மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போலவும், மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் வெளியில் பேசுகிறார்கள் என்று தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் சந்திர குமார் நேற்று (1.2.2012) சட்டசபையில் பேசினார்.
கொஞ்சம் மேலோட்டமாக பாருங்கள், இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க நேரடியாக வைக்கவில்லை! வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்பதன் மூலம் இதை புரட்சித்தலைவியின் மனம் கோணாமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தே.மு.தி.கவின் உறுப்பினர்கள் அம்மா பயத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஏற்கனவே இவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை, புவியியலும் தெரியவில்லை என்று அம்மா ஏகப்பட்ட டோஸ் கொடுத்திருக்கிறார்.
இப்போதும் அப்படித்தான். மின் கட்டண உயர்வை நிர்ணயிப்பது அரசு கிடையாது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் நிர்ணயிக்கிறது, கருத்து கேட்பதும் கூட அவர்களது விதிமுறையின் கீழ்தான் நடக்கிறது, தான்தோன்றித்தனமாக கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கவில்லை, இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் பேசுவது உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது என்று ஜெயலலிதா சீறினார்.
அல்லிராணி அவையில் வெளியே சில ஆட்டுக்குட்டிகள் பசியில் கத்துகின்றன என்று பேசுவதை உள்ளே ஒரு அடிமை முணுமுணுத்தது கூட அல்லிராணிக்கு அலர்ஜி என்பதுதான் விசயம். இப்படித்தான் புரட்சிக் கலைஞருக்கும், புரட்சித் தலைவிக்கும் உள்ளே ஆவேச வாதங்கள் துவங்கின.
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பேயே அமல்படுத்தவில்லையே ஏன் என்று தே.மு.தி.க அப்பாவிகள் அடுத்த கேள்வியை கேட்டதால் சினமடைந்த ஜெ இதெல்லாம் ஏனென்று மக்களிடம் விளக்கிவிட்டேன், நீ யார் கேட்பதற்கு என்று சீறினார். கூடவே இதை சவால் விட்டுப் பேசும் அக்கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்தி போட்டியிட தில் உள்ளதா என்று சவால் விட்டார். அதாவது மேற்கண்ட கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் தேர்தலில் கூட நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது ஜெவின் சவால்.
உண்மையில் இது சவால் இல்லை வெறும் போங்காட்டம் என்பது அதிர்ஷ்டவசமாக கேப்டனுக்கும் பட்டிருப்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியம்தான். அவரும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதும், அது போன்ற அதிகார பலத்தால் நீங்களும் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவீர்கள் என்பது தனக்குத் தெரியுமென்று பேச இரு தரப்பு அடிமைகளும் ஆவேசமாக சண்டை போட்டனர்.
விஜயகாந்த் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டாரென ஜெ பேச, பென்னகரத்தில் நீங்கள் டெபாசிட் கூட வாங்கவில்லையே என்று பதிலுக்கு விஜயகாந்த் பேச சண்டை வலுத்திருக்கிறது. பின்னர் அ.தி.மு.கவினர் கையை காட்டி பேசியதாக கேப்டன் சீற அவரது கட்சியினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தே.மு.தி.கவினரின் பிரச்சினையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். உண்மையில் இவர்கள் அனைவரையும் சட்டசபை நடக்கும் காலம் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும், போனால் போகிறதென இத்தோடு முடித்திருக்கிறோம் என்று ஜெ உறுமியிருக்கிறார்.
இதன்பிறகு சட்டசபையில் தான் கூட்டணி வைத்தாலும், வைத்திருக்காவிட்டாலும் அ.தி.மு.க பெரு வெற்றி அடைந்திருக்குமெனவும், தன்னோடு கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.கவினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்டு கிடைத்திருக்கறது, தகுதியில்லாவர்களெல்லாம் பதவிக்கு வந்தால் என்ன ந்டக்குமென்பது தற்போது தெரியவந்திருக்கிறது, இவர்களோடு கூட்டணி வைக்க தான் விரும்பவில்லை, கட்சிக்காரர்களுக்காகத்தான் கூட்டணி வைத்தேன் என்றெல்லாம் ஜெ பொங்கியிருக்கிறார்.
இந்த இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்த போதே இதைபற்றி எழுதியிருக்கிறோம். ஜெயலலிதாதான் விஜயகாந்த், விஜயகாந்துதான் ஜெயலலிதா என்பதால் இந்த இரண்டு குண்டு ஆளுமைகளும் சேர்ந்திருப்பது சாத்தியமே இல்லை என்பதையும் அப்போது எழுதினோம்.
தகுதி குறித்து ஜெ பேசியிருப்பது அவரது பார்ப்பன மேட்டிமைத் திமிரில் கலந்த ஒன்று. கண்ட கண்ட நாய்களெல்லாம், அறிவில்லாத கூமுட்டைகளெல்லாம் அரசியலுக்கு வந்து நாறடிக்கின்றன என்பதுதான் அவரது பேச்சின் உட்கிடை. தன்னைப் போன்ற கான்வென்டு எஜுகேட்டட் சீமாட்டிகளெல்லாம் இத்தகைய அறிவிலிகளோடு காலம் தள்ள வேண்டியிருக்கிறதே என்பது அவரது பொறுமல்.
எல்லாவற்றும் மேலாக தேர்தல் காலத்தின் போது அவர் கூட்டணி வைத்தது என்பது அவரது கூற்றுப்படி அவர் விரும்பிய ஒன்றல்ல. எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டுமென்ற பொதுக்கருத்தை அறுவடை செய்து கொள்ள வேறு வழியின்றித்தான் அவர் கூட்டணி வைத்தார். சோ போன்ற தரகர்களும் அதற்கு தீவிரமாக முயற்சி செய்தனர். அப்படியும் அந்த கூட்டணியை கேலிக்குள்ளாக்கும் வகையில் அவர் தனியாக வேட்பாளர்களை அறிவித்ததும், அப்போதும் கூட தே.மு.தி.க மற்றும் போலிக்கம்யூனிஸ்டுகள் வெட்கம், மானம், ரோஷமின்றி அம்மாவை கூல் செய்து கூட்டணியை தொடர்ந்ததும் வரலாறு.
இந்த நிலையில் ஈழப்பிரச்சினைக்காகத்தான் ஜெ வெற்றி பெற்றார் என்று நமது தமிழின ஆர்வலர்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அம்மாவின் கவனத்திற்கு போனால் அனைவருக்கும் குண்டாஸ் சட்டத்தில் உள்ள போவது உறுதி. ஏற்கனவே ஈழத்தாய் பட்டம் கொடுத்து அம்மாவை தொழுது வணங்கிய நாம் தமிழர் புலி சீமான் இப்போது ஆட்டுக்குட்டியாய் அடைந்து கிடைக்கிறார்.
ஜெ வெற்றி பெற்றதும் முற்றிலும் மாறிவிட்டார் என்று பார்ப்பன ஊடகங்களும், தி.மு.க எதிர்ப்பாளர்களும், போலிக் கம்யூனிஸ்டுகளும், தமிழின – ஈழ ஆர்வலர்களும் பிதற்றித் திரிந்தது அடி முட்டாள்தனம் என்பதை முன்னரே சொன்னபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
உள்ளாட்சித் தேர்தலின் போதே இதை ஜெ பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தினார் என்றாலும் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க, போலிக் கம்யூனிஸ்டுகள் எல்லாம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி இவர்கள் அனைவரும் ஜெவை பயபக்தியோடுதான் அணுகினர் அல்லது விமரிசித்தனர். இன்று கூட இவர்கள் ஜெவே எதிர்ப்பதெல்லாம் அவர்களது சொந்தக் கருத்து, கட்சி காரணமாக இல்லை. அதுவும் கூட ஜெவே பிடித்து தள்ளியதால் வந்த முரண்பாடுதான். இதில் கொள்கை, மக்கள் நலன், என்று எதுவுமில்லை.
ஆனாலும் சில அப்பாவிகள் அடிமைகளான தே.மு.தி.கவின் எதிர்ப்பை வைத்து விஜயகாந்தை ஏதோ மாபெரும் புரட்சி வீரனாக சித்தரிப்பதைப்ப பார்த்தால் இதற்கு ஜெவே தேவலாம் என்று தோன்றுகிறது. ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடக்கும் சவுடால் சண்டையை காமடியாக புரிந்து கொள்ளுமளவு கூட நமது மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்ன செய்வது? கவுண்டமனி, வடிவேல், விவேக் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து சிரித்த மக்களின் தரம் இதுதான் என்றால் நம் நகைச்சுவை அறிவிலும் பெரிய கோளாறு இருப்பது உறுதி.
இதில் சசிகலா நீக்கத்தை வைத்து ஜெவின் அனைத்து பாவங்களையும் கழுவி புனிதப்படுத்திய பார்ப்பன ஊடகங்கள் இப்போது என்ன சொல்வார்கள்? மன்னார் குடி கும்பல் போய், மயிலாப்பூர் கும்பல் வந்த பிறகும் இதுதாண்டா ஜெ என்று அவர் காட்டிவிட்டதை குற்ற உணர்வுடன் ஒத்துக் கொள்வார்களா?
சுயமோகமும், பார்ப்பன விழுமியங்களும், அதிகார வர்க்கத்தை வைத்து பாசிச ஆட்சி நடத்தும் ஒரு சர்வாதிகாரிதான் ஜே என்பைதயும் இந்த பாசிஸ்ட்டை விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்தி ‘வீரர்கள்’ எதிர்க்க முடியாது என்பையும் இந்த அக்கப்போரிலிருந்து நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம். முல்லைப் பெரியாறு, கூடங்குளம் என்று மக்களின் ஜீவாதாரா பிரச்சினைகள் பேசப்படும் காலத்தில் இந்த அக்கப்போர்களெல்லாம் மாபெரும் பாரதப் போர் என்று அரசியலாக முன்வைக்கப்படும் துரதிர்ஷடமான காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மக்கள் நலனிலிருந்து மட்டுமே அரசியல் மலர முடியுமென்பதை புரிந்து கொள்வதற்கு இந்த எதிர்மறை சான்றும் ஒரு எடுத்துக்காட்டு.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதன்படி முத்து விநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இதுவரை மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது கூடங்குளம் போராட்டக்குழுவினர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வரும் நிபுணர் குழுவினர் நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.
அதன்படி நேற்று 31.01.2012 செவ்வாயன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிபுணர் குழுவும், கூடங்குளம் போராட்டக் குழுவினரும் வருகை தந்தனர். அப்போது இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் ரவுடி ஜெயக்குமாரின் தலைமையிலான குண்டர்கள் கூடங்குளம் போராட்டக்குழுவினரை வெறி கொண்டவாறு தாக்கியிருக்கின்றனர். தாக்குதலை வேடிக்கை பார்த்த போலிசார் பின்னர் இந்து முன்னணி குண்டர்கள் பத்து பேரை வேறு வழியின்றியும், போராட்டக் குழு பெண்களது போராட்டம் காரணமாகவும் கைது செய்திருக்கின்றனர்.
காவிக் கிரிமினல்களின் ரவுடித்தனம்
ஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நிபுணர் குழுவிடம் மனுக் கொடுக்க வந்ததாகவும், போராட்டக் குழுவினர் தேச விரோதிகளென்றும், 140க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் உதயக்குமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் ரவுடி ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டி கொடுக்கின்றான். இந்து முன்னணி காலிகள் தாக்கிய இந்த சம்பவத்தைக்கூட இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.
கூடங்குளம் போராட்டக்குழுவினரை அன்னிய சதி, வெளிநாட்டு பணம், தேச துரோகிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க வந்த நாசகார சக்தி என்றெல்லாம் பொய்ச்செய்தியை வெளியிட்டு தனது வாசகர் வட்டத்தை உசுப்பி வந்ததும் இதே தினமலர்தான். கூடங்குளம் பிரச்சினைக்காக தனிப்பெரும் வெறுப்பு இயக்கத்தையே பல்வேறு முனைகளில் தினமலர் எடுத்து வருகின்றது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது, உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்ட வேண்டுமென்பது வரை தினமலர் தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டவிழத்து வருகிறது.
இடிந்தகரை மக்கள் கிறித்தவ மீனவர்களாக இருப்பதை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் மதவெறி ஊட்டி குளிர்காய நினைக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க கிறித்தவ பாதிரியார்களின் சதியாக மக்களிடம் வன்மத்தை விதைத்து ஆதாயமடையவும் நினைக்கிறது இந்தக் கும்பல். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் இருக்கும் தமிழக காங்கிரசோ தனது ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை நிலை நாட்ட அன்னிய நாட்டுப் பணம் கூடங்குளம் போராட்டக்குழுவினருக்கு வருகிறது என்று கிடைக்கும் காசுக்கு மேல் கூவுகிறது.
இடிந்தகரை மக்களுக்கு சொந்தமான தேவாலய இடத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், ஏனைய சில்லறை செலவுகளுக்கும் முதலில் பெரும் பணம் எதுவும் தேவையில்லை. மேலும் அத்தகைய செலவுகளுக்கும் அப்பகுதி மக்களே குறிப்பாக மீனவர்கள் தங்களது வருமானத்திலிருந்து நிதியுதவி அளிக்கின்றனர். இதை போராட்டக்குழுவினர் பலமுறை விளக்கியபிறகும் அப்படி ஒரு அபாண்டத்தை காங்கிரசு, காவி, தினமலர் காலிகள் தொடர்ந்து ஊளையிடுகின்றனர். கார்ப்பரேட் மீடியாவின் டார்லிங்காக இருந்த அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதக்கூத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தது போல கூடங்குளத்தில் நடக்க வில்லை, நடைபெறவும் முடியாது.
சரி காங்கிரசு கயவாளிகள் சொல்வது போல இந்தப் போராட்டத்திற்கு அன்னிய நாட்டு பணம் வந்தால் அது எந்த அன்னியா நாடு என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே? அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே? அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன? ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் இங்கு அன்னியப்பணம் சட்டப்பூர்வமாக எப்படி வர முடியும்?
உண்மையில் மக்களது போராட்டங்களை சீர்குலைப்பதற்கு இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு காசு வரவழைத்து குளிப்பாட்டுவதெல்லாம் காங்கிரசு, பா.ஜ.க அரசுகளே தரகர்களாக முன்னின்று செய்யும் நடவடிக்கைகள்தான். அதிலும் வெளிநாட்டிலிருந்து அதிக பணம் பெறும் நிறுவனங்களாக விசுவ இந்து பரிஷத்துதான் முதலிடத்தில் இருக்கிறதென்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட விசயம். அதிலும் கணக்கு வழக்கில்லை என்பதும் ஆதாரத்துடன் தோலுரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.
இதற்கு மேல் இந்த நாட்டின் அன்னியக் கைக்கூலிகளாக நடந்து கொள்வது யார்? தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசும், முன்னர் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசும்தான் முதன்மையான அன்னியக் கைக்கூலிகள். பாரத மாதாவை பன்னாட்டு நிறுவனங்கள் கதற கதறக் கற்பழித்து வருவதற்கு மாமா வேலை பார்த்தது ஆதாயமடைந்தவை இந்தக் கட்சிகள்தான். மன்மோகன் சிங்கை விட ஒரு சிறந்த அன்னியக் கைக்கூலியை இந்தியாவில் யாரும் சொல்லிவிடமுடியுமா என்ன?
இப்படி இருக்கும் போது பீஸ் போன பல்புகளான இளங்கோவும், தங்கபாலுவும், ஞானசேகரனும், கோபண்ணாவும், அன்னிய சதி என்று பேசினால் அவர்கள் பல் இருக்க வேண்டுமா இல்லை உடைக்கப் படவேண்டுமா?
அணு உலைக்கு ஆதரவாக காவிக் கிரிமினல்களும் கதர் கிரிமினல்களும்
அடுத்து தினமலர் முதலான பார்ப்பன ஊடங்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதற்கு உதவி செய்யும் என்றொரு பொய்யை விரித்து நடுத்தர வர்க்கத்தையும், ஏன் பொது மக்களையும் உசுப்பி விடுகின்றன. ஏதோ கூடங்குளத்தில் தயாரிக்கப் போகும் மின்சாரம் வராததினால்தான் தமிழக கிராமங்களில் ஐந்து மணி நேர மின்தடை இருப்பதாக இவர்கள் கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.
தற்போதைய மின்தடைக்கு காரணமென்ன? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பட்டணத்து பேரங்காடிகளுக்கும் தடையின்றி அளிக்கப்படும் மின்சாரம்தான் மக்களுக்கு மின்தடையாக மாறுகின்றது. சிறு, நடுத்தர தொழில்கள் செய்யும் முதலாளிகள் உட்பட பாமர மக்கள் வரை இந்த மின்தடையினால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மின் உற்பத்தி பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தாலும் இன்னும் 40 இலட்சம் கிராமங்களில் மின்சாரமில்லை. எனில் உற்பத்தியாகும் இலட்சக்கணக்கான மெகாவாட் மின்சாரம் எங்கே போகிறது?
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை என்பது இத்தனை இலட்சம் மெகாவாட்டுகளாக இருக்குமென்று பட்டியல் போடுகிறார்களே, அந்த தேவையில் நாம் இல்லை. ஆக பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளது தேவையை இந்தியாவின் தேவையென்று மடை மாற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெரியாத சிறுமுதலாளிகளெல்லாம் கூடங்குளம் மின்னுற்பத்தி ஆரம்பித்தால் தங்களது அவலம் மாறுமென்று அப்பாவியாக நம்புகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் தினமலரின் பலம். இந்தியா வல்லரசானால் முதலாளிகளுக்குத்தான் ஆதாயமே அன்றி ஏழை மக்களுக்கு அல்ல. அவர்களது வல்லரசு வளர்ச்சியில் பெரும்பான்மை மக்கள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
இதற்கு மேல் அணுமின்சாரத்தில் சில பத்து மெகாவாட்டுகளைக்கூட தாண்டும் நிலையில் உற்பத்தி இங்கில்லை. வெளிநாடுகளில் காலாவதியான ரியாக்டர்களை பெரும் செலவில் நமது தலையில் சுமத்தும் கொள்ளைதான் கூடங்குளத்திலும், மற்ற இடங்களிலும் நடக்கப் போகிறது. அதுதான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தானே புயலால் நிலை குலைந்த கடலூர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசா அணு விபத்தால் அழியும் நமது மக்களை காப்பாற்றும்?
ஆகவே கூடங்களும் அணுமின்நிலையத்திற்காக பொதுக்கருத்தை ஆதரவாக பல முனைகளில் உருவாக்கிவிட்டு பின்னர் போராட்டக்குழுவினரையும், மக்களையும் ஒடுக்கும் பாசிச தந்திரம்தான் இவர்களிடம் இருக்கிறது. அதன்படி வரும்நாட்களில் இவர்களது பாசிச தர்பார் படம் விரித்து ஆடும். அதன் முன்னோட்டம்தான் இந்துமுன்னணியின் ரவுடி தாக்குதல். இந்தபடிக்கு போனால் இவர்கள் உதயகுமாரை கொல்வதற்கு கூட முயல்வார்கள். அத்தகைய தாக்குதலை உளவுத்துறைகளே கூட வடிவமைத்தால் கூட ஆச்சரியமில்லை. கைது, சிறை, வழக்குகள் என்று மிரட்டினால் எந்த மக்களையும் பணியவைக்க முடியுமென்பது ஆளும் வர்க்கத்தின் பாலபாடம்.
ஆயினும் இந்த பாடத்தை நாம் உடைக்க முடியும். போராடும் மக்களுக்கு நமது ஆதரவை கருத்திலும், களத்திலும் தெரிவித்து இந்த வேடதாரிகளை முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும்தான் கூடங்குளத்திலும் மக்களது எதிரிகளாக வலம் வருகின்றன. ஏற்கனவே முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு காரணமான இந்த காங்கிரசு கயவாளிகள் தண்டனை பெறாமலேயே தெனாவட்டாக திரிகிறார்கள். ஆக பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு என்றொரு கட்சி இனி இருக்கக் கூடாது.
அதே போல காவி வெறிக் கும்பலையும் தகுந்த பாடம் புகட்டி தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். எல்லாப் பிரச்சினையிலும் மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்த ஓநாய்களை வேட்டையாடி அழிப்பது நமது கடமை. இல்லையென்றால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். இக்காலத்தில் எமது அமைப்புகள் தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தியது. பல்வேறு அளவுகளில், களங்களில் நடந்த இந்த இயக்கத்தின் போது நடந்த மணவிழாவின் பதிவுதான் இந்தக் கட்டுரை. சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப் பாருங்கள்!
– வினவு
தமிழகமெங்கும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு. சார்பாக சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம் கருத்திலும், களத்திலும் நடைபெற்றது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். தமிழ்ச் சமூக வாழ்க்கையில் குறுக்கும்- நெடுக்குமாக ஊடுருவிய இவ்வியக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று விழுப்புரத்தில் 1997-ஆம்ஆண்டு நவ. 22-இல் நடைபெற்ற சாதி மறுப்பு மணவிழா.
சாதி சடங்கு பொருத்தங்களுடன் சமூகத்தில் நடக்கும் திருமணம், ஒரு மகிழ்ச்சியான நினைவு. ஆனால் சாதி மறுப்பு மணவிழா ஒரு மலரும் நினைவல்ல.
வெட்டரிவாள் மூலம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ‘மேல்’ சாதிக் கொடூரத்தைக் கூட நேருக்கு நேர் சந்திக்க முடியும். ஆனால் கண்ணீரும், ஒதுக்கும் போக்கும், வெட்டவெளி வசவுகளும், திண்ணைப் பேச்சு அவதூறுகள் முதல் பொதுக் குழாய் குடிநீர் பிடிப்பது வரையிலும் ஒவ்வொன்றையும் எதிர்த்து சாதி மறுப்பு மணமக்கள் ஒவ்வொரு நொடியிலும் போராட வேண்டும்.
இன்று தீண்டாமை, நகரங்கள்- அதன் சுற்றுப்புறங்களில் பெருமளவு ஒழிந்திருந்தாலும், தீண்டாமை மறுப்பு மணம் என்பது இந்தியாவெங்கும் கிராமப்புறங்களில் நடக்க முடியாத ஒன்று. சாதி ஆதிக்கத்தின் உயிர் போகும் ‘மானப் பிரச்சனை’ இதில்தான் அடங்கியுள்ளது. எந்தச் சாதியில் பிறந்த பெண்ணும் தீண்டாமை மறுப்பு மணத்தை ஏற்கும் போது ‘மேல்’ சாதியினர் தமது ஆத்மா குத்திக் கிழிக்கப்பட்டதாக அலறுகிறார்கள்.
இதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்- பெண் இயல்பினால் காதலித்து கல்லறைக்கு போன மணமக்கள் எத்தனை பேர் என்பதற்கு வரலாறு ஏதுமில்லை.
பறையரான காத்தவராயன் பார்ப்பன ஆரியமாலாவை காதலித்து ஊரைவிட்டு ஓடுகிறார். இவ்வழக்கு அரசனுக்கு வருகிறது. முதலில் விடுதலை செய்தவன் பார்ப்பனர்களின் போராட்டத்தினால் முடிவை மாற்றுகிறான். மணமக்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். நாட்டுப்புற பாடல் ஒன்றின் கதை இதுவென்றால் தற்றோதைய நாட்டு நடப்பும் மாறவில்லை. தேர் இழுப்பதற்கு மட்டும் ஊர் கூடுவதில்லை, கலப்பு மணம் கண்ட மணமக்களை ஒற்றைப் பனையில் கட்டிவைத்து எரிப்பதற்கும் கூடுகிறது.
சாதி – மறுப்பு மணவிழா வெறும் பெருமையடையக் கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் சந்திக்கின்ற பிரச்சனைகளை வென்று கடப்பதுதான் முக்கியம்.
70 ஆண்டுகளுக்கு முன்பே ‘சுயமரியாதைத் திருமணம்’ என்ற பெயரில் தந்தை பெரியாரின் இயக்கம் இதை ஆரம்பித்து வைத்தது. 1968-ல் இத்திருமணங்களை அங்கீகரிக்கின்ற சட்டப் பிரிவும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இயற்றப்பட்டது. எழுபது ஆண்டுகளாய் சமூகத்தில் பரவ வேண்டிய சாதி மறுப்பு மணம் வளராமல் போனது ஏன்?
இன்றைக்கு சுயமரியாதை மணம் என்பது புரோகிதர் இல்லாத மணம் என்பதாகச் சுருங்கி விட்டது. தாலி, சாதி, ஆடம்பர விருந்துகள், அலங்காரங்கள் இவையெல்லாம் இருந்துவிட்டு ஐயர் இல்லை என்பதால் மட்டும் இவை பார்ப்பனிய எதிர்ப்பாகாது. மாறாக பார்ப்பனியமயமாக்கப்பட்ட தமிழ்த் திருமணங்கள் என்று தான் அழைக்க முடியும்.
ஆனால் எழுபது ஆண்டுகளில் உள்ளுர் அளவிலான சாதி தனது வலைப் பின்னலை இந்திய அளவில் நிறுவியிருக்கிறது. நகரமயமாக்கம், செய்தி ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக, ஃபேக்ஸ், கணிப்பொறி, இணைய வசதிகளுடன் சென்னையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு சாதிச் சங்கங்கள் செல்வாக்குடன் செயல்படுகின்றன. பத்திரிகைகளில் வரும் மணமக்கள் விளம்பரங்கள் வயது. உயரம், நிறம், சம்பளம், போன்ற எண் கணக்குகளோடு உட்சாதிப் பிரிவையும் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றன.
காலனீய ஆட்சியிலிருந்தே ‘வடமாள், பாரத்வாஜம், அனுஷம்’ என்று தனது குல- கோத்திர- ஜாதக விவரங்களை வெளியிட்டு மண விளம்பரம் செய்யும் பார்ப்பன சாதியினரே இதற்கு முன்னோடிகளாவர். தெரு- ஊருக்குள்ளே சம்பந்தம் முடிக்கும் சாதியினரெல்லாம் இன்று அவாள் பழக்கப்படி தேச அளவில் தேடுகிறார்கள். முன்பை விட உட்சாதி அக மணமுறை மேலும் இறுகியிருக்கிறது. மேலும் நிச்சயதார்த்தம் முதல் சாந்தி முகூர்த்தம் வரை விரிவான சடங்குகள், மாப்பிள்ளை அழைப்பு, கார்- குதிரை ஊர்வலம், ஆடம்பர மண்டபம்- விருந்து- வீடியோ என்ற பார்ப்பனியத்துடன் நுகர்வுப் பண்பாடும் சேர்ந்துவிட்ட திருமணங்கள் தான் இன்று அனைத்துச் சாதிகளும் ஏற்றுக் கொண்ட முறையாகிவிட்டது.
இப்படி சுயமரியாதைத் திருமணங்களையே வீழ்த்திவிட்ட பார்ப்பனியமயமாக்கம் மட்டும்தான் கடந்த தலைமுறையின் வரலாறா? இல்லை. நகரமயமாக்கம், திரைப்படம், தொலைக்காட்சி, தொழில் வளர்ச்சி, கல்விப் பரவல் காரணமாக காதல்- கலப்புத் திருமணங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அப்படியானால் இயல்பாகவே சமூகத்தில தோன்றி வளருகின்ற காதல் திருமணங்களுக்கும், நமது மணவிழாவிற்கும் என்ன வேறுபாடு?
சமூக அக்கறை இன்றியும், வாழ்க்கை- பண்பாடு குறித்து சுயநல கண்ணோட்டமும் கொண்ட காதல் திருமணங்களின் புரட்சியும்- போராட்டமும் மணமேடையிலே தாலி கட்டியவுடன் முடிவுக்கு வருகிறது. ஆணாதிக்கமும், பார்ப்பனிய- சாதியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டும், ஆண் அல்லது பெண்ணின் சாதிக்குள் சங்கமமாகிவிடும் இந்தக் காதல் மணங்கள் சாதி ஒழிப்பு என்ற சமூகப் போராட்டத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை.
விழுப்புரம் மணவிழாவில் தோழர். மருதையன் குறிப்பிட்டதைப் போல எமது திருமணங்கள்- குடும்பங்கள், மூலமாக சாதி வெறியை எதிர்த்து மட்டுமல்ல, நான்கு சுவற்றுக்கு நடுவில் தாமும்- தன் வாரிசுகளுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழும் குடும்பத்தின் கடைந்தெடுத்த சுயநலத்தையும் எதிர்த்தும் தான் போராடுகின்றனர். புரட்சிக்காக தன்னையும், குடும்பத்தினரையும் மாற்றிக் கொண்டு போராடுவதற்கு அமைப்பு வாழ்க்கை உதவி செய்கிறது. ஊருக்குள்ளே தீண்டாமை மறுப்பு மணமக்கள் போராடி வாழ்வதற்கும் இதுவே காரணம்.
மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மதுரை பாளையம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் பேசும் போது, ”தென் மாவட்ட ஆதிக்க சாதியினர் கலவரங்கள் நடத்தும் காலகட்டத்தில் தங்களது திருமணத்தின் மூலம் சாதி ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடுத்திருக்கும் மணமக்கள் இந்தப் பெருமையை தங்கள் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும்” என்று வாழ்த்தினர். தீண்டாமை மறுப்பு மணம் செய்திருக்கும் தோழர். மோகனது வாழ்க்கையும் அந்தப் போராட்டப் பெருமையைக் கொண்டதுதான்.
‘அமைப்பிற்கு வருவதற்கு முன்பே என் திருமணம் முடிந்துவிட்டபடியால் குழந்தையில்லாதவன் தொட்டிலை முகர்வது போல தீண்டாமை மறுப்பு மணம் புரியும் இந்த மணமக்களை வாழ்த்தி நிறைவடைகிறேன்’ என்று பேசிய ஆண்டிப்பட்டி வி.வி.மு. செயலர் செல்வராசின் வாழ்க்கையும் போராட்டங்களைக் கொண்டதுதான். அருகாமை தாழ்த்தப்பட்டவர் வீட்டில் வடை சாப்பிட்டதற்காகச் சிறுவயதில் அவரைக் குளிப்பட்டி வீட்டில் அனுமதித்தவர் அவரது தாய். இன்று சேரியோடு உறவாடும் தோழரை தாயால் சகிக்க முடியவில்லை. தாயும், தனயனும் தத்தமது போராட்டங்களைக் கைவிடவும் தயாரில்லை. விளைவு? இருவரும் 13 வருடங்களாகப் பேசுவதில்லை. அவரவர் வீடுகளுக்குப் படியேறுவதில்லை.
கலப்பு மணம் கண்ட தம்பதியினர் சேரியில் குடியிருப்பது எளிது. ஊருக்குச் சென்றால்? தருமபுரி அருகே ‘மேல்’ சாதித் தெருவில் குடியிருக்கும் தோழர் ஒருவரது மனைவி தாழ்த்தப்பட்டவர். பொதுக் குழாயில் குடிநீர் பிடிக்கும் போது மேல் சாதி கௌரவத்தை நெஞ்சிலே கொண்டிருக்கும் பெண்கள் சண்டை போடுகிறார்கள். முன்பு போல ஊரைவிட்டு ஒதுக்கவோ, பனைமரத்தில் கட்டி வைத்து அடிக்கவோ முடியவில்லை. தமது சாதிக் கௌரவத்தை குத்திக் கிளறும் வி.வி.மு. என்ற ‘அரக்கனை’ பகைத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. போராட்டத்தை தொடருகிறார்கள் எமது தோழர்கள்.
பார்ப்பனச் சாதியில் பிறந்த அந்த பெண்ணும் ம.க.இ.க. தோழர் ஒருவரும் விரும்புகிறார்கள். பெண்ணின் உறவினர்களது தடைகளைத் தாண்டி அமைப்பின் உதவியுடன் காதல் வெற்றி பெருகிறது. புதிய ஊரில் நிலையில்லாத வேலை- பொருளாதார நெருக்கடிகளுடன் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘வெண்மணி’ என்று பெயரிட்டு மகிழுகின்றனர். விழுப்புரம் மணவிழாவில் ‘மாட்டுக்கறி விருந்துண்ணும்’ அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டுவிட்ட அந்தப் பெண் தோழரை அவரது உறவினர்கள் இன்றுவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
சாதி- தீண்டாமை மறுப்புத் திருமணங்களைத் திட்டமிட்டு எமது அமைப்பே ஏற்பாடு செய்கிறது. அப்படி ஒரு விதியில்லை என்றாலும் உறுப்பினர்கள் அனைவரையும் அவ்வாறே மணம் செய்யுமாறு போராடுகிறோம். சமூகத்தில் நடைபெறும் காதல் மணங்கள் வெற்றியடைய கவர்ச்சி- வர்க்க அந்தஸ்த்தை உள்ளடக்கிய காதல் உணர்வு ஊக்குவிக்கிறது. தீண்டாமை மறுப்பு மணம் வெற்றியடைவதற்கு எம் தோழர்களின் சமூக உணர்வே காரணமாகிறதன்றி வெறும் காதல் உணர்வல்ல.
சென்ற ஆண்டு சாதி மறுப்புத் திருமணங்களை பல தோழர்கள் அவரவர் ஊர்களில் நடத்திவிட்டார்கள். விழுப்புரம் மணவிழாவிற்காக அமைப்பை பற்றித் தெரிந்த ஆதரவாளர்கள், நண்பர்கள், மற்றும் பொதுவானவர்கள் வீட்டிற்குச் சென்று மணவிழா குறித்து பேசி விளக்கிய போது மக்களுக்கு பல சந்தேகங்கள், கேள்விகள், ‘தாலியில்லாமல் கல்யாணம் செஞ்சா கூட்டிக் கொடுக்கிற மாதிரியில்லை’ என்றனர். திருச்சி அருகே துறையூரைச் சேர்ந்த சி.பி.எம். கட்சிக்காரர் ‘இந்தத் திருமணங்களுக்கு அத்தாட்சியில்லை’ என்று பெண் கொடுக்க வந்த ஒரு வீட்டினரைத் தடுத்து விட்டனர்.
‘உங்க சைடுல நீங்க எப்படி வேணா கல்யாணம் செஞ்சாலும் எங்களுக்கு ஒரு மாதா கோவில்ல மோதிரம் மாத்தினாத்தான் நிம்மதி’ என்றனர் ஒரு குடும்பத்தினர். அழைப்பிதழில் ‘மாட்டுக்கறி விருந்து’ என்று போட்டிருப்பதால் ‘எங்க உறவுக்காரங்களுக்கு எப்படி பத்திரிக்கை வைக்க முடியும்’ என்றார் ஒரு தந்தை.
இப்படி பல சுற்றுப் போராட்டங்களைத் தாண்டி ஆறு தம்பதியினர் தயாராயினர் என்றாலும் சரி பாதி மணமக்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும் மணப்பெண்கள் இருவருக்கு இது மறுமணமும் கூட. மணமகன்களில் ஒருவரான விழுப்புரம் பகுதி தோழர். நடராசன் விழா நடந்த அன்று காலை வரை தனது பெற்றோர்களைத் திருமணத்திற்கு வருமாறு மன்றாடுகிறார். ‘ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி அவமானமாக்கிட்ட’ என்ற பெற்றோர்கள் திருமணத்தன்று வெளியூருக்குச் சென்றுவிட்டனர்.
வேறு ஒரு தோழர் தனது தந்தையை திருமணத்திற்கு அழைத்த போது, ”நம்ம உறவுக்காரங்க இருக்குற கிராமத்தில உள்ள ‘இந்த’ பெண்ணை என்னை இழிவுபடுத்துறதுக்குன்னே கல்யாணம் செய்யப் போறே’ என்று வர மறுத்து விட்டார்.
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் ஊரைச் சேர்ந்த தோழர் ராஜா விழுப்புரம் நிகழ்ச்சியில்தான் தனது சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறார். சாதி ஆதிக்கத்திற்குப் பேர் போன அவரது ஊரைக் கண்டஞ்சி பல பெண் வீட்டினர் தயங்குகின்றனர்.
இதே வட்டாரத்தில் இரு மாதங்களுக்கு முன்னர்தான் அமைப்பில் சேர்ந்த தோழர் ஒருவரது தங்கையை மணப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ராஜாவின் உறவினர், பெற்றோர் யாரும் விழுப்புரம் வரவில்லை. பின்னர் தம்பதியினராய் ஊருக்குத் திரும்பும் தோழர்கள் இருவரையும் சாணிக் கரைசல் ஆரத்தி வரவேற்கிறது. குடியிருக்க வீடு கூட கிடையாது என முடிவு செய்த ஊரார். அதனாலென்ன? அதே ஊரில் மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை பொதுக்கூட்டமாக நடத்தினார்கள் தோழர்கள்.
இப்படிப் பல தடங்கல்கள் இருந்தாலும் விழுப்புரம் மணவிழா தோழமையின் குதுகலத்தோடு நடந்தேறியது. தமிழகம் முழுவதிலிருந்தும் பல தோழர்கள், நண்பர்கள் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, மணமக்களின் பின்னே சாதிய ஒழிப்பு முழக்கங்களோடு அனைவரும் அணிவகுத்து வர- இந்த புதிய திருமண ஊர்வலத்தை விழுப்புரம் மக்கள் மகிழ்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரான அவர் தேநீருக்காக விழா மண்டபம் அருகே லாரியை நிறுத்தியவர், திருமண நிகழ்ச்சியைக் கேட்டறிந்து மணமார வாழ்த்தி நன்கொடையும் அளிக்கிறார். மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது.
விழுப்புரம் அருகே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அந்த நண்பர் விழாவினைப் பாராட்டி தனது முகவரியைக் கொடுத்து அமைப்பில் சேரவேண்டும் என்கிறார். விழாவிற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு பல்வேறு நூல்களை பரிசாக அளிக்கின்றனர். விருத்தாசலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதி ஒழிப்பு வெளியீட்டைப் (சிறு நூல்) பாராட்டி ரூ.500 நன்கொடை அளிக்கின்றனர்.
குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு மாட்டுக்கறி பிரியாணி சமைக்கின்றனர் அந்த முஸ்லீம் இளைஞரின் தலைமையிலான குழுவினர். இளைய தலைமுறையினர் விருந்தைச் சுவைத்த போது, சில முதியவர்கள் மட்டும் விருந்துண்ணவில்லை. ஒரே நாளில் அவர்கள் மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அதே சமயம் பல நண்பர்கள் முதல் முறையாக மாட்டுக்கறியைச் சுவைக்கிறார்கள். இந்த விழா அவர்களது புதிய சிந்தனைக்கு ஒரு துவக்கம்.
புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தமது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக மணமக்கள் உறுதி மொழியேற்று மாலை மாற்றுகின்றனர். சாதி- தீண்டாமை மறுப்பு மணமக்கள் வாழ்க வாழ்கவே என்ற முழக்கம் மண்டபத்தை நிறைவிக்கிறது. இதுவரையிலும் இனிமேலும் வாழ்க்கையை போராட்டப் பாதையில் அமைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையையும், துணிவையும், பொறுப்புணர்வையும் அக்கணத்தில் பெறுகிறார்கள் மணமக்கள்.
விவசாயப் புரட்சி என்ற வர்க்கப் போராட்டத்தினூடாகத்தான் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிறுவமுடியும் என்ற போதிலும், சாதிகளற்ற எதிர்கால சமூகத்தை இன்றே வாழ்ந்து காட்டுவதன் மூலம், சாதிகளிலான இன்றைய சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதுதான் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் செயலூக்கமுள்ள நம்பிக்கை.
மணவிழா நடந்த மண்டபத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி, முறையான திருமணங்களைக் கண்டிருந்த அவர் இவ்விழாவை ஆரம்பத்தில் சட்டை செய்யவில்ல. நேரம் செல்லச்செல்ல மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களை வியப்புடன் பார்க்கிறார். நிகழ்ச்சிகளையும் சற்று கவனிக்கிறார். ஒதுங்கியிருந்தவர் முழு மனதுடன் உரைகளைக் கேட்கிறார். விழா முடிந்து நள்ளிரவு அமைதியில் தோழர்களை அணுகிக் கேட்கிறார், ”எங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. உங்க தோழர்கள்ள ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.”
ஸ்ரீமுகம் பெறுதல்: ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு.
வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.
என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.
அதுவும் இந்த கம்யூனிஸ்டு படவாள், கம்யூனிஸ்டுன்னா இந்த சி.பி.எம். நம்பூதிரிபாடு வகையறா இல்லே, அவா நம்ப தேவஸ்தான அம்பிகள வச்சே தொழிற்சங்கம் கட்ற அளவுக்கு ஒத்து வந்துட்டாள்.
புதுசா சில கம்யூனிஸ்டு படவாள்லாம் சேர்ந்துண்டு ”நாட்டையே மொட்டை அடிக்கிறவங்கிட்ட போயி நம்பள மொட்டை அடிக்கிறதுக்கும் பிளேடு கேக்குற அளவுக்கு நாடு போகுது எல்லாம் வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்னு” கேலி பேசறாள். அப்படியே அறஞ்சுடலாம்னு ஆத்திரம் வர்றது.
ஏற்கனவே சொவரெல்லாம் ”எய்ட்ஸ் தடுக்க ஆணுறையை பயன்படுத்துங்’கோன்னு எழுதித் தள்ளிருக்காள். திருப்பதி பூரா ”எய்ட்ஸைத் தடுக்க பிளேடைப் பயன்படுத்துங்கள்”னு எழுதத் தொடங்கிட்டா என்ன பண்றது.? யாருக்கு அவமானம்? எல்லாரும் பகவான நம்பி வர்ற எடத்துல பிளேட நம்பச் சொன்னா பரிகசிக்கமாட்டாளா? இந்த விஷயத்துலயும் பெரியவா தலையிட்டே ஆகணும். எவ்வளவோ சிரத்தை எடுத்துண்டு தூர்தர்ஷன் வரைக்கும் போய் காரியம் பண்ணி எழுமலையான் மகிமையைப் பத்தி ‘பாலாஜின்னு’ சீரியல் காட்டிண்டு இருக்கறச்சே, ஜனமான ஜனம் ஏழுமலையான வேண்டிண்டு இருக்கரச்சே, ஏழுமலையான் தேவஸ்தானம், கேவலம் பிளேடுக்கு பாவாடைப் பாதிரிமார் நாட்டுண்ட்ட போயி கையேந்தறது கெடுதலா படறது.
மேலும் பாரம்பரியமா யூஸ் பண்ண கத்திய விட்டுட்டு பிளேடு யூஸ் பண்ண ஆகம விதியில எடமிருக்கான்னு குழப்பமும் மிஞ்சறது, இதுவும் பெரியவா தெளிவுபடுத்தணும்.
அப்படி பிளேடுதான் தோதுன்னா, நம்ப மீயூசிக் அகடாமி டி.டி. வாசுகிட்ட சொன்னா நிரோத் உறை புராடக்ட் பண்றத விட பிளேடையும் பண்ணுடான்னு பெரியவா சொன்னா கேப்பன்.
எதுக்கும் பொள்ளாச்சி மகாலிங்கத்துகிட்ட கூட இது சம்பந்தமா பேசினா இந்து மதத்த விட்டுக் கொடுக்காம தலையாட்டுவாம், பெரியவாளுக்கு தெரியாதது இல்ல, இருந்தாலும் நேக்கு ஆதங்கம் தாங்கல.
எதுவும் தோதுபடலேன்னா, நம்ம சுதேசிமஞ்ச், ஆர்.எஸ்.எஸ். போல தேசபக்தி அமைப்புல உள்ள சூத்ராள வச்சி திருப்பதியில ஷிப்ட்டு போட்டு மொட்டை அடிக்கலாம்.
வருஷத்துக்கு 70 லட்சம் மொட்டை போடறாள்; புதுசா கட்டடம் கட்ட 20 கோடி ரூபா ஒதுக்கறாள். ஏழுமலையான் பூஜை, புனஸ்காரத்த இண்டர் நெட்ல வேற காட்டறாள், மொட்டை அடிக்க பிளேடு வாங்க மட்டும் காசில்லையான்னு காதுபடவே பேசிக்கறது சகிக்கல்ல.
எதுக்கும் மேலிடத்துல சொல்லி வைங்கோ இண்டர்நெட்ல இங்கிலீஷ்ல போட்டா பரவால்ல, வேதத்த சூத்திர பாஷைல சொல்லி நீசத்தனம் பண்ணிடப்போறா.
கடைசியா ஒரு விஷயம் பெரியவா கவனமா இருங்கோ; வழக்கம் போல பெரியவாளுக்கு நம்பளவா சகலச் சேவையும் பண்ணாலும், பெரியவாள்க்கு மொட்டை அடிக்கற பரியாரி மேலே ஒரு கண்ணா இருங்கோ, கண்ட கத்தியும் போட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் ‘சங்கராச்சாரிக்கு எய்ட்ஸ்னு’ இந்த சண்டாளப் பசங்க மானத்த வாங்கிடுவான், பெரியவாளுக்குத் தெரியாதது இல்ல, இருந்தாலும் மனசு கெடந்து பதர்றது. எதுக்கும் பிளேடு பாக்கெட்ட மொத்தமா வாங்கி வச்சுண்டா நல்லது.
மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக திருநெல்வேலி பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில் கடந்த 21.01.2012 அன்று கூடங்குளம் அணுஉலையை மூடகோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் தவிர திருநெல்வேலியை சேர்ந்த வழக்குரைஞர்கள்,ஜனநாயக சக்திகள்,எழுத்தாளர்கள் உட்பட சுமார் 125 நபர்கள் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டத்தில் அமலநாதன்
மற்றும் விஜயக்குமார் பாக்கியம் தவிர மற்ற அனைவரும் உரையாற்றினர்.ம.க.இ.க மைய கலை குழுவின் நாடகம் மற்றும் பாடல்கள் நிகழ்த்தப்பட்டது.
சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை, நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் 70வது ஆண்டு நினைவாக மை லாங் மார்ச் என்ற திரைப்படம் சீனாவைச் சேர்ந்த ஆகஸ்ட் பர்ஸ்ட் பிலிம் ஸ்டுடியோவினால் எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படம் Axis of War (The First of August, My Long March, Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 திரைப்படங்களில் இரண்டாவதாக வெளிவந்த ஒன்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில் குண்டு வீச்சுகளும், போராட்டங்களும், மனித முயற்சிகளும், வலிநிறைந்த அனுபவங்களாக, போராட்டத் துடிப்பின் எத்தனமாக அழுக்கும், ரத்தமும், தூசியுமாக படமாக்கப்பட்டுள்ளன. .
சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம். இதன் டிரைலர் யூடியூபில் சேர்க்கப்பட்டுள்ளது திரைப்படத்தின் டிவிடியை இணைய வழியாக வாங்கிக் கொள்ளலாம்.
இத் திரைப்படத்தின் சில பகுதிகளை காண
வரலாற்றுப் பின்னணி
20-ம் நூற்றாண்டின் முதல் பாதி.
ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட சீன நாடு மன்னராட்சியிலிருந்து விடுபட்ட பிறகும், தொடர்ந்த அன்னிய ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் சீனாவின் உள்ளே தமது ஆதிக்கப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு ‘சுய ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கின்றன. அதிகாரப் போட்டியில் ஜப்பான் ஏகாதிபத்தியமாக களம் இறங்கத் தயாராகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் என்ற பெரும் பாரம் ஒரு பக்கம், நிலப்புரபுக்களின் சுமை இன்னொரு பக்கம் என்று சீன மக்களின் முதுகு உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தச் சுமைகளை தூக்கி எறிந்து மக்களை விடுவிக்கும் போராட்டம் வேண்டும். மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்று ‘சொத்துரிமை, பரம்பரை உரிமைகள் என்று பெரும்பான்மை மக்களை புதிய அதிகார வர்க்க சுரண்டலின் கீழ் வைத்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ‘தேசிய’ அரசாங்கம் ஒரு பக்கம். ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம், தொழிலாளர்களுக்கு உற்பத்தியில் உரிமை, உழைக்கும் மக்களுக்கு அதிகாரம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி மறு பக்கம்.
யுத்தப் பிரபுக்களும் தேசியக் கட்சி (கோமிங்டாங்) அரசாங்கமும் நாட்டின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தென் சீனாவில் ஜியாங்ஷி மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் செந்தள பிரதேசத்தை உருவாக்கினார்கள். கம்யூனிஸ்டுகளை தேசத் துரோகிகள் என்று வர்ணித்து அழித்தொழிப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக பல படைகளை ஏவி விட்டது சியாங் கை ஷேக் தலைமையிலான கோமிங்டாங் அரசாங்கம்.
செம்படையினரின் கொரில்ல போர் முறை இப்படி இருந்தது…
எதிரியை ஆழமாக ஊடுருவச் செய்வதற்கு ஆசை காட்டுதல்
எதிரி முன்னேறுகிற பொழுது நாம் பின்வாங்குகிறோம்
எதிரி நிற்கிற பொழுது நாம் துன்புறுத்துகிறோம்
எதிரி களைப்படையும் போது நாம் தாக்குகிறோம்
எதிரி பின்வாங்கும் போது நாம் துரத்துகிறோம்
‘செம்படையினரை தாக்கி, விரட்டி, துரத்தி முற்றிலும் அழித்து விட வேண்டும்’ என்று சியாங் கை ஷேக் பெரும் ஆயத்தங்களுடன் போர்களை நடத்தினான். பல முறை தோல்விகளைச் சந்தித்த பிறகு இறுதிப் போராட்டத்துக்கு 10 லட்சம் பேரைக் கொண்ட படையைத் திரட்டினான். ஜெர்மன் ஆலோசகர்களின் உதவியுடன் திட்டங்களை வகுத்துக் கொண்டு சண்டையைத் தொடங்கினான்.
‘பலமான எதிரியை சந்திக்கும் போது பின்வாங்க வேண்டும்’ என்ற கொரில்லப் போர் கோட்பாட்டுக்கு மாறாக நேருக்கு நேர் சண்டையில் அரசுப் படைகளை எதிர் கொண்ட செம்படை பின்னடைவுகளைச் சந்தித்தது. கோமிங்டாங் படையினரின் முற்றுகையிலிருந்து தப்பித்து தமது ஆயுதங்களோடும் படைகளோடும் மக்களோடும் 1934-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பயணமாக கிளம்பியது கம்யூனிஸ்டுகளின் செம்படை.
தொடர்ந்து துரத்தி வந்த அரசுப் படைகளின் தாக்குதல்களை தவிர்த்தபடியே சீனாவின் மேற்குப் பகுதிகள் வழியாக வடக்கு நோக்கி நகர்ந்தது செம்படை. இந்த பயணம் சுமார் 370 நாட்கள் நீடித்து வடமேற்கில் உள்ள ஷான்ஷி மாகாணத்தில் முடிவுற்றது. ஜியாங்ஷியிலிருந்து புறப்பட்ட படையினரில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பயணத்தை நிறைவு செய்தார்கள். மற்றவர்கள் வழியில் நடந்த போர்களிலும், பயணத்திலும் உயிரிழந்தார்கள்.
திரைப்படக் காட்சிகளும், வசனங்களும் – My Long March
1. விமானப் பயணம்
இந்த நீண்ட பயணத்தில் 15 வயது கிராமத்துச் சிறுவனாகக் கலந்து கொண்ட கதை சொல்லி (வாங் ருய்) 70 ஆண்டுகளுக்குப் பிறகு வயதான மனிதராக தனது ஊருக்குத் திரும்பி வருகிறார். ‘என்னுடைய வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சியான நிகழ்வுகளும், அதிக சோகமான நிகழ்வுகளும் நீண்ட பயணத்தில்தான் நடந்தன’ என்று அவர் சொல்ல விமானத்தில் பயணிக்கும் அவரது பார்வை மேகங்களின் ஊடாக வானத்திலிருந்து குண்டு மழை பொழியும் ஆற்றுப் பாலத்தின் மீது காட்சியாக விரிகிறது.
2. முதல் தாக்குதல்
செம்படை வீரர்கள் படகுகளின் மீது பலகைகளைப் போட்டு அமைக்கப்பட்ட மிதக்கும் பாலத்தின் மீது ஆற்றைக் (ஷியாங் ஆறு) கடக்கிறார்கள். வானத்திலிருந்து குண்டு மழை பொழிகிறது. நூற்றுக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பிழைத்தவர்கள் விடாமல் முன்னேறி செல்கிறார்கள். விமானங்கள் எரிபொருள் தீர்ந்து திரும்பிப் போய் விட்டு வரும் இடைவெளியில் ஒரு 15 வயது சிறுவன் முதுகில் கனமான சக்கரம் ஒன்றை சுமந்து கொண்டே தன் தந்தையைத் தேடி குரல் எழுப்பிக் கொண்டே ஓடுகிறான். அலை அலையாக முன்னேறும் செம்படையினரைத் தாண்டி போகிறான்.
3. தாக்குதலுக்குப் பிறகு
புகையிலும் அழுக்கிலும் ஊறிப் போயிருக்கும் மனிதர் கூட்டம் அலை அலையாக முன்னேறுகிறது. விமானங்கள் திரும்பி வருவதற்குள் தப்பித்து மறைந்து விட வேண்டும். காயமடைந்தவர்களை தூக்கிச் செல்லும் குழுவினரிடையே தனது அக்காவைப் பார்த்து ‘அப்பாவைக் காணவில்லை’ என்று அழுகிறான் பையன் வாங் ருய். அவனை முன்னால் போகச் சொல்லி விட்டு காயமடைந்தவர்களைத் தேடி அக்கா போகிறாள். எதிர்ப்படும் அப்பாவிடம் வாங்ருய் முன்னால் போகும் தகவலைச் சொல்கிறாள்.
சௌ-என்லாய் தொலைபேசியில் தகவல் அனுப்ப முயன்று தோல்வி அடைகிறார். கருவியில் ஏதோ கோளாறு. அவரை பாதுகாப்பாக கரை கடந்து போகச் சொன்னதை கோபமாக மறுத்து கருவியை சரி செய்யச் சொல்கிறார்.
4. இரண்டாம் தாக்குதல்
இதற்கிடையில் அடுத்த விமானத் தாக்குதல் ஆரம்பிக்கிறது. குண்டுகள் தண்ணீரிலும் பாலத்திலும், படைவீரர் கூட்ட நடுவிலும் விழுகின்றன. முதுகில் சுமையுடன் நடக்கும் வாங்ருய் குண்டு வீச்சில் கீழே விழுகிறான். அவனை தூக்கி நிறுத்தும் ஒருவர் அந்தக் குழுவினர் தூக்கி வரும் கனமான பொருட்களை ஆற்றில் தூக்கிப் போடச் சொல்கிறார். ‘அது மிக முக்கியமான கருவி, இதைத் தூக்கிப் போட்டு விட்டால் மேல் மட்டத்தில் எங்களைக் கேட்பார்கள். நீங்க ஒரு ரசீது எழுதி தர முடியுமா’ என்று வாங் தூக்கிப்போடச் சொல்பவரிடம் கேட்கிறார். ‘விட்டா கோயிலைக் கூட தூக்கிக் கொண்டு வருவார்கள், மாவ் சே துங் சொன்னார் என்று பதில் சொல்லுங்கள்’ என்று பதிலளித்து விட்டு நகர்கிறார் அந்த மனிதர். ‘சேர்மன் மாவோ!’ என்று வாய் பிழந்து நிற்கிறார் கிராமத்து மனிதர். சுற்றிலும் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
‘நாம் எங்கு போக வேண்டும்?’ என்று அப்பாவிடம் கேட்கிறான் வாங் ருய். ‘செம்படையோடு போ’ என்று பதில் சொல்கிறார் அவர்.
5. சிகிச்சை அறை
தாக்குதல் ஓய்ந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது. வாங் ருய்யின் உறவினன் சாங் (அக்காவின் முறைப்பையன்) தாக்குதலில் காயமடைகிறான். மருத்துவரின் சிகிச்சை மேசையின் மீது படுத்திருக்கும் அவன், ‘இது வரை பல ஆறுகளைக் கடந்து பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் பல மலைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. செம்படையின் கடைசி காலம் வந்து விட்டதா! வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தலைவருக்கு, எதிரிகளின் குண்டுகளுக்கு நம் வீரர்களின் உடல்கள்தான் தடுப்பரண்களாக பயன்படுகின்றன என்பது தெரியவில்லை’ என்று தனது படைப்பிரிவுத் தலைவனிடம் கத்துகிறான்.
காயமடைந்த அவனது கையை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது காதலியான வாங் மெய் ஆறுதல் அளிக்கிறாள். அடுத்து கொண்டு வரப்படுவது வாங்-ருய்யின் அப்பா. அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மகளையும் மகனையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சாங்கிடம் ஒப்படைத்து விட்டு உயிர் துறக்கிறார் அவர். ‘செம்படையுடனேயே தொடர்ந்து போவது’ என்று முடிவு செய்கிறார்கள் மூன்று பேரும்.
6. சுன் யீ (Zunyi) – விவாதக் கூட்டம்
பயணத்தின் ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும் இடத்துக்கு பணிக்காக அனுப்பப்படுகிறான் வாங்ருய். இருளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பிரிவு படைவீரர்களுடன் பேச்சு கொடுக்கிறான். அந்த இடம் குய்சோ மாகாணத்தில் உள்ள சுன்யீ என்றும் அங்குதான் மா சே துங் இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறான். தனது பணியின் ஒரு பகுதியாக கூட்டம் நடந்து கொண்டிருக்கும் அறைக்கு நூடுல்ஸ் எடுத்துக் கொண்டு போகிறான். உள்ளேயிருந்து கதவைத் திறக்கும் மாவோ, ‘இப்போ நேரம் சரியில்லை, எடுத்துக் கொண்டு திரும்பிப் போ’ என்று கத்தி அனுப்பி விடுகிறார்.
அறையின் உள்ளே மாவோ உரத்த குரலில் விவாதம் செய்வது கேட்கிறது. ‘நாங்கள் வெறுமனே நடந்து கொண்டிருக்க மட்டும் செய்யவில்லை. எதிரியின் தாக்குதல்களை எதிர் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் சௌஎன்லாயை முழுமையாக ஆதரிக்கிறேன்’ என்று வெளிநாட்டு தலைவர்களுடன் விவாதிக்கிறார்.
அறையிலிருந்து வெளி வந்து தொலைபேசியில் தகவல் சொல்லும் சௌஎன் லாய், வாங் ருய்யைப் பார்த்து, ‘நீ கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வந்ததால்தான் அப்படிக் கத்தி விட்டார்’ என்று ஆறுதல் சொல்கிறார். அறையினுள் எரிந்து அணைந்திருந்த மெழுகுவர்த்திகளை பத்திரமாக துணிக்குள் சுருட்டி எடுத்துக் கொள்கிறான் வாங்ருய். அவன் கூடத்துக்குள் வரும் போது மாவோ அவனைப் பார்க்கிறார்.
7. மாவோவுடன் பேசுதல்
‘நீதான் நூடுல்ஸ் கொண்டு வந்த பையனா?’
‘எனக்கு முன்பே உங்களைத் தெரியும்?’
‘ஆமா, நான்தான் உன் மேல் கோபத்தில் திட்டி விட்டேனே, எப்படி தெரியாமல் இருக்க முடியும்’
‘இல்லை, ஷியாங் பாலத்தில் நான் கீழே விழுந்த போது நீங்கதான் எழுப்பி விட்டீங்க, அப்பவே தெரியும்’
பையனின் ஊர் பெயர் விபரங்களைக் கேட்கிறார். ‘அதுவரை புகைபிடிக்காவிட்டால் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டாம்’ என்று அறிவுரை சொல்கிறார். ‘சோவியத் எல்லாம் இல்லாமல் ஆகி விட்டது. நான் சேர்மன் இல்லை, என்னை சும்மா முதிய மாவோ என்றே கூப்பிடு’ என்கிறார்.
‘களைப்பாக இருக்கிறது, தலையை பிடித்து விட முடியுமா’ என்று கேட்க ‘கைகழுவி விட்டு வருகிறேன்’ என்று சொல்பவனை மறுத்து அப்படியே தலையைப் பிடித்து விடச் சொல்கிறார்.
‘இந்த இடம் வரலாற்றில் இடம் பெறும். 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றிப் பேசுவார்கள்’
‘இங்கு வந்து ஏன் கூட்டம் போடுகிறோம்.’
‘இங்கு எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இங்குதான் செம்படை எங்கு போகிறது என்று முடிவு செய்ய வேண்டும்’
‘உங்க குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள்?’
‘4 பேர் எல்லோரும் செம்படையில், அப்பா, அக்கா, நான், அக்கா வீட்டுக்காரர். அக்கா மருத்துவக் குழுவில், நானும் அக்கா வீட்டுக்காரரும் ஒரே படைப்பிரிவில்’
‘அப்பா ஆற்றில் கடக்கும் போது கொல்லப்பட்டார்.’ என்று கண்ணீர் விடுகிறான் வாங்ருய். அவனுக்கு ஆறுதல் சொல்லி ‘தெருவில் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தருகிறேன்’ என்று அழைத்துப் போகிறார்.
தெருவில் ஒரு இடத்தில் அக்காவைப் பார்த்து ஓடிப் போகிறான். ‘வேலையை விட்டு விட்டு வந்து விட்டாயா!’ என்று அவனை கோபிக்கிறாள் அக்கா. ‘நான்தான் ஓய்வெடுக்கச் சொன்னேன்.’ என்று மாவோ பதிலளிக்கிறார்.
அக்காவும், அவளது காதலனும் சேர்மன் மாவோவுக்கு தமது விபரங்களைச் சொல்கிறார்கள். அவரிடமும் ‘செம்படை எங்கு போகிறது’ என்று கேட்கிறான் அக்காவின் காதலன்.
8. குழந்தை பிறப்பு
பயணம் தொடர்கிறது. படைப்பிரிவுத் தலைவன், அவர்களின் பொறுப்பாளர் பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு இடத்தில் முகாம் அமைக்கிறார்கள். ‘குழந்தை பிறந்து விட்டதா என்று பார்த்து விட்டு வருமாறு வாங்ருய்யை அனுப்புகிறார்கள்.
குழந்தையை பெற்ற தாய் ‘படைகள் எப்படி இருக்கின்றன’ என்று மருத்துவரிடம் விசாரிக்கிறார். வாங் மெய் உதவியாளராக பணி புரிகிறாள். மாவோ அறைக்குள் வருகிறார். மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு தன் மனைவியிடம் பேசுகிறார்.
‘குழந்தை உன்னை மாதிரி இருக்கிறதா, என்னை மாதிரி இருக்கிறதா?’
‘அழகான பெண் ஆனால் மோசமான நேரத்தில் வந்திருக்கிறார்ள். இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும், வழியில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படும் என்று தெரியாது. குழந்தையை இங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’
‘5 குழந்தைகளை ஒவ்வொரு ஊரில் விட்டு வந்திருக்கிறோம். இது இப்பதான் பிறந்த குழந்தை???’
‘இது என் குழந்தையும்தான். நான் கல் மனம் படைத்தவன் இல்லை. ஆனால் இந்தச் சூழலில் வேறு வழி இல்லை’
குழந்தையைப் படுக்கையில் போடச் சொல்கிறார் தாய். ‘குழந்தைக்குப் பேர் கூட வைக்கவில்லை’ என்று மாவோவிடம் கேட்க ‘நாம் திரும்பி வராவிட்டால் உள்ளூர் குழந்தையாகவே வளரட்டும், அதுதான் நல்லது’ என்று பதில் சொல்கிறார். ‘நாங்கள் செம்படை, வேறு வழியில்லாததால் விட்டு விட்டுப் போகிறோம். நன்கு வளர்க்கவும்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு போகிறார்கள்.
13. லோங்ஷான் கணவாய்
பயணம் தொடர்கிறது. ‘சீஹ் ஷூய் ஆற்றை திரும்பத் திரும்ப பார்க்கிறோம்’ என்று சாங் சொல்ல, ‘அது மாவோவின் தந்திரம். எப்படியோ மேலும் உயிர்ச்சேதம் இல்லாமல் போகிறோம். மாவோவின் தலைமையில் நம்பிக்கை இருக்கிறது’ என்று பிரிவுத் தலைவன் பதில் சொல்கிறான்.
‘நான் நேற்று மாவோவைப் பார்த்தேன். மாவோ வயிற்றில் கை வைத்துக் கொண்டிருந்தார், பசியாக இருக்குமோ?’ என்கிறான் வழிகாட்டி.
‘ரூய் ஆர், இதைக் கொண்டு சேர்மன் மாவோவிடம் கொடு. துப்பாக்கியை கையில் எடுத்துக்கோ’ என்று கொழுக்கட்டைகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.
எதிரிப் படையுடன் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிறது. காயம் இன்னும் ஆறாத நிலையிலும் சாங் சண்டையில் கலந்து கொள்கிறான். மாவோவைத் தேடிப் போகும் வாங்ருய் கொல்லப்பட்ட ஒரு செம்படை வீரனின் இடத்தில் துப்பாக்கியை இயக்கி பல எதிரி வீரர்களை வீழ்த்துகிறான்.
திரும்பி வந்தவனை ‘ஏன் இவ்வளவு நேரம். மாவோவைப் பார்த்தாயா, கொழுக்கட்டைகளைக் கொடுத்தாயா’ என்று கேட்கிறார்கள்.
‘நான் ஆறு சாப்பிட்டேன், 6 எதிரிகளை சுட்டேன் அதில் ஒரு படைத்தலைவன் கூட உண்டு’ என்கிறான்.
‘உண்மையிலேயே ஆறா? நீதான் உண்மையான வீரன், நீயே சாப்பிடு’ என்று பாராட்டுகிறார்கள்.
‘ஜியாங்ஷியிலிருந்து புறப்படும் போது நாம் ஓடினோம், இப்போது தாக்குகிறோம். இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்’ என்று பேசிக் கொள்கிறார்கள்.
16. மாவோவுடன் உரையாடல்
மாவோ செம்படை வீரர்களை பார்க்க வரும் போது வாங்ருய் ஓடிச் சென்று வணக்கம் சொல்கிறான் வாங் ருய்.
‘ரூய்ஆர் ஆறு பேரைக் கொன்றான். இனிமேல் அவன் சின்ன பையன் இல்லை. ஒரு ஹீரோ’ என்று தகவல் சொல்கிறார்கள்.
‘உணவுப் பொருட்கள் கிடைப்பது கஷ்டம். நான் சாப்பிடுகிறேன்’ என்று இரண்டு பேரும் சாப்பிடுகிறார்கள்.
‘செம்படை எங்கு போகிறது என்று எனக்குத் தெரிந்து விட்டது, வெற்றியை நோக்கி’ என்கிறான் வாங்ருய்.
‘சரியாகச் சொன்னாய், நமது பாதை நீளமானது, ஆபத்தானது. ஆனால் நாம் அதை வெற்றிகரமாக கடப்போம்’
17. கோட்டை உடைப்பு
சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளில் பயணம் தொடர்கிறது. கோட்டை ஒன்றை உடைத்து நுழைகிறார்கள் செம்படை வீரர்கள்.
‘செம்படை உங்களைக் காப்பாற்ற வந்து விட்டது. பயப்படாதே!’ என்று ஒரு இளைஞனை காப்பாற்றுகிறார்கள். அவன் கத்தியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான்.
‘என் கத்தியைத் பிடுங்கி விட்டு ஓடி விட்டான்’ என்று தகவல் சொன்னதும் ‘கத்தி உன் ஆயுதம், அதை எப்படி இழந்தாய்?’ என்று திட்டு கிடைக்கிறது.
18. பழங்குடி வீரன் செம்படையில்
படையினர் பயணத்தைத் தொடரும் போது அந்த பழங்குடி இளைஞன் இவர்களைத் தொடர்ந்து வருகிறான்.
‘என்ன செய்கிறாய்? என் கத்தியைக் கொண்டு வந்தாயா? எங்கள் கூடவே ஏன் வருகிறாய்? பேசுவது புரிகிறதா?’ என்று கத்தியை வாங்கிக் கொண்டு அவனை திரும்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஒரு இடத்தில் ஓய்வு எடுக்க உட்காருகிறார்கள். சுருட்டு செய்யும் சாங்கிடம் ‘எங்கிருந்து புகையிலை கிடைத்தது? நீ புகைக்க மாட்டாயே’ என்று கேட்கிறார் வாங்ருய். ‘உங்க அப்பாவுக்காக செய்தது.’
அந்த சிறுபான்மை இன இளைஞன் அவர்கள் அருகில் நிற்கிறான்.
‘ஏன் எங்க பின்னாலேயே வருகிறாய்? ஒருவேளை உனக்கு மாண்டரின் புரியவில்லையா, என்ன?’
‘பழி வாங்க வேண்டும்’
‘தலைவரிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டும்’ என்கிறான் பிரிவுத் தலைவன்.
படைப் பிரிவுத் தலைவர் வருகிறார். ‘என்ன சொல்ல வேண்டும்? கூட வர விரும்பினால் தாராளமாக வரட்டும். உழைக்கும் மக்கள் விரும்பினால் செம்படையில் சேர்ந்து கொள்ளலாம். தா ஆர் ஹூவா, நீ இந்தப் பிரிவில் சேர்ந்து கொள். உனக்கு ஆயுதம் இல்லை. சாங், உன் கத்தியை இவருக்குக் கொடு. எங்கள் கூட வந்தால், யீ பகுதிக்குத் திரும்பி திரும்பி வர 4, 5 ஆண்டு ஆகலாம், நன்கு பார்த்துக் கொள்’
‘வா நண்பா, உட்கார். இது என்ன பெரிய போர்வை போல இருக்கு’
‘இதன் பெயர் சார்வா. பகலில் உடுப்பு, இரவில் போர்வை. குடும்பம் யாரும் இல்லை. எல்லோரையும் கொன்று விட்டார்கள்’
வாங்ருய் தாஆர்ஹூவாவின் தலை முடியை ஒதுக்கப் போக, தூக்கி எறிந்து அடித்து விடுகிறான். ‘இது என் முடி இல்லை, புத்தா! இவன் செம்படையினராக இல்லாவிட்டால் கொன்றிருப்பேன்.’ என்று உறுமுகிறான்.
‘தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும், அவன் முடியைத் தொட்டது என் தவறுதான்’
‘அவன் தவறை ஒத்துக் கிட்டான் அவ்வளவுதான். இனிமேல் இரண்டு பேரும் நண்பர்கள்’
20. முட்டுச்சந்து
தொடரும் பயணத்தில் கிராம மக்கள் ஆயுதங்களுடன் செம்படையினரை எதிர்கொள்ள வருகிறார்கள்.
‘யாரும் சுடாதீங்க’
‘நாங்க செம்படை, உங்கள் நண்பர்கள்’
என்று சொல்லச் சொல்ல தா ஆர்ஹூவா மொழிபெயர்த்து சொல்கிறான்.
‘இப்படி எதிரெதிராக நிற்பது சரியில்லை. இரண்டு பேரை அனுப்புவோம்.’
‘நான் போறேன். நான் பெண் நம்புவராகள்’ என்கிறாள் வாங் மெய். கூடவே வாங் ருய்யும் புறப்படுகிறான். தாஆர்ஹூவா உள்ளூர் ஆளாகப் போகிறான்.
‘ஒரு பையன், ஒரு பெண், ஒரு yifu ஆள்.
பயமாக இருக்கு என்று சொல்லும் தம்பிக்கு தைரியம் ஊட்டப் பாடுவதாகச் சொல்லி, வாங் மெய் பாடுகிறாள். பாடல் முடிந்ததும் மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கட்டிப் போடுகிறார்கள். ‘திரும்பிப் போ சுடாதீங்க’ என்று செம்படையினருக்குச் சொல்கிறாள் வாங்மெய்.
அவர்களைப் பார்க்க பெண்கள் வருகிறார்கள். உரையாடலை தாஆர்ஹூவா மொழிபெயர்க்கிறான்.
‘இது என் அக்கா’ என்கிறான் வாங்ருய்.
‘இது என் அக்கா’ என்கிறான் அந்தப் பெண்ணின் தம்பி.
‘நானும் உன் அக்கா’ என்கிறாள் வாங்மெய்.
‘அக்கா’ என்று வாங்மெய்யை அழைக்கிறான் அந்தச் சிறுவன்.
‘நல்லது’ என்கிறாள் வாங்மெய்
‘நானும் உன் அக்கா’ என்று வாங்ருய்யிடம் சொல்கிறாள் கிராமத்துப் பெண்.
‘அக்கா’ என்று அவளைக் கூப்பிடுகிறான்
‘நல்லது’ என்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.
கிராம மக்களுடன் நடனம் ஆடுகிறார்கள்.
23. மாவோவுடன் பேசுதல்
அங்கு சேர்மன் மாவோ வருகிறார். அவருக்குப் பின்னால் போய் கண்ணைப் பொத்துகிறான் வாங்ருய்.
‘யாரு? பையனாக்கதான் இருக்க வேண்டும்.’ என்று கையை பிரிக்கிறார் மாவோ.
‘சீஹ் ஆற்றை தாண்ட வழி காட்டியவர் இதைக் கண்டுபிடிக்க மாட்டாரா’ என்று பக்கத்தில் ஒருவர் ஐஸ் வைக்கிறார்.
‘வாங் ருய் வளர்ந்து விட்டான். இனிமேல் அவன் ஒரு ஹீரோ’
‘இது தாஆர்ஹூவோவாக இருக்க வேண்டும். நான் அதிகாரி இல்லை. செம்படையில் எல்லோரும் தோழர்கள்தான். 3 நாள் முன்பு சேர்ந்தார். சிறுபான்மை இனங்களின் ஆதரவைப் பெற்றதால்தான் யீ பகுதியை தாண்டி செம்படை போக முடிந்தது’ என்கிறார் மாவோ.
இரவில் தாஆர்ஹூவாவும் சுவோ மாவும் சேர்ந்து வெளியில் போகிறார்கள்.
25. மருத்துவமன தாக்குதல்
அடுத்த நாள் காலையில் எல்லோரும் கூடியதும் ‘மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளது, காப்பாற்றுவோம்’ என்று உத்தரவு வருகிறது. தனது அக்கா அங்குதான் இருந்தாள் என்று உணர்ந்து வாங்ருய் சண்டையில் ஆக்ரோஷமாக கலந்து கொள்கிறான்.
‘சரணடைந்து விடுங்கள்’ என்று மருத்துவமனையைத் தாக்கிப் பிடித்திருந்த எதிரிப் படையினரை சுற்றி வளைத்து கைது செய்கிறார்கள்.
‘அக்கா எங்கே? என் அக்கா எங்கே?’ என்று தேடி ஒரு இருட்டு அறைக்குள் போனால், வாங்மெய் கொல்லப்பட்டிருக்கிறாள்.
‘அக்கா..கொல்லாம விட மாட்டேன்’ என்று கத்தியை உருவிக் கொண்டு ஓடுகிறான்.
அவன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி விட்டு, செம்படையின் நடத்தை விதிகளை நினைவுபடுத்துகிறான் பிரிவுத் தலைவன்.
‘கைதிகளை துன்புறுத்தக் கூடாது.’
27. தாவி ஆறு
பயணம் தொடர்கிறது. அடுத்து முக்கியமான ஆற்றுப் பாலத்தை கைப்பற்றி பின்தொடர்ந்து வரும் மற்ற படையினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு இந்த பிரிவுக்குத் தரப்படுகிறது.
‘மூன்று படகுகள்தான் உண்டு. எல்லோரும் படகில் போனால் 1 ஆண்டு ஆகும். இதற்கிடையில் சிசுவான் படைகள் பாலத்துக்குப் போய் விடும். 3 நாள் பயணத்தில் மலைப்பாதை வழியாகப் போய்ச் சேரலாம். 320 மைல்கள் தூரம். தாதூ ஆற்றுப் பாலத்தை எதிரிகள் வருவதற்கு முன்பு நாம் கைப்பற்ற வேண்டும்’ என்று படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.
‘மே 29ம் தேதிக்கு முன்போ போய் சேர வேண்டுமா? அது நாளைக்கு! ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கோம், 80 மைல்கள்தான் ஆச்சு. இன்னும் 240 மைல்கள் ஒரே நாளில் எப்படி’ என்று உத்தரவு கொண்டு வரும் தூதுவனிடம் படைத்தலைவன் கேட்க, ‘இது மேலிட உத்தரவு’ என்று சொல்லி விட்டு திரும்பிப் போகிறான்.
‘வேகமாக ஓடுங்கள்’. கால் வலிக்கிறது என்று புகார் செய்யும் வாங்ருய்யை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்
‘எதிரியும் அங்கே போறான்’ என்று ஆற்றின் மறு கரையில் போகும் அரசு படையினரிடம் ‘நாங்களும் குவோமின்தாங் தெரியுமா’ என்று பொய்யாக குரல் கொடுக்கிறார்கள். நிலச்சரிவு ஒன்றின் கற்களை நகர்த்தும் போது வாங்ருய் கால் தவறி கீழே விழப் போக அவனைக் காப்பாற்ற படைத்தலைவன் விழுந்து விடுகிறான். சத்தமாக அழக் கூட முடியவில்லை. எதிர்க்கரையில் எதிரிகள் கேட்டு விடுவார்கள்!
28. கட்சியில் சேருதல்
பாலத்தை தாக்குவதற்கு முன்பு 8 பேர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. ‘வாங்ருய்க்கு ஆறு மாதம் வயது குறைவாக இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லும் பிரிவுத் தலைவன்
‘முதன் முறையாக உன்னை தோழர் என்று அழைக்கிறேன். படைத்தலைவர் உன்னைக் காப்பாற்ற உயிர் விட்டார். நீ எதற்கு கட்சியில் சேருகிறாய்?’ என்று வாங்ருய்யை கேட்கிறான்.
‘செம்படையின் வெற்றிக்காக! ஏழைகளின் விடுதலைக்காக!. என் உடல், ரத்தம், உயிரைக் கொடுத்து அவற்றுக்காக போராடுவேன்’ என்று பதில் சொல்கிறான்.
29. இறுதிக் காட்சி
கடும் சண்டையில் பலத்த உயிரிழப்புக்குப் பிறகு செம்படை லூதிங் பாலத்தைத் தாண்டிப் போய் எதிரிகளை முறியடித்து, பின்வரும் படைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. சண்டையில் பிரிவுத் தலைவனும், சாங்கும் இறந்து விடுகிறார்கள்.
வெறித்துப் போய் உட்கார்ந்திருக்கும் வாங்ருய்க்கு மாவோ ஆறுதல் கூறுகிறார். ‘புரட்சி வென்றதும் இந்த சண்டையில் உயிர் நீத்தவர்களுக்கு பெரிய நினைவுச் சின்னம் அமைப்போம்’ என்று வாக்களிக்கிறார்.
‘உனது தலைமுடி கலைந்திருக்கிறது’ என்று சொல்லி தலையைப் பிடித்து விடுகிறார். ‘நீ 16 வயது பையன் இல்லை. செம்படை வீரன். நாம் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று தெரியாது.’
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், முதல்வர் சக்தி, மக்கள் தொடர்பு அலுவலர் குஞ்சிதபாதம், துணை முதல்வர் தொல்காப்பியன் ஆகியோர் ஒரே குரலில், “நிர்வாகம் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் மாற்ற முடியாது, ஸ்மார்ட் கிளாஸ்க்கு ரூ.10000 த்தில் பாதி கொடுத்தால் அரையாண்டு தேர்வு தாள் மதிப்பெண் பட்டியல் தருவோம், அரசு கட்டணம் செலுத்துவேன் என்பவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்” என ஜெயலலிதா சொந்தகாரர் போல் பேசினார்கள். பள்ளி தாளாளரின் உறவினர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.
ஆனால் 24-2-12 செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பாக பெற்றோர்களை அணிதிரட்டி முற்றுகை போராட்டம் நடத்தி தேர்வு விடைத்தாளை வாங்கி கொடுத்து சாதித்துள்ளது, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம். பத்திரிக்கை நிருபர்கள் வேடிக்கை பார்க்க கூட வரவில்லை. அந்த அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் இந்த பள்ளி முதலாளி. மீறி எழுதும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. மேலும் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தன் கடலார் மாவட்ட தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் சங்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி நிர்வாகம் ஏற்கனவே கூடுதல் கட்டணத்திற்காக கட்டாய டி.சி. அனுப்புவது மதிப்பெண் பட்டியல் தரமறுப்பு என்ற அடாவடிக்கு எதிராக நாம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்தை பம்பரமாக சுழல வைத்தோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டுவோம், ஸ்மார்ட் கிளாசுக்கு எவ்வளவு என சி.இ.ஓ.விசாரித்து சொன்ன பிறகு தான் கட்டுவோம் என சிதம்பரம் ஆர்.டி.ஓ.முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் எழுத்துப் பூர்வமாக முடிவு செய்யபட்டது. உரிய கட்டணத்தை டி.டி.எடுத்து பதிவுத் தபாலில் நமது சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனுப்பினர். பள்ளி நிர்வாகம் மூன்று மடங்கு (6000 ம் என்றால் 18000 ரூ கேட்கிறார்கள்) கேட்பதை நாம் மறுத்து விட்டோம்.
மேலும் கடந்த ஆண்டு இதே போல் பல மடங்கு வசூலித்ததை திரும்ப பெறவும், இந்த ஆண்டு கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்துவதை தடுக்கவும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி சிங்கார வேல் கமிட்டி முன்பாக நமது சங்கம் ரசீது ஆதாரங்களுடன் புகார் ஆனுப்பியுள்ளது. 2-2-12 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
கூடுதல் பணம் கட்டாத மாணவர்களை தனியே தரையில் அமரவைப்பது, தேர்வு வினாத்தாள் தர மறுப்பது, மதிப்பெண் பட்டியல் தரமறுப்பது என மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளச்சலுக்கு ஆளாக்குவதும் துன்புறுத்துவதும் பற்றி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பினோம். மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் விசாரணைக்கு வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சினார், கதறினார். ஆனால் தாளாளர் தர முடியாது என்று மறுத்து விட்டார்.
நமது பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரான மேடம் என்ன சொன்னார் என கேட்டனர். பள்ளித் தாளாளர் எதையும் ஏற்க மறுக்கிறார், நான் இயக்குநரிடம் சொல்கிறேன் என அமைதியாக சென்றார். மேடம் ஏற்கனவே இருந்த பள்ளி ஆய்வாளரை உள்ள விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என காவல் துறையில் தாளாளர் மீது புகார் கொடுத்து விட்டு போய்விட்டார். அதனால் தான் அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளர் – முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடு என்று போஸ்டர் ஒட்டினோம்.
சிதம்பரம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், பொருளாளர் நடராசன், மாவட்ட தலைவர் அய்யா வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் புஷ்ப தேவன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பாக 24-2-12 அன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. அனைத்து பள்ளிகள் முன்பாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வெளிகேட்டில் பெரும்பகுதி பெற்றோர்களும் உள்புறம் சில நிர்வாகிகளும் முழக்க அட்டையை பிடித்து கோசம் போட்டனர். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சிக்கும் தெரிவித்தோம் யாரும் வரவில்லை.
தினமணி நிருபர் நமது வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் எனும் தலைப்பில் செய்தியினை மாற்றி நமது படத்துடன் செய்தி வெளியிட்டார்.
காவல்துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தாசில்தார் என அனைவரும் பெற்றோர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் பணிய மறுத்தது. நாமும் வினாத்தாள் வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தோம். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், தாளாளரிடம் போனில் பேசி அதிகாரிக்கு பதில் சொன்னார்கள். இறுதிவரை தாளாளர் வர வில்லை. மதியத்திற்கு மேல் ஏதோ சாவு என காரணம் சொல்லி முதல்வரும் ஒளிந்துகொண்டார். பல வழிகளில் பெற்றோர்களை பேசி சமாதான படுத்த முயன்றனர் அதிகாரிகள். ஆனால் பெண்கள் உட்பட அனைவரும் வினாத்தாள் வாங்காமல் போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தனர்.
போலீசார் எங்களுக்கு ஒன்றும் இல்லை 4 பேரை உட்கார வைத்து போய்விடுவோம் என அலட்சியமாக பேசினர். சாமியானா போடப்பட்டது. மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. பெற்றோர்கள் அனைவரும் பள்ளி அமைந்திருக்கும் வேங்கான் தெருவை வால்ஸ்ட்ரிட் போராட்டமாக மாற்றுவோம் என முழக்கமிட்டனர். இரவு உணவு தயார் செய்ய அடுப்பு பாத்திரம் விறகு வந்திறங்கியது. அதிகாரிகள் ஓடத்தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆர்.டி ஓ.விடம் பேசினார். தாளாளருக்கும் முதல்வருக்கும் உடனே வரச்சொல்லி விசாரணைக்கு சம்மன் அனுப்ப பட்டது. துணை முதல்வரை தவிர வேறு யாரும் பள்ளியில் இல்லை.
இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை துண்டி போட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களிடம் வசூலித்துதான் அவர்களுக்கு சம்பளம் தரமுடியும் என நியாயம் பேச வைக்கப்பட்டனர். அதனால் குழந்தைகள் அனைவரும் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை, குடிநீர் இல்லை என்று திடலில் வெயிலில் அமர வைக்கப்பட்டனர். இதனால் போராடும் பெற்றோர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடியது. அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தேநீர் பிஸ்கட் வழங்கியது. போராட்டத் திடலிலேயே நாம் தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம். இரவு உணவுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டது.
போராட்டத்தின் ஒற்றுமையை கண்டு திகைத்து அதிகாரிகள் தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். மாலை ஆர்.டி.ஓ. நேரில் வந்து 2 நாள் அவகாசம் கொடுங்கள் என கேட்டார்.வினாத்தாள் வாங்காமல் செல்லமாட்டோம் என ஒரே குரலில் அறிவித்தனர். பள்ளி தாளாளர் யார் உத்திரவையும் மதிக்க மாட்டார்.நாங்கள் செய்வது தவறு என்றால் எங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள்.இல்லையென்றால் மாணவர்க துன்புறுத்தும் பள்ளி தாளாளரையும் முதல்வரையும் கைது செய்யுங்கள், என நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தாசில்தார், டி.எஸ்பி. அனைவரும் கடுங்கோபத்துடன் பள்ளி உள்ளே சென்று துணை முதல்வரை வெளியே அழைத்து வந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் போராடும் பெற்றோர்களிடம் நாளை மாலைக்குள் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது மணி இரவு 7 ஆகிவிட்டது. என கூறினர். அதற்கும் பெற்றோர்கள் தாளாளர் லட்சுமிகாந்தனை நம்ப முடியாது. நாளை வரை போராடி இருந்து வாங்கியே செல்கிறோம் என கூறினர். அதிகாரிகள் நீங்கள் நம்பலாம் ஆனால் நாங்கள் நம்பத்தயாராக இல்லை என போராட்டம் நீடித்தது.
ஆர்.டி.ஓ. நான் உத்திரவாதம் தருகிறேன். நாளை விடைத்தாள் தராவிட்டால் போராட்டத்தை தொடருங்கள் என மன்றாடினார். பிறகு அனைவரும் பேசி குறிப்பிட்டபடி நடக்க வில்லையென்றால் குடியரசு தினத்தன்று பள்ளி முன்பாக கருப்பு கொடி ஏற்றி போராடுவோம் என முடிவு செய்யப்பட்டு கலைந்து சென்றோம். மறுநாள் விடைத்தாள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சென்றனர். தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களாக மதிக்காமல் இருப்பதும் அவர்கள் மீது சிறு நடவடிக்கை எடுக்க கூட அரசு விரும்புவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 4 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன் கொடுமைக்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் சி.பி.சி.ஐ.டி.யும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என குறிப்பிட்டு மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ஐ.க்கு மாற்றி உத்திரவிட்டுள்ளார். இது மற்றுமொரு சான்றாகும். தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.
சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாய் முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். ‘இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, “எழுபதை ஏழால் வகுத்தால் பத்து” என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறிமுதல் செய்வது என்பவையல்லவா விடை காண வேண்டிய உண்மையான கேள்விகள்.
காமன்வெல்த், ஆதர்ஷ், அலைக்கற்றை ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளாலும், அன்னா ஹசாரேயின் தொந்தரவுகளாலும் அவதிப்பட்டு வரும் சூழலிலும்கூட, அத்வானி வகையறா கறுப்புப் பணம் பற்றி நடத்தும் நாடாளுமன்ற அமளிகள் குறித்து காங்கிரசு அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கறுப்புப் பணத்துக்கு எதிராக அத்வானி உரையாற்றி அமர்ந்த பின்னர், “கருப்புப் பணத்துக்கு எதிராக ரதயாத்திரை போனீர்களே, அதனால் ஆன பயன் என்ன?” என்று அத்வானியைக் கேட்டார் பிரணாப் முகர்ஜி. அது மட்டுமின்றி, “சுவிஸ் வங்கிகளில் இருந்து பணத்தைக் கொண்டுவர இராணுவத்தையா அனுப்ப முடியும்?” என்று நக்கலும் செய்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் மீது படையெடுக்கச் சொல்லும் பா.ஜ.க., கறுப்புப் பண விவகாரத்தில் ‘எல்லை’ மீறமுடியாது என்பது காங்கிரசுக்குத் தெரியாதா என்ன?
“கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், அந்தப் பட்டியலை வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்களை இப்போது வெளியிட்டால், இதற்குப் பின் எந்தத் தகவலையும் அந்த நாடுகள் அளிக்காது” என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. “கருப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடு” என்று கேட்டுக் கொண்டிருக்கும் அத்வானி உள்ளிட்ட யாரும் இதனை எதிர்த்து மூச்சு விடவில்லை. கறுப்புப் பணம் குறித்த உண்மையான வெள்ளை அறிக்கை இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளோ, அல்லது கறுப்புப் பண சொர்க்கங்களான சின்னஞ்சிறிய நாடுகளின் அரசுகளோ ‘கறுப்பு இந்தியர்களின்’ பட்டியலை இந்திய அரசுக்குத் தரவில்லை. ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள் இலஞ்சம் கொடுத்து இவ்வங்கிகளின் ஊழியர்கள் மூலம் திரட்டிய விவரங்களில் ஒரு பகுதிதான் இப்போது பிரணாப் முகர்ஜியின்கையில் இருக்கும் பட்டியலாகும்.
“இந்தப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளால் அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்டவை அல்ல என்பதால், இதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று முதலில் கூறியது மத்திய அரசு. “அப்படியானால் பட்டியலையாவது வெளியிடு” என்று கேட்டால், “வெளியிடமாட்டோம். ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கொடுத்த சத்தியத்தை மீற முடியாது” என்கிறார் பிரணாப். அப்படியானால் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
கையில் இருக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 3,887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது. 3887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகியிருக்கிறது என்றால், 70 இலட்சம் கோடிக்கு எத்தனை வருடம் ஆகும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கவும்.
பிரணாப் முகர்ஜியின் கையில் வைத்திருக்கும் 36,000 பேர் பட்டியலில் மற்றவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பரைச் சொன்ன பிறகும் கூட, அது எங்கள் அக்கவுண்ட் இல்லை என்று மறுக்கிறார்கள். வங்கிகளோ வாடிக்கையாளர் தொடர்பான இரகசியத்தை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே மறுத்துவிட்டன. இனி என்ன செய்வது?
வெளிநாட்டு வங்கிக்கணக்குகளில் உள்ள விவரப்படி சம்பந்தப்பட்ட ஆண்டுகளில் அத்தகையோர் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்து உண்மை நிலை என்னவென்று ஆராயும்படி தொடர்புடைய வருமான வரி அலுவலகங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளதாம். (தினமணி 26 டிச.2011) அதாவது சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்துள்ள முதலாளியோ, சினிமா நட்சத்திரமோ, அரசியல்வாதியோ ஒவ்வொரு ஆண்டும் செய்த செலவுகள், அவர்களுடைய வருமானத்துக்கு மீறியதாக இருந்தாலோ, அல்லது வரி கட்டாமல் வருமானத்தை மறைத்திருந்தாலோ அவற்றையெல்லாம் வருமானவரித்துறை கண்டுபிடிக்குமாம். கண்டுபிடித்தபின், “இத்தனை கோடி ரூபாய் வருமானத்தை நீங்கள் மறைத்திருக்கிறீர்கள். இந்தப் பணத்தைத்தான் நீங்கள் சுவிஸ் வங்கியில் போட்டிருக்கிறீர்கள்” என்று அவர்களை மடக்கி, அப்படியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுமாம். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொக்கின் காதில் ‘வெண்ணெய்’ என்று சொன்னாலே போதும், அது சரணடைந்து விடும் என்கிறது அரசு.
மிகவும் சிக்கலானதாகச் சித்தரிக்கப்படும் இந்தப் பிரச்சினையை ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு நகைத்திருட்டு வழக்கை நம்மூர் போலீசு எப்படிக் கண்டுபிடிக்கிறது? தன் கையில் உள்ள திருடர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களைத் தேடுகிறது. இன்னொருபுறம், திருட்டு நகைகளை வாங்கும் சேட்டுக் கடைகளை சோதனையிட்டு, நகையைக் கண்டுபிடிப்பதுடன், அதனை அங்கே கொண்டுவந்து விற்ற திருடனையும் கண்டுபிடிக்கிறது.
கறுப்புப் பண விவகாரத்தில் நடப்பது என்ன? குறிப்பிட்ட சேட்டு கடையில் ஒரு திருடன் பத்து பவுன் நகையை விற்றிருக்கிறான் அல்லது அடகு வைத்திருக்கிறான் என்ற விவரம் அரசுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், சேட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார், திருடனும் மறுக்கிறான். சேட்டின் மேல் கைவைக்க முடியாது (படையையா அனுப்ப முடியும்?) என்று சொல்லிவிட்டார் பிரணாப் முகர்ஜி. திருடன் மீதும் அரசு கைவைக்காதாம். குறிப்பிட்ட ஆண்டுகளில் திருடனின் வரவுசெலவு கணக்குகளை வருமானவரித்துறை மூலம் பரிசீலித்து, கணக்கில் காட்டாத வரவு இருந்தால் அதைக் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில், “அந்தப் பணம் திருட்டு நகையை விற்று வந்ததாகத்தான் இருக்க முடியும்” என்று அரசு நிரூபிக்குமாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும் சட்டபூர்வமான வழிமுறையாம்.
அப்படிக் கண்டுபிடித்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். வருமானவரித்துறை என்ன செய்யும்? சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் 700 இந்தியர்கள் இரகசியக் கணக்கு வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை பிரான்சிடமிருந்து பெற்றிருக்கிறது இந்திய அரசு. கணக்கு வைத்துள்ளவர் பெயர், அவரது கடவுச்சீட்டு எண், மொத்த முதலீடு உள்ளிட்ட விவரங்கள் தற்போது அரசிடம் உள்ளன. ஆனால் இந்த விவரங்கள் உண்மை என்று அந்த வங்கியோ, அந்நாட்டு அரசோ சாட்சியமளிக்காது. எனவே, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட நபருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது என்று வருமான வரித்துறை நிரூபித்து விடுவதாகவும் வைத்துக் கொள்வோம். சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துக் கொள்வதே கிரிமினல் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வருமானவரி கட்டவில்லை என்பதுதான், அந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக இந்திய அரசு சாட்டுகின்ற குற்றம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுடைய சுவிஸ் வங்கிக் கணக்கை இந்திய அரசால் முடக்க முடியாது. ஏனென்றால் சுவிஸ் நாட்டின் சட்டப்படி, வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அது மட்டுமல்ல, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாகக் கருதிய இந்தியாவின் பெரா (FERA) சட்டத்துடைய பல்லைப் பிடுங்கி, அதனை 1999 இல் பெமா (FEMA) என்ற உரிமையியல் சட்டமாக மாற்றிவிட்டது பா.ஜ.க அரசு. எனவே, அதை வைத்தும் எதுவும் செய்ய இயலாது.
எனவே, எச்.எஸ்.பி.சி (சுவிஸ்) வங்கியில் 438 கோடி ரூபாயை இரகசியக் கணக்கில் வைத்திருந்த 80 இந்தியர்களிடம், “ஐயா, அருள் கூர்ந்து அந்தப் பணத்துக்கு வரியைக் கட்டிவிடுங்கள்” என்று வருமானவரித்துறை கெஞ்சியது. “டேய் முடியலடா, ஓடாதடா” என்று திருடனிடம் மூச்சிரைக்க கெஞ்சும் சிரிப்பு போலீசின் நிலைமைதான்! மனமிரங்கிய அந்த 80 தேசபக்தர்களும் வரி செலுத்திவிட்டார்கள். கொன்னால் பாவம், தின்னால் போச்சு என்ற கதைதான். 438 கோடிரூபாயும் இப்போது வெள்ளையாகிவிட்டது. அந்த 80 பேரின் பெயரைக்கூட அரசு வெளியிடவில்லை. இது கறுப்புப் பணம் தொடர்பான ஒரு கதை. (எகனாமிக் டைம்ஸ், நவ,10,2011)
இலஞ்ச ஊழல்தான் நம் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், ஊழலை ஒழித்துச் சிறந்த அரசாளுமையை வழங்க முடிந்தால் ஏழ்மை ஒழிந்துவிடும், நாடு வல்லரசாகிவிடும் என்ற பிரமையும், 70 இலட்சம் கோடியைக் கைப்பற்றி விநியோகிக்கும் கனவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. குறிப்பாக 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஊழல் மற்றும் சுமார் 50,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மற்றும் வரிஏய்ப்பு மோசடி என்று குற்றம் சாட்டப்படும் ஹசன் அலி விவகாரம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்வோம். அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பட்டியலிட்டு, “இவர்களுக்கு உங்கள் நாட்டின் வங்கிகளில் கணக்கு இருந்தால் எமக்குத் தெரிவியுங்கள்” என்று கறுப்புப் பணத்தின் சொர்க்கங்களாக கருதப்படும் சுவிஸ், கேமேன் தீவுகள், வர்ஜின் தீவுகள், மொனாகோ போன்ற பல்வேறு நாடுகளுக்கும் கடிதம் (letter rogatory) அனுப்பியது. ஒரு மரியாதைக்காகக் கூட எந்த நாடும் பதிலளிக்கவில்லை. அதேபோல ஹசன் அலி வழக்கிலும் பல நாடுகளுக்குக் கடிதம் எழுதியும் பதில் இல்லை. (தெகல்கா, 23 ஜூலை, 2011)
வெளிநாட்டு வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்று ராம் ஜெத்மலானி தொடுத்திருக்கும் வழக்கு, ஜனவரி 19, 2011 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. லீசென்ஸ்டைன் வங்கியில் 18 இந்தியர்கள் 43.83 கோடி ரூபாய் பணம் போட்டிருப்பதாகவும், அதற்கு 24.26 கோடி ரூபாய் வரியும் அபராதமும் செலுத்துமாறு கேட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியது. மேற்படி இந்தியர்களின் பெயரை வெளியிட்டால் அது நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிப்பதுடன், அதன்பின் எந்த விவரத்தையும் பெற இயலாத சூழல் எற்படும் என்றும், லீசென்ஸ்டைன் உள்ளிட்ட பல நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் இருப்பதால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார், சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்.
“இவ்வளவுதான் கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரமா? நாம் பிரம்மாண்டமான தொகையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த தேசம் சூறையாடப்படுகிறது. இது கற்பனைக்கு எட்டாத குற்றம். இது கலப்படமில்லாத திருட்டு. இப்பிரச்சினை நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களைப் பற்றியதல்ல. இது எங்களுக்குப் பெரிதும் கவலையளிக்கிறது” என்றார்கள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகிய நீதிபதிகள். இதன் தொடர்ச்சியாக கறுப்புப் பணத்தை புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக ஜூலை 4, 2011 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜீவன் ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பதாக உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். இவ்வாறு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது, நிர்வாக எந்திரத்தின் செயல்வரம்புக்குள் தலையிட்டுச் சீர்குலைப்பதாகும் என்றும், இந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் மனு செய்திருக்கிறது, மன்மோகன் அரசு.
திருட்டு, சூறை, கற்பனைக்கு எட்டாத குற்றம் என்று உணர்ச்சிகரமான பல சொற்றொடர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்தாலும், இச்சொற்களுக்கு சட்டரீதியாகவோ நடைமுறையிலோ எவ்விதப் பொருளும் இல்லை. திருட்டுப் பணம், கறுப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுதக் கடத்தல் பணம் என்று என்ன அடைமொழிகளைச் சேர்த்து அழைத்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பல சொர்க்கத் தீவுகளைத் தனித்தனி நாடுகளாக உலக முதலாளித்துவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு இந்தியச் சிறுநகரத்தின் பரப்பளவு கூட இல்லாத தீவுகளும், மக்கள் தொகையாக 10,000 பேர் கூட இல்லாத இடங்களும் இவ்வாறு தனித்தனி நாடுகளாகப் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை சுமார் 70. இந்த 70 நாடுகளின் மொத்த மக்கட்தொகையைக் கூட்டினாலும் ஒரு கோடிப் பேர் கூட வராது. ஆனால், உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு இந்த ‘நாடுகளுக்கு’ச் சொந்தம்.
கறுப்பை வெள்ளையாகக் கருதும் இந்த சொர்க்கத்தீவுகளை மூலதனத்தின் மன்னராட்சிகள் என்றும் கூறலாம். எனினும், திருவிதாங்கூர் மன்னர்களைப் போல தம் செல்வத்தை முதலாளிகள் இங்கே புதைத்து வைக்கவில்லை. இது மூலதனம். சுரண்டலில் ஈடுபட்டால் மட்டுமே இது வாழவும் வளரவும் முடியும். எனவே, சுவிஸ் வங்கியின் கறுப்புப் பணம் என்று அழைக்கப்படும் மூலதனம், கண நேரத்தில் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் தாவியபடியே இருக்கிறது. அங்கிருக்கும்போது கறுப்பாகவும், இங்கிருக்கும்போது வெள்ளையாகவும் அது நம் கண்ணுக்குத் தென்படுகிறது.
கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…
எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.
நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ
‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களின் நியாயமான போராட்டங்களைக் கூட இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது. கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.
கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான் மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கி வருகின்றன.
கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும், இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே. இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள் ,பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப்போல் அடித்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்?. எனவே இதை உடனே கைவிடுவோம். நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.
சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூக சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ் நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை ,கழிவறை வசதியும் இல்லை , கேண்டீனும் இல்லை ,போதிய ஆசிரியர்களும் இல்லை ,ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித்திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை. மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும் நீதிமன்றத் தடை . இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளிவிட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?
போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும் ,அதற்கேற்ற புதிய ,புதிய ஜீன்ஸ் ,டி –சர்ட் ,ஷூ போட்டுக் கொண்டு,அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை வளைத்துப் போட பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், , மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும்(கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித்திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது, அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப் பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக எற்றுக் கொண்டு வலம்வர கற்றுத்தருகின்றன.
மேலும் ,புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டிவருகின்றன. அதோடு, நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிர கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக் ,கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்கு கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச் செய்கிறது.
ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான் யாருடைய கல்லூரி பெரியது யாருடைய ரூட் பெரியது, மாப் காட்டுவது, வெயிட் காட்டுவது,கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த மாநிலக்கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்
மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள், பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணைபோவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது; இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்க்குணத்தை இந்த அரசும், போலீசும் ,அரசியல்வாதிகளும்,சினிமா-பத்திரிக்கை –தொலைக்காட்சி ஊடகங்களும் வளரவிடுமா ? விடாது.
நம்முடைய போர்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றிவளைத்து தாக்கும் போலீசையும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும் ,ஊடகங்களையும் நம்மை நெருங்கவிடாமல் அடித்து விரட்டுவோம்.இதற்கு மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம். ரூட் என்று, கல்லூரி என்று ,ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம். நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை இந்த அரசும் – ஓட்டுப்பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான் என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம் மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம். நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்விகற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களே!
கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!
தமிழ் சினிமாவில் கோடிகளில் வாங்கும் நட்சத்திரங்களின் சம்பளமும், சம்பள உயர்வும் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அன்றாடக் கூலியாக வேலை செய்யும் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு மட்டும் மறுக்கப்படும் அல்லது தள்ளிப் போடப்படும். தற்போது ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி திரைப்படத் தொழிலாளர்கள் போராடி வருவதையும், அதை மறுத்து தயாரிப்பாளர் சங்கம் வேலை செய்வதையும் நீங்கள் படித்திருக்கலாம். இது இன்றைய தினத்தில் மட்டுமுள்ள பிரச்சினை அல்ல.
1997ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடினர். அப்போது பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களாகவும் முதலாளிகளாகவும் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள். அப்போது ம.க.இ.க சார்பில் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களை ஆதரித்து பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட சிறு நூலை இங்கே வெளியிடுகிறோம்.
– வினவு
_________________________________
சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய கூட்டத்திலிருந்து – ஜனவரி 2012
டி.வி.எஸ். முதலாளி கையில் ஸ்பானருடன் வந்து நின்று, ‘நானும் தொழிலாளிதான்’ என்று வசனம் பேசினால் எப்படி இருக்கும்? இந்தக் கூத்தெல்லாம் தமிழ் சினிமாவில்தான் நடக்கும் என்பீர்கள். தமிழ்த் திரையுலகத்தில் இப்போது உண்மேயிலேயே அப்படியொரு கேலிக்கூத்து நடந்து கொண்டிருக்கிறது.
விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல், நட்சத்திரங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான மோதல், நட்சத்திரங்களுக்கிடையிலான மோதல்- என்று பல வடிவங்களில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகப் பிரச்சினை இப்போது முதலாளி- தொழிலாளி பிரச்சினையாக, சந்திக்கு வந்துவிட்டது.
பிரச்சினையின் பின்னணி என்ன?
ஒரு ஆண்டில் வெளியாகும் சுமார் 150 படங்களில் 5 படங்கள் மட்டுமே போதிய லாபம் தருகின்றன. மற்ற தோல்வியடையும் படங்களுக்கு முன்பணம் கொடுத்து சூதாட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை.
”ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்களை ‘அவுட்ரைட்’ முறையில் முன்பணம் கொடுத்து வாங்க முடியாது. படத்தை வெளியிடுங்கள். ஓடுகிறதா என்று பார்ப்போம். பிறகு விலையைத் தீர்மானிப்போம்” என்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.
வேறு விதமாகச் சொன்னால் மற்ற குதிரைகளின் மீது கோடிக்கணக்கில் பணம் கட்டிச் சூதாட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. ”தயாரிப்புச் செலவைக் குறை” என்று கூறுகிறார்கள்.
தயாரிப்புச் செலவில் கதாநாயகன், நாயகி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் சுமார் 30 சதவீதம்; இயக்குநருக்கு 10 சதவீதம்; தயாரிப்பு செலவு 50 சதவீதம்; தொழிலாளிகள் அனைவரின் சம்பளம் 10 சதவீதம் – இதுதான் உத்தேசமாக தமிழ் சினிமா ஒன்றின் தயாரிப்புச் செலவு கணக்கு என்று கூறப்படுகிறது.
இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும், நட்சத்திர இயக்குநர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கங்காருவை முத்தமிடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கும், ரங்க ராட்டினம் சுற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் ‘அவுட்டோர்’ சென்று காசை அழிப்பதை நிறுத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.
இருந்தாலும் தயாரிப்புச் செலவைக் குறைக்க வேண்டும். என்ன செய்யலாம்? ரசிகர்களாகிய மக்கள் தலையில் கை வைக்கலாம். அல்லது திரையுல தொழிலாளர்கள் தலையில் கை வக்கலாம். டிக்கெட் விலையேற்றி மக்களை சமீபத்தில்தான் மொட்டையடித்திருக்கிறார்கள் என்பதால் கத்தியை இப்போது தொழிலாளர்களை நோக்கித் திருப்பியிருக்கிறார்கள்.
தொழிலாளி வேடத்தில் முதலாளிகள்!
பட முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினை இயக்குநர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலாக மாறிய மர்மம் என்ன? அதுதான் ”டி.வி.எஸ். முதலாளி ஸ்பானர் பிடித்த கதை.”
மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தின் அதிபர் பாரதிராஜாவும், கவிதாலயா அதிபர் பாலச்சந்தரும் இயக்குநர் வேடத்தில் இப்போது களத்தில் நிற்கிறார்கள். ”வறுமையின் நிறம் சிவப்பு” – ”என்னுயிர்த்தோழன்” போன்ற ‘புரட்சிப் படங்களை’ எடுத்த இயக்குநர்கள்தான் இப்போது தொழிலாளிகளுக்கு எதிராக முண்டா தட்டுகிறார்கள்.
முதலாளிகள் என்று சொல்லிக் கொண்டு களத்தில் நின்றால் தங்கள் ”சுரண்டும் உரிமை” பற்றிப் பேச வேண்டியிருக்கும். மக்கள் ஆதரவும் கிடைக்காது. எனவேதான் இயக்குநர் வேடத்துக்கு மாறிக் கொண்டு ”படைப்புரிமை, கலைஞனின் சுதந்திரம், தமிழுணர்வு” என்று வசனம் பேசுகிறார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனமாகிய ஃபெப்சி சங்கத்தை உடைப்பது என்று தாங்கள் முடிவு செய்யக் காரணம் ராமன் – அப்துல்லா படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைதான் என்று ரீல் சுற்றுகிறார்கள்.
ஆனால், சம்பவம் பற்றி பாலுமகேந்திரா இயக்குநர்கள் சங்கத்திடம் கொடுத்த புகாரை இந்தப் ‘படைப்பாளிகள்’ அப்போது யாரும் கண்டுக் கொள்ளவில்லை. படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருந்தது.
ஃபெப்சியை ‘வழிக்குக் கொண்டு வருவதற்கு’ இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கலாம் என்ற முடிவு தயாரிப்பாளர் சங்கத்தில்தான் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாரதிராஜாவிடம் ”இந்த ஸ்டோரியை டெவலப் செய்யும் பொறுப்பு” ஒப்படைக்கப்பட்டது. இயக்குநர்கள் களத்தில் இறங்கினார்கள்.
‘படைப்பாளி’களின் வாதம் என்ன?
ஃபெப்சியை உடைத்து ”தமிழ்நாடு படைப்பாளிகள் –தொழிலாளிகள் கூட்டமைப்பு” என்ற கருங்காலி சங்கத்தைத் துவக்குவதற்கு இயக்குநர்கள் (அதாவது பட முதலாளிகள் ) கூறும் காரணம் என்ன?
”இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் போன்ற படைப்பாளிகளும் –லைட்மேன், துணை நடிகர்கள், சண்டை நடிகர்கள், சமையல்காரர்கள் போன்ற படைப்பாற்றலுக்குத் தொடர்பில்லாத தொழிலாளிகளும் ஒரு சங்கத்தில் இருக்க முடியாது; தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குகிறவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லோரும் ஒரு சங்கத்தின் கீழ் இருக்க முடியாது. படைப்பாற்றலுக்கு எள்ளளவும் தொடர்பில்லாத தொழிலாளிகள் கும்பல், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. படைப்பாளி வேறு; தொழிலாளி வேறு. படைப்பாளிகள் உரிமையில் எந்தவிதத்திலும் தொழிலாளி தலையிட முடியாது”- என்று இயக்குநர்கள் சார்பாக சண்டமாருதம் செய்கிறார் பாரதிராஜா.
முகமூடியைக் கிழிக்கிறார்கள் தொழிலாளர்கள்!
இயக்குநர்களின் வாதம் வெறும் பித்தலாட்டம் என்று மறுக்கின்றனர், போராடி வரும் ஃபெப்சி தொழிலாளர்கள்.
”இயக்குநர்கள் என்ற பெயரில் கருங்காலி வேலை செய்யும் இவர்களில் பெரும்பான்மையினர் தயாரிப்பாளர்கள் அதாவது முதலாளிகள். 10 மாதங்களுக்கு முன்னால் முதல்வர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இன்று வரை இவர்கள் கையெழுத்திடவில்லை.”
”தெலுங்கு, கன்னட, மலையாள தயாரிப்பாளர்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு விட்டார்கள். சம்பள உயர்வை மறுப்பதற்குத்தான் இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். சங்கத்தை உடைக்கிறார்கள். இன்று தொழிலாளிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த இயக்குநர்கள் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலித்துத் தர, தங்கள் சுண்டுவிரலைக் கூட அசைத்ததில்லை.”
”தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஆயிரக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். பாதி படத்திற்க்கு வேலை செய்ததற்கு கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், மீதி படத்தை வேறு ஆள் வைத்து வேலை செய்கிறோம் என்கிறார்களே, இது என்ன நியாயம்?”
”இந்த திடீர்த் தமிழர்கள் தங்கள் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருப்பார்களா? அனைத்திந்திய சந்தையை கைகழுவி விடுவார்களா? அதெல்லாம் இருக்கட்டும் முதலில் தங்கள் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பார்களா?”- என்ற பதிலடி கொடுக்கிறார்கள் தொழிலாளர்கள்.
தொழிலாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர்களிடமிருந்து நாணயமான பதில் எதுவும் இல்லை. தன் முன்னிலையில் ஏற்றுக் கொண்ட ஊதிய ஒப்பந்தத்தில் 10 மாதமாகக் கையெழுத்து போடாதது பற்றியோ, பல கோடி ரூபாய் சம்பளம் பாக்கி பற்றியோ முதலாளிகளிடம் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் கட்டைப் பஞ்சாயத்து செய்திருக்கிறது, கலைஞர் அரசு.
பிற தொழில்களைப் போன்றதல்ல திரைப்படத் தொழில்!
சினிமா தொழிலாளர்களின் வேலை நிலைமைகளும், அவர்களது பிரச்சினைகளும் மிகச் சிக்கலானவை. பிற தொழில்களைப் போல ஒரு நிர்வாகம் – ஒரு முதலாளி என்பது இங்கே கிடையாது.
முப்பதாண்டுகளாகப் பணியாற்றும் தொழிலாளிகள் இங்கே உண்டு. ஆனால் முதலாளிகள் பலர் முகவரி இல்லாதவர்கள். சூது, மோசடி, வாய் ஜாலம் ஆகியவற்றையே மூலதனமாக வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கும் பல முதலாளிகள் எப்போது ஓடுவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது.
தொழிலாளிக்கு அன்றைய வேலைக்கு அன்றே சம்பளம் கிடைக்காது; வாரத்திற்கு ஒரு முறையும் கிடைக்காது; படம் முடிந்தபின் தருகிறோம் என்று உறுதி சொல்லி பாக்கி வைப்பார்கள்; பாதியில் ஓடுவார்கள்.
எனவே சம்பள உயர்வுக்கும், உரிமைக்கும் போராடும் மற்ற தொழிற்சங்கங்களைப் போல இல்லாமல், உள்ளே சம்பளத்தை வசூல் செய்யும் வேலையையே இங்கே தொழிற்சங்கம் செய்ய வேண்டியிருக்கிறது.
ஃபெப்சி என்ற திரைப்பட ஊழியர் சம்மேளனம், இயக்குநர்கள் சங்கம் முதல் சமையல் தொழிலாளர்கள் சங்கம் வரையிலான 24 சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமாகும். இயக்குநர் முதல் கடைநிலைத் தொழிலாளிவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் ஊதிய ஒப்பந்தப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளுக்கு இந்த நிர்ணயிக்கப்பட்ட கூலி மட்டுமே கிடைக்கும்.
ஆனால் இயக்குநர் போன்றோரின் சம்பளம் அவர்களது மார்க்கெட்டைப் பொருத்து கருப்பு நிறத்தில் தீர்மானிக்கப்படும். முதன் முதலில் இயக்குநராகி தன் பெயரைத் திரையில் பார்ப்பதற்க்கு தவம் கிடக்கும் காலங்களில் இவர்களுக்கு தொழிற்சங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இயக்குநராக உயர்ந்து விட்டவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் தயாரிப்பாளராக மாறி சொந்தப் படம் எடுக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் என்ற முறையில் முதலாளியாகவும் இயக்குநர் என்ற வகையில் தொழிலாளியாகவும் ஒரே நேரத்தில் இரண்டு சங்கங்களிலும் அங்கம் வகிக்கின்றனர். டி. ராஜேந்தர், பாக்கியராஜ் போன்ற ‘சகலகலா வல்லவர்களாக’ இருந்தால் சமையல்காரர் சங்கத்தைத் தவிர எல்லா சங்கத்திலும் தொழிலாளி என்ற முறையிலும் உறுப்பினராகிக் கொள்ளலாம். அதே நேரத்தில் முதலாளியாகவும் இருந்து கொள்ளலாம்.
எனவே பெப்சியை உடைப்பதற்கு காரணமான பிரச்சினை படைப்பாளி – தொழிலாளி பிரச்சினை அல்ல; முதலாளி – தொழிலாளி முரண்பாடுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் தொழிலாளிகள் தரப்பின் நியாயத்தையே புரிந்து கொள்ள முடியும்.
சென்னையில் பெப்சி நடத்திய கூட்டத்திலிருந்து – ஜனவரி 2012
பாரதிராஜாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே, மற்றும் சிகரங்களே, குன்றுகளே,
‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்ற தத்துவக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் உங்கள் சகோதர இயக்குநர்கள்.
”பல லட்சம் சம்பாதிக்கும் எனக்கும் ஒரு ஓட்டு, நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் லைட்மேனுக்கும் ஒரு ஓட்டா?” என்பதுதான் உங்கள் உண்மையான உள்ளக் குமுறல்.
இதை வெளிப்படையாகக் கேட்க வேண்டியதுதானே! ”படைப்பாளி – கலை – எதார்த்தம்” என்று எதற்க்காக குப்பையைக் கிளற வேண்டும்? நீங்கள் குப்பையைக் கிளற ஆரம்பித்து விட்டதனால் நாங்களும் மூக்கைப் பிடித்துக்கொண்டு அந்த குப்பைத் தொட்டிக்குள் குதிக்க வேண்டியிருக்கிறது.
படைப்பாளியா வியாபாரியா?
கலைத் தாய், கலைச் சேவை போன்ற 40 வருடங்களுக்கு முந்தைய வசனங்களையெல்லாம் எடுத்து விடுகிறீர்களே, எந்தத் தேதியிலிருந்து நீங்கள் படைப்பாளிகள் ஆனீர்கள்? ஆபாசக் காட்சிகளையும், கதைக்கு சம்பந்தமில்லாத காட்சிகளையும் பற்றிக் கேட்டால் இது ‘வியாபார சமரசம்’ என்று கூறும் உங்கள் சகோதரர்கள் திடீரெனப் படைப்பாளிகளாக மாறிய மாயம் என்ன?
”சோப்பு வியாபாரி சோப்பு விற்கிறான்; நான் சினிமா விற்கிறேன்” என்று ஒருமுறை சொன்னார் மணிரத்தினம். வியாபாரி என்ற சொல்லுக்குப் பன்மை- வியாபாரிகள். தனியாளாக இருந்தால் வியாபாரி;கூட்டமாய்ச் சேர்ந்தால் படைப்பாளிகளா? அதெப்படி?
‘தனியாக இருந்தால் தென்னங் குச்சி –சேர்த்துக் கட்டினால் விளக்குமாறு’ என்பது போலவா?
ரொம்பவும் தரக் குறைவாக எழுதுகிறோம் என்று வருந்த வேண்டாம்.நாங்கள் தலைகீழாய் நின்றாலும் உங்கள் படைப்பாளிகள் எடுக்கும் படங்களை விடத் தரம் தாழ்ந்து போக முடியாவே முடியாது.
ராமன் –அப்துல்லா படப்பிடிப்பில் நடந்த பிரச்சினை என்ன? வசனம் இல்லாத பாத்திரங்களில் துணை நடிகர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விதி. அதைக் கடைப்பிடிக்கச் சொல்லி கேட்பதில் என்ன தவறு?
கவர்ச்சிக்கு பம்பாய்! கலைக்கு கிராமத்து ஆள்!!
‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கிராமத்து ஆட்கள் கட்டிப் புரண்டு சண்டை போடும் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் கிராமத்து ஆட்களை, ஒரிஜினல் வயலில், ஒரிஜினலாக கட்டிப் புரண்டு சண்டைபோட வைத்து படமெடுத்ததாகவும் ‘அந்தக் காட்சியில் சண்டை நடிகர்களாகிய எங்களை ஏன் பயன்படுத்தவில்லை?’ என்று தொழிலாளர்கள் சண்டைக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறீர்கள்.
இதுபோன்று படைப்பாளிகளான இயக்குநர்கள் பல பேர், பல சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கத்தால் துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள்.
சினிமா என்கிற உன்னதமான கலையை வாழ வைப்பதற்காக எத்தனை இன்னல்களையும், அவமானங்களையும் நீங்கள் மெளனமாக சகித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற உண்மை இப்பொழுதல்லவா தெரிய வருகிறது!
அட உத்தமபுத்திரர்களே! கிளைமேக்ஸ் சண்டையில் கட்டிப் புரள ஸ்டண்டு நடிகர்களைச் சேர்த்தால் யதார்த்தம் கெட்டு விடும். ஆனால் படம் முழுவதும் கதாநாயகனுடன் கட்டிப் புரள கதாநாயகி மட்டும் பம்பாயில் இருந்து வரவேண்டுமோ? ஏன் அதற்கு அல்லி நகரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டியில் ஒரிஜினல் முத்துப்பேச்சிகள் யாரும் கிடைக்கவில்லையா?
நக்மா நாத்து நட்டதையும், குஷ்பூ கரகாட்டம் ஆடியதையும், பால்காரன் பவர் ஷூ போட்டுக்கொண்டு பால் கறப்பதையும், விவசாயி ஜீன்ஸ் அணிந்து வருவதையும், அவ்வளவு ஏன்…. அகத்தியரே ஹவாய் செருப்பு போட்டு நடந்ததையும் காசு கொடுத்துப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
தாத்தாவும் பேத்தியும் டூயட் பாடலாம்; புகைக்குப் பின்னால் ஆடும் பெண்கள் மட்டும் பருவக் குமரிகளாக இருக்க வேண்டுமோ? டோப்பா தலையர்கள் கல்லூரி மாணவனாக நடிக்கலாம்; அவனைச் சுற்றி வரும் துணை நடிகர்கள் கூட்டம் மட்டும் கட்டிளங் காளைகளாக இருக்க வேண்டுமோ?
தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு இந்தத் தொழிலையே நம்பியிருக்கும் துணை நடிகர்களும் தொழிலாளிகளும் இதைக் கேட்கக் கூடாதா? அவர்கள் கதையை மாற்றச் சொன்னார்களா, காட்சிகளை திருத்தச் சொன்னார்களா? ”இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறித்து வயிற்றில் அடிக்காதே” என்கிறார்கள். இதில் என்ன குற்றம்?
படைப்புக்காக உயிர் கொடுத்த படைப்பாளி யார்?
பாலு மகேந்திராவின் ‘மறுபடியும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. பாடல் காட்சியை ஆபாச நடனமாக மாற்ற முடியாது என்று மறுத்து விநியோகஸ்தர்களுடன் கட்டிப் புரளுவார் இயக்குநராக நடிக்கும் நிழல்கள் ரவி.
பாரதிராஜா அவர்களே, உங்கள் படைப்பாளிகள் கூட்டமைப்பில் இப்படி படைப்புக்காகப் போராடி உயிர் நீத்த இயக்குநர்கள் எத்தனை பேர்? தியாகிகள் பட்டியலைக் கொஞ்சம் வெளியிடுவீர்களா?
நாங்கள் வெளியிடுகிறோம். உங்கள் மயிர்க் கூச்செறியும்,பயங்கரமான சண்டைக் காட்சிகளில் அடிபட்டு எலும்பு நொறுங்கிய சண்டை நடிகர்கள், கேட்பாரின்றி இறந்துபோன சண்டை நடிகர்கள், எலக்ட்ரிசியன்கள், லைட்மேன்கள் போன்ற சாதாரண தொழிலாளிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம்.
உங்கள் பணப்பெட்டியை நிரப்புவதற்காகச் சவப்பெட்டிக்குள் போனவர்கள் ”படைப்புத் தொழிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதவர்களா?”
பணத்துக்குத் தலைவணங்கும் படைப்பாளிகள்!
சன் டி.வி.யில் பாலு மகேந்திரா கொடுத்த ‘உருக்கமான’ பேட்டியை நீங்கள் பார்க்கத் தவறியிருக்க மாட்டீர்கள். தான் எடுத்த படங்களில் இரண்டைத் தவிர மற்றவைகளிலெல்லாம் பல சமரசங்கள் செய்து கொண்டதை அவர் நாணயமாக ஒப்புக் கொண்டார். யாருடன் சமரசம் செய்து கொண்டார்? ஃபெப்சியுடனா, அல்லது தயாரிப்பாளருடனா?
படைப்பாளியின் உரிமையில் தொழிலாளி தலையிடுவதை எதிர்த்து இப்போது போராடுகிறீர்களே, தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் தலையிட்டதை எதிர்த்து எப்போதாவது நீங்கள் போராடியதுண்டா?
பணத்துக்குத் தலை வணங்குவதில் உங்களுக்குக் கூச்சமில்லை; உழைப்புக்குத் தலை வணங்குவதுதான் அவமானமாக இருக்கிறது போலும்! அடடா… எப்பேர்ப்பட்ட சுயமரியாதை!
காசுக்காகத் தன்னை விற்றுக் கொள்ளும் பெண்ணை ‘விபச்சாரி’ என்று சமூகம் அழைக்கிறது. அதுவே, ஆணாய் இருந்தால் அவனை என்ன சொல்லி அழைப்பது என்று கேட்டார் பெரியார். ‘படைப்பாளி’களே பதில் சொல்லுங்கள்!
தொப்புளில் ஆம்லெட் போடச் சொன்னவன் தொழிலாளியா?
தமிழ் ரசிகர்களுக்கு கிராமங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, தமிழ்க் கதாநாயகிகளுக்கு டூ பீஸ் நீச்சல் உடையை அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான் என்கிறார்கள். ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கு நீச்சல் உடை தவிர வேறெதுவும் தைத்துத் தர மாட்டோம் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார், தையற் கலைஞர்களா?
கதாநாயகிகளின் தொப்புளில் ஆம்லெட் போடுவது போன்ற கற்பனை செய்ய முடியாத காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களே, உங்கள் படைப்பாளி சகோதரர்கள், அத்தகைய காட்சிகளை திணித்தவர்கள் யார், சமையல் கலைஞர்களா?
என்ன இருந்தாலும் உங்கள் துணிச்சலைக் கண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கொல்லன் தெருவில் ஊசி விற்பதென்றால் சும்மாவா?
ஹீரோவுக்குத் தகுந்த மாதிரி கதை தயார் செய்து, கதாநாயகிக்கும், பிற நடிகர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி கதை சொல்லி, படப்பிடிப்பின் போது ரிலீசாகும் வேறு படங்களைப் பார்த்து அதற்கேற்ப கதையைத் திருத்தி, கடைசியில் விநியோகஸ்தரின் ஆசைக்கேற்ப சில காட்சிகளை சேர்த்து / நீக்கி ஒருவழியாக நீங்கள் தயார் செய்யும் படத்தைப் ‘படைப்பு’ என்கிறீர்கள்.
படைப்பாளியா, அழிப்பாளியா?
சன் டிவியில் உங்கள் பேட்டியைப் பார்த்தோம். சத்தமே வராமல் ஏதோ கையைக் காட்டிக் கொண்டிருந்தீர்கள். சரி. ஊமை நியூஸ் போலிருக்கிறது என்று நினைத்தோம். ”விஷூவலாகவே திங்க் பண்ணிப் பழகியவர் பாரதிராஜா” என்ற உண்மை அப்புறம்தான் எங்கள் மண்டையில் உறைத்தது.
சிந்திப்பதை வார்த்தைகளில் சொல்வதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே, அதைப் புரிந்து கொண்டு அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதென்ன அத்தனை சுலபமா?
‘சந்தையில் ஹீரோ அறிமுகம்’ என்று ஒரு சீட்டில் உங்கள் இயக்குநர்கள் எழுதிக் கொடுத்தவுடனே டீக்கடை, மளிகைக் கடை ஜவுளிக் கடை, கசாப்புக் கடை, பழ வண்டி, ஐஸ் வண்டி முதல் வில்லன் விழுந்து உடைப்பதற்க்குப் பூசணிக்காய், பானை, கட்டைவண்டி, சர்பத் கடை அனைத்தையும் தயார் செய்து வைப்பவர்களும், எதன்மீது எப்படி உருண்டு விழுவது என்று விழுந்து பார்த்து ரெடியாக இருக்கும் சண்டை நடிகர்களும், லைட்மேன்களும் இன்ன பிற தொழிலாளிகளும் உங்கள் படைப்புக்கு எள்ளளவும் சம்பந்தமில்லாதவர்கள்! நீங்கள்தான் படைப்பாளிகள்!
ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் ‘அழிப்பது எப்படி’ என்பதை நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு டிஸ்கஷன் நடத்தும் இயக்குநர்கள் படைப்பாளிகள் என்று சொன்னால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. பூவாலே சாலை போட்டு அதன்மீது நடந்து சென்ற புரட்சித் தலைவி, இத்தகைய வக்கிரங்களை எல்லாம் தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதிலிருந்து கற்றுக் கொண்டிருக்க முடியும்?
உரிமைக் குரலெல்லாம் உழைப்பாளியை எதிர்த்துத்தான்!
படைப்பு உரிமைக்காக சங்கம் கட்டிக் குரல் கொடுக்கும் படைப்பாளிகளே! அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, யோக்கியமான திரைப்படங்கள் பலவற்றில் ஒன்றையாவது ஆதரித்து உங்களில் ஒரு படைப்பாளியாவது குரல் கொடுத்ததுண்டா?
தொழிலாளியின் வயிற்றில் அடிப்பதற்காக உரிமைக் குரல் எழுப்புகிறீர்களே, உங்கள் படைப்பாளி மணிரத்தினம் ‘பம்பாய்’ படத்திற்காக தாக்கரேயின் காலில் விழுந்தாரே, அப்பொழுது உங்களுக்கெல்லாம் தொண்டை அடைத்துக் கொண்டதா?
எச்சரிக்கை தமிழர்கள் வருகிறார்கள்!
உங்கள் கருங்காலித் தனத்திற்குத் தமிழ் முகமூடி வேறு. முப்பந்தைந்து ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் மென்று துப்பிய தமிழை இப்பொழுது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். படத்தின் பெயர் ஆங்கிலத்தில், கதாநாயகியோ இந்தி, பாட்டு கதம்ப மொழி, பணம் கொடுப்பவன் சேட்டு – நீங்கள் தமிழ்ப் படைப்பாளிகள்!
ஹெலிகாப்டரிலிருந்து தேசியக் கொடியை பறக்க விடுவதற்காகவே சிவப்பு, வெள்ளை, பச்சையில் சேலை கட்டி மூன்று தமிழச்சிகளை உட்கார வைத்து அவர்களது சேலையை உருவி பறக்க விட்ட உங்கள் இயக்குநர்கள் தமிழ் படைப்பாளிகள்!
சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், கவுண்டர் பொண்ணா கொக்கா, தேவர் மகன், பசும்பொன், மண்வாசனை…… என்று படமெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகச் சாதி வெறியைத் தூண்டி விட்டவர்களும், ‘வானமே எல்லை’ படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரலெழுப்பிய பாலசந்தரும், குஞ்சுமோனும், ஆர்.பி.சவுத்தியும்,மார்வாடிகளும், சேட்டுகளும்…நீங்கள் எல்லோரும் ‘தமிழ்’ படைப்பாளிகள்!
சாதி, மதம், இனம் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றுபட்டிருக்கும் நீங்கள், தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையைக் கண்டு வயிறெரிகிறீர்கள். சினிமா சென்டிமெண்டால் அடிக்கப் பார்க்கிறீர்கள்.
”பத்து வருஷமா எங்கிட்ட வேல பார்த்த பையனே என்ன மோசமா பேசிட்டான்” என்று கண் கலங்குகிறீர்கள்.
”தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திற்கு நாங்கள் பணம் கட்டுகிறோம்” என்கிறார்கள் சில இயக்குநர்கள். பத்து வருஷமென்ன, முப்பது வருடமாக இந்தத் துறையில் குப்பை கொட்டிவரும் தொழிலாளிகள் இன்னும் தொழிலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.”இதுதான் ஸ்டூடியோ” என்று உங்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டிய தொழிலாளிகள் இன்னும் சைக்கிளில்தான் வருகிறார்கள். கார்,பங்களா, செல்ஃபோன் போன்ற வசதிகள் அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை.
வெற்றிப் படமோ, வெள்ளி விழாவோ அவர்களுக்கு நீங்கள் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட கூலிதான். இன்று கண்ணீர் வடிப்பவர்கள் அன்று லாபத்தைப் பகிர்ந்து கொண்டீர்களா என்ன? மாதத்தில் பாதி நாள் வேலை இல்லாமல் கிடக்கும் தொழிலாளி எப்படி சாப்பிடுவான் என்பதை அப்பொழுது சிந்தித்திருக்கிறீர்களா? இப்போது சிந்திப்பதில் வியப்பில்லை.
போராட்டம் நடக்கும் பொழுதுதான் தொழிலாளிகளின் மீது முதலாளிகளுக்குக் கரிசனம் அதிகமாகும். நீங்கள் வள்ளல்களாக இருக்க விரும்புகிறீர்கள்; ஆனால் தொழிலாளிகள் அடிமைகளாக நீடிக்கத் தயாராக இல்லையே- என்ன செய்வது?
வாலாட்டுகின்றன பத்திரிகைகள்!
ஆனால் பத்திரிகைகள் உங்களுக்குத்தான் வாலாட்டுகின்றன. மனோரமா திரையரங்கில் தாக்கப்பட்ட தொழிலாளர்களை யாரும் படமெடுக்கவில்லை. மறியல் செய்த உங்களைப் படமெடுக்கிறார்கள். பேட்டி எடுக்கிறார்கள். ”பாத்திரம் கழுவுகிறவனுக்கு இயக்குநர் அடிமையா” என்று கொதிக்கிறார்கள்.
”படப்பிடிப்பு தொடங்கியது” என்று கொட்டை எழுத்தில் போடுகிறார்கள். அடுத்த நாள் தொடர்ந்ததா என்று போடுவதில்லை. 30,000 பேர் படைப்பாளிகள் சங்கத்தில் சேர்ந்ததாகப் போடுகிறார்கள். சேர்ந்தவர்கள் தொழிலாளிகளா, ரசிகர்களா என்று போடுவதில்லை.
சினிமா முதலாளிகளும், பத்திரிகை முதலாளிகளும் தொழில் கூட்டாளிகளல்லவா? நட்சத்திர ஓட்டல்களில் தின்றதற்கும் குடித்ததற்கும் வாங்கின ‘கவர்’களுக்கும் விசுவாசமாக ‘கவரேஜ் கொடுக்க வேண்டாமா, அதுதான் வாலாட்டுகிறார்கள்.
அரசாங்கமும் உங்கள் பக்கம். இதுவும்கூடத் தொழில் கூட்டுதான். அரசியல்வாதிகள் எல்லாம் அயோக்கியர்கள் என்று படமெடுப்பீர்கள். ஊரறிந்த அயோக்கியனின் காலில் விழுவீர்கள்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழ் மக்கள் சூறையாடப்பட்டபோது, வேட்டையாடப்பட்டபோது, பத்திரிகைகள் தாக்கப்பட்டபோது, ‘தமிழ்’ படைப்பாளிகளே நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பூனையைப் போல ஜெயலலிதாவின் காலடியில் சுருண்டு கிடந்தீர்கள்.
இப்போது கலைஞர் ஆட்சி. எந்த ஆட்சியானாலும் உங்கள் ஆட்சிதான். கலைஞர் பகிரங்கமாக உங்கள் பக்கம் நிற்கிறார். ”காமம் கலையாகுமென்றால் களவும்கூடக் கலைதான்” என்று மந்திரிகுமாரியில் வசனம் எழுதியவர் உங்கள் பக்கம் நிற்பதும் பொருத்தம்தான்.
படைப்பாளிகள் கூட்டமைப்புக்கு போலீசு காவல், படைப்பாளிகள் வீட்டுக்கு போலீசு காவல், படப்பிடிப்புக்கு போலீசு காவல், காமராவை எடுத்துச் செல்ல போலீசு காவல்…. அடேயப்பா! போலீஸ்காரர்களுக்கு மட்டும் லைட் மேன் வேலை பார்க்கத் தெரிந்திருந்தால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான்.
‘கம்யூனிஸ்டு’களின் ஆதரவு பெற்ற பாரதிராஜா – தொழிலாளியே!
வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளும்கூட உங்கள் பக்கம்தான். ”நாங்கள் முதலாளிகளாக இருந்தால் கம்யூனிஸ்டுகள் எங்களை ஆதரிப்பார்களா? என்று ஒரு கேள்வியை தினமணிக் கதிர் பேட்டியில் எழுப்பியிருக்கிறீர்கள்.
என்ன அற்புதமான கேள்வி! தொழிலாளிகளை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றுதான் இதுவரை நாங்கள் அறிந்திருக்கிறோம். கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்கப்படுபவர்கள்தான் தொழிலாளிகள் என்று புதியதொரு கோணத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.
”எங்கள் சங்கம் வேலை நிறுத்தமே செய்யாது” என்று அடுத்த வரியிலேயே கொள்கைப் பிரகடனம் செய்து உங்களை ஆதரிக்கும் போலி கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை நீங்களே கிழித்து விட்டீர்கள்.
விற்பதற்கு உழைப்பைத் தவிர வேறு உடைமையில்லாத தொழிலாளி, தன் உழைப்பை விற்க மறுப்பதற்குப் பெயர்தான் வேலை நிறுத்தம். உங்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்பதும் உண்மைதான். முதலாளிகள் கதவடைப்புதானே செய்ய முடியும்!
பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சுக் கிருமிகள்!
அரசும், போலீசும், பத்திரிகைகளும், கட்சிகளும் உங்கள் பக்கம் என்று இறுமாந்து இருக்கிறீர்கள். இவர்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளைத் தொழிலாளர்கள் உதிர்த்து வருகிறார்கள் என்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மக்கள் உங்கள் பக்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை. மனோரமா திரையரங்கில் நீங்கள் அடிபட்டு விட்டது போல பொய்ச் செய்தி பரப்பினீர்களே, அதைக்கேட்டு மக்கள் யாரும் மனம் பதறவில்லை; மாறாக மகிழ்ச்சியடைந்தார்கள்.
எவ்வளவுதான் சினிமா போதையில் நீங்கள் மக்களை ஆழ்த்தியிருந்தாலும் லட்சாதிபதிகளுக்காகவும்,கோடீசுவரர்களுக்காகவும் கண்ணீர் விடும் அளவுக்குத் தமிழகம் இன்னும் தாழ்ந்து போகவில்லை; அதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.
அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தைச் சீர்குலைத்திருக்கிறீர்கள். படைப்பாளிகள் என்ற முறையில் நீங்கள் படைத்தவை ஏதாவது உண்டென்றால் அவை பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சுக் கிருமிகள்தான். தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலை மாசுபடுத்தியதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
டெல்லியில் ஆலைகள் மூடப்பட்டதால் 3 லட்சம் தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். கோவையில் விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள். ஆனால் பண்பாட்டை மாசுபடுத்தும் உங்கள் கனவுத் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் தடை விதித்திருக்கிறார்கள்.
பண்பாட்டை மாசுபடுத்தும் நச்சுக் கிருமிகளுக்கெதிராக நாங்கள் வெளியிலிருந்து போராடுகிறோம். ‘உள்ளிருந்தே போராடுங்கள்’ என்று தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறோம்.
”படைப்பாளிகளின் விசயத்தில் தொழிலாளி தலையிடவே கூடாது” என்று நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். ”மேலும் தலையிடுங்கள்” என்று நாங்கள் கோருகிறோம்.
”உங்கள் பிழைப்புக்காக மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலனுக்காகவும் தலையிடுங்கள்” என்கிறோம்.
”ஆபாசக் காட்சிகளுக்குப் பணியாற்ற மாட்டோம்;. ஆங்கிலப் பெயர் வைத்த படங்களுக்குப் பணியாற்றமாட்டோம்; சாதி வெறியைத் தூண்டும் படங்களுக்குப் பணியாற்ற மாட்டோம்” என்று தொழிலாளர்கள் குரல்கொடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
பேசட்டும். இதுவரை வசனம் தரப்படாதவர்களெல்லாம் பேசட்டும். தொழிலாளர்கள் பேசட்டும். லைட்மேன்களும், ஓட்டுனர்களும், தையல்காரர்களும், சண்டை நடிகர்களும், துணை நடிகர்களும் இன்ன பிறரும் பேசட்டும்.
”எங்கள் படைப்புரிமையில் தொழிலாளர்கள் தலையிடுகிறார்கள்” என்று நீங்கள் கூவுவீர்கள். தெருவுக்கு வருவீர்கள்.
அப்போது மந்திரி வந்தாலும் வராவிட்டாலும் மக்கள் வருவார்கள்.
படைப்பு எது, படைப்பாளிகள் யார், படைப்பாளிகளின் உரிமை என்ன என்ற கேள்விகளுக்கான விடை வீதியில் அளிக்கப்படும்.
ஐஐடியின் கலாச்சாரப் பெருவிழாவான ’சாரங்க்’ (SAARANG) – கின் காதைச் செவிடாக்கும் ஓசைகளுக்கிடையே இந்த கட்டுரையை எழுதுகிறேன். பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்து பத்தாயிரக்கணக்கில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருத்த ஆராவாரமும் சீழ்க்கை ஒலிகளும், மின்னணுக் கருவிகளிலிருந்து செயற்கையான முறையில் கிளம்பும் இசை வன்முறையாய் காதையும், மனதையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் இடிபோல் இறங்கும் ட்ரம்ஸ் பீட்டின் இசைக்கேற்ப தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் இளைஞர்களும். ‘தன்னிலை மறத்தல்’ – இதுதான் சாரங்கின் இலக்கு.
1950 களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளாக சென்னையின் இருபெரும் நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன. ஒன்று ஐ.சி.எப், இன்னொன்று ஐ.ஐ.டி. முதலாவது நிறுவனம் தொழிலாளி வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், பார்ப்பனியக் கோட்டையான ஐ.ஐ.டி சென்னையோ கடந்த 20 ஆண்டுக்காலத்தில் படிப்படியாக நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்துவிட்டு ஒப்பந்த கூலிகளைக் கொண்டு நிரப்புவதோடு மட்டுமன்றி, அந்த அமைப்புசாரா தொழிலாளர்களை அடிமாடு போல நடத்துகிறது. கல்வி தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக இருப்பதோடு மாணவர்களையும் மிக மோசமாக ஒடுக்கிவருகிறது. ஐஐடி மாணவர்களுக்கான கேண்டின் வசதி, ஹாஸ்டல் வசதிகள் பற்றி கேட்டால் ‘ஐஐடி ஒன்றும் தர்மாஸ்ரமமல்ல’ என்று சொல்லும் நிர்வாகம்தான் பல கோடிகளில் இக்கேளிக்கைச் சீரழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
ஐஐடி சென்னை வருடம் தோறும் ஜனவரி மாதத்தில் நடத்தும் சாரங்க் உயர் கல்விநிறுவனங்களில் நடத்தப்படும் கலாச்சார திருவிழாக்களிலே பெயர்போனது. நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஐஐடி மாணவர்கள் மட்டுமன்றி தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்கள் உட்பட சுமார் 50,000 பேர் கலந்து கொள்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கான கலாச்சார நிகழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டாலும், இது இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களை ஒன்றிணைக்கும் தளமாகவும் உள்ளது. முழுமையாகவே மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் உண்மையில் இரண்டுமே இருப்பதில்லை. மேற்கத்திய சீரழிவு கலாச்சாரக் கழிவுகளையும், பார்ப்பனியக் கலைகளான பரத நாட்டியம், குச்சுப்புடி, கர்நாடக இசை வழியாக இந்து புராணக் கட்டுக்கதைகளும்தான் அரங்கேறும்.
இந்த ஆண்டும் வழக்கம் போல ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிவரைக்கும் நடந்திருக்கிறது இவ்விழா. சாரங்க் மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்படும் இலாபநோக்கற்ற நிகழ்ச்சி என்று வெளியே கூறப்பட்டாலும், இந்த நான்கு நாட்களாக நடத்தப்படும் ‘ஷோ’க்களுக்கான நுழைவுக்கட்டணம், அதன் புரவலர்களான விளம்பரதாரர்கள், பங்கேற்கும் கலைகுழுக்கள் எனக் கோடிகளில் புரளும் இந்த நிகழ்ச்சியை பற்றி விரிவாகப் பார்த்தால் தான் இதன் பின்னாலிருக்கும் சமூகப் பொருளாதார இலாப நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இந் நிகழ்ச்சியின் முதல்நாள் கிளசிக்கல் நைட். அதில் சசாங்க் சுப்பிரமணியத்தின் புல்லாங்குழலுடன், மலேசியா நடனக் குழுவின் ஒடீசியோடு ஆரம்பித்தது சாரங்க். இந்து புராண கட்டுக்கதையான காளீயமர்த்தனத்தையும், மீரா கிருஷ்ணனின் மேல்வைத்த ஒருதலைக் காதலையும் பல்வேறு இசை வடிவங்களில் மேடையேற்றிய பின்னர் மோகினி வேடமிட்டு அசுரர்களிடமிருந்து அமுதத்தை ஆட்டைய போட்ட விஷ்ணுவிடம் மோகம் கொண்ட சிவனின் லீலைகளும் (ஹரி-ஹர லீலை), தாந்திரிகக் கதைகளில் வரும் யோகினியின் சுடலை நடனமும் ஒடீசி நடன வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் கொறியோ நைட், போப்புலர் நைட் (தேவி சிறீ பிரசாத் மற்றும் விஸால் அன் சேகர்) மற்றும் ரோக் ஷோ (வித்ஜர்தா, சுவீடன்) என்று மேற்கத்திய மற்றும் இந்திய மேல்தட்டு வர்க்க கலைகளின் கூட்டுக்கலவையாக நடைபெற உள்ளது.
இந்த ஆடம்பர கவர்ச்சிகரமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்டெர்நெட்டிலிருந்து சென்னை நகரத்தின் பீட்சா கார்னர்கள் வரைக்கும் கூவிக்கூவி விற்கப்படுகிறது. இப்படி கூவிக்கூவி விற்கிறார்களே ஒரு நிகழ்ச்சிக்குப் போய் பார்க்கலாமென்றால், கட்டணம் 200 ரூபாயில் ஆரம்பித்து 1,500 ரூபாய் வரைக்கும் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என்று அவற்றின் இன்றைய சந்தை நிலவரம் போன்றே விலைவைக்கப்பட்டுள்ளது. சராசரியாக 30,000 பேர் பார்க்கும் இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக்கட்டணம் தலைக்கு சராசரி 400 ரூபாய் போட்டாலும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணத்திலிருந்து மட்டும் வருகிறது.
‘‘பெரிய பெரிய குரூப்பெல்லாம் வறாய்ங்க. ஐய்யோ பாவம் மாணவர்களால இலாபநோக்கமே இல்லாம நடத்தப்படுதே. அதனால தான் இம்புட்டு பைசா போலருக்குண்ணு’’ என்ன மாதிரியே நீங்களும் நெனச்சீங்கண்ணா எமாந்திட்டீங்க. சாரங்க் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதன் புரவலர்களான விளம்பரதாரர்கள் யாரென்றால், நோக்கியா, டாடாவின் குரோமா, ரிலையன்ஸ், பீட்சா கார்னர், பேஸ்புக், லாஜிடெக், மக் டொனால்ட்ஸ், டொயோடா, ஹிந்து, கொக்கோ கோலா போன்ற ‘சின்ன’ கம்பெனிகளிலிருந்து, பிரான்ஸ் எம்பசியின் அல்லயன்ஸ் பிராஞ்சைஸ் , யுஎஸ் கண்சுலேட், இஸ்ரேல் எம்பசி, கொதெ இன்ஸ்டிடுட்/மாக்ஸ்முல்லர் பவன் போன்ற ஏகாதிபத்திய புரவலர்கள் என்று பட்டியல் விரிகிறது.
இந்த கார்பரேட்-ஏகாதிபத்தியப் புரவலர்கள் ஆதாயமில்லாமல் இந்நிகழ்ச்சிக்கு முதலீடு செய்வதில்லை. ஏற்கனவே புதிய தாராளவாதக் கொள்கைகளின் பகுதியாக உயர்கல்வித் துறை தனியார்மயமாக்கப்பட்டு இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இந்திய உயர்கல்வித் துறை கொண்டவரப் பட்டிருக்கிறது. இச் சூழலில் ஐஐடிக்களை தனியார்மயமாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதைப் பற்றி சற்றும் பிரக்ஞையற்ற ஐஐடி மாணவர்களும் பேராசிரியர்களும் வழக்கம்போல ‘ஊழல்’தான் இந்த நாட்டின் முதன்மையான பிரச்சனையென்று அண்ணா ஹசாரே பின்னால் ஆட்டுமந்தைகள் போல் மெழுகுவர்த்தியுடன் பேரணி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தன்னுடன் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்யும் போது கூட எதிர்வினையாற்றும் திராணியற்று விட்டேத்தியாக இருக்கும் அளவிற்கு இம்மாணவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த மனநிலைக்கு சாரங்க் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் ஆற்றும் பங்கும் முதன்மையானது.
படம் – இந்து நாளிதழ்
அதற்கு சாரங்கின் வரலாற்றை கொஞ்சம் புரட்டுவோம். 1960 களில் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து தொற்றுநோய் போல் கீழைநாடுகளிலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஹிப்பி கலாச்சாரம் கீழைநாட்டுப் பிற்போக்கு தத்துவங்களையும் உள்வாங்கி புது வகை உதிரிக் கலாச்சாரமாகப் பரிணமித்த போதே 1973-74 லிருந்து ஆண்டுதோறும் ஐஐடி சென்னையும் ‘மார்திக்ரா’ (Mardi Gras) என்ற பெயரில் இந்த களியாட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமயக் கொள்கைகள் நாட்டை சூறையாட ஆரம்பித்ததும் இந்த களியாட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்படித்தான் 1996-ல் மார்திக்ரா என்ற அராஜகவாதிகளின் களியாட்டம் சாரங்க் என்று பெயர் மாற்றப்பட்டது. 90களில் ஆரம்பித்த இந்த இரண்டாம் தலைமுறை ஹிப்பிகளின் (New Ager) மிகப்பெரிய சங்கமமாக தென் இந்தியாவில் சாரங்க் விளங்குகிறது. இதற்கு இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்து Students Activity center (SAC) முன்புறம் தலைவிரிக்கோலத்தில் கறுப்புடை அணிந்து நாள்முழுதும் ஆடி, அண்டம் கிழியக் கத்தும் ட்ரூப்புகளைப் பார்த்தால் புரியும்.
நாட்டில் 90% உள்ள உழைக்கும் பெரும்பான்மை மக்களின் கலாசாரமும் பொருளாதார நிலைமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 10% நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கங்களதும் பார்ப்பனர்களதும் சமூகப் பொருளாதார விழுமியங்கள் ஒட்டுமொத்த சமூகத்தினதுமாக சித்தரிப்பதில் இம்மாதிரி கலாச்சார நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானது. மேற்கத்திய களிவெறி இசையுடன் கூட்டணி சேர்ந்துள்ள பார்ப்பனிய இசையானது, ஏகாதிபத்தியத்துடன் கள்ள உறவு வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் ஐத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. சாரங்க் மட்டுமன்றி ஐஐடி வளாகத்துக்குள் இயங்கும் விவேகானந்த வாசகர் வட்டம், இஸ்கான் என்ற ஹிப்பி கும்பல், மியூசிக் கிளப், ஆத்ம ஞான யோகா போன்றவை மூலமும், Extra Mural Lectures வாயிலாக ராஜிவ் மல்கோத்ரா (உடையும் இந்தியா ஆசிரியர்), வாழும் கலையின் (Art of Living) ஐ.என்.கே. போன்றவர்களை உரையாற்ற அழைப்பதன் மூலமும் இந்துத்துவத்துவதை கட்டமைக்கும் வேலையிலும் அதனூடாக பார்ப்பனிய கலாச்சாரத்திற்கு முட்டுக்கொடுக்கும் வேலையிலும் ஐஐடி பார்ப்பனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஐஐடி உணவு விடுதிகள் இன்றும் தீட்டுப்படாமல் சைவ உணவகங்களாக இருப்பதும், பெரும்பாலான மாணவர்கள் அசைவப் பிரியர்களாக இருந்தும் இந்தியாவின் தேசிய உணவாக சைவத்தை சித்தரிப்பதும் உதாரணம்.
உயர்கல்வி தனியார்மயமாக்கலின் முதல் இலக்கான ஐஐடி கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் தங்கள் நியாயமான உரிமைகளான உணவு விடுதிப் பிரச்சனைக்கோ அல்லது வாத்தியார்களின் தனிப்பட்ட பாழிவாங்குதலுக்கு எதிராகவோ முணுமுணுத்தால் கூட அதை தன் இரும்புக் கரங்களான பேராசிரியர்களை வைத்து ஒடுக்கிவருகிறது. இதன் கடந்தகால ரத்தசாட்சிகளான நிதின் குமார் மற்றும், அனூப்பின் தற்கொலைகள் இந்த அமைப்பின் கோரமுகத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியும், இந்த அமைப்பினை எதிர்த்து கேள்வி கேட்க்கும் உணர்வுகூட இல்லாததால் இம்மாணவர்களின் காதுகளில் ஒலிக்கும் சகமாணவனின் மரண ஓலம்கூட இன்று சாரங்கின் காக்கஃபோனி இசையின் இரைச்சலில் கரைந்து போயுள்ளது.
ஏற்கனவே இந்த கல்விமுறையால் சுயசிந்தனையற்றவர்களாக ஆக்கப்பட்ட மாணவனை கலாச்சார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தப்படும் சாரங்க் போன்றவை மூலம் எதிர்காலத்தில் பொழுதுபோக்கு சந்தையின் வரைமுறையற்ற நுகர்வோனாவதற்கு தயாரிக்கப்படுகிறான். ஒரு டாலருக்கும் குறைவாக தினக்கூலியாகப் பெறும் 65% மக்கள் வாழும் நாட்டில் கூத்தாடுவதெற்கென்றே பல கோடிகள் செலவு செய்யும் கேவலம் தான் இங்கே நடைபெறுகிறது. இத்தகைய கலாச்சாரத் தாக்குதல்களால் சீரழிவுக்காளான மாணவன் கல்லூரியை விட்டு வெளியேறும் போது சமூகப் பிரக்ஞையற்றவனாக மாறுவதோடு ஏகாதிபத்தியத்தின் அடியாளாகவும் கொ.ப.செ.யாகவும் மாறுகிறான். ஒரு பக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பறித்து அடிமைகளாக்குவதுடன் இன்னொரு பக்கம் சாரங்க் போன்ற கலாச்சார சீரழிவுகள் மூலம் சுயசிந்தனையற்ற யுப்பிகளை உருவாக்குவது தான் சாரங்கின் புரவலர்களான கார்பரேட், ஏகாதிபத்திய தூதரகங்கள் மற்றும் திரைமறைவில் செயல்படும் சாரங்கின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க மூளைகளின் இலக்கு. சாரங்க் நிகழ்வு நடைபெற்ற பகுதியில் புரவலர்களின் விளம்பர மற்றும் விற்பனை அங்காடிகளில் ஒன்றாக டூயுரக்ஸ் ஆணுறை நிறுவனமும் இருந்தது சூசகமாக இதைத்தான் சுட்டுகிறது – F*CK their minds… but Play it Safe!
1. கர்நாடாகாவில் 71,605 தீவிரமாக ஊட்டச் சத்துக் குறைபாடுடைய குழந்தைகளும், 11 லட்சத்து 29 ஆயிரத்து 947 ஊட்டச் சத்து குறைபாடுடைய குழந்தைகளும் இருக்கின்றனர். 2008-09-ல் 1070 சாவுகளும், 2009-10-ல் 1,144 சாவுகளும், 2010-11-ல் ஆகஸ்டு வரை 431 சாவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஜப்பூரில் 8983 தீவிரமாக ஊட்டக் குறைவு பீடித்த குழந்தைகளும் ராய்ச்சூரில் 4531 குழந்தைகளும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராய்ச்சூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், இதற்கான காரணங்களை ஆராய்ந்து, ‘உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது, இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது, படிப்பறிவின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவைகள்தான் இவற்றுக்கு காரணம்’ என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.
ராய்ச்சூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அப்பனடோடி கிராமத்தைச் சேர்ந்த மகாதேவிக்கு வயது மூன்று. அந்த ஊர் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட பிசிபேளாபாத்தை சாப்பிட்ட அன்று இரவு முழுவதும் வயிற்று வலியால் அவதிப்பட்டாள்.
‘படிப்பறிவு இல்லாததால் குழந்தைக்கு என்ன உணவு தேவை’ என்று தெரியாமல் இல்லை அவளது அம்மா நரசம்மாவுக்கு; சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 60 ரூபாய் தினசரி வருமானத்தில் 5 குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சோற்றுடன் மிளகாய்ப் பொடி கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.
அங்கன்வாடியில் இணைக்கப்பட்டுள்ள 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அன்றன்று சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டல். ஆனால், கர்நாடகாவின் 60,000 அங்கன்வாடியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டி பிரைட்கிராம் இண்டஸ்ட்ரீ என்ற தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளில் வரும் பிசிபேளாபாத், கேசரி பாத், நியூட்ரியா கார்ன் பாப் மற்றும் சத்து மாவு குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அவை குழந்தைகள் சாப்பிடும் தரத்தில் இல்லாததோடு புதிதாக சமைத்த உணவைப் போல தேவையான சத்துகளையும் தருவதில்லை.
இப்படி மக்களின் மீது மோசடியை அவிழ்த்து விட்டுக் கொண்டே அந்த மக்களின் மீதே பழி போடுவது ஒரு ‘மக்கள் நல’ அரசின் கீழ்தான் நடைபெற முடியும். மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு வறுமையில் தள்ளி, அரசு நலத் திட்டங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க செயல்படும் இந்த பாவிகள் அந்த மக்களின் மீதே பழி போடுகிறார்கள்.
கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காததிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது. இதற்கு எந்த ஒரு மூட நம்பிக்கையும் காரணம் இல்லை. ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டால்தான் சரியான ஊட்டச்சத்து கிடைத்து ரத்த சோகை இன்றி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்’ என்பதை தெரியாத தாய்மார்கள் யாருமே இல்லை. ஆனால், இந்தியாவின் ஒரே செயல்படும் தங்கச் சுரங்கம் இயங்கும் ராய்ச்சூரில் உழைக்கும் மக்களுக்கு அதற்கெல்லாம் ‘வசதி’ இல்லை, என்ன செய்ய?
குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டதை ஆராய நியமிக்கப்பட்ட 15 உறுப்பினர் குழு குழந்தைகளுக்கு முட்டையும் பாலும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதுவும் மக்களின் மூட நம்பிக்கைகளால் அல்ல, இந்துமதவெறியர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
ராய்ச்சூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊட்டச் சத்து நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஐந்தரை கிலோ எடை மட்டும் இருந்த 18 மாத குழந்தை ஸ்ரீகாந்த் ஊட்டச் சத்து நிவாரண மையத்துக்குக் கொண்டு வரப்பட்ட பத்தே நாட்களில் அவனது எடை 1 கிலோ அதிகரித்தது. வாழைப்பழங்கள், பால், சோறு, பருப்பு, காய்கறிகள், சப்பாத்திகள், ராகி, அவித்த முட்டை போன்றவை தினமும் சாப்பிடுவதன் மூலம்தான் அது நடந்ததே தவிர, ஆய்வுக் குழு கண்டறிந்தது போல அறியாமையை அகற்றி விட்டதால் அல்ல.
_____________________________
2. நைட்ரஸ் ஆக்சைட் என்ற மயக்க வாயு இல்லாததால் அவசரமில்லாத (elective surgery) அறுவை சிகிச்சைகளை தள்ளிப் போட்டிருக்கிறது சென்னை அரசு பொது மருத்துவமனை. நவம்பர் 29 செவ்வாய் கிழமை அன்று அவசர சிகிச்சைகளுக்கு முதலிடம் கொடுத்து 64 அறுவை சிகிச்சைகள் மட்டும் நடத்தப்பட்டன, 29 அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.
‘மழை வெள்ளத்தினாலும், மின்சார தடையினாலும் உற்பத்தி 50% குறைந்து விட்டது. 24 மணி நேரமும் இயக்கப்பட வேண்டிய தொழிற்சாலையில் மின் தடை காரணமாக உற்பத்தி தடைப்பட்டது. அதனால்தான் ஜிஎச்சுக்கு தேவைப்படும் 10 சிலிண்டர்களுக்கு பதிலாக 7 சிலிண்டர்கள் அனுப்பினோம்’ என்று காரணம் சொல்கிறார்கள் ஐநாக்ஸ் ஏர் புரோடக்ட்ஸ் என்ற நைட்ரஸ் ஆக்சைடு அனுப்பும் நிறுவனம்.
உண்மையில் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கூட கையிருப்பில் இருக்காது என்பதுதான் சென்னை அரசு மருத்துவமனையில் வாடிக்கை. நோயாளிகளை வெளியில் அனுப்பி கடைக்குப் போய் விலைக்கு வாங்கி வரச் சொல்வதுதான் நடைமுறை. அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நைட்ரஸ் ஆக்சைட் சிலிண்டர்களை அப்படி கடையில் வாங்கி கொண்டு வரும் சாத்தியம் இல்லாததால் விஷயம் வெளியில் வந்து விட்டிருக்கிறதே தவிர, இவர்கள் சப்பைக் கட்டு கட்டும் மழை, மின்தடை காரணம் இல்லை. சில உதாரணங்கள் கீழே:
ஒரு நாள் ஊசி போடுவதற்கான 10 மிலி சிரிஞ்சு இருக்காது. 5 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். ஒரு நோயாளிக்கு 10 மிலி மருந்து செலுத்த வேண்டுமென்றால் இரண்டு சிரிஞ்சுகளை நிரப்பி முதல் சிரிஞ்சுடன் ஊசி குத்தி விட்டு, அதை அப்படி பிடித்துக் கொண்டிருந்து விட்டு, சிரிஞ்சை மட்டும் கழற்றி விட்டு அப்படியே இரண்டாவது சிரிஞ்சை பொருத்தி ஊசி போட்டு முடிக்க வேண்டும்.
அடுத்த வாரம் 5 மிலி சிரிஞ்சு இருக்காது, 10 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். 4 மிலி மருந்து கொடுக்க 10 மிலி சிரிஞ்சை வீணாக்க வேண்டியிருக்கும்.
இதற்கு எந்த மழை அல்லது மின்தடை காரணம்?
ஒரு நாள் அளவு 7 கையுறைகள் மட்டும்தான் இருக்கும். 7.5 அளவு கை உடைய மருத்துவர் விரல்கள் வலிக்க வலிக்கத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு வாரம் கழித்து 7.5 அளவு கையுறை மட்டும்தான் வழங்கப்படும். கை அளவு சிறிதாக இருக்கும் ஒருவர் நிமிடத்துக்கொரு முறை கையுறையை இழுத்து விட்டுக் கொண்டே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
இவற்றுக்குமா மழை பெய்ததும், மின்சார தடையும் காரணமாக இருக்கும்?
இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்யும் அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தையும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் புதிய மருத்துவமனைகளாக மாற்றி நடத்த திட்டமிட்டுள்ளது!
மேற்கண்ட இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது மருத்துவத்தில் அரசின் அக்கறையின்மையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும், மறுபுறத்தில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு அரசே முன்னின்று உதவி செய்வதையும், காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு கடை விரிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
”மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இது தவிர அஃப்ராஸ், பின்லாதின், சௌதி கேட்டரிங் போன்ற நிறுவனங்களும் சிற்சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றன.
சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். அதாவது லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் பஹா எல்தின் ஹரிரி உருவாக்கிய இந்நிறுவனத்தில்சௌதியின் முன்னாள் மன்னர் அப்துல் அஜீஸின் குடும்பமும் முக்கியமான பங்குதாரராக கருதப்படுகிறது. இது சௌதியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனமே கேகேஐஏ வில் பெரிய ஒப்பந்ததாரராக நீடித்து வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவரும் கேகேஐஏ சௌதி ஓஜரில் பெரும்பாலானோர் வங்கதேசத்தினர் (பங்களா தேஷ்). இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் குறைந்த அளவில் வேலை செய்து வருகிறார்கள். விமானநிலையம், ஊழியர்களுக்கான விடுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இதில் விமான நிலைய பராமரிப்பு பணிகளை ஓராளவு செய்து வந்தாலும், விடுதியின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கும் போதிலும் சௌதி ஓஜர் விமான நிலையத்தின் மீப்பெரும் ஒப்பந்த நிறுவனமாக தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு அது ஆளும் கும்பலைச் சார்ந்த நிறுவனம் என்பதைத் தவிர வேறொன்றும் காரணமில்லை.
இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு நாடுகளிலோ இரண்டு வகை தொழிலாளர்கள் இருப்பார்கள், நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள். ஆனால் சௌதியைப் பொருத்தவரை அனைவருமே ஒப்பந்தத் தொழிலளர்கள் தாம். நிரந்தரத் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சங்கமாக கூடும் உரிமையையோ, தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நடைமுறையையோ சௌதியில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, வேறு சலுகைகளோ நிறுவனத்தின், உயரதிகாரிகளின் விருப்பத்தைப் பொருத்தது. உரிமையாக யாரும் கோர முடியாது. இதனால் கேள்வி முறையின்றி நிர்வாகத்திற்கு அடிபணிபவர்களும், கருங்காலிகளுமே இதுபோன்ற சலுகைகளையும் பதவி உயர்வையும் பெறுவது சௌதியில் சாதாரணம்.
இந்த அடிப்படையில் கடைநிலை ஊழியர்களிலிருந்தே கருங்காலிகளைத் தேர்ந்தெடுத்து ஃபோர்மேன்களாகவும், சூபர்வைசர்களாகவும் இன்னும் சில கங்காணி பதவிகளில் அமரவைத்து (சில ஆண்டுகளுக்கு முன் கடைநிலை ஊழியராக வந்த ஒருவர்தான் இன்று மருத்துவ அதிகாரி. ஊழியர்களை பரிசோதித்து இவர் அங்கீகரித்தால் மட்டுமே உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியும்) உபரிநேர வேலைச் சுரண்டல், விடுதிகளில் அடிப்படை உரிமைகளைக் கூட செய்து தராமல் தொழிலாளர்களை ஏய்த்து வருகிறார்கள். இன்று சௌதி ஓஜர் நிறுவனம் இந்த கங்காணிகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறது.
தற்போது இந்நிறுவனம் முனைய(டெர்மினல்) துப்புறவு பணியாளர்களை மட்டும் லிபனெட்எனும் நிறுவனத்திற்கு உள் ஒப்பந்தம் மூலம் மாற்றியிருக்கிறது. தொழிலாளர்களிடம் முறைப்படி அறிவிக்கவோ, தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தங்களோ எதுவுமின்றி, சௌதி ஓஜரில் பணிபுரிந்தவர்கள் அப்படியே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தினசரி வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக செய்தவர்கள் இன்று புதிய நிறுவனத்திற்காக செய்கிறார்கள். ஐநூறு ரியால் அடிப்படை சம்பளத்தில் வேலை செய்தவர்கள் புதிய நிறுவனத்தில் நூறு ரியால் மட்டும் அதிகம் தருவதாக வாய் மொழியாக கூறியிருக்கிறார்கள்.
பகரமாக எட்டுமணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். அது உபரி நேர வேலையாகவும் கணக்கிடப்படாது. அதாவது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை வாங்கிவிட்டு 100 ரியால் மட்டும் அதிகமாக கொடுக்கப் போகிறார்கள். இந்த 12 மணி நேரத்தில் தேனீர் குடிப்பதற்குக் கூட இடைவெளி எடுக்கக் கூடாது, உணவு இடைவேளை (வேலை நேரமாக கணக்கிடப்படுவதில்லை என்ற போதிலும்) ஒரு மணிநேரத்திலிருந்து அரை மணியாக குறைப்பு, அதுவும் அறைக்குச் சென்று சாப்பிடாமல் வேலை செய்யும் இடத்திற்கே கொண்டு வந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் அசுத்தம் ஏதும் கண்டுபிடிக்கப் பட்டால் தொடர்புடைய பணியாளரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் அறைக்கு அனுப்பிவிட்டு அன்றைய தினத்தை பணிக்கு வராத நாளாக கணக்கிடுவது உள்ளிட்ட பல அடக்குமுறை விதிகளை ஏற்படுத்தி தொழிலாளர்களை வதைக்கிறது.
மட்டுமல்லாது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் ஊர் சென்று வரலாம் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியிருக்கிறது. அதுவும் ஒருவழி விமான பயணச்சீட்டு மட்டுமே லிபனெட் கொடுக்கும் இன்னொரு வழி பயணச்சீட்டை ஊழியர் தன்னுடைய சொந்த செலவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கிரமாக அறிவித்து வருகிறது. இவைகளை எதிர்த்து முணுமுணுத்த ஒரு தொழிலாளியை தனியறைக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள்.
மறுபுறம் சௌதி ஓஜர் நிறுவனமோ புதிய நிறுவனத்தின் அடக்குமுறை பிடிக்காமல் ”நாங்கள் சௌதி ஓஜரிலேயே இருக்கிறோம் வேறு பகுதிகளில் வேலை கொடுங்கள்” என்று வருபவர்களை எந்த வாய்ப்புக்கும் இடமில்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்கிறது. மட்டுமல்லாமல் படிப்படியாக எல்லா பகுதிகளையும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. புதிய நிறுவனத்தின் அடக்குமுறை தாங்காமல் திரும்பி வருபவர்களுக்கு சாப்பாட்டு டோக்கன்களை கூட கொடுக்காமல் பட்டினி போடுகிறது. சௌதி ஓஜரிலேயே வேலை தாருங்கள் என்று திரும்பி வந்தவர்களை இருபது நாட்களுக்கும் மேலாக வேலை கொடுக்காமல் வைத்திருந்து கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டது. அதிகாரிகளுக்கு வேண்டிய சிலரை மட்டும் தண்டனை மாறுதலாக ஜித்தாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது.
இந்த அநீதிகளுக்கு எதிராக ஆங்காங்கே கிளம்பிய முணுமுணுப்புகள் திரளத் தொடங்கிய வேளையில், நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிகழ்வு தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே தொழிலாளர்களிடையே ஏற்படுத்தப்பட்ட போராட்ட உணர்வு சிதறடிக்கப் பட்டிருக்கிறது, மட்டுமல்லாது போராட்ட முயற்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. கொஞ்சம் வைராக்கியம் காட்டிய தொழிலாளர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிகழ்வின் பிறகு தங்கள் விதியை நொந்தபடி வேலைக்கு திரும்பி விட்டார்கள்.
உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள். ஆனால், மறுபக்கம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக வேலை செய்துவரும் வயதான ஒரு தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே கூறுகிறார், “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”
இது நம்பிக்கையா? இயலாமையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் குடும்பத்தைக் காணாது கடல் கடந்து வேலை செய்தாலும் வளமையை பெறமுடியாமல் தடுப்பது, வர்க்க உணர்வு கொள்ளாமல் இருப்பதும், துன்பங்களின் கண்ணீரை கடவுளின் மாயக்கையை எடுத்து துடைத்துக் கொள்ள நினைப்பதும் தான் என்பது அவருக்கு தெரியவில்லை. மத வேறுபாடுகளோ, நாட்டின் எல்லைக் கோடுகளோ சுரண்டுபவர்களிடம் எந்த பேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் சுரண்டும் வர்க்கமாய் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். ஆனால் ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் முதுகில் உரைத்த பின்பும் பிரார்த்தனையோடு முடித்துக் கொள்வதா? முயற்சிகள் தொடர்கின்றன. பலனளிக்குமா? காத்திருப்போம்.
12-1-2012 வியாழன் மாலை 5.30 மணிக்கு புதுவை சிங்காரவேலர் சிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.
கூட்ட நாளன்று பாண்டிச்சேரியின் இன்றைய முதல்வரான என்.ரெங்கசாமியின் அடியாள் படை தொண்டரடிப்பொடி ஒருவன், எங்கள் முதல்வரை திட்டிப் பேசிய நீங்கள் எப்படி பொதுக்கூட்டம் நடத்திவிடுவீர்கள் என பார்த்துவிடுகிறேன், என தொலைபேசியில் மிரட்டியுள்ளான். ஏற்கனவே எல்லா தொழிற்பேட்டை பகுதிகளிலும் விரிவாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, அணிதிரட்டிய போது தானே புயலின் கோர பாதிப்பு, அரசின் பாராமுகம் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்ததோடு சட்டப்படி தொழிலாளர் உரிமைக்கு உதவ வேண்டிய அரசு முதலாளிகளின் எடுபிடிகளாக தொழிலாளர் விரோதப் போக்கிலிருப்பதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் பேசியிருந்தனர். இதனடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது வர்க்க ஒர்றுமையை நிரூபிக்கும் விதமாக பெருந்திரளாக பங்கேற்றனர். சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டிருந்த இப்பொதுக்கூட்டத்தில் யூனிலீவர் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இதுதவிர பல்வேறு ஆலையிலிருந்தும் கணிசமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்
5.30 மணிக்கு இந்துஸ்தான் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர். அய்யனார் தலைமையில் கூட்டம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. வெல்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் விநாயகம், ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர் லோகநாதன், எல்&டி பட்டாளித் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமர், புதுவை புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆகியோர் HUL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதைக் கண்டித்தும் பேசினர். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாகத் திரண்டு பாண்டிச்சேரி முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு சவக்குழி தோண்ட அறைகூவினர். தொழிலாளர்களுக்கே உரிய போர்க்குணத்துடன் நேர்படப் பேசினர்.
கண்டன உரை முடிந்ததும் சென்னை புமாஇமுவின் எழுச்சிமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி, தொழிலாளர்கள் தங்களது உரிமைப் பிரச்சினைகளுக்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்புவது வீணான வேலை என்பதை தனது அனுபவத்தின் மூலமாக நிரூபித்தார். மாறாக தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கு வர்க்க ஒற்றுமையுடன் போராடுவதே தீர்வு என்பதனை மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கூறி விளக்கிப் பேசினார்.
அதன்பின் சிறப்புரையாற்றிய தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, வருங்கால தொழிலாள வர்க்கத் தலைவர்களை முதலாளிகள்தான் உருவாக்குகிறார்கள் என HUL நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார். தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதென்பது தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்குவதற்கு முழுமையான தீர்வாகாது. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போதுதான், முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும். எனவே தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தங்களது போராட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என அரசியல் போராட்டங்களுக்கு அணிதிரள அறைகூவினார். தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் பங்கெடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட அரசிய போராட்டங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு பேசினார்.
இறுதியில் சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.