Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 346

அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கடலூர் நகராட்சியே !

  • நாறும் கடலூர் பேருந்து நிலைய கழிவறைகளை சுத்தம் செய்யாத காண்ட்ராக்டர் உரிமத்தை ரத்து செய் !
  • திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட்டில் உள்ள பெண்கள் ஓய்வறையை உடனே திற!
  • திருப்பாதிரிப்புலியூர் நகராட்சி சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் சென்றுவரும் வழியை திற!
  • மஞ்சக்குப்பம் மின் தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வா!
  • வண்டிப்பாளையம் வழியாக பான்பரி மார்கெட்டுக்கு செல்லும் வழியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், 24.07.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்.நந்தா தலைமையேற்றார். ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடலூர் நகராட்சியில் நீடிக்கும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

இதில் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெண்புறா குமார், விசிக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் திருமார்பன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தோழர் சுப்புராயன், தமிழர் கழகம் அமைப்பின் தோழர் பாரதிவானன், வெண்புறா பொது நல பேரவை தோழர் ராஜசேகர் மற்றும் கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர். தொடர்புக்கு : 81108 15963

களிப்பையும் துயரையும் தந்த காதலியின் நினைவுகள் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 10-அ

ரு ஞாயிறன்று அவர்கள் வோல்காவின் அக்கரையிலிருந்த புல்வெளிக்குச் சென்றார்கள்.

பூத்த புல்தரையில், விண்மீன்கள் போல ஒளிர்ந்த வெண் சாமந்தி மலர்களுக்கு இடையே அவளை நிழல்படம் பிடித்தான் அலெக்ஸேய். அப்புறம் அவர்கள் நீந்திக் குளித்தார்கள். பின்பு அவள் ஈர நீச்சல் உடையைக் களைந்து மாற்றுடை அணிந்து கொள்ளும் வரை அவன் கரையோரப் புதருக்கு அப்பால் பணிவாக மறுபுறம் திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

அவள் கூவி அழைத்ததும் அவன் திரும்பினான். மெல்லிய உடை அணிந்து, வெயிலில் பழுப்பேறிய கால்களை மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அவள். பூந்துவாலையைத் தலைமீது சுற்றிக் கட்டியிருந்தாள். சுத்தமான கைத்துவாலையைப் புல் மேல் விரித்து, அது பறந்து விடாமல் ஓரங்களைக் கற்களால் அழுத்தி, வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்து அதன் மேல் ஒழுங்காகப் பரப்பினாள். உருளைக் கிழங்குக் கூட்டும் எண்ணெய்க் காகிதத்தில் கச்சிதமாக வைத்துச் சுற்றப்பட்டிருந்த மீனும் வீட்டில் செய்த பிஸ்கோத்துகளுங்கூட பொட்டலத்தில் இருந்தன. உப்பும் கடுகு துவையலையுங்கூட மறக்காமல் கொண்டு வந்திருந்தாள் ஓல்கா. குதூகலமும் விளையாட்டும் கொண்ட அந்த பெண் இவ்வளவு அக்கறையுடன் திறைமையாக வீட்டுக் காரியங்கள் செய்வது பார்க்க இனிமையாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் இருந்தது. “இழுத்தடித்தது எல்லாம் போதும். இன்று மாலையே இவளுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன். இவள் கட்டாயமாக என் மனைவி ஆக வேண்டும் என்பதை அவளது மனதில் பதியும்படி சொல்லிவிடுகிறேன்” எனத் தீர்மானித்துக் கொண்டான் அலெக்ஸேய்.

சற்று நேரம் கரையில் படுத்திருந்த பின் மீண்டும் நீந்திக் குளித்துவிட்டு, மாலையில் ஓல்கா வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டு வீடு திரும்பும் பொருட்டுப் படகுத் துறைக்கு மெதுவாக நடந்தார்கள். களைத்துப் போயிருந்தாலும் அவர்கள் உள்ளங்களில் இன்பம் அலை மோதியது. துறையில் எதனாலோ படகையே காணோம். கதிரவன் ஸ்தெப்பி வெளியில் படிந்து விட்டான். மறு கரையில் செங்குத்தான மேட்டின் வழியாக ஊர்ந்து பளிச்சிடும் ரோஜா நிறக் கதிர்க் கற்றைகள் நகர வீடுகளின் முகடுகளுக்குப் பொன்முலாம் பூசின. ஜன்னனல் கண்ணாடிகள் குருதிச் செம்மையுடன் ஒளிர்ந்தன புழுதிபடிந்த அசைவற்ற மரங்கள். கோடைக்கால மாலை வெக்கை நிறைந்து அமைதியாக இருந்தது. எனினும் நகரில் எதுவோ நிகழ்ந்துவிட்டது. இந்த வேளையில் வழக்கமாக வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் ஏராளமான ஆட்கள் பரபரப்புடன் நெரிந்தார்கள். செம்மச் செம்ம ஆட்களால் நிறைந்த இரண்டு லாரிகள் விரைந்து சென்றன. சிறு கூட்டம் அணிவகுத்து நடந்தது.

“இக்கரையிலேயே இரவைக் கழிக்க நேர்ந்தால் என்ன செய்வது?” என்றான் அலெக்ஸேய்.

கதிர் வீச்சும் பெரிய கண்களால் அவள் அவனை நோக்கி, “நீ உடன் இருக்கையில் எனக்கு ஒரு பயமும் கிடையாது” என்று கூறினாள்.

அவன் அவளைத் தழுவி முத்தமிட்டாள், முதல் தடவை, ஒரே தடவை முத்தமிட்டான். துடுப்புக் கொண்டிகளின் சத்தம் ஆற்றின் மீது மந்தணமாகக் கேட்டது. அளவுக்கு மேல் ஆட்களை ஏற்றுக் கொண்டு மறுகரையிலிருந்து புறப்பட்டது ஒரு படகு. அலெக்ஸேயும் ஓல்காவும் இப்போது அதைப் பகைமையுடன் நோக்கினார்கள், எனினும் அது என்ன செய்தி கொண்டுவருகிறது என்று முன்னுணர்ந்தவர்கள் போன்று பணிவுடன் அதை எதிர் கொள்ளச் சென்றார்கள்.

படிக்க:
#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

ஆட்கள் பேசாமல் படகிலிருந்து கரையில் குதித்தார்கள். எல்லோரும் உல்லாச உடைகள் அணிந்திருந்தார்கள். எனினும் அவர்களுடைய முகங்களில் கவலையும் சோர்வும் ததும்பின. ஆழ்ந்த தோற்றம் கொண்ட பரபரப்புள்ள ஆடவர்களும் கிளர்ச்சி பொங்கும் அழுத முகங்கள் உள்ள மாதர்களும் நடைப் பலகைகள் வழியே அவர்கள் இருவரையும் கடந்து சென்றார்கள். ஒன்றும் விளங்காதவர்களாக ஓல்காவும் அலெக்ஸேயும் படகில் தாவி ஏறிக்கொண்டார்கள். நொண்டிப் படகோட்டி அர்க்காஷா மாமா, அவர்களுடைய களி பொங்கும் முகங்களைப் பார்க்காமலே, “யுத்தம்…. இன்று வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது…..” என்றான்.

“யுத்தமா?… யாருடன்?” என்று அலெக்ஸேய் இருக்கையிலிருந்து திடுக்குற்றுத் துள்ளி எழுந்தான்.

“எல்லாம் அந்த பாழாய்ப் போகிற ஜெர்மன்காரர்களோடுதான், வேறு யாரோடு?” என்று கோபத்துடன் துடுப்புக்களை வலிப்பதும் வெடுக்கென்று அவற்றைத் தள்ளுவதுமாக விடையிறுத்தான் அர்க்காஷா மாமா. “ஆட்கள் ஏற்கனவே படைதிரட்டு நிலையங்களுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். படை திரட்டல் நடக்கிறது” என்றான்.

உலாவிலிலிருந்து வீட்டுக்குக்கூடப் போகாமல் நேரே படை திரட்டு நிலையம் சென்றான் அலெக்ஸேய். இரவு 12.40-க்குப் புறப்பட்ட ரயிலில், தனக்கெனக் குறித்த விமானப் படை பிரிவுக்குப் புறப்பட்டு போய்விட்டான் அவன். நடுவில் வீட்டுக்கு ஓடிப்போய் பெட்டியை எடுத்து வரத்தான் அவனுக்கு ஓரளவு நேரம் கிடைத்தது. ஓல்காவிடம் அவன் பிரிவு சொல்லிக்கொள்ளக் கூட இல்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதாவதுதான் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய பரஸ்பர அன்பு குறைந்துவிட்டது; அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. மாணவருக்குரிய குண்டு குண்டான எழுத்துக்களில் வரையப்பட்ட அவளுடைய கடிதங்களை அவன் ஆவலே வடிவாக எதிர்பார்த்தான், அவற்றைச் சட்டைப் பையிலேயே வைத்திருந்தான், தனிமையில் விடப்பட்டதுமே மறுபடி மறுபடி படித்தான். காட்டில் திரிந்த துன்ப நாட்களில் இந்தக் கடிதங்களையே அவன் மார்புற அழுத்திக் கொண்டான், அவற்றையே பார்த்தான். எனினும் அந்த இரு இளம் வயதினரின் உறவு நிச்சயமற்ற ஒரு கட்டத்தில் திடீரென அறுந்து போய்விட்டது. ஆகையால் இந்தக் கடிதங்கள் மூலம் அவர்கள் நெடுங்காலம் நன்கு பழகியவர்கள், நண்பர்கள் என்ற முறையிலேயே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். இன்னும் பெரிய எதையும் இதனுடன் பெரிய எதையும் சேர்க்க அவர்கள் அஞ்சினார்கள். எனவே அது மனம் விட்டுச் சொல்லப்படாமலே இருந்துவிட்டது.

இப்பொழுது மருத்துவமனையில் படுத்துக் கிடக்கையில் ஒரு விஷயத்தைக் கண்டு அலெக்ஸேய் திகைப்பு அடைந்தான். இந்தத் திகைப்பு கடிதத்துக்குக் கடிதம் மிகுந்து கொண்டு போயிற்று. ஓல்கா தானே மனதைத் திறந்து பேச முன்வந்ததுதான் அவனுக்குத் திகைப்பூட்டிய விஷயம். தான் அவனுக்காக ஏங்குவதை ஓல்கா கூச்சமின்றித் தன் கடிதங்களில் இப்பொழுது விவரித்தாள். அன்றைய தினம் அர்க்காஷா மாமா வேண்டாத நேரத்தில் தங்களை மறு கரைக்கு இட்டுச் செல்ல வந்தது குறித்து வருந்தினாள். அலெக்ஸேய்க்கு என்ன நேர்ந்தாலும் சரியே, தான் எப்போதும் நம்பத்தக்க ஒரு நபர் இருப்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், வேற்றிடங்களில் சுற்றித் திரிகையில், போர் முடிந்ததும் சொந்த வீடு திரும்புவதற்கு ஓர் இடம் இருப்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

இவ்வாறெல்லாம் எழுதுபவள் யாரோ புதிய, வேறொரு ஓல்கா என்பதுபோல் தோன்றியது. அவளுடைய நிழற் படத்தை பார்க்கும் போதெல்லாம், ஒரு காற்று வீச வேண்டியது தான், முதிர்ந்த சிறகு விதை போல அவள் தன் பூத்துணி உடையுடன் பறந்துபோய் விடுவாள் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகும். இந்தக் கடிதங்களை எழுதியவளோ, நல்லவள், காதலிப்பவள், காதலுனுக்காக ஏங்குபவள், அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பவள். இந்த நினைப்பால் அவனுக்கு மகிழ்ச்சியும் குழப்பமும் ஒருங்கே உண்டாயின. மகிழ்ச்சி அவன் வசமின்றியே உண்டாயிற்று. தான் இத்தகைய உறவுக்கு உரியவன் அல்ல; இவ்வளவு ஒளிவு மறைவற்ற உறவாடலுக்குத் தக்கவன் அல்ல என்று அலெக்ஸேய் எண்ணியபடியால் அவனுக்கு மனக்கலக்கம் ஏற்பட்டது.

தான் முன்போன்ற வலிமை நிறைந்த இளைஞன் அல்ல, கால்களற்ற அங்கவீனன், அர்க்காஷா மாமாவை ஒத்தவன் என்று ஆரம்பத்திலேயே எழுத அவனுக்குத் துணிவு வரவில்லையே. நோயாளித் தாயார் அதிர்ச்சியால் இறந்து போய் விடுவாளோ என்ற பயத்தால் உண்மையை எழுதத் தயங்கிய அவனுக்கு இப்போது ஓல்காவைக் கடிதங்களில் ஏமாற்றுவது வலுக்கட்டாயம் ஆகிவிட்டது. இந்த ஏமாற்றுச் சிடுக்கில் நாளுக்கு நாள் அதிகமாகச் சிக்கிக் கொண்டு போனான்.

இந்தக் காரணத்தால் கமிஷினிலிருந்து வந்த கடிதங்கள் அவனுக்கு முற்றிலும் எதிரெதிரான உணர்ச்சிகளை – களிப்பையும் துயரையும், நம்பிக்கையையும் கலவரத்தையும் ஏற்படுத்தின. அவை ஏககாலத்தில் அவனுக்கு உற்சாகமூட்டின. அவனைத் துன்புறுத்தி வதைத்தன.

எனினும், தனது கனவை நனவு ஆக்கிக்கொண்டதுமே, அதாவது படையணிக்குத் திரும்பித் தனது செயல் திறனை மீண்டும் அடைந்ததுமே, ஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். இவ்வாறு நிச்சயித்து, தனது இந்தக் குறிக்கோளை அடைவதற்கு முன்னிலும் அதிக விடாப்பிடியாக முயன்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

நெருங்கி வரும் இந்துராஷ்டிரா :

குஜராத்தில் 10 சதவீத மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்களில் இருந்து ஒருவர் கூட மக்களவை உறுப்பினராக இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. “இந்து ராஷ்டிரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு உதாரணம்” என்கிற விஷயத்தை இது நமக்கு உணர்த்துகிறது.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பிரச்சினையில்லை. அவர்கள் உருவாக்கிருக்கும் மனநிலைதான் பிரச்சினை. கடந்த 17 வருடங்களில் மக்களின் சிந்திக்கும் முறையை முற்றிலும் மாற்றியிருக்கிறார்கள். இதன் விளைவுதான் பா.ஜ.க-வின் வெற்றி” என்கிறார் 2002 குஜராத் கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ஷாரிஃப் மாலிக்.

குஜராத்தி மொழியில் உள்ள பலகை கூறுவதாவது:- “ஹல்வத் நகரின் இந்துராஷ்ட்ரம் வரவேற்கிறது – விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தள். (புகைப்படம் – நன்றி : அல்ப் சன்க்கிய அதிகர் மன்ச்)

நரோதா காம் வழக்கில் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் குழுவில் இருக்கும் மாலிக்,  “காங்கிரஸ் ஒரு சில இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியளித்தது. வேறு வழி இல்லாமல் இந்த நிலைமையை எதிர்கொள்கிறோம். இந்த புதிய இந்தியாவில் எங்கள் வாழ்க்கையைக் கடத்த ஏதேனும் வழிகள் உள்ளதா என கண்டுபிடிக்க வேண்டும்” என்றார். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும் ஒன்பது குஜராத் கலவர வழக்குகளில் நரோதா காம் வழக்கும் ஒன்று. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நாடே மோடியின் இரண்டாவது வெற்றியை கொண்டாடும் போது, தொடர்ச்சியான இன்னல்களை அனுபவித்து வரும் குஜராத்  முஸ்லீம்களின் நிலை நம்மை எச்சரிக்கிறது. 2002-ல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை சந்தித்தது மட்டுமல்லாமல் அந்த தாக்குதல்கள் இந்துத்துவ முனைவாக்கத்தின் பகுதியாவும் இருந்தது. இப்போது அந்த முனைவாக்கம் கிட்டத்தட்ட முழுமையடைந்து இருக்கிறது.

இந்துத்துவத் திட்டத்தின் வெற்றிக்கு குஜராத் ஒரு உதாரணம் என அவர்கள் கருதுகின்றனர். சாதிரீதியான, மதரீதியான பாகுபாடுகள் இனி இருக்காது என மோடி கூறினாலும் குஜராத் முஸ்லீம்களிடம் அது செல்லுபடியாகவில்லை. “எங்களுக்கு என்ன நிகழ்கிறதோ அதுவே இந்நாடு முழுக்க நிகழலாம்” என்கிறார் மாலிக்.

படிக்க:
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
♦ நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !

மோடியும்  புதிதாக பதவியேற்றுள்ள அமித்ஷாவும் 2002 கலவரத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தனர். இவர்களின் கண்காணிப்பில் குஜராத் முழுவதும் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலில் 1043 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்; நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர்; இன்றுவரை பலபேரைக் காணவில்லை.

17 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இத்தகைய அரசியல் பிரச்சாரத்திற்கு பயனாக, இன்று அந்த இரட்டையர்கள் நாட்டின் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கின்றனர். கொடூரமான படுகொலைகளை இந்த இருவர் கூட்டணி நினைவூட்டுவது மட்டுமல்லாமல், குஜராத்தை முழுக்கக் காவிமயமாக்கும் அவர்களின் நிகழ்ச்சிநிரலும் நிறைவேறியுள்ளது. மேலும், இந்த இனப் படுகொலையை அம்மாநில வரலாற்றின் மீதான ஒரு சிறிய களங்கமாக பார்க்கும்படி செய்துள்ளனர். காலபோக்கில் அதுவும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும்.

“இந்த திட்டமானது நாடு முழுக்க விரிவடையாதா? மக்கள் அது குறித்து பயப்படவில்லையா?” எனக் கேட்கிறார் இம்தியாஸ் குரேஷி. இவர் நரோதா காம் கலவரத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர். “2002-ல் நடந்ததை இந்நாடு மறந்துவிட்டதா? இந்த அரசியல்போக்கு மேலும் தொடர்ந்தால், இது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். மேற்கு வங்கத்தில் இது ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்டது. நான் கூறுவதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்துராஷ்டிரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கு குஜராத் ஒரு உதாரணம். ஆபத்து இன்னும் சூழ்ந்துள்ளது. அவர்கள் எங்களை கொடுமைப்படுத்த பலவழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்” என்கிறார்.

முஸ்லீம் பிரதிநிதிகள் யாருமில்லை

குஜராத்தில் பா.ஜ.க. அனைத்து 26 இடங்களையும் கைப்பற்றிய பின்னர், கலவரத்தில் பிழைத்தவர்கள் சிலரிடமும் நீதிக்காக தைரியமாக போராடி வரும் செயல்பாட்டாளர்கள் சிலரிடமும் பிரண்ட்லைன் பத்திரிகை பேசியது.

“பா.ஜ.க. எங்களை தேவையற்றவர்களாக ஆக்கியபோது, காங்கிரஸ் மிகவும் பலவீனமான எதிர்ப்பையே காட்டியது. அதன் மூலம் முஸ்லீம்களை மட்டுமல்ல எல்லா சிறுபான்மையினரையும் கைவிட்டது. எங்களுக்கு ஒரு அரசியல் பிரதிநிதிகூட இல்லை. இது முஸ்லீம்களை மேலும் ஒடுக்கும்” என்கிறார் குரேஷி. காங்கிரஸ் இத்தேர்தலில் ஒரேயொரு முஸ்லீமுக்கு மட்டுமே சீட்டு வழங்கியது. அக்கட்சியின் முஸ்லீம்கள் மீதான அர்ப்பணிப்பு குறைந்து வருவதையே இது காட்டுவதாக குரேஷி கூறுகிறார்.

ஷாரிப் மாலெக், நரோதா காம் வழக்கில் நீதிக்காக போராடும் செயல்பாட்டாளர். நரோதா காமில் குடியிருப்பவர், 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர். புகைப்படம் – அனுபமா கடகம்.

வரலாற்றுரீதியாகவே, குஜராத் இரு கட்சிகளின் மாநிலமாகவே இருந்துள்ளது. பா.ஜ.கவும், காங்கிரஸும் எல்லா தேர்தல்களிலும் மோதிக்கொள்ளும். ஆனால் 2000-த்தின் ஆரம்பத்தில் இருந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் காங்கிரஸ் தனது தடத்தை இழந்து வருவதோடல்லாமல், அந்த தோல்வியில் இருந்து இன்னும் மீளவுமில்லை. சிறந்த தலைவர்களின் போதாமை, உட்கட்சிப் பூசல், சிறுபான்மை தலைவர்களை ஒடுக்குவது, கட்சியினர் பா.ஜ.க-வில் இணைவது போன்றவை இப்பழம் பெரும் கட்சியை மோசமான சீர்கேட்டுக்கு இட்டுச் சென்றுள்ளது. 2017 மாநிலங்கவை தேர்தலில் காங்கிரஸ் 182-ல் 77 இடங்களில் வெற்றி பெற்றப்போது நம்பிக்கையின் கீற்று தெரிந்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் அடைந்த படுதோல்வியால் தேசிய மற்றும் மாநிலங்களின் நலன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆச்சிரியப்படும் வகையில், 42 முஸ்லீம்கள் குஜராத் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். பா.ஜ.க எந்த முஸ்லீம்க்கும் சீட்டு வழங்கவில்லை. சிறு அரசியல் கட்சிகள் சார்பாக 8 முஸ்லீம்களும், 34 பேர் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். மோடி ‘அலை’யின் தாக்கத்தால் ஃபாருச் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரேயொரு முஸ்லிமான ஷேர்கான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஃபாருச் தொகுதிதான் மாநிலத்திலேயே அதிக முஸ்லீம் ஓட்டுகள் உள்ள தொகுதியாகும் (அந்த தொகுதியின் மக்கள்தொகையில் 22 சதவீதம் முஸ்லீம் மக்கள் உள்ளனர்). 1984-ல் ஃபாருச் தொகுதியில் வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரான அகமது படேல்-தான் குஜராத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற கடைசி முஸ்லீம் ஆவார்.

“முதல் படி ஏறும்பொழுது அவர்கள் எங்களை எறும்புகளை போல் நசுக்கினர். இப்பொழுது அவர்கள் உச்சியில் உள்ளனர், நாங்கள் அவர்களுக்கு தேவையற்றவர்களாக இருக்கலாம். இனிமேல் வன்முறையை தூண்டிவிடமாட்டார்கள் என நம்புகிறேன். மற்ற பிரச்சினைகளை நாங்கள் சமாளித்துக் கொள்வோம்” என்கிறார் குரேஷி.

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
♦ குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

2002-ல் நடந்ததுபோல், சிறுபான்மையின மக்களுக்கெதிரான வெளிப்படையான வன்முறை குஜராத்தில் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், முஸ்லீம்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆதாரம் உள்ளது. அல்ப் சன்க்கிய அதிகார் மன்ச் என்ற மனித உரிமை அமைப்பும் , புனியாத் என்ற சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பும் திரட்டிய தரவுகள் மற்றும் அளித்த அறிக்கை குஜராத் மாநிலத்தின் மதரீதியான முனைவாக்கம் பற்றி கவலைப்படக் கூடிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.

தேசிய ஊடகங்களின் கவனிப்புக்கு கீழ் வராதபடி சிறு சிறு தாக்குதலை தொடுப்பதே அவர்களின் திட்டம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பிரிவினையும் பாகுபாடும் மாநிலத்தின் சமூக – பொருளாதாரத்தின் அங்கமாகவே மாறிவிட்டது. பல சமயங்களில் அவை கவனிக்கப்படுவதும் இல்லை என்றும் கூறுகிறது. அறிக்கையின்படி சிறு சிறு கலகங்களின் தாக்கம் வீரியமிக்கதாக உள்ளதாகும்; அது மதரீதியாக சமூகத்தை முனைவாக்கம் செய்வதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சாதித்துள்ளது; குஜராத்தில் மதக் கலவரங்களே நடைபெறுவதில்லை என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யை சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளரான ஷாம்ஸ் தப்ரெஃஸ் திரட்டிய தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்து அவர் திரட்டிய தகவல்கள் கீழ்வருமாறு :-

ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரங்கள் உயிரிழந்தோர் காயமடைந்தோர்
2008 79 5 228
2011 47 3 144
2014 74 7 215
2015 55 8 163

 

கூடுதலாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) மற்றும் ஃபேக்ட் செக்கர் (Fact Checker) என்னும் ஆய்வு நிறுவனத்தின் தரவுகளையும் அந்த அறிக்கை அளிக்கிறது. குஜராத்தில் 1998 முதல் 2016 வரை 35,568 கலவரங்கள் நடந்திருப்பதாகக் கூறுகின்றன அத்தரவுகள்; 2014 -க்கும் 2016 -க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் குஜராத்தில் 164 கலவரங்கள் நடந்துள்ளதாகவும் அதனால் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

“தாக்குதல் நடைபெற்ற பெரும்பாலான இடங்கள் 2002-ல் நடந்த கலவரத்தால் பாதிக்கப்படாத பகுதியாகும் என்பது முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டியது. மதரீதியில் வெறுப்பை பரப்புவதற்கு சமூக(வலைதள)ஊடங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்றவை கருவியாக பயன்படுத்தப்படுள்ளன. மதச்சடங்குகள், திருவிழாக்கள், ஊர்வலங்கள், கலப்புத் திருமணங்கள், பெண்களை கேலி செய்தல், தரக்குறைவான பாடல்கள், வெறுப்புப் பேச்சுகள் ஆகியவை மதக் கலவரங்களை தூண்டிவிடும் புள்ளிகளாக இருந்துள்ளன என்பது மேம்போக்கான பார்வையிலேயே தெரிகிறது. மதம் தாண்டிய உறவுகளைக் காரணம் காட்டி எழுப்பப்படும் மோதல்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன” என்கிறது அல்ப் சன்க்கிய அதிகார் மன்ச் / புனியாத்-ன் அறிக்கை.

உதாரணத்திற்கு, ஏப்ரல் 2017 -ல், ஒரு கும்பல் படன் மாவட்டத்தை சேர்ந்த வாதவலி கிராமத்தில் உள்ள முஸ்லீம் குடியிருப்பை சூறையாடிய பிறகு எரித்தது. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வீடற்றவர்களாக்கப்பட்டனர். அரசு இத்தாக்குதலை பதிவு செய்ய முன்வரவுமில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமும் அளிக்கவில்லை. வக்கீல் ஷம்சத் பதான், மாலெக் போன்ற செயல்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சித்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே பெரும்பாடாகிவிட்டது.

முனைவாக்கத்தின் வடிவம் / மாதிரி

வெற்றிகரமான முனைவாக்க செயலுத்திக்கான உதாரணமாக அகமதாபாத் இருக்கிறது. ஒரு காலத்தில், அந்த நகரம் முழுவதும் முஸ்லீம்கள் பரவியிருந்தனர். இப்பொழுதோ  தனித்தொதுக்கப்பட்ட, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ்கின்றனர். நாகரீகமான சுற்றுப்புறங்களில் வாழ பணக்கார முஸ்லீம்களால் கூட முடியவில்லை. முஸ்லீம்கள் அனைவரும் அகமதாபாத்தின் புறநகர் பகுதிகளான ஜுஹபுரா போன்ற சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை செயல்படுத்த மோடி அரசு எப்படி நயவஞ்சகமான வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளது என்பதற்கு இங்கு சில உதாரணங்கள் உள்ளன. பிற மதத்தினரிடமிருந்து சொத்துகளை வாங்கவோ விற்கவோ மாவட்ட ஆட்சியினரின் அனுமதி தேவைப்படும். இந்தியாவின் ஒரே மாநிலம் குஜராத்தான். 2012-ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது, முஸ்லீம்களை பாதுகாப்பதற்காகவும் தனிச்சேரிகளை தடுப்பதற்காகவும், அசையா சொத்துகளின் பரிவர்த்தனையை தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறிய குடியிருந்தவர்களை பாதுகாக்கும் சட்டம், 1991 (Gujarat Prohibition of Transfer of Immovable Property and Provisions for Protection of Tenants from Eviction from Premises in Disturbed Areas Act, 1991) சட்டத்தில் மேம்போக்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும், ஒரு மதத்தினரின் சொத்தை மற்ற மதத்தினர் வாங்கவோ விற்கவோ முடியாது என்பதுதான் இறுதி விளைவாக ஆகியது.

இச்சட்டம் கலவரங்கள் நடந்த இடத்திற்கு பொருந்துவதால், மற்ற மதத்தினர் பலர் இவ்விடங்களில் உள்ள சொத்துக்களை வாங்க முன்வருவதில்லை. யாரும் இங்கு சொத்துக்களை வாங்க விரும்புவதில்லை. ஆதலால் நாங்கள் வாங்குபவரை தேடி அலைவதை கைவிட்டுவிட்டோம். கலவரங்களுக்கு பின், பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதால் ஜுஹபுரா போன்ற சேரிகளில் தங்குகின்றனர்” என்கிறார் ஷாஹின் ஹுசைன். 2002, பிப் 28 -ல் நரோதா பாட்டியாவில் உள்ள தன் வீட்டை சூறையாடலுக்கும் நெருப்புக்கும் பலி கொடுத்தவர்.

படிக்க:
♦ இறுதித் தீர்ப்பு : 2002 குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்
♦ யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

குடியிருப்பு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் சிறுபான்மைக்கு எதிரான பாகுபாடு துலக்கமாகத் தெரிகிறது. 2012 – 2013-ம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்தது. இதற்குக் காரணமாக கூறப்பட்ட வாதம் என்னவென்றால், இது பாகுபாட்டை மேலும் உருவாக்கும், அந்த நிதியைப் பெற தகுதி இல்லாதவர்கள் மத்தியில் மனப் புகைச்சலை உருவாக்கும் என்பதாகும். முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்குவது தன்னுடைய தேசிய அரசியல் கனவை அருகில் கொண்டுவரவில்லை என்பதை மோடி உணர்ந்த நேரத்தில்தான் இப்படிப்பட்ட நயவஞ்சக முறைகள் முஸ்லீம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டன.

2010-ல் சிட்டிசன் நகருக்கு சென்றேன், அவ்விடம் அகமதாபாத்தின் புறநகரில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகில் உள்ளது. நிவாரண முகாம்களில் வசித்து வந்த, கலவரத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிரந்தர அடைக்கலம் அளிக்க அக்குடியிருப்புகள் அவசரமாக அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பரிதாபமாக அக்குடியிருப்புகள் குடிசைகளாகவும், குப்பைக்கிடங்கிற்கு அருகிலும் இருந்தன. திறந்தவெளி கால்வாய்கள், சகதியான சாலைகள், தெரு விளக்கு இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த அப்பகுதியில் ஒரு மனிதன் வாழ முடியுமா என ஐயம் ஏற்படுகிறது.

சிட்டிசன் நகரில் வாழ்பவர்கள். அவர்களின் குடியிருப்பு அகமதாபாத்தின் குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. புகைப்படம் – அனுபமா கடகம்.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான நரோதா பாட்டியா கலவரத்தில் தப்பிப் பிழைத்தவரான கத்தூனப்பா, சிட்டிசன் நகரின் ஒரு மூலையில் உள்ள வீட்டில் வசிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிறிய குப்பைக் கூளங்களாக இருந்தவை இப்போது பெரிய மலை போல் காட்சி அளிக்கிறது. அங்கே அடிக்கும் துர்நாற்றம் தங்கள் மீதும் ஊடுருவியுள்ளதாக அவர் கூறுகிறார். நீர் முழுக்க அசுத்தப்பட்டுள்ளது, பல பேர் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடிவந்த 14 வருடத்தில் சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்கிறார்.

“அவர்கள் (மோடி, அமித்ஷா) முன் என்னை நிறுத்துங்கள். அவர்களுடைய தேர்தல்கள் பற்றி நான் கூறுகிவேன். என்னுடைய புகைப்படம், முகவரியை வெளியிடுங்கள். தோட்டாக்களைக் கண்டு நான் அஞ்சவில்லை” என்று வெளிப்படையான கோபத்துடன் கூறுகிறார்.

“மிருகங்கள் கூட வாழ தகுதியற்ற சூழலில் எங்களை வாழ நிர்பந்தித்துள்ளனர். நாங்கள் குறைந்தபட்சம் சாகடிக்கப்படாமல் இருக்கிறோம். எங்கள் மீதான இந்த வெறுப்பும், கோபமும் ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு என்ன செய்தோம்?” என கேட்கிறார் அப்பெண்.

“எங்களை வெறுப்பதற்கு முகலாயர்கள் நம் நாட்டை கொள்ளை அடித்ததையும், கோவில்களை அழித்ததையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காக தான் அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு (காவிப்படை) நினைவூட்டுகிறேன். அவர்களுடைய வரலாறும் ஒரு நாள் எழுதப்படும். அந்த வரலாறும், முகாலயர்கள் பற்றி வரலாற்றாளர்கள் எழுதியதிலிருந்து வேறுபட்டதாக இருக்காது” என்கிறார் குரேஷி


கட்டுரையாளர் : அனுபமா கடகம்
தமிழாக்கம் : 
– தருண்
நன்றி : ஃப்ரண்ட் லைன்

புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன்

சென்ற காணொளியில் நாம் புகைப்பிடிப்பதனால், என்னென்ன தீங்குகள் என்பதைப் பார்த்தோம். அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்கும் காரணத்தாலேயே 50% இறப்பை சந்திக்கிறார்கள், அதிகப்படியான புற்றுநோய், புகை பிடித்ததன் காரணமாகவே ஏற்படுகிறது, புகைப்பிடிப்பதனால் மாரடைப்பும் ஏற்படுகிறது, அதைப்போல் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் புகைப்பிடிப்பதனால் ஏற்படுகிறது.

இதில் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் என ஒன்று உள்ளது. அதாவது, உங்கள் நண்பர் புகைப்பிடிப்பவராக இருந்தால் அது உங்களையும் பாதிக்கும். ஒருவர் புகை பிடித்து விட்டு வீட்டுக்கு செல்கிறார் என்றால், அல்லது வீட்டிற்கு சென்று புகை பிடிக்கிறார் என்றால், அந்தப் புகையின் தாக்கம் அந்த வீட்டில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் இருக்கும்.

இந்த செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்கினால், பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதையும் நாம் அனுமதிக்க முடியாது.

ஒருவர் கஞ்சா, அல்லது மதுபானம் அருந்துகிறார் என்றால் அது அவரை மட்டுமே பாதிக்கிறது. இதுவே புகை பிடிக்கிறார் என்றால் அது அவரைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது. உங்களது நண்பர் புகைப்பிடிக்கிறார் என்றால் அவரிடம் நீங்கள் வேண்டுகோள் வைக்கலாம், பிடிக்காதே என்று. இல்லை என்றால் நீங்கள் அந்த இடத்தை விட்டு வந்துவிடலாம். ஏனென்றால், நட்பை விட உயிர் மிகவும்  முக்கியம். இப்படி நாம் நம் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களை புகைப்பிடிப்பதை கைவிடச் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

புகைப்பிடிப்பதை கைவிடுங்கள் என நாம் கூறினால், பெரும்பாலும் மக்கள் முன்வைக்கும் வாதம், எனது பக்கத்து வீட்டுக்காரர் முப்பது, நாற்பது வருடங்களாக புகைபிடிக்கிறார் ஆனால், அவர் நன்றாகத்தானே இருக்கிறார் என்பதுதான்.  எந்த ஒரு விளைவாக இருந்தாலும் ‘சசஸ்டெபிளிட்டி’ எனும் ஒரு வார்த்தையை நாம் முன்வைக்க வேண்டும். ஏனென்றால், சில பேருக்கு அந்த நோயானது எளிதில் தாக்கும். சில பேருக்கு காலதாமதம் பிடிக்கும். இது அவர்களுக்கான அதிர்ஷ்டம் என்றுதான் நாம் கூற வேண்டும். அதிர்ஷ்டம் என்றாலும், நாளையே அவர் என்ன வகையான நோயினால் பாதிக்கப்படுவார்; அவரது இறப்பு எப்படி இருக்கும் என நம்மால் கூற முடியாது. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் கூடவே, புகைப்பிடிப்போர் பலர் இறந்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. யார் இறக்காமல் இருக்கிறாரோ, அவர்தான் நமது கண்ணுக்கு புலப்படுகிறார். இப்படி உயிர் பிழைத்திருப்பார் எல்லாம் விதி விலக்குதான். விதிவிலக்குகள் என்றைக்கும் விதி ஆகாது.

படிக்க :
♦ பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு
♦ புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்

நம் கண் முன்னே இன்னொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு போகும் மாணவர்களை நாம் பார்க்கிறோம். ஆனால், விபத்தானது அன்றாடம் நிகழ்வதில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்ற விதத்தில் தான் படியில் தொங்கி கொண்டு செல்வோரில் சிலர் விழுந்து இறக்கிறார்கள். இதை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டு, நமது மகனோ அல்லது உறவினரோ படியில் தொங்கி கொண்டு போனால். ‘நீ நன்றாக தொங்கிக் கொண்டு போ’ என நாம் அறிவுரை வழங்குவோமா அல்லது அவர்களை கடினமான முறையில் கண்டிப்போமா? ஏன் இப்படி செய்கிறீர்கள் என கண்டிப்போம் அல்லவா. அதேதான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் இறக்கிறார்கள், என்பதற்காக படியில் தொங்கிக் கொண்டு போவதை நாம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது.

இந்த வகையான உரையாடல் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோலதான் மேலே கூறிய புகைபிடிப்பதற்கான உரையாடலும் ஆபத்தானது. அதிகம் பேர் புகைப்பிடிப்பதனால் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர் 20 சிகரெட் புகைக்கிறார், நான் 5 சிகரெட்தான் பிடிக்கிறேன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். உங்களது நிலைமை மோசமாக இருந்தால் 5 சிகரெட் பிடிப்பதினாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

வாரம் இரண்டு சிகரெட் மட்டுமே பிடித்து, அதன் காரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் என்றால். அவர்களை 2 அல்லது 3 மாதம் கழித்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டீர்களா? என கேட்கும்போது, அவர் இல்லை முன்பு 20 சிகரெட் பிடிப்பேன் இப்போது 10 சிகரெட்தான் பிடிக்கிறேன், எனக் கூறினால் அதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒரு கிணறை தாண்டுவதை போன்றது. நாம் 50% தாண்டினாலும் கிணற்றில்தான் விழுவோம் 90% தாண்டினாலும் கிணற்றுக்குள்தான் விழுவோம். நாம் 100% கிணற்றைத் தாண்டினால் மட்டுமே, வெளியே வர முடியும்.

முன்பை விட நான் இப்போது அதிகம் குறைத்துவிட்டேன், என்பதையெல்லாம் கூறி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இப்படிக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு, ஒருவர் இன்றே புகைபிடிப்பதை நிறுத்தி விடுகிறார் என்றால், அவர் உடனே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவாரா என்றால் இல்லை. இத்தனை காலம் புகை பிடித்ததன் விளைவுகளை அவர் சந்திக்கத்தான் வேண்டும். இந்த விளைவுகள் பின்வரும் காலங்களில் அவர்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்.

ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும், ஒரு மாதம் கழித்தும் அவருக்கு மாரடைப்பு வரலாம், இரண்டு மாதம் கழித்தும் அவருக்கு பக்கவாதம் வரலாம், அதைப்போல் ஒரு வருடம் கழித்து அவருக்கு புற்றுநோயும் ஏற்படலாம்.  புகைபிடிப்பதை நிறுத்துவதால் நமக்கு ஏற்படும் தீய விளைவுகளை, நாம் படிப்படியாகப் குறைக்கிறோம் என்பது உண்மை என்றாலும், நாம் புகை பிடிக்காதவரோடு ஒப்பிடத்தக்க, மாற்றம் அடைய ஐந்து வருடங்களாவது பிடிக்கும். சிலருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேல் கூட காலதாமதம் ஆகும். இவ்வளவு கொடுமைகளை நமது உடலில் விளைவிக்கும் வல்லமை கொண்டதுதான் இந்த புகைப்பிடிக்கும் பழக்கம்.

புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நாம் கூறினால், அவர்கள் நம்முன் வைக்கும் கேள்வி உடனடியாக கைவிட வேண்டுமா? அல்லது சிறிது சிறிதாக கைவிட வேண்டுமா? என்பதுதான். இத்தகைய உரையாடலில், பலபேர் கூறுவது உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்தக் கூடாது; அது மிகவும் ஆபத்தாகி விடும் என்பதுதான். இது உண்மைக்குப் புறம்பான ஒன்று. ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறார், அடுத்த வாரமே அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், உடனே அவர் புகை பிடிப்பதை நிறுத்தியதால்தான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனக் கூறுவார்கள். இதுதான் மிகவும் தவறான வாதம். இது சம்பந்தமான ஆய்வுகள் எதுவும் இதை நிரூபிக்கவில்லை.

படிக்க :
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
♦ அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

ஒருவர் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால்?  மேலே கூறியது போல, ஒருவர் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தக்கூடாது என்ற கூற்று உண்மையானால், இப்போது விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராயின் அவருக்கு நாங்கள் முதல் நாள் 10 சிகரெட்டும், 4 நாட்கள் கழித்து 5 சிகரெட்டு என படிப்படியாக சிகரெட்டை குறைத்துக் கொண்டே வர வேண்டும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் புகைபிடிக்கும் அறை என தனியாக ஒன்றை வைத்துப் பராமரிக்க வேண்டும். அப்படி ஒன்றை நாம் எங்கும் பார்த்ததில்லை இல்லையா. எனவேதான் கூறுகின்றோம், இது தவறான ஒன்று என்று. மேலும், புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்துவதுதான் சரியான தீர்வும் கூட.

உலகம் முழுவதிலும் புகைபிடிப்பதை நிறுத்துபவர்களில் இரண்டு வகையானவர்கள் உண்டு, ஒருவர் உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துபவர், மற்றொருவர் படிப்படியாக நிறுத்துபவர். இதில் யாருக்கு வெற்றி வீதம் அதிகம் என்றால், உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்தியவருக்குத்தான்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு அடிப்படையாக அமைவது, நம் மனதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய உறுதிதான். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. ஒன்று மனரீதியானது மற்றொன்று உடல்ரீதியானது. மனரீதியாக நாம் புகை பிடிப்பதை நிறுத்துவதில் உறுதியாக இருந்தோம் என்றால் இரண்டாவது சுலபம்தான்.

எனவே, எதனால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதை எழுதுங்கள். இந்த இந்த காரணத்தால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த போகிறேன் என்று பேப்பரில் எழுதுங்கள். எனக்கு குடும்பம் இருக்கிறது, மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள், நாளை நான் பக்கவாதம் வந்து வீழ்ந்து போனேன் என்றால் அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற காரணங்களை எழுதி உங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டி வையுங்கள், அதை நீங்கள் திரும்பத் திரும்ப பார்க்கும் போது உங்களுக்கு புகை பிடிக்கும் எண்ணம்  தோன்றாமல் இருக்கும்.

அதைப்போல் எந்தெந்த நிலைமைகளில் உங்களுக்குப் புகை பிடிக்கும் எண்ணம் தோன்றுமோ, அவற்றை கைவிடுங்கள். நண்பர்கள் சிலருடன் சேர்ந்தால் அவர்கள் புகைப்பிடிக்க அழைப்பார்கள் என்றால் அவர்களை தவிருங்கள். முடிந்தவரை அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள். சில பேர் மது அருந்தும் போது புகை பிடிப்பார்கள், எனவே மது அருந்தாதீர்கள், புகைப்பிடிப்பதையும் கைவிடுங்கள். புகைப்பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது காரிலோ எதிலும் வைக்காதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் முயற்சிதான், உங்களை புகைபிடிப்பதில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றும்.

உங்களுக்கு புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் வேறு ஒறு மாற்றை தேடுங்கள். உதாரணத்திற்கு ஒரு சூட மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலாம்; அல்லது சுவிங்கம்மை  வாயில் போட்டு மென்று கொள்ளலாம். அப்படியும் இல்லையென்றால், அந்த எண்ணம் தோன்றும்போது தனி அறையில் அமர்ந்து ஒரு பாடல் ஒன்றை பாடுங்கள்.  நீங்கள் என்றைக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துகிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குத்தான் இந்தக் துன்பம்  எல்லாம். ஒரு வாரத்தைக் கடந்தால், நீங்கள் இயல்பாக புகைபிடிப்பதில் இருந்து வெளியேறி விடுவீர்கள்.

இப்படி ஏதோ ஒரு மாற்றைத் தேடி, ஒரு வாரத்துக்கு மட்டும் நீங்கள் விடாமல் முயற்சிக்க வேண்டும். சிலபேர்  பழச்சாறு அருந்துவார்கள், சிலபேர் புகைபிடிக்கும் எண்ணம் தோன்றும்போது உணவு உண்பார்கள். இது எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது, நான் இனி புகைப்பிடிக்க மாட்டேன் என நீங்கள் ஏற்கும் மன உறுதிதான். அந்த மன உறுதி இல்லாமல், நீங்கள் எந்த வகையான நடவடிக்கை மேற் கொண்டாலும், உங்களுக்கு அது உதவியாக இருக்காது.

நிக்கோட்டின் தடவிய துணிகள் அல்லது நிகோடின் கலந்த சுயிங்கம்கள் கடையில் கிடைக்கிறது. அதை நீங்கள் வாங்கிக் கொண்டு உங்களுக்கு தேவையானவாறு உபயோகித்துக்கொள்ளலாம். நீங்கள் அதை வாயில் போட்டு ஒரு அரை மணி நேரம் மென்று கொள்ளலாம். இந்த வகை நிக்கோட்டின் பொருட்கள் கெமிக்கல் பாதிப்புகளில் இருந்து வெளியேற உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  நிக்கோட்டின் கம்கள் வாயில் போட்டு மெல்ல கூடியவை அதேபோல் நிக்கோட்டின் பேர்ச்சஸ் என்பது கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியவை. இதேபோல் எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்தி நாம் உபயோகித்துக் கொள்ளலாம். இதுவும் முயற்சி எடுத்து, இதிலும் உங்களுக்கு எந்த வகைப் உதவியும் கிடைக்கவில்லை என்றால். இதற்கென்றே தனியாக மையங்களும்,  மனோதத்துவ நிபுணர்களும் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் அணுகலாம்.

நான் மீண்டும் வலியுறுத்துவது மேற்கூறிய அனைத்தையும் விட முதன்மையானது, நான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நீங்கள் மேற்கொள்ளும் மன உறுதிதான்.

காரணம் புகை பிடிப்பதை நிறுத்துவதினால், பல்வேறு நோய்களிலிருந்து நாம் தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. மருந்துகள், கெமிக்கல்கள் என பட்டியலிட்டு அதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என பார்த்தால், அதில் முதலிடத்தைப் பிடிப்பது இந்த புகைப் பழக்கம் தான்.

அமெரிக்காவில் புகைப்பிடிப்பவர்கள் – முன்னாள் புகை பிடித்தவர்கள் என பட்டியலிட்டு பார்த்தோமேயானால், அதில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் முன்னாள் புகைப்பிடிப்பவர்கள் தான். இதை ஏன் நாம் கூறுகிறோம் என்றால், புகைப் பிடிப்பதை நிறுத்துவது அவ்வளவு கடினமான காரியம் ஒன்றும் கிடையாது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் நாம் மேற்கூறிய அமெரிக்கர்கள். அத்தகையை எண்ணிக்கையில் புகை பிடிப்பதை  நிறுத்தி உள்ளார்கள் என்றால் நம்மாலும் முடியும்.

உங்களது நண்பரை நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு  நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே நாம் எல்லோரும் சேர்ந்து, இந்த உலகத்தை புகைபிடிப்போர் இல்லாத இடமாக மாற்றுவோம். நன்றி !


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

பார்ப்பதற்கு விளையாட்டு வீரரை போல் துடிப்போடு வேலை செய்கிறார், 64 வயதான செல்வராஜ். சொந்த ஊர் திண்டிவனம்.

“20 வயசுலேயே சென்னை வந்துட்டேன். இந்த வேலைக்குப் பிறகுதான் கல்யாணம் கட்டிகிட்டேன். இன்னைக்கும் நாள் முழுக்க சளைக்காமல் உழைப்பேன், சோர்வே அண்டாது. காலையிலிருந்து 5 உறையைத் தனியாளா போட்டேன்னா பாத்துக்குங்க. வயசு பசங்கக்கூட இந்த வேலையை செய்ய முடியாது.

சுறுசுறுப்புடன் இயங்கும் திரு செல்வராஜ்

கூலின்னு பாத்தா 1,500 கிடைக்கும். காலை 7 மணிக்கு வேலைய ஆரம்பிச்சேன்னா சாயங்காலம் 7 ஆயிடும். அதன் பிறகு கை கால் கழுவிட்டு வீட்டுக்குப் போவேன். 8 கிமீ தூரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில்தான் வீடு. வாடகைதான்.

குனிஞ்சு நிமிறுற வேல. நாள் முழுதும் செய்யும்போது  இடுப்பு நோவும், கால் முட்டியும் ஒடிஞ்சு விடுவதுபோல் வலிக்கும். வீட்டுக்குப் போனா, சுடு தண்ணி வச்சு பொறுக்கக் குளிப்பேன், வலி போயிடும். திரும்பவும் பழைய மாதிரி உடம்பு உழைக்க ரெடியாயிடும். இப்படிதான் எம் பொழப்பு போவுது. வேறெந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்ல. குடிப்பது சுத்தமா பிடிக்காது. நல்லா சாப்பிடுவேன். நோய் நொடின்னு டாக்டரிடம் போனதில்ல. கை வைத்தியத்திலேயே சரிபண்ணிக்குவேன்.

சளிக்கு ஆடா தொட இலை, உடம்பு வலிக்கு சுக்கு−மிளகு சூரணம். வயித்து கடுப்பு, வாயுவுக்கு திப்பிலி. இதெல்லாம் நானே ரெடி பண்ணிக்குவேன். இப்பகூட ஸ்டாக் வச்சிருக்கேன். தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன், அதான் எனக்கு மாத்திரை.

இப்படி உழைச்சுதான் மூனு பசங்கள படிக்க வச்சேன், கல்யாணமும் செஞ்சி வச்சிட்டேன். அதுல ஒருத்தன் எம்.பி.ஏ படிச்சுட்டு நல்ல வேலையில கொழந்த குட்டியோட இருக்கான். இப்ப நானும் என் பொண்டாட்டியும் தனியாத்தான் இருக்கோம்.

வயசாயும் இப்படி உழைக்கிறியேன்னு நெறைய பேரு பொறாமைபடுற மாதிரி கேப்பாங்க. எனக்கு பெரிய கவலையேதும் இல்ல, அதுவே நான் செஞ்ச பாக்கியமா நெனக்கிறேன். காரணம் என்னன்னா, எந்த வேலய செஞ்சாலும் ரசிச்சு செய்வேன். என் வேலைன்னா அது தனியா தெரியணும், கண்ணாடி மாதிரி இருக்கணும்னு நெனப்பேன். நம்ம வேல நம்ம பேர சொல்லணும். எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை”  என்றார்.

நெஞ்சை நிமிர்த்தி கூறிய அந்த வார்த்தைகள் உடல் வலிமையால் மட்டுமல்ல, மன வலிமையாலும் தொழில்மீதுள்ள வற்றாத காதலாலும் பிறந்தவை. அதனால்தான் 64 வயது இளைஞனாக இன்னமும் தோற்றமளிக்கிறார்.

***

நாம் ஆவுடையப்பனை சந்திக்கும் போது மாலை 6.30 மணி. மீதமுள்ள சிமெண்ட் கலவையை வீணாக்காமல், நீர்விட்டு கலக்கி சிறிய உறையை (புகைப்போக்கி) தயாரித்துக் கொண்டிருக்கிறார். 60 வயதைக் கடந்த இந்தத் தொழிலாளி தூத்துக்குடி எட்டயபுரத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். சாதாரண மக்கள் வீட்டுச் சன்னலுக்கு வைக்கக்கூடிய ஜாலி, கிணற்று உரை போன்றவற்றைத் தயாரிப்பதுதான் இவரது வேலை. சிமெண்ட் போன்ற பொருட்களை பாதுகாப்பதற்காக அந்த இடத்திலேயே கட்டப்பட்ட சிறு ஓலைக் கொட்டகைதான் அவர் தங்கியிருக்கும் வீடு.

திரு ஆவுடையப்பன்

“என்ன பெரியவரே… வேலை இன்னும் முடியலையா, ஓவர்டைமா” என்று கேட்டதும்,

“இல்லை இல்லை… நமக்கு ஏது ஓவர் டைமு! வேலையிருந்தா செய்ய வேண்டியதுதானே…!” –என்று தனது தொழில் அனுபவத்தை கூறலானார்.

“30 வருசமா உறை போடுற தொழில் செய்கிறேன். தினமும் காலை அஞ்சு அஞ்சரைக்கு எழுந்திடுவேன். காலைக்கடனை முடிச்சிட்டு, நேரா டீக்கடைதான். அங்க ஒரு டீய போட்டுட்டு,  தவறாமல் பேப்பரும் படிச்சிடுவேன். அங்கிருந்து 6 மணிக்கு திரும்பினா சாயந்திரம் 6 மணி வரைக்கும் இதே வேலைதான்.

காலையிலேருந்து இரண்டு தடவ கட்டங்காப்பி போட்டு குடிச்சேன். அதான் இன்னைக்கு சாப்பாடு. சாயங்காலம் கடையில ஏதாவது சாப்பிடுவேன். வேலை வந்துட்டா வாரத்தில சில நாள் இப்படி சாப்பிடக்கூட நேரம் இருக்காது. வழக்கமா காலையில இட்லி, மதியம் பொட்டலம் சோறு. இதுக்கே தினமும் கொறைஞ்சது 100 ரூபா ஆயிடுது.

வெயில் காலத்துல மட்டும்தான் இந்த வேலை. பொரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை – மழைக்காலம் வந்துட்டா சுத்தமா வேலை இருக்காது. டீக்கே வழியில்லாத உட்கார்ந்திருப்பேன். மொதலாளிங்கதான் ஏதாவது கடன் கொடுப்பாங்க. அத வேலை வரும்போது கழிச்சுக்குவாங்க.

எம் பசங்கள்லாம் கல்யாணம் கட்டிகிணு தனியா போயிட்டாங்க. அவனுங்களும் ஏதோ வேல செஞ்சி காலத்த ஓட்டிகிட்டிருக்காங்க. என்ன மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கணுமுன்னு தனியா வந்துட்டேன். ஒடம்பு முடியாம ஊருல இருக்குற என் பொண்டாட்டிக்கு அப்பப்ப ஏதாவது பணம் அனுப்புவேன். மத்தபடி ஒண்டிகட்டதான். இந்த வேலதான் என்னோட வாழ்க்கை; இந்த வீடுதான் என்னோட உலகம்.

லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 28

பாரிசை வெற்றி கொள்ளுதல்

அ.அனிக்கின்

ஸ்காட்லாந்தின் நாடாளுமன்றம் லோ கொடுத்த வங்கி நிறுவும் திட்டத்தை நிராகரித்தது. இங்கிலாந்தின் அரசாங்கம் பத்து வருடங்களுக்கு முன்பு லோ செய்த குற்றத்துக்கு மன்னிப்பு வழங்குவதற்கு இரண்டு தடவை மறுத்தது. இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் இணைப்பதற்குரிய சட்டம் தயாரிக்கப்பட்டு வந்தபடியால் லோ மறுபடியும் ஐரோப்பாவுக்குப் போவது அவசியமாயிற்று.

அங்கே அவர் அநேகமாகச் சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டவரைப் போல வாழ்க்கை நடத்தினார். அவர் ஹாலந்து, இத்தாலி, பிளான்டர்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சில சமயம் குடும்பத்தோடும் வேறு சமயங்களில் தனியாகவும் வசித்தார்; எல்லா இடங்களிலுமே அவர் சூதாடினார்; பத்திரங்கள், நகைகள், பழைய காலத்து ஓவியங்கள் ஆகியவற்றில் வணிகச் சூதாட்டத்திலும் ஈடுபட்டார்.

மொன்டெஸ்க்யூ (Charles Montesquieu)

மொன்டெஸ்க்யூ தன்னுடைய பாரசீகத்திலிருந்து எழுதிய கடிதங்கள் என்ற புத்தகத்தில் (1721) பின்வரும் கிண்டலான கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்கின்ற பாரசீகக்காரர் கூறுவதாக அதை எழுதியிருக்கிறார். “ஐரோப்பாவில் எங்கும் சூதாட்டம் நடக்கிறது; சூதாடியாக இருப்பது ஒரு வகையான அந்தஸ்தாகும். உயர்ந்த குடிப்பிறப்பு, நேர்மை, செல்வம் ஆகியவற்றுக்குப் பதிலாக சூதாடி என்ற பட்டமே போதுமானதாக இருக்கிறது. அந்தப் பட்டத்தைக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நேர்மையுள்ள மனிதர்களின் வரிசையில் இடம் பெறுகிறார்கள்…”

இப்படிப்பட்ட வழியின் மூலமாகவே லோ சமூக அந்தஸ்தையும் செல்வத்தையும் அடைந்தார். சூதாட்டத்தில் அவருடைய திறமையைப் பற்றி அதிகமான கட்டுக்கதைகள் பரவின. அவருடைய உலையா அமைதி, நுண்ணறிவு, நினைவாற்றல், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மூலம் பெரும் வெற்றிகள் சிலவற்றை அடைந்தார். அவர் கடைசியாகப் பாரிசில் குடியேறுவது என்று முடிவு செய்த பொழுது தன்னோடு 16 லட்சம் லிவர் பணமும் கொண்டு வந்தார். ஆனால் பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வந்த சூதாட்டமும் ஊக வாணிகமும் மட்டும் அவரை ஈர்க்கவில்லை.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
♦ பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !

பிரான்சில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்த பொழுது தன்னுடைய திட்டம் அங்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகரித்தது. அங்கே அரசாங்கக் கருவூலங்கள் காலியாக இருந்தன; பெரிய அளவில் தேசியக் கடன் ஏற்பட்டிருந்தது; கடன் வசதி குறைவாக இருந்தது; பொருளாதாரத்தில் தேக்கமும் தாழ்வும் ஏற்பட்டிருந்தது. காகித நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைக் கொண்ட அரசு வங்கியை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் குறைகளை நீக்க முடியும் என்ற ஆலோசனையை லோ முன்வைத்தார்.

பதினான்காம் லுயீ

1715 செப்டெம்பர் மாதத்தில் பதினான்காம் லுயீ இறந்த பொழுது அந்தத் தருணம் வந்தது. பழைய அரசர் மரணமடைந்ததால் அவருடைய வாரிசு வயதுக்கு வரும் வரையிலும் அவர் சார்பில் ஆட்சி செய்வதற்கு அதிக வாய்ப்புப் பெற்ற ஒருவரிடம் இதற்கு முன்பே லோ தன்னுடைய கருத்தைச் சொல்லிவந்தார்.

அவர் பழைய அரசரின் மைத்துனரான ஆர்லியானைச் சேர்ந்த ஃபிலீப் கோமகன். இந்த ஸ்காட்லாந்துக்காரரின் பேச்சில் ஃபிலீப்புக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது. அரசாட்சி செய்வதற்குத் தன்னோடு போட்டியிட்டவர்களை ஒழித்து விட்டு பொறுப்பு அரசர் பதவியைக் கைப்பற்றியதும் ஃபிலீப் உடனே லோவைக் கூப்பிட்டனுப்பினார்.

ஃபிலீப்பின் ஆலோசகர்களான மேற்குடியினரும் பாரிசிலிருந்த நாடாளுமன்றத்தினரும் அவருடைய திட்டத்தை எதிர்த்தனர். அவர்கள் தீவிரமான நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சினர்; மேலும் லோ அந்நிய நாட்டைச் சேர்ந்தவராதலால் அவர் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு அதிகமாயிற்று. அரசு வங்கி என்ற கருத்தைக் கைவிட்டுத் தனியார் கூட்டுப் பங்குகளைக் கொண்ட வங்கியை ஏற்படுத்துவதற்கு லோ இணங்க நேரிட்டது. ஆனால் லோ -வின் செயல் திட்டத்தில் இது ஒரு ஏய்ப்பு நடவடிக்கையே; அந்த வங்கி ஆரம்பத்திலிருந்தே அரசுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது.

1716 -மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெனரல் வங்கி அதன் நடவடிக்கைகளின் முதல் இரண்டு வருடங்களில் மாபெரும் வெற்றியடைந்தது. திறமைமிக்க நிர்வாகியும் நுண்ணறிவுடைய வணிகரும், அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார். இந்த வங்கி வெளியிட்ட நோட்டுகள் – வெளியீட்டின் அளவை இந்தக் கட்டத்தில் லோ வெற்றிகரமாக நிர்வகித்தார் – செலாவணியில் புகுத்தப்பட்டபொழுது அவை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன; சில சமயங்களில் உலோகப் பணத்தோடு ஒப்பிடும் பொழுது, உயர் மதிப்போடு அங்கீகரிக்கப்பட்டன.

பாரிஸ் நகரத்தின் லேவாதேவிக்காரர்களோடு ஒப்பிடும் பொழுது வங்கி குறைவான வட்டிக்குக் கடன் வழங்கியதோடு, வேண்டுமென்றே தொழில் துறை, வர்த்தகத்துக்குப் பணத்தைக் கொடுத்தது , தேசிய பொருளாதாரத்தில் புது ஊக்கம் ஏற்பட்டது; இதை எல்லோருமே பார்க்க முடிந்தது.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள் : 10.08.2019, மாலை 3 மணி,
இடம் : தோழர் கு.ம.பொன்னுசாமி நினைவு அரங்கம், U.P மஹால் திருவாரூர்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை :

தோழர் தங்க. சண்முகசுந்தரம்
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

முன்னிலை :

தோழர் M. மாரிமுத்து
பட்டுக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்.

தோழர் வழக்கறிஞர். ஜெயபாண்டியன்
குடந்தை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தோழர். கிருஷ்ணமூர்த்தி
வேதை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

நேருரை :

தோழர் ஜானகி ராமன்
நன்னிலம் பாதுகாப்பு இயக்கம், நன்னிலம்.

திரு செல்வகணபதி
மு.ஊராட்சி மன்ற தலைவர், கமலாபுரம்

விளக்கவுரை :

தோழர் சுந்தரமூர்த்தி
CPI(M) மாவட்ட செயலாளர்.

தோழர் பழனி
பொது செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி.

தோழர் வடிவழகன்
வி.சி.க மாவட்ட செயலாளர் (தெற்கு) திருவாரூர்.

தோழர் V.T. செல்வம்
வி.சி.க மாவட்ட செயலாளர் (வடக்கு) திருவாரூர்.

திரு வாரை. பிரகாஷ்
திமுக நகர செயலாளர், திருவாரூர்.

திரு K.S.S. தியாக பாரி
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்.

தோழர் மோகன்
திராவிடர் கழகம், மாவட்டச் செயலாளர்.

திரு C.A. பாலு
திருவாரூர் வர்த்தக சங்க தலைவர்

சிறப்புரை :

தோழர் G. வரதராஜன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில இணை செயலாளர்.

பொறியாளர். கோ. திருநாவுக்கரசு
தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்.

தோழர் அய்யநாதன்
பத்திரிக்கையாளர்.

தோழர் காளியப்பன்
மக்கள் அதிகாரம், மாநில பொருளாளர்

காவிரி படுகையில் பூமிக்கு மேலே நெற்பயிர்… கீழே ஹைட்ரோ கார்பன்.. எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர், தொடர்புக்கு : 82207 16242.

இத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 27

டோக்ளியாட்டி

ஜூன் 30-யும் 6 மாட்டியோட்டி, நெருக்கடியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவை இரண்டிலும் ஒத்த அம்சங்கள் இருப்பதைக் காணலாம். இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட எதிர்ப்பாளர்கள் மாட்டியோட்டியும் சில பாசிஸ்டுத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். பாசிசத்தின் கீழ் அணி திரட்டப்பட்ட குட்டி பூர்ஷுவா அணிகளிடையே ஊசலாட்டங்கள் நிலவின; மாட்டியோட்டி காலத்தில் படை அணி திரட்டல் உத்தரவுகளுக்கு மக்கள் கீழ்ப்படியவில்லை: ஜூன் 30-ல் பழுப்புச் சட்டையினர் பெரும் அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால் இப்படை கலைக்கப்பட்டு, மறுசீரமைவு செய்யப்பட்டது.

இத்தாலியில் இதர பல கட்சிகள் இருந்தன, இவை அவென்டைன் கட்சிகள் 7 என அழைக்கப்பட்டன. ஊசலாட்டமான இந்தக் கட்சிகள் வாயிலாக வெகுஜனங்களின் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. இத்தகைய சில அம்சங்கள் ஜெர்மனியிலும் காணப்பட்டன. ஆனால் அவை பிரதான அம்சங்களாக இருக்கவில்லை. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியே ஜெர்மனியைப் பொறுத்தவரையில் பிரதான அம்சமாகும். பழுப்புச் சட்டை இயக்கம், ஆலைத் தொழிலாளர் அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் போன்றவை சிதைந்து போயிருந்தன.

இங்கும் நெருக்கடி இத்தாலியில் நடைபெற்றது போன்ற அதே பாதையில் சென்றது. சமூக ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும், கத்தோலிக்க உணர்ச்சியைத் தட்டியெழுப்புவதற்கும் முயற்சி நடைபெற்றது. இத்தாலியில் மாட்டியோட்டி காலத்தில் இருந்தது போன்ற ஒரு சூழ்நிலை ஜெர்மனியில் நிலவிற்று. ஆனால் ஜெர்மனியில் இது இன்னமும் தொடக்க கட்டத்திலேயே இருந்தது; இத்தாலியிலோ இது பிரதானமான கட்டத்தை அடைந்திருந்தது. ஜெர்மனியில் வெகுஜனங்கள் ஏற்கெனவே பாசிஸ்டு அமைப்புகளுக்குள் வந்துவிட்டனர்; இத்தாலியிலோ பெரும் பகுதியினர் பழைய அமைப்புகளுக்கு வெளியே இருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் புதிய அமைப்புகளுக்குள் கொண்டுவரப்படவில்லை.

(அர்ப்பினதி) leandro-arpinati .

இத்தாலியில் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்டத்திலிருந்து நகர்ந்து இன்றைய கட்டத்துக்கு வருவோமானால் வெகுஜனங்களின் அதிருப்தி தீவிரமடைந்து, பாசிஸ்டு அமைப்புகளில் உட்பகைப் போராட்டங்களாக அது பிரதிபலிப்பதைக் காணலாம். அங்கு எதிர்ப்பு மேன்மேலும் வலுத்து வருகிறது; அது முன்போன்ற வடிவத்தில் இல்லை. மாறாக, பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது.

இது சம்பந்தமாக, அண்மைய அர்ப்பினதி விவகாரத்தை 8 எடுத்துக் கொள்வோம். இந்த எதிர்ப்பு இயக்கம் முந்தைய எதிர்ப்பு இயக்கங்களை விடவும் தீவிரமானது. பாசிஸ்டுக் கட்சியின் வேலைத் திட்டங்களிலிருந்து மாறுபட்ட அரசாங்க வேலைத் திட்டங்களை எவரும் – சாலாவோ அல்லது கியாம்பாலியோ – இதுவரை முன்வைக்கவில்லை. எதிர்ப்பு இயக்கம் மாகாணக் கட்சி அமைப்புகளுக்குள்ளேயேதான் நடைபெற்று வருகிறது. ஆனால் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு அர்ப்பினதி ஒரு வேறுபட்ட திட்டத்தை முன்வைக்கிறார். பாசிஸ்டு அமைப்புகளுக்குள் நடைபெற்றுவரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டம் இது. இன்று இந்தத் தலைவர்கள் வெகுஜனங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால் 1924-ம் ஆண்டிலோ அல்லது 1925-ம் ஆண்டிலோ பழைய தலைவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த நெருக்கடிகள் இன்று ஆழமான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

இத்தாலியில் பாசிசத்துக்கு அடித்தளமாக, கொத்தளமாக விளங்கிய எமிலியாவைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவாக்களின் அதிருப்தியை அர்ப்பினதி பிரதிபலிக்கிறார். குத்தகை தொகை அதிகரிப்பு, சிறு நிலவுடைமை சிதைவு, பண்ணைப் பொருள்களின் விலைகள் வீழ்ச்சி, பெரிய நிலச்சுவான்தார்களின் போட்டி முதலியவை குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர பூர்ஷுவாக்களின் அதிருப்திக்கு காரணம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

6. 1934 ஜூன் 30ல் நாஜிக்கட்சியில் இருந்த தனது எதிரிகளை ஹிட்லர் அழித்தார். இந்த ரத்தக் களறியின் பிரதான பலிகடாக்கள் எஸ்.ஏ.யின் தலைவர்கள் எர்னஸ்ட் ரோஹிமும் மற்றவர்களும்.

