Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 112

திரிபுரா, நாகலாந்து, மேகலாயா தேர்தல் முடிவுகள்: எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

சென்ற மாதம் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜ.க கட்சியானது சமூகத்தில் அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வெற்றி கேரளாவிலும் எதிரொலிக்கும் என்றும் தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் பெருமிதம் கொண்டார் மோடி. பெரும்பான்மை ஊடகங்களும் “வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க, மோடி அலையால் இது சாத்தியமாயிற்று” என மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடின.

மூன்று மாநிலங்களில் திரிபுராவில் மட்டுமே 32 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. மற்ற இரண்டு மாநிலங்களான நாகலாந்தில் 12 தொகுதிகளிலும், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அம்மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் ஆட்சியில் பங்குபெற்றிருக்கிறது பா.ஜ.க.

நாகலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. மேகாலயாவில் எந்தக் கட்சியும் பெரும்பானமை பெறவில்லை. அம்மாநில ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், மற்றொரு மாநிலக் கட்சியான ஜக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இச்சூழலில், ஆளும் தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மலைப்பகுதி மக்கள் ஜனநாயக் கட்சி (Hill State Peoples’ Democratic Party) ஆகியவற்றின் ஆதரவுடன் தொங்கு சட்டசபை அமைந்திருக்கிறது.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


தேர்தலுக்கு முன்பு வரை தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்துவிட்டு தேர்தலின்போது கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய மக்கள் கட்சியை ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்தது ‘உத்தம’க் கட்சியான பா.ஜ.க. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறின. ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அதிகார வெறியால் பா.ஜ.க.வே கூறிய ஊழல்கட்சிக்கு ஆதரவளித்து, அமைச்சர் பதவியும் பெற்றிருக்கிறது.

இம்மூன்று மாநிலத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம் கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றிகளைக் கூடப் பெறவில்லை. “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் கனவானது வடகிழக்கில் நனவாகி வருகிறது. திரிபுராவில், இத்தேர்தலுக்காக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசுடன் சி.பி.எம் வைத்த கூட்டணியும் பலனில்லாமல் போய்விட்டது. வெறும் 11 தொகுதிகளில்தான் சி.பி.எம் வெற்றி பெற்றிருக்கிறது.

இம்மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “வடகிழக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இம்மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டது. இந்த வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக மத்தியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும். ஆனால், தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர்” என்றார்.

சி.பி.எம்-இன் அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையில், “திரிபுரா மாநிலத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பணத்தை வாரியிறைத்தும், முறைகேடுகள் செய்தும் குறைவான பெரும்பான்மையில்தான் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் மூன்றிலும் ஏதாவது ஒரு வகையில் பாசிஸ்ட்டுகள் ஆட்சி அமைத்திருப்பது குறித்து காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளின் நிலைப்பாடு வெறும் தொகுதி குறித்தும், வாக்குவீதம் குறித்துமானதாகவே இருக்கின்றன.  தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுமளவிற்கு வன்முறை மாடலைக் கட்டவிழ்த்துவிட்ட பிறகும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிப்பதே முதல் இலக்கு என்று கம்யூனிஸ்ட்களை வேட்டையாடும் சூழலில், இக்கட்சிகளின் இத்தகைய நிலைபாடானது யதார்த்தத்தைக் காண மறுக்கும் குருட்டுத்தனமாகும்.

இலவசம்…  ‘வளர்ச்சி’ … இரட்டை நாக்கு – பா.ஜ.க.வின் வெற்றி சூத்திரம்

இலவசங்களால் நாடு கெடுகிறது என்று இலவசங்களைக் கண்டு எரிச்சலடைகிற, அவற்றை ஒழித்துக்கட்டத் துடிக்கிற காவி பாசிசக் கும்பல்தான் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில்  வகைதொகையின்றி பல கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கிறது. இந்த மூன்று மாநிலத் தேர்தல்களிலும் பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. பெண் குழந்தைகளுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி, இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, இரண்டு இலவச எரிவாயு உருளை (சிலிண்டர்), நாகலாந்து கலாச்சார ஆய்வு நிதி 1,000 கோடி ரூபாய், விவசாயிகளுக்கான பிரதமர் நிதி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும், பிறந்த பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள பத்திரம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துத்தான் தேர்தலை எதிர்கொண்டது பாசிசக் கும்பல்.

இலவசத் திட்டங்கள்  மட்டுமின்றி, மோடி அலையும், மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களும்தான் பா.ஜ.கவின் வெற்றிக்குக் காரணம் என்கின்றன ஊடகங்கள்.  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-லிருந்து) வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறியிருப்பதால்தான் பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்கின்றன.  இந்தியாவிற்கே மாடல் என்று முன்னிறுத்தப்படும் குஜராத் மாடலின் யோக்கியதை ஊரறிந்ததுதான். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தபோது, குஜராத் மாநிலத்தில் குடிசைகளை திரையிட்டு மறைத்ததை நாம் அறிவோம்.  இத்தகைய வளார்ச்சி மாடலின் நாயகர்கள் வடகிழக்கில் கொண்டுவந்த வளர்ச்சி என்னவாக இருக்கும்?

வடக்கிழக்கின்  “எட்டு மாநிலங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி” என்று கடந்த 2014-லிருந்து பல்வேறு கட்டுமானத் திட்டங்களை அறிவித்து வருகிறது கார்ப்பரேட்தாசனான மோடி அரசு. ரயில்வே, நான்கு வழிச்சாலைகள், வான் வழிப்போக்குவரத்து, எய்ம்ஸ் மருத்துவமனை என பல திட்டங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசானது வடகிழக்கு மாநிலங்களில் 1,34, 200 கோடி ரூபாய் செலவில் சாலை, ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்திற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள 187  திட்டங்களில்,  45 திட்டங்கள் மட்டுமே கடந்த எட்டு ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளன. மற்ற திட்டங்களில் சில கட்டுமானப் பணியில் உள்ளன, சில இன்னும் தொடங்கப்படாமலும் உள்ளன.

நாகலாந்தில் திமபூர்-கோஹிமா சுங்கச்சாவடிகளுடன் கூடிய நான்குவழிச்சாலைக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைத் திட்டமானது, திமபூர்-கோஹிமா தொடங்கி, இந்திய எல்லையக் கடந்து மியான்மர்-பாங்காங்க் வழியாக தாய்லாந்துடன் சாலைப் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் தொடக்கம்தான் இது.  “ஆசியாவின் சுதந்திர வர்த்தகப்பகுதி” (ASEAN-Free trade area) என்ற அடிப்படையில் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கானதுதான் இத்திட்டம். இதை மூடிமறைத்துவிட்டு வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்காக உள்கட்டுமானங்களை உருவாக்குவதுபோல் கூப்பாடு போடுகின்றன காவிக் கும்பல்கள்.


படிக்க: திரிபுரா காவிமயமான வரலாறு !


காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்ட ரத்தானது காஷ்மீரின் லித்தியத்தை அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல் கொள்ளையிட வழிவகுத்தது போல, வடகிழக்கில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்  வடகிழக்கின் வளங்களை உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கொள்ளையர்கள் சூறையாடுவதற்கானதாக இருக்கும் என்று வடகிழக்கு மக்கள் உணரும் தருணம் வெகு தூரமில்லை.  இமயமலைப் பகுதிகளில் உள்ள இந்த மாநிலங்கள் எதிர்கால “ஜோஷிமத்” போல் சூழலியல் பேரிடர்களை எதிர்கொண்டாலும் ஆச்சரியமில்லை.

வடகிழக்கு மாநிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் போடுவதற்காக இலவச அறிவிப்புகளை  ஒருபுறமும், நரித்தனமான இரட்டை நாக்கு சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை மறுபுறமும் கையாண்டு வருகிறது. இம்மூன்று மாநிலங்களில் நாகலாந்து, மேகாலயா இரண்டும் கிறித்துவர்கள் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு விவசாயம் செழிப்பாக இல்லாததால் மாட்டுக்கறிதான் பிரதான உணவாக, மக்களின் பண்பாடாகவும் இருக்கிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் மாட்டுக்கறி தடைச்சட்டத்தை நிறைவேற்றுகிற, மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய் பரப்பி அப்பாவிகளை கொலை செய்யும் காவி பாசிசக் குண்டர்கள் இம்மாநிலங்களில் மாட்டுக்கறி தடை குறித்து பேசுவதே இல்லை.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் “கிறித்துவ கைக்கூலிகள்”, “பாவாடைகள்” என்று கூச்சலிடுகிற, கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற இக்கும்பல்தான், இம்மாநிலங்களில் வெற்றிபெறுவதற்காக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக கே.ஜே அல்போன்ஸ் என்ற கேரள கிறித்துவரை நியமித்து செயல்பட்டது. இம்மாநிலங்களில் 80 தொகுதிகளுக்கு (மேகலாயா 60, நாகலாந்து 20) 75 தொகுதிகளில் கிறித்தவர்களையும், ஐந்து தொகுதிகளில் இதர இந்து அல்லாதவர்களையும் வேட்பாளாராக நிறுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார், வடகிழக்கு மாநில பா.ஜ.கவின் கூடுதல் ஒருங்கிணைப்பாளரும், தேசிய செயலாளருமான ரிதுராஜ் கிஷோர் சிங்கா.

நாகலாந்தில் நொய்பியூ ரியோ தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்கும்போது, அல்லேலுயா பாடியும், “அரசர்களின் அரசனான, தேவர்களின் தேவனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தால்” என்று கூறிதான் ரியோ முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதேமேடையில் எந்தவித சலனமுமின்றி இயல்பிலேயே இந்துவெறியர்களான அமித்ஷாவும் மோடியும் அமர்ந்திருக்கின்றனர். அதிகாரத்தில் பங்குபெறுவதற்காக எந்தளவிற்கு நரித்தனமாக சந்தர்ப்பவாதத்தில் காவி பாசிஸ்ட்டுகள் ஈடுபடுவர் என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

பாசிசக் கும்பலின் இச்சந்தர்ப்பவாதத்தை வடகிழக்கு மாநிலங்களிலும், ஏனைய இந்திய பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று பா.ஜ.கவிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் முயலவில்லை. அந்த அளவிற்கு, பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை வரும்போது வெற்றிபெறலாம் என்று மாயையில், கனவுலகில் சஞ்சரிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்துராஷ்டிர நீரோட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள்

பா.ஜ.க எதிர்ப்பு அலை உருவாகும் என எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் சூழலில், காவி பாசிஸ்ட்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் வேர்பரப்பி வருகின்றனர். ஒரே நாடு – அது இந்துராஷ்டிரம் என தனது இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது காவி பாசிசக் கும்பல். 2024 நாடாளுமன்ற தேர்தலே இந்துராஷ்டிரத்திற்கான நுழைவுவாயிலாக இருக்கும் சூழலில், இம்மூன்று மாநிலத் தேர்தல்களும், இதர மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் பா.ஜ.க.விற்கு முக்கியமானதாக இருக்கின்றன.  இச்சட்டமன்றத்தேர்தல்களில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெல்வது மட்டுமல்ல, அம்மாநிலங்களில் இந்துராஷ்டிர எதிர்ப்பு மனநிலையை ஒழிக்கவும், இந்துராஷ்டிர ஆதரவு மனநிலையை உருவாக்குவதற்கும் இத்தேர்தல்களை கருவியாக அணுகுகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

ஏற்கனவே, வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், வித்யாலாயாக்கள் ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு கொண்ட பழங்குடியினர்களை இந்துக்களாக மதம்மாற்றி வருகிறது பா.ஜ.க. 2014 மோடி ஆட்சிக்குப் பிறகு பெருமளவில் ஆர்.எஸ்.எஸ் இம்மாநிலங்களில் ஊடுருவி வேலை செய்கிறது. கடந்த 2018-இல் திரிபுராவில் பா.ஜ.க வெற்றி பெற்றதும் இவ்வாறே. தற்பொழுது இம்மூன்று மாநிலங்களில்  பா.ஜ.க வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் செய்த  ‘தன்னலமற்ற’ சேவையால் கனிந்தது என ஒப்புதல் வாக்குமூலமளிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ ஏடான  ஆர்கனைசர்.

குறிப்பாக, நாகலாந்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராளியும், கிறித்துவ எதிர்ப்பு கொண்டவருமான கைதின்லியூ என்பவரின் புகழை தனக்கு சாதகமாக கிறித்துவ எதிர்ப்பு மனநிலைக்கும், இந்துத்துவாவை பரப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது பா.ஜ.க. நாகலாந்தின் பெண் தெய்வங்களை கிருஷ்ணனின் மனைவி ருக்மணி, அர்ஜூனனின் மனைவி என்று பார்ப்பனமயமாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஒரே தேச எதிர்ப்பு வரலாறு கொண்ட வடகிழக்கு மாநிலங்களை  ராமாயண-மகாபாரத காலத்திலிருந்து  இந்தியாவுடன் இருப்பதாக கதைகட்டி வருகிறது.

72 வருடங்களாக,  போலி சுதந்திரத்தையோ, போலி குடியரசு தினத்தையோ கொண்டாடாத வடகிழக்கு மக்களிடம் அதை கொண்டாடுவதற்கான பழக்கத்தை, இந்தியாவின் அங்கம் என்ற மனநிலையை உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்துராஷ்டிர நீரோட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களை ஒன்று கலக்கச் செய்ய இந்து-இந்திய மனநிலை உருவாக்குவது முதன்மையானதாகும். இதை உருவாக்குவதற்காகவும், தனது அடித்தளத்தைப் மேலும் மேலும் பலப்படுத்தவும் இத்தேர்தல் வெற்றிகளை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பயன்படுத்தப் போகிறது.

ஆர். எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சித்தாந்தப் போராட்டமாகும். சட்டப்பூர்வமான வழிகளில் மட்டுமின்றி, சட்டவிரோதமான வழிகளில் அக்கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்கும் வகையிலானதாக நமது போராட்டம் பல்வகைப்பட்டதாக இருக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

அப்பு

அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை

கில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள்.

மேலும்..

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் சுமார் 50-ற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, அவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஆதிக்க சாதி வெறியர்களால் மனித மலம் கலக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிகழ்வானது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதயமுள்ள ஒவ்வொரு மனிதரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதைவிட அதிர்ச்சிக்கு உரியது, இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறி நாய்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதும், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் சேர்ந்து பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க சதி செய்துக்கொண்டிருப்பதும் தான்.

படிக்க : வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

இறையூர் என்பது சிறிய கிராமம். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால் தமிழக போலீசு குற்றவாளிகளை இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. மாறாக, குற்றவாளி யாரெனத் தெரிந்து பாதுகாத்து வருகிறது.

வேங்கைவயல் பிரச்சனை வெளியான சில தினங்களில், சமூக அக்கறை கொண்ட சுதந்திர பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களுடைய கள ஆய்வின் மூலமாக யார் இத்தகைய மனிதத் தன்மையற்ற செயலை செய்திருக்கக் கூடும் என்பதை அடையாளப்படுத்தினர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுள்ள சாதிய வன்மம் காரணமாக, முத்தரையர் சாதியைச் சேர்ந்த முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாதான் இதை செய்திருக்கக்கூடும் என்று வெளிக்கொண்டு வந்தனர். மேலும் வேங்கைவயல் மக்களும் முத்தையாதான் மலத்தை கலந்திருக்கக்கூடும் எனக் குற்றம் சாட்டினர்.

மேற்கூறியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், இவ்வழக்கில் பெயரளவிற்கு ஆதிக்க சாதி தரப்பிலிருந்து ஒன்றிரண்டு பேரை விசாரித்துவிட்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதுடன், மலம் எப்படி இருந்தது என வரைந்து காட்ட சொல்லியெல்லாம் சித்ரவதை செய்தது தமிழ்நாடு போலீசு.

தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் தமிழக போலீசின் அக்கிரமங்கள் அம்பலமாகி, அதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பிறகுதான் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி யும் ஆதிக்க சாதி வெறியர்களை காப்பாற்றும் நோக்கில் தான் செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க சதி வேலையில் ஈடுபட்டு வருகிறது. சி.பி.சி.ஐ.டி -யானது விசாரணை செய்த 147 பேரில் 119 பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர் என்றும், குறிப்பாக 11 பேர் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த 11 பேரில் 9 பேர் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாவர்.

சி.பி.சி.ஐ.டி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளும் விசாரணை முறை மிகவும் கவனிக்கத்தக்கது. முதலில் குடிநீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மலத்தின் மாதிரியை எடுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலமானது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த மாதிரியுடன், விசாரணையின் மூலம் சந்தேகப்படும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 11 பேரின் டி.என்.ஏ மாதிரியை ஒப்பிட்டு இவர்களில் யாருடைய மலம் குடிநீர்த்தொட்டியில் கலக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க போகிறார்களாம்.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் யாருடையது என்பதை கண்டறிவதற்கும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டறிவதற்கும் என்ன தொடர்பு? யாருடைய மலம் குடிநீர்த்தொட்டியில் இருக்கிறதோ அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதுதான் சி.பி.சி.ஐ.டி மற்றும் நீதிமன்றத்தின் வாதம். குற்றவாளிகள் தங்களுடைய மலத்தை தான் குடிநீர் தொட்டியில் கலந்து இருக்க வேண்டுமா? பிறருடைய மலத்தை  கலந்திருக்கலாமே? என்ற சாதாரண கேள்வி கூட நீதிமன்றத்துக்கும், போலீசுக்கும் எழவில்லை.

இது அப்பட்டமாக பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் நடவடிக்கை. இதை பாதிக்கப்பட்ட மக்களே அம்பலப்படுத்தி வருகின்றனர். டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்ட 11 பேரில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்த எட்டு பேர், இது பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் நடவடிக்கை என்று கூறி சோதனை முறையை புறக்கணித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது தமிழக போலீசு.

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் வேங்கைவயல் மக்கள், சி.பி.சி.ஐ.டி விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக மாற்றப்பார்க்கிறது; சி.பி.சி.ஐ.டி விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

படிக்க : வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்கி, ஆதிக்க சாதிவெறியர்களை காப்பாற்றுவதற்காக அப்பட்டமாக சதி செய்துக் கொண்டிருக்கிறது அரசு. இந்த பிரச்சனையில் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்தும் சாதிவெறியாட்டங்களை பாதுகாப்பதுதான் இந்த அரசின் பணியாக இருந்துள்ளது. போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய – சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.

இந்த சாதிய அரசிடம் நாம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும். சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப்போராட்டங்களை மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே இத்தகைய சாதிவெறியர்களை தண்டிக்கவும் சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும் முடியும்.

குயிலி

காரல் மார்க்ஸ் 205-வது பிறந்த நாள் – கவிதை

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் 205-வது பிறந்த நாளையொட்டி எழுத்தப்பட்ட கவிதை வரிகள்.

ஏட்டிலே பூத்து கிடக்கும்
காகிதப் பூவல்ல – நீ
உலக மக்களின் உள்ளத்தில்
பூத்துக் குலுங்கும்
புரட்சிப்பூ
சுவாசத்தில் கலந்த
சோசலிச
கருத்தியல் பூ

ஏ தேதோ சொல்கிறார்கள்
எதிரிகள்
அவதூறுக்கு அளவில்லை
அன்னிய தத்துவமாம்
உன்னால்
அழிவு நித்தமுமாம்

எனக்கோ
நகைப்பு
நதியாக ஓடுதே….

காலையில் விழித்து
மாலையில் மறைவதனாலே
கதிரவன்
மரணமடைந்து விட்டது
என்றனர்

நீயோ
மடி சாய்ந்து தங்கும்
மாலைச் சூரியன் அல்ல
இவ்வுலகம்
உன்னுடையதென்று
உழைக்கும் மக்களின்
அச்சத்தை அறுத்தெறியும்
அரிவாள்
பூட்டியிருக்கும் விலங்கை
உடைத்தெறியும்
சுத்தியல்

பாட்டாளிக்கு “மூலதனம்” படைத்தாய்
முதலாளித்துவத்தின்
மூலகனத்தை உடைத்துக்காட்டினாய்

அடிமை வர்க்கம் இருக்கும் வரை
நீ அழியப் போவதில்லை!
அதிகார வர்க்கம் முடியும் வரை
நீ அமைதி கொள்வதில்லை!

ஆம்!
மார்க்ஸ் வாழ்வார்
மார்க்சியம் வாழத்தான் செய்யும்

உலக தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
இழக்க ஒன்றுமில்லை
பெறுவதற்கோ ஓர் பொன்னுலகு உள்ளது.

துடித்து அடங்கட்டும் முதலாளித்துவம்!
துடிப்புடன் முன்னேறும் சமூக விஞ்ஞானம்.

கவிதை: தோழர் அன்பு

‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

டந்த பத்து நாட்களுக்கும் மேலாக (ஏப்ரல் 23-இல் இருந்து) டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் கைசர்கஞ்ச் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து 30-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தினர். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஜனவரி 23-அன்று அமைத்தது மத்திய விளையாட்டு அமைச்சகம். ஆனால், பாலியல் புகார் அளித்து 3 மாதங்களாகியும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி மாத போராட்டத்தின்போது எதிர்க்கட்சியினர், அரசியல் தலைவர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்த வீரர்கள், தற்போது அனைவரும் பங்கேற்கலாம் என்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டக் களத்துக்கு நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு தற்போது பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது.


படிக்க: பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!


மல்யுத்த வீரர்களின் போராட்டம் இந்திய மக்களின் பல தரப்பினரின் பேராதரவை பெற்றுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது குறித்து நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், “நமது வீரர், வீராங்கனைகள் நியாயத்துக்காக வீதியில் இறங்கிப் போராடுவது என்னை மிகவும் வேதனையடையச் செய்கிறது. நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டுக்கு உள்ளது. இனி, இம்மாதிரி சம்பவம் நடக்கவே கூடாது. இது ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்பட வேண்டும். சரியான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பல மல்யுத்த வீரர்கள் குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த சத்யவ்ரத், அன்ஷு மாலிக், மஹாவீர் போகத் போன்றோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வினேஷ் மற்றும் பிறருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

பல்வேறு விவசாயிகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். ஹரியானாவிலிருந்து பல காப் பஞ்சாயத்து உறுப்பினர்களும் போராட்டக் களத்திற்கு வந்தனர். பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகாயித்தும் போராட்டத்தில் பங்கேற்றார்.

“கடந்த முறை விவசாயிகள் போராடியபோது அரசு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. இந்த முறையும் நீதி கிடைக்காவிட்டால், நாங்கள் இங்கேயே உட்காருவோம்,” என்று பாரதிய கிசான் யூனியனின் டெல்லி மாநிலத் தலைவர் பிரேந்திர தாகர் பி.பி.சி-யிடம் தெரிவித்தார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 11-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.


படிக்க: கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !


இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு பெற்றுள்ள பிறகும் பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளான். “கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வீரர்கள் யாரும் இல்லை. ஏன் அரியானாவினர் மட்டும் பங்கேற்கின்றனர்? 12 ஆண்டுகளாக அவர்கள் மட்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனரா?” என்று தனது வக்கிரமாக பேசியுள்ளான்.

இவனுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக பேசிய நெதர்லாந்தில் இருந்து வந்து போராட்டத்தில் பங்கேற்ற ரேகா வோரா பல்லா என்ற பெண்மணி, “ஹரியானாவை சார்ந்தவர்கள் மட்டும் போராடினால் என்ன? ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் போராடுகின்றனர் என்றால் அதனால் என்ன? இந்த விவகாரத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்த பார்க்கிறார்கள்” என்று கூறினார். மேலும், “ஏன் ஒரே குடும்பம், ஏன் ஹரியானாவில் இருந்து மட்டும், ஏன் மற்ற மாநிலத்தில் இருந்து வரவில்லை என்பது இங்கு விவாதமாக்கப்படுகிறது. நான் இந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை. ஏன் முன்பே சொல்லவில்லை என்றால் அவர்கள் பெண்கள், அவர்கள் வெட்கப்படுபவர்கள். அவர்கள் மெதுவாக தைரியம் பெற்றுள்ளனர். இப்பொழுது அவர்கள் பேசுகின்றார்கள்” என்று செருப்பால் அறைந்தது போல் பேசினார்.

முதல் முறை போராடி ஒன்றும் ஆகவில்லையே என்று எண்ணாமல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்தது என்பது முன்னுதாரனமான விசயம். பாசிஸ்டுகளை ஒரு மூச்சிலேயே பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளனர். மேலும், பல்வேறு மிரட்டல்கள், பின்விளைவுகள், வீரர்கள் மீதான போலிசின் தாக்குதல்கள் உள்ளிட்டு அனைத்து நெருக்கடிகளையும் கடந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்துராஷ்டிரத்தை அமைக்க பாசிச கூட்டம் மூர்க்கமாக வேலை செய்துவரும் இத்தகைய சூழலில், பாசிஸ்டுகளுக்கு எதிராக ஆங்காங்கே நடக்கும் இப்போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை அளிக்ககூடியவை. இதுபோன்ற போராட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

சுஜி

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.

– கார்ல் மார்க்ஸ் (Marx, Engels, Collected Works, Vol. 3, Moscow, 1975, p. 134.)

ம், அற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும் போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமாவது அற்பவாதியின் உலகத்தைக் கண நேரம் பார்ப்பது பயன் தரும். மார்க்சின் மேதாவிலாசம் பூத்துச் செழித்த பின்னணியை அதிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்குக் குறைந்த பட்சமாக அந்த உலகத்தைப் பற்றிய நுண்சித்திரத்தையாகிலும் தருவது பயனுள்ளது.

ஜெர்மன் அற்பவாதம் பிரபலமானது; ஏனென்றால் ஹேய்னெயின் புண்படுத்துகின்ற கிண்டலும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் தப்ப முடியாத ஏளனமும் அதன் தோலை உரித்துக் காட்டியிருக்கின்றன. சுய திருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில்-தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில்-எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.

ஆனால், அற்பவாதம் எவ்விதத்திலும் ஒரு தேசியக் கண்டுபிடிப்பு அல்ல. அது குட்டிமுதலாளி வர்க்க சுய திருப்தி, போலியான மத ஆசாரம், இதயத்தில் கைக்கூலித்தனத்தை வைத்திருக்கின்ற முன்னாளைய கைக்கூலியின் அடிமைப் புத்தி ஆகியவற்றின் இயற்கையான விளைவு.

“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற “மனிதாபிமான” கோஷத்தை உபயோகித்து மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மக்களைப் பணத்துக்கு அடிமைகளாக்கி விட்டு அதை மனிதகுலத்தின் மாபெரும் “சாதனை’ என்று கூறுகின்ற சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவு.

அற்பவாதம் பல்வேறு நாடுகளில் அவற்றின் வரலாற்று நிலைமைகளுக்கும் தேசிய குணாம்சத்துக்கும் ஏற்றவாறு வளர்ச்சியடைந்தது. ஜெர்மன் அற்பவாதம் அதற்கே உரிய மணத்தைக் கொண்டிருந்தது. அதற்கு விசேஷமான காரணங்கள் இருந்தன.

அக்காலத்தில் படாடோபமாகச் சொல்லப்பட்ட “ஜெர்மன் தேசிய இனத்தின் புனித ரோமானியப் பேரரசு’’ 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில நூறு “தன்னுரிமை” கொண்ட அரசுகளைக் கொண்டிருந்தது. இவற்றில் பெரிய அரசுகள் (பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியா), மிகச் சிறிய இராஜ்யங்கள், சிற்றரசுகள், எலேக்டரேட்கள், மற்றும் சுதந்திரமான பேரரசு நகரங்கள் இருந்தன. அவை அனைத்தும் கணிசமான அளவுக்கு அரசியல் சுதந்திரத்தைக் கொண்டிருந்தன; சக்கரவர்த்தி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு மட்டுமே கீழ்ப்படிந்தன; சில சமயங்களில் அந்த அதிகாரம் வெறும் கற்பனையாக மட்டுமே இருந்தது. இதன் விளைவாக எங்கும் உள்நாட்டுச் சண்டைகளும் குழப்பமும் கலவரமும் நிலவின.

படிக்க : மார்க்ஸ்-ன் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும் || தோழர் ஏங்கெல்ஸ்

ஒவ்வொரு குட்டி அரசரும் தன்னுடைய குடிமக்களிடம் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அரசவை அதிகாரம் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தது. பிரெடெரிக் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியதைப் போல அவர்கள் எசமானருடைய கஜானாவை நிரப்ப வேண்டும், அவருடைய ‘அந்தப்புரத்துக்குப்’ போதுமான அழகிகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முழு நடவடிக்கைச் சுதந்திரமும் எல்லா ஆபத்துக்களிலுமிருந்து முழுக் காப்பும் வழங்கப்பட்டிருந்தது.

பணம் திரட்டுகின்ற அற்பவாதிகள், முதலாளி வர்க்கத்தினர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபம் என்ற நம்பிக்கையில் தாங்கள் ஒடுக்கப்பட்டு அவமதிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டார்கள்; தொடர்ச்சியான சமூகக் குழப்பத்தில் செல்வத்தின் வற்றாத ஊற்றுக்களைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மக்களோடு ஒன்று சேர்ந்திருந்தால் ஆங்கில முதலாளி வர்க்கம் 1640-1888ம் வருடங்களுக்கு இடையில் ஓரளவுக்குச் செய்ததைப் போல, அந்த சமயத்தில் பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருந்ததைப் போல பழைய ஆட்சியதிகாரத்தைத் தூக்கியெறிந்து பேரரசை மாற்றியமைத்திருக்கக் கூடும்.

ஆனால் ஜெர்மன் முதலாளி வர்க்கத்தினருக்கு அந்தச் சக்தி இல்லை, அதற்குரிய துணிச்சல் இருப்பதாக அவர்கள் ஒருபோதும் பாசாங்கு செய்யவுமில்லை. “விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு தயாரிப்பாளர்கள் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அரசாங்கம் மற்றும் மோசமான வர்த்தகத்தின் இரட்டைத் தாக்குதலை உணர்ந்தார்கள். பிரபுக்களும் சிற்றரசர்களும் தங்களுக்குக் கீழே இருப்பவர்களை எவ்வளவு கசக்கிப் பிழிந்தாலும் தங்களுடைய செலவுகள் அதிகரிப்பதற்குத் தகுந்தாற் போல வருமானங்களைப் பெருக்க முடியாது என்பதைக் கண்டார்கள். எல்லாமே மோசமாக இருந்தது.

நாடு முழுவதும் பொதுவான அதிருப்தி நிலவியது. கல்வியறிவு இல்லை, பெருந்திரளான மக்களின் அறிவைத் தூண்டக் கூடிய சாதனங்கள் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள் இல்லை, பொது மக்களின் கருத்து இல்லை, மற்ற நாடுகளுடன் விரிவான வர்த்தகம் கூடக் கிடையாது. ஒரு அற்பமான, கோழைத்தனமான, பரிதாபகரமான பெட்டிக்கடை நடத்தும் உணர்ச்சி மக்கள் அனைவரிடமும் நிலவியது.” (மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுதி நூல்கள் -ஆங்கிலத்தில் 6-வது தொகுதி – பக்கம் 17)

கேதே எழுதிய ஃபாவுஸ்டு நாடகத்தில் “நாட்டின் நலிந்த நிலைமையைப்” பற்றி சக்கரவர்த்தியிடம் சான்சலர் தருகின்ற படப் பிடிப்புடன் இது மிகவும் பொருந்துகிறது. எங்கும் வேதனை, துன்பம், ஒரு தீமை மற்றொன்றை உருவாக்குகிறது என்று அவர் புகார் செய்கிறார்:

இந்தச் சிகரத்திலிருந்து நாடு முற்றும் எவர் பார்த்தாலும் அது சிதைந்த கனவே. ஒரு குறை அடுத்ததைப் படைக்கிறது; சட்ட விரோதச் செயல்களைச் சட்டமே தூண்டுகின்ற தவறுகளின் சகாப்தம்!…..

…..நல்ல மனிதர் புகழ்ச்சியாளர்,
லஞ்சம் தருவோரிடம் பணிகின்றனர்;
நீதிபதியோ தண்டிப்பதில்லை,
குற்றவாளியுடன் கூடிக் குலவுகிறார்,

நான் கறுப்புச் சித்திரம் தீட்டினாலும்
அங்கே நடப்பவைக்கு இது மேல். (J. W. Goethe, Faust, Vol 2, the Second Part, Boston. and New York, 1871, pp. 10-11)

திடீரென்று பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது: அழுத்தமான தூக்கத்திலும் தேக்க நிலைமை பின் நச்சாவியிலும் நிறைந்த உலகத்தை வானத்திலிருந்து விழுந்த இடியைப் போலத் தாக்கியது. நிராசையும் நம்பிக்கையற்ற நிலைமையும் மறைந்து எங்கும் உத்வேகம் பீறிட்டது. ஜெர்மனியின் மிதவாத முதலாளி வர்க்கத்தினர் “கட்டுமீறிய கலக’’ நடவடிக்கைகளைச் செய்யவும் துணிந்தார்கள். அவர்கள் மதுபான விருந்துகளில் Marseillaise ஐ (மர்சேல் கீதம்) உணர்ச்சியோடு பாடினர்கள்; பிரெஞ்சு தேசிய சபைக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார்கள். ஜெர்மன் கவிஞர்கள் பிரெஞ்சு மக்களைப் போற்றிப் பாடினார்கள். புரட்சியைக் கோருகின்ற ஜாக்கொபின் ஆதரவாளர்கள் ஜெர்மனியிலும் தோன்றினார்கள்.

படிக்க : ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

ஆனால் மேற்குத் திசையிலிருந்து வந்த இடி முழக்கத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த காதல் மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்தது. ஜாக்கொபின்வாதிகளின் பயங்கர நடவடிக்கைகளைக் கண்டு ஜெர்மன் முதலாளி வர்க்கம் பீதியடைந்தது. தனியார் முயற்சிக்குச் சுதந்திரத்தைப் பற்றியும் கோமகன்களுடனும் பிரபுக்களுடனும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றியும் கனவு காணத் தொடங்கிய கெளரவமான அற்பவாதிகள் இப்பொழுது பிரான்சிலிருந்து வந்த செய்திகளைப் பேடித்தனமான நடுக்கத்துடனும் சீற்றத்துடனும் கேட்டனர். சமீப காலம் வரை பிரெஞ்சுப் புரட்சியைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் அதன் எரிச்சலான, வெறிபிடித்த எதிரிகளானார்கள்.

பின்னால் நெப்போலியன் தன்னுடைய இராணுவத்துடன் ஜெர்மானியப் பிரதேசங்கள் மீது படையெடுத்தார். புறநிலையாகப் பார்க்கும் பொழுது ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் அவர் புரட்சியின் பிரதிநிதி; ஏனென்றால் அவர் அதன் கோட்பாடுகளைப் பரப்பினார், அவர் பழைய நிலப்பிரபுத்துவ மரபுகளை ஒழித்து விட்டுத் தன்னுடைய – சந்தேகத்துக்கிடமில்லாமல் அதிக முற்போக்கான-சட்டங்களை நிறுவினார், உளுத்துப் போன பேரரசை ஒழித்தார், பெரிய அரசுகளை ஏற்படுத்தி சிறிய அரசுகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்.

ஆனால் ஜெர்மானியர்கள் நெப்போலியனிடம் குறிப்பிடத்தக்க முறையில் நன்றி பாராட்டவில்லை. அது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. இராணுவத் தோல்விகளில் அவர்களுடைய தேசிய கெளரவம் புண்படுத்தப்பட்டிருந்தது. “தகாத வழியில் அதிகாரத்தைப் பெற்ற நபர் நிலப்பிரபுத்துவத்தின் அழுகிப்போன (அற்பவாதியின் இதயத்துக்கு மிகவும் இனிமையான) சேர்ப்புகளை ஒரே காலுதையில் ஒழித்துவிட்டதும் மற்றொரு காரணமாகும். ஜெர்மன் அற்பவாதி தன் எசமானருக்கு விசுவாசம் காட்டுவதை நிறுத்துவதைக் காட்டிலும் மரணத்தையே மேலென்று கருதுவார்.

ஜெர்மனி “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையிலிருந்து மிகவும் முரட்டுத்தனமான முறையில் விழிக்கும்படி செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் அந்த நிலைமைக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பை அது நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நெப்போலியன் தோல்வியடைந்த பிறகு அந்த வாய்ப்பு ஏற்பட்டது. எங்குமே பிற்போக்குவாதம் ஆட்சி செலுத்தியது. ஜெர்மன் சிற்றரசர்களில் ஒருவர் பிரெஞ்சுக்காரர்களின் புனிதமற்ற கரங்களால் வெட்டிவிடப்பட்ட இராணுவவீரர்களின் சடைகளை மறுபடியும் ஏற்படுத்துகின்ற அளவுக்குக் கூடச் சென்றார்.

அரசர்கள் மத்தியில் கூட முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கின்ற சிலர் இருந்தார்கள். வுர்டம்பர்க் அரசர் தன் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தார். நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சட்டம் வழி வகுத்தது. அந்த நோக்கத்துடன் அவர் சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகளை ஒன்றாகக் கூட்டினார், ஆனால் அப்பொழுது நடைபெற்ற சம்பவம் ஜெர்மனியில் மட்டுமே நடைபெற முடியும். சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகள் அரசரின் மிதவாத முற்போக்கை நிராகரித்தார்கள், “பழங்காலத்திய நல்ல சட்டங்களை’ மறுபடியும் ஏற்படுத்துமாறு கோரினார்கள்.

ஹேய்னெ எழுதிய சீனச் சக்கரவர்த்தியைப் போல புரட்சியிலிருந்து விடுதலையடைந்த மஞ்சூ பிரபுக்கள் “அரசியல் சட்டம் எமக்கு வேண்டாம், பிரம்படியே எமக்கு வேண்டும்” என்று முழங்கினார்கள்!’’ (The Poems of Heine, London, 1878, p. 175.)

இத்தகைய நிலைமைகளில் சற்றுத் தொலைவான தீவிரவாத அரசியல் இயக்கம் கூட எப்படித் தோன்ற முடியும்? மக்கள் தங்களுடைய நாட்டின் விதியில் தலையிடுவார்கள், தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவார்கள் என்று எந்த நம்பிக்கையாவது ஏற்பட முடியுமா?

ஜெர்மன் முதலாளி வர்க்கம் பிரஷ்ய முடியாட்சியிடம் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளையும் ஒப்படைத்திருந்தது. நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் மத்தியப்படுத்தலே ஏற்படுத்தக் கூடிய ஒரே சக்தி அது மட்டுமே என்று கருதியது. அப்பொழுது நிலவிய உள்நாட்டுச் சண்டைகளுக்கும் மோதல்களுக்கும் இடையில் ஒற்றுமையான முதலாளித்துவ அரசு என்ற இலட்சியம் ஜெர்மன் அற்பவாதியின் தேசிய விருப்பார்வங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தெய்வமாக மாறியது. “அரசின் இந்த நிலைமை அரசாங்க எழுத்தரின் கடமையுணர்ச்சி-அதைப் போல வேறு எங்குமே பார்க்க முடியாது-ஜெர்மனியில் அரசைப் பற்றி நிலவுகின்ற எல்லா பிரமைகள் ஆகிய இரண்டையுமே விளக்குகின்றது.” (Marx, Engels, Collected Works, Vol. 5, Moscow, 1976, p. 195.)

ஜெர்மன் அற்பவாதி ஆட்சியில் இருப்பவர்களிடம் அடிமையாக இருந்ததோடு திருப்தியடையவில்லை; அவர் ‘தன்னுடைய இதயத்தில் வைத்திருந்த” கடவுளுக்கும் அடிமையாக இருந்தார். சமய சீர்திருத்தவாதம் மற்றும் புரோட்டஸ்டென்ட் இயக்கத்தின் பிறப்பிடம் ஜெர்மனி, அங்கே மதபக்தி மிகவும் பலமாக இருந்தது. அது “அறநெறித் தூய்மையையும்’’, கடவுள் பக்தியையும் கோரியது.

படிக்க : என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !

அடிமைத்தனம் (அதன் எல்லா வடிவங்களிலும்) மற்றும் போலி ஆசாரத்தைக் கொண்ட மதத்தின் முறைப்படியான வழித்தோன்றலாகிய அற்பவாதி தன்னுடைய குறுகிய நெற்றியில் இரண்டு பெற்றோர்களின் முத்திரையையும் தாங்கியிருக்கிறார், அவர் பல பாத்திரங்களையும் தாங்கி நிற்பவர்; எசமானராக அல்லது ஊழியனாக, சாதாரணக் கந்தலாடைக்காரனாக அல்லது மலினமான கருத்துக்களை விற்பனை செய்பவனாக அவர் இருக்க முடியும்.

எல்லா உதாரணங்களிலுமே தன்னுடைய மேலதிகாரியிடம் தன்னை வேலைக்கு வைத்திருப்பவர், அரசர் அல்லது கடவுளிடம்- மண்டியிடுவதும் அடிமையாவதும் அவரிடமுள்ள குறிப்பிடத்தக்கப் பண்பாகும். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.

அவருடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் வறட்டுக் கோட்பாடுகள் என்ற திரைகள் மறைக்கின்றன; அவர் தன்னுடைய இதயத்திலும் தலையிலும் விலங்குகளைச் சுமந்து செல்கிறார், ஆகவே அவற்றை மதிக்கிறார், சில சூத்திரங்கள் இல்லாமல், மேலே இருந்து வருகின்ற சுற்றறிக்கைகளும் உத்தரவுகளும் இல்லாமல் அவரால் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை செய்யக் கூட முடியாது.

சுதந்திரமாகச் செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற பொழுது அவர் சங்கடமடைகிறார். அவருக்குத் தேர்வுச் சுதந்திரம் கொடுத்தால் அவர் சுதந்திரத்தை ஒருபோதும் தேர்ந்தெடுக்கமாட்டார்.

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்

வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் – திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு முன்பே இங்கு திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நீதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு நிதி முறைகேடுகளை பற்றி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பச்சை பொய் என்று ரவி பேட்டியில் கூறுகிறார்.

இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு மிகவும் குறிப்பிட்ட பிரச்சினைகளின் மட்டும்தான். மக்கள் பிரச்சினைகளில் இருந்ததில்லை. அதாவது பரந்தூர் விமான நிலையை பிரச்சினையிலையோ, காட்டுப்பள்ளி துறைமுகப்பிரச்சினையிலையோ, எட்டுவழிச்சாலையிலையோ, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளிலோ இவர்களுக்கு முரண்பாடு இல்லை..

தமிழ்நாடு அரசு செயல்படுத்துக்குடிய மேற்சொன்ன பிரச்சினைகளை பற்றி ஆளுநர் வாய்திறந்து பேசுவதில்லை.

மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தி.மு.க அரசு பற்றிய பல்வேறு விமர்சனங்களை இந்த காணொலியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மே 15 மாநாடு: தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தில் தோழர்கள்!

சுற்றி வளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற தலைப்பில் மே 15 மதுரை பழங்காநத்தத்தில் மாநாடு நடத்த மக்கள் கலை இலக்கிய கலகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு), மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டை வெற்றிகரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து மதுரையில் மே 15-ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், எழுத்தாளர் அழகிய பெரியவன், கவிஞர் விவேகா, பேரா.வீ.அரசு, இயக்குநர் கரு.பழனியப்பன் போன்றவர்களை சென்னை மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரில் சந்தித்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் வெளீயிடுகளை வழங்கினர்.

மேலும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக வடசென்னை பகுதி மற்றும்  திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் தீவிர பிராச்சாரத்தை மேற்கொண்டனர்.

குறிப்பாக ஆலை நுழைவு வாயில் மக்கள் குடியிருப்பு பகுதி, பேருந்துகள், ரயில்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தை  வீச்சாக எடுத்துச் சென்றனர்.

அதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம் சார்பாக சென்னை எம்.ஜி.ஆர் நகர் காய்கனி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள சிறுகடை வியாபாரிகள் மத்தியில் மாநாட்டின் நோக்கத்தை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதைபோன்று மதுரை மாநகரம் முழுவதும் அமைப்பு தோழர்களால் முன்னெடுக்கப்படும் மாநாட்டு  பிரச்சாரங்களால் மிரண்டு போன ஆர்.எஸ்.எஸ் காவிகும்பல் மாநாட்டிற்கு பல தடங்களை ஏற்படுத்தியபோதும் தடைகளை தகர்த்தெறிந்து செயல்படுவது ஜனநாயக சக்திகளை நம்மை நோக்கி வர வழைக்கிறது.

அதை போன்று கோவை மண்டலத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக  குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற தோழர்கள் ஒவ்வொரு  வீடாக சென்று மாநாடு பிரச்சுரத்தை விநியோகித்து விளக்கி பேசினர். ஆர்வத்துடன் கேட்ட மக்கள் மாநாட்டிற்கு முழு ஆதரவு அளித்தனர்.

மேலும் திருநெல்வேலி மண்டலம் சார்பாக மேலப்பாளையம் பகுதியில்  மக்கள் அதிகாரம்  சார்பாக தோழர்கள் பிரச்சாரத்தை  மேற்க்கொண்டனர். கடைகள், பேருந்துகள் என அனைத்து இடங்களிலும் பிரச்சுரம் விநியோகித்து வருகின்றனர்.

கடலூர் விருதாச்சலம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் மக்கள் அதிகாரம்  தோழர்கள் உழைக்கும் மக்களிடம் மே 15 மாநாட்டின் நோக்கத்தை விளக்கிப்பேசி நிதி திரட்டினர்.

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திப்பு சுல்தானை கண்டு அஞ்சி நடுங்கிய வெள்ளை ஏகாதிபத்தியம்!

இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் மைசூர்ப் புலி திப்பு சுல்தான், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிரான நான்காவது ஆங்கில – மைசூர்ப் போரில் சிப்பாய்களுடன் இணைந்து போரிட்டு மே 4, 1799 அன்று வீரமரணமடைந்த மாவீரன்.

***

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799-இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

மே 4, 1886 – ஹே சந்தை (Haymarket) படுகொலை

மே 4, 1886 – வைக்கோல் மார்க்கெட் (Haymarket) படுகொலை: சிகாகோவில் 8 மணி நேர வேலைநேர கோரிக்கைக்காக நடந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் போலீசுத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர்.

***

சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது.

தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்ததிற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது கூட்டமைப்பு, ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது.

இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது.

அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள்.

மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன.

வீரமரபு பாடல் – டீசர் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu – Teaser

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடலின் டீசரை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

Veera marabu Song – Teaser | வீரமரபு பாடல் – டீசர் | Red wave | ம.க.இ.க

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – மே 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மே – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – மே 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : ‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

♦ பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

♦ ஸ்டெர்லைடை திறக்கச் சதி: மீண்டும் ‘வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

♦ மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

♦ பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

♦ தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

♦ பாசிசக் கும்பலின் கனவு பலிக்காது! இது தமிழ்நாடு!

♦ பாசிஸ்டுகளை வீழ்த்த சந்தர்ப்பவாத வழிமுறை: எங்கு போய் முடியும்!

♦ ‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

♦ நூல் அறிமுகம்: கார்ப்பரேட் பாசிசக் கொடூரத்தின் நேரடி சாட்சியம்: மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டக் கதை!

♦ பகுதி 3: புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

புதிய ஜனநாயகம்

சங்கியுடன் ஒரு பயணம்

துரைக்குச் செல்ல வேண்டும். குருவாயூர் ரயிலைப்பிடிக்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலிலேயே காத்துக்கிடந்து காலாவதியாகிவிட்டது. ஏறத்தாழ முக்கால் மணி நேரம் காத்திருப்புக்குப்பின்னர் ரயில் வந்தது. முன்பு ஒரு பெட்டி, பின்னால் ஒரு பெட்டி என மொத்தமே முன்பதிவற்றப் பெட்டிகள் இரண்டுதான். முன்பதிவில்லாத பெட்டியில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினேன். காவி வேட்டியுடன் இடம் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு எனது அருகிலேயே இடம் பிடித்துத்தந்தேன்.

ரயில் பயணங்களில் எப்போதும் அருகில் இருப்பவர்களுடன் உரையாடுவது வழக்கம் என்பதால் பெரியவரிடம் விசாரிக்க ஆரம்பித்தேன். “ நாகர் கோயில்ல இருந்து வேலையா வந்தேன். எம்.எல்.ஏ ஹாஸ்டல்ல பத்து நாள் தங்கி இருந்தேன். காந்தி தெரியுமா? கால்ல செருப்பு போடாம நடப்பாரு. ரொம்ப தங்கமான மனுசன். பெரிய பணக்காரரு. கல்யாணமே பண்ணல, யாரு வந்து கேட்டாலும் எம்.எல்.ஏ ஹாஸ்டல் சாவிய தந்துடுவாரு” என்று புராணம் பாட ஆரம்பித்தார்.

“அடுத்த மொற காங்கிரஸ் ஜெயிக்குமா?” என்றேன்.

“ராகுல்காந்திக்கு நாக்குல சனி, ஆமா, மோடிங்குறது வட இந்தியாவுல தலித் சாதி, தலித்துங்குள தப்பா பேசுனான், அதான் பதவிய கோர்ட் புடுங்கிடுச்சு, அவன்கிட்ட 50 லட்சம் கோடி சொத்து இருக்கு , உருப்பட மாட்டான்” என்று கொந்தளிக்க ஆரம்பித்தார்.

“மோடிங்குறது சாதியா யாரு சொன்னா, அப்படியெல்லாம் இல்லையே, ஆதாரம் இருந்தா கொடுங்க” என்றேன்.

ஆதாரம் கேட்டதும் பெரிசு பொங்கினார் “நான் சொல்றது உண்மைதான் உண்மைதான் ” என்றார்.

“நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி எல்லாம் ஒரே ஜாதியா என்ன? அப்படின்னா வி.பி சிங்கும் ஹர்பஜன் சிங்கும் ஒரே ஜாதியா? எல்லாம் தெரிஞ்ச மாரி சும்மா வாய்க்கு வந்தத எல்லாம் பேசக்கூடாது. மோடிங்கற பேரை பார்சி கூட பயன்படுத்துறாங்க தெரியுமா” என்றேன்.

முனகிக் கொண்டே அமைதியானார்.


படிக்க: இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ


தாம்பரத்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார். திருவெற்றியூரில் இருந்து தினமும் தடாவுக்கு வேலைக்கு செல்கிறார். கொஞ்ச நேரத்திலேயே மோடியையும் அதானியையும் கார்ப்பரேட்டுகளையும் வெளுத்து வாங்க ஆரம்பித்தார். சங்கியோ கண்ணை மூடிக்கொண்டு காதைத்திறந்து கொண்டு தூங்கி’க் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் மாறி மாறி மோடி – அமித்ஷா – அம்பானி – அதானியை வாரிக்கொண்டு இருந்தோம். தாம்பரத்தில் ஏறியவர் திண்டிவனத்தில் இறங்கினார்.

எனக்கு எதிர் இருக்கையில் இந்தவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் மாதவரத்தில் இருக்கிறார். திருப்பெரும்புதூரில் உள்ள கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். விருது நகரில் இறங்க வேண்டியவர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காவியிடம் இருந்த தினமலர் நாளிதழை வாங்கினார். போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டுவந்தவருக்கு சிலை என்று தலைப்பிடப்பட்ட செய்தியை என்னிடம் காட்டி,
“ ஏன் சமூக நீதிக்காவலர்னு வி.பி. சிங்ன்னு போட்டா என்ன கேடு இவனுக்கு, அட்லீஸ்ட் முன்னாள் பாரதப்பிரதமர்ன்னு போட வேண்டியதுதானே” என்றார்.

“பத்திரிக்கையில இடம் வேணாமா? ஒவ்வொருத்தரு பேரையும் முன்னாள் பிரதமர்ன்னு எழுதிக்கிட்டு போவமுடியுமா” சங்கி பதிலளித்தது.

“லால்பகதூர் சாஸ்திரி எத்தன வருசம் பிரதமரா இருந்தாரு? அவருக்கு மட்டும் முன்னாள் பிரதமர்ன்னு போடறான். இவனுக்கெல்லாம் திமிரு” என்றார்.

சங்கிக்கோ கோபம் கொப்பளிக்க “அவரு சொதந்திரப் போராட்ட வீரரு” என்றது.
“வி.பி. சிங் சமூக நீதிப்போராட்ட வீரர் தெரியுமா?” என்றார்.

“ யாரத்தான் நாட்டுக்காகப் போராடுனவருன்னு ஒத்துக்குவீங்க, வாஜ்பாய்தான் விடுதலைக்குப் போராடுனாரா” என்றேன்.

“வாஜ்பாயை நான் சொதந்திரப் போராட்ட வீரர்னு நான் சொன்னனா” என்று சங்கி குழறியது.

“இந்த ஸ்டாலின் பாருங்க 12 மணி நேர வேலைன்னு ஆக்கிட்டார்” என்று பேச்சை மாற்றியது சங்கி.

“ஸ்டாலின் செஞ்சது தப்புதான், தி.மு.க ஒன்னும் தமிழ்நாட்டுக்கு அத்தாரிட்டி இல்ல. தமிழ்நாட்டுக்கு அத்தாரிட்டி தமிழ்நாடுதான், ஏன் 12 மணி நேர வேலையை மோடி எதிர்க்கல” என்றேன்.

சுமார் அரை மணி நேரம் சங்கி எதுவும் பேசவில்லை. விருதுநகருக்கு போக வேண்டிய ஓட்டுநரோ , சதாசிவம் முதல் லோயா, ரஞ்சன் கோகய் வரை கிழித்து நார் நாராகத் தொங்கவிட்டார்.

இந்தித் திணிப்புப் பற்றி நான் பேசத்துவங்கினேன். உடனே சங்கி மீண்டும் பேசத்துவங்கியது “நம்மள படிக்க வேணாம்னுட்டு எல்லாம் அவனவன் பசங்கள இந்தி படிக்க வச்சுச்சு முன்னேறிட்டான்”

“இவரு என்ன உலகம் தெரியாம இருக்காரு, இந்தி படிச்சா வேலை கெடைக்குமா? அப்புறம் ஏன் இங்க வேலைக்கு வராங்க” என்று அந்த இருக்கையில் இருந்த 4 வட இந்தியர்களை காட்டினார்.

“இந்த தி.மு.க காரனெல்லாம் அவன் பசங்கள படிக்க வெச்சுட்டான், நாம படிக்க முடியல” என்றது சங்கி.

“அய்யா இந்தி வேணும்னா படிங்க யாரு தடுத்தா? திணிக்காதீங்கன்னு சொல்றோம். சொல்றது புரியலையா” என்றார்.

“உங்களுக்கு தமிழ்ல்ல 123 தெரியுமா, தெரியாதுல்ல, அப்புறம் பேசறீங்க, இந்திக்காரங்கனுக்கு புரியணும்னு இங்க இந்தியில எழுதி போட்டுருக்கு, சும்மா தமிழ் தமிழ்ன்னு பேசி முன்னேற உடமாட்டீங்க” என்றது.

“நீங்களே போதும்யா தமிழ அழிச்சுடுவீங்க” என்றார் அவர்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒரு நடுத்தரவயது பெண் “இச், இச்” என்று சொல்லிக்கொண்டு வந்தார். நாம் பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்திருந்தேன்.

“நீங்களே போதும்யா தமிழ அழிச்சுடுவீங்க” என்ற வாக்கியம் அவரை அதிகம் பாதித்துவிட்டது போல!

அந்தப் பெண் “ என்ன அய்யா ரொம்ப பேசறீங்க, எங்களுக்கு எது வேணுமோ அப்படி பேசுறோம், உங்களுக்கு என்ன பிரச்சின, தமிழ்ல 123ன்னு எழுதத்தெரியாதுன்னா தமிழன் இல்லைன்னு ஆயிருமா? அப்ப இருந்து பாக்குறேன் தமிழுக்கு எதிரா பேசிட்டே இருக்கீங்க ? திருச்சிக்கு டிக்கெட் வேணும்னு தமிழ்ல்ல தான கேக்குறோம். உங்க மாதிரி 2 பேரு இருந்தா போதும் தமிழை சீக்கிரம் அழிச்சிடுவீங்க, எதுக்கு ரயில்ல இந்தியில எழுதியிருக்கான், இது மாதிரி வட இந்தியாவுல தமிழ்ல எழுதுவானா ? அயோக்கியப்பசங்க” என்ற படி வெடித்தார்.

சங்கி மீண்டும் பிளைட் மோடுக்கு சென்றது , கண்டிப்பாக நாகர்கோயில் வரை சங்கி நார்மல் மோடுக்கு வராமல் அங்கிருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள். ஆனால் அந்த மோடி வித்தைகள் எல்லாம் இங்கு பலிக்குமா? கஷ்டம்தான்.

இது தமிழ்நாடு!

வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!

மருது

கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை ?…

ண்மையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பேருந்துகளை, ஒப்பந்த அடிப்படையில் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தி.மு.க. அரசின் இந்நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் ஜனநாயக இயக்கங்களும் கண்டனங்களைத் தெரிவித்தன, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தி.மு.க.வின் தொழிற்சங்கமான  தொ.மு.ச.வும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கும் அரசின் நடவடிக்கையானது தொழிற்சங்கங்கள் மத்தியில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களை  தெரிவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  “சென்னை மாநகரப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க  டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது” என தெரிவித்தார். அதேவேளையில், “உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் தனியார் மூலமாக கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்” எனவும் கூறினார்.

அதாவது, போக்குவரத்துத் துறையில் தனியார் பேருந்துகளை இயக்கவில்லையாம், ஆனால், தனியார் மூலமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமாம். தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டே, அது இதுவல்ல என்று ‘விளக்கெண்ணெய்’ விளக்கம் கொடுப்பதன் மூலம் மக்கள் எதிர்ப்பை மடைமாற்ற முயற்சித்து தோற்றுப்போயுள்ளார் அமைச்சர்.

கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம்

சென்னை மாநகராட்சியில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம்  625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக இதில் தினசரி 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை, 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

தற்போது கூட்ட நெரிசலைக் காரணமாக கூறி, கூடுதலாக 1,000 பேருந்துகளை “மொத்த செலவு ஒப்பந்தம்” (Gross Cost Contract) முறையில் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும், 2025 ஆம் ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும் இயக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் எந்தவகையில் இயக்கப்படும் என்பதில்தான் தற்போது தனியார்மயமாக்கம் பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துத் துறையில், “தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சென்னை மாநகரத்தில் 2,300 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. 900 பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” எனக் கூறுகிறார் சி.ஐ.டி.யு அமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயனார்.


படிக்க: மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்


ஆகையால், புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது, இருக்கும் பேருந்துகளை சீர்படுத்தியோ, புதிய பேருந்துகளை வாங்கியோ போக்குவரத்துத் தேவையை ஈடு செய்வது குறித்து தி.மு.க. அரசு சிந்திக்கவில்லை என்பது முதன்மையான பிரச்சினையாகும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் சில வழித்தடங்களில் நேரடியாக தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.மு.க. அரசு இந்தவகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறையில் தனியார் அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

ஆனால், பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த முறையில் இயக்கப் போவதாக அமைச்சர் கூறுவதன் பொருள் என்ன? இதுதான் தீவிரமான தனியார்மயமாக்கமாகும். இது போக்குவரத்துத் துறையையே கபளீகரம் செய்யும் வடிவமாகும். அதாவது, போக்குவரத்துத் துறையில் சில வேலைகளை அயல்பணி (அவுட்சோர்) செய்வதைத்தான் அமைச்சர் இங்கு குறிப்பிடுகிறார்.

அரசானது மொத்த செலவு ஒப்பந்த முறையில், ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என்பதை நிர்ணயித்து  ஒப்பந்த காலம் முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிக்கான (தினந்தோறும் கூட) குறிப்பிட்ட தொகையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பேருந்துகளை ஏற்பாடு செய்வது, பராமரிப்பது, ஓட்டுநர்களை நியமிப்பது தனியார் நிறுவனங்களின் பணி.

பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களை தீர்மானிப்பது, நடத்துனர்களை நியமிப்பது அரசின் பணி. வசூலாகும் பயணக் கட்டணம் அரசினுடையது.

இதன் மூலமாக, பேருந்துகளைச் சொந்தமாக வாங்குவது, அவற்றைப் பராமரிப்பது என்ற பெரிய பணி அரசிடமிருந்து தனியார் கைகளுக்குச் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களும் நடத்துனர்களை அரசும் நியமிக்கும் இந்த முறையானது போக்குவரத்துத் தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையிலானதாகும்.

தற்போது பின்பற்றப்படும் முறையில் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் எந்த ஒப்பந்தமும் கிடையாது. அரசுப் பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். இந்த வழித்தடங்களில் எத்தனை தனியார் பேருந்துகளை இயக்குவது என அரசு தீர்மானித்து அதற்கு அனுமதி வழங்குவதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. இதன் மூலம், ஒரு பேருந்தை மட்டும் வைத்திருக்கும் பேருந்து உரிமையாளர் கூட, தன்னுடைய பேருந்தை அரசு நிர்ணயிக்கும் வழித்தடங்களில் இயக்க முடியும்.

ஆனால், மொத்த செலவு ஒப்பந்த முறையில் இது போன்ற சிறிய பேருந்து உரிமையாளர்கள் போட்டியிட முடியாது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை மூலதனமாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகள் தான் பேருந்தை  இயக்க முடியும்.

முக்கியமாக, மொத்த செலவு ஒப்பந்த முறையில் மின்சாரப் பேருந்துகளைத்தான் அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 500 மின்சாரப் பேருந்துகளை வாங்க வேண்டுமென்றால், 1,000 கோடி ரூபாய் மூலதனமாவது தேவைப்படும். இவ்வளவு அதிக செலவில் பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தங்கள் இயல்பாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்குத்தான் செல்லும். எனவே இத்திட்டமானது, மக்களின் சேமிப்பில், உழைப்பில் உருவாக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படும் போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு தொடக்கமாக அமையும்.

நட்டத்தைக் காரணம்காட்டி மக்களைப் பட்டவர்த்தனமாகக் கொள்ளையடித்தல்

பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் மொத்த செலவு ஒப்பந்த முறைக்கு வக்காலத்து வாங்குபவர்கள்  போக்குவரத்துத்துறை நஷ்டமடைந்து உள்ளதை காரணமாக கூறுகின்றனர். நாளொன்றுக்கு ஏறக்குறைய எட்டு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசு இருக்கும் நிதிச்சுமையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து  பேருந்துகளை வாங்குவது தற்போது சாத்தியமில்லாத ஒன்று என்றும் கூறுகின்றனர். ஆனால் இவை எவையும் உண்மையல்ல. பல ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமிட்டு பல தொழில்களுக்கு செலவு செய்யும் அரசினால் போக்குவரத்துத் துறையை நட்டமில்லாமல் இயக்கவும் முடியும்; சொந்தமாக மூலதனமிடவும் முடியும்.

போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 50 ரூபாய் செலவாகிறது. அதில் 30 ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. 20 ரூபாய் பற்றாக்குறை ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பற்றாக்குறை பல காரணங்களால்  ஏற்படுகிறது. அவற்றில் முதன்மையானது, அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளும் ஊழலும்தான். இந்தப் பிரச்சினைதான் போக்குவரத்துத் துறையில் இருக்கும் நட்டத்திற்கு அடிப்படையாகும்.

போக்குவரத்துத் துறையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த நெருக்கடியைக் காரணம் காட்டி போக்குவரத்துத் துறையையே  கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கிறது தி.மு.க. அரசு.

தற்போது பேருந்துகளை இயக்க ஒரு கிலோமீட்டருக்கு செலவாவதை விட, மொத்த செலவு ஒப்பந்த முறையில் அதிகப்படியான கட்டணமே  நிர்ணயிக்கப்படும். இத்திட்டம்  சென்னையில் செயல்படுத்தப்படுவதற்கு முன்னால், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசுகள் ஒரு கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்குவதற்கு 125 ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. சென்னையிலும் அதற்கு நிகரான ஒரு தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே  மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலதனமிட்டு பேருந்துகளை இயக்கும் போது, அவர்களுக்கு இலாபத்தை உத்தரவாதம் செய்து கொடுப்பதும் அரசின் கடமையாகிவிடுகிறது.

ஓட்டுநர்களும் நடத்துனர்களும் இருவேறு நிர்வாகங்களின் கீழ் வருவதால், போக்குவரத்து மூலமாக அரசு வசூலிக்கும் கட்டணங்கள் குறைவதற்கான காரணங்கள் அனைத்தும் நடத்துனர்கள் மேலேயே சுமத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. இவையெல்லாம், இத்துறை மேலும் நட்டமடையவும் அதனைத் தொடர்ந்து முழுவதும் கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதுதான் சரி என்ற முடிவுக்கு மக்களைத் தள்ளுவதையும் நோக்கமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ள திட்டமாகும்.


படிக்க: திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!


அதுமட்டுமல்ல, இனிவரும்காலங்களில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் மொத்த செலவின ஒப்பந்த முறைக்கு மாற்றப்படும். வளர்ச்சிப் போக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாகப் புதிய பேருந்துகள் வாங்குவது நிறுத்தப்பட்டு, மொத்த செலவு ஒப்பந்த முறைக்குள் கொண்டு செல்லப்படும். இந்தவழியிலும் போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் முழுமையாக்கப்படும்.

ஆகையால், தற்போது சென்னையில் மாநகரப் பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த முறையின் மூலம் கார்ப்பரேட்டுகளை இயக்க அனுமதிப்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட் மயமாக்குவதற்கான தொடக்க நடவடிக்கையாகும்.

ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் தனியார்மயமாக்கும் இந்நடவடிக்கையை தி.மு.க. அரசானது திட்டமிட்டு செய்கிறது. மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது . தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதும் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.

போக்குவரத்துத் துறைகளில் மட்டுமல்ல, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளிலும் தி.மு.க. பாணி கார்ப்பரேட் மயமாக்கம் அமல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அமல்படுத்தப்படும் “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”  “வானவில் மன்றம்” போன்ற திட்டங்கள் இதற்குச் சான்றுகளாகும்.

ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மேற்கண்ட கார்ப்பரேட் சார்பு திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டும். தி.மு.க. அரசின் கார்ப்பரேட் சார்பு திட்டங்களை எதிர்ப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்கு பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலுக்கு இடமளித்துவிடக் கூடாது. இதற்காக, தி.மு.க.வில் இருக்கும் ஜனநாயக சக்திகள், போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைக் கொண்டுவரும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு தங்களது தலைமைக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.

அமீர்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்

03.05.2023

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை!
அகர்வாலின் அரசா?
இது திமுகவின் அரசா?

கண்டன அறிக்கை

ஜிப்சம் அகற்றுவது, ஆலையை பராமரிப்பது என்ற நாடகங்கள் மூலம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் சதி வேலைகளைக் கண்டித்து தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மக்களை அடக்குமுறை மூலம் கைது செய்து மாலை 7 மணி வரை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்திருக்கிறது  போலீசு. இது திமுகவின் அரசா? அகர்வாலின் அரசா? என்று மக்கள் காறி உமிழும் அளவில்தான் போலீசின் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன.

வேதாந்தா நிறுவனம், தனது கைக்கூலிகளுக்கு பணத்தை இறைத்து  ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும்  என்று தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை போலீசும் மாவட்ட நிர்வாகமும் ஒருபோதும் தடுக்க வில்லை. ஆனால் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்த மக்களை தடுப்பதும் கைது செய்வதும்தான் நடைபெற்றிருக்கிறது. இதற்கு பெயர்தான் ஜனநாயகமா? வந்திருந்த மக்கள் அனைவரையும் சந்திக்க முடியாத ஒருவர் எதற்காக கலெக்டராக இருக்க வேண்டும்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப்போராட்டம் – படுகொலைகள் ஆகியவற்றின் தேர்தல் அரசியல் அறுவடையை பலனாகப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு தூத்துக்குடி மக்களுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.


படிக்க: வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.

அவ்வாறு  சட்டம் இயற்றப் போராடுவதே ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு தூத்துக்குடி மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை பாதுகாப்பதும் தமிழ்நாட்டு மக்களின் கடமையுமாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321