Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 365

தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !

2

டந்த 2017 -ம் ஆண்டு  தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 2018-ம் ஆண்டுக்குள் தொழு நோயை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் இலக்கை அடையவில்லை

கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒழித்துவிடுவோம்  என மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஜெனரல் அனில் குமார் இதுகுறித்து கூறுகையில், “கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை 2020-ம்  ஆண்டுக்குள் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஆனால் நாம் அதற்கு முன்னதாகவே அக்டோபர் 2, 2019-க்குள் அந்த இலக்கை அடைந்துவிடுவோம். தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விடுவோம்” என்றார்.

தொழுநோயை முற்றிலுமாக ஒழித்தல் என்பது 10 இலட்சத்திற்கு ஒருவருக்கு மட்டுமே தொழுநோய் இருப்பது எனும் நிலையையே குறிக்கும். கண்கூடாக காணக்கூடிய உருமாறுதல்களை ஏற்படுத்தும் தொழுநோயை, “இரண்டாம் கட்ட முடக்கு நிலை” என குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஜனவரி 25, 2019-ல் தான் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான  தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது. இதுவும், 2018-ம் ஆண்டு இலக்கை எட்டமுடியாமல் போனதும் பொது சுகாதார பார்வையாளர்களின் அக்கறைக்குரிய பிரச்சினையாகும். ஒரு வேளை இந்தியா தனது இலக்கை எட்ட முடியவில்லை எனில், அது உலக அளவிலான தொழுநோயாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கும்.

படிக்க:
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !
♦ சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !

தொழுநோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த நோய் வெளியே தெரிவதற்கு மிக அதிகமான காலம் ஆகும் என்பதுதான். சராசரியாக ஆறு ஆண்டுகள் கழித்துதான் இந்த நோய் வெளியே இருப்பதற்கான அறிகுறி தெரியவரும். இணை இயக்குனர் ஜெனரல் குமார் இது குறித்து கூறுகையில், “நாங்கள் இந்த நோயை கண்டுபிடிப்பதற்காக சிறப்பான வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிகிறது. ஏனெனில் தொழுநோய் ஒரு நபருக்குள் பல ஆண்டுகள் மறைந்திருக்கக் கூடியது” என்றார். தொழு நோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதையும், பாரபட்சம் பார்ப்பதையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாசகவா இந்தியா தொழுநோய் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்

இந்தியாவில் தொழுநோய் தாக்குதல் குறித்த புள்ளி விவரங்கள் ஏற்றத் தாழ்வோடு இருக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் மற்றும் அதன் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது தேக்கத்தில் இருந்தது. 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புதியதாக சுமார் 35 ஆயிரம் தொழு நோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது ஊக்கம் அளிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியது என்னவெனில், கண்கூடாக பார்க்கக்கூடிய உருமாறுதல் ஏற்பட்ட தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான்.  ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் பார்க்கையில் இன்னும் வெளித்தெரியாத நிலையில் இருக்கும் தொழுநோய் பாதிப்பும்அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

படிக்க:
♦ வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !
♦ செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

தொழுநோய் பாதிப்பு வெளிப்படுவதற்கு முன்னர் அதன் அதிகமான அடைகாப்புக்காலம் காரணமாக பல நோய் தாக்குதல்கள் வெளியில் தெரியாமலேயே இருக்கின்றன. மேலும் நோய்த் தாக்குதலின் எண்ணிக்கை திடீரென அதிகமாகவோ குறைவாகவோ மாறாது. முடக்கநிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், தொழுநோய் பரவுவதைத் தடுக்கவும், இந்நோயை விரைவாக கண்டுபிடிப்பது முக்கியானது. ஏனெனில் முடக்கநிலை என்பது இந்நோய்த் தாக்குதலின் மிகத் தீவிரமான விளைவாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள இலக்கான 2020-ம் ஆண்டு என்பது மிகவும் நெருக்கமானது. பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நாம் அந்த இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடுவோம். அதில் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார்.

எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் தொழுநோயின்  இரண்டாம் கட்ட முடக்கு நிலையை ஒழித்து, தொழு நோய் பாதிப்பை 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற அளவுக்கு குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கிறது. இந்தியாவில் தற்போது இது 10 லட்சத்திற்கு 2.4 என்ற அளவில் இருக்கிறது. இதுகுறித்து குமார் கூறுகையில், “நாம் செயலூக்கமான பரப்புரையை 2016-ல் துவக்கும்போது இந்த அளவு 10 லட்சத்திற்கு 4.5 என்ற அளவில் இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கையில் நாம் இரண்டு ஆண்டுக்குள் பிரச்சினையை சரி பாதியாக குறைத்திருக்கிறோம்.” என்றார்

ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால், தொழு நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள், மறுக்கப்படுகின்றன என்பதை கடந்த ஆண்டு தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியது. ஆதார் அட்டையை பொருத்தவரையில் அதற்கு கைரேகையும், கருவிழி பதிவும் அவசியமாக இருக்கிறது. தொழு நோய், நோயாளிகளின் கைகளை பாதித்துவிடுவதால், இத்தகைய உடல்கூறு தகவல்களை ஆதார் அட்டைக்காக கொடுக்க அவர்களுக்கு சாத்தியம் இல்லை. ஆகவே அவர்களால் ஆதார் அட்டை பெற முடிவதில்லை.

இந்தியாவில் பல்வேறு சுகாதார திட்டங்கள், நோயாளிகளுக்கான நலத்திட்டங்களை ஆதார் எண்ணோடு இணைக்க துவங்கிவிட்டன. உதாரணத்திற்கு காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ. 500 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அப்பணம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து குமார் கூறுகையில், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவது இல்லை.” என்றார். மேலும், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் இந்த சேவையை வழங்கி வருகிறோம் அவர்கள் ஆதார் அட்டை வைத்து இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. ஒவ்வொருவரும் இந்த சேவையை பெற்று வருகின்றனர்” என்றார்.

தொழுநோய் குணப்படுத்தக் கூடியதே எனினும், இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது பாரபட்சம் காட்டுவதும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் இன்னமும் நீடிக்கிறது. கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் பாராளுமன்றம், இந்திய தனிநபர் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி விவாகரத்து பெறுவதற்கு தொழுநோயை ஒரு காரணமாக சொல்லலாம் என்ற விதியை ரத்து செய்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கவனம் கொடுக்கப்படாத வெப்ப மண்டல நோயாகவே தொழுநோய் கருதப்படுகிறது. இந்தியாவில் காசநோய் மற்றும் மலேரியாவிற்கு ஒதுக்கப்படும் ஆராய்ச்சி நிதி மற்றும் சிறப்புக் கவனமும் தொழுநோய்க்கு கொடுக்கப்படுவதில்லை. காசநோய் குறித்த ஆய்வுக்கு ரூ.147 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், தொழுநோய் குறித்த ஆய்வுக்கு வெறுமனே ரூ.39 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவிலும் கூட தொழுநோய் குறித்த ஆய்வுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில், தொழுநோய்க்கான ஆய்வு நிதி குறைக்கப்பட்டு வருகையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் முன்னெப்போதையும் விட மிக அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது

நோயை ஒழிப்பது குறித்த இந்தியாவின் இலக்குகள் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கின்றன. தொழுநோயை ஒழிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் 2020-ம் ஆண்டு இலக்கு வைக்கையில், அதற்கு முன்னதாகவே ஒழித்துவிட இலக்கு வைத்துள்ளது இந்தியா. அதே போல, காச நோயை ஒழிக்க உலக சுகாதார நி்றுவனம் 2030-ம் ஆண்டு இலக்கு வைத்திருக்கையில், வரும் 2025-ம் ஆண்டிலேயே  ஒழித்துவிட இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. ஆனால்,  உலகம் முழுவதும் புதியதாக பீடித்திருக்கும், ஒரு கோடியே நாலு லட்சம் காச நோய் தாக்குதல்களில் சுமார் 27% இந்தியாவில் நிகழ்கின்றன என்பதுதான் நிலைமை.


கட்டுரையாளர்     : அனு பூயன்
தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர் 

நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்

யிரக்கணக்கான மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள். அதனை வெறித்துப் பார்த்தவாறு ஒரு ஓரமாக கிடக்கிறார்கள் ஃப்ளோரசண்ட் கலரில் ஜாக்கெட் அணிந்து கழிப்பறையை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். மற்றொருபுறம் கையில் துடைப்பத்தை ஏந்தியபடி எங்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக சுமார் 1.2 இலட்சம் தற்காலிக கழிவறைகள்  அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவு மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக சுமார் 15,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அலகாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் இத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தலித்துகள் மற்றும் பழங்குடிகள்.

சோட்டாலால். அலிஅசன் மற்றும் அகமத்.

கழிவறையின் முன்னே நின்று கொண்டிருந்தார்கள் அத்தாரா மாவட்டம், பாந்த்ரா கிராமத்தை சேர்ந்த அலிஅசன், அகமத் மற்றும் சோட்டாலால். அவர்கள் கும்பமேளா பற்றியும், இந்த வேலைக்கு வந்தது பற்றியும் சொல்கிறார்கள். “எங்களை சாந்தினி என்ற பெண் காண்ட்ராக்டர் ஊருக்கு வந்து கும்பமேளாவில் நிறைய வேலை இருக்கு. வந்தால் ஒரு நாள் கூலியாக 350 ரூபாய் தருவோம் என்றார். ஊரில் வேலை இல்லாமல்தானே இருக்கிறோம்… மூணு மாசம் வேலை தர்றதா சொல்றாங்க. அதுவும் 350 ரூபா சம்பளம். யாரு கொடுப்பான்னு நெனச்சி வந்தோம். இங்க வந்த பிறகு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து விட்டார்கள்.  பத்து கழிப்பறைக்கு ஒரு ஆள் பொறுப்பு. சுத்தம் செய்வது, தண்ணீர் வராத பட்சத்தில் அதனை முறையாக சொல்லி தண்ணி வரவைப்பது, கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில், டப்பா அனைத்தும் பார்த்துக் கொள்வது எங்கள் வேலை.

எங்களை கூப்பிடும்போது இந்த வேலைதான்னு சொல்லி கூப்பிடல.  சொல்லியிருந்தா வந்திருக்க மாட்டோம். இப்ப போகலாம்னு பார்த்தாலும் முடியாது. வீட்டுல சொல்லிட்டு வந்துட்டோம். அவங்க எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. வேற வழியும் இல்லை” என்கிறார் அசன்.

மேலும், “எங்களுக்கு தங்கறதுக்கு இடம் மட்டும்தான் கொடுத்தாங்க. கூடாரம் நாங்களே போட்டுக்கிட்டோம். நைட்டான செம்ம குளுரு. தாக்கு பிடிக்க முடியல. நெருப்பு மூட்டிக் கொள்ள விறகு கட்டை எதுவும் கொடுக்கல. அதையும் நாங்களே பாத்துக்கனும். அதிகாரிங்களுக்கு மட்டும் விறகு கொடுத்திருக்காங்க. கூலி போக உணவுக்காக 100 ரூபா படி தருவோம் என்றார்கள். அதுவும் இன்னமும் தரல. நாங்க எட்டு மணி நேரம் வேலை பார்க்கனும். ஆனால், இரண்டு ஷிப்டு ஒரே ஆள் பார்த்தாலும் அதற்கான கூலியும் தருவதில்லை. படியும் தருவதில்லை.

சாப்பிட இரண்டு ரொட்டி, சப்ஜி – பருப்பு சாம்பார்ன்ற பேர்ல தண்ணிய ஒரு நேரம் கொடுக்கிறாங்க’’ என்கிறார் அலுப்பாக.

» “வேற என்ன பிரச்சனையெல்லாம் இருக்கு?”

‘’இவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. அப்படியே இருந்தாலும் இங்க வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அவங்கள கேட்கவும் முடியல. பக்கெட் இல்லாததால, வாட்டர் பாட்டில்ல தண்ணி புடிச்சிக்கிட்டு வராங்க. அந்த கொஞ்சம் தண்ணியில என்ன பண்ண முடியும்? அதனால பாத்ரூம் சுத்தமாக இருப்பதில்லை. அத நாங்க கழுவுறோம். இது ரொம்ப பிரச்சனையாக இருக்கு. மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது.

எங்க ஊரில் விவசாய வேலை செய்து கொண்டு இருந்தோம். ஆனால், அதில் இப்போது வருமானம் இல்லை என்பதால் இந்த வேலைக்கு வந்தோம். இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். வீட்ல இப்ப கைகொடுக்கிறது ஒரே ஒரு மாடுதான். அதுவும் பால் கறக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை. பின்னால் அதை விற்க முடியாது. விற்க பலரும் பயப்படுறாங்க..

» கங்கையில குளிச்சிங்களா?

இன்னும் குளிக்கல. போகும்போது குளிப்போம்.

» குளிச்சா பாவம் போயிடுமா?

ஆண்டவன் என்ன எழுதி வச்சிருக்கானோ அதுதான் நடக்கும். நாம நல்லது செஞ்சா நல்லது நடக்கும். கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும். எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்கான்” என்றவரிடமிருந்து விடைபெற்று சிறிது தூரம் நடந்ததும் மற்றொரு பிரிவு துப்புரவு தொழிலாளர்கள் சச்சின், தினேஷ், சுனில் மோங்க்ரே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

சச்சின்.

இவர்களுடைய பணி, “தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும், குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் மோங்க்ரே என்று சொல்லக்கூடிய பட்டியலின சாதியை சார்ந்தவர்கள். இந்த வேலைக்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்த விழா முடியும் வரை வேறு எந்த வேலைக்கும் எங்கேயும் செல்லக்கூடாது. இங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும். தங்குவதற்கு ஒரு இடம் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதில் இவர்களே குடில் அமைத்துக் கொள்ள வேண்டுமாம்.

படிக்க:
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

குளிப்பது எல்லாம் குழாயில் தண்ணீர் பிடித்து குளித்துக் கொள்ள வேண்டும்.  கொட்டிக் கிடக்கும் குப்பையை அகற்றுவது மட்டும் இல்லாமல், இரும்புப் பாதையை அடிக்கடி பெருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர் தண்ணீர் தெளிக்க வேண்டும். எந்நேரமும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். எங்குச் சென்றாலும் கையில் துடைப்பத்துடன் சுற்ற வேண்டும். இந்த வேலை முடிந்ததும் ஊருக்கு சென்று அங்கே கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்றே தெரிவிக்கின்றனர்.

இவர்களை அழைத்து வந்த சுனில் மோங்க்ரே சொல்கிறார், “நான் மும்பை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் மிக்சர் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.

தினேஷ் மற்றும் சுனில் மோங்க்ரே.

சென்னையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்பொழுது அந்த வேலைக்கு அதிகம் பேர் வந்து விட்டதால் சம்பளம் குறைந்து விட்டது. வேலையும் சரியாக கிடைப்பதில்லை. மேலும் உடல்நிலை மற்றும் வீட்டு பிரச்சனையால் எனது சொந்த ஊரான பாந்தாவுக்கே திரும்பி வந்துவிட்டேன்.

கும்பமேளா துப்புரவு பணியில் சூப்பர் வைசராக இருக்கிறேன். இந்த வேலைக்கு எங்க ஊரில் இருந்து 12 பேரை கூட்டி வந்தேன். எல்லோரும் தலித் சாதியின் மோங்க்ரே பிரிவை சார்ந்தவர்கள்.

» இந்த பிரிவில் இருந்துதான் துப்புரவு வேலைக்கு வருவார்களா?

ஆம். இன்னும் சில தலித் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களும் வந்திருக்கிறர்கள்.

» உங்களுக்கு அம்பேட்கரை தெரியுமா?

தெரியும். அவர்தான் எங்க தலைவர். அவர் இருந்ததால் தான் இந்த நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருப்போம்.’’ என்றார்.

பிண்டு.

கொஞ்சம் தள்ளி கையில் துடப்பத்தை வைத்துக்கொண்டு தனியாக சோர்வுடன் நின்று கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்ததும் சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் பிண்டு. மிர்சாபுர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.  தலித் சாதியின் வேறொரு பிரிவை சார்ந்தவர்.

» இந்த கும்பமேளா எப்படி இருக்கு?

சூப்பரா இருக்கு. ரொம்ப பேரு வாராங்க. பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.

» இந்த விழாவுக்காக எவ்ளோ செலவாகியிருக்கும்னு நினைக்கிறீங்க?

“ஒரு 30, 40 கோடி இருக்குமா?” என்று சந்தேகத்துடன் வெகுளியாக சொன்னவரிடம் 4,300 கோடி என்றதும் மலைத்துப் போய் பார்த்தார்.

» உங்களுக்கு இந்த வேலை புடிச்சிருக்கா?

“எனக்கு சுத்தமா இந்த வேலை புடிக்கல.. எனக்கு வண்டி ஓட்டுற வேலை.  அந்த வேலை இல்லாததால இந்த வேலைக்கு வந்தேன். எங்கள மாதிரியான ஆட்கள் நெறைய பேர் இந்த வேலைய செய்யுறோம். என்னா செய்றது வேலை எதுவும் இல்ல….” என்று சொல்லும்போது அவருடைய சூப்பர்வைசர் வந்ததால் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.

உழைத்து உழைத்து களைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள் துப்புரவு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் பெண் தொழிலாளர்கள். அவர்களிடம் கேட்டதும் படப்படப்போடு எழுந்து நின்று அவஸ்தையோடு சொன்னார்கள். “நாங்க பாந்தா ஊர். சித்ரகூட் ஜில்லா.  எங்க ஊர்ல இருந்து 12 பேர் வந்திருக்காங்க.  எங்களுக்கு ஒரு நாள் கூலி 275 ரூபா. தங்கறதுக்கு இடம் மட்டும் எங்கள கூட்டி வந்தவங்க கொடுத்தாங்க.  சாப்பாடு, தண்ணி எல்லாம் நாங்களே பார்த்துக்கனும்.

» ஏன் இந்த வேலைக்கு வந்திங்க?

என்ன கேள்வி கேக்குற …  அங்க என்னமோ வேலைய வச்சிக்கிட்டு இந்த வேலைக்கு வந்த மாதிரி கேக்குற… வேல இருந்தா இங்க வருவோமா…? நாங்க ஏன் குப்பை, மண்ணை பெருக்க போறோம்?

» மோடி கவர்ன்மெண்ட்ல எல்லோருக்கும் நல்லது செய்யிறதா சொல்றாங்களே?

எதுவும் இல்ல. 15 லட்சம் கொடுகிறதா சொன்னாரு…. யாருக்கும் வர்ல. வீடு கட்டி தருவோம்னு சொன்னாரு அதுவும் தரல.. .  மோடி சும்மா எதையாவது சொல்லுவார். மத்தபடி ஒன்னும் இல்ல. நாங்க ஏழ்மையானவங்க.  மோடி நல்லது செய்யிறாருன்னு எல்லோரும் சொல்லுறாங்க. ஆனா யாருக்கு செய்யிறாருன்னு தெரியல. நாங்க ஏழையாவே தான் இருக்கோம்.

படிக்க:
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

அரசு கொடுத்திருந்த புளோரசெண்ட் ஜாக்கெட்டை காட்டி….. “எங்க துணிய பாருங்க.  கொசு வலை மாதிரி கொடுத்து இருக்காங்க. கொசுகூட உள்ள போயிரும்.  கடிக்கும். இதுல தலைக்கு தொப்பி வேற… இது எதுக்கு பிரயோஜனம்? குளிரு தாங்கல.  எனக்கு பரவாயில்ல… தோ… இந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு.  ஆனாலும் வேலை செஞ்சிதான் ஆகனும். நாங்க போன வருஷம் இந்த மாதிரி வேலை செய்ய வந்தோம். அப்போ கடைசியில கொஞ்சம் காசு கொடுக்காம அனுப்பிட்டாங்க. இந்த முறை அதை கண்டிப்பா கேட்டிருக்கோம்.

» எல்லோரும் சங்கத்தில் குளித்து விட்டு போறாங்க… நீங்க குளிச்சிங்களா?

நாங்க எப்பவும் குளிக்கிறதுதான். வெளியில இருந்து வரவங்களுக்குத்தான் இது புதுசா இருக்கு. அதனால குளிக்கிறாங்க…. என்றார்கள்.

சாந்தி.

அருகே இருந்த சாந்தி, கழிப்பறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். மிக மோசமாக இருந்தது. ஆண் தொழிலாளர்கள் சொன்ன அதே பிரச்சனைதான்… “இவ்ளோ மோசமா இருக்கு.. இத எப்படி நாங்க கிளீன் பண்ண முடியும்…. சீக்கிரமாக செப்டிக் டேங்க் நிரம்பிடுறதால வண்டியும் வந்து வாரிச் செல்வதில்லை..” என்று சொன்ன சாந்தி அம்மாவின் முகத்தில் ஆத்திரமும் கோபமும்தான் இருந்தது. அவரால் அந்த கழிவறையைப் பார்க்கக்கூட மனமில்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டே கதவை அறைந்து சாத்திவிட்டு அமைதியானார்.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
பாகம் – 4:
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
பாகம் – 5 : நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !

லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !

லலிதா இனிப்புக்கடை ஒரு மக்கள் பலகாரக் கடை என்றால் மிகையல்ல. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது இக்கடை. இன்றும் அந்த சந்தைப் பகுதியை கடக்கும் எவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கடையிது. எந்த இனிப்பு எடுத்தாலும் பத்து ரூபாய். வேலை முடித்து வீடு திரும்புவோருக்கு மாலைநேர சிற்றுண்டி இக்கடைதான். இருபது ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை நான்கைந்து வகையான இனிப்பு- கார வகைகளை இங்கு வாங்கலாம்.

குலோப் ஜாம், ஜாங்கிரி, மைசூர் பாகு, லட்டு, அல்வா, பூந்தி, பால்கேக், ஸ்பெஷல் லட்டு இன்னும் பெயர் தெரியாத இனிப்புகள்; காரவகையில் பக்கோடா, மிக்சர், காரப்பூந்தி, காராசேவ், என்று மற்ற கடைகளில் கிடைக்கும் பண்டங்கள்தான் என்றாலும் இங்கே தனித்துவமான ருசி இருப்பதை உணர முடியும். இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் நான் இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை என்று முப்பதாண்டுகளைக் கடந்தும் வருவது இக்கடையின் சிறப்பு.

இப்பகுதியை அடுத்து உள்ள கே.கே நகரை சுற்றி உயர் நடுத்தர வர்க்கம் வசிக்கும் இடம். அங்கு கிராண்ட் சுவீட், கிருஷ்ணா சுவீட், அடையார் ஆனந்த பவன் என்று மேட்டுக்குடியினருக்கு உரித்தான கடைகள் குவிந்திருக்கிறது. அங்கே அவ்வப்போது கூட்டம் இருக்குமென்றால் இங்கே எல்லா நேரமும் கூட்டம் மொய்க்கும். அதன் வியாபார ரகசியத்தை அறிய அக்கடைக்கு சென்றோம்.

சாலையில் செல்பவர்களின் மூக்கை துளைக்கும் வெங்காய பக்கோடாவின் வாசனை.

கடை பத்துக்கு பத்து அளவை விட சிறியதாக இருந்தது. அடுப்பு முதற்கொண்டு அனைத்தும் வேலைகளும் அதிலேயே பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 70 வயது நெருங்கும் ஒரு முதியவர் கை நடுக்கத்துடன் சுவீட் பேக்கிங் பெட்டியை மடித்துக் கொண்டிருந்தார். அவர்தான் அக்கடையின் முதலாளி. அவரிடம், உங்கள் கடை மக்கள் விரும்பி வரும் ஒரு பிரபலாமான கடையாக இருப்பதன் ரகசியம் என்னவென்று வினவினோம். அதற்கு அவர் புன்சிரிப்பையே பதிலாக தந்தார்.

பக்கத்தில் நம்மை வாஞ்சையாக அழைத்து…. ஒரு மெல்லிய உடைந்த குரலில் பேசினார்…

“நான் ஒரு அனாதை… எனக்கு சொந்த ஊர் கேரளா. 1967 -ஆம் ஆண்டு சிறு பையனாக சென்னைக்கு வந்தேன். அப்போது இருந்தே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதுதான் ரகசியம். என்னை சிறு வயதில் வாழ வைத்தவர் பாரிஸ் கார்னரில் மளிகை கடை வைத்துள்ள ஒரு சேட். அங்கதான் பல வருஷம் அவருகிட்ட எடுபிடி வேலை செய்தேன். அவரே எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டி ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சார். அதன்பிறகு பல்வேறு வேலைகள் மாறி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.

லலிதா இனிப்பகத்தின் முதலாளி சந்திரன்.

நான் இங்கு வரும்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை சரி இல்லாமல் அமெரிக்காவில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். எந்த ஆண்டு என்று எனக்கு நினைவு இல்லை. அப்போது நானும் என் மனைவியும் வீட்டிலேயே இனிப்புக்களை செய்து தள்ளு வண்டியில் வைத்து விற்றோம். இன்று ஏறக்குறைய ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி புரியும் கடையாக வளர்ந்திருக்கிறது.

என் கடையில் சாப்பிட்ட தாத்தா அவர் பேரனுக்கு வாங்கிக் கொடுக்கிறார். இந்த தொழிலில் மூன்று தலைமுறை வாடிக்கையாளைர்களை பார்த்து விட்டேன்.  எல்லோருக்கும் இக்கடையின் ருசியின் மீதும் தரத்தின் மீதும் பெரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான், இந்த வயதிலும் எனக்கு உழைக்கும் வேகத்தை தருகிறது. ஏறக்குறைய நான் கடை துவங்கிய போது எல்லா பண்டங்களும் வெறும் பத்து பைசா தான்… இன்று அது பத்து ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிரசம்.

காலையில் ஏழு மணிக்கு நான் கடைக்கு வந்தால் இரவு பன்னிரெண்டு மணிக்குதான் வீடு திரும்புவேன். என்னால் முடிந்த வேலைகளை செய்து உதவியாக இருக்கிறேன். சில நேரங்களில் மாஸ்டர் வரவில்லை என்றால் நானே வெதுப்பகத்தில் இறங்கி விடுவேன்.  இனிப்பு வகையில் ஒரு டஜன் அயிட்டங்களும், கார வகையில் அதே அளவிற்கு பல பண்டங்களும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அயிட்டங்களை இங்கு தயாரித்து இருக்கிறேன். அந்தளவுக்கு காரம் இனிப்பு என்று 150 – 200 கிலோ தினமும் விற்றுத் தீருகிறது.

மேலும் சீர்வரிசை, கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள் என்று 20 கிலோ மீட்டர் சுற்று வட்டாராத்தில் எந்த விஷேசங்கள் நடந்தாலும் பெரும்பாலான ஆர்டர் என் கடைக்குத்தான் வரும். ஒரே பார்டிக்கு 5,000 லட்டு 6,000 லட்டுகூட செய்து கொடுத்திருக்கிறேன்.  இங்கு அதிகபட்சம் ஒரு கிலோ காரமோ, சுவிட்டோ 200 லிருந்து 250-க்கு மேல் விக்க மாட்டேன். விலைதான் இங்கு மலிவே தவிர அதில் போடும் பொருட்கள் எந்த விதத்திலும் தரம் குறைந்தது இல்லை.

கடையில் ஊழியர்களோடு ஊழியர்களாக பனிபுரியும் உரிமையாளர்.

ரீபைண்டு ஆயிலும், பாமாயிலும் உபயோகப்படுத்த மாட்டேன். மைதா மாவு சர்க்கரை இவற்றை தரமாக நானே தேர்ந்தெடுப்பேன். லாபம் என்பது நிரந்தரமாக சிறிய அளவுதான் வைத்துக்கொள்வேன். அதுதான் இந்த வியாபாரம் நீடிக்க உதவுகிறது.  இங்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பத்து ரூபாய்க்கு வாங்கினால் கூட தங்களுடைய சொந்த வீட்டில் சாப்பிடுவதைபோல பல அயிட்டங்களை எடுத்து ஆசையாக ருசி பார்ப்பார்கள். நான் அதற்கு எந்த தடையும் சொல்வதில்லை. குழந்தைகளை வீட்டில் நாம் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் தான் நான் வாடிக்கையாளர்களை நேசிக்கிறேன்.

வியாபாரம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் என்னுடைய வாழ்க்கை வசதி பெரிதாக எதுவும் மாறவில்லை. வரவுக்கும் செலவுக்குமே சரியாகி விட்டது. நான் முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய மைதா இன்று 2,300 ரூபாய். நூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய சர்க்கரை இன்று 3,500 ரூபாய். ஆயில் 600 – 700 க்கு வாங்கியது இன்று 1,500 ரூபாய் ஒரு டின். இவ்வாறு பல மடங்கு விலை ஏறி இருந்தாலும் நான் பெரிதாக விலையை ஏற்றவில்லை.

கண் முன்னே தயாராகி இருக்கும் மொறு மொறு மிக்சர்.

விலையை குறைப்பதற்கு, வாங்கும் பொருளிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சரக்கு மாஸ்டருக்கு தினமும் 1,000 ரூபாயும், கடையில் இருப்பவர்களுக்கு 600 ரூபாயும் தருகிறேன். இத்தொழிலில் மன நிம்மதியைத் தவிர  ஆடம்பரம், பணம் என்று எதையும் பார்க்கவில்லை. என் வீட்டில் இருப்பவர்கள் என்னை நல்லா பாத்துகுறாங்க. அதுக்கு மேல பெரிய சொத்து எதுவும் தேவையில்லை” என்றார்.

கடைக்கு உள்ளே அடுமனையில் கொதிக்கும் சட்டியில் இருந்து கட்ட காரஸை போட்டுக் கொண்டிருந்தார் வரதன் மாஸ்டர். “நான் விழுப்புரம் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். இங்கு 20 வருஷமா மாஸ்டரா இருக்கேன். என்னோட சேத்து இன்னும் இரண்டு மாஸ்டருங்க இருக்காங்க. தினமும் இங்க இரண்டு சிஃப்டு வேலை. காலை ஏழு மணிக்கு வந்தால் மதியம் 3 மணி வரை சிப்டு. மதியம் இரண்டரை மணிக்கு வந்தா இரவு பத்தரை மணி வரை சிப்டு. மூட்டிய அடுப்பை இரவு பத்து மணிக்குத்தான் அணைப்போம். இந்த வேலைக்கு தினமும் எண்ணெய் மட்டுமே ஏழு டின் காலியாகிடும். ஒரு டின் பதினைந்து லிட்டர்.

வரதன் மாஸ்டர்

லட்டிலிருந்து குலோப்ஜாம் வரை பக்கோடாவில் இருந்து ஓமப்பொடி வரை காலியாக காலியாக போட்டுக் கொண்டே இருப்போம். எண்ணெயை மறுநாள் உபயோகப்படுத்த மாட்டோம். முடியும் போது மீந்துகிற எண்ணெயை வெளியில் கொடுத்து விடுவோம். போடும் சரக்கு 90 சதவீதம் அன்றே தீர்ந்து விடும். இரண்டு நாளைக்கு மேல் இங்கு எந்தப் பொருளும் பார்க்க முடியாது. அதனால் தான் இங்கு கஸ்டமர்கள் வருகிறார்கள். சுற்று வட்டாரம் குன்றத்தூரில் இருந்து தாம்பரம் வரை புது புதுசா வந்து கொண்டிருப்பார்கள்.  ஒருமுறை வாங்குவோர், அவரை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இங்குதான் அனுப்பி வைப்பார்.

கண்கவர் இனிப்பு பூந்தி.

இங்கிருந்து மலேசியா, அந்தமான், சிலோனுக்கு  பலகாரங்கள் செல்கின்றன.  எங்கள் முதலாளி எங்களுடன் உழைத்து எல்லா வேலையும் சேர்ந்து செய்வார். எங்கள் கஸ்டங்களை கேட்டு தீர்த்து வைப்பார். வீட்டு விஷேசத்துக்கு இங்கிருந்துதான் இனிப்பு காரங்களை எடுத்து செல்வோம். அதற்கு எந்த தடையும் சொல்வதில்லை. எல்லோரும் மனம் ஒன்றி வேலை செய்வதால்தான் கடை வியாபாரமும் நிலைத்து உயர்கிறது” என்கிறார்.

ஓயாமல் வந்து கொண்டே இருக்கும் கஸ்டமர்களுக்கு சளைக்காமல் அயிட்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் ரகு. “மாலை 7 மணியிலிருந்து 10 மணி வரை கொடுத்து மாளாது. வந்து கொண்டே இருப்பார்கள். பல அயிட்டங்கள் 2 மணி நேரத்தில் காலியாகி விடும். 9 மணிக்கு மேல வந்தால் விரும்பிய அயிட்டங்கள் கிடைக்காது. வேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் 10, 20 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு 30 ரூபாய்க்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கு வாங்கி செல்வார்கள். ஐம்பது ரூபாய் வைத்தால் குடும்பத்தினரின் பலகார ஆசை தீர்ந்து போகும்.

வரவங்களுக்கு பலகாரம் கொடுத்து ஓயவே ஓயாது… வேலையை விவரிக்கும் ரகு.

பள்ளி செல்லும் சிறுவர்கள்கூட பத்து ரூபாயை எடுத்து வந்து விரும்பியதை வாங்கி சாப்பிடுவார்கள். ஒருநாளைக்கு சராசரியாக 30,000-க்கு குறையாமல் கல்லா கட்டுவோம். ஆனால் அப்பணத்தை தண்டல்காரிடமே முதலாளி கொடுத்து விட்டு சென்று விடுவார். இதுநாள் வரையில் ஒரு இரண்டு லட்ச ரூபாய் வைத்து சொந்தப் பணத்தில் சரக்கு வாங்குவதே இல்லை. அதற்கு காரணமும் எங்களுக்கு புரியவில்லை.

கேட்டால், “எங்கடா சேர்த்து வைக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போகுது. விலைவாசி முன்ன மாதிரி இல்ல. கொஞ்ச லாபம் பாக்குறதே முடியல. ஏதோ கஸ்டமருங்க குறையாம வந்துனு போயினு இருக்காங்களே  அது போதும். லாபத்தை பார்த்தா மத்தவங்க மாதிரி கடையை மூடிட்டு போக வேண்டியது தான்” என்று சொல்வர். காலையில் தண்டல் வாங்கி சரக்கை விற்பது, மாலை தண்டல்காரரிடம் திருப்பி கொடுப்பது என்று இப்படியே போகிறது” என்று சொல்லி அலுத்துக் கொள்கிறார் ரகு.

கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாகலட்சுமி

நாகலட்சுமி

நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்துல இருந்து இங்கதான் வாங்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கதால தினமும் எதாவது வந்து வாங்கிட்டு போவேன். உடம்புக்கு எந்த கெடுதியும் இது வரைக்கும் வந்ததில்ல. எல்லா பொருளும் நல்லா இருக்கும். நம்பிக்கையா வந்து வங்கிட்டு போவேன்.

மணிகண்டன்

சின்ன வயசுல இருந்து சாப்பிடுறேன். பக்கோடா தான் ரொம்ப புடிக்கும். பத்து ரூபா அதிகமா இருந்தா வேற எதனா வாங்கி சாப்பிடுவேன். இல்லனா வீட்டுக்கு வாங்கிட்டு போவேன்.

ராஜா

எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. இங்க வந்து ஆறு மாசம்தான் ஆகுது. இந்த கடையில நாலு மாசமா பலகாரம் வாங்கிட்டு இருக்கேன். காரணம், இங்க தரமா இருக்கு. பல இடங்கள்ல பளப்பளனு இருக்கும். ஆனால் நல்லா இருக்காது. சிக்கு நாத்தம் அடிக்கும். இங்க அப்படி இல்ல. பாக்கத்தான் கடை அழுக்கா இருக்கு. ஆனா எந்த பிரச்சனையும் வரதில்ல. நம்ம கண்ணு முண்ணாடியே செய்யிறாங்க. எல்லாம் உடனே உடனே காலி ஆகிடுது. அதோட இல்லாம நாம வாங்குற எந்த பொருளா இருந்தாலும் கூடதான் குடுப்பாங்களேயொழிய குறைவா இருக்காது. நம்ம மனசுக்கு நிறைவா கொடுப்பாங்க. அதால இங்க வாங்குறதுல ஒரு திருப்தி இருக்கு.

பார்வதி

நான் சக்தி நகர்ல இருக்கேன். இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து வாங்கிட்டு போவேன். பசங்க விரும்பி சாப்பிடுறாங்க. அவங்களுக்காகவே வந்து வாங்கிட்டு போவேன்.

நாகம்மாள்

எனக்கு பசங்க இல்ல. ஒரு முப்பது வருஷமா இங்க முறுக்கு, பக்கோடா, பூந்தி வாங்கி சாப்பிடுறோம். என் வீட்டுக்காருக்கு புடிக்கும். தினமும் வந்து வாங்கிட்டு போறேன். குறைவான விலை. மனசுக்கு திருப்தியா சாப்பிடுறோம்.

கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

0

மோடி ஆட்சியில், பசு குண்டர்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் கும்பல் வன்முறைகளில் ஈடுபடுவதும், மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொல்வதும் அரசின் ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்பட்டது. பசு குண்டர்களின் இந்த செயல்பாடுகளால் மத – சமூக நிலைகளைக் கடந்து பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் மாட்டிறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியில்  முக்கிய இடத்தில் இருந்த இந்தியாவின் நிலை, 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மோசமான நிலைக்கு வந்து விட்டது.  இது இந்தியாவின் வெளிநாட்டு நாணய இருப்பைக் கடுமையாக பாதித்திருக்கிறது என்பதும் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2010-11 லிருந்து 2017-18 ஆண்டுகள் வரையிலான புள்ளிவிவரங்கள் தெரிவித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.

பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.

மோடி ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவான 2010-ம் ஆண்டிலிருந்து மோடி ஆட்சிக்கு வந்த பிறகான ஐந்தாண்டு காலம் வரை பசு குண்டர்கள் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.  வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துத்துக்கள் பசு புனிதமானது என கருதுகின்றனர். இந்துத்துவ கும்பல் பசுவை முன் வைத்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் இத்தகைய கருத்துக்களை விதைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள 99.38% சதவீத பசுக்கள் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்கிறது இந்தியா ஸ்பெண்ட் புள்ளிவிவரம். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பசு வதை சட்டம் அமலில் இருக்கிறது. பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு பசு பாதுகாப்புக்காக தேசிய ஆணையத்தை அறிவித்தது.

“அரசுகளின் இத்தகைய கொள்கை முடிவுகளும் பசுக் குண்டர்களின் தாக்குதல்களும் இந்தியாவின் கால்நடை வர்த்தகத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளன.  அதுபோல இவர்களை சார்ந்திருக்கிற இறைச்சி ஏற்றுமதி தொழிலும் தோல் தொழிலும் பாதிப்புகளை சந்தித்திருக்கின்றன” என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

உலகிலேயே அதிக அளவு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் அளவுக்கான எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த ஏற்றுமதி குறைய ஆரம்பித்துவிட்டது.

அதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும் மாநிலமான உத்தர பிரதேசத்தில்  இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியின் கொள்கை முடிவுகளால், இந்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  2013-14 -ம் ஆண்டில் எருமை இறைச்சி ஏற்றுமதி 35.93 சதவீதமாக இருந்தது. 2014-15 ஆண்டில் 9.88 சதவீதமாக வீழ்ச்சியைக் கண்டது. 2016-17-ம் ஆண்டில் 3.93 சதவீதமாகவும் 2017-18-ம் ஆண்டில் 3.06 சதவீதமாகவும் விழ்ச்சியடைந்தது.

உலகின் தோல் ஏற்றுமதியில் இந்தியா 13% பங்காற்றுகிறது. ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் தரும் தோல் தொழிலில் 48% ஏற்றுமதியில் மட்டும் கிடைக்கிறது. தோல் தொழிலை நம்பி 3 மில்லியன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில் 30% பெண்கள் என்கிறது இந்த ஆணையத்தின் அறிக்கை.

2017-ம் ஆண்டின் அரசின் அறிக்கை இந்தியாவின் ஆடை மற்றும் தோல் தொழில் துறை உலகளாவிய போட்டியில் பங்கேற்கக்கூடியதாகவும் பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடியதாகவும் உள்ளதாக கூறியது. அதேவேளையில் அந்த அறிக்கை, அதிக அளவிலான கால்நடைகள் உள்ள இந்தியாவில் கால்நடை தோல் ஏற்றுமதியின் அளவு மிகவும் குறைவு என்றும் கால்நடைகள் வெட்டுவதில் உள்ள பிரச்சினை காரணமாகவே இந்த நிலை என்றும் கூறியது.

படிக்க:
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி

பசு குண்டர் படையின் தொல்லைகள் காரணமாக நூற்றுக்கணக்கான வெட்டு கூடங்கள் மூடப்பட்டதையும் அந்த அறிக்கை சொன்னது. 2013-14 -ம் ஆண்டுகளில் 18% வளர்ந்த தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 2014-15 -ம் ஆண்டுகளில் 9% குறைந்து, 2015-16 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்து எதிர்மறை அளவுக்கு சென்றுவிட்டது. -9.86 % இருந்த அளவு 2017-18 ஆண்டுகளில் 1.4% அதிகரித்திருக்கிறது. அரசின் புள்ளிவிவரம் இவ்வாறு தெரிவிக்கிறது.

“இந்துத்துவ தலைவர்கள் பசுக்கள் மீதான அதீதத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் சார்ந்த இந்துக்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேதத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பியல் நிபுணரும் எழுத்தாளருமான எம்.எல். பரிஹார்.

நாட்டின் முதல் பசு அமைச்சர்.

கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் பாஜக அரசுகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன.

பாரம்பரியமாக இறந்த கால்நடைகளின் உடல்களை அகற்றுகிறவர்களாகவும் அவற்றின் தோலை உரிப்பவர்களாக தலித்துகள் உள்ளனர். முசுலீம்கள் பாரம்பரியமாக வெட்டுக்கூடங்கள் அல்லது கசாப்புக் கடைகளை வைத்திருப்பவர்களாகவும் இறைச்சி விற்பவர்களாகவும் உள்ளனர். எனவே, பசு பாதுகாப்பு குண்டர்கள் இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக அறிக்கை பேசுகிறது.

இந்த காவி குண்டர்களின் வன்முறைகளில் முசுலீம்கள் 56 சதவீதமாகவும் தலித்துகள் 10 சதவீதமாகவும் 9 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஃபேக்ட் செக்கர் இணையதளம். குண்டர்களின் தாக்குதல் உயிரிழந்த 78% பேர் முசுலீம்கள் என்பது இந்துத்துவ காவிகளின் உண்மையான நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

அரசுகளின் கண்டுகொள்ளாத தன்மையால் இறைச்சியை நம்பியுள்ள இந்துக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. அதாவது விவசாயிகள், கால்நடை பண்ணை வைத்திருப்போர், கால்நடை வர்த்தகர்கள்,  இறைச்சி வர்த்தகர்கள், தோல் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தியாவின் 55%  மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு 17% வழங்குகிறது. 190 மில்லியன் பசுக்களும் 108 மில்லியன் எருமைகளும் உள்ள இந்தியா, உலகிலேயே அதிக அளவிலான பால் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. விவசாயிகள் இந்த கால்நடைகளை பராமரித்து வர்த்தகம் செய்து தங்களுடைய வருமானத்தையும் உணவு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், பசு பாதுகாப்பு குண்டர்கள் மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குரியாகியுள்ளது. 2010-11 -ம் ஆண்டுகளில் ராஜஸ்தானில் 10 கால்நடை சந்தையில் 56 ஆயிரம் பசுக்களும் காளைகளும் கலந்துகொண்டன. இதில் 31 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாகின. ஆனால், 2016-17 ஆண்டுகளில் 11 ஆயிரம் கால்நடைகள் மட்டுமே சந்தைக்கு வந்தன. அவற்றில் 3 ஆயிரம் மட்டுமே விற்பனையாகின.

படிக்க:
மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

வேளாண்மை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் வயதாகும் கால்நடைகள் பிரச்சினையும் விவசாயிகளை தங்களுடைய பசுக்களை கைவிடும் நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றை பராமரிக்க விவசாயிகளால் முடிவதில்லை. இது தெருவில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தெருக்களில் அலையும் கைவிடப்பட்ட பசுக்களால் விவசாயிகளின் விளைச்சல்கள் சேதமாகிறது என்பதும் இந்த இழப்புகளின் வரிசையில் சேரும்.  இவற்றை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று மாநில அரசுகள் மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான அடிப்படை பணிகளுக்கு செலவிட வேண்டிய தொகையை மாட்டு கொட்டகைகள் கட்டவும் அவற்றை பராமரிக்கவும் செலவிடுகின்றன.

எனவே, கால்நடைகளை சார்ந்திருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் மத, சாதி பாகுபாடுகளை உருவாக்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவும் அரசுகளை மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை ஆண்ட பாஜகவை அம்மாநில மக்கள் தூக்கியெறிந்தனர்.  உண்மையில், இந்துத்துவ மோசடி பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த காரணத்தாலேயே, வலுவாக இருப்பதாக சொல்லிக்கொண்ட இடத்திலேயே காவிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.  மேலே சொல்லப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், கிராமப்புற பொருளாதாரத்தை காவி வீணர்கள் மிக மோசமான நிலையில் சீரழித்திருப்பதை உணர முடிகிறது.


கலைமதி
நன்றி: ஸ்கரால்

நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?

மிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வேரூன்றச் செய்வதற்கு அதன் நிறுவனத் தலைவர் ஹெட்கேவர், மராத்திய சித்பவனப் பார்ப்பன கும்பல் ஒன்றை அனுப்பி வைத்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொருத்தவரை,

“1980-இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று, சங்கம் மிக வேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அதோடு சங்கத்தின் சகோதர அமைப்புகள் அனைத்தினது வேலையும் நல்ல முன்னேற்றகரமானதாக உள்ளது. எங்கும் இந்து வேட்கை பற்றிக் கொண்டு வருகிறது. உண்மையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.” (தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து எழுச்சியின் கதை, ஆர்.எஸ்.எஸ். வெளியீடு, பக். 4-5).

 “உடைப்பதற்குக் கடினமான ஒரு கொட்டையாகத் தமிழ்நாடு உள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளராக இருந்த தேவராஸ் சித்தரித்தார்; அந்தக் கொட்டை உடைபட உடன்பாடுவதாகத் தெரிந்தது. 1980-81-ல் ஏராளமான புதிய குழுக்கள் பல புதிய இடங்களில் செயல்படத் தொடங்கின, அப்போதுதான் சங்கத்தின் வேலையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிக் கொள்கிறது. (நூலிலிருந்து பக்.3)

ஒரு 40 ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தத் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாமல் தடுமாறி இருக்கிறது. அதன் பின்னர் சில திருப்பு முனைகள் ஏற்பட்டு வேகமான வளர்ச்சி கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுடன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டதுதான் என்று பார்ப்பது மேலோட்டமான பார்வை. அதே போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்கள் இந்த மண்ணில் தவமிருந்ததன் பலன் என்று கூறுவது ஒரு புனிதப் போர்வை போர்த்தும் செயல்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும். பெரியார் தலைமையிலான பகுத்தறிவு – சுயமரியாதை இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். இந்த மண்ணில் வேரூன்றித் தழைப்பதற்கு பெருந்தடையாக இருந்தது என்பதை அறிவார்கள். இதை இந்து, சடங்கு – சாத்திரங்கள், இந்தி, பார்ப்பனியம், சமசுக்கிருதம், இதிகாசம் – புராணங்கள் ஆகிய வடக்கிலிருந்து வந்தவை அனைத்தையும் புறக்கணிக்கும்படி நடத்தப்பட்ட வெறுப்பு இயக்கம் என்று அவர்கள் சித்தரிக்கிறார்கள்.( நூலிலிருந்து பக்.6)

”பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேச பக்தி” என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார். ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச – பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு இது முழுமையாகப் பொருந்தும். பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நாட்டிற்கு – தேசத்திற்கு எதிரான துரோகம் என்று சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்பற்று – தேசப்பற்று என்பதைக் கேடாகப் பயன்படுத்துவதைத் தமது மூல உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தேசதுரோக முத்திரை குத்தி தனது எதிராளிகளை ஒழிப்பது எளிய வழி என்று கண்டுள்ளனர். இதோடு கூடவே தனக்கு எதிரானவற்றை அந்நிய ஊடுருவல், அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய சதி என்று முத்திரை குத்தி தேசியவெறியூட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். (நூலிலிருந்து பக்.7-8)

படிக்க:
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை ஒரு தேசியவாதப் பண்பாட்டு, சமூக இயக்கம் என்று கூறிக்கொள்கிறது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி தான் ஒரு சுயேட்சையான அரசியல் கட்சி என்று கூறிக்கொள்கிறது. இந்த இரண்டு கூற்றுமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு அரசியல் பிரிவுதான் பாரதீய ஜனதா கட்சி. இரண்டுக்குமே இந்து மதவெறி பாசிசக் கொள்கையான “இந்துத்துவம்” தான் வழிகாட்டும் சித்தாந்தம், இந்து ராஷ்டிரம்தான் இலட்சியம்.

பா.ஜ.க. வைப் போல வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆர்.எஸ்.எஸ். போன்றதொரு பாசிச அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டு, பின்னால் இருந்து இயக்கப்படும் உயர்மட்டத் தலைவர்களில் இருந்து உள்ளூர் பிரமுகர்களையும் அணிகளையும் கொண்டிருக்கவில்லை. சங்கப்பரிவாரங்கள் அதாவது சங்கக் குடும்பம் என்று கூறிக் கொள்ளும் பல்வேறு பிரிவு இந்துமதவெறி அமைப்புகளும் இப்படிப்பட்டவைதான்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளின் பின்புலமோ, வேறு பிற ஆளும் வர்க்க அரசியல் அமைப்புகளைப் போல ”லேசு”’ப்பட்டவை அல்ல. முன்னாள் – இன்னாள் அரசு உயர் அதிகாரிகள், பார்ப்பன – பனியா தரகு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு பெற்றவர்கள் பிற ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இவர்களை விட இந்து மதவெறி பார்ப்பன பாசிச குருமார்கள், ஆச்சாரியர்கள், சந்நியாசிகள், சாமியார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் என்று ஒரு பெரும் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மட்டுமே திரட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலின் அரசியல் – பாசிசப் பேராசைகளுக்கு மூடுதிரையாகவும் கவசமாகவும் அவர்கள் விளங்குகிறார்கள். (நூலிலிருந்து பக்.39)

இந்திய நாட்டின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாகிய பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் முன்பு ஒருமுறை சொன்னார்: ”வெள்ளைக்காரன் ஒரு நல்ல காரியம் செய்தான். நெடுஞ்சாலைகளில் மைல் கல்லை நட்ட வெள்ளைக்காரன் அதில் வெள்ளையடித்து ஊர், பேர், தூரத்தை எழுதி வைத்தான். இல்லையானால் நம்ம ஜனங்க அதற்குப் போய்ப் பொட்டு வைத்து, மாலை போட்டு மைல்சாமி ஆக்கி இருப்பான்.” நமது பாமர மக்களின் பக்தி எத்தகையது என்பது குறித்து கிண்டலாகப் பேசிய ஈ.வெ.ரா.தான் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரம் செய்து அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க அரும் பாடுபட்டார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலோ அந்தப் பாமரப் பக்தர்களிடையே நிலவும் பக்தி உணர்வை மேலும் ஆழப்படுத்தி, பரவச்செய்து தமது பாசிச அரசியல் பேராசைகளை  ஈடேற்றிக் கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆகிய வகுப்புவாத மதவெறி சக்திகளை முறியடிப்பதே தமது நோக்கமென்று கூறிக் கொள்ளும் மதச் சார்பற்ற அல்லது மத நல்லிணக்க அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வுகளை பாதித்து விடாமல் – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற அணுகுமுறையின் மூலம் அதைச் சாதித்துவிட எத்தணிக்கிறார்கள்.

ஆனால், தேவையானது ஊசி – வாழைப்பழ அணுகுமுறை அல்ல; அறுவைச் சிகிச்சை, அதாவது பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வை வேரோடு பிடுங்கி எறிந்து விடவேண்டும். பகுத்தறிவு சுயமரியாதை, நாத்திகம் என்கிற விதையை பாமர மக்களிடையேயும் விதைக்க வேண்டும். (நூலிலிருந்து பக்.40)

நூல்: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?

(புதிய ஜனநாயகம் 2003 ஜூலை முதல் நவம்பர் வரையிலான இதழ்களில் (தொகுதி: 18, இதழ் எண்: 9 முதல் தொகுதி: 19, இதழ் எண்: 1 வரை) வெளியான தொடர் கட்டுரையின் மறுமதிப்பு.)

வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்,
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
தொலைபேசி: 99623 90277

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: commonfolks | marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு ! மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா ?

பிற்பட்ட வகுப்பினருக்குக்கான கல்லூரி அரசு மாணவர் விடுதி. சென்னை கிண்டி பேருந்து நிலையத்தை ஒட்டி பாழடைந்த வளாகம். பராமரிப்பின்றி பேய் பங்களா போன்று காட்சியளித்தது. விடுதிக்குள் மிகவும் தயங்கித் தயங்கி சென்றோம். முட்செடிகளுக்கு மத்தியில் ஒரு ஒத்தையடிப் பாதைதான் அதற்கான வழி. காலை நேரம்.

ஒரு மாணவர் வராந்தாவில் குத்துக்காலிட்டு பல் துலக்கி கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப்பபடுத்திக் கொண்டோம். கேள்விகளைக் கேட்ட மாத்திரத்தில் “இருங்க இருங்க நீங்க கேட்ட கேள்வி எல்லாம் பதில் சொல்றவங்க அங்க, இருக்காங்க” என்று விடுதி அறைக்குள் அழைத்தார்.

அன்று விடுமுறை நாள் என்பதால் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் பாதி சோம்பலிலும் பாதி அரட்டையிலும் காலை நேர வேலையில் முழ்கியிருந்தனர். அவர்களிடம் பேசினோம். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாணவர்களாகிய நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா? உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இங்கு, விடுதியில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? உங்கள் படிப்பு பிரச்சினைகள் என்ன? அவையெல்லாம் வரும் தேர்தலுக்கு பிறகாவது கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா என்று வினவினோம்.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

அவர்கள் நம்மை வித்தியாசமாகப் பார்த்தனர். சார் எங்கள, காலையிலலே வெறுப்பேற்றாதீர்கள் நாங்க கொலவெறியில் இருக்கிறோம். அப்படி பெரிய கனவு எல்லாம் எங்களுக்கு இல்லை! படுத்தா கொசுக்கடியில் தூக்கமே வரல! இதுல எங்களுக்கு எப்படி இப்படிப்பட்ட கனவெல்லாம் வரும். நாங்கள் தங்கி படிக்க இந்த விடுதியாவது எங்களுக்கு கிடைத்ததே அதுவே பெரிய பாக்கியம்.

அதோ, அங்கே வாங்கி மூடி வைத்து இருக்கிறோம் பாருங்க அதுதான் எங்க உணவு. எங்களுக்கு பேய் பசி எடுக்கும் போது தான் அதை சாப்பிட முடியும். சாதாரணமாக பசி எடுக்கும்போது அந்த சோறு எங்க தொண்டைக்குள் போகாது. ஏன்னா? அது அவ்வளவு ’ருசி’யா இருக்கும்! இத விட்டா எங்களுக்கு இங்க வேறு வழி கிடையாது. காலை ஏழு மணி, மாலை ஏழு மணிக்கு என்று இரண்டு வேளைக்கு மட்டும்தான், இந்த சோத்தை எங்களுக்கு போடுவாங்க அப்போ அதை வாங்கி வைத்தால் தான் அன்றைக்கு எங்களுக்கு சாப்பாடு. இல்லையென்றால் முழுக்க பட்டினிதான். மற்றபடி, கையில் காசு இருந்தா வெளியில் வாய்க்கு ருசியா சாப்பிடுவோம். காலையில் இருபது ரூபாய் இருந்தால் இட்லி சாம்பார். மதியம் 30 ரூபாய் இருந்தால் பொட்டலம் சோறு ருசியாக கிடைக்கும். தினமும் அதுக்கு நாங்க எங்க போறது ?

இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காலேஜ்ல படிக்கிறோம். ஒருத்தன் மயிலாப்பூர் விவேகானந்தா காலேஜ். இன்னொருத்தன் வடசென்னை அம்பேத்கார் காலேஜ். ஒருத்தன், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ். அவன், தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக். இதுக்கு போற பஸ் பாஸ் விலையும் கவர்மெண்ட் ஏத்திடிச்சி. போன வருஷம் (2018) மாசம் 130 ரூபாய்க்கு சென்னை முதல் திருவள்ளூர் வரைக்கும் பஸ் பாஸ் கொடுத்தாங்க. உதவியாக இருந்தது. இப்போ அதையும் புடுங்கிட்டாங்க. இப்போ அதே பஸ் பாஸ் 300 ரூபாய். விலை ஏத்திட்டாங்க. நாங்க எங்க ஊருக்கு போறது. தனியா டிக்கெட் வாங்கவேண்டி இருக்கு. இப்ப, சனி ஞாயிறு கூட ஊருக்கு போறது கிடையாது. யோசனை பண்ண வேண்டி இருக்கு. இந்த லட்சணத்துல  நாங்க பிஜேபிக்கு ஓட்டுப் போடனுமா?

படிக்க:
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து
தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !

தமிழிசை அக்காவ  நாங்க சின்ன பசங்க ஏடாகூடமா சொல்லிட்டம்மா அது தப்பாய்டும். நீங்களே இவனுங்க கிட்ட கேளுங்க என்று மற்ற மாணவர்களைப் பார்த்து, சொல்லுங்கடா என்றார்கள். மாணவர்கள் கோரசாக ‘’ஐயோ நாங்க பி.ஜே.பி.க்கு ஓட்டு போட மாட்டோம், போட மாட்டோம்’’ என்று ஒரு  பாட்டாகப் பாடினார்கள். சார், எங்க காலேஜ் பசங்க மோடிக்கு மீம்ஸ் போட்டு தாக்குனானுங்களே பாக்கலையா? மோடி ஊர் சுத்தும் போது கலர்கலரா ஜிப்பா கவுன் போடுற மாதிரி, அரசாங்கத்துலேயும் அதே மாதிரி கலர்கலரா ரூபா நோட்டும் அச்சடிச்சாங்களே அத நாங்க மீம்ஸ்-சா போட்டு ஓட்டுனோமே அதை நீங்க பாக்கலையா? என்று கலாய்த்தனர்.

பக்கத்தில் இருந்த இன்னொரு மாணவர், “பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க, மோடி  ஆளுங்க. இதெல்லாம் தமிழ்நாட்டுக்காரணுங்க மறந்துவிடுவானு நினைக்கிறாங்களா?” என்றார்.

ஏதோ அவசர வேலையை மறந்தவர்கள் மாதிரி, “நாங்க வெளியே போகணும் ஆள விடுங்க” என்று பேச்சை நிறுத்தினர்.

ஏனென்று கேட்ட போது”நாங்க கேட்டரிங் வேலைக்கு போகணும் சனி ஞாயிறு இந்த லீவுலதான் எங்க செலவுக்கான வருமானத்தை பார்க்க முடியும். இப்போ, இந்த 10 பேரும் கல்யாண மண்டபத்துல சப்ளையராக போய் வேலை செய்யப் போறோம்  அதுல கெடைக்கிற பணத்துல தான் காலேஜ் பீஸ் கட்டுவோம் எங்க டெய்லி செலவுக்கு வச்சுக்கோம். வீட்டுக்கு அதுல கொஞ்சம் மிச்சம் பிடித்து அனுப்புவோம். அந்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையானதை ஏதாவது வாங்கி அதை எங்ககிட்ட சந்தோசமா சொல்லுவாங்க. வாரக்கடைசியில வேல இல்லன்னா காலேஜ் நாள்லயே மாலை 6 to 10  வரைக்கும் வேலைக்குப் போவோம், அதுக்கு 200 ரூபா கெடைக்கும்.

நாங்க தறிக்காரர்கள் குடும்பம் சார். ஏழைங்க! இப்ப தறி தொழிலும் நொடிஞ்சிபோச்சு. குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த லட்சணத்துல நாங்கள் எலக்சனுக்கு பிஜேபிக்குனு எப்படி சார் ஓட்டு போடுவோம்? இதெல்லாம் பிஜேபி கட்சி நடத்துற முதலாளிங்களுக்கு தெரியாது,  நாங்க வர்றோம்… சார்”,என்று சிரித்துக் கொண்டே விடைபெற்றனர்.

  • நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து

ரபரக்கும் கிண்டி இரயில் நிலையம்… தனது இறுதி மூச்சை நிறுத்தக் காத்திருக்கும் தொழிற்பேட்டை இது. தமிழ்நாட்டு மக்களிடம் “Goback Modi’ என்று தொடர் உதை வாங்கிய மோடி தற்போது கட்டிப்பிடி வைத்தியம் செய்யக் கிளம்பியிருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமலேயே திருப்பூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். போதுமான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்காமல் மதுரையில் எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டினார். விளம்பரத்திற்காக மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்தார். இந்த கூத்துக்கள் அனைத்தையும் மீம்ஸ்-களாக்கி மோடியைப் பந்தாடுகிறார்கள் தமிழக இளைஞர்கள். நாமும் மோடி குறித்து தமிழக மக்களின் மனநிலையை அறிய சென்னையில் நகர்வலம் சென்றோம்.

ஆனந்தன், ஆட்டோ டிரைவர்.

அய்யய்யோ!  சார் மோடிக்கு ஓட்டா… கடந்த நாலரை வருசத்துல அவர் ஆட்சியில ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம். இனிமே நாங்க செத்தாலும் பிஜேபி-க்கு ஓட்டு போட மாட்டோம். மத்தவங்க கதய விடுங்க..என் கதய கொஞ்சம் கேளுங்க…

அஞ்சு ஆண்டுக்கு முன்ன மன்மோகன்சிங் ஆட்சியில ஆட்டோ வெலை ஆன்ரோடு ரூ. 1,05,000/- தான். இப்ப எவ்ளோ தெரியுமா, ரூ.1,90,000/- அது மட்டுமில்ல, ஒவ்வொரு ரேட்டும் தலைகீழா மாறிப்போச்சு. இன்சூரன்சு ஆண்டுக்கு ரூ.3000/- இருந்தது, இப்ப ரூ. 8500 ஆயிடுச்சு. ஒரு வருசத்துக்கு எஃப்.சி கட்டணம் ரூ.500-ஆ இருந்தது, இப்ப ரூ.1600/ ஆயிடுச்சு. ஆட்டோ பர்மிட் ரெனிவல் பண்றது ( 5 வருசத்துக்கு ஒரு முறை) ரூ.2000/-மா இருந்தது, இப்ப ரூ.7500. இது மட்டுமில்ல, ஆட்டோ ஸ்பேர்  பார்ட்ஸ்-ங்க இப்ப வாங்கவே முடியல, வண்டி திடீர்னு ரிப்பேர் ஆனா, உடனே எங்களால அத சரி பண்ண முடியல. அந்த காச ரெடி பண்றதுக்கு ரெண்டு நாளாகும்.

கிளட்சு வயரு , கியர் வயருன்னு எது எடுத்தாலும் விலைவாசி பல மடங்கு ஏறி போச்சு, 5 ரூபா இருந்ததெல்லாம் இப்ப 25ரூபா. 60 ரூபா இருந்த அவுட்டர் வயரு 190 ரூபா. என் வாய கெளராதீங்க.. நேத்து நைட்டு 9 மணிலேருந்து கண்ண முழிச்சி இன்னும் என் பாக்கெட்ல 500 ரூபா சேரல…. இப்ப காலை மணி பத்தாகுது…இன்னும் ஒரு சவாரி வரல…ஆனா, எனக்கு ஒரு நாள் செலவு ரூ.200. வண்டிக்கு பெட்ரோல் ஊத்தனும், மேற்கொண்டு வீட்டுக்கு எடுக்கனும் , வண்டிக்கு வாடகை கொடுக்கனும் , இத நெனச்சாலே தெனமும் தூங்க முடியல.

தண்டல் வாங்குன பணத்த திருப்பி கொடுக்க முடியல. அதுக்கே மாசம் வட்டி போகுது. இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….

சுந்தர், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்.

மோடி-பிஜேபி இவுங்களுக்கு சவுத் இண்டியான்னா குறிப்பா தமிழ்நாடுன்னா வேப்பங்காயா கசக்குது. தமிழ்நாட்டு வளத்த எப்படி அழிக்கிறது, அதன் வளர்ச்சிய எப்படி தடுக்குறதுன்னு தீயா வேல செய்றாங்க…ஸ்டெர்லைட், மீத்தேன்,  நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை, டிஃபென்ஸ் காரிடார் இப்படி எத எடுத்தாலும் அழிவுத்திட்டம் தான். அத வளர்ச்சித் திட்டம்னு ஏமாத்துறாங்க… இதுல எதுன்னா வளர்ச்சின்னா அது அவுங்களுக்குத் தான், ஆனா நமக்கில்ல…

திலீப், பாலக்காடு, கேரளா.

நான் 15 வருசத்துக்கு முன்னாலயே தமிழ்நாட்டுல குடியேறிட்டேன். சின்ன வயதில் 90-ம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-இல் ஷாகா உறுப்பினராக இருந்து தீவிரமாக வேலை செய்தேன். அதில் போலீசுடன் பிரச்சினை ஏற்பட்டு இங்கே வந்துவிட்டேன். இருந்தும் ஆர்.எஸ்.எஸ். செய்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய நிகழ்ச்சிகளின் போது குறிப்பிட்ட நபரிடம் கொடியை ஏன் கொடுத்தீர்கள். அவன் வேற என்பார்கள். ஏனென்று கேட்டால் அதெல்லாம் விளக்கமாக பொதுவில் சொல்ல முடியாது என்பார்கள். கடைசியில் தான் தெரிந்தது, தலித் – தாழ்த்தப்பட்டவர்களை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், அடிமைகள் மாதிரி நடத்துவார்கள், அதை நாசூக்காக செய்வார்கள். இது அங்கே எனக்குப் பிடிக்கவில்லை. இப்படி அங்கே ஆயிரம் குறை இருந்தாலும் நான் ஒரு இந்து இந்துத்துவவாதி என்பதில் எனக்கு பெருமையுண்டு. அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். நீங்கள் எல்லாரும் சொல்வது போன்று மோதி-ஜி எல்லாருக்கும் ரூ.15 இலட்சம் கொடுப்பதாகச் சொல்லவேயில்லை. அவர் சொன்னது வெளி நாட்டில் இருக்கும் கருப்புப் பனத்தைப் பிடித்தால் அவ்வளவு பணம் தேறும் என்பதுதான். நீங்கள் அதை பொய் பிரச்சாரமாக்கி மோதி-ஜியின் பேரைக் கெடுக்கிறீர்கள். இந்தத் தேர்தலிலும் மோடி தான் திரும்ப வரவேண்டும். ஆனால், நீங்கள் சொல்வது போன்று பசுவின் பெயரில் மனிதரைக் கொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மாட்டையே கொல்வது தவறு எனும்போது மனிதனைக் கொல்வது எப்படி சரியாகும். இப்படி பிடிக்காத பிரச்சினைகள் ஆர்.எஸ்.எஸ்.-இல் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் பிஜேபி நல்ல ஆட்சிதான் கொடுத்துள்ளது. அது மீண்டும் வருவது நல்லதுதானே.

கல்யாணி, குடும்பத்தலைவி.

எனக்கு அவர சுத்தமா பிடிக்காது. அவருக்கு ஓட்டு போடமாட்டேன். கேசுக்கு மானியத்த பேங்குல அவர யாரு போடச்சொன்னது? அப்படி எதுவும் எந்த பணமும் ஒழுங்கா எங்களுக்கு வரல. இப்ப மட்டும் எலெக்சன் வருதுன்னு கேஸ் வெலய கொறச்சி கொடுக்குறாங்க…அத அப்பவே பண்ணிருக்கலாம்ல…இப்படி ஏமாத்துனா எங்களுக்குத் தெரியாதா….

சுரேஷ், தனியார் நிறுவன ஊழியர்.  (புகைப்படம் தவிர்த்தார்)

தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கான வாய்ப்புக்களே இல்ல, டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி வந்ததுக்கப்புறம் பொருளாதார வளர்ச்சிங்குறதே இல்லாம போச்சு….

குமாரவேல், சென்னைக் குடிநீர் வாரியம்.

அதிமுக-பாஜக கூட்டணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்… அந்தம்மா இருந்தப்ப பிஜேபி-காரங்க இவ்ளோ அராஜகம் பண்ணதில்ல…. கேஸ் சிலிண்டர் விலைய ஏத்துனாங்க, டிமானிட்டைசேஷன்-னு சொல்லி மக்கள அலைகழிச்சாங்க..பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து போச்சு, காய்கறி வெலையெல்லாம் ஏறிப்போச்சு, ஜிஎஸ்டி-ய கொண்டு வந்து தொழிலெல்லாம் முடங்கிப்போச்சு….இப்ப எத சொல்லி இந்த பிஜேபி காரங்க ஓட்டு கேட்டு வருவாங்கன்னு தெரியல…. மக்கள் இவுங்க விடுற கதையெல்லாம் நம்பமாட்டாங்க…..

படிக்க:
ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !
கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி

கணேஷ், சவுத் இண்டியன் பேங்க் ஊழியர். (போட்டோ தவிர்த்தார்)

ஜி… நான் பாமக சப்போர்ட்டர், ஆனா அதிமுக-பிஜேபி கூட பாமக கூட்டணி வெக்கிறது எனக்கு பிடிக்கல….ஒரு வேள பாமக அவுங்க கூட கூட்டணி வெச்சா நான் நோட்டாவுக்குத் தான் ஓட்டு போடுவேன்.

அன்பழகன், தனியார் நிறுவன ஊழியர்.

வேலை நிமித்தமாக அவசர கதியில் சென்றுகொண்டிருந்தவரை இடைமறித்து கேள்வி கேட்டதும் புன்னகையுடன் பதிலளித்தார். பிஜேபி தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது சார். கேஸ் விலைய ஏத்திவிட்டது தான் எங்கள மாதிரி மக்கள ரொம்ப பாதிச்சிருச்சு, 400ரூபா இருந்த சிலிண்டர 800ரூபா ஆக்குனது மட்டுமில்லாம, நம்ம காசு கொடுத்து வாங்குனப்புறம் பணத்த பேங்குல போடுறேன்னு சொன்னாங்க…கையில அவ்ளோ காசு இருந்தாத்தானே சிலிண்டர வாங்கமுடியும்… ஆதார் கார்ட பேங்குல இணைக்கனும்னு சொல்லி எத்தன நாளு எங்கள அலக்கழிச்சாரு மோடி, மறந்துருவோமா?

சஜின், ராம், லயோலா கல்லூரி மாணவர்கள்.

மோடிய பத்தி என்னத்த சொல்றது… டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி, நியூட்ரினோ, மீத்தேன் திட்டம் இதெல்லாத்தையும் மறந்துட்டவுங்க வேனா மோடிக்கு ஓட்டு போடலாம். வீதி விருது வழங்கும் விழா-ன்னு எங்க காலேஜ்-ல ஒரு ஈவண்ட் நடந்துச்சு. அதுல சில ஓவியங்கள் அவுங்கள அவமதிச்சதுன்னு எச்.ராஜா, தமிழிசை-யெல்லாம் என்ன சவுண்டு விட்டாங்க தெரியுமா…இத்தனைக்கும் அந்த ஓவியங்கள் எல்லாமே நிஜத்தில நடந்ததுதான். வரஞ்சதுல என்ன தப்ப கண்டாங்கன்னு தெரியல…எங்க ஃப்ரண்ட் மீம்ஸ்-ல பிஜேபி-ய வெச்சு செய்வான். இப்ப அவன் வரல… தாமரை மலரவே மலராது ப்ரோ….

எட்வின்,  பேராசிரியர் – நூருல் இஸ்லாம் கல்லூரி – நாகர்கோவில்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி பிடிக்கலன்னாலும், அதிமுக-பிஜேபி-ன்னு பாக்குறப்ப இந்த நாலு பேத்த தவிர வேற யாராவது வந்தா பரவாயில்ல தான். சீமான், திருமா, வேல்முருகன் இவுங்கள்ல யாராவது வந்துட்டு போகட்டும். ஒருவேளை திமுக கூட வரலாமே தவிர பிஜேபி-யெல்லாம் வரவே கூடாது. பிஜேபி சாதி வெறி பிடித்தவுங்களுக்கான கட்சி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல முதுநிலைப் பொறியியல் முதலாமாண்டு படிக்கும் போது என்னோட ரூம் மேட்டா திருச்சி ஸ்ரீரங்கத்துலேருந்து ஸ்ரீராம்-னு ஒருத்தன் இருந்தான். ரூம் மேட்டா இருந்த வரைக்கும் ஒன்னா சாப்பிட போவோம், வெளியில சுத்துவோம்; ஹாஸ்டல்ல இருக்குற வரைக்கும் நார்மலா தான் பழகுவோம்… கேம்பஸ்ச விட்டு வீட்டுக்குப் போனப்புறம் அவன் பிராமினா இருப்பான், நான் தலித்தா இருப்பேன்…. இந்தக் காலத்துல அந்த மாதிரி நெலம கூட இருக்க விடாம பண்ணுது பிஜேபி கட்சி… ஆர்.எஸ்.எஸ். சொல்றத தான் பி.ஜே.பி. செய்யுது, ஆர்.எஸ்.எஸ் யாருக்கானது? அதுல உயர்சாதி இந்துக்கள் தான் இருக்க முடியும், வருணாசிரமம் சரின்னு சொல்லுற கட்சிய எப்படி ஆதரிக்க முடியும்? இன்னொருமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்னு நெனச்சி கூட பாக்கமுடியல…

நசுருதீன், அஜ்மல், தனியார் நிறுவன ஊழியர்கள் – நசுருதீன் கேரள சிபிஎம் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

எலெக்சன் நடக்கற நேரமா பாத்து தான் காஷ்மீர்ல குண்டுவெடிக்குது. ரஃபேல் ஊழல் பூதாகரமா வெடிக்கிற நேரத்துல இந்த மாதிரி திசை திருப்புறாங்களான்னு சந்தேகம் வருது. கேரளாவுல போன எலெக்சனப்ப காங்கிரஸ் வின் பண்ணுன இடத்துல தான் பிஜேபி ஜெயிச்சது. இந்த எலெக்சன்-ல கண்டிப்பா அது மாதிரி நடக்காது. நான் கேரளாவில இருந்தாலும், தமிழ்நாடு பிஜேபி-ய எதிர்க்கிறத வச்சு பாக்கும்போது ரெண்டு ஸ்டேட்டும் ஒரே மாதிரி தான் இருக்குறோம்னு தெரியுது. பிரிட்டிஷ் காரன் எப்படி டிவைட் அண்ட் ரூல்-னு நம்மள பிரிச்சி வச்சு கொள்ளையடிச்சானோ, அதே மாதிரி கொள்ளையடிக்கிற வேலயத்தான் பிஜேபி-யும் பண்ணுது…கேரளாவுல பிஜேபி ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல…தமிழ்நாட்டுல அப்படித்தான் நடக்கும்னு கேரளாகாரங்க நம்புறோம்.

5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா !

“எட்டாம் வகுப்பு வரை All Pass என்பதால்தான் கல்வியின் தரம் பின்தங்கிவிட்டது, அதனால் தான் மோடி அரசு 5-ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு முறையை கொண்டுவந்துள்ளது இனி கடமைக்கு பள்ளிக்கூடம் போய் நோகாம பாஸ் ஆக முடியாது..!”

நன்கு படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள துறை ரீதியாக நண்பர்களாக இருக்கக்கூடிய ஒரு வாட்சப் குழுவில் வந்த மெசேஜ் இது. இதை பலரும் வரவேற்று கட்டை விரல் உயர்த்துகிற மற்றும் கை தட்டுகிற பொம்மைகளை பதிலாக தருகிறார்கள் .

இன்று நடுத்தர மற்றும் உயர் மட்ட வகுப்பினரை இரண்டு மூன்று வார்த்தைகள் பிடித்து ஆட்டுகின்றன :

  • தரம்,
  • இலவசம்,
  • Heavy competition போன்றவை அவைகளில் சில.

மேலோட்டமாக பார்த்தால் சிறார்களின் கல்வித்தரம் குறித்து வளர்ந்த பெரியவர்கள் அக்கறை காட்டுவதில் என்ன தவறு என்பது போலத்தானே தெரிகிறது?!

சரி, தரம் என்றால் என்ன? ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால் அவர் தரமானவர் என்று சொல்லலாமா? ஆம் சொல்லலாம். ஆனால் இவர்கள் அப்படி கூட சொல்வதில்லையே.. ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் இருந்தால் அதில் 90 குழந்தைகள் படிக்க போகவேண்டும். அந்த 90-ல் பத்து பேர் மட்டும் தனி வகுப்பில் சேர்ந்து தனி பாடம் படிக்கவேண்டும். இல்லை 90 பேரும் ஒரே பாடத்தை படித்தால் கூட அதில் இருபது பேர் பெயிலாக வேண்டும், நாற்பது பேர் Just pass ஆகவேண்டும், பத்து பேர் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். 5 பேர் மட்டும் top rank வாங்கவேண்டும். அந்த 5 பேரில் தன் வீட்டு குழந்தையும் இருக்கவேண்டும். இப்படி நடந்தால் அது தரமான கல்வி.

தரம் என்பது இதுவல்ல. ஒரு ஊரில் உள்ள 5 குழந்தைகளை மட்டும் சீராட்டி வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்புவதல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை. மக்களுக்கான அரசாங்கம் என்பது ஊரிலுள்ள அனைத்து பிள்ளைகளையும் படிக்கவைத்து அவர்களை மேம்படச்செய்ய வைப்பதை கடமையாக கொள்ளவேண்டியது.

படிக்க:
அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !
♦ மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

தரம் என கொக்கரிக்க ஆரம்பித்துள்ள இதே இந்தியத்திருநாடு தான் ஐந்தாம் வகுப்பு கூட படித்திராத / தாண்டியிராத சிறுவர்களை அதிகமாக கொண்ட தேசங்களில் ஒன்று . இந்தியாவில் 6.5 சதவீத குழந்தைகள் தங்களது ஆரம்பக்கல்வியை கூட அதாவது ஐந்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்ற துயரத்தை கொடுமையை இவர்கள் உணர்வார்களா?

இந்திய மாநிலங்களில் கேரளா (ஆரம்பக் கல்வி முடிக்காதவர்கள் -0.08%), தமிழ்நாடுதான் (ஆரம்பக் கல்வி முடிக்காதவர்கள் -0.98%) தங்களது சிறுவர்களை முழுமையாக ஆரம்பக்கல்வியை முடிக்க வழிவகை செய்துள்ளன. குஜராத்திலே 3% பிள்ளைகள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை. ஆந்திராவிலே 6%, மத்திய பிரதேசம் 8% ராஜஸ்தான் 11% உத்தரபிரதேசம் 12% அதிகபட்சமாக மேகாலயா அருணாச்சலபிரதேசத்தில் 15% சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பைக் கூட படிக்காமல் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்.

ஏன் இந்த சிறுவர்கள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை? அப்படியென்றால் பத்தாம் வகுப்பு கூட படித்திராத இந்திய சிறுவர்கள் எத்தனை பேர்? என்ன காரணம்?

பள்ளிக்கூடம் கூட அனுப்பமுடியாத அளவுக்கு வறுமை, பள்ளிகள் இல்லாமை, தேர்வில் தோல்வியடைந்தால் நிறுத்திவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வேலைக்கு அனுப்புதல், தேர்வில் தோல்வியடைவதால் தன்னை விட வயதில் குறைந்த பிள்ளைகளுடன் படிப்பதால் ஏற்படுகிற தாழ்வு மனப்பான்மை, போக இளவயது திருமணம் இவைகளால் இந்த சிறார்கள் கல்வியறிவற்றவர்களாக உருவாகின்றனர்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி தான் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களை பள்ளிப்படிப்பை முடிக்கவைக்கின்றன. பத்தாவது பாஸ் அல்லது பெயில் என்ற தகுதியுடன் அதன்பிறகு அவன் ஏதோ ஒரு வேலையை தேடிக்கொள்கிறான் . அதன்பிறகு அவர்கள் கல்லூரி மற்றும் உயர்கல்வி படிக்கவேண்டும் தான் ஆனால் குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பையாவது நம் சிறார்கள் தாண்ட வேண்டாமா?!

கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிற இந்தியா தான் உலகிலேயே வயது குறைந்த திருமணங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு . நல்லவேளை இளவயது திருமணங்களை கட்டுப்படுத்துவதில் வழக்கம்போல தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மக்கட்தொகையில் 7வது பெரிய மாநிலமான தமிழ்நாடு இளவயது திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் 17வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 19.12 வயதில் திருமணங்கள் நடக்கின்றன . கேரளாவில் சராசரி திருமண வயது 21.5 ஆக உள்ளது . அதுவே ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரி திருமண வயது 16தான். ராஜஸ்தான், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் மிக இள வயதிலேயே திருமணம் நடத்திவைக்கப்படுகின்றன.

தேர்வுகளில் தோற்றுப்போனால் பெண் குழந்தைகள் திருமணத்திற்கும் ஆண் குழந்தைகள் வேலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதுதான் நம்முடைய இந்தியா. அதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கல்வி உரிமை பெறும் சட்டத்தை தந்துள்ளது . அதன்படி ஒவ்வொரு இந்திய சிறாரும் குறைந்தது 14 வயது வரை கல்வி கற்றே ஆகவேண்டும். மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ள ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையினால் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர் குலைப்பதாக அமையும்.

தரம் வளர்ச்சி என்பன ஊரிலுள்ள ஒன்றிரண்டு பேர் மட்டும் நல்ல வசதியான ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிக்கொண்டு விருந்துண்டு மகிழ, அதே வேளையில் வாய்ப்பு இல்லாத சிறுவர்கள் இருக்க இடமின்றி பசியும் பட்டினியுமாக இருப்பதல்ல. எல்லாருக்கும் உணவு கிடைக்கவேண்டும், எல்லாரும் கல்வி கற்க வேண்டும். இதுதான் தரம். இதுதான் வளர்ச்சி.

தங்கள் வீட்டுப்பிள்ளை ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் புத்திசாலிப்பிள்ளை என்று மகிழ்கிறவர்கள் ஊரிலுள்ள நிறைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை குவிக்கும்போது மட்டும், “ஐய்யய்யோ என்ன இப்படி ஆளாளுக்கு மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள் கல்வியில் தரமே இல்லை, யாரைக்கேட்டாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்கிறார்கள் இது என்ன தரம்?” என்று புலம்புவது ஏன்?

குறிப்பு : மேற்கண்ட புள்ளிவிபரங்கள் இந்திய அரசின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. 

நன்றி : சிவசங்கரன் சரவணன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

0

ஜார்கண்ட் மாநிலம் லடேகர் மாவட்டத்தில் உள்ள மஹுவதன் பகுதியில், இறந்து போன தனது தாய் குடியிருந்த வாடகை வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார் பாக்யா பிர்ஜெய்ன். தனது கணவனை இழந்த பாக்யா திருமணத்திற்குப் பின்னர் அருகிலுள்ள பகுதியில் வாழ்ந்து வந்தார். ஜனவரி 1 அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த தனது 80 வயதுத் தாய் புத்தினி பிர்ஜெய்ன் மரணமடைந்த செய்தியைக்  கேட்டு உடனடியாக வந்து சேர்ந்தார் பாக்யா.

கடந்த 2017-ம் ஆண்டு பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி

“எனது தாய் மரணமடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு உண்ண எதுவுமில்லை. இந்த கடுமையான பனியில் உண்ண உணவு ஏதும் இல்லாமல் அவர் பட்டினியால் இறந்துள்ளார்” என்று கூறுகிறார் பாக்யா. புத்தினியின் மரணம் ஜார்க்கண்டில் தொடரும் பட்டினிச் சாவுகள் பட்டியலின் சமீபத்திய சேர்க்கை. கடந்த ஆண்டு ஜார்கண்டின் சிம்டெகா பகுதிய்ல் வசித்து வந்த சந்தோஷி குமாரி என்ற பதினோரு வயது சிறுமியின் மரணத்திலிருந்து ஜார்கண்டின் பட்டினிச்சாவுகள் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன

புத்தினியின் நீண்ட நாள் பட்டினிக்கான காரணம், விசாரிக்க முடியாதது அல்ல. அவருக்கு ரேஷன் கார்டும் கிடையாது. ஆதார் அட்டையும் கிடையாது. உணவுப் பாதுகாப்பின்மை அவரை அச்சுறுத்தியது. புத்தினி பிரிஜியா பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த பழங்குடி இனப் பிரிவு, ”குறிப்பாக அழியும் நிலையில் உள்ள பழங்குடியினப் பிரிவாக” மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ இலவச அரிசியைப் பெறுவதற்கு தகுதியானவர் புத்தினி பிரிஜியா. அந்தியோதயா அன்ன யோஜனா எனும் திட்டத்தின் கீழ் ஏழைகளிலேயே மிகவும் ஏழையாக இருப்பவர்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் இது.

அவர்களது தொடர்ச்சியான வேண்டுகோளுக்குப் பின்னரும் கூட அவர்களால் ரேஷன் அட்டையை பெற முடியவில்லை என்று கூறுகிறார் பாக்யா. ”நாங்கள் ஆறுமுறை ரேஷன் கார்டு பெறுவதற்கு முயற்சித்து விட்டோம். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்து வந்தனர். இறுதிவரையில் எங்களால் இலவச ரேஷன் பொருட்களைப் பெற முடியவில்லை. ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.

புத்தினியின் வீட்டின் முகப்பு (படம் – நன்றி : த வயர்)

உணவு தானியங்களை அருகில் உள்ள உள்ளூர் சந்தையில் இருந்து வாங்குவது என்பது அவரது குடும்பத்திற்கு இயலாத ஒன்று. ஒரு வாடகை வீட்டில் தனது பேரனின் குடும்பத்தோடு இணைந்து வசிக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் தனது கால்கள் ஒடிந்த நிலையில் அவர் தனது பேரனின் வீட்டில் தங்கியிருந்தார்.

ஒரு நாளைக்கு வெறுமனே ரூ. 200 சம்பளம் பெறும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றுகிறார்கள். இவ்வளவு குறைவான வருமானத்தில் பல நாட்கள் அவர்கள் பட்டினியுடன் தான் இருந்திருக்கிறார்கள். புத்தினிக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 600 பெறுவதற்குத் தகுதி இருந்தும் அவரால் அதனைப் பெற முடியவில்லை. அவர் பலமுறை அதற்கான அலுவலகத்திற்கு சென்று முயற்சித்தும் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ”எப்போதுமே இதுதான் நடந்திருக்கிறது. எதுவும் என்றும் நடந்ததே இல்லை” என்கிறார் பாக்யா

படிக்க:
♦ ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

வறுமையான நிலையில் புத்தினிக்கு உணவு பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவரது குடும்பத்தினர் வேலைக்குச் சென்று விட்ட பின், அவரால் சொந்தமாக சமைக்கக் கூட முடியாது. அவரது அண்டைவீட்டார் அவருக்கு தாம் தொடர்ச்சியாக உணவளித்து வந்ததாகக் கூறுகின்றனர். அவரது அண்டை வீட்டுக்காரரான மதினா பீபி, புத்தினி மரணமடைந்த அன்று அவரைத் தாம் காணமுடியவில்லை என்று கூறினார். மானிய விலையில் உணவு தானியங்கள் பெறும் திட்டத்தின் கீழ்தான் மதினா பீபியும் ரேசன் பொருட்களைப் பெற்று வருகிறார்.

சொல்லப்போனால், பல்வேறு அரசாங்க நலத்திட்டங்கள் புத்தினியின் குடும்பத்திற்கு போய்ச் சேரவில்லை. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவரால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை. ஏனெனில் அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. வறுமையானது அவர்கள் குழந்தைகள் உட்பட அவர்கள் அனைவரையும் கல்வியில் இருந்து வெகு தொலைவில் நிறுத்தி வைத்திருந்தது. அவரது பேரனின் ஒரு மாதமேயான குழந்தை அங்கன்வாடி வசதிகளைக்கூட பெற முடியாமல் இருக்கிறார். ஏனெனில் அங்கு கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி செயல்படவில்லை.

கூடுதலாக அவர்களது குடும்பத்திற்கு  வேலை அட்டைகள் இல்லை. அந்த கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. அவர்களது வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய எவ்விதமான வேலைவாய்ப்பு ஆதாரமும் அங்கு அவர்களுக்கு இல்லை. மாநில அரசின் புதிய திட்டமான “கட்யான் கோஷ்”-ன் படி வறுமையின் காரணமாக பட்டினியால் தவிக்கும் குடும்பத்தினருக்கு அவசர உணவு தானியங்கள் வழங்குவதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டமும்கூட புத்தினியை காப்பாற்ற பயன்படுத்தப்படவில்லை.

புந்தினியின் மகள் பாக்யா (படம் – நன்றி : த வயர்)

புத்தினியின் மரணம் குறித்து, உள்ளூர் பத்திரிகையாளர்கள் எழுதிய பிறகு அப்பகுதியை சேர்ந்த அலுவலர்கள் அக்கிராமத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் புத்தினியின் குடும்பத்தினருக்கு ரூ. 2000-ஐ அடக்கம் செய்வதற்காக இழப்பீடாக கொடுத்தனர். கூடுதலாக 50 கிலோ அரிசியும் கொடுத்துள்ளனர். இது குறித்து பாக்யா கூறுகையில், அவர்கள் பணம் தருவதற்கு முன்னர், அடக்கம் செய்வதற்குக் கூட தங்களிடம் பணம் இல்லை என்றும் அதன் காரணமாக அடக்கம் செய்யாமல் 3 நாட்களாக புத்தியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாகக் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் உணவுத் துறை அமைச்சர், சர்-யூ-ராய், பட்டினிச் சாவு என சந்தேகம் ஏற்படும் மரணங்களுக்கு கண்டிப்பாக போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், புத்தினியின் மரணத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் அலுவலர்கள் அவசர அவசரமாக, உடலை புதைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாக பாக்யா தெரிவிக்கிறார்.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் மிகவும் அவசியமானது மற்றும் முதன்மையானது. பொது வினியோக முறையை சீர்செய்து அதன் மூலமாக எண்ணெய், தானிய வகைகள் போன்றவற்றை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்கும் போதுதான் சத்தான உணவு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேருவது உறுதி செய்யப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதுபோன்ற தொடரும் பட்டினிச்சாவுகளும், அன்றாடப் பட்டினிகளும் இந்தியாவின் மக்கள் நல அரசு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

புத்தினியின் குடும்பத்தினர் இரங்கலுக்குக் கூட நேரம் ஒதுக்கும் நிலையில் இல்லை. புத்தினியின் மருமகள் சாஞ்சி, அவரது மரணத்திற்கு மறுநாளே பணிக்குச் சென்று விட்டார். ஏனெனில் ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் இருப்பது என்பது அவருக்கு கட்டுப்படியாகாத ஒன்று. வெறும் ரூ. 2000 இழப்பீட்டைத் தாண்டி பார்க்கையில் அந்த குடும்பத்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை. இந்த அவல நிலையில் அவர்களது வாழ்வு தொடராமல் தடுப்பதற்கான எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது மருமகள் சாஞ்சி கூறுகையில் தங்களுக்குப் போதுமான உணவை உறுதி செய்ய ரேஷன் அட்டை கிடைக்கவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.


கட்டுரையாளர்     : அபினாஷ் தாஷ் சவுத்ரி
தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர்

கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி

“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” என்கிறார். விசுவ இந்து பரிசத்தின் ‘யுவ வாஹினி’ பெண்கள் குண்டர் படையை தலைமையேற்று நடத்திவரும் பிராச்சி, உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளராக களம் கண்டவர்.

“ராவல்பிண்டி மற்றும் கராச்சியை எரித்தால்தான் தீவிரவாதம் முடிவுக்கு வரும்” என்றும் அந்த வீடியோவில் பிரதமருக்கு ‘யோசனை’ சொல்கிறார் பிராச்சி.

2002 -ல் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று குவித்தது இந்துத்துவ கும்பல்.

அந்த வழக்கில் சில முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தீர்ப்பு வந்துவிட்டது. தொடக்கம் முதலே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இந்துத்துவ காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என பலரும் சொல்லிவரும் நிலையில், நீதிமன்றம் பல்வேறு சாட்சியங்களை புறம்தள்ளிய நிலையில், படுகொலை நிகழ்த்திய கும்பலே தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.

படிக்க:
எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது. குஜராத்தில் நான்காயிரத்துக்கும் அதிகமான முசுலீம்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், அதன்பின் இரண்டு முறை முதல்வராகிறார், அதன் பின் நாட்டையே ஆளும் பிரதமராகிறார்.


இதையும் பாருங்க…

நெருங்குவது காவி இருளடா …

மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்

1

மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது!

கொடுமைகளைச்
சொல்வதற்கு
வார்த்தைகளை
தேடுவதை விட
கொடுமையானது
வேறில்லை.

ஒன்றா… இரண்டா
மொத்தக் கொடுமையும்
நாட்டை ஆள்கிறது!

மாட்டுக்கறிக்காக
ஒரு மனிதன் கொல்லப்படுகிறான்
நீட்டு தேர்வுக்காக
ஒரு பெண் சாகடிக்கப்படுகிறாள்
கோவிலில் – கூட்டு வல்லுறவில்
காவிக் கயவர்களால்
சிதைக்கப்படுகிறாள் ஆசிஃபா!

அறியாமைக்கு
காரணமானவர்களை
அடையாளம்
காட்டுவதாலும்,
அநீதியை
அநீதி என்று சொல்வதாலும்
பலர் கொல்லப்படுகிறார்கள்

கொலைகாரர்கள் கையில்
நீதியின் தராசு

ஜனநாயகத்தின் கழுத்தில்
தூக்குக் கயிறு

பிணங்களை நுகர்வதும்
சகஜமாகிப் போகும்
தேசத்தில்
அதைச் சொல்வதும் கூட
தேச விரோதமாகி விடுகிறது

வேடிக்கை பார்ப்பவர்களையும்
விடாது காவி
ஏனெனில்
இது கார்ப்பரேட் ஆவி!

மெல்ல மெல்ல
உனது நிலம், சிறுதொழில்,
உனது கடல், சிறுவணிகம்
உனது கல்வி, விவசாயம்
எங்கும்
கொலையின் விசம்
பரவுகிறது.

போலீசு, ராணுவம்
நீதித்துறை, சட்டம், ஊடகம்
எதற்காக என்று
‘சொல்லப்பட்டதோ’?
அதற்கு
நேர் எதிராக
நமது ரத்தத்தில்
விரைகிறது.

செத்துப்போவதை விடவும்
பிணங்களாய் வாழ்வது
பெரிய கொடுமை!


இந்த கட்டமைப்பே
நெருக்கடி
காவி திரைகளை
கிழித்தெறி!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

நெருங்குவது காவி இருளடா …

ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம்

இந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள்

0

லக அளவில் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனாலும் இங்கு சுமார் 19.4 கோடி இந்தியர்கள் அன்றாடம் பட்டினியில் வாடுகிறார்கள். காரணம், நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்களை வீணடிக்கிறோம். இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் சேமிக்கப்படும் உணவுப் பொருள்கள் மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ வீணாவதை தடுப்பதற்கான கொள்கைகளை உருவாக்குவதாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் வாக்களிக்கின்றனர். ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் பட்டினியைப் போல் இந்த அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது. உலக பசிப் புள்ளிவிவரப் பட்டியலில் (Global Hunger Index) 119 இடங்களில் 100-வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில், இந்த புழுங்கி நாறிப்போன கல்நெஞ்ச நிலையை, நாம் வஞ்சனை என்றே விளிக்கலாம்.

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சி.ஆர்.சவுத்தரி கடந்த பிப்ரவரி 5, 2019 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், “ஜனவரி 1, 2019 கணக்குப்படி, வழங்கவியலாத / நாசமடைந்த நிலையில் 4,135.224 டன் தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டில் இத்தகைய வழங்கவியலாத தானியங்களின் அளவு ஏறக்குறைய 62,000 டன்கள் ஆகும். பின்னர் அவை கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது.

“இந்திய உணவுக் கழக மோசடிதான் இந்த நாடு இதுவரை சந்தித்ததிலேயே மிகப்பெரிய மோசடி” என்கிறார் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியத் தலைவருமான வி.எம்.சிங். “இந்திய உணவுக் கழகம் தானியங்களை வாங்கி அவற்றை திறந்த வெளிகளில் வைத்து விடுகின்றது. நீங்கள் பஞ்சாப், அரியானா அல்லது பீகாருக்குச் சென்று பார்த்தால், அவர்கள் எவ்வாறு ஒரு கருப்புத் தார்ப்பாயை மட்டும் வைத்துக்கொண்டு தானியங்களை திறந்த வெளியில் வைக்கின்றனர் என்பதைப் பார்க்க முடியும். தானியங்களை பிரமிட் போல 50 அடுக்குகளுக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து மூழ்கியிருந்தாலும், அதில் கீழே உள்ள நான்கு அல்லது ஐந்து அடுக்கு தானியங்கள்தான் பாழாகியிருக்கும். ஆனால், அவர்கள் மொத்த பிரமிட் அடுக்குகளிலுமுள்ள தானியங்களையும் (50 அடுக்குகளையும்) அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டுவிடுவர். பெரும்பாலான மூட்டைகளில் பாதிப்படையாத சுத்தமான கோதுமையே இருந்தாலும் இவ்வாறுதான் நடக்கும். இவ்வாறுதான் இந்த மோசடி நடைபெறுகிறது” என்கிறார் சிங்.

நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகள் கட்டுவது சிக்கலாக இருக்கும் சூழலில், பிரச்சினைக்குரிய இடங்கள் என பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியும் சூழலில் மாற்று தளங்களை அவர்கள் நிர்மாணிக்கலாம். “அவர்களுக்கு அந்தப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது தெரியும். அப்படியிருப்பினும் அவர்கள் அதே இடத்தைத்தான் சேமிக்க பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏன் அங்கே தானியங்களை வைத்திருக்கிறார்கள்? ஏனென்றால், அவை கெட்டுப் போனவை என்று அறிவிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதானே அவர்களால் அதனை விற்பனை செய்யமுடியும்! அழுகிப்போன நெல்லும், கோதுமையும் இல்லை என்றால் ஊழல்வாதிகள் என்ன செய்வார்கள்? ஊழல்வாதிகள் பணம் சம்பாதிக்க உதவுவதற்குப் பதிலாக தானியங்களை பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளில் வைக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும்.

படிக்க:
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

பெயர் கூற விரும்பாத ஒரு இந்திய உணவுக் கழக அதிகாரி இது குறித்துக் கூறுகையில், வழிகாட்டுதல்கள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகின்றன என்றும், ஏலம் விட முடிவெடுக்கும் முன்னர் தானியங்களை தரம் பிரிக்க மூன்றடுக்கு முறை பின்பற்றப்படுவதுடன், ஊழல் தடுப்புப் பிரிவின் சோதனையும் நடைபெறுகிறது என்கிறார். “நீங்கள் நாசமான தானியங்களை வெளியில் வீசியெறிய முடியாது. ஒரு கிலோவாக இருந்தாலும் அல்லது ஒரு டன்னாக இருந்தாலும், ஏலத்திற்கு டெண்டர்கள் விடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.

தேசிய மின் கருவூலத்தின் கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் இந்தியா 265 மில்லியன் டன்கள் தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநியோகிக்கப்படும் மொத்த தானியங்களின் அளவை ஒப்பிடுகையில், பாதிப்படைந்த உணவு தானியங்களின் அளவு குறைவானதாக இருந்தாலும், வீணடிக்கப்படும் தானியங்களை வைத்து மொத்த கொல்கத்தாவுக்கும் ஒரு வாரத்திற்கு உணவுதானியங்கள் வழங்கலாம் (ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக எடுத்துக் கொள்ளும் தானியங்களின் அளவாக 3 அவுன்ஸுகள் எனக் கணக்கிட்டுக் கொண்டால்). 2019-ம் ஆண்டுக் கணக்கீட்டின் படி மாநில அளவில் வீணடிக்கப்படும் தானியங்களின் அளவில் பீகாரில் மட்டும், சுமார் 3,567.65 டன்கள் (தேசிய மொத்த அளவில் 86%) உணவு தானியங்கள் வீணாகியிருக்கின்றன. இதில் கோதுமை 1267.69 டன்களும், நெல் 2,299.97 டன்களும் அடங்கும். பஞ்சாப் மாநிலத்தில் 324.39 டன்கள் தானியங்கள் வீணாகியிருக்கின்றன.

“பஞ்சாபில் தானியங்கள் வீணாகுதல் பொதுவாக அதிகமாகவே இருக்கும். ஏனெனில், பஞ்சாபைப் பொறுத்தவரையில் பெருமளவிலான தானியங்கள் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளிலோ அல்லது தார்ப்பாயால் மூடப்படும் கிடங்குகளிலோதான் சேமிக்கப்படுகின்றன. இங்கு தானியங்கள் நாசமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் மழை மற்றும் மோசமான போக்குவரத்து காரணமாகவும் தானியங்கள் நாசமடைகின்றன”, என்கிறார் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான முன்னாள் ஒன்றியச் செயலர், சிராஜ் ஹுசைன்.

குறிப்பாக பிகாரைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் தானியங்கள் வீணாவது குறித்த புள்ளிவிவர வரைபடமும் பிறழ்வாகவே உள்ளது. மராட்டியம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் அவர்களது பழைய நிலையிலிருந்து முன்னேறியிருக்கின்றன.  பீகாரும் கடந்த 2017-ம் ஆண்டு வரை அவ்வாறு முன்னேறியிருக்கிறது. குறிப்பாக 2013-14-ம் ஆண்டில் பீகாரில் நாசமடைந்த தானியங்களின் அளவு 3909.41 டன்களாக இருந்தது. 2014-15 காலகட்டத்தில் 703.65 டன்களாக இருந்தது. 2015-16 காலகட்டத்தில் அது 46.931 டன்களாகக் குறைந்தது. பின்னர் 2016-17-ம் ஆண்டுகளில் வீணான தானியங்களின் இருப்பே இல்லை. தற்போது பீகாரில் இருக்கும் வீணான தானியங்களின் இருப்பு 2017-18 மற்றும் 2018-2019-க்கான இருப்பு ஆகும்.

படிக்க:
உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?
நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !

“தானியங்கள் நாசமடைந்ததற்கு முக்கியக் காரணம், வெள்ளங்கள்தான். சில சேமிப்புக் கிடங்குகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இழப்பைக் குறைக்க அவற்றை அடுக்குவாரியாக ஆய்வு செய்வதற்கான நடைமுறை உள்ளது” என்கிறார் பீகாரின் இந்திய உணவுக் கழக அலுவலர். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டால் பீகார் 11 ஆண்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மரணமடைந்துள்ளனர்.


கட்டுரையாளர் : சித்தார்த்தா மிஸ்ரா
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : அவுட்லுக்

எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது

“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!” என்ற தலைப்பில், 2019, பிப் 23 சனிக்கிழமையன்று திருச்சியில்  நடைபெறவிருக்கும் மாநாட்டிற்காக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் நான்கு பேரை நேற்று பிப்-20 மாலை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் அறந்தாங்கி போலீசார்.

இத்தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த DYFI, வி.சி.க, தி.மு.க, மே 17 இயக்கம் , தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் வழக்கறிஞர்கள் அலாவுதீன், கார்த்திக், சேக் உள்ளிட்டோர் போலீசிடம் வாதிட்டனர். “உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று சட்டப்படி நடக்கும் ஒரு மாநாட்டிற்கான பிரச்சாரத்திற்காக கைது செய்தது தவறு, இது சட்டப்படி குற்றம்” என்பதைச் சுட்டிக் காட்டினர்.

“இது மேலிடத்து உத்தரவு எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்ற ஒற்றை பதிலை மட்டும் கூறி தோழர்களை ரிமாண்டு செய்வதற்கான வேலைகளில் இறங்கினார், அறந்தாங்கி போலீசு பொறுப்பு உதவி ஆய்வாளர். அதன்படி, அவசர அவசரமாக இரவு 8.00 மணிக்கு அறந்தாங்கி நீதித்துறை நடுவரிடம் தோழர்களை ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

அறந்தாங்கி நீதித்துறை நடுவரிடம் போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர், வழக்கறிஞர்கள். நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் மாநாட்டு பிரச்சாரத்தின் பொழுது, மக்களை  இடையூறு செய்யும் விதமாக எந்த சம்பவமும் நடைபெறாத நிலையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையே பொய்யாக புனைந்திருப்பதையும் உணர்ந்த நீதித்துறை நடுவர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை (FIR) நிராகரித்து தோழர்களை சிறையிலடைக்க மறுத்துவிட்டார். உரிய பிணையோடு இன்று (21/2/2019) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நான்கு தோழர்களையும் விடுவித்தார்.

படிக்க:
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

இம்மாநாடு நடைபெறவிடாமல் தடுப்பதற்கான தமக்கு சாத்தியமான எல்லா வகையிலும் முயன்று வருகிறது போலீசு. தஞ்சை பேருந்து நிலையத்தில் பிரசுரம் கொடுத்ததற்காக 9 பேரை கைது செய்திருக்கிறது, தஞ்சை போலீசு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் கடைவீதியில் வியாபாரிகளிடம் மாநாட்டு பிரசுரம் விநியோகித்த தோழர்களை கும்பலாகச் சென்று தாக்கியிருக்கிறது காவிக் கும்பல். போலீசின் பொய்வழக்கு, காவிக் கும்பலின் மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு மாநாட்டு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
அறந்தாங்கி.

புல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது ?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரிய வகையில் மிகவும் அவசரகதியில் நடந்து வருகிறது. இந்த தாக்குதல் பாகிஸ்தானை புகலிடமாக கொண்ட அமைப்புதான் நடத்தியது என்பதும், இதனால் பாகிஸ்தான் அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதிலும் இது மிகவும் கண்டத்துக்குரிய ஒன்று என்பதிலும் மாற்று கருத்து கிடையாது.

பொக்ரானில், இந்திய விமான படை நடத்திய போர் ஒத்திகை.

புல்வாமா தாக்குதலை நடத்தியதில் எப்படி பாகிஸ்தானுக்கு பங்கிருக்கிறதோ அதே போன்று தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதில் இந்திய அரசுக்கும் பங்கிருக்கிறது. இதில் தன்னுடைய தவறை யாரும் சுட்டிக்காட்டி விடக்கூடாது என்பதில் இந்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது. மக்களின் கோவம் முழுவதும் பாகிஸ்தான் மீதே இருக்கும் வண்ணமும் அடுத்து போர்தான் தீர்வு என்பது போன்ற பிம்பத்தையும் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக மோடி அறிவித்துள்ளார். ராணுவம் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையிலும் ஊடகங்கள் தொடர்ந்து போர் மேகம் சூழ்கிறது ஒத்திகைகள் நடக்கிறது என்று பொய்யுரைத்து வருகின்றன. நேற்று பொக்ரான் என்னும் இடத்தில் இந்திய விமான படை போர் நடத்திய ஒத்திகை, இந்த தாக்குதலுக்கு எதிர்வினை ஆற்றவே நடைபெற்றது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை வேறு.

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு இந்திய விமானப்படையால் நடத்தப்பட்டு வரும் ஒன்றாகும். 2013-ம் ஆண்டு வாயு சக்தி என்ற பெயரிலும், 2016-ல் இரும்புக்கரம் என்ற பெயரிலும், இந்த ஆண்டு மீண்டும் வாயு சக்தி என்ற பெயரிலும் நடந்தேறியது.

கார்கில் போர். (கோப்புப் படம்)

தொடர்ந்து போர் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற வகையில் பேசி வரும் பெரும்பாலோனோருக்கு உண்மையில் போர் வந்தால் என்ன விளைவுகள் வரும் என்பதை பற்றிய சிறு புரிதல் கூட இருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு முன்பு 1999-ல் நடந்த கார்கில் போர் பற்றி இவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும், அதில் இந்தியா வெற்றி பெற்றது, மலை உச்சியில் நான்கு வீரர்கள் தேசிய கொடியுடன் இருக்கும் படம் தவிர வேறு ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த போரில் பாகிஸ்தானில் 700-க்கும் அதிகமான உயிரிழப்புகளும், இந்திய ராணுவத்தில் 453 வீரர்களும் இறந்தனர். பாகிஸ்தானில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று நமது தேசபக்தர்கள் கவலை பட மாட்டார்கள். இப்போதைய போர் வேண்டாம் என்பவர்களின் கவலை இந்த 453 உயிர்கள் மற்றும் இனி போர் வந்தால் போகப்போகும் உயிர்களின் மீதானது. ஆனால், போர் வேண்டும் என்பவர்களின் கணக்கு வேறு, நம் பக்கம் 453 தான், எதிரி தரப்பில் 700, நமக்குத்தான் வெற்றி என்பார்கள். நாட்டின் அமைதிக்கு நாம் குறிப்பிட்ட விலையை கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

கார்கில் போராகட்டும் அல்லது தீவிரவாத தாக்குதலில் இறந்த அல்லது காயம் பட்டு உடல் ஊனமுற்ற வீரர்களின் நிலையோ மற்றும் அவர்களின் குடும்பச் சூழ்நிலையோ மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. நமது தேசபக்தர்களின் வேலை என்பது இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதோடு நின்று விடுகிறது. அது மட்டுமல்லாது சில பக்தர்கள் யாரெல்லாம் தேசத்துரோகி என்பதைக் கண்டறியும் வேலைகளையும் சேர்த்துச் செய்து வருகிறார்கள். போர் வேண்டும், பழி தீர்த்தே ஆக வேண்டும் என்று முழங்கும் தேச பக்தர்களும், பாஜக-வும் இந்தப் போருக்கு பின்னான விளைவுகளைக் குறித்துச் சிறிதும் கண்டு கொள்வதில்லை.

மேஜர் தேவேந்திர பால் சிங்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு Zee தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற மேஜர் தேவேந்திர பால் சிங் கூறிய சில தகவல்கள்: (இவர் 1999-ல் நடந்த கார்கில் போரில் தன் ஒரு காலை இழந்தவர். பின்னர் இழந்த காலுக்குப் பதிலாக செயற்கை கால் பொருத்தி ஓட்டப்பந்தயங்களில் கலந்து வருகிறார்).

• லான்ஸ் நாயக் நஷீர் வாணி (தீவிரவாதியாக இருந்து ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிர் துறந்தவர்) போலப் பல காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து ஒருவன் என் வீட்டுக்குள் நுழைந்து என்னுடைய இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறான் என்றால், நான் அதைத் தடுக்கத் தவறி விட்டேன் என்று தான் அர்த்தம்.

• 40 குடும்பங்கள் இப்போது அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இனியும் சரியான தீர்வை நோக்கி சிந்திக்காமல் பழி தீர்த்தலை பற்றியே பேசிக்கொண்டு இருந்தால் இன்னும் பல குடும்பங்கள் அவலநிலைக்குத் தள்ளப்படும். பழி தீர்க்க வேண்டும் என்று முழங்கும் முன்பு ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் கேளுங்கள், உங்கள் வீட்டின் நாயகனை இழக்க விரும்புகிறீர்களா என்று.

• அடுத்தத் தலைமுறை சரியான திசையை நோக்கி சிந்திக்கத் தவறினால், தாக்குதல், பழி தீர்த்தல், அதற்கு எதிரியின் பழி தீர்த்தல், மீண்டும் நம்முடைய பழி தீர்த்தல் என்று சுழற்சியாகவே சென்று கொண்டு இருக்க வேண்டியதுதான்.

• நமக்காக நமது வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், இறந்த வீரரின் விதவை மனைவி தனக்குக் கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகைக்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் படி விட்டு விடுகிறோம். ஒரு சில வீரர்களின் உடல் கிடைக்காமல் போனதால் தனது கணவன் நாட்டுக்காக உயிர் விட்டவர் என்பதை நிரூபிக்க இறந்த உடலை கொண்டு வரும்படி நீதிமன்றம் கூறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

• நானே இதற்கு ஒரு சாட்சி. நான் கார்கில் போரில் காயம் பட்டுக் கால்களை இழந்தவன் என்று 7 வருடங்கள் போராடி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் நிரூபித்து, எனக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய ஓய்வூதியத்தைப் பெற வேண்டி இருந்தது.

• இது போல ஆயிரக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியக் காரணி. இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது.

• நமக்காக நமது வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், போரில் இறந்த, காயம் அடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கல்வி சலுகைகள் குறைக்கப்படுவதைக் கண்டு கொள்ள மாட்டோம். (இந்திய பட்ஜெட்டில் இதற்கான செலவு வெறும் 3 கோடி மட்டுமே). தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இந்தச் சலுகைகள் மீண்டும் கிடைக்கப் பெற்றது.

இங்கு குறிப்பிட்ட அனைத்தும் முன்னாள் ராணுவ வீரரின் வார்த்தைகள். இன்றைய தேசபக்தர்கள் வருடம் தோறும் கொண்டாடும் விஜய் திவாஸ்க்காகத் தனது கால்களை இழந்தவர்.

படிக்க:
சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?
காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !

1999-ல் கார்கில் போர் நடக்கும் போது வாஜ்பாய் அவர்களின் ஆட்சி. 2004 வரை அவருடைய ஆட்சிதான். ஆனால், போரில் காயம் பட்ட வீரர் ஏழு வருடங்கள் நிவாரணத் தொகைக்காக அலைய வேண்டி உள்ளது. 1971 -ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி போரில் இறந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகள் முதல் பட்டம் பெறும் வரை முழுக் கல்வி செலவையும் அரசு ஏற்கும். 2010-ல் இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கல்லூரி மற்றும் விடுதி செலவை மட்டும் அரசு ஏற்கும் மற்ற செலவுகளை ஏற்காது என்ற நிலை உருவானது. 2017 ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் அவர்கள் மற்றொரு திருத்தத்தைக் கொண்டு வருகிறார். அதாவது முழுக் கல்வி செலவையும் அரசால் ஏற்க முடியாது, மாதம் ரூ.10,000 வரை மட்டுமே அரசு ஏற்கும் என்று. அதன் பிறகு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பணியில் உள்ள வீரர்களின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2018 மே மாதம் இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 36 கோடி வரை மட்டுமே தேவைப்படும். படேல் சிலைக்கு 3,௦௦௦ கோடி, கங்கைக்கு 600 கோடி, அரசின் விளம்பரத்திற்கு 3000 கோடி என செலவு செய்யும் அரசு இந்த கல்வி சலுகையில் கை வைத்து 36 கோடி பணத்தை சேமிக்க எண்ணுகிறது.

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ்.

இது மட்டுமா, 2017 ஜனவரி மாதம் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அவர்களுக்குச் சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்று முகநூலில் ஒரு பதிவை மேற்கொள்கிறார். அடுத்த மூன்று மாதத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வருடம் கழித்து 2018 ஏப்ரல் மாதம் ராணுவ வீரர்களுக்கு வாங்கப்படும் உணவின் தரம் குறித்துச் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய DFRL (பாதுகாப்புத் துறை உணவு ஆராய்ச்சியகம்) பணிக்கப்படுகிறது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதா, அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. கடந்த 2019 ஜனவரி மாதம், உணவு குறித்துக் குற்றம் சுமத்திய வீரரின் மகன் பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே, இந்த வீரருக்கு மிரட்டல்கள் வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டில் ஆயுத தளவாடங்களுக்கான தொகை எவ்வளவு, வீரர்களுக்கான தொகை எவ்வளவு என்று நமக்குத் தெரியவில்லை. ரஃபேல் ஊழல், மற்றும் ராணுவ வீரர்களின் கல்வித் தொகைப் பிரச்சினையை ஒப்பிட்டுப் பார்த்தால்  தளவாடங்களுக்கு அதிகம் ஒதுக்கியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும், ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகள் மற்றும் தற்காப்பு உபகரணங்கள் கொள்முதலை நிறுத்தும் நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாது, 7-வது ஊதிய குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வையும் தர முடியாத நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதன் பிறகு ராணுவ  உயரதிகாரிகள் தரப்பில் இருந்து எழுந்த அதிருப்தியின் காரணமாக நிதி ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த நிலை தவிர்க்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை வீரர்களின் தற்கொலைகள் மற்றுமொரு மிகப்பெரிய பிரச்சனை. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி மூன்று நாட்களுக்கு ஒரு வீரர் தற்கொலை செய்து கொள்கிறார். 2001 முதல் 2012 வரையில் 1362 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2013 முதல் 2017 வரை 434 தற்கொலைகள் நடந்துள்ளது. 2018-ம் ஆண்டில் மட்டும் 104 . இதில் 80 % க்கும் மேல் தரைப்படை இராணுவ வீரர்கள் (மீதம் விமானப்படை மற்றும் கப்பற்படை).

இப்படி அரசின் தரப்பில் நிர்வாகக் குறைபாடுகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த நிர்வாகக் குறைபாடுகளை மறைக்கும் பொருட்டே அரசும், அதன் கைக்கூலிகளான ஊடகங்களும் தொடர்ந்து போர் ஒன்றே தீர்வு என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன. இது நேரடியாகத் தனது அரசியல் நலனுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களைப் பணயம் வைக்கும் செயலே.

இது ஒரு பக்கம் இருக்க, சங்க பரிவாரங்கள் தங்கள் பங்குக்கு இசுலாமிய எதிர்ப்பினை வெளிப்படையாக மக்கள் மத்தியில் விதைக்கத் துவங்கி உள்ளனர். பாகிஸ்தானை பழி வாங்க வேண்டும் என்று கூவிக் கொண்டு காஷ்மீர் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்கள் குறிப்பாக இசுலாமியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் எனபதுதான் எதார்த்தம். தங்கள் இசுலாமிய எதிர்ப்பினை காட்ட இந்த 42 வீரர்களின் தியாகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைவிட இந்த வீரர்களின் தியாகத்தை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது.

இது ஒட்டுமொத்த பிரச்சனையின் ஒருபக்கம் மட்டுமே. ராணுவத்தால் காஷ்மீரில் நடந்த வன்முறைகள் மற்றொரு பக்கம். வன்முறை என்றால் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அல்ல. தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி போராடும் காஷ்மீர் மக்கள் மீது அரசால் ராணுவத்தின் உதவி கொண்டு நடத்தப்படும் வன்முறைகள். அரசானது பிரிவினை கோரும் காஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடுகிறது. அதாவது கையில் கல் கொண்டு எரிபவனையும், கையெறிக் குண்டால் அடிப்பவனையும் ஒரே ஆயுதத்தால் அடக்க நினைக்கிறது அரசு. தீவிரவாத குழுக்களால் ராணுவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பிரிவினை கோரும் மக்களின் சனநாயக வழி போராட்டங்களையும் சேர்த்து மதிப்பிழக்கச் செய்கிறது.

படிக்க:
தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

காஷ்மீரைப் பொறுத்தவரை நமது பார்வை மேலோட்டமானது. அங்குக் களநிலவரம் என்பது இன்னும் சிக்கலான ஒன்றாகத்தான் உள்ளது. காஷ்மீர் மக்கள் இந்தத் தீவிரவாத குழுக்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் இருமுனை போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள். உச்சநீதிமன்றமே காஷ்மீரில் ராணுவத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை கொடுத்துள்ளது. ஆனால், இந்த வழிமுறைகள் நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்பதும் உண்மை.  இங்குக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால், போர் வந்தாலும் இறுதியில் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாவது இந்தக் காஷ்மீர் மக்கள்தான். ஆனால், இதுவரை நடந்த போர்களோ அல்லது தீவிரவாத ஒழிப்பு செயல்களோ காஷ்மீர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எந்த வகையிலும் உயர்த்திடவில்லை என்பதுதான் எதார்த்தம்.

அரசின் நிர்வாகத் திறமையின்மை, தவறான கொள்கைகள் ராணுவத்தையும் காஷ்மீரையும் மட்டும் பாதிக்கவில்லை. மற்ற மாநிலங்களும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. சமூக மற்றும் பொருளாதர ரீதியில் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களை அரசும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் செய்து வந்த வண்ணமே உள்ளனர்.

தவறான பொருளாதார கொள்கைகள் வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, கல்வி கட்டணங்கள் உயர்வு, நீட் போன்ற புதிய நுழைவுத் தேர்வுகளின் அறிமுகம், மருத்துவத்துறையில் அரசின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுத் தனியாரின் செயல்பாடுகளை அதிகரித்தல் என அரசின் பல கொள்கைகள் மக்களை அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி கொண்டு இருக்கிறது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் நோக்கில்தான் அரசும் அதன் கைக்கூலி ஊடகங்களும் பொய்யான போர் மேகங்களை உருவாக்கி கொண்டு இருக்கின்றன.

படிக்க:
காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

காஷ்மீர் மக்களுக்கான தீர்வை அம்மக்களின் துணை கொண்டுதான் அடையமுடியும். அது தவிர்த்து போரின் மூலமோ பழி வாங்கும் செயலின் மூலமோ காஷ்மீர் மக்களுக்கான தீர்வையும் பெற முடியாது, தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது. இவற்றோடு சேர்த்து நாம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம் இருக்கின்றது. அதற்கான பதிலை கொடுக்க வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. இவர்களின் போர் முழக்கங்களில் நாம் கவனத்தைச் சிதற விடாமல் பதில் கிடைக்கும்வரை தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

சக்திவேல்
சமூக ஆர்வலர்.

குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்

0

வாழ்க்கை நவீனமாக மாறிவிட்டாலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. அதிலும் பள்ளிகளை தெரிவு செய்வதும், தெரிவு செய்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நல்ல முறையில் கற்பிக்கிறார்களா என்பதும் பெற்றோர்களின் நிரந்தரக் கவலைகளாகி விட்டன. கல்வியில் தனியார்மயம் ஏற்படுத்திய தீங்குகள் ஒருபுறமிருக்க, கல்வி – பள்ளி – ஆசிரியர் போன்ற கல்வியியல் வார்த்தைகள் வெறுமனே தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறியீடுகளாக மாறிவிட்டன.

குழந்தைகள் உலகில் சோவியத் நிபுணர்கள் மிகப்பெரும் சாதனைகளை படைத்திருக்கின்றனர். ஆரம்பப் பள்ளி ஒன்றில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிய அமனஷ்வீலியின் அனுபவங்கள் ஒரு இனிமையான இசை ராகமாக இங்கே மீட்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளை சொந்த முறையில் சிந்திக்க வைப்பதும், கற்றுக் கொடுப்பதும், சரி தவறுகளை இங்கிதமாக உணர வைப்பதும் இன்னபிற அசாத்தியமான விசயங்களை இலகுவாகச் செய்கிறார் இந்த ஆசிரியர். இந்த ஆசிரியரிடமிருந்து நாம் – பெற்றோர்களும், ஆசிரியர்களும் – கற்றுக் கொள்ளவதற்கு நிறைய இருக்கின்றது. தொடர்ந்து படியுங்கள். இந்த பாகத்தில் அணிந்துரையும், நூலாசிரியரின் முன்னுரையும் இடம் பெறுகின்றன. அடுத்த பாகத்தில் இருந்து நூலின் அத்தியாயங்கள் ஆரம்பமாகும்.

– வினவு

 அணிந்துரை

ல்வா அலெக்சாந்தரவிச் அமனஷ்வீலியின் இந்நூலை ஒரு குறிப்பிட்ட வகையை மட்டும் சேர்ந்த நூலாகக் கருத முடியாது. எல்லாமே மிக எளிமையானதாகத் தோன்றக்கூடும் – நூலாசிரியர் தன் பல்லாண்டு நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வாசகரைப் பொறுத்தமட்டில் ஷ. அமனஷ்வீலி சாதாரண ஆரம்பப் பள்ளியாசிரியர். உண்மையிலோ இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர். ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தரும் முறைகளும் வழிகளும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன.

எழுதப் படிக்கவும் ஆரம்பக் கணிதத்தையும் சொல்லித்தரும் ஏராளமான முறையியல் சாதனங்கள், படங்கள் மற்றும் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளதானது இதற்கேற்றவாறு உள்ளது. நூலாசிரியரும் இவரது சகாக்களும் இவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, குழந்தைகள் அந்தந்தப் பாடங்களின் அடிப்படைகளை நன்கு கிரகிக்குமாறு செய்கின்றனர். இதில் வாசகரும் (குறிப்பாக ஆரம்பப் பள்ளியாசிரியரும் குழந்தைகளுக்கான தோட்டப் பள்ளியின் ஆசிரியரும்) கல்வி கற்பிப்பதற்கான ஏராளமான முறையியல் சாதனங்களைக் காணலாம். இவற்றை உருவாக்கியதில் எல்.எஸ். விகோத்ஸ்கி, டி.என். உஸ்னாட்ஸே, எல்.வி. ஸான்கோவ், பி.இ. ஹச்சாபுரீட்ஸே, டி.பி. எல்கோனின், வி.வி. தவீதவ் மற்றும் பல சோவியத் மனோதத்துவ வல்லுநர்களின் மனவியல் – ஆசிரியர் பயிற்சிக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின.

அப்படியென்றால், இந்நூல் ஒரு முறையியல் பாடநூல், ஆரம்பப் பள்ளியாசிரியர்களுக்கான பாடப் புத்தகம் என்று பொருளாகுமா? கிடையவே, கிடையாது. இந்நூல் உண்மையிலேயே ஒரு முழு கல்வியியல் காவியமாகும். அ.எஸ். மக்கா ரென்கோ எழுதிய கல்வியியல் காவியம் என்ற பிரபல நூலிற்குப் பின் காவிய நடையிலான கல்வியியல் எனும் வரையறுப்பிற்கு இவ்வளவு தூரம் பொருந்தி வரும் நூலை நான் பார்க்கவில்லை. ஷ.அ. அமனஷ்வீலியைப் பொறுத்த மட்டிலும் கூட இந்தப் படைப்பு வெறும் கல்வியியல் காவியம் மட்டுமின்றி கல்வியியல் இன்னிசையும் ஆகும்.

குழந்தைகளுடன் நூலாசிரியர் அமனஷ்வீலி.

நூலாசிரியர் குழந்தைகளுடன் கலந்து பழகும் ஒவ்வொரு தருணத்திலும் நுண்ணிய இன்சுவை மிக்க இசைநயம் ஒலிக்கிறது. தன் சின்னஞ்சிறு மாணாக்கர்களுடனான ஒவ்வொரு சந்திப்பையும் நூலாசிரியர், ”எண்ணற்றவகை மாறுபாடுகளையுடைய கல்வி எனும் இசைவெள்ளமாகக்” கருதுவது தற்செயலானதல்ல. ”ஒவ்வொரு பள்ளி நாளின் இன்னிசையும் என் காதுகளில் குழந்தைகள் போடும் சத்தமாக ஒலிக்கிறது” என்று எழுதுகிறார் ஷ.அமனஷ்வீலி.

குழந்தைகளின் மீதான அன்பு, குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கியக் காரணிகளாகும். குழந்தைகளின் மென்மையான இதயத்தைப் புண்படுத்துவது, ஒரு கவனமற்ற வார்த்தையால் அல்லது செயலால் காயப்படுத்துவது எளிது. திபிலீசி நகரில் ஷ.அ. அமனஷ்வீலி ஒரு வகுப்பை நடத்திக் கொண்டிருந்ததை நான் பார்க்க நேர்ந்தது. அவர் வகுப்பில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ஒரு சில குழந்தைகள் பதில் தெரியுமென கரங்களை உயர்த்தினர்.

படிக்க:
பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

தனக்கே உரித்தான பாணியில், மும்முரமாக நடந்து வந்த அமனஷ்வீலி ஒரு சிறுவனை அணுகி மெதுவாகச் சொல்கிறார்: ”தாத்தோ, மெதுவாக என் காதில் சொல்.” தாத்தோ உற்சாகமாக அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறான். ஷ. அ. அமனஷ்வீலி புன்முறுவலோடு கேட்டு, பின் அவனது தலையை அன்பாகக் கோதிவிட்டபடியே மிக மிக மெதுவாகக் கூறுகிறார்: ”தாத்தோ, எங்கே இன்னும் சிறிது யோசி, பார்க்கலாம்.” தாத்தோ தன் அடர்த்தியான கறுப்புப் புருவங்களை சுருக்கியபடியே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறான். இந்த சமயத்தில் ஆசிரியர் இன்னொரு சிறுவனின் அருகே நிற்கிறார், அவனோ எழுந்து நின்று உரக்க, உறுதியோடு பதில் சொல்கிறான்.

சமீபத்தில் எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் தன் ஐந்து வயதுச் சிறுமியைப் பற்றிச் சொன்னார்: ”நான் அறையில் நுழைந்து பார்த்தால் என் மகள் தான்யா எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தாள், தன்னுள்ளேயே மிகவும் லயித்திருந்தாள். இரண்டு முறை நான் கூப்பிட்ட பின் தான் அவள் தன் நிலைக்கே வந்தாள். ‘என்ன யோசனை’ என்று நான் கேட்டேன். அவள் திடீரென பதில் சொன்னாள்: ’ஒன்றுமில்லை அம்மா, நான் என் விஷயமாக, குழந்தைகள் விஷயமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’….”

சோவியத் பதிப்பில் குழந்தைகள் வாழ்க நூல்

ஆம், குழந்தைகள் தம் விஷயங்களை, குழந்தைகள் விவரங்களைப் பற்றி சிந்திக்கின்றனர். அது இவர்களின் சின்னஞ்சிறு உலகம், பெரியவர்களாகிய நாம் இந்த உலகத்தினுள் நுழைவதே கடினம். ஆனாலும் நாம் இந்த உலகத்தினுள் நுழைய வேண்டும். இல்லாவிடில் பெரியவர்களின் உலகத்தை இவர்களுக்கு நம்மால் காட்ட முடியாது, எனவே இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியாது. நமக்கு உகந்த வழியில் இவர்களை வளர்க்க இயலாது. கட்டளைகள், அச்சுறுத்தல், நிர்ப்பந்தம் மூலம் இதைச் செய்ய முயலலாம் அல்லது ஷ. அ. அமனஷ்வீலி செய்வதைப் போல் குழந்தையின் எண்ணங்களுக்குள், குழந்தையின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப்புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு, பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், எதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இதைச் செய்யலாம்.

இந்த விஷயத்தில் ”தனக்கே உரித்தான, குழந்தைகள் விஷயம்” சிறுவனுக்கு ஒரு மகிழ்ச்சியாக மாறுகிறது, இதை ஆசிரியருடன் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்ள அவன் துடிக்கிறான். தமக்கு சுவாரசியமானவையும், முக்கியமானவையுமான எல்லாமே ஆசிரியருக்கும் சுவாரசியமானவை, முக்கியமானவை என்று குழந்தைகளுக்குத் தெரியும். ஆசிரியரின் எல்லா முடிவுகளும் நடவடிக்கைகளும் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூற முடியாவிட்டாலும் அவருடைய உள்ளத்தில் போதனை முறை சம்பந்தமான ஆக்கபூர்வமான அணுகுமுறை  பொங்குகிறது. ஆசிரியரையும் குழந்தைகளையும் இணைக்கும் இழை, நூல் முழுவதும் ஓரிடத்தில் கூட அறுந்து போவதில்லை, நூலாசிரியரின் சிந்தனைகள் மற்றும் செயல்களின் பாலான வாசகரின் கவனம் ஒரு நிமிடம் கூடக் குறைவதில்லை.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தருதல் எனும் ஒரு மிக முக்கிய, கடினமான பிரச்சினைக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது சோவியத் நாட்டில், 1984 ஆம் ஆண்டு பொது மற்றும் தொழிற்கல்வி சீர்திருத்தத்தின்படி ஆறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பமாகிறது. இதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது? இது குழந்தைகளுக்குப் பாதகமாக அமையாதா? இது அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒராண்டைப் பிடுங்கி விடாதா? இப்பிரச்சினைத் தொடர்பாக சோவியத் நாட்டில் எழுபதாம் ஆண்டுகளில் பெரும் விவாதங்கள் நடைபெற்றன.

ஐந்து, ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருவதன் நோக்கம் குழந்தையின் வளர்ச்சியை வேகப்படுத்தி, முடுக்கி விடுவது அல்ல, மாறாக விரிவுபடுத்துவதே, அதாவது குழந்தைகளின் ஆன்மிக உலகைச் செழுமைப்படுத்தி, அவர்களின் அறிவாற்றலுக்கு ஊக்கமளித்து, கண்ணோட்டங்களை விரிவுபடுத்துவது தான் இதன் நோக்கமென இப்பணிக்குத் தலைமை தாங்கும் பேரவை விஞ்ஞானி அ. வி. ஸப்பரோ ஷட்ஸ் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அ. வி. பெத்ரோவ்ஸ்கி,      சோவியத் யூனியன் ஆசிரியரியல் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர்.


முன்னுரை

ரம்பப் பள்ளியின் தயாரிப்பு வகுப்பில் (பல சமயங்களில் இதை பூஜ்ஜிய வகுப்பு என்கின்றனர்) உள்ள ஆறு வயதுக் குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பது பற்றிய நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இந்த ”அசாதாரண” மாணவர்களுடன் கடந்த 15 ஆண்டுகளாகக் கலந்து பழகிய அனுபவம் இந்நூலில் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெற்றோர்கள் சந்தேகப்பட்டனர் (”இந்த வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமா?” என்றனர் அவர்கள்), ஒரு சில விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்தனர் (”எதற்கு அவசரம்? குழந்தைகளின் மன நிலை இதற்குத் தயாராயில்லை!” என்றனர் இவர்கள்)… ஆண்டுகள் உருண்டோடின, தயாரிப்பு வகுப்பு பற்றிய பிரச்சினை அரசு முக்கியத்துவத்தைப் பெற்றது.

பள்ளியில், நர்சரிப் பள்ளியில் அல்லது வீட்டுச் சூழ்நிலையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தர முடியுமா, இது அவசியமா என்று இந்நூலில் நான் நிரூபிக்கப் போவதில்லை. விஞ்ஞான அடிப்படையில், வாழ்க்கையே முன் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில், படிப்பதன் மீது குழந்தைகளுக்கே இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில் இப்பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டு விட்டது. ஆறு வயதுக் குழந்தைகளுக்கு என் கருத்துப்படி எப்படிப்பட்ட பள்ளி வாழ்க்கையை அளிக்கலாம் என்பது பற்றி இந்நூலில் கூற விழைகிறேன்.

தமிழகத்தின் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகள்.

இந்நூலை எழுதும் போது கீழ்க்காணும் கடமைகளை என் முன் வைத்துக் கொண்டேன்: ஆரம்பப் பள்ளியின், இயன்ற அளவிற்கு செகன்டரி பள்ளியின் முழுமையான முறை எனும் படிகத்தின் ஊடாக தயாரிப்பு வகுப்பை புரிந்து கொள்வது; ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளிச் சிறுவனாக மட்டும் காட்டாமல் (உண்மையில் இவனைப் பள்ளிச் சிறுவன் என்று கூறுவதே கடினம்) முதலில் இவனை, தன் பன்முக வாழ்வைக் கொண்ட, சுற்றியுள்ளவர்களுடன் – சிக்கலான பரஸ்பர உறவுகளையுடைய ஒரு வளரும் மனிதனாகக் காட்டுவது; இதற்கேற்றபடி, ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை, இவனது மகிழ்ச்சி, அதிருப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே இவனைப் புரிந்து கொண்டு ஒரு தனிநபர் என்ற வகையில் வளர்க்க முடியும் என்று காட்டுவது; ஆறு வயதுக் குழந்தைகள் ஒரு விசேஷப் பிரிவினர், முதல்வகுப்பு சிறுவர் சிறுமியருக்கு ஏற்ற அதே முறையை இயந்திரகதியாக இவர்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று தெட்டத் தெளிவாக நிரூபிப்பது என்பன தான் என் முன்நின்ற கடமைகளாகும். இது தவிர, பள்ளி வாழ்க்கையின் போதனை முறையில் மனிதாபிமான மற்றும் எதிர்கால நன்னம்பிக்கை அடிப்படைகளை ஊர்ஜிதப்படுத்தும் கடமையும் என் முன்நின்றது.

இக்கடமைகள் தான் இந்த ”பூஜ்ஜிய வகுப்பினருடனான” பணியின் நடைமுறை வடிவங்களை வரையறுத்தன. தன் செயல்முறை, தன் முயற்சிகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள் பற்றிய ஆசிரியரின் சிந்தனைகள் இவற்றிலடங்கும். நான் ஐந்து பாடநாட்களை சித்தரிக்கிறேன். இவற்றில் ஒவ்வொன்றும் குழந்தைகளுடைய பள்ளி வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தோடு (பள்ளி வாழ்க்கையின் துவக்கம், எழுத்துகளைக் கற்றுக்கொள்வது இத்தியாதி) தொடர்புடையது. என் முன் தோன்றும் பாடக்கல்வி சம்பந்தமான கடமைகளை விளக்கும் போது, குழந்தைகளின் பாலான மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் இவற்றைத் தீர்க்கும் முறைகள், கோட்பாடுகளைப் பற்றி சிந்திக்கிறேன், இப்படிப்பட்ட கடமைகளை நிர்ப்பந்த நிலையிலிருந்து தீர்க்கும் முறைகளோடு இவற்றை ஒப்பிடுகிறேன்.

படிக்க:
மாதிரிப் பள்ளிகள் தேவையா? – ச.சீ.இராஜகோபாலன்
தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

முதலாவது வகுப்பில் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு அந்தந்தப் பாடங்களைக் கற்பிக்கும் முறையியல் நூலை உருவாக்க நான் திட்டமிடவில்லை. முதலாவதாக, குழந்தைகளின் பள்ளி வாழ்வை ஒழுங்கமைக்கும் பொது அணுகுமுறையை விளக்குவதும், இரண்டாவதாக, மிகச்சிறு பள்ளி மாணவர்களை வளர்த்து, கல்வி கற்பிப்பதில் மேன்மேலும் புதிய கடமைகளைத் தீர்க்கும் ஆசிரியரின் ஆக்கபூர்வமான முறைகளை விளக்குவதும் தான் எனக்கு முக்கியமாக இருந்தன. பள்ளியாண்டு துவங்கும் முதல் நாளாகிய செப்டெம்பர் 1-ம் தேதிக்கு முந்தைய தருணத்தின் சிந்தனையிலிருந்து துவங்கும் இந்நூல் ஆறு வயதுக் குழந்தைகளின் நாளைய தினத்தைப் பற்றிய எண்ணங்களுடன் முடிவடைகிறது.

என்னுடைய இந்த அனுபவம் பரிசோதனை ரீதியானது; விசேஷமானது; பள்ளியின் எதார்த்த சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருப்பது; பரிசோதனை ரீதியான தயாரிப்பு வகுப்பிற்காகக் குழந்தைகள் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; எனது ஆசிரியர் பணிக்கு ஒரு ஈடு இணையற்ற தனித்துவம் உண்டு என்றெல்லாம் ஒரு வேளை உங்களுக்குத் தோன்றக்கூடும். நிச்சயமாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவருக்கே உரித்தான அம்சம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் அதற்கே உரித்தான தன்மைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஆசிரியர் குழாமும் குழந்தைகளை வளர்த்து படிப்புச் சொல்லித் தருவதற்கான விசேஷ சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன. இவையெல்லாம் உண்மை.

குழந்தைகளை கொண்டாடுவோம் தமிழில் …

ஆனால், இதனால் நான் கூறும் பரிசோதனைப் பணியின் அனுபவம் எங்கோ ஆகாயத்தில் மிதக்கிறது, இதற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகம் என்று பொருளாகாது. சாதாரண பள்ளிச் சூழலில், விசேஷமாக குழந்தைகள் யாரையும் தேர்ந்தெடுக்காமலேயே தான் இந்த அனுபவம் கிடைக்கப்பெற்றது. என் பாணி என்று தனியாகக் கூற முடியாது; பல சோவியத் ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சி அம்சங்கள் இதில் கலந்துள்ளன. சிறு பள்ளி மாணவர்களுடன் கலந்து பழகுவது சம்பந்தமாக எம்மால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் சரியானவை என்று இவர்கள் மெய்ப்பித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் இவர்கள் தம் கூட்டு உழைப்பால் பல நல்ல முறையியல் வழிகளையும் வடிவங்களையும் முன்மொழிவுகளையும் கூறியுள்ளனர். குழந்தைகளின் மீதான உண்மையான அன்பு, இவர்களின் உறுதியான, செயல் முனைப்பான, ஆக்கபூர்வமான உழைப்பு ஆகியவற்றால் இவையனைத்தும் சாத்தியமாகியுள்ளன.

குழந்தைகளுடன் நான் கலந்து பழகிய அனுபவமும், பள்ளியில் இவர்களின் மகிழ்ச்சிகரமான, சுவாரசியமான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதற்கான வழிகளின் விஞ்ஞான பூர்வமான தேட்டமும், நீண்ட காலமாகப் பல பரிசோதனை வகுப்பு ஆசிரியர்களுடன் இருந்து வரும் ஆக்கபூர்வமான, விஞ்ஞான ஒத்துழைப்பும் ஒரு சில போதனைமுறை நம்பிக்கைகள் என்னிடம் உருவாக வழிகோலின.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

குழந்தைகளை வளர்த்து, கல்வி கற்பிப்பது சம்பந்தமான மனிதாபிமானம் மிக்க, எதிர்கால நன்னம்பிக்கையுள்ள அடிப்படைகளிலிருந்து இந்நம்பிக்கைகள் வருகின்றன. அனேகமாக எனது கருத்துக்கள் எல்லாமே விவாதத்திற்கு அப்பாற்பட்டவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், பள்ளிச் சூழலில் ஆறு வயதுக் குழந்தைகளை வளர்த்து படிப்புச் சொல்லித்தர ஒரு விசேஷ போதனை முறை வேண்டும், நவீன வாழ்க்கை மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு ஆரம்பப் பள்ளியின் உள்ளடக்கத்தையும் முறையியலையும் மாற்றியமைக்க வேண்டும் எனும் முக்கிய அம்சத்தில் நாம் கருத்தொருமித்தவர்களாக இருந்தால் இந்நூலின் லட்சியம் அடையப்பட்டு விட்டதாக நான் கருதுவேன்.

– ஷல்வா அலெக்சாந்தரவிச் அமனஷ்வீலி

(தொடரும்)

இத்தொடரைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!