Thursday, May 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 364

மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !

ந்தியப் பிரதமர் மோதிக்கு ஃபிலிப் கோட்லர் பிரெசிடென்சியல் விருது வழங்கப்பட்டது இவ்வளவு பெரிய சர்ச்சையை உருவாக்குமென யாரும் நினைத்திருப்பார்களா எனத் தெரியவில்லை. இது தொடர்பாக இந்தியா டுடேவும் தி வயர் இணைய இதழும் பல விரிவான கட்டுரைகளை வெளியிட்டுவிட்டன. அதில் பின்வரும் கட்டுரை பல அதிர்ச்சிகரமான தகவல்களை அளிக்கிறது.

ஃபிலிப் கோட்லர் விருது பெரும் மோடி

1. ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேர்ல்ட் மார்க்கெட்டிங் சம்மிட் (WMS) விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவை நடத்தியது, இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சுஸ்லென்ஸ் ரிசர்ச் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் (Suslence).

2. WMS, Suslence ஆகிய இரண்டுமே சவுதியைச் சேர்ந்த தவுசீஃப் ஜியா சித்திக்கி என்பவரின் முயற்சிகள்போலத் தெரிகிறது. சித்திக்கி, சவூதி அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான SABIC-ல் 2014 ஜனவரி முதல் பணியாற்றுவதாக அவரது லிங்க்ட் – இன் புரொபைல் கூறுகிறது. SABIC இந்திய பெட்ரோலியச் சந்தையில் தனது கரத்தை விரிவுபடுத்த நினைக்கும் நிறுவனம்.

தவுசீஃப் ஜியா சித்திக்கி லிங்க்ட் – இன் புரொபைல்

3. இது தொடர்பாக தி வயர் திங்கட்கிழமை ஒரு கட்டுரையை வெளியிட்டதும் WMS மற்றும் Suslence ஆகியவற்றின் இணையதளங்கள் மூடப்பட்டுவிட்டன.

4. மோதிக்கு விருது வழங்குவதாக பெருமையுடன் அறிவித்த WMS18-ன் ட்விட்டர் கணக்கும் அழிக்கப்பட்டுவிட்டது.

5. சித்திக்கி SABICல் “Sustainability Specialist”ஆக பணியாற்றுவதாகக் கூறுகிறார். சவூதியின் தம்மமில் வசிக்கிறார்.

6. 2017-ல் Suslence Research International Institute-ஐ சித்திக்கி நிறுவுகிறார். இதன் இணைய தளம், WMS 18 விழா நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக ஜூலையில்தான் துவங்கப்படுகிறது. அலிகாரில் சுஸ்லான்சின் தலைமையகம் இருப்பதாக கூறப்பட்டாலும் இதனைக் கண்டறியமுடியவில்லையென ஒரு தொலைக்காட்சி நிறுவனம் கண்டறிந்தது.

7. Suslence-ல் அவரது மனைவி அண்னா கான், ஃபைசல் ஜியாவுதீன் ஆகிய மேலும் இருவர் இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் மூன்றாவது இயக்குனரின் பெயர் ஜுபைர் அகமது கான்.

8. அன்னாகான் தம்மமில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். பிரதமருக்கு கோட்லர் விருதை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இவரும் காணப்படுகிறது.

படிக்க:
மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் !
♦ ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !

9. பிதமருக்கு அளித்த விருது தவிர கோட்லர் மார்க்கெட்டிங் எக்ஸலன்ஸ் பிரைஸ் என்ற விருதுகளையும் இந்த WMS அளித்திருக்கிறது. அதாவது இந்த விழாவுக்கு ஸ்பான்சர் செய்த கெய்ல், பாபா ராம்தேவின் பதஞ்சலி, பிசினஸ் வேர்ல்ட், விட்டிஃபீட் போன்ற நிறுவனங்களுக்கு அவை அளிக்கப்பட்டிருக்கின்றன.

10. தேர்வுக் குழுவில் இருந்ததாக இணைய தளம் குறிப்பிடும் வால்டர் வியெர்ராவை தி வயர் தொடர்புகொண்டு கேட்டபோது, யாரும் விருதுகளைத் தேர்வுசெய்ய அழைக்கவேயில்லை. அவர்களாகவே பார்த்துக்கொண்டார்கள் என்கிறார். சித்திக்கியை அவருக்கு இதற்கு முன்பாகத் தெரியாது.

11. சித்திக்கி தி வயரிடம் பேச மறுத்துவிட்டார். SABICஇடமும் இது குறித்து வயர் தொடர்புகொண்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற கெம் – 2018 கன்காட்சியில் SABIC நிறுவன தலைவருடன் நிதின்கட்கரி.

12. SABIC 1993-94 ல் இருந்து குஜராத்தில் தனது ஆலைகளை இயக்கிவருகிறது. இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்த இந்நிறுவனம் விரும்புகிறது.

13. இந்திய அரசு நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் கெய்ல் ஆகியவற்றுக்குச் சொந்தமான ONGC Petro Additions Limitedல் 50 சதவீத பங்குகளை, 4.3 பில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க விரும்புகிறது SABIC. கெய்ல் நிறுவனம்தான் WMS18-ன் ஸ்பான்ஸர்களில் ஒன்று.

அதாவது, தி வயர் இணைய தளத்தின் கட்டுரை சுட்டிக்காட்டுவதென்னவென்றால், இந்தியாவின் எரிசக்தித் துறையில் பெரும் முதலீட்டைச் செய்ய விரும்புகிறது SABIC. அதற்கான பரந்த முயற்சிகளில் இந்த விருதும் ஒன்றாக இருக்க முடியாதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

செய்தி ஆதாரம் :
♦ Exclusive: The Saudi Connection to Modi’s ‘First-Ever’ Kotler Presidential Prize

♦ Kotler Impact explains untraceable Suslence’s role after row erupts

நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !

1
போலீசை எதிர்கொண்ட சட்டக்கல்லூரி மாணவரின் அனுபவம் !

ந்தியா போன்ற வளரும் நாடுகளில் (வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிக தொழிற்துறையை ஈர்ப்பதால் அப்படியே அழைக்கலாம்) ஜனநாயகத்தின் நடைமுறை எவ்வாறு உள்ளது என்பதை சட்டக்கல்லூரி மாணவர் என்ற அடிப்படையில் நேரடியாக அனுபவைத்ததிலிருந்து பகிர்கிறேன்.

ஜனவரி 22-ம் தேதி  ஜாக்டோ – ஜியோ சார்பாக ஆசிரியர்கள் தொடர்போராட்டத்தை அறிவித்தார்கள் மாணவர் அமைப்பின் பிரதிநிதியாக நான் கடந்த ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் உண்மைக்கு புறம்பாக வரலாற்று புனைவுகளை எப்படி அறிவியலுடன் இணைத்து பேசுகிறார்கள் மக்களையும், மாணவர்களையும் எப்படி மூடத்தனத்தில் ஆழ்த்துகிறார்கள் என்றும், அதை குறிப்பாக அறிவியலின்பால் கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் எப்படி உணரவேண்டும் என்ற அடிப்படையில் “மூடத்தனத்தை பரப்பும் அறிவியல் மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை விநியோகித்தேன்.

வழக்கம் போல் உளவுப்பிரிவினர் வந்து பிரசுரம் பெற்றுச் சென்றபின் சில நிமிடத்தில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வந்து கையில் உள்ள பிரசுரத்தை பறித்துக்கொண்டு வண்டியை வரச்சொல்லுங்க என துணை ஆய்வாளரிடம் கூறினார்.

நானோ ஏன் சார் பிரசுரம் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது என்றதும், பதில் ஏதும் இல்லை. நான் நீங்கள் இப்படி தான்  20 – ஜனவரி 2019 அன்றும் எங்களை உளவுப்பிரிவு போலிசார்  பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கூறியவுடன்  விசாரணை என்ற பெயரில்  ஒரு நாள் முழுவதும்  காவல் நிலையத்தில் வைத்தீர்கள் ஏன் சார்? எங்களிடம் ஏதும் நீங்கள் சந்தேகப்படும் படியான பொருள் இருந்ததா? என்ற கேள்விக்கும் ஸ்டேஷனுக்கு வாங்க பேசிக்கொள்ளலாம் என கூறி  அழைத்துச்சென்றனர்.

காரில் ஏறியதுமே செல்போனைப் பறித்துக்கொண்டனர். ஸ்டேசனில்  துணை ஆய்வாளர் இருந்தார். இறங்கியதுமே “என்ன செஞ்ச”? என்ற வினாவுடன் ஆரம்பித்தார். “நோட்டீசு கொடுத்தேன் அதற்கு கூட்டிட்டு வந்தாங்க” என்றேன். என்ன நோட்டீசு என்றார்.  நான் பிரசுரத்தின் தலைப்பையும்  அதனுடைய அவசியத்தையும் கூறும்போதே குறுக்கிட்டு, “நோட்டீசு கொடுப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? நீங்க சட்டக்கல்லூரி மாணவர்தானே? இதுகூட தெரியாதா? என்றும் சட்டத்திலேயே அனுமதி பெற்றுதான் நோட்டீசு கொடுக்க வேண்டும் என்று இருக்கு  உங்களுக்கு தெரியாதா?” என்றார்.

அதற்கு நானோ நீங்கள் கூறுவது எந்த சட்டத்திலும் அப்படி இல்லை. அடிப்படை உரிமைகளில் (Fundamental Rights Art-19) என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது அதனால் என்னுடைய கருத்தை நான் கூறலாம் என்று பதிலளிக்கும்போதே, சீறுடை அணியாத துணை ஆய்வாளர் “உங்கள் கருத்தை மக்கள் மீது திணிக்ககூடாது தம்பி, மற்றவர்களின் உணர்வு அது, அதில் ஏன் நீங்க தலையிடுறீங்க” என்றார்.

“நோட்டீசு கொடுப்பதில் என்ன கருத்துத் திணிப்பு வரப்போகிறது சார்… பிரச்சாரம் செய்வது, நோட்டீசு கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது இவையெல்லாம் அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சார்” என்றதும், “அதெல்லாம் கிடையாது நீகொடுக்கக்கூடாது..” என்றார்.

“சரி சார் நான் கொடுக்கக்கூடாது என்றால் அறிவியல் மாநாட்டில் அப்படி  புராணப்புரட்டுகளைப் பேசியது மட்டும் கருத்து திணிப்பு இல்லையா..?” என்றதும்

“அதையெல்லாம் நீ பேசாத உள்ள போயி உக்காரு..” என்று மிரட்டும் தொனியில் பேசி அதிரடிப்படைப் போலிசிடம் சொல்லி அழைத்துச்சென்று உட்காரவைத்தார்.

என்னை அழைத்துசென்ற அதிரடிப்படைப் போலிஸ் 15 நிமிடம் கழித்து  என்னிடம் வந்து “எந்த அமைப்பு, நீங்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.

நான் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி என்கிற மாணவர் அமைப்பு எங்களுடையது பதிவு செய்யப்படாத அமைப்புதான் என்று கூறவும்,

“பதிவு செய்தால் தானே தெரியும் என்றும்,  இல்லையென்றால், மக்களுக்கு எப்படி தெரியும்?” என்றார்.

“நாங்கள் தான் பிரசுரம் கொடுக்கிறோம் இதுபோல் பிரச்சாரம் செய்கிறோம், போஸ்டர் ஒட்டுகிறோம், அனுமதி பெற்று போராட்டம்  நடத்துகிறோம், மக்களுக்கு தெரியாதா மேலும் பதிவு செய்வது அரசிடம், மக்களுக்கு எப்படி தெரியும்…” என்றவுடன்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

“அப்படியிருந்தாலும் அரசுக்கு தெரியவேண்டாமா?” மேலே சொல்லும் நடவடிக்கையின் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாமே சார். “இல்ல தம்பி கண்டிப்பாக பதிவு செய்திருக்கணுமே” என்றார். நானோ அப்படி கிடையாது  7-பேர் சேர்ந்தால் ஒரு சங்கத்தையோ, அமைப்பையோ ஆரம்பிக்கலாம் சட்டமே உரிமை வழங்கியுள்ளது மேலும் சட்டரீதியான தீர்வுகளை  நாடும்பட்சத்தில்தான் பதிவு செய்யவேண்டும் இல்லையென்றால் அதுவும் அவசியம் இல்லை, கட்டாயமும் இல்லை என்றதும் சென்றுவிட்டார்.

நோட்டீசை போனில் யாரிடமோ படித்து காண்பித்தார் சீருடை அணிந்த துணை ஆய்வாளர். பிறகு என்னை அழைத்து  உளவுப்பிரிவு(IS) ஆய்வாளர் பேசுகிறார் பேசு என்று போனில் பேசச் சொன்னார். அவரோ “தம்பி நீங்கள் செய்வது எல்லாம் சரியான செயல்தான் நல்ல கருத்துக்களைதான் சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே நாளில் எப்படி நீங்க நினைப்பது போல் நாட்டை  மாற்றிவிட முடியாது பல கருத்துள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மெது மெதுவாகத்தான் செய்ய முடியும்.”

அதற்கு நானோ “நாங்களும் மெதுவாகத்தான் செய்கிறோம் பிரசுரம், போஸ்டர் என்றுதான் செய்கிறோம் இதில் என்ன தவறு உள்ளது ஏன் என்னை ஸ்டேசனுக்கு அழைத்து வரச்சொன்னீர்கள்” என்றவுடன் “அப்படி இல்ல.. தம்பி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசு காவலுக்குத்தான் நின்றது. ஆனால் சிவா என்ற நபர்தான் முதலில் தடுப்பின் மீது ஏறி குதித்தார் பிறகு கூட்டத்தை களைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அது உனக்கே தெரியும். மேலும் 5 நபர்களுக்கு மேல் கூடினால் பிரச்சனை வரும் என 100 வருடத்திற்கு முன்னாலேயே எழுதியுள்ளான். அப்படி சென்சிட்டிவான இடத்தில் போய் ஏன் வேலை செய்கிறீர்கள்  அதனால் தான் அழைத்து வரச்சொன்னேன். சரி உன்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் உன் ஊர் எது உனது தந்தை எங்கு உள்ளார்..” என்று கேள்விகளை அடுக்கினார்.

ஏன் என்றதும் “உனது குடும்பம் திருந்திவிட்டதா, ஊர் திருந்திவிட்டதா? அங்கு போய் வேலை செய்யுங்கள், உங்கள் குடும்பத்தை திருத்துங்கள் பிறகு திருநெல்வேலி வரலாம் என்று கூறி இனி இப்படிப்பட்ட(Sensitive) பதற்றம் நிறைந்த  பகுதிகளில் வேலை செய்யாதீர்கள்..” என்று அழைப்பைத் துண்டித்தார்.

சிறிது நேரம் கழித்து  எழுதி வாங்கிக்கொண்டு விடுதலை செய்தனர்.

  • மேலே கூறிய சம்பவம் ஒரு முக்கியமான நடைமுறையை எனக்கு உணர்த்தியது. அது இந்திய அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியதாக சொல்லப்படும் ஷரத்து 19- ன் அடிப்படை உரிமைகளை மறுப்பதை புரிந்துகொள்ளமுடியும்.
  • ஷரத்து 19(1)a – பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், இச்சட்டம் நமக்கு தெரியாதெனக் கருதி, எதுவும் அனுமதி பெற்றே செய்ய வேண்டுமாம் சட்டத்தில் உள்ளதாகவும் மிரட்டுகிறார்.
  • ஷரத்து 19(1)b – ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். இதை மறுத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட சட்டம் சொல்லும் 5 நபர்களுக்கு மேல் கூடினால் பொது அமைதி குலையும் பிரச்சனை வரும் அதனால் நீங்கள் கூடவே முடியாது, நோட்டீசே ஆயுதங்களாகப் பாவிக்கப்படுகிறது.
  • ஷரத்து 19(1)c – கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம். இந்த சட்டத்தை மறுத்து, அமைப்பு பதிவு செய்யப்பட்டால்தான்  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பது போலவே அதிரடிப்படை காவலரின் கேள்வி.
  • ஷரத்து 19(1)d – இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம், சட்டமே நியாயமான கட்டுப்பாடு என்று பொதுமக்களின் நலன் முன்னிட்டும் ஷரத்து 19(5)1 என்பதன் மூலம்  இந்தியா முழுவதும் எங்கும் செல்லலாம் என்று கூறியுள்ளது. இதை மறுத்து உனது ஊரை விட்டு ஏன் இங்கு வந்தாய் அங்கு சென்று வேலையைப்பார் என்று மிரட்டுகிறார். (ஒரே மாவட்டத்துக்குள்ளேயே இந்த நிலைமை)

மேலே விவரிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டுள்ள உரிமை. ஆனால் போலீசு அரசின் நடவடிக்கையை, அது அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றும் எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் முடிவு செய்வோம், எங்களை கேட்டுதான் எதையும் செய்ய வேண்டும். என்ற நிலையை நிலைநாட்டுகிறார்கள் போலீசு, அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள்.

உரிமைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது

உதாரனமாக : PSO ஆணைப்படி காவல் நிலைய ஆணைதான் தென்தமிழ்நாட்டை குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியை ஆட்சி செய்கிறது. சட்டத்தின்(அரசியல் சானத்தின்) ஆட்சி இல்லை. இங்கு ஒரு மாதத்தில் பாதிக்கு அதிகமான நாட்கள்  144 தடை உத்தரவு அமலில் இருக்கும். சுதந்திரப்போராட்டத் தலைவர்கள் சாதித்தலைவர்கள், போன்றவர்களின்  பிறந்த நாட்கள், நினைவு நாட்கள் என்றால் இங்கு  காவல்துறையின் ஆட்சி தான் நடக்கிறது. அரங்கக்கூட்டங்களைக் கூட அனுமதி பெற்றுத் தான் நடத்த வேண்டும் என கட்டளை இடுகிறார்கள். 144 தடை அமலில் இல்லாத போதும் கூட இதே நிலைதான் நீடிக்கிறது.

ஒரு சட்டம் பயின்ற மாணவர் என்ற அடிப்படையில் நான் பல கனவுகளில் இருந்தேன்  சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ சட்டவழிமுறைகளுக்கு நேரெதிராக உள்ளது. போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட நிலைநாட்டிட, நாம் புதியப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்ற நிலையே உள்ளது.

நமது நாட்டின் அரசமைப்பு எழுதப்பட்ட அரசமைப்பு (Writton Constitution). அது மேன்மை வாய்ந்தது, உறுதித்தன்மை வாய்ந்தது, என்றே கூறப்பட்டது. அதில் முக்கியமாக சர்வாதிகார, எதேச்சதிகார போக்கிற்கு வழி செய்யாது என்றே அம்பேத்கர் உட்பட பல சட்ட வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால் நிலமையோ அப்படியில்லை. போலீசின் ஆட்சி, மாவட்ட ஆட்சியரின் எதேச்சதிகாரப் போக்கு, அளவில்லாத கேள்விக் கேட்க முடியாத போக்கு என்பது, பாசிசத்தை நோக்கி நமது நாட்டை நகர்த்துகிறது, என்றே நான் உணர்கிறேன்.”

அறிவியல் மாநாட்டில் RSS, BJP –யைச் சேர்ந்தவர்கள் அறிவியலுக்கு ஒவ்வாத முரண்பட்ட பிற்போக்குப் புராணப்புரட்டுக்களை அவர்களின் கருத்துக்களாக பரப்பிட சுதந்திர உரிமையுண்டு. அவற்றை அறிவியல் ரீதியாக விமர்சனம் செய்யவோ, மாற்றுக்கருத்தை சொல்லவோ, பிரசுரமாக மற்றவர்களிடம் கொண்டுசெல்லவோ உரிமையில்லை.

மேற்கூறிய நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக நான் படித்தது, நம்பியது எல்லாம் தவறே என்று உணர்த்துகிறது. மாறாக காவல் நிலைய ஆணையின் படியே நான் இயங்க நிர்பந்திக்கப் படுகிறேன். அதுவே சரி என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன்.

