தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் முன்னணியாளர்களை போலீசு குறிவைத்து கைது செய்வதும், அவர்களின் குடியிருப்புப் பகுதிக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மிரட்டல் விடுப்பதும், பின் தொடர்ந்து கண்காணிப்பதும், அச்சுறுத்துவதும், பொய் வழக்குப் போடுவதும் தொடர்ந்து வருகிறது.
நேற்று மதியம், பண்டாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த, அனைத்துக்கல்லூரி மாணவர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர், சீருடை அணியாத போலீசால் கடத்தப்பட்டு மாலை வரை எங்கிருக்கிறார்? என தெரியாத நிலையில், போலீசைக் கண்டித்து கிராம மக்கள் உள்ளூரிலேயே அமர்ந்து போராடினர். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவியதும் இரவோடு இரவாக பொய் வழக்கில் சந்தோஷ் கைது செய்யப்பட்டு பாளையம் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்றைய (17-01-2019) போராட்டத்தில் முன்னணியாக கலந்து கொண்ட மைக்கேல் என்ற இளைஞரையும், சட்ட ஆலோசகர் அரிராகவன் என்பவரையும் இன்று (18-01-2019) அதிகாலையில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இவர்களின் கைதுக்கான காரணமாக போலீசார் சொல்வது, ”ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று பிரசுரம் கொடுக்க தூண்டினார்கள், உதவினார்கள் என்பதுதான். தூத்துக்குடி போலீசாரின் இந்த செயலை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கார்ப்பரேட் ஸ்டெர்லைட் ஆட்சிதான் நடக்கிறது. ”தூத்துக்குடியில் மருத்துவமனை, கல்வி நிறுவனம், குடிநீர், வேலை வாய்ப்பு மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வசதி அனைத்தையும் செய்து தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து முதல் பக்கத்தில் தினசரி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னைக்கு மக்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய மக்களுக்கும் கட்சி இயக்கங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஸ்டெர்லைட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் போலீசார் அனுமதி அளிக்கின்றனர். எதிர்த்துப் பேசினால் கடுமையாக ஒடுக்குகின்றனர். ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகத்தான் தூத்துக்குடி போலீசும் மாவட்ட நிர்வாகமும் செயல்படுகிறது என குற்றம் சாட்டுகிறோம்.
திருவைகுண்டத்தில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி “ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது, 14 பேர் உயிர்த்தியாகம் வீண்போகலாமா?” என பிரசுரம் கொடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூவரை திருவைகுண்டம் போலீசு கைது செய்து சிறையிலடைத்தது. 15 நாட்களுக்குப் பின்னர் பிணை கிடைத்தது. ஒருமாதம் தினமும் போலீசு நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை பிணையில் வெளியே வந்தனர். பிரசுரம் கொடுத்தது குற்றம் என்று எந்த சட்டம் சொல்கிறது? இந்தப் பிரசுரத்தைக் கொடுக்க தூண்டியதாகதான் ஒப்புதல் வாக்கு மூலத்தில் பெயரை சேர்த்து இன்றைக்கு மைக்கேல், சந்தோஷ், அரிராகவனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் போலீசு ஆட்சிதான் நடக்கிறது.
“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் ஆலையை திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட். “14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது போலீசு. இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்.
இது தூத்துக்குடி பிரச்சினை மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரான போராட்டம். மக்களின், நாட்டின் இறையாண்மையை காக்கின்ற, இயற்கை வளங்களை சூறையாடுகின்ற மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடுகின்ற கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டம். எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த கைது நடவடிக்கைகள்.
தொடர்ச்சியாக மக்களுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் செயல்படும் தூத்துக்குடி எஸ்பி, கலெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா அவர்கள் கோடநாடு கொலைகளை, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக விபத்து, தற்கொலை என வழக்கை முடித்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் வலுத்து வருகிறது. எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும்.
ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய கார்ப்பரேட்டுக்கு உரிமை இருக்கிறதெனில், ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் எனப் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. உயிர்த்தியாகம் செய்து போராடி வரும் தூத்துக்குடி மக்களோடு அனைவரும் இணைய வேண்டும் என அழைக்கிறோம்.
நன்றி!
இப்படிக்கு வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
புத்தகத் திருவிழாவில் கூட்டமில்லை. அப்பளம்தான் அதிகம் விற்பனையாகிறது. இப்படி எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். “ஆமான்டா அப்பளம்தான்டா அதிகமா விக்கும். ஏன்னா அந்த அப்பளத்தைவிட….” என்று வாசகர்கள் திருப்பி திட்டுவதில்லை. அவர்கள் அத்தனை சாதுவானவர்கள். எழுத்தாளன் மீதிருக்கிற கோபத்தில் அம்பிகையே அபிராமியே என அப்பளத்தை வாங்கி கோபமாக இரண்டு கடிகடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வாயில்லா வாசகர்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம். என்றைக்கு தமிழ்வாசகன் அவன் காசு கொடுத்து வாங்கிய நூலை படித்து கடுப்பாகும்போது எழுத்தாளனை திரும்பத் தாக்கத்தொடங்குகிறானோ அன்றைக்குதான் தமிழ் எழுத்துலகம் வாழும். அதெல்லாம் நடக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை… ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.
முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.
அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பதிப்பகமே ரமேஷ் பப்ளிஷர் என நான்குகடை, சுரேஷ் பப்ளிஷர் என ஐந்து கடை, ராமேசுரேஷ் டிஸ்ட்ரிபூட்டர்ஸ் என பத்து கடை என கண்டமேனிக்கி ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். எங்கு சுற்றினாலும் ஒரே மாதிரியான நூல்களையே திரும்ப திரும்ப பார்க்கும் போது வாசகனுக்கு எவ்வளவு அலுப்பும் எரிச்சலும் வரும்… இப்படிப்பட்ட ப்ராக்ஸி கடைகளிலேயே போய்விட்டது 30 % !
அடுத்து ஒரே மாதிரியான புத்தகங்கள் விற்கிற ஜிகே கடைகள். இங்கெல்லாம் பொன்னியின் செல்வன், சத்திய சோதனை, தெனாலி ராமன் கதைகள், பீர்பால், சாண்டில்யன்… இப்படிப்பட்ட நூல்களை மட்டுமே விற்பார்கள். இங்கெல்லாம் ஆண்டுதோறும் ஒரு புதிய நூலைக்கூட போடமாட்டார்கள். வருடாவருடம் அதே செட்டு… அதே நூல்கள். ஒரு புதுமையும் இருக்காது. எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்கிற பிரச்னைகள் இல்லாமல் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து விற்கிற குரூப்கள் இவர்கள். இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு 15% தேறும்.
அடுத்து ஆங்கில நூல்கள் விற்பவர்கள். பென்குயின் தவிர பெரிய ஆங்கில பதிப்பகங்கள் சென்னை புத்தகத்திருவிழாவில் ஏனோ கால்வைப்பதில்லை. பெரும்பாலும் டூபாக்கூர் புக்ஸ் கம்பெனிகள்தான் களம்காண்கின்றன. எங்காவது பழைய கண்டெயினரில் பழைய நூலகத்தில் கழித்துக்கட்டின நூல்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்து எது எடுத்தாலும் 100 வகையில் விற்பார்கள். அதில் பத்து சதவீதம் கூட தேறுகிற நூல்களே இருக்காது. எல்லாமே 10 ரூபாய் கூட மதிப்பில்லாத நூல்களாக இருக்கும். இவ்வகை கடைகள் 5%
அடுத்து ப்ரமோஷன் கடைகள். தங்களுடைய பொருள்களை விற்பதற்காக, அல்லது பிரபலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற கடைகள். இங்கெல்லாம் நமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. புத்தகத்திருவிழாவுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் பத்து கடைகளை மொத்தமாக போட்டு… உள்ளே பத்து பேர் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நம்மை உள்ளே அழைத்து பலூனை கொடுத்து மண்டையை கழுவி எதாவது எஜூகேஷனல் சாப்ட்வேரை தலையில் கட்டுவார்கள். இதுமாதிரி கடைகள் ஒரு 5%
மீதி இருக்கிற 25% கடைகளில் நல்ல நூல்கள் கிடைக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதில் முக்கால்வாசி கடைகளில் புக்பேருக்கென்றே அவசரஅவசரமாக சரியாக எடிட் செய்யப்படாமல், பிழைகள் பார்க்காமல், சரியான ஆய்வுகளோ உழைப்போ இல்லாமல் அவசரகதியில் எழுதப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். 200 ரூபாய் கொடுத்து ஒரு வாசகன் புத்தகம் வாங்குகிறான், அவனுடைய பணத்துக்கு மதிப்புக்கொடுத்து அவனை கொஞ்சமாவது மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்கள் இவைகளில் சொற்பமாகத்தான் தேரும். அது எது எனக் கண்டுபிடித்து சொல்லவும் நம்மிடம் ஆட்கள் இல்லை. ஃபேஸ்புக்கில் தேடினாலும் கிடைக்காது. முகநூல் ஹிட் என சில நூல்கள் உண்டு… அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மட்டையடி அடித்து நம் தலையில் கட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தில் இந்த 25% கடைகளில் எதையோ ஒன்றை எடுத்துவந்து பத்து பக்கம் படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவோம்.
இப்படி ஒட்டுமொத்த புத்தகத்திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்பது கடைசிவரை உள்ளே சென்று திரும்புகிற வாசகனுக்கு மர்மமாகவே இருந்துவிடுகிறது. ஆண்டுதோறும் இதே செட்அப்தான், ஒரு புதுமையோ மாற்றமோ இருக்காது. அதே லிச்சி ஜூஸ், அதே புதிய கவிஞர்கள் படை, அதே காலச்சுவடு கிளாஸிக்ஸ், அதே காமிக்ஸ் கடை, அதே மேடை, அதே சுகிசிவம், அதே மனிதர்கள்…
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ, அவன்மீது எந்த பச்சாதாபமும் இல்லாமல் மொக்கையான சரக்குகளையும் அதிக விலைக்கு தலையில் கட்டி, மோசமான சூழலில் குடிக்க விட்டிருக்கிறார்களோ அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.
உலகெங்கிலும் நடக்கிற புத்தகத்திருவிழாக்களின் வீடியோக்களை யூடியூபில் தேடிப்பாருங்கள்… எப்படியெல்லாம் புதுமைகள் பண்ணுகிறார்கள். ஆங்கில நூல்களை வாங்கிப்பாருங்கள், அட்டை தொடங்கி கன்டென்ட் வரை எத்தனை உழைப்பு. ஒரு ஒரு ரூபாய்க்கும் மதிப்பு மிக்க நூல்களை போடுகிறார்கள்.
நம் புத்தகத் திருவிழா கடைகளில் கிரியேட்டிவிட்டி என்பது துளிகூட இருக்காது. போகட்டும் வசதிகளாவது இருக்கிறதா? கடையில் இருப்பவர்களுக்கும் நூல்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே ஒரு நூலை எடுத்து விவரித்து பரிந்துரை செய்யவும் பக்காவான ஆளில்லை. நல்ல நூல்களும் இல்லை. புதிதாக வருகிற சில நூல்களும் வாசகன் மீதான அக்கறையோடு எழுதப்படுவதில்லை…
இதையெல்லாம் தாண்டியும் இத்தனை கூட்டங்கள் வருடந்தோறும் வருவதும் நூல்கள் வாங்குவதும் கூட அதிசயிக்கதக்க அதிசயம்தான்… பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அந்த பாவப்பட்டவர்களுக்கு ரத்தினக்கம்பளமல்லவா விரிக்க வேண்டும்… அவனை பார்க்கிங்கில் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… யாசகனைப்போல!
கழனியெங்கும்
கார்ப்பரேட் பொங்குகிறது.
ரஜினி வந்து
கிழித்தது என்ன?
‘தல’ வந்து
தைத்தது என்ன?
ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதில் முதுகெலும்பு ஒடிந்து போன மகன், மருமகள், நான்கு பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் கூலி விவசாயி வேலு
இந்தப் பொங்கலுக்கு
உங்கள் சிறப்பு தள்ளுபடி
விவசாயம் – விவசாயி.
நிலம்
நழுவுகிறது
வேர்
அறுபடுகிறது.
ஊர்
சிதைகிறது.
ஆறு
பாதி புதைத்த
பிணமாக கிடக்கிறது,
கழுத்தை நெறித்தது
போதுமா?
கத்திப் பார்க்கலாம்…
பொங்கலோ! பொங்கல்!
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கி“அவர்கள் சொல்வதைக் கேள்” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான்.
“பியோதர் மாசின், பதில் சொல்லுங்கள்…” ”முடியாது. சொல்லமாட்டேன்” என்று துள்ளிக்கொண்டு கூறினான் பியோதர். அவனது முகம் சிவந்து போய்விட்டது. கண்கள் பிரகாசமடைந்தன: என்ன காரணத்தினாலோ அவன் தன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டிருந்தான்.
சிஸோவ் மூச்சடைத்துப் போனான். தாயின் கண்கள் வியப்பினால் அகலவிரிந்தன.
”எனக்காக வக்காலத்துப் பேச நான் வக்கீலை அமர்த்தவும் இல்லை: நான் எதுவும் சொல்லவும் மறுக்கிறேன். இந்த விசாரணையே சட்ட விரோதமானது என நான் மதிக்கிறேன். நீங்களெல்லாம் யார்? எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா? இல்லை. அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்!”
அவன் உட்கார்ந்தான், தனது கன்றிச் சிவந்த முகத்தை அந்திரேயின் தோளுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.
அந்தக் கொழுத்த நீதிபதி பிரதம நீதிபதியை நோக்கித் தலையை அசைத்து, காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். வெளுத்த முகம் கொண்ட நீதிபதி தம் கண்களைத் திறந்து, கைதிகளைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, முன்னாலுள்ள காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார். ஜில்லா அதிகாரி தலையை அசைத்தார், தமது காலை நீட்டி தொந்தியைத் தொடைமீது சாய்த்து, அதைக் கைகளால் மூடிக்கொண்டார். தனது தலையைத் திருப்பாமலே, அந்தக் கிழ நீதிபதி தமது உடம்பு முழுவதையுமே திருப்பி, அந்த வெளுத்தமுக நீதிபதியைப் பார்த்து அவரிடம் ஏதோ ரகசியம் பேசினார். அந்த உபநீதிபதி அவர் கூறியதை வணங்கிய தலையோடு காதில் வாங்கிக் கொண்டார். பிரபு வம்சத் தலைவர் அரசாங்க வக்கீலிடம் என்னவோ சொன்னார்; அதை நகர மேயரும் தம் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே கேட்டார். மீண்டும் அந்தப் பிரதம நீதிபதி மங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.
”அவன் அவர்களை வெட்டிப் பேசினான் பார்த்தாயா?” என்று தாயை நோக்கி வியப்போடு கூறினான் கிஸோவ். “அவன்தான் இவர்கள் எல்லோரிலும் கெட்டிக்காரன்’
அவன் சொன்னதைப் புரிந்துக்கொள்ளாமலேயே புன்னகை புரிந்தாள் தாய். அங்கு நடக்கும் சகல காரியங்களும், அவர்களையெல்லாம் கூண்டோடு நசுக்கித் தள்ளும் மகா பயங்கரத்துக்கான, வேண்டாத வீண் அறிகுறிகளே என்று அவள் கருதினாள். ஆனால், பாவெலும் அந்திரேயும் பேசிய பேச்சுக்கள் நீதிமன்றத்தில் பேசுவது போல் இல்லாமல், தொழிலாளர் குடியிருப்பில், தமது சிறிய வீட்டுக்குள் பேசிய பேச்சுப்போல் பயமற்றும் பலத்தோடும் ஒலித்தன. பியோதரின் உணர்ச்சிவசமான உத்வேகப் பேச்சைக் கேட்டு அவள் பரபரப்படைந்தாள். அந்த விசாரணையில் ஏதோ ஒரு துணிந்த காரிய சாதனை நடைபெறுவது போல் தோன்றியது. தனக்குப் பின்னாலுள்ள ஜனங்களைப் பார்த்தபோது, அவ்வித உணர்ச்சி தனக்கு மட்டுமே ஏற்படவில்லை. அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுகொண்டாள் தாய்.
”உங்கள் அபிப்பிராயம் என்ன?’ என்று அந்தக் கிழ நீதிபதி கேட்டார்.
அந்த வழுக்கைத் தலை அரசாங்க வக்கீல் எழுந்து நின்றார். ஒரு கையை மேஜை மீது ஊன்றியவாறே படபடவென்று புள்ளிவிவரங்களை அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார். அவரது பேச்சில் எவ்விதப் பயங்கரமும் இல்லை .
அதே சமயத்தில் ஏதோ ஒரு வறண்ட குத்தலான பயபீதி உணர்ச்சி தாயின் உள்ளத்திலே புகுந்து உறுத்தியது. கையை உயர்த்திக் காட்டாமல், வஞ்சம் கூறிக் கத்தாமல், ஆனால் அதே சமயத்தில் கண்ணுக்குத் தெரியாமல், புலனுக்கும் வசப்படாமல், குமுறி வளர்ந்து வரும் ஒரு வெம்பகை உணர்ச்சி அந்த நீதிமன்ற சூழ்நிலையிலே தொனித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தறிந்தாள். அந்தக் கொடும் பகை நீதிபதிகளின் முன்னிலையிலேயே வட்டமிட்டு அவர்களுக்கு வெளியில் நடைபெறும் காரியங்கள் எதுவும் அவர்கள் மனத்துக்குள் புகுந்துவிடாதபடி, அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து சூழ்ந்து காப்பி மூடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவள் அந்த நீதிபதிகளைப் பார்த்தாள்; அவர்களது பார்வையிலிருந்து அவளால் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் எதிர்பார்த்தது போல், அவர்கள் பாவெலின் மீதோ பியோதர் மீதோ கோபம் கொள்ளவில்லை. அவர்களை அவமானப்படுத்திப் பேசவில்லை. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கே அவர்கள் எந்த முக்கியத்துவமும் அளித்ததாகவும் தெரியவில்லை. அவர்களது குரல் விருப்பற்ற குரலாக ஒலித்தது. நமது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் அவர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் கேட்டுத் தீர்த்தார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள் போலவும் எல்லா விஷயத்தையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தவர்கள் போலவும் காணப்பட்டார்கள்.
இப்போது அவர்கள் முன்னால் ஒரு போலீஸ்காரன் வந்தான். ஆழ்ந்த குரலில் சொன்னான்:
“பாவெல் விலாசவ்தான் இவர்களில் பிரதம கிளர்ச்சிக்காரன் என்று சொல்லப்படுகிறது…”
“நயோத்காவைப் பற்றி என்ன?” என்று அந்த கொழுத்த நீதிபதி சோம்பலுடன் கேட்டார்.
“அவனும்…” ஒரு வக்கீல் எழுந்திருந்தார். ”நான் ஒரு வார்த்தை சொல்லலாமா?” என்று கேட்டார்.
“ஏதாவது மறுத்துக் கூறவேண்டுமா?” என்று பிரதம நீதிபதி கேட்டார்.
அத்தனை நீதிபதிகளும் ஏதோ நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவது போல் தாய்க்குத் தோன்றியது. அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் ஏதோ ஒரு சீக்கான அலுப்புணர்ச்சி பிரதிபலிப்பதுபோல் தோன்றியது. முகங்களும் அந்த அலுப்பையும் ஆயாசத்தையுமே பிரதிபலித்தன. அவர்களது உத்தியோக உடைகள், நீதிமன்றம், அரசியல் போலீஸ்காரர்கள், வக்கீல்கள், நாற்காலிகளில் உட்கார்ந்து கேள்வி கேட்பது, அதற்கு வரும் பதில்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியான தேவை – எல்லாவற்றையுமே அவர்கள் ஒரு நிர்ப்பந்தவசமான தொல்லையாகத்தான் கருதினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
தாய்க்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான்; பாவெலைப்பற்றியும் அந்திரேயைப்பற்றியும் தனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் உரத்தக் குரலில் நீட்டி நீட்டிப் பேசினான்.
”உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.
கைதிக்கூண்டுகளுக்குப் பின்னால் இருப்பவர்களை, அவர்களைப் பற்றிய பயமும் இல்லாமல், அவர்கள் மீது அனுதாபமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்த்தாள் தாய். அவர்கள் மீது அவள் அனுதாபம் கொள்ள முடியாது. அவள் மனதில் அவர்கள் வியப்புணர்ச்சியைத்தான் உண்டாக்கினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவளது உள்ளத்தில் ஓர் அன்புணர்ச்சி அலை பாய்ந்து சிலிர்த்துப் பரவியது. அந்த வியப்புணர்ச்சியோ அமைதியாயிருந்தது. அந்தப் பரவச ஆனந்தம் தெளிவோடிருந்தது. சுவருக்கு எதிராக அவர்கள் உறுதியோடும் இளமையோடும் உட்கார்ந்திருந்தார்கள். சாட்சிகளின் கிளிப்பிள்ளைப் பேச்சையும், நீதிபதிகளையும், சர்க்கார் வக்கீலோடு மற்ற வக்கீல்கள் பேசும் விவாதப் பேச்சுக்களையும், அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை, இடையிடையே அவர்களில் யாராவது ஒருவன் வெறுப்பாக சிரித்துக்கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து ஏதாவது கிண்டலாகச் சொல்வான். அந்தத் தோழர்களின் முகங்களும் அந்தக் கிண்டலைப் பிரதிபலித்துப் புன்னகை புரிந்தன. குற்றவாளிகளின் தரப்பில் பேசிக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரோடு, பாவெலும் அந்திரேயும் இடையிடையே ஏதேதோ மெதுவாகப் பேசினார்கள். அந்த வக்கீலை முந்தின நாள் இரவு நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்தாள்.
மற்றவர்களை விட உணர்ச்சிக்கு ஆளாகி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த மாசின் அவர்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். சமயங்களில் சமோய்லவ் இவான் கூஸெவைப் பார்த்து ஏதாவது பேசுவான். அதற்குப் பதிலாக இவான் தன் தோழனை முழங்கையால் இடித்துக் கொண்டே பொங்கி வரும் சிரிப்பை அடக்க முயலுவான். அந்த முயற்சியில் அவனது முகம் சிவந்து கன்னங்கள் கன்றிப் போகும்; உடனே அவன் தலையைக் கவிழ்த்துக் கொள்வான்; இருமுறை அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான். பிறகு, அவன் தன் சிரிப்பையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவாறு உட்கார்ந்திருந்தான். அந்தக் கைதிகள் ஒவ்வொருவரிடமும் இளமை பொங்கிப் பிரவாகித்தது. நுரைத்துப் பொங்கும் அந்தப் பிரவாகத்தைத் தடுக்க முயலும் சகல முயற்சிகளையும் அந்த இளமை இலாவகமாக எதிர்த்து ஒதுக்கியது.
“சிஸோவ் தாயின் முழங்கையை லேசாகத் தொட்டான். அவள் திரும்பினாள். மகிழ்ச்சியும், ஓரளவு பதைபதைப்பும் பிரதிபலிக்கும் அவனது முகத்தை அவள் கண்டாள்.
‘நமது இளவட்டங்கள் எவ்வளவு தைரியசாலிகளாகிவிட்டார்கள் என்று பார்” என்று மெதுவாகக் கூறினான் அவன். “பெரிய சீமான்கள்!”
நீதிமன்றத்தில் சாட்சிகள் உணர்ச்சியற்ற குரலில் அவசர அவசரமாகவும், நீதிபதிகளோ விருப்பமின்றியும் அக்கறையின்றியும் பேசிக்கொண்டேயிருந்தார்கள், அந்தக் கொழுத்த நீதிபதி தமது தடித்த கரத்தால் வாயை மூடிக்கொண்டு கொட்டாவி விட்டார். சிவந்த மீசை கொண்ட நீதிபதியின் முகம் மேலும் வெளுப்புற்றுப் போயிற்று. இடையிடையே அவர் தமது நெற்றிப் பொருத்துகளைக் கை விரலால் அழுத்திப் பிடித்துவிட்டவாறே, முகட்டை நோக்கி நிமிர்ந்து சிரமத்தோடு வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே எப்போதாவது அரசாங்க வக்கீல் பென்சிலை எடுத்து எதையாவது குறித்துக் கொள்வார். அதன் பிறகு, அவர் ஊமைக் குரலில் அந்த பிரபுவம்சத் தலைவரோடு தமது பேச்சைத் தொடங்குவார். அவரோ நரைத்த தாடியை நீவிக் கொடுத்தவாறு தமது அழகான பெரிய கண்களை உருட்டி விழிப்பார்; கழுத்தைக் கம்பீரமாக அசைத்துக்கொண்டே புன்னகை செய்வார். நகர மேயர் கால்மேல் கால் போட்டு, முழங்காலின் மீது கை விரல்களால் தாளம் போட்டுக்கொண்டு அந்தத் தாளத்தையே கவனித்துக்கொண்டிருந்தார். முழங்காலின் மீது தொந்தியைச் சரித்துத் தாங்கிக்கொண்டிருந்த அந்த ஜில்லா அதிகாரி அதை இருகையாலும் அன்போடு வாரித் தழுவிக்கொண்டிருந்தார். அவர் ஒருவர்தான் அந்த நச்சுப்பிடித்த சாட்சிகளின் முனகலையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அந்தக் கிழ நீதிபதியோ, காற்றடிக்காத திசையில் ஆடாது அசையாது நிற்கும் காற்றாடியைப்போல், இம்மிகூட அசையாது தமது நாற்காலிக்குள்ளேயே புதைந்து கிடந்தார். சுற்றுச்சூழ இருந்த ஜனங்கள் ஆயாசத்தால் அலுத்து மரத்துப்போகும் வரை இவையனைத்தும் நீடித்தன.
“நான் அறிவிக்கிறேன்…” என்று கூறிக்கொண்டே அந்தக் கிழவர் எழுந்து நின்றார். இந்த வார்த்தைகளுக்குப் பின் வந்த வார்த்தைகள் அவரது உதடுகளுக்குள்ளாகவே மடிந்து உள்வாங்கிப் போய்விட்டன.
நீதிமன்றம் முழுவதிலும் பெருமூச்சுக்களும், அமைதியான வியப்புக் கேள்விகளும், இருமலும், காலைத் தேய்க்கும் சப்தமுமே நிறைந்து ஒலித்தன. கைதிகளை வெளியே கொண்டுபோனார்கள். அவர்கள், தமது நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே புன்னகை புரிந்தார்கள். இவான்கூஸெவ் யாரையோ துணிந்து வாய்விட்டுக் கூப்பிட்டுவிட்டான்:
”பக்கத்துக் கடையிலே போய் ஒரு கப் தேநீர் சாப்பிடலாமா?” என்று சிஸோவ் அன்போடு கேட்டான். “இன்னும் நமக்கு ஒன்றரை மணி நேர அவகாசம் இருக்கிறது.”
“எனக்கு இப்போது தேநீர் தேவையில்லை.”
‘எனக்கும்தான் தேவை இல்லை. அந்தப் பையன்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? இவ்வுலகத்திலேயே அவர்கள் மட்டும்தான் இருப்பது போலல்லவா, அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்? மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அந்த பியோதரைப் பார்!”
சமோய்லவின் தந்தை அவர்கள் அருகில், தொப்பியைக் கையில் பிடித்தவாறே வந்து சேர்ந்தான்.
”என் கிரிகோரியைப் பார்த்தீர்களா?” என்று கசந்த புன்னகையோடு கூறினான் அவன், “அவன் எதிர்வாதம் செய்யவும் மறுத்துவிட்டான்; அவர்களோடு பேசவே அவன் விரும்பவில்லை. முதன்முதல் அவனுக்குத்தான் இந்த யோசனை எட்டியிருக்கிறது. பெலகேயா, உன் மகனோ வக்கீல்களை வைத்து நடத்திப் பார்ப்பதற்குச் சம்மதித்திருக்கிறான். இவனோ எதற்கும் முண்டியதில்லை. அதன் பிறகு நாலுபேர் இவனைப்போலவே மறுத்துவிட்டார்கள்.”
அவனது மனைவி அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். கண்ணில் பொங்கும் கண்ணீரை அடக்க எண்ணி அவள் கண்ணை மூடி மூடி விழித்தாள், கைக்குட்டையால் நாசியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
சமீப காலங்களில் புதிய பிம்பங்கள் தோன்றுவது அதிகரித்து வருகிறது. கவலை வேண்டாம், உடைபடும் பிம்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளன. முன்பொரு காலத்தில் (ஓராண்டுக்கு முன்பு வரை) சினிமா பார்க்கச் செல்பவர்கள் யூ-டியூப் விமர்சகர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் செல்வோம் என நினைத்தார்கள்.
இதை பயன்படுத்திக் கொண்டு சினிமா கார்ப்பரேட்டுகளிடம் டீலிங் பேசுவதில் இருந்து விமர்சனங்களுக்கு இடையே ஆணுறை விற்பது வரை முன்னேறினார் பிரசாந்த் என்ற பாண்டா. மற்றவர்களும் இதற்குச் சளைக்கவில்லை. விளைவு? அவர்களின் “சினிமா விமர்சன” வீடியோக்களின் மறுமொழிப் பக்கங்களில் மக்கள் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஊடக நெறியாளர்களும், விவாதங்களில் போர்த்திக் கொண்டிருந்த “நடுநிலை” ஆடைகளைக் களைந்து அம்மணமாக நிற்கத் துவங்கியுள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சனவரி 14-ம் தேதி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் கேள்வியையும் தெரிவுகளையும் பாருங்கள்:
கேள்வி : அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால்?
தெரிவு 1 : திமுக-காங் கூட்டணி வீழும்
தெரிவு 2 : பாஜக இல்லாவிட்டால் வெல்லும்
தெரிவு 3 : கடுமையான போட்டி உருவாகும்
தெரிவு 4 : வெற்ற பெற முடியாது.
மேற்கண்ட தெரிவுகளை மேலோட்டமாக பார்த்தாலே தெரியும். இரண்டு தெரிவுகளில் அதிமுகவுடன் சேர்த்து பா.ஜகவுக்கு சொம்பு தூக்குவதாகவும் ஒன்று தனிச்சிறப்பாக அதிமுகவுக்கு சொம்பு தூக்குவதாகவும் உள்ளன. கடைசியில் உள்ள ஒரே ஒரு தெரிவு மட்டும் பொத்தாம் பொதுவாக எதிர்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த “பொத்தாம் பொதுவான” தெரிவின் கீழ் தினகரன், திமுக, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் வருகின்றன. ஒரு சம்பிரதாயத்திற்காக கூட குறிப்பான எதிர்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் ஒதுக்கப்படவில்லை.
கொடநாடு விவகாரம் நாற்றமடிக்கத் துவங்கியுள்ள நிலையில் நியூஸ்7, நியூஸ்18, புதிய தலைமுறை, தந்தி டிவி உள்ளிட்ட ‘நடுநிலை’ செய்திச் சேனல்கள் ஒரு வித ஆழ்ந்த மோனநிலைக்குச் சென்றுள்ளன. அச்சு ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தின் நிலை இதுவென்றால் அகில இந்திய அளவில் ஊடகங்கள் மோடி சேவகத்தில் ஒரு புதிய வெறியுடன் களமாடி வருவதை அம்பலப்படுத்துகின்றது ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை
கடந்த இருபதாண்டு காலத்தில் நடந்த தேர்தல்களை ”லோக்நீதி – வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம்” (Lokniti-Centre for the Study of Developing Societies) என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதன் படி செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியின் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் தொலைக்காட்சியே செய்திகளை அறிந்து கொள்வதற்கான முதன்மை ஆதாரம். சுமார் 46 சதவீதம் பேர் தொலைக்காட்சியின் மூலமும், 26 சதவீதம் பேர் செய்தித்தாள்களின் மூலமும் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். இணையத்தின் மூலம் செய்திகளை அறிந்து கொளவது இன்னமும் வளரும் நிலையில்தான் உள்ளது.
பெவ் ஆய்வு மையம் (Pew Global Attitudes) 2017-ம் ஆண்டு நடத்திய மற்றொரு ஆய்வு சுமார் 16 சதவீத இந்தியர்கள் இணையத்தின் வழியே செய்திகளை அறிந்து கொள்வதாக தெரிவிக்கின்றது. இதில் பெரும்பான்மையாக படித்த இளைஞர்களும், வசதி படைத்தவர்களும் குறிப்பாக ஆண்களுமே இருப்பதாக அந்த ஆய்வு முன்வைக்கின்றது.
லோக்நிதி அமைப்பு 306 பாராளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இதன்படி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 31.1 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் ஊடகங்களின் மூலம் செய்திகளை அறிந்து கொள்வோரில் சுமார் 39 சதவீதம் பேர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர். அதே வேளை ஊடக வெளிச்சத்தில் இல்லாதவர்களில் 27 சதவீதம் பேர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர்.
மேலும் ஊடகச் செய்திகளை அதிகம் நுகர்வோர் மத்தியில் பா.ஜ.க முன்வைத்த குஜராத் மாடல் சிறப்பாக எடுபட்டுள்ளது. இதில் குறிப்பாக இணையத்தின் வழியே செய்திகளை நுகர்ந்தவர்களிடையே பாரதிய ஜனதாவுக்கு மிக அதிக செல்வாக்கு இருந்தது தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதாவின் முதன்மை ஓட்டு வங்கியான நகர்ப்புற மேட்டுக்குடியினர் மற்றும் ஆதிக்கச் சாதியினர் மிக அதிக சதவீதத்தில் செய்திகளை நுகர்பவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஆங்கில செய்திச் சேனல்களை விட பிராந்திய செய்திச் சேனல்களுக்கு சுமார் 100 மடங்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும் இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில் பிற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடு ஒப்பிடும் போது நரேந்திர மோடிக்கு நான்கில் மூன்று பங்கு அளவுக்கு கவரேஜ் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் (மோடியின் ஆட்சிக் காலத்தில்) இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. மேலும் செய்திகளின் மூலம் அரசியல் ரீதியிலான கருத்துருவாக்கம் செய்யும் போக்கும் பிற நாடுகளை விட இந்தியாவில் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்தப் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வருவது என்ன?
மோடி என்கிற இரட்சகரை கூலிப் பிரச்சாரங்களின் மூலம் நிலைநாட்டியதோடு கடந்த ஐந்தாண்டுகளில் அவரது ஆட்சியின் அனைத்து தவறுகளுக்கும் முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்துள்ளன ஊடகங்கள். குறிப்பாக இந்துத்துவாவின் ஆதரவுப் பிரிவினரான ’உயர்’சாதியினர், மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினரின் மூளைகளில் மேலும் மேலும் காவி நஞ்சை செலுத்தி அவர்களை வீரிய ஒட்டுரக இந்துத்துவ பைத்தியங்களாக உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. எனவேதான் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் தமிழிசை சொல்வது போல் ஒரு ”வெற்றிகரமான தோல்வி” எனும் நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது – அதன் வாக்கு சதவீதம் கணிசமாக வீழ்ச்சியடையாமல் பாதுகாத்துள்ளது.
இந்துத்துவத்தின் அரசியல் தோல்வி என்பதை தேர்தல் அரசியலின் வரம்புக்குள் மட்டும் நின்று பரிசீலிப்பதில் இருக்கும் சிக்கலை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் செயல்படுவதற்கும் நிலைத்து நிற்பதற்கான ஒரு செயற்களத்தை (Ecosystem) உருவாக்குவதற்கு அகில இந்திய அளவில் ஊடகங்கள் துணை புரிந்துள்ளன. அதைக் கீழிருந்து நிலைநாட்டுவதில் இந்துத்துவ கும்பல் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஈட்டியுள்ளன. இதன் மூலம் பரந்துபட்ட நடுத்தர வர்க்க மக்கள் பார்ப்பன பொதுபுத்தியின் அடிப்படையில் சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அரசியலின் வரம்பைத் தாண்டி இந்த விச சூழலை அறிவுத்தளத்திலும் களத்திலும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு போராடி வீழ்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
”மண உறவை மீறிய பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டால், குடும்பம் என்ற நிறுவனமே நொறுங்கிவிடும். இது ஒழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கும். இந்தியப் பண்பாட்டின்படி திருமணம் என்பது புனிதமானது. அந்த புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், தனித்துவம் வாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாக்கும் பொருட்டும்தான் மக்கள் பிரதிநிதிகள் இந்த சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் இ.த.ச. 497-ஐ ரத்து செய்யக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது மோடி அரசு.
திருமணமும் குடும்பமும் இந்தியாவில் மட்டும் நிலவும் பண்பாடுகள் அல்ல. பெண்ணின் காதலையும் பாலியல் உரிமையையும் கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்கமும் உலகெங்கும் நிலவுவதுதான். மண உறவை மீறிய பாலுறவை குற்றமாகக் கருதும் ஆணாதிக்கச் சட்டங்களும் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றன. அப்படியானால், இதில் இந்திய சமூக கட்டமைப்புக்கே உரிய தனித்துவம் என்று மோடி அரசால் வலியுறுத்தப்படுவது எது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி.
ஆணாதிக்கத்துடன் இணைந்திருக்கும் சாதிய அகமண உறவு என்கிற, பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம்தான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய இந்திய தனித்துவம்’’.
”தனது கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் ஒரு பெண் உறவு வைத்துக் கொள்வதற்கு, அவளுடைய கணவன் நேரடியாக ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. சாடைமாடையான ஒப்புதலை அளித்திருந்தால் கூட, அந்த உறவு தண்டிக்கத்தக்க குற்றமல்ல” என்று கூறுகிறது இ.த.ச. 497. ( if there is consent or connivance of the husband of a woman who has committed adultery, no offence can be established.)
”பிள்ளை இல்லாமல் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலை முறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி.
தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பதுதான் மாதொருபாகன் நாவலில் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை.
ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மறைந்த எம்.எஸ்.கோல்வால்கர்.
”எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது… இதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது” என்கிறார் கோல்வால்கர், (ஆர்கனைசர், ஜனவரி-2,1961, பக்கம்-5)
மதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுக்கம், மரபு என்பவைதான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய “இந்திய தனித்துவம்’’. இவற்றுக்கு எதிராக, தனிநபரின் உரிமை, கவுரவம், அந்தரங்கம், சமத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அரசியல் சட்ட ஒழுக்கத்தை (constitutional morality) இத்தீர்ப்பு முன்நிறுத்துவதால், சமூக ஒழுங்கு குலைந்துவிடும் என்பதுதான் மோடி அரசு நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய குமுறல்.
♦ ♦ ♦
”திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, மதப்புனிதம் சார்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு பெண் தன் உடல் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது” என்பதுதான் இ.த.ச. 497 ஐ ரத்து செய்கின்ற இந்தத் தீர்ப்பின் மையக்கருத்து.
ஆனால், வல்லுறவு குற்றம் தொடர்பான இ.த.ச பிரிவு 375, ”மனைவியின் வயது 15-க்கு குறைவாக இல்லாதவரை, அந்தப் பெண்ணுடன் கணவன் கொள்ளும் பாலுறவை வல்லுறவு என்று கருதமுடியாது” என்று கூறுகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் இ.த.ச. 497 குறித்து வழங்கியிருக்கும் தீர்ப்பை இ.த.ச. பிரிவு 375 மறுதலிக்கிறது.
சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ”மண உறவில் நிகழும் வல்லுறவு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டால், திருமணம் என்ற நிறுவனமே தகர்ந்து விடும் என்றும், இத்தகைய சட்டம் ஆண்களைத் துன்புறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும் என்றும்” வாதிட்டது மோடி அரசு.
”மண உறவில் மனைவியின் மீது கணவன் நிகழ்த்தும் வல்லுறவு’’ (Marital Rape) நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் புகழ்மிக்க பாரதப் பண்பாட்டின்படி’’, திருமணம் என்பது வல்லுறவு கொள்வதற்கு ஆணுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு. வல்லுறவுக்கான பரிகாரமாகவும், தண்டனையாகவும் கூட திருமணம் பரிந்துரைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். திரைப்படங்களும் மரத்தடி பஞ்சாயத்துகளும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களுமே இதைச் செய்கின்றன.
பெண்ணுக்கு தன் உடல் மீது உள்ள உரிமையை உத்திரவாதம் செய்யும் தீர்ப்பை செப். 27-ம் தேதியன்று வழங்கியது உச்ச நீதிமன்றம். அத்தகைய உரிமை ஒரு தலித் பெண்ணுக்கு கிடையாது என்று நிலைநாட்ட அக்டோபர் மாதம், சிறுமி ராஜலட்சுமி கொல்லப்பட்டாள். நந்தீஷும் சுவாதியும் நவம்பர் மாதம் கொல்லப்பட்டனர். இவை சாதி வெறியர்கள் எழுதிய தீர்ப்புகள். அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” என்று அமித்ஷா சொன்னது சபரிமலை தீர்ப்புக்கு மட்டும் பொருந்துவது அல்ல.
ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
ஓசூருக்கு அருகில் சானமாவை அடுத்துள்ள பீர்ஜேப்பள்ளி என்கிற கிராமத்தில் கடந்த ஜனவரி-13 அன்று காலை வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் தாக்குதலில் பலத்தக் காயங்களுடன் உயிர்த்தப்பியிருக்கிறான் லோகேஷ் என்ற சிறுவன். அக்கிராம மக்கள் மேற்கண்ட துணிச்சலான நடவடிக்கையின் காரணமாக உயிர்த்தப்பிய லோகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
இந்த சம்பவம் என்றில்லை, சமீபகாலமாக தொடர்ச்சியாக இது போன்று காட்டு யானைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், வனத்துறையின் சார்பில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியும் ஓசூர் – தர்மபுரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள். கோரிக்கையை பரிசீலிக்கிறோம், விரைவில் ஏற்பாடு செய்கிறோம், என்று பொதுவான வாக்குறுதிகளைக்கூறி வழக்கம்போல கூட்டத்தை கலைத்தது போலீசும் வனத்துறையும்.
விவசாயி வெங்கடேஷ்.
‘’ஒரு மாதத்திற்கு முன் நம்ம பக்கத்து ஊரை சேர்ந்த விவசாயி 55 வயதுடைய செல்வப்பா என்பவரை அவரது வீட்டிற்கே வந்து வீட்டு வாசலில் வைத்தே யானை மிதித்து கொன்றுப்போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒருமுறை யானைகள் வந்து ஒரு ஐந்து பேரை தூக்கி வீசிப்போட்டது. ரெண்டு நாளைக்கு முன்ன கூட, பக்கத்து ஊரில் வயசு பையன் ஒருத்தனை யானை மிதிச்சி மீண்டு வந்திருக்கான். இப்பவெல்லாம் தினம்தோறும் யானைகள் தொந்தரவு அதிகமாகிவிட்டது.’’ என்கிறார், சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்.
‘’ஐந்து வருடங்களுக்கு முன் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் ஓரிரு யானைகள் என்ற வகையில் வந்து தொந்தரவு செய்து எங்களது விவசாயத்தை நாசம் செய்து வந்தது. அதிலிருந்து ஓரளவிற்கு தப்பிக்க ராவும்பகலுமாக காவல் காத்துக் கொண்டோம். இப்பெல்லாம் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவ்வாறு தனியே வருவதில்லை. கூட்டம் கூட்டமாகவே வருகிறது. ஊரே திரண்டு வந்து விரட்ட வேண்டியதாகிறது.
வனத்துறையினரிடம் ஆயிரம் முறை முறையிட்டும் அவர்கள் யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை… ஆயிரம் முறை மனுக் கொடுத்தும் ஒரு பிரயோசனமும் இல்லை… நாங்கதான் மக்கள் எல்லாம் இளைஞர்கள் எல்லாம் திரண்டுவந்து இந்த யானைகளை விரட்டி வருகிறோம்.
சிறிய அளவில்கூட விவசாயம் செய்யமுடியல. கிணத்துல தண்ணியெல்லாம் இருந்தும் எங்களால் பயிர் செய்யமுடியல. நாங்களே சாப்பிடக்கூட விவசாயம் செய்துக்கொள்ள முடியவில்லை.‘’ என்கின்றனர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.
விவசாயி சங்கரப்பா.
‘’முன்பு கடலைக்காய், பீன்ஸ், கேரட், சவ்சவ், கோசு, நெல், ராகி, சோளம், தக்காளி என பயிர்செய்துவந்த நாங்கள் இப்போது வேறுவழியின்றி கீரைவகைகளை மட்டுமே பயிர் செய்துவருகிறோம். அதையும் விட்டுவைப்பதில்லை மிதித்து துவைத்து நாசம் செய்துவிடுகிறது’’ என கண்ணீர் வடிக்கிறார், மற்றொரு விவசாயியான சங்கரப்பா.
மேலும், ‘’மக்கள் திரண்டு இதுமாதிரி போராடினால்தான் அப்போதைக்கு ஒரு இரண்டுபேரை வனத்துறையினர் என்று சொல்லி கார்டுகளை நியமிக்கிறார்கள். அந்த இருவரையும் நாங்கள்தான் பராமரிக்கவேண்டும். அவர்களிடம் ஒரு துப்பாக்கிப் போன்ற நவீன ஆயுதங்களோ எதுவும் தரப்படுவதில்லை. பாவம் அவர்களையே நாங்கதான் எங்க மக்களில் ஒருவராக பாதுகாக்கிறோம்.’’ என்கின்றனர்.
1 of 5
சேதமான போர்வெல்.
சேதமான நீர் பைப்புகள்.
பத்திரிகை செய்தி.
‘’கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது வனத்துறை. விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா?’’ என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.
‘’ஊருக்குள் இருந்த நிலங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டுதான் என் மகள்கள் நான்கு பேரை நான் கட்டிக்கொடுத்துவிட்டு, இப்ப இந்த ரோட்டோரம் ஒரு வீடு வாங்கி வந்து குடியேறியிருக்கிறேன். எல்லோரும் என்னைப்போல செய்யமுடியுமா? நிறையபேர் இந்த நிலம் – வீட்டோடவே எங்களது உயிர் போகட்டும் என்று இருக்கிறார்கள்’’ என்கிறார், விவசாயி வெங்கடேஷ்.
‘’எனக்குத் தெரிந்து இந்தப் பகுதிகளில் நிறைய கிரானைட் கம்பெனிகள் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன. ஆளுயரத் தடுப்புச் சுவர்களையும் எழுப்பியிருக்கின்றனர். சூழலியல் மாறுபாடுகள் ஒருபுறமிருக்க, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும்; தொடர்ந்து வனங்களின் அடர்த்திக் குறைந்து வருவதும் பிரதான காரணங்களாக இருக்கின்றன.’’ என்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த தோழர் ஒருவர்.
‘’யானைகளுக்குத் தேவையான குடிநீர் குட்டைகள் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் எடுக்க வேண்டும். யானைகள் செல்லும் வகையில் இயற்கை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியைச் சுற்றி கல்சுவர், கம்பி வலை அமைக்க வேண்டும். போதுமான அனுபவமும் பயிற்சியும் பெற்ற வனக்காவலர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.’’ என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், அக்கிராம மக்கள்.
இயற்கையாக வாழ முடியாத போதே யானைகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. நாட்டு மக்களையே வாழ விடாத இந்த அரசு, காட்டு யானைகளை மட்டும் வாழ வைத்துவிடுமா என்ன?
மாக்சிம் கார்க்கிஅவளது பயம் ஒரு துர்நாற்றம் போல் அவளது தொண்டையில் கமறியெழுந்து அவளைத் திணறச் செய்தது. விசாரணை தினத்தன்று. தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் மனப்பாரத்தைச் சுமந்துகொண்டுதான் தாய் நீதிமன்றத்துக்குச் சென்றாள்.
தெருவெல்லாம் சுற்று வட்டாரத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து வந்தது. அவளுக்கு அறிமுகமான பல தொழிலாளர்கள் அவளை வரவேற்றார்கள். அவள் வாய்திறந்து எதுவும் பேசாமல் அவர்களுக்குத் தலை வணங்கிக் கொண்டே அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து சென்றாள் நீதி மன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள நடை வழிகளிலும் விசாரணைக்கைதிகளின் உறவினர்கள் கூடிக் குழுமி, தணிந்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு தாய்க்கு அபரிமிதமாகப்பட்டது, அவளுக்கு அது புரியவில்லை . எல்லோரும் ஒரே மாதிரியான சோகத்துக்கு ஆளாகி நின்றார்கள். தாயும் இதை அறிந்திருந்தாள்; அதனால் அவளுக்கு மனப்பாரம்தான் அதிகமாயிற்று.
“என் பக்கத்திலே உட்கார்” என்று ஒரு பெஞ்சில் ஒதுங்கி இடம் கொடுத்துக்கொண்டே கூறினான் சிஸோவ்.
அவள் பணிவோடு உட்கார்ந்து, தன் உடுப்பைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது கண்முன்னால் பச்சை, சிவப்புப் புள்ளிகளும், கோடுகளும், மஞ்சள் நாடாக்களும் நடனமிட்டன.
”எங்கள் கிரிகோரியை உன் மகன்தான் இதில் இழுத்து விட்டுவிட்டான்” என்று அவளுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெண் முனகினாள்.
”வாயை மூடு, நதால்யா!” என்று கோபத்தோடு சொன்னான் சிஸோவ்.
தாய் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அவள் தான் சமோய்லவின் தாய். அவளை அடுத்து அவள் கணவன் உட்கார்ந்திருந்தான். சுமூகமான தோற்றமும், மெலிந்த முகமும், வளர்ந்து பெருகிய சிவந்த தாடியும் வழுக்கைத் தலையுமாகக் காட்சியளித்த அவன் தன் கண்களை நெரித்து ஏறிட்டுப் பார்த்தான்; உள்ளுக்குள் பட்டுக்கொண்டிருந்த சிரமத்தால் அவனது தாடி நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
வெளிப்புறத்திலிருந்து பனி படிந்துள்ள உயர்ந்த ஜன்னல்களின் வழியாக, மங்கிய ஒளி மயக்கம், நீதி மன்றத்துக்குள்ளே பரவி ஒளி செய்தது. ஜன்னல்களுக்கு மத்தியில் அலங்காரமான முலாம் சட்டத்தில் அமைந்த ஜார் அரசனின் சித்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் இருபுறத்தையும் கருஞ்சிவப்பான ஜன்னல் திரைகள் மடிமடியாகத் தொங்கி மறைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சித்திரத்துக்கு முன்னால் பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜை அந்த ஹாலின் அகலம் முழுவதையுமே வியாபித்துக்கொண்டிருந்தது. கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால், வலதுபுறச் சுவரையொட்டி இரண்டு மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இடது புறத்தில், கருஞ்சிவப்பு, துணிவைத்துத் தைக்கப்பட்ட கைநாற்காலிகள் இரு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தங்க நிறப் பித்தான்களைக் கொண்ட பச்சை உடுப்புக்கள் அணிந்த கோர்ட்டுச் சேவகர்கள் வாய் பேசாது முன்னும் பின்னால் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அந்த மப்பும் மந்தாரமும் நிறைந்த சூழ்நிலையில் உள்ளடங்கி ஒலிக்கும் பேச்சுகளும், பற்பல மருந்துகளின் கார நெடியும் கலந்து நிறைந்தன. இவையெல்லாம் – இந்த வர்ண பேதங்கள், பிரகாசம், குரல்கள், நெடி எல்லாம் – கண்ணையும் காதையும் உறுத்தின; சுவாசத்தோடு இதயத்தில் புகுந்து அர்த்தம் ஒன்றுமற்ற பய வேதனையை நிரப்பின.
திடீரென யாரோ உரத்தக் குரலில் பேசினார்கள். தாய் திடுக்கிட்டாள். எல்லோரும் எழுந்து நிற்பதைக் கண்டு அவளும் சிஸோவின் கையைப் பற்றிப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.
இடதுபுறமாக இருந்த ஒரு பெரிய கதவு திறந்தது மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதர் ஆடியசைந்து கொண்டு உள்ளே வந்தார். அவரது சாம்பல் நிறக் கன்னங்களில் மெல்லிய வெள்ளையான கிருதாக்கள் அசைந்து கொடுத்தன. மழுங்கச் செய்யப்பட்ட அவரது மேலுதடு பற்களேயற்ற வாய் ஈறுக்குள் மடிந்து போயிருந்தது. அவரது மோவாயும் தாடையும் அவரது உத்தியோக உடுப்பின் உயர்ந்த காலர்மீது சாய்ந்து கழுத்தே இல்லாதது போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. கொழுத்துத் திரண்ட நெட்டையான வெள்ளை மூஞ்சி இளைஞன் ஒருவன் கை கொடுத்து அவரை மேலேற்றிவிட்டான். அவர்களுக்குப் பின்னால் தங்க நிறக்கரை வைத்துத் தைத்த உத்தியோக உடைகளோடு மூன்று பேர் வந்தார்கள், சாதாரண உடையணிந்து மூன்று பேர் வந்தார்கள்.
அந்த நீண்ட மேஜை முன்னால் அவர்கள் உட்கார்ந்து முடிப்பதற்கே வெகு நேரம் பிடித்தது. அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மழுங்கச் சவரம் செய்து வழவழப்போடு விளங்கும் சோம்பல் முகமுள்ள ஒரு மனிதன் அந்த வயோதிகரின் பக்கம் குனிந்து தனது தடித்த உதடுகளை என்னவோ போல அசைத்துக்கொண்டு, ரகசியமாக ஏதோ சொல்லத் தொடங்கினான். அந்தக் கிழவர் நிமிர்ந்து அவன் கூறுவதை அசையாமல் கேட்டார். அவரது கண்ணாடிக்குப் பின்னால், இரு சிறு புள்ளிகள் மாதிரி தோன்றும் உணர்ச்சியற்ற கண்களைத் தாய் கண்டாள்.
அந்த மேஜையின் ஓரமாகக் கிடந்த எழுதும் சாய்வு மேஜைக்கு அருகே ஒரு நெட்டையான வழுக்கைத் தலை ஆசாமி நின்று கொண்டிருந்தான்; அவன் தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டே தஸ்தாவேஜுக்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
அந்தக் கிழவர் முன்புறமாகக் குனிந்து பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவரது பேச்சு தெளிவாக ஒலித்தது; அப்புறம் அந்தப் பேச்சு அவரது மெல்லிய உதடுகளுக்குள்ளாக மடிந்து உள்வாங்கிப் போய்விட்டது.
”விசாரணை தொடங்குகிறேன் …. அவர்களைக் கொண்டு வாருங்கள்…”
”பார்’ என்று தாயை முழங்கையால் இடித்து நிமிர்ந்து நின்றவாறே மெதுவாகச் சொன்னான் சிஸோவ்.
கைதிக் கூண்டுக்குப் பின்புறமுள்ள கதவு திறந்தது. பளபளக்கும் வாளைத் தோளில் சாத்தியவாறே ஒரு சிப்பாய் வந்தான், அவனைத் தொடர்ந்து பாவெல், அந்திரேய், பியோதர் மாசின் கூஸெவ் சகோதரர்கள். சமோய்லவ், புகின், சோமவ் முதலியோரும். தாய்க்கு அறிமுகமில்லாத ஐந்து இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள். பாவெல் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அந்திரேய் பல்லைக் காட்டி, தலையை ஆட்டினான். அவர்களது புன்னகையும், உற்சாகம் நிறைந்த முகங்களும், அசைவுகளும் அந்த நீதிமன்றத்தின் உம்மணா மூஞ்சிச் சூழ்நிலையை மாற்றி அதைத் தளரச் செய்தது. உத்தியோக உடுப்புகளின் பொன்னொளி ஜாலம் மங்கிப் போயிற்று. தைரியம் மீண்டும் தாயிடம் குடிபுகுந்தது. அந்தக் கைதிகள் தம்மோடு கொணர்ந்த அமைதியான தன்னம்பிக்கையும் ஜீவ சக்தியும் அவளுக்கு வலுவூட்டின. அவளுக்குப் பின்னுள்ள பெஞ்சிகளில், இத்தனை நேரமும் சோர்ந்து அசந்து போய் நின்ற மக்கள். தங்களுக்குள் குசுகுசுத்துப் பேசத் தொடங்கினார்கள்.
“முதலிலேயே நான் உங்களை எச்சரித்து விட வேண்டும்…” என்று சொன்னார் அந்தக் கிழவர்.
முன்னாலுள்ள பெஞ்சியின் மீது பாவெலும் அந்திரேயும் ஒருவர் பக்கம் ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களோடு மாசின், சமோய்லவ். கூஸெவ் சகோதரர்கள் முதலியோரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்திரேய் தன் தாடியை எடுத்துவிட்டிருந்தான், ஆனால் மீசையை மட்டும் வளரவிட்டிருந்தான். அந்த மீசை வளர்ந்து படிந்து அவனது உருண்டை முகத்தைப் பூனை முகம் மாதிரி காட்டிக்கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. கூர்மையும் குத்தலும் நிறைந்த பாவம் அவனது முகத்தில் தோன்றியது. கண்களில் ஏதோ ஒரு கருமை தென்பட்டது. மாசினுடைய மேலுதட்டில் இரு கரிய கோடுகள் காணப்பட்டன. அவனது முகம் உப்பி உருண்டு கொண்டிருந்தது. சமோய்லவின் சுருட்டைத் தலை எப்போதும் போலவே இருந்தது. இவான் கூஸெவ் பல்லைக் காட்டிச் சிரித்தான்.
”ஆ பியோதர் பியோதர் என்று தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தான் கிஸோவ்.
அந்தக் கிழவர் தமது உத்தியோக உடுப்பின் காலருக்குள் அசையாமல் புதைந்து கிடந்த தலையைக் கொஞ்சம் கூட அசைக்காமல், நிமிர்ந்தும் பார்க்காமல் கைதிகளைப் பார்த்து ஏதேதோ கேள்வி கேட்டார், அந்தத் தெளிவற்ற கேள்விக் குரலைத் தாயும் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும் தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அந்த நீண்ட மேஜைக்கு எதிரே இருந்தவர்களின் முகத்தைப் பார்த்து விசாரணையின் முடிவை அவள் ஊகிக்க முயன்றாள்; அவளது ஊகத்தால், அவளது இதயத்தினுள்ளே ஒரு நம்பிக்கை வளர்ச்சி பெற்று ஓங்குவதை அவள் உணர்ந்தாள்.
ஒரு வெள்ளை முக ஆசாமி ஒரு தஸ்தாவேஜை உணர்ச்சியற்று ஒரே குரலில் வாசித்தான். மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் மாதிரி அதைக் கேட்ட ஜனங்கள் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார்கள். விசாரணைக்காக நிற்பவர்களைப் பார்த்து, நாலு வக்கீல்கள் உணர்ச்சியோடும் அமைதியோடும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அசைவுகள் பலமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன. அவர்கள் பெரிய கரும் பறவைகளைப்போல் தோன்றினார்கள்.
“நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”
அந்தக் கிழ நீதிபதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஒரு கொழுத்த உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவரது சிறு கண்கள் கொழுத்த சதைப் பகுதிக்குள் புதைந்து போயிருந்தன. இன்னொரு கைப் பக்கத்தில் கூனிய தோள்களும் வெளுத்த முகமும், சிவந்த மீசையும் கொண்ட இன்னொரு உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவர் தமது தலையைச் சோர்வோடு நாற்காலியின் பின்புறம் சாய்த்து கண்களைப் பாதி மூடியவாறே சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசாங்க வக்கீலும் களைப்புணர்ச்சியோடும் எரிச்சலோடும் இருப்பதாகத் தோன்றியது. நீதிபதிகளுக்குப் பின்னால் மூன்று முக்கிய பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவர் நகரத்து மேயர் – அவர் கனத்துத் தடித்த ஆசாமி; அவர் தமது கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பிரபு வம்சத் தலைவர் – நரைத்த தலையும் சிவந்த கன்னமும் நீண்ட தாடியும், கவர்ச்சிகரமான விசாலமான கண்களும் கொண்டவர் அவர். அடுத்தாற்போல் ஜில்லா அதிகாரி இருந்தார். பெரிய தொந்தியுள்ள ஆசாமி அவர். தொந்தி விழுந்திருப்பது அவருக்கு மனச்சங்கடத்தை உண்டு பண்ணியது போல் தோன்றியது. ஏனெனில் அவர் தமது கோட்டினால் அந்தத் தொந்தியை எவ்வளவோ மறைக்க முயன்றும், முடியவில்லை .
“இங்கு கைதிகளும் இல்லை . நீதிபதிகளும் இல்லை !” என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது. ”பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.”
எல்லோரும் அமைதியானார்கள். சில விநாடிகள் வரையிலும் கரகரவென்று எழுதிச் செல்லும் பேனாவின் சத்தத்தையும், அவளது இதயத் துடிப்பையும் தவிர வேறு எதையுமே தாய் கேட்கவில்லை.
பிரதம நீதிபதியும் அடுத்தாற்போல் என்ன நடக்கப்போகிறது என்பதையே கவனித்துக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவரது உதவி நீதிபதிகளும் நிலையிழந்து அசைந்து கொடுத்தார்கள். முடிவாக அவர் சொன்னார் “ஹம்… அந்திரேய், நஹோத்கா நீங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?”
அந்திரேய் மெதுவாக எழுந்தான்; நிமிர்ந்து நின்றான். மீசையை இழுத்துவிட்டான், தன் புருவங்களுக்குக் கீழாக, அந்தக் கிழ நீதிபதியைப் பார்த்தான்.
“நான் எப்படி என் குற்றத்தைக் கூற முடியும்?” என்று நிதானமாக இனிமையாக தோள்களை உலுப்பிக் கொண்டே கூறினான் அந்திரேய். “நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”
” சுருக்கமாகப் பதில் சொல்க” என்று அந்தக் கிழவர் சிரமப்பட்டுச் சொன்னார்.
தனக்குப் பின்னால் உள்ள பெஞ்சிகளிலுள்ளவர்கள் பரபரத்துக் கொண்டிருப்பதைத் தாயால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஜனங்கள் குசுகுசுத்து ரகசியம் பேசினார்கள், அங்குமிங்கும் அசைந்தார்கள். அந்த வெள்ளை மூஞ்சி ஆசாமியின் பேச்சினால் தம் மீது படர்ந்துவிட்ட தூசி தும்புகளைத் துடைத்துவிடுவது போலவும் நடந்துகொண்டார்கள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
42-வது புத்தகக் காட்சியையொட்டி புதிய வரவாக இரண்டு சிறு நூல்களை கொண்டுவந்திருக்கிறது, கீழைக்காற்று வெளியீட்டகம். அதில் ஒன்று, “கோவிலுக்குள் காவிப் பாம்பு’’. வினவு இணைய தளம், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இவ்வெளியீடு அமைந்திருக்கிறது.
“கோவிலுக்குள் காவிப் பாம்பு’’ என்ற நூலில், “சபரிமலைத் தீர்ப்பு: எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?’’, “தேவதாசி முறை: நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !’’, “ஜீன்ஸ் பயங்கரவாதம்: தினமணியின் திருக்கோவில் லூலாயி’’, “கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை’’, “இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி’’, “அச்சப் பத்து (தெருவில் அருளியது)” – துரை. சண்முகம் கவிதை ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.
… பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்தும்.
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்றுவரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரி ஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப்படும் நாபகலிபார் என்ற திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993-இல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசிமணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்து விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய போவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட்டியது. 1988-ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட்டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
இந்த நூற்றாண்டின் (20-1ம் நூற்றாண்டு) தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரிய வருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட்டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
‘’ஏனென்றால் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது’’ என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்துவிட்டனர். மேலும், 1954, 55-இல் கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் போது 30-க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை. (நூலிலிருந்து பக்.19-21)
1930 களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தபோது, இராஜாஜி அதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சுமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், ‘’ இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்’’ என்று வாதிட்டார்.
‘’ பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப் பெண்கள் அந்தப் புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?’’ என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநிதித்துவம் செய்வது போன்று அத்னைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1882-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டிவிடப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலியுறுத்தி ‘’ தாசிகள் மோசவலை’’ எனும் நாவலை மிகுந்த சிரமத்துகிடையில் 1936-இல் வெளியிட்டார். (நூலிலிருந்து பக்.25-26)
இந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?’’ என்பது புதிய முழக்கமல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்தே சங்கரிவார அமைப்புகள் குறிப்பாக இந்து முன்னணி, இந்த முழக்கத்தை எழுப்பி வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி (பிப்ரவரி, 2018) மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் ‘ஏற்பட்ட’ தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது இக்கூச்சல் காதை அடைக்கிறது.
சொல்லப்போனால், கடந்த காலங்களில் கருவறைத் தீண்டாமை கேள்விக்குட்படுத்தப்பட்ட அனைத்து சந்தரப்பங்களிலும் க உறிப்பாக, ம.க.இ.க. நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டம், இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தபோது என எல்லா சந்தர்ப்பங்களிலும் மேற்படி எதிர்க் கோரிக்கையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பி வந்துள்ளன. (நூலிலிருந்து பக்.44)
கோவில்களைக் காப்பாற்றுவது என்பது இனிமேலும் மதம் பிரச்சினை அல்ல கோவில்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றின் சொத்து – பாரம்பரிய வரலாற்று மதிப்பை காப்பாற்ற மக்கள் அனைவரும் களமிறங்கியாக வேண்டும். அறநிலையத்துறையை வலுப்படுத்த வேண்டும்.
கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களும், இதர சொத்துக்களும் உள்ளன. மதங்களில் பக்தி, ஆன்மீகம் மட்டுமே சாமி யார்களுக்கும், கடவுளர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். இவை தவிர அனைத்தும் மக்கள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் மன்னர்களும், நம்பூதிரிகளும் அடித்த கொள்ளையை இன்றுவரை தண்டிக்க முடியவில்லை. பாபாராம் தேவ், அஸ்ராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா போன்ற சாமியார்கள் பொறுக்கித்தனத்தில் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளிலும் முன்னணி வகிக்கிறார்கள்.
ஆக, வரும் காலத்தில் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் சொத்துக்கள் என்ற வகையில் மட்டுமல்ல, தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கே அது முன் நிபந்தனையாக தேவைப்படுகிறது.
தமிழக கோவில்கள் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்துமதவெறிக் கும்பல்களின் கையில் செல்லுமானால் இவர்களுக்கு ஊருக்கு ஊர் ஒரு ஆயுத முகாம் உருவாகிவிடும். அங்கே அப்பாவி மக்களை வெறியேற்றுவது, இளைஞர்களை அடியாட் படைகளாக மாற்றும் வண்ணம் பயிற்சி கொடுப்பது என பல முறைகேடுகள் நடக்கும். இவற்றுக்கு கோவில்களில் உள்ள மக்கள் சொத்துக்கள் பயன்படும். அனுமதிக்க போகிறோமா? (நூலிலிருந்து… பக்.53)
பக்கம்: 56 விலை: ரூ.55.00
♦ ♦ ♦
சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !
நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35
அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…
சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் : 147, 148
கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277
ஒருதலைப்பட்சமாக அமைந்த தீர்ப்புகள் பல உண்டு. சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்த தீர்ப்புகளும் பல உண்டு. இத்தகைய இழிபுகழ் தீர்ப்புகளில் விஞ்சி நிற்பது மண்டபத்தில் எழுதப்பட்டு வாசிக்கப்படும் தீர்ப்புகள்தான் – அவை எண்ணிக்கையில் குறைவு என்றபோதும். அப்படியான தகுதியைப் பெற்றிருக்கிறது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.
இப்போர்விமானக் கொள்முதல் நடைமுறை, விமானத்தின் விலை, இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது குறித்தெல்லாம் உச்சநீதி மன்றத்திடம் என்னென்ன விளக்கங்களை மோடி அரசு அளித்திருந்ததோ, அதனை அச்சுப் பிசகாமல் தீர்ப்பில் குறிப்பிட்டு நரேந்திர மோடியை ஊழல்-முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
“பிழையான” தீர்ப்பை அளித்ததில் நீதிபதி குமாரசாமிதான் கில்லாடி என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இதோ நாங்களும் இருக்கிறோம் எனக் கோதாவில் குதித்திருக்கிறார்கள், ரஃபேல் தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய மூவரும்.
இந்தத் தீர்ப்பை ஈயடிச்சான் காப்பி (cut and paste) தீர்ப்பு என விமர்சித்திருக்கிறார், பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி. அப்படிப்பட்ட இத்தீர்ப்பைக் கீறிப் பார்ப்பதற்கு முன், ஊழலுக்கு ஒரு புதிய தன்மையை, பரிணாமத்தை அளித்திருக்கும் இந்த வழக்கின் பின்னணியைச் சுருக்கமாக வாசகர்களுக்கு நினைவுபடுத்திவிடலாம்.
126, 36-ஆக சுருங்கிப்போனதன் பின்னணி
முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு, அதில் 18 போர் விமானங்களைப் பறக்கும் நிலையில் பெறுவதென்றும், மீதமுள்ள 108 விமானங்களை இந்தியாவில், பெங்களூரிலுள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் தயாரிப்பதென்றும், அதற்குரிய தொழில்நுட்பங்களை டஸால்ட் நிறுவனம் இந்தியாவிற்குத் தருவதோடு, விமானங்கள் அனைத்திற்கும் சட்டப்படியான தயாரிப்பு உத்தரவாதம் (Sovereign guarantee) அளிக்க வேண்டுமென்றும் விதிகளும், நிபந்தனைகளும் உருவாக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் முடிவாகும் நிலையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணி ஆட்சி தோற்றுப்போய், நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.
உச்சநீதி மன்ற நீதிபதி கே.எம். ஜோசப்.
எனினும், 126 ரஃபேல் போர்விமானங்களை வாங்கும் முந்தைய ஆட்சியின் முடிவு கைவிடப்படாமல், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. மார்ச் 2015-இல் ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக நாடாளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2015-இல் பிரான்சு நாட்டுக்குச் சென்ற நரேந்திர மோடி, அந்நாட்டுத் தலைநகர் பாரீசில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், டஸால்ட் நிறுவனத்திடமிருந்து பறக்கும் நிலையில் 36 போர் விமானங்களை 720 கோடி யூரோ டாலர்கள் விலையில் வாங்கும் முடிவை அறிவித்தார்.
126 போர் விமானங்களை வாங்குவது என்ற பழைய முடிவு கைவிடப்பட்டு, புதிய ஒப்பந்தம் முடிவாகியிருப்பது அப்பொழுதுதான் இந்திய இராணுவ அமைச்சருக்கே தெரிய வந்தது. அப்பொழுது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை மோடி பாரீசுக்குக் கூட்டிச் செல்லவில்லை. அந்தச் சமயத்தில் மனோகர் பாரிக்கர், தனது சொந்த மாநிலமான கோவாவில் ஒரு மீன் கடையைத் திறந்துவைத்துக் கொண்டிருந்தார். எனினும், தனது முகத்தில் வழிந்த அசடையும், அதிர்ச்சியையும் வழித்துப்போட்டுவிட்டு, இது பிரதம மந்திரியின் முடிவு. நான் அதனை ஆதரிப்பேன்” என கோவாவில் மீன்கடையின் முன்நின்றபடி அறிவித்தார்.
மேலும், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 715 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த ஒரு விமானத்தின் விலை, மோடியின் புதிய ஒப்பந்தத்தில் 1,650 கோடி ரூபாயாக அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கழித்துக் கட்டப்பட்டு, அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராக இணைத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கசிந்து வெளியே வந்தன.
உச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.
இப்புதிய ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் மோடியும் அவரது சகாக்களும் பொதுவெளியில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும்கூட நியாயமான விளக்கங்களை அளிக்க மறுத்தனர். மாறாக, தேசப் பாதுகாப்பு என்ற பூச்சாண்டியைக் காட்டியும் பொய்களை அவிழ்த்துவிட்டும் இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை மூடிமறைத்தனர். ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, கடந்த மூன்றாண்டுகளாகவே மோடி அரசும் பா.ஜ.க.வும் இந்த சித்து விளையாட்டை நடத்திவந்தனர். கடந்த காங்கிரசு ஆட்சியில் நடந்த ஊழல்களை அக்குவேறு ஆணி வேறாகத் துணிந்து அம்பலப்படுத்திய தேசியப் பத்திரிகைகள், ரஃபேல் ஊழல் குறித்து கண்டும் காணாமல் நடந்துகொண்டன.
இந்தப் பின்னணியில்தான் மோடி அரசு அறிவித்திருக்கும் ரஃபேல் போர்விமான கொள்முதல் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண் ஆகிய மூவர் இணைந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு முன்பே இக்கொள்முதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், கொள்முதல் நடைமுறையில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை, எந்தவொரு தனிநபருக்கும் சலுகை காட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுத்து விட்டது.
சாகடிக்கப்பட்ட உண்மைகள்
நரேந்திர மோடி தன்னிச்சையாக அறிவித்த புதிய கொள்முதலில் ஒரு விமானத்தின் விலை முந்தைய ஒப்பந்த விலையைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த மர்மம்தான் இந்த வழக்கின் மையமான புள்ளி. இந்த முடிச்சை அவிழ்த்துவிட்டால், மீதமுள்ள இரண்டு முடிச்சுகளும் – இராணுவ அமைச்சருக்கே தெரியாமல் கொள்முதலை அறிவித்தது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸைக் கழட்டிவிட்டு அனில் அம்பானியைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டது – தானாகவே அவிழ்ந்துவிடும்.
ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களுக்குள் நுழையமாட்டோம் எனக் கூறி, வழக்கின் அடிப்படையையே ஆட்டங்காண வைத்தனர். பின்னர், விலை உள்ளிட்ட விவரங்கள் பற்றிய அறிக்கையை மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்திடம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். எனினும், மோடி அரசு நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையின் நகலோ, விவரங்களோ வழக்கைத் தொடுத்த மனுதாரர்களுக்குத் தரப்படவில்லை. தேசப் பாதுகாப்பு கருதி சில விடயங்கள் இரகசியமாக இருக்க வேண்டும்” என இந்த அநீதிக்குப் பொழிப்புரை கூறினார்கள் நீதிபதிகள். விமானக் கொள்முதல் நடைமுறை, விலை குறித்து அரசு அளித்த அறிக்கைக்குப் பதில் அளிக்க மனுதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில்தான் இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு அதிபருடன் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இராணுவ அமைச்சருக்கேகூடத் தெரிவிக்காமல், தன்னிச்சையாக பாரீசில் அறிவித்த 36 போர்விமானங்கள் வாங்கும் முடிவை, சிறிய விதிமீறல்’’தான் எனச் சப்பைகட்டி நியாயப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 126 போர் விமானங்களை வாங்கும் பழைய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுக்கே வராமல் முட்டுச்சந்தில் நின்றுபோனதால்தான், புதிய ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டதாக”த் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
போரின்போதுதான் உண்மைகள் கொல்லப்படும் என்பார்கள். ஆனால், ஆயுதத் தளவாடங்களை வாங்குவதில்கூட உண்மையைத் துணிந்து கொன்றுபோட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
நரேந்திர மோடி புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதற்குப் பத்து நாட்கள் முன்புதான், அதாவது மார்ச் 28, 2015 அன்றுதான் டஸால்ட் நிறுவன செயல் தலைவர் எரிக் ட்ராப்பியர், 126 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.சுவர்ண ராஜூ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டஸால்ட் நிறுவனங்களுக்கு இடையேயான வேலைப்பகிர்வு ஒப்பந்தம் (workshare agreement)கையெழுத்தாகி, அதனைப் பழைய ஒப்பந்தம் ரத்தாவதற்கு முன்பே அரசிடம் ஒப்படைத்துவிட்டதாக” செப்.2018-இல் பகிரங்கமாக வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.
இவையிரண்டும் பழைய ஒப்பந்தம் செயலுக்கு வரும் நிலையை எட்டிவிட்டதைக் காட்டுகிறதேயொழிய, நீதிபதிகள் குறிப்பிடுவதைப் போல மூன்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் முட்டுச்சந்தில் சிக்கியிருப்பதைக் காட்டவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் உண்மையைக் கூறவில்லை. மாறாக, பா.ஜ.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
டஸால்ட் நிறுவனத் தலைவர் எரிக் ட்ராப்பியர், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி மற்றும் பிரான்ஸ் நாட்டு இராணுவ அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி.
போர்ச்சூழல் போன்ற அவசர, அசாதாரணமான நிலைமைகளில் மட்டும்தான் ஆயுதத் தளவாடங்கள் வாங்கும் முடிவுகளைத் தன்னிச்சையாக பிரதம மந்திரி எடுக்க முடியுமே தவிர, அமைதிக் காலங்களில் தளவாடங்களை வாங்குவதற்கான முறையீடுகள் அந்தந்தப் படைப்பிரிவுகளிலிருந்து வந்த பிறகே, அரசாங்கத் தலைமை முடிவெடுக்க முடியும். நரேந்திர மோடி இந்த விதிமுறையை மீறியிருப்பதோடு, தனது தன்னிச்சையான முடிவுக்கு இராணுவ அமைச்சர், இராணுவ அதிகாரிகளை ரப்பர் ஸ்டாம்புகளாகப் பயன்படுத்தி ஒப்புதலும் பெற்றிருக்கிறார்.
அவர்கள் போட்டுக்கொண்ட சட்டதிட்டங்களை அவர்களே ஒருபொருட்டாக மதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், இந்த விதிமீறலின் பின்னுள்ள உள்நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், அதற்குப் பதிலாக நரேந்திர மோடியின் களவாணித்தனத்தைச் சிறிய விதிமீறல் எனச் செல்லமாகக் குட்டிச் சென்றுவிட்டது.
உச்ச நீதிமன்றம் சொன்ன வாழைப்பழக் கதை
“அம்பானியின் நிறுவனத்தைப் பங்குதாரராகத் தேர்ந்தெடுத்தது டஸால்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை” என பா.ஜ.க. கும்பல் கூறிவரும் பொய்யை, பிரான்சு நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலாந்த் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தார். அனில் அம்பானி நிறுவனத்தை மோடி அரசுதான் பரிந்துரைத்தது; அந்நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர டஸால்ட் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை” என்பதுதான் அவர் அளித்த நேர்காணலின் சாரம். உச்சநீதிமன்றமோ முன்னாள் பிரான்சு அதிபர் கூறியதை, யாரோ தெருவில் செல்லும் நபர் கூறியதைப் போல ஒதுக்கித்தள்ளியதோடு, ஹொலந்த் கூறியதை அனைத்துத் தரப்பும் மறுத்துள்ளன என எதிர்வாதத் தையும் தனது தீர்ப்பில் முன்வைத்தது.
அதனை மறுத்தவர்கள் யார்? மோடி அரசு, டஸால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி. குற்றத்தின் நிழல் படிந்தவர்கள் மறுத்ததற்கு முக்கியத்துவம் தந்திருக்கும் உச்சநீதி மன்றம், முன்னாள் அதிபரின் கூற்றுக்கு, அதுவும் நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்வதற்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அவரது நேர்காணலை அலட்சியப்படுத்துகிறதென்றால், நீதிபதிகளின் நடுநிலையும் நேர்மையும் நம்மை நடுங்கச் செய்கிறது! ஸ்வீடன் வானொலியில் வெளியான செய்தியொன்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு செய்த பிறகுதான் போஃபர்ஸ் ஊழல், அதன் முழு பரிமாணத்தோடு அம்பலமானது. ரஃபேல் விமான பேர ஊழலிலோ புலனாய்வையே முடக்கிப் போடுகிறது உச்சநீதி மன்றம்.
“ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பங்குதாரரின் தகுதிகளோடு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அந்த இந்திய நிறுவனத்தின் ஆறு மாத வேலையறிக்கையை அளிக்க வேண்டும். அதனை ஆயுதக் கொள்முதல் குழுவின் மேலாளர் ஆய்வு செய்ய வேண்டும். இராணுவ அமைச்சர் தன் கைப்பட அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றவாறு ஆயுத பேரக் கொள்முதலில் பங்குதாரரை இணைத்துக் கொள்வதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
பத்திரிகையாளரும் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சருமான அருண் ஷோரி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் குறித்து அறிவித்த பிறகுதான் இந்த விதிமுறைகளுள் பல முன்தேதியிட்டு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை அம்பலப்படுத்தினாலும், அதனை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ள மறுத்துவிட்டது. எனினும், பங்குதாரராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது இன்றுவரை கைவிடப்படவில்லை.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களையே தயாரித்து அளித்துவரும் நிலையில், அனில் அம்பானியின் நிறுவனமோ இராணுவத்திற்காக ஒரு குண்டூசியைக்கூட இதுவரை தயாரித்து அளித்ததில்லை. அந்த நிறுவனமே புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சிலநாட்கள் முன்புதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உப்புமா கம்பெனியிடம் ரஃபேல் போர்விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் முடிவு திரைமறைவு பேரங்கள் இன்றி நடந்திருக்காது.
இவை அனைத்தையும் பார்க்க மறுத்த உச்ச நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டிலேயே டஸால்ட் நிறுவனம் அம்பானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டது என பா.ஜ.க. கூறிவரும் தகிடுதத்தத்தைத் தனது தீர்ப்பிலும் வாந்தி எடுத்திருக்கிறது. பழைய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது, மூத்தவர் முகேஷ் அம்பானியின் நிறுவனம். புதிய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இளையவர் அனில் அம்பானியின் நிறுவனம். இந்த வேறுபாடை மறைத்துவிட்டு அந்த அம்பானியும் இந்த அம்பானியும் ஒன்றுதான் என பா.ஜ.க.வோடு சேர்ந்துகொண்டு உச்சநீதி மன்றமும் சாதிக்கிறது. கவுண்டமணி – செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை தோற்றது போங்கள்!
விலையைச் சொன்னால் ஆபத்து! யாருக்கு?
ஆயுதத் தளவாடங்களின் விலையைத் தீர்மானிக்க விலை தீர்மானிக்கும் குழு, ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு எனப் பல அடுக்குகள் உள்ளன. ஆனால், 36 ரஃபேல் போர்விமானங்கள் என்ன விலைக்கு வாங்குவது என்பதை இந்தக் குழுக்கள் தீர்மானிக்கவில்லை. இராணுவ அமைச்சரின் தலைமையில் செயல்பட்டுவரும் ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு இப்போர் விமானங்களின் விலையைத் தீர்மானிப்பதைப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் தாரைவாரத்தது. எனது நினைவில் இருந்து சொல்வதென்றால், இதுவொரு விசித்திரமான, விநோதமான முடிவு” எனக் கொள்முதல் குழுவின் முடிவை விமர்சிக்கிறார், இராணுவ அமைச்சக முன்னாள் உயர் அதிகாரி சுதான்ஷு மோகந்தி.
சொத்துக் குவிப்பு குற்றவாளி ஜெயாவை நிரபராதி என விடுதலை செய்த கணிதப்புலி குமாரசாமி.
விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்த மூன்று இராணுவ அதிகாரிகள் 36 போர் விமானங்களை 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவோ விலையைத் தன்னிச்சையாக 820 கோடி யூரோ டாலர்கள் என அதிகரித்துப் பின்னர் அதனை 720 கோடி யூரோ டாலர்களாகக் குறைத்திருக்கிறது. இன்னொருபுறம் 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளையும் விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்து அதிரடியாகக் கழட்டியும்விட்டது, மோடி அரசு.
பொதுவெளியில் காணக் கிடைக்கும் இந்தத் தகவல்களை உச்சநீதி மன்றம் புலனாய்விற்கும் உட்படுத்தவில்லை; பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை. மாறாக, விலை விபரங்களைப் பொதுவெளியில் தெரிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்” என மோடி அரசிற்குப் பின்பாட்டு பாடியது. இன்னொருபுறத்தில், விமான விலை விவரங்களை மைய தணிக்கைத் துறையிடம் அரசு அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஆய்வு செய்திருக்கிறது. அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவெளியிலும் காணக் கிடைக்கிறது” எனத் தீர்ப்பில் சுத்தமான ஆங்கிலத்தில் எழுதி, ஏறத்தாழ 58,000 கோடி ரூபாய் விலையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்திருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போன்ற சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது.
மைய தணிக்கைத் துறை ரஃபேல் போர் விமான விலை குறித்து எந்தவொரு அறிக்கையையும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிற்கு இதுநாள்வரை அளிக்கவில்லை என்பதே உண்மை. வைக்காத அறிக்கையை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்துவிட்டதாகவும், அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பதோடு, பொதுவெளியிலும் காணக் கிடைப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதெல்லாம் மாபெரும் பொய், மோசடி. தீர்ப்பு வெளியானவுடனேயே இந்தப் பித்தலாட்டத்தனத்தை காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் அம்பலப்படுத்தி, மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டதாகக் குற்றஞ்சுமத்தினர்.
குட்டு அம்பலப்பட்டவுடன் யோக்கியனாக அவதாரமெடுத்த மோடி அரசு, விலை விபரங்களை தணிக்கைத் துறையிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்” என்று மட்டும்தான் அறிக்கையில் கூறியிருக்கிறோம். மற்றதெல்லாம், தணிக்கைத் துறை ஆய்வு செய்த பின் நடைபெறும் வழக்கமான நடைமுறைகளைப் பற்றி, அதாவது, சி.ஏ.ஜி. அறிக்கை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது, அந்த அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறது” எனப் பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறோம். உச்சநீதி மன்றம் நாங்கள் கூறிய பொதுவான நடைமுறைகளை, நடந்துவிட்டதாக, இறந்த காலத்தில்” தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இந்த இலக்கணப் பிழையைத் திருத்தித் தீர்ப்பை வெளியிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறது.
ஜெயாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி குமாரசாமிக்கு கணக்கில் கோளாறு என்றால், ரஃபேல் போர்விமான ஊழல் வழக்கில் இருந்து மோடியை விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆங்கில இலக்கணத்தில் கோளாறு போலும்!
36 ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்து உச்சநீதி மன்றத்திடம் அளிக்கப்பட்டிருக்கும் இரகசிய அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது இரண்டு தரப்புக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று மோடி அரசு, மற்றொன்று தீர்ப்பை எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
மோடி அரசு கூறுவது போல அந்த அறிக்கை இருந்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிழையான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். பிழையான தீர்ப்பின் மூலம் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து மோடியைப் பாதுகாக்க வேண்டிய காரணம், நோக்கம் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மாறாக, அறிக்கையில் இருப்பதைத்தான் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கொண்டால், மோடி அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிவிட்டது என்பது நிச்சயம். அதேசமயம், மோடி அரசு அளித்த விவரங்களை கனம் நீதிபதிகள், தமது அறிவைக் கொண்டு உண்மையா, பொய்யா என ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றம்தானே!
ஆக, ரஃபேல் போர்விமானக் கொள்முதல் வழக்கில் மோடி அரசு மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிற்கவில்லை. பிழையான தீர்ப்பின் மூலம் மோடியை விடுவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
புதிய கலாச்சாரம் வெளியீடாக இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நூல்கள் குறித்து ஏற்கெனவே வினவு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. எனினும், புதிய வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு அந்நூல்களை மீண்டுமொருமுறை சுருக்கமாக அறிமுகம் செய்கிறோம். இந்நூல்கள் அனைத்தும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் (அரங்கு எண்: 147, 148) கிடைக்கும்.
இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்
நாட்டுப்புற இசையைப் பயன்படுத்திப் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்வது. என்ற அளவில்தான் எமது துவக்ககால இசை முயற்சிகள் அமைந்திருந்தன. புதிய முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிதாய்க் கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையை நடைமுறையிலிருந்து எமக்கு உணர்த்தின. புரட்சி செய்வதற்கு இசையறிவு ஒரு கட்டாயமான முன்நிபந்தனை அல்லவெனினும், மக்களை மயக்கத்திலாழ்த்தும் ஒரு போதைப் பொருளாக ஆளும் வர்க்கம் இசையைப் பயன்படுத்தும்போது அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது. இன்னொருபுறம் காலாவதியாகிப் போன மன உணர்வுகளை வெளியிடும் தியாகய்யர் போன்றோரின் இசை, காலத்தை வென்ற இசையாகவும், திரையிசைக்கு மாற்றாகவும் முன் நிறுத்தப்படுகிறது.
களவாடிய இசையே கர்நாடக இசை என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது.
நம் மரபில் எதைக் கொள்வது – எதைத் தள்ளுவது, பிற நாட்டு இசை மரபுகளில் எவற்றைச் செரித்துக் கொண்டு நமது விடுதலைக்கான இசையைப்படைப்பது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இசை விமர்சனக் கட்டுரைகள். அக்கட்டுரைகள் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்கள் முறையாக இசை பயின்றவர்கள் இல்லை என்றாலும், அறியாமையிலிருந்து விடுபடும் தம் சொந்த முயற்சியையே வாசகர்கள் அனைவரின் அனுபவமாக மாற்றியுள்ளனர் என்று கூறலாம்.
நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும் அடிமையைச் சுதந்திர மனிதனாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதை சாதிக்க வேண்டுமெனில் வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிந்து கொள்ள முயல்வோம். (மேலும் படிக்க)
பக்கங்கள்: 112 விலை: ரூ.40.00 (அக்-2002 பதிப்பு)
♦ ♦ ♦
மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்
வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன.
… இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம். (மேலும் படிக்க)
பக்கம் – 88 விலை ரூ.35
♦ ♦ ♦
ஜீன்ஸ் பேண்ட்டும் பாலியல் வன்முறையும்
ஒரு குக்கிராமத்தில் நடக்கும் சம்பவம் கூட செய்தியாக உடனுக்குடன் ஊடகங்களில் இடம் பெறும் வண்ணம் தொழில் நுட்பமும், செய்திகளுக்கான வலைப் பின்னலும் அபாரமாக வளர்ந்துள்ளது. ஆனால் தமக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு சமூக மனிதனாக பரிணமிப்பதற்கு இந்த வளர்ச்சியே உதவிவிடுவதில்லை. காதல், தற்கொலை, கொலை குறித்த செய்திகள் எல்லாம் மலிவான ரசனையைக் கருத்தில் கொண்டு பரபரப்பிற்காகவே வெளியிடப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சீரழிவுகள் மற்றும் தோற்றுப் போன உறவுகளின் சாட்சியங்களாக வெளிப்படும் இத்தகைய சம்பவங்கள் எதுவும் அதற்குரிய கவலையுடனோ அக்கறையுடனோ ஊடகங்களால் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒரு கள்ளக்காதல் கொலை கூட அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தானும் அத்தகையதொரு முயற்சியில் இரகசியமாய் இறங்கலாமென்ற திருட்டுத்தனமான ஆசையை வாசகனின் மனதில் ஏற்படுத்துகின்றது. அதிர்ச்சியின் இடத்தை ஆசை நிரப்புகிறது. விளைவு என்னவென்றால் ஏற்கனவே போலியான உறவுகளால் நீர்த்துப் போயிருக்கும் வாழ்க்கை உறவுகள் தம்மைப் பற்றிய சுய விமரிசனமின்றி காரியவாதத்தையும், பிழைப்பு வாதத்தையும் மாற்றாகத் தேடிக் கொள்கின்றன. (மேலும் படிக்க)
பக்கம் – 48 விலை ரூ.25
♦ ♦ ♦
ஐ.டி துறை நண்பா …
ஐ.டி என்று பரவலாக அறியப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு வாடகை உயர்ந்தது முதல் நட்சத்திர விடுதிகளின் வார விடுமுறைக் கொண்டாட்டம் வரை பல்வேறு விசயங்களில் இந்தத் துறையின் செல்வாக்கும் நமக்கு தெரிந்த விசயம்தான். தீடீரென்று பலரது வாழ்க்கையை ஜாக்கி வைத்து தூக்கிய பெருமையும் இத்துறைக்கு உண்டு. ஒரு காவியம் போல வியந்தோதப்படும் இந்தத் துறையின் இன்றைய நிலை என்ன?….
அமெரிக்கா திவாலின் பிரதிபலிப்பாக இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், ஐ.டி ஊழியர்கள் தமது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கங்களில் திரளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் பல வாசகர்கள்- இத்துறையில் பணியாற்றுபவர்கள்- அவற்றை அலட்சியமாக மறுத்தார்கள். தங்களுக்கொன்றும் பாதிப்பில்லை எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்கள். சில வாசகர்கள் அந்தக் கட்டுரையின் சாரத்தை ஏற்றுக் கொண்டதோடு ஐ.டி துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிஆதாரங்களுடன் தெரிவித்தார்கள். இங்கே அந்தக் கட்டுரையும் அதற்கான மறுமொழிகளையும் வெளியிட்டுள்ளோம்….
முதலாளித்துவத்தின் அநீதியான உலகமயம் எப்படிப் பார்ததாலும் இப்படித்தான் ஒரு அழிவை மக்களுக்கு தர முடியும். இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதும், அதற்கெதிராய் செயல் படுவதும் காலம் நம்மிடம் கோரும் கடமையாகும். அந்த கடமைக்கு வாசகரை தயார் செய்யும் பணியில் இந்த நூலும் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். (மேலும் படிக்க)
பக்கம் – 72 விலை ரூ.35
♦ ♦ ♦
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம். நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்” எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது. (மேலும் படிக்க)
பக்கம்: 80 விலை : ரூ.60
சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !
நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35
அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…
சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் : 147, 148
கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277
மாத மாதம் வாசித்தவுடன்
வீசி விடும் காகிதமாக அல்ல
மாதங்கள் கடந்தாலும்
மீண்டும் வாசிப்பைக் கோரும்
தேவைப்படும் நேரங்களாய்
புதிய சிந்தனையாய்
புதிய தெம்பளிக்கும் உற்ற தோழனாய்..
நீங்கள் வாசிக்கவும்.. யோசிக்கவும் ..
புதிய கலாச்சாரத்தின் தொகுப்புகள் …
பல்வேறு தலைப்புகளில்…
அழகிய வடிவமைப்பில் கையடக்க பெட்டகத்துடன் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் (எண்: 147, 148)கிடைக்கிறது.
தொகுப்பு – 1 எதிர்த்து நில் விலை: ரூ. 100.00
♦ எதிர்த்து நில்
♦ பேரிடர்: புயலா – அரசா?
♦ தூத்துக்குடி முதல் நியமகிரி வரை : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள்!
♦ அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு!
தொகுப்பு – 2 இலுமினாட்டி பிக்பாஸ் கோக்-பெப்சி விலை: ரூ. 90.00
♦ கோக் – பெப்சி: கொலைகார கோலாக்கள்!
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமையுகம்
♦ ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்
♦ தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா?
இலுமினாட்டி பைத்தியமா?
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 52 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கி“ஓடு! ஓடு!” என்று காலைத் தரையில் உதைத்துக்கொண்டே மெதுவாகக் கத்தினாள் தாய்.
அவளது காதுகளில் கிண்ணென்று இரைந்தது. பலத்த கூச்சல்களை அவள் கேட்டாள். சுவரின் மீது மூன்றாவது தலையும் தோன்றியது. தாய் தனது நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு திக்குமுக்காடும் மூச்சோடு கவனித்துப் பார்த்தாள். தாடியில்லாத ஓர் இளைஞனின் வெளிர் முடித் தலை ஒரு குலுக்குக் குலுக்கியவாறே மேலெழுந்தது. ஆனால் மறுகணமே அது மீண்டும் உள்வாங்கிக்கொண்டது. கூச்சல்கள் உரத்தும் உத்வேகத்துடனும் ஓங்கி ஒலித்தன. விசில்களின் கீச்சுச் சப்தங்களைக் காற்று ஆகாயத்தில் பரப்பி ஒலிக்கச் செய்தது. மிகயில் சுவரை ஒட்டி நடந்தான். அவன் அதனைக் கடந்து சிறைச்சாலைக்கும், ஊரின் வீடுகளுக்கும் இடையேயுள்ள வெட்டவெளி மைதானத்தைக் கடந்து சென்றான். அவன் மிகவும் மெதுவாகவும் தலையை அதிகமாக நிமிர்ந்தும் நடப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை அந்தச் சமயத்தில் ஒரு முறை பார்க்க நேர்ந்தவர்கள் அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள். அப்படி இருந்தது அந்த முகத்தோற்றம்.
“சீக்கிரம், சீக்கிரம்!” என்று முணுமுணுத்தாள் தாய். சிறைச்சாலைச் சுவருக்கு அப்பால் ஏதோ மோதியறையும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கண்ணாடிச் சில்லுகள் நொறுங்கி விழும் சப்தத்தை அவள் கேட்டாள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் தனது காலைப் பூமியில் அழுத்தி ஊன்றியவாறே குதிரைக் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அடுத்தவன் தன் முஷ்டியை வாயருகே கொண்டுபோய் சிறைச்சாலையை நோக்கிச் சத்தமிட்டான். அவன் சத்தமிட்டு முடிந்த பிறகு அதற்குப் பதில் எதிர்பார்த்துக் காதைத் திருப்பிச் சாய்த்துக் கேட்டான்
தாய் மிகுந்த சிரமத்தோடு நாலா திசைகளிலும் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே நின்றாள். அவளது கண்கள் எல்லாவற்றையும் பார்த்தன, ஆனால் எதையும் நம்ப மறுத்தன. எந்த ஒரு காரியம் மிகுந்த சிக்கலும் அபாயம் நேரக்கூடிய பயபீதியும் நிறைந்த எண்ணத்தை அவள் மனத்தில் ஏற்படுத்தியிருந்ததோ, அதே காரியம் மிகவும் சுளுவாக எளிதாக சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டது. அதனது துரித சக்தி தாயை ஆட்கொண்டு அவளது புலன்களை மரத்துப்போகச் செய்தது. பின் ஏற்கெனவே மறைந்து சென்றுவிட்டான். ஒரு நெட்டையான மனிதன் நீண்ட கோட்டை அணிந்து கொண்டு தெரு வழியாக நடந்து சென்றான், அவனுக்கு முன்னால் ஓர் இளம் யுவதி ஓடிக்கொண்டிருந்தாள். மூன்று சிறைக் காவலாளிகள் சிறைச்சாலை மூலையிலிருந்து தாவி ஓடி வந்தார்கள். மூன்று பேரும் தங்கள் வலது கைகளை நீட்டியவாறு ஒருவர் அருகில் ஒருவராக ஓடிவந்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் அவர்களைச் சந்திப்பதற்காக ஓடினாள். அடுத்தவன் குதிரையைச் சுற்றிச் சுற்றி ஓடியவாறே அதன் முதுகில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான்.
ஆனால், அந்தக் குதிரையோ முரட்டுத்தனமாக. மேல்நோக்கித் தாவிக்குதித்தது. அந்தக் குதிரை தாவிக் குதிக்கும்போது எல்லாமே தாவிக் குதிப்பது மாதிரி இருந்தது. விசில் சப்தங்கள் இடைவிடாது அழுத்தமாக ஒலித்தன. அவற்றின் கீச்சுக் குரல்கள் தாயின் உள்ளத்திலே அபாய உணர்ச்சியைக் கிளப்பிவிட்டன. அவள் நடுங்கினாள் இடுகாட்டின் வேலிப்புறமாக, அந்தக் காவலாளிகளின் மீது ஒரு கண் வைத்தவாறே நடந்தாள். ஆனால், அந்தக் காவலாளிகளும் சிப்பாய்களும் சிறைச்சாலையின் வேறொரு மூலையைக் கடந்து மறைந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் பித்தானிடப்படாத கோட்டோடு ஒரு மனிதன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் தான் சிறைச்சாலை உபதலைவன் என்று அடையாளம் கண்டு கொண்டான். எங்கிருந்தோ போலீஸ்காரர்களும், பரபரக்கும் ஜனக்கூட்டமும் கூடி வந்தார்கள்.
குதூகலத்தோடு சுற்றியாடுவது போல் காற்று சுழன்று வீசியது. காற்று வாக்கில் தாயின் காதுகளில் உடைந்து கலகலக்கும் கூச்சல்களும், விசில் சப்தங்களும் ஒலித்தன. இந்தக் குழப்பத்தைக் கண்டு தாய் குதூகலமடைந்தாள். தனது நடையை எட்டிப் போட்டு நடந்தவாறே சிந்தித்தாள்.
”சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ முஜீக் உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே உனக்கென்னடா துர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம்.
“அவனும் கூட இப்படிச் சுலபமாய்த் தப்பி வந்திருக்கக்கூடும்!” திடீரென்று ஒரு மூலையிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஓடிவந்தார்கள்.
“நில்” என்று அவளை நோக்கி ஒருவன் மூச்சு வாங்கியவாறே கத்தினாள். ”தாடிக்கார மனுஷன் ஒருவனை நீ பார்த்தாயா?”
அவள் தோட்டமிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினாள்.
”அவன் அந்தப் பக்கமாகத்தான் ஓடினான்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள். ”ஏன்?’
“இகோரவ்! விசிலை ஊது”
தாய் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் எதற்காகவோ வருத்தப்பட்டாள். அவளது மனத்தில் கசப்பும் வருத்தமும் கலந்த உணர்ச்சி தென்பட்டது. வெட்ட வெளியைக் கடந்து தெருவுக்குள் வந்தபோது அவளைக் கடந்து ஒரு வண்டி சென்றது. அந்த வண்டிக்குள் அவள் பார்த்தாள். அதற்குள் வெளிர் மீசையும், வெளுத்துச் சோர்ந்த முகமும் கொண்ட ஓர் இளைஞனைக் கண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவன் பக்கவாட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். எனவே அவனது இடது தோளைவிட வலது தோள் உயர்ந்து காணப்பட்டது.
நிகலாய் அவளை குதூகலத்தோடு வரவேற்றான். ”சரி, என்ன நடந்தது?” ”எல்லாம் சரிவர நடந்துவிட்டதாகவே தோன்றுகிறது.”
அவள் தப்பி வந்ததைப்பற்றி சாங்கோபாங்கமாக விரிவாகச் சொல்லத் தொடங்கினாள். எனினும் அவள் வேறு யாரோ சொன்ன விஷயத்தைத் திருப்பிச் சொல்வது மாதிரிப் பேசினாள். நான் கண்ணால் கண்டதையே அவள் நம்ப மறுத்துச் சந்தேகிப்பது போலிருந்தது.
”அதிருஷ்டம் நம் பக்கம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே கைகளைத் தேய்த்துக் கொண்டான் நிகலாய். “உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடக்கூடுமே என்று நான் பயந்த பயம் சைத்தானுக்குத்தான் தெரியும். நீலவ்னா, நான் சொல்வதைக் கேளுங்கள். விசாரணையை எண்ணிப் பயந்து கொண்டிருக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் விசாரணை முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் பாவெல் சுதந்திரம் அடைவான். நாடு கடத்துவதற்காகக் கொண்டு செல்லும்போதே, அவன் தப்பி வந்துவிடக்கூடும். விசாரணையைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடக்கப்போகிறது…..”
”அவன் கோர்ட்டு நடவடிக்கைகளை விவரித்துக் கூறினான். அவன் அவளை எவ்வளவுதான் தேற்றினாலும் கூட, தான் எதையோ கண்டு தனக்குள் தானே அஞ்சிக் கொண்டிருப்பதாக அவனது பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டாள் தாய்.
”கோர்ட்டில் நான் ஏதாவது தப்புத் தண்டாவாகப் பேசிவிடுவேன் என்றோ, அல்லது நீதிபதிகளிடம் எதையாவது கேட்டுவிடுவேன் என்றோ பயப்படுகிறீர்களா?” என்று திடீரெனக் கேட்டாள் அவள்.
அவன் துள்ளியெழுந்து கைகளை எரிச்சலோடு ஆட்டிக்கொண்டான்.
“இல்லவே இல்லை” என்று புண்பட்ட குரலில் சொன்னான் அவன்.
”நான் பயந்துவிட்டேன். அதுதான் உண்மை. ஆனால் நான் எதைக் கண்டு பயப்படுகிறேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.” அவள் பேசுவதை நிறுத்தினாள். அவளது கண்கள் அறையைச் சுற்றி வட்டமிட்டன.
”சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ முஜீக் உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே உனக்கென்னடா துர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம். பாவெல் கர்வம் நிறைந்தவன். அப்படித்தான் பதிலும் சொல்லுவான். அல்லது அந்திரேய் அவர்களைக் கிண்டல் செய்து எதையாவது சொல்வான். எல்லோருமே சூடானவர்கள். எனவே, அந்த மாதிரி விசாரித்து இனி நாம் அவர்களைக் காண முடியாதபடி செய்துவிடுவார்கள்!”
நிகலாய் பதில் பேசாமலே முகத்தைச் சுழித்தான்: தாடியை இழுத்துவிட்டுக் கொண்டான்.
”இந்த மாதிரி எண்ணங்களை என்னால் ஒதுக்கித்தள்ளவே முடியவில்லை ” என்று அமைதியாகச் சொன்னாள் தாய். “எனவேதான் இந்த விசாரணை எனக்கு அத்தனை பயங்கரமாய்த் தோன்றுகிறது ! அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து அலசி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டால்! அதுதான் பயங்கரமாயிருக்கிறது எனக்குத் தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை. விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது. அதை எப்படிச் சொல்வது என்பதும் தெரியவில்லை …”
தான் சொல்வதை நிகலாய் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சியால் தனது எண்ணங்களை வெளியிட்டுச் சொல்வது கூட அவளுக்குச் சிரமமாயிருந்தது.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு