Friday, May 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 292

கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன ?

கேள்வி: //கீழடி அகழ்வாய்வுகள் காட்டுவது என்ன? கீழடி சான்றுகள் மூலம், ஆற்றங்கரையில் தங்கி வாழ்ந்த, விவசாயம் சார்ந்த சமூகமாக நகர நாகரீகம் கண்ட சமூகமாக வளர்ந்து உள்ளதை காட்டுகிறது.

மற்றும் அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள் (குறிப்பாக: பகடைக் காய்கள், தாயக்கட்டைகள்) கிடைத்தமையை வைத்து உற்பத்தி சார்ந்த உழைப்பில் இருந்து சிலர் விலகி வாழ்ந்தனர் என புரிந்து கொள்கிறேன்.

எனில், 2300-2600 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த சமூகத்தின் உற்பத்தி முறை என்ன?

1) முற்றிய நிலையில் உள்ள புராதன பொதுவுடமை சமூக உற்பத்தியா? அங்கே அப்போது தாய்வழிச் சமூகம் தான் நீடித்ததா?

2) அடிமை உற்பத்தி முறையா? அல்லது வேறு ஏதாவதா?

மேலும்..

மத அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பது பற்றி ஒருபக்கம் மகிழ்ச்சி தான் என்ற போதிலும், இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் அதிலும், எழுதத் தெரிந்த, விளையாடத் தெரிந்த மனிதர்கள் முற்றிலுமாக அறிவியல் அறிவு பெற்று இருப்பார்கள் என நம்ப முடியவில்லை.

இதுவரை ஆய்ந்த இடங்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிற்கூடங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.

எனில், மக்கள் கூடும் பொது இடங்களில் (மந்தை போன்று) கடவுள் வழிபாடு அல்லது மத அடையாளங்கள் கிடைக்கக் கூடும் எனவும் கருதுகிறேன்.

தொகுப்பாக நீங்கள் விளக்கினால், புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி.//

– இரணியன்

ன்புள்ள இரணியன்,

கீழடியில் நடந்த நான்காம் கட்ட ஆய்வு குறித்த அறிக்கை தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. கீழடி குறித்த ஆய்வு முழுமை பெற பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். இந்த ஆய்விற்கு மத்திய அரசு காட்டும் பாராமுகம் ஒருபுறமிருக்க தமிழக தொல்லியல் துறை அளித்த அறிக்கை தமிழகத்தின் ஏடறிந்த வரலாற்றுக் காலத்தை கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தள்ளியிருக்கிறது. கீழடி ஆய்விடங்களில் ஆழ் இடுக்கில் எடுக்கப்படும் கார்பன் வகை மாதிரிகளின் ஆய்வு இந்தக் காலத்தை இன்னும் துல்லியமாகக் தரும்.

சங்க இலக்கியத்தின் படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய திணை வகைகளின் மக்கள் வாழ்க்கையை அறிவோம். முதலில் மலையில் வேடவர் வாழ்க்கை, பின்பு காடு சார்ந்த இடங்களில் கால்நடை வளர்ப்போர் வாழ்க்கை, அதன் பிறகு நிலம் சார்ந்த வேளாண்மை வாழ்க்கை என்று பரிணாம வளர்ச்சியில் மனித சமூகம் சென்றதற்கு இத்திணை வகைகள் ஒரு சான்று. இருப்பினும் ஒரே நேரத்தில் இந்த நான்கு திணைகளிலும் மக்கள் வாழ்க்கை முன்னேறியதும் இருக்கிறது. அவர்களுக்கிடையில் பண்ட மாற்று நடந்ததையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதனால்தான் சங்ககால இலக்கியங்கள் இந்நான்கு திணை வாழ்க்கை பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

கீழடி ஆய்வறிக்கையை வைத்துப் பார்த்தோமானால் அங்கே வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் வைகை நதிக்கரையில் இருந்திருப்பது தெளிவு. தொல்லியல் பொருட்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு நகர நாகரீகத்திற்கான அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது. எதிர்கால ஆய்வுகள் இதை துல்லியமாக உறுதிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

சங்க காலத்தில் மூவேந்தர் அல்லாத சிற்றரசர்கள், இனக்குழுத் தலைவர்கள் குறித்த பாடல்களை சங்க கால இலக்கியம் கூறுகிறது. அதன்படி புராதான பொதுவுடைமை இனக்குழு சமுதாயம் வளர்ச்சி அடைந்து சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து குழுக்களுக்கு தலைவன் அல்லது அரசன் தோன்றும் காலமாக பார்க்கலாம்.

கீழடியில் அணிகலன்களும், தாயக்கட்டைகளும் கிடைத்திருப்பதால் அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருக்கவும், இனக்குழு வாழ்க்கை முதிர்ச்சியடைந்து அடுத்த கட்ட சமூக மாற்ற நகர்விற்கு மக்கள் செல்லும் காலமாகவும் பார்க்கலாம். சங்ககால இலக்கியங்களின் படி ஐந்திணைகளுக்கும் கடவுள் உண்டு. கீழடியில் கடவுள் குறியீடுகள் கிடைக்கவில்லை என்பதால் அம்மக்கள் ‘பகுத்தறிவுடன்’ வாழ்ந்தார்கள் என்பது அபத்தம். கண்டிப்பாக இயற்கை வழிபாடும், திணைக்கேற்ற கடவுளர்களும் இருப்பார்கள். குறிப்பாக அங்கே மூத்தார் வழிபாடு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார். எனினும் கங்கைச் சமவெளியில் தோன்றிய பிற்கால வேத நாகரீகம் போன்று கடவுள், புராணம், மந்திரங்களை முதன்மைப்படுத்திய சனாதன தர்மம் போன்று இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கீழடியின் காலத்தில் தாய்வழிச்சமூகம் முதிர்ச்சியடைந்து தந்தை வழிச் சமூகமாக மாறும் காலகட்டமாக இருக்கலாம். அணிகலன்கள், தாயக்கட்டைகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருப்பதையும், அதை வைத்து சமூகம் எளிய வர்க்கங்களாக பிரிவதையும் அவதானிக்கலாம். ஒரு நதிக்கரை நாகரீகத்தின் வளர்ச்சி அனைத்தையும் கீழடி தொல்லியல் ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. மேலும் வணிகம் சார்ந்த பொருட்களும் கீழடியில் கிடைத்திருக்கிறது. சமூகம் வர்க்கரீதியாக பிரிய ஆரம்பித்திருப்பதற்கு இதுவும் ஒரு சான்று. வணிக சமூகத்தில் வர்க்கரீதியாக தோன்றும் பிரச்சினைகளுக்கான நீதி உபதேசங்களையும் சங்க கால இலக்கியம் முன்வைக்கிறது.

எது எப்படி இருந்தாலும் பார்ப்பனியத்தின் வேதநாகரிகத்தை மறுத்து பண்டைய தமிழ் திராவிட நாகரிகம் முன்னோக்கிச் செல்வதை பாஜக அரசு ஒரு போதும் விரும்பாது. கீழடியில் இதற்கு மேல் ஆய்வுகள் நடத்தப்படுவதற்கே நாம் போராட வேண்டும்.

 

அதைக் கீழடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பணியிடமாற்றத்துக்கு ஆளான அமர்நாத் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளிலேயே புரிந்து கொள்வோம்.

கீழடி அகழ்வாய்வை இழுத்து மூட மோடி அரசால் இடமாற்றும் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் “திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது  இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.

 ♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

♦ தமிழின் தொன்மைக்கு சான்றளித்த ஐராவதம் மகாதேவன் !

திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர் கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்து – இந்தி – இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கேற்ப வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் பார்ப்பன இந்து மதவெறிக்கும்பல், புராண கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அறிவியல் பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை அனுமதிப்பார்களா?

அதனால்தான் இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

கார்பன்-14 பகுப்பாய்வுக்கு இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் 28 பொருட்களையும், குஜராத்தின் தொலவிராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியவர்கள், கீழடியில் கண்டறியப்பட்ட 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் குறைந்தது 10 மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இரண்டிற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது மத்திய தொல்லியல் துறை.

இந்தியாவில் நடந்துள்ள பல அகழாய்வுகள், பல ஆண்டுகள் பல கட்டங்களாக தொடர ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி அகழாய்வை இரண்டே ஆண்டுகளில் முடிவு கட்ட முயற்சித்தது. இதற்கெதிராக எழுந்த எதிர்ப்பால் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி என அறிவித்து விட்டு, கீழடி அகழாய்வில் முக்கியப் பங்கு வகித்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தலைமையில் செயல்பட்ட குழுவை கூண்டோடு அசாமுக்கும், வேறு இடங்களுக்கும் தூக்கியடித்துவிட்டது. துணை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒருவரை இங்கு நியமித்துள்ளது. இந்த மாறுதல் வேண்டாம் என்கிற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் குப்பையில் வீசிவிட்டனர்.

♦ கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015-ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.

ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.

கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?

பதில்: இல்லை.

கேள்வி: அவர்களது மரபணு, ஆரியர் – திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?

பதில்: திராவிடர்கள்.

கேள்வி: தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?

பதில்: தென்னிந்தியர்கள்.

எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.

2015-லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.

♦ சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தென்னிந்தியாவில் மட்டுமல்ல, சிந்து நதிக்கரையில் துவங்கி வைகை நதிக்கரை வரை பார்ப்பனியத்திற்கு முன்பான, அதற்கு மாற்றான ஒரு நாகரீகம் இருப்பது தெள்ளத் தெளிவு. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் கீழடி ஆய்வை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

எனவே கீழடியின் வரலாற்றை மீட்கும் போரை நாம் இந்துத்துவவாதிகளுடன் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !

காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !

நாட்டுப் பிரிவினை என்பது நிகழ்ச்சி நிரலுக்கு வந்தபோது பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தவிர, இங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன.  அவற்றுள் காஷ்மீரும் ஒன்று. இந்த சமஸ்தானங்கள் எல்லாம் யாரோடு சேர்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக அன்று இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947 (India Independence Act 1947) என்ற சட்டம் பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமாக இரண்டு விதிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு குறிப்பிட்ட சமஸ்தானத்து மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தால், அது இந்தியாவின் பக்கம் என்றும் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக இருந்தால், பாகிஸ்தான் பக்கம் என்றும் அந்த குறிப்பிட்ட  நிலப்பரப்பு இந்தியாவை அல்லது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பொது வரையறைகள் வகுக்கப்பட்டன.

சில இடங்களில் மன்னர் முஸ்லீமாகவும் மக்கள் இந்துக்களாகவும் இருந்தனர்; உதாரணமாக ஹைதராபாத் நிஜாம். ஜுனாகத் சமஸ்தானம். திருவிதாங்கூரில் இந்து மன்னர், இந்து, முஸ்லீம்,- கிறிஸ்தவர் எனக் கலவையாக மக்கள் தொகையினர். காஷ்மீரை எடுத்துக்கொண்டால், அங்கு இந்து மன்னர், மக்கள் முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் பவுத்தர்கள்.

பிரிவினைக்கு வகுக்கப்பட்ட மேற்கூறிய பொது வரையறையின்படி பார்த்தோமானால், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்திருக்க வேண்டும். ஆனால், 1947 ஆகஸ்டு 14, 15 தேதி வரை காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளோடும் இணைய விரும்பவில்லை. ஸ்டாண்ட்ஸ்டில் அக்ரீமென்ட்” (Standstill Agreement) என்றொரு ஒப்பந்தத்தைத் தயாரித்துத் தற்போதைய தனது நிலையை அங்கீகரிக்குமாறு நேருவிடமும் ஜின்னாவிடமும் கோரினார். ஜின்னா அதில் கையெழுத்திட்டார். நேரு கையெழுத்திடவில்லை.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து காஷ்மீரை விலைக்கு வாங்கியவர்கள்தான் டோக்ரா என்றழைக்கப்படும் இந்து மன்னர் பரம்பரையினர். 1846 பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கை கிழக்கிந்திய கம்பெனி போரில் தோற்கடித்தது. ரஞ்சித் சிங்கின் கவர்னராக காஷ்மீரில் இருந்த குலாப் சிங், கிழக்கிந்திய கம்பெனியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு,  அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 75 இலட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய தேசம்தான் காஷ்மீர்.

அந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான நிலப்பகுதி மன்னனுக்கும், பண்டிட்டுகள், டோக்ராக்கள் போன்ற ஆதிக்க சாதியினருக்குமே சொந்தமாயிருந்தது. ஆகப் பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் இஸ்லாமியர்கள். அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்கள். விவசாயிகள் விளைவித்த ஆப்பிள், குங்குமப்பூ முதல் கம்பளிகள், சால்வைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 85% வரை வரி வசூலிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னராட்சி விலைமாதர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களிடமும் வரி வசூலித்து, அரசாங்க விலைமாதர்கள் என்ற உரிமமும் வழங்கியிருக்கிறது. அரசுப் பதவிகளில் அமர்ந்திருந்த பண்டிட்டுகளும் பிற ஆதிக்க சாதியினரும் ஊழலிலும் உல்லாசத்திலும் ஊறித் திளைத்ததாகவும் அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.  (Dogra raj in Kashmir)

மன்னர் ஹரி சிங்.

இப்படி நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்களால் ஒடுக்கப்பட்ட, 90 விழுக்காட்டுக்கு மேல் முஸ்லீம் மக்கள் நிரம்பிய காஷ்மீர் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுடன் சென்றுவிடும் என்பதுதான் ஹரிசிங்கின் கருத்து. மன்னனால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான பிரஜா பரிஷத் என்ற கட்சியின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது. எனவே, ஜம்முவை மட்டுமாவது தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்பினர்.

ஆனால், ஜம்முவிலும் பெரும்பான்மையினர் (61%) முஸ்லீம்களாகவே இருந்தனர். எனவே, ஜம்முவை இந்துப் பெரும்பான்மையாகவோ அல்லது முஸ்லீம்களுக்குச் சமமான எண்ணிக்கை கொண்டதாகவோ மாற்றினாலொழிய, தமது எண்ணம் ஈடேறாது என்பதால் ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றினர். 1948- மாணவராக இருந்தவரும் பின்னாளில் காஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டை நிறுவியவருமான வேத் பாசின் இதனை விளக்கியிருக்கிறார். (The killing fields of Jammu: How Muslims become a minority in the region)

ஜம்முவில் இருந்து கணிசமான முஸ்லீம்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மன்னரின் படைகளும் மன்னருக்கு உதவியாக வந்த பிற இந்து சமஸ்தானங்களின் படைகளும் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு முன்னதாக மன்னரின் படையில் இருந்த முஸ்லீம்  சிப்பாய்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன.

படிக்க:
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !

இவ்வாறு தாக்கி விரட்டப்பட்ட முஸ்லீம்கள்  இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி உயிர் தப்பி ஓடினர்.  உயிரைக் காப்பாற்றி விடுகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகளில் முஸ்லீம் மக்களை ஏற்றி சியால்கோட் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கே பச்சைப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடந்த 5 நாட்களுக்குப் பின்னர்தான் பத்தான்கள் காஷ்மீர் மீது படையெடுக்கின்றனர். அடுத்த 4 நாட்களில் (26.10.1947) மன்னன் ஹரிசிங் இந்திய அரசுடன் இணைந்து கொள்கிறார்.

இந்தப் படுகொலை குறித்து அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேலுக்கு ஷேக் அப்துல்லா எழுதிய கடிதம் படேல் கடிதப் போக்குவரத்துகளின் முதல் தொகுதியில் வெளியாகியிருக்கின்றன. மன்னனின் முழு ஆதரவுடன், மன்னனின் படைகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இணைந்து இந்தப் படுகொலையை நடத்தின என்றும் இது குறித்து காந்திக்கும் நேருவுக்கும் தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

ஜவஹர்லால் நேரு.

வெளியிலிருந்து காஷ்மீரில் சென்று குடியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் முஸ்லீம்களைப் படுகொலை செய்தனர் என்றும் பெண்களை மானபங்கம் செய்தனர் என்றும் இவற்றுக்கெல்லாம் காஷ்மீர் மன்னன்தான் பொறுப்பு என்றும் 25.12.1947 அன்று காந்தி எழுதியிருக்கிறார் (தொகுதி ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை 2 இலட்சம் என்று இலண்டனின் ஸ்பெக்டேடர் பத்திரிகையும் 2,37,000 என்று  இலண்டன் டைம்ஸ் நாளேடும்  பதிவு செய்திருக்கின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக இப்படி ஒரு தாக்குதலை அந்த மன்னனே முன்னின்று நடத்தியதாக அன்று காந்தியும் பதிவு செய்திருக்கிறார்.

இத்தகையதொரு கொடிய இனப்படுகொலை நம்முடைய கண்களில் இருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு படுகொலை நடந்த பிறகும் முஸ்லீம்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாழ்கின்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு பண்டிட்கூடக் கொலை செய்யப்படவில்லை என்று பதிவு செய்கிறார்.  இன்று காஷ்மீர் பண்டிட்டுக்களுக்காக நியாயம் கேட்கின்ற யோக்கியர்கள் இந்த இனப்படுகொலைக்குப் பதில் சொல்லவேண்டும்.

முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் படுகொலையைப் பயன்படுத்திக்கொண்டு காஷ்மீர் மக்களைத்  தன் பக்கம் திருப்பி விட முடியும் என்று நம்பித்தான் அன்று பாகிஸ்தான் அரசு பழங்குடிப் படையை காஷ்மீருக்குள் அனுப்பியது.  தனது படையை முஸ்லீம்கள் வரவேற்பார்கள் என்று எண்ணியது. ஆனால், அதன் எண்ணம் நிறைவேறவில்லை.

பண்டிட்டுகள் மற்றும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான ஒரு கலவரமாக இது மாறிவிடக்கூடாது என்ற காரணத்தினால்தான் ஷேக் அப்துல்லா, ஜம்முவில் நடந்த இந்த இனப்படுகொலையை காஷ்மீர் முஸ்லீம்கள் மத்தியில் அரசியல் ஆக்கவில்லை என்று அன்றைய காலகட்டத்தைப் பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் முகம்மது அலி ஜின்னா.

பிறப்பால் முஸ்லீமான ஷேக் அப்துல்லா மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஆகப் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் ஏன் பாகிஸ்தானுடன் சேரவில்லை?

இன்று காஷ்மீரின் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாடும் தேசபக்தர்கள் யோக்கியமாகவும் நாணயமாகவும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காஷ்மீர் மக்கள் பின்பற்றிய சுஃபி இஸ்லாம் என்பது சன்னி இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது. சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்  ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து பார்ப்பனிய சாதிக் கொடுமையின் காரணமாக மதம் மாறியவர்கள்.  எனவே, மதம் மாறிய இந்த இஸ்லாமியர்களுக்கும் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே நீடிக்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்குமிடையே அன்று முதல் இன்று வரை ஒரு தோழமையான உறவு நீடிக்கவே செய்கிறது. இந்த உறவின் வெளிப்பாடாகத்தான்   நாகூர் முதல் அஜ்மீர் வரையிலான தர்ஹாக்களுக்குத்தான்  ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துக்களும் இன்றுவரை செல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல,  ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முன்வைத்த காஷ்மீரி தேசியம் என்பது மதச்சார்பற்ற தேசியமாகும்.  எனவேதான், இஸ்லாமியக் குடியரசு என்று அறிவித்துக் கொண்ட பாகிஸ்தானை  அக்காரணத்துக்காகவே ஷேக் அப்துல்லா நிராகரித்தார்.  மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றப் போவதாக இந்திய அரசு கூறியதால், இந்தியாவைத் தெரிவு செய்வதாக அவர் கூறினார்.

காஷ்மீர் முஸ்லீம்கள் சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் என்பது மட்டுமல்ல, காஷ்மீரி முஸ்லீம்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நிலமற்ற ஏழை விவசாயிகள்,  நெசவாளர்கள், உழைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்கள். டோக்ரா ஆட்சியில் முஸ்லீம் என்றாலே சூத்திரன், பஞ்சமன் என்று கருதும் நிலையிலேயே அவர்கள்   ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பழங்குடியினப் படை.

காஷ்மீர் மக்களின் தேசிய உணர்வுக்கு மன்னர் ஆட்சிக்கு எதிரான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புணர்வு உள்ளடக்கமாக இருந்தது.   தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையில் இது பிரதிபலித்தது.  உழுபவனுக்கு நிலம், பெண் கல்வி, பெண்களுக்குச் சமமான சொத்துரிமை, பெண்களுக்குச் சம வேலைவாய்ப்பு –  சம ஊதியம், மதச்சார்பின்மை, கருத்துரிமை,  ஆலைகள் அரசுடமை, கல்வி- ஓய்வு ஆகிய அடிப்படை உரிமைகள் எனத்  தாங்கள் உருவாக்கவிருக்கும் அரசமைப்புச் சட்டம் பற்றி அந்தக் கொள்கை அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகின்றது.  இந்தக் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் பாகிஸ்தான் பொருந்தி வராது என்ற காரணத்தினால்தான் பாகிஸ்தானை நிராகரித்தது தேசிய மாநாட்டுக் கட்சி.

இதன் காரணமாகத்தான் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்களும், ஆயுதமேந்திய முஸ்லீம் பெண்களும் பாகிஸ்தானிலிருந்து ஆக்கிரமிக்க வந்த பழங்குடிப் படையை எதிர்த்துப் போராடி விரட்டியடித்தனர். இப்படி நம்பிக்கையோடு  இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்பிய மக்களுக்கு  இந்திய அரசு செய்த வஞ்சகம்தான் காஷ்மீரின் வரலாறு.

மேற்சொன்ன வரலாற்றுப் பின்புலத்திலிருந்து தான் சட்டப்பிரிவு 370, 35 ஆகியவற்றை நாம் பரிசீலிக்க வேண்டும். மேற்கூறிய சட்டப்பிரிவுகள் காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகைகள் அல்ல. ஒரே நாடு ஒரே சட்டம் என்று அன்றைக்குப் பேசியிருந்தால், இந்தியா என்ற ஒரு நாட்டையே இரும்பு மனிதர் படேல் உருவாக்கியிருக்க முடி யாது. தனித்தனியாக பல மன்னர்களிடம் பேரம் பேசி சேர்க்கப்பட்டதுதான் இந்திய தேசம். ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் சலுகை வழங்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சட்டம்.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகம்மது அப்துல்லா.

இன்று ஆசாதி என்று முழங்கும் காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறது பா.ஜ.க. ஆனால், 1947- இந்து சமஸ்தானமான திருவிதாங்கூரை இந்தியாவுடன் சேரவேண்டாம் என்றும் தனிநாடாகப் போகுமாறும் ஆலோசனை வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் குருநாதரான சாவர்க்கர். இந்தியாவில் சேராமல் தனிநாடாகப் போவதென்று முடிவு செய்தமைக்காக ஜின்னாவால் பாராட்டப்பட்டவர் திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர்.

ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை இன்று பா.ஜ.க. தேசபக்தர்கள் எதிர்க்கின்றனர். ஆனால், குஜராத்தில் இருந்த ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாப் இந்தியாவுடன் இணைய மறுத்த காரணத்தினால், அங்கே 20.2.1948 அன்று ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்ததன் அடிப்படையில்தான் அது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தனி நாடாகத் தேர்தல் நடத்தி முடித்து அரசமைப்புச் சட்ட முடியாட்சி என்று தன்னை அறிவித்துக் கொண்ட மணிப்பூர் அரசு 1948-ல் கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

சிறப்புரிமை என்பது காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல. 371 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திய அரசியல் சட்டம், வட கிழக்கிந்திய மாநிலங்களுக்குப் பல சிறப்புரிமைகளை அளிக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 (அன்று 306A)  ஐ எதிர்த்து சியாமா பிரசாத் முகர்ஜியோ பா.ஜ.க. வின் மூதாதையர்களோ யாரும் வாக்களிக்கவில்லை. அதற்கு எதிராக வாக்களித்த ஒரே ஒரு நபர் மவுலானா ஹஸ்ரத் மொகானி. இவர்தான் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை வடித்தவர். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினர். சட்டப்பிரிவு 370- கீழ் சுயாட்சி உரிமை காஷ்மீருக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இவர் தெரிவித்த ஆட்சேபம். (An Existential Crisis for Jammu & Kashmir and Danger to Indias Federal Structure)

1953 – ஜவஹர்லால் நேரு சிங் கூட்டணியால் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி ஜம்மு காஷ்மீரில் நடந்த போராட்டம்.

பிரிவு 370- கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் அனைத்தும் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு, அது காலிப் பெருங்காய டப்பாவாக்கப்பட்டுவிட்டது. 1953- ஷேக் அப்துல்லாவைக் கைது செய்ததில் தொடங்கிப் பல்வேறு விதமான அரசியல் சதிகள், ஊழல்படுத்தும் நடவடிக்கைகள், தேர்தல் தில்லுமுல்லுகள், நம்பிக்கைத் துரோகங்கள் ஆகியவற்றின் மூலம் டில்லி இதனைச் சாதித்தது. நாற்காலி அரசியலால் ஊழல்படுத்தப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியினர் உள்ளிட்ட காஷ்மீரின் அரசியல்வாதிகள் காஷ்மீர் மக்களிடையே மதிப்பிழந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக 1980- இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலிருந்தும் விடுதலை கோரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பு தோன்றியது. மதச்சார்பின்மையை முன்வைத்த அந்த அமைப்பை இந்திய, பாக். அரசுகள் இரண்டுமே வெறுத்தன.  இந்த அமைப்பை ஒழித்துப் போராட்டத்தை மதச்சார்புள்ளதாக மாற்றும் பொருட்டு இசுலாமிய மதவெறி தீவிரவாத அமைப்புகளை இந்திய உளவுத்துறையே ஊக்குவிக்க, இதனை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. தீவிரவாத அமைப்புகளைப் பயிற்றுவித்து காஷ்மீருக்குள் அனுப்பத் தொடங்கியது.

படிக்க:
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !

1990 முதல் இன்று வரை இந்திய இராணுவத்தின் ஆட்சி என்பதுதான் நடைமுறையில் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் சிறப்புரிமை. பாகிஸ்தானைப் போல அல்லாமல், இந்தியா மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும்  பின்பற்றும் என்று நம்பித்தான் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது. காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள்.

மருதையன்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !

சென்னையின் ரிச்சி தெரு தென்னிந்தியாவின் மினி சிங்கப்பூர். இங்கு கிடைக்காத உபகரணங்களே இல்லை. வாழ்க்கையின் கடைகோடி நடைபாதைவாசிகள் வாங்கக்கூடிய, 300 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கும் விலையுள்ள பழைய கைப்பேசி ஹெட்ஃபோன் முதல் சினிமா நடிகர்கள், நடிகைகளின் வீடுகளை அலங்கரிக்கும் 10 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சிஸ்டம் வரை கொட்டிக் கிடக்கும் அதிசயம்.

பழமையான ரேடியோ மார்கெட் எனப்படும் ரிச்சி தெரு. ஸ்பீக்கர் விற்கும் ஒவ்வொரு கடைக்கு முன்பும், பெட்டிகள் தயாரிக்கும் பணிகளும், பரபரப்பாக வண்டிகளில் பொருட்களை ஏற்றி இறக்குவதுமாக இருந்ததை இப்போது பார்க்க முடிவதில்லை.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ரேடியோ மார்கெட் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி ஏராளமான நாகரிக மாற்றங்களோடு, இன்று பல ஆயிரம் சிறு குறு வியாபாரிகளை – தினக் கூலிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு வியாபாரம் ஆடியோ ஸ்பீக்கர் விற்பனை. ஊர்த்திருவிழாக்களில், கட்சிக் கூட்டங்களில் வைக்கப்படும் ஆளுயர ஸ்பீக்கர்கள் தெருக்களை அலங்கரித்துக் கொண்டிருந்தது ஒருகாலம். ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஸ்பீக்கரின் அளவிற்கேற்ப பெட்டிகள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். ஆனால், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே கடைகளைப் பார்க்க முடிகிறது.

படிக்க:
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
♦ ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

ஸ்பீக்கர் விற்கும் சிறு கடை வியாபாரி விக்னேஷ் என்ற இளைஞரைச் சந்தித்தோம்.

“பத்து ஆண்டு காலமாக தொழில் நடத்தி வருகிறேன். எங்க அப்பா நடத்திய கடை. தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென் மாநிலங்கள் முழுக்க எங்களுக்கு கஸ்டமர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைகோடி கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி என்று பல நகரங்களுக்கும் வியாபாரம் செய்கிறோம்.

சிறு கடை வியாபாரி விக்னேஷ்

முழுக்க முழுக்க அவுட்டோர் பர்பசுக்கு மட்டுமே இந்த ஸ்பீக்கர்கள் பயன்படும். இந்து, முசுலீம், கிறித்தவர்கள் என்று பல மதத்தவர்களுக்கும் இந்த ஸ்பீக்கர் செட்டு இல்லாமல் விழா நிறையாது. அந்த விழாக்களுக்கு கலை என்றால் இது இருந்தால்தான். பல தேவைகளுக்கு எல்லா சைஸ்களிலும் ஸ்பீக்கர் செய்து கொடுப்போம். ஒரு இன்ச் ஸ்பீக்கரிலிருந்து 64 இன்ச் ஸ்பீக்கர் வரை உள்ளது. அந்த ஸ்பீக்கர் பொறுத்தப்படும் மரப்பெட்டி, ஒரு ஜான் உயரத்திலிருந்து ரெண்டாளு உயரம் வரை செய்வோம். ஆனால், இப்போது அதிகபட்சம் 1,500 வாட்சுக்கு மேல் ஸ்பீக்கர் இல்லை. அதற்கு தடை போட்டாங்க. இறைச்சல் மாசு, அபராதம் தவிர்க்க 18 இன்ச் ஸ்பீக்கர்தான் இப்போது கடைசி. வெறும் 12 இன்ச் ஸ்பீக்கர் நாலை இணைத்து சதுர வடிவில் மர பாக்ஸ் அடிக்கிறோம். அதுதான் இப்போ அதிகமாக ஓடுது. இதைப் போலவே 800, 1000 வாட்சுக்கும் தயாரிப்போம்.

சாலையோரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் பெட்டி.

இதில் 20-க்கும் மேற்பட்ட தரத்தில் பல பிராண்ட் ஸ்பீக்கர்கள் ரூ.3,000-லிருந்து 20ஆயிரம் வரை உள்ளது. சாமியானா பந்தல் வாடகைக்கு விடும் வியாபாரிகள் நடுத்தரமானதையும், கல்லூரி, பள்ளி, இந்து மற்றும் கிறித்துவ மத கலைநிகழ்ச்சிகளுக்கு சற்று தரமானதையும் வாங்குகிறார்கள். ஒருதடவை வாங்கி விட்டால் பல ஆண்டு எந்தச் செலவும் வைக்காது. கையாளும்போது ஏதாவது உடைந்தால் அதை சிறு ரிப்பேர் பார்த்தாலே சரியாகிவிடும்.

வாடிக்கையாளரின்றி கலையிழந்து இருக்கும் ஸ்பீக்கர் விற்கும் கடை.

வழக்கமான வாடிக்கையாளர்கள் ஃபோனிலேயே பேசி ஆர்டர் கொடுப்பார்கள். நாங்கள் பார்சலில் அனுப்பி வைப்போம், அவர்கள் செக்காக பணத்தை அனுப்பி விடுவார்கள். இப்போது பொதுக்கூட்டங்கள் பேச பல தடைகள் விதிப்பதால் முன்பு மாதிரி ஆர்டர் வருவதில்லை. தேவையும் குறைந்து போனது. அதனால் மார்கெட் டல்லடிக்கிறது.”

என்று பேசிக் கொண்டே ஃபோன் ரிங்டோன் ஒலித்தவுடன் அதை நோக்கி ஓடினார்.

***

சூர்யா, தொழிலாளி

சூர்யா (ஸ்பீக்கர் பாக்ஸ்களை மீன்பாடி வண்டியில் ஏற்றி வந்தவர்)

“8 வருசமாக இந்த ஸ்பீக்கர் லோடு அடிக்கிறேன். ஒரு ட்ரிப்புக்கு கூலி 250 ரூபாய். முன்னெல்லாம் ஒரே கடைக்கு மூனு ட்ரிப் அடிப்பேன். இப்போ நாலு கடைக்காரங்க சேர்ந்து ட்ரிப் கூலி கொடுக்குறாங்க. வியாபாரம் இல்லேன்னு பல நாளு வேலைக்குக் கூப்பிட மாட்டேங்குறாங்க. பெரம்பூர், அயனாவரம், சூளை இப்படி 10 கி.மீ சரவுண்டிங்கில ஸ்பீக்கர் பெட்டி தயாரிக்கிறாங்க. அங்கேயும் 50 பட்டறைக்கு மேல் இருந்தது, இப்போ இருபதா கொறைஞ்சி போச்சு” என்று சொல்லிக்கொண்டே வண்டியைத் தள்ளிச் சென்றார்.

***

இதே ஸ்பீக்கர், ஆனால் விலையோ பல லட்சங்கள். சிங்கப்பூர், இத்தாலி, பிரான்சு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள். போஸ், டெனான், டைனாடியோ, போல்க், ஹார்மன் காடன், ஜே.எல்.எக்ஸ், சோனாஸ், கிளிப்ஸ், மராண்ட்ஸ். இப்படி அதனுடைய ஆம்பிளிபயர் மட்டும் 1 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை இருக்கு. ஊஃபர், சப் ஊஃபர், சரவுண்ட், ஃபிரண்ட், ஃபிரண்ட் வய்டு, ஃபிரண்ட் ஹைட், சென்டர், பேக், பேக் ஒய்டு, ஸ்கை (சீலிங்) இப்படி காற்று தவழும் எட்டுத் திக்கு மட்டுமல்ல, 80 கோணங்களிலும் இசை காதில் நிறைய வேண்டும்.

விலையுயர்ந்த ஸ்பீக்கர்கள்.

வீடியோ திரையில் விமானம் பறந்தால், தரைக்கு மேல் பறப்பது மாதிரி இருக்கும். கதாநாயகி நீர்வீழ்ச்சியில் குளித்தால், வீடியோ பார்ப்பவர்களின் முதுகு ஈரமாவது போல் உணர முடியும். இப்படி இசை சிலிர்ப்பு கிடைக்கும். சுமார் ஏழு லட்சம் வரை செலவு செய்தால், நீங்கள் உலகத் தரத்தில் இசை ரசிகராக உலாவ முடியும்.

விலை உயர்ந்த ஆடியோ பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரிடம் பேசினோம்.

விலையுயர்ந்த ஆடியோ பொருட்கள் விற்பனை செய்யும் டெசிபில் ஆடியோ கார்னர் கடை உரிமையாளர்

“முன்பெல்லாம் மாதத்திற்கு 3 முறை சிங்கப்பூர் சென்று பொருட்களை தேடித் தேடி வாங்கிவந்து விற்போம். இப்போது 2 மாதத்திற்கு ஒரு முறைகூட போகமுடிவதில்லை. எனக்கு இந்தத் தொழில் உயிர். நான் சிறு வயது முதல் இசைப் பிரியன். 10 ஆண்டு காலம் லண்டனில் வாழ்ந்தேன். எனக்கு எல்லா இசையும் அத்துப்படி.

கண்களைக் கவரும் மல்டி மீடியா ஸ்பீக்கர்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்கள், பணம் படைத்தவர்கள், விலையை பெரிதாகக் கருத மாட்டார்கள். பிராண்ட், ஒரிஜினல் – அதுதான் அவர்களுக்கு முக்கியம். செல்ஃபோன், வாட்ச், கார் மாதிரி இதையும் அடிக்கடி டாப் பிராண்டுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்ளை தற்போது பார்க்க முடிவதில்லை. அந்த இசை ரசிகர்களுக்கு இப்போ என்ன ஆனதென்றே தெரியவில்லை. எல்லாம் இந்த டிமானிஸ்டேசன், ஜி.எஸ்.டியால் வந்த வினை.

இந்த வருடம் பல நாட்கள் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல் கடையைத் திறந்து மூடிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலம் எப்படி போகும் என்று புரியவில்லை. ஆனால், எல்லாம் சரியாகிவிடும், பார்ப்போம்” என்றார் விரக்தியாக.

“நீங்களோ இசை ரசிகர், தனிமையில வேற உட்கார்ந்திருக்கீங்க. காதுக்கு இனிமையா தரமான பாட்டு போட்டுக் கேட்கலாமே” என்றோம்.

“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” என்று சிரித்தபடியே வழியனுப்பினார்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !

காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !

”அரசியல் சாசனப் பிரிவு 370 பிரிவு ரத்தாவது, அதனுடன் இணைந்து அரசியல் சாசனத்தின் பிரிவு அம்மாநிலத்திற்குப் பொருந்துவதையும் ரத்து செய்கிறது. இதன் விளைவு, அம்மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாது போகிறது.”

அரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், செப்.6, 1952 அன்று ஜவஹர்லால் நேருவுக்கு அனுப்பிய குறிப்பிலிருந்து…

♦♦♦

ம்மு காஷ்மீருக்குத் தனிச் சிறப்புரிமைகள் வழங்குவதாகக் கூறப்படும் அரசியல் சாசனப் பிரிவு 370- செயலற்றதாக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீருக்கென பெயரளவில் இருந்துவந்த தனிக் கொடி, தனி அரசியல் சாசனச் சட்டம், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன. இனி, இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமின்றி, மைய அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இன்றியும் அம்மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். அதேபொழுதில், இனி அங்கு அமையவுள்ள அரசுதான், தனது திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் மைய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். ஒரேயொரு அரசுத் தலைவர் ஆணை மூலம் நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டது, மோடி அரசு.

இந்திய அரசியல் சாசனத்தில் கையெழுத்திடும் அரசியல் சாசன சபை உறுப்பினர்கள். (கோப்புப் படம்)

370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்குப் பெயரளவில் இருந்துவந்த சிறப்பு உரிமைகள் அனைத்தையும் அடியோடு ரத்து செய்ததற்குத் தீவிரவாதம், வளர்ச்சியின்மை என வாய்க்கு வந்த காரணங்களை அடுக்குவதோடு, அந்தப் பிரிவே தற்காலிகமானதுதான். அதனால் அவ்வுரிமைகளை ரத்து செய்தது சட்டப்படி சரிதான்” என வாதாடி வருகிறது, சங்கப் பரிவாரக் கும்பல். இப்பிரிவு அரசியல் சாசனத்தில் தற்காலிகமான, இடைக்காலத்துக்குரிய மற்றும் சிறப்பு வழிமுறைகள் (Temporary, Transitional and Special Provisions)” என்ற தலைப்பின் கீழ் வருவதைத் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள், சங்கப் பரிவார அறிவாளிகள். இந்த வாதம் பாபர் மசூதியின் கீழே ராமர் கோவில் இருந்ததாகக் கூறப்படுவதற்கு இணையான மாபெரும் பித்தலாட்டம், வரலாற்று மோசடி.

370- வரலாற்றுப் பின்னணி

இந்தியா பிரிவினை நடந்து, அவ்விரு நாடுகளும் சுதந்திரமான” தனித்தனி நாடுகளாக மாறிய 1947, ஆகஸ்டில், ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழ் தனி நாடாக இருந்தது. அன்று காஷ்மீர் மக்கள் ஷேக் அப்துல்லாவின் தலைமையில் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு மன்னராட்சிக்கு எதிராகப் போராடி வந்ததோடு,  மதச்சார்பற்ற, சுதந்திரமான காஷ்மீர் அமைவதைத்தான் விரும்பினார்களேயொழிய, இந்தியாவோடோ, பாகிஸ்தானோடோ இணைய விரும்பவில்லை.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், 1947 அக்டோபர் அன்று பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பழங்குடிகள் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் தொடுத்து, வடக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த ஆக்கிரமிப்பை முறியடிக்க வேண்டிய தேவையையொட்டி, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் முடிவை மன்னர் ஹரி சிங் எடுத்தார். இம்முடிவுக்கு ஷேக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சியும் ஆதரவளித்தது.

1949 ஆண்டு சிறீநகரில் நடந்த ஜம்மு காஷ்மீர் தேசிய
மாநாட்டுக் கட்சியின் மாநாட்டில் ஷேக் அப்துல்லாவுடன் (இடது)
ஜவஹர்லால் நேரு. (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும், மற்ற மன்னராட்சிப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்ததைப் போல இந்த இணைப்பு நடக்கவில்லை. பாதுகாப்பு, தொலைதொடர்பு, வெளியுறவு ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே இந்திய அரசிற்கு அதிகாரம் உண்டு; மற்ற அனைத்துத் துறைகளும் ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசனச் சட்டம் 1939-ன் படி ஜம்மு காஷ்மீரை ஆள்பவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இந்திய அரசும் இந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுதான் இணைப்பு ஒப்பந்தத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டது.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்த அதேசமயத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்போ, அரசியல் நிர்ணய சபையோ இல்லை. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருந்தது. ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் குறித்த பொது வாக்கெடுப்பை இனிதான் நடத்த வேண்டி யிருந்தது. இத்தகைய நிலையில் அதிகாரப் பகிர்வு குறித்து நிரந்தரமான ஒப்பந்தத்தை உருவாக்கும் சாத்தியமில்லை. எனவே,  இடைக்கால ஏற்பாடு குறித்து இந்திய அரசின் சார்பில் நேருவும் படேலும்; ஜம்மு காஷ்மீரின் சார்பில் ஷேக் அப்துல்லாவும் மிர்ஸா அப்சல் பேக்கும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில்தான் 370- உருவாக்கப்பட்டு (அப்பொழுது அப்பிரிவு 306 என அழைக்கப்பட்டது) இந்திய அரசியல் சாசனத்தில் அக்.17, 1949 அன்று சேர்க்கப்பட்டது.

இந்த இடைக்கால ஏற்பாடான 370 பிரிவு, ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் வரை அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய அரசுத் தலைவருக்குச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிகமான அதிகாரங்களை வழங்கியது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசிடம் கையளிக்கப்பட்ட பாதுகாப்பு, வெளியுறவு, தொலைதொடர்பு ஆகியவை தொடர்பான சட்டங்களை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு முன்பாக, அரசுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இம்மூன்று துறைகளுக்கு அப்பால் உள்ள விடயங்கள் தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜம்மு காஷ்மீர் அரசு இந்த ஒப்புதலை வழங்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசு அளிக்கும் ஒப்புதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அவை செல்லுபடியாகும்.

இந்த இடைக்கால ஏற்பாடான 370 செயலற்றதாக்கவோ அல்லது மாற்றங்களோடு தொடரவோ இந்திய அரசுத் தலைவர் உத்தரவிடலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 370 ரத்து செய்வது குறித்தோ, மாற்றங்களோடு தொடருவது குறித்தோ இந்திய அரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தால் மட்டுமே அவர் அவ்வாறு உத்தரவிட முடியும். இதன் பொருள், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை இல்லாமல் இந்திய அரசுத் தலைவர் 370 ரத்து செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அப்பிரிவில் மாற்றங்களைக்கூடச் செய்ய முடியாது என்பதாகும்.

காங்கிரசின் துரோகங்கள்

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபைக்கான அறிவிப்பு 1951- ஆண்டு மே தினத்தன்று வெளியிடப்பட்டு, அவ்வாண்டிலேயே அச்சபையின் 75 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தலில் ஷேக் அப்துல்லா தலைமையில் இயங்கிவந்த ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசன சபை உறுப்பினர் பதிவேட்டில்
கையெழுத்திடும் ஷேக் அப்துல்லா. (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 31.10.1951 தொடங்கி 26.01.1957 வரை செயல்பட்டு, 27.01.1957 அன்று சட்டபூர்வமாகக் கலைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அச்சபை ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்ததை உறுதி செய்தது என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இதேகாலக்கட்டத்தில், நேருவின் தலைமையில் இருந்த இந்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மீது தனது அதிகாரத்தை விரிவாக்கும் நோக்கில் பல சதிகளையும் அரங்கேற்றியது.

ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்த ஷேக் அப்துல்லா, 1953 ஆகஸ்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு புனையப்பட்டது. அப்பொழுது ஜம்மு காஷ்மீரின் அரசுத் தலைவராக இருந்த கரண் சிங் (மன்னர் ஹரி சிங்கின் மகன்) இந்திய அரசின் ஏஜெண்டாக இருந்து அப்துல்லாவைக் கைது செய்ததோடு, அவரது அமைச்சரவையையும் கலைத்தார். இதன் பின் பக்ஷி குலாம் முகம்மது என்ற கைக்கூலி காஷ்மீரின் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு, புதிய அரசும் அமைக்கப்பட்டது.

இதேசமயத்தில், 1950, 1952 மற்றும் 1954 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசின் அதிகாரத்தை விரிவாக்கும் அரசுத் தலைவரின் ஆணைகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டன. இவற்றுள் 1954 ஆணை முந்தைய இரண்டு ஆணைகளையும் நீக்கியதோடு, காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த மூன்று துறைகளுக்கு அப்பாலும் சென்று, மைய அரசுப் பட்டியலில் உள்ள இனங்களுள் பெரும்பாலானவை ஜம்மு காஷ்மீருக்குச் செல்லுபடியாகும் என்ற நிலையை உருவாக்கியது.

306 ஏ அவசியம் குறித்து
இந்திய அரசியல் சாசன சபையில்
உரையாற்றிய காஷ்மீர் அரசின்
திவான் கோபாலசுவாமி அய்யங்கார்.
(கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1954 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைந்ததை அங்கீகரித்ததோடு, ஷேக் அப்துல்லாவிற்கும் நேருவிற்கும் இடையே கையெழுத்தாகியிருந்த டெல்லி ஒப்பந்தத்தையும் ஏற்றுக் கொண்டது. இந்த டெல்லி ஒப்பந்தம்தான் மைய அரசு தனது அதிகாரத்தை விரிவாக்கும் வண்ணம் வெளியிட்ட 1954 அரசாணைக்கு அடிப்படையாக அமைந்தது. அதேசமயம், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமைகள் வழங்கக்கூடிய அரசியல் சாசனப் பிரிவு 306  (தற்பொழுது 370), மாற்றங்களோடு தொடருவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இந்திய அரசிற்கு எந்தவொரு பரிந்துரையும் செய்யாமலேயே ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை ஜனவரி 27, 1957- கலைக்கப்பட்டது.

370 மற்றும் அதன் உட்கூறுகளின்படி, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூட்டப்படும் வரைதான், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு இயற்றும் சட்டங்கள் மற்றும் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு உண்டு. அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்ட பின் அந்த அதிகாரத்தை ஜம்மு காஷ்மீர் அரசு இழந்துவிடுகிறது. மேலும், அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு இயற்றிய சட்டங்கள் மற்றும் வெளியிட்ட ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கிக் கலைக்கப்பட்ட பிறகு, இந்திய அரசிற்கு அல்லது நாடாளுமன்றத்திற்கு அதன் பிறகு புதிதாக எந்தவொரு சட்டமோ, ஆணையோ வெளியிடும் அதிகாரமும் கிடையாது. அதாவது, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூடி, ஜம்மு காஷ்மீருக்கும் இந்திய அரசிற்கும் இடையேயான அதிகாரப் பகிர்வை முடிவு எடுத்துக் கலைந்த பிறகு, இந்திய அரசிற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அதிகாரம் தானாகவே ரத்தாகிவிடுகிறது.

படிக்க:
காஷ்மீர் :  இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

மேலும், 370- பிரிவை மாற்றங்களோடு தொடர்வது தொடர்பாகவோ அல்லது ரத்து செய்வது தொடர்பாகவோ அரசியல் நிர்ணய சபை இந்திய அரசுத் தலைவருக்கு எந்தவொரு பரிந்துரையையும் அளிக்காமல் கலைந்து போனதால், அப்பிரிவை நீக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அதில் எந்தவொரு சிறு மாற்றத்தையும் செய்யும் அதிகாரமும் அரசுத் தலைவருக்குக் கிடையாது. இவ்வாறாக, அரசியல் சாசனப் பிரிவு 370 இந்திய அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யமுடியாத நிரந்தர உறுப்பாகிவிடுகிறது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன்
இணைந்தபோது இந்தியாவின்
துணைப் பிரதமராகவும் உள்துறை
அமைச்சராகவும் இருந்த
வல்லபாய் படேல். (கோப்புப் படம்)

இந்திய அரசியல் சாசனத்தின் நிலை இவ்வாறிருக்க, பா.ஜ.க. அரசிற்கு முன்பிருந்த காங்கிரசு அரசுகள், அம்மாநிலத்தை ஆண்ட தமது கூட்டாளிகளைப் பயன்படுத்திக்கொண்டு, அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று, ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசின் அதிகாரத்தை மென்மேலும் விரிவுபடுத்தின. இந்த விரிவாக்கத்திற்கு 1954- வெளியிடப்பட்ட அரசாணையை அடிப்படையாக இந்திய அரசு பயன்படுத்திக் கொண்டது எனக் கூறும் அரசியல் சாசனச் சட்ட வல்லுநர் ஏ.ஜி.நூரானி, 1954 1996- இடைப்பட்ட ஆண்டுகளில் 1954 அரசாணையில் 44 திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆகஸ்டு 5- முன்பாகவே, இந்திய அரசியல் சாசனத்தில் அடங்கியிருக்கும் 395 பிரிவுகளுள் 260 பிரிவுகளும், மைய அரசின் பட்டியலில் உள்ள 97 இனங்களில் 94 இனங்களும் ஜம்மு காஷ்மீரிலும் செல்லுபடியாகும்படி இந்திய அரசின் அதிகாரம் விரிவாக்கப்பட்டுவிட்டது. அதாவது, ஆகஸ்டு 5- முன்பாகவே 370- பிரிவு செத்த பாம்பாகிவிட்டது என்பதே உண்மை. அந்தச் செத்த பாம்பை அடித்த வீரர்கள்தான் மோடி ஷா கும்பல். அந்தச் செத்த பாம்பைக்கூடச் சட்டப்படி எதிர்கொள்ள முடியாமல், பார்ப்பனக் கும்பலுக்கே உரிய நரித்தனங்கள் மற்றும் கிரிமனல்தனமான வழியில் செயலற்றதாக்கி, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கு இணையான தாக்குதலை அம்மக்களின் மீது நடத்தியிருக்கிறது.

மோடி – ஷா கும்பலின் ஆட்சிக் கவிழ்ப்பு (coup)

ஒரு நாடு மற்றொரு நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தால், அந்நாட்டை காலனிய எஜமானர்கள் என்போம். ஜம்மு காஷ்மீரின் பெயரளவிலான சிறப்புரிமைகளைப் பறித்தும், மாநிலத் தகுதியை நீக்கி அதிகாரமற்ற யூனியன் பிரதேசமாக மாற்றியிருப்பதன் மூலமும் ஜம்மு காஷ்மீரை டெல்லியின் காலனியாக மாற்றிவிட்டது, மோடி ஷா கும்பல். இதற்கு அரசியல் சாசனப் பிரிவுகள் 3, 370 மற்றும் 367 ஆகியவற்றைக் கேடாகவும், கிரிமினல்தனமாகவும், அப்பிரிவுகளின் உட்கிடக்கைக்கு எதிராகவும் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.

பிரிவு 370 செயலற்றதாக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பின்புலத்தில் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த ஆகஸ்டு அன்று மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமைகளை வழங்கும் 370 செயலற்றதாக்கக் கோரும் தீர்மானத்தையும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரும் மசோதாவையும் முன்மொழிந்தது. இதனையடுத்து, இந்திய அரசியல் சாசனம் முழுமையும் எவ்வித மாறுதலும் இன்றி ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்ற அரசாணையை 370(1) பிரிவின் கீழ் வெளியிட்டார், ராம்நாத் கோவிந்த். மேலும், இவ்வாணை 1954 அரசாணையை நீக்குவதாகவும் (Supersede) அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான ஆணைகளை வெளியிட அரசுத் தலைவருக்கு 370(1) அதிகாரம் அளித்தாலும், அவ்வாணை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறுகிறது. மேலும், 370 பிரிவின் கூறு 3, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை பரிந்துரைக்காமல் இந்திய அரசுத் தலைவர் தன்னிச்சையாக 370- பிரிவில் மாற்றங்களைச் செய்யவோ, அதனைச் செயலற்றதாக்கவோ ஆக்க முடியாது எனக் குறிப்பிடுகிறது. 370 பிரிவு இந்திய அரசுத் தலைவருக்குச் சட்டப்படி விதித்திருக்கும் இந்த வரம்புகளை மீறுவதற்கு பிரிவு 367- கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.

இந்த 367 பிரிவு அரசியல் சாசனத்தின் கூறுகளுக்கு வியாக்கியானம் அளிக்கும் கூறாகும். அரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வெளியிட்ட ஆணை 367- பிரிவில் புதிய உட்கூறு ஒன்றைச் சேர்க்கிறது. இப்புதிய உட்பிரிவு, 370- பிரிவில் ஜம்மு காஷ்மீரின் பிரதம அமைச்சர் (Sadar-i- மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு என வரும் இடங்களிலெல்லாம் ஆளுநர் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை என வரும் இடங்களிலெல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டமன்றம் என்றும் பொருள் கொள்ளவேண்டுமென புதிய விளக்கத்தை அளித்தது.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக். (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டமன்றம் ஓராண்டுக்கு முன்பாகவே கலைக்கப்பட்டுவிட்டது. தற்பொழுது அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சிதான் நடந்துவருவதால், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர்தான், குடியரசுத் தலைவரின் சார்பாக அம்மாநிலத்தை ஆண்டு வருகிறார். அரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தன்னால் ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக்கோடு ஆலோசனை நடத்தி, இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்துக் கூறுகளும் எவ்வித மாற்றமும் இன்றி அம்மாநிலத்திற்கு இனிப் பொருந்தும் என உத்தரவிடுகிறார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும், சட்டமன்றமும் கலைக்கப்பட்டுவிட்டதால், அவை செய்யவேண்டிய பணிகளுக்கு இப்பொழுது நாடாளுமன்றம்தான் பொறுப்பு. நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, 370- செயலற்றதாக்கும்படி தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, உடனடியாக அரசுத் தலைவரை ஆணை வெளியிடச் செய்துவிட்டது, மோடி அரசு. மேலும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவையும் நிறைவேற்றிவிட்டது.

இவை அனைத்துமே ஏதோ சட்டப்படி நடந்தவை போலத் தெரிந்தாலும், உண்மையில் இது அரசியல் சாசனச் சட்டத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் மோசடிகளாகும். அரசியல் சாசனப் பிரிவு 367 கொண்டு தெளிவற்ற கூறுகளுக்கோ சொற்களுக்கோதான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், 370 பிரிவின் உட்கூறுகளில் கூறப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை, ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, மாநிலச் சட்டமன்றம் ஆகியவை தெளிவற்றதாகவோ, சந்தேகத்திற்குரியதாகவோ இல்லாதபோது, அவற்றுக்குப் புதுவிளக்கம் அளிக்க முடியாது” என்கிறார், நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஃபைசான் முஸ்தபா.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற கூறுகளை ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்துவதற்குத்தான் 370 பிரிவு தந்திருக்கும் தற்காலிக அதிகாரத்தை அரசுத் தலைவர் பயன்படுத்த முடியுமே தவிர, 370- திருத்துவதற்கு 370- பயன்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின்படி தவறானது என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ஷதான் ஃபராஸத் குறிப்பிடுகிறார்.

ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்கும் முன்பாக, அது தொடர்பாக அம்மாநிலச் சட்டமன்றத்தோடு ஆலோசிக்க வேண்டும் என அரசியல் சாசனப் பிரிவு 3 தெரிவிக்கிறது. சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அம்மாநிலம் தொடர்பான சில மசோதாக்களை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு உண்டு. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 3 தொடர்பான விடயங்களில், அப்பிரிவே நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு வரம்பிட்டு அம்மாநிலச் சட்டமன்றத்தோடு ஆலோசிக்க வேண்டும் எனக் கூறும்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முரணாகும்” என்றும் சுட்டிக் காட்டுகிறார், ஷதான் ஃபராஸத்.

இவ்விளக்கங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டாலும்கூட, 2018- 370 பிரிவு குறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அப்பிரிவு தற்காலிகமானது என்ற தலைப்பின் கீழ் உள்ளதென்றாலும்கூட, அப்பிரிவு தற்காலிகமானதல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறது. 1969 370- தற்காலிகமானது என ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், அதனைச் செயலற்றதாக்க முடியாது எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பாக பீகாரில் சிக்கல் எழுந்தபோது, அது தொடர்பான பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்ட மன்றத்தின் நேரடி ஒப்புதலோடு செய்ய முடியாத ஒரு செயலை, சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இருக்கும்போது செய்வது அரசமைப்புச் சட்ட மோசடி யாகும். இது சட்டநெறிமுறை ஆகாது” எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

எனவே, அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கும் நெறிகளுக்கும் எதிராக, முரணாக, அவற்றைத் திருத்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் 370- பிரிவைச் செயலற்றதாக்கியிருப்பதும், அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து, ஒன்றியப் பிரதேசமாக மாற்றி தகுதி இறக்கம் செய்திருப்பதும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை போன்றதொரு கிரிமினல் குற்றமாகும். இக்கிரிமினல் குற்றத்தைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரால் நியாயப்படுத்த முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

மோடி அரசு 370 செயலற்றதாக்கியதைக் கண்டித்து பஞ்சாபிலும், பெங்களூருவிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.

காஷ்மீர் மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இழைத்திருக்கும் அநீதியை மற்ற மாநில மக்கள் கண்டும் காணாது போல நடந்துவருவது தம் தலை மீது தாமே கொள்ளிவைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும். ஏனென்றால், 370- பிரிவை நீக்க வேண்டும் என்பது மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கை அல்ல. மாநில அரசின் மையமான உரிமைகளைப் பறித்து, அவற்றை பஞ்சாயத்து போர்டுகளைப் போல ஆக்க வேண்டும் என்பதுதான் இந்து ராஷ்டிரத்தின் திட்டம். ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு, என்.ஐ.ஏ.விற்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பன வழியாக தனது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது.

படிக்க:
பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !
கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் சோதனைக் களமாகப் பயன்படுத்தியதைப் போல, மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு ஜம்மு காஷ்மீரைச் சோதனைக் களமாகப் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. எனவே, காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதன் வழியாகத்தான் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மக்களும் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

– குப்பன்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கடைமடை சேராத காவிரி ! எடப்பாடி அரசே குற்றவாளி ! விருதையில் ஆர்ப்பாட்டம்

விருதாச்சலத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 20.09.2019 அன்று காலை 11 மணி அளவில் விருதாச்சலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
♦ கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

இதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அனைத்து விவசாய சங்கங்களின் மாநிலச் செயலாளர்  திரு ஸ்டீபன், ஜனநாயக விவசாயிகளின் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் திரு அன்பழகன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் மற்றும் கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதாச்சலம்.

உனக்கே தெரியாது … நீ எப்பேர்ப்பட்ட மனிதன் என்று !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 08 அ

னது வளையாத காலை விமானி அறைக்குள் முடிவில் ஒரு விதமாக வைத்து விட்டான் அலெக்ஸேய். நம்ப முடியாத அளவு அரும் பிரயாசை செய்து மறு காலையும் அறைக்குள் இழுத்து, தொப்பென்று இருக்கையில் சாய்ந்தான். அதே நொடியில் தோல் வார்களால் பொய்க்கால்களை நெம்படிகளுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டான். அமைப்பு சரியானதாக வாய்த்திருந்தது. வார்கள் பொய்க்கால்களை நெம்படிகளுடன் மிகுவாகவும் உறுதியாகவும் அழுத்தி இறுக்கியிருந்தன. பிள்ளைப் பருவத்தில் நன்றாகப் பொருத்தப்பட்ட ஸ்கேட்டுகளைப் பாதங்களுக்கு அடியில் உணர்ந்தது போலவே நெம்படிகளை இப்போது உணர்ந்தான்.

ஆசிரியர் அவனது அறைக்குள் தலையை நீட்டினார்.

“ஏன் தம்பீ, நீ குடித்திருக்கிறாயா என்ன? ஊது” என்றார்.

அலெக்ஸேய் ஊதினான். மதுவிற்கு பழக்கமான வாடை வராமையால் ஆசிரியர் மெக்கானிக்கை அச்சுறுத்தும் பாவனையில் முட்டியை ஆட்டினார்.

“செலுத்தத் தயாராகுக!”

“இணைப்பு ஏற்படுத்துக!”

“அப்படியே, இணைப்பு ஏற்படுத்தியாயிற்று!”

எஞ்சின் சில தடவைகள் காதைத் துளைப்பது போல உறுமியது. பின்பு அதன் பிஸ்டன்கள் அடிக்கும் துலக்கமானத் தனி ஓசை கேட்டது. களி மிகுதியால் மெரேஸ்யெவ் கத்தியும் விட்டான். பெட்ரோல் செலுத்துவிசையைக் கையால் தன்னுணர்வின்றியே இழுத்தான். அதற்குள் பேச்சுக் குழாய் வழியே வந்தது ஆசிரியரின் கோபக் குரல்:

“குருவுக்கு மிஞ்சின சீடன் ஆகப் பார்க்காதே!”

ஆசிரியர் தாமே பெட்ரோல் செலுத்துவிசையைப் போட்டார். எஞ்சின் கடகடத்தது, ஊளையிட்டது. விமானம் எகிறிக் குதித்தவாறு பறப்பு முன்னோட்டம் தொடங்கியது. தன்னுணர்வின்றியே இயக்கியவாறு நவூமவ் பிடியைத் தம் பக்கம் இழுத்தார். தட்டான் பூச்சி வடிவான விமானம், எல்லா விமானிகளும் ஒரு காலத்தில் விமானமோட்டக் கற்றுக் கொண்ட அந்தப் பறப்பூர்தி, செங்குத்தாக வானில் கிளம்பியது.

சாய்வாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் புதிய பயிற்சி மாணவனின் முகத்தைக் கண்டார் ஆசிரியர். நீண்ட இடை நிறுத்தத்துக்குப் பின் முதல் விமானப் பறப்பின் போது இத்தகைய எத்தனையோ முகங்களை நவூமவ் கண்டிருந்தார். தேர்ந்த விமானிகளின் பெரிய மனிதப் பாங்கான நல்லியல்பை அவர் பார்த்திருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக ஆஸ்பத்திரிகளில் நீண்ட காலம் தங்கிவிட்டு மறுபடி தங்கள் வழக்கமான சூழ்நிலைமைக்கு வந்துள்ள உற்சாகிகளான விமானிகளின் விழிகளில் சுடர் வீசுவதை அவர் கண்டித்திருக்கிறார்.

பயங்கர விமான விபத்தில் படுகாயமடைந்து திரும்பியவர்கள் விமானம் வானில் கிளம்பியதும் வெளிறுவதையும் பதற்றமடையத் தொடங்குவதையும் உதடுகளைக் கடிப்பதையும் அவர் அவதானித்திருந்தார். முதல் முறை தரையிலிருந்து வானில் எழும்பும் கற்றுக் குட்டிகளின் சுறுசுறுப்பு ததும்பும் ஆவலை அவர் பார்த்திருந்தார். ஆனால் விமானம் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவனாகத் தோன்றிய இந்த அழகிய சாமள நிற இளைஞனின் முகத்தில் இப்போது கண்ணாடி வாயிலாக அவர் கண்ட விந்தையான பாவத்தை நவூமவ் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய பல ஆண்டுகளில் ஒரு தரங்கூடக் காணவில்லை.

ஜுரத்தினால் ஏற்படுவது போன்ற புள்ளிகள் அடர்ந்த செம்மை புதியவனின் சாமள நிறத் தோலின் ஊடாகப் பரவியது. அவன் உதடுகள் வெளிறின, ஆனால் அச்சத்தால் அல்ல, நிச்சயமாக இல்லை, நவூமவுக்குப் புரியாத, மாண்பு சான்ற கிளர்ச்சி காரணமாக. அவன் யார்? அவனுக்கு என்ன நேர்ந்துவிட்டது? மெக்கானிக் அவனைக் குடிகாரன் என்று எண்ணியது ஏன்?

விமானம் தரையிலிருந்து கிளம்பிக் காற்றில் மிதக்கத் தொடங்கியதும், காப்புக் கண்ணாடிகள் இன்னும் போடப்படாத புதியவனின் விழிகளில் – ஜிப்ஸியுடையவை போன்று கருமையான, பிடிவாதம் நிறைந்த விழிகளில் – திடீரெனக் கண்ணீர் மல்கியது. கன்னத்தில் வழிந்த கண்ணீர் திருப்பத்தின் போது முகத்தில் அடித்த காற்றுத் தாரையால் பூசப்பட்டது. இதை எல்லாம் ஆசிரியர் கவனித்தார்.

“யாரோ விசித்திரப் பிரகதி! இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன செய்வானோ, யார் கண்டது?” என்று தீர்மானித்துக் கொண்டார் நவூமவ். ஆனால் சதுரக் கண்ணாடியிலிருந்து தம்மை நோக்கிய அந்தக் கிளர்ச்சி பொங்கிய முகத்தில் இருந்த ஏதோ ஓர் உணர்ச்சி ஆசிரியரையும் பற்றிக் கொண்டது. தமது தொண்டையிலும் ஏதோ அடைத்துக் கொள்வதையும் உணர்ந்து அவர் வியப்பு அடைந்தார்.

“ஒட்டும் பொறுப்பை உனக்குக் கொடுக்கிறேன்” என்று அவர் சொன்னார். ஆனால் அப்படிக் கொடுத்துவிடவில்லை. கைகளையும் பாதங்களையும் தளர்த்த மட்டுமே செய்தார். ஓட்டும் பொறுப்பை விளங்காத இந்த விசித்திரப் பரகிருதியிடமிருந்து எந்தக் கணத்திலும் வலிய எடுத்துக் கொள்ள ஆயத்தமாக இருந்தார் அவர்.

அலெக்ஸேயின் ஒவ்வொரு அசைவையும் நவூமவ் முன்னிருந்த கருவிகள் அப்படியே இயங்கிக் காட்டின. புதியவன் தன்னம்பிக்கையுள்ள, கைதேர்ந்த விமானி என்பதை அவற்றிலிருந்து அவர் கண்டுகொண்டார். அனுபவம் முதிர்ந்த போர் விமானியான பயிற்சிப் பள்ளித் தலைவர் “வரப்பிரசாதம் பெற்ற விமானி” என்று இத்தகையவர்களைக் குறிப்பிடுவது வழக்கம்.

முதல் சுற்றுக்குப் பின் நவூமவ் தன் சீடனைக் குறித்து அஞ்சுவதை விட்டுவிட்டார்.

விமானம் தயக்கமின்றி, உரிய முறையில் இயங்கியது. ஒரு விஷயந்தான் சற்று விந்தையாகப்பட்டது. விமானத்தைச் சமமட்டத்தில் செலுத்துகையில் பயிற்சியாளன் ஓயாமல் இடமும் வலமுமாகச் சிறு சிறு திருப்பங்கள் செய்தான். சில வேளைகளில் விமானத்தைச் சிறிது மேலே கிளப்பினான். சில வேளைகளில் கீழே இறக்கினான். தனது தேர்ச்சியை அவன் சோதித்துப் பார்ப்பது போல் இருந்தது. புதியவனை மறு நாளே தனியாகப் பயிற்சிப் பகுதியில் பறக்க அனுமதிக்கலாம் என்றும், இரண்டு மூன்று பறப்புக்களுக்குப் பின் சண்டை விமானத்தின் சிறு நகலான “ஊத்-2” ரகப் பயிற்சி விமானத்தை ஓட்ட விடலாம் என்றும் தமக்குள் தீர்மானித்துக் கொண்டார் நவூமவ்.

குளிராயிருந்தது. இறக்கைத் தம்பத்தின் மேலிருந்த வெப்பதட்பமானி நீர் உறைமட்டத்துக்குக் கீழ் பன்னிரண்டு டிகிரி குளிர் இருந்ததாகக் காட்டியது. கூரிய காற்று, விமானி அறைக்குள் புகுந்து நாய்த் தோல் பூட்சுகளுக்குள் புகுந்து பயிற்சி ஆசிரியரின் கால்களை விரைக்கச் செய்தது. திரும்ப நேரம் ஆகிவிட்டது.

ஆனால் “தரையில் இறங்குக!” என்று அவர் குழாய் வாயிலாக உத்தரவு இட்ட போதெல்லாம் ஆர்வம் பொங்கும் கரு விழிகளில் மெளன வேண்டுகோள் தென்படுவதைக் கண்ணாடியில் கண்டார். அது வேண்டுகோள் கூட இல்லை, கோரிக்கை. உத்தரவை மறுபடி இடுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. வழக்கமான பத்து நிமிடங்களுக்குப் பதில் சுமார் அரைமணி நேரம் அவர்கள் பறந்தார்கள்.

விமானி அறையிலிருந்து வெளியே துள்ளி, விமானத்தின் அருகே குதித்தார் நவூமவ். கையுறைகளைத் தட்டிக் கொண்டார், பாதங்களைத் தொப்புத் தொப்பென்று அடித்தார். ஆரம்ப குளிர் அன்று காலையில் உண்மையிலேயே கடுமையாக இருந்தது. பயிற்சி மாணவனோ, வெகு நேரம் அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான். பின்பு அதிலிருந்து மெதுவாக, விருப்பமற்றவன் போல வெளியே வந்தான். தரையில் இறங்கியதும் இறக்கையின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் உவகை ஊற்றெடுத்தது போன்று அது தோற்றம் அளித்தது. குளிராலும் இன்பக் கிளர்ச்சியாலும் செம்மை சுடர்ந்தது அது.

“விரைத்துப் போனாயோ? என்னை பூட்சுகள் வழியாக எப்படிக் குளிர் தாக்கிவிட்டது தெரியுமா? அடே, நீ சாதாரண ஜோடுகள் அல்லவா அணிந்திருக்கிறாய்! கால்கள் குளிரில் மரத்துப் போகவில்லையா?”

“எனக்குக் கால்கள் இல்லை” என்று தனது எண்ணத்தால் புன்னகைத்தவாறு பதிலளித்தான் பயிற்சி மாணவன்.

“என்ன?” என்றார் நவூமவ், உணர்ச்சிகளுக்கேற்ப விரைந்து மாறும் அவர் முகம் நீண்டுவிட்டது.

“எனக்குக் கால்கள் இல்லை” என்று தெளிவாகத் திருப்பிச் சொன்னான் அலெக்ஸேய்.

“‘கால்கள் இல்லை’ என்றால் என்ன அர்த்தம்? நோயுள்ளவையா அவை?”

“இல்லை என்றால் இல்லை, அவ்வளவுதான். இவை பொய்க்கால்கள்.”

யாரோ தலையில் சம்மட்டியால் அடித்து தரையில் பதித்து விட்டது போல நொடிப்பொழுது மலைத்து நின்று விட்டார். இந்த இளைஞன் அவரிடம் சொன்ன விஷயம் முற்றிலும் நம்ப இயலாததாக இருந்தது. கால்கள் இல்லையாவது? இப்போது தானே இவன் விமானம் ஓட்டினான், அதுவும் நன்றாகவே ஓட்டினான்!…

“காட்டு” என்று ஏதோ அச்சத்துடன் சொன்னார் ஆசிரியர்.

இந்த ஆவல் அலெக்ஸேய்க்குக் கோபமூட்டவோ அவமதிப்பாகப்படவோ இல்லை. மாறாக, வேடிக்கையான இந்தக் குதூகல மனிதரை ஒரேயடியாக வியப்பில் ஆழ்த்த அவனுக்கு விருப்பம் உண்டாயிற்று. சர்க்கஸ் செப்படி வித்தைக்காரன் போன்று காற்சட்டையை உயர்த்தி ஏககாலத்தில் இரண்டு கால்களையும் காட்டினான்.

தோலாலும் அலுமினியத்தாலும் ஆன பொய்க்கால்கள் மேல் நின்றான் பயிற்சி மாணவன். ஆசிரியரையும் மெக்கானிக்கையும் முறைக்காகக் காத்திருந்த பயிற்சியாளர்களையும் புன்னகையுடன் நோக்கினான்.

படிக்க:
சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

இந்த மனிதனின் உள்ளக் கிளர்ச்சி, இவன் முகத்தில் காணப்பட்ட அசாதரணத் தோற்றம், இவனுடைய கருவிழிகளில் பொங்கிய கண்ணீர், பறப்பு உணர்ச்சியை நீடிப்பதற்கு அவன் காட்டிய பேரார்வம், எல்லாவற்றையும் நவூமவ் அக்கணமே புரிந்துகொண்டார். இந்தப் பயிற்சி மாணவன் அவரைப் பரவசப்படுத்திவிட்டான். அலெக்ஸேய் அருகே பாய்ந்து வெறி கொண்டவர் போல அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

“அடேயப்பா, எப்படி உன்னால் முடிந்தது? அருமையான ஆள் நீ! அட உனக்கே தெரியாது நீ எப்பேர்பட்ட மனிதன் என்று!…” எனத் தொண்டை தழுதழுக்கக் கூறினார்.

முக்கியமான காரியம் இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. பயிற்சி ஆசிரியரின் அபிமானத்தைப் பெற்றாயிற்று. மாலையில் அவர்கள் சந்தித்துப் பயிற்சித் திட்டத்தைச் சேர்ந்து வகுத்தார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்

0

கலையரசன்

பெல்ஜிய‌ நாட்டில் உள்ள‌ தீவிர‌ வ‌ல‌துசாரி இன‌வாத‌க் க‌ட்சியான “பிலாம்ஸ் பெலாங்” (Vlaams Belang) இளைஞ‌ர் அணியின‌ர் ஆயுத‌ங்க‌ளுட‌ன் காட்சிய‌ளிக்கும் ப‌ட‌ம் ஒன்றை டிவிட்டரில் காணக் கிடைத்தது. அவ‌ர்க‌ள் 2019 -ம் ஆண்டு கோடை விடுமுறைக் கால‌த்தில், போல‌ந்தில் கிராக‌வ் ந‌க‌ருக்கு அருகில் “அர‌சிய‌ல் வ‌குப்புக‌ள்” என்ற‌ பெய‌ரில் இராணுவ‌ப் ப‌யிற்சியில் ஈடுப‌ட்ட நேர‌ம் இந்த‌ப் ப‌ட‌ம் எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

இதனால் தமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற எந்த பயமும் இல்லாமல், இராணுவப் பயிற்சி பெரும் ப‌ட‌த்தையும், யூடியூப் வீடியோவையும் அவ‌ர்க‌ளே வெளியிட்டுள்ள‌ன‌ர். ஐரோப்பாவில் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் வ‌ள‌ர்ந்து வ‌ரும் இந்த‌ நேர‌த்தில் அர‌சு இது குறித்து க‌வ‌ன‌ம் எடுக்க‌வில்லை. அத்துட‌ன், இந்த‌ த‌க‌வல் எந்த‌வொரு ஊட‌க‌த்திலும் வெளிவராது என்ப‌தை நிச்ச‌ய‌மாக‌க் கூற‌லாம்.

பெல்ஜியத்தில் பிலாம்ஸ் பெலாங் கட்சி தன்னை ஒரு மிதவாத பொப்புலிஸ்ட் கட்சியாக காட்டிக் கொள்கிறது. அது வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான இனவாதம், இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் கட்சி. அது டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிலாம்ஸ் என்று அழைப்பார்கள்) பேசும் மாநிலத்தில் மட்டும் இயங்கும் பிரதேசக் கட்சி. அந்தக் கட்சி சார்பில் பல உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர்.

Vlaams Belang
“பிலாம்ஸ் பெலாங்” வலதுசாரி குழுவினர் ஆயுதபயிற்சி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தீவிர‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் இன்றைய‌ உல‌கில் மிக‌ப் பெரும் அச்சுறுத்த‌லாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ருவ‌தாக‌ ப‌ல‌ புள்ளிவிப‌ர‌ங்க‌ளை மேற்கோள் காட்டி நெத‌ர்லாந்து தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ள‌து. (NOS, 18-08-2019) இதுவ‌ரை மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்துள்ள‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ள் யாவும் அங்கு வாழும் வெளிநாட்டு குடியேறிக‌ளை இல‌க்கு வைத்து ந‌ட‌ந்துள்ள‌ன‌.

பிரைவிக் (Brevik), டார‌ன்ட் (Tarrant) ஆகியோர் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளின் நாய‌க‌ர்க‌ளாக‌, வ‌ழிகாட்டிக‌ளாக‌ போற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். நோர்வேயை சேர்ந்த‌ பிரைவிக் ஒஸ்லோ ந‌க‌ரில் ந‌ட‌த்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லில் 90 பேர் ப‌லியாக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ன். அதே மாதிரி நியூசிலாந்து கிரைஸ்ட் சேர்ச்சில் 50 பேர் ப‌லியாக‌ கார‌ண‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லை ந‌ட‌த்திய‌வ‌ன் டார‌ன்ட்.

அண்மையில் ந‌ட‌ந்த‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்திய‌ வெள்ளையின‌ இளைஞ‌ர்க‌ள் மேற்ப‌டி ந‌ப‌ர்க‌ளை த‌ம‌து நாய‌க‌ர்க‌ளாக‌ பிர‌க‌ட‌ன‌ப் ப‌டுத்தி இருந்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ நாடுக‌ளை நோக்கிய‌ பெரும‌ள‌விலான‌ அக‌திக‌ளின் வ‌ருகை வல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஊக்குவிக்கும் கார‌ணியாக‌ இருந்துள்ள‌து. குறிப்பாக‌ ஜேர்ம‌னியில் சிறிதும் பெரிதுமாக‌ ப‌ல‌ அக‌தி முகாம் எரிப்புச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

பிரான்ஸ், ஜேர்ம‌னி, பிரித்தானியா, இத்தாலி ஆகிய‌ மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளை சேர்ந்த‌ அரச உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ல‌துசாரிப் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளின் அச்சுறுத்த‌ல் அதிக‌ரித்து வ‌ருவ‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கை விடுத்துள்ள‌ன‌.

படிக்க:
நியூசிலாந்து : மேற்குலகில் முசுலீம்கள் மீதான பயங்கரவாதம் | ஒரு தொகுப்பு !
♦ அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !

ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌ப்ப‌ப் ப‌டும் வ‌த‌ந்திக‌ளும் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளினால் உண்மை என‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஆசிய‌, ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் இருந்து பெரும‌ள‌வில் ப‌டையெடுக்கும் அக‌திக‌ள், குடியேறிக‌ள் கார‌ண‌மாக‌, ஐரோப்பிய நாடுகளில் பூர்வீக‌ வெள்ளையின‌த்த‌வ‌ரின் ச‌ன‌த்தொகை குறைந்து வ‌ருவ‌தாக‌ வ‌த‌ந்திக‌ள் ப‌ர‌ப்ப‌ப் ப‌டுகின்ற‌ன‌.

நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சேர்ச் நகரில், ஒரு வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதி மசூதியில் தொழுது கொண்டிருந்த ஐம்பது பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் உலகை உலுக்கி இருந்தது. 15 மார்ச் 2019 ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் ஒரு வெள்ளையின‌, நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி என்ப‌தால் விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் அவ‌னை “துப்பாக்கிதாரி” என்றும், ச‌ம்ப‌வ‌த்தை “துப்பாக்கிச் சூடு” என்று ம‌ட்டுமே குறிப்பிட்டன. த‌மிழ் அடிமை ஊட‌க‌ங்க‌ளும் “ம‌ர்ம‌ ந‌ப‌ர்” என்று அறிவித்தன. விரைவில் அவ‌னை ஒரு ம‌ன‌ நோயாளி என்று சொன்னாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ எதுவுமில்லை.

NZ-shooting
நியூசிலாந்தில் மசுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்.

அதே நேர‌ம், எங்காவ‌து ஒரு முஸ்லிம் க‌த்தியால் குத்தினால் கூட‌, அதை ஒரு மிக‌ப் பெரிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லாக‌ சித்த‌ரித்து ஊட‌க‌ங்க‌ள் அல‌றிக் கொண்டிருக்கும். அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ பெரும‌ள‌வு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்களுக்கு காரண‌ம் ந‌வ‌- நாஸிச‌, தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் என்று புள்ளிவிப‌ர‌ம் தெரிவிக்கிற‌து. இருப்பினும் இந்த‌ விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ண்டுகொள்வ‌தில்லை.

நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில் உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.

அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.

அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த “துப்பாக்கிதாரி”(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: “அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்…” குற்றம் சாட்டி இருந்தான். சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.

அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற “முஸ்லிம்” நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ-நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய / ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது. அதே மாதிரி, மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை “முஸ்லிம்கள்” என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.

அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு “முஸ்லிம்” தான்! இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான். “இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்” என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.

படிக்க:
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது. அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.

எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது. இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.

அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ – நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா? இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.

Neo-Nazisவலதுசாரி நிறவெறிப் பயங்கரவாதம் குறித்து ஊடகங்கள் அக்கறை காட்டாது விடினும், ஐரோப்பிய அரசுகளும், அவற்றின் புலனாய்வுத்துறையினரும் இது குறித்து கவனம் எடுத்து கண்காணித்து வருகின்றனர். உள்நாட்டு பூர்வீக ஐரோப்பிய சமூகத்தினர் மத்தியில் உருவாகும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தமது இலக்கை அடைவதற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

வளர்ந்து வரும் வலதுசாரிப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மேற்கைரோப்பிய அரசுகள் மென் போக்கை பின்பற்றி வருகின்றன அதற்குக் காரணம் இந்நாடுகளில் இனப்பிரச்சினையை உண்டாக்கி இனங்களை மோத விடுவதற்கு வலதுசாரி பயங்கரவாதம் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது.

அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஜேர்ம‌னியில் இய‌ங்கிய‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மான‌ “National Socialist Underground” (NSU) ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் ஒன்று பார்க்க‌க் கிடைத்த‌து. அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.

முன்னாள் சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில், ந‌வ‌ நாஸிக‌ள் அல்ல‌து தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளே அர‌ச‌ எதிர்ப்பு ஆர்ப்பாட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌ ஜேர்ம‌னி ஒன்று சேர்ந்த‌து. இத‌னை முன்னாள் ந‌வ‌ நாஸி த‌ன‌து வாக்குமூல‌த்தில் குறிப்பிடுகின்றான்.

♦ முன்ன‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌ன் இர‌க‌சிய‌ப் போலீஸ் த‌ம் மீது க‌டுமையான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌தாக‌வும், ஒன்றிணைந்த‌ ஜேர்ம‌னியிலும் தாம் வ‌ர‌வேற்க‌ப் ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்டான்.

♦ இட‌துசாரிக‌ளுக்கு எதிரான‌ வெறுப்புண‌ர்வு கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் ந‌வ‌ நாஸி அமைப்புக‌ளில் சேருகின்ற‌ன‌ர். தெருக்க‌ளில் காணும் இட‌துசாரிக‌ளை அடிப்ப‌தென்றால் அல்வா சாப்பிடுவ‌து மாதிரி.

♦ ஜேர்ம‌ன் நாஸிக‌ள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொட‌ர்புக‌ளை ஏற்ப‌டுத்திக் கொண்டுள்ளன‌ர். – ந‌வ‌ நாஸிக‌ள் இர‌க‌சிய‌மாக‌ இராணுவ‌ப் ப‌யிற்சி எடுக்கிறார்க‌ள். ஆயுத‌ங்க‌ளை சேக‌ரிக்கிறார்க‌ள்.

♦ எதிர்கால‌த்தில் இன‌ப் பிர‌ச்சினை தீவிர‌ம‌டைந்து இன‌ங்க‌ளுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்கும் என்று ந‌ம்புகிறார்க‌ள்.

♦ இன்றைய‌ ஜேர்ம‌ன் அர‌சு, நாஸிக‌ளை க‌ண்காணிப்ப‌த‌ற்காக‌ த‌ன‌து ஆட்க‌ளை ஊடுருவ‌ வைத்துள்ள‌து.

♦ த‌லைம‌றைவாக‌ இய‌ங்கும் ந‌வ‌ நாஸிக‌ளில் ஏராள‌மான‌ அர‌ச‌ உளவாளிக‌ள் உள்ள‌ன‌ர். இருப்பினும், அர‌சுக்கு வேலை செய்த‌ அதே ந‌வ‌ நாஸிக‌ள் தான், த‌லைம‌றைவாக‌ இய‌ங்கிய‌ NSU உறுப்பின‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் த‌சாப்த‌ கால‌மாக‌ அர‌சுக்கு தெரிய‌வில்லையாம்! (ந‌ம்ப‌ முடியுமா?)

♦ NSU உறுப்பின‌ர்க‌ள் மூன்று பேர் ம‌ட்டுமே என்று சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. இருவ‌ர் வ‌ங்கிக் கொள்ளை முய‌ற்சியில் பொலிசால் வேட்டையாட‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் ம‌ர்ம‌மான‌ முறையில் இற‌ந்து கிட‌ந்த‌ன‌ர். மூன்றாவ‌து ந‌ப‌ரான‌ பெண் உறுப்பின‌ர் ச‌ர‌ண‌டைந்தார். – அந்த‌ மூவ‌ரைத் த‌விர‌ வேறு யாராவ‌து இருக்கிறார்க‌ளா? யாருக்கும் தெரியாது. அது தொட‌ர்பான‌ விசார‌ணை முடிவுக‌ள் இன்ன‌மும் மூடும‌ந்திர‌மாக‌ உள்ள‌ன‌.

♦ NSU ப‌ல‌ த‌ட‌வைக‌ள் வங்கிக‌ளை கொள்ளைய‌டித்தும் பிடிப‌ட‌வில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, நாடு முழுவ‌தும் ப‌த்துப் பேர‌ள‌வில் கொலை செய்துள்ள‌து. கொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒரு பொலிஸ் பெண்ம‌ணியை த‌விர‌ ஏனையோர் வெளிநாட்டு குடியேறிக‌ள். துருக்கிய‌ர்க‌ள், ஒரு கிரேக்க‌ர். கொலை ச‌ம்ப‌ந்த‌மாக‌ துப்புத் துல‌க்கிய‌ பொலிஸ் “கிரிமின‌ல்க‌ளின் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள்” என்று அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌து.

♦ ஒரு த‌ட‌வை கொலை ந‌ட‌ந்த‌ இட‌த்தில், “த‌ற்செய‌லாக‌” இருந்த‌ அர‌ச‌ உள‌வாளியான‌ ந‌வ‌ நாஸியிட‌ம் சாட்சிய‌ம் எடுக்க‌வில்லை. விசேட‌ விசார‌ணைக் குழு இந்த‌ விட‌ய‌த்தை வெளிக் கொண்டு வ‌ந்த‌து. இருப்பினும், அந்த‌ நேர‌டி சாட்சி விசாரிக்க‌ப் ப‌டாத‌து ம‌ட்டும‌ல்ல‌, வேறு ப‌த‌வி கொடுத்து இட‌ம் மாற்ற‌ப் ப‌ட்டார்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !

அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… ஆர்.எஸ்.எஸ். புளுகு !

காஷ்மீர் நிலைமை குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாகவும், தற்போது அது நீக்கப்பட்டுவிட்டதால், அம்மாநில மக்களின் வாழ்க்கை மேம்படப் போகிறது” என்றும் நீட்டி முழக்கினார். மோடி மட்டுமல்ல, சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருமே இப்படிப்பட்டதொரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள். இந்த வாதமுறையின் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஏதோ பீகாரைவிட வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதைப் போன்ற கருத்தை நாட்டின் பிற பகுதி மக்களிடம் உருவாக்கிவிட முயன்று வருகிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்து அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களே அம்மாநிலம் பல்வேறு சமூக நலன் சார்ந்த  அம்சங்களிலும், மனித வளர்ச்சிக் குறியீட்டிலும் (Human Development Index) பா.ஜ.க. ஆண்டுவரும் பசு வளைய மாநிலங்களைவிட, ஏன் குஜராத்தை விடவும் முன்னேறிய நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

மனித வளர்ச்சி குறியீடு என்பது மூன்று முக்கிய காரணிகளான கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

இம்மதிப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் 1990-களில் இருந்தே ஓரளவு முன்னேறிய நிலையில்தான் இருந்து வருகிறது. 25 மாநிலங்களைக் கொண்ட மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் காஷ்மீர் 11-ஆவது இடத்தில் உள்ளது. 370 போன்ற “தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான” சட்ட உரிமைகள் இல்லாத இராஸ்தான், ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களெல்லாம், ஜம்மு காஷ்மீரை ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. உ.பி., பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களை விடுங்கள், மோடியின் சாதுர்யத்தால் அசாத்திய வளர்ச்சியடைந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்கூட காஷ்மீருக்குக் கீழே 14-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

மனித வளர்ச்சி குறியீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதி செய்யப்படும் சமூகப் பாதுகாப்பு முக்கியமானதொரு அம்சமாகும். பேறுகால சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் விகிதமும், பச்சிளம் குழந்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணமடையும் விகிதமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2005-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தேசிய குடும்ப சுகாதார அறிக்கை. அவ்வறிக்கைகளின்படி, 2005-இல் 1000 குழந்தைகளுக்கு 38 ஆக இருந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 2015-இல் 32 ஆகக் குறைந்திருக்கிறது.

இக்குறியீட்டில் மோடி-அமித் ஷாவின் குஜராத் மாநிலம் இன்றுவரையிலும் ஜம்மு காஷ்மீரைவிடப் பின்தங்கியேயுள்ளது. அங்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணவிகிதம் 2005-இல் 43; 2015-இல் 34.

பெண் கல்வியை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில் பத்தாம் வகுப்பிற்கு மேலே படிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆறு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 2005-06-இல் 57.5 சதவீதமாக இருந்தது. அது 2015-16-இல் 65.5% ஆக உயர்ந்த்திருக்கிறது. இச்சதவீதம் பா.ஜ.க. ஆளும் உ.பி. மாநிலத்தைவிட அதிகமாகும்.

பெண் சிசு பாதுகாப்பிலும்கூட ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட ஒருபடி மேலேதான் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 2005-06-இல் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 902 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2015-16 இல் 921 ஆக அதிகரித்திருக்கிறது. அதேசமயம், குஜராத்தில் கடந்த பத்து வருட காலத்திலும் பெண் பிறப்பு விகிதம் 902 என்ற எண்ணிக்கையிலேயே தேங்கி நிற்கிறது. இத்தேக்க நிலைக்குக் காரணம், தந்தை வழி ஆணாதிக்க இந்துத்துவா மனப்பான்மை என்பதை யாரும் மறுக்கவியலாது.

இளவயது பெண் திருமணங்களின் சதவீதம் ஜம்மு காஷ்மீரில்  8.7 ஆகச் சரிந்துவிட்ட நிலையில், குஜராத்தில் அதனைவிட மூன்று மடங்கு அதிகமாக 24.9 சதவீதமாக உள்ளது.

திட்ட கமிசன் 2009-10-இல் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஜம்மு காஷ்மீரில் கிராமப்புற வறுமை 8.1 சதவீதமாகும். இச்சதவீதம் தேசிய சராசரியைவிட (33.8%) மிகமிகக் குறைவாகும். இவ்விடயத்தில் ஜம்மு காஷ்மீரையும் குஜராத்தையும் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தென்படுகிறது. திட்ட கமிசன் புள்ளிவிவரப்படி 2009-10-இல் குஜராத்தில் கிராமப்புற வறுமை 26.7 சதவீதமாகும். மோடி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் கழித்து வந்த புள்ளிவிவரம் இது. தனது ஏழாண்டு கால ஆட்சியில் கிராமப்புற வறுமையைக் குறைக்க முடியாத மோடி, அம்மாநிலத்தை வளர்ச்சியின் உச்சத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறுவது எத்தகைய மோசடி!

ஜம்மு காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமென்றாலும், அவ்வெண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவானது எனத் தேசியக் கணக்காய்வு மையம் 2017-18-இல் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கணக்கெடுப்பில் ஜம்மு காஷ்மீரைவிடப் பத்து மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதேசமயம், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தரமான வேலைவாய்ப்பு குறியீடு கணக்கீட்டின்படி தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட முன்னேறிய நிலையில் இருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு அப்பால், ஊரகச் சாலைக் கட்டமைவு, மருத்துவர்களின் எண்ணிக்கை, சராசரி ஆயுட்காலம் ஆகிய சமூக மதிப்பீடுகளிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சாதித்திருப்பதை அரசின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

படிக்க:
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !

இவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஜம்மு காஷ்மீரின் சமூகப் பொருளாதார நிலை குறித்துப் பச்சைப் பொய்யை உண்மையைப் போலப் பிரச்சாரம் செய்துவருகிறது, ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களும், கட்சிகளும் செய்த பங்களிப்பை மறைத்துவிட்டு, திராவிட அரசியலால்தான் தமிழகம் பின்தங்கிச் சீரழிந்துவிட்டதைப் போல பிலாக்கணம் பாடிவரும் பார்ப்பன வக்கிர மனோபாவம்தான் 370-ஆவது அரசியல் சட்டப்பிரிவு குறித்தும் அவதூறு செய்துவருகிறது.

இங்கு நாம் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களெல்லாம் காஷ்மீர் மக்களின் வாழ்வியல் வளர்ச்சி குறித்துக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வளர்ச்சியாகக் கருத முடியாதென்றால், மோடியும் ஆர்.எஸ்.எஸ்.-ம் ஜம்மு காஷ்மீரில் யாருக்கு வளர்ச்சி இல்லை என்று அழுகிறார்கள்?

மகேஷ்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்

Mudasir-Ahmad

செப்டம்பர் 6 ஆம் தேதி, இரவு 11 மணியளவில், 24 வயதுடைய கல்லூரி மாணவர் முதாசிர் அகமது தர், பாரமுல்லா மாவட்டம், குவாஜா பாக்கில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கி 51 நாட்கள் முடிவடைந்துள்ள போதிலும், அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பதால், முதாசிர் தனது குடும்பத்தினரை சீக்கிரம் படுக்கைக்குப் போகுமாறு கூறியுள்ளார்.

குடும்பத்தினர் படுக்கச் சென்ற சிறிது நேரத்திலேயே அவர்களது வீட்டிற்கு முன்பு வாகனங்கள் வரிசையாக வந்து நின்றது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தட்டியதால், வீட்டில் மூத்தவரான முகமது ரம்ஸாம் தர் (60) கதவினைத் திறந்துப் பார்த்தார். ஆயுதத்துடன் போலீசு சீரூடை அணிந்திருந்த சிலர் அவர்களது வீட்டிற்கு முன் வரிசையாக நின்றிருந்தனர்.

“வீட்டில் உள்ளஆண்கள் அனைவரும் வெளியில் வாருங்கள்” என்று உத்தரவிட்டான் சீரூடை அணிந்திருந்த ஒருவன். வயதானவர் உட்பட ஐந்து ஆண்கள் அவர்கள் முன் நின்றனர்.

“அவர்கள் அதட்டும் தொனியில் எங்களது அடையாள அட்டைகளை எடுத்துவரச் சொன்னார்கள். அவர்கள் சிறப்பு செயல்பாட்டுக் குழு, ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து வந்துள்ளார்கள் என்று உடனே கண்டு கொண்டோம். எங்களது அடையாள அட்டைகளைப் பார்த்தவுடன், என் தம்பியையும், உறவினர் ஒருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினர்” என்கிறார் முதாசிர்.

“எதற்கு ஏறவேண்டும்?” என பெண்கள் கேட்டதும் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது போலீசு. அதோடு நிறுத்தாமல், முதியவர் முகமது ரம்ஸாம் தர் தலையில் ஓங்கி பலமாக அடித்தத்தில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். “அடித்ததில் என் தந்தைக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியது. நாங்கள் கதறினோம். ஆனால் அவர்கள் மற்றவர்களையும் தாக்க ஆரம்பித்தார்கள். நான் என் தந்தையைக் காப்பாற்ற விரைந்தபோது, அவர்கள் (காவல்துறையினர்) என்னை நோக்கி பெல்லட் குண்டுகளால் சுட்டனர்” என்கிற முதாசிர் தற்போது ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

முதாசிர் அருகே அவரது சகோதரி மெக்மூதா அக்தர் (31) அமர்ந்திருந்தார். அவர், “போலீஸ் படைகளின் செயல்கள் எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்றுவிடும் விதமாக இருந்தது. என் தந்தைக்கு 11 தையல்கள் போடும் அளவிற்கு அவர்கள் மிக மோசமாக தாக்கியுள்ளனர். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என்றார்.

“பெல்லட் குண்டுகளால் சுட்டபின் அவர்கள் எனது சகோதரன் முதாசிரை சந்துக்குள் இழுத்து சென்று இரக்கமின்றித் தாக்கினர். முதாசிரை விட்டுவிடும்படி நாங்கள் கெஞ்சினோம். ஆனால் அவர்களின் காதுகளுக்கு அவை கேட்கவில்லை” என்கிற மெக்மூதா, அவர்களின் மிருகத்தனமாக தாக்குதலில் இருந்து தானும் தப்பவில்லை என்கிறார்.

Mudasir-Ahmad
பெல்லட் குண்டு தாக்குதலால் மோசமாக காயமடைந்துள்ள முசாதிர்.

முதாசிர் உடம்பில் பல காயங்கள் இருந்தது. “பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளதால் பல குண்டுகளை மருத்தவரால் அகற்ற முடியவில்லை. இருதயப் பகுதியில் குண்டுகள் துளைத்துள்ளது” என்கிறார் மெக்மூதா.

முதாசிருடைய குடும்பத்தினரும், பக்கத்து வீட்டுக்காரர்களும் போலீஸ் படையின் தாக்குதலில் இருந்து முதாசிரை மீட்கப் போராடினர். ஆனால் போலீசார் அவர்களையும் தாக்கியுள்ளனர்.

“போலீஸ்காரர்கள் எங்களது வீட்டிற்கு வந்து எங்களை அழைத்தபோது, இந்த இரவு நேரத்தில் பெண்களையும், குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டு வர முடியாது. ஆனால் காலை வந்துவிடுவோம் என்று நாங்கள் உறுதியாகக் கூறினோம். ஆனால் அதன்பிறகுதான் அவர்கள் எங்களை மிருகத்தனமாகத் தாக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் ஓட்டுநரான 30 வயது இளைஞர் ஜாவேத் அகமது.

ஜாவேத் அகமதுவின் மனைவி ஷுகுஃப்தா ஜன், படைகளின் தாக்குதலில் இருந்து தனது கணவரை மீட்க விரைந்தபோது, அவரை நோக்கி சுட்டுள்ளனர்.

படிக்க:
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
♦ காஷ்மீர் :  இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை

“பெல்லட் குண்டுகளால் என்னை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள். நான் அலறினேன். சூடான இரும்புக் கம்பிகள் எனது உடலை துளைத்ததுப் போல் உணருகிறேன்” என்கிற ஷுகுஃப்தாவிற்கு, ஆகில் ஜாவேத் என்ற 18 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார்.

“எனது உடலில் கடுமையான வலி உள்ளது. ஆனால், என் மகனுக்கு பால் கொடுக்கமுடியவில்லை என்பதே உடல் வலியைவிட கொடுமையான வலி. ஒரு தாயால்தான் இந்த வலியை உணரமுடியும்” என்கிறார் ஷுகுஃப்தா.

மேலும் அவர், “என் மகன் என்னை எதிர்ப் பார்த்துக் கொண்டிருப்பான். நான் இறந்துவிட்டால் அவனை யார் கவனித்துக் கொள்வது?” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியவர், “போலீஸ்காரர்கள் அப்பாவி மக்களைத்தான் பெல்லட் குண்டுகளால் தாக்குகின்றனர்; சித்திரவதை செய்கின்றனர்; வீட்டிற்குள் புகுந்து துன்புறுத்துகின்றனர். அவர்களது கைகளில் எப்பொழுதும் துப்பாக்கிகள் இருக்கின்றன. ஆகையால் அவர்கள் எங்கள்மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்” என்றார் அவர்.

இது குறித்து முதாசிர் பக்கத்து வீட்டுக்காரர்கள், “பெல்லட், கண்ணீர் புகைக் குண்டுகளால் முதாசிர் குடும்பத்தினர்மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு, படையினர் வீட்டிற்குள் புகுந்து சன்னல் கண்ணாடிகளையும், வெளியில் நிறுத்தி வைத்திருந்த கால்டாக்சியையும் உடைத்தனர்”. அதைத் தடுக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒன்பது பேர் காயமடந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

“நாங்கள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்களது மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். அங்கு எங்களுக்கு நான்கு ஆம்புலன்சையும் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியில் செல்லும் வேளையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ்சார் வந்து தடுத்து நிறுத்தினர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் எங்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை” என்கிறார் அகமத்.

பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளதால் பல குண்டுகளை மருத்தவரால் அகற்ற முடியவில்லை. இருதயப் பகுதியில் குண்டுகள் துளைத்துள்ளது.

“பாரமுல்லா மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி போலீஸாரிடம், நாங்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும், எங்களை வெளியில் செல்லுவதற்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டார். வலியைத் தாங்கமுடியாமல் முதாசிர் துடிப்பதைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர், “நல்லா அனுபவியுங்கள்!” என்று ஏளனமாக சொன்னார்.

முதாசிர் குடும்பத்தினரைக் காப்பாற்றச் சென்ற இக்பால் லத்தீப் கானின் (28) இரண்டு கண்களிலும் பெல்லட் குண்டுகள் துளைத்துள்ளது. தச்சு வேலை செய்யும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

அவரது கண்களில் இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரது கண்களைத் தொடவும் பயந்தார்கள். “கண்ணீர் புகைக் குண்டினை அவர்கள் (போலீசார்) நேரடியாக என் தலையில் போட்டதுபோல் உணர்கிறேன். நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்” என்றார் கான், மெல்லிய குரலில்.

“அவரது கண்களில் ஆழமாகக் குண்டுகள் துளைத்துள்ளது. இரத்தம் நிற்காமல் அதிகமாக வெளியேறுவதால் எங்களால் எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் ஒரு அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளோம். இரண்டு கண்களிலும் குண்டுகள் துளைத்துள்ளதால், இக்பால் லத்தீப் கானின் கண் பார்வை சந்தேகத்திற்குறியதுதான்” என்று கண் மருத்துவர் கூறினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்திருக்கும் பெல்லட் குண்டுகளின் தாக்குதலை, சர்வதேச அமைப்புகள் கண்டித்து வருகிறது. இந்தப் பெல்லட் குண்டு தாக்குதலால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் தங்களது பார்வைகளை இழந்துள்ளனர். ஒரு இரவிலேயே காஷ்மீர் மக்களது வாழ்க்கை தலைகீழாக மாற்றப்படுகிறது.

படிக்க:
பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !
♦ தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !

பள்ளத்தாக்கில், துண்டிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, முதாசிர் குடும்பம் போன்று பொருளாதார ரீதியாகப் பலவீனமான குடும்பங்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.

கால் டாக்சியை நம்பிதான் முதாசிர் குடும்பம் இருக்கிறது. “தகவல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து ஒரு நயா பைசாவைக் கூட நான் சம்பாதிக்கவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமானதாக்குகிறது” என்கிற ஜாவேத் தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக பெரிதும் சிரமப்படுகிறார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு கான் மற்றும் தர் குடும்பத்தினர், இறுதித் தீர்வு போராட்டம்தான் என்று நம்புகின்றனர். “எத்தனை காலங்களுக்குதான் அவர்களுடைய மிருகத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் பொறுத்துக் கொள்ள முடியும்? காரணங்கள் ஏதுமின்றி நாங்கள் பாதிப்புக்குள்ளாகிறோம்” என்று கானை மருத்துவமனையில் சந்திக்க வந்த உறவினர் மன்சூர் அகமது கூறுகிறார்.

“இந்த நடவடிக்கைகளால் எப்படி அவர்களால் அமைதியை கொண்டுவர முடியும்? அவர்கள் எங்களைத் தவறான செயலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு அமைதியைக் கொண்டு வர விரும்பவில்லை. காஷ்மீரில் எப்போதும் அமைதியின்மையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் அக்மத்.


நன்றி : தி வயர்
தமிழாக்கம் : ஷர்மி 

பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ

போட்ட காசக் கூட எடுக்க முடியல … பத்துநாள் வித்தா இருபதுநாள் கீழ கொட்ட வேண்டிய நிலைமை வருது.

25 வருசமா பூ வியாபாரம் பன்றேன். இந்த பத்துவருசத்துலதான் பூ இவ்ளோ வீழ்ச்சியடைஞ்சிருக்கு. பண்டிகை காலங்கள்ல எவ்ளோனாலும் விலை கொடுத்து வாங்கிடுறாங்க. விநாயகர் சதுர்த்திக்கு சாமந்தி கிலோ 200 ரூபாய்க்கு வித்துச்சி. இன்னிக்கு பத்து ரூபாய்க்கு வாங்க ஆளில்லை. பூவை கீழே கொட்டிக்கிட்டு இருக்கோம். கீழ கொட்டினாலும் அள்ள ஆளில்லை. இதனால விவசாயிங்களுக்குத்தான் பிரச்சினை. ஏற்கெனவே நலிஞ்சி போயிருக்காங்க. இதனால திரும்ப விவசாயம் செய்யாம விட்டுருவாங்க. திரும்ப விலை ஏறும்.

தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. வாரம் ஐயாயிரம் நாலாயிரம் வீட்டுக்கு அனுப்பிடுவேன். புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான்.

சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் – கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!

பாருங்கள்! பகிருங்கள்!!


படிக்க:
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !

ருவநிலைக்கானப் போராட்டம்  இந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல வணிக உலகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் முன் எப்போதும் நிகழாதது இந்நிகழ்வு.

மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்து உலகத் தலைவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் உலகெங்கிலும் 2,600 -க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டம் பள்ளி மாணவர்களால் முன்னின்று நடத்தப்படுவது இந்தப் போராட்டத்தின் சிறப்பம்சமாகும். பதினாறு வயதே நிரம்பிய பெண்ணான சுவீடனின் கிரேட்டா துன்பெர்க் இந்த இயக்கத்தின் அடையாளக் குரலாக வெளிப்படுகிறார்.

Climate changeபருவநிலை விஞ்ஞானிகளால் 2017-ல் எழுதப்பட்ட “மனித குலத்திற்கு எச்சரிக்கை” என்பதன் பின்னணியில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மனிதன் தன்னுடைய செயல்கள் மூலம் எவ்வாறு பேரழிவு விளைவுகளை இக்கிரகத்திற்கு ஏற்படுத்துகிறான் என்பதை இந்த விஞ்ஞானிகள் இதில் சுருக்கமாகத் தெரிவித்து இருந்தனர். உலகத்தில் நிலவும் வெப்பநிலையில் ஏற்கனவே மனிதர்கள் ஒருசெண்டிகிரேட் அளவு வெப்பமயமாதலைத் தூண்டியுள்ளனர். கூடிய விரைவில் இது 2 செண்டிகிரேட் என்ற அளவிற்கு மேலே நிகழும்  இத்தகைய வெப்பநிலை அதிகரிப்பானது பனிப்பாறை உருகுவதற்கும், கடல் மட்டம் அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்று, இந்த கிரகத்தின் வெப்பமயமாதலில் ஒரு சுய சுழற்சிக்கு வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையே அச்சுறுத்துகின்றன.

புவி வெப்பமயமாதல், அறிவியியலின் படி மறுக்க முடியாத நிகழ்வு. அது உண்டாக்கும் பேரழிவுகளை தடுப்பதற்காக தான் ஒப்புக் கொண்ட நடவடிக்கைகளை பேரளவுக்கு கூட இந்த உலகச் சமூகம் செயல்படுத்துவதில்லை. சுதந்திர நாடுகளின் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் என்பது ஒரு அறிவியியல் நிகழ்வு என்பதை அங்கீகரிக்கப்பதில் தவறிவிட்டார். மேலும் புதைபடிவ எரிபொருட்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

அதிகளவு கீரின்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுவதை தடுப்பதற்காக, உலகின் புகைப்போக்கி என்றழைக்கப்படும் சீனா, தற்போது மூன்றாம் உலக நாடுகளில் நிலக்கரித் திட்டங்களுக்காக (மான்ஸ்ட்ரோ சிட்டி என்றழைக்கப்படும் சகிவால் மின் உற்பத்தி நிலையம்) தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

படிக்க:
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

உலக முதலாளித்துவத்துவத்தால் எரியூட்டப்படும் அமைப்பைத் தோலுரிக்காமல், பருவநிலை மாற்றம் பற்றி இனி விவாதிக்க முடியாது. உற்பத்தி பொருட்களை சரக்குகளாக மாற்றமடையச் செய்து, வளங்களை பணத்தின் அடிப்படையில் அளக்கும் போக்கே, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களைக் காட்டிலும் அச்சமூகத்தின் தனிச் சிறப்பாகும் இதன் நோக்கம் பொருட்களை உருவாக்குவதும், நீண்ட கால நீடித்த தன்மையோ இல்லை, சரக்குகளின் சுற்றோட்டத்தின் மூலமே, தனியார் இலாபங்களை உருவாக்குதலே ஆகும். முதலாளித்துவத்தின் தனித்தன்மையை அறிய வேண்டுமானால் அதன் வருகையான பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் உலகின் பொருள்சார் செல்வத்தின் பெரும்பகுதி தற்கால மற்றும் வருங்கால தலைமுறைகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்று இருந்தது.

climate_change_1முதலாளித்துவத்தின் வருகை என்பது மனித இயல்பில் பொறிக்கப்பட்ட ஒரு பரிணாம ரீதியான பாதை என்பதை விட, மனித வரலாற்றின் நீண்டகாலப் போக்கை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வாகும். முதலாளித்துவத்தின் எழுச்சிக்குப் பின் ஏற்பட்ட வன்முறை மற்றும் கொள்ளையடிக்கும் வரலாற்றை விவரிக்கும் மார்க்ஸ், எப்படி சமுதாய சொத்துரிமை மீதான தாக்குதல், சரக்கு உற்பத்தியின் அடிப்படையிலான ஒரு சமுதாயம் உருவாவதற்கு மையமாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறார். இது மனித இயல்பு அல்ல. உலக முதலாளித்துவத்திற்கான நிலைமைகளை அமைத்த மில்லியன் கணக்கான மக்களை, பட்டினிக்கும், இடப்பெயர்வுக்கும், வாழ வழியின்மைக்கும் ஆளாக்கியது.

முதலாளித்துவம் அதன் சுற்றுப்புறத்துடன் சமநிலையில் இருக்க முடியாத ஒரு விரிவாக்க அமைப்பு. முதலாளித்துவம் அது தன் இலாபத்தின் நிரந்தரத் தேடலுக்காக இயற்கை வளங்களை பிரித்தெடுப்பதற்க்கும், தன்னுடைய சரக்குகளை விற்பதற்கும்  புதிய சந்தைகளை அவசியமாக்குகிறது. பருவநிலை அரசியல் நிபுணரான ஜான் பெல்லாமி பாஸ்டர் இந்தப் போக்கை உற்பத்தியின் டிரெட்மில் என்றழைத்தார். இதில் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக டிரெட்மில் வேகமாக இயங்கினாலும் அதில் வேகமாக ஒட வேண்டும்.

சமூக மற்றும் சூழலியல் விளைவுகள் எதிர்மறையாக நிகழ்ந்தாலும், தன்னுடைய சரக்குகளுக்காக மேலும் மேலும் இயற்கை வளங்களை உற்பத்தி துறை மூலம் விழுங்குகிறது. நுகர்வு சாதனம் இல்லாமல் மனிதர்களை முழுமையற்றவர்களாக உணரச் செய்கிறது. அநேகமாக மனிதர்கள் நுகர்வு சாதனம் இல்லாமல் தேவையில்லை என்று கூறுவதற்கு 1.2 டிரில்லியின் டாலர் அளவில் விளம்பரத் தொழிற்துறை இயக்கப்படுகிறது. இந்த தீய சுழற்சி நமது சுற்றுப்புறத்தை மட்டும் விழுங்குவதோடு மட்டுமில்லாமல், பண்டங்களின் மூலம் ஒரு தனிநபரின் சமூக மதிப்பை அடையாளப்படுத்தி, மனிதர்களின் சமூக உறவுகளையும்  கூட புறநிலைப்படுத்துகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவம் தன் காலனிய வன்முறைகளின் மூலம் தன் தடையற்ற சந்தைக்கு, அந்நாடுகளின் இயற்கை வளங்களை திறக்கச் செய்ததன் மூலம் அந்நாடுகளின் வரலாற்றுப் பாதையை உடைத்தது. மிகையான கடன்கள் ஏழை நாடுகளை முதலாளித்துவத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. தன்னுடைய மிகச்சிறந்த படைப்பான “பூமராங் கடன்” என்ற ஆய்வில் சூசன் ஜார்ஜ் 1980-களில் இருந்து எவ்வாறு ஏழை நாடுகள், தங்களுடைய கடன்களை ஏற்றுமதி மூலமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதை விளக்கியிருப்பார். இந்நாடுகளில் பெரிய அளவில் தொழிற்துறை உற்பத்தி இல்லாமல் இருந்தால், அந்நாடுகள் தாங்கள் திரும்ப செலுத்த முடியாத பெரும் அளவு குவிந்த கடன் தொகைக்குப் பதிலாக தங்கள் இயற்கை வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உந்துதல், விவசாயத்தில் நீடித்த தன்மையில் அமைந்த நடைமுறைகளை ஒழித்து குறுகிய காலத்திற்குள் விரைவான இலாபத்திற்கான நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது.

Amazone Forest fireஉலகெங்கிலும் நடைபெற்று வருகின்ற காடுகளின் அழிப்பானது, மேற்கில் உள்ள சுரங்க நிறுவனங்கள், பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனங்கள் நுழைவுக்கே ஆகும். அமேசானின் சமீபத்திய தீ விபத்துகள், மேற்கத்திய நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்காக, மேய்ச்சல் நிலத்தை உருவாக்குவதற்காக நிலத்தை வெறுமையாக்கும் திட்டமிட்ட முயற்சியாகவேத் தெரிகிறது. இப்புவியின் நுரையீரல், அதற்கு வடக்கே வசிப்பவர்கள் ஹம்பர்கரை தடையின்றி உண்பதற்கு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இது சமூக பொறுப்பைவிட தனியார் இலாபங்களை எடை போடும் ஒரு அமைப்பின் பகுத்தறிவற்ற தன்மையை காட்டுகிறது.

விஞ்ஞான எச்சரிக்கைகள் இருந்தப் போதிலும், புதைபடிவ எரிபொருட்களை ஏன் நம்மால் வெளியேற்ற முடியவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பெரிய புதைபடிவ நிறுவனங்கள் இதில் பாரிய முதலிடுகள் செய்துள்ளன. மேலும் அந்நிறுவனங்களின் எதிர்கால இலாபங்களை உறுதிசெய்வதற்காக மேற்கத்திய அரசுகளின் ஆதரவைப் பெற்றுள்ளன. மூன்றாம் உலக நாடுகள், தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக, இயற்கை வளங்களில் முதலீடுகளைத் தேடுகின்றன. தங்களின் பொருளாதரத்தை மிகவும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் கொள்கை நடைமுறைகளுக்கும் திறக்கிறது. முதலாளித்துவம், மனிதகுலத்தை அதன் சொந்த சுய நிர்மாணமாக்கலில் பங்கு கொள்ள நிர்ப்பந்திக்கும் ஒரு தர்க்கத்திற்குள் பூட்டி வைத்திருக்கிறது.

படிக்க:
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

தனிப்பட்டநபர்களின்  வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம் என்றாலும், அவை அமைப்புமுறையான நெருக்கடியை எதிர்கொள்ள அவசியமான கூட்டு நடவடிக்கைக்கு பதிலாக இருக்க முடியாது என்பதையும் இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது, இன்று மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கக் கூடிய ஒரு துடிப்பான ஜனநாயகத்தை புத்துயிர் பெறுவதில் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவைரை பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவு குறுகிய பிரச்சினையாக நீண்டகாலமாக இருக்க முடியாது. இரண்டு மாதத்திற்கு முன்னர் தட்டாவைச் சேர்ந்த விவசாயிகள் கடல் மட்டம் உயர்வானது  தங்கள் நிலங்களை மூழ்கடித்ததற்கு எதிராக ஒரு நீண்ட பேரணியை நடத்தினர். கடந்த வாரம் நாங்கள் லாகூர் அருகேயுள்ள குலலன் வாலா மற்றும் கோட் ஆசாத் உல்லா ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம். அங்கேயுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள், குழந்தைகளின் எலும்புகளில் குறைபாடுகளைத் தோற்றுவிக்கின்றன. அக்கிராமத்தை மாசுபடுத்துவர்கள் யார் என்பதை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இருந்தபோதிலும் அவர்களை பொறுப்பாக்குவதற்கு இயலாமல் இருப்பதற்கு, அவர்கள் அதிக சக்திவாய்ந்தவர்களாக இருப்பதாக அக்கிராமவாசிகள் உணர்கிறார்கள். இப்பகுதிகள் தியாக மண்டலங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில் ஒரு சிலரின் செழிப்பான வாழ்க்கையை தக்கவைக்க உள்ளூர் மக்களின் வாழ்க்கை தியாகம் செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் சீர்குலைவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து, அப்பகுதியின் மக்களிடமிருந்து, செல்வந்தர்கள் தாங்கள் இச்சீர்குலைவில் இருந்து தப்பிக்க ஒரு சுற்றுச்சூழல் வளையத்தை – சுற்றுச்சூழல் இன ஒதுக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று ஐ.நா நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நிகழ்வு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அதை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அடிப்படை தர்க்கத்தை கேள்விக்குட்படுத்தாமல் நாம் அதை அர்த்தமுள்ளதாக விவாதிக்க முடியாது.

வேறுவிதமாகக்  கூறினால் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது என்பது ஒரு அருவமான செயல்முறையை கண்டிப்பது மட்டுமில்லாமல், நமது சூழலை நிர்ணயிக்கும் சமூக உறவுகளின் ஒதுக்குதல், ஆதிக்கம், சுரண்டல் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும் இருக்கிறது. செத்துப் போன முதலாளித்துவத்தின் சீர்குலைவான குழப்பத்திற்கு ஒரு புதிய சமூக அமைப்பு மட்டுமே நீடித்த தன்மையையும், திட்டமிடுதலையும் வழங்க முடியும்.

உலகம் முழுவதிலும் சுவர்கள் மற்றும் எல்லைகளை நிர்மாணிப்பதில் தீவிரப்படுத்தும் ஒரு பருவநிலை பேரழிவை நாம் காணப்போகிறோமா? அதற்கு மில்லியன் கணக்கான மக்களை இராணுவமயமாக்கி இச் சமூக கட்டுப்பாடுகளுக்கு அனுப்ப போகிறோமா? இல்லை உலகமெங்கிலும் உள்ள மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் நுகர்வு மற்றும் உற்பத்தி கட்டுப்பாட்டை கொண்டுவரும் மாற்று முறையை உருவாக்கப் போகிறோமா? இது நாம் ஒழுங்கமைக்கப்பட்டு மீண்டும் போராட வேண்டிய நேரம்.


தமிழாக்கம் : – பரணிதரன்
நன்றி : Monthly Review 

ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்

தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகளும் அடிவருடி ஊடகங்களும் “ஹவ்டி மோடி”யுடன் ஒரு நாள் என்று அங்கலாய்த்து பக்கம் பக்கமாய் எழுதியும் ஊதியும் தள்ளியது.

ட்ரம்போ பொழுது விடிந்ததும் “ஹவ்டி இம்ரான்கான்” என்று அடுத்த நகர்வை நோக்கிச் சென்றுவிட்டார். அடிமைகளுக்குள் சண்டைகள் வரலாம். ‘சமாதான’ புருஷர்களுக்கு அடிமைகள் மட்டும்தான் வேண்டும்.

அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று முழங்கிய ட்ரம்ப் இந்தியர்களை கடுமையான உழைப்பளிகள் என முழங்க காரணம் என்ன ?

***

trump-memes

***

அமெரிக்காவில் மோடி பேசும் போது தேசபக்தியில் திளைத்த முகங்களை மட்டுமே தொலைக்காட்சிகள் காண்பித்தன. இவர்களைக் காட்டவில்லை !

கருத்துப்படம் : வேலன்

படிக்க:
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
♦ ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்த டேவிட் ஹியூம் | பொருளாதாரம் கற்போம் – 36 

ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்த டேவிட் ஹியூம் | பொருளாதாரம் கற்போம் – 36

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 36

டேவிட் ஹியூம்

அ.அனிக்கின்

1776-ம் வருடத்தின் மார்ச், ஏப்ரல் மாதங்களின் போது ஹியூம் மரணப் படுக்கையிலிருந்தார், அது அவருக்குத் தெரியும் என்பதால் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை மிக வேகமாக எழுதி முடித்தார். அதன் பிறகும் நான்கு மாதங்கள் வரை அவர் உயிரோடிருந்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு, கால்நூற்றாண்டுக் காலம் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்த ஆடம் ஸ்மித் சுருக்கமான அறிமுகக் கடிதத்தோடு அவருடைய சுயசரிதையை வெளியிட்டார்.

அந்தத் தத்துவஞானியின் கடைசி மாதங்களை ஸ்மித் வர்ணித்திருந்தார். ஹியூம் மற்றவர்களுக்குக் கிடைக்காத மனஅமைதியோடும் அசாதாரணமான உறுதியோடும் மரணத்தை வரவேற்றார். அவர் உற்சாகமானவர், எல்லோருடனும் நன்கு பழகியவர்; நோயின் விளைவாக அவருடைய பருமனான உடல் எலும்புக்கூடாக மாறிவிட்ட போதிலும் அவர் கடைசிவரையிலும் இந்த குணங்களைக் கைக்கொண்டிருந்தார்.

ஸ்மித் எழுதிய அறிமுகக் கடிதம் அரசியல் பொருளாதாரத்தில் அசாதாரணமான பாத்திரத்தை வகித்தது . ஹியூம் ஒரு நாத்திகர் என்பது முன்பே அனைவருக்கும் தெரியும்; அவர் மரணத்தின் தறுவாயில் கூட கடவுளை ஏற்றுக் கொண்டு உண்மையான கிறிஸ்தவராக மரணமடையவில்லை என்பதை அது சந்தேகத்துக்கு இடமில்லாதபடி வெளியிட்டது. ஸ்மித்திடமும் இத்தகைய சமயப்பற்றில்லாத நிலை இருந்தது. திருச்சபை செத்துப் போய்விட்ட ஹியூமின் மீதும் உயிரோடிருந்த ஸ்மித் மீதும் சீறிப் பாய்ந்தது. அண்மையில் ஸ்மித் வெளியிட்டிருந்த நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை முதலில் கல்விச் சிறப்புடைய ஒரு சிறு குழுவினர் மட்டுமே கவனித்தார்கள்.

ஆனால் ஹியூம், ஸ்மித் ஆகியோர் பற்றிச் செய்யப்பட்ட, கண்டனம் அந்தப் புத்தகத்தின் மீது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஸ்மித் ஜாக்கிரதையாக நடந்து கொள்பவர், ஒதுங்கி வாழ்பவர். எனவே அந்தக் கண்டனம் அவருக்கு எதிர்பாராத மனக்கசப்பைக் கொடுத்தது. ஆனால் புத்தகத்திற்கு அடுத்தடுத்துப் பதிப்புகள் வெளிவந்தன. சுமாராகப் பத்து வருடங்களில் நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வேத புத்தகமாயிற்று.

david-hume
டேவிட் ஹியூம்

ஹியூம் இன்னொரு அர்த்தத்திலும் ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்தார் என்று கூறலாம். அவருடைய அற்புதமான சிறு கட்டுரைகள் – இவை பிரதானமாக 1752-ம் வருடத்தில் வெளிவந்தன – வாணிப ஊக்கக் கொள்கையினரோடு ஸ்மித்துக்கு முந்திய மூலச் சிறப்புடைய மரபினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட சில சாதனைகளைச் சுருக்கமாக எடுத்துரைத்தன. நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதில் இக்கட்டுரைகள் வகித்த பாத்திரம் முக்கியமானதாகும்.

டேவிட் ஹியூம் 1711-ம் வருடத்தில் எடின்பரோவில் உயர் குடியிலே பிறந்து பின்னர் ஏழையாகிவிட்ட ஒரு கனவானின் கடைசி மகனாகப் பிறந்தார். அவர் வாழ்க்கையில் பாடுபட்டு முன்னேற வேண்டியிருந்தது. அதற்கு அவர் தன்னுடைய அபாரமான எழுத்துத் திறமையைத்தான் நம்பினார். ஸ்காட்லாந்துக்காரர்களுடைய மரபு வழிப்பட்ட அருங்குணங்களான உழைப்பும் சிக்கனமும் அவரிடம் நிறைந்திருந்தன.

ஹியூம் தனக்கு இருபத்தெட்டு வயதாகும் பொழுது, தன்னுடைய முக்கியமான தத்துவஞான நூலாகிய மனித இயல்பைப் பற்றிய ஆராய்ச்சி என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதன் மூலமாகவே பிற்காலத்தில் அவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலத் தத்துவஞானிகளில் அதிகமான சிறப்புடைய சிலரில் ஒருவராகக் கருதப்பட்டார். அவருடைய தத்துவஞானம் பிற்காலத்தில் ”அறியொணாவாதம்” என்று அழைக்கப்பட்டது. லாக்கைப் போல அவரும் பருப்பொருள் சார்ந்த பொருள்களைப் பற்றிய மனிதனுடைய அறிவின் மிக முக்கியமான தோற்றுவாய் உணர்ச்சியே என்று வாதாடினார்; ஆனால் இந்த அந்நியப் பொருள்களை (அதாவது பருப்பொருளை) அடிப்படையில் அவற்றின் முழு நிறைவோடு அறியக் கூடியவை அல்ல என்று கருதினார்.

பொருள்முதல் வாதத்துக்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையில் எங்காவது ஒரு இடத்தைக் கண்டு பிடிப்பதற்கு அவர் முயன்றார்; ஆனால் உலகம் அறிய முடியாதது என்று வாதிட்ட காரணத்தால் அவர் தவிர்க்க முடியாத வகையில் கருத்துமுதல் வாதத்தை நோக்கிச் சென்றார். அவர் மதத்தைப் பற்றிச் செய்த விமரிசனம் பத்தாம் பசலித்தனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகித்தது. ஆனால் அவர் முரண்பாடற்ற நாத்திகவாதி அல்ல; அவருடைய தத்துவஞானத்தில் விஞ்ஞானத்தையும் மதத்தையும் “சமரசப்படுத்தக் கூடிய” இடைவெளியை விட்டிருந்தார்.

படிக்க:
இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !
♦ பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !

ஹியூம் எழுதிய புத்தகம் உடனே பிரபலமடையவில்லை. இதற்கு அந்தப் புத்தகத்தின் செறிவான தன்மையே காரணம் என்று அவர் கருதினார். எனவே அந்தக் கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறு கட்டுரைகளை எழுதினார். இதனோடு கூடுதலாக, சமூகத்தின் தத்துவத்தைப் பற்றியும் எழுதினார். அவருடைய ஆரம்ப வெற்றி அவர் எழுதிய அரசியல், பொருளாதாரப் புத்தகங்களின் மூலமாகக் கிடைத்தது; இங்கிலாந்தின் வரலாறு என்ற தலைப்பில் பல பகுதிகளைக் கொண்ட புத்தகத்தையும் எழுதினார்; இப்புத்தகம் அவருக்கு ஐரோப்பாவில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

வரலாற்றாசிரியர் என்ற முறையில் ஹியூம் டோரிகளை, நிலவுடைமையாளர்களுடைய கட்சியை ஆதரித்தார்; இந்தக் கட்சி பழமைவாத முதலாளி வர்க்கத்தினரின் ஆதரவைப் பெற்றிருந்தது. அவர் பண்பட்ட அறிவுஜீவி, “ஆன்மாவின் உயர் குடியினர்”. அவருக்கு “விக் கட்சியின் கீழ்மக்கள் கும்பலைப் பிடிக்க வில்லை” கடைக்காரர்களின் முரட்டுத்தனத்தையும் பரிசுத்த வாதிகளின் முட்டாள்தனத்தையும் வெறுத்தார்; லண்டனைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களை ”தேம்ஸ் நதிக் கரையிலிருக்கும் காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டார்.

1763 – 65ம் வருடங்களில் ஹியூம் பாரிஸ் நகரத்தில் இங்கிலாந்தின் தூதரகத்தில் செயலாளராகப் பணியாற்றினார். அங்கே கலை, இலக்கிய வட்டாரங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது; பிரான்சின் அறிவியக்கத்தைச் சேர்ந்த பல அறிஞர்களோடு அவர் நட்புக் கொண்டு பழகினார். பிறகு இங்கிலாந்தில் ஒரு தூதரகப் பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய கடைசி வருடங்களை எடின்பரோ நகரில் அறிவாளிகளும் இலக்கிய மேதைகளுமான நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கழித்தார்.

அவருடைய பொருளாதாரக் கட்டுரைகள் பல சுவாரசியமான காட்சிப் பதிவுகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, செலாவணியிலுள்ள பணத்தின் அளவு அதிகரிப்பதன் விளைவாக விலைகள் மேலே போகின்ற நிகழ்ச்சிப் போக்கில் கால இடைவெளிகள் இருப்பதை முதன் முதலாகச் சுட்டிக் காட்டியது அவர்தான் என்று தோன்றுகிறது, எல்லாப் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும்பொழுது “உழைப்பின் விலை”, அதாவது தொழிலாளர்களுக்குத் தரப்படுகின்ற கூலி மட்டும் கடைசியாகத்தான் அதிகரிக்கிறது என்பதை அவர் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார். காகிதப் பணம் பயன்படுத்தப்படும் பொழுது, பண வீக்கம் ஏற்படும் பொழுது நடைபெறுகின்ற சமூக பொருளாதார நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த முக்கியமான விதிகள் உதவி செய்கின்றன.

எல்லா நாடுகளுக்கிடையேயும் தங்கமும் வெள்ளியும் இயற்கையான வகையில் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றன ; கடைசியாகப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு நாட்டின் வர்த்தகத்திலும் ஏற்றுமதி, இறக்கும்தியின் சமஈடானது இயற்கையாகவே சமநிலையை நோக்கிச் செல்கிறது என்ற கருத்தை 18ம் நூற்றாண்டில் வேறு யாரையும் காட்டிலும் ஹியூம் வளர்த்துச் சென்றார். மூலச் சிறப்புடைய மொத்த மரபுக்குமே குறியடையாளமாக இருக்கின்ற ‘இயற்கைச் சமநிலை’ என்ற கருத்தை ஹியூம் தம்முடைய எழுத்துக்களில் வன்மையாக எடுத்துரைத்தார், வாணிப ஊக்கக் கொள்கையினர் விலையுயர்ந்த உலோகங்களைச் செயற்கையாகக் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கூறியதை அவர் விமரிசனம் செய்ததற்கு இது அடிப்படையாகும். வர்த்தக சம ஈடுகள் (அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் வழங்கீடுகளின் சரியீடுகள்) சம நிலையை நோக்கி இயற்கையாக முன்னேறுகின்றன என்ற கருதுகோளை ரிக்கார்டோ மேலும் வளர்த்துச் சென்றார். அவரைப் பற்றி எழுதவிருக்கும் அத்தியாயத்தில் இதைப் பற்றிக் கூறுவோம்.

ஹியூம் சரியான கருத்துக்களையே கூறினார்; எனினும் அவை பணம் பற்றிய அவரது பொருள் விளக்கத்தோடு இணைந்திருக்கின்றன; ஆனால் அது உழைப்பளவை மதிப்புத் தத்துவத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஹியூம் பிரெஞ்சுக் காரர்களைப் போல மதிப்புத் தத்துவம் இல்லாமலேயே சமாளித்துவிட்டார். அவருடைய தத்துவமான அறியொணாவாதம், ஐயுறவுக் கோட்பாட்டின் விளைவாக இது ஏற்பட்டிருக்கக் கூடும்.

அரசியல் பொருளாதாரத்தில், பிரதானமாக பணத்தின் அளவுத் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என்ற முறையில் தான் அவர் சிறந்து விளங்குகிறார். ஒரே மாதிரியான கருத்துக்களை நோக்கி ஹியூமும் மற்றவர்களும் விலைப் புரட்சி என்று சொல்லப்படுகின்ற வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். 16 முதல் 18ம் நூற்றாண்டு வரையிலும் தங்கமும் வெள்ளியும் அதிகமான அளவில் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த பிறகு, அங்கே பண்ட விலைகளின் மட்டம் படிப்படியாக அதிகரித்தது. அங்கே விலைகள் சராசரியாக மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்தன என்று ஹியூம் மதிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து வெளிப்படையாகத் தோன்றிய ஒரு முடிவுக்கு ஹியூம் வந்தார், அதிகமான பணம் (உண்மையான உலோகப் பணம்!) இருந்ததனால் விலைகள் அதிகரித்தன என்பதே அந்த முடிவு.

படிக்க:
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !
♦ ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

ஆனால் தோற்றங்கள் உண்மையல்ல. ஏனென்றால் இந்த நிகழ்வுப் போக்கு முழுவதையுமே வேறு விதத்தில் விளக்கக்கூடும், அவ்வாறு விளக்குவதும் அவசியமே. இந்த விலையுயர்ந்த உலோகங்கள் அதிகமாக அகப்படுகின்ற இடங்களைக் கண்டு பிடித்ததன் விளைவாக இவற்றை வெட்டியெடுக்கும் உழைப்புச் செலவு குறைந்தது; அதன் காரணமாக அவற்றின் மதிப்பும் கீழே இறங்கியது. பண்டங்களோடு ஒப்பிடும் பொழுது பணத்தின் மதிப்பு குறைந்து விட்டபடியால், பண்டங்களின் விலைகள் அதிகரித்தன.

செலாவணி நிகழ்வின் போது பண்டங்களின் தொகுதி பணத்தின் தொகுதியை எதிரிடும் பொழுது பணத்தின் ”மதிப்பு” (அல்லது அதிக எளிமையாகச் சொல்வதென்றால் பண்ட விலைகள்) நிறுவப்படும்; செலாவணியிலிருக்கின்ற உண்மையான உலோகப் பணத்தின் அளவுக்கு இதில் சம்பந்தமில்லை என்று ஹியூம் கருதினார்.

உண்மையில் பணம், பண்டங்கள் ஆகிய இரண்டுமே, சமூகத்துக்கு அவசியமான உழைப்பின் செலவினால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளோடு தான் செலாவணிக்குள் போகின்றன. ஆகவே பணப் பரிமாற்றத்தின் குறிப்பிட்ட வேகத்தில், நிர்ணயம் செய்யப்பட்ட அளவு பணம் தான் செலாவணியிலிருக்க முடியும். மிகையாக இருக்கும் பணம் அந்நிய நாடுகளைச் சென்றடையும் அல்லது பதுக்கி வைக்கப்படும்.

காகிதப் பணம் வேறு விஷயமாகும். அது ஒருபோதும் செலாவணியை விட்டுப்போகாது. காகிதப் பணத்தின் ஒவ்வொரு அலகின் வாங்கும் சக்தியும் (மற்ற காரணிகளோடு சேர்ந்து) உண்மையிலேயே அவற்றின் அளவைப் பொறுத்திருக்கிறது. செலாவணிக்கு அவசியமான உண்மையான உலோகப் பணத்தின் அளவைக் காட்டிலும் கூடுதலான காகிதப் பணம் வெளியிடப்படுமானால், அவை தம்முடைய மதிப்பை இழந்துவிடும். இது பண வீக்கம் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். ஹியூம் தங்கத்தையும் வெள்ளியையும் ஆராய்கின்ற பொழுது (உண்மையில் வர்ணித்தது) காகிதப் பணச் செலாவணி நிகழ்வையே.

அரசியல் பொருளாதாரத்தில் முக்கியமான பாத்திரத்தை இன்னும் வகிக்கின்ற பிரச்சினைகளின் மீது கவனத்தைத் திருப்பியதே ஹியூமின் சேவையாகும். செலாவணிக்கு அவசியமான பணத்தின் அளவை நிர்ணயிப்பது எப்படி? பணத்தின் அளவு விலைகளை எப்படி பாதிக்கிறது? பணம் அதன் மதிப்பை இழக்கின்ற பொழுது விலையின் உருவாக்கத்தின் தனிவகையான கூறுகள் யாவை? இவையே அந்தப் பிரச்சினைகளாகும்.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!

”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி”  என்கிறார்  நிதி ஆயோக்கின் துணைத் தலைவர். ”மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம் என்றும்” முதலாளித்துவ பொருளியல் வல்லுநர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமின்றிக் கிராமப்புற –  நகர்ப்புற ஏழைகள் பயன்படுத்தும் மிகவும் அடிப்படையான நுகர் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் லீவர், டாபர் போன்ற நிறுவனங்களும் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்கின்றன.

பார்லே,  பிரிட்டானியா நிறுவனங்களின் 3, 5 ரூபாய்  பிஸ்கெட்டு பாக்கெட்டுகளின் விற்பனையே வீழ்ச்சியடைந்திருப்பது கிராமப்புற வறுமையின் கோரநிலையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால், விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சந்திக்கும் நெருக்கடியைப் பேசுவாரில்லை.  பன்னாட்டு, தரகு முதலாளிகளின் பிடியில் இருக்கும் ஆட்டோமொபைல்,  ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்பொருள் தொழில்களின் நெருக்கடிதான் அரசு மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெறுகிறது.

பொருளாதாரம் ஆண்டுக்கு 5% வளர்கிறது என்பது உண்மையல்ல. (சுமார் 3.5% தான் இருக்கும் என்பது முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் மதிப்பீடு) முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை. ஏனென்றால் 94% மக்களுக்கு வேலை கொடுத்து, 45% உற்பத்தியை அளிக்கின்ற விவசாயம்  உள்ளிட்ட அமைப்பு சாராத தொழில்களை, மேற்சொன்ன வளர்ச்சிவீதம்  குறித்த புள்ளிவிவரம் கணக்கில் கொள்ளவே இல்லை. ரயில்வே, போக்குவரத்து, தொழில்துறை, வங்கி, இன்சூரன்சு போன்ற துறைகளை மட்டும் கணக்கில் கொண்டு கூறப்படும் இந்த வளர்ச்சி வீதம் உண்மையல்ல என்றும், கடந்த பல ஆண்டுகளாகவே கிராமப்புற நுகர்வின் வளர்ச்சி என்பது பூஜ்ஜியமாக தான் இருந்து வருகிறது” என்றும் கூறுகிறார் பிரபல பொருளாதார அறிஞர் பேரா.அருண்குமார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதத்தில் பாகிஸ்தானை விடப் பின்தங்கிய நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வந்த ஒரே பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி.

♦♦♦

நிலைமை இவ்வாறு இருக்க,  செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி,   ஐந்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை  3  இலிருந்து    5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தப் போகிறேன், நாடு முழுவதும் 100 சுற்றுலா மையங்களை உருவாக்கப் போகிறேன்” என்று கூசாமல் சவடால் அடிக்கிறார்.  நாட்டு மக்கள்  ஒவ்வொருவரும்  ஆண்டுக்கு 15 சுற்றுலா மையங்களுக்காவது உல்லாசப்பயணம் போக உறுதி ஏற்கவேண்டும் என்று  மூன்று ரூபாய் ரொட்டி வாங்கமுடியாத இந்தியர்களுக்கு  அறைகூவல் விடுக்கிறார்.

தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலர் கே.டி.ராகவன், மூத்த பத்திரிகையாளர்கள் மாலன், கோலாகல சீனிவாசன் உள்ளிட்ட ”பொருளாதார மேதைகளுடன்” விவாதிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தவிடு தின்னும் ராசாவின் முறம் பிடிக்கும் மந்திரியான நிர்மலா சீதாராமன்,  எந்த நெருக்கடியும் இல்லை என்று ஆணவமாகச் சமாளித்து பார்த்தார்.  ரிசர்வ் வங்கி நான்குமுறை வட்டி வீதத்தைக் குறைத்துப் பார்த்தும் முதலீடுகள் வரவில்லை. வெளியேறின. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு முதலீடுகள் வீழ்ச்சியடைந்தன. பட்ஜெட் தில்லுமுல்லுகளை மறைப்பதற்கு ப.சிதம்பரம் கைது என்பன போன்ற திசைதிருப்பல்கள் அம்பலமாகின.

பொருளாதார நெருக்கடி குறித்து  ஆளும்  வர்க்கமே  கூவத் தொடங்கிவிட்டது. வேறு வழியின்றிச் சில சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.  அவை  ரொட்டி வாங்கமுடியாத இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான சலுகைகள் அல்ல. பட்ஜெட்டில் போடப்பட்ட சூப்பர் ரிச் வரி நீக்கம், கருப்பு பண முதலைகளுக்கு ஏஞ்செல் வரி ரத்து, சி.எஸ்.ஆர். மீறல் குற்றம் என்ற விதி நீக்கம், பொதுத்துறை வங்கிகள் மூலம் தாராளக் கடன் வழங்க ஏதுவாக 70,000 கோடி மறுமூலதன உதவி, கார்ப்பரேட் கடனுக்கான வட்டி குறைப்பு, அரசு இலாகாக்கள் புதிய கார்களை வாங்குதல் … என அனைத்துமே பன்னாட்டு நிதிமூலதனச் சூதாடிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள்.

வரி வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, ரிசர்வ் வங்கியிலிருந்து 1.73 இலட்சம் கோடி ரூபாயை எடுக்க வேண்டிய நிலையில் அரசு இருக்க, ஏற்றுமதியாளர்களுக்கு 50,000 கோடி வரிச்சலுகை வழங்கியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். பெருநகரங்களில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி பிளாட்டுகள் சுமார் 7 இலட்சத்துக்கு மேல் வாங்குவார் இல்லாமல் கிடக்கும் நிலையில், கட்டி முடிக்காத கட்டிடங்களை முடிப்பதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு 10,000 கோடி வழங்கியிருப்பதுடன், அவர்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கிக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருக்கிறார். அரசின் அறிவிப்புகள் எதுவும் பொருளாதாரத்தை மீட்கப் போவதில்லை என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். கரடியே காறித்துப்பி விட்டாற்போல, ஆட்டோ மொபைல் நெருக்கடிக்கு ஒலா, உபரைக் காரணம் சொன்ன அம்மையாருக்கு மாருதி நிறுவனமே மறுப்பு வெளியிட்டு விட்டது.

♦♦♦

நீண்ட பொருளாதார மந்தத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறோம். பண மதிப்பழிப்பு, தவறாக அமல்படுத்தப்பட்ட  ஜி.எஸ்.டி. ஆகியவை சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் அழித்து விட்டன. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று பெருமை பேசும் மோடி அரசு, விவசாயிகளுக்கு நியாய விலை கொடுக்காமல்   50% மக்களை வறுமையில் தள்ளியதன் வாயிலாகத்தான் அதைச் சாதித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார் மன்மோகன்சிங்.

மன்மோகன் சிங் கூறும் இந்தக் காரணங்களைப் பல வல்லுநர்களும் ஏறத்தாழ வழிமொழிகிறார்கள். இவை மட்டுமின்றி, கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன்களால் முடங்கிப்போன வங்கிகள், ஐ.எல்.எஃப்.எஸ். இன் மோசடிகள் தோற்றுவித்த திவால் நிலை காரணமாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைகளில் ஏற்பட்ட முடக்கம் போன்றவையும் இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன என்பது உண்மையே.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தவிர்த்திருந்தால், ஜி.எஸ்.டி. முறையாக அமல்படுத்தியிருந்தால், இந்த நெருக்கடியிலிருந்து தப்பியிருக்க முடியுமா என்பதுதான் நாம் விடை தேடவேண்டிய கேள்வி.

பணமதிப்பழிப்பு என்பது முன்யோசனையற்ற நடவடிக்கை அல்ல. விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் வணிகம் போன்ற பணப்பொருளாதாரத்தில் இயங்குகின்ற, அமைப்புசாரா தொழில்களை வங்கிப் பொருளாதாரத்துக்குள் இழுத்து வருவதற்கான நடவடிக்கையே அது. எண்ணற்ற தொழில்களை அழிவுக்குத் தள்ளும் என்று தெரிந்தும், வரி வலையை அகலப்படுத்தும் நோக்கத்துக்காகவும், முறைசாராப் பொருளாதாரம் என்பதே இல்லாமல் மொத்தப் பொருளாதாரத்தையும் சர்வதேச நிதிமூலதனத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே பணமதிப்பழிப்பு.  ஜி.எஸ்.டி.யின் நோக்கமும் அதுதான்.

மோடி அரசின் மேற்சொன்ன நடவடிக்கைகள் மக்களின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள் தள்ளுவதில் பெரும்பங்காற்றின என்பது உண்மையே. எனினும், இவற்றைத் தவிர்த்திருந்தால் நெருக்கடியே வந்திருக்காது என்பது உண்மையல்ல. இன்று ஏற்பட்டிருக்கும் வேண்டல் (demand) சுருக்கம் அல்லது மக்களின் வாங்கும் சக்தியின்மை என்பது அடிப்படையில் புதிய தாராளவாதக் கொள்கை தோற்றுவித்திருக்கும் விளைவு.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு என்ற அறிக்கையை கவுன்சில் ஃபார் சோசியல் டெவலப்மென்ட் என்ற அமைப்பு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது.  2000 ஆண்டுகளில் சமூக ஏற்றத்தாழ்வு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது.  2015 ஆண்டில் மக்கட்தொகையின் மேல் தட்டில் இருக்கும் 1 விழுக்காடு கோடீசுவரர்கள் நாட்டின் செல்வத்தில் 22% வைத்திருந்தனர். அது 2018 58.4% ஆக அதிகரித்து விட்டது என்று கூறுகிறது அவ்வறிக்கை.

1990 புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்தப்பட்ட போது, செல்வம் முதலில் மேல்தட்டுப் பிரிவினருக்குத்தான் கிடைக்கும்; – அதன் பின் மெல்ல மெல்லக் கீழிறங்கி ஏழைகளுக்கும் கிடைக்கும் என்றும் மன்மோகன் முதலான பலரும் விளக்கமளித்தனர். ஆனால், செல்வம் கீழிருந்து மேலே செல்வதுதான் முதலாளித்துவ சுரண்டலின் விதி என்பதை மேற்சொன்ன புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன.

2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி வீதம் இப்போதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருந்தது. இருப்பினும் அது மக்களுக்கு வேலைவாய்ப்பையோ வருவாயையோ அளிக்கவில்லை. மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலை என்று பொய் வாக்குறுதி அளித்து பதவியைக் கைப்பற்றினார் மோடி. ஸ்கில் இந்தியா,  ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா,  மேக் இன் இந்தியா என்பன போன்ற மோடியின் புதுப்புது பஞ்ச் டயலாக்குகள்தான் மக்களுக்குக் கிடைத்ததேயொழிய, வேலை கிடைக்கவில்லை.

மேக் இன் இந்தியா என்று மோடி கூறியபோது, உலகப்பொருளாதாரம் தேக்கத்தை சந்தித்து வருவதால், ஏற்றுமதிக்கான வாய்ப்பே கிடையாது, மேக் ஃபார் இந்தியா (இந்திய சந்தைக்காக உற்பத்தி செய்வது) ஒன்றுதான் தீர்வு” என்றும் ரகுராம்ராஜன்  கூறினார். எதார்த்த நிலையை மறுக்க முடியாமல், ஒரு முதலாளித்துவ பொருளாதாரவாதியிடமிருந்தே வந்த கருத்து இது என்பது மட்டுமல்ல, புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்விக்கும் அவரது கூற்று ஒரு சான்று.

இன்று கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு, விவசாய விளைபொருட்களின் விலையைக் குறைத்து விவசாயிகளைப் பட்டினி போட்டதுதான் காரணம் என்று மோடி அரசை இப்போது குற்றம் சாட்டுகிறார் மன்மோகன்சிங். விவசாயிகளின் ரத்தம் குடிப்பதென்பது புதிய தாராளவாதக் கொள்கை கூறும் வழிமுறைதான். அதனை ஈவிரக்கமின்றி மோடி அமல்படுத்துகிறார். விவசாய உள்ளீடு பொருட்களுக்கு மானியம் கூடாது, விளைபொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கூடாது, – விலையைச் சந்தை தீர்மானிக்க விட்டுவிடவேண்டும், அரசுக் கொள்முதல் கூடாது, விவசாய விளைபொருட்களுக்கு ஏற்றுமதி  இறக்குமதி கட்டுப்பாடுகள் கூடாது என்பன போன்ற உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை கடந்த 30 ஆண்டுகளாக எல்லா கட்சி அரசுகளும் அமல்படுத்தியதன் விளைவுதான் இன்று நாம் காணும் விவசாயத்தின் அழிவு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தைத் தலைமுழுகிவிட்டு, விவசாயம், சிறு – நடுத்தரத் தொழில்களை ஆதாரமாக கொண்ட சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்காத வரையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியோ அல்லது மக்கள் எழுச்சி மூலம் நிறுவப்படும் மாற்று அதிகாரமோதான் இந்தத் திசையில் பொருளாதாரத்தைக் கொண்டு செல்ல இயலும்.

கிராமப்புற வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக அங்கிருந்து வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து தெருவோரங்களில் வசித்துவரும் குடும்பங்கள். (கோப்புப் படம்)

அத்தகையதொரு மாற்றுப்பாதையை மக்கள் சிந்திக்கவே விடாமல் தடுக்க, புதிய தாராளவாதக் கொள்கைக்கு மனித முகம் அணிவிக்கும் முயற்சிதான் நூறுநாள் வேலைத்திட்டம். பரம ஏழைகளான 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6000 ரூபாய் வழங்குவதாக சென்ற தேர்தலுக்கு காங்கிரசு அளித்த வாக்குறுதியும் சரி, விவசாயிகளுக்கு மோடி அறிவித்திருக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாயும் சரி, மரணப்படுக்கையில் கிடப்பவனுக்கு ஊற்றப்படும் உயிர்த்தண்ணீர் தானே தவிர, எழுந்து நடமாடச் செய்யும் நடவடிக்கைகள் அல்ல. இந்தத் திட்டங்கள் இவர்களது சொந்தச் சரக்குகளும் அல்ல.

விவசாயத்தின் அழிவு, நான்காவது தொழில்நுட்பப் புரட்சி மற்றும் ஆட்டோமேசன் காரணமாக உலகின் பெரும்பகுதி மக்களைத் தேவையற்றவர்களாக கழித்துக் கட்டும் திசையில் முதலாளித்துவ உற்பத்தி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை தோற்றுவிக்கும் சமூகக் கொந்தளிப்பையும் பேரழிவையும் சமாளிப்பதற்கும், தனியார்மய கொள்கைகளை அமல்படுத்தும்போது வரும் மக்களின் எதிர்ப்புகளைத் தணிப்பதற்கும், அனைவருக்குமான அடிப்படை வருவாய் என்று (Universal Basic Income) மாதந்தோறும் ஒரு தொகையை வழங்கிவிட்டு, மற்றெல்லா மானியங்களையும் நிறுத்தி விடலாம் என்பது அரசுகளுக்கு ஐ.எம்.எப். கூறியிருக்கும் யோசனை.

ஆகவே, விவசாயிகளைக் காவு கொடுத்துத்தான் மோடி அரசு பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று மன்மோகன் சிங் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. இதே கொள்கையைத் தனது அரசு பின்பற்றியதன் விளைவுதான் வரலாறுகாணாத விவசாயிகளின் தற்கொலைகள் என்பதை மட்டும் அவர் கூறவில்லை.

♦♦♦

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தங்கம் விலை, அரசு ஊழியர் ஊதியம் ஆகியவற்றோடு ஒப்பிட்டுத் தங்கள் விளைபொருட்களின் விலை ஏறாத அநீதி குறித்து விவசாயிகள் கதறுவதைப் பலரும் கேட்டிருப்போம். பெட்ரோல் முதல் எல்லா விலைகளும் விண்ணில் பறந்தாலும், விளைபொருளின் விலையைக் குறைத்து கிராமப்புறத்தில் பண வாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம்தான் மொத்தப் பொருளாதாரத்தின் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது.

”விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை நிர்ணயம் செய்!” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

இதன் முதன்மையான நோக்கம் பன்னாட்டு நிதிமூலதனச் சூதாடிகளைத் திருப்திப்படுத்துவதாகும். உள்நாட்டு சந்தையை சார்ந்திராமல், அந்நிய மூலதனத்தையும் அந்நியச்செலாவணி இருப்பையும் அச்சாக கொண்டு சுழலும் இந்தியப் பொருளாதாரத்தின் கடவுளர்கள் அவர்கள்தான். பணவீக்கம் அவர்களது முதலீட்டின் உண்மை மதிப்பை வீழ்த்தும். அவர்கள் வெளியேறிவிடுவார்கள்.

அது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரம் எனப்படுவது 10% மட்டுமே உள்ள நடுத்தர, உயர்நடுத்தர நுகர்வோரும் அவர்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் கார்ப்பரேட்டுகளும்தான். இவர்களுக்கு அஞ்சித்தான் அஞ்சாத சிங்கம் மோடி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகளைப் பலி கொடுக்கிறார்.

பொருளாதார மந்தத்திலிருந்து விடுபடுவதற்கு பற்றாக்குறை பட்ஜெட் போட்டு, உள் கட்டுமானத் திட்டங்களை அரசே நிறைவேற்றினால், வேலைவாய்ப்பு பெருகி மக்களின் வாங்கும் சக்தி கூடி மந்தநிலை விலகும் என்று சில வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், கஜானா காலி. வரி வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்டத்தான் 1.73 இலட்சம் கோடியை ரிசர்வ் வங்கியி லிருந்து சூறையாடியிருக்கிறது மோடி அரசு.

பற்றாக்குறை பட்ஜெட் போட்டு திட்டங்களை அரசே நிறைவேற்றலாம். ஆனால், பற்றாக்குறை பட்ஜெட் போடக்கூடாது என்ற சர்வதேச நிதிமூலதனத்தின் விதியை அமல்படுத்த நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (FR BMA) என்றொரு சட்டத்தையே இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்காகக் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சிறுதொழில் மற்றும் வணிகத்திற்குப் பாதகமாக இருப்பதைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

மேற்சொன்ன விதியை மீறினால் சர்வதேசத் தரநிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் தரத்தை குறைக்கும். பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவார்கள். அதனால்தான் மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் எதுவும் மக்கள் கையில் காசைக் கொடுக்காமல், நிதிமூலதனச் சூதாடிகளுக்கு வாரி வழங்குபவையாக இருக்கின்றன.

ஆட்டோமொபைல் தொழிலிலும் சரி, நுகர்பொருள் உற்பத்தித்துறையிலும் சரி முதலாளிகளுடைய உற்பத்திப் பொருளின் அடக்கவிலையில் தொழிலாளர்களின் ஊதியம் என்பது அதிகபட்சம் 4% தான். தற்போதைய விற்பனை வீழ்ச்சியின் சுமையைத் தொழிலாளிகள் தலையில் வைத்துவிட்டு, தங்களது இலாபத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்கின்றனர். வேலையிழந்த தொழிலாளிகளுக்கு நிவாரணம் தருவதற்குப் பதிலாக, முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது அரசு. இந்தத் தலைகீழ் தர்க்கம் அரசின் எல்லா நிவாரண நடவடிக்கைகளிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்.

♦♦♦

த்தனை சலுகைகள் அளிக்கப்பட்ட பின்னரும் முதலீடுகள் வெளியேறுகின்றன. காரணம், இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது இந்தியாவுக்கு மட்டுமான நெருக்கடி அல்ல. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சுழற்சி முறையில் வழமையாக  வரும் நெருக்கடியுமல்ல. மீளமுடியாத உலக முதலாளித்துவக் கட்டமைப்பு நெருக்கடி.

2008 தொடங்கிய இந்த நெருக்கடி எவ்வித மீட்சியையும் காணவில்லை. சப் பிரைம் நெருக்கடியின் போது ஜெர்மனி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை நெருக்கடி உலகு தழுவியதாக இருக்கும் என்று பல வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

அதனால்தான் டாலரின் தாயகமான அமெரிக்க அரசின் நீண்டகாலப் பத்திரங்களை நோக்கி பன்னாட்டு முதலீடுகள் செல்கின்றன. வட்டி குறைவு என்றபோதிலும் அவற்றில் முதலீடுகள் அதிகரிப்பது (inversion of the yield curve) நீண்ட பொருளாதார மந்தம் வரவிருப்பதற்கான முன்னறிவிப்பு என்கிறார் சி.பி.சந்திரசேகர் (Frontline, sep. 13, 2019)

இங்கே மக்களிடம் நாம் காணும் வாங்கும் சக்தியின்மை ஒரு உலகுதழுவிய பிரச்சினை. உலகமயமாக்கம் காரணமாகத் தொழில்களும் சேவைகளும் மலிவான உழைப்பைத் தேடி ஆசிய நாடுகளுக்கு நகர்ந்து விட்டதால், மேலை நாடுகளிலும் ஏற்றத்தாழ்வும் வாங்கும் சக்தியின்மையும் அதிகரித்து, வேண்டல் இல்லாத காரணத்தால் பொருளாதாரங்கள் தேங்கி நிற்கின்றன. வீட்டு மனைகளில் மதிப்பைச் செயற்கையாக ஊதித் தனது தேக்கத்திலிருந்து தப்பித்துக் கொண்ட அமெரிக்கா,  குப்பை பத்திரங்களைப் பிற நாட்டினர் தலையில் கட்டுவதன் மூலம் 2008 நெருக்கடியை உலகமயமாக்கியது.

இப்போது குமிழிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பே இல்லை. வட்டியே வேண்டாம், பணத்தைப் பிடி என்றாலும், வீட்டுக்கடன், கார் கடன் வாங்க ஆளில்லை. டென்மார்க்கில் 100 ரூபாய் கடன் வாங்கி 90 ரூபாய் திருப்பினால் போதும் என்று வங்கிகள் கையைப்பிடித்து இழுத்தாலும் வாடிக்கையாளர்கள் கையை உருவிக்கொண்டு ஓடுகிறார்கள்.

இந்நெருக்கடியிலிருந்து முதலாளி வர்க்கம் எப்படித்தான் மீள்வது? தனது நெருக்கடியை சீனாவின் மீது தள்ளிவிடுவதற்குத்தான் பொருளாதார ரீதியில் காப்புவாதத்தையும் அரசியல் ரீதியில் தேசவெறியையும் தூண்டுகிறார் டிரம்ப். இதுவும் பிரெக்சிட்டும் உலகமயமாக்கலின் தோல்விக்கு சான்றுகள்.

மேலை நாடுகளில் அகதிகள் எதிர்ப்பு, நிறவெறி பாசிசக் கட்சிகள், இங்கே பார்ப்பன பாசிஸ்டுகள் ஆகியோரின் வளர்ச்சி வரவிருக்கும் நெருக்கடியை முன்னறிவிக்கின்றன.

ஏகாதிபத்தியங்களும் தரகு முதலாளிகளும்தான் எதிரிகள் என்று மக்கள் அடையாளம் கண்டுவிடாமல் மறைப்பதற்கு, முஸ்லீம்கள், அகதிகள், ஆசியர்கள் என்று பொய்யான எதிரிகளை நோக்கி மக்களின் கோபத்தைத் திசை திருப்புவதும்,  கொடிய வரி விதிப்புகள், வேலை நீக்கங்கள், உரிமை பறிப்புகள், வாழ்வாதாரப் பறிப்புகள் போன்ற நடவடிக்கைகளை பாசிசக் கொடுங்கரம் கொண்டு மக்கள் மீது திணிப்பதும்தான் ஆளும் வர்க்கத்தின் முன் இருக்கின்ற வாய்ப்புகள்.

சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி, – தனிநபர் சுவீகரிப்பு என்ற முரண்பாடு செல்வத்தை ஒரு முனையில் குவித்துப் பெரும்பான்மை மக்களை ஏதிலிகளாக்கியிருக்கிறது. மூலதனத்தின் பசிக்குத் தீனி போட மக்களிடம் எதுவும் இல்லை – உயிரைத் தவிர. அந்த உயிரைத்தான் பலியாக கேட்கிறது மூலதனம். வேலையின்மையாக, பட்டினிச் சாவாக, மதவெறி, –  சாதிவெறிப் படுகொலையாக, போராக!

படிக்க:
மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்
ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !

ஒரு ஆலையில் திட்டமிட்ட உற்பத்தி, அந்தத் துறையில் திட்டமற்ற அராஜகம் என்ற முரண்பாடு காரணமாக இலட்சக்கணக்கான வாகனங்களும் நுகர் பொருட்களும் வாங்குவாரின்றிக் குவிந்து கிடக்கின்றன. அதிகமாக உற்பத்தி செய்த தொழிலாளிக்கு வேலை போனது. அதிகம் விளைவித்த விவசாயி பட்டினி கிடக்கிறான்.

இலாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதற்கு, சோசலிசம் (புதிய ஜனநாயகம்) தவிர வேறு தீர்வு இல்லை. இந்தக் கண்ணோட்டத்துடன், நெருக்கடியின் சுமையை மக்களின் மீது தள்ளிவிடும் மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.

அஜித்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ?

”மார்க்சியம், தகர்ந்து விட்டது; இனி அதற்கு எதிர்காலமே இல்லை”, ”மார்க்சியம், இன்றைய நவீன கால கட்டத்திற்குப் பொருந்தாது” எனும் பிரகடனங்கள் நம்மைச் செவிடாக்கி வருகின்றன. சரி, மார்க்சியம் வேண்டாம்; மாற்று என்ன என்றால் இறுக்கமான மௌனம்தான் பதிலாக வருகிறது.

”மார்க்சியம் வேண்டவே வேண்டாம்” என உள்ளூர ஆசைப்படுபவர்கள்தான் இந்தத் தற்காலப் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.

தேக்கம், தற்காலிகமானது; வளர்ச்சி, நிரந்தரமானது எனும் அடிப்படையில் தன் தளைகளை அறுத்தெரிந்து விட்டு, மார்க்சியம் இப்பொழுது வீரியத்துடன் எழுந்து நிற்கிறது. உலகெங்கும் மார்க்சியத்தின்பால் புதிய ஈர்ப்பும் கரிசனமும் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது. அந்தப் பின்னணியில் தோழர் தியாகுவின் ”மார்க்சியம் அனா ஆவண்ணா” இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

மார்க்சிய மூலவர்கள் கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வரலாறும், மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களும், மார்க்சியத்தின் எதிர்காலங்குறித்த விவாதக்குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.

மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

… ” உலகில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளவரை – வர்க்க ஒடுக்குமுறையானாலும், தேசிய ஒடுக்குமுறையானாலும், சாதிய ஒடுக்குமுறையானாலும் – மார்க்சியம் என்ற விடுதலைப் பேராயுதத்துக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய மார்க்சியம் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல; கடைபிடிக்க வேண்டியதுமாகும். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ளாமல் கடைப்பிடிக்க முடியாது; கடைப் பிடிக்காமல் கற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், மார்க்சியத் தத்துவம் வறட்டுச் சூத்திரமல்ல. அது செயலுக்கு வழிகாட்டி” என்பது தோழர் தியாகுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உடன்பாடான கருத்துத்தான். (நூலின் அறிமுக உரையிலிருந்து)

நம் தமிழ்நாட்டில் கார்ல் மார்க்ஸ் ஓரளவு அறிமுகமாகி உள்ளார். ஆனால் மார்க்சின் பெயர் அறிமுகமாகியுள்ள அளவுக்கு மார்க்சியம் அறிமுகமாகவில்லை.

மார்க்சியத்தை, அதன் அடிக்கூறுகளை அறிந்து கொள்ள – அதன் ”அனா ஆவன்னா”வைக் கற்றுக் கொள்ள – ஆர்வமுள்ள தமிழர்களுக்காகவே இந்த குறுநூல்.

கார்ல் மார்க்சும், அவர் உயிர்த் தோழர் பிரெடெரிக் எங்கெல்சும்தான் மார்க்சியத்தின் மூலவர்கள். மார்க்சியத்தை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்னால் அந்த மூலவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

… தொடக்க காலத்தில் மார்க்ஸ் சமயப் பற்று உள்ளவராய் இருந்த போதிலும், மனித நேயச் சிந்தனைகள் அப்போதே அவரிடம் துளிர்விடத் தொடங்கிவிட்டன. 17 வயதுப் பள்ளி மாணவனாக இருந்த போது மார்க்ஸ் எழுதிய கட்டுரை ”வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஓர் இளைஞனின் சிந்தனைகள்” என்பதாகும். இந்தக் கட்டுரையில் இளம் மார்க்ஸ் கூறியதாவது:

”ஒரு மனிதன் தனக்காவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின், அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம். மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒருநாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது – வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும். அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்”

வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் சத்தற்க வாழ்வை வெறுத்து, மனித குல முன்னேற்றம் என்னும் மகத்தான இலட்சியத்திற்காக வாழும் முழுநிறைவான வாழ்வையே இளம் மார்க்ஸ் விரும்பிப் போற்றினார். (நூலிலிருந்து பக்.9-10)

மார்க்சியம் என்பது கார்ல் மார்க்சினுடைய கருத்துகளின் அமைப்பு ஆகும். கருத்துகளின் தொகுப்பு என்பது வேறு. அமைப்பு என்பது வேறு. மார்க்ஸ் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து புதிதாய்ப் பலவும் கண்டுபிடித்து தாம் கண்ட முடிவுகளைக் கோட்பாடுகளாக வகுத்துரைத்தார். இந்தக் கோட்பாடுகளுக்கிடையே ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தின் முரணற்ற மைய இழையைக் காண முடிகிறது. அவருடைய கருத்துக்களிடையே உயிரோட்டமான தொடர்பு உள்ளது. அவை ஓர் ஆரோக்கியமான உடலமைப்பின் வெவ்வேறு உறுப்புகளைப் போல் இசைந்து செயல்படுகின்றன. அதனால்தான் மார்க்சியத்தின் கருத்துக்கள் ஒரு கதம்பத் தொகுப்பு போலல்லாமல் உயிர்ப்பு மிக்க ஒழுங்கமைப்பாய் உருப்பெற்று மார்க்சியம் என்னும் விஞ்ஞானக் கருத்தமைப்பாக ஏற்றம் பெறுகின்றன.

மார்க்சியத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் :
பொருள்முதல்வாதம் : இது மார்க்சிய மெய்யியலைக் குறிப்பதாகும்.
மார்க்சியப் பொருளாதாரம் : இதற்கு அடிப்படையாகத் திகழ்வது உபரி – மதிப்புத் தத்துவம்
விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் (பொதுவுடமைத் தத்துவம்) : இது மார்க்சியத்தின் அரசியலைக் குறிப்பதாகும்.

திடீரென ஒருநாள் வானத்திலிருந்து வந்து குதித்ததல்ல மார்க்சியம். போதி மரத்தடியில் புத்தருக்கு ஒரு நாள் ஞானம் வந்ததாகச் சொல்வார்களே, அது போல் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு அவர்களின் மூளைகளிலிருந்து பீறிட்டு வந்ததல்ல மார்க்சியம்.

இயற்கை விஞ்ஞானத்திலும் சமூக விஞ்ஞானத்திலும் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தையெல்லாம் அடித்தளமாயக் கொண்டுதான் மார்க்சியம் எழுந்தது. மார்க்சியத்தின் மூன்று கூறுகளுக்கும் மூன்று தோற்றுவாய்கள் உண்டு.

மார்க்சிய மெய்யியலுக்கு ஜெர்மானிய மெய்யியலும், மார்க்சியப் பொருளாதார இயலுக்கு பிரித்தானிய அரசியல் பொருளாதாரமும், விஞ்ஞான சோசலிசத்துக்கு பிரெஞ்சு சோசலிசமும் தோற்றுவாய்களாகும். (நூலிலிருந்து பக்.18)

படிக்க:
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

மெய்யியல் அல்லது தத்துவ ஞானம் என்பது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மிகப் பொதுவான வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவியல் ஆகும். இதனை விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் அல்லது அறிவியல்களின் அறிவியல் என்று சொல்லலாம்.

இந்த உலகை – பிரபஞ்சத்தை – படைத்தவர் யார்? இது உண்மையிலேயே படைக்கப்பட்டதுதானா? இதில் காணப்படும் கோடானுகோடிப் பொருள்களுக்கென்று ஏதாவது பொதுத் தன்மை உண்டா? உண்டென்றால் அது என்ன? உலகம் இயங்குகிறதா? இயங்குகிறது என்றால் அந்த இயக்கத்திற்கு யார் அல்லது எது காரணம்? இப்படி நிறைய கேள்விகளை அன்றாடம் நாம் சந்திக்கிறோம். இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதுதான் மெய்யியல்.

எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூலாதரமான ஒரு கேள்வி உள்ளது. இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் மற்ற கேள்விகளுக்கெல்லாம் எளிதில் விடையளித்துவிடலாம். பொருள் முதலா? கருத்து முதலா? என்பதுதான் அந்த அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையைப் பொறுத்து, மெய்யியல் அன்று தொட்டு இன்றுவரை மொத்தத்தில் இரு முகாம்களாகப் பிரிந்து நிற்கிறது. சும்மா நிற்கவில்லை. சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது.

பொருள்தான் முதல் என்பது பொருள்முதல்வாதம். கருத்துதான் முதல் என்பது கருத்து முதல்வாதம். (நூலிலிருந்து பக்.20)

மனிதனின் தோற்றம் பற்றி இதுபோல் எத்தனையோ கட்டுக்கதைகள் உலவி வந்த காலத்தில் உண்மைச் சுடரேந்தி இருள் போக்க வந்தவர்தான் டார்வின் என்னும் இயற்கை விஞ்ஞானி. உயிரியல் வளர்ச்சியின் விதிகளை டார்வின் கண்டுரைத்தார், மனிதனின் தோற்றமென்னும் மர்மத்தை விண்டுரைத்தார். குரங்கு, மனிதக் குரங்காகி மனிதனான உண்மையைப் பரிணாம வளர்ச்சி விதிகளின் துணை கொண்டு நிரூபித்துக் காட்டினார்.

இயற்கை அறிவியலில் டார்வின் செய்ததை சமூக அறிவியலில் மார்க்ஸ் செய்தார். மனித வரலாற்றின் வளர்ச்சி விதிகளை அவர் கண்டுபிடித்தார். (நூலிலிருந்து பக்.29)

மார்க்சியத்தின் எதிர்காலம்:

மார்க்சியத்திற்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பிக் கொண்டிருக்கிற நேரத்தில் நாம் இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்தத் தத்துவமும் குறிப்பிட்ட காலத்திற்குரியதுதான். எல்லா காலத்துக்குமான முழு முதல் உண்மைகளும் முழுமுதல் தத்துவங்களும் கிடையாது என்ற மார்க்சியக் கோட்பாடு மார்க்சியத்துக்கும் பொருந்தும். மார்க்சியம் இந்த உலகத்திற்கு, மனித சமூகத்திற்குத் தேவையற்றுப் போகுமானால், அதற்குரிய காலம் முடிந்து அது காலாவதி ஆகிற நிலை வருமானால், அதுவேகூட மார்க்சியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். எப்படி என்றால் மார்க்சியம் அப்போது அதன் வரலாற்றுக் கடமையைச் செய்து முடித்திருக்கும்.

நூலாசிரியர் தோழர் தியாகு.

குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குரிய தேவையை நிறைவு செய்ய வந்த ஒரு தத்துவம் அந்தத் தேவையை நிறைவு செய்து முடித்த பிறகு, ஒரு தத்துவம் என்ற அளவில் மடிந்து போகும். அதன் ஆய்வு முறைகள், அழகியல் வடிவங்கள் போன்ற வேறு சில கூறுகள் தொடர்ந்து உயிர் வாழலாம்.

மார்க்சியம் அதன் வரலாற்றுப் பணியை நிறைவேற்றி விட்டதா? இல்லை. அந்தப் பணி இன்னும் மிச்சமிருக்கிறது. பெருமளவுக்கு மிச்சமிருக்கிறது.

மார்க்சியம் அதற்குரிய பணியை நிறைவேற்றும் ஆற்றலை இழந்துவிட்டதாகக் கருதுவோர் உண்டு. இந்தக் கோணத்திலிருந்து கூட மார்க்சியம் தோற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு என்ன சான்று? சோவியத்து நாட்டைப் பார். கிழக்கு அய்ரோப்பிய நாடுகளைப் பார் என்று விரல் நீட்டிப் பேசுகிறார்கள்.

சோவியத்து நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் ஒரு பெரும் பின்னடைவு நேரிட்டிருப்பது கண்கூடான உண்மை. தோல்வி, வீழ்ச்சி என்றே சொல்லலாம். எதன் தோல்வி? எதன் வீழ்ச்சி? இந்த நாடுகளின் பொதுவுடமைக் கட்சிகள் எதை மார்க்சியம் என்று கருதியும் சொல்லியும் வந்தனவோ, எதைச் சொல்லிதம் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி வந்தனவோ அதற்குத்தான் தோல்வி. அதாவது அங்கெல்லாம் மார்க்சியம் என்று அறியப்பட்ட ஒன்று தோற்றதே தவிர மார்க்சியம் தோற்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படை வரையறைகள் என்ன என்று பார்த்தோமானால், இந்த உண்மை புலப்படும்.

சோவியத்து நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் சோசலிச அமைப்புகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்லது தோல்வி அந்தந்த நாட்டிலும் ஏற்படுத்தப்பட்ட சோசலிச மாதிரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியாகும். மார்க்சியம் எந்த ஒரு சோசலிச மாதிரியையும் முன்வைக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அது சோசலிசத்திற்கான சமையல் குறிப்பு அன்று. பார்க்கப்போனால் மார்க்சியம் முதலாளித்துவம் பற்றிப் பேசிய அளவுக்கு சோசலிசம் பற்றி பேசியது இல்லை.

மார்க்சியப் பொருளாதார இயல் என்பது சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் பற்றியது அல்ல. அது முதலாளித்துவச் சமுதாயத்தின் தோற்றம், வாழ்வு, சரிவு, அழிவு ஆகியவற்றின் விதிகளைச் சொல்வதாகும். (நூலிலிருந்து பக்.48-49)

நூல் : மார்க்சியம் அனா ஆவன்னா ?
ஆசிரியர் : தியாகு

வெளியீடு : புதுமலர் பதிப்பகம்,
10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம் (அஞ்சல்)
ஈரோடு – 638 004.
தொலைபேசி எண் : 94433 07681
மின்னஞ்சல் : newflower_kurinji@yahoo.co.in

பக்கங்கள்: 64
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.