குப்பைவாரும் சாதியிடம்
கொள்வினை கொடுப்பினை
கூடாது எனும்
உங்கள் கொள்கையை
துப்புரவு தொழிலாளிகள்
கடைபிடித்தால்
இந்நேரம் என்னாகும் சென்னை!
எத்தனையோ
பாதாள சாக்கடைகளைப்
பார்த்தவர்கள்
கொசு முட்டையில்
வளர்ச்சி பொரிக்கும்
நகரமயத்தின்
கோரத்தைப் பார்த்து
பதைக்கிறார்கள்.
ஊர்விட்டு உறவுவிட்டு
வேலைதான் எனினும்
உடல்நலம்
இழப்புதான் எனினும்
உதவும்
மனிதசேவையில்
மனம் விரிந்த தொழிலாளிகள்
ஒருநாள் இழப்பையும்
சகிக்காமல்
ஐ.டி தொழிலாளிகளை
அடுத்த கணமே
அடுத்த லாபத்திற்கு
அடுத்த நகரத்திற்கு
வருவதை பார்த்து திகைக்கிறார்கள்.
கால்டாக்சி, செல்போன்
இணையம், இன்சாட்
எது இருந்தும்
தனியார்மக் குப்பையால்
மூடப்பட்ட
பிணங்களின் தலைநகரை பார்த்து
அஞ்சுகிறார்கள்.
குப்பைகளைப் பார்த்தல்ல
இவ்வளவு குப்பைகளை
நுகரமுடிந்த
மேட்டுக்குடி தொப்பைகளைப் பார்த்து
மலைக்கிறார்கள்.
வரலாறு காணாத
பெருவெள்ளம்
எதை எதையோ உணர்த்தியதாய்
பாடம் சொல்லும்
தருணத்தின் புதல்வர்களே,
வரலாறு நெடுக
அடிமனதில் சேகரித்த
சாதிக்குப்பையை
இப்போதும் கூட
வீசி எறியாமல்
மனிதம் கூசும்படியான
நடத்தையை பார்த்தே
அவர்கள் நடுங்குகிறார்கள்.
பார்க்கவே
குமட்டுவதாய்
நீங்கள் சொல்லும்
சாக்கடை சகதி
வெளியில் மட்டும்தானா?
காணவே அருவருக்கும்
உங்கள் கழிவுகளில்
தன் உயிரை பணயம் வைத்து
அந்த தொழிலாளிகள்
கை வைத்திருக்கிறார்கள்.
காணாத இடங்களில் எல்லாம்
ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் உள்மனதின்
சாதி மதவெறிக் கழிவுகளில்
கொஞ்சம் கை வையுங்களே
ஊர் சுத்தமாகட்டும்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென வெள்ள நீர் திறந்து விட்டப்பட்டது, அது தொடர்பான பொதுப்பணித்துறை விதிமுறைகள் மற்றும் வருவாய்த் துறை செய்திருக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள், வெள்ளம் சென்னையை மூழ்கடித்த பின் செய்திருக்க வேண்டிய மீட்புப் பணிகள் என்று சகல அம்சத்திலும் அரசும் அதன் மொத்த நிர்வாக அமைப்புகளும் சீட்டுக் கட்டு மாளிகை போல் சரிந்து விழுந்துள்ளது.
டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகமெங்கும் பேய் மழை பெய்யப் போகும் தகவல் சாதாரண மக்களுக்கு வேண்டுமானால் முன்கூட்டியே தெரியாமலிருக்கலாம். ஆனால், இந்த தகவல் அரசுக்குத் தெரியும். சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் இந்த தேதிகளில் பெருமழை பெய்யப் போவதை முன்னறிவித்திருந்தன.
தற்போது தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் சொல்வது என்னவென்றால் எந்த வானிலை ஆய்வு மையங்களும் ஐம்பது செ.மீ மழை பெய்யப் போவதாக சொல்லவில்லை என்கின்றனர். பொதுவில் எந்த வானிலை ஆய்வு நிலையங்களும் எவ்வளவு மழை என்று துல்லியமாக சொல்வதில்லை. மாறாக மிதமான மழை, கன மழை, அதிக கன மழை, மிக அதிக கன மழை என்று சொல்வார்கள். அதன்படி அன்று மிக அதிக கன மழை பெய்யுமென சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும், பொறியாளர்களும் நவம்பர் 26-ம் தேதியே தமது துறைச் செயலாளருக்கும் மற்ற உயரதிகாரிகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் இருந்து 16 அடிக்கு குறைக்க வேண்டுமெனக் கோரி குறிப்புகள் அனுப்பியிருக்கின்றனர். நவம்பர் 26-லிருந்து 29-ம் தேதி வரை பெரியளவில் மழை இல்லாத நிலையில் அடையாற்றின் நீர் ஓட்டமும் குறைவாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் துறைச் செயலாளருக்கு அனுப்பிய கோரிக்கை அவரிடமிருந்து தலைமைச் செயலாளர் ஞானதேசிகனிடம் அனுப்ப பட்டுள்ளது. மேற்படி கோரிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு “யாருடைய” உத்தரவிற்கோ ஞானதேசிகன் காத்திருந்து மதிப்பான நேரத்தை வீணடித்து விட்டார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் செய்தி தெரிவிக்கிறது. தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள பொதுக் கக்கூசில் பழுது பார்க்கப்பட்ட தண்ணீர்க் குழாயைத் திறப்பதாக இருந்தாலும், “புரட்சித் தலைவியின் ஆணைக்கிணங்க தான் நிறைவேற்றப்படும்” என்கிற எதார்த்தத்தை பொருத்திப் பார்த்தால், டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடும் “யாரோ” யாராக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தற்போது இதே அதிகாரிகள் எல்லாம் முறைப்படி நடந்தது, வெள்ள உபரி நீரை திறப்போமென மக்களுக்கு அறிவித்தோம் என்றெல்லாம் கூசாமல் பொய்யுரைக்கிறார்கள். தண்ணீர் திறந்து விடப்ட்ட அன்று தகவல் தொடர்பு துண்டிக்கப்ட்ட பிறகு, மின்சாரம் இல்லாத நிலையில் இவர்கள் தொலைபேசி மூலம் சக அதிகாரிகளுக்கு கூட சொல்லியிருப்பது கடினம். இதில் மக்களுக்கு இந்த தகவல் எப்படி போய் சேரும்? சொல்லவில்லை என்பதை மறைக்க எப்படி அடித்து விடுகிறார்கள் பாருங்கள்.
ஆக, அணை நிரம்பி வெள்ளம் வெடித்து கிளம்பும் நிலையில், வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டின் மீது அமர்வதைப் போல் செம்பரம்பாக்கம் அணைக்குப் பொறுப்பான அதிகாரிகள் காத்திருந்த வேளையில், அவர்கள் அனுப்பிய கோரிக்கை மனு போயஸ் தோட்டத்தின் கதவுகளுக்கு முன் அநாதையைப் போல் காத்துக் கிடந்துள்ளது. ஒருவழியாக ‘அம்மாவுக்கு’ நேரம் கிடைத்து உத்தரவும் கிடைத்த போது டிசம்பர் 1-ம் பேய் மழையும் வந்து சேர்ந்திருந்தது. அதற்கு மேல் 29000 கூசெக் நீரை திறந்து விடாவிட்டால் மொத்த அணையும் உடைந்து பல லட்சம் உயிர்களை காவு வாங்கி விடும் என்கிற நெருக்கடியில் தான் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
திறந்து விடப்பட்ட நீரின் அளவு 29000 கூசெக் (அல்லது 33,500) என்பது தற்போது ஏடுகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் வெளிப்படையாகியுள்ளது. ஆனால், அதே டிசம்பர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி வெளியிட்ட அறிக்கையோ, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கூசெக் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும், நீர்வரத்து அதிகமிருப்பதால் வெளியேற்றப்படும் அளவு 7,500 கூசெக்காக உயர்த்தப்படலாம் என்றும், எனவே அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியது.
பொதுப்பணித் துறை திறந்து விட்ட நீரின் அளவு என்னவென்பது மாவட்ட ஆட்சியாளருக்கே தெரிவிக்கப்படவில்லை. மறுபுறம் நீர் திறந்து விடப்படுவதைத் தொடர்ந்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தவும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் காவல் துறைக்கும் போதிய நேரம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வரப்போகிறது என்று ஆட்சியாளர் வெளியிட்ட அறிக்கை, மக்களை எச்சரித்து காப்பாற்றும் களப்பணியில் ஈடுபடவுள்ள கீழ்கட்ட அரசு நிர்வாக அமைப்புகளுக்கு வந்து சேர்ந்த போது வெள்ளம் தலைக்கு மேல் ஏரியிருந்தது.
ஏரி மதகுகளைத் திறந்து விட உத்தரவிட்ட அரசுத் தலைமை, தண்ணீர் பாய்ந்து வரத் துவங்கிய பின் தான் மக்களைப் பற்றியே சிந்தித்துள்ளது. அது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் கூட இல்லை. வெள்ளத்தில் மக்கள் எறும்புகளைப் போல் அலைக்கழிக்கப்படும் போது தங்கள் உயிரைக் காப்பாற்ற காவல் துறையைத் தொடர்பு கொள்வார்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், காவல்துறை அதிகாரிகள் செல்போன்களை அணைத்துள்ளனர்.
மின்னல் வேகத்தில் சகல திசைகளில் இருந்தும் தங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் எங்கே செல்வதெனத் தெரியாமல் திகைத்தனர். மொத்த பகுதியும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் வீடுகளின் கூரைகளின் மேல் ஏரி மூன்று நாட்கள் வரையும் கூட நீரும் உணவும் இன்றித் தவித்துள்ளனர்.
தி வயர் இணையப் பத்திரிகையின் செய்தியாளர் வெள்ளம் ஏற்படப் போகும் தகவல் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எவ்வாறு, எந்த நேரத்தில் சொல்லப்பட்டது என்பதை மேலதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். அதன்படி டிசம்பர் 1-ம் தேதி மாலை நான்கு மணிக்கு ஆட்சியாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கம் ரோந்துக் காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகளின் மூலம் சொல்லப்பட்ட போது இரவு மணி 8.
வெள்ளம் சூழும் போது மின் கசிவு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மின்வாரியத்துடையது. ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்படுவதோ, வெள்ள அபாயம் அறிவிக்கப்பட்டிருப்பதோ மின்வாரியத்திற்கு தெரிவிக்கப்படவே இல்லை.
மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி
நவம்பர் மத்தியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்புப் பணிகளுக்காக வந்த கப்பற் படையினர் டிசம்பர் 1 இரவில் தான் மீட்புப் பணிகளில் ஈடுபட கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையினருக்கு மீட்புப் பணியில் ஈடுபடக் கோரி எந்த தகவலும் தெரிவிக்கப்படவே இல்லை. படகு மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தொழிமுறைத் தேர்ச்சி கொண்ட இவ்விரு படைகளும் சென்னையிலேயே நிலை கொண்டிருந்தும் மாநில அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விளைவாக, பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் மீனவர்களிடம் படகுகளை வாடகைக்கு எடுத்துச் சென்று மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
மாநகர நிர்வாகத்துறை மற்றும் நீர்வழங்கல் துறைகளுக்கு வெள்ள அபாயம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த மூன்று நாட்களுக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீரின்றித் தவித்துள்ள நிலையில், இதை முன் அனுமானித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் செய்யப்பட்டிருக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படவில்லை.
சிவில் நிர்வாக அமைப்புகள் ஒவ்வொன்று வெள்ள நாட்களில் துண்டிக்கப்பட்டுக் கிடந்துள்ளது. பேரிடர்க் காலங்களில் சிவில் சமூகத்தை முன்னின்று வழிநடத்துவது, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட எல்லாத் துறைகளும் ஒரு மத்தியப்படுத்தப்பட்ட கட்டளையின் கீழ் இயங்கியிருக்க வேண்டும்.
வெள்ளம் வருவதற்கு முன்னும் வந்த பின்னும் அதை எதிர்கொள்வது எப்படி, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது எப்படி, நிவாரணப் பொருட்கள் மற்றும் உணாவுப் பொருட்களை எங்கேயிருந்து எப்படி ஏற்பாடு செய்வது, தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்படும் மக்களை எங்கே தங்க வைப்பது என்பதைப் பற்றி ஆலோசனை செய்யும் கூட்டம் நடத்தப்படவே இல்லை.
மேலும், வெள்ள பாதிப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை டிசம்பர் 6-ம் தேதி வரை அமைக்கப்படவே இல்லை. இதன் விளைவாக அரசின் சார்பில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை போன்ற அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் இலக்கின்றி வெள்ளத்திற்குள் வீசப்பட்டனர்.
உதாரணமாக, மீட்புப் பணிகளுக்காக டிசம்பர் 5ம் தேதி அனுப்பப்பட்ட 100 இராணுவ வீரர்கள் எங்கே செல்வது, யாரை மீட்பது என்கிற தகவல் ஏதுமின்றி சுமார் 10 மணி நேரம் சும்மா இருந்துள்ளனர். பின்னர் மாநில அரசு அளித்த தகவலின் படி அவர்கள் பள்ளிக்கரணை சென்றுள்ளனர் – அங்கோ ஏற்கனவே ஒரு இராணுவ படைப்பிரிவு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், இன்னொரு படைப்பிரிவை தி.நகருக்கு அனுப்பியுள்ளனர். படகுகளோடு அங்கே மீட்புப் பணிகளுக்குச் சென்ற இராணுவ வீரர்களை கணுக்கால் அளவு தண்ணீர் தான் வரவேற்றுள்ளது. அரசு சார்பான மீட்புப் படையினரை பணக்காரர்கள் மற்றும் வி.ஐ.பிக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்புவதிலேயே மாநில நிர்வாகம் குறியாக இருந்துள்ளது என்று ஆங்கில இந்து பத்திரிகையின் செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.
மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளில் காலம் கடந்த பின் தான் மாநில அரசு நிர்வாகம் இறங்கியது. டிசம்பர் 1,2,3 மற்றும் 4 தேதிகளில் தன்னார்வத்தோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான பொதுமக்கள். சமூக வலைத்தளங்களில் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வது, உதவி தேவைப்படும் இடங்கள், தேவையான உதவிப் பொருட்கள் பற்றிய தகவல்களை பிற தன்னார்வலர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து சரியான நேரத்தில் உணவும் உதவிகளும் சென்று சேர்வதை உத்திரவாதப்படுத்தினர்.
ஆளுங்கட்சி குண்டர்களோ, பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்களைச் சுமந்து வரும் வாகனங்களை மறித்து பொருட்களை கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கினர். குறிப்பாக கடலூர் மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்களால் அனுப்ப பட்ட நிவாரணப் பொருட்கள் காவல் துறை உதவியோடே வழிப்பறி செய்யப்பட்டன. அந்தப் பொருட்களின் மீது ஜெயாவின் மூஞ்சியை ஸ்டிக்கராக ஒட்டி தாங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பதைப் போல் காட்டிக் கொண்டு வக்கிரமாக நடந்து கொண்டனர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை வாங்கி வந்த 8-வது வார்டு அதிமுக பிரமுகர் அதைத் தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இரவு நேரத்தில் அதைத் தனது கட்சிக்காரர்களுக்கு மட்டும் இரகசியமாக வினியோகித்ததை கண்டுபிடித்து மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். அதிமுகவின் இந்த வழிப்பறியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பகுதி மக்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்துள்ளனர்.
சென்னை அசோக்கரைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் நிவாரணப் பொருட்கள் வழங்க வந்த தன்னார்வலர்களை மறித்து மிரட்டியும் அடித்தும் பொருட்களைப் பிடுங்க முயற்சி செய்த காட்சிகள் பாலிமர் செய்திகளில் காட்டப்பட்டது. எனினும், அ.தி.மு.கவின் இது போன்ற வழிப்பறி கொள்ளைச் செயல்களை காவல்துறை கண்டு கொள்ளாததோடு உறுதுணையாக நின்றுள்ளது.
வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட தங்கள் மாநில மக்களை மீட்க இலவச பேருந்துகளை இயக்கியது கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள். ஆனால், தமிழக அரசோ சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களுக்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் பேருந்துகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீட்டு ஒன்றுக்கு மூவாயிரம் நான்காயிரம் என்று கொள்ளையடித்துள்ளனர்.
இறுதியில் டிசம்பர் 5-லிருந்து மாநகரப் பேருந்துகளில் மக்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்திய பின் அது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. அதையும் “தாயுள்ளத்தோடு புரட்சித் தலைவி அம்மா அறிவித்தார்” என்று கூச்சநாச்சமின்றி சொல்லிக் கொண்டதோடு பேருந்துகளில் ஜெயாவின் மூஞ்சியை ஒட்டி வைக்குமளவிற்கு ஆளும் கட்சியினர் வக்கரித்துப் போயினர்.
வெள்ளம் வடிந்தும் வடியாத நிலையிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள உயிரழப்புகள் சில நூறாகவும் பொருள் இழப்பு சில பத்து ஆயிரம் கோடிகளாகவும் உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி இறந்தவர்கள் எண்ணிக்கை 269 என்று மத்திய அரசு அறிவிக்கிறது – அதற்கு மறுநாள் மாநில தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 245 என்கிறார். அதிகாரப்பூர்வமின்றி சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கக் கூடும் என்கின்றன பத்திரிகை செய்திகள். பிணங்களை எண்ணும் வேலையைக் கூட இந்த அரசு உருப்படியாகச் செய்யவில்லை.
அரசும் அரசு கட்டமைப்பும் அதன் ஒவ்வொரு உறுப்புகளும் புழுத்து நாறிப் போய் விட்டன. அவை ஒவ்வொன்றும் சீழ்பிடித்து மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த மழை வெள்ளம் நமக்கு உணார்த்தியுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியின் அராஜகத்தையும், அரசு நிர்வாக இயந்திரத்தின் செயலின்மையையும் வெறும் மெத்தனம் என்றோ அடாவடித்தனங்கள் என்றோ சுருக்கிவிட முடியாது.
அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் அவரகளைப் புழுப் பூச்சிகளைப் போல் தண்ணீரில் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அரசு அமைப்பின் தோல்வியை இந்த மழை தான் உண்டாக்கியதா? ஒரு பேரழிவிற்கான அடித்தளத்தை இவர்கள் ஏற்படுத்தி வைத்துக் கொண்டு மழை நாட்களில் எப்படி நிம்மதியாக இருந்தார்கள்? அரசு எந்திரத்தின் தோல்வியை எப்படிப் புரிந்து கொள்வது?
சென்னை மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் பரவலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்த துயர சம்பவங்கள் தோற்றுவித்திருக்கும் மனிதாபிமானத்தோடு நிற்காமல், நடந்து முடிந்த பேரழிவை அதன் உண்மையான பின்னணியோடு அரசியல் ரீதியிலும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இருவிதமான கண்ணோட்டங்களை வளர்க்கும் வேலையினை ஊடகங்கள் மற்றும் ஜெயாவின் அடிமைப் பட்டாளங்களான செய்து வருகின்றன. ”இயற்கையை எதிர்த்து மனிதன் என்ன செய்ய முடியும்?”, “மனிதன் பேராசையால் ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கொண்டதன் பலனை அனுபிக்கிறான்” என்பதான சமாளிப்புகள் இயற்கையையும் மக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றன.
இது உண்மையா?
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத துவக்கம் வரை வங்க கடலில் ஒன்றன் பின் ஒன்றாக உருவெடுத்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் – மண்டலங்கள் வட தமிழகத்தில் கன மழையாக பொழிந்தன. இதில் நவம்பர் மாதம் 8,9,12,13,14,15 மற்றும் 23-ம் தேதிகளில் மிக கடுமையான பொழிவு இருந்தது. மீண்டும் நவம்பர் 30 அன்று துவங்கிய மழை, டிசம்பர் மாதம் 3-ம் தேதி மாலை வரை கொட்டித் தீர்த்தது.
அக்டோபர் இறுதியில் துவங்கிய பருவமழைக் காலத்தில் தமிழகம் முழுவதிலும் 485 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது – கடந்தாண்டு பெய்த மழையின் அளவு 438 மி.மி. நவம்பர் மாதம் மட்டும் சென்னையில் பெய்த மழையின் அளவு 1218 மி.மி – கடந்தாண்டு 407 மி.மி. வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் பெய்த மழையின் அளவு 667 மி.மி – கடந்தாண்டு இதே மாதம் 147மி.மி. சந்தேகமின்றி இது அதிகளவிலான மழை தான்.
ஆனால், சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்திற்கு இந்த மழை தான் காரணமா? இல்லை. மழை வெள்ளத்தால் நிரம்பிய நீராதாரங்கள் கையாளப்பட்ட விதமும், வெள்ள வடிகால்களில் கைவிடப்பட்ட பராமரிப்புப் பணிகளும் தான் இந்தப் பேரிடருக்கான மிக முக்கியமான காரணிகள். இதில் குறிப்பாக நவம்பர் 17 மற்றும் டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் சென்னையை மூழ்கடித்த வெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர்தான் முதனத்மையான காரணி.
முதலில் சென்னையைச் சுற்றிலும் உள்ள நீராதாரங்கள் மற்றும் அதன் புவியியல் அமைப்பைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
சென்னை மாநகருக்கான மிக முக்கியமான நீர ஆதாரங்கள் நான்கு – அவை, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழாவரம் ஏரி மற்றும் செங்குன்றம் ஏரி. இந்த நான்கு ஏரிகளில் இருந்து சென்னை நகருக்குள் கொசஸ்தலை ஆறு, அடையாறு மற்றும் கூவம் ஆகிய மூன்று நதிகள் பாய்கின்றன. இந்த மூன்று நதிகளையும் சென்னை கடற்கரை ஓரம் ஓடும் பக்கிங்ஹம் கால்வாய் இணைக்கின்றது.
சுமார் 210 ஆண்டுகளுக்கு முன்பு (1806-ம் ஆண்டு) வெள்ளையர்களால் வட சென்னையையும் எண்ணூரையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட பங்கிங்கம் கால்வாய், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சுமார் 792 கிலோ மீட்டர்கள் வங்க கடற்கரையோரம் பயணித்து, சென்னையின் ஊடே அதன் கரையோரம் ஓடிக் கடந்து, விழுப்புரத்திற்கு அருகே முடிவடைகிறது. இந்தக் கால்வாயின் மிக முக்கியமான இணைப்பான கூவம் – அடையாறு நதிநீர் இணைப்பு 1876-77 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைத் தாக்கி சுமார் 60 லட்சம் மக்களை பலிவாங்கிய தாது வருஷ பஞ்சத்தை அடுத்து ஏற்படுத்தப்பட்டதாகும்.
தீபகற்க இந்தியாவின் தக்காண பீடபூமியின் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் ஆங்கில ‘ஒய்’ வடிவில் எழுந்து நிற்கிறது. தக்காண பீடபூமியில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் கிழக்கே வங்கக் கடலில் கலக்கின்றன. வட தமிழகத்தைப் பொறுத்த வரையில் சென்னை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகியவை வடிகால் பகுதிகள். வட தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான நதிகள் பருவ மழையை ஆதாரமாகக் கொண்டவை.
பருவமழைக் காலங்களில் நதிகளில் பாயும் வெள்ளம் கடலில் கலந்து பயனற்றுப் போவதைத் தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் நிறைய ஏரிகளும் குளங்களும் இவற்றை இணைக்கும் கால்வாய்களையும் ஏற்படுத்தி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். வெள்ளையர் ஆட்சியில் பக்கிங்ஹம் கால்வாய் உள்ளிட்ட ஒருசில நீர் மேலாண்மை திட்டங்களைத் தவிர்த்து பெரியளவிலான பணிகள் நடைபெறவில்லை. எனினும் இருப்பதைப் பராமரித்து வந்தனர். நதி நீர் கடலில் பாய்வதற்கு முன் ஒரு ஷாக் அப்சர்வர் போல செயல்பட்டு நீரை பிற பகுதிகளுக்கு பகிர்ந்தளித்த பக்கிங்ஹம் கால்வாய் மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றது.
சென்னைக்கு மேற்கே வேலூர் செல்லும் வழியில் 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காவேரிபாக்கம் என்ற ஊரில் இருந்து உற்பத்தியாகிறது கொசஸ்தலை ஆறு. இந்த் ஆறு மொத்தம் 136 கிலோமீட்டர்கள் தூரம் திருவள்ளூர், காஞ்சி மற்றும் சென்னை ஆகிய ஊர்களைக் கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த கொசஸ்தலை ஆறு இரண்டாகப் பிரிவதால் உருவாகும் நதி தான் கூவம். கொசஸ்தலை ஆறும், ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து உருவாகி வட தமிழகத்தை அடையும் நகரி ஆறும் பூண்டி ஏரியை அடைகின்றன. தெலுகு கங்கை திட்டப்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரும் ஆந்திராவிலிருந்து கால்வாய் மூலம் பூண்டி ஏரியை அடைகிறது.
பூண்டி ஏரியில் இருந்து தாமரைப்பாக்கம் தடுப்பணைக்கு வரும் நீர் அங்கிருந்து சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளை அடைகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து துவங்கும் அடையாறு, முடிச்சூர், மேற்கு தாம்பரம், பம்மல் வழியாக சென்னை விமான நிலையத்தைக் கடந்து (புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் ஓடுபாதை, மிகச்சரியாக அடையாறின் மேல் அமைந்துள்ளது) நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, வழியே கடலை அடைகிறது.
இன்னொருபக்கம், இரண்டாக பிரிந்த கொசஸ்தலை ஆறு, கூவம் நதியாக வட சென்னை வழியே கடலை அடைகிறது. கொசஸ்தலை ஆறாகவே ஓடும் இன்னொரு பிரிவு, எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது. இம்மூன்று நதிகளும் கடலில் கலப்பதற்கு முன் பக்கிங்ஹம் கால்வாயைக் கடந்தாக வேண்டும். மேலும் மிக முக்கியமான பல பாலங்களையும் கடந்தாக வேண்டும்.
சென்னை நகரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலத்திற்கு முன் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த கால்வாய்கள் மற்றும் வடிகால்களை தூர்வாறும் பணி நடைபெற்றாக வேண்டும். தந்தி டி.வி பாண்டே போன்ற அடிமுட்டாள்கள் சொல்வதைப் போல் பராமரிப்புப் பணியை போன ஆட்சி செய்ததா இல்லையா என்பதல்ல கேள்வி – ஒவ்வொரு நாளும் மலம் கழித்து குடலை சுத்தம் செய்வதைப் போல் இந்தப் பணி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடந்தாக வேண்டும்.
அ.தி.மு.க அரசு பதவியேற்ற இந்த நான்காண்டுகளில் இது எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது, நீர் நிலைகளில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து பின்னர் பார்ப்போம். உடனடி புரிதலுக்காக, ப்ரண்ட்லைன் பத்திரிகை செய்தியில் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் ஒருவர் தெரிவித்த தகவலின் படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியின் சார்பாக கால்வாய் தூர்வாறுவது சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்யாமலேயே அ.தி.முக கவுன்சிலர்கள் போலியான பில்களை சமர்பித்து மேற்படி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக் கொள்ளையடித்துள்ளனர்.
ஆக, சென்னை மாநகரை ஒரு பேரழிவிற்குள் தள்ளுவதற்கான முன்தயாரிப்புகளை ஆளும் கட்சியினர் ஏற்கனவே செய்து வைத்திருந்த நிலையில் தான் வரலாறு காணாத பருவமழை துவங்கியது.
நவம்பரில் கொட்டித் தீர்த்த பருவமழை குறிப்பாக செம்பரம்பாக்கம் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவாக இருந்தது. இதன் விளைவாக, செம்பரம்பாக்கம் அணை அம்மாத துவக்கத்திலிருந்து மிக வேகமாக நிரம்பத் துவங்கியது. நவம்பர் 16, 17 தேதிகளில் அணை அதன் முழுக் கொள்ளளவான 3.5 டி.எம்.சி அளவை அடைகிறது. இந்நிலையில் இந்த அணையின் உபரி நீர் எவ்வாறு திறக்கப்பட்டது என்பதை கீழே காணலாம்.
(குறிப்பு: கூசெக் = Cusecs ie., Cubic feet per second கூசெக் என்பது ஒரு வினாடிக்கு எவ்வளவு நீர் பாய்கிறது என்பதைக் குறிக்கும் அளவை.)
நவம்பர் 16 : நீர் வரத்து 9717 கூசெக் – வெளியேற்றியது 64 கூசெக்
நவம்பர் 17 : நீர் வரத்து 12031 கூசெக் – வெளியேற்றியது 18000 கூசெக்
நவம்பர் 18 : நீர் வரத்து 4247 கூசெக் – வெளியேற்றியது 800 கூசெக்
நவம்பர் 19 : நீர் வரத்து 1626 கூசெக் – வெளியேற்றியது 500 கூசெக்
நவம்பர் 20 : நீர் வரத்து 3798 கூசெக் – வெளியேற்றியது 4000 கூசெக்
நவம்பர் 21 : நீர் வரத்து 2178 கூசெக் – வெளியேற்றியது 2000 கூசெக்
நவம்பர் 22 : நீர் வரத்து 1460 கூசெக் – வெளியேற்றியது 1500 கூசெக்
நவம்பர் 23 : நீர் வரத்து 3649 கூசெக் – வெளியேற்றியது 4000 கூசெக்
நவம்பர் 24 : நீர் வரத்து 5842 கூசெக் – வெளியேற்றியது 6000 கூசெக்
நவம்பர் 25 : நீர் வரத்து 5629 கூசெக் – வெளியேற்றியது 5000 கூசெக்
நவம்பர் 26 : நீர் வரத்து 2165 கூசெக் – வெளியேற்றியது 2500 கூசெக்
நவம்பர் 27 : நீர் வரத்து 1100 கூசெக் – வெளியேற்றியது 1000 கூசெக்
நவம்பர் 28 : நீர் வரத்து 610 கூசெக் – வெளியேற்றியது 500 கூசெக்
நவம்பர் 29 : நீர் வரத்து 510 கூசெக் – வெளியேற்றியது 570 கூசெக்
நவம்பர் 30 : நீர் வரத்து 500 கூசெக் – வெளியேற்றியது 600 கூசெக்
டிசம்பர் 01 : நீர் வரத்து 960 கூசெக் – வெளியேற்றியது 900 கூசெக்
டிசம்பர் 02 : நீர் வரத்து 26000 கூசெக் – வெளியேற்றியது 29000 கூசெக்
டிசம்பர் 03 : நீர் வரத்து 10200 கூசெக் – வெளியேற்றியது 11000 கூசெக்
டிசம்பர் 04 : நீர் வரத்து 4900 கூசெக் – வெளியேற்றியது 5000 கூசெக்
டிசம்பர் 05 : நீர் வரத்து 3493 கூசெக் – வெளியேற்றியது 3500 கூசெக்
டிசம்பர் 06 : நீர் வரத்து 2363 கூசெக் – வெளியேற்றியது 3000 கூசெக்
(ஆதாரம்: இந்து பத்திரிகை செய்தி இணைப்பு கீழே)
மேலே உள்ள விவரங்களின் அடிப்படையில் இருந்து பார்த்தாலே சென்னை நகரத்திற்கு நேர்ந்த அழிவிற்கான அடிப்படை என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடியும். நவம்பர் 16-ல் வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு அதற்கு மறுநாள் வெளியேற்றப்பட்ட நீரின் அளவையும் நவம்பர் 27-ல் இருந்து டிசம்பர் 1-ம் தேதி வரை வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு டிசம்பர் 2-ம் தேதி வெளியேற்றப்பட்ட நீரின் அளவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டதல்ல என்பதையும் நிர்வாக சீர்குலைவினால் செயற்கையாக ஏற்பட்படுத்தப்பட்டதே என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்தே முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தான் கிடைக்கின்றன. 29000 கூசெக் நீர் வெளியேற்றப்பட்டது என்றும் 33,500 கூசெக் நீர் வெளியேற்றப்பட்டதென்றும் இருவிதமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்களின் கணிப்பின் படி அரசு சொல்லும் அளவை விட இரண்டு மடங்கு நீர் அடையாறில் ஓடி இருக்கலாம் என்கின்றனர். மேலும் அடையாறு நதியோடு செம்பரம்பாக்கம் ஏரி நீர் தவிர்த்து மேலும் சுமார் 40 சிறிய ஏரிகளில் இருந்து வரும் நீரும் சேர்ந்து தான் சென்னையை வந்து அடைகின்றது.
இதே காலகட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மட்டுமின்றி மற்ற அடையாறு நதியின் கலக்கும் மேலும் 200 ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பொழிந்துள்ளது என்பதையும் சேர்த்துக் கணக்கிட்டால் டிசம்பர் 2ம் தேதி அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படியே செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு மற்ற ஏரிகளின் உபரி நீரும் கலந்துள்ளது. குறிப்பாக அத்தனூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட 5000 கூசெக் நீரும் அடையாறில் கலந்துள்ளது. இதன் காரணமாகத் தான் சென்னை நகரமே வெள்ளக்காடானது.
ப்ரண்ட்லைன் செய்திக் கட்டுரையின் படி, அடையாறில் வழக்கத்திற்கும் மேலாக சிறிய அளவு அதிக தண்ணீர் ஓடினாலே அதன் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதை பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவர். அப்படியிருக்கும் போது, ஒரே நாளில் திடீரென மிக அதிகளவில் தண்ணீரைத் திறந்து விடும் முட்டாள்தனத்தை ஏன் செய்தனர்?
கடலூர் மாவட்ட வெள்ள சேதத்திற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்லலாம்.
1. தென்பெண்ணை ஆற்றில் நடந்த மணல் கொள்ளை. இதை ஏற்கனவே வினவில் படித்திருப்பீர்கள்.
2. கடலூர் மாவட்டத்தில் ஓடுகின்ற கெடிலம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு.
3. வீராணம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட்டது.
இதில் கெடிலம் ஆற்றின் மீதான ஆக்கிரமிப்பை இந்தக் கட்டுரையில் காணலாம். வீராணம் குறித்த கட்டுரையை அடுத்து வெளியிடுகிறோம்.
கெடிலம் ஆறு கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடருக்கு அருகாமையில் தொடங்கி விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக வந்து கடலில் கலக்கிறது.
கெடிலம் ஆறு கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடருக்கு அருகாமையில் தொடங்கி விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக வந்து கடலில் கலக்கிறது. இதன் நீளம் 80 கி.மீ ஆகும். இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறாக இருந்தாலும் தென்பெண்ணையாற்றின் முக்கிய துணையாறு ஆகும். இதன் கொள்ளளவு 30,000 கன அடி. இந்த தாங்கும் திறனுக்கு ஏற்ற வகையில் ஆற்றின் அகலம் அது ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. இப்பொழுது விழுப்புரம், கடலூர் இரு மாவட்டங்களிலும் ஆற்றின் இரு கரைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
ஆக்கிரமிப்புகள் என்று சொன்னால் பொதுவாக ஆற்று கரையோரங்களில் விவசாய நிலங்கள், நிலமற்ற விவசாயிகள், ஓரளவுக்கு சிறு விவசாயி போன்றவர்கள் எடுத்துக்கொள்வதையே பொதுவில் பலரும் கூறுவார்கள்.ஆறுகள், குளங்கள் ஓடைகள் அனைத்தும் எல்லாம் மக்களுக்கு தான் சொந்தமானது. தங்களின் வாழ்வாதாரத்துக்கு சிறு, குறு விவசாயிகள் எடுத்துக்கொள்வது என்பது பிரச்சினையல்ல. வனத்தில் மலைவாழ் மக்கள் விறகு சேகரிப்பதையே சுற்றுச் சூழல் அழிவு என்று சொல்வது எவ்வளவு தவறோ அதே மாதிரிதான் இதிலும்.
உண்மையில் ஆக்கிரமிப்பு என்பது ஆற்றையொட்டி இருக்க கூடிய நில முதலைகள், பண்ணையார்கள் நூறு, இருநூறு ஆண்டுகள் பரம்பரையாக இருக்கக்கூடிய பெரிய பணக்கார விவசாயியாக இருப்பவர்கள், இவர்கள் தான் ஆற்றின் கரையோரம் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து சவுக்கை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
ஆற்றின் கரையோரம் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து சவுக்கை போட்டு விடுகிறார்கள்
அரசின் சட்டப்படி, ஆக்கிரமிப்போ அல்லது நிலத்தை எடுப்பதோ போன்ற விஷயங்களில், அரசு நிலங்களை கையகப்படுத்தும் போது சில விதிகள் வைத்துள்ளார்கள். உதாரணமாக, ஒரு விவசாயி சவுக்கு, முந்திரி போன்றவை போட்டிருந்தால் அது நீண்ட காலபயிர் என்பதால் எடுக்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை நில முதலைகள் கேடாக பயன்படுத்தி சவுக்கை போட்டு ஆதாயம் பார்க்கின்றனர். நீர்நிலைகளை எல்லாம் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்வது என்பது இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாகத்தான் உள்ளது.
2009-ல் கம்மியம்பேட்டை அருகே கெடிலம் ஆற்றின் கரையை விற்பதற்கு, ஏற்கனவே பழைய தடுப்பணை உள்ள இடத்தை தாண்டி புதிதாக ஒரு தடுப்பணையை கட்டி இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடத்தை ரியல் எஸ்டேட்டாக மாற்றியிருக்கிரார்கள், அதிமுக பிரமுகர்கள். அதற்கு 2009-ம் ஆண்டிலேயே ஐம்பது கோடிக்கு பேசியிருக்கிறார்கள். இன்று அதன் மதிப்பு இன்னும் பல கோடி இருக்கும். அப்பொழுதே இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து சில பொதுநல இயக்கங்கள், மற்றும் மக்களே திரண்டு போய் போராட்டங்கள் நடத்தி ரியல் எஸ்டேட்காரர்கள் போட்டு வைத்திருந்த கொட்டகை எல்லாம அடித்து நொறுக்கினார்கள்.
கெடிலம் ஆற்றின் பல இடங்களில் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உயிர்பெற்று ஹோட்டல்கள், ஹாலோபிலாக் தொழிற்சாலைகள் கட்டுவது, திருமண மண்டபம், தியேட்டர், காம்ப்ளக்ஸ், லாட்ஜ் என்று பல வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கெடிலம் ஆற்றின் பல இடங்களில் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உயிர்பெற்று ஹோட்டல்கள், ஹாலோபிளாக் தொழிற்சாலைகள் கட்டுவது, திருமண மண்டபம், தியேட்டர், காம்ப்ளக்ஸ், லாட்ஜ் என்று பல வகைகளில் ஆக்கிரமித்துள்ளார்கள். கெடிலம் ஆற்றை நீண்ட காலமாக ஆய்வு செய்பவர்கள் “ஆறு தொடங்கிய இடத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆறு இன்று சிற்றாராக சுருக்கப்பட்டதன் விளைவாகத் தான் முப்பதாயிரம் கன அடி உள்ள ஆற்றில் 92 ஆயிரம் கன அடி தண்ணிர் தற்பொழுது பெய்த மழைக்கு சென்றுள்ளது” என்கிறார்கள்.
92 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடியதற்கு ஒரு காரணம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல பெண்ணையாற்று நீரை கெடிலம் ஆற்றுக்கு திருப்பி விட்டது. எந்த அளவிற்கு ஆறு சுருக்கப்பட்டு இருந்தால் தண்ணீர் எவ்வளவு வேகமாக நீர் வந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதனை தான் மேல் இருந்து ஒரு சுனாமி வந்தது போல் இருந்தது என்று கூறுகிறார்கள் விசூர், பெரியகாட்டுப்பாளையம் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்.
2004-ல் சுனாமி வந்த போது ஒரு சட்டம் கொண்டு வந்தார் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆற்றின் இரு கரையோரத்திலிருந்து நூறு மீட்டர் தூரத்திற்கு யாரும் ஆக்கிரமிக்க கூடாது என்று அந்த அவசர சட்டம் கூறுகிறது. ஆனால் இன்று இந்த ஆற்றின் இரு கரைகளையும் ஆக்கிரமித்தவர்களில் முக்கியமானவர்கள் யார் என்றால் அ.தி.மு.க பிரமுகர்கள் தான்.
குறிப்பாக கடலூர் அ.தி.மு.க-வின் நகரமன்ற துணைத்தலைவர் குமாருக்கு (முன்னாள் பரோட்டா மாஸ்டர், சேவல் குமார் என்கிற உஜாலாகுமார்) சொந்தமான கம்மியம்பேட்டை பாலம் அருகில் உள்ள ஓட்டல், பிரபு டீசல் ஒர்க்ஸ் ஆகியவையும், கே.வி டெக்ஸ் எதிரில் உள்ள கோகுலம் லாட்ஜும் கெடிலம் ஆற்றை வளைத்து போட்டு கட்டியது தான். இந்த உண்மை ஏற்கனவே வினவில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். தற்பொழுது இந்த ஹோட்டல் ஆகாஷ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (மூர்த்தி கபே என்பது பழைய பெயர்)
NB நகர், RR நகர், சிவாலயா கார்டன் ஆகியவை அனைத்தும் ஆற்றுப் புறம்போக்கு தான்
கடலூர் திருவந்திபுரத்தின் பெரும்பகுதி கெடிலம் ஆறு ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. பாதிரிக்குப்பம் என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தேங்காய் நார் கம்பனி, அதே பகுதியில் சுடுகாட்டை வளைத்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள்
இவை அனைத்தும் ஆற்று புறம்போக்கு தான். மேலும் அதே பகுதியில் உள்ள SNB நகர், RR நகர், சிவாலயா கார்டன் ஆகியவை அனைத்தும் ஆற்றுப் புறம்போக்கு தான்.
அதே போல் திருவந்திபுரத்தில் அணைக்கட்டு அருகில் உள்ள ஆனந்த செங்கமலத்தாயார் மண்டபம், ஸ்ரீ ஆண்டாள் திருமண மண்டபம், தேவநாத கோவில் அண்ணதான மண்டபம் உட்பட அனைத்தும் ஆற்று புறம்போக்கு தான்.இந்த இடங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தவை. ஆனால் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.
மேலும் கடலூர் துறைமுக சாலையில் இயங்கி வரும் வேல்முருகன் தியேட்டர் (வள்ளி விலாஸ் காம்ப்ளக்ஸ்) , கோகுலம் லாட்ஜ், சிவா காம்ப்ளக்ஸ், KTR காம்ப்ளக்ஸ்,திருப்பதி மார்பல்ஸ், பவானி துணிக்கடை, விரைவு போக்குவரத்து கழகம், தங்கம் ஸ்டீல் கம்பனி, ஹரி ஸ்டீல், ஹோட்டல் மகாராஜா ஆகிய அனைத்தும் ஆற்று புறம்போக்கை வளைத்து கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் தான்.
நிலைமை இவ்வாறு இருக்க சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள், கடலூரில் ஆக்கிரமிப்பே இல்லை என்று பேசுகிறார். அரைகுறை உண்மையை சொல்லக்கூடிய அவர்களே இப்படி என்றால் மற்ற கட்சிகளிடம் உண்மையை எப்படி எதிபார்க்க முடியும்?
இதிலிருந்து கெடிலம் ஆறு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பினால் வரக்கூடிய பிரச்சனை என்னவென்று அதிகாரிகளுக்கும் தெரியும். ஆற்று புறம்போக்கு இடத்தில் வீடு கட்ட கூடாது, வணிக வளாகம் கட்ட கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்களை எல்லாம் மீறி அதற்கு அனுமதியும் கொடுத்து, பட்டாவும் கொடுத்து, மின்சார இணைப்பும் கொடுத்து இதையெல்லாம் அனுமதிக்க கூடிய குற்றவாளிகள் கிராம நிர்வாக அலுவலர்,தாசில்தார், கலெக்டர் தான்.
அப்படிப்பட்ட குற்றவாளிகள் தான் தற்பொழுது மக்கள் மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், தற்காலிகமாக அமைக்க கூடிய குடிசைகள், தினக்கூலிகள் வேறு வழியே இல்லாமல் அதன் கரைகளில் குடிசை போட்டு தங்க கூடியவர்கள், இவர்களைத்தான் பெரிய ஆக்கிரமிப்பாளர்கள் போல் சித்தரிக்கிறார்கள். இது ஒரு பச்சையான அய்யோக்கியத்தனம். அதுமட்டுமில்லாமல், இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஆகும்.
கெடிலம் ஆறும், விருத்தாச்சலத்தில் உள்ள பரவனாறும் ஒரே இடத்தில் வந்து தான் கடலில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் போது எந்த ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகிறதோ அது தான் அதிக அழுத்தத்துடன் சென்று முதலில் கடலில் கலக்கும். இன்னொரு ஆறு நிச்சயமாக கலக்க முடியாமல் தண்ணீர் பின்னோக்கி தான் செல்லும். அதன் அடிப்படையில் கெடிலம் ஆற்றில் வந்த நீர் இரண்டாவதாக தான் வந்ததாக மக்கள் கூறுகிறார்கள். ஆக 92 ஆயிரம் கன அடி வேகத்தில் வந்த தண்ணீர் கடலில் கலக்க முடியாமலும், ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கன நீரை தாங்கும் திறன் இல்லாமலும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது என்பதே நிதர்சனம்.
மேலும் இரு ஆறுகளும் இணையும் இடத்தில் அருவாமூக்கு என்ற ஒரு ஒரு திட்டம் போடப்பட்டது. அந்த இடத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை நாகார்ஜுனா பைனரி என்ற கம்பனி ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அருவாமூக்கு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் உள்ளது. இந்த காரணமும் சேர்ந்து தான் கெடிலம் ஆற்று நீர் கடலூரை இந்த அளவிற்கு பாதித்துள்ளது.
இந்த அருவாமூக்கு திட்டத்திற்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காணவேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பாளர்களை எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல் அகற்ற வேண்டும். தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரியாக போடப்பட்டுள்ள ககன் தீப்சிங் பேடி, மழை முடிந்த உடன் ஆக்கிரமிப்பை அகற்றுவோம் என அறிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்
அவர் ஆக்கிரமிப்பை அகற்றும் முன்பு நாம் ஒரு நிபந்தனையை விதிக்கிறோம். சாதாரண மக்களை அகற்றுவது என்பது அயோக்கியத்தனம். நீங்கள் அகற்ற வேண்டும் அன்றால் யார் எல்லாம் தியேட்டர் , லாட்ஜ், காம்ப்ளக்ஸ், KTR காம்ப்ளக்ஸ், ஹோட்டல் என்று பெரியதாக ஆக்கிரமித்து வைத்துள்ளார்களோ அதனை முதலில் அகற்றி விட்டு, அதன் பிறகு சாதாரண குடிசை ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.அப்பொழுது தெரியும் ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்றும், யாரால் கெடிலம் ஆறு சுருங்கி போய்விட்டது, யாரால் தண்ணீர் ஊருக்குள் வந்தது என்ற உண்மை தெரியும்.
இதனை அரசு செய்யுமா என்றால், செய்யாது. மீண்டும் வலியுறுத்துகிறோம், இந்த அரசு குற்றவாளி. இந்த அரசு தோல்வியடைந்து விட்டது. தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக போய்விட்டது. ஆகவே கெடிலம் ஆறை பாதுகாக்கவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்றால் அதற்கு மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்த அ.தி.மு.க முதலைகள், முதலாளிகள், ரியல் எஸ்டேட் தரகர்கள்தான் குற்றவாளிகள் என்பதை உறுதியாக கூறுகிறோம்.
1. நுங்கம்பாக்கம் குடிசைப் பகுதியில் மக்கள் அதிகாரம்
நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மேற்கு நமச்சிவாயபுரம் மற்றும் கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியில் மழை நீர் தேங்கி இன்று வரைக்கும் மக்கள்அவதிப்படுகிறார்கள். இந்தப் பகுதியில் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 3 மணிக்கு கூவத்திலிருந்து மழைநீரும், சாக்கடையும் இணைந்து வீடுகளுக்குள் புகுந்து விட்டது. பல வீடுகளில் முதல் தளம் வரை விறுவிறுவென தண்ணீர் ஏறியதால், வீட்டில் இருந்த எந்தப் பொருட்களையும் மீட்க முடியவில்லை. இன்று எதுவுமற்று வீட்டில் இருக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.
இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் பெயிண்டிங், எலக்டிரிசன் வேலை என தினசரி சம்பளத்தில் வேலைகள்செய்கின்றனர். ஒரு சில இளைஞர்கள் மார்கெட்டிங் வேலைகள் செய்கிறார்கள். பலர் குடிக்கும் அடிமையாகி உள்ளனர்.
பகுதி வெள்ள பாதிப்பில் மிதந்த பொழுது, பகுதி இளைஞர்கள் தான் படகின் மூலம் மக்களை காப்பாற்றியுள்ளனர். “லயோலா கல்லூரி இல்லையென்றால்நாங்கள் அனைவரும் செத்திருக்க வேண்டியது தான்” என்கின்றனர். பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் ஆகியும் பகுதியில் நிலைமை சீராகவில்லை. வீடுகளில் சேறு, குப்பைகள் தேங்கி மக்கள் வசிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. ”கொசுக்களின் தொல்லையால் இரவில் தூங்க முடியவில்லை. மாநகராட்சிபள்ளிக்கு தான் போகிறோம். தனிநபர்கள், DYFI போன்ற அமைப்புகள் தான் உணவு வழங்கினார்கள். அரசு நிர்வாகிகளோ, அதிகாரிகளோ, கட்சிக்காரர்களோ யாரும் வரவில்லை. பகுதியில் சில இடங்களுக்கு இன்றும் மின்சாரம் கிடைக்கவில்லை. பலர் இன்று வரை அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தான் தங்கியிருக்கிறோம்.” என்கின்றனர், மக்கள்.
“நாங்க அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம். வீட்டுக்கு 5000 ரூ என அரசு அறிவித்துள்ளது. இதை வைத்துக்கொண்டு என்னவாங்குவது? ஒரு மிக்ஸியே ரூ. 2000 விலை விற்கிறது. அதனால், ஒவ்வொரு வீடாக வந்து பார்த்து இழப்புகளை கணக்கிட்டு பிறகு இழப்பீடு தீர்மானிப்பதுதான் சரியான நிவாரணமாக இருக்கும்” என்கின்றனர்.
பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றவேண்டும், மின்சாரம் வேண்டும் , தங்க இடம் வேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தினால் ”பத்து நாளில் வெளியே போக போற எதுக்கு போராடுற!” என போலிஸ் திமிராக மிரட்டுகிறது. ”எங்களுக்கு வீடு கொடுத்தால் நாங்கள் போக தயார். ஆனால்கட்சிக்காரங்களுக்கு ஒதுக்கி விட்டு மீதி தான் எங்களுக்கு வரும்” என்கின்றனர்.
பகுதியில்மக்கள்அதிகாரம்தோழர்கள்
மக்கள் அதிகாரம் இப்பகுதியில் வேலை செய்ய வந்தவுடன் மாநகராட்சி AE வந்து நம்மிடம் பதைபதைப்புடன் வந்து பேசினார். மக்களுக்கு உதவ வந்துள்ளோம் என தெரிவித்ததும், உடனே கிளம்பிவிட்டார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களோடு இணைந்து குப்பைகளை அகற்றியும் சேற்றை சுத்தம் செய்யும் வேலையில் மக்களோடு ஈடுபட்டனர். நிவாரண பணியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் சத்யா இருவரும் நம்மோடு சேர்ந்துவேலைகளில் ஈடுப்பட்டனர். தோழர்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்து இந்த பகுதிகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
தகவல் மக்கள் அதிகாரம், சென்னை 9176801656
காஞ்சிபுரம் வெள்ளப் பகுதிகளில்
பு.ஜ.தொ.மு இருவாரமாக பணி
நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை தாம்பரத்து அருகே அழகான, அமைதியான குடியிருப்பு மனைகள், இரயில்,பேருந்து போக்குவரத்து வசதிகளுடன், பள்ளி, கல்லூரி, மருத்துவ மனைகள் செல்ல வசதியுள்ளது என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, விளை நிலங்களையும், நீர் நிலைகளையும், நீர்வழி பாதைகளையும் ஆக்கிரமித்து மனைகளும், குடியிருப்புகளும் உருவாக்கிய ஓட்டு பொறுக்கி கட்சிகள், இவர்கள் தலைமையிலான ரியல் எஸ்டேட் மாஃப்பியாக்களும், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரகடம், இருங்காட்டு கோட்டை போன்ற பகுதியில் ஏரிகளை ஆக்கிரமித்தனர். இதன் தொடர்ச்சியாக பல அடுக்கு மாடி குடியிருப்புகள் நீர்வழி பாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்ததின் விளைவுதான், தமிழகம் தழுவிய விளை நிலங்களும், குடியிருப்பும், மக்கள் உடமைகள் இழந்ததற்கு காரணம். பாதிப்பில் பரிதவித்த மக்களை சந்தித்து உதவி செய்வது, நிவாரண பணிகள் மேற்கொள்வதென்று மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள திருங்காலிமேடு, அருந்ததியார் நகர் (தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி) மக்களை 01-12-2015 அன்று மாலை சந்தித்து உதவினோம். அதைத் தொடர்ந்து மறு நாள் முடிச்சூருக்கு செல்ல பேருந்து இல்லாமல் வேன் பிடித்து சென்றும், நடந்து சென்றும் அப்பகுதி மக்களை சந்தித்து உதவினோம். அதைத் தொடர்ந்து 04-12-2015 அன்று முதல் 05-12-2015 வரை அன்றாடம் மக்களை சந்தித்து, லட்சுமி நகர் மேற்கு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு பால் பாக்கெட்,பிஸ்கெட்,தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தோம்.
இவை தவிர மாவட்டக் குழு தோழர்களின் ஆதவாளர்களை ஒருங்கிணைத்து, வேட்டி சேலை, குழந்தைகளுக்கான உடைகள், மெழுகுவர்த்தி, கொசுவத்தி, அமிர்தாஞ்சனம் தைலம், தீப்பெட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து உதவினோம். இது போன்ற உதவிகளும், இதற்கும் மேலும் பலரும்தான் செய்கின்றனர். இதில் என்ன விசேஷம்?
உதவி செய்கின்ற பலரும், சாலைகளிலும், தெருமுனைகளிலும், வண்டியில் நின்றபடியே நிவாரண உதவிகள் செய்கின்றனர். இப்படி கொடுப்பதால், சக்தி உள்ளவர்கள் வாங்கி கொள்கின்றனர். நிவாரணம் முழுமையாக செல்வதில்லை என்பதுடன் மக்களை கையேந்தும் பிச்சைக்காரர்களாக்கி விடுகின்றது. இதற்கு மாற்றாக மக்களை மதித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொடுக்கப்பட்டது.
பாலும், உணவும், மட்டும் போதாது, மழை – வெள்ளம் வீட்டையும் நாசப்படுத்தியிருக்கின்றது. அனைத்தும் இழந்து பரிதவித்த மக்களிடம், மாவட்டக் குழு தோழர்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்த வேண்டுமா? தாமாகவே கேட்டபோது, கட்டப்பொம்மன் தெருவில் உள்ள ஸ்டெல்லா என்பவர் நானும் எதிர் வீட்டு பிரியாவும் இணைந்து இருவர் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டோம். என்றார். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய சாதி, மத பேதங்களற்று, கூட்டுழைப்பும், ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்ற பண்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
லட்சுமி கணபதி தெரு, வ.உ.சி உள்ளிட்ட தெருங்களில் மக்களை சந்தித்து உதவிகள் வேண்டுமா? என்றபோது, பலரும் நெகிழ்ந்து போய் நீங்கள் கேட்டபோதும் என்றனர். மோகன் என்பவர் தனியார் பள்ளியொன்றில் அட்னென்டராக பணிபுரிகின்றார். வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து விட்டோம் என்றார். மோகனின் தாயார் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி உதவுமாறு கேட்டபோது, தோழர்கள் அனைவரும் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் வெளியே எடுத்து வைத்து கழுவி சுத்தப்படுத்தி திரும்பவும் உள்ளே எடுத்து வைத்தோம்.
அதே போல, சாந்தி என்பவரது வீட்டையும், இரயில்வே ஊழியரான மணிகண்டன் வீட்டையும் முழுவதுமாக கழுவி சுத்தப்படுத்தி கொடுத்தோம்.
இரயில்வே ஊழியரான மணிகண்டன் பேசுகையில், “ மக்கள் மேல் உண்மையான அக்கரையோடு நீங்கள்தான் செயல்படுகின்றீர்கள்” என மிகுந்த உணர்ச்சி பெருக்கோடு தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நேசம் கரம் நீட்டிய தொழிலாளர்கள்
மாவட்டக் குழு தோழர்களின் தலைமையில் செயற்குழு தோழர்களும், ஆக்ஸில் இந்தியா மற்றும் கீரிடோ இந்தியா கிளை சங்க தொழிலாளர்களும் உணர்வுபூர்வமாக வேலைகளில் பங்கெடுத்து வந்தனர். இவர்களை போலவே, திருப்பெரும்புதூரில் குடியிருப்புகளில் பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினானர்கள்.
ஹூண்டாய் ஆலையில் ட்ரெய்னியாக பணிபுரியும் தொழிலாளியொருவர், சக தொழிலாளர்களிடம் நிதி திரட்டி, பால், பிஸ்கெட் பாக்கெட் வாங்கி கொடுத்ததுடன், இரவு ஷிப்ட் முடித்து விட்டு, உடல்வலியும் பொருட்படுத்தாமல் உணர்வுடனும், உற்சாகத்துடனும் வேலைகளில் பங்கெடுத்து கொண்டது, பாட்டாளி வர்க்க உணர்வுக்கு ஒரு வகை மாதிரி. இவரைப் போலவே, ராஜீவ்காந்தி, தினேஷ், அறிவழகன் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து 200 பேருக்கு உணவு சமைத்து கொடுத்தது. மக்களுக்கு மக்கள்தான் உதவினார்கள் என்பதற்கொரு முன்னுதாரணமாகும்.
நிவாரணப் பணி பார்த்து மாவட்ட ஆட்சியர் வியப்பு!
கடந்த 05-12-2015 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, லட்சுமி நகரில் ஆய்வை மேற்கொண்டார். அப்போது உடனிருந்த ஊராட்சி மன்ற தலைவரிடம், “மக்களுக்கான உணவு உள்ளிட்ட நிவாரணம் சரிவர கொடுக்கப்படுகின்றதா?” என கேட்டார். அதற்கு தலைவர், “தண்ணீர் முட்டிக்கால் அளவுக்குமேல் இருக்கின்றது. படகு வசதி இல்லை, முகாமில் தங்க வைத்து உதவகின்றோம்” என்றார்.
அப்போது தோழர் ஒருவர் குறுக்கிட்டு, “ஓட்டு கேட்க மட்டும், வீடு வீடாக வருகின்றீர்கள், மக்களுக்கு உதவ இது போன்ற நேரங்களில் வரமாட்டீர்களா?” என கேள்வியெழுப்பியபோது திகைத்து நின்றார்.
உடனே தலைவரின் கைத்தடிகள், “நீங்கள் யாரு உங்களை நாங்க பார்த்தது இல்லை” என்றபோது கூடியிருந்த மக்கள், “இவங்கதான் தொடர்ந்து வந்து உதவி செய்றாங்க” என்றதும் அடிமைகள் அடங்கி போனார்கள்.
அதன் பிறகு அடுத்தடுத்த தெருக்களில் நிவாரண பணிகள் மேற்கொண்டொம். அப்போது 60 வயது மிக்க சரசானி என்பவர் தோழர்களை பார்த்து “நீங்கள் போன பிறகு கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் உங்களுக்கு தேவையான நிதி, வண்டியெல்லாம் அரசு கொடுக்கின்றது, அதைப் பயன்படுத்தி மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை கேள்வியெழுப்பினர்” என்று கூறி நம்முடைய பணியை அங்கீகரித்து நன்றி தெரிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களை ஈர்த்த நிவாரண பணியும், நெகிழ வைத்த அனுபவங்களும்
ஏற்கனவே குறிபிட்டப்படி, பல்வேறு தன்னார்வாளர்களும், அமைப்புகளும் நிவாரண உதவிகளை தெருங்களிலும், சாலைகளிலும் வாகனத்தில் நின்றபடி கொடுப்பது மக்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது. இதற்கு மாறாக வீடு, வீடாக மக்களை சந்தித்து கொடுத்தது உள்ளூர் இளைஞர்களான ஆரோக்கிய ராஜ், விஜய், தீபக், ஆறுமுகம் ஆகியோரை ஆர்வத்துடன் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.
அன்றைய வேலையை முடித்துக்கொண்டு அனுபவத்தை ஒவ்வொருவரிடமும் கேட்கையில்,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரான ஆறுமுகம் “எனக்கு சேற்று புண்ணு கால் வலி தாங்க முடியாமதான் இருந்தேன். ஆனால் எங்கிட்ட ஒரு புடவை கொடுத்து மக்களுக்கு கொடுங்க என்றதும், வலி எனக்கு தெரியவில்லை. இப்போ வரைக்கும் எனக்கு வலியில்லை. இதேபோல, மக்களுக்காக எல்லோரும் உதவி செய்ய வரணும்” என்றார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 03-12-2015 அன்று துவங்கி 09-12-2015 அன்று வரையிலும் நிவாரண பணிகள் மேற்கொண்டதில் மொத்தம் 60 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பெண் தோழர்கள் ஜோதி, கௌதமி உடல்நிலை சரியில்லா நிலையிலும் குறிப்பாக தோழர் கௌதமிக்கு சேற்று புண்ணால் அவதிப்பட்ட நிலையில் தன்னுடைய 2 வயது கைக்குழந்தையை தன்னுடைய அம்மாவிடம் விட்டு விட்டு, உற்சாகத்துடன் வேலைகளை செய்தது, தோழர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. அதேப்போல கல்லூரி மாணவி தோழர் ராதிகா மக்கள் படும் துன்பத்தை தோழர்கள் மூலம் தெரிந்து கொண்டதுடன், நிவாரண வேலைகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டக் குழு தலைமையில், கிளை சங்க தொழிலாளர்கள், ஆதரவாளர்கள், பிற ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து மக்களுக்கு உதவி செய்தோம். மக்களை மதித்தது, மக்களின் துன்பத்தில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்து கொண்டு உதவியது, தோழர்களின் கூட்டுழைப்போடு வேலைகளை முன்னெடுத்தது, இவையாவும் சுயநலமற்ற, மக்களை நேசிக்க கூடிய சமூக அமைப்பு உருவாக்குவதற்கான போராட்டத்தின் ஒரு அங்கம்தான் எமது நிவாரண பணி.
ஆனால் இந்த மழை வெள்ள பாதிப்புக்கு காரணமான குற்றவாளிகள் பன்னாட்டு முதலாளிகள், ரியல் எஸ்டேட் மாஃப்பியாக்கள், மணல் கொள்ளையர்கள், ஒட்டு பொறுக்கி கட்சிகள், அவர்களது பினாமிகள் ஆகிய அனைவரையும் பாதுகாக்கின்றது, இந்த அரசமைப்பு. குற்றவாளிகளின் கூடாரமான இந்த அரசு, மக்களை பாதுகாக்காது என்பதை மழை வெள்ளம் இல்லாத நிலையில் உழைக்கும் மக்களின் வாழ்நிலையை ஒப்பீட்டு பேசி, உழைக்கும் மக்கள் நிலவுக்கின்ற இந்த அரசமைப்பை தகர்த்தெறிந்து அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சமுகமாற்றத்தின் மூலம்தான், நமது வாழ்க்கை முழு நிவாரணம் பெறும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகத்தான் நிவாரண பணிகளை மேற்கொண்டோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம். 88075 32859
திருவள்ளூர் மேற்கு மாவட்ட
நிவாரணப் பணிகளில் பு.ஜ.தொ.மு
05-12-2015 அன்று, ஆவடி டியூப் புராடக்ட்ஸ் நிர்வாகம் மூலம் கொடுக்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர், அந்த நிறுவனத்தில் உள்ள நமது சங்கத்தோழர்களுடன் இணைந்து, பட்டாபிராம் – பூந்தமல்லி சாலையில் உள்ள வயலாநல்லூர், சத்திரம், கோளப்பன்சேரி ஆகிய கிராமங்களில் வழங்கப்பட்டது.
வயலாநல்லூரிலும், கோளப்பன்சேரியிலும் முழங்கால் அளவு நீர் வடியாமல் நின்ற நாட்கள் அவை. குறிப்பாக வயலாநல்லூரில் வெள்ளம் வரக்காரணமே, அப்பகுதியில் உள்ள கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள L&T நிறுவனத்தின் மெட்ரோ ரயில் யார்டு தான் என்றனர் உள்ளூர் இளைஞர்கள். சுமார் 40 அடி அகலமுள்ள கால்வாயை ஆக்கிரமித்ததால்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டது என்பதை முன்வைத்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிப் போராடிய மக்களை அடித்து விரட்டி, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு போட்ட போலீசு, L&T வளாகத்தில் காலை உணவை உண்டு, கையில் பணமும் வாங்கிக் கொண்டு சென்றதைக் கண்ட மக்கள் காறித்துப்புகிறார்கள்.
மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட இப்பகுதிகளில் உணவோடு மெழுகுவர்த்தியும் அவசியத் தேவையாக இருந்தது. நமது கிளை, இணைப்புச் சங்கத் தோழர்கள் மூலமும் அவர்களது நண்பர்கள் மூலம் இவை சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக டிஐ மெட்டல் ஃபார்மிங், டியூப் புராடக்ட்ஸ் ஆகிய சங்கத் தோழர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளில் 10 நாட்களுக்கானவற்றை முன்கூட்டியே பெற்றுக் கொடுத்தனர். அச்சங்க உறுப்பினரான ஒருதோழரின் தம்பியும் அவரது நண்பர்களும் காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய பிஸ்கட், வாழைப்பழம், மெழுகுவர்த்திகள், சேற்றுப்புண்ணுக்கான மருந்து மற்றும் மாத்திரைகள், அரிசி ஆகியவற்றையும் வீடிழந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து விநியோகித்தோம். நீண்ட நேரம் நம்முடன் இருந்து, இவ்வேலைகளில் பங்கெடுத்த அவ்விளைஞர்கள் அடுத்தநாள் ஊருக்கு சென்றதும் மீண்டும் உணவுப் பொருட்களோடு, பேஸ்ட், பிரஷ், புடவைகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்தனர். இந்நிவாரணப் பணிகளில் எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினரும் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். இவர்களைப் போன்ற தோழர்கள், ஆதரவாளர்களது உதவியுடன், யாரும் செல்லாத குக்கிராமங்களில் நமது நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கோளப்பன்சேரியில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடிசைகள், வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததில் கணிசமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. மற்ற ஊர்களில் எல்லாம் பள்ளிகளில் சென்று தங்கிக் கொள்ள முடிந்தது, இங்கோ பள்ளியே நீரில் மிதக்கிறது. சுமார் பத்து குடும்பங்கள் அங்கன்வாடி மையத்திலும், இன்னும் பத்து குடும்பங்கள் சிறிய கோவிலிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்த பெண் ஒப்பந்தத் தொழிலாளிகள் 13 பேர் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தனர். அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருமாத காலமாக வேலையும் இல்லாமல், வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீரில் துணிகளும் நனைந்துபோய் மாற்றுடைக்கே வழியில்லாமல் சொல்லொணாத் துன்பத்தில் இருந்தனர். இவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள்,, உடைகள், போர்வைகள் ஆகியவற்றை ஆதரவாளர்கள் மூலம் பெற்று உடனடியாக வழங்கினோம்.
மக்களது கோரிக்கைகளை நினைவில் வைத்திருந்து தேடிச் சென்று அவர்கள் கேட்ட பொருட்களை ஒப்படைத்தோம்.பொதுவாக நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சாலையில் நின்று அங்கு வருபவர்களிடம் மட்டும் கொடுத்துச் சென்றுவிடுவது வழக்கம். வீடுகளை இழந்து நிற்பவர்கள் தகவலறிந்து உட்புறத்திலிருந்து வந்து சேர்வதற்குள் அனைத்துப் பொருட்களும் தீர்ந்துவிடும். ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வார்கள். சிலசமயம் ஒருசிலரே அதிகப்படியான நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றுவிடுகின்றனர். ஆனால், வயலாநல்லூரில் இருந்த இளைஞர்களும் பெண்களும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்தனர். “எங்களுக்கு அதிகம் பாதிப்பில்லை, உள்ளே செல்லுங்கள் அங்குதான் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று சொன்னதோடு உடன் வந்தும் குறிப்பான பகுதிகளில் இருந்த மக்களுக்கு உதவி சென்று சேர்வதை உத்தரவாதப்படுத்தினர். இதே போல கோளப்பன்சேரியிலும் நாம் உள்ளே உள்ள மக்களைத் தேடி சென்று பொருட்களை வழங்கியது அவர்களை நெகிழச்செய்தது.
இன்னும் ஏராளமான உதவிகள் ஆதரவாளர்கள், நண்பர்கள், தொழிலாளர்கள் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாகத் தேவையுள்ள மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடமையோடு பு.ஜ.தொ.மு செய்ய வேண்டிய முக்கியமான நிவாரணப்பணி ஒன்று நிகழ்ச்சி நிரலில் இருந்துகொண்டே இருக்கிறது. மழைவெள்ளம் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுவதற்குக் காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் அது. ஆவடி நகராட்சியின் கீழ்வரும் பட்டாபிராம் – சார்லஸ் நகர் பகுதியில் இதற்கான வேலைகள் முன்பே துவங்கப்பட்டு விட்டன. இதை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதுதான் தலையாய கடமையாக நிற்கிறது. மக்களைத் திரட்டிக் கடமையை நிறைவேற்றும் உறுதியுடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பு.ஜ.தொ.மு.வின் வேலைகள் தொடர்கின்றன.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (மேற்கு)
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு
நெ.5/9, எஃப்.எம் பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 01
10.12.2015
பத்திரிக்கைச் செய்தி
கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களாகத் தமிழகத்தை உருக்குலைத்து, தமிழக மக்களது வாழ்வுக்குச் சர்வநாசம் விளைவித்தது இயற்கைப்பேரிடரால் நேர்ந்தவை அல்ல. இவை ஆட்சியாளர்களே விளைவித்த பேரிடர், பேரழிவுகள்தாம். இவை குறித்து, “மக்கள் அதிகாரம்” அமைப்புக்கான கொள்கை அறிக்கையில் சொல்லியுள்ளவாறு “இயற்கைப் பேரிடர், பேரழிவுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நாசம்” மட்டுமல்ல, நிவாரணங்கள் என்ற பெயரில் உள்ளிட்டு நடப்பவை எல்லாம் நமது நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பில் நேர்ந்துள்ள நெருக்கடியைக் குறிப்பவைதாம்.
இவை நாட்டின் கட்டமைப்புத் தோல்வியைக் குறிப்பதாக விவரம் புரிந்த பலரும் சொல்லுகிறார்கள். எதிர்பாராது, தற்செயலாக இயற்கையாக ஏற்பட்ட விபத்துக்கள் அல்ல. இலாப வெறிபிடித்த கொள்ளையர்கள் விளைவிக்கும் விபத்துக்கள், உயிர்ப் பலிகள்தாம். இவ்வாறு நடக்கும் பெருநாசங்கள் நாளும் பெருகி வருகின்றன. இனியும் இவைபோன்ற பேரழிவுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய ஏற்பாடுகள், வழிவகைகள், அதற்கான அறிகுறிகள்கூட ஏதும் இல்லை. இம்மாதிரியான குற்றங்கள் மீதான விசாரணைகள், வாதப்பிரதிவாதங்கள், பரிசீலனைகள் எல்லாமுமே முட்டுச்சந்துக்குப்போய் மோதி நின்று விடுகின்றன.
இவை, அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் ஆளத் தகுதி இழந்து விட்ட நிலையையும், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்ட நிலையையும் நிரூபிக்கின்றன. இப்போது தமது வாழ்வாதாரங்களையும் உற்றார் உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்கள், தொலைக்காட்சிக் காமிரா முன்பு கதறுவது இதற்குச் சாட்சியமாக விளங்குகின்றன.
வளர்ச்சி, முன்னேற்றம் என்று என்னதான் ஆட்சியாளர்கள் ஒருபுறம் கூச்சல் போட்டாலும் அதில் ஆங்கிலேயக் காலனியவாதிகள் கொஞ்சமாவது காட்டிய, மேற்கொண்ட நீண்டகாலதொலைநோக்குப் பார்வை, பொதுநல-மக்கள் நலக் கண்ணோட்டம் கூட இவர்களிடம் கிடையாது. விஷன் 2023 போன்ற திட்டங்கள் எல்லாம் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களின் கொள்ளைக்காகவே வகுக்கப்பட்டு நீர், நில, இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன.
தமது நலன்களின் தேவைக்கான அடிப்படைக் கட்டுமானங்களை ஆங்கிலேயக் காலனியவாதிகள் நிறுவியபோதுகூட அதற்காக அவர்கள் திரட்டி வைத்திருந்த இயற்கை, நீர், நில அமைப்பு குறித்த அடிப்படை விவரங்கள், அவற்றின் மேலாண்மைக்காக வகுக்கப்பட்ட முந்தைய திட்டங்கள் எல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக சிதைக்கப்பட்டன. புதிய நிலைமைகள், தேவைக்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் பொதுநல-மக்கள்நல மற்றும் நீண்டகால-தொலைநோக்குப் பார்வையிலானவை அல்ல. குறுகிய காலக் கொள்ளையைக் குறிவைத்து, அவையும் அராஜகமான முறையில் அமலாக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி, தண்ணீர் பயிர்களோடு, விவசாய நிலங்களையும் அடியோடு அடித்துக் கொண்டுபோனது. மேலும் கொட்டித் தீர்த்த மழை மணற் கொள்ளையர்களால் சூறையாடப்பட்ட வெள்ளாறு, கெடிலம், பரவலாறு ஆறுகளினூடே பெருவெள்ளமாக ஓடி, அம்மாவட்ட விவசாயிகளோடு கிராமங்களையே அடித்துக் கொண்டு போனது. அதன் கோரத் தாண்டவம் இன்னமும் அடங்கவில்லை.
தூத்துக்குடிக்குள் பாய்ந்த காட்டாற்று வெள்ளம், இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் விடாது பெய்யும் பேய் மழையால் அங்குள்ள அணைகள் தாங்காது குமரி, நெல்லை மாவட்டங்களில் தாமிரவருணி முதலிய ஆறுகளின் பெருவெள்ளம் மக்கள் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் விளைந்து நின்ற பயிர்கள் பாழாகி விட்டன.
நெடுங்காலமாக சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்குவன செங்குன்றம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள்தாம்; வரம்புக்குட்பட்ட புதிய வீராணம் திட்டம் மற்றும் கிருஷ்ணா நீர் திட்டங்கள். கடந்த கோடையில் அவையும் வறண்டுபோய்விட்டன. அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மட்டுமே முக்கிய மழைநீர் மற்றும் சாக்கடை வடிகால் வழித் தடங்கள். புதிய நீர் ஆதாரங்களோ, மழைநீர் மற்றும் சாக்கடை வடிகால் வழித் தடங்களோ ஏற்படுத்தப்படவேயில்லை.
ஆலோசனைகள், ஆய்வுகள், திட்டங்கள் வகுக்கப்பட்டும், 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டும் கிடப்பிலேயே கிடக்கின்றன. இருக்கின்ற குடிநீர் ஆதாரங்களும் கார்ப்பரேட் தொழில் நிறுவன, வீடு-விட்டுமனை, கல்விக் கொள்ளையர்கள் அரசு-ஆளுங் கடசி ஆக்கிரமிப்பாளர்களாலும் வளைத்துப் போடப்பட்டு விட்டன. எஞ்சிய பகுதிகள் துர்வாராமல், மேடுதட்டி,முள்காடுகளாகிப் போயிருந்தன.
ஆகவே, பருவ மழை தொடங்கிய இருவாரத்திலேயே, சென்னைக் குடிநீருக்காக வழக்கமாகத் தேக்கிவைக்கும் அளவை ஏரிகள் அடைந்து விட்டன. கடும் மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது; குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் சென்னைக் குடிநீருக்காக வழக்கமாகத் தேக்கிவைக்கும் அளவை விரைவில் எட்டிவிடும் என்று கணித்த பொதுப்பணித் துறை பொறியாளர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்கு பரிந்துரைக்கும் கோப்பை நவம்பர் 17 அன்று தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளார். அடுத்தடுத்து நினைவூட்டலும் அனுப்பினார். வழக்கம்போல புரட்சித்தலைவி அம்மாவின் உத்திரவுக்குக்காக தலைமைச் செயலரின் மேசையில் அந்தக் கோப்பு காத்துக்கிடந்தது.
14 நாட்களுக்குப் பிறகு, ஒரேநாளில், 45 செ. மீக்கு மேல் பேய்மழை பெய்ததில் திடீரென்று விழித்துக்கொண்ட அரசும் ஆட்சியாளர்களும் டிசம்பர்-1ஆம் தேதி, நள்ளிரவில் முன்னறிப்பின்றி, அவசர அவசரமாக இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டார்கள். அரசும் அதிகாரிகளும் அறிவித்ததைவிட இரண்டு, மூன்று மடங்கு தண்ணீர் திறந்து விட்டார்கள். ஏரித் தண்ணிரைத் திறந்துவிட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட கொஞ்ச நேரத்தில், இரவில் திடீர் காட்டாறாக மாறி சென்னைக்குள் பாய்ந்தது. தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பதறியடித்து கொண்டு மக்கள் ஒட, திடீர் வெள்ளம் அவர்களின் கொஞ்ச நஞ்ச வாழ்வுடைமைகளோடு கரையோரக் குடிசைகளை அடித்துக் கொண்டுபோனது. கரைகளைத் தாண்டி, நான்கைந்து கி.மீட்டர் வரை ஒடிய அந்தப் பெருவெள்ளம் குடிசைகளையும் சிறுவிடுகளையும் சாலைகளையும் மூழ்கடித்தது. அடுக்கு மாடி வீடுகளின் இரண்டாம் தளங்களை எட்டியது.
சென்னை நகருக்குள் காம்பவுண்டுகள் பங்களாக்களையும் அடுக்குமாடி வீடுகளையும் கட்டிக்கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்தவர்களைப் பெருமழை விட்டு வைக்கவில்லை. காம்பவுண்டு சமூகம் என்று பெருமை பீற்றிக்கொண்ட அவர்கள் தமது சொந்த வாழ்வு, வசதி மீது மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். பெய்யும் மழை நீரோ, சாக்கடையோ வடிவதற்கான, நல்ல சாலைகள் போடுவதற்கான பொதுச் சேவைகள், அதற்கான அரசின் ஏற்பாடுகள் குறித்துக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை. இத்தகை பொதுச் சேவைகளுக்கான நிதியைக் கொள்ளையடிப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள். எனவேதான், அவர்களின் காம்பவுண்டுக்குள்ளும் சாலையிலும் கொட்டிய பெருமழையே அவற்றைத் தண்ணீர் சமாதிகளாக்கிப் போனது. சாலைகள் மரணக் குழிகளாகிப் போயின.
கோடிக்கணக்கான மக்கள் வாழும் இவ்வளவு பெரிய சென்னைக்கு, அதன் தோற்ற காலம் முதல் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று மட்டுமே, வடிகால் வழித் தடங்களாக உள்ளன. புதிதாக வடிகால் வழித் தடங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவே இல்லை. சென்னையைச் சுற்றியிருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட ஏரிகள் அரசாளும் ஆட்சியாளர்களாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் வீடு-வீட்டுமைைன, மற்றும் கல்விக் கொள்ளையர்களாலும் ஆக்கிமிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய ஏரிகளும் பராமரிப்பில்லாமல் கொட்டித்தீர்த்த பெருமழை முழுவதுமாக கரைகளை உடைத்துக்கொண்டு சென்னையின் புறநகருக்குள் பாய்ந்து வெள்ளக் காடாக மாற்றியது. மழைநீர் மற்றும் சாக்கடை வடிகால் வழித் தடங்களைத் துர்வாருவதற்கும் அடைப்புகள் நீக்குவதற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஆளுவோர் விழுங்கி ஏப்பம் விட்டிருந்தனர்.
சர்வதேசத் தரத்திலானவை என்று கூறிக்கொண்ட கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்குள் வெள்ளம் பாய்ந்து, மின் சேவைகள் இல்லாது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த, நோயாளிகள், அடுக்கு மாடிவீடுகளில் தினசரி சிறுநீர் கழிக்க முடியாத நோயாளிகள், மருத்துவ வசதியற்ற முதியவர்கள், குடிக்கப் பாலும் உணவும் இல்லாத குழந்தைகள் என அனைவரும் இறந்துபோனார்கள். சுடுகாடுகளும் இடுகாடுகளும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்க இறந்தவர்களின் பிணங்கள் மரங்களின் கிளைகளில் கட்டித் தொங்க விடப்பட்டன. உயிர் தப்பிப் பிழைத்திருந்தவர்கள், குடிதண்ணிரையும் உணவையும் தேடி அலைந்த மக்கள் மழைநீரும் கழிவறை-சாக்கடையும் கலந்த வெள்ளத்தில் கூடவே பிணங்களும் மிதப்பதைக் கண்டார்கள். கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் மாண்டுபோனவர்களின் பிணங்களைக் கொண்டுவந்து அரசு மருத்துவ மனைகளில் போட்டுவிட்டு ஒடிப்போனார்கள்.
தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை பலவும் இருந்த போதும் கோரியபேதும் தமிழத்தில் நேரிட்டதை தேசியப் பேரிடராக அறிவிக்கவும் போதிய நிதியும் பொருட்களும் தர மறுத்ததோடு, இலட்சக்கணக்கான மக்களை மீட்க சில நூறுபேரை மட்டுமே மீட்புப் பணிக்காக அனுப்புகிறது மத்திய அரசு. மாநில அரசோ பரிதவிக்கும் மக்களை மீட்கவும் தப்பிப் பிழைத்தவர்களுக்கு குடிதண்ணர், பால், பாய், போர்வை, மருந்து முதலிய அடிப்படைத் தேவைகளை வழங்கவும் இல்லை; பலநாட்களாகத் தேங்கி கிடக்கும் கழுத்தளவு வெள்ள-சாக்கடை நீரையும், நாசமாகிப்போய், மலையாகக் குவிந்து கிடக்கும் பொருட்களை அகற்றவில்லை.
உள்ளூர் இளைஞர்களும் அவசரமாகத் தோன்றிய அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சில அரசியல் எதிர்க் கட்சிகளும் மட்டுமே இப்பணிகளைச் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு நிவாரணப் பொருட்களையும் நிதியையும் கொள்ளையடிப்பதில் ஆளும்கட்சிக்கு ரெளடிகள் இறங்கியுள்ளனர். இது அம்பலமாகிப்போனபோது அரசு அதிகாரிகளே மாவட்ட எல்லைகளில் போலீசுச் சாவடிகள் அமைத்து, நிவாரணப் பொருட்களைப் பறித்துக் கொள்கிறார்கள். அவற்றின் மீது அம்மா விளம்பரங்களை ஒட்டி, ஆளும்கட்சி ரெளடிகள் மூலம் விநியோகிக்கின்றனர்.
பெருமழை, பெருவெள்ளத்தால் தமிழக மக்கள் இழந்ததோ பல லட்சம் கோடிரூபாய்கள்! ஆனால், கோழிக்கு நூறு என்று தொடங்கி ஆடு, மாடு, குடிசை மனித உயிருக்கு நான்கு லட்சம் என்று வைத்து நிவாரணம் என்ற பெயரில் ஏலம் போடுகிறது, அரசு. அதையும் கணக்கு-வழக்கு, தணிக்கை என்று எதுவுமில்லாமல், ஜெயா-சசி கும்பலின் தேர்தலுக்கான பணப்பட்டுவடாவாக்கி தனது அடிமை ரெளடிகள் மூலம் செய்கிறது. தமிழகத்தைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் ஜெயா-சசி கும்பலின் ஆட்சிக்கு மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வும் பார்ப்பன மற்றும் விலைபோன ஊடகங்களும் துணை நிற்கின்றன.
ஆகவே, நேரிட்டது மத்திய அரசு ஒப்புக்கொள்ளவும் அறிவிக்கவும் மறுத்தாலும், அளவிலும் வீச்சிலும், இழப்பிலும் “தேசியப் பேரிடர்தான்”, ஆனால், இயற்கைப் பேரிடர் அல்ல. மனிதப் பேரிடர். ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதிகாரிகளுமே இதற்குக் காரணமானவர்கள். இதற்குப் பலியான மக்கள் கோரவேண்டியது உடனடி, நீண்டகால நிவாரணங்கள் மட்டுமல்ல. இந்தக் கிரிமினல் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதற்காக வழக்கம்பேல மக்கள் அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. எழுச்சிப் போரட்டங்களில் குதிக்க வேண்டும்.
மாணவர் அமைப்புக்கள் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் கடந்த 52 நாட்களாக தீரமிகு போராட்டங்களை நடத்திவருகின்றன.
கல்வியில் தனியார்மயத்தை புகுத்துவதன் மூலம் ஏழை மக்களிடமிருந்து கல்வியை பறிக்கும் சதி அதிவிரைவாக நடந்துவருகின்றது. டிசம்பர் 13 முதல் 17 வரை கென்யாவின் நைரோபியில் உலக வர்த்தக கழக மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் காட்ஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் கல்வி ஏழை மாணவர்களுக்கு முற்றிலும் எட்டாக்கனியாக மாற்றப்படவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திடவுள்ளது. இம்மாநாட்டுக்கு எதிராக உலகம் முழுவுவதும் மாணவர்கள் பேராசிரியர்கள் போராடிவருகின்றனர். இவ்வொப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியில் AISA,ADISO,SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புக்கள் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் கடந்த 52 நாட்களாக தீரமிகு போராட்டங்களை நடத்திவருகின்றன.
இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் 50 பேர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி sanhati.com
10.12.15 அன்று மேற்கண்ட அமைப்புக்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்றத்தினை நோக்கி முற்றிகையிட முன்னேறிச்சென்றனர். அவர்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருக்கிறது தில்லி போலீசு. இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் 50 பேர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வி என்பது உரிமை அதற்காக போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசின் இச்செயலை பு.மா.இ.மு கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களை தில்லியில் நேரில் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.கணேசன் மற்றும் பு.மா.இ.மு அமைப்பினர் இப்போராட்டத்திற்கு பு.மா.இ.மு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தீரமிகுப் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே கல்வி என்ற உரிமையை மீட்டெடுக்க முடியும். அதற்காக மாணவர் வர்க்கத்தை அலையலையாக தட்டியெழுப்பும் போராட்டத்தில் மாணவர் அமைப்புக்கள் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கல்வித்துறையை ஆக்கிரமிக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து AIFRTE இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை கடந்த டிசம்பர் 7ந்தேதி முதல் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் சார்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கலந்து கொண்டுள்ளது.
டெல்லி ஆர்பாட்டத்தில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன்
2015 டிசம்பர் 12ந்தேதி காலை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்காக பு.மா.இ.மு – சார்பில் மாணவர்கள் டெல்லி சென்றுள்ளனர். ஜந்தர் மந்தரில் கடந்த 7-ந்தேதி முதல் நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொள்வதோடு, 12-ந்தேதி பு.மா.இ.மு நடத்தும் தர்ணா ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சார வேலைகளையும் முழுவீச்சில் செய்து வருகின்றனர் பு.மா.இ.மு தோழர்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
கண்டன உரையாற்றுவோர்:-
பேராசிரியர். ரமேஷ் பட்நாயக்
presidium member of AIFRTE
பேராசிரியர். அனில் சத்கோபால்
presidium member of AIFRTE
பேராசிரியர். மது பிரசாத்
presidium member of AIFRTE
போராசிரியர். பிரேந்தர் சிங் ராவத்
Professor – Delhi University
தோழர். மோகித்
All India Student Association (AISA)
க.ரமேஷ்
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், ஐ.ஐ.டி சென்னை
ஆனந்த்
The New Materialist, JNU, Delhi
சூரஜ்
The New Materialist, JNU, Delhi
புரட்சிகர கலை நிகழ்ச்சி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
நமது கல்வி உரிமையைப் பாதுகாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவரையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.
கல்வியை வியாரபாரமாக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
Agitation Date : 12th December 2015
Time : 11.00 AM
Venue : Jantar mantar (Near Kerala House)
The recolonization Policies, that are being imposed on the country over the past two decades have caused a large scale destruction in every aspect. Now ‘New Education Policy-2015’ (NEP – 2015) drafted by BJP – RSS led Indian government is another move towards the implementation of WTO – GATS. Through this policy, Indian education will be commoditized further and our fundamental rights will be scrapped. Moreover, under the cover of NEP, brahminical forces attempt to saffronize the education system. We, the students should stand against the motive of imperialist forces ( WTO – GATS ) and brahminical tyranny. Let us fight together to save the right to education for all common mass.
Agenda:
Presedent:
Comrade. Ganesan
State Co-ordinator, Revolutionary Student Youth Front
Speakers:
Prof. Ramesh Patnaik
Presidium member – AIFRTE
Prof. Anil Sadgopal
presidium member – AIFRTE
Prof. Madhu Prasath
Presidium member – AIFRTE
Prof. Brendira Singh Ravath
Professor – Delhi University
Comrade. Mohith
All India Student Association (AISA)
G. Ramesh
Ambedkar Periyar Study circle – IIT, Madras.
Anand
The New Materialist, JNU, Delhi.
Suraj
The New Materialist, JNU, Delhi.
Revolutionary Student Youth Front, welcomes all the Students, Teachers and Academicians for this Agitation
சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.
முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு மனிதனை மதம் சார்ந்து திரட்டக் கூடாது, அப்படி திரட்டுவது ஆளும் வர்க்கத்திற்கே இறுதியில் உதவுவதாய் இருக்கும் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. மத நம்பிக்கையோ, மத சடங்குகளோ, இறை வழிபாடோ அனைத்தும் ஒரு தனிநபரின் உரிமை மட்டுமே. நமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக எந்த மதத்திலும் தீர்வோ, வழியோ கிடையாது. அதனால்தான் அனைத்து மதங்கள், சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கமென்ற முறையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறோம்.
சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.
நிவாரணப் பணியில் ஈடுபடும் டி.என்.டி.ஜே தொண்டர்கள்
மேலும் மதம் சார்ந்து மட்டும் அதிகம் போராடும் அந்த இயக்கங்கள் முதன் முறையாக ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பெருமளவில் அணிதிரண்டு வேலை செய்திருக்கின்றனர். இந்த இணைப்பு மக்களிடம் இணக்கத்தையும், ஜனநாயகத்தையும், சகோதர உணர்வையும் ஓரளவிற்கேனும் அறிமுகப்படுத்தும்.
முஸ்லீம் மக்கள் குறித்து இந்துக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் வன்மத்தையும் இந்த வெள்ள நிவாரணப் பணி அழித்து விட்டிருக்கிறது. ஊடகங்களில் முஸ்லீம் அமைப்புகள் குறித்த செய்திகள் பெரும்பான்மையாகவும், ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்திகள் சிறுபான்மையாகவும் வருவதைக் கண்டு இந்துமதவெறியர்கள் தாங்கவொண்ணா எரிச்சலில் இருக்க வேண்டும். உண்மையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களின் பேரைச் சொல்லி இயங்கும் மதவெறியர்களை தோற்கடித்திருக்கிறார்கள்.
தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் எனும் பா.ஜ.க மதவெறியனுக்கு இந்துக்களே திருப்பி அடித்திருக்கின்றனர், முகநூலில். இவையெல்லாம் தமிழக மண்ணில் இந்துமதவெறிக்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜனநாயக உணர்வின் அடிப்படையிலும் மக்கள் திரள்வதற்கும் சேர்வதற்கும் வழியெடுத்துக் கொடுக்கும்.
இனி அந்த இளைஞர்கள் பேசுவதைக் கேட்போம்.
சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு – மசூதி தோட்டம் பகுதி. இப்பகுதியில் கடந்த ஏழு நாட்களாக உணவு உறக்கம் மறந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் சேட் (எ) அஷ்ரப் உசைன். நாம் சென்ற போது அங்கே போர்வைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
சேட் என்ற உசைன், ஆட்டோ தொழிலாளி, மனித நேய மக்கள் கட்சியின் வட்டச் செயலாளர்.
“பாய் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க மாடி வீடு. கீழ் வீடுகளில் தான் பாதிப்பு உங்களக்கு கொடுக்க முடியாது”- என்று உரிமையோடு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார், உசைன். இதைக் கேட்டு மாடியில் வசிக்கும் பாய் பின்னால் செல்ல தரைதளங்களில் வசிக்கும் ஏனைய ‘இந்து’, மற்றும் ‘முஸ்லீம்கள்’ நிவாரணப் பொருட்களை பெற்று செல்கிறார்கள். அவரிடம் பேசினோம்.
கேள்வி : கடந்த ஒரு வாரமா நீஙக செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்க?
உசைன்: முதல் நாள் பகலில் தண்ணீர் கரண்டை கால் வரை தான் வந்தது. மக்களும் இதுக்கு மேல வராதுனு நெனச்சிட்டு இருந்தாங்க. நைட்டு திடீருனு தண்ணி அளவு அதிகரிக்க ஆரம்பிச்சிருச்சு. உடனடியா மக்களை வெளியேற்றினோம். நடக்க முடியாத பெரியவர்களை டிரை சைக்கிளில் ஏற்றி கூட்டிச் சென்றோம். சீக்கிரமாகவே இந்த பகுதி தண்ணீரால் சூழப்பட்டு விட்டது.
காப்பாற்றப்பட்ட மக்களை தங்க வைக்க இடமில்லை. மசூதிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருந்தது. அது பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைக்க காவலாளி எதிர்ப்பு தெரிவித்தார். “போலீஸ் கேஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் மக்களை தங்க வைக்கணும்” என்று காவலாளிக்கு எடுத்துச் சொல்லி துணிந்து பூட்டை உடைத்து மக்களை தங்கவைத்தோம்.
சில பகுதிகளில் மக்கள் வெளியேற முடியாமல் மாடிகளில் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு நாட்கள் உணவு, பால் வீடு வீடாக கொடுத்தோம். இது சபரிமலை சீசன். ஏரியா இந்து சகோதரர்கள் பலர் மாலை போட்டிருந்தார்கள். அவங்களுக்கு பிரியாணி கொடுத்தால் நம்மை தப்பா நினைக்கமாட்டார்களா. அவர்களுக்காக பிரிஞ்சி , லெமன் சாதம் சமைத்து கொடுத்தோம்.
ஓ.எம்.ஆர் கந்தன்சாவடி அருகிலிலுள்ள பகுதிகளிலும் மீட்பு பணியில் ஈடுபட்டோம். விநாயகபுரம் பகுதியில் கரண்டைகாலுக்கு மேல்வரை சேறு. அன்சர்பாஷா, அலாவுதீன் மற்றும் பகுதி இளைஞர்கள் சிறப்பாக உதவினார்கள்.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சேற்றுப் புண்!
(நாம் பார்த்த வரை மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் பலரும் காலில் சேற்றுப்புண் மற்றும் மீட்பு பணியின் போது அடிபட்ட காயங்களோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது.)
கேள்வி : நீங்க என்ன தொழில் செய்யறீங்க? இந்த உதவி வேலைகள் செய்யுறதால உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பில்லையா?
உசைன்: ஆட்டோ வெச்சிருக்கேன். 7 நாள் வேலைக்கு செல்லவில்லை. பலரும் உதவி செய்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சில நகைகளை அடகுவைத்திருக்கிறேன்.
கேள்வி: மறுமையில் சொர்க்கம் கிடைக்குமுனு உதவி செய்யுறதா சில முஸ்லீம் தொண்டர்கள் சொல்லுறாங்க. உங்க கருத்து என்ன?
உசைன்: மனுசனுக்கு மனுசன் மனிதநேயம் தான் சார் முக்கியம். மார்க்கம் இரண்டாவதுதான். எங்க மார்க்கமும் மனிதநேயத்தை தான் சொல்லுது. இப்போ உங்க அப்பா அம்மாவை உங்க கண் முன்னால யாராவது அடிச்சா எந்த உணர்ச்சி வருமோ அப்படி தான் சார் மக்கள் இப்படி துயரப்படும்போது இருக்கும்.
கேள்வி: எப்போதும் அடித்தட்டு மக்கள் பகுதியிலேயே வெள்ளம் வருதே, போயஸ் தோட்டம் பகுதியில வெள்ளம் ஏன் வருவதில்லை?
உசைன் : சட்டம்னா என்ன சார்? இங்க எல்லாருக்கும் ஒரே சட்டம் கிடையாது. கனிமொழி எவ்ளோ கொள்ளையடிச்சி இப்போ வெளியே இருக்கு. ஜெயலலிதாவ ஒரு நீதிபதி ஜெயில்ல போட்டா இன்னொருத்தர் விடுதலை பண்ணிட்டார். போலீஸ் நினைத்தால் தவறுகளை தடுக்க முடியும் ஆனா அவர்களுக்கு கட்டிங் செல்கிறது. அரசு மருத்துவமனைக்கு போங்க. குழந்தை பிரசவத்துக்கு ஆண் குழந்தைக்கு 2000, பெண் குழந்தைக்கு 1000 ரூபா கொடுக்கணும். அதை கொடுக்கலேன்னா நம்மை மதிக்கவே மாட்டாங்க. என் காலுல் அடிபட்ட போது அரசு மருத்துவமனையில் கட்டு போடவே பல மணி நேரம் ஆக்குறாங்க. சாதாரண ஜனங்கள்னாலே அலட்சியம் தான்.
முஸ்லீம்ல கூட கொஞ்சம் பேரு பாதுகாப்பா வெளியூருக்கு கிளம்பிட்டாங்க. திருநெல்வேலி அங்க இங்கனு. போன் போட்டு திட்டுனேன். அங்கயும் தண்ணிவந்துட்டா எங்கடா போவீங்கணு.
கேள்வி: முஸ்லீம்களில் பலர் கோவில் பிரசாதம் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த நிவாரணப் பணிகளில் பல கோவில்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செஞ்சுருக்கீங்க? அதை எப்படி பாக்குறீங்க?
உசைன்: பல அமைப்புகள் நிவாரணப் பணி செய்யுறாங்க. இந்து, முஸ்லீம் என்று தனித்தனியாக பிரிச்செல்லாம் சுத்தம் செய்ய முடியாது. இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. பிரசாதம் சாப்பிடக் கூடாது தான். ஆனா சில சமயங்களில் நண்பர்களில் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து வேளை தொழுவதால் மட்டும் யாரும் சொர்க்கத்திற்கு போக முடியாது. அடுத்தவர் மனது புண்படுத்தக்கூடாதுனும் மார்க்கம் சொல்கிறது. சமூகத்திற்கு என்ன செய்தோம், குடும்பத்தை எப்படி வழிநடத்தினோம்னு பல விசயம் இருக்கிறது.
நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்லும் பெண்கள்!
கேள்வி : இப்போது முஸ்லீம் அமைப்புகள் பாராட்டப்படுவதற்கு காரணம் வெள்ளம் என்ற அனைத்து மக்களுக்குமான பொதுப்பிரச்சனையில் இறங்கி உதவி செய்திருப்பதால் தான். ஆனால் சில முஸ்லீம் அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும், முஸ்லீம் மக்களுக்கான கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?
உசைன்: பிராபகரன் பையன் கொல்லப்பட்ட செய்த வந்த போது நாங்கள்தான் முதலில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டோம். எங்களுக்கு அடுத்து தான் வை.கோ-வே வந்தார். பொதுப் பிரச்சனைகளுக்கும் செல்கிறோம். நாலு பேரும் நமக்கு தேவைதான். மற்ற சமுதாயத்தை சேக்காம பண்றது தவறு.
கேள்வி : அப்படியே சென்றாலும் விஸ்வரூபம் பிரச்சனைக்கும், கார்டூன் பிரச்சனைக்கும் திரள்கிற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு வருவதில்லையே ?
உசைன்: எங்க பகுதியிலிருந்து எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அளவு எண்ணிக்கையில தான் செல்கிறோம். ஆனாலும் நபிகள் நாயகம் கார்டூன் எல்லாம் உணர்வு ரீதியான பிரச்சினை அதனால் மக்கள் அதிகமாக வருவாங்க.
கேள்வி : நீங்கள் பொதுப் பிரச்சனைக்கு வருவதாக சொல்கிறீர்கள். நல்ல விசயம்தான். சில முஸ்லீம் அமைப்புகள் பொதுப் பிரச்சனைக்கு வரலேன்னாலும், உங்கள மாரி வாரவங்களை முஸ்லீம் இல்லைன்னு சொல்றாங்களே?
உசைன்: தவ்ஹீது ஜமாதை தானே சொல்கிறீர்கள். ஒருத்தர் முஸ்லீமா இல்லையா என்பதை அல்லா தான் முடிவு பண்ணனும். நானும் நீயும் முடிவு பண்ண முடியாது. அங்க பள்ளம் இருக்குப்பா பாத்துப்போ என்று சொல்லத்தான் முடியும். கேக்கமாட்டேன் போய் விழுவேனு போனா நாம என்ன செய்ய முடியும். ஆனா வெள்ள நிவாரண பிரச்சனையில அவங்க நல்லா செயல் படுறாங்க. முதல் முறையா ஒரு சமூக பிரச்சனையில தவ்ஹீது ஜமாதை பாக்குறேன். இதை முதல்லயே செஞ்சிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க. இத தொடர்ந்து செய்யனும்.
கேள்வி : மக்கள் அரசு மீது குற்றம் சாட்டுகிறார்களே, உங்க கருத்து என்ன?
உசைன்: யாருக்கும் அறிவிக்காமல் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத தவறு. இவ்வளவு தண்ணீர் வரும் என்று மக்களுக்கு தெரியாது. கால் அளவு தண்ணீர் வரும் என்று தான் நினைத்தார்கள். நாங்கள் அழைக்கும்போது கூட மக்கள் முதலில் வெளியேறவில்லை. காரணம் இவ்வளவு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி மக்கள் வரவிட்டால் கூட அரசின் கடமை அறிவிப்பதுதானே. அதை ஏன் செய்யவில்லை. அதனால் இது அரசின் மீதான தவறுதான்.
கேள்வி : நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி இதுவரை இதை கண்டிக்கவில்லையே?
உசைன்: அது பற்றி தெரியவில்லை. நிவாரணப்பணியில் இருக்கிறேன். கட்சி தலைவர்களை சந்தித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இது கண்டிக்க வேண்டிய ஒன்று. நாங்கள் கண்டிக்கச் சொல்லி வலியுறுத்துவோம்.
கேள்வி : அப்படி கண்டிக்காவிட்டால் என்ன செய்யவீர்கள்?
உசைன் : மக்களுக்கு வேலை செய்யத்தான் கட்சி. எங்கள் கட்சியில் அனைவரும் கருத்து சொல்ல முடியும். 17 வயது பையன் கூட சொல்லலாம். அப்படி சொல்லுவோம். கேட்கவில்லை என்றால் வெளியேறிவிடுவேன். இது அரசின் தவறுதான்.
அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.
இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் (சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென் சென்னை வர்த்தக பிரிவில் பொறுப்பு வகிக்கிறார்.
சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதிக்கு சென்ற போது கழுத்தளவு தண்ணீரில் முஸ்லீம் இளைஞர்கள் உணவு கொண்டு தந்ததை மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள். விசாரித்த போது அப்பகுதியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ -யின் ஆட்டோ சங்கமும் அதோடு தொடர்புடைய இளைஞர்கள் குறித்தும் கூறினார்கள். அவர்களிடம் பேசினோம். அக்கட்சியின் அப்துல் மஜித், தென்சென்னை வர்த்தக அணியை சேர்ந்தவர் பேசினார்.
“செவ்வாய் இரவு இப்பகுதி முழுவதும் வெள்ளம் நிறைந்து விட்டது. மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். செய்தி அறிந்ததும் உடனடியாக கிச்சடி தயார் செய்தோம். ரப்பர் டியூப்கள் தயார் செய்து அதை கொண்டு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்த்தோம். சிறிய குறுகலான சந்துகளில் கயிறு கட்டி சென்றோம். தண்ணீர், வத்திபெட்டி, சின்ன டார்ச், மெழுகுவர்த்திகளை விநியோகித்தோம். இரவு எங்களால் முடிந்த அளவுக்கு செய்தோம். மறுநாளும் தொடர்ந்தோம்.
தெருவில் மக்கள் அடித்துக்கொள்ளும் வகையில் கொடுக்ககூடாது என்பதால் வீடு வீடாக கொண்டு சென்றோம். மழை முடிந்ததும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டோம். சந்துகளில் இருந்த குப்பைகள், சாக்கடைகளை வாரி அரசு ஊழியர்கள் கொண்டு செல்ல வசதியாக தெருமுனைகளில் குவித்து வைத்தோம்.
மக்களை எங்களை பாராட்டும் போது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.”
கேள்வி : முஸ்லீம் அமைப்புகளை மக்கள் பாராட்டுவதற்கு காரணம் பொதுப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் தான். ஆனால் சில அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும் , இஸ்லாமியர்கள் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?
மஜித்: எங்கள் அமைப்பை பொறுத்தவரை நாங்கள் எல்லா அரசியல் விசயங்களுக்கு குரல் கொடுக்கிறோம். சமீபத்தில் கூட டாஸ்மாக் பிரச்சனைக்கு ஒரு மாதமாக போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். ஈழம் முதலிய எல்லா விசயங்களுக்கும் போராடுகிறோம்.
சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை. முஸ்லீம் நினைத்து மட்டும் சி.எம் ஆக முடியுமா சார். நடக்ககூடிய காரியமா? மற்றவர்களுடன் சேர்ந்து செய்வது தான் காலத்தின் கட்டாயம். சங் பரிவாரத்திற்கு எதிரானவர்களை அனைவரையும் இணைத்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடுகிறோம்.
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள்.
கேள்வி : ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் மதப் பிரச்சினைகளைத்தானே பிரதானமாக செய்கிறார்கள்.? இப்போது கூட தவ்ஹித் ஜமாஅத் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறார்கள்.?
மஜித் : மார்க்கம் தனிப்பட்ட விசயம். அரசியல் பொதுவான விசயம். நான் விரலை ஆட்டி தொழுவேன். தொப்பி போட்டு தொழுவேன், போடாமல் தொழுவேன். இப்படி செய்தால் தான் முஸ்லீம் செய்யாவிட்டால் முஸ்லீம் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது.
கேள்வி : மற்ற கடவுள்களுக்கு படைக்க்ப்பட்ட பிரசாதங்களை சாப்பிடக் கூடாத நீங்கள் கோயிலை சுத்தப்படுத்துவது மார்க்கப்படி சரியா?
மஜித் : இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. சிலை வணக்கம் தான் செய்யக்கூடாது. கோவிலை சுத்தம் செய்வதில் பிரச்சனை இல்லை. இஸ்லாமியர் ஒருவர் அப்படி வணங்கினாலும் அவரை இஸ்லாமியரல்ல என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. அதை அல்லா தான் முடிவு செய்வான். அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது.
கேள்வி : மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறீர்கள். சரியானதுதான். இதற்கு காரணமான அரசுக்கு எதிராகவும் போராடுவீர்களா?
மஜித் : இந்த அரசு மக்களை அலட்சியமாகத்தான் கருதுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளில் தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக பலரும் போராடினார்கள். அரசு அதை மதிக்கவிலை. இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.
முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பகுதி மக்களான ‘இந்துக்கள்’ சிலரிடம் கருத்து கேட்டோம்.
முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் என்று சொன்ன அம்மா.
முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பார்கள், நம்மிடம் ஒட்டமாட்டார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால்
இப்பொழுது உங்கள் தெரு சாக்கடையை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.
தாங்கள் அப்படி கருதவில்லை என்று பலர் கூறினார்கள். முன்னாடி எங்களுக்கு அப்படிதான் சொன்னாங்க. நாங்களும் அப்படி தான் நினைத்திருந்தோம். வீடு வாடகைக்கு விடும்போது கூட யோசிப்போம். அத எல்லாம் காதால்தான் கேட்டிருந்தோம். அது தவறு என்பதை இப்போ கண்ணால் பாக்றோம் என்றார்கள்.
அப்படியானல் இனி வாடகைக்கு வீடு கொடுப்பீர்களா? என்று கேட்ட போது, “வீடென்ன உயிரையே கொடுப்போம்” என்றார் ஒரு பெண்மணி.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை இங்குள்ள அரசு நிர்வாகம் திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இங்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே அப்பட்டமாக நடிக்கிறார்கள்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பல பகுதிகளில் குவிந்து ஆய்வு செய்தனர். விழுப்புரம் நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு, அதனால் அவர்கள் படும் துயரங்களை தொகுத்து குறைந்த பட்ச அடிப்படை தேவைகளை கூட அவர்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் இருப்பதை உணர்ந்து நிவாரணப் பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் கோத்தகிரி, கோவை, ஈரோடு, பகுதி தோழர்கள் அங்குள்ள உழைக்கும் மக்கள், சமூக ஆர்வலர்களிடம் சேகரித்து தந்தார்கள்.
1. தாமரைக்குளம், ஊரல்கரைமேடு
விழுப்புரம் நகரின் ஒரு முனையில் உள்ள தாமரைக்குளம், ஊரல்கரைமேடு பகுதிகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு மிக அருகிலேயே அ.தி.மு.க எம்.பி லக்ஷ்மணன் வசிக்கிறார். அனால் எந்த உதவியும் இல்லை. மக்களால் இன்னும் சரியாக வீடுகளுக்கு வரமுடியவில்லை. பலரது வீடுகளில் முட்டியளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுவரை அரசின் எனது ஒரு உறுப்பும் அவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து தர முன்வரவில்லை.
இங்கு வசிக்கக்கூடிய மக்களில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட 55 குடும்பங்களை தேர்வு செய்து 08-12-2015 செவ்வாய் அன்று காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான போர்வை, நைட்டி, துண்டு, புடவை, சிறுவர்களுக்கான ஆடைகள், அரிசி, பருப்பு, தண்ணீர், சர்க்கரை, எண்ணெய், பிரட், பிஸ்கட், நாப்கின், காய்கறிகள், குழந்தைகளுக்கு தேவையான பால்புட்டி, பால் பவுடர், ஹக்கீஸ், இவை அனைத்தையும் உள்ளடக்கி மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களிடம் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் விநியோகித்தனர். இவர்களுடன் நகரில் செயல்படும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களும் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.
நம்முடைய விநியோகத்திற்கு பிறகு மக்கள் சொன்னது…
“முதல் முறையாக எங்களுக்கு உதவி செய்தது நீங்கள்தான். அதுவும் மிகச்சரியாக மக்களுக்குள் சண்டை வராமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு வீடாக சென்று சேர்த்தீர்கள். இதே இந்த பொருள அரசாங்கம் குடுத்திருந்தா இங்க சண்டைதான் நடந்திருக்கும். பொருளெல்லாம் வீணாப்போயிருக்கும். இதுல பாதிய அதிகாரிங்க, அரசியல்வாதிங்க திருடி இருப்பானுங்க. வயசுல சின்னப் பசங்களா இருந்தாலும் கரெக்டா செஞ்சீங்க. உங்கள மாதிரி போராடுற கட்சி தான் எங்களுக்கு வேணும். இவனுங்கலாம் வேஸ்ட் பா.. உங்க அமைப்புல எங்களையும் சேத்துக்குங்க. எங்க புள்ளைங்களுக்கு நல்லதா சொல்லிகொடுங்க”
2. ஸ்டாலின் நகர், இந்திரா நகர்.
விழுப்புரம் நகரின் இன்னொரு திசையில் மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். சாலை வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் அந்த மக்களுக்கு இல்லை. இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு நகரின் மையப்பகுதியில் வசித்தவர்கள். மாவட்ட மருத்துவமனையின் விரிவாக்கதிற்காக நகரின் வெளியில் நயவஞ்சகமாக தூக்கி எறியப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இப்போது மழை வெள்ள துயரத்தில் தத்தளிக்கிறார்கள்.
இங்கு நூற்று அறுபது வீடுகளுக்கு மழை வெள்ள பாதிப்பு இருப்பதை கண்டறிந்து இவர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று மேலே பட்டியிலப்பட்ட பொருட்களை 08-12-2015 செவ்வாய் அன்று மாலை விநியோகித்தோம். அந்த பகுதியில் இருந்த மாணவர்களும், இளைஞர்களும் கணக்கெடுத்ததில் இருந்து இறுதி வரை நம்முடன் இருந்து ஒத்துழைத்தனர். தேநீர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
“இது வரைக்கும் ஒரு நாய் கூட இந்த பக்கம் வந்து எட்டி பாக்கலப்பா. நல்ல வேள நீங்களாச்சும் வந்தீங்களே. மனுசங்க மேல உள்ள பற்றே இல்லாம போச்சோன்னு நெனச்சுட்டோம்பா” என்று ஆதங்கப்பட்ட மக்கள்… அரசாங்கம் என்று நாம முடிப்பதற்குள் கடுங்கோபத்தில் அச்சிட முடியாத வார்த்தைகளால் ஜெயலலிதாவையும், மற்ற ஒட்டுக் கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும் வறுத்தெடுத்தனர். “இனிமே எவனாவது ஒட்டு கேட்டு இந்த பக்கம் வரட்டும் பீயையும், சாணியையும் கரைச்சு தொடப்பத்துல முக்கி அடிக்கறோம். எவன் இந்த பக்கம் வரான்னு பார்ப்போம்” என்று திட்டி தீர்த்தார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
3. ஜி.ஆர் .பி தெரு
நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் நூறு வீடுகளை தேர்வு செய்து மேலே பட்டியிலப்பட்ட பொருட்களை 09-12-2015 புதன் அன்று மதியம் பகுதி இளைஞர்கள் துணையோடு விநியோகித்தோம்.
