Saturday, May 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 821

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

30
A demonstrator taped a bill to a statue of George Washington at the Federal Hall National Memorial on Wall Street during a protest against the proposed $700 billion Wall Street bail-out in New York on September 25, 2008. In response to the global financial crisis, protesters, from a variety of activist groups, denounced the capitalist system, Wall Street and the administration of US President George W, Bush. AFP PHOTO/Nicholas ROBERTS (Photo credit should read NICHOLAS ROBERTS/AFP/Getty Images)

இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்.

தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களைக் கண்டோரெல்லாம் “இனி எல்லாம் பிரைவேட்தான், பேஷ், பேஷ் ரொம்ப நன்னாகப் போறது” என்று சப்புக்கொட்டினர். கல்வி, காப்பீடு, சுகாதாரம், நிதி, அத்தனையிலும் தனியார் மயம் வெள்ளமென ஓடியது. அரசுக் கட்டுப்பாடுகள் எனும் கோட்டா ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு தாரளமயம் திறந்து விடப்பட்டது. கோக், பெப்சி முதல் எண்ணற்ற நுகர்வுப் பொருட்கள் ஒரு அடியில் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன.

பங்குச் சந்தை முன்னெப்போதையும் விட பகாசுரமாக வளர்ந்தது. ஒவர் நைட்டில் அம்பானி போன்ற முதலாளிகளெல்லாம் பில்லியனில் இலாபம் பார்க்கத் தொடங்கினார்கள். வளர்ச்சியின் அளவுகோலாக செல்பேசிகளும், வாகனங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தொலைக்காட்சி சீரியல்களும், பேரங்காடிகளும், ஏ.டி.எம்களும் அலையலையாய் வந்திறங்கின. சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் முன் இரவுபகலாய் இருந்த நீண்டவரிசை ஆடு விழுங்கிய மலைப்பாம்பு போல எப்போதும் கிடந்தது.

இப்படி உலகமயம் பூத்துக்குலுங்கிய நாட்டில்தான் இதே காலத்தில்தான் இந்த உலகமயக் கொள்கைகள் காரணமாக ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப் புறங்களில் வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களை அப்பிக் கொண்டனர். பின்தங்கிய மாநிலங்களிலிருந்து நாடோடிகளாய் புலம் பெயருவது வாடிக்கையானது. கல்வியும், சுகாதாரமும் காசு உள்ளவனுக்கு மட்டும் என்றானது. இருப்பினும் தனியார் மயத்தின் மகிமைகளை குறிப்பாக நடுத்தர வர்க்கம் மறப்பதற்குத் தயாராக இல்லை. இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை மதவெறியை விட அதிகமான முதலாளித்துவ வெறியுடன் ஆதரித்து வந்தன.

எக்னாமிஸ்ட் போன்ற பத்திரிகைகளெல்லாம் இனி உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது எனவும் யாரும் தனியாக வாழ முடியாது என்றும் பிரகடனம் செய்தன. சோசலிச முகாம் அழிந்த நிலையில் முதலாளித்துவமே இனி உலகின் யதார்த்தம் என்ற கொள்கை முழக்கம் வெற்றிகரமாய் அறிவிக்கப்பட்டது. உலக வங்கியும், ஐ.எம்.எஃப்பும், உலக வர்த்தகக் கழகமும் புதிய உலகின் சக்கரவர்த்திகளாக முடிசூட்டப்பட்டார்கள்.

இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உலகமயம் என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதை திவாலான அர்ஜென்டினா, மெக்சிகோவும், 95களில் பொருளாதா பூகம்பங்களைச் சந்தித்த தென்கிழக்காசிய நாடுகளும் அவ்வப்போது எடுத்துக் காட்டின. அப்போதெல்லாம் இவையெல்லாம் விதிவிலக்குகள், காலப்போக்கில் பிரச்சினைகள் சரியாகிவிடும், சந்தையின் வளர்ச்சி எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து விடும் என்று ஜோசியம் சொன்னார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

தனிநபர்களிடம் மேலும் மேலும் சொத்து சேர்வதும், பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், குறிப்பிட்ட தொழிற்சாலையில் திட்டமிட்ட உற்பத்தியும், நாட்டளவில் அராஜக உற்பத்தியும் நிலவுவதும் என முதலாளித்துவ சமூகத்தின் இரு முரண்பாடுகளை காரல் மார்க்ஸ் தனது மூலதனம் ஆய்வில் நிறுவியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் முற்றும்போதுதான் பலவிதமான பொருளாதார நெருக்கடிகளும், போர்களும் வெடிக்கின்றன. உலகில் தற்காலிகமாக சோசலிசம் மறைந்திருக்கலாம், ஆனால் மார்க்சியம் என்ற சமூக அறிவியல் மறையாது. ஆம். தற்பொது அந்த விதிப்படி உலக முதலாளித்துவத்தின் தலைமையிடமான அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசிகளை அளித்திருக்கின்றன. வால்ஸ்டீரீட் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைநகரத் தெரு கடந்த சில நாட்களாக அதிர்ச்சியில் புதையுண்டிருக்கிறது. இது அமெரிக்காவோடு முடியாமல் பிரச்சினையும் உலகமயமாகியிருக்கிறது.

2001இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காய்தாவால் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு விமானப் போக்குவரத்து, சுற்றுலா என்று பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதை ஈடுகட்ட ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்தது அமெரிக்கா. இதனால் போர்தளவாட உற்பத்தியும், எண்ணெய் தொழிலும் அபராமாக இலாபம் சம்பாதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அப்படி ஒன்றும் நடந்து விடவில்லை. ஈராக் போர் அமெரிக்காவின் பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது.

இந்நிலையில் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்த கடன் என்ற போதையை நிபந்தனைகள் இல்லாமல் நிதி நிறுவனங்கள் மூலம் அளித்தார்கள். ஏற்கனவே ஆளாளுக்கு பத்து கடன் அட்டைகள் வைத்திருக்கும் அமெரிக்காவில் இந்த புதிய கடன் வெள்ளமெனத் திறந்து விடப்பட்டது. கொஞ்ச நாளைக்கு எல்லா அமெரிக்கர்களும் தின்று தீர்த்தார்கள். முக்கியமாக வீட்டின் அடமானத்தை வைத்து வாங்கப்பட்ட கடன்கள் பல கைககள் மாறி கடன் குட்டிகள் போட்டு பண செயலாக்கத்தை பன்மடங்காக்கியது. இறுதியில் கடன் வசூலிக்கும் போது நிபந்தனையில்லாத கடன்களை வசூலிக்க முடியவில்லை. வீட்டு மதிப்பும் பாதாளத்தில் இறங்கியது. இதைச் சரிக்கட்ட நல்ல கடன், கெட்ட கடன் எல்லாவற்றையும் கலந்து ஒரு காக்டெயில் மாதிரி ரெடிபண்ணி நிதி நிறுவனங்கள் பிரித்துக்கொண்டன. இதன் மூலம் நட்டத்தை தவிர்க்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. மேலும் சரிவை எல்லா நிறுவனங்களும் சேர்ந்து சந்தித்தால்தான் தப்பிக்க முடியும் என்ற காரிய வாதமும் அதில் இருந்தது. இதைத்தான் சப் பிரைம் லோன் நெருக்கடி என்று அழைக்கிறார்கள். ஆனால் லோன் மட்டும் வந்தபாடில்லை.

தேவைக்கு அதிகமான உற்பத்தி, வாங்குவதற்கு ஆளில்லை. அதனால் கடன் கொடுத்து வாங்க வைக்கிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் தீடிரென்று விண்ணுக்கு பாய்கிறது. தேவை முடிந்ததும் பாதாளத்தில் சரிகிறது. முந்தைய மதிப்பில் கடன் வாங்கியவர்கள் தற்போதைய குறைவான மதிப்பை வைத்துக் கடனைக் கட்ட முடியவில்லை. வீடுகளின் உண்மையான பயன் மதிப்பு செயற்கையாக உப்பவைக்கப்பட்ட போது ஒன்றும் தெரியவில்லை. உப்பியது வெடித்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை.

வராக்கடன்கள் கைமாறி கடைசியில் போய்ச்சேர்ந்த நிறுவனங்கள் கடனை வசூலிக்க முடியாமல் மாட்டிக்கொண்டன. இதில் கொள்ளை இலாபம் அடித்தது யார், சுமாரன இலாபம் சுருட்டியது யார், நட்டமடைந்தது யார், மக்களுக்கு என்ன இழப்பு இன்னபிறவையெல்லாம் தேவ ரகசியங்கள். நமக்கு புரியாத உபநிடதங்களும் கூட. இவற்றை சி.ஐ.ஏ புலனாய்வு செய்தாலும் கண்டுபிடிக்க முடியாத மறை பொருளாகும். மொத்தத்தில் ஊக வணிகமும், எதிர்பார்ப்பு வணிகமும், பங்குச்சந்தைச் சூதாட்டமும் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீர்க்குமிழ் உடைந்து விட்டது. முதலாளித்துவத்தின் இலாபம் தனக்குத் தானே தோண்டிக்கொண்டுள்ள சவக்கிடங்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மார்க் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதைத் தொடர்ந்து உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமான் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி எனப்படும் அமெரிக்கன் இன்டர் நேஷ்னல் குரூப் நிறுவனமும் திவாலாகியது. தற்போது அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாஷிங்டன் மியுட்சுவல் மற்றும் மார்கன் ஸ்டான்லி, கோல்ட் மேன் சாஸ் ஆகிய நிதிக் கழகங்களும் மஞ்சள் கடுதாசி வரிசையில் காத்திருக்கின்றன. மொத்தத்தில் வால் தெருவிலிருக்கும் நிதி நிறுவனங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டன.

சரி தனியார் மயக் கொள்கைப் படி வல்லவன் வாழ்வான், முடியாதவன் சாவான் என்று விட வேண்டியதுதானே? அதுதானில்லை. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பல்லாயிரம் பேர் வேலையிழப்பர், பொருளாதாரம் சீர் குலையும், ஆடம்பர வாழ்க்கை மட்டுமல்ல அத்தியாவசிய வாழ்க்கையைக் கூட இழக்க நேரிடும், அமெரிக்கர்கள் நுகர்வைக் குறைத்துவிட்டால் அதற்காக உலகமெங்கும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாடுகள் பாதிக்கப்படும் என்று பலவிதமான சென்டிமென்டுகள் சொல்லப்பட்டு அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணததில் கிட்டத்தட்ட 35 இலட்சம் கோடி ரூபாயை கொடுத்து இந்நிறுவனங்களை மீட்கப் போகிறது. அதற்காக புஷ் கையெழுத்திட்டு பாராளுமன்றத்திலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் அரசுடைமையாக்கப் படவும் இருக்கின்றன. இந்த நிவாரணப் பணத்தை அந்த நிறுவனங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம, அமெரிக்க சட்டப்படி கணக்கு தணிக்கை தேவையில்லை, என்றெல்லாம் சலுகைகள் வேறு!

எல்லாவற்றையும் தனியார் மயம் என்று பேசியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? இழப்பு என்று வந்ததும் அரசு தலையிட்டு பணம் கொடுத்து அரசுடைமையாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரு சோசலிச நாட்டில் அனைத்தும் மக்களுடைமையாக்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி செய்யும் போது மட்டுமே இந்த பிரச்சினைகளை வரவிடாமல் செய்ய முடியும் என்று மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தை வன்மத்தோடு எதிர்த்த நாடு தனது முதலாளிகளைப் பாதுகாக்க நிறுவனங்களை அரசுடைமையாக்குகிறது என்றால் இதுதான் வரலாற்றின் கவித்துவமான நீதி!

இந்தப் பொருளாதாரச் சரிவால் அமெரிக்காவின் நிதி, காப்பீடு, வங்கி நிறுவனங்களுக்கு அவுட் சோர்சிங் செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதி இலாபத்தை இழக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் 25,000பேருக்கு மேல் வேலையிழப்பும் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்குறைப்பு, செலவு குறைப்பு என்று மாற்றப்படும் ஐ.டி துறையின் பொற்கால வாழ்க்கையை இனி மலரும் நினைவுகளாய் பாடவேண்டியதுதான். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் பலநாடுகளிலும் சேவைத் துறைசார்ந்த நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சீர்குலைவால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முதலாளித்துவ அறிஞர்களே கணிக்கிறார்கள். அடுத்த பலிகடா யார் என்று காத்திருந்து பார்ப்போம். ஓவர் நைட்டில் பில்லியனரான மொள்ளை மாறிகளெல்லாம் அதே ஓவர் நைட்டில் தெருவுக்கு வருவதும் நடக்கப் போகிறது. ஆனாலும் மேற்கண்ட திவாலான நிறுவனங்களின் முதலாளிகளும், தலைமை நிர்வாகிகளும் திவாலாவதற்கு முன்னால் எச்சரிக்கையாக முடிந்த அளவை சுருட்டியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதையெல்லாம் யார் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பது? பின்லேடனையே இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இதில் பணலேடன்களை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பது?

பூச்சி மருந்து குடித்த விவசாயிகளைக் கொலை செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் நாயகன் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அவல நிலைக்காக கண்ணீர் விடுகிறார். ஏதாவது செய்து உதவ வேண்டுமே எனத் துடிக்கிறார். அமெரிக்கா பொருளாதாரத்தைச் சூறாவளி தாக்கியிருக்கும் இச்சூழலில்தான் இந்தியவை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 123 ஒப்பந்தம் ஒரிரு நாட்களில் நிறைவேறப் போகிறது. எல்லா வகை நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் இவ்வொப்பந்தம் காலாவதியான அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக இந்திய மக்களின் சில இலட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்காவுக்கு தாரை வார்ப்பதோடு, இறையாண்øமையையும் சேர்த்துக் கொடுக்கிறது. மட்டுமல்ல அமெரிக்காவின் நலனுக்கு உட்பட்டு இந்தியா செயல்படுகிறது என்று ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் மதிப்பீடு செய்து இந்த ஒப்பந்தத்தை அமல் படுத்துவராம். இது பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் விரிவஞ்சி இங்கே தவிர்க்கிறோம். அமெரிக்காவின் தெற்காசிய பேட்டை அடியாளாக இந்தியா மாறப்போவது மட்டும் உறுதி. எதிர்காலத்தில் ஈரானின் மீது அமெரிக்கா படையெடுக்கும் பட்சத்தில் இந்தியா அதன் இராணுவத்தளமாக செயல்படுவது நிச்சயம். இந்திய அரசில் இருக்கும் சில அமெரிக்க கைக்கூலிகளால் இது சாத்தியாமாயிருக்கிறது.

இவ்வொப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அம்பானி முதலான தரகுமுதலாளிகள் பாராளுமன்ற வியாபாரத்தில் இறங்கி காரியத்தை சாதித்தார்கள். அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு கட்சிகளும் ஒன்றுபட்டு ஆதரித்தார்கள். இடது சாரி கட்சிகள் மட்டும் வேறு வழியின்றி அதுவும் காலம் கடந்த எதிர்ப்பைக் காட்டினார்கள். கனிமொழி தி.மு.க சார்பில் சிங்கிற்கு மலர்க்கொத்து கொடுத்து ஒப்பந்தம் நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒட்டுமொத்த அரசியல் உலகும், இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்குவதற்கு கர்ம சிரத்தையோடு வேலை செய்திருக்கிறது என்பதைத்தான். ஆயினும் அமெரிக்காவைத் தாக்கிய பொருளாதாரச் சூறாவளி இந்தியாவையும் தாக்குவதற்கு அதிக காலம் பிடிக்காது. அப்போது இந்த இந்திய அடிமைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

பூலோக சொர்க்கமான அமெரிக்காவிலேயே தனியார் மயம், சந்தை, முதலாளித்துவ உற்பத்தி முறை, அபரிதமான இலாபம் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறது முதல் முறையல்ல. ஏற்கனவே 1930களில் உலகப் பெருமந்தம் என்ற பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடங்கி உலகமெங்கும் ஏழைகளை அழித்துச் சென்றது. அப்போது அமெரிக்காவில் ஒரு புறம் கஞ்சித் தொட்டி திறந்தும், மறுபுறம் விலை வீழ்ச்சியடைந்த கோதுமையை கடலில் கொட்டியும் நெருக்கடியை சமாளிக்க முயன்றார்கள். இப்போதோ அதை விட பன்மடங்கு நெருக்கடி வந்திருக்கிறது. தேவனே வந்து மீட்புப் பணி செய்தாலும் காப்பாற்ற முடியாத நெருக்கடி.

ஏழை நாடுகளைச் சுரண்டி தன் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கும் அமெரிக்க நெருக்கடியை மற்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் கவலையோடுதான் பார்க்கின்றன. இதனால் அந்த நாடுகளும் பாதிப்பு அடையும் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஜி எட்டு மாநாட்டிலேயே இதைப் பற்றி பேசி கூட்டாக நெருக்கடியை சமாளிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் நோபல் பரிசுபெற்ற பொருளாதார வல்லுநர்களை அதிபர்களாக நியமித்தாலும் இப்போதைய நெருக்கடி அவ்வளவு சுலபத்தில் தீர்ந்து விடாது. சந்தையின் பாசிசம் உருவாக்கிய அராஜகம் அதன் அழிவுகளை செய்து விட்டுத்தான் தணியும். எனினும் இறுதியில் இந்த அழிவுகளை சுமக்கப் போகிறவர்கள் உலகின் பெரும்பான்மையான மக்கள்தான். அவர்களைப் பற்றி கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இதுநாள் வரையிலும் அறியாமையில் உலகமயத்தை ஆதரித்து வந்த பலர் இனியாவது விழித்துக் கொண்டு எதிர்க்க வேண்டியது அவசியம். தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே உலகமயத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி. அந்த வழியை சாதிக்க வேண்டுமென்றால் அரசியல் களத்தில் வெல்லவேண்டும். உலகமயத்தை ஆதரித்து அமல்படுத்திவரும் அரசியல், முதலாளித்துவ வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டுவது ஒன்றே இந்த அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.

 

 

ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??

65

“ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது” என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: “பர்தாவில் ஷகீலா!”
“எந்த ஷகீலா?”ன்னு அப்பாவி மாதிரி கேட்கக்கூடாது. எந்த ஷகீலாவை எதிர்பார்த்து உள்ள வந்தீங்களோ, அந்த ஷகீலாவே தான்!

2003ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக் கலைவாணி திரையரங்கில் ஓடிய ‘இளமைக் கொண்டாட்டம்’ என்ற திரைப்படத்தில் சென்சார் செய்யாத காட்சிகளில் ஷகீலா நடித்துள்ளார் என்பதற்காக அவர் மீதும், அவருடன் நடித்துள்ள நடிகர் வினோத் மீதும், திரையரங்க நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் தணிக்கை செய்யப்படாத படத்தைத் திரையிடுதல் மற்றும் ஆபாசமாக நடித்துக் கூட்டம் கூட்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் வாய்தாவுக்காக நெல்லை வந்த ஷகீலா பர்தாவில் மறைந்து கொண்டு வந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தையே மக்கள் கூட்டத்தால் நிரப்பி விட்டார். நீலத்திரையில் பார்த்த கனவுக் கன்னி கருப்புத் திரைக்குள் ஒளிந்து வந்த போதிலும், தமது கனவுக் கன்னியை நேரில் தரிசிக்கும் பரவசமான வாய்ப்பை அங்கிருந்த மக்கள் இழக்க விரும்பவில்லை. ஷகீலாவின் வாய்தா என்றைக்கு என்ற தேதியை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கவர் பண்ண காமிராவோடு நிருபர்களும் வந்து விட்டார்கள்.வழக்கை அக்டோபர் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார் நீதிபதி. தேதியை ஷகீலா குறித்துக் கொண்டாரோ இல்லையோ, நிருபர்களும் ரசிக மகாஜனங்களும் நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

நியூஸ் இனிமேல்தான் ஆரம்பிக்கிறது. பர்தாவில் ஷகீலா என்ற சேதியைக் கேள்விப்பட்டுக் கொதிப்புற்றுப் போன தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) நெல்லை மாவட்டத் தலைவர் பாளை ரஃபீக் பத்திரிகைகளிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

“அன்றைக்கு வெள்ளிக்கிழமை நான் தொழுகைக்கு கிளம்பிய நேரம்தான் நடிகை ஷகீலா பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வந்திருப்பதாக போன் வந்தது. நான் அன்றைக்குத் தொழுகைக்கு மட்டும் போகவில்லை என்றால் அவரை செருப்பால் அடித்து கோர்ட்டில் இருந்து ஓட ஓட விரட்டியிருப்பேன். பர்தா என்பது முஸ்லீம் பெண்களின் கண்ணியம், கலாச்சாரத்துக்குரிய ஆடை. அந்த ஆடையை இப்படிப்பட்ட ஒரு பெண்மணி தன்னை பிறர் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்து வருவதென்பது முஸ்லீம்களின் கோபத்தைக் கிளறியிருக்கிறது. திரையில் பலர் கண் முன்பு பச்சை கொச்சையாக நடிக்கும் ஒரு நடிகை, நீதிமன்றத்திற்க்கு மட்டும் யோக்கியமாய் பர்தா அணிந்து வருவது என்ன நியாயம்? அடுத்த முறை இதே பாளை கோர்ட்டிற்கு ஆஜராக வரும்போது அவருக்குப் பாடம் கற்பிப்போம். எங்கள் மகளிரணிப் பெண்கள் திரண்டு வந்து ஷகீலாவிற்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். அது என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்”

இதற்கு ஷகீலாவின் பதில் வருமாறு:
” நான் உருது பேசும் ஒரு முஸ்லீம் பெண். நான் பர்தா அணிந்து வருவதில் ஒன்றும் தப்பில்லையே. வறுமை காரணமாகத்தான் சினிமாவில் நடிக்கப் போனேன். கிளாமராக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை. படமெடுக்கும்போது டீசண்டாகத்தான் எடுப்பார்கள். படத்தை தியேட்டரில் ஓட்டும்போது இடையில் பிட்டை ஓட்டி விடுவார்கள். அதனால்தான் 2002க்குப் பிறகு மலையாளப் படங்களில் நடிப்பதையே விட்டுவிட்டேன். நான் பர்தா அணிவது தப்பு என்று சொல்பவர்கள் நான் பணத்துக்காக கஷ்டப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள்?”

இரு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டன. அடுத்த வாய்தாவுக்காக ஷகீலா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னாலேயே இதற்குத் தீர்ப்பு என்ன என்று கண்டுபிடித்தாக வேண்டுமே! வழக்கிற்க்கு உள்ளே போவோம்.

“தேவ்டியாளுக்கு பர்தா எதுக்கு?” என்பது ரபீக் எழுப்பும் முதல் பிரச்சினை. “கண்ணியமான முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையான பர்தாவை கண்ணியமற்ற ஷகீலா அணிந்து வருவதால், பர்தா போட்ட பெண்களின் கண்ணியம் காற்றில் பறந்து விடும்” என்பது இரண்டாவது பிரச்சினை. “இது முஸ்லிம் பெண்களின் உடை என்பதால் ஷகீலாவின் நடவடிக்கை முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்தியிருக்கிறது” என்பது மூன்றாவது பாயிண்ட்.

ரபீக்கின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. சமீப காலமாக பலான வழக்குகளில் கைதாகும் மேட்டுக்குடிப் பெண்கள், காமெராவிலிருந்து தப்பிக்கத் தோதான கோர்ட் சீன் டிரஸ்ஸாக பர்தாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்து மதவெறியர்களின் தாக்குதல், அரசின் அடக்குமுறை, முஸ்லிம் என்றாலே பயங்கரவாதி என்று ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் சித்தரிப்பு ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் இசுலாமிய சமூகத்தினருக்கு, இந்த பர்தா விவகாரம் புண்ணில் உப்பு தேய்த்தது போல இருந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் முஸ்லிம் பெண்களுடைய கண்ணியத்தின் அடையாளம் பர்தா என்ற விளக்கத்தை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆண்களின் கண்ணியமற்ற காமவெறிப் பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசம்தானே பர்தா? அப்படிப் பார்த்தால் அதனை ஆண்களுடைய பொறுக்கித்தனத்தின் அடையாளம் என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்!

ஷகீலாவை விடுங்கள். எவ்வளவு ‘கண்ணியமான’ முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் பர்தா போடவில்லை என்றால் “அவளும் கண்ணியமற்றவள்தான்’ என்பதுதானே மதவாதிகள் வழங்கும் தீர்ப்பு! பெண்களின் கண்ணியம் ஒழுக்கம் கற்பு போன்ற எல்லாவற்றையும் கண்காணிக்கும் அதிகாரத்தை ஆண்கள் எடுத்துக் கொள்வதை அசிங்கம் என்பதா அயோக்கியத்தனம் என்பதா? ஷகீலா பிரச்சினை இருக்கட்டும். பர்தா போடாத இசுலாமியப் பெண்களளைக் கொலை செய்த தலிபான்கள் கூட, இசுலாமியப் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் கொலையாகத்தானே அதனை சித்தரித்துக் கொண்டார்கள்? சென்ற ஆண்டு கோவையிலும் மேலப்பாளையத்திலும் ‘நடத்தை சரியில்லாதவர்கள்’ என்று குற்றம் சாட்டி மூன்று முஸ்லிம் பெண்களைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்கள் சில முஸ்லிம் அடிப்படைவாதிகள். பாகிஸ்தானிலோ, இத்தகைய சம்பவங்கள் கணக்கில்லாமல் நடக்கின்றன. கேட்டால் “எம் பொண்ட்டாட்டிய நான் அடிப்பேன் நீ யார்டா கேக்க?” என்ற பாணியில் “என் மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான் கொல்லுவேன். நீ யார் கேக்க?” என்று பதில் சொல்லக் கூடும்.

கேட்பவன் பாதிக்கப் பட்டவனாகவே இருந்தால்? பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா என்ற ஏழைச் சிறுமி, குவைத்துக்கு வீட்டு வேலை செய்யப் போனாள். வீட்டுக்கார ஷேக் அந்தச் சிறுமியைக் கசக்கி நாசமாக்கினான். பொறுக்க முடியாத சாரா ஷேக்கை குத்திக் கொன்றாள். ஏன் கொலை நடந்தது என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டது. இருந்தாலும் தீர்ப்பு என்ன? சாராவுக்குத் தூக்கு தண்டனை! இந்த அநீதியை எதிர்த்து பிலிப்பைன்சில் போராட்டமெல்லாம் நடந்த பிறகு அது ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டது.
கண்ணியத்துக்கு ஆயுள் தண்டனை!

“ஷகீலா பர்தா போட்டுக் கொண்டு வந்தால் விரட்டி விரட்டி அடிப்போம்” என்கிறார் ரபீக். இதே நெல்லையில் ஷகீலா படம் பார்க்கப் போன முஸ்லிம் ஆண்களை இவர்கள் எப்போதாவது விரட்டி அடித்ததுண்டா? ஆபாசம் ‘பிட்’ படத்தில் மட்டுமா இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற அதைவிடக் கேவலமான படங்களை முஸ்லிம் ஆண்கள் பார்ப்பதில்லையா? முஸ்லிம்கள் யார் வீட்டிலும் டிவி இல்லையா? யாருமே ‘மானாட மயிலாட’ பார்ப்பதில்லையா? அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? கேட்டால் “சொல்லத்தான் முடியும். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்?” என்பார்கள். அந்த நியாயம் பெண்களுக்கு மட்டும் பொருந்தாது போலும்!

ஒரு பெண் அரை அம்மண நடனம் ஆடி, அதனை ஆண்கள் பார்த்தால் அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஏனென்றால் ஆண்கள் இறைவனாலேயே ‘ஜொள்ளு பார்ட்டிகளாக’ படைக்கப்பட்டவர்கள். ஆனபடியினாலே, அவர்கள் ஜொள்ளு விடும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க வேண்டியது, (அதாவது பர்தா அணிய வேண்டியது) பெண்களின் கடமை. மீறினால் தண்டனை!

“ஷகீலா பர்தா அணிந்து வரக்கூடாது” என்ற கோரிக்கைக்கு முஸ்லிம் பெண்களையெல்லாம் திரட்ட வேண்டியதில்லை. விசயத்தை சொன்னால் போதும்! சர்வ மதங்களைச் சேர்ந்த ஆண் ரசிகர்ளும் உற்சாகமாகத் திரண்டு வந்து ஷகீலாவின் பர்தாவைக் கிழித்து எறிந்து விடுவார்கள். அவ்வளவு ஏன், இந்த விசயத்தில் மட்டும் இந்து முன்னணி ஆட்கள் கூட ‘மத நல்லிணக்க உணர்வுடன்’ ஆதரவும் கொடுப்பார்கள்.

இனி ஷகீலா தரப்பு வாதத்துக்கு வருவோம். பிட் படங்களில் நடித்ததற்கு ஷகீலா சொல்லும் நொண்டி சமாதானங்களான ‘வறுமை’, ‘எனக்கு தெரியவே தெரியாது’ என்ற பொய்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையே இல்லை. அந்தம்மாளின் வாதத்தை ஒரே பாயிண்டில் சுருக்கி விடலாம். “தேவையின்னா நான் பர்தா போடுவேன். தேவையில்லைன்னா அவுத்தும் போடுவேன். இரண்டுமே என்னுடைய ஜனநாயக உரிமைகள்.”

அப்படியா? ஜனநாயக உரிமை என்பதைப் பலரும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் வீட்டின் குளியலறைக்குள் அவர் அவுத்துப் போடுவது அவருடைய ஜனநாயக உரிமை. லட்சக்கணக்கான மக்கள் முன் அவுத்துப் போடுவது எதற்காக? சம்பாதிப்பதற்காக என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்.

அது ஆண்களின் காமவெறியைக் காசாக்கும் சம்பாத்தியம். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஷகீலா படம் வசூலைக் குவித்திருக்கிறது. இத்தகையப் படங்கள் ஆண்களின் “மொழியில்’ எடுக்கப் படுவதால், டப்பிங்கே தேவைப்படாமல் எல்லா மாநிலங்களிலும் ஓடியிருக்கிறது. ஷகீலாவின் படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? ‘இளைஞர்களைக் கெடுத்து விட்டது’ என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். உண்மையில் அது பெண்களைத்தான் கெடுத்திருக்கிறது.

பெண்களின் அங்கங்களை ரைட் ராயலாக மேயும் இளைஞர்களின் பார்வை, அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும் கொச்சையான கமென்டுகள், பேருந்தின் உரசல்கள், மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள், விசுவாசிகளை வதைக்கும் பாதிரிகள், சிறுமிகளைக் குதறும் அண்டை வீட்டு அங்கிள்கள், பெண்களை வலையில் வீழ்த்த வேண்டிய பட்சிகளாகவும், ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய கறித்துண்டுகளாகவும் கருதும் மாணவர்கள்.. இப்படிப் பலவிதமான மிருகங்களை உருவாக்கி வளர்த்து விட்டிருப்பதில் ஷகீலா படங்களின் பங்கு மகத்தானது. இரைக்கு அலையும் நாயைப் போலவும், கூச்ச நாச்சமற்ற மிருகங்களைப் போலவும் நெல்லை கோர்ட்டில் ஷகீலாவுக்கு கூடிய கூட்டமே, அவரது குற்றத்தின் பரிமாணத்தை விளக்கப் போதுமானது.

ஷகீலாவின் மீது ஏதோ ஒரு போண்டா கேஸ் போடப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய படங்கள் எல்லாம் சென்சார் போர்டு முத்திரையோடுதானே வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன? அவை அனுமதிக்கப்பட்டது ஏன்? அரசியல் சட்டத்தின் மொழியில் சொல்வதென்றால் அது அந்தப் படத்தை இயக்கிய படைப்பாளியின் கருத்துரிமை; ஷகீலாவுடைய கருத்துரிமை. Right to free expression!

அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் என்ன ‘கருத்தை’ சொன்னார் என்பது அன்று கோர்ட்டில் கூடிய ரசிகர்களுக்குத் தெரியும். அந்தக் ‘கருத்தை’ காணத்தான் அவர்கள் அங்கே ஓடோடி வந்தார்கள். எனினும் “தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதோ பர்தாவால் மறைப்பதோ தனது தனி நபர் உரிமை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது” என்றும் கூறுகிறார் ஷகீலா.

அந்தப் பக்கம் ரபீக்கின் மத உரிமை. இந்தப் பக்கம் ஷகீலாவின் தனிநபர் உரிமை. இரண்டு உரிமைகளுமே தத்தம் வழியில் ஆணாதிக்கத்தை வெறி கொண்டு ஆடவைக்கின்றன. இவற்றுக்கிடையில் நடக்கும் மோதலில் ‘ஷகீலாவின் பர்தா’ கிழிந்து சின்னாபின்னமானாலும் ஆகாவிட்டாலும், ஒரு உரிமை ஏற்கனவே சிக்கிச் சின்னாபின்னமாகிவிட்டது.
அதன் பெயர் பெண்ணுரிமை!

 

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

19

“ஏன் பாஸ் இத்தன பேர் சேர்ந்து அடிச்சாங்களே, நீங்க திருப்பி ஒரு அடி கூட அடிக்கலையா” ” அடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்… எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்டான்னு , அவ்வ்வ்வ்வ்வ்”
-வைகைப் புயல் வடிவேலு

22.9.08 சென்னை போரூரில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பதினோராவது மாநாட்டுப் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் பெரியாரின் பிறந்த நாள் விழாக் கூட்டத்தின் போது இந்து முன்னணிக் குண்டர்கள் புகுந்து தாக்கினர். கற்களை வீசியும், நாற்காலிகளை எரிந்தும் நடத்தப்பட்ட தாக்குதலில் பல தோழர்கள் காயமடைந்தனர். கூட்டமும் அத்தோடு முடிந்தது. கலை இலக்கியவாதிகளின் கூட்டமென்பதாலோ என்னவோ யாரும் திருப்பியடிக்கவில்லை.

இதைக் கண்டித்து த.மு.எ.ச 30.9.08 செவ்வாய்க்கிழமையன்று அதே இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தின் தலைப்பு “மதவெறித் தாக்குதலுக்கு எதிராக….”. கண்டனக் கூட்டத்தைக்கூட இந்து மதவெறிக்கு எதிராக என்று போடுவதற்கு சி.பி.எம் தோழர்கள் தயங்கும் போது இந்து முன்னணி நிச்சயமாகக் கொஞ்சிக் குலாவும் என எதிர்பார்க்கமுடியுமா?

கூட்டத்தில் பேசியவர்கள் சொன்னதை பார்க்கும் போது முந்தைய கூட்டத்தில் அப்படி ஒன்றும் இந்து மதவெறியைத் தாக்கி தோழர்கள் பேசியதாகத் தெரியவில்லை. கலை நிகழ்ச்சிகள் முடிந்து பேசும்போது ஒருவர் நமது ஊரில் மாரல் (moral) போலீஸ் ஒருவர் இருக்கிறார்; அவரால் தசாவதாரம் படம் தயாரிப்பு முடிவதற்குள் பிரச்சினை ஏற்பட்டது என்றாராம். உடனே பார்வையாளர்களில் ஒருவர் ராம கோபாலன் என்று சொன்னாராம். உடனே இந்து முன்னணியினர் தாக்கத் தொடங்கினராம். ஒருவேளை உண்மையிலேயே இந்துமதவெறியைத் விமரிசித்திருந்தால்… பாவம் அந்த அப்பாவிப் பிள்ளைகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
(படிக்க-http://santhipu.blogspot.com/2008/09/11-130-22-2008.html)

நமக்குத் தெரிந்து சி.பி.எம் கட்சியினர் பல இடங்களில் இந்து மதவெறியர்களிடமிருந்து அடி வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் கண்டனக் கூட்டத்தைத்தான் நடத்தினார்களே ஒழிய பதில் தாக்குதல் செய்யவில்லை. என்ன இருந்தாலும் ஜனநாயகவாதிகளாயிற்றே! சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பாரதி இல்லத்தில் த.மு.எ.ச கூட்டத்தில் இந்து முன்னணியினர் உள்ளே புகுந்து அடித்தனர். அதற்கும் திருவல்லிக்கேணியில் இதே போலதொரு மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற காட்டுமிராண்டிக்கால செய்கைகளெல்லாம் ஜென்டில்மென் சி.பி.எம் தோழர்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆடு பசித்தாலும் கறி தின்னாதே!

எல்லாவற்றுக்கும் மேல் டெல்லி சி.பி.எம் தலைமையகத்தையே பா.ஜ.க தொண்டர்கள் சூறையாடிய போது எச்சூரி கூட இப்படித்தான் பாசிஸ்ட்டுகள் நடந்து கொள்வார்கள் என்று சான்றிதழ் அளித்தார். பாசிஸ்ட்டுகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதா பிரச்சினை? அவர்களை எப்படி எதிர் கொள்வது என்பதுதானே விசயம் என்று நாம் கேட்டால் ” இல்லை தோழர் நாமும் பாசிஸ்ட்டுகள் மாதிரி செய்ய முடியாது, இது ஜனநாயக நாடு, எல்லாம் ஜனநாயக முறைப்படிதான் செய்ய முடியும்” என்று கழுத்து அறுபடும் வண்ணம் வகுப்பெடுப்பார்கள்.

போகட்டும். நாம் மீண்டும் கண்டனக் கூட்டத்திற்கு திரும்புவோம். கூட்டத்தில் பத்திரிகையாளர்கள், பிற அமைப்புத் தலைவர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பேசினர். இவ்வளவு பேர் நம்மளைப் பற்றி பேசுகிறார்களே என்று ஒரு வாரத்துக்கு முந்தி தாக்குதல் நடத்திய இந்து முன்னணிக்காரர்கள் தங்களை மாபெரும் ஹீரோக்களாக கருதியிருக்கக்கூடும். வீடு புகுந்து நாலு சாத்து சாத்த வேண்டிய சில்லறைகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் அர்ச்சனை! இதுகூடப் பரவாயில்லை. அடிபட்டு தையல் போட்ட தோழர்களுக்கெல்லாம் துண்டுகளை பொன்னாடையாகப் போட்டு பாராட்டினார்களே அதைத்தான் கடுகளவு கூட சகிக்க முடியவில்லை. திருப்பி அடித்திருந்தால் கூட போராளிகள் என்று கவுரவிக்கலாம். அடிபட்டதையே சிலாகிப்பதைப் பார்க்கும் போது அனாமதேயங்களிடம் அடிவாங்கும் வடிவேலுவே மேல் என்று தோன்றுகிறது.

நக்கீரன் கோபால் பேசும் போது குஜராத்தை நரவேட்டையாடிய மோடி என்ற பேடியை வீட்டிற்கு வரவேற்று நாற்பது வகை உணவுகளைக் கொடுத்து சீராட்டுவதற்கு போயஸ் தோட்டம் இருக்கும் போது இவர்கள் தாக்காமல் என்ன செய்வார்கள் என்றார். இந்த இடத்தில் தோழர்கள் கண்டிப்பாக நெளிந்திருக்க வேண்டும். நாம் மேடைக்கு சற்றுத் தொலைவில் இருந்ததால் நெளிவு சுளிவுகளை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி அம்மாவோடு தோட்டத்தில் மேய்வதற்குக் காத்திருக்கும் தோழர்களுக்கு கோபாலின் பேச்சு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதுதான் தர்மம். இதன்றி சங்கடப்படுவதில் பொருளில்லை.

ஓவியர் வீரசந்தானம் பேசும்போது அடிபட்ட தோழர்களெல்லாம் வாட்டசாட்டமாக இருக்கிறார்கள், இவர்களா அடிபட்டார்கள், திருப்பித் தாக்கியிருக்க வேண்டாமா என்றார். உடனே பொங்கி வந்த கோபத்துடன் அடுத்து செந்தில்நாதன் ஆவேசமாக விளக்கமளித்தார். த.மு.எ.ச ஒன்றும் கோழைகளின் கூட்டமல்ல, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டக்கூடிய அஹிம்சாவாதிகளல்ல, இந்தக் கூட்டத்தில் கூட இந்து முன்னணியினர் தாக்கினால் அவர்களை துரத்தி வீடு புகுந்து அடிப்போம் என்றெல்லாம் கர்ஜித்தார். இது உண்மைதானா என்று கூட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம். கூட்டத்தில் சுமார் 500பேர்கள் இருந்தனர். எங்கும் சிவப்பாடை அணிந்த ஒரு தொண்டரைக்கூட கம்புடன் பார்க்கவில்லை. போலீசுதான் கர்ம சிரத்தையோடு அருகாமை சந்து பொந்துகளிலெல்லாம் சுற்றி வந்து பாதுகாப்பு கொடுத்தது. ஒருவேளை போலீசார்தான் வீடு புகுந்து அடிப்பார்கள் என்று பொருள்பட பேசியிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில் செந்தில்நாதன் தில்லை நடராசன் கோவிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமியின் தமிழுக்கான போராட்டத்தைக் குறிப்பிட்டார். அது ஏதோ சி.பி.எம் சம்பந்தப்பட்டது என்பது போல மறைமுகமாகப் பேசினார். இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தை தெரிந்தே இருட்டடிப்பு செய்தார். உண்மையில் இந்தப் போரட்டத்தில் பார்ப்பனர்கள் என்ற சொல் இருக்கிறது என்ற காரணத்திற்காக சி.பி.எம் கட்சியினர் விலகிக் கொண்டதுதான் வரலாறு. பார்ப்பன இந்து மதத்தின் சித்தாந்த்தத் தலைமையாக விளங்கும் பார்ப்பனர்களை அப்படி அழைப்பதைக் கூட பொறுக்க முடியாத கட்சிதான் இந்தியாவில் இந்துவத்தை வேரறுக்கப் போகிறதாம். கேப்பையில் நெய் வடிந்தாலும் வடியும்.

கவிஞர் சூரியதீபன் பேசும்போது ஒரிசாவில் இந்துமதவெறியர்கள் செய்யும் கலவரங்களைச் சொல்லி, லட்சுமாணனந்தாவை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்ததை எடுத்துக்காட்டி இந்து மதவெறியர்களை அடக்கும் செயலை மாவோயிஸ்ட்டுகள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை தேவைப்பட்டால் நாமும் செய்யவேண்டும் என்றார். நேபாள் மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிதைப்போல இந்திய மாவோயிஸ்ட்டுகளும் யூ டர்ன் அடித்துத் திரும்பவேண்டும் என்று பேசிவரும் சி.பி.எம் கட்சியனர் இதற்கு என்ன சொல்வார்கள்? உடனே ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சங்க பரிவாரத்தை வேட்டையாடக் கிளம்பி விடுவார்களா, இல்லை காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு மதவெறி அரசியலை எதிர்க்க “போர்க்குணமிக்க” முறையில் போராடுவார்களா?

தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசும்போது இந்துத்வவாதிகள் ஒரு திட்டத்துடன் இருப்பதுபோல நாமும் ஒரு திட்டத்துடன் செயல்படவேண்டுமென்றார். பெரியாரும், அம்பேத்காரும் அதற்கான வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்றவர், இந்துக்களாக வாழ்ந்து கொண்டு இந்துப் பண்டிகைளைக் கொண்டாடிக் கொண்டு, சாதியத்தைக் கடைபிடித்துக் கொண்டே இந்துத்வவாதிகளை எதிர்க்க முடியாது என்றார். நமக்கு சி.ஐ.டி.ய ஆட்டோ சங்கம் நடத்தும் ஆயுத பூஜையும், தீக்கதிரின் தீபாவளி சிறப்பு மலரும், சோமநாத் சட்டர்ஜி பேரனுக்கு செய்த பூணூல் கல்யாணமும், நான் முதலில் ஒரு இந்து அப்புறம்தான் ஒரு கம்யூனிஸ்ட்டு என்று ஒரு மேற்கு வங்க அமைச்சர் பேசியதும் நினைவில் வந்து போனது. இதன்படி பார்த்தால் சுத்தமான இந்துக்களாக வாழும் சி.பி.எம் கட்சியனர் என்றைக்குமே இந்து மதவெறியர்களை எதிர்க்க முடியாது என்றாகிறது.

அம்பேத்கர் பத்து இலட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மாறியதே தீர்வு என்று பேசிய புனித பாண்டியன் மதமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.இந்த அணுகுமுறையை ஈழத்தமிழர்களுக்கு அமல்படுத்தினால் என்ன ஆகும்? அங்கே ஈழத்தமிழர்களை வேட்டையாடுவதை புத்த பிட்சுக்கள் வலியுறுத்தும் போது என்ன செய்வது? ஈழத்தில் மட்டும் கிறித்துவ மதத்திற்கு மாறவேண்டுமா? சாதியும், தீண்டாமையும் மதம் மாறினாலும் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டுவிடாமல் கட்டிப்போடும்போது, மதமாற்றம் முழுவிடுதலை அளிக்காது. பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தை அதன் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படைகளிலிருந்து வீழ்த்தும் வரை இந்துத்வம் அழியாது.

போரூரில் கணேசன் காந்தி எனும் இந்துமுன்னணி வட்டார ரவுடியின் தலைமையில் அணிதிரண்டு தாக்கியவர்களை ஒன்னும் செய்யமுடியாத த.மு.எ.ச இலக்கியவாதிகளுக்கு இவ்வளவு பெரிய விசயமெல்லாம் செய்யவேண்டுமென்றால் அதற்கு இந்துவாகவே வாழ்ந்து கொண்டு போய்விடலாம் என்பார்கள். அல்லது வர்க்கப்போரட்டம் ஓன்றே சர்வரோக நிவாரணி என்று வகுப்பெடுப்பார்கள். நடைமுறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மார்க்சியத்தின் வர்க்கப்போராட்டம் அவர்களுக்கு உதவிசெய்வதை கண்டால் காரல் மார்க்சுக்கே கோபம் வரும்! என்ன செய்வது, மார்க்ஸ்தான் உயிருடன் இல்லையே!

த.மு.எ.சவின் பேச்சாளர்கள் எல்லோரும் ஒரு விசயத்தை மட்டும் வலியுறுத்தினர். அதுதான் கருத்துரிமை! அதாவது இந்துவத்தை விமரிசனம் செய்தால் பதிலுக்கு இந்துமுன்னணி கூட்டம் போட்டு பதில் சொல்லவேண்டுமாம். இதுதான் ஜனநாயகமுறையாம். இதை விடுத்து தாக்குவது என்பது மதவெறியாம். இந்த முக்கியமான பாலபாடம் தெரியாததால்தான் இந்தியாவில் இந்து மதவெறியர்கள் இவ்வளவு நாள் கலவரம் செய்து பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள் போலும். இனி இந்து முன்னணியின் ஒவ்வொரு கிளைக்கும் த.மு.எ.ச தோழர் ஒருவரை அனுப்பி வகுப்பெடுப்பதுதான் பாக்கி. இதை இராம கோபாலனிடம் விளக்கி கன்வின்ஸ் செய்தால் முடிந்தது பிரச்சினை! இந்தப் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் பாசிசத்தை மதிப்பிடுவதையும், அதை எதிர்கொள்வதையும் நினைத்தால் புல்லரிக்கிறது.

பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை இராஜேந்திரன் பேசும் போது இன்றைக்கு இடதுசாரி இயக்கங்களெல்லாம் பெரியாரின் கொள்கைகளைப் பேசிவருவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். போரூரில் தாக்கியவர்கள் எல்லாம் பார்பனர்கள் அல்ல பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்று பேசிய ராஜேந்திரன் அவர்களும், தலித்துக்களும் பார்ப்பனிய இந்து மதத்தால் அடிமைகளாக நடத்தப்படுவதை விளக்கினார். இதையெல்லாம் எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களும் முன்வரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

சங்க பரிவாரத்தால் சித்தாந்த ரீதியாக அணிதிரட்டப்பட்டுள்ள மக்களிடம் இப்படிப் பிரச்சாரம் செய்வது சரிதான். அதே சமயம் அது போர்க்குணமிக்க முறையிலும், சித்தாந்த ரீதியில் தாக்குதல் நிலையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் சாதி, மொழி, பண்பாட்டு வகையில் பார்ப்பனியத்தால் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை விடுவிக்க முடியும். சி.பி.எம் கட்சியோ இந்துமதத்தின் ஆன்மாவாக இருக்கும் சாதிய சமூகத்தை மறுத்து நல்ல இந்து மதம் ஒன்று இருப்பதாக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ.எஸ் இன் இந்து மதம் வன்முறையானதாம், இவர்களுடையது சாத்வீகமானதாம். பாம்பில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு!

இறுதியில் பேசிய த.மு.எ.சவின் தமிழ்ச்செல்வன் பெரியாரையும், அம்பேத்காரையும் இப்போதுதான் என்றில்லை வெகுகாலமாகவே பேசிவருவதாகச் சொன்னார். அப்புறம் பாரதியாரையும், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் முறையே பார்ப்பனிய எதிர்ப்புக்காகவும், வர்க்கப் போரட்டத்திற்காகவும் தோளில் தூக்கிச் சுமப்பதாகச் சொன்னார். கூட்டத்திலும் பாரதி, காந்தியின் படங்களை தூக்கியவாறு தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சிகளில் தேசியக்கவி என்று கொண்டாடப்படும் பாரதியாரை த.மு.எ.ச வும் கொண்டாடுகிறது. இப்போது ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் இந்துமதவெறியர்கள் தாக்குவதை, அவர்கள் தலைவர்கள் இது மதமாற்றத்திற்கு எதிரான போர் என்று பிரகடனம் செய்கிறார்கள். பாரதியும் மதமாற்றத்தைக் கண்டித்து அப்போதே எழுதியிருக்கிறார். என்றால் பாரதி யாருக்குச் சொந்தமாக இருக்கமுடியும்? பங்காளிகள் பேசி முடிவு செய்து கொள்ளட்டும்.

டிசம்பர் 18 முதல் 21 வரை சென்னையில் நடைபெற இருக்கும் த.மு.எ.ச மாநில மாநாட்டை மதவெறி எதிர்ப்பு, தலித் விடுதலை, பெண்விடுதலை, தமிழ் வளர்ச்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஐந்து அம்சங்களுக்காக நடத்தப் போகிறார்களாம். தற்போது போரூரில் இந்து முன்னணி தாக்குதல் நடத்தியதால் தமிழகம் முழுவதும் மதவெறியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம். ஷாபனா ஆஸ்மியும், நடிகர் அமீர் கானும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தமிழ்ச்செல்வன் பேசினார். கோகோ கோலாவின் விளம்பரத் தூதராக இருக்கும் அமீர் கானை வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு! நல்ல பொருத்தம்தான்.

அதிலும் கூட மதவெறியைத்தான் எதிர்க்கப் போகிறார்கள். ஏதோ நாட்டில் ஆயிரம் மதவெறிகள் இருப்பதை போல. இந்தியாவில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று இரண்டாக மதப்பிரிவுகளை பிரிக்கலாம். இப்போது பெரும்பான்மையின் பெயரால் சிறுபான்மை ஒடுக்கப்படுகிறது. இதை இந்து மதவெறி என்று கூட சொல்வதற்கு கூச்சப்படும் கோமாளிகளின் கூட்டம் எப்படி இந்துத்வத்தை எதிர்கொள்ளும்?
அதிகபட்சம் அடுத்த தேர்தல் முடிந்த பின் சி.பி.எம் கட்சி காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.கவை எதிர்ப்பதுதான் நடக்கப்போகிறது. இதற்கு இவ்வளவு பெரிய போர்முழக்கம் செய்வது பொருத்தமாக இல்லை.

பபூன்கள் சீரியஸாக நடித்தாலும்….சிரிப்புதான் வரும்!

________________________________

 

உப்பிட்டவனை உடனே கொல்!

5

ஆப்கானிலும், ஈராக்கிலும் அப்பாவி மக்களைக் கொன்று வரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அறிந்திருக்கிறோம். குஜராத்திலும் இப்போது ஒரிசாவிலும் சிறுபான்மை மக்களை நரவேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தையும் இதன் எதிர் விளைவாய் குண்டுகளை வெடிக்கச் செய்யும் இசுலாமிய தீவிரவாதத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் படித்தவர்களின் பயங்கரவாதம்? நாளிதழ்களின் மூலையில் சிறுசெய்தியாய் வந்து போன இச்சம்பவத்தைப் படியுங்கள்.

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த அறுபது வயது ராமசாமி வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஒரு மகனுடன் சிங்கப்பூரில் வசிக்கிறார். மற்ற மூன்று வாரிசுகளும் வெவ்வேறு நகரங்களில் வாழ்கின்றனர். ராமசாமி மட்டும் சென்னை தாம்பரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது உடன்பிறந்தவரின் மகனான அருணுடன் வசித்து வந்தார். பிள்ளைகள், மனைவி அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருக்க ராமசாமி பெரும்பாலும் தனியாகவே வாழ்வைக் கழித்து வந்தார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெஞ்சமின் பெர்னார்டு ஊரிலேயே ராமசாமிக்கு அறிமுகமானவன். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கும் இவனுக்கு சென்னையிலேயே ஒரு வேலையை ராமசாமி வாங்கித் தந்திருக்கிறார். அச்சுதன்(24), ராஜா டேவிட்(24) இருவரும் பெர்னார்டின் நண்பர்கள். மூவரும் தாம்பரத்திற்கு அருகேயுள்ள சீலையூரில் சேர்ந்து தங்கியிருக்கின்றனர். இதில் டேவிட் வங்கி ஒன்றில் வசூல் முகவராகவும், அச்சுதன் நகரத்துக் கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.ஸி படிக்கும் மாணவனாகவும் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் அடிக்கடி ராமசாமியின் வீட்டுக்கு சென்று வருவது உண்டு.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் இது போன்ற இளைஞர்களுக்கு தேவைப்படும் முக்கியமான விசயம் பணம். விலையுர்ந்த உடைகளும், இரு சக்கர வாகனங்களும், மேட்டுக்குடியினர் சங்கமிக்கும் உணவகங்கள், திரையரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள் முதலானவற்றிற்கு செல்வதும் என எல்லாவற்றுக்கும் பணம் சற்று அதிக அளவில் தேவைப்படும். இவற்றைச் செலவழிப்பதற்கு அருகதை இல்லையென்றால் கேவலம் ஒரு சுமாரான பெண்ணின் நட்பைக்கூட கைப்பற்ற முடியாது. தன் வயதினையொத்தவர்கள் இந்த ஆடம்பர வாழ்வை வாழும்போது அவற்றுக்கு வழியில்லாதவர்கள் அடையும் மனஅழுத்தம் சற்றே அதிகம்தான். கண்ணெதிரே இன்பத்தை அளிக்கத் தயாராக ஒரு சொர்க்கம் காத்துக்கொண்டிருக்கும் போது அதில் நுழைவதற்கு அனுமதி இல்லையென்றால் என்ன செய்வது?

இந்த மனப்போராட்டத்தில் தத்தளித்த நண்பர்கள் எப்படியாவது இந்த சென்னை சொர்க்கத்தில் நுழைவது என்று கொள்கை முடிவெடுத்து விட்டார்கள். அதற்கு அவர்கள் வந்தடைந்த முடிவு பெரியவர் ராமசாமியைக் கொலை செய்து வீட்டிலிருக்கும் நகை, பணத்தை அபகரிப்பது. கடந்த 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை தங்கள் முடிவை அரங்கேற்றுவதற்காக ராமசாமியின் வீட்டிற்கு மூவரும் சென்றனர். ஆனால் அச்சுதனுக்கும், டேவிட்டுக்கும் சற்று தயக்கம் இருந்ததால் காரியம் கைகூடவில்லை. தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிய மூவரும் மீண்டும் விவாதித்திருப்பார்கள் போலும். கிடைக்கப்போகும் பணமும் அது தங்களுக்கு தரப்போகும் இன்பத்தையும் பெர்னார்டு விளக்கி இருவரையும் வசமாக்கியிருக்கக்கூடும்.

இந்த தெளிச்சலுக்குப் பின்னர் அடுத்த நாள் அருண் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மூவரும் மதியம் அந்தப் பெரியவர் வீட்டிற்குச் சென்றனர். மூவரையும் வரவேற்ற அந்தப் பெரியவர் தானே சமையல் செய்து சாப்பாடு கொடுத்தார். பணியாள் இன்றி தன் பணிகளே தானே செய்து கொண்டு வாழும் அந்த மூத்த குடிமகனின் கையால் சாப்பிட்ட கையுடன் அந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தனர். இரவும் வந்தது.

அதுவரை கலகலப்பாய் பேசிக்கொண்டு இருந்தவர்கள் நள்ளிரவை நெருங்கும் நேரம் பெரியவர் தொலைக்காட்சியை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் பொது அதை அரங்கேற்றினார்கள். பெர்னார்டு ஒரு துண்டினால் ராமசாமியின் முகத்தை இறுக்கமாக மூடிக்கொள்ள அச்சுதன் ஒரு சுத்தியலால் தலையில் ஓங்கி பலமுறை அடிக்க என்ன ஏது என்று அறியாமலே ராமசாமி அமைதியானார். பின்னர் அவரை குளியலறையில் இழுத்துப் போட்டுவிட்டு எல்லா குழாய்களையும் திறந்து வைத்தனர். அப்போது அவரது கை மட்டும் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் டேவிட் ஒரு கத்தியால் அவரது தொண்டையை அறுத்து இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தினான்.

பிறகு வீட்டிலிருந்த 85,000 மதிப்பிலான நகைகளையும், 35,000 ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அன்றிரவே நாகர்கோவிலுக்கு சென்று விட்டனர். உடனே நகைகளை விற்றவர்கள் காசோலை மூலம் ராமசாமியின் வங்கிக் கணக்கிலிருந்த ஐந்து இலட்சத்தை சென்னை வந்து எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.

இந்தக் கொடூரமான கொலையை விசாரித்த போலீசு முதலில் பெரியவருடன் தங்கியிருந்த அருணின் மேல் சந்தேகப்பட்டது. சம்பவம் நடந்த அன்று அருண் வேறொரு நண்பர் வீட்டிற்குச் சென்றது தெரிய வந்ததோடு, பெர்னார்டும் மற்ற நண்பர்களும் அடிக்கடி வந்து போவதை அருண் தெரிவித்ததும் புலனாய்வுக்கு வழி பிறந்தது. குற்றவாளிகளும் பிடிபட்டார்கள். குற்றத்தையும் செய்த விதத்தையும் ஒப்புக் கொண்டார்கள்.

உயர் கல்வி கற்ற இந்த சமவயதினையொத்த இளைஞர்கள் தங்களின் குடும்ப நண்பரும் வயோதிகருமான ஒரு பெரியவரை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்து பணத்தை திருடியிருக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இவர்கள் எவரும் தொழில் முறைக் குற்றவாளிகள் இல்லை. உச்சந்தலையில் சுத்தியலால் அடித்து மண்டை ஓட்டைப் பிளந்து ஒரு முதியவரை விகாரமாக கொல்லும் மனநிலையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?

எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வருவதாக சொல்லப்படும் இந்தியாவில் இப்பொது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல பொருட்கள் வந்து விட்டன. ஐ போனும், பல நூறு வசதிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், அதி நவீனக் கார்களும், நட்சத்திர விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும் சனி, ஞாயிறு நடக்கும் நடன மது-மாது விருந்துகளும், இலட்சக்கணக்கான பொருட்களை அடுக்கி அழகு பார்க்கும் ஹைப்பர் மார்ட்டுகளும், நூற்றுக்கணக்கான வகைகளைக் கொண்ட காஃபி ஃஷாப்புக்களும், இலட்சங்களை அள்ளிக் கொடுக்கும் ஐ.டி துறையும் எல்லாமும் வந்துவிட்டன.

வாழ்வதற்காக பொருட்கள் என்பது போய் பொருட்களை நுகர்வதற்காக வாழ்க்கை என்றாகி விட்டது. விதவிதமான பொருட்களை நுகருவதற்கு கற்றுக் கொண்ட நடுத்தர வர்க்கம் அதற்கேற்றவாறு மனித உறவுகளையும் மாற்றிப் போடுகிறது. பொருட்களின் மேல் கொண்ட பாசம் மனிதர்களின் மேல் வருவதில்லை. வசதியான வாழ்க்கைக்கு ஏங்கும் மனது, அதற்காக சில உறவுகளைப் பலியிட வேண்டும் என்றாலும் தயங்குவதில்லை. பொருட்களைத் தர வக்கில்லாத உறவுகள் இரக்கமின்றி கைகழுவப்படுகின்றன. வாழ்வில் முன்னேறுவதற்கு நேர்மையும், அறமும் தடையென்றால் அவற்றைத் தூக்கி எறிவதற்கு இன்றைய தலைமுறை தயங்குவதில்லை. அதே போல தனது முன்னேற்றத்திற்க்கு அநீதியான காரணங்கள் தடை செய்கின்றன என்றால் அதற்காக போராட்டப் பாதையை விடுத்து குறுக்கு வழிகளையே நாடுகிறார்கள்.

படிப்பும் வசதியான வாழ்க்கையும் மட்டுமே நல்ல விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. இன்றைய கிரிமனல்கள் ஆனந்த விகடன் சித்தரிக்கும் பெரிய மீசை வைத்த முரடர்கள் போன்று இருப்பதில்லை. அவர்கள் உயர் கல்வி கற்றவர்கள். பங்குச் சந்தை வர்த்தகமோ, ரியல் எஸ்டேட் வணிகமொ எதிலும் ஏமாற்றுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

வாழ்வின் முன்னேற்றமே கிரிமினல் மயமாகி வரும்போது இளைய தலைமுறை இப்படி வக்கிரமான செயல்களுக்குள் இறங்குவதில் வியப்பில்லை. இது இந்தக் காலம் கற்றுக் கொடுக்கும் பண்பு. உலகமயமாக்கம் மேற்கில் குடி கொண்டிருந்த இந்த சமூக வன்முறைகளை – காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக குடும்பத்தினரையே கொலை செய்வது போன்ற – இப்போது கிழக்கிற்கும் இறக்குமதி செய்திருக்கிறது.

ஆயினும் கை நனைத்த வீட்டில் திருடக்கூடாது என்பது தொழில் முறைத் திருடர்கள் கூட கடைபிடிக்கும் ‘தர்மம’. பிக்பாக்கட் அடிக்கும் திருடர்கள் கூட இத்தகையக் கொடூரக் கொலைகளைச் செய்வதில்லை. கிரிமினல் தொழிலில் புதிய அறங்களை உருவாக்கியிருக்கும் இந்த இளைஞர்கள் யார்?

சுருங்கக் கூறின் நம்மைச் சுற்றியிருப்பவர்களில் யார் கிரிமினல்களை என்பதும், அவர்கள் எப்போது குற்றமிழைப்பார்கள் என்பதையும் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. ஏனெனில் அவர்கள் படித்தவர்கள்! சுற்றியிருக்கும் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க அவர்களுக்குத் தேவைப்படும் பணம் கிடைக்கவில்லையென்றால் அவர்கள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். இனிய வாழ்வின் புதுமைகளை புதிய விளம்பரங்கள் போதிப்பதற்கேற்ப இவர்களது வெறியும் அதிகரிக்கும். அது எப்போது வெடிக்கும் என்பது தெரியாது.

நமத்துப் போன வாழ்வை சூடேற்றுவதற்குத் தேவைப்படும் பணம் அவர்களுக்குத் தேவை. அது கிடைப்பதற்காக குரல் வளையை அறுப்பார்கள் அல்லது குடலையும் உருவுவார்கள். இந்தப் படித்த தீவிரவாதிகளை அரசியல் தீவிரவாதிகளைப் போல முன்கூட்டியே கைது செய்வது நடக்கக் கூடிய காரியமா என்ன? ஆதலால் அடுத்த தீவிரவாதிகள் தங்கள் செயலை அரங்கேற்றுவதற்காக காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்வது?

 

இது காதலா, கள்ளக்காதலா?

61

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.

அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை உறவு எந்த அளவுக்கு கசக்கிறதோ அந்த அளவுக்கு கள்ள உறவு வாசகருக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. கூடவே ஒரு ஆணின் தடையற்ற பாலுறவுப் பசி அல்லது வெறி இந்தச் செய்தியினூடாக வெளிப்படுகிறது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கள்ளகாதல் என்பது கணநேர மகிழ்ச்சி. இறுதியில் கொலையில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.

இதுவும் செப்டம்பர் 24 இல் நக்கீரனில் வெளிவந்த ஒரு செய்திதான். சேலம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் தனது கணவன் ஆறுமுகத்தைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விடுகிறாள்.

இதைப்பற்றி ஊர் என்ன சொல்கிறது? ” அவளுக்கு 38 வயசுனு சொன்னா யாராலும் நம்ப முடியாது. வயசுப் பொண்ணு போலத்தான் வாளிப்பா போவா, வருவா. அவளோட சுண்டியிழுக்கிற கண்ணுக்கு சொக்கிப் போய் சுத்துற பசங்க…. 18 வயசுலயும் கூட இருக்கானுங்கன்னா பார்த்துக்கங்களேன். இவ்ளோ அழகிருந்து என்ன பிரயசோனம்? புருஷன் மகா குடிகாரன். அதுவே ஆறுமுகத்தோட உயிரை எடுத்துடுச்சி. இப்ப இவளையும் போலீசு பிடிச்சுட்டு போயிடுச்சி”.

38 வயதில் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் பொன்னம்மாள் மினுக்கியவாறு இருந்ததை ஊர் வெளிப்படையாக ரசிக்கவில்லை. ஒரு கிராமத்துப் பெண் அழகிப்போட்டிக்கு தேவையான ஒப்பனை எதுவும் செய்வதில்லை. இருப்பினும் அவளது சாதாரண அலங்காரமும் அழகும் ஊரின் கண்களை சுண்டி இழுக்கிறது. ஒரு பெண் நடத்தை சரியில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு ஊர் பயன்படுத்தும் முதல் வாதம் அவள் அழகாக சிங்காரித்துக் கொள்கிறாள் என்பதுதான். மேலும் அந்த அழகை ‘ஊர்’ உள்ளுக்குள் இரசிப்பதும், வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்வதும், முடியாத போது புரணி பேசி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வதும் வழக்கம்.

பொன்னம்மாளைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் உத்ரபதியின் வாக்குமூலம் இது: “என் புருஷன் குடிச்சுட்டு வந்து தானே கழுத்தைத் துண்டால் இறுக்கி தற்கொலை பண்ணிக்கிட்டாருனு சொல்லி அழுதாள். எங்களுக்கு இது சந்தேகம் தர விசாரிச்சப்போதான் நாராயணனோட இருந்த கள்ளக் காதல் உறவு தெரிய வந்தது. இவளுக்கு மகன் ஒண்ணு, மகள் ஒண்ணு இருந்து இருவருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சப்புறமும் இவள் கள்ளக்காதலை விடலை. இதை அவள் புருஷன் தட்டிக்கேட்கவும் கொன்னுருக்காள்”.

போலீசுக்கு வழக்கு முடிந்த நிம்மதி. குற்றவாளியைக் கண்டுபிடித்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குப் போட்டு தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்களின் பணிப் பதிவேட்டில் மதிப்புப்புள்ளிகள் ஏறும். பதவி உயர்வுக்குப் பயன்படும். மற்றபடி ஒரு பெண்ணின் வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அடக்குமுறை எந்திரங்களின் ஈரமற்ற இதயங்களில் உயிருள்ள வாழ்க்கையின் வலியும், அது தோற்றுவிக்கும் அவலமும் கடுகளவு கூட இறங்குவதில்லை.

நெடுங்காலம் தன்னை சித்திரவதை செய்த பிரச்சனையிலிருந்து விடுதலையையும் ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதறியாத இறுக்கமும் கலந்த வெளிறிப் போன முகத்துடனும் காவல் நிலையத்தில் இருக்கும் பொன்னம்மாள் தனது கருத்தை நிருபரிடம் கூறுகிறாள்.

அவளது முதல் கேள்வியே ” ஊரே கள்ளக்காதல்னு சொல்லி திட்டுறாங்க. காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? ”
பதினைந்து வயதில் ஆறுமுகத்தை திருமணம் செய்த பொன்னம்மாவுக்கு இன்று ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. முப்பத்தி எட்டு வயதில் பாட்டி ஸ்தானத்தை அடைந்து வட்ட பொன்னம்மா இத்தனையாண்டுகளாக தனது குடிகார கணவனால் தினமும் கொடுமைகளேயே சந்தித்திருக்கிறாள். மரம் ஏறி பிழைக்கும் ஆறுமுகம் 50 ரூபாய் கிடைத்தாலும், 500 ரூபாய் கிடைத்தாலும் குடித்தே அழித்து விடுவான். குடித்து விட்டு வீட்டுக்குவரும் அவன் பொன்னம்மாளை நிர்வாணமாக்கி கண்ட இடங்களில் அடிப்பதும், மிருகம் போல வல்லுறவு வைத்துக்கொள்வதும் தினசரி வாடிக்கை. பேரன், பேத்தி எடுத்த பிறகும் இந்தக் கொடுமை தொடர்ந்தது. இந்த விஷச்சூழலில் மாட்டிக்கொண்ட பொன்னம்மா அன்புக்கும், பாசமான தாம்பத்திய உறவுக்கும் ஏங்கினாள். வயது குறைந்தவளென்றாலும், மற்ற ஆண்கள் பார்வையை வசீகரிக்கும் அழகுள்ளவள் என்றாலும் நெடுங்காலம் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வந்தாள்.

ஆறுமுகத்தின் தொடர் சித்திரவதை இந்த ஒழுக்கவேலியை தாண்டுமாறு தூண்டியது. தற்செயலாக நாராயணன் என்பவனது நட்பு கிடைத்தது. அவனுக்கும் குடும்ப வாழ்வில் நிம்மதியில்லை என்பதால் இந்த நட்பு பரஸ்பரம் தங்களது துன்பத்தை பரிமாறிக் கொண்டு தேவையான இன்பத்தையும் பகிர்ந்து கொண்டது. இளம்வயதில் தாயாகி, பாட்டியாகி, கணவனின் வெறிக்கும், அடிக்கும் வாக்கப்பட்ட பொன்னம்மாள் இந்தக் ‘கள்ள’ உறவில்தான் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறாள். நீண்ட காலம் புரையோடிப் போயிருந்த புண்ணுக்கு அது மருந்து. திருட்டுத்தனமான மருந்தென்றாலும் ஆறுதலைத் தரும் மருந்து.

ஒரு நேரம் நாராயணனுடன் ஓடிப்போகலாம் என்று திட்டமிட்டு இருபது நாட்கள் அசலூரில் வாழ்ந்தாள். இருப்பினும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மனதில் கொண்டு இனி ஒழுக்கமாக வாழ்வோமென ஊருக்குத் திரும்பினாள். எல்லா சுகமும் இருபது நாட்களோடு போகட்டுமென முடிவெடுத்து வாழத் துவங்கினாள். ஆனால் ஆறுமுகம் திருந்துவதாயில்லை. பிள்ளைகள், மருகப்பிள்ளைகள் முன்பே அவளை அடிப்பதும், உறவுக்கு அழைப்பதும் என வாடிக்கையை தொடர்ந்தான். பொன்னம்மாளின் கள்ள உறவைப் பற்றி ஊர் பேசத்துவங்கியதும் ஆறுமுகத்தின் கொடுமைகள் அதிகரித்தன. தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியெல்லாம் ஆறுமுகத்திடம் ஏற்படவில்லை. அவனைப் பொறுத்தவரை அடிப்பதற்கு ஒரு முகாந்திரம் கூடுதலாகக் கிடைத்தது அவ்வளவுதான். பொன்னம்மாளும் தனது கணவனுக்கு தெரிந்து விட்டது குறித்து கவலை கொள்ளவில்லை. அன்புக்குப் பதில் வன்மத்தையும், வெறுப்பையும் கொட்டி வந்த அவனை அவள் எப்போதோ தன் மனதிலிருந்து அகற்றிவிட்டாள்.

“போன செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியிருக்கும். குடிச்சிபுட்டு வாயை பொளந்து தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கும் தூக்கம் வராம அவனையே வெறிச்சி பார்த்தேன். ஏதோ வெறி வந்துடுச்சு. மெல்ல கட்டிலருகே போயி அவன் கழுத்துல இருக்கிற துண்டை இறுக்கினேன். துடியா துடிச்சான். அவன் என்னை படுத்துன கொடுமைக்கு முன்னாடி அவன் துடிப்பு பெரிசா தெரியலை. ரெண்டு கையாலேயே இறுக்கி கொன்னேன். என் இத்தனை வருஷ தாகம் நாராயணனோட சேர்ந்தப்ப தீர்ந்தது. இத்தனை வருட வெறி ஆறுமுகத்தோட கழுத்தை இறுக்கி கொன்னப்போ தீர்ந்தது. 23 வருஷ சிறையில இருந்து மீண்டுட்டேன். இனி தனியா படுத்தாலும் நிம்மதியா படுப்பேன்” நிம்மதிப் பெருமூச்சோடு நிருபரிடம் பகிர்ந்து கொண்ட பொன்னம்மா சிறைச்சாலை நோக்கி பயணமாவதற்குக் காத்திருக்கிறாள்.

நடந்த கொலையை அவளே ஒத்துக்கொண்டிருப்பதால் வழக்கு விசாரணை வேகமாக நடந்து அவளுக்கு அநேகமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். அப்படி விதிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து வருடம் சிறையில் இருக்கவேண்டும். 53 வயதில் விடுதலையடைவாள்.

ஆறுமுகத்தை பொன்னம்மாள் கொலை செய்தாளா, அல்லது தண்டனை கொடுத்தாளா? பொன்னம்மாள் இப்போது விடுதலை அடைந்து விட்டாளா, அல்லது சிறைக்கு செல்கிறாளா? இப்போது அவளுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதா, அல்லது தொடங்க்கப் போகிறதா? இறுதியாக…. இது காதலா, கள்ளக்காதலா?

 

 

ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

62

எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்றாடம் பல கொலைகளும், விபத்து மரணங்களும், இயற்கைச் சாவுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா வழியிலும் மரணம் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுத் தருணங்கள் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. வாழ்வைப் பற்றியே நினைக்க நேரமில்லாத போது சாவைப் பற்றி நினைக்க முகாந்திரமேது?

என்றாலும் இந்தச்சாவு ஒரு கணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேரங்காடிகளும், சங்கிலித் தொடர் கடைகளும் முளை விட்ட நேரம். சிறுவணிகத்தை பெருவணிகம் முந்திச் சென்ற காலம். பெருகிவரும் நடுத்தர வர்க்கத்தின் முன்னேற்றத்தின் அளவுகோலாக சூப்பர் மார்க்கெட்டுகள் உதிக்கத் தொடங்கியிருந்தன. காய்கறிக் கடைகளும் பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் நகரெங்கிலும் சற்றே பிரம்மாண்டமாய் கடைவிரித்த நேரம். புறநகர் பகுதி ஒன்றில் புதிதாகத் துவங்கப்பட்ட அந்த காய்கனி அங்காடியில் வாரம் ஒரு முறையாவது காய்கள் வாங்கச் செல்வது உண்டு.

சிறு கடைகளில்தான் காய்கள் வாங்குவது பழக்கம் என்றாலும் தக்காளி, வெங்காயம், உருளை மட்டும் அந்தக் கடையில் வாங்குவது பழக்கமானது. இந்த மூன்று காய்கள்தான் பல இளைஞர்களைப் போல எங்களுக்கும் தேசிய உணவாக இருந்தது. பேச்சுலராக வாழ்வைக் கழிக்கும் நேரத்தில் சமையல் என்பது சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பமாக ஆவதும் உண்டு. எனினும் நாடாறு மாதம் காடாறு மாதம் போல உணவு விடுதி, பிறகு சலிக்கும் போது சமையல். நண்பர்கள் மத்தியில் என் கையே மணக்கும் என்று சபிக்கப்பட்டிருப்பதால் காய்கள் வாங்குவதும் எனக்கிடப்பட்ட பணியானது.

சுமார் ஆயிரம் சதுர அடியில் இருக்கும் அந்தக் கடையை தென் மாவட்டத்து அண்ணாச்சி ஒருவர் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் பத்து விடலைச்சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். மூன்று மணிக்கு கோயம்பேடு சென்று மூன்று சக்கர வாகனத்தில் மூட்டைகளை கொண்டு வந்து தரம்பிரித்து அடுக்கி, பழையதன் கழிவைக் கொட்டி, விலைப் பட்டியல் எழுதி அட்டையில் தொங்கவிட்டு, காலை ஆறு மணிக்கு கடையைத் திறந்து இரவு பதினொன்றுக்கு மூடி…. என்று நிற்காத தொடர் வண்டி போல ஒடும் அந்த வாழ்க்கையைப் பார்க்கும் போது மனது வலிக்கும். அண்ணாச்சியிடமும், அந்தச் சிறுவர்களிடமும் அவர்களின் காய்கனிச் சிறைவாழ்க்கையை கலகலப்பாக ஆக்கும் பொருட்டு பேசுவது உண்டு. தூங்கி வழியும் அந்தச் சிறுவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை விசாரிக்கும்போது மட்டும் ஒரு கணம் மின்னுவார்கள்.

2007 இல் அந்தப் பகுதிக்கு திடீரென்று வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் பிரஷ். அறிமுகச் சலுகை, உறுப்பினர் சேர்க்கை, தள்ளுபடி விலை என்று தினந்தோறும் அறிவிக்கப்பட்ட மோடிமஸ்தான் வேலையால் சுற்றுப்புற பலசரக்குக் கடைகள் தள்ளாடத் துவங்கின. நமது அண்ணாச்சி அதற்கு முன்பு வரை தினமும் ரூபாய் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை கல்லா கட்டியவர்; இப்போது ஐந்தாயிரமாய் சுருங்கிப் போனார்.

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் அப்படி ஒன்றும் நம்மை அசைத்து விடாது என அப்பாவியாய் நம்பினார். மெல்ல மெல்ல சிறுவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்து போனது. தினசரி விற்பனை இரண்டாயிரம் ரூபாயாக சரிந்தது. பிறகு, வேலையாளின் சம்பளத்தையாவது மிச்சப்படுத்துவோம் என்று தனது குடும்பம் முழுவதையும் கடையில் இறக்கினார் அண்ணாச்சி. இருப்பினும் நான்கு மாதத்திற்கு மேல் அந்தக் கடையின் மரணத்தை ஒத்திப் போடமுடியவில்லை.

ரிலையன்ஸின் சுற்றுவட்டாரத்தில் இப்படி சில ஜீவராசிகள் வாழ்வை இழப்பது பற்றி கட்சி மாறிய நடுத்தர வர்க்கத்திற்கு அக்கறைப் படவில்லை. கேட்டால் ‘அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு அதிகம்’ என்று அம்பானியின் பிரச்சார பீரங்கிகளாக பேசினார்கள்.

அண்ணாச்சி கடையில் கார்பென்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து. எனக்கு ஆச்சரியம்! விசாரித்தேன். கடையை ரிலையன்சு போல அலங்காரமாய் புதுப்பிக்கப் போவதாகச் சொன்னார்கள். புதுப்பிப்பவர் பழைய அண்ணாச்சி இல்லை. கடையை விற்று விட்டு அண்ணாச்சி காற்றில் கரைந்து விட்டார். தூக்கம் கலந்த விழிகளுடன் வேலை செய்த அந்தப் பழைய சிறுவர்களை நினைத்துப் பார்த்தேன். சுனாமியில் தொலைந்து போனவர்களை நினைவில் தானே துழாவ முடியும்!

பிறகு சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கடை ரிலையன்சு போல குளிர்சாதன வசதியுடன், சீருடை அணிந்த பணியாளர்களுடன், கணக்குப் போடும் கணினியுடன், கடையின் பெயர் அச்சிடப்பட்ட நாகரீகப் பைகளுடன் மொத்தத்தில் அழகாகத்தான் திறக்கப்பட்டது. இப்போது யாரென்று விசாரிக்கையில் கடை உரிமையாளர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு பழமுதிர்ச்சோலையில் எட்டாயிரம் சம்பளத்தில் மேலாளராக பணியாற்றியவராம். அங்கே தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாய் ஒரு கடை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் சில இலட்சங்களை கடன் வாங்கி இந்தக் கடையை அணுஅணுவாய் அலங்கரித்து திறந்திருக்கிறார். அவருக்கு ஒரு 27 வயது இருக்கலாம். அப்பொதுதான் அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. காதல் திருமணம். காதலில் வெற்றி பெற்ற கையோடு சுய தொழிலிலும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரது கண்களில் மின்னியது. சில நேரம் அவரது மனைவியும் கடையில் பில் போடும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

ரிலையன்சு வந்ததும் அருகாமையில் உள்ள சிறு கடைகளிலேயே எல்லாவற்றையும் வாங்குவதாக முடிவெடுத்து விட்டதால் அந்த கடைக்கு செல்வதில்லை. சமயத்தில் ஒரு நண்பர் அந்த கடைக்கு அழைத்துச் சென்று சாத்துக்குடி பழச்சாறு வாங்கித்தருவார். சாதாரணமாக மற்ற கடைகளில் அதன் விலை 20 ரூபாய். இங்கு மட்டும் அதன் விலை ரூ.10.. வாடிக்கையாளரை ஈர்ப்பதற்க்காக இந்த விலைக் குறைப்பு. ‘நீர் சேர்க்காமல் பழச்சாறை மட்டும் கொடு’ என்று கடை சிப்பந்தியை அந்த இளைஞர் நிர்ப்பந்திப்பதை சிலநேரம் பார்த்திருக்கிறேன். சில சமயம் சுறுசுறுப்பாக வாயிலில் நின்று கொண்டு வரும் மக்களை அவர் கவனிப்பதையும் கண்டிருக்கிறேன்.

இருப்பினும் ரிலையன்சை எதிர்த்து இவர் மட்டும் எப்படி தாக்குப் பிடிக்க முடியும் என்று நானும் நண்பரும் விவாதிப்பதுண்டு. இதை அந்த நாமக்கல் இளைஞரிடம் பேச விருப்பமிருந்தாலும் தயக்கமிருந்தது. அபசகுனமாக பேசுகிறார்களே என்று அவர் நினைத்து விடக்கூடுமல்லவா! ஏதோ கொஞ்சநாளைக்கு மலிவு விலையில் பழச்சாறை குடிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பருடன் தமாசாகப் பேசிவிட்டு அகன்று விடுவோம். கடையில் காய்கறிகளும் மிக மலிவாகவே விற்கப்பட்டது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுண்டு. இது எப்படி சாத்தியம், ஏதாவது வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இப்படி முதலீடு செய்து செலவழிக்கிறாரா என்றெல்லாம் எங்களுக்குள் விவாதிப்பது உண்டு.

உண்மையில் அவர் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதெல்லாம் அப்போது தெரியாது. மேலும் வாடிக்கையாளரைக் கவர மூன்று சதவீதம் மட்டும் இலாபம் வைத்து காய்கறிகளை விற்று வந்தததையும் நாங்கள் அறியவில்லை. இந்த இலாப விகிதத்தில் எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்பதோடு, இப்படி தொழில் நடத்தினால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இடையில் 2008இல் ரிலையன்சு கடை இரண்டாவது கிளையையும் இப்பகுதியில் திறந்து விட்டது. இரு வல்லூறுகளுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு எத்தனை நாள் தப்பிக்க முடியும்? என்னதான் நவநாகரீகமாக கடை நடத்தினாலும் நட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடை திறந்து நான்காவது மாதத்திலேயே காய்கள் வாடத்துவங்கின. கைமாற்றுப் பணமில்லாத காரணத்தால் புதிய காய்கறிகள் அடிக்கடி வரவில்லை. கூட்டமும் குறையத் தொடங்கியது.

இதற்குள் அவர் மாதத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் நட்டமடைந்திருந்தார். மொத்தம் ஐந்து இலட்சம் கடனாகிவிட்டது. வழக்கமாக கோயம்பேடில் சில்லறை வியாபாரிகள் கடனுக்கு காய் வாங்கி அடுத்த நாள் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கட்டுவார்கள். இந்த முறையையும் அந்த நாமக்கல் இளைஞர் பின்பற்ற முடியவில்லை. கைப்புழக்கத்திற்குக் கூட பணமில்லாத நிலையில் ஒரு இலட்ச ரூபாயை கடன்பெற முயற்சித்திருக்கிறார். கிடைக்க வில்லை. கோயம்பேட்டிலும் மொத்த வியாபாரிகள் கடனுக்கு காய் வழங்க மறுத்து விட்டனர். 25,000 கோடி முதலீட்டுடன் இந்திய சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஐந்து இலட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு நாமக்கல் இளைஞர் எதிர் கொள்ள முடியுமா என்ன? எல்லா இடத்திலும் கடன் கேட்டும் கிடைக்காமல் வீட்டுக்கு வந்த அந்த இளைஞர் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது மனைவிக்கு என்ன ஆகியிருக்கும்? வழக்கம் போலத ‘தெரியவில்லை’ என்பதுதான் விடை.

இப்போது அதே கடையை வேறொரு அண்ணாச்சி – ஏற்கனவே சில கிளைகளை வைத்திருப்பவர் – வாங்கி அதே பெயரில் நடத்துகிறார். அவர்தான் நேற்று இந்த விவரங்களைச் சொன்னார். இவரும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. யோசிப்பதை அவரிடம் பேசவும் முடியவில்லை.

அதே கடை. அதே பெயர். அண்ணாச்சிகள் மட்டும் மாறியபடி இருக்கிறார்கள். உயிர்களைக் குடித்துத் தாகம் அடங்காத பலிபீடம் போல என்னை அச்சுறுத்துகிறது அந்தக் கடை. அந்தக் கடைப் பக்கம் செல்லும்போதெல்லாம் தூக்கில் தொங்கிய அந்த இளைஞனின் நம்பிக்கை ஒளிரும் கண்களும், கணவனுக்குத் துணைநின்ற அந்தக் காதல் மனைவியின் முகமும் கொஞ்சம் தடுமாற வைக்கின்றன. விலை மலிவு என்பதற்காக பத்து ரூபாய் பழச்சாறைக் குடித்த குற்ற உணர்விலிருந்து என்னால் இன்னமும் விடுபட முடியவில்லை.
…………………………………………………………………………………………………………………….
குற்ற உணர்வு கொள்ளாத இலக்கிய மனத்தை அறிந்து கொள்ள…

கேழ்வரகில் வடிகிறது நெய் ! கருத்துரிமைக்காகப் போராடுகிறது காலச்சுவடு !!

5

குடிமைச் சமூகத்திற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகிவரும் சூழலில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விவாதத்தை உருவாக்கவும் – கருத்துரிமையும் வாழ்வுரிமையும் – என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்றினை 14.06.08 அன்று சென்னையில் நடத்தியது காலச்சுவடு” – இது காலச்சுவடில் வெளிவந்த விளம்பரம். இக்கருத்தரங்கில் தியாகு, கிருஷ்ணானந்த், சதானந்த மேனன், பேராசிரியர் கல்யாணி, இன்குலாப், பா.செயப்பிரகாசம், இராசேந்திர சோழன், ஒவியா, அனிருத்தன் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

திடீரென்று கருத்துரிமையின் பால் காலச்சுவடுக்கு காதல் வந்த மர்மம் என்ன? 2003ஆம் ஆண்டிலிருந்து நூலகத்துறை சிறு அளவில் காலச்சுவடை வாங்கிவந்ததாம். 2006 ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க ஆட்சியேற்ற பின் 1500 பிரதிகள் வாங்கப்பட்டனவாம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒரு வாய்மொழி உத்தரவின் மூலம் காலச்சுவடு வாங்குவது நிறுத்தப்பட்டதாம். உடனே கருத்துரிமைக்கு ஆபத்து வந்து விட்டதென களத்தில் இறங்கிவி்ட்டது காலச்சுவடு.
நூலகத்துறை வாங்கியபோது சுமார் ஏழாயிரம் பிரதிகள் அச்சடித்த காலச்சுவடு தற்போது ஐந்தாயிரம் பிரதிகள் மட்டும் வெளியிடுகிறார்கள் என்று கருதுகிறோம். இதழ் வாங்குவது நிறுத்தப்பட்டதால் ஏதோ தமிழகத்திற்கு மாபெரும் ஆபத்து வந்துவிட்டதாகக் காலச்சுவடு பதறுகிறது. அந்தப் பதற்றத்தில் கருத்துரிமைக்கு கல்லறை கட்டப்பட்டதாக எண்ணுவதை என்னவென்று சொல்ல? தமிழகத்தின் பண்பாடு, கல்வி, அறிவு அத்தனைக்கும் தான்தான் அத்தாரிட்டி என்று ஒரு ஆதீனத்தின் மனநிலையில் காலச்சுவடு இருப்பதுதான் இந்தப் பதற்றத்திற்கு காரணம்.

நூலகத்துறை வாங்கி நிறுத்திய விவகாரத்தை ” காலச்சுவடுக்குத் தடை” என்ற சொல்லாடல் மூலமாக ஒரு மாபெரும் போராட்டமாகக் காலச்சுவடு முன்னெடுத்திருக்கிறது. இதற்காக பல இந்திய எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், த.மு.எ.ச, க.இ.பெ.மன்றம் என அனைவரும் காலச்சுவடுக்காக பரிந்துபேசி கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்கள் அனைத்தும் “கருத்து” அமைப்பின் கார்த்தி சிதம்பரம், கனிமொழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். நியாயமாக இந்த கடித வினைகள் நூலகத்துறை சார்ந்த அமைச்சருக்குத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். கருத்து அமைப்பிற்கு அனுப்பவேண்டிய காரணமென்ன? உங்களக்கோ, எனக்கோ ஒரு பிரச்சினை என்றால் போலீசில் புகார் கொடுப்போம், அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம். இதைவிடுத்து தமிழகத்தின் மனித உரிமை மீறல்களுக்கு யாரும் கருத்து அமைப்பிடம் செல்வதில்லை. அது மேட்டுக்குடியின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட வெற்று மனிதாபிமான அமைப்பு. கருத்துரிமைக்காக அது எதையும் பிடுங்கியதில்லை. ஆனால் காலச்சுவடு இவர்களிடம் புகார் கொடுத்தற்குக் காரணம் இந்த மேட்டுக்குடி குலக் கொழுந்துகளை வைத்து பல காரியங்கள் சாதித்திருப்பதுதான். நண்பர்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை பொது மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறது காலச்சுவடு.

தமிழகத்தின் அறிவுத் துறைக்கு ஆதீனமாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன்.
தமிழகத்தின் அறிவுத் துறைக்கு ஆதீனமாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இதன் ஆசிரியர் கண்ணன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்,” காலச்சுவடின் நடுநிலைமையை யாரும் சந்தேகப்பட முடியாது. பதிப்பகத்துறைக்கு முதல்வர் செய்திருக்கும் உதவிகளைப் பாராட்டித் தலையங்கம் எழுதினோம். மூன்றாவது பாலினத்தாருக்கு நலவாரியம் தொடங்கியது, சென்னை சங்கம விழாவை நடத்தியது என பாராட்டத்தக்க விசயங்களைப் பாரட்டினோம். அதே சமயம், கடந்த மே மாதம் மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் தி.மு.க தரப்பை விமரிசித்து எழுதிய எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக தி.மு.க ஏற்பாடு செய்த கூட்டத்தையும் விமர்சித்தோம். கனிமொழியின் அணுசக்தி ஆதரவு உரையைப் பதிவு செய்து, அதற்கு விமர்சனமாக வந்த வாசகர் கடிதங்களையும் வெளயிட்டோம். குறிப்பாக செம்மொழி மையம் ஆரம்பிக்கப்படப் போவதாக அறிவிப்பு வந்த போது, அதற்குத் தலைவராக முதல்வர் கருணாநிதி இருந்தால், அரசியல் சார்பு என்பது போன்ற சர்ச்சைகள் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இதெல்லாம் ஆளும் தி.மு.க அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டதோ என்னவோ… தற்போது காலச்சுவடு இதழ் நூலகங்களில் நிறுத்தப்பட்டிருக்கிறது. எந்தக் காரணமும் சொல்லாமல் பத்திரிகைகள் மீது விரோதம் பாராட்டுவதை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தினகரன் பத்திரிகைக்குப் பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுத்தவர்கள், இப்போது அதை நிறுத்தி இருக்கிறார்கள். தேவைப்படும்போது வரம்பு மீறி வாரி வழங்குவதும், ஆகாத போது அரசு விளம்பரங்களைக் கொடுக்காமல் தவிக்கவிடுவதும் அரசின் வாடிக்கையாகி விட்டது. அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையே சட்ட ரீதியான நெறிமுறைகள் பிறப்பிக்கப்படவேண்டும். மாற்றுக் கருத்துக்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால்தான் அரசு இப்படி நடந்து கொள்கிறது”.

ஏதோ காலச்சுவடைப் பார்த்து தி.மு.க அரசு கதிகலங்கி பயம்பிதுங்கி நிற்பதைப் போல கண்ணன் பேசுகிறார். தினகரன் அலுவலகத்தில் புகுந்து அடித்தவர்களுக்கு காலச்சுவடெல்லாம் எம்மாத்திரம்? உலகத் தமிழ் இதழ் என்ற அடைமொழியோடு காலச்சுவடு வருவதால் தன் தகுதியை மீறி தன்னை மிகப்பெரிய அறிவுத்துறை ஆதினமாக கருதுவதுதான் நகைப்பிற்குரியது.

காலச்சுவடு நூலகங்களுக்கு வாங்கப்பட்டது நிறுத்தப்பட்ட உடன்தான் அரசின் மனப்பக்குவம் கண்ணனுக்குத் தெரிகிறது. அ.தி.மு.க ஆட்சியில் முரசொலி நிறுத்தப்படுவதும், தி.மு.க ஆட்சியில் நமது எம்.ஜி.ஆர் நிறுத்தப்படுவதும் இங்கு காலங்காலமாக நடந்து வரும் நெறிமுறைதான். மற்றபடி தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ், வாரப் பத்திரிகைகள், வாரமிருப் பத்திரிகைகள் அனைத்தும் எப்பபோதும் வாங்கப்பட்டுதான் வருகின்றன. இவற்றில் அரசை விமரிசித்து செய்திகளோ, கட்டுரைகளோ வந்தால் அதற்காக நிறுத்தப்படுவதில்லை.
இதையே இந்தப்பிரச்சினை குறித்துக் கேட்ட்போது அமைச்சர் தங்கம் தென்னரசும் (ஜூ.வி) கூறியிருக்கிறார்.” தி.மு.கவுக்கு எதிராக எத்தனையோ செய்திகளை காலச்சுவடு மட்டுமல்லாமல் பல இதழ்களும் இன்றைக்கும் வெளியிட்டுத்தான் வருகின்றன. அதற்காகவெல்லாம் இதழை நிறுத்த வேண்டும் என்றால், அந்த இதழ்களையும்தானே நிறுத்தியிருக்க வேண்டும். வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான் காலச்சுவடு பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். இது புரியாமல் அரசியல் காரணங்களுக்காக காலச்சுவடு நிறுத்தப்பட்டதாக திசை திருப்புகிறார்கள்.”

அமைச்சரின் இந்தக் கூற்றில் பாதிதான உண்மை. அரசுக்கு ஆதரவாக இருக்கும் பல அனாமதேயப் பத்திரிகைகள் நூலகத்திற்கு வாங்கப்படுவதும், அவைகளுக்கு விளம்பரம் வழங்கப்படுவதும், அந்த விளம்பரங்களுக்காகவே பல பத்திரிகைகள் 500, 1000 பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்படுவதும் எல்லா ஆட்சிகளிலும் நடக்கும் விசயம்தான்.

கனிமொழியின் உறவில் ஏற்பட்ட விரிசலே காலச்சுவடின் கருத்துரிமை பிரகடனத்திற்குக் காரணம்.
கனிமொழியின் உறவில் ஏற்பட்ட விரிசலே காலச்சுவடின் கருத்துரிமை பிரகடனத்திற்குக் காரணம்.

நாம் எழுப்பும் கேள்வி என்னவென்றால் காலச்சுவடைப் போல பல சிறு பத்திரிகைகள் மாதந்தோறும் வெளிவந்தாலும் காலச்சுவடு மட்டும் நூலக ஆணையைப் பெற்றதன் மர்மம் என்ன? காலச்சுவடு நூலகத்துறையால் நிறுத்தப்பட்டதை விட அது ஏன் வாங்கப்பட்டது என்பதைத்தான் அமைச்சரும், கண்ணனும் தெரிவிக்கவேண்டும். இதை தெரிந்து கொள்ள நமக்கு கருத்துரிமை இருக்கிறதல்லவா?

அதேபோல பாசிசத்திற்கு பேர்போன புரட்சித் தலைவியில் ஆட்சியில் சிறு அளவில் காலச்சுவடை நூலகத்துறை வாங்கியதற்கு என்ன காரணமென்பதை கண்ணன் அறிவிக்கத் தயாரா? தி.மு.க ஆட்சியில் 1500 படிகள் வாங்கப்பட்டதன் பின்னணி என்ன? முன்னது அதிகாரவர்க்கத்தின் சிபாரிசிலும் பின்னதில் கனிமொழியின் சிபாரசும்தானே காரணம்? ஆக காலச்சுவடு நூலகத்துறைக்குள் நுழைந்தற்கும் மற்ற அனாமதேயப் பத்திரிகைகள் நுழைந்தற்கும் எந்த வேறுபாடுமில்லை.
இதைவிடுத்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேலை மெனக்கெட்டு காலச்சுவடை வாங்குவதற்கு தீவிர முயற்சி எடுத்தார்களா என்ன? எல்லாம் பெரிய இடத்து தொடர்பும், சிபாரிசும், பழக்கமும்தானே வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதில் கருத்துரிமைக்கு ஆபத்து எங்கே இருக்கிறது? அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கனிமொழியின் பேச்சை காலச்சுவடு வெளியிட்டது ஐஸ்வைக்கத்தானே அன்றி வேறு என்ன காரணமிருக்கமுடியும்? அணு ஒப்பந்தம் குறித்து அதன் கேடுகள் பற்றியும் பல முன்னாள் விஞ்ஞானிகள், அறிஞர்கள் காத்திரமானக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விடுத்து மன்மோகன் சிங்கிற்கு முதுகு சொறியும் தி.மு.கவின் நிலைப்பாட்டை முதல் உரையில் வாந்தியெடுத்த கனிமொழியின் பேச்சை அப்படியே வெளியிட்டதன் அரசியல் நோக்கமென்ன? எல்லாம் எலும்புத் துண்டுகளை கவ்வத்தானே?

செம்மொழி மையத்தில் கருணாநிதியை விமரிசித்ததால் அரசின் வெறுப்புக்கு ஆளாகி விட்டோமென கண்ணன் கருதுகிறார். புற்றீசல் போல ஆங்கிலக் கான்வென்டுகள் பெருக்கெடுத்து மக்களை அறியாமைக் கவர்ச்சியில் இழுத்து வரும் நிலையில் தமிழ் செம்மொழி மையமா பிரச்சினை? உழைக்கும் தமிழனுக்கு உய்வில்லாமல் தமிழ் மட்டும் உயர்ந்து விடுமா என்ன? தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தி.மு.க அரசியலுக்கு இந்த செம்மொழி மையம் ஒரு அலங்கார நடவடிக்கைதானே ஒழிய இதனால் தமிழுக்கு ஒன்றும் வாழ்வு கிடைத்து விடப்போவதில்லை.
கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார் போன்ற இலக்கியவாதிகள் அரசியலுக்குள் நுழைந்ததை காலச்சுவடு பொதுவில் ஆதரித்துத்தானே எழுதியது? பண்பாட்டுத் துறையில் பண்பட்டவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் நல்லது பல நடக்கும் என்று எதிர்பார்த்து விட்டு தனக்கு நல்லது நடக்கவில்லை என்பதால் மோசம் என்பது கடைந்தெடுத்த சுயநலமில்லையா?

கருணாநிதியின் அரசியலில் காலச்சுவடிற்கு எங்கே இடமிருக்கிறது?
கருணாநிதியின் அரசியலில் காலச்சுவடிற்கு எங்கே இடமிருக்கிறது?

இவர்களுக்கெல்லாம் அரசியலுக்குள் நுழைவதற்கு என்ன தகுதியிருக்கிறது? மற்றவர்களை விடுங்கள் கனிமொழியை எடுத்துக் கொள்வோம். சில கவிதைகள் எழுதியதைத் தவிர இவருக்கு அரசியலைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ என்ன தெரியும்? எல்லாம் ராஜாத்தி அம்மாள் தனது பங்குக்காக கருணாநிதியிடம் சண்டை போட்டு பெற்றதுதானே இந்த அரசியல் வாழ்வு? கனிமொழி ராஜ்ஜிய சபா உறுப்பினர் தேர்வுக்காக தனது சொத்துப்பட்டியலில் பத்து கோடி இருப்பதாக வெளியிட்டாரே? இந்த பத்துகோடி எப்படி வந்தது என்று காலச்சுவடுக்கு தெரியாதா என்ன?

கனிமொழியை வைத்து எல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்பதற்காகவே அவரிடம் நட்பு பாராட்டிய காலச்சுவடு பின்பு அதே கனிமொழி செம்மொழி பிரச்சினைபற்றி காலச்சுவடு எழுதியதற்காகச் சினம் கொண்டு நூலகத்துறை ஆணையை நிறுத்திவிட்டார் என்பதில் மட்டும் கருத்துரிமையைத் தேடவேண்டிய அவசியமென்ன? கனிமொழிதான் காலச்சுவடை நிறுத்திவிட்டார் என்று எழுதுவதற்குக்கூட கண்ணனுக்கு பயம். ஒருவேளை நாளை மீண்டும் சேர்ந்து விட்டால் பிழைப்பை ஓட்டவேண்டுமென்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.

நூலகத்துறையின் குழுவில் காலச்சுவடின் ஆதரவாளர்கள் வெங்கடாசலபதி போன்றவர்கள் இடம்பெற்றது கனிமொழியின் கருணையில்லையா? இதன் மூலம் காலச்சுவடு தனது பதிப்பக புத்தகங்களை நூலகத்துறைக்குள் தள்ளவில்லையா? அந்தக் கணக்கு பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறீர்கள்? இப்படிப் பெரிய இடத்து தொடர்பின்றி நூலகத்துறைக்குள் தமது புத்தகங்களை அனுப்பமுடியாமல் பல ஏழைப் பதிப்பகங்கள் இருக்கின்றனவே அவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.

பொதுவில் இடதுசாரி பத்திரிக்கைகள் மற்றும் அவர்களது வெளியீடுகள் நூலகத்துறைக்குள் வாங்கப்படுவதில்லை. தி.மு.க அரசுடன் கூட்டணியில் இருந்த போதும் செம்மலர், தாமரை போன்ற பத்திரிகைகள் அரசால் வாங்கப்படவில்லை. இவர்களைவிட வெளிப்படையாகவும், கூர்மையாகவும் அரசை அம்பலப்படுத்தும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான பத்திரிகைகளும் அவற்றின் வெளியீடுகளும் அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்களும் அதை சட்டை செய்வதில்லை. இது போக பெரிய இடத்து பழக்கமில்லாத பல பதிப்பகங்களும் தமது நூல்களை நூலகத்திற்கு விற்கமுடியாமல் திணறித்தான் வருகின்றன.

பொதுவில் ஒரு வர்க்கம் தனது நலனுக்காக பரிந்து பேசுவதற்கு மற்ற வர்க்கங்களின் நலனும் இதில் கலந்திருப்பாத சொல்லிக் கொண்டு அதை ஒரு பொதுப் பிரச்சினையாக்கி தனது ஆதாயத்தை தேடும். காலச்சுவடுக்கு அந்த சாமர்த்தியம் கூட இல்லை. மற்ற சிறுபத்திரிகைகளையும் நூலகத்துறை வாங்கவேண்டும் என்று காலச்சுவடு பேசவில்லை. தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது. அதனால் அதன் கருத்துரிமை போராளி வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது.

தி.மு.க அரசைப் பற்றி காலச்சுவடுக்கு பொதுவான கருத்து என்று எதுவுமில்லை. நடுநிலையில் நின்று நல்லவைகளை ஆதரித்து, கெட்டவைகளை எதிர்ப்பார்களாம். முதலில் நடுநிலை என்ற கூற்றே ஒரு மோசடியாகும். எல்லாப் பத்திரிகைகளும் ஒரு கருத்தில் ஒரு நிலையெடுத்தே செய்திகளை வெளியிடுகின்றன. ஒரு அரசியல் நிலைப்பாடு மக்களுக்கு ஆதரவானதா, எதிரானதா என்பதைத்தாண்டி மூன்றாவதாக நடுநிலையென்பதாக ஒரு நிலையில்லை. உலகமயமாக்கத்தை தீவிரமாக மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் அமுலாக்கி வரும் தி.மு.க அரசின் கொள்கைகளால் விவசாயிகள் வாழ்விழந்து நகரங்களுக்கு கூலி வேலைக்காக ஓடி வருகிறார்கள். கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியார் மயமாகி நடுத்தர மக்கள் கூட அவற்றை பயன்படுத்தமுடியாத சூழ்நிலையை நோக்கி தமிழகம் நகர்ந்து வருகிறது.

இதில் அடுத்த ஆட்சியில் வருவோமா, வரமாட்டோமா என்று தி.மு.க தளபதிகள் கிடைத்தைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியோ தனது கட்சியையும், ஆட்சியையும், சொத்தையும் தமது வாரிசுகளுக்கு பங்கிடும் வேலையை செய்து வருகிறார். இப்பேற்பட்ட மக்கள் விரோத அரசை நூலகத்துறை பிரச்சினையை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது காலச்சுவடு. இதுதான் இலக்கியவாதிகளின் அற்பவாதம். தனக்கு ஒரு குறை என்றால் உலகமே சரியில்லை என்று சாபமிடுவது சுந்தர ராமசாமியின் குருகுல மரபு. அந்த மரபின் படி காலச்சுவடும் தனது அற்பவாத அம்மணத்தைக் கூச்சமில்லாமல் காட்டிக் கொள்கிறது.

எல்லா எழுத்தாளர்களையும் ” கருத்து ” அமைப்பின் அமைப்பாளர்களான கார்த்தி சிதம்பரம், கனிமொழி இருவருக்கும் கடிதம் எழுதச் செய்திருக்கும் காலச்சுவடு இந்த இளவரசர்களின் யோக்கியதையை வானளாவ உயர்த்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றிவரும் மத்திய அரசின் முக்கிய அமைச்சரான ப.சிதம்பரம் இந்தத் துரோகச் செயலுக்கு கைமாறாக பல ஆதாயங்களை அனுபவித்து வருகிறார். அதில் முக்கியமானது இவரது மகன் கார்த்தி சிதம்பரம் பல பன்னாட்டு நிறுவனங்களில் கௌரவ ஆலோசகராக பணியாற்றி பல கோடி சம்பளம் வாங்கி வரும் விவகாரம். தற்கொலைக்கும், வேலையின்மைக்கும் ஆளாகிவரும் விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை நாடே பிழைப்பதற்காக நாடோடிகளாக மாறி வருவதற்கு காரணமான முழுமுதற் குற்றவாளிகளுக்கு சன்மானம் இப்படித்தான் வழங்கப்படுகிறது. இந்த சிகாமணிதான் கருத்து அமைப்பின் அமைப்பாளர் என்பதும் இவரிடம் மண்டியிட்டு கருத்துரிமைக்காக காலச்சுவடு கையேந்துவதும் இனம் இனத்தோடு சேரும் என்பதைத்தான் காட்டுகிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான கூட்டத்தோடுதான் காலச்சுவடு நட்பு வைத்திருக்கறது என்பதற்கு இதுவே எடுப்பான செய்தி.

கருத்துரிமை என்பது மக்கள் தங்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டது. பறிக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக மக்கள் போராடும் போதுதான் ஆளும் வர்க்கம் அவற்றை ஒடுக்கி அந்தக் கருத்தையே பேசவிடாமல் ஒடுக்கிவிடுகிறது. காலச்சுவடு உலகப்பிரச்சினைகள் தொடங்கி உள்ளூர் பிரச்சினைகள் வரை எல்லாவற்றிலும் தமது கருத்துக்களைப பதிவு செய்வதை வைத்துக் கொண்டு தன்னை மாபெரும் கருத்துரிமைப் போராளியாக சித்தரிக்கிறது. இது புரட்சித் தலைவி தனது கட்அவுட்டை பார்த்து தனது அதிகாரத்தை பிரம்மாண்டமாக உணருவதற்கு ஒப்பானது.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் அற்றைத் திங்கள் என்னும் தலைப்பில் அருங்காட்சியக அறிஞர்களை வைத்து மாதம் ஒரு கூட்டத்தை நடத்தியது காலச்சுவடு. ஆனால் இதே கோவையில்தான் இந்து மதவெறியர்களை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் கூட்டம் நடத்துவதற்குத் தடை இருக்கிறது. கோவை ஆர்.எஸ் புரத்தில் இந்து மதவெறியர்களைக் கண்டித்தும், அப்பாவி முசுலீம்களை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும் காலச்சுவடு ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தியதில்லை. அப்படி ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் கருத்துரிமையின் வலியை கண்ணன் உணர்ந்திருப்பார். காலச்சுவடு தலைமை அலுவலகம் இருக்கும் நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் நெல்லையில் கோக் நிறுவனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு புரட்சிகர அமைப்புகளுக்கு அனுமதியில்லை. நெல்லையில் வாசகர் வட்டம் நடத்தும் காலச்சுவடு கோக் கம்பெனிக்கு எதிராக பொதுக்கூட்ட்ம் வேண்டாம் ஒரு அரங்கக்கூட்டத்தைக்கூட நடத்தியதில்லை.

ஈழத் தமிழர்களிடம் சந்தையைக் கைப்பற்றியிருக்கும் காலச்சுவடு களத்தில் என்ன செய்தது?
ஈழத் தமிழர்களிடம் சந்தையைக் கைப்பற்றியிருக்கும் காலச்சுவடு களத்தில் என்ன செய்தது?

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் தனது நூல்களுக்கு விரிவான சந்தையை உருவாக்கியிருக்கும் காலச்சுவடு ஈழத்தமிழர்களுக்காக அவர்களை ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கை அரசைக் கண்டித்து ஏதாவது கூட்டம் நடத்தியிருக்கிறதா? புரட்சித் தலைவி ஆட்சியில் நடத்தியிருந்தால் கண்ணன் கோஷ்டி பொடாவில் கைதாகி புரட்சிப் புயலோடு சிறையில் வாலிபால் விளையாடிக்கொண்டிருக்கும். இதழின் அட்டையில் ஈழத்துக்காக கண்ணீர் விடும் காலச்சுவடு களத்தில் இறங்கியிருந்தால் உண்மையில் கருத்துரிமை என்றால் என்ன என்பதை தன் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டிருக்கும்.

புக்கர் பரிசு வென்றாலும் அருந்ததிராய் நர்மதா மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதற்காக அவர் எழுதிய கட்டுரைக்காக நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொண்டு ஒரு நாள் நீதிமன்றக் காவலில் இருந்தார். குடியுரிமைக்காக போராடிய பினாயக் சென் சட்டீஸ்கர் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்பாவி அபசல் குருவுக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை எதிர்த்து பொது அரங்கில் விவாதத்தை எழுப்பினார். தற்போது காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு காஷ்மீருக்கு விடுதலை தரப்பபட வேண்டுமென எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு அறிவுஜீவியின் நேர்மையான கருத்துரிமைப் போராட்டம் என்று மதிப்பிடலாம். ஆனால் காலச்சுவடின் வரலாற்றில் இப்படி ஏதேனும் ஒரு சம்பவம் உண்டா?

அவ்வளவு ஏன் 2002 குஜராத் கலவரத்திற்கு நிவாரணம் என்ற பெயரில் காசு வசூலித்த காலச்சுவடு இந்து மதவெறியர்கள் என்ற சொல்லைக்கூட பயன்படுத்தவில்லை. அப்போது இந்த வசூலுக்கு கனிமொழியும் உதவி செய்தார். அந்த நேரம் தி.மு.க கட்சி, பா.ஜ.க அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்தது. இந்த துரோகத்தை அம்பலப்படுத்தியோ, இது குறித்து கனிமொழியிடம் ஒரு கேள்விகூட காலச்சுவடு கேட்டதில்லை. பதிவும் செய்த்தில்லை. 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்த இந்து மதவெறியர்களின் பெயரைக்கூட சொல்லாமல் செயல்பட்டதுதான் காலச்சுவடின் சாமர்த்தியம். அதனால்தான் மலர்மன்னன் போன்ற இந்துமதவெறியர்கள் அதன் வாசகர்களாக இருக்கிறார்கள்.

இப்படி பாதுகாப்பான அரங்குகளில் பாதுகாப்பான தலைப்புக்களில் யாரையும் கேள்விக்குள்ளாக்காமல் கூட்டம் நடத்துவதாலேயே காலச்சுவடு தன்னை கருத்துரிமைப் போராளியாக கருதிக்கொள்கிறது. இவற்றையெல்லாம் விட காலச்சுவடின் புரவலர்காளக இடம்பெறும் விளம்பரதாரர்கள் பலரும் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானவர்கள்தான். நல்லி சில்க்ஸூம், ஆர்.எம்.கேவியும் காஞ்சிபுரத்தில் நெசவாளர்களைக் கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கிக்கொண்டுதான் தனது பட்டுச்சேலைகளை விற்றும், விளம்பரமும் செய்து வருகின்றன. ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனமோ பல ஏழைகளிடம் சீட்டுப் பணம் வாங்கிக் கடன் கொடுத்து அசலைவிட வட்டியை அதிகமாக கொள்ளையடித்து பின்பு வசூலிக்க அடியாட்களை அனுப்பி இறுதியில் வழக்கும் போட்டு அந்த மக்களை அலைக்கழிக்கிறது. தினமலரைப் பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. பார்ப்பனியத்தின் அடியாளாகச் செயல்படும் இப்பத்திரிக்கை புரட்சிகர அமைப்புக்கள், இசுலாமிய அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் பற்றி வெளியிட்டுள்ள அவதூறுகள், வன்மங்கள், துவேசங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம்.

ஆக பல பிரிவு மக்களின் வாழ்வுரிமையைப் பிடுங்கும் நிறுவனங்களின் பிச்சையோடுதான் காலச்சுவடின் பொருளாதார அடிக்கட்டுமானம் கட்டப்பட்டிருக்கிறது. காலச்சுவடு மேற்கண்ட நிறுவனங்களை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளியிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொது என்ன நடக்கும்? அந்த நிறுவனங்கள் விளம்பரங்களை ரத்து செய்யும். இதுவும் கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று காலச்சுவடு பேசுமா? அப்படிப் பேசாது. ஏனெனில் அந்த விளம்பரப் பணம் அந்த நிறுவனங்களின் சொந்தப் பணம். அவற்றை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என காலச்சுவடு வாதிடலாம். கருணாநிதி அரசு காலச்சுவடை நிறுத்தியது மக்களின் சொந்தப் பணத்தில். ஆகையால் இது கருத்துரிமைக் கணக்கில் வரும். இப்படி காலச்சுவடின் தருக்கத்தின்படி பார்த்தால் கருணாநிதிக்கு ஒரு நீதி, நல்லி குப்புசாமி செட்டியாருக்கு ஒரு நீதி என்றே வரும்.

இந்த அக்கப்போரைப் பார்க்கும்போது புரட்சித் தலைவி ஆட்சி வந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. அப்போதுதான் கருத்துரிமை என்னவென்பதை காலச்சுவடு அம்மாவின் தயவில் கற்றுக்கொள்ளும். ஆனால் அம்மா அவர்கள் காலச்சுவடு போன்ற இலக்கியக் கோமாளிகளையெல்லாம் தனது தரத்திற்கேற்ற எதிரியாகக் கருதும் வாய்ப்பில்லை என்பதால் கருத்துரிமை பற்றிக் காலச்சுவடு தெரிந்து கொள்ளமுடியமலே போகலாம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்

37

ஓரே நேரத்தில் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கிறது? ஸ்ரீநகரில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். பீகாரில் திசை திரும்பிய கோசி ஆற்றின் வெள்ளத்தால் பல இலட்சம் மக்கள் உடமைகளை இழந்து வர மறுக்கும் நிவாரணத்திற்காகத் தவிக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் சிங்கூரில் டாடாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்க விவசாயிகள் போராடுகிறார்கள். ஒரிசாவில் சங்கபரிவார குண்டர்களுக்கு அஞ்சி பல்லாயிரம் கிறித்தவப் பழங்குடிகள் காடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வடக்கிலிருந்து வரிசைப்படி வரும் இக்காலத்தில்மின்வெட்டால் இருண்டு கிடக்கும் தென்கோடித் தமி்ழ்நாட்டில் என்ன நடக்கிறது? நடிகை நமீதாவின் விஜயத்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல்! வடக்கே போராட்டம்; தெற்கே டிராபிக் ஜாம்!

நமீதாவால் மையம் கொண்ட அரசியல் புயல் என்று இந்த தூத்துக்குடி விஜயத்தைக் குமதம் ரிப்போர்ட்டர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அரசியலில் கொட்டை போட்ட இரா. ஹென்றி எனும் பிரமுகர் முதலில் அ.தி.மு.கவிலும் பின்பு காங்கிரசிலும் காலம் தள்ளிக் கடைசியில் புரட்சித் தலைவியிடமே தஞ்சமடைந்திருக்கிறார். அம்மா கட்சியில் சேர்ந்த உற்சாகத்தில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜெபா ஜூவல்லர்ஸ என்றொரு நகைக்கடையைத் திறந்திருக்கிறார். இதனைத் திறந்து வைக்கத்தான் நமீதா முத்து நகருக்கு வந்தார்.

அரசியலிலேயே பிரம்மாண்டமாக ஏதாவது செய்து பெயரெடுத்த ஹென்றி தனது சொந்த நகைக் கடையை மட்டும் சிம்பிளாக திறப்பாரா என்ன? ஊர் முழுக்க நமீதாவின் கட்அவுட்டும், பேனரும் , சுவரொட்டிகளையும் இறைத்திருந்தார். உள்ளூர் சேனல்களில் நமீதா வாராரு, நகைக்கடையைத் திறப்பாரு என்று பாடல்கள் இடையறாது ஒளிபரப்பாகின. காலை ஒன்பதே முக்காலுக்கு கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதிகாலையிலிருந்தே இரசிகர்கள் வெள்ளமெனத் திரண்டனர். டி.எஸ்.பி, மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஐம்பது போலீசாரின் தலைமையில் பாதுகாப்பு போடுமளவுக்கு கூட்டம். இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் நெரிசல். தென்மாவட்டங்களில் நவரசக் கோமாளி கார்த்திக், நாட்டாமை சரத்குமார், கேப்டன் விஜயகாந்த், குண்டுகல்யாணம், குமரிமுத்து யார் வந்தாலும் கூட்டம் சேருவது என்ன கணக்கென்று புரியவில்லை.

நமீதாவுடன் நாசரேத் ஆயர்!
நமீதாவுடன் நாசரேத் ஆயர்!

மதுரை வரை விமானத்தில் வந்த நடிகை பின்னர் காரில் தூத்துக்குடி வந்து சேர்ந்தார். நமீதா வருகிறார், வந்து கொண்டேயிருக்கிறார் என்று அறிவிப்பு கொடுத்தவாறு கூட்டத்தைச் சூடேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு சர்வ கட்சிப் பிரமுகர்களையும் ஹென்றி அழைத்திருந்தார். நமீதாவின் முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்றஞ்சி யாரும் வராமலில்லை. பின்னே மேடைக்கு அருகாமையில் அந்த அம்மையாரை தரிசிக்கும் வாய்ப்பை யார்தான் இழப்பார்கள்?

நகைக்கடை விளம்பரத்தில் நமீதாவைப் போட்டவர் நகைக்கடை வைக்குமளவு சம்பாதிக்க வழி செய்த புரட்சித் தலைவி அம்மாவை கண்டுகொள்ளவில்லையே என சில அ.தி.மு.க தொண்டர்கள் கிசு கிசுக்க அரசியல் வேறு, தொழில் வேறு என்றாராம் ஹென்றி. இதை அம்மாவும் ஏற்றுக்கொள்வார் என்றுதான் தோன்றுகிறது. அம்மாவின் சேனல் அழகிரியின் கேபிள் நிறுவனத்தில் தெரிவதும், அம்மாவின் கோல்டன் மிடாஸ் சரக்குகள் டாஸ்மாக்கில் விற்பதும் சரியென்றால் இதுவும் சரிதானே? அரசியலில் எவ்வளவுதான் சண்டை போட்டாலும் தொழிலில் மட்டும் அது மணற் கொள்ளையோ, ரேசன் அரிசி விற்பதோ, கிரானைட் விற்பனையோ, ரியல் எஸ்டேட் தொழிலோ எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் மனமாச்சரியங்களில்லாமல் ஒரு உண்மையான ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அரசியலில் வெட்டு குத்து இருந்தாலும் அரசியலால் கைவரப்பெற்ற தொழிலில் அவரவர் எல்லை என்ன என்பதை எழுதாத ஒப்பந்தம் போல ஒற்றுமையாக கடைபிடிப்பார்கள்.

நாம் தூத்துக்குடியைத் திணறடித்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க விஜயத்திற்குத் திரும்புவோம். எல்லோரையும் காக்க வைத்து டென்ஷனாக்கிய நமீதா சரியாக பதினொன்றரை மணிக்கு பல கார்கள் பவனி வர ஒரு மந்திரி ரேஞ்சில் வந்திறங்கினார். இறுதியில் பரம்பொருளைக் கண்ட பரவசத்தில் இரசிகர்கள் எழுப்பிய கூச்சல் கடல்தாண்டி கொழும்பிலும் எதிரொலித்ததாம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் சிறிய தடியடி நடத்தியபோது என் செல்லங்களை அடிக்காதே என்று மழலைத் தமிழில் பேசிய நடிகை கூட்டத்திற்கு எண்ணிறந்த பறக்கும் முத்தங்களை அள்ளி விட்டாரம். பெண் காவலர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்குப் போட்டிபோட, மேடையிலிருந்த சர்வகட்சிப் பிரமுகர்கள் அவரையே பரவசத்துடன் பார்க்க, மேடையில் ஐந்தே முக்கால் வார்த்தைகள் பேசியபின் நகைக்கடையைத் திறந்த அம்மையார், பேசியபடி சில இலட்சங்களை தரிசனக் கட்டணமாக வாங்கிவிட்டு சென்னைக்கு விமானமேறிப் போய்விட்டார். இத்துடன் கதை முடியவில்லை, இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.

மேடையில் நமீதாவுக்கு அருகாமை இருக்கையில் அமரும் பாக்கியம் பெற்றவர் நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் அவர்கள். பொதுவாக பல நிகழ்ச்சிகளில் ஆயருக்காக மற்றவர்கள் காத்திருப்பார்கள். இங்கே எல்லோரையும் போல நமீதாவுக்காக ஆயரும் காலையிலிருந்தே காத்துக்கொண்டிருந்தார். ஒரு நடிகை திறக்கும் நகைக்கடையில் ஆயருக்கு என்ன வேலை?

நகைக்கடை முதலாளி பெரும் அரசியல் பிரமுகர் என்பதோடு கிறித்தவராகவும் இருக்கிறார் என்பதால் ஆயரை அழைத்திருக்க வேண்டும். இதே அழைப்பை கடற்கரை மீனவர் கிராமங்களில் இருக்கும் ஒரு ஏழை அம்புரோஸோ, அந்தோணி சாமியோ தங்களது வீட்டுநிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டிருந்தால் ஆயர் வரமாட்டார். என்ன இருந்தாலும் பணக்கார மந்தைகளுக்குத்தான் தேவனது கிருபை கிடைக்கும். அ.தி.மு.கவில் மாவட்ட செயலாளராக இருந்ததினால் அதுவும் ஜெயா சசி கும்பல் தமிழகத்தை மொட்டையடித்த காலத்தில் புறங்கையை ருசித்து சம்பாதித்தவர் ஹென்றி. இதை தூத்துக்குடி நகரமே அறியும் என்றால் ஆயருக்கு மட்டும் தெரியாதா என்ன? அரசியலிலும், சமூக வாழ்க்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக முளைத்திருக்கும் இந்த தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை நம்பித்தான் திருச்சபையும் இயங்க வேண்டியிருக்கிறது.

நடிகையின் விஜயம் நகைக்கடையைப் பிரபலமாக்குவதற்கும், நாசரேத் ஆயரின் வருகையின் மூலம் தேவனின் கிருபை கிடைப்பதற்கும் ஹென்றி விரும்பியிருக்கிறார். என்னதான் மக்கள் தாலிகளை அறுத்து உருக்கி நகைக்கடை உருவாக்கினாலும் அதுபற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஒரு ஊழல் பேர்வழியை சர்வகட்சி ஊழல் பேர்வழிகள் அங்கீகரிக்கும் போது ஆயரும் அங்கீகரிக்கத்தானே வேண்டும்? யாரும் இதை ஒரு பாவச்செயலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆயருக்கும் தெரியும். உண்மையில் பல திருச்சபைகள் மேல்மட்ட கிறித்தவர்களின் பிரச்சினைகள் அல்லது பஞ்சாயத்துக்களைத்தானே கவனிக்கின்றன?

இறைச்சலுடன் சிரித்தவாறு நமீதா ரசிகர்களைக் கலாய்த்துக் கொண்டிருந்தபோது அதையே புன்னகை பூத்த முகத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார் நாசரேத் ஆயர். இதே நேரம் ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடிக் கிறித்தவ மக்கள் உயிரிழந்து, உடமையிழந்து, இந்துமதவெறியர்களுக்கு அஞ்சி காடுகளில் ஒளிந்தவாறு அலைகிறார்கள். இதற்காக இந்திய கத்தோலிக்கத் திருச்சபை தனது பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறைவிட்டு அடையாள எதிர்ப்பைக் காட்டியது. அதையொட்டி தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் நாசரேத் ஆயர் கலந்து கொண்டு கடமையைச் செய்தார். மற்றபடி ஜெபச்சந்திரனப் போன்ற ஆயர்கள் எவரும் தெருவில் இறங்கிப் போராடவில்லை. ஒரிசாவின் சபிக்கப்பட்ட கிறித்தவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாத ஆயர் நகைக்கடைக்கும், நடிகைக்கும் காலத்தை அள்ளி வழங்குகிறார்.

கருப்பு ஏசுநாதர்; தலித்துக்களுக்கு தேவகிருபை கிடையாது!
கருப்பு ஏசுநாதர்; தலித்துக்களுக்கு தேவகிருபை கிடையாது!

ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் கிறித்தவ திருச்சபைகள் நவீன சிற்றரசர்களைப் போலத்தான் நடந்து கொள்கின்றன. இந்தச் சொத்துக்களை அனுபவிப்பதில் இவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டையும் நடப்பது உண்டு. பேராயரிலிருந்து கீழ்மட்டப் பாதிரியார் வரை சாதி ரீதியாக சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செய்வது தமிழகத்தில் சகஜம். தாழத்தப்பட்ட கிறித்தவ மக்களின் தெருவுக்கு இன்றும் கன்னி மேரியோ, தேவனோ வருவதில்லை. ஆயர்களே சாதி ஆதிக்கத்தில் ஊறியிருக்கும்போது, தேவாலயப் பிரார்த்தனையில் மட்டும் சாதி போய்விடுமா என்ன? கல்லறைகளில் கூட பல ஊர்களில் தலித் மக்களின் கல்லறைகளை சாதி ஆதிக்கச் சுவர் பிரித்திருக்கிறது. இப்படி நடை முறை வாழ்க்கையில் எந்தத் துரும்பையும் எடுத்துப் போடாமல்தான் திருச்சபைகள் இயங்கி வருகின்றன.

மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் எளியமக்களை சுரண்டியே பலர் தனித்தனி சபைகளை உருவாக்கியிருக்கின்றனர். இந்த சேவைகள் படம்பிடிக்கப்பட்டுகிறித்தவம் உளுத்துவரும் மேலை நாடுகளுக்கு அனுப்பிப் பணம் திரட்டப்படுகிறது. நம்மூரில் தழைக்காத தேவனின் ராஜ்ஜியம் கீழை நாடுகளிலாவது பரவட்டுமே என பல தனிநபர்களும் நிறுவனங்களும் வாரி வழங்குகின்றன. இயேசு அழைக்கிறார் கூட்டத்தை வைத்தே செத்துப்போன டி.ஜி.எஸ் தினகரன் பல கோடிகளுக்கு அதிபதியாயிருக்கிறார். குணமான சாட்சிகளை செட்டப் செய்தே காருண்யா பல்கலைக் கழகத்தை கட்டியெழுப்பியிருக்கிறார் என்றார் வசூல் எவ்வளவு நடந்திருக்கும்?

பொதுவில் இந்து, இசுலாமிய மதங்களைவிட கிறித்தவ மதம் சற்று முற்போக்காய் இருப்பது போல தோற்றமளிக்கும். அதிலும் இளம் பாதிரியார்கள் மார்க்சியம், சுற்றுச்சூழல், பெண்ணியம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் என்று எல்லா இயங்களையும் பேசுவார்கள். இந்த இசங்களை வைத்து நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வார்கள். இப்படி ஊருக்கு உபதேசம் இலவசமாய் செய்தாலும், திருச்சபை ஊழல்களைப் பற்றி மட்டும் பேசமாட்டார்கள் என்பதோடு, விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். அவர்களின் வசதி நிறைந்த வாழ்வுக்கு திருச்சபையின் புனித இருப்பு தேவையாயிருக்கிறது.

ஏழு வயதில் தன்னை பாலியல் வன்முறை செய்த பாதிரியார் புகைப்படத்தைக் காண்பிக்கிறார், லீ காலிகோஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு வயதில் தன்னை பாலியல் வன்முறை செய்த பாதிரியார் புகைப்படத்தைக் காண்பிக்கிறார், லீ காலிகோஸ்

ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் மட்டும் பெண்கள் ஆயர்களாக வரமுடியாது. அது ஆண்களுக்கு மட்டுமே உள்ள தகுதி. இவர்களது பெண்ணிய முழக்கத்தின் யோக்கியதை இதுதான். மேலும் உலகெங்கிலும் உள்ள திருச்சபை பாதிரியார்கள் செய்திருக்கும் பாலியல் முறைகேடுகள் சங்கரமட லீலைகளைப் போல எண்ணிலடங்காதது. அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறாரை பாலியல் வன்முறை செய்ததாக வழக்கு நடக்கிறது. பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை இரண்டு பில்லியன் டாலர் பணத்தை நிவாரணமாகவும், அபராதமாகவும் கட்டியிருக்கிறது. அமெரிக்க பாதிரியார்களில் நான்கு சதவீதம் பேர் பாலியல் முறைகேடுகள் செய்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து போப்பே அவமானப்பட்டிருக்கிறாராம்.

இவையெல்லாம் நமது உள்ளூர் பாதிரியார்களுக்கு தெரிந்த விசயம்தான். கூடவே யார் யாரெல்லாம் இங்கு அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் அவர்கள் மட்டுமே அறிந்த தேவரகசியம். இப்படி ஒழுக்கத்திலும், சாதி ஆதிக்கத்திலும், சொத்து முறைகேடுகளிலும் ஊறியிருக்கும் திருச்சபையை எந்தப் பாதிரியாரும் கேள்வி கேட்டு கலகம் செய்ததில்லை. இதனால் சுயவிமரிசனம் செய்து கொண்டு சபையை விட்டு வெளியேறியதுமில்லை. லிபரேசன் தியாலஜி என்றெல்லாம் கரடி விடும் முற்போக்கு பாதிரியார்கள் கூட இந்தப் பிற்போக்குத்தனத்தை கேள்வி கேட்டதில்லை. போப்புக்களின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அவர்களும் ஹிட்லரின் ஆதரவாளர்களாகவும், புஷ்ஷின் அபிமானிகளாகவும்தான் ஊழியம் செய்திருக்கிறார்கள்.

எது எப்படியோ தூத்துக்குடி மாவட்டத்தின் நாலுமாவடி ஊரில் நடந்த இயேசு விடுவிக்கிறார் கூட்டத்தில் நடிகை நக்மா சகோதரி நக்மாவாக பிரசங்கம் செய்யும் போது நாசரேத் ஆயர் நமிதாவின் இரசிகராக நடந்து கொண்டது அப்படி ஒன்றும் பெரிய தவறல்லவே!

 

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

8

நாற்பத்தி மூன்று வயதாகும் மவுலானா அப்துல் ஹலீம் என்ற இசுலாமிய அறிஞர் உத்திரப் பிரேதச மாநிலத்திலிருந்து 1988ஆம் ஆண்டு அகமதாபாத் நகரத்திற்கு வந்தவர். இந்தியாவில் சுமார் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த அஹ்லி ஹதீஸ் எனும் இவருடைய சன்னி பிரிவை அகமதாபாத் நகரில் மட்டும் சுமார் 5000ம்பேர் பின்பற்றுகின்றனர். இவர்களுடைய மசூதியில் 20 வருடங்களாக மத உரை நிகழ்த்துகிறார் ஹலீம். இந்த மதப்பணி போக தன்னுடைய வருமானத்திற்கு ஓரு பழைய இரும்புச் சாமான்கள் சேகரிக்கும் கடையையும் நடத்தி வரும் இவருக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கின்றனர். மூத்த குழந்தைகள் இருவரும் டெல்லி மதரசாவில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் அப்துல் ஹலீம் உரையாற்றும் போது “அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது” என்று வந்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஒரு மத அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.

மேலும் அவர் சிமி எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குஜராத் அரசு வழக்கறிஞரால் நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து ஹலீம் தலைமறைவாகி விட்டார் என்றும் போலீசு குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை தெகல்வாக வார ஏடு (9.08.08) புலன் விசாரனை செய்து வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் குடியிருக்கும் ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவர். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.

இந்த ஆண்டு மே மாதம் ஹலீமும் அவரது மதப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பிய போலீசு அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன?

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.
அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருமதத்தவர்களையும் அடக்கிய சமூக ஒற்றுமை அமைதிக்கான இயக்கம் என்ற அமைப்பு மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் ஹலீமின் பெயரும் இருந்தது. இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நீருபிக்க வேண்டுமென்பதில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது குழந்தைகள் மீது ஆணையாக அவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ஹலீமின் மனைவி நூர் ஷாபா.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயிற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி பெற ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதம் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த்தாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொரதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் அகதிகள் முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

குஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு மத அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார்.கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போலிசோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது.

ஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமிய அப்பாவிகள், குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை தெகல்கா ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.

தொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி பயங்கரவாதியக இருக்கலாம் என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.

பயங்கரவாத்த்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலைச் சிறிதேனும் தரும். இல்லையென்றால் அதன் விளைவை எல்லோரும் சந்திக்கவேண்டும்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.
ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமணானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்த இவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர். குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம், ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றனர். ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிரகாம் ஸ்டேன்ஸ் எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிட்டது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள் இந்துமதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.

குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.

இந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.

பயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாயமானைப் போல ஓடிக்கொண்டே இருக்கும்.

 

ஏழையின் கண்கள் என்ன விலை?

13

கண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட்டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத கண்கள்.

கண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இவ்வுலகம். கண்கள் உறைந்து போய் கருத்தைக் கருத்தரிப்பதற்காக நகரில் பிரம்மாண்டமாய் வளரந்து நிற்கும் விளம்பரப் பலகைகள். விழி வழித் தூண்டி உமிழ் நீர் சுரப்பதற்கு வண்ணச் சிதறலாய் இறைந்து கிடக்கும் விதவிதமான உணவு வகைகள். எதிர் பால் விழிகளை மறித்து ஆளுமையை அறிவிப்பதற்கு சரம் சரமாகத் தொங்கும் உடை வகைகள். கண்களின் நீர் வேண்டி விளம்பரங்களுக்கிடையில் கதை சொல்லும் தொலைக்காட்சியின் நிழல் வாழ்க்கை சீரியல்கள். விழிகளின் பிரமிப்பிற்காகப் பெரிய திரையில் அணிவகுக்கும் திரைப்படங்கள். கண்களின் பரபரப்பிற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஊடகங்களின் செய்திக் கதைகள். காதலின் துவக்கமோ, கவிதையின் இயக்கமோ, கண்களின்றி இல்லை. விழிகளுக்காகவே இவ்வுலகம். விழிகளின்றி இல்லை இவ்வுலகம்.

ஆயினும் ஏழைகளின் கண்களுக்கு இந்த படிமங்கள் எதுவுமில்லை. கழுத்தை நெறிக்கும் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு ஒரு உழைப்புக் கருவியாய் மட்டும் கண்கள். எழில்மிகு உலகத்தை இந்தக் கண்கள் அனுபவிப்பதற்கு எப்போதும் வழியில்லை. ஏழ்மையுடன் முதுமையும் சேரும்போது மங்கிப்போகும் கண்கள் மிச்சமிருக்கும் வாழ்வைக் கடனே என்று கழிக்கின்றன. அந்த மங்கிய கண்களையும் இரக்கமின்றி பறித்திருக்கிறார்கள் சில சதிகாரர்கள்.

திருச்சியிலும், பெரம்பலூரிலும் இருக்கும் ஜோசப் கண் மருத்துவமனை ஒரு பிரபலமான தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கடுவனூரில் 28.7.08 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த இலவச முகாம்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மனிதாபிமான முகமூடிகள். இந்த முகமூடியிலும் கூட அவர்களுக்கு அபரிதமான பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அரசின் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், இலவச முகாம்கள் நடத்துவதற்காக இம்மருத்துவமனைக்கு ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இது போக ஜோசப் நிர்வாகம் இலவச முகாம்களைப் படம் பிடித்து வெளிநாட்டு மிஷினரிகளுக்கு அனுப்பி நன்கொடைகளையும் அளவில்லாமல் திரட்டி வந்தது.

வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும் இந்த இலவசத்திற்கு இலக்கு வைத்த நிர்வாகம் அவ்வட்டாரத்தில் உள்ள மக்களைக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிப்பது போல பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென அம்மருத்துவமனை காட்டிய தீவிரம் சந்தேகத்திற்குரியது. முகாமிற்கு வந்த 180 நபர்களில்- பெரும்பாலும் கூலி வேலை செய்யும் முதியவர்கள்- 45 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சிகிச்சைக்காக சில ஆயிரங்கள் செலவு தேவைப்படும் வசதி இல்லாத அம்முதியவர்கள் இந்த இலவசமில்லையென்றால் சதை வளர்ந்த கருவிழிகளுடன் மங்கிய பார்வையோடு மிச்சமிருக்கும் வாழ்வைக் கழித்திருப்பார்கள். ஒரு வேளை அப்படி விட்டிருந்தால்கூட இருக்கும் குறைந்த பட்சப் பார்வைத் திறனாவது மிஞ்சியிருக்கும்.

அந்த 45 ஏழைகளுக்கும் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையில் ஆடுமாடுகளுக்கு செய்வது போல அறுவை சிகிச்சை நடந்தது. இலவசம்தானே என்ற அலட்சியத்துடன் போதிய பாதுகாப்பின்றி, பயிற்சியற்ற மருத்துவர்களால், சோதித்த்தறியப்படாத மருந்துகளுடன் ஈவிரக்கமின்றி அந்த சிகிச்சை நடந்து முடிந்தது. ஊர் திரும்பிய மக்கள் சிகிச்சை நடந்த கண்களில் தாளமுடியாத வலியுடன் தெளிவில்லாத பார்வையுடன் அவதிப்பட்டனர். திரும்பிச் சென்று மருத்துவமனையில் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால் ஒரு சொட்டு மருந்தைக் கையில் கொடுத்து விட்டு இனி பார்வை கிடைக்காது என்று அலடசியமாக கைவிரித்து விட்டது ஜோசப் மருத்துவமனை. ஏன்ன ஏது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே சாலை மறியல் செய்தபோது விசயம் வெளியே தெரியவந்தது.

இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. அதற்காக ஆளுக்கொரு இலட்சம் கொடுத்து சமாதனம் செய்ய முயல்கிறது அரசாங்கம். எத்தனை இலட்சம் கொடுத்தாலும் இழந்த பார்வை கிடைக்காதே என்று கதறுகிறார்கள் அந்த ஏழைகள். இனி ஓட்டை விழுந்த ஒற்றைக் கண்ணுடன் எப்படி வாழமுடியும் என்று நிர்க்கதியாக அழுகிறார்கள் அம்மக்கள். முதுமையோடு குருடும் இணைந்த பயங்கரத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.

ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இந்த பயங்கரவாதத்தை மருந்துகளின் குறைபாடு, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம், மருத்துவமனையைச் சோதனையிட்டோம் என்று மேலோட்டமாக விசாரணை நடத்துகிறது அரசு. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும். ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.

தனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது. அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே? அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது? மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.
திருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன. பணமிருப்பவனுக்குத்தான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தின் அந்த ஏழைகள் பார்வையிழந்து வாழப்போகிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களின் கண்களைப் பிடுங்கியிருக்கும் இந்தச் சம்பவத்தை ரம்பாவின் தற்கொலைக் கிசுகிசு குறித்து கவலைப்படும் நாட்டில் எத்தனைபேர் கவனிக்கப் போகிறார்கள்?
எது எப்படியோ நாம் பார்த்து நுகரத்தான் இந்த உலகில் அழகானவை ஏராளமிருக்கிறதே!

ஆனால், “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அ்தின்றேல் /புண்ணென்று உணரப் படும்.” என்கிறது குறள்.

 

குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல !

29

கடைசியாகக் கிடைத்த தகவலின் படி சாலிக்கிராமம் (சென்னை வடபழனிக்கு அருகில் இருக்கும் சினிமாக்காரர்களின் புண்ணியத்தலம்) வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். சைக்கிள் பாஸ் கலெக்சனிலும் கூட நாயகன் குசேலனை விஞ்சிவிட்டதாம்.

குத்துப்பாட்டுக்கு தொந்தியை ஆட்டி, குளோசப் காட்சிகளில் தொங்கி வழியும் முகச்சதைகளைக் காட்டி வெள்ளித் திரையில் அமர்க்களம் செய்யும் ரித்தீஸைக் காண வேலை மெனக்கெட்டு உடனே கிளம்பி விடாதீர்கள். அந்தி மயங்கும் நேரத்தில் தமிழ்ச் சேனல்களில் ஓடும் நாயகன் ட்ரைலரைப் பார்க்கும் போது அதில் என்ன நடக்கிறது என்பது புரியாவிட்டாலும் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக ஒரு நட்சத்திரம் உருவாகி வருவது மட்டும் தெரிகிறது. தற்போது ரஜினி ரசிகர்களே மறுக்க முடியாத வகையில் வசூலில் காலி டப்பாவாகி, திரையரங்கை விட்டு வெளியேறும் குசேலனின் திரைப்படச் சுருளும் அதைத்தான் நிரூபிக்கிறது.

வையகம் முழுவதும் உள்ள தமிழ் நாக்குகளால் சூப்பர் ஸ்டாரென தன்னிலை மறந்து பக்தியுடன் உச்சாடனம் செய்யப்படும் ஒன்றின் படம் இப்படி ஊத்திக் கொண்டதற்குக் காரணமென்ன?

ஈழத் தமிழரோ, மலேசியத் தமிழரோ, சிங்கப்பூர்த் தமிழரோ, அகதித் தமிழரோ, அகலாமலிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழரோ எல்லாத் தமிழர்களின் கண்களும் ஊடகங்கள் முதல் சின்னத்திரை, வெள்ளித்திரை வரை சகலமான அயிட்டங்களிலும் பார்த்த விழி பார்த்தபடி மாறாமல் உற்று நோக்கி ஒன்றுவது தமிழ் சினிமாவில் மட்டும்தான். செஞ்சோலை, மாஞ்சோலைப் படுகொலைகள் தெரியாது என்றாலும் ஆஸ்திரேலியப் பூஞ்சோலையில் பாடும் இளைய தளபதியின் மனைவி குழந்தைகள் பெயர்கள் மனப்பாடமாய்த் தெரியும்; காய்ந்து போயிருக்கும் காவிரியாறு எந்தெந்த மாவட்டங்களில் பாய்கிறது தெரியாவிட்டாலும் நமீதாவின் பூர்வாசிரமம் அட்சர சுத்தமாய்த் தெரியும்; இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு தெரியாவிட்டாலும் உலகநாயகனின் வரலாறு களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தசாவதாரம் வரை தப்பாமல் தெரியும்; பீகார் மாநிலம் எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும் பில்லா திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட் பளிச்சென்று தெரியும்.

இப்படி உலகத் தமிழர்களுக்கு கல்வியை, வரலாறை, பூகோளத்தைக் கற்றுத்தரும் தமிழ் சினிமாவிலிருந்துதான் அடுத்தடுத்து தமிழகத்தை ஆளப்போவதாய்ச் சொல்லித் திரிகிற கேப்டன்களும், நாட்டாமைகளும் சிலிர்த்தவாறு வருகிறார்கள். மொத்தத்தில் தமிழ் வாழ்வின் மேல்வாய் முதல் கீழ்வாய் வரை வாயுவாய் விரவியிருக்கும் சினிமாவில் ஒரு பிரச்சினை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. திரைப்படங்களால் பாலூட்டி வளர்க்கப்படும் தமிழன் என்னதான் அடி முட்டாளாக இருந்தாலும் சமயத்தில் அவனுக்கே தெரியாமல் புத்திசாலித்தனமாய் ஏதாவது செய்து தொலைத்து விடுகிறான்.

இரசிகப் பெருமக்களின் புரிந்து கொள்ள முடியாத இந்த உளவியல்தான் திரையுலகின் படைப்பாளிகள், முதலாளிகள் அனைவரின் மண்டையையும் ஒற்றைத் தலைவலியாய் குடைகிறது. இதைத் தீர்க்கக்கூடிய டைகர் பாம் மட்டும் இருந்திருந்தால் குசேலன் குதிரையில் பணம்கட்டிய பெருமகன்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கும்.

தமிழ் நாட்டில் கிருஷ்ண பரமாத்மா என்றொரு சூப்பர் ஸ்டார் இருந்தாராம். அவருக்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தி குசேலன் என்றொரு தோழன் இருந்தானாம். அவன் இப்போது சலூன் கடை வைத்து பிழைக்கிறானாம். இருவரும் ஒரு நாள் சந்தித்தார்களாம். அதைப் பார்த்துப் பலரும் அழுதார்களாம். குசேலனைக் குபேரனாக்கிவிட்டு அடுத்தநாள் கிருஷ்ண பரமாத்மா இமயமலைக்கு போனாராம். தோழன் சலூனுக்கு ஒரு நாள் விடுமுறைவிட்டு என்னமோ யோசித்தானாம். குமுதத்தின் லைட்ஸ் ஆன் கிசுகிசுவுக்குக்கூட தகுதியில்லாத இந்தக்கதைக்குத் தமிழர்கள் 100 கோடி ரூபாய் பீஸ் கட்டவேண்டுமாம். அப்படியென்றால் இதைவிட மட்டமான சிவாஜிக்கு மட்டும் தமிழர்கள் புற்றீசல் போல பீஸ் கட்டினார்களே என்று நீங்கள் கேட்கலாம். தமிழன் ஏமாளிதான்! இருந்தாலும் சமயத்தில் கிரியேட்டிவாக ஏதாவது செய்யக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன? அரசியலில் புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் புரட்சித் தலைவரால் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்த போது அல்வா கொடுத்து விட்டார்கள். இதையெல்லாம் ஏனென்று ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

கிருஷ்ண பரமாத்மா தும்மினாலும், தம் அடித்தாலும், இமயமலைக்குப் பம்மினாலும் அட்டைப்படக் கட்டுரைகளாக வெளியிடும் பத்திரிகைகள் பாபா படத்திற்குக் காகிதமே கண்ணீர் விடுமளவுக்கு அலப்பறைகள் செய்து ஊளையிட்டன. பரமாத்மா இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை படம் தந்தால் ஊடகங்கள் ஒரு மாமாங்க காலத்திற்குச் செய்தி வெளியிடும். கடைசியில் இந்த வெற்றுக் கூச்சலில் பாபா படம் கவிழ்ந்தது. பீடியை வலித்தவாறு பரமாத்மா புரூடா விட்ட ஆன்மீக அரட்டைகளை ரசிகர்களே சட்டை செய்யவில்லை, பேண்ட்டும் செய்யவில்லை. பாபா டாலர், செயின், டீ ஷர்ட் என முடிந்தமட்டும் சுருட்ட நினைத்த குண்டுக் கொழுப்பு லதா ரஜினிகாந்தின் பேராசை மண்ணைக் கவ்வியது. அப்போதும் பாபாவின் கிளைமாக்சை ஊடகங்கள் முடிக்கவில்லை. யானை விழுந்தால் எழாது, குதிரை விழுந்தால் மீண்டு எழும் என்ற பரமாத்மாவின் உளறல்களெல்லாம் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. உளுத்திருந்த இமேஜைத் தூக்கி நிறுத்த பரமாத்மா சந்திரமுகிக்குச் சென்ற கதைகள் அடுத்து வெளிக்கி வர ஆரம்பித்தன.

பாபா படத்தை பரமாத்வே தயாரித்திருந்ததால் தன்னை வைத்துச் சூதாடிய வினியோகஸ்தர்களுக்குச் சுருட்டிய தொகையில் கொஞ்சம் கொடுத்தார். இது போக அவருக்கு எஞ்சிய தொகை பத்து கோடியைத் தாண்டும். இதுவும் முதல் பத்து நாட்களுக்கு ரசிகர்கள் வீட்டு நகைகளை அடகுவைத்து 500, 1000 என்று ப்ளாக் டிக்கெட்டில் அழுத பணம்தான். உண்மையான கட்டணத்தில் பாபா திரைப்படம் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும் பரமாத்வுக்கு இந்தப் பணம் கிடைத்திருக்காது. திரைப்படம் வெளியிடப்படும் முதல் வாரம், மாதத்தில் திரையரங்குகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அளித்திருந்த சலுகை பகிரங்கக் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கியது. கடந்த பத்து வருடங்களாக கிருஷ்ண பரமாத்மாவும் இன்ன பிற நட்சத்திரங்களும், முதலாளிகளும் இப்படித்தான் வழிப்பறி செய்து சொத்து சேர்த்து வருகின்றனர்.

தற்போதைய பிரச்சினை என்னவென்றால் பாபா படத்திற்கு முதல் பத்து நாட்களுக்கு வந்த கூட்டம் கூட குசேலனுக்கு வரவில்லையாம். அப்படி வரும் என்று எதிர்பார்த்து குசேலனுக்கு கொட்டப்பட்ட பணம் 61 கோடி ரூபாய். இதில் ரஜினிக்கு 20 கோடி, இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி, படத்தைத் தயாரித்த கே.பாலச்சந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், வைஷ்ணவி மூவிஸ் அஸ்வினிதத் மூவருக்கும் தலா 7 கோடி, மிச்சமெல்லாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தின் தயாரிப்புச் செலவாம். இதை 61 கோடிக்கு வாங்கிய பிரமீட் சாய்மீரா எனும் கார்ப்பரேட் நிறுவனம் பரமாத்மாவின் இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சுருட்டலாம் என்று சப்புக் கொட்டியது. பரமாத்மா தமிழ்க் குசேலனுக்கு மட்டும் அருள் பாலிக்காமல் தெலுங்குக் குசேலனுக்கும் பிச்சை போடும் விதமாக தெலுங்கிலும் தனியாக படமெடுத்தார்களாம். என்.டி.ராமாராவ் கிருஷ்ணனாகவும், இராமனாகவும் அவதரித்து பக்தியில் ஊறப்போட்ட மண்ணாயிற்றே!

குசேலனின் இசை உரிமையை பிக் மீயுசிக் நிறுவனம் 2.45 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமையை 5 கோடிக்கு கலைஞர் டி.வியும் வாங்கியதாம். ஒரு படத்தில் பரமாத்மாவின் போஸ்டரைக் காண்பித்தாலே பிய்த்துக் கொண்டு ஒடும் காலத்தில் பரமாத்மாவின் இசை பஜனையும், தொலைக்காட்சி திவ்ய தரிசனமும் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதில் ஆச்சரியமில்லை. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த படியால் ஒரு சுபமூகூர்த்தத்தில் 600 பிரிண்டுகள் போடப்பட்டு அமெரிக்கா, மொரிஷியஸ், பாங்காக், மலேசியா, சிங்கப்பூர், கேரளா, கர்நாடகம் என்று உலகம் முழுவதும் கோபால் பற்பொடி போல குசேலன் வெளியிடப்பட்டது. இதுதான் படத்தை போட்ட உடன் காசை எடுக்கும் பாராசூட் வணிகமாம். பத்து நாட்களுக்குப் பிறகு படத்தைப் பற்றி எதிர்மறைக் கருத்து உருவாகி வசூல் பாதிக்கலாம் என்ற அபாயம் இதில் இல்லையாம். அதனால்தான் இத்தனை அதிக பிரிண்டுகள் போட்டு இரண்டு வாரத்தில் முதலை இலாபத்தோடு எடுத்து விடுவார்களாம். சரியாகச் சொன்னால் ரசிகன் விழித்துக் கொள்வதற்குள் அவனிடம் பிக்பாக்கெட் அடித்து விடவேண்டும். தமிழகத்தில் பாதி இடங்களில் பிரமீட் சாய்மீராவே ரீலீஸ் செய்து மீதியை விநியோகஸ்தர்கள் மூலமாகத் திரையிட்டது. மொத்தத்தில் 100 கோடியைக் காணிக்கையாகப் பிடுங்குவது திட்டம்.

பக்தர்களைச் சோதனைக்குள்ளாக்கிக் கடைத்தேற்றும் பரமாத்வுக்கே அப்போதுதான் சோதனைகள் வரலாயிற்று. ஒகேனக்கல் பிரச்சினையில் தப்புச் செய்பவர்களை அடிப்பேன், உதைப்பேன் என்று பரமாத்மா வீரவசனம் பேசியதை வைத்து கர்நாடகத்தில் குசேலன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோமென எதிர்ப்புக் கிளம்பியது. பரமாத்மா எந்தவிதக் கூச்சநாச்சமின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தார். பரமாத்மாவின் பல்டியை கர்நாடகம் ஏற்றுக்கொண்டு வழி விட்டாலும், தமிழ் ரசிக பக்தர்களிடையே ஒரு நெருடல் ஏற்பட்டது. என்னடா நம்ம தலைவர் சுண்டுவிரலசைவில் நூறு பேரைப் புரட்டி எடுப்பாரே, இப்படி தீடீரென்று பணிந்து விட்டாரே, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டாரே என்று பக்தர்களிடம் சற்று மனக்கிலேசம் பற்றியது.

இது ரிலீசுக்கு முந்தைய நாள் நிலவரம். பரமாத்மா ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்ததன் கூடவே அவரது இமேஜூம் உப்பியது என்பதை இந்த முக்கியமான தருணத்தில் நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். பரமாத்மாவினால் இமேஜ்! இமேஜினால் பரமாத்மா! இமேஜைப் பராமரிப்பது இரசிக பக்தர்களின் வேலை. திரையில் இமேஜாகவே விசுவரூபமெடுக்கும் பரமாத்மா நிஜவாழ்விலும் அதைப் பராமரிக்கவேண்டுமல்லவா! ஆனால் உண்மையில் முரண்படும் இந்த இரு துருவங்களை ஒத்திசைவாக கொண்டுசெல்வதற்கு அந்த நிஜ பரமாத்மாவே வந்தாலும் சாத்தியமில்லை. மாயைக்கும், உண்மைக்குமான சண்டையில் வியாபாரத்துக்கும், இமேஜுக்குமான மோதலில் பரமாத்மா தனது மகிமையைச் சற்ற சுருதி குறைத்துக்கொண்டார். வினை தொடங்கிவிட்டது.

அடுத்த குசேலன் படம் முழுவதும் சுமார் 55 நிமிடக் காட்சிகளில் வரும் பரமாத்மாவின் பண்பு நலன்கள், பழகும் தன்மை, எளிமை, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், வாழ்க்கையைப் பற்றி அவர் என்ன நினைக்கறார், அவரைப் பற்றி வாழ்க்கை என்ன நினைக்கிறது, இமயமலையில் அவர் பெற்ற ஆன்மீகம் எல்லாம் புண்ணிய நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இமேஜ் பில்டப்பில் ஒரு விசயம் மட்டும் பிழையாகிவிட்டது. அரசியலுக்கு தான் வருவதாக திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசியதெல்லாம் தனது சொந்தக் கருத்தல்ல, இயக்குநர் எழுதிக் கொடுத்ததைத்தான் பேசினேன் என்று பரமாத்மா குசேலனில் வசனம் பேசியது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது அரசியல் இமேஜ் ஒரு மாயை என்கிறார் பரமாத்மா. பக்தர்களோ அது மாயை என்று தெரிந்தாலும் தங்களை அந்த மாயையில் வைக்குமாறு வற்புறுத்துகிறார்கள். இது பக்தர்களின் பிழையல்ல. ஏனெனில் அவர்கள் அந்த மாயையை நம்பித்தான் பரமாத்மாவுக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கூடவே வட்டிக்கு வாங்கிய காணிக்கையையும் கொடுத்து பூஜை செய்கிறார்கள். காணிக்கையை வாங்கி கல்லாவை நிரப்பிவிட்டு தான் ஒரு எளிய மனிதன் என்று புரூடா விட்டால் அதை நம்புவதற்கு பக்தர்கள் என்ன மாங்காய் மடையர்களா?

இதை லேட்டாகத் தெரிந்து கொண்ட படக்குழுவினர் அந்த வசனத்தை வெட்டி விட்டு பரமாத்மாவின் காட்சிகளை அதிகப்படுத்தி படத்தை புத்துருவாக்கம் செய்தார்கள். அப்போதும் படம் பிக்கப் ஆகவில்லை. பக்தர்களின் பிச்சையால் ஒரு பில்லியனராக விசுவரூபமெடுத்திருக்கும் பரமாத்மா அன்றாட வாழ்வில் எளிமையாக இருக்கும் ஒரு ஆன்மீகவாதி என்று தன்னை வெளிப்படுத்துவதெல்லாம் ஊடகங்கள் முதல் பக்தர்கள் வரைக்கும் பிரபலமான ஒரு சங்கதி. அதையே திரைப்படமாக எடுத்தால்? ஊற்றிக் கொள்ளும் என்பதையே பாபா, குசேலனின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் போட்டுடைக்கிறது. படையப்பா, பாட்சா, அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் ஒரு கணக்கில் பரமாத்மாவின் இமேஜுக்குப் பொருத்தமாக இருப்பதால் ஓடியது. பாபாவில் பரமாத்மாவின் ஆன்மீக உபன்னியாசங்களை பக்தர்கள் சீண்டவில்லை. என்ன கேட்டாலும் கிடைக்கும் வரம் பெற்ற பாபாவிடம் வினியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட காசையாவது திருப்பிக் கொடுங்கள் என்று வரம் கேட்டனர்.

குசேலினிலும் அதுவே ஆக்சன் ரீப்ளேவாக ஓடுகிறது. நிஜக்கதையில் குசேலனை குபேரனாக மாற்றுவார் பரமாத்மா. எங்களை குபேரனாக்காவிட்டாலும் பரவாயில்லை பிச்சைக்காரர்களாக மட்டும் மாற்றி விடாதீர்கள் என்று பரமாத்மாவுக்காக மூதலீடு செய்த பணத்தை கேட்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் குசேலனை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் திரைப்படப் பெட்டியை சென்னைக்கு அனுப்பிவிட்டு நட்டகணக்குடன் தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டிருக்கிறார்கள். இதில் பரமாத்மா தலையிட்டு பிச்சை போட்டாலும் பெற்றுக் கொள்வோம் என்கிறார் ராயலசீமா பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சங்கத்தைச் சேர்ந்த சசிதர் பாபு. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ பரமாத்மாவை நேரில் சந்தித்து தாங்கள் நிழல் குசேலனால் நிஜ குசேலனாக்கப்பட்டதை எடுத்துக் கூறி நிவாரணம் கேட்டிருக்கிறார்.

பரமாத்மாவும் உரியவர்களிடம் பேசி முதலீட்டில் 33 சதவீதத்தை திருப்பித் தர ஆவன செய்வதாகக் கூறினாராம். இதை பன்னீர் செல்வம் ஏற்றுக் கொள்ளாததோடு தாங்கள் 80 சதவீதம் நட்டமடைந்திருப்பதாகவும் அதில் 70 சதவீதமாவது திரும்பத் தரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பரமாத்மாவை வைத்து பணத்தை டபுளிங் (இரண்டு மடங்கு கள்ளநோட்டை ஒரு மடங்கு நல்ல நோட்டாக மாற்றுவது) செய்து விடலாம் என்று மனப்பால் குடித்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் இது குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. திரைப்படத்தை பார்த்து விட்டுத்தான் வாங்கினார்கள் எனவே பணத்தை திருப்பித் தரும் பேச்சே இல்லை என்று கே.பாலச்சந்தர் கறாராக கூறிவிட்டாராம். இப்படி சகல தரப்பிலும் குசேலனுக்கான உள்குத்து ஆரம்பித்து விட்டது. ஒரு நூறு கோடி ரூபாயை பக்தர்கள் மட்டும் உண்டியலில் செலுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

பரமாத்மா என்றொரு இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்று பரமாத்மா, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் ஆணித்தரமாக நம்பி இறங்கினர். இதில் பரமாத்விற்கும், தயாரிப்பாளர்களுக்கும் உரியது கிடைத்து விட்டது. மற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள். மாட்டிக் கொண்டவர்களும் அப்பாவிகளல்ல. பரமாத்மா என்றொரு மூடநம்பிக்கையை வைத்து முட்டாள் ரசிகர்கள் ஆராதிக்கும் வரை கவலையில்லை என்று நம்பிக்கையுடன் தொழிலில் இருந்தவர்கள்தான். அந்த முட்டாள்கள் இப்போது படத்தைப் பார்ப்பதற்குத் தயாரில்லை. என்ன செய்யலாம்?

பரமாத்மாவின் திருவிளையாடலை பக்திப் பரவசமின்றி பக்தர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். பரமாத்மாவின் 20 கோடி சம்பளத்தை குறைக்க முடியுமா? அவரது சந்தை மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் கூலியைக் கொடுத்துதான் ஆக வேண்டும். பரமாத்மாவின் படத்தை சுப்பிரமணியபுரம் மாதிரி லோ பட்ஜட்டில் எடுக்க முடியுமா? அவரது இமேஜுக்காக படம் பார்க்க வரும் பக்தர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ரிச்சாகத்தான் எடுக்க முடியும். அவரது படத்தை ஒரு நியாயமான விலைக்கு விற்க முடியமா? பந்தயத்தில் இந்தப் பரமாத்மா குதிரை ஓடி ஜெயித்து விட்டால் ஜாக்பாட் அடிக்குமென்பதால் அநியாய விலைக்குத்தான் விற்க முடியும். பரமாத்மாவின் படத்தை உரிய திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் இந்தப் பிரச்சினை தீருமா? அப்படி வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால் பிளாக்கில் 500,1000 என்றுதான் விற்க முடியும். கிருஷ்ண பரமாத்மா என்ற இந்த சூப்பர் ஸ்டாரின் இமேஜும், வர்த்தகமும் இணைந்து நடத்தும் இந்த சூதாட்டம் இப்படித்தான் இயங்க முடியும்.

இந்த சூதாட்டத்தில் பக்தர்கள் நினைத்தால் ஜாக்பாட்டும் கொடுப்பார்கள், மொட்டையும் அடிப்பார்கள். இரண்டையும் எப்போது எப்படி செய்வார்கள் என்பது பரம்பொருளுக்கே பிடிபடாத மர்மம். ஆனாலும் ஒவ்வொரு சூதாட்டத்திலும் பரமாத்மாவுக்கு மட்டும் நட்டம் வராது. வெற்றி பெறும் ஒவ்வொரு சூதாட்டமும் மக்கள் தாலியறுத்த பணத்தில்தான் நடக்கிறது என்பதுடன் பரமாத்மாவின் புராணத்தை முடித்துக் கொள்வோம்.

_____________________________________________

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

35

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

 

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ்அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

அமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் !

12

2020ஆம் ஆண்டிற்குள் இராணுவத்திலிருக்கும் துருப்புக்களில் 30 சதவீதம் பேரை நீக்கிவிட்டு எந்திர ரோபோக்களை நியமிப்பதென அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டிருக்கிறதாம். ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா விமானங்கள், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் எந்திரங்களையெல்லாம் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய துணைச்செயல்களைத் தாண்டி இனிவரும் ரோபோக்கள் போர்க்களத்தில் இறங்கி சண்டையே போடுமாம்! வீடியோ விளையாட்டுக்களிலும், அறிவியல் புனைகதைத் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகியிருக்கும் இந்தக் கற்பனை ரோபோக்கள் உண்மையிலேயே வரப்போகிறார்கள் என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். எந்தப் பயனுமில்லாத இந்த ஆச்சரியத்தை ஒத்திவைத்து விட்டு இதன் அரசியல் பரிமாணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.


இவற்றினை ரோபோக்கள் என்பதைவிட தானியங்கிக் கட்டளைகளை நிறைவேற்றும் எந்திரங்கள் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள். கவச வாகனங்களை ஓட்டுவதும், வெடிகுண்டுகளைச் செயலிழக்கவைப்பதும், முன்களத் தாக்குதலில் இறங்கி போரிடுவதுமென இதன் செயல்பாடுகள் நீள்கின்றன. இது ஒருபுறமிருக்க இந்த ரோபோக்களை இராணுவத்தில் சேர்ப்பதால் வரும் அறவியல் பிரச்சினைகளைக் குறித்து மட்டும் அமெரிக்க அறிவாளிகள் கவலைப்படுகிறார்கள். அந்த அறத்தின் கவலை என்ன?

எந்திரம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படப்போகிறது. ஆனாலும் எதிரில் வருபவர் அப்பாவியா, முதியவரா, பெண்களா, குழந்தைகளா, ஆடு-மாடா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சுட்டுத்தள்ளினால் என்ன செய்வது? இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தன்னறிவுடன் அவற்றை வடிவமைக்க முடியாதே? மாட்ரிக்ஸ் திரைப்படம் போல எந்திரங்கள் சுயமாக சிந்தித்து உலகை ஆளும் கற்பனையெல்லாம் நிஜத்தில் சாத்தியமில்லை. ஒரு மனிதன் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக போரிடுகிறானோ அந்த அளவுக்கு ரோபோக்களை வடிவமைப்பது சாத்தியமென்றாலும் அதன் இயக்கு விசை மனிதனிடமே இருக்குமென்பதால் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள் அதன் பொறியியலாளர்கள். சண்டையிடும் ரோபோக்களைத் தூரத்தில் ஒரு கணினித் திரையில் பார்த்தவாறு பொத்தானை அழுத்தி இயக்கப்போவது மனிதனென்பதால் இது பாதுகாப்பான போர்முறைதான், வில்லங்கம் ஏதுமில்லை என்றும் கூறுகின்றனர்.

மற்றபடி இந்த எந்திரமயமாக்கத்தால் செய்யப்படும் ஆட்குறைப்பால் பலர் வேலை இழப்பார்களே என்பது கூட அவர்களது கவலையில்லை. அந்த வசதியான கவலையாளர்கள் எவரும் ஈராக்கில் போய் சண்டையிடப் போவதில்லை. இராணுவத்தில் சேரும் பெரும்பான்மையினரில் வாழவழியற்ற கருப்பின மக்கள்தான் அதிகம். இருப்பினும் இது குறித்து நாமும் கவலைப்படத் தேவையில்லை. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தில் மனிதன் இருந்தாலென்ன, எந்திரங்கள் இருந்தாலென்ன?

எந்திரப் பொம்மைகள் அப்பாவிகளைச் சுட்டுக்கொல்வது குறித்து அவர்கள் கவலைப்படுவது ஆடுகளுக்காக ஓநாய்கள் அழுவது போலத்தான். இப்போது பல நாடுகளிலிருக்கும் உயிருள்ள வீர்ர்களைக் கொண்ட அமெரிக்க இராணுவம் அப்பாவிகளைச் சுடாமலா இருக்கிறது? ஜப்பானில் அணுகுண்டு போட்டு இரண்டு நகர மக்களைக் கூண்டோடு அழித்தது எந்திரமா என்ன? வியட்நாமில் முழுநாட்டையே ஏஜெண்ட் ஆரஞ்சு வெடிமருந்தினால் அழித்தார்களே, அது யாருடைய வேலை? கிராமம் கிராமமாக வியட்நாமியப் பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, ஆண்களைச் சித்திரவதை செய்து கொன்றதையெல்லாம் வரலாறு குறித்திருக்கிறது.

இவையெல்லாம் நேற்று நடந்த கதையென்றால் ஆப்கானிலும், ஈராக்கிலும் என்ன நடக்கிறது? அப்பாவி மக்களைக் கொன்ற கணக்கு சில இலட்சங்களைத் தாண்டும். அமெரிக்க ஏவுகணைகளும், கிளஸ்டர் குண்டுகளும் மக்கள் குடியிருப்புகளைத் தாக்கி அழிக்கும் ஒவ்வொரு முறையும், இராணுவத் தளபதிகள் தெரியாமல் நடந்து விட்டதென போகிறபோக்கில் சப்புக்கொட்டினர். ஒரு வேளை ரோபோக்கள் வந்துவிட்டால் இந்த அட்டூழியங்கள் குறையத்தானே செய்யும்?

அபுகிரைபில் செய்த வக்கிரங்களை படம் பிடித்து மகிழ்ந்தது போல ரோபோக்கள் நிச்சயம் செய்யாது எனலாம். குவான்டனாமோ சிறையிலும், டீகோகார்சியா தீவிலும், எண்ணற்ற போர்க்கப்பல்களிலும், எல்லையற்ற சித்திரவதையால் துன்பப்படும் ஆயிரக்கணக்கான கைதிகளையெல்லாம் ரோபோக்கள் துன்புறுத்தப் போவதில்லை. ஆனால் ரோபோக்களையும் அப்படி வடிவமைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

விண்வெளி ஆய்வுகளுக்கு நிகரான செலவு பிடிக்கும் இந்த ரோபோக்களை வடிவமைக்கும் திட்டத்தில் அமெரிக்கா இறங்கியதற்கு சில காரணங்கள் இருக்கலாம். என்னதான் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் போரென்று வரும்போது அமெரிக்காவும் தனது வீர்ர்களைப் பலிகொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. வியட்நாமிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் வீர்ர்களின் சவப்பெட்டிகள் நூற்றுக்கணக்கில் வந்திறங்கியது, அமெரிக்க மக்களிடம் போரெதிர்ப்பு உணர்வைத் தூண்டியது உண்மை. வியட்நாமிலிருந்து அமெரிக்கா தோல்வியுற்று பின்வாங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த உள்நாட்டு எதிர்ப்பை தவிர்க்க வேண்டுமெனில் வீர்ர்களின் இறப்புக் கணக்கை குறைத்துக் காண்பிப்பது அவசியம். அதற்கு ரோபோக்கள் உதவுமென்பது ஒரு எதிர்பார்ப்பு. ரோபோக்கள் அழிக்கப் பட்டால் யாரும் கண்ணீர் விடமாட்டார்கள் என்பதோடு சென்டிமென்ட் அரசியலும் எழாது.

தற்போதே ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் அறிவியல் தொழில் நுட்ப உதவியினால் நேரடி கள மோதலின்றி பாதுகாப்பான போரைத்தான் நடத்துகிறது. போராளிகள் நெருங்க முடியாத அதி உயர் குண்டு வீசும் விமானங்கள் மூலமும், பாரசீக வளைகுடாவில் பாதுகாப்பான தொலைவில் இருக்கும் போர்க்கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், ஈராக்கை சின்னா பின்னாமாக்கிய பிறகே அமெரிக்க வீரர்கள் எதிர்ப்பதற்கென்று ஆளில்லாமல் ஈராக்கில் இறங்கினார்கள். தற்போது வட்டியும் முதலுமாய்ச் சேர்த்து வாங்குகிறார்கள் என்பது வேறு விசயம். இங்கே நாம் சொல்ல வருவது பாசிஸ்ட்டுகள் தங்கள் நிழலைக் கண்டு கூட அஞ்சுவார்கள் என்பதைத்தான். எவ்வளவு வசதி இருந்தாலும் ஒரு ஆக்கிரமிப்பு படைக்கு நேரிட்டு போரிடும் தைரியம் நிச்சயம் இருக்காது. இந்த அணுகுமுறைக்கு ரோபோக்கள் பொருத்தமாய் இருக்கின்றன.

ஒரு ஆக்கிரமிப்பு போரை முழுவதும் ரிமோட் கண்ட்ரோலிலேயே நடத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இன்னும் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் இறக்கவேண்டுமோ தெரியவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரசியலை நிறைவேற்ற மனிதர்கள் அடங்கிய துருப்புக்கள் என்ன செய்தனவோ அவற்றைத்தான் ரோபோக்களும் செய்யப் போகின்றன. இதைத்தாண்டி இதில் அறவியல் பிரச்சினை ஏதுமில்லை.

கடைசியாக ஒரு விசயம். அடுத்த அதிபர் தேர்தலில் புஷ் வேண்டுமா, ஒரு ரோபோ வேண்டுமா என்று அமெரிக்க மக்களைக் கேட்டால் யாரைத்தெரிவு செய்வார்கள்? புஷ்ஷை விட ஒரு ரோபோ முட்டாள்தனமாக செயல்படாது என்பதால் பொம்மையைத்தான் தெரிவு செய்வார்கள்!

_________________________________________

ரவி ஸ்ரீநிவாஸ்: நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

7

From ரவி சீனிவாஸ் to “சுரணையற்ற இந்தியா”, 2008/08/04 at 7:04 மாலை

தலிபான்கள் புத்தர் சிலைகளை இடித்தனர், இஸ்லாமியர அல்லாதோரை பாரபட்சத்துடன் நடத்தினர், துருக்கியில் ஆர்மினிய கிறித்துவர் இனஒழிப்பு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கெல்லாம் யார் சாரி சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் பிற மதத்தினர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குவீர்களா.

 

From ரவி சீனிவாஸ் to “சுரணையற்றஇந்தியா”, 2008/08/04 at 6:57 மாலை

2002ல்நடந்தது குறித்து நீங்கள் எழுதுங்கள்.மொகலாய படையெடுப்பில்நடந்ததிற்கு,இடிக்கப்பட்ட கோயில்களுக்கு பழி வாங்க,பழைய கணக்கைத் தீர்க்க பாப்ரி மசூதியை இடித்தோம் என்று அவர்கள் எழுதுவார்கள். இருவர் தர்க்கமும்ஒன்றுதான், கால அளவுதான் மாறுபடுகிறது. 2002ல் குஜராத்தில் நடந்ததற்கோ அல்லது நூறாண்டுகள் முன்பு நடந்ததற்கோ இன்று  பழிவாங்குகிறேன் என்று யாரையும் கொல்ல, பொதுச்செத்துக்களை சேதம் செய்ய, பிறருக்கு ஊறு விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 1979ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் தன் ஆதரவு அரசை நிறுவியது. அதுதான் முதல் தவறு. அதற்கு தொடர்ச்சியாக அமெரிக்கா-பாக் ஒத்துழைப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயிற்சி பெற்று, சோவியத் ஆதரவு அரசிற்கு எதிராக போரிட்டனர்.உங்கள் தர்க்கத்தின்படி மூலவினை சோவியத் செய்த செயல் என்றல்லவா கொள்ள வேண்டும். அதை வசதியாக மறைத்துவிட்டு எழுதுவீர்கள்.

இந்த்துவம் இல்லாத பாகிஸ்தானில் ஏன் குண்டு வெடிக்கிறது, சூடானில் ஏன்இனப்படுகொலை நடக்கிறது,பாலஸ்தீனத்தில் ஏன் ஹமாஸும், PLO பிரிவும் மோதிக்கொள்கின்றன என்று கேட்டால் பதிலாக இந்தியா என்ற நாடு இருப்பதால்தான் குண்டுகள் வெடிக்கின்றன, இந்து என்றமதம் இருப்பதே பழி வாங்கும் உணர்வை தூண்டுகிறது. எனவே இந்தியாவை ஜிகாதிகளிடம் கொடுத்துவிட வேண்டும், காஷ்மீரையும் அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும், இந்துக்கள் இஸ்லாத்தினை ஏற்று கோயில்களை,தங்கள் வழிப்பாட்டுத்தலங்களை இடித்துத் தள்ள வேண்டும்என்று தர்க்கபூர்வமாகநீங்கள் எழுதினால் நான் வியப்படையமாட்டேன்.

 

From ரவி சீனிவாஸ் to கருகும் கனவுகள் !, 2008/08/04 at 6:25 மாலை

இந்தியாவில்தமிழ்நாடு மட்டும்தான் மதுவை அனுமதித்துள்ளதா, பிற மாநிலங்களில் 100% மதுவிலக்கு நிலவுகிறதா.மது உற்பத்தியும்,விநியோகமும்,நுகர்வும் பலமாநிலங்களில் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆண்கள் குடிப்பதால்,சீக்கிரம்இறக்கிறார்கள் எனவே விதவைகள் எண்ணிக்கை அதிகம் என்பது ஏற்கத்தக்கதாக இல்லையே.நந்தனுக்கு இதுக் கூடப் புரியாதா?

“ஐ.நா சபையின் ஆய்வுப்படி இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில்ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம் (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம்.அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே விதவைகளின் விகிதம்தமிழ்நாட்டில்தான் அதிகமாம்”

60+ வயதுகளில் விதவைகள் இல்லையா. அகில இந்திய விபரம் சராசரி என்றால் அதை வைத்துக் கொண்டு ஆரம்பகட்ட கருதுகோளைக் கூட வைக்கமுடியாது.மாநிலவாரியாக,
வயதுவாரியான தகவல் இல்லாமல் மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதுவதை நம்ப படிப்பவர்களெல்லாம் முட்டாள்களா.

‘Why can’t you give information which says that drinking habit has improved the standard of living of the Indians (in particular Tamilians) or the society?’ I have not claimed that drinking has improved the standards of living.If you cant understand what I had written it is better you start agains from Class I.

‘It is because, in our society opportunity is not available equally to all. For example, Hindu religion tells that barber’s son has to do that work only’. For how long you will blame Hindu religion.Even the author states that workers from other countries in Asis go to Gulf in search of greener pastures. The problem lies not with Hindu religion but with lack of employment in many countries.

*******

வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்!!, கருகும் கனவுகள், சுரணையற்ற இந்தியா ஆகிய வினவின் கட்டுரைகளுக்கு பதிவர் ரவி சீனிவாஸ் மேற்கண்டவாறு மறுமொழிகளை ஒரு தேர்ந்த அறிஞர் போல ஏராளமான விவரங்களுடன் எழுதியிருந்தார். அறிஞரின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதிலளிப்பதைவிட அக்கருத்துக்களைத் தோற்றுவித்த அவரது இதயத்தைக் கேள்வி கேட்கிறது இப்பதிவு

ரவி சீனிவாஸ் ரொம்பவும் உணர்ச்சிவயப்படுகிறார். அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் தான் நடுநிலையாக சிந்திப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கவும் அவர் முயற்சி செய்கிறார். அதுதான் கொஞ்சம் அசட்டுத்தனமான முயற்சியாக இருக்கிறது. புத்தர் சிலையை இடித்ததற்கு தாலிபான்கள் சாரி சொல்லாதபோது, மோடி மட்டும் என்ன இளித்தவாயனா என்பதுதானே உங்கள் கேள்வி ரவி சீனிவாஸ்? அதை அப்படியே வெளிப்படையாகக் கேட்டிருக்கலாமே! மோடி ஒரு இந்து தாலிபான் என்பதை நாங்கள் மறுக்கவில்லையே1

2002 குறித்து நீங்கள் எழுதுங்கள், முகலாயர் அட்டூழியங்களுக்குப் பழிவாங்க மசூதியை இடித்த்தாக அவர்கள் எழுதுவார்கள், என்று குறிப்பிடுகிறீர்கள். நாங்கள் யாரென்பது தெரிந்ததுதான். அவர்கள் சங்க பரிவாரம். அதிருக்கட்டும். நீங்கள் யார்? இரண்டும் சாராத நடுநிலையாளரா? அப்படியானால் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். தினமணி வாசகர் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்தால் அந்த நடுநிலைக் கலையை நீங்கள் கற்றுத் தேறலாம்.

ஆப்கானிஸ்தானை ரசியா ஆக்கிரமித்தது நியாயம் என்று வினவு சொல்லவில்லையே. சொல்வீர்கள் என்று வாய்க்குள் வார்த்தையைத் திணித்து பிறகு அதற்கு பதில் சொல்கிறீர்கள். இது புத்திசாலித்தனமாகத் தோன்றும் தரம் தாழ்ந்த விவாதமுறை. சரி, ரசியா ஆப்கானை ஆக்கிரமித்தால் அமெரிக்கா ஒரு பின்லாடனை உருவாக்கித்தான் ஆப்கானுக்கு விடுதலை வாங்கித்தர வேண்டுமா? இந்த வாதத்தின் மூலம் பின் லாடன் உருவாக்கப்பட்டதற்கான நியாயத்தை நீங்கள்தான் வழிமொழிகிறீர்கள் என்பது கூடப் புரியவில்லையா உங்களுக்கு?

முன்பு நடந்ததற்காக இன்று பழிவாங்க யாருக்கும் உரிமை இல்லை, அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். என்று கூறுகிறீர்கள். அமெரிக்கா இராக்கின் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இராக்கில் எந்த ஒரு அந்நியநாடும் தலையிடுவதை ஏற்கமுடியாது என்று இந்திய அரசாங்கம் விட்ட அறிக்கையைப் போல இருக்கிறது இது. அல்லது பாரதிய ஜனதா கையும் களவுமாகப் பிடிபட்டுவிடும் சந்தர்ப்பங்களில், சோ தெரிவிக்கும் கண்டனத்தைப் போலவும் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் தெகல்கா வீடியோ பற்றி சோ வின் கருத்தைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் துக்ளக் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பது தெரியவரும்.

வரலாற்றுப் பழிதீர்ப்பது என்ற சொற்றொடரை இந்திய அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது யார்? அவ்வாறு பழிவாங்குவதை நியாயப்படுத்தி அந்த அரசியலால் நாட்டை இரத்தக்காடாக்கி ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது ஒரு கட்சி. அந்தக்கட்சியின் தலைவர்களைத் தண்டிப்பதைப் பற்றி நீங்கள் எழுதவில்லையே! இசுலாமிய தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தி வினவு எழுதவில்லை. அத்தகைய பழிவாங்கும் அரசியலுக்கான நியாயத்தை முன்மொழிந்தவர்கள் அல்லது வழிமொழிகிறவர்கள் சங்க பரிவாரத்தினர்தான். சங்க பரிவாரத்தைக் கண்டிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இசுலாமியத் தீவிரவாதிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும், இல்லையென்றால் நீ ஜிகாத் கட்சியா, கோயில்களை இடித்து மசூதி ஆக்கிவிடலாமா என்று மிரட்டுவதும் ரொம்ப பழைய உத்தி.

என்ன செய்வது, நாசூக்காக இந்துத்துவா பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி (பா.ஜ.க) முதல் ஸ்வபன்தாஸ் குப்தா (இந்தியா டுடே) வரையிலான ஜி க்கள் எல்லோருமே உணர்ச்சி வசப்படும்போது, வேட்டியை ஏத்திக் கட்டுகிறார்கள். உள்ளே இருக்கும் காக்கி அண்டர்வேர் தெரிந்துவிடுமே என்று அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதில்லை. உங்களை சங்க பரிவாரம் என்று முத்திரை குத்த விரும்பவில்லை. அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். மோடிக்கு ஓட்டுப் போட்ட எல்லோரும் சங்கபரிவாரத்தினர் என்றா சொல்ல முடியும்?

போகட்டும். டாஸ்மாக் மேட்டர் பற்றி ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அது ஒரு செய்தியின் அடிப்படையிலான பதிவு (கருகும் கனவுகள்). ஆய்வுக் கட்டுரை அல்ல. மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளின் முன்னால் சந்திக்கும் டிராபிக் ஜாமை அன்றாடம் பார்ப்பதினால் அப்படி ஒரு ஆய்வு தேவையில்லை என்று கருதி விட்டோம். இதுதான் உண்மை. குஜராத்தில் 2002 இல் நடந்த்து கலவரமா இனப்படுகொலையா என்று முடிவுக்கு வருவதற்கு செத்தவர்கள் 2000 பேரா அல்லது 1986 பேரா என்ற புள்ளிவிவரம் அவசியமில்லை அல்லவா? அது போலத்தான் இதுவும்.

“சுரணையற்ற இந்தியா”

16

“எத்தனை வருஷங்களுக்கு இந்த காரணத்தை சொல்லி மக்களை பலியிடுவார்கள்.
இந்த பாரதத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றது, பிரச்சனை எல்லாருக்கும் தான் வருகிறது. சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை பழிவாங்கிகொண்டிருக்கவில்லை.”—“வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்” என்ற எமது முந்தைய கட்டுரைக்கு குந்தவை எனும் பதிவர் எழுதிய மறுமொழி இது.

நடந்ததை மறக்கச் சொல்லுகிறார் குந்தவை. பெரியார் கிரிட்டிக் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரோ நடப்பது சர்வதேச பயங்கரவாதம் எனச் சித்தரிக்கிறார். ஊடகங்களும் இத்தகைய கருத்தையே பரப்புகின்றன. “இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடாக இருந்தும், அவமானகரமாக அதை எதிர்க்கும் அரசியல் உறுதியைக் காட்ட மறுக்கிறது சுரணையற்ற இந்தியா” என்று கூறுகிறது இந்தியா டுடேயின் அட்டைப்படக் கட்டுரை. இந்தப் பதிவை எழுதி முடித்த பிறகுதான் இந்தியா டுடேயைப் பார்த்தோம். அந்தத் தலைப்பும் நன்றாகத்தான் இருக்கிறது….”சுரணையற்ற இந்தியா”.

“சும்மா நடந்ததையே நினைத்து அப்பாவிகளைப் பழிவாங்கலாமா?” என்று கேட்கிறார் குந்தவை. ஒரு சிறிய திருத்தம். குற்றவாளிகளைத்தான் பழிவாங்க முடியும். அப்பாவிகளைப் பழிவாங்க முடியாது. ஒருவேளை குற்றவாளிகள் பழிவாங்கப்பட்டிருந்தால் அது குறித்து நாம் கவலைப்படப் போவதில்லை. ஆனால், ஒரு பாவமும் அறியாத ஏழை எளிய மக்கள் வெடிகுண்டுகளால் பிய்த்தெறியப்படும்போது! அந்தக் கொடூரத்தை யார்தான் நியாயப்படுத்த முடியும் – சங்க பரிவாரத்தினரைத் தவிர.

‘சும்மா நடந்ததையே நினைத்து’,,,,

நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், ‘அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது’ என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.

ஆனால், குந்தவை ஒப்புக் கொள்ளும் இந்த உண்மையை, ‘பக்கத்து வீட்டு மாமி’ சுஷ்மா சுவராஜோ, ‘எழுச்சி பெற்ற இந்து’ வினய் கட்யாரோ ஒப்புக் கொள்ளவில்லை. “எம்.பி க்களை விலைக்கு வாங்கிய அயோக்கியத்தனத்திலிருந்து நாட்டைத் திசை திருப்பவும், முஸ்லிம்களின் ஒட்டுக்களை அறுவடை செய்யவும் காங்கிரசு நடத்தும் சதிதான் இந்தக் குண்டுவெடிப்பு” என்பது சுஷ்மா புலனாய்வின் முடிவு.

“அதெப்படி குண்டு வெடித்து 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கரெக்டாகக் கண்டுபிடிக்க முடியும்?” என்று கேட்காதீர்கள். கோத்ரா ரயில் பெட்டி எரிந்த மறுநாளே ‘இது ஐ.எஸ்.ஐ சதி’ என்று அத்வானி கண்டுபிடிக்கவில்லையா? “பிணங்களின் மீதேறி பதவி கைப்பற்றும் கலையை பாரதிய ஜனதாவிடமே போட்டுக் காட்டுகிறதா காங்கிரசு? திருப்பதிக்கே லட்டா?” என்று கேட்கிறார் சுஷ்மா.

சுஷ்மாவின் குற்றச்சாட்டின்படி அப்சல் குருவுக்கு அடுத்தபடியாக மன்மோகன் சிங்கைத் தூக்கில் போட வேண்டும். ‘துப்புக் கொடுப்பவர்களுக்கு 51 இலட்சம் சன்மானம்’ என்று மோடி அறிவித்திருக்கிறாரே, அதையும் மாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது. ‘அது அவரது தனிப்பட்ட கருத்து’ என்று மாமியைக் கழட்டி விட்டுவிட்டது பாரதிய ஜனதா தலைமை.

‘பயங்கரவாதி’ மன்மோகன் சிங்குடன் ஒன்றாக நின்று போஸ் கொடுக்கிறார் மோடி. “குஜராத் படுகொலைக்காகத்தான் இசுலாமியத் தீவிரவாதிகள் பழிவாங்குகிறார்கள்” என்ற குந்தவையின் கருத்தையும் கூட மோடி ஏற்கவில்லை. என்ன நடக்கிறது இந்த நாட்டில்? அப்பாவி ஹிந்துக்கள் இவ்வளவு பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தும், குஜராத்தில் ஒரேயொரு முஸ்லிம் கூட பதிலுக்குக் கொல்லப்படவில்லையே! மோடிக்கு நியூட்டனின் விதி கூட ஞாபகத்துக்கு வரவில்லையே! பூனை சைவமாகி விட்டதா?

“நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை” என்பதனால்தான் குண்டு வெடிப்பு நடந்த கையோடு அதை மோடியே மறந்து விட்டாரா?! “மோடியே மறந்து விட்டார், அப்புறம் என்ன, 2002 குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் மறந்துவிட வேண்டியதுதானே” என்கிறாரா குந்தவை?

மறக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சிறிய முன்நிபந்தனை இருக்கிறது. அநீதியால் பாதிக்கப்பட்டவன் தனது பாதிப்பை மறக்க வேண்டுமானால், அந்த அநீதியை இழைத்தவனும், அவனைச் சார்ந்த சமூகமும், தான் இழைத்த அநீதியை நினைவில் வைத்திருக்க வேண்டும். நினைவில் வைத்திருப்பது மட்டுமல்ல, அதற்காக வருந்த வேண்டும். பரி காரம் தேட வேண்டும். அநீதி இழைத்த குற்றவாளிகளைத் தண்டிக்கவும் வேண்டும். இத்தனையும் நடந்த பின்னர்தான் பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவர்களது சுற்றத்துக்கும் தங்களுக்கு நடந்த அநீதி மறக்கத் தொடங்கும்.

ஆனால் நாம் காண்பது என்ன? 2002 இனப்படுகொலைக்குப் பரிசாக முதல்வர் பதவியை மோடிக்கு வழங்கினார்கள் குஜரத்தின் பெரும்பான்மை இந்துக்கள். கார்ப்பரேட் உலகத்தின் தாரகை மோடியை, டெவில்ஸ் அட்வொகேட் நிகழ்ச்சியில் நேர்காணல் செய்தார் கரண் தாப்பர். “குஜராத் சம்பவங்களுக்காக நீங்கள் ஒரு சின்ன ஸாரி சொல்லக்கூடாதா?” என்ற லெவலுக்கு இறங்கி ஒரு கேள்வி கேட்டார். உடனே பேட்டியை அத்தோடு முறித்துக் கொண்டு வெளியேறினார் மோடி.

ஒரு சின்ன ஸாரி. கலீலியோவை சித்திரவதை செய்ததற்கு வாடிகன் தெரிவித்தது போன்ற நயாபைசா பெறாத ஒரு ஸாரி. கரண் தாப்பர் கோரியது இவ்வளவுதான். ஆனால் 2002 இல் நடந்த்தை நினைவுபடுத்துவதைத்தான் மோடி விரும்பவில்லையே!

நடந்ததையெல்லாம் மோடி மட்டுமா மறக்க விரும்புகிறார்? மரண வியாபாரி என்று வாய்தவறி உளறியதை மறுநாளே மறக்க விரும்பினார் சோனியா. பாரதிய ஜனதாவின் நேற்றைய பங்காளிகளான தி.மு.க வும் பா.ம.க வும் சந்திரபாபு நாயுடுவும் ஒமர் அப்துல்லாவும் கூட குஜராத்தை மறக்கத்தான் விரும்புகின்றனர். அன்று படுகொலையை நியாயப்படுத்திய மாயாவதியும், இன்று மாயாவதியுடன் கூட்டு சேர்ந்திருக்கும் மார்க்சிஸ்டுகளும் கூட குஜராத்தை மறக்கத்தான் விரும்புகின்றனர்.

குந்தவை அவர்களே, இப்படி ஒரு பச்சை இரத்தப் படுகொலையை எல்லோரும் மறந்து விட்டதனால்தான், ‘அவர்கள்’ நினைவில் வைத்திருக்கிறார்கள்.

2002 இனப்படுகொலையின் போது பக்கத்து வீட்டை ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு தேசாயோ, படேலோ ‘அது சலீமின் வீடு’ என்பதைப் ‘பெருந்தன்மையுடன்’ மறந்துவிட முடியும். ஆனால் வீட்டைப் பறிகொடுத்து விட்டு, அதே ஊரின் அகதி முகாமில் கையேந்தி நிற்கும் ஒரு சலீம், தனது வீட்டை எப்படி மறக்க முடியும்? தான் புணர்ந்த சிறுமிகளின் உறுப்புகளையும், கொன்ற உடல்களின் முகங்களையும் ரிச்சர்டும், பாபு பஜ்ரங்கியும் (2002 இனப் படுகொலையின் போது தாங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றி தெகல்காவிற்கு வீடியோ வாக்குமூலம் கொடுத்த கிரிமினல்கள்) மறந்துவிட முடியும். கொல்லப்பட்ட உடல்களின் உறவுகளும், உறுப்புகளின் உணர்வுகளும் எப்படி மரத்துவிட முடியும்?

மறக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நீதி கேட்டு உச்சநீதி மன்றம் போகலாம். மனநோயாளி ஆகலாம். மருந்து குடித்துச் சாகலாம். ‘இந்தியன் முஜாகிதீன்’ ஆகலாம். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது வேறு விசயம். ஆனால் அவர்களால் ‘மறக்க முடியாது’ என்பதுதான் பொது அறிவுக்குக் கூடப் புலப்படும் உண்மை. ஆனால் குந்தவை போன்றோரால் மட்டும் புரிந்து கொள்ள முடியாத உண்மை.

ஐந்து வயது ஹீரோ தனது அப்பாவைக் கொன்ற வில்லனை ஞாபகம் வைத்திருந்து, அவனைக் கொல்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு, கிளைமாக்ஸ் காட்சியில் வெட்டிக் கொன்றால் அந்த ‘வெறி’ வெள்ளி விழா கொண்டாடுகிறது. என்ன செய்வது! நண்பன் தனக்கு இழைத்த அநீதியை ‘அண்ணாமலை’ மறக்கக் கூடாது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் தனது கண் முன்னே மகளைக் கற்பழித்திருந்தாலும் அப்துல்லாவாக இருக்கும் பட்சத்தில் அவன் மறக்க வேண்டும்!

‘கோட்டா ஒழிக’ என்று இடஒதுக்கீட்டை எதிர்த்துக் குமுறி வெடித்த டெல்லி எய்ம்ஸ் மாணவர்களும் கூட மறக்கத்தான் சொல்கிறார்கள். “என்னுடைய கொள்ளுப்பாட்டனோ, எள்ளுப்பாட்டனோ எவனோ எப்பவோ யாருக்கோ செய்த அநீதிக்காக, அப்பாவிகளாகிய நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என்று நியாயம் கேட்கிறார்கள். அந்த வரலாற்றைச் சொல்வதற்கு நமது வாய் திறப்பதற்குள், கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ‘நான்தான் எனது கொள்ளுப்பாட்டன்’ என்று தரிசனம் தருகிறார்கள்.

எனக்கொரு கிணறு, உனக்குத் தனிக்கிணறு; எனக்கொரு சுடுகாடு, உனக்குத் தனிச்சுடுகாடு; எனக்கு கிளாஸ், உனக்குக் குவளை; எனக்கு ஊர், உனக்கு சேரி.. ஆயினும் இந்துவே, தீண்டாமையை மறந்துவிடு! அப்சலுக்குத் தூக்கு, மோடிக்கு முதல்வர் பதவி – ஆயினும் மறந்துவிடு! சோம்நாத் ரதயாத்திரை முதல் மோடியின் கவுரவ யாத்திரை வரை அத்தனையையும் மறந்துவிடு!

சகோதரர்கள் சொத்துத் தகராறை மறந்து விட்டால், பங்காளிகள் வரப்புத் தகராறை மறந்து விட்டால், வங்கிக்காரன் கொடுத்த கடனை மறந்து விட்டால் இந்த நாடுகூட நீதிமன்றங்களையே மறந்து விடலாம். பணத்தை விட மலிவானவையா என்ன மானமும் உயிரும்? கைநீட்டி அடித்த புருசன் சும்மனாச்சிக்கும் ஒரு சாரி கூட சொல்லாவிட்டாலும், (அடித்ததையே நினைத்துக் கொண்டிருக்காமல்) அவனை அணைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் உண்டா, தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தகைய கற்புநெறியைத்தான் குந்தவை கோருகிறாரோ!

இந்து – முஸ்லிம், ஆர்.எஸ்.எஸ் – கம்யூனிஸ்டு என்ற முரண் எதிர்வுகளின் கருத்துமோதல் கிடக்கட்டும். தார்மீக உணர்வு தோற்றுவிக்கும் கோபத்தையும் கூட ஒதுக்கிவிடுவோம். குறைந்தபட்சம் பொது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா இந்த புத்திமதி?

ராமஜென்ம பூமி, தாஜ்மகாலில் சிவன் கோவில், ராமன் பாலம் என எதைச் சொன்னாலும் நம்ப வேண்டும். அதே ராமன் அதே இடத்தில் அந்த சமுத்திர ராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க ‘பொது நீர்நிலையில் தண்ணீர் எடுத்து தீட்டுப்படுத்திய தீண்டத்தகாத இழிமக்கள் மீது’ பாணம் போட்டு அழித்தான் என்கிறார் வால்மீகி. சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அதே வால்மீகி ராமாயணத்தின் அதே சருக்கத்தில்தான் இந்த ஆதாரமும் இருக்கிறது. ஆயினும் அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. மறந்துவிட வேண்டும்.

‘மறக்கச் சொல்வதை மறக்க வேண்டும், நினைக்கச் சொல்வதை நினைக்க வேண்டும்’ என்று மனிதமனத்தை ஆட்டிப் படைக்க வேண்டுமானால் அது மாட்ரிக்ஸ் உலகில்தான் சாத்தியம். அதைத்தான் மோடியும் விரும்புகிறார்.

குஜராத்தின் பணவாடையை முகருங்கள், பிணவாடையை மறந்துவிடுங்கள் என்கிறார் மோடி. விதர்பாவை மறந்து விடுங்கள், பங்குச் சந்தையை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் மன்மோகன். அபுகிரைபை மறந்து விடுங்கள், அதே சிறையில் நேற்று சதாம் நடத்திய சித்திரவதைகளை மட்டும் நினைவில் வையுங்கள் என்கிறார் புஷ்.

என்ன ஆச்சரியம்! குண்டு வைத்ததற்காகவும், வைக்க நினைத்ததற்காகவும் கைது செய்யப்படுபவர்களின் பெயர்கள் எல்லாம் இசுலாமியப் பெயர்களாகவே இருந்தும்கூட “இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடுமோ’ என்ற சந்தேகம் சொல்லி வைத்தாற்போல யாருக்குமே வரவில்லை.

ஏனென்றால் இது சர்வதேச பயங்கரவாதமாம்! அமெரிக்காவில் வெடிக்கிறது, லண்டனில் வெடிக்கிறது, இராக்கில் வெடிக்கிறது, இங்கேயும் வெடிக்கிறதாம்!

இப்படி சர்வதேசங்களிலும் பயங்கரவாதிகளைத் தோற்றுவித்த சர்வதேச அகிம்சாவாதி யார்? பின்லாடனை உருவாக்கிய முன்லாடன் யார்? சர்வதேச பயங்கரவாதத்தின் தயாரிப்பாளராக சவூதி ஷேக்குகளைத் தயார்செய்த பைனான்சியர் யார்? பாகிஸ்தான் மதரஸாக்களுக்குத் தீவிரவாதப் பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்த வாத்தியார்கள் யார்?

அதையெல்லாம் கேட்கக்கூடாதாம். ஏனென்றால் இது பதிலி யுத்தமாம்! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிவீதம் ஏறிக்கொண்டே இருக்கிறதாம். ஐ.டி துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் கண்டு டென்சனாகி பில் கேட்சுக்கே பி.பி ஏறுகிறதாம். இதையெல்லாம் பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலில்தான் பாகிஸ்தான் குண்டு வைக்கிறதாம்.

இதென்ன காப்டனின் வல்லரசு கதையைச் சுட்டா மா..திரி தெரிகிறதே என்கிறீர்களா? சுட்ட கதைதான். காப்டனின் கதையை மன்மோகன் சுட்டு, மன்மோகன் கதையை மோடி சுட்டு .. கிளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதியைச் சுட்டு .. ஒரு வழியாகக் கதையை முடிக்கலாம் என்றுதான் முயற்சி பண்ணுகிறார்கள். முடியவில்லையே! ஏன்?

குந்தவை அவர்களே, ஒரிஜினல் வல்லரசு சொல்வதை ஒரே ஒரு முறையாவது காது கொடுத்துக் கேளுங்களேன்!

இராக்கில் பெண்கள் தற்கொலைப்படைப் போராளிகளாக மாறுவது அதிகரித்து வருகிறதாம். “பெண்கள் இப்படித் தற்கொலைப் படையில் சேருவதற்குக் காரணம் பழிவாங்கும் வெறி. அநேகமாக இவர்களெல்லாம் பெற்றோரையோ சகோதரர்களையோ பிள்ளைகளையோ பறிகொடுத்தவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் இராக்கில் உள்ள பாக்குபா அமெரிக்கப் படைத்தளத்தின் கமாண்டர், கெவின் ரெயான்.

“பழிவாங்கும் வெறி என்பது ஒரு வலிமையான உந்து விசை. இதை பின் லாடனின் ஆட்கள் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” – இது இராக் ராணுவ கர்னல் அலி அல் கார்க்கி யின் வாக்குமூலம். (டைம்ஸ் ஆப் இந்தியா, 02.08.08).
லஷ்கர் ஏ தொய்பா.. ஜிகாத்.. சர்வதேச பயங்கரவாதம்.. எல்லாம் உண்மைதான். யார் இல்லை என்றார்கள்? ஆனால் காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி லஷ்கர் ஏ தொய்பாவில் எப்படியாவது பிளேஸ்மென்ட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகப் பலர் முண்டியடிப்பதைப் போலவும், அவர்களையெல்லாம் அப்படியே கொத்தாக அமுக்கி பொடாவில் போட்டு விட்டால், பயங்கரவாதத்தை ஒரேயடியாக ஒழித்து விடலாம் என்பதாகவும் அத்வானி அண்டு கோ கூறிக்கொண்டிருக்கிறது.

மதரஸாக்களில் உருவாக்கப்படும் ஜிகாதிகளை அரசு பொடாவில் உள்ளே தள்ளலாம். ஏன், மதராஸாக்கள் மொத்தததையும் ரவுண்டப் பண்ணி பொடாவில் தள்ளி விடலாம். ஆனால் இந்துத்துவத்தின் சோதனைச்சாலையால் உருவாக்கப்படும் ஜிகாதிகளை எப்படிப் பொடாவில் போடுவது? காஷ்மீர் முதல் திருநெல்வேலி வரை அவர்களை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? அதைக் காட்டிலும் இந்துத்துவத்தை ரவுண்டப் பண்ணி உள்ளே தள்ளுவது புத்திசாலித்தனமில்லையா, குந்தவை அவர்களே!

அதாவது, நினைத்துக் கொண்டே இருப்பவர்களைத் தேடிப் பிடிப்பதை விட, மறந்து விடச் சொல்பவர்களை நோக்கி நமதுகவனத்தைத் திருப்பலாமே! இப்படிச் சொல்வதனால் தீவிரவாதி, கம்யூனிஸ்டு என்றெல்லாம் முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதீர்கள்.

இது கலப்படமில்லாத சுத்தமான பாரம்பரிய அறிவியல். “எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும்” என்பது பழமொழி. பழமொழியைப் பொடாவிலும் போட முடியாது. என்கவுன்டரும் பண்ண முடியாது.

________________________________