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti)

7. அவென்டைன் கட்சிகள் : கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

ரோம் நகருக்கு வெளியே வீசப்பட்டிருந்த கியாசோமோ மாட்டியோட்டி உடலை சுமந்து வரும் போலீசார்.

எனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவியிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் – நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.

படிக்க:
#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !

வாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.

8. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !

7

ந்துத்துவ சாதி-மத வெறியை ஊட்டி வட மாநிலங்களில் வெகு விரைவாக வளர்ந்து விட்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, தமிழகத்தில் மட்டும் இன்னும் வளரமுடியவில்லை. அதற்காக மக்களிடம் இருக்கும் இயல்பான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை தனது பக்கம் இழுத்துக் கொள்ள கோவிலை ஒரு களமாகப் பயன்படுத்த முடிவு செய்த சங்க பரிவாரத்திற்கு, தமிழகத்தில் அரசு சார்பில் இந்து அறநிலையத் துறையின் கையில் கோவில்கள் இருப்பது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது. அதனை முறியடிக்க “கோவில்களை மீட்போம்” என்ற பெயரில் ஒரு இயக்கம் எடுத்து நடத்தி வருகிறது. இது ஒரு சதித்திட்டமென்பது ஊரறியும்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென தாமிரபரணி புஷ்கரம் என்று 160 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழா என இல்லாத ஒன்றை களமிறக்கியது சங்கபரிவாரம். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, அத்தி வரதரைக் களமிறக்கினார்கள். இந்திய அளவில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து, அத்திவரதர் நிகழ்வு மூலம் தமிழக பக்தர்களையும் தன் பக்கம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடுத்ததாக, 24-07-2019 அன்று முதல் வைகைப் பெருவிழா என்ற பெயரில், சாமியார்கள் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளது, ஆர்.எஸ்.எஸ்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது, இசுலாமியர்களும், கிருத்தவர்களும் அவ்விழாவை தமது சொந்த ஊரின் விழாவாகக் கொண்டாடுவதும், கோரிப்பாளையம் தர்காவின் சந்தனக் கூடு திருவிழாவில் இந்துக்கள் கலந்து கொள்வதும் மதுரை நகரின் இயல்பான மரபு.

அந்த மரபைக் காப்பாற்ற, சங்க பரிவாரத்தின் சதிகளை முறியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்குமாறு செய்துள்ளனர் தமிழ் மக்கள். அதன் தொகுப்பை கீழே தருகிறோம்.

*****

தாமிரபரணியைத் தொடா்ந்து வைகை பெரு விழா என்ற பெயாில் அகில பாரத துறவியா்கள் சங்கம் ஜுலை 12 முதல் ஆகஸ்டு 25 வரை மதுரையில் மாநாடு நடத்த உள்ளது.

வைகை நதியின் பெயரில் மதவாத அரசியலை நுழைத்து மதுரை மக்களை பிளவுபடுத்தும் முயற்சி இது. நதி என்பது மக்களின் சொத்து. அதை மத அடிப்படைவாதிகள் துறவியா்கள், ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது.

ஏற்கனவே வைகை சுற்று சூழல் சீா்கேட்டால் மாசுபட்டு நாசமாகிக் கிடக்கையில், அகில பாரத துறவியா்கள் சங்கம் நடத்தும் மாநாடு அதை மேலும் நாசமாக்கவே உதவும். அதோடு அது மதசாா்பின்மைக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கும் எதிரானது என்பதால் துறவியா்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது, என்று மக்கள் உாிமை பாதுகாப்புமையம், மக்கள் சிவில் உாிமைக்கழகம், திராவிடர் கழகம், திமுக வழக்கறிஞா் அணி, சமநீதி வழக்கறிஞா்கள் சங்கம், உள்ளிட்ட பல அமைப்பினரும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ஆனந்த் :

எலேய் மதுரக்காரன்டான்னு சவுண்டு வுட்டா பத்தாதுடே. இந்த அரடவுசர் பயலுக உள்ள வரவே உடாம போராடுங்கடே, என் மதுர மக்கா. மதுர வீரன் சாமியும், கருப்பனும், முருகனும் சூலாயியும், முனியாண்டியும் அய்யனாரும் ஆத்தா மீனாட்சியும் நம்மள காரித்துப்புவாங்கடே. #SaveVAIGAIfromRSS

பாண்டியன் பெரியையா பொறியாளன் :

கங்கை நதியை மாசு படுத்தியவர்கள் இப்போது வைகை நோக்கி வருகிறார்கள். தமிழ் நதியால் பயிர் விளையும். காவி நதியால் உயிர் பிரியும். எச்சரிக்கை தமிழர்களே! #SaveVAIGAIfromRSS

ரவிசங்கர் :

சமத்துவ விழாவான மதுரை சித்திரை திருவிழாவை சனாதன விழாவாக மாற்றும் முயற்சியில் வைகை மாதா விழா, வைகை பெருவிழா என்னும் புது வடிவம் கொடுத்து RSS காவிகும்பல் மாற்ற முயற்சிகிறது. #SaveVAIGAIfromRSS

வெங்கட் :

RSS நடத்தும் வைகை பெருவிழாவிற்கு தயவு செய்து அனுமதி கொடுக்காதீர்கள், ஏனென்றால் இவர்கள் கங்கையை சுத்தமா வச்சிக்கிட்ட லட்சணம் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தெரியும். #SaveVAIGAIfromRSS

கிசான் :

வைகையில் மட்டுமல்ல, இது காவிரி, தாமிரபரணி ஆறுகளிலும் நடக்கிறது. ஆகையால அனைத்து நதிகளையும் ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து காப்பாற்றுங்கள் ! #SaveVAIGAIfromRSS

உதயகுமார்:

இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. அதை மதத்தின் பெயரால் கைப்பற்றி மூடத்தனத்தைப் பரப்பி மக்களை காட்டுமிராண்டிகளாக மாற்றும் முயற்சியில் RSS இறங்கியிருக்கிறது.#SaveVAIGAIfromRSS #savevaigai

இங்கர்சால் சே :

செல்லூர் ராஜீ போன்ற விஞ்ஞானிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட மதுரை சங்கீகளினால் அசிக்கப்பட போகிறது.. #SaveVAIGAIfromRSS

மதுரை மன்னன்:

இதுதான் வைகை… இதுதான் மதுரை… இதுதான் தமிழ்நாடு…. பூஜை பண்றேன்னு கண்ட குப்பைகளையும் கொண்டுவந்து கொட்டாம இருந்தாலே போதும் #SaveVaigai

தமிழை விரும்பும் தேவன் :

ஐயர்வால்…. வந்தோமா தட்ல விழுந்த அஞ்சு… பத்த பொறுக்குனோமானு போகனும்….. 40 வருசத்துக்கு முன்னாடி இந்து இஸ்லாமியர் வேறுபாடே கிடையாது… உங்க பரதேசி கூட்டம் வந்த பின்னாடி தான் பிரிச்சு வச்சு விளையாட பாக்குறீங்க….. இதெல்லாம் புரியும் போது தெரியும்… #SaveVAIGAIfromRSS

கவிதா :

வைகை எங்களது (தமிழர்களின்) கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளம். நாங்கள் இந்தக் காவிக் கும்பல் எங்களது கலாச்சாரத்தை சீரழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS

ராஜ் :

தமிழர்கள் பாசிசத்திற்கும், சங்கியிசத்திற்கும் எதிரானாவர்கள். நாங்கள் ஒருபோதும் இந்துத்துவக் கும்பல் எங்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்கமாட்டோம். கங்கை ஆற்றை காவிகள் அசுத்தப்படுத்தியதிப் போல எங்கள் (வைகை) ஆற்றை அவர்கள் அசுத்தப்படுத்த அனுமதியோம். #SaveVAIGAIfromRSS

தமிழ்நந்தி :

சிவனாக நினைத்து கொண்டு மண்டை ஓடு எலும்பு துண்டுகளோடு சுற்றும் அகோரி! இதுவும் ஒரு வித மூளை பிசகின உதாரணம். கடைசி வரை சிவனையும் காணமுடியாத ஊனக் கண்ணோடு செத்துப் போவது இந்த அகோரிகள் இயல்பு! வடமாநிலங்களுக்கே உரிய சிவன் சாபம் இது! #SaveVAIGAIfromRSS

தமிழ்பித்தன் :

அழகர் இறங்கும் ஆற்றில் அகோரிகளுக்கு என்ன வேலை???? #GetOutRSs #SaveVAIGAIfromRSS

பிரபாகரன் குருசாமி :

ஆடிப்பெருக்கு எந்த ஆற்றுக்கு தொடர்புகொண்ட திருவிழா என்றுகூட தெரியாத இந்த RSS தீவிரவாதிகளிடம் இருந்து வைகை நதியையும் தமிழ் பண்பாட்டையும்காப்பாற்ற வேண்டும். #SaveVAIGAIfromRSS

ஸ்டாலின் ஈ.பி

தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத காவிகள் நம் தமிழரின் தொன்மையான சொத்துக்களுள் ஒன்றான வைகையை மாசுபடுத்த அனுமதிக்கலாமா? அவர்கள் காவி வர்ணம் பூச நம் வைகை என்ன வாரனாசியா? வடக்கானே உங்கள் கலாச்சாரம் உங்களோடு. எங்கள் வைகை எங்களோடு. ஆதலால் நீ ஓடு #SaveVAIGAIfromRSS

கவிதா :

நாங்கள் வைகையை இப்படிக் காண விரும்பவில்லை. #SaveVAIGAIfromRSS

அஷோக் குமார் தவமணி :

காலங்காலமாக, தமிழர்கள் தங்களது குலதெய்வங்களுக்கு கால்நடைகளை பலி கொடுத்து, தங்களது குல வாரிசுகளுக்கு அதனைக் கறி செய்து பகிர்ந்து உண்பர். தற்போது இந்த வழக்கம் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பலால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது., நாம் அவர்களை வைகைத் திருவிழாவை நடத்த அனுமதித்தோம் என்றால், அவர்கள் நாளை இவ்வழக்கத்தை (கெடா வெட்டும்) நிறுத்தச் சொல்லி நமக்கு உத்தரவிடுவார்கள். #SaveVAIGAIfromRSS

விவேகானந்தன் :

காவி பாஜக வைகை நதியை தேசிய நிர்க் கொள்கையின் கீழ் தனியார்மயப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன் மீதான விவாதத்தைத் திசை திருப்ப, தற்போது காவிக் கும்பல் வைகை திருவிழாவை நடத்தவிருக்கிறது.#SaveVAIGAIfromRSS

அருண் காளிராஜா :

கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தைக் குறித்து நினைவுபடுத்திப் பாருங்கள். நமது அன்பிற்குரிய சுயமோகி மோடி தனது பெயர் பொறித்த உடுப்பை ஏலத்தில் விட்டு அத்தொகையையும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு தானமளித்தார். ஏதாவது ஒரு சங்கியாவது தைரியமிருந்தால், இன்றுவரைக்கு என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது எனச் சொல்லட்டும். பின்னர் வைகை திருவிழாவுக்கு வரட்டும்.

வேடிக்கை பார்ப்பவன் :

இந்துத்துவக் குண்டர்களே ! தமிழ் மண்ணை விட்டு வெளியேறுங்கள்! #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

மதுரை மதச்சார்பின்மையின் மண். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா அமைதியான முறையில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைதியை அழித்து விநாயகர் ஊர்வலத்தைப் போல நிலைமையை மோசமாக்க நினைக்கிறது. #SaveVAIGAIfromRSS

பிரபு விஜயன் :

வைகை ஆறு மதச்சார்பின்மையின் அடையாளம். வைகையில் தமிழ்ச் சமூகத்தால் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஒருங்கிணைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் தற்போது மதக் கலவரங்களைத் தூண்டும் நோக்குடன் வைகை பெருவிழா மற்றும் முட்டாள்தனமான பிற பசுப் பாதுகாப்பு மாநாடுகள் நடத்தவிருக்கிறது. #SaveVAIGAIfromRSS

ஸ்ரீசந்தர் :

ஆர்.எஸ்.எஸ். கும்பல் கங்கை நதியை அழித்தது போல நமது வைகை நதியையும் நமது தமிழ் பாரம்பரியத்தையும், வைகைப் பெருவிழா என்னும் பெயரில் அழிக்கத் திட்டமிடுகிறது. #SaveVAIGAIfromRSS

சபரி ராம்:

நியூட்ரினோ திட்டத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமல்படுத்துவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் வைகையின் ஊற்றுமூலத்தை அழித்துவிட்டு, இங்கு வைகைப் பெருவிழாவை மதுரையில் நடத்தவிருக்கிறது. தமிழர்களாகிய நாங்கள், வைகையை காவிமயமாக்குவதன் மூலம் இப்பிரச்சினையை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் போடும் இந்த தூண்டிலில் நாங்கள் சிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

வைகை ஆற்றங்கரையில் இருக்கும் 2500 ஆண்டு பழமை வாய்ந்த கீழடி அகழ்வாய்வில் எந்த ஒரு மதத்தின் குறியீடுகளும், மதம் சம்பந்தப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை. தங்களது சித்தாந்தத்தை தமிழகத்தில் நிலைநாட்ட முடியாத கையறுநிலையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கடுப்படைந்திருக்கிறது. அவர்கள் தற்போது அதனை அழிக்க வருகிறார்கள். #SaveVAIGAIfromRSS

சாமானியனின் சவுக்கு:

#SaveVAIGAIfromRSS மதுரை அழகர் மீனாட்சிக்கு போட்டியாக காவிக்கும்பல்களின் வைகைமாதாவா..? விரட்டியடிப்போம் வைகைகரையிலிருந்து காவிகளை.. #SaveVAIGAIfromRSS

பிரபு :

ஜுனிதா :

என்னடா இதெல்லாம்? வைகையை காக்க நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பேசவோ இல்ல வைகை தாய் பெற்றெடுத்த கீழடி நாகரிகத்தை பற்றி பேசவோ ஒரு நிகழ்வு கூட நிகழ்ச்சி நிரல்ல காணோம். #savevaigaifromRSS

அப்துல் பஷீத் :

நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்து வைகை நீர்த்தேக்கத்தை உடைக்கத் துடிக்கும் காவி கும்பல் வைகைக்கு விழா நடத்துகிறதாம். தமிழரின் வரலாற்றுப் பெருவிழாவான சித்திரைத் திருவிழாவை, வைகையின் வரலாற்றை காவிமயப்படுத்த 12 நாள் வைகைப் பெருவிழாவை காவிகள் துவக்கியுள்ளனர். #SaveVAIGAIfromRSS

நா. தனசேகரன் :

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழிக்கத் துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.! வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS

அசோக்குமார் தவமணி :

வைகை நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்த நாகரீகம். இவ்விரண்டும் திராவிட நாகரீங்களாக அடையாளங் காணப்பட்டதை ஆரிய இந்துத்துவவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். வைகை நாகரீகத்தை ஒழித்துக்கட்டி பண்டைய தமிழ் வரலாற்றை திருப்பி எழுத மதுரைக்கு வருகிறது. #SaveVAIGAIfromRSS

பிரபு :

அரவிந்தன் :

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழித்தாள துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.!வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS

ஸ்ரீதர் :

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு அத்தி வரதரை போல் மறைந்து இருந்த சங்கி கூட்டத்துக்கு இப்போ வைகைல என்ன வேலை?? #SaveVaigaiFromRSS

ஹைதம் :

அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டனர். இப்போது வைகையைக் குறி வைக்கின்றனர். சங்கிகள் நமது நதிகளை அழித்துவிட அனுமதிக்காதீர்கள்.. #SaveVAIGAIfromRSS

இசை :

வைகைக்கும் இந்த மதவாத காட்டுமிராண்டி கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு தமிழகத்தை RSS தீவிரவாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் முதலமைச்சர் @EPSTamilNadu தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள எத்தனை பேக்கரி டீலிங்குகள்! #SaveVAIGAIfromRSS

சாமானியனின் சவுக்கு :

இந்த வருடம் இல்லை என்றாலும் இன்னும் இரண்டு வருடங்களில் வைகை நதியை இந்த கும்பல் ஆக்கிரமிக்கும் இதை கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு கொடுறமாக இருக்கிறது என்று இதை செய்லபடுத்த தான் வைகை பெருவிழா என இந்துதுவ விழா நடத்துகிறது #SaveVaigaiFromRSS

ஜெய்குமார் :

வைகைப் பெருவிழாவா? வைகைக்கு மூடுவிழாவா? நேற்று தாமிரபரணியில் புஷ்கரம்.. இன்று வைகைக்கு பெருவிழாவாம். தமிழர்களின் வரலாற்றை காவிகும்பல் திருட நினைக்கிறது. முறியடிப்போம். #SaveVAIGAIfromRSS

வெங்கட் :

மதுரைக்கார இஸ்லாமியரும் கூடி சேர்ந்து கொண்டாடுற அழகர் திருவிழாதான் ‘வைகை பெருவிழா’. வயித்துலயிருந்த இஸ்லாமிய சிசுவயும் வயித்தக் கிழிச்சு கொன்ன வடநாட்டு காட்டுமிராண்டி சாமியார் கூட்டம் நடத்தனும் நினைக்குறது ‘காட்டுமிராண்டி பெருவிழா’. #SaveVAIGAIfromRSS

மனோ கிட்டு:

வைகையை அழிக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதிகொடுத்துவிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலம் வைகையை குறுக்கி இருபுறமும் சாலை அமைக்கவிட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் கும்பல் வைகைப்பெருவிழா கொண்டாடுவது நாடகமே.. #savevaigaifromRSS

எரிசினக் கொற்றவை :

காவிரி அனில் அகர்வாலுக்கு, தாமிரபரணி கொக்ககோலாவிற்கு, வகையை யாருக்கு விற்க வைகை பெருவிழான்னு ஏமாத்துற? #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

பிரிட்டிஷாரின் காலை நக்கியவர்களே (சங்கிகளே), தமிழ்தேசத்தை விட்டு விலகிநில்லுங்கள்… #SaveVAIGAIfromRSS

சரண் குமார் :

காவிக் கும்பல் மிகச் சிறப்பாக தனது திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. தமிழக அரசும் அதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது. முதலில் தாமிரபரணி புஷ்கரம், அடுத்து அத்திவரதர், தற்போது வைகைப் பெருவிழா. #SaveVAIGAIfromRSS

கார்த்திக் :

இந்துத்துவக் குண்டர்களே, தமிழ் மண்ணை விட்டு வெளியேருங்கள் ! #SaveVAIGAIfromRSS

உங்கள் கார்த்திக் :

வைகை என் ஆறு.. அந்தியனே வெளியேறு.. #SaveVaigaiFromRSS


தொகுப்பு : நந்தன்

நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

ரலாற்று காலம் தொட்டு அடர்ந்த வனங்களிலும், உயர்ந்த மலைமுகடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களுக்கு வன நிலங்களின் மீது உரிமை அளிக்கும் சட்டம் 2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நிறைவேற்றப் பட்டது. அப்படியானால் இதுகாறும் வனம் தொடர்பான சட்டங்களே இல்லை என்ற அர்த்தமல்ல.

1846-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முதலாவது வனச் சட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்நிய ஆட்சியின் போதும் அதனை தொடர்ந்து நாட்டின் விடுதலைக்கு பின் மீண்டும் பல வனச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தபோதிலும் பாரம்பரியமான பழங்குடி மக்களை வனநிலங்களிலிருந்து அந்நியப்படுத்துவதில் மட்டும் வேறுபாடுகளே இல்லை.

நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும். இக்காரியத்தை தான் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து வனச்சட்டங்களும் அட்சரம் பிசகாமல் செய்து வந்தன.

தலைமுறை தலைமுறையாக வனங்களோடு வாழ்ந்த ஆதிவாசி மக்கள் மீது அதிரடியான தாக்குதல்களைத் தொடுத்தன. சொந்த மண்ணில் இவர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். ஆடு, மாடுகள், கோழிகள் வளர்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளில் பச்சைமலையில் ஒரு ஆதிவாசி குடும்பத்துக்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதுடன் குழியையும் பறித்த கதையாக இம்மக்களது நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்த வனத்துறை காடுகள் அழிப்பு, மரங்களை வெட்டுவது, சந்தன மரக்கடத்தல் என பொய்யான காரணங்களை இட்டுக்கட்டி, இம்மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் – புனையப்பட்ட பொய்வழக்குகள் ஏராளம்! ஏராளம்! இதன் உச்சகட்டமே சித்தேரி மலையில் வாச்சாத்தி கிராம மக்கள் மீது இவர்கள் நடத்திய பேய் நர்த்தனம். அதுபோலவே, வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களை நீதிபதி சதாசிவா விசாரணை கமிஷன் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும், உடையையும் தவிரத் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடிச் சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர். மன்னர்கள் ஆண்ட காலத்திலும் வரிவசூல் செய்தார்களே தவிர, அம்மக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கவில்லை

1757 ஜனவரி 2 கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் ராபர்ட் கிளைவ் வங்கத்தை கைப்பற்றிய நாள். படிப்படியாக இங்கிலாந்தின் காலனியாக இந்தியா மாற்றப்பட்டது. இந்த நிலையில், “இங்கிலாந்து மன்னரின் கப்பற்படைக்கு தேவையான வலுமிக்க தேக்கு மரங்களை இந்தியாவிருந்து அனுப்ப வாய்ப்புள்ளதா” என ஆராயுமாறு 1805-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கட்டளையிட்டது. 1806-ல் காலனிய அரசில் முதன்முறையாக கேப்டன் வாட்சன் எனும் போலீஸ் அதிகாரி வனத்துறை அதிகாரியாக பெரும் அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டான். 1854-ம் ஆண்டு அரசின் முதல் வனக்கொள்கை அறிவிக்கப்பட்டது. 1855-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந் தேதி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசி பிரபுவால் விஞ்ஞான பூர்வமாக வனத்தை நிர்வகிப்பதற்கான சட்டம் (Charter) வெளியிடப்பட்டது.

படிக்க:
நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்
♦ மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

பழங்குடி மக்கள் காட்டைத் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு, காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1854-ம் ஆண்டு வனக்கொள்கை அதை வெளிப்படுத்தியது. சென்னை ராஜதானியில் 1856-ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865 மே 1-ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் மரங்கள் அடர்ந்த பகுதியையும் அல்லது புதர் மண்டிய பகுதியையும் வனப்பகுதியாக அறிவித்து அரசுக்கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வழிவகை செய்தது.

காலனிய அரசு, பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். எந்த அளவுக்கு இதில் அரசு ஆர்வம் காட்டியது என்பதற்கு, 1885-ல் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 10,789 ஏக்கர் நிலப்பரப்பில் 331 காப்பித்தோட்டங்கள் இருந்தன என்றால் நாடு முழுவதும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

காட்டையே தங்களது தாய்வீடாகவும், கடவுளாகவும் பாவித்த மக்கள், காடுகள் தங்கள் கண் முன்னே வெட்டி அழிக்கப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டனர். சட்டமும், நிர்வாக ஏற்பாடுகளும், வனத்துறை அதிகாரிகளும் அம்மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

வனத்துறையினரின் கொடுமைகள் – வனத்துறை அதிகாரிகளின் தயவிலேதான் வனத்தினுள் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு கிட்டதட்ட அடிமை நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

காயப்பட்ட மனிதன் கிளர்ந்தெழுவது இயற்கை என்பதற்கேற்ப – ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஆதிவாசி மக்கள் வெடித்தெழுவதும் – இழந்த நிலங்களையும் – வாழ்க்கையையும் மீட்பதும் நிச்சயம்.

ஆதிவாசிகள் தங்களின் நில உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், பிரிட்டிஷாரின் ஏஜெண்டுகளாக இருந்து வரிவசூலில் ஈடுபட்ட ஜமீன்தார், ஜாகீர்தார்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

செங்கொடி இயக்கத்தலைவர்களின் தலைமையில் மகாராஷ்ட்ராவில் ‘வார்லிகள்’ எழுச்சி, மேற்கு வங்கத்தில் சந்தால் எழுச்சி, திரிபுராவில் மன்னர்களை எதிர்த்து எழுச்சி, பீகாரில் பிர்சா முண்டா தலைமையில் பெரும் போராட்டம், தமிழகத்தில் ஜமீன்தார் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம், வனத்துறை அதிகாரிகளின் அத்து மீறல்களை எதிர்த்தும், வரிக்கொடுமைக் கெதிராகவும், கந்துவட்டிக் கொடுமைக்கெதிராகவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. (நூலிலிருந்து…)

நூல் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

ஆசிரியர் : பெ. சண்முகம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 15.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 11

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பின்வரும் சுவாரசியமான நிகழ்ச்சி நடைபெற்றது. ஜார்ஜிய மொழிப் பாட வேளையில் கடைசி பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்தன. இது மூன்றாவது பாடவேளையாக இருந்தது. நாங்கள் வார்த்தைகளின் பகுப்பாய்வில் மூழ்கியிருந்தோம். நான் குழந்தைகளை நோக்கி ஒலிகளை “விட்டெறிய”, அவர்கள் “பிடித்தனர்”. திடீரெனப் பார்த்தால் வோவா கண்களை மூடியபடி ஒலிகளை “பிடிக்காமல்” மேசையில் சாய்ந்திருந்தான்.

“அவன் தூங்கி விட்டான்!” என்று வோவாவைச் சுட்டிக் காட்டியபடி தாம்ரிக்கோ கூறினாள்.

குழந்தைகள் சிரித்தனர். சத்தம் போட வேண்டாமெனக் குழந்தைகளிடம் சொல்லி விட்டு நான் வோவாவை நெருங்கினேன். அவன் கவலையின்றி உறங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் முன் வரை அவன் சுறுசுறுப்பாகச் சிரித்துக் கொண்டிருந்தான், மகிழ்ச்சியோடிருந்தான். மகிழ்ச்சியாலும் களைப்பேற்படலாம், சிறிதே கண்ணயர விருப்பமேற்படும். நான் என்ன செய்வது? சிறுவனை எழுப்பி, பாடவேளையில் தூங்கக் கூடாது என்று விளக்குவதா?

“குழந்தைகளே, ஒருவன் தூங்கும் போது இடையூறு செய்யக் கூடாது, ஏனெனில் தூக்கத்தின் போது மனிதன் தான் இழந்த சக்திகளை மீட்கிறான். எனவே, வோவாவை எழுப்பிவிடாதபடி அமைதியாகப் பாடம் படிப்போம் வாருங்கள்!” என்றேன் நான்.

நான் குரலைத் தாழ்த்தியபடி அவர்களை நோக்கி ஒலியலைகளை விட்டெறியத் துவங்கினேன்.

குழந்தைகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அவர்கள் திடீரெனப் பெரும் அக்கறையுள்ளவர்களாக, மென்மையானவர்களாக மாறினர். ஒவ்வொருமுறை பதில் சொன்ன பிறகும், எங்கே வோவாவை எழுப்பி விட்டோமோ என்று அவனைப் பார்த்தார்கள். இடைவேளை வந்ததும் அரவமின்றி மெதுவாகத் தாழ்வாரத்திற்கு வந்தார்கள், யார் நாற்காலியை நகர்த்தினாலும் உரக்கப் பேசினாலும் அவர்களைக் கண்டிப்போடு பார்த்தனர்.

சில சமயங்களில் குழந்தைகள் களைத்துள்ளதைப் பார்த்ததும் இவர்களில் சிலர் கொட்டாவி விட்டனர், சோம்பல் முறித்தனர்- நான் அவர்களுக்கு தலையைக் குனிந்து, வசதியாக உட்காரும்படியும் கண்களை மூடிக் கொண்டு கதை கேட்கும்படியும் முன்மொழிவேன். கதையை மிக மெதுவான, சாந்தப்படுத்தும் குரலில் நான் சொல்வேன். முழு நிசப்தம் நிலவும், குழந்தைகள் ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்தபடிக் கண்ணயர்வார்கள். இப்படிப்பட்ட ஐந்து நிமிட ஓய்விற்குப் பின் அவர்கள் இழந்த சக்தியை விரைவாக மீட்டதையும் பின் முன் போன்றே மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பாடங்களைத் தொடர்ந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த அனுபவம் எதைக் காட்டுகிறது? ஆறு வயதுக் குழந்தைகள் பள்ளி வாழ்க்கைக்குப் பழகுவது கடினமானது என்பதை ஒருவேளை இது காட்டுகிறதோ? இவர்களுடைய மூளை அறிவைப் பெறத் தயார். ஆனால் உட்கார்ந்த நிலையில் உடல் பலம் செலவாவதால் இவற்றை மீட்க விசேஷ வழிகள் தேவைப்படுகின்றன. மினி-பாடவேளைகள், வெவ்வேறுவிதமான வகுப்பு, பள்ளி இடைவேளைகள் போன்றவை குழந்தைகளின் களைப்பை அகற்றி இது ஏற்படாது செய்யும் வழிகளாகத்தான் என் நடைமுறையில் வந்தன.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
♦ இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

விரைவில் மினி-பாடவேளைகள் தேவையிருக்காது என்று எண்ணுகிறேன். இவை பள்ளிக் கல்விக்குப் பழக்கப்படும் வாய்ப்பை குழந்தைகளுக்கு அளித்தன, பாடவேளையின் நேரத்தை மதிப்பிட எனக்குச் சொல்லித் தந்தன.

மனச்சாட்சியைத் தட்டியெழுப்பு

பத்து நிமிடப் பள்ளி இடைவேளைகளின் போது எனக்கு எப்போதும் வேலையிருக்கும். இந்தச் சமயங்களில் நான் அடுத்த பாடவேளைக்குத் தேவையானவற்றைக் கரும் பலகையில் எழுதுவேன், உதவி செய்யும் குழந்தைகளுடன் சேர்ந்து பாடத்திற்குத் தேவையானவற்றை எல்லா பெஞ்சுகளுக்கும் பகிர்ந்து அளிப்பேன், மீன் தொட்டியையும் பூந்தொட்டிகளையும் பராமரிக்க குழந்தைகளுக்கு உதவுவேன்.

ஆனால் இதைவிட முக்கியமான ஒரு வேலை உண்டு. இதன் உட்பொருளை முன் கூட்டியே கணிக்க முடியாது. அதாவது குழந்தைகளுக்கு நடுவராக இருக்க வேண்டும், அவர்களிடையே தோன்றும் பூசல்களைத் தீர்க்க வேண்டும், அவர்களோடு கலந்து பழக வேண்டும், உறவு முறைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

இதோ இப்போது இதற்கு அவசியமேற்பட்டுள்ளது. இலிக்கோ, கோச்சா, எலேனா, நீக்கா ஆகியோர் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

“நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள்?”

“இவை கடினமானவையா?”

“இவை என்ன என்று எனக்குத் தெரியும்.”

இலிக்கோவும் கோச்சாவும் சிவிங்கத்தையும் மிட்டாயையும் பகிர்ந்து கொண்டனர். இலிக்கோ மிட்டாயை உடனே வாயில் போட்டுக் கொண்டான், கோச்சா தன் சிவிங்கத்தைச் சிறுமிகளுடன் பகிர்ந்தபடி எனக்கும் நீட்டினான்.

“நன்றி!” என்றபடியே சிவிங்கத்தை வாங்கி மென்றேன். “மிகச் சுவையாக உள்ளது!”

“மிட்டாயும் சுவையாக உள்ளது!” என்கிறான் இலிக்கோ. “உங்களுக்கு வேண்டுமா?”

“நன்றி, வேண்டாம், என்னிடம் சிவிங்கம் உள்ளது.”

“ஆனால் மிட்டாய் சிறந்தது!” என்கிறான் இலிக்கோ, வாயிலிருந்து எஞ்சிய , துண்டை எடுத்து என் வாயருகே நீட்டுகிறான். “சாப்பிட்டுப் பாருங்கள்!” நான் விருப்பத்தோடு வாயைத் திறக்கிறேன்.

“நன்றி, இலிக்கோ! உண்மையிலேயே சுவையான சாக்லேட்.”

இது சுகாதாரக் கேடானது என்று சொல்லாதீர்கள்! இது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வளர்ப்புப் பணிக்கு ஏற்றது: குழந்தைகள் தமக்கு விருப்பமான தின்பண்டங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள, என்னோடு நட்பு கொள்ள முயல்கின்றனர், இதற்காக ரொட்டித் துண்டை, திராட்சைக் குலையை, இன்ன பிறவற்றை நீட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன் சூரிக்கோ தாழ்வாரத்தில் என் கையில் ஒரு சாக்லேட்டைத் திணித்தான்.

“உனக்கு இருக்கிறதா?” என்றேன் நான்.

“எனக்கு வேண்டாம், இது உங்களுக்கு.”

சாக்லேட் வழவழவென்று இருந்தது. எனக்குத் தருவதா, தானே சாப்பிடுவதா என்று இதை கையில் வைத்தபடி அவன் நீண்ட நேரம் யோசித்தது எனக்கு நன்கு புரிந்தது.

“வா, பகிர்ந்து கொள்ளலாம்!” என்றேன் நான்.

“சரி!” என்று மகிழ்ந்தான் சூரிக்கோ.

நாங்கள் சாக்லேட்டைப் பகிர்ந்து கொண்டோம். பின் எங்களைச் சுற்றிலும் இருந்தவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம்…..

இப்படிப்பட்ட சம்பவங்களும் பள்ளியில் நடப்பதுண்டு: யாராவது கண்ணாடியை உடைப்பார்கள், புத்தகத்தைக் கிழிப்பார்கள், யாராவது யாரையாவது அடிப்பார்கள். இருவர், மூவர் அல்லது அதற்கும் அதிகமானோர் அங்கிருந்தால் அவர்கள் உடனே பரஸ்பரம் மற்றவர் மீது குற்றஞ்சாட்டத் துவங்கி தம்மை நியாயப்படுத்தத் துவங்குவார்கள். உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல – அவ்வளவுதான். பெரியவர்கள் யார் குற்றவாளியென குழந்தைகளிடம் பெரிதும் தீவிரமாயும் கண்டிப்புடனும் விசாரித்து, ஒரு சாரர் சொல்வதை நம்பாமல் மறு சாரார் சொல்வதை நம்பி “குற்றம்” புரிந்தவருக்கு புத்திமதி சொல்வதும் தண்டிப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை.

தண்டிக்கப்பட்டவன் தவறிழைக்காதவனாக இருந்தால் என்ன செய்வது? அவனது “குற்றத்திற்காக” சொல்லப்பட்ட புத்திமதி அல்லது கொடுக்கப்பட்ட தண்டனை தன் காரியத்தைச் செய்யும், குழந்தையை எச்சரித்து அவன் இனி தவறிழைக்காதவாறு பார்த்துக் கொள்ளும் என்று நம்ப முடியுமா? இப்படி மட்டும் இருந்தால் இது ஆசிரியரியலில் குழந்தைகளின் சகலவிதக் குறும்புகளுக்கும் ஒரு சஞ்சீவி மருந்தாகத் திகழும். செய்யப் போகும் குறும்புகளுக்காக முன்கூட்டியே எல்லோரையும் தண்டித்து விட்டால் கண்டிப்பாக புத்திமதிகளைக் கூறிவிட்டால் எல்லா குழப்பங்களுக்கும் என்றென்றைக்குமாக ஒரு முடிவு கட்டி விடலாம். தான் தப்பு செய்யவில்லை என்று கருதும் ஒரு குழந்தையைக் குற்றஞ்சாட்டுவது ஆசிரியரியலில் தீய செயலாகும்.

இது இக்குழந்தையை எதிர்காலத்தில் தவறுகள் செய்யாமல் காப்பாற்றாது, ஆனால் தன்னை நம்பாத பெரியவர்கள், நண்பர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். தப்பு செய்தவனைத் தேடாமல், அவன் முன்னிலையில், அவன் பங்கேற்போடு ஒழுங்கை நிலை நாட்டி, நடந்ததை மதிப்பிடுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். தப்பு செய்தவர்களைத் தேடி கண்டிக்காமல் விடுவதன் மூலம் அவர்கள் மீண்டும் இதே மாதிரி செய்ய ஊக்கம் தருகிறோம் என்று யாராவது மறுப்புத் தெரிவிக்கக் கூடும். இல்லை, நான் இப்படிக் கருதவில்லை. இது குழந்தையின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும், செய்யும் காரியங்களுக்கான பொறுப்புணர்வை ஏற்படுத்தும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !

0

டந்த வாரத்தில் தொழிலாளர் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகளின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது…

♠ ♠ ♠ 

பணிபுரியும் பெண்களும் மாதவிடாயும்

பிபிசி-யில் வந்த இரண்டு கட்டுரைகள் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாதவிடாய் குறித்து பேசியுள்ளன. முதல் கட்டுரை மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக மாதவிடாய் வருவதை தவிர்க்கும் பொருட்டு, தங்களுடைய கர்ப்பப்பையை அகற்றிக் கொள்வது குறித்து பேசுகிறது.

மாதத்தின் இரண்டு, மூன்று நாட்கள் மாதவிடாய் காரணமாக பணிக்கு வரும் பெண்கள் விடுப்பு எடுத்து கொள்வதால் ஒப்பந்ததாரர்கள் அவர்களை பணிக்கு அமர்த்துவதில்லை என்கிற காரணத்தால், இப்படி வலுக்கட்டாயமாக பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறது அந்தக் கட்டுரை.

மற்றொரு கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு உரிமம் பெறாத மருந்துகளை நிர்வாகம் தருவதாக கூறுகிறது.

இந்தக் கட்டுரைகளில் இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் பணிபுரியும் பெண்களுக்குள்ள உரிமையாக மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு தருவது அரசுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசுக்கு அத்தகைய கரிசனங்கள் எதுவும் இல்லை.

தனி நபர் மசோதாவாக இது நிறைவேற்றப்பட்டால் மிகுந்த பயனளிக்கும் என நிதி ஆயோக் பரிந்துரைத்தது. ஆனால், அத்தகைய மசோதாக்கள் எப்போதாவது நிறைவேற்றப்படுவதால், இதுபோன்ற கொள்கையை சட்டமாக இயற்றுவதற்கு இன்னும் காலம் பிடிக்கலாம். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா போன்ற தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சினை குறித்து பல ஆண்டுகளாக பேசி வருகின்றன.

♠ ♠ ♠ 

வேலைவாய்ப்பின்மை வளர்கிறது !

தி இந்து -வில் வெளியான தொழிலாளர் குறித்த பருவ கணக்கெடுப்பு குறித்த கட்டுரையில் தொழிலாளர் பங்கேற்பு குறைந்து கொண்டே வருவதும் வேலைவாய்ப்பின்மையும்; தகுதிக்கு குறைவான பணியைச் செய்வதும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

2012 முதல் 2018 வரை தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.2 மில்லியனாக சரிவைக் கண்டுள்ளது. இதில் ஊதியம் இல்லாத குடும்பத் தொழிலாளர்களும் சுயதொழில் புரிவோரும் அடக்கம்.

அதுபோல, பாலின வேறுபாடும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. “பெண்களின் தொழிலாளர் ஆற்றல் பங்கேற்பு விகிதம்” கடுமையான சரிவைக் கண்டுள்ளது. வேலைவாய்ப்பை அணுக இயலாத காரணத்தாலும், தொழிலாளர் பங்கேற்பிலிருந்து விலக்கப்படுவதாலும் அவர்கள் கடுமையான இழப்புக்கு ஆளாகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது பல்வேறு ஆய்வுகளில் பட்டவர்த்தனமாக தெரிந்த விசயம்தான் எனிலும், பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடியது என்பதால் தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்த போதிய தொலைநோக்கு திட்டங்கள் இல்லாதவரை, இந்தப் பிரச்சினை பேரழிவாகவே அமையும். அல்லது ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்.

♠ ♠ ♠ 

இந்தியாவின் முறைசாரா தொழிலாளர் நிலை…

ல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு கொடுத்த வெவ்வேறு அறிக்கைகளில் முறைசாரா தொழிலாளர்களின் நிலையை கண்டறிய முடியாத நிலையில் அரசு உள்ளதை பிஸினஸ் டுடே கட்டுரை அலசியிருக்கிறது. சில அறிக்கைகளில் 85% என்றும் சில அறிக்கைகளில் 90% மேல் எனவும் முரண்பாடான விவரங்கள் அளிக்கப்படுவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

கல்லூரிகளின் எண்ணிக்கை அல்லது துறைமுகங்களை எண்ணுவதைக் காட்டிலும், முறைசாரா தொழிலாளர்களை எண்ணுவது சற்று குறைவான சவாலானது என்றபோதிலும் துல்லியமான தரவுகளை சேகரிக்காததை ஒரு முறையாகவே செய்து வருகிறது அரசு.

“அவர்களுக்கு விடுப்பு கிடையாது. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. மருத்துவ வசதியோ சமூக பாதுகாப்பு உதவியோ இல்லை. அவர்களுடைய வேலை நேரத்திற்கு வரம்பு இல்லை. சம்பளமும் மிகக் குறைவு. முறைசாரா பணியாளர்களின் சமூக பாதுகாப்பு சட்டம் 2008 -இல் கொண்டு வந்த பிறகும் கூட வெறும் 5-6% பேர் மட்டுமே சமூக பாதுகாப்பு உதவிகளைப் பெறுகின்றனர்” என்கிறார் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் சி.கே. சஜிநாராயணன். பாஜக-வின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் இதற்காக மோடி அரசாங்கத்தைத்தான் எதிர்த்துப் போராட வேண்டும். மற்றபடி இவர்களின் தொழிலாளர் நலன் வெறும் உதட்டளவில் மட்டும்தான்.

♠ ♠ ♠ 

இராஜஸ்தானில் தொழிலாளர் திட்டங்களில் உள்ள முறைகேடுகள்..

ராஜஸ்தானில் நலத்திட்டங்கள் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்த நிலையில் உச்சநீதிமன்றம் சமூக தணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து தி இந்து -வில் வெளியான செய்தி, “33% கட்டட தொழிலாளர்களுக்கான நலத்திட்டத்தின் பயனாளிகளில், அந்தத் துறையில் பணியாற்றியவர்கள் எவரும் இல்லை” என்கிறது. இ-மித்ரா மையங்களில் இந்தப் பதிவுகள் நடந்தன. இதில் தொடர்புடைய சில மையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு தொழிலாளர் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதுபோல, கட்டுமான திட்டங்களின் மூலம் மாநில அரசு வசூலிக்க வேண்டிய செஸ் வரியும் வசூலிக்கப்படவில்லை. இந்த வரி கட்டட தொழிலாளர்கள் உதவி திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடியது.

படிக்க:
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

♠ ♠ ♠ 

தெலுங்கானாவின் பருத்தி வேளாண் துறையில் குழந்தை தொழிலாளர்கள் !

தெலுங்கானா மாநில அரசும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து பருத்தி விநியோகம் – தேவை குறித்து நடத்திய இரண்டாண்டு கால ஆய்வில், பல்வேறு மாவாட்டங்களில் பருத்தி வேளாண் தொழிலில் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடு கண்டறியப்பட்டதாக லைவ் மிண்ட் – இல் வெளியான செய்தி கூறுகிறது.

தொழிலாளர் இணை ஆணையரின் மேற்கோளின்படி, பருத்தி வேளாண் தொழில் 50% தொழிலாளர்கள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

♠ ♠ ♠ 

காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்பு !

காஞ்சிபுரத்தில் மரம் வெட்டும் ஆலையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய இருபதுக்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையில் உரிமையாளரிடம் இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்காக இவர்கள் கொத்தடிமைகளாக அங்கே பணியாற்றியுள்ளனர்.

தமிழக அரசின் வருவாய் துறையும் கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பும் இந்த மீட்புப் பணியைச் செய்துள்ள நிலையில், ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது அடியாட்களிடமிருந்து தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

ரூ. 375 குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு பதிலாக அரசு 2 ரூபாய் உயர்த்த உள்ளது !

தொழிலாளர் அமைச்சக குழு பரிந்துரைத்த ரூ. 375 குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு பதிலாக, மத்திய அமைச்சரவை தற்போதைய குறைந்த பட்ச ஊதியத்திலிருந்து 2 ரூபாயை உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கிறது. இனி நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 178 கிடைக்கும்.

“நாகாலாந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முன்மொழியப்பட்ட தொகையைவிட குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், இந்த அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் உதவாது” என லைவ் மிண்ட்- க்கு அளித்த பேட்டியில் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான ஊதிய தளம் இந்தியாவில் சமத்துவமின்மையையும் ஏழ்மையையும் குறைக்கும் என பொருளாதார ஆய்வு 2018 கூறியிருந்த நிலையில், 2 ரூபாயை உயர்த்தி ஏழ்மையை ஒழிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

♠ ♠ ♠ 

‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகம் தழுவிய வேலைநிறுத்தம் !

ங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிபிசி செய்தியின்படி, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த அமேசான் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள ஜெர்மனியில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் தொழிலாளர் ஆறு மணி நேர வேலை நிறுத்தத்துக்கு திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தில், வாரம் முழுமைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். தங்களுடைய போராட்டத்துக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கோரியுள்ள தொழிலாளர்கள். அதன் ஒரு பகுதியாக அமேசானை புறக்கணிக்கும்படி கோரியுள்ளனர்.

அமேசான் நிறுவனம் சமீபத்தில் விலைக்கு வாங்கிய Whole Foods என்ற மளிகை விற்பனை சங்கிலியில் பணியாற்றும் தொழிலாளர்கள், அமேசானின் வருகைக்குப் பிறகு தங்களுடைய நிலைமை மோசமாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். கார்டியனின் வெளியான செய்தியின்படி, அமேசான் தொடர்பான மாற்றங்களில் ஒன்றாக ஆட்குறைப்பு வழக்கமாகிவிட்டதாக Whole Foods தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 15 டாலர் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தியதை அடுத்து, முழுநேர தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 40 மணியிலிருந்து 35 முதல் 37 மணி நேரமாகக் குறைந்துள்ளனர். இதனால் சம்பள உயர்வு ஏறக்குறைய இல்லாததாக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

கலைமதி

மேலும் வாசிக்க :

♦ The Life of Labour: Amazon Workers Strike on ‘Prime Day’; Irregularities in Rajasthan’s Schemes 

நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் !

0

ற்போது அறுபத்தி ஒன்பது வயதாகும் ராஜ், தனது 58 -வது வயதில் முதன் முறையாக மூச்சுத்திணறல் பிரச்சினையை எதிர்கொண்டார். முதலில் சாதாரண மூச்சுத்திணறல் என்று கருதப்பட்ட இந்தப் பிரச்சினை பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease) என கண்டறியப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக, தனது 17 வயதில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 60 சிகரெட்டுகள் புகைத்தவர் ராஜ்.

“எனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து ஏதோவொரு சுவாச நோய் என்பதை அனுமானித்தேன். ஆனால் அது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்பது முதலில் தெரியாது. அதே போல் இந்த நோய் எந்தளவுக்கு முற்றிப் போகும் என்பதும், குணப்படுத்தவே முடியாத ஒன்று என்பதும் முதலில் எனக்குத் தெரியாது” என்கிறார் ராஜ்.

புகைப்பழக்கம் ராஜின் நோய்க்கான பிரதான காரணம். முன்பு வசதியாக வாழ்ந்து வந்த ராஜ், தற்போது ஒரு சிறிய வீட்டின் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அவரது மகன் மற்றும் மருமகளின் தயவில் அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

சதா நேரமும் செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரத்தின் துணையோடு சுவாசித்து வரும் ராஜின் நடமாட்டம் பெரிதும் குறைந்து போய் விட்டது. உடலில் சேரும் கரியமில வாயுவை வெளியேற்றும் ஆற்றலை அவரது நுரையீரல் இழந்து விட்டதால் எலும்புகள் வலுவிழந்து போயுள்ளன. குணப்படுத்தவே முடியாத இந்த நோய் மெல்ல மெல்ல அவரது உடலை உருக்குலைத்து உயிரைப் பறிக்கவுள்ளது – அவரைப் பொறுத்தவரை அவரது எஞ்சிய நாட்கள் நரகம்.

*****

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் கொல்லப்படுகின்றனர் என்கிறது இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை. நோயாளிகளுக்கு மட்டுமின்றி ஆரம்ப நிலை மருத்துவர்களுமே இந்நோயை சாதாரண மூச்சுத்திணறல் என்றே கருதுகின்றனர். புகைப்பழக்கம் இந்நோய்க்கான ஒரு காரணம் என்றாலும், காற்று மாசுபாடு பிரதான காரணம் என்று தெரிய வந்துள்ளது. அறியப்பட்ட நோயாளிகளில் சுமார் 53 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டின் விளைவாகவே இந்நோய் ஏற்பட்டுள்ளது.

காற்றுமாசு எனும் போது தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை போன்ற சுற்றுப்புற காரணங்களோடு விறகு மற்றும் சாண வறட்டிகள் கொண்டு எரிக்கப்படும் அடுப்பின் புகையும் இந்நோய்க்கு பங்களிக்கிறது.

கடந்த 2017 -ம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் (1990 துவங்கி) சுற்றுப்புற துகள் மாசுபாடு (ambient particulate pollution) 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 58 மைக்ரோ கிராமில் இருந்து 53 மைக்ரோ கிராமாக துகள் மாசுபாட்டின் அளவை சீனா குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே மாசுபாட்டின் சராசரி அளவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்பதை கவனிக்க வேண்டும் – ஏனெனில், மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் நச்சுத் துகள்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.

இது தவிற சுமார் 26.6 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்துவதாகச் சொல்கிறது உலக சுகாதார மையத்தின் 2018 -ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை. புகையிலையால் ஏற்படும் மரணங்களில் 48 சதவீதம் இதய நோயின் விளைவாகவும், 23 சதவீதம் நாள்பட்ட சுவாசக் கோளாறுகளின் விளைவாகவும் ஏற்படுகின்றன. பீடி, சுருட்டு, சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான புகை வஸ்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 15 -ல் இருந்து 69 வயது வரையிலானவர்களிடையே 1998 – 2010 காலகட்டத்தில் சுமார் 27 சதவீதம் புகைக்கும் பழக்கம் குறைந்துள்ளது. ஆனால், இதில் சிகரெட்டை மட்டும் தனியே எடுத்துக் கொண்டால் 15 -ல் இருந்து 29 வயதினரிடையே நான்குமடங்கு புகைப்பழக்கம் அதிகரித்துள்ளது.

*****

நோய் உருவாவதற்கான புறக்காரணிகள் மற்றும் தனிப்பட்ட தீய பழக்கங்கள் அதிகரித்து வருவது ஒரு புறம் என்றால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் மரணங்கள் அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது. ராஜ் விசயத்தையே எடுத்துக் கொள்வோம். அவர் முதன் முதலில், 2006 -ம் ஆண்டு, மூச்சுத் திணறல் மற்றும் தொடர் இருமல் வந்த போது இதய நிபுணரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். முதலில் அவருக்கு வந்தது இதயம் சம்பந்தப்பட்ட சுவாசக் கோளாறாக இருக்கலாம் என்றே நினைத்துள்ளனர்.


அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து அவருக்கு திடீரென இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. இந்த முறை பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே அவருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் தினசரி 60 சிகரெட்டுகள் வரை புகைத்தவருக்கு ஏற்பட்டிருப்பது நுரையீரல் தொடர்பான நோய் என்பதைக் கண்டறியவே இரண்டாண்டுகள் ஆகியுள்ளது. இத்தனைக்கும் ராஜ் படித்தவர், மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.

“நமது 25 வயதின் போது தான் நுரையீரல் அதன் உச்சகட்ட ஆற்றலோடு இயங்கும். அந்த சமயம் ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும் போதும் நான்கிலிருந்து ஆறு லிட்டர் காற்றை உள்ளிழுக்கிறோம். பின்னர் வருடம் செல்லச் செல்ல இந்த திறன் குறைகிறது. 25 மில்லியில் இருந்து 30 மில்லி அளவுக்கு ஆண்டு தோறும் குறைந்து வருகின்றது. இதே புகைபிடிப்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 80 மில்லியில் இருந்து 90 மில்லி அளவுக்கு ஆற்றல் குறைகின்றது” என்கிறார் பெங்களூருவில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சந்திர சேகர். புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் 45 வயதாகும் போது அவரது நுரையீரலுக்கு 75 வயதாகி விடுகிறது (75 வயதுக்கான ஆற்றலோடு செயல்படுகிறது).

படிக்க:
♦ புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

பெரும்பாலான நோயாளிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை திடீரென்று ஏற்பட்டதாக கருதிக் கொள்கின்றனர். மருத்துவர்களும் இந்த நோயைக் கண்டறியத் தவறுவதற்கு என்ன காரணம்?

♣ பெரும்பாலும் இந்நோயின் அறிகுறிகளை சாதாரண ஆஸ்துமா பிரச்சினை என்று முடிவு கட்டி விடுவது.

♣ நுரையீரலின் உள்ளிழுக்கும் திறன் மற்றும் வெளித் தள்ளும் திறனை கண்டறியும் ஸ்பைரோமெட்ரி சோதனை வசதி இந்தியாவில் பரவலாக இல்லாதிருப்பது.

♣ பெரும்பாலான மருத்துவர்கள் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கே இந்நோய் வரும் என நினைப்பது.

♣ ஆஸ்துமாவுக்கான சிகிச்சையைத் துவங்கி விடுவது.

♣ நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் இதயம் பாதிக்கப்படும். இதயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அந்த பிரச்சினைக்கான மூல காரணம் நுரையீரலில் இருப்பதை கவனிக்கத் தவறுவது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட பழக்க வழக்கங்களை முறைப்படுத்திக் கொள்வதும், புகை போன்ற தீய பழக்கங்களை கைவிடுவதும் அவசியம். மறுபுறம், சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை தடுப்பது தனிநபர்களின் கைகளில் இல்லை.

ஆலை மாசுபாடு, அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த நாட்களிலும், எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கூடத் தெரியாமல் லட்சக்கணக்கான இந்தியர்கள் மரணிக்கும் கொடுமை முடிவு கட்டப்பட வேண்டும்.


சாக்கியன்
மேலும் விரிவான வாசிப்புக்கு: ஸ்க்ரால்

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்

0

“மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ”, என்கிற முழக்கத்தை முன்வைத்து 25.7.2019 மாலை 5.30 மணிக்கு மதுரையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து அரங்க கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வருக..!

மதுரையில் அரங்கக் கூட்டம்

நாள் : 25 ஜூலை, 2019 வியாழக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி (பி.டி.ஆர் தேனீர் கடை அருகில்), மதுரை

தலைமை :

தோழர் சினேகா, பு.மா.இ.மு., மதுரை

உரைகள் :

திரு சிவா, ஆசிரியர், மதுரை.

திரு சரவணன், ஆசிரியர், மதுரை,

பேராசிரியர் அ. சீனிவாசன், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.

நன்றியுரை :

தோழர் ஆனந்த், பு.மா.இ.மு., மதுரை.

மோடி அரசு திணிக்கும் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்….!

*****

‘தேசிய கல்விக் கொள்கையை’ இது நம் நாட்டின் பெரும்பான்மை மாணவர்களுக்கான கல்விக் கொள்கையல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் நாசகாரக் கொள்கை.

அன்று இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் கட்டியமைத்த போராட்டம்தான் இந்தி ஆதிக்கத்தை ஒழித்தது.

இன்று, கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனுக்காக மோடி அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைப்போம். வரைவு அறிக்கையை மொத்தமாக நிராகரிப்போம். எந்த வடிவத்தில் வந்தாலும் மோதி வீழ்த்துவோம். இதற்கு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஓர் அமைப்பாகத் திரள்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே !

3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான பொதுத் தேர்வாம்! இது ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் சதித்திட்டம்!

3 – வது முதலே தச்சு வேலை, தோட்ட வேலை, கட்டிட வேலை, பானை செய்தல் போன்ற தொழில்கள் ஒரு படிப்பாக கற்றுத்தரப்படுமாம்! காசு இல்லாதவனுக்கு கல்வி எதற்கு என்கிறார் மோடி!

ஆரம்பக் கல்வி முதலே மும்மொழி திட்டம் கட் டாயமாம்! தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தேசிய இனங்களின் மொழியை ஒழித்துக்கட்ட இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு!

முன்பருவக் கல்வி முதல் (அங்கன்வாடி) மாணவர்களுக்கு பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீதா உபதேசம் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டுமாம்! இது அறிவியலுக்கு புறம்பாக, பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் மூடத்தனம்!

பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!

தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு – இது மாநிலங்களின் கல்வி உரிமைக்கு வைக்கும் வேட்டு!

யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை கலைத்துவிட்டு, உயர் கல்வி ஆணையம், ஆராய்ச்சி கல்விக்கான அறக்கட்டளை, உயர்க்கல்வி நிதிக்கான குழு ஆகியவை கள் உருவாக்கப்படுமாம். ஒட்டுமொத்த உயர்க் கல்வியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் மெகா திட்டம்!

மருத்துவ கல்விக்கு மட்டுமல்ல, கலை அறிவியல் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வாம்! ஏழைகளுக்கு இனி உயர்க் கல்வி இல்லை – இது மோடி அரசு உருவாக்கும் புதிய மனுநீதி!

‘இந்தியாவில் படியுங்கள்’ மோடி அரசின் புதிய திட்டம். ஆனால் ஏழைகள் படிக்கக் கூடாது இது தான் சர்வதேச முதலாளிகளின் சட்டம்.

மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு தாராள அனுமதி! அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தனியார்மயம். சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைப் பறிப்பு.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் தன்னாட்சியாம்! இட ஒதுக்கீடு – சமூக நீதி பறிப்பு, மாணவர் சங்கம் ஆசிரியர் சங்கங்கள் அமைக்கத் தடை!

ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு நிரந்தர வேலை, சம்பளம், ஓய்வூதியம் என்பதெல்லாம் இனி இல்லை. அனைவரும் தற்காலிக ஊழியர்கள். திறமை அடிப்படையில் வேலை நீட்டிப்பு, சம்பளம்.

இதுதான் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை – 2019.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
மதுரை, தொடர்புக்கு : 82200 60452.

பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 26

டோக்ளியாட்டி

பாசிச நிறுவனங்கள் சம்பந்தமான நமது கொள்கை குறித்த ஒரு பிரச்சினையை இப்போது ஆராய்வோம்.

பாசிசத்தில் எழுந்துள்ள நெருக்கடிகளையும், அவற்றின் அம்சங்களையும், இதனால் நாம் பணியாற்றுவதற்குக் கிட்டக்கூடிய வாய்ப்புகளையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். பாசிஸ்டுக் கட்சி இன்னமும் சர்வாதிபத்தியக் கட்சியாக ஆவதற்கு முன்னர் இந்த நெருக்கடிகள் குறிப்பிட்ட சில அம்சங்களைக் கொண்டிருந்தன. பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும், அது கடைப்பிடித்த மூர்க்கத்தனமான முதலாளித்துவக் கொள்கையை எதிர்த்து குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதரப் பூர்ஷுவாக்கள் போராடினர். ஆனால் இந்தச் சக்திகள் மக்களது நலன்களை முன்னிட்டு இவ்வாறு செய்ததாகக் கருதிவிடக் கூடாது. கட்சிக்குத் தலைமை ஏற்பதில் பேரார்வம் கொண்ட குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்த அணியினரின் அதிருப்தியை போர்னியும் பதோவனியும் 4 பிரதிபலித்து வந்தனர்.

இந்தப் போராட்டம் ஸ்தாபனத்துக்கு எதிர் அணியில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்திற்று; அரசுடனும் மோதலை ஏற்படுத்திற்று. எனினும் பாட்டாளி வர்க்கம் ஆதிக்க நிலையில் இல்லாத, குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதரப் பூர்ஷுவாக்களும் பரந்த அளவில் உள்ள அரசியல் மேடைகளில் அல்லாமல் ஒரு தலைவரை உச்சிமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் ஸ்தாபன ரீதியில் ஒழுங்கமைக்கப்படாத பாட்டாளி வர்க்கம் நிரம்பியுள்ள நேப்பள்ஸ் போன்ற சில இடங்களில் அந்தப் பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இவர்கள் பேசி வந்தார்கள். இத்தகைய அம்சம் சில சமயங்களில் இதர இடங்களிலும் காணப்பட்டது. மிலானில் தலைதூக்கிய, கியாம்பயோலிசத்தை 5 இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் அரை – குற்றவாளிகளையும், ஸ்தாபனரீதியில் அணி திரட்டப்படாத பாட்டாளி வர்க்கத்தையும், படை அணிகளில் இருந்த பழைய ஸ்குவாட்ரிஸ்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தங்கள் சொந்த நலன்களைப் பூர்த்தி செய்து கொள்ள பழைய பாணியில் அமைந்த பயிற்சிப் படை வீரர்களது நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இவர்கள் விரும்பினர். ஆனால் மிலானில் தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தினர் ஏராளமானோர் இருந்தனர். இதனை மனத்திற்வைத்து கியாம்பயோலி தொழிலாளர்கள் பெரிதும் அக்கறை கொண்ட பிரச்சினைகளையும் எழுப்பினர்; தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆரம்பத்தில் நேபள்ஸில் காணப்பட்டது போன்ற சில அம்சங்களைக் கொண்டிருந்த இந்த எதிர்ப்பு இயக்கம் பெரிய தொழில்துறை நகரத்தில் மாறுபட்டதொரு இயல்பைப் பெற்றது. கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் தொழிற்சங்கத் தன்மையைக் கொண்டிருந்தது என்பது தெள்ளத் தெளிவு.

ஆனால் பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு, இந்த நெருக்கடிகள் ஆகியவற்றின் இயல்பு பாசிஸ்டுக் கட்சி ஏக சர்வாதிபத்தியக் கட்சியின் தன்மையைப் பெற்றபோது மாற்றமடைந்தது. அப்போது வெகுஜனங்களை ஸ்தாபனரீதியில் ஒருங்கு திரட்டவும், ஓரளவு பாசிச சார்புள்ள துணைப் படைகளையும் ராணுவ, பிரசார எந்திரத்தையும், தொழிற்சங்கங்களையும் தோற்றுவிக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !

நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் இப்போது வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவையாக மாறிவருவதைப் பார்க்கிறோம். 1930-ம் ஆண்டிலிருந்து தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்த சக்திகள் பல கிளர்ச்சிகளை நடத்தி வந்திருக்கின்றன. படை வீரர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். முதலாளிகளை எதிர்த்துப் பாசிஸ்டுகள் பகிரங்க ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றனர்; தொழிற்சாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். 1930-ல் மிலானில் முதலாளிகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிகள் பாசிஸ்டுகள் ஆரம்பித்தவையே ஆகும்.

பதோவனி (Aurelio_Padovani)

இதுதான் இன்று காணப்படும் அம்சம்; நமக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியைவிட மக்கள் படையில் (மக்கள் படை எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது). குறிப்பாக இளம் பாசிஸ்டுகளிடையே இந்த அம்சம் வலுவானதாக இருப்பதைக் காணலாம். இளம் பாசிஸ்டுகளிடையே ஏற்பட்ட எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் கடந்த ஆண்டுகளில் இடையறாது வளர்ந்து வந்திருக்கின்றன. இது இந்த அமைப்பின் இயல்பிலிருந்து நேரடியாகத் தோன்றும் விளைவாகும்; இந்த இயல்பு ஏற்கெனவே கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. வெகுஜனங்கள் அவர்களது சொந்த உடனடி நலன்கள் பொருட்டு எளிதாக அணிதிரட்டப்படுகின்றனர்; ஸ்தாபனத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். இளைஞர் நிறுவனங்களுக்குள் நடைபெறும் இந்தக் கிளர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; முக்கியமாக நாம் செயலாற்றுவதற்கான ஒரு பரந்த களத்தை அவை அளிக்கின்றன.

இன்று நடைபெறும் கிளர்ச்சிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் கடந்த காலத்தில் நடைபெற்றவற்றுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நெருக்கடிகளின் தன்மை பற்றி ஓர் ஆழமான ஆய்வு தேவை; குட்டி பூர்ஷுவா சக்திகள் செயல்படுவதை வெளிப்படையாகக் காணுவது எப்போதுமே சிரமம். ஆனால் இன்று இந்த இயக்கங்களின் இயல்பை மிக எளிதாக உய்த்துணர முடிகிறது.

உதாரணமாக, இங்கு ஜெர்மனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இரண்டு வகையான சர்வாதிகாரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், ஒற்றுமைகளையும் இந்த ஒப்பீடு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இரண்டு பாசிசங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று எப்போதுமே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே ஒரு விரிந்து பரந்த வெகுஜன இயக்கமாக வெற்றி கண்டுவிட்டது என்பது இதிலுள்ள அடிப்படையான வேறுபாடாகும். ஜனநாயகரீதியில் தேர்தல்கள் மூலம் அது அதிகாரத்தை வென்றது. இந்த ஜனநாயகம் வரையறைக்குட்பட்ட ஜனநாயகம் என்பதிலும், வன்முறைகளால் அதன் எல்லைகள் மேலும் குறுக்கப்பட்டன என்பதிலும் ஐயமில்லை; இவ்விதமெல்லாம் இருப்பினும் ஜெர்மன் பாசிசம் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது. இது முதல் வேறுபாட்டு அம்சமாகும்.

போர்னி (cesare-forni).

அடுத்து இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் குட்டி பூர்ஷுவா, மத்திய தர பூர்ஷுவா வர்க்கத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும் மட்டுமன்றி வேலையில்லாதோர் ஏராளமானோரையும் தன் அணிகளில் கொண்டிருந்தது; அவர்கள் மூலம் சில தொழிலாளர் பிரிவினரிடமும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளிடமும் தனது செல்வாக்கை பரப்பியிருந்தது.

இதனால்தான் ஜெர்மன் பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் உடனடியாக இதர இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. பெரிய பூர்ஷுவாக்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதர பூர்ஷுவாக்களும் கிளர்ந்தெழுவது சாதாரணமாக பாசிசத்தில் காணப்படும் அம்சமாகும். ஆனால் ஜெர்மனியில் இந்தக் கிளர்ச்சிகள் மிக வலுவாக உள்ளன. அவை ஆலைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி அவதிப்படுபவர்கள், விவசாயிகள் போன்றோரின் அதிருப்தியை வெளியிடுகின்றன. இவர்கள் எல்லோரும் பாசிசம் ஏராளமான பிரச்சினைகளுக்கு, முக்கியமாக பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் என்று நம்பி அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால் பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர்.

இந்த நிகழ்வுப் போக்கு இத்தாலியில் ஒரு வரையறைக்குட்பட்ட அளவிலேயே காணப்படுகிறது. பாசிச அமைப்புகளில் தொழிலாளர்கள், விவசாயிகளின் அதிருப்தி சமீப காலமாகத்தான் வெளிப்பட்டு வருகிறது.  கடந்த காலத்தில் வெகுஜனங்கள் பழைய ஸ்தாபன அமைப்புகளின் கட்டுக்கோப்புக்குள் இருந்து வந்தனர். ஆனால் இன்று பாசிஸ்டுக் கட்சியின் சர்வாதிபத்திய அமைப்புக்குள்ளும் அதன் இதர இணை அமைப்புக்குள்ளும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

(தொடரும்)

(முகப்புப்படம் : நேபள்ஸில் முசோலினியுடன் அயுரிலியோ பதோவனி.)

அடிக்குறிப்புகள் :

4. நேபள்ஸிலும் கம்பானியாவிலும் பாசிஸ்டுக் கட்சியின், பாசிஸ்டு மக்கள் படையின் யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க தலைவராக அயுரிலியோ பதோவனி இருந்தார். “சகஜமாக்கப்பட வேண்டுமென்பவர்களுக்கும்”, “இணக்கத்தை விரும்பாதவர்களுக்கும்” ஏற்பட்ட மோதலில் அவர் வீழ்ச்சியடைந்தார். தேசியவாதிகளோடு இணைவது என்பது பாசிசத்தின் “புரட்சிகரத்” தன்மைக்கு துரோகம் செய்வதாகும் என்று பதோவனி நம்பினார். அவருடைய மன்னராட்சிக்கு எதிரான, பூர்ஷுவாக்களுக்கு எதிரான அறிவிப்புகள் புதிய ஆட்சிக்கு அவரைப் பாதகமானவராக்கியது. மாட்டியோட்டி நெருக்கடியின் போது, பி.என்.எப்பில் மீண்டும் சேரும்படி பதோவனியை பரினாஸ்ஸி கேட்டுக் கொண்டார், பதோவனி மறுத்துவிட்டார்.

5. 1919-ல் பாஸ்சி இட்டாலியானி கம்பாட்டிமென்டோவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மிலான் மாநில பி.என்.எப்பின் தலைவருமான மரியோ கியாம்பயோலியின் ஆசை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக தொழிற்சாலைகளில் கட்சிக் குழுக்கள் அமைக்க வேண்டுமென்பதாகும்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !