Friday, June 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 113

மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக நிதியுதவி செய்தது, கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து புத்தகங்கள் வாங்கியது என அற்ப காரணங்களை முன் வைத்து, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (AIPEU) மற்றும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) ஆகிய இரண்டு பெரிய அஞ்சல் சங்கங்களின் அங்கீகாரத்தை பறித்திருக்கிறது மோடி அரசு.

1920-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்ட AIPEU சங்கமானது இந்தியாவின் மிகப்பழமையான தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.NFPE என்பது அஞ்சல் துறை சங்கங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும்.மேலும் தபால் ஊழியர்களின் 75% பெரும்பான்மை வாக்குகளை பெற்று இயங்கும் இச்சங்கத்தில் AIPEU உட்பட 8 அஞ்சல் ஊழியர் சங்கங்கள் இணைந்து செயல்படுகின்றன.

இந்நிலையில், NFPE மற்றும் AIPEU ஆகிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியளிப்பதாகவும், CPI(M) மற்றும் CITU சங்கங்களுக்கு நிதியளிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு போன்ற சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் அஞ்சல் துறையின் உதவி இயக்குநர் நஹர் சிங் மீனா.


படிக்க: தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!


மேலும் “அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு நன்கொடை வழங்குவது என்பது பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் விதிகளுக்கு முரணானது நடவடிக்கைக்கு உரியது” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“இவ்வாறு தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையானது தொழிற்சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று NFPE உதவிப் பொதுச் செயலாளர் பி.கே.முரளீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் NFPE தொழிற்சங்கமானது அஞ்சல்துறை சேவைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. குறிப்பாக ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரியது என இவர்கள் கொண்டுவரும் கார்ப்பரேட் நலச் சட்டங்களுக்கு எதிராக நின்று போராடி அவற்றை அமல்படுத்தவிடாமல் தடுக்கும் வேலைகளை இச்சங்கங்கள் செய்து வருவதால், இம்மாதிரியான பாசிச நடவடிக்கைகளை அஞ்சல் சங்கங்கள் மீது ஏவிவிட்டிருக்கிறது மோடி அரசு.


படிக்க: நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!


இதில், நாம் கவனிக்க வேண்டியது AIPUE மற்றும் NFPE போன்ற தொழிற்சங்கங்களின் மீது அவ்வாறான புகார்கள் அளித்தது ஆர்.எஸ்.எஸ்-இன் பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் (BMS) இணைந்த பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் (BPEA). இவர்கள் கொடுத்த பல்வேறு புகார்கள் நெருக்கடிகளின் பெயரில்தான் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கிறது.

NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை. மக்கள் போராட்டத்தை ஆதரித்தால் நாளை உங்களுக்கும் இதே நிலை தான் என்று தொழிற்சங்கங்களை பார்த்து கொக்கரிக்கிறது பாசிச கும்பல்.

டேவிட்

சென்னை – மதுரை மே தின பேரணி ஆர்ப்பாட்டம் | நேரலை காணொலிகள்

சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் !

பேரணி:

 

ஆர்ப்பாட்டம்:

0-0-0

மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்!

பாகம் -1

 

பாகம் -2

 

பாகம் – 3

 

பாகம் – 4

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

மே தினம் குறித்து தோழர் லெனின்

மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்தபோது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார்.

அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது.

படிக்க : நான் உலகம்! தொழிலாளி நானே உலகம் | ம.க.இ.க பாடல் | சிவப்பு அலை

“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

“பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக கடைபிடித்தார்கள்.

காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர்.

மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள்.

இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’.

ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ஆம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட “கார்கோவில் மே தினம்” என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

“இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம்.

மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது.

லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார்.

“வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.

படிக்க : உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிச தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுபோன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்து வைக்கக் கூடாது. 8 மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.”

– அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு நூலிலிருந்து…

நான் உலகம்! தொழிலாளி நானே உலகம் | ம.க.இ.க பாடல் | சிவப்பு அலை

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழாவில் ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலின் காணொலியை இங்கே வெளியிடுகிறோம்.

பாடல் வீடியோவை பாருங்கள்! பகிருங்கள்!!

உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

தெரிந்தோ தெரியாமலோ
சுரண்டப்பட்டு கொண்டிருக்கும்
தொழிலாளியின் வியர்வை
காய மற்றொரு நாள்
விடுமுறை!

புலனத்தில்
ஒரு ஸ்டேட்டஸ்
தெரிந்தவர்களுக்கு
ஒரு வாழ்த்து
அவ்வளவுதானா
இத்தினத்தின் வீரியம்?

பிறகு,
சிந்திக் காய்ந்த
குருதியையும்
தியாகம் செய்யப்பட்ட
உயிர்களையும்
நினைவுக் கூர்வது
எப்போது?

முட்டி முளைக்கும்
விதை முதல்
எட்டி உதைக்கும்
குழந்தை வரை
இங்கு அனைத்து உயிரும்
தன் தேவைகளை
போராடிதான்
பூர்த்தி செய்கிறது.

அப்படி நடந்த
பல போராட்டங்களின்
ஒரு அடையாளமே
இந்த மே தினம்.

குறைந்தபட்ச கூலிக்கு
உலகெங்கும் அடிமைகளாய்
மாற்றப்பட்ட தொழிலாளர்கள்
சிலிர்த்தெழுந்ததின்
நினைவு தினம் அது.

20 மணி நேர
வேலை நேரத்தை
8 மணி நேரமாக
அடைந்து காட்டிய
சரித்திர வெற்றியின்
கொண்டாட்ட தினம் அது.

தொழிலாளர் வர்க்கத்திற்கான
ஆர்ப்பாட்ட நாளாய்
பாரிஸ் மாநாடு
அள்ளித்தந்த தினம் அது.
ஆம், இது நமக்கான நாள்!

இருந்த வேலை வாய்ப்புகளை
பிடுங்கிக் கொண்டு
கிடைக்கும் வேலைக்கெல்லாம்
நம்மை துரத்தியடிக்கும்
முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்!

தொழில்நுட்ப சுரண்டளுக்கான
எச்சரிக்கை நாள்!
முதலாளித்துவத்திற்கு எதிராய்
தொழிலாளர்கள் சங்கேந்தி
கிளம்ப வேண்டிய
புரட்சி நாள்!

– துலிபா

மாநாடு பிரச்சாரத்தில் ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள்! | வீடியோ

க்கள் கலை இலக்கிய கழகம் “சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு என்ற தலைப்பில் மே மாதம் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கான தொடர்வண்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் தோழர் தீரன் அவர்கள் பாடிய பாடல் இரயிலில் பயணித்த மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!

கொடூரமான நாஜி – பாசிச படைகளின் பிரதிநிதியாக இருந்த ஹிட்லர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தனது பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டான். தனது கனவுகள் சிதைந்து போனதையும், குறிக்கோள்கள் தன் கண்ணெதிரே தோற்றுப் போனதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டான், ஹிட்லர்.

பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது.

1945-ம் ஆண்டு மே 8-ம் தேதிதான் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது. நாஜிக்களின் பாசிச படைகள் இறுதித் தோல்வியை தழுவின.

1939-ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 6 ஆண்டுகள் நீடித்தது. அதில் 61 நாடுகளின் 170 கோடி மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது அன்றைய உலக மக்கள் தொகையில் 80% ஆகும். இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள். சோவியத் யூனியனின் 1,710 நகரங்கள், 70,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 32,000-த்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், 65,000 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை ஜெர்மன் படைகளால் அழிக்கப்பட்டன. மனித வரலாற்றிலேயே எந்த ஒரு நாடும் எந்த ஒரு போரிலும் சந்தித்திராத இந்த பேரிழப்பின் பொருளாதார மதிப்பு 2,600 பில்லியன் ரூபிள்.

சோவியத் இராணுவம் 11.3 கோடி மக்கள் தொகை கொண்ட 11 நாடுகளை நாஜிகளின் பிடியிலிருந்து விடுவித்தது. மேலும், பாசிசத்துக்கு எதிராக சோவியத் யூனியன் ஈட்டிய வெற்றி, உலகெங்கிலும் காலனிய ஆட்சியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்றாம் உலக நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை வீரியமடையச் செய்தது.

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.

இந்தியாவிலும் தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற கொக்கரித்துக் கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச படையை முறியடிக்க சோவியத் மக்களின் வழியில் வீறுநடைபோடுவோம்!

பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

0

பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் 14 பேரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளது குஜராத் அரசு. இதை பற்றி விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசிடம் உச்ச நீதிமன்றம் 2023 ஏப்ரல் 18 அன்று கேட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி குஜராத்தில் நடந்த காவிக் குண்டர்களின் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் போது அகமதாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பில்கிஸ் பானோ காவிக் குண்டர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அவருக்கு 19 வயது, கர்ப்பிணியாக இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் காவிக் குண்டர்களால் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அவரது மூன்று வயது மகனும் அடங்குவார்.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் கோத்ரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குஜராத் அரசு அதன் மன்னிப்புக் கொள்கையின் கீழ் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

குஜராத் மாநிலத்தில் குற்றம் நடந்ததால் மன்னிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் 2022 மே மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு உள்ளிட்டு ஒரு தொகுதி மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 2023 ஏப்ரல் 18 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி 2023 மார்ச் 27 ஆம் தேதி முதல் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அன்றைய தினம், குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்குவது குறித்த காரணங்கள் அடங்கிய அசல் கோப்புகளுடன் தயாராக இருக்குமாறு குஜராத் அரசுக்கு நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இன்னும் கோப்புகளை தாக்கல் செய்யாததால், அரசின் நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்று அமர்வு குறிப்பிட்டது.

“கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுள்ளார். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று அமர்வு குறிப்பிட்டது. “பாதிக்கப்பட்டவரின் வழக்கை வழக்கமான பிரிவு 302 கொலை வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது என்பதுபோல, படுகொலையை ஒரு வழக்கமான கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் பொதுவாக சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிராக செய்யப்படுகின்றன. சமத்துவமற்றவர்களை சமமாக நடத்த முடியாது” என்று அமர்வு கூறியது.

“இன்று பில்கிஸ், ஆனால் நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். விடுதலை வழங்குவதற்கான காரணங்களை நீங்கள் கூறவில்லை என்றால், நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுப்போம்” என்று நீதிமன்றம் கூறியது.

படிக்க : பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!

விளக்கம் அளிக்காமல் நாட்களை கடத்தி பில்கிஸ் பானோவிற்கு நீதி கிடைக்க விடாமல் காவிக் குண்டர்களுக்கு விடுதலை கிடைக்க வழிவகையை செவ்வனே செய்துவருகிறது குஜராத் – ஒன்றிய மோடி அரசு.

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்கள் பா.ஜ.க நடத்தும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்களோடு மேடையை பகிர்கின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையும் அவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி விடுதலை செய்வதற்கே! இன்னும் எத்தனை காலத்திற்கு காவிமயமாக்கப்பட்டு வரும் நீதிமன்றங்களை நம்பி சட்டப்போராட்டம் மட்டும் நடத்திக்கொண்டு இருக்கப்போகிறோம்?

கல்பனா

“ஈரோடு பட்டி ஃபார்முலா”: புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி, ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது தி.மு.க; திருமங்கலம் மாடலை விஞ்சிவிட்டது ஈரோட்டு மாடல்” – என ஈரோடு இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் பணநாயகம் வென்றதாகவும் ஜனநாயகம் தோற்றதாகவும் பேசி வருகின்றன. ஓட்டுக்கு பணம் வாங்குவது, பரிசுப் பொருட்கள் தருவது எல்லாம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தல்களிலும் நடக்கும் விஷயம்தான் என்றாலும் இவர்களின் புலம்பல்கள் ஈரோட்டில் இது உச்சம் அடைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

படிக்க : அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிப்பெற்றுள்ளார். இது தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துவிட்டனர்.

காங்கிரஸ்தான் தேர்தலில் போட்டியிட்டது என்றாலும், ஆரம்பம் முதலே தி.மு.க.தான் களத்தில் இறங்கி மும்முரமாக வேலை செய்து வந்தது. எப்போதுமே இடைத்தேர்தல் என்றால், அதற்கு ஆளும்கட்சிகள் காட்டும் அக்கறையே தனிதான். எனினும் தனது திராவிட மாடல் ஆட்சியின் மீதான பிம்பத்தை இழந்துவிடக்கூடாது என்ற தி.மு.க.வின் பதற்றமும், வரப்போகும் மக்களவைத் தேர்தலில் இது கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்ற எதிர்கட்சிகளின் எண்ணமும் ஈரோடு தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்தது.

குறைந்தது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வேண்டும் என்ற இலக்கில் களமிறங்கிய தி.மு.க. இத்தேர்தலுக்கு செலவழித்த மொத்தத் தொகை சுமார் 400 கோடி என்று சொல்லப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் பார்த்துப் பார்த்து கட்டமைத்து வைத்திருந்த “திராவிட மாடல்” பிம்பத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ஒட்டுப் பொறுக்குவதற்காக எல்லா அயோக்கியத்தனங்களையும் அராஜகத்தையும் நிகழ்த்தியது.

தேர்தல் தேதி அறிவித்ததும் ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சரவையும் ஈரோட்டில் கூடாரம் போட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தது. ஒரு அமைச்சருக்கு மூன்று வார்டுகள் என பிரித்துக் கொடுக்கப்பட்டதால் திரும்பும் திசையெல்லாம் அமைச்சர்களின் ஊர்வலங்களும், அவர்கள் செய்த கோமாளித்தனங்களும்தான் பேசுபொருளாக இருந்தன.

தி.மு.க. அமைச்சர் செஞ்சி மஸ்தான் போட்ட பரோட்டா, அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி ஆடிய ஒயிலாட்டம், உதயகுமார் போட்ட டீ – என கேலிக்கூத்துகளுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் இருந்தது தேர்தல் களம்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வாரியிறைத்தன. ஒரு ஓட்டுக்கு சுமார் 15,000 ஆயிரம் ரூபாய்வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குக்கர், ஹாட்பாக்ஸ், சேலை, கொலுசு, வெள்ளி டம்ளர், ஸ்மார்ட் வாட்ச், லேப் டாப் என பரிசுப் பொருள்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது. தி.மு.க. வழங்கிய வெள்ளி டம்ளர் அளவில் பெரியதாக இருப்பதாகவும் அ.தி.மு.க. கொடுத்த டம்ளர் சிறியதாக இருப்பதாகவும் ஒப்பிட்டுக் காட்டி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலாவிக் கொண்டிருந்தன. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கே சென்று இறைச்சி தருவது, காதணி விழா என்ற பெயரில் பிரியாணி வழங்குவது என எப்படியாவது ஓட்டுக்களை பொறுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக வேலை செய்துவந்தன தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்.

“தமிழ்” “தமிழர்” என பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது தேர்தலுக்கான ஆயுதங்களாக இனவெறியையும் சாதிவெறியையும் எடுத்துக் கொண்டார். “போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார்”. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு தூய்மை பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தெலுங்கர்கள்தான் அருந்ததியர்கள்” என அப்பட்டமாக சாதிவெறியை கக்கினார். நாட்டையே காவி இருள் சூழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றியெல்லாம் பேச வக்கற்றுப்போன சீமான் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநிலத் தொழிலார்களை அடிப்பேன் உதைப்பேன் என இனவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் வேலையில் இறங்கினார்.

பிழைப்புவாதத்தின் மற்றொரு பரிணாமம்!

மற்ற இடைத்தேர்தல்களைவிட, ஈரோடு தேர்தலை மற்றொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றது “பட்டி ஃபார்முலா”. தி.மு.க.வினர் ஏற்பாடு செய்த மண்டபங்களில் காலை முதல் நண்பகல் வரை இருந்தால் 500 ரூபாயும், காலை முதல் மாலை வரை இருந்தால் 1,000 ரூபாயும், மூன்று வேலை உணவும் தருவதாகக் கூறி மக்களை கொத்துக் கொத்தாக அழைத்துச் சென்று அடைத்து வைத்தது. இவ்வாறு கருங்கள்பாளையத்தில் மக்களை பட்டியில் அடைத்து வைத்திருப்பதை நேரலையில் செய்தியாக வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர்களை தி.மு.க.வினர் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி நாறிப்போனது.

தி.மு.க. கையிலெடுத்த இந்த பட்டியில் அடைக்கும் தேர்தல் உத்தியினால் எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, தெருக்களிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஈயாடியது. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை பார்த்து, “நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால், சூடு, சொரணை, வெட்கம், மானம் உள்ளவராக இருந்தால் வாக்களர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என கதறும் நிலைமைக்கு உள்ளானார்.

“பட்டி ஃபார்முலா”விற்கு அடுத்து, வாக்களர்களை “இன்பச் சுற்றுலா” அழைத்து செல்லும் சலுகையையும் அறிவித்து ஓட்டுக்களை கவர்ந்தது தி.மு.க.

தி.மு.க. மக்களை பட்டியில் அடைத்து வைக்கிறது, பணம் பரிசுப்பொருட்களை வாரியிறைக்கிறது என தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என அப்படமாக கைக்கழுவி விட்டு நடக்கும் அராஜகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்.

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுத்து தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் பாராட்டு விழா” என்று கரூரில் ஒட்டப்பட்ட சுவராட்டிகள் தேர்தல் ஆணையத்தின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியது.

வரலாறு காணாத அராஜகங்களையும், அட்டூழியங்களையும் அரங்கேற்றி தேர்தலில் வெற்றிப்பெற்று விட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், “இந்த வெற்றி 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். தி.மு.க.வை ஆதரிப்பவர்களும் இந்த வெற்றியை தி.மு.க.வின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்று வெட்கமே இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.

தேர்தல் சீரழிவின் கதை!

தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் இந்த இழிந்த கேடுகெட்டநிலை திடீரென்று தோன்றிய ஒன்றல்ல.

தற்போது திரிபுராவில் சட்டமன்ற தேர்தலில் பாசிச பா.ஜ.க எதிர்க்கட்சிகளை அடித்து விரட்டவதும், கொலை செய்வதும், ஓட்டுப் போடவிடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் வழிமுறைகளையும், தமிழ்நாட்டில் பாசிச ஜெயலலிதா, 2002 ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலிலேயே கையாண்டார். எதிர்க்கட்சிகள் அனைவரையும் அடித்து உதைத்து, கைதுசெய்து, பிரச்சாரத்திற்கு கூட வர விடாமல், வாக்குச்சாவடியிலும் நுழைய விடாமல் பல அட்டூழியங்களை நிகழ்த்தி ஜெயலிலதா அத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

அதேபோல, தற்போது ஈரோடு மாடலுக்கு முன்னோடி 2009 திருமங்கலம் இடைத்தேர்தல் ஆகும். அப்போதைய தி.மு.க.வின் தென்மண்டலச் செயலாளராக இருந்த அழகிரி தலைமையில் இடைத்தேர்தலை சந்தித்த தி.மு.க, ஒரு ஓட்டுக்கு 5,000 ஆயிரம் வரை பணமும், மிக்சி, கிரைண்டர், செல்போன், திருநெல்வேலி அல்வா, சாராயம் போன்ற பொருட்களும் வழங்கியது. இந்த தேர்தலை ஒட்டி உருவான “திருமங்கலம் ஃபார்முலா” என்ற சொல்லாடல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

ஆபாச நடனம், கறிவிருந்து என கலாச்சாரச் சீரழிவுகளை தேர்தல் பிரச்சாரத்தில் பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தி.மு.க. உருவாக்கிய “திருமங்கலம் ஃபார்முலாவை”, 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தல் விஞ்சிவிட்டது.

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டு போட்ட பிறகும்கூட மக்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் அ.ம.மு.க. கட்சியின் டி.டி.வி. தினகரன் உருவாக்கிய “டோக்கன் ஃபார்முலா” இன்றைய ஈரோடு தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டது.

சீரழிந்த தேர்தல் முறையின் இன்றைய கேடுகெட்ட பரிணாமம்தான் “பட்டி ஃபார்முலா” ஆகும். ஆடு-மாடுகளை அடைத்துவைப்பதற்குப் பெயர்தான் பட்டி. வாக்காளர்களை காசுக்காக ஆடு-மாடுகளைப் போல, காலை முதல் மாலை வரை ஒரு கூரையின் கீழ் அடைத்துவைப்பது ஒப்பீடு சொல்ல முடியாத இழிவாகும். இந்த அளவிற்கு மக்களை பிழைப்புவாதச் சாக்கடையில் மூழ்கடித்திருக்கிறது சொல்லிக்கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம்.

ஈரோடு இடைத்தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அதே மாவட்டத்தில்    கோபிசெட்டிபாளைய பகுதியில் பல நாட்களாக உணவின்றி பசிக் கொடுமையினால், இறந்துபோன தன் கணவர் மற்றும் தாயின் உடலை புதைக்கக் கூட பணமில்லாமல் ஒரு வாரகலாமாக சாந்தி என்ற பெண், வீட்டில் வாழ்ந்த கோடூரம் அரங்கேறியது. இதுதான் மக்களின் உண்மையான வாழ்நிலை.

படிக்க : தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!

வேலையின்மை, வறுமை, மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் எவையும் ஈரோடு தேர்தலிலோ அல்லது வேறு எந்த தேர்தலிலும் பேசப்படப் போவதில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று முழக்கங்கள் என்பதும், ஓட்டுக்கு கொடுத்தவரை பணத்தை வாங்கிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பதும் பெரும்பான்மை மக்களின் கருத்தாக உள்ளது.

ஓட்டுக்கட்சிகள் தேர்தல்களை, அதிகாரத்தின் மூலம் பொறுக்கித் திண்பதற்கான வாய்ப்பாகத்தான் பார்கின்றன. பெரிய கட்சிகள் அனைத்தும் இன்று கார்ப்பரேட் பாணியில் மாறிவிட்டன. அதனோடு தேர்தல் சீரழிவும் கார்ப்பரேட் பாணியில் மாறிவிட்டன. இங்கு அரசியல் கொள்கைகளுக்கு எந்த வேலையும் இல்லை.

பாசிச அபாயம் சூழந்து வரும் நிலையில் ஈரோடு “பட்டி ஃபார்முலா” போன்ற அரசியலற்ற பிழைப்புவாதத்தை ஊட்டிவளர்க்கும் வேலையை செய்வது பாசிச பா.ஜ.க வளர்வதற்குதான் துணைப் புரியும். கவர்ச்சிவாத-பிழைப்புவாத அரசியலை மற்ற ஓட்டுக் கட்சிகளை விட பாசிச பா.ஜ.க-வால் சிறப்பாகவே செய்ய முடியும் என்பதை விளக்கத் தேவையில்லை. உண்மையான அரசியல்படுத்துதல் என்பது மக்களை போராட்டக்களங்களுக்கு அழைத்துவருவதிலேயே இருக்கின்றது.

மதி

முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!

ர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் ரீதியான செல்வாக்குமிக்கவர்களாக பார்க்கப்படும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினரின் ஓட்டுகளை கவர்வதற்காக இம்மூன்று கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இதற்கிடையே கா்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. இந்த 4 சதவீத இடஒதுக்கீடு, ஒக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பெறலாம் என்றும் மாநில அரசு அறிவித்தது.

கா்நாடகாவில் மே 10-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவோம்” என்று வாக்குறுதி அளித்தது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியோ, “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் ஒருவரே முதல்வராக அமர்த்தப்படுவார்” எனக் கூறியது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பா.ஜ.க., இந்த கட்சிகள் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாக கூறியது.

படிக்க : கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

இதனையடுத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டிற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முஸ்லீம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்று பேசினார்.

“கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத அடிப்படையில் முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எப்போதும் ஏற்க முடியாது” என்றார்.

மேலும், “முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத்து சமூகங்களுக்குக்கான இடஒதுக்கீட்டு அளவை பா.ஜ.க அரசு உயர்த்தியுள்ளது” என்று கூறினார்.

இதற்கிடையே, முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யபட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 9 வரை கர்நாடக மாநில அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மே 9 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இதே யுக்தியை தெலுங்கானவிலும் பயன்படுத்தியது பா.ஜ.க. சமீபத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தலை சந்திக்கவுள்ள  தெலுங்கானாவில் அமித்ஷா உரையாற்றியபோது,  “இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டவிரோதமானது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்று நேரடியாகவே கூறினார்.

தேர்தல் நேரத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற எந்தவித அச்சமுமின்றி முஸ்லீம்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பா.ஜ.க.  இதனை, தேர்தல் பிரச்சாரம் குறித்து பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா பேசுகையில், “சாலை, குடிநீர்,வடிகால் போன்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்துப் பேச வேண்டாம். இந்து – முஸ்லீம் பிரச்சனை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலை சந்திப்போம். இஸ்லாமியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட நமக்கு தேவையில்லை” என்று பேசியதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

படிக்க : கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் பகிரங்கமாக முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையை பா.ஜ.க மேற்கொண்டிருப்பது ஏதோ வடமாநிலங்களில் அல்ல. கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில்.

“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது. தென்மாநிலங்களிலும் முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது. முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதன்மூலம் முஸ்லீம் அல்லாதவர்களிடையே தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வாக்குகளை அறுவடை செய்துகொள்வதற்கும் இந்த கீழ்த்தரமான யுக்தியை காவிக்கும்பல் கையாள்கிறது.

தூய்ஷன்

தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!

0

ப்ரல் 26 அன்று ஒரு ஊடக நிகழ்வில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து மோடியின் ‘நகைச்சுவை’ சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை பற்றி ஒரு பிரதமர் நகைச்சுவையாக கூறுவது மிகவும் மோசமானது என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், ஊடக சந்திப்பில் பார்வையாளர்கள் முன் இந்தியில் பேசிய மோடியின் உரை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பட்டது. அதில் மோடி, “எங்கள் குழந்தை பருவத்தில், நாங்கள் ஒரு நகைச்சுவையைக் கேட்போம். அதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

அப்போது அவர் கூறியதாவது: ஒரு பேராசிரியர் இருந்தார், அவருடைய மகள் தற்கொலை செய்து கொண்டாள். அவள், “வாழ்க்கை  மனச்சோர்வை அளிக்கிறது. வாழ விரும்பவில்லை. அதனால் நான் கன்காரியா ஏரியில் குதிக்க போகிறேன்” என்று கடிதத்தில் எழுதி இருந்தாள். காலையில் மகள் வீட்டில் இல்லாததை பெற்றோர்கள் பார்த்தார்கள். படுக்கையில் அவள் கடிதத்தை தந்தை எடுத்து படித்துவிட்டு மிகவும் கோபமடைந்தார். “நான் ஒரு பேராசிரியர். இத்தனை ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்தேன், இப்போதும் கூட அவள் கன்காரியா என்பதை தவறாக எழுதியுள்ளார்” என்றார்.

படிக்க : காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

இதை கேட்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். மோடியும் சிரித்தார். மேலும், “அர்னாப் கோஸ்வாமி நல்ல இந்தி பேசத் தொடங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். மேலும் கைதட்டல் எழுந்தது. “அவர் கூறியது சரியா தவறா என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நல்ல இந்தியில் பேசுகிறாரா இல்லையா என்பதில் நான் கவனம் செலுத்தினேன். அவர் மும்பையில் வசிப்பதால் இந்தி சரியாகக் கற்றுக்கொண்டிருக்கலாம்” என்று கோஸ்வாமியை புகழ்ந்து மோடி கூறினார்.

கோஸ்வாமியின் இந்தியைப் பாராட்ட இந்த ‘நகைச்சுவை’ ஏன் தேவைப்பட்டது என்பது பற்றி மோடியும் கூறவில்லை நமக்கும் தெளிவாகத் தெரியவில்லை.

மோடியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குழந்தைகளை இழக்கின்றன என்றும் அவர்களை பிரதமர் கேலி செய்ய வேண்டாம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இந்தியாவின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பதென்பது ஒரு சோகம் என்றும் நகைச்சுவை அல்ல என்றும் கூறினார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி மனோஜ் குமார் ஜா, “தற்கொலை போன்ற முக்கியமான பிரச்சினையை நாட்டின் பிரதமர் நகைச்சுவையாகச் சொல்லுவது மோசமானது. ஆனால் அந்த நகைச்சுவைக்குப் பிறகு கைதட்டல் மற்றும் சிரிப்பு என்பது இன்னும் படுமோசமானது. நாம் மிகவும் இழிவான சமூகமாகிவிட்டோம்…” என்று ட்விட் செய்துள்ளார்.

“மோடி தன்னைத்தானே மிஞ்சுகிறார்” என்று ஸ்வாதி சதுர்வேதி எழுதினார்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2021-ல் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் 450 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும் சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது முந்தைய ஆண்டை விட  7.2% அதிகமாகும்.

சமீபத்திய அறிக்கைகள் பல இளம் இந்தியர்களிடையே கல்வி சார்ந்த பிரச்சினை, உயரடுக்கு நிறுவனங்களில் கூட சாதிப் பாகுபாடு, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகள் மாணவர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிமைப்படுத்தியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

படிக்க : மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

மோடி ‘தற்கொலை’ பற்றி பேசிய அதே ஏப்ரல் 26‌ அன்று ஆந்திராவில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் மனநிலையை பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் சென்று நகைச்சுவை செய்வாரா பிரதமர் மோடி?

ஐஐடி – ஐஐஎம்-களில் தொடர்ந்து நடக்கும் மாணவர்களின் தற்கொலையை எப்படி பார்க்கிறார் மோடி என்பது அவரின் கேவலமான நகைச்சுவை உணர்வில் இருந்து நமக்கு தெளிவாக புலப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ வழியற்று தற்கொலை செய்துகொள்வதும் மோடியை பொறுத்தவரை ‘நகைச்சுவை’ தான்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனப்படுகொலையில் 2000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த காவிக்குண்டர்களில் முதன்மையானவரான மோடிக்கு, தற்கொலை சம்பவங்கள் நகைச்சுவையாகத்தான் தெரியும். இந்த பாசிச குணாம்சம் மோடிக்கு மட்டும் உரியது கிடையாது; ஹிட்லர் முதல் மோடி வரை பாசிஸ்டுகள் அனைவருக்குமே உரித்தானது இது!


காளி

உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!

0

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை, இந்தியாவின் முதல் கல்வி மந்திரி மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய அனைத்து குறிப்புகளை நீக்கியுள்ளதாக கூறுகிறது.

பழைய 11-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகமான இந்திய அரசியலமைப்பு வேலையின் முதல் அத்தியாயத்தில் இருந்து ஆசாத் பற்றிய குறிப்பையும், அதே பாடப்புத்தகத்தின் 10-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள ஜம்மு & காஷ்மீர்-ன் தன்னாட்சி நிலையும் நீக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, பழைய பாடப்புத்தகத்தில், ஜம்மு & காஷ்மீர் பற்றிய பத்தி கூறுகிறது: “ஜம்மு-காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்திருப்பது என்பது, அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் அதன் சுயாட்சியைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது” ஆனால் இந்தக் குறிப்பு நீக்கப்பட்டுவிட்டது.

படிக்க : இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

12 ஆம் வகுப்புக்கான திருத்தப்பட்ட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வரலாற்று புத்தகத்தில் முகலாய சாம்ராஜ்யம், 2002 குஜராத் கலவரங்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

12 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தின் ‘இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள்: பகுதி 2’ என்ற துணைத் தலைப்பின் கீழ் உள்ள ‘ராஜாக்கள் மற்றும் நாளாகமம்; முகலாய நீதிமன்றங்கள் (சி. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்)’ என்ற அத்தியாயங்கள் நீக்கப்படுள்ளன.

11 ஆம் வகுப்பு உலக வரலாற்றின் கருப்பொருள்கள் புத்தகத்தில் இருந்து ‘மத்திய இஸ்லாமிய நிலங்கள்,’ ‘கலாச்சார மோதல்’ மற்றும் ‘தொழில்துறை புரட்சி’ என்ற தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘குஜராத் கலவரம்’ என்ற தலைப்பில் உள்ள பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது. 2002 குஜராத் இனப்படுகொலை தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கை மற்றும் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் “ராஜ் தர்மம்” பற்றிய குறிப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தலித் இயக்கம் பற்றிய ஒரு கவிதை மற்றும் பனிப்போர் பற்றிய ஒரு அத்தியாயம் அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், முகலாயர்கள் தொடர்பான கவிதைகள் மற்றும் பத்திகளை நீக்க உள்ளது.

10 ஆம் வகுப்பு ஜனநாயக அரசியல் 2 பாடப்புத்தகத்தில், ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை,’ ‘மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள்’ மற்றும் ‘ஜனநாயகத்தின் சவால்கள்’ என்ற தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களை வரவிருக்கும் 2023-2024 கல்வி ஆண்டில் கொண்டுவரவுள்ளது.

“நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி புத்தகங்களைப் பயன்படுத்திக் கற்பிக்கிறோம்… திருத்தப்பட்ட பதிப்பில் உள்ள அனைத்தும் பின்பற்றப்படும்” என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.

முகலாயப் பேரரசின் பல அறிஞர்கள் இந்த நடவடிக்கைக்கு கடுமையாக பதிலளித்துள்ளனர். சைமன் ஷாமா என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர், “இது வரலாற்றின் மீதான மற்றொரு அபத்தமான போர் – முகலாயர்கள் ஒரு அற்புதமான நாகரிகம், கலை, இசை, கட்டிடக்கலை ஆகியவற்றை உருவாக்கினர்” என்று ட்வீட் செய்துள்ளார்.

முகலாய இந்தியாவில் இசை கேட்கும் வரலாற்றாசிரியர் கேத்ரின் ஸ்கோஃபீல்ட், “இது அபத்தமானது. முகலாயர்கள் இந்தியாவின் பெரும்பகுதியை 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர் (தொழில்நுட்ப ரீதியாக 300-க்கும் மேற்பட்டவர்கள்) மற்றும் நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றனர்” என்று கூறியுள்ளார்.

0-0-0

பரிணாம உயிரியலின் அறிவும் புரிதலும் உயிரியலின் எந்தவொரு துணைத் துறைக்கும் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும் முக்கியமானது. பரிணாம உயிரியல் என்பது மருத்துவம் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு, தொற்றுநோயியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், உளவியல் வரை சமூகங்கள் மற்றும் நாடுகளாக நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் துறையாகும்.

மனிதர்கள் மற்றும் வாழ்க்கைத் திரையில் அவர்களின் இடம் பற்றி நம்மில் பலர் வெளிப்படையாக உணரவில்லை என்றாலும், இயற்கைத் தேர்வின் கொள்கைகள், எந்த ஒரு தொற்றுநோய் எவ்வாறு முன்னேறுகிறது அல்லது சில உயிரினங்கள் ஏன் அழிந்து போகின்றன என்பதைப் புரிந்துகொள்ள பரிணாம உயிரியல் உதவுகின்றன.

NCERT-ன் ஆவணத்தின்படி, 10 ஆம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் உள்ள பகுத்தறிவு உள்ளடக்கத்தின் பட்டியலில், அறிவியல் பாடப்புத்தகம் அத்தியாயம் 9-ல் டார்வீன் பரிணாம வளர்ச்சி கோட்பாடு முற்றிலுமாக நீக்கிவிட்டு, ‘பரிணாமம்’ என்று தலைப்பை ‘பரம்பரை’ என்று மாற்றப்பட்டுள்ளது.

டார்வினிய பரிணாமக் கோட்பாட்டை இடைநிலைக் கல்வியில் மீட்டெடுக்க வேண்டும் என்று கோரி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தின் காரணத்திற்காக நாடு தழுவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான Breakthrough Science Society, ‘An Appeal Against Exclusion of Evolution’ என்ற தலைப்பில் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது.

படிக்க : என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (டிஐஎஃப்ஆர்), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) மற்றும் ஐஐடிகள் போன்ற பிரபல நிறுவனங்களின் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய 1,800 விஞ்ஞானிகள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, பரிணாம செயல்முறையைப் புரிந்துகொள்வது “அறிவியல் மனநிலையை உருவாக்குவதில் முக்கியமானது”; இதனை மாணவர்கள் உணரவிடாமல் செய்வதென்பது “கல்வியின் கேலிக் கூத்து” என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

உண்மை வரலாறுகளை நீக்கி தனது இந்துராஷ்டிர கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் வரலாற்றை திரித்து மடைமாற்ற எத்தனிக்கிறது மோடி அரசு. அறிவியல் பூர்வமான படித்து பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக அறிவியலையே வரலாற்றையே அழித்தொழிக்கும் வரலாற்று மோசடியை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

உண்மை வரலாற்றையும் பகுத்தறிவு பாடங்களையும் அறிவியல் பாடங்களையும் நீக்கும் இந்த மோடி அரசின் பாசிச செயல்பாடுகளை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

கல்பனா

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!

ன்னிரண்டு மணி நேர வேலைக்கான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவானது பா.ஜ.க தவிர்த்து தமிழ்நாட்டு மக்கள், அரசியல் இயக்கங்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடரின் அதே நாளில் 17 மசோதாக்கள் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கூட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் முக்கியமானது, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special ProjectsAct) என்பதாகும்.

இந்தச் சட்டம் கடந்த மூன்றாண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது என்பது கவனத்திற்குரியது.

நீர்நிலைகளான ஆறுகள், ஓடைகள், குளம், குட்டை, ஏரிகள் ஆகிய இடங்களை எந்தத் தடையுமின்றி தொழில்வளர்ச்சிக்காக எடுக்கலாம் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மசோதா வந்துள்ளதாகத் தெரிகிறது.


படிக்க: அரசு வேலைகளும் அரசு துறைகளும் அனைத்தும் தனியாருக்கே! “நம்ம ஸ்கூல் திட்டம்” திராவிட மாடலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்!


இச்சட்ட மசோதா அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவிருக்கும் பயணத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இன்னும் மோசமாக சுற்றுச் சூழலை அழிக்கப் போவது திண்ணம்.

காவி – கார்ப்பரேட் கும்பல் தமிழ்நாட்டை சுடுகாடாக்க துடிக்கும் கொண்டிருக்கும் நிலையில், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட இயற்கையை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலாபம் கொழிக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க இச்சட்ட மசோதா வழிவகை செய்யும். கொலைகார ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆலையை மீண்டும் திறப்பதற்கும் கூட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும். விவசாயிகளின் நிலங்களை பறித்து பரந்தூர் விமான நிலையம், சிப்காட்கள் அமைப்பது போன்ற திட்டங்களுக்கும் இனி தடை இல்லாமல் போய்விடும்.

ஒருபக்கம் பா.ஜ.க எதிர்ப்பு, சமூகநீதி பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் திமுக அரசு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான திட்டங்களையும், அதற்கேற்ப சட்டத் திருத்தங்களையும் ஒன்றிய மோடி அரசின் பாணியிலேயே செய்து வருகிறது. கார்ப்பரேட் கும்பலின் வேட்டை நிலமாக நாட்டை மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு துணை போகிறது.


படிக்க: காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!


கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் தொடர்ச்சியான போர்க்குணமிக்க போராட்டங்களை கண்ட பின்பும் தி.மு.க அரசு கார்ப்பரேட் சார்பு சட்டங்களை கொண்டு வந்து, தன் கார்ப்பரேட் வர்க்கச் சார்பை மூடி மறைக்க வேண்டிய அவசியமின்றி, தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆள்தான் என வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறது.

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவிற்கு எந்தளவிற்கு கடும் எதிர்ப்பை தமிழ்நாடு காட்டியதோ, அதே அளவிற்கு நமது இயற்கை வளங்களை அழிக்க வழிவகைக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதாவிற்கும் கடும் எதிர்ப்பை காட்ட வேண்டும். களப் போராட்டங்களின் மூலம் தி.மு.க அரசின் கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முறியடிக்க வேண்டும்.

அய்யனார்

சர்வதேசச் சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பதிவுசெய்துகொண்டு, ‘பரஸ்பர அடிப்படையில்’ சட்ட பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், “வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகள் 2022”-ன் கீழ், புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய பார் கவுன்சில். இவ்விதிகளின் மூலம் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்ற அமர்வுகளின் தீர்ப்புகளை இந்தியாவில் தொழில் துறை சார்ந்த வழக்குகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெருநிறுவனங்கள் தொடர்பான விஷயங்களிலும்; கையகப்படுத்துதல், அறிவுசார் சொத்து விவகாரங்கள், ஒப்பந்த வரைவு மற்றும் பரிவர்த்தனை சம்பந்தமான விவகாரங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டப் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று இவ்விதிகள் கூறுகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டே வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படும் என்று பார் கவுன்சில் கூறுகிறது. சான்றாக, இந்திய வழக்கறிஞர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் நேரடியாக வழக்குகளில் ஆஜராக முடியாது என்றும், இந்திய வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய சட்டத்துறையில் வெளிநாட்டு வழக்கறிஞர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான விவாதம் 2007ஆம் ஆண்டு முதலே எழுப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில், 2009ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றமும், 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும், இந்தியாவில் சட்டப்படிப்பு முடித்த வழக்கறிஞர்கள் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் வழக்காட முடியும் என்று தீர்ப்பளித்தது. 2018ஆம் ஆண்டில், மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. எனவே தற்போது பார் கவுன்சிலால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.


படிக்க: ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!


“இச்சீர்திருத்தம் மூலம் நாடு வளர்ச்சி அடையும்” என்றும், “சர்வதேசச் சட்டங்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்கும்போது நமது வழக்கறிஞர்களின் திறன் மேம்படும்” என்றும் கூறுகிறது பார் கவுன்சில். மேலும், “நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டின் பாய்ச்சலில் உள்ள சிக்கல்களையும், இந்தியாவை சர்வதேச வர்த்தக நடுவர் மையமாக மாற்றுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தீர்க்க இவ்விதிகள் உதவும்” என்கிறது. இவற்றை செயல்படுத்தாவிட்டால், “சட்ட தொழில்முறை நிபுணத்துவத்தை வழங்குவதில் இந்தியாவின் சட்ட சகோதரத்துவம் பின் தங்கிவிடும்” என்கிறது.

ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும், குறிப்பாக தொழில்துறை சட்டங்கள் அந்நாட்டின் தனிச் சிறப்பான சூழல், சமூக நிலைமை, சூழலியல் அமைப்புக்கு ஏற்ப வகுக்கப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, எல்லா நாடுகளிலும் பொதுவான சர்வதேச வர்த்தகச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதற்கு சேவைசெய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதிகளைத்தான் “அந்நிய முதலீட்டின் பாய்ச்சலில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்” என்கிறது பார் கவுன்சில்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுவது குறித்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய சட்டத் துறையில் சர்வதேசச் சட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது இங்கிலாந்து. பார் கவுன்சில் தனது புதிய விதிகளை அறிவித்ததும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (Wales) நாடுகளின் சட்டச் சங்கங்கள் வரவேற்றன. இப்போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து இணங்கி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

90-களில் கொண்டுவரப்பட்ட தனியார்மய – தாராளமய – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளின் ஒருபகுதியாக நாடுகளுக்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) போடப்படுகிறது. பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளுடன் ஏகாதிபத்திய நாடுகள் போட்டுக் கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், அந்நாட்டை கொள்ளையடுவதற்கான பல்வேறு வடிவங்களுள் ஒன்றாகும்.

நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.


படிக்க: நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!


ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல் இன்றுவரை தொழில்துறை, தொழிலாளர்நலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு சட்டத்திருத்தங்களை வரைமுறையின்றி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நம் நாட்டின் சட்டங்களே, கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு ஏற்றவகையில் தளர்த்தப்பட்டு வந்துள்ளது. என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இருப்பதை பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் தொல்லையாகக் கருதுகின்றன. அந்த ‘சிக்கலை’ தீர்ப்பதற்குத்தான், இந்த ‘சீர்த்திருத்தம்’.

போபாலில் மிகப்பெரிய இனப்படுகொலை செய்த யூனியன் கார்பைட் ஆலை, ஸ்டெர்லைட் ஆலை போன்ற நச்சு ஆலைகளுக்கு, சர்வதேச சட்டவிதிகளை மேற்கோள் காட்டி எவ்வித இடையூறும் இன்றி அனுமதி வாங்குவதற்கும் சூறையாடலை நடத்துவதற்கும்தான் இந்த புதிய விதிகள் பயன்படும்.

வெளிநாட்டு வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட பயிற்சிகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இருந்தால், இந்தியாவில் உள்ள சட்ட சகோதரத்துவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற பார் கவுன்சில், நாட்டு வளங்களும் உழைக்கும் மக்களும் சுரண்டப்பட மாட்டார்கள் என்ற எவ்வித உத்தரவாதமும் கொடுக்கவில்லை; கொடுக்கவும் முடியாது.

மொத்தத்தில், பார் கவுன்சிலின் இந்த புதிய விதிகள் தேசத்துரோகமனாதாகும். தேசப் பற்றுள்ள, உழைக்கும் மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு வழக்கறிஞரும், வழக்கறிஞர் அமைப்புகளும் பார் கவுன்சிலின் இந்த புதிய விதிமுறைகளை எதிர்க்க வேண்டும்.

வெண்பா

சென்னை மீனவர்கள் போராட்டம்: மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவாரா நீதிபதி? | தோழர் புவன்

மிழ்நாடு அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னை பூர்வகுடி மீனவர்களை அப்புறப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற மீனவர் பகுதிகளை உயர்நீதிமன்ற சென்னை நீதிபதி அழுக்காக பார்க்கிறார். நீதிபதிகள் முன்வந்து எடுக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்று பூர்வகுடி மீனவ மக்களை வெளியேற்றுவதில் அரசு அதிகாரிகள் அவசரம் காட்டுவது யாருக்காக.?

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!