Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 114

சர்வதேசச் சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பதிவுசெய்துகொண்டு, ‘பரஸ்பர அடிப்படையில்’ சட்ட பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், “வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகள் 2022”-ன் கீழ், புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய பார் கவுன்சில். இவ்விதிகளின் மூலம் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்ற அமர்வுகளின் தீர்ப்புகளை இந்தியாவில் தொழில் துறை சார்ந்த வழக்குகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெருநிறுவனங்கள் தொடர்பான விஷயங்களிலும்; கையகப்படுத்துதல், அறிவுசார் சொத்து விவகாரங்கள், ஒப்பந்த வரைவு மற்றும் பரிவர்த்தனை சம்பந்தமான விவகாரங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டப் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று இவ்விதிகள் கூறுகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டே வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படும் என்று பார் கவுன்சில் கூறுகிறது. சான்றாக, இந்திய வழக்கறிஞர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் நேரடியாக வழக்குகளில் ஆஜராக முடியாது என்றும், இந்திய வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய சட்டத்துறையில் வெளிநாட்டு வழக்கறிஞர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான விவாதம் 2007ஆம் ஆண்டு முதலே எழுப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில், 2009ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றமும், 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும், இந்தியாவில் சட்டப்படிப்பு முடித்த வழக்கறிஞர்கள் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் வழக்காட முடியும் என்று தீர்ப்பளித்தது. 2018ஆம் ஆண்டில், மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. எனவே தற்போது பார் கவுன்சிலால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.


படிக்க: ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!


“இச்சீர்திருத்தம் மூலம் நாடு வளர்ச்சி அடையும்” என்றும், “சர்வதேசச் சட்டங்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்கும்போது நமது வழக்கறிஞர்களின் திறன் மேம்படும்” என்றும் கூறுகிறது பார் கவுன்சில். மேலும், “நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டின் பாய்ச்சலில் உள்ள சிக்கல்களையும், இந்தியாவை சர்வதேச வர்த்தக நடுவர் மையமாக மாற்றுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தீர்க்க இவ்விதிகள் உதவும்” என்கிறது. இவற்றை செயல்படுத்தாவிட்டால், “சட்ட தொழில்முறை நிபுணத்துவத்தை வழங்குவதில் இந்தியாவின் சட்ட சகோதரத்துவம் பின் தங்கிவிடும்” என்கிறது.

ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும், குறிப்பாக தொழில்துறை சட்டங்கள் அந்நாட்டின் தனிச் சிறப்பான சூழல், சமூக நிலைமை, சூழலியல் அமைப்புக்கு ஏற்ப வகுக்கப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, எல்லா நாடுகளிலும் பொதுவான சர்வதேச வர்த்தகச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதற்கு சேவைசெய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதிகளைத்தான் “அந்நிய முதலீட்டின் பாய்ச்சலில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்” என்கிறது பார் கவுன்சில்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுவது குறித்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய சட்டத் துறையில் சர்வதேசச் சட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது இங்கிலாந்து. பார் கவுன்சில் தனது புதிய விதிகளை அறிவித்ததும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (Wales) நாடுகளின் சட்டச் சங்கங்கள் வரவேற்றன. இப்போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து இணங்கி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

90-களில் கொண்டுவரப்பட்ட தனியார்மய – தாராளமய – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளின் ஒருபகுதியாக நாடுகளுக்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) போடப்படுகிறது. பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளுடன் ஏகாதிபத்திய நாடுகள் போட்டுக் கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், அந்நாட்டை கொள்ளையடுவதற்கான பல்வேறு வடிவங்களுள் ஒன்றாகும்.

நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.


படிக்க: நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!


ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல் இன்றுவரை தொழில்துறை, தொழிலாளர்நலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு சட்டத்திருத்தங்களை வரைமுறையின்றி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நம் நாட்டின் சட்டங்களே, கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு ஏற்றவகையில் தளர்த்தப்பட்டு வந்துள்ளது. என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இருப்பதை பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் தொல்லையாகக் கருதுகின்றன. அந்த ‘சிக்கலை’ தீர்ப்பதற்குத்தான், இந்த ‘சீர்த்திருத்தம்’.

போபாலில் மிகப்பெரிய இனப்படுகொலை செய்த யூனியன் கார்பைட் ஆலை, ஸ்டெர்லைட் ஆலை போன்ற நச்சு ஆலைகளுக்கு, சர்வதேச சட்டவிதிகளை மேற்கோள் காட்டி எவ்வித இடையூறும் இன்றி அனுமதி வாங்குவதற்கும் சூறையாடலை நடத்துவதற்கும்தான் இந்த புதிய விதிகள் பயன்படும்.

வெளிநாட்டு வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட பயிற்சிகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இருந்தால், இந்தியாவில் உள்ள சட்ட சகோதரத்துவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற பார் கவுன்சில், நாட்டு வளங்களும் உழைக்கும் மக்களும் சுரண்டப்பட மாட்டார்கள் என்ற எவ்வித உத்தரவாதமும் கொடுக்கவில்லை; கொடுக்கவும் முடியாது.

மொத்தத்தில், பார் கவுன்சிலின் இந்த புதிய விதிகள் தேசத்துரோகமனாதாகும். தேசப் பற்றுள்ள, உழைக்கும் மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு வழக்கறிஞரும், வழக்கறிஞர் அமைப்புகளும் பார் கவுன்சிலின் இந்த புதிய விதிமுறைகளை எதிர்க்க வேண்டும்.

வெண்பா

சென்னை மீனவர்கள் போராட்டம்: மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவாரா நீதிபதி? | தோழர் புவன்

மிழ்நாடு அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னை பூர்வகுடி மீனவர்களை அப்புறப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற மீனவர் பகுதிகளை உயர்நீதிமன்ற சென்னை நீதிபதி அழுக்காக பார்க்கிறார். நீதிபதிகள் முன்வந்து எடுக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்று பூர்வகுடி மீனவ மக்களை வெளியேற்றுவதில் அரசு அதிகாரிகள் அவசரம் காட்டுவது யாருக்காக.?

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திருமண மண்டபங்களில் மது விற்பனை | டாஸ்மாக்கை வைத்து தாலியை அறுக்காதே | தோழர் மருது

டாஸ்மாகை வைத்துதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வந்துவிட்டது. “அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் சுயமான முயற்சியில் முன்னேருகிறோம்” என்று கூறும் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் போன்ற மெத்தபடித்த அறிவுஜீவிகளை வைத்துக்கொண்டு இருக்கும் இந்த திமுக அரசு, நடைமுறையில் “எங்களுக்கு வேறுவழிகிடையாது நாங்களும் சாராயத்தை ஊற்றித்தந்துதான் பிழைப்பு நடத்தவேண்டும்” என்று சொல்கிறது.

ஆனால் கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டவில்லை என்ற கதையாக, வேறு ஒன்றை சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பதை செய்து வருகிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!

காராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் பார்சு கிராமத்தில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.

ரத்தினகிரி மாவட்டத்தின் நானாரில் பெட்ரோ- கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடந்த 2015-ஆம் ஆண்டு தேவேந்திர பட்நாவிஸ் அரசு முடிவு செய்தது. இதனால் கடுமையான சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படும் என்பதனால் மக்கள் போராட்டம் நடத்தியதாலும் எதிர் கட்சிகளின் தற்காலிக எதிர்ப்பினாலும் திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின் உத்தவ் தாக்கரே அரசாங்கம் நானார் பகுதிக்கு மாற்றாக பார்சுவை திட்டத்திற்கான மாற்று இடமாக அறிவித்தது. அந்த வகையில் தற்போது பார்சு பகுதியில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு ஷிண்டே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள பல கார்ப்பரேட் ஆதரவு சட்டங்கள், குறிப்பாக பாரத்மாலா, சாகர்மாலா மற்றும் தேசிய பணமயமாக்கல் திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் இந்தியா முழுவதும் நிலக்கரி சுரங்கங்கள், பெட்ரோ- கெமிக்கல் மண்டலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பல்வேறு கார்ப்பரேட் நல திட்டங்கள் தொடர்ச்சியாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப மாநில அரசாங்கங்களும் இத்திட்டங்களை மெல்ல அமல்படுத்துகின்றன.


படிக்க: ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !


அதற்கு எதிராக மக்கள் போராடினாலும் அதை கீஞ்சித்தும் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சங்க பரிவார கும்பல் தங்களுடைய எஜமானர்களின் நலனுக்காக கார்ப்பரேட் நல திட்டங்களை கொஞ்சமும் பின் வாங்காமல் மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் பார்சு கிராமத்தில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக மண் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று வருவதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள், அவர்கள் வரும் சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டு “ஒருபோதும் இம்மாதிரியான நாசகார திட்டங்களை எங்கள் மண்ணில் அமல்படுத்த விடமாட்டோம்” என்று முழங்கினர்.

“தொடர்ச்சியாக இப்பகுதியில் இது போன்ற திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் கடல்வளம் பாதிக்கப்படுவதோடு பல்லுயிர் பெருக்கமும் அழிந்துபோய், நாங்கள் வாழ முடியாத நிலை உருவாகும். உள்ளூர் வாழ்வாதாரமான சிறு சிறு வேலைகளை கொண்டு பிழைத்து வரும் எங்களை இங்கிருந்து விரட்டியடிப்பதன் மூலம் தற்கொலைக்கு தள்ளுகிறது இந்த அரசு” என்று தங்களுடைய கோபங்களை வெளிப்படுத்தினர்.

ஆய்வுக்குழு உட்பட யாரையும் கிராம பகுதிக்குள் அனுமதிக்காது கொளுத்தும் வெயிலில் மண் சாலையில் குறுக்கே படுத்துகொண்டு நடத்திய உறுதிமிக்க போராட்டம் அரசு அதிகாரிகளை அச்சப்படுத்தியது. உடனே ஒடுக்குவதற்கு முதல் ஆளாக ஓடி வரும் போலிஸ்படை போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்தது. 30 பெண்கள் சிறுகுழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு ரத்தினகிரி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லபட்டனர்.

இப்படி ஆயிரக்கணக்கான கிராம மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து இயற்கையை நாசாமாக்கி அமைக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிலையம் யாருக்கானது என்ற கேள்வி நமக்குள் எழலாம். வழக்கம் போல் இதுவும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகானதும் அதற்கு தரகு வேலை செய்து பொறுக்கி தின்னும் அதானிக்கானதும் தான்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று தேசிய எண்ணெய் நிறுனங்களின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது ரத்தினகிரி சுத்திகரிப்பு பெட்ரோல் கெமிக்கல்ஸ் லிமிடெட்(RRPCL). இந்த கூட்டமைப்புதான் மகாராஷ்டிராவின் மேற்குக் கடற்கரையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை செயல்படுத்த திட்டம் வகுத்து செயல்படுகிறது.

இந்தியாவின் எரிபொருள்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சவுதி அராம்கோ (SA) மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) ஆகிய இரண்டு உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இணைய தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. இவர்களுக்கு தரகு வேலை பார்ப்பதற்கு தயாராகியுள்ள அதானி நிறுவனம் பன்னாட்டு முதலாளிகளுடன் பங்குதாரர்களாக இணைய தயாராகின்றது.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


இப்படி பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பை குறைந்த விலைக்கு சுரண்டி முதலாளிகள் கொழுப்பதற்கு இதுபோன்ற திட்டங்கள் உதவுமே அன்றி நமக்கும் நாட்டிற்கும் ஒரு போதும் பயன் தராது.

இதை அறிந்தே தான் அரசு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் திட்டமிட்டு கார்ப்பரேட் சேவைகளை செய்துவருகின்றனர். அதை தமிழ்நாட்டின் பரந்தூர் விமான நிலையம் முதல் பார்சு பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் வரை கண்டு வருகிறோம்.

இத்திட்டத்திற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் ரத்தினகிரி மக்கள் அதை கடுமையாக எதிர்த்துள்ளனர். எண்ணெய் ஏகபோகங்களுக்கு எதிரான இந்தப் போராட்டம் அப்பகுதி மக்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. எனவே, ரத்தினகிரியில் போராடும் மக்களுக்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்.

டேவிட்

மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் – தமிழ்நாடே விழித்துக்கொள்!

ண்டைக்காடு கலவரம்’ தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கருப்புப்புள்ளி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் நன்கு அறியப்பட்ட இயக்கமாக அரசியல் செல்வாக்கு பெற்ற இயக்கமாக மாற இக்கலவரம்தான் காரணமாக அமைந்தது. இந்து மதவெறியர்கள் அதன் பலனை தற்போது வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1980வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மதக் கலவரங்கள் நடந்ததற்கான வரலாறு கிடையாது. இந்து மக்களும், கிறித்துவ மக்களும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்துக்கொண்டிருந்தனர். பல குடும்பங்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றும் குடும்ப உறுப்பினர்களை கொண்டிருந்தன. அத்தகைய மதநல்லிணக்கத்தை, இந்து மக்களிடையே மதவெறியூட்டி சிதைத்தது ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சுப்பாம்பு. அதன் உச்சநிலையே மண்டைக்காடு கலவரம். பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவில் கிறித்துவ இளைஞர்கள் இந்துப் பெண்களை கேலி செய்ததாக வதந்தியை பரப்பி கலவரத்தை நடத்தியது காவிக் கும்பல். இன்று மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது காவிக் கும்பல்.

படிக்க : நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடைவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, ஹைந்தவ சேவா சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அமைப்பு பக்தர்களிடம் நிதி வசூலித்து “இந்து சமய மாநாடு” என்ற பெயரில் மாநாடு நடத்துகிறது. இந்த மாநாடு 85 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் மதவெறி அரசியல் கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு தி.மு.க. அரசு, இந்து சமய அறநிலையத்துறையே மாநாட்டை நடத்துவதாக அறிவித்ததோடு, தனியார் அமைப்புகள் மாநாடு நடத்தத் தேவையில்லை என்று ஹைந்தவ சேவா சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்து சமய மாநாட்டை “ஆன்மீக மாநாடாக” நடத்துவதாக அறிவித்திருந்தது. இந்நடவடிக்கையை தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றனர். இந்துமதவெறி அமைப்புகள் பக்தி என்ற பெயரில் மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டுவதை தடைவிதிக்கின்ற வகையிலான தமிழ்நாட்டு அரசின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியதே என்றனர்.

ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியானவுடனேயே, இந்து மதவெறிக் குண்டர்கள், ஹைந்தவ சேவா சங்கத்திற்கு சமய மாநாட்டை நடத்த அனுமதியில்லை என்றால் கலவரம் வெடிக்கும் என அரசிற்கு பகிரங்கமாக மிரட்டல் விட்டனர்.

இந்து தர்ம வித்யாபீட தலைவரான சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் என்பவர், “மண்டைக்காட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகளும் அரசும் செயல்படக் கூடாது. மீண்டும் 1982 கலவர நிலைமைக்கு கொண்டு செல்லக்கூடாது” என்றும், பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ் “மண்டைக்காட்டை அயோத்தியாக்கி விடாதீர்கள்” என மிரட்டல் விடுத்தனர்.

மேலும், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கே மிரட்டல் விடுக்கும் தொனியில், பொன்.ராதாகிருஷ்ணன், “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் மனோ தங்கராஜை நம்பி முதல்வர் களத்தில் நின்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” எனப் பேசினார். மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு மதவெறிப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு கோயில் திருவிழாவை தடை செய்தததாகவும், அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தான் காரணம் என்று அவதூறுகளைப் பரப்பினர். அமைச்சர் மனோ தங்கராஜ் கிறித்துவர் என்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மதவெறியைத் தூண்டும் வகையில் போராட்டங்களை நடத்தினர்.

இந்து சமய மாநாடு என்ற பெயரில் மக்கள் மத்தியில் இந்துமதவெறியூட்டுவதற்கும், அம்மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க  அமைப்பை வலுப்படுத்துவதற்குமான ஒரு கருவியாக இம்மாநாட்டை பயன்படுத்துகிறது காவி பாசிசக் கும்பல். மேலும், இந்து மதப் பண்டிகைகளைப் பயன்படுத்தி மக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது.  இந்து சமய அறநிலையத்துறையின் தலைமையில் இம்மாநாடு நடந்தால் இவையெல்லாம் பாதிக்கப்படும் என்பதற்காகவே  இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது காவிக் கும்பல். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல இடங்களில் கோவில் வளாகங்களை கைப்பற்றிக் கொண்டு தங்கள் அரசியல் நோக்கத்திற்காக அடாவடித்தனமாக செயல்படுகிறது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து, கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கூப்பாடுபோடுவதும் இதற்காகதான்.

படிக்க : புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

தொடக்கத்தில் தமிழ்நாடு அரசே ஆன்மிக மாநாட்டை நடத்தும் என்று அறிவித்த தி.மு.க. அரசு, காவிக் குண்டர்களின் போராட்டங்களுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் சமரசம் செய்து கொண்டது. ஆர்.எஸ்.எஸ் கும்பலுகும், தி.மு.க அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இந்துசமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தலாம் என்றும், இந்துசமய அறநிலையத்துறை அச்சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. மார்ச் 5-ஆம் தேதி தொடங்கிய இந்துசமய மாநாட்டில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் உடனான தி.மு.க அரசின் இந்த சமரசப் போக்கை, தில்லை நடராஜர் கோயில் பிரச்சினையிலும், வயலூர் முருகன் கோயிலில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் பணி நீக்கப்பட்ட பிரச்சினையை கையாளும் அணுகுமுறையிலும் பார்க்க முடியும்.

ஆளுநர் ரவியின் இணையாட்சி, செய்தி- சமூக ஊடகங்களைக் கைப்பற்றுவது, இந்துசமய மாநாடு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்து, காலூன்ற எத்தனித்து வருகிறது காவி பாசிசக் கும்பல். இந்த பாசிச அபாய சூழலில், தமிழ்நாட்டு மக்களாகிய நாம் விழிப்புடன் இருந்து, நமது பார்ப்பனீய எதிர்ப்பு மரபை விடாது உயர்த்திப் பிடிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் எத்தனிப்புகளை முறியடிக்க வேண்டும்.

சிவராமன்

நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

டந்த ஆண்டு செப்டம்பர் 28 – ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.முரளிதர் அவர்களை நியமிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றமே அப்பரிந்துரையை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

இந்திய  தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம் ஜோசப், எம்.ஆர்.ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய கொலீஜியம், 28.09.2022 – அன்று ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ். முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு அதை அமல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பல முறை அழுத்தம் கொடுத்தும் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகக்கூட எண்ணாமல் தட்டிக்கழித்து வந்தது.

உச்ச நீதிமன்ற கொலிஜியம் பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு சென்னை உயர் நிதிமன்ற நீதிபதியாக முரளிதரை நியமிக்க மறுத்து வந்தது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

கடந்த 2020 – ஆம் ஆண்டு மோடி அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தால் டெல்லியில் வன்முறை ஏற்பட்டது. அப்பொது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய முரளிதர் தலைமையிலான அமர்வு 26.02.2020 அன்று  பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகளான  கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பிரவேஷ் வர்மா ஆகியோர் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதனால்தான் வன்முறை ஏற்பட்டது என்று கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, டெல்லி வன்முறை தொடர்பாக வெளியாகியுள்ள காணொளிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வாத் சிங் தலைமையிலான அமர்வு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

உத்தரவிட்ட அந்நாள் இரவே,  அதாவது 26.02.2020 – அன்று இரவே நீதிபதி முரளிதர் மத்திய அரசால் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இன்றுவரை குற்றம் சாட்டப்பட்ட அந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யபடவில்லை. அதில் அனுராக் தாக்கூர் தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சராக உள்ளார்.


படிக்க: பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !


இந்நிலையில், நீதிபதி முரளிதர் ஆகஸ்ட் 7 – ஆம் தேதி, அதாவது இன்னும் நான்கு மாதங்களுக்குள், ஓய்வு பெறப்போகிறார் என்றும், ஆறு மாதங்களுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றதிற்கு நிரந்தர தலைமை நீதிபதி இல்லை என்றும் கொலீஜியம் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்றத்தில் நிரந்தர தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும் என காரணம் கூறி நீதிபதி முரளிதரை நியமிப்பதற்கான பரிந்துரையை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாவை நியமிக்க பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பாசிஸ்டுகளோடு மோத முடியாது என்று பின்வாங்கி விட்டது. இதுதான் நீதித்துறையின் வரம்பு. பாசிஸ்டுகள் வைக்கும் வரம்புக்குள்ளே தான் நீதித்துறையும் செயல்பட வேண்டியுள்ளது.

முன்னதாக, கே. எம். ஜோசப் அர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சித்தாந்தத்திற்கு எதிராக பேசியிருந்ததாலும் மத்திய அரசுக்கு எதிராக உத்தரகாண்ட் வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அவர்   கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு நீண்ட நாட்களாக  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபடவில்லை.

அதேபோல, அமித்ஷா பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா டிசம்பர் 1, 2014 அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நியமங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதே கதிதான் இன்று நீதிபதி முரளிதரனுக்கும் ஏற்பட்டுள்ளது.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


இதற்கு மேலுமொரு துலக்கமான சான்று வழக்குரைஞர் நாகேந்திர ராமச்சந்திர நாயக் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிகழ்வு. நாயக் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் 03.10.2019 – அன்று பரிந்துரைக்கப்பட்டார். அது அரசால் நிராகரிக்கப்படவே 02.03.2021, 01.09.2021 மற்றும் 10.01.2023 என 3 மூன்று முறை மறுபரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அரசு செவிமடுக்கவில்லை.

இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.

ஆர்.எஸ்.எஸ்‌ – பா.ஜ.க கும்பல் தன்னை விமர்சிப்பவர்களையும் அம்பலப்படுத்துபவர்களையும்  நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க விடாமல் தன் சித்தாந்தம் கொண்டவர்களை நியமித்து நீதித்துறை முழுவதையும் சங்கிகள் மற்றும் பாசிஸ்டுகளின் கூடாரமாக்கி வருகிறது.

ஆனால் இன்று  கே.எம் ஜோசப், முரளிதர், டி.ஒய்.சந்திரசூட் போன்ற நீதிபதிகள் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள்; இவர்கள் பாசிஸ்டுகளை எதிர்க்கும் வல்லமை கொண்டவர்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்புகளின் ஊடாகவே பாசிசத்தை வீழ்த்திவிடலாம்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பாசிச கட்டமைப்புகளில் இருந்துகொண்டு அவர்களை எதிர்த்துகொண்டிருந்தால் ஒரு நாளும் நம்மால் வெல்ல முடியாது என்பதைதான் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன. நீதிபதிகள் நிச்சயம் பாசிஸ்டுகளிடம் சரண் அடைந்தே தீர வேண்டும்; இல்லையெனில் புறக்கணிக்கப்படுவார்கள், சில சமயங்களில் கொலை கூட செய்யப்படுவார்கள் நீதிபதி லோயாவைப் போல.

இனியும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பிலிருந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை  வீழ்த்திவிடலாம் என்று இருப்பது நம்க்கு நாமே சவக்குழி தோண்டிக்கொள்வது ஆகும். இந்த பாசிச கும்பலை வீழ்த்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைப்பு கட்டுவதே ஒரு தீர்வாகும்.

இன்பா

புல்வாமா தாக்குதல்: தேர்தல் வெற்றிக்காக 40 பேரை கொன்ற பாசிச கும்பல்!

டந்த சில தினங்களுக்கு முன்பு “தி வயர்” என்ற தனியார் செய்தி ஊடகம் நடத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மோடி அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு ஆளுநராக இருந்தவர்தான் இந்த சத்யபால் மாலிக். 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-வை ரத்து செய்த போதும் புல்வாமா இராணுவ தாக்குதல் சம்பவம் நிகழ்வின் போதும் அம்மாநில ஆளுநராக இருந்து பணியாற்றியவர். அதன் பின் கோவா, மேகாலாயா மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் “தி வயர்” ஊடக நேர்காணலில் பங்கேற்ற அவர், இந்திய துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்தார்.

நேர்காணலில் பேசுகையில், “நான் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த வேளையில் உளவுத்துறை எச்சரிக்கை அடிப்படையில், துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்பு கருதி, ஜம்மு-வில் இருந்து அவர்களை இராணுவ எல்லை பகுதிகளுக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர் மற்றும் விமான சேவை உதவி கேட்டு உள்துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டேன். அவர்கள் என்னுடைய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி 40 ராணுவ வீரர்கள் பலியானர்கள்” என்றார்.

மேலும், “துணை ராணுவ வீரர்கள் இப்படி இறந்து போனதற்கு அலட்சியமாக செயல்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் தவறான அனுகுமுறை குறித்து நீங்கள் பொதுவெளியில் ஏதுவும் பேச வேண்டாம்” என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக மோடியை குற்றம் சாட்டியுள்ளார் மாலிக்.


படிக்க: புல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி !


அதன்பின் இந்திய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவலை தொடர்பு கொண்டு, நம்முடைய அலட்சியத்தால்தான் இச்சம்பவம் நடந்துள்ளது, இதற்கு நாமே பொறுப்பு என பேசியபோது “சகோதரர் மாலிக் தயவுசெய்து கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருங்கள், இது வேறு விஷயம்” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார் என்கிறார் சத்தியபால் மாலிக். ஆளும் கட்சியின் முன்னாள் ஆளுநரே இவ்வாறு பேசியது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது சத்யபால் மாலிக் கூறிய கருத்து சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு பெரும் விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது.

முன்னாள்ஆளுநரான சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் பற்றிய இக்கருத்துக்களை கூறுவதற்கு முன்பே, என்.ஐ.ஏ உயர்மட்ட குழு ஒரு விசாரணை நடத்தி அறிக்கையை வெளியிட்டது. அதன் மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் பல சந்தேகங்களை முன்வைத்து நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

“ராணுவ வீரர்களை அழைத்து செல்லும் தரைவழி சாலையில் குறுக்கே பல இணைப்பு சாலைகள் வந்து சேர்கின்றன. அவற்றை முறையாக சோதனையிடாமலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளாமலும் 2000-திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரை 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அழைத்து சென்றது ஏன்? இப்படி இவர்களை அழைத்து செல்வது வழக்கமான ராணுவமுறை அல்ல. அனைத்து வாகனங்களும் தொடர்ச்சியாக அணிவகுத்துச் சென்றதே தாக்குதலுக்கு சாதகமாக அமைந்தது. மேலும் கடுமையாக உளவுத்துறை எச்சரித்தபோதிலும் ஏன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பற்ற முறையில் தரைவழி மார்க்கமாக அழைத்து செல்லப்பட்டனர்? 300 கிலோ பயங்கரமான வெடி மருந்துகளை கொண்ட வாகனம் இந்திய ராணுவப்படை சோதனைகளையெல்லாம் மீறி 10 நாட்கள் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது எப்படி?
பின்பு சரியான நேரத்தில் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி ராணுவ வீரர்களின் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது எப்படி? ஆயுதமேந்திய படையுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்கள் ராணுவ வீரர்களுடன் சென்றனவா?” போன்ற பல்வேறு சந்தேகங்கள் அப்பொழுது இருந்தே எழுப்பபட்டது.


படிக்க: புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !


தற்போது சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துக்களை கணக்கில் கொண்டால் அத்துணை ராணுவ வீரர்கள் இறந்து போவார்கள் என்று தெரிந்தே தங்களுடைய ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக அவர்களை மோடி அரசு பலியிட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அன்று ஆட்சியில் அமர்திருந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் ராணுவ வீரர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என்றும் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் கூறியது. மேலும் ராணுவ வீரர்களின் ‘தியாக’த்தை அரசியலாக்கி ராணுவ வீரர்களின் மரணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நம் அனைவரின் வாயை அடைத்தது தேசப்பற்றை ஏலம் எடுத்துள்ள காவிக்கும்பல்.

இவ்வாறு பேசிய தேசபற்றாளர்களின் தலைவர் மோடிதான் புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்று முடிந்த ஆறு மாதங்கள் கழித்து மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் “புல்வாமா போன்ற தாக்குதல்களை முறியடிக்க சிந்தித்து வாக்களியுங்கள்” என்று மேடையில் பேசினார். மேலும், தீவிரவாதி மற்றும் பயங்கிரவாதிகளை ஒழிக்க வந்த தலைவனாக தன்னை வெளிகாட்டிக்கொண்டு தேர்தலை சந்தித்தார்.

புல்வாமா தாக்குதல் பற்றி நம்மை பேசக் கூடாது விவாதிக்க கூடாது என்று கூறிய இவர்கள்தான் அந்த தாக்குதல் சம்பவத்தை மேடையில் பேசி மக்கள் மத்தியில் அனுதாப வாக்குகளை சேகரித்தனர். மேலும் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை உருவாகி கொண்டிருந்த அந்நேரத்தில் 2019 தேர்தலுக்கு சாதகமாக புல்வாமா தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியமைத்தது பாசிச கும்பல்.

இத்தகைய தங்களின் நாசகர தந்திரங்களை அம்பலப்படுத்தியதால் ஆவேசப்பட்டு சத்யபால் மாலிக் மீது சி.பி.ஐ-யை ஏவி விட்டிருக்கிறது மோடி அரசு. ஆனால் இதோடு மோடி அரசு ஓய்ந்துவிடாது. 2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாக இருக்கலாம் அல்லது புல்வாமா தாக்குதலில் நடந்ததை போல குறிப்பிட்ட மக்களை தெரிந்தே கொன்றுவிட்டு அதை வைத்து அரசியல் செய்வதாகவும் இருக்கலாம். இந்த பாசிச கும்பலின் நயவஞ்சக அரசியலுக்கு பலியாகாமல் இக்கும்பலை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று.

டேவிட்

ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

றுகாலனியாக்கக் கொள்கைள் மற்றும் சீன-அமெரிக்க மேலாதிக்கப் போட்டாபோட்டியின் விளைவால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கையில், கடந்த ஆண்டு மிகப்பெரிய மக்கள் எழுச்சி நடந்து ராஜபக்சே-க்கள் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திகொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அடிவருடியான ரணில் விக்ரமசிங்கேவை அதிபராக்கியது.

மீட்பராக முன்னிறுத்தப்பட்ட அமெரிக்க அடிவருடியான ரணில் விக்ரமசிங்க அதிபராக நியமிக்கப்பட்ட பிறகும் எந்த முன்னேற்றமும் அடையாத இலங்கைப் பொருளாதாரம் 46 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனோடு நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund – IMF) மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை 17-வது முறையாக இலங்கை கடனாக பெற்றுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி எற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஐ.எம்.எஃப்-யிடம் ரணில் அரசு மீண்டும் கடன் வாங்கியதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் சொத்துக்கள் பெரிய அளவில் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் என்றும் பொருட்களின் விலைவாசியும் மக்கள் மீதான வரிச்சுமையும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது ஐ.எம்.எஃப் இலங்கைக்கு கடன் வழங்கியதற்கான ஒப்பந்தமானது கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஐ.எம்.எஃப் விதித்த கடுமையான 15 நிபந்தனைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றிய பிறகுதான் முதல் தவணை கடன் வழங்கப்பட்டது. இதுகுறித்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த சவாலான கொள்கை நடவடிக்கைகளை இலங்கை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பது பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளது. “கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற பெயரில், ஐ.எம்.எஃப் விதித்துள்ள நிபந்தனைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இலங்கையில் மேலும் தீவிரமாக்கியுள்ளது.

ஐ.எம்.எஃப்-இன் கட்டளையின் பேரில், ரணில் அரசு செலவினங்களை கடுமையாகக் குறைத்து வருகிறது. மேலும், 14 அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 4.5 பில்லியன் டாலரை திரட்ட திட்டமிட்டுள்ளது.


படிக்க: இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1


கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பிப்ரவரி மாதத்தில் மின்சாரக் கட்டணங்களை 66 சதவிகிதம் உயர்த்தியுள்ளது ரணில் அரசு. இதன் மூலம் மின்சாரக் கட்டண உயர்வு 200 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

அதேபோல், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி 36 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய போதும், “இது ஐ.எம்.எஃப்-இன் நிபந்தனையாக இருப்பதால் வருமான வரியை குறைக்க முடியாது” என்று விக்கிரமசிங்க நேரடியாகவே கூறினார்.

பணவீக்கம் சுமார் 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக உணவு, எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த மக்கள்தொகையில், 33 சதவிகித மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. “சேவ் தி சில்ட்ரன்” என்ற அமைப்பு, கடந்த மாதம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவின் ஒரு பகுதியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறுகிறது.

இவையெல்லாம் ஐ.எம்.எஃப்-இன் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதால் கடனை பெறுவதற்கு முன்பே இலங்கை மக்கள் சந்தித்த நிலைமை. தற்போது இந்நிலைமை மேலும் தீவிரமடையும். வரும் காலங்களில் இலங்கையில் இன்னும் வறுமையும் வேலையின்மையும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடனை பெறுவதற்கு விதித்துள்ள நிபந்தனைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது. அது எவ்வளவுக்கு எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் இலங்கை அரசால் அதனை மறுக்க முடியாது. ஒருவேளை அப்படி மறுத்தால் ஐ.எம்.எஃப்-இன் அனைத்து உதவிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு நெருக்கடியை தீவிரபடுத்துவதற்கான வேலையில் ஐ.எம்.எஃப் இறங்கும். இதுதான் 2019ஆம் ஆண்டு ராஜபக்சே அரசாங்கத்திற்கும் நிகழ்ந்தது.

எனவே, ஐ.எம்.எஃப்-இன் நிபந்தனைகளை நடைமுறைபடுத்தக் கூடாது என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்குவற்காகவும் மக்களின் எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதற்காகவும் ரணில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சான்றாக, தனிநபர் வருமான வரியை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்த உத்தரவு ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைய ஆரம்பித்தன. இதை ஒடுக்குவதற்காக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது ரணில் அரசு. இதன்மூலம் பொதுப் போக்குவரத்து, உணவு விநியோகம், எரிபொருள்கள் விநியோகம், ரயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் அனைத்து துறைகளும் “அத்தியாவசிய சேவை”க்குள் கொண்டு வரப்பட்டு, வேலைநிறுத்தம் செய்யும் எவரும் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று மிரட்டப்படுகிறார்கள்.

குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் வரி மற்றும் கட்டண உயர்வுக்கு எதிராக, தேசிய வேலைநிறுத்தத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்ததையடுத்து அதனை ஒடுக்குவதற்காகவே இந்த உத்தரவானது பிறபிக்கப்பட்டது. தற்போது வரை இந்த சட்டத்தை வைத்து போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை மிரட்டி ஒடுக்கி வருகிறது ரணில் அரசு.


படிக்க: இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 2


அதேபோல் தனக்கு எதிரான மக்களின் வெறுப்பை எதிர்க்கொள்ள முடியாது என்பதால் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்தது. இதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக கூறப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு செலவு செய்ய நிதி இல்லாத அதே வேளையில் இலங்கையின் ‘சுதந்திர தின’த்தை கோலாகலமாக கொண்டாடி ரணில் அரசு அதன் பாசிச தன்மையை வெளிப்படுத்தியது.

ஆனால், இவை அனைத்தையும் மீறி இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரணில் அரசின் வரி உயர்வுக்கு எதிராக ஜனவரி மாதத்தில் ஏறக்குறைய அனைத்து பிரிவு தொழிலாளர்களும் போராட்டம் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தலை முடக்கியதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி ஐ.எம்.எஃப்-க்கு எதிராக நடந்த போராட்டத்தில் மருத்துவம், கல்வித்துறை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் 14 சர்வதேச விமானங்களை பாதிக்கும் வகையில், இரண்டு மணிநேரம் மெதுவாகச் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டங்களை ஒடுக்குவதற்காக அத்தியாவசிய சேவைகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் போராட்டங்கள் ஓய்ந்த பாடில்லை. ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்த போராட்டம் இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் மீது அடுக்குமுறைகளையும் நெருக்கடியையும் சுமத்தும் ரணிலுக்கு எதிராக மக்கள் உறுதியாக போராடி வருகின்றனர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், கப்பற்படை தொழிலாளர்கள், விமான தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்தான் இலங்கை ஐ,எம்.எப்-யிடம் கடன் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஐ.எம்.எஃப்-யிடம் 2.9 பில்லியன் டாலர் பெற்றதோடு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து 3.75 பில்லியன் அமெரிக்க டாலர் வரை கடன் பெறுவதற்கும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் நாட்டு மக்களை அடகு வைத்தது போதாது என்று பிற எகாதிபத்தியங்களிடமும் அடகு வைக்க நாக்கை தொங்கவிட்டு காத்துக்கிடக்கிறது ரணில் அரசு.

இதனால், இலங்கையின் பொருளாதாரமும் மக்களின் வாழ்நிலையும் மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. அதற்கு எதிர்வினையாய் இலங்கை மக்களின் போராட்டமும் மேலும் தீவிரமடையும். அதாவது மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியை இலங்கை எதிர்கொள்ள உள்ளது. ஆனால், கடந்த முறை நடந்ததைப் போன்று, ஒரு மாற்றுத் திட்டத்தோடு இந்த எழுச்சியை அமைப்பாக்கத் தவறினால், சமூக பொருளாதார தளத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போகும். ஏகாதிபத்திய சுரண்டலாளர்களை தூக்கியெறிய முடியாமல் போகும்.

அத்தனை லட்சம் மக்கள் உறுதியாகப் போராடி, இனவெறி பாசிஸ்டுகளான ராஜபக்சேக்களை தூக்கியெறிந்த போதிலும் அதனால் மக்களுக்கு பெரிதாக எந்த நலனும் வாய்க்கப்படவில்லை. மீண்டும் அப்படி நடந்தால் ஏகாதிபத்தியங்கள் ‘அடுத்த ரணிலு’க்கான ஏற்பாட்டைச் செய்து முடிக்கும்.

எனவே, இலங்கையில் உள்ள புரட்சிகர சக்திகள், மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்கள் போராட்டத்தை அமைப்பாக்கும் வேலையில் இறங்க வேண்டும்.

பானு

இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலை எதிர்த்துப் போராடிவரும் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் இன்றைய பிரபலமான முழக்கம் “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்பதுதான். இப்படிச் சொல்லும்போது ‘மதச்சார்ப்பற்ற’, ‘சோசலிச’, ‘ஜனநாயக’த் தன்மையுள்ள நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தூக்கியெறிய முயல்வதாகக் கருதுகிறார்கள் அல்லது சித்தரிக்கிறார்கள். ஆனால், எதார்த்தமோ வேறுவகையில் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தனது பாசிச ஆட்சியை அரங்கேற்றுவதற்கு ஒத்திசைவாகத்தான் நமது நாட்டின் அரசியலமைப்பே உள்ளது. வரலாற்றாளர் மற்றும் நூலாசிரியருமான ஏ.ஜி.நூராணி, தனது “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற நூலில் குறிப்பிடுவதைப் போல, “இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்டத்திருத்தத்தை செய்ய வேண்டிய தேவையில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால்போதும். இதைத்தான் மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார்” என்று குறிப்பிடுகிறார்.

அதாவது, இப்போதிருக்கும் அரசியலமைப்பே பாசிச ஆட்சியை நிறுவிக் கொள்வதற்குப் போதுமானது என்பது நூரணியின் கருத்தில் இருந்து கிடைக்கும் உண்மையாகும். குஜராத், உத்தரப் பிரதேசம், திரிபுரா போன்ற எல்லா மாடல்களும் இந்திய அரசியலமைப்பைத் திருத்தாமலேயே மேற்கொள்ளப்படுபவைதான். ஆகையால், அரசியல் சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் பாசிச ஆட்சி வரப்போவதாக நாம் கருதுவதே தவறான ஒன்றாகும்.

அப்படியெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதசார்பற்றது, ஜனநாயகமானது சோசலிசக் குடியரசு என்று பல கட்சிகள் குறிப்பிடுவது உண்மையா என்ற கேள்வி எழலாம்.


படிக்க: ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!


உண்மையில், 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்ப்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசு என்று குறிப்பிடவில்லை. 1976-இல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தை ஒட்டி “இந்தியாவை மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாக” இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையில் (preamble) சேர்க்கப்பட்டது. அந்த சொற்களுக்கெல்லாம் என்ன விளக்கம் – வரையறை என்பதையும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. இயல்பிலேயே சர்வாதிகாரத்தன்மை கொண்ட இந்த போலி ஜனநாயகத்தின் உண்மை முகத்தை மூடி மறைக்கும் முகமூடியாக அச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த அரசமைப்பைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல், தங்களது இந்துராஷ்டிர இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் வகையில், அரசியலமைப்பையும் அரசுக் கட்டமைப்பையும் ஒரே அடியாக தூக்கியெறிந்துவிடாமல் படிப்படியாக மறுவார்ப்பு (Remodifying) செய்துவருகிறது. இதன்மூலம், அன்று அரசியல் சாசனத்திற்கு அணிவிக்கப்பட்ட மதசார்பற்ற-சோசலிச-ஜனநாயாகக் குடியரசு என்ற முகமூடிதான் கிழித்தெறியப்படுகிறது. மாறாக, இந்திய ஜனநாயகத்தின் உண்மையான சர்வாதிகாரத் தன்மையை மோடி கும்பல் முழுவதுமாக வெளிக்கொண்டுவரப்பட்டு, அதனைத் தனது இந்துராஷ்டிரத்திற்கான கட்டமைப்பாகப் பயன்படுத்துகிறது.

ஆகையால், “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று குறிப்பிடுவதானது, ஜனநாயக அரசமைப்பைக் காப்பாற்றும் முயற்சி என்று கருதிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இந்திய அரசியலமைப்புக்கே இல்லாத, வெறும் முகமூடியாகப் பயன்படுத்தப்பட்ட, ஏட்டளவிலான சில அம்சங்களைத்தான் மீட்டெடுப்பதைதான் இந்த முழக்கம் குறிக்கிறது.

அண்மைக் காலமாக மோடி கும்பல் தனக்கு கிடைத்திருக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, சர்வாதிகார ஆட்டம் போட்டு வருகிறது. இது இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியுமா? இல்லை. மோடி கும்பல், காங்கிரசைப் பார்த்து எழுப்பும் ஒவ்வொரு கேள்வியையும் கவனித்து நோக்கும் போது, இந்த உண்மையை நாம் நன்குணர முடியும்.

இருவேறு ‘ஜனநாயகம்’!

இந்த மார்ச் மாதத்தில், ஒரு வார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத வகையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக, ஒரு ஆளும் கட்சி நாடாளுமன்றத்தை முடக்கிவைத்திருந்தது.

அதானியின் பங்குச் சந்தை மோசடி தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் விசாரிக்க வேண்டும்; சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை முடக்கும் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுவதைப் பற்றியும், எரிவாயு சிலிண்டர் விலையுயர்வு பற்றியும் விவாதம் நடத்தப்பட வேண்டும், பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு எதிராக ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை மாற்றியமைத்திருப்பது போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிவந்தன.

பா.ஜ.க. எம்.பி.க்களோ, “லண்டனில் ராகுல் காந்தி பேசியது மன்னிக்கமுடியாத தேசத்துரோகக் குற்றம். அந்நிய மண்ணில் அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை இழிவுபடுத்திவிட்டார். இதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூச்சலிட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவந்தனர்.

இக்கூட்டத்தொடர் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ராமேஷ், அதானியின் முறைகேடுகள் குறித்து பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் காங்கிரஸ் நாள்தோறும் மூன்று கேள்விகளை எழுப்பிவந்ததாகவும், இதுவரை 100 கேள்விகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

இவற்றில் எந்தக் கேள்விக்கும் பா.ஜ.க.வினர் பதிலளிக்கவில்லை, பதிலளிக்கப் போவதுமில்லை. அதானியின் மோசடியை மடைமாற்றுவதற்குத்தான் ராகுல் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுபடுத்திவிட்டார் என்று கூப்பாடு போட்டுந்தது பா.ஜ.க கும்பல்.


படிக்க: ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!


நட்டநடுநிலை என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் ஊடகங்கள் எவையும், மோடி கும்பலின் இந்த மடைமாற்றும் சதியை அம்பலப்படுத்திக் கண்டிக்கவில்லை. மாறாக, “ராகுல் பேசியது சரியா, தவறா” என்று விவாதம் நடத்தியதன் மூலம், ராகுல் காந்தி தேசத்துரோகியாகச் சித்தரிக்கப்பட்டார்.

அதானியின் மோசடிகளைப் பற்றி பேசினால், மைக் ஆஃப் செய்யப்படும் என்பது நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டிருக்கின்ற நடைமுறை.

நாடாளுமன்றத்தின் இந்த அவலநிலையைப் பற்றித்தான், லண்டனில் ராகுல் காந்தி ‘ஜனநாயக நிறுவனங்களின் மீதான தாக்குதல்’ என்றார். இதே ‘ஜனநாயக’ நிறுவனங்களை இழிவுபடுத்திவிட்டதாகத்தான் பா.ஜ.க.வினரும் கூப்பாடு போடுகிறார்கள்.

ஒரே நாடாளுமன்றம், இருவேறு ‘ஜனநாயகங்கள்’! – இப்படியொரு நிலை இருக்க முடியுமா? ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் புதைக்கப்பட்டுவிட்ட போலி ஜனநாயகத்தின் நிலையை சித்தரிக்கிறார் ராகுல். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலோ, தற்போது நடைமுறையில் நிலவுகின்ற ‘ஜனநாயக’த்தின் மாண்பை இழிபடுத்திவிட்டதாக கூச்சலிடுகிறது.

ஆம், இன்று நாடாளுமன்றத்தை ஆட்சிசெய்துகொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பல்களுக்கான ஜனநாயகமே. இந்திய மக்கள் மீதான பாசிச சர்வாதிகார ஆட்சியே.

000

“மோடி” என்ற சாதியையே இழிவுப்படுத்திவிட்டார் என்று ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் காரணம்காட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருப்பது, நடப்பது காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் ஆதிக்கம்தான் என்பதற்குப் பொருத்தமான அண்மைய சான்றாகும்.

ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதியாகும். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போன தேசத்துரோகிகளான லலித் மோடி, நீரவ் மோடிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சவுகிதாராக (காவலர்) செயல்பட்டார் என்பதை அம்பலப்படுத்தி பேசியதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயை பகிரங்மாக ஆதரிக்கும் மாலேகான் குண்டுவைப்பு குற்றவாளி பிரக்யாசிங் தாக்கூர் போன்றவர்கள் எவ்வித தொந்தரவுக்கும் ஆளாகாமல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளியே நாட்டின் பிரதமராக இருக்கும் போது, இதுவெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு குறைவான விசயம்தான்.

பதவி பறிப்பு என்பது ராகுல் காந்தியோடு நிற்கப்போவதில்லை. மோடி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வைப் பற்றியோ, அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல்களைப் பற்றியோ யாரேனும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அவர்களெல்லாம் நாடாளுமன்றத்தை விட்டே தூக்கியெறிப்படுவார்கள் என்று எச்சரிக்கிறது பாசிசக் கும்பல்.

இவை எல்லாம் அரசியல் சாசனத்திற்கு எதிராக நடத்தப்படுவதாக ஒரேயடியாக சொல்லிவிடமுடியுமா?

போலி ஜனநாயகமே விளைநிலம்!

சென்றமுறை நாடாளுமன்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்தது, ஒன்றிய தகவல் தொடர்புத் துறைக்கு சமூக வலைதளப் பதிவுகளை நீக்குவதற்கான அதிகாரம் கொடுத்தது உள்ளிட்டவற்றை பற்றி விவாதிக்க வேண்டும் என்று முயன்றபோது, இந்திரா காந்தியின் அவசரநிலையைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளை விமர்சித்தார் மோடி. “அதானி.. அதானி” என்று எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் முழங்கிக் கொண்டிருக்க, சுமார் ஒன்றே முக்கால் மணிநேரமாக காத்திரமான உரையாற்றினார் மோடி.

“சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியைக் கலைத்தது யார் தெரியுமா? அதிலும் ஒருவர் மட்டுமே 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியைக் கலைத்திருக்கிறார். அது இந்திரா காந்திதான். மாநில ஆட்சியை கலைப்பதில் அரைசதம் அடித்திருப்பவர் இந்திரா காந்திதான்” என்றார் மோடி.

இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரையைச் சுட்டிக்காட்டி, “1975-இல் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது ஜனநாயகம் எங்கே இருந்ததாம்” என்று மடக்கினார் பா.ஜ.க. எம்.பி பிரகலாத் ஜோஷி.

மோடியின் பாசிச சர்வாதிகாரப் போக்கை கேள்வி எழுப்பினால், “ஏன் இதெல்லாம் காங்கிரஸ் செய்யாததா? இந்திரா காந்தி செய்யாததா? அந்த காங்கிரஸுடன் தானே கூட்டணி வைத்துள்ளீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை சாடுகிறது பாசிசக் கும்பல். இது கேள்விக் கேட்பவர்களுடைய அருகதையை கிளருவதன் மூலம் தன்னை யோக்கியவானாக காட்டிக் கொள்ளும் உத்தியாகும்.

அதேநேரம், இக்கூற்றுகள் “தனது இயல்பிலேயே சர்வாதிகாரத்தன்மை கொண்ட, பெரும்பான்மை அதிகாரங்களை ஒன்றியத்திடம் குவித்துள்ள போலி ஜனநாயக அரசமைப்புதான் பாசிசத்தின் விளைநிலமாக இருக்கிறது” என்று பா.ஜ.க-மோடி கும்பலே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலமாகும்.

000

கொலிஜியத்தை கலைத்துவிட்டு, நீதிபதிகளைத் தெரிவுசெய்ய ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்ற புதிய அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. இதன் மூலம் அரிதிலும் அரிதாக சந்திரசூட், கே.என்.ஜோசப் போன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவதை வடிகட்டி, அக்மார்க் சங்கிகளை நீதித்துறை முழுவதும் நிரப்ப எத்தனிக்கிறது காவிக் கும்பல். “இந்நடவடிக்கை அரசியமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. நீதிமன்றத்தின் சுயேட்சைத் தன்மையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது” என்று முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ‘பதிலடி’ கொடுக்கும் வகையில், இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டுவந்தபோது, அதை ஆதரித்து அரசியல் சார்போடு நடந்துகொண்டது அன்றைய கொலிஜியம்தானே, இப்போது என்னமோ ‘அரசியல் சார்பு’ நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்கின்ற பாணியில் சிறப்புக் கட்டுரை எழுதியது ஆர்.எஸ்.எஸ்-ன் பஞ்சசன்யா இதழ்.

இந்திரா காந்தியை விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், இந்திரா காந்தியின் வழியில்தான், அதாவது நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் தமது பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது. பாசிசம் வேர்பிடித்து வளர்வதற்கான பக்குவப்பட்ட விளைநிலமாக இருப்பது நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பாகும்.

000

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராகுலின் பதவி நீக்கம் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று அழைக்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். “இது நீதிமன்றத்தின் முடிவு. குறிப்பிட்ட எதிர்க்கட்சி சார்பில் எடுக்கப்பட்ட முடிவல்ல. யாருக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று மிரட்டுகிறார்” அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் பலரும் விமர்சிப்பதைப் போல, பா.ஜ.க. இந்திய ஜனநாயகத்தின் ‘புனிதங்களை’ கெடுத்துவிடவில்லை; மாறாக, இந்த ‘புனிதத்தை’ மேலும் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வதன் மூலமே, இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கிறது!

சொந்த அனுபங்களை தொகுத்துப் பாருங்கள்

நிலவுகின்ற இந்த அரசு முறை, யாருக்கான ஜனநாயகமாக இருக்கிறது? யாருக்கு சர்வாதிகாரமாக இருக்கிறது என்பதை வகுப்பெடுத்து புரிய வைக்க வேண்டிய நிலைமையெல்லாம் இல்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள் தங்களுடைய சொந்த அனுபவத்தை தொகுத்துப் பார்ப்பதே போதுமானது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை ஒழித்துக்கட்டுவது ஒன்றே, மோடி ஆட்சியின் கீழ் சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளின் முழுநேரப் பணியாக உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, டெல்லி அரசின் மதுப்பானக் கொள்கையை வகுப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சி.பி.ஐ.யால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். பல சுற்று விசாரணைக்கு பிறகும், சி.பி.ஐ. அவர் குற்றவாளி என்பதற்கான எவ்வித ஆதரத்தையும் இதுவரை தாக்கல்செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி சி.பி.ஐ.யால் தாம் துன்புறுத்தப்படுவதாக மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதே வழக்கில் தொடர்புடையவராக, தெலுங்கான முதல்வரும் பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் சகோதரி கவிதாவும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிர ஜனதா தளத்துடன் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், லாலு பிரசாத் யாதவ் மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு தூசி தட்டப்பட்டிருக்கிறது. லாலு, இரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, முக்கிய பதவிகளை நியமனம் செய்வதற்கு நிலங்களை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரும், அவரது மனைவியும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “நீங்கள் ராஜா ஹரிச்சந்திரனாக இருந்தாலும் பா.ஜ.கவிற்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும். மராட்டியத்தில் சரத்பவாரின் மருமகன் பா.ஜ.க.விற்கு சென்றார். அவர் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. திரிணமூல் காங்கிரஸிலிருந்த முகுல் ராய் பா.ஜ.க.விற்கு சென்றபோது அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், நீங்கள் பா.ஜ.க.வின் முகத்திரையை வெளிக்கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும்” என்று அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!


சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக நிறுவனங்களாலேயே எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுவதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே தலைமையில் 16 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்துகொண்ட உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலம் இரண்டாகப் பிளந்து தண்டித்தது பா.ஜ.க. காவிக் கும்பலின் அடியாளாக செயல்படும் தேர்தல் ஆணையமோ, இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கே கட்சியின் பெயரையும், சின்னத்தையும் வழங்கி உள்ளது.

“தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தேர்தல் ஆணையத்தை கலைத்திட வேண்டும். தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பதிலாக, வாக்கெடுப்பு முறையில் அவர்களைத் தேர்தெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மீதுதான் கடைசி நம்பிக்கையை வைத்திருக்கிறோம்”

“… ஜனநாயக அமைப்புகளின் உதவியுடன் நாட்டில் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. “… 2024க்குப் பிறகும் பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம், தேர்தல் நடைமுறைகள் என எதுவும் இருக்காது” – என்று எச்சரிக்கிறார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே பேசுகிறாரே இதுதான் சொந்த அனுபவம்.

ராகுல் காந்தியும்கூட, “இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓர் அரசியல் கட்சியை எதிர்த்துப் போராடவில்லை. ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிவருகிறோம். இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கைப்பற்றியுள்ளன” என்று பல மேடைகளிலும் பேசிவருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பலின் பாசிசத்தை தேர்தலின் மூலம் வீழ்த்திவிட முடியாது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடும் எல்லா அரசியல் சக்திகளும் தங்களது சொந்த அனுபவத்தின் மூலமே இதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனாலும், “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று இல்லாத ஜனநாயகத்தைக் கட்டியழுதுகொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், இந்த கட்டமைப்பை ஒட்டுமொத்த இந்துராஷ்டிரமாக உருவாக்கி வார்த்துக் கொண்டுவருகிறது. இந்துராஷ்டிரம் முழுமையாக நிலைநாட்டப்படும்போது, அதை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியைத் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகள்கூட இல்லாமல் ஆக்கப்படுவோம். ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இனி, எட்டு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை அது மற்ற கட்சி எம்.பி.களும் பரவலாம். அல்லது ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதன் தொடர்ச்சியாக தேர்தலே ரத்துசெய்யப்படலாம்.

இனியும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று முழங்குவது இல்லாத ஜனநாயகத்திற்காக அழுவதாகும். இதை விடுத்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை அமைப்பதற்காகப் போராடுவதுதான் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாகும்.

பால்ராஜ்

8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை! | தோழர் மருது | வீடியோ

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டிலே நிறைவேற்றியுள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற உரிமையானது தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது. தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலே 16 – 20 மணி நேர வேலையால் பாட்டாளிகள் பிழிந்தெடுக்கப்பட்டனர். தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து யோசிக்கக்கூட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

அப்போது போராடி பெற்றது தான் இந்த எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற உரிமை. இதை மாற்றுவதற்கு இவர்களுக்கு யார் அங்கீகாரம் தந்தது?

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திருமாவளவனை குறிவைத்து தாக்குவது ஏன்? | தோழர் மருது | வீடியோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது.

சில நாட்களுக்கு முன்பு சன் டிவி விவாதம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் நபர் ஒருவர் “திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கனகராஜ் அவர்கள் சிறப்பான பதில் அளித்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக தடா பெரியசாமி திருமாவளவனை இழிவாக பேசியிருந்தார்.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வினர் திருமாவளவனை ஏன் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்பதுதான் முக்கியமான அம்சம்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி

“எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”

சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

பெத்னதா (”ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.

“இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”

பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (”பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.

“இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.

“ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். ”எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”

விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.

கட்டாயத் தானியக் கொள்முதல்* பற்றியும், விவசாயிகளின் கடிய நிலைமை பற்றியும் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. லெனினது சொந்த அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டன. விவசாயிகள் கடிதங்களின் பொழிப்பு வீணாகப் போகவில்லை என்று நான் விரைவில் உறுதி கொண்டேன். கட்சியின் 10-வது காங்கிரசில் லெனின் சமர்ப்பித்த கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக உணவுப் பொருள் வரி விதிப்பது பற்றிய அறிக்கையைக் கேட்ட நான் விவசாயிகளின் கடிதங்களை லெனின் இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தேன்.

அதிலிருந்து பெத்னதாவின் ஒழுங்கான அறிக்கைகள் தமக்குக் கிட்ட வேண்டும் என்று விளதீமிர் இலீச் கோரினார். விளதீமிர் இலீச் நுணுக்கி நுணுக்கி எழுதிய ஒரு துண்டுக் காகிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது. அதை அப்படியே கீழே தருகிறேன்.

“26.1.1922.
தோழர் கர்பீன்ஸ்கி!

பின்கண்டவை பற்றி எனக்குச் சுருக்கமாக (அதிகபட்சம் 2-3 பக்கங்கள்) எழுத மாட்டீர்களா? விவசாயிகளிடமிருந்து பெத்னதா பத்திரிகைக்கு எத்தனை கடிதங்கள் வந்திருக்கின்றன? முக்கியமாக (குறிப்பாக, முக்கியமாக), புதியதாக இக்கடிதங்களில் என்ன இருக்கிறது? அவர்கள் மனநிலை எப்படி? முக்கியமான பிரச்னை என்ன?

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை (அடுத்தது 15.3.1922) இத்தகைய கடிதங்கள் நீங்கள் எழுத முடியுமா?

அ. கடிதங்களின் சராசரி எண்ணிக்கை
ஆ. மனநிலை
இ. மிக முக்கியமான பிரச்சனை.

கம்யூனிச வாழ்த்துக்களுடன்,
லெனின்”

அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த விளதீமிர் இலீச் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார். தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

 

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க விசேஷ தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்து விட்டு பதட்டத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, விளதீமிர் இலீச்சைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவிவிட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார்.

“தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!”

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்படையும் விளதீமிர் இலீச் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

விளதீமிர் இலீச் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்ததும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும் கூட விளதீமில் இலீச் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

படிக்க : டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

வரவேற்பறையில் ஒருநாள் பின்கண்ட சம்பவம் நடந்தது. வந்தவர்களில் ஒருவர் திடீரென்று குதித்தெழுந்து மிகவும் பதற்றத்துடன் சொன்னார்:

“தோழர் லெனின், இதெல்லாம் என்ன?! அவர்கள் எங்களை முன் போலவே கசக்கிப் பிழிகிறார்கள், கசக்கிப் பிழிகிறார்கள்!”

விளதீமிர் இலீச்சுக்கு ஒன்றும் பிரியவில்லை.

“இவான் ரதியோனவிச், அமைதி கொள்ளுங்கள். என்னவென்று விளக்கிச் சொல்லுங்கள். அவர்கள் என்பது யார்?”

“யார் என்கிறீர்களா? எங்கள் கிராம சோவியத்துக் காரர்கள்! அநியாய வரிகள் தண்டி எங்களை வாட்டி வதைக்கிறார்கள்!”

“அவர்களைத் தேர்ந்தெடுத்து யார்?”

“நாங்கள்தான். வேறு யார்?…”

“வேறு ஆட்களைத் தேர்ந்தெடுங்களேன்!”

“அப்படி முடியுமா என்ன?”

“முடியும். அப்படித்தான் செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளாத எந்த சோவியத் பிரதிநிதியையும், அவரது பணியின் காலம் முடிவதற்குள் ஒதுக்கி வேறொருவரைத் தேர்ந்தெடுக்க சோவியத் சட்டம் அனுமதிக்கிறது. இதுதான் விஷயம், இவான் ரதியோனவிச்!”

இத்தகைய உரையாடல்களுக்குப் பின்பு அவசியமான சந்தர்ப்பங்களில் உடனடியாக ஆணைகள் பிறப்பித்தார் விளதீமிர் இலீச். தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நடந்த உரையாடல்களில் கிடைத்த தகவல்கள் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகத் திகழ்ந்திருக்கின்றன.

– கர்பீன்ஸ்கி
“லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” – நூலிலிருந்து…

மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!

0

காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்துத்துவ கும்பல்களால் 50 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேரணிகள் அனைத்திற்கும் பொதுவானது என்னவென்றால் “லவ் ஜிஹாத், நில ஜிஹாத், கட்டாய மதமாற்றம், முஸ்லீம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது” என்ற இஸ்லாமிய வெறுப்பு தான்.

கடந்த மார்ச் 12 அன்று, மும்பையின் மிரா சாலையில் (Mira Road) ஒரு பெரும் மக்கள் கூட்டம் காவித் தொப்பிகள் அணிந்தும் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியும் அணிவகுத்துச் சென்றது. அங்கு இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் உரைகள் பேசப்பட்டன.

பேரணியில் உரையாற்றிய பேச்சாளர்களில் ஒருவர் காஜல் ஹிந்துஸ்தானி. அவருக்கு புளூ டிக் ட்விட்டர் கணக்கு மற்றும் 95.4 ஆயிரம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் அடக்கம். அவர் பேசுகையில் “இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன – லவ் ஜிஹாத், நில ஜிகாத் மற்றும் மதமாற்றம். இந்த மூன்று குடைச்சல்களுக்கும் ராமர் வழங்கிய தீர்வு உள்ளது. அதை அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் ஊடகங்களால் கூட தடுக்க இயலாது. அந்தத் தீர்வுதான் பொருளாதாரப் புறக்கணிப்பு” என்று உரையாற்றினார்.

மேலும், “முஸ்லீம் விற்பனையாளர்கள் நஞ்சு கலந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கிறார்கள். இந்த ஜிகாதி விற்பனையாளர்களை புறக்கணித்து, கூடுதல் செலவு செய்து இந்து விற்பனையாளர்களிடம் வாங்குங்கள். நீங்கள் செலவு செய்யும் பணம் ஒரு இந்துவின் வீட்டிற்குச் செல்லட்டும்” என்று பேசினார்.

“மிரா ரோட்டில் அமைந்துள்ள நயா நகர் (Naya Nagar) பகுதி ஜிஹாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு இந்துக்கள் தஞ்சம் அடையக்கூட இடமில்லை” என்றும் ஹிந்துஸ்தானி கூறினார்.


படிக்க: ‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!


மார்ச் 12 அன்று நடந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த மிராவின் சுயேச்சை எம்.எல்.ஏ கீதா ஜெயின், “மிரா – பயாந்தர் (Mira – Bhayander) புறநகர்ப் பகுதியானது முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மிரா – பயந்தரில் வசிப்பவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் அவரது குடியிருப்பின் பெயர் ‘வங்காளதேச ஜோபாட்பட்டி’ (Bangladesh Zopadpatti) என்று இருந்தது; மற்றொருவரின் மின்சாரக் கட்டண ரசீதில் ‘சோட்டா பாகிஸ்தான்’ (Chhota Pakistan) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல” என்று உள்நோக்கம் கற்பித்துப் பேசினார்.

இந்தப் பேரணியில் விஷ்வ ஹிந்து பரிஷத் – பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நித்தேஷ் ரானே ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நவம்பர் 20, 2022 தொடங்கி, மகாராஷ்டிரா முழுவதும் கிட்டத்தட்ட 36 மாவட்டங்களில் குறைந்தது 50 “இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா” (Hindu Jan Aakrosh Morcha) பேரணிகள் நடைபெற்றுள்ளன. தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் 35 துண்டுகளாக அவரது கூட்டாளி ஆப்தாப் பூனாவாலா-வால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரையும் பதபதைக்க வைத்தது. அச்சம்பவத்தை பின்னணியாக வைத்து முதல் பேரணி பர்பானி (Parbhani) மாவட்டத்தில் நடத்தப்பட்டது. லவ் ஜிகாத்தின் ஆபத்துகள் குறித்து இந்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி நடத்தப்படுவதாக இந்து மதவெறியர்கள் தெரிவித்தனர்.

இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சாவின் பதாகையின் கீழ் இந்துத்துவா அமைப்புகளின் கூட்டமைப்பான சாகல் ஹிந்து சமாஜால் (Sakal Hindu Samaj) இப்பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. “இந்த பேரணிகளின் நோக்கம்‌, பசுவதை, லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இந்தச் சட்டங்களை நாடு முழுவதும் அமுல்படுத்தினால் மட்டுமே இந்தப் பேரணிகளை நிறுத்துவோம்” என்று ஏற்பாட்டாளர்களான காவி குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

“நான் ஒரு இந்து என்பதால் நானும் ஆபத்தில் இருக்கிறேன். பச்சை நிற ஆடைகள் அணிவதற்கு என் கணவர் தடை விதித்துள்ளார். அது ஒரு முஸ்லீம் நிறம்” என்கிறார் பேரணியில் கலந்து கொண்ட இந்துத்துவ சித்தாந்தம் பற்றி அறிந்திராத பெண்மணி ஒருவர்.

இந்துத்துவ சித்தாந்தத்தை அறிந்திராதவர்கள்கூட காவிகளின் பின்னால் அணிதிரள்கிறார்கள் என்பதுதான் பேராபத்து. “வலதுசாரி பேரணிகளில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்வது ஒரு புதிய போக்கு” என்று வி.எச்.பி (மகாராஷ்டிரா பிரிவு) பொதுச் செயலாளர் சங்கர் கைகர் ‘பெருமித’ப்பட்டுக்கொள்கிறார். “லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு தாங்களும் ஆளாக நேரிடும் என அஞ்சுவதால்தான் பெண்கள் பேரணிகளில் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


படிக்க: ‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!


இதேபோல, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 பேர் கலந்து கொண்ட ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணி ஒன்று கடந்த பிப்ரவரி 26 அன்று வாஷி (Vashi) மற்றும் நவி மும்பையில் (Navi Mumbai) நடைபெற்றது. கடந்த ஜனவரியில், தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் இருந்து பிரபாதேவியில் உள்ள கம்கர் மைதானத்திற்கு அணிவகுத்து சென்ற பேரணியில் ஏறக்குறைய 10,000 பேர் கலந்துகொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

அரசின் துணையோடு காவி குண்டர்களால் நடத்தப்படும் இந்த மதவெறி பேரணிகள் நீதிமன்றங்களின் கண்களுக்கு தெரிவதில்லை. முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை சுட்டிக்காட்டி பேரணிகளுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒருபுறம், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏக்நாத் ஷிண்டே அரசால் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மற்றொருபுறம், மார்ச் 9 அன்று அவுரங்காபாத் (Aurangabad) நகரின் பெயரை சத்ரபதி சாம்பாஜி நகர் (Chhatrapati Sambhaji Nagar) என மாற்றுவதற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் 1,500 பேர் கலந்து‌கொண்டனர். அதில் பலர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக துணை முதல்வர் ஃபட்னாவிஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், போலீசுத்துறைக்கு லவ் ஜிஹாத் குறித்து விழிப்புணர்வு ஊட்டுமாறு போலீசு தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 2022 இல் இந்துமதவெறி சிவசேனாவை உடைத்து வெளியேறி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததிலிருந்து மகாராஷ்டிராவில் காவிகளின் அச்சுறுத்தல் பெருமளவு அதிகரித்துள்ளது. உத்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத்தைப் போல, ‘இந்து ராஷ்டிர’த்தின் ஒரு மாதிரியாக உருவெடுத்து வருகிறது.

பொம்மி

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க – தி.மு.க இடையே போட்டி!

ந்தியாவிலேயே மே தினத்துக்கு அரசு விடுமுறை அறிவித்த ஆட்சி; மே தினத்தியாகிகள் நினைவாக சென்னையில் “மே தினப் பூங்கா” அமைத்த ஆட்சி என்றெல்லாம் தி.மு.க-வினர் அடிக்கடி பீற்றிக் கொள்வார்கள். ஆனால், கார்ப்பரேட் சேவையில் எந்தக் கட்சி ஆட்சியும் ஒன்றாகவே இருக்கிறது. கட்சிகளது ஆட்சி என்று வெளியில் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்துகின்றனர். முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவே ஆட்சியை நடத்துகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவைச் சொல்லலாம்.

1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை சுருக்கி 4 தொகுப்புகளாக்குவது (Labor Codes) என்கிற தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஏற்கனவே நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டமாக்கி தயார் நிலையில் வைத்துள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்களை உள்ளடக்கிய பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொகுப்பு, 2020-ஐ கடந்த செப்டம்பர் 2020-ல் ஒன்றிய அரசு சட்டமாக்கினாலும் அமலாக்கம் செய்யாமல் தள்ளி வைத்துள்ளது.

சட்டத் தொகுப்பு (code) அமலாக்கம் தாமதமானாலும் கார்ப்பரேட் செவைகள் தடையின்றி நடக்க வேண்டும் என்பதில் அரசு எந்திரம் குறியாக இருக்கிறது. தொழிற்சாலைகள் சட்டம் மத்திய சட்டம் என்கிற போதிலும், பிரிவு 127-ல் மாநில அரசுகளுக்கு சில ‘உரிமைகள்’ வழங்கப்பட்டுள்ளது.

பிரிவு 127-ல் கண்டுள்ள ‘உரிமைகளின்படி’ மாநில அரசானது தனது மாநிலத்துக்குட்பட்ட ஆலை அல்லது ஆலைகளின் குழு (factory or group of factories) ஆகிய எதிலும் மிகை நேரப்பணியை கவனத்தில் கொண்டு வேலைநேரத்தை தளர்த்துதல் (flexible working hours) பணியிடை ஓய்வு நேரத்தை கணக்கில் கொண்டு வேலைநேரத்தை பரவலாக்குதல் (spread-over hours) ஆகியவற்றை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தைத் தான் தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது.

படிக்க : இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ

தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள தொழிற்சாலைகள் சட்டத் திருத்தமானது இச்சட்டத்தின் பிரிவு 51, 52, 54, 55, 56 அல்லது 59 ஆகியவற்றை தளர்த்தி ஒரு தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் குழுக்கள் ஆகியவற்றுக்கு விலக்கு (exemption) அளிக்க வழிவகை செய்துள்ளது.

இந்த விலக்கு எந்தெந்த தொழிற்சாலைகள் அல்லது தொழிற்சாலைகள் குழுவுக்கு எந்தெந்த வகையில் தரப்படும் என்பதை அரசு அடுத்தடுத்த நாட்களில் முடிவு செய்யும். இந்த விலக்கினால் தொழிலாளர்களுக்கும் – குறிப்பாக – பெண் தொழிலாளர்களுக்கு – நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் நன்மை ஏற்படும் என்று வழக்கம் போல் புருடா விட்டுள்ளனர். ஆனால், இந்த சட்டத்திருத்தமானது தளர்வாக்கப்பட்ட வேலைநேரம், பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்கிற பெயரில் 8 மணிநேர உரிமையை முற்றிலும் பறிக்கக் கூடியது. தொழிற்சங்க உரிமையையும், அதன் உடன் பிறந்த கூட்டுப்பேர உரிமையையும் பறிக்கக் கூடியது. நிரந்தர வேலை என்பதையும் பறிக்கக் கூடியது.

தளர்வாக்கப்பட்ட வேலைநேரம் என்பதன் பொருள் ஷிப்ட் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஷிப்ட் நேரத்தில் இடை, இடையே ஓய்வுகள் (இடைவெளி) தரப்பட்டு மீண்டும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என்பதே பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்பதன் பொருள்.

உதாரணமாக, ஒரு கணக்கை பார்க்கலாம். இதில் எண்ணால் குறிப்பிடுவதை வேலைநேரமாகவும், எழுத்தால் குறிப்பிடப்படுவதை இடைவெளி நேரமாகவும் எடுத்துக் கொண்டால்,

3 + மூன்று + 3 + மூன்று + 3 என 12 மணி நேரத்துக்கும்,

4 + இரண்டு + 2 + இரண்டு + 2 என 12 மணி நேரத்துக்கும்

3 + இரண்டு + 3 + இரண்டு + 2 என 12 மணி நேரத்துக்கும்

வேலைநேரத்தை பரவலாக்க (spread over) செய்ய முடியும். இந்த வேலை நேரத்தை உற்பத்திப் பொருளின் தன்மை, சந்தையின் தன்மை, உற்பத்தி அல்லது பணியில் ஈடுபடுவோரின் தன்மை ஆகியவற்றுக்கேற்ப 24 மணிநேரத்துக்கும் மாற்றியமைக்க தளர்த்தப்பட்ட வேலைநேரம் (flexible working hours) கட்டமைக்கப்படும். இது தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக இருக்காது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தையும் (Shops and Establishment Act) உள்ளடக்கிக் கொண்டால், வங்கிகள், இன்சூரன்ஸ், ஐ.டி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (I.T & ITES) ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தக்கூடியது.

காலை 6 முதல் மாலை 6 வரை அல்லது மாலை 6 முதல் காலை 6 வரை; தலா 12 மணிநேரம் ஒரு தொழிலாளியின் வேலைநேரம் நீடிக்கும். இடைப்பட்ட உணவு நேரம், தேநீர் இடைவெளி நேரம் (தலா 15 நிமிடங்கள், இரண்டு முறை) ஆகியவை தொழிலாளியின் சொந்தக்கணக்கில் சேர்க்கப்படும். அதாவது, உணவு நேரம், தேநீர் நேரம் ஆகியவற்றை இடைவெளி நேரக்கணக்கில் சேர்த்து விட்டால் சிந்தாமல், சிதறாமல் எட்டு மணி நேர உழைப்பை முதலாளி அறுவடை செய்து கொள்வான். தினசரி 12 மணி நேரம் ஆலையோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் 8 மணிநேர வேலைக்கு அப்பால் வேலை செய்தால் தரப்பட வேண்டிய மிகைநேரப் பணிக்கான இரட்டிப்பு ஊதியத்தை முதலாளி தர வேண்டியதில்லை. வேலை நேரம் என்று கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம்; வாரத்துக்கு 48 மணிநேரம் என்கிற கணக்கு சரியாகி விடும்.

இந்த இடைவெளி நேரத்தில் நிரந்தரத் தொழிலாளியை உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, காண்டிராக்ட், பயிற்சி மற்றும் நீம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கான சாத்தியமே அதிகம். பகுதிநேர, பீஸ் ரேட் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும் இந்த சட்டத்திருத்தம் கதவைத் திறந்து விட்டுள்ளது.

“வீட்டிலிருந்து பணி” என்கிற நவீனரக சுரண்டல் முறையை கார்ப்பரேட்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் தளர்த்தப்பட்ட, பரவலாக்கப்பட்ட வேலைநேர சட்டத்திருத்தம் தீவிரமாக்கியுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கான நிரந்தரத் தொழிலாளியை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று ஷிப்ட்டுகளையும் ஓட்ட வைக்கும் திட்டத்துக்கான முன்னேற்பாடே இந்த சட்டத் திருத்தம்.

இந்த சட்டத்திருத்தம் மூலம் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கை சொற்பமாகக் குறைவதோடு, தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், தமது பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதும் சாத்தியமற்றதாகிறது. இதன் விளைவாக, தொழிற்சங்க செயல்பாடும், கூட்டுப்பேர உரிமையும் தேவையற்றதாகி விடுகிறது.

இதில், தொழிலாளருக்கு நன்மை கிடைக்குமாம். குறிப்பாக, பெண் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்குமாம். எப்படிப்பட்ட நன்மை கிடைக்கும்? பெண் தொழிலாளர்கள் 3 வகையான ஷிப்ட்டுகளிலும் ஈடுபடுவதற்கு குடும்பப் பராமரிப்பு வேலைகள் தடையாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது, வேலைநிறுத்தம் செய்வது போன்ற ‘இடையூறுகள்’ எதையும் தரமாட்டார்கள். அப்படியே போராட நேர்ந்தாலும்  குடும்பத்தினரே போராட்ட நடவடிக்கைகளை தடுத்து விடுவார்கள்.

இதெல்லாம் முதலாளிகள் தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். பெண் தொழிலாளர்கள் குடும்பப் பராமரிப்புக்கு நேர இடைவெளி கொடுத்தால் நாள் முழுக்க வேலை செய்வது சாத்தியமானது தான் என்பதையும் முதலாளிகள் நன்கறிவர். பெண் தொழிலாளர்களுக்கு இடைவெளி தேவைப்படுகின்ற நேரம் காலை 6-10 மற்றும் மாலை 6-8 என்பதுதான். இந்த கால இடைவெளியில் ஓய்வு கிடைத்துவிட்டால் எந்த தொந்தரவும் இன்றி இரவு 10 மணி வரை வேலை செய்வார்கள்.

இப்படி, இடைவெளி நேரத்தில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மலிவான, தொந்தரவு செய்யாத, அதட்டலுக்கு அடங்கிப்போகும் உழைப்பாளிகள் கிடைத்து விடுவார்கள். சில துறைகள் தவிர, பொதுவில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என தற்போதைய தொழிற்சாலைகள் சட்டம் சொல்வதை அடித்து நொறுக்குகின்றனர். இதுதான் இந்த சட்டத் திருத்தம் பெண் தொழிலாளர்களுக்கு செய்யப்போகும் ‘நன்மை’.

இதில், இன்னொரு உள்குத்தும் இருக்கிறது. திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, திருப்பூர் போன்ற தொழில் மைங்களில் பெண் தொழிலாளர்கள் தங்குமிடத்தை கார்ப்பரேட்டுகள் சொந்த ஏற்பாட்டில் செய்து கொடுக்கின்றனர். சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 60,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கான கட்டுமானத்தை திருப்பெரும்புதூர்-ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டி வருகின்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வந்தது. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெவ்வேறு சைஸ்களில் இது போன்ற தங்குமிடங்களை கட்டி வருகின்றன.

இத்தகைய தங்குமிடங்கள் உற்பத்தி ஸ்தலத்தை ஒட்டியே கட்டப்படுகின்றன. புதிய தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் மூலமாக பரவலாக்கப்பட்ட, இடைவெளிகள் கொண்ட -வேலைநேரம் கொண்ட- ஷிப்ட்டுகள் உருவாக்கப்பட்டால், பெண் தொழிலாளர்கள் இடைவெளி நேரங்களில் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், இடைவெளி நேரம் முடிந்த பிறகு மீண்டும் பணியிடங்களுக்கு அழைத்து செல்லப்படுவதும் சாத்தியமான ஒன்றாகி விடுகிறது. இது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொருந்தக்கூடிய பார்முலா தான்.

ஏற்கனவே சொல்லப்பட்ட பகுதிநேர, பீஸ்ரேட், காண்டிராக்ட், நீம் மற்றும் அவுட்சோர்ஸிங் வேலைமுறை மூலம் தொழிலாளியை தனித்தனியாக பிரித்து வைத்து உற்பத்தியை தீவிரப்படுத்தவே  மேற்படி சட்டத்திருத்தம்.

இதிலும் கூட 21..4.2023 அன்று ஒரு நாடகம் நடந்திருக்கிறது. 12.4.2023 அன்று மசோதா முன்வைக்கப்பட்ட தளர்த்தப்பட்ட, பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்கிற முன்மொழிதல் பின்னுக்குத்தள்ளப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் தலா 12 மணிநேரம் வேலை செய்துவிட்டு எஞ்சிய 3 நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்கிறார், அமைச்சர். ஒரு நாளுக்கு 6 முறை சாப்பிட்டுவிட்டு அடுத்த 3 நாட்கள் பட்டினி கிடப்பது என்பதைப் போன்றிருக்கிறது.

12 மணிநேரம் வேலை செய்தால் தொழிலாளிக்கு வருவாய் பெருகும் என்றொரு முத்தான அறிவுரையை சொல்லி இருக்கிறார், அமைச்சர் பெருமகன். இது ஐ.டி ஊழியர்களுக்குத் தான் என்றும் அருளி இருக்கிறார். இதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டால், வேறு பல கேள்விகள் எழுகின்றன.

ஐ.டி துறையிலோ, தொழிற்பூங்காக்களிலோ வேலை செய்யும் எவருக்கும் வீட்டு வாசல்படியில் பணியிடம் இல்லை. குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் பிக்கப் பஸ்சில் சென்றாக வேண்டும். காலை 8 மணி ஷிப்ட்டுக்கு 6 மணிக்கே கிளம்ப வேண்டும். காலை 8 மணிக்கு ஷிப்ட் துவங்கினால் இரவு 8 மணிக்கு முடியும். அதன் பிறகு பிக்கப் பஸ் ஏறினால் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்துவிடலாம். பின்னர் சாப்பிட்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும்.

6 மணிநேரம் கூட தூங்க முடியாது என்கிறபோது குடும்பம் அல்லது சமூகத்துடன் எப்படி உறவாட முடியும்? எந்திரத்தை விட மோசமாக இருக்கிறதல்லவா? அடுத்ததாக கூடுதல் வருவாய் விசயத்துக்கு வருவோம். எந்திரத்தொடு எந்திரமாய் உழைத்து, 40 வயதும்குள் மூட்டுகள் தேய்ந்து, முதுமை அடைந்து சாகச் சொல்கிறார்கள்.

12 மணிநேர வேலை என்பது கட்டாயமல்ல; தொழிலாளி ஒப்புக் கொண்டால் செய்யலாம் என்கிற பம்மாத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஆலையில் தொழிலாளர்கள் வேலைநேரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்துடன் இருக்கிறார்கள்? இதெல்லாம் தொழிலாளர் துறை அதிகாரிகள் அமைச்சருக்கு சொல்லமாட்டார்களா? கார்ப்பரேட்டுகளே அரசை நடத்துகிறார்கள் என்கிறபோது அமைச்சர் பதவி வெற்று தானே?

படிக்க : தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

12 மணிநேர வேலையை நடைமுறைப்படுத்தி அதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் அனுபவத்தை யாரிடம் கேட்டு பெறப்போகின்றனர்? தொழிலாளியிடமா? தொழிற்சங்கத்திடமா? முதலாளிகளிடமா? அப்படி அனுபவத்தை தொகுப்பதற்கான காலக்கெடு என்ன? அனுபவத் தொகுப்புக்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறதா? அனுபவத்தொகுப்பு குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் யாரும் பதில் சொல்லப்போவதில்லை. மாறாக, ஏதாவது சொல்லி 12 மணிநேர வேலையை நம் தலைமீது திணிப்பது மட்டுமே தி.மு.க அரசின் நோக்கமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநில அரசும் இதேத் திட்டத்தை சட்டமாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

44 தொழிலாளர் சட்டங்களை நாடாளுமன்றத்தில் 40 நொடிகளில் ஒழித்துக்கட்டிய மோடி அரசுக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலமாக தொழிற்சாலைகள் சட்டத்திருத்ததை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின் அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஒன்றிய அரசு, மத்திய தொழிற்சங்கங்களுடன் விவாதிக்காமல் தொழிலாளர் உரிமைகளை பறித்ததற்கும், அதே போக்கில் எந்த தொழிற்சங்கத்தின் கருத்தையும் கேட்காமல் தமிழ்நாடு அரசு முடிவெடுத்ததற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஒன்றிய அரசோ, மாநில அரசோ – எந்த அரசானாலும் மக்கள் உரிமையைப் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. அரசுகளின் பார்வையில் கார்ப்பரேட் நலன் தான் முக்கியமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க – அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தமிழ்நாடு. செல் : 7397404242.

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “இவங்க எல்லாம் சங்கிங்க” பாடல் காணொலி வடிவில்

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Song

பாருங்கள்! பகிருங்கள்!!