Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 347

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 14

நான்கு வருணங்கள், மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது. சமுதாய நடவடிக்கைகளிலும் அது கையாளப்படுகிறது. நான்கு வருணங்கள் இந்த நாட்டில் என்றுமிருந்ததில்லையென்பதை நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். தமிழ் ஆசிரியர்களில் சிலர், ஸ்மிருதியை, அதாவது நான்கு வருண பேதத்தைப் புகுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய பாகுபாட்டைத் தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை.

சமஸ்கிருத அறிஞர்கள் (ஆரியர்கள்) சுதேச மன்னர்களின் மந்திரிகளாக வந்த பிறகோ அல்லது ஆதிக்கம் கைப்பற்றிய பிறகோதான் பூணூல் அணிந்து கொண்டு தங்களைப் பிராமணர்கள் என்றும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்றும் கூறிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இதனால் சமுதாயக் கட்டுப்பாடு அதிகரிக்கலாயிற்று. சமஸ்கிருதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற விரும்புகிறவர்களைச் சமூகம் ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தது.

சென்ற நூற்றாண்டில் இடதுசாரிகளுக்குள்ளும் வலதுசாரிகளுக்குள்ளும் சண்டை ஏற்பட்டது.

பழைய கோட்பாட்டில் பற்றுடையவர்கள் எல்லாரும் பள்ளர் – பறையர் என்ற 18 ஜாதியினர்களாக வகுத்துக் கொண்டு ஒரு பகுதியினர்களாக விளங்கினார்கள்.

தங்களைப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம் இடதுசாரிகளாக வகுத்துக் கொண்டனர்.

இடதுசாரிகள் வெறுக்கப்பட்டு வந்தார்கள். மேற்படி வருணத்தில் போய்ச் சேர்ந்த தமிழர்கள் கூட வெறுக்கப்பட்டு வந்தார்கள். கோயில்களில் கூட அவர்களுக்கு இடமில்லை.

ஆனால் இன்று பார்ப்பதென்ன? நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே சட்டமாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதனால் தமிழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக்கொண்டால், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தில் சிலர் பூவைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆகவே இந்நாட்டில் மக்களிடையே சரியான ஒற்றுமையும் ஐக்கிய மனோபாவமும் ஏற்பட வேண்டுமானால், தென்னிந்தியக் கலையைச் சரியானபடி உணர்ந்து கொள்வதினால்தான் முடியும்.

”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்துவிட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

”இந் நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திராவிடர்கள் தாம்; ஆரியர்கள் என்பவர்கள் இந்நாட்டில் குடியேறினார்கள் என்று சொல்லுவதே தவறு; இது உண்மையான சரித்திரமல்ல; இந்திய மக்களைப் பிரித்து வைக்க வெள்ளைக்காரரால் செய்யப்பட்ட பொய்ச்சரிதங்கள்” என்று கூறுவர் நமது காங்கிரஸ் சரித்திர ஞானிகள்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் – பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் – திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் – திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.

சென்ற 5-2-41 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறோம்.

நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர் 16-9-26-ல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபாத்தியாயினி. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதா மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்புச் செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் – ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில் பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறிப்பிட்டு விட்டனர்.

இந்நாட்டில் ஆரியர் – திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான். இந்தத் தீர்ப்பு காலநிலையை ஆதாரமாகக் கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவைக் கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் அமைந்திருக்க வேண்டும்.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டுமென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய தேவ ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர் – திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 10

லெக்ஸேய் விந்தையான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

பயிற்சி செய்வதன் மூலம் கால்கள் இன்றியே விமானம் ஓட்டக் கற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது முதல், வாழ்வு வேட்கையும் செயல் ஆர்வமும் அவனை ஆட்கொண்டுவிட்டன.

இப்போது அவனுக்கு வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. சண்டை விமானி வேலைக்குத் திரும்புவதே அது. கால்கள் விளங்காத நிலையில் பிடிவாதத்துடன் அவன் ஊர்ந்து தன்னவர்களை அடைந்தானோ, அதே பிடிவாதத்துடன் இந்தக் குறிக்கோளை அடைய முயலலானான்.

விமானமோட்டும் தொழில்நுட்பத்தை அறிந்த எவனுக்கும் இந்தச் சேதி நம்ப முடியாததாகப்பட்டிருக்கும். ஆனால் இது மனிதத் திறனின் எல்லைக்கு உட்பட்டதுதான். இந்த நோக்கத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முடியும் என அவன் உறுதி பூண்டான். தனது திட்டத்தை செயல்படுத்துவதில் முனைந்தான் அலெக்ஸேய். தனக்கே வியப்பூட்டிய சடங்குப் பற்றுடன் மருத்துவர்கள் குறித்த சிகிச்சை முறைகளை தவறாது கடைப்பிடித்தான், குறித்த அளவு மருந்துகளை உட்கொண்டான். சில வேளைகளில் பசியே இராது. எனினும் அவன் அதிகப்படி உணவை உண்டே தீர்ப்பான். என்ன நேர்ந்தாலும் சரியே, குறித்த மணிநேரம் உறங்கி விடுவது என்று திட்டப்படுத்திக் கொண்டான். செயலூக்கமும் துடிப்பும் கொண்ட அவனது இயல்பு பகல் தூக்கத்தை நெடுங்காலம் எதிர்த்தது. ஆயினும் அவன் பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உறங்கும் வழக்கத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டான்.

சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மருந்து உண்பதற்கும் தன்னைப் பழக்கிக் கொள்வது கடினம் அல்ல. உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. மெரேஸ்யேவ் முன்பு வழக்கமாகச் செய்துவந்த உடற்பயிற்சி, கால்களை இழந்து கட்டிலோடு கட்டிலாகக் கிடந்த மனிதனுக்கு ஏற்றதாக இல்லை. தனக்கு ஏற்ற உடற்பயிற்சியை அவனே கற்பனை செய்து அமைத்துக் கொண்டான். முழு மணி நேரம் வளைவதும் நிமிர்வதும் விலாவில் கைகளை ஊன்றியவாறு உடலை முறுக்குவதும் முள்ளெலும்புகள் கடகடக்கும்படி தலையை இரு மருங்கும் உற்சாகமாகத் திரும்புவதுமாக இருப்பான்.

கால்களிலிருந்து கட்டுக்கள் அகற்றப்பட்டு, கட்டிலின் எல்லைக்குள் அதிக அங்க அசைவுக்கு வாய்ப்பு கிடைத்ததும் அலெக்ஸேய் உடற்பயிற்சியை இன்னும் சிக்கலாக்கிக் கொண்டான். கட்டில் விளிம்பின் அடியே வெட்டுண்ட கால்களைப் புகுத்திக் கொண்டு இடுப்பில் கைகளை ஊன்றியவாறு மெதுவாக வளையவும் நிமிரவும் தொடங்கினான். தடவைக்குத் தடவை வேகத்தைக் குறைத்து “வளைதலின்” எண்ணிக்கையை அதிகப்படுத்தினான். பின்பு கால்களுக்கேற்ற பயிற்சித் தொடரை முறைப்படுத்திக் கொண்டான். கட்டிலில் நிமிர்ந்து படுத்துக் கால்களைத் தன் பக்கம் இழுத்து வளைப்பான், பின்பு நேராக்கி முன்னே வீசிப் போடுவான். முதல் தடவை இந்தப் பயிற்சியைச் செய்தபோது எத்தகைய பிரம்மாண்டமான, ஒரு வேளை சமாளிக்கவே முடியாத இடர்பாடுகள் தன்னை எதிர்நோக்கி இருக்கின்றன என்பதை உடனே கண்டு கொண்டான். கணைக்கால்வரை வெட்டுண்டிருந்த கால்களை இழுக்கையில் அவை சுரீரென்று வலித்தன. அங்க அசைவுகள் கூச்சமுள்ளவையாகவும் ஒரு சீரற்றும் இருந்தன. இறக்கை அல்லது வால் பழுதடைந்த விமானத்தை ஓட்டுவது போலவே இந்த இயக்கங்களைக் கணிப்பது கஷ்டமாயிருந்தது. தான் அறியாமலே தன்னை விமானத்துடன் ஒப்பிட்டுப்பார்த்த மெரேஸ்யேவ், ஆதர்சக் கணக்குப் பொருத்தம் உள்ள மனித உடல் அமைப்பு அனைத்தும் தன் சரீரத்தில் சிதைந்து போயிருக்கிறது என்றும், தனது உடல் இன்னும் சிதைந்து போயிருக்கிறது என்றும், தனது உடல் இன்னும் முழுதாகவும் வலுவுள்ளதாகவும் இருப்பினும் குழந்தைப் பருவம் முதல் பயிற்சியால் உருவாக்கப்பட்ட முந்தைய இயக்க ஒருங்கிசைவை அது இனி ஒருபோதும் பெறாது என்றும் புரிந்து கொண்டான்.

கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கிற்று. எனினும் மெரேஸ்யெவ் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை முந்திய நாளைவிட ஒரு நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான். இவை பயங்கரமான நிமிடங்கள். அந்த நிமிடங்களில் கண்ணீர் தானாகவே விழிகளிலிருந்து பெருகும். தன்வசமற்ற முனகலை அடக்கிக் கொள்வதற்காக உதட்டை இரத்தம் வரும் வரை கடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆயினும் அவன் தொடக்கத்தில் நாள்தோறும் ஒருமுறையும் பின்பு இரண்டு முறைகளும் உடற்பயிற்சி செய்யத் தன்னை நிர்ப்பந்தமாகப் பழக்கிக் கொண்டான். தடவைக்குத் தடவை பயிற்சி நேரத்தையும் அதிகரித்துக் கொண்டு போனான். இத்தகைய ஒவ்வொரு உடற்பயிற்சிக்குப் பிறகும் அவன் தொய்ந்து போய்த் தலையணையில் விழுந்து, மறுபடி இந்தப் பயிற்சிகளைச் செய்யத் தனக்கு இயலுமா என்று கவலையுடன் சிந்திப்பான். ஆனால் குறித்த நேரம் வந்ததும் அவன் மீண்டும் பயிற்சியில் முனைந்து விடுவான்.

மெரேஸ்யெவின் எண்ணங்கள் யாவும் கால்களையே மையமாகக் கொண்டு சுழன்றன. சில வேளைகளில் மறதி காரணமாகப் பாதங்கள் வலிப்பதாக உணர்வான், கிடக்கையை மாற்றிக் கொள்வான். பாதங்கள் இல்லை என்ற நினைவு அப்புறந்தான் அவனுக்கு வரும். ஏதோ நரம்புச் சீர்கேடு காரணமாக அவனுடைய வெட்டுண்ட காற்பகுதிகள் நெடுங் காலம்வரை உடலோடு சேர்ந்து உயிர்த்திருந்தன; திடீரென அவற்றில் அரிப்பு எடுக்கும், ஈரப் பருவ நிலையில் உளைச்சல் உண்டாகும், வலி கூட ஏற்படும். கால்களைப் பற்றியே ஓயாது சிந்தித்தமையால், தான் உடல் நலத்துடன் விரைந்து நடப்பது போலக் கனவில் அவனுக்கு அடிக்கடி மனத் தோற்றம் உண்டாகும். விமானத்தாக்கு அபாய அறிவிப்பைக் கேட்டு விமானத்தை நோக்கிக் குதிகால் பிட்டத்தில் அடிக்க ஓடுவது போலவும், ஓடுகிற ஓட்டத்திலேயே இறக்கை மேல் பாய்ந்து தாவி அறைக்குள் புகுந்து இருக்கையில் அமர்ந்து சுக்கான்களைக் கால்களால் சரி பார்ப்பது போலவும் இதற்கிடையே யூரா எஞ்சின் மேலிருந்து மூடியை அகற்றுவது போலவும் ஒரு சமயம் தோன்றும். மறு சமயம் தானும் ஒல்காவும் பூத்துக் குலுங்கும் ஸ்தெப்பி வெளியில் கைகோர்த்துக் கொண்டு வெறுங்காலுடன் பாய்ந்து ஓடுவது போலவும் ஈரிப்பும் வெதுவெதுப்பும் உள்ள தரையின் கொஞ்சலான வருடலை உணர்வது போலவும் தோன்றும். எவ்வளவு நன்றாயிருக்கும் இந்தப் பிரமை! தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டதும் தனக்குக் கால்கள் இல்லை என்பதைக் உணர்கையில் எத்தகைய ஏக்கம் நெஞ்சைக் கவ்விக்கொள்ளும்!

இத்தகைய கனவுகளுக்குப் பின் சில வேளைகளில் அலெக்ஸேய் வெகுவாகக் குன்றிக் குறுகிப் போய்விடுவான். தான் பறக்கப் போவதில்லை, கமிஷினைச் சேர்ந்த இனிய நங்கையுடன் ஸ்தெப்பியில் வெறுங்காலுடன் ஓடவே போவதில்லை என்று அவன் எண்ணலானான். இந்தப் பெண்ணைப் பிரிந்திருந்த காலம் அதிகமாக ஆக அவள் அவனுக்கு முன்னிலும் நெருங்கியவளாகத் தென்படலுற்றாள்.

அனேகமாக ஒவ்வொரு வாரமும் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அலெக்ஸேயை “நடனமாடச்” சொல்லுவாள்.

அதாவது அவன் கைகளைக் கொட்டியவாறு கட்டிலில் துள்ள வேண்டும், அதற்குப் பரிசாக அவள் பள்ளி மாணவனது போன்ற குண்டுகுண்டான, திருத்தமான எழுத்துக்களில் முகவரி தீட்டப்பட்ட உறையை அவனிடம் கொடுப்பாள். இந்தக் கடிதங்கள் நாளாக ஆக அதிக விஸ்தாரமாகிக் கொண்டு போயின. அவற்றில் அதிக உணர்ச்சிப் பெருக்கு காணப்பட்டது. குறுகிய கால, இளமைப்பருவக் காதல், போரினால் இடைமுறிக்கப்பட்ட காதல், ஒல்காவின் உள்ளத்தில் மேலும் மேலும் முதிர்ந்து கனிந்து வருவதை இவ்விஷயங்கள் காட்டின. இந்த வரிகளை அலெக்ஸேய் கலவரத்துடனும் ஏக்கத்துடனும் படித்தான். இவற்றுக்கு இதே உணர்ச்சிகள் மூலம் விடை அளிக்கத் தமக்கு உரிமை இல்லை என்பதை அவன் உணர்ந்தான்.

அவர்கள் பள்ளித் தோழர்கள். ஒருவருக்கொருவர் அன்புக் கவர்ச்சி கொண்டிருந்தார்கள். பெரியவர்களைப் பின்பற்றி இந்தக் கவர்ச்சியை அவர்கள் காதல் என்று அழைத்தார்கள். பிறகு ஆறு ஏழு ஆண்டுகள் அவர்கள் பிரிந்து விட்டார்கள். முதலில் நங்கை தொழிற்பள்ளியில் படிக்கப் போனாள். அப்புறம், அவள் திரும்பி வந்து தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்க்கத் தொடங்கியபோது அலெக்ஸேய் ஊரில் இல்லை. அவன் விமானப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தான். போர் மூள்வதற்கு முன் சிறிது காலத்துக்கு அவர்கள் மீண்டும் சந்தித்துச் சேர்ந்திருந்தார்கள். இந்தச் சந்திப்பை அவனோ, அவளோ தேடிப் பெறவில்லை. வசந்த காலத்தில் ஒரு நாள் மாலை அலெக்ஸேய் தாயாருக்குத் துணையாக நகர்த் தெரு வழியே எங்கோ போய்க் கொண்டிருக்கையில் எதிரே வந்தாள் ஒரு பெண். அவளுடைய வடிவமைந்த கால்களை மட்டுமே அவன் கவனித்திருந்தானே தவிர அவளை உற்றுப் பார்க்கக்கூட இல்லை.

“நீ என்ன, இவளுக்கு முகமன் கூடச் சொல்லவில்லை? இவள் ஓல்கா ஆயிற்றே, மறந்துவிட்டாயா என்ன?” என்றாள் தாயார்.

அலெக்ஸேய் திரும்பிப் பார்த்தான். பெண்ணும் திரும்பி அவர்களைப் பார்த்தாள். அவர்கள் விழிகள் சந்தித்தன. அக்கணமே தன் நெஞ்சு படபடப்பதை உணர்ந்தான். தாயாரை விட்டுவிட்டு, இலைகள் அற்ற பாப்ளர் மரத்தடியில் நடை பாதையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கிப் பாய்ந்தோடினான்.

“நீயா இது?” என்று வியப்புடன் கூவினான். தனக்கு முன் நிற்பவள் ஏதோ தீவாந்திரத்தைக் சேர்ந்த அழகிய விந்தைக் கன்னி போலவும், வசந்தக்காலச் சேறு நிறைந்த தெருவில் அமைதியான மாலை வேளையில் எப்படியோ வந்து விட்டவள் போலவும் அவளை ஏற இறங்க ஆச்சரியத்துடன் நோட்டமிட்டான்.

“அலெக்ஸேயா?” என்று அவன் போலவே வியப்புடனும் நம்பிக்கையுடனுங்கூட வினவினாள் அவள்.

அலெக்ஸேய்க்கு முன் நின்றாள் வடிவான அங்க அமைப்பும் லாவகமும் உள்ள சிறுகூடான மேனி கொண்ட நங்கை. அவளது இனிய உருண்டை முகமும் சிறுவனது போன்று இருந்தது. அவளுடைய மூக்குத் தண்டில் பொன்னிற மச்சங்கள் காணப்பட்டன. மென்மையாகக் கோடிட்டிருந்த தன்னுடைய புருவங்களைச் சற்றே நிமிர்த்தி, கதிர் வீச்சும் பெரிய சாம்பல் நிறக் கண்களால் அவனை நோக்கினாள் அவள். தொழிற்சாலைப் பள்ளியில் அவர்கள் கடைசியாகச் சந்தித்த ஆண்டில் அவள் சிவப்பேறிய உருண்டை முகமும் உறுதியான உடற்கட்டும் உள்ள முரட்டுச் சிறுமியாக இருந்தாள். தகப்பனாரின் சிக்குப்பிடித்த தொழிலாளிக் கோட்டைப் போட்டுக் கொண்டு கைகளை மடித்து விட்டவாறு மிடுக்குடன் வளைய வருவாள். இப்போது அலெக்ஸேய்க்கு முன்னே நின்ற லாவகமும் தளதளப்பும் ஒயிலும் கொண்ட கன்னிக்கும் அந்த சிறுமிக்கும் ஒற்றுமை வெகு சிறிதே காணப்பட்டது.

தாயாரை மறந்துவிட்டு அலெக்ஸேய் அவளையே பாராட்டுடன் நோக்கினான். இந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாகத் தான் அவளை மறக்கவே இல்லை என்றும் இந்தச் சந்திப்பைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது.

“ஆ, இப்போது நீ இப்படிப்பட்டவள் ஆகிவிட்டாயா?” என்று முடிவில் கூறினான்.

“எப்படிப்பட்டவள்?” என்று கணீரென்ற குரலில் கேட்டாள் அவள். அடித்தொண்டையிலிருந்து வந்த அந்தக் குரல் பள்ளி நாட்களில் இருந்ததற்கு முற்றிலும் வேறாயிருந்தது.

அன்னை அவர்கள் இருவர் மீது கண்ணோட்டி விட்டு ஏக்கத்துடன் முறுவலித்துத் தன் வழியே சென்றாள். அவள் உள்ளுணர்வால் விஷயத்தைப் புரிந்து கொண்டாள். அவள் இதனால் வருத்தப்படவில்லை. முதியவர்கள் மூப்பு அடைகிறார்கள், சிறுவர்கள் வளர்கிறார்கள் – இது தானே வாழ்வின் நியமம்!

படிக்க:
விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் !
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! அச்சுநூல்

அலெக்ஸேயும் ஓல்காவும் தங்கள் காதலைப் பற்றி ஒரு முறைகூடப் பேசவில்லை. மாலை வெயிலில் பளிச்சிடும் அமைதி சூழ்ந்த வோல்கா ஆற்றின் கரையில் உலாவி விட்டுத் திரும்புகையில், கழிந்து கொண்டு போகும் விடுமுறை நாட்களை எண்ணிக் கணக்கிட்டு, அலெக்ஸேய் தீர்மானிப்பான் – ஓல்காவிடம் மனம் திறந்து பேசி விடுவது என்று. அடுத்த மாலை வரும். சினிமாவுக்கோ சர்க்கஸுக்கோ, பூங்காவுக்கோ அவர்கள் போவார்கள். எங்கு போனாலும் அலெக்ஸேய்க்கு ஒன்றுதான். அவன் திரையையோ அரங்கையோ உலாவுவோர் கூட்டத்தையோ கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான். ஒல்காவையே நோக்கியவாறு, “இதோ வீடு திரும்பும் வழியில் கட்டாயமாக விஷயத்தை விளக்கிவிடுகிறேன்” என்று எண்ணுவான். ஆனால் வழி முடிந்து விடும், அவனுக்கோ துணிவு வராது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

0

தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்த மசோதாவை, கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றியது மத்திய மோடி அரசு. அந்த சட்டத் திருத்தம் குறித்து மக்களவையில் கடும் விவாதம் ஏற்பட்டது.

இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார். இச்சட்டதிருத்தம், பயங்கரவாதியின் மதத்தை பேதப்படுத்தாமல், பயங்கரவாதத்தை ஒழிக்கவே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்திற்கு திமுக ஆதரவு அளித்திருப்பது முற்போக்காளர்கள் மத்தியிலும், முஸ்லீம்கள் மத்தியிலும் விமர்சனத்தை  எழுப்பியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமைச் சட்டம், 2008 – மும்பை 26/11 தாக்குதலைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என அமித் ஷா வாக்குறுதி அளித்திருக்கிறார். இச்சட்டப்படியே முறைகேடு நடக்கு முடியும் போது சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையே?

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமைக்கு சிபிஐ-யை விட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த தேசிய புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரமும் உண்டு. இதற்கு குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்குத் தேவையான போலீசுப் படையை அனுப்பவேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

இந்தச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வழக்குகளில், முக்கியமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்குப் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் மட்டுமே தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முடியும்.

படிக்க:
♦ காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

ஆனால், தற்போதைய புதிய சட்ட திருத்தம் கூடுதல் அதிகாரங்களை தேசிய புலனாய்வு முகமைக்குச் சேர்த்துள்ளது. முதலாவதாக, தேசிய புலனாய்வு முகமைக்கு வெளிநாடுகளில் சென்று விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசிற்கு, என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரித்து வரும் செசன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. மூன்றாவதாக, ஏற்கெனவே இருந்த என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உகந்த குற்றங்களின் பட்டியலில் இருக்கும் எட்டுக் குற்றங்களோடு கூடுதலாக நான்கு வகையான குற்றங்களை சேர்த்திருக்கிறது.

முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களோ, அல்லது இந்தியாவின் சொத்துக்களோ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டால் அதனை விசாரிக்க என்.ஐ.ஏ-வுக்கு முழு அதிகாரத்தையும் அளிக்கிறது.

இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், குறிப்பான வழக்குகளில் பல்வேறு தரப்பில் அனுமதி பெற்று சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் 9 மாதங்கள்வரை ஆவதால், மத்திய அரசின் அனுமதியை மட்டும் பெற்றுக் கொண்டு விசாரணை நடக்கும் செசன்ஸ் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படச் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

மூன்றாவதாக, என்.ஐ.ஏ-வால் விசாரிக்கத் தகுந்த குற்றங்களின் பட்டியலில் புதியதாக பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தல், கள்ள நோட்டு அடித்தல், (இந்திய தண்டனைச் சட்டம் 370, 370A (1860)) ; தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் (ஆயுதச்சட்டம் (1959) பிரிவு 25 [1AA] ; இணையக் குற்றங்கள் (தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 66F) ; வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் (2000) ஆகிய பிரிவுகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் குற்றப்பட்டியல்களில் சேர்த்துள்ளது பாஜக அரசு.

புதிய குற்றப் பிரிவுகளை உள்ளே சேர்த்ததன் மூலம் பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.

குறிப்பாக ஆயுதம் தயாரித்தல் – விற்பனை செய்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளைச் சேர்த்திருப்பதைப் பார்க்கையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ சாத்வி பிரக்யா சிங்கை விடுவித்தது தான் நமது நினைவுக்கு வருகிறது.

இன்று ஆயுதத் தயாரிப்பு, வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து சிக்கியிருப்பது யார்? சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல்கள்தான் இத்தகைய வழக்குகளில் கைதாகியிருக்கின்றனர்.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்களைக் கொன்ற சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல், தற்போது மாநில அரசுகள் அமைத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவின் வளையத்திற்குள் சிக்கியிருக்கின்றன. இந்த சட்டத் திருத்தத்தின் படி இந்தக் கிரிமினல் கும்பல்களை விசாரிக்கும் அதிகாரமும் இனி என்.ஐ.ஏ-விடமே ஒப்படைக்கப் படலாம்.

பின்னர் நடக்கவிருப்பது நாம் அறியாததல்ல. சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் போல இந்தக் கும்பலும் என்.ஐ.ஏ-வின் உதவியுடனும் சிறப்பு நீதிமன்றத்தின் உதவியுடனும் விடுதலை செய்யப்பட்டு, எம்.பி சீட்டோ, எம்.எல்.ஏ. சீட்டோ கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படலாம்.

நாடாளுமன்றத்தில் தனது உரையில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைகள் குறித்தெல்லாம் குரல் எழுப்பிய திமுக-வின் நாடாளுமன்றக் கொறடா ஆ.ராசா அவர்கள், இந்த சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துவது கண்டிக்கத் தக்கது.

அடுத்ததாக இணையக் குற்றப் பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் இந்தப் பிரிவே பொத்தாம் பொதுவாக பின்வருமாறுதான் ஆரம்பிக்கிறது. “with intent to threaten the unity, integrity, security or sovereignty of India” அதாவது “இந்தியாவின் ஒற்றுமைக்கு, ஒருங்கிணைந்த தன்மைக்கு, பாதுகாப்புக்கு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடன்..” இணையத்தில் எழுதினால் இனிமேல் என்.ஐ.ஏ. பிடித்துக் கொண்டுபோய் உள்ளே தள்ளும் என்பதுதான் அதன் பொருள்.

இனி திமுக-வின் ஐ.டி பிரிவினர் திராவிடம் 2.0 என்றோ, இந்தியைப் புறக்கணிப்போம் என்றோ டிவிட்டரிலும், முகநூலிலும் பதிவிட்டாலே போதும், என்.ஐ.ஏ கைது செய்ய முகாந்திரம் இருக்கிறது. ஏனெனில், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த தன்மைக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் இருக்கிறது அல்லவா ?

மோடி அமித்ஷா கும்பல் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறித்து பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆ.ராசா நாடாளுமன்றத்தில், “நாட்டில் சிவில் சட்டங்களை தவிர, எல்லா கிரிமினல் சட்டங்களும் மதச்சார்பற்றவைகளாகவே இருக்கின்றன; எனவே, இச்சட்டத்தை மதக் கண்ணோட்டத்தோடு அரசு அணுகக்கூடாது.” என்று பேசியதாக, தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிரிமினல் சட்டங்கள் மதச்சார்பற்றதாக இருக்கலாம். அதனை நடைமுறைப்படுத்தும் இடத்திலும், கண்காணிக்கும் இடத்திலும் காவிக் கிரிமினல் கும்பல் அல்லவா இருக்கிறது?

மேலும் இச்சட்டத்தின் படி ஒருவர் மீது ஐயம் இருந்தாலே போதும் கைது செய்து நெடுங்காலம் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் எப்படி கைது செய்யப்பட்டார், யார் சொல்லி கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் முதல் தகவல் அறிக்கையில் கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விசாரணை மூடுண்ட நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கும் இச்சட்டம் உதவுகிறது. ஒருவர் ஒரு பென்டிரைவ் வைத்திருந்தார் அதில் இந்தியாவிற்கு எதிரான முழக்கம் இருந்தது என்று கூட அவரைக் கைது செய்ய முடியும். இவையெல்லாம் இச்சட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் அம்சங்கள்.

குறிப்பாக முஸ்லீம் மக்களை கேட்பார் கேள்வியின்றி கைது செய்ய இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தடா, பொடா போல இச்சட்டமும் முஸ்லீம்களோடு அரசியல் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து பழிவாங்க பாஜக அரசிற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கூடவே என்.ஐ.ஏ சட்டப்படி பெரும்பாலான வழக்குகளில் அப்பாவிகள்தான் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கிறது. இந்துமதவெறியர்கள் மட்டும் என்.ஐ.ஏ விசாரிக்கும் போது விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே நடப்பது போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அதற்கான சட்டப் பாதுகாப்பை, இந்த சட்டமும் அதன் திருத்தங்களும் தருகின்றன.

இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பேசினாலும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க, பிஎஸ்பி, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இச்சட்ட திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்கின்றன. சிறுபான்மையினருக்கு தமது கட்சிகள் கேடயமாக பாதுகாப்பு அளிக்கும் என இக்கட்சிகள் கூறினாலும் இச்சட்டம் முஸ்லீம்களை குறிவைத்து தாக்குவதையும், இந்துமதவெறிக் குற்றவாளிகளை விடுதலை செய்வதையும் ஏற்கெனவே செய்து வருகிறது.

வாக்கரசியலைத் தாண்டி இச்சட்டத்தின் திருத்தம் மட்டுமல்ல இச்சட்டத்தையே ரத்து செய்யுமாறு போராடுவதற்கு முற்போக்கு அரசியல் உலகம் முயலவேண்டும். ஏனெனில் இச்சட்டத்தின் மூலம் பாஜகவை எதிர்த்து யாரும் பேச முடியாது எனும் நிலையை இச்சட்டத் திருத்தம் ஏற்படுத்துகிறது.


நந்தன்

செய்தி ஆதாரம் :  இந்தியன் எக்ஸ்பிரஸ்

போதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் ! ஆவணப்படம்

0

லியெம் கோலின்ஸ் ஒரு வெற்றியடைந்த விளையாட்டு வீரர்; தோல்வியடைந்த தொழில் முனைவோர். இங்கிலாந்தைச் சேர்ந்த கோலின்ஸ், தடை ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று பல வெற்றிகளைக் குவித்தவர்.

தனது 18 வது வயதில் – 1998-ல் – பள்ளி அளவில் நடந்த 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வென்ற கோலின்ஸ், கடைசியாக தனது 35-வது வயதில் (2014-ம் ஆண்டு) நடந்த யுரோப்பியன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தடகள விளையாட்டு அரங்கில் மிக நீண்ட காலம் தாக்குப் பிடித்து நின்ற கோலின்ஸ், அதே காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் கால் வைத்து பெரும் சரிவையும் சந்தித்தவர்.

லியெம் கோலின்ஸ்

தனது சாதனைகளுக்காகவோ, தோல்விகளுக்காகவோ பெரிதும் அறியப்படாத கோலின்ஸ் 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியான ஒரு ஆவணப்படத்தைத் தொடர்ந்து அட்லாண்டிக்கின் மறுமுனையில் இருக்கும் வட அமெரிக்க கண்டமெங்கும் பரபரப்பாக பேசப்படும் நபராகினார். அல்ஜசீரா தொலைக்காட்சியின் மறைபுலனாய்வுப் பிரிவு வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” (The Dark Side: Secrets of the Sports Dopers) என்கிற ஆவணப்படம் அமெரிக்க விளையாட்டு உலகத்தை மட்டுமின்றி இரசிகர்களையும் திகைக்கச் செய்தது.

“நான் நினைத்தால் சாதாரண மரபணுக்கள் கொண்ட ஒரு விளையாட்டு வீரரை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைக்க முடியும். போதைப் பொருட்கள் பயன்பாட்டை கண்டறியும் அமைப்பின் கண்களில் மிக எளிதாக மண்ணைத் தூவி விடலாம்” என இரகசிய கேமரா முன் சொல்கிறார் மருத்துவர் சாட் ராபர்ட்சன். இவர் கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்தவர். பல்வேறு அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இவரது வாடிக்கையாளர்கள். ஆவணப்படமெங்கும் ஒரு விளையாட்டு வீரர் எப்படி ஊக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளை பரிசோதனைகளில் மாட்டிக் கொள்ளாமல் மீற முடியும் என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

டெக்சாசைச் சேர்ந்த சார்லி ஸ்லை எனும் மருத்துவர் அமெரிக்க கால்பந்தாட்டம் மற்றும் பேஸ்பால் விளையாட்டு வீர்களின் பிரத்யேக “மருத்துவர்”. இவரது சிறப்பு மருந்து டெல்டா 2 எனப்படும் ஊக்க மருந்து. இந்த மருந்தைப் பயன்படுத்தி விளையாட்டில் சாதித்த வீரர்களின் பெயர்களை அனாயசியமாக பட்டியலிடுகிறார் சார்லி. அமெரிக்க கால்பந்தாட்டம், பேஸ்பால் மற்றும் கூடைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவலாக தனியார் கிளப்புகள் மூலம் தொழில்முறைப் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இரசிகர்களின் ஆதரவை இழந்திருந்த அமெரிக்க கால்பந்தாட்டமே ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களின் வரவுக்குப் பின்னர் சூடுபிடிக்கத் துவங்கியது என ஆவணப்படத்தின் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகின்றது.

டிம் மோண்ட்கோமெரி

ஆவணப்படத்தின் இயக்குநர் முதலில் போதை மருந்து உபயோகத்தின் காரணமாய் தடை செய்யப்பட்ட முன்னாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் டிம் மோண்ட்கோமெரியைச் சந்திக்கின்றனர். தனது விளையாட்டு வாழ்வின் உச்சமாக 100 மீட்டர் தூரத்தை 9.78 நொடிகளில் கடந்து உலக சாதனை புரிந்தவர் டிம். ஆனால், பின்னர் அந்தப் போட்டியின் போது அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதும் அவர் தடை செய்யப்பட்டதுடன் அவரது உலக சாதனையும் பறிக்கப்படுகின்றது.

“வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். எனக்கு அந்தப் புகழ் பிடித்திருந்தது; அது வேண்டுமாய் இருந்தது. எனது சிறிய வயதில் பெரியவர்களோடு ஓடி வென்ற அந்த தருணங்கள் மீண்டும் மீண்டும் தேவைப்பட்டது. அதை நான் உணர வேண்டும் என்பதற்காய் ஊக்க மருந்துகளை நாடினேன். பின்னர் பிடிபட்டு தடை செய்யப்பட்டேன்” என்கிறார் டிம். தற்போது போதை உலகில் இருந்து வெளியேறியுள்ள டிம், இளம் வீரர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

டிம் யார் மூலமாக ஊக்க மருந்துகளைப் பெற்றார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவணப்பட இயக்குநர், கோலின்சை தொடர்பு கொண்டு “ஓய்வு பெறும் முன் இறுதியாய் ஒரு முறை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளத் துடிக்கும் வீரர்” என்கிற போர்வையில் போதை மருத்துவர்கள் மற்றும் முகவர்களைச் சந்திக்க வைக்கின்றனர் – இரகசிய கேமராவுடன். முதலில் பகாமஸ் தீவுகளுக்குச் செல்லும் ஆவணப்படக் குழு அங்கே டிம்முக்கு மருந்துகள் சப்ளை செய்த மருத்துவர்களைச் சந்திக்கின்றனர். பின்னர் அங்கிருந்து நூல் பிடித்து கனடாவின் வான்கூவரில் உள்ள சாட் ராபர்ட்சன் மற்றும் டெக்சாசைச் சேர்ந்த சார்லி ஸ்லை ஆகியோரை அடைகின்றனர்.

பகாமஸ் மருத்துவர்களிடம் சொன்ன அதே கதையுடன் இவர்களையும் அணுகுகின்றது ஆவணப்படக் குழு. இரகசிய கேமராவின் முன் இவ்விருவரும் அவிழ்த்து விட்ட உண்மைகள் ஒவ்வொன்றும் அமெரிக்க இரசிகர்களை அணுகுண்டுகளாய்த் தாக்கியுள்ளன. நேரலைக் கட்டணப் (pay per view) போட்டிகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு காசு கட்டி பல மணி நேரங்கள் ஆராவாரித்து கொண்டாடிய வீரர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாய்ப் பொருமினர்.

எனினும், அமெரிக்க விளையாட்டு உலகம் இதில் அதிர்ச்சியடைவதற்கு ஏதுமில்லை என்பதே எதார்த்தம். வென்றே தீர வேண்டும் என்கிற வெறி ஒருபுறம் – அமெச்சூர் போட்டிகளில் எப்பாடுபட்டாவது வெற்றிகளைக் குவித்து விட்டால் தொழில்முறை விளையாட்டு உலகினுள் ஒரு நல்ல இடம் கிடைத்து விடும் என்கிற உத்திரவாதம் மறுபுறம். தொழில்முறை விளையாட்டு உலகிலும் வெற்றி ஒன்றே ஒரு வீரனின் இருப்பையும் வருமானத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான வழி என்கிற நிலை இன்னொரு புறம். இந்த நெருக்கடிகளோடு பண்டைய ரோமானிய கிளாடியேட்டர்களைப் போல் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொள்ள அவர்கள் மிக இயல்பாக ஊக்க மருந்துகளை நாடுகின்றனர்.

ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளும் விளையாட்டு வீரன் வெல்கிறான் – விளையாட்டு தோற்றுப் போகின்றது. இந்த நச்சு சூழலை ஓரளவிற்கு நேர்மையாக படம்பிடித்துக் காட்டுகின்றது அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.


சாக்கியன்
நன்றி: அல்ஜசீரா

முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

0

65 பேர் கொல்லப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

த்தரப் பிரதேச மாநிலத்தில் 2013-ம் ஆண்டு முசுலீம் மக்கள் மீது இந்துத்துவ காவிக் குண்டர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, அகதிகளாக முகாம்களில் குடியேறினர். 65 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் 10 கொலைகள் மட்டுமே வழக்குகளாக பதியப்பட்டு, விசாரணை செய்யப்பட்டன.

2013, செப்டம்பர் 8-ஆம் தேதி, ஷாம்லி மாவட்டத்தில் 65 வயதான இஸ்லாம் காவி குண்டர்களால் துரத்தி படுகொலை செய்யப்பட்ட மசூதி இது…

இந்த 10 கொலை வழக்குகளின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களின் அடிப்படையிலும், பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்ட நிலையில், குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்.

# குற்றப்பத்திரிகையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களான ஐந்து அரசு தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்துக்கு வரவேயில்லை.

# ஆறு அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர். போலீசு தங்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறினர்.

# ஐந்து வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் போலீசு ஒப்படைக்கவில்லை.

# அரசு தரப்பு ஒருபோதும் காவல்துறையினரை குறுக்கு விசாரணை செய்யவில்லை.

# இறுதியில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியமாக மாறினர்.

உண்மையில், 2017 முதல் முசாஃபர் நகர் நீதிமன்றங்கள், இந்தக் கலவரம் தொடர்பான 41 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. முசுலீம்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட மற்ற 40 வழக்குகளிலிருந்தும் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கலவரத்தில் எரிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு வீட்டை பார்க்கும் சிறுவன். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனைத்து வழக்குகளையும் பதிந்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணைகள் அகிலேஷ் ஆட்சியிலும் தற்போதைய பாஜக ஆட்சியிலும் தொடர்ந்தன. ஒரே ஒரு வழக்கில் அமர்வு நீதிமன்றம் முசாமில், முஜாஸ்மின், ஃபர்கான், நதீம், ஜஹாங்கீர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய ஏழு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 2017 ஆகஸ்ட் 27-ம் தேதி, கவால் கிராமத்தில் கவுரவ், சச்சின் ஆகியோரை கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். இதுதான் கலவரத்தை தூண்டியதாக நீதிமன்றம் சொன்னது. அதாவது காவி நீதிமன்றம் முசுலீம்களை மட்டுமே தண்டித்திருக்கிறது.

பத்து கொலை வழக்குகள் என்னென்ன என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வழக்கு விவரங்களை ஆராய்ந்து எழுதியுள்ளதில், நீதிமன்றமும் போலீசும் காவிகளின் கைக்கூலிகளாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு குடும்பமே உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு முதல், நண்பர்கள் வெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டது, ஒரு குடும்பத்தில் தந்தை வாளால் கொல்லப்பட்டது, மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்ட ஒருவர் என பத்து வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 53 பேர், விடுதலை செய்யப்பட்டனர்.

நான்கு கூட்டு வல்லுறவு வழக்குகளும் 26 கலவர வழக்குகளிலும் இதே நீதி தான் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதித்யநாத் தலைமையிலான காவி அரசு, காவி குண்டர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ‘அனைவருக்குமான அரசு’ என்கிற வகையிலும்கூட மேல்முறையீடு செய்யமாட்டோம் என அறிவித்துள்ளது. பிறழ் சாட்சியங்களாக மாறியவர்கள் மீது 344-வது பிரிவின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க:
♦ முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு அதிரடி !
♦ ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

10 வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணையில் தெரியவந்த முக்கியமான விசயங்கள்…

# புகாரில் 69 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 24 பேரின் மீது மட்டுமே விசாரணை நடந்தது.

# ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் கொலை ஆயுதங்கள் குறித்த பதிவு இருந்தபோதும், போலீசு ஐந்து வழக்குகளில் மட்டுமே ஆயுதங்களை கைப்பற்றியது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி புதானாவில் அம்ரோஜ், மெகர்பென், அஜ்மல் ஆகிய மூவர் கொல்லப்பட்ட வழக்கை மூன்றாக பிரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து கொலை ஆயுதமாக அரிவாளை கைப்பற்றியது போலீசு. ஒரு வழக்கில் இது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. இன்னொரு வழக்கில் கொலை ஆயுதத்தில் ரத்தக்கறை இல்லை என்றது. மூன்றாவது வழக்கில் ரத்தக்கறை இல்லாததால் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பவில்லை எனக்கூறியது. இந்த ஆயுதத்தை கைப்பற்றிய போலீசிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

# அசிமுதீன் மற்று ஹலிமா என்ற இணையர் புகானாவில் கொல்லப்பட்ட வழக்கில் போலீசு இரண்டு சாட்சியங்களின் முன்னிலையில் சாட்சியங்களை கைப்பற்றியதாக கூறியது. ஆனால் அவர்கள் இருவரும் எந்தவித சாட்சியங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் வெற்றுத்தாளில் தங்களை போலீசு கையெழுத்து இடச் சொன்னது என்றும் கூறினர்.

இதேபோல, ரோஜுதீன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும் சாட்சியங்கள் போலீசுதான் அனைத்து ஆவணங்களையும் எழுதி கையெழுத்து வாங்கியதாகக் கூறினர்.

# மிராபூரில் ஷாரீக், டிதாவியில் ரோஜுதீன், மிராபூரில் நதீம் கொல்லப்பட்ட வழக்கில் உடல்கூராய்வு செய்த மருத்துவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தன். ஆனால், நீதிமன்றத்தில் மருத்துவர்களிடம், மருத்துவ ஆவணங்கள் உண்மையா இல்லையா என்பது மட்டும் கேட்கப்பட்டது. மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கவில்லை.

# அசிமுதீன், ஹாலிமா கொலை வழக்கில் அரசு தரப்பில் உடல்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. புகாரும் அதன் பின் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் உடல்கள் கைப்பற்ற இடம் குறித்த தகவலும் மட்டும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. வேறு எந்த ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் சொன்னது.

முசாஃபர் நகர் கலவரத்தினால் அகதி முகாம்களில் பலர் தஞ்சமடைந்தனர். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் – கோப்புப் படம்)

இந்த பத்து வழக்குகளில், 65 வயதான இஸ்லாம் கொல்லப்பட்ட வழக்கும் ஒன்று. இஸ்லாமின் மகன் ஸாரிஃப் பதிந்த முதல் தகவல் அறிக்கையில், “ஹர்பால், சுனில், பிரமன் சிங், ஸ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித், குல்தீப், அரவிந்த் ஆகியோர் மதவாத முழக்கங்களை எழுப்பிக்கொண்டு எங்கள் குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கினர். ஸ்ரீபால் கூரான ஆயுதம் கொண்டு என் தந்தையின் தலையில் தாக்கினார். மற்ற ஆறுபேரும் கத்தியால் அவரை தாக்கினர். எங்கள் வீட்டை அவர்கள் கொளுத்தினர். என்னுடைய சகோதரர் தந்தையை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கு விசாரணையின்போது ஸாரிஃப், “என்னுடைய தந்தை கொல்லப்பட்டார், என்னுடைய உறவினர் குல்சார் எழுதிய புகாரில் நான் கையெழுத்து மட்டுமே போட்டேன். குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை” என பிறழ் சாட்சியாக மாறினார். மற்ற மூன்று சாட்சியங்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நடந்த கொலையில் தொடர்பில்லை என்றனர்.

ஒரு தொழிலாளியாக உள்ள ஸாரிஃப், தான் எப்போது புகார் அளித்தோம், எப்போது பிறழ் சாட்சியாக மாறினோம் என்கிற விவரமெல்லாம் நினைவில் இல்லை என்கிறார். நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்டத் தவறிவிட்டார்.

ஆனால், தன்னுடைய தந்தையின் கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களை அப்படியே கூறுகிறார்.

கிராமத்தின் பெரியவர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று பாதுகாத்தனர். வழிபாட்டிடத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்பினோம். நாங்கள் யாரை நம்பினோமோ அதே நபரகள் எங்கள் தந்தையை கொன்றனர். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

“இந்த கிராமத்தைச் சேர்ந்த முசுலீம் குடும்பங்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில் நாங்கள் மட்டுமே இங்கேயே இருந்தோம். கிராமத்தின் பெரியவர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று பாதுகாத்தனர். வழிபாட்டிடத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்பினோம்.

ஆனால், சில மணி நேரத்திலேயே நிலைமை மோசமாவதை உணர்ந்தோம். எங்கள் தந்தை தானே பொறுப்பாளரை அழைத்தார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை உதவிக்கு அழைத்தோம். அவர் இராணுவம் வந்துகொண்டிருப்பதாக சொன்னார். அதற்குள் நாங்கள் யாரை நம்பினோமோ அதே நபரகள் எங்கள் தந்தையை கொன்றனர்” என்கிறார் ஸாரிஃப்.

பிறகு ஏன் நீதிமன்றத்தில் இதைச் சொல்லவில்லை என்கிற கேள்விக்கு ஸாரிஃபின் பதில், “கொலையில் விடுவிக்கப்பட்டவர்கள்தான் கொன்றவர்கள். எங்களுடைய பலவீனத்தின் காரணமாக நாங்கள் சமரசம் செய்துகொண்டோம். எங்களுக்கு திராணி இருந்திருந்தால் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றத்துக்கும் சென்றிருப்போம். ஆனால், எங்களுடைய குடும்பத்துக்கு உணவிடவே எங்களால் முடியவில்லை என்னும்போது, நீதிமன்றத்திடம் நீதி கேட்டு எங்களால் எப்படி போராட முடியும்?”.

படிக்க:
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

இஸ்லாமின் வழக்கில் அவருடைய குடும்பத்தாரின் நிலைமை மட்டும் காரணமில்லை. முரண்பட்ட விசாரணை தகவல்களாலும் குற்றவாளிகள் தப்பினர்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரில் ஐந்து பேர் மீது மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, இஸ்லாம் இறப்பதற்கு முன் போலீசு அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்திருக்கிறது.

“என்னுடைய தந்தை சில மணி நேரம் உயிரோடு இருந்தார். மோசமாக தாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி போலீசிடம் கேட்டார். தன்னை தாக்கியவர்களை அடையாளம் தெரியும் எனவும் சொன்னார். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். ஏனெனில் குற்றவாளிகளை பாதுகாக்கவே போலீசு ஆரம்பம் முதல் முயன்றது” என்கிறார் ஸாரிஃப்.

மோடியை ஆட்சியில் அமர வைக்க காவிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட முசாஃபர்நகர் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கே இல்லை. அவர்களே முன்வந்து பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். எவரும் கொல்லப்படவில்லை, உயிரோடு எரிக்கப்படவில்லை, வல்லுறவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு கலவரமே நடக்கவில்லை என சொல்லக்கூடிய அவலநிலையும் அவர்களுக்கு வரக்கூடும்.


செய்திக்கட்டுரை: Kaunain Sheriff M , Manish Sahu
கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்

0

நைஜீரியாவின் மைதுகுரியை (Maiduguri) சேர்ந்த கோமி காஜேவின் (Komi Kaje) வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்குள் மிக இன்றியமையாத நபர்கள் இருவரை கொன்று விட்டனர் போகோ ஹராம் பயங்கரவாதிகள். அவரது 46 வயதான சகோதரரை பயங்கரவாதிகள் கடந்த 2015, நவம்பரில் சுட்டுக் கொன்றனர்.

”ஏழு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். நான் அங்கு சென்ற போது அவர் இருமுறை தலையில் சுட்டு கொல்லப்பட்டிருந்ததைப் பார்த்தேன்” என்றார் காஜே.

பாரம்பரிய வழக்கப்படி துக்க நாட்கள் கடைபிடிக்கப்பட்டன. காஜே உடைந்துதான் போயிருந்தார். ஆனால் அவரது 35 வயதான ஆண் நண்பர் பீட்டர் ஆடம் அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தார். சனிக்கிழமை காஜேவின் குடும்பத்தினருடன் துக்கம் கடைபிடித்து மதிய உணவையும் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் போகோ ஹராம் மீண்டும் தாக்குதலைத் தொடுத்து காஜேவின் தற்காலிக ஆறுதலை நிரந்தர துக்கமாக்கிவிட்டனர். “அவரது தலையிலும் மார்பிலும் சுட்டனர். அவர் அருகிலிருந்த அகழியில் விழுந்தார். அவரது மூளையை குண்டு தாக்கியது” என்று காஜே கண்ணீருடன் கூறினார்.

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரியில் தற்கொலை கார் குண்டு வெடித்த இடத்தில் மக்கள் கூடுகிறார்கள்

அந்த படுகொலைகளை மறக்க காஜே கடுமையாக முயன்றார். ஆனால் இராணுவ அபாய சங்குகள், துப்பாக்கிச் சூட்டின் சத்தம் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பார்த்தது அவருக்குள் ஒரு கடுமையான மனக்குமுறலை ஏற்படுத்தியது.

புதிய இடத்திற்குச் சென்றால் அவருக்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம் என்று நினைத்த அவரது பெற்றோர் நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிற்கு சென்று சில காலம் தங்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் அது வேலைக்காகாது என்பதை காஜே புரிந்து கொண்டார். “ஏனெனில் போகோ ஹராம் எங்கும் சூழ்ந்திருந்தனர்” என்கிறார் அவர்.

பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம் என்று கருதினார். அதே நேரத்தில் ஆயுதந்தாங்கிய போகோ ஹராம் பயங்கரவாதிகள் பல நகரங்களையும் கிராமங்களையும் இஸ்லாமிய கலிபா (Islamic caliphate) என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தனர். 2009-ம் ஆண்டிலிருந்து 27,000-க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்ததுடன் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது வீடுகளை விட்டு இடப்பெயர்ச்சி செய்திருந்தது போகோ ஹராம்.

போகோ ஹராமை எதிர்த்துச் சண்டை:

போகோ ஹராமை எதிர்த்த போராட்டத்தில் சேர வேண்டும் என்ற கருத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் முன்வைத்த போது கேலி மற்றும் அலட்சியப்போக்கை காஜே எதிர்கொண்ட்டார். “போகோ ஹராமுடன் ஒரு பெண் எப்படி போராட முடியும்?” என்று அவரிடம் கூறப்பட்டது.

காஜேவும் ஃபதியும் பொதுமக்கள் கூட்டுப் படைக்குழுவில் (Civilian Joint Task force) இணைந்தனர். அது போகோ ஹராமினால் பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டது. அது இராணுவத்துடன் இணைந்தும், ஆதரவாகவும் போகோ ஹராமை எதிர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பொதுமக்கள் கூட்டுப் படைக்குழுவில் பெரும்பாலும் ஆண்களே இருந்தனர். ஆனால் பெண்களுக்கென்றே சில குறிப்பான வேலைகளும் இருந்தன.

படிக்க :
♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
♦ ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை

“சண்டைக்கு பலப் பெண்களை போகோ ஹராம் பயன்படுத்திக்கொண்டது. எனவே அதை எதிர்ப்பதற்கான எதிர்-உத்திக்கு பெண்களே தேவைப்பட்டனர்” என்கிறார் காஜே.

சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் இதர பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு போகோ ஹராம் பெண்களை அனுகூலமாக பயன்படுத்திக்கொண்டது.

2011-17 இடைப்பட்ட ஆண்டுகளில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய 338 தாக்குதல்களில் 244 -ல் பெண் தற்கொலை குண்டுதாரிகளையே பயன்படுத்தியதாக அமெரிக்காவின் “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் மையம்” (Combating Terrorism Center) கூறுகிறது. போகோ ஹராம் 2018-ம் ஆண்டில் தற்கொலை தாக்குதல்காரர்களாகப் பயன்படுத்திய 48 குழந்தைகளில் 38 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத மற்றும் இன்னப்பிற [பிற்போக்கு] கலாச்சார காரணங்களுக்காக நைஜீரிய படையினர் பெண்களை சோதனை செய்வது தடுக்கப்பட்டிருந்தது. இது போகோ ஹராமிற்கு தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரியில் உள்ளூர் சந்தையில் நுழைந்த ஒரு பெண்ணை காஜே கோமி சோதனையிடுகிறார்.

அதன் பிறகு பெண்கள், அதிகாலை முதல் அந்தி சாயும் வரை, தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய மைதுகுரியின் (Maiduguri) சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுமக்கள் பகுதிகளுக்குச் சென்று பெண் தற்கொலை குண்டுதாரர்களை தேடுகின்றனர். இதனால் பல பெண் தற்கொலை குண்டுதாரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது கொலைகாரத் தாக்குதல்கள் தோல்வியடைந்தன.

சில சூழ்நிலைகளில், பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுக்க பெண்களை இராணுவம் ஈடுபடுத்துகிறது. இது ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. இதனால் “போகோ ஹராமைப் பற்றி கிசுகிசுப்பவர்கள்” (Gossipers of Boko Haram)” என்ற புனைப்பெயர் அவர்களுக்கு வந்தது.

போகோ ஹராம் குறிப்பிட்ட பகுதியில் தாக்குதல் நடத்த இருக்கிறது என்று இராணுவத்திற்கு துப்பு கிடைத்ததும் கூட்டத்தில் மறையும் பெண் தற்கொலை குண்டுதாரர்களைக் கண்டறிந்து அம்பலப்படுத்த துப்பு கொடுக்கும் பெண்களை பயன்படுத்துகிறது. அரிதான, ஆனால் மிகவும் ஆபத்தான சில சமயங்களில், பெண் போகோ ஹராம் குண்டுதாரர்களை குறிவைத்த இராணுவ நடவடிக்கைகளில் இப்பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கொலை மிரட்டல்கள:

ஆனால் நைஜீரிய பெண்களின் நடவடிக்கைகள் குறித்து எல்லொருமே மகிழ்ச்சியடைவதில்லை. “அக்கம்பக்கத்தினர் எப்பொழுதுமே என்னை கேலி செய்கிறார்கள். ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது” என்று ஃபதி கூறினார்.

படிக்க :
♦ அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !
♦ படக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி !

தூதர்களை அனுப்பி பெண் போராளிகளுக்கு போகோ ஹராம் கொலை மிரட்டல் விடுகிறது. “போகோ ஹராம் பல முறை எனக்கு கொலை மிரட்டல் விட்டிருக்கிறது. இந்த வேலையை விட்டு விடு இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அவர்கள் என்னை எச்சரித்தார்கள். எங்கள் செயல்பாடுகளால் அவர்களது நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் நிறுத்தப் போவதில்லை. ஏனெனில் எனக்காக அல்ல என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் அவர்களுடன் சண்டையிடுகிறேன்” என்கிறார்.

போகோ ஹராமுடைய வன்முறை உச்சத்திலிருந்த போது, அவர்களது ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவி குடிமக்களை கைது செய்தல், சிறையிலடைத்தல் மற்றும் கொலை செய்ததாக இராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. யாருக்கெல்லாம் போகோ ஹராமுடன் தொடர்பிருக்கிறது என்று கண்டறிவதற்கு போதுமான தகவல்கள் இராணுவத்திடம் இல்லை.

ஒன்பது வயது சிறுவர்கள் உட்பட 20,000 பேர்கள் எந்த விதமான சட்டபூர்வமான நடவடிக்கைகள் ஏதுமற்று இரணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் 1,200-க்கும் மேற்பட்ட ஆண்களும் படுகொலை செய்யப்பட்டதாக ஆம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

பலர் மடிந்துவிட்டார்கள்:

சில உள்ளூர்வாசிகளுக்கு போகோ ஹராம் பற்றி தெரிந்தாலும் இராணுவத்திற்கு துப்பு கொடுத்தால் தங்களது குடும்பத்தினரை பயங்கரவாதிகள் கொன்று விடுவார்கள் என்பதால் துப்பு சொல்வதில்லை. அதே நேரத்தில் இந்த தடைக்கற்களை உடைத்து, போகோ ஹராம் பற்றி மதிப்பு மிக்க தகவல்களை இராணுவத்திடம் சொல்லும் பெண்களும் அதே சமூகத்தில் இருக்கிறார்கள்.

போகோ ஹராமிடமிருந்து பெண் போராளிகளுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறுகிறார் இட்ரிஸ் ஃபதி.

”இதனால் பல பெண்கள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்” என்று மைதுகுரி திங்கள் சந்தை வாயில்காப்பாளர்களை ஒருங்கிணைப்பாளரான உமர் ஹபிபா கூறினார். கிளர்ச்சியின் மையமான நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் தற்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர் என்று அவர் கூறினார். அச்சுறுத்தல்கள், திருமணம் மற்றும் சமூகத்தின் அழுத்தம் ஆகியவற்றின் விளைவாக ஏனையோர் பணியிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர் கூறுகிறார்.

இப்பணியில் எப்பொழுதுமே ஆபத்து நிறைந்துள்ளது. தற்கொலை குண்டுதாரர்களின் தாக்குதலின் போது இப்பணியில் ஈடுபடும் பெண்களும் பலியாகக்கூடும். “இப்பணியில் வீரமரணம் எய்தினால் என்னுடைய பெற்றோர்கள் என்னைப்பற்றி பெருமையடைவார்கள் என்று எனக்கு தெரியும்” என்றார் காஜே. முன்பு தன்னார்வலராக இந்தப் பணியைச் செய்து வந்த நிலையில் தற்போது மாநில அரசிடமிருந்து 30 டாலரை மாத ஊதியமாகப் பெறுகிறார். “கடுமையான பணி அழுத்தம் காரணமாக பல பெண்கள் இதிலிருந்து வெளியேறிவிட்டனர்” என்கிறார் காஜே.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்

ராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல் லோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?

தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?

எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்!

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு, பெரும் கற்பனைச் சித்திரமும் ஆகும்.
2. அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியையும் அக்கால ஆரியப் பண்பாடு – பழக்க வழக்கம் முதலிய அவர்களது அன்றைய கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.
3.அது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் என்னும் பெயரால் நாட்டில் வழங்கிவருகின்றன.
4. அவை ஒருவரால் ஏற்பட்டவை அல்ல.
5. ஒரே காலத்தில் உண்டாக்கப்பட்டனவும் அல்ல
6. கோர்வை அற்றது.
7. முன்னுக்குப் பின் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.
8. முன்னுக்குப்பின் பொருத்தமற்ற கற்பனைகள் பல
9. மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல
10. தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல
11. மனித தர்ம ஒழுக்கம் காணவும் முடிவதில்லை .
12. உண்மையான வீரம் காண முடிவதில்லை
13. யுத்த முறையிலும் யுத்த தர்மமோ உண்மையான மனித பலமோ தெய்வீக பலமோ அறிவுக்கேற்ற வில்வித்தை முதலிய ஆயுதப் பயிற்சி பலமோ ஆயுதமோ இருந்ததாகத் தெரிய முடியவில்லை . எல்லாம் பொருத்தமற்ற கற்பனைகளே.
14. அதில் காணப்படும் ஆள்கள் உண்மையாய் இருந்தவர்களாக இருக்க முடியாது.
15. ரிஷிகள் முதலியவர்களும், இருந்த மக்கள் என்று சொல்ல முடியாததாகும்.
16. இராமாயணம் சரித்திரத்திற்குச் சம்பந்தப்பட்டதல்லாதது என்பது மாத்திரமல்லாமல், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சம்பந்தப்படாததே ஆகும்.
17. தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை
18. அதில் கடவுளாகக் காணப்படுபவர்கள் ஒரு வரிடத்திலும் (நடத்தையிலும், பேச்சில், எண்ணத்தில்) கடவுள் தத்துவம் என்பதைச் சிறிதும் காணமுடிவதில்லை.
19. மாமிசம் சாப்பிடுவது, மது அருந்துவது இராமாயணத்தில் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.
20. தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
21. இவர்களது வயதுகளும் வரையறுக்கப்படவில்லை ; வயதுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முரண்பாடு கொண்டதுமாகும்.
22. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு சமயத்தில் இருக்கும் சக்தி, தன்மை மற்றொரு சமயத்தில் காணப்படுவதில்லை.
23. இராமாயணக் காலம் என்பதில் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் இருக்கிறது.
24. வேதங்களுக்குப் பிறகுதான் புராணங்கள் உண்டாகி இருக்க வேண்டும். புராணங்களில் தான் இராமாயணம், பாரதம், கடவுள்கள், அவதாரங்கள் காணப்படுகின்றனவே ஒழிய, வேதத்தில் இல்லை.
25. வேதத்தில் விஷ்ணு ஒரு சாதாரண, மூன்றாந்தர, நாலாந்தர தேவன்
26. சிவனும், பிர்மாவும் வேதத்தில் இல்லை . ருத்திரன் தான் காணப்படுகிறான்.(நூலிலிருந்து பக்.5-7)

படிக்க:
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

இராமாயணம் ஆரிய கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் இலக்கியம்!

ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள்! எப்படியெனில்,

அவர்கள் குறிப்பிடும் காலக்கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம், லட்சம் சதுர்யுகம், கோடி சதுர்யுகம், என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள்.

தாசிகள் கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.

ஆண்களைப் பலாத்காரம் செய்த விபச்சாரிகளையும் பதிவிரதை’லிஸ்டில்’ சேர்த்து விடுவார்கள்.

மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.

10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறு கோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.

இப்படியாக இவை போன்ற ஏராளமான பொய்கள், புனை சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.

இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையை பாரத்தவுடன் இராமனுக்குச் சந்தேகம் உண்டாகிறது. ஏன்? சீதை இதுவரைக் கணவனைவிட்டுப் பிரிந்து சோகத்தால் வாடியவளாகத் தென்படவில்லை. அவள் அணிந்திருந்த ஆடைகளும், ஆபரணங்களும், இராமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது.

சீதையைக் கண்டான்; உன்மீது எனக்கு விருப்பமில்லை என்கிறான். ” நான் எங்கே போவேன்” என்கிறாள் சீதை. ”நீ யாருடனாவது எக்கேடு கெட்டு போ” என்கிறான் ராமன்.

உனக்குத்தான் என் விஷயம் தெரியுமே! ஏன் இராவணனிடமிருந்து மீட்டுவந்தாய்? என்று சீதை இராமனிடம் வாதாடுகிறாள்; சத்தியம் செய்து சீதை தீயில் இறங்க வேண்டும் என்பதாக இறுதியில் சமரசத்துக்கு வருகின்றனர். (நூலிலிருந்து பக்.44-45)

… இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள் ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்? தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூகோலகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனவே, இப்போது பூ தேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்! (நூலின் பின் அட்டையிலிருந்து)

நூல் : இராமாயணக் குறிப்புகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : பெரியார் திராவிடர் கழகம்,
29, இதழியலாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர்,
திருவான்மியூர், சென்னை – 600 041.

பக்கங்கள்: 60
விலை: ரூ 10.00 (முதற் பதிப்பு)

இணையத்தில் வாங்க : periyarbooks | panuval
(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள நூல்கள்தான் இணையத்தில் கிடைக்கின்றன. இப்பதிப்பின் விலை ரூ.30.00)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 10

ஆசிரியரின் நொடிகளைப் பிரித்தல்

னது சக ஆசிரியர்கள் முதலில் 15 நிமிடப் பாட வேளைகளை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர்.

“உங்கள் பாடங்கள் எப்படி நடக்கின்றன?” என்று அவர்கள் அடிக்கடி ஆர்வத்தோடு கேட்டனர்.

“ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை… என்னால் முடியவில்லை” என நான் சொல்வேன் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

என்றாலும் இப்படிப்பட்ட பதிலுக்காகக் காத்திராமல் மினி – பாடவேளைகளுக்கு வர விருப்பம் தெரிவித்தனர்.

ஆம், அவர்களுக்கு உயிரோட்டமுள்ள, கச்சிதமான, உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நிரம்பிய இந்தப் பாடவேளைகள் பிடித்துப் போயின. குழந்தைகள் களைப்படைவதில்லை, ஒரே விதமான சலிப்பு இல்லை. அன்றாடம் பாடவேளைகளும் இடைவேளைகளும் கிட்டத்தட்ட இன்றிருந்த மாதிரி இருக்கும்.

செவ்வாய்க்கிழமை

  1. தாய் மொழிப் பாடம் (ஜார்ஜிய மொழி).

ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை: இசைக்கேற்ப நடனமாடுமாறு குழந்தைகளிடம் கூறுகிறேன்.

கணிதப் பாடம்.

பள்ளி இடைவேளை (10 நிமிடங்கள்).

  1. ருஷ்ய மொழிப் பாடம்.

ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை: இசைப் பின்னணியில் ருஷ்ய கிராமியக் கதையைக் குழந்தைகள் கேட்கும்படிச் செய்கிறேன்.

கணிதப் பாடம்.

பெரும் பள்ளி இடைவேளை (30 நிமிடங்கள்): தூய காற்றில் உலாவச் செல்கிறோம்.

  1. ருஷ்ய மொழிப் பாடம்.

ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை: தலையைக் குனிந்து , கண்களை மூடியபடி ஏதாவது நல்ல, அன்பான, மகிழ்ச்சியான விஷயங்களைப் பற்றி யோசிக்குமாறு கூறுகிறேன்.

தாய் மொழிப் பாடம் (ஜார்ஜிய மொழி).

பள்ளி இடைவேளை (10 நிமிடங்கள்).

  1. ஓவிய வகுப்பு (ஓவிய, பாட்டு, இசை, வேலை வகுப்புகளும் உடற்பயிற்சி வகுப்புகளும் முழுமையானவை, – தலா 35 நிமிடங்கள்).

இப்படிப்பட்ட பாட அட்டவணை எனக்குப் பல வேலைகளைக் கூட உண்டாக்குகிறது. பாடவேளைகளின் உள்கட்டமைப்பை நான் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இந்த 600 நொடிகளை நன்கு பிரித்து, நல்ல பயனுள்ள கிரியை ஏற்படும்படியும் தேவையான சக்தி வெளிப்படும்படியும் செய்து,

வாழ்க்கையின் மகிழ்ச்சியும்
புதியவற்றை அறியும் மகிழ்ச்சியும்
கலந்து பழகும் மகிழ்ச்சியும்
வளர்ந்து பெரியவர்களாகும் மகிழ்ச்சியும் –
அவர்களுக்கு கிட்டுவதற்கு இதைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தையால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது அவனுக்குப் பொறுமையில்லை. அவன் இன்றே, இப்போதே மகிழ்ச்சிகரமானவனாய் இருக்க விரும்புகிறான், இருக்க வேண்டும். நான் அக்குழந்தையுடன் கலந்து பழகும் ஒவ்வொரு நொடியும் அவனை மகிழ்ச்சியானவனாக, சந்தோஷமானவனாக, புத்திசாலியாக, அனுபவம் உள்ளவனாக மாற்றாவிடில் நான் என்ன ஆசிரியர்!

இப்படிப்பட்ட மகிழ்ச்சியை எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்தும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் அளிக்க, நான் ஒவ்வொரு பாடவேளை, இடைவேளை குறித்தும் பல மணி நேரங்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆசிரியரின் நொடிப்பொழுதுகள் எனக்கு மிகவும் மதிப்புள்ளவை.

நான் குழந்தைகளை நோக்கி அவசரமாகச் செல்லும் போது பாடவேளைகளுக்கு முன் என்னை யாரும் தடுத்து நிறுத்தி தாமதப்படுத்த வேண்டாம்!

மிக அவசியம் இருந்தால் தவிர யாரும் பாடநேரத்தின் போது கதவைத் தட்ட வேண்டாம்!

நான் குழந்தைகளுடன் இருக்க வேண்டிய நேரத்தில், நான் அவர்களுக்கு அவசியமான போது, யாரும் என்னை அவர்களிடமிருந்து பிரிக்க வேண்டாம்!

எது எப்படியிருந்தாலும் நான் யாருக்கும் அடங்கி நடக்க மாட்டேன்! ஏனெனில், நான் தாயகத்தின் முன், மனிதகுலத்தின் முன், எதிர்காலத்தின் முன் மாபெரும் சேவை செய்து கொண்டிருக்கிறேன், இதில் பெரிதும் ஈடுபட்டுள்ளேன்.

மினி-பாடவேளைகளில் விஷயம் அடங்கியிருக்கவில்லை. ஆசிரியரின் நொடிப்பொழுதுகளுக்கு உள்ள மதிப்பை அறிந்திருக்க வேண்டும், இப்பாடவேளைகள் இதற்கு எனக்கு உதவின. இந்த நொடிப்பொழுதுகளை விழுங்கி ஏப்பம் விடும் வெற்று வார்த்தைகளுடன் நான் எப்படி குழந்தைகளை அணுக முடியும்? வெற்று வார்த்தைகள் என்றால் என்ன தெரியுமா?

“இப்போது நான் சொல்லப் போவதைக் கவனியுங்கள்…. கவனமாகக் கேளுங்கள்…. ஒரு சிறுமி கடையில் மூன்று நோட்டுப் புத்தகங்களை வாங்கினாள். புரிந்ததா? மூன்று நோட்டுப் புத்தகங்கள்… ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் விலையும் இரண்டு கோப்பெக்குகள். அச்சிறுமி மூன்று நோட்டுப் புத்தகங்களுக்கு எவ்வளவு காசு தந்தாள்?… அவசரப்படாதீர்கள். முதலில் யோசியுங்கள், நன்கு யோசியுங்கள். கணக்கைத் திருப்பிச் சொல்லட்டுமா? ஒரு நோட்டுப் புத்தகத்தின் விலை இரண்டு கோப்பெக்குகள் என்றால் மூன்று நோட்டுப் புத்தகங்களின் விலை என்ன? .. புரிந்ததா? சத்தம் போடாதீர்கள். எல்லோரும் யோசியுங்கள். அவசரப்படாதீர்கள்!..”

படிக்க:
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

குழந்தைகள் அவசரப்படவில்லை. ஒரு வேளை முன்னர் அவர்கள் அவசரப்பட்டிருக்கலாம், இன்று பருவ நிலை எப்படிப்பட்டது, மூன்று நோட்டுப் புத்தகங்களின் விலை என்ன என்று சொல்ல முன்னர் முந்திக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இன்று மான் வேகம் ஆமை வேகமாகிவிட்டது. முதலில் இவர்கள் தெளிவற்ற வார்த்தைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். நொடிகள் ஓடிக் கொண்டிருந்தன. இவற்றை இனி பிடிக்கவே முடியாது, இவற்றிலிருந்து ஆசிரியருக்குத் தேவையான சக்தியை இனிப் பெறவே இயலாது. விலங்கியல் பூங்காவில் அடைபட்ட ஒரு மானுக்கு துள்ளி குதித்தோடப் போதிய இடம் இல்லாவிடில் தன் மீது பாய்ந்து தாக்கவல்ல புலியும் அருகில் ஒரு கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறது என்பதற்காக மகிழ்ச்சியடையுமா என்ன?

பழகும் ஒவ்வொரு நொடியும் அவனை மகிழ்ச்சியானவனாக, சந்தோஷமானவனாக, புத்திசாலியாக, அனுபவம் உள்ளவனாக மாற்றாவிடில் நான் என்ன ஆசிரியர்!

பாடவேளைகளின் போது வெற்று வார்த்தைகள் என்றால் என்ன?

இது கல்வி போதிக்கும், வளர்க்கும் அரட்டை, ஆசிரியரின் முட்டாள் தனமாகும். இது பறந்து திரிவதற்கென்றே பிறந்துள்ள குழந்தையின் மூளையையும் உரிமைகளையும் “கட்டிப் போடும்”. இது பறவைகளின் இறக்கைகளைக் கட்டிப் போடும் சிலந்திவலை, மான்களின் கால்களில் இடப்பட்ட விலங்கு. இது புதியவற்றை அறியும் ஆர்வத்தை அணைக்கும், கல்வி மகிழ்ச்சி எனும் தொடர் போக்கைத் தடுத்து நிறுத்தும். “நேரம் போதவில்லை” என்று சொல்லும் ஒரு ஆசிரியர் அதே பாடவேளையில் வெற்றுச் சொற்களால் எவ்வளவு நேரம் வீணாயிற்று என்றே யோசிப்பதில்லை .

எனது மினி- பாடவேளைகள் இதைத்தான் (இவற்றிற்கு வேறு நோக்கங்களும் இருந்த போதிலும்) எனக்குச் சொல்லித் தந்தன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 25

டோக்ளியாட்டி

னி பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு கட்சி அமைப்பாக அல்லாமல், நேரடியாக இராணுவத்துடன் இணைந்த ஓர் அரசு அமைப்பாகவே இருந்து வந்தது. இது கிட்டத்தட்ட முற்றிலும் சுய விருப்ப அடிப்படையில் அமைந்ததாகவே இருந்தது. சேவை காலக் குறைப்பு, சில விசேடப் படைப் பிரிவுகளுடன் பணியாற்றுதல், அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளில் சேவை செய்தல் போன்ற சில கட்டுப்பாடுகள் இருந்தன. இவை அதன் சுயவிருப்பத் தன்மையை ஓரளவுக்கு மட்டுப்படுத்திற்று எனலாம்.

இதன் பின்னர் இந்தப் பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்பு ஒரு அரசாங்க சட்டத்தின் மூலம் ஒரு கட்டாய அமைப்பாக மாற்றப்பட்டு, பாசிஸ்டுக் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது; கட்சி இந்த அமைப்பின் மூலம் இளைஞர்கள் மீது நேரடிச் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்தை அமைப்பதன் மூலம் பாசிசம் பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளைக் குலைக்கவில்லை; அவற்றை ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே செய்தது. ஏனென்றால் இளைஞர் பிரச்சினை கடினமான பிரச்சினை என்பதும், ஒரே ஒரு நிறுவனத்தைவிட இரண்டு நிறுவனங்களைக் கொண்டு அப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வுகாண முடியும் என்பதும் பாசிசத்துக்குத் தெரியும். பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளைக் கொண்டு பெரும் பணிகளைச் சாதிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது. உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அடிக்கடி ஊசலாட்டங்களைக் கண்டுவரும் இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கும் இது பொருந்தும். பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகள் இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கு உதவ வேண்டும்; அதேபோன்று இளம் பாசிஸ்டுகள் அமைப்பு பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இந்த அமைப்புகள் குறித்த ஒரு முக்கியமான அம்சத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம். பாசிஸ்டுக் கட்சியில் மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த அமைப்புகளுக்குத் தலைமை ஏற்கிறார்கள். இது சம்பந்தமாக சில சுவையான விவரங்களைக் கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும். இந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவரீதியிலும் அரசியல்ரீதியிலும் வழிகாட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. ஏறத்தாழ 5 இலட்சம் இளம் பாசிஸ்டுகள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படிப் பார்த்தால் பத்து இளைஞர்களுக்கு ஒரு வயது வந்த தலைவர் வீதம் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. பல சந்தர்ப்பங்களில் இந்தத் தலைவர்கள் இராணுவத்தினராக இருப்பதைக் காணலாம். இந்தப் பணிக்காக பாசிஸ்டுகளுக்கு அடிக்கடி பணம் தரப்படுகிறது. பாசிஸ்டுக் கட்சியின் செயலூக்கமிக்க இந்தக் கேந்திரப் பகுதியினர் ஆட்சி முறை முழுவதையும் இணைக்கும் இழைமமாக அமைந்துள்ளார்கள்.

பாசிஸ்டுக் கட்சிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையேயான மற்றொரு வகையான பிணைப்பு ஸ்தாபன ரீதியான பிணைப்பாகும்; இளைஞர் அமைப்புகளுக்கு அதிகாரவர்க்கத்தின் வழிகாட்டுதலிலிருந்து இது தோன்றுகிறது. அண்மைக் காலம் வரை இளம் பாசிஸ்டுகள் மாகாண செயலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர். இளம் பாசிஸ்டுகளுக்கு மாகாண செயலாளர்கள் வழிகாட்ட வேண்டும் என்று இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலிருந்து கீழே வரை இந்த வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கட்சி செயலாளர்தான் இளம் பாசிஸ்டுகளின் படைத்தலைவர். கட்சியின் உடனடி வழிகாட்டுதல் இந்த விதமாக செயல்படுத்தப்படுகிறது.

இளம் பாசிஸ்டுகள் பாசிசத்தின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை, மிகவும் தீர்மானமான அம்சம் ஒன்றைப் பிரதிபலிக்கின்றனர் என்பதை பாசிஸ்டுகள் இதன் மூலம் ஒப்புக் கொள்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் விஷயத்துக்கு வருவதற்கு முன்னர் பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியம். இந்தக் குழுக்களில் 60 ஆயிரம் இளம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குட்டி பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை இல்லா 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட அரசு ஊழியர்களின் பாசிஸ்டு அமைப்பு, 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட ரயில்வே ஊழியர்களின் பாசிஸ்டு அமைப்பு போன்ற பல்வேறு பாசிஸ்டு நிறுவனங்களைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். ஆனால் பாசிச சர்வாதிகாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்த நிறுவனங்கள் அனைத்திலும் மிக முக்கியமானவை பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களே ஆகும்.

இதர நிறுவனங்களைப் போலன்றி, பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களில் ஆராய்ச்சித்திறன் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பாசிஸ்டு சர்வாதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்; அவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் இதர இடங்களில் விவாதிக்கப்படுவதில்லை. பாசிஸ்டு அமைப்புகளிலும் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறுவதில்லை. ஆனால் பல்கலைக் கழக மாணவர்கள் மட்டும் இவ்விவாதத்தை நடத்துகிறார்கள். பாசிசம் இவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதேற்பட்டது; லிட்டோரியலி தெல்லா கல்சுரா 3 என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது இந்த ஆட்சியின் மிகவும் சுவையான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது குறித்த விவரங்களைப் பத்திரிகைகளில் படித்துப் பாருங்கள். அவை அறிவொளி வீசுபவையாக இருக்கக் காணலாம். இந்த விவரங்கள் எல்லாம் தேர்ந்த, சிறந்த, அனுபவ மிக்க ஆசிரியர்களால் எழுதப்படுபவையாகும்.

படிக்க:
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !

எனினும் அப்படியும் எவ்வாறு ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன என்பதைப் பார்க்கலாம். வர்க்க ஒத்துழைப்பின் இயல்பையும், முதலாளிகளுக்கு இருக்கும் அதே உரிமைகள் தொழிலாளிகளுக்கும் இருக்குமாயின் அப்போது ஏற்படக்கூடிய வர்க்க ஒத்துழைப்பின் இயல்பையும் பற்றி மாணவர்கள் விவாதிக்கிறார்கள். சர்வாதிகாரத்தின் அடித்தளங்களுக்கு வேட்டு வைக்கக்கூடிய, அபாயத்தை உண்டு பண்ணக் கூடிய பிரச்சினைகள் மேலெழும்புகின்றன. முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல முடியுமா, முடியாதா என்ற பிரச்சினை அடிக்கடி எழுகிறது. இத்தாலியப் பொருளாதாரத்தின் இயல்பும் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதங்கள் பாசிசத்தின் வரையறைக்குட்பட்டு நடைபெறுகின்றன என்பது உண்மையே. இருப்பினும் இந்தக் குழுக்கள் பாசிசம் நிர்ணயித்துள்ள வரம்பையும் கடந்து செல்ல ஆரம்பித்திருக்கின்றன என்பதையும், பாசிசத்தின் சித்தாந்த கட்டுமானத்தைத் தகர்க்கக் கூடிய திசைவழியில் அவர்களது விமரிசனம் செல்கிறது என்பதையும் நீங்கள் காணலாம்,

நமது பணியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது இது நமது கவனத்தைப் பெரிதும் கவரக் கூடிய பிரச்சினையாகும். இளம் பாசிஸ்டுகள் மத்தியில் போன்றே, இவர்கள் மத்தியிலும் நாம் சித்தாந்த விவாதத்தைத் தொடங்குவதற்கும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் சித்தாந்தத்தைச் சிதைப்பதற்கும் பணியாற்றுவதற்கு நமக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

3. லிட்டோரியலி தெல்லா கல்சுரா : பல்கலைக் கழகத்தின் கலாச்சார, கலைப் போட்டிகள் ஆண்டுதோறும் 1934 -லிருந்து 1940 வரை தேசிய அளவில் நடைபெற்றன. கவிதைகளிலிருந்து வெளி நாட்டு கொள்கைகள் வரை பல்வேறு பொருள்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டி-விவாதங்கள் பல வாலிப பாசிச – எதிர்ப்பு இளைஞர்களை தோற்றுவிக்கும் களமாக ஆயிற்று.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை

0

.எஸ்..எல் பயங்கரவாதிகளை முறியடித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பழம்பெரும் மொசூல் நகரின் நிலை

மொசூல் (அல் – மொசூல்), ஈராக்கின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்று. தலைநகர் பாக்தாக்கிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டைக்ரிஸ் (Tigris) ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெசொபொதாமியாவின் (Mesopotamia) ஒருங்கிணைந்த பகுதியான இது அஸ்சிரியன் இன மக்களுக்கு (Assyrians) வரலாற்றுரீதியில் இன்றியமையாத இடம்.

எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும் மேற்கு ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஈராக்கின் மீதான அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்புடன் தொடங்குகிறது, மொசூல் நகரின் இன்றைய சோக வரலாறு. ஈராக் உடனான போரில் அமெரிக்கா மண்ணைக் கவ்வினாலும் அது விதைத்த அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் இன்ன பிற பயங்கரவாத அமைப்புகளின் தோற்றங்களுடனும்; முடிவுறாத சோகத்துடனும் மொசூல் தன்னை புதைத்துக்கொண்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் (Islamic State of Iraq and the Levant) பயங்கரவாதிகளை முறியடித்து மொசூலை மீட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் 3,00,000 மக்கள் நகருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக நார்வே அகதிகள் மன்றம் (Norwegian Refugee Council) தெரிவிக்கிறது.

மோதலின் போது நகரிலுள்ள 1,38,000 வீடுகள் சிதைக்கப்பட்டன. மேற்கு மொசூலில் மட்டும் 53,000 வீடுகளுக்கு மேல் இன்னும் தரைமட்டமாகிக் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லாததால் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்தே வாழ்கின்றன. அவர்களின் 4 விழுக்காட்டினர் மட்டுமே இந்த ஆண்டில் நகருக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக நார்வே அகதிகள் மன்றம் கூறுகிறது.

படிக்க:
♦ பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை
♦ நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !

நகருக்கு திரும்ப முடிவு செய்தவர்கள் வீடுகளை மீண்டும் தாங்களாகவே கட்டியெழுப்ப வேண்டும். வெடிக்காத குண்டுகள் மற்றும் அவசர சட்டங்களின் மிச்சசொச்ச அச்சங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நகருக்கு திரும்ப வந்தவர்கள் உடைந்த வீடுகளிலும், நொறுங்கிய கட்டிடங்களின் அடித்தளங்களிலும் எவ்வித வசதியும் இல்லாமலே வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சமூக மக்களின் உதவி மற்றும் ஆதரவை பெரும்பாலும் நம்பியிருக்கும் அதே வேளையில் அரசின் இழப்பீட்டையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பழைய நகரமான மொசூலின் இடிபாடுகள் வழியாக ஒருவர் நடந்து செல்கிறார்.

லிகாவும் அவரது குடும்பத்தினரும் பழைய மொசூல் நகரின் ஒரு அடித்தளத்தில் வசித்து வருகின்றனர். “பணம் இல்லாதவர்கள் வேறு வழியில்லை என்பதால் திரும்ப வருகிறார்கள். நாங்கள் எப்படி வாழ்கிறோமோ அப்படியே அவர்களும் வாழ்வார்கள்” என்று அவர் கூறினார்.

“எனக்கு 5 குழந்தைகள். நாங்கள் அடித்தளத்தில் வாழ்கிறோம். நாங்கள் இங்கேயே சாப்பிடுகிறோம், குடிக்கிறோம், உறங்குகிறோம்” என்கிறார் லிகா.

அடித்தளத்தின் நுழைவாயிலில் லிகாவின் கணவர் அவர்களின் இரண்டு குழந்தைகளுடன் காணப்படுகிறார். “இங்கே எந்த வசதிகளும் இல்லாததால் யாரும் திரும்ப வரமாட்டார்கள். இப்பழைய நகரத்தில் எங்களுக்கென்று வசதிகளும் எதுவும் இல்லை. அருகில் மருத்துவமனை எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றாலும் மருந்து இல்லை. வெளியில் இருந்துதான் வாங்க வேண்டும். உங்களிடம் பணம் இல்லையென்றால் நீங்கள் எப்படி வாழ முடியும்? ” லிகா வினவுகிறார்.

ஹுசைன் அப்பாஸ், சிதைக்கப்பட்ட தன்னுடைய வீட்டிலிருந்து அல்-நூரி பள்ளிவாசலைப் (al-Nuri Mosque) பார்க்கிறார். பழைய நகரமான மொசூலின் மையத்தில் அப்பாஸின் வீடு உள்ளது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தை மீட்கும் நடவடிக்கைகளின் போது அவரது வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது. இது ஐ.எஸ்.ஐ.எல்-ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இன்னும் அது சேதமடைந்தே காணப்படுகின்றது. வெடிக்காத பீரங்கி குண்டுகள் சுவர்களில் புள்ளிகளாக இருக்கின்றன.

மொசூலைச் சேர்ந்த 41 வயதான முகமது ஹசன் யூனிஸ் தனது குடும்பத்தினருடன் நகரத்தில் உள்ள ஹமாம் அல்-அலீல் இடம்பெயர்ந்தோர் முகாமில் (Hamam al-Alil IDP camp) மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவருக்கு ஆறு குழந்தைகள். மூத்த குழந்தை இதய நோயால் அவதிப்படுகிறது. இளைய குழந்தைக்கோ மன அழுத்தம் உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கும் நிபுணர்களின் சிறப்பு சிகிச்சை உடனடியாக தேவை.

“நான் மொசூலுக்குத் திரும்ப விரும்புகிறேன் ஆனால் வாடகை மிக அதிகம். கூடுதலாக, மிகக் குறைந்த வேலை வாய்ப்புகளே உள்ளதால் அங்கு வேலை தேடுவது மிகவும் கடினம்” என்று யூனிஸ் கூறுகிறார்.

மொசூலில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் செல்ல யூனிஸ் விரும்புகிறார். ஆனால் அவர் தனது வீடு, வேலை மற்றும் அவரது சுற்றுப்புறத்தை இழந்து தவிக்கிறார்.

பழைய நகரமான மொசூலில் ஒருவர் தனது மிதிவண்டியை ஓட்டிச் செல்கிறார். மொசூலை சேர்ந்த 3,00,000-க்கும் அதிகமானோர் இன்னும் திரும்பிச் செல்ல வீடுகள் இல்லாமல் இடம்பெயர்ந்துள்ளனர்.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

ஜினி பட ரிலீஸ், மோடியின் செல்ஃபி விளம்பரங்களெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக காஞ்சிபுரம் அத்திவரதர் மாறி விட்டார். புதுப்படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன, மோடி இன்று போட்டிருக்கும் கோட்டு சூட்டின் விலை என்ன என்ற சேதிகளுக்கு போட்டியாக அத்தி வரதர் இன்று என்ன கலரில் பட்டு உடுத்தினார் என்பது காஞ்சிபுரத்தை தாண்டி பேசப்படும் விசயமாகி விட்டது.

இன்று கத்திரிப்பூ பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக தினமலர் எழுதுகிறது. அந்தப் பட்டுப்புடவையின் விலை குறைந்தது ரூ. 50,000-த்திற்கு மேல் என்று எழுதுகின்றன ஊடகங்கள். அந்தக் காலத்து மாதுரி தீஷ்ஷித் போன்ற ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு ஒரு டசன் ஆடைகளை மாற்றுவது போல அத்தி வரதர் தினமும் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார்.

தெப்பக் குளத்தில் மூழ்கியிருந்து விட்டு நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து தரிசனம் கொடுப்பதாக ஒரு புரட்டை பார்ப்பன பீடங்கள் அவிழ்த்து விட்டன. வரலாற்றின்படி இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாத இந்துத்துவக் கூடாரமும், பார்ப்பன கிச்சன் கேபினட்டும் இணைந்து இந்த அத்தி வரதர் கூத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

விவிஐபி டோக்கனில் அத்தி வரதரை தரிசித்த வரிச்சூர் செல்வம்.

இந்தப் புரட்டுக்கு அடிமை எடப்பாடி அரசு ஓகே சொல்லி, பிறகு ஊடகங்கள் அதுவும் பார்ப்பன ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அத்தி வரதரைப் பற்றி இத்துப் போன கதைகளை பலவற்றை வெளியிட்டு வருகின்றன. பிறகு தினமும் இலட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்டன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் விடுமுறை போடும் ‘தியாகத்தை’  கூட செய்யாமல் சனி, ஞாயிறு விடுமுறை அன்று காஞ்சிபுரத்தை மொய்க்கின்றன. வார நாட்களில் கூட்டமில்லை. இது போக வரிச்சூர் செல்வம் போன்ற ரவுடி பக்தர்கள் விவிஐபி டோக்கனில் அத்தி வரதரை தரிசித்து செல்கின்றனர்.

அத்தி வரதரை ஒரு முறை தரிசித்தால் சொர்க்கம், இரு முறை தரிசித்தால் மறு பிறப்பில்லை, மூன்றாம் முறை சந்தித்தால் விண்ணுலகில் தேவராகலாம் என்று மக்களிடையே கதைகளை எழுப்பி கூட்டம் சேர்க்க முயல்கின்றனர்.

பொதுவில் வியாபாரத்தில் காய்ந்து போயிருந்த காஞ்சிபுரம் இந்த அத்தி வரதர் வைபவத்தில் திடீரென விசுவரூபமெடுத்திருக்கிறது. சாதா, ஸ்பெஷல் வியாபாரிகள் அனைவரும் பத்து மடங்கு வணிகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களது பங்கிற்கு அத்தி வரதர் நினைத்தால் அள்ளிக் கொடுப்பார் என மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர், ஆளுநர் போன்றோர் வந்து சென்ற நிலையில் மோடி வரப்போகிறாராம். அத்தி வரதரின் தர்பார் மொத்தம் 48 நாட்கள் என்றால் அதில் 24 நாட்கள் சயன கோலம், 24 நாட்கள் நிற்கும் கோலமாம். மோடி இந்த இரண்டு கோலத்தையும் பார்க்க போகிறாராம். நள்ளிரவில் அத்தி வரதரை தூக்கி நிறுத்தும் போது பார்க்கப் போகிறாரா தெரியவில்லை.

இன்றைய கேள்வி:

அத்தி வரதரைப் பற்ற வைத்தது யார்?

♣ பார்ப்பன பீடங்கள்
♣ ஊடகங்கள்
♣ அரசு
♣ பக்தர்கள்

(பதில்களில் இரண்டு தெரிவுகளை தெரிவு செய்யலாம்)

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூப்-ல் வாக்களிக்க :

அத்தி வரதரைப் பற்ற வைத்தது யார் ?

மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி

சட்டமன்றம் முற்றுகை ! கருத்துரிமையை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிரான போராட்டம் !

மிழகத்தில் இன்று அறிவிக்கப்படாத போலீஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. எது ஜனநாயகம்? எது கருத்துச் சுதந்திரம் என்பதை உளவுப் பிரிவு, கியூ பிரிவு போலீசுதான் முடிவு செய்கிறது. ஜனநாயக உரிமை பறிப்பு என்பதும், சட்டவிரோத போலீசு ஆட்சி என்பதும் தமிழகத்தில் நிறுவனமயமாகிவிட்டது. இதற்கு நீதிமன்றத்திலும் தீர்வு இல்லை, என்ற நிலைதான் நீடிக்கிறது.

போலீசைக் கேள்வி கேட்காத நீதிமன்றம், போராடுவோரின் பின்னணியில் யார் இருக்கிறார் என்று கேட்கிறது. இந்த அரசை பாசிசமயமாக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத்தான் நாம் முதலாவதாக கேட்க வேண்டி இருக்கிறது.

அந்த வகையில் போலீசு ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசைக் கண்டித்து 17.7.2019 அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் வெற்றிவேல் செழியன் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மேலும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பார்வேந்தன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் செந்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் சீராளன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் ஆகியோர் உரையாற்றினர்.

சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் :

தோழர் மருதையன் உரை :

தோழர் இராஜு உரை :

இறுதியில் உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜூ “இப்போராட்டம் ஒரு எச்சரிக்கை, இனியும் கருத்துரிமையை நசுக்கினால் போராடும் உரிமையை ஒடுக்கினால் சட்ட மன்ற முறுகைப் போராட்டம் இங்கிருந்து தொடங்காது, சட்டமன்றத்திலேயே தொடங்கும்” என்று எச்சரித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் “என் அப்பா மீது 20 பொய் வழக்குகள்! என் மீது எப்போது வழக்கு?”என்பது போன்ற வாசகங்களை ஏந்திச்சென்றது ஊடகவியலாளர்களையும் மக்களையும் சிந்திக்க வைக்கும் வித்த்தில் இருந்தது. அமைப்புத் தலைவர்களின் இரண்டு மணி நேர உரைக்குப் பின்னர் பேரணியாக சென்றவர்களை போலீசு தடுத்து நிறுத்திக் கைது செய்தது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த முற்றுகைப் போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக இருந்தது.

படிக்க:
♦ சட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் ! | Live Streaming
♦ மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் சிந்தாதரிப்பேட்டை சமூகநல கூடத்தில் வைத்திருந்தது போலீசு. அங்கும் தோழர்கள் உரை, பாடல் என உற்சாகத்துடன் காணப்பட்டனர். பின்னர் அவர்கள் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 99623 66321

பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 13

நீர்மேல் குமிழிபோல் உருவாக்கப் பெற்ற இந்த ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற குமிழியை ‘மனித உற்பத்தி நூல்’ வல்லவர்கள் தங்கள் ஆராய்ச்சியால் சிதைத்துவிட்டார்கள். எப்படியென்றால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமுள்ள மக்கள் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்களே என்றும், ஆரியர் ஒரு சிறு வகுப்பார்தான் என்றும் மனித உற்பத்தி ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

இதனால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியிருந்த மாபெரும் ஆரிய வகுப்பினர் ஒரு சிறிய கூட்டமாகக் குறைந்து விட்டார்கள். ஆரியரின் பூர்வீக நாட்டைப் பற்றி பாஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் பால்டிக் கடலோரம் என்றும், இத்தாலி ஆசிரியர் செர்ஜி ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் ஐரோப்பா மீது படையெடுக்கும் போது காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் மனித உற்பத்தி சாஸ்திர வல்லுநரான டாக்டர் ஹாடன், ஐரோப்பிய மக்களின் பூர்வ வரலாற்றைப் பற்றி 1991-ல் எழுதிய நூலில் இந்த “ஆரியர்’’ என்ற பேச்சையே எடுக்கவில்லை. எனவே ஐரோப்பாவைப் பொறுத்தவரை ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற கற்பனை புதைக்கப்பட்டு விட்டதெனலாம்.

ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுப்பினை இல்லாத எண்ணிறந்த வகுப்புகளைக் கொண்ட தற்கால இந்து சமூகத்தில் உயர்ந்த ஜாதிகள் எனப்படுவோர் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆரியர் படையெடுத்து வந்து இந்திய மக்களை நாகரிகப்படுத்தினார்களென்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்து கூறிய போது, அது தங்களுக்குப் பெருமை தருவதென்று இந்த மேல் ஜாதிக்காரர்கள் அந்தக் கற்பனையை உற்சாகத்துடன் ஆதரிக்க முற்பட்டனர். இப்படித் தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்கிற இந்த மேல் வகுப்பினர் தங்கள் நரம்புகளில் சாதாரணச் சிவப்பு ரத்தமல்ல, நீல நிறமான ஆரிய ரத்தமே ஓடுகிறதென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா என்பதைத் தற்கால முறைப்படி ஆராய்ச்சி செய்யலாமே? என்றால் மற்றெல்லாரையும் விட இந்த ‘மேல் ஜாதிக்காரர்கள்’தான் அவ்வித ஆராய்ச்சியைப் பலமாய் ஆட்சேபிக்கிறார்கள்.

வேதங்களிலே, ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வந்ததாக ஒரு குறிப்பேனும் காணப்படவில்லை. மேலும் தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களிலும் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளில் வாழ்ந்திருந்தனர். இரதங்கள், குதிரைகள், ஆடு, மாடுகள் முதலியன அவர்களிடம் ஏராளமாயிருந்தன. ஆரியர்கள் அதைப்பற்றிப் பொறாமைப்பட்டு, திராவிட நகரங்களைக் கொள்ளையடிக்க நினைத்ததுண்டு என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திராவிட நாட்டு நிலையை உணராதாருக்கு 1940-ல் திருப்பதியில் நடைபெற்ற 10-வது அகில இந்திய கீழ்நாட்டுக் கலை மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, திருவாளர் T.A. இராமலிங்க செட்டியார் அவர்களின் சொற்பொழிவு விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் விரிவுரையைக் கீழே பிரசுரிக்கின்றோம்.

“ஜெர்மனியில் இன்று ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், உலகத்துக்கே அவர்கள் நாகரிகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் சொல்லி வருவது யாவர்க்கும் தெரியும். இதனால் மிகவும் பயங்கர முடிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை .

இந்து சமவெளிப் பிரதேசத்திலும், மொஹஞ்சதாரோ பிரதேசத்திலும் வெட்டி எடுக்கப்பட்ட பண்டைக்காலத்துச் சின்னங்களிலிருந்து, ஆரிய நாகரிகத்திற்கு முன் ஒரு நாகரிகமிருப்பது நன்கு விளங்கும்.

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடல் ஓரமாகவும் வட இந்தியாவிலும்தான் பண்டைய நாளையில் சிறந்த நாகரிகமடைந்த மக்களிருந்து வந்தனர் என்று சொல்லப்படுமானால், இந்தியாவில் ஆரியர்கள் வரவால் நாகரிகம் புகுத்தப்பட்டதென்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமோ? என்பது யோசிக்க வேண்டியதாகும்.

நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்குத் திக்கை நோக்கியோ அல்லது அதற்கு நேர் எதிராகவோ பரவியிருக்கக்கூடும்.

படிக்க:
தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !

பழைய கால நிர்ணய நூல் பிரகாரம் பார்த்தால், ஆரியர்கள் இந்தியாவுக்கு மிகப் பிந்திய காலத்திலே வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

தென்னிந்தியாவின் பழக்க வழக்கங்களை நம்பினால் தெற்கே ஓர் உபகண்டமிருந்ததாகவும், அதன் பெரும் பாகத்தைக் கடல் கொண்டுவிட்டதாகவும். அப்பாகங்களில் உலகிலே தலை சிறந்ததாகக் கருதப்படும் நாகரிகம் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

தமிழ்க் கலைகள், மக்கள் சுதந்திரத்தோடு இருந்து வந்ததாகவும், மக்கள் எத்தகைய துன்பத்தையும் கண்டறியாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பழைய பெருமையைக் குறித்துப் பேசுவதில் பலனில்லை என்று நாம் கருதுகிறோம்.

நமது முன்னோர்கள் கலையாச்சாரத்தைக் குறித்தோ, மொழியைக் குறித்தோ சிறிதும் கவனம் செலுத்தியதில்லை தெற்கே எங்கும், பழைய நாகரிகத்தைக் கண்டறியக் கூடிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆரியர்கள்தான் குரு, சமஸ்கிருத மொழிதான் உயர்ந்த மொழி என்று கொண்டதால்தான், மற்றவை மூலமாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்பது அடியோடு புறக்கணிக்கப்பட்டது.

T.A. இராமலிங்க செட்டியார்.

இதைக் குறித்து ஏதோ, அங்கொருவர் இங்கொருவர் ஆட்சேபிக்கிறார்களேயல்லாது, சமீப காலம் வரை யாரும் பலமாகத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவேயில்லை. இந்தியாவில் உள்ள பலதிறப்பட்ட ஜாதிகள் கலந்து விட்டனவென்றாலும், ஜாதியில் உள்ள உயர்வு தாழ்வு ஒரு சிலரைத் தாங்கள்தான் சுத்தமான ஆரிய வம்சத்தினர் என்றும், சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழியென்றும் மற்ற மொழிக்கும், கலைக்கும், நாகரீகத்திற்கும் தாங்கள்தான் பாதுகாப்பாளர் என்றும் சொல்லும்படி செய்து வருகின்றது.

இந்த நிலையை இப்படியே விட்டுக்கொண்டு போனால், இதனால் வரும் பலன் மிக்க பயங்கரமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான், சமஸ்கிருத மொழியாளர்கள் (ஆரியர்கள்) நிர்வாகிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வரமுடிந்தது; அவர்களால், தங்கள் ஸ்மிருதியைப் புகுத்த முடிந்தது. அதன் பின்தான் ஸ்மிருதியில் கண்டதே சட்டமாயிற்று.

இதனால் நான் ஏதாவது துவேஷம் கற்பிப்பதாகக் கொள்ளலாகாது.

இந்நாட்டின் பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள் என்னவென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் தாங்கள் புகுத்தும் முறைகள் சிறந்தவை என்று நம்பி விடுவதும் உண்டு.

ஸ்மிருதி புகுத்தப்பட்டதினால் வந்த பலனை அறிய ஒரே ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறேன். அதாவது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்குச் சிரார்த்தம் என்பதே என்ன என்று தெரியாத மக்களுக்குக் காட்டுப் பிண்டம் (சிரார்த்தத்தில் ஒரு வகைச் சடங்கு) எடுப்பதை ஆதாரமாக வைத்து நீதி வழங்கப்படுகிறது. இன்னும் வினோதம் என்னவென்றால், ஒரு பார்ப்பனன் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத் தக்கதென்றும், ஒரு பார்ப்பனரல்லாதான் ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத்தகாதென்றும் கூறுவதாகும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் !

சத்யபாமா பல்கலைக் கழக  – வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியங்கள் மற்றும் ஊழியர்கள் சங்க – ஊதிய உயர்வு போராட்டம் வெல்லட்டும் !

சென்னை செம்மஞ்சேரி OMR சாலையில் இயங்கி வரும் ‘காலஞ்சென்ற முன்னாள் மந்திரி’ ‘திருவாளர்’ ஜேப்பியார் அவர்களின் சுயநிதி பொறியியல் கல்லூரி குழுமத்தின் முதன்மை நிறுவனமான சத்யபாமா பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து, உணவகம், அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி என பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது.

சத்யபாமா பல்கலைக்கழகம்.

பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கு ரூபாய் 200-க்கும் குறைவாகவே உயர்வு போடப்பட்டுள்ளது. மிகச் சொற்பமான சீனியர்களுக்கு மட்டுமே ரூபாய் 500-வரை ஊதிய உயர்வு போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதே நடைமுறையிலேயே ஊதிய உயர்வைக் கொடுத்து வருகிறது நிர்வாகம்.

2018-ம் ஆண்டு நிர்வாகம் இதே போன்ற ஊதிய உயர்வை வழங்கியதை தொழிலாளர் தரப்பு நிர்வாகத்தின் சேர்மேனிடம் நேரில் பார்த்து முறையிட்டது. அதன் காரணமாக இப்பிரச்சினையில் முன்னின்ற முன்னணி தொழிலாளிகளை பல்வேறு பொய்க்குற்றச் சாட்டுகளின் பேரில் ‘ஒழுங்கு நடவடிக்கை’ என்ற பெயரில் வெளியேற்றி பழிவாங்கியது.

அதுமட்டுமின்றி, பொய்க்குற்றச்சாட்டு சுமத்த முடியாத சங்க முன்னணியாளர்களை இந்தியாவின் கடை கோடி வட மாநிலங்களில் உள்ள காசி-வாரணாசி, அசாம் போன்ற இடங்களுக்கு தற்காலிக பணிமாறுதல் செய்தது. அதுவும் அவர்கள் பணிமுடித்து வீடு புறப்படும் தருனத்தில், “நீங்கள் நாளைமுதல் வாரணாசிக்கு அல்லது அசாமுக்கு போக வேண்டும்” என ரயில் டிக்கட்டுடன் பணிமாற்ற ஆணையையும் வழங்கி பழிவாங்கியுள்ளது நிர்வாகம்.

படிக்க:
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
♦ சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !

மேற்படி செயல் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக உரிமையைப் பற்றி பேசும் தொழிலாளர் அனைவரையும் ஒழித்துக்கட்டியுள்ளது நிர்வாகம். மேற்கண்ட வடிவத்தில் மட்டும் இதுவரை 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வழக்குகள் போட்டு அலைகழித்திருக்கிறது நிர்வாகம். போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ‘மாண்புமிகு’ உயர் நீதிமன்றதில் கிடப்பில் கிடக்கின்றது.

10 ஆண்டுக்கு முன் தொழிற்சங்கத்தின் மூலம் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு தொழிற்தாவாவும் இன்றுவரை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தீர்க்கப்படாதவண்ணம் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம். கடந்த 3 ஆண்டுகளாக ஏரிவரும் விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, தொழிலாளர் குடும்பங்கள் வாழ உகந்த ஊதிய உயர்வை அளிக்காததுடன், இது பற்றி பேசும் தொழிலாளரையும் தனது பழிவாங்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஒழித்துக்கட்டி வருகின்றது.

சத்தியபாமா நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளிகள் 10 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் ஒரு தொழிலாளி என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டதுடன் எந்தவித அடிப்படை உரிமையும் இல்லாமல் கொத்தடிமையைப் போல வேலை வாங்குவதும்; உரிமைக் கேட்டால் அடுத்த நாள் கேட்டிலேயே தடுத்து “வேலை இல்லையென நிர்கதியாக துரத்தப்பட்டது”; என தொழிலாளிகள் அலைகழிக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் வந்தனர்.

அதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உதவியுடன் எதிர்கொண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக கல்வி நிறுவனத்தில் சங்கம் துவங்க வழிகோலும் விதம், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கி பதிவு செய்தனர் தொழிலாளிகள்.

உரிமை கோரியதற்காக 20-க்கும் மேற்பட்ட முன்னணித் தொழிலாளிகளை தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றிய நிர்வாகத்தின் செயலுக்கெதிரான வழக்குகள் சிலவற்றில் வெற்றி பெற்றும் வேலை தராமல் மேல்முறையீடு என்ற பெயரில் வழக்குகளை இழுத்தடித்து வருகின்றது நிர்வாகம்.

நிர்வாகத்தின் அனைத்து பழி வாங்கும் நடவடிக்கைக்கும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடி பணி நிரந்தர உரிமையை நிலை நாட்டியது சங்கம். இதன் விளைவாக கல்வி நிறுவனங்கள் “சேவை நிறுவனம்” என ஏமாற்றிவந்த கல்வி முதலாளிகளின் பல கல்வி நிறுவனங்களில் சங்கம் கட்டப்பட்டதுடன் பணி நிரந்தரமும்; சில சட்டப் பூர்வ அங்கீகாரமும் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி வர்க்கம் பெற வழி அமைக்கப்பட்டது.

அடுத்தபடியாக மாதாந்திர சம்பளத்திற்கான ரசீது வழங்க 6-ஆண்டுகாலம் சட்டப் போராட்டம் நடத்தி அதில் வென்றது சங்கம். பிறகு சம்பள ரசீதில் தொழிலாளிக்கு வழங்கும் விடுப்பைப் ( EL, CL ) பதிவு செய்யவைக்கப் போராடியதின் அடிப்படையில் தற்போது வெறும் CL –விடுப்பை மட்டும் பதிவு செய்துள்ள நிர்வாகம். வருடத்திற்கு 180 நாட்கள் மட்டுமே கல்லூரி நடப்பதால் EL – வழங்க இயலாது என தவிர்த்து வருகின்றது.

தொழிலாளர் தரப்பு எமது ஒரு நாள் வேலை நேரம் என்பது காலை 6.00 மணி முதல் இரவு 7.00மணிவரை என்பதால் அதற்கு OT – யோ விடுப்போ வழங்காத நிலையில். எமது வேலை என்பது சுமார் 270 நாட்களுக்கும் மேல் என்பதால்,  EL  வழங்க வேண்டும் என்பதற்கான தொழிற்தாவாவை தொழிலாளர் ஆய்வாளர் மூலம் நடத்தப்பட்டு வழங்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டும், அதனை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றது நிர்வாகம்.

இதே போல் தொழிலாளிகளுக்கான ஓய்வறையை ஒதுக்காமல் பேருந்திலும், கட்டிட நிழல்களிலும் அலைய விட்டுவந்த நிர்வாகம். தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக இப்போது டிரான்ஸ்போர்ட் தொழிலாளிக்கு மட்டும் ஓய்வறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

அந்த வகையில் தனது சோரம் போகாத தொழிலாளிவர்க்க உணர்வால் எந்தவித இழப்பிற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடிவரும் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியங்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தை ஒழித்துக்கட்ட நினைக்கிறது நிர்வாகம்.

பெரும்பான்மை தொழிலாளர்களை வேலை பயம் ஏற்படுதுவதின் மூலம் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாத நிலையில், நிர்வாகமே தொழிலாளர் நல ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர்கள் மூலம், தொழில்முறை தரகு வேலை மூலம் ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி; தொழிலாளிகளை மிரட்டி அதன் உறுப்பினர்களாக சித்தரித்து வருகின்றது.

இதில் தொழிலாளர் இருக்க வேண்டும் என்பதற்காக கல்விப் படியென ஆண்டிற்கு ரூபாய் 2500 வரையும், பண்டிகைப் பணம் என்ற பெயரில் ரூபாய் 1000, 500 எனவும் முறையற்ற கணக்குகள் மூலம் அந்த தொழிலாளிகளுக்கு மட்டும் வழங்கி, அதற்கான கையொப்பம் பெற்று, அதையே சங்கத்தின் பொதுக்குழுவாக சோடித்து நமது சங்கத்திற்கு எதிராக தொடர்ந்து நிறுத்திவருகின்றது நிர்வாகம். இந்த அற்பத்தனங்கள் எதற்கும் எப்போதும் சோரம் போகாத நமது உறுப்பினர்கள் தங்களின் சட்டப் பூர்வ உரிமைகளுக்காக உறுதியாக நின்று போராடி நிலை நாட்டி வருகின்றார்கள்.

படிக்க:
♦ மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !
♦ டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !

மேற்படி சத்தியபாமா நிர்வாகம் தொழிலாளர் உரிமைக்கான போராட்டம் படிப்படியான வெற்றியை பெற்று வரும் நிலையில் பழைய தொழிலாளர்கள் ஓய்வு பெரும் வயதை தொடும் நிலையிலும், அடுத்ததாக ESI, உரிமை போனசு, ஊதிய உயர்வு ஒப்பந்த உரிமைக்கு என தங்கள் 10 ஆண்டுகால நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளார்கள்.

நமது சங்கம் ESI கோரி எடுத்த நடவடிக்கையை முறியடிக்க 400 சுய நிதி கல்வி முதலாளிகள் சேர்ந்து வழக்கு தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தங்கள் போராட்ட பலன்களை தங்களது வருங்கால தொழிலாளி வர்க்கத்திற்கும் நிலைக்கும்படி நிலைநாட்டி வருகின்றார்கள் சத்யபாமா பல்கலைக் கழக தொழிலாளர்கள்.

தொழிலாளர் போராட்டங்கள் நிலவும் அரசுக் கட்டமமைப்பிற்குள் ஜனநாயகப் பூர்வமாகத் தீர்க்க, தொழிலாளர் வாழ்நாளே போதாது என்பதைத்தான் மேற்கண்ட வழக்கு விவரங்கள் உணர்த்தும் உண்மைகள்.

எனவே தொழிலாளி வர்க்கத்தின் தனித்தனியான போராட்ட முறைகள் இனி தீர்வாக முடியாது. மாற்று அரசுக் கட்டமைப்பிற்கான போராட்டமே தீர்வு.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சத்தியபாமா பல்கலைக் கழகக் கிளை

உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9-அ

ரு நாள் இரவு நேரத்தில், வஸீலிய் வஸீலியெவிச்சின் நெடிய உருவம் ஆளோடியின் கோடியில் தென்பட்டது. கைகளை முதுகுப்புறம் வைத்தவாறு மெதுவாக நடந்தார் அவர். அவரது மேலங்கிப் பொத்தான்கள் போடப்படாமல் இருந்தன, தலையில் தொப்பி இல்லை, அடர்ந்த நரைமுடிக் கற்றைகள் நெற்றிமீது புரண்டன.

தனிவகை அமைப்புள்ள பொய்க்கால்கள் பற்றிய தனது திட்டத்தை அப்போதுதான் கமிஸாருக்கு விவரித்திருந்த அலெக்ஸேய், “வஸீலிய் வருகிறார்” என்று கிசுகிசுத்தான்.

வஸீலிய் வஸீலியெவிச் கால் இடறிவிட்டது போலச் சட்டென நின்று சுவர் மீது கையைத் தாங்கலாக அழுத்திக் கொண்டார். ஏதோ மூக்கால் முனகினார். பின்பு சுவற்றிலிருந்து விலகி நாற்பத்து இரண்டாவது வார்டுக்குள் நுழைந்தார். வார்டின் நடுவே நின்று எதையோ நினைவுப்படுத்திக் கொள்ள முயல்பவர் போல நெற்றியைத் தடவினார். அவரிடமிருந்து ஸ்பிரிட் வாடை அடித்தது.

“உட்காருங்கள், வஸீலிய் வஸீலியெவிச். சற்று பேசுவோம்” என்றார் கமிஸார்.

உறுதியின்றி அடிவைத்து, கால்களை இழுத்துப்போட்டவாறு தலைமை மருத்துவர் கமிஸாரின் கட்டிலை நெருங்கி, அதன் வில் கம்பிச் சுருள்கள் கிரீச்சிட்டு நெளியும்படி பொத்தென்று உட்கார்ந்தார், கன்னப் பொருத்துக்களைத் தேய்த்துக் கொண்டார். முன்னரும் அவர் நோயாளிகளில் கமிஸாருக்கு வெளிப்படையாகத் தனி மரியாதை காட்டிவந்தார். எனவே இந்த இரவு வருகையில் விந்தையானது எதுவும் இல்லை. ஆயினும் இந்த இரு மனிதர்களுக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட உரையாடல் நடக்கப் போகிறது என்றும் அதை மூன்றாமவன் கேட்க வேண்டியதில்லை என்றும் அலெக்ஸேய் எதனாலோ உணர்ந்தான். அவன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாவனை செய்தான்.

“இன்று ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி. அவனுடைய பிறந்த நாள். அவனுக்கு முப்பத்தாறு வயது நிறைந்து விட்டது இல்லை, நிறைந்திருக்க வேண்டும்” என்று தணித்த குரலில் சொன்னார் தலைமை மருத்துவர்.

கமிஸார் போர்வைக்கு அடியிலிருந்து பெருத்த, உப்பிய கையை மிகுந்த சிரமத்துடன் வெளியில் எடுத்து வஸீலிய் வஸீலியெவிச்சின் கரத்தின் மேல் அதை வைத்தார். அப்போது நேர்ந்தது நம்ப முடியாத நிகழ்ச்சி: தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.

“போர் முனைக்குப் போகுமுன்பு அவன் என்னிடம் வந்தான். தொண்டர் படையில் பெயர் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, யாருக்குத் தன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதையும் கேட்டான். அவன் இங்கேயே, என்னோடு வேலை செய்து வந்தான். எனக்கு ஏற்பட்ட திகைப்பில் நான் அவனை அதட்டக் கூடச் செய்தேன். மருத்துவ இயல் பி.எச்.டி. பட்டம் பெற்றவன், திறமை வாய்ந்த விஞ்ஞானி எதற்காகத் துப்பாக்கி பிடிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் அவன் சொன்னது வார்த்தைக்கு வார்த்தை நினைவுக்கு வருகிறது அவன் சொன்னான்: ‘அப்பா, மருத்துவ இயல் பி.எச்.டி.க்கு துப்பாக்கி பிடிக்க வேண்டிய வேலையும் உண்டு’. இப்படிச் சொல்லிவிட்டு, ‘யாருக்கு வேலையை ஒப்படைப்பது?’ என்று மறுபடி கேட்டான். நான் டெலிபோன் செய்யவேண்டியது தான், ஒன்றுமே, எதுவுமே நடந்திருக்காது, புரிகிறதா, எதுவுமே! எனது மருத்துவமனையில் ஒரு பிரிவுக்கு அவன் தலைவனாக இருந்தான், இராணுவ மருத்துவ மனையில் வேலை செய்து வந்தான், இல்லையா?”

வஸீலிய் வஸீலியெவிச் பேசாதிருந்தார். அவர் சிரமப்பட்டு, கரகரத்த ஓசையுடன் மூச்சு விடுவது கேட்டது.

“….வேண்டாம், அன்பரே. என்ன நீங்கள், என்ன நீங்கள்! கையை எடுங்கள். அசைவது உங்களுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பது எனக்குத் தெரியும்….. ஆயிற்றா. நான் இரவு முழுவதும் சிந்தித்தேன். போன் செய்யாமலே இருந்துவிட்டேன்…”

“இப்போது அதற்காக வருந்துகிறீர்களா?”

தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.

“இல்லை. இது வருந்துவது ஆகுமா? நான் எண்ணமிடுகிறேன்: எனது ஒரே மகனின் கொலையாளியா நான்? இப்போது அவன் இங்கே, என்னுடன் இருந்திருப்பான். நாங்கள் இருவரும் நாட்டிற்கு மிகவும் பயனுள்ள காரியம் செய்து கொண்டிருப்போம். அவன் இயல்பான திறமைசாலி – உயிரோட்டமுள்ள, துணிவுமிக்க, ஒளிவீசும் திறமை அவனிடம் இருந்தது. அவன் சோவியத் மருத்துவ இயலுக்கே பெருமையாகத் திகழ்ந்திருப்பானே… அப்போது நான் மட்டும் போன் செய்திருந்தால்!”

”போன் செய்யாததற்கு வருந்துகிறீர்களா?”

“என்ன கேட்கிறீர்கள்? அடே, ஆமாம்… தெரியவில்லை , எனக்குத் தெரியவில்லை.”

“இப்போது எல்லாம் மீண்டும் திரும்ப நிகழ்வதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்பீர்களா?”

மெளனம் குடிகொண்டது. உறங்குவோரின் ஒரு சீரான மூச்சுவிடுகை கேட்டது. கட்டில் லயத்துடன் கிரீச்சிட்டது – தலைமை மருத்துவர் சிந்தனையில் ஆழ்ந்தவராக இப்புறமும் அப்புறமும் அசைந்தாடினார் போலும். வெப்பமூட்டு நீராவிக் குழாய்களில் தண்ணீர் மந்தமாகக் களகளத்தது.

“ஊம், என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் கமிஸார். எல்லையற்ற பரிவு அவர் குரலில் தொனித்தது…

“எனக்குத் தெரியவில்லை….. உங்கள் கேள்விக்கு உடனே பதில் சொல்வது இயலாது. ஆனால் எல்லாம் திரும்ப நிகழ்ந்தால் நான் முன்போலவே நடந்து கொண்டிருப்பேன் என்றே தோன்றுகிறது. எவ்வளவு பயங்கரமானது இது – யுத்தம்…… அட, இதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன….”

தலைமை மருத்துவர் எழுந்தார், கட்டில் அருகே சற்று நின்று கமிஸாரின் கையைப் பதபாகமாகப் போர்வைக்குள் வைத்து இழுத்துப் போர்த்தினார். பின்பு மெளனமாக வார்டிலிருந்து வெளியேறினார். இரவில் கமிஸாரின் நிலைமை மோசம் ஆயிற்று. உணர்விழந்த நிலையில் பற்களை நெறுநெறுப்பதும் முனகுவதுமாகக் கட்டிலில் புரண்டார். பின்பு விரைப்பாக நீட்டிப் படுத்து அமைதியாகக் கிடந்தார். முடிவு நெருங்கி விட்டது என எல்லோருக்கும் பட்டது. மகன் இறந்த நாள் முதல் தமது பெரிய வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் குடிவந்து தமது சிறு அறையில் சோபாவில் படுத்துத் தூங்கிய வஸீலிய் வஸீலியெவிச் விஷயத்தை அறிந்து வார்டுக்கு வந்து பார்த்தார். கமிஸாரின் நிலை மிகவும் மோசமாயிருப்பதைக் கண்டு அவரை மற்றவர்கள் பார்க்காதபடி படுதாவால் மறைத்துவிடும் படி உத்தரவிட்டார். அந்திக் காலத்தில் நோயாளிகளை இவ்வாறு படுதாவால் மறைப்பது வழக்கந்தான்.

கற்பூரத்தைலம், ஆக்ஸிஜன், இவற்றின் உதவியால் கமிஸாரின் நாடித் துடிப்பு சீர்பட்டதும் முறைவேலை மருத்துவரும் வஸீலிய் வஸீலியெவிச்சும் இரவின் எஞ்சிய பகுதியை உறங்கிக் கழிக்கச் சென்றுவிட்டார்கள். படுதாவுக்குள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே இருந்தாள். அவள் அழுத முகத்துடன் ஒரே கலவரம் அடைந்து காணப்பட்டாள். மெரேஸ்யெவும் உறங்கவில்லை. “இதுதான் முடிவா என்ன?” என்று திகிலுடன் எண்ணினான் அவன். கமிஸார் பெருத்த வதைபட்டுவிட்டார். ஜன்னியில் அவர் புரண்டு அலை பாய்ந்தார். முனகலோடு கூடவே ஏதோ ஒரு சொல்லைக் கம்மிய குரலில் பிடிவாதமாகக் கூறினார். “குடிக்க, குடிக்க, குடிக்க!” என்று அவர் கேட்பது போல மெரேஸ்யெவுக்கு தோன்றியது.

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா படுதாவுக்கு உள்ளிருந்து வெளிவந்து நடுங்கும் கைகளால் கண்ணாடித் தம்ளரில் நீர் ஊற்றினாள்.

படிக்க:
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !

ஆனால் நோயாளி நீர் பருகவில்லை. தம்ளர் அவர் பற்களில் வீணே இடித்தது, தண்ணீர் ததும்பித் தலையணையில் வழிந்தது. கமிஸாரோ, வேண்டுவதும் கோருவதும் உத்தரவிடுவதுமாக அதே சொல்லைவிடாது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கேட்பது “குடிக்க” அல்ல “பிழைக்க” என்பதே என அலெக்ஸேய் திடீரெனப் புரிந்து கொண்டான். இந்தக் கத்தலில் அந்த விறல் வாய்ந்த மனிதனின் உள்ளமும் உயிரும் எல்லாம் சாவுக்கு எதிராக உணர்வின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது.

அப்புறம் கமிஸார் அமைதியுற்று விழிகளைத் திறந்தார். “ஆண்டவன் காப்பாற்றினான்!” என்று ஆறுதலுடன் கிசுகிசுத்துப் படுதாவைச் சுருட்டத் தொடங்கினாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.

“வேண்டாம், படுதா இருக்கட்டும்” என்ற கமிஸாரின் குரல் அவளைத் தடுத்தது. “வேண்டாம் அருமைச் சகோதரி. படுதா இருப்பது நமக்கு அதிகச் சௌகரியம். அழவும் வேண்டாம். உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே… அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி!.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை