Saturday, May 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 295

ஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 07

தேர்வுக்குழுவின் முன் மெரேஸ்யேவ் முதலில் அழைக்கப்பட்டான். பிரமாண்டமான, முதிர்ந்து கனிந்த முதல் வரிசை இராணுவ மருத்துவர் கடைசியில் அலுவல் பயணத்திலிருந்து திரும்பித் தலைமைப் பீடத்தில் வீற்றிருந்தார். அலெக்ஸேயை அவர் உடனே அடையாளம் கண்டுகொண்டு அவனை வரவேற்க இருக்கை விட்டு எழுந்து முன் சென்றார்.

“என்ன, ஏற்க மாட்டோம் என்கிறார்களா அன்பரே. உமது விவகாரம் சிக்கலானது. சட்டத்தை மீற நேரிடும். சட்டத்தை எப்படித் தாண்டுவது?” என்று நல்லியல்புடன் பரிவு காட்டினார் அவர்.

அலெக்ஸேய் சோதித்துக் கூடப் பார்க்கப்படவில்லை. அவனுடைய காகிதத்தில் இராணுவ மருத்துவர் சிவப்புப் பென்சிலால் பின்வருமாறு எழுதினார்: “பணியாளர் நியமன அலுவலகத்துக்கு. விமானப் பயிற்சி ரெஜிமென்டுக்குச் சோதனைக்காக அனுப்பப்படலாம் என்று கருதுகிறேன்.” இந்தக் காகிதத்துடன் நியமன அலுவலகத் தலைவரான ஜெனரலிடமே நேரே சென்றான் அலெக்ஸேய். துணை அதிகாரி அவனை ஜெனரலிடம் போகவிடவில்லை. அலெக்ஸேய்க்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. இந்தத் துணையதிகாரி கறுகறுவென்ற மீசையும் வடிவமைந்த மேனியும் கொண்ட இளம் காப்டன். குதூகலமும் நல்லியல்பும் ஒளிர்ந்த அவனது முகத்தால் வசீகரிக்கப்பட்ட அலெக்ஸேய் அவனுடைய மேஜை அருகே உட்கார்ந்து தானே எதிர்பார்க்காத விதத்தில் தன் கதையை எல்லாம் சாங்கோபாங்கோமாக அவனுக்கு எடுத்துரைத்தான். டெலிபோன் மணி அவனுடைய கதையை அடிக்கடி இடை முறித்தது. காப்டன் மறுபடி மறுபடி எழுந்து தன் தலைமையதிகாரியின் அறைக்குப் போகவேண்டியிருந்தது.

ஆனால் அங்கிருந்து திரும்பியதுமே அவன் மெரேஸ்யெவுக்கு எதிரே உட்கார்ந்து, குழந்தைமையும் எளிமையும் ஆவலும் பாராட்டும் ஓரளவு அவநம்பிக்கையுங்கூடத் ததும்பும் விழிகளுடன் நோக்கியவாறு, “ஊம், ஊம், ஊம், அப்புறம்?” என்று அவசரப்படுத்துவான். அல்லது திடீரென்று கைகளை விரித்து விளங்காமைதோன்ற, “மெய்தான் சொல்லுகிறாயா? கடவுளாணை, பொய் சொல்லவில்லையே நீ? ம்-ம்-பிரமாதம்!” என்பான்.

ஒவ்வோர் அலுவலகமாகத் தான் அலைந்ததை மெரேஸ்யெவ் விவரித்தும் காப்டன் எரிச்சலுடன் கத்தினான்: “அடச் சைத்தான்களா! வீணாக உன்னை அலைகழித்திருக்கிறார்களே. நீ அருமையான ஆள், ஊம், எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை….. நீ அசாதாரண இளைஞன்! ஆனாலும் அவர்கள் செய்தது சரியே. கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியாது.”

“ஓட்டமுடியும்….. இதோ….” என்று மெரேஸ்யெவ் பத்திரிக்கைத் துணுக்குகளையும் இராணுவ மருத்துவரது முடிவையும் அவரது சிபாரிசையும் எடுத்து வைத்தான்.

“ஆனால் கால்கள் இல்லாமல் நீ எப்படி விமானம் ஓட்டுவாய்? விசித்திரப் பேர்வழி! முடியாதப்பா. ருஷ்யப் பழமொழி கூட உண்டே, ‘காலில்லாதவன் நடனமாட முடியாது’ என்று.”

வேறு ஒருவன் இப்படிச் சொல்லியிருந்தால் மெரேஸ்யெவ் கட்டாயம் மனத்தாங்கல் கொண்டிருப்பான், ஒருவேளை கோபங்கொண்டு முரட்டுத்தனமாகப் பேசிக்கூட இருப்பான். காப்டனின் துடியான முகத்தில் காணப்பட்ட நல்விருப்பம் காரணமாக அவன் அப்படிச் செய்யாமல் சிறுவன் போன்ற உற்சாகப் பெருக்குடன் கூவினான்:

“முடியாதோ?” – இவ்வாறு கத்திவிட்டு எதிர்பார்ப்பு அறையிலேயே நடனம் ஆடத் தொடங்கிவிட்டான்.

காப்டன் பாராட்டுத் தோன்ற அவனைக் கவனித்தான், பின்பு ஒரு வார்த்தை பேசாமல் அவனுடைய காகிதங்களை எடுத்துக் கொண்டு தலைமையதிகாரியின் அறைக்குள் மறைந்தான்.

வெகு நேரம் வரை திரும்பவில்லை. கதவின் மறுபுறமிருந்து வந்த இரு குரல்களின் ஒலிகளைக் கேட்டுக் கொண்டிருந்த மெரேஸ்யெவின் உடம்பு முழுவதும் இறுகிக் குறுகியது, இதயம் கடுமையாக, விரைவாகத் துடித்தது – விரைந்தியங்கும் விமானத்தில் அவன் செங்குத்தாகப் பாய்ந்து இறங்குவது போல.

காப்டன் மனநிறைவைக் காட்டும் புன்னகையுடன் வெளியே வந்தான்.

“விஷயம் இதுதான். உன்னை விமானியாகச் சேர்த்துக் கொள்வது பற்றிய பேச்சைச் செவியேற்கவே ஜெனரல் விரும்பவில்லை. ஆனால் விமானப்படை டெப்போவுக்கு இதே சம்பளத்துடன் வசதிகளுடன் பணியாற்ற அனுப்பும் படி இதோ எழுதியிருக்கிறார். புரிந்ததா? இதே சம்பளத்துடன்…”

அலெக்ஸேயின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் ஆத்திரத்தைக் கண்டு காப்டன் பெருவியப்படைந்தான்.

“டெப்போவுக்கா? ஒருபோதும் இல்லை. அட உங்களுக்கு என் இது புரியமாட்டேன் என்கின்றது? வயிற்றுப்பாட்டையும் சம்பளத்தையும் பற்றி அல்ல நான் கவலைப்படுவது. நான் விமானி, புரிகிறதா? நான் விரும்புகிறேன் விமானம் ஓட்ட, போரிட!. இதை ஏன் ஒருவரும் புரிந்துகொள்ளவதில்லை? இது வெகு சுலபமான விஷயம் ஆயிற்றே….”

காப்டன் குழப்பமடைந்தான். நல்ல விண்ணப்பதாரன்தான் வந்து சேர்ந்தான்! இவன் இடத்தில் வேறு எவனும் மறுபடி களிப்பால் கூத்தாடத் தொடங்கியிருப்பான். ஆனால் இவனோ… வேடிக்கையான பிரகருதி! எனினும் இந்த வேடிக்கைப் பிரகருதி மேல் காப்டனுக்கு முன்னிலும் அதிக அன்பு உண்டாயிற்று. இவன்பால் பரிவு அவன் உள்ளத்தில் ஊறித் ததும்பியது. இவனது அசாத்தியத்தியமான முயற்சியில் எவ்வகையிலேனும் உதவக் காப்டனுக்கு விருப்பம் கிளர்ந்தெழுந்தது. சட்டென அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அவன் மெரேஸ்யெவைப் பார்த்துக் கண் சிமிட்டி, விரல் சைகையால் அவனை அருகே அழைத்து, தலைமையதிகாரியின் அறையை ஓரக் கண்ணால் நோக்கியபடி கிசுகிசுத்தான்:

“ஜெனரல் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்து விட்டார். இதற்கு மேல் அவருக்கு அதிகாரம் இல்லை. கால்கள் இல்லாதவனை விமானியாக நியமித்தாரானால் அவரையே பைத்தியக்காரர் என்று எல்லோரும் எண்ணிவிடுவார்கள். நேரே நமது உச்ச அதிகாரியிடமே போ. அவர்தான் உன் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.”

அரைமணி நேரத்திற்கெல்லாம் மெரேஸ்யெவ் தன் புதிய நண்பனின் முயற்சியால் கிடைத்த நுழைவு அனுமதிச் சீட்டுடன் உச்ச அதிகாரியுடைய எதிர்பார்ப்பு அறையின் தரைக் கம்பளத்தின் மேல் பதற்றத்துடன் நடந்தான். முன்னமே இது அறிவில் படாமல் போயிற்றே! ஆம். இவ்வளவு நேரத்தை வெட்டியாகக் கழிக்காமல் எடுத்த எடுப்பிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ, இரண்டில் ஒன்று தீர்ந்து போயிருக்கும்… உச்ச அதிகாரி தாமே தேர்ந்த விமானியாக இருந்தவராம். அவர் கட்டாயம் புரிந்து கொள்வார். சண்டை விமானியை டெப்போவுக்கு அவர் ஒருபோதும் அனுப்பமாட்டார்!

படிக்க:
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

எதிர்பார்ப்பு அறையில் ஜெனரல்களும் கர்னல்களும் நயப்பாங்குடன் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் வெளிப்படையாகப் பதற்றப்பட்டார்கள். புகை குடித்துக் கொண்டிருந்தார்கள். அலெக்ஸேய் மட்டுமே தரைவிரிப்பின் மீது விந்தையான முறையில் எம்பி எம்பிக் குதித்தவாறு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான். காண வந்திருந்தவர்கள் எல்லோரும் கண்டு சென்ற பின் மெரேஸ்யெவின் முறை வந்ததும் அவன் துணையதிகாரியின் மேஜையருகே சட்டெனப் போய் நின்றான். ஒளிவு மறைவு அற்ற முகத்தினனான மேஜர் அந்தத் துணையதிகாரி.

“தோழர் சீனியர் லெப்டினன்ட், நீங்கள் உச்ச அதிகாரியையே பார்க்க வேண்டுமா?” என்று அவன் வினவினான்.

“ஆம், முக்கியமான ஒரு சொந்தக் காரியம் அவரால் எனக்கு ஆக வேண்டியிருக்கிறது.”

“இருந்தாலும் உங்கள் விவகாரத்தை எனக்கும் தெரிவிக்கலாமா? உட்காருங்களேன். சிகரெட் பிடிப்பது உண்டா?” என்று சிகரெட் பெட்டியை மெரேஸ்யெவிடம் நீட்டினான் துணையதிகாரி.

மெரேஸ்யெவ் புகை பிடிப்பதில்லை என்றாலும் எதற்காகவோ ஒரு சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்துக் கசக்கி விட்டு மேஜைமேல் வைத்தான். பின்பு, திடீரென்று தன் அசாதாரண அனுபவங்களை எல்லாம் கேப்டனுக்கு விவரித்தது போலவே ஒரு மூச்சில் சொல்லித் தீர்த்துவிட்டான். மேஜர் அவனுடைய கதையை வெறுமே மரியாதைக்காக இன்றி, மிகுந்த நட்புடனும் பரிவுடனும் கவனித்தும் கேட்டான். பத்திரிக்கைக் குறிப்பையும் மருத்துவரின் பரிந்துரையையும் படித்தான். அவனுடைய பரிவால் உற்சாகமடைந்த மெரேஸ்யெவ் துள்ளி எழுந்து, தான் இருக்கும் இடம் எது என்பதைக் கணப்பொழுது மறந்து மறுபடி நடனமாடிக் காட்ட முற்பட்டான்… அவனுடைய நோக்கமெல்லாம் பாழாகாமல் மயிரிழையில் தப்பியது. தலைவர் அறைக் கதவு சட்டெனத் திறக்கப்பட்டது. கருமுடியும் நெடிய ஒடிசலான மேனியும் உடைய ஒருவர் அங்கிருந்து வெளிப்பட்டார். போட்டோக்களில் பார்த்திருந்தமையால் அலெக்ஸேய் அவரை உடனே அடையாளம் தெரிந்து கொண்டான். நடந்தவாறே அவர் மேல் கோட்டுப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு, தன் பின் வந்த ஜெனரலிடம் ஏதோ சொன்னார். கவலையில் வெகுவாக ஆழ்ந்திருந்தமையால் அவர் அலெக்ஸேயைக் கவனிக்கக் கூட இல்லை.

“நான் கிரெம்ளினுக்குப் போகிறேன்” என்று கடிகாரத்தைப் பார்த்து விட்டு மேஜரிடம் சொன்னார் அவர். “ஆறு மணிக்கு ஸ்தாலின்கிராத் செல்ல விமானத்துக்கு ஆர்டர் கொடுங்கள். வெர்க்னியா பொக்ரோம்னயாவில் விமானம் இறங்க வேண்டும்” என்று கூறி விட்டு வந்தது போலவே விரைவாக வெளியே போய்விட்டார்.

மேஜர் உடனே விமானத்துக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, மெரேஸ்யெவை நினைவு படுத்திக்கொண்டு கைகளை விரித்தார்.

“உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. இன்றே விமானத்தில் வெளியூர் போகிறோம். நீங்கள் காத்திருக்க நேரும். தங்க இடம் இருக்கிறதா உங்களுக்கு?” என்று கேட்டார்.

நிமிட நேரம் முன்பு பிடிவாதமும் சித்தவுறுதியும் தென்பட்ட அலெக்ஸேயின் சாமள முகத்தில் திடீரென ஒரே ஏமாற்றமும் சோர்வும் காணப்பட்டதைக் கவனித்த மேஜர் தன் தீர்மானத்தை மாற்றிக் கொண்டான்.

“நல்லது… நமது தலைமை அதிகாரியை நான் அறிவேன். அவரும் இப்படியே செய்திருக்கிறார்.”

இவ்வாறு கூறி, அலுவலகக் காகிதத்தில் சில வார்த்தைகளை எழுதி, காகிதத்தை உறையில் இட்டு, “பணியாளர் நியமன அலுவலக தலைவருக்கு” என்று எழுதி அலெக்ஸேயிடம் கொடுத்து அவன் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று உளமார விரும்புகிறேன்!” என்றான்.

காகிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது: “லெப்டினன்ட் அ. மெரேஸ்யெவ் விமானப்படைத் தலைவரைக் காண வந்திருந்தார். அவர் விஷயத்தில் முழுக்கவனம் செலுத்தப் பட வேண்டும். அவர் விமானப் படைக்குத் திரும்ப முடிந்த வகையில் எல்லாம் உதவுவது அவசியம்.”

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கருமீசை காப்டன் தன் தலைமையதிகாரியின் அறைக்கு மெரேஸ்யெவை இட்டுச் சென்றான். சினக் குறி காட்டும் பறட்டைப் புருவங்கள் கொண்ட பாரியான முதிய ஜெனரல் காகிதத்தைப் படித்து விட்டு, களி சுடரும் நீல விழிகளை உயர்த்தி அலெக்ஸேயைப் பார்த்து நகைத்தார்.

“அதற்குள் அங்கேயும் போய் வந்துவிட்டாயா!… துருசான ஆள்தான் நீ, படு துருக்காரன்! நான் உன்னை டெப்போவுக்கு அனுப்பியதால் மனத்தாங்கல் கொண்டவன் நீ தானே? ஹஹ்ஹஹ்- ஹா!” என்று அவர் கடகடவென்று உரக்கச் சிரித்தார். “சபாஷ்! உயர்தர விமானி நீ என்பதைக் கண்டு கொண்டேன். டெப்போவுக்குப் போக மாட்டானாம், அவமதிப்பாக நினைக்கிறான்….. சரியான வேடிக்கைதான்! நான் உன்னை என்ன செய்வது, ஊம், நடன சிகாமணி? விமானத்தோடு விழுந்து நொறுங்கினாயானால் என் தலையை வாங்கி விடுவார்களே. ‘கிழட்டு மட்டி, அவனை எதற்காக நியமித்தாய்?’ என்று கேட்பார்களே! ஆனால் நீ என்ன செய்வாய் என்று யார் கண்டது?… இந்த யுத்தத்தில் நம் ஆட்கள் உலகை பிரமிக்க வைத்து விட்டார்கள் என்றால் வெறுமேதானா… இப்படிக் கொடு அந்தக் காகிதத்தை” என்றார்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

காகிதத்தின் குறுக்கே நீல நிறப் பென்சிலால் விளங்காத கையெழுத்தில் அரைகுறைச் சொற்களில் “பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புக” என்று எழுதியிருந்தார் ஜெனரல். நடுங்கும் கைகளால் காகிதத்தைப் பெற்றுக் கொண்டான் மெரேஸ்யெவ். அப்போதே, மேஜை அருகிலேயே அதைப் படித்தான். அப்புறம் மாடிப் படி மேடையிலும், பிறகு கீழே அனுமதிச் சீட்டைச் சரிபார்க்கும் பாராக்காரனின் பக்கத்திலும், பின்பு டிராமிலும், முடிவில் நடைபாதையில் மழையில் நின்று கொண்டும் மறுபடி மறுபடி படித்தான். அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

கருவறையில் தமிழ் பாடினால் தீட்டு என்று கூறி உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய தீட்சிதர்கள், தில்லை நடராஜர் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு பணம் பார்த்திருக்கிறார்கள்.

சிவகாசி ஸ்டேண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனரின் மகளுக்கும், சென்னை ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனரின் மகனுக்கும் நடைபெற்ற திருமணம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பிரசித்தி பெற்ற ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது என்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தியாக இருந்தது.

தில்லை நடராஜர் கோவிலில் பன்னெடுங்காலமாக ஆண்டு அனுபவித்து வரும் தீட்சிதர்கள் தங்களது கல்லாவை நிரப்பிக் கொள்ள கோவிலைக் கொள்ளையடிக்கவும் திறந்துவிடத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய சான்று தான் இந்த நிகழ்வு.

இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் உரையாற்றுகிறார்.

பாருங்கள் ! பகிருங்கள் !

கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?

Identity-Politics-Slider

கேள்வி: //எனக்கு தெரிந்து 2009 தேர்தல் முதல் 2019 வரை அடையாள அரசியல் கட்சிகள் (பாமக, விசிக) திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?//

– தமிழ்ச் செல்வன்

ன்புள்ள தமிழ்ச் செல்வன்,

இந்த 2019 தேர்தலில் விசிக வெற்றியும், பாமக தோல்வியும் அடைந்திருக்கின்றன. பொதுவில் சாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தும் கட்சிகள் அந்தந்த பிரிவு மக்களை முற்று முழுதாக திரட்ட முடிவதில்லை. பா.ம.க-வின் தோல்வி வன்னியர்களிடமே அக்கட்சி செல்வாக்கு பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. அதே போன்று விசிக-வின் வெற்றிக்கு ஓரளவு வன்னியர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அக்கட்சியை ஓரளவுக்கு பொதுவான கட்சியாக பார்க்கும் பார்வையை குறிக்கிறது. தேர்தல் அரசியலைத் தாண்டி நாம் அடையாள அரசியலை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மனிதரிடமும் பால், சாதி, மதம், தேசிய இனம் போன்ற அடையாளங்கள் இருக்கிறது. இவற்றை விட வர்க்க அடையாளமே (அவர் என்ன தொழில் செய்கிறார்) ஒரு மனிதரின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இதனால் மற்ற அடையாளங்களுக்கு பங்களிப்பே இல்லை என்பதல்ல. ஆனால் அவை இரண்டாம் பட்சமானதுதான். ஏனெனில் ஒவ்வொரு அடையாளமும் கூட ஒரே படித்தானதாக இல்லை. அவையும் வர்க்க ரீதியில் வேறு வேறு பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. சாதி என்ற அடையாளத்தில் ஒரு பார்ப்பனருக்கும், வன்னியருக்கும், தலித்துக்கும் இருக்கும் பிரச்சினைகள் கூட வர்க்க ரீதியாக பிரிந்திருக்கின்றன. பார்ப்பனர்கள் சமூகத்தில் இருக்கும் மேல் தட்டு தகுதியில் வாழ்க்கை பிரச்சினைகளை ஒப்பீட்டளவில் சுலபமாக எதிர்கொள்கிறார்கள். வன்னியர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தாலும் சில நேரம் சாதிய உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். தலித்துகளுக்கோ பொருளாதாரமும் சரி, சாதி ஆதிக்கமும் சரி இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

படிக்க :
♦ அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !
♦ தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

நள்ளிரவில் மாநகராட்சி தண்ணீருக்காக காத்திருக்கும் குடிசைப் பகுதி பெண்களும் நள்ளிரவில் பஃப்புக்கு செல்லும் மேட்டுக்குடி பெண்களும், பெண்கள் என்ற அடையாளத்தில் ஒரே பிரச்சினைகளை கொண்டிருக்கவில்லை. ஆழ்கடலில் அன்னிய மீன்பிடிக் கப்பல்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியால் மீன் வளமின்றி அவதிப்படும் ஒரு மீனவர் தமிழர் என்ற முறையில் வாழ்க்கைப் பிரச்சினையை எதிர் கொள்வதில்லை.

இப்படி வர்க்கம் பல்வேறு அளவுகளில் மக்களிடம் பங்காற்றுகிறது. இது குறித்த அறிவு – அறியாமைக்கேற்ப அடையாள அரசியல் வலுவாகவோ, பலவீனமாகவோ தொழிற்படுகிறது. பொருளாதாரப் பிரச்சினைகளை திசை திருப்பும் உணர்ச்சிகரமான அரசியலாக அடையாள அரசியல் இருக்கிறது. அதே நேரம் அது எல்லா நேரத்திலும் பலிப்பதில்லை. மக்களின் அரசியல் பார்வை முதிர்ச்சி அடைய அடைய, அடையாள அரசியல் வலுவிழந்து போகும். இன்றைக்கும் தமிழகத்தில் ஓரிரு விதிவிலக்குகளைத் தாண்டி ஆதிக்க சாதி சங்கங்கள் அரசியல் வெற்றி அடைவதில்லை. தாழ்த்தப் பட்டோர் பிரிவில் அடையாள அரசியலை முன்வைக்கும் கிருஷ்ணசாமி கூட தென்காசியில் தோற்றுத்தான் போனார்.

அதே நேரம் தலித் அரசியல் கூட வர்க்க ஒற்றுமைக்கு எதிரான அடையாள அரசியலாக நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் சாதிகள் என்பது பொதுவில் வர்க்க ரீதியாகவே இருக்கிறதே அன்றி அவை என்ன சாதி என்பது அதற்கு உட்பட்டதே. அனைத்து வகையான அடையாள அரசியல்களையும் ஆளும் வர்க்கம் முன்னிலைப்படுத்துகிறது. வர்க்க ரீதியான ஒற்றுமை வந்து விட்டால் அது ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதில் வலுவடையும். அதை பிரிப்பதே ஆளும் வர்க்கங்களின் நோக்கம். இன்றைக்கும் பாஜக-வுடன் ராம் விலாஸ் பஸ்வான் போன்ற சில தலித் அரசியல் கட்சிகள் சேர்ந்திருக்கின்றன.

இந்துக்களின் பிரதிநிதி என்று கூறும் பாஜக-வும் தமிழகத்தில் தோற்றிருக்கிறது. அதே நேரம் கிட்டத்தட்ட 40% மக்கள் வட இந்தியாவில் அக்கட்சியினை ஆதரித்திருக்கிறார்கள். அடையாள அரசியல் பேசும் கட்சிகளுக்கு போதிய மாற்றுக் கட்சிகள் இல்லாதிருப்பதால் பாஜக போன்ற கட்சிகள் செல்வாக்கு பெறுகின்றன. பாஜக-வின் இந்துத்துவ அடையாள அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் வீழ்த்த முடியும் என்பதால் வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் வட இந்தியாவில் பாஜக-விடம் தோற்றுப் போகின்றன. அதனால்தான் காங்கிரசு கூட தானும் இந்துத்துவாவை பின்பற்றுவதாக அவ்வப்போது காட்டிக் கொள்கிறது.

படிக்க :
♦ கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

குஜராத்தில் உனா தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாக தலித் மக்கள் அகமதாபாத் வந்து போராடினர். அரசு அலுவலகங்களில் மாட்டுத் தோல்களையும், எலும்புக்கூடுகளையும் வீசி தமது கோபத்தை காட்டினர். கோமாதா என்று புனித வணக்கம் கோலேச்சும் பசுப்படுகையில் இத்தகைய எதிர் நடவடிக்கையை எது சாத்தியமாக்கியது? அதுவே அடையாள அரசியலுக்குரிய பதிலாகும். மேலும் மக்களை அடையாள அரசியலுக்கு அணி திரட்டுவது பொதுவில் சுலபமாகவும், வர்க்க ரீதியில் அணி திரட்டுவது பொதுவில் கடினமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் இந்துத்துவா தனது வேலையைக் காண்பித்து மக்களை மதவெறியிலும், சாதி வெறியிலும் ஆழ்த்துகிறது. பிற்போக்குத்தனங்களை எதிர்த்துப் போராடும் வர்க்க அரசியல் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் நீண்டகால நோக்கில் வெற்றி அடைந்தே தீரும்.

UNA-attack
உனா தலித் மக்கள் மீதான தாக்குதல்

உலக அளவில் நியோ நாசிசக் கட்சிகள் செல்வாக்கு அடைந்து வருகின்றன. இக்கட்சிகளை அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள், கார்ப்பரேட் நிறுனவங்கள் ஓரளவுக்கு ஆதரிக்கின்றன. உள்ளூர் தொழிலாளியின் வேலையின்மைக்கு எதிராக வேறு நாட்டிலிருந்து அகதியாக வந்த தொழிலாளி முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் முதலாளித்துவத்தின் கட்டமைப்பு நெருக்கடியை மேற்கத்திய நாடுகளில் கூட மக்கள் உணர்ந்து வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து வருகிறார்கள். பிரான்சில் நடந்துவரும் மஞ்சள் சட்டை போராட்டம் சமீபத்திய சான்று.

கம்யூனிசம் என்றாலே சாத்தான் என்று பழக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவிலே கூட பொருளாதார நெருக்கடி முற்றிய இக்காலத்தில் “முதலாளித்துவம் ஒழிக, நாங்கள் 99%” போன்ற அரசியல் முழக்கங்கள் ஒலிக்கின்றன. எனவே நமது அடையாளங்களை விட நம் வாழ்வை நகர்த்திச் செல்லும் பொருளுதார வாழ்க்கை மிகப்பெரியது. அந்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்துவதற்கேற்ப ஒரு நாடு முற்போக்காக பயணிக்கும். தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் கூட இது பொருந்தும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !

0

மீபத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்த அரசின் முயற்சிக்கு தன்னுடைய அமைச்சகத்தின் பங்களிப்பாக ஏற்றுமதியை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு வியர்த்துக் கொட்டியிருக்க வேண்டும். அவர்ககளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட அமைச்சர், தனது திட்டத்தையும் அங்கேயே விவரித்தார்.

“ஒரு ட்ரில்லியன் என்பதை யாருக்கும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. கணக்கு பார்க்காத ஐன்ஸ்டீன் தான் புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பதை மறக்க கூடாது” என்றார்.

அருண் ஜெட்லி இறந்த பின் மோடியின் அமைச்சரவையில் இருப்பவர்களிலேயே ஓரளவுக்கு அறிவாளி என பெயர் பெற்றவர் இந்த பியூஷ் கோயல் என்பதை வாசகர்கள் மறந்து விடக்கூடாது. இருப்பதிலேயே அறிவாளி இப்படி உளறிக் கொட்டியதை இணைய உலகம் கொண்டாடித் தீர்த்தது.

மோடியின் சகாப்தம் துவங்கியபின் முட்டாள்தனத்திற்கும் அறிவாளித்தனத்திற்கும் இடையே இருந்த சீனப் பெருஞ்சுவர் தகர்த்தெறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பாரதிய ஜனதா அமைச்சர்கள், மோடி அரசின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், சாமியார்கள் என தில்லி கொலு மண்டப செட் பிராப்பர்ட்டிகள் உதிர்த்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் வடிவேலுவின் வின்னர் காமெடியை தோற்கடித்து விடும் என்றால் அது மிகையல்ல. அவை அனைத்தையும் ஒருவர் தேடித் தேடி தொகுத்துள்ளார்.

அந்த தொகுப்பில் இருந்து சில வைரத் துளிகள் உங்களுக்காக இங்கே.. 

அனைத்தையும் சர்வ வல்லமை பொருந்திய “தலை” தான் ஆரம்பித்தது : புவிவெப்பமடைதலால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் குறித்து பேசிய மோடி, “சீதோஷ்ண நிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நம் வீட்டுப் பெரிசுகள் குளிர்காலத்தில் நடுங்குகிறார்கள் இல்லையா… அது அவர்களின் வயதின் காரணமாக நடக்கிறது. வயதானதால் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதால்தான் குளிர் அதிகமாகத் தெரிகின்றது”

“தலையின்” மற்றொரு முத்து : “கர்ணன் அவனது தாயின் கருப்பையில் இருந்து பிறக்கவில்லை. அப்போதே மரபணு விஞ்ஞானமும், பிளாஸ்டிக் சர்ஜரியும் இருந்தது. அன்றே வினாயகனின் தலையில் யானையின் தலையில் பொருத்தியுள்ளனர். அதே போல் வானவியல் விஞ்ஞானத்திலும் நமது முன்னோர்களுக்கு பெரும் அறிவு இருந்தது”

தலையே ஆடிய பின் வால்கள் சும்மா இருக்குமா?

“பண்டைய இந்தியர்கள் விமானங்களை ஓட்டினர். அவர்கள் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அதே போல் வின்வெளி ஆயுதங்களை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உண்டு” – இப்படிச் சொன்னவர் சுதர்ஷன் ராவ். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வர் ரமேஷ் போக்ரியால் அசால்ட்டாக அணுகுண்டையே எறிந்து விட்டார். “பல லட்சம் வருடங்களுக்கு முன் (பல லட்சமாம் !?! ) கானாட் என்கிற முனிவர் அணுகுண்டு சோதனை செய்துள்ளார். நமது ஜோசியத்தின் முன் எல்லா அறிவியலும் மண்டியிட வேண்டும்”

சாதாரண பாஜக-வினரின் உடல் முழுக்க மூளையால் நிரம்பியிருக்கும் போது அவர்களின் அறிவியல்துறை அமைச்சர் எப்படி இருப்பார்? “அல்ஜீப்ராவும் பித்தகோரஸ் சூத்திரங்களும் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த வெளிநாட்டுக்காரர்கள் பெயரைத் தட்டிக் கொண்டு போயிட்டாங்க” என சூளுரைத்துள்ளார் மத்திய அறிவியல் துறை (முன்னாள்) அமைச்சர்  ஹர்ஷ் வர்த்தன்.

படிக்க:
வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !
♦ ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !

பார்ட் டைம் விஞ்ஞானிகளே இப்படி இருக்கும் பார்ட் டைம்களின் ஆட்சியின் கீழ் ஃபுல்டைம் விஞ்ஞானிகளாக இருந்தவர்கள் எப்படி பர்மாமென்ஸ் காட்ட வேண்டும்?

இதோ வருகிறார் ஓய்வு பெற்ற விஞ்ஞானி பி.பி சிங் – “பல இந்திய அறிவியலாளர்கள் பண்டைய இந்தியா அறிவியலில் முன்னேறிய நிலையில் இருந்தது எனக் கருதுகின்றனர். விமானத் தொழில்நுட்பம், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், மாற்று உயிரின உறுப்பு மாற்று மற்றும் மாற்று உயிரின குழந்தை பிறப்பு மனித குளோனிங்… இப்படி பல விஞ்ஞானங்கள் வளர்ந்திருந்தது” (அதாகப்பட்டது மனித இனமும் பிற விலங்கினங்களும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்வது; நரசிம்மரைப் போல என்று நாம் ‘புரிந்து’ கொள்ள வேண்டும்)

விமானங்கள் மோடியின் சீடர்களுடைய கற்பனையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதன் இரகசியம் என்னவென்று தெரியவில்லை – இப்படிச் சொல்வதால் இதை ரஃபேலுடன் நீங்கள் தொடர்புபடுத்திப் புரிந்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல. விமான தொழில்நுட்பம் நம்முடையது என அமைச்சர்களே சொன்ன பின், விமானப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் வேறு மாதிரி சிந்திக்க முடியுமா என்ன?

“7000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் விமானங்கள் இருந்தது. விமானத்தின் மூலம் வேறு நாடுங்களுக்கும் கண்டங்களுக்கும் பயணித்துள்ளனர். விமானிகளின் உணவில் எருமைப் பால், பசும்பால், ஆட்டுப்பால் ஆகியன முக்கிய இடம் பிடித்திருந்தது. விமானிகளின் அணிந்த ஜட்டி தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது” – சத்தியமாக இதை நாங்கள் சொல்லவில்லை! இதைச் சொன்னவர் ஆனந்த் போடாஸ் விமானப் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

படிக்க:
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !

விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசும் போது இஸ்ரோ இல்லாவிட்டால் நாமும் ஆண்டி இந்தியர்கள் ஆகிவிடுவோமே. எதற்கு வம்பு, இதோ முன்னாள் இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயர் பேசியதையும் கேட்டு விடுவோம். “வேதங்களில் உள்ள சில சுலோகங்கள் நிலாவில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடுகிறது. ஐசக் நியூட்டனுக்கு முன்பே ஆர்யபட்டாவுக்கு புவியீர்ப்பு விசை குறித்து தெரியும்”

இவ்வாறானவர்கள் தலைமையில் இஸ்ரோ சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதார விந்தங்களுக்குக் கீழ் தானே?

“இன்றைக்கு இஸ்ரோ என்ன செய்ததோ அதை அன்றைக்கே பகவான் ஸ்ரீ ராமர் செய்து விட்டார். அவரிடம் எஞ்சினியர்கள் இருந்தனர். அவர் ராம சேது பாலத்தைக் கட்டினார். அதற்கு அனுமான் மட்டுமா… சிறிய அணில் கூட உதவி செய்தது. மலையையே தூக்கி வரும் தொழில்நுட்பம் அன்றைக்கு இருந்துள்ளது” என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.

பகவான் ஸ்ரீராமர் அருள் பெற்ற இஸ்ரோ, விஞ்ஞானத்திற்கான இந்திய ஏஜெண்டு என்றாலும், மேரிமைந்தனின் ஆசிபெற்ற நாசா தானே உலக ஏஜெண்டு? நாசாதானே ஏரியாவில் பெரிய கை? எனவே, எதுவாக இருந்தாலும் அது நாசா உறுதிப்படுத்தியதாக இருந்திடுவது அவசியம்.

“சமஸ்கிருதம் தான் பொருத்தமான மொழி என்று நாசாவே சொல்லி விட்டது. சமஸ்கிருதத்தில் எழுத்துப் பிழை என்கிற பிரச்சினையே கிடையாது (ஏன்னா அதில் எழுத்தே கிடையாது) அது ஒரே போல் தான் ஒலித்தாக வேண்டும். ஏனெனில் அது ஒலி விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது” இந்த தத்துவத்தின் சொந்தக்காரர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

MHRD-Minister-Ramesh-Isaac-Newton
ரமேஷ் போக்ரியால்

இந்த உலகத்தில் பிச்சைக்காரனாக கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நாசாவாக வாழ்வது அதை விடக் கொடூரமானது. இதோ மற்றொரு அமைச்சர் நாசாவை துணைக்கு அழைக்கிறார் – “நடக்கும் கம்ப்யூட்டர்கள் சாத்தியமாகும் போது அது சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நாசாவே சொல்லி விட்டது” – ரமேஷ் போக்ரியால் (மோடி 2.0 -வில் மனித வளத்துறை அமைச்சர்).

இதற்குப் பின் மேற்படி ஆசாமி (நாசா) உத்திரத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். போகட்டும். நம்ம தல மோடியின் விழுதுகள் கைவைக்காத இடமே இல்லை. விஞ்ஞானத்தோடு கபடி விளையாடியவர்கள் விவசாயத்தை மட்டும் சும்மா விடுவார்களா என்ன?

“யோக விவசாயம் என்பது விதைகளுக்கு நேர்மறை எண்ணத்தை வழங்கும். ராஜயோகத்தின் மூலம் விதைகளுக்கு அன்பு, அமைதி மற்றும் தெய்வீகத் தன்மையை விவசாயிகள் வழங்க வேண்டும்” – ராதா மோகன் சிங் (மத்திய விவசாயத் துறை அமைச்சர்).

தெய்வீகத் தன்மை பெற்ற விதைகள் விளைந்த பின் குறைந்தபட்ச உத்திரவாதத் தொகையாவது கிடைக்குமா என்பது குறித்து அமைச்சர் ஏதும் பேசவில்லை. ஆனால், யோகம் என்று வந்து விட்டால் நம்ம ரூட்டு தலயின் அடிப் பொடிகளை கையில் பிடிக்கவே முடியாது.

படிக்க:
நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

“யோகாசனத்தால் கான்சர் போன்ற கொடிய வியாதிகள் குணமாகும். இன்னும் ஒரு வருடத்தில் இதற்கான அறிவியல் ஆதாரங்களை அரசு முன்வைக்கும். தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர்கள் கீமோதெரபி செய்து கொள்ள வேண்டியதில்லை” மத்திய அமைச்சர் (ஆயுஷ்) ஸ்ரீபாத நாயக்.

புற்றுநோயை யோகா குணமாக்கா விட்டால்? இருக்கவே இருக்கிறது மாட்டு மூத்திரம். தப்பு… கோமூத்திரம். மாட்டு மூத்திரத்தால் புற்று நோய் குணமாகும் என்று பல அமைச்சர்கள், பல சந்தர்பங்களில், பல விதமாக குறிப்பிட்டுள்ளனர். இதில் வித்தியாசமாக கூவியது யார் என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அஷ்வினி சௌபே, மாட்டு மூத்திரம் கொண்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் தனது அமைச்சகம் ஈடுபடும் என்று கூறியுள்ளார். “மாடு எங்கள் தாய். அதன் சாணியும் மூத்திரமும் அமிர்தம். அது எல்லா நோயையும் குணப்படுத்தும் போது உங்கள் கைபேசியில் இருந்து வரும் ரேடியேஷனில் இருந்தா காப்பாற்றாது?” என சந்தேகப்படும் ஆண்டி இந்தியர்களைப் பார்த்து ஆத்திரப்படுகிறார் சங்கர்லால் (அகில பாரதிய கௌ சேவா)

மாட்டின் மகாத்மியங்கள் கிண்டக் கிண்ட வந்து கொண்டே இருக்கின்றது. மாட்டு மூத்திரத்தில் தங்கம் எடுக்கும் முயற்சியையே செய்திருக்கிறார்கள் (மஞ்சளாக இருப்பதாலோ என்னவோ!). ஆனாலும் சர்வசக்தி வாய்ந்த பரப்பிரம்மா ஸ்ரீலஸ்ரீ மாட்டையும் அதன் சுச்சாவையும் மீறி சிலருக்கு புற்றுநோய் குணப்படுத்தவே முடியாத நிலைக்குச் செல்வது ஏன் என்றால், “அதெல்லாம் அவர்கள் செய்த பாவங்களின் கர்ம வினை” என்கிறார் அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா. மேற்படியாருக்கு எந்த நேரத்தில் குண்டு பார்சல் போய்ச் சேரும் என்பதை பிரக்யாசிங்கே அறிவார்.

அறிவியலை பிடித்து வந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டிய பின் அறிவியல் நிலையங்கள் என்ன செய்வதாம்? அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எய்ம்சைச் சேர்ந்த மருத்துவர் அசோக் குமார் விளக்குகிறார் கேளுங்கள். “மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய மையம் ( Indian Council of Medical Research) மகாமிருத்யஞ்சயா மந்திரம் மூளையில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்த என்ன விதமாக உதவி செய்கிறது என்பதை ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது”

இந்த விசயத்தில் உத்திராகண்ட் மாநில பாஜக அரசு ஒரு படி மேலேயே சென்று விட்டது. “உத்திராகண்ட் அரசு ராமாயனத்தில் ராமன் தன் தம்பி லட்சுமனனை எழுப்ப பயன்படுத்திய சஞ்சீவினி பூதி என்கிற மூலிகையைத் தேடிக் கண்டுபிடிக்க 3.7 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது” என்று அறிவித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஸ்ரீபாத நாயக்.

இத்தனை செலவு செய்து ராமாயன மூலிகைகளை எல்லாம் தேடிப் பீராய்ந்து மருந்து கண்டுபிடித்த பின் அதையெல்லாம் அம்பானிக்கும் அதானிக்குமா கொடுக்க முடியும்? மக்களுக்குத் தானே? ஆனால் மக்களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்கள் மறுத்து விட்டால்? “சில அலோபதி மருத்துவர்கள் ஆயூர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுருத்துகின்றனர். இவர்களெல்லாம் தேச விரோதிகள்” என எச்சரிக்கிறார் அதே அமைச்சர் ஸ்ரீபாத நாயக்.

இதற்கு மேல் வரக் கூடிய தத்துவ முத்துகளை செறிக்கும் ஆற்றல் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் விரல்களுக்கே இல்லை. “டார்வினின் பரிணாம தத்துவம் தவறு. ஏனெனில் எங்க ஆயா காலத்துல குரங்கு மனிதக் குழந்தையைப் பெற்றெடுத்ததை யாரும் பார்க்கவில்லை”, “நியூட்டனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மகுப்தா புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்து விட்டார்” (இது ராஜஸ்தான் கல்வித்துறை மந்திரி சொன்னது). “மகாபாரதத்தில் இண்டெர்நெட்” (இது திரிபுரா முதல்வர் பிப்லப்தேவ் சொன்னது) – இப்படி பல ஸ்பெசல் அயிட்டங்கள் உள்ளன.

மன உறுதி கொண்டவர்கள் மேலே வழங்கப்பட்டிருக்கும் டிவிட்டர் இணைப்பைத் திறந்து படித்து உய்யலாம்.

– சாக்கியன்

ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

0

கலையரசன்

ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து?

முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 -ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது ஹாங்காங் தொட‌ர்ந்தும் த‌னித்துவ‌ம் பேணுவ‌த‌ற்கு சீனா ச‌ம்ம‌தித்த‌து. அத‌னால் சீனாவுக்கும் இலாப‌ம் கிடைத்த‌து. அப்போது தான் சீனா முத‌லாளித்துவ‌ உல‌கில் காலடி எடுத்து வைத்திருந்த‌து.

உல‌கில் பெருமள‌வு மூல‌த‌ன‌ம் புழ‌க்க‌த்தில் உள்ள‌ நாடுக‌ளில் ஹாங்காங்கும் ஒன்று. ஆக‌வே சீனாவுக்கு அருகில் உள்ள‌ ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் சீன‌ ச‌ந்தையில் முத‌லிட‌ ஓடி வ‌ருவார்க‌ள். அத‌னால் சீன‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ச்சி அடையும் என்று க‌ண‌க்குப் போட்ட‌து. அப்ப‌டியே ந‌ட‌ந்த‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ம‌று ப‌க்க‌மாக‌ சீன‌ அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ள் கூட‌ ஹாங்காங் ப‌ங்குச் ச‌ந்தையில் முத‌லிட்டு இலாப‌ம் ச‌ம்பாதித்துள்ள‌ன‌.

hongkongத‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி எம‌க்கு ஊட‌க‌ங்க‌ள் ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌. இது “குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்தும் ச‌ட்ட‌ம்” தொட‌ர்பான‌ அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்ப‌து ஒரு ப‌குதி உண்மை ம‌ட்டுமே. அது அல்ல‌ முக்கிய‌ கார‌ண‌ம். உண்மையில் குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்துவ‌தை எந்த‌ நாடும் த‌வ‌றென்று சொல்ல‌ப் போவ‌தில்லை. ஹாங்காங் ம‌க்க‌ளும் அந்த‌ள‌வு முட்டாள்க‌ள் அல்ல‌.

உண்மையான‌ பிர‌ச்சினை வேறெங்கோ உள்ள‌து. ஹாங்காங்கில் இன்று வ‌ரையில் பிரிட்டிஷ் கால‌னிய‌ கால‌ ச‌ட்ட‌ம் தான் அமுலில் உள்ள‌து. Common Law என்ற‌ பிரிட்டிஷ் ச‌ட்ட‌ம் நிதித் துறையில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதிப்ப‌தில்லை. laisser faire (பிரெஞ்சு சொல்லின் அர்த்த‌ம் “செய்ய‌ விடு”) எனும் பொருளாதார‌ சூத்திர‌த்தின் அடிப்ப‌டையில், வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு த‌லையீடு இன்றி வ‌ர்த்த‌க‌ம் செய்து அதிக‌ இலாப‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். சுருக்க‌மாக‌, குறுக்கு வ‌ழியில் ப‌ண‌க்கார‌ராக‌ வர விரும்புவோருக்கு ஹாங்காங் ஒரு சிற‌ந்த‌ நாடு.

ஹாங்காங் அதி தாராள‌வாத‌ பொருளாதார‌த்தை கொண்டுள்ள‌தால் சாத‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ பாத‌க‌மும் உண்டு. அத‌ன் அர்த்த‌ம் அங்கு ந‌ட‌க்கும் மூல‌த‌ன‌ப் பாய்ச்ச‌லையும் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது. யார் எத்த‌னை கோடி டால‌ர் ப‌ண‌ம் ச‌ட்ட‌விரோத‌மாக‌ ச‌ம்பாதித்தார்க‌ள்? அதை எங்கே ப‌துக்கி வைக்கிறார்க‌ள்? இந்த‌க் கேள்விக‌ளுக்கு விடை தெரியாது.

படிக்க:
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
♦ அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !

இத‌னால் சீன‌ அர‌சால் புதிய கட்டுப்பாடுகள் போடப் பட்டன. நிதி மூல‌த‌ன‌ம் ஹாங்காங்கை விட்டு வேறு நாடுக‌ளுக்கு செல்வ‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் ஒரு ப‌குதி தான் குற்ற‌வாளிக‌ளை நாடு க‌ட‌த்தும் ச‌ட்ட‌ம். அதாவ‌து கோடிக்க‌ண‌க்கில் ப‌ண‌ மோச‌டி செய்த‌ க‌ம்ப‌னி நிர்வாகியும் குற்ற‌வாளி தான். புதிய‌ ச‌ட்ட‌த்தினால் அப்ப‌டியான‌ ஊழ‌ல்பேர்வ‌ழிக‌ள் நிறைய‌ அக‌ப்ப‌டுவார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் எழுந்த‌து. அத‌ன் விளைவுதான் அங்கு ந‌ட‌க்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள்.

அநேக‌மாக‌ எல்லா பெரிய‌ வ‌ங்கி நிறுவ‌ன‌ங்க‌ளும் ஹாங்காங்கில் த‌ள‌ம் அமைத்துள்ள‌ன‌. அதே போன்று பெரிய‌ அக்க‌வுன்ட‌ன்ட் நிறுவ‌ன‌ங்க‌ளும் உள்ள‌ன‌. அவை அங்கு முத‌லிட‌ம் வ‌ரும் ப‌ன்னாட்டு கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்குகின்ற‌ன‌. ஆனால், அவை அதை ம‌ட்டும் செய்ய‌வில்லை. அர‌சிய‌லிலும் த‌லையிடுகின்ற‌ன‌ என்ப‌த‌ற்கு அங்கு ந‌டக்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளே சாட்சிய‌ம்.

கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் நினைத்தால் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை தெருவுக்கு கொண்டு வ‌ந்து ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ வைக்க‌ முடியும். அத‌ற்கு ஆதார‌மாக‌ KPMG, EY, Deloitte, PwC ஆகிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வெளியிட்ட‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ரை ஆத‌ரிக்கும் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை குறிப்பிட‌லாம். இது அங்கு எந்த‌ள‌வு தூர‌ம் கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் அர‌சிய‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நிரூபிக்கின்ற‌து. இது குறித்து சீன அர‌சு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ பின்ன‌ர் த‌ம‌து ஆதரவை வெளிப்ப‌டையாக‌ காட்டிக் கொள்வ‌தில்லை.

சீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் “ம‌க்க‌ள் எழுச்சி” ஏற்ப‌டுகிற‌து. உதார‌ண‌த்திற்கு, ஹாங்காங் விமான‌ சேவைக‌ள் நிறுவ‌ன‌மான‌ க‌தே ப‌சிபிக் தலைவ‌ர் ப‌த‌வி வில‌கினார். அந்த‌ நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ நேர‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை என்று அர‌சு குற்ற‌ம் சாட்டி இருந்த‌தே ப‌த‌வி வில‌க‌லுக்கு கார‌ண‌ம். அதைத் தொட‌ர்ந்து எங்கிருந்தோ வ‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் விமான‌ நிலைய‌த்தை முற்றுகையிட்டு விமான‌ப் போக்குவ‌ர‌த்தை சீர்குலைத்த‌ன‌ர்.

முன்னைய‌ ச‌ம்ப‌வ‌த்தை இருட்ட‌டிப்பு செய்து விட்டு பின்னைய‌தை ப‌ற்றி ம‌ட்டுமே ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தெரிவித்த‌ன‌. அதே மாதிரி ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ப்ப‌டுவ‌தில்லை. அது ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கூட‌ த‌டைசெய்ய‌ப்ப‌டும் என்று ட்விட்ட‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவித்திருந்த‌து.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் !

ந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு 17.09.2019 அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். கலைக்குழு பாடகர் தோழர் கோவன் அவர்கள் பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். பெரியாரின் புகழை உயர்த்தியும் இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையில் இந்தியா முழுவதும் பாசிசத்தை கட்டவிழ்த்து விடும் மோடி, பா.ஜ.க, RSS கும்பல்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் வழக்கறிஞர் ஆதி தலைமையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ரெங்கநாதன் மற்றும் பாலகுரு ஆகிய இருவரையும் அழைத்து தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர்.

பின்னர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருவரும் பெரியார் உருவச்சிலை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி படித்த நாங்கள் அர்ச்சகராக முடியாமல் திட்டமிட்டே அ.தி.மு.க அரசால் பழிவாங்கப்பட்டோம்.

படிக்க:
கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !
♦ வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

அன்றிலிருந்து இன்றுவரை கோயில்களில் அர்ச்சகராவதற்கு பல்வேறு வழக்குகள் நடத்தி வருகின்றோம். எங்களுக்கு அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்கவில்லை. அதை கண்டித்துதான் நாங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்று கூறினார்கள். இம்மாணவர்களுக்கு ஆதரவாக ம.க.இ.க அதன் தோழமை அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்தோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வு அங்கு தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை போட வந்திருந்த பல்வேறு கட்சிகள் அமைப்புகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

***

தஞ்சையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தோழர்கள் !

செப்டமபர் 17, தஞ்சையில் அதிமுக, பிஜேபி தவிர எந்த அமைப்பிற்கும் கூட்டம் போட அனுமதி கிடையாது. அப்படியே கிடைத்தாலும் வழக்கு உறுதி. அதனால் கூட்டங்கள், ஆர்பாட்டங்களை சமீபகாலமாக தஞ்சையில் அதிகம் பார்க்க முடிவதில்லை. இரயிலடியில் காவல்துறையின் பாதுகாப்பில் இருபத்தைந்து பேர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்ததை பார்த்தபடி மக்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

கருப்பு சட்டை அணிந்தவர்கள் பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று கொண்டிருந்தனர். பெரியார் சிலையை சுற்றி நூற்றுக்கணக்கில் கருஞ்சட்டைகள் மற்றும் மக்கள் கூட்டம். அந்நிகழ்வில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கேற்பு மகிழ்சியூட்டியது.

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், தஞ்சை ஒருஙகிணைப்பாளர் தோழர் தேவா, மக்கள் கலை இலக்கியக் கழக தஞ்சை கிளைச்செயலர் தோழர் இராவணன் உள்ளிட்ட தோழர்களோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பார்பன மதவெறி பாசிசத்திற்கெதிராக விண்ணதிர முழக்கமிட்டபடி வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பிஜேபி -யினர் நீங்கலாக காங்கிரஸ் கடசியினர் உட்பட அனைத்துக் கட்சியினர், அமைப்பினர் என அணிஅணியாக திரண்டுவந்து பெரியாருக்கு மாலை அணிவித்து பெரியாரைப் போற்றி முழக்கமிட்டனர். இன்றைய நிகழ்ச்சிகள் தஞ்சையின் நிறம் அவ்வளவு எளிதாக காவியாக மாறிவிடாது என்ற நம்பிக்கையை பறைசாற்றியது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

படிக்க:
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

***

அம்பேத்கர் பெரியாரைப் படிப்போம் ! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் !

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பெரியாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதோடு மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக் கூடிய வகையில் நீட் தேர்வு மற்றும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என கல்வியில் இருந்து பெரும்பான்மை மாணவர்களை விரட்டவும்; மீண்டும் குலக்கல்வியை திணிக்கும் காவி கும்பலுக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் பற்றி படிப்போம் என உறுதியேற்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

***

சாதி ஒழிக்க சபதமேற்போம் ! மதுரையில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா !

பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அம்பேத்கர் சிலையில் இருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள், சாதியை ஒழிக்க, சமத்துவம் காக்க, மதவெறி மாய்க்க, மடமை மாய்க்க, பகுத்தறிவு வளர்க்க, பெண்ணடிமை தீர, மொழி உரிமை காக்க, மனுநீதி ஒழிக்க பெரியார் வேண்டும்! என முழக்கமிட்டபடி பெரியார் சிலைக்கு வந்தடைந்து பெரியாருக்கு மாலை இட்டு, இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளை முறியடிக்க சபதம் ஏற்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
மதுரை.

கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !

0

டலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள், தந்தை பெரியாரின் பிறந்த நாளான 17.09.2019 அன்று பெரியாரை நினைவில் ஏந்தும் வகையில்  “சாதியத்தை ஒழித்து மனிதத்தை நிலைநாட்டுவோம் ! சாதி மனிதனை சாக்கடையாக்கும் மதம் மனிதனை மிருகமாக்கும் !” என்ற பெரியாரின் கருத்துக்களை முழங்கி கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம் பண்பாட்டை பறிக்கும் வகையில் அமித்ஷாவின் இந்தி திணிப்பு ஆணவ பேச்சிற்கு எதிராகவும்; 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டுவந்து மீண்டும் மனுதர்ம குலக்கல்வியை நிலை நாட்ட துடிக்கும் மோடியின் தேசிய கல்வி கொள்கையை வழி மொழியும் அறிவிப்பை கண்டித்தும்; மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட நுண்ணுயிரியல் துறை தலைவர் பேராசிரியர் நிர்மல் குமார் பணியிட மாற்றத்தை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்றும் பெரும்பான்மை ஏழை எளிய மாணவர்கள் பயிலும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் திடீரென உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ! ஆகிய கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் மாணவர்கள் ஏற்கனவே பஸ்கட்டணம் உயர்ந்து விட்டது, ஸ்காலர்ஷிப் முறையாக வழங்கவில்லை. இதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது பல்கலைக்கழகம். இப்போது மாணவர்களின் நிலை தனியார் கல்லூரியில் படிப்பதுபோல் உள்ளது.

அதனால் இம்முறை பல்கலைகழக நிர்வாகம் தேர்வு கட்டணத்தை குறைக்காத வரை போராட்டத்தை கைவிமாட்டோம் என அனைவரும் ஒரே குரலாய் ஒலித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

***

தேர்வு கட்டண உயர்வு ! இந்தி திணிப்பு ! 5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கண்டித்தும் விழுப்புரம் திண்டிவனத்தில் மாணவர்கள் போராட்டம் !   

திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரியிலும் திடீர் என  தேர்வு கட்டண உயர்வுவை அறிவித்ததை தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF)  ஒருங்கிணைப்பில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி மற்றும் திண்டிவனம் கோவிந்த சாமி அரசு கலை கல்லூரி ஆகியவற்றில் 17.09.2019 அன்று வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தேர்வு கட்டண உயர்வு என்பதை ‘மோடி எப்படி 500,1000 ரூபாய் செல்லாது என்று இரவோடு இரவாக அறிவித்தாரோ’ அதை போல கல்லூரி நிர்வாகம் 15-ம் தேதி இரவில் மாணவர்களுக்கு தொடர்பு கொண்டு கட்டண அறிக்கை வந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில்  கட்டணம் முழுவதும் கட்டி விடவேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அரசு கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பம்களில் இருந்து  பல்வேறு கடினமான சூழ்நிலையில் இருந்து வருகிறவர்கள். இந்த தேர்வு கட்டண உயர்வு என்பது  மாணவர்கள் மீது மிக பெரிய சுமையாக மாறும் எனவே இந்த கட்டண உயர்வை உடனடியாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும் என்ற அடிபடையிலும் கல்லூரி நிர்வாகம் அதிர்ந்து போகும் விதமாகவும்.

தேசிய கல்வி கொள்கை – 2019 உள்ள அனைத்து பரிந்துரைளை அமல்படுத்தும் விதமாக 5, 8-ம்  வகுப்பிற்கு பொது தேர்வு நடத்த வேண்டும் என்பதை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த தேர்வு என்பதை பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் இடை நிற்றலை அதிகரிக்கும் ஆகவே இந்த பொதுத்தேர்வு பெரும்பான்மை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் உடனடியாக அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும், கடந்த சில நாட்களுக்கு முன் அமித்ஷா -வின் இந்தி திணிப்பு பற்றி ஆணவ பேச்சை கண்டித்தும் மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கையை உடனே நிறைவேற்றவில்லை என்றால் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம் மாவட்டம். தொடர்புக்கு : 91593 51158

***

திருச்சி பெரியார் கலைக் கல்லூரி – பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் :

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மாணவர்களுக்கிடையே இனிப்புகளைப் பகிர்ந்தும் கொண்டாடினர்.

கல்லூரி தந்த தலைவனுக்கு மாணவர்களின் மரியாதை :
“கருப்பு எங்கள் நிறமடா”
“இது பெரியார் பிறந்த மண்ணடா”

என்ற முழக்கங்களையும் முழங்கினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு.
திருச்சி. தொடர்புக்கு : 74182 06819.

பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35

0
Adam-smith-1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 35

மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல்

அ.அனிக்கின்

டின்பரோ பல்கலைக்கழகத்தில்தான் அரசியல் பொருளாதாரம் முதன் முதலில் ஒரு தனி விஞ்ஞானமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே 1801-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித்தின் மாணவரும் நண்பருமான டக்ளஸ் ஸ்டுவர்ட் அரசியல் பொருளாதாரத்தைக் கற்பித்தார். 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை பொருளாதாரப் பேராசிரியர் எல்லோருக்கும் பழக்கமான நபராக வளர்ச்சியடையவில்லை. ஆயினும் பேராசிரியர்களாக இல்லாத பலர் இந்த விஞ்ஞானத்துக்கு மிக முக்கியமான கருத்துரைகளைக் கொடுப்பது தொடர்ந்து கொண்டிருந்தது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்தப் புதிய விஞ்ஞானத்தைப் படைத்த திறமை மிக்கவர்களை மூன்று முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதலாவதாக, அந்தக் குறிப்பிட்ட யுகத்தின் தனித் தன்மையைக் கொண்ட, இயற்கை மற்றும் சமூகத்தைப் பற்றிய தங்களுடைய பொதுவான அமைப்புக்களுக்குள்ளாகவே பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்த தத்துவ ஞானிகளைக் குறிப்பிடலாம். அவர்களில் மிகச் சிறந்தவர்களாக இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக், டேவிட் ஹியூம் மற்றும் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஆடம் ஸ்மித்; பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹெல்வெடியஸ் மற்றும் காண்டில்லாக்; இத்தாலியைச் சேர்ந்த பெக்காரியா முதலியோர் உள்ளனர்.

இரண்டாவதாக, வணிகர்களும் தொழிலதிபர்களும். இவர்கள் தங்களுடைய குறுகிய வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து அரசு விவகாரங்களுக்கு முன்னேறி இராஜியவாதிகளாகச் சிந்தனை செய்ய முயற்சித்தவர்கள். இங்கே தாமஸ் மான், ஜான் லோ, டட்லி நோர்த் மற்றும் ரிச்சர்ட் கான்டில்லான் ஆகியோரைக் குறிப்பிடலாம். பிரான்சில் புவாகில்பேர், டியுர்கோ, குர்னே ஆகியோர் அந்த நாட்டின் தனிச்சிறப்புக்கு ஏற்ற வகையில் நீதி, நிர்வாகத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

மூன்றாவதாகவும் கடைசியாகவும் இருப்பவர்கள் அறிவிற்சிறந்து விளங்கிய சாதாரணமானவர்கள். இவர்கள் பல தொழில்களையும் சேர்ந்தவர்கள்; சில சமயங்களில் இவர்கள் மேல் வர்க்கத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள், சில சமயங்களில் அவ்விதம் நடைபெறவில்லை. மருத்துவர்களான வில்லியம் பெட்டி, நிக்கோலஸ் பார்பன், பெர்னார்டு மான்டெவில், பிரான்சுவா கெனே முதலியோர் அரசியல் பொருளாதாரத்தை நன்றாகப் படித்திருந்தனர் என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியதே.

படிக்க:
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் மருத்துவத்துறை மட்டுமே சிறப்பான வளர்ச்சி பெற்றிருந்தபடியால் அது சுறுசுறுப்பானவர்களை, சிந்திக்கக் கூடியவர்களைக் கவர்ந்தது. 18-ம் நூற்றாண்டில் பொருளியலாளர்கள் மத்தியில் மதப் பணிகளை மேற்கொண்டவர்களையும் பார்க்கிறோம்; பிரான்சிலும் இத்தாலியிலும் மத குருக்கள் (தற்சிந்தனையும் ஆழமான அறிவும் கொண்ட இத்தாலியப் பொருளியலாளரான காலியானி இவர்களில் ஒருவர்), இங்கிலாந்தில் ஆங்கிலத் திருச்சபையின் பாதிரிமார்கள் (டக்கர் மற்றும் மால்தஸ்) இதில் அடங்குவர்.

இந்தப் பிரிவுகள் சில நிபந்தனைகளுக்குட்பட்டே சரியானவை என்பதால் கருத்துக்கள் எவ்விதமாக வளர்ச்சியடைந்தன என்பதை இவை நிச்சயமாக நிர்ணயிக்கவில்லை; ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சியிலிருந்த சிக்கலான நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்வதற்கு இவை உதவுகின்றன.

ஏதாவதொரு குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவாக எழுதுவது அல்லது அந்தக் கொள்கையைப் பற்றி விமர்சனம் செய்வது என்பதே பொருளாதாரக் கட்டுரைகளின் முக்கியமான செய்முறை நோக்கமாக இன்னும் இருந்து வருகிறது. எனினும் 18-ம் நூற்றாண்டின் அறுபதுக்களில் டியுர்கோ மற்றும் ஜேம்ஸ் ஸ்டுவர்ட் எழுதிய புத்தகங்கள் 17-ம் நூற்றாண்டிலும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாணிப ஊக்கக் கொள்கையினர் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து அதிகமாக வேறுபட்டிருக்கின்றன. அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முறையாகவும் தத்துவரீதியாகவும் விளக்கிக் கூறுவதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சிகள் இவை.

The Wealth of Nations Adam Smith Bookமேலும் “செய்முறை நோக்கம்” பலவிதமான வடிவங்களை அடைகிறது. சில எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அது அவர்களுடைய சொந்த நலன்களையும் அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களையும் நேரடியாக ஆதரித்துப் பத்திரிகைகளில் எழுதுவதாக இருக்கிறது. வேறு சிலரிடம் அது சமூக நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்கின்ற மிகவும் ஆழமான போக்காக இருக்கிறது; இந்த ஆராய்ச்சியானது வர்க்க நலன்களை பல் கூட்டுத் தொகுதியாகவும் இடையில் வருகின்ற வடிவத்திலும் மட்டுமே கவனம் கொள்கிறது. இரண்டாவது வகையைச் சேர்ந்த மனிதர்கள்தான் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கினார்கள் என்பதை வலியுறுத்துவது அவசியமல்ல. உதாரணமாக, ஆடம் ஸ்மித் வணிகருமல்ல, தொழில் அதிபருமல்ல. நாடுகளின் செல்வம் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் சுதந்திரமான வர்த்தகக் கொள்கையை ஆதரித்துத் தீவிரமாக வாதாடுகிறார்; அதனால் தனக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவருக்குச் சுங்க இலாகாவில் வேலை கிடைத்தது. அவர் எந்தக் கருத்தை எதிர்த்துப் போராடினாரோ அந்தக் கருத்தின் உருவகமான அமைப்பிலேயே அவர் பணி புரிய நேர்ந்தது அவருடைய வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்றாகும்.

மான்டெவிலின் முரணுரைகள் எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவர் இங்கிலாந்தில் மூலச்சிறப்புடைய மரபின் உருவாக்கத்திலிருந்து சற்று விலகியே நிற்கிறார். அந்த மரபு முதலாவதாகவும் முதன்மையாகவும் லாக் (1632-1704) மற்றும் நோர்த் (1641-1691) ஆகியோரோடு இணைக்கப்பட்டிருக்கிறது; இவர்கள் பெட்டியின் நேரடியான வாரிசுகள்.

18-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தத்துவஞானியும், பொருள்முதல்வாத அறியும் ஆற்றல் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் முதலாளித்துவ மிதவாதத்தின் தந்தையுமான லாக் பொருளாதார விஞ்ஞானத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். 1691-ம் வருடத்தில் அவர் வெளியிட்ட வட்டி விகிதத்தைக் குறைப்பது, பணத்தின் மதிப்பை உயர்த்துவது ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி சில கருத்துக்கள் என்ற புத்தகம் இதற்குக் காரணமாகும். அதே சமயத்தில் லாக்கின் தத்துவஞானம் முழுவதுமே, 18-ம் நூற்றாண்டில் – 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட – ஆங்கில அரசியல் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக உதவியது. லாக் சமூக விஞ்ஞானத்தில் இயற்கைச் சட்டக் கருத்துக்களை வளர்த்தார்; இவை இயற்கை விஞ்ஞானத்தில் நியூட்டன் வளர்த்த யாத்திரிகப் பொருள்முதல்வாதத்துக்குச் சமமான போக்காகும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல, இந்தக் கருத்துக்கள் அவர் களுடைய காலத்தைப் பார்க்கும் பொழுது முற்போக்கான வையாகும்; ஏனென்றால் அவை சமூக நிகழ்வுகளின் உலகத்தில் புறநிலையான விதிகள் என்ற கோட்பாட்டை ஏற்படுத்தின.

உபரி மதிப்பைப் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் லாக் செய்த முக்கியமான முன்னேற்றம் கூட இயற்கைச் சட்டம் என்ற கருத்து நிலையிலிருந்தே தோன்றியது. மனிதன் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொண்டு விவசாயம் செய்யக் கூடிய அளவுக்குத் தேவையான நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கையானது; அது போல தன்னுடைய சொந்த நுகர்வுக்குத் தேவையான எல்லாவிதமான மற்ற வசதிகளையும் (இதில் பணமும் உண்டு) பெற்றிருக்க வேண்டும் என்பதும் இயற்கையே என்று அவர் எழுதுகிறார். ஆனால் உடைமைகளைப் பகிர்ந்தளிப்பதிலுள்ள செயற்கையான ஏற்றத்தாழ்வின் காரணமாகச் சிலரிடம் அதிகமான நிலமும் பணமும் சேர்ந்து விடுகிறது; அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுகிறார்கள், பணத்தை வட்டிக்குக் கொடுக்கிறார்கள். நிலக் குத்தகையும் வட்டியும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் ஒரே மாதிரியான இரு வடிவங்கள் என்று லாக் கருதினார்.

படிக்க:
1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
♦ குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !

டட்லி நோர்த் தற்சிந்தனை மிக்க ஆளுமை பெற்றவர். ஒரு பிரபுவின் குடும்பத்தில் இளைய மகனாகப் பிறந்தார்; இளமைப் பருவத்தில் அவர் கல்வி கற்பதில் காட்டிய ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அவரை (தாமஸ் மானைப் போலவே) நடுக்கடல் நாடுகளோடு வர்த்தகம் செய்யும் கம்பெனியின் வணிகர் ஒருவரிடம் சேர்த்து விட்டார்கள். அவர் துருக்கியில் பல வருடங்களைக் கழித்து விட்டு அநேகமாக நாற்பது வயதாகும் பொழுது பணக்காரராக இங்கிலாந்துக்குத் திரும்பினார். ஆனால் ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பது போல, ”அவருடைய தோற்றம் காட்டு மிராண்டியைப் போல இருந்தது; அவனைக் காட்டிலும் அதிகப் பண்பாடு எதுவும் அவரிடம் இல்லை.”

1683-ம் வருடத்தில், இரண்டாம் சார்ல்சின் ஆட்சியில் டோரிகள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அவர் லண்டன் நகரத்தின் ஷெரிபாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகிக்கும் பொழுது துருக்கி நாட்டுப் போர் வீரர்களுக்குரிய பழக்க வழக்கங்களைத்தான் அவர் வெளிக்காட்டினார். அரசருக்கு விசுவாசமாகப் பாடுபட்டு விக் கட்சியினருக்கு அதிகமான கெடுதல்களைச் செய்ததற்காக அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது; சர் டட்லி நோர்த் அதற்குப் பிறகு இன்னும் சில முக்கியமான பதவிகளை வகித்தார்; ஆனால் 1688-89ம் வருடப் புரட்சி அவருடைய முன்னேற்றத்தை ஒழித்தது.

1691-ம் வருடத்தில் லாக் வெளியிட்ட வட்டி விகிதத்தைக் குறைப்பது, பணத்தின் மதிப்பை உயர்த்துவது ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி சில கருத்துக்கள் என்ற புத்தகம்.

லாக்கின் ஆழ்ந்த புலமையில் பத்தில் ஒரு பங்கு கூட நோர்த்திடம் இருக்கவில்லை. எனினும் அவர் துல்லியமாகவும் துணிச்சலாகவும் பொருளாதாரத்தில் சிந்தனை செய்யக் கூடிய அசாதாரணமான திறமையைக் கொண்டிருந்தார். சென்ற காலத்தின் அங்கீகாரம் பெற்ற மேதைகளைப் பற்றிக் கவலையில்லாமல் அவர் புதுச் சிந்தனையைக் கொண்டிருந்தார். லாக் எழுதிய புத்தகம் வெளிவந்த அதே சமயத்தில் வர்த்தகத்தைப் பற்றிய கருத்துரை என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுபிரசுரம் வெளிவந்தது. லாக் எழுதிய பிரச்சினைகளைப் பற்றியே இவரும் எழுதியிருந்தார். இந்தச் சிறு பிரசுரம் 17-ம் நூற்றாண்டின் பொருளாதாரச் சிந்தனையின் அரிய சாதனைகளில் ஒன்றாக விளங்குகிறது.

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விஞ்ஞான முறையை – தர்க்கரீதியான சூக்குமப்படுத்துதலை வளர்த்துச் செல்வதில் நோர்த் பெரும் பங்கு வகித்தார். ஒரு பொருளாதார நிகழ்வு முடிவில்லாத அளவுக்குப் பல கூட்டுத் தொகுதியாக, எண்ணற்ற உறவுகளைக் கொண்டுள்ள தாக இருக்கிறது. எனவே அதை ஆராய்வதென்றால் அதிலுள்ள தேவையற்ற எல்லாத் தொடர்புகளையும் கூறு களையும் ஒதுக்கிப் பிரித்து “கலப்பற்ற வடிவத்தில்” அதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். இதுதான் தர்க்கரீதியான சூக்குமப்படுத்துதலாகும்.

நோர்த் மூலதனத்தை வட்டி கிடைக்கிற பண மூலதனத்தின் வடிவத்தில் மட்டுமே ஆராய்ந்தார் என்பது உண்மையே என்ற போதிலும் அதன் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர் அவரே. கடன்களுக்குக் கிடைக்கும் வட்டி (வாணிப ஊக்கக் கொள்கையினரும் லாக்கும் கூட நினைத்தது போல) நாட்டிலுள்ள பணத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை; பண மூலதனத் திரட்சிக்கும் அதன் தேவைக்குமுள்ள உறவு தான் இதை நிர்ணயிக்கிறது என்று எடுத்துக் காட்டினார். இது வட்டி பற்றிய மூலச் சிறப்புடைய மரபினரின் தத்துவத்துக்கு ஆதாரமாயிற்று; இதிலிருந்து தான் பிற்காலத்தில் லாபம் என்ற இனத்தைப் பற்றிய தெளிவு ஏற்பட்டது. பணத்தைப் பற்றிய தத்துவத்தின் வளர்ச்சிக்கும் நோர்த் அதிகப்பங்காற்றினார்.

நோர்த் வாணிப ஊக்கக் கொள்கையைக் கூர்மையான, அடிப்படையான விமர்சனத்துக்கு உட்படுத்தியதும், “இயற்கையான சுதந்திரத்தை” உறுதியாகத் தீவிரமாக ஆதரித்ததுமே அவரைப் பற்றிய முக்கியமான அம்சமாகவும் இருக்கலாம். வட்டியைக் கட்டாயமாக ஒழுங்குபடுத்துவதை (தனக்கு முன்னர் பெட்டியும் லாக்கும் செய்ததைப் போல) அவர் ஆட்சேபித்தது இதற்குக் காரணமாகும். எனினும் வாணிப ஊக்கக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களைக் காட்டிலும் நோர்த் வெகுதூரம் முன்னே சென்றார். இந்த அம்சத்தைப் பொறுத்த வரையிலும் அவர் ஆடம் ஸ்மித்தின் நேரடியான முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார்.

உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் லாக், நோர்த் ஆகிய இருவருமே பெட்டி அளவுக்கு முன்னே செல்லவில்லை. ஆனால் 17, 18-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற நூல்களில் அது படிப்படியாக வளர்க்கப்பட்டு நிறுவப்பட்டது; அதன் மூலம் ஸ்மித் வருவதற்கு தளம் தயாரிக்கப்பட்டது. உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சி, உற்பத்தியில் புதுப்புதுத் துறைகளின் தோற்றம், பண்டப் பரிவர்த்தனை விஸ்தரிக்கப்படுதல் இவை அனைத்துமே மக்கள் உண்மையில் மனித உழைப்பின் பகுதிகளைத்தான் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்ற கருத்தை உறுதியாக்கியது. எனவே பரிவர்த்தனை விகிதம், பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்புக்கள் ஒவ்வொரு பண்டத்தையும் உற்பத்தி செய்வதற்குச் செலவழிக்கப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். நிலமும் உற்பத்திக் கருவிகளும் பயன்மதிப்புக்கள் என்ற வகையில் செல்வத்தைப் படைப்பதில் நிச்சயமாக ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன, ஆனால் மதிப்பைப் படைப்பதில் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை என்ற உணர்வு வளர்ந்து கொண்டிருந்தது.

பல விதமான கருத்துக்கள் மோதிக் கொண்டிருந்த குழப்பமான நிலையில் இத்தகைய கருத்துக்கள் மெதுவாக, அதிக சிரமத்தோடு கெட்டிப்பட்டன. இவ்விதமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கருத்துக்களின் கடினமான போராட்டம் ஆடம் ஸ்மித்தின் மூளையிலும் நடைபெற்றது. அதை நாம் பின்வரும் பகுதியில் வர்ணிப்போம். மதிப்புத் தத்துவத்தில் அவருடைய முன்னோடிகளில் அதிக முக்கிய மானவர்கள் ரிச்சர்ட் கான்டில்லான், ஜோசப் ஹாரிஸ், வில்லியம் டெம்பிள் மற்றும் ஜோஸையா டக்கர் ஆகியோராவர். இவர்கள் 18-ம் நூற்றாண்டின் முப்பதுக்களுக்கும் ஐம்பதுக்களுக்கும் இடையில் எழுதினார்கள்.

இவர்களில் ஒரு எழுத்தாளரைப் பற்றி நாம் எந்தத் தகவலையும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் பெயர் நமக்குத் தெரியாது. “பெயரில்லாத-1738”(1) என்று தான் அவரைக் குறிப்பிடுகிறார்கள். அவர் ஓரளவுக்கு ஆடம் ஸ்மித்தைக் கூட விஞ்சும் படி மதிப்புத் தத்துவத்தை அற்புதமான வகையில் துல்லியமாக வகுத்துரைத்தார். 17, 18-ம் நூற்றாண்டுகளில் பல பொருளாதார நூல்கள் ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டன. இவற்றில் சிலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் முன்பே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. மற்றவர்கள் இந்த விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் நிறைந்த பாத்திரத்தை வகிக்கவில்லை. இவர்களில் ‘பெயரில்லாத-1738’ ஒரு விதிவிலக்காக இருக்கிறார்.

அவருடைய புத்தகம் பொதுவாக பணத்துக்கு வட்டியைப் பற்றிய சில சிந்தனைகள் என்ற சாதாரணமான தலைப்பைக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஒரு முக்கியமான பகுதியை இங்கே மேற்கோள் காட்டுவோம். நமது ஆராய்ச்சிக்கு உதவுகின்ற வகையில் கீழே (2)விளக்கக் குறிப்பும் தரப்பட்டிருக்கிறது.

”வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உண்மையான, மெய்யான மதிப்பு அவை மனிதகுலத்தை நிலைத்திருக்கச் செய்வதற்குத் தரும் பங்குக்கு ஏற்ற விகிதத்தில் இருக்கிறது. பரிவர்த்தனையாக அவற்றில் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறுகிற பொழுது அவற்றின் மதிப்பு, அவற்றை உற்பத்தி செய்வதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. அவற்றை விற்பனை செய்கிற பொழுது அவற்றின் மதிப்பு அல்லது விலை அவற்றில் பயன் படுத்தப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டும், பொதுவான அளவுகோல் அல்லது ஊடகமானது அதிகமாக அல்லது குறைவாகக் கிடைப்பதைக் கொண்டும் முடிவாகும்.

Carrying Waterவாழ்க்கைக்கு ரொட்டியையும் மதுவையும் போல் தண்ணீரும் அவசியமே; ஆனால் கடவுளின் கருணையால் ஒவ்வொரு மனிதனுக்கும் எந்த சிரமமும் இல்லாமல் போதுமான அளவுக்குக் கிடைக்கும் வகையில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது : அதனால் பொதுவாக அதற்கு எந்த விலையும் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட மனிதர்களுக்கு அதைக் கொண்டு வந்து கொடுப்பதற்கு எங்கே, எப்பொழுது உழைப்புத் தேவைப்படுகிறதோ அங்கே தண்ணீருக்குக் கொடுக்காவிட்டாலும் உழைப்புக்குக் கூலி கொடுக்க வேண்டும். அதன் காரணமாக சில நேரங்களில், சில இடங்களில் ஒரு பீப்பாய் தண்ணீர் கூட ஒரு பீப்பாய் மதுவைப் போல அதிகமான விலையுள்ளதாக இருக்கலாம்” (3)

மதிப்புத் தத்துவத்தின் வளர்ச்சியோடு ஒட்டிய வகையில் வேறு முக்கியமான துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. கடைசியாகப் பார்க்கும் பொழுது கூலித் தொழிலாளர்களின் ஊதியம் அவர்கள் உயிரோடிருப்பதற்குக் குறைந்த பட்சம் தேவையானவற்றின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது என்பது பெட்டியின் கருத்து. இந்தக் கருத்தை வளர்த்துச் செல்லும் பொழுது பொருளியலாளர்கள் இந்தக் குறைந்த பட்சத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் வகையில் நெருங்கி வந்தனர். அவர்கள் மக்கள் தொகைப் பிரச்சினைகளை ஆராய்ந்ததன் மூலமாக, குறைந்த பட்சத்தோடு நின்றுவிடுகிற அளவுக்குத் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்துவிடும் வகையில் தொழிலாளர்களுக்கிடையே போட்டியை ஏற்படுத்துகின்ற விதத்தில் தொழிலாளர் எண்ணிக்கையின் புனருற்பத்தியை உறுதிப்படுத்துகின்ற பொறியமைவை ஓரளவுக்கு விளக்கினார்கள்,

வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்ற லாபத்துக்கும் கடன்களிலிருந்து கிடைக்கின்ற வட்டிக்கும் வேறுபடுத்திப் பார்த்தது மூலதனத்தையும் அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தையும் புரிந்து கொள்வதில் முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் எழுதிய ஜோசப் மாஸ்ஸி, டேவிட் ஹியூம் ஆகியோர் வழக்கமான நிலைமைகளில் வட்டி என்பது வருமானத்தின் பகுதி; வணிகரும் தொழிலதிபரும் பணத்தின் , கடன் மூலதனத்தின் உடைமையாளரோடு இதைப் பகிர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதை முன்பே புரிந்து கொண்டிருந்தனர்.

ஆகவே ஆடம் ஸ்மித்துக்கு முந்திய அரசியல் பொருளாதாரம் உண்மையில் உபரி மதிப்பை ஆராய்கிறது ; ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் லாபம், வட்டிமற்றும் நிலவாரம் என்ற விசேஷமான வடிவங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) 1738 என்ற வருடமும் முற்றிலும் நிச்சயமானதல்ல.

(2)  ஆசிரியர் இந்த இடத்தில் உண்மையில் பயன்மதிப்பை வரையறுத்துக் கூறுகிறார். இங்கே அவர் பரிவர்த்தனை மதிப்பு பற்றிய கருத்து கோளைத் தருகிறார். இது பயன் மதிப்பிலிருந்து முழுவதும் வேறுபட்டிருக்கிறது. சமூகத்துக்கு அவசியமான உழைப்பு நேரம் என்ற கருத்து இங்கே கரு வடிவத்தில் காணப்படுகிறது.

ஆசிரியர் விலைக்கும் மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்கிறார். பணத்தின் மிகையளவு அல்லது பற்றாக்குறையின் தாக்கத்தினால் விலை மாற்றமடைகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.

இது ”மதிப்பைப் பற்றிய புதிர்” என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறப்பான உதாரணமாகும். இது பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது.

மதிப்பை உருவாக்குவது உழைப்பு; இயற்கை அல்ல என்பதை ஆசிரியர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

(3)  R. Meelk, Studies in thie Labour Theory of Value, London, 1956, pp. 42-43.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது அதன் சாதுரியமான செயல்பாடுகளாலோ அல்லது அதிநவீன ராணுவ வல்லமையாலோ மட்டுமல்ல; கடல் போல் விரிந்த இந்திய கடன் வாய்ப்பை கைதேர்ந்த வகையில் தன்னோடு இணைத்துக் கொண்டதே அதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

– வில்லியம் டாரிம்பிள்

***

ந்தியாவை பிரிட்டன் வெற்றி கொண்டது பற்றி இன்னமும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது ஒரு கொடூரமான எதார்த்த உண்மையை மறைக்கும் பேச்சே ஆகும். 18-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் பெரும்பகுதியை கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசாங்கம் அல்ல; மாறாக அது ஒரு அபாயகரமான கட்டுப்படுத்தப்படாத தனியார் நிறுவனமாகும்.

இலண்டனில் 5 ஜன்னல் வைத்த ஒரு சின்னஞ்சிறு அறையை தலைமையகமாகக் கொண்டு இயங்கியதுதான் அந்த கிழக்கிந்தியக் கம்பெனி. ஈவிரக்கமற்ற முரடனும் அவ்வப்போது புத்தி சுவாதீனம் இழப்பவருமாகிய ராபர்ட் கிளைவ் என்னும் ஒரு கார்பரேட் பிணந்தின்னியே அதன் இந்திய நிர்வாகி. லாப வெறி பிடித்த இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ்தான் இந்தியா காலனி நாடானது.

தி அனார்கி நூலின் ஆசிரியர் வில்லியம் டாரிம்பிள்.

இந்த நிகழ்வின் சாத்தியக்கூறு குறித்து 2013-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலம் செய்த ஆய்வில் விளைவு தான் ப்ளூம்ஸ்பர்ரி நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள தி அனார்கி (அராஜகம் / கும்பினி ஆட்சி: கிழக்கிந்தியக் கம்பெனி, கார்ப்பரேட் வன்முறை மற்றும் ஒரு சாம்ராஜ்யம் சூறையாடப்படுதல்) என்ற என்னுடைய நூல்.

இந்த நூலின் குறிக்கோள் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு மற்றும் வர்த்தக செயல்பாடுகளை ஆய்வதல்ல. மாறாக, லண்டனில் ஓர் அலுவலக வளாகத்தின் சிற்றறையில் இயங்கிய சின்னஞ்சிறு தொழில் நிறுவனம், 1756 – 1803-ம் ஆண்டுகளில் இந்தியத் துணைக்கடத்தின் வல்லமைமிக்க இருபெரும் பேரரசுகளான மொகலாய மற்றும் மராட்டியப் பேரரசுகளை அகற்றிவிட்டு தனது ஆட்சியை நிறுவியது எப்படிச் சாத்தியமானது என்ற மையமான கேள்விக்கு விடை காணும் முயற்சியே இது.

1740-களின் கர்நாடக போர் தொடங்கி, 1803-ம் ஆண்டின் ஆங்கில – மராத்தா போர் ஈராக 60 ஆண்டு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி தன்னை எதிர்த்த இந்தியப் பேரரசுகள் அனைத்தையும் வீழ்த்தி தில்லியைக் கைப்பற்றியது. இந்த அசாதாரணமான வெற்றிக்கு வழமையான பல காரணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்: பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் மொகலாயப் பேரரசு சிதறுண்டு போய் போட்டியும் பொறாமையும் மிக்க நவாபுகளின் ஆட்சி நடைபெற்றதும், இந்திய அரசுகளிடையே ஒற்றுமை இன்மையும் இதற்கு முக்கியப் பங்காற்றின.

மேலும் மிக முக்கியமாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் முழு ஒத்துழைப்பையும் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. 18-ம் நூற்றாண்டு முழுவதும் பரஸ்பர நலன் கருதி கம்பெனிக்கும் பாராளுமன்றத்துக்குமான உறவு சீராக வளர்ச்சியுற்று இன்று சொல்லப்படும் அரசு தனியார் கூட்டு நிறுவனம் (PPP) என்ற நிலையை அன்றே அடைந்தது. பெரும் கனவான்களாக ஏராளமான செல்வத்துடன் திரும்பிய ராபர்ட் கிளைவ் போன்றோர் பாராளுமன்ற இரு அவைகளிலும் இருக்கைகளை விலைபேசி வாங்க முடிந்தது. பதிலுக்கு பாராளுமன்றம் கம்பெனிக்கு தன்னுடைய கப்பல்களையும், ராணுவ வீரர்களையும் கொடுத்து வெற்றிக்கு வழி கோலியது.

Robert Clive
ராபர்ட் கிளைவ்

புதிய இராணுவ தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட வளர்ச்சி ராணுவ மேன்மையை உறுதிசெய்தது. உதாரணமாக, அக்டோபர் 24, 1746 அன்று அடையாறு கழிமுகப் பகுதியில் நடைபெற்ற சண்டை இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. முதல் முதலாக நவீன போர்க்கலையில் பயிற்சிபெற்ற 700 பிரெஞ்சு – இந்திய சிப்பாய்களை கர்நாடக நவாப்பின் மூத்த மகன் மஹ்ஃபுஸ்கான் 10,000 குதிரைப்படை வீரர்களுடன் சென்று இடைமறித்தார். இதுநாள் வரை இந்தியாவில் எங்கும் பார்த்திராத புதிய துப்பாக்கிப் பிரயோக முறை சில நிமிட நேரங்களில் எதிர்ப்பை முறியடித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இறுதியில் இரண்டு பிரெஞ்சு சிப்பாய்களும் 300 முகலாய படைவீரர்களும் பலியாகி இருந்தனர். இந்த இராணுவ வல்லமையை ஈடுசெய்யும்படியான எந்த ஒரு ராணுவமும் இந்தியாவில் இல்லை என்ற நிலை தெளிவானது. 1765-ம் ஆண்டுவரை இந்த நிலை தொடர்ந்தது. இருபது ஆண்டுகால இடைவெளிக்குள் இந்திய அரசுகள் இராணுவத் தொழில்நுட்பத்தில் கும்பினி படைகளோடு ஒப்பிடத்தக்க வகையில் தமது போர்த்திறனை முன்னேற்றிக் கொண்டன.

“வங்காளம் மற்றும் கோரமண்டலக் கடற்கரை பகுதிகளில் இந்தியர்கள் போர்க்கலையில் அடைந்திருக்கும் முன்னேற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று 1765-ல் லண்டனில் இருந்த கும்பினி இயக்குனர்கள் கருதினர். “ஐரோப்பிய அதிகாரிகளோ சிப்பாய்களோ பிரதேச அரசுகளின் படையில் பணியாற்றுவதை தடை செய்ய வேண்டும்” என்றும், “அவர்களிடையே ராணுவ ரீதியான முன்னேற்றங்கள் தொடர்வதை சாத்தியமான அளவு தொய்வடையச் செய்யும்படியும்” கும்பினி இயக்குனர்கள் தங்களது வங்காள கவுன்சிலை வலியுறுத்தினர்.

படிக்க:
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

கும்பினி இயக்குனர்களின் மேற்படி அச்சத்தை நியாயப்படுத்துவது போல ஜனவரி 1779-ல் மும்பையில் இருந்து வந்த கும்பினிப் படையை, புனே நகருக்கு வெளியே தலைக்கானத்தில் நடைபெற்ற போரில் மகாத்ஜி சிந்தியாவின் படை சுற்றி வளைத்து தோற்கடித்தது.

அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் 26, 1780-ல் நடைபெற்ற புலியூர் சண்டையில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் படை வில்லியம் பைலீ தலைமையில் வந்த 3,800 சிப்பாய்களைக் கொண்ட கும்பினிப் படைப்பிரிவை சுற்றிவளைத்து ஒட்டு மொத்தமாக அழித்தொழித்து மாபெரும் வெற்றியீட்டியது.

Battel of Pulliour
1780-ல் நடைபெற்ற புலியூர் சண்டையில் கும்பினி படைகள் பெரிய சேதத்தை சந்தித்தன. அதனை விளக்கும் ஓவியம்.

இந்தப் பேரழிவு செய்தி கல்கத்தாவின் வில்லியம் கோட்டையை எட்டியது. இப் படுதோல்வி உணர்த்தும் செய்தியை உடனடியாக உணர்ந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் “இதுநாள் வரை வெற்றிக் களிப்பில் மிதப்பதை தவிர வேறு ஒன்றும் அறியாத நமது படைகள் பயங்கரமான இந்தத் தலைகீழ் முடிவு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து எளிதில் மீள முடியாது; மேலும் தோற்றுப்போன கமாண்டர்கள் தலைமையின் கீழ் முன்போல் அவர்கள் நம்பிக்கையுடன் போர்க்களம் செல்வதும் சாத்தியமில்லை” என்று லண்டனுக்கு எழுதினார்.

மதராஸில் இருந்து மெக்கார்ட்னி பிரபுவும் அதே புரிதலுடன், “இந்தியர்களுக்கு நமது ராணுவத்தின் மேல் இருந்த அச்சம் போய் விட்டது; அவர்களது எதிர்ப்பை பற்றிய நமது அலட்சியமும் போய்விட்டது. எனவே கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நமது எதிர்கால நலன்களை கணக்கிட முடியாது” என்று லண்டனுக்கு எழுதினார்.

இதன் பின்னர் ஐரோப்பிய ராணுவ செயல் தந்திரங்களின் முக்கியத்துவம் குறைந்து மூலவளங்கள், ஆட்சியதிகாரம், வரிவசூல் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டது. இது நொடிப்பொழுதில் பெருந்தொகையை திரட்டுவதற்கான வாய்ப்பை கும்பினிக்கு வழங்கியது. செந்தூர சிவப்பில் சீருடைகள், பல்லாடியன் அரண்மனைகள், புலி வேட்டைகள், போல்கா நடனங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் கும்பினியின் கணக்கர்கள் விரித்த லாப நட்ட பேரேடும், லண்டன் பங்குச் சந்தையில் ஏறி இறங்கும் அதன் பங்கு விலைகளும் இருக்கத்தானே செய்கின்றன.

இந்தியர்கள் பலரது ஆதரவை, குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெயின் மற்றும் மார்வாடி வட்டிக் கடைக்காரர்கள், வங்கியாளர்களின் ஆதரவைப் கும்பினி பெற்றிருந்தது. இதுவே கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான இரகசியம் ஆகும். எனினும் இது பெரிதும் பேசப்படாத இரகசியமாகவே நீடிக்கிறது.

உண்மையில் கிழக்கிந்திய கம்பெனியினர் இந்திய நிதி மூலதன உடைமையாளர்களுக்கு இணக்கமான மொழியில் பேசினர். இந்திய மூலதனத்திற்கு தங்களுடைய போட்டியாளர்களை விட கூடுதலான பாதுகாப்பு வழங்கினர். இறுதியாகப் பார்த்தால் எல்லாம் பணத்துக்கான ஏற்பாடுதான். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் வங்காளம் வருவாய் உபரியாக ஆண்டொன்றுக்கு 25 மில்லியன் ரூபாய்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தவறாமல் வழங்கி வந்தது. அதேசமயம் மகாத்ஜி சிந்தியா 1.2 மில்லியன் ரூபாய்களை தனது மால்வா பிரதேசத்தில் இருந்து பெறுவதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். “பணமில்லாமல் பட்டாளத்தை திரட்டுவது எப்படி; போர் நடத்துவதுதான் எப்படி” என்று இந்நிலையை அவர் வேதனையோடு வெளிப்படுத்தினார்.

Mahadaji Scindia
மகாத்ஜி சிந்தியா

ஜெயின், மார்வாரி போன்ற இந்தியாவெங்கிலும் உள்ள வங்கியாளர்கள், வட்டி லேவாதேவிக்காரர்கள் மைசூர் சுல்தான்களையோ மராட்டியர்களையோ ஆதரிக்கவில்லை; மாறாக கிழக்கிந்திய கம்பெனியயையே ஆதரிப்பதென்று தீர்மானித்தார்கள். இறுதியாகப் பார்க்கையில், இதுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்துக்கு வழிகோலியது.

பேரரசர் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு முகலாயப் பேரரசு எங்கும் அராஜகம் தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் வங்காள நவாப் முர்ஷித்அலி கான் தில்லிக்கு செலுத்தவேண்டிய ஆண்டு திறைத் தொகையை தங்கம், வெள்ளி காசுகளாக வண்டிகளில் ஏற்றி பட்டாளம் புடைசூழ மோசமான சாலை வழியே அனுப்புவதை முற்றிலுமாக தவிர்த்தார். அதற்கு பதிலாக ஜோத்பூர் ராஜ்ஜியத்தின் நாகர் பகுதியை பூர்வீகமாக கொண்ட மார்வாரி ஒஸ்வால் ஜெயின் குடும்ப வங்கியாளர்களின் பணப்பரிவர்த்தனை வலைப்பின்னலை பயன்படுத்தி திறைத் தொகையை அனுப்பி வைத்தார். 1722-ல் மொகலாயப் பேரரசர் இந்த மார்வாரி ஜெயின்களைத்தான் ஜெகத் சேத்கள் (உலக வங்கியாளர்கள்) என்ற பாரம்பரியத்துக்கும் நிலைக்கும்படியான பட்டத்தை அளித்து கவுரவித்தார்.

மொகலாயப் பேரரசின் செழுமையான வங்காள மாகாணத்தின் நாணய தயாரிப்பை கட்டுப்படுத்துதல், வரி வசூலித்தல், வருவாய் பரிமாற்றங்கள் செய்தல் போன்ற அனைத்தையும் தங்களது முர்ஷிதாபாத் அரண்மனையில் இருந்து கொண்டு செயல்படுத்திய ஜெகத்சேத்துகள் வங்காள நவாபுக்கு அடுத்தபடியான அதிகாரத்தைச் செலுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வச் செழிப்பு மிக்க யூத வங்கியாளர் குடும்பமாக ரோத்ஸ்சைல்டுகளுக்கு இணையானவர்கள் என்று கூறுமளவுக்கு இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். “கங்கை தனது 100 கிளைகள் வழியாக நீரை கடலுக்குள் சொரிவது போன்று செல்வம் சேத்துகளின் கஜானாவை சென்று சேருகிறது” என்று ஒரு வங்காளக் கவிஞர் விவரிக்கிறார்.

கும்பினி விரிவுரையாளர்களும் ஜகத் சேத்துகளின் செல்வச் செழிப்பு கண்டு ஒரு கணம் கண் கூசி நின்றனர். வங்காளத்தை நெருக்கமாய் அறிந்த ராபர்ட் ஓர்ம் “இவர்கள் நாம் அறிந்த உலகின் மாபெரும் நாணய வல்லுனர்களும் வங்கியாளர்களும் ஆவர்” என்று அப்போதைய ஜெகத் சேத்துகளைப் புகழ்ந்து விவரிக்கிறார். கேப்டன் ஃபென்விக், “வங்காள விவகாரங்கள் 1747-48” என்ற தலைப்பின் கீழ் எழுதும்போது மஹ்தாப் ராய் ஜெகத் சேத் பற்றி “வங்காள நவாப்புக்கு மிகவும் பிரியமானவர்” என்றும். “லண்டன் நகரத்தில் வங்கிகளின் வீதியான லாம்பர்ட் வீதியின் ஒட்டுமொத்த வங்கியாளர்களையும் விட மிகப்பெரிய வங்கியாளர்” என்றும் குறிப்பிடுகிறார். வங்காளத்தின் ஆட்சியாளர்கள் உட்பட யாரையும் உருவாக்கவோ அழிக்கவோ வல்லவர்களாக ஜெகத் சேத்துகள் விளங்கினர். அவர்கள் தங்களது பொருளாதார உள்ளுணர்வுக்கு இணையான அரசியல் உள்ளுணர்வை கொண்டிருந்தனர்.

துண்டு துக்காணி அரசுகளாக சிதறிக்கிடக்கும் ஒழுங்கற்ற இந்திய அரசியல் சூழலில் இயங்குவதற்கு ஜெகத் சேத்துகள் தங்களுக்கு வாய்த்த இயல்பான கூட்டாளிகள் என்பதையும் பெரும்பாலான விஷயங்களில் இருவரது நலன்களும் ஒத்துப்போகின்றன என்பதையும் ஆரம்ப காலம் முதற்கொண்டே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர்கள் ஜெகத் சேத்துகளின் கடன் வசதிகளை வாடிக்கையாகவும், தாராளமாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.

1718-க்கும் 1730-க்கும் இடைப்பட்ட காலத்தில் கும்பினி இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ 4 லட்சம் கடனாக பெற்றது. “கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பரஸ்பர நலன்களின்” அடிப்படையில் பொருத்தமான காலத்தில் அமையப்பெற்ற இவர்களது கூட்டணி மற்றும் மார்வாரி வங்கியாளர்கள், இந்திய நிதிச் சந்தையில் நுழைய கும்பினியினருக்கு வழிவகை செய்து கொடுத்தது ஆகியவை இந்திய வரலாற்றின் போக்கையே புரட்டிப்போடும் மாற்றத்தைக் கொண்டு வந்தன.

படிக்க:
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
♦ ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

மார்ச், 1757-ல் சந்தர்நகரில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்த பின்னர் ராபர்ட் கிளைவ் தனது துருப்புக்களை மெட்ராசுக்குத் திருப்பி அனுப்ப ஆயத்தமானார். அப்போது ஜெகத் சேத்துகளின் தூதுவர்கள் கிளைவைச் சந்தித்து, வங்காளத்தின் புதிய நவாப் சிராஜ் உத்தவுலாவை ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அகற்றிவிட்டு அவரது பாட்டனார் அலிவர்தி கானை அதிகாரத்துக்குக் கொண்டுவர ஜெகத் சேத்துகள் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நடவடிக்கையில் கிளைவ் பங்கேற்க வேண்டும் என்றும் கோரி ஆசை காட்டினர்.

மஹதாப் ராய் ஜெகத் சேத் மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரரும் மஹாராஜா என்று அல்வர்திகானால் பட்டம் சூட்டப்பட்டவருமான ஸ்வரூப் சந்த் ஆகிய இருவரும் அப்போது வங்கி நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர். இவர்களிடம் புதிதாக பட்டத்துக்கு வந்த சிராஜ் தனது போர் நடவடிக்கைக்காக 30 மில்லியன் ரூபாய்களைக் கொடுக்கும்படி ஆணையிட்டார். அதை மஹதாப் மறுத்து விடவே சிராஜ் ஆத்திரத்தில் அவரை அறைந்து விட்டார். அதன் பின்னரும் தலைநகரின் முதல் குடிமகனான ஜெகத் சேத்திடம் சிராஜ் மோசமாகவே நடந்து கொள்ளத் தொடங்கினார்.

இதற்கு பழிவாங்கவே ஜெகத் சேத்துகள் நிதி திரட்டி ராபர்ட் கிளைவுக்கு லஞ்சம் கொடுத்து அவரை வடக்கே வரவழைத்து சிராஜ் உத்தவுலாவுடன் பிளாசிப் போரில் இறக்கினர். “பிளாசிப் போருக்கான காரண கர்த்தாக்கள் ஜெகத் சேரத்துகள்தான் என்று நான் உறுதிபடக் கூற முடியும்”, “அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் மட்டும் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஆங்கிலேயர்களின் குறிக்கோள் சேத்துகளுடைய குறிக்கோளாக ஆனது” என வங்காளத்தின் பிரெஞ்சுப் படை கமாண்டர் ஜீன் லா எழுதினார்.

கும்பினி ஆட்சியின் ஆரம்ப காலமான 1757-ல் பிளாசி யுத்தத்தில் தொடங்கிய இந்த உறவு அடுத்த அரை நூற்றாண்டுக்குப் பின்னர் 1803-ல் நடந்த இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போரில் கிழக்கிந்திய கம்பெனி மராட்டியர்களை வெற்றி கொண்ட போதும் தொடர்ந்தது. அடிப்படையில் இந்த உறவுதான் கும்பினியாருக்கு தில்லியிலும் மத்திய இந்தியாவின் சமதள பகுதிகளிலும் ஆட்சியதிகாரத்தை வழங்கியது.

ஏராளமாகத் திரண்டிருக்கும் நிதி இருப்பை நிலையான நிலவரி வருவாய் என்ற வகையிலும், வட்டி லேவாதேவிக் காரர்கள், வங்கியாளர்கள் கூட்டணி மூலமும் பெறுவதற்கான வாய்ப்புதான் இந்திய எதிரிகளை விட கும்பினிப் படைகளின் கை ஓங்கியிருக்கச் செய்தது. கீழ்த்திசை நாடுகளிலேயே மிகப்பிரம்மாண்டமான, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவத்தைக் களமிறக்கும் அளவுக்கு மாபெரும் நிதி ஆதாரத்தைத் திரட்டவும், முறையாக வினியோகிக்கவுமான வழிவகைகளை கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. எதிரிகளுக்கு அமையாத இந்த வாய்ப்புதான் கும்பினிப்படைகளை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய அம்சமாகும்.

திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் மகன்களை பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லும் கார்ன்வாலிஸ் பிரபு.

லாலா கஷ்மிரி மால் ஹவுஸ், ராம் சந்த் – கோபால் சந்த் ஷாஹு, கோபால் தாஸ் – மனோகர் தாஸ் போன்ற அன்றைய மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை கையாண்டன; மும்பை, சூரத் அல்லது மைசூர் ஆகிய இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யத் தக்க மாற்று முறிகளை [bills of exchange] தயார் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டன; கூடவே, ஏராளமான கடன்களைப் பணமாக வழங்கின. இச்சேவைகள் அனைத்தும் கும்பினி சிப்பாய்களுக்கு முறையாக சம்பளம் கொடுப்பது, படைப் பராமரிப்பு, ஆயுத தளவாடங்களையும் சிப்பாய்களின் பிற வழங்கீடுகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பித்தல் ஆகிய பணிகளை சாத்தியமாக்கின.

இந்த அளப்பரிய உதவிகளுக்குக் கைமாறாக கிழக்கிந்திய கம்பெனி ஜெகத் சேத்துகளுக்கு பதிலாக இனி ஹவுஸ் ஆஃப் கோபால்தாஸ் அரசாங்க வங்கியாளர்களாக இருப்பார்கள் என்று அறிவித்தது. கம்பெனியின் ஆதரவைப் பெற்ற இந்த நிதி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மேற்கு இந்தியாவிலும் விரிவாக்கின.

படிக்க:
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

இந்திய வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி இயற்கையான கூட்டாளியாக அமைந்தது. “தங்களது பிராந்தியத்தில் வசிக்கும் வங்கியாளர்கள், வியாபாரிகள் மற்றும் பிற பணக்காரர்களின் செல்வத்தில் கும்பினி எந்த ஒரு குறுக்கீடும் செய்யவில்லை; மாறாக அந்த செல்வந்தர்களிடம் நேசமாக நடந்து கொண்டது” என்று ஹரிச்சரண் தாஸ் எழுதுகிறார்.

1798 -ல் வெல்லஸ்லி பிரபுவின் வருகைக்குப்பின் கும்பினியின் இராணுவம் வெகுவேகமாக பெருகியது. சில ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 1,15,000 -த்தில் இருந்து 1,55,000 ஆகவும் அடுத்த பத்தாண்டில் 1,95,000 ஆகவும் அதிகரித்தது. இது பிரிட்டிஷ் ராணுவத்தை போன்று ஏறத்தாழ இரு மடங்காகும். அதுபோலவே உலகின் மிகப்பெரிய ஐரோப்பிய பாணி நிலை ராணுவங்களில் ஒன்றாகவும் கும்பினிப்படை உயர்ந்தது. த(லை)க்கானத்துப் போர் மற்றும் புலியூர் சண்டையின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டு ஐரோப்பிய மற்றும் தென் ஆப்பிரிக்க குதிரைகளை வரவழைத்து ஒரு குதிரைப்படையும் நிறுவப்பட்டது. இவ்வாறான மாபெரும் ராணுவ ஏற்பாட்டிற்கு செலவு செய்ய வெல்லஸ்லி சிரமப்படவில்லை.

Tipu
திப்பு சுல்தான்

காரன்வாலிஸ் பிரபு செய்த நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எழுந்த கிராமப்புறக் கிளர்ச்சிகள் ஓய்ந்த பிறகு வங்காளம் கும்பினிக்கு ஆண்டு உபரி வருவாயாக ரூபாய் 25 மில்லியன்களை சீராக வழங்கியது. மாறாக தனது பாசன வசதி குறைவான மால்வா பிரதேசத்திலிருந்து 1.2 மில்லியன் ரூபாய்களை திரட்டுவதே சிந்தியாவுக்கு பெரும் பாடாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பெற்ற இந்த உத்தரவாதமான உபரி வருவாய் வங்காளத்தின் நிதி சந்தையிலிருந்து தேவைக்கேற்ப ஏராளமான தொகையை கடனாக பெறுவதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. 1798 -க்கும் 1806 -க்கும் இடைப்பட்ட வெல்லஸ்லியின் காலத்தில் கம்பெனியின் கடன் சுமை மூன்று மடங்காக உயர்ந்தது.

கம்பெனி தனது நிதி ஆதாரத்தை நாடு முழுவதும் திறம்பட மறு விநியோகம் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தது. பனாரஸ் வங்கியாளர்கள் மற்றும் வெஸ்ட் கோஸ்ட ஆஃப் கோபால் தாஸ் – மனோகர் தாஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் கம்பெனியின் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் படைகளுடன் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ராணுவத் துருப்புகளுக்கும் அவர்களது எஜமானர்களுக்கும் தேவையான தொகையை பட்டுவாடா செய்தனர். உண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வங்கியாளர்கள் கம்பெனிப் படைகளுக்கு கடன் கொடுப்பதற்கு தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். இவ்வாறு தனது சக்திவாய்ந்த கூலிப்படைகளுக்குத் தேவையான நிதியை உத்தரவாதப் படுத்தியது தான் கிழக்கிந்தியக் கம்பெனி போர்களில் பெற்ற வெற்றிக்கான பிரதான காரணமாகும்.

இதற்கு நேர் எதிரான வகையில் “இந்த நாடு முழுவதிலும் பேஷ்வா முதல் கடைநிலை குதிரைவீரன் வரை எந்த ஒரு மராட்டியனிடத்திலும் ஒரு சல்லி காசு கூட கிடையாது” என்று இளம் ஆர்தர் வெல்லெஸ்லி குறிப்பிட்டார்.

இந்தியாவின் மீதான காலனியாதிக்க வெற்றி எந்த அளவுக்கு போராடிப் பெறப்பட்டதோ அதே அளவுக்கு விலை கொடுத்தும் வாங்கப் பட்டிருக்கிறது என்று பர்டோன் ஸ்டீன் குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்வு நடந்தேறுவதற்கான நிதியும் கூட இந்தியாவின் ஜெயின் மற்றும் மார்வாரி வங்கியாளர்களிடம் இருந்துதான் வந்தது.

கம்பெனியின் வர்த்தகர்களும் அவர்களது இந்திய கூட்டாளிகளான வங்கியாளர்களும் எப்பொழுதுமே ஆதாயம் என்ற ஒரே மொழியில் பேசிக் கொண்டனர். 1750 முதல் அவர்கள் நெருங்கி செயல்படத் தொடங்கியதன் தொடர் விளைவாகத்தான் கும்பினி அரசு இந்தியாவில் வெற்றி வாகை சூடியது.

சர்வதேச அரசியலில் நிதியாதிக்கக் கும்பலின் கை, ஏதோ இன்று  மட்டும் ஓங்கியிருக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வட்டி, லேவாதேவிக்காரர்களின் ஆதிக்கம், அரசை உருவாக்குவதிலும் வீழ்த்துவதிலும் இருந்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை அன்னியர்களுக்கு நாட்டை காட்டிக் கொடுத்து வந்தது இந்த பார்ப்பன பனியா, மார்வாடிக் கும்பல்கள்தான்.


கட்டுரையாளர் : William Dalrymple
தமிழாக்கம் :  ரவி வர்மன்
நன்றி
: அவுட்லுக் இந்தியா.

கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?

Share-Market

கேள்வி: //ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தகத்தில்.. பங்கின் விலை மற்றும் பொருளின் விலை ஏற்றம் இறக்கம் நொடிக்கு நொடி மாறுகிறது. இது எப்படி…?

பங்குச்சந்தை வர்த்தகத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தம் இருக்கிறதா..?

பங்குகளின் (equity) விலை பொருட்களின் (commodity) விலை ஏற்றம் இறக்கத்திற்கு எப்படி சாத்தியமாகும்..?//

– எம். ஃப்ராங்கிளின்

ன்புள்ள ஃப்ராங்கிளின்,

இந்தியாவில் இரண்டு பங்குச் சந்தைகள் இருக்கின்றன. மும்பை தலால் தெருவில் இருக்கும் மும்பை பங்குச் சந்தை 1875-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகும். தற்போது உலக அளவில் பத்தாவது பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மும்பையில் இருக்கும் தேசியப் பங்குச் சந்தை 1993-ம் ஆண்டு துவங்கப்பட்டது. நவீனவசதிகளுடன் வர்த்தகம் செய்யும் இந்தச் சந்தை உலகின் பதினோராவது பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Share-Marketஇரண்டு பங்குச் சந்தைகளிலும் சுமார் நான்காயிரம் நிறுவனங்கள் வர்த்தகம் புரிகின்றன. இவை இந்திய மொத்த உள்நாட்டு வருமானத்தில் நான்கு சதவீதத்தையே கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களது அனைத்து மதிப்பையும் சேர்த்தால் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12-14 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்கிறார் ஒரு ஆய்வாளர். மற்றபடி பெரும்பான்மையான மொத்த உள்நாட்டு வருமானம் முறைசாரா தொழில்கள் மூலமே வருகிறது.

இரண்டு பங்குச் சந்தைகளில் துறைவாரியாக முக்கிமாக கருதப்படும் நிறுவனங்கள் பட்டியல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும். இவற்றின் பங்குகள் வர்த்தகம் ஒரு நாளில் எவ்வாறு என்பதைப் பொறுத்து பங்குச் சந்தையின் குறியீட்டெண் மதிப்பிடப்படுகிறது. இதை வைத்து பங்குச் சந்தையின் வர்த்தகப் போக்கை மதிப்பிடுகிறார்கள். அதாவது பங்குச் சந்தை குறியீட்டெண் அதிகரிக்கிறது, குறைகிறது என்பது இப்படித்தான்.

“எக்னாமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகை மதிப்பீட்டின் படி இந்தியாவில் ஆறு கோடிப்பேர் தங்களது சேமிப்பை பங்கு வர்த்தகத்திலும், பரஸ்பர நிதியங்களிலும் முதலீடு செய்கின்றனர். பிமால் ஜாலன் கமிட்டி அறிக்கையின் படி இந்திய மக்கள் தொகையில் 1.3% நபர்களே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது அமெரிக்காவில் 27% ஆகவும், சீனாவில் 10% ஆகவும் இருக்கிறது.

சரி, பங்குச் சந்தையில் பங்குகளின் விலை நொடிக்கு நொடி எப்படி மாறுகிறது?

பங்குச் சந்தையில் நிறுவனங்கள் முக மதிப்போடு பங்குகளை வெளியிடுகின்றன. சான்றாக டாடா நிறுவனம் தனது பங்கு விலையின் முக மதிப்பை ரூ. 10 என்று 1995 -ல் வெளியிட்டிருக்கிறது என்று வைப்போம். இன்றைக்கு அந்த பங்கின் விலை ரூ.100 -ஆக மாறியிருக்கிறது. அதாவது தொடர்ந்து அந்த பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ரூ.100-ஆக உயர்ந்திருக்கிறது. சரி, இன்னும் சில மாதங்களில் அது 125-ஆக மாறும் என எதிர்பார்த்து இன்று சிலர் அதை ரூ.100 கொடுத்து வாங்குகிறார்கள்.

படிக்க :
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
♦ பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

ஆனால் இன்னும் சில நாட்களில் அது விலை உயர்வுக்கு பதில் ரூ.90 ஆக குறைந்திருக்கிறது. அப்படி எனில் அதை நூறு ரூபாய்க்கு வாங்கியவர்கள் பங்கு ஒன்றுக்கு பத்து நட்டமடைகிறார்கள். தொடர்ந்து அது நட்டமடையும் என எதிர்பார்த்து ஒருவர் தன்னிடம் உள்ள 100 டாடா பங்குகளையும் விற்றுவிட்டால் அவர் ரூ.1000 நட்டமடைகிறார். இல்லை இன்னும் சில நாட்களில் பங்கு விலை சீராகி உயரும் என நினைத்து அவர் அப்படியே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அவர் நினைத்தபடி சில மாதங்களில் பங்குகள் ரூ.140 என உயர்ந்து அவர் விற்றால் ரூ.4000 ரூபாய் இலாபம் அடைகிறார். இவை அனைத்தும் பேப்பரில் நடக்கும் பரிவர்த்தனை மட்டுமே. ஒருவர் பங்குச் சந்தையிலிருந்து அடியோடு வெளியேறாத வரைக்கும் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டலில் மட்டும் நடக்கும்.

பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள்தான் மேற்சொன்னவாறு பரஸ்பர நிதியங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் 6 கோடி பேர். ஆனால் பங்குச் சந்தையில் பெரும் வர்த்தகத்தை அன்னிய நிதி நிறுவனங்கள் செய்கின்றன. இவர்கள் தினசரி இலட்சக்கணக்கான பங்குகளை வாங்குவார்கள், விற்பார்கள். சில நேரங்களில் நிறுவனங்களே தமது பினாமிகள் மூலம் பங்குகளை அதிகம் வாங்கி செயற்கையாக விலையை உயர்த்த  முயற்சி செய்யும். இதனால் காலையில் பங்குகள் விலை உயர்வது போன்று தோன்றி நாம் வாங்குவோம். மாலையில் அதன் விலை வீழும். அப்போது வீழ்ந்த விலைக்கு விற்க நினைத்தால் அது நமக்கு நட்டம். இல்லை நாளை உயரும் என எதிர்பார்த்து விற்காமலும் வைத்திருக்கலாம்.

stocks-market

மொத்தத்தில் பங்குச் சந்தையின் இயக்கம் என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். அதற்கும் நிஜமான பொருளாதாரத்திற்கும் சம்பந்தமில்லை. இதில் ஒரு பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை இல்லை. ஏனெனில் உயர்ந்து கொண்டே இருந்தால் அதை யார் தொடர்ந்து வாங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறது. புதுப்புது முதலீட்டாளர்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் போதுதான் அந்த செயற்கையான உயர்வு சாத்தியம். இது மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றதுதான். நம் நாட்டில் 130 கோடிப் பேர்களும் கற்பனையாக பங்குச் சந்தையில் சேர்ந்து விட்டால் அடுத்து பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இல்லை. இந்நிலையில்தான் இருக்கும் சிறு முதலீட்டு பங்குதாரர்களை ஏமாற்றி அன்னிய நிதி நிறுவனங்கள் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ விளையாடுகின்றன. அவர்கள் நொடிக்கு சில பல மில்லியன் டாலர்களை முதலீடும் செய்வார்கள், திரும்ப எடுக்கவும் செய்கிறார்கள்.

எனவே பங்குச் சந்தையில் ஒருவர் இலாபமடைகிறார் என்றால் அதன் பொருள் இன்னொருவர் நட்டமடைகிறார் என்பதே. பங்குச் சந்தை முகவர்களிடம் கேட்டால் முதலில் குறைவான முதலீடுகளைச் செய்யுங்கள், பங்குகளை தவிர்த்து விட்டு பரஸ்பர நிதியங்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள், பங்குகளில் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். எப்படி இருந்தாலும் இலாபம் என்றால் நட்டம் என்பது இருந்தே தீரும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
♦ தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

இது போக ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, அவர்களது பொருட்களின் வர்த்தகம், புதிய பொருளை சந்தைப்படுத்துவது, மத்திய அரசின் நிதிக் கொள்கை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவை இரண்டாம் பட்சக் காரணங்கள் மட்டுமே. அதே போன்று உலக அளவில் அரசியல் மாறுபாடு, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் இவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால்தான் நொடிக்கு நொடி பங்குகளின் விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கும் விலைவாசி உயர்விற்கும் நேரடித் தொடர்பில்லை. விலைவாசி உயர்விற்கு அரசின் வரிக் கொள்கை, கச்சா எண்ணைய் விலை உயர்வு, மையப்படுத்தப்படாத உற்பத்தி, முதலாளித்துவ நெருக்கடி, பணவீக்கம், வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணங்கள் காரணமாக இருக்கின்றன.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்

வேகமாக மாறிவரும் இவ்வுலகில் அனைத்துமே துரிதகதியில் இயங்கிவருகின்றன. எங்கும் வேகம், எதிலும் வேகம். இன்று புதிது என நாம் காண்பது நாளை நடைமுறைக்கொவ்வாத பழம் பொருளாகிவிடுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவு முற்றிலும் புதிதானவை முளைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இவற்றுக் கான காரணம் என்ன என்று கூறவும் வேண்டுமோ? ஆம், நாளுக்கு நாள் நாம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் அடைந்துவரும் அசுர வளர்ச்சியே மனித இனத்தை இத்துணை சிறப்பான நிலைக்கு உயர்த்தி வருகிறது.

சமூக விலங்குகளாகிய நாம், மாறிவரும் உலகின் புதுப் புது சூழ்நிலைகளின் சவால்களை வெற்றிகரமாகச் சந்திக்க, அவற்றுக்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டாக வேண்டும். அதற்குரிய திறமைகளை முயன்று அடைந்து சமாளித்து வாழ்வில் முன்னேற வேண்டும். இல்லாவிடில் திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டவனைப் போன்று வாழ்க்கையையே இழக்க நேரிடும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மனிதாப உணர்வுடன் கூடிய சமுதாய வளர்ச்சிக்கான பாதையை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. இப்பாதை சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தினரின் நலனையும் கருத்தில் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயின் சமீபகாலங்களில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் ஆதார அம்சமாகிய மனிதாபம் என்பது புறக்கணிக்கப் படுவதைக் காண்கிறோம். இந்த அபாயகரமான உண்மைநிலை நம்மைத் தொடர்ந்த கவலைக்குள்ளாக்கிவருகிறது.

1854-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ் சிவப்பிந்தியச் சமுதாயத்தினரைத் தாங்கள் நிலங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுமாறு உத்தர விட்டார். இது தொடர்பாகச் சிவப்பிந்தியர்களின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு: “எங்களுக்குத் தெரியும் … இந்தப் பூமி மனிதர்களுடையதல்ல. ஆயின் மனிதர்கள் பூமியைச் சேர்ந்தவர்கள். இரத்தமானது எவ்வாறு ஒரு குடும்பம் முழுவதையும் இணைக்கிறதோ அவ்வாறே இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. நறுமணமுள்ள பூக்கள் நமது சகோதரிகள் . . . மான்கள், குதிரைகள், பருந்துகள் எல்லாமே நமது சகோதரர்கள் மனித இனம் எல்லாமே மலையுச்சிகள், பசுமையான புல்தரைகள், அடர்ந்த காடுகள் மற்றும் மனித இனம் எல்லாமே ஒரே குடும்பத்தின் பல்வேறு அங்கங்கள், ஊற்றுகளிலும் நதிகளிலும் பாயும் நீர் வெறும் தண்ணீரல்ல …. அது எங்கள் முன்னோர்களின் இரத்தமே. இந்த நிலத்தை ஒப்படைக்கும் படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் நினைவில் கொள்ளுங்கள் இப்பூமி புனிதமானது. அது தனது தூய்மை பற்றி உங்கள் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும்….”

Amazon Rainforest fire… அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்க உயர்வுகளை மேன்மேலும் கண்டுகொண்டிருக்கையில் பாமர மக்களிடையே, ஏன் படித்தவர்களிடையேயும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் இன்னமும் இருப்பது வருந்தத்தக்கன. சகுனங்கள், வாஸ்து, வண்ணக்கற்களை அணிகலன்களில் பொருத்துவது, பெயரின் எழுத்துக்களை கூட்டுவது / குறைப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது என இந்தப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும் ஒன்று. இத்தகையவற்றை மக்கள் மனதிலிருந்து நீக்கி, மனிதர்கள் மனிதர்களாக மனித நேயத்துடன் வாழ்வதற்கு எங்களது வெளியீடுகள் பெரிதும் உதவுபவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)

பெருவெடிப்பு (பிக் பாங்க்) கோட்பாடு :

அகிலத்தின் தொடக்கத்திற்குக் காரணம் பெரு வெடிப்பு நிகழ்வே என்பது பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு அறிவியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, இந்நிகழ்விற்கு முன்னால் அகிலம் ஒரு மிக மிக அடர்த்தியான குறுக்கப்பட்ட நிலையில் மிகவும் வெப்பமான நிலையில் இருந்ததாக அறிகிறோம். சுமார் 15 பில்லியன் (1500 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர், இந்த அகிலம் தொடர்ந்து விரிவடைந்தும் குளிர்ந்து கொண்டும் வருகிறது. 1927-ல் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜியார்ஜிஸ் லெமைடர் இந்த அகிலம் “தொன்மையான ஒரு அணு” வெடித்ததால் உருவானதாகக் கருத்து தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த எட்வின் ஹப்பின் எனும் வானவியலாளர் மேற்கூறிய கருத்தை ஆதரிக்கும் ஆதாரங்களை 1929-ல் கண்டுபிடித்தார். ஹப்பிளின் கண்டுபிடிப்பின்படி, நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றன. அகிலம் ஒரே சீராக விரிவடைந்து கொண்டிருக்கிறது; அதாவது காலக்ஸிகள் அவை உள்ள தொலை தூரத்திற் கேற்பக் கூடுதல் வேகத்தில் விலகிச் சென்றுகொண்டுள்ளன.

அறிவியலும் மதமும் !

உண்மையிலேயே பெரு வெடிப்பு நிகழ்ந்திருந்த அச்சமயம் ஏற்பட்ட கதிர் வீச்சின் சுவடு கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றன. இந்தப் “பெருவெடிப்புக் கதிர்வீச்சின் மிச்சம்” பற்றிய கண்டுபிடிப்பை 1965-ம் ஆண்டு ஆர்னோ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் எனும் விஞ்ஞானிகள் செய்தனர். இதற்காக இவர்களுக்கு 1978-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெருவெடிப்பு நிகழ்வு பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அகிலம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விஞ்ஞானிகளால் இன்றுவரை சரிவர விளக்க முடியவில்லை. அவை விளக்கப்படாமலேயே போகக் கூடும். இதனால் விடையளிக்கப்படாத பல கடினமான கேள்விகள் அப்படியே இருந்துவிடலாம். (நூலிலிருந்து பக்.11-12)

க்வான்டம் கோட்பாடு (Quantum Theory) :

கதிரியக்க ஆற்றல் அலைவீச்சுக் கோட்பாடு : பொருளினால் சக்தி வெளிப்படுதல், சக்தி உள் வாங்கப்படுதல் மற்றும் துகள்களின் இயக்கம் பற்றிய நவீன இயற்பியல் கோட்பாடு “க்வான்டம் கோட்பாடு” எனப்படுகிறது. க்வான்டம் கோட்பாடு, மிகமிகச் சிறிய அளவுடைய அணு மூலக்கூறுகள், அணுக்கள் மற்றும் ஆதாரத்துகள்கள் போன்றவை சம்பந்தப்பட்டவற்றை அறிய மிக முக்கியமானது. இந்தக் கோட்பாடு மூன்று அடிப்படை உந்துவிசைகளைப் பற்றி விளக்குகிறது – மின்காந்த விசை, பலவீனமான விசை மற்றும் பலமிக்க விசை, இது புவி ஈர்ப்பு விசை பற்றி விளக்காது. க்வான்டம் கோட்பாட்டினால் அணுக்கள் பற்றியும், வேதியல் மற்றும் வேதியல் இணைப்புகள் பற்றியும் அறிய முடிகிறது. கடந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் க்வாண்டம் கோட்பாட்டின் அடிப்படையிலானவை.

படிக்க:
உ.பி : பிரியாணியை வைத்து பிரச்சினை கிளப்பிய பிரியாணி அண்டா திருடர்கள் !
காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

க்வான்டம் கோட்பாடு வித்தியாசமானது. வழக்கமான கோட்பாட்டின்படி சக்தி என்பது ஒரு தொடர் நிகழ்வாகக் கருதப்படுகிறது. க்வான்டம் கோட்பாடு, பொருள் மற்றும் சக்தியை “க்வான்டா” என அழைக்கப்படும் தனித்தனியான, கண்ணுக்குத் தெரியாத சிறு பெட்டகங்களாக (Packets) விளக்குகிறது. ஒரு அணு உட்கிரகிக்கும் அல்லது வெளியிடும் கதிர்வீச்சின் அதிர்வெண், ஒளி க்வான்டா அல்லது ஃபோட்டான்களின் சக்தியைப் பொறுத்தது என க்வான்டம் கோட்பாடு விளக்குகிறது. (நூலிலிருந்து பக். 84-85)

நூல் : இயற்பியல் உலகம்
ஆசிரியர் : முனைவர் தினேஷ் சந்திர கோஸ்வாமி
தமிழில் : சி.எஸ். வெங்கடேஸ்வரன்

வெளியீடு : அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2811 3630.

பக்கங்கள்: 104
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை

0

ட்டுமொத்த காஷ்மீரும் ஒரு மாத காலமாக முடக்கப்பட்டு, கொத்துக் கொத்தாக மக்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதுமன்றி, பொருளாதாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு காஷ்மீர் மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது இந்திய ஆளும் வர்க்கமும், இராணுவமும்.

இந்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் காஷ்மீருக்கான சிறப்பு சட்ட அங்கீகாரப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு மாத காலமாக அங்கு நிலவி வரும் கொடுமைகளைச் சொல்லி மாளாது. அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிப்பு, இந்திய அரசை இன்னமும் நம்பி நிற்கும் அப்பாவி காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டு கொடூர முறையில் சித்திரவதை செய்யப்படும் நிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Kashmir-Life-Siege
இந்தியாவில் முசுலீம்கள் மெஜாரிட்டியாக வசித்துவரும் ஒரே மாநிலமான காஷ்மீரில், சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பின்னர் ஏற்கெனவே நிலவி வந்த கொஞ்ச நஞ்ச அமைதி நிலையும் சீர்குலைந்து, போராட்டக்களமாய் மாறி, மக்கள் பொதுவெளியில் கூட வரமுடியாமல் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவரும் இந்திய இராணுவம்.

உலகிலேயே அதிக அளவிலான இராணுவம் குவிக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீரமும் ஒன்று. அப்படியிருந்தும் எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து போராடி விடுவார்களோ என்ற பயத்தில் மேலும் ஆயிரக்கணக்கில் படைவீரர்களைக் குவித்துள்ளது இந்திய அரசு.

படிக்க:
தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

இணைய சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இராணுவத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் காஷ்மீர் மக்களின் அவல நிலைகளைப் பாருங்கள்.

Kashmir-Life-Siege 2சுதந்திரம் வேண்டும் என்று கூறி வெள்ளியன்று நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைக்குப் பிறகு போராடும் காஷ்மீர் பெண்கள். இடம் – சிறீநகர்

Kashmir-Life-Siegeஸ்ரீநகரின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், பெல்லட் குண்டுகளால் தாக்கியும் கலைக்கும் இந்திய இராணுவமும், போலீசும்.

Kashmir-Life-Siegeரகுமான் தர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். கல்லெறிந்தார் என்ற பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக 4000-க்கும் மேற்பட்டோர் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கின்றன ஊடக செய்திகள்.

Kashmir-Life-Siegeஆகஸ்டு 6-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் ஃபிர்தூஸ் அகமது – வயது 22 ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மற்றும் 12 கிராமத்தினரைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. தடிகளாலும், வயர்களாலும் தாக்கப்பட்ட ஃபிர்தூஸின் பின்னந்தொடை, முழங்கால் பகுதிகள் முழுவதும் கறுப்பு நிறமாகியுள்ளது. போலீசார் தன்னைக் குறைந்தபட்சம் 100 முறையாவது அறைந்திருப்பர் என்கிறார் ஃபிர்தூஸ்.

Kashmir-Life-Siegeசிறீநகரில் உள்ள மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆறு வயது சிறுமி முனிஃபா நசீர். தன்னுடைய மாமாவுடன் பண்டிகை தினத்தன்று வெளியே சென்ற சிறுமி இராணுவத்தால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய வலது கண்ணால் பார்க்கும் திறனை இழந்துவருகிறார் என்கிறார் இவரைக் கவனித்துக்கொள்ளும் உறவினர் ஒருவர்.

Kashmir-Life-Siegeதங்களுடைய சொந்த பந்தங்களுடன் தொலைபேசியில் பேசுவதற்காக வரிசையில் காத்திருக்கும் காஷ்மீர் மக்கள். தனி நபர் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாஸ்மீன் என்ற தன்னார்வலரால் தொடங்கப்பட்ட இலவச தொலைத்தொடர்பு சேவை வசதியை தினமும் 400 பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

Kashmir-Life-Siegeமுகம்மது அயூப் (ஆட்டோ ஓட்டுனர்) தன் வீட்டிற்கு வெளியே பெட்ரோல் விற்பனை செய்துவரும் காட்சி. ஆட்டோ ஓட்டும்போது தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான பணம் கிடைத்ததாகவும், தற்போதைய நிலவிவரும் சூழலில் இப்போது பெட்ரோல் விற்று மட்டுமே குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காஷ்மீரில் இதுவரை நான் பார்த்த நெருக்கடி நிலைமைகளில் மிகவும் மோசமானது இதுதான் என்கிறார் முகம்மது அயூப்.

Kashmir-Life-Siegeதுப்பாக்கி மற்றும் அதி நவீன ஆயுதங்கள் ஏந்தி வலம் வரும் இராணுவத்தை வெறும் கம்புகளுடன் எதிர்நோக்கி நிற்கும் காஷ்மீரின் வீரப்பெண்கள். இடம்- அஞ்சார், சிறீநகர். இராணுவத்தின் இரவு நேர அத்துமீறல் கைதுகளைத் தடுப்பதற்காக இப்பகுதி இளைஞர்கள் இரவு முழுவதும் கண்விழித்து ரோந்துப் பணியில் ஈடுபடுவதால், தாய்மார்கள் பகல் நேரங்களில் இராணுவத்தை எதிர்கொள்கின்றனர். காஷ்மீரின் வீரம் நிறைந்த போராட்டக்களங்களில் இதுவும் ஒன்று.

Kashmir-Life-Siegeபத்திரிக்கையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இணைய சேவை மையத்தில் காத்து நிற்கும் காட்சி. வெறும் 5 கணிணிகளே ஒதுக்கப்பட்டுள்ளதால், தரவுகளை அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.


தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

PP Letter head

நாள் 16-9-2019

பத்திரிகைச் செய்தி

ன்புடையீர் வணக்கம் !

கடந்த 12-9-2019 அன்று சிதம்பரம் நடராசர் கோவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நட்சத்திர ஓட்டல் போல் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு தனியார் திருமணம்  நடந்துள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகை தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது. இதனால் மக்கள் தீட்சிதர்கள் மீது ஆத்திரம் கொண்டதுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக திருமணங்கள் நடராசர் கோவில் உள்ளே வடக்கு கோபுரம் அருகில் பாண்டியனார் சன்னதியில்தான் நடைபெறும். தீட்சிதர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள், என்பதுதான் கடந்தகால வரலாறு.

நடராசர் நின்று தரிசனம் தரும் இடத்தில் எப்படி ஆடம்பர திருமணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதித்தார்கள் என்பதுதான் சிதம்பரம் பக்தர்களின் ஆதங்கம். தொடர்ந்து பத்திரிக்கைகளில் கண்டனங்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் கண்துடைப்பாக பொது தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதர் இரு நாட்கள் கழித்து, “சம்பந்தபட்ட தீட்சதர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணம் நடத்த ஏற்பாடு செய்த கட்டளை தீட்சிதரான பட்டு தீட்சிதரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்ததுடன் ஆயிரத்து ஒரு ரூபாய் அபாராதம் விதித்துள்ளோம்” என அறிவித்தார். இது தமிழக அரசையும், தமிழக மக்களையும் முட்டாளாக்கும் செயல் ஆகும்.

சிவலோகத்திலிருந்து சிவனோடு முவாயிரம் தீட்சிதர்கள் வந்த கதையில் தற்போது சுமார் 450 தீட்சிதர்கள் உள்ளனர். நடந்த ஆடம்பர ஆயிரங்கால் திருமணத்திற்கு கையூட்டாக தீட்சிதர்கள் அனைவரும் தங்கம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என தொழிலதிபர்களிடம் பெற்றுள்ளனர். அர்த்தசாம பூசைக்கு பிறகு இரவில் கோவில் சாத்தப்படும். வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக இரவில் வெளியூர் ஆட்களை வைத்து ஆயிரம்கால் மண்டபம் முழுவதும் கண்கவரும் ஆடம்பர மின் விளக்குகள், வண்ண சீலைகள், பிரமிப்பூட்டும் மலர் அலங்காரம். அலங்கரிக்கப்பட்ட சேர்கள், என ஐந்து நட்சத்திர விடுதி போல ஜொலிக்க ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர்.

படிக்க:
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

பொற்கூரைமீது ஏறி அலங்கரித்துள்ளனர். திருமணத்திற்கு காலணிகளுடன் செல்வ சீமான்கள் நடந்து சென்றுள்ளனர். பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியே வந்த பிறகுதான் தீட்சிதர்களின் இந்த அநியாயம் தெரிய வந்தது.

திருமணம், சிவகாசி தொழிலதிபர் ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் உரிமையாளர்  ராஜரத்தினம் – பத்மா தம்பதியரின் குமாரத்தி சிவகாமி மணமகள். சென்னை ரத்னா ஸ்டோர் உரிமையாளர் சிவசங்கர் – வாசுகி குமாரன் சித்தார்த்தன் மணமகன். இத்திருமணத்திற்காக கைமாறியது பல லட்சங்களா? பல கோடிகளா என்ற இந்த சிதம்பர ரகசியத்தையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் தமிழில் பாடியதை தீட்டு என்ற தீட்சிதர்கள் கும்பல், கோவிலை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கிறது.

சிவனடியார் ஆறுமுகசாமி 2000-ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள், பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை. தில்லை நடராசன் மட்டுமல்ல, சிதம்பரம் கோவிலே எங்கள் சொத்து என்ற தீட்சிதர்களின் இருமாப்புதான். அரசும் நீதிமன்றமும் நாங்கள் ஆட்டுவித்தால் ஆடும் என்ற ஆணவம்தான் காரணம்.

சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பல ஆண்டுகளாக தூங்கி கிடந்த நடராசர் கோவில் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கொண்டு வந்தோம். நீதிபதி பானுமதி அவர்கள் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார்.

ஆனால் கடைசி வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வில்லை. மாறாக தீட்சிதர்கள் உண்டியலில் எண்ணெய்யை ஊற்றினார்கள். ஆறுமுகசாமி பாட பல முறை இடையூறு செய்தார்கள். சுப்பிரமணிய சுவாமியை வழக்கில் நுழைத்தார்கள். வழக்கில் தீட்சிதர்களை எதிர்த்து வாதாடாமல் இருக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்கள். வடக்கே உள்ள விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலை சிதம்பரம் கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். கோவிலை அரசு நிர்வகிப்பது கூடாது என பிராமணர் சங்கத்தை வைத்து சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினர். பா.ஜ.க இல. கணேசனை பேச வைத்தார்கள். இவ்வாறு பல சூழ்ச்சிகளை செய்து தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை தங்கள் அனுபவ சொத்தாக அனுபவித்து வருகின்றனர் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க:
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !
♦ தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு ! கேலிப்படம்

தீட்சிதர்களுக்கு முதலில் சொத்துரிமை, பிறகுதான் தில்லை நடராசன், ஆன்மீகம், புனிதம், பக்தர்கள் எல்லாம். கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி சிக்கன் மட்டன் அருந்தினார்கள். பெண்களுடன் சல்லாபங்கள் செய்தார்கள். கோவில் உள்ளே மர்ம மரணங்கள் நடந்துள்ளது. விலை உயர்ந்த சாமி நகை களவு போனது. கோவில் சொத்தை முறைகேடாக விற்றது. கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டமல் பொய் கணக்கு எழுதி தங்களுக்குள் பிரித்து கொள்வது. வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானபடுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பல்வேறு புகார் மனுக்களை தொகுத்து அனுப்பியது. நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது. ஆனால் போலீசார் ஊத்தி மூடிவிட்டனர். ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகள் இன்னும் முடிவு காணமுடியாமல்  உள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பொய் பித்தலாட்டம் செய்யும் இப்படிப்பட்ட தீட்சிதர்களிடம்தான் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலும் நடராசரும் உள்ளார் என்பதை பக்தர்கள் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிதம்பரம் கோவில் போன்று அனைத்து கோவிலையும் பார்ப்பனர் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் பா.ஜ.க இந்து முன்னணி அமைப்புகள் போராடி வருகின்றனர். இதற்கு சாதாரண மக்களின் பக்தியை முகமூடியாக இந்துத்வா சக்திகள் பயன்படுத்துகின்றனர். பயமும் பக்தியும் கடவுள் மீது மட்டும் இருந்தால் போதும். மணியடிக்கும் பார்ப்பனரிடம் எதற்கு பயம் பக்தி. தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பிற கோவில்கள் போன்று தீட்சிதர்களும் ஊதியம் பெற்றுக் கொள்ளட்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் இருக்க கூடாது. அதற்கு சிதம்பரம் வாழ் மக்கள் முன்னணியாக போராடாமல் அது சாத்தியம் இல்லை.

தமிழக அரசே !

  • தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராசர் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்று!
  • கோவிலை வைத்து பல லட்சம் வசூல் செய்துவரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்து!
  • சிதம்பரம் நடராசர் கோவில் வருமானம், வரவு – செலவு மீது தணிக்கை நடத்து!
  • நடராசர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து ! அதன் மூலம் நடந்த பணபறிமாற்றத்தின் மீதும் நடவடிக்கை எடு!

தோழமையடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99626 66321

மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !

பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தோழர் ராமலிங்கம் வரவேற்புறை நிகழ்த்தினார். அவர் தன்னுடைய வரவேற்புறையில் “பெரியார் என்றாலே பார்ப்பன கும்பலுக்கு அச்சம்தான். அந்த அச்சத்தின் காரணத்தை தெரிந்துகொள்ளத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரை சென்ட்ரல் தியேட்டர் சுற்றி உள்ள கடைகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிதி தராதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுமளவிற்கு சங் பரிவாரங்கள் வளர்ந்துள்ள இந்த நிலையில் நாம் பெரியாரின் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் தன்னுடைய தலைமையுரையில் “தேசிய கல்வி கொள்கை என்கின்ற பெயரில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது, அமித்ஷா இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழி என்கிறார்.

நம் கண்ணுக்கு எதிரிலேயே மக்களின் சேமிப்பான 1.75 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிலிருந்து பல்வந்தமாக பெற்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கிறார்கள். ஒரே நாடு – ஒரே ரேசன் கார்ட் என்ற பெயரில் குறைந்தபட்ச உணவு பாதுகாப்பும் மக்களுக்கு மறுக்கிறார்கள். கேட்டால் நாட்டின் வளர்ச்சிக்காக என்கிறார்கள். தேசத்தை பற்றி பேசும் இவர்களுடைய யோக்கியதை என்ன?

வெள்ளையர்களுக்கு எதிராக தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர் மாட்டிற்கு புல்லு வெட்டும் போராட்டம் செய்யபோகிறோம் என்றவர். எனவே இத்தகைய பாசிச கும்பலை முறியடிக்க வேண்டும் என்றால் அது பெரியாரின் துணையோடுதான் முடியும்” என்று பேசினார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !
♦ கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அடுத்ததாக பேசிய சமநீதி வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் கனகவேல் அவர்கள் “நாம் ஒருவரை சந்தித்தவுடன் கூறும் வணக்கம் என்ற சொல்லின் வரலாறையே பெரியாரின் வரலாற்றோடுதான் நாம் பார்க்கமுடியும். நமஸ்காரம் என்றும், கும்புடுறேன் சாமி என்றும் சாதி ஆதிக்கத்தில் மூழ்கியிருந்த இந்த சமூகத்தை ஒவ்வொரு செங்கலாக உடைதெறிந்து இந்த சமூகத்தை மாற்றிக்காட்டியவர். அவர் செய்யாத போராட்டங்களே கிடையாது.

சாதி ஒழிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாடு தமிழருக்கே போராட்டம், பெண் விடுதலை, கள்ளுக்கடை போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம், கோவில் நுழைவு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் என்று எண்ணிலடங்காத போராட்டம். அதில் குறிப்பாக இரண்டு விசயத்தை குறிப்பிடலாம். முதலாவது பெண்களை அரசியல் படுத்துவது என்பதை தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கியவர். இரண்டாவது புனிதம், புனிதமானவர் என்று எதைக் கண்டும் அஞ்சாதவர்.

தேச தந்தை என்று காந்தியை இந்த நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது காந்தி ஒழிய வேண்டும் என்று வெளிப்படையாக அம்பேத்கருக்கு வட்ட மேஜை மாநாட்டின் இரட்டை வாக்குரிமை பிரச்சினையின் போது தந்தி அடித்து ஆதரவு தெரிவித்த ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டும்தான். எனவேதான் அம்பேத்கரையும், பகத்சிங்கையும் செரிக்க முடிந்த ஆர்.எஸ்.எஸ்-ஸால் பெரியாரை நெருங்க முடியவில்லை. எனவே இந்துத்துவ கும்பல்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் நாம் பெரியாரைத்தான் உயர்த்தி பிடிக்கவேண்டும்” என்று பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக சிறப்புறையாற்றிய நிஜ நாடக இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் பேசுகையில்

“யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார் அவர்கள்” என உணர்ச்சிமயமாக‌ கண்ணீர் மல்க கூறினார். “பெரியாரியத்தை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அனைத்து வித பாகுபாடுகளையும் ஒழிப்பதுதான். அவரை போல் இதுவரை இந்தியநாடு ஒரு வலிமையான தலைவரை பார்த்ததில்லை. அவர் உங்கள் கட்சியின் நோக்கம் என்ன என்று கேட்ட போது காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்று ஒழிக்க வேண்டியதை மட்டுமே லட்சியமாக கொண்ட தலைவர் தந்தை பெரியார்” என்று பேசினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய AIBSNLAE -யின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் பேசும் போது “செப்டம்பர் 17 தான் மோடிக்கும் பிறந்த நாளாம். செப்டம்பர் 17-ல் பிறந்தவர்கள் எல்லாம் பெரியாரை போல் வாழ்ந்து விட முடியுமா? பெரியாரின் வாழ்க்கை அப்படிப்பட்டது. வெறும் 3-ம் வகுப்பு படித்தவர் என்று நாம் பேசுகிறோம். ஆனால் வட்ட மேஜை மநாடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஆகிய விசயத்தில் மிக பெரிய ஆய்வாளராக பட்டம் பெற்றவரான அம்பேத்கருக்கே ஆலோசனை சொல்லும் அளவிற்கு புத்தி கூர்மையோடு இருந்தார்.

அவர் அயோத்திதாசரிடமிருந்தும் ரெட்டைமலை சீனிவாசனிடமிருந்தும் தன்னுடைய கருத்தின் சாராம்சத்தை பெற்றார். தான் எடுத்து கொண்ட பொறுப்புகளில் எல்லாம் ஆழமாக ஊன்றி நின்று செயல்பட்டவர். காங்கிரசில் சேர்ந்த போது கூட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்மொழிவதையே நோக்கமாக செயல்பட்டவர். அதில் இருந்து வந்த பிரச்சினைதான் சேரன்மாகாதேவி குருகுல பிரச்சினை. இந்த உலகம் புனிதம் என்று சொன்னதை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தவர். சாதி ஆதிக்க சமூகமாக இருந்ததை மாற்றுவதற்கு தன் காலம் முழுவதும் உழைத்தவர் பெரியார். இன்று நம்முடைய தினசரி மாமூல் வாழ்க்கையை தினம் ஒரு சட்டத்தை போட்டு மாற்றிவிட துடிக்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது நமக்கு பெரியார் அவசியமாகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேரும் போது ஏராளமான கவுரவ பதவிகளை வகித்து வந்தவர். அப்படிப்பட்ட மிக பெரிய மிட்டா மிராசு குடும்பத்தை சேர்ந்தவர். அத்தனை கவுரவ பதவிகளையும் ஒரே நாளில் ராஜினாமா செய்துவிட்டுத்தான் காங்கிரசில் சேருகிறார். அந்தளவிற்கு பொது நன்மைக்காக தியாகம் செய்யக்கூடியவராக இருந்தார். ஆனால் பெரியார் வழியில் வந்தவர்கள் பெரியாரை போல் இருக்கவில்லை. எனவே நமக்கு மீண்டும் ஒரு பெரியார் தேவைபடுகிறார்” என சூளுரைத்தார்.

இறுதியாக ம.க.இ.க தோழர் முத்தையா அவர்களின் நன்றியுரை உடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

PP Letter head

  • பாசனத்துக்கு 21,000 கன அடி, கடலுக்கு 26,756 கன அடி !
  • டெல்டா விவசாயிகளின் முதல் எதிரி எடப்பாடி அரசுதான் !!
  • கொள்ளைக் கும்பலிடம் சிக்கிச் சீரழியும் டெல்டா நீர்ப்பாசனம் !!!

பத்திரிகைச் செய்தி

காவிரி நீரில் தமிழக விவசாயிகளின் உரிமைக்கு மத்திய, கர்நாடக அரசுகள் தொடர்ந்து செய்யும் வஞ்சகத்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஒருபோக சாகுபடியைக்கூட உறுதியாகச் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் டெல்டா விவசாயிகள். இந்நிலையில் பெரும் மழையின் காரணமாக கர்நாடக அரசு திறந்துவிடும் உபரி நீரைக்கூட தேக்கி, சேமித்து பாசனத்திற்கு வழங்க எந்த அக்கறையும் காட்டாத எடப்பாடி அரசு பெருமளவு நீரைக்கடலில் கொட்டி விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கிறது.

கடந்த ஆண்டு முக்கொம்பு மேலணை உடைந்ததன் விளைவாக சுமார் 227 டிஎம்சி நீர் கடலில் கலந்து வீணானது. இவ்வாண்டும் , மேட்டூர் அணை நிரம்பியிருந்தும் விவசாயத்திற்கு நீர்விடாமல் கடந்த சில நாட்களாக 26,000 கன அடிக்கும் மேல் நீரை கொள்ளிடத்தில் திறந்து வீணடித்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதே இல்லை.

இவ்வாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒருமாதம் ஆன பின்னரும் தஞ்சையை அடுத்த அம்மாப்பேட்டை போன்ற பகுதிகளுக்குக்கூட இன்னும் தண்ணீர் போய்ச் சேரவில்லை.

காவிரி டெல்டா பாசனத்திற்கு அடிப்படை காவிரி, வெண்ணாறு , கல்லணைக்கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள்தான். இவற்றின் அதிகபட்ச நீர் எடுத்துச்செல்லும் திறன் முறையே 16461 கனஅடி, 13295 கனஅடி, 4500 கனஅடி. தற்போது போதுமான தண்ணீர் இருந்தும் காவிரி வெண்ணாற்றில் தலா 9,000 கனஅடி கல்லணைக் கால்வாயில் 3,000 கனஅடி என்று குறைவாகவே திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவை உயர்த்தினால் மட்டுமே பல பகுதிகளுக்கு நீர் போய்ச்சேரும். ஆனால் பொதுப்பணித்துறையோ, தற்போது திறப்பதைவிட கூடுதலாக நீரைத் திறந்தால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு மோசடியான காரணத்தைக்கூறி போதிய நீர் திறக்க மறுக்கிறது.

இது பொய் என்பதற்கு சான்று ; வெண்ணாற்றில் இயல்பான நீர்தாங்கும் திறன் 8,863 கியூசெக்ஸ். ஆனால் இப்போது விடப்படும் நீரின் அளவு 9,000 கியூசெக்ஸ். கரை உடையும் ஆபத்து என்றால் வெண்ணாறு உடையாதா? டெல்டா பாசன அமைப்புக்களை சீர்குலைத்துவிட்டு பழியை இயற்கை மீது சுமத்துகிறது எடப்பாடி அரசு.

கடந்த பல ஆண்டுகளாக வரைமுறையின்றி ஆற்றுமணலை அள்ளி ஆறுகள் ஆழமாகிவிட்டன. இன்னொருபுறம் பாசனக்கால்வாய்கள், ஏரிக்குளங்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து மேடாகி வருகின்றன. எனவே தண்ணீர்க் கால்வாய்களுக்கும் ஏரிகுளங்களுக்கும் பாய்வது தடைபடுகின்றது. இந்த உண்மையை மறைத்து கரை உடைந்துவிடும் எனப் பொய்யான காரணம் சொல்லி பாசனத்திற்குத் திறந்துவிடும் நீரைவிட அதிகமாக கடலில் கொட்டி வீணடிக்கிறது.(பாசனத்துக்கு 21,000 கன அடி, கடலுக்கு 26,756 கன அடி) ஜெயலலிதா காலத்திலிருந்து இன்றுவரை எடப்பாடி விடாமல் கைக்குள் வைத்துக்கொண்டு இருக்கும்துறை பொதுப்பணித்துறை. எடப்பாடிக்கு இத்துறை ஒரு தங்கச்சுரங்கம்.

இத்துறைக்கு ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை எடப்பாடி கும்பல் சூறையாடியதுதான் தமிழக பாசன அமைப்புக்கள் மோசமாக சீர்கெட்டதற்குக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28-ம் நாள் மேட்டூர் அணை மூடப்படும். அதன் பிறகு ஜூன் 12-ம் தேதிக்குள் ஆறு, ஏரி குளம் போன்ற நீராதாரங்களை தூர்வாரி மராமத்துப் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது பொதுப்பணித்துறையின் விதி. இதை இவர்கள் அமல்படுத்துவதே இல்லை.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
♦ கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

மாறாக ஜூன் மாதத்திற்குப்பிறகே நிதி ஒதுக்குகின்றனர். இவ்வாண்டு ஜூலை 8-ம் தேதிதான் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. எந்த வேலையும் செய்யாமல் நிதியை அதிமுக கும்பல் சுருட்டவே இந்த ஏற்பாடு. எந்த ஏரி, எந்த வாய்க்காலுக்கு எவ்வளவு நிதி தேவை என ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்வதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை. ஆனால் ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வளவு என்றல்லவா நிதி ஒதுக்குகிறார்கள். இது கொள்ளையடிப்பதற்கான முறையல்லவா?

மக்களே உருவாக்கிய குடிமராமத்து முறைய மீண்டும் கொண்டு வந்துவிட்டோமென பீற்றிக்கொள்ளும் எடப்பாடி அரசு. இதற்கென்று ஒதுக்கிய தொகை 2016 -17ல் ரூ 100 கோடி, 2017-2018ல் 331.69 கோடி, 2018 -2019ல் 499.69 கோடி ஆக இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தூர்வார ஒதுக்கிய தொகை ரூ 931.38 கோடி . 2500 கி.மீ. நீளக் கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்தார் எடப்பாடி. ஒருமாதமாகியும் கடைமடை உட்பட பலபகுதிகளுக்கு நீர்போய்ச் சேரவில்லையே ஏன்?

டெல்டா பாசனத்தின் முக்கிய ஆறாகிய வெண்ணாற்றின் சூழலை புனரமைத்து மேம்படுத்தும் திட்டத்திற்கென ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து ரூ 800 கோடி கடன் பெற்று சென்ற ஆண்டு செலவிடப்பட்டது.. இதனால் விளைந்த பயன் என்ன என்பது எடப்பாடிக்கே வெளிச்சம். இதே போல ரூ 2000 கோடியில் ஆசிய வளர்ச்சி வங்கிக்கடன் மூலம் கல்லணைக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தன் அதிகாரம் முடிவுக்கு வருவதற்குள் முழுதாக தமிழகத்தை மொட்டையடிப்பதுதான் எடப்பாடியின் திட்டம் போலும்.

எடப்பாடி கும்பலும் அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்த்து சட்ட விரோதமான முறையில் பாசன மேலாண்மையைக் கையாண்டு வருகின்றன. மராமத்து , நீர்ப்பங்கீடு ஆகியவற்றை விவசாயிகளின் கமிட்டி மூலம் செய்ய வகைசெய்யும் தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மைச் சட்டம் 2000 நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. (Tamilnadu Farmers Management of Irrigation System Act 2000). மாறாக அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றனர்.

எனவே பாசனத்திட்டங்களை சீராக்கி, நீரை சேமிக்க வழிகாணாமல் நீரை கடலில் கலக்க விடுவது கர்நாடகம் மேக்கேத்தாட்டு திட்டத்தை நிறைவேற்ற மறைமுகமாக உதவுவதாகவே அமையும். மேலும் எடப்பாடி அரசு அறிவித்துள்ள காவிரி உபரி நீரை சேமிக்க சேலம் மாவட்டத்தில் ஏரி வெட்டும் திட்டம் சிக்கலானதும் பல நூறுகோடி செலவு பிடிக்கக்கூடியது மட்டுமல்ல காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமையைப் பறிப்பதுமாகும்.

மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதி என்ற ஐயமும், அச்சமும் பரவலாக எழுந்து வருகிறது. கிடைக்கும் நீரை வீணாக்கி விட்டு, நீர் சிக்கனம் பற்றி அறிந்து வர எடப்பாடி இஸ்ரேல் செல்லவிருப்பது இந்த அச்சத்தை மேலும் அதிகமாக்குகிறது. டெல்டா விவசாயம் பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கியிருப்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன. அரசு, அதிகாரவர்க்கத்தின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தாமே தம் சொந்த செலவில் ஏரி குளங்களைத் தூர் வாரும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை சில தொலைக்காட்சிகளும் ஊக்குவிக்கின்றன. பார்வைக்கு இவை நல்ல முயற்சிகள் போன்று தோன்றலாம். ஆனால் விளைவு கொள்ளையர்கள் சுதந்திரமாகக் கொள்ளையிடவே வழிவகுக்கும்.

எனவே விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் பாசன மேலாண்மை முழுவதும் விவசாயிகள் கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மீது சுயேச்சையான அமைப்பு மூலம் விசாரணை நடத்தி அவர்களை தண்டிப்பதுடன் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் அனைவரும் இணைந்த மக்கள் போராட்டங்களே இன்றைய தேவை.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்
மாநிலப்பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

***

திருச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

கடைமடைக்கு வராத காவிரியை கடலுக்கு திருப்பி விடுகிறது எடப்பாடி அரசு! 
ஆற்று மணல் கொள்ளை !! தூர் வாரியதிலும் கொள்ளை !!!

“மன்றாடியது போதும் போராடுவோம் !” என்ற தலைப்பில் 16.09.2019 அன்று காலை 11.30 மணியளவில் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகம் வாயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக அலுவலகத்திற்கு சுப்பிரமணியபுரம் பேருந்து நிருத்ததிலிருந்து தோழர்கள் பேனர், முழக்க அட்டை, கொடி பிடித்து முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி நீர் கடலில் கலந்து ஆறு ஏரி வாய்க்கால் குளம் சீரழித்து விவசாயத்தை நாசமாக்காதே !

வெண்ணாற்றை சீரமைக்க 800 கோடி என்னாச்சு?
கல்லணை கால்வாய் சீரமைக்க 2000 கோடி என்னாச்சு?
சீரமைக்க வாங்கிய கடனை அதிகாரிகளும்,
எடப்பாடி கும்பலும் ஏப்பம் விட்டு அழிச்சாச்சு ..

என முழக்கமிட்ட தோழர்களை பகுதி மக்கள் அருகில் வந்து கவனித்தனர். செயலிழந்து போன பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகத்தை போலீசு கும்பல் பாதுகாத்து நின்றனர்.

எதாவது ‘செய்வோம்’ என போலீசு உடனே ஆர்ப்பாட்டத்தை முடிக்குமாறு நெருக்கடி தந்தது. மறுத்து அரை மணி நேரம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநகர செயலர் தோழர் வின்சென்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு ம.ப. சின்னத்துரை மற்றும் அரியூர் பகுதி விவசாயிகள் திரு. திருநாவுக்கரசு, திரு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன் பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம். தொடர்புக்கு : 94454 75157.