Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 731

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

2

புதிய-கலாச்சாரம்

புதிய கலாச்சாரம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

  1. திரை விமர்சனம்- ”ஈவன் த ரெயின்”: –   வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள்!
  2. டெல்லி பாலியல் வன்முறை – குற்றம்: தூண்டியது யார்?
  3. செல்பேசி:-  மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்!
  4. காதல்: –கொலையாளிகளும் கலையாளிகளும்!
  5. ரஜத் குப்தா:-திறம் வேறல்ல! அறம் வேறல்ல!!
  6. “கம்பீரம்”:-  ஒரு உண்மைக் கதை!
  7. அமெரிக்காவில் சோக கிறிஸ்துமஸ்!
  8. ”எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை”
  9. ”பா.ம.க., ராமாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க!”   – -களஆய்வில் வன்னிய மக்கள் கருத்து!
  10. செம்மஞ்சேரி:- எழில்மிகு சென்னையின் இருண்டகாலனி!
  11. சிறுகதை:-  ”நார்மல்!”
  12. கவிதை:- ஆதலினால் காதல் செய்!

புதிய கலாச்சாரம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

 

வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!

5
வன்னியரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கடந்த மாதம் “பா.ம.க.- வின் சாதி வெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவதூறுகளால் நிரம்பிய அக்கட்டுரையை “பெரியார் தளம்” என்கிற பெரியார் தி.க. இணையதளமும், “கீற்று” என்கிற தளமும் பெருமகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளன.

வன்னியரசு தனது கட்டுரையில், “‘ புரட்சி’ செய்யப் புறப்பட்ட நக்சல்பாரிகள், அந்தப் பாதையிலிருந்து விலகி, சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் பிழைக்கப் போய் விட்டார்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தலித் மக்கள் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நாய்க்கன்கொட்டாய் முகப்பில் இன்று அப்பு, பாலன் சிலைகள் மட்டுமே பாதுகாப்பாக இருக்கின்றன. சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர். பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்ல, தி.மு.க., அ.தி.மு.க., ம.க.இ.க., என்று கட்சி பேதம் இன்றி அனைத்து வன்னியர்களும் முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்று ஒன்று சேர்ந்து கொண்டு தாக்கினர்” என்று எழுதியிருந்தார்.

“அறிவு நாணயம் இருந்தால், தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டும் ம.க.இ.க. காரர்கள் யார் யார் என்பதைச் சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால், வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்” என்று வினவு தளத்தில் நம் தோழர்கள் எழுதியிருந்தனர்.

அதற்கு கீற்று தளத்தில் பதில் எழுதிய வன்னியரசு. “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வன்னியர், ம.க.இ.க. தோழர்” என்று குறிப்பிட்டிருந்தார். “அந்த கிருஷ்ணன் யார் என்பதை நேரில் வந்து காட்டுங்கள் நானும் வருகிறேன்” என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வி.வி.மு. தோழர் ஆம்பள்ளி முனிராஜ் வினவு தளத்தின் மூலம் சவால்விட்டதும் வன்னியரசு வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.

தருமபுரி தாக்குதலைப் பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளிலிருந்து தாக்குதலுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் வரை அனைவரும் ஒன்றைக் கூறுகிறார்கள்: “நக்சல்பாரி இயக்கம் இருந்தவரை சாதி ஒடுக்குமுறை இல்லை. இயக்கம் பின்னடைவுக்குள்ளானதால்தான் சாதிவெறியர்கள் தலை தூக்கியிருக்கிறார்கள்” என்கின்றனர்.

நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்ட ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்த காரணத்தினால்தான் அங்கே சாதிவெறியர்களை நேருக்குநேர் எதிர் கொள்ள முடிந்தது.

தருமபுரியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சாதிவெறியர்களை எதிர்த்து அந்தந்த சாதிகளைச் சேர்ந்தவர்களையும், பிற ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் முன்நிறுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலை நாட்டியதும் சாதி ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்ததும் கம்யூனிஸ்ட் இயக்கமே அன்றி, தலித் அமைப்புகள் அல்ல. இதை தாழ்த்தப்பட்ட மக்களும் நன்கு அறிவார்கள். இந்த உண்மை தான் ம.க.இ.க. வுக்கு எதிராக வன்னியரசைப் புளுக வைத்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத வன்னிய சாதிவெறியர்களின் வன்மம் தான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று அனைவரும் கூறுகின்றனர். தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களோ நக்சல்பாரி தோழர்கள் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காது என்கிறார்கள். ஆனால், வன்னியரசு மட்டும் இதற்கு வேறு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.

சேரி மக்கள் நக்சல்பாரிகளை ஆதரித்ததற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்களாம். இப்படி வன்னியரசு ஏன் புளுக வேண்டும்? அதற்கு பல காரணங்கள் உண்டு எனினும், ’நக்சல்பாரி கட்சிக்குப் போகாதீர்கள்’ என்பது முதல் காரணம். இரண்டாவது தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களை ம.க.இ.க. தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. அவர்களின் நடைமுறையை மட்டுமின்றி, இந்த அரசமைப்புக்குள்ளேயே சீர்திருத்தம் மூலம் சாதியை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்ற அம்பேத்கரியத்தையும் அரசியல் ரீதியில் விமர்சிக்கிறது. எனவேதான் வன்னியர் சங்கத்தை விட, ம.க.இ.க. மீது வன்னி அரசு கொலைவெறியோடு பாய்கிறார்.

caption

தருமபுரி தாக்குதலைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படைப்பாளிகள் நடத்திய கூட்டத்தில், இவர்களுடைய முகத்துக்கு நேரே பூணூலை உருவிக்காட்டும் காங்கிரசு பார்ப்பானுக்கு கைதட்டுகிறார்கள். குச்சு கொளுத்தி ராமதாசுடன் நல்லிணக்கம் காண விரும்புகிறார்கள்.

ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் பட்டமளித்தது யார் ? மதுரை விமான நிலையத்திற்கு தேவர் சாதிவெறியனின் பெயரை வைக்கச் சொன்னது யார் ? சேதுராமனுடன் கைகோர்த்துக்கொண்டு போஸ் கொடுத்தது யார் ? மூப்பனார் வீட்டுக்குப் போனது யார்? நாலு சீட்டுக்காக பாசிச பாப்பாத்தியிடம் நின்றது யார் ? கண்ணகி-முருகேசன் கொலையில் கட்டப்பஞ்சாயத்து செய்தது யார்?

ரியல் எஸ்டேட் மாஃபியா மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக்கிச் சந்தி சிரித்தவர்கள், ஊரறிந்த கட்டப் பஞ்சாயத்து பேர்வழியும், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவருமான செல்வப்பெருந்தகையை இணைப் பொதுச்செயலாளராக்கி அழகு பார்த்தவர்கள், கட்டப்பஞ்சாயத்தையே அன்றாட கட்சிப்பணியாக்கி, அதற்காக கூச்சநாச்சமின்றி சாதிவெறியர்களோடு ஒட்டிக்கொண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் துரோகம் செய்கின்ற பிழைப்புவாதிகள்தான் புரட்சிகர அமைப்புகள் மீது அவதூறு செய்கிறார்கள்.

தனது முதல் கட்டுரையில் புரட்சியாளர்களை அவதூறு செய்யும் வன்னியரசு, இரண்டாவது கட்டுரையில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைப் பார்த்துப் புல்லரித்துப் போய் “அவங்க ரொம்ப நல்லவங்க; தியாகம் எல்லாம் பண்றாங்கன்னு சர்டிபிகேட் கொடுக்கிறார்!” அய்யாவுக்கு கொடுத்த அம்பேத்கர் சுடர் விருதை மாவோயிஸ்டுகளுக்குக் கொடுக்காமல் இருந்தால் சரி. வன்னி அரசு போன்றவர்களால் அவதூறு செய்யப்படுவதே அதைவிடக் கவுரவமானது.

________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________

அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

60

ராமதாஸ்-பா-ம-க-கார்டூன்டந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் அங்கு வந்த தாம்பரம் காவல் நிலைய காவலர் ஒருவர் பத்திரிகையை கேட்டு வாங்கினார். “இங்க என்ன செய்றீங்க, உடனே கெளம்புங்க” என்று புறப்பட்டுப் போகச் சொன்னார். அதற்குள் அங்கு வந்த அருகில் இருந்த 2-3 ரவுடிகள்,

“இவுனுங்கள சும்மா விட மாட்டோம். நான் பா.ம.க. நகரச் செயலாளர், வக்கீல். நான் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளெயின்ட் எழுதித் தாரேன், இவனுங்கள புடிச்சி உள்ள போடுங்க” என்று எகிற ஆரம்பித்தனர்.

காவலரோ, “ஏம்பா, நீங்க கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கீங்க, நாங்க விசாரிக்கிறோம். இடையில இப்படி ரவுடித்தனம் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார்.

இதற்குள் ரவுடிகளில் ஒருவன், தொலைபேசியில் “ஆமாஜீ, சுத்தி வளைச்சிட்டோம். 4 பேரு இருக்காங்கஜி, போலீஸ்ல கொண்டு போயிரலாம்ஜி” என்று ஏதோ ஒரு ஜீக்கு தகவல் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

இதற்குள் போலீஸ் ரோந்து வாகனம் வந்து விட காவலர் தோழர்களை வண்டியில் ஏறச் சொன்னார். “இவனுங்க 100க்கு கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கானுங்க. நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வந்து ஒரு அறிக்கை கொடுத்துட்டு போயிருங்க”என்றார்கள்.

வெளியில் ரவுடிகளுடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொள்ள சாமியாட ஆரம்பித்தார்கள்.

“தேவிடியாப் பசங்க, இவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அய்யாவைப் பத்தி எழுதுவாங்க, கைய, கால உடைச்சாத்தான் சரியாகும்”

“பத்திரிகைல என்ன வேணுண்ணா எழுதிருவியா நீ! ஒனக்கு வன்னியப் பொண்ணுதான் கேக்குதா, நீ சக்கிலியண்ணா, சக்கிலியப் பொண்ணை போய் கல்யாணம் பண்ணுடா”

என்று சாதிவெறியை போதை போல ஏற்றிக் கொண்டு பேசிக் கொண்டே எகிற ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரி அவர்களை கடிந்து கொள்வதைப் போல விலக்கி விட ஆரம்பித்தார். “டேய் விடுறா, டேய் விடுறா” என்று உதார் விட்டுக் கொண்டே அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்தனர் ரவுடிகள்.

தோழர்கள், உறுதியாக நின்று கொண்டு, பாமக சாதிவெறியர்களுக்கு உரிய மறுமொழி கொடுத்தனர்.

ரோந்து வண்டியில் ஏறி தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் உதவி ஆய்வாளர்கள் அறைக்குள் தோழர்களை அமரவைத்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் இதற்குள் வெளியில் ஒரு கும்பலை சேர்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

4-5 கார்களில் வந்து இறங்கிய வட்டம், மாவட்டங்களுடன் உதிரிகளாக காலையில் அடித்த டாஸ்மாக் மயக்கம் தெளிந்து எழுந்தது போலத் தெரிந்த 20-30 பேர் சேர்ந்து கொண்டிருந்தனர்.

கும்பலின் துணையோடும் பிற கொடுக்கல் வாங்கல் உறவுகளின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிணைப்போடு, பாட்டாளி மக்கள் கட்சி வக்கீல் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவருடன் உட்கார்ந்து புகார் ஒன்றை எழுதினார். புகாரில், தோழர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் பொய் புளுகுகளை அவிழ்த்து விட்டிருந்தனர்.

இதற்குள் தோழர்கள் மூலமாக தகவல் தெரிந்த மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஊடகங்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

வெளியில் கூடியிருந்த பாமக ரவுடி கும்பல், “எங்கள் அய்யாவை இழிவு படுத்தியவர்களை கைது செய்” என்று முழக்கம் போட ஆரம்பித்தது. காவல் அதிகாரிகளோ, தோழர்களை வெளியில் விடாமல் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்தார்கள்.

காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் மாமியார் வீடு போல உள்ளே வந்து போய்க் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் சிலர், தோழர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, ஏதோ நோட்டம் விடுவதைப் போல ஒவ்வொருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள்.

ஒருவர்,

“நீங்க என்னிக்காவது நல்லா படிச்சு, வேலைக்குப் போங்கன்னு பத்திரிகைல எழுதியிருக்கீங்களா. அப்படி எழுதியிருந்தா எனக்கு அத்தாட்சி கொடுங்க, காதல் கேக்குதா, காதல், அம்பானி மகளை கல்யாணம் செஞ்சு ஒரே நாள்ள அம்பானி ஆகப் பாக்குறானுங்க”

என்று திட்டி  விட்டுப் போனார்.

இதற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் சொன்ன தகவலின் படி அக்கட்சியின் நகரச் செயலாளர் வந்து தோழர்களிடம் பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்த தோழர்கள் ‘இந்தப் பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்வதாக கூறினர். அப்போதுதான் பா.ம.க ரவுடிகளுக்கு ஒரு பாடமாக இருக்கு’மென்று கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களுக்கு ஆதரவாக வந்ததைப் பார்த்த பா.ம.க ரவுடிகள் உடனே அவர்களிடம் “நாமெல்லாம் ஒரே ஏரியா, ஒரே முகம் பார்த்து பழகுறோம், நீங்கள் ஏன் கலை இலக்கியத்துக்கு (மகஇக) ஆதரவாக போறிங்க” என்று புலம்பினார்கள்.

சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு காவல் நிலையத்துக்கு வந்த ஆய்வாளர் தோழர்களை அழைத்துப் பேசினார். பேசுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று சொல்லி தோழர்களின் செல்பேசிகளை வாங்கி வைத்துக் கொண்டார். புதிய கலாச்சாரம் இதழின் பின் அட்டையில் வெளியாகியிருந்த கவிதையைப் படித்துப் பார்த்தார்.

“சைவப் பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும் கீரிப்பிள்ளை பிறப்பதில்லை!
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!”

“வன்னியப் பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்
நாடு ஒன்று மூழ்கிடாது
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!”

என்ற வரிகளைப் படித்துக் காண்பித்து, “இப்படி ஒரு கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதலாமா” என்று நியாயம் பேசினார்.

“இது தனிப்பட்ட முறை தாக்குதல் இல்லை சார், அவர் பொதுவில்   பேசிய அராஜக பேச்சுகளுக்கும், நடத்தைக்கும் பதில் சொல்லும்படியாக எழுதப்பட்ட கவிதை. நாங்க இந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுடனும் உடன்படுகிறோம். மக்களிடையே சாதி வெறியைத் தூண்டி விடக் கூடிய பாட்டாளி மக்கள்  கட்சி போன்ற கும்பல்களைப் பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்” என்று தோழர்கள் பதில் சொன்னார்கள்.

“நீங்க, காவல் துறை அனுமதி இல்லாம எப்படி பத்திரிகை விற்கலாம்” சட்டம் பேச ஆரம்பித்தார்.

“இப்படி புத்தக விற்பனை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் செய்கிறோம். அப்படி விற்கக் கூடாது என்பதற்கு எந்த சட்ட விதிகளும் இல்லை. விற்பது, பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை என்றும், ஒருவேளை இது போன்ற ரவுடிகள் பிரச்சினை வந்தால் மக்களின் ஆதரவுடன் அதைத் தீர்த்துக் கொள்கிறோம்” என்று தோழர்கள் விளக்கினார்கள்.

“இதுவரை பிரச்சனை வரவில்லை, இப்போ இவங்க பிரச்சனை செய்றாங்க, எதுனா சட்ட ஒழுங்கு குலைவு ஏற்பட்டா, யாரு பதில் சொல்வாங்க” என்று சொல்லும் போதே அவர் உயர் அதிகாரியிடமிருந்து தொலைபேசி வர,

“ஆமா சார், அதுதான் விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். இவங்க ராமதாஸ், காடுவெட்டி குரு பத்தி கவிதை எழுதியிருக்காங்க” என்றபடி பத்திரிகையை புரட்டிப் பார்த்து விட்டு,  ‘பா.ம.க., ராமதாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க! – கள ஆய்வில் வன்னிய மக்கள் கருத்து’ என்று இவங்க சர்வே நடத்தின மாதிரி போட்டிருக்காங்க.”

“அதில ‘வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், நானே வன்னியர்தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டு ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார் என்று கோபத்துடன் தன்னுடைய சொந்த சாதி வெறியர்களைச் சாடினார்’னும் எழுதியிருக்காங்க சார். விசாரிச்சிட்டு சொல்றேன் சார்”

என்று தொலைபேசியை வைத்தார்.

‘நீங்க அனுமதி வாங்காம இப்படி பொது இடத்தில பத்திரிகை இஷ்யூ பண்ணக் கூடாது’ என்று திரும்பவும் சொல்லி விட்டு, “எத்தனை பத்திரிகை வித்தீங்க” என்று பத்திரிகை விற்ற பணத்தையும் வாங்கிக் கொண்டார். செல்பேசிகளை திருப்பித் தராமல் வெளியில் போய் காத்திருக்கச் சொன்னார்.

காவல் துறை இப்படி ரவுடிக் கும்பலுடன் ஒத்துழைத்து அவர்கள் ஆட்சியை அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தார்கள். மேலும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பெண்களையும் உள்ளிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூடி விட்டார்கள்.

காவல் நிலையத்துக்கு வெளியில் பாட்டாளி மக்கள் கட்சி கும்பல் கோஷம் போட்டுக் கொண்டிருந்தது. தோழர்கள் எண்ணிக்கை வர வர ஷத்திரியர்கள் படை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி ஓட ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் ஐம்பது பேர் என்றால் தோழர்கள் வந்த பிறகு பத்து பேராக சிறுத்துப் போனது. உள்ளே தடுக்கப்பட்டிருந்த தோழர்கள், மதிய உணவுக்கு போக வேண்டும் என்று சொன்னதும், காவலர்களே வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் உடன் வர அனைவரும் ஆய்வாளர் அறைக்குள் போனார்கள்.  அங்கு வந்திருந்த காவல் துறை உதவி ஆணையர்

“அவங்க புகார் கொடுத்திருக்காங்க, இவங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதனால மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சொல்லியிருக்காங்க. அதுக்கு சிஎஸ்ஆர் போட்டுக் கொடுத்திருக்கோம். நீங்க ஏன் இப்படி எல்லாம் எழுதி பொது இடத்தில குழப்பம் ஏற்படுத்துறீங்க” என்று தோழர்கள் மீதே குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார்.

வழக்கறிஞர்களும் தோழர்களும் உறுதியாக அதை மறுத்தனர்.

‘புதிய கலாச்சாரம் பத்திரிகை சமூக பிரச்சனைகளை உறுதியாக நேர்மையாக யாருக்கும் பயப்படாமல் விமரிசித்து முன் வைக்கும் பத்திரிகை. 30 ஆண்டுகளாக இப்படித்தான் வெளியாகிறது. தமிழ் நாடு எங்கும் பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்கிறார்கள். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் நடத்துவதற்குத்தான் போலீஸ் அனுமதி தேவை. இது போன்று பத்திரிகை விற்பதற்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை’ என்றார்கள்.

உதவி ஆணையரோ, “அப்படின்னா, நீங்க விற்கும் போது அவங்க வந்து அடிக்கத்தான் செய்வாங்க, அப்போ பொறுப்பு எங்களுக்குத்தானே” என்று மடக்கப் பார்த்தார்.

“நீங்க ஒரு அதிகாரியா இருந்துட்டு இப்படிச் சொல்லக் கூடாது. பொது இடத்துல ரவுடித் தனத்தை கட்டுப்படுத்தத்தான் நீங்க இருக்கீங்க. நீங்க பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்களின் அவதூறு புகாரை வாங்கிக் கொண்டு தோழர்களை காலையிலிருந்து காவல் நிலையத்தில் காத்திருக்க வச்சிருக்கீங்க. அந்த குண்டர்கள் தோழர்களை அசிங்கமாகத் திட்டியதோடு இல்லாமல் கும்பலைச் சேர்த்துக்கிட்டு மிரட்டியிருக்காங்க. அதற்கான புகாரையும் வாங்கிக் கிட்டு அத்தாட்சி கொடுங்க.” என்று வாதாடினார்கள்.

இதற்கிடையில் ஒரு உதவி ஆய்வாளர் வந்து, “ஏன் சார், இதப் பெருசு படுத்துறீங்க! பேசாம ‘இப்படி பிரச்சனை வந்துட்டுது, எங்கள மன்னிச்சுக்குங்க, இனிமே இப்படி நடந்துக்க மாட்டோம்’னு எழுதிக் கொடுத்திட்டு போங்க. நீங்களும் நீளமா ஒரு புகார் எழுதணுமா” என்று ‘நட்பு’டன் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“எந்தத் தப்பும் செய்யாத  நாங்க ஏன் மன்னிப்புக் கேட்கணும். அராஜகம் செய்த ரவுடிங்க மேலதான் புகார் பதிவாகணும். நாங்க சமூகத்துக்காக நியாயமான கருத்துக்கள பிரச்சாரம் செய்றோம். ரவுடிங்க புகாரை நீங்க வாங்கியிருக்கும் போது நாங்களும் புகார் கொடுக்கிறோம், வாங்கிக்கிட்டு அத்தாட்சி கொடுங்க” என்று சொல்லி தோழர்கள் நடந்த சம்பவங்களை எழுதி புகார் கடிதம் கொடுத்தார்கள்.

பின்னர் போலீசு தோழர்களின் செல்பேசி, மற்றும் பத்திரிகை விற்பனைப் பணம் ஆகியவற்றை முறையாக ஒப்படைத்தது.

இறுதியில் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சுமார் 4.30 மணியளவில்  தோழர்கள் வெளியில் வந்தனர்.  தோழர்கள் வெளியே வந்தால் அடித்து நொறுக்குவதாக சபதம் போட்டு இனோவாவிலும், ஸ்கார்ப்பியோவிலும் வந்து குதித்த ஷத்திரிய குல வீரர்களில் ஒருவனைக் கூட காணவில்லை. கடைசியில் பா.ம.க குண்டர் படை, தோழர்களின் அணிதிரட்டலுக்கு பயந்து சொல்லாமல் கொள்ளாமல் அஞ்சி ஓடிக் கொண்டது.

‘வன்னிய மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து, சாதி வெறியையும் கலவரங்களையும் தூண்டி விட்டு கட்சியை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கும் ஓட்டுப் பொறுக்கி ராமதாசையும், அந்தக் கட்சியை அண்டிப் பிழைக்கும் ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து உழைக்கும் மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்’ என்ற உறுதியோடு தோழர்கள் கலைந்தார்கள்.

___________________________
ஓவியம்  – நன்மாறன்
___________________________

படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் !

2

சென்னைக்கு அருகேயுள்ள பெருங்குடியில் கடந்த மாதம் 10-ஆம் தேதியன்று காலையில் சென்னை மாநகரப் பேருந்தும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டதில், அப்பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்துவந்த நான்கு இளம் மாணவர்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது; மேலும் மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.

பதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும். ஆனால், அரசு, முதலாளித்துவப் பத்திரிகைகள், போலீசு, நீதிமன்றம் என நம்மை ஆள்வோர் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு, இச்சம்பவத்தை ஏதோ எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட விபத்து போலவும், முக்கியமாக மாணவர்களின் சாகசக் கலாச்சாரத்தால் நேர்ந்துவிட்ட மரணமாகவும் சித்திரித்து, இறந்துபோன மாணவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னை மாணவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே, மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் ஏழை மாணவர்கள் மீது அக்கறை கொண்டவனைப் போல, பொது போக்குவரத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விசாரணையைத் தானே முன்வந்து தொடங்கியது, உயர் நீதிமன்றம். அவ்விசாரணையின்பொழுது, “இந்த விபத்து நடந்த பழைய மகாபலிபுரம் சாலையில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் 95 பேருந்துகளை இயக்குகிறோம். ஆனால், மாணவர்கள் எப்போதுமே கடைசிப் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். மேலும், அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்” என வாதிட்டார், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.

கொல்லப்பட்ட மாணவர்கள்
சாகசத்திற்காக அல்ல, பள்ளி-கல்லூரிக்குப் போவதற்காகப் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய நேரிட்டதால் உயிரைப் பறிகொடுத்த (இடமிருந்து) விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார்

இது அடுக்கமாட்டாத பொய் என்பது தினந்தோறும் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மாணவனுக்கும், தொழிலாளிக்கும் தெரியும். ஆனால், ஏ.சி. காரிலேயே பங்களாவிலிருந்து நீதிமன்றத்துக்கும், அங்கிருந்து சீட்டுகிளப்புக்கும் பயணம் செய்யும் நீதிபதிகளுக்குத் தெரியவில்லை. எனினும், அவர்கள் புத்தியிலும் பதியும்படி சென்னை போக்குவரத்து தொடர்பாக சில புள்ளிவிவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. “சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குவதாகவும், இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும்” அந்தப் புள்ளிவிவரம் கூறியது. மேலும், காரப்பாக்கம், சிறுசேரி, பெருங்குடி, அஸ்தினாபுரம் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுவது படுமோசம் என்றும் அம்பலப்படுத்தியது, ஹிந்து நாளிதழ்.

இதுவொருபுறமிருக்க, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குறைவான கட்டணத்தில் ஓடும் சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக, போக்குவரத்துக் கழகத்தின் நட்டத்தைக் குறைப்பது என்ற பெயரில், அநியாயக் கட்டணமுள்ள டீலக்ஸ் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெள்ளை போர்டு பேருந்துகள் குறைக்கப்பட்டன. இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் இந்த வெள்ளை போர்டு பேருந்துகளைத் தவிர, டீலக்ஸ் பேருந்துகளில் ஏறக்கூடாது என்ற கெடுபிடியும் உருவாக்கப்பட்டது. இப்படிக் குறைவாகப் பேருந்துகள் இயக்கப்படுவதால், 73 பேர் (48 பேர் அமர்ந்துகொண்டும், 25 பேர் நின்றுகொண்டும்) மட்டுமே பயணம் செய்ய வேண்டிய பேருந்தில் நெரிசல் நேரங்களில் 150 பேர் வரை பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கூட்ட நெரிசல்தான் மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் படிக்கட்டுப் பயணத்தைத் திணிக்கிறது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் பணக்கார, நடுத்தர வர்க்க மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு கார், ஆட்டோ, டூ வீலர், பள்ளிப் பேருந்து எனப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வீட்டிலிருந்து தொலைதூரத்திலுள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதற்கு மாநகரப் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மாணவனுக்கு உயிரைப் பணயம் வைத்துப் படிக்கட்டில் தொங்க வேண்டியதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது. நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளைத் துரத்திக்கொண்டு போய் ஏற வேண்டிய கட்டாயம் அவன் தலைக்கு மேல் தொங்குகிறது.

படிக்கட்டில் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது; உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடியது என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியாதா என்ன? ஆனால், நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த விதிமுறையை மீறாமல், உயிரைப் பணயம் வைக்கும் சாகசத்தில் இறங்காமல் வேறென்ன செய்ய முடியும்?

‘‘நாங்கள்லாம் உள்ளே போக ஆரம்பிச்சோம்னா கேர்ல்ஸ்ங்க, வயசானவங்க இவங்கள்லாம் ஃபுட்போர்டு அடிக்க வேண்டியிருக்கும்ணே. அடிக்கடி பசங்க ஃபுட்போர்டு அடிக்கிற மாதிரி பத்திரிகையில ஃபோட்டா போடுறீங்களே, காலியா இருக்குற பஸ்ல நாங்க ஃபுட்போர்டு அடிக்கற மாதிரி ஒரு போட்டாவை காண்பீங்க” என நக்கீரன் இதழ் நிருபரிடம் ஜெயக்குமார், கார்த்திக் என்ற இரு மாணவர்கள் கேட்டுள்ளனர்.

படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் மாணவர்கள் மீது மட்டுமா சுமத்தப்படுகிறது? சென்னை நகரில் ஓடும் மின்சார ரயில்களில் நெரிசல் நேரங்களில் நடுத்தர வயதினர்கூடத் தொங்கிக்கொண்டு போவதைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் படிக்கட்டில் மட்டுமல்ல, கூரை மீது உட்கார்ந்துகொண்டு பயணிகள் செல்வதையும் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். இவர்களையெல்லாம் சாகசம் செய்கிறார்கள் என மனம் போன போக்கில் குற்றஞ்சுமத்த முடியுமா?

அரசு, அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் ஒழிந்துவிடும் – எனக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். லாரி இடித்து நசுங்கிச் செத்துப் போன இந்த நான்கு மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது குடும்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தினுள் குடியிருந்து வந்தன. நகரத்தை அழகுபடுத்துவது, அடிக்கட்டுமானத்தை மேம்படுத்துவது, குடிசைகளை ஒழிப்பது – எனப் பல்வேறு சால்ஜாப்புகளைச் சொல்லி, அந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களை மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்களின் குடும்பங்களை நகரத்திற்கு வெளியே துரத்தியடித்தது, அரசு.

இப்படி அரசால் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் செம்மஞ்சேரி, பெருங்குடி, கண்ணகி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, போக்குவரத்து – என எந்தவொரு வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் இங்கு வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள குடும்பங்கள் வேலைக்கும், கல்விக்கும் பல கிலோமீட்டர் பயணம் செய்து நகரத்தின் மையத்திற்கு வந்து போவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கியிருந்தால், சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்தியிருந்தால், சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் படிக்கட்டு பயணத்தையும் அதனால் ஏற்படும் அநியாயச் சாவுகளையும் ஒழித்துவிட முடியும். ஆனால், தனியார்மயம்-தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கை இந்த இரண்டுக்குமே எதிராக இருக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபத்திற்காக அரசுப் பள்ளிகள் ஒழிக்கப்படுகின்றன. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள பன்னாட்டு மோட்டார் கம்பெனிகளின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது கைகழுவப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தை ஒழித்துக்கட்டி வரும் தனியார்மயம்-தாராளமயம்தான் மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் உயிரைக் குடித்திருக்கிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பறித்து வருகிறது. இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் விவசாயத்தை நாசப்படுத்தி, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவருகிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலைவாய்ப்பையும் தட்டிப் பறிக்கிறது; வறுமையையும் ஏழ்மையையும் தீவிரப்படுத்துகிறது. எனவே, இந்த நான்கு மாணவர்களின் மரணத்தை ஏதோ தனித்ததொரு அசம்பாவிதம் போலப் பார்க்க முடியாது; கூடாது என உணர வேண்டும்.

இந்த உண்மைகளையெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏறெடுத்துப் பார்க்கவோ, காது கொடுத்துக் கேட்கவோ தயாராக இல்லை. மாறாக, “பேருந்து படிக்கட்டில் இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்தால், பள்ளி, கல்லூரியை விட்டு மாணவனை நீக்க வேண்டும்” என அதிரடியாகத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் என்றால் மெத்தப் படித்த அறிவாளிகள் என நம் மீது ஒரு கற்பிதம் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களோ குரூரமும் கோமாளித்தனமும் நிறைந்த பாசிஸ்டுகள் என இந்த உத்தரவின் மூலம் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

————————–

மினி பேருந்துகடந்த டிசம்பர்-3 அன்று இரவு, கோத்தகிரியிலிருந்து கொட்டகம்பை என்ற ஊருக்குப் புறப்பட்ட மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோத்தகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிப்பதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தவர்களை அருகிலுள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த மினி பேருந்துகளை அதிவேகத்தில் இயக்கச் சொல்லி நிர்பந்திக்கும் முதலாளிகளின் இலாபவெறியே, நடைபெற்ற விபத்துக்கும் உயிர்ப்பலிக்கும் காரணம் என்பதை அம்பலப்படுத்தியும், இதுபோன்று அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்ற “மினி பேருந்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கு! கோத்தகிரி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்து!!” என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் பகுதி உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து, 07.12.2012 அன்று ஒருநாள் பகுதி அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது, இப்பகுதியில் செயல்பட்டு வரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்.

முதலில் முழுநாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்த கோத்தகிரி வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைமை, மினி பேருந்து முதலாளிகளின் அழுத்தம் காரணமாக கடையடைப்புக்கு தந்த ஆதரவை பின்னர் விலக்கிக்கொண்டது. வியாபாரிகள் சங்கத் தலைமையை அம்பலப்படுத்தி உடனடியாக பிரசுரம் தயாரித்து அனைத்து வியாபாரிகளிடமும் விநியோகித்து முழுநாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவைத் திரட்டியது, நீ.அ.தொ.சங்கம்.

வியாபாரிகள் சங்கத் தலைமை கடைகளைத் திறக்குமாறு மிரட்டல் விட்ட போதிலும், அதிகாரவர்க்கமும் போலீசும் நீ.அ.தொ.சங்கம் நக்சலைட் அமைப்பு என்று பீதியூட்டிய போதிலும் வணிகர்கள் முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விபத்தில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வியாபாரிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நீ.அ.தொ.சங்கத்தின் நியாயமான கோரிக்கைகள் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற முழக்கமாக மாறியிருக்கிறது. இவ்விபத்துக் குறித்து இதுவரை வாய்திறக்காத ஓட்டுக்கட்சிகளையும் வேலை செய்ய வைத்திருக்கிறது, இப்போராட்டம்.
– தகவல்: நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், கோத்தகிரி.

______________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
______________________________________________________

அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி !

5

ப்படி ஒரு வேலைக்கு ஆண்டுக்கு ரூ 1.25 கோடி சம்பளம் என்றால் எப்படி இருக்கும்?

காலை 9 மணி  அலுவலகத்துக்கு வந்து ரெட்இட் தளத்தை படிக்க  வேண்டும். சில பூனை வீடியோக்களை  பார்க்க  வேண்டும்

காலை 11.30 மணி    மதிய உணவு இடைவேளை

மதியம் 1 மணி       ஈபே நேரம்

மதியம் 2 மணி      பேஸ்புக், லிங்க்ட்-இன்

மாலை 4.30 மணி    நாள் இறுதி அறிக்கை நிர்வாகத்துக்கு அனுப்புதல்

மாலை 5 மணி     வீட்டுக்கு

இப்படி ஒரு கனவு வேலை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் சுயமுனைப்பு இருந்தால் அப்படி ஒரு வேலையை உருவாக்கிக் கொள்ளலாம். சில ஆண்டுகளாக இப்படி வேலை செய்து வந்த “பாப்” என்பவரைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப நிறுவனமான வெரிசான்.

ஆம், 40களின் நடுவிலான வயதுடைய “பாப்”, அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வாக சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரது ஆண்டு சம்பளம் $250,000 (சுமார் ரூ 1.25 கோடி). சற்றே வேலைப் பளு அதிகம் தான். ஆனால் “பாப்” இதை எளிமையாக கையாண்டார்.

“பாப்” வேலை செய்த நிறுவனம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு வசதியாக வி.பி.என். எனப்படும் மெய்நிகர் தனியார் இணைப்புச் சேவை (VPN)யை இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தியிருந்தது. நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு மே 2012ல் அந்த சேவை தொடர்பான கணினி பதிவுகளை ஆய்வு செய்ததில் சீனாவில் இருக்கும் ஷென்யாங்கிலிருந்து இந்த வசதி பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.

அதற்கு பயன்படுத்தப்பட்டிருந்த கணக்குக்கு உரிமையாளரான “பாப்” அலுவலகத்தில் கணினி திரையை நோக்கி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் C, C++, பெர்ல், ஜாவா, ரூபி, பி.எச்.பி., பைதான் போன்ற கணினி மொழிகளில் நிபுணர். நிறுவனத்தில் நீண்ட காலம் பணி புரிபவர். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான குடும்பப் பாங்கான மனிதர். அவருக்கு செல்லமாக “பாப்” என்று பெயர் சூட்டியிருக்கிறது வெரிசான்.

‘”பாப்”பின் கணினியில் புகுந்துள்ள ஏதோ ஒரு திருட்டு நிரல் மூலம் யாரோ சீனாவிலிருந்து தங்களது கணினி வலைக்குள் நுழைந்து விட்டார்கள்’ என்று அதிர்ச்சியடைந்த நிறுவனம் இதைப் பற்றி ஆராய்ந்து சரி செய்ய வெரிசான் ஆய்வாளர்களை உதவிக்கு அழைத்தது.

வெரிசானின் ஆய்வில், ‘சீனாவிலிருந்து வி.பி.என் பயன்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை’ என்று தெரிந்தது. கைவசம் இருந்த 6 மாத கணினி பதிவுகளின் படி குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு இது நடந்து வந்திருக்கிறது. “பாப்”பின் கணினியில் ஏதாவது நச்சு நிரல் புகுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தது வெரிசான். அதற்காக கணினியில் அழிக்கப்பட்டு ஆனால் இன்னும் மறுபடியும் பயன்படுத்தப்படாத சேமிப்பிலிருந்து அழிக்கப்பட்ட பழைய கோப்புகளை மீட்ட போது ஷென்யாங்கில் இருக்கும் ஒரு சீன நிறுவனத்துக்கு அனுப்பிய நூற்றுக் கணக்கான இன்வாய்ஸ்களை கண்டுபிடித்தது வெரிசான்.

அதாவது, “பாப்” அவருக்குக் கொடுக்கப்படும் வேலையை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டார்- அந்த வேலையைச் செய்ய வருடத்திற்கு $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) சீன நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்.

இதனால் நிறுவனத்துக்கு நடக்க வேண்டிய வேலைகளில் எதுவும் பாதிப்பில்லைதான். கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மிகச் சிறந்த மதிப்பீடுகள் கிடைத்திருக்கின்றன. அவரது நிரல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன; தெளிவாக இருந்தன; நேரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு காலாண்டிலும் அவர் அந்த அலுவலகத்தின் மிகச் சிறந்த நிரலாளர் என்று பாராட்டப்பட்டிருந்தார்.

வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் “பாப்”பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது. நியாயமாக பார்த்தால் “பாப்”புக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால், முதலாளித்துவ அறம் இதை குற்றம் என்கிறது. வெரிசானின் இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு “பாப்” வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

பூனை

பாப் இந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் குறைந்த கூலிக்கு வெளிநாடுகளில் வேலைகளை செய்து வாங்குவதை முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தன.

இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்த வெரிசானின் வேலன்டைன் என்ற அதிகாரி ‘”பாப்” போல இன்னும் பலர் இது போன்று செயல்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்’ சொல்லியிருக்கிறார். சீனாவிலிருந்து நேரடியாக அலுவலகத்தில் இணைக்கச் சொல்லாமல் தனது வீட்டுக் கணினி மூலமாக வழி நடத்தியிருந்தால் “பாப்” கூட பிடிபடாமல் தப்பித்திருந்திருக்கலாம்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஊழியர்களுக்கு சரியான கூலி, 8 மணி நேர வேலை, ஊக்கத் தொகை, வசதியான வேலைச் சூழல் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க வேண்டும். ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடக் கூடாது என்பதற்காக பல சலுகைகளை கொடுத்து உழைக்கும் வர்க்கத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்க வேண்டியிருந்தது. கம்யூனிசம் வந்து விடக் கூடாது என்று உழைப்பவர்களுக்கு வசதிகளை கொடுத்து வைத்திருந்தால் போராட்டங்களையும் புரட்சியையும் தவிர்த்து விடலாம். ஆனால் முதலாளித்துவத்தின் புனிதமான லாப வேட்டைக்கு அது மிகப்பெரிய ஆப்பாக இருந்தது.

அதைத் தாண்டுவதற்கு உலகமயமாக்கல் முதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுத்த வழி, ‘குறைந்த கூலிக்கு, மோசமான பணிச் சூழலில், அடிமைகளைப் போல், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, வளரும் நாடுகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி தேவையான வேலைகளை செய்து வாங்கிக் கொள்வது.’ அமெரிக்காவில் ஒரு சேவையை உருவாக்கும் செலவில் பல மடங்கு குறைவாக சீனாவிலோ, இந்தியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ வேலையை முடித்து வாங்கி விடலாம். கிளம்பினார்கள் முதலாளிகள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலைகள் குறைந்தன, சீனாவிலும் இந்தியாவிலும் மனிதத்தன்மை குறைந்தது. முதலாளிகளின் உற்பத்தியும் லாபமும் உயர்ந்தது.

பன்னாட்டு நிறுவனங்களின் அவுட்சோர்சிங்கை கிண்டல் செய்து ஆனியன் இணைய தளம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடியோவை தயாரித்திருந்தது.

அந்தக் கேலி படத்தை நடைமுறையாக மாற்றியதுதான் “பாப்”பின் திறமை. இதையே அந்த நிறுவனம் செய்திருந்தால் அது பொருளாதாரத் திறமை. “பாப்” செய்ததால் துரோகம். அந்த நிறுவனம் இனி வரும் காலத்தில் ருசிகண்ட பூனையாக, தானே இதைத் தான் செய்யப் போகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெருமளவு லாப வேட்டைக்காக நடத்தும் சுரண்டலைப் போல “பாப்” சிறு அளவில் சுரண்டி இருக்கிறார். அழுகிப் போயிருக்கும் முதலாளித்துவம் தன் அழுகிய காயங்களை வெளியே காட்டிகொண்டிருகிறது. பாப் அந்த அழுகலின் ஒரு பக்கம் மட்டும்தான்.

‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள்.

_____________________________________________

– ஆதவன்

_____________________________________________

மேலும் படிக்க

செய்தி ஊடகம் இந்துமதத்தை இழிவுபடுத்துகிறதாம் !

68

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 27

“இன்று இந்துக்கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம், புனிதநூல்களைத் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் கிண்டல் பண்ணுகிறார்கள்.  கிறித்தவ பாதிரிகள், முசுலீம் மௌல்விகள் என்றால் பெரிய மகாத்மா போலவும், கோயில் பூசாரிகள் – இந்துத் துறவிகள் கயவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் எந்தக்கருத்தும் வராமல் தடை செய்ய வேண்டும். அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.”

– “இந்துக்களுக்கு உரிமைகிடையாதா?” – இந்துமுன்னணிவெளியீடு.

இந்து தர்மம், பண்பாட்டை யாரும் வெளியிலிருந்து மெனக்கெட்டு கிண்டல் பண்ணத் தேவையில்லை; வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், ஸ்தோத்திரங்கள் இவற்றையெல்லாம் இந்து முன்னணியே மலிவு விலையில் அச்சடித்து வெளியிட்டாலே போதும். கடவுளர்கள் உருவான கதை, ஊடல் – கூடல் -ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா – ஊர்வசி – மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன் – விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள். அப்படித் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்து மதவெறியர்களும் – உபந்நியாசம் செய்பவர்களும் இந்து தர்மம் – பண்பாடு பற்றி பூடகமாகவும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் புதுக்கவிதை பாணியில் புரியாமலும் பேசி வருகிறார்கள்.

”நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ” என்று சித்தர்கள் அன்று கேட்டார்கள். புத்தர், மகாவீரர், சார்வாகர், நியாயவாதிகள், மீமாம்சவாதிகள், பூதவாதிகள் என்று பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய அனைவரும் ‘இந்து தர்மத்தை’ புரியும்படி மக்களிடம் விளக்கியதற்காகவே ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய இலக்கியங்களும் பெருமளவு அழிக்கப்பட்டன.

தற்காலத்தில்  அம்பேத்கரும், பெரியாரும் இதைச் செய்ததற்காகவே இந்து மதவெறியர்களால் கேவலமாக ஏசப்படுகிறார்கள். ”எல்லாம் இறைவன் செயல் என்றால் கொலை கொள்ளை எவன் செயல்?” என்ற திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு, ‘எல்லாம் மனிதச் செயல் என்றால் ஈ.வெ.ராவிற்கும் மணியம்மைக்கும் குழந்தையில்லையே ஏன்?’ என்று இந்து முன்னணி தனது வெளியீடு ஒன்றில் பதிலளித்திருக்கிறது. இதுபோக ‘பெரியாரைக் கொளுத்துவோம்’ என இராம.கோபாலன் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது என்றால் அதன்பின்னே வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் டன் கணக்கில் உள்ளது.

ஆகவே, ‘இந்து தர்மத்தை’ அம்பலப்படுத்தும் அதாவது இழிவுபடுத்தும் அனைவரும் இன்றுவரை ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை. ‘இந்து தர்மத்தை’ விமரிசிப்பதற்கெதிரான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஏதோ புதிதாக விதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோருவதன் பொருள் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

அடுத்து வானொலி – வானொளியில் இந்து மதம் இழிவுபடுத்துப்படுகிறது என்பது உண்மையா? நிச்சயம் கிடையாது.

திப்புசுல்தான் வாள்இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இராமானந்த சாகரின் இராமாயணம், சோப்ராவின் மகாபாரதம், சாணக்கியன், ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமான், சிவமகாபுராணம் முதலான ஏராளமான புராணக் கதைகள் தூர்தர்சனிலும், தனியார் அலைவரிசைகளிலும், இந்தி மற்றும் தேசிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.

மேலும் விநாயகர் ஊர்வலம் பம்பாயிலிருந்தும், கிருஷ்ண ஜெயந்தி மதுராவிலிருந்தும், தியாகய்யர் உற்சவம் திருவையாற்றிலிருந்தும், அமர்நாத் யாத்திரை ஜம்முவிலிருந்தும், ஜெகந்நாதரின் தேரோட்டம் பூரியிலிருந்தும், தசரா ஊர்வலம் மைசூரிலிருந்தும், காளி பூஜை கல்கத்தாவிலிருந்தும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலிருந்தும், ஓணம் ஊர்வலம் திருவனந்தபுரத்திலிருந்தும், மகர விளக்கு ஐயப்பன் கோவிலிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகள் வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. இவைகளுக்காகப் பலகோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஒலி – ஒளிபரப்பு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய சலுகை ஏனைய மதங்களுக்குக் கிடையாது. மேலும் ராமனைக் கசிந்துருகும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளானாலும் சரி, மாணவர்களின் தமிழ்ப்பாட நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெறும் திருவாசகமானாலும் சரி பார்ப்பனியத்திற்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் நூற்றிலொரு பங்கு கூட முசுலீம் – கிறித்தவ மதங்களுக்குக் கிடையாது.

காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த இந்திய அரசர்களில் முதன்மையானவன் திப்பு. அவன் பிறப்பினால் ஒரு முசுலீம் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் திப்புவைக் கட்டோடு வெறுக்கிறது. ‘திப்பு சுல்தான்’ தொடரை ஒளிபரப்பியதற்காக பல தூர்தர்சன் நிலையங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. அதன்பிறகு தொடருக்கு முன்னால் ”இது உண்மைக் கதையல்ல, கற்பனைச் சம்பவங்கள் நிறைந்தவை” என்ற அறிவிப்போடு பல சமரசங்களுடன்தான் திப்புவின் தொடர் ஒளிபரப்பானது. ”திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.

’47 பிரிவினையின் போது நடந்த இந்து – முசுலீம் கலவரப் பின்னணியை வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘தமஸ்’ தொடரையும் இந்துமத வெறியர்கள் எதிர்த்தனர். பார்ப்பன இந்து மதம் விதவைகளை எப்படிக் கேடாக நடத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்ட தீபாமேத்தாவின் ‘வாட்டர்’ படப்பிடிப்பையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடை செய்திருக்கிறது. சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான்.

இந்தியாவின் திரையுலகமும் கூட பார்ப்பனியத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்ட ஊதுகுழலாகத்தான் இருக்கின்றது.

இந்தித் திரையுலகைக் கட்டுப்படுத்துவது பால்தாக்கரேவின் சிவசேனா கும்பல்தான். ‘ரோஜா’ படத்தில் காசுமீர் முசுலீம் மக்களைக் கேவலப்படுத்திய மணிரத்தினம், ‘பம்பாய்’ படத்திலும் முசுலீம்களைக் கலவரக்காரர்களாக உண்மைக்கும் புறம்பாகச் சித்தரித்ததனாலேயே தாக்கரேயின் பாராட்டையும், அனுமதியையும் பெற்றார்.  மணிரத்தினத்தின் இத்தகைய படங்கள் தூர்தர்சனின் ஏதோ ஒரு அலைவரிசையால் மாதந்தோறும் இப்போதும் திரையிடப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பை வைத்து முசுலீம்களை பயங்கரவாதிகளாக – வில்லன்களாகக் காட்டும் படங்கள் தற்போது ஏராளம் வருகின்றன. முசுலீம்களையும், கம்யூனிஸ்டுகளையும் கேவலப்படுத்தி ஹாலிவுட்டில் 80-களில் வந்த படங்களின் போக்கிற்கு இணையானது இது.

விஜயகாந்த், அர்ஜுன் போன்றோரது ‘தேசபக்தி’ப் படங்களிலும், தெலுங்கின் மசாலாப் படங்களிலும், அவ்வளவு ஏன் கடவுளைக் கேலி செய்து வெளிவந்த வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படத்திலும் ‘பின்லேடன்’தான் வில்லன். தாடியும், குர்தாவும், கண்களில் தெறிக்கும் வெறியும் கொண்ட முசுலீம் பயங்கரவாதிகளாய் இவர்கள் காட்டப்படுகிறார்கள். மேலும் முசுலீம் கிறித்தவப் பெயர் கொண்டவர்களே கடத்தல்காரர்களாகவும், சட்ட விரோதத் தொழில் செய்பவர்களாகவும் திரைப்படத்தில் தோன்றுவது இந்தியத் திரை மரபாகவே நிலைபெற்று விட்டது. பார்ப்பனியத்தின் பண்பாட்டை ஆதரிப்பவரே நல்ல முசுலீம் – கிறித்தவராகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

திராவிட இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும், சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். தி.மு.க.வின் முன்னாள் கொ.ப.செ.யான ராஜேந்தர் தீவிரமான ஆஞ்சநேய பக்தர், பக்திப் படங்களை மாதம் ஒன்று என எடுத்துத் தள்ளும் இராம நாராயணன் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தன் மகனுக்கு ‘பிரபாகரன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தவரும், தனது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பாராட்டியதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவருமான நடிகர் விஜயகாந்த், ஒரு மாதிரி தேசியம் கலந்த தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக் கொள்பவர். ‘கள்ளழகர்’ தொடங்கி பின்னர் வெளிவந்த ‘நரசிம்மா’ வரை இராம.கோபாலனுக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த். ‘நரசிம்மா’ படத்தில் ”இந்தியாவில் ஒரு முசுலீம், ஜனாதிபதியாக, கிரிக்கெட் காப்டனாக மாறமுடியும், உங்க பாகிஸ்தானில் ஒரு இந்து வரமுடியுமா? இங்கே ஏராளம் மசூதிகள் கட்ட முடியும், உங்க பாகிஸ்தானில், இந்துக் கோவில்கள் கட்ட முடியுமா?” என்று ஒரு காசுமீர் முசுலீம் ‘தீவிரவாதியிடம்’ விஜயகாந்த் வாதிடுகிறார்.

எனவே, தமிழ்த் திரையுலகின் மணிரத்தினம், விசு, பாலசந்தர், ஜீ.வி., சங்கர், கமலஹாசன், பாலகுமாரன், சுஜாதா, வாலி போன்ற பார்ப்பனர்களானாலும், விஜய்காந்த், பாரதிராஜா, எஸ்.தாணு, இளையராஜா, வைரமுத்து போன்ற சூத்திர – பஞ்சமர்களானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து தேசபக்த – பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்டவர்கள்தான். பிரபல பின்னணிப் பாடகியான சித்ரா சென்னை ஆர்.எஸ்.எஸ். குரு பூஜையில் வருடந்தோறும் பாட்டுப் பாடுகிறார். கௌதமி, எஸ்.வி.சேகர், விசு, விஜயசாந்தி, சத்ருகன்சின்ஹா, விக்டர் பானர்ஜி என இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பா.ஜ.க.வில் குவிந்து கிடக்கின்றனர். இராமாயணத் தொடரில் இராமன், சீதையாக நடித்த நடிகர்கள் கூட பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் மற்றும் மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்யும் ‘டாக்குமென்டரி’ பட உலகிலும் இந்து மதவெறியர்களை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது.

அத்வானியின் ரத யாத்திரையை வைத்து இந்து மதவெறியர்கள் நடத்திய ‘ராமஜென்ம பூமி’க் கலவரங்களைப் பதிவு செய்து ‘கடவுளின் பெயரால்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன. அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என்ற அரசு உத்தரவை முறியடிக்க அவர் 8 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. அதேபோல ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணை உடன்கட்டையேற்றிக் கொன்ற பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தைப் பதிவு செய்து ஒரு குறும்படமாக்கிய 5 பெண் பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைமைதான். போலீசு நடத்திய வெறியாட்டத்திற்குப் பிறகு, கொடியங்குளத்தின் அவலத்தை வீடியோவில் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் திரையிட்டது ‘புதிய தமிழகம்’ கட்சி. அதைக்கூட தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டவர் இந்து முன்னணி இராம.கோபாலன்.

இப்படி காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல, செய்தி ஊடகத்திலும் பார்ப்பனியமே தலைதூக்கித் துரத்துகிறது. இந்தியாவின் அநேக மாத, வார, நாளிதழ்கள் பார்ப்பன – மேல்சாதியினரிடமே இருப்பதால் இந்து மீட்புவாதத்திற்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் கோட்டையாக அவை விளங்குகின்றன. ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம், வார – மாத ராசி பலன்கள், சாமியார்களின் அருளுரைகள், கோவில் யாத்திரைகள் எல்லாம் இந்தப் பத்திரிகைகளில் நிரம்பி வழியும். எல்லா மதத்தினரும் வாங்கிப் படிக்கும் குமுதம், விகடன் வகையறாக்கள் தீபாவளிக்கு மூன்று புத்தகங்கள் வெளியிடும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்காக மூன்று பக்கங்களைக் கூட அதிகரிக்காது.

உள்நாட்டு – வெளிநாட்டு சினிமா கிசுகிசுக்கள் நிரம்பி வழியும் தினமலரின் வாரமலர் பக்கங்களில் கீழே ராமகிருஷ்ண பரமஹம்சரது பொன்மொழிகள் தவறாமல் இடம் பெறும். ‘பொய்யே உன் பெயர்தான் தினமலரா’ என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஜெலட்டின் குச்சிகளும், ஐ.எஸ்.ஐ. உளவாளிகளும் நிரம்பி வழிவதாக இப்போதும் கூசாமல்  எழுதுகிறது தினமலர். பா.ஜ.க.வின் அரசியலை ஆதரிப்பதற்குத் தனது தலையங்கப் பக்கத்தையே ஒதுக்கியுள்ளது தினமணி. தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, இந்தியாடுடே போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்து மதவெறியர்களுக்கு நேரடிப் புரவலராக இருக்கும் தினமலர், பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிகையான காலச்சுவட்டிற்கும் புரவலராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது அலுவலகத்திலேயே பெருமையுடன் விற்பனை செய்யும் ஜெயமோகனின் ‘விஷ்ணு புரம்’ நாவலுக்கு பணஉதவி செய்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். கோக் – பெப்சி முகவராக இருக்கும் மகாலிங்கத்தின் கல்லூரிகளில்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் பயிற்சி முகாம்கள் இன்றும் நடக்கின்றன. ”எங்கே பிராமணன், மகாபாரதம், இராமாயணம்” இவற்றை வைத்தே ‘அரசியல்’ பத்திரிகை நடத்தும் ‘சோ’ தனது பா.ஜ.க. விசுவாசத்திற்குப் பரிசாக ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றார். இவரைப்போலவே இந்து மதவெறியரின் பத்திரிகையாளராக இருந்த அருண் சோரி – இன்று அமைச்சர் பதவியையே பரிசாகப் பெற்றிருக்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில – இந்தி நாளேடுகள் பல பாபர் மசூதி இடிப்பிலும், மண்டல் கமிசன் பிரச்சினையிலும், பா.ஜ.க.வின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டன. முலாயம்சிங் முதலமைச்சராக இருந்தபோது 90-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அயோத்தி கரசேவை கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தி வெளியிட்ட ஆஜ், தைனிக் ஜாக்ரண், சுதந்திர சேத்னா, சுதந்திர பாரத் எனும் 4 இந்தி இதழ்கள் ‘இந்திய பிரஸ் கவுன்சிலினால்’ கடும் கண்டனம் செய்யப்பட்டன. இக்கண்டனத்தைக் கூட ஏனைய தேசியப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து விட்டன.

சட்டரீதியில் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டாலும் செய்தி ஊடக நிறுவனங்களில் இயல்பாக உள்ள ‘இந்து’ ஆதிக்கம் சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்துகிறது. போட்டி மதவாதம் எழுவதற்கு இத்தகைய இந்து செய்தி நிறுவனங்களும் ஒரு காரணமாகின்றது.

மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி – செய்தி – பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?

– தொடரும்

__________இதுவரை____________

இளந்தளிர்களை பலி கொண்ட வன்னிய சாதிவெறி

6
சேத்தியாத்தோப்பு மறியல்
காடுவெட்டி குரு - ராமதாஸ் உள்ளிட்டு, கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சேத்தியாத்தோப்பு - சிறீமுஷ்ணம் பகுதியில் நடந்த போராட்டம் (உள்படம்) கோபாலகிருஷ்ணன்

ருமபுரி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதலைத் தொடுத்த கையோடு, ராமதாசு தலைமையிலான ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கக்கிவரும் சாதிவெறித் தீ ஆங்காங்கே அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்கி வருகிறது.

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு, சென்னிநத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோபாலகிருஷ்ணனும், பரதூர் கிராமம் வன்னிய சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி துர்காவும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். கடந்த 12.12.12 அன்று துர்கா அழைத்ததன் பேரில் அவரைச் சந்திக்க சேத்தியாதோப்பு சந்தைக்குச் சென்ற கோபாலகிருஷ்ணன், அதன்பின் வீடு திரும்பவே இல்லை.

சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், 19-12-12 அன்று பரதூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளியக்குடி ஓடையில் கழுத்தறுக்கப்பட்டு, நாணல் கொண்டு சகதிக்குள் திணித்து வைக்கப்பட்ட நிலையில் கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

“கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும். அதுவரை கோபாலகிருஷ்ணனின் சடலத்தை வாங்க மாட்டோம்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னிநத்தம் கிராம மக்களை அணிதிரட்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இப்போராட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துப் பங்கெடுத்துக் கொண்டன.

சேத்தியாத்தோப்பு மறியல்
காடுவெட்டி குரு – ராமதாஸ் உள்ளிட்டு, கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சேத்தியாத்தோப்பு – சிறீமுஷ்ணம் பகுதியில் நடந்த போராட்டம் (உள்படம்) கோபாலகிருஷ்ணன்

இதன்பின், கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்யப் போவதாகப் போக்குக் காட்டிய போலீசு, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், துர்காவின் 75 வயதான பாட்டி கனகவல்லியைக் கொலைவழக்கில் கைது செய்து ஏய்க்க நினைத்தது. போலீசின் தகிடுதத்தத்தைப் புரிந்துகொண்ட சென்னிநத்தம் கிராம மக்கள், “உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சடலத்தை அடக்கம் செய்யமாட்டோம்” என மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.

‘‘இப்படுகொலையை இரு குடும்பத்தின் பிரச்சினையாகச் சுருக்கி வழக்கை முடிக்க நினைக்கிறது, போலீசு. வன்னிய ஆதிக்க சாதிவெறி தூண்டிவிடப்பட்டதன் விளைவாக நிகழ்ந்துள்ள படுகொலைதான் கோபாலகிருஷ்ணன் மரணம்” என்பதை அம்மக்களிடையே வலியுறுத்திப் பேசினார், ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்குரைஞர் ராஜு.

சென்னிநத்தம் கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தையின் புகார் மனுவை வாக்குமூலமாகப் பதிவு செய்து கொண்டது போலீசு. இதனையடுத்து 21-12-12 அன்று சென்னிநத்தம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங், பெண்ணாடம் திருவள்ளுவன், மனித உரிமைக் கட்சி விஸ்வநாதன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் அமைப்பாளர் அரங்க. குணசேகரன் உள்ளிட்டோர் நீதி கேட்டு சென்னிநத்தம் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் இறுதிவரையிலும் உடனிருந்ததோடு, கோபாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றனர்.

கோபாலகிருஷ்ணனின் படுகொலை மட்டுமல்ல; குறிஞ்சிப்பாடி அருகில் பாச்சாரபாளையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னியப் பெண்ணைப் பார்த்து முடி ஒரிஜனலா, டூப்ளிகேட்டா எனக் கேலி செய்ததாகக் கூறி, 10-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகளை கொளுத்தினர், வன்னிய சாதிவெறியர்கள். பண்ருட்டியில் மாணவி பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண், தனது தோழியின் காதல் திருமணத்திற்கு உதவினார் என்பதனால், அவ்விளம்பெண் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு குளத்தில் சடலமாக வீசியெறியப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கண்ணன், வன்னியப் பெண் காயத்ரியைக் காதலித்த விவகாரத்தில், போலீசும் வன்னிய சாதிவெறியர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு காதலர்களை மிரட்டிப் பிரித்தனர். “நீ தற்கொலை செய்து கொள்; இல்லையேல் உன் காலனியைக் கொளுத்திவிடுவோம்” என கண்ணன் மிரட்டப்பட்டதால், அவர் 29.12.2012 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

சாதி – தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இத்தருணத்தில், அதற்கு எதிராகவும் சாதி ஆதிக்கத்தைப் புதுப்பிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார், குச்சு கொளுத்தி ராமதாசு. அவரது தலைமையில் அணிதிரண்டுள்ள அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற சாதிவெறி பிடித்த கிரிமினல் கும்பலை மோதி வீழ்த்தாவிட்டால், இருண்ட காலத்திற்குள் தமிழகம் தள்ளப்படும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,

விருத்தாசலம்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________

அறிவை விடுதலை செய் ! ஆரன் ஸ்வார்ட்ஸ் தற்கொலை !!

7

மெரிக்காவைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ஆரன் ஸ்வார்ட்ஸ் நியுயார்க்கில் உள்ள தன் வீட்டு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணினி நிபுணர், இணைய அறிவாளி, இணைய போராளி என்று பன்முகம் கொண்ட ஸ்வார்ட்ஸை, கார்ப்பரேட் அமெரிக்காவின் வெறிபிடித்த கணினி தொடர்பான குற்றங்கள் சட்டம் கொன்றே விட்டது.

ஸ்வார்ட்ஸ், இன்று இணையத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும்; இணையதளங்களில் வெளியாகும் புதிய பதிவுகளை பின் தொடர உதவும்; ஆர்எஸ்எஸ் (RSS) தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். திறந்தவெளி நூலகம் மற்றும் இன்னும் பிற இணைய சேவை நிறுவனங்களின் பங்குதாரர். இணைய தனிநபர் சுதந்திரம், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், அறிவுசார் சொத்துடமை எதிர்ப்பு போன்றவற்றிற்காக போராடி வந்தார். இதற்கு ஆதரவான இணைய குழுக்களில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய “முன்னேற்றத்தை கோருவோம் (Demand Progress) என்ற அமைப்பு அமெரிக்காவின் இணைய தணிக்கை சட்டங்களான சோப்பா/பிப்பாவுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வந்தது.

“அறிவுசார் ஆவணங்கள் சில தனியார் நிறுவனங்களின் லாபவெறிக்கு மட்டும் பயன்படுவது தவறு, அது அனைவருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்” என்பது அவரது கருத்து.

போராளி ஆரன் ஸ்வார்ட்ஸ்
போராளி ஆரன் ஸ்வார்ட்ஸ்

அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுடன் தொடர்புடைய  ஆவணங்கள், பிற ஆய்வாளர்களின் கட்டுரைகள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்களை படிக்க வேண்டிய தேவை உள்ளது. இவையனைத்தும் ஒருங்கே கிடைக்கும் இடம் தான் ஜே-ஸ்டோர் (JSTOR) எனும் இணையதளம். பெருமளவு பணச் செலவில்தான் இதன் உறுப்பினராகி ஆவணங்களை பயன்படுத்த முடியும். $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) வரை ஆண்டு சந்தா செலுத்தி பெரிய ஆய்வு பல்கலைக் கழங்கள் ஜே-ஸ்டோரிலிருந்து அறிவியல் ஆவணங்களை பெற்றுக் கொள்கின்றன.

அப்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சென்டர் பார் எதிக்ஸ் துறையில் ஆய்வு மாணவராக செயல்பட்டு வந்த ஸ்வார்ட்ஸ் ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் உலகில் உள்ள அனைத்து ஆய்வாளர்களுக்கும் பயன் தர வேண்டும், மாறாக அதை காப்புரிமை என்ற பெயரில் ஜே-ஸ்டோர் நிறுவனம் லாபவெறியுடன் பதுக்கி வைக்கிறது’ என்று அதை எதிர்த்து வந்தார்.

‘2010 செப்டம்பரிலிருந்து 2011 ஜனவரி வரை அதே வளாகத்தில் இருக்கும் எம்.ஐ.டி. பலகலைக் கழக கணிணி நெட்வொர்க்கில் தன் மடிக்கணியை இணைத்து எம்.ஐ.டி. நெட்வொர்க் வழியாக ஜே-ஸ்டோரில் இருந்து பல லட்சம் ஆவணங்களை தரவிறக்கினார்’ என்று அவர் மீது மசாச்சுசெட்ஸ் மாவட்ட நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2011 ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப் பத்திரிகை, ஆவணங்களை கோப்புகள் பகிர்ந்து கொள்ளும் இணைய சேவைகள் மூலம் வினியோகிக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியது.

அறிவுசார் ஆவணங்கள் மீதான காப்புரிமையை உறுதிசெய்து, அவற்றை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபமீட்டுவதற்கும், இணையத்தில் ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை தவிர்க்கவும், அதற்காக இணைய வெளி கண்காணிப்பை அதிகப்படுத்தவும் அமெரிக்க அரசு மேலும் மேலும் கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அந்த சட்டங்களையும் அறிவுசார் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் தடைகளையும் எதிர்த்த அவரது போராட்டமே இறுதியில் ஆரன் ஸ்வார்ட்சின் உயிரை பறித்து விட்டது.

தகவல் தொடர்பு இணைப்பு மோசடி, கணினி மோசடி, பாதுகாக்கப்பட்ட கணினியிலிருந்து சட்ட விரோதமாக தகவல்களை பெற்றது, பாதுகாக்கப்பட்ட ஒரு கணினியை சேதப்படுத்தியது, போன்ற பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த ஸ்வார்ட்ஸ் 1 லட்சம் டாலர் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளியில் வந்து வழக்கு நடத்திக் கொண்டிருந்தார். இந்த பிரிவுகளில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலையில் ஸ்வார்ட்ஸ் கடந்த ஜனவரி 10-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்வார்ட்ஸ் செய்த இணைய அதிர்வை அவர் நிஜத்தில் செய்திருந்தால் சில நூறு டாலர் அபராதம் கட்டி விட்டு வெளிவந்திருக்கலாம். உண்மையில் சொல்லப் போனால் ஸ்வார்ட்ஸ் செய்த இந்தச் செயலால் ஜே-ஸ்டோர் நிறுவனத்திற்கு 1 ரூபாய் கூட இழப்பு ஏற்படவில்லை. ஆனால் ஸ்வார்ட்சின் செயல் மற்றவர்களால் தொடரப்பட்டால் காப்புரிமை என்ற கட்டமைப்பே உடைக்கப்பட்டு, அதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சம்பாதிக்கும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபம் பாதிக்கப்படும்.

கணினி தொடர்பான குற்றங்களுக்கு அமெரிக்காவில் 30 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை என்றால், தமிழ்நாட்டில் 1 வருடம் பிணையில் வெளிவர முடியாத குண்டர்கள் சட்டம், ஃபேஸ்புக்கில் லைக் போட்டதற்காக சிறை என்று இணைய உலகம் அதிகாரவர்க்கத்தின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறிது காலம் முன்பு வரை பெரிய அளவு கண்டுகொள்ளப்படாமல் இருந்த இணைய மெய்நிகர் உலகம் இன்று மெய் உலகைவிட அதிகமான கண்காணிப்புக்கும் அடக்குமுறைக்கும் அரசாங்கங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளது. ‘இணையத்தில் குழுக்கள் ஏற்படுத்தி போராடுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம்’ என்று செயல்பட்ட ஸ்வார்ட்சும் நடைமுறை உலகின் நிதர்சனங்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

சோப்பா இணையம்
டூன்பூல்

போலியோ தடுப்பு மருந்தை கன்டுபிடித்த மருத்துவர் ஜான் சால்க் அதை காப்புரிமை செய்ய மறுத்தார். ‘அது அனைத்துலக மக்களுக்கும் பயன்பட வேண்டும் அதை காப்புரிமை செய்து லாபமீட்ட முடியாது’ என்றார், மேலும் ‘நீங்கள் சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா’ என்றார்? ஆனால் வேம்பு முதல் எலுமிச்சை வரை அனைத்தையும் காப்புரிமை செய்து அவற்றை பயன்படுத்தும் மக்களிடம் பணமீட்டி லாபமடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறது முதலாளித்துவம்.

மனிதன் அவன் பெற்ற அனுபவங்களை வாய்வழி கடத்தி, பின் ஓலைகள், குகை ஓவியங்கள், காகிதம், புத்தகம் என அறிவை பகிர்ந்து கொண்டு அறிவு திரட்டல்களின் முழுத் தொகுப்பை பயன்படுத்தி மேலும் மேலும் வளர்கிறது மனித சமுகம். ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு அவரால் மட்டும் நடத்தப்பட்ட ஒரு சாதனை அல்ல, அது இது நாள் வரை அந்தத் துறையில் உழைத்த எண்ணற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதற்கு உதவி செய்த உதவியாளர்கள் என இனம், மொழி மதம், நாடு கடந்த கூட்டு உழைப்பின் விளைவு. மொத்த உழைப்பின் விளைவையும் ஒருவர், ஒரு சில நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுவதும் அதை வைத்து மற்றவர்களுக்கு அறிவுசார் தகவல்களை மறுப்பதும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வக்கிரம்.

லாபவெறி, சுரண்டல், ஆதிக்கம் என்பதை எல்லாம் தாண்டி அறிவியல் வளர்ச்சியையே அறிவுசார் சொத்துடமை முடக்குகிறது என்பது நிதர்சனம். பணம் படைத்தவர்கள் மட்டுமே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட முடியும் என்ற நிலையும், அறிவியல் வளர்ச்சியில் பரந்து பட்ட ஆய்வாளர்களின் பங்கெடுப்பு தடுக்கப்படுவதும் அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

ஒரு காலத்தில் அறிவியல் திருச்சபைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது வளர முடியாமல் தவித்ததும், பின்பு பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அறிவியல் விடுவிக்கப்பட்டதும் வரலாறு. கருத்து ரீதியான தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிவியல் இன்று முதலாளிகளின் தனிச்சொத்து, பணம் என்ற தடைகளால் முடக்கப்பட்டுள்ளது. இந்த தளைகளை பாட்டாளி வர்க்கம் உடைக்கும் போதுதான் மனித சமூகத்தின் உண்மையான முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகும்.

அத்தகைய அரசியல் விடுதலை வராத வரை ஸ்வார்ட்ஸ் போன்ற இளைஞர்களை நாம் காப்பாற்ற முடியாதா?

மேலும் படிக்க

அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

19
திருமா ராமதாசை கௌரவிக்கிறார்
குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)

மிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என்று விடுதலைச் சிறுத்தைகளால் கொண்டாடப்பட்ட ராமதாசு, தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறியர்கள் அனைவருக்கும் தலைவராக அவதரித்திருக்கிறார். “அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை” என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தையும், வன்கொடுமை தடைச் சட்டத்தையும் எதிர்த்து ராமதாசு சண்டமாருதம் செய்கிறார். திருமாவளவனோ, “ராமதாசு என்னைச் சட்டையைப் பிடித்து இழுத்தாலும் நான் சண்டைக்குப் போக மாட்டேன்” என்கிறார்.

ராமதாசும், காடுவெட்டி குருவும் தூண்டி விட்ட சாதிவெறி ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்குகிறது. சேத்தியாதோப்பு பகுதியில், வன்னியர் சாதிப் பெண்ணைக் காதலித்த கோபாலகிருஷ்ணன் என்ற மாணவனைக் கழுத்தை அறுத்தே கொலை செய்து, குட்டைக்குள் வீசியிருக்கிறார்கள் வன்னிய சாதிவெறியர்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர், அழுகி நாறிய நிலையில் அந்த இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புக் காதலுக்குப் பழிவாங்குவதற்காக, காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண் வன்னிய சாதிவெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறாள்.

திருமாவளவன் மட்டும் ராமதாசுடன் சமரசத்தை நாடுகிறார். “இப்போது அமைதி காப்பதுதான் வீரம்” என்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நவம்பர்-24 அன்று திருமா அளித்திருக்கும் பேட்டி, அவர் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்று காட்டுகிறது.

தருமபுரி தாக்குதல் ராமதாசுக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றுதான் அவர் முதலில் நினைத்தாராம். இலண்டனிலிருந்து கோ.க. மணியுடனும், டாக்டர் செந்திலுடனும் தொலைபேசியில் பேசியபோது, ‘இந்தத் தாக்குதலில் பா.ம.க.வுக்குச் சம்மந்தமே இல்லை’ என்று அவர்கள் சொன்னார்களாம்; இவரும் நம்பி விட்டாராம். என்ன நடந்தது என்று ஒருமுறை கூட அவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடம் கேட்கவில்லை போலும். நம்புவோம்.

“சாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவேன் என்று மாமல்லபுரத்திலேயே காடுவெட்டி குரு ஏற்கெனவே பேசியிருக்கிறாரே, உங்களுக்குத் தெரியாதா?” என்று பேட்டியாளர் ஜென்ராம் கேட்கிறார். “அது பற்றி கோ.க. மணியிடம் கேட்டேன். குருவை டாக்டரய்யா கண்டித்ததாகச் சொன்னார். நம்பினேன்” என்கிறார்.

கடைசியாக ராமதாசு தனது சொந்த வாயால் ஊடகங்களில் பேசிய பின்னர்தான், ‘இது மேலிருந்தே திட்டமிட்டு நடத்தப்படுகிறது’ என்ற உண்மை திருமாவுக்குப் புரிந்ததாம். அதாவது, விடுதலைச் சிறுத்தைகளை ராமதாசு தாக்குகிறார் என்பதை உலகமே பார்த்து விட்டதால், இனிமேலும் வலிக்காத மாதிரி நடிக்க முடியாது என்பது திருமாவுக்குப் புரிந்து விட்டது!

அதன் பிறகும் அவருக்குக் கோபம் வரவில்லை. திருப்பி அடிப்பதெல்லாம் இருக்கட்டும். “ராமதாசு அம்பேத்கர் சுடர் அல்ல, வன்னிய தீவட்டி” என்று சாடியிருக்கலாம். ராமதாசையும் குருவையும் வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யக் கோரிப் போராடியிருக்கலாம். செய்யவில்லை. “வன்னியப் பெண்கள் வயிற்றில் தலித் கரு வளர வேண்டும் என்று நான் பேசியதாக பொப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு இடத்திலாவது நான் அப்படிப் பேசியதாக நிரூபித்தால், தூக்கில் தொங்கத் தயார்” என்று தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக தன்னிலை விளக்கம் அளிக்கிறார் திருமா.

ஆனால், தனது கட்சியினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்க அவர் முயலவில்லை. ‘காதல் திருமணங்களைப் பிரித்து காசு பறிப்பதாகச் சொல்கிறீர்களே, அப்படி ஒரேயொரு ஆதாரமாவது காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பவில்லை. ‘எங்கள் கட்சிக்காரர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, வன்கொடுமைச் சட்டத்தை வைத்துப் பணம் பறித்ததாகவோ ஒரு ஆதாரம் கொடுங்கள், அரசியலை விட்டே விலகுகிறேன்’ என்று சவால் விடவில்லை.

மாறாக, சமரசத்திற்கு இப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பேட்டியின் முடிவில் பிரகடனம் செய்கிறார். “தம்பி, தேர்தல் அரசியல் வேண்டாம்; வா, நாம் இரு சமூக மக்களின் நல்லிணக்கத்துக்காக, உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம் என்று டாக்டரய்யா என்னை அழைத்தால், இந்த நிமிடமே கட்சியை விட்டுவிட்டு வரத் தயார். நாடாளுமன்ற அரசியல் எனக்குத் தேவையில்லை” என்கிறார். ஆனந்த விகடன் பேட்டியில் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்ததை நியாயப்படுத்துகிறார். “எதிர்காலத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக ராமதாசு நடந்து கொண்டால், மீண்டும் அவருக்கு விருது கொடுப்போம்” என்கிறார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும், தமிழர் ஒற்றுமைக்காகவுமே தான் அமைதி காப்பதாகவும், பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தனது அணுகுமுறைக்கு விளக்கம் சொல்கிறார் திருமாவளவன். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் டிஜிட்டல் பானர் முழக்கங்களையும், மேடைப் பேச்சுகளையும் பார்த்து, திருமாவைப் போர்க்குணத்தின் உருவமாக எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள் திகைக்கிறார்கள். இப்படியொரு சரணடைவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்?

அனைத்து சாதி கூட்டம்
ராமதாசு தலைமையில் அணி திரண்டுள்ள ஆதிக்கசாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தன்னைத்தானே சித்தரித்துக் கொள்வதைப் போலவோ, அல்லது முற்போக்காளர்கள் எனப்படுவோர் சிலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ, தலித் விடுதலைக்கான அமைப்பு அல்ல. மற்றெல்லா ஓட்டுக்கட்சிகளையும் போலவே, அது ஒரு சாதிய பிழைப்புவாதக் கட்சி. வன்னிய மக்களின் பெயரைச் சொல்லி பா.ம.க. என்ற பிழைப்புவாதக் கட்சியை ராமதாசு நடத்துவதைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினருடைய பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

பா.ம.க.வால் ஏமாற்றப்படும் வன்னிய மக்கள் ஆதிக்க சாதி; சிறுத்தைகளால் ஏமாற்றப்படும் மக்கள் ஒடுக்கப்பட்ட சாதி என்பதுதான் வேறுபாடு. பா.ம.க.வுக்கும் சிறுத்தைகளுக்கும் வேறெந்த வேறுபாடும் இல்லை. 2001 தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் கூட்டணி அமைத்திருந்தபோது, திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் பல ஊர்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதலில் காயம்பட்டனர். அப்போது, “இந்தச் சாம்பல் மேட்டின்மீது நின்று சொல்கிறேன். கொளுத்தியவர்களுடன் இனி கூட்டணி கிடையாது” என்று திருமா அறிவித்தார்.

அன்று அப்படிச் சொல்லி விட்டு மறுபடியும் பா.ம.க., தி.மு.க.-வுடன் கூட்டுச் சேர்ந்த சந்தர்ப்பவாதம் பற்றிக் கேட்டால், “அம்பேத்கர் ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. இருக்கின்ற அரசமைப்பில் பங்கேற்று அரசதிகாரத்தைப் பெறுமாறுதான் கூறியிருக்கிறார்” என்று கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார். ‘தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தலித்துகளை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காகத்தான் வலியச் சென்று கைகுலுக்க வேண்டியிருப்பதாக’ நியாயப்படுத்துகிறார்.

தனிக்குடியிருப்பு, தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஊரின் மைய நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக எந்தக் கட்சியாவது வாக்குறுதி கொடுத்ததா, அல்லது கூட்டணிக்கான முன்நிபந்தனையாக அப்படி ஏதேனும் ஒன்றை திருமா முன்வைத்திருக்கிறாரா? எதுவும் கிடையாது.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்போதே, அரசியலில் தலித் பிழைப்புவாதிகளை காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைவரும் மைய நீரோட்டத்தில் இணைத்துதான் வைத்திருக்கிறார்கள். ‘இப்படிப் பல்வேறு கட்சிகளிலும் தலித் வாக்குகள் சிதறடிக்கப்படுவதனால்தான் தலித்துகள் அரசியலதிகாரம் பெற முடியவில்லை’ என்று கூறித் தொடங்கப்பட்டவைதான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் கட்சிகள்.

வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான் ராமதாசும் தனிக்கட்சி தொடங்கினார்.

பல்வேறு கட்சிகளிலும் உள்ள வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்துத் தனியாக ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு, தி.மு.க., அ.தி.மு.க. போன்றோருடன் பேரம் பேசுவதுதான் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லா சாதிக் கட்சிகளின் நோக்கமும். தங்கள் சாதி வாக்காளர்களிடம் எந்த அளவுக்குச் சாதி உணர்வைத் தூண்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தை மறைத்துக் கொள்ள முடியும். தமது சாதி வாக்குகளை உறுதி செய்து கொள்ள முடியும்.

நீயும் நானும் ஒண்ணு, மக்கள் வாயில் மண்ணு!

இருப்பினும், திருமாவுக்கு என்ன காரணத்துக்காகவோ ராமதாசுடன் ஒரு நல்லிணக்கம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதற்காகக் கொளுத்தப்பட்ட மக்களுக்கும் கொளுத்திய கிரிமினல்களுக்கும் நல்லிணக்கம் பேசுகிறார். ராமதாசோ, “நான் இருப்பதனால்தான் வட தமிழகம் அமைதியாக இருக்கிறது” என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார்.

திருமா – ராமதாசு கூட்டணி, வன்னியர் – தாழ்த்தப்பட்டோரிடையேயான சமூக உறவில் எந்த சமத்துவத்தையும் கொண்டுவந்து விடவில்லை. வசூல் வேட்டை நடத்தவும், போலீசுக்குப் புரோக்கர் வேலை பார்க்கவும், கட்டப் பஞ்சாயத்து செய்யவும், காண்டிராக்ட் எடுக்கவும் மற்றெல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் பெற்றிருக்கும் ‘ஜனநாயக உரிமை’யை விடுதலை சிறுத்தைக் கட்சியின் ‘தளபதிகளுக்கு’த் தான் பெற்றுத் தந்தது. தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தனிக்குடியிருப்பும், தனிச்சுடுகாடும் அப்படியேதான் இருந்தன. அவ்வாறிருக்கும்போதே தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றுவதற்குத்தான் அம்பேத்கர் சிலை திறப்பு, தலித்துக்கு மந்திரி பதவி போன்ற ராமதாசின் தந்திரங்கள். பதிலுக்கு வன்னியர்களை தாஜா செய்வதற்குத்தான் ராமதாசுக்கு திருமா வழங்கிய தமிழ்க் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் பட்டங்கள்.

‘குச்சு கொளுத்தி’ என்று தாழ்த்தப்பட்ட மக்களால் வெறுப்புடன் ஏசப்பட்ட ராமதாசுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களையே ஓட்டுப்போட வைத்ததும், இப்போது நத்தம் காலனியைக் கொளுத்திய பின்னரும், தமிழர் ஒற்றுமை என்று கூறிக் கொண்டு ராமதாசுக்கு நல்லிணக்கத் தூது விடுவதும்தான் திருமாவின் சாதனை என்று சொல்ல வேண்டும்.

மறுகாலனியாக்கம் பெற்றெடுத்த புதிய புல்லுருவிகள்!

திருமா காடுவெட்டி குருவுக்கு மரியாதை செய்கிறார்
வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)

நத்தம் தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் படைப்பாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு பேசினர். நெருப்பு, கொள்ளை, துயரம், கண்ணீர் போன்ற சொற்கள் ஒலிபெருக்கியிலிருந்து தெறித்த வண்ணம் இருந்தன. ஆர்ப்பாட்டத்திற்கு ‘அண்ணன் திருமா’வுடன் வந்திறங்கி இருபுறமும் அணிவகுத்து நின்ற குவாலிஸ், இன்னோவா, சுமோ போன்ற வெள்ளை வண்டிகளில் சாய்ந்தபடி மினிஸ்டர் ஒயிட்டும், கழுத்தில் தங்கத் தாம்புக்கயிறு, கையில் பிரேஸ்லெட்டும் அணிந்த சிறுத்தைகள் பலர் நின்றிருந்தனர். அவர்கள் வாயிலிருந்து ‘லட்சம், கிரவுண்டு, அப்ரூவ்டு, எம்.எல்.ஏ’ போன்ற சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. இந்த வர்க்கத்தினரை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வதைத்தான் தலித்துகளை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வது என்கிறார் திருமா.

ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர்வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கின்றன. இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள்தான் வி.சி. கட்சியின் தூண்கள். இவர்கள்தான் டிஜிடல் பானர் வைப்பவர்கள், தங்கக் காசு கொடுப்பவர்கள், கூட்டத்துக்கு ஆள் திரட்டுபவர்கள், அண்ணன் வந்தால் முன்னும் பின்னும் 50 வண்டிகளில் புழுதி கிளப்பிக் கொண்டு செல்பவர்கள்.

இதே வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்களோடு இவர்கள் தொழில் கூட்டாளிகளாக, நண்பர்களாக, அன்றாடம் போலீசு ஸ்டேசன் முதல் கலெக்டர் ஆபீஸ் வரையில் பல இடங்களில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் வர்க்க நலனும் ஒன்றுதான். தொழில் தேவைக்காக வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்களேயன்றி, வேறு எந்தக் கொள்கையாலும் இவர்கள் பிரிந்து நிற்கவில்லை.

ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறையிலோ இலஞ்சத் தொகை கீழிருந்து மேல் வரை தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சுமுகமாகப் பிரித்துக் கொள்ளப்படுவதைப் போல, தனியார்மய- தாராளமயக் கொள்கைகள் வழங்கியுள்ள வாப்புகளைப் பயன்படுத்தி அடிக்கின்ற கொள்ளையை இவர்கள் தமக்குள் சுமுகமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கூட்டணி மாறுவதால், சில நேரம் இந்த அணியிலும், சில நேரம் அந்த அணியிலும் இருக்க நேர்ந்தாலும், இவர்களுடைய உறவின் சமநிலை அநேகமாகக் கெடுவதில்லை.

சென்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியைத் தொடர்ந்து, ஜுலை மாதத்திலேயே திராவிடக் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்கப் போவதாக அறிவித்தார் ராமதாசு. உடனே அதை வழிமொழிந்தார் திருமாவளவன். தன்னை திடீரென்று ராமதாசு கழற்றிவிடுவார் என்பதைத்தான் திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை போலும். உழைத்துக் கஞ்சி குடிக்கின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் ராமதாசுடன் சமரசத்தைக் கோரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் அரசியல் இம்மக்களுடைய நலனுக்கானதும் அல்ல.

சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்!

அ மார்க்ஸ்
அ மார்க்ஸ்

வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய இந்தச் சாதி அரசியலின் இரண்டாவது சுற்று, 90-களின் தொடக்கத்தில் ஆரவாரமாகத் தமிழகத்தில் தலையெடுத்தது. வன்னியர் வாக்குவங்கியை மையமாக வைத்துப் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய ராமதாசு, அம்பேத்கர் – பெரியார் – மார்க்ஸ் ஆகியோரது படங்களை உறுப்பினர் அட்டையில் போட்டுக் கொண்டதன் மூலம் சாதி-தீண்டாமை ஒழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற எல்லா சரக்குகளும் கிடைக்கின்ற பல்பொருள் அங்காடியாக பா.ம.க.வைச் சந்தைப்படுத்தினார். அப்பட்டமான சாதிக் கட்சி என்று தெரிந்தபோதும், சமூக மாற்றத்துக்குக் குறுக்குவழி தேடிக் கொண்டிருந்த சில முன்னாள் புரட்சியாளர்களும், பின் நவீனத்துவ அறிவுத்துறையினரும், நரிக்கு சாயம் பூசிப் பரியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின் நவீனத்துவத்தின் நுண் அரசியலானது, சாதி, உட்சாதி, இனக்குழு, பாலினம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தி, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தையும் கம்யூனிசத்தையும் தூற்றியது.

ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் ஸ்பான்சர் செய்யப்பட்டு, தன்னார்வக் குழுக்களால் கடைவிரிக்கப்பட்ட இந்த அடையாள அரசியலை, தலித்தியம், தலித் அரசியல் என்ற பெயர்களில் பின் நவீனத்துவ அறிஞர்கள் இங்கே முழங்கினர்.

பேரா.கல்விமணி
பேரா.கல்விமணி

‘கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் உணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்குவங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்’ – இவையெல்லாம் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்.

நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நக்சல்பாரிகளின் செல்வாக்கு இருந்தவரை சாதி அரசியல் தலையெடுக்க முடியவில்லை. அவர்கள் இல்லாத காரணத்தினால்தான் இன்று இத்தாக்குதல் நடந்திருக்கிறது” என இன்றைக்கு நத்தம் காலனி மக்கள் கூறுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சாதி அமைப்பு என்பது ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் தவறு என்று ஆதிக்க சாதி உழைக்கும் மக்களை உணர வைத்து, சாதிக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதுதான் ஜனநாயகப் புரட்சியின் கடமை. ஆனால், அடையாள அரசியலோ, ‘மற்றதன் இருப்பை அங்கீகரிப்பது’ என்று கூறிக்கொண்டு எல்லா சாதியினரும் தத்தம் அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஒரு ஜனநாயக உரிமையாகக் கௌரவப்படுத்தியது.

ரவிகுமார்
ரவிகுமார்

அதே நேரத்தில், ‘சாதி அடையாளத்தைத் துறந்து பணியாற்றும் கம்யூனிஸ்டுகளை நம்பாதே’ என்று தலித் மக்களுக்கு அறிவுறுத்தியது. ‘மாயாவதி, பஸ்வான் உள்ளிட்ட அப்பட்டமான தலித் பிழைப்புவாதிகளைக்கூட யாரும் விமர்சிக்கக் கூடாது. விமர்சிப்பவர்கள் ஆதிக்க சாதிக்காரர்களாகவோ, அவர்களது எடுபிடிகளாகவோதான் இருக்க முடியும். தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறுயாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது’ என்றெல்லாம் பேசி, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளியது தலித் அரசியல். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.

இவ்வாறு, ஒரு மனிதன் கொண்டிருக்கும் கொள்கை, அவனது நடைமுறை ஆகியவற்றைப் புறந்தள்ளி விட்டு, ‘அவனுடைய பிறப்பை முதன்மைப்படுத்தியதன் மூலம்’, அடையாள அரசியல் பார்ப்பனியத்தை அப்படியே வழிமொழிந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சாதிரீதியாகக் கூறுபோடுவது, கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர இயக்கங்களின் மீது தலித் இளைஞர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துவது என்ற ஆளும் வர்க்கத் திட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாக இருந்தது. ‘நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடு’ என்று பச்சையாகக் கேட்கும் ஓட்டுப் பொறுக்கிகளின் சாதி அரசியலையே, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பம்மாத்து மொழியில், தன்னார்வக் குழுக்களின் தத்துவ விசார தோரணையில் முன்வைத்தது அடையாள அரசியல். மார்க்சிய – லெனினிய புரட்சிகர அரசியலிலிருந்து வெளியேறிய எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி, நிறப்பிரிகை குழுவினர் முதலானோரெல்லாம் அடையாள அரசியலில்தான் தஞ்சம் புகுந்தனர்.

சாதி சமத்துவம் என்பது சாத்தியமா?

இதன்படி, சாதியைக் கூறிக்கொள்வது நேர்மையான நடவடிக்கையாக போற்றப்பட்டது. “நான் வன்னியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அறிவித்தார் கவிஞர் பழமலய் (இன்றைக்கு அவர் ராமதாசின் கூற்றை அப்படியே வழிமொழிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). பின் நவீனத்துவ அறிஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவர் ஐயாவோ, ‘காலையில் வன்னியராக இருந்து அக்கினி சட்டி கொடி ஏற்றுவது, மாலையில் தலித் விடுதலைக்காக அம்பேத்கர் சிலை திறப்பது’ என்று பொளந்து கட்டினார்.

திருமா - ராமதாஸ் சமரசம்
வாழும் பெரியார் திருமாவை அன்று பாராட்டிய ராமதாசுக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்: “அடங்க மறு” என்பவர்கள் அடக்கி வாசிப்பது ஏன்?

அடையாள அரசியல், சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடியது. சாதி அடையாளங்களைப் பேணிக்கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் செய்தது. மொத்தத்தில் ‘சுயநலம், சுயசாதி அபிமானம், பிழைப்புவாதம், ஆளும் வர்க்க நிறுவனங்களை நத்திப் பிழைப்பது, கட்சி தாவுவது, பொறுக்கித்தனங்கள்’ போன்ற நடவடிக்கைகள்தான் உண்மையான கலகங்கள் என்றும், ‘புரட்சி, தியாகம், சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம்’ போன்ற கருத்துகள் தலித் மக்களை ஏமாற்றுவதற்கு, கம்யூனிசப் புரட்சியாளர்கள் கடைவிரிக்கும் ‘பெருங்கதையாடல்கள்’ என்றும் பிரச்சாரம் செய்தது. எனவே, இத்தகைய அமைப்புகளிலிருந்து ‘தப்பித்து’ வெளியே வருமாறு தலித்துகளை அறைகூவியது.

தலித் மக்களை இப்படித் தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தியவர்களில் ஒருவர்தான் பின்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எம்.எல்.ஏ. பதவியைக் கைப்பற்றியவரும், சமீபத்தில் தனது மகன் திருமணத்தை மருத்துவர் ஐயா தலைமையில் நடத்தியவரும், இப்பொழுதும் நத்தம் தாக்குதலுக்கு நக்சல்பாரிகளைக் குற்றம் சாட்டி அவதூறு செய்து கொண்டிருப்பவருமான இரவிக்குமார். அவர் ‘தப்பி’ விட்டார், அவருடன் சேர்ந்து இவற்றையெல்லாம் பிரச்சாரம் செய்த நிறப்பிரிகை அறிஞர்களும் ‘தப்பி’ விட்டார்கள். அடையாள அரசியல் வைத்த நெருப்பிலிருந்து நத்தம் மக்கள்தான் தப்ப முடியவில்லை.

சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் பிரிவினரைக் கூட ‘தலித்’ என்ற பெயரில் ஒன்றுபடுத்த முயலவில்லை. ‘நாங்கள் தலித் அல்ல, தேவேந்திர குலம்’ என்கிறார்கள் பள்ளர் சமூகத்தினர். அருந்ததியர் சமூகத்துப் பையனைக் காதலித்த பறையர் சமூகத்துப் பெண் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்படுகிறாள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் தங்கள் கட்சியினரின் உட்சாதி மேட்டிமைத்தனத்துக்குத் துணையாகத்தான் நின்று வருகின்றனர். இதனை ஒழிக்க முயன்றால் இவர்களது கட்சியே ஒழிந்துவிடும் என்பதே உண்மை.

மங்கும் சாதியை புதுப்பிக்கும் சாதிய பிழைப்புவாதம்!

திருமாவுக்கு தங்கம்
புதுச்சேரியில் நடந்த போராளி தலைவனுக்கு பொன் வழங்கும் விழா (கோப்பு படம்)

மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஒவ்வொரு சாதியிலும் உட்சாதியிலும் உள்ள படித்த நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடி வர்க்கமும் முடிந்தவரை பார்ப்பனப் பண்பாட்டைத் தழுவுவதன் மூலம் தன்னை மேல்சாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இராசராசன் மள்ளர், நந்தன் அரசன் போன்ற வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. வருங்கால முதல்வர் ஆக விரும்புகின்ற சாதியினர் அனைவரும் தாங்கள் நேற்றைய முதல்வர் பரம்பரை என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறார்கள். சாதிப்பெருமிதம் கெட்டிப்படுகிறது.

விவசாயம் அழிந்து, மறுகாலனியாக்கத்தால் சிதறடிக்கப்பட்டு, முறுக்கு போடவும் மூட்டை தூக்கவும் தோட்டவேலை செய்யவும் மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கும் கள்ளருக்கும், முத்தரையருக்கும், வன்னியருக்கும், பள்ளருக்கும் ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போலிப் பெருமித அடையாளமாக இப்போது சாதி புதுப்பிக்கப்படுகிறது. தேவர் ஜெயந்தி, மகாபலிபுரம் விழா போன்றவையெல்லாம் ஆண்டுதோறும் அவர்களுக்கு ஏற்றப்படும் மயக்க ஊசிகள். தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் காரணமாகத் தோன்றியிருக்கும் புதிய தரகு வர்க்கங்கள்தான் இன்று சாதிச் சங்கங்களுக்கும் சாதிக்கட்சிகளுக்கும் புரவலர்கள்.

நத்தம் தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கிறது. சாதி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களைக் காதல் மணம் புரிந்துள்ள பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டிகளில், அவர்களிடம் சாதி மறுப்பு ஜனநாயகக் கருத்துகள் இயல்பாக அரும்பியிருப்பதை காணமுடியும்.

ஒருபுறம் சாதியின் அடித்தளம் பலவீனப்பட்டு வந்த போதிலும், சாதி ஆதிக்க விழுமியங்கள் அழிந்து விடவில்லை. சாதி கடந்த திருமணங்களில், தொடக்கத்தில் பெற்றோர்கள் முரண்படுவது, பின்னர் மெல்ல ஏற்றுக் கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும். அவ்வாறு நடக்க விடாமல் அங்கே சாதிவெறியைத் தூண்டி, இத்தகைய கொடூரமானதொரு தாக்குதலை நடத்தக் காரணமாக இருந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி எனும் சாதிக்கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் பொறுப்பாக்கி, இதன் அடிப்படையில் ஆதிக்கசாதி சங்கங்கள் அனைத்தையும் திரட்டி நிறுத்தியிருக்கிறார் ராமதாசு. சாதி கடந்த திருமணத்தை எதிர்ப்பது என்று தொடங்கி வன்கொடுமைச் சட்டத்தையே முடக்குவது, சாதி- தீண்டாமையைத் தங்கள் பிறப்புரிமையாக அறிவிப்பது என்ற எல்லைக்குச் செல்கின்றனர் சாதிவெறியர்கள்.

சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?

சாதியை ஒழித்து சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டால் பதவியும் அதிகாரமும் பெற்ற ஆதிக்க சாதியினரின் சங்கங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. பதிவு செய்யப்படும் வழக்குகளும் குற்றவாளிகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் விதத்திலேயே சோடிக்கப்படுவதால் 3 சதவீதம் பேர் கூட தண்டனை பெறுவதில்லை. இன்று வன்கொடுமைச் சட்டத்தை முடக்க இதுவே ஆதாரமாக காட்டப்படுகிறது.

கீழிருந்து மேல் வரை தலித் போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சி வழக்கை எப்படி முடக்கினர் என்று அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்டும்டெ. இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமேயன்றி, சாதி எனும் சமூகக் கொடுமையை ஒழிக்க உதவாது என்பதுடன், அதுவே சாதிய பிழைப்புவாத, வாக்கு வங்கி அரசியலுக்கும் வழிதிறந்து விடுகிறது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடாகப் பிறந்ததோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலைநாட்டப்பட்டதோ அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும், பிரித்தாளுவதற்கும், நிறுவனமயப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு மேலிருந்து திணித்த, கறை படிந்த ஜனநாயக அரசு வடிவம்.

“போலீசும் உளவுத்துறையும் சரியாகத் தம் கடமையைச் செய்திருந்தால் நத்தம் தாக்குதலை தடுத்திருக்க முடியும்; வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு தவறிவிட்டது” என்ற வகையில் கூறப்படும் விமர்சனங்கள், தெரிந்தோ தெரியாமலோ இந்த அரசு குறித்த பிரமையை உருவாக்குகின்றன. ஆனால், சட்டங்கள் மூலம் சமுதாயத்தை மேலிருந்து ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசு உருவாக்கப்படவில்லை. சாதி முதலான பிற்போக்கு விழுமியங்களை ஒழித்து இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.

ஜனநாயகப் புரட்சியின்றி சாதி – தீண்டாமை ஒழிப்பு இல்லை!

சாதி, தீண்டாமை, ஆணாதிக்கம் உள்ளிட்ட ஜனநாயக விரோத விழுமியங்களை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற வேண்டுமானால், சாதி – மத வேறுபாடுகளை நிராகரிக்கின்ற ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வை தாழ்த்தப்பட்ட மக்களிடம் யாரும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதி ஆதிக்கம் கூடாது என்ற உணர்வுக்கு ஒரு சாதி இந்துவைக் கொண்டு வருவது எப்படி என்பதுதான் கேள்வி.

திவ்யா போன்ற பெண்கள் இத்தகைய உணர்வுக்கு வருவதற்கு காதல் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால், ஆதிக்க சாதி மக்களை ஒட்டுமொத்தமாக இந்த உணர்வுக்கு கொண்டு வருவது எப்படி என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. நக்சல்பாரி அமைப்புகள் அப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் சாதி உணர்வு தலையெடுக்கவில்லை என்று கூறப்படுவதன் பொருள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் தண்டனை குறித்த அச்சத்தினால் ஒடுங்கியிருந்தனர் என்பதல்ல; சாதி பாராட்டுவது கூடாது என்று கருதும் ஜனநாயகப் பண்பும் மனநிலையும் உழைக்கும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதன் பொருள்.

பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பின் ஆகத்தாழ்ந்த படிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருந்தாலும் சரி, ஆதிக்க சாதியாக இருந்தாலும் சரி, சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. அது சாதி அமைப்புகளையும், சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் மேலும் வலுப்படுத்தவே பயன்படும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்காக மக்களைத் திரட்டும் போக்கில்தான், சாதி தம் வர்க்க நலனுக்கு எதிரானது என்பதையும், அது ஒரு தீயொழுக்கம் என்பதையும் ஆதிக்க சாதி மக்களுக்கேகூட உணர்த்த முடியும்.
_________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________

பியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் !

14

ரஜினி கார்ட்டூன்மிழ் மக்களின் சுயமரியாதையை ஒழித்து அடிமைத்தனத்தைக் கற்றுத் தருவதில் பல பத்திரிகைகள் நம்பர் 1க்குப் போட்டி போடுகின்றன. 20.1.13 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், “காத்திருக்கும் அரசியல் புயல்” என்று ரஜினியைக் குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கவர் ஸ்டோரி என்றால் அது ஏதோ மிகப்பெரும் செய்தி அலசல் என்று நினைத்து விடாதீர்கள். இது “சுவாமி வம்பானந்தா” என்ற கிசுகிசு மாமாவின் பக்கத்தில் வருகிறது. ஜூனியர் விகடனின் கழுகுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த மாமா, சிஷ்யை எனும் பெண்பால் பாத்திரத்தின் மூலம் கவர்ச்சியுடன் வாரம் இரண்டு முறை மேல் மட்ட கிசுகிசுக்களை வாந்தி எடுக்கும் இழிவான ஜன்மம்.

ரஜினி, தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்களை, புத்தாண்டில் சந்தித்து பேசினாராம். அப்போது இந்த வம்பானந்தா கூட இருந்த ரசிகர்களை சந்தித்து இந்த சேதிகளை தயாரித்து எழுதுகிறார். ரசிகர்களை சந்தித்த ரஜினி முழுக்க அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தாராம். ரசிகர்களுக்கு தெரிந்த அரசியல் அறிவில் கடுகளவு கூட தெரிந்திராத ரஜினி என்ன பேசியிருப்பார்? குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியைப் பிடித்த மோடியை உதாரணம் காட்டிய ரஜினி, “மோடி மக்களுக்காக நல்லது பல செய்தாலும் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை, கஷ்டப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார், இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை” என்றாராம்.

இவர்கள் கிசுகிசுவாகவும், பரபரப்பிற்காகவும் செய்திகளை கேட்டோ இல்லை இட்டுக்கட்டியோ எழுதினாலும் உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நரவேட்டை மோடியை சிலாகித்துச் சொல்லுமளவு ரஜினியின் இதயமும் பாசிசத்தின் செல்வாக்கில் இருப்பது ஒருபுறம். இன்னொரு புறம் அத்தகைய மோடி கூட படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லை என்பதன் மூலம் ரஜினி என்ன கூற வருகிறார்?

அரசியல் என்பது நோகாமல் நொங்கெடுத்து வயிறார தின்ன வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அவரது திரைப்படத்தில் பாம்பையோ இல்லை பந்தையோ வைத்து ஊதி ஊதியே வில்லன்களை பந்தாடுவார் இல்லையா? அது போல அரசியலிலும் எந்த கஷ்டங்களும் இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி சொல்ல வரும் கருத்து. எனில் இத்தகைய மைனர்களெல்லாம் தற்செயலாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை கதறக் கதற ‘கற்பழிப்பார்கள்’ என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அடுத்து ‘ஒரு கட்சியில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் அவரது எதிரணியினர் போய் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்குவது போன்ற மனநிலையில்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று ரஜினி கவலைப்படுகிறாராம். இப்படிப்பட்ட தொண்டர்களால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் என்பதால் தொண்டர்கள் கட்டுக்கோப்போடு இருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறாராம். எல்லா ஓட்டுக்கட்சிகளும் தலைமை முதல் தொண்டர்கள் வரை சுயநலம், பதவி, அதிகாரம், ஊழல், சொத்து என்று செயல்படுவதால் பதவி கிடைக்காத பேர்வழிகள் இப்படித்தான் அதிருப்தியாளர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

ஆனால் ரஜினியே ஒரு பிரம்மாண்டமான சுயநலமாக இருப்பதால் இது அவருக்கு புரியவில்லை. ஆனால் எது எப்படியோ தலைமை எப்படி இருந்தாலும் தொண்டர்கள் முழு அடிமைத்தனமாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இந்த விசயத்தில் இவரை ஆம்பளை ஜெயலலிதா என்றும் அழைக்கலாம். பாசிஸ்டுகளுக்கு ஏது பால பேதம்?

“கடையை ஆரம்பிப்பது விஷயமல்ல, கடையை ஆரம்பித்தால் வெற்றி பெறணும், அதற்கான சூழ்நிலை அமைய வேண்டும், அதுவரைக்கும் காத்திருக்க வேண்டும்” என்று ரஜினி சொன்னாராம். கொள்கையே இல்லாத ஒரு நபர் தனது கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் யோசிக்க முடியும். இதற்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சியே மேல். தனது சொந்த நேர்மையின் மேல் நம்பிக்கை இல்லாத நபர்தான் மற்ற சூழ்நிலைகள் விபத்து போல் தரும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு மேலே ஏற கனவு காண முடியும். அரசியல் என்பது அண்ணாமலையில் பால்காரன் கோடிசுரவனாக மாறியது போல ரஜினி புரிந்து வைத்திருக்கிறார். போகட்டும், இந்த அளவாவது ‘யோசிக்கிறாரே’ என்று நமக்குத்தான் ஆச்சரியம்.

“எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள்தான் இருந்தன, அதனால் அவரால் ஜெயிக்க முடிந்தது, இப்போது நிறைய கட்சிகள், ஜாதிக் கட்சிகள்….இதையெல்லாம் தாண்டி அரசியலில் ஜெயிக்கணும்னா அசுர அலை வரணும், அதுவரைக்கும் காத்திருங்கள்” என்று ரஜினி மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே கூறினாராம்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தி.மு.க, காங்கிரசு போக யார் அந்த ரஜினியின் மூன்றாவது கட்சி? ஒரு வேளை போலிக் கம்யூனிஸ்டுகளாக இருக்குமோ? இது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் ‘சூப்பர் ஸ்டாரே நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து மூன்றாவது கட்சி என அங்கீகரித்திருக்கிறாரே, அவரது இதயத்தில் நமக்கும் ஓர் இடமிருக்கிறதே’ என நன்றிப் பெருக்கால் தீக்கதிரில் ரஜினி சிறப்பிதழ் வெளிவருவது உறுதி.

எம்.ஜி.ஆர் மாதிரி குறைவான கட்சிகள் ஓரிரண்டு இருந்தால் தனது வெற்றி சுலபம் என்று ரஜினி கருதுவது நாம் ஏற்கனவே சொன்னது போல சைக்கிள் சுற்றுகிற நேரத்தில் கதாநாயகன் முதலாளியாவதாக கற்றும் தரும் தமிழ் சினிமாவின் அசட்டு உளவியல் பாதிப்பில்தான் ரஜினி இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. சிகரட்டை தூக்கிப் போட்டு தம்மடிப்பதை வைத்து ஆளானவரெல்லாம் அரசியல் குறித்து யோசித்தால் சாக்ரடிசாகவா பேச முடியும்? சாக்கடையாகத்தான் உளற முடியும்.

96-ல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் என்று இடையில் குமுதத்தின் வம்பானந்தா வருத்தப்படுகிறார். ஆனாலும் ரஜினியை கைவிடவில்லை. அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்படும் போது உள்ளே வரலாமென அவர் நினைக்கலாம் என்று குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது. ரஜினியே பதறியடித்து ஓடினாலும் இந்த ஊடக மாமாக்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இதுதான் ரஜனிக்கும் நாம் உண்மையிலேயே பெரிய ஆள் என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும். அவ்வகையில் ரஜினி என்ற கோமாளி பலூனை ஊதுபவர்கள் இத்தகைய விபச்சார ஊடகங்கள்தான்.

ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சொன்ன அறிவுரைப்படிதான் அவர் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை நிறுத்திக் கொண்டாராம். அப்போதுதான் அவரைப் பற்றிய ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்குமென்று அந்த ஆலோசகர்கள் சொன்னதாக வம்பானந்தா அடித்து விடுகிறார். இது உண்மை என்றால் ரசிகர்களைப் பற்றி ரஜினி எவ்வளவு கேவலமாக கருதுகிறார் என்று தெரிகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் தங்களது தனிமையை, ‘சுதந்திரத்தை’ இழந்து விடுவார்களென ஒரு ஒப்பாரியை எல்லா நடிகர்களும் வைப்பார்கள். அதாவது அந்த நட்சத்திர அந்தஸ்தினால் வரும் பணம் மட்டும் அவர்களுக்கு தேவை. அந்த பணத்தை தரும் ரசிகர்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் இருப்பதும் இப்படித்தான். ஆனாலும் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என்று தனது சினிமாக்கள் பெருவெற்றி பெற்று வசூலில் தனது கழிவுத்தொகை கொட்ட வேண்டுமென்றால் மட்டும் அவர் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார். மற்ற நேரங்களில் அந்த அரசியல் ஆலோசகர்கள் மேல் பழியைப் போட்டு பதுங்கிவிடுவாராம். ரஜினி ரசிகனே இதைக் கேட்டாவது நீ ‘தற்கொலை’ செய்து கொள்வாயா?

பாசிச ஜெயலலிதாவின் ஊடக பாதந்தாங்கியாக செயல்படும் குமுதம் மாமா, ரஜினியை இப்படி ஊதிப்பெருக்கினால் அம்மா கோவித்துக் கொள்ள மாட்டாரா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? கவலையே வேண்டாம், அதற்கும் இந்த விபச்சாரத் தரகர்கள் ஒரு பதிலை கச்சிதமாக வைத்திருக்கிறார்கள். அதாவது ‘ரஜினி இப்படி தனி ஆவர்த்தனம் காட்டி, தனிக் கட்சி கண்டால் அது அதிமுகவிற்கு பாதகமில்லையாம். எதிர்க்கட்சிகளின் வாக்குகளைத்தான் ரஜினி பிரிப்பார் என்பதால் புரட்சித் தலைவி குஷியில் இருக்கிறார்’ என்று தில்லானா மோகனாம்பாளின் வைத்தி விஞ்சும் புரோக்கர் விசுவாசத்தில் புல்லரிக்கிறது குமுதம் ரிப்போர்ட்டர்.

ஆக ரஜினிக்கு தேவையான இமேஜ் பில்டப் ஒருபுறம், மறுபுறம் அதனால் புரட்சித் தலைவிக்கு பாதிப்பில்லை என்று சமாதானம் வேறு. ஒரு விபச்சாரத் தரகன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது இதுதானில்லையா?

திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !

6

ரவுடி ஜெயலலிதாண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் மாநாட்டின் நிறைவில் முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள அதிரடி அறிவிப்புகள், பாசிச ஆட்சியைச் சட்டபூர்வமாகக் கட்டவிழ்த்துவிடுவதற்கான முன்னறிவிப்பாகவே அமைந்துள்ளன. இம்மாநாட்டில், போலீசாருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ள ஜெயலலிதா, தற்போதுள்ள குண்டர் சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவது, இணையக் குற்றங்களை (சைபர் கிரைம்) குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது, மறியல் செய்வதற்கு முப்பது நாட்களுக்கு முன்னதாக அனுமதி வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது – என மூன்று சட்டத் திருத்தங்களை அறிவித்துள்ளார்.

தொடர் குற்றங்களில் ஈடுபடும் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள், கள்ளச் சாராயம் காச்சுவோர் போன்றோரைத் தண்டிப்பது; வெளியில் இருந்தால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அத்தகையோரைக் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என்று கூறிக் கொண்டுதான் பிணை ஏதுமின்றி ஓராண்டு காலத்துக்குச் சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குற்றச் செயல்களிலிருந்து தடுப்பதற்கான இச்சட்டத்தை இப்போது, ஒருவர் முதன்முறையாகக் குற்றம் செய்தால்கூட ஏவலாம் என்றும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போரை இச்சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்கலாம் என்றும் இச்சட்டத்தைத் திருத்தி விரிவாக்கியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.

ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள்தூக்கிச் சட்டத்தின்படி, அரசுக்கு எதிராகப் போராடும் புரட்சிகர -ஜனநாயக சக்திகளும் எதிர்க்கட்சியினரும் நாடெங்கும் ஒடுக்கப்பட்டனர். அக்கொடிய சட்டத்தைக் கொண்டு 1990-களில் பாசிச ஜெயா அரசு ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புகளையும் ஈழ விடுதலை ஆதரவு அமைப்புகளையும் கொடூரமாக ஒடுக்கியது. அடிப்படை மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட ஜனநாயக விரோதச் சட்டம்தான் இது. இச்சட்டத்தின் நீட்டிப்பாகவே, தொடர் குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தன்னளவிலேயே ஜனநாயக விரோதமான இச்சட்டம், பின்னர் திருட்டு விசிடி தயாரிப்போர், விற்போர் மீது ஏவும் வகையில் விரிவாக்கப்பட்டது.

தமிழகத்தில் குண்டர் சட்டத்தைப் போலக் கேடாகப் பயன்படுத்தப்பட்ட சட்டம் வேறு எதுவும் இல்லை. குண்டர் சட்ட வரையறைக்குள் வராதவை என்று 99 சதவீதத்துக்கும் மேலான வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க.தலைவர்களும் முன்னணியாளர்களும் இச்சட்டத்தால் பழிவாங்கப்பட்ட கதையை அனைவரும் அறிவர். எதிர்க்கட்சியினரை முடக்குவதற்கானதாக மட்டுமின்றி, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் பறித்து மக்களை ஒடுக்கும் நோக்கத்துடன் அச்சட்டத்தின் எல்லைகள் இப்போது மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிடலாம் என்கிற புதிய விதியானது, ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கொடிய விதியாகும். மின்வெட்டுக்கு எதிராகத் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடும் உழைக்கும் மக்களும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களும், காவிரி- முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் நியாயவுரிமைக்காகப் போராடும் விவசாயிகளும், இனி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படலாம். பொது அமைதி என்றால் என்ன என்பதை மாவட்ட ஆட்சியரும், போலீசு அதிகாரிகளும், அரசு வழக்குரைஞர்களும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்பத் தீர்மானிப்பார்கள். இதன் மூலம் எந்தவிதமான சட்டபூர்வமான போராட்டங்களைக்கூட நடத்த முடியாத நிலைமை ஏற்படும். உழைக்கும் மக்கள் ஒரு கண்டன ஊர்வலம் நடத்தும்போது, அதனால் பொதுப் போக்குவரத்துக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டால் கூட, அதனைப் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டி, முன்னணியாளர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிட முடியும்.

ஏற்கெனவே உள்ள தகவல்-தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இணையக் குற்றத் தடுப்புக்கான 66-ஏ பிரிவின்படி, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொத்துக்கள் குவிந்தது எப்படி என்று டுவிட்டரில்” விமர்சித்ததற்காக புதுச்சேரியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில், பால்தாக்கரேயின் மரண ஊர்வலத்துக்காக மும்பை நகரம் முடக்கப்பட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கருத்துரிமையைப் பறிக்கும் இக்கொடிய சட்டப் பிரிவானது, இப்போது குண்டர் சட்டத்திலும் சேர்க்கப்பட்டு, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இணையக் குற்றங்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நோக்கம், அரசுக்கு எதிராகக் கருத்துக்களைச் சொல்பவர்களை மிரட்டி ஒடுக்குவதற்குத்தான். அதாவது, இனி ஜெயலலிதாவை நையாண்டி செய்து யாராவது கேலிச்சித்திரம் வரைந்தால்கூட அவர் மீதும் குண்டர் சட்டம் பாயும். இணையத்தின் மூலம் சுதந்திரமாகக் கருத்துகளை வெளியிட முடியும் என்று கருதிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரது மாயைகளை பாசிச ஜெயாவின் இச்சட்டத்திருத்தம் கீழறுத்துப் போட்டுள்ளது.

இத்தனையும் போதாதென்று, மறியலில் ஈடுபடுபவர்கள் 30 நாட்களுக்கு முன்னதாக போலீசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்ற விதியானது, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கொடூரத் தாக்குதலாகும். தங்கள் குரலை ஆட்சியாளர்கள் செய்விமடுக்காதபோது, உழைக்கும் மக்கள் வேறுவழியின்றி பயன்படுத்தும் ஒரு ஆயுதம்தான் மறியல் போராட்டம். இது அநீதிக்கு எதிரான மக்களின் போராட்ட வடிவம். ஒரு ஊரில் சாதியக் கொடுமையோ, அல்லது போலீசின் அட்டூழியமோ நடந்தால், அப்போது நாட்டு மக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க மறியல் போராட்டம் முக்கியமான போராட்ட முறையாக உள்ளது. இது வன்முறைப் போராட்டம் அல்ல. இருப்பினும், இத்தகைய போராட்டம் நடத்தும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கு எதிராக நள்ளிரவில்கூட குடும்பத்துடன் திரண்டு, வேறுவழியில்லாத நிலையில்தான் உழைக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே போலீசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது கேலிக்கூத்தானது மட்டுமின்றி, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையே குழிபறிக்கும் செயலாகும். மறியல் போராட்டத்தை முற்றிலும் தடை செய்யவில்லை என்று காட்டிக் கொண்டு, மறியல் போராட்டத்தைத் தண்டிக்கத்தக்க குற்றமாக மாற்றியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.

தனியார்மய – தாராளமயத் தாக்குதல் தீவிரமாவதைத் தொடர்ந்து நாடெங்கும் மக்களின் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகி வருகின்றன. அதை முந்திக் கொண்டு பாசிச அடக்குமுறைச் சட்டங்களும் பெருகி வருகின்றன. தனியார்மய – தாராளமயத்துக்கு எதிராகப் போராடுபவர்களை எவ்விதத் தடையுமின்றி ஒடுக்குவதற்காகவே தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும், தடா-பொடா சட்டங்களின் மறு அவதாரமான “ஊபா”வும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் ஆதார் அடையாள அட்டை கொண்டுவரப்படுகிறது. பெருகிவரும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கான முன்னேற்பாடாகவே, இப்போது குண்டர் சட்டத்தின் எல்லைகளும் விரிவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சமச்சீர் கல்வி, பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரியில் பிரச்சினை முதலானவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள பாசிச ஜெயா கும்பலின் ஆட்சியை போலீசு அடக்குமுறையும் பாசிச சட்டங்களும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. “ஆட்சிக்கு வந்தவுடன், அம்மா திருந்திவிட்டார், இவர் பழைய ஜெயலலிதா அல்ல” என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் அவருக்கு ஒளிவட்டம் போட்டன. ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதைத் தனது அதிரடி பாசிச சட்டங்களின் மூலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்மென்றால் பொய்வழக்கு! ஏனென்றால் குண்டர் சட்டம்!!

பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என ஜெயா அறிவித்திருப்பது மக்களுக்காகப் போராடுபவர்களைக் குறிவைத்துதான் என்பதை, சென்னை-மதுரவாயல் பகுதி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியைச் சேர்ந்த திவாகரன், குமரேசன் என்ற இரண்டு தோழர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைதாகியிருப்பது நிரூபித்துவிட்டது.

கடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதி மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வந்த போலீசு, பகுதி மக்களைப் பீதியூட்டும் அராஜகத்தில் இறங்கியது. அவ்விரண்டு தோழர்களும் போலீசின் அராஜகத்தைத் தட்டிக் கேட்டதற்காக அவர்களைக் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்த போலீசு, அதன் பின் அவர்கள் மீது குண்டர் சட்டத்தையும் ஏவிவிட்டது. போலீசின் இந்தக் காட்டு தர்பாரைக் கண்டித்து போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்களின் மீதும், பு.மா.இ.மு தோழர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசு, பு.மா.இ.மு. தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டு 64 பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்தது.

குண்டர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் போவதாக கடந்த டிசம்பர் 19 அன்றுதான் அறிவித்தார், ஜெயா. ஆனால், அதற்கும் முன்பாகவே உழைக்கும் மக்களுக்காகப் போராடிவரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீது அச்சட்டத்தைச் சட்டவிரோதமான முறையில் ஏவியிருக்கிறது, சென்னை போலீசு. அம்மா எள் என்பதற்கு முன்பாகவே எண்ணெயாக நின்ற தமிழக போலீசின் கடமையுணர்ச்சியை என்னவென்பது!

_________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________

வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

1

ந்திய நாடாளுமன்றம் என்பது வெற்று அரட்டைமடம்; ஜனநாயகத்துக்கான தேசிய முகமூடி; நாட்டையும் மக்களையும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைக்கும் துரோகிகள்தான் ஓட்டுக்கட்சிகள் – என்பதை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான வாக்கெடுப்பு விவாதம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதென்பதுதான் ஓட்டுக் கட்சிகளின் முடிவாக இருந்தது. எனினும், இந்த நாடகத்தை எப்படித் திறமையாக நடத்துவது என்பதில்தான் அவர்களிடையே வேறுபாடு நிலவியது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில், எந்த ஓட்டுக்கட்சி எந்த நிலையை எடுக்கும் என்பதும், ஓட்டெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்பதும் கிட்டத்தட்ட எல்லோரும் அறிந்த விசயம்தான். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் என்ற பெயரில் தலா இரண்டு நாட்களுக்கு ஒரு ஜனநாயகக் கேலிக்கூத்து நடந்துள்ளது.

மன்மோகனின் ஷாப்பிங் கார்ட்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் தீர்மானம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அரசுக்கு எதிராக 218 வாக்குகளும், ஆதரவாக 253 வாக்குகளும் கிடைத்தன. 545 எம்.பி.க்களைக் கொண்ட அவையில் அன்று 471 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். முலயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மைய அரசைக் காப்பாற்றவும் தாங்களும் எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளவும் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவையில், மைய அரசின் முடிவுக்கு எதிராக 102 வாக்குகளும், ஆதரவாக 123 வாக்குகளும் பதிவாகின. இங்கேயும் சமாஜ்வாதி கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியோ ஆட்சியைக் காப்பாற்ற மைய அரசை ஆதரித்து வாக்களித்தது. மக்களவையில் 35 வாக்குகளும், மாநிலங்களவையில்21 வாக்குகளும் கூடுதலாகப் பெற்று இத்தீர்மானம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசே நிர்வாக ரீதியாக இம்முடிவை எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதே உலக வங்கியின் – ஏகாதிபத்தியங்களின் கட்டளை. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி நாடகமாடியதால் இப்படியொரு ஜனநாயக நாடகமாட வேண்டியிருந்தது. இது ஆளும் காங்கிரசு கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்துள்ளோம் என்று நியாயவாதம் பேச கைக்கூலி மன்மோகன் அரசுக்கு வாப்பாகிவிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக நாடகமாடிய கட்சிகள், நாளை ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றமே இப்படியொரு முடிவை எடுத்துள்ளதால் அதை உடனடியாக மாற்ற முடியாது; நாடாளுமன்றமே மீண்டும் இதை நிராகரித்தால்தான் மாற்ற முடியும் என்று கூறிக் கொண்டு, வேறு வழியின்றி சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைத் தொடர வேண்டியிருக்கிறது என்று நியாயவாதம் பேசுவதற்கும் வாய்ப்பாகிவிட்டது.

அந்நிய முதலீட்டை நான் ஆதரிக்க மாட்டேன், வியாபாரிகளுக்கு எதிரான நிலையை தி.மு.க. எப்போதும் எடுக்காது என்று உறுதியளித்த கருணாநிதி, மதவாத ஆட்சி வரவிடாமல் தடுக்க காங்கிரசை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பல்டி அடித்தார். கருணாநிதி ஒரு வாரத்தில் பல்டி அடித்தார் என்றால், மாயாவதி இரண்டே நாட்களில் பல்டியடித்தார். மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியினர், வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மன்மோகன் அரசைக் காப்பாற்றினர். ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சி வெளிநடப்பு செய்யவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகமாகி நெருக்கடி ஏற்படும் என்பதால் அங்கு மைய அரசுக்கு ஆதரவாக அவரது கட்சியினர் வாக்களித்துள்ளனர். “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து, எங்கள் எதிர்ப்பை அவையில் பதிவு செய்தோம்” என இக்கட்சிகள் கூறுவதெல்லாம் மக்களின் தலையில் மிளகா அரைத்த கதைதான்.

இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்று, தனது 2004 தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக அறிவித்து ஆதரித்த கட்சிதான் பா.ஜ.க. இப்போது எதிர்ப்பதாக நாடகமாடும் பா.ஜ.க., வாக்கெடுப்பை நடத்தச் சொன்னதே தவிர, அந்நிய முதலீட்டைத் தடுக்க எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் தப்பித்து நழுவிக் கொள்ளும் நோக்கத்துடன் தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினரின் உயர்பதவிக்கான மசோதாவை அது முதன்மைப்படுத்தியது. நாடாளுமன்றத்தை முடக்கிக் கூச்சலிட்டதைத் தவிர, எந்த எதிர்க்கட்சியும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய துளியும் முயற்சிக்கவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் ரிலையன்ஸ், மோர், பார்தி முதலான உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் கால்பதிக்கத் தொடங்கின. குறிப்பாக, பார்தியும் வால்மார்ட்டும் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோதமாக சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தபோதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடவில்லை.

வானகரத்தில் வால்மார்ட்
வால்மார்ட் நிறுவனம் சென்னை – வானகரத்தில் கட்டி வரும் கட்டிடம்

நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துக் கூச்சல்களும் வெளிநடப்புகளும் நடந்து கொண்டிருந்தபோதே, தமிழகத்தில் சென்னை-வானகரம் அருகே கிடுகிடுவென கட்டிடங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது பார்தி வால்மார்ட் நிறுவனம். அண்ணாநகர் -திருமங்கலத்தில் அலுவலகம் அமைத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 2,500 சில்லறை வணிகர்களைத் தனது உறுப்பினர்களாக்கியுள்ளது. மற்றவர்களைவிட ஏறத்தாழ 30 சதவீதத்துக்கு விலை குறைவாகத் தருவதாக வணிகர்களிடம் பேரம் பேசி வருகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சவடால் அடித்துக் கொண்டிருக்கும்போதே இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம், அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிநிகளாகிய எம்.பி.க்களையும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் நடவடிக்கைகள் – லாபியிங்” என்றழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் லாபியிங் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இந்த லாபியிங் நடவடிக்கைகளுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு நிறுவனமும் அரசுக்குக் காலாண்டுக்கொருமுறை அறிவிக்க வேண்டும். இதன்படி வால்மார்ட் நிறுவனம், கடந்த நான்காண்டுகளில் உலகெங்கும் 125 கோடி ரூபா செலவிட்டுள்ளதாகவும், இதில் இந்தியச் சந்தையில் நுழைவதற்கு லாபியிங் செய்யப்பட்டதை ஒரு அம்சமாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் லாபியிங் நடவடிக்கைகளுக்கு வால்மார்ட் நிறுவனம் எவ்வளவு செலவிட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அரசுக்குத் தெரிவிக்கும் சட்டபூர்வ லாபியிங் செலவுகளைத் தவிர, இதர பல வழிகளிலும் எல்லா ஏகபோக நிறுவனங்களும் செயல்படும் நிலையில், வால்மார்ட் இந்தியாவில் எவ்வளவு செலவிட்டு எத்தனை எம்.பி.க்களை விலைபேசியுள்ளது என்பது கோடி ரூபாய் கேள்வியாகவே நீடிக்கிறது.

பு.ஜ.தொ.மு. திருச்சி ஆர்ப்பாட்டம்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதை எதிர்த்து அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

தற்போதைய அரசியலமைப்பு முறையானது, தனியார்மய- தாராளமய கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரமாக்கி, நாட்டு மக்களை மரணப் படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த அரசியலமைப்புக்குள்ளாகவே தீர்வு கண்டுவிட முடியும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடியும் என்று சிறு வணிகர்கள் இன்னமும் நம்புகிறார்கள். ஓட்டுக் கட்சிகள் தொடர்ந்து துரோகமிழைத்த போதிலும், மண்குதிரைகளான அவற்றின் வெற்று வாக்குறுதிகளை நம்பி ஆற்றில் இறங்குகிறார்கள். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே புதிய போராட்டமுறைகளை மேற்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இவையனைத்தும் சேர்ந்து இத்தகைய கேலிக்கூத்தை ஓட்டுக்கட்சிகள் திறமையாக நடத்துவதற்கு வாப்பாக அமைந்து விட்டது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள துணிச்சலில், வங்கித்துறையைச் சீர்குலைக்கும் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா (2012), பங்கு ஆதாயம் மற்றும் கடன்கள் மீட்புச் சட்டங்கள் திருத்த மசோதா( 2012) ஆகியவற்றை மன்மோகன் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவாக, இனி அரசுத்துறை வங்கிகளின் குடுமி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இரும்புப் பிடியில் இருக்கும். உள்நாட்டு தனியார் வங்கிகள் அனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிதி நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

இவை தவிர, தடா, பொடா சட்டங்களின் புதிய அவதாரமான பயங்கரவாத “ஊபா’’ (UAPA) சட்டத்திலும் புதிய திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. எந்தவொரு குடிமகனையும் பயங்கரவாதியுடன் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டிக் கைது செய்ய போலீசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் வகையில், “ஊபா” சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒருபுறம், அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு தாராள அனுமதி; மறுபுறம், நாட்டு மக்கள் மீது ஏவப்படும் பாசிச கருப்புச் சட்டங்கள். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும், இன்றைய நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிக்கும் சாராம்சத்தில் வேறுபாடு இல்லாமல் போவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மூலமோ, ஓட்டுக்கட்சிகளை நம்பியோ தீவிரமாகிவரும் இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களை முறியடித்துவிடலாம் என்று சில்லறை வணிகர்களும் உழைக்கும் மக்களும் இனியும் காத்திருக்க முடியாது. கடைந்தெடுத்த துரோகிகளாகிவிட்ட ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற – சட்டமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள்திரள் புரட்சிகர போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டும்தான், மூர்க்கமான இத்தகைய மறுகாலனியத் தாக்குதலை முறியடிக்க முடியும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________

பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?

6

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத்திருத்தம் தீர்வாகுமா?

இந்தியத் தலைநகர் தில்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றம், அதுவும் குறிப்பாகக் கும்பல் பாலியல் வல்லுறவுக் குற்றம் எப்போதாவது அரிதாக நடக்கும் நிகழ்வு அல்ல. “இந்தியாவின் வல்லுறவுத் தலைநகர்” என்ற வெறுக்கத்தக்க பெயர் பெறும் அளவுக்கு வாடிக்கையாகி விட்டது. ஒரு நாளைக்கு சராசரி இரண்டாவது நடப்பதுதான் என்கிறவாறு அதிகரித்துவிட்டது. காஷ்மீர், கிழக்கு- வட கிழக்கு மாநிலங்கள் போன்ற போராட்டக் களங்களிலும் கிராமப்புற எளிய ஒடுக்கப்படும் மக்கள் மீதும் வல்லுறவுக் குற்றங்கள் ஏராளமாக நடந்தபோதும் பெருந்தன்மையுடன் அமைதி காத்து வந்த தலைநகர்வாழ் குடிமக்களை” கடந்த மாதம் 16-ஆம் நாள் முன்னிரவு நேரம் தில்லியில் நடத்தப்பட்ட கொடூரமான கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் பொங்கி எழச் செய்துவிட்டது.

குறிப்பாக, தில்லி பல்கலைக்கழகங்களின் கல்லூரிகளின் மாணவி-மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், இளந்தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் வெறுப்பு, ஆத்திரம், கோபம் கொப்பளிக்கத் தில்லி அதிகாரபீடங்களின் வாயில்களில் தினமும் குவிந்தார்கள். தடுப்புக் கம்பிகளையும், தடுப்பு அரண் கட்டைகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டு முன்னேறினார்கள். வல்லுறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிடவும், பெண்களுக்குப் பாதுகாப்பும் அதற்குரிய கடும் சட்டங்கள் போடவும் கோரி முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும், மெழுகுவர்த்திகள் ஏந்தி பிரார்த்தனைகளும் ஆவேச முழக்கங்களும் எழுப்பி அமைதியாகப் போராடினரார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் நேரடியாகத் தம்முன் வந்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டுமென்பதுதான் அவர்களது உடனடி வேண்டுகோள்.

போலீசு தாக்குதல்
பாலியல் வல்லுறவுக் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் மீது வெறியோடு பாயும் இந்தியாவின் வல்லுறவுத் தலைநகரப் போலீசு

ஆனால், பெண்களுக்கு எதிரான எல்லாப் பாலியல் குற்றங்களும் இந்த அளவுக்கு வளர்வதற்குக் காரணமாக இருந்த அரசியல்-அதிகாரக் குற்றவாளிகள், தில்லி கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதலைக் கண்டித்துக் குரல் கொடுப்பவர்களின் வரிசையில் முன்னணியில் வந்து நின்று கொண்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டத்தைக் கடுமையாக்குவது முதல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வல்லுறவு உணர்வுகளை காயடிக்கும் மருந்து ஊசி போடுவது வரை வல்லுறவுக் குற்றங்கள் மீது கட்சி வேறுபாடின்றிக் கடும் உக்கிரம் காட்டினர். இந்த வகையில் செய்தி ஊடகங்களும் முன்னிலையில் நின்றன. ஆனால், தில்லித் தெருக்களில் போராட்டங்கள் வலுப்பெற, வலுப்பெற இக்கட்சிகளின், ஊடகங்களின் அணுகுமுறை நிறம் மாறத் தொடங்கியது. ஆளும் கட்சிகளும் அதிகார அமைப்புகளும் அடக்குமுறைகளைக் கையிலெடுத்தன. “இளைஞர்கள் – மாணவர்களின் போராட்டங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. சமூக விரோத கும்பல்கள் ஊடுருவி விட்டார்கள்” என்று கூறி போலீசு அதிரடிப் படைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போலீசுக் காட்டுமிராண்டித்தனம் என்று தொடக்கத்தில் கண்டித்த ஊடகங்கள், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மிகையானவை, நிறைவேற்றகூடியவை அல்ல எனக் காட்ட ஆரம்பித்தன.

கல்லுளிமங்கர்களான சோனியா-மன்மோகன் கும்பல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சட்டங்கள் கடுமையாக்கப்படும், பேருந்துகளில் காமிராக்கள் பொருத்தப்படும், போலீசு ரோந்து அதிகரிக்கப்படும் என்று ஒருபுறம் வாக்குறுதி அளித்தது. மறுபுறம், ருசிய அதிபர் வருகைக்கு முன்பு தில்லி தெருக்களைச் சுத்தம் செய்துவிட வேண்டும் என்றும், வல்லுறவு தாக்குதலுக்குப் பலியாகி உயிருக்குப் போராடிவரும் பெண்ணுக்கு எதாவது நிகழ்ந்தால், அதுவும் இந்தியாவில் நிகழ்ந்தால் விபரீத மாகிவிடும் என்றும் சதித்தனமாகத் திட்டமிட்டது. போராட்டங்களை ஒடுக்கவும், அப்பெண்ணுக்கு உயர் சிகிச்சை என்ற பெயரில் சிங்கப்பூர் அனுப்பவும் உத்திரவு போட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். விரைவில் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படும், விரைவு நீதிமன்றத்தில் விசாரித்துக் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவர்; போராட்டங்களை முடித்துக் கொண்டு இருப்பிடங்களுக்குத் திரும்புங்கள் என்று அதிகார பீடங்கள் எச்சரித்தன.வல்லுறவுத் தாக்குதலுக்குப் பலியான அப்பெண் சிங்கப்பூரில் இரண்டே நாளில் மரணமடைய, அரசு அவள் உடலை இரவோடு இரவாக கொண்டு வந்து சில நிமிடங்களில் எரியூட்டி விட்டது. இனிச் சட்டம் தனது வழக்கமான வேலையைச் செய்யும்! மக்கள் எல்லாவற்றையும் மறந்துபோவார்கள்!

பஞ்சாப் சம்பவம்
தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதைத் தட்டிக் கேட்ட குற்றத்துக்காக அமிர்தசரஸ் கடைவீதியில் ஆளும் அகாலிதளக் கட்சித்தலைவர்களுள் ஒருவனான ரஞ்ஜித்பால் சிங்-ஆல் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் போலீசு உதவி ஆய்வாளர் ரவீந்தர்பால் சிங். இந்த அநீதியை யாரும் தட்டிக் கேட்கவில்லையே என்று கதறியழும் அவரது மகள்.

இதற்கிடையே, பாலியல் வன்முறைக் குற்றங்களுக்குப் பெண்களே காரணமென்றும், குற்றவாளிகளை நியாயப்படுத்தியும், குடியரசுத் தலைவரின் மகன் உட்பட பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பேச ஆரம்பித்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பாலியல் குற்றவாளிகள் கணிசமான பேர் உறுப்பினர்களாக உள்ளபோது, மாநிலப் போலீசுத் தலைமை அதிகாரிகள் முதல் போலீசில் பலரும் பாலியல் குற்றவாளிகளாக உள்ளபோது, இதில் ஒன்றும் வியப்பில்லை. தில்லியே வல்லுறவுத் தலைநகர் என்று பெயர் பெற்றுள்ளது என்றால், நாட்டின் பிற பகுதிகள் வேறு எப்படி இருக்கும்?! காசுமீரிலும், வடகிழக்கு, கிழக்கு-மத்திய இந்தியாவில் பிரிவினைவாதிகளையும் தீவிரவாதிகளையும் ஒடுக்குவது என்ற பெயரில் அரசின் ஆயுதப்படைகளே கும்பல் பாலியல் வன்முறை குற்றங்களைக் கேள்விமுறையின்றி நடத்தி வருகின்றன. தில்லி சம்பவம் நடந்த நாளுக்கு முன்னும் பின்னும் ஒரிசா, தில்லி, தமிழ்நாடு, மும்பை என்று பெருந்திக்குகளிலும் பாலியல் வல்லுறவுக் குற்றச்செய்திகள் குவிகின்றன. ஒன்றரை வயது, பதின்வயது குழந்தைகள், சிறுமிகள், பள்ளி மாணவிகள் பெருமளவு வல்லுறவுக்குப் பலியாகும் அவலங்கள் ஆட்கொல்லி நோயைப் போல பரவுகின்றன.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்துதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்திரவு போட்ட அடுத்த நாள், பஞ்சாபின் ஒரு நகரில் பட்டப் பகளில் 5 வாலிபர்கள் கடைத்தெருவில் தந்தையுடன் போன இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். தடுக்கப்போன அவளது தந்தை ஆளும் அகாலித் தள உள்ளூர்த் தலைவனால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவன் போலீசு துணை இன்ஸ்பெக்டர். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு போலீசு பட்டாளம். இதே போன்று பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான வேறொரு இளம் பெண் அகாலி தளத் தொண்டர்களால் அடுத்த வாரம் தாக்கப்பட்டார். மும்பையில் தன் அண்டை வீட்டு இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டு போனான் ஒரு இளைஞன். அப்பெண்ணைக் கேலி கிண்டல் செய்த கும்பலை எதிர்த்ததற்காக அந்த கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டான் அந்த இளைஞன்.

இவ்வாறான பாலியல் வெறிச் சம்பவங்கள் இந்நாட்டில் அதிகரித்து வருவது ஏன்? ஏற்கனவே, பிற்போக்கு ஆணாதிக்க சமுதாயத்தைக் கொண்ட இந்திய சமூகத்தின் மீது புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய தாராளவாத அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்கள் திணிக்கப்பட்டதன் விளைவாக பெண்களும் நுகர்வுவெறிக்கான பண்டமாகக் ஆணாதிக்க பாலியல் வெறியர்களால் கருதப்படுகின்றனர். புதிய சீர்திருத்தவாதமும் தாராளமயமும் பெண்களுக்குப் பாதுகாப்பையும் ஜனநாயகத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால், அவ்வாறான மாயத்தோற்றத்துக்கு பலரும் பலியாகின்றனர். வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா? பாலியல் குற்ற விசாரணை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நீதியரசர்களிடமிருந்து நீதி கிடைக்குமா?
_________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________

மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!

2

வரியில்லா தீவுகள்ரி தவிர்ப்பை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி போடுவதாக’ நிதி அமைச்சர் ப சிதம்பரம் அறிவித்திருக்கிறார். இந்திய தொழில் துறை இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பம்பாய் பங்குச் சந்தை குறியீட்டு எண் 243 புள்ளிகள் உயர்ந்து இரண்டு ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறது.

இதன் மூலம் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.

அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி கவர்வதற்காக ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமான பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ‘பார்த்தசாரதி ஷோமே தலைமையிலான குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை ஏற்றுக் கொண்டு வரி தவிர்ப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளை 2016 வரை தள்ளி போடுவதாக’  நிதி அமைச்சர் கூறினார்.

2012 மார்ச் மாதம் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசிய அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரி தவிர்ப்புக்கு எதிரான விதிமுறைகளை கொண்டு வரப் போவதாக அறிவித்தார். உடனேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய மூலதனத்தை வெளியில் கொண்டு போனார்கள்.  இந்திய  முதலாளிகளும் ஊடகங்களும் ‘இந்த விதிமுறைகள் அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தகர்ப்பதாக இருக்கின்றன’ என்று முறையிட்டார்கள். ‘வரி விதிப்பு தொடர்பான இந்திய அரசின் கொள்கைகள் முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாக’ இந்திய அரசை ஒபாமா எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி, ‘இப்பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்வதற்கு அவகாசம் வேண்டியிருப்பதால், இதன் அமலாக்கம் ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக’ அறிவித்து விட்டார்

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பார்சல் செய்து அனுப்பப்பட்ட பிறகு நிதி அமைச்சகத்தின் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், வரி தவிர்ப்புக்கு எதிரான விதிகளை ஆய்வு செய்வதற்காக வரி விதிப்புத் துறை நிபுணர் பார்த்தசாரதி ஷோமே தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.  பொதுவாக பல ஆண்டுகளாக இழுத்தடித்து முடிவை தள்ளிப் போடும் இத்தகைய குழுக்களுக்கு மத்தியில் ஷோமே குழு மிக விரைவில் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

  • GAAR விதிமுறைகளை 3 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்
  • பங்குகளை விற்று கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு வரியை ரத்து செய்ய வேண்டும்.
  • மொரிஷியசில் பதிவு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்களின் வசிப்பிடத்தின் உண்மைத் தன்மையை சோதனை செய்ய இந்த விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது

என்றும் இன்னும் பல சலுகைகளையும் பரிந்துரைத்திருந்தது.

‘அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு GAAR செயல்பாட்டை 2016 வரை தள்ளிப் போடப் போவதாக’ நிதி அமைச்சர் ப சிதம்பரம் இப்போது அறிவித்திருக்கிறார்.

“’வரி ஏய்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரியில்லா சொர்க்கத் தீவுகளில் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீதும், வரி ஏய்ப்புக்காகவே செய்யப்படும் பரிவர்த்தனைகள் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை வருமானவரித்துறை ஆணையர்களுக்கு வழங்குவதற்காக’ வரி ஏய்ப்பு எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறியிருந்தது.

இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஒரு பெயர்ப்பலகை கம்பெனியைத் தொடங்கி, அதன் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து விட்டால், தானாகவே வரிச்சலுகை கிடைத்து விடும் என்பதே தற்போதைய நிலை. இதனை மாற்றி, இத்தகைய நிறுவனங்கள் உண்மையிலேயே அந்த நாட்டில் இருக்கின்றனவா, அல்லது அவை வெறும் பெயர்ப்பலகைகளா என்று ஆராயும் அதிகாரத்தை இந்தப் புதிய விதி வருவாய்த்துறை ஆணையருக்குத் தருகிறது.

அது மட்டுமின்றி, பன்னாட்டு நிதி நிறுவனங்களும், இந்தியக் கறுப்புப் பணப் பேர்வழிகளும், தங்களுடைய முகத்தை மறைத்துக் கொண்டு பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் இறக்கி வரும் வழியான, ‘பார்ட்டிசிபேட்டரி நோட்‘ என்ற முகமூடியணிந்த முதலீடுகள் விசயத்திலும், இந்த விதி “மூக்கை நுழைக்கிறது’’. வருமான வரித்துறை ஆணையர் கோரும் பட்சத்தில், வரி தவிர்ப்புக்கு அப்பாற்பட்ட பிற வணிக நோக்கங்களுக்காகவும்தான், பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் முதலீடு செய்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் நிரூபிக்கவேண்டும் என்று கூறுகிறது இந்த விதி.

கனடா போன்ற முன்னேறிய பொருளாதார நாடுகளிலும் இத்தகைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் வோடபோன் நிறுவனத்தின் மீது வருமான வரித் துறை விதித்த வரியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு தடுப்பு விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் வாம்போவாவும் இந்தியாவின் மேக்ஸ் குழுமும் 1992-ல் ஹட்சிசன்-மேக்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் ஆரம்பித்தன. செல்பேசி சேவைகளுக்கான உரிமங்களை பெற்றும் எஸ்ஸார், ஏர்செல் நிறுவனத்தின் ஒரு பகுதி, பி.பி.எல்.  போன்றவற்றை விலைக்கு வாங்கியும் ஹட்ச்-எஸ்ஸார் என்ற பெயரில் இந்தியாவின் பல பகுதிகளில் செல்பேசி சேவைகளை வழங்கி வந்தது அந்த நிறுவனம்.

நிறுவனத்தில் 67 சதவீதம் பங்குகளை வைத்திருந்த ஹட்சிசன் டெலிகாம் இன்டர்நேஷனல் 2007ம் ஆண்டு தனது பங்குகளை வோடபோன் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ரூ 52,300 கோடிக்கு விற்றது.  இதன் விளைவாக இந்தியாவில் இயங்கி வந்த ஹட்ச் தொலைபேசி சேவை வோடபோன் என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்திய வருமானவரிச் சட்டத்தின் படி ‘எந்த ஒரு சொத்தையும் விற்கும் போது அந்த விற்பனையால் கிடைக்கும் ஆதாயத்தின் மேல் வரி செலுத்தப்பட வேண்டும்.’ ‘சொத்தின் விற்பனை மதிப்பு வாங்கிய விலையை விட அதிகரிப்பது சொத்தின் உரிமையாளரின் முயற்சிகளை மட்டுமின்றி புறச் சூழல்களையும் சார்ந்திருப்பதால், ஆதாயத்தின் ஒரு பகுதி அரசுக்குச் சேர வேண்டும்’ என்ற அடிப்படையில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.

ஹட்ச்-வோடபோன்‘ஹட்சிசன்-வோடபோன் பரிமாற்றத்துக்கான மூலதன ஆதாய வரியாக ரூ 11,000 கோடி கட்ட வேண்டும்’ என்று இந்திய வருமான வரித் துறை வோடபோனுக்கு உத்தரவிட்டது. அதாவது ஹட்சிசன் தனது பங்குகளை வோடபோனுக்கு விற்றதால் ஈட்டிய ஆதாயத்தின் ஒரு பகுதியை இந்திய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். ஹட்சிசனுக்கு தான் கொடுத்த பணத்திலிருந்து வரியை கழித்துக் கொண்டு அரசாங்கத்துக்கு வோடபோன் நிறுவனம் கட்ட வேண்டும்.

இந்த பரிமாற்றம் கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்டது. எனவே ‘வாங்கப்பட்ட சொத்துக்கள் இந்தியாவில் இருந்தாலும் பரிமாற்றம் இந்தியாவுக்கு வெளியில் நடைபெற்றதால் வரி கட்டத் தேவையில்லை’ என்று வோடபோன் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோற்றது. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் ரூ 11,200 கோடி ரூபாய் இந்திய அரசிடமிருந்து பிடுங்கப்பட்டு வோடபோன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஹட்சிசன்-வோடபோன் நிறுவனங்கள் இந்திய மக்களிடமிருந்து ஏமாற்றி பறித்துச் சென்ற ரூ 11,200 கோடி ரூபாயைப் போல பல லட்சம் கோடி ரூபாய் வரி தவிர்ப்பு கார்ப்பரேட்டுகளால் செய்யப்படுகின்றன.  மக்களின் கோபத்தைப் பற்றி கவலைப்படாமல் ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் வெட்டு, பெட்ரோல்/டீசல் விலை உயர்வு என்று சுமைகளை ஏற்றிக் கொண்டே போகும் மத்திய அரசு, முதலீட்டாளர்களை கோபப்படுத்தக் கூடாது என்ற அக்கறையில் கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை விட்டுக் கொடுக்கிறது. இந்திய அரசும் ஜனநாயகமும் யாருக்காக செயல்படுகின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

43

டிசம்பர் 25, கீழத் தஞ்சையின் கீழ்வெண்மணி கிராமத்தில், 1/2 படி நெல் கூட்டிக்கேட்ட கூலிவிவசாயிகளை, கோபாலகிருஷ்ண நாயுடு எனும் திருச்சூர் பண்ணையாரின் உத்தரவின்படி அடியாட்கள் கூரை வீட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற நாள். கொல்லப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட மக்களில்  பெண்கள் குழந்தைகளும் அடக்கம்.

கீழ்வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்தும், கடந்த நவம்பர் 7ம் தேதி தரும்புரி நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி, செங்கல்மேடு உள்ளிட்ட தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் காதல் திருமணத்தைக் காரணமாக காட்டி ஆதிக்க சாதி வெறியர்கள் 250க்கும் மேற்பட்ட வீடுகளை கொளுத்தியும் நகை, பணம் வீட்டில் இருக்கும் அனைத்து அத்தியாவசியமான பொருள்களையும், பல தலைமுறை உழைத்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடி வெறியாட்டம் போட்டதை கண்டித்தும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய சில விபரங்கள்:

திருச்சி

கீழ் வெண்மணி நாளை நினைவு கூறும் அதே சமயம், இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆதிக்க சாதியின் வெறியாட்டத்தை கண்டித்தும் 25.12.12 அன்று காலை 10.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்தின.

கீழ்வெண்மணி நினைவு நாள் - திருச்சி ஆர்ப்பாட்டம்
திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

பு.மா.இ.மு தோழர்.செழியன் தலைமையேற்று பேசும்போது

இன்று வெண்மணியின் படுகொலையை நினைவு கூறும் அதே சமயம் நாடு முழுவதும் ஆதிக்க சாதி வெறியாட்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அன்று கீழ்வெண்மணி மக்கள் அனுபவித்த கொடுமை, பண்ணையார்களின் அடக்குமுறை அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் மக்களை தமது உரிமை கேட்டு கிளர்ந்தெழ வைத்தது. 44 பேரை கொளுத்தியவர்களை நக்சல்பாரி தோழர்கள் கணக்கு தீர்த்தனர்.

சாதி சங்கங்களை தடைசெய் எனும் கோரிக்கையுடன் தலைமை உரையை நிறைவுசெய்தார்.

கண்டன உரை யாற்றி தோழர்.பவானி (பெண்கள் விடுதலை முன்னணி) பேசும்போது

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு, பார்ப்பனரின் பார்வையில் அனைவரும் வேசிமக்கள். இதை நாம் ஆமோதிக்கிறோமென்றால், அவரவர் சாதியில் ஆழமாக ஊன்றி நில்லுங்கள். கீழ்வெண்மணியின் கொடுமையை வார்த்தையால் மதிப்பிட முடியாது, சூரியன் உதிக்குமுன் வயலில் இறங்கி, சூரியன் மறைந்தபிறகு கரையேறுவது, அதுவும் குடும்பத்துடன் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும், குழந்தையை வயக்காட்டில் தொட்டி கட்டிப் போட்டுவிட்டு, குனிந்த இடுப்பு நிமிரமுடியாமல், குழந்தையின் பசியை போக்க முடியாமல் அவதிப்படும் கொடுமை, இதற்கு முடிவு கட்டவும், கூலியை கூட்டிக் கேட்டதுமே அவர்கள் செய்த குற்றம். தீக்கிரையாக்கி 44 உயிர்களை, பச்சிளம் குழந்தையை கூட இரக்கமில்லாமல் கொன்றொழித்தனர்.

அன்றைய சாதிக்கொடுமை என்பது, செருப்பு போட்டு நடக்க கூடாது, இடுப்பில் உள்ள துண்டை அவுத்து கக்கத்துக்குள் வைக்கனும், மாராப்பு போடக்கூடாது, இவையெல்லாம் ஓரளவு மறைந்தாலும் நவீன தீண்டாமை என்பது திண்ணியத்தில் மலத்தை வாயில் திணிப்பது, பரமக்குடி துப்பாக்கிசூடு, இப்போ தர்மபுரி, மக்களை ஒன்று சேரவிடாமல், தாய்க்குலங்களின் மாணிக்கம்(ஜெயலலிதா), கோவில்களில் அன்னதானம் 24 மணிநேர டாஸ்மார்க் கடை திறந்து மானமற்ற நடைப்பிணங்களாக ஆக்கியதை சாடினார்.

சிறப்புரையாற்றிய தோழர் தர்மராஜ் (ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர்) பேசும்போது

சாதிக் கலவரங்கள், சாதி தீண்டாமை பற்றி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. தர்ம்புரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குருவி போல் சேர்த்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டது, ஓட்டை உடைத்து, டைல்ஸ்களை நொறுக்கி, வண்டிகளை தீவைத்து கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளது வன்னியர் சாதி வெறி கும்பல், காட்டுமிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த மக்களுக்கான சண்டை, இது உருவாக யார் காரணம் பார்ப்பான் உருவாக்கிய மனுதர்மம். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், கால்ல பிறந்தவன் சூத்திரன், வேற எங்கயும் இடமில்லாததால், அரிக்குப் பொறந்தவர்கள் பஞ்சமர்கள் போன்ற சாதிகள். இந்த அடிமைகள் உரிமைபற்றி பேசுவதா, கால் கட்டைவிரல் பாத்து பேசுறவன், பண்ணையாரின் கண்ணைப் பார்த்து பேசுவதா? என்பதன் வெளிப்பாடே இந்தக் கலவரங்கள்.
வன்னியர்களின் தலைவன், தமிழ்குடி தாங்கி, டாக்டர் ராமதாசு கலப்பு மணம் செய்ததன் விளைவே இது என நியாப்படுத்துகிறார். இன்று கலப்பு மணம் மனிதர்களை விட உன் கடவுள் முருகனே செய்திருக்கானே, இந்திய ஆட்சியாளர்கள் எத்தனை பேர் கலப்பு மண தம்பதிகள். இந்த நியாயத்தையெல்லாம் பார்க்க தயாராகயில்லை. அவர்களின் பொருளாதார அடித்தளத்தை நசுக்குவதே நோக்கமாக கொண்டு சூரையாடியுள்ள கும்பலை காட்டுமிராண்டிகள் என்பதைவிட வேறென்ன சொல்வது.

தர்மபுரி மண்ணில் நக்சல்பாரி தோழர்கள் அப்பு, பாலன் கால்ப்பட்ட இடமெல்லாம் சாதிப்பேய் ஒழிந்து சமத்துவம் நிலைநாட்டினர். இன்று அதே மண்ணில் நக்சல்பாரிகளை கொன்றொழித்து வேட்டையாடிய ஆளும் வர்க்கம், சாதி வேற்றுமையை வளரவிட்டு, மக்களை மோத விட்டு சுகம் காண்கிறது இதை அங்கு இருந்த போலீசே கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?. மக்கள் பிளவுபட்டு சாதிக்கட்சிகளில் இணையாமல் வர்க்க சக்திகளாக நக்சல்பாரிகளின் பின்னே அணிசேரவேண்டும். கலப்பு மணங்களை ஊக்குவித்து, சாதிப்பேயை சவக்குழிக்கனுப்ப வேண்டும் என ஆத்திரத்துடன் சாடினார்.

இறுதியில், ம.க.இ.க மாவட்ட செயலாளர். தோழர்.சீனிவாசன் நன்றி உரையாற்றினார். பகுதி மக்கள் திரண்டு நின்று ஆதரவு கொடுத்தனர். நமது கருத்துகளை ஆழமாக கூர்ந்து கவனித்தனர். நூற்றுக் கணக்கான தோழர்கள், பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

– செய்தி: ம.க.இ.க.திருச்சி

_____________________

மதுரை

கீழ் வெண்மணி தியாகிகள் நாள் ஆர்ப்பாட்டம் மாலை 6 மணிக்கு மகஇக மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமையில், மதுரை ஜான்சி ராணி பூங்கா முன்பு நடைபேற்றது. உசிலை வி.வி.மு தோழர் ஆசை மற்றும் உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கீழ்வெண்மணி நினைவு நாள் மதுரை ஆர்ப்பாட்டம்
மதுரையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தோழர் ராமலிங்கம் தனது தலைமையுரையில்,

உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு, நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.  இங்கே சாதிக்கு என்ன வேலை இருக்கிறது. சாதி மக்களை பிளக்கவும், வாழ்வை மேலும் மோசமாக்கவும், மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவுமே பயன்படுகிறது

என அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் ஆசை தனது உரையில்,

உசிலை வட்டத்தில் உள்ள பன்னியான் என்ற கிராமத்தில் அரசு நிதியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க தேவர் சாதியினர் கோரிவருகின்றனர். ஆனால் அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களோ, அப்படி தேவர் பெயரை வைத்து விட்டால் பின் எந்த காலத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்த மேடையை பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும்.  மேடை தேவர் சாதியினரின் உடைமை யாகிவிடும் என்பதால் பொதுப் பெயர் (பன்னியான் நாடக மேடை) வைக்கவேண்டும்

என கோரிவருவதையும், ஆதிக்க சாதியினர் ஊர் சொத்தை அபகரிக்க போடும் நாடகங்களையும் அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் குருசாமி தனது உரையில்,

நாய்ய தூக்கி மடில வெச்சுக்கிட்டு கொஞ்சரான், முத்தம் கொடுக்கரான்.. ஆனா சக மனுசன் கூட சேந்து டீ குடிக்க முடியாதுங்கரான். இந்த மாதிரி ஆட்கள மனுசன் கணக்குல சேக்குறதா இல்ல நாய் கணக்குல சேக்குறதா. மனுசனா நாயான்னு தெரியாத இந்த மாதிரி ஆட்கள் தான் ‘காதல் நாடகம்’ னு பேசறானுக. எதுடா நாடகம்.  நீ போடறதுதான் நாடகம்.

என்று ஆதிக்க சாதியினரின் இரட்டை வேடத்தை அம்மபப்படுத்தி பேசினார்.

* தில்லை அம்பல நடராசன்
வைத்த தீயில் நந்தன் செத்தான்
அயோத்தி ராமன் வைத்த தீயில்
வேடன் சம்புகன் செத்து மடிந்தான்
கோபால கிருஷ்ன நாயுடு தீயில்
வெந்து மடிந்தனர் வெண்மணியில்
வன்னிய சாதி வெறியாட்டத்தில்
எல்லாம் இழந்தனர் தருமபுரியில்
இரண்டாயிரம் ஆண்டுகளாக‌
பார்ப்பண பயங்கர வாதத்தின்
கொடுங்கோன்மை ஆட்டம் போடுது

* நாயும் பன்னியும் மேயும் தெருவில்
மனிதன் நுழையக் கூடாதா
கழுதைக்கு தாலி கட்டும் நாட்டில்
மனிதத் திருமணம் கூடாதா

* காதல் என்பதும் திருமணம் என்பதும்
ஜனநாயக உரிமையடா
ஜனநாயக உரிமை பறிக்கும்
ஆதிக்க சாதி வெறியர்களின்
ஓட்டுரிமை உள்ளிட்ட‌
ஜனநாயக உரிமைகளை
ரத்து செய்! ரத்து செய்!

* தீண்டாமை குற்றம் புரியும்
ஆதிக்க சாதிகளின்
இடஒதுக்கீட்டை ரத்து செய்!

* ஆதிக்க சாதிக் கட்சிகளை
தடை செய் தடை செய்

* ஆதிக்க சாதிச் சங்கங்களின்
தலைவர்களை கைது செய்
குண்டர் சட்டத்தில் கைது செய்

* தலித்தியமும் பெரியாரியமும்
பிழைப்பு வாத சகதியிலே
சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்டுவோம்
நக்கசல்பாரிப் பாதையிலே.

* திட்டமிட்டு சாதி பார்த்து
சாதி மறுப்பு திருமணங்களை
முன்னின்று நடத்தி வைப்போம்

* சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட‌
கீழவெண்மணி படுகொலை நாளில்
சபத்ம் ஏற்போம் சபதம் ஏற்போம்!

* வந்து பாரடா ராம்தாசே
வந்து பாரடா, மோதி பாரடா
ஆதிக்க சாதி வெறி நாயே!

என்ற ஆர்ப்பாட்ட முழக்கங்கள், மக்களை கவர்ந்தது.

செய்தி: ம.க.இ.க., மதுரை

__________________________

புதுச்சேரி

வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி-பொதுக்கூட்டம்- புரட்சிகர கலை நிகழ்ச்சி விடுதலைச் சிறுத்தைக் கட்சியினரின் அடாவடியால் காவல் துறை அனுமதி திரும்பப் பெறப்பட்டு முடக்கப்பட்டது.

ஆனால் தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்தாவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்து குடியிருப்பு பகுதியிலிருந்து ஊர்வலமாக திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே செஞ்சட்டையுடன் தோழர்கள் கையில் “பா.ம.க வை தடை செய்”, “வன்னியர் சங்கத்தை தடை செய்”, ”காடு வெட்டி குருவை கைது செய்” போன்ற பல முழக்கங்கள் அடங்கிய தட்டிகளுடனும், செங்கொடிகளுடனும், ஆசான்களின் படங்களுடனும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 400 பேர் அளவுக்கு அணி திரண்டனர்.

காலையில் காவல் நிலையத்தில் இருந்த வி.சி கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் உதவி ஒப்பந்ததாரராக உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக சங்கம் நடத்திவரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த உதயகுமார் என்பவரின் கீழ் ஒப்பந்ததாரர்களாக உள்ளவர்கள். இந்த உதயகுமாருக்கு வி.சி கட்சி மட்டுமின்றி திமுக, காங்கிரசு, என்.ஆர் காங்கிரசு, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளில் உள்ளவர்களும் நெருக்கம். இப்படிப்பட்ட நபரின் தொழிலாளர் விரோதச் செயலை அம்பலப்படுத்தும் விதமாக நாம் இப்பகுதியில் இயக்கம் எடுப்பதும், நமது சங்கத்தை விரிவாக்கம் செய்வதும் இவரின் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதால் சாதிப்பெயரால் நம்மைப் பழிதீர்க்க நினைக்கிறார். இதற்கு துணை போகும் உதவி ஒப்பந்ததாரர்களாக உள்ள வி சி கட்சியினர், பு.ஜ.தொ.மு பொதுக்கூட்டம் போடக்கூடாது என்கின்றனர்.

கீழ்வெண்மணி நினைவு நாள் - புதுச்சேரி
புதுச்சேரியில் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்ட பிறகு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்

எதிர்த் திசையில் வி.சி.க வினர் என்று சொல்லிக் கொண்டு காலையில் காவல் நிலையம் வராத வேறு ஒரு நான்கு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் சென்று ஆய்வாளர் பேசிய போது அவர்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், ஏன் நிற்கிறார்கள், கலைந்து போகச் சொல்லுங்கள் என போலீசுக்கு உத்தரவிட்டனர். எதையுமே நடத்தக் கூடாது என்றனர். ’வன்னியர் சங்கத்தைத் தடை செய்’ , ‘வன்னியர் சங்க சொத்துக்களைப் பறித்தெடு’ போன்ற முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் என்கிற பெரிய பதாகைகளையும் பார்த்துக் கொண்டேதான் அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட்டனர். காவல் துறை அதிகாரிகளும் அவர்களுடன் குழைந்து, குழைந்து பேசிக் கொண்டு நம்மிடம் ’இவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பொறுக்கிகள், அமைப்பாக உள்ள நீங்கள் கலைந்து சென்று விடுங்கள்’ என்று நைச்சியமாகப் பேசினர்.
கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த விடக் கூடாது என்பதில் வி.சி.க வினரை விட போலீசே முனைப்பாக நின்றது. ஒப்பந்தக்காரர்களின் ,அடியாட்களாக இவர்கள் இருவரும் விசுவாசமாக இணைந்து செயல்பட்டுள்ளது பளிச்சென அம்பலமாகி உழைக்கும் மக்கள் காரித் துப்பிச் சென்றனர். வி.சி.க தலைமையைப் பற்றிய நமது விமர்சனம் சரிதான் என்பதை உள்ளூர்த் தலைமை தனது இந்த நடவடிக்கையால் அம்பலப்படுத்திக் கொண்டது.

பிரச்சனை செய்த வி.சி.க வில் உள்ள சிலரே, ‘கூட்டம் நடத்தக் கூடாது என்பது தவறு. நீங்கள் செய்வது சரியல்ல’ என அவர்களிடம் கூறி ஒதுங்கிக் கொண்டனர். மேலும் அவ்வழியே சென்ற வேறு சிலரை அவர்கள் அழைத்த போது ‘ஏழரை சனி கூப்பிடுது. நிற்காதே ஒடு’ என அவர்கள் ஓடினார்கள். கூட்டம் நடத்தக் கூடாது என அடாவடி செய்த சிலர், ’வெண்மணித் தியாகிகள் தினம் என்று தெரிந்திருந்தால், நாமும் போஸ்டர் போட்டிருக்கலாமே’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

நமது துண்டறிக்கையில் எந்த முழக்கம் முதன்மையாக உள்ளது? யாரை எதிர்த்துக் கூட்டம் நடத்தப் படுகிறது?  என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒப்பந்ததாரர்களின் கட்டளைக்கு விசுவாசமாக கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று அடியாள் வேலை செய்வதிலேயே குறியாக இருந்தது இவர்களின் அரசியலற்ற தற்குறித்தனத்தை பளிச்சென அம்பலப்படுத்தியது.

மேலும் காலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்த ஒப்பந்தக்காரர்களான வி.சி.க வினர் பா.ம.க வினரிடம் சென்று ’நோட்டீசில் உங்களையும் திட்டி எழுதியுள்ளார்கள். போய் கூட்டம் நடத்தக் கூடாது என புகார் செய்யுங்கள்’ என்று தூண்டியுள்ளனர். தங்களது தலைவரைத் திட்டியதால் தான் கூட்டம் நடத்த விட மாட்டோம் என்று இவர்கள் சொல்வது உண்மையல்ல என்பதை இந்த செயல் அம்பலப்படுத்தி விட்டது.

கூட்டத்தைக் காண வந்த சிலரும் இவர்களிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்றும், இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், நமது தோழர்களிடம் கூறிவிட்டு வெறுப்புடன் சென்றனர். இவர்கள் முன்பு வி.சி.க வில் ஊக்கமாக செயல் பட்டு, தலைமையின் தவறான நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் போராடினார்கள். அவர்களின் படங்களைப் போட்டுக் கொள்ளும், வி.சி.க  பார்ப்பனீயம் தோற்றுவித்த சாதியக் கட்டுமானத்திற்குள் நின்று கொண்டு சாதியைத் தகர்க்க முடியாது என்பதை உணர மறுக்கிறது.  நவீனமயமாக்கப் பட்ட பொருளுற்பத்தியில் ஈடுபடும் போது சாதிய உணர்வுகள் குறையும். வர்க்க சிந்தனை மேலோங்க வாய்ப்புள்ளது. இந்த வேலையை பு.ஜ.தொ.மு செய்வதால் தான் முதலாளிகள், பு.ஜ.தொ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளை எதிர்க்கின்றனர். ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் இதுதான். ஏனெனில் சாதி ரீதியாக பிளவுபடுத்தி எந்த எதிர்ப்புமினறி உழைப்பாளிகளை கொடூரமாகச் சுரண்டுவதற்கு சாதி உணர்வை மங்கவிடாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஓட்டுக் கட்சிகள் இந்த சேவையை விசுவாசமாக செய்கின்றனர். பா.ம.க இன்று இதில் முன்னிற்கிறது. வி.சி.க வின் நடவடிக்கையும் இதற்குத் துணை நிற்கிறது.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்குத் தேவைப்படும் சாதிப் பிளவுகளை உயர்த்திப் பிடிக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணிப்போம். ஏனெனில்

சொந்த சாதி மக்களைக் காவு கொடுக்கும்
சாதி அரசியல் அழிவைத் தரும்!
உழைப்பாளி மக்களை வர்க்கமாய்த் திரட்டும்
கம்யூனிச எழுச்சியே விடிவைத் தரும்!

செய்தி – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி , புதுச்சேரி.

_________________________

கோவை

மக்கள்  கலை  இலக்கிய  கழகம்  மற்றும்  அதன்  தோழமை  அமைப்பான  புதிய  ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணி  இரு அமைப்புகள்  சேர்ந்து  ஆதிக்க சாதி  வெறியாட்டத்தை  கண்டித்து கோவை  செஞசிலுவை  சங்கத்தின்  முன்பாக  மாலை  5.00 மணிக்கு   ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

கீழ்வெண்மணி நினைவு நாள் - கோவை
கோவையில் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க மாவட்டச் செயலாளர்  தோழர்  மணிவண்ணன் அவர்கள்  தலைமை  உரையாற்றினார். சிறப்புரையாக  புதிய  ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணியின் மாவட்டச்  செயலாளர்  தோழர் விளவை  இராமசாமி  அவர்கள் உரையாற்றினார்.  தர்மபுரியில்  நடந்த  வன்  கொடுமையை  கண்டித்தும் , அதனை  தூண்டி  விட்டவர்களை  வன்  கொடுமை தடுப்பு  சட்டத்தின்கிழ்  கைது  செய்யவேண்டும்  என்றும்  பதிக்கப்பட்ட  மக்களுக்கு  உடனடியாக  நிவாரணம்  வழங்க  வேண்டும்  என்று  தனது உரையில்  குறிப்பிட்டார்.

இதில் திரளானபேர்  கலந்துகொண்டனர். பு .ஜ .தொ .மு  மாவட்ட  பொருளார்  தோழர் பூவண்ணன் நன்றி உரையாற்றினார்.

செய்தி : ம.க.இ.க., கோவை

_____________________

தருமபுரி

தருமபுரியில் டிசம்பர் 25ம் தேதியை ஒட்டி அனைத்து தாலுகா, நகர, கிராமப் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பிரச்சார இயக்கம் நடத்தினர்.

“தமிழகத்தை ஆக்கிரமிக்க வரும் ஆதிக்க சாதிவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!

சாதிவெறியாட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!”

என்ற முழக்கங்களுடன் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

_________

கரூர்

டிசம்பர் 7 சம்பவத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு நிகரான பொருளாதார வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாது திட்டமிட்டே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சதித்திட்டம் தீட்டி இவற்றினை நடத்தியுள்ளனர். இதற்கு வன்னிய சாதியின் காடுவெட்டி குரு, ராமதாஸ் போன்ற சாதி சங்கத் தலைவர்களும் நியாயப்படுத்தியும் சாதிவெறியைத் தூண்டியும் வருகின்றனர், வளர்க்கின்றனர்.

கீழ்வெண்மணி நினைவுநாள் கரூர் ஆர்ப்பாட்டம்
கரூரில் பு.மா.இ.மு.வும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையமும் நடத்திய ஆர்ப்பாட்டம்
  • இவற்றினை தெரிந்தே தடுக்க மறுத்த காவல்துறை மற்றும் அரசும் இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குகின்றன என்பதை கண்டித்தும்
  • தஞ்சை கீழ் வெண்மணி முதல் தொடர்ந்து மேலவளவு முருகேசன், திண்ணியம் கருப்பையா, விருத்தாச்சலம் முருகேசன், கயர்லாஞ்சியின் போட்டமாங்கே தற்போது தரும்புரி இவ்வாறு தொடரும் இச்செயலைத் தடுக்க மக்களிடம் சாதி வெறியைத் தூண்டி வளர்க்கும் வன்னிய சாதி சங்கம் உள்ளிட்ட அனைத்து – ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
  • காடு வெட்டி குருவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும்

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் பாக்கியராஜ் (செயலாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தோழர் ஆதி நாராயணன் சிறப்புரையும், தோழர் ராமசாமி கண்டன உரையும் நிகழ்த்தினர். புரட்சிகர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரட்சிகர மாணவர் இளைஞர் முனணி தோழர் பால முருகன் (இணைச் செயலாளர்) நன்றியுரை வழங்கினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் பிற ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.

செய்தி : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்

_______________

கோத்தகிரி

  • கீழ்வெண்மணி நினைவு நாள் - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்
    கோத்தகிரியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்க தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

    தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறுகின்றன சாதிவெறி கொலைகள்! சாதிவெறி கிரிமினல்களை பாதுகாக்காதே!

  • கலவரத்தை தூண்டிய அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய்
  • மக்கள் அனைவரும் சாதிக் கட்சிகள், சங்கங்களை விட்டு வெளியேறுங்கள்
  • சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்

என்ற முழக்கங்களின் அடிப்படையில் 25-12-2012 அன்று காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். ராஜா, பாலன், மோகன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர், விஜயன் நன்றி கூறினார்.

செய்தி : நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்

______________________

வேலூர்

கீழ்வெண்மணி நினைவு நாள்

கீழ்வெண்மணி நினைவு நாள் - வேலூர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அன்று தலித் மக்கள் மீது பெருகி வரும் ஆதிக்கச் சாதி வெறித் தாக்குதலை முறியடிப்போம் என்கிற முழக்கத்தினை முன் வைத்து வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் 25.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட  ம.க.இ.க செயலாளர் தோழர் த.இராவணன் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ம.க.இ.க தோழர் இராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள உட்பட  30 பேர் கலந்து கொண்டனர்.

  • தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்து அடுத்து அரங்கேறுகின்ற சாதி வெறிக் கொலைகளை மற்றும் சாதி வெறி கிரிமினல்களை பாதுகாக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும்
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு இழப்பீடு வழங்கக்கோரியும்
  • அனைத்து ஆதிக்கச் சாதிசங்கங்களை தடை செய்யக் கோரியும்

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உழைக்கும் மக்கள் சாதிக்கட்சிகள்-சாதிச்சங்கங்களைவிட்டு வெளியேறி உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணையவும் அறைகூவல்விடுக்கப்பட்து.

செய்தி – ம.க.இ.க வேலூர்.

______________________________________________________________________________________________________________