இந்தியா ஒரு விவசாய நாடு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முக்கியதொழிலாக செய்பவர்கள். ஒரு நாட்டில் எது பிரதான தொழிலாக இருக்கிறதோ அதைச்சார்ந்துதான் அந்த நாடு வளர்ச்சி அடைய முடியும் என்பது பொதுவான விதி.
ஆனால், மக்களாட்சி என்று சொல்லக்கூடிய இந்த போலிஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகளும், ஆளும்வர்க்கமும் திட்டமிட்டே விவசாயத்தை அழித்து வருகின்றனர். இந்த நாடு யாருக்கானது? இந்த அரசு யாருக்கானது? தம் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்ள இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த அரசோ, விவசாயிகளிடம் நிலத்தைப்பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலம், சிப்காட் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கிறது.
அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த சிவரக்கோட்டை, கரிசக்கலாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி, நேசனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்குத் தெரியாமலேயே அவர்களது விளைநிலங்களை சிப்காட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அரசு. தற்செயலாக ஒரு விவசாயி தன் நிலங்களுக்கு வில்லங்கச்சான்று எடுத்து பார்த்த போதுதான் அவருக்கு நிலைமை தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.
“இந்த நிலங்கள் மலட்டு பூமியென்று மாவட்ட ஆட்சியரால் சான்று வழங்கப்பட்டு அதன்பேரில் நிலங்கள் சிப்காட்டுக்கு மாற்றிவிடப்பட்டன” (படம் : நன்றி The Hindu)
அதேபோல மற்ற விவசாயிகளின் நிலங்களும் சிப்காட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்து அதிர்ச்சியுற்ற விவசாயிகள் வட்டாட்சியரை அணுகி கேட்டபோது, “இந்த நிலங்கள் மலட்டு பூமியென்று மாவட்ட ஆட்சியரால் சான்று வழங்கப்பட்டு அதன்பேரில் நிலங்கள் சிப்காட்டுக்கு மாற்றிவிடப்பட்டன” என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிவரக்கோட்டை பகுதி விவசாயிகள் கடந்த எட்டு வருடங்களாக விளைநிலங்களைத் தரமாட்டோம் என்று பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.
இந்த நிலங்களில் விவசாயிகள் காலங்காலமாக 20-க்கும் மேற்பட்ட வகை சிறுதானியங்களைப் பயிர் செய்து விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறனர். இந்நிலையில் இந்த விவசாய நிலங்கள் மலட்டு பூமியென்று போலியான மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு தெரியாமலேயே நிலங்கள் சிப்காட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.
நிலத்தையும், நீரையும் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நம்மிடமிருந்து பிடுங்கும் அரசு, தெருவெங்கும் சாராயக்கடைகளைத் திறந்து நம் மக்களை அடிமையாக்கி சிந்திக்கும் திறனை, போராடும் பண்பினை அழித்து வருகிறது. இந்தக் கொலைகார, கொள்ளைக்கார அரசை எதிர்த்து எட்டாண்டுகளாக போராடி வரும் சிவரக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களை பாராட்டியும், உற்சாகப்படுத்தும் விதமாகவும், போராட்டத்தின் வடிவத்தை மாற்றவும் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பாக சிவரக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் சிவரக்கோட்டை மற்றும் அத்னைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலம் பாதுகாப்புக்கமிட்டி உறுப்பினர்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சிவரக்கோட்டை உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவின் பாடல்வரிகள் அந்த பகுதி மக்களின் பேராட்ட உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் வீரணன்…,
“போராட்டம் இல்லாமல் வெற்றி காண முடியாது. நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். விவசாயத்தை அழித்து விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டு அதனை மறைக்க இலவசம் என்ற பெயரில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி யாருக்கு வேண்டும். இலவசம் நாங்களா கேட்டோம். இல்லை, எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும், விவசாயம் வேண்டும்.
ரேசன் கடைகளை மூடிவிட்டு நீங்கள் கொடுக்கும் ரூ 600-க்கு சாராயம் குடித்து சாகவா? எங்கள் பணத்தை எங்களுக்கே திருப்பி கொடுத்து ரேசன் கடைகளை மூடும் உங்களது திட்டம் எங்களுக்கு நன்றாக தெரியும்.
இலவசம் யார் கேட்டா? என்னா மயித்துக்குத் கொடுக்கிற. இலவசம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறிகளாக்கி விவசாயத்தை அழிக்கும் திட்டம். ஒரு கிராமத்தில் 1000 பேர்களுக்கு விவசாயத்தின் மூலம்தான் வேலை கிடைக்கும். நாம் தலைநிமிர்ந்தும் தன்மானத்தோடும் வாழலாம் உங்களுக்குத் துணையாக நாங்களும் எங்கள் தோழமை அமைப்புகளும் இருக்கிறோம் ஒன்றிணைந்து போராடுவோம் வாருங்கள்!”
சிவரக்கோட்டை சிப்காட் நில கையகப்படுத்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் (படம் : நன்றி The Hindu)
சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி மூக்கையா…
“நாங்க இந்த பூமியை நம்பித்தான் வாழ்கிறோம். எங்களுக்கு வேறவேலை தெரியாது, எங்ககிட்ட இருந்து எங்க நிலத்தை பிடுங்கிட்டா நாங்க எப்படி வாழ முடியும்? எல்லா அரசியல் வாதிகளும் ஓட்டுக் கேட்டு வரும்போது நாங்க பாத்துக்கிறோம். உங்க நிலத்தை யாரும் எடுக்க மாட்டாங்க என்று வாக்குறுதி கொடுத்துட்டு போறாங்க. ஆனா அவங்கதான் இடைத்தரகராக இருந்து வேலை பார்க்கிறார்கள். எனவே அதிகாரிங்க ஒத்துழைப்பு கொடுக்கணும். புரட்சிகர அமைப்புகள் எங்களுக்கு துணையாக இருக்கணும்.”
சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி டேவிட் என்ற ஆறுமுகம் …
“இந்த கரிசல் பூமிதான் எங்கள் வாழ்வாதாரம். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்குது இந்த அரசு. இது திருமங்கலத்தில் நடக்கிற பிரச்சனை என்று மட்டும் பார்க்ககூடாது. இதை ஒரு தேசியப் பிரச்சனையாக பார்க்க வேண்டும். இறையாண்மை பற்றி வள்ளுவர் கூட நிறைய எழுதியுள்ளார், ஒரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும்.
எங்க பிள்ளைங்க படிச்சு வேலை பார்த்து நகரங்களில் பெரிய பெரிய வீடு கட்டி வசதியாக வாழ்கிறார்கள். நாங்கள் அவங்க கூட சேர்ந்து வாழமுடியும். அப்படி நாங்க போயிட்டா இந்த சிறுதானிய விவசாயத்தையும் இந்த பூமியையும் யார் காப்பாற்றுவது. உற்பத்தி இல்லையென்றால் இந்த மக்களை யார் காப்பாற்றுவது? எதை உண்பார்கள், இன்றைக்கு நாடே சிறுதானியங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளது”
உதவி செய்யலேனாலும்! உபத்ரவம் செய்யாதே!
உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி…
“அரசை எதிர்த்து இந்த மண்ணை பாதுகாக்கும் உங்களுடைய போராட்டங்கள் வரவேற்கக் கூடியவை. உங்களுடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் விவசாயத்தையும் இந்த மண்ணையும் பாதுகாத்தவர்களுக்கு பரிசு அளிக்கவேண்டும் என்றால் முதல் பரிசு உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
இந்த அரசு இதுவரை விவசாயத்துக்கு தேவையான பாசன வசதி செய்து கொடுக்கவில்லை மாறாக விவசாயத்தை திட்டமிட்டே அழித்து வருகிறது. நம்முடைய பாரம்பரிய விதைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்டு விதைகள் அனைத்தையும் மான்சாண்டோவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அரசு நாட்டை ஆள தகுதியிழந்து விட்டது. விவசாயத்தை பாதுகாப்பது நமது கடமை. விவசாயத்தை விட்டால் அரசு நம் அனைவருக்கும் வேறு என்ன வேலை கொடுக்கும். நாம் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும். 100 நாள் வேலைகொடுத்து விவசாயத்தை அழித்து நம்மை சோம்பேறிகளாக மாற்றி வருகிறது. நாம் விவசாயத்தை எப்படி பாதுகாக்கப் போகிறோம்? அனைத்து துறைகளும் கைவிட்டு விட்டன.
நிலத்தை கொடுப்பது பணத்தை பெறுவது என்பது விசயமில்லை. நாம் இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறோம். வாழ்ந்தாலும் செத்தாலும் இந்த பூமியில்தான் இருப்போம் என்று சபதமேற்போம்.”
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் வாஞ்சிநாதன்…
“மண்ணின் மானத்தை, நாட்டின் விவசாயத்தை காக்க 8 ஆண்டுகளாக போராடிவரும் இந்த சிவரக்கோட்டை உள்ளிட்ட அனைத்து கிராம மக்களையும் பாராட்டுகிறேன். உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பேராடி வருகிறீர்கள்.
நம் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நாம் இந்த மண்ணில் மானத்தோடும், உயிரோடும் வாழ இந்த அரசு மறுக்கிறது. இந்த அரசு கொலைகார, கொள்ளைக்கார அரசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “நிலத்தை கேட்டு வருபவன் எவனாக இருந்தாலும் நீ உயிரோடு போக மாட்ட” என்று சொல்லிப்பாருங்கள், வந்த வழியே சென்று விடுவான். நாம் முதலில் நமது பயத்தையும் அச்சத்தையும் போக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த கொள்ளைக்கார அரசு நமக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நம் வாழ்வாதாரத்தை பறிப்பவனை செருப்பால் அடிப்போம். ‘மனு கொடுத்து நியாயம் கேட்போம்’ என்று போவது முட்டாள்தனம்.
இன்றைக்கு நீதித்துறை மிகவும் மோசமாக உள்ளது. நீதிபதிகளை நம்பாதீர்கள் பாதிப்பேர் அயோக்கியர்களாக உள்ளார்கள்.
மோடி உருவாக்கியுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒரு கிராமத்திற்கு ஆண்கள் 100 பேர் பெண்கள் 100 பேர் வீதம் ஒரு அமைப்பாக திரண்டு உறுதி எடுத்து வாருங்கள். இந்த சிப்காட்டை துரத்தியடிப்போம்.
இந்த அரசுக்கு சாராயம் விற்பதுதான் கடமையா? கல்வி மருத்துவம் தண்ணீர் யார் கொடுப்பது இதையெல்லாம் கொடுக்காத இந்த அரசுகட்டமைப்பு நமக்கு வேண்டாம்! இது நம்மை ஆள தகுதியிழந்து விட்டது!
இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிவோம்! மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்போம்!
ஊர்தோறும் மக்கள் பாதுகாப்பு குழு கட்டுவோம்!
மக்கள் அதிகார அமைப்பில் இணைந்து நமது மக்களையும் விவசாயத்தையும் காப்போம்! வரலாறு படைப்போம்!
வாருங்கள்! வாருங்கள்!
தொகுப்பாக..
நம்முடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதற்கு அதிகாரிகளிடம் மனுகொடுத்தோ, பேச்சுவார்த்தை நடத்தியோ இந்த அரசுக்கட்டமைப்பிற்குள்ளே தீர்வு காண முடியாது. இந்த அரசு மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறி ஆளத் தகுதியிழந்து விட்டது.
எனவே நம்முடைய போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும் (அடித்தால் திரும்ப அடி). நம்முடைய முன்னோர்கள் பகத்சிங், பூலித்தேவன், ஒண்டிப்புலி, மருதுசகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை, வ.உ.சி, திப்பு, தீரன்சின்னமலை வாரிசுகளாய் நக்சல் பாரிகளாய் ஒன்றிணைந்து போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
குஜராத் முதல்வராக இருந்தபோது 2013-ல் இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, “அரசாங்கம் போட்ட சாலைகளில் தனியார் வாகனங்கள் போகும்போது, தனியார் விமானங்கள் அரசின் விமான நிலைய ஓடுபாதைகளில் பறக்கும்போது, ஏன் அரசாங்க தண்டவாளத்தில் தனியார் ரயில்கள் ஓடக்கூடாது?” என்று தனியார்மயமாக்கலை வெறியோடு ஆதரித்துப் பேசினார். பிரதமரான பின்னர், மேகாலயாவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய மோடி, ரயில்வே என்பது ‘வளர்ச்சி’யின் வாகனம், ரயில் நிலையங்களைத் தனியாரிடம் கொடுத்து விமான நிலையங்களைப் போல நவீனப்படுத்த வேண்டுமென்றார். மோடியின் நோக்கமே காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் தனியார்மயமாக்கலைத் தீவிரமாக்குவதுதான்.
அந்த நோக்கத்துடன், நட்டத்தில் இயங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவது பற்றி ஆராயப் போவதாக கூறிக்கொண்டு ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவுக்கு பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் பற்றிய நூல்களை எழுதியுள்ள நம்பகமான இந்துத்துவ விசுவாசியும், தனியார்மய தாசரும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவராய் என்பவரைத் தலைவராக நியமித்தார். அந்தக் குழுவும் ‘விரைவாக’ஆய்வு செய்து, மோடி என்ன எதிர்பார்த்தாரோ, அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வேயை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கான செயல் திட்டத்தைத் தமது பரிந்துரைகளாக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பித்தது.
“பயணிகள் போக்குவரத்தையும் சரக்கு போக்குவரத்தையும் கொண்டுள்ள தற்போதைய ரயில்வே மண்டலங்களில், ஒன்றில் ஏற்படும் நட்டத்தை மற்றது ஈடு செய்து கொள்வதற்கு மாறாக, ரயில்வே மண்டலங்களைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். எந்த மண்டலத்தில் நட்டம் அதிகமாக உள்ளதோ அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும். ரயில்வே துறையை உள்கட்டமைப்புக் கழகம், போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். தண்டவாளங்கள் போடுவது, சிக்னல்களை நிர்வகிப்பது முதலானவற்றைக் கொண்ட உள் கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தை தனியார் நிர்வகிக்க வேண்டும். ரயில்பெட்டிகள், என்ஜின்களைப் பராமரிக்கத் தனியாருக்கு அனுமதியளிக்க வேண்டும்.
இரயில்வே துறையைத் தனியார் முதலாளிகள் விழுங்குவதற்குப் பரிந்துரைத்துள்ள தனியார்மய தாசரும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவருமான விவேக் தேவராய்.
தற்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை முதலானவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். புறநகர் ரயில்கள் போன்ற அதிக இலாபமில்லாத ரயில் போக்குவரத்தை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட வேண்டும். பயணிகள் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தையும் நிர்ணயிப்பதில் அரசு தலையிடக் கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஏறத்தாழ 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது. அடுத்த ஆண்டிலிருந்து 7-வது ஊதியக்குழுவின் புதிய சம்பள விகிதங்கள் அமலுக்குவரும்போது ரயில்வே துறையில் கூடுதல் செலவாகும் என்பதால், ஏறத்தாழ 10 லட்சம் தொழிலாளர்களைக் குறைக்க வேண்டும். அவர்கள் செய்துவந்த பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்சினைகளையும் தாவாக்களையும் தீர்த்துக் கொள்ளவும், கட்டண நிர்ணயத்தைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்”
-என ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கான திட்டத்தை, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால இலக்குடன் அறிக்கையாகக் கொடுத்துள்ளது இக்குழு.
அதாவது, ரயில் தண்டவாளங்களை அரசாங்கம் பராமரிக்க, தனியார் முதலாளிகள் அதில் ரயில் விடுவார்களாம். பொதுச் சோத்தில் மஞ்சள் குளிப்பார்களாம்!
இப்பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், தற்போது பல தடங்களில் இயக்கப்பட்டுவரும் ரயில்களால் லாபமில்லை என்று நிறுத்தப்படும். வருமானம் அதிகமுள்ள பெரு நகரங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணத்துடன் அம்பானி ரயில், அதானி ரயில்கள் சென்ட் மணக்க பளபளப்பாக இயக்கப்படும். சிறு நகரங்களுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் ரயில்களும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும் ஒழிக்கப்படும்.
நட்டம் அதிகமாக உள்ள ரயில்வே மண்டலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, கோடிக்கணக்கிலான ரயில்வே சொத்துக்கள் பறிபோகும். ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனமான தொலைத்தொடர்புத்துறை முடமாக்கப்பட்டதைப் போல, ரயில்வே துறையும் முடமாக்கப்படும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும். ஒப்பந்த சேவை அடிப்படையில் அற்பக் கூலிக்கு தொழிலாளர்கள் சுரண்டப்படுவார்கள். சீசனுக்கு ஏற்பவும், கிராக்கிக்கு ஏற்பவும் சாதாரண ரயில்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். இதனால் காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றப்படும்.
இருப்பினும், முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறையை லாபகரமானதாக்கி, ‘வளர்ச்சி’யைச் சாதிக்க தனியார்மயம் அவசியம் என்று இதனை மோடி நியாயப்படுத்துகிறார். பேருந்துகளை வாங்கி தனியார் முதலாளிகள் இயக்குவதைப் போல, மூலதன அழுத்தமும் குறைவான லாபமும் கொண்ட ரயில்களை தனியார் முதலாளிகள் வாங்கி இயக்குவதற்கு மடியில் பணத்தைக் கட்டிக் கொண்டு தயாராக இருப்பதைப் போல பல திட்டங்களை மோடி கும்பல் அறிவித்த போதிலும் யாரும் முதலீடு செய்ய வரவில்லை. அரசாங்கம் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அதில் நான் டெலிபோன் கனெக்ஷன் கொடுக்கிறேன் என்று தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பொதுச் சொத்தில் மஞ்சள் குளித்ததைப் போல, அரசாங்கம் தண்டவாளம் போட்டு, ரயிலையும் கொடுத்தால் நான் அதிக கட்டணத்துக்கு அந்த ரயிலை ஓட்டுவேன் என்கிறார்கள் தனியார் முதலாளிகள். இதற்கு மாமா வேலை செய்கிறார் மோடி.
இந்திய ரயில்களில் அன்றாடம் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். பேருந்து போக்குவரத்தை விட, ரயில் போக்குவரத்துதான் மலிவானது, வசதியானது என்று சாமானிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே சாமானிய மக்கள் பயன்படுத்தும் முன்பதிவு செய்யப்படாத ரயில்பெட்டிகளை அதிகரிப்பதற்கு மாறாக ஏ.சி., பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, பாசஞ்சர் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக்குவது, எக்ஸ்பிரஸ் ரயிலை சூப்பர் பாஸ்ட் ஆக்குவது, பயணிகள் ரயில் கட்டண அதிகரிப்பு, தட்கல் திட்டத்தில் மாற்றம், பிரீமியம் ரயில், பிளாட்பார டிக்கெட் கட்டண அதிகரிப்பு – என அடுத்தடுத்து தாக்குதலை ஏவியது போதாதென்று, இனிமேல் ரயில்களை இத்தகையோர் பயன்படுத்தவே கூடாது என்று வர்க்கவெறியுடன் ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கிளம்பியுள்ளது மோடி அரசு. தனியார் முதலாளிகளுக்கு இலாப உத்திரவாதம் வேண்டுமென்பதால், பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக பயணிகள் ரயில்களை மாற்றுவது என்பதே மோடியின் திட்டம். இப்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ள பளபளப்பான குளுகுளு மெட்ரோ ரயிலின்
அநியாயக் கட்டணத்தால், அதில் யாரும் பயணிக்க முடியாமல் வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. அதேபோல அனைத்து ரயில்களையும் மாற்றுவதுதான் மோடியின் நோக்கம்.
குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளரைக் கொண்டு அதிக லாபத்தை ஈட்டுவதுதான் தனியார் முதலாளிகளின் நோக்கமாக உள்ளபோது, தனியார்மயத்தால் சேவை அதிகரிக்கும் என்பது வடிகட்டிய பொய். இந்திய ரயில்வேயில், ரயில் பெட்டிகளையும், பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளையும் சுத்தப்படுத்துவது, ரயில் பயணத்தில் உணவு தயாரித்து பரிமாறுவது, ரயில் நிலைய கழிவறைகளைப் பராமரிப்பது முதலானவை ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தனியார் என்றால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்; தனியார்மயம் என்றால் சேவை நன்றாக இருக்கும் என்ற பொய்யை ரயில் பெட்டிகளின் கழிப்பறைகளே நாறடித்துக் கொண்டிருக்கின்றன.
பிரிட்டனில் 1990-களில் ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அரசியல் பொருளாதார நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு 2013-ஆம் ஆண்டில் “சமூக கலாச்சார மாற்றம் குறித்த ஆய்வு மையம்” என்ற அமைப்பால் அறிக்கையாக வெளியிடப்பட்டது. “தி கிரேட் டிரெயின் ராபரி” (மாபெரும் ரயில் கொள்ளை) என்று தலைப்பிட்டு, தனியார்மய தாசர்களின் முகத்தில் காறி உமிழாத குறையாக, தனியார்மயத்தால் சேவை அதிகரிக்கவில்லை, கட்டணக் கொள்ளைதான் தீவிரமாகியுள்ளது என்று அந்த அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது.
இருப்பினும், இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்து, கோடிக்கணக்கான சொத்துக்களுடன் அடிக்கட்டுமான வசதிகளைக் கொண்டுள்ள நாட்டின் முதுகெலும்பான ரயில்வே துறையை, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யும் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தை, மக்களின் வாழ்வோடு நெருக்கமான பிணைப்பைக் கொண்ட ரயில்வே துறையைத் தனியார் முதலாளிகள் விழுங்கி ஏப்பம் விடுவதற்காக அத்துறையைத் தனியார்மயமாக்க வெறியோடு அலைகிறது மோடி கும்பல். இந்த அநியாயத்தையும் பேரழிவையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?
நண்பனின் ஆச்சி வைக்கும் ரசம் எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே பிரசித்தம். நாங்கள் தம்ளர் தம்ளராக மிளகு ரசம் வாங்கிக் குடிக்கவே நண்பன் வீட்டுக்குப் படையெடுப்போம்.
அஜினோமோட்டோ ஜப்பானிய செயற்கை உப்பு நமது சமையல் கட்டில் புகுந்ததோடு மட்டுமின்றி சகல விதமான துரித உணவுகளிலும் நீக்கமற நிறைந்து விட்டது.
ஆச்சி ரசம் வைக்கும் முறை மிகவும் அலாதியானது. முதலில் ஒரு சின்ன கல்லுரலில் சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டு நறநறவென நசுக்கி எடுப்பார். அதைத் தனியே வைத்து விட்டு ஒரு பொறிக்கான் சட்டியை அடுப்பில் வைத்து கடலை எண்ணை விட்டு அதில் வெந்தையம் கடுகைப் போட்டு தாளிப்பார். கடுகு குதிக்கும் போது ரெண்டு மிளகாய் வற்றலை கிள்ளிப் போடுவார். மிளகாய் வற்றல் பொறியும் நிலை வந்ததும் ஒரு தக்காளியைக் கையால் நசுக்கிப் போடுவார். தக்காளி வதங்கிக் கொண்டிருக்கும் போதே தண்ணீரில் புளியைக் கரைத்து எடுத்து வைப்பார். இப்போது ஏற்கனவே இடித்த சமாச்சாரங்களை எண்ணையில் போட்டு ஒரு நிமிடம் கிளறுவார். பின் அதற்குள் புளிக் கரைசல் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் மல்லித் தூள் சேர்ப்பார். ஒரு கொதி வந்த பின் அதற்குள் கொஞ்ச கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு இறக்குவார். எப்படியும் அரைமணி நேரத்திற்கு பொறுமையாக இத்தனை வேலைகளையும் பார்த்திருப்பார்.
இன்றைய துரித உணவக காலத்தில் வைக்கப்படும் ரசத்தில் வழக்கமாக நறுநறுவென்று தட்டுப்படும் சீரகம், மிளகு, பூண்டு வகையறாக்கள் கிடையாது. வழக்கமான மணம் இல்லை – என்றாலும் அந்த ரசத்தில் ஏதோவொரு சுவை நாக்கை கட்டிப் போட்டது.
அந்த சுவைக்கு காரணம் அஜினோமோட்டோ. இன்றைக்கு அந்த ஜப்பானிய செயற்கை உப்பு நமது சமையல் கட்டில் புகுந்ததோடு மட்டுமின்றி சகல விதமான துரித உணவுகளிலும் நீக்கமற நிறைந்து விட்டது.
“ஏதோ ஜப்பான் உப்பாம்ல?” என்று மக்களால் சாதாரணமாக அறியப்பட்டிருந்த மேற்படி வஸ்து தற்போது நெஸ்லே மேகி தடை விவகாரத்திற்கு பின் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது – மோனோ சோடியம் க்ளூட்டமேட் என்கிற அதன் சொந்தப் பெயரில்!
2013-ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ 50,000 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டிருந்த அஜினோமோட்டோவின் ஆண்டு வருமானம் சுமார் ரூ 58,600 கோடி!
கிகுனே இகேடா என்ற ஜப்பானிய ரசாயனத் துறைப் பேராசிரியர் 1908-ம் ஆண்டு வாக்கில் ஜப்பானிய மற்றும் சீன உணவு வகைகளில் சேர்க்கப்படும் கோம்பு எனும் கடற்பாசி தான் அந்த உணவுகளின் தனிச்சிறப்பான சுவைக்கு காரணம் என்பதைக் கண்டறிகிறார். இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் உப்பு ஆகிய அடிப்படைச் சுவைகளில் இருந்து மாறுபட்ட அந்த சுவைக்கு உமாமி என்று பெயரிட்ட கிகுனே இகேடா, குறிப்பிட்ட அந்த கடற்பாசியில் உள்ள க்ளூட்டமிக் அமிலங்கள் தான் அந்த சுவைக்கு காரணம் என்பதைக் கண்டறிந்தார்.
தக்காளி, கோதுமை போன்ற இயற்கையான தாவரங்களில் கிடைக்கும் க்ளூட்டமின் அமிலங்கள் சந்தைத் தேவைக்காக எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? இயற்கையான தாவரங்களை கோரினே என்ற பாக்டீரியாவுடன் (Coreneybacterium) நொதித்தலுக்கு (Bacterial fermentation) உட்படுத்தி, பின்னர் அதனோடு சோடியம் உப்பைக் கலந்து வாசனையற்ற வெண்மையான க்ரிஸ்டல்களாக வடித்தெடுக்கின்றனர். இறுதியாக கிடைக்கும் மோனோசோடியம் க்ளூட்டமின் என்கிற இந்தக் க்ரிஸ்டலைத் தான் நாம் அஜினோமோட்டோ என்ற பெயரில் பக்கத்து மளிகைக் கடைகளில் வாங்குகிறோம்.
1909-ம் ஆண்டு தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்ற கிகுனே இகேடா, பின்னர் அதைச் சந்தைக்கு அறிமுகம் செய்தார். 1917-ம் ஆண்டு மோனோசோடியம் க்ளூட்டமினை அஜினோமோட்டோ என்ற வணிகசின்னத்தோடும் அதே பெயரில் துவங்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் விற்கத் துவங்கினார் கிகுனே. 1956-ல் அமெரிக்காவில் கால் பரப்பிய அஜினோமோட்டோ தற்போது உலகெங்கும் கிளை விரித்துள்ளது.
சீன உணவுகளில் வரைமுறையற்று தூவப்படும் அஜினோமோட்டோவால் ஏற்படும் பாதிப்புகள் ’சீன உணவக சிண்ட்ரோம்’
2013-ம் ஆண்டு வாக்கில் 1,091 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ 50,000 கோடி) மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டிருந்த அஜினோமோட்டோவின் ஆண்டு வருமானம் 1,172 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ 58,600 கோடி)!
மோனோ சோடியம் க்ளூட்டமின்கள் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்பதைப் பல்வேறு சுயேச்சையான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனினும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இந்த மோனோசோடியம் க்ளூட்டமின்களுக்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான அந்தஸ்தை (GRAS – Generally Recognized as Safe Status) வழங்கியுள்ளது. பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் (FDA – Food and Drug Administration) முடிவுகளை ஒரு நிர்ணய அளவாக (Standard) கொண்டே செயல்படுவதால் எந்தத் தடையுமின்றி அஜினோமோட்டோ சக்கை போடு போடுகிறது.
தற்போது நெஸ்லே நிறுவனமும் FDA வழங்கியுள்ள அனுமதியைத் தான் சுட்டிக் காட்டுகிறது. அதாவது, அமெரிக்காவே அனுமதித்த ஒன்றை நீ தடுத்து நிறுத்துவாயா என்பதே இந்த சுட்டிக்காட்டுதலின் பொருள்.
1950-களில் இருந்தே அஜினோமோட்டோ அமெரிக்காவின் சீன உணவகங்களில் சாதாரணமாக புழங்கி வந்துள்ளது. சீன உணவுகளில் வரைமுறையற்று தூவப்படும் அஜினோமோட்டோவால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்கர்கள் ’சீன உணவக சிண்ட்ரோம்’ என்று பேச்சு வழக்கில் அழைக்கத் துவங்கியிருந்தனர். எண்பதுகளில் அஜினோமோட்டோ தான் அந்த ‘சிண்ட்ரோமுக்கு’ காரண கர்த்தா என்பதை உணர்ந்த பல அமெரிக்கர்கள் அதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி FDA-விடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
1992-ம் ஆண்டு பரிசோதனை முறை உயிரியல் ஆய்வுகளுக்கான அமெரிக்க நிறுவனம் (FASEB Federation of American Society for Experimental Biology) என்ற அமைப்பிடம் அஜினோமோட்டோவினால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் பொறுப்பை FDA வழங்கியது. அந்நிறுவனத்தின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய அஜினோமோட்டோ, ஆய்வின் முடிவுகள் தமது வர்த்தகத்தை பாதிக்காதவாறு 1995-ம் ஆண்டு வெளியிடச் செய்தனர். 3 கிராம்களுக்கு மேல் அஜினோமோட்டோ உட்கொள்வது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்ற அறிவுறுத்தலோடு FDA தனது அனுமதியைத் தொடர்கிறது.
அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்ளூட்டமேட்) நேரடியாக நமது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியை பாதிக்கிறது.
எனினும், இன்று வரை சுயேச்சையான ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் அஜினோமோட்டோவின் பாதகங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு அமைப்புகள் FDA வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி வருகின்றன.
அஜினோமோட்டோ அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றது?
சாதாரணமாக நாம் கடையில் வாங்கும் தக்காளியை எடுத்துக் கொண்டால் நூறு கிராமுக்கு சுமார் 203 மில்லி கிராம் க்ளூட்டமின்கள் உள்ளது. இயற்கையான க்ளூட்டமின் மூலங்களில் தக்காளியில் கிடைப்பதே அதிகம். குறைந்தபட்சமாக கிச்சினிப் பழத்தில் (Orange) நூறு கிராமுக்கு 2 மில்லி கிராம் அளவில் க்ளூட்டமின்கள் உள்ளன. இப்படி இயற்கையான மூலங்களில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவிலான க்ளூட்டமின்கள், மூளை நரம்புகளின் செயல்பாட்டுக்குத் தேவையான காமா அமினோ பியூட்ரிக் அமிலம் உற்பத்திக்கு உதவுகின்றன.
இதே அளவுக்கு மீறிச் சென்றால் என்ன நடக்கும்? சந்தைத் தேவைக்கென செயற்கையான முறையில் உற்பத்தி செய்யப் படும் அஜினோமோட்டோவை அள்ளித் தூவிய துரித உணவு என்ன விளைவை ஏற்படுத்தும்?
மிதமிஞ்சிய அளவில் நம் உடலுக்குள் நுழையும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்ளூட்டமேட்) நேரடியாக நமது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியை பாதிக்கிறது. ஹைபோதலாமஸ் தான் நமது உணவுப் பழக்கங்களின் கட்டுப்பாட்டுப் பகுதி. அதாவது நாம் எதை, எந்த அளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற கட்டளை மூளையால் பிறப்பிக்கப்படுவதை ஹைபோதலாமஸ் கட்டுப்படுத்துகிறது.
எப்படி? நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை தொடர்ந்து கண்காணித்து வரும் ஹைபோதலாமஸ், மூளையின் ஒரு சென்சாராக செயல்படுகிறது. உடலின் ஆற்றல் குறையும் போது இன்சுலினையும் அட்ரினலையும் அதிகமாக சுரக்கச் செய்யும் ஹைபோதலாமஸ், பசியை உண்டாக்கி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற முடிவை மூளை எடுக்குமாறு தூண்டுகிறது.
நாவில் பட்டதும் அதன் சுவை மொட்டுக்களை மரக்கச் செய்யும் அஜினோமோட்டோ, ஒரு விதமான காரல் சுவையை ஏற்படுத்தி பிற சுவைகளை அறியாதபடிக்கு மூளையைக் குழப்புகின்றது.
லேய்ஸ், குர்குரே, சீஸ் பால்ஸ் போன்ற குப்பை உணவுகளைத் தின்னும் பிள்ளைகள் எந்தப் பசியும் இன்றி ஓரு பழக்கம் போல தொடர்ந்து அவற்றை உள்ளே தள்ளுவது மேற்கண்ட முறையிலேயே நடக்கிறது.
மேலும் மோனோ சோடியம் க்ளூட்டமேட்டினால் தூண்டப்படும் ஹார்மோன்கள் – குறிப்பாக திடீரென்று அதிகரிக்கும் இன்சுலின் மற்றும் அட்ரினலின் – உடலின் ஒத்திசைவில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. நீண்ட கால நோக்கில் உடல் எடை அதிகரிப்பது, மன அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை உண்டாக்கவல்ல அஜினோமோட்டோ, உடனடியாக உட்கொண்டவரின் ஹார்மோனில் தாறுமாறான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
எந்தக் காரணமும் இன்றி திடீரென்று அதிகரிக்கும் கோபம், சட்டென்று தன்னுள் ஒடுங்கிக் கொள்ளும் மனச் சோர்வு போன்றவற்றை இந்த ஹார்மோன் தடுமாற்றங்கள் ஏற்படுத்துகின்றன.
நாவில் பட்டதும் அதன் சுவை மொட்டுக்களை மரக்கச் செய்யும் அஜினோமோட்டோ, ஒரு விதமான காரல் சுவையை ஏற்படுத்தி பிற சுவைகளை அறியாதபடிக்கு மூளையைக் குழப்புகின்றது. சுர்ரென்று இழுக்கும் இந்த காரல் சுவை மற்ற சுவைகளை கீழ் தள்ளி மூளை நரம்புகளை ‘இந்தப் பதார்த்தம் நல்லது’ என்று நம்பச் செய்து ஏமாற்றுகிறது. இதன் காரணமாகவும் செயற்கையான ஹார்மோன் தடுமாற்றங்களின் விளைவாகவும், பொய்யான பசியினாலும் கையில் உள்ள ஒரு பாக்கெட் குப்பை உணவோடு நாம் நிறுத்திக் கொள்ள மாட்டோம். தொடர்ந்து நான்கைந்து பாக்கெட்டுகள் காலியான பிறகு தான் மூளையின் தர்க்கப் பிரிவு விழித்துக் கொள்கிறது – அதற்குள் போதுமான அழிவு வேலையை அஜினோமோட்டோ செய்து முடித்திருக்கும்.
இயற்கை உணவுப் பழக்கத்தை சமீபகாலமாக பிரச்சாரம் செய்து வரும் என்.ஜி.ஓக்கள் இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்கின்றனர்; விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் ஓரளவு செய்கிறார்கள். ஆனால், இந்த அஜினோமோட்டோவை தடை செய்ய அதன் அடிநாதமான முதலாளித்துவ சமூக அமைப்பை கேள்வி கேட்காமல் முடியவே முடியாது. அப்படி கேட்கப்படும் குரல்களை திசை திருப்பும் வேலைகளையே இத்தகைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன.
மேலும்”இயற்கை உணவு” என்பதே ஒரு தனிவகை கார்ப்பரேட் தொழிலாக ஏற்றம் கண்டு வருகிறது. மரபீனி தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்கும் அதே நெஸ்லே, ஆர்கானிக் உணவுப் பொருட்களையும் விற்கிறது. முந்தையது மாஸ் என்றால் பிந்தையது க்ளாஸ். அதாவது காசில்லாதவன் பரிசோதனைக்குரிய பன்றி, காசுள்ள ‘தரமான’ வாடிக்கையாளனுக்கு ‘தரமான’ பொருள்!
வியாபாரத்திற்காக, மூலதனத்தின் நலனுக்காக, முதலாளிகளின் லாப வெறிக்காக எதைச் செய்தாலும் அது சரியே என்ற ‘நீதி’ நிலைநாட்டப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டத்திற்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம். அது அழிக்கப்படும் தண்டகாரண்ய வனமாக இருக்கலாம், உடைக்கப்படும் மதுரை மாவட்ட கிரானைட் மலைகளாக இருக்கலாம், அள்ளப்படும் காவிரி பாலாற்றின் மணலாக இருக்கலாம் – முதலாளிகளுக்கு லாபம் கிடைக்குமென்றால் அது நற்செயல் தான் என்பது இந்தக் காலத்தின் நீதி.
இந்த அநீதியை தூக்கி எறியும் வரை, அப்படி தூக்கி எறியும் அதிகாரத்தை மக்கள் பெறாத வரை அஜினோமோட்டோக்கள் நமது வயிற்றைச் சுரண்டி ஆரோக்கியத்தை விலை பேசும்.
தொடர்பற்றவை போலத் தோன்றும் விசயங்கள் தொடர்பற்றவையாக இருப்பதில்லை. தனித்தனியானவை போலத் தெரிகின்ற விசயங்கள் வேறு வேறு உண்மைகளைச் சொல்வதுமில்லை. மாகி நூடுல்ஸுக்குத் தடை, பால வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளிக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர் போராட்டம், செம்மரக் கடத்தல் மற்றும் கொலையில் ஒரு டி.எஸ்.பி ஈடுபட்டிருப்பது ஆகிய இம்மூன்று செய்திகளும் சென்ற மாதம் வெளியானவை. மேல் தோற்றத்தில் தொடர்பற்றவை போலத் தோன்றினாலும், ஒருங்கிணைந்த முறையில் பார்க்கும்போது, இவை இந்த அரசமைப்பின் தோல்வியை வெவ்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
***
நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி கொல்கத்தாவில் சி.பி.டி.ஆர் என்ற மனித உரிமை அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.
மாகி நூடுல்ஸ், நெஸ்லே என்ற ஸ்விஸ் பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு. இதன் விற்பனை ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய். 2014 மார்ச் மாதம் உ.பி. மாநிலம் பாராபங்கி நகரின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளைச் சோதனையிட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பாதுகாப்புக்கான நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே, அதில் அனுமதிக்கப்பட்ட அளவான 2.5 பி.பி.எம்.ஐ விட அதிகமாக, 17.2 பி.பி.எம். அளவிற்கு காரீயம் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து, இதனை உறுதி செய்யும்பொருட்டு கோரக்பூரிலுள்ள பிராந்திய சோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். காரீயம் மட்டுமின்றி, சாப்பிடுபவர்களின் நாக்கை அடிமையாக்கும் நச்சு வேதிப்பொருளான மோனோ சோடியம் குளூடோமேட் என்ற அஜினமோட்டோவும் இதில் கலந்திருப்பதாக கோரக்பூர் சோதனைக்கூடம் கூறியது. நெஸ்லே நிறுவனம் இதனை ஏற்க மறுத்து, சென்ற ஜூலை, 2014-ல் கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வுக்கூடத்துக்கு மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஆய்வுக்கூடமும் மேற்கூறிய முடிவை உறுதி செய்ததைத் தொடர்ந்து, சென்ற மாதம் உ.பி. மாநிலம் முழுவதும் மாகி பாக்கெட்டுகள் கடைகளிலிருந்த அகற்றப்பட்டன.
ஒரு ஆண்டுக்கு முன்னரே தொடங்கிய இந்தப் பிரச்சினை, இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.
“அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது, அஜினமோட்டோவை சேர்த்து விட்டு, சேர்க்கப்படவில்லை என்று பாக்கெட்டில் அச்சிட்டிருப்பது, மாகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ் – என்ற சோதனைக்குட்படுத்தி ஒப்புதல் பெறப்படாத பொருளை விற்பனைக்கு விட்டது” ஆகிய மூன்று முறைகேடுகளைக் காட்டி, தில்லியில் உள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), மாகி பாக்கெட்டுகளைச் சோதனைக்கு உட்படுத்துமாறு மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு அறிவுருத்தியது. மக்களின் கோபத்துக்கு வடிகாலாக, பல மாநில அரசுகள் மாகி பாக்கெட்டுகளை கடைகளிலிருந்து அகற்ற உத்தரவிட்டிருக்கின்றன.
“மாகி நூடுல்ஸ் பிரச்சனை கிடக்கட்டும், டெல்லி தெருக்களில் விற்கப்படும் பானிபூரியில் உள்ள மலம் கலந்த தண்ணீர் டைபாய்டை உருவாக்கும்” எனத் தரநிர்ணய ஆணையம் தனது இணையத்தில் எச்சரிக்கிறது. பொது மக்களின் மீது ரொம்பத்தான் அக்கறை!
இருந்தபோதிலும், தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னர் கோக், பெப்சியில் பூச்சி மருந்து அளவுக்கதிகமாக கலந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, இந்தியாவின் நிலத்தடி நீரிலேயே பூச்சி மருந்து அதிகமிருக்கிறது, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று அந்நிறுவனங்கள் திமிராகப் பதிலளித்ததைப் போல, இந்தியாவில் விளையும் வெங்காயத்தில் அதிக அளவுக்கு காரீயம் கலந்திருப்பதால், அந்த வெங்காயத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் மாகியிலும், காரீயம் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறுகிறது நெஸ்லே. அதுமட்டுமல்ல, அஜினமோட்டோவைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய அரசின் எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறது.
மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கடைகளிலிருந்து அப்புறப்படுத்தியதையே நெஸ்லேக்கு விதிக்கப்பட்ட மாபெரும் தண்டனை போலச் சித்தரித்துக் காட்டி, உணவில் நஞ்சுவைத்த கொடுங்குற்றத்திலிருந்து நெஸ்லே நிறுவனத்தை விடுவிக்கின்றது அரசு. இயல்பிலேயே பன்னாட்டு நிறுவனச் சார்பு கொண்டவையும், நெஸ்லே போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களால் பெரும் ஆதாயம் அடைபவையுமான ஊடகங்கள் இந்த விசயத்தில் அரசுக்கு எதிராகவோ, நெஸ்லேவுக்கு எதிராகவோ கேள்வி எழுப்புவதில்லை.
பாக்கெட் உணவு விளம்பரங்களுக்குப் பலியாகாமல் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வது பெற்றோரின் பொறுப்பு என்று கூறி சாமர்த்தியமாகப் பிரச்சினையைத் திசை திருப்புகின்றன. இத்தகைய நச்சுப் பொருட்களின் விற்பனையை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் அரசையும், உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகார வர்க்கத்தையும் குற்றத்திலிருந்து விடுவிக்கின்றன ஊடகங்கள்.
சிறு தொழிலாகவும், குடிசைத் தொழிலாகவும் நொறுக்குத் தீனிகளைத் தயாரிப்போரைச் சந்தையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு தரச் சட்டத்தை எதிர்த்து தமிழக உணவுப் பொருள் உற்பத்தியாளர் சங்கம் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
320 கோடி மதிப்புள்ள மாகி பாக்கெட்டுகளை சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுத்திருக்கிறது நெஸ்லே. இப்படி செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை என்பதே உண்மை. இருந்த போதிலும், தங்கள் பொருளில் எந்தக் குற்றமும் இல்லை என்ற போதிலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு, தாங்கள் செய்திருக்கும் Kதியாகமாக” இதனைச் சித்தரித்துக் கொள்கிறது நெஸ்லே.
***
சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர், உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிக்கின்ற சி.பி.எஸ்.இ. பள்ளி. வர்க்கம், போராட்டம் போன்ற சொற்களையே கட்டோடு வெறுப்பவர்களான இந்த வர்க்கத்தினருக்கு, வர்க்க ஏற்றத்தாழ்வு தோற்றுவிக்கும் அவமதிப்பு எத்தகையது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்தப் பள்ளியின் நிர்வாகம்.
நீதிபதி சிங்காரவேல் கமிட்டி நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைப் போல மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்கிறது இந்தப் பள்ளி. வசூலிக்கும் தொகைக்கு ரசீது தருவதில்லை. தாமதமாகப் பணம் கட்டினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் அபராதம். 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்குத் தயார்படுத்துவதற்காக மெரிட்டஸ் என்றவொரு வகுப்பு – அதற்கு ஆண்டுக்கு 90,000 ரூபாய். பாதியில் வேண்டாமென்று கருதினாலும் 1.8 லட்சத்தையும் கட்டியாக வேண்டும். இப்படிப்பட்ட கொள்ளைகள் எல்லை மீறிப் போகவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்குமாறு பெற்றோர் மத்தியில் கோரிக்கைகள் எழத்தொடங்கின.
உடனே பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு கீழ்க்கண்டவாறு சுற்றறிக்கை அனுப்பியது.
“சிங்காரவேல் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் கட்டும் பெற்றோர், கட்டணத்தை பள்ளிக்கு வந்து வரிசையில் நின்று கட்டவேண்டும். அந்த மாணவர்களுக்கு அரைநாள்தான் வகுப்பு நடத்தப்படும். கேன்டீனில் சாப்பிட முடியாது. கழிவறை பயன்படுத்தவும் கட்டுப்பாடு உண்டு. விளையாட்டுப் பயிற்சி கிடையாது.”
நிர்வாகம் சொல்கின்ற கட்டணத்தை செய்லுத்தும் பெற்றோர் கியூவில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் கட்டலாம். மாலை 3.40 வரை வகுப்பு உண்டு. அம்மாணவர்களுக்கு கேன்டீன், கழிப்பறை வசதி உண்டு. விளையாட்டு, நடனப் பயிற்சியுடன், 59 வகை கல்விச் சேவைகள் வழங்கப்படும்.”
சினிமா கொட்டகைகளின் பெஞ்சு டிக்கெட்டை விடவும், ஓட்டல்களில் போடப்பட்ட ஜனதா சாப்பாட்டை விடவும் கேவலமான முறையில் மாணவர்களை இழிவுபடுத்திய இந்த சுற்றறிக்கையை அந்தப் பள்ளியின் ஆசிரியர்களாலேயே சீரணிக்க முடியவில்லை. வித்யா மந்திர், டி.ஏ.வி. பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளை அக்கிரகாரங்கள் – மேட்டுத்தெருக்களாகவும், அரசுப் பள்ளிகளைச் சேரிகளாகவும் மாற்றியிருக்கும் கல்வி தனியார்மயம் என்ற புதிய வருணாசிரமக் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களான இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர், வர்க்க ரீதியான அவமதிப்பின் அநாகரிகத்தைப் பட்டுத் தெரிந்து கொண்டார்கள். பால வித்யா மந்திரை நடத்தும் பிராமணோத்தமர்கள், கல்வி வியாபாரிகளாக அவதரித்திருக்கும் சாராய வியாபாரிகளைப் போலவே ரவுடித்தனமாக நடந்து கொள்வதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாங்கக் கோரிய மாணவர்கள் – பெற்றோர்களைக் கீழ்த்தரமாக அவமதித்த பால வித்யா மந்திர் நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர்களும், அப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளியின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஆம். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது என்று கூறிய பள்ளியின் தலைமை ஆசிரியர், தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமின்றி, 8 ஆசிரியர்களும் அங்கிருந்து பள்ளியின் வேறு கிளைக்கு தூக்கியடிக்கப்பட்டார்கள். ஒரு வார காலம் போராட்டம் தொடர்ந்ததன் விளைவாக சிங்காரவேல் கமிட்டியும் சி.பி.எஸ்.இ. அதிகாரிகளும் தலையிட நேர்ந்ததாலும், தவிர்க்கவியலாமல் பள்ளி நிர்வாகம் ஊடகங்களில் அம்பலமாகிவிட்டதாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதாக நிர்வாகம் ஒப்புக்கொள்ள நேர்ந்தது.
இருப்பினும், இதன் பிறகு பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கும் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் சி.எச்.ராம், “அரசு சொல்லும் கட்டணத்தை வசூலிப்போம். அதே நேரத்தில் இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, ஆசிரியர்களைக் குறைப்போம். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்போம். சிறப்பு வகுப்புகளைத் தனியே நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார். முடிவில் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளியா, அரசின் மேலாண்மையா?
***
ஆம்பூருக்கு அருகிலுள்ள பாலூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் பேர்வழியான பா.ம.க. வைச் சேர்ந்த சின்னபையன் என்பவரை மிரட்டி, அவரிடமிருந்து 7 டன் செம்மரக் கட்டைகளைப் பிடுங்கியது மட்டுமின்றி, அவரைக் கூலிப்படையை அமர்த்திக் கொலையும் செய்திருக்கும் பலே கிரிமினல், வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல் என்பது அம்பலமாகிவிட்டது.
செம்மரக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்களுக்காக் கைது செய்யப்பட்டுள டி.எஸ்.பி தங்கவேலுவை அரசு வி.ஐ.பி. போல அழைத்துச் செல்லும் தமிழக போலீசு.
“டி.எஸ்.பி. தங்கவேலுதான் செம்மரங்கள் எப்போது வரும் என்பது பற்றியும், அவற்றை வெளியே அனுப்புவது பற்றியும் எங்களுக்குச் சொல்வார். சின்னப்பையன் கொலை விசயத்திலும் டி.எஸ்.பி. சொன்னதைத்தான் செய்தோம்” என்று இந்தக் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி ஆகியோர் ஆம்பூர் போலீசிடம் வாக்குமூலம் தந்திருக்கின்றனர்.
இந்தத் தகவலை உடனே தங்கவேலுவுக்கு சொல்லி, தலைமறைவாவதற்கு ஏற்பாடு செய்து விட்டு, முன் ஜாமீனுக்கும் மனுப்போட்டு விட்டு, குற்றவாளியை வலைவீசித் தேடுவதாக அறிவித்தது ஆம்பூர் போலீசு. 12 நாட்களுக்கு மேல் இந்த நாடகத்தை நடத்த முடியாமல் போகவே, வேறு வழியின்றி தங்கவேலு கைது செய்யப்பட்டார்.
தங்கவேலுவின் முகம் பத்திரிகை காமெராக்களில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே இரவு நேரத்தில் அவரை நீதிபதி வீட்டுக்கு ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கிய ஆம்பூர் போலீசு, நீதிபதியின் வீட்டைச் சுற்றி விளக்கை அணைத்து இருட்டாக்கியது. வாசல் வழியாக நுழையாமல் கொல்லைப்புறமாக நுழைந்தது. ஒரு கான்ஸ்டபிள் தயாராக குனிந்து நிற்க, அவர் முதுகில் பச்சைக்குதிரையேறி காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்த தங்கவேலுவை, தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது போலீசு. இருப்பினும் இத்தனையும் தாண்டி ஊடகங்கள் தங்கவேலுவைப் படம் பிடித்து விட்டன.
அடுத்தமுறை நீதிமன்றத்துக்கு வந்த தங்கவேலு ஒளிந்து மறைந்து வரவில்லை. போலீசாருக்கு, தலைமை தாங்கி செல்லும் தோரணையில், கைகளை, அங்கும், இங்குமாக நீட்டி, ’ஜாலி’யாக பேசியபடி அந்தக் கிரிமினல் நடந்து சென்றதையும், போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும், அவர் பின்னால், போலீசார், ’பவ்யமாக’ நடந்து சென்ற காட்சியையும் பத்திரிகைகள் விவரித்தன.
விசாரணையின் போது, 4 அ.தி.மு.க. பிரமுகர்கள், 11 போலீசு அதிகாரிகள், 12 வனத்துறை அதிகாரிகள், 10 கடத்தல்காரர்கள் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக முதலில் சொன்ன தங்கவேலு, அடுத்த சில நாட்களில் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதித்திருக்கிறார்.
இந்த வழக்கில் பல லட்சம் ரூபாய் கை மாறி தங்கவேலுவைக் காப்பாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார் செம்மரக் கட்டைகள் கடத்தல் பிரிவைச் சேர்ந்த ஆந்திர டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன். தங்கவேலுவை விசாரித்து வரும் தனிப்படையினர் யார் தெரியுமா? அவருடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற, ஒண்ணாக உட்கார்ந்த சரக்கடித்த அங்காளி பங்காளிகள்தான் அவரை விசாரித்து வரும் தனிப்படை!
***
மேற்சொன்ன மூன்று சம்பவங்களிலிருந்தும் தெரியவரும் உண்மைகள் என்ன? உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறையாகட்டும், கல்வித்துறையாகட்டும், போலீசாகட்டும் – அரசின் இந்த உறுப்புகள் எதுவும் தாமே கூறிக்கொள்ளும் நோக்கங்களை இம்மியளவும் நிறைவேற்றுபவையாக இல்லை.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்று மிகவும் டாம்பீகமாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த போதிலும், நெஸ்லே, பிரித்தானியா போன்ற நிறுவனங்கள் இந்த அமைப்பின் சோதனைச்சாலையில் சான்றிதழ் பெற்றால்தான் பொருளை சந்தைப்படுத்த முடியும் என்று சட்டமே இல்லை. இந்த நிறுவனங்கள் தமது சோதனைச்சாலைகளில் சோதித்துப் பார்த்து விட்டதாகக் கூறி தருகின்ற சான்றிதழுக்கு கீழே இந்த ஆணையம் கையெழுத்து மட்டுமே போடுகிறது.
இந்த அமைப்பிடம் இருப்பவை வெறும் 4 சோதனைச்சாலைகள். மாநில அரசுகளிடமும் போதிய சோதனைச்சாலைகள் கிடையாது. ஒரு ஒப்பீடு சொல்லவேண்டுமானால், சீனாவில் 2 லட்சம் பேருக்கு ஒரு உணவுத்தர சோதனைச்சாலை. இந்தியாவிலோ சுமார் ஒரு கோடிப் பேருக்கு ஒன்று என்ற அளவிலேயே உள்ளது. அதேபோல, Kதங்களது விளம்பரங்கள் உண்மையானவை” என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் உறுதிமொழியை அரசு அங்கீகரிக்கிறதே தவிர, பொய்யான விளம்பரங்களைச் சோதிக்கவோ, தண்டிக்கவோ கூட சட்டங்கள் இல்லை.
அப்படியே இதனை வித்யா மந்திர் விவகாரத்துடன் பொருத்திப் பாருங்கள். சிங்காரவேல் கமிட்டி கூறும் கட்டணத்துக்கு மேல் வசூலிக்காத தனியார் பள்ளி இருக்கிறதா? மழலையர் வகுப்புக்கே ஒரு லட்சம் என்ற அளவுக்கு கல்விக் கொள்ளை சிரிப்பா சிரித்த போதிலும், எந்தப் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
அடுத்து, இந்தக் கமிட்டிகளாலும் ஆணையங்களாலும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று சொல்லப்படுவோர்தான், இந்த ஆணையங்களை மறைமுகமாகக்கூட அல்ல, நேரடியாகவே கட்டுப்படுத்துகின்றனர்.
கோலா பானங்களில் பூச்சி மருந்துகளும் நச்சு வேதிப்பொருட்களும் அளவுக்கதிகமாக இருப்பதை, அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இத்தகைய உணவுப் பொருட்களை சோதிக்கவும் கண்காணிக்கவும் 2006-ல் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான ஆணையமாக FSSAI உருவாக்கப்பட்டது. உணவு மாதிரிகளைச் சோதிக்கும் குழு, அறிவியல் குழு, விளம்பரக் கண்காணிப்பு குழு போன்ற குழுக்கள் இந்த ஆணையத்தால் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்களில் நிரம்பியிருந்தவர்கள் கோக், நெஸ்லே, யூனிலிவர், ஐ.டி.சி., பிரிட்டானியா போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் அதிகாரிகள். அதாவது குற்றவாளிகள்தான் கண்காணிப்பாளர்கள்!
சமச்சீர் பாடத்திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க, தனியார் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டதைப் போல! டி.எஸ்.பி தங்கவேலுவை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி.யோ, எஸ்.பி.யோ நியமிக்கப்பட்டிருப்பதைப் போல!
இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அரசு குற்றவாளிகளை விடுவிக்கின்றது. சட்டப்படி குற்றம் என்று கருதப்பட்டவற்றை இனி சட்டபூர்வமானதென்றும் மாற்றுகின்றது.
சான்றாக, தமிழகத்தில் ஜுன் 1,1976-க்கு முன் மதுரை, சென்னை பல்கலைக்கழகங்களிடம் அங்கீகாரம் பெற்றிருந்த சுமார் 40 மெட்ரிக் பள்ளிகளைத் தவிர, தமிழகத்தில் தற்போது இயங்கும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் பள்ளிகள் முதல் மழலையர் பள்ளிகள் வரையிலான அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், இந்தப் பள்ளிகளை அங்கீகரிப்பதற்காகத் தமிழக அரசு இயற்றியிருக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான நெறிமுறைகளும் சட்டவிரோதமானது என்றும், பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை மறுக்க முடியாத தமிழக அரசு, சட்டவிரோத மெட்ரிக் பள்ளிகள் முதல் மழலையர் பள்ளிகள் வரையிலான அனைத்தையும் சட்டபூர்வமாக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு ஒரு ஆண்டு அவகாசம் கேட்டது. நீதிமன்றமும் அவகாசம் வழங்கியிருக்கிறது. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 19.6.15)
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று கூறிக்கொள்ளும் நீதிமன்றம், கல்விக் கொள்ளையைச் சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு துணை நிற்கிறது. தனியார் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு அமைக்கப்பட்ட சிங்காரவேல் கமிட்டி, கொள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்து ஆண்டுதோறும் அவர்களுடைய கோரிக்கைக்கு ஏற்ப கட்டணத்தை ஏற்றிக் கொடுக்கிறது.
மோடியின் துணிச்சலான நடவடிக்கை என்பதைப் போல பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் மாகி விவகாரத்தில், நெஸ்லேவுக்கு எதிராக அரசு கிரிமினல் வழக்கு ஏதும் தொடுத்திருக்கிறதா என்றால், இல்லை. நுகர்வோரின் சார்பாக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் (NCDRC) முறையிட்டிருக்கிறது. இதைக்காட்டிலும் அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.
அதே நேரத்தில், பாக்கெட் உணவுகளில் உப்பு, சர்க்கரை போன்றவை எந்த அளவு இருக்கலாம் என்று தீர்மானிக்க தர நிர்ணய ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இந்திய உணவுப் பொருள் சந்தையில் சிறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதால், உணவுப் பொருட்களைத் தரப்பரிசோதனைக்கு உட்படுத்துதல் என்ற பெயரில், அவர்களை வெளியேற்றுவதும், பன்னாட்டு நிறுவன ஆதிக்கத்தை உத்திரவாதப் படுத்துவதும்தான், மாகி பிரச்சினையைச் சாக்கிட்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிபுணர் குழுவின் நோக்கமாக இருக்கும் என்று நிச்சயமாக சந்தேகிக்கலாம்.
இத்தகைய சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், மாகி நூடுல்ஸ் பிரச்சினை கிடக்கட்டும், “கையேந்தி பவன் பானி பூரியில் உள்ள மலம் கலந்த தண்ணீர் டைபாய்டை உருவாக்கும்” என்று எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையத்தின் இணையதளம். மாநகராட்சிக் குழாய்களில் சாக்கடைத் தண்ணீர் வழங்கும் அரசு, கையேந்திபவனில் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கிறதாம்!
உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், போலீசு, பள்ளி கல்வித்துறை முதலான துறைகளும் சரி, அவற்றுக்கான நோக்கங்கள், விதிகள், நெறிகள் போன்றவையும் சரி – அனைத்தும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனுக்கேற்ப வடிவமைத்துக் கொண்டவைதான். இந்த நிறுவனங்களையும் விதிமுறைகளையும் எல்லா மக்களுக்கும் பொதுவானவை என்று பிரச்சாரம் செய்து நம்பவைப்பதன் மூலம்தான் மக்களிமிருந்து ஆள்வதற்கான நியாயவுரிமையைப் பெற்றிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.
ஆனால் அவர்கள், தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களையும் நெறிகளையும் தாங்களே மீறுகிறார்கள். இந்த அரசமைப்பின் வரம்புக்கு உட்பட்டு, இத்தகைய முறைகேடுகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், முன்னிலும் பெரிய முறைகேட்டுக்கு வழி வகுக்கிறது. ‘சட்டத்தின் ஆட்சி’ என்ற இடையூறைத் தகர்த்துத் தரைமட்டமாக்கியபடி, மத்திய அமெரிக்காவின் வாழைப்பழக் ‘குடியரசு’களின் நிலைக்கு வழுக்கிச் சரிகிறது ‘இந்திய ஜனநாயகம்’.
அடையாறு மேட்டுக்குடி வர்க்கம் தெருவுக்கு வந்ததும், கொலைக் குற்றவாளி பகிரங்கமாக போலீசின் முதுகில் பச்சைக்குதிரை தாண்டுவதும், உணவில் நஞ்சு கலந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கே தரநிர்ணய அதிகாரம் வழங்கப்படுவதும் இந்த அரசுக் கட்டமைவின் மக்கள் விரோதத் தன்மையை மட்டும் காட்டவில்லை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தோல்வியையும், அது ஆளும் அருகதை இழந்து நிற்பதையும் வெவ்வேறு கோணங்களில் பறைசாற்றுகின்றது.
90 சதவீத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்மல்கர் குடும்பத்திடமிருந்து ஒரு கடிதம்
ரூ 5,000-க்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பம் எப்படி வாழ்கிறது. என்று ஆஷூதோஷ் பரத்வாஜ் கண்டறிகிறார். சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சத்தீஸ்கரில் கிட்டத்தட்ட அனைத்து கிராமப்புற குடும்பங்களும் அவ்வளவுதான் சம்பாதிக்கின்றன.
சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப் புற இந்தியாவின் 4-ல் 3 குடும்பங்களின் முக்கிய பணமீட்டும் உறுப்பினரின் மாத வருமானம் ரூ 5,000-க்கு குறைவானது. சத்தீஸ்கரில் 90 சதவீத குடும்பங்களில் இதுதான் நிலைமை.
மகள் தான்யாவுடன் ராஷ்மி. காது கேட்காத, வாய் பேசாத அந்தக் குழந்தைக்கு செயற்கை காது சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அது தங்களுக்கு எப்போதும் கட்டுப்படியாகப் போவதில்லை என்று அவளது அப்பா, அம்மாவுக்கு தெரியும். (படம் நன்றி : ஆஷூதோஷ் பரத்வாஜ், எக்ஸ்பிரஸ் போட்டோ)
ஈஷ்வர் நிர்மல்கரின் 5 பேர் கொண்ட குடும்பம் இந்த வரையறைக்குள் வருகிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, மாதம் ரூ 5,000 சம்பாதிப்பது கூட இழுபறியாகத்தான் இருக்கிறது. அவர்கள் வாழும் போரியா கலன் கிராமம் சத்தீஸ்கர் அரசு உருவாக்கி வரும் புதிய தலைநகரான நயா ராய்பூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகன், மகள் திருமணத்துக்கு ஒரு பெருந்தனக்காரரிடமிருந்து ரூ 60,000 கடன் வாங்கியது அந்தக் குடும்பம். அவரிடம்தான் நிர்மல்கர் மாடு மேய்த்து வந்தார்.
ஐந்து, ஆறு ஆண்டுகள் முறையாக தவணை கட்டியபிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “இது வரை கட்டியது வட்டி மட்டும்தான், அசல் இன்னும் அப்படியே இருக்கிறது” என்று கடன் கொடுத்தவர் சொல்லியிருக்கிறார். நிர்மல்கரின் மனைவி பிர்ஜா பாய் தனது தம்பியிடமிருந்து ரூ 20,000 கடன் வாங்கினார், குடும்பத்தின் மருமகள் ராஷ்மி தனது தாய் வீட்டிலிருந்து ரூ 10,000 வாங்கி வந்தார். அந்தத் தொகைகளை கடன் அடைக்க கொடுத்த பிறகும், இப்போது ரூ 20,000 பாக்கியிருக்கிறது.
“கடன் கொடுத்த பெருந்தனக்காரருக்கு இதுவரை மொத்தம் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம் என்ற கணக்குக் கூட மறந்து போச்சு” என்கிறார் பிர்ஜா பாய்.
நிர்மல்கர் குடும்பத்துக்கு என்று சொந்தமாக நிலம் இல்லை. அவர்கள் வாங்கியது இந்தக் கடன் மட்டும் இல்லை; ஒரு கடனுக்கான வட்டியை கட்ட இன்னொரு கடன் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் நவுகர் லால் நிர்மல்கர் ஒரு கூட்டுறவு வங்கியிடமிருந்து ரூ 10,000 கடன் வாங்கி ஒரு பான் கடை திறந்தார். மாதா மாதம் ரூ 300 தவணை கட்டிய பிறகும் அந்தக் கடனில் இன்னும் ரூ 1,000 மீதியிருக்கிறது.
ஒரு பசு வாங்குவதற்கான கடனால் ஒரு குடும்பமே அழிந்தது பற்றி எழுத்தாளர் பிரேம் சந்த் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தனது “கோதான்” என்ற கதையில் எழுதியிருந்தார். அதேதான் தங்களது குடும்பத்தின் கதையும் என்றால் பிர்ஜா பாய் ஒத்துக் கொள்வார். காய்கறிகாரருக்கு ரூ 300, மளிகைக் கடைக்கு ரூ 500, கிராமத்து டாக்டருக்கு ரூ 900 என அனைத்துக் கடன்களையும் பட்டியலிடும் 55 வயதான பிர்ஜா பாய், “எல்லாக் கடனும் நான் செத்தால்தான் தீரும்” என்று பெருமூச்சு விடுகிறார்.
37 வயதான நவுகர் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவர் தனது கும்டி (பான் கடை) யில் மாதம் ரூ 4,000 வரை சம்பாதிக்கிறார். இதுதான் அக்குடும்பத்தின் முதன்மையான வருமானம். இதற்கு மேல் 57 வயதான பிர்ஜாவும், 65 வயதான நிர்மல்கரும் அறுவடை காலத்தில் விவசாய வேலைக்குப் போவார்கள். அப்படி வேலை கிடைத்தால் கூடுதல் வருமானம் வரும்.
அவர்கள் வீட்டில் கழிவறை இல்லை; அந்த குடும்பத்துக்கு வறுமைக்கோட்டுக்கு கீழானவர்களுக்கான குடும்ப அட்டை இல்லாததால் அரசு நலத்திட்டங்களும் கிடைப்பதில்லை. பெரும்பான்மை மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறினாலும், “பல தடவை போய் பார்த்துட்டோம். வறுமைக் கோட்டு அட்டை கிடைக்க மாட்டேங்குது. அந்த அட்டை இருந்தாலாவது, அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏதாவது உதவி கிடைத்திருக்கும்” என்கிறார் நவுகர்.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால், மண்ணும், சாணமும் சேர்த்து கட்டப்பட்ட அவர்களது வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்திலேயே இருக்க வேண்டும். போன ஆண்டுதான் ஒரு பக்கச்சுவர் இடிந்தது என்கிறார் ராஷ்மி.
நவுகரின் மூத்த மகள் 6 வயது தான்யாவுக்கு காது கேட்டல், பேச்சு குறைபாடு உள்ளது. தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்திருக்கும் தான்யா, இருண்ட வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறாள். சுவரில் ராணி லட்சுமி பாயின் ஒரு பழைய போஸ்டர் தொங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நவுகர் அதை வாங்கியிருந்தார். “அப்போதெல்லாம், என் மூத்த மகள் பற்றி பெரிய கனவுகள் வைத்திருந்தேன். ஆனால்….”
அவளுக்கு செயற்கைக் காது அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். “இந்த அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்” என்று ராய்ப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவுகரிடம் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்தை தன்னால் ஒருபோதும் ஏற்பாடு செய்ய முடியாது என்று அவருக்கு தெரிகிறது.
3 வயதான அவரது இளைய மகள் பிரக்யா, அங்கன்வாடிக்கு போகிறாள். பிர்ஜா ஒரு பேரன் பிறப்பான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், ராஷ்மி கருத்தடை சிகிச்சை செய்து கொண்டு விட்டார் என்பதை நவுகர் இன்னும் தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு மேல் வளர்ப்பது தனக்கு கட்டுப்படியாகாது என்கிறார் நவுகர்.
நேரம் மாலை 7 மணியை தாண்டி விட்டிருக்கிறது. நிர்மல்கர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர் ஏதாவது கட்டிட வேலை கிடைக்குமா என்று தேட காலையிலேயே ராய்பூர் போயிருந்தார். அவர் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் இன்று இரவு ஏதாவது காய் சமைக்க முடியும் என்று நவுகர் கிண்டல் செய்கிறார். ஆனால், மற்ற நாட்களிலிருந்து இன்று எதுவும் மாறி விடப் போவதில்லை என்று பிர்ஜாவுக்கு தெரிகிறது. அவர்கள் வேலை தேடி நாள் தவறாமல் ராய்ப்பூருக்கு போகத்தான் செய்கிறார்கள். ஆனால், சத்தீஸ்கரில் அவர்களைப் போன்ற உடல் உழைப்பு தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவு இருப்பதால் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.
நவுகர் முன்பு ஒரு முறை ராய்ப்பூரில் வேலை செய்ய முயற்சித்திருக்கிறார். நிர்மல்கர்கள் பாரம்பரியமாக துணி வெளுக்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். நவுகர் ராய்ப்பூரில் துணி தேய்க்கும் வண்டி ஏற்பாடு செய்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆனால், அந்த பகுதியில் இருந்த பிற துணி வெளுக்கும் தொழிலாளர்கள் சில நாட்களுக்குள்ளாகவே அவரை துரத்தி விட்டனர்.
அதனால், நகரத்தை விட கிராமத்தையும், அக்கம் பக்கத்தவரின் ஆதரவையும் நிர்மல்கர் குடும்பம் விரும்புகிறது. சென்ற ஆண்டு ஒரு விபத்துக்குப் பிறகு நவுகர் படுக்கையில் இருந்த கால கட்டத்தை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது அவர்களுக்கு. அவர்களை போலவே ஏழ்மையில் உள்ள சக கிராமத்தினர்தான் தங்களால் இயன்ற எல்லா உதவியையும் செய்தார்கள் என்கிறார் ராஷ்மி.
“எங்களைப் போன்றவர்களுக்கு ராய்ப்பூரில் இடம் இல்லை” என்று உறுதியாக சொல்கிறார் அவர்.
8 மணி வாக்கில் நிர்மல்கர் வந்து சேர்கிறார். 60 வயதான அந்த முதியவர் மெதுவாக நடந்து வருகிறார். அவரது தயக்கமான காலடிகள் பிர்ஜாவின் அச்சத்தை உறுதி செய்கின்றன. கடந்த சில மாதங்களின் பல நாட்களைப் போலவே இன்றும் ராய்ப்பூரில் வேலை தேடிப் போன அவரது நாள் வீணாகவே போனது.
பிர்ஜாவின் நெற்றிச் சுருக்கங்கள் ஆழமாகின்றன. அடுத்த மாதம் அந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய பண்டிகை ஹரியாலி தீஜ் வருகிறது. திருமணமான பெண்கள் தமது தாய்வீட்டுக்கு வருவார்கள், அவர்களுக்கு பரிசுகள் தரப்பட வேண்டும். பிர்ஜாவுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு பரிசு கொடுக்க பிர்ஜாவுக்கு அவரது தாய் வீட்டிலிருந்தும், ராஷ்மிக்கும் வரும் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். “இப்படித்தான் வண்டி ஓடுது” என்று புன்னகைக்கிறார் ராஷ்மி.
பதில் உதவியாக, இன்னமும் பாரம்பரிய துணி வெளுக்கும் தொழில் செய்யும் ஒரு சில குடும்பங்களில் ஒன்றான நவுகரின் அக்கா கல்யாணி, தமக்குக் கிடைக்கும் எஞ்சிய துணிகளில் சிலதை தனது தம்பி குடும்பத்துக்கு கொடுத்து உதவுகிறார்.
எதைப் பேசினாலும், பேச்சு பெருந்தனக்காரருக்குக் கொடுக்க வேண்டிய ரூ 20,000-க்கு திரும்புகிறது. அவர் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்று விட்டார். ஆனாலும் அவரது செல்வாக்கு குறித்து நிர்மல்கர் குடும்பத்துக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது “பரம்பரை வீட்டை” விற்பதுதான் கடனை அடைக்க ஒரே வழி என்று தெரிகிறது. மூன்று ஓலைக் குடிசைகளும் ஒரு முற்றமும் கொண்ட அந்த வீட்டுக்கு ரூ 50,000 விலை கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முந்தைய 2 திருமணங்களுக்கான கடனை அடைத்த பிறகு வாழ்வதற்கு ஒரு குடிசை போட பணம் எஞ்சியிருக்கும்.
மாதம் ரூ 5,000 சம்பாதிப்பதற்கான அவர்களது போராட்டம் அதன்பின்னும் தொடரும்.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடையை ஒட்டி எழுந்த பரபரப்பு அதே வேகத்தில் வடிந்து விட்டது. உடல் நலன், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு என்றெல்லாம் கவலைப்பட்ட ஊடகங்கள், இப்போது சுதி இறங்கி ’நெஸ்லே போன்ற ஒரு பாரம்பரிய பெருமை மிக்க நிறுவனம் இப்படிச் செய்யலாமா?’ என்று வருத்தப்படுகின்றன. நுகர்வோர் மீதான கவலையை கார்ப்பரேட் மீதான பக்தி வென்று விட்டது.
மேகி பிரச்சினையின் போது நெஸ்லே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) தில்லிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு ஊடகங்கள் கவலையை மாற்றிய சக்தி எது என்பதை ‘துப்பறிந்து’ கண்டுபிடிக்க வேண்டியதில்லை.
ஒருபுறம்ம், நெஸ்லேவின் வணிக சின்னம் (Brand image) மீதான கருணைக் கட்டுரைகள்; மறுபுறம் நெஸ்லே மேகியில் உள்ள அதிகமான காரீயத்திற்கு அதில் பயன்படும் வெங்காயம் விளையும் மண்னின் தன்மையே என்பதை விளக்கும் அறிவியல் கட்டுரைகள். நீ மட்டும் யோக்கியமா போன்ற கிரிமினல்களின் மொழியில், மேகியில் மட்டுமில்லை, பல பொருட்களிலும் கலப்படம் உள்ளதை விவரிக்கும் தந்திரமான கட்டுரைகள், ‘அந்தக் காலம் மாதிரி வருமா’ என்று குற்றவாளியைத் தேடாமல் சுகத்தை அசைபோடும் கட்டுரைகள், இவைதான் மக்களின் சிந்தனை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
நெஸ்லேவை ஆதரிக்கும் வாதங்களின் சாரம் என்ன? மேகியில் காரீயமும் மோனோசோடியம் க்ளூட்டமைட்டும் இருந்தது என்னவோ தப்பு தான், ஆனா பாருங்க நம்ம பாரம்பரிய பெருமை மிக்க நெஸ்லே பங்குச் சந்தையில் சரிந்து கிடக்கிறது; இது இந்தியா தொழில்களுக்கு நண்பன் என்ற பிம்பத்தை சிதைக்க கூடியது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு வணிக பிம்பத்தைக் கட்டமைப்பது சாதாரமாணதில்லை – என்பதே இந்த வாதங்களின் உட்கிடை.
அப்பேற்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் பாரம்பரிய பெருமைதான் என்ன?
”குழந்தைக் கொலையாளி” நெஸ்லே
நெஸ்லே நிறுவனத்தின் வரலாறு 1830-ம் ஆண்டு துவங்குகிறது. டானியேல் ஆல்பர் நெஸ்லே என்ற ஜெர்மானியர் அந்த வருடம் தான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேறி தனது ஆராய்ச்சியைத் துவங்குகிறார். தாய்ப்பாலுக்கான ஒரு மாற்று பானம் குறித்ததே அந்த ஆராய்ச்சி. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் 1866-ம் ஆண்டு நெஸ்லே பால் பவுடரைக் கண்டு பிடிக்கிறார். இப்படித்தான் 1867-ம் ஆண்டு நெஸ்லே நிறுவனம் துவங்கப்படுகிறது.
அடுத்து வந்த நூறாண்டுகளில் நெஸ்லே நிறுவன பால் பவுடருக்குப் போட்டியாக டூமிகோ மற்றும் மீட் ஜோன்சன் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும் பால் பவுடர் வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் நெஸ்லே வசம் தான் இருந்தது. இரண்டு உலகப் போர்களுக்குப் பின் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரிக்கவே, பால் பவுடருக்கான தேவை அதிகரித்திருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனிய நாடுகள் விடுதலையடைந்து வந்தன. குறிப்பாக இந்த வகை மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் அப்போது தான் மெல்லத் தவழத் துவங்கியிருந்தது. பல ஆசிய, ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் சுகாதாரக் குறியீடு மிகவும் பின்தங்கியிருந்தது. இந்த சந்தர்பத்தை நெஸ்லே மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இந்நாடுகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு பதில் புட்டிப்பால் புகட்டுவதே நல்லது என்கிற பிரச்சாரத்தை நெஸ்லே முன்னெடுத்தது. பல நாட்டு அரசாங்கங்களின் சுகாதார அமைச்சகங்களை கைக்குள் போட்டுக் கொண்டு அரசு செலவிலேயே இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது.
அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் புட்டிப்பால் புகட்டுவதால் ஆண்டொன்றுக்கு சுமார் பதினைந்து லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள் என்று ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அச்சமயத்தில் பால்பவுடர் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக நெஸ்லே இருந்தது தற்செயலானதல்ல. எழுபதுகளின் மத்தியில் இருந்து நெஸ்லே நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்தன.
“நெஸ்லேவைப் புறக்கணிப்போம்”
இன்றைக்கு ”நல்ல உணவு; நல்ல வாழ்க்கை” (Good Food, Good life) என்பதைத் தனது வர்த்தக முழக்கமாக கொண்டிருக்கும் நெஸ்லேவை அன்றைக்கு மக்கள் எப்படி அழைத்தார்கள் தெரியுமா? ”குழந்தைக் கொலையாளி” (Baby Killer)!
தனது லாபவெறிக்காக குழந்தைகளின் உயிர்களோடு விளையாடுவது நெஸ்லே புதிதாக வரித்துக் கொண்ட வணிக கொள்கையல்ல – அது தான் அதன் வரலாறே!
1977-ம் ஆண்டு சர்வதேச அளவில் நெஸ்லேவுக்கு எதிரான மக்களின் அதிருப்தி உச்சமடைந்த பல்வேறு நாடுகளில் “நெஸ்லேவைப் புறக்கணிப்போம்” என்ற பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இன்றளவும் பல்வேறு நாடுகளில் இந்த பிரச்சார இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அடிப்படை மனித விழுமியங்களும் முதலளித்துவ சந்தை நலனும் கார்ப்பரேட் லாப வெறியும் எந்தக் காலத்திலும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள நெஸ்லே ஒரு எடுப்பான உதாரணம்.
அதை நேரடியாகவே நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பீட்டர் ப்ரெபெக் நமக்கு காட்டியருளுகிறார்.
பீட்டர் ப்ரெபெக்கின் தண்ணீர் குறித்த தத்துவத்தை அவரது வார்த்தைகளிலேயே கேட்க
https://www.youtube.com/watch?v=SEFL8ElXHaU.
அவரது வாதப்படி தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள். அதனால் மற்ற பண்டங்களுக்கு இருப்பது போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும். எனவே, ஒரு மனிதனுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமைகளில் சேராது. ஆக தண்ணீர் என்பது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டும்.
பீட்டர் ப்ரெபெக்கின் ’தண்ணீர் தத்துவம்’ என்ற சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை – வருடாந்திரம் சுமார் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை (சுமார் 10.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பாதித்துக் கொடுக்கும் நெஸ்லேவின் தண்ணீர் வர்த்தகப் பிரிவின் லாபம் சமீபத்திய ஆண்டுகளில் லேசாக ஆட்டம் கண்டுள்ளதே அதற்குக் காரணம்.
”புட்டியில் அடைபட்ட வாழ்க்கை” (Bottled life) என்ற தலைப்பில் நெஸ்லே நிறுவனம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் அர்ஸ் ஷென்னெல் மற்றும் பத்திரிகையாளர் ரெஸ் கெரிகர் ஆகியோர் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளனர்.
பீட்டர் ப்ரெபெக்கின் ’தண்ணீர் தத்துவம்’ என்ற சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை
இருவரும் நெஸ்லேவின் இரத்தக் கவிச்சி வீசும் பாதையில் ஆப்ரிக்க கண்டம் துவங்கி ஆசியாவின் பாகிஸ்தான் வரை பயணித்துள்ளனர். சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெஸ்லேவின் தண்ணீர் திருட்டைச் சொல்லிக் குமுறியுள்ளனர். பாகிஸ்தானின் பாத்தி தில்வான் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெஸ்லேவின் தண்ணீர் தொழிற்சாலை அந்த கிராமத்தின் நிலத்தடி நீரை 100 அடியில் இருந்து 400 அடி ஆழத்திற்கு விரட்டியுள்ளது.
பெரியர், விட்டல், ப்யூர் லைஃப் உள்ளிட்ட சுமார் 60 வணிகப் பெயர்களில் நெஸ்லே தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வளர்ந்த நாடுகளில் உள்ள தமது கிளைகளின் லாபம் குறைவதைப் பற்றி கவலை தெரிவித்த நெஸ்லே நிறுவனத்தின் தண்ணீர் வர்த்தகப் பிரிவின் தலைவர் “ஐரோப்பாவைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் குழாய்த் தண்ணீருக்கு மாறி வருவது எங்களுக்குக் கவலையளிக்கிறது. ஒருவேளை பொருளாதாராம் மீண்டாலும், குழாய்த் தண்ணீருக்குப் பழகிய மக்கள் மீண்டும் பாட்டில் தண்ணீருக்கு மாறுவது சந்தேகமே” என்று வருந்தியுள்ளார்.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து கிடைத்து வந்த லாபம் குறையத் துவங்கியதை அடுத்து நெஸ்லே ஆப்ரிக்க, ஆசிய மற்றும் தென்னமெரிக்க நாடுகளைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளது.
மலேரியா, எய்ட்ஸ் நோய், போர்கள் மற்றும் போக்குவரத்து விபத்துகளில் நேரும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கையை விட நாளொன்றுக்கு அதிகமான குழந்தைகள் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிப்பதாலேயே மரணிக்கிறார்கள். இந்நிலையில் நெஸ்லே போன்றதொரு நிறுவனம் ’சுகாதார மற்ற குடிநீரால் ஏற்படும் இறப்புகளுக்குத் தீர்வு சுத்தமான குடிநீரும் சுத்தமான வாழ்க்கையும் (Pure life) தான் விடை என்று சொன்னால் அதன் பொருள் என்ன?” என்று கேட்கும் ஐ.நா சபையின் முன்னாள் அலோசகர் மௌடீ பார்லோ, அதற்கான விடையை அளிக்கிறார்.
“உங்கள் ஊற்றுக்களின் நீரை வறண்டு போகச் செய்து உங்கள் தண்ணீரை உங்களுக்கே விற்போம்” என்பதே நெஸ்லே போன்ற நிறுவனங்களின் வாதம் என்று விளக்கும் பார்லோ, இது பொறுப்பற்றத்தனம் மட்டுமல்ல, எதார்த்தத்தில் ஒரு கொடுமையான கிரிமினல் அடக்குமுறை என்கிறார்.
மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கும் கடமையைச் செய்வதைத் தடுக்கும் நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், குடிநீர் வழங்கல் மற்றும் சுத்தமான குடிநீர் உற்பத்தியில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. காசிருந்தால் சுத்தமான குடிநீரை வாங்கிக் குடித்து பிழைத்துக் கிடக்கலாம் – காசில்லாதவர்கள் சுகாதாரமற்ற விஷத்தைக் குடித்து செத்துப் போக வேண்டும் என்பதே நெஸ்லே வழங்கும் Good food, good life என்ற மந்திரத்தின் பொருள்.
கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டையின் முன் மனித சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இயற்கையும் அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது.
கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டையின் முன் மனித சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இயற்கையும் அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது. அடிப்படை மனித அறம், விழுமியங்கள் என்பதற்கெல்லாம் என்ன தான் பொருள்? எளிமையான இந்தக் கேள்வியை நீங்கள் அடுத்த முறை மொறுமொறுப்பான கிட் கேட் சாக்லேட்டைக் கடிக்கும் போது கேட்டுப் பாருங்கள் – உங்கள் கடைவாய்ப் பற்களின் இடையில் நொறுங்கும் கிட்கேட் சாக்லேட்டின் ”க்ரஞ்சி” சப்தங்களுக்கிடையே மெல்லியதாய்க் கேட்கும் உராங்குட்டான் குரங்குகளின் மரண ஓலங்கள் ஒருவேளை பதில் சொல்லலாம்.
நெஸ்லே கிட்கேட் சாக்லேட்டின் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பாம் மரத்தின் எண்ணெய் மலேசியாவில் இருந்து தருவிக்கப்படுகிறது. இதற்காக பல லட்சம் ஏக்கர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பாம் மரங்கள் பயிரிடப்படுகின்றன. மழைக்காடுகளின் அழிவு அந்தக் காடுகளையே நம்பி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த உராங்குட்டான் குரங்குகளை அழிவின் விளிம்புக்குத் தள்ளியிருகின்றது.
உராங்குட்டான் குரங்குகள் அழிவதைத் தடுக்கவும், கிட்கேட் சாக்லேட்டுக்கு எதிராகவும் க்ரீன்பீஸ் வெளியிட்ட விளம்பரப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டு நெஸ்லே நிறுவனத்தின் வற்புறுத்தலுக்குப் பின் நீக்கப்பட்டது. தற்போது அந்த விளம்பரம் விமியோ தளத்தில் காணக்கிடைக்கிறது
நெஸ்லே நிறுவனத்தின் லாபவெறியின் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறுத்தது, ஆப்ரிக்க கிராமங்களின் கிணறுகளில் விஷத்தைக் கலந்தது தொடங்கி இன்று தனது கிளை நிறுவனமான லோரியல் நிறுவனத்தின் முகப்பூச்சு கிரீம்களில் இன்னும் அனுமதிக்கப்படாத நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை மரபீணி மாற்றப் பயிர்கள், விதைகள் என்று அதற்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.
முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் என்ற பெரும் சாகரத்தின் ஒரு சிறு துளி தான் நெஸ்லே என்பதை மறந்து விடக்கூடாது. நெஸ்லேவுக்கு ஒப்பான – அதையும் விஞ்சும் பகாசுர கார்ப்பரேட்டுகளில் விற்கும் பொருட்களோடு தான் நமது ஒவ்வொரு நாளும் விடிகிறது; பின் அடைகிறது. ”பல்லுக்குள்ளே ஊடுருவிச் செல்லும்” பற்பசையில் இருக்கும் நானோ துகள்களோடும், கல்லீரலுக்குள் ஊடுருவிச் செல்லும் பூச்சி மருந்தைக் கொண்ட கோலா பானங்களோடும் தான் நமது ஒவ்வொரு நாளும் நகர்கின்றது.
இதனால்தான் கார்ப்பரேட்டுகளின் தண்ணீர் தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக “தண்ணீர் மக்களின் அடிப்படை உரிமை” என்பதை நிலைநாட்டிய கொலம்பியா, தென்னாப்ரிக்க மக்களின் கலகங்கள் மற்ற நாடுகளிலும் பரவுகின்றன. முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் என்பவை பேரழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி கூட்டங்கள் என்பதை உலக மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். அதை நாம் வால் வீதியிலும், லண்டன், கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் கண்டோம்.
இந்த நச்சுக் கிருமிகளைத் தடை செய்யக் கோரி அரசாங்கங்களிடம் கெஞ்சுவதில் பொருளில்லை – அரசாங்கங்களும் முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளும் ஈருடல் ஓருயிர் என்பதை எப்போதும் மறைத்துக் கொண்டதேயில்லை. அதைத் தான் கோக் மற்றும் பெப்சியில் கலந்திருந்த பூச்சிமருந்தும், காட்பரீஸ் சாக்லேட்டில் நெளிந்த புழுக்களும் அவற்றின் மேல் அரசாங்கம் எடுத்த “நடவடிக்கைகளும்” நமக்கு உணர்த்துகின்றன.
மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதை நாமக்கு கொலம்பியர்களும் தென்னாப்ரிக்கர்களும் ஏற்கனவே கற்பித்துள்ளனர்.
கடலூர் சைமா சாயப்பட்டறை: போராட்டம் ஊரை விக்குது ஊராட்சி மன்றம்! நாட்டை விக்குது நாடாளு மன்றம்!
கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது பெரியப்பட்டு எனும் சிறு நகர கிராமம். இங்கு ‘ஜவுளி தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்போகிறோம், நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்’ என்ற பொய்யைச் சொல்லி 400 ஏக்கருக்கு மேல் வளைத்துப்போட்டு அதை சைமா எனும் தென்னிந்திய ஜவுளி முதலாளிகள் சங்கத்தின் சாயப்பட்டறைக்கு தாரை வார்த்துள்ளது கடலூர் சிப்காட் அலுவலகம்.
இவ்வட்டாரம் எங்கும் 5 அடியில் பள்ளம் வெட்டினாலே அற்புதமாக சுரக்கும் ஊற்று நீரைக் கொண்டு, கத்தரி, வெள்ளரி, தர்பூசணி, சவுக்கை நாத்து பயிரிடுதல், வெட்டிவேர் பயிரிடுதல் போன்றத் தொழில்களை செய்து தங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் விவசாயிகள்.
மே மாதம் சைமா திட்டத்தை எதிர்த்த கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி அரங்கக் கூட்டமாக மாற்றப்பட்டது (கோப்புப் படம்)
இந்நிலையில் சைமா சாயப்பட்டறையில் ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்த மக்கள் கடந்த ஏப்ரல்-15-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு இருந்தனர். காவல்துறையின் அனுமதி மறுப்பால் அரங்க நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது.
இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்திற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுப்போடப்பட்டதுடன் மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பின் சார்பிலும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பிலும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை அணிதிரட்டும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது திருட்டுத்தனமாக போர்வெல் வேலையைத் துவங்கியது சைமா நிறுவனம். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கடந்த மே-16-ம் தேதி அன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கில் திரண்டு கட்டுமானப் பணி செய்த பொருட்களை சேதப்படுத்தினார்கள். ஏற்கனவே போடப்பட்டு இருந்த 2 ஆழ்துளை குழாய்களையும் மூடினார்கள்.
சைமா திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
இதன் பின் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலிசின் குவிப்பாலும், மிரட்டலாலும் இப்போராட்டம் அடக்கப்பட்டு போராட்ட முன்னணியாளர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்ய கிராமம், கிராமமாகத் தேடியது போலீசு.
மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கமும், பு.மா.இ.மு-வும் இவ்வட்டாரம் எங்கும் இப்போராட்டத்தை ஆதரித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்கக் கோரியும் சுவரொட்டி பிரச்சாரம் செய்து போராடிய மக்களை சந்தித்து மீண்டும் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தி ஜுலை 4-ம் தேதி அன்று உயர்நீதி மன்ற அனுமதியின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களுமாய் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கிராமம் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து போராட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பேரழிவைக் கொண்டு வரும் சைமா திட்டம் (கோப்புப் படம்)
இந்நிலையில் கடந்த 11-07-2015 அன்று காலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலிசிடம் அனுமதிக்கு கொடுத்தபோது “மேலாதிகாரியப் பார்க்கனும், கீழ் அதிகாரியப் பார்க்கனும்” என்று அலையவிட்டது போலிசு. முன்னணியாளர்கள் “தடை செய்தால் கைதாவோம்” என்ற முடிவுடன் மக்களை அணிதிரட்டத் தீவிரம் காட்டினார்கள். இதன் அடிப்படையில் சுமார் 1000 பேருக்குமேல் மக்கள் திரண்டு விட்டதால் போலிசு திகைத்து வாயடைத்துப் போய் நின்றது.
ஊர்வலமாய் வந்த மக்கள் ஒவ்வொருவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, கையில்
எங்கள் ஊரு! எங்கள் வீடு! சைமா நாயே வெளியேறு!
ஊரை விற்க ஊராட்சி மன்றம்! நாட்டை விக்குது நாடாளுமன்றம்!
ஓட்டுப்போட்டது கிராம மக்கள்! ஊரை விற்கவா தலைவரு!
என்ற முழக்கப் பதாகைகளுடன் அணிவகுத்தனர்.
விண்ணதிரும் முழக்கங்களுடன் நீண்ட நெடுந்தூரம் வரை நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆங்காங்கே மக்கள் கோசமிட்டு கொண்டு நின்றனர். சுமார் 9 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 12.30 மணிவரை நடந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
போராட்டம் துவங்கிய போது, “நாங்கள் உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம்” என்றவாறு உள்ளே நுழைந்தனர் ஆம் ஆத்மி கட்சியினா 8 பேர். போராட்டத்தை அறுவடை செய்ய ஆம் ஆத்மி என அச்சிடப்பட்ட குல்லாக்களை போட்டு வந்ததோடு வந்திருந்த மாணவர்களுக்கும் குல்லாய் போட்டு விடுவதைப் பார்த்து எச்சரித்தனர் உள்ளுர் மக்கள். பிறகு குல்லாக்கள் நழுவிக் கொண்டன.
இறுதியாக பெரியப்பட்டுத் திடலில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்த முன்னணியாளர்கள் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு பேசினார்கள். இதில் உள்ளுர் தலைவர்களும் வழக்குரைஞர் செந்தில் குமாரும் உரையாற்றினார்கள்.
“அடுத்த கட்டப்போராட்டம் என்பது அரசை அச்சுறுத்தும் வகையில் அமைய வேண்டும் சைமா சாயப்பட்டறைத் திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் ஓயாது. அதற்கு உங்களை தயார்படுத்தி கற்றுக் கொள்ளுங்கள். வரும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தினத்தில் வீடு தோறும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நாம் தயாராவோம்” என்ற அறைகூவலுடன் போராட்டம் நிறைவு பெற்றது.
குறிப்பு:
ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஆம் ஆத்மியினர் “நாம் வெற்றி பெற கோர்ட்டில் ஸ்டே போட்டு விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் செய்யனும். நம் உயிரைப் பறித்து விட்டு இத்திட்டத்தை அரசு செய்யுமா என்று பார்ப்போம். காந்தி வழியில், அமைதி வழியில், அகிம்சை வழியில் போராடுவோம்” என்றனர்.
இடையில் ஒருவர் எழுந்து, “சோறு தின்னாம நாம ஏன் சாகணும், மசிறு அவன் சாகட்டும்” என்றார்.
கடைசியாக, “நம் தமிழகத்தில் நடைபெறும், செயில் போராட்டம், கெயில் போராட்டம், மீத்தேன் போராட்டம், கிரானைட் போராட்டம், தாதுமணல் போராட்டம், கூடங்குளம் போராட்டம், டாஸ் மார்க் எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் மனுபோட்டும், மண்டியிட்டும், சட்டத்தின் படியும் நடத்தி பார்த்தாச்சி. இனி இந்த அரசையும், நீதித்துறையையும், சட்டத்தையும், கட்சிகளையும் நம்பிப் பலனில்லை. மக்களைத் திரட்டி (5,000 பேர் வரை) சாயப்பட்டறை முன் குடியேறி சமைத்து சாப்பிட்டு நாள் கணக்கில் தொடர்ச்சியாக போராடும்போது மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்று தோழர்கள் விளக்கினர்.
மக்களும் கைதட்டி வரவேற்று இதுதான் தீர்வு. அதற்காக உடன் தயாராவோம், இனிவரும் போராட்டங்கள் பயிற்சி எடுக்கும் பள்ளிக் கூடங்களாகட்டும் என்றனர்.
தகவல்
மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், கடலூர் – சிதம்பரம் வட்டம்
மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல்: சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!
பாசிச மோடியைப் புதிய ரட்சகனாக,செயல்வீரனாக, வளர்ச்சியின் நாயகனாக விளம்பரப்படுத்தி, பல விதங்களிலும் பில்ட் -அப் கொடுத்து ஊடகங்களும் இந்துத்துவப் பரிவாரங்களும் தூக்கி நிறுத்தியபோதிலும், அத்தனையும் சரிந்து விழுந்து, நாடு முழுவதும் கடும் அதிருப்தியையும் வெறுப்பையும்தான் மோடி அரசு எதிர் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் அடியாளும் பாசிசக் கோமாளியுமான மோடி கும்பலின் பராக்கிரமங்களைச் சித்தரிக்கும் பல விளம்பரப் படங்களை அடுத்தடுத்து வெளியிட்ட போதிலும், அவையனைத்தும் புஸ்வாணமாகிவிட்டன. இந்நிலையில் அனைத்து அரங்குகளிலும் தோல்வியடைந்துள்ள மோடி கும்பல், இவற்றை மூடிமறைக்கவும், மக்களின் கவனம் எப்போதும் தன்னை நோக்கியே இருக்கவும் கிரிமினல்தனமாக யோசித்து, “எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு” என்ற புத்தம் புது ஆக்ஷன் சினிமாவை அண்மையில் வெளியிட்டது.
கடந்த ஜூன் 4 அன்று வடகிழக்கிந்திய தேசிய இன ஆயுதக் குழுக்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 18 சிப்பாய்களைப் பலி கொண்டு சிதிலமடைந்து கிடக்கும் இந்திய இராணுவத்தின் வாகனம்.
கடந்த ஜூன் 9 அன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவப் படையினர், இந்திய-மியான்மர் எல்லையை தாண்டிச் சென்று மியான்மரில் பதுங்கியிருந்த தீவிரவாதக் குழுக்களின் இரண்டு முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியதாகவும், தீவிரவாதிகளில் ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டு 50 பேர் படுகாயமடைந்து காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும் மோடி அரசும் ஊடகங்களும் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிட்டன.
இந்திய ராணுவத்தின் டோக்ரா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த வாகனத்தின் மீது வடகிழக்கிந்திய தேசிய இன ஆயுதக் குழுக்கள் கடந்த ஜூன் 4 அன்று நடத்திய தாக்குதலில் 18 சிப்பாய்கள் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர் ஜூன் 9 அன்று மியான்மருக்குள் புகுந்து ஆயுதக் குழுக்களின் முகாம்கள் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தியதாகத் தொடர்ந்து ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், இதனைத் தீவிரவாதத்துக்கு எதிரான மோடி அரசின் உறுதியான நடவடிக்கையாகச் சித்தரித்தன.
மோடி கும்பலின் காமெடி பீசாகிய மத்திய இராணுவத்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நாடெங்கும் பரபரப்பாக வெளியிடப்பட்ட இந்த சினிமாவுக்குப் பிரமோஷன் கொடுக்கக் கிளம்பினார். மோடி அரசின் உறுதியான துணிச்சலான முடிவினால்தான் இத்தகைய சாதனை நிகழ்ந்துள்ளது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் அண்டை நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும், நட்பு நாடான மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது போன்றே எந்த நாடாக இருந்தாலும் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை ஒழிக்க தயங்கமாட்டோம் என்றும் பாகிஸ்தானை எச்சரித்து வீராவேச உதார் விட்டார்.
ஆனால், “இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது அப்பட்டமான பொய். எங்களது முகாம்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், எமது தரப்பில் கொல்லப்பட்ட ஒருவரது உடலையாவது பகிரங்கமாகக் காட்டத் தயாரா?” என்று நாகா தேசிய விடுதலை கவுன்சிலின் கப்லாங் குழுவினர் தங்களது மறுப்பு அறிக்கையின் மூலம் இந்திய அரசுக்குச் சவால் விட்டுள்ளனர். இந்திய அரசுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக கடந்த மார்ச் 27 அன்று அறிவித்துள்ள இக்குழுவும், அசாமின் உல்ஃபா சுதந்திரக் குழு, காம்டபூர் விடுதலை அமைப்பு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி – ஆகிய குழுக்களும் இந்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட, தென்கிழக்காசியாவின் மேற்குப் பிராந்திய ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி [United National Liberation Front of Western SouthEastAsia (UNLFW)] என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக கடந்த ஏப்ரல் 17 அன்று அறிவித்துள்ளன.
2009-ல் ராணுவச் சிப்பாய்கள் தங்களுக்குள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை, இவர்கள்தான் மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய அதிரடிப்படையினர் என்று ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்ட “உல்டா” படம்.
இதுவொருபுறமிருக்க, இத்தாக்குதல் எங்கள் நாட்டிற்குள் நடக்கவேயில்லை என்றும், எந்த வெளிநாட்டுச் சக்தியும் எங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் மியான்மர் அதிபர் மாளிகை அலுவலக இயக்குநரான ஷாவ் ஹித்தே என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மோடி கும்பலின் ஆஸ்தான கோயபல்சாகிய “துக்ளக்” சோ கூட, இது இந்திய எல்லைக்குள் நடந்ததா, அல்லது அதைக் கடந்து மியான்மர் எல்லையினுள் நடந்ததா என்பது தெளிவாகாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று இந்த நடவடிக்கையின் சந்தேகத் தன்மையைத் தனது தலையங்கத்தில் போகிற போக்கில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இருப்பினும் மோடி கும்பலின் ராம்போ பொய்யை மூடிமறைத்துவிட்டு, காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் மோடி அரசானது எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதிகளைத் தாக்கத் துணிந்துள்ளதாக ‘தேசிய’ ஊடகங்கள் உடுக்கையடித்தன. இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மனிடம் பேட்டி எடுத்து தனது வீரதீரத்தை மோடி கும்பல் பறைசாற்றிக் கொண்ட போதிலும், மோடி கும்பலின் பொய்யும் மோசடியும் அடுத்தடுத்து அம்பலமாகியதால், அது இன்னுமொரு கேலிக்கூத்தாகிப் போனது. அதன் பிறகு, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தினாலும் இப்படி தண்டோரா போட்டு விளம்பரப்படுத்துவது ராஜதந்திரம் அல்ல என்றும், மோடி அரசு நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டுமென்றும் இப்போது ‘தேசிய’ ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.
தாங்கள் எல்லை தாண்டினால் அதனை சாதனையாக சவடால் அடித்துக் கொள்ளும் மோடி கும்பல்தான், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை, “நீ எல்லை தாண்டுவதால்தான் சுடுகிறார்கள்” என்று இக்கொலைகளையும் தாக்குதல்களையும் நியாயப்படுத்துகிறது. 2001 இறுதியில் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாக். எல்லையில் 5 லட்சம் படைகளைக் குவித்த பா.ஜ.க. அரசு, அமெரிக்காவின் கட்டளைப்படி படைகளைத் திருப்பியழைத்து, தனது சரணாகதியை மூடிமறைத்துக் கொண்டு வெற்று சவடால் அடிக்கத்தான் முடிந்துள்ளது. இந்த லட்சணத்தில் குடிகாரன் தெருவில் உதார் விடுவதைப் போல, இந்தப் பாசிசக் கோமாளிகள் பாகிஸ்தானுக்கு எதிராக இப்போது சவுண்டு விடுகின்றனர்.
“நாங்கள் ஒன்றும் மியான்மர் கிடையாது, பகல்கனவு காண்பதை நிறுத்துங்கள்; மியான்மரிலிருந்து பாகிஸ்தான் முற்றிலும் வேறுபட்டது” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுதாரி நிசார் அலி கான் இந்தியாவைப் பகிரங்கமாகவே எச்சரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு என்று பகட்டு ஆரவார வீரவசனம் பேசிய மோடி கும்பல், அதன் பிறகு வாயே திறக்கவில்லை. குறுகிய தேசிய வெறியையும் போர்வெறியையும் கிளறிவிட்டு, மட்டரகமான வெற்றுச் சவடால்களால் தன்னைத் தேசபக்த நாயகனாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியை, சூரப்புலியாகக் காட்டிய எல்லை தாண்டிய “தீவிரவாத எதிர்ப்பு” சினிமாவும் வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் சுருண்டுவிட்டது.
இதுவும் போதாதென்று, நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்க வந்த புதிய ரட்சகனாக, ஐந்து பைசா கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய்க்கு விளம்பரம் செய்து கொள்ளும் அற்பவாதியான மோடி கும்பலையும் அதன் விசுவாச ஊடகங்களையும் நேபாள மக்கள் விரட்டியடித்த கதை சந்தி சிரிக்கிறது. இந்நிலையில், மோடி கும்பலும் ‘தேசிய’ ஊடகங்களும், இப்போது உள்ளூர் ரட்சகனாக இருந்த மோடி, உலக ரட்சகனாக அவதாரம் எடுத்துள்ளதாக சாமியாடிக் கொண்டு,உலக அமைதிக்காக மோடியின் “யோகசனம்” எனும் இன்னுமொரு கேவலமான கூத்தை வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட பிறகு மழைக்கால ஈசல்களைப் போல் வேறு சில துரித உணவு வகைகளையும் ஆய்வு செய்யப் போவதாக விறைப்புக் காட்டுகிறது இந்திய அரசு. இந்த வீராப்புகளுக்கும் அதே மழைக்கால ஈசல்களின் ஆயுள் தான். கூடுதலாக மேகியை தடை செய்த ‘கடுமையான’ நடவடிக்கைகளின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு முதலாளியின் கண்ணோட்டத்தில் லாபத்திற்கு உட்பட்டதுதான் அறநெறி. லாபம் எழுப்பும் மக்கள் விரோத பிரச்சினையை முதலாளியின் கஷ்டமாக இவர்கள் மடை மாற்றுவார்கள். இந்நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனம், மூன்றாம் உலகநாடு ஒன்றில் தொழில் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்நாட்டு மக்களை என்னவாக கருதும்?
இந்தக் கேள்விக்கான சரியான விடையை போபால் விஷவாயு புகழ் ஆண்டர்சன் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார். ஓரளவுக்கு சரியான விடையை இந்திய தரகு முதலாளிகளாலும் கூட சொல்ல முடியும்.
நெஸ்லே மேகியில் காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் அதிகளவில் உள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது
இந்தியச் சந்தையில் விற்கப்படும் நெஸ்லே மேகியில் காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் அதிகளவில் உள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தனது நாட்டில் விற்கப்படும் மேகி பாக்கெட்டுகளை பரிசோதனைக்கு அனுப்பிய சிங்கப்பூர், பரிசோதனை முடிவுகளின் படி தமது நாட்டில் விற்கப்படும் மேகி பாக்கெட்டுகளில் காரீயமும் மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு உள்ளே இருப்பதாக அறிவித்துள்ளது.
கோக்கோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களின் தயாரிப்புகளான கோலா பானங்களில் ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த அளவை விட 36 மடங்கு அதிகமாக பூச்சி மருந்து கலந்திருப்பதை 2003-ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பு அம்பலப்படுத்தியது. இவ்விரு கோலா நிறுவனங்களும் தமது பூச்சி மருந்து வியாபாரத்தை இந்தியர்களோடு நடத்தி வந்த அதே நேரம் தமது மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகளுக்கு மட்டும் ஓரளவு தரக்கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தன.
ஒருபக்கம் இந்தியர்களுக்கும் வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு இருவேறு அளவுகோல்களை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை (FDA) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹல்திராம் நொறுவை வகைகளுக்கு தடை விதித்துள்ளது. ஹல்திராமின் தயாரிப்புகளில் அதிகளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருந்ததால் அவை உட்கொள்ளத் தகுதியற்றவை என்று FDA சான்றளித்துள்ளது.
அமெரிக்காவின் தடை குறித்து ஹல்திராம் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஒருவரிடம் இந்தியா டுடே பத்திரிகை கேட்ட போது, “ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு தரநிர்ணயம் உள்ளது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டுள்ளார்.
போலவே இங்கே சாதாரணமாக பெட்டிக் கடைகளில் கிடைக்கும் டாபர் சவன்ப்ராஷ் லேகியத்தை கனேடிய அரசாங்கம் அதிகளவிலான காரீயம் மற்றும் மெர்குரி கலந்திருப்பதால் 2005-ம் ஆண்டு முதல் தடை செய்துள்ளது. அதே போல் “மணல் மணலான’ சுத்தமான நெய் என்று விளம்பரப்படுத்தப்படும் ஜி.ஆர்.பி நெய் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் மேல் தனிவகைக் குறியீடுகள் இடம் பெறுவதை கட்டாயமாக்கியுள்ள அதே நேரம் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களில் மரபணு மாற்ற விதைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு அவை குறித்த விவரங்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர். அரிசி, தக்காளி, மக்காச் சோளம், கத்தரி போன்றவற்றில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் அவை என்ன ரகங்கள் எந்தப் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவையனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது.
மருந்துப் பொருட்களை எடுத்துக் கொண்டால், Novalgin, Baralgan, Nise, D’cold, Vicks action 500, Ciza, Droperol, Furoxone, Lomofen, Furacin, Emfurazone, Helmazan, Enteroquinol, Ibsinorm, Tagon, Ridazin, Thioril, Pacentrex உள்ளிட்ட ஏராளமான மருந்து வகைகள் உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இதே மருந்துப் பொருட்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கடந்து இவற்றை மருத்துவரின் பரிந்துறை இல்லாமலே கூட நுகர்வோரால் வாங்க முடியும் என்ற அளவில் தான் இங்கே ‘கட்டுப்பாடு’ உள்ளது.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளில் Furoxone, Lomofen, Furacin மற்றும் Emfurazone ஆகிய மருந்துகள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என்றும், D’cold மற்றும் Vicks action 500 ஆகியவை மூளைச்சிதைவை (Brain hemorrhage) ஏற்படுத்தக் கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சில மருந்துப் பொருட்கள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும் கண் பார்வையையே பறிக்கக் கூடியவை என்பதால் தடை செய்யப்பட்டவை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவையனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது. போலவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ளதென்றும், அவை சாலையில் பயன்படுத்தத் தக்கவையல்ல என்றும் கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிராகரிக்கப்பட்டன.
இது தவிர பல நாடுகளில் தடை செய்யப்பட்ட Carbaryl, Malathion, Acephate, Dimethoate, Chlorpyrifos, Lindane, Quinalphos, Phosphomidon, Carbandizm, Captan, Tridamorph, Practilachlor, 2.4–D and Glyphosate உள்ளிட்ட 67 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் இந்திய நிலங்களில் கொட்டப்பட்டு மொத்த நாட்டின் விளை நிலங்களும் விசமாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு உரக்கம்பெனிகள் மேற்கில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை வகை தொகையின்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி எதார்த்தத்தில் மொத்த இந்தியாவும் உலகின் குப்பைத் தொட்டியாக விளங்குகிறது.
உலகின் மின்னணுக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாக விளங்குகிறது தில்லியில் உள்ள சீலம்பூர். 2007-ம் ஆண்டு கணக்கின் படி சுமார் 11594 டன் அளவாக இருந்த மின்னணுக் கழிவுகளின் வரத்து, 2014-ம் ஆண்டு 30,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கழிவுகளின் மொத்த கணக்கைச் சேர்த்தால் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் தில்லியில் கொட்டப்படுகின்றன.
தலைநகர் தில்லியில் உள்ள மாயாபுரி தொழிற்சாலைக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாக பராமரிக்கப்பட்டு வந்தது. பல லட்சம் டன்கள் இரும்பு மற்றும் உலோகக் கழிவுகள் மாயாபுரியில் கொட்டப்பட்டு அந்தப் பிராந்தியமே மாசுபட்டு சீரழிந்தது.
காடுகளையும் ஆறுகளையும் மலைகளையும் அழித்தும், ஆற்றுநீரையும் நிலத்தடி நீரையும் வரைமுறையின்றி உறிஞ்சியும், நச்சுக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவின் 13 நகரங்கள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் அளவுக்கு நச்சுக் கழிவுகள் குவிந்து ஆண்டுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மேற்கில் காலாவதியாகிப் போன சாதாரண தொழில்நுட்பம் முதல் அணுத் தொழில்நுட்பம் வரை இந்தியாவின் தலையில் கட்டுகிறார்கள் பன்னாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்திய நாடுகளும். இந்த சூறையாடலுக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் முனைப்பாக உள்ளது. அதற்காகவே, சுற்றுச்சூழல் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்று சகல விதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்துகிறது, மோடியின் அரசு.
பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமான கட்டுப்பாட்டு முறை என்பதே இந்தியாவில் பெயரளவில் தான் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் சந்தைக்குச் செல்லும் முன் மற்றும் சந்தைக்குச் சென்ற பின் என சோதனை மற்றும் எதிர்வினை என்று இரண்டு அம்சங்களிலும் பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ள நுகர்வோர் விழிப்புணர்வு ஒரு காரணம் என்றாலும், தங்கள் சொந்த நாட்டு வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை வரைமுறையின்றி சீரழிக்கலாம் என்ற ஏகாதிபத்திய சுரண்டல் நலனே பிரதான பாத்திரமாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் அதிக கழிவுகளை வெளிப்படுத்தும் உற்பத்தித் தொழில்கள் மற்றும் ஆலைத் தொழில்களை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குத் தள்ளி விடுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்களின் மேலும், இயற்கை வளங்களின் மேலும் செய்யப்படும் கூட்டு வல்லுறவை தொழில் வளர்ச்சி என்கின்றனர் முதலாளித்துவ ’அறிவுஜீவிகள்’. பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணின் உயரம் முதலாளிகளுக்கு ஏற்படுத்தும் உவகையின் முன் அழிந்து கொண்டிருக்கும் நாடும் நாட்டு மக்களும் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த மனித குல விரோதிகளின் ஒட்டுமொத்த குறியீடாக வந்திருப்பவர் தான் மோடி.
நம்மைச் சுற்றிலும் மலையைத் திருடி, ஆற்றை உறிஞ்சிக் களவாடி, காடுகளை அழித்து, நிலத்தை நஞ்சாக்கி, காற்றில் விஷத்தை பரப்புகிறார்கள் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும். இந்தச் சூழலில் நீங்கள் ப்ராணாயாமம் செய்தாலும் உள்ளே செல்லப் போவதென்னவோ காற்றில் கலந்துள்ள கார்பன் மோனோ ஆக்சைடு தான். பாதுகாப்பட்ட தண்ணீரைக் குடித்தாலும் டவ் கெமிக்கல்சின் இரசாயன பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து தப்ப முடியாது.
நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு தடை எத்தனை காலத்திற்கு இருக்கும் என்று நமக்குத் தெரியாது – கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் இந்த ‘தடைக்கும்’ நேரும். நிரந்தரத் தடை வேண்டுமென்றால் அது மக்கள் கையில் மட்டுமே உள்ளது.
கடன்களை புதுப்பிக்க வேண்டுமானால், ‘சிக்கன’ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் வேண்டும் என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் நிபந்தனையை, ஜூலை 5-ம் தேதி நடத்தப்பட்ட நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மை கிரீஸ் மக்கள் நிராகரித்திருந்தனர். இப்போது, கிரீஸ் மக்கள் நிராகரித்த அதே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் கால்களில் விழுந்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.
கிரீஸ் மக்கள் நிராகரித்த அதே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் கால்களில் விழுந்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.
வாக்கெடுப்பின் முடிவை பயன்படுத்தி ஐரோப்பிய கடன் நிறுவனங்களிடம் புதிய வலுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார், அலெக்சிஸ் சிப்ராஸ். அதன்படி ஜூலை 7-ம் தேதி அவர் முன்வைத்த கடன் கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவர் முகத்திலேயே தூக்கி எறிந்து விட்டன. மாறாக, அடுத்த 48 மணி நேரத்துக்குள் கிரீஸ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அம்மக்கள் மீது சுமத்துவதற்கான புதிய திட்டத்தை வகுத்துத் தருமாறு உத்தரவிட்டிருந்தன.
அதாவது, ஜூலை 9-ம் தேதிக்குள் கடன் கொடுத்தவர்களுக்கு உகந்த ஒப்பந்தத்தை போட்டுக் கொள்ளா விட்டால், ஜூலை 12-ம் தேதி மற்ற ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் ஒன்று கூடி கிரீசை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவது குறித்து முடிவெடுப்பார்கள். இதில், கிரீஸ் மக்களின் விருப்பம், முடிவு, ஜனநாயகம் எதற்கும் இடமில்லை. இதற்குப் பணிந்து சிப்ராஸ் கடன் நிறுவனங்கள் முதலில் சொன்ன நிபந்தனைகளையே ஏற்றுக் கொள்ளும் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறார்.
இந்தச் சூழலில், கிரீஸ் ஐரோப்பாவுக்குள் தொடர்வது உலக நிதித் துறை கட்டமைப்புக்கு தேவையானது என்று ஒரு புறமும், கிரீஸ் போன்ற ஊதாரி, பொறுப்பற்ற நாட்டை வெளியேற்றுவதுதான் சரியானது என்று இன்னொரு புறமும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் முதலாளிகளின் தவறுகளை மக்கள் மேல் சுமத்துவது ஒரு தந்திரம். உண்மையில் கிரீஸின் இன்றைய நெருக்கடிக்கும் அதன் கடன் சுமைக்கும் யார் பொறுப்பு?
முன்னேறிய வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட பிறகு கிரீஸின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டது.
ஐரோப்பிய பொருளாதார சமூகத்திலும் (1962), ஐரோப்பிய ஒன்றியத்திலும் (1981), யூரோ ஒற்றை நாணய அமைப்பிலும் (2001) ஆரம்பத்திலிருந்து உறுப்பினராக ஆன நாடு கிரீஸ். தெற்கு ஐரோப்பாவில் உள்ள அந்நாட்டின் இப்போதைய மக்கள் தொகை சுமார் 1 கோடி, அதன் பரப்பளவு தமிழ்நாடு அளவுக்கு சமமானது. மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் கிரீசின் வரலாற்றுப் பெருமையும் அனைவரும் அறிந்ததே.
பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், விவசாயத்துடன் மீன்பிடித் தொழில், கப்பல் கட்டும் தொழில் ஆகியவற்றை சார்ந்திருந்தது. முன்னேறிய வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட பிறகு கிரீஸின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டு விவசாயத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது; அதன் தொழில் துறை, ஏற்றுமதி சார்புடையதாக மாற்றப்பட்டது; அதன் தீவுகளும், பொருளாதாரமும் சுற்றுலாத் துறையை சார்ந்திருக்கும் படி மாற்றப்பட்டன. இன்று கிரீஸின் உழைக்கும் மக்களில் 5-ல் ஒருவர் சுற்றுலாத் துறையில் நேரடியாக பணிபுரிகின்றனர்.
கிரீஸ் (சட்ட விரோத நிதி கடத்தல்)
ஐரோப்பிய ஒற்றை நாணய யூரோவை ஏற்பதன் மூலம் லாப வேட்டையாட காத்திருந்த வங்கிகளும், முதலாளிகளும் கிரீஸின் நிதி நிலைமை அதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிலையில் மோசடி கணக்கு தயாரித்தனர். நாட்டின் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்று குறைத்துக் காட்டி யூரோவில் சேர்வதற்கான நிபந்தனையை நிறைவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஆலோசகராக இருந்து வழிகாட்டியது.
கிரீஸ் அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப்பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியே 100 கோடி யூரோ ரகசியக் கடனாக கொடுத்து சரிக்கட்டியது. 2001-லிருந்து இந்த மோசடி நடந்து வந்திருப்பது 2010-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
கிரீஸ் ஐரோப்பிய ஒற்றை நாணயத்தை பயன்படுத்த தொடங்கியது, வெளியிலிருந்து பாய்ந்த மூலதனமும், கடன்களும் ரியல் எஸ்டேட், 2004 ஒலிம்பிக் போட்டி கட்டுமானங்கள் (€2,000 கோடி) என்று கிரீஸ் கிரேக்க நாட்டு முதலாளிகளின் பைகளை நிரப்பியது. மேலும், கிரேக்க முதலாளிகள் அந்நாட்டு வரிகளை தவிர்க்க தமது நிறுவனங்களை வெளிநாடுகளில் பதிவு செய்து கொண்டனர். உதாரணமாக, கிரேக்கர்களுக்கு சொந்தமான 3,760 கப்பல்களில் 2,898 கப்பல்களை வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு கிரீஸ் நாட்டு வரிகளை ஏய்க்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் கிரீஸ் கப்பல் முதலாளிகளுக்கு 58 வெவ்வேறு வகையான வரி வெட்டுகள் வழங்கப்பட்டன.
நாட்டின் கடன்கள் குறித்து ஆய்வு செய்ய கிரீஸ் நாடாளுமன்றம் நியமித்த குழு வெளியிட்டிருக்கும் கடன்கள் பற்றிய விபரம்.
1980 முதல் 2010 வரை கார்ப்பரேட் வரி விதிப்பு 49% -லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டது. இருந்தாலும், முதலாளிகள் மோசடி மூலமும், லஞ்சம் மூலமும் பெருமளவு வரிகளை ஏய்த்தனர். 2000-க்கும், 2007-க்கும் இடையே கார்ப்பரேட் வரி விதிப்பு வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1%-லிருந்து 2.6% ஆக வீழ்ச்சியடைந்தது. மாறாக, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகள் மொத்த வரி வருவாயில் 60%-ஐ விட அதிகமாக உள்ளது. (ஐரோப்பிய சராசரி 36.2%).
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து கிரீஸ் $2,140 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்தது. அந்நாட்டுக்குத் தேவையற்ற, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை கடத்தும், உள்நாட்டு தரகர்களின் பையை நிரப்பும் இந்த இறக்குமதிகள் மூலம் கிரீஸ் மக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.
கிரீஸ் வங்கிகளும், மற்ற ஐரோப்பிய நாட்டு வங்கிகளும் கிரீஸ் அரசின் கடன் பத்திரங்களை வாங்கி வரி வசூல் பற்றாக்குறை, ஆயுத இறக்குமதி, ஆடம்பர கட்டுமானப் பணிகள், முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கின.
2010 முதல் 2015 வரை பெறப்பட்ட நிதி பயன்பாட்டு வீதம்.
இந்நிலையில் 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்த உலகளாவிய நிதி நெருக்கடி ஐரோப்பிய நாடுகளையும் தாக்கியது; கிரீஸ் அரசு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது கிரீஸ் அரசு கடன் பத்திரங்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் திவாலாகியிருக்கும். உடனே, ஐரோப்பிய மத்திய வங்கியும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஐ.எம்.எஃப்-ம் தலையிட்டனர். அதன்படி €11,000 கோடி கடன் வசதி கிரீஸ் அரசுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் பெரும்பகுதியை, ஐரோப்பிய வங்கி நிறுவனங்கள், வணிக வங்கிகளிடமிருந்து கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டு செலவை கிரீஸ் அரசின் கணக்கில் எழுதிக் கொண்டன. 2012-ல் கிரீஸ் அரசின் கடன்களில் 80% தனியார் வங்கிகள் வாங்கிய கடன் பத்திரங்கள் வடிவில் இருந்தது, 20% பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்போது அந்த நிலைமை நேர் எதிராக மாறியிருக்கிறது.
கிரீஸ் அரசு கடன் கட்ட முடியாமல் போனதற்குக் காரணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பொதுத்துறை செலவுகள், ஓய்வூதியங்கள், மக்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்காதது இவைதான் காரணம் என்று கூறி அவற்றை சரி செய்யும்படி உத்தரவிட்டன. அதே ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்தும் ஜெர்மனியிடமிருந்தும் வாங்கத் திட்டமிட்டிருந்த ஆயுதங்களை வாங்கத் தவறி விடக் கூடாது என்றும் கூறின. திவாலாகிப் போன கிரீஸ் அரசு மக்கள் மீது நிதிச் சுமையை அதிகரிக்க வேண்டும், ஆனால் அமெரிக்கா ஆயுதம் வாங்குவதை நிறுத்தி விடக் கூடாது. இதுதான், இவர்களது ‘சிக்கன’ நடவடிக்கைகளின் யோக்கியதை.
கார்ப்பரேட்டுகள் மீதான வரி விதிப்பை அதிகப்படுத்துவது, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவது, கிரீஸ் முதலாளிகள் சுவிஸ் வங்கியிலும், லண்டன் ரியல் எஸ்டேட்டிலும் குவித்திருக்கும் பணத்தை திரும்ப கொண்டு வருவது பற்றியும் அந்த ‘சிக்கன’ நடவடிக்கை எதுவும் பேசவில்லை.
கிரேஸில் உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேலையின்றி இருக்கின்றனர். இளைஞர்களில் பாதிக்கும் மேல் வேலை இல்லை.
கிரீஸின் 1 கோடி மக்கள் தொகையில் பாதிப் பேர் சம்பளம் பெறும் தொழிலாளர்கள். அவர்களது சராசரி நிகர ஆண்டு வருமானம் €9,000 யூரோ மட்டுமே. இது அந்நாட்டின் தனிநபர் சராசரி வருமானத்தில் பாதியை விடக் குறைவு. பெரும்பான்மை மக்கள் சுரண்டப்பட்டு மிகச் சிறுபான்மை கிரேக்க முதலாளிகள் கொழுக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது கிரேஸில் உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேலையின்றி இருக்கின்றனர். இளைஞர்களில் பாதிக்கும் மேல் வேலை இல்லை. அவர்கள் ஓய்வூதியம் வாங்கும் தமது பெற்றோர் அல்லது தாத்தா/பாட்டியை சார்ந்து வாழ்கின்றனர். 2010-க்குப் பிறகு கிரீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25% வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.
இத்தகைய கடும் நெருக்கடியினால் அழுத்தப்பட்ட கிரீஸ் ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து போராடினர். இத்தகைய போராட்டங்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து ஐரோப்பிய வங்கிகளுக்கு கிரேக்க மக்களின் நலன்களை பலி கொடுத்துக் கொண்டிருந்த இடது, வலது சாரி கட்சிகளை எதிர்த்து சிக்கன நடவடிக்கைகளை நிராகரிப்போம், கடன்கள் ரத்து செய்யக் கோருவோம் ஆகிய முழக்கங்களை முன் வைத்து போட்டியிட்ட சிரிசா என்ற ‘தீவிர’ இடது சாரி கூட்டணி 2015 ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.
ஆளும் வர்க்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமூட்டும் பிரச்சாரங்களுக்கும் மத்தியில் 61% மக்கள் ஐரோப்பிய கடன் நிறுவனங்களின் நிபந்தனைகளை நிராகரித்திருக்கின்றனர்.
தனது வாக்குறுதிப்படி, கடன் வசூலிக்கும் மும்மூர்த்திகளின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோருவதாக அறிவித்தது, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா அரசு. அதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. கடன் கொடுத்த நிறுவனங்கள், ஐரோப்பிய வங்கிகள், உலக நிதி நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள், கடன் வாங்கினால் கட்டுவதுதான் சரி என்று கண்டிப்பு காட்டினர். தாங்கள் சொல்லும் நிபந்தனைகளே ஏற்றே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
இது குறித்து, தான் முடிவு செய்ய முடியாது என்றும், கிரீஸ் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தி ஐரோப்பிய கடன் கொடுத்த நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று கேட்கப் போவதாக ஜூன் 27-ம் தேதி அறிவித்தார் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.
அதைத் தொடர்ந்து நிதி பற்றாக்குறை காரணமாக கிரீஸில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஏ.டி.எம் எந்திரங்களில் அதிகபட்சம் ஒரு நாளைக்கு €60 மட்டுமே எடுக்க முடியும் என்று வரம்பு விதிக்கப்பட்டது. “கிரீஸ் கடன் நிபந்தனைகளை ஏற்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்படும், கடந்த 5 ஆண்டுகளில் அனுபவித்த (வேலை இழப்பு, ஓய்வூதிய இழப்பு, கல்வி/மருத்துவ வெட்டு) கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுமளவு பேரழிவு காத்திருக்கிறது” என்று கிரேக்க முதலாளிகள் கைவசம் இருந்த தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்தன. ஆம் தரப்பும், இல்லை தரப்பும் சரிக்கு சமமாக உள்ளன என்று மோசடி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
மறுபுறம், பார்சிலோனா, மாட்ரிட், லிஸ்பன், டப்ளின், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கிரீஸ் மக்களுக்கு ஆதரவாக பேரணியாகச் சென்றனர். ஜூலை 3-ம் தேதி ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் இல்லை தரப்பு ஆர்ப்பாட்டத்தில் 1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
ஆளும் வர்க்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமூட்டும் பிரச்சாரங்களுக்கும் மத்தியில் 61% மக்கள் ஐரோப்பிய கடன் நிறுவனங்களின் நிபந்தனைகளை நிராகரித்திருக்கின்றனர். 18 முதல் 25 வயது இளைஞர்களில் 85% ஏகாதிபத்திய நிதிக் கொடுங்கோன்மையை எதிர்த்து வாக்களித்திருக்கின்றனர்.
“கடனை வெட்டு, ஐ.எம்.எஃப் திரும்பிப் போ” – ஜூலை 3-ம் தேதி ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் இல்லை தரப்பு ஆர்ப்பாட்டத்தில் 1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், மீண்டும் கடன் கொடுத்த நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப் போவதைத் தவிர மாற்று திட்டம் எதுவும் இல்லாத போலி இடது சாரி கூட்டணிதான் சிரிசா என்பது நிரூபணமாகியிருக்கிறது.
தனியார் மயத்தை நிறுத்துவதாக கூறிய சிரியா, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று நிதி திரட்டப் போவதாக அறிவித்திருக்கிறது..
கிரீஸ் விமானப்படையை மேம்படுத்துவதற்கான நிதி உட்பட பெருமளவு நிதியை ராணுவத்துக்கு ஒதுக்கியிருகிறது.
தேசிய ஓய்வூதிய நிதி மற்றும் நகராட்சி நிதியிலிருந்து மும்மூர்த்திகளுக்கு கடன் அடைத்திருக்கிறது, சிரிசா.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொது முதலீடுகளை வெட்டி, மும்மூர்த்திகளின் கடன் கட்டும் இலக்குகளை நிறைவேற்ற முயற்சிக்கிறது, சிரிசா.
மக்கள் பணத்தை மேலும் கொள்ளையடித்து தற்போது 0.7% பற்றாக்குறையில் இருக்கும் கிரீஸ் பட்ஜெட்டை 0.6% மிகை பட்ஜெட்டாக மாற்றுவதாக சிரிசா வாக்களித்திருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைப்பதாக வாக்களித்த சிரிசா இப்போது 23% வரியை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
‘கடன் எப்படி வந்திருந்தால் என்ன, அதை எதிர்த்து கிரீஸ் மக்கள் வாக்களித்தால் என்ன, நாங்கள் சொன்ன நிபந்தனைகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்’ என்று சொல்லும்படி உத்தரவு.
பிரதமர் சிப்ராஸ் ஐரோப்பிய கடன்காரர்களுக்கு எதிராக பேசிய முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரோஃபகிஸ்-ஐ நீக்கி விட்டு இங்கிலாந்தில் படித்த மேற்கத்திய அடிமை சாக்கலோடோஸ்-ஐ நிதி அமைச்சர் ஆக்கி ஐரோப்பிய ஈட்டிக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால், “என்ன நடந்தாலும் சரி, பூரா தொகையையும் ஒரு பைசா விடாம எண்ணி கீழ வைக்கணும்” என்று சொல்கின்றன கிரீஸுக்கு கடன் கொடுத்த ஐரோப்பிய மத்திய வங்கியும், ஜெர்மனி, பிரான்ஸ் முதலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும்.
‘கடன் எப்படி வந்திருந்தால் என்ன, அதை எதிர்த்து கிரீஸ் மக்கள் வாக்களித்தால் என்ன, நாங்கள் சொன்ன நிபந்தனைகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்’ என்று சொல்லும்படி கிரீஸ் பிரதமருக்கு உத்தரவிட்டன. அதை சிரமேற்கொண்டு அத்தகைய ஒரு திட்டத்தை முன் வைத்திருக்கிறார் அலெக்சிஸ் சிப்ராஸ். ஆனால், சிரிசா கட்சிக்குள்ளேயே சிப்ராசின் இந்த சரணடைவு கடும் எதிர்ப்பை சந்திக்கும். மக்கள் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
2-ம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியும், பிரான்சும் செய்ததைப் போல கடன்களை கட்ட முடியாது என்று கடன் கொடுத்த நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடன் தள்ளுபடி அல்லது குறைப்பு செய்ய வேண்டும். கிரீசுக்கு அத்தகைய சலுகையை செய்ய மறுக்கின்றன இப்போது கடன் கொடுத்த நாடுகளாக இருக்கும் ஜெர்மனியும், பிரான்சும்.
2012-ல் கிரீஸ் அரசின் கடன்களில் 80% தனியார் வங்கிகள் வாங்கிய கடன் பத்திரங்கள் வடிவில் இருந்தது, 20% பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்போது அந்த நிலைமை நேர் எதிராக மாறியிருக்கிறது.
அல்லது, அந்நாட்டு நாணய மதிப்பை குறைப்பதன் மூலம் கடன் சுமையை கையாளலாம். அதன் மூலம் ஒன்று உள்நாட்டு கடன்களை குறைந்த மதிப்பில் திருப்ப முடியும், மேலும் குறைந்த மதிப்பு நாணயத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்து வெளிநாட்டுக் கடன்களை கட்ட செலாவணி ஈட்ட முடியும்.
யூரோ ஒற்றை நாணயத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிரீஸ் அதையும் செய்ய முடியவில்லை. யூரோ மீதான கட்டுப்பாடு ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருக்கிறது. கிரீஸ் மத்திய வங்கியிடம் இல்லை. யூரோவிலிருந்து வெளியேறி, தனி நாணயத்தை உருவாக்கி கிரீஸ் மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கிரீஸின் நிதித்துறையை கொண்டு வர முடியும்.
உலக நிதிக் கட்டமைவில் நெருக்கமாக பிணைக்கப்பட்டு விட்ட, சுயசார்பு பொருளாதாரம் முழுவதும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் கிரீஸ் என்ன செய்ய முடியும்? ஐரோப்பிய ஒற்றை நாணயத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் விட்டு வெளியேறினால் அந்நாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? இந்த விலகல் ஐரோப்பிய பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?
கிரீஸ் யூரோவை விட்டு விலகுவது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிதிப் பிணி நெருக்கடியில் சிக்கி, கடும் சிக்கன நடவடிக்கைகளில் அவதிப்படும் போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி மக்களும் கிரீஸின் வழியில் போகும்படி கோரும் போராட்டங்கள் பரவும். அந்நாடுகளும் யூரோவை விட்டு விலகினால் அது ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனப்படுத்துவதுடன், யூரோ திட்டத்தை சீர்குலைத்து, ஐரோப்பிய ஐக்கியத்தை இல்லாமல் செய்து விடும்.
பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமது ஐரோப்பிய கடன் பத்திரங்களை விற்க ஆரம்பித்தால் யூரோவின் மதிப்பு பெருமளவு சரியும். வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் (மத்திய தரைக்கடல் வழியாக) நுழையும் அகதிகளை கிரீஸ் நாட்டின் உதவியின்றி ஐரோப்பா கையாள முடியாது.
மாறாக, கிரீஸ் சீனா, ரசியா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும். ரசியாவிலிருந்து துருக்கி வழியாக எண்ணெய்/எரிவாயு குழாய் அமைத்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கான மையமாக கிரீஸ் செயல்பட முடியும். பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இணைந்து ஏற்படுத்திய புதிய வளர்ச்சி வங்கி (நியூ டெவலப்மென்ட் பேங்க்) மற்றும் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியிலும் கிரீஸ் நாடு இணையலாம்.
எப்படியானாலும், தீர முடியாத, நிரந்தரமான, ஆழமான நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் பலவீனமான கண்ணிகளில் ஒன்றான கிரேக்க நாட்டில் ஏகாதிபத்திய நிதிக் கட்டமைப்பு நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் ஆளும் வர்க்கங்களின் முயற்சிகள் உழைக்கும் மக்களின் எதிர்ப்புக்கு முன்பு திணறிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்த முதலாளித்துவ கட்டமைப்பை தூக்கி எறிந்து மக்களுக்கான அமைப்பை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் கிரீஸ் மக்களுக்கு துணை நிற்க வேண்டியது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.
“தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டு” – இதுதான் மோடி பிராண்டு “வளர்ச்சி”!
மன்மோகன் சிங் அரசு மிச்சம் வைத்துவிட்டுப் போன துறைகளை, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் படையல் போடும் வேலையை வெளிப்படையாகவும் கமுக்கமாகவும் என இரண்டு வழிகளிலும் நிறைவேற்றி வருகிறது, மோடி அரசு. காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவது; இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியத் தரகு முதலாளிகளை அனுமதித்திருப்பதோடு, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் அத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்வதற்கும், சில குறிப்பிட்ட இனங்களில் 100 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது; பல்வேறு உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைக் காப்புப் பட்டியலில் இருந்து விடுவித்து, அவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகபோக நிறுவனங்களுக்கு அளிப்பது என்பவையெல்லாம் வெளிப்படையாக நடந்திருக்கும் அதேசமயம், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் மிகவும் கமுக்கமாகவும் சதித்தனமாகவும் அரங்கேறி வருகிறது.
அரசு வங்கிகளைக் கொல்வதற்குத் தயாராகிவரும் தனியார்மயக் கோடாரிகள் : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் நாயக் கமிட்டியின் தலைவர் பி.ஜே.நாயக்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வந்த சமயத்தில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் இன்ஸ்டிட்யுட் என்ற சிந்தனைக் குழாம்-குடிமைச் சமூக அமைப்பில் உயர் பொறுப்பிலிருந்த இந்தியரான அரவிந்த் சுப்பிரமணியன் இந்திய பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்ட வேண்டியதை வலியுறுத்தி கட்டுரையொன்றை எழுதியிருந்தார். பொதுத்துறை வங்கிகளை, இந்திய அரசின் கழுத்தில் தொங்கும் தேவையற்ற சுமையாகச் சாடியிருந்த அவரைத்தான், தனது தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமித்துக் கொண்டார், மோடி. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளைச் சீரமைப்பது தொடர்பான வழிகளை ஆராவதற்காக மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட நாயக் கமிட்டி, தனது அறிக்கையை பிரதமர் மோடியிடம் அளித்தது. இவையிரண்டும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க மோடி அரசு வெறித்தனமாக முயலும் என்பதை எடுத்துக் காட்டின என்றால், மோடி அரசின் இரண்டு பட்ஜெட் (2014-15, 2015-16) அறிக்கைகளும் அதனைத் தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தின.
பொதுத்துறை வங்கிகளின் அழிவில்தான் தனியார் வங்கிகள் வளர முடியும் எனக் கூறும் அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரை, அதற்காகப் பொதுத்துறை வங்கிகளை நைச்சியமான முறையில் கொன்றுவிட வேண்டும் என வெளிப்படையாகவே பரிந்துரைக்கிறது. “இந்திய வங்கித் தொழிலில் 75 சதவீத பங்கு இன்னமும் பொதுத்துறை வங்கிகளிடம்தான் உள்ளன. மேலும் மேலும் தனியார் வங்கிகளைத் திறப்பதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் இந்த செல்வாக்கைக் குறைத்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுத்துறை வங்கிகளின் இந்தச் செல்வாக்கைச் சுருக்காமல், தனியார் வங்கிகள் வளர்வதற்கான வாய்ப்பே இல்லை. நல்ல இலாபமீட்டும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதை இந்திய அரசியல் சூழல் அனுமதிக்காது. அதற்குப் பதிலாக, வாராக் கடன் பிரச்சினையால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைக் கவிழ்ப்பதன் மூலம்தான் ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளின் செல்வாக்கைக் குறைக்க முடியும்” என்கிறது, அவரது கட்டுரை.
மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க மறுத்த இந்திய அரசு வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
பொதுத்துறை வங்கிகளைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயமாக்க ரிசர்வ் வங்கியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கும் அவரது கட்டுரை, “வாராக் கடன் பிரச்சினையால் தடுமாறும் பொதுத்துறை வங்கிகளைக் கைதூக்கிவிடும் நோக்கில் அரசு அந்த வங்கிகளில் மேலும் மூலதனமிட முயலும்பொழுது, அத்தகைய ‘பெயில் அவுட்’ நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தலையிட்டுத் தடுக்க வேண்டும். பொருளாதார மந்த நிலையில் இத்தகைய பெயில் அவுட் நடவடிக்கைகள் நிதிப்பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; திறமையற்ற வங்கிகள் அரசின் ஆதரவோடு உயிர் பிழைத்திருப்பதை அனுமதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அரசிடம் உறுதியாக எடுத்துச் சொல்ல வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை எந்தளவிற்கு மோசமாக உள்ளதோ, அந்தளவிற்கு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பொதுத்துறை வங்கிகளை பெயில் அவுட் செய்வதற்கு எதிராகப் பேச வாப்புகள் கிடைக்கும். மோசமடைந்த பொதுத்துறை வங்கிகளைத் தீர்த்துக் கட்டுவதை ஒருபுறமும், இலாபகரமான வங்கிகளைத் தனியாருக்குக் கைமாற்றிவிடுவதை இன்னொருபுறமும் செய்வதற்கு இந்த வாப்புகளை ரிசர்வ் வங்கி கவர்னர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றவாறு பொதுத்துறை வங்கிகளைத்
தனியார்மயமாக்கும் திட்டத்தை விவரிக்கிறது, அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரை. பொதுத்துறை வங்கிகளுக்கு “சைலண்டாக” சங்கு ஊதச் சொல்லும் இந்தக் கட்டுரைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு – “சாகடித்துச் சீர்திருத்துவோம் (Reform by Death)”
நாயக் கமிட்டி அறிக்கையும் வாராக் கடன் பிரச்சினையை முன்வைத்து பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கோருகிறது. “பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதற்கு அரசின் தலையீடும் நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம்” எனக் கூறும் நாயக் கமிட்டி, இதற்குத் தீர்வாக, “மைய அரசு பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கி முதலீட்டு கம்பெனி என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி, அதனிடம் இப்பங்கு மூலதனத்தையும் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும். முதலீட்டாளர் என்ற முறையில் அரசு பொதுத்துறை வங்கிகள் மூலம் கிடைக்கும் இலாபத்தை எண்ணிக் கொண்டிருப்பதைத் தாண்டி வேறெந்த வகையிலும் வங்கி நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது” எனப் பரிந்துரைக்கிறது.
வங்கிப் பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கம் டெல்லியிலுள்ள இந்திய அரசு வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
அரவிந்த் சுப்பிரமணியன் போலவே பி.ஜே.நாயக்கும் அமெரிக்க இறக்குமதி சரக்குதான். 2008-ல் அமெரிக்காவில் வெடித்த சப்-பிரைம் (வீட்டுக் கடன்) மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுள் ஒன்றான மார்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அவர், இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். இரத்த வெறி கொண்டு அலையும் செந்நாய் கூட்டம் போல, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், பி.ஜே.நாயக் உள்ளிட்ட ஏகாதிபத்திய அடிவருடி நிபுணர்கள் கும்பல் இந்தியாவின் நிதித்துறையை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கத் துடிக்கிறார்கள்.
***
2000-ஆம் ஆண்டின் முதல் எட்டு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கண்ட வளர்ச்சிக்கும், அம்பானி சகோதரர்கள், அதானி, ரூயா உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளிகள் உலகக் கோடீசுவரர்களாக வளர்ந்ததற்கும் அடிப்படையாக இருந்தது பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்கள்தான். 1999-ல் அடிக்கட்டுமானத் துறைக்குப் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் வெறும் 724 கோடி ரூபாய்தான். இது 2012-13-ல் 78,605 கோடி ரூபாயாக அதிகரித்தது. அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் (Public Private Partnership) தொடங்கப்பட்ட அடிக்கட்டுமான திட்டங்களில் தனியார் பங்களிப்பு என்பது பூஜ்யம்தான். அத்திட்டங்கள் அனைத்தும் வங்கிகளின் கடனைப் பெற்று உருவாக்கப்பட்ட அரசு திட்டங்கள்தான் என்கிறார், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்கரவர்த்தி.
பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட இத்தகைய கடன்கள்தான் பொதுத்துறை வங்கிகளைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளின. பொதுத்துறை வங்கிகளை நிதி நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் வாராக் கடனில் பெரும் பகுதி ஒரு முப்பது நிறுவனங்களிடம் தேங்கியிருப்பதாக செப்டம்பர் 2013-ல் மையப் புலனாய்வு துறை வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியது. அரசியல் செல்வாக்குமிக்க கிங்ஃபிஷர் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தியிருக்கிறது. 36 தனியார் அனல் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட 2,09,000 கோடி ரூபாய் கடன் வசூலிக்க இயலாத சிக்கலில் இருப்பதாக கிரெடிட் சூயிஸ் என்ற ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உமி கொண்டுவந்தவன் அவல் தின்ற கதையாக அரசுப் பணத்தில் நவீனமான முறையில் சீரமைக்கப்பட்ட டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையம் ஜி.எம்.ஆர் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வாராக் கடன்கள் ஒருபுறமிருக்க, கடனைக் கட்டாமல் ஏய்த்து வரும் தரகு முதலாளிகள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, கடன் தொகையிலும் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்து, திருப்பிக் கட்டுவதற்கான தவணை முறைகளை நீட்டிப்புச் செய்து தரும் அயோக்கியத்தனத்தைக் கடன் மறுசீரமைப்பு என வங்கி நிர்வாகங்கள் அழைக்கின்றன. இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால், அது இன்னொரு கொள்ளையாக விரிகிறது.
2008-ல் வெடித்த பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய ஐந்தாண்டுகளில் வாராக் கடன் பட்டியலுக்குள் கொண்டு வராமல் தந்திரமாக மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை ஐந்து இலட்சம் கோடி ரூபாயாகும் என சி.பி.ஐ. குற்றஞ்சுமத்தியிருக்கிறது. அந்த ஐந்தாண்டுகளில் அரசுடமை வங்கிகளின் இலாபத்திலிருந்து 1.41 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, வங்கி ஊழியர் சங்கம்.
இப்படி பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை தொழில் கடன்கள் என்ற பெயரில் கொள்ளையடித்து, அதன் மூலம் தங்களின் சொத்து மதிப்புகளை உயர்த்திக் கொண்டுள்ள இந்தியத் தரகு முதலாளிகள் கும்பல், வாராக் கடனால் வங்கிகள் நொடித்துப் போயிருப்பதால், அவற்றைத் தனியார்மயமாக்கித் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருகிறார்கள். இது மாட்டை இரண்டு முறை தோலுரிப்பதற்கு ஒப்பானது. இம்மாபாதகத்தைக் கச்சிதமாகவும் விரைவாகவும் முடித்துக் கொடுக்க முனைந்துள்ளது, மோடி அரசு.
தனது பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பொதுத்துறை வங்கிகளைச் சத்தமில்லாமல் தனியார்மயமாக்குவதற்கு என்ன வழியை முன்வைத்தாரோ, அதே வழியை, பொதுத்துறை வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கடுமையாக வெட்டுவதன் மூலம், போதுமான அளவிற்கு இலாபம் ஈட்டாத பொதுத்துறை வங்கிகளைச் சந்தையை நோக்கித் தள்ளிவிடும் (தனியார்மயமாக்கும்) முதல்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது, மோடி அரசு.
மன்மோகன் சிங் ஆட்சியிலும்கூடப் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி வெட்டப்படுவது வாடிக்கையாக இருந்தாலும், மோடி ஆட்சியில் இந்த வெட்டு கடுமையாகியிருப்பதோடு, ‘திறமையாகச் செயல்படாத’ பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதித்தனத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது. மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் (2014-15) பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்கு 11,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக கணக்குக் காட்டப்பட்டது. இந்தத் தொகை அதற்கு முந்தைய பட்ஜெட்டைக் காட்டிலும் 2,800 கோடி ரூபாய் குறைவானது என்பது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் பொதுத்துறை வங்கிகளுக்கு முழுமையாகத் தரப்படவில்லை. பட்ஜெட்டில் 11,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, வெறும் 6,990 கோடி ரூபாய்தான் பொதுத்துறை வங்கிகளுக்குத் தரப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலோ, கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாக 7,940 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
மோடி அரசுக்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்குக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டாலும், அந்த நிதி அனைத்து வங்கிகளுக்கும் கிடைப்பதற்கு ஏற்றவாறு, அவற்றின் தேவை கணக்கில் கொள்ளப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், மோடி அரசோ பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்கு அவற்றின் இலாபத்தை மையமாகக் கொண்ட புதிய விதியைப் புகுத்தியது. இந்த விதியும்கூட ஒரு நியாயமான முறையில் உருவாக்கப்படாமல், வாராக் கடனால் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ள வங்கிகளைப் புறக்கணிக்கும் தீய நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின்படி 22 பொதுத்துறை வங்கிகளுள் 9 வங்கிகளுக்கு மட்டுமே மறுமூலதன நிதியைப் பெறும் தகுதியிருப்பதாகக் கூறப்பட்டு, மீதமுள்ள 13 வங்கிகளும் நட்டாற்றில் விடப்பட்டன.
அரசின் நிதி கிடைக்காத இந்த 13 வங்கிகளுள் ஏழு வங்கிகள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைச் சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ள அனுமதித்திருப்பதன் மூலம், அவற்றைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது, மோடி அரசு. இப்படி அனுமதி அளிக்கப்பட்ட அதே சமயத்தில், ஏகாதிபத்திய தரநிர்ணய நிறுவனமான மூடி, சென்ட்ரல் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டும் மூலதனமிடுவதற்கு ஏற்றவையல்ல என அறிவித்திருக்கிறது. அரசும் நிதி ஒதுக்காது, சந்தையிலிருந்தும் நிதி திரட்ட முடியாது என்ற நிலையில் இந்த இரண்டு வங்கிகளும் தமது கடையை மூடிவிட்டு, வேறொரு பெரிய வங்கியோடு இணைய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.
ஒருபுறம் வாராக் கடன் நெருக்கடி, இன்னொருபுறம் அரசின் நிதியுதவி மறுக்கப்படுவது என்ற இரட்டை இடியைப் பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் இந்த நிலையில்தான், ஏகாதிபத்திய நாடுகளாலும் பன்னாட்டு வங்கிகளாலும் வரையறுக்கப்பட்டுள்ள “பாசல் 3” விதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தையும் பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்டுள்ளன. “பாசல் 3” விதிகள் அமலுக்கு வரும்பொழுது இந்திய வங்கிச் சட்டங்கள் செல்லாக்காசாகிவிடும்.
வங்கிகள் வழங்கும் கடன்களின் மதிப்புக்கு ஏற்ற விகிதத்தில் அவற்றின் மூலதன/சொத்து மதிப்பு இருக்க வேண்டும் என வரையறுக்கிறது, “பாசல் 3” விதிகள். இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் புதிய பணக்கார நடுத்தர வர்க்கத்திற்கும் கடன்களை வாரிக் கொடுப்பதற்கு ஏற்றவாறு வங்கிகள் தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறல்ல. இதன்படி 2018-ம் ஆண்டுக்குள் மேலும் 2,40,000 கோடி ரூபாயை மூலதனமானத் திரட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டை எதிர்கொண்டுள்ளன பொதுத்துறை வங்கிகள்.
அனைத்துப் பொதுத்துறை வங்கிகளையும் ஒரேவீச்சில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிடுவதற்குக் கிடைத்த வாப்பாக “பாசல் 3” விதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு. இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் செலுத்த வேண்டிய வாராக் கடன்களையும் மறுசீரமைக்கப்பட்ட கடன்களையும் வசூலித்தாலே பொதுத்துறை வங்கிகளின் மூலதனத் தேவையை ஈடுகட்டிவிட முடியும். ஆனால், அரசோ தரகு முதலாளிகள் மீது கைவைப்பதற்கு மாறாக, தன் வசமுள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைச் சந்தையில் விற்று “பாசல் 3” விதிகளை நிறைவேற்றத் திட்டமிடுகிறது.
மொத்தமுள்ள 27 பொதுத்துறை வங்கிகளுள் 22 பொதுத்துறை வங்கிகள் மைய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், 5 பொதுத்துறை வங்கிகள் இந்திய அரசு வங்கியின் (ஸ்டேட் பாங்கி ஆஃப் இந்தியா) கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த வங்கிகளில் 65 முதல் 80 சதவீதப் பங்குகள் மைய அரசு மற்றும் இந்திய அரசு வங்கிக்குச் சொந்தமாக உள்ளன. இதனைத் தடாலடியாக 52 சதவீதமாகக் குறைப்பதன் மூலம், 1,60,825 கோடி ரூபாயைச் சந்தையிலிருந்து திரட்டத் திட்டமிடும் மோடி அரசு, இது தொடர்பான அறிவிப்பையும் கடந்த டிசம்பரில் வெளியிட்டிருக்கிறது.
இதற்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகளின் தலைமைப் பதவிகளைத் தனியார்மய ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பும் வேலையையும் தொடங்கிவிட்டது, மோடி அரசு. குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியத் தொழில்வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாப்பு விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்குப் பொருந்தாதவாறு, கொட்டைபோட்ட பங்குச்சந்தை சூதாட்ட நிபுணர்களை, தனியார் வங்கியாளர்களை அப்பதவிகளில் உட்கார வைப்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.
விவசாய நிலங்களை அபகரிக்க நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க தொழிலாளர் சீர்திருத்த சட்டம் என்ற வரிசையில் பொதுமக்களின் சேமிப்புகளைத் தங்கு தடையின்றிச் சூறையாடப் பொதுத்துறை வங்கிகளை முற்றிலுமாகத் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு. விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும், வங்கி ஊழியர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் இவற்றைத்தான் மோடி அரசு ‘வளர்ச்சி’ என அழைக்கிறது.
புரட்சியாளர்களைச் சிறையில் அடைத்து, அடிப்படை வசதிகளையும் மருத்துவ உதவிகளையும் திட்டமிட்டே புறக்கணித்து நோயையும் மன உளைச்சலையும் தீவிரப்படுத்துவதன் மூலம் மரணத்துக்குள் தள்ளி, அவர்கள் இயற்கையாகவே மரணமடைந்ததாக் காட்டும் சதியை திட்டமிட்டு ஆட்சியாளர்கள் அரங்கேற்றத் துடிக்கின்றனர். முனைவர் ஜி.என்.சாய்பாபாவும், தோழர் கோபட் காந்தியும் அண்மையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களே இதனை நிரூபித்துக் காட்டுகின்றன.
முனைவர் ஜி.என்.சாய்பாபா
புரட்சிகர அமைப்புகளின் உருவாக்கத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகித்ததோடு, காட்டு வேட்டை என்ற பெயரிலான பழங்குடியின மக்களின் மீதான அரசு பயங்கரவாத அடக்குமுறையை எதிர்த்து கருத்தியல் தளத்திலும் போராடி வந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரான முனைவர் ஜி.என்.சாய்பாபா, கடந்த 2014 மே 9 அன்று மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரால் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனும் பயங்கரவாத “ஊபா” சட்டத்தின் கீழ் அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சக்கர நாற்காலியின் உதவியுடன் இயங்கிவரும் மாற்றுத் திறனாளியான அவர், இதய நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு முதலானவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து – மாத்திரைகளைக்கூட தராமல், சிறை அதிகாரிகள் அவரைப் புறக்கணித்திருக்கின்றனர். மருத்துவர் பரிந்துரைத்துள்ள உணவும் சிகிச்சையும் முறையாக அவருக்கு அளிக்கப்பட வேண்டுமென நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், சிறை நிர்வாகம் அதை அலட்சியப்படுத்தியுள்ளது. தொடரும் இக்கொடுமைக்கெதிராக, கடந்த ஏப்ரல் 11 முதலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அவர், ஏப்ரல் 14 அன்று நினைவிழந்த நிலையில் நாக்பூர் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார். அங்கு அவருக்கு இதய நோக்கான ஆன்ஜியோகிராம் சோதனை செய்யப்பட்ட போதிலும், மருத்துவர்களை நிர்பந்தித்து சிகிச்சையை போலீசார் தாமதப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சாய்பாபாவை மரணத்துக்குள் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
பல்வேறு மனித உரிமை அமைப்பினரும், அறிவுத்துறையினரும் வழக்குரைஞர்களும் இக்கொடுஞ்செயலை எதிர்த்தும், முனைவர் சாய்பாபாவை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் கடந்த மே மாதத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர். இதுபற்றிய பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மொகித் ஷா, ஏ.கே.மேனன் ஆகியோர் தாமே இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மாநில அரசும் சிறைத்துறையும் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அவர் விருப்பப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும் ஜூன் 22 அன்று உத்தரவிட்டனர். அதன் பிறகு, மரணத்தின் விளிம்பில் நிற்கும் அவரது உடல்நிலை காரணமாக, நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அவரது பிணை மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இவரைப் பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற கருத்துக்கு தாங்கள் வந்துள்ளதாகவும், இதுபற்றி மாநில அரசு கருத்து கூறுமாறும் கடந்த ஜூன் 26 அன்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சாய்பாபா மூன்று மாத கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தோழர் கோபட் காந்தி
முனைவர் சாய்பாபாவைப் போலவே, மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் கோபட் காந்தி, கடந்த 2009-ல் டெல்லியில் கைது செய்யப்பட்டு, இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு சதித் திட்டம் தீட்டினார் என்று பொய்வழக்கு சோடிக்கப்பட்டு “ஊபா” சட்டத்தின் கீழ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே இதய நோய், இரத்த அழுத்த நோய், இடுப்பு எலும்பு நகர்வினால் ஏற்பட்ட பாதிப்பு, மூட்டுவலி, சிறுநீரக நோய் மற்றும் இதர தொல்லைகளால் அவதிப்படும் 68 வயதான அவருக்கு, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக படுக்கையும் கழிப்பறை வசதியும் செய்து தராமல், குறுகிய கால இடைவெளியில் துப்புரவு செயப்படாத வெவ்வேறு வார்டுகளுக்கு சிறிதும் மனிதாபிமானமின்றி சிறை அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றியதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமாகியது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், சிறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
ஒரு அரசியல் கைதியைப் போலல்லாமல், தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளியைப் போல நடத்தப்படுவதையும், சிறை நிர்வாகத்தின் அடிப்படை மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து அவர் கடந்த மே 30 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 18 நாட்களாக அவர் தொடர்ந்து போராடிய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சிறை நிர்வாகம் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும், அவரது நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் ஜூன் 19 அன்று முன்வந்துள்ளது.
அரசாங்கத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்து நாட்டின் மீதும் மக்களின் மீது அக்கறை கொண்டு இலட்சியத்துடன் செயல்படும் கோபட் காந்தி போன்ற அறிவுத்துறையினரும் புதிய சமுதாயச் சிந்தனையாளர்களும் சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா – சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.
ஒருவர் மீது பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுவிட்டால், எல்லாவகை மனித உரிமை மீறல்களும் அவமானப்படுத்தல்களும் நியாயப்படுத்தப்படுகின்றன. பா.ஜ.க.வின் மைய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் டாங்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகியோர் பட்டபடிப்பு சான்றிதழ் மோசடி செய்து அமைச்சராகி நாட்டை வழிநடத்துகிறார்கள். ஆனால் கல்வியாளர்களும் புரட்சிகர சிந்தனையாளர்களும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்போரும் கைது செய்யப்பட்டு சிறையில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்தைவிட கொடுமையான இருண்ட காலத்தில் நாடும் மக்களும் தள்ளப்பட்டிருப்பதையே இது மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.
லலித் மோடி – சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே உறவு விவகாரங்களில் அம்பலத்துக்கு வந்திருக்கும் திரைமறைவு இரகசியங்கள் பா.ஜ.க.வோடு, ஊழலுக்கு எதிரானவராகவும், வலிமையான தலைவராகவும் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியின் டவுசரையும் உருவிவிட்டன. லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே – இந்த மூவரில் யார் மீது நடவடிக்கை எடுத்தாலும், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொண்டது போன்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட மோடி, வழக்கமாக காது வரை கிழியும் தன் வாய்க்குப் பூட்டுப்போட்டு “மன்மோகன் சிங்” ஆகிவிட்டார். அவரது அமைச்சர்களெல்லாம் ஊடகங்களின் கண்ணில் படாமல் தப்பித்து ஓடுகின்றனர்.
“பொதுப் பணத்தை நானும் தின்னமாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என்று ஊழலுக்கு எதிராக உதார்விட்டு ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால், அவரது அமைச்சரே – சுஷ்மா சுவராஜ் – பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நெருக்கமாக இருந்து உதவி புரிந்திருக்கிறார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” எனச் சவடால் அடித்த மோடி, கருப்புப்பணக் குற்றவாளியான மோடியைக் காப்பாற்றுவதா, தனது அமைச்சர்களைக் காப்பாற்றுவதா, காற்றுப் போன பலூனாகிவிட்ட தனது இமேஜைக் காப்பாற்றுவதா என்று தெரியாத நகைக்கத்தக்க கேவலமான நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
***
லலித் மோடியின் மீது 16 பொருளாதாரக் குற்றங்கள் நிலுவையில் இருப்பதால், அவரது கடவுச்சீட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் (காங்கிரசு ஆட்சியின் போது) முடக்கிவைத்திருப்பதை எதிர்த்து லலித் மோடி தொடுத்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற அதே நேரத்தில், தனது அமைச்சகத்தின் நிலைக்கு எதிராகவும், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங்கிற்குத் தெரியாமலும், லலித் மோடிக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார். மேலும், இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து லலித் மோடிக்கு உதவும்படிக் கோரியிருக்கிறார். இது குறித்து நிதியமைச்சருக்கும் சுஷ்மா தெரிவிக்கவில்லை. காரணம், சுஷ்மாவுக்கும் அருண் ஜெட்லிக்குமிடையிலான கோஷ்டி தகராறு மட்டுமல்ல, ஐ.பி.எல். இலிருந்து லலித் மோடியை விரட்டிய முக்கிய எதிரி அருண் ஜெட்லி என்பதும்தான்.
லலித் மோடிக்கு உதவியது குறித்து கடந்த ஒரு வருடமாக வாய் திறக்காமலிருந்த சுஷ்மா, பூனைக்குட்டி வெளியே வந்தவுடன், “லலித் மோடி மனைவிக்கு போர்ச்சுகல் மருத்துவமனையில் புற்றுநோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதற்கு லலித் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டியிருந்ததால், மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாகவும்” விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கம் வெளிவந்தவுடனேயே இது பொய் என்பது அம்பலமாகிவிட்டது. மனைவியின் அறுவை சிகிச்சைக்கு கணவனின் கையெழுத்து தேவை என்று போர்ச்சுகல் நாட்டு சட்டங்கள் கூறவில்லை. கையெழுத்துப் போடுபவர்கள் அதனை இணையத்தின் வழியாக அனுப்பலாம் என்றும் அந்நாட்டின் விதிகள் அனுமதிக்கின்றன என்ற விவரங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி விட்டன. மேலும் லலித் மோடிக்கு சுஷ்மா செய்திருக்கும் ‘மனிதாபிமான’ உதவியின் விளைவாக, போர்ச்சுகலுக்கு சென்று வருவதற்கு மட்டுமல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கான பயண ஆவணம் பிரிட்டிஷ் அரசால் லலித் மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
மனைவியின் அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்பட்ட மூன்றாவது நாளே, போர்ச்சுகலுக்கு அருகிலுள்ள இபிஸா என்ற உல்லாசத் தீவில் தனது குடும்பத்தாரோடு கேளிக்கை விருந்தைக் கொண்டாடியிருக்கிறார் லலித் மோடி. இதுமட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்து வெளியேற அனுமதி கிடைத்த இந்த ஓராண்டுக்குள் லலித் மோடி உலகெங்குமுள்ள 25-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் கேளிக்கை விருந்துகளில் கும்மாளமடித்திருக்கிறார்; வியாபார பேரங்களை நடத்தி முடித்திருக்கிறார். மேற்கண்ட காரியங்களுக்காக இங்கிலாந்திலிருந்து வெளியேறுவதற்கு லலித் மோடிக்கு அனுமதி வாங்கிக் கொடுப்பதுதான் சுஷ்மா சுவராஜின் நோக்கமென்பதும், புற்றுநோய் என்பதெல்லாம் மட்டரகமான செண்டிமெண்ட் நாடகம் என்பதும் அம்பலமாகியிருக்கின்றன.
விசயம் இத்தோடு முடியவில்லை. மேற்கண்ட மனிதாபிமான உதவியின் பின்புலமும் அம்பலமாகியிருக்கிறது. சுஷ்மாவின் உறவினர் ஒருவருக்கு இலண்டனில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் கல்லூரியில் இடம் வாங்கித் தந்திருக்கிறார் லலித் மோடி. சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் கடந்த 22 ஆண்டுகளாக லலித் மோடியின் வழக்குரைஞர். சுஷ்மாவின் கணவரும் மகள் பான்சுரி சுவராஜும் லலித் மோடிக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கடவுச்சீட்டு முடக்கப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடியவர்கள். இன்டோபில் என்ற தனது நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்குமாறு ஏப்ரல்-15, 2015 அன்று சுஷ்மாவின் கணவருக்கு லலித் மோடி கடிதம் அனுப்பியிருக்கிறார். தான் அந்தப் பதவியை வேண்டாமென்று மறுத்துவிட்டதாக தற்போது சுவராஜ் கவுசல் விளக்கமளித்த போதிலும், லலித் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் இடையிலான கொடுக்கல் – வாங்கல் உறவுகளை இவை அம்பலமாக்குகின்றன.
***
சுஷ்மா – லலித் மோடிக்கு இடையேயான உறவைவிட, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் லலித் மோடிக்கும் இடையேயான உறவு அசாதாரணமானது. பனியா தரகு முதலாளியான கே.கே.மோடியின் மகனும், படிப்புக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கே போதை மருந்து வழக்கில் சிக்கி, தந்தையின் செல்வாக்கினால் இந்தியாவுக்குத் தப்பித்து வந்தவனுமான, பணக்கார வீட்டு உருப்படாத பிள்ளைதான் லலித் மோடி. அடையாளம் தெரியாமல் கிடந்த லலித் மோடி இந்திய கிரிக்கெட் அரங்கையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு வளர்ந்ததற்கு அடித்தளமிட்டுக் கொடுத்ததே வசுந்தரா ராஜேதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் விதிகளை மாற்றி, 2005-ல் லலித் மோடியை அதன் தலைவராக்கினார். சூப்பர் சீஃப் மினிஸ்டர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கூறும் அளவுக்கு அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, ராஜஸ்தான் பா.ஜ.க. விலும் மோடியின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.
இதனைத் தொடர்ந்து லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியைப் பெற்றதும், அதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசின் ராஜீவ் சுக்லா, பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி மற்றும் சரத் பவார் உதவியதும், இந்த கோஷ்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தமக்கு எதிரான டால்மியா கோஷ்டியைத் தோற்கடித்ததும், 2008-ல் லலித் மோடி ஐ.பி.எல். என்ற பெயரில் மாபெரும் சூதாட்டத்தை அறிமுகப்படுத்தியதும், ஒரு கட்டத்தில் சீனிவாசன்-லலித் மோடி கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு, லலித் மோடி ஓரங்கட்டப்பட்டு, அவரது தில்லுமுல்லுகளும் மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட்டதும், காங்கிரசு ஆட்சியில் மோடியின் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்ததும், மோடி நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், அருண் ஜெட்லி அங்கம் வகித்த கமிட்டியே லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆயுட்காலத் தடை விதித்ததும் இந்திய கிரிக்கெட் சூதாட்ட வரலாற்றில் கல்வெட்டுகளாகப் பதிவாகியிருக்கின்றன.
ஊழல் –
மோடியின் ஸ்டைல்!
எத்தனை குறைகள் இருந்த போதிலும், மோடியின் ஓராண்டு ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று கார்ப்பரேட் முதலாளிகள் கொண்டாடுகின்றனர். அவர்கள் கொண்டாடக் காரணம் இருக்கிறது. இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைக் கூட்டி பல ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அதானி மீது தொடரப்பட்ட வழக்கு நிதியமைச்சகத்தில் தூங்குகிறது. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராச்சியத்தை நடத்தும் பாபா ராம்தேவ் மீது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பண வழக்கு இருந்தது. அதனை மோடி அரசு ரத்து செய்து விட்டது. அலைக்கற்றை வழக்கில் ராசா மீதான வழக்கு தீவிரமாக நடத்தப்படுகின்ற அதே நேரத்தில், அலைக்கற்றை விற்பனையிலும், பின்னர் நிலக்கரி வயல் ஏலத்திலும் ஆதாயமடைந்த தரகு முதலாளிகள் பலர் மீதான கருப்புப் பண வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளுடைய வாராக்கடன் 5 இலட்சம் கோடியில் பெரும்பகுதியைத் தரவேண்டிய 12 தரகு முதலாளிகளின் பிடியில்தான் சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கேந்திரமான பல துறைகள் இருக்கின்றன. இந்த ஊழல்களுக்குப் பொறுப்பான குற்றவாளி சின்ன மோடி அல்ல, பெரிய மோடி.
லலித் மோடியுடனான இத்தகைய நீண்டகால உறவின் அடிப்படையில்தான் மோடி இலண்டனில் தங்குவதற்கு அனுமதி கேட்டு பிரட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் செய்தபொழுது, அவருக்குச் சாட்சியம் அளித்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார், வசுந்தரா ராஜே. இந்தப் பிரமாண பத்திரத்தை அவர் ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரிட்டிஷ் அரசிடம் தாக்கல் செய்ததோடு, இது இந்திய அரசுக்குத் தெரியக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். லலித் மோடி இலண்டனை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்தபொழுது, ராஜே அவரது மனைவியைப் புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுகலுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ராஜஸ்தான் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்குவதற்காக என்று கூறிக்கொண்டு, மோடிக்கு சிகிச்சை அளித்த போர்ச்சுகல் மருத்துவமனை ஜெய்ப்பூரில் ஒரு கிளையைத் தொடங்குவதற்கு 96,000 சதுரமீட்டர் நிலத்தை ஒதுக்கியிருக்கிறார் ராஜே. அதே சமயத்தில் சிகரெட் மீது முந்தைய காங்கிரசு அரசு விதித்திருந்த வரியை 20% குறைத்து, மோடியின் சிகரெட் கம்பெனிக்கு கோடிக்கணக்கில் ஆதாயத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
வசுந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க.வின் எம்.பி.யுமான துஷ்யந்த், தனது மனைவியைப் பங்குதாரராகக் கொண்டு நிகந்த் ஹெரிடேஜ் என்ற ஆடம்பர விடுதியை நடத்தி வருகிறார். இது ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் காட்டப்பட்ட உப்புமா நிறுவனங்களைப் போன்றது. இந்த நிறுவனத்தில் வரவு-செலவு எதுவுமே நடந்ததில்லை எனக் கூறப்படுகிறது. இப்படிபட்ட உப்புமா நிறுவனத்தின் 10 ரூபாய் பெறுமான பங்கை 96,160 ரூபாய் கொடுத்து வாங்கி, அந்நிறுவனத்தில் 11 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார், லலித் மோடி. இந்த முதலீட்டிற்கான பணம் கருப்புப் பண சோர்க்கமான மொரிஷியஸிலிருந்து வந்திருக்கிறது. இது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான தோல்பூர் அரண்மனை கட்டிடத்தை வசுந்தராவின் மகனும் லலித் மோடியும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டனர். ராஜஸ்தானில் இவர்கள் நடத்தியிருக்கும் கூட்டுக்கொள்ளையின் ஒரு சிறிய பகுதிதான் இது என்று தெரிகிறது.
கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் மட்டும், லலித் மோடி மீது அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்டு 16 பொருளாதாரக் குற்றங்கள் விசாரணையில் உள்ளன; 1,680 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. மோசடிக் குற்றத்துக்காக சென்னையில் ஒரு கிரிமினல் வழக்கு 2010-இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாக் கட்சிகளிலும் மோடிக்கு கூட்டாளிகள் இருப்பதாலும், இந்த கொள்ளைக்கூட்ட வலைப்பின்னலில் அங்கம் வகிக்கும் காங்கிரசு, பா.ஜ.க. தலைவர்கள் முதல் பவார் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பாலிவுட் நடிகர்கள், தரகு முதலாளிகள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்ற பலரும் இந்த விவகாரம் கிளறப்படுவதை விரும்பவில்லை என்பதாலும்தான் மோடிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இப்படிபட்ட குற்றவாளிக்குத்தான் சுஷ்மா சுவராஜும், வசுந்தரா ராஜேயும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார்கள். இந்த அதிகார துஷ்பிரயோகம்தான் 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் ஆ.ராசாவின் மீது உள்ள குற்றச்சாட்டு, ராசா கையூட்டு வாங்கினார் என்பதல்ல. ஆ. ராசா தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அலைக்கற்றையை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான். ஆனால் சுஷ்மா, வசுந்தரா ராஜேவுக்கு எதிரான குற்றங்களோ மிகக்கடுமையானவை. ஒவ்வொரு வழக்கிலும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பணத்தை வெள்ளையாக்கும் குற்றங்கள் பலவற்றை செய்து விட்டு, எல்லா கட்சிகளிலும் அதிகார வர்க்கத்திலும் தனக்கு இருக்கும் செல்வாக்கினால் தண்டிக்கப்படாமல் தப்பி வரும் ஒரு கிரிமினலுக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். இந்த உதவிக்காக, சுஷ்மாவும் ராஜேவும் மோடியின் மூலம் பெற்றிருக்கும் ஆதாயங்களும் நாள்தோறும் அம்பலமாகி வருகின்றன.
ஆனாலும், ஆ.ராசாவுக்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் இவர்களுக்கு வக்கீலாக நின்று வாதாடுகிறது. ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சுஷ்மா சுவராஜின் ‘மனிதாபிமான உதவி’யை நியாயப்படுத்துகிறார். லலித் மோடி மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, மோடி மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கிறதா, அவர் தேடப்படும் குற்றவாளியா என்று லலித் மோடியின் வக்கீலாகவே கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க. வின் பிரதிநிதிகள்.
***
ஐ.பி.எல் போட்டிகளைத் தொடங்கியதில் லலித் மோடிக்கு ஆதரவாக நின்ற பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி அரசு – இம்மூன்றும் ஒரே குரலில் சுஷ்மாவையும் ராஜேவையும் ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், நாளுக்கொன்றாக வெளிவரும் ரகசியங்களும் சங்க பரிவாரத்தை பீதிக்குள்ளாக்குகின்றன. பிள்ளையைக் கிள்ளிவிட்டது யார் என்ற கேள்வி பா.ஜ.க.விற்குள்ளேயே எழுப்பப்படுகிறது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க விவகாரத்தில் அருண் ஜெட்லியிடம் மண்ணைக் கவ்விய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க.வின் தர்பங்கா தொகுதி எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத், “இவை போன்ற பிரச்சினைகளைக் கட்சிக்குள் ஏற்படுத்தி, மோடி அரசுக்குத் தலைவலி ஏற்படுத்தி வருவது அருண் ஜெட்லிதான். அவர் தன்னை மிஞ்சி யாராவது கட்சியிலும் ஆட்சியிலும் வளர்ந்துவிட்டால், அவர்களைக் காலி செய்ய தந்திரமான காரியங்களைச் செய்யத் தொடங்கி விடுவார்” என வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, அருண் ஜெட்லியைப் புல்தரையில் மறைந்திருக்கும் பாம்பு எனச் சாடியிருக்கிறார்.
இது மட்டுமின்றி, “ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுபோனதில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக லலித் மோடியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள அமைப்புகள், ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவில் நடத்த அனுமதி கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரிய கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த அருண் ஜெட்லியை, சரத் பவாரை, ராஜீவ் சுக்லாவை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை?” எனக் கேட்டு, இந்த விவகாரத்தின் இன்னொரு பக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கல்வித் தகுதி மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் 200 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜா முண்டே
சுஷ்மா, வசுந்தரா ராஜே தொடர்பான செய்தியை வெளியிட்ட இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகை ரூபர்ட் முர்டோக்கிற்கு சொந்தமானது என்றும், ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையைத் தனக்குத் தரவில்லை என்பதற்குப் பழிவாங்கத்தான் முர்டோக் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிளறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் லலித் மோடி.
“காங்கிரசு ஆட்சியில் அமைச்சராக இருந்த சசிதரூர் தனது மனைவி சுனந்தா பெயரில் ஐ.பி.எல். கொச்சி அணியை ஏலம் எடுத்ததை அன்று நான் அம்பலப்படுத்தியதனால்தான், அன்று நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அடுக்கடுக்காக என்மீது வழக்கு போட்டார். தற்பொழுது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் தனிச் செயலர் ஓமிதா பாலுக்கு சர்வதேச ஹவாலா கடத்தல் பேர்வழி நாக்பாலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்புப் பணம் வெளியேறி, அது சுவிஸ் வங்கிகளில் போடப்படுவதற்கு நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். மறுக்க முடியுமா?” என்று இன்னொரு குண்டையும் வீசியிருக்கிறார் லலித் மோடி.
சுஷ்மா-லலித் மோடி உறவு அம்பலமான அடுத்த நாளிலேயே, லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேக்கும் இடையேயான முப்பது ஆண்டு கால நட்பும், வர்த்தக உறவுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து லலித் மோடியைத் தேசியவாத காங்கிரசு கட்சித் தலைவர் சரத் பவார், இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், மும்ப போலீசு கமிஷனர் ராகேஷ் மிஷ்ரா உள்ளிட்டுப் பலரும் இலண்டனில் சந்தித்திருப்பது வெளியானது. லலித் மோடிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
ஒருவகையில் லலித் மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிடலாம். கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகிய அனைத்திலும் உள்ள பிரமுகர்களைத் தனக்காக அணிவகுத்து நிற்க வைத்திருக்கிறார். தன் மீது தாக்குதல் வரும் பட்சத்தில் யாருடைய இடுப்புத் துணியை உருவுவதற்கும் அவர் தயங்கமாட்டார்.
***
லலித் மோடி மலத்தொட்டிக்குள் கிடக்கும் குண்டு. அவர் மீதான விசாரணையை மன்மோகன் சிங் ஆட்சியும், மோடி ஆட்சியும் கிடப்பில் போட்டிருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கக் கூடும். எனினும், அந்த குண்டு வெடித்தால் அத்தனை பேரும் மக்கள் மத்தியில் நாறி விடுவோம் என்ற காரணத்தினால், ‘பொது நன்மை கருதியே’ யாரும் அவரை சீண்டத் தயங்குகிறார்கள். கெடு வாய்ப்பாக சின்ன மோடி என்ற இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விடிந்துவிட்டது.
பிரதமர் பதவியையும் கட்சித்தலைவர் பதவியையும் சதித்தனமாக கைப்பற்றியிருக்கும் மோடி – அமித் ஷா கும்பல், ஒரே ஆண்டில் இப்படி சிக்கித் தவிப்பது குறித்து காங்கிரசை விடவும் மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் பா.ஜ.க. தலைவர்களாகத்தான் இருப்பர் என்பதில் ஐயமில்லை. அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, சவுகான், ராஜே போன்ற பலரும் தங்களது எதிரிகள் என்று மோடி-ஷா கும்பலுக்கு தெரியும். ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வைத் தன் செல்வாக்கின் கீழ் வைத்துக் கொண்டுள்ள வசுந்தரா ராஜே, “நானாகப் பதவி விலக மாட்டேன்” என்று மோடிக்கு தண்ணி காட்டுகிறார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராஜேவை நீக்கலாம். ஆனால் அவர் மோடிக்கு வெளிப்படையான சவாலாகி விடுவார். கட்சியும் கலகலத்து விடும்.
ராஜேவை நீக்கினால் சுஷ்மாவை நீக்காமலிருக்க முடியாது. இரண்டு பேரை மட்டும் நீக்கினால், பிறகு வியாபம் ஊழல் சவுகான், மகாராஷ்டிராவில் பங்கஜா முண்டே என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி, மகாராஷ்டிரா கல்வியமைச்சர் வினோத் டாவ்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகிய மூவரும் தமது கல்வித் தகுதி குறித்து பொய்த்தகவல்களையும், போலிச்சான்றிதழ்களையும் தந்திருப்பது அம்பலமான பிறகும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரசு கூட்டணி ஆட்சியிலாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசா, பவன் குமார் பன்சால், அஸ்வின் குமார் ஆகியோரை நீக்க முடிந்தது. மோடியின் தனிப்பெரும்பான்மை ஆட்சியோ தடுமாறுகிறது. ஏற்கெனவே மோடியைப் பயந்தாங்கொள்ளி என்று காங்கிரசு கேலி பேசுகிறது. கட்சிக்குள்ளேயும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்புகின்றன.
ல. மோடியை இலண்டனுக்குத் துரத்திய ந.மோடி!
இன்று லண்டனில் இருக்கும் சின்ன மோடியைப் பிடித்துக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விழுந்திருக்கிறது. ஆனால், லலித் மோடி இலண்டனுக்கு ஓட நேர்ந்ததற்கு காரணமே நரேந்திர மோடிதான் என்ற விவகாரம் எத்தனை பேருக்குத் தெரியும்?
2008-ல் ஐ.பி.எல். சூதாட்டம் லலித் மோடியால் தொடங்கப்பட்டு, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா போன்றோரெல்லாம் ஆளுக்கு ஒரு டீமை விலைக்கு வாங்கி கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்த நிலையில், தானும் ஒரு டீமை விலைக்கு வாங்கவேண்டுமென அதானி ஆசைப்பட்டார். எனவே, நரேந்திர மோடியும் அவ்வண்ணமே ஆசைப்பட்டார். ந.மோடிக்கு ஒரு அணியை வாங்கித்தருவதாக ல.மோடி வாக்களித்திருந்த நிலையில், அதனை கொச்சி அணி என்ற பெயரில் லவுட்டிக் கொண்டு போய் விட்டார் சுனந்தா புஷ்கர். ஆத்திரமடைந்த ல.மோடி, ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் விதிகளை மீறி, ஏலம் தொடர்பான உள் விவகாரங்களைப் போட்டு உடைத்ததுடன், புஷ்கருக்குப் பின்னால் இருந்தது அன்றைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்றும் குற்றம் சாட்டினார். சசி தரூர் பதவி இழந்தார். அதன் தொடர் விளைவாக லலித் மோடி ஐ.பி.எல் இலிருந்து வெளியேற்றப்பட்டார். அதானி விவகாரத்துக்காக அன்று ல.மோடி மீது நடவடிக்கை எடுத்தவர்களில் முக்கியமானவர் அருண் ஜெட்லி.
தோல்வியைச் சீரணிக்க முடியாதவரான அன்றைய குஜராத் முதல்வர் ந.மோடி, சசி தரூரின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கேர்ல் பிரண்டு என்று சுனந்தா புஷ்கரை கீழ்த்தரமான முறையில் ஏசினார். இன்று சுனந்தா புஷ்கரின் சந்தேக மரணத்துக்காக சசிதரூர் விசாரிக்கப்படுகிறார்.
பெரிய மோடியின் ஆசையை நிறைவேற்ற முனைந்து, அதன் விளைவாக பதவி இழந்து இலண்டனுக்கு ஓட நேர்ந்த சின்ன மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான சூழலில் இருக்கிறார் பெரிய மோடி.
அலட்சியப்படுத்தப்பட்டு குமுறிக் கொண்டிருந்த அத்வானி அதனை தொடங்கிவைக்கிறார். தன் மீது ஹவாலா குற்றச்சாட்டு வந்தபோது, தான் உடனே ராஜினாமா செய்ததை நினைவு கூர்ந்து, “பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்” என்று கூறி, மோடிக்கும் தன்னைக் கைவிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும் சேர்த்து அல்லையில் ஒரு குத்து குத்துகிறார். மோடியை பேசச்சொல், அமித் ஷாவைப் பேசச்சொல் என்று ஆளாளுக்கு தொலைக்காட்சிகளில் சவால் விடுகிறார்கள்.
இதற்கு மேலும் பேசாமலிருக்க முடியாது, பேசவும் முடியாது என்ற நிலையில் இருக்கும் சங்க பரிவாரத்தின் தலைமை, கோவிந்தாச்சார்யாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. “சுஷ்மாவும் ராஜேவும் ராஜினாமா செய்யவேண்டும். இந்த அரசு மதிப்பீடுகளை இழந்து விட்டது. தன்னுடைய கவுரவம் போக்கொண்டிருக்கிறது என்பதை நரேந்திர மோடி உணரவேண்டும்” என்று பேட்டி கொடுக்கிறார் கோவிந்தாச்சார்யா.
ஊழல் இல்லை என்பதுதான் ஒரு ஆண்டு ஆட்சியின் முக்கிய சாதனை என்று சொல்லி வாய் மூடுவதற்குள் கிளம்பி விட்டது சின்ன மோடி விவகாரம். பதினைந்து நாட்களுக்கும் மேலாக எல்லாத் திசைகளிலிருந்தும் அன்றாடம் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. யார் மீது யார் கல்வீசினாலும் அந்தக்கல் கடைசியில் பிரதமரின் மண்டையைத்தான் பதம் பார்க்கிறது. சர்வதேச யோகா தினம், பெண் குழந்தைகள் தினம், மன் கி பாத், “டிஜிட்டல் இந்தியா” என்று எத்தனை நாட்கள்தான் வடிவேலு கணக்காக வலிக்காதது போல நடிக்க முடியும்?
தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், உறுதியான நடவடிக்கையாக எதையாவது செய்ய வேண்டும். இறுதியில் பார்த்தால், எதுவும் செய்திருக்கக்கூடாது. இதை எப்படிச் செய்வது என்பதுதான் நரேந்திர மோடியின் முன் உள்ள கேள்வி.