Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 527

வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது – லண்டன் வாழ்க்கை !

21

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 முதல் 11:00 மணி வரை, ரமோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லண்டனின் வணிக இதயமான ஃபின்ஸ்பரி சதுக்கத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடத்தில் வேலை செய்கிறார். கடைசி ஊழியர் சுழற்கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியேறும் போது அவர் தமது சீருடையை அணிகிறார்.

மாதிரிப் படம்

பின்னர் அவர் சுத்தம் செய்யத் தொடங்குகிறார். ஐந்து மாடிகளை மற்றொரு பணியாளருடன் தூசுறிஞ்சியைக் (Vacuum Cleaner) கொண்டு எல்லா குப்பைகளையும் அகற்றுகிறார். மேலும், சமையலைறைகளில் பெரும்பாலும் அவர் வரும் நேரத்தில் அசுத்தமும் அருவருப்புமாக இருக்கும் தட்டுகள் கருவிகளை கழுவி உலர்த்துகிறார். அவருடைய வேலையை முடிக்க இரண்டு மணிநேரம் மட்டுமே இருக்கிறது.

கழிப்பறைகளை சுத்தம் செய்வது அவருக்கு விருப்பக்குறைவான வேலை என குறிப்பிடுகிறார். “மனிதக் கழிவுகளின் நாற்றத்தை விட வெளுப்பான்கள் (Bleach) நெடி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்” என்று 36 வயதான அவர் விளக்குகிறார். மதிய நேரத்தில் மற்றொரு சுத்தம் செய்யும் வேலையும் இருப்பதால், இது களைப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் ரமோனா காது கேட்பொறியில் (earphones) சல்சா இசையைக் கேட்பதன் மூலம் தனது மனநிலையை சமப்படுத்த முயல்கிறார். அவரைக் கடந்து அலுவலகத்திலிருந்து வெளியேறி செல்வோரின் விகாரமான வாழ்த்துக்களை தவிர, ரமோனா அரிதாகவே யாருடனும் பேசுகிறார். ஆனால் அவர் அதுபற்றி கவலைப்படவில்லை என்கிறார். “என் வாழ்க்கை இப்போது நன்றாக இல்லை, ஆனால் நான் லண்டனில் முதன்முதலாக வந்தபோது இருந்ததை விட மிகவும் நன்றாக இருக்கிறது” என்கிறார் அவர்.

இளஞ்சிவப்பு கன்னங்களையும் பொன்னிற பின்னப்பட்ட கூந்தலையும் கொண்ட மகிழ்ச்சியான பெண்ணான ரமோனா, சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேடி லண்டனுக்கு வந்தார். அவர் தனது தாய்நாடான பொலிவியாவை விட்டு, 2006-ம் ஆண்டில் எவா மொராலஸ் அதிபராவதற்கு சிறிது முன்னர், நாட்டின் வறுமை விகிதம் 38.2 சதவீதமாக உயர்ந்திருந்த போது வெளியேறினார். அவர் தனது சகோதரி மற்றும் உறவினருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் குடியிருப்பைப் பகிர்ந்து கொண்டு, முறைசாரா அடிப்படையில் பல்வேறு அலுவலகங்களில் இரவில் சுத்தம் செய்யும் வேலைகளை செய்துவந்தார். அவர் சக லத்தீன் அமெரிக்கர்களிடமிருந்து வாய்மொழியாக வேலை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டார்.

“நான் முதலில் துவங்கிய போது சீருடைகள் இல்லை, ஒப்பந்தங்கள் இல்லை, எதுவுமே இல்லை” என ரொக்கப் பணமாக ஊதியம் பெற்றதையும் ரமோனா நினைவு கூர்கிறார். “  சில சமயங்களில், ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்தபின்  ஊதியம் எப்போது கொடுக்கப்படும் என்பதை அறிய நான் மேலாளரை அழைத்தபோது, அவர் ‘அப்படியானால் உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?’ என்று கேட்டிருக்கிறார்”. அவர் தனது கணவரைக் கூட இன்னும் சந்திக்கவில்லை. மேலும், ஆளரவமற்ற வேளையில் பணிபுரிவதால் அவர் எவருடனும் பேசாமல் நாட்கள் அல்லது வாரங்கள் கூட கடந்து போகும்.

லண்டனில் கண்ணுக்குத் தெரியாத மற்றும் பாதிப்படைய ஏதுவான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளில் ரமோனாவும் ஒருவர். அவரது பிரிட்டன் பயணம், அத்தொழிலிலுள்ள மற்ற அனைவரின் வகைமாதிரியாகும். அவர்கள் பெரும்பாலும் வறுமையிலிருந்து விடுபடும் வழியைத் தேடி சுற்றுலாப் பயணிகளாக பிரிட்டனுக்குள் நுழைகின்றனர். முதலில் முறைசாரா ஏற்பாடுகளில் சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர். அது அவர்களை பணிப்பாதுகாப்பற்ற மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்படும் நிலைக்குத் தள்ளுகிறது. ஆவணங்களின்றி புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான சட்ட ஆலோசனைக்கு சில வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்வது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

ஈக்வாடர் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்பானிய குடிமகனான தனது கணவரை திருமணம் செய்து கொண்ட பின் இங்கிலாந்தில் குடியுரிமை பெற தகுதிபெற்றார், ரமோனா. ஆனால் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக நுழையும் அந்த தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை மிகவும் கடினமானதாகவே இருக்கும். அல் ஜசீராவுடன் பேசிய சுத்தப்படுத்தும் தொழிலாளிகள் பலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தை கொள்கையின் அடிப்படையில் இங்கிலாந்திற்குள் நுழையும் உரிமையைப் பெறுவதற்காக மற்ற ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும் சில ஆண்டுகள் வேலைசெய்து சில பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர். இந்த பத்திரிக்கையாளர் பேசிய ஒன்பது சுத்தப்படுத்தும் தொழிலாளிகளும் இந்த நேர்காணலின் போது இங்கிலாந்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தனர்.

ஆங்கில வகுப்புகள்

ரமோனா எதிர்கொள்ளும் நிச்சயமற்ற ஆபத்தான நிலை குளோரியா(43) மற்றும் டெஸ்டெமோனா (47) ஆகிய கொலம்பிய சகோதரிகள் எதிர்கொள்வதை ஒத்திருக்கிறது. ஆனால் அவர்கள் லண்டனை வந்தடைந்த பாதை மிகவும் கடினமானது. 2001-ல் அவர்கள் ஸ்பெயினுக்கு தங்களை கடத்திக் கொண்டனர். அங்கு மூன்றாண்டுகள் முன்புவரை ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பழம் சேகரிப்பவர்களாகவும், வீட்டை சுத்தப்படுத்துபவர்களாகவும் வேலை செய்தனர்.

மாதிரிப்படம்

ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையைப் பெற்ற பின் லண்டனில் உள்ள மைத்துனர் ஒருவர் அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துள்ளார். அவர்கள் சிறிது காலத்திற்கு அவருடன் தங்கியிருந்து, வர்த்தக சுத்தப்படுத்துபவர்களாக பணியாற்றத் தொடங்கினர்.

“வாழ்க்கை கடினமானது,” குளோரியா ஸ்பானிய மொழியில் கூறுகிறார். “புனித பால் தேவாலயத்திற்கு அருகிலிருக்கும் எனது பணியிடத்திற்கு செல்ல பேருந்தைப் பிடிக்க தினமும் அதிகாலை 1 மணிக்கு எழுகிறேன். எனது தினசரி வேலை நேரங்கள் 2-லிருந்து 4 மணிக்குள் மற்றும்  5-லிருந்து 7 மணி வரை”.

“நாங்கள் முதலில் இங்கு வந்தபோது, நீலக் கண்களும் பொன்னிறமுடைய கைநிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் நிறைந்த நகரம் லண்டன் என்று எண்ணியிருந்தோம். எங்களைப் போன்ற மற்ற ஏழை மக்களும் இங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.” சொல்லிவிட்டு டெஸ்டெமோனா சிரிக்கிறார். இரு சகோதரிகளுக்கும் ஆங்கிலம் பேச தெரியவில்லை.

ஒரு பல்பொருள் அங்காடியில் மளிகை சாமான்களை வாங்கச் செல்வதுகூட மிகக்கடினமாக இருக்கிறது, ஏனென்றால் உதவி கேட்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று குளோரியா கூறுகிறார்.

2016, செப்டம்பரில் கொலம்பியாவின் காலி நகரில் இவர்களது மூத்த சகோதரி இறந்துவிட்டார். ஆனால் பணமின்மையால் இவர்களால் சவ அடக்கத்திற்கு செல்ல முடியவில்லை. மேலும், ஊருக்கு சென்றால் இங்கிலாந்திற்கு திரும்ப முடியாது என்ற அச்சமும் குளோரியாவுக்கு இருந்தது. பெரும்பாலான நேரம், எங்கு வேலை செய்யப்போகிறோம் என்பது முதல்நாள் வரை தெரியாது என்கின்றனர் சுத்தப்படுத்தும் தொழிலாளிகள்.

“நான் உண்மையாகவே ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினேன், ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வைத்த பிறகு, இறுதியாக 1,400 பவுண்டுகள் செலுத்தி (சுமார் 1,17,041 ரூபாய்) கட்டணம் செலுத்தி ஒரு மொழி மையத்தில் காலை வகுப்புகளுக்குச் சென்றேன்” என்று ராமோனா கூறுகிறார். அவர் படிப்பை முடிக்கத் தவறிய காரணத்தினால் தான் செலுத்திய கட்டணத்தை மிகச்சரியாக நினைவில் வைத்துள்ளார்.

“நான் ஒவ்வொரு பாடத்தோடும் தூங்கினேன். இரவில் 14 மணி நேரம் நான் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கவனம் செலுத்த கடினமாக இருந்தது.” அதன் பின் ரமோனாவின் முதலாளிகளில் ஒருவன் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஊதியமளிக்காத துன்பம் மிகுந்த காலம் வந்தது.

ஒப்பந்த நிறுவனத்திற்கு அழைத்த போது எந்த பதிலுமில்லை. இறுதியாக மேலாளரை பிடித்துக் கேட்ட போது, அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அவருக்கு சொல்லப்பட்டது.

“உன் ஒப்பந்தம் முடிந்துவிட்டது இனி அழைக்காதே என்று அவர் சொன்னார்” வருத்தத்துடன் சொல்கிறார் ரமோனா. அந்த நேரத்தில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தினால் பொலிவியாவுக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவரது சேமிப்பு ஒரு ஆபத்தான வீதத்தில் குறைந்து கொண்டிருந்தது. மேலும், பஸ் கட்டணங்களை சேமிப்பதற்காக ஒரு அலுவலகத்திலிருந்து  மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு மணிநேரமானாலும் கூட நடந்தே சென்றார். சட்ட உதவி பெறுவதையோ அல்லது பணியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அம்பலப்படுத்துவதையோ பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. “வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது” என்று அவர் கூறுகிறார்.

டெஸ்டெமோனாவும் குளோரியாவும் தங்களது வேலையை ஒரு பொறியாக (Trap) பார்க்கிறார்கள்.  “எங்களது வீட்டில் தொலைக்காட்சி இல்லை, இணையம் இல்லை. எங்களது ஓய்வு நேரத்தில் தூக்கம் பிடிக்கவில்லையென்றால், பூங்காவிற்கு சென்று வெளியே குளிரில் உணவருந்துவோம்” என்கிறார் டெஸ்டெமோனா.  “இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” கேட்கிறார்.

– தொடரும்

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம்: ஜான்சன்

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)

0

பாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.

அதேபோல “ஆரிய – பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவம்” மார்க்சிய – லெனினிய தத்துவத்துக்கு எதிரானது, உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்ணாசிரம, சாதீய அடிப்படையிலானது என்பதை சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்யகோடிகளும் ஒப்புக் கொண்டாலும் “அறிவார்ந்த சிந்தனைப் பணி”, “தத்துவ ஞானம்”, “பாரதீயத் தத்துவம்” என்று கூறி ஏற்றிப் போற்றுகின்றனர்.

Agnihotra
“ஆரிய – பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவம்” மார்க்சிய – லெனினிய தத்துவத்துக்கு எதிரானது

வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றின் சமூகப் பங்கு பற்றி அந்தப் போலி மார்க்சிஸ்டுகளே “நால்வருண முறையின், இந்திய அடிமை முறையின் தத்துவங்கள்தான் வேதங்களும் உபநிடதங்களும், பிராமண ஆதிக்கத்திலான சாதீய முறையின் தத்துவங்களும் இவைகள்தான்.” (மார்க்சிஸ்ட்”93, அக் பக்: 34) என்கின்றனர்.

“வேதங்களின் இறுதிப்பகுதி என்ற முறையில் பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என்று ஏராளமான புதிய தத்துவ விளக்கங்களை உருவாக்கியுள்ளனர். இந்த வளர்ச்சிப் போக்கில் வேத காலத்தின் – வேதமதத்தின் எளிமை மறைந்தது. பிராமண ஆதிக்கம் வலுவடைந்தது. இந்த புதிய தத்துவங்கள் எல்லாம் பிராமண ஆதிக்கத்தின் தத்துவ அடிப்படையாக அமைந்தது.”

“இக்காலத்தில் தான், பிரம்மம் தான் உண்மை உலகு மாயை என்று ஒரு உபநிடத விளக்கத்தை – பிரம்ம சூத்திரம் என்ற விளக்க உரையை பாதராயணன் (வேத வியாசர்) உருவாக்கினார். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பிற்காலத்தில் சங்கராச்சாரியார் தன்னுடைய பிரம்மசூத்திரத்தை எழுதினார். உபநிடத காலத்தில் தான் முன்பிறப்பு. மறுபிறப்பு, கருமபலன், தலையெழுத்து, நரகம், சொர்க்கம் போன்ற தத்துவங்கள் எல்லாம் பரப்பத் தொடங்கினார். உபநிடத காலத் தத்துவங்கள் இந்திய சமுதாயத்தில் ஒரு பின்னடைவை அல்லது தேக்க நிலையை உருவாக்கியது என்று கூறினால் மிகையாகாது.”

உபநிடத காலத்தைத் தொடர்ந்து, பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய லோகாயத, சார்வாக, ஆஜீவக, புத்த, சமண, தத்துவங்களின் வீழ்ச்சியும், சாதீய அமைப்பிலும், புராதன ஆச்சாரங்களிலும் வேரூன்றிய இந்து மதத்தின் முன்னேற்றமும் புதிய தத்துவ இயக்கத்திற்குப் பாதை திறந்து விட்டது; பழைய வைதீக ஆச்சாரங்களின் புனரமைப்பு என்ற முறையில்தான் இந்துமதம் வலுவடைந்தது; ஆனால், புதிய தத்துவ சிந்தனைகளின் புதுவடிவம் என்ற முறையில் மதத்தின் கையைப் பற்றிக் கொண்டுதான் தத்துவங்கள் முன்னேற வேண்டியிருந்தது. சங்கரன், இராமானுஜர், மத்வர் முதலிய புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் எல்லாம் உபநிடதத் தத்துவங்களையும் புராண வேதாந்தத்தையும் பகவத் கீதையையும் சனாதன தர்மங்களையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் தங்களின் தத்துவங்களுக்கு வடிவம் அளித்தனர் என்கின்றனர் போலி மார்க்சிஸ்டுகள்.

cartoon2
வர்க்க சார்பற்ற முறையில் பொதுநிலையில் நின்று மனித சிந்தனை, தத்துவார்த்த போக்கை ஆய்வு மதிப்பீடு செய்வதைப் போல பித்தலாட்டம் செய்கிறார் நம்பூதிரி.

ஆக, வேத உபநிடத காலத்திலும் அதற்குப் பின்வரும் ஆரிய – பார்ப்பன சனாதனிகளால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் எல்லாம் வர்ண – சாதி ஒடுக்குமுறைக்கான ஆயுதங்களாகவும், சமுதாய முன்னேற்றத்துக்குத் தடைகளாகவும், பிற்போக்கானவைகளாகவும் இருந்தன என்கிற முடிவுக்குத்தான் மேற்கண்ட போலிமார்க்சிஸ்டுகளின் தொகுப்பில் இருந்து வரமுடியும். ஆனால் தமது ஆரிய – பார்ப்பனத் தன்மையின் காரணமாக அவற்றையே இவர்கள் தலைசிறந்த, தன்னிகரற்ற தத்துவ அறிவுச் சாதனைகள் என்று போற்றுகின்றனர்.

“உலகில் முதன் முதலாக தத்துவ சிந்தனை வளர்ச்சி அடைந்த மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவும் கிரேக்கமும் தான் அவைகளில் முதலில் இடம்பெறும் நாடுகள். இன்று உலகில் மிகவும் முன்னேறியுள்ள ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிகவும் பின்தங்கியிருந்த காலத்தில் தத்துவச் சிந்தனையில் ஈடுபடும் அளவிற்கு இந்தியநாடு வளர்ச்சியடைந்திருந்தது.” (“93 ஜீலை, மார்க்சிஸ்ட் பக்: 29) என்று பீற்றிக் கொள்கின்றனர்.

குறிப்பாக ஆதிசங்கரனின் தத்துவ வெற்றி, பிராமணர் மற்றும் மற்ற ஆதிக்க ஜாதிகளின் வெற்றி, இந்தியச் சமுதாயத்தின் மற்ற பகுதியின் தோல்வி என்பதை சங்கரன் நம்பூதிரி ஒப்புக் கொள்கிறார். “பிராமண மேலாதிக்கத்தின் கையில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தோல்வி, கருத்து முதல்வாதத்திடம் பொருள்முதல் வாதம் அடைந்த தோல்வி ஆகியவை, இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. இது இறுதியில் தேச சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது” என்பதை நம்பூதிரி ஏற்கிறார். இருந்தாலும் இதற்குரிய தத்துவத்தை உருவாக்கிய ஆதிசங்கரனை கேரள மைந்தர், மாமுனிவர் என்று போற்றுகிறார்.

“சங்கரர் இந்தியாவின் (மேலும் உலகத்தின்) கருத்து முதல்வாத தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்தவர். அவருடைய அத்வைத வேதாந்தம், இந்திய மனித சமுதாய அறிவுக் களஞ்சியத்துக்கு அளித்த விலை மதிப்பற்ற அன்பளிப்பாகும்.” என்கிறார் நம்பூதிரி “ஆதிசங்கரனின் திறமை அசாதாரணமானது; அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். வேதங்கள், உபநிடதங்கள் அவர் காலத்தின் பல்வேறு தத்துவங்கள் ஆகிய அனைத்திலும் ஆழமான புலமைபெற்று எதிர்த்தரப்பு தத்துவ சிந்தனையாளர்களையெல்லாம் தோற்கடித்து இந்திய நாட்டின் சிந்தனைத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று நம்பூதிரியின் தமிழ்நாட்டுத் தத்துவத்தரகர் பரமேசுவரன் புகழ்கிறார்.

Shankaracharya
சங்கராச்சாரியார்

ஆதிசங்கரனின் தத்துவத்தை இவ்வளவு தூரம் தாங்கிப் பிடிப்பதற்கு ஏதோ மார்க்சிய – லெனினியத் தத்துவ அடிப்படையிருப்பதைப் போல இந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் குரு சங்கரன் நம்பூதிரி வாதிடுகிறார். “இந்தியத் தத்துவத்தின் மிக உயர்ந்த வடிவமான சங்கரனின் தத்துவம் மார்க்சிய லெனினிய இயக்க இயல் பொருள் முதல்வாதத்துக்கு எதிரானது என்றாலும் எந்த ஒரு மார்க்சியவாதியும், அத்தத்தத்துவத்தின் பரிணாம வளர்ச்சி, இந்திய சிந்தனை வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டம் என்பதையும், அது இந்திய சமுதாய வளர்ச்சியோடு பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்தது என்பதையும் காணாமல் இருக்க முடியாது” என்கிற பொது அணுகுமுறையைப் பயன்படுத்தி பின்வரும் முடிவுக்கு வருகிறார் சங்கரன் நம்பூதிரி. அவர் கேரளாவில் பிறந்தாலும் இந்திய கருத்து முதல்வாதத்தின் நல்ல அம்சங்களை முன்னுக்கு எடுத்துச் சென்ற மிக உயர்ந்த அறிஞர் என்ற பெயரையும், புகழையும் பெற்றிருந்தார். அவருடைய வாழ்க்கையையும் எண்ணங்களையும், கேரளம் மட்டும் அல்லாது, முழுமையான இந்தியாவும் உருவாக்கியது – என்கிறார்.

மார்க்சிய லெனினிய இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரான கருத்துமுதல்வாதத் தத்துவத்தையே ஆதிசங்கரன் முன் வைத்தாலும் அதை இவ்வளவு தூரம் போற்றுவதற்கு நம்பூதிரி சொல்லும் காரணம் மிகப் பெரிய தத்துவ மோசடியாகும்.

கருத்துமுதல்வாதமும், பொருள்முதல்வாதமும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒன்றுக்கொன்று எதிரான, எதிர்மறைத் துருவங்கள் அல்ல என்கிறார். அவற்றுக்கிடையிலான உறவு பற்றி பின்வருமாறு விளக்குகிறார்: “இது நிஜ வாழ்க்கையிலும், மனித சிந்தனையிலும் உள்ள எதிர்மறைகளைப் போல், கருத்துமுதல்வாத, பொருள்மதல்வாத கருத்துப் போக்குகள், இயக்க மறுப்பு நிலையை விட (Metaphysics) இயக்க இயல்முறையோடு உறவுள்ளது என்பதைக் காணத்தவறுகிறது. கருத்துமுதல் வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய எதுவுமே ஒரே நிலையில் இருப்பது கிடையாது. எப்பொழுதும் அவை ஒன்றை ஒன்று நிராகரித்து முன்னேறுவது, புதிய, புதிய வடிவங்களில் அவைகளுக்கு இடையிலான போராட்டம் நடப்பது ஆகியவை, மனித சிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆகவே, பொருள் முதல்வாதம் என்ற வகையில் அது கருத்து முதல்வாதத்தைவிட உயர்ந்தது அல்லது கருத்து முதல்வாதம் எனற வகையில் அது பொருள் முதல்வாதத்தை விட தாழ்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை.” (89 அக், மார்க்சிஸ்ட் பக்1)

சங்கரன் நம்பூதிரியின் மேற்கண்ட விளக்கமே அவரது தத்துவப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி விடுகிறது. முதலில் அவரே கருத்து முதல்வாதமும் பொருள்முதல் வாதமும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஒன்றுக்கொன்று எதிரான, எதிர்மறைத் துருவங்கள் அல்ல என்கிறார். ஐந்தே வரிகளுக்குப் பிறகு, அவை எப்பொழுதும் ஒன்றை ஒன்று நிராகரித்து முன்னேறுவது புதிய, புதிய வடிவங்களில் அவைகளுக்கு இடையிலான போராட்டம் நடப்பது ஆகியவை மனித சிந்தனையின் வளர்ச்சி விதியாகும் என்கிறார், வேறொரு இடத்தில் மார்க்சிய-லெனினிய இயக்கஇயல் பொருள் முதல்வாதம் ஆதிசங்கரனின் தத்தவத்திற்கு எதிரானது என்கிறார்.

Aryans_settling_in_Indiaஉண்மையில், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு எதிரெதிரான அம்சங்களைக் கொண்ட முரண்பாட்டின் நிகழ்ச்சிப் போக்குத்தான் மனித சிந்தனையின் தத்துவ இயலின் வளர்ச்சி விதியாகும். இவை இரண்டும் எப்போதும் எந்த இடத்திலும் எதிர்மறைத் துருவங்கள் தாம். அவை சம நிலையிலோ, இணக்கமான உறவுடனோ ஒருபோதும் நிலவ முடியாது; இரண்டில் ஏதாவது ஒன்று ஆதிக்கநிலையில் இருக்கும்; சமனற்ற, எதிரெதிரான மாறுகின்ற மோதிக்கொள்ளும் நிலை இல்லை என்றால் மனித சிந்தனை, தத்தவ இயல் வளர்ச்சிப் போக்குக்கு அடிப்படையான முரண்பாடே இல்லாமல் போகும்.

இவ்விரு தத்துவப் போக்குகளுக்கு இடையிலான முரண்பாடு மோதலுக்கு அப்பால் ஒரு பொதுநிலை, நடுநிலையில் நின்று யாருமே மதிப்பீடு ஆய்வு செய்வது முடியாது. குறிப்பாக மார்க்சிய – லெனினியவாதிகளுக்கு இது சாத்தியமே இல்லை. ஏனெனில் இரண்டு போக்குகளில், பொருள் முதல்வாதம் பாட்டாளி வர்க்க சார்புடையது; கருத்து முதல்வாதம் அதற்கு எதிரான வர்க்கங்களின் சார்புடையது. ஆனால் வர்க்க சார்பற்ற முறையில் பொதுநிலையில் நின்று மனித சிந்தனை, தத்துவார்த்த போக்கை ஆய்வு மதிப்பீடு செய்வதைப் போல பித்தலாட்டம் செய்கிறார் நம்பூதிரி. வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையிலான முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான முரண்பாட்டில் எப்படி நடுநிலை கிடையாதோ, “ஒரு வர்க்கமின்றி மற்ற வர்க்கம் கிடையாது, இரண்டும் சேர்த்து நடத்தும் வர்க்கப் போராட்டத்தில் தான் சமுதாய வளர்ச்சிப் போக்கு நிகழ்கிறது” என்று கூறி அவ்வர்க்கங்களுக்குத் தூரத்தில் நின்று மதிப்பீடு – ஆய்வு செய்ய முடியாதோ அதே போன்றதுதான் இதுவும்.

“கருத்து முதல்வாத, பொருள் முதல்வாத, கருத்துப்போக்குகள், இயக்க மறுப்பு நிலையைவிட இயக்க இயல்முறையோடு உறவுள்ளது” என்கிற வாதம் நம்பூதிரியின் இன்னொரு தத்துவப் பித்தலாட்டம். இந்த வாதத்தின் பொருள் என்னவென்றால், கருத்து முதல்வாதம் என்றாலே இயக்க இயல் முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதனால் இயக்க மறுப்பு நிலையை விடவும், (இயக்க மறுப்புநிலை பொருள் முதல்வாதத்தை விடவும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) இயக்க இயல்முறை உறவுகளை கருத்து முதல்வாதத்தை தனக்கு சமநிலை உடையதாக நெருக்கமானதாக பொருள்முதல்வாதம் மதிக்கிறது” என்கிறார். கருத்து முதல்வாதமெல்லாம் இயக்க இயல் அடிப்படையிலானது என்பதே தவறானது; இயக்க இயல் அடிப்படையிலான கருத்துமுதல்வாதமோ, இயக்க மறுப்புநிலைவாத பொருள்முதல்வாதமோ, இரண்டுமே தவறானதாம்; ஒன்றைவிட ஒன்று மேலானது, பின்னதைவிட முன்னது தனக்கு நெருக்கமானது என்று மார்க்சிய – லெனினியப் பொருள் முதல்வாதம் எப்போதுமே கருதியது கிடையாது.

கருத்து முதல்வாதம் முட்டாள்தனமானது என்று இயக்கமறுப்பு பொருள் முதல்வாதம் கருதியது; ஆனால் கருத்து முதல்வாதம் ஒரு ஒருதலைப்பட்சமாக, மிகைப்படுத்தப்பட்ட, பொருளில் இருந்தும் இயற்கையில் இருந்தும் பிரித்து அறிவின் ஒரு பகுதியை, ஒரு அம்சத்தை, அதன் பன்முகங்களின் ஒன்றை முழுமையான கருத்தாகவும் தெய்வீகமானதாகவும் ஆக்குகிறது என்று இயக்க இயல் பொருள் முதல்வாதம் கருதுகிறது. மத மூடநம்பிக்கையான கருத்து முதல்வாதத் தத்துவம் எல்லையில்லாத சிக்கல் நிறைந்த அறிவின் சாயலில் ஒன்றின் மூலமாக, மதமூடநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் பகுதியாக உள்ளது – இந்த லெனினுடைய வரையறுப்பைக் காட்டி, மனித சிந்தனையில் கருத்து முதல்வாதத்தின் பங்கை மார்க்ஸ், எங்கெல்சைப் போலவே லெனினும் மதித்தார் என்கிறார் நம்பூதிரி.

ஃபயர்பாக் மற்றும் ஹெகல்
ஃபாயர்பாக் மற்றும் ஹெகல்

இங்கே கருத்துமுதல்வாதம் பற்றிய இயக்க மறுப்புநிலை மற்றும் இயக்க இயல்நிலை எடுக்கும் பொருள் முதல்வாதிகளின் மாறுப்பட்ட, கண்ணோட்டங்களைத் தான் லெனின் விளக்குகிறார். இது எப்படி மனித சிந்தனையில் கருத்து முதல்வாதத்தின் பங்கை மதிப்பதாகும்? இதை வைத்து ஃபயர்பாகின் இயக்க மறுப்பு நிலை பொருள் முதல்வாதத்தை விட ஹெகலின் இயக்க இயல் கருத்து முதல்வாதம் மனித சிந்தனையின் வளர்ச்சியில் மேலான பங்கு வகிப்பதாக மார்க்சிய லெனினிய ஆசான்கள் மதிக்கின்றனர் என்று நம்பூதிரி புளுகுகிறார். ஹெகலின் கருத்து முதல்வாதத்தை நிராகரித்து இயக்க இயல் அணுகு முறையையும், ஃபாயர்பாகின் இயக்க மறுப்புநிலையை நிராகரித்து பொருள் முதல்வாதத்தையும் எடுத்து செழுமைப்படுத்தி இயக்க இயல் பொருள் முதல்வாதத் தத்துவத்தை உருவாக்கினார் என்பதுதான் உண்மை. ஆனால் ஹெகலின் கருத்து முதல்வாதத்தைப் போலவே ஃபாயர்பாகின் பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்து வந்ததுதான் இயக்க இயல் பொருள்முதல்வாதம் என்று பச்சையாகப் புளுகுகிறார் நம்பூதிரி (மேற் படி பக் 2).

அதே சமயம் ஆதிசங்கரனின் தத்துவத்தை இவ்வளவு தூரம் ஏற்றிப் போற்றும் நம்பூதிரி, அது ஹெகலியத் தத்துவத்தைப் போல இயக்க இயல் அடிப்படையிலானது என்று எங்கேயும் கூறவோ, நிரூபிக்கவோ முயலவில்லை. ஆகவே அதில் மதிக்கத்தக்க அம்சம் எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை, ஆனால், சங்கரனின் தத்துவம் இன்றைய காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்புடையதல்ல; அதையும் இந்து மறுமலர்ச்சியாளர்களையும், வேத உபநிடத உணர்வுகளுக்கு எதிராகவும் போராடுவதன் அவசியத்தை ஒருபுறம் குறிப்பிட்டாலும், அடுத்த மறுபுறம் பின் வருமாறு எழுதுகிறார் நம்பூதிரி.

“எனினும், இதைச் செய்யும்போது மார்க்சிய லெனினிஸ்டுகளாகிய நாம், எப்பொழுதும் கருத்து முதல்வாதக் குழுக்களின் பிரதிநிதியாக விளங்கிய சங்கரர் மற்றும் கருத்து முதல்வாத பிரிவினரின் கோட்பாடுகள் அனைத்தையும் மறுக்கும் போக்கினைப் பின்பற்றக்கூடாது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல மார்க்சிய அறிஞர்கள் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள்” என்கிறார் நம்பூதிரி

இதைத் தொடர்ந்து ஒரு சோவியத் திருத்தல்வாதியின் பின்வரும் கூற்றை தனக்கு ஆதரவு வாதமாக வைக்கிறார். “சில மார்க்சிய அறிஞர்கள் அடிக்கடி பொருள் முதல்வாதத்துடன், பிராமண எதிர்ப்பு மனோபாவம், அல்லது ’விடுதலை’ (ஆன்மா) தத்துவத்தை நிராகரிப்பது போன்ற பொருள் முதல்வாதம் இல்லாத தத்துவங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். லோகாயத தத்துவம் ஒரு தலைப்பட்சமாக மேல்மட்டத்திற்கு தள்ளப்பட்டு அதே நேரத்தில் வேதாந்த தத்துவம் ஏழாவதாகவும், கடைசியாகவும் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்கிறார்.

இந்த ஆசிரியர், “வேதாந்தம் அன்றும் இன்றும் இந்தியத் தத்துவங்களிலேயே செல்வாக்கு படைத்தது, மேலும் சங்கரர், இந்திய தத்துவத்தில், ஏறக்குறைய மேற்கு ஐரோப்பிய தத்துவங்களில் பிளாட்டோவின் தத்துவம் பெற்றிருக்கும் இடத்தை, பெற்றிருக்கிறார்” என்று கூறுகிறார். (அக்’89 மார்க்சிஸ்ட் பக்: 12-13)

இப்படிப் போலிகளினால் போற்றப்படும் ஆதிசங்கரனின் அத்வைதமோ, பிற பிரம்ம சூத்திர ஆன்ம தத்துவங்களோ உலகிலேயே தனிச் சிறப்பானவையா என்றால் எதுவும் கிடையாது. போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொண்டுள்ளவாறு ஆதி சங்கரனின் அத்வைத தத்துவம் என்பது ஆரிய-பார்ப்பன சனாதன அமைப்பை உருவாக்கிக் காத்துக் கொள்வதற்காக வேதங்கள், உபநிடதங்கள் பிராமணங்கள், ஆரணியங்கள், இதிகாச-புராணங்கள், இறுதியாக வேதாந்தங்கள் ஆகியவற்றின் மூலத் தத்துவமான பிரம்ம சூத்திரத்தின் புதிய விளக்கம் தான். இவற்றுக்கெதிராக லோகாயதம், சார்வாகம், ஆஜீவகம், பெளத்தம், சமணம் ஆகிய பொருள் முதல்வாதம் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மதங்களின் தாக்குதலால் சனாதன வருணாசிரம, சாதிய அமைப்பு ஆட்டங்கண்டபோது அதற்கு முட்டுக் கொடுத்துப் புத்துயிர் ஊட்டுவதற்காக பல்வேறு தத்துவப் பித்தலாட்டங்கள், அரசியல் சூழ்ச்சி மோசடிகள், அராஜக – அடாவடிகள், ஆளுவோரின் துணையுடன் கூடிய அக்கிரமங்கள், அடக்குமுறைகள் மூலமாக நிறுவப்பட்டதுதான் சங்கரனின் அத்வைதத் தத்துவம். இவற்றையெல்லாம் மிக விரிவாகவும், ஆழமாகவும், ஆதாரத்துடனும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஆகவே, போலி மார்க்சிஸ்டுகள் வாதிடுவதைப் போல ஆதிசங்கரன் தனது அசாதாரணத் திறமையினாலோ, அறிவு ஆழத்தினாலோ, வெற்றி ஈட்டிடவில்லை. ஆதிசங்கரனின் அத்வைத தத்துவம் என்பது அறிவுத் தெளிவு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் தடுத்து மனித உடற்கூறுகளுக்கும் புலனுணர்ச்சிக்கும் – சிந்தனைக்கும் இடையிலான இயக்க இயல் உறவை பற்றிய அறியாமையை ஆதாயமாகக் கொண்டு, அதை மேலும் சூட்சுமப்படுத்தி தமது சனாதன சுயநலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

இதைப் பின்வருமாறு எங்கெல்சு விளக்குகிறார்:
marxandengels..எல்லாத் தத்துவ ஞானத்துக்கும் – குறிப்பாக நவீன காலத்திய தத்தவ ஞானத்துக்கும் – அடிப்படையான மாபெரும் பிரச்சனை, சிந்தனைக்கும் வாழ்நிலைக்கு முள்ள உறவு பற்றிய பிரச்சனையாகும். மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுடைய உடலின் கட்டுமானத்தைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்த போது, கனவுகளுக்குக் காரணம் விளங்காத போது, தமது சிந்தனையும், புலனுணர்ச்சியும் தமது உடலின் நடவடிக்கைகள் அல்லவென்றும், உடம்பில் தங்கியிருந்து சாவுக்குப் பின் வெளியேறிவிடுகிற ஒரு தனிவேறான ஆன்மாவின் நடவடிக்கைகளே என்றும் நம்பத் தொடங்கியபோது இந்த ஆன்மாவுக்கும் வெளியுலகத்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி சிந்தித்துப் பார்க்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சாவுக்குப் பின் உடலை விட்டு வெளியேறி, ஆன்மா தொடர்ந்து வாழ்கிறதென்றால், அதற்கென்று ஒரு தனி வேறான சாவைப் புனைவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை. இவ்வழியே தான் அதன் சாகாநிலை பற்றிய கருத்து உதித்தது. இக்கருத்து அந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஓர் ஆறுதலாக நிச்சயமாகத் தோன்றவில்லை. எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த ஒரு தலை விதியாகவும், அடிக்கடி (கிரேக்கர்கள் கருதியதுபோல்) நேருறுதியான துரதிர்ஷ்டமாகவும் அது தோன்றியது.

ஆன்மா ஒன்று இருக்கிறதாக ஒப்புக் கொண்டு விட்டால், பிறகு உடல் மாண்டபின் இந்த ஆன்மா எங்கே போய் ஒளிந்து கொள்கிறது என்று தமக்குத் தாமே விளக்கிக் கொள்ள முடியாமல் இருந்த, எங்கும் நிலவிய அறியாமை தான் தனிநபர் வகைப்பட்ட அமரநிலை பற்றி சலிப்பூட்டும் எண்ணப் போக்குக்குப் பொதுவான வழியில் கொண்டு சென்றதே ஒழிய, மன ஆறுதலுக்கான மத விருப்பம் அல்ல. இதே போன்ற முறையிலேதான் இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்துவதின் மூலமாக முதன் முதலாக கடவுளர்கள் தோன்றினர். சமயங்கள் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதையொட்டி இக்கடவுளர்கள் மேன்மேலும் உலகியலுக்கு அப்பாற்பட்ட வடிவம் எடுத்துக் கொண்டு, மனிதரின் அறிவு வளர்ச்சிப் போக்கில் இயற்கையாக நடந்து வரும் சூட்சுமப்படுத்தும் ஒரு நிகழ்வுப் போக்கின் மூலமாக – வடிகட்டி இறக்கு நிகழ்வுப் போக்கு மூலமாக என்றுகூட அனேகமாக நான் சொல்லக்கூடும் – இறுதியில் ஏறத்தாழ வரம்பிட்ட மூர்த்தியுடைய, ஒருவருக்கொருவர் வரம்பிட்டுக் கொள்கிற பல கடவுளர்களிடையேயிருந்து ஒன்றே கடவுள் என்று சொல்லும் சமயங்களின் தனியொரு கடவுள் பற்றிய கருத்து மனிதர்களின் மனத்திலே உதித்தது.. (லுத்விக் ஃபாயர்பாகும் மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவ ஞானத்தின் முடிவும் – பக் 28, 29), (மார்க்சிஸ்ட் 94 ஜூன் பக். 58-59).

Debiprasad
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

இதைக் கூட சங்கரன் சுயமான மூல அறிவைக் கொண்டு செய்யவில்லை. அப்போது உருவாகியிருந்த கிறித்தவ, இசுலாமியர்களின் ஒரிறை என்ற தத்துவ நம்பிக்கையைத் திருடிக் கொண்டார். வருண-சாதி அமைப்பினால் வெறுப்புற்று ஆரிய – பார்ப்பன சனாதனத்தை எதிர்த்துப் போராடிய சக்திகளை இழுப்பதற்காக, காளி, மாரி, துர்க்கை முதல் பெரியபாளையத்தம்மன், துலுக்காணத்தம்மன் உட்பட எல்லாம் சக்தியின் வடிவம் என்றும் அவதாரக் கதைகளைப் புனைந்தும், ஒன்றே கடவுள் – அது பிரம்மம் என்றும் மாயாவாத அத்வைத – ஆன்மா பற்றிய கோட்பாட்டை முன்னிறுத்தியும் தத்துவ மோசடி செய்தார்; அதை நிலை நாட்டுவதற்கும் அனைத்து அதர்ம வழிகளையும் பின்பற்றினார்.

ஆரிய-பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவத்தை எதிர்த்துப் போராடி, நிலைகுலையச் செய்த சார்வாகம், ஆஜிவகம், பெளத்தம், சமணம் போன்ற தத்துவங்களையெல்லாம் அடக்குமுறை, அராஜகம், அக்கிரம வழிகளிலோ அல்லது எதிராளிகளின் தத்துவக் கோட்பாடுகளைத் திரித்தும், ஊடுருவிச் சிதைத்தும், மக்களை ஈர்த்த அவற்றின் முக்கிய அம்சங்களைத் திருடியும் இந்து மதம் தன்னைக் காத்துக் கொண்டது. இந்திய தத்துவ வரலாறு என்பதே இப்படி முரண்பட்ட, எதிரெதிரான இரண்டு வருண – சாதீய – வர்க்கப் பிரிவுகளுக்கிடையிலான போராட்டங்கள் நிறைந்ததுதான். இந்த உண்மையையும் ஒப்புக் கொண்டு திரித்துச் சொல்லுகிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள். அவை ஆதி முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் மாயாவாதத் தத்துவம் இல்லை; தெய்வீக சக்தியுடையதெனக் கருதப்பட்ட இயற்கை வழிபாடுதான் இருக்கிறது; அதில் நால் வருண சாதியப் பாகுபாடு கிடையாது; அதன் இறுதியில் யாராலேயோ “புருஷ சூக்தம்” என்கிற நால்வருண விளக்கம் புகுத்தப்பட்டு விட்டது. அந்த வேதமும், வால்மீகி இராமாயணமும் மத நூல்களல்ல; மிகச்சிறந்த இலக்கியங்கள்தாம் என்கின்றனர் போலி மார்க்சிஸ்டுகள்.

வேத உபநிடத, வேதாந்த பிராமண, ஆரண்ய, புராண – இதிகாசங்களில் உள்ள கருத்து முதல்வாதம் தோன்றியபோதே, அதற்கு எதிரான லோகாயதம், சார்வாகம், சாங்கியம் வைசேடிகம், ஆஜீவகம் போன்ற பொருள் முதல்வாதமும் தோன்றி விட்டது; இவை வேதங்களிலும், உபநிடதங்களிலும் வேதாந்தங்களிலும் அடங்கியுள்ளன; அதாவது அவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. வேத உபநிடத கால ரிஷிகளே, ஆரிய – பிராமண முனிவர்களே பொருள் முதல்வாதத்தையும் உருவாக்கி வளர்த்தனர் என்று பச்சையாகப் புளுகுகின்றனர். (93 ஜூலை மார்க்சிஸ்ட் பக் 35-40, 93 டிச, மார்க்சிஸ்ட் பக் 31-33)

ஆனால், “லோகாயத – சார்வாகர்கள்” முதலிய பொருள் முதல்வாதத் தத்துவவாதிகளும், அவர்களது சிந்தனைகள் அடங்கிய நூல்களும் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த அரசு அதிகாரத்தினால் முற்றாக அழிக்கப்பட்டன, ஆதிசங்கரன் போன்ற தத்துவவாதிகள், வேத உபநிடதங்கள் போன்ற நூல்கள் தமது சனாதனவாதங்களை நியாயப்படுத்துவதற்காக எதிர்த்தரப்பு என்ற முறையில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களில் இருந்துதான் அடக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட பொருள் முதல்வாத சிந்தனை பற்றிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதேபோல ஆரிய பார்ப்பன சனாதனத் தத்துவம் தோன்றுவதற்கு முன்பே இங்கு நிலவிய புராதனப் பொருள் முதல்வாதத் தத்துவமும் ஆரியப் படையெடுப்பினாலும் அழிக்கப்பட்டன என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நிரூபித்துள்ளார். “பண்டைய இந்தியாவின் பொருள் முதல்வாதத்துக்கு ஆதரவாக” “இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பதும் மறைந்து போனதும் என்ன?” “இந்தியப் பொருள் முதல்வாதம் பற்றிய மேலும் சில ஆய்வுகள்” “பண்டைய இந்தியாவில் மருத்துவ அறிவியல்” “பண்டைய இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு” “ஒவ்வொரு மனிதனுக்குமான பூவுலகத் தத்துவம்” ஆகிய தொடர்ச்சியான ஆய்வு நூல்கள் மூலம் லோகாயதர்கள் – சாருவாகர்கள் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை ஒழித்து கட்டுவதற்கு சங்கரன் முதலிய ஆரிய பார்ப்பன சனாதனங்கள் செய்த இழிசெயல்கள், சூழ்ச்சிகளை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அம்பலபடுத்தியுள்ளார்.

ஆனால், இத்தகைய ஆய்வாளர்களின் பெயர்களையும், மேற்கோள்களையும் உச்சாடனம் செய்து கொண்டே, ஆதி சங்கரன் முன்பு செய்ததைப் போல பல்வேறு திரிபுகள், சூழ்ச்சிகள் மூலம் இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும். நேரடியான, அப்பட்டமான எதிரிகளைவிட, மூடிமறைக்கப்பட்ட கபட வேடதாரிகளான இவர்கள்தாம் லெனின் சொன்னதைப் போல மிகவும் அபாயகரமானவர்கள் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டியவர்கள்.

  • முற்றும்.

புதிய கலாச்சாரம், பிப். மார்ச், 1995.

மேலும் படிக்க :

தீவிரவாதிகளுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ? மிரட்டுகிறது திருப்பூர் போலீசு !

1

திருப்பூர் 21-வது வார்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் : 1937) கடந்த 07.05.2017 அன்று அப்பகுதி பெண்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் உதவியுடன் மூடினர். வட்டாட்சியர் திரு சுப்ரமணி என்பவர் அக்கடைக்கு மக்கள் முன்  சீல் வைத்தார்.

இந்நிலையில் நேற்று 10.05.2017 டாஸ்மாக் கடை முன்பு பார் உரிமையாளர், கூலிக்கு ஆட்களை அழைத்துவந்து மூடிய கடையை திறக்க வேண்டும் என ‘போராடியுள்னர்’. இந்த தகவலை அறிந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை டி.எஸ்.பி. அண்ணாதுரை டாஸ்மாக் பார் உரிமையளருக்கு தனது ஆதரவை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டார். போராடும் மக்களிடம் முறைப்படி தாசில்தார் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தால் தான் கடையை மூட முடியும் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மக்கள் போராடினால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டியிருக்கிறார்.

நாளை (11.05.2017) கடை திறக்கும் போது யாரும் கடைக்கு முன்னால் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். வெளியூர் தீவிரவாதிகளை ( மக்கள் அதிகாரம் அமைப்பை ) உங்களுக்கு எப்படி தெரியும்? எந்தனை ஆண்டுகள் இந்த பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள்? சொந்த வீடு உண்ட? என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.

அவர்கள் (மக்கள் அதிகாரத்தினர்) உங்களை மூளைச்சலவை செய்து அவர்கள் இயக்கத்தில் சேர்த்துவிடுவார்கள் என்று ‘நல்ல’விதமாகவும் எடுத்துச் சொல்லியுள்ளார். பச்சையாகச் சொல்வதாக இருந்தால் பார் உரிமையாளருக்கு ஆதரவாக டி.எஸ்.பி. அண்ணாதுரை தான் போராடும் மக்களை மூளைச்சலவை அல்ல அதிகார வெறியுடன் பணிய வைக்க முனைகிறார்.ஆனால் அதிகார மிரட்டலுக்கும், நைச்சிய பேச்சுக்கும் மயங்காத பொதுமக்களும், பெண்களும் மீண்டும் கடை திறக்கப்பட்டால், சாராயக்கடை அடித்து நொறுக்கப்படும் என தங்கள் முடிவை அறிவித்துவிட்டு திரும்பியுள்ளனர். இது வேற தமிழ்நாடு! காக்கிகளே புரிந்து கொண்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்! தமிழகப் பெண்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கின் மீதான உங்கள் பாசத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு – 9788 58526.

நீட் தேர்வு – அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !

10

டந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதில் இருந்தும் சுமார் 11 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு விதிமுறைகளை சி.பி.எஸ்.ஈ உருவாக்கி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கையாக வெளியிட்டது. அதில் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி உள்ளிட்ட விவரங்களோடு, உடைகளுக்கான விதிமுறைகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தது. அவை,

  • கருப்பு நிற உடைகளையோ, அடர் நிற உடைகளையோ அணியக்கூடாது. வெளிர் நிற உடைகளையே அணிய வேண்டும்.
  • ஆண்களும் பெண்களும் முழுக்கை மேலாடை அணியக் கூடாது. மேலாடைகளிலோ, கீழாடைகளிலோ பெரிய பட்டன்கள் இருக்கக் கூடாது.
  • உடம்பில் / துணியில் துளி கூட உலோகங்கள் இருக்கக் கூடாது.
  • பூட்ஸ் அணியக் கூடாது. ’ஹை-ஹீல்ஸ்’ அணியக் கூடாது.
  • மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட், செயின், நெக்லெஸ், மூக்குத்தி, தோடு உள்ளிட்ட ஆபரணங்கள் அணியக் கூடாது. திருமணமான பெண்களுக்கு மட்டும் தாலியும், வளையலும் அணிந்து கொள்ள அனுமதி உண்டு.
  • தலைமுடியைக் கட்டும் பெரிய ரப்பர் பேண்டுகள், பெல்ட், தொப்பி, புர்கா, பைஜாமா, குர்தா, சேலை ஆகியவை அணியக்கூடாது.

மாணவர்கள் ‘பிட்’ மற்றும் ‘காப்பி’ யடிப்பதைத் தடுக்கும் பொருட்டே இத்தகைய கறாரான உடைக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகக் கூறியிருக்கிறது சி.பி.எஸ்.ஈ. அதாவது, கருப்பு / அடர் நிற உடைகள் மூலமும், உடையில் இருக்கும் உலோகங்கள் மூலமும், காதில் போடும் தோடுகளின் மூலமும் முறைகேடுகளில் ஈடுபட முடியும் எனத் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு சிந்தித்து இவற்றை எல்லாம் தேர்வு அறைக்கு வெளியே விடவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது சி.பி.எஸ்.ஈ.

சி.பி.எஸ்.ஈ இந்த ஆடை விதிமுறைகளை, அனைத்துத் தேர்வு மையங்களிலும் கறாராக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 07.05.2017 ஞாயிறு அன்று நடைபெற்ற நீட் தேர்வில் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் பல்வேறு அவலங்கள் அரங்கேறின.

சென்னையில் இரண்டு நிமிடம் தாமதமாக வந்த மாணவியர் மூவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனக் கூறி வெளியேற்றியிருக்கின்றனர். அதனைக் கண்டித்து மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து போராடிய பின்னும் போலீசை வைத்து மிரட்டி, அப்பெண்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். சென்னையில் முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையின் கைகளை அரைக்கைச் சட்டை அளவிற்கு கிழித்த பின்னரே அவர்களைத் தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் குஜராத்தில் முழுக்கைச் சட்டையுடன் மாணவர்கள் எவ்விதத் தடையுமின்றி தேர்வு எழுதியிருக்கிறார்கள்

பெங்களூருவில் ஒரு மாணவியின் காதணிகளைக் கழற்ற முடியாதபடி அதன் திருகாணி கழண்டு வராத நிலையில் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறிய பிறகு, அப்பெண் தனது  தந்தையுடன் உடனடியாக அருகில் உள்ள தங்க நகை ஆசாரியிடம் சென்று காதணியை வெட்டி எடுத்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர்.

ஆந்திராவில் பல இடங்களில் தலைமுடியை கட்டும் முடி பேண்டுகள் நீக்கப்பட்டால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தக் கெடுபிடிகளால் அங்கு மாணவிகள் அனைவரும் தலைவிரி கோலமாகவே தேர்வு எழுதினர்.

தென்னிந்தியா முழுவதும் கருமை நிற மற்றும் அடர் நிற ஆடைகள் அணிந்துள்ள மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அவசர அவசரமாக வெளியில் சென்று தேடிப்பிடித்து வெளிர் நிற ஆடைகளை வாங்கி வந்தனர்.

கேரளாவில் பெண் ஒருவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் உலோக பட்டன் ’மெட்டல் டிடெக்டர்’ கருவியில் சத்தம் கொடுத்ததும் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதி மறுத்தனர். அப்பெண் தனது தந்தையிடம் இது குறித்துக் கூறியதும், அவர் தனது மகளின் ஜீன்ஸ் பேண்டில் இருந்த உலோக பட்டனை அறுத்தெடுத்தார். அதன் பின்னரே அப்பெண்ணை தேர்வுக்கு அனுமதித்தனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, இழிவுகளின் உச்சமாக நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே அடர் நிற ஆடை அணிந்திருந்த ஒரு மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதன் பின்னர், அப்பெண்ணின் தாயார் அருகில் உள்ள பகுதிகளில் அலைந்து தேடி ஒரு மாற்று உடையை அம்மாணவிக்கு வாங்கி வந்து கொடுத்துள்ளார். தேர்வு ஆரம்பிக்க 10 நிமிடம் மட்டுமே உள்ள சூழலில் அப்பெண் மீண்டும் பரிசோதனை வளையத்திற்குள் செல்லும் போது மெட்டல் டிடெக்டர் பரிசோதனையில் அப்பெண்ணின் உள்ளாடையின் கொக்கிக்கு ‘மெட்டல் டிடெக்டர்’ சத்தம் எழுப்பியுள்ளது. அப்பெண்ணின் உள்ளாடையைக் கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும், அதுவும் தேர்வு தொடங்கும் நேரத்திற்குள் உள்ளாடையைக் கழற்றிவிட்டு வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அம்மாணவி வேறு வழியில்லாமல் அலுவலர்கள் இருந்த பரிசோதனை அறையிலேயே தனது மேல் உள்ளாடையைக் கழட்டி அதனை வாயிலில் இருந்த தனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு அவசர அவசரமாகத் தேர்வுக்குச் சென்றுள்ளார்

இச்சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது, அவர்கள் கூறிய ஒரே பதில், “விதிமுறைகளில் கூறியதை நாங்கள் அப்படியே பின்பற்றினோம், இதில் தவறு ஏதும் இல்லை” என்பது தான். விதிகளைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன அந்த அலுவலர் தனது மகளை அவ்வாறு பொதுவெளியில் நடத்தியிருப்பாரா ? அல்லது தனது மகளுக்கு அவ்வாறு நிகழ்ந்திருந்தால் சும்மாயிருந்திருப்பாரா? பிழைப்புவாதமும் அடிமைத்தனமும் நமது மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.

தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் மக்களின் மீது தமது மேலதிகாரிகளின் உத்தரவிற்கிணங்க வெறிநாய் போல பாய்ந்து குதறும் போலீசுக்கும், இராணுவத்திற்கும் இதே அடிமைத்தனம் தான் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தைத் தான் இராணுவப் பயிற்சியிலும், போலீசுப் பயிற்சியிலும் பிரதானமாக சொல்லித் தருகின்றனர். இந்த அடிமைத்தனம் தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதியப் படிநிலையின் ‘ஒழுக்கமாக’ நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் மீதான இந்தக் கடுமையான ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சித்த பெற்றோர்கள் வெகு சிலரே. இது குறித்து மூச்சே விடாமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. “நான் சொல்வதே சட்டம், அதுவே சாசனம்” என்ற பாகுபலியின் எதேச்சதிகார  வசனத்திற்கு கைதட்டி ரசிக்கும் கூட்டம் இருக்கும் போது சுய மரியாதைக்கு எங்கே போவது?

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடல்

3

டாஸ்மாக்கை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என போராடிக் கொண்டிருந்த போது, குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சிப் பயணில்லை. மக்களே டாஸ்மாக் கடைகளை மூடும் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என முன் மாதிரியான போராட்டங்களை நடத்திக் காட்டியது மக்கள் அதிகாரம்.

நூற்றுக் கணக்கான மாணவர்களை அணி திரட்டி பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நொறுக்கித் தள்ளினர். மதுரவாயல், மீஞ்சூர், விருத்தாச்சலம், நாகர்கோவில், தர்மபுரி என பல இடங்களில் டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராடினர். அந்த போராட்டங்களை காவல் துறை கொடூரமாக ஒடுக்கியது. பச்சையப்பன் கல்லூரி போராட்டத்தில் மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்தது. மதுரவாயல் போராட்டத்தில் 50 வயதுப் பெண்மணியின் மண்டையை உடைத்தது காவல்துறை. தன்னெழுச்சியாக தமிழகமெங்கும் போராடியவர்களையும் கொடூரமாகத் தாக்கியது. சசி பெருமாள் அவர்களைக் கொன்றே போட்டது தமிழக அரசு. இப்போராட்டங்களின் போது மக்கள் அதிகார தோழர்கள் பலர் பல நாட்கள் சிறை வைக்கப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் சிறை வைக்கப்பட்டனர்.

மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே !

அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே !
மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம் !
நம்ம ஊரில் இனி  கிடையாது டாஸ்மாக்கு , அடிச்சு தூக்கு !

இந்த பாடலுக்காக தோழர் கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். எந்த பாடலுக்காக அவர் கைது செய்யப்பட்டாரோ அந்த பாடலானது தற்போது தமிழக மக்களால் செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து டாஸ்மாக்கை உடைத்து போராடுகின்றனர். விழிபிதுங்கி நிற்கிறது காவல்துறையும் அதிகாரவர்க்கமும்.

டாஸ்மாக்குக்கு எதிரான இந்த போராட்டத் தீ பரவட்டும் !

எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?

0

ந்த ஞாயிற்றுக் கிழமை காலை மாலத்தீவு வாசிகளுக்கு அதிர்ச்சிகரமாக விடிந்தது. 29 வயதே ஆன புகழ்பெற்ற இணைய எழுத்தாளர் யமீன் ரஷீது கொல்லப்பட்டார் என்கிற செய்தியே அதிர்ச்சிக்குக் காரணம்.

சுமார் நான்காண்டுகளுக்கு முன், 2012 அக்டோபர் மாதம், இதே போன்ற ஒரு கொடூரமான கொலை மாலத்தீவு வாசிகளை அதிர்ச்சியுறச் செய்திருந்தது. அப்போது புகழ்பெற்ற இசுலாம் மத அறிஞரும், சீர்திருத்தவாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அஃப்ரஷீம் அலி கொல்லப்பட்டார். இருவருமே ஒரே விதமாக கொல்லப்பட்டிருந்தனர். உடல் முழுவது பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இருவரின் உடல்களும் மாலத்தீவின் தலைநகர் மாலேவில் அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மாடிப்படிகளின் கீழே கண்டெடுக்கப்பட்டன.

2014 ஆகஸ்ட்டிலிருந்து ரஷீதின் நெருங்கிய நண்பரும், இணைய எழுத்தாளருமான அகமது ரில்வான் காணாமல் போயிருக்கிறார். அனேகமாக அவர் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென்றே கருதப்படுகின்றது. போலீசாரால் குற்றவாளிகளை இது வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், இந்தக் கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் யார் காரணம் என நம்மால் சொல்ல முடியாது.

இந்தக் குற்றச் செயல்களைத் தூண்டிருக்க கூடிய காரணங்கள் எவையாக இருப்பினும், இவை மாலத்தீவில் ஒரு புதிய வகை சித்தாந்தத்தின் பரவல் விளைவித்திருக்கும் புதிய வகை குற்றங்களின் பிரதிபலிப்புகள் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் அரசியல் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய இந்த புதிய வகை சிந்தாந்தம், மதச்சார்பற்ற அரசியலின் தோல்வியின் மேலும், சிதறிய மத நம்பிக்கைகளின் மேலும் எழுகின்றது.

மத நம்பிக்கைகள்

கொலை செய்யப்பட்ட யமீன் ரஷீத்

மதம் தொடர்பான சர்ச்சைகளில் ரஷீதும், ரில்வானும், அலியும் வெளிப்படையாகப் பேசினர்.

சொல்ல போனால், அலி ஒரு முதிர்ச்சியடைந்த மத அறிஞரும் கூட. மதம் தொடர்பாக அவரிடம் ஒரு விதமான சீர்திருத்தவாத கண்ணோட்டம் இருந்தது. மாலத்தீவின் பாரம்பரிய இசை உள்ளிட்ட வெகுஜன கலாச்சாரங்களை மதித்த அலி, ஆண் பெண் சமத்துவத்தை ஆதரித்தார்.

ரஷீதும், ரில்வானும் இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்திய நவீன சித்தாந்த போக்குகளை பிரதிபலித்தனர். இன்றைய காலகட்டத்தில் மாலத்தீவின் இளைஞர்களில் சிலர் பகுத்தறிவு இசுலாமிய போக்கான முத்தாஸிலிடெசையும், சூஃபியிசத்தையும் ஆதரிக்கின்றனர். மேலும், மாலத்தீவின் பழைய புத்தமத வரலாறும், இசுலாமிய பாரம்பரியம் அதன் கலாச்சாரம், இலக்கியங்களும் இளைஞர்களைக் கவர்கின்றன. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மாலத்தீவின் இளைஞர்களை அறிவியல் பூர்வமான பகுத்தறிவும், மனிதாபிமான சித்தாந்தங்களும் பாதித்துள்ளன.

எனினும், இந்த இளைஞர்களில் சிலருக்கு அறிவியல் பூர்வமான புதிய நாத்திகவாதத்தின் மேலும், மதச்சார்பின்மையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களை தனிபட்ட சொந்த விசயங்களாக கையாள வேண்டும் என இவர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் கறாராக சட்டவாதம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பதில்லை. இளைஞர்களாக இருப்பதால் இயல்பாகவே தீராத பல கேள்விகளுக்கு இவர்களிடம் நிரந்தரமான, உத்திரவாதமான நிலைப்பாடுகள் இருப்பதில்லை.

ரஷீதும் ரில்வானும் இந்தப் புதிய தலைமுறை இளைஞர்களையே பிரதிபலித்தனர். அவர்களிடம் அறுதியான நம்பிக்கைகள் ஏதும் இல்லை. ஆனால், மனித உரிமை தொடர்பாக அவர்கள் என்ன பேசினார்களோ அதில் சமரசமற்றவர்களாக இருந்தனர். கடும் பிற்போக்குவாதத்தையும், தீவிரவாதத்தையும் தக்ஃபீரி போக்கையும் (தக்ஃபீர் பொருள் :- எது சரியான இசுலாம், யார் சரியான முசுலீம் என்று முத்திரை குத்துவது) இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறாக மதவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை ஒரு சேர சம்பாதித்துக் கொண்டனர் இவ்விருவரும்.

 மதம் சாராத அரசியல்வாதிகளின் மிரட்டல்கள்

அரபு வசந்தத்திற்கு சில ஆண்டுகள் முன்பு, 2008-லேயே மாலத்தீவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கான எழுச்சி மலர்ந்தது. அதன் போக்கில் சுதந்திர மையம் (Freedom House) எனும் சிந்தனைக்குழாம் ஒன்று மாலத்தீவை முதன் முறையாக தேர்தல் ஜனநாயக நாடாக அறிவித்தது.

எனினும், 2012 பிப்ரவரி மாதம் முதன் முறையாக ஜனநாயகப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட அதிபரான மொகமது நஷீதின் ஆட்சிக்காலம் மேலும் இரண்டாண்டுகளுக்கு இருந்த போதே கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதம் சாராத அரசியல் சக்திகளின் மூலமே மெல்ல மெல்ல மாலத்தீவில் ஜனநாயக நீக்க நடவடிக்கைகள் துவங்கின.

கட்டாய பதவி விலக்கம் செய்யப்பட்ட மாலத்தீவு அதிபர் மொகமது நஷீத்

இந்த ஜனநாயக நீக்க நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட முறைமையில் நடந்தன. அதாவது, தேர்தல் ஜனநாயகத்திற்கும் சாதாரண மாலத்தீவுவாசிகள் பின்பற்றும் இசுலாத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் அதற்கு காரணமாக இல்லை – சொல்லப் போனால், மாலத்தீவுவாசிகள் ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்களாகவே இருந்தனர்.

நஷீதின் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் தலைவர்கள் சிலரால் நிதியுதவி செய்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளின் பின் மதமும் ஒரு காரணியாக இருந்தது உண்மை தான். எனினும், மாலத்தீவின் இளம் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதற்கு அடிப்படைக் காரணிகளான அரசியல் பொருளாதார மற்றும் ஆட்சிமுறை சார்ந்த சவால்கள் அந்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள மேட்டிமைத்தனத்திலிருந்தே கிளைத்து எழுந்தவையாகும்.

பழைய எதேச்சாதிகாரத்தின் இடத்தில் புதிய எதேச்சாதிகாரம் நுழைந்ததும் மாலத்தீவில் மனித உரிமைமீறல்கள் திடீரென அதிகரித்தன. இது எதேச்சாதிகாரத்தின் மிக மோசமான வடிவமாகும். வழமையான வடிவங்களையும் ஜனநாயக மேல்பூச்சுகளையும் பயன்படுத்திக் கொள்வதோடு உள்ளடக்கத்தில் முழுமையடைந்த ஊழல்மயமாகவும் கிரிமினல்மயமாகவும் இருக்கின்றது.

தங்களது நலன்களைக் காத்துக் கொள்ள அரசியல் ரீதியான வன்முறைகளைக் கையிலெடுக்கும் குற்ற கும்பல்களை தங்களது ஊழல்களாலும் கிரிமினல்தனத்தாலும் மேன்மையானவர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள்.

இந்தப் புதிய எதேச்சாதிகாரத்தையும், அதன் ஊழல்களையும் மனித உரிமை மீறல்களையும் ரஷீதும், ரில்வானும் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்தனர். அவர்களுக்கு பகடியும், நகைமுரணாக தங்களாது கருத்துக்களை முன்வைப்பதும் இயல்பாக கைவந்தது. ரஷீதின் கேலி கிண்டல்களுக்கு அவரது நையாண்டியான வலைப்பூவே சாட்சி. இந்த வலைப்பக்கங்கள் மாலத்தீவில் மிகவும் பிரபலமாயின.

மேற்படி போக்கின் விளைவாக அரசியல் வன்முறைகளின் சூத்திரதாரிகளே இந்தக் கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் காரணமாக இருந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது. தங்களுக்கு எதிரான குரல்களை மௌனமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், வேறொரு வாய்ப்பும் உள்ளது.

சிதறிய மதப் பரப்பு

மாலத்தீவில் உருவாகியுள்ள ஒரு புதிய வகை – ஆனால், சிறிய – குழுக்கள் சிலவும் சமூகவலைத்தள பிரபலங்களான ரஷீத், ரில்வான் மற்றும் அலியைப் போன்ற சீர்திருத்தவாத தாராளவாத மத அறிஞர்களை தங்களுக்கான ஆபத்தாக பார்க்கிறார்கள். இவர்கள் மத தீவிரவாதிகள்.

சமீபமாக மாலத்தீவில் நடந்து வரும் நவீன வளர்ச்சிகளைத் தொடர்ந்து சமூகத்தில் மதத்தின் பங்கு என்னவென்பதைக் குறித்த கேள்வி மக்களிடையே விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதன் காரணமாக, அதிகாரப்பூர்வமாக ஒற்றை இசுலாமிய அடையாளம் வலியுறுத்தப்பட்டாலும் மத ரீதியான சிந்தனைப்போக்குகளில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரங்களின் மத்தியில் அரசியலில் தாராளவாதப் போக்கு நுழைந்த பின் தீவிரவாத குழுக்களும் அபரிமிதமாக வளர்ந்து சமூக அந்தஸ்த்தைப் பெற்றன.

கடந்த ஆண்டுகளில் இது போன்ற குழுக்கள் மத ரீதியான வன்முறைகளை நிகழ்த்தியுள்ளன. இதில் சில குழுக்கள் வன்முறையான ஜிகாதை வெளிப்படையாகவே ஆதரிக்கவும் செய்கின்றன. இவர்களுக்குள் ’எதற்கு எதிராக ஜிகாது செய்ய வேண்டும்’ என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், செய்யப்படும் ஜிகாது வன்முறையாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை நிலவுகின்றது.

இதை நாம் ‘சூழல் பொருத்தம் விலக்கப்பட்ட வன்முறை’ (Decontextualised Violence) என்று அழைக்கலாம். குறிப்பாக தக்ஃபீரி கொள்கை கொண்ட சில குழுக்கள் ரஷீதும் ரில்வானும் மதவிரோதிகள் என குற்றம் சுமத்தின. ரஷீதின் மரணத்திற்குப் பின் இந்தக் குழுக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் முகநூல் பதிவுகளில் அவர்கள் ரஷீதை மதவிரோதியென தூற்றியதைப் பார்க்க முடிந்தது.

ரஷீது ரில்வான் போன்றவர்களால் சொல்லப்படும் கருத்துக்களை மத அடிப்படையில் விதண்டாவாதமாக புரிந்து கொள்வதே மதரீதியான வன்முறைகளுக்கு காரணமாகிறது. மாலத்தீவில் இயங்கிவரும் இது போன்ற தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிலர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்றுள்ளனர்.

ஊழல்வாத அரசியல்வாதிகளைப் போன்றே இந்த மத தீவிரவாத கும்பல்களும் தீவிரவாத சிந்தனை கொண்ட இளைஞர்களுடன் கைகோர்த்துள்ளன. ”தீவிரவாதிகளை இசுலாமியமயமாக்குவது” என ஆலிவர் ராய் சொல்லும் ஒரு போக்கு மாலத்தீவில் உள்ளது. இது போல் “இசுலாமியமயமாக்கப்பட்ட தீவிரவாதிகள்” பலர் சிரியாவுக்குச் சென்றுள்ளனர். இந்தக் குழுக்களுக்கு சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களுடன் பரஸ்பர உறவு இருப்பதால் தங்கள் மீதான சட்டநடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

ரஷீது, அலியின் கொலையின் பின்னும், ரில்வானின் கடத்திலின் பின்னும் மாலேவில் உள்ள இது போன்ற கும்பல்கள் இருக்குமென்றால், சர்வதேச அழுத்தங்கள் இருந்தால் அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை. அப்படியே நீதி கிடைத்தாலும் குற்றம் அரசியலுக்காக நடந்ததா அல்லது மத காரணங்களுக்காக நடந்ததா என்கிற கேள்வி எஞ்சி நிற்கும்.

எப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.

மூலக்கட்டுரை: Who killed my friend Yameen Rasheed?
நன்றி: Azim Zahir, ALJAZEERA
தமிழாக்கம்: முகில்

காட்டு தர்பார் நடத்திய நீட் தேர்வு !

5

‘நீட்’ இந்தியா

தில்லியில்
ஆடை களைந்தான் விவசாயி.
தேர்வில்
ஆடை அவிழ்க்கப்பட்டார்கள்
மாணவர்கள்.

பர்தா களையப்பட்டது
துப்பட்டா விலக்கப்பட்டது
கூந்தல் கலைக்கப்பட்டது
உள்ளாடையும் உருவப்பட்டது
அதாகப்பட்டது,
மோடி அரசின் தூய்மையைக் காட்ட
ஆணுடலும், பெண்ணுடலும்
அசிங்கப்பட்டது.

பதஞ்சலியின் கோவணமும்
ஈசாவின் தலைப்பாகையும்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,

படிக்கும் மாணவரின்
முழுக்கை சட்டையும்,
பைத்தியக்கார விதிகளால்
கிழிக்கப்பட்டது.
கழுத்தணியும், காதணியும்
பாதணியும் கூட
பறிக்கப்பட்டது.

எச்சரிக்கை விதிகளால்
எல்லா கயிறுகளும்
அறுக்கப்பட்டது.
ஆனால்,
பூணூல் கயிறு?

அன்று
கல்வி உரிமையே
மறுக்கப்பட்டது,
இன்று
சுயமரியாதையும்
பொசுக்கப்பட்டது!
இந்த காட்டு மிராண்டித்தனங்களுக்கு பெயர்
‘நீட்’!

  • துரை. சண்முகம்

பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன ?

5

ந்த நபர் மேடைகளில் காட்டும் சேட்டைகளும், யோகா எனும் பெயரில் நடத்தும் ‘ஸ்டேண்டப் காமெடிகளும்’, நிகழ்ச்சிக்கு இடையிடையே சொல்லும் மலிவான நகைச்சுவைத் துணுக்குகளும் தென்நாட்டில் – குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு – வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களில் அவர் கடவுளுக்கு நிகரானவர். சிக்கலான ஆன்மீக தத்துவங்களைச் சொல்லிக் குழப்பாமல் வெறுமனே சில எளிமையான ஜிம்னாஸ்டிக் வித்தைகளின் மூலம் சிறப்பாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார். வடக்கே கோடிக்கணக்கானவர்கள் – சகல வர்க்கப் பின்புலத்தைச் சார்ந்தவர்களையும் உள்ளிட்டு – அவருக்கு பக்தர்களாக இருக்கின்றனர். யோகாவைக் கடந்த மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியம் ஒன்றின் அதிபதியான அவரின் பெயர், பாபா ராம்தேவ்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களில் பாபா ராம்தேவ் கடவுளுக்கு நிகரானவர்.

பாபா ராம்தேவையும் அவரைப் பின்தொடரும் இந்தி பேசும் வடமாநில நடுத்தரவர்க்க பக்தர் கூட்டத்தையும், பாபா ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சமீபத்திய அசுர வளர்ச்சியையும், பாரதிய ஜனதாவையும் அதன் தேர்தல் வெற்றிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராம்தேவின் பதஞ்சலி 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெல்லும் குதிரையாக பாரதிய ஜனதாவைக் கணித்து அப்போதே அந்தக் கட்சிக்கு கனமாக தேர்தல் நன்கொடை வழங்கியதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெறப்பட்ட விவரங்கள் உணர்த்துகின்றன.

பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் இன்றைய தேதியில் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறார் ராம்தேவ். யோகாவின் மூலம் ஈட்டும் வருமானத்தின் கணக்கு தனி.  2011 – 2012 காலகட்டத்தில் லோக்பால் மசோதாவைக் கோரி அன்னா ஹசாரே களமாடிக் கொண்டிருந்த போது காங்கிரசின் ஊழல்களால் அதிருப்தியுற்று நாடெங்கும் திரண்ட மக்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதற்காக இந்துத்துவ முகாம் சார்பில் ராம்தேவ் களமிறக்கப்படுகிறார்.

ஜன்லோக்பால் கோரிக்கை மற்றும் ஊழலின் மீதான அதிருப்தியை மோடியின் வெற்றியாக மடை மாற்றிய பிறகு மிக குறுகிய காலத்தில் ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியம் பல மடங்காக விரிவடைந்துள்ளது. மிக குறுகிய காலத்தில் ராம்தேவின் தொழில் கூட்டாளி பாலகிருஷ்ணா இந்தியாவின் 100 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இன்றைய தேதியில் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பே 16,000 கோடிகள் என்றால், ராம்தேவின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பற்பசையில் இருந்து அழகு சாதனப் பொருள் வரை சுமார் 445 பொருட்களை சந்தையின் விற்கும் பதஞ்சலியின் தொழில் வெற்றி என்பது பாரதிய ஜனதாவின் தேர்தல் அரசியல் வெற்றியோடும் பாரதிய ஜனதாவுடன் பாபா ராம்தேவுக்கு உள்ள உறவோடும் தொடர்புடையது. மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் அமைந்துள்ள பாரதிய அரசாங்கங்கள் பதஞ்சலிக்கு வாரி வழங்கியுள்ள சலுகைகளின் பட்டியல் மிக நீண்டது.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “யோகாவை வளர்ப்பது” என்கிற முகாந்திரத்தில் அந்தமான் அருகே ஒரு தீவையே ராம்தேவுக்குப் பரிசளித்துள்ளார். கடந்த ஆண்டும் ஆகஸ்டில் இருந்து மத்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை (DRDO) பதஞ்சலியின் ‘மூலிகை’ பொருட்களை விற்பதற்கு அந்நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்வது குறித்து அறிவித்துள்ளது.

பல்லாயிரம் கோடிகளை கொட்டி டி.ஆர்.டி.ஓவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுவதாக சொல்லப்படும் இலகு ரக போர் விமான இஞ்சினான காவேரி, டி.ஆர்.டி.ஓவின் பெங்களூரு மையத்தில் தூசு படிந்து கிடக்கின்றது. இந்நிலையில் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் நடந்த தனது சொந்த  ஆராய்ச்சியை பரணில் போட்டு விட்டு ராம்தேவின் பதஞ்சலி ஊறுகாயை விற்பதற்கு முண்டியடிக்கிறது டி.ஆர்.டி.ஓ. இத்தனைக்கும் இராணுவ உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த பதஞ்சலியின் நெல்லிச்சாறு குடிப்பதற்கு ஒவ்வாதது என்பதைக் கண்டறிந்து அதன் விற்பனை சமீபத்தில் தான் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவல் ஓரம், தமது அமைச்சகம் ராம்தேவுடன் இணைந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், பதஞ்சலி சந்தைப்படுத்தி வரும் பல்வேறு உணவுப் பொருட்கள் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் (FSSAI) சான்று பெறவே இல்லை. மட்டுமின்றி, பதஞ்சலியின் பல்வேறு உணவுப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, எம்.பி எக்ஸிம் என்கிற வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து தேனைக் கொள்முதல் செய்யும் பதஞ்சலி, அதன் மேல் தனது வணிக முத்திரையை ஒட்டி சந்தைப்படுத்துகின்றது. தேன் மட்டுமின்றி, பதஞ்சலி சந்தைப்படுத்தும் பல பொருட்களும் இவ்வாறே விற்கப்படுகின்றன. எம்.பி எக்ஸிம் உற்பத்தி செய்யும் தேனில் சர்க்கரை அல்லது சாக்ரினுடன் எதிர்உயிரிகளும் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் பொருகளுக்கு வட இந்தியாவில் சந்தை மதிப்பு அதிகம் என்பதைக் கணக்கில் கொண்டு வேறு ஒரு சில்லறைத்தனத்திலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. பதஞ்சலியின் பொருட்களுடைய முகப்பில் அந்தப் பொருளின் சேர்வையுறுப்புகள் (ingredients) எழுதப்பட்டிருக்கும். இதில், மூலிகைகளின் பெயர்கள் இந்தியிலும், வேதிப் பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. “முழுமையான ஆயுர்வேத தயாரிப்பு” என விளம்பரப்படுத்தி விற்கப்படும் பதஞ்சலியின் வேதிப் பொருட்களில் சில ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

பதஞ்சலி பொருட்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையிலேயே மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு தமது மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அவற்றை விற்பதாக அறிவித்துள்ளது. இத்தனைக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களே கூட கிடைப்பதில்லை. அம்மாநில விவசாயத் துறை அமைச்சர் கௌரிசங்கர் பிசென் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட வேண்டிய கோதுமையில் 90% சட்டவிரோதமான கள்ளச்சந்தைக்கு திருப்பி விடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2017 பிப்ரவரி மாதம் மத்திய வருமான வரித் தீர்ப்பாயம் (ITAT) பதஞ்சலி யோக பீடத்திற்கு  வருமான வரிவிலக்கு சலுகையும் அறிவித்துள்ளது. மேலும் பதஞ்சலி யோகபீடத்திற்கு வரும் நன்கொடைகளுக்கும் வருமான வரிவிலக்கு அறிவித்துள்ளது.

புதிய சுதேசி ரக கோதுமை மற்றும் மிளகாய் விதைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.

இதற்கிடையே உத்திராகண்ட் மாநிலத்தில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள பதஞ்சலி, அதற்கென ஏக்கர் கணக்கில் நிலத்தையும் பெற்றுள்ளது. தற்போது சுமார் பத்தாயிரம் கோடி வருவாய் ஈட்டும் தனது நிறுவனத்தின் எதிர்கால வணிக இலக்காக ஆயுர்வேதத்துடன் விவசாயப் பொருட்களையும் இணைத்துள்ளது பதஞ்சலி. இதற்கான ஆராய்ச்சிகளை உத்திராகண்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் மேற்கொண்டு வருகின்றது. மோடியால் கடந்த மே 4-ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் புதிய சுதேசி ரக கோதுமை மற்றும் மிளகாய் விதைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.

மேலும், மாட்டின் கழிவில் இருந்து பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியும் இந்த மையத்தில் நடந்து வருகின்றது. பினாயிலுக்கு மாற்றாக மாட்டு மூத்திரத்தில் இருந்து (கோனாயில் என்கிற வணிகப் பெயரில்) தரையைச் சுத்தமாக்கும் திரவம் உள்ளிட்டு பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் திட்டத்திற்காக மாதம் ஐயாயிரம் லிட்டர் மாட்டு மூத்திரத்தை உத்திராகண்ட் மாநில அரசிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

கோனாயில் வணிக ரீதியில் வெற்றி பெறுமா பெறாதா (அல்லது அது உண்மையிலேயே இயற்கையானதா இல்லையா) என்கிற வாதம் ஒருபுறம் இருக்க, வடமாநிலங்களில் இந்துமதவெறி குண்டர்கள் முன்னெடுத்து வரும் ‘கோமாதா’ அரசியலுக்கு ஒரு பொருளியல் அடிப்படையை உண்டாக்கித் தருகின்றது பாபா ராம்தேவின் பிராடு ஆராய்ச்சிகள். பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் ஆய்வுகளின் விளைவாக நாட்டுப் பசுக்கள் அபிவிருத்தி அடைவதுடன், பால் பொருட்களின் மூலம் நெஸ்லே போன்ற விதேசி நிறுவனங்கள் லாபமடைவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்கிறார் பாபா ராம்தேவ். பன்னாட்டு நிறுவனங்களை இப்படி கேலி பேசுவதால் பெரிய பிரச்சினை இல்லை. இல்லையென்றால் அமெரிக்க அடிமைகளான சங்க வானரக் கூட்டத்தை பகவான் டொனால்ட் டிரம்ப் உண்டு இல்லை என்று பிய்த்து விடுவார்.

பா.ஜ.க. வின் வெற்றியையும் பதஞ்சலியின் வெற்றியையும் பிரித்து பார்க்கமுடியாது

இந்துத்துவ அரசியலின் அக்கம் பக்கமாகவே ஆயுர்வேதத்தையும் தனது பிற தொழில் நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்துகிறார் பாபா ராம்தேவ். பதஞ்சலி சந்தைப்படுத்தும் பொருட்களை கேள்வி கேட்பவர்களையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பவர்களையும், அந்தப் பொருட்கள் கறாரான தரக்கட்டுப்பாட்டு முறைமைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பவர்களையும் “இந்து வாழ்க்கை முறைக்கு” எதிரானவர்களாக சித்தரிக்கிறார் பாபா ராம்தேவ். அதாவது, அதிதீவிர இந்து தேசிய வெறியை அப்படியே வணிகமாக்குவதே இந்த உத்தி.

பசுப் பாதுகாப்பு, லவ் ஜிஹாத், ராமர் கோவில், இசுலாமிய வெறுப்பு என நேரடியாக இந்துத்துவ அரசியலை திணிக்கும் அதே நேரம், ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக சாதிய சமன்பாட்டை தமக்குச் சாதகமாகத் திருப்புவது, மதச்சார்பற்ற, பல்தேசிய இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் இடத்தில் பார்ப்பன இந்து மத உணர்வையும் கலாச்சாரத்தையும் மாற்றீடு செய்வது உள்ளிட்ட தந்திரங்களைக் கையாள்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கலாச்சார ரீதியில் நடுத்தரவர்க்க இந்துப் பொதுபுத்தியை தமது அரசியலுக்காக தயார்ப்படுத்த ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களை பயன்படுத்திக் கொள்கின்றது.

வனங்களை வெட்டிச் சூறையாடிய ஜக்கி வாசுதேவுக்கு விருது, ஸ்ரீஸ்ரீ ரவி சங்கரின் யமுனை ஒழிப்பு விழாவை பெரிய அளவு கண்டுகொள்ளாமல் இருப்பது, பாபா ராம்தேவின் தொழில்களுக்கு விதிகளைத் தளர்த்துவது மற்றும் அரசுத் துறைகளைக் கொண்டே உதவுவது என கைமாறு செய்கிறது பாரதிய ஜனதா அரசு. இணைய தளங்களில் பாபா ராம்தேவின் யோகாவையோ, அவரது பதஞ்சலி பொருட்களையோ விமர்சிப்பதை ஏறக்குறைய இந்து மத துவேஷத்திற்கு இணையாக வைத்து வாதிடுகின்றனர் இணைய ஆர்.எஸ்.எஸ் கூலி கும்பல்.

போராடும் விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கத் தயாராக இல்லாத பிரதமர், ஃபிராடு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தைத் துவங்க ஹெலிகாப்டரில் பறக்கிறார். இதைவிட இவர்கள் மக்கள் விரோதிகள் என்பதை நிரூபிக்க வேறு சான்றுகள் தேவையா என்ன?

– சாக்கியன்

செய்தி ஆதாரம் :

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்

0

ருத்துவ உயர்கல்வியில் ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த 50% இடஒதுக்கீட்டை இரத்து செய்யக்கூடாது என தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். சென்னை டி.எம்.எஸ் வளாகத்துக்குள் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அவர்களுக்கு பல மருத்துவ சங்ககள், அரசு ஊழியர்களின் சங்கங்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. எனினும் இந்தப் போராட்டம் முடிவதற்கு முன்பாக 04.05.2017 அன்று மாலை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் அகிலன் அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் திரு.அகிலன்

இந்த போராட்டத்தின் துவக்கத்தை பற்றி சொல்லுங்களேன்.

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் மருத்துவ உயர்படிப்புகளில் மாநில அரசு ஏற்கனவே வழங்கிவந்த 50% இடஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மத்திய அரசின் அனைத்திந்திய கலந்தாய்வு முறையை பின் பற்றபட வேண்டும் என ஒரு தீர்ப்பு வெளியானது.அதனைத் தொடர்ந்து தான் எங்களுடைய போராட்டம் தொடங்கியது.

இந்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் இனி மருத்துவ படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அது கட்டாயமாக திணிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவ உயர் படிப்புகளில் பழைய முறையே தொடரும், என்று அறிவித்ததன் அடிப்படையில் தான் மருத்துவர்கள் தேர்வெழுதிவிட்டு உயர்படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை காரணம்காட்டி 50% இடஒதுக்கீடானது இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பழைய முறையே பின்பற்ற வேண்டும் எனக் கோரி போராடிவருகிறோம். வரும் 7-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் ஆனால் இது வரை எங்கள் கோரிக்கைக்கு முறையான பதில் இல்லை.

இந்த 50% இடஒதுக்கீடு முறை ஏன் கொண்டுவரப்பட்டது ?

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்புவரை அரசு ஆரம்ப சுகாதாரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருந்தனர். இன்னும் சொல்லப் போனால் கிராமப்புறங்களில் முறையான மருத்துவர்களே இல்லாமல் இருந்தனர்.

அப்போது பரவலாக மருத்துவ இளங்கலை படித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துக் கொண்டே மருத்துவ உயர்படிப்புக்கு தன்னை தயார் செய்து கொள்வது; அதன் பின் மருத்துவ உயர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் வேலைக்கு சேருவது என்ற போக்கு தான் இருந்தது. இதனால் கிராமப் பகுதிகளில் சிறப்பு மருத்துவம் மட்டுமல்ல பொது மருத்துவமே கூட கிடைக்காத நிலை உருவானது. இதனை சரி செய்வதற்காகத் தான் இந்த 50% இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. அதிலும் தொலைதூரப் பிரதேசங்கள் பழங்குடிமக்கள் பகுதியில் வேலை செய்தவர்களுக்கு அவர்களின் அனுபவத்தை பொருத்து அதிகபட்சமாக் 10 மதிப்பெண்கள் வரை சிறப்பு மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கணிசமான அளவு மருத்துவம் படித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு சேர ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது எத்தனை அரசு மருத்துவர்கள் உள்ளனர்?

ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் சுமார் 1800 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள், 330 அரசு மருத்துவமனைகள், 19 மருத்துவ கல்லூரிகள் உள்ளன இதில் சுமார் 16,000 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பாதி பேர் கிராமப்புறங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்றவகையில் போதுமானதாக உள்ளதா?

மருத்துவர்கள் போதுமான அளவில் கிடையாது தான். பல மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. எனக்குத் தெரிந்தே பரமக்குடியில் அரசு மருத்துவ மனையில் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் மட்டுமே உள்ளார். குறைந்தபட்சம் 4-பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார். இவ்வாறான நிலை ஒரு புறம் இருந்தாலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சற்று பரவாயில்லை என்ற நிலையே தமிழகத்தில் உள்ளது. தொடர்ந்து சிறப்பு மருத்துவர்களின் பற்றக்குறையும் உள்ளது.

தமிழகத்தில் எத்தனை முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன ? அவற்றில் எத்தனை இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு தரப்படுகின்றது ?

தமிழகத்தில் சுமார் 1500 முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன. அதில் 50% மத்திய அரசின் அனைத்திந்திய கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 750 இடங்களில்தான் தமிழக அரசு 50% இட ஒதுக்கீடும் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாகவும் வழங்கப்படுகின்றன. இது தவிர தனியார் பல்கலைக் கழகங்களிலும் மருத்துவ முதுகலைப் படிப்புகள் உள்ளன. மொத்தத்தில் 2 முதல் 3 சதவீதம் வரையிலான அரசு மருத்துவர்கள் தான் மேற்படிப்பை நோக்கி செல்ல முடிகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களில் முதுகலை இடங்களில் இடஒதுக்கீடு உண்டா? அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத பட்சத்தில் தனியார் கல்லூரிகளில் ஏன் சேருவதில்லை ?

உங்களுக்கே தெரிந்திருக்கும், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணத் தொகையானது கோடிகளில் உள்ளது. அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் அவ்வளவு பணம் படைத்தவர்களாக இல்லை. அதே போல பல கோடி செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் யாரும் கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றப் போவது கிடையாது. சமீபத்தில் கூட மருத்துவ படிப்புகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட வேண்டும். அவற்றை முறையாக தமிழக கோரிப் பெறாததை கண்டித்து அரசுக்கு 1 கோடி ரூபாய் அபரதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனாலும் அரசு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டாலும் தனியாரின் கல்விக்கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறை தான் உள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஏன் இந்த 50% இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்? அவர்களும் நேரடிப் போட்டி மூலம் படிக்கலாமே?

அரசு மருத்துவர்களைப் பொருத்தவரை ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக தங்களது சேவையை வழங்கி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் 200 முதல் 300 நோயாளிககளை பார்க்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பணிச்சுமையும் கடுமையான அளவில் உள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி தான் நாங்கள் படிக்கிறோம் அந்த அடிப்படையில் தான் இந்த 50% இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் ஊக்குவித்ததால் தான் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகமானது இந்திய அளவில் அனைத்து சுகாதரக் குறியீட்டில் முன்னணியில் உள்ளது. மக்களுக்கு செய்யும் சேவைக்கு எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கைமாறாகத்தான் இதனை பார்கிறோம். மேலும் நாங்கள் பணி ஓய்வு பெரும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவோம் என்ற உத்திரவாத்தின் படி தான் இடஒதுக்கீட்டை பயன்படுத்துகிறோம்.

நீங்கள் உங்கள் சேவைக்கான வெகுமதியாக இடஒதுக்கீட்டை பார்த்தாலும், இடஒதுக்கீடுகளால் தான் மருத்துவர்களின் தரமும், மருத்துவத்தின் தரமும் குறைந்துவிடுகிறது என ‘உயர்சாதியினர்’ மற்றும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்கள் கூறுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவு பல்வேறு நுட்பமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ் பெற்றது நமது சென்னை மருத்துவ கல்லூரி. இது போன்ற அரசுக் கல்லூரிகளில் பயின்ற அரசு மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். ஆக இட ஒதுக்கீட்டால் தரம் குறையும் என்பதை ஏற்கமுடியாது.

உங்கள் போராட்டம் உங்களுக்கான நலன் மட்டும்தானே?

எங்களுடைய போராட்டமானது மருத்துவர்களின் கோரிக்கை என்பதைத் தாண்டி இது மக்களின் பிரச்சினை. தமிழகத்தில் பிற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவு மருத்துவத்தில் முன்னேறிய நிலையில் இருந்தாலும். இன்றளவும் அனைத்து கிராமங்களுக்கும் அரசின் மருத்துவ சேவை முழுமையாக சென்றடையவில்லை.

நகர்புறங்களிலும் ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு இரத்து செய்தால் அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். கிராமப்புற சேவைகள் இல்லாமல் போகும். அரசு மருத்துவமனைகளில் சேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம். இதனால் சாதாரண மக்களுக்கு நேரடியான பாதிப்பு இருக்கும். ஆக இவற்றை கருத்தில் கொண்டுதான் நாங்களும் போராடி வருகிறோம்.

எங்களின் கோரிக்கை முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறைகளை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

உங்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை பாதிப்படையாதா?

நாங்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள். இங்கு போராடிக் கொண்டிருந்தாலும் அவசர சிகிச்சைகள் தடைபடாத வகையில் சில மருத்துவர்களை வேலைக்கு என ஒதுக்கிவிட்டுத் தான் போராடுகிறோம்.

அதே போல தமிழகம் முழுக்கவும் கூட போராடும் மருத்துவர்கள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு, இரண்டு மணி நேர வேலைப் புறக்கணிப்பு போன்று தான் போராடி வருகிறோம். எங்களை போராடுமாறு இந்த அரசு தான் தள்ளியுள்ளது. அரசை கேட்பதை விட்டு எங்கள் போராட்டத்தால் மக்கள் பாதிப்படைகிறார்கள் எனக் கூறுவது தவறானது ஆகும்.

உங்கள் போராட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி எடுத்துச் செல்வீர்கள்?

அனைத்து மருத்துவ சங்கங்களையும் இணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். மேலும் கிராமப்புற சேவைகளுக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்டதை குறிக்கும் கல்லறை கட்டுதல், கடவுளுக்கு மனு அளித்தல். போன்ற பல்வேறு நூதன முறைகளோடு மக்களிடம் எங்கள் கோரிக்கையின் நியாயத்தை விளக்கும் வகையில் நேரடியாகப் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக கிராமப்புற மக்களைப் போராட்டத்தில் பங்கு பெறச் செய்ய முயன்று வருகிறோம். இவற்றை எங்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

வ்வாறு தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டமாக, பெரும்பான்மை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நேரத்தில் அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்தன. மருத்துவர்கள் போரட்டத்தால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிப்பு என்பது போன்ற செய்திகளை அதிகம் வெளியிட ஆரம்பித்தனர். நீதி மன்றமும் உடனடியாக தமிழக அரசு மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என உத்தரவிட்டு தன்னை உத்தமன் போல காட்டிக் கொண்டது. அதே நேரத்தில் தமிழக அரசின் பேச்சுவார்த்தைக்கு மருத்துவர்கள் பணியாவிட்டால், ஜெயலலிதா ஒரே ஆணையில் ஒரு லட்சக் கணக்கான அரசு ஊழியர்களை தூக்கியடித்ததைப் போல இவர்களையும் செய்யலாம் என தனது உண்மை முகத்தை காட்டிவிட்டது. இவ்வாறு கீழறுப்பு செய்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது நீதி மன்றம்.

இந்த அரசையோ, நீதிமன்றத்தையோ நம்பிப்பயன் இல்லை என்பதை அரசு மருத்துவர்களின் போராட்டமும் நிரூபித்துள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எவ்வாறு அவமதிக்கப்பட்டனர் என்பதை சமீபத்தில் பார்த்தோம். எனவே மருத்துவர்கள் மற்ற பிரிவு தமிழக மக்களோடு இணைந்து இந்தப் போராட்டத்தை இன்னும் வீச்சாக நடத்தினால்தான் மோடி அரசையும், மோடி அரசுக்கு கொடி பிடிக்கும் எடப்பாடி அரசையும் பணிய வைக்க முடியும்.

-வினவு செய்தியாளர்

திருப்பூரில் மது ஒழிந்தது – தர்மபுரியில் குடிநீர் வந்தது

0

திருப்பூர் ராதா நகர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகாலமாக 21-வது வார்டில் டாஸ்மாக் கடை (எண் : 1937) ஊரின் முக்கிய தெருவில் அமைந்துள்ளது. மக்கள் குறிப்பாக பெண்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை மக்களிடையே நீறு பூத்த நெருப்பாக உள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டார். அதனடிப்படையில் 07.05.2017 அன்று அப்பகுதி மக்கள் மத்தியில் டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும்! என்ற முழக்க பிரசுரத்தை வீடு வீடாக வினியோகித்து தோழர்கள் மக்கள் உதவியோடு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் மக்கள் அனைவரையும் வீதி வீதியாகச் சென்று அழைப்பு விடுத்து, அணிதிரட்டி டாஸ்மாக் கடை முற்றுகையிடப்பட்டது. கடைக்கு முன்பாக மக்கள் சென்ற போது காலை 12:00 மணிக்கு முன்பாகவே மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை கண்டு அந்த மது பாட்டில்களை உடைத்தெறிந்தனர். மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை தங்கள் முழக்கமாக மாற்றி போர்க்குணத்தோடு போராட்டத்தினை தொடர்ந்தனர்.

சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது கைக்குழந்தைகளுடன் பெண்கள் சாலையில் 4-மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கடையை இன்றே மூடினால் தான் கலைந்து செல்வோம் என உறுதியாக அறிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இங்கு வரவேண்டும் என்று மக்கள் முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ பதறியடித்து மக்களைச் சந்திக்க வந்தார். அவர் 15 நாட்களில் கடை அகற்றப்படும் என பேச்சுவார்த்தையில் அறிவித்தார்.

ஆனால் இதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இன்றே கடையை மூடி சீல் வைக்கச் சொல்லி பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் போலீசு மக்கள் அதிகாரம் தோழர்களைக் குறிவைத்து அவர்களை மக்களிடம் இருந்து பிரிக்கப் பார்த்தது. ஆனால் அதனை மக்களே முறியடித்தனர். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே மக்களை கலைப்பதற்காக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், பிளாஸ்டிக் லத்திகள், கவசங்கள், கேமரா வாகனம் என அனைத்தையும் கொண்டு வந்து இறக்கியது போலீசார்.

பின்னர் டி.எஸ்.பி கடை கட்டாயம் மூடப்படும் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என அறிவித்தார். மக்கள் ஆர்.டி.ஓ –வை சொல்லச் சொல்லி முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து கடை ஆர்.டி.ஓ-வால் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் வெற்றி ஆரவாரத்தோடு முழக்கமிட்டனர்.

சில மணி நேரங்களில் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டி இந்த அரசின் அதிகாரத்தை செல்லாக் காசாக்கினர். அது மட்டுமல்ல போராட்டத்தில் பெண்கள் தங்கள் போர்க்குணத்தால் எதையும் சாதிக்க முடியும் என உணர்ந்துள்ளனர். போராட்டத்தின் போது ஒரு பெண்ணின் கணவர் அதிகார தோரணையில் வீட்டுக்கு அழைத்தார். ஆனால் அப்பெண் விடாமல் போராட்டத்தில் மீண்டும் வந்து கலந்து கொண்டு கடையை சீல் வைத்த பின்னர் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர் – 97885 58526


ருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகரத்தை ஒட்டியவாறு உள்ள பகுதி அண்ணாநகர், இங்கு வசிக்கும் கல் உடைக்கும் தொழிலாளிகள் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. மக்கள் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். கடந்த ஓராண்டாக குடி தண்ணீர் கிடைக்காமல் தெருவிட்டு தெரு செல்வது,  ஊர் விட்டு ஊர்செல்வது, இரண்டு கிலோ மீட்டர் மேல் சென்றால் தான் உப்பு தண்ணீர் கிடைக்கும். குடிநீர் என்றால் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்போதும் கூட இரண்டு  குடம் தண்ணீர் பிடிக்கவே போட்டி போட வேண்டும்.

இந்த நிலையை கண்டு கொதித்து போன மக்கள், அரசு நமக்கு குடிநீரை கூட தீர்த்துக்கொடுக்காது என்று தங்கள் சொந்த அனுபவத்தில் புரிந்துக்கொண்டு, இனி போராடமல் தண்ணீர் பெற முடியாது என்று மக்கள் அதிகாரம் அமைப்பை நாடினர். குடிநீர் பிரச்சனையை தீர்த்து கொடுங்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு பலமுறை மனுகொடுத்து பாத்துள்ளனர் அண்ணாநகர் மக்கள். இருந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறதே தவிர தண்ணீர் பிரச்சனையை தீர்த்த பாடில்லை.

வேறு வழியில்லாமல் கடந்த 5 -ம் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்கள் உடன் வந்து பெண்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அரசு அதிகாரிகள், போலீசாரும் சாமதனாம் செய்து, போராடிய பெண்களை அனுப்பி வைத்தனர். தலைமை தாங்கிய பெண் தோழர்களிடத்தில் உத்திரவாதம் கொடுத்தனர். உத்திரவாதம் கொடுத்து மூன்று நாட்கள் கடந்தும் குடிநீரை வழங்காமல் உதாசீனம் செய்து வந்தனர் அதிகாரிகள்.

தட்டினால் அரசு கதவு திறக்காது நாம் தான் திறக்க வைக்க வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரத்தை செய்தது மக்கள் அதிகாரம். அடுத்த கட்டமாக மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 08.05.2017 திங்கள் அன்று பெண்கள் குழந்தைகள் அனைவரும் காலி குடங்களுடன் சென்று அலுவலத்தை முற்றுக்கையிட்டு முழக்கமிட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக எந்த அதிகாரிகளும் போராடும் மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. உடனே மக்கள் அதிகாரம் தோழர்கள் நாம் முழக்கமிடுவது அதிகாரிகளுக்கு கேட்கவில்லை, அதனால் அதிகாரியின் காதில் போய் முழக்கமிடுவோம் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.

சில ஊழியர்கள் இது என்ன முறை வெளியே போய் செய்யுங்க இது ஆபிஸ் என்றனர். பி.டி.ஓ- வை வர சொல்லுங்க இல்லையின்னா? தண்ணீர் கொடுங்க என்று பேசியவுடன் ஒதுங்கி கொண்டனர். அலுவலகத்திற்குள்ளும் முழக்கமிட்டு கொண்டே இருந்தும், எந்த அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. அப்போது மக்கள் அதிகாரம் தோழர்கள் அலுவலகத்திற்குள்ளே பேரணி சென்று அலுவலகத்தின் மைய பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை கண்டு அருகில் இருந்த நூற்றுக்கானக்கான மக்கள் அலுவலகத்திற்கு வந்து என்ன நடக்கும் என்று கவனித்து கொண்டிருந்தனர். இறுதியாக அவசர அவசரமாக வந்தார், பெண் வட்டார வளர்ச்சி அலுவலர்.

போராட்டத்தின் தீவிரத்தை கண்டு உங்கள் பிரச்சனை உடனே தீர்க்கப்படும் வாருங்கள் என்று அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களும் தமது பிரச்சினையான குடிநீர் கிடைக்காததை விளக்கினர். அதன் பிறகு அதிகாரிகள் உடனே குடிநீர் ஏற்பாடு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை செய்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்  தண்ணீர் கேட்டு அதிகாரியிடம் மனுகொடுத்து கேட்கலாம் ஆனால் இப்படி எல்லாம் போராட கூடாது இது ரவுடித்தனம் என்றார். இதற்கு மக்கள் அதிகாரம் தோழர் ஒருவர் ‘சுதந்திரம்’ கிடைத்து 70 ஆண்டுக்கு மேலாகிவிட்டது, குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை இதற்கு பெயர் என்ன என்றார். தண்ணீர் கேட்டு போராடினால் ரவுடித்தனம், தண்ணீர் பிரச்சனையை கூட தீர்க்க முடியாத அதிகாரிகளும், அரசும் செய்வற்கு பெயர் என்ன? என்றவுடன், பேசுவதை நிறுத்திக்கொண்டார், அந்த அதிகாரி. அரசு கதவை தட்டுவதை விட்டு உடைப்பதுதான் பிரச்சனை தீர்க்கும் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டனர். நாம் வீதிக்கு வந்தால் தான் விடிவு பிறக்கும் என்பதை உணர்ந்து போராடுவதே ஒரே வழி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 81485 73417


டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓலையூர் கிளை. 96591 94257

மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

0

திருமங்கலம் அருகில் கண்டுகுளம் கிராமத்திற்குள் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க 7.5.2017- ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள சில பெண்கள் முன்முயற்சி எடுத்து எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடை வரக்கூடாது, மீறி திறந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். என எழுதி சம்மந்தப்பட்ட எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தார்கள். அந்த மனுவிற்கு அதிகாரிகள் மயிரளவும் மரியாதை கொடுக்கவில்லை.

இன்று கடை திறக்கப் போவதாக தகவலறிந்து அப்பகுதி பெண்கள், மக்கள் அதிகார தோழர் பரமனின் வீட்டைத் தேடி வந்து எங்கள் போராட்டத்திற்கு உதவுங்கள் எனக் கேட்டனர். கட்டாயம்  உதவுவோம், இன்று மாலை மக்களைக் கூட்டிவையுங்கள், நாங்கள் வந்து பேசுகிறோம், என்று கூறி அனுப்பி வைத்தோம். கூறியபடி மாலை 6 மணிக்கே அவர்கள் ஆட்களைக் கூட்டி வைத்துள்ளோம், வாருங்கள் என்று நமக்கு போன் செய்தார்கள், அங்கு ஒரு தெருமுனைக்கூட்டமாகவே நடத்தி, காலையில் அனைவரும் 9:00 மணிக்கு திரண்டு கடை திறக்கவிடாமல் மறிப்போம் என முடிவெடுத்தோம்.

அதன்படி 7.5.2017 காலை 9:00 மணிக்கு மக்கள் தாங்களாகவே ஒன்றுதிரண்டு வீதி வீதியாக சென்று 150 பெண்கள் 50 இளைஞர்கள், பெரியவர்கள் என திரண்டு திறக்கவிருக்கும் கடையை முற்றுகையிட்டார்கள். டாஸ்மாக்குக்கு இடம் கொடுத்தவர்களையும் பெண்கள் சரமாரியாக திட்டித்தீர்த்தார்கள். தகவலறிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட போலீசும், வி.ஏ.ஓ-வும் மக்களை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சித்தார்கள். அந்த வீட்டுக்காரரை எழுதித்தர சொல்லுகிறோம் என்று திசை திருப்பினார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரி வந்து கடையைத் திறக்க மாட்டோம் என எழுதித் தரச்சொல் என்று மக்கள் உறுதியாக நின்றவுடன் எழுதித் தராமல் காலதாமதப்படுத்தினார்கள்.

3-மணி நேரம் மறியல் செய்தும் உரிய அதிகாரி வராததால் சாலை மறியல் செய்வோம் என முடிவெடுத்து உசிலை – திருமங்கலம் மெயின்ரோட்டை மறித்து 1-மணி நேரம் உட்கார்ந்தார்கள். அதன் பிறகு தான் மக்களின் உறுதியான போராட்டத்தால் மிரண்டு போன தாசில்தார் இங்கு கடை திறக்க அனுமதி தரமாட்டோம் என எழுதிக் கொடுத்த பின்தான் போராட்டம் முடிவுற்றது. மக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மக்கள் அதிகார அமைப்பாளர்களின் உதவியால்தான் எங்களால் வெற்றிகரமாக போராட முடிந்தது என வெளிப்படையாகப் பேசினார்கள்.

ஒரு பெரியவர் கம்யூனிஸ்ட் கட்சி முன்னமாதிரி இப்ப இல்ல… என்று ஏங்கியிருந்தேன், உங்களைப் பார்த்த பின் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி உதித்தெழுவதைக் காண முடிகிறது என்றார். பெண்கள் நமது தோழர்களுக்கு நன்றி கூறியதோடு கட்டாயம் சாப்பிட்டு விட்டு போகனும் என அழைத்தனர்.

இறுதியாக மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி அவர்கள்,  கண்டுகுளம் கிராம மக்களுக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்கும் இடையே டாஸ்மாக் போராட்டத்தில் ஏற்பட்ட இந்த ஒற்றுமை குடிநீர், ரேஷன்கடை ஒழுங்குபடுத்துதல் என தொடர வேண்டும். இனி இந்த ஆளும் அருகதை இழந்த அரசிடம் கெஞ்சியது போதும், ஒன்றுபட்டு போராடுவோம். தொடர்ந்து வெற்றி பெறுவோம் என பேசிய போது பெண்கள் கைதட்டி குரலெழுப்பி வரவேற்றார்கள்.

சென்ற ஆண்டு 2016 மே மாதம் மக்கள் அதிகாரத் தோழர்கள் டாஸ்மாக் கடையை அடைக்க பெண்களைப் போராட்டத்திற்கு வாருங்கள் என வீடு வீடாக சென்று அழைத்துள்ளனர். ஆனால் இன்று 2017  மே மாதம் பெண்களே மக்கள் அதிகாரத் தோழர்களை வீடு தேடி வந்து போராட்டத்திற்கு உதவுங்கள் என அழைக்கிறார்கள். காலம் மாறிப்போனது. இது வேறு தமிழகம்! எழுச்சித் தமிழகம்!! ஆண்கள் உதவியின்றி பெண்களே போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் வலிமை பெற்ற, எழுச்சியின் தமிழகம்! என்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக இந்திரா காலனி மக்களும் மக்கள் அதிகாரத்தின் தோழர்களை அழைத்துக் கொண்டு சென்று போராடி கடையை அடைத்தார்கள். அடுத்து கல்லூத்து கிராமப்பெண்கள் 10பேர் நம் தோழர்களைத் தேடி வந்து அழைத்திருக்கிறார்கள்.

பரவட்டும் போராட்டம்! இணையட்டும் மக்களின் தனித்தனிப் போராட்டங்கள்!! ஒன்றுபடட்டும் மக்களும் மக்கள் அதிகாரமும்!!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலை பகுதி.


நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், அக்கடைகளை எல்லா விதிமுறைகளை மீறி மக்கள் குடியிருப்புகளில் வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் வேளையில் மதுரை ஒத்தக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை, ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் கிராமத்தில் அமைத்து டாஸ்மாக் நிர்வாகம் கல்லா கட்டிக்கொண்டிருந்தது.

இதனால் பெண்கள், மாணவிகள் ரோட்டில் நடமாட முடியாமலும், குழந்தைகள் வாசலில் விளையாடக் கூட முடியாமலும்  நரசிங்கம் மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 07.05.2017 அன்று காலை  “டாஸ்மாக் கடைகளை மூடும் மக்கள் போராட்டம் பற்றிப் பரவட்டும், தமிழகத்தை பூரண மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவோம். உங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவோம் வாருங்கள்” என்று அப்பகுதி மக்களிடம் அழைப்பு விடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

காய்ந்த சருகுகள் தீப்பட்டவுடன் எரிவதை போல், நமது போராட்ட அறைகூவலை கேட்டவுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிடச்சென்றனர். முற்றிகையிட வரும் மக்களை பார்த்தவுடன் விற்பனையாளர் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார்.

முற்றுகையிட்டு போராடி வரும் மக்களை பார்த்தவுடன் பதறி அடித்து ஓடி வந்தார்கள் போலீசும், வருவாய்த்துறையும். “கடையை உடனே அகற்ற  வேண்டும், அதுவரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்” என மக்கள் உறுதியாக நின்றார்கள்.

மக்களின் உறுதியான போராட்டத்தை கண்ட அதிகார வர்க்கம் கடையை மூடுவதாக வாக்குறுதி அளித்தனர். “உங்கள்  வாக்குறுதியை எல்லாம் நாங்கள் நம்பவில்லை, நாளையில் இருந்து கடையை திறக்க கூடாது, திறந்தால் கடையை அடித்து நொறுக்குவோம்” என அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் எச்சரிக்கை செய்து கலைந்தனர். இப்போராட்டம் பகுதி மக்களிடம் உறுதியான நம்பிக்கையையும், போராட்டம் தான் தீர்வு என்ற உணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

விழுப்புரம் கொளப்பாக்கத்தில் – டாஸ்மாக்கை நொறுக்கிய மக்கள் !

1

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமம் செ.கொளப்பாக்கம். கோழிப்பண்ணையில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டார் தூரம் உள்ளே செல்ல வேண்டும். கிராமத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் 70 ஆண்டுகளாக இல்லை. சாலைகளில் மின்சார வசதிகள் இல்லை. முட்புதர்களும், மலைகளும்  சூழ்ந்த பகுதி. கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில் இருந்தன.  தண்ணீர் இன்றி பயிர்கள்  அனைத்தும் காய்ந்து கிடந்தது. குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை கொண்டு வந்து வைத்தது இந்த கேடு கெட்ட அரசு. இதற்காக தனியார் நிலத்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு ஒழுங்கான கட்டிடம் இல்லாமல் மர நிழலில் படிக்கும் இந்த ஊரில் தான் சாராயம் விற்பதற்கு கான்கிரீட் கட்டிடம் ஒரு கேடாம்.

தேசிய நெடுஞ்சாலை கோழிப்பண்ணையில்  இருந்த கடையைத் தான் ஊருக்கு உள்ளே  கொண்டு வந்து வைத்துள்ளார்கள். (கடை எண்:11477) இந்த கடைக்கான கட்டிடம் கட்டும் பொழுதே கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் மின்கொட்டகை கட்டுவதாக சமாளித்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி  இரவோடு இரவாக சாராய பாட்டில்களை கொண்டு வந்து இறக்கியது அரசு. அன்று முதல் பள்ளி மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு ஆரம்பித்தது தலைவலி. வீட்டில் சண்டை, மாணவிகளை தரக்குறைவாக பேசுவது என்று குடிகார ஆண்களின் வக்கிரங்களுக்கு ஆளாகினார்கள்.

டாஸ்மாக் கடயை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் டி.எஸ்.பி -யை முற்றுகையிட்ட மக்கள்

கோழிப்பண்ணையில் இருந்த  கடையை எடுக்க கோரி  ஊர் தலைவர் ராஜாங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். எந்த நடவடிக்கையும் இல்லை. அவரும் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு கிராம மக்களே ஒன்று கூடி கடையை எடுக்க முடிவெடுத்தனர். அதற்காக கிராமம் தோறும் கையெழுத்து இயக்கம் நடத்தி  அந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் 02.01.2017 அன்று மனுவாக கொடுத்தார்கள். அதனை மூடுவதாக ஆட்சியர் வாக்குறுதி கொடுத்தார், இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த மக்கள் இரண்டு முறை சாலை மறியல் செய்துள்ளார்கள்,. அப்பொழுதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்கள் எவ்வளவோ போராடியும் இந்த டாஸ்மாக்  கடையை மூடாமல் அரசு தீவிரம் காட்டுவதற்கு முக்கிய காரணம், விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வரை சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு ஒரு கடை கூட இல்லை. மக்கள் வாடகைக்கு கடை கொடுக்கவும் தயாராக இல்லை. இதனையும் மூடிவிட்டால் தங்கள் “சேவை” தடைபட்டு விடுமோ என்ற அச்சம் தான் காரணம். இதே செஞ்சி சாலையில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு டாஸ்மாக் கடையை மூடியது மக்கள் அதிகாரம்.

வேறு வழி தெரியாமல் இருந்த மக்களுக்கு மக்கள் அதிகாரம் தான் நினைவுக்கு வந்தது. அந்த ஊரில் இருந்த விசிக பிரமுகர் மக்கள் அதிகாரத்தை பற்றி  கூறியதால் உதவிக்கு மக்கள் அதிகாரத்தை அணுகியுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 26 ம் தேதி கடையை முற்றுகையிட்டு போராடினார்கள். போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த  விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குவளவன் கடையை இன்றே மூடிவிடுகிறேன் என்று கூறி மக்கள் முன்னிலையிலேயே கடைக்கு சீல் வைத்தார். மக்கள் நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

“ருசி கண்ட பூனை சும்மா இருக்காது” என்பது போல 05.05.2017 அன்று  திடீரென முன்பக்க  வழியை மூடிவிட்டு பின்பக்க வழியாக கடையை திறந்து விற்பனையை நடத்தியுள்ளனர். இவ்வளவு விரைவாக கடையை திறக்க காரணம் அந்த ஊரில் பத்து நாட்களுக்கு தொடர் திருவிழா ஆரம்பித்துள்ளது. ஆத்திரமடைந்த மக்கள் அந்த “கடையை மூடுவது தான் எங்களுக்கு திருவிழா” ஆகவே   கடையை உடைப்பது என்றே முடிவுக்கு வந்துவிட்டனர். மக்களின் கோபம் ஊரெங்கும்  பற்றிப் பரவியதால் டாஸ்மாக் விற்பனையாளர் காதுக்கும் கேட்டுள்ளது. ஆகவே பயத்தால் கடையை மூடி விட்டார்.

கடை இருந்தால் தானே திறப்பதற்கு இனி அந்த கடை இல்லாமல் ஆக்கிவிடுவோம்  என்ற முடிவோடு மக்கள் அதிகாரம் தலைமையில் 06.05.2017 சனிக்கிழமை அன்று  திரண்ட மக்கள் தாங்கள் இதுவரை இந்த அரசின் மேல் கொண்ட கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடப்பாரை, மண்வெட்டி கொண்டு பூட்டு போட்டியிருந்த கடையை உடைத்தனர்.

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில் கேஸ்களை வெளியில் எடுத்து போட்டுடைத்தனர். சிறியவர்கள் முதல் பெண்கள் வரை தங்களின் ஆவேசம் தீர உடைத்தார்கள்.  கிராம நிர்வாக அலுவலர் அங்கே வந்ததை சற்றும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பாட்டிலை உடைப்பதிலேயே தீவிரமாக இருந்தனர்.

பெண்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காதைப் பொத்திக் கொள்ளும் காவலர்

போராட்ட இடத்திற்கு வந்த  கஞ்சனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மீதி சாராய பாட்டில்களை உடைக்காதவாறு பாதுகாப்பு கொடுத்தார். போலிசை பார்த்து கொஞ்சமும் அச்சப்படாத மக்கள் பாட்டிலுக்கு  பாதுகாப்பு கொடுத்த போலிசை “ கழுவி ஊற்றினார்கள்”. அத்துணை வசை சொற்களையும் சிரித்தவாறே ஏற்றுக் கொண்டு “என் கடமையை நான் செய்கிறேன்” என்றார்.

குறிப்பிட்ட நிமிட இடைவெளியில் விழுப்புரம் நகர சரகத்திற்குட்டபட்ட அனைத்து காவல் நிலைய போலிசு இன்ஸ்பெக்டர்கள், சட்டம் ஒழுங்கு சங்கர், கலால் பிரிவு வெள்ளைசாமி ஆகிய காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்   மற்றும் உளவுப்பிரிவு,  அதிரடிப்படை என அத்துணை படையையும் குவித்தனர். எந்த படைக்கும் பயப்படாத மக்கள் கடையை அகற்றாமல் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டோம். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றதும் செய்வதறியாமல் திகைத்த போலிசு வேறு வழியின்றி தாசில்தாரை வரவழைத்தது.

அந்த “தாசில்தார் உத்தமர்” வந்ததும் உடைந்த பாட்டில்கள், உடையாத பாட்டில்கள் அனைத்தையும் கணக்கெடுத்துக்கொண்டு இரண்டு மினி வேன்களில் மிச்ச மீதியிருந்த சாராய பாட்டில்களை  ஏற்றி அனுப்பி விட்டு கடையை மூடி விட்டோம். இனிமேல் திறக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

இத்தனை நாட்கள் தாங்கள் மடியில் கட்டிக்கொண்டு அலைந்த நெருப்பு இன்று அணைந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் மக்கள் அனைவரும் தங்கள் வீடு திரும்பினார்கள்.

தங்களின் அதிகாரத்தை இழந்து மக்களின் அதிகாரத்துக்கு பணிந்த போலிசு சும்மா இருக்குமா? மக்களிடம் தாங்கள் மண்ணை கவ்விய கோபத்தில் இதற்கெல்லாம் காரணம் மக்கள் அதிகாரம் அமைப்பு தான் என்றும், அவர்களை கைது செய்தால் தான் தங்கள் வெறி அடங்கும் என்று நினைத்து கிராமத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய அனைத்து கிளை சாலைகளிலும் போலிசை  நிறுத்தி வைத்திருந்தது.

சரியாக மாலை ஆறு மணிக்கு கிராமத்தில் இருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் புறப்பட்டு கொஞ்ச தூரம் சென்ற தோழர்களின்  வண்டியை நிறுத்தி  கைது செய்ய முயற்சி செய்தார் பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

அவரை எதிர்கொண்ட தோழர்கள்  மீண்டும் கிராமத்திற்குள் சென்று  எங்களை கைது செய்ய வருகிறார்கள் என்று மக்களிடம் கூறியதும், மக்கள் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர். ஊருக்குள் பதுங்கியிருந்த வேட்டை நாய் போல் தபதபவென்று போலிசும் வந்து விட்டது.

போலிசை முற்றுகையிட்ட மக்கள் ஆளுக்கொரு திசையில் “எங்களுக்காக வந்தவர்கள் அவர்களை கைது செய்தால் எங்களையும் கைது செய்” என்று ஒரே குரலில் கூறியதால் என்ன சொல்வதென்று தெரியாமல், நாங்கள் அவர்களை கைது செய்யவில்லை வாகன சோதனையில் தான் ஈடுபட்டோம் என்று பச்சையாக புளுகியது. “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்ன சோதனை வேண்டி கெடக்கு. சாராயம் விக்கும் போது கூட வந்ததில்லை” யார்கிட்ட பொய் சொல்ற என்று மக்கள் கேட்க தன வாயை பொத்திக்கொண்டார் உதவி ஆய்வாளர்.

எப்படி பேசினாலும் கடிவாளம் போடுவதால், உங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது. எனவே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றது போலிசு. “உங்களை நாங்கள் பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்கவில்லை, உங்கள் பாதுகாப்பை நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம், எங்களை மீறி நீங்கள் எப்படி அவர்களை கைது செய்து விடுவீர்கள் என்று பார்த்து விடாலாம் என நேருக்கு நேராக மக்கள் கூறியதும் தங்கள் பாட்சா இனியும் இவர்களிடம் செல்லாது என்பதை எப்பொழுதும் போல் தாமதமாகவே புரிந்து கொண்டது போலிசு.

உடனடியாக அங்கிருந்து கிளம்பினால் பெரும் அவமானம் என்பதால் தொடர்ந்து அந்த ஊரில் உள்ள  கைக்கூலிகளின் உதவியோடு ஊரையே சுற்றி வந்தது.   விடியற்காலை வரை சுற்றி மக்களை பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். விடிந்தும் தோழர்களை அவர்களால் கைது செய்ய முடியவில்லை.

இனிமேல் “சும்மா இருந்தால் ஊருக்குள்ள ஒரு பையனும் மதிக்க மாட்டான், அதனால் காசு கொடுத்தாவது பதக்கம் வாங்கி செல்வோம்” என்ற வடிவேல் காமெடி போல் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்த தாய்மார்கள் இரண்டு பேரையும், காலைக்கடன் கழிக்க சென்றவர்களையும் “கையில் மாட்டியதை எடுத்துச் செல்லும் வழிப்பறி திருடன் போல்”  யாருக்கும் தெரியாமல் கைது செய்து வேனில் ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் சென்றது  போலிசு.

மக்கள் பாதுகாப்பில் இருந்த தோழர்களை கைது செய்ய முடியாததால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் போஸ்கோவை அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அடாவடியாக கைது செய்தது.  எப்படியோ  ஒன்பது பேரை கைது செய்து தன்  வீரத்தை நிலைநாட்டியது காவல்துறை.

உள்ளூர் அதிமுக பிரமுகர் மூலம் மூளை சலவை செய்ய முயற்சிக்கும் போலீசு.

சம்பவம் அறிந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்வதென முடிவெடுத்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் மோகன்ராஜ் தலையில் மீண்டும் திரண்ட மக்கள் சாரை சாரையாக கிளம்பினார்கள். மீண்டும் அதே போலிசு படை களமிறங்கியது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை ரிமாண்ட் செய்து விட்டு இரண்டு பெண்கள் உட்பட ஆறு  பேர் விடுதலை செயபட்டனர். மற்றவர்களையும் விடுதலை செய்யாமல் இங்கிருந்து கலைய மாட்டோம் என்று மக்கள் உறுதியாக நின்றனர்.

நேரடியாக மக்களிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் அதிமுக வின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை களமிறக்கி மக்களைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. தன்னால் முடிந்த வரை மணிக்கணக்காக பேசியும் ஒருவர் கூட அவர் சொல்வதை கேட்கவில்லை. அவமானப்பட்டது தான் மிச்சம்.

நேரம் ஆகியும் காவல்துறை அவர்களை விடுவது குறித்து எதுவும் சொல்லாததால் அங்கேயே இந்த அரசையும் காவல்துறையின் காட்டுமிராண்டி தனத்தையும் கண்டித்து முழக்கமிட்டு ஆர்பாட்டம் நடத்தியாதல் மக்கள் அதிகாரம் தோழர்கள் உட்பட 65 பெண்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யகூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்பளித்தும் சட்டவிரோதமாக கைது செய்கிறது போலிசு. இதன் மூலம் நீதி மன்ற தீர்ப்புகள் எல்லாம் எங்கள் காலுக்கு சமம் என்று பறைசாற்றி விட்டது காவல்துறை.

அரசுக்கட்டமைப்பே தோற்றுப் போய் விட்டதன் விளைவு தான் தாங்கள் வகுத்த சட்டத்தை அவர்களே மீறுகிறார்கள். இனி இவர்களிடம் கெஞ்சுவதில் எந்த பயனும்  இல்லை என்பதை மக்களே தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்து விட்டார்கள். இன்று சாராய மதுக்கடையை நொறுக்கிய மக்கள் நாளை இந்த அரசையும் நொறுக்குவார்கள். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அதிகார வர்க்கத்திற்கும் உணர்த்துவார்கள்

-வினவு செய்தியாளர்.

நெல்லை, கோவையில் மே தினப் பேரணி

0

நெல்லை ஆர்ப்பாட்டம்
மே தின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம்!

நெல்லையில் மே 1 2017   காலை 10.00 மணிக்கு இரயில் நிலையம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவா தலைமை வகித்தார். சரியாக 10 மணிக்கு மே தின முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் துவங்கியது. சுற்றியிருந்த வியாபாரிகளும், இரயில் நிலையம் செல்வோரும் முழக்கங்களை ஆர்வத்துடன் கவனித்துச் சென்றனர்.

தலைமையுரையாற்றிய தோழர் சிவா, ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவு மக்களும் இன்றைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர், கார்ப்பரேட் முதலாளிகள் இதற்கு எப்படி காரணமாக உள்ளனர்,  கார்ப்பரேட் முதலாளிகளை அரசு பாதுகாப்பதை அம்பலப்படுத்திப் பேசினார். அடுத்ததாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி  இந்த அரசுக் கட்டமைப்பு மக்களை ஆள தகுதியற்றுப் போய்விட்டதை உணர்த்தும் விதமாக பேசினார்.

அடுத்ததாக, சிறப்புரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோணிராஜ் “ மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையைப் பாதுகாக்க இந்து மதவெறி பாசிஸ்டுகள் எப்படி நாடு முழுவதும் வெறிகொண்டு செயல்படுகிறார்கள், ஹெச்.ராஜா போன்றவர்கள் போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை கடுமையாகச் சாடிப் பேசினார். இறுதியாக, எல்லாப் போராட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும், புரட்சிகர அமைப்புகளின் தலைமையின் கீழ்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்பதையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அரசுக்கட்டமைப்பில் அது சாத்தியமில்லை என்பதையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மாற்று என்பதையும் வலியுறுத்தினார். விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர சக்தி நன்றியுரையாற்றினார்.

அரசையும், இந்து மதவெறி பாசிஸ்டுகளையும் அம்பலப்படுத்திய பதாகைகள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன.

ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை ஜங்ஷன் போலீசு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்தது. தொழிற்சங்கங்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம்  நடத்துவார்கள் அதனால் அதற்கு மேல் முடியாது என்பதை அதற்கு காரணமாக கூறியது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என்று அதற்கும் தடை விதித்தது. கேட்டால் பாடல்களில் உள்ள கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறது. யாருக்கும் அனுமதியில்லையாம். இந்து மதவெறி பாசிஸ்டுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இந்த நாட்டையே சுடுகாடாக மாற்றுவதற்கு உரிமை உண்டு. ஆனால் கருத்துக்களை வெளிப்படுத்த ஜனநாயக வழியைப் பின்பற்றினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை.

போலீசின் இந்த நெருக்கடிகளையும் தாண்டி தோழர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்கான பாதையை அறைகூவும் விதமாக போராட்டம் நடந்தேறி நிறைவுற்றது.

 

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
நெல்லை மாவட்டம்

***

கம்யூனிசம் தோற்றுவிட்டதென்றால் வென்றது எது…? மே நாள் பேரணி, கூட்டம், கோவை.

மே ஒன்று உலகத் தொழிலாளர் தின பேரணியும் அதனை தொடர்ந்து தெருமுனைக் கூட்டமும் கோவை மண்ணில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களால் நடத்தப்பட்டது.

கோவையை பொறுத்தவரை காக்கிகளும் காவிகளும் நிரந்தரக் கூட்டணி அமைத்துள்ளனர். போலீசின் நிறைவேற்றும் பொறுக்கிக் கும்பலாக ஜனநாயக சக்திகளின் மீதான அடக்கு முறைக்கு காரணங்களை உருவாக்குபவர்களாக அவ்வப்போது முதலாளிகளின் அடியாட்களாக என காக்கி மற்றும் காவிப் படையின் ஆளும் வர்க்க சேவைகளின் பரிணாமம் கோவையில் நமக்கு நிறைய காணக் கிடைக்கும்.

சி.‌ஆர்.‌ஐ நிறுவன சட்டவிரோத கதவடைப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருந்த காலத்தில், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் போஸ்டர்கள் ஒட்டப்படும் இடங்களிலெல்லாம் பழைய சினிமா பட போஸ்டர்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு நமது போஸ்டர்கள் மீது ஒட்ட ஆளையும் பசையையும் காசையும் கொடுத்து அனுப்புவார் முதலாளி. அதே போல இப்போதும் மே நாள் சுவரொட்டிகள் மீதும் காவிக்கூட்டத்தைச்சேர்ந்த ஒருவரின் நினைவு நாளை போஸ்டரை ஒட்டியுள்ளார்கள். மே நாள் பி‌ஜெ‌பி காரனுக்கு எரிச்சலை தருகிறது.

மே தின சுவரொட்டிகளை மறைக்கும் வானரப்படைகள்

இடையர்பாளையத்தில் தொழிலாளிகள் போராடி களம் கண்ட மண்ணில் பேரணி துவங்கியது. ஓங்கி ஒலிக்கத் துவங்கிய மே நாள் முழக்கங்களும் மேற்கு மண்டல மண்ணின் இசைக்கருவி மத்தளம் பேரொலி எழுப்பி நாற்சந்தி அதிர எஸ்.‌ஆர்.‌ஐ தொழிலாளிகள் ஜி‌டி‌என் தொழிலாளிகள் இன்னும் பல நிறுவன தொழிலாளிகள் வண்ண வண்ண சீருடைகள் இவையனைத்திற்கும் இணையாய் செஞ்சட்டைகள் குழந்தைகள் பெண்கள் என பேரணி மெல்ல நகர்ந்தது.

இடையர்பாளையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி கடந்த வருடம் காவிகளின் கலவர பாளையமாக மாறிய மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் நோக்கி சென்றது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் சரவணன் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். தனது தலைமையுரையில் இந்த கூட்டத்தின் அவசியத்தை விளக்கினார்.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்க தோழர் ஜெகநாதன் மில் தொழிலாளிகளின் உணர்வை மேடையேற்றினார்.

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் உமா,

“செய்தி தாள்களில் பேஸ்புக் எங்கும் மே தின வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். இது வாழ்த்து தெரிவிக்கும் நாளா..? மார்ச் எட்டு உழைக்கும் மகளிர் தினம் எப்படி கோலப்போட்டிகளாலும் பட்டுச் சேலை கட்டிக்கொண்டும் அற்பத்தனமாக சீரழிக்கப்பட்டதோ, அதே போல மே தினத்தையும் சீரழிக்க நாம் அனுமதிக்க கூடாது. போராட்டத்திற்கு யாரையும் கூப்பிடும் அவசியம் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. மக்கள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அதிகாரம் தமிழகம் முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. திருவாரூரில் மக்களிடம் மனுவாங்க அதிகாரி மறுக்கிறார், தாலுகா அலுவலகம் அடித்து நொறுக்கப்படுகிறது. டாஸ்மாக் போராட்டத்தில் இப்போது பெண்கள் உடைக்கும் அளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை வளர்த்தெடுக்க வேண்டும்.” என கூறினார்.

மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் சம்புகன்,

“போராடிப் பெற்ற உரிமைகளை தக்க வைக்க வேண்டிய அவசியத்தையும் பாசிச மோடியின் ஆட்சியில் எப்படி இயற்கையும் நாடும் சுரண்டப்படுகிறது என்பதை கூறினார்.” தேர்தல் பாதையை காறியுமிழ்ந்து போராட்டப் பாதைக்கு அறைகூவி முடித்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில்,

இந்த மே நாள் என்பது ரசியப் புரட்சியின் நூற்றாண்டில் வரும் மே தினம் 18ஆம் நூற்றாண்டில் சிக்காகோ தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக போராட்டத்தை துவக்கினார்கள். அதனை ரசிய புரட்சி நடத்திக் காட்டியது. இந்த மே தினத்தில் மீண்டும் தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைக்காக குரல் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டோம். முதாளித்துவம் நம்மை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்து வந்து விட்டது.

வரலாற்றின் சக்கரங்கள் மீண்டும் சுழலும். பாட்டாளி வர்க்கம் ஏற்கெனவே பெற்ற வெற்றியை விட கூடுதலாக வெற்றி அடையும். மே தினத் திருநாள் வாழ்த்தை எடப்பாடி முதற்கொண்டு சி‌பி‌ஐ, சி‌பி‌எம் என அனைவரும் கூறுகின்றனர். மே தினம் என்பது திருநாளல்ல. அது விடுதலைக்காக அறை கூவல் விடுக்கும் நாள். தமிழ் மாதங்களில் கொண்டாடப்படுகின்ற பௌர்ணமி, பிரதோஷம் ஆவணி அவிட்டம், மகா சிவராதிரி, தீபாவளி, பூசம், மகம் போல மே தினம் கொண்டாடப்படுகிறது. மூடத்தனம் நிரப்பிய பண்டிகை போல அது காட்டப்படுகிறது.

மேதினம் என்பது ஏதோ எட்டு மணி நேர வேலை என்பதுடன் குறுக்கப்படுகிறது. மேதினத்தின் கொள்கைகள் அதையும் தாண்டியது அரசியல் அதிகாரத்தை நோக்கி அது வளரும். வளர்த்த வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது நாம் தான். போராட்டங்களின் தலைமை பாட்டாளி வர்க்கம்தான். வரலாறு நமக்கு அந்தக் கடமையை வழங்கியுள்ளது. அதன்படி நம் நாட்டின் அனைத்துப் போராட்டங்களுக்கும் தலைமை ஏற்போம். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் குடிநீர் தட்டுப்பாடு வறட்சி பற்றி என்ன கூறுகிறார்கள்? இது 144 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வந்துள்ளது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இதனை நாம் பொய் என்கிறோம். இந்த வறட்சிக்கு காரணம் அரசியல்வாதிகளும் முதலாளிகளும்தான்.

நொய்யல் கோவைக்கு தாயாக ஓடிக் கொண்டிருந்தாள். நொய்யலில் நின்று ஒரு வெண்கல சொம்பை எடுத்து துண்டால் மூடி தண்ணீரை மொண்டு குடித்தால் தேனாய் இனிக்கும். சாயக்கழிவை கொட்டி நொய்யலை அழித்தது முதலாளித்துவ வர்க்கம்தான்.

நொய்யலில் இன்றும் தினசரி இரவு 10 மணிக்கு மேல் மணல் அள்ளுவது அமைச்சர் எஸ்‌பி வேலுமணிதான். இவருடைய கூட்டாளிதான் தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்திய வானதி சீனிவாசன். தொண்டாமுத்தூரில் தான் வானதியின் தோட்டமும் வீடும் உள்ளது. ஆனால் அக்கா அங்கே தேர்தலில் போட்டியிடாமல் கோவை தெற்கு தொகுதியில் நின்ற காரணமே எஸ்பி வேலுமணி கூடுதல் ஓட்டு வாங்கி ஜெயிக்க வேண்டும் என்பதற்கு தான். கூடுதல் ஓட்டு வாங்கி ஜெயித்தால் தான் மந்திரி பதவி என்பது செத்துப் போன அம்மாவின் கணக்கு எனவே தன் சாதிக்காரர்க்கு வானதி மேடம் இப்படியாக உதவினார். மக்கள் விரோதிகளுக்கு கட்சி லேபிள்கள் வேறு ஆனால் கொள்ளை அடிப்பதில் ஒரே அணி.

வானதி, வேலுமணியோடு ஈஷா ஜக்கியும் ஒரே அணி. மலையை அழித்து ஆசிரமம் கட்டி, ஆதீயோகி சிலை அமைத்து மேற்கு தொடர்ச்சி மலையை நாசமாக்கி வருகிறார்கள். நதியை, மலையை நாசமாக்கினால் வான்மழை எப்படி வரும் வறட்சி தான் வரும். எனவே சமீபத்திய வறட்சிக்கு இந்த சதிகாரர்களே காரணம். உழைக்கும் மக்கள் இவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றாமல் தடுக்கவே கலாச்சாரச் சீரழிவுகளை முன்நிறுத்துகின்றனர்.

இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என பாகுபலிக்கு ஊடகங்கள் கவர் வாங்கிக் கொண்டு எழுதிக் கொண்டுள்ளார்கள். ஆனால் மக்கள் செங்கொடியை உயர்த்தினாள் உடனே முதலாளித்துவ கூலி எழுத்தாளர்கள், ஊடகங்கள் கம்யூனிசம் தோற்று விட்டது என்கிறார்கள்.

கம்யூனிசம் தோற்று விட்டால் வென்றது எது ?
காந்தியிசமா அல்லது முதலாளித்துவமா…?

எந்த இசம் வென்றது என்று இவர்களால் ஏன் சொல்ல முடியவில்லை. மேகங்களால் மறைக்கப்பட்டு நிலவின் ஒளி மங்கினால் நிலவு தோற்று விட்டதாக சொல்வது எப்படி மடமையோ அது போல கம்யூனிசம் தோற்று விட்டதாக சொல்வதும் ஆகும். இனி மே நாளை போராட்ட நாளாக மாற்றுவோம் என்று அறைகூவல் விடுத்து முடித்தார்.

தோழர் ஜோசப் குழுவினரின் பாடல்கள் கூட்டத்தை உற்சாகம்மூட்டியது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் தேவராஜ் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
கோவை.

சென்னை, வேலூர், கோத்தகிரி – மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா

0

நீலமலையில் ஆசான் காரல் மார்க்சின் 200வது பிறந்த நாள் !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக உழைக்கும் மக்களின் விடிவெள்ளி காரல்மார்க்ஸின் 200 -வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படம் திறந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

வாகனப்பிரிவு தலைவர் தோழர் சுப்பிரமணி மற்றும் செயலாளர் தோழர் கணேஷ் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.
மாவட்ட செயலர் தோழர் பாலன் உரையாற்றியதில் மூலதனத்தின் சுரண்டலில் ஏழை நாடுகள்  எவ்வாறு கொடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதோடு, அப்பொழுதே ஆசான்கள் இந்த நிலைமையை கணிந்துள்ளதை உணர்ந்து பாட்டாளி வர்க்க விடுதலைக்கு நாம் தோழர் காரல் மார்க்ஸின் சிந்தனையை உயர்த்திப்பிடிப்போம் என்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்(இணைப்பு)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
தொடர்புக்கு – 9047453204


காரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் நிகழ்ச்சி – வேலூரில் கொடியேற்றம் !

வேலூர் பழைய மீன்மார்கெட் அண்ணா சாலையில் பு.ஜ.தொ.மு. சார்பில், ஆசான் கார்ல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியையொட்டி கொடி ஏற்றி படத்திறப்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் தோழர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்.
_____
சென்னை மதுரவாயலில் மார்க்ஸ் பிறந்த நாள் படத்திறப்பு !
சென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் மத்தியில் ஆசான் காரல் மார்க்சின் 200-வது பிறந்தநாள் பிறந்த நாள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மார்க்சின் படத்திறப்பு நிகழ்ச்சியும் கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பொது மக்களும், தோழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மானவர் இளைஞர் முன்னணி,
சென்னை – 94451 12675

ஆதார் கண்காணிப்பு : மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு

14

போதை மருந்து கும்பல்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் நிதிமூலமாக கருப்புப்பணம் இருந்து வருகின்றது. எனவே, ஒரு நபரின் அடையாளத்தைப் போலி நகல் செய்ய முடியாத அளவுக்கு உறுதியான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மத்திய அரசு வழக்குறைஞர் முகுல் ரோத்தகி.

முகுல் ரோத்தகி

வருமான வரி செலுத்துவதற்கும், பான் அட்டைகள் எடுப்பதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் போது கடந்த மே 2ம் தேதி மேற்படி வாதம் அரசு தரப்பில் வாதமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளில் நிறைய போலிகள் இருப்பதாகவும், போலி பான் எண்களின் மூலம் நடக்கும் வருமான வரி தாக்கலில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், இதுவும் கருப்புப்பணத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் அரசின் வாதம்.

மேலும் தனது வாதத்தை முன்வைத்த மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இதுவரை சுமார் 113.7 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது நாள் வரை வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளில் போலிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உயிரியளவு விவரங்கள் (Biometric information), கருவிழிப் பதிவு மற்றும் கைரேகை விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதால் போலி அட்டைகளுக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நெஞ்சறிந்து பொய் சொல்வது என்பதற்கு மத்திய அரசு வழக்கறிஞரின் மேற்படி வாதத்தை உதாரணமாக காட்டலாம்.

முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் களமாடியதற்கு சரியாக ஏழு நாட்கள் முன்பாக (ஏப்ரல் 26) குஜராத் மாநிலம் அகமதாபத் நகரைச் சேர்ந்த நிலேஷ் மிஸ்த்ரி என்பவர் கைது செய்யப்படுகிறார். நிலேஷ் ஏன் கைது செய்யப்படுகிறார்? அதற்கும் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதத்திற்கும் என்ன தொடர்பு?

அலோபதி மருந்துகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன் தன்னார்வலர்களாக முன்வரும் மனிதர்களின் மேல் பரிசோதிக்கப்படும்(Clinical Trials). மேற்படி சோதனைகளுக்கு முன்வரும் ஒருவர், அதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்கள் வேறு கிளினிக்கல் டிரையலுக்கு சென்றிருக்க கூடாது என்பது விதிமுறை. நிலேஷ் மிஸ்த்ரி வேலையிழந்த மென்பொருள் பொறியாளர். அவருக்குப் பண நெருக்கடி இருந்ததால் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறி குறுகிய காலத்தில் மீண்டும் சோதனைக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக புது புது அடையாளங்களுடன் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கியுள்ளார். தனக்கு மட்டுமின்றி, தன்னிடம் அறிமுகமான வேறு 100 பேர்களுக்கும் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

போலி ஆதார் அட்டைகள் தயாரித்தற்காக கைது செய்யப்பட்ட வேலையிழந்த மென்பொருள் பொறியாளர் மற்றும் அவருக்கு உதவியவர்கள்

போலி ஆதார் அட்டைகள் உருவாக்க முடியாது என்பது பொய். சட்டப்பூர்வமான முறைகளிலேயே போலி பான் அட்டைகள் பெற முடியும் என்றால், ஆதாரைப் பொருத்தவரை சட்டப்பூர்வமற்ற முறையில் போலி செய்ய முடியும். மேலும், ஆதார் விவரங்கள் அனைத்துமே மையப்படுத்தப்பட்ட கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்பும் உள்ளது. உலகிலேயே அதிசக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையங்கள் கொண்ட கணினிகளுக்குள்ளேயே ஹேக்கர்கள் நுழைந்து விவரங்களைத் திருடுவது தொடர்பான செய்திகள் ஏராளமாக உள்ளது.

எனவே முகுல் ரோத்தகி பீற்றிக் கொள்வதைப் போல் அரசின் நோக்கம் போலி செய்யவே முடியாத ஆதாரின் மூலம் போலிப் பான் அட்டைகளை கட்டுப்படுத்துவது அல்ல என்பது அவரே முன்வைத்த பிற வாதங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்துவது மற்றும் அதற்காக உயிரியளவு விவரங்கள், கருவிழிப் பதிவு மற்றும் கைரேகைப் பதிவு போன்றவற்றைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது என்பது தனிநபர் ஒருவரின் தனியுரிமையில் (Privacy) தலையிடுவதாகும் என்றும், அவ்வாறு செய்வது ஒருவரின் உடலின் மேல் நிகழ்த்தப்படும் அத்துமீறல் என்றும் அது தனிநபர் ஒருவருக்கு அவரது உடலின் மேல் உள்ள உரிமையில் தலையிடுவதாகும் என்றும் தற்போது உச்சநீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்காடி வரும் எதிர்மனுதாரர்கள் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி பின்வருமாறு வாதிட்டுள்ளார் –

”சொல்லிக் கொள்ளப்படும் தனியுரிமை மற்றும் உடல் ரீதியான அத்துமீறல் என்பதே பொய்யானதாகும். தனிநபர் ஒருவருக்கு அவரது உடலின் மேல் அறுதி உரிமை ஏதும் கிடையாது” என்ற முகுல் ரோத்தகி, மேலும் தனிநபர் ஒருவரைக் கொல்லும் உரிமையே அரசுக்கு உள்ளது என்றும், கைரேகைகள் மட்டுமின்றி மரபணு மாதிரிகளையும் கூட ஆதார் விவரங்களுடன் இணைக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளதென்றும் வாதிட்டார். மேலும், “ஒன்று உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் – வேறு வாய்ப்புகள் எதையும் சட்டம் அனுமதிக்காது” என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்தில் தொனிப்பது திமிர் மட்டுமல்ல – இந்த நாட்டின் எல்லைகளுக்குள் வாழும் மக்கள் சகல வகைகளிலும் அரசு அதிகாரத்திற்கும் கீழ்படிய வேண்டும் என்கிற பாசிச வெறி. மக்களைக் கண்காணிப்பதற்கான அடிப்படை முறையாக ஆதார் அட்டையை முன்தள்ளுகிறது மோடி அரசு. கண்காணிப்பதே கட்டுப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதே நிரந்தர அடிமைகளாக்குவதற்கும் முன்தேவைகள் என்பதன் அடிப்படையில் தான் வெறித்தனமாக ஆதாரை கட்டாயமாக்க முனைந்துள்ளது மோடி அரசு. இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளின் குறுக்கே எதுவும் வந்து விடக்கூடாது – நீதிமன்றம் உட்பட – என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ளது மத்திய அரசு. இதை அமல்படுத்த நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் கூட காற்றில் பறக்க விட துணிந்துள்ளது.

ஆதாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பல்வேறு சந்தர்பங்களில் அதைக் கட்டாயமாக்குவதோ, அரசின் திட்டங்களுக்கு முன்நிபந்தனையாக்குவதோ கூடாதென உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. “ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எந்த தனிநபரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அரசின் சில துறைகள் தமது திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என சுற்றறிக்கை விட்டிருந்தாலும், இறுதி தீர்ப்பு வரும் வரையில் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது” என 2013-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி அறிவித்தது உச்ச நீதிமன்றம். 2015 மார்ச் 16-ம் தேதி தனது முந்தைய வழிகாட்டுதலை அரசுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது உச்ச நீதிமன்றம். ஆதார் கட்டாயமில்லை என அரசே அச்சு மற்றும் மின் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என 2015 ஆகஸ்ட் 11-ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2016 செப்டெம்பர் 14-ம் தேதி தனது முந்தைய உத்தரவுகளை உறுதிப்படுத்தியதுடன், கல்வி உதவித் தொகை பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என்கிற உத்தரவையும் அளித்தது

இன்னும் ஏராளமான சமயங்களில் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை போட்டுள்ளது. ஆனால், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் அச்சிட்டப்பட்ட காகிதங்களைக் கொண்டு அதிகார வர்க்கம் மலம் துடைத்துப் போட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்திற்கும் தெரியாத ஒன்றல்ல. போகப் போக நீதிபதிகளின் பார்வை மாறி வருகிறது அல்லது மத்திய அரசின் நிலையை ஏற்கும் திசையை நோக்கி செல்கிறது.

கல்வி உதவித் தொகை, ரயில்வே தேர்வாணையத் துறை, மத்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை உள்ளிட்டு, மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்கள், மாநில கல்வித் துறைகள், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தொழிலாளர் ஓய்வூதியத் துறை, பொது விநியோகத் துறை என மத்திய மாநில அரசின் வசமுள்ள எண்ணற்ற திட்டங்களுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது அரசு. பால்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ளிட்டு பள்ளிக் குழந்தைகள் அனைவரின் மேலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கித் திணித்துள்ளது அரசு. பிறகு எதிர்ப்புகள் வந்த பிறகு குழந்தைகளுக்கு தேவையில்லை என்று சமாளிக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் சகல துறைகளும் ஆதார் அட்டையைக் கோருவதால் மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய அசைவும், செயல்பாடுகளும் கூட ஆதார் இன்றி நிறைவேற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி நிறைவேற்றப்பட்டவை தாம்.

நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம், அதன் வரம்புகள் மற்றும் எல்லைகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு உட்பட்டது என்பது ஆதார் விசயத்திலம் நடக்கிறது. ஏனெனில் மைனர் குஞ்சுகள் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் இந்த அரசு என்கிற கட்டமைப்பின் நடுமத்தியில் இருக்கும் புனிதப் பசு தான் நீதித்துறை. எனவே அதன் சவடால்களை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்பதை தன்னுணர்வாகவே ஆளும்வர்க்கம் அறிந்திருக்கும் என்றாலும், நீதிமன்றத்திற்கு என்றே உள்ளதாக சொல்லிக் கொள்ளப்படும் ‘புனிதம்’ எனப்படும் கந்தாயத்தை பெயருக்காகவாவது பராமரிக்க வேண்டிய தேவை குறித்து கூட அவர்கள் கவலைப்படவில்லை.

கண்காணிப்புக் கருவியான ஆதார் அட்டையை மக்களின் மேல் திணித்து ஒரு எதேச்சதிகார பாசிச அரசாங்கத்தை நிறுவும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது மோடி அரசு – அப்படிப் போகிற போக்கில் ”நீதிமன்றத்தின் மாண்பு” மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருப்பது ஒரு துணை விளைவு தான். ஒருவேளை மோடியின் அரசு தனது இலக்கை அடையும் நிலை ஏற்பட்டால், நாம் மீண்டும் வரலாற்றின் இருண்ட கட்டம் ஒன்றுக்குள் நுழைய வேண்டியிருக்கும்.

மோடியும் இந்துத்துவ பாசிஸ்டுகளும் தமது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார்கள்;
ஜனநாயக சக்திகளின் முன் மிக நீண்ட போராட்டம் ஒன்று காத்துக் கிடக்கிறது.

– சாக்கியன்

மேலும் படிக்க: