Sunday, May 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 367

குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 51 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
தாயும் நிகலாவும் ஜன்னலருகே சென்றார்கள். வெளி முற்றத்தைக் கடந்து வாசல் வழியாக அவள் சென்று மறைவதை இருவரும் கவனித்தார்கள். நிகலாய் லேசாகச் சீட்டியடித்தவாறே மேஜை முன்வந்து உட்கார்ந்து எழுதத் தொடங்கினான்.

”அவளுக்குச் செய்வதற்கு மட்டும் ஏதாவது வேலை கொடுத்துவிட்டால் போதும், உடனே அவள் மனம் தேறிவிடுவாள்” என்று ஏதோ யோசித்தவாறே கூறினாள் தாய்.

“ஆமாம்” என்றான் நிகலாய். பிறகு அவன் தாயின் பக்கமாகத் திரும்பி அன்பு ததும்பும் புன்னகையோடு பேசினான். “நீலவ்னா உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை போலிருக்கிறது. தான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது.”

“ப்பூ!” என்று கையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய். “எனக்குத் தெரிந்த ஒரே உணர்ச்சியெல்லாம் – என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவார்களே என்ற பயம் ஒன்றுதான்!”

”என்றுமே நீங்கள் யாரையேனும் விரும்பியதில்லையா?”

“எனக்கு நினைவில்லை. விரும்பியதாகத்தான் நினைக்கிறேன். யாரையோ நான் விரும்பத்தான் செய்தேன். ஆனால் ஞாபகம் தான் வரவில்லை .”

அவள் அவனைப் பார்த்தாள். பிறகு எளிமையாக அமைதியான சோக உணர்ச்சியோடு பேசினாள்:

” என் புருஷன் கொடுத்த அடியிலும் உதையிலும் என் கல்யாணத்துக்கு முன்னே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனையுமே நினைவை விட்டு ஓடிப்போய்விட்டன.”

நிகலாய் மேஜைப் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். தாய் அந்த அறையைவிட்டு ஒரு கணம் வெளியே சென்றாள். அவள் திரும்பி வந்தபோது நிகலாய் அவளை அன்பு ததும்பப் பார்த்தவாறே இனிய அருமையான நினைவுகளில் திளைத்தான்.

“என்னைப் பொறுத்தவரையில் சாஷாவைப்போல் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு. நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன் – – அவள் ஓர் அதிசயமான ஆசாமி. அவளைச் சந்தித்தபோது எனக்கு இருபது வயதிருக்கும். அன்று முதலே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நான் அவளை அப்போது எப்படி நேசித்தேனோ, அது போலவே இப்போதும் நேசிக்கிறேன் – என் இதயபூர்வமாக, என்றென்றும் பெருந்தன்மையோடு காதலிக்கிறேன்.”

தான் நின்ற இடத்திலிருந்தே அவனது கண்களில் தோன்றும் இனிய தெளிந்த பிரகாசத்தை அவளால் காணமுடிந்தது. அவன் தனது கைகளை நாற்காலிக்குப் பின்னால் கோத்து. தன் கைகளின் மீது தலையைச் சாய்த்திருந்தான். எங்கோ வெகு தொலைவை ஏறிட்டுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான். அவனது பலத்த மெலிந்த உடம்பு முழுவதும் சூரிய ஒளிக்காக ஏங்கித் தவிக்கும் மலரைப்போல் ஏதோ ஒரு காட்சியைக் காணத் தவித்துக்கொண்டிருந்தது.

“நீங்கள் ஏன் அவளை மணந்து கொள்ளக்கூடாது?” என்று கேட்டாள் தாய்.

“அவளுக்குக் கல்யாணமாகி நாலு வருஷங்களாகிவிட்டது.”

“முதலிலேயே நீங்கள் ஏன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை”

அவன் ஒரு கணம் சிந்தித்தான்.

படிக்க:
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்
மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !

“எப்படியோ அது நடக்காமல் போய்விட்டது. நான் வெளியில் இருந்தால். அவள் சிறையிலாவது, தேசாந்திரத்திலாவது இருப்பாள். அவள் வெளியிலிருந்தாள், நான் சிறையில் இருந்தேன். சாஷாவின் நிலைமையைப் போலத்தான். இல்லையா? முடிவாக, அவர்கள் அவளைப் பத்து வருஷகாலம் தேசாந்திர சிட்சை விதித்து, சைபீரியாவில் எங்கோ ஒரு கோடியில் கொண்டு தள்ளிவிட்டார்கள். நானும் அவளோடு போக விரும்பினேன். ஆனால், நானும் கூச்சப்பட்டேன். அவளும் கூச்சப்பட்டாள். அங்கே போன இடத்தில் அவள் வேறொருவனைச் சந்தித்தாள். அவன் நல்லவன்; எனது தோழர்களில் ஒருவன். பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி, வெளிநாட்டுக்குச் சென்று இப்போது அங்கே வசித்துவருகிறார்கள். ஹம்!

நிகலாய் தன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்தான் , வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்துப் பார்த்தான். மீண்டும் துடைத்தான்.

”அட. என் அப்பாவித் தோழா!” என்று அன்போடு கூறிக்கொண்டே தலையை அசைத்தாள் தாய். அவனுக்காக அவள் வருந்தினாள். அதே சமயம் அவளைப் பற்றிய ஏதோ ஒன்று தாய்மையின் பரிவுணர்ச்சியோடு அவளைப் புன்னகை செய்ய வைத்தது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து மீண்டும் பேனாவை எடுத்துத் தான் பேசும் வார்த்தைகளுக்குத் தக்கபடி அதை அசைத்தாட்டிக்கொண்டே பேசினான்.

”குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது – எப்போதுமே குறைத்துவிடுகிறது. குழந்தைகள், குடும்பத்தைப் பட்டினி கிடக்காமல் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம், போதாமை. ஒரு புரட்சிக்காரன் என்றென்றும் தனது சக்தியை வளர்த்துக்கொண்டே போக வேண்டும், அப்போதுதான் அவனது நடவடிக்கைகளும் விரிவு பெறும். இன்றைய காலநிலைக்கு அது அத்தியாவசியம். நாம்தான் மற்றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும். ஏனெனில், பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான். நாம் கொஞ்சம் பின் தங்கினால், சோர்வுக்கு ஆளானால், அல்லது வேறு ஏதாவது சில்லரை வெற்றியிலே மனம் செலுத்தினால் ஒரு பெருந்தவறைச் செய்யும் குற்றத்துக்கு, நமது இயக்கத்தையே காட்டிக்கொடுப்பது போன்ற மாபெரும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம். நமது கொள்கையை உடைத்தெறிந்து நாசமாக்காமல் நாம் வேறு யாரோடும் அணி வகுத்துச் செல்ல முடியாது; நமது இலட்சியம் சின்னஞ்சிறு சில்லரை வெற்றியல்ல, ஆனால் பரிபூரணமான மகோன்னத வெற்றி ஒன்றுமட்டும்தான் என்பதை நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.”

அவனது குரல் உறுதியுடன் தொனித்தது. முகம் வெளுத்தது. கண்கள் வழக்கம் போலவே நமது அமைதியும் அடக்கமும் நிறைந்த சக்தியோடு பிரகாசித்தன. மீண்டும் வெளியே மணி அடித்தது. லுத்மீலா வந்தாள். அவளது கன்னங்கள் குளிரால் கன்றிப்போயிருந்தன. அந்தக் குளிருக்குத் தாங்காத மெல்லிய கோட்டுக்குள்ளே அவளது உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

”அடுத்த வாரம் விசாரணை நடக்கப்போகிறது” என்று கோபத்தோடு கூறிக்கொண்டே, தனது கிழிந்து போன ரப்பர் பூட்சுகளைக் கழற்ற முனைந்தாள் அவள்.

”நிச்சயமாகத் தெரியுமா?” என்று அடுத்த அறையிலிருந்து கத்தினான் நிகலாய்..

தாய் அவளிடம் ஓடிப்போனாள். அவளது இதயத்திலே ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம் பயமா குதூகலமா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. லுத்மீலா அவளோடு போனாள்.

நாம்தான் மற்றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும். ஏனெனில், பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான்.

“எனக்கு நிச்சயமாய்த் தெரியும். தீர்ப்பு நிர்ணயமாகிவிட்ட விஷயத்தைக் கோர்ட்டில் யாரும் மறைத்துப் பேசக் காணோம்” என்று தனது ஆழ்ந்த குரலில் கிண்டல்போலச் சொன்னாள் அவள். ”இந்தமாதிரி விஷயத்தை எப்படித்தான் விளங்கிக் கொள்கிறதோ? தனது எதிரிகளிடம் அதிகாரிகளே தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்று அரசு பயப்படுகிறதா? தனது சேவகர்கள் அனைவரது மனத்தையும் கலைத்துச் சீர்குலைப்பதிலேயே தன் சக்தியையும் காலத்தையும் முழுக்க முழுக்கச் செலவழித்துள்ள அரசு, அந்தச் சேவகர்களே யோக்கியர்கள் ஆவதற்குத் தயாராயிருக்கிறார்களா என்று அஞ்சுகிறது.” அலுமீலா சோபாவின் மீது உட்கார்ந்தாள்; தனது மெல்லிய கன்னங்களைக் கைகளால் தேய்த்து விட்டுக்கொண்டாள். அவளது கண்களில் ஒரே கசப்புணர்ச்சி பிரதிபலித்தது, அவளது குரலில் வரவரக் கோபம் கனன்று சிவந்தது.

“லுத்மீலா, வீணாய் ஏன் உயிரை விடுகிறீர்கள்?” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முனைந்தான் நிகலாய். “நீங்கள் சொல்வதை அவர்கள் ஒன்றும் கேட்கப்போவதில்லை. உங்களுக்குத் தெரியாதா…”

தாய் அவளது வார்த்தைகளைக் கவனத்தோடு காதில் வாங்கிக் கொண்டாள். எனினும் அவளுக்கு அவற்றில் எதுவுமே புரியவில்லை. ஏனெனில், அவள் மனத்தில் சுற்றிச் சுற்றி மாறி மாறியெழுந்த ஒரே சிந்தனை இதுதான்.

”விசாரணை – அடுத்தவாரம் ”

ஏதோ ஓர் இனந்தெரியாத மனிதத்துவம் அற்ற சக்தி நெருங்கி வருவதாக திடீரென அவள் மனத்தில் தட்டுப்பட்டது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்

42-வது புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்

புத்தகக் கண்காட்சிக்கு இளைஞர்கள் நிறைய வருகிறார்கள் என்பது மட்டுமல்ல… வருகைதரும் இளைஞர்களின் புத்தக தேடல் சமூகப் பார்வை சார்ந்து இருக்கிறதென்பதுதான் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விசயம். வெறும் புத்தகத்தை வாங்குவது என்றில்லாமல் புதிய கருத்துக்களை சிந்திக்க முற்படுவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

தமிழக இளைஞர்கள் வலைத்தளம், செல்போன் இதுபோன்ற விசயங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்ற கருத்தை தகர்த்திருக்கிறார்கள் அன்றாடம் புத்தகக் காட்சிக்கு வருகைதரும் இளைஞர்கள். ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர்கள் தொடங்கி ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர்கள் வரையில் வருகை தருவது உற்சாகமளிக்கிறது. குறிப்பாக அரசியல் நூல்களை தேடி வாங்குகிறார்கள்.

மார்க்ஸ்-எங்கெல்ஸின் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை மற்றும் ராகுல் சாங்கிருத்தயாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை ஆகிய இரு நூல்கள் அவர்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. பல்வேறு வர்க்கப் பிரிவினரும், பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும்கூட மார்க்சிய எழுத்துக்களை நாடி வருகின்றனர்.

♦ ♦ ♦

ந்த ஆண்டு புத்தகக் காட்சியையொட்டி கீழைக்காற்று சார்பில் இரு நூல்களை கொண்டு வந்திருக்கிறோம். ஒன்று, கோவிலுக்குள் காவிப் பாம்பு.

சாமானிய மக்களின் பக்தியை எப்படி மதத்தின் வெறியாகவும்; அந்தக் கோயில்களை சாதியத்தின் கோட்டையாகவும் எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது, இந்நூல்.

சமீப காலமாக இந்து அறநிலையத்துறையையே கலைக்க வேண்டும், கோயில்களை அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், யதார்த்த உண்மைகள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது இச்சிறுநூல்.

அடுத்தது, இலுமினாட்டி வரலாறும் அரசியலும். ஹீலர் பாஸ்கர் வகையறாக்கள் முன்வைக்கும் சதிக்கோட்பாடுகளின் அரசியல் பின்புலத்தைத் தோலுரிக்கிறது இச்சிறுநூல்.

♦ ♦ ♦

நூற்றுக்கணக்கான அரங்குகள்… ஆயிரக்கணக்கான நூல்கள்… எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? இன்றைய அரசியல் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் தோழர் துரை.சண்முகம்.

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !

 புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
தமிழ்நாடு

நெ.7,மாதா கோவில் முதல் தெரு, நொளம்பூர், சென்னை-95, 9445112675


தேதி : 10.1.2019

கண்டன அறிக்கை!

மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு!

ந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை, புராண கட்டுக்கதைகளை மாணவர்கள் மத்தியில் பரப்புவதை செய்திருக்கிறது மோடி – பி.ஜே.பி கும்பல்.

அறிவியலாளார்கள் என்ற போர்வையில் இந்துமத கருத்துக்களை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவுப்பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய அறிவியல் காங்கிரசின் 106-வது மாநாடு  ஜனவரி 3 முதல் 5 நாட்கள் ஜலந்தரில்  நடைபெற்றது. இதில் 60 நாடுகளின் 20,000 அறிவியல் அறிஞர்கள், உயர்கல்வி  நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பேசிய ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் சோதனை குழாய் மூலம் பிறந்தவர்கள் என்று அளந்துவிடுகிறார்.

அதோடு, டார்வினது பரிணாம கோட்பாட்டிற்கு முன்னரே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர், ஏவுகணைகளை ராமர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியவர், ராவணன் 24 வகையான விமானங்களை பயன்படுத்தினார் என்றெல்லாம் அறிவியலுக்கு புறம்பான கட்டுக்கதைகளை, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.

அதே மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஜகதள கிருஷ்ணன் எனும் மின்னணுவியல் பொறியியல் அறிஞர்; ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்கிறார். புவியீர்ப்பு அலைகளுக்கு நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் என ஆர்.எஸ்.எஸ். காரரைப் போல் பிதற்றுகிறார்.

vinchani-memes-800கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் டைனோசர்களின் தோற்றமும் மறைவும் குறித்து ஆய்வு செய்துவரும் பஞ்சாப் பல்கலைக்கழக புவியியலாளர் அசு கோஸ்லா, “இந்த பிரபஞ்சத்தின் சிறந்த அறிவியலாளர் பிரம்மாதான். அவருக்கு டைனோசர்கள் பற்றி தெரிந்திருந்தது. வேதங்களில் அது குறித்த தகவல் உள்ளது” என்கிறார்.

அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல், இந்துமத வேதம் / புராணங்களில் உள்ள கட்டுக்கதைகளை, மூடத்தனங்களை எல்லாம் வேதத்தில் உள்ள அறிவியல் – தொழில்நுட்பம் என்று பேசுவதை பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

கடந்தாண்டு இதே அறிவியல் மாநாட்டில் இதே கட்டுக்கதைகளை, குப்பைகளை அறிவியல் உண்மைகள் என நாட்டின் பிரதமர் மோடி பேசினார். இப்போது அதே கருத்துக்களை அறிவியலாளர்கள் வாயால் சொல்ல வைக்கிறார்கள். இது போன்ற ஆதாரங்களற்ற புராணக் குப்பைகளை கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அறிவியல் பேராயத்தில் RSS/BJP ஆதரவு பேராசிரியர்கள் பேசிவருகின்றனர்.

கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்தி – சமஸ்கிருத திணிப்பு, கல்வியில் காவிமயத்தை புகுத்துவது, உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ளவர்களை பொறுப்புகளில் அமர்த்தி கைப்பற்றுவது, அரசு கட்டமைப்புகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை போட்டு நிரப்புவது, உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என அவர்கள் ஆதிக்கத்திற்கு வழிவகுப்பது, இந்த வரிசையில் இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மோடி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு வேத – புராண கட்டுக்கதைகளை பரப்புகிறது. ஒரு அடிமைச் சமூகத்தை, இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற துடிக்கிறது.

இதை அம்பலப்படுத்தியும், மாற்றாக அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள், மாணவர் அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோருகிறோம்.

இவண் :

.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675

*****

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை


நாள் : 11-01-2019

இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியலுக்கு புறம்பானவற்றை பேசியதற்கு கண்டனம் !

ந்திய அறிவியல் பேராயத்தின் (Indian science congress) 106 -வது மாநாடு ஜனவரி 3 முதல் 7 ஆம் தேதி வரை ஜலந்தரில் நடைபெற்றது. ஏறத்தாழ 60 நாடுகளில் இருந்து 20,000 அறிவியல் அறிஞர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. நாகேஸ்வரராவ் கௌரவர்கள் சோதனை குழாய் தொழில் நுட்பம் மூலம் பிறந்தவர்கள் எனவும், டார்வினது பரிணம் கோட்பாட்டிற்கு முன்னரே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர் என்றும் ஏவுகணைகளை ராமர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியவர் என்றும் ராவணன் 24 வகையான விமானங்களை பயன்படுத்தினார் என்றும் பேசியிருக்கிறார்.

ஆந்திரா பல்கலையின் துணை வேந்தர் நாகேஸ்வர ராவ்

அம்மாநாட்டில் பேசிய தமிழகத்தை சேர்ந்த கண்ணன் ஜகதல கிருஷ்ணன் என்பவர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்றும் பேசியிருக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் புவியீர்ப்பு அலைகளுக்கு (Gravitational wave) நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் எனக் கூறியுள்ளார்.

எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாததையும் வேதம், புராணங்களில் உள்ள குப்பைகளையும் அறிவியல் – தொழில்நுட்பம் என்று இவ்விரு பேராசிரியர்களும் கூறியுள்ளனர்.

அறிவியலுக்கெதிரான இவ்விரு பேராசிரியர்களின் இச்செயல்பாட்டை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புகுழு(CCCE) கடுமையாக கண்டிக்கிறது.

இத்தகைய பிற்போக்குதனமான கருத்துகளுக்கு இந்தியாவில் பல்வேறு அமைப்புகளும், கல்வியாளர்களும் நோபல் பரிசு பெற்றவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

படிக்க:
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
♦ வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !

இது போன்ற ஆதாரங்களற்ற புராணக் குப்பைகளை கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அறிவியல் பேராயத்தில் RSS-BJP ஆதரவு பேராசிரியர்கள் பேசிவருகின்றனர். கடந்த வருடம் நடைபெற்ற 105 -வது இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் ஆல்பர் ஐன்ஸ்டைனின் நிறை ஆற்றல் சமன்பாடு (E=mc’) பற்றி வேதங்களிலேயே உள்ளதாக பேராசிரியர் ஸ்டீபன் ஹக்கிங் சொன்னதாக பொய்யுரைத்தார்.

அனைத்துக்கும் மூலமாக 2014 அக்டோபரில் மருத்துவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி மகபாரதம் மற்றும் வேதங்களில் genetic engineering, plastic surgery போன்ற தொழில்நுட்பங்கள் இருந்து என்று கர்ணனையும், விநாயகரையும் உதாரணம் காட்டி பேசியிருந்தார்.

Psuedo Science modiஇந்துத்துவ கருத்துகளை கல்வித்துறையில் திணிக்க மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. ஐ.ஐ.டி, என்.ஐ.டி மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தை விருப்ப படமாக்கியது, அடுத்த கல்வியாண்டிலிருந்து சமஸ்கிருதமும், புராணக் கதைகளையும் அறிவியல் பெயரில் பொறியியல் மாணவர்களுக்கு கட்டாய பாடமாக்கியது மேலும் RSS புரவலர்களை பள்ளி – கல்லூரிகளின் உயர் பதவிகளில் பணியமர்த்துவது மற்றும் பேராசிரியர்களாக நியமிப்பது போன்ற வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் ஒருபுறம் தேசிய இனங்களின் மொழி, கலச்சார, பண்பாட்டு அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்துவதையும், மறுபுறம் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தை கல்விபுலத்திலிருந்தே துடைத்தெறியவும் செய்கிறது.

நாளுக்குநாள் இதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது நாம் எதிர்வினையாற்றவில்லை என்றால் பின் எப்போதும் செயலாற்ற முடியாமல் போகலாம்.

பேராசிரியர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் மாணவர் அமைப்புகளும் இணைந்து இத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கும் இந்துத்துவ திணிப்புக்கும் எதிராக குரல் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை
தொடர்புக்கு : 72993 61319, 94443 80211

1) பேரா. வீ. அரசு, ஒருங்கிணைப்பாளர், CCCE -சென்னை. (மேனாள் தமிழ்த்துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்).
2) முனைவர். க. ரமேஷ், துணை ஒருங்கிணைப்பாளர், CCCE-சென்னை.
3) பேரா. கதிரவன், சென்னை பல்கலைக்கழகம். பொருளாளர், CCCE-சென்னை.
4) பேரா. சிவக்குமார், மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசு கல்லூரி.
5) பேரா. கருணானந்தன், மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி.
6) பேரா. லட்சுமனன், MIDS. CCCE-சென்னை.
7) பேரா. அருணாச்சலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
8) பேரா. கமலக்கண்ணன், பச்சையப்பன் கல்லூரி.
9) பேரா. ரகுபதி, திரு கோவிந்தசாமி கலைக்கல்லூரி, திண்டிவனம்.
10) பேரா. அருள்.
11) முனைவர். சாமிநாதன்.
12) முனைவர். ஆனந்த்.
13) திரு. மணிபாலன்.

தொகுப்பு:

 


இதையும் பாருங்க:

ஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு !

தொழில்துறை நிலையாணை சட்டம்கர்நாடக அரசின் தொழிலாளர் விரோத போக்கு

ர்நாடக அரசு தொழிற்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டத்திலிருந்து ஐ.டி நிறுவனங்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் விலக்கு கொடுக்கவிருக்கிறது. அதாவது, “தொழிற்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946-ன் படி விதிமுறைகள் வகுப்பதற்கு ஜனவரி 25, 2014 அன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.டி நிறுவனங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அது வரும் ஜனவரி 2018 அன்று முடிவடைவதால் மீண்டும் கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. அதை கர்நாடக அரசு அங்கீகரித்துள்ளது. அதன் மூலம் ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக அரசு கூறியுள்ளது” என்ற செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது.

ஐ.டி. துறையின் வளர்ச்சிக்காக பேசும் கர்நாடக அரசு, அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது ஏன்?

முதலில், தொழிற்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946 தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை அல்லாத தொழில்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்.

இந்தச் சட்டம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடங்கிய நிறுவனங்களுக்கு பொருந்தும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பணி நிலைமை தொடர்பான கொள்கைகளை (policy) நிறுவனம் வகுக்க வேண்டும். விதிமுறைகளை தொழிலாளர்கள் மீறினால் எவ்வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வரையறுத்திருக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் பிரிவு 2(g) கீழ்க் கண்டவற்றை முறையாக்க வேண்டும் என்கிறது.

1. தொழிலாளர் வகை : நிரந்தரத் தொழிலாளர், தற்காலிக தொழிலாளர் பற்றிய தகவல்
2. தொழிலாளர்களின் வேலை நேரம், விடுமுறை நாட்கள், ஷிப்ட் முறை போன்றவை
3. வருகைப்பதிவேடு, காலதாமதமாக வருவது பற்றிய விதிமுறைகள்
4. தொழிலாளர் முறைகேடாக நடந்து கொண்டால் என்னென்ன தண்டனைகள்
வழங்கலாம் என்பது பற்றி (தற்காலிக நீக்கம், நிரந்தர பணி நீக்கம்)
5. பணி நீக்கம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
6. நிறுவனத்திற்குள் குறைகளை தெரிவிக்கும் வழிமுறைகள் ஏற்படுத்தியிருப்பது பற்றி

மேலும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான விதிமுறைகள் தொழிலாளர் சட்டத்தின் படி வகுக்கப்பட வேண்டும்.

நிறுவனங்கள் தங்களது பணியிடம் தொடர்பான விதிமுறைகளை வகுத்து ஆவணமாக தயாரித்து சான்றிதழ் அளிக்கும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் அதிகாரி அந்த மாநிலத்தில் உள்ள பெரிய தொழிற்சங்கங்கள் அல்லது தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அதை அனுப்பி ஒப்புதல் வாங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் நிறுவனம் கொடுத்த ஆவணத்தின் மீது தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால், அவ்வாறு கருத்து தெரிவிப்பதற்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது.

நிறுவனம் தயாரித்த கோப்புகளில் தொழிலாளர் உரிமைகளுக்கு விரோதமாக விதிமுறைகள் உள்ளதாக தெரிந்தால் தொழிற்சங்கம் சான்றிதழ் அளிக்கும் அதிகாரியிடம் தமது மறுப்புரையை தெரிவிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் அல்லது கோப்புகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர் நினைத்தால் அதை நிராகரித்து நிறுவனத்துக்கு சாதகமாகக் கூட செயல்படலாம். இவ்வாறாக இறுதி செய்த விதிமுறைகள் அடங்கிய கோப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த முப்பது நாட்களுக்குப் பிறகு அந்தக் கொள்கை ஆவணம் அந்த நிறுவனத்தில் விதிமுறைகளாக அமல் ஆகத் தொடங்கும்.

ஐ.டி நிறுவனங்களுக்கு விலக்கு ஏன்?

நிறுவனத்தின் கொள்கைகள் / விதிமுறைகள் தொடர்பாக தமது கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் சட்டரீதியாக தெரிவிப்பதற்கு தொழிலாளர்களுக்கு இவ்வளவு குறைந்த பட்ச வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை பின்பற்றுவதைக் கூட கார்ப்பரேட்டுகள் விரும்பவில்லை.

தொழிலாளர் சட்டங்களை பின்பற்றினால் தொழிலாளர்களை அடிமை போல வேலை வாங்க முடியாது என்பது முதலாளிகளின் ஒருமித்த கருத்து. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை குறைத்து இலாபத்தை அதிகரிக்கவும் அதற்கு ஏற்றாற்போல பாலிசிகளை வடிவமைத்துக்கொள்வதும்தான் ஐ.டி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை. கொள்கைகளையும், விதிமுறைகளையும் அவ்வப்போது தமது வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பது அவர்களது கோரிக்கை, அதை கர்நாடக அரசு ஆதரித்து நிற்கிறது.

எனவே, தமது நிறுவனத்துக்கான விதிமுறைகளை வகுத்து சான்றிதழ் பெற அனுப்ப மறுத்துதான் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் சார்பாக கர்நாடக அரசிடம் கால நீட்டிப்பு பெறப்பட்டுள்ளது. மீண்டும் அதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, ஐ.டி நிறுவனங்களுக்கு நிலையாணை சட்டத்திலிருந்து விலக்கு கொடுக்கும் அரசாணையில் தொழிலாளர்களின் குறைகளை விசாரித்து தீர்வு காண்பதற்கு நிர்வாகத் தரப்பு/தொழிலாளர் தரப்பு இரண்டு தரப்பிலிருந்தும் சம எண்ணிக்கை பிரநிதிகளைக் கொண்ட GRC (Grievance Redressal Committee) அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பணி நீக்கம் உட்பட ஊழியர்கள் மீது எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தகவலை தொழிலாளர் உதவி ஆணையருக்கும், தொழிலாளர் ஆணையருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.டி நிறுவனங்கள் இந்த அடிப்படை நிபந்தனைகளை கூட பின்பற்றாமல் ஊழியர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்து வருகின்றன. அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இந்த அரசாணையின் அடிப்படையில் வழக்கு நடத்தி வருகின்றனர்.

ஆனால், பிற தொழில் நிறுவனங்களைப் போல ஐ.டி நிறுவனங்களின் அனைத்து கொள்கை விதிகளும் தொழிலாளர் துறை, தொழிலாளர் பிரதிநிதிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு முக்கியமானதாகும்.

ஐ.டி நிறுவனங்களின் பாலிசிகள் சட்டத்திற்குட்பட்டு வகுக்கப்படுமா?

ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கென்று தனித்தனியாக விதிமுறைகள் (பாலிசி) வைத்துள்ளன. உதாரணமாக அப்ரைசல் முறை என்பது சட்டத்தை பின்பற்றி நடப்பதில்லை. அதனால் நிறுவனங்கள் அதை ஆயுதமாக பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு குறைவான மதிப்பீடு வழங்கி அதன்மூலம் தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் அப்ரைசல் முறை என்பது தொழிலாளர்களின் திறன்களை சோதித்தறிய பயன்படுகிறது என்று பொய்யான காரணத்தை கூறி இன்னும் அதே நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

படிக்க:
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்

இந்திய தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946 சட்டத்தின்படி ஐ.டி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தாங்கள் வகுத்துக் கொண்ட கொள்கை விதிமுறைகளை சட்டபூர்வமாக்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்களின் விதிமுறைகளை (பாலிசி) சட்டப்படி சான்றிதழ் பெற்றதாக்குவதில் பெரிய பிரச்சனை இல்லை. தொழிற்சங்கத்தால் கருத்துக்கள்தான் தெரிவிக்க முடியும். அதை எடுத்துக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். எனவே நடைமுறையில் நிறுவனங்கள் தமக்கு சாதகமான விதிமுறைகளை வகுத்துக் கொள்வது நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிறுவனமும், சான்றிதழ் வழங்கும் தொழிலாளர் துறையும் யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்பதை தொழிலாளி வர்க்கத்தின் முன்பு அம்பலப்படுத்துவதாக சான்றிதழ் பெறும் நடைமுறை அமையும்.

ஐ.டி நிறுவனங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், தங்கு தடையின்றி இயங்க உறுதுணையாக இருப்போம். எனவே நிலையாணை சட்டத்திலிருந்து விலக்கு அளித்து ஐ.டி துறை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. இதிலிருந்தே நமக்கு தெரியவில்லையா அரசு யாருக்கு ஆதரவாக உள்ளது என்று? மணிக்கணக்கில் கம்பெனிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காகவா அல்லது பல்வேறு மோசடிகளை செய்து தொழிலாளர்களை வெளியேற்றி வரும் ஐ.டி நிறுவனங்களுக்கு ஆதரவாகவா என்பதை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் உழைக்கும் தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்ட அரசு என்ன சொல்லியிருக்க வேண்டும்? தமது விதிமுறைகளை முறைப்படி சான்றிதழ் பெறும் வரை மாதிரி நிலையாணி அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிருக்க வேண்டும்.

நாஸ்காம் (NASSCOM) யாருக்காக செயல்படுகிறது?

ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டதுதான் நாஸ்காம். ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகையான சலுகைகளையும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டது. அதனோடு ஐ.டி நிறுவனங்களின் எதிர்கால திட்டங்களை வகுத்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்வதும் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து லாபத்தை உறுதிசெய்யும் நடவடிக்கை வரை திட்டங்கள் போட்டு கொடுப்பதும் இதன் பிரதானமான வேலை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஐ.டி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் முதலாளிகளின் கூட்டமைப்புதான் நாஸ்காம்.

அந்த வகையில் நாஸ்காம் சார்பாக ஐ.டி நிறுவனங்களுக்கு தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946-ல் இருந்து இன்னும் ஐந்து ஆண்டுகள் விலக்கு வேண்டும் என்று கோரிக்கை கர்நாடக அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.

“தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் செயலிகள் ஐ.டி நிறுவனத்தில் நடைமுறையில் உள்ளதாகவும் அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் நாஸ்காம் சொல்கிறது. எனவே தொழிலாளர் சட்டங்களை ஐ.டி நிறுவனங்கள் பின்பற்றத் தேவையில்லை. அவ்வாறு பின்பற்ற கோருவது ஐ.டி நிறுவனங்களுக்கு மேலும் சுமையாக அமைந்து விடும் என்கிறார் நாஸ்காம் துணைத்தலைவர் விஸ்வநாதன்.

தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுவது ஐ.டி நிறுவனங்களுக்கு சுமையாக இருக்கிறது என்பதன் பொருள் தொழிலாளர்களை அடிமைகள் போல உரிமைகளை இழந்த இயந்திரமாக பயன்படுத்த முயற்சி செய்வதைத் தடுத்து விடும் என்பதுதான். தொழிலாளர் சட்டங்களின்படி தொழிலாளர்கள் ஒற்றுமையாக தொழிற்சங்கமாக ஒன்று கூடி அப்ரைசல் மோசடி, சம்பள மோசடி இன்னும் பல நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனத்தை கேள்விகேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதுதான் அந்தச் சுமை.

தொழிற்சங்கமாக தொழிலாளர்கள் ஒன்று கூடிவிட்டார்கள் என்றால் தொழிலாளர்களை தனித்தனியாக மிரட்ட முடியாது. அதனால் தொழிலாளர்களை ஏமாற்றி கொள்ளை லாபத்தை குவிப்பதற்கு தடை ஏற்பட்டு விடும் என்ற பயமும் அடங்கியிருக்கிறது.

வருமானம் குவிக்கும் ஐ.டி நிறுவனங்கள்

கர்நாடகாவில் மட்டும் 3500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிட்டத்தட்ட $32 பில்லியன் டாலர் மதிப்பிலான மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி ஆகிறது. நேரடியாக 10 லட்சம் பேரும், மறைமுகமாக 30 லட்சம் பேரும் இந்தத் துறைக்காக உழைத்து இந்த ஏற்றுமதியை சாத்தியமாக்குகின்றனர். அது மாநிலத்தின் வருமானத்தில் 25% பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகா 38% பங்களிப்பு செய்கிறது.

தமிழ்நாட்டிலும் பல லட்சம் தொழிலாளர்கள் ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார்கள். 2017-2018 காலத்தில் தமிழ்நாட்டில் இந்தத் துறையில் 1111.79 மில்லியன் வருமானம் வந்திருக்கிறது. இந்தியாவில மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா – 1215 மில்லியன் வருவாயுடன் இரண்டாமிடத்திலும், தெலுங்கானா- 851.76 மில்லியன் ஈட்டி நான்காமிடத்தில் உள்ளன.

இப்படியாக வருமானத்தை குவிக்கும் ஐ.டி நிறுவனங்கள் அதற்காக உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பதில் உறுதியாக உள்ளன.

ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்று ஐ.டி நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. கட்டாய பணிநீக்கம், ராஜினாமா செய்ய வற்புறுத்துவது, ராஜினாமா செய்யாதவர்களை இனி எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காத மாறி தடுத்து நிறுத்திவிடுவோம் பிளாக் லிஸ்டில் போட்டுவிடுவோம் என்று மிரட்டுவது என்ற பல்வேறு வழிகளில் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றி வந்தனர்.

2015-ல் பு.ஜ.தொ.மு. – ஐ.டி ஊழியர்கள் பிரிவு (NDLF) கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் பொருந்தும் என்ற உத்தரவை தமிழக அரசிடமிருந்து பெற்றது. ஊழியர்களுக்கு எதிராக ஐ.டி கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்கும் இடையே இருந்த எழுதப்படாத உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தீர்வுதான் என்ன?

தொழிலாளர் தங்களது குறைகளை தெரிவிக்க நிறுவனங்களில் செயல்படும் வசதிகளின் யோக்கியதை என்ன என்று அதில் மோதிப் பார்த்து எந்த தீர்வும் கிடைக்காத ஊழியர்களுக்கு தெரியும். இந்நிலையில் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவது தமக்கு சுமையாக இருக்கும் என்று அவற்றில் இருந்து விலக்கு கேட்கின்றன ஐ.டி நிறுவனங்கள். ஆனால், நிறுவனங்கள் உருவாக்கும் மாற்றும் விதிமுறைகளோ ஊழியர்களுக்கு எதிராகவும், நிறுவனத்தின் லாபத்தை உறுதி செய்வதாகவுமே அமைகின்றன.

கர்நாடகாவில் விதிவிலக்கு அளிக்கப்படும் நடைமுறையை பிற மாநிலங்களிலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அபாயமும் உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஐ.டி தொழிலாளர்களாகிய நாம் சங்கமாக ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து போராட வேண்டும்.


சுகேந்திரன்
ஆதாரம்:
♦ Karnataka likely to continue Employment Act exemption for IT sector 
♦ Tamil Nadu’s IT, ITeS exports pick up pace in 2017-18, grow 8.55%
நன்றி: new-democrats.com

விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019

விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019

1. கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம்!
இந்த அரசு மக்களுக்கானது அல்ல என்பதை ஸ்டெர்லைத் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் நிரூபித்துள்ளது. இனி நம் முன் உள்ள பிரச்சினை இந்த கார்ப்பரேட் அதிகாரத்தை வீழ்த்துவது எப்படி என்பதுதான்.

2. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று!
ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றுவது ஒன்றே தீர்வு. மற்றவையெல்லாம் மக்களை ஏமாற்றும் சதியே.

3. விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா?
விவசாயிகளின் வாக்குகளைக் கவரும் கவர்ச்சிகரமான பொறிதான் வங்கிக் கடன் தள்ளுபடி.

4. உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள்!
கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

5. பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சியடையலாம்… எனினும் மெத்தனம் கூடாது! பா.ஜ.க.வின் தோல்வியைப் பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

6. மூன்று மாநில மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள்?
ம.பி. இராசஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் விவசாய உற்பத்தி அதிகரித்த அதே விகிதத்தில் விவசாயிகளின் துயரமும் அதிகரித்திருக்கிறது.

7. மண உறவை மீறிய பாலுறவு குறித்த தீர்ப்பு : சமூக ஒழுங்கை சீர்குலைக்காது! மண உறவை மீறிய பாலுறவை வைத்துக் கொள்வது சமூகத் தவறு மட்டுமே. அதனை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் சாரம்.

8. அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும்

இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் எவ்வாறு சாதிய கட்டுமானத்தையும், பொது புத்தியையும் கட்டமைத்திருக்கிறது என்பதையும், மேலிருந்து போடப்படும் சட்டங்களும் தீர்ப்புகளும் எவ்வாறு ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

9. பார்ப்பனியம் : சமத்துவத்தின் முதல் எதிரி!
பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம் எனக் கூறுவது வன்முறை அல்ல. அதுவொரு உண்மை விவரம். இவ்வாறு கூறுவதைத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதலாகத் திரிக்கிறது பார்ப்பனக் கும்பல்.

10. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்!
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்

11. உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு?
விவசாயத்திற்கும் ரேஷனுக்கும் மானியத்தை வாரி வழங்குவதாக இந்தியா மீது உ.வ.க.வில் புகார் கொடுத்திருக்கிறது, அமெரிக்கா. ஆனால், உண்மையோ அதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.

12. கஜா புயல் நிவாரணம் : தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களா?
பாதிப்புகளை ஈடுசெய்யக்கூடிய நிவாரணத் தொகையை மோடி அரசு வழங்காவிட்டால், தமிழக மக்கள் வரிகொடா இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

நெய்வேலி 3-வது நிலக்கரிச் சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்திய என்.எல்.சி நிர்வாகம், அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடோ, வேலைவாய்ப்போ வழங்கவில்லை. மேலும் அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும் வேலை நிரந்தரம் செய்யவில்லை.

அதனைத் தொடர்ந்து, “நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு இல்லை ! வேலையும் தரவில்லை!! ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்னும் நிரந்தரம் செய்யவில்லை! என்.எல்.சி நிர்வாகமே, மூன்றாவது சுரங்கம் யாருக்காக?” என்ற முழக்கத்தை முன் வைத்து, கடந்த ஜன-10 அன்று கம்மாபுரம் பகுதி, கிராம மக்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

அறிவித்தபடி, காலை முதலாகவே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்த போலீசு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து அங்கிருந்து கலைந்து போகும்படி கூறியது.

போலீசின் நாடகத்தை அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள், மக்கள் மத்தியில் நாம் போராடி கைதாவதா? இல்லை கலைந்து சொல்வதா? என்று கேள்வினர். அதற்கு பதிலளித்த மக்கள், “நாங்கள் போராடி கைதாகிறோம்” என்று போலீசு செவிகளுக்கு கேட்கும் படி அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு, போலீசு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அனைவரையும்  கைது செய்தது போலீசு.

மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 97912 86994

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

தினமலர் பத்திரிக்கையை எரித்த திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்

நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும்; தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்றும்; ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தை அம்பலப்படுத்தியும், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதும், மக்கள் அதிகாரம் போன்ற மக்களுக்காக போராடும் அமைப்புகளின் மீது அவதூறு பரப்பும் தினமல(ம்)ர் பத்திரிக்கையை தீயிட்டுக்கொளுத்தினர்.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள், திருச்சி.
99431 76246

 ♦ ♦ ♦

கும்பகோணம் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, குடந்தை வழக்கறிஞர்கள் சார்பாக, ஜன-10 அன்று குடந்தை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் குருமூர்த்தி , கருணாமூர்த்தி மற்றும் பாபநாசம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் என்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.

♦ ♦ ♦

திருச்சி – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

“டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!!ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !!” என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்பு வழக்கறிஞர்கள் இணைந்து திருச்சி நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் மீண்டும் பற்றிப் பரவட்டும்..

தொகுப்பு:

விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 51

மாக்சிம் கார்க்கி
டுத்த ஞாயிற்றுக்கிழமையன்று அவள் சிறைச்சாலை ஆபீசில் பாவெலைச் சந்தித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டிருந்தாள், அந்தச் சமயத்தில் அவன் அவளது கைக்குள் ஒரு காகித உருண்டையை வைத்து அழுத்துவதைத் தாய் உணர்ந்தாள். கையில் சூடுபட்ட மாதிரி அவள் திடுக்கிட்டுப்போனாள். தன்னுடைய மகனது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்; எனினும் அதில் அவளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பாவெலின் நீலக் கண்கள் வழக்கம் போலவே அமைதியோடும் அழுத்தத்தோடும் சிரித்துக் களித்தன.

”வருகிறேன்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.

மீண்டும் ஒரு முறை அவளது மகன் தன் கரத்தை நீட்டினான்; அவனது முகத்தில் அன்பின் சாயை படர்ந்தோடியது.

”போய்வா. அம்மா.”

அவள் அவனைப் போகவிடாமல் அப்படியே நின்றாள். ”கவலைப்படாதே. கோபமும் படாதே” என்றான் அவன்.

இந்த வார்த்தைகளும் அவனது நெற்றியிலே அழுந்தித் தோன்றிய உறுதியான ரேகையுமே அவளுக்குப் பதிலளித்தன.

“அட, கண்ணு” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே சொன்னாள். “நீ என்ன சொல்கிறாய்.

அவனை மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் வெளியே வந்தாள். தனது கண்களில் பொங்கும் கண்ணீரையும் நடுங்கும் உதடுகளையும் தன் மகன் பார்த்துவிடக்கூடாதே என்ற தவிப்பில் விருட்டென் வெளிவந்துவிட்டாள். வீட்டுக்கு வந்து சேருகிறவரையிலும், அந்தக் காகித உருண்டையை வாங்கிய கரம் கனத்துத் தொங்குவது போலவும், தோளில் ஓங்கி அறை வாங்கியது போலவும், அதனால் அது வலியெடுத்து வேதனைப்படுவது போலவும் அவளுக்குத் தோன்றியது. விட்டுக்கு வந்த மாத்திரத்தில் அவள் அந்தக் காகிதத்தை நிகலாய் இவானவிச்சிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு. அவன் அந்தக் காகிதத்தை விரித்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கும் வரையிலும். இதயத்திலே நம்பிக்கை படபடத்துத் துடித்துக்கொண்டிருக்க, அப்படியே காத்து நின்றாள். ஆனால் நிகலாயோ அவற்றைக் கவனிக்கவில்லை.

”ஆமாம். அவன் இதைத்தான் எழுதியிருக்கிறான்’ என்று கூறிவிட்டு அதை வாசிக்கத் தொடங்கினான். ‘தோழர்களே. நாங்கள் தப்பி வருவதற்கு முயலமாட்டோம். எங்களால் முடியாது. எங்களில் எவராலும் முடியாது. அப்படிச் செய்தால் நாங்கள் எங்கள் சுயமரியாதையையே இழந்து விடுவோம். ஆனால் சமீபத்தில் கைதான அந்த விவசாயிக்கு நீங்கள் உதவ முயலுங்கள். அவனுக்கு உங்கள் கவனிப்புத் தேவை. நீங்கள் உங்களால் முடிந்ததையெல்லாம் அவனுக்காகச் செய்யுங்கள்; அவன் அதற்குத் தகுதியானவன். அவனுக்கு இங்கு பொழுது போவதே பெரும்பாடாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவன் அதிகாரிகளோடு சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறான். ஏற்கெனவே அவன் இருள் கொட்டடியில் இருபத்து நாலுமணி நேரமாய்க் கிடந்து வருகிறான். அவர்கள் அவனை சித்திரவதை செய்தே கொன்றுவிடுவார்கள். நாங்கள் அனைவரும் அவன் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்கள். அவளுக்கு எல்லாவற்றையும் சொல்லுங்கள், அவள் புரிந்துகொள்வாள்!”

தாய் தன் தலையை உயர்த்தி அமைதியோடு நடுநடுங்கும் குரலில் சொன்னாள்:

”சொல்வதற்கு என்ன இருக்கிறது? எனக்குப் புரிகிறது.”

நிகலாய் வேறொரு பக்கமாகத் திரும்பிக்கொண்டு, மூக்கைப் பலமாகச் சிந்தினான்.

”எனக்கு என்னவோ சளிதான் பிடித்திருக்கிறது போலிருக்கிறது…..” என்று முணுமுணுத்தான்.

அவன் கைகளை உயர்த்தி, தன் மூக்குக் கண்ணாடியைச் சீர்படுத்திக்கொண்டே மேலும் கீழும் நடந்தான்.

“உண்மை இதுதான். எப்படியானாலும் நமக்கு இனிமேல் நேரமே இல்லாது போயிற்று.’

”அது சரிதான். விசாரணையாவது நடக்கட்டும்” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு இதயத்திலே மூட்டமாய்ப் படிந்த சோகத்தோடு சொன்னாள் அவள்.

“இதோ. இப்போதுதான் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஒரு தோழரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..”

”எப்படியும் அவன் சைபீரியாவிலிருந்து தப்பி வந்துவிடலாம். இல்லையா?”

“நிச்சயமாய், விசாரணை சீக்கிரமே நடைபெறப் போகிறதென்றும், ஆனால் தீர்ப்பு—அவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதென்று தீர்ப்பு — செய்துவிட்டதாகவும் அவர் எழுதியிருக்கிறார். இந்த ஏமாற்றுக்காரர்கள் தங்களது சொந்த நீதிமன்றங்களைக்கூட ஓர் ஆபாசக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே, பீட்டர்ஸ்பர்க்கில் தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது!

“கவலைப்படாதே நிகலாய் இவானவிச்” என்று உறுதியுடன் கூறினாள் தாய். “நீங்கள் எனக்கு இதை விளக்கவும் வேண்டாம். ஆறுதல் கூறவும் வேண்டாம். பாவெல் சரியான காரியத்தைத்தான் செய்வான். எந்தவிதக் காரணமுமின்றி அவன் தன்னையும் தன் தோழர்களையும் கஷ்டத்துக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டான். அவன் என்னை நேசிக்கிறான். அவன் என்னைப்பற்றி எவ்வளவு கவலைப்படுகிறான் . என்பதை நீங்களே அறிவீர்கள். அவளுக்கு விளக்கிச் சொல்லுங்கள்’ என்று சொல்கிறான் அவன். ‘ஆறுதல் கூறுங்கள்’ என்கிறான்…”

அவளது இதயம் மூர்க்கமாகப் படபடத்தது. உணர்ச்சி வேகத்தால் அவள் கண்கள் இருண்டு மயங்கின.

“உங்கள் மகன் அருமையான பேர்வழி” என்று இயற்கைக்கு மீறிய உரத்த குரலில் சொன்னான் அவன். “அவன் மீது எனக்கு அபார மதிப்பு”.

“ரீபினுக்கு உதவுவதற்கு நாம் வேறொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொன்னாள் தாய்.

அவள் உடனடியாக ஏதாவது செய்ய விரும்பினால், எங்காவது போக, களைத்துப் போய்க் கீழே சாய்கிறவரையிலும் நடந்தே போக விரும்பினாள்.

‘நல்லது என்று கூறிக்கொண்டே அறைக்குள் நடந்தான் நிகலாய். ”இப்போது சாஷா நமக்குத் தேவை…”

‘அவள் வந்துவிடுவாள். நான் என்றென்றெல்லாம் பாவெலைப் பார்த்துவிட்டு வருகிறேனோ, அன்றெல்லாம் அவள் வந்துவிடுவாள்.”

படிக்க:
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !
மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ?

”நிகலாய் சோபாவில் தாய்க்கு அருகே உட்கார்ந்தான். அவன் சிந்தனை வயப்பட்டவனாய்த் தலையைக் குனிந்து உதட்டைக் கடித்து, தாடியைத் திருகிக்கொண்டிருந்தான்.

“இந்தச் சமயத்திலே என் அக்காவும் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான்…”

“பாவெல் அங்கிருக்கும் போதே நாம் இந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டால் நல்லது. அவனும் அதைக் கண்டு சந்தோஷப்படுவான்’ என்றாள் தாய்.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள்.

”அவனுக்கு ஏன் இதில் விருப்பமில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை …’ என்றாள் தாய்.

நிகலாய் துள்ளியெழுந்தான். அதற்குள் வாசலில் மணியடித்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“சாஷாவாய்த்தான் இருக்கும்” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.

“அவளிடம் இதை எப்படிச் சொல்வது?” என்று தானும் மெதுவாகக் கேட்டாள் தாய்.

”ஹம் — ஆமாம்.” ”அவளை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது.”

மீண்டும் மணியடித்தது. ஆனால் இந்தத் தடவை உரத்து ஒலிக்கவில்லை. வாசலில் நிற்கும் ஆசாமி உள்ளே வருவதற்குத் துணியாதது மாதிரி தோன்றியது. நிகலாயும் தாயும் கதவினருகே சென்றார்கள். சமையல் கட்டுக்குள் சென்றவுடன் நிகலாய் ஒருபுறமாக நின்று கொண்டு சொன்னான்.

“நீங்கள் மட்டும் போவதுதான் நல்லது…”

”அவன் மறுத்துவிட்டானா?” என்று கதவைத் திறந்து விட்டவுடனேயே தாயிடம் தைரியமாகக் கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம்.”

”அவன் இப்படிச் செய்வான் என்று எனக்குத் தெரியும் என்று வெறுமனே சொன்னாள் சாஷா . எனினும் அவளது முகம் வெளுத்து விட்டது. அவள் தனது கோட்டுப் பித்தான்களைக் கழற்றினாள்; மீண்டும் அதை மாட்டினாள். அந்தக் கோட்டைத் தன் தோளில் சிறிது நழுவிக்கிடக்குமாறு செய்ய முயன்றாள்.

“மழையும் காற்றும் — பொல்லாத பருவம்!” என்று சொன்னாள் அவள். ”அவன் சௌக்கியமா?”

“ஆமாம்.”

”செளக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறான்” என்று மெதுவாகக் கூறிவிட்டு, தன் கையையே பார்த்துக் கொண்டு நின்றாள் சாஷா .

”நாம் ரீபினை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவன் எழுதியிருக்கிறான்’ என்று அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்காமலேயே கூறினாள் தாய்.

“அப்படியா? நாம் அதற்கேனும் நமது திட்டத்தை உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று மெதுவாகச் சொன்னாள் அந்த யுவதி.

”நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டே வாசல்நடைக்கு வந்தான் நிகலாய் ”வணக்கம், சாஷா.”

அந்த யுவதி தன் கரத்தை நீட்டியவாறே கேட்டாள்:

“ஏன் கூடாது? எல்லோரும் இது ஒரு நல்ல திட்டம் என்றுதான் கூறுகிறார்கள்.”

“ஆனால், இதை நிறைவேற்றி வைப்பது யார்? நமக்கெல்லாம் ஒரே வேலையாயிருக்கிறதே.”

”நான் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே எழுந்தாள் சாஷா . “எனக்கு அவகாசம் இருக்கிறது.”

“ரொம்ப சரி. ஆனால் மற்றவர்களைக் கேட்டுக் கலந்து கொள்ள வேண்டும்…”

”நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போதே போகிறேன்.”

மீண்டும் அவள் தனது மெல்லிய விரல்களால் தனது கோட்டுப் பித்தான்களை அவசர அவசரமாக மாட்ட முயன்றாள்.

“முதலில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள் தாய்

”எனக்கு ஒன்றும் களைப்பாயில்லை” என்று அமைதியான புன்னகையோடு கூறினாள் அந்தப் பெண்.

வாய் பேசாது அவர்களோடு கை குலுக்கிவிட்டு அவள் மீண்டும் பழைய விறைப்போடும் கடுமையோடும் வெளியில் சென்றாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அனைவரையும் விடுவித்தது. ஓய்வு பெறும் முன் அவசர அவசரமாக சட்ட புத்தகத்தில் தனது முத்திரையை பதிக்கும் வகையில் தீர்ப்பெழுதி நீதிபதி அனைவரையும் விடுவித்தார்.  அதோடு விட்டாரா? தானாக முன்வந்து விடுவிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் (இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பா.ஜ.க. தலைவர் அமித் ஷா)  இந்த வழக்குக்கும் தொடர்பே இல்லை என்றார்.

நீதிமன்ற சட்டத்தின் முன் போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறி விடுவிக்கப்பட்டாலும் இந்தக் கொலைகள் ஏன் நடத்தப்பட்டன? யாருக்காக நடத்தப்பட்டன? என்கிற கேள்விகள் இயற்கையாக எழ வேண்டும்.

ஆனால், இது எளிதானது அல்ல. இரு தரப்பிலிருந்து அரசியல் சேறு வாரியிறைக்கப்படும்போது, உண்மை அங்கே பாதிப்புக்குள்ளாகிறது. எனினும், வழக்கறிஞராக இருந்து நிதியமைச்சரான அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவுக்கு “சொராபுதீன் விசாரணையை கொன்றது யார்?” என தலைப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

வழக்கு விசாரணை கொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதோடு, சொராபுதீன், கவுசர் பி, துளசிராம் பிராஜபதி, ஹரேன் பாண்டியா ஆகியோரது மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையும் பா.ஜ.க. அமைச்சர் இறுதியாக ஒப்புக்கொள்கிறார்.

கவுசர் பீ மற்றும் சொராபுதீன்.

சொராபுதீன் வழக்கில் இந்த முடிவுக்கு வர 13 ஆண்டுகள் இரண்டு மாதங்களும் ஹரேன் பாண்டியா வழக்கில் 15 ஆண்டுகள் ஒன்பது மாதங்களும் ஆகியிருக்கின்றன.  ஒருவர் உள்ளூர் ரவுடி, மற்றவர் முன்னாள் உள்துறை அமைச்சர். நீதியின் முன் அவர்கள் இருவரும் சமமானவர்களே.  அவர்கள் புறக்கணிப்புக்கும் நீதி மறுப்புக்கும் சமமாகவே ஆளாகினர்.

இதை ஏற்றுக்கொண்ட ஜெட்லி,  தன்னிச்சையாக கருத்து சொல்வதன் மூலம் 15 ஆண்டுகால வழக்கு வரலாற்றின் தருணங்களை நினைவூட்டுகிறார்.  நீதிபதி அனைவரையும் அவசர கதியில் விடுவித்ததாக காங்கிரசும் பா.ஜ.க.வும் சொல்கின்றன. அனைவரும் இறுதியாக வழக்கு விசாரணை முழுமையானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்டரே குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்!

முக்கியமாக, குறைந்தபட்சம் சொராபுதீன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டர்களின் பட்டியலில் முதலில் இருந்த, அப்போதைய தீவிரவாத தடுப்பு படையின் டி.ஐ.ஜி.-யான டி.ஜி. வன்சாரா தனது ட்விட்டில், “எங்களுடைய திட்டமிட்ட எண்கவுண்டர்” என உலகத்துக்கு தனது குற்றத்தை அறிவிக்கிறார்.

டி.ஜி.வன்சாரா.

அதில் அவர் சொல்கிறார், “சொராபுதீன் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் 22 போலீசு அதிகாரிகளையும் விடுவித்திருக்கிறது. எங்களுடைய என்கவுண்டர் அனைத்தும் உண்மையானவை என்ற எனது முடிவை கோடிட்டு காட்டுகிறது. எங்களுடைய பணியை செய்ததற்காக நாங்கள் தவறாக குற்றம்சாட்டப்பட்டோம்.  டெல்லிக்கும் காந்தி நகருக்கும் இடையே  நடந்த அரசியல் போரில்  நாங்கள் பலியாக்கப்பட்டோம்.”

மற்றொரு ட்விட்டில், “அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பெசண்ட் சிங், பெனாசீர் புட்டோ, பிரேமதாசா போன்றோரை தீவிரவாதிகள் வெற்றிகரமாக படுகொலை செய்தார்கள். கோத்ரா சம்பவத்துக்கு பின் தடுப்பு நடவடிக்கையாக குஜராத் போலீசு என்கவுண்டர்களை செய்திருக்காவிட்டால், நரேந்திர மோடிக்கும் அது நடந்திருக்கும். நாங்கள் ஒரு மீட்பரை காப்பாற்றினோம்” என்கிறார்.

உண்மையில் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், இது ஒரு போலி மோதல் கொலை என்பதில் எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 2007-ம் ஆண்டு குஜராத் அரசு வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, உச்சநீதிமன்றத்தில் சொராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டார் என தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்குப் பின், கவுசர் பி கொல்லப்பட்டு,  துண்டுத்துண்டாக வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டது என அவரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அனைவரும் உண்மையின் அடிப்படையில் ஒத்துக்கொண்ட கொலைக்கு – ரத்த வெறிகொண்ட போலீசின் கொலைக்கு உதாரணம்தான் இந்த வழக்கும். ஆனால், நீதி இன்னும் கிடைக்கவில்லை.

இரண்டு முக்கியமான கேள்விகளை குற்றம்சாட்டப்பட்டவராகவும் அரசு தரப்பாகவும் உள்ள குஜராத் அரசு கேட்டு அதற்கு பதிலும் சொன்னது.

கேள்வி 1: சொராபுதீன் கொலை ஒரு போலி மோதல் கொலையா?
பதில்: ஆமாம்.
கேள்வி 2: கவுசர் பி, கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டாரா?

பதில்: ஆமாம்.

இப்போது அமைச்சர் ஜெட்லி கேட்கும் அதே கேள்வியை நாமும் கேட்போம், “ஏன் எதற்கும் நீதி கிடைக்கவில்லை?”

அடிப்படையிலிருந்து ஆரம்பிப்போம்!

2013-ம் ஆண்டும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெட்லி எழுதிய கடிதத்தில் எழுப்பிய குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியும் சொல்கிறார். அரசியல் ஒரு பகுதியாக இருந்தாலும்  வெளிப்படையாக சிலவற்றை பேசியே ஆக வேண்டும்.

கேள்வி 3: ஐ.எஸ்.ஐ. அல்லது லஷ்கர் இ தொய்பா அனுப்பிய நபரா சொராபுதீன்?
சொராபுதீனை ‘திட்டமிட்டு’ கொன்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு கவுசர் பி கொல்லப்பட ஒரு பண்ணைவீட்டில் காத்திருக்கும் நேரத்தில், டி. ஜி. வன்சாரா, நிருபர்களிடம் ’சொராபுதீன் ஒரு லஷ்கர் தீவிரவாதி என சொன்னார்.

ஆனால், குஜராத் சட்டப்பேரவை எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில் (மார்ச் 20, 2006) அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, சொராபுதீன் ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் என்றும், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டவர் என்றும் சொன்னார்.  அப்போதைக்கு கிடைத்த தகவல்படி எனவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது டி.ஜி.வன்சாரா, இந்த வழக்கில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியிருக்கிறார்.

அமைச்சர் ஜெட்லி, சொராபுதீனை இப்படிச் சொல்கிறார், “குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தேடப்பட்டுவந்த ஒரு மாஃபியா. பல்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வந்தவர்” என 2013-ல் எழுதிய கடிதத்தில் சொல்கிறார். ஜெட்லியின் கடிதம்கூட, வன்சாராவின் கூற்றை ஆதரிக்கவில்லை.

ஆனால், சொராபுதீனின் கிரிமினல் பின்னணி குறித்து ஜெட்லி அறிந்து வைத்திருந்தார். ஜிர்னியா வழக்கிலிருந்து சொராபுதீன் விடுதலையான பிறகு, அவர் பிழைப்புக்காக என்ன செய்தார்? மூன்று மாநிலங்களிலும் தப்பித்து அவர் எப்படி வாழமுடிந்தது?

1998-ம் ஆண்டிலிருந்து குஜராத்தை ஆள்கிறது பா.ஜ.க. மத்திய பிரதேசத்தில் 2003 டிசம்பரிலிருந்து ஆண்டுகொண்டிருக்கிறது. 1993 – 2008-க்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க. இராஜஸ்தானில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது.  இந்த காலத்தில்தான் சொராபுதீனும் செயல்பட்டார்.

நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. சொல்கிறார்: “இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்குகிறது. மாஃபியாக்கள் மதிப்பிழக்கும்போது, அரசாங்கம் அவர்களை தூக்கியடித்தது”

படிக்க:
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

எனவே, சொராபுதீன் மூன்று மாநிலங்களிலும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு அளித்தது யார்? ஏன்?  இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க ஜெட்லியும் அவருடைய மூன்று மாநில அரசின் சகாக்களும் பொருத்தமானவர்கள்.


கட்டுரையாளர்: சரிதா ராணி
தமிழாக்கம்: அனிதா
நன்றி: த வயர்

மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ?

1

”உங்கள் வயிறு நிறையா விட்டால் நல்ல இசையைக் கேட்க முடியாது” என்கிறார் உன்னிகிருஷ்ணன். கோவையைச் சேர்ந்த இவர் ‘இசை’ ரசிகர். சென்னையில் நடந்து கொண்டிருக்கும் மார்கழி இசை உற்சவத்திற்கு கோவையில் இருந்து வந்திருப்பவர். கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் மார்கழி இசை உற்சவத்தில் கரகரப்பிரியாவுக்கும் நாட்டக்குறிஞ்சிக்கும் இணையான மவுசு கிழங்கு போண்டாவுக்கும் பில்டர் காபிக்கும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தக்காலத்திலிருந்து ஆனந்த விகடனில் வி.எஸ்.வி, சுப்புடு வகையறாக்கள் எழுதி வரும் மார்கழி சீசன் விமர்சனக் கட்டுரைகளில் இது விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும்.

எனினும், கடந்த பதினாறு ஆண்டுகளாக சபா கேன்டீன்களின் தீனிப் பட்டியல் வீங்கிப் பருத்திருப்பதன் தாத்பர்யம் குறித்து ஆராய்கிறது ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை. மேற்படி கட்டுரையில் வாழை இலையின் மேல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது; ஏறத்தாழ 14 அயிட்டங்கள். கமகங்களின் தாலாட்டுக்கு செருகும் கண்களை தொடை தட்டி எழுப்ப மாமாக்கள் படும் பாடு உலகறிந்ததே. இந்நிலையில் மூக்கு முட்ட தின்றபின் கீர்த்தனைகளின் மீட்டரை அளப்பதற்கு சம்மட்டியால்தான் தாளம் போட வேண்டியிருக்கும். அடுத்த முறையாவது கருநாடக இசையின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சம்மட்டி ஏற்பாடு செய்து கொடுப்பது நலம்.

போகட்டும். சென்னை சபாக்களில் பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கருநாடக இசைத் திருவிழாக்களால் இசைத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து தரவுகள் ஏதுமில்லை. ஆனால், சங்கத்தை விட சோறுதான் முக்கியம் என்பதை சபா கேன்டீன் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி புள்ளிவிவரங்களோடு நிரூபிப்பதை மேற்படி கட்டுரை தெளிவாக விளக்குகின்றது. தமிழகமெங்கும் இருந்து சிலுக்கு வேட்டி சகிதம் சபா கேன்டீன்களில் குவியும் மயிலை மாமாக்கள் வாழை இலை சாப்பாட்டுக்கு அலைமோதுவதை ரசனையோடு விவரிக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

வெள்ளைச் சோறு, சாம்பார், ரசம், பாயாசம், கூட்டு, பொரியல், தயிர் என நீளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அயிட்டங்கள் ஒவ்வொன்றும் வெளியே கிடைப்பதை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றதாம். கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.

இவை தவிர தர்பூசணி ரசம், வெஜிடபிள் பாயாசம், பச்சை மிளகாய் அல்வா (!) எலுமிச்சை அல்வா, மோர் உப்புமா போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களும் உண்டு. இசையில் நடந்ததோ இல்லையோ தீனி விசயத்தில் காத்திரமான ஆராய்ச்சிகள் நடந்திருப்பதை இந்தப் பட்டியல் உறுதிப்படுத்துகின்றது. இத்தனையையும் மூக்குப் பிடிக்க விழுங்கி விட்டு நேயர்கள் விடும் குறட்டை மற்றும் குசு சப்தங்களை கருநாடக சங்கீத பக்கவாத்தியங்களின் பட்டியலில் சேர்க்க முடியுமா என்பதை ஆராய்ந்தால் நிச்சயம் ஆக்கப்பூர்வமான முடிவுகள் ஏதேனும் கிட்டலாம்.

டிசம்பர் சீசன்களில் சபாக்களில் அலைமோதும் கூட்டத்தை ஈர்ப்பது எது என்பதில் இனிமேல் யாருக்கும் சந்தேகம் தோன்ற வாய்ப்பில்லை. மலேசியாவில் இருந்து ஒவ்வொரு டிசம்பர் சீசனுக்கும் சென்னை நோக்கிப் பறந்தோடி வரும் உமா பாலன் என்கிற மாமியின் விளக்கம் இதில் லவலேசம் கூட குழப்பம் ஏற்படாதபடிக்கு விளக்குகிறார். “இங்கே கிடைக்கும் இனிப்புப் பதார்த்தங்கள் சிறப்பாக உள்ளன. அனைத்தும் சுத்தமான நெய்யில் செய்யப்பட்டுள்ளன. அதே போல் நான் ஏதாவது ஒரு சபா கேன்டினில் தின்று கொண்டிருக்கும் போது பக்கத்திலமர்ந்து சாதகம் புரிபவர் இன்னொரு சபா கேன்டினில் கிடைக்கும் வேறு ஒரு பதார்த்தத்தையும் முயற்சித்துப் பார்க்குமாரு பரிந்துரை செய்வார்”.

பதினேழு அயிட்டங்கள் கொண்ட புல் மீல்ஸ் முன்னூறு ரூபாய்; ஒன்பது அயிட்டங்கள் கொண்ட மினி மீல்ஸ் நூற்றி முப்பது ரூபாய் என்கிறது மதராஸ் ம்யூசிக் அகாடெமியின் கேன்டினின் முன் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல். மேன்மக்களின் கலை என்பதால் இப்படித் தான் இருக்கும் போல. முன்பெல்லாம் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டு இருந்தால் தான் கேன்டினுக்குள் நுழைய முடியுமாம்; இப்போது வெளியார்களுக்கும் திறந்து விடப்பட்டிருப்பதால் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டு விற்கும் கவுண்டரை விட கேன்டினில் கூட்டம் அள்ளுவதாக கட்டுரையாளர் சொல்கிறார்.

எங்கே கல்லா நிறைகிறது என்பது சபா செயலாளர்களுக்கும் தெரிந்தே இருக்கும். எனவே  கருநாடக இசையின் எதிர்காலம் இனிமேல் சிரம திசையில் நுழையும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் நடந்துள்ள ஒரே நல்லது என்கிற வகையில் மவுண்ட்பேட்டன் மணி அய்யருக்கு ஒரு நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்வோம். மவுண்ட்பேட்டன் மணி அய்யர் என்பது ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் செயல்படும் கேன்டினின் பெயர் என்பதை முன்பே குறிப்பிட மறந்து விட்டோம் – மேற்படி மவுண்ட்பேட்டன் என்கிற முன்னொட்டு அந்தக் காலத்தில் அன்னாருக்கு இன்னார் சோறாக்கிப் போட்டதால் கிடைத்தது என்பது கொசுறு தகவல்.

♠ ♠ ♠

செவ்வியல் இசை என அறியப்படும் கருநாடக இசை மேற்கத்திய செவ்வியல் இசையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. மேலும் கர்நாடக இசையின் மூலம் தமிழிசைதான். தமிழிசையிலிருந்து திருடப்பட்டு கர்நாடக இசை என்ற பெயர் சூட்ப்பட்டு கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் மார்க்கெட் செய்யப்பட்ட இசை இது. அந்த சந்தைப்படுத்தலும் வெகு மக்களுக்கானதாக இல்லாமல் மேட்டுக்குடி பிரிவினருக்காகவே செய்யப்பட்டது.

அந்தக் கால அந்தப்புரங்களிலும், பார்ப்பனக் கோவில்களின் துதிப்பாடல்களாக தேவதாசிகளாலும் பாடப்பட்டு வந்த கருநாடக இசை சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் அக்கிரகாரத்திற்கு வந்து சேர்ந்தது. அது இந்து – இந்தியாவின் கலாச்சார அடிப்படைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வந்த காலம்; அதன் கலை வடிவங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ளப்பட்ட கருநாடக இசையை பார்ப்பனர்கள் மனமுவந்து வரித்துக் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. என்றாலும் கருநாடக இசையின் ஆன்மாவாக எப்போதும் இருந்து வந்தது மேட்டுக்குடி பண்புகள் என்பதையே சபா கேன்டினில் நிரம்பி வழியும் சிலுக்கு ஜிப்பாக்களும், மடிசார்களும் உணர்த்துகின்றன.

படிக்க:
தமிழிசை மரபு சில குறிப்புகள்
நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

நாடி நரம்பை முறுக்கேற்றும் பறையிசையைக் கேட்பதற்கு வேண்டுமானால் மாட்டுக்கறி தின்ன வேண்டியிருக்கும். ஆனால், கருநாடக இசை வித்துவான்களின் வாய்கள் கோணிக் கொண்டிருப்பதை தரிசிக்கும் துன்பத்திலிருந்து காப்பாற்ற சுத்தமான பசுநெய்யில் செய்யப்பட்ட வெண்பொங்கலால் மட்டும் தானே முடியும்?

சாக்கியன்

ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?

ஸ்விகி தொழிலாளர்கள் போராட்டம் – தேவை ஒரு புதிய அணுகுமுறை

ஸ்விகி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் சரி, ஓலா போன்ற டாக்சி சேவை நிறுவனங்களும் சரி கிளவுட் மென்பொருளை பயன்படுத்தி பெரிய அளவு வேறு முதலீடு இல்லாமல் உழைப்பாளர்களையும் நுகர்வோரையும் இணைத்து லாபம் ஈட்டுகின்றன.

செய்யும் வேலைக்கு நியாயமான கூலி, வேலை நேரம், வேலை நிபந்தனைகள் போன்றவற்றை உறுதி செய்ய யாரிடம் பேசுவது என்பது கூட தெளிவில்லாமல் உழைக்கின்றனர் இந்தத் துறை தொழிலாளர்கள். ஒரு நகரில் மட்டுமின்றி, நாடு தழுவி, உலகில் பல நாடுகளையும் தழுவி இயங்கும் இந்த நிறுவனங்களுக்காக வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளை பாதுகாப்பது எப்படி என்பது முக்கியமான சவாலாக எழுந்து நிற்கிறது.

சமீபத்தில் நடந்த ஸ்விகி தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் பற்றி ஒரு தொழிலாளி சொல்லும் விபரங்களில் இருந்து இந்த நெருக்கடியை புரிந்து கொள்ளலாம்.

மாதிரிப் படம்

“வணக்கம் நான் ஸ்விகில ஒர்க் பன்றேன். நான் இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வேற ஒரு கம்பெனில மார்க்கெட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன்” என்று ஸ்விகி போராட்டம் பற்றி நம்மிடம் பேசியவருக்கு வயது சுமார் 26 இருக்கும்.

“ஏற்கனவே பார்த்த மார்க்கெட்டிங் வேலையில் வருமானம் குறைவு. சிட்டிக்கு வெளிலதான் இருக்கோம், இருந்தாலும் அதிகமாகிட்டுவரும் செலவு காரணமா இந்த வேலைக்கு வந்தேன். வேலையில் சேரும்போது எனக்கு என்ன சொன்னாங்கன்னா ஸ்விகில ஜாயின் பண்ணுனா மாதம் 30,000 சம்பாதிக்கலாம் அப்டின்னாங்க.

நான் ஸ்விகில ஜாயின் பண்ணும்போது என்கூட சுமார் 100 பேர் ஜாயின் பண்ணுணாங்க. நான் சேர்ந்த நேரத்தில் வேலை கொஞ்சம் நல்லா போச்சு, வருமானமும் ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. சொன்னமாதிரி 30,000 வரலைன்னாலும் 20,000-க்கு கூடுதலா வந்துச்சு. ஆனா இப்போ கடந்த ஒரு சில மாதமா வருமானம் குறைஞ்சிருச்சு. நான் சேரும்போது ஆட்கள் கம்மி. இப்போ ஆர்டரும் அதிகமாயிருக்கு, ஆட்களும் ரொம்ப அதிகமா சேத்திருக்காங்க. கம்பேனிக்கு வேலை நல்லாதான் போகுது. ஆனால் எங்களுக்குதான் வருமானம் குறைஞ்சிருச்சு.

ஆரம்பத்துல சேர்ந்த போது குறைஞ்சது இத்தனை ஆர்டர் எடுத்தா இவ்வளவு இன்சன்டிவ் தர்றோம்னு சொன்னாங்க. இப்போ அந்த இன்சன்டிவ் சிஸ்டத்தையும் மாத்திட்டாங்க. அமொண்டுக்கு ஏத்த இன்சன்டிவ்னு சொல்றாங்க. ஆர்டர் குறைஞ்சிருச்சு, குறைஞ்சபட்சமா இருந்த வருமான உத்தரவாதமும் போயிருச்சு. இதுபற்றி ஆபீஸ்ல போய் கேட்டா உங்க நல்லதுக்கு தான் பண்றோம்னு சொல்றாங்க. என்ன நல்லது பன்றுங்கன்னுதான் தெரியல.

படிக்க:
♦ Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் !
♦ சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

ஆரம்பத்தில எங்களுக்கு காலைல இருந்து இரவு வரைக்கும் ஓடிட்டே இருந்தா ஒரு நாளுக்கு 700 ரூபாய் வரைக்கும் கிடைச்சது. இப்போது ஒரு நாளுக்கு ரூபாய் 500 தான் கிடைக்குது. பெட்ரோல் அதிலேயேதான் போட்டுக்கணும். காலையிலயே வந்துட்டு இரவுதான் வீட்டுக்கு போனேன். சாப்பிடறது எல்லாமே நாங்கள் அதில தான் பார்த்துக்கணும்.

இந்த நிலமைலதான் 2 வாரம் முன்னால ஸ்டிரைக் பண்ணுனோம். ஒரு ஆர்டர் எடுத்தா 36 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு ஆர்டர் கொடுக்கச் செல்லும்போது பக்கத்தில் உள்ள ஏரியாவுக்கும் சேர்ந்தாப்ல இரண்டு ஆர்டர் டெலிவரி கொடுத்தா முதல் ஆர்டக்கு 36 ரூபாயும் அடுத்த ஆர்டருக்கு 20 ரூபாயும் தந்தாங்க. இப்போ அதை மாத்தி முதல் ஆர்டருக்கு 35 ரூபாயும் இரண்டாவது ஆர்டருக்கு 10 ரூபாயும் தர்றதா சொல்றாங்க. அதோட தூரத்தையும் கூட்டிட்டாங்க. முதல்ல 4 கி.மீ க்கு இருந்தத இப்போ 5 கி.மீ -னு மாத்திட்டாங்க. காசைக் குறைச்சு தூரத்தை கூட்டிருக்காங்க. இந்த சம்பளத்துலதான் பெட்ரோலும் போடணும்னு சொல்லும் போது சிரமமா இருக்கு.

இதுபத்தி எங்க ஆபீஸ்ல முதல்ல நேரா போயி கேட்டோம். சரியான பதில் சொல்லல. திரும்பத் திரும்ப கேட்டோம். அதுக்குபிறகு அவ்வளவுதான் தரமுடியும்னு சொன்னாங்க. நாங்க விவரமா எடுத்துச் சொன்னப்போ உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்கன்னு மூஞ்சில அடிச்சமாதிரி சொன்னாங்க. அதுக்குப்பிறகுதான் ஸ்டிரைக் ஆரம்பமாச்சு.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

வடபழனி, அடையார்ல ஆரம்பிச்சு எல்லா பகுதிலயும் ஸ்டிரைக் நடந்துச்சு. ஸ்டிரைக்லாம் பண்ணமாட்டாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல. ஆனா எல்லா ஏரியாலயும் சப்ளை நின்னுபோச்சு. அதுக்கு பிறகு சீனியர் ஆட்கள் கொஞ்ச பேர தனியா கூப்பிட்டு உங்களுக்கு மட்டும் தர்றோம்னு சொல்லிருக்காங்க. அவங்க மறுத்ததனால ஸ்டிரைக் தொடர்ந்துச்சு. அதுக்கு பிறகு ஒரு மீட்டிங் போட்டு. உடனடியா ஆர்டர் எடுக்கப்போங்க, இத்தனை நாள் ஸ்டிரைக் பண்ணதுக்கு 2,000 தர்றோம். இதை நம்பி எல்லாரும் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டோம். ஆனால் அந்த இரண்டாயிரம் ரூபாயும் வரல ஸ்கீமையும் மாத்தல.

இது இப்படியிருக்கு, இன்னொரு பக்கம் ஸ்விகி அப்ளிகேசன் பாத்திங்கன்னா நீங்க ஆர்டர் போடும் பக்கத்தில நிறைய சேஞ்சஸ் செய்திருக்காங்க. அதே மாதிரி வேலை செய்ற எங்களுக்கும் அப்ளிகேசன் இருக்கு. அந்த அப்ளிகேசன்ல நிறைய குறைகள் இருக்கு. அதாவது, கி.மீ கணக்குல சம்பளம் தர்றாங்க. டெலிவரி செய்ற இடத்தை வண்டில ஸ்பீடோ மீட்டரையும், வேற அப்ளிகேசனையும், கூகுல் மேப்லையும் வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரணமா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும் ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க. வேலை பாத்ததுக்கு சம்பளம் அனுப்பும்போதும் ஒரு கணக்கே இருக்காது. திடீர்னு கூடுதலா அனுப்புவாங்க, திடீர்னு குறையா அனுப்புவாங்க. என்னன்னு கேட்டா அதுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பாங்க. அடுத்து பணம் போடும்போது எடுத்துப்பாங்க. எங்ககிட்ட ஒரு கணக்கு இருக்கும் அவங்க ஒரு கணக்கு தருவாங்க. நாங்க சரிபார்க்கவும் முடியாது.

இந்த கம்பேனிக்கு நாங்களும் இந்த ஸ்விகி அப்ளிகேசனும்தான் மூலதனம்.

இந்த குறைய சரி செய்யச்சொல்லி பலமுறை கேட்டாச்சு. ஒரே அப்ளிகேசன்தான் ஆனால் கஸ்டமருக்கு ஒரு மாதிரியும் எங்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கு. நேரடியா சம்பளத்துலயும், இதுபோல மறைமுகமாவும் தில்லுமுல்லு நடக்குது.”

“சரிங்க, இதெல்லாம் உங்க ஓனருக்குத் தெரியுமா”

“ஆபீஸ்ல சொல்றோம்ல அவ்வளவுதான். இந்த கம்பேனிக்கு யார் ஓனர்னே எங்களுக்குத் தெரியாதுங்க”

“பெட்ரோல் செலவு பத்தி சொல்றீங்க அப்படி எவ்வளவு கிமீ வண்டி ஓட்டுவீங்க”

“ஒரு நாளுக்கு சுமார் 100 கிமீ ஓட்டுவோம்”

“வண்டி ஓட்டும்போது குண்டக்கமண்டக்க வண்டி ஓட்டுறீங்கனு உங்கள பத்தி சிலர் கம்பிளைண்ட் பன்றாங்களே”

“உண்மைதான். ஆனால் அதுக்கு முன்னாடி எங்க வேலையை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. மேப்ல தான் லொக்கேசன் வச்சு ஆர்டர் பன்றாங்க. அத வச்சுதான் எங்களுக்கு சம்பளம். ஒரு அப்பார்ட்மென்ட்ல ஆர்டர் வந்தா அந்த அப்பார்ட்மென்ட் உள்ள வரைக்கும் போய் கொடுப்போம். ஆனா ஸ்விகி ஆப்ல என்ட்ரன்ஸ் வரைக்கும்தான் தூரம் காட்டும். இன்னொன்னு ஒன்வே மாதிரி இடங்கள சரியா காட்டாது. அதை சுத்தி போனாலும் காசு எங்களுக்கு தான் நஷ்டம். இன்னொன்னு மூன்று வேளை சாப்பிடும் நேரம்தான் எங்களுக்கு வேலை அதிகமா இருக்கும். மத்த நேரம் அப்பப்போதான் ஆர்டர் கிடைக்கும். அந்த பீக் அவர்ஸ்ல ஓடுனாதான் காசும் கிடைக்கும். இன்னொரு பக்கம் இப்படி சம்பளத்தை குறைக்கும் போது வேற வழியும் எங்களுக்கு இல்ல. வேகமா ஓடித்தான் ஆகனும்னு நிலைமை. தப்புதான், அதுக்காக சரின்னு சொல்ல வரல. என்ன காரணம்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கனு சொல்றேன்.

வண்டி ஓட்டிட்டு ஜாலியான வேலைதானன்னு சிலர் நினைக்கிறாங்க. எனக்கும் வண்டி ஓட்ட பிடிக்கும், ஆனால் ரேஸ்ல போறமாதிரி அந்தந்த நேரத்துல ஓட வேண்டியிருக்கு. ஒரு ஆர்டர் போட்டு அதை டெலிவரி பன்றதுக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள கொண்டுபோய் கொடுத்தாகனும், கடைல லேட் ஆச்சுனாலும் நாங்கதான் பொறுப்பு. அதுமாதிரி டார்ச்சர்லாம் யோசிச்சாலாம் புரியாது, அனுபவிச்சாதான் புரியும். இப்படி நிலைமை எங்களைத் துறத்துறப்ப நாங்க அதுக்கேத்தா மாதிரி ஓடவேண்டியிருக்கு. சமீபத்துல வருமானம் குறைஞ்சிருக்கது இன்னும் அதிகமா ஓடனும், வேகமா ஓடனும் அப்பதான் இழந்ததை சரிசெய்ய முடியும்ன்ற நிலைமை ஏற்பட்டிருக்கு. பலரும் செய்யிறதுதான். நாங்க ஒன்னும் புதுசா செய்யல. ஆபீஸ்ல ஓவர்டைமும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்னுதான்.

நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு வீட்டிலுள்ளவங்களோ, டாக்டரோ எங்களைப்பார்த்து சொல்ல முடியாது. எல்லோருக்கும் உணவைச் சேர்த்துவிட்டுதான் எங்களது உணவு இடைவேளையை துவங்குகிறோம்.

வேற வேலைக்கு போகலாம்னு நானும் பலமுறை யோசிச்சு தேடியும் பாத்துட்டேன் வேற வேலையும் கிடைக்க மாட்டேங்குது. எனக்காத் தெரிஞ்சவரைக்கும் ஸ்விகில நிறையபேர் டிகிரி, டபுள்டிகிரி படிச்சவங்கதான். வேற எங்கயும் கிடைக்கலைனு தான் இங்க வர்றாங்க. மழை வெய்யில் குளிர்லாம் பாத்தா வேலைக்கே ஆகாது. இதுமாதிரி ஏராளமானவை சொல்ல முடியும். என்ன நடந்தாலும் எதைப்பத்தியும் கவலைப்படக்கூடாது. யாராவது அடிபட்டு கிடந்தாலும் ஆர்டர் புக் ஆனா ஓடவேண்டியதுதான்”

*****

ன்பார்ந்த ஸ்விகி ஊழியர்களே!

இப்படியே எவ்வளவு காலம்தான் ஓடிக்கொண்டே இருக்க முடியும். ஸ்விகி நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு வாக்குறுதியளிக்கும் நேரம் குறையக்குறைய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகலாம். ஆனால் அதற்கேற்ப ஓடப்போவது ஸ்விகி ஓனர்களில்லை, நம்மைப்போன்ற தொழிலாளிகள்தான். இவர்களது ஓட்டம் காசாக பணமாக அதன் முதலாளிக்கு கொட்டும் இவர்களுக்கு கிடைக்கும் பணம் இவர்களது எதிர்காலத்துக்கு உதவுமா?

சராசரியாக ஒருநபர் மாதம் முழுதும் விடுப்பின்றி நாளொன்றுக்கு பத்து மணிநேரம் ஓடினாலும் கிடைக்கக்கூடியது சுமார் 18,000 ரூபாய். இதில் பெட்ரோலுக்கு, மதியம் மற்றும் இரவு உணவுக்கு 70 ரூபாய், இடையில் தேனீர் செலவுக்கு 20 ரூபாய், வண்டி மெய்ன்டெய்ன்சுக்கு 30 ரூபாய் , செல்போன் ரீசார்ஜ்க்கு 6 ரூபாய், வண்டி இன்சூரன்ஸ்க்கு 4 ரூபாய், டயர் மாற்றுவது போன்ற பெரிய செலவுக்கு 5 ரூபாய். பெட்ரோலுக்கு 200 ரூபாய் என்று சராசரியாக ஒரு நாளுக்கு 250 லிருந்து 300 ரூபாய் வரை செலவாகும். அதுபோக மீதிதான் குடும்பச் செலவிற்கு.

படிக்க:
♦ தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்
♦ யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

இந்த சம்பளத்தை வைத்து அன்றாட வாழ்க்கையை ஓட்டவே தனிச்சிறப்பான பட்ஜெட் போடவேண்டும். அதற்கு மேல் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே வாய்ப்பிருக்காது. இந்த ஓட்டமானது சுமார் 35 வயதுவரை தாங்கும் அதற்குமேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். அதற்கு பிறகுதான் வாழ்க்கைச் செலவுகளே அதிகமாகும். குழந்தை, கல்வி, மருத்துவம், குடும்பச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது.

ஸ்விகி தொழிலாளிகளே உங்களது இன்றைய ஓட்டத்தை இன்றைக்கான பொருளாதார தேவை என்பதோடு நிறுத்தி சுருக்கிப் பார்க்காதீர்கள். எதிர்காலம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள். அதெல்லாம் பார்த்துக்கலாம் வேற வேலை கிடைக்காமலாப் போய்விடும் என்று நினைக்காதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம். இன்றைக்கே அனைத்து சக்தியையும் இழந்துவிட்டு நாளைய வேலைக்கு என்ன செய்வீர்கள். போராடி உங்களது நிறுவனத்தை இறங்கிவரச் செய்த நீங்கள் உங்களது சக ஊழியர்களை திரட்டி இதுபற்றி பேசுங்கள். சம்பளம் என்ற பொருளாதார தேவையை மட்டும் முன்வைத்து ஓடாதீர்கள். உங்களுக்கென்று ஓர் எதிர்காலம் உள்ளது. குடும்பம் உள்ளது அதையெல்லாம் பற்றி கலந்து பேசுங்கள். டெலிவரி நேரம் பற்றியும், பணிப் பாதுகாப்பு பற்றியும், இ.எஸ்.ஐ., பற்றியும் பேசுங்கள்.

இன்றைக்கு கூட்டமாகத் திரண்டாலும் இது போதாது. இந்திய தொழிலாளர் நலச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சங்கமாகத் திரளுங்கள். உங்களுக்கென்று ஓர் வரையறையை உருவாக்குங்கள். அதுபோலில்லாத வரை பணப் பிரச்சினை மட்டுமல்ல எந்தப் பிரச்சினையும் தீராது, அதிகமாகிக்கொண்டே போகும். சங்கமாகத் திரள்வதுதான் முதல்படி.

உங்களது கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துகிறோம்.

நன்றி : New Democrats

நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !

னித உரிமைகளுக்கு மாபெரும் எதிரியான பார்ப்பன இந்துமதத்தின் புரட்டுக்களையும், இழிவுகளையும் எதிர்ப்பது என்பது அடிப்படையில் ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். வரலாற்று அறிவியலின் அடிப்படையில் தொல்லியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முன்வைத்த உண்மைகளை தூக்கி யெறிந்து விட்டு, மத நம்பிக்கை என்ற அடிப்படையில் துளசிதாசர் இராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டாடும் உச்சநீதி மன்றம். நேர்மையான முன்னாள் இராணுவ வீரர் நல்லகாமனை மனித உரிமைக்கு எதிராக அடித்து அரைநிர்வாணமாக்குவதும், கிரிமினல் சங்கராச்சாரி ஜெயேந்திரன் மலம் கழிக்க தலைவாழை இலை அறுக்கும் காவல் நிலையங்கள்.

இப்படியொரு முறைகேடான வெட்கக்கேடான சூழல் நிலவும்போது வெறும் சட்டவரம்புகளில் மட்டும் நின்று சமூக விடுதலையை சாதிக்க முடியாது. சட்டவரம்பிற்கு அப்பாற்பட்ட முறையில் மட்டுமே சமூகத்திற்காக சரியாகச் சிந்திக்க முடியும் என்பதை காலம் உணர்த்துகிறது. ஏற்கெனவே சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடினால் தீட்டு என்று கொக்கரிக்கும், சிவனடியார் ஆறுமுகச்சாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் தில்லை வாழ் அந்தணர்களின் திமிருக்கு எதிராகப் போராடி வருகிறோம் நாங்கள். இப்போது ராமன் பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை’ என்று புதிய கதை எழுதும் உச்சநீதி மன்ற தில்லிவாழ் அந்தணர்களுக்கு எதிராகவும் அவாளோடு சேர்ந்து ராம பஜனை பாடக் கிளம்பியிருக்கும் புதிய பார்ப்பனர்களுக்கு எதிராகவும் நாங்கள் செய்துவரும் வேலைகளின் ஒரு பகுதியாக இந்தக் கவிதை நூலைக் கொண்டு வருகிறோம். நூற்றாண்டுகளாக நம்மை நசுக்கும் பார்ப்பனி யத்துக்கு எதிரான வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை. அதை தீர்ப்பதற்கான அரசியல் திசை வழியை அடையாளம் காட்டும் இந்தக் கவிதை நூலை வழக்கம் போல நீங்கள் வரவேற்று ஆதரியுங்கள். (நூலின் முன்னுரையிலிருந்து…)

கதிருக்கு அடிக்க வேண்டிய
பூச்சி மருந்தை
தன் உயிருக்கு
அடித்துச் சாகிறான் விவசாயி;

காரணமான உலகமயம் பற்றி
நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த
குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி
நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!…

மசாஜ் பார்லர் வைத்து
ஆளைப்பிடித்து இழுத்தால்
அது விபச்சாரம்;

மனுதர்மத்தை வைத்து
ஆளைப் பிடித்து அமுக்கினால்
அது மகாபாரதம்

மாமனை வைத்து தொழில் செய்தால்
அதற்குப் பெயர் விபச்சாரம்;
ராமனை வைத்துத்
தொழில் செய்வதற்குப் பெயர்
ராமாயணம்.

ராமனையா பழிப்பது
என கோவணத்தை வரிந்து கட்டும்
கோபாலா….

ஆ… ஊ… என்று அரற்றி வரும்
அக்கிரகாரத்து சூத்திர்வாலே
‘ஏ’வும் ‘யு’வும் போட்டு
ஓட்ட வேண்டிய
உங்கள் ராம காவியத்தை
உள்ளது உள்ளபடி ஓட்டுவாயா?…

அன்று:
ஊரான் மாட்டை
அவாள் ஓசியில் தின்றது
உபசாரம்;
இன்று:
உழைத்திடும் மக்கள்
காசுக்கு வாங்கிக் கறி தின்றால்
அபச்சாரம் அபச்சாரம்.

அவாள்
சாராயம் குடித்தால்
அது தீர்த்தம்;
நம்மாள் குடித்தால்
நாத்தம்.

பார்ப்பானோடு பழகி
கெட்ட பழக்கங்கள் வந்தது போதும்
பஞ்சமரோடு/பறையரோடு பழகடா
பாட்டாளி வர்க்க
உழைப்பைக் கற்று உயரடா…

நம்ம மேல சாமி வந்தா
நாக்குல கம்பியைக் குத்துது!
பார்ப்பான் சாமி மேலே வந்தா
போய் அடுத்தவனை வெட்டுது!
எனவேதான் சொல்கிறோம்
பக்தி என்ற பெயரிலே
பார்ப்பான் பின்னே செல்லாதே!

இந்து என்ற நினைப்பிலே
ராமன் பின்னே செல்லாதே!…

எய்ட்ஸ்… ஆர்.எஸ்.எஸ்.
இரண்டும் ஆபத்து
உள்ளுக்குள் விட்டால் உயிரின்
எதிர்ப்புணர்வு குன்றிவிடும்
உள்ளே விட்டதனால்
இதோ-உருக்குலைந்து தமிழ்நாடு!…. ( நூலிலிருந்து…)

நூல்: இந்து என்று சொல்லாதே… ராமன் பின்னே செல்லாதே!
ஆசிரியர்: துரை.சண்முகம்

வெளியீடு: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை.
158, சேதுபதி குறுக்குத் தெரு, இராமையா தெரு கடைசி,
ஜெய்ஹிந்த் புரம், மதுரை – 11.
தொலைபேசி: 94434 71003

பக்கங்கள்: 56
விலை: ரூ 20.00

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

அவன் மட்டும் சம்மதித்தால் … !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 50

மாக்சிம் கார்க்கி
ன்று மாலையில் இக்நாத் நிகலாய் வெஸோவ்ஷிகோவுக்கு எதிராக, ஒரு சின்ன நில அடி அறையில் உட்கார்ந்து தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தான்:

“மத்திய ஜன்னலில் நாலு தடவை தட்ட வேண்டும்…”

”நாலு தடவையா?” என்ற ஆர்வத்தோடு கேட்டான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

”முதலில் மூன்று — இந்த மாதிரி” என்று கூறிக்கொண்டே அவன் மேஜை மீது தட்டிக் காண்பித்தான். “ஒன்று. இரண்டு, மூன்று ஒரு விநாடி பொறு. அப்புறம் இன்னொரு முறை.

“புரிந்துகொண்டேன்.”

“உடனே செம்பட்டைத் தலையனான ஒரு முஜீக் வந்து கதவைத் திறப்பான் திறந்து; ‘நீ மருத்துவச்சிக்காக வந்தாயா?’ என்பான். உடனே: ”ஆமாம். முதலாளியின் மனைவியிடமிருந்து வருகிறேன்” என்று நீ சொல்ல வேண்டும். அவ்வளவுதான். அவன் உன்னைப் புரிந்து கொள்வான்.”

அவர்கள் இருவரும் ஒருவர் தலையோடு ஒருவர் தலை முட்டுமாறு உட்கார்ந்திருந்தனர். இருவரும் குண்டுக்கட்டான பலசாலிகள். அவர்கள் இருவரும் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை, தாய் தன் மார்பில் கரங்களைக் கோத்தவாறு நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் கூறிய மர்மமான சங்கேதச் சொற்களையும், தட்டுவதன் அர்த்த பாவத்தையும் காண அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

‘இன்னும் சின்னப் பிள்ளைகள்தான்” என்று அவள் தனக்குத் தானே நினைத்துக்கொண்டாள்.

சுவரிலிருந்த விளக்கு ஒரு நெளிந்து போன பழைய வாளியையும், மூலையிலே தரையில் கிடக்கும் தகரத் தொழிலாளியின் தகட்டுக் குப்பைகளையும் ஒளி செய்து காட்டிக்கொண்டிருந்தது. அந்த அறை முழுதும் நீரூற்று நாற்றமும் எண்ணெய்ச் சாய வாடையும் துரு நாற்றமும் நிறைந்து நின்றன.

இக்நாத் தொள தொளத்த துணியால் தைக்கப்பெற்ற கனத்த கோட்டு அணிந்திருந்தான்; அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது போல் தோன்றியது. அந்தக் கோட்டின் கையை ஆசையுடன் அவன் தடவிக் கொடுத்ததைத் தாய் பார்த்தாள். அவன் தன் கழுத்தைத் திருப்பித் தன்னைத் தானே நன்கு பார்த்துக்கொள்ளத் திரும்பினான்.

”குழந்தைகள்!” என்று நினைத்துக்கொண்டாள் அவள். ”அருமைக் குழந்தைகள்……”

”ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் இக்நாத். ”முதலில் முரார்த்தலின் வீட்டுக்குச் சென்று. நாத்தாவைப் பற்றிக் கேட்க மறந்துவிடாதே.”

”மறக்கமாட்டேன்” என்று பதிலளித்தான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

ஆனால் இக்நாத்துக்குப் பூரண திருப்தி ஏற்படவில்லை. தான் சொல்லிக் கொடுத்த சமிக்ஞைகளையும் சங்கேதங்களையும் திரும்பவும் ஒரு முறை சொல்லிவிட்டுத் தன் கரத்தை நீட்டிப் பேசினான்;

“அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லு. அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்கள் என்பதை நீயே கண்டுகொள்வாய்” என்று சொன்னான் அவன்.

அவன் தனக்குத்தானே மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு தன் கோட்டைத் தட்டிவிட்டுக்கொண்டான்.

“நான் போவதற்கு நேரமாகிவிட்டதா?” என்று அவன் தாயிடம் கேட்டான்.

“உனக்கு வழி தெரியுமா?”

”கண்டுபிடித்துப் போய்விடுவேன். போய் வருகிறேன். தோழர்களே!”

அவன் வெளியே சென்றான். நிமிர்ந்த மார்போடும், அகன்ற தோள்களோடும், ஒரு புறமாகச் சாய்த்து வைத்த தொப்பியோடும்.

பாக்கெட்டுக்குள் கைகளை லாவகமாக விட்டவாறும் அவன் வெளியே சென்றான். அவனது சுருட்டைத் தலையின் வெளிர்மயிர்க் கற்றைகள் அவனது நெற்றிப் பொருத்துக்களில் ஊசலாடின.

“ஒரு வழியாக எனக்கு இப்போது ஒரு வேலை கொடுத்தாகி விட்டது” என்று கூறிக்கொண்டே நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தாயின் பக்கமாக மெதுவாக வந்தான் ”ஏனடா சிறையை விட்டு வெளியில் வந்தோம் என்று எனக்கு முதலில் இருந்தது. வந்த புதிதில் எனக்கு ஒரே எரிச்சல். இங்கே வந்து ஒரு வேலையும் செய்யாமல், இரவும் பகலும் உள்ளே மறைந்திருப்பதுதான் என் வேலை. அங்கே இருந்தாலாவது ஏதாவது கற்றுக்கொண்டிருப்பேன். பாவெல் எங்கள் அறிவை எப்படியெல்லாம் வளர்த்தான்! சரி, அவர்கள் தப்பி வருவதற்குப் போட்ட திட்டம் என்ன ஆயிற்று, நீலவ்னா?”

“எனக்குத் தெரியாது” என்று தன்னையுமறியாது எழுந்த பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.

நிகலாய் தனது கனத்த கரத்தை அவள் தோள் மீது போட்டு, தனது முகத்தை அவள் பக்கம் கொண்டு போனான்.

”நீ அவர்களிடம் சொல்லிப்பார்” என்று பேசத் தொடங்கினான் அவன். “நீ சொன்னால் அவர்கள் கேட்பார்கள். அதில் ஒன்றும் சிரமமில்லை. நீயே போய்ப்பார். சிறைச்சாலைச் சுவர் இருக்கிறதா? அடுத்தாற்போல் தெருவிளக்கு அதற்கு எதிர்த்தாற்போல் வெட்ட வெளி மைதானம்; இடது புறம் இடுகாடு, வலது புறம் தெருக்களும் வீடுகளும், ஒவ்வொரு நாளும் விளக்கேற்றுபவன் விளக்கைத் துடைத்துச் சுத்தம் செய்ய வருவான். எனவே அவன் சிறைச்சாலைச் சுவரின் மீது ஏணியொன்றைச் சாத்தி, மேலே ஏறி, அந்தச் சுவரிலுள்ள ஒரு செங்கல் தூணில் ஒரு நூலேணியைக் கட்டி, சிறைச்சாலைக்குள்ளே அதை இறக்க வேண்டியது. அப்புறம் அவன் போய்விட வேண்டியது. சிறைக்குள்ளே இருப்பவர்களுக்கு இது எப்போது நடக்கும் என்பது நன்றாகத் தெரியும். அவர்கள் சாதாரணக் கிரிமினல் கைதிகளோடு வம்பிழுத்துப் பேசி ஒரு கலவரத்தைக் கிளப்ப வேண்டியது. இல்லையென்றால் தமக்குள்ளேயே அவர்கள் கலாட்டா செய்ய வேண்டியது. அதாவது சிறைச்சாலைக் காவலாளிகள் கண்டுபிடித்து விடாதபடி, அவர்கள் கவனத்தைக் கொஞ்சம் கவர வேண்டியது. இதற்குள் தப்பியோட வேண்டியவர்கள் ஏணி வழியாக ஏறி வெளியே வந்துவிட வேண்டியது. ஒன்று, இரண்டு, மூன்று – அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் முடிந்து விடும். இதுதான் சுலபமான வழி.”

அவன் தனது திட்டத்தைக் கைகளை ஆட்டி சைகைகள் காட்டி விளக்கியதால், அவன் கூறிய விஷயங்கள் எல்லாம் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் எளிதாகவும் தோன்றின. நிகலாயை அவள் எப்போது ஒர் அசமந்தப் பேர்வழியாகவே கருதி வந்திருக்கிறாள். முன்னெல்லாம் அவன் எந்த விஷயத்தையும் பகைவுணர்ச்சியோடும் அவநம்பிக்கையோடும் தான் பார்ப்பான். இப்போதோ அவன் புனர்ஜன்மம் எடுத்த மாதிரி, முற்றிலும் மாறிப்போய்விட்டான். அவனிடம் காணப்பட்ட நிதானமும் அன்பும் தாயின் இதயத்தைக் கவர்ந்தது. பரவசப்படுத்தியது.

“கொஞ்சம் யோசித்துப் பார். அவர்கள் இதைப் பகல் நேரத்திலேயே செய்யலாம். பகலில்தான் செய்ய முடியும்! சிறைச்சாலையிலுள்ளவர்கள் அனைவருமே விழித்திருந்து நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு கைதி தப்பியோடிவிடுவான் என்று எவரேனும் சந்தேகப்பட முடியுமா?”

”அவர்கள் சுட்டுத் தள்ளமாட்டார்களா?” என்று நடுங்கிக் கொண்டே கேட்டாள் தாய்.

”யார்? சிப்பாய்கள் இல்லை. அந்தக் காவலாளிகளுக்கு எல்லாம் தங்கள் கைத்துப்பாக்கிகளை வைத்து ஆணி அறைந்துதான் பழக்கம்.”

“நீ சொல்வதைப் பார்த்தால் எல்லாம் எளிதாகத்தான் தோன்றுகிறது.”

”நீயே பாரேன். நீ அவர்களிடம் இது விஷயமாகப் பேசிப் பார். நான் எல்லாம் தயாராய் வைத்திருக்கிறேன். நூலேணி, சுவரில் அறைய வேண்டிய கொக்கி – எல்லாம் தயார். இங்கே என் வீட்டுக்காரன் இருக்கிறானோ, அவன்தான் விளக்கேற்றுகிற நபராக இருப்பான்.”

படிக்க:
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !

கதவுக்கு அந்தப் புறத்தில் யாரோ இருமிக்கொண்டே தடவித் தடவி நடந்தார்கள். ஏதோ ஒரு தகரத்தை உருட்டி ஓசை உண்டாக்கும் சத்தம் கேட்டது.

“அதோ, அது அவன்தான்” என்றான் நிகலாய்.

வாசல் நடையில் ஒரு தகர குளியல் தகர தொட்டி முதலில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஒரு கரகரத்த குரல் ஒலித்தது.

”ஏ, பிசாசே ! உள்ளே போய்த் தொலையேன்!”

அந்தத் தகர்த்தொட்டிக்கு மேலாக ஒரு மனிதனின் முகம் தெரிந்தது. சுமூகபாவமும், துருத்திய கண்களும், நரைத்த தலையும் மீசையுமாகக் காட்சி அளித்தான் அவன்.

நிகலாய் அந்தத் தொட்டியை உள்ளே இழுத்து அவனுக்கு உதவி செய்தான். தொட்டி உள்ளே வந்த பிறகு, நெட்டையான கூனிப்போன அந்த மனித உருவத்தை அவர்கள் கண்டார்கள். தாடியற்ற கன்னத்தைப் புடைக்கச் செய்யும் பலத்த இருமலோடு அவன் இருமியவாறு துப்பினான். பிறகு தன் விருந்தாளிகளைப் பார்த்து வரவேற்றான்.

”உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.” “இதோ, இவனையே கேள்” என்று சொன்னான் நிகலாய். ”என்னை என்ன கேட்கிறது?”

“”சிறையிலிருந்து தப்புவது பற்றி” “ஆஹா!” என்று அந்தத் தகரத் தொழிலாளி சொல்லிவிட்டுத் தனது கறைபடிந்த விரல்களால் மீசையைத் தடவி விட்டுக்கொண்டான்.

“யாகவ் வசீலியவிச்! அது எவ்வளவு சுலபமான காரியம் சொன்னால், இவள் நம்பமாட்டேன் என்கிறாள்.”

“நம்பவில்லையா? ஹம்! அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை என்றுதான் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும் விருப்பம் இருக்கிறது, அதனால், நான் இதை நம்புகிறோம்!” என்று அமைதியாகச் சொன்னான் அவன். திடீரென்று அவன் முதுகைக் குனிந்து இருமத் தொடங்கினான். அந்தத் தொண்டைப் புகைச்சல் ஓய்ந்து அடங்கியதும், அவன் தன் நெஞ்சைக் கையால் தடவிக் கொடுத்தவாறே அறையின் மத்தியிலேயே நின்று, தனது முண்டகக் கண்களால் தாயையே கவனித்துப் பார்த்தான்.

“பாவெலும் அவனது தோழர்களும் இந்த விஷயத்தைத் தீர்மானிப்பார்கள்” என்றாள் தாய்.

நிகலாய் ஏதோ சிந்தித்தவாறே தலையைத் தொங்கவிட்டான்.

“யார் அது – பாவெல்?” என்று கேட்டுக்கொண்டே ஒர் இடத்தில் அமர்ந்தான் அந்தத் தொழிலாளி.

”என் மகன்.” “அவன் முழுப் பெயர்?” ”பாவெல் விலாசவ்.”

அவன் தலையை அசைத்தான், புகைக் குழாயை எடுத்து அதில் புகையிலையை நிரப்பத் தொடங்கினான்.

“அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் அவன் : ”என் மருமகனுக்கு அவனைத் தெரியும். என் மருமகனும் சிறையில்தான் இருக்கிறான். அவன் பெயர் எவ்சென் கோ. கேள்விப்பட்டிருக்கிறாயா? என் பேர் கோபுன். அவர்கள் போகிற போக்கிலே கூடிய சீக்கிரத்தில் ஊரில் இருக்கிற இளைஞர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளிவிடுவார்கள். நம்மைப் போன்ற கிழடுகட்டைகளுக்கு வெளியே தாராளமாய் இடம் இருக்கும்! என் மருமகனை அவர்கள் சைபீரியாவுக்கு அனுப்பப் போவதாக ஒரு போலீஸ்காரன் என்னிடம் சொன்னான். செய்வார்கள் – நாய்கள்!”

அவன் நிகலாவிடம் திரும்பி, புகைக் குழாயைத் ‘தம்’ பிடித்து இழுத்துக் கொண்டே. அடிக்கொரு தடவை தரையில் காரித் துப்பிக்கொண்டிருந்தான்.

ஏனடா சிறையை விட்டு வெளியில் வந்தோம் என்று எனக்கு முதலில் இருந்தது. வந்த புதிதில் எனக்கு ஒரே எரிச்சல். இங்கே வந்து ஒரு வேலையும் செய்யாமல், இரவும் பகலும் உள்ளே மறைந்திருப்பதுதான் என் வேலை. அங்கே இருந்தாலாவது ஏதாவது கற்றுக்கொண்டிருப்பேன்.

”அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை. இல்லையா? அது அவள் பாடு. ஒருவன் சுதந்திரமாயிருந்தால்தான், உட்கார்ந்து களைத்துப் போனாலும் கொஞ்ச தூரமாவது நடந்து பார்க்கலாம் நடந்து நடந்து களைத்துப் போனாலும் கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், அவர்கள் உன்னைக் கொள்ளையடித்தால், கண்ணை மூடிக் கொள். அடித்தால் பட்டுக்கொள். அழாதே, கொன்றால் அப்படியே செத்துப்போ. இது எல்லோருக்கும்தான் தெரியும். என்ன ஆனாலும் சரி, நான் என் சவேலியை வெளியே கொண்டுவரத்தான் போகிறேன். நிச்சயம் கொண்டுவந்து விடுவேன்.”

அவன் அந்தச் சின்னஞ்சிறு வாக்கியங்களைச் சொன்ன விதத்தைக் கண்டு தாய் வியப்படைந்தாள், இறுதி வார்த்தைகளால் ஒரு விதத்தில் பொறாமை உணர்ச்சிகூட ஏற்பட்டது.

தெரு வழியாகக் குளிர் காற்றிலும் முகத்தில் அறையும் மழையிலும் நடந்து வரும்போதும் கூட, அவள் நிகலாயைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தாள்;

“அவன் எவ்வளவு மாறிவிட்டான். எப்படி மாறினான் நினைத்துப் பார்த்தால் ”

அவள் கோபுனைப் பற்றியும் நினைவு கூர்ந்தாள். பிரார்த்திப்பது போல, தன்னுள் தானே பணிவுடன் நினைத்துக்கொண்டாள்.

“வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.”

அதே சமயத்தில் அவளது இதயத்தில் மகனைப்பற்றிய சிந்தனையும் நிரம்பியெழுந்தது.

“அவன் மட்டும் சம்மதித்தால்…!”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

“தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச RSS – BJP யை வீழ்த்த, ஜனவரி 8,9 இருநாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!” என்ற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் சார்பாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் 08.01.2019 அன்று மாலை 4:00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் மா. சரவணன் தலைமை உரையாற்றினார். அதை தொடர்ந்து விண்ணதிர முழக்கங்கள் முழங்கப்பட்டன.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்; அதில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் கீழ் தொழிலாளர் நலன்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்கள் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பதை விளக்கியும். சுதந்திரத்திற்கு முன்பே போராடிப்பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக மாற்றுவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு  சேவை செய்யும் மோடி அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தினார்.

நாடே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், முதலாளிகளுக்கு லாபமீட்டி தருவது ஒன்றே நாட்டின் ஒரே செயல்பாடு போலவும், மத்திய – மாநில அரசுகள் இதனை செய்து முடிக்கும் கங்கானிகளாகவும்  இருக்கும் வகையில் நாட்டின் கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு ஜியோ, அனில் அம்பானிக்கு ரஃபேல், அதானிக்கு மின்சாரம், ஆலைகள் முதல் சாலைகள் வரை அனைத்தும் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு திறந்துவிடப்படுவதை பட்டியல் போட்டு விளக்கினார்.

இங்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் ஒடுக்கப்படுகின்றனர்.  மீனவர்கள் கடலை விட்டு துரத்தப்படுகின்றனர், மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகள் மூலம் கல்வியை விட்டு துரத்தப்படுகின்றனர்.
விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற நாசகாரத் திட்டங்களால் விவசாயத்தில் இருந்து துரத்தப்படுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தபோது கூட அதை திரும்பி பார்க்க மறுக்கிறது மோடி அரசு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்கள் 14 பேரை அருகிலிருந்து தலையிலும், மார்பிலும் சுட்டுக்கொன்றது இந்த அரசு. இந்த படுகொலை மீதான விசாரணை துவங்கும் முன்னர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எல்லா நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக செய்து வருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதையும்.

மேலும் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, பெட்ரோல் டீசல் மீதான தொடர்ச்சியான விலையேற்றம் அதன் மூலமாக சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவு பாதித்துள்ளது என்பதையும் விளக்கி தன்னுடைய கண்டன உரையை நிகழ்த்தினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் தலைவர் தோழர் சே.சரவணன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட கிளை / இணைப்பு சங்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பகுதியில் உள்ள கடைகளில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதில் குறைந்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பகுதிவாழ் தரைக்கடை வியாபாரிகள் பெருந்திரளாக நிதி அளித்தனர்.

மேலும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்த வண்ணம் இருந்தனர். ஆர்ப்பாட்ட பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

தகவல் :

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.


புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக ஜன.8-9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து தங்களது பங்கேற்பை செலுத்தும் வண்ணம் ஒசூர் ரயில் நிலையம் முன்பாக ஜன.8 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  திரளான ஆலைத் தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பலரும் கலந்து கொண்டனர்.

♣ காண்ட்ராக்ட், நீம், குறிப்பிட்ட கால வேலை போன்ற கொத்தடிமை முறைகளை வாபஸ் பெறு!
♣ சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமைகளை பறிக்காதே!
♣ முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு உறுதிப்படுத்து!
♣ சுயசார்பு பொருளாதாரத்திற்கு துணை புரியும் பொதுத் துறையை தாரை வார்க்காதே!
♣ நிரந்தர தொழில்களில் ஒப்பந்த ஊழியரை ஈடுபடுத்தி பல உயிரிழப்புகள், உடலுறுப்பு இழப்புகள் ஏற்படுகிறது, தொழிலாளர் துறையே தூங்காதே!
♣ Fixed Term Employment and Neem – ஐ முழுமையாக கைவிடு!
♣ 44 தொழிலாளர் சட்டத்தையும் முடக்காதே!
♣ மக்களின் சொத்தான பொதுத் துறைகளை விற்காதே!
♣ பாசிச RSS – BJP யை வீழ்த்திடுவோம்!

தகவல்:

கிருஷ்ணகிரி –  தர்மபுரி  – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880  11784


தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட ஜனவரி 8, 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஜனவரி 9 அன்று அனைத்துச் சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), AITUC, CITU, LPF, HMS, SDPI, மற்றும் INTUC உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் இம்மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர், AITUC மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ், CITU மாவட்டப் பொருளாளர் தோழர் குமார், INTUC மாவட்டத் தலைவர் தோழர் கோவிந்தசாமி, HMS மாவட்டத் தலைவர் தோழர் பெருமாள், LPF மாவட்டப் பொருளாளர் தோழர் ஞானதாஸ் மற்றும் SDPI  கட்சியினர் உள்ளிட்ட பலரும் இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் பெண் தொழிலாளர்களும் இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பிறகு மாலை 6.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

படிக்க:
இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !
ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி

தகவல்:

வேலூர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !

0

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கலாம் : கார்ப்பரேட்டுகளுக்கு காவடி தூக்கும் உச்சநீதிமன்றம் !

ஸ்டர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை வழிமொழிந்து “வேதாந்தா கார்ப்பரேட் முதலாளிக்கு” காவடி தூக்கும் உச்சநீதி மன்றத்தை கண்டித்து பு.மா.இ.மு தலைமையில் 09.01.2019 காலை 9:30 மணிக்கு  குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கல்லூரி வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தை பலரும் நின்று கவனித்துச் சென்றனர்.

தகவல் :

குடந்தை.