Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 294

5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !

குழந்தைகள் கல்வியின் வரையறை எது???

ம் குழந்தைகளை அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து மதிப்பு தரும் பெற்றோராக நாம் இப்போது மாறினால் நம் குழந்தைகள் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்தும் நாம் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்காக மட்டுமே நம்மை மதிக்கும் நிலை நாளை உருவாகும்.

கல்வி என்பது என்ன?

கல்வி என்பது பல நல்ல பழக்க வழக்கங்களை ஒருங்கே கற்பது. அதை குழந்தையின் மூளை வேகமாக உள்வாங்கி கொள்ளும் என்பதால் கல்வியை தொடக்கம் முதலே ஆரம்பிக்கிறோம்.

சப்பான், சீனா முதலிய நாடுகளில் ஆறு வயது வரை கூட தாத்தா பாட்டியிடம் கதை கேட்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். தாத்தா பாட்டியிடம் ஒழுக்கங்கள்/ பழக்க வழக்கங்கள் / கதைகள் கேட்டு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள் .

நாம் மூன்று வயது முடியுமுன்னமே முந்தி அடித்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறோம்.

அங்கு குழந்தை எதை கற்கிறது ?

அதுவரை தாய் தந்தை தாத்தா பாட்டி என்ற குக்கூனுக்குள் இருந்து வெளியே வந்து தொடக்க கல்வி என்ற ப்யூப்பா கட்டத்திற்கு செல்கிறது. அங்கே தன் போன்ற சகல குழந்தைகளுடனும் விளையாடுகிறது .அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் தான் அவர்களுக்கு அப்போதைய தேவதைகள். தேவதைகள் செய்யும் அனைத்தையும் தானும் செய்து பார்க்கின்றன.

மனிதன் ஒரு சமூக மிருகம் என்கிறோம். சமூகத்துடன் தன்னை ஒருமித்துக்கொள்ளும் வித்தையை பள்ளிக்கூடங்கள் தான் ஆரம்பித்து வைக்கின்றன .

விட்டுக்கொடுத்தல்; தட்டிக்கொடுத்தல்; புறம்பேசுதல்; காட்டிக்கொடுத்தல்,
போன்ற பல மனித உணர்வுகள் ஊற்றெடுப்பது சமூகத்துடன் கலந்தவுடன் மட்டுமே … இவையனைத்தும் பள்ளிகளில் ஒருங்கே நிகழும்.

பிறகு பள்ளிகள் இந்த குணங்களில் எது அதிகம் தேவையோ அதை ஃபைன் ட்யூனிங் செய்து அதிகமாக்கும். எது தேவையில்லையோ அதை கொஞ்சம் கண்டிப்புடன் குறைத்து வைக்கும். ஆக பள்ளிக்கூடங்கள் என்பது மனிதனை மனிதனாக்கும் கூடங்கள்.

அல்லது, மனிதனை சமுதாயத்துக்கு தேவையுள்ளவனாக மாற்றும் கூடங்கள். பள்ளிக்கூடம் விட்டு வெளிவரும் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கான தனது பணியை உணர்ந்தவர்களாக வெளிவருவது அந்த பள்ளியின் நோக்கமாக இருக்கிறது.

சரி .. இதனூடே பனிரெண்டாம் வகுப்பு எனும் மலை முகட்டில் ஏறி சிறகு விரித்து பறக்கத் தேவையான ஆயத்தப்பணிகளும் நடக்கும்.  ஆம்… பனிரெண்டாம் வகுப்புக்கு பிறகு ஒரு மாணவ மாணவியின் எதிர்கால தொழில் முடிவாகுவதால் அது ஒரு மலை முகட்டோடு ஒப்பிடப்படுகிறது.

சிலர் தாங்களாக சிறகு விரித்து பறக்கிறார்கள்… சிலருக்கு பெற்றோர் பணமெனும் காகிதத்தால் செயற்கை சிறகு செய்து பறக்க விடுகிறார்கள் … பலருக்கு அதற்கான எந்த பாக்கியமும் இல்லாமல் சிறகின்றி மலை முகட்டிலேயே நின்று அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

இப்படி பனிரெண்டாம் வகுப்பின் மீது இத்தனை ப்ரஷர் ஏற்றப்பட்டு
காணும் பிள்ளைகளின் தாய் தந்தையர் அனைவருமே தன் பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் கனவு காண்கிறார்கள். பத்து லட்சம் பேர் தேர்வு எழுதும் இடத்தில் ஐயாயிரம் சீட்டுகள் மட்டுமே மருத்துவராக இருக்கிறது. அதே அளவுதான் சிறந்த இஞ்சினியரிங் கல்லூரிகளில் பயில இருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை திறன் இருக்கிறது. இருக்கும்.
ஆனால், அந்த திறனை வெளிக்கொண்டு வரும் பெற்றோரும் கல்வி நிலையமும் சமுதாய சூழ்நிலையும் அமையாதிருப்பதே, பல துறை சார்ந்த மேதைகள் நம் நாட்டில் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் அவரது மகனின் திறமையில் நம்பிக்கை வைக்காமல் அவரை அடித்து துன்புறுத்தி படிக்க அனுப்பியிருந்தால் அவர் இன்று ஏதோ ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்.

இருப்பினும் இந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக காரணமானது
அவரது தந்தை ஒரு இசையமைப்பாளர்; தாய் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை.

கீபோர்டு கையில் எடுத்த அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானாக முடியும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் நிச்சயம் பல ஏ.ஆர்.ரஹ்மான்கள் உருவாகாமல் இருப்பதற்கு நமது கல்வி அமைப்பே காரணமாகிறது என்று கூறுகிறேன்.

இப்போது கல்வி நிலையத்தில் தனித்திறமைகள் போற்றப்படுவது குறைந்து வருகிறது. தனித்திறமைகள் வைத்து சம்பாதிக்க முடியாது என்ற வாதம் தான் நம் அனைவரையும் அந்த மலை முகட்டை நோக்கி உந்தித்தள்ளுகிறது.

இன்றோ ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / பதினோறாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு என்று பல சிகரங்கள் உருவாகி
குழந்தைகளின் வாழ்வை போர் மயமாக்கி வைத்துள்ளன.

இந்த சிகரங்களை யாரெல்லாம் கடக்க வேண்டும்? யாரெல்லாம் பின் தங்க வேண்டும் ?  என்று சமூகம் முடிவு செய்கிறது.

சிலரை வாழை இலையில் உணவு உண்ண அழைக்கிறது. சிலரை எச்சில் இலையை பொறுக்க அழைக்கிறது.  சிலரை வீடு கட்டவும் , சிலரை வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யவும் மட்டுமே தயார் செய்கிறது.

சிலரை தகுதி இல்லாவிடினும் மருத்துவராக்குகிறது. பலருக்கு தகுதி இருந்தும் மருத்துவக்கனவு காணக்கூடாது என்கிறது.  இப்படியாக சமூகம் தான் பெற்றெடுத்த குழந்தைகளிடமே ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது…

எல்.கே.ஜி. பயிலும் குழந்தைக்கு பரிட்சையின் போது காய்ச்சல் அடித்தாலும் லீவ் போடாமல் பரீட்சை எழுத வைக்கும் வேலையை பெற்றோர்கள் செய்கின்றனர்.  இது போன்ற பெற்றோர்களுக்கு நாளை தனிமைதான் பரிசாகக்கிடைக்கப் போகிறது என்பதை உணர்கிறார்கள் இல்லை.

இன்று காய்ச்சல் இருமலில் உழலும் உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி அதை தனிமைபடுத்தும் ஒவ்வொரு பெற்றோருக்கும் நாளை முதியோர் இல்லமோ தனிமையான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையோ காத்துக்கொண்டிருக்கிறது.

படிக்க:
விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

உண்மையில், சமுதாயத்துக்கு நன்மையை கற்றுத்தர வேண்டிய கல்வி முறையாக மாறாமல் சமுதாயத்தை இன்னும் சுயநலமிக்கதாக தான் மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் குலக்கல்வியின் இருபத்தி ஓராம் நூற்றாண்டு வெர்சன்களாகவே தெரிகின்றன. மேலும் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கும் ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு முந்தைய சமுதாயத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகவே இருக்கிறது.

இந்த பாதைகளெல்லாம் எங்கு சென்று முடிகின்றனவோ .. அங்கு நம் குழந்தைகளின் குழந்தைத் தன்மைகளை சேட்டைகளை சுட்டிகளை குழிதோண்டி புதைக்கும் சுடுகாடு இருக்கிறது… ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமுதாய அடுக்கில் கீழே இருக்கும் மக்களை கல்வியை விட்டு இன்னும் தூரப்படுத்தும்.

எனவே, மத்திய-மாநில அரசுகளை உடனே இது குறித்து தாய்மை உள்ளம் கொண்டு ஆராய்ந்து இந்த பரீட்சைகளை கைவிடக் கோருகிறேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா

மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமாருக்கு சிவப்பஞ்சலி | பு.ஜ.மா.லெ.க – இலங்கை

மூத்த எழுத்தாளரும் மக்கள் கவிஞருமான மல்லிகை சி.குமாருக்கு செவ்வஞ்சலிகள்!

லையக மண்வாசனை சொட்ட அம்மக்களின் வாழ்வியலை தன் படைப்பிலக்கியத்தின் ஊடாக பறைசாற்றி நின்ற கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் அவர்களின் மறைவுக்கு எமது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மலையக மண் இன்று மூத்த எழுத்தாளரை, எப்போதும் சலனமில்லாத, எந்த வேளையும் சமரசம் செய்து கொள்ளாத, இறுதி வரை மக்கள் விடுதலையின்பால் தீரமுடன் எழுதி வந்த படைப்பிலக்கியவாதியை இழந்து நிற்கிறது.

கவிஞர் மல்லிகை குமார்.

புகழுக்கும் பகட்டுக்கும் பின்னால் பலர் ஒடுகையில் கடின உழைப்பை வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டு, தன் பேனா முனையில் மலையக மக்களின் வாழ்வையும் அவர் தம் விடுதலையையும் நெஞ்சுரத்துடன் பேசியவர் கவிஞர் மல்லிகை சி.குமார்.

புன்முறுவல் பூத்த முகத்துடன் எப்போதும் அன்பாய் ஆராதிக்கும் அவர் குணம், நகைச்சுவையாய் நையாண்டியாய் அவரது எழுத்துகளில் மாத்திரமன்றி ஓவியங்களிலும் வெளிப்பட்டு நிற்பதை கண்டிருக்கின்றோம். நேரடி அரசியல் செயற்பாட்டாளராக இல்லாதபோதும் தன் படைபிலக்கியத்தின் ஊடாக சோரம் போகாத அரசியல் அறப்போர் புரிந்தவர் மக்கள் கவிஞர் மல்லிகை சி. குமார்.

அவரது எழுத்துக்கள் மலையக மண்வாசனையுடன் சமூக உணர்வையும் வெளிப்படுத்துவனவாகவே இருந்து வந்திருக்கின்றன. மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்க செயற்பாடுகளின் போது களத்தில் அவர் வாசித்த கவிதைகள் மலையக மண் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கு இன்னுமொரு சான்றாகும்.

தனது சிறுகதைகள் கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தது மட்டுமின்றி பிழைப்புவாத அரசியலை எள்ளி நகையாடி சமூக விடுதலையை வலியுறுத்தி வந்துள்ளார். அன்னாரின் திடீர் இழப்பு இலக்கியத் தளத்தில் மாத்திரமன்றி சமூக அரங்கிலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

படிக்க:
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

இந்த வேளையில் அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடனும் கலை இலக்கிய நண்பர்களுடனும் எமது கட்சி துயரைப் பகிர்ந்து கொள்கிறது.

எந்த மக்கள் விடுதலைக்காக மல்லிகை சி. குமார் தன் பேனா முனையை போர்வாளாய் தூக்கிப் பிடித்தாரோ. அந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்த உழைப்பதே அன்னாருக்கு நாம் செய்யும் உண்மையான, நேர்மையான அஞ்சலியாகும்.

V.மகேந்திரன்,
தேசிய அமைப்பாளர்,
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி.

நன்றி : முகநூலில் புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி

disclaimer

விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு ?

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 11

முக்கிய நபர் தமது அறையில் உட்கார்ந்து, பல ஆண்டுகளாகத் தாம் பார்க்காத தமது பழங்கால நண்பரும், குழந்தைப் பருவத் தோழரும் சமீபத்தில் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்திருந்தவருமான ஒருவருடன் மிக மிகச் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பஷ்மாச்கின் என்ற ஒருவன் அவரைக் காண விரும்புவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. “யார் அது?” என்று வெடுக்கென வினவினார் முக்கிய நபர். “யாரோ எழுத்தனாம்” எனப் பதில் கிடைத்தது. “ஓ அப்படியா? காத்திருக்கச் சொல்லுங்கள். இப்போது எனக்கு நேரமில்லை” என்றார் முக்கிய நபர்.

முக்கிய நபர் சொன்னது பச்சைப் பொய் என்பதை இங்கே கூறிவிடுவது நல்லது. அவருக்கு நிறைய நேரம் இருந்தது. அவரும் நண்பரும் பேச வேண்டியதையெல்லாம் எப்போதோ பேசி விட்டார்கள். வெகு நேரமாகவே நடு நடுவே நீண்ட மௌனத்தில் ஆழ்ந்துவிடுவதும், மௌனத்துக்கு மத்தியில் ஒருவரையொருவர் முழங்காலில் அடித்து, “ஆச்சா, இவான் அப்ராமவிச்!” “அப்படியாக்கும் சேதி, ஸ்தெபான் வர்லாமிச்!” என்பதுமே அவர்களுடைய உரையாடலாகத் திகழ்ந்தது. இருந்தபோதிலும் அவர் எழுத்தனைக் காத்திருக்கச் சொன்னது எதற்காகவென்றால், அரசுப் பணியிலிருந்து வெகுகாலத்துக்கு முன்பே விலகி, கிராம வீட்டிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த நண்பருக்கு, எழுத்தர்கள் எவ்வளவு நேரம் தமது பேட்டிக்காக நடையில் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காகத் தான். கடைசியில் வேண்டிய அளவு பேசிவிட்டு, அல்லது உண்மையில் மௌனமாயிருந்து முடிந்து, வசதியான சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து இன்பமாகச் சுருட்டு புகைத்து முடிந்ததும் முக்கிய நபர் திடீரென எதோ நினைவுக்கு வந்தது போன்று, கத்தைக் காகிதங்களும் கையுமாகக் கதவருகே நின்று கொண்டிருந்த தமது செயலாளனை விளித்து, “அங்கே யாரோ எழுத்தன் காத்திருக்கிறான் போலிருக்கிறது பேட்டிக்கு. அவனை வரச் சொல்லும்” என்றார்.

அக்காக்கியின் எளிய தோற்றத்தையும் பழைய உடுப்பையும் கண்டதும் முக்கிய நபர் சட்டென அவன் பக்கம் திரும்பி, தமக்கு தற்போதைய வேலையும் ஜெனரல் பதவியும் கிடைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தனிமையில் நிலைக் கண்ணாடிக்கெதிரே நின்று பயிற்சி செய்து கொண்ட கடுமையான குரலில், “உமக்கு என்ன வேண்டும்?” என்று வெடுக்கெனக் கேட்டார்.

ஏற்கெனவே வேண்டிய அளவு அச்சமும் நடுக்கமும் நிறைந்திருந்த அக்காக்கிய், சற்றுத் தடுமாற்றங் கொண்டு, “வந்து…” “அதாவது…” என்று அசைச் சொற்களை வழக்கத்துக்கு அதிகமாகவே உபயோகித்து, தன் மேல்கோட்டு புத்தம் புதியதென்றும் மனிதத்தன்மையற்ற முறையில் அது அபகரிக்கப்பட்டு விட்டதென்றும், தான் முக்கிய நபரிடம் வந்திருப்பது, அவர் தக்கவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லியோ, நகரப் போலீஸ் கமிஷனருக்கோ வேறு யாருக்கேனுமோ எழுதியோ தனக்கு மேல்கோட்டு திரும்பக் கிடைக்கச் செய்வார் என்ற நம்பிக்கையுடனேயே என்றும், தன்னால் இயன்றவரை, குழறும் நா அனுமதித்த அளவுக்கு விவரமாக விளக்கினான். அவன் இவ்வாறு தம்மை அணுகியது முறையற்ற சொந்தம் பாராட்டுதல் என்று என்ன காரணத்தாலோ முக்கிய நபருக்குப் பட்டது. “என்ன அய்யா, ஒன்றும் புரியவில்லையே! ஒழுங்கான நடைமுறை உமக்குத் தெரியாதா என்ன? இங்கே எதற்காக வந்தீர்? விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு? இதைப் பற்றி விண்ணப்பம் எழுதி நீர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பம் தலைமை எழுத்தர் பார்வைக்கு வந்திருக்கும், அதாவது அலுவலகப் பிரிவின் தலைவருக்கு; அவர் அதை என் செயலாளருக்கு அனுப்பியிருப்பார், செயலாளர் என் கவனத்துக்கு அதைக் கொணர்ந்திருப்பார்…” என்று கடுகடுத்த குரலில் சீறினார்.

அக்காக்கிய் தன்னிடமிருந்த சொற்ப மனோ தைரியத்தை முழுவதும் திரட்டி, மேல்காலெல்லாம் வியர்த்துக் கொட்ட, “ஆனால், பெரிய துரை அவர்களே, நான் மாட்சிமை பொருந்திய தங்களைத் தொந்தரவுபடுத்தத் துணிந்தது எதனாலென்றால், செயலாளர்கள் இருக்கிறார்களே இவர்கள்… அதாவது… வந்து… நம்பகமானவர்கள் அல்லர்…” என்று ஆரம்பித்தான்.

படிக்க:
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

“என்ன? என்ன? என்ன சொன்னீர்?” என்றார் முக்கிய நபர். “இம்மாதிரிப் பேச எங்கிருந்து ஐயா வந்தது உமக்கு நெஞ்சுத் துணிச்சல்? இந்த உதவாக்கரை எண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன உமக்கு? தங்கள் தலைவர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் எதிராக இளைஞர்களுக்கிடையே பரவிவரும் இந்தக் கலக உணர்ச்சிக்கு என்ன ஐயா அர்த்தம்?” என்று விளாசினார். அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது என்பதை முக்கிய நபர் கவனிக்கவில்லை போலும். அவனை இளைஞன் என்று அழைத்தது, எழுபது வயதானவனுடன் ஒப்பிட்டால் அவன் இளைஞன் என்ற பொருளிலேயே என நினைக்க வேண்டியிருக்கிறது. “யாரிடம் இதையெல்லாம் சொல்லுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு? உம் எதிரே நிற்பது யார் என்பது புரிகிறதா ஐயா? புரிகிறதா ஐயா இது? புரிகிறதா ஐயா? உம்மைத் தான் கேட்கிறேன்.”

இவ்வாறு கூறுகையில் அவர் காலைத் தொப்பென்று அடித்துக் குரலை உச்சத் தொனிக்கு உயர்த்திவிடவே, அதனால் குலைபதறியது அக்காக்கிய் அக்காக்கியெவிச் ஒருவனுக்கு மட்டுமே அல்ல. அக்காக்கிய் கதி கலங்கிப்போய், கால்கள் குடுமாற, மெய்விதிர்க்க, நிற்க முடியாமல் தத்தளித்தான். வாயில் காப்போர் ஓடிவந்து தாங்கியிராவிட்டால் அவன் துவண்டு தரையில் சாய்ந்திருப்பான். அநேகமாக உணர்ச்சியற்ற நிலையில் அவனை வெளியே கொண்டு போனார்கள். விளைவு தாம் எதிர்பார்த்ததையும் விஞ்சி விட்டது என்பதைக் கண்டு திருப்தியடைந்த முக்கிய நபர், தமது வாய்ச்சொல் ஒருவனை உணர்விழக்கச் செய்யும் வன்மை கொண்டது என்ற எண்ணத்தால் உவகை மீதார, தமது நண்பர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவரைக் கடைக் கண்ணால் நோக்கினார்; நண்பர் மனநிம்மதியின்றித் தவிப்பதையும், தாமே அரண்டு போயிருப்பதையும் பார்த்து அவருக்கு மன நிறைவு ஏற்படாமலில்லை.

எப்படி மாடிப்படி இறங்கினோம், எப்படித் தெருவுக்கு வந்தோம் என்பது ஒன்றுமே அக்காக்கிய்க்கு நினைவில்லை. அவன் கை கால்கள் உணர்விழந்து மரத்துப் போய் விட்டன. வாழ்வில் ஒரு முறைகூட அவன் ஒரு முக்கிய நபரால், அதுவும் வேறு அலுவலக முக்கிய நபரால் இவ்வளவு கடுமையாக அதட்டி உருக்கப்பட்டது கிடையாது. வீதியில் இரைச்சலுடன் அடித்துக் கொண்டிருந்த பனிப் புயலில், நடைபாதையிலிருந்து இடறி இடறி விழுந்தவாறு நடந்தான்; காற்றோ, பீட்டர்ஸ்பர்க் வழக்கப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாச் சந்துகளிலிருந்தும் எககாலத்தில் வீசிக் கொண்டிருந்தது. கணப்போதில் அவன் தொண்டை அழன்றுபோயிற்று, எப்படியோ தள்ளாடியவாறு வீடு வந்து சேர்ந்ததும் அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. மேலெல்லாம் வீக்கங்கண்டிருந்தது. உடனே படுக்கையில் படுத்தான். அதிகாரிகளின் சரியான விளாசல் சில சமயங்களில் அவ்வளவு வன்மையுள்ளதாகும்!

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்

நூல் வெளியீடு – கருத்தரங்கம்

நாள் : 30.01.2020, மாலை 5 மணி.
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம்.

நூல் வெளியீடு :

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

மொத்தம் 16 பக்கங்கள்
நன்கொடை : ரூ 10/-

***

கருத்தரங்கம் : அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் : கல்வி உரிமையைப் பறிக்கும் இருபெரும் ஆபத்துகள் !

தலைமை :

பேரா. வீ. அரசு
ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.

சிறப்புரை :

பேரா. கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

திரு. சக்திவேல்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை.

மருத்துவர் ருத்ரன்
மனநல மருத்துவர், சென்னை.

அனைவரும் வாரீர்…!

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை
Coordination Committee for Common Education – CCCE, Chennai.

புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !

சில சமயங்களில் புத்தகம் எழுதுவதுகூட சிலரது வாழ்வை நாசமாக்கிவிடும். அதற்கு உதாரணம், வரலாற்றுப் பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா.

1998-ல் சுஷில் ஸ்ரீவஸ்தவா குஜராத்தில் உள்ள மகாராஜா சாயாஷிராவ் பல்கலைக்கழகத்தில் வரலாறு பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அப்போது கல்வித்துறை அமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் – பிறகு குஜராத்தின் முதல்வரானவர் – பா.ஜ.க எம்.எல்.ஏ.வான மது ஸ்ரீவத்ஸவா மூலம் ஒரு செய்தியை அனுப்புகிறார். அதாவது சுஷில் குஜராத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். அதன் பின் அனில் கானே அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பிறகு, சுஷிலை அழைத்து “உடனடியாக வெளியேறாவிட்டால் கை, கால்களை உடைத்து விடுவார்கள். ஏன் இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறாய்?” என்று கேட்கிறார்.

பயந்துபோன சுஷில் சீக்கிரமே அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேலை தேடிக்கொண்டு சென்றுவிடுகிறார்.

அப்படி அவர் என்ன புத்தகத்தை எழுதினார்? “The Disputed Mosque: A Historical Inquiry” என்பதுதான் அந்தப் புத்தகம்.

நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, எழுதப்பட்ட புத்தகம் இது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி குறித்து துல்லியமான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் இது. 1853-க்குப் பிறகுதான், பாபர் மசூதியை சொந்தம் கொண்டாடும் போக்கு ஆரம்பித்தது. அதற்கென ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பதுதான் இவரது புத்தகத்தின் வாதம்.

அயோத்தியில் முதன் முதலாக அலக்ஸாண்டர் கன்னிங்கம் தொல்லியல் சர்வேயை மேற்கொண்டபோது, அங்கே பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் இருந்தனவே தவிர, கோவில்களின் இடிபாடுகள் எதையும் அவர் பார்க்கவில்லை என்பதையும் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் சுஷில்.

படிக்க:
♦ நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54
♦ அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !

இந்தப் புத்தகத்தை எழுதியதால் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனிமைப்படுத்தப்பட்டு, மனம் நொந்து 2018-ல் செத்தே போய்விட்டார் சுஷில்.

இதைவிட கொடூரம் அந்தப் புத்தகம் இப்போது எங்கேயுமே கிடைப்பதில்லை என்பதுதான். Archive.orgல் இரவல் பெற்று வாசிக்கலாம் அவ்வளவுதான்.

சுஷில் ஸ்ரீவஸ்தவா குறித்து ஒரு அட்டகாசமான கட்டுரையை கேரவான் இதழ் வெளியிட்டிருக்கிறது. அதற்கான இணைப்பு:

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

எம்புள்ளைய விரட்டிட்டீங்களே !

டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது துர்கா. இப்போ அஞ்சாவது படிக்குது. ஆனா ஆறாவது படிச்சிருக்கணும். மொத வகுப்பு சேர்ந்ததிலிருந்தே டிசம்பர் கடைசியில துர்காவோட அப்பா அம்மா அத கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய்டுவாங்க வீட்ல பாத்துக்க ஆளில்லாததால.”நம்ம பள்ளி விடுதியோடு இணைஞ்சது, இங்கயே விட்டுட்டுப் போங்க”னு சொல்லி எவ்ளோ கூப்பாடு போட்டாலும் அவுங்கக் கேட்டதேயில்ல.

டிசம்பர் மாசம் கடைசியில போய் ஏப்ரல் மாசம் யுகாதி சமயம் வருவாங்க. கேரளாவுல இருந்து வந்ததும் அதுவே பள்ளிக்கூடத்துக்கு வந்துடும்… இல்லேனா போய்ட்டுக் கூப்டு வந்துருவேன். நாலாவது படிக்கும்போது (போனவருசம்) என்னனு தெர்ல… அவுங்க அப்பா அம்மா கூட கேரளாவிக்கு மிளகு எடுக்கப் போகல அது. ரொம்ப ஷாக்கிங்காதான் இருந்தது. “ஏன் மா இந்த வருசம் போகாமவிட்டுட்ட”னு கேட்டதுக்கு “படிக்கணும் மிஸ்”னு சொன்னிச்சி. அவ்ளோ சந்தோசமா இருந்துச்சி.

இந்தக் கல்வியாண்டின் அரையாண்டு லீவுக்குக்கூட நான் வீட்டுக்குப் போகல. காரணம் பள்ளியில கொஞ்சம் வேல பாக்கி இருந்துச்சி & எலெக்ஷன் டியூட்டி. 24-ம் தேதி பள்ளிக்கூடத்துக்கு வந்து என்கூடவே இருந்துச்சி. துர்கா மட்டுமில்ல… டேஸ்காலர்ஸ்(13) எல்லாருமே!

படிக்க :
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
♦ வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !

“மிஸ்….காலையில 6-மணி பஸ்க்கு துர்கா அவங்க அப்பாம்மா கூட கேரளா போயிடிச்சி”னு மத்த புள்ளைக அடுத்தநாள் (25-ம் தேதி) சொல்றாங்க.
“போனவருசம் போகலியே.. இந்த வருசம் ஏன் திடீர்னு கிளம்பிப் போச்சி? நேத்துக் கூட வந்துச்சி… ஒரு வார்த்தக் கூட சொல்லலியே”னு கேட்டதுக்கு.

“மிஸ்… இந்த வருசம் அஞ்சாவதுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்கல்ல… அதுக்கு பயமா இருக்குதாம்… அதான் போயிடிச்சாம்”னு மத்த புள்ளைக சொன்னபோது… “ஐயோ…..துர்கா” எனக்கத்தி வாய்விட்டுக் கதறி அழத் தோனிச்சி.

“எதுக்கும் பயப்படாதீங்கமா… அதெல்லாம் சும்மா… சாதாரண டெஸ்ட் மாதிரிதான்”னு நான் சொல்லியும் நீங்க அரசாணை போட்டு, டிவிலயும், பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர் மூலமும், மத்த ஆசிரியர்கள் மூலமும் தெரியப்படுத்திய பொதுத்தேர்வு என்ற வார்த்தை, எம்புள்ளைக்குப் பயத்தைக்கூட்டி, பள்ளியைவிட்டுக் கேரளாவுக்குத் தொரத்தியிருக்கு.

துர்கா மட்டுமில்ல… ஆனந்தன், சிவா, அஜீத் இவங்க எல்லோருமே கேரளாவுக்குப் போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குத் திரும்ப வராம நின்னுபோனவங்க.
அவங்கள தொரத்தி, தொரத்திப் புடிச்சிப் பார்த்தும் தோத்துப் போய் நிக்குறேன். இதுல துர்கா மட்டும்தான் வந்துகிட்டிருந்துச்சி. இப்போ அந்தப் புள்ளைய நான் என்ன சொல்லி வரவைக்கிறதுனு தெர்லியே…

“வாழ்வாதாரம் தேடி நாலஞ்சு மாசத்துக்குக் கேரளாவுக்குப் போற பெத்தவங்க தம்புள்ளைகளையும் சேர்த்தே கூப்பிட்டுட்டுப் போயிட்றாங்க. அதனால அவுங்களுக்கு இங்கயே எதாவது ஒரு நிரந்தரமான வேல வேணும்; அதுக்காக ஒரு மினி தொழிற்சாலை (இந்த மலையில் பருவகாலத்திற்கேற்ப விளையும் பயிர்களை அடிப்படையாகக் கொண்டு) ஒன்ன உருவாக்கினா… அவுக இங்கேயே இருப்பாங்க… புள்ளைகளோட படிப்பும் கெடாது”னும்…. இல்லேனா… “கேரள அரசுக்கிட்ட பேசி, பெரிய பெரிய மிளகுத் தோட்டத்துக்கு மிளகு எடுக்க வர்றவங்க யாரும் 6-14 வயசு இருக்கிற குழந்தைகளைக் கூட்டிட்டு வரக்கூடாது; அப்படி வந்தா இங்க வேல கிடையாதுனு சொல்லச்சொல்லுங்க”னும் State Planing Commission, UNICEF,  Child Rights Commission and Collectorate வரை கத்திட்டேன் 2015-லிருந்து. ஆனா இதுநாள் வரை அதுக்கான எந்த நடவடிக்கையும் யாருமே எடுக்கல. இந்த மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கபபடும் நிதி கொஞ்ச நஞ்சமல்ல… அதெல்லாம் இறுதியில் என்ன ஆகிறது என்று கூடத் தெரிவதில்லை.

இந்த மலையிலுள்ள 372-க்கும் (தி.மலை) மேற்பட்ட வாழ்விடப்பகுதிகளிலுள்ள 100 பள்ளிகளிலிருந்தும் ஒவ்வோராண்டும் குழந்தைகள் கேரளாவுக்குப் போய்க்கிட்டேதான் இருக்காங்க. இதைத் தடுப்பதற்கான வழியை இந்த அரசு ஒருபோதும் சொல்லாது… இவர்களே நிரந்தர கேரள மிளகெடுப்பவர்களாக மாற்றும் முயற்சியைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது.

வாழ்த்துகள் தமிழக அரசே!

குறிப்பு: துர்காவின் ஃபோட்டோ இதில்தான் தெளிவாக இருந்தது.

நன்றி : ஃபேஸ்புக்கில் மகாலெட்சுமி

இதையும் பாருங்கள் :

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு

“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி !

Deepfaking (தமிழ்ச்சொல் உருவாக்கப்படவேண்டும்) நுட்பம் பற்றி நாம் உரையாடவேண்டியுள்ளது. “உண்மை”க்கு வந்துள்ள புதிய நெருக்கடி பற்றியும் கதைக்க வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணுணறிவு (AI), முகம் உணரும் தொழில்நுட்பம், விழியப் பகுப்பாய்வுத் தொழிநுட்பம் (Image analysis), குரல்தொகுப்பு எல்லாம் படுவேகமாக வளர்ந்து செல்கின்றன. இவற்றின் துணையோடு எந்தவொரு வீடியோவிலும் எந்தவொருவரையும் பொருத்திவிடக்கூடிய வல்லமையை மென்பொருட்கள் எட்டியுள்ளன.

இதனை உங்கள் கைப்பேசியிலேயே செய்துவிடக்கூடிய Deepfaking Apps பாவனைக்கும் வந்தன. அச்செயலிகளைப் பயன்படுத்தி பெண்கள் மீது பாலியல் தொந்தரவினைச் செய்ய முடியும் என்ற அடிப்படையில் சட்டத்தின் துணையோடு அவை தடை செய்யப்பட்டன. இந்தத்தடைகள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.

ரஜினிகாந்த் இனி இதையும் பயன்படுத்தி இளமைத் தோற்றத்தோடு படம் வெளியிட ஆசைப்படுவார் என்பதை விடவும் ஆபத்தான விடயங்கள் இதில் நிறையவே உள்ளன.

இனிமேல் நாம் எண்ணிம வடிவில் (Digital Format) காண்கின்ற எந்தவொரு ஆவணமும் வீடியோவும் படமும் உறுதியான / உண்மையான ஒன்றாக இருக்கப்போவதில்லை. வாழ்நாள் முழுதும் ஆய்வு செய்து சான்றுகளோடு உருவாக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், ஆவணப்படங்கள் எல்லாம் பொருளற்றுப் போகப்போகின்றன.

Photoshop பண்ணி போலிசெய்ததெல்லாம் பாலர் பாடசாலைப் பிள்ளைகளின் விளையாட்டு. இப்போது வந்திருப்பது அதிதுல்லியமானது.

“சான்றுகள்”, “உண்மை” என்பதன் பொருள் இனிவரும் உலகில் தீவிர மாற்றத்துக்கு உள்ளாகப்போகிறது.

ஏற்கனவே “உண்மைத்தன்மை” என்பது பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். போலிச்செய்திகளும் வதந்திகளும் பரப்புரைகளும் எம்மை ஆளும் சூழலுக்குள் சிக்குண்டு திணறுகிறோம். இப்போது “போலி உண்மை”க்கு செயற்கை நுண்ணறிவு நுட்பம் துணைசெய்யப்போகிறது.

பின்வரும் வீடியோவில் பேசுவது ஒபாமா அல்ல. ஆனால், அதை யாருமே நம்பமாட்டார்கள்.

இனி எல்லாமே இப்படித்தான்.

இதிலுள்ள நன்மை என்னவென்றால், எம்முடைய வீடியோவோ ஒலிப்பதிவோ படமோ வெளியானால், அதிலிருப்பது நானல்ல, போலியே என்று எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். இவற்றை வைத்து எம்மை மிரட்ட முடியாது.

ஆனால் “உண்மைத்தன்மைக்கு” ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிதான் பெரும் சவாலாக மாறப் போகிறது.

படிக்க:
அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !
மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !

அதிகார வர்க்கம் இப்போதிருப்பதை விட எளிதாக எம்மை மாங்காய் மடையர்களாக்கப்போகிறது. மக்களுக்கு “உண்மையை” வெளிப்படுத்த ஓயாது உழைக்கும் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பெரும் நெருக்கடிக்குள்ளாகப்போகிறார்கள்.

இந்தப் புதிய நிலவரத்தின் புதிய வாய்ப்புகளை, உழைக்கும் மக்கள் எப்படி தமக்கு நன்மையாக மாற்றப்போகிறார்கள் என்பது தான் கேட்கவேண்டியிருக்கும் கேள்வி.

முகநூலில் :Muralitharan Mayuran Mauran

disclaimer

ஒரு சங்கியின் கேவலமான செயல் !

நான் ஒரு ஐடி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். தினமும் மாலை அந்நிறுவன ஊழியரை சேத்பட் பகுதியில் பிக்கப் செய்வது வாடிக்கை. இன்றும் அங்கு சென்றிருந்தேன். தொடர்ந்து மூன்றாண்டுகளாக செல்வதால் அங்கு அருகிலிருக்கும் பெட்டிக்கடைகாரர் பழக்கம்.

அஞ்சு கோடிப் பேரையும் இப்படித்தான் சேத்திருப்பாங்களோ…

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு ஐம்பது வயது மதிக்கக்கூடிய மனிதர் வந்தார் கடைக்காரரிடம், “அவசரமா ஒரு நம்பருக்கு கால் பண்ணனும் உங்க மொபைல் போன் குடுங்க” என்று கேட்டார். உடனே கடைக்காரர், “அய்யயோ என் போன் வீட்டிலேயே மறந்து வச்சிடேன்” என்றார்.

கடைக்காரர் என்னைப் பார்த்து, “சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க” என்றார். நானும் பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் அதை அவசரமாக வாங்கி ஒரு எண்ணை டயல் செய்து விட்டு எதுவும் பேசாமல் எதையோ குறித்து கொண்டு கைபேசியை தந்து விட்டு நகர்ந்தார்.

அவர் சென்றவுடன் எனது கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தியும் அதில் ஒரு otp-யும் வந்திருந்தது அதைதான் அவன் குறித்துக் கொண்டு சென்றான் போல. எனக்கு நல்ல கோபம். கடைக்கராரிடம் காண்பித்தேன். ”அய்யோ எனக்கு ஏதும் தெரியாதுங்க என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்.

என்ன ஒரு கேவலமான செயல். கோபத்துடன் அவனைத் தேடி தெருமுனைக்கு சென்று விசாரித்தேன். அங்கிருந்த டீக்கடைகாரரும் சில துப்புரவு தொழிலாளர்களும் இப்பதாங்க எங்ககிட்டையும் போன வாங்கி பேசினாருங்க என்றனர். பிஜேபி உறுப்பினர் என்பதை ரத்து செய்ய ஏதும் வழி உள்ளதா.?? தயவு செய்து இது குறித்து உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க அண்ணா… (பிஜேபி உறுப்பினர்) அந்த சொல்லை கேட்டாலே அருவருப்பாகவுள்ளது…

நன்றி முகநூலில் : karthi prithvi

disclaimer

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பின்லாந்தில் போராட்டம் !

னவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மதம் மற்றும் இன அடிப்படையில் வேற்றுமை காட்டும் இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் நடந்த போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பின்லாந்து நாட்டின் மூன்று நகரங்களில் (Helsinki, Turku, Tampere) நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, நகரின் மத்தியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பை வாசித்து அதன் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பற்றிய பாடல்களும் கவிதைகளும் வாசிக்கப்பட்டன.

Amnesty International அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் CAA-விற்கு எதிராக போராடும் மக்களின் மீது அரசு காவல்துறையை கொண்டு கட்டவிழ்க்கும் வன்முறைகளை கண்டித்து பின்னிஷ் மொழியில் பேசினார்கள்.

28 நாடுகள் கொண்ட ஐக்கிய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கும் சூழலில் ஐரோப்பா எங்கும் ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, பின்லாந்து என பல நாடுகளில் CAA மற்றும் NRC சட்டத்திற்கு எதிராக இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழ்த்துகள் Radheesh Dhanasegaran

நன்றி : ஃபேஸ்புக்கில் கபிலன் காமராஜ் 

நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 54

அத்தியாயம் பதினொன்று | ஆடம் ஸ்மித்: பொருளாதார முறையை உருவாக்கியவர் | நாடுகளின் செல்வம்

அ.அனிக்கின்

1767-ம் வருடத்தின் வசந்த காலத்தின் போது ஸ்மித் ஓய்வுக்காக கெர்கால்டிக்கு சென்றார்; அடுத்த ஆறு வருட காலம் அங்கேயே அநேகமாகத் தொடர்ந்து இருந்தார். இந்தக் காலம் முழுவதையும் தன்னுடைய புத்தகத்தை எழுதுவதில் கழித்தார். ஒரே மாதிரியான வாழ்க்கை முறையும் தன்னுடைய காலத்தையும் சக்தியையும் ஒரே நோக்கத்துக்காக மிகவும் அதிகமாக ஒன்று திரட்டிச் செலவிடுவதும் தன்னுடைய உடல் நலத்தைப் பாதிக்கின்றன என்று தன்னுடைய கடிதங்களில் ஒன்றில் எழுதினார்.

1773-ம் வரு டத்தில் லண்டனுக்குப் புறப்படும் பொழுது தன் உடல் நிலை அதிக பலவீனமாக இருப்பதாக உணர்ந்த படியால், தனக்கு மரணம் ஏற்படுமானால் தன்னுடைய இலக்கிய பாரம்பரிய உரிமைகளை ஹியூம் பெற வேண்டும் என்று எழுதிவைத்தார். தன்னுடைய புத்தக வேலை முடிந்துவிட்டதாக அந்தப் பிரயாணத்தின் போது அவர் நினைத்தார். இதற்குப் பிறகு, அந்தப் புத்தகத்தை முடிப்பதற்கு இன்னும் மூன்று வருடங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. கிளாஸ்கோ சொற்பொழிவுகள் எனப்படுகிற அவருடைய தொடக்க நிலைப் பொருளாதார ஆராய்ச்சிகளுக்கும் நாடுகளின் செல்வம் புத்தகத்துக்கும் இடையில் கால்நூற்றாண்டுக்கால இடைவெளி இருக்கிறது. நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று கூறவேண்டும்.

நாடுகளின் செல்வத்தின் இயல்பையும் காரணங்களையும் பற்றி ஓர் ஆராய்ச்சி என்ற நூல் 1776-ம் வருடம் மார்ச் மாதத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது. அந்த நூல் ஐந்து பாகங்களைக் கொண்டதாகும். முதல் இரண்டு பாகங்களில் ஸ்மித்தினுடைய தத்துவ அமைப்பின் அடிப்படையான கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. அவருடைய அமைப்பு அதற்கு முந்திய நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில, பிரெஞ்சு பொருளியலாளர்களின் கருத்துக்களில் பலவற்றைப் பொதுமையாக்கி முழு நிறைவாக்குகிறது.

முதல் புத்தகம் சாராம்சத்தில் மதிப்பு, உபரி மதிப்பு பற்றிய ஆராய்ச்சியைக் கொண்டிருக்கிறது. உபரி மதிப்பு என்பதை லாபம், நிலக்குத்தகை என்ற ஸ்தூலமான வடிவங்களைக் கொண்டு ஸ்மித் ஆராய்கிறார். இரண்டாவது பாகம் மூலதனத்தின் தன்மையும், குவிப்பும் பயன்படுத்தலும் குறித்து என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ள மூன்று பாகங்களிலும் ஸ்மித் தனது தத்துவத்தைப் பிரதானமாக பொருளாதாரக் கொள்கைக்கும் ஓரளவுக்கு வரலாற்றுக்கும் கையாள்கிறார். மூன்றாவது பாகம் அளவில் சிறியது; அது நிலப்பிரபுத்துவத்திலும் முதலாளித்துவ உருவாக்க சகாப்தத்திலும் ஐரோப்பியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆராய்கிறது. நான்காவது பாகம் விரிவானது; அது அரசியல் பொருளாதாரத்தின் வரலாறாகவும் விமர்சனமாகவும் இருக்கிறது. அதில் எட்டு அத்தியாயங்கள் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கும் ஒரு அத்தியாயம் பிஸியோகிராட்டுகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிகவும் பெரியதாகவுள்ள ஐந்தாம் பாகம் நிதியைப் பற்றி, அரசு வருமானம், செலவுகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அடர்த்திமிக்க ஸ்தூலமான விவரங்களைக் கொண்ட இந்தப் புத்தகங்களில் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி ஸ்மித்தினுடைய மிகவும் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம் என்பதில் சந்தேகமில்லை. வால்டர் பேஜ்காட் கூறியது போல, அது பொருளாதார ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, “பழைய காலத்தைப் பற்றி மிகவும் வேடிக்கையாக எழுதப்பட்ட புத்தகமாகும்”. கெனேயின் சுவையற்ற பகுப்பாராய்ச்சிகளுக்கும் டியுர்கோவின் தேற்றங்களுக்கும் ஆழமான சூக்குமப்படுத்தலைக் கொண்டிருக்கும் ரிக்கார்டோவின் நுட்பம் நிறைந்த கோட்பாடுகளுக்கும் ஸ்மித்தின் நூலுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. அதில் விரிவான புலமையும் நுட்பமான காட்சிப் பதிவும் தற்சிந்தனையான நகைச் சுவையும் இருக்கின்றன.

நாடுகளின் செல்வம் நூலைப் படிப்பவர்கள் குடியேற்றங்களையும் பல்கலைக் கழகங்களையும், யுத்தத்தையும் வங்கித் தொழிலையும், வெள்ளிச் சுரங்கங்களையும் கடத்தலையும் பற்றி, இன்னும் அதிகமான பொருள்களைப் பற்றி சுவாரசியமான பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். நவீனச் சிந்தனையின்படி பார்க்கும் பொழுது இவற்றில் பெரும்பாலானவைகளுக்கும் பொருளாதாரத் தத்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் ஸ்மித் அரசியல் பொருளாதாரம் என்பது எல்லாவற்றையும் தழுவிய சமூக விஞ்ஞானம் என்று நினைத்தார்.

படிக்க :
நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !
♦ HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான ஆராய்ச்சி முறை தர்க்க ரீதியான சூக்குமப்படுத்தல் என்பதாகும். பொருளாதாரத்தில் அடிப்படையான ஆரம்ப இனங்களின் சில தொடர்வரிசைகளை நிறுவி ஆதாரமான சார்பு நிலைகளின் மூலம் அவற்றைத் தொடர்புபடுத்தினால், மென்மேலும் சிக்கலான, ஸ்தூலமான சமூக நிகழ்வுகளை ஆராய்வதை நோக்கி ஒருவர் முன்னேற முடியும். ஆடம் ஸ்மித் இந்த விஞ்ஞான முறையை வளர்த்துச் சென்றார். அவர் உழைப்புப் பிரிவினை, பரிவர்த்தனை, பரிவர்த்தனை மதிப்பு போன்ற இனங்களை ஆதாரமாகக் கொண்டு தன்னுடைய அமைப்பை நிறுவுவதற்கு முயற்சித்தார். பிறகு அவற்றிலிருந்து முக்கியமான வர்க்கங்களின் வருமானங்களுக்கு முன்னேறினார்.

அவருடைய நூலில் எண்ணற்ற வர்ணனைகளும் பிற செய்திகளை விரிவாகக் கூறுதலும் இடம் பெற்றுள்ளன. ஆனால் மேலே சொன்ன அர்த்தத்தில் பார்க்கும் பொழுது அவை குறிப்பிட்ட பிரத்யட்ச மதிப்பைக் கொண்ட பொருள் விளக்கங்கள் என்று கருதலாம். ஆனால் விஞ்ஞான ஆராய்ச்சியில் உயர்வான தரத்தை ஸ்மித் நெடுகிலும் கையாள முடியவில்லை. வர்ணனைகளும் மேலெழுந்த வாரியான கருத்துக்களும் அவரை உந்தித்தள்ளிக் கொண்டு சென்றபடியால் தனது ஆழமான பகுப்பாராய்ச்சி முறையை அவர் அடிக்கடி கைவிட்டார். இந்த இரு பக்கத்தன்மை புறநிலையில் அந்தக் காலத்தின் கூறுகளாலும் விஞ்ஞானத்தில் ஸ்மித்தின் இடத்தினாலும், அகநிலையில் அவருடைய அறிவின் தனிவகையினாலும் நிர்ணயிக்கப்பட்டது.

இதைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்:

“இடைவிடாத முரண்பாட்டில் அதிகமான எளிமையோடு ஸ்மித் முன்னேறுகிறார். ஒரு பக்கத்தில், அவர் பொருளாதார இனங்களுக்கு இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்பை அல்லது முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் தெளிவாகப் புலப்படாத கட்டமைப்பைத் தேடிக் கண்டு பிடிக்கிறார். மறுபக்கத்தில், அதே சமயத்தில் இந்தத் தொடர்பை அது போட்டி என்ற நிகழ்வில் தோன்றுகின்ற விதத்தில் அப்படியே எடுத்துரைக்கிறார்; விஞ்ஞான ரீதியான முறையைப் பின்பற்றாத சாதாரணமான பார்வையாளருக்கு எப்படித் தோன்றுமோ அப்படியும், முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப் போக்கில் உண்மையிலேயே அக்கறை கொண்டவருக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் தோன்றுகின்ற விதத்திலும் அப்படியே எடுத்துரைக்கிறார். இக்கருதுகோள்களில் ஒன்று முதலாளித்துவ அமைப்பின் உள்தொடர்பை, அதன் உள்ளமைப்பைத் துருவி ஆராய்கிறது. மற்றொரு கருதுகோள் வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகளை அவை தோன்றும் விதத்தில், தெரிகின்ற விதத்தில் எடுத்துக் கொண்டு அவற்றை மொட்டையாக வர்ணிக்கிறது, பட்டியல் கொடுக்கிறது, மறு கணக்கிடுகிறது, வடிவ ரீதியான வரையறைகளில் ஒழுங்குபடுத்துகிறது. ஸ்மித்திடம் இந்த இரண்டு விதமான அணுகுமுறைகளும் ஒன்றுக்குப் பக்கம் மற்றொன்று குதூகலமாகச் செல்வதோடு மட்டுமல்லாமல் அவை ஒன்றோடொன்று கலந்து பிணைந்து அடிக்கடி ஒன்றையொன்று மறுத்துக் கொள்ளவும் செய்கின்றன” (1)

இன்னும் மேலே எழுதுகிற பொழுது ஸ்மித்தின் கடமை இரட்டை அம்சத்தைக் கொண்டிருந்த படியால் அவருடைய இரு பக்கத்தன்மை நியாயமானதே என்று மார்க்ஸ் கூறுகிறார். பொருளாதார அறிவை ஒரு அமைப்பாக ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் பொழுது உள்ளார்ந்த தொடர்புகளைப் பற்றி சூக்குமமான பகுப்பாராய்ச்சியைக் கொடுக்க வேண்டியிருந்ததோடு மட்டுமல்லாமல், முதலாளித்துவ சமூகத்தை வர்ணிப்பதும் அதற்குரிய வரையறைகள், கருதுகோள்களைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமாக இருந்தது.

படிக்க :
தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !
♦ தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி

ஸ்மித்திடமிருந்த இரு பக்கத்தன்மை, அடிப்படையான விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் காணப்பட்ட பொருந்தாத்தன்மை அரசியல் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சியில் அதிகமான முக்கியத்துவம் உடையதாக இருந்தது. ஸ்மித்தை முதன் முதலாகக் குறை சொன்னவர் அநேகமாக டேவிட் ரிக்கார்டோவாகவே இருக்கும். அவர் ஸ்மித் என்ற பகுப்பாய்வாளரை ஸ்மித் என்ற வர்ணனையாளரிடமிருந்து பாதுகாத்தார். ஆனால் ரிக்கார்டோவிலிருந்து வேறுபட்ட பல எழுத்தாளர்களும் நாடுகளின் செல்வத்திலிருந்து மேற்கோள்களைக் கையாண்டார்கள். இவர்கள் ஸ்மித்தின் மேலெழுந்த வாரியான, கொச்சையான கருத்துக்களை வளர்த்துச் சென்றார்கள்.

விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் ஆராய்ச்சிப் பொருளைப் பற்றி ஸ்மித் மிகவும் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்; அது இன்றைக்கும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரத்துக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பொருளாயத வசதிகளின் உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை, நுகர்வு பற்றிய விதிகளை, மனிதனுடைய விருப்பத்துக்குச் சம்பந்தமில்லாத வகையில் இயங்குகின்ற விதிகளை ஆராய்கின்ற விஞ்ஞானமாகும். இது முதன்மையான அம்சமாகும்.

ஸ்மித் தன்னுடைய அறிமுகத்தில் முதல் இரண்டு புத்தகங்களிலும் எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்று எடுத்துக் கூறும் பொழுது அவர் உண்மையில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய இந்த அறிவையே விளக்கிக் கூறுகிறார். அவர் சமூக உழைப்பின் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் காரணங்களை, சமூகத்திலுள்ள வெவ்வேறு வர்க்கங்களுக்கும் குழுவினருக்கும் இடையே உற்பத்திப் பொருளின் விநியோகத்தின் இயற்கையான வரிசைக்கிரமத்தை, மூலதனத்தின் தன்மையை, அதன் படிப்படியான திரட்டலின் சாதனங்களை ஆராய்வதற்கு உத்தேசிக்கிறார்.

இது சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பற்றிய ஆக்க முறையான, பகுப்பாய்வு அணுகுமுறையாகும். அது யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் இந்த யதார்த்தம் எப்படி ஏன் வளர்ச்சியடைகிறது என்பதையும் ஆராய்கிறது. ஸ்மித் அரசியல் பொருளாதாரத்தைப் பிரதானமாக சமூகப் பிரச்சினைகளின், சமூக வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளின் பகுப்பாய்வு எனப் பார்க்கிறார் என்பது முக்கியமானதாகும்.

ஆனால் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் புற நிலையான ஆராய்ச்சியின் மூலம் செய்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது ஸ்மித்தின் கருத்தாகும். அது ஒரு பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்தி சிபார்சு செய்ய வேண்டும். அந்தக் கொள்கை “மக்களுக்கு அதிகமான வருமானத்தை அல்லது வாழ்க் கைக்குத் தேவையான வருமானத்தை ஏற்படுத்த வேண் டும்; அல்லது அவர்கள் தாங்களாகவே அத்தகைய தேவை யான வருமானத்தைப் பெறுவதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும் என்பது இன்னும் பொருத்தமானதாகும்.”(2) எனவே சமூகத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு நிலவ வேண்டும் என்பதை அரசியல் பொருளாதாரம் ஆதரிக்க வேண்டும்.

இது இயல்பான செய்முறை அணு குமுறையாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையில் பொருளியலாளர் “செல்வம் வளர்ச்சியடைவதற்கு” என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறார்.

இரண்டு அணுகுமுறைகளுமே பொதுவாக இடைத் தொடர்பு உடையவையாகும்; எந்த மாதிரியான பொருளாதாரக் கருதுகோளிலும் ஒன்று மற்றொன்றின் குறையை நிரப்புகிறது. எனினும் பிற்காலத்தில் பிரபலமான அறிஞர்கள் பலருக்கு முதல் அல்லது இரண்டாவது அணுகுமுறை குறியடையாளமாக இருந்தது என்பதை நாம் பின்னர் காண்போம். “ஸேய் மரபு” அதன் “நேர்க்காட்சிவாதத்தைப்” பற்றிப் பெருமை கொண்டு இயல்பான அணுகுமுறையை நிராகரிப்பதை வலியுறுத்தியது; ஆனால் ஸி ஸ்மான்டி பிரதானமாகத் தான் விரும்பிய வழியில் சமூகத்தை மாற்றியமைப்பது எப்படி என்று காட்டுகின்ற விஞ்ஞானமே அரசியல் பொருளாதாரம் என்று கருதினார். ஆனால் ஸ்மித் தனக்குரிய பன்முகத்தன்மையோடு இரண்டு அணுகுமுறைகளையும் அங்கக ரீதியாக இணைத்துக் கொண்டார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :
 (1) K. Marx, Theories of Surplus-Value, Part 11, Moscow, 1968, p. 165.
(2) A. Smith, The Wealth of Nations, Vol. 1, London, 1950, p. 395.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க :

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !

0

திருச்சி பாலக்கரை பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகச் செயல்பட்டுவந்த விஜயரகு என்பவர், நேற்று (27-01-2020) காலை 6 மணியளவில் திருச்சி சந்தைப் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்ற பாஜக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

திருச்சியில் (காந்தி மார்க்கெட் அருகில்) உப்புப்பாறை  என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு. இவர் அந்தப் பகுதியில் மார்க்கெட்டுக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திருச்சி பாலக்கரைப் பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள மிட்டாய் பாபு என்பவருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. விஜயரகுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்ததாகவும், அதற்கு விஜயரகு குடும்பத்தினர் மறுத்துவிட்டதாகவும், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முன் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள நேற்று (27-01-2020) காலையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிட்டாய்பாபு விஜயரகுவை சந்தையில் ஓட ஓட வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட விஜயரகு.

கடும் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்த விஜயரகுவை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் விஜயரகு. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முன் கூடிய பாஜக காலிகள் – எச்.ராஜா வரும்வரை பிணத்தை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள சாலையில் 10 பேர் அமர்ந்து கொண்டு ‘சாலை மறியல் போராட்டத்தையும்’ நடத்தியுள்ளனர்.

அதற்குள்ளாக கொலை நடந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்தது மிட்டாய் பாபுவும் அவரது கூட்டாளிகளும் என்பது வெளியில் அனைவருக்கும் தெரியவந்தது. கொலை செய்த மிட்டாய்பாபுவை போலீசு தேடி வந்தது. பலரது பார்வையில் நடந்த கொலையாதலால் மிட்டாய் பாபு பெயர் வந்தது. யாரென்று விவரம் தெரியாமல் இருந்திருந்தால், முசுலீம் ‘தீவிரவாதிகள்’தான் இந்தக் கொலையை செய்ததாக, பாஜகவும் – ஊடகங்களும் அறிவித்திருக்கும்.

இதற்குள்ளாகவே, செத்த பிணத்திலும் காசு திருடும் பாஜக தலைவர்கள் இசுலாமிய தீவிரவாதக் கதையை சமூக வலைத்தளங்களில் கட்டிப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்தக் கொலை குறித்து பாஜக-வின் தேசியச் செயலாளர்களான எச்.ராஜா -வும் முரளிதர் ராவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமது முசுலீம் வெறுப்பைக் கொட்டத் தொடங்கிவிட்டனர்.

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
♦ பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?

எச்.ராஜா தனது டிவிட்டில், “பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் ஜிகாதி குண்டர்களால் திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் ரகு கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீசு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே கொலை செய்த நபர் முசுலீம்தான் என்பதை இவர்கள் இருவரும் அடித்துக் கூறுகின்றனர். சொல்வது பாஜக ஐ.டி. விங்கில் போட்டோஷாப் வேலை செய்யும் ஏதேனும் சைபர் கூலியாக இருந்தால் கூடப் பரவாயில்லை, சொல்பவர்கள் பாஜக-வின் தேசியப் பொதுச் செயலாளர்கள்.

இவர்களாவது இசுலாமிய பயங்கரவாதிகள் கொலை செய்ததாகக் கூறுவதோடு நிறுத்திக் கொண்டனர். பாஜக-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்னும் தரம் தாழ்ந்து ஒரு ‘நாலாம்தர’ பொறுக்கியைப் போல பேசியுள்ளார்.

படிக்க:
♦ களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்

சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்னார், “தமிழகத்தில் ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் எல்லோருக்கும் ஓர் உயிர்தான். எல்லாருக்கும் ஒரு சாவுதான். அதைப்பற்றி கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. இதை தமிழ அரசும் காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும், என்றார். ” (செய்தி : தினகரன் 28-01-2020)

அதாவது இவர்கள் யாரையும் போட்டுத்தள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்களாம். சாவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லையாம். இதை போலீசும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.

இவர்கள் மக்களைக் கொல்வதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாதவர்கள் என்பது இவர்களது சித்தாந்த குருவான கோல்வால்கர், சாவர்க்கரின் நூல்களிலேயே காணக் கிடைக்கிறது. ரத யாத்திரை முதல் சமீபத்திய ஜே.என்.யூ. வன்முறை வரை சங்க பரிவாரத்தின் கொலைவெறியைப் பற்றி  அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அடுத்ததாக, சாவைப் பற்றியும் இவர்கள் கவலைப்பட மாட்டார்களாம். ஆம், களத்தில் பலியாவது அனைத்தும் இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பணவசதியற்றவர்கள் தானே. ஆகையால் சாவைப் பற்றி பொன்னார்களுக்கும் எச்.ராஜாக்களுக்கும் கவலை ஏதும் கிடையாது என்பதும் உண்மைதான்.

கடைசியாக, தமிழக அரசும் போலீசும் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் என இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பொன்னார். அதுதான் புதிதாக இருக்கிறது. தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?

பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த யாரேனும் சாதாரணமாக மரணமடைந்தாலேயே அதில் இசுலாமிய தீவிரவாதப் பின்னணி இருப்பதாக பாஜக கிளப்பிவிடுகிறது. பாஜக – இந்து அமைப்பு பிரமுகர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாக சங்கிகள் அலறுகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை கொலை செய்யப்பட்ட பல்வேறு பாஜக – சங்க பரிவாரப் பிரமுகர்களில் பெரும்பாலானவர்களின் மரணத்திற்கு கட்டப்பஞ்சாயத்து, முன் விரோதம், கள்ளக் காதல் போன்ற விவகாரங்கள்தான் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்கிற உண்மை போலீசு விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தக் கொலைப் பழியை இசுலாமியர்கள் மீதே போடுவதற்கு முயற்சித்து வருகிறது பாஜக கும்பல்.

கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, இதே போல சவடால்களும், மிரட்டல்களும் சாலை மறியல்களும் நடத்தப்பட்டன. பின்னர் விசாரணையில் ஒரு பெண் விவகாரத்தில் பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவருடன் இருந்த முன்விரோதத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்தது.

அதே ஆண்டு நாகபட்டிணத்தைச் சேர்ந்த அப்போதைய பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி ஜூலை மாதத்தில் காலையில் நடைபயிற்சியின் போது 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போதும் முசுலீம் தீவிரவாதம் எனக் குதித்தது பாஜக. இந்தப் புகழேந்தி அப்போதுதான் ஒரு ஆசிரியரின் வீட்டை அபகரித்த வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார் என்பதும், கட்டப் பஞ்சாயத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகத்தான் முனீஸ்வரன் என்பவர் புகழேந்தியைக் கொன்றார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், திருப்பூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து, இசுலாமிய ‘தீவிரவாதிகளால்’ அன்னார் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், அருகில் மோடி படத்துடன் பாஜக கொடிக்கும் சேர்த்து செருப்பு மாலையெல்லாம் போட்டு செட்டப்பை  தயாரித்து வைத்திருந்தனர் சங்கிகள். போஸ்ட் மார்டம் அறிக்கையும் உறவினர்களின் சாட்சியமும் சங்கிகளின் நாடகத்தின் மீது சேறை வாரியிறைத்தன.

பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலின் நோக்கமே கலவரத்தைத் தூண்டுவதும், வாழ்வாதாரப் பிரச்சினைகளை நோக்கி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புவதும்தான். சமீபத்தில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை தொடங்கி, நேற்றைய விஜயரகு கொலை வரையிலும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறது பாஜக கும்பல்.

கலவரங்களின் மூலம் ஒன்றிரண்டு தொகுதியையாவது கைப்பற்றிவிடமாட்டோமா என பாஜக தலைவர்கள் ஏங்கும் அதே வேளையில், ஒன்றிரண்டு பிரியாணி அண்டாக்களாவது கிடைக்காதா என பாஜக – சங்க பரிவார தொண்டர்களும் ஏங்கிக் காத்துக் கொண்டுள்ளனர் !

தமிழக மக்களே! அண்டா திருடர்கள் வரத் தயாராகிவிட்டார்கள் ஜாக்கிரதை !

 நந்தன்

 

மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்

மிழில் உலக சினிமாக்களும் பெருகிவிட்டன; உலக சினிமா ஆர்வலர்களும் பெருகிவிட்டார்கள். உலக சினிமாக்களை அப்படியே சுட்டு, வசனம் வரை மொழிபெயர்த்து உருவாக்கப்படும் ‘உலக சினிமாக்கள்’ உண்டு. உண்மையில் உலக சினிமாக்கள் என்று கொண்டாடப்படுபவை அந்தந்த நாடுகளின் தன்மையைப் பிரதிபலிக்கும் சினிமாக்கள். அவை அந்த மண்ணில் உருவாக்கப்பட்டு உலக சினிமாக்கள் ஆகின்றன. ஆனால் தமிழகத்தில் உலக சினிமா நோய் பீடித்தவர்களோ அந்த சினிமாக்களைப் போன்ற பாவனை சினிமாக்களை இங்கே உருவாக்குகின்றனர்.

தமிழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்து உலகத்தர சினிமாக்கள் வழங்கியவர்கள் என்று பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால் சில நல்ல ஷாட்கள், கவித்துவமான சில காட்சிகள், ஆங்காங்கே இலக்கிய அடையாள உதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் ‘உலக சினிமா’வை உருவாக்கிவிட முடியும் என்று நம்புபவர் மிஷ்கின். எந்த நிலத்துக்கான சினிமா எடுக்கிறாரோ, அந்த நிலத்தின் மணல்துகள்கள் அவர் படங்களில் இருப்பதில்லை.

மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார். அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே.

மிஷ்கின் படத்தில் பட்டப்பகலில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும். ஒரு பணக்கார குடும்பம், ஒரே ஒரு மகன், பார்வையற்றவன், அவனை சிங்கம்புலியிடம் அம்போ என்று விட்டுவிட்டு கனடாவில் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்? கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவனின் பெயர் அங்குலிமாலா, அவன் வைத்திருக்கும் பன்றிப்பண்ணையின் பெயர் ‘சாந்தி பன்றிப்பண்ணை’. ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

மிஷ்கினின் படங்கள் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டிக் கீழே இறங்கி வருவதில்லை. அந்த வர்க்கத்தின் வாழ்க்கையும் இயல்புடன் சித்திரிக்கப்படுவதில்லை. பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள் கழிவிரக்கம் கோரி செயற்கை பாவனை செய்வார்கள். சைக்கோ கொலைகாரனை, எந்த க்ளூவும் கிடைக்காமல் காவல்துறை பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறைக்குக் கிடைக்கும் க்ளூ, ‘அவன் க்ளீன் ஷேவ் பண்ணியிருப்பான்’ என்பது. சிசிடிவி கேமராவே இல்லாத உலகம் மிஷ்கினின் படைப்புலகம்.

படிக்க :
சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !
ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்

உலக சினிமாவில் தர்க்கம் பார்ப்பதா என்று பாப்கார்ன் அதிர சிலர் கோபிக்கக்கூடும். சரி தர்க்கம் வேண்டாம், வலுவான தத்துவமாவது இருக்கிறதா?
மிஷ்கின் படங்கள் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் காட்டுவதைப் போல பாவனை செய்பவை. ஆனால் அடிப்படையில் அவை நல்லவன், கெட்டவன், திருடன், போலீஸ், பிசாசு, தேவதை, ஓநாய், ஆட்டுக்குட்டி, எம்.ஜி.ஆர், நம்பியார் என்று இருமை எதிர்வுகளில் நிறுத்துபவைதான்.

தமிழகத்தில் வசிக்கும் ஒருவர் சாதி, மதம், பாலினம், வட்டாரம், வர்க்கம் எனப் பல அடையாளங்களில் சூழப்பட்டவர். அவருடைய வாழ்க்கைச் சிக்கல் பல பரிமாணங்கள் கொண்டது. ஆனால் மிஷ்கின் படத்திலோ மொன்னையான இரு தரப்புகள், இந்தத் தரப்பில் சில அன்பு, அந்தத் தரப்பில் சில அன்பு. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான யுத்தம், இறுதியில் நன்மையே வெல்லும். அவ்வளவுதான். உலக இலக்கியம் படித்து, உலக சினிமாக்கள் பார்த்து மிஷ்கின் மீண்டும் மீண்டும் படைப்பது தத்துவ பாவனை பூசப்பட்ட ஈசாப் நீதிக்கதைகளையே.

கமலாதாஸ், சில்வியா பிளாத் போன்ற இலக்கியப் பெயர்களைத் தூவிவிட்டால் புத்திசாலிப் பாவனை. போதாக்குறைக்கு சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, ஷாஜி போன்றவர்களை சில உதிரிப்பாத்திரங்களில் நடிக்க வைத்துவிட்டால் இலக்கியப் பாவனை. சாதியச் சிக்கல்களையும் முரண்களையும் நேரடியாகப் பேசக்கூடிய படங்கள் வரும் காலத்தில், “சாதிவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்; மதவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்” என்று விஜயகாந்த் காலத்து வசனம் வைக்கிறார் மிஷ்கின். ஏனென்றால் அதை அவரால் சித்திரிக்க முடியாது.
எதார்த்தத்தில் காவல்துறை அடக்குமுறைக்கருவி, தந்திரங்கள் நிறைந்தது. ஆனால் மிஷ்கின் படங்களிலோ அது சாதுவான அப்பாவி மிருகம். அவரது எந்தப் படங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை காட்சிப்படுத்தப்பட்டதில்லை. ‘சைக்கோ’வில் ஏ.எம்.ராஜா பாட்டுப்பாடியபடி தலை வெட்டுப்பட்டுச் சாகிறார் ஒரு போலீஸ் அதிகாரி.

அங்குலிமாலா, பௌத்தம், ஜென், கமலாதாஸ், கிறிஸ்துவ விக்டோரிய ஒழுக்கம் என்று விதவிதமான பாவனைகள் காட்டினாலும் அடிப்படையில் மிஷ்கின் படங்கள் எம்.ஜி.ஆர் படங்கள்தான். எம்.ஜி.ஆர் படங்களில் நாயகிகள் வில்லனிடம் ஆபத்தில் சிக்கியிருப்பார்கள். அவர்களை எம்.ஜி.ஆர் வந்து மீட்பார். ‘சைக்கோ’விலும் நாயகி, “கௌதம் வந்து மீட்பான்” என்று வில்லனிடம் புன்னகைக்கிறாள்.

படிக்க :
CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !
♦ ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !

‘பிசாசு’ படத்தில் பிசாசு தன் மனைவியை அடித்து உதைப்பவனை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும்; தன் காதலனை பீர் அடிக்க விடாமல் பாட்டிலை உடைத்துவிடும்; அப்பா புகைபிடிக்கக்கூடாது என்று சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓடும். இதெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் அவர் வழக்கமாகச் செய்பவை. இதை ‘பிசாசு’ செய்தது மட்டும்தான் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மிஷ்கினின் உலக சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம். என்ன ஒன்று, மிஷ்கின் பட நாயகர்கள் பெண்களை மீட்டுவிட்டு, ‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ என்று டயலாக் பேச மாட்டார்கள். அதற்குப் பதிலாக கொஞ்ச நேரம் குனிந்துநிற்பார்கள்.

படைப்பூக்கமுள்ள படைப்பாளிகள் பன்மைத்துவ பாத்திரங்களைப் படைத்து அதன் வழியாக வாழ்க்கையின் சிக்கலான முரணியக்கத்தைச் சித்திரிப்பார்கள். ஆனால் மிஷ்கினோ வெவ்வேறு உடல்களின் வெவ்வேறு உடல்மொழிகளை, பாவனைகளைக் கொன்றொழித்துவிட்டு ஒரேமாதிரியான உடல்மொழியை எல்லா உடல்களுக்குள்ளும் திணிப்பார். ஒரே அச்சில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளியைப் போல, திரைக்குப் பின்னால் நூலைப் பிடித்து தோற்பாவைகளை ஆட்டிவைக்கும் பொம்மலாட்டக்காரரைப் போன்றவர் மிஷ்கின்.

மனிதர்கள் குனிந்தபடி நிலம் நோக்குவார்கள். கிறுக்குப்பிடித்தாற்போல் திடீரென்று குறுக்கும் நெடுக்குமாக ஓடுவார்கள். இறந்தது மகள்தான் என்று தெரியும். இருந்தும் அரைகிலோ மீட்டர் நடந்துபோய், தரையில் விழுந்துதான் ‘கடவுளே’ என்று கதறுவாளா தாய்? இதிலே என்ன இழவு புதுமை இருக்கிறது? ‘அஞ்சாதே’ படத்தில் ‘குருவி’ என்று ஒரு பாத்திரம் வரும். சற்றே உரத்த குரலில் சின்ன எரிச்சலுடன் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். அது அந்தப் பாத்திரத்தைப் பொறுத்தவரை சரி.

ஆனால் மிஷ்கினின் எல்லாப் படங்களிலும் ‘பழைய பிளேடால் பைல்ஸ் ஆபரேஷன்’ செய்த மனிதர்கள் எரிச்சலில் கத்திக்கொண்டேயிருக்கிறார்கள். கணியன் பூங்குன்றனாரின் பெயரைத் துப்பறிவாளனுக்கு வைத்து, ‘க்ரீன் டீயா இது, கழுதை மூத்திரம் மாதிரி இருக்கு’ என்று ஒரு பெண்ணிடம் எரிந்து விழுந்து, கையில் துடைப்பத்தைக் கொடுத்து, ‘கூட்டிப்பெருக்கு’ என்று ஆணையிட வைத்து கணியன் பூங்குன்றனை அவமானப்படுத்தினார். இந்தப் படத்தில் கமலாதாஸை அவமானப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். ஏன் அவர் தன் தாய் உள்பட எல்லோரையும் அவமானப்படுத்தி, வசைகளைப் பொழிந்து, எரிந்துவிழ வேண்டும்? நமக்கு எரிச்சலாக இருக்கிறது.

படிக்க :
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
♦ அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு உடல்மொழிகள், வெவ்வேறு பாவனைகள், வெவ்வேறு மனநிலைகள் என பன்மைத்துவமே மனித வாழ்க்கையின் அழகு. பாசிசமோ பன்மைத்துவத்தை விரும்புவதில்லை. அது பன்மைத்துவத்தை அழித்து. வித்தியாசங்களைத் தகர்த்து ஒற்றைத்தன்மையை நிறுவ விரும்புகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று மதவாத பாசிசம் சொன்னால் ‘ஒரே உடல்; ஒரே உடல்மொழி’ என்கிறார் மிஷ்கின். மிஷ்கின் மற்றும் மணிரத்னத்தின் படங்கள் வித்தியாசத்தை அழித்து, ஒற்றைத்தன்மையைப் போலியாகப் பாத்திரங்களுக்குள் திணிக்கும் பாசிச மனநிலை கொண்டவை.

மிஷ்கின் படங்களில் இன்னோர் ஆபத்தும் உண்டு. பெண்கள் கல்வி கற்க வந்த தொடக்க காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் படங்கள் ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’, ‘இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’ என்று பிற்போக்குப் பாடல்கள் பாடின. படித்த பெண்களை அகங்காரம் உள்ளவர்களாகக் காட்டின. மிஷ்கின் படங்களோ ‘நீ வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கடத்தப்படுவாய், கொல்லப்படுவாய்’ என்று மீண்டும் மீண்டும் பயமுறுத்துகின்றன.

பெண்களுக்குப் பாதுகாப்பு, பாலியல் அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்னைகள் இருப்பது உண்மைதான். ஆனால் பெண்கள் அதை எதிர்கொள்வது போன்றோ சமூக மாற்றங்கள் குறித்தோ மிஷ்கின் படங்கள் பேசுவதில்லை. எப்போதும் பெண்களை மீட்பது உடல் வலிமை அல்லது அறிவு வலிமையுள்ள ஆண்களின் கடமை. எந்தப் பெண்ணும் தன்னைத் தற்காத்துக்கொள்ள, ஆபத்தை எதிர்கொள்ள எந்தப் பிரயத்தனமும் செய்வதில்லை. இருக்கும் ஒரே ஒரு துணிச்சலான பெண்ணையும் படிக்கட்டிலிருந்து தள்ளி, சக்கர நாற்காலியில் முடக்கிப்போடுகிறார் மிஷ்கின். ஒருகட்டத்தில் சைக்கோ, நாயகியின் சங்கிலியை அவிழ்த்துவிட்டுச் சுதந்திரமாக நடமாட விட்டாலும் அவள் தப்பிப்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. ‘கௌதம் வந்து காப்பாற்றுவான்’ என்று காத்திருக்கிறாள்.

கிறிஸ்துவ விக்டோரிய ஒழுக்க விதிகளைக் கேள்விக்குள்ளாவது நல்ல விஷயம்தான். ஆனால் சுய இன்பத்தைச் சொல்லிவிட்டால் அது புதுமையான உலக சினிமா என்று நினைத்துக்கொள்கிறார் மிஷ்கின். ஆனால் அந்தக் கலாச்சார அதிர்ச்சிகளை எல்லாம் தமிழ் சினிமா தாண்டிவந்துவிட்டது. குமாரசாமி தியாகராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ பாலியல் மீறல்களை விரிவாகப் பேசுகிறது. ஆனால் மிஷ்கினோ ‘பேண்ட் ஜிப் மாட்டிக்கிச்சு’ என்று நிற்கிறார். ‘சில்லுக்கருப்பட்டி’யில் ஓர் இளைஞனின் சுய இன்பம் குறித்து ஓர் இளம்பெண் பேசக்கூடிய காட்சிகளில் எவ்வளவு எதார்த்தமும் கலைத்தன்மையும் இருக்கிறது. ஆனால் ‘சைக்கோ’விலோ பாவனைகள் மட்டுமே இருக்கின்றன. பிளாஸ்டிக் பாவனைகள்.

எம்.ஜி.ஆர் படங்கள் எல்லாம் உருமாற்றப்பட்ட நீதிக்கதைகள். மிஷ்கின் படங்களோ உருமாற்றப்பட்ட எம்.ஜி.ஆர் படங்கள். ஆனால் எம்.ஜி.ஆர் படங்களில் இவ்வளவு அபத்தமான காதல் காட்சிகள் ஒருபோதும் இருந்ததில்லை.

கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது. அதுவும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர் கதை. மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர் கதை.

 

நன்றி : ஃபேஸ்புக்கில் சுகுணா திவாகர்

தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !

1

தீண்டாமைக்கு எதிராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போராடினார். அரசியலமைப்பும் 1950-ல் அதைத் தடைசெய்தது. ஆனால் தேசிய அவமானம் என்றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டாலும் சாதித்தீண்டாமை இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித்திருக்கிறது.

வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும்பங்கள் சாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி (EPW) இதழின் ஆய்வு கூறியிருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக்காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத் (Amit Thorat) மற்றும் ஓம்கர் ஜோஷி (Omkar Joshi) கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு -2 (IHDS) 2012 ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தோரத், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பொருளாதாரப் பேராசிரியராகவும், ஜோஷி, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் (University of Maryland) சமூகவியல் துறையில் அறிஞராகவும் பணிபுரிகின்றனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் தீண்டாமையின் பரவலை ஆய்வு செய்வதற்காக தகவல்களை பல்வேறு பகுதிகளாக அவர்கள் பிரித்தனர். IHDS – II இன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 42,000 வீடுகளில் தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research) மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகமும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தின. ஆய்வின் சாராம்சமான விவரங்கள்;

படிக்க:
♦ தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !
♦ CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

ஊரக-நகர வேறுபாடு:

30 விழுக்காட்டு கிராமப்புற குடும்பங்கள் தீண்டாமை பழக்கத்தை கடைப்பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 20 விழுக்காடாக குறைந்துள்ளது. நகரங்கள் மக்களை ஓரிடத்தில் குவிப்பதுடன் அவர்களின் வாழ்நிலையை ஒன்று போலானதாக்குகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” போல பிரிவினைகள் போற்றும் பழைய பிற்போக்கு கலாச்சாரங்களை கைவிட்டு அந்த இடத்தில் அனைவரையும் உள்ளடக்கும் புதியதொரு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள நகரச்சூழல் அவர்களை நெருக்குவதே இதற்கு முதன்மையான காரணமாக இந்த ஆய்வு கூறுகிறது.

மதரீதியான வேறுபாடு:

கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன. சமணர்கள் கண்டிப்பான மரக்கறி உணவுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இறைச்சி உணவு உண்பவர்களை தங்களது சமையலறைக்குள் விடுவதில்லை. அடுத்ததாக 30 விழுக்காடு இந்துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இந்து மதத்தின் தீண்டாமையில் இருந்து தப்புவதற்காக புத்த மற்றும் சமண மதத்திற்கு மாறிவர்களும், இந்து மத்திலேயே இருக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் இடஒதுக்கீடு மூலம் ஓரளவிற்கு பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ளனர். அதே சமயத்தில் தீண்டாமை கொடுமையிலிருந்து தப்புவதற்காக இசுலாம் மற்றும் கிருத்துவ சமயங்களுக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடும் இல்லை. மதமாற்றமும் அவர்களது சாதி அடையாளத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அழிக்கவில்லை. அவர்கள் இன்னும் சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கல்வியின் தாக்கம்:

கல்வியறிவற்ற சுமார் 30% மக்கள் இன்னும் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். அதே நேரத்தில் பட்டப்படிப்போ அல்லது பட்டயப்படிப்போ படித்த இளைஞர்கள் இருக்கும் வீடுகளில் தீண்டாமை 6 விழுக்காடு குறைந்துள்ளது.

பார்ப்பனர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பினரிடையே கல்வி உயர உயர தீண்டாமை கடைபிடிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்தது. பள்ளிப்படிப்பிலிருந்து கல்லூரி படிப்பு என கல்வியின் மட்டம் உயரும் அதே நேரத்தில் பார்ப்பனர்களிடையே 69 விழுக்காட்டிலிருந்து 48 விழுக்காடாக தீண்டாமை குறைந்துள்ளது.

படிக்க:
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

கல்வியின் நிலை உயர உயர தீண்டாமையின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990 -களில் தனியார்மய கொள்கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

பொருளாதாரக் காரணி:

ஏழைகள், இரண்டாம் பிரிவினர், நடுத்தர பிரிவினர், நான்காம் பிரிவினர் மற்றும் பணக்காரர் என்று வருமானத்தின் அடிப்படையில் குடிமக்களை ஐந்து குழுக்களாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். வரைப்படத்தில் ஏழைகளில் இருந்து பணக்காரர் நோக்கி செல்ல செல்ல தீண்டாமையின் அளவு குறைந்திருக்கிறது.

32.56 விழுக்காட்டு ஏழைக்குடும்பங்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் பணக்காரர்களிடையே இந்த எண்ணிக்கை 23.35 விழுக்காடாக குறைந்திருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

வட்டார வேறுபாடு:

வட மாநிலங்களில் சுமார் 40 விழுக்காடு குடும்பங்கள் மற்றும் மைய மாநிலங்களில் சுமார் 49 விழுக்காடு குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன. அதே நேரத்தில் மேற்கு மாநிலங்களில் 13 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை வழக்கத்தை பின்பற்றுகின்றன. கிழக்கு மாநிலங்களில் 17 விழுக்காடு மக்கள் இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றன.

“இந்த ஆய்வை 2015 முதல் நாங்கள் செய்து வருகிறோம். இந்த ஆய்வு பகுதி அளவிலாக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மேற்கோள் காட்டினார். சமூகத்தில் தீண்டாமை இன்னமும் எவ்வாறு நிலவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது” என்று ஆய்வாளர்களில் ஒருவரான அமித் தோரட் கூறினார்.

இன்றைக்கு யாரு சார் சாதி பார்க்கிறார்கள் என்று ஆங்காங்கே சிலர் முனகுவது நம்முடைய செவிகளில் விழத்தான் செய்கிறது. சாதியொழிப்பு தான் முதன்மையானது வர்க்க விடுதலையை அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று தலித் விடுதலையை முன்னிறுத்துபவர்களும் கூறுகின்றனர். ஆனால் பொருளாதார விடுதலையின்றி சாதி விடுதலையோ, ஏன் பெண் விடுதலையும் கூட சாத்தியமன்று என்பதையே இந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது.

 கட்டுரையாளர் : ஐஷ்வர்யா ஸ்ரீராம்

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி :  EPW, நியூஸ் மீட்டர். 

80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா !

சிறு தொழில் நிறுவனங்கள், மத்திய மாநில அலுவலகங்கள், ஐ.டி வளாகங்கள், பல்துறை தொழிற்கல்விக் கூடங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம், சென்னை கிண்டி தொழிற்பேட்டை.

இங்கு நடைபாதையில் தளர்ந்த வயதில் ஒரு மூதாட்டி, வயது 80-க்கும் நெருக்கம். குழந்தை போன்ற முகம், பார்ப்பவர்களை மனம் குளிரவைக்கும் சிரிப்பு.  தனி ஒரு ஆளாக தள்ளுவண்டி பெட்டிக்கடையை அவர் நிர்வகித்துக்கொண்டிருந்தார். கோலி சோடா, பன்னீர் சோடா, லெமன் சோடா, கடலை உருண்டை, மிட்டாய், பட்டர் பிஸ்கெட், முறுக்கு, ரோஜா பாக்கு, கிரேன் பாக்கு, பிளாக் ஒயிட் என்று சில சிகரெட் பாக்கெட்டுகள், இப்படி அந்த தள்ளுவண்டியில் இருக்கும் மொத்த பொருட்களின் மதிப்பு ரூபாய் 3000-க்கும் குறைவாக இருக்கும். ஆனால் அந்த மூதாட்டி மிகப்பெரும் சங்கிலித்தொடர் அங்காடியை நிர்வகிக்கும் இளம் முதலாளியைப் போல, பொங்கி வழியும் உற்சாகத்தோடு வாடிக்கையாளர்களை அணுகுகிறார்.

நாங்கள் வெயிலுக்கு அவரிடம் கோலி சோடா  வாங்கிக்கொண்டே உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது, எப்படி இந்த வயதில் உற்சாகமாக இருக்கிறீரகள் என்றோம்.

அவர் நம்மைப் பார்த்து தம்மை மறந்தபடி சிர்த்தார். வெட்கத்தில் முந்தானையால முகத்தை மூடியபடி திரும்பவும் முகம் நிறைய சிரித்தார். அவரது கடை வாடிக்கையாளர்கள், அம்மா, பாட்டி, ஆயா என்று அவரைப் பல சொந்தங்களில் அழைத்து, சிகரெட் – பாக்கு, கடலை உருண்டை என அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்தனர். வந்தவர்களில் பாதிபேர் வட நாட்டு இளைஞர்கள் (ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள்) அவர்களிடம் இந்தி, உருது, மராட்டி, தெலுங்கு என பல மொழிகளில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வரிசையாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். கூடவே அவர்கள் மொழியிலேயே சரளமாகக் கிண்டலடித்து அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தார்.

படிக்க:
♦ சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…
♦ RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !

டேய் வந்துட்டீங்களா, ஒரு சிகரெட்ட வாங்கி மூனு பேரு ஊதுவானுங்க, இவனப்பாரு படிக்கச் சொல்லி காலேஜு-க்கு அனுப்புனா, அரியர் வெச்சு சுத்திக்கிட்டிருக்கான், படிப்ப முடிச்சிட்டு போயிட்டான்னு பாத்தா திரும்ப பரிச்சன்னு வந்துருக்கான். இப்பயாவது கட.. கடையா சுத்தாமா ஒழுங்கா படிடா என்று அவனைக் கலாயத்தார்.

பொங்கிவரும் சிரிப்பை அடக்க முயலும் பாட்டி.

நம்மிடம் திரும்பி, இந்த பிளாட்பாரத்துக்கு நான் வந்து 50 வருசம் ஆகுது. இந்த பசங்க தான் எனக்குப் பேராண்டிக. அவுங்க கிட்ட வாயாடுவேன், அவுங்க கோவிச்சுக்க மாட்டாங்க. ஒரு நாள் உடம்பு சரியில்லன்னு வரலன்னாலும், ஏன் ஆயா நேத்து வரலன்னு அக்கறயா விசாரிப்பாங்க என்று உருகினார்.

என்னோட 3 குழந்தைகள தூக்கிக்கினு 31 வயசுல் இந்த பிளாட்பாரத்துக்கு நிர்கதியா வந்தேன். அதுலேருந்து இங்க தான் என் பொழப்பு ஓடுது. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு எந்த கொறையுமில்ல. 4 வயசு, 7 வயசு, 11 வயசுன்னு ஒரு ஆம்பள பயன், ரெண்டு பொம்பள பசங்க எல்லாத்தயும் கட்டி கொடுத்தேன். பேரன் பேத்தி எடுத்துட்டேன். ஒடம்பு சரியில்லாம சின்ன வயசுலேயே என் மவன் போயி சேந்துட்டான். அவனுக்குப் பொறந்த ரெண்டு பொட்ட பசங்க மருமகள இப்ப நாந்தான் காப்பாத்துறேன்.

பெரிய பேத்திக்கு 20 வயசு டெய்லர் வேலைக்குப் போகுது. சின்ன பேத்திக்கு 7 வயசு, படிக்கிது. நான் காலைல 9 மணிக்கு கடைக்கு வந்தா சாயங்காலம் 7 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். பேத்தி இந்தப்பக்கம் வேலைக்குப் போகும்போது என்கூட வந்து இருந்துட்டு சாப்பாடு கொடுத்துட்டு போகும். சில நேரம் மருமக சாப்பாட்ட எடுத்துன்னு வருவா… காலைல 4 இட்லி, மதியானம் சாம்பார் சோறு, நைட்டு சோறு சீரணமாகல அதனால டீ பன்னு சாப்புட்டு காலத்த தள்ளுறேன்.

தனது மகன் நினைவாக வைதிருக்கும் புகைப்படம்.

சைதாப்பேட்ட கொத்தவால்சாவடியில தான் சொந்தமா ஒரு குடிச இருக்குது, அந்த காலத்துல எப்படியோ அத வாங்கிட்டேன். அந்த குடிசய இன்னும் மாத்த முடியல, பொன்னுங்கள கட்டிக்குடுக்குறது, பையனுக்கு வைத்திய செலவு என செலவு மேல செலவு, என் பையன காப்பாத்த முடியல, அதான் எனக்கு தீராத துக்கம் என்று சோகமானார்.

படிக்க:
♦ ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

அவன் எனக்குப் பையன் கிடையாது, ஃபிரண்டு தான், பெரியவனான பெறகு கூட என் தோள்மேல கைய போட்டுக்கிட்டு தான் என்கூட பேசுவான், குழந்தைகள் வளர்ப்பு, தண்டல் பிரச்சன, குடும்பப் பிரச்சன என எல்லாத்தையும் எங்கிட்ட மனசுவிட்டு பேசுவான். ஆட்டோ ஓட்டி பொழச்சான். அவன காப்பாத்த முடியலயே, அவன் என்கூட இல்லயேங்குறதுதான் என்னோட ஒரே கஷ்டம் இப்ப.

சின்ன வயசுலேயே என்னோட வீட்டுக்காரர நான் பிரிஞ்சிட்டேன். அவருக்கு சாவகாசம் சரியில்ல. மூணு புள்ளங்க இருந்தும் இன்னொருத்தி பின்னால போனாரு, லாரி டிரைவர் வேல, குடிகாரனாகி, அவர் போக்குல போயிட்டாரு. நான் குழந்தைகள காப்பாத்த அவர அறுத்துவிட்டுட்டேன். சுமைய கொறச்சுக்கினு சொந்தக் காலுல வாழத் துணிஞ்சேன். சின்னதா இங்கதான் 50 வருசத்துக்கும் முன்னாடி பிளாட்பாரத்துல அடுப்பு மூட்டி இட்லிகட போட்டேன். அப்போ கடைக்கு வந்த சில மகராசனுக என் நெலமய பாத்துட்டு, சின்ன சின்ன உதவின்னு 100 ரூவா தெரட்டி எங்கையில கொடுத்தாங்க. இத இட்லி கட முதலுக்கு வெச்சுக்கோ அப்படீன்னாங்க.

அத வெச்சு, விறகு அடுப்புலேருந்து ஸ்டவ்வு அடுப்புக்கு மாறுனேன். சில்வர் தட்டு, டம்ளர்னு வாங்கி போட்டு இன்னக்கி ஒரு ஆளா நிக்கிறேன். இப்ப வயசாகி கண்ணுல புரை விழுந்து கண்ணு மங்கிடுச்சு, பேத்திங்க பெரிய ஆளாயிடுச்சுங்க, இனிமே இட்லி நெருப்புல வேக முடியலன்னு இந்த தள்ளு வண்டியில ஒக்காந்துட்டேன். ஒடம்புக்கு முடியலன்னாலும் வீட்டுல ஒக்காரக் கூடாது. நீ செய், நான் செய்-னு சண்ட வரும், அதனால இப்படியே ஓடிக்கினே செத்துடனும். இதுவரைக்கும் எனக்கு பெருசா எந்த நோயும் வரல. முட்டி நோவு, கால் வலி அடிக்கடி வரும், நான் தைலம் தேச்சுப்பேன், முடியலன்னா ஒரு ஊசி போட்டு சரிபண்ணிக்குவேன். அதான் எனக்கு வைத்தியம். வெயில் மழைன்னா கொஞ்சம் ஓரமா ஒதுங்கிக்குவேன், வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழம லீவு எடுத்துக்குவேன், அன்னக்கி வெறுமனே இங்க உக்காந்துட்டு போவேன், அப்பதான் என் மனசு சந்தோசமாக இருக்கும் என்று நம்மிடம் குழந்தையாக சிரித்தார்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்

ரு வர்க்கம் ஒரு குறிப்பிட்ட சமூக – பொருளாதார உற்பத்தி முறையில் உருவாகி, திடப்படுகிறது; அந்த உற்பத்திமுறை மாறும்போது அவ்வர்க்கமும் சிதைந்து, அழிகிறது; உருமாற்றம் அடைகிறது. தூய வர்க்கம், வர்க்கக்குழு என்பது எப்போதும் கிடையாது. காரணம் ஒருவர்க்கம் வட்டார, சாதி, மத, இன்னும் பல பண்பாட்டு அடையாளங்களைத் தாங்கி நிற்கவே செய்கிறது. வாழ்நிலைக்கான போராட்டத்தின் ஊடே தன் வர்க்கத்தின் சக உறுப்பினர்களையும், வர்க்க உணர்வையும் ஒரு தனி மனிதன் அடைகிறான். அதுவரை வட்டார, சாதி, மத இன்னும் பல பண்பாட்டு அடையாளங்களையே ‘தான்’ என்று அறிகிறான். இச்சிக்கலான நிலையை உணர்ந்து கொண்டாலன்றி சமூகமாற்ற இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமூகநிலைக்கு முகம் கொடுக்க இயலாது. மேற்கண்ட புரிதல் தேவையை இச்சிறுநூல் முன்னெடுத்துச் செல்கிறது. அந்த வகையில் மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது. இந்நூலுடன் “வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்”‘ என்ற சிறு நூலையும் சேர்ந்து வாசிப்பது நற்பலனைத் தரும். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

நவீன கால ஐரோப்பா இரண்டு விதமான அரசியல்களை நமக்குப் பரிச்சயப்படுத்தியது. முதலாவது, பூர்ஷ்வா (முதலாளிய) தாராளவாத அரசியல். தேசிய அரசு, அரசியல் சட்டம், அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், தேர்தல், நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை நிறுவனக்கூறுகளாகக் கொண்ட அரசியல் இது. தனிச்சொத்துரிமை, தனிமனிதன், மனித உரிமைகள் ஆகியவை இந்த வகையான அரசியல் கோட்பாட்டில் மையமான இடம் வகிக்கின்றன. இரண்டாவது, மார்க்சிய வர்க்க அரசியல். சமூகம் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பது மார்க்சிய அரசியலின் கோட்பாடு. சுரண்டும் வர்க்கம் ஆளும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் உள்ளன. எனவே வர்க்க முரண்பாடுகள் அரசியலாக வெளிப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், அவற்றோடு அரசியல் போராட்டங்கள், உழைக்கும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆகியவை வர்க்க அரசியலின் கூறுகள்.

இவை இரண்டிலும் நேரடியாகச் சேராதது அடையாள அரசியல். தேசம், சாதி, மதம், மொழி, பிரதேசம், பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலை அடையாள அரசியல் என்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், இன்னும் விரிவாக, மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடையாள அரசியல் கடந்த இரு நூற்றாண்டுகளில் வலுவான ஒன்றாக இடம்பெறுகிறது.

அடையாள அரசியலின் பண்புகள்

அடையாள அரசியல் என்பது பின்னை நவீனத்துவச் சூழலில் உருவான ஒருவகை அரசியல் என்று சில மேற்கத்திய சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர். மேலைநாடுகளின் நவீன அரசியல் லட்சியங்கள் பொய்த்துப் போன பின்னர், உலக அளவில் சோசலிசத்திலும் நெருக்கடிகள் எற்பட்ட பின்னர் அடையாள அரசியல் முன்னுக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சமீப காலங்களின் அடையாள அரசியல் தீவிரப்பட்டு வருவதற்கும் அது கோட்பாட்டு ஆதரவைப் பெற்றமைக்கும் மேலே குறிப்பிட்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். ஆயின் ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில், காலனியச் சூழல்களில், 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஓர் அரசியல் நடந்து வந்திருக்கிறது.

படிக்க:
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்

முதலாளியத்திற்கு முந்திய பழங்குடிச் சமூகங்களின் சமூகப் பிரிவுகளையும் சமூகத்திரட்சி முறைகளையும் கொண்டு இவ்வகை அரசியல் தன்னை வடிவமைத்து வந்துள்ளது. இந்தியச் சூழல்களில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதற்கொண்டு, இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற மதத்திரட்சிகளும், தமிழ்ச் சூழல்களில், வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கம், கால்ட்வெல்லின் திராவிடம் பற்றிய கருத்தாக்கத்திற்குப் பிறகான அச்சு நூல்கள் பதிப்பு இயக்கம், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம் பின்னர் பெரியாரின் நுழைவு தனித்தமிழ், தமிழிசை இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், இன்று பழங்குடிகள் என நீண்ட நெடிய ஓர் அரசியலைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இவை காலனிய ஆட்சியின் பிரித்தாளும் உத்திகளால் உருவாக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆட்சியாளர்கள் பிரித்தாண்டனர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பிரித்தாள முடியாதபடி நாம் ஒன்றுபட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதும் வரலாற்றுரீதியாகத் தவறான கற்பிதம்.

இந்துத்துவச் சிந்தனையாளர்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால், இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் இந்தியா ஒரு பொற்கால வாழ்வை வாழ்ந்து வந்ததாக எழுதுவதுண்டு. இது போன்ற ஒற்றைப்படையான மதிப்பீடுகளைக் கடந்து இந்திய சமூகத்தை நாம் அணுகிச் செல்லுவதே சரியாக இருக்கும். எனவே ஆட்சியாளர்கள் பிரித்தாளுவதற்கான சமூக அடிப்படைகள் நமது சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவாதம், அடையாள இயக்கங்களின் வரலாற்றுரீதியான சமூக அடிப்படைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்லவேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் பழஞ்சமுக அமைப்புகளிலிருந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களும் உட்காலனியக் கூறுகளும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன என்றே இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. (நூலிலிருந்து 5-7)

Identity-Politics-Slider… அடையாள அரசியலார் இந்தியச் சூழல்களிலும் சர்வதேசச் சூழல்களிலும் மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை குறித்து முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளை மனதில் இருத்தி இங்கு பேசமுனைவோம்.

வர்க்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கம், அது மக்கட் கூட்டங்களிடையிலான பொருளாதாரச் சுரண்டலை (Exploitation) மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுகிறது. அது சாதிரீதியான, நிற அடிப்படையிலான அல்லது இன அடிப்படையிலான, பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் (Oppressions) கணக்கில் கொள்ளுவது கிடையாது என்பது அடையாள அரசியல் நம்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். சுரண்டல் என்பது, பொருளாதாரச் சுரண்டல் என்பது மார்க்சியத்தின் மிக வலுவான ஒரு கருத்தாக்கம். (நூலிலிருந்து பக்.12)

… இந்தியா போன்ற ஒரு பழைய சமூகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர அசைவுகளின்றித் தேங்கிக்கிடந்த சமூகத்தில், சனநாயகப் புரட்சியின் செயல்பாடுகள் மிக வன்முறையாக நிகழ்த்தப்படவேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக சாதி ஒழிப்பு என்ற இலக்கு சோசலிசம் என்ற இலக்கை விட கடுமையானதாகக் கூட அமையலாம். இதற்குப் பொருள் வன்முறையை நாம் தூண்டிவிடப் போகிறோம் என்பதல்ல, இங்குள்ள சாதி மேலாக்கம் சாதி ஒழிப்பு என்ற இலக்கை மிகத் தீவிரமாக எதிர்த்தே தீரும். எனில் கம்யூனிஸ்டுகள் அதனை எதிர்கொண்டே தீரவேண்டும். இந்திய சனநாயகப் புரட்சி சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை.

உலகமயமாக்கச் சூழல்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட கிராமப்புறப் பாட்டாளிகள், தேசிய இனங்கள், சமயச் சிறுபான்மையினர், கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள், பெண்கள் எனப் பலவகைப்பட்ட மானுடக் கூட்டங்களின் சனநாயக உரிமைகள் மிகக் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் இம்மக்களின் வாழ்வுரிமைகளுக்கான பிரச்சினைகளைக் முந்திச் சென்று கையிலெடுக்கத் தயங்கினால், அவர்கள் தன்னிச்சையான, தம்மளவிலான இயக்கங்களைக் கட்டமைப்பார்கள். போராட்டங்களை வடிவமைப்பார்கள். இம்மாதிரியான நிலைமைகளை இன்று இந்தியாவில், தமிழ்ச் சூழல்களில் முன்னெப்போதுமில்லாத அளவில் மிக அதிகமாகச் சந்திக்கிறோம். சனநாயகப் புரட்சி பற்றி நம்மிடையிலான கூடுதலான வெளிப்படையான விவாதங்களும் நடைமுறை அரசியலுமே இச்சூழல்களில் நமக்குத் தேவைப்படுகின்றன. (நூலிலிருந்து பக்.21-22)

நூல் : மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 22
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam