கருத்துக் கணிப்பு: மோடி – பிரியங்கா சோப்ரா டிஸ்கஷன் – சப்ஜெக்ட் என்ன ?
ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், இதில் எதுவுமில்லை.
வாக்களியுங்கள்!
இந்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்து மதவெறி பாசிச அரசுக்கு எதிராக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியைப் பிரசவிக்கும் தருணத்தில் இருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்த மூன்று சம்பவங்கள், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல காஷ்மீர் குமுறிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. “காஷ்மீர் நம் கையைவிட்டுப் போய்விடுமோ?” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டுப் பலரும் பதறி நிற்கும் அளவிற்கு அம்மூன்று சம்பவங்களும் “இந்து” இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சவால்விட்டுள்ளன.
முதல் சம்பவம், கடந்த மார்ச் மாதம் பட்காம் மாவட்டத்தில் நடந்தது. அம்மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த ஒரு போராளியைச் சுட்டுக் கொல்வதற்காக வந்த இந்திய இராணுவத்தைத் தடுத்து நிறுத்திய அக்கிராம மக்கள், அப்போராளியைத் தப்ப வைக்கும் நோக்கில் இராணுவச் சிப்பாய்களைக் கற்களைக் கொண்டு தாக்கினர். அச்சமயத்தில் இராணுவத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையே நடந்த மோதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் படுகாயமடைந்தனர். கிராம மக்களின் இரத்தத்தில் தனது பூட்ஸ் கால்களை நனைத்த பிறகுதான், அந்தப் போராளியை இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்ல முடிந்தது.

“முன்பெல்லாம் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடக்கும்போது, பொதுமக்கள் அந்த இடத்திலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இப்பொழுதோ பொதுமக்கள் தீவிரவாதிகளின் கேடயமாக மாறி, இராணுவத்தை எதிர்த்து நிற்கிறார்கள்” என இப்புதிய நிலைமையைப் பற்றி பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி குறிப்பிடுகிறார்.
இரண்டாவது சம்பவம், ஏப்ரல் மாதத்தில் சிறீநகர் மற்றும் ஆனந்த்நாக் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களையொட்டி நடந்தது. 35,000 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள சிறீநகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு 17,000 சிப்பாய்களை இறக்கியிருந்தது, இந்திய அரசு. தேர்தலுக்கு முதல்நாள் இணைய தள சேவையும் அரசால் தடை செய்யப்பட்டது. ஆனாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 9 அன்று சிறீநகர் இடைத்தேர்தலை “அமைதியான” முறையில் நடத்தி முடிக்க முடியவில்லை. அத்தேர்தலை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் ஏப்ரல் 9 அன்று நடந்த சிறீநகர் இடைத்தேர்தலில் வெறும் ஏழு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. அத்தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 12 அன்று நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவில் வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 28 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை. “காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த நேரத்தில்கூட, இவ்வளவு குறைவான வாக்குகள் பதிவானதில்லை” எனக் குறிப்பிட்டுள்ள காஷ்மீர் பத்திரிகையாளர்கள், “இத்தேர்தல் புறக்கணிப்பு 1989 காலகட்டத்திலிருந்து வேறுபட்டது, காஷ்மீர் முசுலீம்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு” எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

90 சதவீதத்துக்கும் மேலான வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறீநகர் இடைத்தேர்தல் முடிவும்கூட, அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணிக்கு எதிரானதாகவே அமைந்தது. அத்தேர்தலில் காங்கிரசு-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வேட்பாளரான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். ஆனந்த்நாக் இடைத்தேர்தலில் இதைவிடத் தீவிரமான எதிர்ப்பையும், தோல்வியையும் ஆளுங்கூட்டணி சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில், மோடியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக இடைத்தேர்தலையே காலவரையின்றி ஒத்திவைத்துவிட்டது, இந்தியத் தேர்தல் ஆணையம்.
இவ்விரண்டு சம்பவங்களைக் காட்டிலும், ஏப்ரல் 24 அன்று சிறீநகரில் நடந்த கல்லூரி, பள்ளி மாணவிகளின் போராட்டம்தான் ஆளுங்கும்பலையும் தேசியவாதிகளையும் திகைப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு மாணவி, தனது ஒரு கையில் கூடைப்பந்தையும், இன்னொரு கையில் கல்லையும் ஏந்தியிருந்தார். அப்போராட்டத்தில் கற்களைக் கையில் ஏந்தியிருந்த ஒவ்வொரு மாணவியின் முதுகிலும் புத்தகப் பை இருந்தது. “கணினியை ஏந்த வேண்டிய காஷ்மீர் இளைஞர்கள், கற்களைத் தூக்குவதா?” என முதலைக் கண்ணீர் வடித்த மோடிக்கு, “நாங்கள் புத்தகப் பையையும் சுமப்போம், கல்லையும் ஏந்துவோம்” என காஷ்மீர் மாணவிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
சிறீநகர் மாணவிகள் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி புல்வாமா கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டமாகும். கடந்த ஏப்ரல் 12 அன்று புல்வாமா அரசுக் கல்லூரிக்குள் நுழைந்து சோதனையிட முயன்ற இராணுவத்தை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கண்ணீர் புகை குண்டுகளையும், பாவா (PAVA) என அழைக்கப்படும் மூச்சைத் திணறச் செய்யும் குண்டுகளையும் கொண்டு மாணவர்களைத் தாக்கிய அரசுப் படைகளை, அவர்கள் கற்களைக் கொண்டு தடுத்து நிறுத்தினர்.
இராணுவத்துக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த அம்மோதலில் 40 மாணவிகள் உள்ளிட்டு, 64 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிவரச் சென்ற அவசர ஊர்தியின் ஓட்டுநர், “எனது வண்டி கல்லூரிக்குள் நுழைவது போல எனக்குத் தோன்றவில்லை. மாறாக, ஒரு போர்க்களத்திற்குள் நுழைந்தது போல இருந்தது” என்கிறார். இந்திய இராணுவம், கல்லூரி மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலின் தீவிரத்தையும் கொடூரத்தையும் அந்த ஓட்டுநரின் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிறீநகர், பந்திபோரா, பாரமுல்லா, ஆனந்த்நாக், புல்வாமா, குப்வாரா, குல்காம், சோபியன் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத மாநில அரசு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளித்து, மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இறங்கியது.

ஆனால், கல்லூரிகள் திறக்கப்பட்ட ஏப்ரல் 24 அன்றே சிறீநகரிலுள்ள அரசு மகளிர் கல்லூரி மற்றும் அரசு மேநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் போராட்டத்தில் இறங்கி, மாநில அரசின் முகத்தில் கரியைப் பூசினர். இந்தப் போராட்டத்தைத் தடுக்க முயன்ற பேராசிரியர்களை, “நீங்கள் மாடா, இல்லை மனுசங்களா?” என எதிர்த்துக் கேட்டு, மாணவிகள் நையாண்டி செய்துள்ளனர்.
கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசைக் கற்களைக் கொண்டு தாக்கிப் பின்வாங்கச் செய்த மாணவிகள், போலீசின் கவச வாகனங்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். அன்று, சீறிநகரின் புகழ்பெற்ற லால் சௌக் பகுதி முழுவதும் போராடிய மாணவிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறுகிறார்கள், அப்பகுதி வணிகர்கள்.
கடந்த ஆண்டு ஜூலையில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளம் வயது போராளி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து வெடித்த காஷ்மீர் மக்களின் கலகம் இன்னமும் தணிந்துவிடவில்லை. இக்கலகத்தை ஒடுக்க ஜூலை 2016 தொடங்கி டிசம்பர் 2016 முடியவுள்ள ஆறு மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் முசுலீம்களின் மீது 1,60,000 கண்ணீர்ப் புகை குண்டுகளும், பாவா குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இவையல்லாமல், பல இலட்சம் பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். பெல்லட் குண்டுகள் தாக்கி கண்பார்வையை இழந்துபோனவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்தைத் தாண்டுகிறது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றிச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இத்துணைக்கும் பிறகுதான் மேலே கூறப்பட்டுள்ள மூன்று சம்பவங்களும் நடந்துள்ளன.

“காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை எல்லாத் திசைகளிலும் நசுக்கி வருகிறது, அரசு. இந்த நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, எங்களால் எப்படி ஒதுங்கிப் போய்விட முடியும்? காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனக் கூறுகிறார் பன்னிரெண்டாவது படிக்கும் ஒரு மாணவி. இந்திய அரசுக்கு எதிரான வெறுப்பையும் விடுதலை வேட்கையையும் கொண்ட இந்த மாணவர்களை, இளைஞர்களை வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களைக் கொண்டோ, துப்பாக்கி தோட்டாக்கள், பெல்லட் குண்டுகள், கருப்புச் சட்டங்கள், சிறை தண்டனை – என நீளும் அடக்குமுறையின் மூலமோ வீழ்த்திவிட முடியாது என்பதை இந்திய ஆளுங்கும்பல், குறிப்பாக மோடி அரசு உணர மறுக்கிறது.
மாறாக, இந்தியாவின் மீது இன்னமும் கொஞ்சநெஞ்சம் நம்பிக்கை வைத்திருப்பவர்களையும்கூடத் தமது அடக்குமுறையின் மூலமாக போராளிகள் பக்கம் தள்ளிவிடும் நல்ல காரியத்தைச் செய்து வருகிறது. அதற்கு உதாரணமாக இருப்பவர்தான் 26 வயதான பரூக் அகமது தர்.
இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறீநகர் இடைத்தேர்தலில் வாக்களித்த 7 சதவீத காஷ்மீர் முசுலீம்களுள் பரூக் அகமது தர்ரும் ஒருவர். வாக்களித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பரூக் அகமது தர்ரைப் பிடித்த இந்திய இராணுவச் சிப்பாய்கள், அவரைத் துப்பாக்கியாலும், தடிகளாலும் மயங்கிச் சரியும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். அரை மயக்க நிலையில் இருந்த அவரை, ஒரு இராணுவ ஜீப்பின் முன்பகுதியில் உட்கார வைத்து, இறுகக் கட்டி, “இராணுத்தின் மீது கல்லெறிபவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்” என ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்துகொண்டே இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவமானப்படுத்தி, பீதியூட்டி அதன் பிறகு விடுவித்திருக்கிறது, இந்திய இராணுவம்.

இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்துபோய், தனது வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பரூக் அகமது தர், “நான் செய்த குற்றமென்ன?” எனப் புலம்பி வருகிறார். காஷ்மீரியாக, அதுவும் முசுலீமாக இருப்பதே குற்றம் எனக் கொக்கரிக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.
மோடி அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, “காதலிலும் போரிலும் அத்துமீறல்களெல்லாம் வாடிக்கையாக நடப்பதுதான்” என அலட்சியமாகப் பதில் அளித்து, பரூக் அகமது தர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்துகிறார்.
இந்திய இராணுவம் கடந்த முப்பது ஆண்டுகளாக காஷ்மீர் முசுலீம்களுக்கு இழைத்திருக்கும் அநீதிகளைக் கண்டிக்கவோ, அதனால் பாதிக்கப்பட்ட காஷ்மீரி முசுலீம்களுக்கு நீதி வழங்கவோ தயாராக இல்லாத உச்ச நீதிமன்றம், கற்களைக் கீழே போடுமாறு காஷ்மீர் இளைஞர்களுக்குக் கட்டளையிடுகிறது. பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக வேறு எந்தச் சனியனைக் கொண்டு காஷ்மீர் இளைஞர்களை அடக்கி ஆளலாம் என மூளையைக் கசக்கி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். வானரப் படையைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமியோ இன்னும் ஒருபடி மேலே சென்று, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் முசுலீம்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முகாம்களில் அடைக்க வேண்டும் எனக் கூறி, இட்லரின் யூத அழித்தொழிப்பை நினைவுபடுத்துகிறார்.
ஜம்முவிலுள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் ராகேஷ் குப்தா, முசுலீம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கத்தோடு, ஜம்முவில் குடியேறியிருக்கும் வங்கதேச மற்றும் பர்மிய முசுலீம்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொல்லுமாறு அறிவிக்கிறார்.

இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மேவார் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் காஷ்மீர் மாணவர்களுள் ஆறு பேர் உள்ளூர் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். அம்மாணவர்களைத் தீவிரவாதிகள் எனப் பழிபோட்டு அவமானப்படுத்திய அக்கும்பல், படிப்பைக் கைவிட்டு காஷ்மீருக்கு ஓடிப்போய்விடுமாறு மிரட்டியிருக்கிறது.
உ.பி. மாநிலத்தின் மீரட் நகரில், உத்தரப் பிரதேச நவ நிர்மாண் சேனா என்ற இந்து மதவெறி அமைப்பு, ஏப்ரல் 30-க்குள் அந்நகரத்தில் படித்துவரும் காஷ்மீர் மாணவர்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரித்தும், காஷ்மீரிகளைப் புறக்கணிக்குமாறு உள்ளூர் இந்துக்களைத் தூண்டிவிட்டும் பிரச்சாரத் தட்டிகளைக் கட்டி வைத்திருக்கிறது.
இந்திய இராணுவத்தின் கீழ்த்தரமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட ஜனநாயக, குடியுரிமைகளுக்காகவும் போராடி வரும் காஷ்மீர் முசுலீம்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள் எனப் பலவாறாக அவதூறு செய்து கொச்சைப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் பிற மாநில மக்களிடம் அவர்கள் மீது வெறுப்புணர்வைத் திட்டமிட்டு வளர்த்து வருகிறது, இந்திய ஆளுங்கும்பல்.
காஷ்மீர் முசுலீம்களும் மாணவர்களும் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ முடியாது, கல்வி பயில முடியாது என்றால், இந்திய அரசு காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடுவதற்கு, அதனை அடக்கி ஆளுவதற்கு என்ன தகுதியும் உரிமையும் இருக்கிறது? தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீர் முசுலீம்களின் வாழ்வுரிமையைக் காலில் போட்டு மிதித்துவரும் இந்திய அரசுக்கும், அதனின் சட்டங்களுக்கும், இராணுவம் உள்ளிட்ட அதனின் நிறுவனங்களுக்கும் அவர்கள் ஏன் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்?
தற்போது அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணியைத் துரோகத்தின் மறுஉருவாகவே கருதி வெறுக்கிறார்கள், காஷ்மீரி முசுலீம்கள். ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், இன்னொருபுறம் – ஜம்மு காஷ்மீரில் பசுவதைச் சட்டத்தை அமல்படுத்துவது, காஷ்மீரி தேசியக் கொடியை ஒழித்துக் கட்டுவது, ஜம்முவைச் சேர்ந்த மேல்சாதி பார்ப்பன பண்டிட்டுகளுக்கும் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கும் தனி காலனிகளை உருவாக்குவது ஆகிய திட்டங்களின் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்துமயமாக்குவதன் மூலமும் காஷ்மீரை இந்தியாவின் நிரந்தரக் காலனியாக வைத்துக் கொள்ள முடியும் என மனப்பால் குடிக்கிறது, மோடி கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்தத் திட்டங்கள், கடந்த சில ஆண்டுகள் “அமைதியாக” இருந்த காஷ்மீரை எழுச்சியின் எல்லைக்குத் தள்ளிச் சென்றுவிட்டது. “தீவிரவாதிகளின்” கோரிக்கையாக இருந்த விடுதலைக் கோரிக்கையை, பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் உடனடி அரசியல் கோரிக்கையாக மாற்றிவிட்டது. சிறீநகர் தொகுதி தேர்தல் புறக்கணிப்பும், இளைஞர்கள்-மாணவர்கள் நடத்திவரும் கல்லெறி போராட்டங்களும் இந்த மாற்றத்தின் சாட்சியங்களாக உள்ளன.
-செல்வம்
புதிய ஜனநாயகம், மே 2017
நொய்யல், நல்லாறு, அமராவதி, பாலாறு, சின்னாறு ஆகியவையே திருப்பூர் மாவட்ட எல்லைகளுக்குள் ஓடும் ஆறுகள்; இவையே திருப்பூரின் முக்கியமான நீராதாரங்கள். இதில் நொய்யலாறு திருப்பூர் நகர எல்லைகளுக்குள்ளாக ஓடுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகும் நொய்யல், கோவை நகரின் குறுக்காக ஓடி, அவினாசி தாலுக்காவைக் கடந்து திருப்பூருக்குள் நுழைந்து பின்னர் ஒரத்தபாளையம் அணையைக் கடந்து கரூரில் காவரியாற்றில் கலக்கின்றது.
சோழர்களின் காலத்தில் நொய்யலாற்றை மையமாக வைத்து சுமார் 32 தடுப்பணைகளும், குளங்களும், இணைப்புக் கால்வாய்களும் வெட்டி விரிவான நீர் மேலாண்மை ஏற்பாடுகள் செய்திருந்தனர். மங்கலம் தடுப்பணை, ஆண்டிபாளையம் குளம், பெரியபாளையம் குளம் போன்றவை முக்கியமான குளங்கள். திருப்பூர் நகர நிர்வாகம் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து சி.பி.ஐ கட்சியின் முன்னாள் உறுப்பினரும், தொட்டிபாளையம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான தோழர் மோகனிடம் பேசினோம்.
“திருப்பூரில் முன்பு இயற்கையான மழை பொழிவை நம்பி பல்வேறு குளம் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காவிரி கடைமடைப் பகுதிகளைப் போல் குளம் குட்டைகளுக்கு இடையே விரிவான இணைப்புக் கால்வாய் வலைப்பின்னல் இல்லையென்றாலும், பெய்யும் மழை சிறு சிறு குட்டைகளிலும், பின் அங்கிருந்து குளங்களுக்கும் பின்னர் நொய்யல் ஆற்றுக்கும் சென்ரு கலந்து விடுவதைப் போன்ற ஏற்பாடு இருந்தது” என்றார் தோழர் மோகன்.

முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன், அதாவது பின்னலாடை ஏற்றுமதி விறுவிறுப்பான தொழிலாக மாறும் முன் இங்கே விவசாயம் நடந்ததா?
“நடந்தது. கால்வாய் பாசனம் நடக்கவில்லை. ஆனால், இங்கே இருந்த நீர் மேலாண்மை ஏற்பாடுகளின் காரணமாக நிலத்தடி நீர் வளம் மிகுந்து இருந்தது. ஐம்பது அறுபது அடிகளிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். எனவே இங்கே கிணற்றுப் பாசன முறை நடைமுறையில் இருந்தது. புகையிலை, கரும்பு போன்ற பணப்பயிர்களும், நெல்லும் விளைந்தது” என்றார்.
திருப்பூர் இன்றைக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பனியன் கம்பெனிகளே காரணம் என்று புரிந்து கொள்ளலாமா?
“அப்படிச் சொல்ல முடியாது. திருப்பூரின் நீராதாரங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலைகளால் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் சீரழிக்கப்பட்டன. பல இடங்களில் விவசாயம் நடந்தபட்ட நிலத்துக்கு மத்தியிலேயே கூட ஒன்றிரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள குட்டைகள் இருக்கும். பின்னாடி ரியல் எஸ்டேட் காரர்கள் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக்கிய போது மொத்தமாக குட்டைகளை மூடி விட்டனர். இது ஒருபக்கம் என்றால், புறம்போக்கு நிலங்களில் இருக்கும் பெரிய குளங்களையும் ஆக்கிரமித்தனர். இதையெல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டு விட்டது. அரசே போட்ட சாலைகளுக்காக கூட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன..” எனத் தொடர்ந்தார் தோழர் மோகன்.

ஒருபக்கம் திருப்பூரின் நீராதாரங்களும், நீர் வழித்தடங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நாசமாக்கப்பட்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பலநூறு அடிகளுக்கும் கீழ் இறங்கி பின் மறைந்தே போனது. சாயப்பட்டறைகள் பல லட்சம் செலவு செய்து அமைத்த ஆழ்துளைக் கிணறுகள் பூமிக்கடியில் நீரோட்டமில்லாத வெற்றுப் பகுதியில் முடிந்து வெறும் காற்றையே மேலே அனுப்பின. வேறு வழியில்லாமல் அதே ஆழ்துளாய்க் கிணற்றின் குழாய்களின் வழியே சாயக் கழிவுகளை பூமிக்குக் கீழ் அனுப்பி தங்கள் பங்குக்கு நிலத்தடி நீரை நஞ்சாக்கும் வேலையைச் சாயப்பட்டறைகள் செய்த போதும் அரசு முறைப்படுத்த முன்வரவில்லை.
இதற்கிடையே என்பதுகளில் இருந்தே திருப்பூர் நகரத்திற்குள் இடம்பெயர் தொழிலாளிகள் வந்து குவியத் துவங்கினர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ற நகர அபிவிருத்தி திட்டங்களையும் அரசு புறக்கணித்ததோடு, முறையான கழிவு நீர் வடிவால் வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. திருப்பூர் நகரின் மொத்த கழிவுகளும் நொய்யலில் கலந்து இன்றைய நிலையில் நொய்யல் ஒரு சாக்கடை ஆறாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் குலோத்துங்கனைக் காண நொய்யல் ஆற்றின் கரையோரமாகவே பயணித்துச் சென்றோம். நல்லாத்தம்பாளையத்தைக் கடந்த போது அங்கிருந்த மிகப் பெரிய குளம் ஒன்று படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்கூடாகவே காண முடிந்தது, சில பத்தாண்டுகளுக்கு முன் மிகப் பெரிதாக இருந்த நல்லாத்தம்பாளையம் குளத்தில் இப்போது சில பத்து சதுர அடிகளுக்கு சாக்கடைச் சகதி மட்டுமே தேங்கி நிற்கிறது.
நல்லாத்தம்பாளைய குளத்திற்கு சுற்றுவட்டாரத்திலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்கள் அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தன. தேங்கி நின்ற சாக்கடைச் சகதியினுள் மீனைத் தேடி எங்கிருந்தோ வந்த நாரைக் கூட்டம் ஒன்று வந்திருந்தது. அந்த நாரைகள் விடாமுயற்சியோடு தமது அலகால் கிளறிக் கிளறி மீனைத் தேடி ஏமாந்து கொண்டிருந்த காட்சி நமது இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதை தெளிவுபடுத்தியது.
நால்லாத்தம்பாளைய குளத்தை ஒட்டிச் சென்ற தார் சாலைக்கு மறுபுறம் இன்னொரு சிறிய குட்டை ஒன்று இருந்தது; அதனுள் கரும்பச்சை நிறத்தில் தேங்கி நின்ற இடுப்பளவு தண்ணீருக்குள் சிறுவர்கள் சிலர் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இதுவும் சாக்கடைச் சகதிகளால் நிரம்பி விடும்.
திரூப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும் மூன்று கட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து தோழர் மோகனிடம் கேட்டோம்
“முதல் மற்றும் இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக மேட்டுப்பாளையம் பில்லூர் அனையில் இருந்து நீர் எடுக்கப்படுகின்றது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் அதிகபட்சம் 60 எம்.எல்.டி (1 எம்.எல்.டி = ஒரு கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும். ஆனால், தற்போது இவ்விரண்டு திட்டங்களின் மூலமும் சுமார் 25 எம்.எல்.டி தண்ணீர் தான் திருப்பூர் மாநகராட்சி பெற்றுக் கொண்டுள்ளது. புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிகபட்சம் 185 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க முடியும்; என்றாலும், வறட்சியின் காரணமாக சராசரியாக நூறு எம்.எல்.டி தண்ணீருக்கும் குறைவாகவே கிடைத்து வருகின்றது. கடந்த மாதங்களில் அதுவும் கூட இல்லாமல் சுத்தமாக வறண்டு விட்டது”
மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை எல் & டி தண்ணீர் என்று மக்கள் அழைக்கின்றார்களே?
“புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தில் அரசுக்கு பத்து சதவீத பங்குகள் உள்ளது – மற்றபடி அதில் தணியார் முதலீட்டார்களின் பங்குகள் தான் அதிகம். புதிய பொருளாதார கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின், திருப்பூரின் குடிநீர் வழங்கலை முழுக்க தனியாருக்கு அளித்த விட வேண்டும் என்று முடிவெடுத்து 1995-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்துக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. குடிநீர் திட்டத்தை அமல்படுத்தும் வேலையை செய்தது எல் & டி நிறுவனம் – ஆனால், தற்போது அதன் பராமரிப்பு முழுவதும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் தான் உள்ளது. மக்கள் ஒரு பழக்கத்தின் காரணமாக எல் & டி தண்ணீர் என்று சொல்வார்கள்” என்றார்.

தண்ணீரை ஒரு சந்தைப் பொருளாக மாற்றி விலை வைத்து விற்பது என்பது இன்றைக்கும் கூட கேட்பதற்கே ஆத்திரமூட்டுவதாக உள்ளது. ஆனால், இருபது வருடங்களுக்கு முன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது மக்களிடையே எந்த எதிர்ப்பும் எழவில்லை. இவ்வாறு எதிர்ப்புகள் இன்றி தனியார்மய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசு தரப்பில் சில ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தனர்.
முதலாவதாக, மாநகராட்சி சார்பாக முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான அடிக்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை. பில்லூரில் இருந்து ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்ட வழித்தடத்திலேயே இன்னும் அகலமான குழாய்கள் அமைத்திருந்தால், மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கே தேவையில்லாமல் போயிருக்கும். இரண்டாவதாக, பவானியில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உபரியாக செல்லும் நீரைத் திருப்பி திருப்பூரின் குளம் குட்டைகளை நிறைத்து இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க வகை செய்யும் அவனாசி அத்திக்கடவு திட்டமும் பல பத்தாண்டுகளாக வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக திருப்பூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையிலேயே வைக்கப்பட்டிருந்தது. எப்படியாவது தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மக்களையும் தொழில் நிறுவனங்களையும் ஒரு சூழலுக்குள் நெட்டித் தள்ளி விட்ட பின் தான் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்படுகிறது. அந்த சூழலில் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மக்கள் வரப்பிரசாதமாகவே பார்த்துள்ளனர்.
காவிரியும் பவானியும் இணையும் ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கள் பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர் உறிஞ்சு மையம் ஒன்றை அமைத்துள்ளது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம். தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து நின்று போன நிலையில் பவானியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் பல்லாயிரம் அடி ஆழத்திலிருந்து உறிஞ்சப்படும் சொற்ப நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருமையான நிறத்திலேயே வருகின்றது. இந்தாண்டு மழை பொழிவும் இல்லாமல், காவிரிநீரும் இல்லாமல் போனால், திருப்பூர் தாகத்தால் மரணிக்கும் நிலை தான் ஏற்படும்.
வினவு செய்தியாளர்கள் மக்களைச் சந்தித்த போது பலரும் இந்த தண்ணீர் பஞ்சத்துக்கு வானத்தையே நோக்கியே விரல் சுட்டினர். “மழையில்லை, கர்நாடகா காரன் தண்ணி விடலை…” என்றே மக்களில் பலரும் விரக்தியாக பேசினர். ஆனால், திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கையையோ ‘கடவுளையோ’ கர்நாடகாவையோ முழுவதுமாக பழி சொல்வதற்கில்லை. திருப்பூரின் தொண்டைக் குழியைத் தாகத்தில் தவிக்க விட்ட குற்றவாளி அரசு தான்.
நகர விரிவாக்கத்தை கண்டு கொள்ளாமல் ரியல் எஸ்டேட் முதலைகளின் சூறையாடலுக்கு வழி விட்டது, இயற்கையான நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதை அனுமதித்தது, நிலத்தடி நீரைச் செறிவூட்ட, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்தது, திருப்பூரின் ஆறுகளும் கால்வாய்களும் சாக்கடைகளானதை தடுக்கத் தவறியது, இன்றும் அவை சாக்கடைகளாகவே ஓடிக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் அனுமதிப்பது, பனியன் தொழிலுக்காக இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுவதை முறைப்படுத்த தவறியது என அரசின் குற்றப்பட்டியல் மிக நீண்டது.
நீர் மேலாண்மை, நகர்புற மேம்பாடு என ஒரு சிவில் சமூகத்தில் அரசும் அதன் உறுப்புகளும் செய்திருக்க வேண்டிய மிகக் குறைந்தபட்சமான அரசாளுகை தொடர்பான கடமைகளைக் கூட நிறைவேற்றாததுடன், சூழல் சீர்கேட்டுக்கும், தண்ணீர் பஞ்சத்துக்கும் திருப்பூரைத் தள்ளிவிட்டது அரசும் அதன் இயந்திரங்களும் தான்.
தற்போது நிலைமை மிகத் தீவிரமான திசையில் செல்லத் துவங்கிய பின், நடந்து வரும் மக்கள் போராட்டங்களின் இலக்காக தற்காலிக தீர்வுகளே உள்ளன; இந்நிலை மாறி, அரசு கட்டமைப்பின் தோல்வியையும் அது எதிர்நிலை சக்தியாக மாறி தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்திய குற்றவாளியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசே தங்களது எதிரியாக இருப்பதை மக்கள் உணர்ந்து போராட்டங்களை அந்த திசையில் செலுத்தினால் தான் திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்.
முற்றும்
– நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளார்கள்
உழவன் வேதனை கவர்மெண்டுக்குத் தெரியுமா? கலகம் செய்யாமல் விவசாயிகளுக்கு கௌரவம் கிடைக்குமா? ஊர் உலகை திரட்டுவோம்! ஏர்கலகம் செய்வோம்! – என்ற முழக்கத்தின் கீழ் மதுரை மாவட்டம், திருப்பறங்குன்றம் தாலுகா, செக்கானூரணியில் முருகவிலாஸ் மகாலில் கடந்த 14.05.2017 அன்று மாலை 5:00 மணியளவில். விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
வி.வி.மு தோழர் ஆசை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பாளர் தோழர் மோகன், 58 கால்வாய் கிராம விவசாய சங்க செயலர் பச்சைத்துண்டு பெருமாள், கூட்டுறவு வீட்டு வசதி பணியாளர் சங்கம் எம்.பி.லட்சுமணன், விவிமு உசிலை வட்ட செயலாளர் தோழர் போஸ், விவிமு திருமங்கலம் அமைப்பாளர் தோழர் வீரணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
இந்த கருத்தரங்கத்திற்கு செக்கானூரணியைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய நேசர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் திரண்டு வந்திருந்தனர்.
தோழர் ஆசை தனது தலைமை உரையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை இந்த அரசு உதாசீனப்படுத்தும் நிலையில் விவசாயிகள் தம்மை இழிவு படுத்திக் கொண்டும், வருத்திக்கொண்டும் போராடும் முறையை மாற்றிக் கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர்களை இணைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அரசின் தோளில் துண்டைப் போட்டு இழக்கும் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று பேசினார்.
எம்.பி.லட்சுமணன் தனது சிறப்புரையில் விவசாயிகளின் அனைத்து தேசிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மல்லையாவுக்கும் அம்பானிக்கும் வழங்கும் தள்ளுபடியை,விவசாயிகளுக்கு ஏன் செய்யச்கூடாது என்று மத்திய, மாநில அரசை சாடினார். மேலும் விவசாய சங்கங்களை அனைத்து கிராமங்களிலும் கட்டுவதன் வாயிலாகத்தான் விவசயிகள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறினார்.
அய்யா பச்சைத்துண்டு பெருமாள் தனது சிறப்புரையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த 58 கிராம மக்கள் பயன்படுத்தும் தொட்டி பாலத்தை நிறைவேற்ற 28 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அது இல்லை இது இல்லை என்று காரணம் சொல்லி இழுத்து கொண்டே இருக்கிறது, கேட்பதற்கு நாதியில்லா நிலையில் விவசாயிகளின் மீது உண்மையான அக்கறையுடன் இது போன்ற கருத்தரங்கு நடவடிக்கைளை விவசாசாயிகள் விடுதலை முன்னணி செயல்படுத்தும் போது நம்பிக்கை வந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
தோழர் மோகன் தனது சிறப்புரையில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்காகவிவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு மிச்சமான ஆயுத மூலப்பொருட்களைக் கொண்டு வந்து உரமாக நம்ம மண்னில் இறக்கி எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றவர்கள் மூலமாக விவசாயம் அழிக்கப்பட்டது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகம் உயரமாக இருந்தது. அந்தப் பயிர் அடியில் மண்ணுக்கும், மேல்பகுதி மாட்டுக்கும், நுனிப் பகுதி மனிதர்களுக்கும் என்ற விவசாயமுறை அழிந்து, மாட்டுக்கு தீவனமும் குறைந்து போனது. இதுதான் மாடு வளர்க்க முடியாமல் போனதற்கு காரணம். ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் விவசாயத்தின் அழிவுக்கு காரணமான பன்னாட்டு கம்பெனிகளை எதிர்த்து விவசாயிகள் பேராடவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
கருத்தரங்ககு முடிந்து விவசாயிகள் கலைந்து செல்லும் போது இந்த கருத்தரங்கை பொதுக்கூட்டமாக நடத்தியிருந்தால் இன்னும் நிறைய விவசாயிகள் வந்திருப்பார்கள். இந்த விசயங்களையெல்லாம் அறிந்திருப்பார்கள் என்று கூறினார்கள். விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.
மேலும் கூட்டத்திற்கு வராத விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தோம். என்ன தீர்மானம் போட்டீர்கள் என்று ஆர்வமாக விசாரித்தனர். விவசாயிகளின் குரலை அலட்சியப்படுத்தி நிர்வாணமாக்கும் அரசுக்கு எப்படி தெரியும் நமது உள்ளக் குமுறல். அதை கேளாத அந்த செவிகளை கேட்க வைக்கப் போராடுவோம் என இப்பகுதி விவசாயிகளிடம் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது, விவசாயிகள் விடுதலை முன்னணி.
-புதிய ஜனநாயகம் செய்தியாளர், உசிலை.
ஓசூர் சூளகிரி அருகே சப்படி மற்றும் காமன் தொட்டி பகுதிகளில் செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரத்தோடு இணைந்து கிராம மக்கள் பெண்கள் உள்ளிட்ட பலரும் திரளாக திரண்டு மூட வைத்தனர்.
இதுவரை ஒட்டுக் கட்சிகளுக்கு கூட்டம் காட்ட பயன்படுத்தி வந்த ஏழைப் பெண்கள் தங்கள் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கிற்கு மூடு விழா நடத்தியுள்ளனர். சப்படியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். மேலும் கலெக்டருக்கும் மனு கொடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்களை நாடினர் சப்படி கிராம மக்கள். வட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தால் எனக்கு அதிகாரம் இல்லை என்பார். கலெக்டரிடம் சென்றால் மனுவை பரிசீலிக்கிறேன் என்பார். காரணம் டாஸ்மாக் டெவலப்மெண்ட் ஆபீசரு கலெக்டர் தான், தாசில்தார் – வி.ஏ.ஒ அவருக்கு கீழே வேலை செய்பவர்கள். இதனால், மனு கொடுத்து பயனில்லை என விளக்கினார்கள் தோழர்கள்.

“இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்” என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ”எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்” என்று தாசில்தார் சொல்லி மக்களுக்கு இந்த அரசுக்கட்டமைப்பின் யோக்கியதையைப் புரிய வைத்தார்.
இதன் பின்னர் கிராமத்தில் கூட்டம் போட்டனர். 24 வயது கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டிடத் தொழிலாளி குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பெண்களின் போராட்டங்களையும் எடுத்து விளக்கப்பட்டது. இதன் பின்னர் மக்கள் வீரத்துடன் களமிறங்கினர்.
200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் 22.05.2017 திங்கள்கிழமை அன்று டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து அதன்படி அன்று காலை 10:00 மணிக்கே திரண்டனர். 12:00 மணிக்கு வழக்கமாக கடையை திறக்க வரும் டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் மக்கள் சக்தியைக் கண்டு கடையை திறக்க முன் வரவில்லை. மாறாக, வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் ஓடோடி வந்து கூடியிருந்த மக்களிடம் நைச்சியமாகப் பேசி போராட்டத்தை கைவிடச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்.
மக்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை காது கொடுத்து கேட்கத் தயாரில்லை. அதிகாரிகளையும், போலீசையும் திட்டிக் கொண்டே கடையின் பூட்டை இரும்பு ராடு மற்றும் பெரிய அளவிலான கருங்கற்களை கொண்டு அடித்து உடைத்தனர். பதறிப்போன டாஸ்மாக் ஊழியர்கள் ஓடிவந்து மக்களிடம் மன்றாடினர். உடனே கடையை காலிசெய்து விடுகிறோம் என்று வாக்களித்து அதன்படியே கடையில் இருந்த மதுபானங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாது என அதிகாரிகள் உறுதியளித்தபிறகே, மக்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் போராடிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வரவழைக்கப்பட்டு அங்கே தங்களின் மதிய உணவை முடித்துக் கொண்டனர். மீண்டும் அனைவரும் கூடி தங்களுக்குள்ளே பேசிக் கொண்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள காமன்தொட்டியில் உள்ள டாஸ்மாக் கடையையும் இவ்வாறே அகற்றவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அங்கிருத்து சுமார் 3 கி.மீ தூரம் ஊர்வலமாக சென்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போலீசு அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு வளையம் போட்டு பாதுகாத்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் தடையை உடைத்துக்கொண்டு போலீசின் பயமுறுத்தல்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்திக்கொண்டே கடையின் பூட்டு மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு முன்னேறினர். செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மக்களின் போர்க்குணத்திற்கு அடிபணிந்து கடையில் இருந்த ரூ22 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு கடையை நிரந்திரமாக பூட்டினர்.

அடுத்ததாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு மதுக்கடை இயங்கி வந்த நிலையில் தற்போது இரண்டாவது கடையை அதே பகுதியில் திறந்துள்ளதை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்காவிடில் இதேபோன்று போராட்டம் நடத்தி அகற்றப்படும் என திரண்டிருந்த மக்கள் ஆவேசமாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
புக்கசாதம் – உத்தனப்பள்ளி — சூளகிரி சாலை, சின்னாறு தேசிய நெடுஞ்சாலை, சூளகிரி கீழ் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை புதிய இடங்களில் அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
-பு.ஜ செய்தியாளர், ஒசூர்.
உள்நாட்டுக்கான பனியன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருப்பூர், எழுபதுகளின் இறுதியில் இருந்து மெல்ல மெல்ல ஏற்றுமதிக்கான உற்பத்தியைத் துவங்கியது. இந்தியச் சந்தைக்கான உள்ளாடை உற்பத்தி எனும் அளவில் இருந்த காலத்தில் சலவைப் பட்டறைகள் பின்னர் ஏற்றுமதிக்கான உற்பத்தி விறுவிறுப்படைந்த காலகட்டத்தில் சாயப்பட்டறைகளாக உருமாறின. இன்றைக்கு சுமார் 451 சாய பட்டறைகள் திருப்பூரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

பின்னலாடை உற்பத்திச் சங்கிலியில் சாயபட்டறை, பிரிண்டிங் பட்டறை மற்றும் வாசிங் ஆகிய கட்டங்களில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப் படுகின்றது. திருப்பூரின் சூழல் சீர்கேடுகள் அனைத்துக்கும் பனியன் கம்பெனிகளை நோக்கியே விரல் நீட்டுகின்றன பல்வேறு என்.ஜி.ஓ அமைப்புகள். குறிப்பாக நிலத்தடி நீரை மாசுபடுத்தியதற்கு முழுமுதற் காரணமாக திருப்பூரின் சாயப்பட்டறைகளை குறிப்பிடுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
இதில் உள்ள உண்மைத் தன்மையை பரிசீலிப்பதற்கு முன், திருப்பூரின் தொழிற் பட்டறைகள் தண்ணீர் பஞ்சத்தால் படும் சிரமங்களை பார்த்து விடுவோம். ஏனெனில், திருப்பூரின் தொழிற்பட்டறைகள் வரம் கொடுக்கும் தேவதை இல்லாவிடினும், பிழைக்க வழியற்றவர்களுக்குச் சோறு போட்டுக் காப்பாற்றும் சூனியக்காரி அல்லவா?
”கடந்த ஒரு வருசமா யாரும் புதிய சாயபட்டறைகள் திறக்கலை. இருக்கிற சாயப்பட்டறைகளும் வரிசையா மூடிட்டு வர்றாங்க… அனேகமா நான் ஒருத்தன் தான் சமீப காலத்துல புதுசா சாயபட்டறை திறக்கிறவனா இருப்பேன்னு நினைக்கிறேன்” எனச் சொல்லி சிரிக்கிறார் சந்திரசேகர். சுமார் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ’ஸ்ரீ வாரி கலர்ஸ்’ எனும் பெயரில் திறக்கப்படவுள்ள தனது சாயப்பட்டறையில் சில நாட்களுக்கு முன் நிறுவப்பட்ட புதிய இயந்திரங்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

“அப்படி என்ன நம்பிக்கை?”
“நம்பிக்கை எல்லாம் ஏதுமில்லை.. இருபத்தைந்து வருசமா வேற கம்பெனியில கலர் மாஸ்டராவே வேலை பார்த்திருக்கேன். இதைத் தவிற வேற தொழில் எதுவும் தெரியாது. எப்படியாவது முட்டி மோதி மேல வந்திரலாம்னு ஒரு நம்பிக்கை தான்” என்றார்.
”உங்களோட பட்டறையின் உற்பத்தித் திறன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க”
”எங்களோட இயந்திரம் தினசரி அதிகபட்சமா 2600 கிலோ துணிக்கு சாயம் போடும் அளவுக்கு செயல் திறன் கொண்டது. இதுவே ரொம்ப சின்ன யுனிட் தான். பெருந்துறை சிப்காட்டில் இருக்கும் ரோகினி மாதிரி பெரிய யூனிட்டுகள்னா 30 ஆயிரத்திலேர்ந்து 50 ஆயிரம் கிலோ வரைக்கும் கையாளும் திறன் கொண்ட இயந்திரங்கள் வைத்திருப்பார்கள்..”
”சாயப்பட்டறைக்கு தண்ணீர் தான் முக்கியம். இப்போ திருப்பூர்ல மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலைமைல உங்களுக்கு தொழில் செய்ய மட்டும் எப்படி தண்ணீர் கிடைக்கும்?
”சிரமம் தான்.. எப்படியாவது மழை பெய்து இந்த வருசமாவது நிலைமை சரியாகிடும்னு நம்பறோம்”
”உங்களுடைய இந்த பட்டறையை இயக்க தேவைப்படும் தண்ணீருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்?”
”மறு சுழற்சி மையத்துக்கு மாதா மாதம் ஐந்து லட்சம் கட்டணமா செலுத்தனும். அது போக ஒவ்வொரு நாளும் எல் & டி கிட்டேர்ந்து 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கனும்.. எல் & டி தண்ணீர் லிட்டருக்கு 8.50 பைசா. எல்லாம் சேர்த்துக் கணக்குப் பார்த்தா எப்படியும் மாசம் ஆறு லட்சம் வரைக்கும் தண்ணீருக்காக செலவழிக்கனும்” என்றார்.

“தண்ணீருக்கே ஆறு லட்சமா?”
“சார், அப்படியாவது குடுத்தா பரவாயில்லைங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் தான் தண்ணீர் தர்றான். மற்ற நாட்கள்லே மறுசுழற்சி மையத்திலேர்ந்து குறைவா தர்ற தண்ணீரை வச்சி சமாளிச்சாகனும். சனி ஞாயிறு பட்டறையை இயக்க கூடாது. அப்படிப் பார்த்தா, வாரத்துல மூனு நாளைக்குக்கூட முழு உற்பத்தித் திறனோட பட்டறையை இயக்க முடியாதுங்க”
”இந்த நிலைமையில உங்களால பட்டறையை லாபகரமா இயக்க முடியுமா?”
”ஏற்கனவே போட்ட முதலீடெல்லாம் கடன் வாங்கிப் போட்டது தான். நல்லா மழை வந்து, தண்ணீர் பிரச்சினை தீர்ந்து எல்லாம் சரியா போச்சின்னா எப்படியும் நாலு அல்லது ஐந்து வருடத்துல நிமிர்ந்துடுவேன். ஆனாலும், பெரிய லாபம் ஏதும் பார்க்க முடியாதுங்க. கைய கடிக்காம ஓட்டிக்கலாம். அவ்வளவு தான்” என்ற சந்திரசேகர், ஏற்கனவே நாற்பதுகளின் மத்தியில் இருந்தார்.

”மறுசுழற்சி மையங்கள் பற்றிச் சொன்னீங்க. இந்த இடத்துல ஒரு கேள்வி, திருப்பூரோட நிலத்தடி நீரை நாசமாக்கினதே சாயபட்டறைகள் தான்னு சொல்றாங்களே, அதைப் பத்தி என்ன சொல்றீங்க?”
”ஒரு பத்து வருசத்துக்கு முன்னே நீங்க சொல்றது உண்மை தான்” என சங்கடமான தொனியில் சொன்னவர், மேலும் தொடர்ந்தார் “இப்போ விதிமுறைகள் கடுமையாக்கியிருக்காங்க. பத்து வருசத்துக்கு முன்னே நடந்த கோர்ட் கேசுக்கு அப்புறமா நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்காங்க. பத்து வருசமாவே நாங்க கழிவு நீரை நேரடியா சாக்கடைலையோ, நிலத்துக்கு கீழேயோ விடறதில்லே. திருப்பூரைச் சுற்றி 16 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைச்சிருக்காங்க. இதுக்கு அரசு 200 கோடி ரூபாய் மானியம் கொடுத்தது – மிச்சத்தை சாயப்பட்டறை முதலாளிகள் சங்கம் போட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களோட நிர்வாகம் தனியார் கையில தான் இருக்கு. எங்களோட கழிவு நீரெல்லாம் இந்த மையங்களுக்குப் போகும், அதில் 70 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு எங்களுக்கே திரும்பி வந்துடும்” என்றார்.

திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் நஞ்சாகிப் போக சாயப்பட்டறைகள் ஒரு காரணம் என்றாலும், அவைகளே முழு காரணம் அல்ல. தொன்னூறுகளில் ஏற்றுமதிக்கான உற்பத்தி உச்சகட்டமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி எவ்வாறு நடக்கின்றது, அப்பொருட்களின் உற்பத்தி நடைமுறைகளில் சூழலியல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா என்பன போன்ற கண்காணிப்புகள் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு உற்பத்தி செய்வதற்குத் தேவையான சுரண்டல் பின்னிலமாகவே திருப்பூரைப் பாவித்து வந்த காலம் அது. தொன்னூறுகளின் இறுதியில் மேற்குலக நாடுகளின் மக்களிடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளில் உள்ள ஏற்றுமதிக்கான உற்பத்தி அலகுகளுக்கு பெயரளவிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன.

தொழில் வளர்ச்சியை குறிப்பிட்ட பிராந்தியத்தில் திட்டமிட்டு ஏற்படுத்துவது இயல்பாக ஒரு பிரதேசத்தில் உருவாகி வரும் தொழில்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உத்திரவாதப்படுத்திக் கொடுப்பது, அந்தத் தொழிலின் விளைவாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடிக்கு ஏற்பாடுகள் செய்வது, தொழில்களுக்குத் தேவையான உள்ளீட்டுப் பொருட்களும் கச்சாப் பொருட்களும் எளிதில் கிடைக்க வகை செய்வது ஒரு அரசின் கடமை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இதே வசதிகளை காலில் விழுந்து செய்து கொடுக்கும் அரசு, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்நாட்டு முதலாளிகளின் சொந்த முயற்சியில் வளர்ந்த தொழில்களுக்கு செய்து கொடுப்பதில்லை என்பதோடு நெருக்கடி முற்றும் சமயங்களில் புதிய கட்டுப்பாடுகளை திணிக்கவும் செய்கின்றது.
மறுபுறம், தொடர்ந்து கொள்முதல் விலையைக் குறைத்துக் கொண்டே வரும் பன்னாட்டு இறக்குமதியாளர்களின் நெருக்கடியையும் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே, பனியன் கம்பெனிகளும் அதனுடன் தொடர்புடைய சாயபட்டறைகள் உள்ளிட்ட பிற தொழிற்பட்டறைகளும் இரண்டாயிரங்களின் மத்திய பகுதி வரை பெயரளவில் இருந்த சூழலியல் சார்ந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டன. நொய்யலாற்றிலும் நல்லாற்றிலும் சாயக் கழிவுகளைக் கலந்தது போக, பல சாயபட்டறைகள் கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகளுக்குள் இறக்கி நிலத்தடி நீரை நஞ்சாக்கின. நிலைமை கைமீறிச் செல்லும் வரை அரசு நிர்வாகம் இவையெதையும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளது.
”அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம். நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு புதிய திட்டங்கள் போட்டு அதில் முதலீடு செய்யலாம். அதே போல மறுசுழற்சி மையங்களைக் கூட முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அரசாங்கமே துவங்கி அதைப் பயன்படுத்த பட்டறைகளிடம் கட்டணம் வசூலிச்சிருக்கலாம். ஆனா, திருப்பூரோட தொழில் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடலை. எல்லாத்தையும் தனியார்ட்ட ஒப்படைச்சி அவன் தான் கோடி கோடியா லாபத்தை அள்ளிட்டுப் போறான். அதுவும் நிலைமை கைமிஞ்சிப் போன பின்னாடி தான் செய்தாங்க” என்கிறார் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் குலோத்துங்கன்.

”தனியார் கிட்டே இருந்தா தான் எல்லாம் தரமா இருக்கும்னு சொல்றாங்களே?” என்றோம்.
”கிழிச்சாங்க. எல் & டி தண்ணீரோட பி.பி.எம் அளவு 800 வரை இருக்கு. எங்களுக்கு 300க்கு உள்ளே பி.பி.எம் அளவு இருந்தா தான் பிரிண்டிங் தரமா இருக்கும். அதை ஈடுகட்ட நாங்க கலர் மையை அதிகம் பயன்படுத்துரோம். இது உற்பத்திக்கான செலவை அதிகரிக்குது. அது மட்டுமில்லாம, தண்ணிக்காக மட்டும் தினசரி 1500 ரூபா வரைக்கு செலவு செய்ய வேண்டியிருக்கு. அப்படியும் தினசரி தண்ணி கிடைக்க மாட்டேங்குது. வாரத்துல ரெண்டு நாள் கிடைச்சா அதிர்ஸ்டம். எங்களுக்கே சொந்தமா நீர் சுத்திகரிப்பு மையம் இருக்கு – ஆனால், அதில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு லிட்டருக்கு 25 பைசா ஆகும். தண்ணீர் இல்லாம ஒரு நாள் மிசினை நிறுத்தினா நாற்பதாயிரம் நட்டமாகும். இந்த நட்டத்தை தவிர்க்கவாவது மிசினை ஓட்டியாக வேண்டியிருக்கு. இது புலிவாலை பிடிச்ச கதை சார். விடவும் முடியாது, பிடிச்சிகிட்டே ஓடறதும் ஆபத்து…” என்கிறார் குலோத்துங்கன்.
குலோத்துங்கனின் நிறுவனம் தினசரி நான்கு டன் துணிகளுக்கு பிரிண்ட் அடிக்கும் உற்பத்தித் திறன் கொண்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான நாட்கள் முழு உற்பத்தித் திறனோடு இயக்குவதில்லை. கடந்த இருபதாண்டுகளில் இந்த நிறுவனத்தில் லாபம் சுமார் 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 100 தொழிலாளிகள் வேலை செய்யும் இந்நிறுவனத்தை இழுத்து மூடி விட்டால் நூறு குடும்பங்களின் நிலை கேள்விக்குள்ளாகி விடும் என்கிற கவலை குலோத்துங்கனிடம் வெளிப்பட்டது.

ஒருபக்கம் உற்பத்திக்கான மூலதன உள்ளீடு அதிகரித்துக் கொண்டே செல்ல, இன்னொரு புறம் துணிகளை இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்முதல் விலையைப் படிப்படியாக குறைத்து வருகின்றன. அரசோ தண்ணீர் போன்ற அத்தியாவசிய வசதிகளையும் கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றது.
இதை விடச் சிறிய நிறுவனங்களின் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. நாங்கள் ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு கண்ணனைச் சந்தித்தோம். சாயமேற்றி, பிரிண்ட் செய்த பின் துணிகளைத் தைப்பதற்கு முன் துவைத்துக் கொடுக்கும் நிறுவனம். 12 தொழிலாளிகள் இரண்டு சிப்டாக பணிபுரிகின்றனர். சொந்தமாக நீர் சுழற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.

”தண்ணிக்காக மட்டும் மாசம் நாற்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகுது சார். பதினெட்டு லட்சம் செலவுல ஆர்.ஓ பிளாண்ட் ஒன்னு போட்டிருக்கோம். இதை நடத்தவே மாசம் ஐம்பதாயிரம் செலவாகும்.. எல் & டி காரன் கிட்டே தண்ணீர் இணைப்பு கேட்டா மெயின் ரோட்டிலேர்ந்து பைப் இழுக்கிற செலவை நீயே பார்த்துக்கன்னு சொல்லிட்டான். அதுக்கு எப்படியும் ஏழு லட்சம் செலவாகும். அவ்வளவு செலவு செய்தாலும், முறையா தண்ணீர் தரமாட்டான்” என்கிறார் கண்ணன்.

தொடர்ந்து குறைந்து வரும் கொள்முதல் விலையால் குறைந்து கொண்டே செல்லும் லாபம், தண்ணீர் பற்றாக்குறை என முதலாளிகளின் கழுத்தைச் சுற்றிலும் கத்தி இருந்தாலும், நிலைமையைச் சீர்செய்வதற்கு உறுதியான கோரிக்கைகளோ போராட்டங்களோ எழவில்லை. மாறாக, மூலதன உள்ளீட்டையும் லாபத்தையும் ஈடுகட்ட தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிகின்றன. இன்றைய நிலையில் திருப்பூரில் ஒரு சிப்ட் வேலை என்பது குறைந்தபட்சம் 12 மணி நேரமாக உள்ளது. வடமாநிலத் தொழிலாளிகள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்வதால், குறிப்பிட்ட உற்பத்தி இலக்கை அடைவதற்காக நேரம் காலமின்றி வேலை செய்கின்றனர்.

தண்ணீர் பஞ்சத்தால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும், திருப்பூர் தொழிலாளிகளின் அசுரத்தனமான உழைப்பு ஒன்று மட்டுமே இன்றைய தேதியில் அந்நகரைக் காப்பாற்றி நிலை நிறுத்தியுள்ளது. நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட நேரமின்றி வேலையின் பின்னே மக்கள் ஓடுவதாலேயே அரசு நிர்வாகம் திருப்பூரின் தண்ணீர் பற்றாக்குறையை இடக்கரத்தால் அலட்சியமாக கையாள்கின்றது – ஏனெனில், தாகத்தில் மரணிக்கும் நிலை வரும் வரை புரட்சி வெடிக்கப் போவதில்லை என்பதை அரசு உணர்ந்தே இருக்கிறது.

தண்ணீர் பஞ்சமும், அரசின் துரோகத்தனமும், முதலாளிகளின் பாராமுகமும், இடம்பெயர்ந்த தொழிலாளிகளின் கொல்லும் மௌனமும் திருப்பூரைக் விசக் கொடுக்குகளாக சுற்றி வளைத்துள்ளன. இந்தத் தேக்க நிலையை ஒரு மாபெரும் மக்கள் போராட்டமே உடைத்தெறிய முடியும். தண்ணீர் பிரச்சினை எல்லை மீறிச் சென்று விட்ட நிலையில், தற்போது ஆங்காங்கே சிறு அளவில் மக்கள் போராட்டங்களும் பரவலாக முணுமுணுப்புகளும் கேட்கத் துவங்கியுள்ளன – இது தீர்மானகரமான வடிவங்களை எடுப்பது ஒன்றே திருப்பூருக்கு விடிவு காலத்தைக் கொண்டு வரும்.
திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதா, உருவாக்கப்பட்டதா? மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் நிலை என்ன?
திருப்பூர் பலைவனமாக்கப்பட்ட வரலாறு…
(தொடரும்)
– வினவு செய்தியாளர்கள்

பா.ஜ.க.வின் அரியானா முதலமைச்சர் கட்டார், மே நாளை இனி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப் போவதில்லை என்றும் விசுவகர்மா தினத்தைத்தான் இனி கொண்டாடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. மே தினத்தைத் தடுத்தால் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் செயலற்றுப் போய்விடாது.
வேலை நீக்கம், பொய்வழக்குகள், சிறை ஆகியவற்றை மீறி, கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு தருகிறோம்.

பீகாரில் போராடிய தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு!
பீகாரின் மோட்டிஹரி நகரில் உள்ள பிர்லாவுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 2002–2005 காலகட்டத்தில் அங்கு வேலை பார்த்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளமும், கரும்பு சப்ளை செய்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கரும்புக்கான பணமும் கொடுக்காமல் 2005-ஆம் ஆண்டு மூடப்பட்டது அந்த ஆலை. இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிர்லா நிறுவனம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், அவர்களுக்குத் தர வேண்டிய பணத்தை பிர்லா நிறுவனம் தரவில்லை.
இது குறித்து மனு கொடுத்தும், பல்வேறு போரட்டங்கள் நடத்தியும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 11 அன்று ஆலை வாயிலில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினர். அரசின் அலட்சியத்தையும், பிர்லா நிறுவனத்தின் இரக்கமற்ற போக்கையும் கண்டித்து இரண்டு தொழிலாளர்கள் தீக்குளித்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்த செய்தியறிந்ததும், தொழிலாளர்களும் விவசாயிகளும் கற்களைக் கொண்டு ஆலையைத் தாக்கினர். அத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 24 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும் அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல், போராட்டம் தொடரும் என விவசாயிகளும் தொழிலாளர்களும் அறிவித்துள்ளனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் கட்டியமைத்திருக்கும் இந்த ஒற்றுமை முன்னுதாரணமானது.

அரியானா அரசைப் பணிய வைத்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!
அரியானா மாநிலப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரியானா அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல்-9 முதல் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதல் 3 நாட்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்திய அரியானா அரசு, பிறகு தொழிலாளர்களை மிரட்டும் விதமாக 120 பேரை இடைநீக்கம் செய்தது. தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, புதிய போக்குவரத்துக் கொள்கையைக் கைவிடுவதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் அரியானா அரசு ஒப்புக் கொள்ள நேர்ந்தது.

அரசைப் பணிய வைத்த பெங்களூரு அங்கன்வாடித் தொழிலாளர்களின் போராட்டம்!
கடந்த மார்ச் மாதம் அங்கன்வாடியில் வேலை பார்க்கும் ஊழியர்களும், அங்கன்வாடி உதவியாளர்களும் ஊதிய உயர்வு வேண்டி பெங்களூருவின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 22-இல் தொடங்கி 20 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தின் உறுதியால் கர்நாடக காங்கிரசு அரசு பணிந்து போனது. இப்போராட்டத்தின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.6,000-லிருந்து ரூ.8,000-மாகவும், உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.3,500-லிருந்து ரூ.4,500-ஆகவும் உயர்த்தப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களின் இடைவிடாத போர்க்குணமிக்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.
ராஜஸ்தான்: ஒப்பந்தத் தொழிலாளிகளுக்காகப் போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!
ராஜஸ்தான் மாநிலம் தாருஹெராவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலை, ஹீரோ, ஹோண்டா, யமஹா போன்ற நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 388 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது ஓமாக்ஸ் நிறுவனம். பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் அந்நிறுவனத்தில் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை பார்த்தவர்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஜய் பாண்டே என்ற 35 வயது இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அவர் மனநோயாளி என்றும் அவதூறு செய்தது நிர்வாகம். வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பாண்டேயின் குடும்பத்தாருக்கு நட்டஈடு தர வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஓமாக்ஸ் நிறுவனத்தின் வாயிலில் அஜய் பாண்டேயின் சடலத்தைக் கிடத்தி போராடத் தொடங்கினர். ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். ரிக்கோ ஆட்டோ பிட், டாய்கின் போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொள்ளவே நிர்வாகம் பணிய வேண்டியதாயிற்று.
அஜய் பாண்டே குடும்பத்தினருக்கு 5.5 லட்சம் ரூபாய் நட்டஈடு கொடுப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வது குறித்து தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னர் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட 34 நிரந்தரத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து பழி வாங்கியிருக்கிறது, ஓமேக்ஸ் நிர்வாகம்.

டில்லி அரசின் மெத்தனத்தைக் கலைத்த துப்புரவுத் தொழிலாளர்கள்!
டில்லி மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 17,000 தொழிலாளர்கள் உட்பட சுமார் 25,000 மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்த டில்லி மாநகராட்சியைக் கண்டித்து, கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர், துப்புரவுத் தொழிலாளர்கள். வேலை நிறுத்தம் தொடங்கிய ஐந்தே நாட்களில் டில்லி நகரமே குப்பைக் காடானது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டு டில்லி அரசையும், மத்திய அரசையும் இப்பிரச்சினைக்கு உடனடியாக எப்படியேனும் தீர்வு காணும்படி வலியுறுத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த டில்லி அரசு, தொழிலாளர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கியதோடு, இனி சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது என உறுதியளித்தது. சுமார் 11 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின் தாக்கம் துப்புரவுப் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் ,அவர்களது வாழ்வின் அவலத்தையும் டில்லி நகரவாசிகளுக்கு உணர்த்துவதாக அமைந்தது.
ஜார்க்கண்ட் : பா.ஜ.க. அரசில் துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாகச் சம்பளமில்லை!
சுரங்கப் பகுதி வளர்ச்சிக் குழுமம் என்ற அமைப்பு சுரங்கப் பகுதிகளின் குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளைப் பராமரிக்கின்ற சுமார் 1,150 ஊழியர்களைக் கொண்ட அரசுத்துறை. இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக முறையாக மாதச் சம்பளமே தரப்படவில்லை. இதன் காரணமாக, இரண்டு ஊழியர்கள் பட்டினியால் இறந்திருக்கின்றனர். கனிம வளம் நிறைந்த அந்த மாநிலத்தில் காசுக்கு என்ன பஞ்சம்? மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கும் பழங்குடி மக்களைக் காட்டை விட்டு விரட்டுவதற்கும் பணத்தைக் கொட்டுகின்ற பா.ஜ.க. அரசாங்கத்திடம் துப்புரவுத் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையாம். இதுதான் மோடியின் சுவச் பாரத்.
குஜராத்தில் தொழிலாளிகள் நடந்து போனால், முதலாளிக்கு பயமாம்!
குஜராத்தில் சனந்த் நகரில் உள்ள டாடாவின் நானோ கார் தொழிற்சாலையில் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க மறுத்து வருகிறது டாடா நிர்வாகம். அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கும் நிர்வாகம், தொழிலாளிகளுடைய ஊதிய உயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளாக மறுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கம்பெனி பஸ்ஸில் ஏறமாட்டோம், நடந்தே வீடு செல்கிறோம் என்று அறிவித்தார்கள் தொழிலாளர்கள். பேருந்து செலவு மிச்சம் என்று மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையடைந்திருக்கிறது டாடா நிர்வாகம். கூட்டமாக நடந்து போகக்கூடாது என்று தொழிலாளிகளுக்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசின் மாவட்ட நிர்வாகம். தொழிலாளிகள் கூட்டமாகச் சேர்வது பற்றி அவ்வளவு பயம், முதலாளி வர்க்கத்துக்கு! தொழிலாளிகளுக்கும் ஐ.டி. ஊழியர்களுக்கும் “பிக் அப் – டிராப்” வசதிகளை நிர்வாகம் செய்து கொடுப்பதற்கான காரணம் என்னவென்பது, 144 போடும் போதல்லவா புரிகிறது!
தொழிற்தகராறு சட்டத்தையே ஒழிக்க பா.ஜ.க. வின் சதித்திட்டம்!
தொழிற்தகராறு சட்டம் என்று அழைக்கப்படும் சட்டத்தின்கீழ், தொழிற்சாலை, தொழிலாளி என்ற சொற்களுக்கான விளக்கத்தைக் கடந்த 1978-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வரையறுத்திருக்கிறது. அந்த அடிப்படையில் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் மருத்துவமனை ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் வரையிலான சேவைத்துறைகள் சார்ந்தவர்களும் தொழிற்தகராறு சட்டத்தின்கீழ் வருவதால், குறைந்தபட்ச ஊதியம், பணி உத்திரவாதம் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுகின்றனர். சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய ஆட்குறைப்பின்போது, ஐ.டி. ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமை கிடையாது என்று அந்நிறுவனங்கள் கூறியதை எதிர்த்து வழக்கு தொடுத்து, ஐ.டி. நிறுவனங்களும் தொழிற்தகராறு சட்டத்தின் கீழ்தான் வருகின்றன என்றும் அந்த ஊழியர்களுக்கும் தொழிற்சங்க உரிமை உண்டு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
“தொழில்” என்பதற்கான பொருளை மறு வரையறை செய்வதன் மூலம், 1978 தீர்ப்பு தொழிலாளிகளுக்கு அளிக்கும் உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால், தொழிலாளி வர்க்கம் தன்னை எதிரி என்று அடையாளம் கண்டுவிடும் என்ற காரணத்தினால், அந்த வேலையை நீதிமன்றத்தின் மூலம் சாதித்துக் கொள்வதற்குச் சதித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை தவிர, மற்ற அனைத்தையும் இச்சட்டத்தின் வரையறையிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அதன் பொருட்டு 1978 தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான அரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளன. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் தவிர, மற்ற எல்லாத் தொழில்களையும் அமைப்பு சார்ந்த தொழில்கள் என்ற வரையறையிலிருந்தே நீக்குவதுதான் இவர்களது நோக்கம்.
-கதிர்
புதிய ஜனநாயகம், மே 2017

நாயைக் கொல்வதென்றாலும் சட்டப்படிதான் கொல்வாம் என ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்கள் தமது நேர்மைக்குத் தாமே சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டது போல, நீட் தேர்வை நியாயப்படுத்த தரம், தகுதி, தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என வாதங்கள் அடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மோடி அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், உச்ச மற்றும் உயர்நீதி மன்றங்கள் ஆகியவை எல்லாம் தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அப்பழுக்கற்றவர்கள் போலவும், நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தரம், தகுதிக்கு எதிரான ஊழல் பேர்வழிகள் போன்றும் ஒரு சித்திரத்தைக் கட்டமைக்கின்றன.

இந்தியாவிலேயே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய முறைகேடு வியாபம் ஊழல்தான். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த ஊழலின் சூத்திரதாரிகள் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். யோக்கியசிகாமணிகள். அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மனைவி என இந்த ஊழலில் கைநனைத்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் பட்டியல் நீளமானது. இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர்கள், முக்கிய சாட்சிகள் எனப் பலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, இந்த ஊழலின் தடயங்களை மறைக்க நடந்த முயற்சிகள் தனியொரு கிரிமினல் வரலாறாக நீள்கிறது.
இந்திய மருத்துவ கவுன்சிலின் யோக்கியதை என்ன? தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை மாநில அரசிடம் ஒப்படைத்து, அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டும்தான் அந்த இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிறது, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதி. இந்த விதியை கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசும் பின்பற்றவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்த முறைகேட்டைக் கண்டு கொள்ளவில்லை. இந்த முறைகேட்டுக்காக சென்னை உயர்நீதி மன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவும், இந்த இழிநிலைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் காரணம் என்றே குற்றம் சாட்டியிருக்கிறது. போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து பல நூறு கோடி லஞ்சம் வாங்கிய இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய், 2010-இல் சி.பி.ஐ.யால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். டாக்டர் தொழில் செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேசாயை மீண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நியமித்தது குஜராத் பல்கலைக்கழகம்.
ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்கு முன்பே தீர்ப்புக் கூறுவது ஊழலுக்கு நிகரான முறைகேடு. நீட் தேர்வு வழக்கில் இம்முறைகேட்டினைத் துணிந்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். நீட் தேர்வு தேவையா என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, இத்தேர்வு தேவையில்லை எனப் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மைய அரசு வழக்கு போட்டது. உச்ச நீதிமன்றம் அதனை இன்னும் விசாரிக்கவே இல்லை. இருப்பினும் அதற்குள் நீட் தேர்வை அமல்படுத்துவது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முடிவு அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு சரியா, தவறா என்பது இனிமேல்தான் விசாரிக்கப்படும்.

புரியும்படி சொல்வதென்றால் இப்படியும் கூறலாம். தற்போது சசிகலா போட்டுள்ள சீராய்வு மனு விவகாரத்தில் சசிகலாவை விடுதலை செய்து விட்டு, அதன் பிறகு, அவரை விடுவித்தது சரியா, தவறா என்று பொறுமையாக விசாரித்துத் தீர்ப்பு கூறினால், அது எத்தகைய கேலிக்கூத்தாக இருக்குமோ அதைவிடப் பெரிய கேலிக்கூத்து இது.
தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்தாக வேண்டும் என்ற தார்மீக ஆவேசம் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் அவ்வளவு அவசரப்பட்டது என்பதை அறிவோம். கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்தபின், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் தலையிட மைய அரசு மறுத்துவிட்டது. இதனால் வழக்கம் போல கொள்ளை நடந்தது. இதன் மீது உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அடுத்த ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என உத்தரவு போட்டு நழுவிக் கொண்டது. இன்னொருபுறம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்த அனுமதிக்குமாறு அரசிடம் மனு போட்டுவிட்டன.
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வு பயிற்சிக்கு 40,000, 50,000 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில், நீட் தேர்வு கல்விக் கொள்ளையை ஒழிக்கவில்லை, மாறாக, அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதோடு, கொள்ளைக்குப் புதிய வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு பத்தாம்பசலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்க்கப்படுவது போலக் கற்பிதம் செய்துகொண்டு, தமிழக மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களை முறையாக நடத்தினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஊதித் தள்ளிவிடுவார்கள், தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.-க்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றெல்லாம் நீட் தேர்விற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நீட் தேர்வை எதிர்ப்பதற்குத் தமிழக மாணவர்களின் திறமையோ, தமிழகப் பாடத் திட்டத்தின் தரமோ முதன்மையான காரணமல்ல. நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது. இந்த அநீதியை மிகவும் நைச்சியமான வழியில் மைய அரசும், நீதிமன்றங்களும் செய்கின்றன.
மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது; மாநில அரசு நிர்வாகம் ஊழல்மயமானது, சி.பி.ஐ. போன்ற மைய அரசின் அமைப்புகள் அப்பழுக்கற்றவை; மாநிலக் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பியவை, தேசியக் கட்சிகள் நேர்மையானவை என்றவாறு ஒரு பொய்யை தமிழகப் பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதன் நீட்சிதான் நீட் தேர்வுத் திணிப்பு.

நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பறித்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த இட ஒதுக்கீடை இனி யார் அனுபவிப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. நீட் தேர்விற்கு முன்னதாகவே, அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பறிபோய்விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வெறும் இருநூற்று சொச்சம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தை நீட் தேர்வின் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தும். குறிப்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், 40,000, 50,000 கொடுத்து தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் சேர வாய்ப்புள்ள நல்ல வசதி படைத்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் மருத்துவராக முடியும்.
மேலும், வட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கக் கூடும். தமிழகத்திலுள்ள ரயில்வே அலுவலகங்களிலும், மைய அரசின் அலுவலகங்களிலும் வட இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை பெருத்துள்ளதைப் போன்ற நிலையைக் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தமிழக மக்கள் காணக் கூடும்.
நீட் தேர்வும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, ஏழை நோயாளிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் நிலையை உருவாக்கும். தரமான, தகுதியான மருத்துவர்கள் என்பது இறுதியில் ஏழை மாணவர்களுக்கும் ஏழை நோயாளிகளுக்கும் எதிரானதாக அமைகிறது.
நீட் தேர்வானது, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனியுரிமையாக்குகிறது. பணக்கார மாணவர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு என்ற புதிய சமூக நீதியை மருத்துவக் கல்வியில் புகுத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாக கூறிக்கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு அதற்கு நேர் எதிரான விளைவையே அளித்திருக்கிறது. இந்த பணக்கார வாரிசுகளும், பார்ப்பன – ஆதிக்க சாதி மேட்டுக்குடியினரும் மருத்துவர்களாகி அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து ஏழைகளுக்குச் சேவை செய்யப்போவதில்லை. அமெரிக்காவுக்குப் பறப்பது எப்படி என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும்.
மருத்துவக் கல்வியின் தரத்தையும் மருத்துவ சேவையின் தரத்தையும் மருத்துவர் தொழிலின் மாண்பையும் காப்பாற்றுவதற்குத்தான் அரும்பாடுபடுவதாக மோடி அரசும் உச்ச நீதிமன்றமும் கூறிக் கொள்கின்றன. அந்தக் கனவு நிறைவேறுமா?
2016 –17ஆம் ஆண்டுக்கான உலக மருத்துவக் கழகத் தலைவராக கேதன் தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது சி.பி.ஐ. போட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாகப் பொய் சொல்லி, தேசாயை இந்தப் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அசிங்கமான உண்மையை ராய்ட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராய்ட்டர் புலனாய்வு தேவைப்படாத வேறொரு உண்மையும் இருக்கிறது. 2013-இல் கேதன் தேசாய்க்கு குஜராத்தில் மறுவாழ்வு தரப்பட்டபோது, அங்கே முதல்வராக இருந்தவர் திருவாளர் மோடி. தேசாய்க்கு சர்வதேச கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், பிரதமராக இருப்பவரும் திருவாளர் மோடிதான்.
தகுதி வாழ்க, திறமை வாழ்க, நல்லொழுக்கம் வாழ்க, நீட் வாழ்க! பாரத் மாதா கி ஜெய்!
-அழகு
புதிய ஜனநாயகம், மே 2017