Saturday, May 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 293

நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ?

”மார்க்சியம், தகர்ந்து விட்டது; இனி அதற்கு எதிர்காலமே இல்லை”, ”மார்க்சியம், இன்றைய நவீன கால கட்டத்திற்குப் பொருந்தாது” எனும் பிரகடனங்கள் நம்மைச் செவிடாக்கி வருகின்றன. சரி, மார்க்சியம் வேண்டாம்; மாற்று என்ன என்றால் இறுக்கமான மௌனம்தான் பதிலாக வருகிறது.

”மார்க்சியம் வேண்டவே வேண்டாம்” என உள்ளூர ஆசைப்படுபவர்கள்தான் இந்தத் தற்காலப் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.

தேக்கம், தற்காலிகமானது; வளர்ச்சி, நிரந்தரமானது எனும் அடிப்படையில் தன் தளைகளை அறுத்தெரிந்து விட்டு, மார்க்சியம் இப்பொழுது வீரியத்துடன் எழுந்து நிற்கிறது. உலகெங்கும் மார்க்சியத்தின்பால் புதிய ஈர்ப்பும் கரிசனமும் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது. அந்தப் பின்னணியில் தோழர் தியாகுவின் ”மார்க்சியம் அனா ஆவண்ணா” இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

மார்க்சிய மூலவர்கள் கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வரலாறும், மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களும், மார்க்சியத்தின் எதிர்காலங்குறித்த விவாதக்குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.

மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

… ” உலகில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளவரை – வர்க்க ஒடுக்குமுறையானாலும், தேசிய ஒடுக்குமுறையானாலும், சாதிய ஒடுக்குமுறையானாலும் – மார்க்சியம் என்ற விடுதலைப் பேராயுதத்துக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய மார்க்சியம் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல; கடைபிடிக்க வேண்டியதுமாகும். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ளாமல் கடைப்பிடிக்க முடியாது; கடைப் பிடிக்காமல் கற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், மார்க்சியத் தத்துவம் வறட்டுச் சூத்திரமல்ல. அது செயலுக்கு வழிகாட்டி” என்பது தோழர் தியாகுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உடன்பாடான கருத்துத்தான். (நூலின் அறிமுக உரையிலிருந்து)

நம் தமிழ்நாட்டில் கார்ல் மார்க்ஸ் ஓரளவு அறிமுகமாகி உள்ளார். ஆனால் மார்க்சின் பெயர் அறிமுகமாகியுள்ள அளவுக்கு மார்க்சியம் அறிமுகமாகவில்லை.

மார்க்சியத்தை, அதன் அடிக்கூறுகளை அறிந்து கொள்ள – அதன் ”அனா ஆவன்னா”வைக் கற்றுக் கொள்ள – ஆர்வமுள்ள தமிழர்களுக்காகவே இந்த குறுநூல்.

கார்ல் மார்க்சும், அவர் உயிர்த் தோழர் பிரெடெரிக் எங்கெல்சும்தான் மார்க்சியத்தின் மூலவர்கள். மார்க்சியத்தை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்னால் அந்த மூலவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

… தொடக்க காலத்தில் மார்க்ஸ் சமயப் பற்று உள்ளவராய் இருந்த போதிலும், மனித நேயச் சிந்தனைகள் அப்போதே அவரிடம் துளிர்விடத் தொடங்கிவிட்டன. 17 வயதுப் பள்ளி மாணவனாக இருந்த போது மார்க்ஸ் எழுதிய கட்டுரை ”வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஓர் இளைஞனின் சிந்தனைகள்” என்பதாகும். இந்தக் கட்டுரையில் இளம் மார்க்ஸ் கூறியதாவது:

”ஒரு மனிதன் தனக்காவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின், அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம். மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒருநாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது – வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும். அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்”

வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் சத்தற்க வாழ்வை வெறுத்து, மனித குல முன்னேற்றம் என்னும் மகத்தான இலட்சியத்திற்காக வாழும் முழுநிறைவான வாழ்வையே இளம் மார்க்ஸ் விரும்பிப் போற்றினார். (நூலிலிருந்து பக்.9-10)

மார்க்சியம் என்பது கார்ல் மார்க்சினுடைய கருத்துகளின் அமைப்பு ஆகும். கருத்துகளின் தொகுப்பு என்பது வேறு. அமைப்பு என்பது வேறு. மார்க்ஸ் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து புதிதாய்ப் பலவும் கண்டுபிடித்து தாம் கண்ட முடிவுகளைக் கோட்பாடுகளாக வகுத்துரைத்தார். இந்தக் கோட்பாடுகளுக்கிடையே ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தின் முரணற்ற மைய இழையைக் காண முடிகிறது. அவருடைய கருத்துக்களிடையே உயிரோட்டமான தொடர்பு உள்ளது. அவை ஓர் ஆரோக்கியமான உடலமைப்பின் வெவ்வேறு உறுப்புகளைப் போல் இசைந்து செயல்படுகின்றன. அதனால்தான் மார்க்சியத்தின் கருத்துக்கள் ஒரு கதம்பத் தொகுப்பு போலல்லாமல் உயிர்ப்பு மிக்க ஒழுங்கமைப்பாய் உருப்பெற்று மார்க்சியம் என்னும் விஞ்ஞானக் கருத்தமைப்பாக ஏற்றம் பெறுகின்றன.

மார்க்சியத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் :
பொருள்முதல்வாதம் : இது மார்க்சிய மெய்யியலைக் குறிப்பதாகும்.
மார்க்சியப் பொருளாதாரம் : இதற்கு அடிப்படையாகத் திகழ்வது உபரி – மதிப்புத் தத்துவம்
விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் (பொதுவுடமைத் தத்துவம்) : இது மார்க்சியத்தின் அரசியலைக் குறிப்பதாகும்.

திடீரென ஒருநாள் வானத்திலிருந்து வந்து குதித்ததல்ல மார்க்சியம். போதி மரத்தடியில் புத்தருக்கு ஒரு நாள் ஞானம் வந்ததாகச் சொல்வார்களே, அது போல் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு அவர்களின் மூளைகளிலிருந்து பீறிட்டு வந்ததல்ல மார்க்சியம்.

இயற்கை விஞ்ஞானத்திலும் சமூக விஞ்ஞானத்திலும் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தையெல்லாம் அடித்தளமாயக் கொண்டுதான் மார்க்சியம் எழுந்தது. மார்க்சியத்தின் மூன்று கூறுகளுக்கும் மூன்று தோற்றுவாய்கள் உண்டு.

மார்க்சிய மெய்யியலுக்கு ஜெர்மானிய மெய்யியலும், மார்க்சியப் பொருளாதார இயலுக்கு பிரித்தானிய அரசியல் பொருளாதாரமும், விஞ்ஞான சோசலிசத்துக்கு பிரெஞ்சு சோசலிசமும் தோற்றுவாய்களாகும். (நூலிலிருந்து பக்.18)

படிக்க:
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

மெய்யியல் அல்லது தத்துவ ஞானம் என்பது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மிகப் பொதுவான வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவியல் ஆகும். இதனை விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் அல்லது அறிவியல்களின் அறிவியல் என்று சொல்லலாம்.

இந்த உலகை – பிரபஞ்சத்தை – படைத்தவர் யார்? இது உண்மையிலேயே படைக்கப்பட்டதுதானா? இதில் காணப்படும் கோடானுகோடிப் பொருள்களுக்கென்று ஏதாவது பொதுத் தன்மை உண்டா? உண்டென்றால் அது என்ன? உலகம் இயங்குகிறதா? இயங்குகிறது என்றால் அந்த இயக்கத்திற்கு யார் அல்லது எது காரணம்? இப்படி நிறைய கேள்விகளை அன்றாடம் நாம் சந்திக்கிறோம். இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதுதான் மெய்யியல்.

எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூலாதரமான ஒரு கேள்வி உள்ளது. இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் மற்ற கேள்விகளுக்கெல்லாம் எளிதில் விடையளித்துவிடலாம். பொருள் முதலா? கருத்து முதலா? என்பதுதான் அந்த அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையைப் பொறுத்து, மெய்யியல் அன்று தொட்டு இன்றுவரை மொத்தத்தில் இரு முகாம்களாகப் பிரிந்து நிற்கிறது. சும்மா நிற்கவில்லை. சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது.

பொருள்தான் முதல் என்பது பொருள்முதல்வாதம். கருத்துதான் முதல் என்பது கருத்து முதல்வாதம். (நூலிலிருந்து பக்.20)

மனிதனின் தோற்றம் பற்றி இதுபோல் எத்தனையோ கட்டுக்கதைகள் உலவி வந்த காலத்தில் உண்மைச் சுடரேந்தி இருள் போக்க வந்தவர்தான் டார்வின் என்னும் இயற்கை விஞ்ஞானி. உயிரியல் வளர்ச்சியின் விதிகளை டார்வின் கண்டுரைத்தார், மனிதனின் தோற்றமென்னும் மர்மத்தை விண்டுரைத்தார். குரங்கு, மனிதக் குரங்காகி மனிதனான உண்மையைப் பரிணாம வளர்ச்சி விதிகளின் துணை கொண்டு நிரூபித்துக் காட்டினார்.

இயற்கை அறிவியலில் டார்வின் செய்ததை சமூக அறிவியலில் மார்க்ஸ் செய்தார். மனித வரலாற்றின் வளர்ச்சி விதிகளை அவர் கண்டுபிடித்தார். (நூலிலிருந்து பக்.29)

மார்க்சியத்தின் எதிர்காலம்:

மார்க்சியத்திற்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பிக் கொண்டிருக்கிற நேரத்தில் நாம் இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்தத் தத்துவமும் குறிப்பிட்ட காலத்திற்குரியதுதான். எல்லா காலத்துக்குமான முழு முதல் உண்மைகளும் முழுமுதல் தத்துவங்களும் கிடையாது என்ற மார்க்சியக் கோட்பாடு மார்க்சியத்துக்கும் பொருந்தும். மார்க்சியம் இந்த உலகத்திற்கு, மனித சமூகத்திற்குத் தேவையற்றுப் போகுமானால், அதற்குரிய காலம் முடிந்து அது காலாவதி ஆகிற நிலை வருமானால், அதுவேகூட மார்க்சியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். எப்படி என்றால் மார்க்சியம் அப்போது அதன் வரலாற்றுக் கடமையைச் செய்து முடித்திருக்கும்.

நூலாசிரியர் தோழர் தியாகு.

குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குரிய தேவையை நிறைவு செய்ய வந்த ஒரு தத்துவம் அந்தத் தேவையை நிறைவு செய்து முடித்த பிறகு, ஒரு தத்துவம் என்ற அளவில் மடிந்து போகும். அதன் ஆய்வு முறைகள், அழகியல் வடிவங்கள் போன்ற வேறு சில கூறுகள் தொடர்ந்து உயிர் வாழலாம்.

மார்க்சியம் அதன் வரலாற்றுப் பணியை நிறைவேற்றி விட்டதா? இல்லை. அந்தப் பணி இன்னும் மிச்சமிருக்கிறது. பெருமளவுக்கு மிச்சமிருக்கிறது.

மார்க்சியம் அதற்குரிய பணியை நிறைவேற்றும் ஆற்றலை இழந்துவிட்டதாகக் கருதுவோர் உண்டு. இந்தக் கோணத்திலிருந்து கூட மார்க்சியம் தோற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு என்ன சான்று? சோவியத்து நாட்டைப் பார். கிழக்கு அய்ரோப்பிய நாடுகளைப் பார் என்று விரல் நீட்டிப் பேசுகிறார்கள்.

சோவியத்து நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் ஒரு பெரும் பின்னடைவு நேரிட்டிருப்பது கண்கூடான உண்மை. தோல்வி, வீழ்ச்சி என்றே சொல்லலாம். எதன் தோல்வி? எதன் வீழ்ச்சி? இந்த நாடுகளின் பொதுவுடமைக் கட்சிகள் எதை மார்க்சியம் என்று கருதியும் சொல்லியும் வந்தனவோ, எதைச் சொல்லிதம் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி வந்தனவோ அதற்குத்தான் தோல்வி. அதாவது அங்கெல்லாம் மார்க்சியம் என்று அறியப்பட்ட ஒன்று தோற்றதே தவிர மார்க்சியம் தோற்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படை வரையறைகள் என்ன என்று பார்த்தோமானால், இந்த உண்மை புலப்படும்.

சோவியத்து நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் சோசலிச அமைப்புகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்லது தோல்வி அந்தந்த நாட்டிலும் ஏற்படுத்தப்பட்ட சோசலிச மாதிரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியாகும். மார்க்சியம் எந்த ஒரு சோசலிச மாதிரியையும் முன்வைக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அது சோசலிசத்திற்கான சமையல் குறிப்பு அன்று. பார்க்கப்போனால் மார்க்சியம் முதலாளித்துவம் பற்றிப் பேசிய அளவுக்கு சோசலிசம் பற்றி பேசியது இல்லை.

மார்க்சியப் பொருளாதார இயல் என்பது சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் பற்றியது அல்ல. அது முதலாளித்துவச் சமுதாயத்தின் தோற்றம், வாழ்வு, சரிவு, அழிவு ஆகியவற்றின் விதிகளைச் சொல்வதாகும். (நூலிலிருந்து பக்.48-49)

நூல் : மார்க்சியம் அனா ஆவன்னா ?
ஆசிரியர் : தியாகு

வெளியீடு : புதுமலர் பதிப்பகம்,
10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம் (அஞ்சல்)
ஈரோடு – 638 004.
தொலைபேசி எண் : 94433 07681
மின்னஞ்சல் : newflower_kurinji@yahoo.co.in

பக்கங்கள்: 64
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !

1
chinmayanand

த்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார் கல்லூரி மாணவி ஒருவர். சின்மயானந்தாவின் ஆசிரமத்துக்குள் இயங்கும் சட்டக் கல்லூரியில் படித்த அந்த மாணவியை மிரட்டி, அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகார்களை உ.பி. போலீசில் அளித்திருந்தபோதும் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மூலமாக சின்மயானந்த் குறித்து முக்கிய வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக அந்தப் பெண் கூறியிருந்தார்.

சின்மயானந்தை காப்பாற்ற பாஜக-வினர் பல தரப்பிலிருந்து முயற்சித்தனர். விளைவாக இவ்வளவு புகார்கள் எழுந்தபோது அவர் மீது ஒரு வழக்கு கூட பதியப்படாமல் இருந்தது. தன்னிடம் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் உள்ளன என அந்தப் பெண் கூறியிருந்த நிலையில், சின்மயானந்த் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

chinmayanand arrestஇந்திய தண்டனை சட்டம் 376 – C, 342, 354 – D, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சின்மயானந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவி அளித்த பாலியல் வல்லுறவு பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவில்லை. புகார் அளித்த மாணவியின் மீதே மிரட்டி பணம் பறித்தல் பிரிவின் கீழ் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.

குற்றம்சாட்டப்பட்ட நபர், சக்திவாய்ந்தவராக உள்ளபோது, பாதிக்கப்பட்டவருக்கு எதிராக நீதியின் சக்கரங்கள் நகர்வதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. உ.பி.போலீசு நத்தை வேகத்தில் இந்த வழக்கில் செயல்பட்டதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆகஸ்டு 24-ஆம் தேதி, முதன்முதலாக சின்மயானந்துக்கு எதிராக கல்லூரி மாணவி தனது முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தன் கல்லூரில் முதன்மையான அதிகாரி தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றும்படியும் தனக்கு நீதி பெற்றுத் தரும்படியும் முதலமைச்சர் ஆதித்யநாத்தையும் பிரதமர் மோடியையும் அந்தப் பெண் கேட்டிருந்தார்.

அதற்கு அடுத்த நாள் அந்தப் பெண் காணாமல் போய்விட்டதாக அவருடைய அப்பா போலீசில் புகார் தெரிவித்தார். தனது மகள் சின்மயானந்தால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக அவர் புகாரில் கூறியிருந்தார். அதே நேரத்தில் சின்மயானந்தின் வழக்கறிஞர் அந்தப் பெண்ணும் அவருடைய தந்தையும் மிரட்டி பணம் பறிக்க திட்டமிடுவதாக புகார் அளித்தார்.

படிக்க:
குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
♦ பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

ஆகஸ்டு 30-ஆம் தேதி மாணவி, இராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, உ.பி. கொண்டுவரப்பட்டார். ஒரு நாள் கழித்து, மாணவியின் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உ.பி. அரசாங்கத்தை அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம். இந்த புலனாய்வை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

தனது கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து கிடைக்கக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்ட சதி இது, என சின்மயானந்த் தரப்பு மீண்டும் ஒரு ‘காரணத்தைக்’ கூறியது.

சாமியார் சின்மயானந்தின் பாதக செயல்களை அம்பலப்படுத்திய சட்ட மாணவி.

செப்டம்பர் 9-ஆம் தேதி, அந்தப் பெண் முதல்முறையாக, பாஜக தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறினார். முன்பு பாலியல் துன்புறுத்தல் செய்தார் எனக் கூறியிருந்தார். இப்போது, சின்மயானந்த் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் ஓராண்டுக்கும் மேல் உடல்ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அடுத்த நாள் வெளியான ஒரு வீடியோவில், நிர்வாணமாக சின்மயானந்த் இருப்பதும் ஒரு பெண் அவருக்கு மசாஜ் செய்துவிடுவது போன்றும் இருந்தது. இந்த வீடியோவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு சாமியாரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியது.

செப்டம்பர் 14-ஆம் தேதி அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் ஹாஸ்டலில் குளிக்கும்போது தன்னை சின்மயானந்தின் ஆட்கள் படமாக்கியதாக கூறினார். இந்த வீடியோவை வைரலாக்கிவிடுவதாக மிரட்டி தன்னை பாலியல் வல்லுறவு செய்தததையும் அதையும் படமாக்கியதையும் அந்தப் பெண் கூறினார். அதன்பின், அவர் சொன்னதுபோல வேறு வழியின்றி நடந்துகொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !
♦ ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

அதோடு, சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் மறைத்து வைத்திருந்த காமிரா மூலம் எடுத்த 43 வீடியோக்களையும் அளித்தார். அதன்பின், உடல்நலமில்லை எனக்கூறி சின்மயானந்த் மருத்துவமனையில் சேர்ந்தார்.

இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை, செப்டம்டர் 20-ஆம் தேதி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். ஒரு மாத கால புகார்களுக்குப் பிறகு இறுதியாக கைது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர் தெளிவாக பாலியல் வல்லுறவு புகார் கூறியிருந்தபோதும் அந்தப் பிரிவின் கீழ் பாஜக சாமியார் மீது புகார் பதியப்படவில்லை.

Chinmayanand-Hospital
சாமியார் சின்மயானந்தின் நாடகம்.

“இதுதான் நடக்கும் என எனக்குத் தெரியும். இங்கே நீதி என்று ஒன்று இல்லை. சிறப்பு புலனாய்வு குழுவிடம் நான் எப்படி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டேன் என்பதை கூறிவிட்டேன். ஆனாலும் பிரிவு 376 சேர்க்கப்படவில்லை. சின்மயானந்த் கைது செய்யப்பட்டிருப்பதன் பின்னால் உள்ள திட்டம் என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. சிறப்பு புலனாய்வு குழுவின் செயலில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்கிறார் அந்தப் பெண்.

அதோடு விட்டார்களா என்றால் இல்லை… இவர் மீதும் இவருடைய மூன்று பெண் நண்பர்கள் மீதும் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிப்பட்டதில், மூவர் கைதாகி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

“இது நீதியை முழுமையாக கேலி செய்வதைப் போன்றதாகும். ஒரு பக்கம் எங்களுடைய புகாரை கேட்கவேயில்லை. இப்போது எங்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் பாதிக்கப்பட்டவர் யார்?” எனக் கேட்கிறார் பெண்ணின் தந்தை.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சாதகமாக காவி அதிகார வர்க்கம் துணை நின்றதைப் போல, இந்த சாமியாரை காப்பாற்றவும் துணை நிற்கின்றன. நீதியை பெற முடியாது என தெரிந்தே மீண்டும் மீண்டும் துணிச்சலோடு காவிகளோடு மோதிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண். அடிப்படைவாதிகளின் ஆட்சியில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, நீதிக்கும் வாய்ப்பில்லை.


– அனிதா
நன்றி
: த வயர்.  

இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !

ந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நடந்த போராட்டங்களின் தொகுப்பினை உங்களுக்காக வழங்குகிறோம்…

♠ ♠ ♠ 

மேற்கு வங்க பல்கலையில் மத்திய அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் !

மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் கடந்த 19-ம் தேதி கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்றார். ஆனால், பல்கலையின் நுழைவு வாயிலில் மாணவர்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

மேற்க்கு வங்க மாணவர் போராட்டம்.

பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் கலாச்சார பிரிவு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுப்ரியோவுக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், அவரை திரும்பி செல்லும்படி முழக்கமிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்கலை நுழைவு வாயிலிலேயே அவர் தடுக்கப்பட்டார். பின்னர் அமைச்சரை போலீசு வந்து உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறது.

மீண்டும், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் அவருடைய காரை மாணவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் நேரடியாக பல்கலை கழகத்துக்கு சென்று விசாரணை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

♠ ♠ ♠ 

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லி நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி !

ரும்பு நிலுவைத் தொகை, கடன் நிவாரணம், இலவச மின்சாரம், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் அமலாக்கம் போன்ற 15 கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேசத்தில் பாரதிய கிஸான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 11-ம் தேதி சஹரன்பூரில் இருந்து நொய்டா வழியாக டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.

நொய்டாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்.

நொய்டாவில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் பேரணியை கைவிடவும் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும்  எட்டப்படவில்லை. பேரணியைத் தொடர்ந்து நடத்திய விவசாயிகளை  டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையில் போலீசு தடுத்து நிறுத்தியது. விவசாய சங்க பிரதிநிதி குழுவை மட்டுமே கிரிஷி பவனில் அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க முடியும் என போலீசார் திட்டவட்டமாக  கூறியதால் 11 பேர் அடங்கிய குழு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

படிக்க:
கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்
♦ எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ

♠ ♠ ♠ 

பருவநிலை மாற்றம் : டெல்லியில் மாணவர்கள் போராட்டம் !

லகம் முழுவதிலும் பருவ நிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி லோதி கார்டன் பகுதியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 23 வயது மாணவியான பணாஸ்ரீ தபா கூறும்போது “நான் ஒரு வனச்சரகரின் மகள். ‘பாதுகாப்பதற்கு எதுவுமே இல்லாமல் போனால் என் தந்தை எதைப் பாதுகாப்பார்?’ இது பருவநிலை மாற்றத்தையும் கடந்த ஒரு விஷயம். இது இயற்கையின் கோபம். இந்தக் கோபம் நம்மை நோக்கி வருகிறது. அதனால்தான் நான் இங்கு வந்தேன்” என்று அவர் கூறியதாக பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♠ ♠ ♠ 

மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து ஸ்டிரைக் ! தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை : நாடு முழுவதும் ரூ. 100 கோடி சரக்கு தேக்கம்..!

த்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி,  போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில்  அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நேற்று நடத்தியது.

கோப்புப் படம்.

டெல்லி, அரியானா, உ.பி., ம.பி., குஜராத், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என அனைத்து மாநிலத்திலும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படவில்லை. நாடு முழுவதும் சுமார் 40 லட்சம்  லாரிகள் நிறுத்தப்பட்டது. இதனால், சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டது. இதனால், சுமார் 4 லட்சம் லாரிகள்  ஓடவில்லை. இதனால், 100 கோடி  மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் 10 கோடி சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அரசுக்கு ஒரு கோடி வரி இழப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

♠ ♠ ♠ 

கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் !

சென்னையில் அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16-ம் தேதி முதல் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் 21 சங்கங்கள் பங்கேற்றன. தற்போது, 20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ 2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ 3,500-ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி  கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர்.

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், 20 அடி கன்டெய்னருக்கு வாடகை 2,500 ரூபாயில்  இருந்து 3,500 ரூபாயாகவும், 40 அடி கன்டெய்னருக்கு வாடகை 3,500 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இருப்பினும் சில சங்கங்கள் இந்த முடிவை ஏற்க மருத்ததால் குழப்பம் நீடித்து வருகிறது.

♠ ♠ ♠ 

கடைமடைக்கு காவிரி நீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது !

டைமடைக்கு காவிரிநீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டூரிலிருந்து கடந்த மாதம் 13-ம் தேதியும், கல்லணையிலிருந்து 17-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதேசமயம் கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து  வீணானது.

இதையடுத்து கடை மடைக்கு வராமல், காவிரிநீரை கடலுக்கு திருப்பி விட்ட எடப்பாடி அரசை கண்டித்தும், தூர் வாருவதில் செய்யப்பட்ட கொள்ளையை கண்டித்தும் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை மண்டல பொறியாளர்  அலுவலகத்தை கடந்த 16-ம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலிசு 2 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்தனர்.

♠ ♠ ♠ 

வேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் !

வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தவிர்க்கவும், வேலூரை சுற்றி ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து ஆரணி, திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை, நெல்வாய், ஆவாரம்பாளையம், மலைக்கோடி வழியாக செல்லும் வகையில் ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

வேலூர் விவசாயிகள் போராட்டம்.

இதற்காக ஆவாரம்பாளையம் பகுதியில் ரிங்ரோடு அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வேலூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி வந்தனர். அப்போது, விவசாய நிலத்தில் இறங்கி அளவீடு செய்ய தொடங்கினர்.

உடனே விவசாயிகள், நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். சமாதானம் பேசிய  போலீசாரிடம், சாலை அமைக்க எங்களின் வாழ்வாதாரமான நிலத்தை அழிக்கிறீர்களே, நாங்கள் என்ன செய்வது? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு விவசாயி, எனது நிலத்தை அளந்தால் தீக்குளிப்பேன் என்றார். அப்போது அதிகாரிகள், ‘உயரதிகாரிகளின் உத்தரவின்படி அளக்க வந்துள்ளோம். நீங்கள் டி.ஆர்.ஓ. -வை சந்தித்து முறையிடுங்கள்’ என தெரிவித்தனர். இதனை ஏற்காத பொதுமக்கள், “எங்கள் இடத்தை அரசு எடுக்க, நாங்கள் எதற்காக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என்று கேள்வி எழுப்பியதல் அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்., விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

♠ ♠ ♠ 

கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் !

டந்த 2017- 2018 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு இறையூர் அம்பிகா, எ. சித்தூர் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அதேபோல் விவசாயிகளின் பெயர்களில் வங்கியில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், வருகின்ற அக்டோபர் 3- ஆம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

♠ ♠ ♠ 

ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் எச். ராஜா வருகைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !

விருதாச்சலம் – அரியநாச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரச்சினைக்குரிய இந்த கோயிலுக்கு 19-ம் தேதி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வரவுள்ளதாக கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போஸ்டர் ஒட்டினர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆனால், காவல்துறை எச்சரிக்கை, கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி எச்.ராஜா ஊருக்குள் நுழைய முயன்றார். அங்கு திரண்ட பொதுமக்கள், எச்.ராஜா காரை வழிமறித்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான கிராமத்தில் ஆன்மிகத்தை வைத்து எச்.ராஜா அரசியல் செய்ய முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எச்.ராஜா கிராமத்திற்குள் செல்லாமல் திரும்பி சென்றார். மக்களின் ஒற்றுமையே மதவாதிகளை அடித்தி விரட்டும்.

தொகுப்பு : – வினவு செய்தியாளர்

ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமும், அந்நிறுவனத்தின் கைக்கூலிகள் சிலரும் சேர்ந்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் உள்ளிட்ட அதன் நேரடி பாதிப்புகளை ‘அனுபவித்து’வரும் கிராமங்களுள் ஒன்றான காயலுரனி என்ற டி. குமாரகிரி கிராமத்தில் சொந்த செலவில் கோயில் கட்டி தருகிறோம் என்று கூறி கிராம மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

சாதி, மத வேறுபாடுகளை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும், ஸ்டெர்லைட் தியாகிகளின் முதலாமாண்டு நினைவுநாளை கடைபிடிக்கக்கூட விடாமல் பல்வேறு வகைகளில் நெருக்கடிகள் கொடுத்த போதிலும் இன்றுவரையில் எதிர்கொள்ளும் கொலைமிரட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

எப்படியேனும் ஆலையைத் திறந்துவிட வேண்டுமென்று துடிக்கும் ஆலைநிர்வாகம் தனது கைக்கூலிகளைக் கொண்டு, மரக்கன்று நடுவது, தண்ணீர்த்தொட்டி அமைத்து தருவது, கோயில் கட்டி தருவது என எலும்புத்துண்டுகளைக் காட்டி மக்களின் ஒற்றுமையைக் குலைக்க கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டுவருகிறது.

போலீசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டுவிடாமல், ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசும் எலும்புத்துண்டுக்கு பலியாகாமல் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர், சுற்றுவட்டார கிராம மக்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகள் அனைத்தையும் அவ்வப்போது எதிர்த்து முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் கட்டித்தருகிறேன் என்று கூறி இரு தரப்பினர் இடையே குழு மோதல் உருவாக்கி அமைதியை கெடுப்பதை தடுக்க கோரியும்; மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஸ்டெர்லைட் ஆலையின் உதவிகளை தடுத்து நிறுத்தக்கோரியும்; ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காயலுரனி என்ற டி. குமாரகிரி மற்றும் மடத்தூர், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரின் வழியாக தமிழக முதல்வருக்கும் தலைமைச் செயலருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

மக்கள் அளித்துள்ள மனு :

ஸ்டெர்லைட் ஆலையின் உதவிகளை தடுத்து நிறுத்தவும், ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அகற்ற வேண்டுதல் – சம்பந்தமாக …

ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து பல்வேறு கிராம பகுதி மக்கள் இன்று மனு கொடுக்கிறார்கள். அவர்கள் மனுவின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் சரியானவை என்றும் கருதி எமது கூட்டமைப்பு சார்பில் மேற்படி மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.

1996ம் ஆண்டிலிருந்து செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையினால் நீர், நிலம், காற்று மிகவும் மாசுபாடு அடைந்தது. பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளினால் உயிர்க்கொல்லி நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். தங்களது சுகாதாரமான வாழ்க்கையை மீட்டெடுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் அமைதியான முறையில் போராடி வந்தனர்.

மே-22-2018 அன்று நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 15 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் கை, கால் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தனர். இதன்பின்பு மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணையை பிறப்பித்தது. மேற்படி அரசாணையை ரத்து செய்ய ஸ்டெர்லைட் தரப்பில் சட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டின் சட்ட விரோத செயல்பாடுகள் தவறுகள் போன்றவற்றை தமிழக அரசு விசாரணையின்போது தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை 15 வருடங்கள் அனுமதி இல்லாமல் நடத்தியதை நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக தமிழக அரசு நிறுவியுள்ளது.

தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு அதை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதனை உணர்ந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள மடத்தூர், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், சங்கரபேரி, காயலூரணி, சோரீஸ்புரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும், தூத்துக்குடியின் மாநகர பல்வேறு பகுதிகளிலும், மீனவர்கள் அதிகமாக வாழும் கடற்கரையோர பகுதிகளிலும் மரம் நடுவது, குடிதண்ணீர் விநியோகம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்-நோட்டு புத்தகம் வழங்குதல், கிப்ட் வவுச்சர் கொடுப்பது, மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் கொடுப்பது, பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்குதல், சாலையோர சிறு வியாபாரிகளுக்கு நிழல் குடை வழங்குதல், பொதுமக்களுக்கான குடிநீர் கட்டணம் செலுத்துதல் உட்பட பல்வேறு விதமான உதவிகள் செய்து வருகிறது. ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை நடத்திவரும் வழக்கில் வெற்றி கிடைக்காது என்று எண்ணி குறுக்கு வழியில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு இந்த உதவிகள் உதவிகள் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. அரசாணையின் மூலம் மூடப்பட்ட பின்பு இவ்வகையான நலத்திட்டங்களை செய்வதற்கு அரசிடமிருந்து சட்டப்படி அனுமதி இல்லை. சட்டவிரோதமாக மக்களை அணுகுகிறார்கள். பொது மக்கள் பலமுறை எழுத்துப் பூர்வமாகவும், நேரிலும் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிமுதல் ஸ்டெர்லைட் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கோருகிறோம்.

அடுத்ததாக, மக்களைப் பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட்டின் இவ்வகை நயவஞ்சக உதவிகளால் தூத்துக்குடி கிராமங்களில் அமைதி குலைவு உண்டாகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தூண்டிவிடுகிறது. ஏற்கனவே ஸ்டெர்லைட் மூட மே-22-2018 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் 273 வழக்குகளும், அதற்கு முன்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும், மே -22-2018 பின்னர் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன. சிப்காட், தாளமுத்து நகர் காவல் நிலையங்கள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பல்வேறு புகார் மனுக்கள் வரப்பெற்று ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்படுவதால் குற்றவியல்  விசாரணை முறை சட்டம் பிரிவு-133 இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

♦ எங்கள் நிலத்தடி நீரைக் கெடுத்த ஸ்டெர்லைட்டின் குடிநீர் வேண்டாம்!
♦ தாமிரபரணியை சூறையாடும் வேதாந்தாவின் உதவிகள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!
♦ ஸ்டெர்லைட்டை சுற்றி மரம் நட்டி பசுமை வளையம் வைக்க துப்பில்லை!
ஊருக்குள் மரம் நடுவது ஒரு கேடா!

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
50-B,போல்டன் புரம்,3 ம் தெரு,
திருச்செந்தூர் மெயின் ரோடு,
தூத்துக்குடி – 628 003.


இதையும் பாருங்க :

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !

0

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், செய்யாறு பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இக்கல்லூரியில் காலை மற்றும் மாலை சேர்த்து 5000 மாணவர், மாணவியர்கள் படிக்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகம் படிக்கிறார்கள். திடீரென திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை கடந்த செப்15 -ம் தேதி உயர்த்தி உத்தரவிட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

மூன்றாவது நாள்  நடத்திய போராட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகமோ மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், போராட்டக் களத்திலேயே மாணவர்கள் மயங்கி கீழே விழுந்த பிறகும் , மூன்று மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பிறகும், ஆர்.டி.ஓ. மட்டுமே மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். அவர் திங்கள்கிழமை வரை மாணவர்களிடம் அவகாசம் கேட்டார்.

திங்கட்கிழமை கட்டணத்தை குறைப்பார்கள்; இல்லை எனில் நீங்கள் பழைய கட்டணத்தையே செலுத்துங்கள் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் அனைவரும் திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்குகிறோம் புதிய கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை எனில் மீண்டும் திங்கட்கிழமை போராட்டம் தொடரும் என்று ஆர்டிஓ-விடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், செப்- 23 அன்று காலை மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் போலீசு வாகனத்தை கல்லூரி நுழைவாயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த போலீசார் மாணவர்கள் ஒன்று திரண்டு போராடிவிடாதபடி அவர்களை மிரட்டத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு கட்டண உயர்வு குறித்த பல்கலைகழகத்தின் நிலையை கல்லூரி முதல்வர் அறிவிப்பார் என்றும் அனைவரும் வகுப்புக்குச் செல்லுமாறு பேராசிரியர்களை வைத்து மாணவர்களை விரட்டினர் போலீசார்.

படிக்க:
கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

இவற்றையெல்லாம் மீறி, அணிதிரண்ட கல்லூரி  மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தேர்வு கட்டண உயர்வு மட்டுமின்றி கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையை மாற்ற வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தகவல் :
பு.மா.இ.மு.,
காஞ்சிபுரம் மாவட்டம்,
தொடர்புக்கு : 9445112675.

எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ

டுத்தர மக்கள்கிட்ட ஏதுங்க பணம்? தங்கம் எல்லாம் வாங்க முடியாது.

லிட்டருக்கு 13 ரூபாய் தனியார் பால் விலையை ஏத்தியிருக்கான். ஆவின் பால் 8 ரூபாய் ஏத்தியிருக்காங்க. யாரு சம்பாரிக்கிறாங்க? அரசியல்வாதிங்களா? மக்களா? மோடியையும் ஓ.பி.எஸ். எடப்பாடிய பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது.

தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா?

எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்து, இங்க விலைவாசிய குறைக்கப்போறாரா? இன்னய நிலைமையில பத்து ரூபா செலவு பண்ணவே யோசிக்க வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் வரி. ஜி.எஸ்.டி. வரி இல்லாத பொருளு ஒன்னு வாங்கிட முடியுமா?

எங்களால சேர்க்க முடியல… இருக்க இருக்க அழிச்சிகிட்டு இருக்கோம்.

மளிகைகடைக்காரரின் குமுறல்!

பாருங்கள்! பகிருங்கள்!!


படிக்க:
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்

கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்

கேள்வி: //இந்தியா முழுவதும் ஒரே மொழி சாத்தியமா? இந்த திட்டம் பாஜக- வின் நெடுநாள் கனவு, எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கிவிட்டார்களா, இல்லை வேற காரணமிருக்கா?//

– அசோக்குமார்

ன்புள்ள அசோக்குமார்,

இந்தியா முழுவதும் ஒரே மொழி சாத்தியமில்லை. அரசியல் சாசன சட்டப்படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தி தேசிய மொழி அல்ல என்றாலும் அதை ஆங்கிலத்தோடு சேர்த்து அலுவலக மொழியாக வைத்திருக்கிறார்கள். மறைமுகமாக இந்தியை அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக கொண்டு வருவதுதான் பாஜக-வின் இலக்கு. இந்தி பேசும் மாநிலங்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு வேண்டுமானால் இந்த முயற்சி பலிக்குமே அன்றி, நாட்டின் பெரும்பான்மை பகுதிகள் இந்தியை ஏற்பதில்லை. இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்று அமித்ஷா சொல்லிவிட்டு, பிறகு தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக கூறியதற்கு காரணம் நாடெங்கும் எழுந்த எதிர்ப்புதான்.

பாஜக அரசின் காலத்தில் பல்வேறு துறைகளில் இந்தித் திணிப்பு நடந்து வருகிறது. மத்திய அரசின் பணித் தேர்வுகளிலும் இந்தியை திணித்து வருகிறார்கள். இந்தியாவின் நாற்பது சதவீத மக்கள் இந்தியை பேசுவதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த நாற்பதிலும் உருது, போஜ்புரி, கடிபோலி, மைதிலி மற்றும் இந்துஸ்தானி பேசுகின்ற மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். இவ்வழக்கு மொழிகளை அழித்து செரித்து உருவாக்கப்பட்டதுதான் இந்தி. அதனுடைய லிபி கூட தேவநாகரிதான். 1947 அதிகார மாற்றத்திற்கு பின்னர், அலுவலக மொழிப் பிரச்சினை வந்தபோது சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தி மொழிக்கு 78 வாக்குகளும், இந்துஸ்தானி மொழிக்கு 77 வாக்குகள் கிடைத்தன. இப்படி ஒரு வாக்கு வேறுபாட்டில்தான் இந்தி மொழி தேசிய அளவில் பயன்பாட்டிற்கு வந்தது.

இன்றைக்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இந்தி அல்லாத மொழிகளைத்தான் பேசிவருகிறார்கள். அந்தந்த மாநிலங்களில் அந்தந்த தேசிய இன மொழிகள் அலுவலக மொழிகளாக இருக்கின்றன. இதையெல்லாம் அழித்து விட்டு இந்தியை ஒரே மொழியாக கொண்டு வருவதுதான் பாஜக-வின் திட்டம். இந்து – இந்தி – இந்தியா என்ற இந்துத்துவத்தின் பார்ப்பனமயமாக்க திட்டத்தில் இந்தி மொழி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதற்காகத்தான் இந்தி மொழிக்கென்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பரப்பி வருகிறார்கள்.

நன்றி!

படிக்க :
♦ சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 17
♦ 
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

♦ ♦ ♦

கேள்வி: //தேசிய கல்வி கொள்கைக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் தொடர்புள்ளதா? இருக்கிறதெனில் எவ்வாறு?//

– அசுரன்

ன்புள்ள அசுரன்,

இரண்டிற்கும் நேரடியாக தொடர்பில்லை. பொருளாதார நெருக்கடி குறித்த விழிப்புணர்வை திசை திருப்புவதை அவ்வப்போது மோடி அரசாங்கம் செய்து வருகிறது. பசுப்புனிதம், கால்நடைகளுக்கு தடுப்பூசி, இந்திதான் இந்தியாவின் அடையாளம், காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போன்று அவ்வப்போது செய்து வருகிறது. அதில் ஒன்று தேசியக் கல்விக் கொள்கை. எனினும் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் இத்திட்டங்கள் ஒரு இலக்கோடு தொழிற்படுகின்றன.

தேசியக் கல்விக் கொள்கையின் படி மாநிலங்களின் கல்வி உரிமையை மறுப்பது, கல்வியில் தனியார் மயமாக்கத்தை அதிகரிப்பது, ஏழைகளை கல்வி கற்பதிலிருந்து விலக்குவது, இந்தி திணிப்பு போன்று பல அம்சங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை மாற்றுவதும் இதன் நோக்கம். இன்னொருபுறம் விவசாய நலிவு, சிறு குறு தொழிற்துறை மூடல், பெரு நிறுவனங்களின் விற்பனை தேக்கம் காரணமாக மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போயிருக்கிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் அது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிப்பதாக கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு இரண்டிற்கும் தொடர்பிருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //சமீபமாக நடக்கும் ஹாங்காங் போராட்டம் பற்றி சொல்லுங்க?//

– தீபக்

ன்புள்ள தீபக்,

இது குறித்து தோழர் கலையரசன் எழுதிய கட்டுரை முழு விளக்கத்தையும் அளிக்கிறது. இணைப்பிலுள்ளதை படியுங்கள். நன்றி!

♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

♦ ♦ ♦

கேள்வி: //Mnc/IT அல்லது எந்த தனியார் நிறுவனமும் தங்கள் ஊழியர்களிடம் சாதி, மதம், மற்றும் ஆதார் போன்ற மிக முக்கியமான/ sensitive தவல்களை கொடுக்க கட்டாய படுத்தலாமா. தனிநபர் கொடுக்க முடியாது என மறுக்க இயலுமா. மிக விரைவாக பதில் வேண்டும். 20 – செப்டம்பருக்குள் கொடுக்க வேண்டி எங்கள் நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது.//

– ஆனந்த் குமார்

ன்புள்ள ஆனந்த குமார்,

பொதுவில் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களிடமும், வேலைக்கு விண்ணப்பவர்களிடமும் சாதி, மதம் குறித்து கேட்பதில்லை. கல்வித் தகுதி, அனுபவத் தகுதிகளையே முக்கியமாக வைத்திருக்கிறார்கள். ஆதாரைப் பொறுத்தவரை சட்டப்படி கேட்கக் கூடாது. ஆனால் நிறுவனங்களின் மனிதவளத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக ஆதார் எண் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பினும் நிறுவனங்கள் இப்படி வாங்கிக் கொள்கின்றன. அதனால் பலரும் வேறு வழியின்றி ஆதார் தகவலை நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இதை சட்டப்படி கொடுக்க முடியாது என்று தொழிற்சங்கம் வாயிலாக போராடுவது ஒன்றே தீர்வு!

♦ ♦ ♦

கேள்வி: //முஸ்லிம் மதம் இந்தியாவில் எப்படி வந்தது? ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். கிறிஸ்துவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதுபோல் முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்களா அந்த மதம் இந்தியாவில் இருந்ததா?//

– குழலி

ன்புள்ள குழலி,

கண்டிப்பாக இசுலாம் மதமும் அரபுலகிலிருந்துதான் வந்தது. இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் 14.2% மக்கள் முசுலீம்கள். 2018-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி சுமார் இருபது கோடி முசுலீம்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். முசுலீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கு வெளியே இந்தியாவில்தான் அதிக முசுலீம்கள் வாழ்கிறார்கள். இந்திய முசுலீம்களில் பெரும்பான்மையினர் சன்னி பிரிவு முசுலீம்களாகவும், ஷியா பிரிவில் கணிசமானோரும் வாழ்கின்றனர்.

அரபுலகில் இசுலாம் தோன்றுவதற்கு முன்னரேயே இந்திய துணை தீபகற்பத்துடன் அரபுலக வணிகர்கள் இந்தியாவிற்கு வந்து போய்க்கொண்டிருந்தனர். கேரளம், கொங்கணி, குஜராத் கடற்கரை வழியே இந்த வர்த்தகம் நடந்து கொண்டிருந்தது. இசுலாத்தின் தோற்றத்திற்கு பின் அரபுலக வணிகர்களோடு இசுலாம் மதமும் ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் அரபுக் கடற்கரையோரம் வந்து சேர்ந்தது.

குஜராத்திலும், மலபாரிலும் ஏழாம் நூற்றாண்டிலேயே மசூதிகள் கட்டப்பட்டன. இப்பகுதியில் கணிசமானோர் முசுலீம்களாக மாறினர். வட இந்தியாவில் 12-ம் நூற்றாண்டு முதல் இசுலாம் அறிமுகமானது. டில்லி சுல்தான்களில் துவங்கி, முகலாயர் வம்சம், தக்காண சுல்தான்கள் ஆட்சிக்காலம் வரையிலும் இந்தியாவின் பெரும்பான்மை பகுதி இசுலாத்திற்கு அறிமுகமானது. முகலாயர் ஆட்சி, முதல் இந்திய சுதந்திரப் போரான 1857 வரை இருந்தது. இக்காலத்தில் இந்தியாவின் கலை, இலக்கியம், இசை, கட்டிடம், உணவு பண்பாட்டில் முகலாயர்கள் பெரும் பங்கு செலுத்தினர்.

இந்தியாவின் பெரும்பாலான முசுலீம்கள் பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே எளிதில் முசுலீம்களாக மாறினர். அதே காரணத்தை முன்னிட்டுத்தான் கிறித்தவ மதமாற்றமும் நடந்தது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //நீங்கள் குறிப்பிடும் இரண்டு பகுதிகளும் எதிர் எதிரா தோன்றுகின்றன.

  1. //எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.//

மற்றும்

  1. //அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. //

1 இன் மூலமாக கிறித்துவ மதத்திலும் தீண்டாமை இருப்பது தெரிகிறது. ஆனாலும், மக்கள் இந்து மதத்தில் இருந்து மாறுவது ஏன் ?

கொதிக்கும் அடுப்பில் இருந்து எரியும் கொள்ளியில் விழுவது ஏன் ?//

– ஆதவன்

முதலில் கிறித்தவ – இசுலாம் மதங்களில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது இல்லை. இது அம்மதக் கோட்பாடுகளிலும் சரி, புனித நூல்களிலும் சரி தெளிவாக இருக்கிறது. தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ அனைவரும் வழிபாடு செய்யலாம். சாதிக்கேற்ற பிரிவுகளோ, தனி ஆலயங்களோ கிடையாது. அனைவரும் சேர்ந்து உண்ணும் வழக்கமும் உண்டு. எவரும் ஒரு பாதிரியாராகவோ, கன்னியாஸ்தீரியாகவோ, மௌல்வியாகவோ உருவாக முடியும். இவை அனைத்தும் பார்ப்பனியத்தில் கிடையாது. அது பிறப்பு முதல் இறப்பு வரை பாகுபாடு பார்க்கும் ஒரு வாழ்க்கை முறை.

எனவே இந்தியாவில் கிறித்தவ, முசுலீம் மதங்கள் அறிமுகமான போது பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் அம்மதங்களுக்கு மாறினர். காலப்போக்கில்தான் இம்மதங்களிலும் சாதிப்பாகுபாடு பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் நுழைந்தது. இன்றும் முசுலீம் மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. கிறித்த மதத்தில் கொஞ்சம் அதிகம். சொல்லப்போனால் சாதிய ஏற்றத்தாழ்வை ஏற்றுக் கொண்டதாலேயே கிறித்தவ மதம் கொஞ்சம் வேகமாக பரவியது.

படிக்க :
♦ கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
♦ கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

அதே நேரம் இன்றும் கிறித்தவ, முசுலீம் மதங்களில் பாதிரியார்களோ, மௌல்விகளோ அனைத்து பிரிவுகளிலிருந்தும் வருகிறார்கள். வந்த பிறகு கிறித்தவ சபையில் சாதிரீதியான அரசியலைச் செய்கிறார்கள். வட இந்திய முசுலீம்களிடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு உண்டு. இருப்பினும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களையும் மனிதர்களாக கண்ட காரணத்தினாலேயே இம்மதங்களிற்கு மாறியது உண்மை. எனவே இதில் முரண்பாடு ஏதுமில்லை. அல்லது காலம் செல்லச் செல்ல இரு மதங்களும் பார்ப்பனியத்திற்கேற்ற முறையில் தம்மை தகவமைத்துக் கொண்டன. எனினும் அம்மதக்கோட்பாடுகளில் மக்களை ஏற்றத்தாழ்வோடு பாராட்டும் விதிகள் இல்லை என்பதால் இன்று வரையிலும் அம்மதங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மாறுவது சகஜமாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அன்புக் குழந்தைகளே … நீங்களே எனது ஆசிரியர்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 02

பாடவேளைகளின் உணர்ச்சி பூர்வமான சூழல், புதியவற்றை அறியும் ஆர்வமும், இவர்களுடைய பள்ளி நாள் முழுவதும் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அதிகரிக்கின்றன அல்லது குறைகின்றன – என்று என் நடைமுறை எனக்கு காட்டுகிறது.

இளமைப் பருவத்தில் எனக்கு சாதாரணப் பாடத் திட்டங்களுடன் வகுப்பறையினுள் நுழையும் துணிவு இருந்தது, இதில் விசேஷப் பிரச்சினைகள் எதுவும் கிடையாது, மற்றவற்றை நடைமுறையே சொல்லுமென நம்பினேன்; இப்போதோ, பல்லாண்டு அனுபவத்திற்குப் பின் ஏதோ பள்ளி நாட்களின் முழு இசைக் குறியீடுகளைப் பற்றிப் பேசுகிறேன். இது விந்தையில்லையா? எப்படியோ, எனக்குத் தெரியாது. இதில் எந்த வித விந்தையையும் நான் பார்க்கவில்லை. எப்படி சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் கலந்து பழகுவது என்று பூர்வாங்கமாக சிந்திக்காமல் என் சின்னஞ்சிறு மாணாக்கர்களைச் சந்திக்க நான் அஞ்சுகிறேன். கண் மூடித்தனமாக வளர்த்து, கல்வி போதிக்கப் பயப்படுகிறேன். எனது முழு அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தாமல் கலந்து பழக அஞ்சுகிறேன். இது தவிர, அப்போது எனக்கு இது ஒரு மகத்தான, ஈடு இணையற்ற ஆசிரியரியல் இசை, இதற்கு என்னிடமிருந்து பெரும் தொழில் திறமையும் அற்புதமான வழிமுறைகளும் தனிப்பட்ட ரசனைகளும் மனிதாபிமானமும் தேவை என்பதெல்லாம் முழுமையாகப் புரியவில்லை .

பாடங்கள் பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டின் ஓர் அங்கம். சிம்பனி இசையைப் போன்றே இப்பாடங்களில் தலைப்புகள் உருவாக்கப்படுகின்றன, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகின்றது. எப்படிப்பட்ட தலைப்புகள்? என்ன மாதிரியான பிரச்சினைகள்? முன்னர் பாடத் திட்டங்களை உருவாக்கும் போது, உதாரணமாக, பின்வருமாறு என்னால் எழுத முடிந்தது: “’பாடத் தலைப்பு – பத்திற்குள் கூட்டலும் கழித்தலும்”. இத்தலைப்பின் அடிப்படையில் நான் பாடத்தைக் குழந்தைகள் கிரகிக்குமாறு செய்தேன், தலைப்போடு சம்பந்தப்படாத மற்றவற்றின் மீது அவர்கள் கவனம் திசை திரும்பாதவாறு சகல விதங்களிலும் காத்தேன். கூட்டல், கழித்தல் பாடத் தலைப்பிற்கும், வாழ்க்கையில் புதிதாக என்ன நடந்தது, முந்திய நாள் அவர்கள் எதன் மீது அக்கறை காட்டினர் என்ற பேச்சிற்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என்ன! குழந்தைகள் நேற்று எப்படித் தூங்கினார்கள், தொலைக்காட்சியில் என்ன பார்த்தார்கள், புதிதாக என்ன தெரிந்து கொண்டார்கள், வீட்டில் யாருக்கு உடல் நிலை சரியில்லை என்பவை எல்லாம் எனக்கு எதற்கு?

இவையெல்லாம் அப்போது எனக்கு உண்மையிலேயே தேவையற்றவையாக, பாடங்களுடன் சம்பந்தப்படாதவையாகத் தோன்றின, எனக்கு “சின்ன விஷயங்கள்” என்று தோன்றிய இவற்றின் மீது கவனத்தை சிதறடிக்காமலிருக்க நான் முயன்றேன். வகுப்பறையில் குழந்தை நுழையும் போது தன் மகிழ்ச்சி, ஏமாற்றம், புத்தம்புது மனப்பதிவுகள், இன்ப துன்பங்கள் ஆகியவை அடங்கிய தன் வாழ்வை பள்ளிக்கு வெளியே வைத்து விட்டு வர வேண்டும், வகுப்பில் நான் சொல்லித் தருவதன் மீது மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று நான் பாடுபட்டேன். குழந்தையின் கவனம் திசை திரும்புகையில், சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கையில் “என்ன யோசனை” என்று என்னால் கண்டிப்புடன் அவனைக் கேட்க முடிந்தது. பையிலிருந்து ஒரு சிறு போர் வீரன் பொம்மையை எடுத்து அவன் விளையாடுவதைப் பார்த்து “என்ன இது? பாடவேளையில் என்ன செய்கிறாய்?” என்று என்னால் கூற முடிந்திருந்தது. இப்பொம்மையைக் குழந்தையிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பெற்றோர்களைக் கூட்டி வரும்படி சொல்ல முடிந்தது; “உங்கள் பையன் பையில் எதை வைக்கிறான் என்று நீங்கள் ஏன் பார்ப்பதில்லை? பாடவேளையில் அவன் கவனம் திசை திரும்புகிறது” என்று பெற்றோர்களிடம் கூற முடிந்தது.

ஆம், என்னால் முன்னர் இப்படியெல்லாம் நடக்க முடிந்தது. ஏனெனில், நான் பின்வருமாறு நினைத்தேன்: “பாடங்கள் என்பது அன்றாட வாழ்விலிருந்து குழந்தையின் கவனத்தைத் திசை திருப்பும் உயர் வடிவமாகும். குழந்தை வகுப்பறையில் நுழைந்து விட்டானா? அவ்வளவு தான். படி! வேறெதையும் நான் ஒப்புக் கொள்வதில்லை!” ஆனால் இன்று, பல்லாண்டுகளுக்குப் பின் நான் இப்படி நடப்பதில்லை. நான் மாறிவிட்டேன், என் போதனை முறையும் மாறிவிட்டது.

அன்புக் குழந்தைகளே! உங்களுக்கு நன்றி! நான் ஆரம்ப வகுப்புகளில் உங்களை வளர்த்தேன். உங்களுடைய ஒவ்வொரு தலைமுறையும் தன் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் எனக்கு விட்டுச் சென்றுள்ளது. நான்காண்டுகளில் நான் உங்களுக்குப் படிக்க, எழுத, கணக்குப் போட சொல்லித் தந்துள்ளேன், உங்களுக்குப் படிப்பு சொல்லித் தந்தேன். பின், நீங்கள் எப்படி மாறி, வளர்ந்து விட்டீர்கள் என்று ஆச்சரியப்பட்டேன். அனேகமாக, உங்களுக்கு நான் படிப்பு சொல்லித் தருவதை விட என்னை மாற்றியமைப்பது உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.

ஆம், ஆசிரியர்களாகிய நாங்கள் இப்படிப்பட்டவர்கள். ஒரு மாதிரி வேலை செய்யப் பழகிவிட்டால், எங்களது வேலை முறை ஒரு தடவை நடைமுறையில் சரியென நிரூபிக்கப்பட்டு விட்டால், நாங்கள் தப்பே செய்யவில்லை என்றும், கல்வியிலும் குழந்தை வளர்ப்பிலும் சிகரத்தை எட்டிவிட்டதாயும் எண்ணுகிறோம், “எங்கள் போதனை முறையை”, “எங்கள் கோட்பாடுகளைக்” கண்டு பெருமிதம் கொள்கிறோம். ஆசிரியர்களாகிய நாங்கள் எவ்வளவு எளிமையானவர்கள், பார்த்தீர்களா? தன் நடைமுறையில் மூடி மறைந்து கொள்ளும் ஆசிரியர் உங்களை – குழந்தைகளை – வளர்த்து, கல்வி போதிப்பதில் எப்போதாவது சர்வ பொதுவழிகளைக் கண்டுபிடிப்பாரென எண்ணலாமா என்ன? நீங்கள் வாழ்க்கையின் உருவகம்! இவ்வாழ்க்கையோ ஒரு நொடிப்பொழுது கூட நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கை இப்படி நிற்காமல் ஓடும் போது, இது இப்படிச் சுற்றிலும் எல்லாவற்றையும் மாற்றும் போது, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் இப்படி புதிதாகி வரும் போது, உங்களது திறமைகளாலும் வாய்ப்புகளாலும் இப்படித் திக்கு முக்காடச் செய்யும் போது, ஏராளமான ஆறு வயதுக் குழந்தைகள் இப்படி உற்சாகமாகப் பள்ளிக்குப் பாய்ந்து வந்து பல்லாயிரக் கணக்கான வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்கும் போது, எவ்வித இயக்கமும் மாற்றங்களும் இன்றி தன் அறிவுச் சிகரத்தில் அப்படியே உட்கார்ந்திருக்க ஆசிரியருக்கு என்ன உரிமையுள்ளது?

மாறாக, ஆசிரியர் எப்போதும் நாளைய தினத்தை நோக்கி, நாளைய மறுதினத்தை நோக்கிச் செல்ல வேண்டும், உங்களுடைய நாளைய தினத்தை சுவாசிக்க வேண்டும், உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது போல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும், இப்படித்தான் உங்களைச் சந்திக்கப் பள்ளிக்கு வர வேண்டும். மாறுவது, தேக்கமுற்ற மாதிரிகளிலிருந்து விடுபடுவது ஆசிரியர்களாகிய எங்களுக்குப் பல நேரங்களில் அவ்வளவு சிக்கலாக இருக்கிறதே, என்ன செய்ய? எங்கே எல்லாம் மிகவும் கொதிக்கின்றதோ, எவ்வளவு முனைப்பாக இயங்குகிறதோ அங்கே நாங்கள் அமைதியான வாழ்க்கையைத் தேடுகின்றோமா என்ன?

சோவியத் ஆசிரியர் பி. பிளோன்ஸ்கி அரை நூற்றாண்டுக்கு முன் எங்களை நோக்கி கேட்ட கேள்வி எனக்கு எப்போதுமே ஆழ்ந்த மனப் பதிவை ஏற்படுத்துகிறது. “பள்ளியைப் புதுப்பிப்பதில் அடிக்கடி நீயே முக்கியத் தடையாக இருக்கின்றாயா இல்லையா என்பதைப் பார்த்துக்கொள்” என்று அவர் ஆசிரியர்களைப் பார்த்துச் சொன்னார். இல்லை, இப்படி இருக்கக் கூடாது! வாழ்க்கையைப் படைக்க வேண்டிய ஆசிரியர் விருப்பமின்றியோ, தெரியாமலேயோ, அன்பாலோ, உறுதியோடோ வாழ்க்கைப் போக்கின் வேகத்தைக் குறைக்கக் கூடாது, குழந்தைகளின் முன்னோக்கிய அணி நடையைத் தாமதப்படுத்தக் கூடாது! எனவே, ஆசிரியர் தன் அனுபவத்தை (இது இருபதாண்டு, நாற்பதாண்டு அனுபவமாயிருந்தாலும் கூட) ஏதோ முழுமை பெற்ற ஒன்றாக, ஒவ்வொரு முறையும் குழந்தைகளைச் சந்திக்கும் போது செழுமைப்படுத்தத் தேவையில்லாத ஒன்றாகக் கருதக்கூடாது. குழந்தைகளே! அப்படியே யாராவது தேக்கமுற்று நின்றாலும், நீங்கள் உறுதியாக நின்று, உங்களைப் புதிய முறையில் பார்க்க உதவுங்கள்! உங்களை வளர்த்து, கல்வி போதித்து, மனிதர்களாக்கும் எனது நல்லெண்ணங்களுக்கு இடையூறாக நிற்கும் ஒரு சக்தியாகத்தான் நான் நீண்ட காலமாக உங்களைப் பார்த்து வந்தேன். உங்களை வளர்ப்பதில் நீங்களே என் உதவியாளர்கள் என்று கண்டுகொள்ள ஒரு சில தலைமுறைகள் தேவைப்பட்டன.

தன் வாழ்வின் அதிக சுவாரசியமான, முனைப்பான இயக்கத்திற்கான சூழ்நிலைகளைக் குழந்தை பாடங்களில் கண்டால் இவற்றை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுவான் – என்பதை நான் அறிந்து கொண்டேன்.

என் வகுப்புகளில் எந்தத் தலைப்பு ஒலிக்கிறது? ஆம், முக்கியமான தலைப்பு ஒன்று உள்ளது. இது குழந்தைகளின் வளரும் வாழ்க்கை, இவர்கள் வளர்ந்து பெரியவர்களாவது. இன்றைய பாடங்களை மட்டுமின்றி 170 பள்ளி நாட்களின் எல்லா 680 பாடங்களையும் முன் நிர்ணயிக்கும் இத்தலைப்பை எப்படிக் குறிக்கலாம்? அனேகமாக, குழந்தைகளின் செழுமையான, பன்முக வாழ்விலிருந்து, பாடங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அடிப்படையைத் தனித்துப் பிரிக்க வேண்டும். குழந்தையின் மனநிலை; புதியவற்றை அறியும் ஆர்வம், இந்த ஆர்வம் வெளிப்படும் வடிவங்கள் – “சுயமாகத் தேடிக் கண்டுபிடிப்பது”, “இரகசியங்களைக்” கண்டுபிடிப்பது, பிரச்சினையை சுயமாகத் தீர்ப்பது, “கடினமான” கணக்குகளைப் போடுவது, ஆசிரியரின் “தவறுகளைத்” திருத்துவது, சொந்தக் கருத்தை வலியுறுத்துவது போன்றவை – இந்த அடிப்படையாகும்.

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

குழந்தைகள் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் வளர்ச்சியுறவும் பெரும் பொறுமையும் நிதானமான உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த உழைப்பு பொதுவான முன்னோக்கிய அறிதல் நடவடிக்கையில் ஒன்றிணைந்து, வெற்றியினால் ஊக்குவிக்கப்படும் போது குழந்தைகளால் நல்லபடி ஏற்றுக் கொள்ளப்படும்.

இவை நான் முன்மொழியும் போதனை முறைக் கோட்பாடுகளின் அடிப்படையாகும்.

கல்வி போதிப்பது பற்றிய தத்துவத்தில் புதிய போதனைக் கோட்பாடுகளை முன்மொழிவது சாதாரணமானதா? அனேகமாக, கீழே குறிப்பிடப்படவிருக்கும் கருத்து நிலைகள் புதியவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் இவற்றை போதனைக் கோட்பாடுகளாக்குவதை சந்தேகத்தோடு பார்க்கலாம். போதனை முறை கோட்பாடுகளை வரையறுக்க இதுவரை உறுதியான கோட்பாடு இல்லாததால் மூன்று கோட்பாடுகளைத் துணிவோடு முன்மொழிகிறேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

0

த்திய அரசு பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றப் போவதாக தெரிவித்துள்ளது. யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளைத்தான் இணைக்கப் போகிறார்கள்.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

இந்த இணைப்பு நடவடிக்கையால் அரசு வங்கிகள் வலுப்பெறும், நிர்வாகச் செலவுகள் குறையும், புதிய கிளைகள் துவங்கப்படும், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றெல்லாம் அரசாங்கம் தெரிவிக்கின்றது. இவை உண்மையா?

CP Krishnan
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன்

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அரசின் வாக்குறுதிகளை மறுப்பதோடு இந்த இணைப்பு கார்ப்பரேட்டுகளுக்கே பயனளிக்கும் என்கிறார்.

முதலில் இந்த வங்கிகளின் இணைப்பால் அடுத்த சில மாதங்களுக்கு இணைப்பு வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அன்றாட வங்கி நடைமுறை வேலைகள் பாதிக்கப்படும். மென்பொருள் இணைப்பு, மனித வள இணைப்பு, பணிமாற்றம் என்று ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சவாலான பிரச்சினைகள் இருக்கின்றன. ஏட்டில் இணைக்கப்பட்ட இணைப்பை நடைமுறையில் கொண்டு வருவதற்கு ஆயிரெத்தெட்டு சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் சாதாரண வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதற்கு கடந்த கால கசப்பான வரலாற்றுச் சான்றே உண்டு. 2017-ல் ஸ்டேட் வங்கியில் ஐந்து துணை வங்கிகளும், பாரத் மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட பிறகு 2000-த்திற்கும் மேற்பட்ட கிளைகளும் மூடப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேற்கண்ட செய்தி காட்டுவது என்ன? ஆறு இலட்சம் கிராமங்கள் உள்ள நமது நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் கிராமப்புற கிளைகள் சுமார் 35,000 மட்டுமே உள்ளன. தற்போதைய இணைப்பு என்பது இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்குமேயன்றி அதிகப்படுத்தாது.

படிக்க:
வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

உண்மையில் அரசின் நோக்கம் என்ன? அரசு வங்கிகளை தனியார்மயப்படுத்துவதுதான். இதை 1991-ம் ஆண்டுமுதல் அமல்படுத்தி வருகிறார்கள். இது ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கியின் கட்டளையும் கூட. அப்படி தனியார்மயமாக்குவதற்கு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசு வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மாற்றி அமைக்க வேண்டுமென்பது ஐ.எம்.எஃப்-ன் கட்டளை! அதைத்தான் தற்போது அமல்படுத்தி வருகிறார்கள்.

அதன் மூலம் ஓன்றிரண்டு பெரிய வங்கிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கடன் வழங்குவதும், வராக்கடனைத் தள்ளுபடி செய்வதும் எளிதாக இருக்கும். நேரெதிராக சாதாரண மக்களுக்கான சேவையும், கடன் வழங்கலும் அரிதாகும், குறையும்.

வராக் கடன்களைப் பொறுத்த வரை ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் சட்டத்திற்கு பயந்து வாங்கிய கடனை சரியாகத் திருப்பி விடுகிறார்கள். மொத்த வராக் கடனில் ரூ.5 கோடியும் அதற்கு மேலும் வழங்கப்படும் கடன்களே மொத்தக் கடனில் 56% இருக்கின்றன. அதாவது சரியாக பாதிக்கு பாதி பெரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன. அதிலும் இவர்கள் திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட வராக் கடன்தான் 88% என்று ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இத்தகைய பெரிய கடன்கள் அனைத்தும் மண்டல அலுவலகங்கள், தலைமை அலுவலகங்களால் வழங்கப்படுகின்றது.

நான்கு கிளைகளுக்கு ஒரு கிளையைக் கிராமப்புறத்தில் திறக்கப்பட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியைத் தனியார் வங்கிகள் மதிப்பதே இல்லை. தனியார் துறை வங்கிகளைப் போல அரசு வங்கிகளும் கிராமப்புறங்களில் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், சாதாரண மக்களுக்கான கடன் வழங்கலை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மெக்கன்ஸி வெளிநாட்டு தனியார் நிறுவனம் வகுத்துக் கொடுத்த கொள்கையை மத்திய அரசு ஏற்று அமல்படுத்துகிறது.

தற்போதுள்ள நிலைமையில் தோராயமாக 50% கிராமப்புற மக்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காத காரணத்தால், அவர்கள் கந்துவட்டிக்காரர்கள், நிலச்சுவான்தாரர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் கடன் வழங்குவதில் அரசு வங்கிகள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. தனியார் வங்கிகள் அப்படி வழங்குவதில்லை. தற்போது இதை நிறுத்தியோ குறைத்தோ விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் கடன்களை வழங்க அரசும், ரிசர்வ் வங்கியும் அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் அரசு வங்கிகள் தனியார் வங்கிகளைப் போல நடத்தப்படுவதற்கு அழுத்தம் தருகின்றனர். தனியார் வங்கி உயரதிகாரிகளே அரசு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். அந்த நிர்வாகிகளே பணக்காரர்களையும், பெரும் தொகையைக் கடனாக பெற்றவர்களையும் விசேடமாக நடத்தும்படி வங்கிகளை மாற்றி வருகிறார்கள்.

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

ஸ்டேட் வங்கி “ஹை நெட் வொர்த்” எனப்படும் அதிக பணம் சேமிக்கும் வாடிக்கையாளர்களை 35,000-த்திலிருந்து 2 இலட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஓர் அரசு வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ. 50,000, நடப்புக் கணக்கில் ரூ.1 இலட்சம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை சிறப்பாக நடத்த வேண்டும் என பகிரங்கமாக சுற்றறிக்கையே வெளியிட்டுள்ளது. இப்படி அரசு வங்கிகளிலேயே பாகுபாடும் அமலுக்கு வந்து விட்டது.

வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதற்கு பிறகே மொத்தக் கடனில் சாதாரண மக்களுக்கு 40% முன்னுரிமைக் கடன் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதில் 18% விவசாயிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ரூ. 2 இலட்சம் வரை சிறு தொழில் கடன், ரூ. 3 இலட்சம் வரை விவசாயக் கடன், ரூ. 4 இலட்சம் வரை கல்விக் கடன் அனைத்தும் எந்தப் பிணையும் இல்லாமல், சொத்து அடமானம் இல்லாமல் வழங்குவது அரசு வங்கிகள் மட்டும்தான். இதை நீர்த்துப் போகச் செய்யவே கடந்த 28 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்று வருகிறது. “மக்கள் பணம் மக்களுக்கே” என்ற முழக்கத்தை முன்வைத்து வங்கி ஊழியர்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்களும் போராட்டங்களுமே இன்று வரை இத்திட்டத்தைக் காப்பாற்றி வருகின்றன.

bank-merger1991-ம் ஆண்டில்  காங்கிரசு அரசு, ஐ.எம்.எஃப் அறிக்கையை “நரசிம்ம கமிட்டி அறிக்கை” என்று பெயர் சூட்டி நடைமுறைப்படுத்தத் துவங்கியது. அதன்படி அரசு வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்றது, பத்து புதிய தனியார் வங்கிகளை அனுமதித்தது, அதில் குளோபல் டிரஸ்ட் வங்கி எனும் தனியார் வங்கி 10 வருடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதை ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் என்ற அரசு வங்கியுடன் இணைத்ததால் அரசு வங்கிக்கு 1,100 கோடி நட்டம் ஏற்பட்டது. இப்படி தனியார் வங்கி நட்டத்தை அரசு வங்கியின் தலையில் சுமத்துகிறார்கள்.

தனியார்மயத்தில் பாஜக அரசு, காங்கிரசு அரசை வேகமாக முந்தி வருகிறது. 2014-ம் ஆண்டில் பிஜே நாயக் குழுவை அமைத்த பாஜக அரசு “எல்லா அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும்” என்ற பரிந்துரையை பெற்றுக் கொண்டது. அதை உடனே அமல்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். 2015-க்கு பிறகு 2 அகில இந்திய அளவிலான தனியார் வங்கிகளையும், 11 பேமண்ட் வங்கிகளையும், 10 சிறு வங்கிகளையும் இக்காலகட்டத்தில் அனுமதித்துள்ளார்கள். இவை சாதாரண மக்களுக்கு வருடம் 25% கந்துவட்டியில் கடனை வழங்கி மக்களைக் கசக்கிப் பிழிகின்றன.

இவ்வளவு தகவல்களையும்  பகிர்ந்து கொண்ட சி.பி.கிருஷ்ணன் இறுதியில் தொகுத்துக் கூறுகிறார். அதன்படி வங்கித் துறை தனியார் கைகளுக்கு சென்று விட்டால் அரசின் கட்டுப்பாடு இருக்காது. மக்களுக்கு குறைந்த வட்டியில் பிணை இல்லாமல் கடன் கிடைக்காது. ஏன், வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு கூட பாதுகாப்பு இருக்காது, இந்தியப் பொருளாதாரத்தின் அச்சாணி பெருநிறுவனங்களின் கைகளில் சிக்கிவிடும் என்கிறார் அவர்.

பா.ஜ.க அரசின் வளர்ச்சி என்பது இதுதான். பெரும் முதலாளிகளுக்கு பெருந்தொகையை கடன் வழங்க வேண்டும், அவர்களது வராக்கடன்களை ரத்து செய்ய வேண்டும், மக்களுக்கான வங்கிச் சேவைகளை குறைக்க வேண்டும் என்று ‘பீடை நடை’ போட்டுக் கொண்டு போகிறது மோடி அரசாங்கம். இந்த விவரங்களை மக்களிடம் கொண்டு செல்வதும், வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதும் நமது கடமையாகும்.


– மதன்
நன்றி : இந்து தமிழ் திசை 

மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்

தலையங்கம்:

மரம் ஓய்வை நாடினாலும் காற்று தணிந்துவிடாது !

”நாடு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக”த் தனது ஆட்சியின் 100 நாள் சாதனை குறித்துத் தம்பட்டம் அடித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. அத்தகைய மிகப்பெரிய மாற்றம் எது? அவற்றால் யாருக்குப் பலன் விளைந்திருக்கிறது?

மோடியின் இரண்டாம் தவணை ஆட்சி 100 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைக்கூட (உண்மையில் மூன்று சதவீதம்) எட்டிப்பிடிக்க முடியாமல் சரிந்துவிட்டது. இப்பொருளாதார மந்தத்தை முட்டுக் கொடுக்க அவரது அரசு அறிவித்திருக்கும் சலுகைகளோ கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியைத் தீர்க்கப் பயன்படுமேயொழிய, வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்ட தொழிலாளிகளுக்கு எள்ளளவும் பலன் அளிக்கப் போவதில்லை. தொழிலாளி வர்க்கத்தைக் கைதூக்கிவிடுவதற்கு மாறாக, தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலும் கைவிடும் வண்ணம் அச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயலுகிறது, அவரது அரசு.

அந்நிய நிதி நிறுவனங்களும் உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியைத் தள்ளுபடி செய்திருக்கும் மோடி அரசு, கடன் சுமையில் தத்தளித்துவரும் விவசாயிகளுக்கு வட்டித் தள்ளுபடியைக்கூட அறிவிக்கவில்லை. நாடே திவாலானாலும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபத்திற்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் மோடி விரும்பும் மாற்றம்.

இப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்க்கக்கூடிய அமைப்புக்களை மட்டுமல்ல, கருத்துக்கூறத் துணியும் தனி நபர்களைக்கூடப் பயங்கரவாதிகளாகக் குற்றஞ்சுமத்தக்கூடிய வகையில் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது, மோடி அரசு.

இவை மட்டுமா? சாலை விதிகளை மீறுவோருக்கு 100 ரூபாய், ஐநூறு ரூபாய் என நூற்றுக்கணக்கில் அபராதம் விதித்துவந்த மாநிலப் போக்குவரத்துச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு, அதனிடத்தில் பத்தாயிரம் முதல் இலட்ச ரூபாய் வரை வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் மத்தியச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

3, 5, 8 வகுப்புக்களுக்குப் பொதுத் தேர்வு. மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு நீட் தேர்வு. மருத்துவராகி வெளியே வருவதற்கு நெக்ஸ்ட் தேர்வு. இப்படித் தரம் என்ற போர்வையில் தேர்வுக்கு மேல் தேர்வுகள் மாணவர்களின் மீது ஏவுகணைகளாக ஏவப்படுகின்றன.

இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு, அதனிடத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கிறது, மைய அரசு. இனி பணக்கார வீட்டுக் குலக்கொழுந்துகள் மட்டும்தான் மருத்துவக் கல்வி பயில முடியும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

முத்தலாக் மணவிலக்கு முறையைத் தடை செய்ததோடு நில்லாமல், அதனை கிரிமினல் குற்றமாக்கியிருக்கிறது மோடி அரசு. முஸ்லீம் பெண்களைப் பாதுகாப்பதற்குத்தான் இம்மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பதாக நியாயப்படுத்துகிறார்கள், சங்கிகள். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது!

குடிமக்களை 24 மணி நேரமும் வேவு பார்க்கும் வண்ணம் ஆதார் சட்டங்களும், இணைய தளச் சட்டங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன. மேலும், வன உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் அச்சட்டங்களின் நோக்கங்களையே சிதைத்துவிட்டன.

தேசியப் புலானய்வு முகமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் மூலம் மாநில போலீசின் அதிகாரத்தை மத்திய அரசு வாரிச் சுருட்டிக் கொள்கிறது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370- பிரிவைச் செயலற்றதாக்கியதோடு, தொலைத்தொடர்பு துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் இராணுவக் கண்காணிப்பு ஆகியவை மூலம் அம்மாநில மக்களின் மீது அவசர கால நிலையைவிடக் கேடுகெட்ட கொடுங்கோன்மையை ஏவிவிட்டிருக்கிறது, மோடி அரசு.

♦ ♦ ♦

நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஊடகம் என்ற நான்கு தூண்களின் மீது ஜனநாயகம் நிற்பதாகக் கூறுவார்கள். பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்பது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் பலவீனம் மற்றும் கூட்டுக் களவாணித்தனத்தாலும் நாடாளுமன்றம் இன்று இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மடமாகி விட்டது. அதிகார வர்க்கம் அதனின் கூஜாவாகிவிட்டது. சுதந்திரமானவை எனக் கூறப்படும் நீதித்துறையும் ஊடகமும் இம்மாற்றங்களுக்கெல்லாம் ஆற்றும் எதிர்வினையோ மிகக் கேவலமாக இருக்கிறது.

வெளிநாட்டுப் பத்திரிகைகள் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திக் கட்டுரைகளை வெளியிட்டுவரும்போது, இந்திய ஊடகங்களோ காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதாக மோடி அரசின் பொய்களை வாந்தியெடுக்கின்றன.

நீதித்துறையோ, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மோடி அரசு காலில் போட்டு மிதிப்பதை அலட்சியப்படுத்தி வருகிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்களை விடுவிக்கக் கோரும் வழக்கில் அரசின் அடக்குமுறையைக் கேள்விக்குள்ளாக்காமல், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசின் ஜனநாயகப் படுகொலையைச் சகஜமாக்க முயலுகிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் முதலுமல்ல, முடிவுமல்ல. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ராமானியின் பதவி விலகல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்தளவிற்கு மோடி – அமித் ஷா கும்பலின் தலையாட்டிப் பொம்மைகளாக நடந்து வருகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் இன்னொரு சான்று.

370 ரத்து செய்ததையும் காஷ்மீர் மக்களின் கருத்துரிமையைப் பறித்ததையும் கண்டித்து சசிகாந்த் செந்தில், கண்ணன் கோபிநாதன் என்ற இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவி விலகியிருக்கிறார்கள்.

மோடி அரசால் பொய்வழக்கில் ஆயுள்தண்டனை விதித்துப் பழிவாங்கப்பட்டிருக்கும் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் சிறையிலிருந்து எழுதியிருக்கும் கடிதம் பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்போருக்கு ஒரு ஊக்க மருந்து.

நாற்பது நாட்கள் கடந்த பிறகும் காஷ்மீர் மக்களை மோடி – அமித் ஷா கும்பலால் பணிய வைக்க முடியவில்லை. தொலைபேசி தொடங்கி உயிர் காக்கும் மருந்துகள் வரை மறுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டபோதும், அவர்களது போர்க்குணம் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கக் கோரி பஞ்சாபில் போராட்டம் நடக்கிறது. தேர்தல் கட்சிகள் கோழைத்தனமாகச் சரணடைந்துவிட்டாலும், எண்ணற்ற அறிவுத்துறையினரும் பத்திரிகையாளர்களும் துணிவுடன் மோடி- ஷா கும்பலை எதிர்த்து நிற்கிறார்கள்.

படிக்க:
வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !
தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

பாசிச அடக்குமுறை முன்பு மனித மாண்பு தோற்றுப்போய்விடவில்லை என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. மரம் ஓய்வை நாடினாலும் காற்று அதனை விடுவதில்லை என்பது போல, பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறைகளும் தவிர்க்கவியலாமல் மக்களைப் போராட்டக் களத்துக்கு இழுக்கும். அவர்களை வரவிடாமல் தடுப்பதற்குத்தான் எதிரிகள் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பரப்புகிறார்கள். அவநம்பிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாசிசம் என்பது ஆளும் வர்க்க வெற்றியின் வெளிப்பாடல்ல, தோல்வியின் வெளிப்பாடு.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

டந்த வியாழக்கிழமை (19-09-2019) அன்று தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி-4 ஆய்வின் முடிவுகளானவை வெறும் தமிழ் – இந்திய வரலாற்றினை மட்டுமன்றி, தென்னாசிய வரலாற்றினையும் சேர்த்தே மாற்றி எழுதவேண்டிய ஒரு தேவையினை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆய்வு முடிவுகளில் சில ஏற்கனவே ஊடக மட்டங்களில் பேசப்பட்டு வந்த செய்திகள்தான் என்றபோதும், அவை அறிவியல் சான்றுகளுடன் அரசினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது முதன்மையானதே. ஏறக்குறைய 45 ஆண்டுகளிற்கு முன்னர்  சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவனால் கண்டெடுக்கப்பட்ட ஒரு தொல் பொருள், ஒரு ஆசிரியரின் (பாலசுப்பிரமணியம்) கவனத்தினைப் பெற்றதிலிருந்து கீழடி ஆய்விற்கான விதை போடப்பட்டது.

archeologist-Amarnath Ramakrishnan
கீழடி அகழ்வாய்வுப் பனிகளில் அமர்நாத் இராமகிருஷ்ணன்.

பின்னர் நடுவண் அரசினால் 2014 ம் ஆண்டிலிருந்து  மூன்று கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் முதலிரு கட்டங்கள் அமர்நாத் ராமகிருசுணனால் சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலக்கணிப்பினைச் செய்வதில் நடுவண் அரசானது வேண்டுமென்றே பல குளறுபடிகளைச் செய்தது.  முதலில் கண்துடைப்பிற்காக வெறும் இரு பொருட்களை மட்டுமே ஆய்விற்கு அனுப்பியது. அதுவும் கீழ் மட்டங்களில் கிடைத்த பொருட்களை தெரிவுசெய்யாமல் (எப்பொழுதும் தொல்லியல் மேடுகளில் கீழ் மட்டத்திலேயே மிகப் பழைய காலப் பொருட்கள் கிடைக்கும்), வேண்டுமென்றே இடை மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களையே ஆய்விற்கு அனுப்பியது. அதன் பின்னரும் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்த தயங்கியே வந்தது.  நாடாளுமன்றத்தில் நா.உ (MP ) கனிமொழி கேள்வி எழுப்பிய பின்னரே ஆய்வு முடிவினை வெளியிட்டது.

அதில் அப்போதே கீழடித் தொல் பொருட்கள் பொ.மு 2ம் நூற்றாண்டைச் (BCE 2nd cent) சேர்ந்ததவை எனக் கண்டறியப்பட்டது.  இதன் பின்னர் சிறப்பாகச் செயற்பட்ட அமர்நாத் ராமகிருசுணன் வேண்டுமென்றே இடமாற்றப்பட்டு, சிறீராம் என்பவரின் தலைமையில் 3 -ம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த ‘சிறீராம்’ என்பவர் தனது பெயரிற்கேற்ப ‘பொலோ ஜெய் ஸ்ரீராம்’  எனக் கூச்சலிடும் குழுவின் தாளத்திற்கேற்பவே ஆடினார்.  உண்மையில் முதலிரு கட்ட ஆய்வுகள் சுட்டிய பாதையில் தொடராமல், அதற்கு எதிர்த்திசையிலேயே வெறும் எட்டு குழிகளை மட்டுமே தோண்டி, அங்கு குறிப்பிடும்படி எதுவுமேயில்லை எனக்கூறி ஆய்வினை நிறுத்திக்கொண்டார். நடுவண் தொல்லியல் துறையானது இதே காலப்பகுதியில் குச(ஜ)ராத், உத்திரப்பிரதேசப் பகுதிகளில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளிற்குக் கொடுத்த முதன்மையினை கீழடிக்கு இறுதிவரைக் கொடுக்கவேயில்லை.

இந்த நிலையிலேயே தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தது. இப்போது  ஐந்தாம் கட்ட ஆய்வும் முடிவுறும் வேளையிலுள்ளபோதும், வியாழன் அன்று வெளியானது நான்காம் கட்ட ஆய்வின் அறிவியல் சான்றுகளுடனான அதிகாரபூர்வ முடிவுகளேயாகும்.  இதுவே பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வில் தெரியவந்தவை:

நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது ‘கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி’ என்ற தலைப்பிலான ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளது. அந்த நூலின் PDF வடிவமானது இக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.  இவ்வாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை அமெரிக்க ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி AMS (Accelerated mass spectometry) முறையில் மேற்கொள்ளப்பட்ட கரிமச் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு  அவற்றின் காலம் பொ.மு 6-ம் நூற்றாண்டு (BCE 6th cent) எனக் கண்டுள்ளார்கள்.  மேலும் ஆய்வு முடிவானது பின்வரும் வழிகளில் முதன்மை பெறுகின்றது.

படிக்க:
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

சங்ககால பின்நோக்கிய காலவரையறை – சங்க காலமானது பொ.மு ஆறாம் நூற்றாண்டுவரைப் (BCE 6th cent) பின்நோக்கிச் சென்றுள்ளது. எனவே இனிச் சங்ககாலம் என்பது பொ.மு 600 (BCE 600) இலிருந்தே தொடங்கும்.

தமிழர்களின் நகர நாகரிக காலம் –  இதுவும் முதலில் கூறிய காலத்திற்கே (BCE 600) செல்லும். மேலும் இக் காலப்பகுதியிலேயே சிந்துவெளி நாகரிகத்திலும் இரண்டாம் நகர உருவாக்கப்பட்டிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழி எழுத்தின் காலமும்  BCE 6-ம் நூற்றாண்டே – இங்கு கிடைத்த பானை ஓடுகளிலுள்ள எழுத்துகளது காலமும் பொ.மு 6ம் நூற்றாண்டு (BCE 600) என சான்றுப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் முதலில் எழுத்துகளைப் பயன்படுத்தியோர் தமிழர்களே என்பதும், அசோகரின் பிராமி எழுத்துகளை விட தமிழி 300 ஆண்டுகள் பழமையானவை என்பதும் சான்றுபடுத்தப்பட்டுவிட்டது.

எழுத்துகளின் பரவலான பயன்பாடு – எழுத்துகள் சிலரால் மட்டுமல்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய எழுத்து வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன.  தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அகழ்வாய்வில் மட்டுமே 56 தமிழி எழுத்துகளைக் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் எழுத்துகளின் பரவலான பயன்பாடு தெரியவந்துள்ளது.

சிந்துவெளி நாகரிக எழுத்திற்கும்-தமிழிற்குமிடையேயான தொடர்பு –  பொதுவாக மனிதனின் படிமலர்ச்சி பற்றிப் பேசும்போது ‘விடுபட்ட இணைப்பு’ {Missing link in human evolution} ஒன்று பற்றிப் பேசப்படும். அதுபோன்றே, எழுத்துகளின் படிமலர்ச்சியிலும் சிந்துவெளி வரி வடிவத்திற்கும், தமிழிற்குமிடையே ஒரு விடுபட்ட தொடர்பு இருப்பதாகக் கருதுவார்கள். அதற்கான வெளிச்சம் இப்போது கிடைத்துள்ளது.

கீழடி
சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.

வேளாண்மை –  திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்புகள் மக்கள் வாழ்விடங்களில் கிடைத்ததன் மூலம் அவ் விலங்குகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தியிருப்பதனை அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்ககால சமூகம் வேளாண்மையினை முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பினையும் ஒரு துணைத் தொழிலாகவும் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பானைகளும் கிடைத்துள்ளன.

கைத்தொழில் – முதன்மையான கைத்தொழிலாக பானை வனைவு காணப்படுகின்றது.  பானைகளைப் பொருத்தவரையில் தண்ணீர் சேமித்து வைக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பானையோடுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்திற்கு (Universita Di Pisa) அனுப்பிச் சோதனைசெய்யப்பட்டதில், உள்ளூர் மண் பயன்படுத்தப்பட்டுள்ளமையும், தனித்த பானை வனைவு நுட்பம் பயன்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது. மேலும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகளிலிருந்து பானை செய்வதற்கு இரும்புத்தாதுப் பொருளான கேமடைட் – Hematite  (சிவப்பு நிறக் காரணம்), கரியினையும் (கருப்பு நிறக் காரணம்) பயன்படுத்தி 1100 பாகை செ வெப்பநிலையில் சுட்டுப் பானைகளை உருவாக்கியுள்ளார்கள்.  மேலும் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் 4 நூற்றாண்டுகளாக  (BCE6th cent –  BCE 2nd cent) இத்தகைய நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.  நெசவுத் தொழில் நுட்பத்தினை வெளிக்காட்டும் வகையில் நூல்களை நூற்கும் தக்களி, எலும்பிலான தூரிகைகள் (துணியில் வடிவங்களை வரைய), தறியில் தொங்கவிடப்படும் கருங்கல், சுடுமண்ணிலான குண்டு, செம்பிலான ஊசி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

கட்டிடக்கலை – கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச்சாந்து, கூரை ஓடுகள் என்பன வேலூர் பல்கலைக்கழகப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டதில் சங்ககால மக்களின் கட்டிடத் தொழில்நுட்பம் தெரியவந்துள்ளது.  செங்கற்களில் 80%  -இற்கும் கூடுதலாகச் சிலிக்காவும், பிணைப்பிற்காக 7 % சுண்ணாம்பும் கலந்துள்ளார்கள். சுண்ணாம்புச் சாந்தில் 97 %  சுண்ணாம்பு இருந்துள்ளது. இத்தகைய கலவைகளை நுட்பமாகப் பயன்படுத்தியதாலேயே கட்டிடங்கள் நீண்டகாலம் நிலைத்து நின்றிருக்கின்றன.  களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைத்தளங்களும் , கூரையில் பயன்படுத்தப்பட்ட ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், கூரைகளில் மரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என உய்த்துணர முடிகின்றது. ஓடுகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய வகையில் சிறு பள்ளங்களும் உள்ளன.  தச்சு வேலையும் இருந்துள்ளது.

வணிகம்  –  கீழடி அகழ்வாய்வில் குசராத் போன்ற வட இந்தியாவில் கிடைக்கும் அகேட் மற்றும் சூதுபவளம் போன்ற மணிகள் கண்டுபிடிக்கப்பட்டமையும், உரோமன் நாட்டு அரிட்டைன்  பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் தமிழர்களின் வணிகத் திறனை வெளிக்கொண்டுவந்துள்ளன. {இவ்விடத்தில் ஐந்தாம் கட்ட ஆய்வில் செப்பு-வெள்ளிக் காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது 4ம் கட்ட ஆய்வறிக்கை என்பதால் காசுகள் இங்கு குறிப்பிடப்படவில்லை}. வணிகத்தின் மூலமாகப் பொருட்கள் மட்டுமன்றி, தொழில்நுட்ப இறக்குமதியும் நடைபெற்றுள்ளமை வியப்பிற்குரியது. இங்கு கிடைத்த ரௌலட்டட் பானை ஓடுகள்  முன்னர் உரோம நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பானை ஓடுகள் என்றே கருதப்பட்டன. ஆனால், பிந்திய முடிவுகள் உரோமன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டவை என மண்ணின் மாதிரி ஆய்வுகள் மூலம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தினையும் இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

கலையுணர்வும், அழகுணர்வும் – அக் கால மக்கள் அணிகலன்களாக தங்கத்திலான அணிகலன்கள், செப்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கற்களிலான மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்திலான வளையல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியமையும் தந்தத்திலான சீப்பினைப் பயன்படுத்தியமையும் தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சுடுமண் உருவங்களை உருவாக்கியமை பழங்காலத் தமிழர்களின் கலைக்குச் சான்றாகவுள்ளன. கீழடி அகழ்வாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட 13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் கிடைத்துள்ளன.

விளையாட்டுகள் – தாயத்தில் பயன்படுத்தப்படும் பகடைக் கட்டைகள் , வட்டச்சில்லுகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் 600-ற்கும் கூடுதலான பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு விளையாடப்பட்ட ஒரு வகையான விளையாட்டே இன்றும் ‘பாண்டி’ என்ற பெயரில் 2600 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது.   சிறுவர்கள் இழுத்து விளையாடும் வண்டிகளின் சில்லுகளும் கிடைத்துள்ளன.

இவ்வாறு கீழடி அகழ்வாய்வு 4 -இன் முடிவானது பல்வேறு வழிகளில் வியப்பினை ஏற்படுத்துகின்றது. {மேலும் வியப்படைய கட்டுரையின் கீழுள்ள இணைப்பினைப் பார்க்க}.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

சங்க இலக்கியங்களை மெய்ப்பிக்கும் கீழடி ஆய்வு :

சங்க இலக்கியங்கள் என்பன வெறும் கற்பனையல்ல, அவை அக் கால மக்களின் வாழ்க்கையினை வெளிக்காட்டும் கலைப் படைப்புக்களே என்பதற்கான சான்றுகளும் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. சங்ககாலப் பாடல்களில் உயர்வு நவிற்சி, உவமை போன்றவை இடம்பெற்றிருந்தாலும், அவற்றினை அணுகிப் பார்ப்பதன் மூலம் அக் கால மக்களின் வாழ்வியலினையும் அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் சங்ககாலப் பாடலைப் பாருங்கள்.

`அற நெறி பிழையாது, ஆற்றின் ஒழுகி,
குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்,
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும், நிலத்தவும், நீரவும், பிறவும்,
பல் வேறு திரு மணி, முத்தமொடு, பொன் கொண்டு,
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்`  –   { மதுரைக் காஞ்சி 500-505}

பொருள் –  பயிர்செய்து பெற்ற பொருள்களைப் ‘பண்டம்’ என்றும், கைவினைப் பொருள்களைப் ‘பண்ணியம்’ என்றும் இப் பாடற்பகுதி தெளிவுபடுத்துகிறது.  பண்டங்களையும் , பண்ணியங்களையும் விற்பனை செய்வோர் அறநெறி பிழையாமல் நன்னடத்தை கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது வீடுகள் குன்றுகள் போன்றவை. பருந்துகள் அமர்ந்து இரை தேடும் அளவுக்கு உயரமான அடுக்கு மாடிகளைக் கொண்டவை.

இங்கு வேளாண்மைத் திறன், கைவினைத் திறன், வணிகம் என்பனவற்றின் சிறப்புகள் பேசப்படுகின்றன. இவற்றுக்கான சான்றுகளை ஏற்கனவே இக் கட்டுரையில் ஏற்கனவே பார்த்துள்ளன. மேலும் உயர்ந்த கட்டிடக்கலை பற்றியும் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இன்னொரு பாடலையும் பாருங்கள் :

மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி’  -(மதுரைக்காஞ்சி 425)

பொருள் – வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி  (பகற்கடை) நிலை மாறுபடவில்லையாம்.

இதுவும் வெறும் வெற்றுப்பெருமையல்ல என கீழடி ஆய்வுகளை அணுகிப் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவை மட்டுமன்றி மதுரை நகர் பற்றிய பல சங்ககாலப் பாடல்களை உண்மை என மெய்ப்பிக்கும் வகையில் கீழடி ஆய்வு அமைந்துள்ளது.

விளையாட்டுக்கள் பற்றிய சங்ககாலப் பாடல்களைப் பார்ப்போமா!

`முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்` –  (கலித்தொகை136)

இங்கு இடம்பெறும் வரிகளின் பொருள் – முத்துப் போன்ற மணலில் நீ என் தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் கவறு விளையாட்டில் “பத்து” எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள்.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பாருங்கள் :

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம்
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள்`

பொருள் – முடம் பட்டிருந்த தாழை மர முடுக்கில் நீ இவளுக்கு அளி செய்தாய். அப்போது அவள் வித்தாயம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். {ஒன்று தெரிந்தால் அதனைத் தாயம் (வித்தாயம்) என்று குறிப்பிடுவர்}.

மேற்கூறிய இரு பாடல்களிலும் குறிப்பிடப்படும் தாயக் கட்டைகள் கீழடி-4  ஆய்வில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் செய்யவேண்டியவை :

இவை எல்லாம் எமது முன்னோர்களின் பெருமையே. இப்போது நாம் என்ன செய்யலாம். முதலில் சங்ககால எழுத்துகளை இனி ‘தமிழி’ என்றே (தமிழ் பிராமி அல்ல) அழைப்போம்.

♦ கீழடிப் பெயர்களை { ஆதன் , சேந்தன், உதிரன், திசன், இயனன், குவிரன், கோதை…..} நாளாந்தப் பயன்பாட்டிற்குக் (குழந்தைகளின் பெயர் + நிறுவனப் பெயர்கள் + புனை கதை மாந்தர்களின் பெயர்கள்… என)  கொண்டு வருதல் வேண்டும்.

♦ மேலதிக ஆய்வுகளிற்காகக் குரல்கொடுப்பதுடன், அது தொடர்பான தேடல்களில் ஈடுபடுதலும், அவற்றினை ஏனையோரிற்குக் கொண்டு செல்லவும் வேண்டும்.

♦ இற்றைக்கு 2600 ஆண்டுகளிற்கு முன்னரே சாதி மதமற்ற மனிதர்களாகத் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்ற செய்தி மூலம் சாதி-மத இடைச்செருகல்களைத் தவிர்த்து மனிதர்களாக வாழவேண்டும்.

♦ இறுதியாக, எல்லாவற்றையும் விட ஒரு மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே முடிந்தளவிற்குத் தமிழை வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், இதனை வருங்காலத் தலைமுறைகளிற்கும் கடத்தவும் வேண்டும்.

குறிப்பு – நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது ‘கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி’ என்ற தலைப்பிலான ஒரு நூலை வெளியிட்டிருந்தது, அதன் PDF  வடிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழுள்ள இணைப்பில் உள்ளது.

கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி தமிழ் நூலை தரவிரக்கம் செய்ய அழுத்தவும்.

KEELADI – An Urban Settlement Of Sangam Age On the Banks Of River Vaigai ஆங்கில நூலை தரவிரக்கம் செய்ய அழுத்தவும்.

வி.இ.  குகநாதன்

வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்

நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார்.
மீடியா: துணிச்சல், புத்திசாலித்தனம், நாடு முன்னேறும், சூப்பர்!
நிர்மலா சீத்தாராமன் அடுத்த சில மாதங்களில் கார்ப்பரேட்டுகளுக்கான வரியைக் குறைப்பார்.
மீடியா: துணிச்சல், புத்திசாலித்தனம், நாடு முன்னேறும், சூப்பர்!


 

பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. – யோகி ஆதித்யநாத் !
ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி … ”வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல”!

கருத்துப்படம் : வேலன்

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

கல்வியை வியாபாரமாக்குவதை நோக்கமாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராடிவரும் சூழலில், பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றங்கள் தொடங்கி, 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு வரையில் தேசியக் கல்விக் கொள்கையில் ஆலோசணைகளாகக் கூறப்பட்ட பல அம்சங்கள் சதித்தனமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சிதான் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் திடீர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு.

இத்தகைய சதிகளை அம்பலப்படுத்தியும், மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் மாணவர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – திண்டிவனம் :

திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து நான்காவது நாளாக கடந்த செப்-20 அன்று, திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பு.மா.இ.மு. ஒருங்கிணைப்பில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இம்மறியல் போராட்டத்தையடுத்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார் மாவட்ட துணை ஆட்சியர். ”எதிர்வரும் செப்-23 வரை யாரும் கட்டணம் கட்டத் தேவை இல்லை. கட்டணம் குறைக்கப்படும்” என்று அவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவது என்றும்; கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் சென்னை-சேலம் புறவழிச்சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு – 91593 51158


 

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி – விழுப்புரம் :

செப்-20 அன்று  விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒலிபெருக்கி ஏற்பாட்டோடு நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பாடல், கவிதை, கண்டன உரையின் வாயிலாக பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை அம்பலப்படுத்தினர். செப்-23 இன்றும் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்,
தொடர்புக்கு:  91593 51158


பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி – கடலூர் 

டலூர் பெரியார் கலைக் கல்லூரி  மாணவர்களும் நான்காவது நாளாக செப்-20 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; 5,8 வகுப்புக்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும்; அமித்ஷா அறிவித்த நாடு முழுவதற்குமான ஒரே மொழி இந்திதான் என்ற ஆணவ பேச்சைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

படிக்க:
ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த கல்லூரி முதல்வர் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் நோக்கில் அல்லாமல், எப்படியாவது போராட்டத்தை கைவிட வைக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு பேசினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய கடந்த செப்-20 அன்று கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். எனினும், திருவள்ளூர் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டத்தை தொடர்வது என்பதில் மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 97888 08110


திருவள்ளுவர் கலைக் அறிவியல் கல்லூரி – குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடியில் செயல்பட்டுவரும் தனியார் கல்லூரியான திருவள்ளுவர் கலைக் அறிவியல் கல்லூரி மாணவர்கள்  செப்-20 அன்று கல்லூரிக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் போலீசும் பின்னர் வட்டாட்சியரும் அதனைத்தொடர்ந்து ஊர்ப்பெரியவர்களும் போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்கெனவே, தொட்டதுக்கெல்லாம் கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்துவரும் நிலையில், திருவள்ளுவர் பல்கலைக் கழகமும் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது இதனை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர், கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுரை வழங்குவதாக வட்டாட்சியர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர். பல்கலைக்கழகம் தனது அறிவிப்பைத் திருப்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கையோடு கலைந்து சென்றனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்,
தொடர்புக்கு: 97888 08110


மாணவரை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடு !
பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் விழுப்புரம் SP – யிடம் மனு !

திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு எதிராக திருவெண்ணெய் நல்லூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், பு.மா.இ.மு ஒருங்கிணைப்பின் கீழ், கடந்த 19.09.2019 அன்று சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

தாக்குதலுக்கு ஆளான மாணவர் கவி நிலவன்(இடது), அவரைத் தக்கிய காவலர் புஷ்பராஜ்.

இப்போராட்டத்தை கலைக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டனர். அப்போது கல்லூரி மாணவர் கவி நிலவனை அதிரடி படை காவலர் புஷ்பராஜ் தாக்கினார். இதனை போராட்டத்தின்போதே மாணவர்கள் கடுமையாக கண்டித்தனர்.

அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காவலர் புஷ்பராஜ் மீதும், காவல் ஆய்வாளர் லஷ்மி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி 20.09.2019 அன்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு, எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக SP ஜெயகுமார் அவர்கள் கூறி இருக்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு : 91593 51158.

துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019

துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019

  1. அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… ஆர்.எஸ்.எஸ். புளுகு!
    ஜம்மு – காஷ்மீர் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு 370-ஆவது சட்டப்பிரிவு தடையாக இருக்கவில்லை, படிக்கல்லாக இருந்திருக்கிறது.
  2. மரம் ஓய்வை நாடினாலும் காற்று தணிந்துவிடாது!
    “நாடு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாகத் தனது ஆட்சியின் 100 நாள் சாதனை குறித்துத் தம்பட்டம் அடித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. அத்தகைய மிகப்பெரிய மாற்றம் எது? அவற்றால் யாருக்குப் பலன் விளைந்திருக்கிறது?
  3. பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும்: துக்ளக் பாதி! இட்லர் பாதி!!
    வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.
  4. காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்
    இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என நம்பி அதனுடன் இணைந்த காஷ்மீரிகளின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறது, பா.ஜ.க.
  5. காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்!
    காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டன. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களின் உரிமைகளோ ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.
  6. காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்!
    ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம் காஷ்மீர் மக்களின் நிலத்தை மட்டும் பிடுங்கப் போவதில்லை, ஹைட்ரோகார்பனுக்கும், எட்டு வழிச் சாலைக்கும் நிலத்தைப் பிடுங்கப் போவதும் அந்த முழக்கம்தான்.
  7. நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர, 370 அல்ல!
    ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கு நீதி வேண்டும் எனக் கோரிப் போராடுகிறார்கள். மோடி அரசோ அவர்கள் மீது மென்மேலும் அடக்குமுறைகளை ஏவி, அநீதி இழைத்து வருகிறது.
  8. காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?
    காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து முயன்றுவரும் பாகிஸ்தானின் நோக்கத்திற்குத்தான் மோடி – அமித் ஷாவின் நடவடிக்கை பயன்பட்டிருக்கிறது.
  9. தேசியக் குடிமக்கள் பதிவேடு: யாருக்கும் மனநிறைவு அளிக்காத ஒரு கேடான வழிமுறை! – ஹர்ஷ் மந்தேர்
    சிந்தித்துப் பாருங்கள். மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பது என்பதே இதன் பொருள். மாறுபட்ட மதநம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0

“5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை! கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை பள்ளிப் படிப்பில் இருந்து விரட்டும் நடவடிக்கை!” என்ற முழக்கத்தின் கீழ்,  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கடந்த செப்-19 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

“இந்த தேர்வு முறை தரமான கல்வியை  உருவாக்குவற்காக என சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இது தரமற்ற கல்வியையே உருவாக்கும். ஒட்டு மொத்த கல்வி முறையையும் அழிப்பது தான் இதன் நோக்கம். மேலும் இந்தித் திணிப்பு இவை எல்லாம் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகள்தான்.” என்பதை அம்பலப்படுத்தி உரையாற்றினார், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் மதுரை வீரன்.

தோழர் வவுனியன், தனது கண்டன உரையில், ”திருவள்ளுவர் பல்கலை கழகம் அறிவித்து இருக்கும் தேர்வு கட்டண உயர்வு என்பதும் கூட தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்தான். கட்டண உயர்வுக்கு எதிராக போராடக் கூடிய  மாணவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு போலீசாரால் அச்சுறுத்தப் படுகிறார்கள். போராடிய 1000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது போலீசு. இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

படிக்க :
♦ 5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்
♦ ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி

அடுத்து பேசிய, பு.மா.இ.மு.வின் புதுச்சேரி அமைப்பாளர் தோழர் மோகன், இந்தி திணிப்பின் வரலாறு மற்றும் அதில் தமிழகத்தின் வரலாற்று ரீதியான போராட்டம் பற்றி பேசிய அவர் மேலும் ”இந்தியாவில் பல்தேசிய இன மக்கள் வாழ்கிறார்கள், அவர்களுடையை  பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் அழித்து விட்டு ஒரே பண்பாட்டை உருவாக்க விரும்புகிறார்கள் ஆட்சியாளர்கள். நமது பண்பாட்டை காக்க ஒரு அமைப்பாக அணிதிரள்வோம்” என்று பேசினார்.

இறுதியாக விழுப்புரம் பு.மா.இ.மு அமைப்பளர் தோழர் ஞானவேல் அவர்கள் இந்த ”தேசியக் கல்வி கொள்கை என்பது ஒரு மேம்பட்ட சமுகத்தை உருவாக்குவதற்காக என்று சொல்லி கொண்டு, வரைவு அறிக்கையை கொண்டு வந்து ஆகஸ்ட் – 15 வரை மக்கள் மத்தியில் கருத்து கேட்பு நாடகத்தை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அதில் உள்ள அம்சங்களை தற்பொழுது படிபடியாக அமல்படித்திக் கொண்டு வருகிறார்கள் அதன் ஒரு பகுதிதான் 5,8 பொதுத்தேர்வு முறை.

இதை கொண்டு வருவதற்கு இரண்டு நோக்கம் இருக்கிறது. இந்தியாவின்  கல்வி முழுக்க சர்வதேச பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது மற்றும் அதனூடே தனது இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கடந்த 60 வருடங்களில் கண்ட குறைந்த பட்ச முன்னேற்றத்தைக் கூட தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் பின்னோக்கி இழுக்கப் பார்கிறார்கள். இந்த பிரச்சனை என்பது மாணவர் அமைப்பு பிரச்சனை இல்லை. இது சமூக பிரச்சனை அதை உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டும்” என்று பேசி முடித்தார். தோழர் திலீபன் நன்றியுரையோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்,
தொடர்புக்கு : 91593 51158.