இடையில் குறுக்கிட்ட அந்த பகுதியை சேர்ந்த அமைப்பின் மேல் வெறுப்பில் இருக்கும் பா.ஜ.க நபர் ஒருவர் அனைத்து பகுதியிலும் கொடுக்க வேண்டியது தானே என்று ‘அரசியல்’ செய்யப் பார்த்தார். பதிலடியாக நம் தோழர்கள் “நீங்க தானே இந்தியாவ ஆள்றீங்க. நீங்க மொதல்ல களத்துல எறங்கி செய்ங்க” என்று அம்பலப்படுத்தியதும் சட்டென்று கிளம்பிவிட்டார்.
“காலையில் தான் இந்த புள்ளைங்க கணக்கெடுத்தாங்க.. எங்களால இத நம்பவே முடியல. மத்யானமே பொருள கொண்டாந்து கொடுக்குறாங்க. அரசாங்கம் தெண்ட கருமாந்திரத்திற்கு இருக்கு. இதுவரையிலும் ஒருத்தவன் கூட வந்து செத்தோம இருக்கோமான்னு கூட பாக்கல” என்று கோபத்துடன் சொன்னார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இவண்.
மக்கள் அதிகாரம், விழுப்புரம்.
தொடர்புக்கு: 99441 17320.
DADAAB, KENYA - JULY 23: Somalian refugees queue for a bus to transport them from the IFO camp registration centre to the Dagahaley refugee camp, which makes up part of the giant Dadaab refugee settlement on July 23, 2011 in Dadaab, Kenya. The refugee camp at Dadaab, located close to the Kenyan border with Somalia, was originally designed in the early 1990s to accommodate 90,000 people but the UN estimates over 4 times as many reside there. The ongoing civil war in Somalia and the worst drought to affect the Horn of Africa in six decades has resulted in an estimated 12 million people whose lives are threatened. (Photo by Oli Scarff/Getty Images)
கோடிக்கணக்கானோரைப் பசியால் வாட்டிச் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்தல்
துண்டுத் தாள்களும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட குவளைகளும் அந்த அறையில் தரை முழுக்க இறைந்து கிடக்கின்றன. அதுதான் உலக உணவு வர்த்தகத்தின் கட்டுப்பாட்டு அறை. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள சிக்காகோ வர்த்தக மன்றத்தின் செயல் தளத்தில் நாம் நிற்கின்றோம். மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ண வண்ண மேலாடைகளை அணிந்து வியர்வையில் நனைந்த பல ஆண்கள் தம் பாதங்களில் மிதிபடும் குப்பைகளைக் கண்டுகொள்ளாமல் அங்குமிங்கும் ஆரவாரத்துடன் நடமாடிக்கொண்டுள்ளனர். சோயா மொச்சை. இறைச்சி, கோதுமை உள்ளிட்ட பண்டங்களில் அவர்கள் ஊக வணிகத்தை முழு வீச்சில் நடத்திக்கொண்டுள்ளனர்.
உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் ஊக வணிகம் உலகில் சில நகரங்களில் நடக்கிறது. சிக்காகோ வர்த்தக மன்றம் என்பது அவையனைத்திலும் மிகப் பெரிய வணிகக் குழுமம். உலகளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் இங்கு நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்மூலம் பல கோடி மக்களுடைய தலைவிதியையும் இவர்கள் முடிவு செய்கின்றனர். இவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகில் பசி, பட்டினி ஆகியவற்றின்மீதும் சில முதலீட்டாளர்களின் செல்வ வளத்தின்மீதும் தாக்கம் செலுத்துகின்றன.
இதோ இவர்தான் ஏலன் நக்மென். ஆரவாரம் மிக்க இந்த அறை இவருக்கு மிகவும் பிடித்த இடம். “இங்குதான் முதலாளியம் தன் தூய வடிவில் இயங்குகிறது” என்று மகிழ்கிறார் இவர். “இங்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.” நாற்பத்திரண்டு அகவையான இவர் முகத்தில் மகிழ்ச்சி நடமாடுகிறது.
இவர் இங்கு வேலைக்கு வந்து இருபத்தேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வர்த்தகத் தளத்தில் கீழ் பதவியில் இருந்து வேகமாக மேலே வந்துவிட்டார். ஊக வணிகத்தில் முதலீடு செய்வது இவருடைய பணி. அதில் பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றிய பருவ இதழ் ஒன்றை இவர் வெளியிடுகிறார். “எந்தெந்தப் பொருள்களின் வணிகத்தில் குறுகிய காலத்தில் நிரம்பப் பணம் சம்பாதிக்க முடியுமோ அவற்றில் எல்லாம் நான் வர்த்தகம் செய்கிறேன். என் நோக்கமே பணம் சம்பாதிப்பதுதான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறார் நக்மென்.
ஊகச் சந்தையை முழுக்க நம்புவதாகக் கூறும் இவர் தான் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறோம் என்பதைக் குறித்து அதிகம் நினைப்பதில்லை. கன்னெயம் (பெட்ரோலியம்), வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், உணவுப் பொருள்கள் எனப் பலவற்றில் அவர் ஊக வணிகம் நடத்துகிறார். “நான் அரசியல் ஈடுபாடற்றவன். சந்தையை மட்டுமே நம்புகிறேன். சந்தை எப்போதும் சரியான முடிவுகளையே எடுக்கும்” என்கிறார்.
உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவது குறித்து அவர் என்ன நினைக்கிறார்? அவரைப் பொறுத்தவரை பண்டங்களின் இருப்பும் மக்களின் தேவைகளுமே விலைகளை முடிவு செய்கின்றன.
ஊக வணிகர்களைப் பற்றிய அவருடைய கருத்து என்ன?
“சந்தைக்கு அவர்கள் நன்மை செய்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து விடுகின்றார்கள்.”
ஊக வணிகம் மிக அதிகமாகிவிட்டதா என்றால், தான் அப்படிக் கருதவில்லை என அவர் சொல்வது வியப்பளிக்கின்றது. உலக அளவில் உணவுப் பண்டங்களின் வணிகத்தில் முன்பு எப்போதும் இருந்ததைக்காட்டிலும் இப்போது மிக அதிக அளவில் பணம் புரள்கிறது. ஊக வணிகத்தில் செய்யப்பட்ட முதலீட்டைப் பொருத்தவரை, 2010-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்ததைவிட மும்மடங்குப் பணம் இறுதிக் காலாண்டில் அத்துறையில் நுழைந்தது. பல நாடுகளில் அண்மையில் நேர்ந்த பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து அரசுகள் தொழில், வணிகத் துறைகளில் மூலதனத்தைப் பெருக்கின.
விளைபொருள்களின் ஊக வணிகம் பல முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. வர்த்தகம் செய்யப்படும் பண்டங்களைப் பற்றி அவர்கள் குறிப்பாக அக்கறை கொள்வதில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் வர்த்தகம் செய்து பணம் சம்பாதித்தவர்கள் இப்போது உணவுப் பண்ட வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வளவுதான்.
ஓய்வூதிய நிதிகளை மூலதனமாகக் கொண்டு பெருமளவில் பணம் சம்பாதிக்க முனையும் பெரிய நிதி நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட முறையில் ஊக வணிகத்தில் சம்பாதிக்க விரும்பும் சிறு முதலீட்டாளர்கள் வரை பலரும் விளைபொருள் ஊக வணிகத்தில் நுழைகின்றனர்.
தேவையை முழுமை செய்தல்
வைப்பகங்களும் இதற்கேற்றவாறு பெருமளவில் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன. நிறுவனங்களின் பங்குகள் எப்படி வணிகப் பொருள்களாக உள்ளனவோ அதேபோல உலகின் உணவுப் பண்டங்களும் திடீரென வணிகப் பொருள்களாகிவிட்டன.
விளைபொருள்களின் ஊக வணிகம் இவ்வாறு பெருகுவதைத் தொடர்ந்து உலகெங்கும் அவற்றின் விலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுள்ளன என்பது வேதனை தரும் நிகழ்வு. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் விளைபொருள்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து உலகில் பல பகுதிகளில் பசி, பட்டினி அதிகரித்தது. அதைவிட இந்த ஆண்டு விலைகள் அதிகரித்துவிட்டதாக மார்ச் மாதம் ஒன்றிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் உணவுப் பண்டங்களின் விலைகள் முப்பத்தொன்பது விழுக்காடு உயர்ந்தன. தானியங்கள், சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றின் விலைகள் எழுபத்தொரு விழுக்காடு உயர்ந்தன.
“மலிவான உணவு கிடைக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று கட்டியங்கூறுகிறார் நக்மென். இது அமெரிக்கர்களுக்கு அவ்வளவு மோசமான நிகழ்வல்ல என்கிறார். “பெரும்பாலான அமெரிக்கர்கள் அளவுக்கதிகம் உண்கின்றார்கள்.”
அமெரிக்கர் ஒவ்வொருவரும் சராசரியாகத் தம் வருமானத்தில் பதின்மூன்று விழுக்காட்டினைத்தான் உணவுப் பொருள்களை வாங்குவதில் செலவிடுகிறார். உணவுப் பண்டங்களின் விலையேற்றம் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மட்டும் தென்படலாம். ஆனால் உலக அளவில் ஏழைகள் தம் குறுகிய வருமானத்தில் எழுபது விழுக்காட்டினை உணவுக்காகச் செலவிடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த விலையேற்றம் அவர்களுடைய வாழ்வாதாரத்தையே தகர்க்கிறது.
விலையேற்றம் காரணமாக 2011 சூன் மாதத்தில் மட்டும் புதிதாகச் சுமார் நான்கரைக் கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக உலக வைப்பகம் சொல்கிறது. நாளொன்றுக்கு ஒன்றேகால் அமெரிக்க டாலருக்குக் (2011-இல் சுமார் அறுபது ரூபாய்களுக்கு) குறைந்த தொகையில் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதாக உலக வைப்பகம் வரையறுக்கிறது. [இது மிகக் குறைவான, எதார்த்தத்துக்கு முற்றிலும் புறம்பான தொகை என்பது வெளிப்படை.]
உலகெங்கிலும் சுமார் நூறு கோடிப் பேர் பட்டினி கிடக்கின்றனர். ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதியில் (சோமாலியா, எத்தியோப்பியா, எரிட்ரியா முதலிய நாடுகளில்) இப்போது பட்டினி வாட்டுகிறது. மழையின்மை, உள்நாட்டுப் போர்கள், ஊழல் மலிந்த அரசுகள் முதலியன மட்டுமே இதற்குக் காரணங்கள் அல்ல. விளைபொருள்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதும் ஒரு முதன்மையான காரணியாகும். [1943-44 வங்காளப் பஞ்சம் குறித்த தன் ஆய்வில், ‘பசி, பட்டினி ஆகியவற்றுக்குக் காரணம் உணவுப் பண்டங்களின் பற்றாக்குறை அன்று. மக்களிடம் அவற்றை வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததுதான் அவர்கள் பட்டினி கிடப்பதற்குக் காரணம்’ என்கிறார் பொருளாதாரத்தில் நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென்.]
விரும்பத் தகாத ‘பக்க விளைவுகள்’!
வறியவர்கள் தம் உணவு ஆதாரத்தை இழந்துள்ளது குறித்து நக்மென் என்ன நினைக்கிறார்? அது “சந்தைப் பொருளாதாரத்தின் விரும்பத்தகாத பக்கவிளைவுகள்” என்கிறார்.
அத்தகைய பக்கவிளைவுகளை நேரடியாக எதிர்கொள்பவர்களின் நிலை என்ன என்று சற்றுக் கூர்ந்து பார்ப்போமா?
இதோ இவர் பெயர் அலிமா அபூபக்கர். இருபத்தைந்து அகவை நிரம்பிய இந்தத் தாய் கென்ய நாட்டின் மிகப் பெரும் சேரியான கிபேரா-வில் சிறு குடிசை ஒன்றில் வாழ்கிறார்.
தன் இரண்டு குழந்தைகளுக்கும் கணவனுக்கும் இன்றிரவு என்ன உணவு படைக்கமுடியும் என்று சிந்திக்கிறார். அண்மைக் காலம் வரை இந்தச் சேரியில் அதிகம் சம்பாதித்தவர்களில் இவரும் இவருடைய கணவரும் அடங்குவர். அலிமாவின் கணவர் சிறைக் காவலராகப் பணியாற்றுகிறார். அவருடைய மாதச் சம்பளம் நூற்றைம்பது யூரோக்கள். இச்சம்பளத்தில் பாதி அவருடைய குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இருந்தது.
ஆனால், இப்போது திடீரென நிலைமை மாறிவிட்டது. கென்ய மக்களின் முதன்மையான உணவுப் பொருள் மக்காச்சோள மாவு. கடந்த ஐந்து மாதங்களில் அதன் விலை இரட்டிப்பாகிவிட்டது. உருளைக் கிழங்கின் விலை முப்பது விழுக்காடு உயர்ந்தது. பால், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளும் ஏறிவிட்டன.
இந்த அதிரடி விலையேற்றத்தின் காரணம் என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், இனி உணவுக்காகச் செலவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பது மட்டும் அவருக்குப் புரிகிறது. முதல் கட்டமாக விலை குறைந்த மக்காச்சோள மாவை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். அது சுவையற்றதாக இருக்கிறது. ஆனால் வயிற்றை நிரப்பியாகவேண்டுமே! தன் குழந்தைகளுக்குப் போதுமான உணவு தருவதற்காகச் சில சமயங்களில் அந்தத் தாய் தான் சாப்பிடாதிருக்கப் பழகிக்கொண்டார்.
கும்பி என்ற சிற்றூர் மலாவி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது. 2008-ம் ஆண்டு அவ்வூர் மக்கள் திடீரெனக் கடும் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். வழக்கமாகத் தென் ஆப்ரிக்காவில் பசி, பட்டினி, சத்துப் பற்றாக்குறை ஆகியவை நிலவுவதற்குக் காரணம் வறட்சிதான். ஆனால் இம்முறை அப்பகுதியில் வறட்சி இல்லை. உணவுப் பண்டங்கள் சந்தையில் நிறைய இருந்தன. மக்காச்சோளம், அரிசி ஆகிய அடிப்படை உணவுப் பொருள்களின் விலைகள் எந்த வெளிப்படைக் காரணமும் இன்றி சில மாதங்களில் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டன. இம்முறை உள்ளூர் வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைக்கவும் இல்லை.
நூற்றுக்கு மேற்பட்ட வளரும் நாடுகளில் இதே நிலை நிலவிற்று.
விலையேற்றத்துக்குச் சொல்லப்படும் காரணங்கள்
வளரும் நாடுகளில் உள்ள மக்கள் இந்த விலையேற்றத்தால் படும் அவதியைப் பற்றிக் கூறும் உலக வைப்பகத் தலைவர், “ஏற்கெனவே அதிகமாக உள்ள உணவுப் பண்டங்களின் விலைகள் மேன்மேலும் அதிகமாகி வருவதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அல்லலுறுகின்றனர். ஏழைகளின் எண்ணிக்கையும் வளர்ந்துவருகின்றது” என்கிறார்.
கருத்தரங்குகள் உள்ளிட்ட கூட்டங்களில் விலைகள் தாறுமாறாக உயர்வதற்கு அடிக்கடி சொல்லப்படும் காரணங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
சூழல் மாற்றத்தால் வறட்சி, வெள்ளம், புயல் முதலியன அதிகம் நிகழ்கின்றன. அதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
கன்னெயத்துடன் கலந்து ஊர்திகளை இயக்குவதற்கு உயிரெரிபொருளாகப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பயிர்களை வளர்க்கவேண்டும். அதற்கு விளைநிலங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதனால் உணவு உற்பத்திக்குப் பயன்படும் நிலப்பரப்பு குறைகிறது.
பெருகிவரும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உலக உணவு உற்பத்தி பெருகவில்லை.
சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக உயர்வதால் அந்நாட்டு மக்கள் முன்பைவிட உயர்தரமான உணவுவகைகளை உட்கொள்கின்றனர். அதனால் தேவை அதிகரிக்கிறது.
கச்சா எண்ணெய்ப் பொருள்களின் விலையேற்றத்தால் உணவு உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றின் செலவு அதிகரிக்கின்றது.
இறைச்சி அதிகம் உட்கொள்ளப்படுகிறது. அதற்கான கால்நடைகளை வளர்ப்பதற்கு அதிக அளவில் தானியங்கள் தேவைப்படுகின்றன.
பல்லாண்டுகளாக அரசுகள் – குறிப்பாகப் பசி, பட்டினி அதிகம் உள்ள நாடுகளின் அரசுகள் – வேளாண்மையில் போதுமான முதலீடு செய்யாமல் புறக்கணித்துவந்துள்ளன. இதனால் மொத்த விளைச்சல் குறைகிறது.
இவையனைத்துமே சரியான காரணங்களைப் போலத்தான் தோன்றுகின்றன. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆயினும், இந்த அளவு கிடுகிடுவென விலைகள் ஏறுவதற்கு இவை காரணங்கள் அல்ல.
விலையேற்றத்தின் உண்மையான பின்னணியை எடுத்துரைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் ஒலீவியர் டீ சூட்டர் என்பவர். இவர் ஒன்றிய நாடுகளவையின் உணவு உரிமைக்கான சிறப்பு அதிகாரி. உயிரெரிபொருள் உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட உற்பத்திச் சிக்கல்களும் விளைச்சல் குறைதல், ஏற்றுமதி நிறுத்தம் ஆகியவையும் விலையேற்றத்திற்கு மிகச் சிறிய காரணங்கள் என்று அவர் அண்மையில் எழுதினார். “உலகளவில் நிதிச் சூழலில் ஏற்கெனவே சிக்கல் அதிகம் இருந்தது. அத்துடன் ஊக வணிகமும் சேர்ந்துகொண்டது. அதனால்தான் உணவுப் பண்டங்களின் விலைகள் கடுமையாக ஏறின” என்கிறார் அவர். நிதிச் சந்தையில் கடும் தேக்கம் நிலவியதால் பெரிய நிதி முதலீட்டாளர்கள் பண்ட வர்த்தகத்திற்கு மிகப் பெரிய அளவில் தாவினார்கள். அதனால் ஊக வணிகம் கட்டுக்கடங்காமல் ஏற்றங்கண்டது. என்று டீ சூட்டர் விளக்குகிறார்.
உயிரி எரிபொருள் பயன்பாடு
பண்ட வர்த்தகத்தைக் கூர்ந்து கவனித்தால் உணவுப் பண்டங்களின் விலையேற்றத்திற்கு இதுவரை கூறப்பட்ட காரணங்கள் ஐயத்திற்கிடமானவையே என்பது தெளிவாகிறது.
ஒவ்வொரு வீக்கத்தின் பின்புலத்திலும் ஒரு கதை இருக்கும்
உணவு உற்பத்திக்காகப் பயன்படும் நிலம் உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதில் உண்மை இருக்கிறது. ஆனால், அண்மைக்காலம்வரை மொத்த தானிய உற்பத்தியில் ஆறு விழுக்காடுதான் உயிரெரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. உணவுப் பண்டங்களின் விலையேற்றத்தில் உயிரெரிபொருள்களின் பங்கு பரவலாக அறியப்பட்டதைவிட மிகக் குறைவுதான் என்ற உலக வைப்பகத்தின் கூற்று கவனிக்கத்தக்கது. மேலும், உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்குத் தரும் மானியத்தை அதிகப்படுத்துவதற்கு எதிராகக் கடந்த சூன் மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்தது. உயிரெரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முகமாகத்தான் இந்த வாக்கெடுப்பு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதேபோல, வளரும் நாடுகளில் இறைச்சித் தேவை அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு சிறு காரணந்தான். சீனா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இறைச்சி இறக்குமதியைப் பெரிய அளவில் அதிகரிக்காமலே தம் இறைச்சித் தேவையைச் சமாளிக்கமுடியும் என்கிறது அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகம். “வளரும் நாடுகளில் தேவை அதிகரிப்பதால் உலகளவில் விலைகள் ஏறியதற்கான தடயங்களே இல்லை” என்று உலக வைப்பக அறிக்கையொன்று கூறுகிறது.
சூழல் மாற்றம் காரணமா? கண்டிப்பாக அதற்கும் ஒரு பங்கு இருக்கிறது. உலகெங்கும் உணவுப் பண்டகசாலைகளில் இருப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும், உணவு விற்பனையைவிட உற்பத்தி அதிகமாக உள்ளது என்பதே இன்றைய நிலவரம்.
பிரேசிலின் பெரிய மக்காச்சோள பண்ணையில் அறுவடை
உணவுத் துறையில் அவசர நிலை நிலவுவதாகப் பரப்புரை செய்யப்படுவது சூழ்ச்சிகரமான செயலுத்தியின் ஒரு பங்கு. எந்தவொரு துறையிலும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவேண்டுமானால் அதன் பின்புலத்தில் ஒரு கட்டுக்கதை தேவை.
சில ஆண்டுகளுக்கு முன் தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய வீக்கம் நேர்ந்தது. பொது அறிவு மட்டுமன்றிப் பாரம்பரியப் பொருளாதார முறையின் விதிகளும் இப்போது மதிப்பிழந்துவிட்டன என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிய “புதிய பொருளாதாரம்” அந்த வீக்கத்தின் கட்டுக்கதைப் பின்புலமாகத் திகழ்ந்தது.
வீடு வாங்குவது மிகப் பாதுகாப்பான முதலீடு என்ற கட்டுக்கதை அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்கும் துறையில் உருவான வீக்கத்திற்குப் பின்புலமாக இருந்தது.
ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத் தேவையாக விளங்குவது உணவு. அதில் பற்றாக்குறை வரப்போகிறது என்று அச்சமூட்டுவது மேற்கண்ட கட்டுக்கதைகளின் வேறொரு வடிவமே.
உலக உணவுத் துறையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உணவுச் சந்தை நிதிச் சந்தையாக உருமாற்றம் பெற்றுள்ளது என விவரிக்கிறது வர்த்தகம், மேம்பாடு ஆகியன குறித்த ஒன்றிய நாடுகளின் கருத்தரங்கம் (வமேஒநாக). இதன் வெளிப்பாடாகத்தான் நம் அடிப்படைத் தேவையான உணவு பங்கு வர்த்தகத்தில் சூதாட்டப் பொருளாக மாறியிருக்கிறது.
தாறுமாறான விலைகள்
வமேஒநாக-வின் தலைமைப் பொருளாதார அதிகாரியான கெய்னெர் ப்லாசுபெக் இது குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார். செருமானிய நிதி அமைச்சகத்தின் முன்னாள் உயர் அதிகாரியான இவர் உணவுப் பண்டங்களில் ஊக வணிகம் நடைபெறுவது குறித்துப் பல ஆண்டுகளாக அக்கறை கொண்டுள்ளார்.
2008-ம் ஆண்டு நேர்ந்த உலக நிதி நெருக்கடிக்குப்பின் உலக நாடுகளின் நாணயங்கள், பண்டங்கள், அரசு கடனீட்டு ஆவணங்கள், பங்குகள் ஆகியவற்றின் விலை மதிப்புகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை இவர் கண்காணிக்கத் தொடங்கினார். இவை ஒவ்வொன்றின் விலைகளும் மாறுவதில் ஏதோ ஓர் ஒற்றுமை தெரிந்தாற்போல் இருந்தது. அதைக் கூர்ந்து கவனிப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை ப்லாசுபெக் அமைத்தார்.
“நிதிமயமாக்கப்பட்ட பண்டச் சந்தைகளில் விலைகளை முடிவு செய்வதில் தகவல் பரிமாற்றத்தின் பங்கு” என்ற பெயரில் அந்தக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தத் தலைப்பு பொத்தாம்பொதுவானது போலத் தோன்றுகிறது. ஆனால், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் மிகவும் முதன்மை வாய்ந்தது. பண்டப் பரிமாற்றச் சந்தை நல்லபடி நடக்கவில்லை என்று அந்த வல்லுநர் குழு தெரிவிக்கிறது. பொருளாதார மாதிரிகளின் அடிப்படையில் சந்தைகள் எப்படி இயங்கவேண்டுமோ அப்படிப் பண்டச் சந்தை இயங்கவில்லை. ஒரு பண்டத்தின் இருப்பும் அதன் தேவையும்தாம் அப்பண்டத்தின் விலையைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால், நிதிச் சூதாட்டச் சந்தையில் கலந்துகொள்பவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் விலைகளைத் தள்ளிச்செல்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.
இதன் காரணமாக விலைகள் மிக மோசமான முறையில் சிதைக்கப்படுகின்றன. இருப்பு–தேவை என்கிற எதார்த்த நிலைமைகளுக்கும் விலைகளுக்கும் தொடர்பே இல்லை. வருங்காலத்தில் பொருளாதார நிலைமை எவ்வாறு மாறும் என்ற ஊகத்தின் அடிப்படையில் விலைகள் முடிவு செய்யப்படுகின்றன.
பண்டங்களின் ஊக வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு அந்தப் பண்டங்களைக் குறித்த புரிதல் இல்லை. ஒரு பண்டத்தை விற்றல், வாங்குதல் ஆகியன குறித்து அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் அந்தப் பண்டத்திற்கும் எந்தத் தொடர்புமே இல்லை. விலைகளை முடிவு செய்வதற்குத் தக்க அடிப்படைக் காரணங்களைப் பயன்படுத்தாமல் ஒருவரைப் பார்த்து மற்றவர் விலை சொல்வது அதிகம் நிகழ்கிறது.
உலக உணவாதாரத்துடன் சூதாடுதல்
டுனீசியாவில் ரொட்டி விலை, கென்யாவில் மக்காச்சோள மாவின் விலை, மெக்சிக்கோவில் மக்காச்சோளத்தின் விலை ஆகியவற்றை நிதி முதலீட்டு வைப்பகங்களும் பெருநிதி முதலாளிகளும் முடிவு செய்யும் இந்த நிலை எப்படித் தோன்றிற்று? பெரிய ஓய்வூதிய நிதியங்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைவரும் உலக உணவாதாரத்தின் மீது சூதாட்டம் நடத்தும் நிலை வரக் காரணம் என்ன? உலக அளவில் எவ்வளவு பேர் பசியுடன் கிடக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் வல்லமை சிக்காகோ, நியூ யார்க், லண்டன் ஆகிய வல்லரசு நகரங்களின் சந்தைகளுக்கு எப்படிக் கிடைத்தது?
பரவலாகக் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முக்கியமானதொரு சந்தை மாற்றமே இந்தத் தவறுக்கு அடிப்படை. பெருநிதி நிறுவனங்கள் செய்த பல மாறுதல்கள்தாம் மனித குலத்தின் உணவாதாரத்தை நிதிச் சூதாட்டச் சந்தைப் பொருளாக மாற்றின.
பன்னெடுங்காலமாக இருப்பும் தேவையுமே உணவுப் பண்டங்களின் சந்தையைக் கட்டுப்படுத்திவந்தன. உழவர்கள் விளைவித்த உணவுப் பண்டங்களை விநியோகிப்பவர்களும் சில்லறை விற்பனையாளர்களும் நுகர்வோருக்குக் கொண்டுசேர்த்தனர்.
வெளிப்படையாக நடக்கும் ஊகச் சந்தை இடைக்காலத்தில் உருவாகிற்று. விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் முகமாக உற்பத்தியாளர்கள் தம் பண்டங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட விலைக்கு விற்றார்கள். வழக்கமாக அந்த விலை அப்போதைய நிலவரத்தைவிடக் குறைவானதாக இருந்தது. ஊக வணிக ஒப்பந்தம் முழுமையடைந்த நாளில் பண்டம் உற்பத்தியாளரிடமிருந்து கை மாறிற்று. அப்போதைய விலை முன்பே ஒப்புக்கொண்ட விலையைவிடக் குறைவாக இருந்தால் உழவருக்கு நன்மை. அதிகமாக இருந்தால் ஊக வணிகருக்கு நன்மை. உழவர்களும் உணவுப் பண்டங்களுக்கு மதிப்புக் கூட்டுவோரும் தத்தம் இடரைக் குறைத்துக்கொள்வதற்கு ஒரு வழி செய்தது இத்தகைய ஊக வணிகம். இந்தச் சந்தையில் புழங்குவதற்குத் தேவையான நிதியை ஊக வணிகர்கள் தந்துதவினர். நுகர்வோருக்குப் பண்டங்கள் தொடர்ந்து கிடைத்தன.
இந்தச் சந்தையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வேளாண் தொழிலுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்: உழவர்கள், மதிப்புக் கூட்டுபவர்கள், சேமிப்புக் கிடங்கு வைத்திருப்பவர்கள், உணவு வழங்கலில் ஈடுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியோர்.
வைப்பகங்கள் இதில் ஒரு சிறு பங்கினைத் தான் வகித்தன. சந்தையில் பங்கு பெறுவோருக்குக் கடன் தரும் பணியை வைப்பகங்கள் செய்தன. அது நன்றாக நடந்தது. சந்தைகள் பல ஆண்டுகள் நிலையாக, அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் நடந்துவந்தன. நிதித்துறை நிறுவனங்களின் கண் படும்வரை.
அரசுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல்
இந்தப் புது வணிகத் துறையில் நிதி நிறுவனங்கள் புகுவதற்கேற்பச் சந்தை நுழைவு விதிகள் விரிவாக்கப்பட வேண்டியிருந்தன. அதுவரை அந்த விதிகள் கடுமையானவையாக இருந்தன. அதற்கு நல்ல காரணம் இருந்தது. ஆனால், நிதி நிறுவனங்களின் வல்லமை படைத்த மேலதிகாரிகள் அமெரிக்க அரசின் மேல்மட்டங்களில் இருப்பவர்களுடன் கமுக்கமாக வேலை செய்தார்கள், அதன் விளைவாக 1999-ல் அமெரிக்க அரசின் ‘பண்டங்கள் ஊக வணிக ஆணையம்‘ ஊக வணிகச் சந்தை விதிகளைப் பெருமளவு தளர்த்திவிட்டது. பண்டங்களின் பங்குரிமைச் சான்றிதழ்களைப் பெருமளவு வாங்குவதற்கு வைப்பகங்கள் அனுமதிக்கப்பட்டன.
லேமென் பிரதர்சு, மார்கன் இசுடேன்லி, பேய்ர் இசுடெய்ர்ன்சு, சே.பி. மார்கன் ஆகியன உலகளவில் மிகப் பெரிய நிதி முதலீட்டு வைப்பகங்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான அரசு விதிகளைத் தளர்த்தவேண்டும் என்று இந்த வைப்பகங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்க அரசின் ‘பங்குரிமைச் சான்றிதழ் மற்றும் பரிமாற்ற ஆணையம்’ 2004-ம் ஆண்டு வைப்பகங்களின் செயல்தளத்தை மேலும் விரிவாக்கிற்று. அதன் விளைவாக நிதித்துறைச் சூதாடிகள் தம் கைவசம் இருக்கும் துணைப்பிணையத் தொகையைக் காட்டிலும் நாற்பது மடங்குத் தொகை வரை ஊக வணிகத்தில் முதலீடு செய்ய முடிந்தது. இப்படியாக முன்னைக் காட்டிலும் மிக அதிகப் பணம் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடிற்று.
ஆனால், தனிப்பட்ட பண்டங்கள் மீது பந்தயம் வைப்பது இடர் மிக்க செயல். அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலில் இந்த வர்த்தகத்தில் நுழையத் தயங்குவார்கள். அவர்களைக் கவர்வதற்கான வழிகளை வைப்பகங்கள் தேடின. கோல்ட்மென் சேக்சு நிறுவனத்திற்கு ஒரு சிந்தனை உதித்தது: தனிப்பட்ட பண்டங்களில் வாணிகம் செய்யாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பண்டங்களில் மொத்தமாக வாணிகம் செய்தல். (இந்தச் சிந்தனை எவ்வளவு பரவியுள்ளது என்பது அமெரிக்க வீட்டுக்கடன் குமிழ் உடைந்தபின் தெளிவாகத் தெரிகிறது.) கன்னெயம் முதல் கோதுமை வரை பரந்த அளவில் பண்டங்கள் மீது ஊக வணிகம் நடத்துவதற்கேற்பக் ‘குறியீட்டு நிதிகள்’ உருவாக்கப்பட்டன. ஒரேயொரு பண்டத்தின்மீது பந்தயம் வைப்பதால் அதிகரிக்கும் இடரைப் பல பண்டங்கள் மீது பந்தயம் வைப்பதன்மூலம் பரவலாக்குவதற்கு இவை உதவின. அதனால் அந்த நிதிகளின் ‘கடன் நம்பகத்தன்மை’ உயர்கிறது. அதன் விளைவாகப் பெரு நிதி முதலீட்டாளர்கள் அந்த நிதிகளில் முதலீடு செய்ய ஈர்க்கப்படுகின்றனர்.
சூதாடிகள் இந்த ஊக வணிகப் பங்குகளை அவற்றின் மூலப் பண்டங்களாக எப்போதுமே மாற்றுவதில்லை என்பதில்தான் சூழ்ச்சி அடங்கியுள்ளது. நிதி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை விற்கின்றன. அந்த ஒப்பந்தங்கள் சுமார் எழுபது நாள்களுக்கு நீடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றின் கெடு முடிவதற்குள் அவற்றை விற்று அதில் கிடைக்கும் உபரியைக் கொண்டு புதிய ஒப்பந்தங்களில் முதலீடு செய்வது நிதி நிறுவனங்களின் வணிகத் தொழில். இப்படியாக இது வெளியில் இருந்து ஆற்றல் தேவைப்படாமல் என்றென்றைக்கும் தொடர்ந்து இயங்கும் இயந்திரம் போலச் செயல்படுகிறது. ஊக வணிக முதலீட்டாளர்கள் நேரடியாகப் பண்டங்களின் சந்தை மதிப்புடன் எந்தவிதத் தொடர்பும் அற்றவர்களாகின்றனர்.
இவ்வாறாக, ஊக வணிக முதலீட்டாளர்கள் பண்டங்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளாதிருப்பதால் பொருள்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவதற்கு ஊக வணிகத்தைக் குற்றம் சொல்லக்கூடாது என்பது இந்தத் தொழில் செய்வோரின் வாதம். “எங்கள் சூதாட்டத்திற்கும் பொருள்களின் இருப்பு-தேவைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!” என்கின்றனர்.
நச்சு வளையம்
ஆனால், ‘அவர்களுடைய இந்த வாதம் தவறானது. ஊக வணிகம் பண்டங்களின் விலைகளை பாதிக்கிறது’ என்கிறார் இதை ஆராய்ந்த மேக்சிமோ டொரேரோ என்ற வல்லுநர். அவர் அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகத்தின் சந்தை, வணிகம், மற்றும் நிறுவனத் துறையின் இயக்குநர். மக்காச்சோளம், சோயா, கோதுமை ஆகியவற்றின் சந்தைகளை அவர் மிகக் கவனமாக ஆராய்ந்திருக்கிறார். அவற்றின் விலைகள் வருங்காலத்தில் எப்படி மாறும் என்று ஊக வணிகர்கள் பேரம் செய்கிறார்களோ அதைப் பொருத்து உண்மையாகவே விலைகள் மாறுகின்றன என்பதை அவருடைய ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டின.
மேலும், விலைகள் ஏறுமுகமாக இருக்கையில் பண்டங்களைத் தம் கைவசம் வைத்திருப்பவர்கள் அவற்றை விற்காமல் காக்கின்றனர். அதன் காரணமாக விலைகள் மேலும் உயர்கின்றன.
சீனாவின் சாங்காயில் பன்றி இறைச்சி
இப்படியாக, முன்னர் ஓரளவு கணிக்கக்கூடியனவாக இருந்த உணவுச் சந்தைகள் இப்போது முற்றிலுமாக ஆட்டங்கண்டுவிட்டன. “தானியம், சமையல் எண்ணெய், கால்நடைகள் ஆகியவற்றின் சந்தைகளில் உலகளவில் எழுந்துள்ள புதிய ஊக வணிக வாய்ப்புகள் ஒரு நச்சு வளையத்தை உருவாக்கிவிட்டன” என்கிறார் ப்ரெடெரிக் காப்மேன். “கோல்ட்மென் சேக்சு எவ்வாறு உணவுப் பற்றாக்குறையைத் தோற்றுவித்தது” என்பது அவர் ஏப்ரல் 2011-இல் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு. அவர் தெளிந்த முடிவாகச் சொல்வது இதுதான்: “உணவுப் பண்டங்களின் விலை ஏற ஏற அவற்றின் ஊக வணிகத்தில் மேன்மேலும் நிதி குவிகிறது. அதன் விளைவாக விலைகள் மேன்மேலும் உயர்கின்றன.”
2003-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களுடன் தொடர்புள்ள ஊக வணிகம் 2300 விழுக்காடு (அதாவது, 23 மடங்கு!) அதிகரித்தது. பண்டங்களின் ஊக வணிக ஒப்பந்தங்களில் இரண்டு விழுக்காடு மட்டும் மெய்யாகவே பண்டங்கள் கை மாறுவதற்கு வழிகோலியதாக ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. அது நடப்பதற்கு முன்னர் மீதமுள்ள (நூற்றுக்குத் தொண்ணூற்று எட்டு) ஒப்பந்தங்கள் குறுகிய காலத்தில் நிறைய ஊதியம் அள்ளும் நோக்கம் உள்ள முதலீட்டாளர்களால் ஒருவருக்கொருவர் கைமாற்றப்பட்டன. அந்த இடைநிலை முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்தங்களில் உள்ள பண்டங்களைப் பற்றித் துளிக்கூட அக்கறை இல்லை.
ஊக வணிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்
அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மென் சேக்சு உள்ளிட்ட நிறுவனங்களும் தனிப்பட்ட மூலதனக்காரர்களும் இந்தச் சூதாட்டத்தில் விளையாடுகின்றனர். 2009-ஆம் ஆண்டு கோல்ட்மென் சேக்சு எனும் அந்த முதலீட்டு வைப்பகம் பண்டங்களின் ஊக வணிகத்தில் மட்டும் ஐநூறு கோடி டாலர்கள் (அப்போதைய மதிப்பில் சுமார் 21,000 கோடி ரூபாய்கள்) சம்பாதித்தது. அந்நிறுவனத்தின் மொத்தச் சம்பாதனையில் இது மூன்றில் ஒரு பங்கு.
உணவுத் துறையில் நிலவும் கடும் சிக்கல் குறித்து 2008-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவைக் குழு ஒன்று விசாரணை நடத்திற்று. மைக்கேல் மாசுட்டர்சு என்னும் ஊக வணிக நிதி மேலாளர் அக்குழுவின் முன் பின்வருமாறு வாக்குமூலம் அளித்தார்: “பண்டங்களின் ஊக வணிகச் சந்தையில் புது வகையான சூதாடிகள் நுழைந்ததால் அவற்றின் தேவை வெகுவேகமாக உயர்ந்தது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை நாம் இப்போது காண்கிறோம்.”
இந்தச் சந்தையை அரசுகள் ஒழுங்குபடுத்தவேண்டும் என்கிறார் பொருளாதார வல்லுநர் ப்லாசுபெக். இல்லையேல் ஊக வணிகச் சூதாடிகளின் எண்ணிக்கையும் பசி பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் உயரும்; அதன் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும் என்கிறார் அவர்.
உலகளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் பத்து விழுக்காடு உயர்ந்தால் மேலும் ஒரு கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவதாக உலக வைப்பகம் கூறுகிறது. அனைவருக்கும் போதுமான உணவு உலகில் உள்ளது. ஆனால், அதை வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லாததால் நிறையப்பேர் பசியால் சாகின்றனர்.
“பண்டச் சந்தைகள் சரியாக இயங்கவேண்டுமானால் உடனடியாக உலகளவில் அரசியல் செயல்பாடுகள் தேவை” என்று ஒன்றிய நாடுகளவையின் வாணிபம் மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடத்திய ஆய்வில் தெரியவருகிறது. அது மேலும் பின்வருமாறு தெரிவிக்கிறது: ‘சந்தைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும். சூதாடிகளின் செயல்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.’
அந்த ஆய்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் முன்வைத்தனர்: விலைகள் திடீரென உயரும்போது அதைக் குறைப்பதற்கென அரசுகள் தனி நிதியை இருப்பில் வைத்திருக்கவேண்டும். நிதிச் சந்தைச் செயல்பாடுகளின் வேகத்தை மட்டுப்படுத்தி ஊக வணிகத்தைக் குறைப்பதற்காக அத்தகைய வர்த்தகத்தில் சம்பாதிக்கும் பணத்தின்மீது ‘பரிமாற்ற வரி’ விதிக்கவேண்டும்.
சுவடின்றிச் செத்து மடிதல்
ஆப்பிரிக்காவில் பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்ட அகதிகளின் வரிசை
அத்தகைய ஆலோசனைகளை அந்தச் சமயத்தில் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்கள்போலத் தெரிந்தது. வட ஆப்ரிக்காவில் உணவு விலையேற்றத்தை எதிர்த்து வெடித்த கிளர்ச்சிகளைக் கண்டு பணக்காரர்கள் அஞ்சினர். “பசிப் போராட்டங்கள்” பரவும் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. ஆனால் அதுவும் கற்பனையாகிவிட்டது.
“கன்னெயப் போராட்டங்கள் என்றும் அவற்றைக் குறிப்பிடலாம்” என்கிறார் பெட்டீனா எங்கெல்சு. அவர் செருமனி நாட்டு பெர்லின் நகரில் உள்ள அரசியல் ஆய்வுக் கழகம் ஒன்றில் அமைதி மற்றும் போர்கள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். “ஆளுமையில் மக்கள் பங்கு பெறுதல், செல்வத்தை அனைவருக்கும் மறுபங்கீடு செய்தல்” ஆகியனதாம் இந்தப் போராட்டங்களில் நடுநாயகமாகனவை என்கிறார். ட்யூனிசு, கைரோ, ட்ரிப்போலி உள்ளிட்ட பல நகரங்களில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் நடுத்தர மக்கள்தாம், வறியவர்கள் அல்லர் என்பது அவருடைய வாதத்திற்கு வலுச் சேர்க்கிறது.
“பசியால் வாடுபவர்களுக்குப் போராடுவதற்கு நேரமில்லை” என்கிறார் ரால்ப் சூதாப். இவர் ஒன்றிய நாடுகளவையின் உலக உணவுத் திட்டத்தின் பெர்லின் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். பசியால் வாடுபவர்களில் பெரும்பாலானோர் சிறு குறு உழவர்கள். அவர்கள் செத்து மடிவது வெளியுலகுக்குத் தெரியவருவதில்லை.
இருப்பினும், உணவுப் பண்டங்களின் விலை உயர்வு எனும் சிக்கல் அரசியல் செயல்நிரலில் மேல்நிலைக்கு வந்துள்ளது. தங்குதடையில்லா வர்த்தகத்தை முன்னிறுத்தும் செருமன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூட உணவுப் பண்டங்களில் இப்போது நிகழும் “பொறுப்பற்ற சூதாட்டத்தைக்” கண்டித்துள்ளார். “ஐயத்துக்கு இடந்தரும் நிதித்துறைச் செயல்பாடுகளால் உணவுப் பண்டங்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துவிட்டன. அதனால் 2006-2009 ஆண்டுகளில் பல கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பசியால் தவிக்கின்றனர்” என்று மே மாதம் செருமன் வெளியுறவுத் துறை நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறினார்.
சந்தையைக் கட்டுக்குள் கொண்டுவருதல்
“சந்தை என்றாலே அது ஒழுங்குபடுத்தப்படவேண்டும். அது சந்தையின் இயல்பு.” அப்படியில்லையேல் அது திக்குத் தெரியாத அடர்ந்த காடு போலாகிவிடும் என்றார் அப்போதைய பிரெஞ்சு அதிபர் நிக்கொலசு சார்க்கோசி. தொழில் துறையில் உலகில் முன்னணியில் உள்ள எட்டு நாடுகளைக் கொண்ட G8 அமைப்பு, உலகளவில் தொழில் துறையில் முன்னணியில் உள்ளவையும் முன்னுக்கு வந்துகொண்டிருப்பவையுமான இருபது நாடுகளைக் கொண்ட G20 அமைப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்ந்தாற்போல 2011-இல் அவர் தலைவராக இருந்தார். ஊக வணிகம் காரணமாக உணவுப் பண்டங்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் ஏறுவதைக் குறி வைத்துள்ளார்.
G20 வேளாண் அமைச்சர்களின் மாநாடு 2011 சூன் 22-23 தேதிகளில் பாரிசில் நடந்தது. அப்போது மேற்கண்ட சிக்கல் மீது முதன்மையான கவனம் செலுத்தப்பட்டது. வேளாண் பொருள்களின் சந்தைகள் மீது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று சார்க்கோசி அம்மாநாட்டில் வாதிட்டார். “ஒழுங்குபடுத்தப்படாத சந்தை சந்தையே அல்ல. மாறாக, அது நன்மையில் நம்பிக்கையற்ற ஒரு சிலருக்குப் பணத்தை அள்ளித் தரும் சூதாட்டம் தான்” என்றார்.
ஆனால், உலகளாவிய வேளாண் சந்தைத் தகவல் முறை ஒன்றினை அறிமுகப்படுத்தவேண்டும் என ஒப்புக்கொண்ட அந்த அரசியல்வாதிகள் இந்தச் சிக்கல் குறித்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அரசுகள் அந்தத் தகவல் முறையைப் பயன்படுத்தி உணவுப் பண்டங்களின் விலைகளைக் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ளமுடியும். அப்படிச் செய்வதன் மூலம் வருங்காலத்தில் கோதுமை, மக்காச்சோளம், அரிசி, சோயாமொச்சை ஆகியவற்றின் விலைகள் ஏறுகையில் அரசுகள் உடனுக்குடன் தலையிடமுடியும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.
இருப்பினும், உணவுப் பண்டங்கள் தொடர்பான நிதி கைமாறுதல்களை ஒழுங்குபடுத்துவதற்கெனப் பருண்மையான சட்டங்கள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. அப்படிச் செய்வதற்கு வலுத்த எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் பிரிட்டனும் அதைக் கடுமையாக எதிர்க்கின்றன. தம் நாடுகளில் உள்ள நிதிச் சந்தைகள் அத்தகைய சட்டங்களால் பெருமளவு பாதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசுகள் கவலைப்படுகின்றன.
வர்த்தகத்தை வெளிப்படையானதாக மாற்றுதல்
பண்ட வர்த்தகத்தில் ஒளிவுமறைவுகளை அகற்றவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. மேலும், ஊக வணிகத்தில் ஒவ்வொரு பண்டத்துக்கும் உயர்ந்த அளவு விலையை நிர்ணயம் செய்வது குறித்தும் அந்நாடுகள் சிந்தித்துவருகின்றன. ஐரோப்பாவைப் போலன்றி, அமெரிக்க பங்குச் சந்தைகளில் பல பொருள்களுக்கு ஏற்கெனவே அத்தகைய வரையறைகள் உள்ளன. அவற்றை பால், பருத்தி, காபி, கோக்கோ போன்ற உணவுப் பண்டங்களுக்கும் விரிவாக்குவது குறித்து அமெரிக்க அரசு சிந்தித்துவருகிறது.
ஆனால், அப்படிப்பட்ட வரையறைகளைச் செயல்படுத்துவது கடினமாகத்தான் இருக்கப்போகிறது. ஏனெனில், உலகளாவிய பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் மிகச் சிறு அளவுதான் சட்டப்படியான சந்தைகளில் நடைபெறுகிறது. சட்டங்கள் கடுமையாகும்போது வைப்பகங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தம் ஊக வணிகத்தை அரசுக் கட்டுப்பாட்டுக்கப்பால் தமக்குள் வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இத்தகைய ஆபத்தான, கட்டுக்கடங்காத வளர்ச்சியை உள்ளடக்கிய வணிகத்தை அரசுகள் மிகக் கவனத்துடன் ஒழுங்குபடுத்தவேண்டும் என்பது தெளிவு. அமெரிக்காவிலுங்கூட அத்தகைய திட்டங்களை அரசு உருவாக்கிவருகிறது. ஆனால், அத்தகைய சட்ட முன்வரைவுகள் சட்டமாகாமல் தடுப்பதில் நிதி நிறுவனங்களின் கையாள்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகின்றனர்.
மக்களுக்கு உணவு தருவது குறித்துச் செயல்பட அரசியல்வாதிகள் தயங்குகின்றனர். அதே சமயம் பங்குச் சந்தை வணிகர்கள் ‘புகுந்து விளையாடுவதற்கு’ ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
வாய்ப்புகளைத் தேடி …
வேளாண்மையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்கு கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்தபோது நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். வைப்பகர்கள், தரகர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், பெருநிதி நிறுவன மேலாளர்கள், பெரிய முதலீட்டாளர்கள் ஆகியோருடன் சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் முதலீட்டு அதிகாரிகளும் ஒரு அமெரிக்க நகரின் காவல் மற்றும் தீயணைப்புத் துறை ஓய்வூதிய நிதி மேலாளர்களும் அங்கு திரண்டனர்.
உணவுப் பண்டங்களின் விலை உயர்வைக் கொண்டு தம் ஊதியத்தைப் பெருக்கிக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள அவர்கள் அனைவரும் விரும்பினர். அமெரிக்க விளைநிலங்களில் முதலீடு செய்வது நல்லதா, இல்லை ப்ரெசீல் நாட்டு விளைநிலங்களில் முதலீடு செய்வது சிறந்ததா? உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்கு உகந்த நிலம் எங்கு மலிவு விலையில் கிடைக்கும்? ஆப்ரிக்காவிலா அல்லது தென் அமெரிக்காவிலா? அத்தகைய பகுதிகளில் முதலீடு செய்த பிறகு ஏதாவது சிக்கல் [அரசியல் கலவரம் உள்ளிட்டவை] நேர்ந்தால் அங்கிருந்து எவ்வளவு விரைவில் முதலீட்டைப் பாதுகாப்பாக வெளிக்கொணரமுடியும்? [இவைபோன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினர்.]
தம் முதலீடுகள் அவை இயங்கும் நாடுகளில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நிதி முதலீட்டாளர்களுக்குத் துளிக்கூட அக்கறை இல்லை. அம்முதலீடுகளால் குமுகங்களும் சூழலும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.
வேளாண்மையில் [குமுகப்] பொறுப்புடன் முதலீடு செய்வதை முன்னிலைப்படுத்தும் கூட்டத்திற்கும் மேற்கண்ட கருத்தரங்கில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் அந்தக் கூட்டம் கருத்தரங்கின் இறுதிக் கட்டத்தில் நிகழுமாறு கவனமாக நிகழ்ச்சி நிரலை உருவாக்கியிருந்தனர். அதற்கான நேரம் வருவதற்குள் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தோரில் பெரும்பாலானோர் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவதற்காக வானூர்தி நிலையங்களுக்குப் புறப்பட்டுவிட்டார்கள்.
பிற நாடுகளில் விளை நிலங்களை வாங்குபவர்களை “நிலத் திருடர்கள்” என்று நடுநிலையறிஞர்கள் குறிப்பிடுவர். அவர்கள் [மக்களை அடிமைப்படுத்தும்] “புதுப் பிரபுக்கள்” என்கிறார் ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் முன்னாள் பொது இயக்குநர் சேக் டியூப்.
ஆனால், அவ்வாறு குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு அவர்கள் தவறு செய்வதாகவே தெரியவில்லை. தம் முதலீடு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். வேகமாகப் பெருகிவரும் மக்கள்திரளுக்குத் தேவையான உணவு உற்பத்தி செய்வதற்குத் தாங்கள் உதவுவதாக அவர்கள் வாதாடுகின்றார்கள்.
நிலங்களைத் திருடுதல்
கடந்த நாற்பது ஆண்டுகளில் உலக மக்கள் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்தது. இப்போது மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இருப்பினும், 2050-ஆம் ஆண்டுக்குள் மக்கள் எண்ணிக்கை முப்பது விழுக்காடு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நிகழ்ந்தால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் தொள்ளாயிரம் கோடி மக்கள் இருப்பார்கள்.
இந்நிலையில் நிலத் திருட்டுகள் அவ்வளவு மோசமானவையாக முதலில் தெரியவில்லை. உலக வைப்பகமும் வளர்ச்சியடையா நாடுகளில் அத்தகைய முதலீடுகளைப் பரிந்துரைத்தது. அந்நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் பெருகி வேலை வாய்ப்பு அதிகரித்தால் அனைவருக்கும் நல்லது என உலக வைப்பகம் நம்பிற்று [அல்லது, நம்புவதாக நடித்தது!].
ஆனால், முதலீட்டாளர்களின் பேராசையையும் பசி, பட்டினிக்கு எதிரான போரையும் இணைத்தால் அனைவருக்கும் நல்லது என்ற திட்டம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
பிரிட்டானியப் பல்கலை ஒன்றில் நடந்த கருத்தரங்கிலும் உலக வைப்பகத்தின் ஆய்வொன்றிலும் எட்டப்பட்ட முடிவுகள் மேற்கண்ட நிலத் திருட்டின் கொடிய விளைவுகளை அம்பலப்படுத்துகின்றன:
ஆதிக்க ஆற்றல்கள் சிறு குறு உழவர்களை ஏமாற்றி அவர்களுடைய நிலங்களைப் பெரு முதலீட்டாளர்களுக்கு விற்றுவிட்டன
வேலை வாய்ப்புத் தொடர்பாக மக்கள் ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டனர்
உள்ளூர் மக்களுக்கு வேண்டிய தண்ணீரைத் திருடும்வண்ணம் பாசன முறைகள் கட்டமைக்கப்பட்டன
மக்கள் வாழிடங்களில் இருந்து கட்டாயத்தின்பேரில் அப்புறப்படுத்தப்படுதல்.
2011 வரையான சில ஆண்டுகளில் உலக அளவில் சுமார் எட்டுக் கோடி எக்ட்டேர் நிலம் (20 கோடி ஏக்கர்கள்) வெளிநாட்டு முதலீட்டாளர்களுடைய கைககளுக்கு மாறிவிட்டதாக உலக வைப்பகம் தெரிவிக்கிறது.
இந்தச் சிக்கல்கள் எத்தியோப்பிய நாட்டில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. பசி, பட்டினி என்றாலே பலருடைய நினைவுக்கு வருவது எத்தியோப்பியா தான். ஐம்பத்தேழு லட்சம் எத்தியோப்பியர்கள் தம் உணவுக்குப் பன்னாட்டு உதவியை நம்பி வாழ்கின்றனர். அந்நிலையில் எத்தியோப்பிய அரசு பெருமளவில் வளமான விளைநிலங்களைப் பிற நாட்டு முதலாளிகளுக்கு விற்றல், குத்தகைக்குத் தருதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த முதலீட்டாளர்கள் அந்நிலங்களின் விளைபொருள்களை எத்தியோப்பியாவில் இருந்து ஏற்றுமதி செய்துவிடுகின்றார்கள்!
2007-ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நிதியுதவி பெறும் வேளாண் திட்டங்கள் 815-க்கு எத்தியோப்பிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சௌதி நிறுவனங்கள், பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள், பிரிட்டானிய ஓய்வூதிய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியன அங்கு முதலீடு செய்துள்ளன.
எத்தியோப்பியாவின் கம்பேலாப் பகுதியில் சுமார் முப்பத்தாறு லட்சம் எக்ட்டேர் (90 லட்சம் ஏக்கர்) நிலம் இவ்வாறு தாரை வார்க்கப்பட உள்ளது. அந்நாட்டு அரசு அமைக்கவுள்ள தேசியப் பூங்காவுக்கு ஒதுக்கவேண்டிய நிலத்தின் பெரும்பகுதியும் இதில் அடங்கும். பிற நாடுகளின் உணவுத் தேவைக்காக இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. எத்தியோப்பியத் தலைநகரமான அடிசபாபாவிற்கு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இசுப்பானிய நாட்டு நிறுவனமொன்று வாரமொன்றுக்கு 180,000 கிலோ காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. அவை துபாய், கத்தார், பகுரெயின், சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டுக் கன்னெய நிறுவனங்கள்,
ஐந்து-விண்மீன் (நட்சத்திர) உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
“பசியால் வாடுபவர்களுக்கு அந்நிய நாட்டுச் சந்தையில் கோதுமை வாங்குவதற்கு அரசுக்குத் தேவைப்படும் அந்நியச் செலாவணியை நாங்கள் ஈட்டித் தருகிறோம்” என்கிறார் அந்த இசுப்பானிய நிறுவனத்தின் மேலாளர். “தமக்காக எதையுமே வாங்கும் திறன் இல்லாதிருக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது அரசின் பொறுப்பு” என்கிறார் டச்சு (ஆலந்து) நாட்டினரான அந்த மேலாளர்.
தவறானவற்றில் முதலீடு செய்தல்
சிக்கல் என்ன என்பதை அவர் சரியாகத்தான் சுட்டிக்காட்டியுள்ளார்: போதுமான உணவு உள்ளது; ஆனால் அந்த உணவை வாங்குவதற்குப் பலரிடம் பணம் இல்லை. மலிவு விலையில் உணவு உற்பத்தி செய்வது தம் பொறுப்பு என்று முதலீட்டாளர்கள் கருதுவதில்லை. தம்மிடம் ஏற்கெனவே நிறைய உள்ள பணத்தை மேலும் பெருக்குவதுதான் அவர்களுடைய வேலை. விளைபொருள் விற்பனையில் கிடைக்கும் ஊதியமும் விளை நிலங்களின் விலை உயர்வால் கிடைக்கும் உபரியும் இருபத்தைந்து விழுக்காடு இருக்கும் என்று பிரிட்டானிய நிதி நிறுவனமொன்று எதிர்பார்க்கிறது.
சாலை, பாசன வசதிகளைவிட்டுத் தொலைவில் இருக்கும் வெறும் நிலத்தில் இவ்வளவு அதிகமான ஊதியத்தை வழக்கமாக எதிர்பார்க்கவியலாது. நீர் வளமும் போக்குவரத்து வசதிகளும் கொண்ட வளமான நிலங்களைத்தான் வழக்கமாக முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். அந்நிலங்களை ஆற்றல் தேவை மிக்க வேதி வேளாண்மைக்கு உட்படுத்திச் சூழல் மாசுபடுதல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை மேலும் மோசமாக்குவார்கள்.
ஆக, சத்துப் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு முதலீட்டாளர்களும் ஊக வணிகச் சூதாடிகளும் இழைக்கும் கொடுமை விலைவாசி உயர்வு மட்டுமன்று. “மோசமானவர்கள்தாம் முதலீடு செய்கின்றனர் என்பதல்ல சிக்கல். அவர்கள் தவறான பொருள்கள் மீதும் முதலீடு செய்கின்றனர்” என்கிறார் சுவிசர்லாந்து நாட்டுத் தொழில்நுட்பக் கழக வேளாண் சூழலியலாளர் ஏஞ்செலிகா இல்பெக்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய நாடுகளவையின் சார்பில் “மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு அளவீடு” என்ற ஆய்வு உலகெங்கும் நடத்தப்பட்டது. ஒன்றிய நாடுகளவையும் உலக வைப்பகமும் நூற்றுக்கணக்கான அறிவியலாளர்களை இதற்காகப் பணியமர்த்தின. வேளாண்மையின் எதிர்காலம், பசி, பட்டினியைப் போக்குவதில் வேளாண்மையின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய தம் அறிவை அந்தக் குழுவினர் தொகுத்தனர். இல்பெக்கும் அந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றினார். அவர்களுடைய அறிக்கை 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்போது பரவலாகச் செய்யப்படும் வேதிவேளாண்மை எனும் ஆலை சார்ந்த வேளாண் முறையை ஆதாரங்களுடன் மிகக் கடுமையாகச் சாடிற்று அந்த அறிக்கை. சூழலில் நஞ்சு கலந்து மாசுபடுதல், திடீர் திடீரென நிகழும் பருவநிலை மாற்றங்கள், உயிரின அழிவு, தண்ணீர்ப் பற்றாக்குறை, நோய்களும் வறுமையும் அதிகரித்தல் ஆகியவற்றில் வேதி வேளாண்மைக்குப் பெரும்பங்கு உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது.
மாற்றம் கோருதல்
பருவநிலை மாற்றங்களால் விளையும் இன்னல்களைப் போக்குவதற்கு அந்த ஆய்வாளர்கள் பின்வரும் தீர்வுகளை முன்வைத்தனர்:
பெருமளவில் விளைச்சல் அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இப்போதைய வேதி வேளாண் முறையைக் கைவிடுதல்
ஓரினப் பயிர் சாகுபடியைத் தவிர்த்தல்
இப்போது மிகப் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் உயிர்க் கொல்லிகளை முற்றிலும் ஒதுக்குதல்.
இத்தகைய வேதி வேளாண்மை தண்ணீரை மாசுபடுத்துகிறது. மண்ணை வறளச் செய்கிறது. ஏற்றுமதி சார்ந்த வேளாண்மை வளரும் நாடுகளின் சந்தைகளை ஒழித்துவிடுகிறது.
சூழலுக்கு உகந்த, நிலைத்த, நீடித்த முறைகளைப் பயன்படுத்திச் சிறு குறு உழவர்கள் உள்ளூர்த் தேவைக்கு விளைவிக்கும் வண்ணம் வேளாண் முறைகளை திசை திருப்பவேண்டும் என்று மேற்படி அறிஞர் குழு கூறுகிறது. அந்த உழவர்களுக்குத் தேவையான விதைகள், கட்டமைப்பு வசதிகள், வேளாண் அறிவு, சந்தை ஆகியவற்றைத் தருவதற்குப் போதுமான முதலீடுகள் செய்யப்படவேண்டும் என்கிறது அந்த ஆய்வு. அப்படிச் செய்தால் அந்தச் சிறு உழவர்கள் தாமும் உண்டு பிறருக்குத் தேவையான உணவையும் உற்பத்தி செய்வார்கள். உலக உணவாதாரத்தைக் காத்து, பசிப் பிணியை ஒழிப்பதற்கு இது ஒன்றே வழி என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. நிலைத்த, நீடித்த வேளாண்மையில் முதலீடு செய்வதற்கு இன்றும் அரசுகள் உதவி செய்வதில்லை. “உணவு உற்பத்தியில் ஈடுபட்டுத் தாமும் உண்டு வாழும் எழுநூறு கோடி மக்களின் தேவைகளைவிட நிறுவனங்கள், பணக்காரர்கள் ஆகியோருடைய நலத்தில் தான் அரசுகள் தொடர்ந்து கவனஞ்செலுத்துகின்றன” என்கிறார் ஆக்சுபாம் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் வேளாண் வல்லுநர் மரீட்டா விக்கெர்த்தேல்.
சூழலுக்கு உகந்த, நிலைத்த வகையில் விளைச்சல் எடுத்து அதன் பலனை அனைவருக்கும் போதுமான அளவு வழங்கும் புது உணவு யுகம் இப்போதைக்கு வருவதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள தீவிர ஆலைமயமான வேளாண் முறையின் பக்க விளைவுகள்தாம் வேளாண்மையைச் சிக்கலில் மாட்டியுள்ளன என்று தெரிந்தும் அரசியல்வாணர்களும் பொருளாதார முறைகளும் அந்த வேளாண் உற்பத்தி முறைக்குத்தான் இன்னமும் முதன்மை தருகின்றனர்.
சிக்கலின் ஒரு கூறு
இந்தத் தீய போக்கில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. பண்டங்களின் ஊக வணிகத்தில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்கள் வேளாண் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பெருநிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளன. எ.கா. செருமன் நாட்டு டாய்ச்செ வைப்பகத்தின் DWS உலகளாவிய வேளாண்வணிக நிதியம், அலையான்சு RCM உலகளாவிய வளங்கள் நிதியம் ஆகியன மிகப் பெரும் நிதி நிறுவனங்கள். (“விளைச்சலை அதிகரிக்கும் வாய்ப்புகளை முன்வைத்தல்” என்பது அலையான்சின் விளம்பர மந்திரமாக உள்ளது.) இவை மான்சான்ட்டோ, சின்சென்ட்டா போன்ற விதை நிறுவனங்கள், பொட்டாசு கார்ப்பொரேசன், மொசெயிக் உள்ளிட்ட வேதியுர நிறுவனங்கள், ஏடீஎம், பன்சி போன்ற பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள், டெசுக்கோ, சேப்வே, டைசன் புட்சு போன்ற உணவுப் பொருள் வழங்கல் நிறுவனங்கள் உள்ளிட்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளன.
“மேற்படி நிதி நிறுவனங்களில் நீங்கள் செய்யும் முதலீடு உலகளவில் உணவாதாரத்தைக் காக்க உதவுகிறது” என்று உங்களுடைய நிதி ஆலோசகர் சொல்வதை நீங்கள் நம்பினால் ஒன்றைக் குறித்து நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்:
அத்தகைய முதலீடுகள் சிக்கலை உண்டாக்குகின்றன, தீர்வுகளை அல்ல.
ஊகவணிகம் – மிக எளிமைப்படுத்தப்பட்ட ஓர் எடுத்துக்காட்டு
சந்தையில் இன்று சோளம் கிலோ பதினெட்டு ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம். சோளம் பயிரிட்டிருக்கும் உழவர் ஒருவர் பண்ட வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் கீழ்க்கண்டவாறு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்: இற்றைக்கு மூன்று மாதங்கள் கழித்து அவரிடமிருந்து ஐயாயிரம் கிலோ சோளத்தைக் கிலோ இருபது ரூபாய்க்கு அந்நிறுவனம் வாங்கிக்கொள்ளும்.
அந்த மூன்று மாதக் கெடு முடிகையில் சோளத்தின் விலை கிலோ இருபதைவிடக் குறைவாக இருந்தால் ஒப்பந்தம் போட்ட உழவருக்கு நல்லது. அதிகரித்திருந்தால் நிறுவனத்துக்கு நல்லது.
இந்த ஒப்பந்தத்தில் உணவுப் பண்டம், அதை விளைவிப்பவர், அதை வாங்கும் நிறுவனம் ஆகியன நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இது உலகின் பல பகுதிகளில் சில நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது. அண்மைக்காலத்தில் வணிக முறைகள் இதைவிட நுணுக்கமாக மாறியுள்ளன. எப்படி?
மேற்படி ஒப்பந்தத்தையே பங்குச் சந்தையில் விற்கவும் வாங்கவும் முடியும்! உற்று நோக்குங்கள்; விற்பனை செய்யப்படுவது சோளம் அல்ல, அது குறித்து உழவரும் சோளம் வாங்கும் நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தம் அடுத்த கட்டமாகப் பங்குச் சந்தையில் வணிகப் பொருளாகிறது, அந்த ஒப்பந்தம் இவ்வாறு பல கைகள் மாறலாம். இதுதான் மிக எளிமையான அளவில் பண்டங்களில் ஊக வணிகம்.
இப்படிப்பட்ட ஊக வணிகத்தில் ஈடுபடுவோர் அதன் அடிப்படையாக உள்ள பண்டத்தை வாங்கவோ விற்கவோ வேண்டியதில்லை. அவர்களுக்கும் எந்தவொரு பண்டத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கவேண்டியதில்லை என்றாகிறது!
அ. கட்டுரையில் மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் “[]” தரப்பட்டுள்ளன.
ஆ. கட்டுரையில் அழுத்தத்திற்காகச் சில வாக்கியங்கள் தடிப்பான எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளன.. இது மூலக் கட்டுரைகளில் இல்லை.
பிறமொழிச் சொற்கள், சொற்றொடர்கள், அமைப்புகளின் பெயர்கள்
தமிழ் அருஞ்சொற்பொருள்கள் ‘அப்பாத்துரையார் அகராதி’ எனப்படும் ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன (சென்னைப் பல்கலை வெளியீடு).
அமர்த்யா சென் – amartya sen, “poverty and famines”, 1982
அமெரிக்க டாலர் – the US dollar
அரசு கடனீட்டு ஆவணங்கள் – government bonds
அலிமா அபூபக்கர் halima abubakar
அலையான்சு RCM உலகளாவிய வளங்கள் நிதியம் allianz RCM global resources fund
அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகம் the international food policy research institute (washington)
ஆக்சுபாம் oxfam
ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி the horn of africa
இசுப்பானிய spanish
இந்தோனேசியா indonesia
உணவு மற்றும் வேளாண் கழகம் the food and agricultural organization
உயிரெரிபொருள் biodiesel
ரூபாய் rupee
(ஒன்றிய நாடுகளவையின்) உலக உணவுத் திட்டம் the UN world food program
உலக வைப்பகம் the world bank (உலக வங்கி)
ஊக வணிகம் futures trading
எத்தியோப்பியா ethiopia
எரிட்ரியா eritrea
ஏஞ்செலிகா இல்பெக் angelika hilbeck
ஏடீஎம் ADM
ஏலன் நக்மேன் alan knuckman
ஐரோப்பிய ஒன்றியம் the european union
ஒலீவியர் டீ சூட்டர் olivier de schutter
ஒன்றிய நாடுகள் the united nations (ஐக்கிய நாடுகள்)
கடன் நம்பகத்தன்மை credit rating
கத்தார் qatar
காபி coffee
கிபேரா kibera
கும்பி gumbi
குறியீட்டு நிதிகள் index funds
கெய்னெர் ப்லாசுபெக் heiner flassbeck
கென்யா kenya
கைரோ cairo
கோக்கோ cocoa
கோல்ட்மென் சேக்சு goldman sachs
சிக்காகோ வர்த்தக மன்றம் the chicago board of trade
சின்சென்ட்டா syngenta
சீனா china
சுவிசர்லாந்து switzerland
சூதாடி (பந்தயம் வைப்பவர்) speculator
செருமனி germany
செருமானிய german
சேக் டியூப் jacques diouf
சேப்வே safeway
சே.பி. மார்கன் j p morgan
சோமாலியா somalia
சௌதி (அரேபியா) saudi arabia
ட்யூனிசு tunis
ட்ரிப்போலி tripoli
டச்சு (ஆலந்து) dutch (holland)
டாய்ச்செ வைப்பகத்தின் DWS உலகளாவிய வேளாண்வணிக நிதியம் deutsche bank’s DWS global agribusiness fund
டுனீசியா tunisia
டெசுக்கோ tesco
டைசன் புட்சு tyson foods
துணைப்பிணையம் collateral
துபாய் dubai
நிக்கொலசு சார்க்கோசி nicolas sarkozy
நிதிமயமாக்கப்பட்ட பண்டச் சந்தைகளில் விலைகளை முடிவு செய்வதில் தகவல் பரிமாற்றத்தின் பங்கு price formation in financialized commodiity markets: the role of information
நோபெல் பரிசு the nobel price
ப்ரெசீல் brazil
ப்ரெடெரிக் காப்மேன் frederick kaufman
பகுரெயின் bahrain
பங்குரிமைச் சான்றிதழ் securities
பங்குரிமைச் சான்றிதழ் மற்றும் பரிமாற்ற ஆணையம் the US securities and exchange commission
பண்டங்கள் commodities
பண்டங்கள் ஊக வணிக ஆணையம் the US commodities futures rrading commission
பன்சி bunge
பிரிட்டன் britain
பிரெஞ்சு french
பெட்டீனா எங்கெல்சு bettina engels
பெர்லின் berlin
பேய்ர் இசுடெய்ர்ன்சு bear stearns
பொட்டாசு கார்ப்பொரேசன் potash corporation
மரீட்டா விக்கெர்த்தேல் marita wiggerthale
மலாவி malawi
மார்கன் இசுடேன்லி morgan stanley
மான்சான்ட்டோ monsanto
மெக்சிக்கோ mexico
மேக்சிமோ டொரேரோ maximo torero
மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு அளவீடு international assessment of agricultural knowledge, science and technology for development
மைக்கேல் மாசுட்டர்சு michael masters
மொசெயிக் mosaic
யூரோ euro
ரால்ப் சூதாப் ralf sudhoff
லேமென் பிரதர்சு lehman brothers
வர்த்தகம், மேம்பாடு ஆகியன குறித்த ஒன்றிய நாடுகளின் கருத்தரங்கம் the united nations conference on trade and development
வைப்பகம் bank (வங்கி)
கடலூர் மாவட்டத்தில் 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனையொட்டி கேட்கக்கூடிய நிவாரணம் என்பது பொதுவாக எப்படி பார்க்கப்படுகிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதாக ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரப்படுகிறது.
இந்த நிவாரணத்தை பொறுத்த வரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று மக்களுக்கு உடனடியாக செல்லக்கூடிய உதவிகள், அதாவது வீடுகளை இழந்து, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்து நிற்கக் கூடிய , முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக தேவை என்பது மூன்று வேளை உணவு , பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழந்தைகளுக்கு பால், முதியோர்களுக்கு மருந்துகள், குளிருக்கு போர்வை போன்றவை தான் உடனடியாக தேவை. ஆனால் சில அறிஞர்கள், “இது போன்ற உதவிகளை எல்லோரும் செய்கிறார்கள், தேவை அதுவல்ல நிரந்தர தீர்வு தான் வேண்டும்” என்று பேசுகிறார்கள்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்ப்பது தான் நிரந்தரமான தீர்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால், நிரந்தர தீர்வை பற்றி பேசும் போதே உடனடி தீர்வான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டே அதனை உத்தரவாதப்படுத்துவது என்பது தான் இன்றைக்கு அவசியமான வேலையாக உள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தவை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுப்புரம் தனியாக பிரிக்கப்பட்டது. கடலூரை பொறுத்த வரை ஒவ்வொரு மழையின் போதும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏனென்றால் கடலூர் ஒரு வடிகால் மாவட்டம். குறிப்பாக சேலம், கரூர்,பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து பாயும் தண்ணீர் இந்த மாவட்டத்தின் வழியாக தான் சென்று கடலில் கலக்கிறது.
காவிரியில் நீர் வரத்து அதிகமானால் அவை கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலூர் வந்து கடலில் கலந்து விடும். ஆகவே இந்த மாவட்டம் வடிகால் பிரதேசமாக இருப்பதால் நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மேலும், இந்த மாவட்டத்தில் ஐந்து முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. வெள்ளாறு, பரவனாறு, மணிமுக்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவை இம்மாவட்ட்டத்தின் வழியாக ஓடுவதனால் மழைக்காலங்களில் 100 டி.எம்.சி தண்ணீர் இவ்வழியாக செல்ல வேண்டி இருக்கிறது. எனவே அனைத்து நீர்நிலைகளும் பராமரித்து பாதுகாக்கப்பட்டு வந்தால் தான் மக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்வது தான் நிரந்தர தீர்வாகவும், நிரந்தர பணியாகவும் இருக்க முடியும்.
இதில் என்ன தவறு நடந்துள்ளது என்றால் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு உள்ள நீர்நிலைகள் எதுவும் தூர்வாரப்படவில்லை. அதனால் தான் 2000-க்கு பிறகு இது மூன்றாவதாக மிகப்பெரிய இழப்பாக ஏற்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
சில அறிஞர்கள் சொல்வது போல் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் இந்த சூழலில் யாராவது முன் வருவார்களா? நிரந்தர தீர்வை யார் செய்ய வேண்டும் என்றால் அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் செய்ய வேண்டிய அரசோ குற்றவாளியாக உள்ளது. நீர்நிலைகள், குளம் குட்டைகள், ஏரிகள், என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு காரணமாக இருப்பவர்கள் இந்த அதிகாரிகள் தான் எனும் போது அவர்கள் இந்த வேலையை செய்வார்களா என்றால் செய்ய மாட்டார்கள். ஆக அரசு செய்ய மறுப்பதை மக்களே செய்ய வேண்டும்.
இந்தத் தருணத்தில் நாம் உடனடியாக செய்ய வேண்டியது வேலை என்னவென்றால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்த்து ஆறுதல் சொல்வது, “நீங்கள் தனி ஆட்கள் இல்லை. உங்களை பாதுகாக்க பல்வேறு மாவட்ட மக்கள் இருக்கிறார்கள், உங்களை பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை” என்று ஆறுதல் கூற வேண்டும். இந்த ஆறுதல் சொல்லக்கூடியவர்கள் வெறும் கையோடு போக மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு போகக்கூடியவர்களை முறைபடுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது.
ஆனால் எந்த பொறுப்பும் இல்லாமல் அமைச்சர்கள், அதிகாரிகள் ‘அம்மாவின் ஆட்சியில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது’ என்று கணக்கு காட்டும் வேலையை மட்டும் செய்கின்றனர்.
எங்கிருந்தோ கொண்டு வரும் நிவாரண பொருட்களை கூட வழி மறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு கடத்தி சென்று அம்மாவின் முகம் ஒட்டி அனுப்பும் வேலை நடக்கிறது. இதற்கு அவர்கள் கூறும் காரணம், ‘தன்னார்வலர்கள் கொடுப்பதை மக்களே வழிமறித்து பிடுங்கிக் கொள்கிறார்கள். எனவே அலுவலகத்தில் இருந்து நிவாரணத்தை முறையாக வழங்குவோம்’ என்கிறார்கள்.
ஏற்கனவே நவம்பரில் பெய்த மழை விட்டு கிட்ட தட்ட இரண்டு வார காலம் ஆகிவிட்டது. இது டிசம்பரில் பெய்த இரண்டாவது மழை. “இது வரையிலும் அதிகாரிகள் வரவில்லை, கணக்கு எடுக்கவில்லை” என்பதே மக்களின் குமுறலாக இருக்கிறது. இனிமேல் எப்ப கணக்கு எடுத்து எப்ப நிவாரணம் கொடுப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா என்றால் இல்லை.
இன்று மக்கள் பசியில் இருக்கிறார்கள், உணவு இல்லை, குழந்தை பாலுக்கு அழுவுகிறது, மருத்துவ ரீதியாக ஜுரம்,காய்ச்சல் தலைவலி என்று பல பிரச்சனைகள் பல இருக்கின்றன. இதற்குத் தீர்வு இல்லை. பிறகு கணக்கெடுத்து கொடுப்போம் என்பதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத்தனத்தை முதலில் நாம் தட்டி கேட்க வேண்டும் தடுத்து நிறுத்த வேண்டும்.
நிவாரணம் கொடுக்க வருபவர்கள் மக்கள் தவிக்கிறார்களே என்று தான் கொண்டு வருகிறார்கள். அதையும் பிடுங்கி கொண்டு பின்னாடி தருவோம் என்பது இந்த மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாதனத்தை தான் காட்டுகிறது. முதலில் இந்த மாவட்ட நிர்வாகம், தான் ஆளத் தகுதியிழந்து விட்டதை ஒப்புக்கொண்டு விலக வேண்டும். மக்களே ஆங்காங்கு ஒருங்கிணைந்து கொண்டு நிவாரணப் பொருட்களை முறையாக விநியோகிக்க முடியும். அதற்கு பல்வேறு ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு அமைப்புக்கள் துணை நிற்கும்.
இந்த நிவாரணம் கோரக்கூடியவர்களை மூன்று வகையாக எடுத்துக் கொள்ளலாம்.
1. கடலூர் மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வகையான பயிர்களும் நாசமாகியுள்ளது. எனவே நிலத்தை சரி செய்ய வேண்டும், தண்ணீரை வெளியேற்ற வேண்டும், நிலங்களில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் விவசாயம் செய்வதற்கு உகந்தவாறு அதை முறைபடுத்தி கொடுக்க வேண்டும் . அதற்கு லட்சக் கணக்கில் செலவாகும். அப்படிப்பட்ட நிவாரணம் ஒருவகை.
2. வீடுகளை இழந்தும், உயிர்களை, உடமைகளை இழந்தும், கால்நடைகளை இழந்தும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டித்தர வேண்டும். வீடு கட்டி தருவது என்பது உடனடியாக சாத்தியமில்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தையும் உடனடியாக கணக்கெடுத்து அவற்றுக்கு எத்தனை கோடிகள் செலவாகுமோ அதனை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
இடிந்த வீடுகளுக்கு மட்டும் தான் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று அரசு அறிவித்திருப்பதே முதலில் அயோக்கியத்தனம். கட்டிட வீடாக இருந்தாலும் அதற்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதன் தன்மையே மாறி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அதன் தாங்கும் திறன் எல்லாம் தளர்ந்திருக்கும். அதனால் கட்டிட வீடாக இருந்தாலும், வீடு இடிந்திருந்தாலும், கூரை வீடாக இருந்தாலும் அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்.
கூரை வீடுகள் அனைத்தையும் கட்டிட வீடாக கட்டித்தர வேண்டும். கூரை வீடு இருந்தால் அது அப்படியே தான் இருக்க வேண்டுமா? கூரை வீடு தான் அரசின் கொள்கையா? தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற போகிறோம் தொலை நோக்கு திட்டம் உள்ளது என்பதெல்லாம் என்ன ஏமாற்று தானா… ஆகவே கூரை வீடுகள் இருந்தால் அதனை கட்டிடமாக மாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.
ஆனால், நவம்பரில் மழை பெய்தது வீடுகள் சேதமடைந்து விட்டது. தற்பொழுது சென்று பார்க்கும் அதிகாரிகள் எதுவும் ஆகவில்லை. எனவே உங்களுக்கு நிவாரணம் இல்லை என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் கூறுவதை போலவே நிவாரணம் வழங்க நினைப்பவர்களும் கூறுகிறார்கள்.
எப்பொழுது பாதிப்படைந்ததோ அப்பொழுது வரவில்லை. அதன் பிறகு ஒருவாரம் கழித்து வந்து பார்த்தால் அது வரைக்கும் தண்ணீர் வடியாமல் இருக்கனுமா? வீடு விழுந்திருந்தால் அதைத் தூக்கி நிறுத்த மாட்டார்களா? தன்னை பாதுகாக்க வேண்டும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது, கூரை வீட்டில் வசிப்பவார்கள் எங்கு போவார்கள். இருப்பதோ ஒரு அறைதான். அங்கேயே படுக்க வேண்டும், தூங்க வேண்டும். அதற்காக தான் மக்களே சரி செய்து கொள்கிறார்கள்.
மக்களே தங்கள் முயற்சியில் செய்து கொள்வதை கூட அதிகாரிகள் இது எல்லாம் நன்றாக உள்ளது. வீடுகள் விழவில்லை என்று நிவாரணம் வழங்க மறுப்பது எல்லாம் பச்சை அய்யோக்கியத்தனம்.
3. இந்த மாவட்டத்தை பொறுத்த வரை பெரும்பாலான மக்கள் கூலி விவசாயிகள் . அதுவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பொறுத்த வரை விவசாய கூலிகள். கொத்தனார், பெயிண்டர் போன்ற அடிக்கட்டுமான வேலையில் இருப்பவர்கள். மழைக்காலத்தை பொறுத்தவரை வேலையின்மை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. கட்டிட வீடாக இருந்தாலும், தண்ணீர் மட்டும் புகுந்து வடிந்தவையாக இருந்தாலும் அந்த மக்களுக்கு உட்பட அனைவருக்குமே நிவாரணம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் நிவாரணம். வீடு இடிந்தால் நான்காயிரம், சுவர் விழுந்தால் மூவாயிரம் என்பதெல்லாம் ஏமாற்று தான். ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே.
நிவாரணம் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மக்கள் செலுத்தக் கூடிய வரியில் இருந்து தான் அரசு இயங்குகிறது. நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் வரி கட்டுகிறோம். கிராம நிர்வாக அலுவலர் முதல் கலெக்டர், அமைச்சர்கள் , முதலமைச்சர்கள் வரை வாங்கும் சம்பளம் அனைத்தும் மக்கள் தான் கொடுக்கிறார்கள். அந்த மக்கள் வீடிழந்து வாழ்க்கையை இழந்து துயரத்தில் இருக்கும் போது மக்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
நிவாரணம் என்பது பிச்சை கிடையாது. அரசு மக்களுக்கு செய்தே ஆக வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் தான் நிவாரணத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ “அம்மா கொடுத்துட்டாங்க கிடைத்ததை வாங்கிகொள்ளுங்கள் , அல்லது எப்ப கொடுக்கிறார்களோ அப்ப வாங்கிகொள்ளுங்கள்” என்று அதிகாரிகள் சொல்வது கண்டிக்கத்தக்கது. ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய இந்த மக்களை ஏமாற்றும் ஒரு துரோக நடவடிக்கையே.
ஆகவே நிவாரணம் தர நினைக்கும் மக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேரவேண்டும் என்ற உங்களுடைய உணர்வு சரியானது. குறிப்பாக கடலூர் மாவட்டம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இது மூன்றாவது மிகப்பெரிய பாதிப்பு இதற்கு உதவ வேண்டும் என்று நினைக்க கூடிய மக்களுக்கு கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வி.வி.மு, பு.மா.இ.மு, புஜதொமு சார்பாக நாங்கள் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிவாரணம் என்பதை இதன் அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்….
கடலூர் மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் எண்:
ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ?
இறுதி பாகம் ( வீடியோ மற்றும் கட்டுரை)
கூட்டுநடவடிக்கை பற்றி விமர்சனங்கள் சொல்பவர்கள், ‘இந்த அடக்குமுறை வந்ததனால் கட்சிகாரங்களை போய் பார்க்கிறீர்கள். மற்றபடி பிரச்சினைகளுக்கான கூட்டுநடவடிக்கைகளில் நீங்க எந்த காலத்திலும் ஈடுபட்டதில்லை’ என்று சொல்கிறார்கள்.
இப்படிச் சொல்வது, ஒரு வகையில் கொச்சைப்படுத்துவது. முதன்மையாக, உண்மைக்கு மாறானது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசு தாக்குதல் நடந்தது. அதை எதிர்த்து கட்சிகளுடைய கண்டனம் வந்தது. தி.மு.க முதல் எல்லா கட்சிகளும் கண்டித்தார்கள். அது தேடிப் பெற்ற ஆதரவு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
கோவன் கைதுக்கு கண்டனம் எழுந்தது, எப்படி நடந்தது? கைதிற்கு தி.மு.க. தலைவர் முதலில் கண்டனம் தெரிவிக்கிறார். ஆங்கில ஊடகங்களில் தேசிய அளவில் மோடியின் சகிப்பின்மைக்கு எதிராக, கருத்துருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், “இங்கே ஒரு பாடலுக்காக ராஜதுரோகக் குற்றமா?” என்று சொல்லி ஆங்கில ஊடகங்களில் செய்தி வருகிறது. எல்லா கட்சிகளும் கண்டிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் செய்தி வருகிறது. இந்தக் கண்டனங்கள் எதுவும் ம.க.இ.க. தேடி வரவழைத்த கண்டனங்கள் அல்ல. அப்படி சொல்வது நேர்மையான முறையில் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு கண்டனம் தெரிவித்தவர்களையும் அசிங்கப்படுத்துவதாகும். இந்த கண்டனங்கள் எல்லாம் ‘டாஸ்மாக் என்ற கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது., அதன்பால் இந்த அரசு கொண்டிருக்கிற அணுகுமுறை’ இதன் காரணமாக எழுந்ததே தவிர, அது ம.க.இ.க.விற்குக் காட்டப்பட்ட சலுகையுமல்ல.
அதோடு, கோவன் ராஜத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை சந்தித்திராத அடக்குமுறையும் அல்ல. சொல்லப்போனால், 1991-96 காலத்தில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட ராஜத்துரோக வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. 1987-90 வரையிலான காலகட்டத்தில் பல பொய்யான வெடிகுண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வெறும் சுவரெழுத்துக்காக 9 மாதம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில தோழர் காளியப்பன் உள்ளிட்ட 5 தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். ராஜிவ் கொலைவழக்கு பிரச்சினையில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தடாவில் பல தோழர்கள் சிறையிலிருந்திருக்கிறார்கள். ஈழ அகதிகளை வெளியேற்றக் கூடாது என்பதற்காக அந்த காலகட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான தோழர்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டங்களிலெல்லாம் விடுதலைக்காக நாங்கள் யாருடைய ஆதரவையும் கோரிப் பெற்றதில்லை. ஒருவேளை அவ்வாறு கோரியிருந்தால் அதில் தவறும் இல்லை. பெற்றதில்லை என்பது ஒரு உண்மை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால், இதே காலகட்டத்தில் இங்கே ஜெயலலிதா ஆட்சி, அங்கே பாபர் மசூதி இடிப்பு – பார்ப்பன பாசிசத்தின் எழுச்சி என்ற காலகட்டத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் தொடங்கி, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தப் போராட்டங்களிலெல்லாம் தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கூட்டு நடவடிக்கையாக எங்களோடு கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஈடுபடுத்தியிருக்கிறோம். இது ஒரு உண்மை. இதே கருவறை நுழைவுப் போராட்டத்தை ஆதரித்து முரசொலி பல தலையங்கங்களை எழுதியிருக்கிறது. விடுதலை எழுதியிருக்கிறது. வேறு சில பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் கோரிப்பெற்றவையல்ல. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் எழுதியவை. ஆகவே,இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு எந்த காலத்திலும் இவர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்று சொல்வது, மக்கள் கலை இலக்கியக் கழகத்துக்கு எதிரான ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடு. தமிழ் மக்கள் இசைவிழாவை விட கூட்டுநடவடிக்கைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தேவையில்லை. அது பல ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னாலே தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம். அதிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் கழகம், குறிப்பிட்ட காலத்திற்கு மார்க்சிஸ்டு கட்சி உள்ளிட்டு பலர் அதிலே பங்கேற்றிருக்கிறார்கள் அவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது ஆகஸ்டு-31 அன்று எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இப்போது நாங்கள் பார்த்து சென்றுவிட்டு வந்த கட்சித் தலைவர்கள், மக்கள் நலக்கூட்டியக்கம், தே.மு.தி.க, தி.மு.க ஆகிய எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் அங்கே கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கோவன் கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
எங்கள் மீது அடக்குமுறை வந்ததினாலதான் போகிறோம் என்று சொல்வது உண்மையல்ல. உண்மை என்னவென்றால், யாரோடு கூட்டு நடவடிக்கைக்குப் போகலாம், போகக்கூடாது என்பதில் விமர்சனம் செய்பவர்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியல் கட்சிகள் யாரோடும் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக்குப் போகக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது. மாறாக, அந்நிய நிதியுதவி பெறுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்பே இல்லாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக தனிநபர்கள் வைத்திருக்கின்ற பெயர்ப்பலகை அமைப்புகள் இவர்களோடு கூட்டு நடவடிக்கைக்குப் போவதில்லை. அப்படி ஒரு மக்கள் அடித்தளமோ, அல்லது நேர்மையான செயல்பாடோ இல்லாதவர்களுடன் ஒரு 50 பேர், 60 பேரை சேர்த்துக்கொண்டு கூட்டு நடவடிக்கை என்று ஈடுபடுவது கோரிக்கையையும் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றுவதாகும். என்பதன் காரணமாக அதனை நாங்கள் செய்வதில்லை.
வேண்டுமானால், அவர்களோடெல்லாம் சேர்ந்து செய்ய வேண்டும் என்று கருத்துக் கொண்டவர்கள் அது சரியென்று வாதாடட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்வோம்.
சிலர், ‘சிறிய அமைப்பு, அடக்குமுறை வந்திருக்கிறது. போய் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது’ என்ற கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், இது அப்படி கேட்கப்பட்ட ஆதரவு அல்ல. இது செயலுக்கான ஒரு அறைகூவல். அதற்காக அழைத்திருக்கிறோம். அடக்குமுறைக்கு அஞ்சி ஆதரவு தேடுகிறார்கள் என்று சொல்வது, ம.க.இ.க. வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டுமென்று போராடுபவர்கள் மீது ஜெ. அரசு இப்படிப்பட்ட ஒரு அடக்குமுறையை செலுத்துகிறதே, அந்த உண்மையின் பால் கடுகளவும் அக்கறை இல்லாத அவர்களுடைய மனோபாவத்தைத்தான் காட்டுகிறது.
மேலோட்டமாக பார்க்கும்போது தேர்தல் புறக்கணிப்பு முழக்கத்தை வைத்திருக்கின்ற மக்கள் அதிகாரம், அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக தேர்தல் கட்சிகளிடம் போய் ஆதரவு கேட்பது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகமும் தோழமை அமைப்புகளும் இருக்கின்றன. டாஸ்மாக்கை மூடுவது என்ற ஒரு கோரிக்கையின் மீதான கூட்டு நடவடிக்கைக்காகத்தான் தேர்தல் அரசியல் கட்சிகளை அணுகியிருக்கிறோம்.
மற்றபடி அவர்கள் வந்தால் டாஸ்மாக்கை மூடுவார்கள், அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று யார் ஒருவருக்காகவும் ஓட்டு கேட்கப்போவதில்லை. நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத்தான் பேசப் போகிறோம், பேசுவோம். இது யாரிடம் ஆதரவு கேட்கிறோமோ அந்தக் கட்சிகளுக்குத் தெரியும். ஆர்ப்பாட்டத்தில் இதுவரை கலந்து கொண்ட அந்தக் கட்சிகள் அனைவருக்கும் தெரியும்.
இது போலி ஜனநாயகம் என்பது மட்டுமல்ல, சொல்லிக்கொள்கிற ஜனநாயகம், ஜனநாயகம் என்கிற அமைப்பில் உள்ள நிறுவனங்கள், அவர்களே சொல்கிற சட்டங்கள், மரபுகள், விதிமுறைகள், நெறிகள் இவை எதையும் கடைப்பிடிக்காமல் தோற்று விட்டன, திவாலாகி விட்டன, காலாவதியாகி விட்டன என்பதைத்தான் மக்கள் அதிகாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அதற்கு ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள்தான் எல்லா குற்றங்களிலும் முன்வரிசையில் இருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலையோ, ஸ்ரீரங்கம் தேர்தலையோ எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாக் கட்சிகளையும் தேர்தல் புறக்கணிப்பை நோக்கித் தள்ளியது யார், ம.க.இ.க-வா தள்ளியது? புரட்சித் தலைவிதான் தள்ளினார். அப்படி ஒரு “புரட்சி” நடந்து கொண்டிருக்கிறது.
“ஜனநாயகம் என்ற இந்த போலி ஜனநாயகம் அதன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் நிற்கிறது. இற்று வீழ்ந்து விட்டது. இங்கே மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும், அது உடனடி கோரிக்கையாக இருக்கிறது” என்பதுதான் மக்கள் அதிகாரம் அமைப்பினுடைய நோக்கம்.
டாஸ்மாக்கை மூடுவது கூட கீழிருந்து மக்கள் அதிகாரத்தின் துணை கொண்டு, வலிமை கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம் கூறுவது. அதற்குத் துணையாகத்தான் இந்தத் தேர்தல் கட்சிகள் இங்கே அழைக்கப்படுகிறார்களே அன்றி, அதற்கு மாற்றாக அல்ல. மக்கள் அதிகாரத்துக்கு அவர்களை உட்படுத்துவது என்பதுதான் இந்த கூட்டு நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும் முயற்சி.
இப்போது கேள்வி கேட்பவர்கள் மீது ஒரு கேள்வி. இதை எதிர் விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்தக் கட்சித் திருடன். இந்தக் கட்சி திருடன். அவன் சரியில்லை. இவன் சரியில்லை. என்று தீர்ப்பளிப்பதற்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது இந்த டாஸ்மாக் விசயத்தையே எடுத்துக் கொள்வோமே. இப்படித் தீர்ப்புகள் வழங்குபவர்கள் அதற்கு மேல் செயல்பூர்வமாக செய்தது என்ன?
யாரை நம்பத்தகாதவர்கள், நம்பத்தகாத கட்சிகள் என்று தீர்ப்பு வழங்குகிறார்களோ? அந்தக் கட்சியைச் சேர்ந்த கீழ்மட்டத் தொண்டர்கள் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள், அ.தி.மு.க. தொண்டன் உள்ளிட்டு. ஆற்றுமணல் கொள்ளைக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். எங்களோடு சிறைக்கு வந்திருக்கிறார்கள், அந்தத் தொண்டனை நம்புவதா, அல்லது எதையும் செய்யாமல் எதற்கும் வராமல், எல்லோர் மீதும் தீர்ப்பளிப்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பதா? யார் தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சமூக மாற்றத்தை சாதிப்பார்கள். தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். எந்த சமூக மாற்றமும் வேண்டாம். கூடாது, இருப்பதே நன்றாக இருக்கிறது. இந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று கருதுகின்ற பிரிவினர்தான் “எல்லோரும் திருடன் சார் யாரும் நம்பாதீங்க” என்று பேசுபவர்கள். இந்த கூட்டு நடவடிக்கைக்கு போனோம் என்பதனால் அல்ல, பொதுவிலேயே அரசியல் விமர்சனங்களை ம.க.இ.க. எழுதும் போது, பல பேர் சொல்வதுண்டு, “ ஆமா, இப்போ இப்படி பேசுவீங்க. நாளைக்கு அதிகாரத்துக்கு நீங்க வந்தபிறகு இல்ல தெரியும்” என்பார்கள்.
சென்னை மாநகரத்தில் இருப்பவர்கள். பீச் தாம்பரம் மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது பேச்சு கொடுத்துப் பாருங்கள். “இவ்ளோ வெள்ளம் வந்திருக்குதே, அம்மா கவனிக்கலையே, கொடநாட்டுல போயி உட்கார்ந்துகிட்டாங்க” அப்படினு பேச்சை ஆரம்பிங்க. “என்ன சார் செய்ய முடியும்? மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூணு நாள்ல பெஞ்சிருச்சே” என்று ஜெயலலிதாவின் வசனத்தைப் பேசுவார்கள். அதை மறுத்து உரிய ஆதாரங்களை அடுக்கத் தொடங்கினால், ஒரு ஸ்டெப் தாண்டுவார்கள். “ஆமாமா ஒண்ணும் சரியில்லை சார். தி.மு.க.காரன் காலத்திலேயே இது ஆரம்பமாயிடுச்சி” என்று தி.மு.க ஆட்சிகால முறைகேடுகள் சிலவற்றை சொல்வார்கள். “நீங்கள் சொல்வது போல் அல்ல” என்று வாதாடினால், “எவன் சார் யோக்கியன்? இந்த காலத்தில யாரை நம்ப முடியுது? எல்லாம் திருட்டுப்பயலுக” என்று சொல்லி தங்களது உரையை முடித்துக் கொள்வார்கள்.
இப்படி எல்லோரும் திருடர்கள் என்று தீர்ப்பளிப்பவர்கள் மிகப்பெரிய ஒழுக்கவாதிகளைப் போல தோற்றமளித்தாலும், அந்தத் தீர்ப்பே மிகவும் ஒழுக்கக் கேடானத் தீர்ப்பு. எல்லோரும் சமம். எல்லோரும் திருடன் என்று கூறுவதும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் அது ஒரு மிகப் பெரிய தந்திரம் – நரித்தனம்.
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு இல்லையா? இல்லையென்றுதான் பலரும் பேசுகிறார்கள். இப்போ தாத்ரி கொலை நடந்திருக்கிறது. கல்புர்கி கொலை நடந்திருக்கிறது. பன்சாரே கொலை நடந்திருக்கிறது. அடுக்கடுக்காக, அறிவுத்துறையினர் மீது தாக்குதல் நடக்கிறது. இதை பற்றிய அ.தி.மு.க.வின் கருத்தென்ன என்று யாராவது கேட்டதுண்டா? எந்த ஊடகமாவது ஏன் கருத்து சொல்லவில்லை என்று அவர்களை மடக்கியதுண்டா? அப்படி கருத்து சொல்லாமலிருப்பதே பி.ஜே.பி. ஆதரவு நிலைப்பாடென்று என்று யாருக்கும் புரிவதில்லையா? நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றதற்கு அம்மா வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஏன் தெரிவிக்கவில்லை? அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தத்தை யாரும் கேள்விக்குள்ளாக்காமலேயே
தி.மு.க.வும்., அ.தி.மு.க.வும் சமம் என்று பேசுகிறார்கள்.
பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. கருவறை நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கை இருக்கிறது. தமிழ்பாடும் கோரிக்கை இருக்கிறது. சுயமரியாதைத் திருமணம் தொடர்பான கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு நான் கோபாலபுரம் போகட்டுமா? போயஸ் தோட்டம் போகட்டுமா?
போயஸ் தோட்டம் என்ன செய்தது? தில்லைக்கோயிலை தீட்சிதர் வசம் திரும்ப பிடுங்கி ஒப்படைத்தது. தி.மு.க. எவ்வளவு ஊசலாடும் கட்சியாக இருந்தாலும் தமிழ்பாடும் போராட்டம் நடத்தி ஒரு எல்லைக்கு வந்தபிறகு, தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்டுகின்ற ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறது. அந்தக்கோயிலை மேற்கொள்கிற நடவடிக்கையை அது மேற்கொள்கிறது. ஜெயலலிதா அரசு அதைப் பிடுங்கி தீட்சிதர்கள் வசம் வழங்கியது. இதில் வேறுபாடே இல்லையா? பார்ப்பன பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிராக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் – பேசுகின்ற கட்சிக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லையென்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? யார் கலப்பு மணத்தை எதிர்க்கிறார்களோ, யார் தமிழை எதிர்க்கிறார்களோ, யார் சாதிப் பாகுபாட்டை பராமரிக்க விரும்புகிறார்களோ அவர்கள்தான் வேறுபாடு இல்லையென்று சொல்ல முடியும். அவர்கள் நிச்சயமாக முகமூடியணிந்த அ.தி.மு.க. ஆதரவாளர்கள். முகமூடி அணிந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள்.
பா.ம.க. கட்சி இருக்கிறது. எல்லாக் கட்சியும் பெரும்பான்மை சாதி யாரோ அவர்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள். இது தெரிந்த விசயம்தான். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ, ஒரு கொங்கு கட்சியோ, என்ன செய்கிறார்கள்? சாதிவெறியை அடித்தளமாகக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டி அதன் அடிப்படையிலே அந்தக் கட்சியைக் கட்டுகிறார்கள். இதுவும் சாதியை தேர்தல் அரசியலுக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகின்ற தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளும் சமமாகிவிடுமா?
தவ்ஹீத் ஜமாஅத் எங்களை விட தீவிரமாக மதுவிலக்கு பற்றிப் பேசும். அதன்காரணமாக அந்த மதவெறிக் கட்சியோட சேர்ந்துகொள்ள முடியுமா? மதவெறி என்பது மதுவெறியை விடக் கொடியது இல்லையா? பா.ஜ.க. மதுவிலக்குனு பேசுகிறது. அது எத்தகைய கொடூரமான பாசிசக்கட்சி. பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒண்ணுதான் என்று பேச முடியுமா? இந்த வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் எல்லோர் மீதும் சேற்றை வாரி இரைப்பதும் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு. அல்லது பா.ஜ.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகும்.
இந்த சாராய சாம்ராஜ்யத்தை அ.தி.மு.க. கட்டிக் காப்பாற்றுகிறது. தமிழ்ச்சமூகத்தை நாசமாக்கி சீரழிக்கின்ற ஒரு சதிவேலை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவதற்காக நிற்பவர்கள் அரசியல் கட்சியாக இருக்கட்டும். அரசியல் கட்சி சாராத சமூக இயக்கங்களாக இருக்கட்டும். அவர்கள் எத்தனை பலவீனமானவர்களாக இருந்தாலும், எத்தனை உறுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் போக வேண்டும். டாஸ்மாக்கை மூடுவது என்ற இந்த இலக்கை எப்பாடுபட்டேனும் அடைய வேண்டுமென்பதற்காகத்தான் இவர்களையெல்லாம் அணுகியிருக்கிறோம்.
ஆகவே, தேர்தல் அரசியல் கட்சிகளை தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் அணுகலாமா என்ற கேள்வியை எழுப்புகின்றவர்கள் டாஸ்மாக் என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, அதை மூடுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றனவா, இதைவிடச் சிறந்த இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் கருத்தை உங்கள் தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.
சென்னை நகரத்ததில் ஓடும் அடையாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளின் ஒவ்வொரு தெருக்களும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. குப்பை என்பதைவிட சாக்கடை கழிவுகள் என்று கூறுவது தான் பொருத்தம். பாத்திரங்கள், கட்டில், நாற்காலி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து சாக்கடை கலந்திருக்கிறது. நீர் வடியத் துவங்கிய சில நாட்களுக்கு பின்னர் மக்கள் அவற்றை வீதிகளில் விசிறியெறிந்துவிட்டார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் சாக்கடை கழிவுகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் இவற்றை உடனடியாக அகற்றாவிட்டால் மழை வெள்ளத்தை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொள்ளை நோய்கள் ஏற்படும். இன்றைய அத்தியாவசிய பணி இதுதான். தூய்மை இந்தியா (சுவச் பாரத்) என்று ஆரவாரம் கிளப்பி சீன் போட்ட குலக்கொழுந்துகள் எவரையும் சாலையில் காணவில்லை. வழக்கம் போல உழைக்கும் மக்கள் தான் அதை அகற்றி வருகிறார்கள்.
ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு சென்றோம்.
அருகிலிருக்கும் சூரப்பள்ளம் பகுதி தெருக்களில் இருந்து எடுத்துவரப்படும் கழிவுகள் கே.கே நகர் நெசப்பாக்கம் சாலை சந்திப்பில் குவிக்கப்படுகின்றன. ஒரு சிறு தெருவிலிருது மட்டும் 3 ஜே.சி.பி எந்திரங்கள், 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கழிவுகளை வாரிக் குவித்தும் குப்பைகள் குறையவில்லை. கழிவுகளின் அளவு அப்பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளுக்கே அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பல தெருக்கள், பகுதிகளில் மலையென குவிந்திருக்கும் குப்பைகள் எடுத்தவாறு தொழிலாளிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தூங்கவில்லை, குளிக்கவில்லை, மாற்று துணியில்லை, வீட்டுக்கும் போகவில்லை. முதல் இரண்டு நாட்கள் வெள்ளத்தோடு போராட்டம். கடந்த மூன்று நாட்கள் குப்பையோடு குப்பையாக போராட்டம். இவர்கள் வீடும் வெள்ளத்தில் மூழ்கியவைதான். குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றன. குடும்பம் பற்றிய கவலையும் அவர்களை வாட்டத்தான் செய்கிறது. குப்பையோடு வேலை செய்வதால் காலில் சேற்றுப்புண், தொண்டையில் புண் என அவர்களால் பேசக்கூட முடியவில்லை. சென்னையின் சுகாராதாரத்தை நிலைநாட்டுவதற்காக அளவேதுமில்லாம் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஒரே நாளில் பல டன் கழிவுகளை கையாளுகிறார்கள். கையில் பாதுகாப்புறை இல்லை, மூக்கில் பாதுகாப்பு கவசம் இல்லை, குறைந்தபட்சம் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் வேலை செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இது குறித்து அக்கறைபடவில்லையா என்று கேட்டால் சிரித்துக்கொண்டே “அவர்கள் காரில் வருவார்கள், போவார்கள் இதற்கா அக்கறைப்பட போகிறார்கள்” என்கிறார்கள். “இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே அவர்கள் குழந்தைகளா” என்று கேட்டபடியே வேலையில் மூழ்குகிறார்கள்.
இந்த தொழிலாளிகளில் சென்னையை சேர்ந்தவர்களும் வெளியூரில் இருந்து வந்தவர்களும் அடக்கம். இனி அவர்கள் பேசுவதைக் கேட்போம்.
“நாங்களாவது குறைந்த பட்சம் குப்பை அள்ளுவதற்கான பொருட்கள், வண்டிகள் வைத்திருக்கிறோம் ஆனால் ஏரியா ஜனங்க இது எதுவுமில்லாமல் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் மாற்றுத் துணி கூட இல்லாமல் வெற்றுடம்போடு கையில் கழிவுகளை சுத்தம் செய்கிறார்கள். இதை பார்க்கும் போது எங்களது கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.”
எங்களை கார்ப்பரேசன் ஊழியர்களாக பலர் நினைக்கிறார்கள் அது உண்மையில்லை. நாங்கள் (Chennai municipal Solid Waste Private limited என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்) ஒப்பந்த கூலிகள். எங்களைப் போல சென்னை முழுவதும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கார்ப்பரேசன் ஊழியர்கள் நியமனம் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டுவிட்டld. காண்டிராக்ட் ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறோம்.
குப்பை வாரும் எங்களுக்கு மாதம் 5,500 தான் சம்பளம். சூப்பர்வைசருக்கு 8000. மழை வெள்ளத்தால் எங்கள் வீடுகளும் தண்ணியில் போய்விட்டது. மனைவி குழந்தைகள் நிவாரண முகாமில் தான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் நாங்களும் வேறு வேறு இல்லை.
இந்த வேலையால் வரும் தோல் நோய்கள் எங்கள் குழந்தைகளுக்கும் பரவுகிறது. என்ன செய்வது ஏதாவது மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். இதை நிறுவனமோ அதிகாரிகளோ கண்டுகொள்வது கிடையாது. வேலையை முடித்துவிட்டுத்தான் பொது ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், அதற்கு நேரம் எங்கிருக்கிறது?
குப்பை வண்டிகள் போக முடியாத குறுகலான சந்துகளில் போகிறோம். அங்கிருந்து லோடு எடுத்துவர 2 மணிநேரம் ஆகிறது. குப்பை அள்ளும் போதும், கொட்டும் போது அடிக்கும் நெடியை எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தாங்க முடியவில்லை. வரலாறு காணாத பிரச்சனை என்கிறார்கள் ஆனால் குப்பை லாரிகளை ஒழுங்குபடுத்த ஒரு போலீஸ் கூட இல்லை. நாங்களே வண்டி ஓட்டி நாங்களே டிராபிக் கிளியர் பண்ணிக்கிறோம். அமைச்சர்கள் வண்டி எல்லாம் அப்படியா போகிறது. தாங்களாகவா டிராபிக் கிளியர் பண்ணுகிறார்கள்?
சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை. அதிகாரிகள் தினமும் குளித்து மணக்க மணக்க வருகிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஊரிலும் மழை என்கிறார்கள். குடும்பத்திடம் பேசினீர்களா என்று கூட யாரும் கவலைப்படவில்லை.
இங்கு வேலை செய்வதை வருத்தாமாக சொல்லவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை பற்றி தான் கூறுகிறோம்.
ஒரு லாரி முழுவதும் குப்பைகளை நிறைத்து வெளியே வருதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதிகாரிகள் இதை கவனித்து ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தினால் அரை மணி நேரமாக குறைக்கலாம். அதற்கான முயற்சியை யாரும் எடுக்கவில்லை. மலை போல வேலைகளை இருக்கும் போது அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். அவர்களின் பெயரை கூறினால் எங்களுக்கு தான் பிரச்சனை.”
“3 கி.மீ சுற்றுவட்டாரத்திலிருந்து கழிவுநீரை எடுத்துவருகிறோம். ஒரு லோடுக்கு 700 ரூபாய் கார்ப்பரேசன் தருகிறது. இதில் பெட்ரோல் , வண்டி வாடகை, டிரைவர் கூலி எல்லாம் அடங்கும். கணக்கு காண்பிப்பதற்காக தான் இதை எடுக்க சொல்கிறார்கள். பெரும்பாலான தண்ணீர் அங்கேயே தான் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து வருவது நடக்கது.”
உழைப்புக்கும் ஓய்வில்ல. உழைக்கும் மக்களுக்கும் ஓய்வில்லை. குப்பை எடுக்கும் தொழிலாளிகள் பொதுவில் நாற்றத்தை சகித்துக் கொள்வதற்கு மது அருந்துவது உண்டு. ஆனால் கிடைக்கும் மிகக்குறைவான சம்பளத்தில் அதற்கும் வழியில்லை. அதனால் பான்பராக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து, பத்து ரூபாய் செலவில் ஓரிரு மணி நேரங்கள் பாக்கோடு சகித்துக் கொள்கிறார்கள்.
இயல்பு வாழ்க்கையே இவர்களுக்கு எந்திரம் போலத்தான் என்பதால் இத்தகைய நிவாரண பணிகளில் இவர்களை சிறப்பாக யாரும் கவனிக்க தேவையே இல்லை. துப்புரவு பணி தொழிலாளிகளின் கழிவு அகற்றும் பணிக்காக தமிழக அரசு ரூ.2000 சிறப்பு ஊதியம் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த ஊதியம் மிகக் குறைவு என்பதோடு அது எதுவும் இவர்களின் சூழலை மாற்றிவிடாது. இது போக அன்றாடம் ரூ.300 கூலிக்கு புதிய தொழிலாளிகளை தினக்கூலியாக தமிழக அரசு எடுத்து வருகிறது.
சாக்கடை அள்ளும் ஒரு தொழிலாளிக்கு அவர் இழக்கப் போகும் உடல் நலத்தையும் கணக்கிட்டு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். காரிலும், விமானத்திலும் கால் தரையில் பாவாமல் வெள்ளத்தை பார்க்கும் ராணிகளின் ஆட்சியில் தரையில் தத்தளிக்கும் மக்களை வெள்ளம்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை.