Saturday, May 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 294

செலுத்தத் தயாராகுக ! இணைப்பு ஏற்படுத்துக !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 08

மாஸ்கோ நகர்ப்புறத்தில் சிறு பயிற்சி விமானத்திடலின் பக்கத்தில் அமைந்திருந்தது விமானப் பயிற்சிப் பள்ளி. பரபரப்புமிக்க அந்த நாட்களில் அங்கே வேலை வெகு மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.

விமானப் பயிற்சிப் பள்ளி அலுவலகத் தலைவர் சிறுகூடான மேனியர். மிகப் பருத்த செம்முகத்தினர். வலிய உடற்கட்டு வாய்ந்தவர். உறக்கமின்மையால் அவர் கண்கள் சிவந்திருந்தன. மெரேஸ்யெவை அவர் எரிச்சலுடன் பார்த்த பார்வை, “நீ வேறு எதற்காக வந்து இழவு கொடுக்கிறாய்? எனக்கு இங்கே ஏற்கனவே கவலைகள் போதாதென்றா?” எனக் கேட்பது போல் இருந்தது. நியமனப் பத்திரமும் மற்றக் காகிதங்களும் அடங்கிய கட்டை அவர் அவன் கையிலிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டார்.

லெப்டினன்ட் கர்னலின் வெகு நாட்களாக மழிக்கப்படாத பரந்த முகத்தில் சுருட்டை சுருட்டையாக மண்டியிருந்த பழுப்பு ரோமங்களைத் திகிலுடன் பார்த்தவாறு, “கால்கள் இல்லாததைக் குறைகாட்டி விரட்டிவிடுவார்” என்று நினைத்தான் மெரேஸ்யெவ். ஆனால் ஏக காலத்தில் இரண்டு டெலிபோன்கள் கணகணத்து அவரை அழைத்தன. ஒரு டெலிபோன் குழாயைக் காதுடன் தோளால் அழுத்திக்கொண்டு, இன்னொரு குழாய்க்குள் பதற்றத்துடன் ஏதோ கூறியபடியே மெரேஸ்யெவின் தஸ்தாவேஜுகள் மீது விரைவாகக் கண்ணோட்டினார் அவர். அவற்றில் ஜெனரலின் தீர்மானம் ஒன்றை மட்டுமே அவர் படித்தார் போலும். ஏனெனில் டெலிபோன் குழாய்களை வைக்காமலே அதன் அடியில் “மூன்றாவது பயிற்சிப் பிரிவு. லெப்டினன்ட் நவூமவுக்கு. சேர்த்துக் கொள்ளவும்” என்று எழுதினார். பிறகு இரு குழாய்களையும் வைத்துவிட்டுக் கனைத்த குரலில் கேட்டார்:

“சாமான் சான்றிதழ் எங்கே? ரேஷன் கார்டு எங்கே? இல்லையா? ஒருவரிடமும் இல்லை. தெரியும், தெரியும் எனக்கு இந்தப் பல்லவி. மருத்துவமனை, களேபரம், இதற்கெல்லாம் நேரமில்லை, அப்படித்தானே? ஆனால் நான் உங்களுக்கு எதைக் கொண்டு சாப்பாடு போடுவதாம்? அறிக்கை எழுதுங்கள். சான்றிதழ் இல்லாமல் பயிற்சிப்பிரிவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.”

“உத்தரவு!” என்று விரைப்பாக நிமிர்ந்து சல்யூட் அடித்தவாறு சந்தோஷமாக முழங்கினான் அலெக்ஸேய். “போக அனுமதிக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“போங்கள்!” என்று கையை வீசி ஆட்டினார் லெப்டினன்ட் கர்னல். மறுகணமே அவரது கொடூரமான கர்ஜனை முழங்கிற்று: “நில்லுங்கள்! இது என்ன?” தங்கக் குறியெழுத்துக்கள் பொறித்த கனத்த தடியை – வஸீலிய் வஸீலியெவிச் பரிசளித்ததை – அவர் விரலால் சுட்டிக்காட்டினார். அறையிலிருந்து வெளிச் செல்லுகையில் உள்ளக் கிளர்ச்சி காரணமாக மெரேஸ்யெவ் அதை மூலையில் மறந்து விட்டு விட்டான். “இதென்ன பகட்டு? கைத்தடியுடன் வளைய வருவது? படைப் பிரிவு அல்ல இது, ஜிப்ஸி முகாம்! நகரப் பூங்காதான்: தடிகள் என்ன, பிரம்புகள் என்ன, சவுக்குகள் என்ன, சாட்டைகள் என்ன… விரைவிலேயே கழுத்தில் தாயத்து மாட்டிக் கொள்வீர்கள், விமானி அறைக்குக் கறுப்புப் பூனையைக் கொண்டு வருவீர்கள் – அதிர்ஷ்டத்துக்காக. இனி மேல் இந்தச் தப்புச் தவறெல்லாம் என் கண்ணில் படக்கூடாது! தெரிந்ததா, பகட்டாரே!”

“உத்தரவு, தோழர் லெப்டினன்ட் கர்னல்!”

மூன்றாவது பயிற்சிப் பிரிவின் பயிற்சி ஆசிரியர் லெப்டினன்ட் நவூமவின் பொறுப்பில் மெரேஸ்யெவ் ஒப்படைக்கப்பட்டிருந்தான். முதல் நாளே விமான நிலையத்தில் அவரைத் தேடிப் பிடித்தான் மெரேஸ்யெவ். நவூமவ் சிறுகூடான உடலினர். மிகவும் துடியானவர். அவருடைய தலை பெரியது, கைகள் நீண்டவை. பயிற்சித் திடலில் அவர் ஓடியாடிக் கொண்டிருந்தார். சின்னஞ்சிறு விமானம் பறந்து கொண்டிருந்த வானத்தை நோக்கியவாறு அதை ஓட்டியவனை வைது நொறுக்கினார்.

“கட்டுப்பெட்டி … கோணிப்பை… ‘சண்டை விமானியாக இருந்தானாம்’! கதை. யாரை ஏய்க்கப் பார்க்கிறான்?”

தன் வருங்காலப் பயிற்சி ஆசிரியர் முன் வந்து இராணுவ முறையில் முகமன் தெரிவித்த மெரேஸ்யெவின் வணக்கத்துக்கு விடையாக அவர் வெறுமே கையை ஆட்டிவிட்டு வானத்தைக் காட்டினார்.

“பார்த்தீர்களா? ‘சண்டை விமானியாம்’, வானச் சூறாவளி திறப்பு வெளியில் பூச்செடிபோல ஊசலாடுகிறான்….”

பயிற்சி ஆசிரியரை அலெக்ஸேய்க்குப் பிடித்துவிட்டது. கூட்டு வாழ்க்கையில் இந்த மாதிரிக் கிறுக்கர்களையே – தனது வேலையை உளமார விரும்புபவர்களையே – அவன் விரும்பினான். இத்தகையவர்களுடன் கலந்து பழகுவது திறமையும் விடாமுயற்சியும் உள்ளவனுக்கு எளிது. விமானமோட்டியவனைப் பற்றிச் சில கருத்துக்களை அவன் வெளியிட்டான். லெப்டினன்ட் இப்போது அவனைக் கால் முதல் தலைவரை கவனமாகப் பார்த்தார்.

படிக்க:
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

“என் பிரிவுக்கு வந்திருக்கிறீர்களா? குலப்பெயர் என்ன? எந்த விமானத்தை ஓட்டினீர்கள்? போரில் பங்கு கொண்டீர்களா? எவ்வளவு காலமாக விமானம் ஓட்டவில்லை?”

தன் பதில்களை லெப்டினன்ட் காது கொடுத்துக் கேட்டதாக அலெக்ஸேய்க்கு நம்பிக்கைப்படவில்லை. அவர் மறுபடி தலையை நிமிர்ந்து, முகத்தில் வெயில் படாமல் உள்ளங்கையால் மறைத்தவாறு முட்டியை ஆட்டினார்.

“மூட்டை தூக்கி!… பாருங்கள் அவன் எப்படித் திரும்புகிறான் என்று! அறைக்குள் நீர்யானை போல” என்றார்.

மறுநாள் பறப்பு தொடங்கும் நேரத்தில் வரும்படியும் உடனே “வெள்ளோட்டம்” விட்டுப் பார்ப்பதாகவும் அவர் அலெக்ஸேயிடம் சொன்னார்.

“இப்போது போய் இளைப்பாருங்கள். பயணத்துக்குப் பின் ஓய்வு கொள்வது பயனுள்ளது. சாப்பிட்டீர்களா? இல்லாவிட்டால் இங்கே குழப்பத்தில் உங்களுக்குச் சாப்பாடு போட மறந்து விடுவார்கள்…… அட குட்டிச் சாத்தான்! வா, வா, இறங்கு, உனக்குக் காட்டுகிறேன் ‘சண்டை விமானியை!’“ என்று பொரிந்துக் கொட்டினார்.

மெரேஸ்யெவ் இளைப்பாறப் போகவில்லை. டெப்போவில் செம்மானைக் கண்டு, தன் ஒரு வார புகையிலை ரேஷனை அவனுக்குக் கொடுத்து, கமாண்டருக்குரிய தோல்வாரைக் கொண்டு பக்கிள்ஸ் வைத்த தனிவகை அமைப்புள்ள இரண்டு இறுக்குவார்கள் தைத்துத் தரும்படி கேட்டுக் கொண்டான். கால்களால் இயக்கும் நெம்படிகளுடன் பொய்க்கால்களை இவற்றின் உதவியால் இறுக இணைத்துக் கொள்ளலாம் என்பது அவன் நோக்கம். பிறகு அவன் விமான நிலையம் திரும்பினான். இருட்டும் வரை, கடைசி விமானம் தன் இடத்திற்கு இட்டு வரப்பட்டு, தரையில் அடிக்கப்பட்டிருந்த முளைகளில் கயிற்றால் கட்டப்படும் வரை அவன் விமானப் பறப்புக்களைக் கவனித்துக் கொண்டிருந்தான் – வானின் தனித் தனிப் பகுதிகளில் வழக்கப்படி பயிற்சிக்காக “ஏறியிறங்குவது” அல்ல இது, தலைசிறந்த விமானிகளின் போட்டி என்பது போல. உண்மையில் ஒவ்வொரு பறப்பையும் அவன் உற்றுப் பார்க்கவில்லை. விமான நிலையத்தின் காரியக் கெடுபிடியையும் விமான எஞ்சின்களின் ஓய்வற்ற இரைச்சலையும் வானக் குழல்களின் அமுங்கிய அதிரொலியையும், பெட்ரோல், மசகெண்ணெய் ஆகியவற்றின் மணத்தையும் தனக்குள் நிறைத்தவாறு விமான நிலையச் சூழ்நிலைமையிலேயே இருந்தான். அவனது உள்ளமும் உடலும் உவகையில் திளைத்தன. மறுநாள் விமானம் மக்கர் பண்ணக்கூடும், தன் ஏவலுக்கு இணங்க மறுக்கக்கூடும், விபத்து நேரக் கூடும் என்று அவன் சிந்திக்கவே இல்லை.

மறுநாள் காலையில் அவன் பறப்புத் திடலுக்கு வந்த போது அது இன்னும் வெறுமையாக இருந்தது. சூடுபடுத்தும் விமான எஞ்சின்கள் இரைத்தன. உந்து விசிறிகளைச் சுழற்றி விட்ட மெக்கானிக்குகள் பாம்பை மிதித்தவர்கள் போல அவற்றிலிருந்து துள்ளி விலகினார்கள். வழக்கமான காலைக் குரலொளிகள் கேட்டன:

“செலுத்தத் தயாராகுக!”

“இணைப்பு ஏற்படுத்துக!”

“அப்படியே, இணைப்பு ஏற்படுத்தியாயிற்று!”

அலெக்ஸேய் இவ்வளவு முன்னதாக விமானங்களின் அருகே எதற்காகச் சுற்றுகிறான் என்று ஒருவன் அவனைத் திட்டினான். அலெக்ஸேய் வேடிக்கையாகப் பேசி அவனிடமிருந்து நழுவினான். குதூகலம் பொங்கிய ஒரு வாக்கியம் அவன் நினைவில் எதனாலோ பதிந்துவிட்டது. “இணைப்பு ஏற்படுத்தி ஆயிற்று, இணைப்பு ஏற்படுத்தி ஆயிற்று, இணைப்பு ஏற்படுத்தி ஆயிற்று” என்று மறுபடி மறுபடி அந்த வாக்கியத்தைத் தனக்குள் சொல்லிக் கொண்டான். முடிவில் விமானங்கள் துள்ளிக்கொண்டு பாங்கின்றித் தள்ளாடியவாறு இறக்கை ஊர்ந்து சென்றன. மெக்கானிக்குகள் அவற்றின் இறக்கைகளின் அடியில் கை கொடுத்துத் தாங்கியவாறு நடந்தார்கள். நவூமவ் அங்கே இருந்தார். தானே சுற்றிய சிகரெட்டை அவர் புகைத்துக் கொண்டிருந்தார். தமது பழுப்பேறிய விரல்களிலிருந்து அவர் புகை இழுத்து விடுவது போலத் தோன்றும் படி அவ்வளவு சிறியதாக இருந்தது சிகரெட்டு.

அலெக்ஸேய் இராணுவ முறைப்படி தெரிவித்த வணக்கத்துக்குப் பதில் வணக்கம் தெரிவிக்காமலே, “வந்து விட்டாயா? அதுவும் சரிதான். முதலில் வந்திருக்கிறாய், முதலில் பறப்பாய். ஒன்பதாம் எண் விமானத்தின் பின் அறையில் உட்கார். நான் இதோ வருகிறேன். பார்ப்போம், நீ எப்பேர்பட்டவன் என்பதை” எனக் கூறினார்.

சின்னஞ்சிறு சிகரெட்டை விரைவாகப் புகை இழுத்துக் குடித்து முடிப்பதில் முனைந்தார் அவர். அலெக்ஸேய் விரைவாக விமானத்துக்கு நடந்தான். ஆசிரியர் வருவதற்குள் கால்களை நெம்படிகளுடன் வார்களால் இணைத்து இறுக்கிக் கொள்ள விரும்பினான் அவன். ஆசிரியர் அருமையான ஆள்தாம், ஆனாலும் திடீரென்று அவர் பிடிவாதம் பிடிக்கலாம், பரீட்சித்துப் பார்க்க மறுக்கலாம், கூச்சல் கிளப்பலாம் – யார் கண்டது? வழுக்கலான இறக்கை மேல் தொற்றி, விமானி அறை விளிம்பைப் பதற்றத்துடன் பற்றியவாறு ஏறினான் அலெக்ஸேய். கிளர்ச்சி காரணமாகவும் பழக்கம் இன்மை காரணமாகவும் அவன் சறுக்கிச் சறுக்கி விழுந்தான். அறைக்குள் காலை எடுத்துப் போடவே அவனால் முடியவில்லை. குறுகிய முகம் கொண்ட, இளமை கடந்துவிட்ட மெக்கானிக் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து, “குடித்திருக்கிறான், நாய்ப் பயல்” என்று எண்ணிக் கொண்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி

“சிக்னல் தாண்டி போயிட்டோம்னு உடனே வீட்டுக்கு பில் அனுப்புறாங்க… பல இடங்கள்ள சிக்னலே வேலை பாக்க மாட்டேங்கிது ! அதுக்கு இவங்க ஃபைன் கட்டுவாங்களா ? சிட்டிக்குள்ள எங்கயாச்சும் ரோடு நல்லா இருக்கா? இந்த அமைச்சர்களை எல்லாம் சென்னை டிராஃபிக்ல எங்க கூட சாதாரண ஆட்களா இந்த ரோட்டுல வரச் சொல்லுங்க.. அப்பத்தான் டிரைவருங்க படும்பாடு தெரியும்… ”

– கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல் !

பாருங்கள் ! பகிருங்கள் !

வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !

இந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு 49 சதவீதமா ? இத்துறை 3 கோடியே 70 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறதா?

ந்திய உற்பத்தித் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பில் மோட்டார் வாகனத் தொழிற்துறையின் பங்கு 49 சதவீதம் என்று கூறப்படுவது சரியான மதிப்பீடுதானா? மோட்டார் வாகனத் தொழில்துறை 3 கோடியே 70 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறதா?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் ‘இல்லை’ என்பதே. உண்மையான புள்ளி விவரமோ, சொல்லப்படும் அளவில் அரைக்கால்வாசிக்கும் தேறாது.

இப்படி ஒரு பூதாகாரமான புள்ளிவிவரத்தை வெளியிடுவது யார்?

மோட்டார் வாகன துறையின் தலைமையில் இருப்பவர்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள். மோட்டார் வாகனத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 7 அல்லது 7.5% என்றும், மொத்த தொழில்துறை உற்பத்தி மதிப்பில் இது 49% என்றும், இத்துறை 3.7 கோடி அல்லது 4 கோடி “நேரடி மற்றும் மறைமுக” வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் இத்துறை சார்ந்த அமைப்புகள் கூறுகின்றன.

அவர்கள் ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்?

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வேலை வாய்ப்புக்கும் மோட்டார் வாகன துறையின் பங்களிப்பை பன்மடங்காக உயர்த்திக் காட்டுவதன் மூலம் இத்துறையின் கனவான்கள் மேலும் கூடுதலான சலுகைகளையும் மானியங்களையும் அரசிடமிருந்து பிதுக்கி எடுக்க விரும்புகிறார்கள்.

ஆனந்த் மகேந்திரா

இதே புள்ளிவிவரங்களை முன்னிறுத்தி, “சில குறுகிய கால சலுகை நடவடிக்கைகள் மூலமாக மோட்டார் வாகனத் துறையை உதைத்து கிளப்பி ஓடவிடுவது விரிந்த தேசிய நலனுக்கு உகந்தது,” என்று கூறி இத்துறைக்கு வரிச் சலுகைகளை கோருகிறார் ஆனந்த் மகேந்திரா.

இதே புள்ளிவிவரங்களில் சில ஜால வித்தை காட்டி, இத்துறையை கைதூக்கி விட மாநில அரசுகள் ‘அரிசினாச்சும்’ போட வேண்டும் என்கிறார் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர்.

வாகன உற்பத்தியாளர்கள், உதிரிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் கார் டீலர்கள் ஆகியோரது அமைப்புகள் நிதி அமைச்சரிடம் ஊக்க உதவித்தொகை கோரியபோதும் இதே புள்ளிவிபரங்களைத்தான் முன் வைக்கிறார்கள். கூகுளில் தேடியபோது செய்தி ஊடகங்களில் இந்த புள்ளிவிவர மேற்கோள்கள் திரும்பிய பக்கமெல்லாம் தாக்கின.

இந்த மோட்டார் வாகனத் துறை அரசின் பிணை எடுப்புத் தொகுதியை (bail-out package) பெறுவதற்கு தகுதியானது தானா?

ஓராண்டு காலமாகவே இந்திய மோட்டார் வாகனத் தொழில்துறை நெருக்கடியில் இருக்கிறது; அதன் உற்பத்திக்கு ஏற்ப சந்தையில் வேண்டல் (demand) இல்லை என்பது உண்மைதான். (வாகன விற்பனையில் மிகப்பெரும் அளவுக்கு கடனுதவி செய்துவந்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடி மோட்டார் வாகன துறையின் நெருக்கடிக்கான உடனடி தூண்டுதலாக அமைந்துவிட்டது. (1)) பெரு நிறுவனங்களின் விற்பனை திருகு சுழல் வடிவில் மெல்லச் சரிந்துவருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து திண்டாடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளிகள். இந்த தானியங்கி வாகனத் துறையே மிகப்பெரும் விகிதத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் துறையாகும்.

படிக்க:
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
♦ சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை

இருப்பினும், அனைத்து உற்பத்தி துறைகளும், சொல்லப்போனால் மொத்த பொருளாதாரமுமே, திருகுச்சுருள் வடிவில் மெல்ல சரிவது போல தோன்றுகிறது. வேலை இழப்புகள் பல்வேறு துறைகளிலும் கொடூரமாகப் பரவியிருக்கிறது. ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு பாரம்பரியமான வாழ்வாதாரமாக இருந்துவந்த வேளாண்மை, நெசவு, கட்டுமான வேலைகள், பெட்டிக் கடைகள், அமைப்பு சாரா உற்பத்தி போன்ற துறைகள் சிறிது காலமாகவே நெருக்கடியில் இருந்து வருகின்றன. நிலைமை இவ்வாறிருக்க, அரசின் உதவிக்கு காத்திருக்கும் இந்த கையேந்தி வரிசையில் குறுக்கே நுழைவதற்கு, கார்ப்பரேட் ஆதாயங்களுக்கு அப்பால் தங்களது துறை – அகண்ட காவேரி படித்துறை போல – விரிந்த பொருளாதார மற்றும் சமூக நலன் சார்ந்த துறை என்று காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மோட்டார் வாகனத் துறையின் கனவான்கள் நன்கறிவர். மகேந்திராவின் வார்த்தைகளில் இதுதான் “விரிந்த தேசிய நலன்”.

ஜி.டி.பி யிலும் வேலைவாய்ப்பிலும் மோட்டார் வாகனத் துறையின் உண்மையான பங்களிப்புதான் என்ன?

அனைத்து தானியங்கி ஊர்திகள் மற்றும் ஊர்திகளுக்கான டயர், டியூப் உள்ளிட்ட அனைத்து உதிரிபாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிலையங்களில் வேலைசெய்வோர் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் மட்டுமே (2) . இதுதான் எதிர்பார்க்கக்கூடிய அளவும் கூட. ஏனெனில் மோட்டார் வாகன உற்பத்தி என்பது பெருத்த மூலதனக் குவிப்பு தேவைப்படுகின்ற கனரக தானியங்கி எந்திரங்கள் சார்ந்த உற்பத்தித் துறை; வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையல்ல.

மேலும் GDP-யில் இந்த தொழிற்துறையின் ஒட்டுமொத்த பங்களிப்பு சுமாராக 1% மட்டுமே. அனைத்து உற்பத்தி துறைகளின் மொத்த உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்களிப்பு 6.4 % மட்டுமே. (3) இந்த உண்மை நிலையோ மோட்டார் வாகனத் துறை தலைவர்கள் அள்ளி விட்டதும் ஊடகங்கள் அதை வாங்கி அளந்து விட்டதுமான புள்ளிவிவரங்களில் மீச்சிறு துளியே.

மோட்டார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் பிற சேவைகளை வழங்கும் அதன் துணை துறையின் வேலை வாய்ப்புகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

விற்பனை மற்றும் பழுது நீக்க நிலையங்களை கணக்கில் கொண்டால் அது மோட்டார் தொடர்பான வேலைவாய்ப்பு எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும். மோட்டார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் பணிமனைச் சேவைகள் 2017-18 -ம் ஆண்டின் கணக்குப்படி இந்திய உழைப்பு சக்தியில் 0.78 சதவீதத்தினருக்கு, அதாவது 38 லட்சம் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது (4) இதில் 9 லட்சம் பேர் விற்பனை தொடர்பாகவும், 29 லட்சம் பேர் பணிமனை சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை மேற்சொன்ன உற்பத்தி தொடர்பான வேலைவாய்ப்பு எண்ணிக்கையுடன் கூட்டினால் சுமார் 52 லட்சம் தொழிலாளர்கள் மோட்டார் வாகன உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வருகிறது.

இது மிகப்பெரிய எண்ணிக்கைதான். எனினும் இதற்கும் மோட்டார் வாகன தொழில் துறை தலைவர்கள் கூறுகின்ற 3 கோடியே 70 லட்சம் அல்லது 4 கோடி வேலைவாய்ப்புகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது.

பெரிதும் உயர்த்தப்பட்ட இந்த புள்ளிவிவரத்தை மோட்டார் வாகனத்துறை எப்படிக் கணக்கிட்டது?

இத்துறை கோமான்கள் மறைமுக வேலைவாய்ப்பின் வரம்பை முடிந்த அளவுக்கு இழுத்து விரித்து அதில் வாகன ஓட்டுநர்கள், காப்பீட்டு முகவர்கள் போன்ற எல்…..லோரையும் கொண்டுவந்து அதன் எண்ணிக்கையை அளவுகடந்து உயர்த்துகிறார்கள்.

தானியங்கித் துறையின் இலட்சிய திட்டம் 2006-16 ( Automotive Mission Plan 2006-16 : இது பெரிதும் அத்துறை சார்ந்தவர்களாலேயே தயாரிக்கப்பட்டது) -ன் படி ஒரு கார் 5.3 வேலையை உருவாக்குகிறது; ஒரு வர்த்தக பயன்பாட்டு வண்டி -லாரி, டிரக் – 13.3 வேலையை உருவாக்குகிறது; ஒரு இருசக்கர வாகனம் 0.5 வேலையை உருவாக்குகிறது; மற்றும் ஒரு மூன்று சக்கர வாகனம் 3.9 வேலையை உருவாக்குகிறது.(5)எந்த அடிப்படையில் இவ்வாறு கணக்கிடப்பட்டது? அது பற்றி ஒரு விவரமும் இல்லை. இருப்பினும் இந்த விகிதாச்சாரப்படி கணக்கிட்டால் இந்த கோமான்கள் கணக்கு கோமாளிக் கணக்கு ஆகிவிடுகிறது.

படிக்க:
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

2018-19 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன உள்நாட்டு விற்பனையை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டால் அவர்களது கண்டுபிடிப்பின்படி 4 கோடியே 40 லட்சம் வேலைவாய்ப்புகளை அந்த வாகனங்கள் உருவாக்கியிருக்க வேண்டும். (6) ஓராண்டில் கழித்துக் கட்டப்படும் வண்டிகளின் எண்ணிக்கையை விலக்கிவிட்டு பார்த்தாலும் இந்த வேலை உருவாக்க எண்ணிக்கை நம்பத் தக்கதன்று.

மோட்டார் வாகனத் துறையின் உற்பத்தி மொத்த உற்பத்தி மதிப்பில் 49% என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% என்றும் இந்த துறையினர் எந்த அடிப்படையில் கணக்கிட்டார்கள் என்பது பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

உற்பத்தியாகும் ஒவ்வொரு காரும் ஓட்டுநர்கள், கிளீனர்கள், காப்பீட்டு முகவர்கள் போன்ற பல வேலைகளை உருவாக்குகிறது என்று சொல்வது சரியா?

உற்பத்தி செய்யப்படும் ஒரு கார் அல்லது ஒரு சரக்கு ஊர்தி ஓட்டுநருக்கான வேலையை உருவாக்குவதில்லை. ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தும் முன்னர் அந்த கார் அல்லது டிரக் ஒருவரால் வாங்கப்பட்டு இருக்க வேண்டும். நிலவுகின்ற பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த வேண்டல் (demand) வளர்முகத்தில் இருக்கும் போது போக்குவரத்தின் தேவையும் அதிகரிக்கிறது. அது கார் அல்லது டிரக்கை வாங்கவும், ஓட்டுநரைப் பணியில் அமர்த்தவும் கோருகிறது. ஆனால் இன்றைய பிரச்சனையோ ஒட்டுமொத்த வேண்டலில் ஒரு சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதே. (7)

உண்மையில் இந்த வேலைவாய்ப்புகள் எதையும், போக்குவரத்து உள்ளிட்ட எதிலும், மோட்டார் வாகனத் துறை உருவாக்கவில்லை என்பதையே இத்துறையின் நெருக்கடி சாராம்சத்தில் வெளிப்படுத்துகிறது. மாறாக, போக்குவரத்து துறைக்கான தேவை அதிகரிக்கும் போது அது வாகன தேவையையும், வேலைவாய்ப்பையும் மோட்டார் வாகனத் துறையில் உருவாக்கும் என்று சொல்லுவதே பொருத்தமானதாக இருக்கும்.

தானுந்து ஊர்தித் துறைக்கு அரசு என்ன உதவிகளைச் செய்கிறது?

அரசு இத்துறைக்கு ஏராளமான பல பொருளாதார சலுகைகளை வழங்கி வருகிறது. மலிவு விலையில் நிலம், மின்சாரம், நீர், கடன்கள், வரிச்சலுகை போன்ற பலவாறான சலுகைகளில் பெரும்பகுதியை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வழங்குகின்றன. உதாரணமாக மோடி தலைமையில் இருந்த குஜராத் மாநில அரசு டாடாவின் நானோ கார் உற்பத்தி திட்டத்திற்கு வழங்கிய மானியங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட இருந்த கார் ஒன்றுக்கு ரூ.60,000 என கணக்கிடப்பட்டது. (8)

நானோ திட்டம் தொடர்பான விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன. ஆனால் அதே அளவில் மானியங்கள் வெளியில் தெரியாமல் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெரிதும் தனியார் வாகனங்களால் பயன்படுத்தப்படும் நகர்புற சாலைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையையும் சேர்த்துக் கணக்கிட்டால் இந்த துறைக்கான மானியத்தொகை உண்மையில் பன்மடங்கு பெரிதாக இருக்கும்.

இத்துறையை புத்தெழுச்சி பெறச் செய்வதற்காக நிதி அமைச்சர் சமீபத்தில் ஒரு அறிவிப்பு மழை பொழிந்தார். மத்திய அரசு தனது அலுவலக பயன்பாட்டிற்காக புதிய கார்கள் வாங்குவதற்கு விதித்துக்கொண்டிருந்த சுய தடையை நீக்குவது; புதிய பயன்பாட்டு நீக்க கொள்கை (new scrappage policy); உயர்த்தப்பட்ட வாகனப் பதிவுக் கட்டணத்தை 2020-ம் ஆண்டுக்கு ஒத்தி வைத்தல்; 15% கூடுதல் தேய்மான மதிப்பை அனுமதித்தல் ஆகியவை இந்த அறிவிப்புகள். ஆனால் இத்துறைக் கோமான்களுக்கு இச்சலுகைகள் போதவில்லை; அவர்கள் தங்களது கோரிக்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்கிறார்கள். கார்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது அவர்களது உடனடி கோரிக்கை.

மோட்டார் வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வளர்க்க வேண்டுமா?

இல்லை தனியார் வாகனங்களை அல்ல, மாறாக பொது போக்குவரத்தை மட்டுமே அரசு ஊக்குவித்து வளர்க்க வேண்டும். மோட்டார் வாகனத்துறை வளர்ச்சியை ஒரு பொதுநலன் சார்ந்த முன்னுரிமையாக கருதுவதும் அரசின் மேக் இன் இந்தியா தளத்தில் செய்திருப்பது போல இதை ஒரு ”சூப்பர்ஸ்டார் தொழிற்துறை” என்று விளம்பரப்படுத்துவதும் முறைகேடான கொள்கையாகும்.

மோட்டார் வாகனங்கள் நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழல் சீரழிவையும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் உருவாக்குகின்றன. ஆகப் பெரும்பான்மையான நகர்புற மக்கள்தான் இதனால் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் சொந்தமாக கார் எதையும் வைத்திருக்கவில்லை. மலிவுக் கட்டணத்தில் நல்ல விதத்தில் இயங்குகிற பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தாலேயே இந்த உழைக்கும் மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் இருசக்கர வாகனங்களை வாங்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். இருந்த பொதுப் போக்குவரத்தின் வீழ்ச்சியும் கூட மோட்டார் வாகன தனியார் துறை வளர்ச்சி மற்றும் மோட்டார் அரசியல் தரகு கும்பலுடன் (auto lobby) தொடர்புடையதே.

மோட்டார் வாகனத் துறைக்கு மானியங்களும் வரி தள்ளுபடிகளும் வழங்க கூடாது என்பதற்கு இது போன்று பல காரணங்கள் உள்ளன. இத்துறையில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை‌. இருப்பினும் சமூகப் பயன்பாடு மிக்க நல்ல தொழில் துறைகளின் வளர்ச்சி, அல்லது உடனடி மாற்றாக, விரிந்த பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் போன்றவை மோட்டார் வாகனத் தொழிலில் வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

மோட்டார் வாகனத் துறைக்கு உதவக் கூடாது என்றால் வேறு எந்தப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும்?

தானாக இயங்கிய அமைப்புசாரா தொழில்துறையை முடமாக்கி விட்டு அதைப்பற்றி கவலைப்படாமல் தானியங்கி ஊர்தி துறையின் மீது அளவு மீறி அக்கறை படுவது அடாவடித்தனமாக இருக்கிறது, ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்திய வேலைவாய்ப்பில் ஐந்தில் நான்கு மடங்குக்கும் மேலாக பங்கினை அமைப்புசாரா துறைதான் வழங்குகிறது. இதிலிருந்து வேளாண்மைத் துறையை விலக்கிவிட்டு பார்த்தாலும் மீதமுள்ள வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு மடங்கிற்குக் கூடுதலான பங்கினை அமைப்புசாரா தொழில் துறை தான் வழங்குகிறது.

படிக்க:
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

நாம் அந்த 16 கோடி தொழிலாளர்களை பற்றி பேசுகிறோம். 2016-ம் ஆண்டுக்கு முன்னரே இந்த அமைப்பு சாரா தொழில் துறை பலவிதத்திலும் அடி வாங்கிக் கொண்டிருந்தது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் அத்துறைக்கு மரண அடி கொடுத்தன. இத்துறையில் வேலையிழப்பு என்பது பெரிதும் கண்ணுக்கு புலப்படாமல் நடக்கிறது. இங்கே முழுமையான வேலை இழப்புக்கு பதிலாக கொடூரமான வருவாய்ச் சரிவு ஏற்படுகிறது.

இருப்பினும், அமைப்புசாரா தொழில் துறையின் வேலை இழப்புகளைப் பற்றி மந்திரத்தில் மாங்காய்களாக புள்ளிவிவரங்களை வருவித்துக் கொண்டு, மஞ்சள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளை தருவித்துக் கொண்டு பேரம்பேச ஒரு அரசியல் தரகு கும்பல் இல்லை; நிதியமைச்சருடன் விவாதிக்க அமைப்புசாரா தொழிற்துறையின் பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பார்வை நேரம் ஏதும் ஒதுக்கி தரப்படுவதில்லை; பொருளாதார மந்தத்தில் அடியாழத்தில் அழுந்திக் கிடக்கும் வேண்டலை (demand) வெளிக்கொணர்ந்து துயருற்றிருக்கும் பல லட்சம் இந்திய உற்பத்தியாளர்களை காக்க, பாதாளக் கொத்துக் கரண்டி போல, ஒரு ஊக்க உதவித் தொகுப்பை அறிவிப்பதற்கு அந்த அம்மையார் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அவசர அழைப்பு ஏதும் விடுக்கப்போவதும் இல்லை.

*****

அடிக்குறிப்புகள் :

(1) கடந்த சில ஆண்டுகளில் நடந்த நுகர்வோர் வாகன விற்பனையில் சுமார் 30 சதவீதமும், வர்த்தக வாகன விற்பனையில் 55-60 சதவீதமும், இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 65 சதவீதமும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களின் மூலமே நடந்திருப்பதாக குறிப்பிடுகிறது ஐ.சி.ஆர்.ஏ எனும் பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம். ( How the NBFC crisis sent India’s automobile sector into a tailspin )

(2) ஆலைகள் குறித்த வருடாந்திர சர்வே (Annual Survey of Industries 2016-17) மூலம் கிடைக்கும் தரவுகளின் படி, வாகன உற்பத்தி, வாகனங்களின் வெளிப்புற கட்டுமானம், உதிரி பாகங்கள் தயாரிப்பு, இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் சக்கரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகின்றது. அதே போல் தேசிய மாதிரி சர்வேயின் 73-வது சுற்றின் மூலம் கிடைக்கும் தரவுகள், 2015-16 ஆண்டுக்கான ஒழுங்கமைக்கப்படாத உற்பத்தித் துறை குறித்த விவரங்களை அளிக்கிறது. அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத வாகன உற்பத்தித் துறையில் சுமார் 96,000க்கும் குறைவான தொழிலாளர்களே ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

(3) ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி ஆலைகள் வாகன உற்பத்தி மற்றும் அது சார்ந்த உப தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு ருபாய் 146,556 கோடி. ஒழுங்கமைக்கப்படாத வாகன உற்பத்திப் பட்டறைகள் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு 1509 கோடி. இது தேசிய மாதிரி சர்வேயின் 73ம் சுற்றில் (2015-16) இருந்து கிடைக்கும் விவரம். 2016-17ம் நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 152,53,714 கோடி – இதில் உற்பத்தித் துறையின் பங்கு 23,29,220 கோடி.

(4) Periodic Labour Force Survey, 2017-18.

(5) ”நேரடி வேலை வாய்ப்பு என்பது தொழிலாளர்களை வாகன உற்பத்தி மற்றும் உதிரி பாக உற்பத்தி ஆலைகள் பணிக்கு அமர்த்திக் கொள்வதாகும். மறைமுக வேலை வாய்ப்பு என்பது, வாகனக் கடன்கள் ஏற்பாடு செய்யும் நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகள், சேவை நிலையங்கள், உதிரிபாக டீலர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், டயர் தொழிற்சாலைகள், உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் வாகன உற்பத்திக்கு ஈடாக உண்டாகும் வேலை வாய்ப்புகள். – Automotive Mission Plan, 2006-2016.

(6) வாகன உற்பத்தித் துறை வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2018-19 நிதி ஆண்டில் வாகன விற்பனையைப் பொருத்தமட்டில் 34 லட்சம் கார்களும், 10 லட்சம் வர்த்தக வாகங்களும், 7 லட்சம் மூன்று சக்கர வாகங்களும், 2.12 கோடி இரு சக்கர வாகங்களும் விற்பனை ஆகியுள்ளன. Automobile Domestic Sales Trends

(7) தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வங்கியல்லாத நிதி நிறுவானங்கள் சந்திக்கும் நெருக்கடி நிலை தூண்டி விட்டது என்பதில் சந்தேகமில்லை. எனினும், நிதி நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடியும் கூட தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் பாதிப்புக்கு உட்பட்டது தான்.

(8) டாடா குழுமம் சுமார் 9,750 கோடி மென் கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனை 20 ஆண்டுகளில் 0.1 சதவீத வட்டியோடு திருப்பிச் செலுத்தினால் போதும். இதைத் தவிற அரசு தரப்பில் நான்கு வழிச் சாலை இணைப்பு, மின் கட்டண விலக்கு, பதிவுக் கட்டண விலக்கு மற்றும் நிலத்தை மாற்றுவதற்கான கட்டண தள்ளுபடி என டாடா நிறுவனம் சலுகைகள் பெற்றுள்ளது. மேலும், அரசு தரப்பில் கழிவு சேகரிப்பு மையம் ஒன்றும், அகமதாபாத் நகரத்திற்கு அருகே நூறு ஏக்கர் நிலமும், இயற்கை எரிவாயு இணைப்பும் டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. குஜராத் அரசு ஒவ்வொரு டாடா நானோ காருக்கும் சுமார் 60,000 ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குவதாக காங்கிரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. Modi’s offer to Tata: Rs 9,570-cr soft loan


தமிழாக்கம் : ரவி வர்மன்
மூலக்கட்டுரை : – RUPE India 

சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை

ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யுமிடம் சென்னை ரிச்சி தெரு. உலகின் அதிநவீன மின்னணுப் பொருட்கள் அனைத்தும் முதன்முதலில் தமிழகத்தில் நுழையும் இடமும் இதுவே.

இங்கு மின்னணுப் பொருட்கள் பழுது நீக்கும் சிறிய மற்றும் பெரிய கடைகள் ஏராளம். கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட கடைகளைக் காணலாம். வியாபாரம் மட்டுமின்றி, ஒவ்வொரு புதிய வரவையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அலசிப் பழுது நீக்கும் நிபுணர்களையும் பார்க்க முடியும். தமிழகத்தின் பலதரப்பட்ட மனிதர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அச்சாலையின் இருமருங்கிலும் கைப்பேசி கடைகள் இருப்பதைக் காணலாம். அதில் விற்பனையுடன் பழுதுநீக்கம் செய்வதும் உண்டு.

அவ்வீதியில் ‘மொபைல் விசன்’ என்ற கடையில் இளைஞர்கள், வயதானவர்கள் எனச் சிலர் தங்களது கைப்பேசிகளை கொடுப்பதும், வாங்கிச் செல்வதுமாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கைப்பேசிக்கும் ஓராயிரம் பிரச்சினைகள்: சவுண்ட் வரவில்லை, பிக்சர் மங்களாகத் தெரிகிறது, அதுவாகவே ஆஃப் ஆகிறது, ஓவர் ஸ்பீடாகிறது, ஃபோன் கான்டாக்ட் திடீரென காணவில்லை; முக்கியமான ஆஃப் இயங்கவில்லை; கீழே விழுந்து விட்டது; பாத் ரூமில் விழுந்து விட்டது; பேட்டரி நிற்கவில்லை; சார்ஜ் ஆகவில்லை… இப்படி பல புகார்களை சொல்லிச் செல்கின்றனர்.

கடை உரிமையாளர் முகம்மது உவைஸிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, தொழில் நிலவரத்தைக் கேட்டோம்.

“கம்பெனியில சாதாரணமான வேலை செய்வோர் மற்றும் சிறு வியாபாரிகளே இங்கு வருகின்றனர். கடையின் தோற்றத்திற்கு ஏற்ற மாதிரிதான் அதன் வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். பிரதான சாலைகளில் இருக்கும் பிரமாண்டமான கடைகளுக்கு முதல்தர கஸ்டமர்கள் போய் விடுவார்கள். எங்கள மாதி சிறு சந்துபொந்துகளில இருக்கிற கடைகளுக்கு பேரம் பேசும் வாடிக்கையாளர்களே வருவார்கள்.

‘மொபைல் விசன்’ கடை உரிமையாளர் முகம்மது உவைஸ்.

அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள், மிட் ரேஞ்ச் என்று சொல்லக்கூடிய ஃபோனைத்தான் பயன்படுத்துவார்கள். 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வாங்கியிருப்பார்கள். எம்.ஐ, சாம்சங், வைவோ, ஓப்போ, ஹானர் இதுதான் இப்போ மிட் ரேஞ்சில் டாப் பிராண்ட். ஒழுங்காக வைத்திருந்தால் ஓராண்டுக்கு பிரச்சினை இருக்காது. வாங்கியது மாதிரி தொடர்ச்சியாக பராமரிக்க மாட்டார்கள். கண்டபடி வைப்பது, குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுப்பது, ஓயாமல் அதை நோண்டுவது, மனைவி மீது இருக்கும் கோபத்தை அதன் மீது காட்டுவது, காதலர்கள்கிட்டே பிரச்சினை வரும்போது ஃபோனை விசிறி எறிவது… என்று அதன் ஆயுளை பாதியிலேயே முடித்து விடுவார்கள்.

படிக்க:
இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் !
♦ குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை

நாங்கள் பேட்டரி, டிஸ்ப்ளே மாற்றுவதற்கு 1,000-லிருந்து 1,200 வரை சார்ஜ் செய்வோம். சவுண்ட் வரவில்லை, ஆன் ஆகவில்லை, சூடாகிறது போன்ற பிரச்சினைகளுக்கு அதிகபட்சம் 500, 600 ரூபாயில் முடித்து விடுவோம்” என்றார்.

“ஃபோனில் பிராண்ட்டைத் தாண்டி, எதை முக்கியமாக வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்? புது ஃபோன் வாங்கும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?” என்றோம்.

கைப்பேசியில் என்ன பிரச்சினை எனப் பார்த்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பழுதுநீக்கி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.

“வயது, வயசுக்குத் தகுந்த மாதிரி அவர்களது தேவையும் மாறுது. இளைஞர்கள் கேமராவுக்கும், வியாபாரிகள் பளிச்சென தெரியும் ஸ்கிரீனுக்கும், மார்கெட்டிங் வேலை செய்றவங்க ஸ்பீடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இப்போ, 4 கேமரா ஃபோன், டிஎஃப்டி, அமோல்டு (Active-Matrix Organic Light-Emitting Diode) ஸ்கிரீன்; வெறும் ஸ்டீரியோவுக்கு பதில் டால்ஃபி ஸ்டீரியோ, 1 ஜிபி, 2 ஜிபி ரேம் போயி இப்போ 12, 24 ஜிபி ரேம் என்று பார்த்துப் பார்த்து பாக்கெட்டிற்குள் போடுவதற்குள் அடுத்த மாடல் வந்து விடுகிறது. எதை வாங்குவது, எதை விடுவது என்று தெரியாமல் குழம்பி வெறுத்துப் போகிறார்கள்.

இப்படி எத்தனை முறை ஃபோனை வாங்கினாலும் திருப்தியடையாமல் இல்லாத மாடலுக்காக ஏங்குகிறார்கள். கார்பென்டர், பிளம்பரை போல ஃபோனை, தேவைக்கான ஒரு டூலாக பார்க்காமல், பெண்கள் நகை வாங்குவது போல் வாங்குகிறார்கள்.

இன்னும் பெரிய அளவு செல்ஃபோனை வெளியில் தெரியும்படி வைத்துக்கொள்வதை சிலர் விரும்புகிறார்கள். அதிலும், நல்ல பிராண்டாக இருந்தால் கூடுதல் பெருமை அடைகிறார்கள். ஷேர் மார்கெட் பிசினெஸ், மெயில் அனுப்புறது, கஸ்டமர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புவது, பிசினெஸ் ஆர்டர் கேட்பது, மணி டிரான்ஸ்பர் செய்வது… இப்படி தேவையைக் கருதி ஒருசிலர்தான் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி 99 சதவீதம் பேர் பொழுதுபோக்குக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.

***

மதங்கள் கடந்து ஒன்றுசேர்ந்தோம் ! இப்போ, கடன்தான் மிச்சமிருக்கு !

தே தெருக் கோடியில், இன்னும் உட்புறமாக 5-க்கு 5 அடி அளவுள்ள சிறு கடையில் (கடை என்று சொல்ல முடியாது, கட்டிடத்தின் விரிவாக்கப்பட்ட தாழ்வாரப்பகுதி) வாடிக்கையாளரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பழைய கைப்பேசிகள் விற்பனை மற்றும் பழுது நீக்கம் செய்யும் கடைக்குச் சென்றோம். முகம் தெரியாத நம்மிடம், தொழிலில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து கொட்டினார்கள்.

பழைய கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தும் நியாமதுல்லா, உதயகுமார்.

“வாங்க, வாங்க… இப்பதான் தண்டல் பணத்தை எப்படி  அடைப்பது என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாங்க மூன்று பேரும் நண்பர்கள். பார்ட் டைமாக சேர்ந்தவர்கள், இப்போ முதலாளியாகி சிறு கடையை நடத்துகிறோம்.

முருகன், நியாமதுல்லா, உதயகுமார் – நாங்க மூன்று பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அதெல்லாம் எங்களுக்கு பிரச்சினையில்லை. இப்போ தொழில் நடக்கல என்பதுதான் ஒரே பிரச்சினை. நீங்களே பாருங்கள், அரை டஜனுக்கு மேல் தண்டல் நோட்டுகளை வைத்துக் கொண்டு எதைக் கட்டுவது, எதை நிறுத்துவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் சுயமாகக் கற்றுக் கொண்டு இந்தத் தொழிலுக்கு வந்தோம். பல வேலைகளில் மிச்சம் பிடித்தப் பணத்தில் சிறு தொகையை பங்காகப் போட்டு கடையை கூட்டாக நடத்திக் கொண்டிருக்கிறோம். பழைய ஃபோன் சர்வீஸ் செய்வது, விற்பது  என்று ஒன்றுசேர்ந்தோம். இப்போது கூட்டாக எங்களுக்குள் கடன்தான் மிச்சமிருக்கிறது.

நியாமதுல்லா, உதயகுமாரின் மற்றொரு பார்ட்னர் முருகன் (எ) டேனியல்.

மாதமாதம் கரண்ட் பில் கட்டுவதற்கே தண்டல் வாங்கும் நிலைக்கு வந்து விட்டோம். வியாபாரம் படுத்து போச்சு. இதிலிருந்து கூலியை எங்கே எடுப்பது? எங்க நெலமய வெளியே சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. குடும்பத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு வாங்கக் கூட கடன் வாங்க வேண்டியிருக்கு. இந்தச் சின்ன கடையக் கூட பளிச்சினு வச்சிக்க முடியல. வாடிக்கையாளர்கள், இது என்ன கடைன்னு கேவலமாகப் பார்த்துட்டுப் போறாங்க. கடையோட போர்டு வெளுத்துப்போச்சு, ஃப்ளெக்ஸ் அடிச்சு புதுசா ஒரு போர்டுகூட மாட்ட முடியல. கொறைஞ்சது ஆயிரமாவது வேணும்” என்றார் சீனியர் பார்ட்னர் நியமதுல்லா.

அவரது நண்பர் டேனியல் என்ற முருகன், “சார் எனக்கு 5-வது படிக்கிற சின்ன பொண்ணு ஒன்னு இருக்கு. முன்னெல்லாம் வாரத்துக்கு ஒருமுறை பீச், மால்னு கூட்டிப் போவேன். இப்ப பல மாதங்களாச்சு. “ஏம்பா வெளியிலேயே கூட்டிப்போக மாட்டேங்குறீங்க”ன்னு சொல்லி அழுவுது. என்னோட கஷ்டத்த எப்படிச் சொல்லி புரியவைப்பது?

படிக்க:
5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்
♦ கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?

இப்பல்லாம் குழந்தைய சமாளிக்கறதே பெரும் பிரச்சினையாயிருக்கு. முன்னெல்லாம் கடைய மூடிட்டு வீட்டுக்குப் போகும்போது குழைந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா, ஐஸ் கிரீம்னு வாங்கிப் போவேன். இப்ப அதைகூட செய்ய முடியல. கடைய சாத்திட்டு வீட்டுக்குப் போயி வெறுங்கையோட கொழந்தைய பார்க்குறதே கஷ்டமாயிருக்கு.

‘அம்மா நீ பொம்பள பொண்ணு, இனிமேல் சிக்கன் பக்கோடாவெல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது, ஒடம்புக்கு பிரச்சினையாகிடும்’ என்று சொல்ல வேண்டியிருக்கு” என்றார் வேதனைச் சிரிப்போடு.

“இந்த ஐநூறு ஆயிரம் ரூபா ஃபோன ஒன்னு விக்கிறதுக்குள்ளே தாவு தீர்ந்துடும். கஷ்டமர் ஆயிரம் கேள்வி கேக்குறான். லட்சம் ரூபா கொடுத்து ஆப்பிள் ஃபோன் வாங்குனாகூட இந்த கேள்விய கேக்கமாட்டாங்க” என்கிறார் பார்ட்னர் உதயகுமார்.

“இதோ எங்களுக்குத் தண்டல் கொடுக்கும் பைனான்சியர் வருகிறார். நீங்களே அவரிடம் எங்க கதையைக் கேளுங்கள்” என்றனர் கோரசாக.

***

தண்டல்காரர் ரவி

தண்டல்காரர் ரவி

“இவர்களுக்கு 8 வருசமாக தண்டல் கொடுக்கிறேன். ஆளுக்குத் தனித்தனியாக 80 ஆயிரம் வரை கொடுத்திருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லாம கட்டியிருக்காங்க. ஆனா, இப்போது அவர்கள் கடனைத் திருப்பித்தர திணறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு கடன் கொடுப்பதை குறைத்து விட்டேன்.

தற்சமயம் வெறும் 20 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்திருக்கிறேன். அதை திருப்பிக் கொடுப்பதற்கே முடியாமல், வெறுங்கையோடு அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் மேலும் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து ஏன் நெருக்கிப் பிடிக்க வேண்டும்? ஆதலால், கடன் சுமையை அவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. நீங்களே சொல்லுங்கள், நான் செய்தது நல்லதா, கெட்டதா” என்று நம்மைக் கேட்கிறார்.

அரை டஜனுக்கு மேல் தண்டல் நோட்டுகளை வைத்துக் கொண்டு எதைக் கட்டுவது, எதை நிறுத்துவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

“இப்படி கடனை வாங்கியவர்கள் சரியாக திருப்பிக் கொடுக்காததால், தண்டல் கட்டும் 30 பேரிலிருந்து 10 பேராக குறைந்து விட்டார்கள். வசூல் ஆனாதானே சார் மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும்” என்கிறார்.

***

50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்பொருள் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த  பழமையான ரிச்சி தெரு, இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. சிறு, நடுத்தர வியாபாரிகளும் தொழிலாளிகளும் தங்களது எதிர்காலம் இருண்டு விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பு கூட “எள்ளு போட்டால் கீழே விழாத..” அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்ட சென்னை ரிச்சி தெரு, இன்று வெறிச்சோடிக் காணப்படுகிறது.

சாலையின் இருமருங்கிலும் சந்து சந்தாக உள்ள கடைகளில் பெரும்பாலானவை மூடியே காணப்படுகின்றன.

மேலும் படங்களுக்கு : 

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் !

0
VPM-RSYF-Protest-Slider

திருவள்ளுவர் பல்கலைகழகம் திடீரென அறிவித்த தேர்வு கட்டண உயர்வை கண்டித்து பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் நாளாக அவர்களது போராட்டத்தை நேற்று நடத்தினர். அதன் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது நிர்வாகம்.

அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் கட்டண உயர்வைக் கண்டித்து போராடுவது என முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் 19.09.2019 அன்று  கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தபட்டது. கல்லூரி, நிர்வாக ரீதியாக எந்த பேச்சுவார்த்தைக்கும் வராததால் மாணவர்கள் அவர்களது கோரிக்கையை மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் திருவெண்ணெய் நல்லூர் – திருகோவிலூர் சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசு ஆய்வாளர் ஜெயலஷ்மி மாணவர்களின் கோரிக்கை என்ன என்பதை கேட்காமல், போராடுவதற்காக அங்கு கூடிய மாணவர்களை மிரட்ட ஆரம்பித்தார். “அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்..” என்று கூறினார். முன்னணியாக இருக்கக் கூடிய மாணவர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்து “உங்கள் வாழ்க்கை வீணாகி விடும்.. உங்கள் மீது வழக்கு போடுவேன்..” என்று  மிரட்டுவதன் மூலம் போலீஸ் தனது சதித்தனத்தை அரங்கேற்றத் தொடங்கியது.

போலீசின் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாமல், போர்க்குணத்தோடு மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் வெறுப்பான அதிரடிப் படையை சேர்ந்த புஷ்பராஜ் என்ற  காவலர், போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் விலங்கியல் மூன்றாம் ஆண்டு மாணவர் கவி நிலவனின் சட்டையை பிடித்து கிழித்த புஷ்பராஜ், ஒரு ரவுடியாகவே மாறி, மாணவர் கவி நிலவனைக் கீழே  தள்ளி தாக்க ஆரம்பித்தார்.

மாணவர் கவி நிலவன் (இடது) அவரைத் தாக்கிய போலீசு புஷ்பராஜ் (வலது படம்).

இதனை பார்த்த சக மாணவர்கள் ஆத்திரம் கொண்டு அந்தக் காவலரைக் கண்டித்து முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர். “முதலில் மாணவன் மீது கை வைத்த காவலர் மன்னிப்பு  கேட்க வேண்டும்…” அதன் பிறகுதான் களைந்து செல்வோம் என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

என்ன செய்வதென தெரியாமல் திக்குமுக்காடிய போலீசு அதன் பிறகு கல்லூரி முதல்வர்  சுரேஷ் அவர்களை வரவழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்தனர். கல்லூரி முதல்வர், “வரும் 20.09.2019 வெள்ளிக்கிழமை மாலை 5:00 வரைக்கும்  கால அவகாசம் கொடுங்கள்.. பல்கலைகழக நிர்வாகத்திடம் பேசி, கட்டணக் குறைப்பு குறித்து ஒரு தீர்வை சொல்கிறேன்…” என கூறினார்.

கல்லூரி முதல்வரின் வேண்டுகோளைத் தொடர்ந்து “கட்டணக் குறைப்பு செய்யவில்லை என்றால், தொடர் போராட்டத்தை நடத்துவோம்.” என்று மாணவர்கள் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டமானது தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

மேலும் போராடும் மாணவர்களை சட்ட விரோதமாகத் தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பு.மா.இ.மு சார்பில் அரசுக்கும் போலீசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.

படிக்க :
♦ 5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்
♦ பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

***

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு ! விருத்தாசலம் கல்லூரி மாணவர்களின் மூன்றாம் நாள் போராட்டம் !

விருத்தாச்சலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக கட்டண உயர்வை கண்டித்து, அதனை திரும்பப் பெறக் கோரி போராடி வருகின்றனர். இப்போராட்டத்தை மூன்றாம் நாளாக நேற்றும் (19.09.2019) தொடர்ந்தனர்.

அப்போது மாணவர் ஒருவர் “ஏற்கெனவே ஒரு பேப்பருக்கு முப்பது ரூபாய் இருந்த கட்டணத்தை 68 ரூபாய் என மாற்றினார்கள். இப்போது மீண்டும் 100 ரூபயாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர்.

இது போன்ற நடவடிக்கையை இனியும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனிமதித்தால் நாம் அரசு கல்லூரிகளில் படிக்க முடியாது. படிப்படியாக தனியார் கல்லூரிகளைப் போன்று மாறிவிடும்.. அதனால் இப்போதே இக்கட்டண உயர்வை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர். போராட்டமானது காலை, மாலை என இரு பாடவேளைகளிலும் நடத்தப்பட்டது. மேலும் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு: 97888 08110

நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?

மாமனிதர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்துக்களும் அவரது சிறப்பான மக்களுக்கான பங்களிப்பும் இன்றுவரை யாரிடமும் சரியாகப் போய் சேரவில்லை என்பது பெரும் மனக்குறையே. இந்தியாவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அத்துணை பேரும் அம்பேத்கரின் சேவைக்கு நன்றியும் நன்மதிப்பும் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அவரது இந்நூலில் ஆதிப்பழங்குடிகள் குற்றப் பரம்பரையினர் தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களைக் குறித்தும் அவற்றின் துயரங்கள் குறித்தும் பதிவு செய்கிறார். இந்து பார்பனிய நாகரிகமானது இம்மக்களை சமூக நிலையிலும் அரசியல் அதிகாரத்திலும் இழிவானதாகவும் அடிமைகள் போலவும் நடத்தி வருகிறது.

1931-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 8 கோடி மக்கள் அன்றைய நிலையில் இத்தகைய கொடுமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார். உலகெங்கிலும் நாகரிகமானது தனது இனம் நிறம் கொண்டிருந்த மேலாண்மையின் வேறுபாடும் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு ரோமானிய இனத்திற்கு ஜெர்மானிய இனமும், ஐரோப்பிய சில இனங்களும் காட்டுமிராண்டிகளாகத் தெரிவார்கள். ஐரோப்பியனுக்கு செவ்விந்திய குடிகள் நாகரிகமற்றவர்களாக தெரிவார்கள். அலெக்ஸ் ஏலி குறிப்பிடுவது போல ஒரு ஆப்பிரிக்க இளைஞனுக்கு தலைவன் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் முதலாவது எங்காவது அவித்த கோழியின் வாடை அடித்தால் கவனமாக இரு. அங்கே வெள்ளையன் ஒழிந்து கொண்டு இருப்பான். நம்மை பிடித்துக்கொண்டு போக என்று எச்சரிக்கை செய்கிறார்.

ஆப்பிரிக்கனை பொறுத்தமட்டில் வெள்ளையர்கள் காட்டுமிராண்டிகள். அங்குள்ள உருவமும் நிறமும் உருவாக்கிய வேறுபாட்டை சாதி என்னும் கொடுமையும் சேர்த்து கொடூர வகைப்பாட்டை கற்பிக்கிறது இந்து கலாச்சாராம் இந்தியாவில்.

புரிநூல் போடுவதாலும் சடங்குகள் செய்வதாலும் தான் கடவுளுக்கு மேலானவனாகி, சமூகத்தின் பெருந்திரள் மக்களை மிருகங்களை விட கேவலமாக பார்த்து, ஊருக்கு வெளியே தள்ளிவைத்து சட்டம் செய்து கொள்கிறான். இக் கொடூரத்தை தன் மதத்தின் புனித தன்மைக்காக என்றும் சொல்லிக் கொள்கிறான்.

பழங்குடிகள் தீண்டத்தகாதோரின் கலாச்சாரம், மொழி, உணவுப் பழக்கம் எல்லாம் இவர்களுக்கு தீட்டுக்களாகின்றன. இந்துத்துவத்தின் கொடூரம் அதோடு நிற்காது. ஊருக்கு வெளியே தள்ளிவைக்கும் குளத்தில் தண்ணீர் எடுக்க விடாது, உணவுக்கான வழியை அடைக்கும், வறுமையே என்றும் வாழ்க்கையாக்கும். எல்லா வழிகளையும் அடைத்து விட்டு, தங்களின் மதக் கலாச்சார நடமுறைக்கு வரத் தகுதியற்றவர்கள் என்று அநியாயவாதம் பேசி, எண்ணிக்கைகாக மட்டும் மதத்தில் வைத்துக் கொண்டு எல்லைக் கோடுகளை என்றைக்கும் வைக்கும்.

இந்தக் கொடுமை வடிவத்தை அம்பேத்கர் அவர்கள் உலகுக்கு எடுத்துக்காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை விழித்தெழச் செய்தார்.

இவர்கள் பெருமிதம் கொள்ளும் ஆன்மீக ஞானம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அம்பேத்கர் சுட்டிக்காட்டுவது போல இந்து நாகரிகத்தில் மெய்ஞ்ஞான குப்பையைத் தவிர வேறு இல்லை. அறிவியல் தொழில்நுட்பம் ஏதும் எல்லோரையும் சென்றடைந்ததாகவும் இல்லை.

அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தலைப்புகளை மட்டும் இத் தொகுப்பில் தந்திருக்கிறோம். “அம்பேத்கரை படித்தறிக”… (நூலின் பதிப்புரையிலிருந்து)

… சாதியின் அடிப்படை விதிகள் யாவை, சாதி என்பது எதில் அடங்கியுள்ளது என்ற கேள்விக்கு உறுதியான விடையளிப்பவை பிராயச்சித்தம் தொடர்பான விதிகளே. எந்த விதிகளை மீறினால் பிராயச்சித்தம் கிடையாதோ அவைதாம் சாதியின் ஆன்மா ஆகும். எவற்றை மீறுவதற்கு மிகக் கடுமையான பிராயச்சித்தம் செய்தாக வேண்டுமோ அவைதாம் சாதியின் உடலாகும். ஆகவே சாதிக்கு நான்கு அடிப்படை விதிகள் இருப்பதாகத் தயங்காது கூறலாம். (அ) இந்துச் சமயத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதும், (ஆ) திருமணம், (இ) உணவு, (ஈ) தொழில் ஆகியவை தொடர்பான குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்குக் கட்டுண்டிருப்பதுமான ஒரு சமூகக் குழுவே சாதி என்று இலக்கணம் கூறலாம். இத்தோடு தனித்தன்மையையும் சேர்த்துக் கொள்ளலாம், அதாவது தன்னை இனங்காட்டுகிற ஒரு பொதுப் பெயரைப் பெற்றுள்ள சமூகக் குழு எனலாம்.

திருமணத்தைப் பொறுத்தவரை அகமணம்தான், அதாவது சாதிக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் விதிமுறை. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே கலப்புத் திருமணம் கூடவே கூடாது. சாதியின் முழுக் கட்டமைப்புக்குமான முதற் கருத்து. மிக அடிப்படையான கருத்து இதுவே.

உணவைப் பொறுத்தவரை, ஒருவர் தன் சாதியைச் சேராத எவரிடமிருந்தும் உணவு பெற முடியாது, அவருடன் சேர்ந்துண்ண முடியாது என்பதே விதி. ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள்தான் சேர்ந்துண்ணவும் முடியும் என்பது இதன் பொருள். மண உறவு கொள்ள முடியாதவர்கள் சேர்ந்துண்ண முடியாது. அதாவது சாதி என்பது ஒரு அகமண அலகு மட்டுமன்று, அது ஒரு கூட்டுச் சமுதாய அலகுமாகும்.

தொழிலைப் பொறுத்தவரை, ஒருவர் தன் தன் சாதியின் பரம்பரைத் தொழிலைத்தான் செய்யவேண்டும்; சாதிக்குத் தொழிலேதும் இல்லையென்றால் தந்தையின் தொழிலைச் செய்து வரவேண்டும் என்பது விதி.

ஒருவரின் தகுநிலையைப் பொறுத்தவரை அது நிலையானது, வழிவழியாக வரப்பெறுவது. ஒருவரின் தகுநிலை அவர் சார்ந்த சாதியின் தகுநிலையால் நிர்ணயிக்கப்படுவதால் அவரது பெற்றோர் சார்ந்த சாதியின் முத்திரை குத்தப்பட்டு விடுவதால், அது வழிவழியாக வரப்பெறுவது என்கிறோம். ஓர் இந்து தன் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது என்பதால் தன் தகுநிலையையும் மாற்றிக் கொள்ள முடியாது. ஓர் இந்து ஒரு சாதியில் பிறக்கிறார், பிறந்த சாதியைச் சேர்ந்தவராகவே இறந்தும் போகிறார். ஓர் இந்து சாதியை இழந்தால் தன் தகுநிலையை இழக்கிறார். ஆனால் அவர் ஒரு புதிய அல்லது மேம்பட்ட அல்லது வேறான தகுநிலையை ஈட்ட முடியாது.

ஒரு சாதிக்கென்று ஒரு பொதுப்பெயர் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? அவசியமான இரு கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால் இந்த முக்கியத்துவம் தெளிவாகத் தெரியவரும். இந்த இரு கேள்விகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான விடை அளித்தல் சாதி என்னும் இந்நிறுவன ஏற்பாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள இன்றியமையாதது. சமூகக் குழுக்கள் ஒழுங்கமைந்தோ, ஒழுங்கமையாமலோ உள்ளன. குழுவில் உறுப்பினராய் இருப்பதும், குழுவில் சேருவதும், அதைவிட்டு வெளியேறுவதுமான நிகழ்வும் திட்டவட்டமான சமூக விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கும்போது, குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பாகக் குறிப்பிட்ட சில கடமைகளையும் உரிமைகளையும் அவசியப்படுத்தும்போது, அக்குழுவை ஒழுங்கமைந்த குழு எனலாம்.

ஒரு குழுவில் சேரும் உறுப்பினர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும், அக்குழு கூடி நிறைவேற்ற வேண்டிய நோக்கங்களையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு சேரும்போது, அது ஒரு விரும்பிச் சேர்ந்த குழுவாகும். இவற்றில் தனிப்பட்ட ஒருவர் தானாக விரும்பி எதையும் செய்யாமலே உறுப்பினராகி விடுகிறார், தன்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாத சமூக விதிமுறைகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் உட்பட்டவராகி விடுகிறார்.

சாதி என்பது மிகவும் ஒழுங்கமைந்த ஒரு சமூகக் குழுச்சேர்க்கை என்பது கூறாமல் விளங்கும். அது ஒரு தளர்வான அல்லது நிலையில்லாத அமைப்பன்று. இதேபோல் சாதி என்பது விரும்பிச் சேராத ஒரு குழுச்சேர்க்கை என்பதையும் சொல்லத் தேவையில்லை. எந்த இந்துவும் ஒரு சாதியில் பிறந்து அந்தச் சாதியைச் சேர்ந்தவராகவே இறக்கிறார். சாதியில்லாத இந்து எவரும் இல்லை. இந்துவால் சாதியிலிருந்து தப்பமுடியாது; பிறப்பிலிருந்து இறப்புவரை சாதிக்குக் கட்டுண்டிருப்பதால், அவர் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சாதிக்குரிய சமூகவிதிகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் உட்பட்டவராகிறார்.

ஒரு சாதிக்கென்று தனியாக ஒரு பெயர் இருப்பதன் முக்கியத்துவம் என்னவென்றால், இப்பெயர்தான் சாதியை ஒழுங்கமைந்த குழுச்சேர்க்கையாகவும் விரும்பிச் சேர்க்காத குழுச் சேர்க்கையாகவும் ஆக்குகிறது. ஒரு சாதிக்கென்று வேறுபட்டதொரு தனிப்பெயர் இருப்பது சாதியை நிரந்தர வாழ்வும் தனிக்கூறு எனும் முத்திரையும் கொண்ட தொழிற்கழகம் போன்றதாக்கிவிடுகிறது. தனித்தனிச் சாதிகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் இருப்பதன் முக்கியத்துவத்தைச் சாதி குறித்து எழுதிய எழுத்தாளர்கள் போதிய அளவுக்கு உணரவில்லை. ஆகவே, சாதிச் சமூகக் குழுக்களுக்குரிய ஒரு தனிச்சிறப்பான பண்புக்கூறு ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கிறது. இருந்தாக வேண்டும் என்பதை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டார்கள்.

பல நாடுகளிலும் இருக்கிற பல சமூகக் குழுக்களை இந்தியாவில் உள்ள பல்வேறு சாதிகளுக்கும் சமன்படுத்த முடியும்; இவற்றின் சமதையாகக் கருதவும் செய்யலாம். சமூகக் குழுக்கள் என்ற முறையில் மண்பாண்டம் செய்கிறவர்களும் சலவைத் தொழிலாளர்களும் அறிவாளர்களும் எங்கெங்கும் இருக்கிறார்கள். ஆனால் ஏனைய நாடுகளில் அவர்கள் ஒழுங்கமையாத, விரும்பிச் சேர்ந்த குழுக்களாகவே இருந்துள்ளார்கள்; இந்தியாவிலோ ஒழுங்கமைந்த, விரும்பிச் சேராத குழுக்கள் ஆகிவிட்டார்கள்; அதாவது சாதிகள் ஆகிவிட்டார்கள். வேறு நாடுகளில் இந்தச் சமூகக் குழுக்களுக்குப் பெயர் தரப்படவில்லை, இந்தியாவில் தரப்பட்டது என்பதே காரணம். சாதி சூடியுள்ள பெயர்தான் அதற்கு நிலைத்தன்மையும் தொடர்ச்சித் தன்மையும் தனித்தன்மையும் அளிக்கிறது. அதன் உறுப்பினர்கள் யார் என வரையறுப்பதே பெயர்தான். ஒரு சாதியிற் பிறந்தவர் பெரும்பாலும் தன் பெயருடன் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொள்கிறார்.

படிக்க:
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
உ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !

சாதியானது அதன் விதிமுறைகளையும் கட்டுப்பாட்டுகளையும் செயலாக்குவது பெயரால்தான் எளிதாகிறது. இது இரு வழிகளில் நடைபெறுகிறது. முதலாவதாக, தனிமனிதனின் துணைப் பெயராகிற சாதிப்பெயரானது, விதியை மீறுகிற எவரும் தான் வேறு சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லி ஏமாற்றிவிடாமலும், இவ்விதம் சாதியின் மேலுரிமையிலிருந்து தப்பி விடாமலும் தடுக்கிறது. இரண்டாவதாக, விதியை மீறும் தனி மனிதரையும் அவர் எந்தச் சாதியின் மேலுரிமைக்கு உட்பட்டவர் என்பதையும் அடையாளம் காட்டுவதற்கு அது பயன்படுகிறது; இவ்விதம் சாதி விதிமீறலுக்காக அவரைப் பிடித்துத் தண்டிப்பது எளிதாகிறது… (நூலிலிருந்து பக்.49-52)

நூல் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்

வெளியீடு : அங்குசம்,
புதிய எண் 39, பழைய எண்.15,
எழுத்துக்காரன் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019.
தொலைபேசி எண் : 94443 37384

பக்கங்கள்: 100
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | newbooklands

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம்


PP Letter headபத்திரிகை செய்தி

காவிரி நீர் கடைமடையில் பாயாமல் கொள்ளிடம் ஆறு மூலம் கடலில் கலப்பதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை.

டந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன்-12 ல் திறக்காததால் காவிரி டெல்டாவில் குறுவை பருவம் பொய்த்து போய்விட்டது. கனமழையால் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் 70 அடி இருக்கும் போதே தமிழக அரசு நீரை திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடி செய்தும், கடலில் வீணாவதை தடுத்தும் இருக்க முடியும்.

இந்த ஆண்டும் 35,000 கனஅடிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வீணாக கடலில் கலந்து வருகிறது. காவிரியின் கிளை ஆறுகளில் பாசனத்திற்கு நீரை திறந்திருந்தால் காய்ந்து கிடக்கும் கடைமடை பகுதி வரை பாய்ந்து ஏரி, குளம் நிரம்பி விவசாயம் செழித்து இருக்கும். மக்களுக்கு வேலைவாய்ப்பும், குடிநீர்- நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். கடந்தாண்டு உடைந்த மேலணை இதுவரை கட்டப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதே கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு என்ற கிராமம் அருகே கதவணை கட்ட 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இதுவரை கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகையில் சென்ற ஆண்டு தடுப்பணை கட்ட 110 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்ட அணையும் கட்டப்படவில்லை. இதனால் காவிரியின் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நிலக்கரி எடுக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் வளமான காவிரி டெல்டாவை அழிப்பதற்கு மத்திய அரசு மற்றும் வேதாந்தாவுடன், தமிழக அரசும் கூட்டு சேர்ந்து இந்த துரோகத்தை செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர் திறப்பதற்கு முன்பே பழுது பார்ப்பது, தூர்வார்தல், பாலம் கட்டுவதை செய்யாமல் தண்ணீர் திறந்துவிட்ட பின்பு செய்வதால் குறைந்தபட்ச தண்ணீர் கூட கடைமடைக்கு வராமல் தடுக்கின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி அரசையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

♦ கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டு!
♦ காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி!
♦ கடைமடை வரை நீரை உடனே பாய விடு!
♦ விவசாயத்திற்கான அனைத்து ஈடு பொருட்களையும் போர்க்கால அடிப்படையில் உடனே வழங்கு!

மக்கள் அதிகாரம்

***

காவிரி நீர் கடைமடைப்பகுதி வரை சென்று சேராததற்கு காரணமாக அமைந்துள்ள அரசின் அலட்சியம் – பொதுப்பணித்துறையில் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், மிக முக்கியமாக டெல்டா பகுதியை கார்ப்பரேட் கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாற்ற முயலும் அரசின் சதியை அம்பலப்படுத்தும் வகையிலும் கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காயும் கடைமடை விவசாயத்திற்கு தண்ணீர் விடாததை கண்டித்தும்!
திருவாலி – பெருந்தோட்டம் ஏரிகளை நிரப்பக்கோரியும்!
பாசன அமைப்புகளை சீர் செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும்- பொதுப்பணித்துறையை கண்டித்தும்!
கொள்ளிடத்தில் வீணாக வடியும் தண்ணீரை சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக தடுப்பணை கட்ட கோரியும்!
2018-2019 பயிர்காப்பிட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும்!

கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

தோழர் அ.சீனிவாசன், நாகை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.

”பொதுப்பணித்துறை என்பது பொறுப்பான துறை தான். தற்போது பொறுப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் பங்கு பிரித்து  கொடுப்பது என்பதில் மிகவும் சிறப்பாக தான் செய்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக நகரத்தில் தான் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது என்று நினைத்திருந்தோம். ஆனால், கிராமங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் சென்று தான் நல்ல தண்ணீர் கொண்டு வரும் நிலை சீர்காழி வட்டாரங்களில் உள்ளது. இன்று ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தினால் காவிரி டெல்டா பாலைவனமாகும் அபாயம் உள்ளது. இப்பெரும்பிரச்சனையை பற்றிப் பேசாமல் இந்தியா முழுவதும் இந்தியை திணிக்கின்ற வேலையில் இறங்கியிருக்கின்றது மத்திய அரசு. குளு குளு அறையில் உட்கார்ந்துக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகள் எப்படித் தெரியும். தமிழக அரசு பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதே காவிரி தண்ணீரை திறந்து விடும். ஆனால், அது மழைநீரா? இல்லை காவிரி நீரா? எனத் தெரியாது. இந்தாண்டு நான் காவிரி நீரை ஏ- பிரிவு வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்காலில் மட்டும் பார்த்தேன். மற்ற வாய்க்காலில் எங்கும் பார்க்க முடியவில்லை. பார்த்த நீரை கூட எங்களால் அனுபவிக்க முடியவில்லை. சீர்காழி பகுதிக்குட்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் சேர்ந்து செய்வோம். எங்கள் மாநில செயலாளர் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார். தற்போது இருக்கும் அரசாங்கம் இதைச் செய்யாது.”

தோழர் த. ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி.

”பொதுப்பணித்துறையில் நிறைய அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களின் வேலை குடிக்கத் தண்ணீர் கொடுக்கனும், விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கனும், வாய்க்காலை தூர்வாரனும், தடுப்பணை கட்டனும் இதுதான் அவர்களின் வேலை. ஆனால், தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியும் ஏன் இவ்வளவு நாள் தடுப்பனை கட்டவில்லை என அரசிடம் கேட்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தகுதியில்லையா? அறிவில்லையா? வெட்டிய வாய்க்காலில் ஏன் தண்ணீர் வரவில்லை என அதிகாரி பார்க்கனுமா? பார்க்கக் கூடாதா? இப்படி எந்த வேலைகளையும் எதையும் செய்வது இல்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முக்கியமான நோக்கம் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது தான். ஒரு வேலையை வருங்கால தேவைக்காக முன் கூட்டியே திட்டமிட்டு செய்வதற்கு தான் பொதுப்பணித்துறை. இன்று தண்ணீர் வந்த பிறகு அறைகுறையாக தூர்வாரி கணக்கைக் காட்டி கொள்ளையடித்து விடுகிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பொதுப்பணித்துறை சட்டையை என்றைக்கு பிடித்து கேள்வி கேட்கிறோமோ அன்று தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும், விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கும், சாப்பிட உணவு கிடைக்கும்”

தோழர் வீரராஜ், ஒன்றிய செயலாளர். த.வி.ச.

”பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட்டதாக கூறியிருக்கிறது. ஆனால், எந்த வயலிலும் தண்ணீர் இல்லை. ஏ- பிரிவு வாய்க்காலில் மட்டும் தான் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். மக்களிடம் பொய்க் கூறி மக்களை நம்ப வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கூறுவதற்கு கூட போலிசே தடுக்கின்றது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடத்தையே ஒதுக்கித் தரவில்லை. நாங்களே ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஏற்பாடு செய்து கொண்டு நடத்தும் அவல நிலைதான் இன்று இருந்தது. இது போல நடைமுறையை மீண்டும் கடைபிடித்தால் போலிசைக் கண்டித்துத்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியிருக்கும்.”

படிக்க:
கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

மேலும், தோழர் ப.வ. பெரியார் செல்வம், மாவட்ட செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்; தோழர் சி.வி.ஆர். ஜீவானந்தம் மாவட்ட செயற்குழு, சி.பி.ஐ.எம்; தோழர் கி. வரதராசன், ஒன்றிய வி.ச. செயலாளர், சி.பி.ஐ., மற்றும் தோழர் எஸ். மேகலா, மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாதர் சங்கம், நாகை மாவட்டம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் செல்லப்பன் நன்றியுறை கூறினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 01

பள்ளி நாளின் முழு இசைக் குறியீடு (122-வது நாள்) இசையும் ஆசிரியரியலும்

ன்றாடம் காலை நான் பள்ளிக்குச் செல்லும்போது புதிய பள்ளி நாளுக்கான திட்டத்தை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். முதல் நாள் இரவு இதை நான் தயாரிப்பேன். முந்தைய நாட்களை நன்கு சீர்தூக்கிப் பார்த்து விட்டு, பின் எனது சின்னஞ்சிறு மாணவர்களின் அடுத்த தினத்தை எனக்கே உரித்தான போதனை நயங்களுடன் நான் கற்பனையில் பார்ப்பேன். ஒவ்வொரு பள்ளி நாளையும் பற்றிய இந்த சிம்பனி இசை என் காதுகளில் இனிமையாக ஒலிக்கிறது. நாள் பூராவும் நான் குழந்தைகளுடன் எப்படிக் கலந்து பழகப் போகிறேன் என்பதும் அவர்களுடைய பள்ளி வாழ்வின் காட்சிகளும் என் மனக் கண்ணில் நிழலாடுகின்றன.

இதற்கெல்லாம் என்னை நானே தயார்படுத்திக் கொள்ளும்போது நான் மிகவும் ஒன்றிப் போவதால், யதார்த்தத்தில் இவற்றைச் சந்திக்கும் போது ஏதோ நன்கு பழக்கமானவற்றைச் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால் உறுதியோடு செயல்படுகிறேன். இந்த யதார்த்தத்தை எனது ஆசிரியரியல் எண்ணங்களைச் செயல்படுத்தும் களமாக நான் கருதுவதால் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, உற்சாகமாகக் கலந்து பழகுகிறேன். இந்த யதார்த்தம் மானுட மனதை மேம்படுத்தப் போவதாக நான் கருதுவதால் முழுப் பொறுப்புணர்வோடு செயல்படுகிறேன்.

அடுத்த பள்ளி நாளைத் திட்டமிடுகையில் பார்க்கும் போது, என் வகுப்புக் குழந்தைகள் பெரியவர்களாகும் நிகழ்ச்சிப் போக்கை, அறிவையும் ஒழுக்க அடிப்படைகளையும் கற்கும் பொருட்டு இவர்கள் முன்னோக்கி நடைபோடுவதை என் மனக் கண்ணில் காண விரும்புகிறேன். எனது போதனை முறையை நாளைய தினத்தின் ஊடாகப் பார்த்து, இதைப் புதுப்பிக்கவும் அதன் மூலம் என்னை நானே புதுப்பித்துக் கொள்ளவும், கடந்த காலத்திலிருந்து அல்லாமல் எதிர்காலத்திலிருந்து என் வகுப்பறையில் நுழையவும் நான் விரும்புகிறேன். நான் அடிக்கடி ஆசிரியரை எதிர்கால மனிதனாகத் தான் பார்க்கிறேன்.

தன்னால் எவற்றையெல்லாம் இனி அடைய முடியாதோ அவற்றை நோக்கி தன் மாணவர்களைத் தள்ளுபவர் உண்மையான நவீன ஆசிரியர் அல்ல. தன் மாணவர்களை ஊக்குவித்து எதிர்காலத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, எதிர்கால இலட்சியங்களை நிலைநாட்ட இவர்களுக்குச் சொல்லித் தருவதற்காக அந்த எதிர்காலத்திலிருந்து “வந்தவர் தான்” உண்மையான நவீன ஆசிரியர் – என்று எனக்குத் தோன்றுகிறது.

கல்வி – வளர்ப்புப் பணியின் அன்றாட திட்டத்தை நான் ஏன் முழு இசைக்குறியீடு என்கிறேன்? இசை அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வார்த்தை எனக்குப் பிடித்துள்ளதாலா?

ஆம், இச்சொல்லும் இதன் உள்ளடக்கமும் எனக்குப் பிடித்துள்ளது. ஒரு இசைக் குழு, பாட்டிசைக் குழு, வாத்திய இசைக் குழுவிற்கான இசை படைப்பின் எல்லா பாத்திரங்கள் அல்லது குரல்களுக்காகவும் எழுதப்பட்ட முழுப் பதிவை இது குறிக்கிறது. குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு கல்வி சொல்லித் தருவதற்கான எல்லா அவசியமான, சாத்தியமான விஷயங்களின் பதிவையும் நான் பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டில் பார்க்கிறேன். இவ்விஷயங்களை நிறைவேற்றும் கலையை, திறமையை நான் இதில் பார்க்கிறேன்; இதையும் இசையுலகச் சொற்களால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தலாம்.

கேள்வி கேட்பது, விளக்குவது, மனதில் பதியச் செய்வது, வீட்டு வேலை தருவது என்ற வழக்கமான பாணியில் நான் பாட திட்டங்களைத் தீட்டி வந்த எனது பழைய நடைமுறையை நினைத்து இப்போது வியப்படைகிறேன், மேற்கூறிய அம்சங்கள் ஒவ்வொன்றிற்காகவும் ஒரு சில கேள்விகளையும் வேலைகளையும் நான் யோசித்து வைப்பது வழக்கம். இதில் சிக்கலானது ஒன்றுமேயில்லையென பெரும்பாலும் நம்பினேன். பாடம் நடக்கும் போதே உள்ள நிலவரத்தைக் கொண்டு அங்கேயே நேரடியாகக் கூடுதல் கேள்விகளையும் மற்ற வேலைகளையும் என்னால் சிந்தித்துக் கேட்க முடியாதா என்ன? உண்மையைச் சொன்னால், இத்தகைய மேற்போக்கான திட்டங்களுக்குக் கூட நான் எதிராக இருந்தேன்: “இவையெல்லாம் எனக்கு எதற்கு? இவையெல்லாம் சம்பிரதாயமாயிற்றே! பூர்வாங்கத் தயாரிப்பின்றி ஆரம்ப வகுப்புகளில் எந்த ஆசிரியரால் பாடம் நடத்த முடியாது!”

ஆசிரியரியலில் எளிய விஷயங்களே கிடையாது என்று குழந்தைகளும் பள்ளி வாழ்க்கையும் எனக்குச் சொல்லித் தரும் வரை நான் இப்படி நினைத்தேன். குழந்தைகள் எனது ஆசிரியர்கள். அவர்களுடன் கலந்து பழகுவது எவ்வளது சிக்கலானது என்று பல ஆண்டுகள் அவர்கள் எனக்குப் பொறுமையாகச் சொல்லித் தந்தனர். அவர்களை வளர்ப்பது எளிதாக வேண்டுமெனில், ஒவ்வொரு பள்ளி நாளையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமெனில், எனது முயற்சிகள் நல்ல பயன்களைத் தர வேண்டுமெனில் நாளைய தினத்தை நான் முன் கூட்டியே திட்டமிட வேண்டும், இயன்ற அளவு தெட்டத் தெளிவாக, செயல் முனைப்போடு இதற்குத் தயாராக வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

ஆனால் இது மட்டும் போதாது. இதையெல்லாம் எப்படி நடைமுறையில் நிறைவேற்றுவது என்பதைப் பற்றியும் முன் கூட்டியே தீவிரமாகச் சிந்திக்க வேண்டும், ஏனெனில் குழந்தைகள் தாம் கற்றுக் கொள்ளும் விஷயங்களை, இவ்வாறு புதியவற்றை அறிவதை, தம் ஆசிரியரை எப்படி அணுகுகின்றனர் என்பது மேற்கூறியதைப் பொறுத்துள்ளது. விஷயங்கள் எவ்வளவு சுவாரசியமானவையாகவும் முக்கியமானவையாகவும் இருந்தாலும் இவற்றைக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருகின்றோம் என்பது பெரிதும் முக்கியமானது. ஆசிரியர் குழந்தைகளை நேசிப்பது மட்டும் போதாது, இந்த நேசத்தை வெளிப்படுத்தத் தெரிந்தவராயும் அவர் இருக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு வேண்டும். குழந்தை வளர்ப்புக் கலை, கல்வி போதிக்கும் கலை பற்றிச் சிந்திக்க வேண்டும். இதைப் பற்றி நேரடியாக பாடத்தின் போது சிந்திப்பதானது பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஒரு கலைஞன் ரசிகர்களின் முன் மேடையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால் எப்படியிருக்குமோ அதே போல் இருக்கும். பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டில் அன்றைய தினத்திற்கான திட்டம் மட்டும் அடங்கியிருக்கவில்லை, குழந்தைகளின் மீது எப்படி அக்கறை செலுத்துவது, அவர்களுக்கு எப்படி சந்தோஷத்தை அளிப்பது, எனது ஆசிரியர் வாழ்க்கையில் நான் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய எண்ணங்களும் இவற்றில் அடங்கியுள்ளன.

இசையும் குழந்தை வளர்ப்பும்! இசையும் கல்வி போதனையும்! இங்கே இசை எதற்கு?

ஆம், இசைத் தத்துவத்தால், குழந்தை வளர்ப்புத் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் மனிதாபிமான சாரத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்க முடியும். பள்ளி வாழ்க்கையை, குழந்தைகளுக்கு புத்தி சொல்லிக் கொடுப்பதற்காக ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நடக்கும் முடிவற்ற போராட்டமாகப் பார்க்காமல் நேர்மையான மனதையும் மென்மையான இதயத்தையும் படைக்கும் மாபெரும் இசைப் படைப்பாக ஏன் பார்க்கக் கூடாது? இந்த இசை பெரும்பாலும் ஓங்கியும் சில சமயங்களில் சுருதி தாழ்ந்தும் ஒலிக்கும், சோகமும் சில நேரங்களில் தலை தூக்கும். ஆனால் இந்த இசை கண்டிப்பான, அதிகாரத் தொனியிலான, பதட்டமான, எரிச்சலூட்டக் கூடிய, முரட்டுத்தனமான இசையாக இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட தன்மைகள் இசைக்குத் தேவையே இல்லை, ஆசிரியரியலுக்கும் இவை அவசியமில்லை .

இசை மானுட மனதில் உள்ள மனிதாபிமானத்தின் அடிப்படை. பள்ளி நாளின் முழு இசைக் குறியீடுகளுடன் குழந்தைகளை நோக்கிச் செல்லும் ஆசிரியர், இந்த இசையைக் கேட்கும் போது, குழந்தை வளர்ப்பு எனும் மந்திரக் கோலோடு தான் நிற்பதைக் கற்பனை செய்து பார்க்கையில், தன்னைத் தானே குழந்தைகளுக்கு அர்ப்பணித்துள்ளதில் தான் குழந்தை வளர்ப்பின் ரகசியம் உள்ளது என்று நம்பும் போது – இதை விட ஆசிரியருக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது.

ஒரு ஆசிரியர் தீய எண்ணங்களோடு பள்ளிக்குச் செல்லாமலிருப்பது நல்லது, அப்போது தான் குழந்தைகளின் மனதைப் பாழ்படுத்தாமலிருக்கலாம்; தெளிவான இலட்சியங்களும் வளர்ப்பு எண்ணங்களும் இல்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது நல்லது, அப்போது தான் மலைப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் விஷயங்களைக் குழந்தைகள் மீது திணிக்காமல் இருக்கலாம்; நேற்றைய தினத்திலிருந்து, தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளாமல் பள்ளியினுள் நுழையாமலிருப்பது நல்லது, அப்போது தான் சலிப்பையும் ஒரே மாதிரியான அலுப்பேற்படுத்தும் தன்மையையும் விட்டொழிக்க முடியும்; ஆசிரியரியல் மீது நம்பிக்கையின்றி குழந்தைகளிடம் வராமலிருப்பது நல்லது, அப்போதுதான் தம் மீதும் தம் ஆசிரியர் மீதும் உறுதியின்மையை அவர்கள் மனதில் விதைக்காமலிருக்கலாம். இதெல்லாம் நல்லது, ஏனெனில் ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையின் துவக்கத்தில் நிற்கிறார், தன் சொந்தக் கரங்களால், தன் நடவடிக்கையால் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை இடுகிறார். உற்சாகம், உறுதி, அர்ப்பணிப்பு இல்லாமல் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை அமைக்க முடியாது.

படிக்க:
ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !

நான் பாடவேளைகளுக்கு மட்டுமின்றி, பள்ளி நாள் முழுவதற்குமான முழு இசைக் குறியீட்டை உருவாக்குவதையே விரும்புகிறேன். பாடங்கள் தான் பள்ளி நாளின் அடிப்படை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் குழந்தைகள் பாடங்களுக்காக மட்டுமே பள்ளிக்கு வரவில்லை என்பது தெளிவு. இவர்கள் இடைவேளைகளுக்காகவும், பள்ளியில் தங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதியவற்றிற்காகவும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஆசிரியரைச் சந்திக்கவும், பொதுவில் சுவாரசியமான பள்ளி விஷயங்களுக்காகவும் பள்ளிக்கு வருகின்றனர். பாடவேளைகளில் மட்டுமின்றி பள்ளி வாழ்க்கைச் சூழல் முழுமையாலும் பள்ளியில் கலந்து பழகுவதாலும் பள்ளி விஷயங்களாலும் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்

0

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் !

”கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளி படிப்பில் இருந்து விரட்டவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !. இந்த அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும்.” என்ற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 18.09.2019 அன்று மாலை 5:30 மணியளவில் கரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் நல கட்சி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் குணசேகரன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சிவா, வழக்கறிஞர் தோழர் முருகேசன் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தோழர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

படிக்க:
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் காவிரி நாடன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர் தாமரைக்கண்ணன் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சமயத்தில் மழை பெய்தபோதும் வந்திருந்த பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என யாரும் கலைந்து செல்லாமல் இருந்து கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு : 96298 86351.

ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

மோடியின் ஆட்சியில் இந்தியா இதுவரை சந்தித்திராத பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. என்னதான் மோடி அரசும் நிர்மலா சீதாராமனும் அதை மறுத்தாலும் களநிலவரம் இந்த பொருளாதார வீழ்ச்சியை உறுதி செய்கி்றது.

இருசக்கர மற்றும் வணிக வாகன விற்பனையாளர்கள் இருவர் தங்களது அனுபவங்களைப் பகிர்கின்றனர் ..

பாருங்கள் ! பகிருங்கள் !

கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி

கேள்வி: //பெரியாரை நான் படித்தாலும் சாதிய வாழ்வியல் உள்ள இந்த சமூகத்தில் எப்படி அதை கடந்து வருவது?//

– வினோத்குமார்

ன்புள்ள வினோத் குமார்,

சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் சாதியத்தை துறப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன.

  • ஒன்று – சாதி – தீண்டாமை மறுப்பு மணம் செய்வது.
  • இரண்டு – குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதமற்றவர்களாக பதிவு செய்வது.
  • மூன்று – சாதி – தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதர அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது.

Thanthai Periyar memories

இம்மூன்றையும் செய்யும்போது சொந்தபந்தங்கள், குடும்பத்தினர் தடுப்பார்கள் அல்லது ஊக்கமிழக்கச் செய்வார்கள். அதில் உறுதியாக இருப்பது நம்முடைய தெரிவு. இத்தகைய போராட்டங்களைச் சொந்த வாழ்வில் உறுதியாகச் செய்யும் போது மட்டுமே நம் அகநிலை வலுப்படும்.

பெரியார், அவர் காலத்தில் ஏராளமான சாதி – தீண்டாமை மறுப்பு மணங்களையும், கைம்பெண்கள் மறுமணங்களையும் செய்து வைப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றார். அதே போன்று தனது குடும்பத்து பெண்களையும் தான் கலந்து கொள்ளும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடச் செய்தார். நாமும் அவ்வழியில் பயணிக்க வேண்டும்.

முதல்பார்வையில் இது ஏதோ நாம் தியாகம் செய்து இந்த சமூக மாற்றத்திற்கு பயன்படுகிறோம் என்று பிழையாக தோன்றும். உண்மையில் சாதிய வாழ்வை வாழ்வதுதான் மிகப்பெரிய சுமை! அதைத் துறப்பது உண்மையில் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருமென்பதும் உண்மை.

♦ ♦ ♦

கேள்வி: //தமிழ்நாட்டில் எதிர் காலத்தில் கல்வியில் எவ்வித மாற்றம் நிகழும் என எண்ணுகிறீர்கள்?//

– சுதாகர்

ன்புள்ள சுதாகர்,

அரசு பள்ளி – கல்லூரிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மேலும் நலிந்து போகும். இப்போதே அங்கு ஆதரவற்றவர்கள், வறிய ஏழைகள், வேறு வழியின்றி தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருந்தால் பெண் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு ஆண் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். தனியார் பள்ளியும், ஆங்கில வழிக் கல்வியும்தான் தரம் என்பது நூற்றுக்கு நூறு மக்களிடம் மாற்றமுடியாத மூட நம்பிக்கையாக நிலைபதிந்து விட்டது. அதற்கு அடிப்படையாக கல்வியில் தனியார்மயத்தை அரசு உறுதிப்படுத்தி விட்டது.

உயர்கல்வியை எடுத்துக் கொண்டால் பொறியியல் கல்லூரிகளின் காலி இடம் அதிகரிக்கும். அங்கு படிப்போரும் வேலையின்றி கிடைத்த வேலையைச் செய்வது என்ற போக்கு அதிகரிக்கும். வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரிக்கும். நீட் தேர்வினால் பெரும்பாலும் வசதி உள்ளவர்களே மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

இதைத்தாண்டி செல்பேசி, வாட்ஸ் அப் காலத்தில் கல்வியும் அறிவும் தனது ஒளியை இழந்து நம்மை தக்கை மனிதர்களாக மாற்றும். மண், மனிதர்கள், சூழல், தேவை சார்ந்த கல்வி போய் வேலை, தொழில்நுட்பம், கிராக்கி கொண்டதாக மாறிக் கொண்டே இருக்கும். உலகமயம் தனது தேவையை ஒட்டிய கல்வியை திணித்து அதில் பல்லாயிரம் பேரை காசிழக்கச் செய்வதோடு படிக்கச் செய்து அதிலிருந்து சில நூறு பேர்களை மட்டும் பணியில் அமர்த்தும்.

படிக்க :
♦ கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

ஐஐடி – ஐஐஎம் போன்ற அதி உயர் கல்விக்கான வசதிகளை மட்டும் அரசு செய்து தரும். அங்கே படிப்போர் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதி உயர் சிந்தனையாளர் குழாமில் சேருவார்கள். புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் பட்சத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிப் போக்கு முன்னிலும் வீரியமாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதே நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் மேற்கண்ட எதிர்மறைச் சூழலை மாற்றுமா, புதிய சமூகத்தை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இயற்கையின் இயக்கத்தையும், மனித குல வரலாற்றையும், இயக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்வி காசுக்கேற்ற பண்டமாக மாற்றப்படுகிறது. இதை எதிர்த்த அரசியல் கல்வியே இன்றைய காலத்தில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வியாக இருக்கிறது.

♦ ♦ ♦

கேள்வி: //சமூக வலை தளங்களில் நாம் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு, சங்கிகள் மிரட்டும் போது அவர்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது?

நன்றி.//

– துழாயன்

ன்புள்ள துழாயன்,

சங்கிகளின் மிரட்டலுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து தரவுகள், உண்மைகள், புள்ளிவிவரங்கள் சார்ந்து அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அவர்களே மறுக்க முடியாதபடி நமது பிரச்சாரம் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் பின்வாங்கி தற்காப்பு நிலைக்கு போய்விடுகிறார்கள்.

Nirmala-Sitharaman-Economy-Cartoon-Slider“ஓலா, உபர் டாக்சி சேவைகளை அதிகம் இளைஞர்கள் பயன்படுத்துவதால் கார்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருக்கிறது” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் எதிர்வினையாற்றி வைரலாக்கினர். இத்தகைய சூழலில் சங்கிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்கள். இது தொடர்பாக தோழர் வில்லவன் அழகாக எதிர்வினையாற்றிருந்தார். பொருத்தம் கருதி அதை இங்கே இணைக்கிறோம்.

கார் விற்பனை குறைந்தது ஏன்?
எல்லாரும் ஓலால போறாங்க.

அப்ப ஓலா வருமானம் ஏன் குறையுது?
எல்லாரும் ஒர்க் ஃபிரம் ஹோம் எடுக்குறாங்க.

வேலைவாய்ப்பு ஏன் குறையுது?
மக்கள் சோம்பேறி ஆயிட்டங்க, அதான்.

ஆடை விற்பனை ஏன் குறையுது?
எல்லாரும் கைலி, நைட்டியோட வெளிய வந்துடறாங்க.

ஏன் மக்கள் புது ஜட்டிகூட வாங்கறது இல்ல?
பழைய ஐந்தாண்டு கால ஆட்சியில நாடு ரொம்ப சுபிட்சமாக இருந்தால அப்போ வாங்கின ராசியான ஜட்டிய யாரும் மாத்த விரும்பல.

விவசாய உற்பத்தி ஏன் குறைஞ்சுடுச்சி?
மக்கள் பேலியோவுக்கு மாறுவாங்களா இருக்கும்.

புதிய வீடுகள் ஏன் விற்பதில்லை?
அப்போ எல்லாத்துக்கும் வீடு ஏற்கனவே கிடைச்சிருக்குமா இருக்கும்.

ஏற்றுமதி சரிவு?
தனக்கு மிஞ்சிதான் தானம் என மக்கள் நினைத்துவிட்டார்கள்.

அதானி அம்பானி தவிர நாட்டுல யாருக்குமே வருமானம் கூடலையே?
அல்ஃபாபேட்டிக்கல் ஆடர்ல அவங்க முதல்ல வர்றாங்க. மத்தவங்களுக்கு பொறுமையா கிடைக்கும்.

நாட்டுல பசி பட்டினி ரொம்ப அதிகமாயிருக்கு…
சாரி பசி பட்டினி பத்தி பேச நான் டாக்டர் இல்ல. என்கிட்ட பொருளாதாரம் பத்தி மட்டும் கேளுங்க.

-நிருபர் தற்கொலை – பேட்டி நிறைவு.

♦ ♦ ♦

கேள்வி: //தமிழகத்தில் இளைஞர்கள் சாதரணமாக ரோட்டு ஓர தள்ளுவண்டி கடைகளில் பீஃப் வருவல் சாப்பிடுகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் சாத்தியமில்லலை. ஒரு மனிதனின் மனநிலையை புறச்சூழல் அல்லது சூழ்நிலை தீர்மானிக்கிறதா?//

– வேழவேந்தன்

ன்புள்ள வேழவேந்தன்,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரூப்ஸா சக்ரவர்த்தி ஒரு பெண் பத்திரிகையாளர். பார்ப்பனராக பிறந்திருந்தாலும் மேற்கு வங்க பண்பாட்டுப்படி அவர் இறைச்சி உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடக் கூடியவர். குஜராத்தில் பணி நிமித்தமாக செல்பவருக்கு அங்கே சென்ற பிறகே இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு வீடே கிடையாது என்ற உண்மை தெரிய வருகிறது.

பிறகு தான் சைவம் என்றொரு பொய்யைச் சொல்லி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வீடு வாடகைக்கு பிடிக்கிறார். அசைவம் சாப்பட வேண்டுமென்றால் அகமதாபாத்தில் உள்ள முசுலீம்கள் பகுதிக்கு சென்று உணவகங்களில் சாப்பிடுகிறார். அவருடைய அனுபவத்தை கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பசுப்படுகை மாநிலங்களில் அசைவம் சாப்பிடுவதையே குற்றமென்பதாக வைத்திருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் கணிசமான ஆதிக்க சாதிகளின் பண்பாட்டில் சைவம் இருந்தாலும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அதில் தலித்துக்கள், முசுலீம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் அசைவ உணவைச் சாப்பிடக்கூடியவர்கள்தான். இதை வைத்து இந்தியாவில் சைவம்தான் முதன்மையானது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது அது உண்மையல்ல.

♦ Most Indians are non-vegetarian, Southern and Northeastern states top the list: Report

இந்தியா ஸ்பெண்ட் இணையதளத்தின் ஆய்வுப்படி 80% ஆண்களும், 42.8% பெண்களும் இந்திய அளவில் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியா, வடகிழக்கு இந்தியாவில் ஆகப் பெரும்பான்மையினர் அசைவத்தையும், வட இந்தியாவில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கிறார்கள். பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் மட்டும் ஆண்களும், பெண்களும் பத்து சதவீத அளவுக்குள் அசைவம் சாப்பிடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

பார்ப்பனியப் பண்பாட்டின் அசைவம் சாப்பிடுகிறவர்கள் கீழானவர்கள் என்ற கருத்து மத அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் உழைக்கும் மக்கள் தமது குலதெய்வங்களுக்கு இறைச்சி உணவுகளை படையல்களாக வைக்கும் போது ‘உயர்’ சாதி இந்துக்கள் வணங்கும் தெய்வங்களுக்கு சைவ உணவு வகைகளே பிரசாதங்களாக வைக்கப்படுகின்றன.

எனவே இந்தியாவில் பெரும்பகுதி மக்களின் சூழல் அசைவ உணவு சாப்பிடுவதை நிலை நாட்டியிருக்கிறது. சிறுபான்மை வட இந்திய பகுதி மாநிலங்களில்தான் அந்த சூழல் நேரெதிராக இருக்கிறது. அங்கும் கூட கோழி, ஆட்டிறைச்சி மட்டும்தான். மாட்டிறைச்சியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இதை விடக் கொடுமை, பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் குழந்தைகளுக்கான சத்துணவில் முட்டை கூடக் கிடையாது. தமிழக சத்துணவில் அன்றாடம் முட்டை உண்டு.

மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

எனவே நம் மக்களின் உணவுச் சூழலில் அசைவம் வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறது. இந்துத்தவத்தை வேரறுக்கும் வரை நம் மக்களுக்கு அசைவ உணவும், நம் குழந்தைகளுக்கு முட்டையும் கிடைக்காது. தமிழகத்தில் உதிரிப்பணிக்காக வரும் வட இந்திய இளைஞர்களில் பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். அவர்கள் ஊரில் அத்தகைய சூழல் இல்லை.

ஆக உணவு உண்பதை நம் மக்களின் அக விருப்பம் தீர்மானிக்கும் சூழல் இங்கில்லை. அதை பார்ப்பனியமே கட்டுப்படுத்துகிறது. தமிழகத்தில் கூட பீஃப் வறுவல்கள் பரவலாக கிடைத்தாலும் மேட்டுக்குடியினர், ஆதிக்க சாதியினர் வசிக்கும் நகர – கிராமப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இங்கேயும் அதை ஏதோ சாக்கனாக் கடை போல ‘தீண்டத்தகாததாக’ வைத்திருக்கிறார்கள். நமது அரசியல் போராட்டங்களில் வருடந்தோறும் மாட்டுக்கறி உணவு உண்ணும் விழாக்களை நடத்துவதும், இது குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்வதும் அவசியம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

 

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

18.09.2019

டப்பு கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பொதுத் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களை 2021-22 வரை இடைநிறுத்தம் செய்யக்கூடாது எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வையும் சேர்த்து ஐந்து பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எழுத வேண்டும். இப்பொதுத் தேர்வுகள் பெரும்பான்மை மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே சாதகமாக அமையும். எனவே உடனடியாக இவ்வரசாணையை திரும்ப பெறுமாறு பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு தமிழக அரசைக் கோருகிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை இல்லாத ஆரம்பப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவது, பத்துக்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் ஓராசிரியரை மட்டுமே நியமிப்பது, ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவது, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு போன்றவைகளை உதாரணங்களாகக் கூறலாம். மேலும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி வழங்கப் போவதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

மேற்கண்ட இவ்வறிவிப்புகள் அனைத்துமே இன்னும் விவாதத்தில் மட்டுமே உள்ள, சட்ட அங்கீகாரம் கூட பெறாத தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். இருந்தபோதிலும் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற போர்வையில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !
♦ பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, படிப்பதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலிருப்பது போன்ற குறைபாடுகளை சரிசெய்ய வேண்டுமென கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்குறைபாடுகளை சரி செய்யாமல் 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு அதிக சுமையை உருவாக்கும். இது மாணவர்களை தனியார் பயிற்சி வகுப்புகளை (Tuition) நோக்கி செல்லுவதை கட்டாயமாக்கும். மேலும் இத்தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்கள் கட்டாய இடைநிற்றலுக்கும் தள்ளப்படுவர். குறிப்பாக கிராமப்புற மற்றும் சமுதாய – பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய சூழலிருந்து வருகின்ற மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவர்.

மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு என்ற பொய்யை சொல்லி கிராமப்புற மாணவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றி பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.

அதுபோலவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது எதார்த்தத்தில் பெரும்பான்மை மாணவர்களை பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்களின் வரைமுறையற்ற கொள்ளைகுமே சாதகமாக அமையும். ஆகையால் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொது தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

– பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
தொடர்புக்கு : 94443 80211, 94892 35387, 96005 82228

1) பேரா. வீ. அரசு, ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.
2) பேரா. மன்சூர், திருச்சி, ஒருங்கிணைப்பாளர், CCCE – திருச்சி.
3) பேரா. அமலநாதன், ஒருங்கிணைப்பாளர், CCCE – நெல்லை.
4) பேரா. கதிரவன், சென்னை.
5) பேரா. சிவக்குமார், சென்னை.
6) பேரா. கருணானந்தன், சென்னை.
7) பேரா. அருணாச்சலம், திருச்சி.
8) பேரா. மருதை, திருச்சி.
9) பேரா. மதிவானன், திருச்சி.
10) பேரா. ஐயம்பிள்ளை , திருச்சி.
11) பேரா. சோமசுந்தரம், நெல்லை.
12) பேரா. சாம், திருச்சி.
13) முனைவர். ரமேஷ், சென்னை.

பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

0

கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் திண்டிவனம் அரசுக் கல்லூரி மாணவர்களின் இரண்டாம் நாள் போராட்டம் !

“திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெறு ! இந்தியை திணிக்காதே ! 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும் !”  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) ஒருங்கிணைப்பில் தொடர் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இரண்டாவது நாளாக நேற்று (18.09.2019) விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் திண்டிவனத்தில் உள்ள கோவிந்த சாமி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி அமைந்துள்ள சாலையில் அமர்ந்து விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.

படிக்க :
♦ அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
♦ மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

***

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டம் !

  • திருவள்ளூர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!
  • பேராசிரியர் நிர்மல் குமார் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!
  • 5, 8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும்!

இவற்றோடு அமித்ஷா அறிவித்த நாடு முழுவதற்குமான ஒரே மொழி இந்திதான் என்ற ஆணவ பேச்சை கண்டித்தும், கடலூரில் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் (18.09.2019) இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தினர்.

திருவள்ளுவர் பல்கலைகழகம் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் இப்போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து நடத்தினர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திண்டிவனம் மற்றும் கடலூர் அரசு கலைக் கல்லூரிகளில் இன்றும் (19.09.2019) மூன்றாம் நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !

0

ந்தியை திணிக்கும் அமித்ஷாவின் ஆணவப் பேச்சை கண்டித்தும்;  5, 8-ம் வகுப்பு மாணவர்களை கல்வியிலிருந்து விரட்ட பொதுத் தேர்வைத் திணிக்கும் சதித்தனத்தை எதிர்த்தும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் தொகுப்பு…

***

போலீசு மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடிய தர்மபுரி மாணவர்கள் ! 

  • இந்தியை திணிக்கும் அமித்ஷாவின் ஆணவ பேச்சு!
  • 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! மாணவர்கள் மீதான வன்முறை!
  • கிராமப்புற ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பில் இருந்து விரட்டும் அரசாணையை திரும்பப் பெறு!

என்ற தலைப்பில் 18-09-2019 காலை 11:30 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகமும், போலீசும் மாணவர்களை போராட்டத்தில் கலந்துக் கொள்ள விடக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் மாணவர்கள் அந்த தடையையும் தாண்டி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசாரும், 10-க்கும் மேற்பட்ட உளவுப் பிரிவினரும் வந்து மாணவர்களை சூழ்ந்து கொண்டு களைத்து விடும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் எழுச்சிமிகு முழக்கமிட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டத்தை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடத்தி முடித்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து மாணவர்கள் அனைவரும் சென்ற நிலையில், அங்கிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் தோழர் பாலன் ஆகிய இருவரையும் தர்மபுரி அதியமான் கோட்டை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் ஐந்து போலீசார் ஒரு வேனில் வந்து வழிமறித்தனர்.

“வண்டில ஏறு.. நீ எதுக்கு இங்க வந்து போராட்டம் நடத்தற.. நீ அனுமதி வாங்கினேயா? நாங்கள் எல்லாம் என்னாத்துக்கு இருக்கிறோம்? உன்னுடைய இஸ்டத்துக்கு வந்து அரச எதிர்த்து போராட்டம் நடத்துவ.. அதனை நாங்க பார்த்துக் கொண்டு இருப்போமா? ஏறுடா வண்டியில…” என்று வலுக்கட்டாயமாக போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படிக்க :
♦ கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !
♦ தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

அப்போது தோழர்களின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பிடிங்கிக் கொண்டது போலீசு. அதன் பிறகு குற்றவாளிகளை விசாரிப்பது போல் லாக்-அப்பில் அடைக்க முயன்றனர். இதனை எதிர்த்து தோழர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரண்டுபோன போலீசு அதிகாரிகள் அதன் பிறகு சரி உங்கள் முகவரியை மட்டும் கொடுங்கள் என்று கூறி எழுதி வாங்கிக் கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு தோழர்களை கைது செய்த போலீசு இரவு 7:30 மணிக்கு தான் அவர்களை விடுவித்தது. மேலும் தோழர்கள் மீது 151 சி.ஆர்.பி.சி. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, சட்டவிரோதமாக கூடியது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கல்வி உரிமை பறிப்புக்கு எதிராக மத்திய மாநில அரசு தொடுக்கும் அடக்குமுறைக்கு எதிராக, தொடர்ந்து மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், அடுத்தக்கட்ட போராட்டத்துக்கும் தயாராகி வருகிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம். தொடர்புக்கு: 63845 69228

***

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 3 வருடம் தள்ளிவைப்பு ! தமிழக அரசின் கபடநாடகம் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

  • 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !
  • தமிழக அரசே 3 வருடம் தள்ளிவைப்பு என்று நாடகமாடாதே!
  • அரசாணையை திரும்பப்பெறு!

என்ற முழக்கங்களின் அடிப்படையில், சென்னை பள்ளி கல்வி துறை இயக்குனரகம் (DPI) முன்பு 18.9.2019 அன்று பிற்பகல் 3:00 மணியளவில் சென்னை பு.மா.இ.மு சார்பில் ஆப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்துக்கு புமாஇமு சென்னை நகர செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து கண்டனங்களைப் பதிவு செய்தார்.

பின்னர் போராட்டத்தில் பங்குபெற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் போலீசு நிலையத்தில் மாலைவரை வைக்கபட்டிருந்தனர். பின்னர் அவர்களை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

***

கடலூர் அஞ்சலகம் முன் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

  • 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்ற கிராமப்புற மாணவர்கள் கல்வியை பாதிக்கும் அரசாணையை  திரும்பப் பெறு!
  • 2019 தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தாதே!
  • ஒரே நாடு – ஒரே மொழி இந்தி என்ற அமித் ஷாவின் ஆணவப் பேச்சுக்கு கண்டனம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து கடலூர் அஞ்சல் அலுவலகம் முன்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 18.09.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பு.மா.இ.மு மாவட்டசெயலாளர் தோழர் மா.மணியரசன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்புறா குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார், மற்றும் மாணவர்கள் வெங்கடேஸ்வரன், பூங்குழலி, பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

***

உளவுப் பிரிவு போலீசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் கள்ளக் கூட்டை முறியடித்த திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் !

ல மொழிகளை அழித்து இந்தியை திணிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்தும்; 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரியும், திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாட்ச் மேன் மூலம் நேரடியாக உளவு பிரிவுக்கு தகவல் சென்றது. உடனே 3 வேன்களில் 2 உளவுப் பிரிவு மற்றும் 13 போலீசார் வந்திறங்கினர். அதுமட்டுமல்லாது போராடும் மாணவர்களை கலைக்க ஒரு போராசிரியரும் முயன்றார். அந்த பேராசிரியருடன் மாணவர்கள் நிகழ்த்திய உரையாடல் கீழே…

மாணவர்கள் : மாணவர்கள் போராட்டம் என்றாலே நாம் ஒருங்கிணைவதற்குள் இவர்கள் வந்து விடுகிறார்கள். நமக்குள் கருப்பு ஆடு இருக்கு. நல்லா வாட்ச் பன்னணும்.
ஒரு ஆசிரியர் : 5-வது 8-வது பள்ளிக்குதானே தேர்வு, இங்கு எதுக்கு போராடுறீங்க…
மாணவர்கள் :‌ வேறு எங்கு டாஸ்மாக் கடையில நின்னு போராடவா…
ஆசிரியர் : எங்காவது நின்னு போராடு. இங்க பன்னாதிங்க.
மாணவர்கள் : சரி, அப்போ கல்லூரி பிரச்சனையை பத்தி பேசுவோம், சரியா டாய்லட் இருக்கா, நல்ல தண்ணி இருக்கா… சொன்னா லிஸ்ட் பத்தாது…
ஆசிரியர் : ???!!!????

அடங்கிய ஆசிரியர் அமைதியாக உள்ளே சென்றுவிட்டார்.

அதன் பின்னர் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. உரிமைக்காக போராடுவது கடமை! உரிமையை பறிக்கும் போதும் உறுதியாக போராடுவதும் நம் கடமை என மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தாய் மொழி தமிழ் இருக்க இந்தியை திணிக்காதே! 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வில் 3 ஆண்டு விலக்கு என ஏமாற்றாதே ! முழுமையாக ரத்து செய்! என மாணவர்கள் முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர் கூட்டமைப்பு.
திருச்சி. தொடர்புக்கு : 74182 06819.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா

மிழகமெங்கும் கார்காலம் தொடங்கிவிட்டதால் நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோயான டெங்குவைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • டெங்கு வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய் நிலை.
  • வைரஸை பரப்பும் வேலையை செவ்வனே செய்வது ஏடிஸ் எனும் கொசுவின் வேலை.

டெங்கு எவ்வாறு பரவும் ?

டெங்குவும் மலேரியாவும் பரவும் விதத்தில் ஒன்றானவை. டெங்குவால் பாதிக்கப்பட்ட கொசு யாரையெல்லாம் கடிக்கிறதோ அனைவருக்கும் டெங்கு நோய்க்கிருமி பரவும். இருமனிதர்க்கு நடுவே தொடுவதாலோ இருமுவதாலோ பரவுவதில்லை

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு எங்கே வளரும் ?

இந்த ஏடிஸ் எனும் எதிரி, நல்ல நீரில் வளரும் தன்மை கொண்டது. எங்கெல்லாம் நல்ல நீர் தேங்கியுள்ளதோ அங்கெல்லாம் வளரும். 10 மில்லி நீர் போதும் இந்தக் கொசு முட்டையிட்டு வளர.

பொதுவாக வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் டெங்கு புழு காணப்படும் இடங்கள் ?

Dengu-Awarenessகுப்பையில் கிடக்கும் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கொட்டாங்குச்சி சிரட்டைகள், அருந்திவிட்டு போடப்படும் இளநீர், டையர்கள், குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னே சேரும் நீர், வீட்டில் வளர்க்கும் செடிகளின் சட்டிகளில் சேரும் நீர் என்று ஒரு இடத்தையும் விடுவதில்லை இந்த எதிரி.

மூடிவைக்காத தண்ணீர் குடங்கள், தண்ணீர் தொட்டிகள் யாவும் இந்தக் கொசுப்புழுவுக்கு சொர்க்கச் சோலைகள்.

சரி. டெங்கு நோயை எவ்வாறு கண்டு கொள்வது ?

  1. மற்ற வைரஸ் காய்ச்சல் போல் அல்லாமல் அதீத உடல் உஷ்ணம் (>102 டிகிரி) நோய் ஆரம்பித்த அன்றிலிருந்தே இருக்கும்

2. பொறுத்துக்கொள்ள இயலா உடல் வலி இருக்கும். கண்களுக்கு பின்னே வலி இருக்கும்.

3. காய்ச்சலோடு வயிற்றுவலி இருக்கலாம். கருப்பாக மலம் செல்லலாம்.

4. கடும் காய்ச்சல் மூன்று நாள் இருக்கும் . நான்காவது நாள் திடீரென்று குணமாகிவிடும். இது நல்ல அறிகுறி அல்ல. உள்ளங்கை உள்ளங்கால் ஜில்லென்று ஆகும். இதுவும் நல்ல அறிகுறி அல்ல.

படிக்க:
நூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்
♦ உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

டெங்குவை தடுப்பது எப்படி ?

டெங்குவுக்கு தடுப்பூசிகள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன. டெங்குவுக்கு பரப்பும் கொசுவை ஒழிப்பதே நல்லது.

1. சேமிக்கும் தண்ணீரை மூடி இட்டு வைக்கவும்

2.தினமும் வீட்டைச் சுற்றி குப்பை சேராமல் கண்காணிக்க வேண்டும். சேர்ந்தார்கள் ஒன்று அப்புறப்படுத்தவும் அல்லது எரித்து விடவும்.

3. குழந்தைக்கோ தங்களுக்கோ காய்ச்சல் வரின் தங்கள் குடும்ப மருத்துவரையோ குழந்தைகள் மருத்துவரையோ அணுகவும்

4. மருந்துக்கடைகளில் சுய மருத்துவம் பார்ப்பது நல்லதல்ல. போலி மருத்துவர்கள் ஆங்காங்கே தோன்றுவார்கள். அவர்களை இனங்கண்டு தவிர்க்கவும்.
அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகுவது சாலச்சிறந்தது .

4. கொசுப்புழுவை அழிக்க அபேட் எனும் புழுக்கொல்லி சேமித்து வைத்திருக்கும் நீரில் லிட்டருக்கு ஒரு மில்லி வீதம் தெளிக்கவேண்டும்

5. கொசுவாக உருவாகி நோய் பரப்பினால் பைரித்ரம் எனும் கொசுக்கொல்லி மருந்து டீசலில் கலந்து புகையாக அடிக்கப்படும். ஏடிஸ் பகலில் கடிக்கும் கொசு மற்றும் வீட்டுக்குள்ளே வாழ்வதால் காலையும் மாலையும் வீட்டுக்குள் புகை அடிக்கப்பட வேண்டும்.

6. கொசு நம்மை கடிக்காத வண்ணம் கொசு வலைகளை பயன்படுத்தலாம். முழுக்கை சட்டைகளை குழந்தைகளும் நாமும் அணியலாம்

டெங்குவைத் தடுப்போம் !
இன்னுயிர்களைக் காப்போம் !!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.