இந்த நிகழ்வு என்னை மட்டுமல்ல, ”சட்டத்தை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும்” என்று சிந்தித்து சட்டம் பயிலும் அனைவரிடமும் கேள்வியை எழுப்பும் என்றே எண்ணுகிறேன். நாம் பயின்ற சட்டத்தின் ஆட்சியை எப்படி நடைமுறைப்படுத்துவது, உலகில் பெரிய ஜனநாயக நாட்டின் நிலைமை இதுதான். இதை நாம் எவ்வாறு மாற்றப்போகிறோம் என்ற கேள்விகளுடன் விடைகிடைக்காமல் முடிக்கிறேன்.

சட்டத்தை மிதிப்பவர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு,
மதிப்பவர்களுக்கு பொய்வழக்குகைதுசிறையிலடைப்பு,
இதுவே இன்றைய இந்திய ஜனநாயகம்”.

சட்டக் கல்லூரி மாணவர்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
நெல்லை.

ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீது புனே காவல்துறை போட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், ஆனந்த் தெல்தும்டேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜனவரி 22-ம் தேதி நான்கு ஐ.ஐ.டி-களில் மாணவர்கள் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர்.

ஐஐடி காந்திநகரில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான பொய்வழக்குகளைக் கண்டிக்கும் மாணவர்கள்.

ஐஐடி சென்னையில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டமும், ஐஐடி மும்பையில் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டமும், ஐஐடி கரக்பூரில் அம்பேத்கர் பகத்சிங் படிப்பு வட்டமும் , ஐஐடி காந்திநகரில் மாணவர்களும் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராட்ட கூட்டத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். ஐஐடி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, பொறியியல், கார்ப்பரேட்டு நிர்வாகம், சமூகவியல் என பல துறைகளில் பல உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றியவர். ஐஐடி கரக்பூரில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் நலனை மையப்படுத்திய அவரது எழுத்துகள் மற்றும் செயல்பாட்டிற்காக மோடி அரசால் ஆனந்த் தெல்தும்ப்டே பழிவாங்கப்படுகிறார்.

படிக்க:
♦ என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
♦ ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

இந்நிகழ்வில் மாணவர்களும் பேராசிரியர்களும் பேசுகையில், மோடி அரசு பார்ப்பனிய-கார்ப்பரேட் அடிவருடித்தன அரசியலை எதிர்க்கும் எவரையும் ஒடுக்கவே செய்யும் என்பதையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் நலன் சார்ந்து செயல்படும் அறிவுஜீவிகளை ஒடுக்குவது என்பது மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஜனநாயக வெளி சுருங்கி வருவதை வெளிக்காட்டுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினர்.

மேலும், தங்களது அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை எதிர்ப்போர் அனைவருக்கும் தேசதுரோகி என பட்டம் வழங்கும் பாஜக அரசு, காலனிய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கருப்புச் சட்டங்களின் தொடர்ச்சிகளைக் கொண்டுதான் இன்று வாழ்வாதாரங்களை இழந்து போராடும் மக்கள் மீதும் ஒடுக்குமுறை செய்கிறது என்பதை வந்திருந்த பேராசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அரசுக்கு எதிரான கருத்துகளைச் சிந்திப்பதே தவறு எனக் கூறி தன் கருப்புச் சட்டங்களை மக்கள் மீது பாய்ச்சுகிறது இந்த அரசு என்று பேசினார் மற்றொரு பேராசிரியர். மாணவர் ஒருவர் தெல்டும்டே எழுதிய ‘சாதியக் குடியரசு’ (‘Republic of Caste’) என்ற புத்தகத்தில் இருந்து தற்போதைய இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தப்படும்போது அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்படும் அரச வன்முறை பற்றிய சில பக்கங்களை வாசித்தார்.

ஐஐடி சென்னை அம்பேத்கர் பெரியார்  படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைத்த விவாதக் கூட்டம்

ஐஐடி மும்பையைச் சேர்ந்த அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம்

ஐஐடி காந்திநகர் மாணவர்கள் ஒருங்கிணைத்த விவாதம் மற்றும் கையெழுத்து பதாகை

ஐஐடி கரக்பூரில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட போராட்டம்

# ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி வாரணாசி, ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி காந்திநகர், IIEST சிவ்பூர் மற்றும் IMS-BHU ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையின் இணைப்பு (ஆங்கிலத்தில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் :
அம்பேத்கர் பெரியார்  படிப்பு வட்டம்,
சென்னை ஐஐடி.

நத்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் ! சாதி வெறியர்கள் மிரட்டல் !

புகழ் பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தன்னகத்தே கொண்ட பஞ்சாயத்துதான் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்காவில் உள்ள கூத்தப்பாடி பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் தாய் கிராமமான கூத்தப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதே ஊரில் வன்னிய சாதியை சேர்ந்த சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆசிரியப் பெருமக்கள் உள்ள கிராமம் இது. காவிரி இந்த பஞ்சாயத்தில்தான் முதலில் நுழைகிறது. ஆனால் இந்த தண்ணீர் இங்குள்ள விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அளவில் பல அடி பள்ளத்தில்தான் காவிரி ஓடுகிறது.

வானம் பார்த்த பூமியாக இப்பகுதி இருப்பதால் வன்னிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோறு போடுவது என்னவோ அண்டை மாநிலமான கர்நாடகத்தின் பெங்களூருதான். பழைய இரும்பு கடை, கோழி வியாபாரம், பாய் வியாபாரம், கட்டிட வேலை, பெயிண்ட் வேலை என்று வாழ்வின் பெரும்பகுதி நாட்களை பெங்களூருவில் கழிக்கும் நிலை.

ஆனால் என்ன? எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டு விடுகிறது. உண்மையில் ஒரு சில கட்சிகளின் சாதி வெறி பேச்சுக்கள் மூலம் பிரச்சாரத்தின் மூலம் அவர்கள் ஊட்டிய தைரியத்தில் மக்கள் இந்த நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இவ்வாறு சாதிய வெறியூட்டல்கள், புகைச்சல்கள், முரண்பாடுகள், சண்டைகள் அதிகம் உள்ள தருமபுரி கிராமங்களில் கூத்தப்பாடியும் ஒன்று.

இந்த சாதி வெறிக்கு, மிக அருகில் இருந்து பாதிப்பை சந்தித்து வரும் மக்கள்தான் கூத்தப்பாடி தாழ்த்தப்பட்ட மக்கள். எனவே விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற ஜனநாயக அமைப்பு தொடங்கிய காலத்திலிருந்தே இந்த கிராம தாழ்த்தப்பட்ட மக்கள் இதில் ஆர்வமுடன் இணைந்தனர்.

சாதி வெறியை கருத்து ரீதியாகவும், களத்திலும் போராடி அதற்கு பதிலடி கொடுத்ததன் காரணமாக மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வந்தது, வி.வி.மு. ஆதிக்க சாதி பிரிவில் ஓரளவு ஜனநாயகமாக சிந்திக்க கூடியவர்கள் பலர் சாதிகடந்து ஆதரவு தரும் நபர்களாக மாறினர். ஆனால் யாரும் உறுப்பினராக மாறவில்லை. அந்த அளவு சாதி உணர்வின் தாக்கம் இருப்பதே இதற்கு காரணம்.

ஊரின் நுழைவாயிலில் ஊரை காக்கும் முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பட்டய புறம்போக்கில் உள்ளது. இதை சுற்றி கான்கிரீட் தளம் உள்ளது. இந்த இடமானது, பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கான பேருந்து நிறுத்தும் இடமாகவும், திருமணம் நடைபெற்றதும் மணமக்களை ஊருக்கு சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைக்கும் இடமாகவும், நிழல் தரும் மரங்கள் இருப்பதால் பொழுது போக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறுதான் கோயில் கட்டப்பட்ட 40 ஆண்டு காலத்திலிருந்து இருந்து வருகிறது.

இந்த கோயிலுக்கு மிக அருகில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களை கடந்து சற்று தொலைவில் இருப்பவர்கள் ஆதிக்க சாதியினர். இந்த முனியப்பன் சாமியின் பெயரில்தான் இப்போது ஆதிக்க சாதியினர் பிரச்சினையை கிளப்புகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் இந்த கோயிலை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று அவதூறு செய்து சாதிவெறியை கக்குகின்றனர், சாதி தீயை மூட்டுகின்றனர்.

உண்மையில் அதுவல்ல பிரச்சினை. இதன் பின்னணியில் இருப்பது ஆதிக்க சாதிவெறியும், வரும் நாடாளுமன்ற தேர்தலுமே ஆகும். இதற்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்ப வேண்டும்.

கோயிலை சுற்றி தீண்டாமை வேலியை அமைக்க நீண்ட காலமாக அவர்கள் முயற்சித்து வருவதும், இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருந்துவரும் நிலையில் மீண்டும் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

2017-ம் ஆண்டு ஆதிக்க சாதியினர் கம்பி வலை மூலம் வேலி அமைக்க முயற்சித்த போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் சண்டை வந்தது. அதன்பேரில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதன் பேரில் தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை 14.06.2017 அன்று நடந்தது. இதில் மேற்படி கோயில் புறம்போக்கு நிலத்தில் இருப்பதால் எந்த ஒரு கம்பி வேலியும் அமைக்க கூடாது என்று முடிவாகி தீர்மானம் (ந.க.01/2017)நிறைவேற்றப்பட்டது. ஆனால், வேலி போடுவதற்காக நடப்பட்ட கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாமல் இருந்தன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வந்தது. வெளிமாநிலத்திற்கு பிழைக்க சென்று பொங்கலை கொண்டாட ஊருக்கு பெரும் எண்ணிக்கையில் வந்த ஆதிக்க சாதிக்காரர்களுக்கு சாதி வெறிதான் பொங்கியது. பொங்கலில் நடந்த சிறு பிரச்சினையை காரணம் காட்டி, ஏற்கெனவே போடப்பட்ட தீர்மானத்தை மீறி, 19.01.2019 அன்று காலை 9 மணிக்கு ஆதிக்க சாதியினர் கம்பி வேலி அமைத்தனர்.

இது குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களிடம் நியாயம் கேட்டபோது, ஆதிக்க சாதிவெறியர்கள் , தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரை குறிப்பிட்டு அசிங்கமாக திட்டியும் கொலை செய்து விடுவதாகவும் சேரியை நத்தம் காலனி போல் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டி அனுப்பினர்.

இது தவறு என்று பேசிய அக்கிராமத்தில் உள்ள தலித் முன்னணி இளைஞர்களிடம், நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க, நாங்கள் வேலி போட்டது, போட்டதுதான் என்றனர். இது குறித்து டிஎஸ்பி -யிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் முறையிட்டனர். அவர் 4 போலீசை அனுப்பினார். ஆனால் அவர்கள் கம்பி வேலி போடுவதை தடுக்காமல் வேடிக்கைதான் பார்த்தனர். இது குறித்து மீண்டும் டிஎஸ்பி-யிடம் முறையிட்டாலும் அலட்சியமாக இருந்து மணிக்கணக்கில் காலம் தாழ்த்தினார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர், அதிகாரம் என்னிடம் இல்லை. தாசில்தாரை போய் சந்தியுங்கள் என்று கூறிவிட்டார்.

தாசில்தாரிடம் முறையிட்டாலும், அவரும் வேறு வேலை இருப்பதாக கூறி காலம் தாழ்த்தினார். இந்த காலம் தாழ்த்துதலை பயன்படுத்தி கொண்டு ஆதிக்க சாதியினர் கம்பி வேலி அமைத்து முடித்து விட்டனர். கோயிலை சுற்றி மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கட்டிக் கொடுத்த புதிய காலனி பகுதிகளுக்கு செல்லும் பாதையையும் அடைத்து வேலி அமைத்து விட்டனர்.

அரசு அதிகாரிகளின் பலத்தை விட ஆதிக்கசாதிக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதே நாடு முழுவதும் நடந்துவரும் நிகழ்வுகள் காட்டுகிறது. பிறகு பேச்சு வார்த்தை என்ற பேரில் தலித் மக்களை அழைத்தும் ஆதிக்க சாதியினரை அழைத்தும் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் பேசினர். இதில் அத்துமீறிய ஆதிக்க சாதியினர் கட்டுபடவில்லை.

மறுநாள் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 150 பேர் வரை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்து முறையிட்டனர். பிறகு RDO பேச்சுவார்த்தை என்று தொடர்ந்து இருநாள் நடந்து வருகிறது. அரசு நிலத்தில் கோயில் கட்டியதே தவறு, இதில் தாசில்தார் உத்தரவையும் மீறி வேலி போட நீங்கள் யார் என்று ஆர்டிஓ கேட்கும் கேள்விக்கு ஆத்திரத்தையே பதிலாக கொடுக்கிறார்கள், ஆதிக்க சாதியினர்.

முதல் சுற்றில் திமிராக பேசிய அவர்கள், இரண்டாவது சுற்றில் வேறு வழியின்றி தவறை ஒத்துக் கொண்டாலும் வேலியை அகற்ற முடியாது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஆர்டிவோ வேலியை அகற்ற உத்தரவு போட்டு விட்டார். அரசு உத்தரவிற்கு கட்டுபட மறுக்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் வெறித்தனமாக தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி வருகின்றனர். நத்தத்தை நினைவு படுத்திக் கொண்டு பேசுங்கள் என்று நரித்தனமாக மிரட்டுகின்றனர்.

உத்தரவு போட்ட மறுநாளே ஊரை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடைகளில் பொருட்கள் கொடுக்க கூடாது என்று கட்டுபாடு போட்டு விட்டனர். தற்போது அங்குள்ள கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. பென்னாகரம் வந்துதான் பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல தாழ்த்தப்பட்ட மக்களும் ஊரில் இறந்த ஒருவருக்கு அடிமை தொழிலான மேளம் அடிப்பதை செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

ஊரில் அதிகாரிகளும், போலிசும், உளவு போலிசும் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். தற்போது ஆதிக்க சாதிக்காரர்கள், காலனி தெருவிற்கு போகக்கூடிய வழியை மட்டும் விட்டு விடுகிறோம். அதை அடைத்து போட்ட வேலியை மட்டும் அகற்றி விடுகிறோம். மற்றபடி முனியப்பன் கோயிலை சுற்றி போட்ட வேலி அப்படியே இருக்கட்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் நைச்சியமாக பேசி வருகின்றனர். இது தீண்டாமை வேலி. இதை அனுமதித்தால் அடுத்தடுத்து ஆதிக்க சாதிவெறி தாக்குதல்களை நாங்கள் சந்திக்க நேரிடும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் வேலியை அகற்றுவதற்கான போராட்டத்தில் உறுதியாக உள்ளனர்.

ஆதிக்க சாதி வெறியர்கள் மிரட்டுவதை போல், மீண்டும் நாயக்கன் கொட்டாய் சம்பவம் அரங்கேறுமா என்பது அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சாதி வெறியர்களை எப்படி தனிமைப் படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது.

-பு.ஜ செய்தியாளர்
பென்னாகரம்.

நீங்கள் எங்கள் தீர்ப்பை முன்பே எழுதிவிட்டீர்கள் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 55

மாக்சிம் கார்க்கி

அவள் மகன், அவளுக்குத் தெரியாத எதையும் சொல்லிவிடவில்லை. அவனது சிந்தனைகளெல்லாம் அவளுக்கும் பரிச்சயமானவைதாம். என்றாலும் இங்கே, நீதிமன்றத்தின் முன்னிலையில், அவனது கொள்கையின் மீது அவளுக்கு ஓர் அதிசயக் கவர்ச்சி முதன் முதலாக ஏற்படுவதை அவள் உணர்ந்தாள். பாவெலுடைய அமைதியைக் கண்டு அவள் வியப்படைந்தாள். அவளது கொள்கையிலும் அதன் இறுதி வெற்றியிலும் முழு நம்பிக்கை கொள்ளும் ஒரு நட்சத்திர ஒளியைப் போலவே அவள் அவனது பேச்சைத் தன் இதயத்துக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள்.

இனிமேல் அந்த நீதிபதிகள் அனைவரும் அவனோடு காரசாரமான விவாதத்தில் இறங்கி, அவன் கூறுவதையெல்லாம் கோபாவேசமாக மறுத்துக்கூறி, தங்களது சொந்த சிந்தனைகளை வலியுறுத்துவார்கள் என்று தாய் எதிர்பார்த்தாள். ஆனால் அந்திரேய் ஆடியசைந்து கொண்டே எழுந்திருந்தான். தனது புருவங்களுக்குக் கீழாக அந்த நீதிபதிகளைக் கவனித்துப் பார்த்தான். பிறகு பேசத் தொடங்கினான்.

”பிரதிவாதிப் பெரியோர்களே…”

”நீங்கள் நீதிபதிகளைப் பார்த்துத்தான் பேச வேண்டும். பிரதிவாதிகளை நோக்கியல்ல!” என்று அந்தச் சீக்காளி நீதிபதி கோபத்தோடு உரக்கக் கத்தினார். அந்திரேயின் முகத்தில் ஒரு குறும்புத்தனமான உணர்ச்சி பிரதிபலித்ததைத் தாய் கண்டுகொண்டாள். அவனது மீசைகள் அசைந்து துடித்தன; கண்களில் ஒரு பூனைக்கண் பிரகாசம் தோன்றியதைத் தாய் கண்டாள். அவன் தனது தலையை மெலிந்த நீண்ட கரத்தால் பரபரவென்று தேய்த்துவிட்டுக்கொண்டான்; பெரு மூச்செறிந்தான்.

”அப்படியா?” என்றான் அவன். ”நான் இதுவரை உங்களை நீதிபதிகளாகக் கருதவில்லை. பிரதிவாதிகளாகவே கருதிவிட்டேன்!”

”விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசுங்கள்!” என்று அந்தக் கிழ நீதிபதி வறண்ட குரலில் எச்சரித்தார்.

”விஷயத்தையா? ரொம்ப சரி. உங்களை நேர்மையும் கௌரவமும் சுதந்திரமும் கொண்ட உண்மையான நீதிபதிகளாகக் கருதிக் கொள்வதென்று நான் என் மனத்தைப் பலவந்தப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டேன்……..”

”நீதிமன்றத்துக்கு உங்கள் விமர்சனம் எதுவும் தேவையில்லை!”

“ஓஹோ, அப்படியா? ரொம்ப சரி. நான் எப்படியாவது பேசுகிறேன். நீங்கள் எல்லாம் ‘உன்னது’, ‘என்னது’ என்ற வித்தியாசம் பாராத, பாரபட்சமற்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலைமையாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சரி, உங்கள் முன்னால் இரண்டு பேரை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: ‘அவன் என்னைக் கொள்ளையடித்ததுமில்லாமல் என்னைக் கூழாய் அடித்து நொறுக்கிவிட்டான்’ என்கிறான். இன்னொருவன் எனக்கு ஜனங்களைக் கொள்ளையடிக்க உரிமை உண்டு; என்னிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கி இருப்பதால் அவனைக் கூழாக அடித்து நொறுக்கவும் செய்வேன்’ என்கிறான்…….”

“வழக்கைப் பற்றி ஏதும் பேசத் தெரியாதா?” என்று குரலை உயர்த்திக்கொண்டு கேட்டார் அந்தக் கிழ நீதிபதி. அவரது கரம் நடுங்கியது. அவர் கோபப்படுவதைக் கண்டு, தாய்க்குச் சந்தோஷமாயிருந்தது. ஆனால் அந்திரேய் நடந்து கொள்ளும் விதம் தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது பேச்சு தன் மகனுடைய பேச்சோடு இணைந்து செல்வதாகத் தோன்றவில்லை. அவர்களது விவாதமெல்லாம் கண்ணியமும் கண்டிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென அவள் விரும்பினாள்.

அந்த ஹஹோல் தான் பேசத் தொடங்குவதற்கு முன்னால் அந்தக் கிழவரை வாய்பேசாது பார்த்தான்.

”விஷயத்தை மட்டுமா?” என்று நெற்றியைத் தடவிக்கொண்டே சொன்னான். ”நான் ஏன் அதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்? உங்களுக்கு இப்போது என்னென்ன தெரிய வேண்டுமோ, அதையெல்லாம்தான் என் தோழன் எடுத்துக் கூறிவிட்டானே. மற்ற விஷயங்களை முறை வரும்போது மற்றவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்…”

அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு சத்தமிட்டார்.

”நீங்கள் பேசியது போதும்!” அடுத்து – கிரிகோரிய் சமோய்லவ்!

ஹஹோல் கப்பென்று உதடுகளை மூடிக்கொண்டு பெஞ்சின் மீது சாவதானமாக உட்கார்ந்தான். சமோய்லவ் தனது சுருட்டைத் தலையைச் சிலுப்பிவிட்டுக்கொண்டு எழுந்திருந்தான்.

“அரசாங்க வக்கீல் என்னுடைய தோழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், நாகரிகத்தின் எதிரிகள் என்றும் கூறினார்……..”

“உங்கள் விசாரணையைப் பொறுத்த விஷயத்தை மட்டும் பேசுங்கள்.”

“இதுவும் அதைப் பொறுத்த விஷயம்தான். யோக்கியப் பொறுப்புள்ளவர்களைப் பொறுத்த விஷயங்கள்தான் எல்லாம். அவர்கள் சம்பந்தப்படாத எந்த விஷயமும் இல்லை. தயை செய்து நான் பேசுவதில் குறுக்கிட வேண்டாம். உங்கள் நாகரிகம் எது? அதைத்தான் நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”

“உங்களோடு விவாதம் பண்ணுவதற்காக இங்கு நாங்கள் வரவில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள்!” என்று பல்லைக் காட்டிக்கொண்டே சொன்னார் அந்தக் கிழவர்.

அந்திரேயின் நடத்தை அந்த நீதிபதிகளிடத்தில் ஒரு மாறுதலை உண்டுபண்ணியிருந்தது. அவனது வார்த்தைகள் அவர்களிடமிருந்து எதையோ உரித்தெடுத்துவிட்டதுபோல் தோன்றியது. அவர்களது சாம்பல் நிற முகங்கள் கறுத்துக் கறைபடிந்தன. கண்களில் உணர்ச்சியற்ற பசிய ஒளி மினுமினுத்தது. பாவெலின் பேச்சினால் அவர்களுக்கு எரிச்சல்தான் உண்டாயிற்று. எனினும் அவர்கள் அவனை மதிக்கும்படியான நிர்ப்பந்தத்தை உண்டாக்கிவிட்டது, அவனது பேச்சு. அதனால் அவர்கள் தங்களது எரிச்சலைக்கூட வெளிக்காட்டாமல் உள்ளடக்கிக்கொண்டு தவித்தார்கள். அந்த ஹஹோலோ அவர்களது இந்தப் பாசாங்குத் திரையைக் கிழித்தெறிந்து, அவர்களது அந்தரங்க உணர்ச்சியை வெளிக் கிளப்பிவிட்டுவிட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் குசுகுசுத்துப் பேசினார்கள்; முகத்தை விகாரமாகக் கோணிக் கொண்டார்கள்; நிலைகொள்ளாமல் துறுதுறுத்தார்கள்.

”நீங்கள் மக்களை உளவாளிகளாகப் பழக்கிவிடுகிறீர்கள், இளம் யுவதிகளையும் பெண்களையும் கெடுக்கிறீர்கள்; மனிதர்களைத் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாற்றிவிடுகிறீர்கள்; மதுபானத்தால் மக்களை விஷமூட்டிக் கொல்கிறீர்கள். சர்வதேச யுத்தங்கள், பொய் பித்தலாட்டங்கள், விபச்சாரம், காட்டுமிராண்டித்தனம் – இதுதான் உங்கள் நாகரிகம். இந்த மாதிரியான நாகரிகத்துக்கு நாங்கள் எதிரிகள்!”

‘நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்…….” என்று சத்தமிட்டார் அந்தக் கிழவர். ஆனால் சமோய்லவோ முகம் சிவக்க, கண்கள் பிரகாசிக்க எதிர்த்துச் சத்தமிட்டான்.

”நீங்கள் எந்த மக்களைச் சிறையிலே தள்ளி நாசப்படுத்துகிறீர்களோ, பைத்தியம் பிடிக்கச் செய்கிறீர்களோ அந்த மக்கள் குலத்தின் நாகரிகத்தைத்தான் நாங்கள் மதிக்கிறோம்; ஆதரிக்கின்றோம்; கெளரவிக்கிறோம்……”

”பேசியது போதும், சரி. அடுத்தது – பியோதர் மாசின்!”

பியோதர் முள் குத்தியது போலத் துள்ளியெழுந்து நிமிர்ந்து நின்றான்.

”நான் – நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் எங்கள்மீது ஏற்கெனவே தீர்ப்புச் செய்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அவன் மூச்சுத் திணறிக்கொண்டே சொன்னான். அவனது கண்களைத் தவிர முகம் முழுவதும் வெளிறிட்டுப்போனதாகத் தோன்றியது. அவன் தன் கையை நீட்டி உயர்த்திக்கொண்டே கத்தினான். “நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நீங்கள் என்னை எங்கெங்கு அனுப்பினாலும் சரி, அங்கிருந்து நான் எப்படியாவது தப்பிவந்து என் சேவையை என்றென்றும். என் வாழ்நாள் பூராவும் தொடர்ந்து நடத்துவேன். இது சத்தியம்!”

சிஸோவ் உரத்து முனகிக்கொண்டே, தன் இருப்பிடத்தைவிட்டு அசைந்து உட்கார்ந்தான். ஜனக்கூட்டத்திடையே ஒரு விசித்திரமான முணுமுணுப்பு எதிரொலித்தது. அது திக்பிரமையுணர்ச்சியில் கலந்து அமிழ்ந்தது. ஒரு பெண் பொருமிக் குமுறியழுதாள். யாரோ திடீரென இருமலுக்கு ஆளாகிப் புகைந்தார்கள். போலீஸ்காரர்கள் கைதிகளை மங்கிய வியப்புணர்ச்சியோடு பார்த்தார்கள்; ஜனங்களைக் கோபத்தோடு பார்த்தார்கள். நீதிபதிகள் முன்னும் பின்னும் அசைந்தாடினார்கள். அந்தக் கிழட்டு நீதிபதி வாய்விட்டுக் கத்தினார்.

“அடுத்தது – இவான் கூஸெவ்!”

”நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!”

”அடுத்தது – வசீலி கூஸெவ்!”

”எனக்கும் ஒன்றும் இல்லை”

”பியோதர் புகின்!”

வெளுத்து நிறமிழந்து போயிருந்த புகின் சிரமத்தோடு எழுந்திருந்து, தன் தலையை உலுக்கிவிட்டுக்கொண்டு பேசினான்.

”நீங்கள் உங்களைப் பார்த்தே நாணித் தலைகுனிய வேண்டும். எனக்குக் கல்வியறிவு இல்லைதான். என்றாலும் எது நியாயம் என்பது எனக்குத் தெரியும்.” அவன் தன் கையைத் தலைக்கு மேலாக உயர்த்தி, மௌனமானான். கண்களைப் பாதி மூடியவாறு தூரத்தொலையிலுள்ள எதையோ கூர்ந்து கவனிப்பது போலப் பார்த்தான்.

“இதென்ன இது?” என்று எரிச்சல் கலந்த வியப்போடு கூறிக்கொண்டே அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் சாய்ந்தார்.

“ப்பூ! நீங்கள் நாசமாய்ப் போக!……”

புகின் வெறுப்போடு கீழே உட்கார்ந்தான். அவனது இருண்ட வார்த்தைகளில் ஏதோ ஒரு புதுமையும் ஏதோ ஒரு பெரிய முக்கியத்துவமும், எதையோ பழித்துக் கூறும் துக்க உணர்ச்சியும், அப்பாவித்தனமும் பொதிந்திருந்தான். எல்லோருமே இதை உணர்ந்துகொண்டார்கள். நீதிபதிகள்கூட, அவன் கூறியதைவிடத் தெளிவானதான ஓர் எதிரொலியை எதிர்பார்ப்பது போலத் தம் செவிகளைக் கூர்ந்து சாய்த்தார்கள். அசைவற்ற அமைதி அங்கு நிலவியது. இடையிடையே அழுகைக்குரல் கேட்பதைத் தவிர அந்த மெளனத்துக்கு வேறு இடைஞ்சல் எதுவும் ஏற்படவே இல்லை. கடைசியாக, அரசாங்க வக்கீல் தமது தோள்களைக் குலுக்கிக் கொண்டு லேசாகச் சிரித்தார். பிரபுவம்சத் தலைவர் இருமினார்; மீண்டும் அந்த நீதிமன்றத்தில் ரகசியப் பேச்சுக்களின் கசமுசப்புக்குரல் முணுமுணுக்கத் தொடங்கியது.

”நீதிபதிகள் பேசப்போகிறார்களா?” என சிஸோவைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள் தாய்.

“எல்லாம் முடிந்துவிட்டது – இனிமேல் தீர்ப்பு மட்டும்தான் பாக்கி……”

”இவ்வளவுதானா? வேறொன்றும் இல்லையா?”

”இல்லை.”

அவளால் அதை நம்ப முடியவில்லை.

சமோய்லவின் தாய் தனது இடத்தில் நிலைகொள்ளாமல் தவித்துப் புழுங்கினாள். பெலகேயாவை முழங்கையாலும் தோளாலும் இடித்துத் தள்ளினாள்.

“இதென்ன இது? இப்படியா நடக்கும்?” என்று தன் கணவனை நோக்கிக் கேட்டாள் அவள்.

“நீதான் பார்த்தாயே. இப்படித்தான் நடக்கும்.”

“கிரிகோரியுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்?”

”சும்மா இரு.”

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிளவை, ஏதோ ஒரு முறிவை, ஏதோ ஒரு குழப்பத்தை உணர்ந்திருந்தார்கள். அடிமுடி காண முடியாத ஏதோ ஒரு சொக்கப்பனையின் ஒளியை, அதனுடைய இனம் தெரியாத அர்த்த பாவத்தை, அதனது தடுத்து நிறுத்த முடியாத அசுர சக்தியைக் கவனித்துக்கொண்டிருப்பதுபோல் ஜனங்கள் அனைவரும் ஒன்றுமே புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். திடீரெனத் தங்கள் முன் தோன்றிய மகத்தான விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், தங்களுக்குப் புரிந்த சின்னஞ்சிறு விஷயங்களைப் பற்றி மட்டும் ஏதேதோ உணர்ச்சிகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

படிக்க:
♦ தாய் பாகம் 12 : இவன் சோஷலிஸ்ட் ! முட்டாள் அல்ல
♦ எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா ?

”இதைக் கேளு. அவர்கள் ஏன் இவர்களைப் பேசவிடுவதில்லை?” என்று புகினின் மூத்த சகோதரன் சிறிது உரக்கக் கேட்டான். ”அரசாங்க வக்கீலை மட்டும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசவிடுகிறார்களே……..”

பெஞ்சுகளுக்குப் பக்கத்தில் நின்ற ஓர் அதிகாரி ஜனக்கூட்டத்தை நோக்கித் தன் கையை நீட்டி அவர்களைக் கையமர்த்தினான்.

”அமைதி… அமைதி” என்றான் அவன்.

சமோய்லாவின் தந்தை பின்னால் சாய்ந்து கொண்டு மனைவியின் முதுகிற்குப்பின் உடைந்த வார்த்தைகளில் ஏதேதோ முணுமுணுக்கத் தொடங்கினான்.

“ரொம்ப சரி – அவர்கள் குற்றவாளிகளென்றே வைத்துக் கொள்வோம். இருந்தாலும் தங்கள் கட்சியை எடுத்துரைப்பதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் யாருக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்? நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் என் இதயத்தில் சில சொந்த அபிப்பிராயங்கள் உண்டு…”

”உஷ்!” என்று சமோய்லவின் தந்தையை நோக்கி விரலை நீட்டி எச்சரிக்கை செய்தான் அதிகாரி.

சிஸோவ் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டான்.

தாய் தனது பார்வையை அந்த நீதிபதிகளின் மீதிருந்து அகற்றவே இல்லை. அவர்கள் வெளிக்குத் தெரியாமல் தமக்குள் பேசிக்கொள்ளும்போது அவர்கள் ஆத்திர உணர்ச்சி அதிகரித்து வருவதையே அவள் கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்களது உணர்ச்சியற்ற மெலிந்த குரல்கள் தாயின் முகத்தைத் தொட்டன; அவளது கன்னங்களைத் துடிக்கச் செய்தன. அவளது வாயிலே ஏதோ ஓர் அருவருக்கத்தக்க கசப்பு ருசியை உண்டாக்கின. குதுகுதுக்கும் ரத்தமும், ஜீவ சக்தியும் நிறைந்து துடிக்கும் தனது மகனையும் அவனது தோழர்களையும் பற்றி, அவர்களிடம் உடம்புகளைப் பற்றி, அந்த இளைஞர்களின் தசைகளையும் அவயவங்களையும் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாக தாய்க்குத் தோன்றியது. அந்த உடம்புகளைக் காணும் அவர்களது உள்ளத்தில் பிச்சைக்காரர்களின் கேவலமான பகைமை உணர்ச்சியும் நோய்ப்பட்டு நொம்பலமானவர்களின் பேராசையுணர்ச்சியுமே இடம்பெற்று வளர்ந்தன.

இன்பத்தை அறியவும் ஆக்கவும் சக்தி படைத்த, வேலை செய்யவும் செல்வத்தை ஆக்கவும் பெருக்கவும் சக்தி படைத்த, அந்த இளைஞர்களது உடல்களைப் பார்த்துப் பார்த்து வருத்தத்தோடு தங்கள் நாக்குகளைக் சப்புக் கொட்டிக்கொண்டார்கள். ஆனால் இந்த உடல்வளம் பெற்ற இளைஞர்களோ இனி ஒதுக்கப்பட்டுப் போனார்கள். அதாவது இனிமேல் அந்த உடல் வளத்தை யாரும் தங்கள் உடமையாகக் கருத முடியாது. அதைச் சுரண்டி வாழ முடியாது; தின்று வாழ முடியாது. இந்தக் காரணத்தினால்தான் அந்தக் கிழட்டு நீதிபதிகளின் மனத்திலே பழிவாங்கும் சோக எரிச்சல் மூண்டது.

தம் முன்னால் புதிய இரைப்பிராணி வரும்போது அதை எட்டிப்பிடிக்கத் தெம்பும் திராணியும் அற்றுப்போய் மெலிந்து வாடும் காட்டு மிருகத்தைப்போல், பிற மிருகங்களின் பலத்தை அமுங்கடித்து அவற்றைத் தமக்கு இரையாக்கித் தின்பதற்குச் சக்தியற்றுப் போய் அந்த இரைப்பிராணிகள் தம்மிடமிருந்து தப்பி நடமாடுவதைக் கண்டு, அவற்றைப் பிடித்து அடிக்கத் திராணியற்று அவற்றை நோக்கி உறுமுவதோடும் ஊளையிடுவதோடும் திருப்தியடையும் காட்டுமிருகத்தைப் போல் அவர்களும், தங்களது ஆட்சிக்குள் சிக்காது தப்பிக்கும் அந்த இளைஞர்களைப் பார்த்து பழிகொள்ளும் துன்ப உணர்வுடன் கொட்டாவி விட்டுக் குமுறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த மாதிரியான குரூரமான, விபரீதமான எண்ணங்கள் எல்லாம் நீதிபதிகளையே கவனித்துக்கொண்டிருந்த தாயின் மனத்தில் தெள்ளத் தெளிவாக உருப்பெற்றுத் தோன்றிக் கொண்டிருந்தன. தங்களது இந்தப் பேராசை உணர்ச்சியையும், ஒரு காலத்தில் தங்களது மிருகப் பசியைத் தணித்துக் கொள்வதற்கு வழி தெரிந்து வைத்திருந்து, இன்று பலமிழந்துபோன மிருகங்களின் உறுமலைப் போன்ற ஆண்மையற்ற மூர்க்க பாவத்தையும், அவர்கள் அனைவரும் மூடி மறைக்க விரும்பவில்லை என்றே அவளுக்குத் தோன்றியது.

பெண்மை உணர்ச்சியும் தாய்மையுணர்ச்சியும், கலந்து நிறைந்த தாய்க்கோ தனது மகனது சரீரம் என்றென்றும் இனிமை பயப்பதாக, ஆத்மா என்று சொல்லப்படுகிறதே, அதைவிட அருமையானதாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் பசிவெறி கொண்ட மங்கிய கண்கள் அவனது முகத்தின் மீதும், மார்பின் மீதும் தோள்களின் மீதும், கைககளின் மீதும் ஊர்ந்து தவழ்ந்து, அவனது உயிர்ப்பு நிறைந்த சதைக் கோளத்தின் உணர்வை நாடி, அவன் உடம்போடு ஒட்டி உராய்ந்து தமது உடம்பிலும், தங்களது தொய்ந்து தொள தொளத்துப் போன தசைக் கோளங்களிலும், வலியிழந்துபோன நரம்புகளிலும் புது வலுவை ஏற்றிக் கொள்ளும் விருப்பத்தோடு பற்றிப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே அவளுக்குப் பயங்கரமாய்த் தோன்றியது.

அந்த இளைஞர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கும் தாமே ஆளாகி, அவர்களது உடம்புகளைத் நாம் என்றென்றும் இழப்பதற்கும் தயாராகிவிட்ட அந்த இளைஞர்களை எண்ணியெண்ணி அந்த நீதிபதிகள், ஊறிவரும் பகைமை பேராசை முதலியவற்றின் உறுத்தலால், ஒரு புதிய துடிப்புக்கு ஆளாயினர். அவர்களது இந்த உணர்ச்சியற்ற இனிமையற்ற பார்வையைப் பாவெலும் உணர்ந்து கொண்டது போலவே அவளுக்குத் தோன்றியது. எனவேதான் அவன் அவளை ஒரு நடுக்கத்தோடு பார்ப்பதாக அவள் உணர்ந்தாள்.

பாவெல் அவளை அமைதியோடும் அன்போடும், கண்ணில் களைப்பின் சாயை படர்ந்து பரவப் பார்த்தான். இடையிடையே அவன் அவளை நோக்கித் தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.

”சீக்கிரமே – விடுதலை!” என்ற வார்த்தைகளே அவனது புன்னகையின் அர்த்த பாவமாகத் தோன்றியது. அந்தப் புன்னகை அவளைத் தொட்டுத் தடவி அமைதியளித்தது.

திடீரென்று அந்த நீதிபதிகள் எழுந்திருந்தார்கள். தாயும் தன்னை அறியாமலே எழுந்து நின்றாள்.

“அதோ அவர்கள் போகப் போகிறார்கள்” என்றான் சிஸோவ்.

”தீர்ப்புச் செய்யவா?” என்று கேட்டாள் தாய்.

“ஆமாம்.”

அவள் கொண்டிருந்த உணர்ச்சிப் பரவசம் திடீரென இற்று முறிந்து, அவளுக்குக் களைப்புணர்ச்சியினால் ஏற்படும் மயக்க உணர்ச்சி மேலோங்கியது. அவளது புருவங்கள் நடுங்கின. நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்துத் துளிர்த்தன. அவளது இதயத்திலே துயரமும் அதிருப்தியும் நிறைந்த மனப்பாரம் ஏறியமர்ந்தது; அந்த மனப்பார உணர்ச்சி திடீரென்று அவள் மனதில் நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கசப்புணர்ச்சியை உண்டாக்கிவிட்டது. தலையை வலிப்பதாக உணர்ந்தாள் அவள். எனவே தன் கையினால் நெற்றியை அழுத்திப் பிடித்துத் தேய்த்தவாறே அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

கைதிக் கூண்டுகளை நெருங்கிச் சென்ற கைதிகளின் உறவினர்களையும் பேச்சுக் குரலின் ரீங்காரம் நிரம்பிய நீதிமன்றத்தையும் அவள் பார்த்தாள். அவளும் பாவெலிடம் சென்றாள். அவன் கையை அழுத்திப் பிடித்தாள். பல்வகையுணர்ச்சிகளின் குழப்ப நிலைக்கு ஆளாகி, அதனால் எழுந்த வேதனையோடும் இன்பத்தோடும் அவள் பொங்கிப் பொங்கி அழுதாள். பாவெல் அவளிடம் அன்போடு பேசினான். ஹஹோலோ சிரித்துக் கேலி பண்ணினான்.

எல்லாப் பெண்களுமே அழுதார்கள். சோகத்தால் அழுவதைவிட, பழக்கத்தின் காரணமாகத்தான் அவர்கள் அழுது தீர்த்தார்கள். எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்து தம்மைத் தாக்கிய சோக வேதனை எதுவும் அவர்களுக்கு இல்லை. தங்களது குழந்தைகளைப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தால்தான் அவர்கள் அழுதார்கள். அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து அந்த வருத்த உணர்ச்சிகூட ஓரளவு சமனப்பட்டுப் போயிருந்தது. தந்தைமார்களும் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைக் குழம்பிப்போன பல்வகை உணர்ச்சியோடு பார்த்தார்கள்.

பெரியவர்களாகிய நாங்கள் அந்த இளைஞர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற வழக்கமான எண்ணத்தோடு, அந்த இளைஞர்களின் காரியங்களில் அவநம்பிக்கை உணர்ச்சியோடுதான் அவர்கள் பார்த்தார்கள். எனினும் அவர்கள் அந்த இளைஞர்களுக்கு ஒருவிதத்தில் மரியாதையும் காட்டினார்கள். புதியதொரு நல்வாழ்வைச் சமைப்பதைப் பற்றிக் கொஞ்சங்கூடப் பயமில்லாமலும் தைரியத்தோடும் அந்த இளைஞர்கள் எடுத்துக்கூறிய விஷயம் அவர்களது மனத்திலோ ஒரு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே அந்த வியப்புணர்ச்சிக்கு ஆளாகி, இனிமேல் தாம் எந்தவிதமாக வாழ வேண்டும் என்ற கவலைக்கு ஆளாகிச் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்ந்தார்கள் அந்தப் பெற்றோர்கள். உணர்ச்சிகளை உருவாக்கி வெளியிட முடியாத ஏலாத் தன்மையால் அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளேயே அழுந்திப் போயின. எனவே அவர்கள் சர்வ சாதாரணமான விஷயங்களைப் பற்றி, துணிமணி, உடம்பைப் பார்த்துக்கொள்ளுதல் முதலிய விஷயங்களைப் பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டார்கள்.

புகினின் மூத்த சகோதரன் தன் தம்பிக்கு எதையோ விளக்கிச் சொல்வதற்காக, கையை ஆட்டிக்கொண்டிருந்தான்.

“நியாயம் – இதுதான் வேண்டும். வேறொன்றுமில்லை!”

“நமது மைனாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்று பதிலளித்தான் புகின்.

”பார்த்துக் கொள்கிறேன்”

சிஸோவ் தன் மருமகனின் கையைப்பிடித்துச் சொன்னான்:

”நல்லது, பியோதர், அப்படியென்றால் நீ எங்களை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறாயா?….”

பியோதர் தன் மாமனின் பக்கமாகக் குனிந்து அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு, குறும்புத்தனமாகப் புன்னகை செய்தான். அங்கு காவல் நின்ற காவலாளியும் புன்னகை செய்தான். ஆனால் மறுகணமே அவன் தன் முகத்தை வக்கிரமாக வைத்துக் கொண்டு தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டான்.

மற்றப் பெண்கள் பேசியது போலவே தாயும் தன் மகனிடம் துணிமணிகளைப் பற்றியும், அவனது தேக சுகத்தைப் பற்றியுமே பேசினாள். எனினும் அவளது உள்ளத்தில் சாஷாவைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவனைப் பற்றியும் ஆயிரமாயிரம் கேள்விகள் நிரம்பிப் புடைத்து விம்மிக்கொண்டிருந்தன. இதற்கெல்லாம் மேலாக, அவள் தன் மகன் மீது கொண்ட பாசவுணர்ச்சியால் ஏதோ ஒரு பாரவுணர்ச்சி நெஞ்சில் குடிபுகுந்தது. அவள் அவனை மகிழ்வித்து, அவனது இதயத்தைத் தன் இதயத்தால் தொட்டுவிட விரும்பினாள்.

ஏதோ நடக்கப்போகிறது என்றிருந்த பய பீதியுணர்ச்சி மறைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக அந்த நீதிபதிகளைப் பற்றிய நினைவு எழும்போது ஒரு நடுக்க உணர்ச்சியும், அவளது மனத்தின் மூலையிலே சில இருண்ட எண்ணங்களுமே தோன்றிக்கொண்டிருந்தன. தன்னுள்ளே ஒரு புதிய பிரகாசம் பொருந்திய இன்ப உணர்ச்சி பிறப்பதை அவள் உணர்ந்தாள். அதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவள் குழம்பித் தவித்தாள். ஹஹோல் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, தான் பாவெலிடம் காட்டும் பாசவுணர்ச்சியைவிட, அவனிடமேதான் அதிகமான பாசம் கொள்ள வேண்டும் என்பதை அவள் உணர்ந்து அவனிடம் திரும்பிப் பேசினாள்.

”உங்கள் விசாரணையை நான் அப்படியொன்றும் பெரிதாக நினைக்கவில்லை!”

”ஏன் அம்மா?” என்று நன்றியுணர்வோடு புன்னகை செய்து கொண்டே கேட்டான் அவன். “பசு கிழடேயானாலும் பாலின் ருசி போகுமோ?….”

“அதைப் பற்றிப் பயப்படுவதற்கே ஒன்றுமில்லை. ஆனால் இந்த விசாரணையால் யார் சொல்வது சரி, யார் சொல்வது தப்பு என்பது வெளிவரவேயில்லை என்று அவள் தயக்கத்தோடு கூறினாள்.

“ஓஹோ, அதுவா? அதைத்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று சொன்னான் அந்திரேய். ”அவர்கள் உண்மையைத் தேடிக் காண்பதில் அக்கறை கொண்டவர்கள் என்று நினைத்தீர்களா?”

”இது ரொம்பப் பயங்கரமாயிருக்குமென்று நான் நினைத்தேன்” என்று பெருமூச்சோடும் புன்னகையோடும் சொன்னாள் அவள்.

“அமைதி! ஒழுங்கு!”

எல்லோரும் அவரவர் இடத்துக்கு ஓடிப்போனார்கள்.

பிரதம நீதிபதி தமது கையொன்றை மேஜை மீது ஊன்றிக் குனிந்தவாறு மறு கையால் தமது முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை எடுத்துப் பிடித்தார், மெலிந்து இரையும் குரலில் அதை வாசித்தார்.

”அவர் தீர்ப்பை வாசிக்கிறார்” என்றான் சிஸோவ்.

அந்த அறை முழுவதும் அமைதியாயிருந்தது. ஒவ்வொருவரும் அந்தக் கிழவரையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். ஏதோ கண்ணுக்குப் புலனாகாது, கையிலே தாங்கிய அசைவற்ற தடியைப் போல், அவர் தோற்றம் அளித்தார். மற்ற நீதிபதிகளும் எழுந்து நின்றார்கள். அந்த ஜில்லா அதிகாரியும் எழுந்தார். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, கண்களை முகட்டை நோக்கித் திருப்பியவாறே நின்றார். நகர மேயர் தமது மார்பைக் கைகளால் கட்டிக் கொண்டு நின்றார். பிரபுவம்சத் தலைவர் தமது தாடியைத் தடவிக்கொடுத்தார். நோயாளி நீதிபதியும், கொழுத்த முகம் கொண்ட அவரது சகாவும், அரசாங்க வக்கீலும் கைதிகள் நின்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். சித்திரத்திலுள்ள அந்த முகத்தின் மீது ஒரு பூச்சி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

”தேசாந்திர சிட்சை!” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொன்னான் சிஸோவ். “நல்லதாய்ப் போயிற்று. கடவுள் புண்ணியத்தில் இது ஒருவழியாய் முடிந்தது. தேசாந்திரத்தில் கடும் உழைப்பு என்றார்கள். அது எப்படியும் ஒத்துப்போய்விடும். அம்மா, வீணாகக் கவலைப்படாதே.”

”அது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று சோர்ந்த குரலில் சொன்னாள் தாய்.

“எப்படியும் போகட்டும். நமக்குத்தான் என்னென்ன நடக்கும் என்பது தெரியுமே. அது எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பேசுவானேன்?”

அவன் கைதிகளின் பக்கமாகத் திரும்பினான்; அதற்குள் காவலாளிகள் கைதிகளைக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

”போய் வா, பியோதர்” என்று அவன் கத்தினான். ”எல்லோரும் போய் வாருங்கள். கடவுள் உங்களுக்குக் கருணை புரியட்டும்!”

தாய் தன் மகனையும் மற்றவர்களையும் பார்த்து மெளனமாகத் தலையை ஆட்டினாள். அவள் வாய்விட்டு அழ விரும்பினாள், ஆனால் அழுவதற்கோ வெட்கப்பட்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

பார்ப்பனியம் : சமத்துவத்தின் முதல் எதிரி

பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கத்தைத் தகர்த்தெறி! என்ற முழக்க அட்டையைக் கையிலேந்தி நிற்கிறாள் ஒரு பெண். தனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்ட அந்த முழக்கத்தின்” வீரியம் என்னவென்று தெரியாமல் அதைக் கையில் பிடித்துக்கொண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி. இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளி வந்தவுடனே அண்டம் கிடுகிடுத்தது.

ஒரு சிறுபான்மை சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகவும், துவேசத்தைப் பரப்புவதாகவும், யூதர்களைப் போல தங்களை வேட்டையாடுவதாகவும் முன்னாள் இன்போசிஸ் இயக்குநர் மோகன்தாஸ் பாய், ரிபப்ளிக் டிவியின் ஆலோசகர் சித்ரா சுப்ரமணியம், காங்கிரசின் மனிஷ் திவாரி ஆகியோர் முதல் கிரீன் கார்டு அம்பிகள் வரையிலான பார்ப்பன சர்வதேசியர்கள் எழுப்பிய கூச்சலுக்கு டிவிட்டர் பணிந்தது. அந்த அட்டைக்கும் டோர்சிக்கும் இடையிலான உறவு எத்தகையதோ அத்தகையதுதான் ஜனநாயகத்துக்கும் அமெரிக்காவுக்குமான உறவு என்ற கசப்பான உண்மையை வாஷிங்டனை வணங்கும் லிபரல்கள் விழுங்க வேண்டியதாயிற்று.

” பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கத்தைத் தகர்த்தெறி!” என்ற முழக்க அட்டையைக் கையில் ஏந்தி நிற்கும் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி.

பார்ப்பனிய எதிர்ப்பை சர்வதேசப் பிரச்சினையாக உயர்த்திய இந்தப் படத்தை உருவாக்கியவர் அமெரிக்காவில் பணிபுரியும் தென்மொழி சவுந்தரராசன். இவர் ஒரு தலித் பெண், அதிலும் தமிழ்நாட்டுப்பெண் என்பதற்காக நாம் பெருமைப்படுவோம். பார்ப்பனக் கும்பலின் எதிர்ப்பைக் கண்டு அவர் அசரவில்லை.

பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம் என்று கூறுவது ஒரு வன்முறை அல்ல. அது ஒரு உண்மை விவரம். பார்ப்பனிய ஒடுக்குமுறைக் கட்டமைப்பைப் பற்றி நாம் பேசுகிறோம். இந்த கட்டமைப்பினால் ஆதாயம் அடைபவர்கள், அதனை மறைத்துக் கொள்வதற்காக, தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதல்” என்று இதனை திசை திருப்புகிறார்கள். பல நூற்றாண்டுகளாக சலுகையை அனுபவித்த ஆதிக்க சாதியினர், சமத்துவம் என்று சொன்னாலே, அதனைத் தங்கள் மீதான அடக்குமுறையாக உணர்கிறார்கள்” என்று இதற்குப் பதிலளித்தார் தென்மொழி சவுந்தரராசன்.

பார்ப்பனியம் என்பது படிநிலை சாதி – வர்க்க ஆதிக்கம் – தீண்டாமையையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், மொழி – இன ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகின்ற, போற்றிக் கொண்டாடுகின்ற சித்தாந்தம். இது வெறும் பண்பாடாக இல்லை, சட்டமாகவே இருந்தது. நமது அரசமைப்பு சட்டத்திலும் தொடர்கிறது. அதில் சிறியதொரு மாற்றத்தைக்கூட அனுமதிக்க முடியாது என்றுதான் சபரிமலையில் கலகம் செய்கிறார்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

தென்மொழி சவுந்தரராசன்.

”தந்தைவழி ஆதிக்கத்தை தகர்ப்போம்” என்று மட்டும் சொல்லியிருக்கலாமே, எதற்காக பார்ப்பனிய” என்ற முன்னொட்டு?” என்று கேட்கிறார்கள் பார்ப்பன லிபரல்கள். இடைநிலைச் சாதிவெறியர்களையும், நகர்ப்புறப் பார்ப்பனர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பன லிபரல்களின் இந்த ஆதங்கம் நியாயமானதாகவே தெரியும்.

பார்ப்பன, சத்திரிய, வைசிய குலப் பெண்களை நமது” வேதங்களும் சாத்திரங்களும் எவ்வளவு இழிவுபடுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரை, அட்டையில் எழுதிய முழக்கம்” தங்களை இழிவு படுத்திவிட்டதாகத்தான் அவர்கள் நம்பிக் கொண்டிருப்பார்கள்.

பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம்” குறித்து 1993-இல் உமா சக்ரவர்த்தி எழுதிய நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறோம். (Conceptualising Brahmanical Patriarchy in Early India: Gender, Caste, Class and State, Uma Chakravarti, Economic and Political Weekly Vol.28, No.14 (Apr. 3, 1993), pp. 579&585)

பார்ப்பனியம்” என்று சொல்வதற்குக் கூச்சப்படும் பார்ப்பனரல்லாத ஜென்டில்மேன்களுக்கும், தங்களை சாதி உணர்வற்றவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் லிபரல் பார்ப்பன நண்பர்களுக்கும் இதனைப் படிக்கக் கொடுங்கள். ஒருவர் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பின், அவர் என்ன சாதியில் பிறந்திருந்தாலும் பார்ப்பனியம் என்பது அவருடைய பொது எதிரி. சமத்துவத்தை எதிர்ப்பவர் எனில், அவர் என்ன சாதியில் பிறந்திருந்தாலும் அவர் பூணூல் அணியாத பார்ப்பனரே என்பதைப் புரிய வையுங்கள்.

இனி, உமா  சக்ரவர்த்தியின் கட்டுரையிலிருந்து….

சாதி ஆதிக்கம், பாலின ஆதிக்கம் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. இவற்றின் அடிப்படையில்தான் பார்ப்பனிய சமூக ஒழுங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது… இந்து சமூகத்துக்கு மட்டுமே உரிய சாதிப் புனிதத்தை பேணுவதற்கும் தந்தை வழி மரபுரிமையை பராமரிப்பதற்கும் ஆதிக்க சாதிப் பெண்களை பாலியல் ரீதியாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பார்ப்பனியத்துக்கு மிகவும் அவசியமாக இருந்தது…

பெண்களின் புனிதத்தை பேணினால்தான் சாதிப் புனிதத்தை பேண முடியும்.  பூப்பெய்தல் சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமும் இதுதான். சாதிப் புனிதத்தை கறாராகக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான், ஆதிக்க சாதியினருக்கு, அதிலும் குறிப்பாக பார்ப்பன சாதியினருக்கு பால்ய விவாகம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது…

பெண்கள்தான் சாதியமைப்பின் நுழைவாயில்களாக கருதப்படுகிறார்கள். கீழ் சாதி ஆணின் பாலினக் கவர்ச்சியிலிருந்து மேல் சாதிப்பெண்களை காப்பாற்றுவதற்கான நிறுவனரீதியான ஏற்பாடு தேவைப்பட்டது. சாதிக்கலப்பை தடுக்க முடியவில்லையென்றால், சாதி அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட சமூக ஒழுங்கு முழுவதும் நொறுங்கிச் சரிந்து விடும் என்று பார்ப்பன சாத்திரங்கள் அஞ்சின…

கீழ் சாதி ஆண்களும் மேல் சாதிப் பெண்களும் தமக்கு விதிக்கப்பட்ட நெறிகளை மீறும் காலம்தான் கலியுகம் எனப்படுகிறது. பகவத்கீதை இதைப்பற்றிப் பேசுகிறது. குடும்பங்கள் உடைகின்றன, சடங்குகள் மறக்கப்படுகின்றன, பெண்களின் புனிதம் கெடுகிறது. இந்த ஒழுக்கக்கேட்டின் விளைவாக சாதிகள் ஒன்றுகலக்கின்றன” (கீதை, ஐ, 41-44)

வேதகால சடங்குகளை விவரிக்கும் சதபத பிராமணம் எனும் நூல், தமது மனைவிமார்கள் வேறு ஆண்களுடன் போய்விடுவார்கள்” என்ற அச்சத்தை வெளியிடுகிறது. அப்படி கணவனைத் தவிர்த்து வேறொருவனுடன் உடலுறவு கொண்ட பெண்ணை தேவலோகத்தைச் சேர்ந்த வருணன் பிடித்து இழுத்து வந்ததாக” கூறுகிறது.  பெண், சூத்திரன், நாய், காக்கை ஆகியவை அனைத்தும் பொய்மை, பாவம் மற்றும் இருளின் வடிவங்கள்” என்று சித்தரிக்கிறது….

பெண்கள் எவனுடனும், எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் போகக்கூடியவர்கள். பாலியல் ரீதியாகவே அதுதான் அவர்களது இயல்பு. எனவே, தனது வாரிசுகள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டுமானால், கணவன்மார்கள் தமது மனைவியரை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்” என்கிறான் பார்ப்பனிய சமூக அமைப்பின் சித்தாந்த குருவான மனு…

ஆளும் வர்க்கத்தினர், நில உடைமையாளர்கள் மற்றும் புரோகித வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் பாலுணர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகத்தான் சாத்திர நூல்கள் பெரிதும் கவலைப்படுகின்றன….

இந்து பாரம்பரியம் : மதுராவில் கொண்டு தள்ளப்படும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனாதரவான கைம்பெண்கள். (கோப்புப் படம்)

இருபிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணத்தினருக்கு சேவை செய்வது என்பது கீழ் சாதியினருக்குரிய தருமம். கீழ் சாதியினரின் பிறவிக்குணம் அதற்குப் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால், கணவனுக்கு விசுவாசமாக இருப்பது என்பது பெண்களுக்குரிய ஸ்த்ரீதருமம்.  ஆனால், பெண்களின் பிறவிக்குணமோ,  அவர்களை வேற்று ஆண்களை நோக்கி இழுக்கிறது”  என்கின்றன பார்ப்பன சாத்திரங்கள். (அதாவது சூத்திரர்களைக்கூட நம்பலாம்.  சொந்தப் பெண்டாட்டியை நம்ப முடியாது என்பதே இதன் பொருள்- மொர்)

எனவே, பெண்கள் மீதான பாலியல் ரீதியான கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்த அவர்களை ஒருங்கிணைந்த முறையில்  அடிமைப்படுத்தும்  ஏற்பாடு அவசியமாயிற்று.  இதற்கு 3 வழிமுறைகள் கையாளப்பட்டன.

முதலாவது, சித்தாந்த ரீதியான அடிமைத்தனம்.

பதிவிரதா தருமத்தைக் கடைப்பிடித்து வாழும் பெண்தான் சமூகத்தின் இலட்சியப்பெண்ணாக சித்தரிக்கப்பட்டாள். அதாவது கற்பு நெறி மாறாத பதிவிரதைதான் பார்ப்பனர்களால் வடிவமைக்கப்பட்ட தந்தை வழி சாதி – வர்க்க ஆதிக்க சமூகத்தின் இலட்சியப்பெண். ஒரு பெண் மறுபிறவியில் மோட்சம் அடைவதற்கான வழியே பதிவிரதையாக இருப்பதுதான்” என்று வகுக்கப்பட்டதால், பெண்களின் சொந்த இலட்சியமாகவே அது மாறியது. சீதை, சாவித்திரி, அனுசூயா, அருந்ததி போன்ற புராண நாயகிகளின் வாயிலாக கற்புநெறி பிறழாமையே  பெண்மையின் இலட்சியம் என்று நிலைநாட்டப்பட்டது…

இங்ஙனம், கற்பு நெறி என்பது பெண்ணுக்கான சித்தாந்த ரீதியான பர்தாவாகவும், பார்ப்பனிய சாதி-வர்க்க ஆதிக்க சமூக ஒழுங்கை பெண்ணின் ஒத்துழைப்புடன்  மறு உற்பத்தி செய்வதற்கான முகமூடியாகவும் தொழிற்பட்டது…

இரண்டாவது, வன்முறை.

வீட்டை விட்டு வெளியில் சுற்றும் பெண்ணை மூங்கில், சாட்டை அல்லது கையால் அவளுடைய பின்புறத்தில் அடிக்குமாறு” அர்த்தசாத்திரத்தில் கவுடில்யன் கூறுகிறான். பார்ப்பனக் கணவனை ஏமாற்றிவிட்டு வேறொருவனோடு சென்ற மனைவியை மாட்டுச் சாணத்தை தின்ன வைத்தும் சாட்டையால் அடித்தும் வழிக்கு கொண்டு வந்ததாக” ஜாதகக் கதைகள் விவரிக்கின்றன…

ஒரு கணவனால் தனது மனைவியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அது அவர்களது தனிப்பட்ட குடும்ப விவகாரமாக விடப்படவில்லை.  அந்தப் பெண்ணின் நடத்தை என்பது பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்க சமூக ஒழுங்கையே கேள்விக்குள்ளாக்குவதால், அத்தகைய பெண்ணை  தண்டிக்கும் அதிகாரமும், கட்டுப்படுத்தும் அதிகாரமும் மன்னனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இது மூன்றாவது வழிமுறை…

சந்தேகத்துக்கு இடமான சூழலில் வேற்று ஆணுடன் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தால், அவளை ஊருக்கு நடுவில் வைத்து ஒரு சண்டாளனைக் கொண்டு . சாட்டையால் அடிக்கவேண்டும்” என்கிறது அர்த்த சாத்திரம். (சண்டாளன் – தீண்டத்தகாத ஆணுக்கும் உயர் வருண பெண்ணுக்கும் பிறந்தவன்)

கீழ் சாதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை, ஊருக்கு நடுவில் வைத்து நாய்களுக்கு தின்னக் கொடுக்குமாறு மன்னன் உத்தரவிடவேண்டும்” என்கிறான் கவுதமன் எனும் முனிவன்.  கீழ்சாதிக்காரனை உயிருடன் கொளுத்த வேண்டும் என்றும் மேல் சாதிப் பெண்களை நிர்வாணமாக்கி,  மொட்டையடித்து,  கழுதைமேல் ஊர்வலம் விடவேண்டும் என்றும்” கூறுகிறான் வசிட்டன்…

இத்தகைய நடத்தை கெட்ட” பெண்களை தண்டிப்பதன் வாயிலாக நிலவுடைமை உறவுகளையும் சாதிய ஒழுங்கையும் மன்னன் பாதுகாக்கிறான்.  பெண்ணின் தூய்மைதான் சாதித் தூய்மையைப் பாதுகாக்கிறது.  சாதித்தூய்மையின் வழியாக பார்ப்பனிய சமூக ஒழுங்கையும் பாதுகாக்கிறது…

படிக்க:
பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

எனவே தந்தைவழி ஆணாதிக்கம்” என்பது வெறும் கருத்தியலாக மட்டும் நிலவவில்லை. இந்தியாவைப் பொருத்தவரை சாதி, வர்க்கம், அரசு ஆகியவை ஒரு நிறுவனக் கட்டமைப்பாக  ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கின. பெண்ணுக்கு எதிரான பாலின ஒடுக்குமுறை என்பதும் இந்தக் கட்டமைப்பின் வழியேதான் இயங்கியது…

இருப்பினும் பார்ப்பன தந்தைவழி ஆதிக்கத்துக்கு பெண்கள் தம் உளப்பூர்வமான ஒப்புதலை வழங்கிவிடவில்லை. பெண்களுக்கு எதிரான விரிவான விதிமுறைகளும், விதி மீறல்கள் குறித்த கதைகளும் இதையே காட்டுகின்றன. கட்டாயப்படுத்தித்தான் பெண்களைப் பணியவைக்க வேண்டும் என்ற சூழல் நிலவியதிலிருந்து, பார்ப்பனிய சித்தாந்தம் பெற்ற தோல்வியை நாம் புரிந்து  கொள்ள முடிகிறது.  அதே நேரத்தில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சாதி அமைப்பின் விழுமியங்களை  ஏற்றுக்கொண்டிருந்ததும் தெளிவாகத் தெரிகிறது…

பெண்களைப் பொருத்தவரை, அவர்கள் பாலின ஒடுக்குமுறைக்கு உள்ளான போதிலும், ஆதிக்க சாதிக்குரிய சலுகைகள் கிடைக்கப்  பெற்றதன் காரணமாக, சாதி அமைப்பை மறு உற்பத்தி” செய்வதற்கு அவர்கள் ஒத்துழைத்தார்கள்.  தீண்டத்தகாத சாதியினர் இருவரைக் கண்ணால் கண்டுவிட்ட இரண்டு மேல் சாதி பெண்கள்  உடனே தங்கள் கண்களைக் கழுவுவதற்கு ஓடியதாக” சொல்கிறது ஒரு ஜாதகக் கதை…

தங்களுடைய சொந்த அடிமைத்தனத்தையும் உள்ளடக்கிய பார்ப்பன தந்தை வழி ஆதிக்க சமூக கட்டமைப்பிற்கு ஒத்துழைப்பவர்களாக  பெண்கள் மாறிவிட்ட காரணத்தினால், அவர்களுடைய  பாலியல் தூய்மையைக் கண்காணிப்பது குறித்து பெரிதும் கவலைப்படுகின்ற சாத்திரங்களும் விதிமுறைகளும்   அவசியமற்றவையாகிவிடுகின்றன.

இன்று டிவிட்டரில் கொந்தளிக்கும் ஐ.டி. தயிர்சாதங்கள், சபரிமலையில் கொந்தளிக்கும் நாயர்குலப் பெண்கள் ஆகியோரின் மூளையிலும், பெற்ற பெண்ணையே கொலை செய்யத் துணியும் (நந்தீஷ்) சுவாதியின் அம்மாவுடைய மூளையிலும் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர்கள் வசிட்டன், கவுதமன் போன்ற பிராம்மணோத்தமர்கள். அவர்களை சூத்திரர்கள் என்றோ, ஜிகாதிகள் என்றோ நாம் அழைக்க முடியாதல்லவா?

மருதையன்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ

“தனிச்சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை விரட்டு!
துப்பாக்கிச்சூடு – கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய்!”

என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தின் சார்பாக, கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரை !

தோழர் இராஜு பேசுகையில், இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது எவ்வாறு திட்டமிட்டு ஸ்டெர்லைட்டால் அரங்கேற்றப்பட்டது என்பதையும், அரசின் அத்தனை உறுப்புகளும் எவ்வாறு கார்ப்பரேட் சேவை செய்கின்றன என்பதையும் விவரித்துப் பேசினார். இதனை எதிர்கொள்வதற்கான அவசியம் குறித்தும் அதற்கான புதிய உத்திகளை வகுத்துக் கொள்வது குறித்தும் உரையாற்றினார்.

அவரது உரையின் காணொளி:

உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு பேசுகையில், போலீசு எவ்வாறு மக்கள் விரோதமாக மாறியிருக்கிறது என்பதை விவரித்துப் பேசினார். மேலும் இதனை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கவிடாமல் தடுக்க  வேண்டுமெனில், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தமிழகத்தின் பொதுக்கருத்தாக மாற்றப்பட வேண்டும் என்றார்.

அவரது உரையின் காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

*****

ஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் !

லகமயச் சூழலில் பெரியவர்களுக்கே வாழ்க்கை என்பது எந்திரம் போல ஆன பிறகு குழந்தைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் விளையாட்டு உலகம், மழலையர் உலகம் அனைத்தும் சுருங்கி வருகிறது. குழந்தைகளின் உலகில் முக்கியமான குதூகலம் சர்க்கஸ். நேற்றைய தலைமுறையினர் பார்த்துக் களித்த சர்க்கஸ் உலகம் இன்று இல்லை. அவ்வப்போது வரும் இன்றைய சர்க்கஸில் பழைய சர்க்கஸின் பிரம்மாண்டம் இல்லை.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ,மூர்மார்க்கெட் பின்புறம்  கண்ணப்பர் திடலில் ஜம்போ சர்க்கஸ் நடைபெறுகிறது.  சென்னை மக்களை மகிழ்விக்க வந்துள்ள ஜம்போ சர்க்கஸ்  கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய அங்கு சென்றோம்.

சர்க்கஸ் திடலினுள் நுழைந்த போது, தமிழக மற்றும் வட இந்திய கலைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரும தங்கள் காலை வேலைகளில்  மும்முரமாக இருந்தனர். ஒருவர் பல் துலக்கிக்கொண்டிருந்தார். மற்றொருவர் இடுப்புத் துண்டுடன் குளிக்க சென்றார்.  சிலர் சமையல் கட்டில், காலை சாப்பாட்டுக்கு கோதுமை மாவு பிசைந்து கொண்டிருந்தனர். சிலர், குதிரைகளுக்கும் நாய்களுக்கும் தீனியை தயார் செய்து கொண்டிருந்தனர். வளையத்துக்குள் கலைஞர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பெண் கலைஞர்கள்  குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள  கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

சிலர் கூடாரம் அமைக்க உதவும் படுதாக்காளை விரித்து வெயிலில் உலர்த்தினர். சிலர் கிழிந்த படுதாக்காளை ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டிருந்தனர். முதியோர் சிலர்  காலை வெயிலில் வெறுமனே உட்கார்த்து கொண்டிருந்தனர். ஊழியர்களுடன்  அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர்களோ வேலை மும்முரத்தில் எங்களிடம் ஈடுபாடு காட்டவில்லை.

சர்க்கஸ் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றோம். அவர்கள் வேண்டா வெறுப்புடன், “பேட்டி எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஏற்கனவே வந்து பார்த்தவர்கள் செய்தது போதும்” என்றனர். விளக்கங்களை எவற்றையும் அவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கொஞ்சம் வலியுறுத்திக் கேட்ட பின்னர், “பலமுறை நாங்கள் மனு கொடுத்தும் எந்த அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. இனி எங்களுக்கு எதுவும் நடக்காது. நாங்கள்தான் இந்த வேலையை விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கும் இதை விட்டால் வேறு வேலை எதுவும் தெரியாது. அதனால்தான் இதில் கிடந்து  உழல்கிறோம்.  நீங்கள் ஓனரிடம் பேசிக் கொள்ளுங்கள். அவர் பொங்கல் தினத்தில் இங்கு வருவார்” என்றனர்.

ஒரு தொழிலாளி, என்ன விசயமென்று விசாரிக்க நம் அருகே வந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் தமிழன்தான்  என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனது 40 ஆண்டுகால சர்க்கஸ் பணியை ஒரு துயரக் கதை போல் விவரித்தார்.

சர்க்கஸ் தொழிலாளி

“நான் கள்ளக்குறிச்சி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவன். பத்து வயதிலேயே சர்க்கஸில் சேர்ந்து விட்டேன். அதுமுதல் இப்போது 54 வயது வரை இங்கேயே என்  காலம்  ஓடுகிறது. நான்  சர்க்கஸுக்கு விரும்பி வரவில்லை. என்னுடைய போதாத காலம், என்னை இங்கு தள்ளிவிட்டது. எனக்கு சிறுவயதிலேயே அம்மா இல்லை. அப்பா மட்டும்தான். பெங்களூரில் இருந்த என் அண்ணன் என்னை அங்கு அழைத்துச் சென்றார். என் அண்ணியோ எனக்கு சோறு போட மறுத்தார். நான் பொறுக்க முடியாமல் கால்போன போக்கில் நடந்து, கடைசியில் சென்னை வந்தேன். இங்கு சோத்துக்கு ஹோட்டலில் பிளேட் கழுவினேன். அங்கு என்னை பார்த்த ஒருவர்  பக்கத்தில் நடக்கும் சர்க்கஸுக்கு வேலைக்கு வருகிறாயா என்று கூப்பிட்ட, நானும்  சர்க்கஸ் பார்க்கும் ஆசையில்  வந்தேன். இங்கும் எனக்கு முதலில் பாத்திரம் கழுவும் வேலையை தான்  கொடுத்தார்கள். அப்போது மாதம் 60 ரூபாய் சம்பளம். ஆனால்  ஓட்டலில் மாதம் ரூபாய் 10 தான். தொடர்ச்சியாக இங்கே பல வேலைகளை கற்றுக் கொண்டேன்.

அதுமுதல் சில ஆண்டுகள் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இருப்பது திரும்பவும்  இன்னொரு சர்க்கஸ் கம்பெனிக்கு மாறுவது என்று இதுவரை 40 ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிகளில் வேலை பார்த்துள்ளேன். நியூ கிராண்ட் சர்க்கஸ் – கேரளா, பாரத் சர்க்கஸ் – கர்நாடகா, ஜியோ சர்க்கஸ் – மேற்கு வங்கம், எஸ்.எம். சர்க்கஸ் – ஆந்திரா, வீனஸ் சர்க்கஸ் – தமிழ்நாடு, என்று ஏராளமான சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து விட்டேன்.  இந்த ஜம்போ சர்க்கஸில்தான் நீண்ட நாட்களாக  இருக்கிறேன்.” என்றார்.

இன்றளவும் வாகனம் மூலம் விளம்பரம் செய்யும் ஜம்போ சர்கஸ் நிறுவனம்.

சர்க்கஸ் தொழில் பற்றி கேட்ட பொழுது, “சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய் விட்டார்கள் ! போக முடியாதவர்கள்தான்  இன்னும் இருக்கிறார்கள். விலங்குகள் எப்போது எங்களை விட்டு போனதோ அப்போதே எங்கள் உயிரும் போய்விட்டது. விலங்குகளை வதை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களிடமிருந்து விலங்குகளை ஓட்டிக் கொண்டு சென்றவர்கள் அவற்றையும் கவனிக்காமல் கொன்று விட்டார்கள். அதன் பிறகு நாங்களும இங்கு  செத்துக் கொண்டிருக்கிறோம். சர்க்கஸ் என்றாலே விலங்குகள்தான். இப்போது விலங்குகள் இல்லாததால் கலைஞர்கள் ஒவ்வொரு நொடியும் தங்கள் உயிரை கொடுத்து புதுபுது வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். அதை ரசிக்க ஏதோ கொஞ்சம் பேர் வருகிறார்கள்.” என்றார்.

“இப்போது கொடுக்க வேண்டிய கூலியை கூட  முதலாளியால் ஒழுங்காக கொடுக்க முடியவில்லை. நாங்களும் அவரை நெருக்கி கேட்பதில்லை. எங்கள் முதலாளிகளுக்கு எங்களை ஏமாற்றும் எண்ணம் ஏதும் இல்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.  இப்போது வருமானம் இல்லை என்றாலும் எங்களுடைய சாப்பாட்டுக்கு அவர்கள் எந்த ஓரவஞ்சனையும் செய்வதில்லை. இன்னமும்  காலையில்  டிபன் உப்புமா, பூரி, சப்பாத்தி என்று அவரவர்களுக்கு விருப்பமானதை தேவையான அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். மதியம் குழம்பு சாம்பார் கூட்டு,பொறியல் முட்டையுடன் சாப்பாடு கிடைக்கும். இன்றளவும் எங்கள் சாப்பாட்டுக்கு மட்டும் முதலாளி எந்த குறையும் வைத்தது இல்லை. கம்பெனிக்கு போதுமான வருமானம் வரவில்லையே என்று எங்களுக்குத்தான் மனசு வருத்தமாக இருக்கிறது..” என்று தனது முதலாளியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

தொடர்ந்து ஜம்போ சர்க்கசின் வரலாற்றைப் பற்றி கூறத் தொடங்கினார். “ஜம்போ சர்க்கஸ் தொடங்கிய முதலாளி எம்.வி. சங்கரன், கேரளத்துக்காரர். இவர் விலங்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர். ஜம்போ என்ற பெயர் கொண்ட யானை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் பல லட்சம் குழந்தைகளின் செல்லப்பிராணியாக வலம் வந்தது. இது பதினாறு அடி உயரமும் 7 டன் எடையும் கொண்ட பலசாலி. ஆனால் சிறு குழந்தைகளும் அணுகும் மெல்லிய மனம் படைத்தது. அது இறந்த பிறகும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இன்றளவும் அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் எலும்புக்கூடாக பராமரிக்கப்படுகிறது. இதன் நினைவாகத்தான் தன்னுடைய சர்க்கஸ் நிறுவனத்துக்கு ஜம்போ சர்க்கஸ் என்று பெயர் வைத்தார்.”

முன்னாட்களில் சர்க்கசில் என்னென்ன வகையான மிருகங்கள், கலைஞர்கள், சர்க்கஸ் சாகசங்கள் இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து விளக்கினார். “ரசியாவின் கொசவ் பிரதேசத்திலிருந்து வந்த குதிரைகள், அரேபியாவின் ஒட்டகங்கள், உலகின் பல முனைகளிலிருந்தும் வந்த நாய் இனங்கள், பாமரனியன், டால்மியன், பாண்ட் மற்றும் கூர்வுணர்ள்ள ரசியன் பூடில், டாஷ், பாரசீக பூனைகள், ஓநாய்கள், நீர் யானை, வரி குதிரை, பிரேசிலிய காடுகளில் காணப்படும் மாஸா என்ற அரிய கிளி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் காக்டெயோஸ் என்ற அரிதான பறவை, கரும்புள்ளி பெக் இப்படி ஒவ்வொரு மிருகங்களையும் பறவைகளையும் பார்த்து பார்த்து வாங்கி அவற்றின் மீது தங்களது உயிரையே வைத்திருந்தனர் கலைஞர்கள்.

இந்த கலைஞர்களும் உலகின் பல பாகங்களிலிருந்தும்  வந்தவர்கள்தான். ரசியா, ஆப்பிரிக்கா, நேபாளம், இந்தியாவின் மேற்கு வங்கம், கேரளா என்று உலகே இந்த கூடாரத்தில் வசித்தது. அப்போது மக்களையும் மகிழ்வித்து மனநிறைவோடு வாழ்ந்தோம். அது ஒரு காலம்! அப்போது காட்சிக்கு காட்சி புதுமைகள் செய்வோம். 40-க்கும் மேற்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தும். குழந்தைகளும் பெரியவர்களும் இளைஞர்களும் வைத்த கண் எடுக்காமல் மெய் மறந்து ரசிப்பார்கள். பஃபூன்களின் சேட்டை கண்டு குழந்தைகள் வயிறு நோக சிரிக்கும். அக்குழந்தைகளின் சிரிப்பை அடக்க முடியாமல் பெரியவர்கள் திண்டாடுவார்கள். அப்படி ஒரு சந்தோசம் அது.

எத்தனை எத்தனை விசித்திரங்கள்? க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாகிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப் அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், லெக் ஜங்லிங், ஆப்பிரிக்கன் பையர் டேன்ஸ், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு நீர் யானை, குதிரை, ஒட்டகம், யானை, நாய், கிளி, சிங்கம், புலி, வரி குதிரை, பூனை இவற்றின் சாகசங்கள் என ஆயிரம் கண்கொண்டு பார்த்தாலும் தீராத காட்சிகள். ஆனால்  இப்போது நிலைமை சொல்ல முடியாத துயரமாகி விட்டது.” என்றார்.

“40 ஆண்டுகால கலைஞர்களுக்கும் மாஸ்டர்களுக்கும் தினக்கூலி ரூ 800 கொடுப்பதற்கு பெரும்பாடாக இருக்கிறது. இதற்கு அவர்கள் 12 மணி நேரம் உழைக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணத்தை ஏற்படுத்தும் சாகசங்கள் செய்ய வேண்டும். இந்த நிலையில் இங்கு யார் விரும்பி வேலை செய்ய முடியும்? உதவியாளர்களுக்கு, எலக்ட்ரிசின்களுக்கு, சமையல் செய்பவர்களுக்கு, வாகன ஓட்டுநர்களுக்கு, செக்ரூட்டிகளுக்கு, அலுவலக ஊழியர்களுக்கு என ரூ 300-லிருந்து ரூ.700 வரைதான் தினக்கூலி.

அதற்கே இங்கு சர்க்கஸில் தினப்படி வசூல் வருவது பெரும்பாடாக இருக்கிறது. இதற்கே போலீசுக்கு ஓசி டிக்கெட், அதிகாரிகளுக்கு ஓசி டிக்கெட் தரவேண்டும். தற்போது சராசரியாக மொத்தத்தில் 20-லிருந்து 25 சதவீதம்தான் டிக்கெட் விற்கிறது. அதை வைத்து என்ன செய்வது? முதலாளி எங்களுக்கு இவ்வளவு செய்வதே பெரிய பாக்கியம். கேரளா அரசாங்கம் மட்டும்தான் பழைய உறுப்பினர்களுக்கு, நலிந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு மாதம் ரூ. 2000 பென்சன் தருகிறது. அதுவும்கூட இப்போது இருப்பவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அரசு  மருத்துவமனைதான் ஒரே போக்கிடம்.

முன்பெல்லாம் எங்களுக்கு, விலங்களுக்கு என்று தனித்தனியாக மருத்துவர் இங்கேயே இருந்தார். அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்கிறோம். இதற்கும் உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் ஏதாவது எழுதி வேட்டு வைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் உங்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை. மற்றப்படி யார் மீதும் அவர்களுக்கு கோபம் இல்லை.” விரக்தியோடு பேசி முடித்தார்.

மக்களை மகிழ்விக்க மனித குலத்தின் ஆகத் திறமையான கலைஞர்களை உருவாக்கிய சர்க்கஸ் கலை இங்கே ஆதரவின்றி தவிக்கிறது. மனித உடல் எதையெல்லாம் செய்ய முடியாது என்பதை உடைத்து எதிர்கால தலைமுறையினருக்கு திறமைகளை கைமாற்றிக் கொடுத்த அந்த முதுபெரும் கலை இன்று சீண்டுவாரின்றி நலிகிறது.

நிற்கதியாய் இருக்கும் அந்த சர்க்கஸ் கூடாரத்தை பார்த்துக் கொண்டே கனத்த மனத்தோடு திரும்பினோம்.

பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன்

2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 – உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்…

அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய போஸ்டரைக் கொடுத்தார். நாங்களும் மொழிக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறினார். அந்த போஸ்டரில் உலகத் தாய்மொழிகள் நாள் குறித்து ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வாசகங்கள் இருந்தன.

அந்த டென்ட்டில் இருந்த ஒருவர் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னிடம் இந்தியில் என்னவோ கேட்டார். எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று கேட்டேன்.

பிறகு நல்ல அழகான ஆங்கிலத்தில், இந்த போஸ்டரில் இருக்கும் “International Mother Languages Day” என்று ஆங்கிலத்தில் இருந்ததை குறிப்பிட்டு, இந்த ஆங்கிலத்தை எடுத்துவிடுங்கள், வேண்டும் என்றால் தமிழிலேயே போஸ்டரை போடுங்கள், நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்றார்கள். தமிழ் அழகான மொழி என்றார் அவர்களில் ஒருவர்.

நான் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆரிய எதிர்ப்பு தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தவன் என்பதால், அவர்களின் தமிழ்ப்பாசத்தைக் கண்டு நான் உருகவில்லை.

அந்த டென்ட் கொட்டாய் பேர்வழிகள் எந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிய அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. பிறகு இரண்டு மணி அவர்களோடு அங்கே விவாதம் நடந்திருக்கும்.

ஆங்கிலத்தை ஒழித்தே கட்டவேண்டும். அதனால் இந்திய மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்கள். அதற்கு நான், ஆங்கில ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் இந்தியாவிலுள்ள மொழிகள் என்ன உலகம் முழுக்கவே பல மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்பதெல்லாம் உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டேன்.

ஆனால் இந்தியாவில் ஒரு கூட்டுச் செயல்பாடு செய்வதென்றால், பல மொழியினர் ஓரிடத்தில் ஒன்று கூடும்போது, நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடுவது என்று கேட்டேன். ஆங்கிலம் வேண்டாம் என்றால், இந்தியில் உரையாடுங்கள் என்று கூறவருகிறீர்களா என்று கேட்டேன்.

“அது வந்து, அது வந்து… ”

என்னோடு இருந்த பிற மொழிக்காரர்களையும் சுட்டிக்காட்டி, “நான் தில்லிக்கு வந்தால் உங்களோடு இந்தியிலும் இதோ இவர் இருக்கிறாரே இவர் பெங்களூர், பெங்களூருக்கு போனால் இவரோடு கன்னடத்திலும், கொல்கத்தா போனால் இவரோடு பெங்காலியிலும் பேசவேண்டுமா? அல்லது இவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தால் என்னோடு தமிழில் பேசுவார்களா?” என்று கேட்டேன்.

படிக்க:
♦ விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?
♦ இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி !

“ஆங்கிலம் அந்நிய மொழி!” என்று அதற்கு பதில் வந்தது. இந்தி மீதான துவேஷம் என்று கோபத்தோடு கத்தினார் டென்ட்வாசி ஒருவர்.

“இந்தியும் எங்களுக்கு அந்நிய மொழிதான். அப்புறம் இதோ நீங்க எங்கிட்ட ஆங்கிலத்தில பேசறீங்க.. உங்க வசதிக்காகத்தானே கத்துக்கிட்டீங்க! அப்படித்தான் நாங்க எங்க வசதிக்காகத்தான் கத்துக்கிட்டோம்!”

இப்படி தொடர்ந்தது விவாதம்.

ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, இந்த டென்ட் கொட்டாய்காரர்களோ இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழிப்பது என்று பேசுவது இந்திக்கு எந்தப் போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதனால் நமது அரசியல் தலைவர்கள் இந்திக்கு எதிராக ஆங்கிலத்தையும் உறுதியாக பயன்படுத்தினார்கள்.

ரங்கராஜ் பாண்டே அந்த டென்ட் கொட்டாக்காரங்களுக்குச் சொந்தக்காரர்தான். அவங்களோட அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைத்தான் இங்கே வந்து கொட்டுகிறார் பாண்டே. தமிழை ஆதரித்து ஆங்கிலத்தை எதிர்ப்பது போல பாசாங்கு செய்கிறார் அவர்.

நம்மூர் முட்டாள்கள், “பாண்டே சொல்றது கரெக்ட்தான் இல்லே!”ன்னு கெக்கே பிக்கேன்னு சிரிப்பார்கள். ஆங்கிலம் வெளிநாட்டு மொழி, இந்தி நம்ம நாட்டு மொழி என்று குதர்க்கவாதம் புரிவார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்.

முகநூலில்: ஆழி செந்தில்நாதன்

இந்துத்துவாவை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வது எப்படி ? – கோம்பை எஸ். அன்வர் நேர்காணல்

‘யாதும்’ – ஆவணப்படம் மூலம் அறியப்பட்டவர் கோம்பை எஸ். அன்வர். வரலாற்று ஆய்வாளர், பத்திரிக்கையாளர் , புகைப்பட கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக அளித்த நேர்காணலில் இசுலாமியர்களின் கல்வி, அவர்களின் பன்மைத்துவம்,வியாபாரத்தால் இஸ்லாம் வளர்ந்த விதம், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போன்ற பல விஷயங்களை பேசுகிறார். சென்னையில் அவரது இல்லத்தில் நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

***

கேள்வி : தமிழ் முஸ்லிமான நீங்கள் வளர்ந்த சூழல் பற்றி சொல்லுங்கள். உங்கள் எண்ணவோட்டத்தை எது உருவாக்கியது?

பதில் : எனக்கு தேனி மாவட்டத்திலுள்ள கோம்பைதான் சொந்த ஊர். என் அப்பா ஏலக்காய் வியாபாரி. திராவிட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். அப்பா மட்டுமல்ல உறவினர் அனைவரிடமும் தமிழர் என்பதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்பது எங்களுக்கு சிறு பிராயத்திலேயே இயல்பாக அமைந்த ஒன்று. ஊரில் மத வித்தியாசம் என்னவென்றே தெரியாது.

வெளியூரில் பள்ளியில் படிக்கும்போது மதம் குறித்த லேசான உராய்வுகள் வந்தன. தமிழ் முஸ்லிம்கள் பேசும் தமிழ்தான் அருமையான தமிழ் என்று என்னுடைய தமிழாசிரியராக இருந்த செல்வராஜ் வகுப்பறையில் பாராட்டுவார். அது உராய்வுகளுக்கு அருமருந்தாக அமைந்தது. அதே கால கட்டத்தில் நான் சந்தித்த பெரும்பாலான இஸ்லாமிய மதகுருமார்கள் (ஹஜ்ரத்மார்கள்) சற்று பிற்போக்காகவே எனக்கு தெரிந்தார்கள். பெண்கள் மேற்படிப்பில் ஆர்வமற்றவர்களாக, புகைப்படம் தவிர்க்கப்பட வேண்டியது என்றும், முஸ்லிம்களுக்கு சினிமா (ஹராம்) தடுக்கப்பட்டது என்றும் அவர்களில் பலர் உரக்கக் கூறிக் கொண்டிருந்த காலம். இது போல் இன்னும் பல. எனவே நான் மதத்திலிருந்து சற்று விலகியே இருந்தேன்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த சமயம் என்று நினைக்கிறேன், தாரிக் அலி (Tariq Ali) என்ற இடது சாரி சிந்தனையாளர் எழுதிய “Shadows of Pomegranate Tree” என்ற நாவலைப் படித்தேன். 15-ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் மூர்களின் (இஸ்லாமிய ஆட்சியாளர்களின்) இறுதி ஆட்சி காலத்தைப் பற்றிய கதை. அறிவைத் தேடுபவர்களாகவும், விஞ்ஞானத்தை போற்றுபவர்களாகவும், ஐரோப்பிய கிறித்துவ உலகம் வெறுத்து ஒதுக்கிய யூதர்களுக்கு பாதுகாப்பாக இஸ்லாமிய சமூகம் இருந்த வரலாற்றை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது அந்த நாவல். அந்நாவலைப் படித்த பின்னர்தான் இங்கிருக்கும் இன்றைய முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடுவது, புரிந்து கொள்வது தவறு என்று முடிவுக்கு வந்தேன். குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் எனது புரிதல் மாறுபடத் துவங்கியது.

கே : ’யாதும்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தீர்கள். அதை எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

பதில் : தமிழ் எனக்குத் தாய் மொழி. கல்லூரிக்காக சென்னைக்கு வந்த புதிதில் எனது பெயரைக் கேட்டவுடன் பலரும் இந்தியில் அல்லது உருதுவில் உரையாடத் துவங்குவார்கள். அவர்கள் பலருக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட கணிசமான முஸ்லிம்கள் தமிழகத்தில் வசிக்கின்றார்கள் என்பதே தெரியாது. தமிழகத்திற்கும் அரேபியாவிற்குமான நீண்ட கால வணிகத் தொடர்புகள் மூலமாக இஸ்லாம் இங்கு 7-ம் நூற்றாண்டிலேயே வந்தடைந்தது என்ற உண்மை நமது வரலாற்று புத்தகங்களில் சொல்லப்படுவது இல்லை. தப்பும் தவறுதலுமாக நம் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றை இந்து சகாப்தம் (Hindu Era) இஸ்லாமிய சகாப்தம் (Islamic Era) என்று ஆங்கிலேய காலனியம் தவறாக பிரித்துக் கையாண்டது. ஆனால் இப்படி தனித்த வரலாறாக இந்திய வரலாறு என்றுமே இருந்ததில்லை. அடிப்படையில் இஸ்லாம் பன்மைத்துவத்தை வலியுறுத்தி வருகிற மதம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்த ஒரு பன்மைத்துவமான சமுதாயமாகத்தான் நாம் வாழ்ந்துள்ளோம். மன்னரை வைத்து ஆட்சியை எடை போடுவது தவறு. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பொறுப்பில் இந்துக்களும், இந்து மன்னர்களின் ஆட்சியில் பெரும் பொறுப்பில் இஸ்லாமியர்களும் இருந்திருக்கின்றார்கள். இன்று பெரிதும் பழித்துச் சொல்லப்படும் அவுரங்கசீப்பின் படையில்தான் அதிகமான இந்துக்கள் இருந்திருக்கின்றார்கள். செஞ்சியை முகலாய படைகள் கைப்பற்றியவுடன், அது அவுரங்கசீப்பின் உத்தரவுப்படி சுவரன் சிங் என்ற ராஜபுத்திரனுக்கு ஆட்சி பொறுப்பு கொடுக்கப் பட்டது. சுவரன் சிங் இஸ்லாமியரா?

படிக்க:
♦ வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?
♦ வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !

அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியம் மட்டும் இதனால் மறுதலிக்கப்படவில்லை, போரோடு சம்பந்தப்பட்ட சகல கொடுஞ் செயல்களும் மதத்தோடு பின்னிப் பிணைக்கப் படுகின்றது. எனவே இது போன்ற தவறான பிரச்சாரங்கள் பத்திரிக்கைகளில் வரும் போது அதை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து எழுதினால் சரியாகிவிடும் என்று வெகுளித்தனமாக அப்போது நம்பினேன்.

பார்ப்பனிய எழுத்தாளர் சுஜாதா

ஆனந்த விகடனில் சுஜாதா தன்னுடைய ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் ஸ்ரீரங்கம் வரலாற்றைக் கூறும் “கோயில் ஒழுகு” வின் புதிய பதிப்பு குறித்து ஒருமுறை எழுதி இருந்தார். அதில் ஸ்ரீரங்கம் தேர்திருவிழாவின் போது பிராமணர்கள் நோஞ்சானாக இருந்ததால் விவசாயிகள் தேரை இழுப்பார்கள் என்றும் அப்போது அவர்கள் பாடும் நாட்டுப் புற பாடல்களை ஆய்வு செய்தால் 13000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் முகமதியர்களால் கொல்லப்பட்ட தகவல் குறித்து தகவல் தெரிய வரலாம் என்றும் எழுதி இருந்தார். அவர் குறிப்பிட்ட நூலை வாசித்தேன். நூல் ஆசிரியரே இதற்கு சான்றுகள் இல்லை என்று எழுதியிருந்தார். இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை சுஜாதா போன்றவர்கள் முன்னிலைப்படுத்துவது தவறு என்று நானும் , Dr. ராஜா முகம்மது என்ற மூத்த ஆய்வாளரும் சில சான்றுகளை முன்வைத்து கேள்வி எழுப்பினோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் “இனிமேல் இஸ்லாமியர்கள் பற்றி எழுதமாட்டேன்”; இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற ரீதியில் சுஜாதா விவாதத்தை முடித்துவிட்டார்.

சுஜாதாவுடனான இந்த விவாதங்கள் ‘காலச்சுவடு’ இதழில் வெளியானது. அதனடிப்படையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தேசிய அளவிலான ஆய்வரங்கம் ஒன்றில் பேச அழைத்தார்கள். இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து வந்திருந்த அறிஞர்களுக்கு தமிழ் இஸ்லாமியர் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்து நான் எடுத்து வைத்த பல கருத்துக்கள் புதிதாக, ஆச்சரியமாக இருந்தன. உடனடியாக சென்னைப் பல்கலைக் கழகத்திலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் பேச அழைத்தார்கள். தொடர்ந்து மேலும் பல அழைப்புகள். பேசிய இடங்களிலெலலாம் இஸ்லாமியர் வரலாறு குறித்த தவறான கண்ணோட்டத்தை எனது உரை மாற்றியது என்று பாராட்டினர். இது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக ‘யாதும்’ ஆவணப்படத்தை எடுத்தேன்.

கே : ‘யாதும்’ ஆவணப்படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது ?

வலங்கை சாதியினரால் தமது பெண்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுத்த முஸ்லீம்களுக்கு நன்றி கூறும் இடங்கை சாதியினர் – கோம்பை தாமிர பட்டயம்

பதில் : நான்கு ஆண்டுகள் கடும் உழைப்பின் விளைவாக 2013-ல் “யாதும்” உருவானது. கிட்டத்தட்ட 15 இலட்ச ரூபாய் செலவானது. ஒரு ஆய்வுப் பட்டத்திற்கு உரிய விவரங்கள் இதில் உள்ளன. பொது சமூகத்தில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை அறிஞர்கள் மத்தியில், தமிழ் இஸ்லாமியர் குறித்த வரலாற்றுப் பார்வையில் ஒரு பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பேன். படத்தை தமுஎகச (தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) மற்றும் சில அமைப்புகள் பல இடங்களில் திரையிட்டன. இஸ்லாமியர்களிடமிருந்து பலதரப்பட்ட எதிர்வினைகள் ( mixed reactions) வந்தன. இஸ்லாமிய அறிஞர்கள், சில முஸ்லீம் ஜமாத்துகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, அமேரிக்கா போன்ற நாடுகளில், குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இது திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது, இதுவரை அவ்வளவாக பேசப்படாத வரலாற்றை பேசுவதால், வெளிநாடுகளில் இருந்து கலாச்சாரம், பண்பாடு குறித்து ஆய்வு செய்ய வரும் பல அறிஞர்கள் சென்னை வரும்போது என்னிடம் விவாதிக்க விரும்புகிறார்கள்.

கே : நீங்கள் திராவிட இயக்கத்தின்பால் பற்று கொண்டவர். கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த முக்கியமான சாதனை என்று எதனைச் சொல்லுவீர்கள் ?

பதில் : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய ஆட்சிகளில் இஸ்லாமியர்கள் பறிகொடுத்த பலவற்றை, உரிமைகளை மீட்டெடுக்க முடிந்தது. இஸ்லாமியர்களுக்காக கல்லூரி (காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி), அண்ணாநகரில் யுனானி படிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது விழாவிற்கு அரசு விடுமுறை. இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் கிடைத்தது, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ( 3.5 %) கொடுக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் காரணமாக அரசு இயந்திரத்தில் இஸ்லாமியர்கள் சேர்ந்து வருகின்றனர். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, நீதிபதிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக பல்வேறு தளங்களில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.

இவை அனைத்தையும் மீறி கலைஞர் செய்த சாதனை தமிழக இஸ்லாமியர்களுக்கு கொடுத்த பாதுகாப்பு உணர்வுதான். சமீபத்தில் டெல்லியைச் சார்ந்த ஒரு முஸ்லீம் பத்திரிகையாளரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.அவர் சொன்னார் “வீட்டிலிருந்து வெளியே போனால் திரும்பி பத்திரமாக வருவோமா என்ற கவலை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கிறது ” என்றார். அது போன்ற அவல நிலை தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் கலைஞரின் தலையாய சாதனை என்பேன்.

கே : பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : எண்பதுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தபிறகு உலக அளவில் மேற்கத்திய உலகிற்கு பொது எதிரி தேவைப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மீண்டும் மேற்கத்திய உலகம் செயல்பட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்துத்துவத்திற்கும் மேற்கத்திய நவீன காலனியத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கங்கள் பக்கம் திரும்பினர். சுதந்திர இந்தியா மத அடிப்படைவாதத்தை ஒழிக்க இன்னும் சிரத்தையுடன் செயல் பட்டிருந்தால் இன்று நாடு இந்த நிலையில் இருந்திருக்காது. அடிப்படைவாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். மத நம்பிக்கையையும், மத அடிப்படைவாதத்தையும் சரிவர வித்தியாசப் படுத்திப் பார்க்க முந்தைய அரசாங்கங்கள் தவறி விட்டன. அதன் விளைவுதான் இது.

ஆனால் இஸ்லாமியர்கள், பொதுச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமாகத்தான் எதிர் சக்திகளை வெற்றி கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. உதாரணமாக பத்தொன்பது சதவிகித முஸ்லிம்கள் வாழும் உபியில், முஸ்லிம்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அரசியல் வெற்றி காண முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருக்க ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான தமிழகத்தில் யோசிக்க வேண்டும்.

படிக்க:
♦ யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்
♦ இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

கே : பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு எந்த தடையும் இல்லை. மிகப் புனிதத் தலமான மக்காவில் உள்ள கவ்பாவில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. முன்பு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு போவதில்லை. எனவே வீட்டிலேயே தொழுது வந்தார்கள். இப்போது பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். எனவே காலம் மாறி வருகிறது. சென்னையிலும் சில பள்ளிவாசல்களில் அண்மைக்காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கே : பத்திரிகைத்துறையில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : தவறு. தமிழகத்தை பொறுத்த வரை நிச்சயமாக பத்திரிகை உலகில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்படுவதில்லை. பெரும்பாலான ஊடகங்களில் முஸ்லிம்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும் இஸ்லாமியர் குறித்து தவறான செய்திகளை சில பத்திரிக்கைகள் அவ்வப்போது உள்நோக்கத்தோடு வெளியிடுகின்றன. மறுப்பதற்கில்லை. அவர்களிடம் பத்திரிகை இருக்கிறது. எழுதுகிறார்கள். ஆனால் இஸ்லாமியர் பத்திரிகை நடத்தக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதும் இல்லையே. அப்படியிருக்க பொது சமூகத்தை சென்றடையக் கூடிய வகையில் இஸ்லாமியர்கள் நடத்தும் பத்திரிகைகள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இது சமூகத்தின் தவறு.

கே : சென்னை, அதனையொட்டிய சுற்றுப் பகுதிகளில் நீங்கள் மேற்கொண்டு வரும் பாரம்பரிய பயணங்கள் குறித்து.

பதில் : நான் ஒரு வரலாற்று ஆய்வாளன். நமது பல பிரச்சனைகளுக்கான தீர்வு வரலாற்றில் இருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் வரலாறு நமக்கு முறையாக சொல்லித் தரப்படுவதில்லை. உதாரணமாக தமிழர்களுக்கு மிகப் பெரிய கடல் பாரம்பரியமுண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்து சென்று பொருளீட்டிய சமூகம் இது. அவ்வாறு சங்க காலத்திலிருந்து, கடல் கடந்து ஈட்டிய பொன்னும் பொருளும் தமிழகத்தை வளப்படுத்தியது. இன்று தமிழர்களுக்கு இந்த வரலாறு பெரும்பாலும் தெரியாது. பலவற்றை மறந்து விட்டோம், சில நம்மிடமிருந்து மறைக்கப் பட்டது. இவ்வாறு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, பேசப்படாத வரலாற்றை பேசுவதுதான் எனது பாரம்பரிய நடை பயணத்தின் நோக்கம். எனவே இதில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு செல்கிறோம்.

***

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.  டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களை நேர்காணல் செய்து வருகிறார் பீட்டர் துரைராஜ்.

***

நன்றி : டைம்ஸ் தமிழ்

விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?

3

ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம். சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டுள்ள யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்; இதுவரை மொத்தம் ஐநூற்றி சொச்சம் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் அவர் எடுத்துக் கொள்ளாத விசயங்களே கிடையாது என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வானத்திற்குக் கீழ் உள்ள அனைத்தைக் குறித்தும் – சில வேளைகளில் வானத்திற்கு அப்பாலும் பூமிக்கு கீழே உள்ளவைகளைக் குறித்தும் கூட – அவரிடம் சொல்வதற்கு ஏதாவது உள்ளது.

சிக்கல் என்னவென்றால் அப்படிச் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்று விக்கிபீடியாவில் சுட்டதாக இருக்கும் அல்லது வெறும் வாயில் சுட்டதாக இருக்கும். பெரும்பாலும் மேலோட்டமான, அறைகுறையான தகவல்களின் தொகுப்பு. இதேபோல் எண்ணற்ற தமிழ் சேனல்கள் யூ-டியூபில் உள்ளன. அந்தந்த சூழலில் பரபரப்பாக பேசப்படும் செய்திகள் குறித்து மேம்போக்காக அடித்து விட்டு ஹிட் தேத்துவதை நோக்கமாக கொண்டவை இந்த சேனல்கள். ஆனால், மக்கள் இதை விரும்புகின்றனர்.

மதன் கவுரி சர்வகலா வல்லுநராக வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் பாரிசாலன் என்பவர் (பஜாஜ் புகழ்) தமிழ்தேசியத்தின் சிந்தனைக் கிட்டங்கியாக (Think Tank) வளர்ந்துள்ளார் – ஹீலர் பாஸ்கர் என்பவர் யூ-டியூப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவராக வளர்ந்துள்ளார். சாராம்சத்திலும் தன்மை அளவிலும் இவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல; அரைவேக்காடுகள். இவ்வாறான அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி? இந்தப் போக்கின் அடிப்படை என்னவென்பதை தொட்டுக் காட்டுகின்றது ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரை.

இந்தப் போக்கைப் புரிந்து கொள்ள நாம் இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சுருக்கமாக பார்த்து விடுவது நல்லது.

உலகளாவிய வலைக்கான (World Wide Web) தரநிர்ணயத்தைச் செய்யும் உலகளாவிய வலைக்கான கூட்டமைப்பு (World Wide Web Consortium) தொன்னூறுகளின் இறுதியில் இருந்து உலகளாவிய இணையம் கைக்கொண்ட தொழில்நுட்பத்தை வெப் 2.0 என்றும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை வெப் 1.0 என்றும் பிரிக்கிறது. தற்போது வெப் 3.0 தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. வெப் 1.0, வெப் 2.0 மற்றும் வெப் 3.0 ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன – எனினும், இந்தப் பதிவின் வரம்பைக் கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு சாரமாக புரிந்து கொள்வோம்.

வெப் 1.0 வில் உள்ளடக்கம் (Content) என்பது பெரிதும் ஒருமுக திசை கொண்டதாக (Uni Directional) இருக்கும் – அதாவது ஒரு தளத்தின் உரிமையாளர் அல்லது ஒரு நிறுவனம் தான் முன்வைக்க நினைக்கும் கருத்தை நேயர்களுக்கு (வாசகர்கள் அல்லது இணைய பயனர்கள்) முன்வைக்கும். வெப் 2.0 வில் உள்ளடக்கம் என்பது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாசகர்கள் அல்லது இணையப் பயனர்களும் உள்ளடக்கத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் (இதன் ஒரு வெளிப்பாடு சமூக வலைத்தளங்களின் பெருக்கம்). இப்போது வளர்ந்து வரும் வெப் 3.0 வில் உள்ளடக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் – அதாவது உருவாக்கப்படும் கண்டெண்ட்டிற்கு பலவிதப் பயன்கள் இருக்கும்.

இனி ஸ்க்ரோல் கட்டுரை சொல்வதை சாரமாகப் பார்ப்போம்.

வெப் 2.0-வின் அடிப்படையில் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்களின் விளைவால் ஏராளமான கற்றுக்குட்டிகள் (Amateur) உருவாகி இருக்கின்றனர் என்கிறார் கட்டுரையாளர். இவர்கள் பெரும்பாலும் தங்களது அனுபவத்தையே பொதுவான உண்மைகளாக முன்வைக்கின்றனர். இது தவிர ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக நடிகர்கள் அல்லது பாடகர்கள்) பிரபலமடையும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில நுகர்பொருட்களுக்கு (ஆயத்த ஆடை போன்ற) விளம்பரத் தூதர்கள் ஆவதோடு சொந்த முறையிலும் நிறுவனங்களைத் துவக்குகின்றனர்.

வேய்நித் பால்த்ரோ.

வேய்நித் பால்த்ரோ (Gwyneth Paltrow) எனும் நடிகை ஆரோக்கியத்துக்கான நல்லெண்ணத் தூதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். இதில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு அழகு சாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இந்நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் ’மருத்துவ’ குணாம்சங்கள் குறித்தும் பாடம் எடுக்கிறார். பால்த்ரோவின் நிறுவனம் முன்வைக்கும் போலி அறிவியல் (psuedo-science) குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இன்றைய தேதியில் அந்நிறுவனத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.

சமூக வலைத்தளத்தின் கேடான விளைவுகளுக்கு இன்னொரு உதாரணம் டொனால்டு டிரம்ப். அரசியல் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத டிரம்ப், சமூக வலைத்தளத்தை ஒரு பரப்புரை சாதனமாக மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டார். வழமையான அரசியல்வாதிகள் போல் அல்லாமல் “எளிமையாக பேசக்கூடியவர்”, “மனதில் இருப்பதைப் பேசும் வெள்ளந்தி” என்பதைப் போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்படுத்த அவருக்கு சமூக வலைத்தளங்களும் அதில் அவரால் பணிக்கமர்த்திக் கொள்ளப்பட்ட இணையக்கூலிப் படையின் சேவையும் மிகப் பெரிய அளவுக்கு கைகொடுத்தது.

தகவல்களைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பாவிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும் கற்றுக்குட்டிகளால் உண்மையும் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களும் பிரித்தறிய முடியாதபடிக்கும் பிணைந்து கிடக்கின்றன. இதன் விளைவாக சமீப காலமாக போலி அறிவியல் கருத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களே இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் பல்கிப் பெருகுவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

இன்னொரு புறம், சமூக வலைத்தள பிரபலங்கள் உருவாக்கும் “கருத்துக்கள்” வணிக ரீதியில் ஆதாயமானதாக இருப்பதைக் காணும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களைத் தங்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு நமது சூழலில் யூ-டியூப் சினிமா விமர்சகர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் போக்குகளை 2007-ம் ஆண்டிலேயே ஓரளவு மிகச் சரியாக முன் அனுமானித்த ஆண்ட்ரூவ் கீன் என்பவர், அதிகரிக்கும் சமூக வலைத்தளப் பயன்பாடு ஒருகட்டத்தில் டிஜிட்டல் நார்சிசத்தை நோக்கிச் செல்லும் என்றார். அதாவது, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது பின்னுக்குப் போய் தன்னைத் தானே மிகையாய் மதிப்பிட்டு முன்னிறுத்திக் கொள்வதில் சென்று முடியும் என்பதை கீன் பத்தாண்டுகளுக்கு முன்னரே அனுமானித்தார்.

இதன் எதார்த்தமான விளைவுகளை நாம் தமிழ் சமூக வலைத்தள சூழலில் காண்கிறோம். பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோர் எந்த அடிப்படை அறிவோ, துறைசார்ந்த திறமைகளோ இன்றி போகிற போக்கில் அடித்து விடுவதை எல்லாம் “தத்துவங்களாக” ஏற்றுக் கொள்ள சில இலட்சக்கணக்கான இளைஞர்கள் “பக்குவம்” அடைந்துள்ளனர். வெறும் வாட்சப் வதந்திகளின் தொகுப்பாக நாம் தமிழர் என்கிற ஒரு அரசியல் கட்சியே செயல்பட்டு வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.

இயற்கை வைத்தியம், இயற்கை வேளாண்மை, இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள், யார் தமிழன் என்கிற ஆராய்ச்சி, தற்சார்பு வாழ்வியல் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது உயரங்களை எட்டி வருகின்றன. நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் இது போன்ற போலி வல்லுநர்கள் சொல்வதை நம்பி இயற்கை வேளாண்மையில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்று ஒரு பெண் அநியாயமாக இறந்தே போனார்.

இந்தப் போக்குகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு எனக் கண்களை மூடி வெறுமனே கடந்து செல்லலாம். பாரிசாலன் போன்ற பைத்தியங்களோடு விவாதித்து அவரது வெறிபிடித்த ”தமிழ்தேசிய” ட்ரோல்களிடம் ஏச்சு வாங்குவதற்கு பதில் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்லலாம். அல்லது இந்த சூழலை மாற்றப் போராடலாம். நம் முன் இருக்கும் தெரிவுகள் எளிமையானவை. அதில் சூழலை மாற்றப் போராடுவது என்கிற சரியான தெரிவோ மிகவும் சவாலானது. எப்போதும் சரியானவைகளின் பாதை கடுமையானது என்பதால் மாற்றத்துக்கான போராட்டம் கடுமையாகவும் நிறைய உழைப்பையும் நேரத்தையும் கோருவதாகவே இருக்கும்.

என்றாலும் அந்த நெடும் போராட்டத்திற்கு தயாராவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

சாக்கியன்

உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !

0

பூமிப்பந்தை அழிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு 1983-ம் ஆண்டின் அதிகாலை பொழுதொன்றில் சோவியத் அதிகாரி ஒருவருக்கு வந்து சேர்ந்தது. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் சோவியத் யூனியனை இன்னும் 25 நிமிடங்களில் தாக்கவிருப்பதாக அந்த அதிகாரியின் கணினிக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அந்த அதிகாரியின் பெயர் ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ்.

ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ்

ஒரு பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாது என்று கருதியதால் மேலதிகாரிகளுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் அந்த கீழ்நிலை கடற்படை அதிகாரி தெரிவிக்காமல் இருந்துவிட்டார். அதன் மூலம் ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது. பின்னர், கணினியில் ஏற்பட்ட கோளாறுதான் அச்செய்திக்கான காரணமென உறுதியானது. இது போன்ற இன்றியமையாத தகவலை தெரிவிக்காததற்கு பெட்ரோவ் கண்டிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் பணியிலிருந்து அவரே விலகிவிட்டார்.

இரண்டு தலைமுறைகளாக அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தி வந்த ஒரு கட்டமைப்பு சரிந்து விழும் நிலையில் கடந்த ஆண்டு 77 வயதான அவர் இறந்து விட்டார். சாத்தியமான அணு ஆயுத மோதல்கள் என்பது பனிப்போரின் தொடர்ச்சியாக தோற்றமளிக்கலாம் ஆனால் அவற்றைத் தடுப்பதற்கான கட்டமைப்பு சமீபத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து அது பேராபத்தில் இருக்கிறது.

1987-ம் ஆண்டு போடப்பட்ட ”மிதமான தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு உடன்படிக்கை”-யிலிருந்து (Intermediate-Range Nuclear Forces Treaty) வெளியேறப்போவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் 2018-ம் ஆண்டு கூறினார். இந்த உடன்படிக்கை ஐரோப்பாவில் அணு ஆயுதம் பெருகாமல் இருப்பதற்கு பெரும்பங்கு வகித்தது. தரைதள சீர்வேக ஏவுகணையை ரசியா சோதனை செய்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் முன்னாள் ரசிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ்

அடுத்ததாக 2010-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ரசிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ் இருவரும் கையெழுத்திட்ட போர்த் தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty) காலாவதியாகக் கூடிய நிலையில் இருக்கிறது. வரும் 2021-ம் ஆண்டில் காலாவதியாக இருக்கும் இந்த ஒப்பந்தத்தை “மோசமான ஒப்பந்தம்” என்று விளாதிமிர் புதினுடனான தொலைபேசி அழைப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த உடன்பாட்டை தகர்ப்பதற்கான ஆயத்தங்களை அமெரிக்கா செய்து வருகிறது என்று நம்புவதாக இரசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

மேலும் உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்களை கடந்த ஆண்டு இரசியா தயாரித்திருக்கும் நிலையில் 1972-ம் ஆண்டின் நீண்ட தூர ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கூறியதே தற்போது புதிய ஆயுத போட்டியை உருவாக்கியிருப்பதாக புதின் குற்றம் சாட்டியிருந்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலிலிருந்து தாக்கும் அணு ஆயுத ஏவுகணை கொம்பு முனையை (Cape Horn) சுற்றி காலிபோர்னியாவை நோக்கி வடக்கே செல்வது போன்ற ஒரு அனிமேசன் காணொளி இரசிய நாட்டு மக்களுக்கான அவரது உரையின் போது ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.

“எங்களது நாடு சொல்வதை நீங்கள் கேட்கவில்லை” என்று 2001-ம் ஆண்டு நீண்ட தூர ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை கூறிய புதின் “இப்பொழுது நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறினார்.

பனிப் போரிலிருந்தும் பின்னரும் கிடைத்த படிப்பினைகளிலிலிருந்து ரசியாவும் அமெரிக்காவும் இது போன்ற பல்வேறு உடன்படிக்கைக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தன.

“இந்த உடன்படிக்கைகள் முழு நிறைவானது அல்ல” என்று இரு தரப்பு வல்லுனர்களும் கூறுகின்றனர். மேலும் இந்த உடன்படிக்கைகளை சமரசம் செய்வது முறித்து கொள்வதை விட மிகவும் கடினமானது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

படிக்க:
♦  ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !
♦ பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி

இடைப்பட்ட தூரம் பாயும் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு (INF) உடன்படிக்கையை நீட்டிப்பதற்கான உண்மையான விவாதங்கள் நடக்காதததால் புதியதொரு கண்மூடித்தனமான ஆயுத போட்டியில் நம்மை தள்ளியிருக்கிறது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அட்லாண்டிக் மன்றத்தில் நடைபெற்ற அமெரிக்காவின் போர்த்தந்திர ஆயுத குறைப்பு உடன்படிக்கை தூதராக பணியாற்றிய ரிச்சார்டு பார்ட் கூறினார்.

இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடாத சீனா மற்றும் இதர நாடுகளுடைய இராணுவ நடவடிக்கைகளை பார்த்தே இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறப் பார்க்கிறது என்று ரசிய கூட்டமைப்பின் போர்த்தந்திர ஏவுகணைப் படைப்பிரிவின் (Russian Federation Strategic Missile Force) முன்னாள் தலைவரான விக்டர் ஏசின் கூறியிருக்கிறார்.

இந்த அணு ஆயுத ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதால் தவிர்க்கவியலாமல் அதிகரித்திருக்கும் இந்த ஏவுகணை நெருக்கடியிலிருந்து அரசியல் ரீதியிலான முடிவுகள் மட்டுமே ரசியா மற்றும் ஐரோப்பாவை காப்பாற்றும் என்று அவர் மேலும் கூறினார்.

அந்த எச்சரிக்கைகள் சரியாக இருக்கின்றன. தரைவழி ஏவுகணைகளை கூடிய விரைவில் உருவாக்கி தயார்படுத்துமாறு பென்டகனுக்கு போல்டன் உத்தரவிடுவதை வாஷிங்டன் போஸ்ட் ஒரு பதிவில் அம்பலப்படுத்தி இருக்கிறது. உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கூறிய உடனேயே அதனை தடுக்க அதனுடைய ஐரோப்பிய கூட்டாளிகள் குறுக்கிட்டதற்கு பிறகே இந்த உத்தரவு வந்துள்ளது. இரசியாவிற்கு வாஷிங்டன் 60 நாட்கள் கெடு விதித்து உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாகவும் எச்சரித்துளளது. அதே நேரத்தில் உடன்படிக்கையை மீறியதாக ஒப்புக்கொள்ளாத இரசியா தன்னுடைய போக்கையும் மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறி விட்டது.

போல்டன்

இதற்கு பின்னணியில் போல்டன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆயுத தடுப்பு உடன்படிக்கைகளிலிருந்து வெளியேறுவதற்கு அவர் ஆர்வத்துடன் இருக்கிறார். 2001-ம் ஆண்டின் ஏவுகணை தடுப்பு உடன்படிக்கை மற்றும் தற்போது அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கை ஆகிய இரண்டும் முறியடிக்கப்பட்டதன் பின்னணியில் அவர் இருக்கிறார்.

உறுதிமிக்க தனிநபர்களால் வரலாற்றின் போக்கை மாற்ற முடியும். 1983-ம் ஆண்டில் தன்னுடைய உயரதிகாரிகளை எச்சரிக்கை செய்யாத பெட்ரோ அச்சூழல் தனது அடிவயிற்றில் புளியைக் கரைத்ததாக கூறுகிறார். இன்றோ போல்டனின் முடிவினால் ஏவுகணை உடன்படிக்கை மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா தன்னை துண்டித்துக் கொள்ளும்படி செய்துள்ளது.


தமிழாக்கம் : சுகுமார்
மூலக்கட்டுரை :  த  கார்டியன்

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்

கேள்வி: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? இவை 85-வது முறையாக உடைந்தது என்று ஒரு புள்ளி விவரம்? கட்டுமானம் சரி இல்லையா ? இல்லை அறிவியல் பூர்வமான காரணம் ஏதும் உண்டா?

–  பா. அருண்

ன்புள்ள அருண்,
லண்டன் பாலம் உடைந்து விழுகிறது என்ற ஆங்கிலக் கவிதையை இனி சென்னை விமான நிலைய கண்ணாடி உடைகிறது என்று மாற்றி விடலாம். உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. சென்னையின் புதிய விமான நிலைய முனையத்தை 2013 ஆம் ஆண்டில் அப்போதைய துணைக் குடியரசுத் தலைவராக இருந்த அமீத் அன்சாரி திறந்து வைத்தார். ஆன செலவு 2,200 கோடி ரூபாய். இந்த புதிய முனையத்தில் செயற்கை கூரைகள், கண்ணாடிக் கதவுகள், கிரானைட் பலகைகள் என ஆடம்பரமாக கட்டியிருந்தார்கள்.

Chennai-AirportGlass-1பிறகு முனையம் திறந்து வைத்த பிறகு மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடிக் கதவுகளும், கூரைகளும் விழுந்து உடைவது ஊடகங்களின் நிரந்த செய்தியாகி விட்டன. 2019-ம் ஆண்டு கணக்கை சில நாட்களுக்கு முன்பு விழுந்த கண்ணாடி கதவு துவங்கி வைத்திருக்கிறது. இதோடு உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.

சூழலுக்கு பொருத்தமாக அக்கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை என்பதால் உடைந்து விழுகின்றன. இது அறிவியல். உடைபடும் அளவிற்கு கண்ணாடிகளும், கட்டுமானமும் மோசமாக இருப்பதால் உடைகின்றன. இது யதார்த்தம். இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையின் சர்வதேச நுழைவாயிலாக இவ்விமான நிலையம் இருக்கிறது. சமீப ஆண்டுகளாக விமானப் போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. அதற்காகத்தான் பல கோடி செலவழித்து பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கட்டுமானத்துறையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் ஒரு அழகியலாக அறிமுகமானது. அதற்கு முன் கட்டிடக் கலையில் இருந்த பயன்பாட்டுவாத அணுகுமுறையை அழகியல் முறையாக மாற்றியது பின் நவீனத்துவ கட்டிடக் கலை. அப்படித்தான் இன்று நாம் காணும் கண்ணாடி மாளிகை வகை கட்டுமானங்களும், விதவிதமான தோற்றமுள்ள கட்டிடங்களும் கட்டப்பட்டன.

படிக்க:
♦ பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
♦ பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இருக்கும் பணக்காரர்கள் மேற்குலகின் கட்டிடக் கலையைப் பார்த்து காப்பி அடித்து கட்டுகிறார்கள். அந்த காப்பியோடு கமிஷனும் சேர்கிறது. எட்டுவழிச்சாலையில் எடப்பாடியின் மாமனார் இருக்கிறார். வேதாந்தா நன்கொடைப் பட்டியலில் பாஜக இருக்கிறது. ஆதலால் கமிஷன் பற்றிய விசாரணைகளை நாம் செய்ய முடியாது.

தனியார்மயத்தின் முக்கியமான அம்சமே பொறுப்புத் துறப்புதான். அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் படி இங்கே அணு உலைகளில் விபத்து நடந்தால் அதற்கு அமெரிக்க நிறுவனங்கள் நிவாரணம் அளிக்கத் தேவையில்லை. இதை போபாலில் நடந்த யூனியன் கார்பைடு கொலை விபத்திலேயே பார்த்திருக்கிறோம். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தின் நகரும் படிக்கட்டில் சிக்கி ஒருவர் இறந்து போக அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஏனெனில் ஒரு விமானநிலையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்று பணிபுரிகின்றன. தரையை பராமரிக்க ஒன்று, சாலையை பராமரிக்க ஒன்று, படிக்கட்டுகளுக்கு ஒன்று, பேருந்துகளுக்கு ஒன்று என பிரித்துப் பிரித்து வைத்திருப்பதால் இங்கிலாந்தில் யாரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலும் அந்த நிலைமை பரவிவருகிறது.

சென்னை விமான நிலைய கட்டுமானத்தில் யார் இருந்தார்கள் என்பது நமக்கு குறிப்பாகத் தெரியவில்லை. கண்ணாடிகளை கான்ட்ராக்டு எடுத்தவர்கள் யாரெனவும் தெரியவில்லை. அம்மா ஆட்சியின் ஆசீர்வாதத்தோடு கூட அது நடந்திருக்கலாம். புதிய முனையத்தில் இப்படி கண்ணாடிகள் விழுந்து உடைவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்திருக்கிறது. சில பல வழக்குகளும் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கின்றன. எனினும் இதுவரை ஏன் உடைகிறது, யார் காரணம் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.  இது விபத்து நடப்பதை விட பயங்கரமானது. நாம் சாவது கூட பிரச்சினையில்லை. ஆனால் ஏன் செத்தோம் என்று கூட இந்தியாவில் தெரிந்து கொள்ள முடியாது, இதுதான் மீப்பெரும் சோகம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !

அருண் கார்த்திக்
மோடி அரசு ஏழைகளுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவருவதாக கூறி ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018-இல் கொண்டுவந்தது. இந்த திட்டத்தால் 10 கோடி குடும்பங்கள், அதாவது 50 கோடி மக்கள், பயன்பெறுவார்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் யார் பயன்பெறலாம் என்று இணையத்தில் தேடி பார்த்தால் தெளிவாக இல்லை.

Ayushman Bharathசமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு, 2011-இன் (Socio-Economic Caste Census (SECC), 2011) அடிப்படையில் இந்த திட்டத்துக்கு தகுதியான ஏழைக் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. 10% இட ஒதுக்கீட்டு விசயத்தில் மட்டும் 8 லட்சத்திற்கு குறைவாக வருட வருமானம் இருப்பவர்கள் அனைவரும் ஏழைகள் என்று எளிமையான விளக்கம் தரப்படுகிறது. ஆனால் மருத்துவக் காப்பீட்டுக்கு அவ்வாறு எளிய விளக்கம் இல்லை. இன்னும் கொஞ்சம் இணையத்தில் தேடி பின்வரும் தகவல்களை திரட்ட முடிந்தது. திரட்ட தான் முடிந்தது, பாதி புரியவில்லை பாதி ஞாபகம் இல்லை.

ஒரு குடும்பம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை தொழில்சார்ந்த அளவுகோல்களை (occupational criteria) வைத்து முடிவு செயகிறார்கள். கிராமபுறத்திற்கும் நகர்புறத்திற்கும் வேறு வேறு அளவுகோல்கள் உள்ளன.
கிராமப்புறதில் தகுதி உடைய குடும்பங்கள்: 16 முதல் 59 வயது வரை உள்ள உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், பெண் குடும்ப தலைவியை கொண்ட 16 முதல் 59 வயது வரை உள்ள ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்கள், SC/ST குடும்பங்கள், சொந்தமாக நிலம் எதுவும் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்கள்.
இதேபோல் நகர்ப்புறங்களுக்கு பிச்சைக்காரர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என மொத்தம் 11 வகையான தொழில்சார்ந்த அளவுகோல்கள் உள்ளன.

இந்த திட்டத்தில் குடும்பங்களை தேர்வு செய்வதில் இருந்து திட்டத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்வது வரை, இதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் செயல்பாட்டாளர்களின் விமர்சனங்களும் இணையத்தில் கிடைக்கும்.

இந்த கட்டுரை ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியது அல்ல. இந்த திட்டம் வந்தபொழுது ஏற்கனவே இது போன்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மாநில அரசுகள் இந்த திட்டத்துடன் இணைந்து இந்த திட்டத்தில் கிடைக்கும் பயனையும் பெறலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு இணைத்துக்கொண்டால் திட்டத்துக்கு ஆகும் செலவில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

படிக்க:
மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !
♦ தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் !

ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகமாவதற்கு முன்னரே தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. இந்த திட்டம் சுமார் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1 முதல் 2 லட்சம் வரை செலவாகும் 1,027 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு தந்து வந்தது. டிசம்பர் 1 முதல் தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பெயரும் தமிழ் நாடு முதல்வர் திட்டம் என்பதில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதற்க்கேற்ப அட்டைகளில் இருக்கும் புகைப்படங்களும் தமிழக முதல்வரின் படத்தில் இருந்து இந்திய பிரதமர் படத்துக்கு, அதாவது மோடி படத்துக்கு மாறியது.

இந்த மாற்றத்தில் பணம் யார் தருகிறார்கள், பெயரையும் புகழையும் யார் பெறுகிறார்கள் என்பது தான் சூட்சுமமே.

ஜனவரி 12 அன்று வந்த Business Line செய்தித்தாளில் இருந்த செய்தி – “Tamil Nadu tops the claims charts under Ayushman scheme”, அதாவது, ஆயுஷ்மான் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த செய்தியில் வந்த மற்ற தகவல்கள் பின்வருமாறு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விதிகளின்படி பார்த்தால் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் தான் பயனாளர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருந்த அனைவருக்கும், சுமார் 1.5 கோடி குடும்பங்களுக்கும், இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தமிழக அரசு விரிவு படுத்தியதால் தமிழகத்தில் 1.5 கோடி குடும்பங்கள் பயனாளர்களாக உள்ளனர். இதில், 77 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான நிதியை மட்டும் தான் மத்திய அரசு தரும், அதிலும் 60% மட்டும் தான் தரும், மீதி 40% மாநில அரசு தரவேண்டும்.

மருத்துவமனையில் கத்திருக்கும் மக்கள் (படம் – வினவு)

இதில் இன்னொரு செய்தியும் உண்டு. முன்பு இருந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance) நிறுவனத்துடன் இணைந்து நடத்திவந்தது; ஒப்பந்தப்படி 2 லட்சம் வரை செலவாகும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தர வேண்டும். இந்த ஒப்பந்தம் 2022 வரைக்குமான ஒப்பந்தம்.

இப்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்துள்ளதால் காப்பீட்டுத் தொகை 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருப்பதால் 2 லட்சம் வரை மட்டும் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும், அதற்கு மேல் 5 லட்சம் வரை ஆகும் செலவை தமிழக அரசு தான் ஏற்க வேண்டும், அவ்வாறு தான் ஏற்று வருகிறது.

மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும். சமீபத்தில் சத்தீஸ்கரில் பதவியேற்ற காங்கிரஸ் அரசாங்கம் ஆயுஷ்மான் திட்டத்தில் இருந்து வெளியேற முடிவுசெய்துள்ளது. “மருந்து கொள்முதல், ஆஷா ஊழியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முழு கட்டமைப்பும் இருக்கும்பொழுது நாங்கள் எதற்கு காப்பீட்டு திட்டங்களை நடத்த வேண்டும். அனைவருக்கும் பொதுவான சுகாதார சேவையை வழங்க தேவைப்படும் திறனும் மனிதவளமும் எங்களிடம் உள்ளது” என்று சத்திஸ்கரின் சுகாதாரத்துறை அமைச்சர் TS சிங் தியோ தெரிவித்தார்.

“சுமார் 90 முதல் 95% நோயாளிகளின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ தேவைகளை அரசு அமைப்பு மூலமே நிவர்த்திசெய்துவிடலாம். சத்திஸ்கருக்கு தேவையானது பொதுவான சுகாதார சேவை தான்” என்று அவர் மேலும் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் வேண்டாம் என்று சொல்வதில் சத்தீஸ்கர் ஐந்தாவது மாநிலம்.

மத்திய அரசு ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு மாதம் முன்பே ஓதிஸா பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. தெலுங்கானாவும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்கவில்லை. ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகளுக்கு அனுப்பப்படும் கடிதங்களில் மோடியின் படம் இடம்பெறுவதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ ஏற்க மறுத்துவிட்டார். 40% நிதியை மாநில அரசு தருவதால் மாநில அரசுக்கும் கடிதங்களில் இடம் இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.

மோடிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2009-இல் தமிழகத்தில் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஜூலை 23-ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின்படி 51 நோய்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது. 2011-ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இப்போதும் அமலில் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மத்திய அரசின் திட்டத்துடன் தமிழக அரசு இணைகிறது.

மேலே கூறியது போல, தமிழகத்தில் ஆயுஷ்மான் திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில், 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மத்திய அரசு இன்சூரன்ஸ் கட்டண தொகை செலுத்தும், அதுவும் 60% தான் செலுத்தும், மீதி 40%-யை தமிழக அரசு தான் செலுத்த வேண்டும். மீதம் உள்ள குடும்பங்களுக்கு முழு செலவும் தமிழக அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் மொத்த திட்டத்தையும் செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை திட்டத்தின் பெயரால் மத்திய அரசு தட்டி செல்கிறது.

வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில் 1 கோடி குடும்பங்களுக்கு தமிழக அரசு தான் இன்சூரன்ஸ் கட்டண தொகையை செலுத்துகிறது. மத்திய அரசு வெறும் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் செலுத்துகிறது. இருந்தாலும், யாருடைய படம் முன்னிலைப்படுத்தப்படுகிறது? மோடியின் படம்! செய்திகள் என்ன சொல்கின்றன? ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்’! தமிழக அரசு செலவு செய்து மத்திய அரசு திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக காட்டுகிறது.

ஸ்டிக்கர் பாய்ஸ் என்று கிண்டல் செய்தொம். மக்கள் கொடுத்த பொருட்களில் அவர்களின் தலைவி ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இப்போது தமிழக அரசு நிதியில் மத்திய அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது, மோடியின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அப்போது அவர்களின் தலைவிக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது யாருக்கு என்று வெளிப்படையாக சொல்லவேண்டியதில்லை.

அதிமுக செய்து வரும் இந்த சேவையை ‘சொந்த கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று கூறலாம்.

அருண் கார்த்திக்

செய்தி ஆதாரம் :
♦ Tamil Nadu tops the claims charts under Ayushman scheme

♦ Chhattisgarh govt to pull out of Ayushman Bharat

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட என்ன வழி ?

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று !

நாசகார ஸ்டெர்லைட் ஆலையினைத் தமிழகத்தில் இருந்து அகற்ற தூத்துக்குடி மக்களோடு இணைந்து தமிழகமே குரல் எழுப்புகிறது. தாமிர உருக்காலையினைத் தமிழகத்தில் தடைசெய்யும் சிறப்புச் சட்டத்தினைத் தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றக் கோருகிறது, தமிழகம்.

மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இரண்டாவது ஆலையைத் தொடங்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வெற்றி பெற்றதையடுத்துதான், ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர், தூத்துக்குடி நகர மக்கள்.

இத்தொடர் போராட்டத்தால், ஆலை இயங்குவதற்கான அனுமதியினை நீட்டிக்க இயலாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. அதேசமயம், மின்சாரம் துண்டிக்கப்படாததால், இந்த உத்தரவு காகித உத்தரவாகவே இருந்தது.

இப்பித்தலாட்டத்தினை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் ஆலை மூடப்படும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராடுவது எனத் தீர்மானித்து, கடந்த மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அமைதியான முறையில் நடந்த இந்தப் பேரணியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது, தமிழக அரசு. இதன் காரணமாக ஆளும் அ.தி.மு.க. அரசின் மீது தமிழகமெங்கும் எழுந்த வெறுப்பையும் கோபத்தையும் தணிக்கும் முகமாக ஆலையை நிரந்தரமாக மூடும் பலவீனமான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த ஆணையை ரத்து செய்து, ஆலையினைத் திறக்கலாம் எனப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினைத் தமிழக மக்கள் ஏற்கவில்லை. கருப்புக் கொடி, சிறுவர்கள் பேரணி, மாவட்ட ஆட்சியரிடம் சென்று கேள்வி கேட்பது என தூத்துக்குடி மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறமோ தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே தூத்துக்குடியை போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.

படிக்க:
தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
♦ தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ

கருப்புக் கொடி விற்கத் தடை, விற்பனை செய்த கடைக்காரர் மீது போலீசு தாக்குதல், போராட்ட முன்னணியாளர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வேவு பார்ப்பது, மீனவர் அமைப்புகள், வணிகர் சங்கத்தினரைச் சந்தித்தால் கைது, சிறுவர்கள் பேரணியாகச் சென்றதற்கு வழக்கு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது என அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இன்னொருபுறத்தில், வேதாந்தா நிர்வாகம் கோவில் நன்கொடை, கல்வி உதவித் தொகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் அடைப்பு எனப் பணத்தினை வாரியிறைத்து மக்களை ஊழல்படுத்தும், மக்களைப் பிளவுபடுத்தும் அதனின் சதிக்கு துணை போகிறது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த பசுமைத் தீர்ப்பாய ஆணையைக் கண்டித்து தூத்துக்குடி நகர மக்கள் தெருக்கள், வீடுகள் எங்கும் கருப்புக் கொடி கட்டி நடத்திய போராட்டம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அரசு தரப்பைத் தவிர, வேறு யாரையும் கேட்காமலேயே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆய்வுக் குழுவோ மக்கள் தரப்பு நியாயங்களை ஒப்புக்குக் கேட்டுவிட்டு, தன் முன்னால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் முன்வைக்கப்பட்ட சான்றுகளுக்கும் பதிலளிக்காமலேயே ஆலையினைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்தது. தூத்துக்குடியின் நாலரை இலட்சம் மக்கள் ஆலையினைத் திறக்க வேண்டாம் என அளித்த மனுக்கள் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றன.

ஸ்டெர்லைட் ஆலை தங்களது நலனுக்கு உகந்தது இல்லை என மக்கள் கூறும்போது கார்ப்பரேட் நலனைப் பற்றி பேசுகிறார்கள், நீதிபதிகள். கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக வெளியேற்று என்று மக்கள் காட்டும் வழியில் செல்ல மறுக்கிறது தமிழக அரசு.

மக்களின் போராட்டத்தினால் ஸ்டெர்லைட் மூடப்படுமானால், அது ஒட்டுமொத்த கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் விடப்படும் சவாலாக இருக்காதா என்ன? இதனால்தான் சற்று தள்ளிப்போட்டும், துப்பாக்கிச்சூட்டை நினைவுபடுத்தும் வகையில் மக்களை அச்சுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையினைத் திறக்க வன்மத்துடனும் சதித்தனத்தோடும் செயல்படுகிறது, அரசு-வேதாந்தா கூட்டணி.

– பாவலன்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart