Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 775

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

46

கேள்வி :
ஒரு இந்தியன் அவனது வாழ்நாளில் இரண்டு முறைதான் தேர்தலில் போட்டியிட முடியும்” என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்தால் எல்லா ஊழல்களும் உடனடியாக நிறுத்தப்படும். சமூகவிரோதிகளும் அரசியலுக்கு வரமாட்டார்கள். காரியவாதிகளும் அரசியலை தொழில் போல நினைத்து வர இயலாது.

என்னுடைய கேள்வி, இத்தகைய சட்டம் இந்தியாவில் வருவதற்கு வாய்ப்புண்டா?

– ஜெகன்

அன்புள்ள ஜெகன்,

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த நாராயண மூர்த்தி பதவி விலகிக் கொண்டு வேறு ஒருவரை நியமித்துள்ளார். இதுபோல பல முதலாளித்துவ நிறுவனங்களில் முக்கியமாக மேற்கத்திய நிறுவனங்களில் நடக்கின்றன. நிறுவனத்தை நடத்துவது வேறு ஆளாக இருந்தாலும் நிறுவனத்தின் பங்குகள் என்னமோ முதலாளிகளின் கையில்தான் குவிந்து கிடக்கின்றன. அந்த வகையில் அந்தந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது எல்லாம் இவர்கள்தான்.

அதே போல இந்தியாவில் தேர்தல்களில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை விட அவர்கள் எந்தெந்த வர்க்கங்களுக்கு ஆதரவாக, பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அந்த வகையில் இங்குள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சிகள் அனைத்தும் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், நிலவுடைமை வர்க்கங்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. காங்கிரசும், பா.ஜ.கவும், தி.மு.க – அ.தி.மு.கவும் முதலாளிகளது நலனுக்காகத்தான் கட்சிகளை நடத்துகின்றன.

அடுத்து நமது ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை விட நிரந்தரமாக இருக்கும் அரசின் உறுப்புகளுக்குத்தான் ( அதிகார வர்க்கம், நீதிமன்றம், போலீசு – இராணுவம்) அதிக அதிகாரம் இருக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றத்தான் முடியும். அதை அமல்படுத்துவது அரசு எனப்படும் மையமான உறுப்பைச் சேர்ந்த அதிகார வர்க்கம்தான்.

கருணாநிதி அரசு செய்தவற்றில் மக்கள் நலனுக்கானவற்றைத்தான் இப்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா ரத்து செய்ய முடியுமே அன்றி முதலாளிகளுக்கு பாதகமாக எதையும் செய்ய முடியாது. சான்றாக தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ரத்து என்பது பள்ளி முதலாளிகளின் நலனில் குடிகொண்டிருக்கிறது என்பதால் சாத்தியம். ஆனால் தி.மு.க ஆட்சியில் அனுமதி பெற்று இங்கு வந்து தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுனவங்களை ஜெயலலிதா விரும்பினாலும் ரத்து செய்ய முடியாது.

அதேபோல பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் கனிம வளங்களையும் தனியாருக்கு விற்பது மட்டும்தான் மன்மோகன் அரசு செய்ய முடியுமே அன்றி உல்டாவாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க முடியாது. அமெரிக்கா திணித்திருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத்தான் காங்கிரசு அரசு செய்யுமே அன்றி அதை எதிர்த்து கருத்துக்கூட தெரிவிப்பதற்கு வழியில்லை.

ஆக அரசாங்கங்களின் இலட்சணம் இதுதான் என்றால் பின் ஏன் தேர்தல் போட்டிகள் இத்தனை பிரயத்தனத்துடன் நடக்கின்றன? தெரிவு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் அளவில்லாமல் சம்பாதிப்பதற்கு இந்த அமைப்பு வாய்ப்புகளை நல்கிறது. இதில் எதிர்க்கட்சி என்றால் கமிஷன் கம்மியாகவும், ஆளும் கட்சி என்றால் அதிகமாகவும் இருக்கும். இதை எதிர்பார்த்தே தேர்தல்களில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். ஆளும் கட்சி என்றால் முதலாளிகளிடமிருந்து கணிசமாக கிடைக்கும் என்பது ஒரு யதார்த்தம். இதைத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்க்கிறோம்.

அதே நேரம் அரசியல்வாதிகள் அடிக்கும் ஊழல், கொள்ளைகளை விட அதிகாரிகளும், முதலாளிகளும்தான் கணக்கில்லாமல் அடிக்கிறார்கள். இப்போது கோதாவரி எரிவாயு பேசினில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் தொகையை அரசுக்கு கொடுக்காமல் கைப்பற்றியிருக்கும் ஊழல் வெளிவந்திருக்கிறது. இப்படித்தான் அனைத்து ஊழல்களிலும் முதலாளிகளே முதன்மையாக இருக்கிறார்கள். ஆனால் இந்த முதலாளிகளே ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதால் அரசியல்வாதிகள் மட்டுமே மக்களிடம் வில்லன்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள்.

இதுதான் நிலைமை என்றால் தேர்தலில் போட்டியிடும் நபர்களின் தனிப்பட்ட பண்பு நலன்கள் எதுவும் பலனளிக்க போவதில்லை. ஒருவர் முழுமையான நல்லவராக இருந்தாலும் இந்த அமைப்பு முறையின் ஊழலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இது போக இப்போதே தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போட்டியிடுவதற்கு தனித்தொகுதிகளை ஒதுக்குகிறார்கள். இதனாலெல்லாம் பெண்களும், தலித்துகளும் பலனடைந்திருக்கிறார்களா என்றால் இல்லை.

புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் இப்போது  காங்கிரசு என்று சுற்றி வரும் செல்வப்பெருந்தகை ஒரு கட்டைப்பஞ்சாய்த்து ரவுடி. அதன் மூலமே கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்தவர். தலித்துகளுக்கான தொகுதியில் இவர் தலித் என்பதால் போட்டியிட்டு வெல்வதால் என்ன பலன்? அது போல இன்று பல பஞ்சாயத்து இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களும் பதவிகளுக்கு வருகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் அவர்களது கணவன்மாரே தலைவர்கள் என்று அறியப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள். எனவே இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களால் எந்தப் பலனும் இல்லை.

நீங்கள் சொல்வது போல ஒருவர் இரண்டுமுறை மட்டும்தான் போட்டியிட முடியும் என்று ஆக்கினாலும் அது ஊழல்பெருச்சாளிகளின் வாரிசுகளும், குடும்பத்தினரும் போட்டியிடுவார்கள் என்று மாறிவிடும். சான்றாக தங்கபாலு இரு முறை போட்டியிட்டு மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்றால் தனது மனைவியை களமிறக்குவார். மனைவிக்கு இரு முறை முடிந்தால் அப்புறம் வாரிசுகள், பினாமிகள் என்று இந்த ஆதிக்கம் சட்டத்திற்கேற்ப தொடரவே செய்யும்.

இப்போதே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசகளும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். சோனியா, பைலட், முலாயம், லல்லு, சரத்பாவார், கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம், என்று டெல்லி முதல் சேலம் வரை குடும்பங்களே ஆதிக்கம் செய்கின்றன. இதற்கு மேல் நீங்கள் கோருவது போன்ற சீர்திருத்தத்தை இப்போதைக்கு கொண்டு வருவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பும் சாத்தியமில்லை. ஒரு வேளை மக்களுக்கு ஏதாவது ஒரு பொய்மான் மாற்றத்தை காண்பிப்பதற்க்காக கொண்டு வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

தேர்தல் கமிஷன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் தேர்தல் அரசியலில் இருந்து மக்களின் பங்கேற்பை ரத்து செய்து கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனது. இது குறித்து தேர்தல் நேரத்தில் வெளியிட்ட கட்டுரைகளை பார்க்கவும். பலரும் இந்த தேர்தல் சீர்திருத்தங்களை மாபெரும் வெற்றி என்று பிழையாக பார்க்கிறார்கள்.

இறுதியாக நாம் முற்றிலும் உளுத்துப்போன இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையை தகர்த்துவிட்டு புதிய ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை உருவாக்க போராடுவதே சரி. அதுவரை எல்லா சீர்திருத்தங்களும் விழலுக்கிறைத்த நீர்தான்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 4

பிற்பட்டோர் மற்றும் ஹரிஜனங்கள், பழங்குடியினர் ஆகிய இந்துக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளன. அவற்றைப் பிடுங்கி, மதம் மாறிப் போன முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது முறைகேடும், அநீதியும் ஆகும். இதனால் இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை குறைகிறது. பறி போகிறது. ஆகவே இந்தச் சலுகைகளை இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

– ”மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?”

இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 45.

தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!! ந்துக்களின் இட ஒதுக்கீட்டை முசுலீம்களும் கிறித்தவர்களும் பிடுங்கிக் கொள்வதாகக் கூறும் இந்த அவதூறே உண்மைக்கு மாறான ஒரு மோசடியாகும். இன்று வரையிலும் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களை, பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டில்தான் சேர்த்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட முசுலீம் மக்களுக்கு எதிலும் இடஒதுக்கீடு கிடையாது. ஒரு சில மாநிலங்களில் ஒரு சில முசுலீம் சாதிகளை மட்டும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மதம் மாறுகின்ற முசுலீம், கிறித்தவ மக்கள், இடஒதுக்கீட்டுச் சலுகையை இழக்கிறார்கள் என்பதே உண்மை.

அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் அனைவருமே வரலாற்று ரீதியாக ‘இந்துக்களாக’ இருந்தது கிடையாது. ‘சதுர்வர்ணம்’ எனும் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர – வர்ண சமூக அமைப்பிலேயே பஞ்சமர்கள் இடம் பெறவில்லை. ஆங்கிலேயர் காலத்தில், அதுவும் முதல் சென்சஸ் கணக்கெடுப்பின் போதுதான் இம்மக்கள் இந்து மத்திற்குள் சேர்க்கப்பட்டனர். மேலும் பார்ப்பன  இந்து மதத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் எழுச்சியான போராட்டங்களும் வெள்ளையர் காலத்தில்தான் துவங்கின. இடஒதுக்கீடு கோரிக்கை பிறந்து பின்னர் அமலாக்கப்பட்டதின் அடிப்படை இதுதான்.

இத்தகைய இடஒதுக்கீடும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் சமூக விடுதலைக்காகத் தரப்பட்டதல்ல; மண்டல் கமிசன் குறிப்பிடுவதைப் போல உளவியல் ரீதியில் சற்று ஆறுதலைத் தருவதற்குத்தான். எனினும் இடஒதுக்கீடு என்ற சொல்லே சமூக வாழ்க்கையில் இடமில்லாமல் போன உழைக்கும் மக்களின் அவலத்தை அதாவது பார்ப்பன இந்து மதத்தின் கொடுமையைத்தான் குறிக்கின்றது. ஆதலால் இடஒதுக்கீடு பற்றிப் பேசுவதற்குக் கூட இந்து மதவெறியர்களுக்கு அருகதை கிடையாது. சாட்டையில் ரத்தம் தெறிக்க அடிப்பவனே புண்ணுக்கான மருந்தை சிபாரிசு செய்ய முடியாதல்லவா?

ஆங்கிலேயர் வருவதற்கு முன் உழைக்கும் மக்களை இந்து மதத்திற்கு வெளியே வைத்து ஆதிக்கம் செய்தார்கள். ஆங்கிலேயர் வந்தபின் இந்து மதத்திற்குள்ளே அடைத்து ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் – அதுவும் முசுலீம் எதிர்ப்பு அடையாளத்தோடு. அதனால்தான் இந்து மதத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற இடஒதுக்கீட்டை முசுலீம்  கிறித்தவ மதங்கள் தட்டிச் செல்கின்றன என்று அவதூறு செய்கின்றனர். இன்னொருபுறம் இடஒதுக்கீடே கூடாது என்பதும், இடஒதுக்கீட்டை எதிர்த்து வட இந்திய மேல்சாதியினர் நடத்தும் கலவரங்களை முன்னின்று  நடத்துவதும் இவர்கள்தான்.

எனவே தாழ்த்தப்பட்டோரைத் தாழ்த்தியதும், பிற்படுத்தப்பட்டோரை பின்தங்க வைத்ததும் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல என்பதற்கு விரிவான அகழ்வாராய்ச்சி தேவையில்லை. அதேபோல மதமாற்றம் என்பது அல்லா – இயேசுவின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவே நடந்தது என்பதையும் விளக்கத் தேவையில்லை.

அடுத்து மதமாற்றத்தையும், இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத வெறியர்கள் கவலைப்படும் மோசடியைப் பார்போம். பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், இடஒதுக்கீடு என்ற பொருள் உலக ஆசையைக் காட்டி இந்து மதத்தில் இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது மட்டும் ‘லவுகீக’ விசயமில்லையா? அதிலும் கவனியுங்கள், ”இந்து மதத்தின் சாதி – தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள்” என்று அவர்கள் கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள். இப்படி ஆன்மீகத்தினால் அல்ல பொருளாசையைக் காட்டித்தான், சமாதானத்தினால் அல்ல கிரிமினல் மிரட்டல்கள் மூலமாகத்தான் இந்துமதம் வாழ்கிறது என்பது அதன் யோக்கியதைக்கு ஒரு சான்று.

இருந்த போதிலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிவிடுவதால் மட்டும் சாதிய இழிவுகள் போய் விடாது என்பதும் உண்மைதான். பணவசதி இருந்தும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்சாதித் தெருவில் குடியிருக்க முடியாது. அவர்கள் செய்துவரும் அடிமைத் தொழிலும் பெரிதாக மாறிவிடவில்லை. மதம் மாறியதால் கிடைக்க வேண்டிய சமத்துவம் கேவலம் சுடுகாட்டில் கூட கிடைக்கவில்லை. திருச்சி கிறித்தவ இடுகாடு அதற்கோர் உதாரணம். கலப்புத் திருமணம் செய்வதால் கட்டி வைத்து அடிக்கப்படுவதும் நிற்கவில்லை. முசுலீம்கள் வாழும் அரியானாவின் சுதாக்கா கிராமம் அதற்கோர் உதாரணம். சாதிகள் எங்களிடம் இல்லை என்று தம் மதங்களின் புனிதக் கதைகளைப் பேசிவரும் இசுலாமும், கிறித்தவமும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஆங்கிலேயர்கள் போகும்வரை தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், 1950-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்து மதமல்லாத ஏனைய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என மாற்றப்பட்டது. அதன்பின் 1956, 1990-ஆம் ஆண்டுகளில் முறையே சீக்கிய, புத்த மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என அதே சட்டம் திருத்தப்பட்டது. காரணம் மதம் மாறுவதினால் அம்மக்களுக்கு சமூக, பொருளாதார முன்னேற்றம் கிடைத்து விடவில்லை என்பதால் இத்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள். எனில் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட கிறித்தவ – இசுலாமிய மக்களுக்கும் பொருந்தும்.

பார்ப்பனியத்தின் ஆன்மாவான சாதி – தீண்டாமையால் நலிவுற்றுத் திணறும் இந்தியச் சமூகத்தில், எந்த மதமும் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, அந்த ‘ஆன்மா’ ஒழிக்கப்படும்வரை தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு  இடஒதுக்கீடு – மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறோம்.

தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

72

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

17

முகமது யூனுஸ் - கிராமீன் வங்கி
முகமது யூனுஸ்

2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பங்களாதேஷைச் சேர்ந்த கிராமின் வங்கியின் நிறுவனர் முகமது யூனுஸ் அப்போது ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் – “நான் உலகமயமாக்கலை ஆதரிக்கிறேன். இது தான் ஏழைகளுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது என்று கருதுகிறேன். எமது வங்கியின் குறுங்கடன்களின் மூலம் ஏழ்மையை அறவே ஒழித்து விட முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். ஏழ்மை ஒழிப்பு ஒன்று தான் தீவிரவாதப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று கருதுகிறேன்”

குறுங்கடன்களின் முன்னோடி என்று கருதப்படுபவர் யுனூஸ். அவரது கிராமின் வங்கி வழங்கிய குறுங்கடன்கள் மூலம் பங்களாதேஷில் பலரை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தியிருக்கிறார் என்றும், ஏழ்மை ஒழிப்புக்கு இது தான் மிகச் சிறந்த வழியென்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ ஊடகங்கள் இவரை போற்றிப் புகழ்ந்து வந்தன. கிராமின் வங்கியின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால் கவரப்பட்டு, இப்போது சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் ‘வறுமை ஒழிப்பில்’ குதித்துள்ளன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.

பன்னாட்டு வங்கிகளுக்கு  உலக ஏழைகள் மேல் ஏற்பட்ட இந்த திடீர் பாசத்தின் மதிப்பு மட்டும் சுமார் 270 லட்சம் கோடிகள் (60 billion USD) என்று டெக்கான் க்ரானிக்கலில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இவர்கள் ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு ஏழைகளை கடைத்தேற்றுவதில் மும்முரமாக இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்கின்றன.

தனிநபர்களுக்கோ அல்லது சுய-உதவிக் குழுக்களுக்கோ சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்து, அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது தான் குறுங்கடன்களின் நோக்கம் என்றும், ஏற்கனவே இதை பங்களாதேஷில் சாதித்துக் காட்டியது தான் கிராமின் வங்கியின் சாதனை என்றும் ஊடகங்கள் சொல்கின்றன. இந்த வகையில் வறுமையை ஒழித்த சாதனைக்காகத் தான் மொஹம்மத் யுனூஸுக்கு நோபல் பரிசு வழங்கபட்டது.

ஆனால் எதார்த்தத்தில் நிலவரங்கள் முற்றிலும் வேறு கதையைச் சொல்கின்றன.

மே மாத மத்தியில் பங்களாதேஷில் இருந்து வெளியாகும் ‘ஷப்தஹிக் 2000’ என்கிற ஏடு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. குறுங்கடன் எனும் பெயரில் சுமார் 30 – 40 சதவீதம் வரை அநியாய வட்டி விதிக்கும் கிராமின் வங்கி, தவணையைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் அப்படியும் தவணை தரமுடியாமல் தவிப்பவர்களின் கால்நடைகளைக் கவர்ந்து வருவதையும் பல ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. மேலும், ஹிலாரி கிளின்டனின் பெயரில் ஹிலாரி ஆதர்ஷா என்கிற திட்டத்தைத் துவங்கிய கிராமின் வங்கி, ரிஷி பால்லி எனும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கேயுள்ளவர்களுக்கு குறுங்கடன்கள் வழங்கி அவர்கள் வாழ்நிலைமைகளை முன்னேற்றி அந்தக் கிராமத்தையே ஒரு முன்னுதாரணமான கிராமமாகத் தாங்கள் மாற்றி விட்டதாக கிராமின் வங்கி பீற்றிக் கொண்டிருந்தது.

ஆனால் உண்மையில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் அக்கிராமத்தை விட்டே பலரும் ஓடியிருக்கிறார்கள் என்றும் எஞ்சியவர்கள் பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் விபச்சாரத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தத்தையும் கிராமின் வங்கியின் கந்து வட்டிக்கடன்கள் உண்டாக்கியதையும் ஷப்தஹிக் அம்பலப்படுத்தியது.

இது கிராமின் வங்கியின் கதை மட்டுமல்ல. நைஜீரியாவில் கிராமின் வங்கியைப் போன்றே குறுங்கடன் வழங்கும் LAPO (Lift above poverty organization) என்கிற வங்கி 100 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. மெக்சிகோவின் கம்பார்டமோஸ் என்கிற குறுங்கடன் வங்கியோ 70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. தமது முதலீடுகளை ‘சமூக முதலீடு’ என்று கூறிக் கொள்ளும் இவ்வங்கிகள், எதார்த்தத்தில் கார்பொரேட் கந்து வட்டி கும்பலாகத் தான் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவின் கிராமப்புரங்களில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு வலுவான வலைப் பின்னலை ஏற்படுத்தி ஆழ ஊடுருவியிருக்கும் என்.ஜி.ஓக்கள் மூலம் கோடிக்கணக்கானோருக்கு இது போன்ற குறுங்கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழில் துவங்க இந்தக் கடன்கள் பயன்படும் என்று சொல்லப்பட்டாலும், உலகமயமாக்கலின் விளைவாய்  கைவினைப் பொருட்களுக்கென்று சந்தையே இல்லாத ஒரு எதார்த்த நிலையில், இது அவசர ஆத்திரத்திற்கும் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளுக்குமே பயன்படுகிறது. திருப்பிச் செலுத்த இயலாத அநியாய வட்டிக்குத் தரப்படும் இக்கடன்களை வசூலிக்க குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் அடியாட்களையே பயன்படுத்துகிறார்கள்.

இரக்கமற்ற இந்த கார்பொரேட் கந்து வட்டி கும்பலின் கொடுமைகளையும் அதனால் விளைந்த அவமானங்களையும் தாங்க முடியாமல் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே 54 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது அரசு காட்டும் கணக்கு தான் – எனவே உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தவணை கட்டமுடியாத ஒருவரின் 16 வயதே நிரம்பிய பெண்ணை விபச்சாரம் செய்தாவது பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். அவமானம் தாளாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://www.ibtimes.com/articles/77043/20101029/microfinance-deaths-sks-microfinance-spandana-asmitha-share-l-t-andhra-suicides-india-microfinance-d.htm

ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஏற்பட்ட குறுங்கடன் சந்தையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு நாவில் எச்சில் ஊறிய சர்வதேச நிதிமூலதன கும்பலும் இப்போது இத்துறையில் வலுவாகக் காலூன்றியிருக்கிறது. LAPO அமைப்பின் பங்குதாரராக டச்சு வங்கி, கால்வர்ட் பவுன்டேஷன் போன்ற நிதிமூலதன முதலைகளே இருக்கிறார்கள். இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் உலகைக் கவ்விய சர்வதேசப் பெருமந்தத்தை அடுத்து, தாம் சூதாடிய களங்களையெல்லாம் சூரையாடி நாசப்படுத்திய நிதிமூலதனச் சூதாடிகள் இப்போது ஏழை நாடுகள் மீதும் வறியவர்கள் மீதும் கண்பதித்திருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, விவசாயப் பொருட்களின் ஊகபேர வர்த்தகம், கனிமச் சந்தையின் ஊகபேர வர்த்தகம் என்று ஒவ்வொரு துறையையும் பெரும் வெட்டுக்கிளி கூட்டம் போல் தாக்கும் நிதிமூலதன சூதாடிகள், ஒவ்வொன்றாக நிர்மூலமாக்கி விட்டிருக்கிறார்கள். இந்தக் கும்பலின் லாபவெறியினால் நிர்மூலமாகி விட்ட ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை மற்றும் பிற ஊகபேர வர்த்தகச் சந்தைகள் அதிலிருந்து மீண்டெழும் வழி தெரியாமல் தவிக்கின்றன. இப்போது அனைத்தையும் கடந்து தமது நேரடி இலக்காக மூன்றாம் உலக நாடுகளையும் ஏழைகளையும் மாற்றியிருக்கிறார்கள். சர்வதேச நிதிமூலதனம் ஒரு சுருக்குக் கயிறு போல மொத்த உலகையும் இறுக்கி கொத்துக் கொத்தாய் அப்பாவி ஏழை மக்களைக் கொன்று குவித்து வருவதைத் தான் முதலாளித்துவ ஊடகங்கள் ஏழ்மை ஒழிப்பு என்று அலங்காரமான வார்த்தைகள் மூலம் நம்மிடம் பசப்புகின்றன.

குறுங்கடன்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்ளும்  இவர்கள் எதார்த்தத்தில் ஏழைகளையே ஒழித்துக் கட்டுகிறார்கள் என்பது இப்போது பட்டவர்த்தனமாக அம்பலமாகியிருக்கிறது. மூலதனத்திற்கு எல்லைகள் இல்லை என்பது தான் உலகமயமாக்கலின் அடிப்படை என்கிறார்கள் முதலாளித்துவதாசர்கள்;  அதனால்தான் அதற்கு இதயமும் இல்லை என்பதை இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

நண்பர்களே இந்த யூனூஸ் நோபல் பரிசு வாங்கிய போது வறுமை ஒழிப்பு புரட்சி என்று பிரம்மாண்டமான விளம்பரத்தை உலக ஊடகங்கள் கொடுத்திருந்தன. இந்தியாவிலும் அதே மாதிரி புரட்சியை கொண்டு வரவேண்டுமென்று அப்துல் கலாம் முதல் அண்ணா ஹசாரே வரை பலரும் பிதற்றியிருக்கக் கூடும். ஆனால் இறுதியில் இந்த அமைதியான ஏழ்மை ஒழிப்பு புரட்சியின் முகம் அம்பலமாகியிருக்கிறது. இனி நோபல் பரிசு என்றால் உடனே வாய் பிளக்காமல் இருக்கவாவது அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கம் முயலுமா?

மேலும் வாசிக்க

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல் !

1
பஞ்சோ விய்யா - சபாடா
பஞ்சோ விய்யா - சபாடா

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 7 (மெக்சிகோ, பகுதி: மூன்று)

கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் “ஹிஸ்பானியர்கள்”  என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் படலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது.

அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர்,  நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது.  ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிகோ தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.

மெக்சிகோ  சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால்  அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன.

இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுதல். பெற்றோரின் “இழிந்த தொழிலை” செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாக இருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், “இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு”  என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது.

உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது.  இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். “உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில்  ஒற்றுமையைக் கொண்டுள்ளன…”, என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது.

அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.

பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை வீழ்த்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது.

டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் “பாஞ்சோ வியா”,  வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

பஞ்சோ விய்யா - சபாடா
பஞ்சோ வியா – சப்பாத்தா

படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். “நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள்! நிலங்களை பறித்தெடுங்கள்!!” என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.

நாட்டில்  ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் “சப்பாத்தா” வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்சிகோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன்.  பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது.

ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917- ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத “ராபின் ஹூட் வகையறாக்கள்” போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது.

இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, “புரட்சியை பாதுகாக்கும்” கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல.

குவாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன.  கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு “கிரான்மா” படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.

1994- ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன.

சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், போராளிகள் மலைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.

நீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் “ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை  தாங்குகிறார்…” என்பது போன்ற சர்ச்சை அது.  இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை.

சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், “நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக…” எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.

ஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார்.

பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத்  தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது.   அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.  தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது.

இந்திய பழங்குடி மக்கள், 21- ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006- ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.

2006- ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். மாநிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

மெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. “ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை” என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன்,  சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.

ஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக  பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.)    மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின்  துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது.

காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு.  அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.

தொடரும்

_________________________________________________

– கலையரசன்
____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி-பதில்!

16

கேள்வி 1:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு கனிமொழிக்கு ஆதரவாக இருக்குமா, எதிராக இருக்குமா? இதில் தி.மு.கவின் மற்ற அமைச்சர்கள் ஏன் இல்லை?

கேள்வி 2:
தேர்தலுக்கு பிந்தைய நாட்களில் அ.தி.மு.க, தே.மு.தி.க உறவு எப்படி இருக்கும்?

– சுப்ரமணி

__________________________________________

கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !அன்புள்ள சுப்ரமணி,

அலைக்கற்றை ஊழல் வழக்கு ஏன் இப்போது நடக்கிறது, அந்த ஒதுக்கீடு நடந்த வருடங்களில் ஏன் நடக்கவில்லை என்பதை பரிசீலித்துப் பார்த்தால் இது குறித்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு குறித்த முடிவுகளில் ராசாவுக்கு மட்டுமல்ல, காங்கிரசு அரசுக்கும், ஏன் அதற்கு முன் இருந்த பா.ஜ.க அரசுக்கும் பங்குண்டு. இரண்டு கட்சிகளும் இதனால் ஆதாயம் அடைந்திருக்கின்றன. கூடவே நிறைய முதலாளிகளும். அதனால்தான் அப்போது இந்த ஊழல் குறித்து ஏதுவும் நடக்கவில்லை.

ஆனால் பின்னர் பொதுநல வழக்கு காரணமாக உச்சநீதிமன்றம் இதில் தற்செயலாக தலையிட்டதின் மூலமே தற்போதைய விசாரணை நடந்து வருகிறது. மன்மோகன் அரசு விரும்பும் வகையில் செயல்படும் சி.பி.ஐ வேறு வழியின்றி நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் ஏதாவது விசாரித்து காட்ட வேண்டியிருக்கிறது. மேலும் இதைத் தொடர்ந்து செய்யும் போது ஊழல் வழக்கு ஆழமும், அகலமும் கொண்டதாக விரிந்து செல்கிறது. இதுதான் ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்கு உள்ள பிரச்சினை.

டெக்னிக்கலாக ராசாதான் அவர் மட்டும்தான் இதைச் செய்தார் என்று காட்ட முயன்றாலும் அது அப்படி மட்டும் காட்டிவிட முடியாது. இப்படித்தான் சில நிறுவன அதிகாரிகள், மற்றும்  கனிமொழி வரைக்கும் கைதுகள் சென்றுள்ளது. ஆகவே இந்த குழி அவர்கள் விரும்பாமலேயே உருவாகிவிட்டது. முடிந்த வரைக்கும் ஒரு சிலரை மட்டும் தள்ளிவிட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகலாம் என்றுதான் அவர்கள் முயல்கிறார்கள்.

தற்போது தயாநிதிமாறனும் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் அரசியல்வாதிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் மட்டும் மாட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஒரு முதலாளியே மாட்டிக் கொண்டுள்ளார். மாறன் சகோதரர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக டாடா, சிவசங்கரன் போன்ற முதலாளிகளோடு வணிக நலன் காரணமாக மோதியது வெளியே வந்திருக்கிறது.

இப்படி முதலாளிகளுக்கிடையே ஏற்படும் பகிரங்கமாக போட்டி, மோதல் காரணமாக மேலும் சில விவரங்கள், ஊழல்கள் வெளிவரலாம். இதவரை ராடியா டேப் உள்ளிட்டு பல விவரங்கள் வெளியே வருவதற்கே முதலாளிகளிடையே உள்ள முரண்பாடுதான்.

கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அடிபடும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மத்திய அமைச்சர் சரத்பவாருக்குச் சொந்தமானது என்பது மும்பையில் உள்ள அனைவருக்கும் தெரியுமென்று நீரா ராடியாவே கூறியிருக்கிறார். ஆனாலும் இதுவரை சரத்பவார் சி.பி.ஐ வளையத்தில் பிடிபடவில்லை. அப்படி சரத்பவார் மாட்டினால் வரிசையாக பெரிய தலைகள் காத்திருக்கின்றன.

அதே நேரம் ஒட்டுமொத்தமாக தனியார் மயத்திற்கு ஆதரவாக அலைக்கற்றை விவகாரம் இருப்பதால் முதலாளிகளும் இதை எந்த அளவுக்கு கொண்டு செல்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் தி.மு.க, காங்கிரசு உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளுக்கு இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் விருப்பம். இல்லையேல் இந்த வழக்கு நேரடியாக முதலாளிகளை குறி வைத்து சென்றுவிடக் கூடும். பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று…

********

தே.மு.தி.க, அ.தி.மு.க உறவு குறித்து…..

கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !தேர்தலுக்கு பின் என்ன, தேர்தலுக்கு முன்பேயே இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. அதற்கான வாய்ப்புமில்லை. தங்களது சொந்த இமேஜின் மூலமே தத்தமது கட்சிகள் நடப்பதாக எண்ணிக் கொண்ட இரு சுயநல யானைகள் எப்படி சேர்ந்து இயங்க முடியும்?

தி.மு.க அரசின் மீதான மக்கள் வெறுப்பை அறுவடை செய்வதற்காகத்தான் இருவரும் சந்தர்ப்பவாதமாக உறவு கொண்டார்கள். அதுவும் துக்ளக் சோ போன்ற அதிகாரத் தரகர்கள் இதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதே இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டார்கள். கோவையில் நடந்த அ.தி.மு.க அணி கூட்டத்திற்கு கூட விஜயகாந்த் வரவில்லை. பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகும் அழைப்பு வந்தால் பதவியேற்பு விழாவிற்கு செல்வோமென பட்டும்படாமலும்தான் விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் செல்வாக்கு அடைவதை ஜெயலலிதா விரும்பமாட்டார். அந்த வகையில் தேர்தலின் போது வடிவேலு செய்த பிரச்சாரத்தை கருணாநிதியைக் காட்டிலும் ஜெயாவே மிகவும் விரும்பியிருப்பார். அது போல விஜயகாந்தும் அ.தி.மு.க கூட மிகவும் நெருக்கமாக இருந்தால் தனது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று இடைவெளி விட்டுத்தான் செயல்படுவார். ஆனால் இவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் தே.மு.க.தி.க என்ற கட்சி ஆட்சியைப் பிடிக்குமளவு செல்வாக்கை அடையப்போவதில்லை. கூட்டணி பலத்தின் மூலமே அவர்களுக்கு இப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் தனிஆவர்த்தனம் செய்வது இனிமேலும் அர்த்தமுள்ளதாக இருக்காது. எனினும் விஜயகாந்தைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க காலியாகும், அ.தி.மு.கவிற்கு போட்டியாக தான் வந்துவிடலாம் என்று ஒரு கணக்கை நிச்சயம் போட்டிருப்பார். அப்படி நடந்தால் அடுத்த முதலமைச்சர் தான்தான் என்று கூட அவர் கனவு காணலாம்.

தற்செயலான சில அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு விபத்து போலத்தான் ஜெயாவும், விஜயகாந்தும் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   இரண்டு கட்சிகளுமே ஊழல் பெருச்சாளிகள் நிறைந்தவைதான். இந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும்  கூட்டணி வைத்திருக்கவில்லை என்றால் இதுவே அவருக்கு மங்களம் பாடப்பட்ட கடைசி தேர்தலாக இருந்திருக்கும். கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே கருணாநிதி அரசு எதிர்ப்பு அலை காரணமாக மூன்றாம் முறையாக முதலமைச்சாராகும் வாய்ப்பை பெற்றவர் ஜெயலலிதா.

குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் மக்களிடையே தோன்றுகின்ற அபிப்ராயங்களெல்லாம் வேறு வழியின்றி இத்தகைய கோமாளி பாசிஸ்ட்டுகளை பதவிக்கு கொண்டு வந்துவிடுகின்றன. எது எப்படியோ இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் பணிந்து போகப்போவதில்லை. அரசியல் உலகில் உண்மையான மாற்று உருவாகாத நிலைமையில் நாமும் இத்தகைய அபத்தங்களை சகித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

கடைசியாக இந்த ‘கேப்டன்’ இதுவரை சரக்கு அடிக்காமலேயே சட்டமன்றம் சென்று வருவதை அவரது கட்சிக்காரர்களே வியப்பாக பார்க்கிறார்களாம். இதுதான் தே.மு.தி.கவின் தற்போதைய சாதனை!

நன்றி.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

76

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.

சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.

இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.

“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.

சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லுஎன்று கேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:

இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.

மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.

பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.

உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?

“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே!  அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.

இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.

தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.

சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.

துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”” உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.

“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.

நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!

30
மார்க்சிஸ்ட்டுகளின் இரட்டை வேடம்
அதான் 'ஏற்கனவே' சொல்லியாச்சே

மார்க்சிஸ்டு’கள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளி வர்க்கத்துக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று அம்மாவையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் மார்க்சிஸ்டுகள் என்பதுதான் புது விசயம்.

சென்ற 8.6.2011 தினமணியை எடுத்துப் பாருங்கள்.

சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்த்து. ஆனால் அதில 3,4 திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறைவேற்றினார்கள்… இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித்திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகம், “இந்த சட்டமுன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவாகும்” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். (தினமணி, 8.6.2011 பக்கம் 9)

அதே 8 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியைச் சார்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி” சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். (தினமணி பக்கம் 6)

அதன் பின் 10 ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

உடனே 11 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலர் இராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுகிறார்.

“சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”

இது எப்படி இருக்கு? அதாவது பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும், அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாம். மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி வரும் இந்தக் கருத்தைத்தான் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம்.

ஏற்கெனவே என்றால் எந்த ஏற்கெனவே? 11 ஆம் தேதிக்கு முன்னால் உள்ள “ஏற்கெனவே” என்பது 7 ஆம் தேதி. அதற்கும் முந்தைய “ஏற்கெனவே” என்பது திமுக ஆட்சிக்காலம்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது சமச்சீர் கல்வி சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது உண்மை. இதுதான் “முதலாவது ஏற்கெனவே”.

இந்த மாதம் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி ஒழிப்பு மசோதாவை “சமூக நீதிக்கான சட்டமுன்வடிவு” என்று கூறி ஆதரித்ததும் உண்மை. இது “இரண்டாவது ஏற்கெனவே”.

இதில் எந்த “ஏற்கெனவே” பற்றி குறிப்பிடுகிறது மார்க்சிஸ்டு கட்சி என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் வேறொரு விசயம் புரிகிறது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்களும் சரி – எதிர்ப்பவர்களும் சரி, யாராயிருந்தாலும் மார்க்சிஸ்டு கட்சி “ஏற்கெனவே” வலியுறுத்திய கொள்கையைத்தான் பின்பற்றியாகவேண்டும்.

இராமகிருஷ்ணனின் கூற்றுப்படி, சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியாகட்டும், அதனை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கும் புரட்சித்தலைவியாகட்டும், இரண்டு பேருமே மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கொள்கை முடிவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.

மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ மேற்படி முடிவுகளை எடுத்திருக்கலாம். மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கை முடிவுகளை திருடி முன்தேதியிட்டு அறிவித்து விட்டார்கள் என்றுதான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமேயன்றி, நேற்று கருணாநிதிக்கும், இன்று ஜெயாவுக்கும் காவடி எடுப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த முடிவுகள் எதையும் கருணாநிதி, ஜெயலலிதா அல்லது சிவபெருமான் உள்ளிட்ட யாரும் தோழர் இராமகிருஷ்ணனுக்கு மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கவில்லை என்பதையும் மாநில செயற்குழு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறது.

மேலும், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறும் சிவபெருமானின் கவிதையும், “இல்லை” என்று கூறும் நக்கீரனின் தீர்ப்பும் இது தொடர்பாக மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தையே வழிமொழிகின்றன என்பதையும் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவினர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

டெய்ல் பீஸ்:

சட்டமன்றத்தில் மசோதாவை வரவேற்று விட்டு, வெளியே வந்து எதிர்ப்பதாகப் பேசும் மார்க்சிஸ்டுகளின் நாடகம் புரட்சித்தலைவிக்குப் புரியாமல் போனதெப்படி? இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா? கடமை தவறும் காவல்துறையை தினமணி கூட கவனிக்கவில்லையா?

புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே! தா.பா கவனிப்பாரா?

பின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும்  சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.  செய்வார்களா?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 

பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!

197

’’யாரு… காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட பாவத்துக்காக தன்னோட மாமனாராலயே ஆள் வச்சு சாவடிக்ப்பட்டிச்சே… அந்த பார்த்தசாரதியை பார்க்க வந்தீங்களா? ம்… என்னத்த சொல்ல… நானும் இந்த ஏரியாக்காரன்தான். அம்பது வருஷங்களா இங்கதான் இருக்கேன். ஒரு ஈ,எறும்பு அசைஞ்சா கூட எனக்கு தெரிஞ்சுடும். அப்படியிருக்கிறப்ப அந்தத் தம்பி இருபது வருஷங்களா இதே ஏரியாவுலதான் இருந்திச்சுன்னு பேப்பர்ல பாத்ததும் அப்படியே பகீர்னு ஆகிப்போச்சு. சத்தியமா சொல்றேன்… பேப்பர்ல பார்த்தசாரதியோட ஃபோட்டோவை பார்த்ததும் முன்னபின்ன பார்த்தா மாதிரியோ, பேசினா மாதிரியோ நினைவேயில்ல. அந்தளவுக்கு தானுண்டு… தன்வேலையுண்டுனு அந்தத் தம்பி இருந்திருக்கு. எனக்கு மட்டும் இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிருந்தா அப்படியே கோயில் கட்டி கும்பிட்டிருப்பேன். ஆனா, பணக்காரனுங்களுக்கு எங்க மனுஷனோட குணம் தெரியுது? ஒரு தும்மல் கூட எவ்வளவு விலை போகும்னுதான கணக்கு பார்க்கறாங்க? என்னவோ போங்க… முன்னாடியெல்லாம் தெற்குப் பக்கம்தான் சாதி, அந்தஸ்தை பார்த்து இப்படி கொலை செய்வாங்கனு படிச்சிருக்கேன்… இப்ப இந்தப் பழக்கம் சென்னைக்கும் வந்திருக்கு… இதெல்லாம் நல்லதுக்கில்ல… ஆமா…’’

என்றபடி அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட் சாலையில், மீன் மார்கெட்டுக்கு எதிர்புறமாக செல்லும் சாலையை அடையாளம் காட்டினார். அதுதான் அய்யாவு முதலி தெரு. பார்த்தசாரதியின் குடும்பம் அத்தெருவில்தான் வசிக்கிறது. சாலையின் தொடக்கத்தில் ‘சிந்தாதிரிப்பேட்டை உதவி காவல் மையம்: உபயம் சிந்தாதிரிப்பேட்டை வணிகர் பெருமக்கள்’ என்னும் பெயிண்ட் உதிர்ந்த போலீஸ் பூத், காவலர்கள் இன்றி காற்றாடிக் கொண்டிருந்தது. சாலையின் குறுக்கே ஓடையை போல் ஓடுகிறது கழிவு நீர். அதைத் தாண்டினால் சாலையின் இருபுறகும் கடைகள். பெரும்பாலும் சந்தன மாலை உட்பட செயற்கையான மாலைகளை விற்கும் கடைகள். இதனையடுத்து ஒரு சின்ன ஹார்டுவேர். பிறகு புரொவிஷன் ஸ்டோர். பெட்டிக் கடைகள். இக்கடைகளின் மாடிகளில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக துணிகள் வெயிலில் காய்ந்துக் கொண்டிருந்தன. பிறகு வருபவை அனைத்தும் குடியிருப்புகள்தான்.

வீடுகளோ, கடைகளோ இடைவெளியின்றி அடுத்தடுத்து இருக்கின்றன. ஒரு வீடு அல்லது கடையின் எல்லை அடுத்த வீடு அல்லது கடையின் ஆரம்பமாக இருக்கிறது. ஐம்பதடி தூரம் நடந்தால் இடது புறத்தில் சின்னதாக மசூதி. மேலும் ஐம்பதடி நடந்தால் வலப்புறம் ‘சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்’. இக்கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் வெள்ளை சுண்ணாம்படித்த வீட்டின் மாடியில்தான் பார்த்தசாரதியின் குடும்பம் வசித்து வருகிறது.

ஆங்காங்கே சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களில், இடைவெளி விட்டு ஜன்னல்கள் முளைத்திருக்கின்றன. அனைத்துமே மர ஜன்னல்கள். எல்லாமே திறந்திருக்கின்றன. எந்த ஜன்னலுக்கும் கொக்கியும் இல்லை. அவை நேராக நிற்கவும் இல்லை. ஒரு புறமாக சாய்ந்த நிலையில் காணப்படும் அந்த ஜன்னல்களின் கம்பிகள் துருவேறி, எளிதில் வளைக்கக் கூடிய அல்லது பிடுங்கக் கூடிய நிலையில் இருக்கின்றன.

வாசலில் காலிங்பெல் இல்லை. வாசக் கதவும் மரக் கதவுதான். சாயம்போன பழுப்பு நிறம். இடுப்பு வரை வெறும் மரச்சட்டங்கள். அதன் பிறகு நீள வடிவ மரப் பலகையின் நடுவில் நான்கு, நான்கு கம்பிகள். அந்தக் கம்பியின் இடைவெளியில் கைவிட்டால் உட்புறமாக இருக்கும் தாழ்பாளை அணுகலாம். ஆனால், கவனமாக அந்தத் தாழ்பாளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வாயைப் பிளந்தபடி காட்சியளிக்கும் அந்த இரும்புத் தாழ்பாளின் முனைகள் கைகளை கிழித்துவிடும்.

தாழ்பாளை நீக்கியதும் கைகளை அழுத்தி கதவைத் திறந்தால்… கரகர ஒலியுடன் கதவு திறக்கிறது. அதுதான் காலிங் பெல் போலும். சரியாக மூன்றடி நீளமுள்ள தாழ்வாரம். அதன் பிறகு கீழ் வீட்டுக்கான கதவு. அக்கதவை ஒட்டினால் போல வலது புறத்தில் மாடிக்கு செல்லும் படிக்கெட்டுகள்.

கைகள் இல்லாத கறுப்பு பனியனை அணிந்திருந்த, சுமாராக எட்டு வயதுள்ள சிறுவன் கீழ் வீட்டின் கதவை திறந்தபடி வந்தான். ”நீங்க யாரு..? யாரைப் பார்க்கணும்..?” என்றெல்லாம் கேட்காமல், ”பார்த்தசாரதி வீடுதான? மேல போங்க. ஆனா, சத்தம் போடாம போங்க. என் தம்பி தூங்கிட்டு இருக்கான்…” என்றபடி மாடிப் படிக்கெட்டை சுட்டிக் காட்டினான்.

மாடிப்படியின் அகலம் இரண்டடி இருக்கும். நீளம் என்று என்று பார்த்தால் அதிகபட்சம் ஓரடித்தான். சற்றே தாட்டியான உடலுள்ளவர்கள் அப்படிகளில் நேராக ஏற முடியாது. படிக்கெட்டின் நடுவில் ஆங்காங்கே உடைந்திருப்பதால் கால்களை கவனமாக ஊன்ற வேண்டும். ஏழு படிக்கெட்டுகள் வரை ஏறியதும் சராசரி உயரமுள்ளவர்கள் கூட குனிவது நல்லது. இல்லாவிட்டால் தலை இடிக்கும். இதன் பிறகு குறுகலான இரண்டு படிக்கெட்டுகள். அதன் பிறகு இடப்புறமாக முன்பைப் போல் மூன்று படிக்கெட்டுகள்.

பார்த்தசாரதியின் வீடு திறந்தே இருக்கிறது. கீழே சிறுவன் பேசியது கேட்டிருக்க வேண்டும். எனவே கதவின் அருகில் காலடி சத்தம் கேட்டதுமே, ”உள்ள வாங்க…” என குரல் அழைக்கிறது.

செவ்வகமான ஹால். தரைத்தளம் சிமெண்டினால் பூசப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே விரிசலும், சில இடங்களில் சற்றே பெயர்ந்தும் காணப்படுகிறது. கூரையை மரச் சட்டங்கள் தாங்கியிருக்கின்றன. வாசக் கதவுக்கு எதிர்முனையில், மர ஈசி சேரில் பெரியவர் ஒருவர் சாய்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் சாயம் போன சாம்பல் நிற பிளாஸ்டிக் சேர் காலியாக இருக்கிறது. பெரியவருக்கு அந்தப் பக்கம், சுவற்றுடன் ஒட்டியபடி பழைய மர டேபிள். அதன் மீது புதியதாக ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க, பார்த்தசாரதியின் புகைப்படம், ரோஜா மாலையுடன் சுவற்றில் சாய்ந்தபடி வருபவர்களை வரவேற்கிறது.

அந்த மர டேபிள் ஆடாமல் இருப்பதற்காக, கால் பகுதியின் அடிப்பாகத்தில் சின்னதாக ஒரு கருங்கலை வைத்திருக்கிறார்கள். டேபிளுக்கு கீழே, புதியதாக ஒரு சின்ன எவசில்வர் குடமும், அதன் மீது மஞ்சள் தடவப்பட்ட தேங்காயும், தேங்காயை சுற்றிலும் மாவிலையும் இருக்கிறது.

”உட்காருங்க…” என தன் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை அந்தப் பெரியவர் காட்டினார். அவரது உறவினர்கள் ஏழெட்டு பேர், சுவற்றுடன் ஓட்டியபடி நின்றிருந்தனர்.

”நீங்க பத்திரிகைக்காரங்கனு தெரியுது. ஆனா, எந்தப் பத்திரிகைனு நீங்க சொன்னாலும் என்னால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா, எனக்கு படிப்பறிவு கம்மி. அதனால நானே நடந்ததை சொல்ல ஆரம்பிச்சுடறேன்.

என் பேரு சந்திர மோகன். டைலர். இப்ப தொழில் செய்யறதில்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன். பையன்தான் கடைசி. என் பொண்டாட்டி ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டா. கொஞ்ச நாள் பிராட்வேல இருந்தோம். அப்புறம், இதோ இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம். சுமாரா ஒரு பதினேழு, பதினெட்டு வருஷங்களா இதே வீட்லதான் குடியிருக்கோம். நாங்க குடிவந்தப்ப இந்த வீட்டுக்கு வாடகை இருநூறு ரூபா. இப்ப இரண்டாயிரம் ரூபா வாடகை தர்றோம். பசங்களை கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். பொண்ணுங்களை கட்டி கொடுத்ததும் தொழிலை விட்டுட்டேன்.

என் பையன் நல்லா படிப்பான். கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சான். ப்ளஸ் 2 முடிச்சதும் இன்ஜினியரிங் படிக்கறேன்னு சொன்னான். அந்தளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால அவனாவே பேங்க்ல லோன் வாங்கி படிச்சான். படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை கிடைக்கலை. சின்னச் சின்ன வேலையாதான் கிடைச்சது. வீட்டு சூழ்நிலை புரிஞ்சு கிடைச்ச வேலைக்கு போனான். நைட் ஷிப்ட் வேலைதான் பெரும்பாலும் கிடைச்சது. அவனுக்கு கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணத் தெரியும். அதனால பகல்ல அந்த வேலையை பார்த்தான். இந்த வருமானத்துலதான் படிப்புக்காக அவன் வாங்கின லோனையும் கட்டினான். குடும்பத்தையும் பார்த்துகிட்டான்.

இதுக்கு நடுவுல ஒரு பொண்ணை காதலிக்கறதா சொன்னான். அந்தப் பொண்ணு பேரு சரண்யா. நாங்க முதலியாருங்க. அவங்க நாயுடு. இதுபோக ஏணி வைச்சா கூட எட்ட முடியாத அளவுக்கு அவங்க பணக்காரங்க. அதனால இது சரிப்பட்டு வருமானு நான் யோசிச்சேன்.

ஆனா, சரண்யாவ பார்த்ததும் இப்படியொரு மருமக கிடைச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சேன். அந்தளவுக்கு பந்தா இல்லாம, பணக்கார திமிரு இல்லாம எங்கிட்டயும், என் பொண்ணுங்க கிட்டயும் அன்பா பழகினா.

இவங்க காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் சரண்யாவோட அப்பாவும், அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. எங்களையும் சரி, எங்க வீட்டையும் சரி, அவங்களுக்கு பிடிக்கலை. ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது. என் பொண்ணை மறந்துடு’னு என் பையன் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, என் பையனும், சரண்யாவும் உறுதியா நின்னாங்க. அதனால அவங்க வீட்ல திரும்பவும் பேச நான் போனேன்.

அவங்க வீடு பங்களா. என்னை நிக்க வைச்சு பேசி ‘இந்தக் கல்யாணம் நடக்காது’னு சொல்லி அனுப்பிட்டாங்க…” என்று அவர் சொல்லும்போதே அவருக்கு இருமல் வந்தது.

”பார்த்துப்பா… பார்த்து…” என்றபடி அழுது வீங்கிய முகத்துடன் உள்ளறையிலிருந்து ஒரு பெண் வேகமாக வந்து அவரது மார்பை தடவி விட்டார். ”இவதான் சரண்யா… என் மருமக…” இருமலின் வழியே அந்தப் பெரியவர் அறிமுகப்படுத்தினார்.

சரண்யா
சரண்யா

”அதிகம் பேசினா இவருக்கு இருமல் வரும். அதுக்காக, பேசாமயும் இருக்க முடியாது. ஏன்னா, நடந்த கொடூரத்தை உங்கள மாதிரி பத்திரிகைகாரங்ககிட்ட இப்ப சொன்னாதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பறோம். அதனாலதான் திரும்பத் திரும்ப எங்க துக்கத்தை சொல்லிகிட்டே இருக்கோம்…” என பெரியவரின் மார்பை தடவியபடியே சரண்யா பேச ஆரம்பித்தார்.

”கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெரம்பூர், பெரியார் நகர்ல எங்கப்பா அம்மா கூடதான் நான் இருந்தேன். எங்கப்பா நரசிம்மன். அவரு வில்லிவாக்கம் குடிநீர் வடிகால் வாரியத்துல உதவி செயற்பொறியாளரா இருக்காரு. அம்மா பேரு லதா, கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர். ஒரேயொரு அண்ணன். பேரு அரவிந்த். இன்ஜினியரிங் முடிச்சுட்டு வெளிநாடு போக டிரை பண்ணிட்டு இருக்கான். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்.

சின்ன வயசுலேந்தே எங்க வீட்டை எனக்கு பிடிக்காது. எங்கப்பாவும், அம்மாவும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ்தான். ரெண்டு பேரோட சம்பளத்தையும் சேர்த்தா அதிகபட்சம் மாசம் முப்பதாயிரம் ரூபாதான் வரும். ஆனா, எங்களுக்கு சென்னைல மட்டுமே 5 வீடுகள் இருக்கு. இதுதவிர எங்க சொந்த ஊரான அரக்கோணத்துல சொத்துக்கள் இருக்கு. நிச்சயம் இதெல்லாம் அவங்க சம்பளத்துல வாங்கியிருக்க முடியாது. வேற வழியில சம்பாதிச்ச பணம்தான். ஒருமுறை லஞ்சம், ஊழல் தொடர்பா எங்கப்பா மேல விசாரணை கூட நடந்தது. ஆனா, எப்படியோ தப்பிச்சுட்டாரு.

வீட்ல எங்கப்பா சாது. அம்மா வைச்சதுதான் சட்டம். பண ரீதியா எல்லாத்தையும் எங்கம்மாதான் பார்த்துப்பாங்க. எல்லாத்தையும் பணத்தை வைச்சே மதிப்பிடுவாங்க. பணக்கார ஃப்ரெண்ட்ஸோட பழகினா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்பாங்க. அதுவே ஏழையாவோ அல்லது சுமாரான நிலைல இருக்கிற ஃப்ரெண்ட்ஸாவோ இருந்தா ‘அவங்க கூட எல்லாம் ஏன் பழகற’னு என்னை திட்டுவாங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்காது. அடிக்கடி அவங்களோட சண்டை போடுவேன். எங்கண்ணன் எப்பவும் அம்மா பக்கம்தான். அப்பா வாயே திறக்க மாட்டாரு. அதனால தனிமைப்பட்டு நின்னேன்.

இந்தநேரத்துலதான் ‘சாட்டிங்’ மூலமா 5 வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தசாரதி அறிமுகமானாரு. ஒருத்தரையொருத்தர் சந்திக்காமயும், ஃபோட்டோ கூட பரிமாறிக்காமயும் நட்பா பழகினோம். காஞ்சிபுரம் பக்கத்துல எம்.பி.பி.எஸ். படிக்க எனக்கு சீட் கிடைச்சது. உண்மையை சொல்லப் போனா பணம் கொடுத்து சீட் வாங்கினோம்னு சொல்லணும்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி நானும் பார்த்தசாரதியும் நேருக்கு நேர் ஒரு பொது இடத்துல சந்திச்சோம். பணத்தை பெரிசா நினைக்காத பார்த்தசாரதியோட குணம் எனக்கு பிடிச்சிருந்தது. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடிதான் அவரோட நான் வெறும் நட்பா மட்டும் பழகலை… காதலிக்கவும் செய்யறேன்னு புரிஞ்சுது. ஏறக்குறைய பார்த்தசாரதியும் அதே மனநிலைதான் இருந்தாரு. அதனால பரஸ்பரம் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.

நான் வீட்லேந்து தினமும் காலேஜுக்கு போயிட்டு வந்துட்டிருந்தேன். சீக்கிரமா காலேஜ் விட்டு வர்றப்ப அல்லது வார கடைசில நாங்க ரெண்டுபேரும் ஊர் சுத்துவோம். இதை யாரோ பார்த்துட்டு எங்க வீட்ல போட்டுக் கொடுத்துட்டாங்க.

எங்க காதலை பத்தி எங்கப்பா என்ன நினைச்சார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனா, எங்கம்மாவும், அண்ணனும் இதை ஏத்துக்கலை. பலமா எதிர்த்தாங்க. பார்த்தசாரதியை நான் மறக்கணும்னு என்னை அடிச்சாங்க. ஆனா, நான் உறுதியா நின்னேன்.

அதனால ஃபைனல் இயர் படிக்கிற எனக்கு அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஒரு அமெரிக்க மாப்பிள்ளையோட கடந்த ஜனவரி 27-ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடத்தினாங்க. இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாதுனு காலேஜ் ஹாஸ்டல்ல தங்கினேன். ஆனா, வார கடைசில வீட்டுக்கு வர்றப்ப பார்த்தசாரதியை நான் சந்திக்கக் கூடாதுனு ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி செஞ்சாங்க. என்னுடைய செல்ஃபோனையும், லேப்டாப்பையும் பிடுங்கிட்டாங்க. ‘பார்த்தசாரதிய நீ எங்களுக்கு தெரியாம கட்டிகிட்டாலும் உன் தாலிய அறுத்து உனக்கு இரண்டாவது கல்யாணம் செஞ்சு வைப்போம்’னு சொன்னாங்க.

ரொம்ப அருவெறுப்பா ஆகிடுச்சு. கொஞ்சமா ஒட்டிட்டிருந்த பாசம் கூட விட்டுப் போயிடுச்சு. பணம் பணம்னு அலையற எங்கம்மாவையும், அண்ணனையும் பார்க்கவே எனக்கு பிடிக்கலை. பணத்தை பத்தி பெரிசா நினைக்காத, சின்ன வயசுலேந்து நான் தேடிக்கிட்டிருந்த அன்பை மட்டுமே முக்கியமா கருதற பார்த்தசாரதியோட குடும்பம் எனக்கு பெரிசா தெரிஞ்சது. எந்தக் காரணத்தை கொண்டும் இவங்களை இழந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.

நடுவுல எங்கண்ணன், பார்த்தசாரதியை கூப்பிட்டு மிரட்டினான். ஆனா, ‘சரண்யாவ உயிருக்கு உயிரா காதலிக்கறேன். அவளை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்’னு பிடிவாதமா நின்ன பார்த்தசாரதிய பார்க்க பிரமிப்பா இருந்தது. உண்மைய சொல்லணும்னா அந்தக் கணத்துலேந்துதான் நான் அதிகமா பார்த்தசாரதியை நேசிக்க ஆரம்பிச்சேன்னு சொல்லணும்.

உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியலை. நீங்க சின்ன வயசுலேந்து எதை தேடிட்டு இருந்தீங்களோ… எது கிடைக்கவே கிடைக்காதுனு நம்பிட்டு இருந்தீங்களோ… அது உங்க முன்னாடி வந்து நின்னு ‘உனக்காகத்தான் நான் காத்திருக்கேன்’னு சொன்னா எப்படி இருக்கும்? அப்படியான மனநிலைதான் நான் இருந்தேன்.

அதனால கடந்த பிப்ரவரி மாசம் 10ம் தேதி நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். பிப்ரவரி 23ம் தேதி சின்னதா ஒரு ரிசப்ஷனை வச்சோம். எங்க வீட்லேந்து யாருமே வரலை.

நான் வாழ்ந்த வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அது பல் விலக்கறதுலேந்து ஆரம்பிக்கிற வேறுபாடு. ஆனா, இந்த வீட்லதான், இந்த நாலு சுவத்துக்குள்ளதான் நான், நானா இருக்கேன். எந்தவிதமான மன சங்கடமும் இல்லாம சந்தோஷமா இருக்கேன். இருக்கிற சாப்பாட்டுல எனக்கும் ஒரு வாய் கொடுக்கிறாங்க. ஆனா, வயிறார நான் சாப்பிடறேன்.

எங்க கல்யாணத்துக்கு பிறகுதான் பார்த்தசாரதிக்கு ஒரு நல்ல வேலை டைடல் பார்க்குல கிடைச்சது. நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். வார கடைசில இங்க வந்துடுவேன்.

திருமணத்துக்கு பிறகு எங்கம்மாவும், அப்பாவும் அமைதியா ஆகிட்டாங்க. அண்ணன் கூட எந்த ரியாக்ஷனும் காட்டலை.  இது அவங்க வழக்கத்துக்கு மாறானது. அதனாலயே ஏதோ பெரிசா ப்ளான் பண்ணறாங்கனு என் மனசு கடந்து அடிச்சுகிட்டே இருந்துச்சு. பார்த்தசாரதிகிட்ட என் பயத்தை சொன்னா, ‘எதுக்கு வேண்டாததை போட்டு குழப்பிக்கற’னு என்னை டைவர்ட் பண்ணிடுவாரு. ஆனாலும் நான் சமாதானமாகலை.

தினமும் காலைலயும், மாலைலயும் நான் பார்த்தசாரதியோட பேசுவேன். அப்படித்தான் ஜூன் 2-ம் தேதி காலைலயும் அவரோட பேசினேன். ஆனா, கொஞ்ச நேரத்துலயே கால் கட்டாகிடுச்சு. திரும்பவும் கூப்பிட்டேன். அப்ப பார்த்தசாரதி யார் கூடவோ வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாரு. ‘என்ன பிரச்னை? யாரோட சண்டை போடறீங்க’னு கேட்டேன். அவர் பதில் சொல்றதுக்குள்ள அவரோட செல்ஃபோன் கீழ விழுந்து, ஆஃப் ஆகிடுச்சு. அதுக்குப் பிறகு விடாம தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆஃப்னே வந்தது.

பயந்து போய், பார்த்தசாரதியோட அப்பாவுக்கு ஃபோன் பண்ணினேன். அவருக்கும் எந்த விவரமும் தெரியலை. பகல் பூரா பார்த்தசாரதியை தொடர்பு கொள்ளவே முடியலை. வீட்டுக்கும் அவர் வரலை. ஆபீசுக்கும் அவர் போகலை. அதனால அலறியடிச்சு சென்னைக்கு வந்தேன். நிச்சயம் இது எங்க அப்பா, அம்மாவோட வேலையாதான் இருக்கும்னு உறுதியா நம்பினேன்.

மாலையே சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்தோம். பார்த்தசாரதோட செல் நம்பரை வாங்கி, டிரேஸ் பண்றதா சொன்னாங்க. நான் தெளிவா எங்கப்பா, அம்மா, அண்ணனை விசாரிங்கனு சொன்னேன். எங்கப்பாவோட பெயரையும், வேலையையும் கேட்டவங்க சட்டுனு ஜர்க் ஆனாங்க. அதுக்குப் பிறகு அவங்க போக்கே மாறிடுச்சு.

‘பார்த்தசாரதிக்கு வேற அஃபேர் இருந்துச்சா… பணம் கேட்டு என்னை டார்ச்சர் பண்ணினாரா… கெட்டப் பழக்கங்கள் அவருக்கு இருக்கா’னு தேவையில்லாத கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாங்க. இந்த நிலைலதான் கடந்த 7-ம் தேதி ராத்திரி திண்டிவனம் பக்கத்துல ஓலக்கூர் பாலத்துக்கு கீழ எரிஞ்ச நிலைல ஒரு உடலை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சாங்க…”

துக்கத்தை கட்டுப்படுத்தி சரண்யா சொல்லிக் கொண்டிருக்கும்போது, பார்த்தசாரதியின் அப்பா வாய்விட்டு அழ ஆரம்பித்தார். ”அழாதீங்கப்பா… நான் இருக்கேன்… அக்கா, கொஞ்சம் இவரை உள்ள கூட்டிட்டு போங்க…” என்று சரண்யா சொன்னதையடுத்து பார்த்தசாரதியின் சகோதரிகள் அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, உடைந்த குரலில் சரண்யா தொடர்ந்தார். ”இந்தத் தகவல் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் போச்சு. சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்காரங்க, அப்பாவை (சந்திரமோகனை) திண்டிவனம் கூட்டிட்டு போனாங்க. கேசியோ வாட்ச், சிவப்பு நிற உள்ளாடை, காப்பி கலர் பேண்ட்டை வச்சு அந்த உடல், பார்த்தசாரதியுடையதுதான்னு அடையாளம் காட்டினாரு…”

கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், ”டிஎன்ஏ ரிசல்ட்டும் அதை ஊர்ஜிதபடுத்திச்சு. எந்த பார்த்தசாரதியோட நான் வாழ்ந்தா சந்தோஷமா இருப்பேனோ, அந்த பார்த்தசாரதியை என்னை பெத்தவங்களே உயிரோட எரிச்சு கொன்னுட்டாங்க. உண்மைல அவங்களுக்கு நான் மகளாதான் பொறந்தேனா அல்லது என்னை எங்கேந்தாவது வாங்கினாங்களானு தெரியலை.

பார்த்தசாரதிக்கு 24 வயசாகுது. எனக்கு 23 வயசு. மூணு மாசங்கள் கூட நாங்க முழுசா சந்தோஷமா வாழலை. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு…”

பார்த்தசாரதி - சரண்யா
சரண்யா - பார்த்தசாரதி

துப்பட்டாவால் தன் முகத்தை மூடி அழுதார் சரண்யா. மெளனமாக நிமிடங்கள் கரைய சட்டென ஆவேசத்துடன் நிமிர்ந்தார். ”நான் புகார் கொடுத்தப்பவே எங்க வீட்டாரை கூப்பிட்டு விசாரிச்சிருந்தாங்கனா என் புருஷனை காப்பாத்தியிருக்கலாம். நான் ஏதோ, வேணும்னே எங்க அப்பா, அம்மா, அண்ணன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா நினைச்சுட்டாங்க. எங்கப்பாவோட வேலைய பார்த்து அடங்கிட்டாங்க. ஆனா, இப்ப என்ன ஆச்சு..?”

அருகிலிருந்த 12-ம் தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழின் 3ம் பக்கத்தை விரித்தார். ”எங்கப்பாவே நான்தான் கூலிப்படையை ஏவி கொன்னேன்னு சரணடைஞ்சிருக்காரு. இதுக்காக 5 லட்சம் ரூபாய கொடுத்தாராம். நூறு ரூபாய கூட எங்கம்மாவுக்கு தெரியாம எடுத்து எங்கப்பா செலவு செய்ய மாட்டாரு. அப்படியிருக்கிறப்ப இவ்வளவு பெரிய தொகைய எங்கம்மாவுக்கு தெரியாமயா கொடுத்திருப்பாரு? எங்கம்மாவையும், அண்ணனையும் காப்பாத்தறதுக்காக குற்றத்தை தானே செஞ்சதா வாக்குமூலம் கொடுத்திருக்காரு. போலீசும் அதை நம்புது. ஆனா, நான் சும்மா விட மாட்டேன். எங்கப்பாவ தூண்டிவிட்ட எங்கம்மாவும், எங்கண்ணணும் கைது செய்யப் படணும். மூணு பேருமே தண்டிக்கப்படணும்…”

மூச்சு வாங்க பேசிய சரண்யா, சற்று நிதானத்துக்கு வந்தார். ”என்னை ஐஏஎஸ் ஆக்கிப் பார்க்கணும்னு என் புருஷன் ஆசைப்பட்டாரு. அவரோட ஆசைய நான் நிறைவேத்தணும். அதுக்காகவே எம்.பி.பி.எஸ். ஃபைனல் இயர் முடிச்சதும், ஐஏஎஸ்-க்கு படிக்கப் போறேன். தன் படிப்புக்காக அவரு பேங்க்ல வாங்கின லோன் இன்னும் அடையலை. அதை நான் அடைப்பேன். அவரோட இடத்துல இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்துவேன்… நாசமா போற அந்தஸ்துக்காக பெத்தவங்களே இப்படியா கொடூரமா நடந்துப்பாங்க…” உதடு துடிக்க பேசிய சரண்யா, சட்டென எழுந்தார். ”ஐ’ம் சாரி… தப்பா நினைக்காதீங்க… நான்… நான்… உள்ள போறேன்…” என்றபடி உள்ளறைக்கு சென்றார்.

வெளியே வந்த பிறகும் சரண்யாவின் கேவல் கேட்டுக் கொண்டே இருந்தது.

______________________________________________________________________

வினவு செய்தியாளர், சென்னை – சிந்தாதரிப்பேட்டையிலிருந்து….
_______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

38
பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
அது போன மாசம்.........

நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து சிறுநாக்கையும் அதைச் சுற்றி மேலண்ணத்தில் இருக்கும் நெகிழ்வான பகுதிகளையும் அழுத்துமாறு வைத்துக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விடுவதற்கு ஹட யோகத்தில் கேச்சரி முத்திரை என்று பெயர். இப்படிச் செய்வதால், ப்ராணன் இடது மற்றும் பிங்கள நாடியிலிருந்து அகன்று சுஷூம்னா நாடியில் நிலை கொள்ளுமாம். இதனால் ஒரு மனிதனுக்கு பசியே உண்டாகாமல் தடுத்து விட முடியுமாம். பதறாதீர்கள் நண்பர்களே. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை – யோக சாஸ்திரம் தான் சொல்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் ஒரு நாட்டில் இது போன்ற  ஆன்மீக சரடுகளையெல்லாம் பெரும்பாலானோர் நம்பப் போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால்,

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
உண்ணாவிரதத்தை முடித்து வைத்த ஸ்ரீஸ்ரீ

இதையெல்லாம் நம்மை நம்பச் சொன்னதோடு அதையே மூலதனமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ள ஒருவருவருக்கு மேற்படி யோக டெக்னிக் ஒர்க்அவுட் ஆகாமல் காலைவாரி விட்ட சோகக் கதையை இனி பார்ப்போம்.

ஜூன் நான்காம் தேதி பாபா ராம்தேவ் கருப்புப் பணத்தையும் ஊழலையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது எப்படியும் இந்தாளுக்கு இருக்கும் யோக பலத்தின் அடிப்படையில் ஒரு பத்து மாதத்திற்காவது இந்த டிராமாவை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார். இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?

பல ஆண்டுகளாக ராம்தேவ் செய்து வந்த யோகாப்பியாசங்கள் வழங்கிய உடல் உறுதியைக் காட்டிலும் அந்தச் சாதாரணப் பெண்ணின் மனவுறுதி வலிமையானது என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆக, போராட்ட உறுதியையும் கொள்கைப் பிடிப்பையும் உறுதி செய்வது வெறும் உடல் வன்மையல்ல – அது ஒருவன் ஏற்றுக் கொண்ட நேர்மையான அரசியலும் அதற்கு விசுவாசமாக  நிற்கும் மனத்தின்மையும் தான் என்பது இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த யோகப் போராளி தினமும் பாலும், தேனும் அடித்து விட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருந்தும் ஒரு வாரத்திற்கு மேல் அண்ணாத்தேவின் உதார் விரதம் தாக்குப்பிடிக்கவில்லை.

போகட்டும். அண்ணா ஹசாரேவுக்கு மதிப்புக் கொடுத்த காங்கிரசும் அவரை ஒரு நாயகன் போல ஏற்றிப் போற்றிய முதலாளித்துவ ஊடகங்களும் பாபா ராம்தேவைக் கைவிட்டதன் தவிர்க்கவியலாத விளைவு தான் இப்போது அவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு நாடெங்கும் குறைந்த பட்சமாகத் திரண்ட நடுத்தரவர்க்க மக்கள் திரளின் பின்னே இருந்தது, வலுவானதொரு என்.ஜி.ஓ வலைப்பின்னல் மற்றும் ஊடகங்கள். என்.ஜி.ஓவின் ஆன்மாவே அதன் அரசியலற்ற தன்மையும் மக்களை அரசியல் ஓட்டாண்டிகளாக்கிக் காயடிக்கும் துரோகத்தனமான செயல்திட்டமும் தான். இதனால் கீழ்மட்ட அளவில் ஊடுறுவ முடிந்த காவி கும்பலால் மேல்மட்ட அளவில் ஊடுறுவி ஓரளவுக்கு மேல் ஆதாயம் அடைய முடியவில்லை. மோடியை ஆதரித்த அண்ணா ஹசாரே கூட ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய விமர்சனம் வந்த போது சுதாரித்துக் கொண்டார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க் கொண்டிருக்கும் ஆங்கில ஊடகங்களுக்கும் அண்ணாவை மெனக்கெட்டு ஆதரிப்பதில் ஆதாயம் இருந்தது. வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் விளைவாய் அவர்களிடையே எழுந்திருந்த இயல்பான ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் ஒரு வடிகாலாய் அண்ணாவை முன்னிறுத்தி டி.ஆர்.பியை உயர்த்தி நன்றாகக் கல்லா கட்டிக் கொண்டார்கள்.

ஆனால், பாபா ராம்தேவின் கதையே வேறு. இவரைப் பின்னின்று இயக்கியது புகழ் போதையும் காவி கும்பலும் தான். இவரை ஆதரித்தால் தமது சந்தையான அரசியலற்ற மொக்கைக் கூட்டத்தில் பிளவு உண்டாகிவிடும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் அறிந்து இருந்ததாலேயே தெளிவாகக் கைகழுவி விட்டனர். ராம்தேவ் தில்லியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டைம்ஸ் நௌவின் ‘நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சியைத் துவக்கிய அம்பி அர்னாப் கோஸ்வாமி, அந்நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார் – “அண்ணா ஹசாரேவை நாம் ஆதரித்தோம். ஏனெனில் அவர் அரசியல் சார்பற்றவராயிருந்தார். அவருக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கிறது”

அண்ணா ஹசாரே அரசியலற்ற மொக்கை என்பதால் தான் அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. அவரது அரசியல் ஓட்டாண்டித்தனம் தான் ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே ஊழல் கறை படிந்து ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் ஊரே காறித் துப்பிய டைம்ஸ் குழுமத்தோடும் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ பர்காதத்தின் என்.டி.டிவியோடும்  ஒட்டி உறவாட வைத்தது. இதோடு சேர்த்து, ஹரித்வாரில் இருந்து ராம்தேவை நேரடி ஒளிபரப்பு செய்வதெல்லாம் செலவு பிடிக்கும் காரியம். போட்ட துட்டுக்கும் வரும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கும் எப்படி கட்டுபடியாகும்? எனவே அண்ணாவை ஏற்றிப் போற்றிய ஊடகங்கள் ராம்தேவை லூசில் விட்டுவிட்டார்கள்.

இந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொண்ட காங்கிரசு, முடிந்தவரை அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ராம்தேவை தில்லியிலிருந்து விரட்டியடித்த உடனேயே தனது ரத கஜ துரகாதிபதிகளை களமிறக்கிய காங்கிரசு, தொடர்ச்சியாக ராம்தேவை ஊடகங்களில் தாக்கி வந்தது. இதற்கிடையே ராம்தேவின் கும்பலை வேடிக்கை பார்க்கச் சென்ற பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் போட்ட தேசபக்தி குத்தாட்டத்தையும் காங்கிரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் மெழுகுவர்த்திப் போராளிகள் ராம் லீலா மைதானத்தில் காங்கிரசு காட்டிய பூச்சாண்டிகளுக்குப் பயந்து மொத்தமாக பதுங்கிக் கொண்டனர். பாபா ராம்தேவ் வேறு சூழ்நிலை புரியாமல் போலீசை எதிர்த்து சண்டை போட 11,000 பேர் கொண்ட ஒரு ஆயுதப் படையை அமைக்கப் போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 பேர் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சும்மா ‘பே’ என்றாலே காலோடு மூத்திரம் போகும் தைரியசாலிகளான மெழுவர்த்தி வீரர்கள் முதல் வேலையாக வாங்கிய மெழுகுவர்த்தியை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். பின்னே, போராட்டம் என்றால் பேஷன் பெரேடு  என்று நினைத்தவர்களிடம் போய் சண்டை, ஆயுதம் என்று பேசினால் வேறென்ன நடக்கும்?

ஒருவழியாக ராம்தேவைச் சுற்றி எல்லா கதவுகளும் அடைபட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருக்குக் கைகொடுக்க டபுள் ஸ்ரீ முன்வந்தார். நேற்று ராம்தேவைச் சந்தித்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ராம்தேவ், தனது சத்தியாகிரகம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த பத்துநாட்களாக அவர் நடத்திய டிராமாவை காங்கிரசு மதித்து எந்த உத்திரவாதத்தையும் அளிக்காத நிலையிலும் இனிமேலும் மேற்படி நாடகத்தைத் தொடர்ந்தால் தான் இத்தனை ஆண்டுகளாக மக்களின் தலையில் மிளகாய் அரைத்து சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு அனுபவிக்காமல் போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அஞ்சியே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

ராம்தேவ் தில்லி வந்தபோது அவரை வரவேற்க நான்கு அமைச்சர்களையும் பின்னர் விரட்டியடிக்க நானூறு போலீசையும் ஏவிவிட்ட காங்கிரசு கும்பல் அவரை இப்போது  எதிர்ப்பதற்கும் ஜனநாயக சக்திகள் ராம்தேவை எதிர்ப்பதற்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இவர்கள் ஊழலின் ஊற்று மூலத்தை ஆதரித்துக் கொண்டே ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் துரோகத்தனத்தையும், இந்த கும்பலின் பின்னேயுள்ள ஜனநாயகமற்ற தன்மையையும், அதன் நீட்சியாய் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின் புகலிடமாக இந்தப் போராட்டங்கள் மாறுவதையும் அடிப்படையாய்க் கொண்டே இந்தப் ‘போராட்டங்களை’ விமரிசிக்கிறோம்.

இனி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ள  மக்களுக்கு, ஊழலின் அடிப்படையாய் இருக்கும் அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதற்கு இப்போது நடந்து வரும் கூத்துகளே துலக்கமான நிரூபணமாய் இருக்கிறது. இனிமேலும் இத்தகைய கைப்புள்ளகைகளின் பின்னே திரளும் காரியவாத அப்பாவிகள் திருந்தினால் அதுவே ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குச் செய்யப்படும் பேருதவியாக இருக்கும்!

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!

மச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி அமைச்சர், துறைச் செயலர், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட புரட்சித் தலைவியின் போர்ப்பபடைத் தளபதிகள் அனைவரும் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் பாசறை அமைத்து போர்த்திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

வரலாறு காணாத வெற்றி பெற்ற புரட்சித்தலைவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முதல் மசோதாவுக்கே இடைக்காலத் தடையா? முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ வா? அக்கா மூடு அவுட் என்பதை தங்கச்சி தெரிவித்திருப்பார். அம்மாவின் நெற்றிக்கண் திறப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள். சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா, குட்டையா நெட்டையா என்பதையெல்லாம் பேசுவதற்கு இனி நேரமில்லை. “உயர்நீதிமன்றத் தடையைத் தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் வேண்டும்” என்பதுதான் தளபதிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரபகவானுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் மூலம் இடைக்காலத் தடையைத் அகற்ற வாய்ப்பில்லை என்று ஜோசியர்கள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.

“கவிதையில் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கேற்ப பரிசுத்தொகையைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள “பிழையான” பாடங்களை நீக்குவதற்கான அதிகாரத்தையும் அம்மாவின் அரசுக்கு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு. எனினும் இத்தகைய சோளப்பொறிகளால் அம்மாவைத் திருப்திப் படுத்தி விட முடியுமா என்ன?

திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் நிலவிய வெறுப்பின் காரணமாக தான் வெற்றி பெறவில்லையென்றும், 1991-96, 2001-2006 ஆகிய இரு காலகட்டங்களில் தாங்கள் அனுபவித்த பொற்கால ஆட்சியை எண்ணிப்பார்த்து, அந்தப் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று தமிழக மக்களின் இதயத்திலிருந்து வெடித்துக் கொப்புளித்த வேட்கையின் விளைவுதான் இந்த இமாயலய வெற்றி என்றும் அம்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேற்படி பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஒண்ணாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ஆட்சியின் முதல் காட்சியை ஓபன் பண்ணும்போதே பழைய பொற்காலத்தின் “எஃபெக்ட்” தெரியவேண்டும் என்பதை உத்திரவாதப் படுத்தியிருக்கிறார் புரட்சித்தலைவி.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறந்திருக்க வேண்டும். அது ஜூன் 15 க்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்மாவின் அரசுக்கு சாதகமாக அமைந்துவிட்டால், செப்டம்பர் மாதம் முடியும்வரை மாணவர்களுக்கு விடுமுறைதான். இதுநாள்வரை வகுப்பறை இல்லாத பள்ளியையும், வாத்தியார் இல்லாத வகுப்பறையையும் மட்டுமே பார்த்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த முறை பாடப்புத்தகமே இல்லாத “கல்வி”யையும் காண்பார்கள்.

அக்டோபர் நவம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை கோடைக்கால விடுமுறையை நீட்டிக்கும் ஆட்சி, பொற்கால ஆட்சியாகத்தானே இருக்கமுடியும்? இதை மாணவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டுமா என்ன? ஓபனிங் ஷாட்டிலேயே முழுப்படத்தின் கதையையும் நுணுக்கமாக கூறும் திறமை புரட்சித்தலைவியைத் தவிர வேறு யாருக்கு வரும்?

“பாடப்புத்தகத்துக்காக 4 மாத காலம் மாணவர்கள் காத்திருக்க வேண்டுமா?” என்று சிலர் குமுறக்கூடும். 2006 இலிருந்து 2011 வரை 5 ஆண்டு காலம் இந்தப் பொற்கால ஆட்சி தொடங்குவதற்காக 7 கோடி தமிழ்மக்கள் காத்திருக்கவில்லையா? ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக புரட்சித்தலைவியே கொடநாட்டில் 5 ஆண்டுகள் தவமிருக்கவில்லையா? அவ்வளவு ஏன், அம்மாவின் தரிசனத்துக்காக கூட்டணிக் கட்சிக்காரர்கள் போயசு தோட்டத்தின் வாயிலில் அன்றாடம் காத்திருக்கவில்லையா? பொற்காலம் வேண்டுவோர் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

எப்பாடு பட்டேனும் தமிழக மாணவர்களைப் பொற்காலத்துக்குள் தள்ளிவிடவேண்டும், இல்லையேல் தங்களது எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும் என்ற உண்மை புரிந்திருப்பதனால்தான் கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும், அட்வகேட் ஜெனரலும் சனிக்கிழமை காலை முதல் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டிலேயே படுத்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு பொற்காலத்துக்குள் மாணவர்கள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் ம.க.இ.க சார்ந்த மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் ஆகிய அமைப்புகள். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்துள்ள கோரிக்கை.

இன்று – 13.6.2011, திங்கட்கிழமை – காலை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் பி.பி.ராவ் ஆஜரானார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். வழக்கின் விவரங்களைப் படித்துவிட்டு வரவேண்டியிருப்பதால் விசாரணையை நாளைக்குத் – 14.6.2011. செவ்வாய்க் கிழமை – தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை. விசாரணை நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ஒரு வேளை மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாலும், கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வாதங்களைப் பரிசீலிக்காமல் இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்காது.

அம்மாவின் அரசு vs மனித உரிமைப் பாதுகாப்பு மையம்! இவ்வழக்கில் வெளிப்படையாகத் தெரியும் வாதி-பிரதிவாதிகள் இவர்கள். ஆனால் இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள்ளே “தனியார் கல்வி vs பொதுக்கல்வி”, “மனுநீதி vs சமநீதி” என்ற முரண்பாடு ஒளிந்திருக்கிறது. பொற்காலத்துக்குள் ஒளிந்திருக்கும் இருண்டகாலம் போல. இருளை அடையாளம் காட்டுவோம்!

_____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டம்

கனிமொழியை பிணையில் எடுப்பதற்காக ராம் ஜேத்மாலினி போன்ற காஸ்ட்லியான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த தி.மு.க சமச்சீர் கல்விக்காக அத்தகைய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து போராடவில்லை என்பது மட்டுமல்ல பாசிச ஜெயா திமிருடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும் அதைப்பற்றி காமா, சோமா என்று ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு அடங்கிப்போனார்கள் இந்த சூராதி சூரர்கள். மக்களிடம் அதைப்பற்றி விளக்கி அம்பலப்படுத்த வேண்டும் என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்நிலையில் தேர்தலை புறக்கணிக்கின்ற ம.க.இ.கவும் அதன் சார்பு அமைப்புகளான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இரண்டும் தமிழகம் முழுவதும் பெற்றோர்களை அணிதிரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் போராடி வருகிறது. விருதாசலத்தில் இலவச கல்வி உரிமைக்கான மாநாட்டை நடத்தியதோடு சென்னை முதல் மதுரை வரை பல ஊர்களில் ஆர்பாட்டங்களை நட்ந்திருக்கிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இரத்து செய்த அ.தி.மு.க அரசின் மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகித்த ம.உ.பா.மை அடுத்து இந்த தடை உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்வதையும் எதிர் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.

இப்படி மக்கள் களத்திலும், சட்ட முனையிலும் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது புரட்சிகர அமைப்புகள். இங்கே சில ஊர்களில் நடந்த போராட்டத்தை படங்களாக பதிவு செய்கிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

தூத்துக்குடி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

திருச்சி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

தருமபுரி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

விருத்தாசலம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

கோவை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

மதுரை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

சேத்தியாதோப்பு

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

திருவண்ணாமலை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

சென்னை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

_________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – ரிபோர்ட்!

சமச்சீர் கல்வி இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை அணிதிரட்டி விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடுகிறது. இந்த போராட்டம் தற்போது கடலூர் மாவட்டம், கோவை என்று பரவி வருகிறது. இதை ஒட்டி விருத்தாசலத்தில் பெற்றோர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், அரசியல் சட்டப்படி கல்வி என்பது எப்படி நமது உரிமையாக உள்ளது, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகள் நூதனக் கொள்ளை, பகிரங்க கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. சாரமாக தனியார் கல்வியின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று எழுதியிருக்கும் இந்த முக்கியமான கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்! நன்றி

இலவசக் கல்வி நமது உரிமை

விருத்தாசலம் நகரில் இலவச கல்வி உரிமை மாநாடு கடந்த மே மாதம் செவ்வாய் (24-05-2011) அன்று நடைபெற்றது.  மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் திரு .செந்தாமரைக்கந்தன் வரவேற்புரை வழங்கி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு வை வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அவரது பேச்சிலிருந்து:

மக்கான கல்வி உரிமை நாம் கேட்கின்றோம். எட்டாவது வரை இலவசக்கல்வி என்று கல்வி உரிமைக்கான சட்டதிருத்தம் செய்யப்பட்டது. அப்பொழுது எட்டாவது வரை கல்வியை இலவசமாகக்கொடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கெல்லாம் மத்திய அரசு அறிக்கை அனுப்பியது.ஆனால் இங்கே என்ன நடந்தது?  அரசுப்பள்ளிகளில் மட்டும் இலவசக்கல்வி – தரமற்றக் கல்வி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் கொடுத்துதான் கல்வி என்ற நிலைமைதான் இன்னும் இருந்து வருகிறது. இலவசக்கல்வி இன்னும் வழங்கப்படவில்லை.”

“ஆனால், ஏழைகளுக்குப் பிச்சை போடுவதுபோல், ஒவ்வொரு பள்ளியிலும் 25%ஒதுக்கிவிட்டு அதில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக அவர்கள் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு வரை  ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும். அந்தக்கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்று ஒரு ஒப்பந்தம் வந்துள்ளது, நாம் இப்போது என்ன கேட்கிறோம் என்றால்இலவசக்கல்வி என்பது நமது உரிமை.அதாவது பன்னிரெண்டாவது வரை இலசவசக்கல்வியை அரசு கொடுக்க வேண்டும்.  ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் இலவசக்கல்வியை வழங்கவேண்டும். அதாவது, மற்ற இலவசங்களை வழங்குகின்ற அரசு ஏன் இலவசக்கல்வியை தரக்கூடாது? என்று கேட்பது நமது உரிமை. அதைத்தான் நாம் நமது மாநாட்டிலே இப்போது வலியுறுத்திக் கூறுகிறோம்.”

“அடுத்ததாக, இந்த கல்வி கட்டணத்துகாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவிப்பு வந்தது. அதை தனியார் பள்ளிகள் செயல்படுத்தாமல்  அளவுக்கு மீறி பணம் வாங்கினார்கள். ஒன்றுக்கு மூன்று  பங்கு பணம் வாங்கினார்கள். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பெற்றோர் சேர்ந்து போராட்டம் செய்தபிறகுதான் இந்தக்கட்ட்டணக் கொள்ளையை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த முடிந்தது, அதன்பிறகு, பெற்றோர்கள் ஒன்றுகூடி மனித உரிமை பாதுகாப்ப்பு மையத்தின் மூலம் கட்டணக்கொள்ளையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கட்டணங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதை பெற்றோர் பார்க்குமளவுக்கு ஆர்வம், ஈடுபாடு  ஏற்படுத்தினார்கள்.”

” அதன்பிறகு பெற்றோர்கள் தனித்தனியாக கூடுதல் கட்டணம் வாங்குகிறீர்களே என்று நிர்வாகத்தினரிடம் கேட்க ஆரம்பித்தார்கள். தனித்தனியாக கேட்க ஆரம்பித்தபின் நிர்வாகத்தினரிடம் ஏளனத்தையும் அலட்சியத்தையும் சந்திக்க நேரிட்டது. அதன்பின் பெற்றோர்கள் ஒன்றுகூடி சங்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று வந்தார்கள். அதன்பிறகு, பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு முற்றுகை போராட்டம் கூட மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.”

“அப்பொழுது அந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் வந்து சில உறுதிமொழிகளை தந்தார்கள். அதாவது கூடுதல் கட்டணம் நீங்கள் கொடுக்க வேண்டாம்.  அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மட்டும்தான் செலுத்த வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். மாணவர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்கள்.  பள்ளி தகவல் பலகையில் இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த உத்தரவிடுகிறேன் என்று உத்தரவு வழங்கினார்கள்.”

“ஒரு சில பள்ளிகள் மட்டும் ஓரிரு நாட்கள் வைத்துவிட்டு எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு பெற்றோர் சங்கம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக என்னையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தார்கள். பெற்றோர் சங்கம்  மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து அந்த கூடுதல் கட்டணம், கட்டணக் கொள்ளையை எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம்.  சில பல போராட்டங்களை நடத்தினோம். இருந்தும் கூடுதல் கட்டணம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.”

“கட்டணக்கொள்ளையை வைத்து வியாபாரம் செய்ய  ஆரம்பித்தார்கள். மாணவர்கள் கூப்பிட்டு மிரட்டுவது, பெற்றோரிடம் பணம் வாங்கிவரச் சொல்வது, அவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற தொல்லைகளை எல்லாம் கொடுத்தார்கள். இருந்தும் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினோம். இதற்கும் பிறகும் கூட அவர்கள் திருந்தவில்லை.  தற்போது பள்ளி திறக்காத நிலையிலும் நீதியரசர் ரவிராஜ பாண்டியன் அறிக்கை வெளிவராத நிலையிலே அதிகமாக கட்ட வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். பெற்றோருக்கும் நோட்டிசு அனுப்புகிறார்கள்.”

“இதற்கெல்லாம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், பல பெற்றோர் மனத் திடம் இல்லாமல், நமது குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ இந்த பள்ளிகள் என்று பயப்பட்டு செலுத்திவிடுகிறார்கள். அந்த உணர்வை போக்கும் வகையிலே நாங்கள் போராடுகிறோம். இருந்தாலும் சரி செய்ய முடியவில்லை.  நீங்களெல்லாம் செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். கோயமுத்தூரில் சங்கீதா என்ற பெண் யூகேஜி படிக்கும் தனது மகனுக்கு தனியார் பள்ளி கேட்டகட்டணம் கட்டி படிக்க வைக்கமுடியவில்லை என்று மனமொடிந்து தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மரண வாக்குமூலத்தில் கூடுதல் பணம் கேட்டார்கள், என்னால் கட்டமுடியவில்லை அதனால் உயிரை மாய்த்துக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பெற்றோர்களை பொறுத்தவரை நீங்கள் உறுதியாக இருந்தால் நாம் நமக்குரிய உரிமைகளை பெற முடியும். ”

“அந்த அளவிலே, இலவசக்கல்வி என்பது நமது நீண்டகால கோரிக்கை அதற்கு இப்போதிருந்தே அடித்தளம் அமைத்து போராட வேண்டிய சூழ்நிலை. அதற்குள்ளே, தனியார் பள்ளிகளெல்லாம் கொள்ளைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். அதை முறியடிக்க பெற்றோர்கள் ஒன்று கூடவேண்டும். கூடுதல் கட்டணம் கட்டமாட்டோமென்று உறுதியாகக்கூற வெண்டும். சென்ற ஆண்டு கூடுதல் கட்டண்ம் வசூலித்த பள்ளிகளுக்கெல்லாம் அதைக் கழித்துக் கொண்டு  இந்த ஆண்டு அறிவிப்பு வந்த பிறகு வசூலிக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கியிருக்கிறது மெட்ரிகுலேசன் ஆய்வாளர்கள் சங்கம்.”

“அதேபோல், இந்த பெற்றோர் சங்கத்தை வளர்க்க வேண்டுமென்று கடந்த ஒரு மாதகாலமாக ஒவ்வொரு பெற்றோர் வீட்டிற்கும் தெருத்தெருவாக சென்றும் நிலைமையை எடுத்துக்கூறி பயப்படவேண்டாம் அச்சப்படவேண்டாம் என்று கூறி உறுப்பினராக சேர்த்து வருகிறோம். ஏறக்குறைய ஆயிரம் பெற்றோர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் அந்தப்பணி தொடரும். போராட ஆரம்பித்தால்தான், உரிமைகளை கேட்க ஆரம்பித்தால்தான் பள்ளிகள் நிர்வாகம் கட்டுப்படும். எவ்வளவு கேட்டாலும் கட்டிவிடலாம், குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் உரிமைகளைப் பெற முடியாது. நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும். அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. நாம் பள்ளிகளிடம் போராடவில்லை. அரசு தரமான கல்வியைக் கொடு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கல்வியைக் கொடுக்க வேண்டுமென்று நாம் கேட்கின்றோம். தனியார் கட்டணக் கொள்ளைக்கெதிராக அரசிடம் தான் நாம் போராடுகிறோம்.”

“அரசு கூடுதல் கட்டணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். சரியான நடவடிக்கை எடுத்தால்தான் தனியார் பள்ளிகள் அடங்கி ஒழுங்காக அரசுக் கட்டணத்தை வாங்குவார்கள். நாங்கள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களோடு ஒன்றுபடுங்கள். போராடுங்கள். உங்கள் குழந்தைகளை பள்ளியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதற்கெல்லாம் கட்டாயக்கல்வி சட்டத்திலே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள், ஒன்று சேர்ந்து போராடுவோம். தனியார் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என்றுக்கேட்டுக்கொள்கிறேன். “

________________________________________________________

அடுத்து கருத்துரை வழங்க வந்தார் சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினரான கல்வியாளர் திரு..சீ.ராஜகோபாலன் அவர்கள்.

கோவையைச் சேர்ந்த சங்கீதா, தன் குழந்தைக்கு கல்வி கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கத்திலே தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,  இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிசம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் பேசலாம் என்றார். அஞ்சலி செலுத்தப்பட்டபின் தன் கருத்துரையை தொடங்கினார். அவர் பேச்சிலிருந்து,

”1964-ஆம் ஆண்டு இலவசக் கல்வி, அனைவருக்கும் கல்வி தொடங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. ஆனால்  1978-ல் கட்டணக் கல்வியைக் கொண்டுவந்தார்கள். அப்போழுது ஒரு கட்டுரை நான் எழுதியிருந்தேன். அதை அரைப்பக்கமாக  வெளியிட்டிருந்தார்கள். நான் அதிலே எடுத்துச் சொன்னேன்.  நீங்கள் கட்டணக் கல்வியை அனுமதித்துவிட்ட காரணத்தாலே  இலவசக் கல்வி மறைந்து விடும். அதுமட்டுமல்ல, தமிழ் தமிழ்நாட்டைவிட்டு ஓடிவிடும்.  தமிழை முதன்மையாக எடுத்துப்படிப்பது கூட நின்றுவிடும் என்று எழுதியிருந்தேன்.”

“இன்றைக்கு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட கழக பள்ளிகளிலோ அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ இலவசக்கல்வி கற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இன்று அவர்களின் பிள்ளைகளின் அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணக் கல்விக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் நீங்கள் அனைவரும். இப்பொழுது அரசு அதிகாரிகளெல்லாம் மிகக் கெட்டிக்காரர்கள். எப்போதுமே திசை திருப்புவதிலேயே மகாக் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.”

“அந்த வகையிலேதான் இப்பொழுது என்ன செய்தார்களென்றால் சமச்சீர் கல்வி, அடுத்தது கட்டண நிர்ணயம் என்று சொன்னார்கள். இந்த இரண்டுமே திசை திருப்பும் முயற்சியே என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இலவசக் கல்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால், இலவசக் கல்வி வேண்டாம்,அதற்கு பதிலாக சமச்சீர் கல்வி என்று நமது கோரிக்கையையே மாற்றி விட்டார்கள். இன்றைக்கு இலவசக் கல்வி பற்றி பேசவேயில்லை. இலவசக் கல்வி நமது உரிமை. இலவசக் கல்விக்கு பதில்  குறைந்த கட்டணம் கொடுத்தால் போதும் என்று நாம் அவல நிலைக்கு வந்திருக்கிறோமென்றால் இதை மாற்றிய அரசை என்னவென்று சொல்வது? நமது கோரிக்கையே அர்த்தமில்லாமல் எங்கேயோ திருக்கப்பட்டுவிட்டது.அரசு பள்ளிகளால் ஏன் தரமான கல்வியைத் தரமுடியவில்லை? ”

அதைத்தொடர்ந்து அவர் அரசு எவ்வாறு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை ஒழித்து விட்டு தனியார் பள்ளிகளை ஊக்குவித்தது  என்றும்,தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் பற்றியும் சமச்சீர்கல்வி பற்றியும்  விரிவாகப் பேசினார். இலவசக் கல்வியே நமது முடிவான கோரிக்கை, அதுவரை கட்டணக் கல்வி என்பது தற்காலிகமானது என்றும் அவர் பேச்சு தெளிவுப்படுத்தியது.  (அவரது கருத்துரையை தனி இடுகையாக வெளியிடுகிறோம்.)

_________________________________________________________________

டுத்து பேசிய  ராமனாதன், முன்னாள் எம்பி அவர்கள் பேச்சிலிருந்து,

“அந்த காலத்தில் எம்எல்ஏ  மகனும் சரி அவரின் வாகன ஓட்டியின் மகனும் சரி ஒரே பள்ளியில் ஒரே பாடத்தை தான் படித்தனர். அரசு, அரசு பள்ளிகளை மேம்படுத்த நிறைய முயற்ச்சிகள் எடுக்கும், நிறைய நிதி ஒதுக்கும்.அப்பொழுதெல்லாம் இவ்வளவு தனியார் பள்ளிகள் இல்லை. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.”

அவரைத்தொடர்ந்து பேசிய ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ “தனியார்மயக் கொள்ளைதான் – அரசாங்கத்தின் கொள்கை” என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சிலிருந்து,

ருணாநிதி ஆட்சியானாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியானாலும் சரி, எனக்கு இவ்ளோதான் கட்டணம். பில்லு போட்டு இவ்வளவு கட்டணம்,பில்லு போடாமல் இவ்ளோ கட்டணம,  கட்டவில்லையா, டிசியை வாங்கிட்டு போய்டு, மாணவர்களை நிற்க வைப்பது என்று பல அராஜகங்கள். விருத்தாசலம் மாவட்டத்தில் மட்டும் 30 தனியார் பள்ளிகள் உள்ளது. தினந்தோறும் இந்தப் பிரச்சினை இருந்துகிட்டே இருக்கு. தமிழக அரசு சட்டம் போட்டு நீதியரசரை நியமிச்சு கட்டணம் போட்டும் தனியார் பள்ளி முதலாளிகள் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். சுப்ரீம் கோர்ட்  அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தோத்துப்போய் விட்ட்டார்கள்.”

“அப்படியும் அவர்கள், அரசு சொல்வதைக் கேட்ட மாட்டோம் என்கிறார்களென்றால் அப்படியும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றால் என்னவென்று சொல்லுவது. தனியார் முதலாளிகளின் கொள்கைதான் அரசின் கொள்கைகள். கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமையாக, வாழும் உரிமையாக அரசியல் சாசன ஷரத்து இருபத்தியொன்று ஏழு  கூறுகிறது. 16 வயது வரை கல்வி பெறும் உரிமை உள்ளது.  கருத்துரிமை, பேச்சுரிமை, தொழிற்சங்க உரிமை என்று எப்படி சொல்லுவோமோ அது போல கல்வி உரிமையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடலாம்.  இந்த சட்டம் என்னுடைய உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் இந்த நீதிமன்றம் என்னுடைய உரிமையை நிலைநாட்டவில்லையென்றால் நாமேதான் களத்தில் இறங்கி போராடவேண்டும்.”

அதோடு, கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசு என்ன சொல்கிறது,  தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டுபாடியாகவில்லை என்று கட்டணம் நிர்ணயிக்கிறது. உலகில் 135 நாடுகளில் தாய்மொழிக்கல்விதான். அய்யா ராசகோபாலன் சொன்னது போல இன்றைய பல அறிஞர்கள் தாய்மொழியில் கல்வி கற்றவ்ர்கள்தான்.நமது தண்ணீரை ஒரு லிட்டருக்கு 12 காசு கொடுத்து வாங்கி விட்டு அதை  கொகோகோலா 18 ரூபாய்க்கு நம்மிடம் விற்கிறான். நம்முடைய இயற்கை வளம், இரும்புத்தாது தனியார் முதலாளிகளுக்கு 27 ரூபாய்க்கு விற்கிறான்.  நம்முடைய காடுகள், மலைகள், பாக்சைட் தாது அனைத்தையும் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டான். இந்த வளங்கள் ஒருநாள் வற்றிவிடும். எண்ணெய் வளத்தை எடுத்தால் தீர்ந்துவிடும், கோலார் தங்கவயலில் தங்கம் தீர்ந்துபோகிறது.”

“ஆனால், இந்த கல்வி எனும் சுரங்கம் வற்றாது. 120 கோடி இந்திய மக்கள் தொகையில் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். எல்கேஜி போய் ப்ரிகேஜு அதற்கு 20000 ரூபாய். பிரிகேஜியில் என்ன செய்யும்? குழந்தை சாப்பிடும், தூங்கும், வீட்டுக்கு வந்துவிடும்?அதற்கு எதுக்கு இருபதாயிரம் ரூபாய்? மருத்துவக்கல்லூரிக்கு ஒரு மாணவனுக்கு எட்டாயிரம் பீஸ். எல்கேஜிக்கு 20000 ரூபாய்? இலவச டீவி தருகிறேன், வாசிங் மெஷின் தருகிறேன், லேப்டாப் தருகிறேன் என்று சொல்கிறவர்கள் ஏன் இலவசக் கல்வியை தருவதில்லை? எதிர்க்கட்சிகளும் ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்? ஒரு எல்கேஜி சீட்ட்டுக்கு அநியாயக் கொள்ளையாக இருபதாயிரம் ரூபாய் வாங்குகிறார்களே? பெற்றோர்களும் எப்படியாவது படித்து தம்பிள்ளைகள் மேலே வந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.”

ஒரு கடையில் கிரைண்டர் வாங்குகிறோம் மிக்சி வாங்குகிறோம். ஒரு கடையில் மூவாயிரம் சொல்கிறான். ஒரு கடையில் இரண்டாயிரத்து எண்ணூறு என்கிறான். உடனே அவனிடம் இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் கிரைண்டரை மூவாயிரம் என்கிறாயே என்று சண்டை போடுகிறோம். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவோம் என்கிறோம். நான் பெரிய அதிகாரி என்கிறோம். ஆனால், இங்கிருக்கும் நந்தினி ஸ்கூலில் கோவிந்தராஜன் கமிட்டியில் போட்ட கட்டணத்தை தாண்டி அதிகமாக கேட்கிறார்கள்,  யூனிபார்முக்குத் தனியாக வாங்குகிறார்களே, எத்தனைப் பெற்றோர்கள் கட்டணத்துக்கு கூடுதலாக வாங்குகிறார்கள் என்று கேட்கிறார்கள்? ஏன் கேட்காமலிருக்கிறார்கள்?”

“நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்றும் ஒளிவு மறைவு கிடையாது. பயம், தயக்கம், அறியாமை. அதைப் போக்குவதற்கு பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்., பல சுவரொட்டிகள், பல முழக்கங்கள். நமக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி உரிமை இருக்கிறது. அனைத்து மக்களும் வீதியில் இறங்கி கேட்க வேண்டும். கட்டணத்தை குறைக்குமாறு 15  ஊரில் போராட்டம் செய்தால் அடுத்த ஊரில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து கேட்பார்கள்.  இவையெல்லாம் பின்னிப் பிணைந்தது. ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பள்ளியை முற்றுகையிட்டு கூடுதல் கட்டணம் வாங்குவதை தடுத்தி நிறுத்தினால் இதைப்பார்த்து மற்ற பள்ளிகளிலும் மக்கள் போராடுவார்கள். நாங்கள் போராடி வெற்று பெற்று ஆய்வாளர்  பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணத்தை நோட்டீஸ் போர்ட்டில் போட உத்தரவிட்டார்.”

“கூடுதலாக கட்டாவிட்டால் உங்கள் பிள்ளைகளை பெயிலாக்க முடியாது. தேர்வை நிறுத்தி வைக்க முடியாது. கோயமுத்தூரில் 15ஆயிரம் கட்டணத்தை கட்ட முடியாமல் தீக்குளித்து  தற்கொலை செய்துக்கொண்டதாக ஒரு தாய் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோயமுத்தூரிலுள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யவும், தற்கொலைக்கு  தூண்டியதாக அந்த பள்ளி முதலாளி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

மேலும் வழக்குரைஞர் ராஜூ பேசும் போது வீடுவீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்து பெற்றோர் சங்கத்தில் சேர்த்ததை பற்றியும் பேசினார். சிலரிடம்  இரண்டரை மணிநேரம் கூட பேசி ஆரம்பத்தில் 15 உறுப்பினர்களோடு ஆரம்பித்த சங்கம் இன்று ஆயிரம் பெற்றோர்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

_________________________________________________

அவரைத்தொடர்ந்து வழக்குரைஞர் மீனாட்சி பேசினார். விருத்தாசலம் பகுதியில் இன்று எழுந்த தீப்பொறி நாடு முழுக்க பரவட்டும் என்ற வாழ்த்தோடு தனது உரையைத் தொடங்கினார்.

நமது அரசியலமைப்புப் பிரிவுகளின் படி கல்வி எப்படி நமது வாழ்வுரிமைகளின் கீழ் வருகிறது என்பதை தெளிவாக விளக்கினார். அவரது உரையிலிருந்து,

“ தமிழ்நாட்டின் அனைத்துப் பெற்றோரின் மனசிலும்  ஆழமாக பதிந்திருந்திருக்கும் பெயர் எதுவென்றால் ரவிராஜபாண்டியன். ஏனெனில், அவர்தான் நமது குழந்தைகளில் படிப்புக்கு பள்ளிக்கட்டணத்தை நியமிக்கப் போகிறவர். நமது ஆதங்கத்துக்கும், வெற்றிக்கும் ஒரே காரணமாக இருக்கப்போகிறவர் இப்போது அவர்தான். அனைவருக்கும் இலவசக் கல்வி சாத்தியமா? நமது ஊரில் எங்கும் சாத்தியமாக இல்லை. இந்தியாவைத் தவிர மக்கள் தொகை அதிகமாக கொண்டநாடுகளில் கூட கல்வி இலவசம். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட கல்வி இலவச உரிமை.”

1947- இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுப்பினர். 1947-ல் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வருகிறது. அந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் ஷரத்து 26 என்ன சொல்கிறதென்றால், இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது உரிமையாகும். அதுவும் குறிப்பாக குறைந்த பட்சம் 6 முதல் 14 வயது அடிப்படை கல்வி உரிமையாக்கபட வேண்டும். அது கட்டாயமாகக் கொடுக்கப்படவேண்டும், அன்று  இந்தியா இட்ட கையெழுத்தில் நம் அனைவருக்கும் கல்வி என்பது இலவச உரிமையாக்கப்பட்டுள்ளது.”

“நமது அரசியலமைப்புச் சட்டம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பிரிவுகள், பகுதி 3 மற்றும் பகுதி 4.  பகுதி 3 நமது அடிப்படை உரிமைகளை தருகிறது. அடிப்படை உரிமைகள். பகுதி நான்கில் வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளது. இன்று நமக்கெல்லாம் கல்வி இலவச உரிமையாக இருக்கிறதென்றால் அதற்கு ஒரு பெண் காரணம். அவருடைய பெயர் மோனிக் ஜெயின்.  அவர் கர்நாடகத்தின் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேருகிறார். அவரை 60000 ருபாய் கட்டச்சொல்கிறார்கள். அரசாங்கத்திலோ ஏழாயிரம் ரூபாய். ஆனால், மேனேஜ்மெண்ட்டில் 60000 ரூபாய்.  ”கல்வி எனது அடிப்படை உரிமை, ஷரத்து 21 எனக்கு அந்த வாக்குறுதியைத் தருகிறது.” அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். அதில் நான் சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய உரிமை அடங்கியிருக்கிறது.  அந்த ஷரத்துக்குள் எனது கல்வியுரிமை அடங்கியிருக்கிறது என்று வழக்குத் தொடுத்தார்.”

“வழக்கு அவருக்குச் சாதகமாக முடிகிறது. ஆனால், அதற்குள் அவர் படிக்கவேண்டிய காலம் முடிகிறது. படிக்கமுடியவில்லை. ஆனாலும் கூட ஒரு பெண் எழுப்பிய ஒரு குரல் நமக்கு அடிப்படை உரிமையை வழங்கியிருக்கிறது என்று சொன்னால் நாம் எல்லோரும் எழுப்பும் இந்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.”

“1973- இல் தனியார் கல்வி முதலாளிகள் ஐந்து பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். ஷரத்து 19 1 டி என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அது எனக்கு வியாபாரம் செய்யும் உரிமையை தருகிறது, அதனால் கல்விக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அதைத் தடுக்கலாமா என்று கேட்கிறார்கள். அதில் தனியார் கல்வி முதலாளிகளின் கோரிக்கை என்னவென்றால் “ நீங்கள் அனைவருக்கும் இலவசக் கல்வியை தரச் சொல்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதைப் பொறுத்துத் தீர்ப்பு வழங்கவேண்டும்” என்பதுதான். அப்போது ஷரத்து 45ஐ உச்சநீதிமன்றம் கவனிக்கிறது. இந்த ஷரத்துப்படி 6 வயதிலிருந்து 16 வயது வரை கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.  ஆக, முழுக்க முழுக்க கல்வி என்பது  நம்முடைய உரிமையில் கைவைக்க நீதிமன்றத்துக்கும் கிடையாது.”

” உலக வங்கியால்  நாடாளுமன்றங்களும்  கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனுடைய தாக்கம் அரசுத்துறைகளிலும் நீதிமன்றங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, தனியார் கல்வி நிறுவனங்களும் காசு பார்க்கட்டும் என்று சொல்கிறது. அதுதான் தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் இலவசமாக கல்வியைக் கொடுத்தால் போதும், மீதி 75 சதவீதத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நான்கு வகையான பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், நான்கு வகையான மார்க் என்று இருக்கிறது. இவையனைத்தையும் ஒன்றாக்கி பரிசீலித்து ஒரு பாடத்திட்டமாக்கி இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அதை தடுத்தி நிறுத்தியிருப்பதை நாம் எதிர்த்து போராட வேண்டும்.தடுத்து நிறுத்த வேண்டும். ”.

_____________________________________________________

டுத்துப் பேசியவர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் கணேசன் அவர்கள். பெற்றோர்கள் ஒன்று திரண்டு போரடவேண்டிய அவசியத்தை மிகவும் அருமையாக உணர்த்தினார். அவர் பேசியதிலிருந்து,

“இன்று அனைத்து பெற்றோர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பது என்னவென்றால் பள்ளியின் கட்டணம்தான்.ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் பள்ளிகளைத் தேடிசெல்ல வேண்டியிருக்கும். இப்போது, புற்றீசல் போல பல்கிப் பெருகிக் கிடக்கின்றன்.  இந்த விருத்தாசலத்தின் சந்து பொந்துகளில் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வாடகைக்குக் கூட இடங்களை எடுத்து பள்ளிகளை நடத்துக்கிறார்கள். பள்ளிகளுக்கென்று வரையறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை வசதிகளைக்க்கூட கணக்கிலெடுக்காமல் இன்று பள்ளிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன.”

“நான் கஞ்சி குடித்தாவது பத்து பாத்திரம் நடத்தியாவது என் பிள்ளையை படிக்க வைப்பேன். என்னைப்போல் என் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துதான் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றன்ர். இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் என்ன நடந்ததென்றால், இந்த நியாயமான கோரிக்கை நம் உரிமையாகிய இலவசக் கல்வியை தனியார் பள்ளிகளின் சட்டையைப் பிடித்து ”என்பிள்ளைக்கு கல்வி கொடுறா  நாயே ” என்றுஉரிமையோடு கேட்பதற்கு பதிலாக அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.”

” ஒரு விஷயத்தைச் சொன்னால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு குழந்தையை எல்கேஜியில் சேர்க்க பொதுவாக எவ்வளவு செலவாகும்? கிராமப்புறங்களாக இருந்தால் மூன்றாயிரம். ஓரளவு வசதியாக இருந்தால் ஆறாயிரம். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு லட்சம்  செலவு ஆகிறது. வேலம்மாள் இண்டர்நேசனல் ஸ்கூல், சென்னை பப்ளிக் ஸ்கூல், எஸ்பிஓஏ இன்னும் நிறைய இருக்கிறது அங்கெல்லாம் இந்த நிலைமைதான். இந்த நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் எல்லாம் வறண்ட மாவட்டங்கள். ஆனால், அங்கே போனால் ஒரே கார்களாகத்தான் நின்றுகொண்டிருக்கும், ஏனெனில் அங்கிருக்கும் பள்ளிகளில்தான் எல்லா ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளெல்லாம் படிக்கிறார்கள்.”

“அங்கெல்லாம் பிள்ளைகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள். படிக்க வைத்து அனுப்புவதில்லை. அங்கு எதைக்கேட்டாலும் விலையேறிப் போய்த்தான் கிடக்கிறது.  இன்னொரு செய்தி, ஒரு பள்ளிக்கூடத்தில் 5000 பிள்ளைகள். அவர்கள் அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள். ”என் பிள்ளை இந்த பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறது” என்று பெற்றோர் எழுதுவது போல. ”கோவிந்தராசன் கமிட்டி ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது, இந்த பள்ளிக்கூடத்தை ஐந்தாயிரம் கொடுத்து நடத்தமுடியாது. என் பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்காது. அதனால் தயவு செய்து கோவிந்தராஜன் கமிட்டி என் பிள்ளைக்கு பீசை கொஞ்சம் உயர்த்திக்கொடுக்கவும் “ என்று பிள்ளைகள் மூலம் ஃபார்ம் கொடுத்து அனுப்புகிறார்கள்.”

“எவ்வளவு நூதனமாகச் சிந்திக்கிறார்கள், பாருங்கள்,  நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா இப்படி? இந்த அயோக்கியப் பயலை நடுத்தெருவில் தூக்கிபோட்டு மிதிக்க நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?  எதுவும் முடியாமல் பெற்றோர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனைக் கமிட்டிப் போட்டாலும் எதுவும் தீரவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? தனியார் கல்வியை அனுமதித்தவர்கள்தானே! இதனால் எத்தனைப்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? அனைவரும் ஒன்றாகத் திரண்டு போராட வேண்டும். ”.

___________________________________________________

தற்குப் பின்னர். மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1: இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை குறைத்துக் கொள்ளவும், மேலும் கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2: அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு எல்கெஜி, யூகேஜி முதல் இலவசமாக வழங்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி  அடிப்படை உரிமையான 6 முதல் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை மட்டுமே உத்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட நீதியரசர் ரவிராஜப்பாண்டியன் கமிட்டியை ரத்து செய்ய இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழ்நாடு அரசு இவ்வாண்டு சேர்க்கைக்காக  கோவை பிரேஸ் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து உயிரழந்த சங்கீதா மரணத்துக்கு காரணமான பள்ளி முதலாளியை கைது செய்து அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டுமென ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. மேலும் சங்கீதாவின் குடும்பத்துக்கு  உரிய இழப்பீடு வழங்கவும்,  யூகேஜி படிக்கும் அவரது மகனின் கல்வி கட்டணம் முழுவதையும்  தமிழக அரசே ஏற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தின் சமச்சீர் கல்வி கட்டணத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக பாடத்திட்டத்தையே நிறுத்தி வைத்து முந்தைய பாடத்திட்டமே செல்லுமென சொல்லியிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்தவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: சமூக சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மனிதாபிமானமும் உடைய தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கவும், ஆங்கில வழிக் கல்வியையும் தனியார்மய பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டுமென பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாகக்  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8: அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை  அரசு பொறுப்பில் இலவசமாக வழங்கத் தடையாக உள்ள தனியார் மயத்தை எதிர்த்து போராட பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பெற்றோர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை

நாடுகிறார்களென்றும், தனியார் பள்ளிகளின் அராஜகத்தைப்பற்றியும்,  பெற்றோர் சங்கத்தில் சேர்ந்தபின்னர் மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகையின் பலன்களை பற்றியும் தகவல்கள் தெரிவித்தனர். இறுதியில் பெற்றோர்கள் அனைவரும் தாம் ஒன்றாக இணைந்து போராடுவதில்தான் தமது பிள்ளைகளின்  கல்விக்கான தீர்வு இருக்கிறது என்பதையும் உணர்ந்துக்கொண்டதாக அந்த கலந்துரையாடல் இருந்தது.  இறுதியில் பெற்றோர் சங்கத்தின் பொருளாளர் க.வீரகாந்தி நன்றியுரை வழங்க கூட்டம் முடிவடைந்தது. தனியார் மய பள்ளிகளுக்கெதிராக விருத்தாசலத்தில் எழுந்த இந்த தீப்பொறி நாடெங்கும் பரவட்டும்.

_________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், விருத்தாசலத்திலிருந்து..

____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,

சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமீபத்தில் அதை சட்டமாக்கியும் முடித்துவிட்டார்கள். அமைச்சரவை உத்தரவு வந்த போதே மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் போராடியதோடு சட்டப் போராட்டத்தையும் கையிலெடுத்தது.

இதே நேரத்தில் சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சமச்சீர் கல்விக்காக தி.மு.க அரசு அச்சிட்ட நூல்களை அழிக்க கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். வெளியே சி.பி.எம் கட்சி ஜெயா வீட்டில் தனது எம்.எல்.ஏக்களோடு கூருப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அக்கட்சியின் மாநில செயலர் பாசிச ஜெயாவை மயிலிறகால் வருடிக் கொண்டிருந்தார். அதாவது அம்மா பாத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.

ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர் அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று

வழக்கறிஞர் சியாம் சுந்தர் என்பவரும், திமுகவின் முன்னாள் கூடுதல் அடிஷனல் அட்கவேட் ஜெனரல் வில்சன் ஒரு மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதாடினார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அது சார்ந்த கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம் சார்பில் ம.உ.பா.மையத்தின் இளம் வழக்கறிஞர்கள் விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். ம.உ.பா.மை சார்பாக வழக்கறிஞர்கள் காந்தி, புருஷோத்தமன், மோகன், தியாகு ஆஜராகினர். மேலும் ஒரு வழக்கறிஞர் படையே இதற்காக தீவிரமாக வேலை செய்து வந்தது.

இன்று நடந்த விவாதத்தில் நமது வழக்கறிஞர்கள் பாசிச ஜெயா அரசின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக நிரூபித்தார்கள். முக்கியமாக 15ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும், அதற்குள் பழைய பாடத்திட்டம் அச்சடிக்கப்படும் என்ற அரசின் வாதத்தை பொய் என்று நிரூபித்தார்கள். அதன்படி பழைய பாடத்திட்டம் அச்சடிப்பதற்காக அரசு, அச்சக உரிமையாளர்களோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்கள். அதில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நூல்களை வழங்கினால் போதுமென்று அரசு கோரியிருந்ததை சுட்டிக்காட்டி வாதாடினார்கள்.

ஆக பதினைந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும், நூல்கள் கிடைக்கும் என்று பொய்யுரைப்பதை நிரூபித்தார்கள். மேலும் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஏன் தரமல்ல என்பது குறித்து இதுவரை அரசு ஒரு விசயத்தை கூட சொல்லவில்லை, விளக்கமளிக்கவில்லை என்பதையும் வாதிட்டார்கள். 200 கோடி ரூபாய் செலவிட்டு அச்சிடப்பட்ட நூல்களையும், அந்த திட்டத்திற்கான பிரயத்தனத்தையும் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். மேலும் இதில் ஜெயா அரசி காழ்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி வேறு காரணமில்லை என்றும் பேசினார்கள்.

இன்று இந்த வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்சில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னால் நடந்தது. இறுதியில் நீதிபதிகள் சமச்சீர் கல்வியை ரத்து செய்த புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் 200கோடியை செலவழித்து விட்டு தற்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த காரணமுமில்லை என்பதையும், அரசின் உள்நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வழக்கை ஒத்திவைத்தார்கள்.

தற்போது தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே ஆக வேண்டும். பாசிச ஜெயா அரசு இதற்காக உடனே உச்சநீதிமன்றம் சென்று இந்த இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கும். அதற்கென்று பெரிய வழக்கறிஞர்களை  நியமித்து, பெரிய செலவில் வாதாடும். எனினும் இந்த இடைக்காலத் தடை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

மேலும் ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. சமச்சீர் கல்வி வேண்டுமென பலர் வழக்குப் போட்டதை ஒன்றாக இணைத்தே உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. எனினும் ம.உ.பா.மை சார்ந்த மனுதான் விரிவாகவும், ஆதாரப் பூர்வாகமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் செல்லும் என்ற நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. மக்கள் அரங்கிலும் சரி, சட்ட அரங்கிலும் சரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ம.க.இ.க அமைப்புகள் தயாராகின்றன.

தி.மு.க போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில் ம.க.இ.க இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பாசிச ஜெயாவுக்கு நாங்கள்தான் உண்மையான எதிரிகள், அதனால் எங்களது போராட்டமும் தொடரும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

21

ஜெயலலிதாமிழக சட்டசபையில் கடந்த புதன்கிழமையன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணையத்திலும், தமிழ்தேசிய ஆர்வலர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதுவுமே நடக்காத நிலையில் இந்த அளவுக்காவது தீர்மானம் போட்டிருக்கும் ஜெயாவை பாராட்ட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.

தீர்மானத்தை ஆதரித்த திமுக கடைசியில் விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்படாத காரணத்தால் வெளிநடப்பு செய்தது. மறுநாள் சட்டசபையில் கச்சத்தீவை மீட்பதற்காக தாம் நடத்தும் சட்டப் போராட்டத்தில் வருவாய்த்துறையையும் ஒரு வாதியாக சேர்க்க உச்சநீதி மன்றத்திடமும் கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.

வருவாய்த்துறையிடம் ஆதாரமாக உள்ள 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது என்றும், அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்றால் கச்சத்தீவை அது குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார் ஜெயா.

1974- இல் தமிழக முதல்வராக கருணாநிதி இருக்கும் போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உரிமை உள்ள கச்சத்தீவு மத்தியில் இருந்த காங்கிரசு அரசால் தாரை வார்க்கப்பட்டது. அப்போதே இதுபற்றிய கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லித் தப்பியவர்தான் கருணாநிதி எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா, அஞ்சலக அரசியல் நடத்தியதாக கருணாநிதியின் பிரதமருக்கான கடிதங்களை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. முல்லைப் பெரியாறு துவங்கி காவிரிப் பிரச்சினை வரை அனைத்தையுமே தீர்க்க‌ முந்தைய‌ திமுக‌ அர‌சு எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை என‌க் குற்ற‌ம் சாட்டினார் விஜ‌ய‌காந்த். தமிழ் சமூகத்தை அழித்த பெருமையும் திமுக விற்கே உண்டு என்றும் குற்றம்சாட்டிய அவர் கலைஞரின் 4 மணிநேர உண்ணாவிரதம் என்ற நாடகத்தையும் கிண்டல் செய்தார். இத‌னைய‌டுத்துதான் முதல் நாளில் திமுக சட்டசபையில் இருந்து வெளியேறிய‌து.

தில்லியில் சென்று முகாமிட்டு ம‌ற்ற‌ மாநில‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளைக் கூட்டி பேசி ம‌த்திய‌ அர‌சுக்கு அழுத்த‌ம் த‌ர‌ வேண்டும் என்கிறார் நெடுமாற‌ன். இல‌ங்கை மீதான‌ பொருளாதார‌த் த‌டைவிதிக்க‌ கோரி இந்திய‌ அர‌சை ஐ.நா.விட‌ம் வ‌லியுறுத்த‌க் கோரும் தீர்மான‌த்தையும், முள்வேலி முகாமிலிருக்கும் ம‌க்க‌ளுக்கு நிவார‌ண‌ம் அளிக்க‌ வ‌லியுறுத்தும் தீர்மான‌மும் ந‌ம்பிக்கை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என்கிறார் வைகோ. ச‌க‌ல‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் இதுபோல‌ பாலைவ‌ன‌த்துச் சோலையாக‌ இத்தீர்மான‌த்தை பார்க்கின்ற‌ன‌ர்.

மத்திய அரசை வலியுறுத்தும் இத்தீர்மானத்தில் கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசையும் மாநில அரசையும் 2008 இல் பிரதிவாதியாக அன்று வாதியாக இருந்த ஜெயா சேர்த்திருக்கிறார். இன்று அவர்தான் பிரதிவாதி, வாதியும் அவர்தான். இந்த கேலிக்கூத்துக்கு மத்தியிலும் வருவாய்த்துறையையும் வாதியாக சேர்க்கச் சொல்லவும் அவர் தயங்கவில்லை. இதற்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை அல்லது ஒரு நாடு தனிநபருடன் போடும் பரஸ்பர ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் அறுபதுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் கூட வெற்றி கண்டிருக்காது. அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றிருந்தால் நாம் அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தைக் கூட ஒரு ரிட் போட்டு தூக்கி எறிந்திருக்கலேமே?

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பிறகு குறிப்பாக 90 களுக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் வெற்றி பெற முடியாது என்பது நம்மை விட ஜெயாவுக்கு நன்றாகத் தெரியும். கச்சத்தீவு மீதான நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது சரியல்ல என்பதுதானே வாதம். அப்படியானால் நமது நாட்டில் இன்று அமுலாகிக் கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கூட நமது நாட்டுச் சட்டம் செல்லுபடியாகாதே அதற்கு எதிராக ஜெயாவோ கருணாநிதியோ பேச முன் வருவார்களா ? மாட்டார்கள். மாறாக, நான்தான் நோக்கியாவை கொண்டு வந்தேன், எனது ஆட்சிக் காலத்தில்தான் ஹூண்டாய் கம்பெனிக்கு நிலம் ஒதுக்கினோம் என்றெல்லாம் கூறி தாங்கள் நாட்டு மக்களது இறையாண்மையை விற்றதையே தொழில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றெல்லாம் பீற்றித் திரிந்த்தை அனைவரும் அறிவார்கள்.

கச்சத்தீவை மீட்க மற்ற மாநில அரசியல்கட்சி தலைவர்களோடு பேசி மத்திய அரசுக்கு எதிராக போராடி அழுத்தம் தர ஜெயாவுக்கு ஐடியா கொடுக்கிறார் மாவீரன். யாருக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தேவையாக இருக்கிறது என்பதை குறைந்தபட்சமாக பரிசீலித்தாலே இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இத்தீவில் மீனவர்களுக்கான பயன்பாட்டைத் தாண்டி எதாவது பொருளாதார கனிம வளம் இருக்கிறதா ? இல்லை இந்த இடம் ஏதாவது ராணுவரீதியில் கேந்திரமான இடமா ? என்பதை பரிசீலித்தால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது. இதில் மீனவர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவதால்தானே அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஒருவேளை கச்சத்தீவில் மட்டும் எண்ணையும், இரும்புத் தாதும் அளப்பறிய அளவில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினை என்றோ ஃபைசல் செய்யப்பட்டிருக்கும். தமிழக மீனவர்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் போது இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக கட்சிகளும், அரசும் ஏன் கருதப்போகிறது? கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்றால் அது தமிழக மக்களை அணிதிரட்டி மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதன் மூலமே செய்ய முடியும். அதற்கு தயாரில்லாத கட்சிகள் இப்படி வெத்து சவடால் அடிப்பதையே ஈழ ஆதரவாளர்கள் கொண்டாடினால் அதை என்னவென்று சொல்ல?

பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரக் கப்பல்களில் பிடிக்கப்படும் மீனை நமது மீனவர்களுக்கு கிடைக்கச் செய்வதையா அரசு செய்கிறது? இல்லை. கடலின் மீதான மீனவர்களின் உரிமையாக இருக்கட்டும், நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் 90 களுக்குப் பிறகு அரசு வெளிப்படையாக வேறு மாதிரிதானே நடந்து கொள்கிறது. அதில் கருணாநிதி ஆட்சிக்கும் ஜெயா ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் வந்துவிட முடியும். இப்போது கூட காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடித அரசியலைத்தானே ஜெயாவும் பின்பற்றி இருக்கிறார்.

ஆனால் இதே ஜெயாதான் கச்சத்தீவு பிரச்சினையில் ஸ்வரண்சிங் இடம் கருணாநிதி வருத்தம் மட்டும்தான் தெரிவித்தார், எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்கள் மீது பன்னாட்டு முதலாளிகளுக்காக மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் போர் நடத்தி அவர்களை உள்நாட்டில் அகதிகளாக ஓட விட்டிருக்கும் மன்மோகன்சிங் அரசு இலங்கை முள்வேலி முகாமை பற்றி அக்கறை கொள்ள வாய்ப்பில்லை. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில் தான் ஒன்றும் சொல்ல முடியாது என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்ல முடியும். மேலும் அரசின் கொள்கை முடிவு, அது உள்நாடாக இருந்தாலே தலையிடாத நீதிமன்றமா இன்று அயல்நாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் முடிவு செய்துவிடும்?

மேலும் ஜமீன்தாரி ஒழிப்புக்கு முன்னர் இருந்த வருவாய்த்துறையின் ஆவணங்களை முன்வைப்பது என்பதே இந்த வழக்கினை நீர்த்துப் போக வைப்பதற்கான வழிமுறைதான். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் பலவும் பின்னால் சட்டமாக வாய்ப்புள்ளதால் இதுபற்றி எதிரான தீர்ப்புதான் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை என்பது  ஒருபுறமிருக்க உள்நாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் மீட்டு வரைமுறைப்படுத்த வேண்டிய போராட்டம் உள்நாட்டில் கிளம்ப வாய்ப்புள்ளதையும் அவர்களை அறிவார்கள். கருணாநிதியின் கடித அரசியலை மிஞ்சி இந்த சட்டமன்றத் தீர்மான அரசியலுக்கு எந்த பலனுமில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுத்தான் கச்சத்தீவை கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதமெல்லாம் எடுபடாது. 1994 ல் சொந்த நாட்டில் பொதுத்துறை நவரத்னாக்களை தனியாருக்கு விற்க வழிவகை செய்ய காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நரசிம்மராவ் அரசு பிறகுதான் அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரிய போதும் அன்றைய நாடாளுமன்றம் வாக்கெடுப்பில்லாத விவாதங்களை மாத்திரம்தான் அனுமதித்தது. இதற்கு பிறகும் கச்சத்தீவை ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தில் பேசிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் எடுபடாது.

_________________________________________________

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?

தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.

கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.

இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.

கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

ஆனால் இவர்களுத தீர்மானங்கள், கருத்துக்களால் வரலாறு நிர்ணயிக்கப்படுவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலில் போர் என்றால் மரணங்கள் சகஜம்தான் எனத் தெரிவித்த அம்மையார் உடனடியாக ஈழத்தாயாக அவதாரம் எடுத்து 16 சீட் கிடைத்தவுடன் கொடை நாடு போய் ஓய்வெடுக்கத் துவங்கினார். முள்ளிவாய்க்காலுக்காக இன்றுவரை கூட ஒரு அறிக்கை கூட எதிர்த்து வெளியிடாதவர்தான் ஜெயா. எல்லா ஜனநாயக இயக்கங்களுக்கும் எதிரான அவர் அன்று தனி ஈழத்தைக் கூட ஆதரித்தார். அவருக்காக பல தமிழ் தேசிய அமைப்புகளும் பிரச்சாரம் செய்தனர்.

அதன்பிறகு பிரச்சாரம் செய்யப் போனவர்கள் மாத்திரம் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அம்மையார் அறிக்கைப் போர் மாத்திரம் நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாது போன காலத்தில் வந்த அவரது அறிக்கையை விட சட்டசபைத் தீர்மானம் கடினமானது அல்ல என நன்றாகப் புரிந்த பிறகும் இதாவது நடக்கிறதே என்பது போராட முடியாமல் துவண்டு போகின்றவர்கள் மற்றும் போராட முடியாதவர்களின் வாதம்.

உத்தரவாதமான எதிர்காலத்தை தங்களது வாழ்க்கை நடைமுறையில் வர்க்க நலனில் இருந்து பெறுபவர்கள் முள்வேலி முகாமை அதற்குள் இருக்கும் மனிதர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு சட்டசபைத் தீர்மானமே பெரிய சாதனைதான். இதனை இணையத்திலும், செய்தித்தாளிலும் படிப்பதற்காக நேரம் ஒதுக்கியதே அவர்கள் செய்த மாபெரும் தியாகமாகத்தான் அவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு  இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது. இது ஜெயா போன்ற பாசிஸ்டுகளுக்கு புரியுமென்பதால்தான் அவர்கள் இதுபோன்ற நடக்க முடியாத விசயங்களுக்காக போராடுவது போல போராடுகிறார்கள். சீமான், நெடுமாறன், வைகோ, ருத்ரகுமாரன் என நீளும் ஒரு தமிழ்தேசிய பட்டியலே தனக்குப் பின்னால் திரளும் எனத் தெரிந்துதான் ஈழத்தாய் இரண்டாம் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்களது சரணாகதி அரசியலுக்கு பொருத்தமாக அட்டைக்கத்தியை இடுப்பில் சொருகியபடி புரட்சித்தலைவி உலா வருகிறார். புறநானூற்று தாயை கண்ட திருப்தியில் புளங்காகிதம் அடைகிறது நடுத்தர வர்க்கம்.

________________________________

• வசந்தன்
________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்