Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 291

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! பாதுகாப்போம் ! பரப்புவோம் ! – மதுரை அரங்கககூட்டம்

  • 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை, தமிழ்சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு!
  • கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்!

என்கின்ற தலைப்பில் கடந்த 21-ம் தேதி அன்று மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் மதுரையில் அரங்கக்கூட்டம் நடந்தது.

இந்நிகழ்விற்கு தோழர். ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமையுரையில்;

“அத்திவரதரை பார்க்க சென்றதை போன்று கூட்டம் கூட்டமாக தமிழக மக்கள் கீழடிக்கு சென்று பார்க்கின்றனர். ஒரு தொல்லியியல் ஆய்வை இவ்வளவு மக்கள் சென்று பார்ப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தருகிறது. ஆனால் எதிரிகளுக்கு அச்சத்தை தருகிறது. ஏனென்றால் தமிழன் என்றாலே இந்துதான் என்று சொல்லித்திரியும் பார்ப்பன பிஜேபி கும்பலுக்கு அவர்களுடைய வேத மரபுக்கான எந்த ஆதாரமும் கீழடியில் கிடைக்க வில்லை எனும் போது அச்சம் வரத்தானே செய்யும். அதனால்தான் கீழடியை இந்த அரங்கக்கூட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுவரொட்டியை ஒட்டிய தோழர்களை கூட காவல்துறையை விட்டு கைது செய்கிறது அரசு.

அதேபோல் பகவத்கீதையை அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்க சென்ற போது காவல் ஆய்வாளர் “குரான், பைபிள் சேர்த்தால் இப்படி எதிர்ப்பீர்களா” என்று பிஜேபி உறுப்பினர் போல பேசி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தார். எனவே இந்து பார்ப்பன பாசிசம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான் கீழடியில் தொல் தமிழர் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவேதான் அத்தகைய அடையாள சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறோம்” என்று பேசினார்.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கதிரவன் “2600 வருடங்களுக்கு முன்னரே ஒரு நகர பண்பாட்டை தமிழர்கள் பெற்று இருந்தனர் என்பதை தமிழக மக்கள் அனைவரும் பெருமையோடு பார்க்கின்றனர். மேலும் அபோதே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழகம் இருந்திருக்கிறது. எனவே மார்க்சியத்தின் அடிப்படையிலேயே பார்த்தால் கூட கீழடி போன்ற கண்டுபிடிப்பு ஆவனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ் இலக்கிய ஆளுமைகள் அனைவரும் சொன்னதை போல சங்க கால இலக்கியங்கள் வெறும் கற்பனை அல்ல என்பது கீழடியின் மூலமாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது திடீரென மகாபாரத போரை பற்றி ஏதோ தடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெரிய அளவில் விளம்பரப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த கண்டுபிடிப்பை பற்றி இந்திய தொல்லியியல் ஆய்வு நிறுவனம் இதுவரை கால கண்டுபிடிப்பை உறுதி செய்யவில்லையாம். இப்படி உறுதிபடுத்தப்படாத தகவல்களை வைத்துக்கொண்டுதான் இவர்கள் கீழடியை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள். வெறும் 50 சென்ட் நிலத்தில் மட்டும்தான் தற்போது கீழடியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100 ஏக்கர் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல் இந்த ஆய்வை தடுத்து நிறுத்தாமல் பார்த்துகொள்வது நம் அனைவரின் கடமையாகும்” என்று பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக சிறப்புரையாற்றிய ஓய்வு பெற்ற‌ தொல்லியல் ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் தன்னுடைய உரையில்

“தானும் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மொழியின் வரலாறு கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றுதான் இருந்தேன். ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஆசானாக நினைத்திருந்த திரு. நாகசாமி அவர்களால் தவறு என்பதை உணர்ந்தோம். அவர் தமிழ் மொழியை சமஸ்கிருந்தத்திற்கு அடுத்தநிலையில் வைத்து ஒரு புத்தகம் எழுதினார், அடுத்த சில வாரங்களில் அவருக்கு மத்திய அரசின் விருது கொடுக்கப்பட்டது. இப்போது அறிவுஜீவிகள் என்பவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றனர். விருதிற்காக தங்களையும் தங்களுடைய அறிவையும் விற்றுவிடுகிறார்கள்.

பொதுவாக பிராமி என்ற ஒரு எழுத்து வடிவ பெயரே கிடையாது, பம்மி என்றுதான் முன்பு இருந்தது அதுதான் மருவி பிராமி என்று வந்தது. அதே போல் அசோகர் காலத்தில் இருந்த எழுத்து வடிவங்களை பற்றி ஒரு பழைய புத்தகம் இருக்கிறது, அதில் திராவிடி என்ற எழுத்து வடிவமும் இடம் பெற்றிருக்கிறது. எனவே அப்போதே திராவிடி என்று தனி எழுத்து வடிவம் கொண்டிருந்ததை எதற்காக தமிழ் பிராமி என்று அழைக்க வேண்டும்? தமிழி என்றே அழைக்கலாம்.

படிக்க :
♦ கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !
♦ பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

மேலும் ‘திராவிட நாகரிகம் அல்ல சுத்தமான தமிழர் நாகரிகம்தான்’ என்று சொல்பவர்களுக்கும் இதுவே பதில் கொடுத்துவிடுகிறது. தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றுதான். இதற்காகத்தான் தமிழ் மொழியின் மேல் குறிப்பாக வட இந்தியர்கள் மற்றும் பிராமணர்கள் வெறுப்பாக இருப்பதற்கு காரணம். ஏனென்றால் தற்போதையநிலையில் அவர்களுடைய அத்தனை புராண கதைகளையும் ஒவ்வொன்றாக பொய்யாக்கும் விதமாக தமிழ் சமூக வரலாறுகள் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் மூலமாக வெளிச்சத்திற்கு வருகின்றன” என்று பேசினார்.

மேலும் அவர் தன்னுடைய பணிக்கால அனுபவங்களிலிருந்து தமிழ் மற்றும் இந்திய சமூக வரலாறுகள் பலவற்றை குறிப்பிட்டு அதிலிருந்து கீழடியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக பேசியதும். இறுதியாக நடந்த கேள்வி பதில் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததும் ஒட்டு மொத்தமாக இந்திய சமூக மற்றும் எழுத்து வரலாற்றின் அடிப்படையை புரிந்து கொள்வதாக இருந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.
தொடர்புக்கு : 97916 53200.

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்

மனுஷ்ய புத்திரன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீதி என்ற ஒன்று இருக்கிறது என
இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் ஒரு அன்னியனின்
கடவுச் சீட்டுடன் நின்றுகொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் நிபந்தனையற்று
விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்
மெளனமாக இருக்க
நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
என் தேசபக்தியை நிரூபிக்க
எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து
காட்டி வந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்
முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் எனறால்
வேறு யாராகவும் இருக்க
நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்

படிக்க :
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே
இருக்க விரும்புகிறேன்
என் நெஞ்சில் நீங்கள்
கடைசியாகப் பாய்ச்சப்போகும்
ஈட்டியின் கூர்மையை
நான் காண விரும்புகிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

உங்களை முகம் சுழிக்க வைக்கும்
அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு
ஒரு இஸ்லாமிய கதகதப்போடு
உங்களை அணைத்து
முகமன்கூற விரும்புகிறேன்

ஒரு போதும் நாங்கள் சண்டையிட வரவில்லை
இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறோம்
பிரார்த்தனையின் அமைதியை
கபர்ஸ்தான்களின் அமைதியை
ஒரு தரப்பான நீதியின் அமைதியை

ஒரு இஸ்லாமியனாக வாழ்வது
மிகவும் கடினமானது நண்பர்களே
அவன் எப்போதும் உலகத்தின் சமாதானத்திற்காக வாழவேண்டும்
பிறகு தன்னைத்தானே
சமாதானப்படுத்திக்கொண்டு வாழ வேண்டும்

மேலும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது
தனியனாக இருப்பதல்ல
அது
ஒரு கூட்டு மனம்
ஒரு கூட்டுக் காயம்
ஒரு கூட்டுத்தண்டனை
ஒரு கூட்டுத் தனிமை
அதை இன்றுதான் அறிந்து கொண்டேன்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

செருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் !!

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04c

லெக்ஸேய் இப்போது பணியாற்றிய சண்டை விமான ரெஜிமெண்டுக்கு, டாங்கிச் சேனை பகையணிகளைப் பிளந்து முன்னேறத் தொடங்கியது முதல் போர்வேலை இடைவிடாது நெரித்தது. பகையணி பிளக்கப்பட்ட இடத்துக்கு மேலே ஸ்குவாட்ரன்கள் ஒன்று மாற்றி ஒன்றாகப் பறந்த வண்ணமாக இருந்தன. சண்டையிலிருந்து ஒரு ஸ்குவாட்ரன் திரும்பி தரையில் இறங்கியும் இறங்காததுமாக இன்னொரு ஸ்குவாட்ரன் அதற்கு மாற்றாகப் பறந்தது. இறங்கிய விமானங்களுக்குப் பெட்ரோல் நிரப்பப் பெட்ரோல் லாரிகள் விரைந்தன. காலிக் கலங்களில் பெட்ரோல் களகளவென்று தாரையாய்க் கொட்டியது. விமானிகள் தங்கள் அறைகளிலிருந்து இறங்கவில்லை. சாப்பாடு கூட, அலுமினியப் பாத்திரங்களில் அவர்களுக்கு இங்கே கொண்டு வந்து தரப்பட்டது. ஆனால் எவருமே அதைச் சாப்பிடவில்லை. அன்றைய தினம் சாப்பாட்டில் யாருக்குமே புத்தி போகவில்லை. கவளம் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரன் மறுபடி தரையில் இறங்கி, விமானங்கள் காட்டு மறைப்புக்கு இட்டுச் செல்லப்பட்டுப் பெட்ரோல் நிறைக்கப்படுகையில் மெரேஸ்யெவ் இன்பமான சோர்வினால் மூட்டுகளில் வலியை உணர்ந்தவனாக, பொறுமையின்றி வானத்தை நோக்குவதும் பெட்ரோல் நிரப்புவர்களிடம் கத்திப் பேசுவதுமாகப் புன்னகையுடன் விமானி அறையில் உட்கார்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் விமானச் சண்டையில் கலந்து கொள்ளவும் தன்னைச் சோதித்துப் பார்க்கவும் அவனுக்கு அடங்கா ஆசை உண்டாயிற்று. மார்பை ஒட்டினாற்போல் சட்டைக்குள் இருந்த சரசரக்கும் கடித உறையை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஆனால் இவன் இத்தகைய சூழ்நிலையில் கடிதத்தைப் படிக்க அவன் விரும்பவில்லை.

மாலையில், சேனையின் தாக்கு வட்டாரத்தை மங்கல் நம்பகமாக மறைத்துவிட்ட பின்பே விமானிகள் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாகச் செல்லும் காட்டுக் குறுக்கு வழியில் போகாமல், சுற்று வழியாக, களைகள் மண்டிய ஊடே நடந்தான் மெரேஸ்யெவ்.

திடீரென எதிர்பாராத வகையில் ஜீப். சக்கரங்கள் கீச்சிட அது பாதையில் நிறுத்தப்பட்டது. திரும்பிப் பாராமலே அது ரெஜிமென்ட் கமாண்டர் என மெரேஸ்யெவ் ஊகித்துக் கொண்டான்.

“விமான நிலையம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டேன்: எங்கே நம் வீரர்? எங்கே மறைந்து விட்டார் வீரர்? என்று. அவரோ, இங்கே உழாவுகிறார்” என்றார் கமாண்டர்.

ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினார் கர்னல். அவர் தாமே அருமையாகக் கார் ஓட்டுவார். ஒழிவு நேரத்தில் அதில் நேரத்தை செலவிடுவதை விரும்புவார். அவ்வாறே கடினமான வேலைகளில் தாமே ரெஜிமென்டைத் தலைமை வகித்து நடத்திச் செல்வார். பிறகு மாலை வேளையில் எண்ணெய் வழியும் எஞ்சின்களைச் செப்பம் செய்வதில் மெக்கானிக்குகளுடன் பாடுபடுவார். வழக்கமாக அவர் நீலப் பறப்பு உடை அணிந்து வளையவருவார். அவருடைய மெலிந்த முகத்தில் காணப்பட்ட அதிகார தோரணையுள்ள மடிப்புகளையும், புத்தம், புதிய, பகட்டான விமானித் தொப்பியையும் கொண்டே அவரை மெக்கானிக்குகளிலிருந்து தனிப்பிரித்து அறிய முடியும்.

எங்கோ நினைவாகக் கைத்தடியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்த மெரேஸ்யெவின் தோளைப் பற்றினார் கமாண்டர்.

“எங்கே, உங்களைப் பார்ப்போம்? சைத்தானுக்கே வெளிச்சம் – சிறப்பானது எதையும் காணோமே! இப்போது நான் ஒப்புக் கொள்ளலாம்: நீங்கள் இங்கு அனுப்பப்பட்டபோது, சேனையில் உங்களைப் பற்றிக் கூறப்பட்டவற்றை நான் நம்பவில்லை. சண்டையில் தாக்குப் பிடிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. நீங்களோ, என்னமாய்ச் சண்டை செய்திருக்கிறீர்கள்! இது தான் ருஷ்ய அன்னையின் மகிமை! வாழ்த்துகிறேன். வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்” என்றார்….

அலெக்ஸேய் நிலவறைக்குள் போகவில்லை. பிர்ச் மரத்தின் அடியில் காளான் மணம் வீசும் ஈரக் கம்பளி போன்ற பாசியில் படுத்து, ஓல்காவின் கடிதத்தை உறையிலிருந்து பதபாகமாக வெளியே எடுத்தான். ஒரு நிழல்படம் கையிலிருந்து நழுவிப் புல்மேல் விழுந்தது. அலெக்ஸேய் அதை எடுத்தான். அவன் நெஞ்சு படபடத்தது.

நிழல் படத்திலிருந்து அவனை நோக்கியது பழக்கமான, ஆனால் அதே சமயம் இனங்காண முடியாத அளவுக்குப் புதிய முகம். இராணுவச் சீருடை அணிந்த ஓல்காவின் சீருடை அது. இராணுவ உடுப்பு, இடுப்புவார். செந்நட்சத்திர விருது ஆகியவையும் அவளுக்கு மிகவும் இசைந்தன. இராணுவ அதிகாரி உடுப்பு அணிந்திருந்த ஒடிசலான அழகிய பையன் போல இருந்தாள் அவள். ஒரே விஷயம் என்னவென்றால் இந்தப் பையனின் முகம் களைத்துச் சோர்ந்து இருந்தது, ஒளி வீசும் பெரிய, வட்ட விழிகள் சிறுவனுக்கு இயல்பு அல்லாத ஊடுறுவும் நோக்குடன் பார்த்துக் கொண்டிருந்தன என்பதே.

அலெக்ஸேய் அந்த விழிகளை நெடு நேரம் நோக்கியவாறு இருந்தான். அவன் உள்ளம் இனந்தெரியாத இனிய சோகத்தால் நிறைந்தது. விருப்பத்துக்கு உரிய பாட்டொலி மாலை வேளையில் தொலையில் இருந்து கேட்கும் போது உணர்வது போன்ற சோகம் இது. பையிலிருந்து பழைய ஓல்காவின் நிழல்படத்தை எடுத்துப் பார்த்தான் அலெக்ஸேய். அதில் அவள் பல்வண்ண உடை அணிந்து விண்மீன்கள் போல் செறிந்திருந்த வெண் சாமந்த மலர்கள் பூத்துக் குலுங்கிய புல் தரை மேல் உட்கார்ந்திருந்தாள். வேடிக்கை என்னவென்றால் இராணுவ உடையும், களைத்த விழிகளுமாக இருந்த, அவன் முன் கண்டிராத பெண் பழக்கமான பெண்ணைவிட அவனது அன்புக்கு உரியவளாக இருந்தாள். நிழல்படத்தின் மறுபக்கம், “மறந்து விடாதே” என்று எழுதப்பட்டிருந்தது.

– கடிதம் சுருக்கமாக, உற்சாகம் பொங்கித் ததும்புவதாக இருந்தது. ஓல்கா இப்பொழுது சேப்பர் பிளாட்டூன் தலைவி. அவளுடைய பிளாட்டூன் இப்போது சண்டையில் பங்கு கொள்ளவில்லை. அது அமைதி நிறைந்த ஆக்க வேலையில் ஈடுபட்டிருந்தது. ஸ்தாலின் கிராத் நகரை மீண்டும் நிறுவிக் கொண்டிருந்தார்கள் பிளாட்டூன்காரர்கள். ஓல்கா தன்னைப் பற்றிக் கொஞ்சந்தான் எழுதியிருந்தாள். மாபெரும் ஸ்தாலின் கிராத் நகரைப் பற்றியும், அதன் உயிர்த்தெழும் இடிபாடுகள் பற்றியும் மிக ஆர்வமுடன் விவரித்திருந்தாள்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இப்போது அங்கு வந்துள்ள மாதர்களும் மங்கையரும் சிறுமிகளும் போருக்குப்பின் எஞ்சியிருக்கும் நிலவறைகளிலும் காப்பரண்களிலும் காப்பகழ்களிலும் ரெயில் பெட்டிகளிலும் மண்காப்பறைகளிலும் வசித்துக்கொண்டு நகரைப் புதுப்பித்து நிறுவுவது பற்றி பரவசப்பட்டு எழுதியிருந்தாள். நன்றாக வேலை செய்யும் ஒவ்வொரு பணியாளுக்கும் புதுப்பித்து அமைக்கப்பட்ட ஸ்தாலின்கிராதில் பின்னர் இருப்பிடம் தரப்படுமாம். இது உண்மையானால் போர் முடிந்த பிறகு தங்கி இளைப்பாறத் தனக்கு இடம் இருக்கும் என்பதை அலெக்ஸேய் தெரிந்து கொள்ளட்டும்.

கோடைகால வழக்கப்படி விரைவாக இருட்டாகி விட்டது. கடைசி வரிகளை டார்ச் விளக்கு வெளிச்சத்தில்தான் அலெக்ஸேய் படித்தான். படித்து முடித்ததும் டார்ச் வெளிச்சத்தில் நிழல் படத்தை மறுபடி பார்த்தான். படைவீரப் பையனின் விழிகள் கண்டிப்பும் நேர்மையும் ஒளிர நோக்கின. அன்பே, அன்பே, உன் பாடு எளிதல்ல… போர் உன்னை விடவில்லை, எனினும் உன் உளவுறுதியைச் சிதைக்கவில்லை! எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எதிர்பார் எதிர்பார்! காதலிக்கிறாயா? காதலி, காதலி, அருமையானவளே! அவளிடமிருந்து, ஸ்தாலின் கிராத் போரில் பங்கு கொண்ட வீரப் பெண்ணிடமிருந்து தனது துர்ப்பாக்கியத்தை இந்த ஒன்றரை வருட காலமாகத் தான் மறைத்துவருவது குறித்து அவனுக்குத் திடீரென வெட்கம் உண்டாயிற்று. அப்போதே தன் அறைக்குப் போய் எல்லா விஷயங்களையும் உள்ளபடியே, ஒளிவு மறைவின்றி எழுதிவிட விரும்பினான். அவள் தீர்மானிக்கட்டும். எவ்வளவு சீக்கிரம் விஷயம் முடிவாகிறதோ அவ்வளவு நல்லது. எல்லாம் தெளிவுபட்டதும் இருவருக்கும் மனச்சுமை குறைந்துவிடும்.

இன்றையச் செயலுக்குப் பின் அவன் அவளோடு சமமாக உரையாட முடியும். அவன் வெறுமே விமானம் ஓட்டவில்லை, போரும் புரிகின்றான். தன்னுடைய எதிர்பார்ப்புகள் வீணாகி விட்டாலோ அல்லது தான் போரில் மற்றவர்களுக்கு ஒப்பாகப் பங்கு கொள்ளத் தொடங்கினாலோ அவளுக்கு எல்லா விஷயங்களையும் தெரிவித்துவிடுவதாக அவன் உறுதி பூண்டிருந்தான், சபதம் ஏற்றிருந்தானே. இப்போது அவன் நோக்கம் ஈடேறி விட்டது. அவனால் வீழ்த்தப்பட்ட இரண்டு பகை விமானங்கள் எல்லோர் கண்களுக்கும் முன்பாகப் புதரில் விழுந்து எரிந்து போயின. முறை அதிகாரி இன்றுப் போர்க்களச் செய்தித் தாள்களில் இந்தத் தகவலைப்பதிப்பித்து விட்டான்.

படிக்க:
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

டிவிஷனுக்கும் சேனைக்கும் மாஸ்கோவுக்கும் இது பற்றிச் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது.

இதெல்லாம் மெய்யே. அவன் சபதம் நிறைவேறிவிட்டது. இப்போது எழுதலாம். ஆனால் கண்டிப்பாகச் சீர்தூக்கிப் பார்த்தால் “செருப்புக்காலி” சண்டை விமானத்துக்குச் சரியான பகைவன்தானா? நல்ல வேட்டைக்காரன் தன் வேட்டைத் திறமைக்குச் சான்றாக, தான், ஒரு பேச்சுக்குச் சொன்னால், முயலைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூ்றுவானா?…

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

PP Letter head ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். சார்பாக
உச்சநீதிமன்றமே சிரமேற்கொண்டு இருப்பதுதான் தீர்ப்பின் சாரம் !

ட்டத்தின் ஆட்சி, மதச்சார்பின்மை மட்டுமல்ல சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையும் நொறுக்கப்பட்டு இருக்கிறது. அரசின் அனைத்து அதிகார பீடங்களும் பாசிசமயமாகிக்கொண்டு இருக்கும் இச்சூழலில், இந்த  நாட்டில் நீதியை நீதிமன்றம் பெற்றுத்தரும் என்று 70 ஆண்டுகளாக வழக்காடியவர்களுக்கும் அதை நம்பியவர்களுக்கும் தான் இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருக்கும். மோடியின் 2.0 பாசிச ஆட்சியில் இதை விட வேறு  நியாமான தீர்ப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? இனி சிறுபான்மை மக்களுக்கான இடம் எது என்பதை இத்தீர்ப்பின் மூலம் அரசு நிறுவியிருக்கிறது. நவம்பர் மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று சுப்ரமணியசாமி கூறியது போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

 அயோத்தி பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்  என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த இடத்திலேயே  இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். விரும்பிய தீர்ப்புதான் வரும் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் மோடி அரசும் யோகி அரசும் சில நாட்களாகவே வெளிப்படுத்தி வந்ததை அனைவராலும் எளிதில் உணர முடிந்தது.

உ.பி. யோகி அரசு பெருமளவு போலீசை குவித்தது மட்டுமின்றி எட்டு தற்காலிகச் சிறைகளையும் உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே உ.பி. காவல்துறை தலைவர்களை அக்டோபர் மாதம் அழைத்துப் பேசினார். நவம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தீர்ப்பு வரலாம் என்று செய்தி பரப்பப்பட்டதற்கு மாறாக திடீரென ஒன்பதாம் தேதி என அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இஸ்லாமியர்களை அச்சத்தில் உறைய வைத்துவிட்டு இத்தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர்  (1500 சதுர மீட்டர்) நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கு. ஆனால் அதை விட்டுவிட்டு ராமர் கோயில் கட்ட உத்தரவிட்டிருக்கிறது. இந்த இடத்தை யாரும் உரிமை கோர முடியாது, அது அரசுக்குச் சொந்தம் என்று கூறிவிட்டு, மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அந்த மொத்த இடத்தையும் அதனிடம் ஒப்படைத்து ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு அளிப்பது என்ன நியாயம்? ‌ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதுதான் இந்துக்களின்  நம்பிக்கையே தவிர, பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்பது அல்ல. அயோத்தியில் இன்றும் பல ராமர் கோயில்களில் பூசாரிகள் தங்கள் கோயிலில்தான் ராமன் பிறந்தான் என்று கூறிவருகின்றனர். ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பது அடிப்படையற்ற நம்பிக்கை. ஆனால் பாபர் மசூதி 450 ஆண்டு ஆதாரத்துடன் கூடிய உண்மை வரலாறு.

இந்துக்களின் தரப்புக்கு இவ்வளவு தெளிவாக உத்தரவிட்ட நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் ஒதுக்க வேண்டும் அதில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக் கொள்ளலாம் என ’கருணை’ காட்டி பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்கும் நியாயம் வழங்கியிருப்பதாக பாசாங்கு செய்திருக்கிறது. இத்தீர்ப்பு. ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். சார்பாக உச்சநீதிமன்றமே சிரமேற்கொண்டு இருப்பதுதான் தீர்ப்பின் சாரம். பாபர் மசூதி இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தால் கரசேவை செய்யப்பட்டிருக்கிறது.

படிக்க:
அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

ஓராண்டுக்கு முன் இப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆட்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினர். அது உண்மைதான் என்பதை இந்தத் தீர்ப்பு மூலம் மெய்ப்பித்திருக்கிறார்கள். தனது அரசியல் எதிரியான ப.சிதம்பரத்தை பழிவாங்க மொத்த நீதித்துறையையும் எப்படி மோடி அரசு ஆட்டி வைக்கிறது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வின் விருப்பங்களை மீறி எந்த நீதிமன்றமும் செயல்பட முடியாது என்பதுதான் இன்றைய எதார்த்தம். நாடு முழுவதும் தனது பாசிச அதிகாரத்தை நிலைநாட்ட தேர்தல் உள்ளிட்ட அனைத்து பெயரளவு ஜனநாயகத்தையும் ஒழித்து வருகிறது  பார்ப்பன  – பா.ஜ.க. கும்பல்.

இன்று மராட்டியத்தில் வெட்கமற்ற முறையில் குதிரை பேரத்தில் இறங்கி இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் அது பற்றி மூச்சுவிடாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கல்வித் திட்டம், தேசப்பாதுகாப்புக்கு ஆபத்து, பயங்கரவாத அச்சுறுத்தல் என்று பீதியூட்டி  பாசிச ஒடுக்குமுறைக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கும் என்பதற்கான அடிப்படை தகர்ந்து கொண்டே வருகிறது. இது அபாயத்தின் அறிகுறி. அயோத்தியோடு இது ஒரு போதும் நிற்கப்போவதில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். – இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும்  என்பதையே  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

தோழமையுடன்,
தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!

முன்னாள் மைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுத் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியாவும், ராகுல் காந்தியும் பிணை பெற்றிருக்கிறார்கள். பிணை ரத்து செய்யப்பட்டால், திகார்தான்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் “சாரதா சிட்பண்ட்ஸ்”, “ரோஸ் வேலி” நிதி நிறுவன மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மைய அமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழகத்திலோ தி.மு.க. மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகள் பாயப்போவதாகவும் முக்கியத் தலைவர் கைது செய்யப்படலாம் என்றும் எச்.ராஜா நேரடியாகவே மிரட்டுகிறார். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான 2 ஜி ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, ப.சிதம்பரத்திற்குப் பிணை வழங்க மறுத்த நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள், மற்ற எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றஞ்சுமத்திக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.க.வும் தங்களை ஊழலுக்கு எதிரானவர்களாக, அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பா.ஜ.க., 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டுவிட்டது. தனது இப்புதிய வேடத்திற்கு 2ஜி அலைக்கற்றை விற்பனை வழக்கு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு ஆகியவற்றை கார்ப்பரேட் ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது.

“எனது அமைச்சரவையில் யாராவது ஒருவர் ஊழல் செய்தார் எனக் காட்ட முடியுமா?” எனச் சவால்விடுகிறார், மோடி. “தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்” என ஊழலுக்கு நியாயம் கற்பித்த காலம் பா.ஜ.க. ஆட்சியில் மலையேறிப் போய்விட்டதா, என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலும், கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த நில பேர ஊழலும், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலும் பா.ஜ.க.வின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் பழைய புராணங்கள். இனி உத்தமர் மோடி ஆட்சியில் நடந்து வரும் புதிய ஊழல் புராணத்திற்கு வருவோம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார்.

அரசுத் திட்டங்களில் சட்டத்தை மீறிக் கையூட்டுப் பெற்றால்தானே ஊழல், ஊழலையே சட்டபூர்வமாக்கிவிட்டால்..? பா.ஜ.க. ஆட்சியில் நடப்பது இத்தகைய சட்டபூர்வ ஊழல்கள்தான். இதற்குப் பணமதிப்பழிப்பு தொடங்கி நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை இயக்கும் உரிமத்தை அதானிக்கு வழங்கியது வரையிலான மோடி அரசின் பல்வேறு பொருளாதார முடிவுகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வழக்குகளையும் தனது அரசியல் இலாப நோக்கில்தான் நகர்த்தி வருகிறது, மோடி அரசு.

நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்ததாகப் பீற்றிக் கொண்டார் மோடி. ஆனால், அச்சட்டபூர்வ நடவடிக்கை, மோடியே கூறிய மூன்றரை இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்குத்தான் பயன்பட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய சுமார் 8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்கள் பா.ஜ.க ஆட்சியின் கடந்த ஆறு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  பா.ஜ.க. அளித்த இந்தச் சட்டபூர்வத் தள்ளுபடியின் காரணமாக இந்திய வங்கித்துறையே இன்று திவால் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. அரசுக்கு நட்டமேற்படுத்திய 2ஜி விற்பனையை ஊழல் என்றால், இந்திய வங்கிகளைத் திவால் நிலைக்குத் தள்ளிய வாராக் கடன் தள்ளுபடியை என்னவென்பது?

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

காங்கிரசு அரசு 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றதை ஊழல் எனச் சாடும் மோடி, தனது அரசு ரஃபேல் போர் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதைத் தேசப் பாதுகாப்பு என நியாயம் கற்பிக்கிறார். மாமியார் உடைத்தால் மண் குடமாம், மருமகள் உடைத்தால் பொன்குடமாம். ரஃபேல் கொள்முதல் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரை ஊழல் வழக்கில் உள்ளே தள்ளிய மோடி அரசுதான், இந்திய வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் பத்திரமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் விமானம் ஏறியதாக வாக்குமூலமே அளித்தார் விஜய் மல்லையா.

தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, எந்த முதலாளி எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார் என்பதைக் கணக்குக்காட்டத் தேவையில்லை என்பது சட்டபூர்வமானது. அதாவது இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகள் இரகசியமாக ஓட்டுக்கட்சிகளுக்கு அளித்துவந்த கருப்புப் பண நன்கொடையை இத்தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டபூர்வமாக்கினார் மோடி. இதற்குப் பிரதிபலனாக கார்ப்பரேட் முதலாளிகள் பா.ஜ.க.விற்குத் தமது நன்கொடைகளை வாரி வழங்கினார்கள்.

இது மட்டுமின்றி, ஊழல் ஒழிப்புச் சட்டத்திலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவந்ததன் மூலம் அதிகார வர்க்க ஊழல்கள் அம்பலமாவதையும் அதிகாரிகள் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவதையும் தடுத்தாண்டிருக்கிறார், உத்தமர் மோடி.

ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. முன்னெடுக்கும் நடவடிக்கைகளோ ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற தார்மீக நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. மாறாக, ப.சி. போன்ற தனது நேரடி அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்க்கட்சிகளை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ப.சிதம்பரத்தையும், டி.கே.சிவக்குமாரையும் உள்ளே தள்ளியிருக்கும் மோடியின் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் எடப்பாடியையும், விஜயபாஸ்கரையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இந்த அரசியல் சுயநலம்தான்.

தமிழகத்தில் கூவத்தூரில் தொடங்கிய எடப்பாடி அரசின் ஊழல்களும் முறைகேடுகளும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளிவராத நாட்களே இல்லை. இவற்றையெல்லாம் அமித் ஷா கண்காணித்துக் கொண்டிருப்பதாக கிசுகிசுச் செய்திகள் வெளிவருவதைத் தாண்டி, இவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை. அ.தி.மு.க.விற்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளோ, ஒன்று ஊறுகாய்ப் பானைக்குள் உறங்குகின்றன; அல்லது குற்றவாளிகளுக்கு விசாரணை அமைப்புகளே நற்சான்றிதழ் கொடுத்து அவ்வழக்குகளை ஊத்தி மூடிவிடுகின்றன.

மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் தமிழகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக, ஓ.பி.எஸ்.-இன் நெருங்கிய கூட்டாளி சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 34 கோடி ரூபாய் பெறுமான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. ஊரே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு அலைந்துகொண்டிருந்த வேளையில் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே ஊழல் –  முறைகேட்டின் அழிக்கமுடியாத சாட்சியமாக அமைந்தன.

இந்த வழக்கை விசாரித்து வந்த வருமான வரித்துறை இப்பொழுது சேகர்ரெட்டியை விடுவித்துவிட்டது. கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் சேகர் ரெட்டி நேர்மையான வழியில் சம்பாதித்தவை என நற்சான்றிதழும் வழங்கிவிட்டது. இந்தத் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்ன? ரெய்டு நடந்தபோது ஓ.பி.எஸ். சசிகலா கோஷ்டியில் இருந்தார். அதன் பின் அவர் பா.ஜ.க.வின் தீவிர விசுவாசியாக மாறினார். அந்த மாற்றத்திற்குக் கிடைத்த மரியாதைதான் சேகர்ரெட்டி மீதான வழக்கு வாபஸ்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் கோஷ்டி, ஓ.பி.எஸ். கோஷ்டி என இரண்டாகப் பிரிந்து நின்றபோது, தினகரன் கோஷ்டிக்கு எதிராக வருமானவரிச் சோதனை நடத்தி, பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றஞ்சுமத்தி வருமான வரித்துறையினர் கொடுத்த பட்டியலில் விஜயபாஸ்கருடன் எடப்பாடியின் பெயரும் இருந்தது. பா.ஜ.க. மத்தியஸ்தம் செய்துவைத்து, ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்த பின்னர் ஓ.பி.எஸ். துணை முதல்வரானார். ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கிலோ வருமான வரித்துறை விசாரணை என்ற பம்மாத்துதான் நடந்து வருகிறது.

படிக்க:
குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !
♦ அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !

2016-ஆம் ஆண்டு சென்னை நகரில் பல இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் சென்னை போலீஸ் கமிசனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. அவ்வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை என்ற பூச்சாண்டியைத் தாண்டி அந்த வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் நடந்துவிடவில்லை.

அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் குட்கா விற்பனையோ கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கென அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசார் என அனைத்து மட்டத்திலும் மாதம் ஒன்றுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம் மட்டும் 300 கோடி ரூபாய் என ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா’ விஜயபாஸ்கர்.

இவை தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு முட்டை வாங்கியதில் ஊழல், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வில் ஊழல், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் ஊழல், போக்குவரத்துத் துறையையே முற்றிலும் முடக்கிப் போட்டுள்ள போக்குவரத்து ஊழல், அரசு கட்டிடங்களுக்கு முறுக்குக் கம்பி வாங்கியதில் ஊழல், ஏரி மணல் அள்ளுவதில் ஊழல் என திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் செய்து தமிழகத்தையே கொள்ளையடித்து வருகிறது ஆளும் அ.தி.மு.க. இந்தக் கொள்ளைக்கூட்டத்தோடு கூட்டணி கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மேலிடத்திற்கு, அ.தி.மு.க. கட்டும் கப்பம் எவ்வளவு என்பதுதான் இவ்வூழல்களில் பொதிந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

அ.தி.மு.க. என்று மட்டுமல்ல, தனக்கு ஆதாயம் என்றால் எத்தகைய கிரிமினல் பேர்வழிகளையும் காத்து இரட்சிக்க பா.ஜ.க. தயங்குவதேயில்லை.

எடுத்துக்காட்டாக, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேர் மீது வருமான வரித்துறைச் சோதனைகள் நடத்தப்பட்டு, வருமான வரி மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், அப்பொருளாதாரக் குற்றவாளிகளை மோடி எவ்விதக் கூச்சமும் இன்றித் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் தனது பலத்தைக் கூட்டிக்கொண்டுவிட்டார். இனி அந்த வழக்குகளின் கதி அதோகதிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை உள்ளே தள்ளிய மோடி – அமித் ஷா இணை, பொருளாதாரக் குற்ற வழக்குகளைச் சந்தித்துவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகுல் ராயை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான முகுல் ராய் பா.ஜ.க.விற்குத் தாவியதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுதான் இந்தத் தலைவர் பதவி.

எனவே, பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த கதை போன்றதுதானே தவிர, அக்கட்சிக்கோ, தனிப்பட்ட விதத்தில் மோடிக்கோ ஊழலை எதிர்த்து சவுண்டு விடுவதற்குக் கடுகளவும் தகுதி கிடையாது.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !!

2011 -ம் ஆண்டில் ஒரு இரவு. அயோத்தியாவைச் சேர்ந்த நாக வைராகியான ராம் அசாரே தாஸ் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொல்லப் பார்த்தார்கள்.

கிட்டத்தட்ட செத்தே போய்விட்டோம் என்று நினைத்த நேரத்தில், தன் வலுவையெல்லாம் திரட்டி அந்த கொலைகாரனைத் தள்ளிவிட்டார் ராம் அசாரே. தன்னைக் கொல்ல வந்தவன் யாரென அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது தன் சீடனான பிரிஜ்மோகன்தாஸ் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.

ராம் அசாரே தாஸ் அயோத்தியாவில் உள்ள சௌபுர்ஜி கோவிலின் மகாந்த். அதாவது தலைவர். ஒரு நாள், அதையும் ராம் அசாரேவிடமிருந்து எழுதி வாங்கிவிட்டு, அவரைத் தெருவில் விட்டுவிட்டார் பிரிஜ்மோகன் தாஸ்.

மேல் இருப்பது அயோத்தியாவில் கோவில்களை அடைய நடக்கும் போட்டியின் ஒரு சிறு துளி. அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலின் மகந்த்தும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். அதுவும் தனது அடுத்த மடாதிபதியை நியமித்துவிட்டால் உயிர் எப்போது போகுமெனத் தெரியாது.

அதேபோல, சில மடங்களின் தலைவர்கள் இன்னொரு மடத்தையும் அதன் சொத்துகளையும் அபகரிப்பதும் நடக்கும். சீடர்களை நியமிக்காமலேயே சீடர்கள் தோன்றுவார்கள். இது எல்லாம் அயோத்தியில் நடக்க ஆரம்பித்தது 1980-களில்.

இதன் பின்னணியில் இருப்பது வி.எச்.பி என்கிறது தீரேந்திர கே. ஜா எழுதியுள்ள Ascetic Games: Sadhus, Akharas and the making of the Hindu Vote என்ற புத்தகம்.
அயோத்தியில் உள்ள கோவில்களும் மடங்களும் எப்படி முழுமையாக ஒரு அரசியல் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக்கப்பட்டிருக்கின்றன என்பதோடு, அலகாபாத் கும்பமேளா எப்படி ஒரு அரசியல் கருத்துருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

உத்தரப்பிரதேசத்திற்கு வெளியில் இருப்பவர்கள் ஒரு போதும் கற்பனைகூட செய்திருக்க முடியாத பல தகவல்களை தீரேந்திர ஜா இந்தப் புத்தகத்தில் கொட்டியிருக்கிறார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

வைணவ, சைவ அகாராக்களுக்கிடையிலான மோதல், மகாமண்டலேஸ்வர் போன்ற அர்த்தமில்லாத பட்டங்களின் விற்பனை, கும்ப மேளாவுக்காக போலியாக நாகா சாதுக்கள் பணத்திற்காக அணிவகுப்பது, அந்த நகரமே கிரிமினல்களின் கூடாரமாகியிருப்பது என திகைக்கவைக்கிறது புத்தகம்.

கோவில்களும் மடங்களும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

புத்தக ஆசிரியரான தீரேந்திர கே. ஜா பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை எழுத ஏன் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. இவர் ஏற்கனவே, Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Ayodhya: The Dark Night ஆகிய நூல்களை எழுதியவர். தி கேரவான், ஓபன், ஸ்க்ரால், தி டெலகிராஃப் ஆகிய பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.

புத்தகத்தை Westland பதிப்பகத்தின் இம்ப்ரிண்டானா Contxt வெளியிட்டிருக்கிறது. 218 பக்கங்கள். விலை ரூ. 599/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

1990 – பிப்ரவரி 10-ல், வாரங்கல் ககாதியா பல்கலைக் கழகத்தில் நடந்த ஆந்திரப்பிரதேச வரலாற்றுக் காங்கிரசில், “வகுப்புவாதமும் இந்தியாவின் பழமையும்” என்ற தலைப்பில் பேசப்பட்ட மமிடிப்புடி வெங்கிட ரங்கையா நினைவுச் சொற்பொழிவின் விரிவே இந்த வெளியீடு.

… வகுப்பு, வகுப்புவாதம் ஆகியவற்றை வரையறுத்துச் சொல்லுவது சிரமம். இனத் தன்மை, தொழில், வாழும் இடம், ஜாதி கடைசியாக மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் வகுப்பு உருவாகலாம். ஆனால் வகுப்புவாதம் எனும் பொழுது நாம் மத சமூகங்களையே மனதில் கொள்கிறோம். இந்தியாவில் சமீப காலங்களில் சீக்கிய மத அடிப்படையில் அமைக்கப்பட்ட சமூகத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான தனித்தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் பொதுவாக இந்தியாவில் வகுப்பு வாதமானது இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகியோரிடையேயுள்ள உறவின் தன்மையிலேயே பார்க்கப்படுகிறது.

அடிப்படையான மத நம்பிக்கைகள், சடங்குகள், நடைமுறைகள், ஆகியன இயற்கை ஏற்படுத்தும் தடங்கல்களை மனிதன் வெற்றி கொள்ளவும், சமூகப் பிரச்சினைகளில் சகமனிதன் ஏற்படுத்தும் பிரச்சினைகளை வெற்றி கொள்ளவு மான தொடர்ச்சியான போராட்டத்தில் தோன்றி வளர்கின்றன. இயற்கை தரும் சிரமங்களை அறிவுப்பூர்வமாக விளக்குவதற்கு மக்கள் சிரமப்படும்போது, அவர்கள் தெய்வீகமான, மத நம்பிக்கையான விளக்கங்களில் இறங்குகின்றனர். இவை பெருந்திரளான ஆண் பெண் கடவுள்களை உருவாக்கியுள்ளன. நமக்கு அனுகூலமான அல்லது எதிரான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மாதிரியான தெய்வீக சக்திகளே ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. (நூலிலிருந்து பக். 3 – 4)

… மதங்களை அவை தோன்றிய சமூகச் சூழல்களிலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க இயலாது.

காலந்தோறும் மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாக மதக் கொள்கைகள் ஆகும் போது மதத்தைச் சீர்திருத்தவும், மதத்தைப் பின்பற்றுவோருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை மாற்றவும் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆரிய சமாஜம், பிரார்த்தனை சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவை தற்காலத்தின் முக்கிய உதாரணங்கள். இவற்றில் ஆரிய சமாஜ இயக்கம் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. வேதக் கல்வியிலிருந்து விலகி வைக்கப்பட்ட சூத்திரர்கள், குழந்தை மணம், வாழ்க்கை முழுவதும் விதவை நிலை ஆகிய கொடுமைகளுக்கு இரையானோரின் கொடுமைகளை நீக்க அது இயக்கம் நடத்திற்று. விக்கிரக வழிபாட்டையும் இவ்வழிபாட்டினால் தோன்றிய தீமைகளையும் அது எதிர்த்துப் போராடியது.

… ஆனால் இன்றோ இந்து சமூகத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த மூலவர்களின் ஆர்வங்கள் இஸ்லாம் எதிர்ப்புப் போராட்டங்களாகத் தரந்தாழ்ந்து போகும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மோசமானது என்னவென்றால், உலகத்தின் எல்லா ஞானமும், சாதனைகளும் வேதங்களில் உள்ளன என்ற தான்தோன்றித் தனமான கருத்தால் அது தாக்குதல் தொடுக்கவும் தொடங்கியுள்ளது. விவரங்களையும் தடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வரலாற்றாளர்கள் இம்மாதிரிப் பிரச்சாரங்களை ஜீரணித்துக் கொள்ள இயலாது.

பண்டைய நூல்களில் பஞ்சமின்றிக் கிடக்கின்ற உண்மைச் செய்திகளாலும், விவரங்களாலும் இந்த விஷமப் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடா விட்டால் அது எழுத்தறிவு பெற்ற மக்களை மத வெறியர்கள் ஆக்கி விடும். அவர்களோ சாதாரண மக்களிடம் மத வெறி என்னும் விஷக் கிருமியைப் பரப்பி விடுவார்கள். இடைக்காலத்தில் சிலுவை யுத்தமும், கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்தாண்டுகளுக்கும் இடையில் நடந்த போர்களும் இம்மாதிரி விஷப்பிரச்சாரங்களும் இதர காரணங்களும் சேர்ந்ததினால் ஏற்பட்ட பைத்தியக் காரத்தனமான போர்களே. தற்காலத்தில் இந்தியாவில் இம்மாதிரியான விஷமப் பிரச்சாரம் தேச ஒருமைப்பாட்டுக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது. (நூலிலிருந்து பக். 6-7)

படிக்க:
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

இந்து மதத் தலைவர்களின் வறட்டுத்தனமான சகிப்பின்மைக்கு அயோத்தியின் இடைக்கால வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டலாம். அவுரங்கசீப் ஆட்சி செய்யும் வரை அவருடைய வலிமையான கை அயோத்தியின் விவகாரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் 1707-ல் அவர் இறந்த பின், அங்குள்ள சைவ சன்னியாசிக் கூட்டத்துக்கும், வைணவ வைராகிக் கூட்டத்துக்கும் இடையே பயங்கரமான மோதல்கள் நிகழ்ந்ததை நாம் காணுகிறோம். இருவரிடையே உள்ள பிரச்சினையின் அடிப்படையே மத முக்கியத்துவமுள்ள இடங்களையும் புனித யாத்திரீர்களின் கட்டணங்களையும் காணிக்கைகளையும் யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதே! இந்த இரண்டு கூட்டத்தினருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதலை விவரித்து 1804-1805-ம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு மூல நூலின் ஒரு பகுதியை இங்கே அப்படியே தருகிறேன்:

“ராமர் பிறந்த தினத்தன்று ஜனங்கள் கோசலாபுரிக்குப் போய் அங்கே கூடினார்கள். அந்தப் பெருங்கூட்டத்தை யாரால் விவரிக்க இயலும்! அந்த இடத்தில் சன்னியாசி உடையில் எண்ணிக்கையிலடங்காத வலுவான போர் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். சடைமுடி தரித்திருந்தார்கள். கை கால்களில், திருநீறு பூசியிருந்தார்கள், யுத்தத்தில் மகிழ்ச்சி கொள்ளும் போர்வீரர்கள் அவர்கள். எண்ணிக்கைக்கோ கணக்கில்லை. வைராகிகளுடன் அவர்களுக்கு போர் மூண்டது. வைராகிகளால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. போர்த் தந்திரம் அவர்களுக்குப் போதாது. அவர்கள் சன்னியாசிகளை நோக்கிப் போனது ஒரு தவறு. வைராகி உடை துயரத்தின் அடையாளமாயிற்று. வைராகியுடையணிந்திருந்தவர்கள் சன்யாசிகளைத் தாண்டி ஓடினார்கள். அவத்பூர் வெறிச் சோடிற்று, வைராகியுடையணிந்தவர்களைக் கண்டபோது அவர்கள் (சன்யாசிகள்) பயங்கரமான அச்சுறுத்தினார்கள், அவர்களுடைய அச்சுறுத்தலால் எல்லோரும் அச்சமடைந்தார்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் ரகசிய இடங்களில் மறைந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வைதீக அடையாளங்களையும் மறைத்துக் கொண்டார்கள். யாருமே தங்கள் அடையாளத்தைக் காட்டவில்லை (ரகுநாதபிரசாதின் ஸ்ரீமகராஜ சரித்திரம், பக்கம் 42; ஹான்ஸ் பேக்கரின் அயாத்தியா, கார்னிங்னன், 1986, பக்கம் 149-இல் எடுத்துக் காட்டப்பட்டபடி).

இடைக்கால இந்து மதத் தலைவர்கள் கடைப்பிடித்த சகிப்புத் தன்மை என்னும் புனைச்சுருட்டை வெளிப்படுத்த மேலே கொடுக்கப்பட்ட பகுதியே போதுமானது. (நூலிலிருந்து பக். 21-22)

… 1980-ல் உத்தர பிரதேசத் தொல்பொருள் துறையினரால் பெரிதும் சிறிதுமாகக் கிட்டத்தட்ட 6000 கோயில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த ராமபக்தர்களுக்கு எப்போதும் சுதந்திரம் உண்டு. ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள். (நூலிலிருந்து பக். 36)

நூல் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
ஆசிரியர் : ஆர்.எஸ். சர்மா
தமிழில் : பொன்னீலன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooksperiyarbooks

குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 04

டிசம்பர் 6. பிறந்த நாள்

குழந்தைக்கு சந்தோஷம் தர நிறைய சாக்லேட்டு தர வேண்டுமென்றோ, நூற்றுக் கணக்கான விளையாட்டுச் சாமான்களைப் பரிசளிக்க வேண்டுமென்றோ, எண்ணற்ற முறை முத்தமிட வேண்டுமென்றோ, இடையறாது ஏராளமான அன்பு வார்த்தைகளைப் பேச வேண்டுமென்றோ அவசியமில்லை. உண்மையான மகிழ்ச்சியைப் பெற, சந்தோஷமாக இருக்க அவனுக்கு சிறிதளவே போதும். ஒரு மணி நேரம் அவனுடன் விளையாடுங்கள் – அவன் சந்தோஷமடைவான்; சாதாரண தாளையும் எளிய பென்சிலையும் தாருங்கள் – அவன் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியென பாருங்கள்; வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள்- அவனுடைய மகிழ்ச்சிகரமான குதிப்பால் வீடே அதிரும்; இரவு அவனுக்கு ஒரு கதை சொல்லுங்கள் – அவன் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதனாக உறங்குவான்.

உங்களுடைய மென்மையான, அக்கறை மிக்க உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள், அவன் எப்போதும் சந்தோஷமானவனாக இருப்பான் என்று என்னால் உறுதி கூற முடியும், இது அவனது அன்றாட மகிழ்ச்சிகளின் தீரா மூல ஊற்றாகும். ஆண்டிற்கு ஒரு முறை, அவனுடைய பிறந்த நாளன்று, தனக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் தனது தனித்துவம் உயர்ந்துள்ளதை, தான் பெரியவன் ஆனதை உணரும்படி ஏதாவது செய்யுங்கள். அவனுடைய மகிழ்ச்சிக்கு முடிவே இருக்காது.

ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளையும் வகுப்பில் கொண்டாடுகிறோம். குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றிய இந்தச் சிந்தனைகள் இதன் தொடர்பாக என் மனதில் உதித்தன.

இன்று நாங்கள் மாரிக்காவின் பிறந்த நாளைக் கொண்டாடினோம். காலையில் குழந்தைகளுக்கு முகமன் கூறிய பின் நான் கம்பீரமாக அறிவித்தேன்:

“உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று நம் மாரிக்காவிற்குப் பிறந்த நாள்!”

குழந்தைகள் சந்தோஷமாகக் கை தட்டுகின்றனர்.

“நீங்கள் அவளுக்கு என்ன வாழ்த்து சொல்ல விரும்புகின்றீர்கள்?”

சான்த்ரோ: “மாரிக்கா, எப்போதும் அன்பான சிறுமியாக இரு!”

தாம்ரிக்கோ: “உன் தாய் நாட்டை விரும்பு!”

தீத்தோ: “உன் பெற்றோர்களை மதித்து நட. படிப்பில் உன் வெற்றிகளால் அவர்களுக்கு சந்தோஷம் தா!”

விக்டர்: “மாரிக்கா, நான் உன்னைத் தொந்தரவு செய்தேன், ஞாபகம் உள்ளதா? இனி அப்படிச் செய்ய மாட்டேன்.”

தேக்கா: “ உன் அறிவால் நீ புகழ் பெற வேண்டும்!”

கோச்சா: ”துணிவுடைய பெண்ணாயிரு!”

ஏக்கா: “நன்கு, அழகாக எழுது!”

நீக்கா: ”நன்கு ருஷ்ய மொழி பேசக் கற்றுக் கொள்!”

லாலி: ”நீ ஒருமுறை கூட உடல் நலம் குன்றி பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.”

இராக்ளி: “மிகச் சிக்கலான கணக்குகளை நீ முதலில் போட வேண்டும்!”

எல்லோரும் வாழ்த்துகளைக் கூறினர். அந்த நேரத்தில் மாரிக்கா கரும்பலகையருகே நின்று புன்முறுவல் பூக்கிறாள், தலையை ஆட்டுகிறாள், ”நன்றி” என்று சன்னமான குரலில் கூறுகிறாள். கண்களில் மகிழ்ச்சி ஒளி.

“குழந்தைகளே! உங்கள் சார்பாக மாரிக்காவை வாழ்த்தி, அவளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறேன். அதில் ‘எங்கள் அன்பு மாரிக்கா! உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் விரும்புகிறோம். நீ அன்பானவள்! உன் வகுப்பு மாணவர்கள்’ என்று எழுதினேன்.”

புத்தகத்தை மாரிக்காவிற்குத் தருகிறேன். குழந்தைகள் கை தட்டுகின்றனர், மாரிக்காவிற்கோ மகிழ்ச்சி பொங்குகிறது.

”மாரிக்காவிற்காக இன்று எந்த மாதிரி கேள்விகளைத் தயாரித்திருக்கிறேன் பாருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை திறக்கிறேன். தாய் மொழிப் பாடத்திற்கான பயிற்சியில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் புதிரில் உரிய எழுத்துகளை எழுதினால் “மாரிக்கா” என்ற பெயர் வரும். குழந்தைகள் இதை விரைவிலேயே கண்டுபிடிக்கின்றனர். எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் இதைச் சொல்லுமாறு சைகை செய்கிறேன்.

”மாரிக்கா!” என்று வகுப்பு முழுவதும் உரக்கக் கூவுகிறது.

மற்ற சாதாரண கேள்விகள் அனைத்திற்கும் மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக பதில் சொல்கின்றனர்.

இடைவேளையின் போது இவளை ஒரு ஸ்டேன்ட் அருகே இட்டுச் செல்கிறோம். இது இரண்டு மீட்டர் அகலமும் ஒன்றரை மீட்டர் உயரமும் உடைய ஒரு மரப்பலகை. இதில் குழந்தைகளுக்கு ஒரு வயது கூட நிரம்பாதபோது எடுத்த புகைப்படங்கள் உள்ளன. அப்படங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. குழந்தைகள் குறும்புத்தனமாகப் பார்க்கின்றனர். குழந்தைகள் இவற்றைப் பார்த்து மகிழ்கின்றனர். இப்புகைப்படங்கள் ஸ்டேன்டின் மேல் பகுதியில் உள்ளன, கீழ்ப் பகுதிக்கு ஒரு விசேஷம் உள்ளது. பிறந்த நாளன்று குழந்தையை இந்த ஸ்டேன்டின் அருகே அழைத்துச் சென்று, அவனை அருகே நிறுத்தி, உயரத்தை அளக்கிறோம், தேதியை அருகே எழுதி, பெற்றோர்கள் கொண்டு வரும் புதிய புகைப்படத்தை ஒட்டுகிறோம். ஸ்டேன்டில் பல குழந்தைகளின் பிறந்த நாள்களும் குறிக்கப்பட்டு விட்டன. இப்போது மாரிக்காவின் உயரத்தை அளந்து, அருகே தேதியை எழுதி, புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்த வைபவத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இன்னும் மூன்று முறை மாரிக்காவின் உயரத்தை அளந்து அவள் எப்படி வளர்ந்திருக்கிறாள், எல்லாக் குழந்தைகளும் எப்படி வளர்ந்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

கணிதப் பாடத்திலும் மிகச் சிக்கலான கணக்குகளை மாரிக்காவை கௌரவிக்கும் முகமாகப் போடுகிறோம்.

ஓவிய வகுப்பிலும் ஒவ்வொருவரும் மாரிக்காவிற்காக வரைகின்றனர். ஒரு அழகிய அட்டை தயாராக உள்ளது, குழந்தைகள் தாம் வரைந்தவற்றின் பின் வாழ்த்துகளை எழுதி இதில் வைக்கிறார்கள் (எல்லா எழுத்துகளையும் தெரிந்தவர்கள் எழுதுகிறார்கள்). பின் கர ஒலியோடு மாரிக்காவிற்கு இதை வழங்குகிறோம்.

கடைசிப் பாடவேளையின் போது கலை நிகழ்ச்சியை நடத்துகிறோம். மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக நடக்கும் அதில் சிலர் கவிதை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பாடுகின்றனர்.

நாள் இறுதியில் சிறுமி அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பாள். அவள் வேறு ஏதோ மாதிரியானவளாக, நாணம் உள்ளவளாக, சிந்தனையுள்ளவளாக மாறியிருக்கிறாள். அவளிடம் மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் மிகுந்திருக்கும்.

நாள் முடிகிறது. ஒவ்வொருவராக மாரிக்காவை நெருங்கி, மீண்டும் புன்முறுவல் பூத்து, வாழ்த்துக் கூறி விடைபெறுகின்றனர். வீட்டிற்குச் சென்று தம் மகிழ்ச்சியை உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்ள அவள் அவசரப்படுகிறாள்.

மாரிக்காவின் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாடினோம்.

“அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனின் பிறந்த நாளையும் இதே போல் கொண்டாட நான் சமீபத்தில் திட்டமிட்டிருந்தேன். அன்று அவன் விசேஷ அலங்காரத்துடன் வந்திருந்தான், எல்லோர் கவனத்தையும் கவர்ந்தான்.

“இது அயல்நாட்டுக் காலணி; இதுவும் அயல் நாட்டுக் கோட்டு! இன்று மாலை எங்கள் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். எனக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும்.”

இவ்வாறாக அவன் வகுப்புகள் துவங்கும் முன்னரே தம்பட்டம் அடிக்கத் துவங்கினான், அவனது பிறந்த நாளைப் பற்றிச் சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கும் சந்தர்ப்பத்தையே அவன் எனக்குத் தரவில்லை.

குழந்தைகளும் விசேஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. “அவனுக்கு என்ன சொல்லி வாழ்த்துவது?”

குழந்தைகள் சொன்னார்கள்: “தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியாமலிருக்கட்டும்!”

“சிறுமிகளுடன் எப்படிப் பழகுவது என்று தெரிந்து கொள்ளட்டும்!”

“புத்திசாலியாகட்டும்!”

“அவன் நாகரிகமாக நடக்கக் கற்றுக் கொண்டால் நாங்கள் அவனை விரும்புவோம்!”

“அவன் கத்துகிறான்! தன் குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துகிறான்!”

“பொய் பேசாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும்!”

இந்த வாழ்த்துகளை நான் தடுத்து நிறுத்த வேண்டிவந்தது. ஏனெனில் சிறுவன் தலையைக் குனிந்தபடி அழத் தயாரானான்.

“குழந்தைகளே, அவனுடைய மனது அன்பானது என்று எனக்குத் தெரியும், அவன் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறான். அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாருங்கள்!”

குழந்தைகள் கர ஒலி எழுப்பினர். நான் புத்தகத்தைப் பரிசளித்தேன்.

கரும்பலகையை மூடியிருந்த திரையை விலக்கி, அன்றைய பாடங்கள் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணித்து, குழந்தைகள் சற்று முன் அவன் மனதில் ஏற்படுத்திய காயத்தை சரி செய்யத் தயாரானேன். அறுவைச் சிகிச்சை மருத்துவர் “இதயத்தைத் திறந்து” காயத்தை சரி செய்ய நுண்ணிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு தயாராவதைப் போல் நான் தயாரான போது, எச்சரிக்கையின்றி கதவை ஒரு தட்டுத் தட்டி உள்ளே எட்டிப் பார்த்த அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை ஒரு நிமிடம் வகுப்பறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தாள்.

“கதவை மூடுங்கள், இப்போது பாடம் நடக்கிறது!” என்றேன் நான்.

“ஒரு நிமிடம் தான், நீங்கள் என்ன பயப்படுகின்றீர்கள்?”

குழந்தைகள் முன் தாறுமாறாக எதுவும் நடந்து விடக் கூடாதே என்பதற்காக நான் வெளியே தாழ்வாரத்திற்கு வந்தேன்.

இருதய அறுவை சிகிச்சையை துவங்குவதற்காக மேசையருகே இருக்கும் மருத்துவரை பல இனிப்புப் பண்டங்களை காட்டுவதற்காக இதுவரை யாரும் வெளியே அழைத்ததில்லை.

“இங்கே கேக் உள்ளது, எல்லோருக்கும் போதும், சாக்லேட்டுகள், பணியாரம், நாற்பது பாட்டில்கள் லெமனேட். இன்று என் மகனுக்குப் பிறந்த நாள்! குழந்தைகள் கொண்டாடட்டும்! நீங்களும் அவனிடம் அன்பாக இருங்கள்!”

“ஒன்றும் வேண்டாம்! எல்லாவற்றையும் திரும்ப எடுத்துச் செல்லுங்கள்!” என்று நான் கண்டிப்புடன் கூறுகிறேன்.

அவளோ: “பயப்படாதீர்கள், இவையெல்லாம் வீட்டில் செய்தது, ஒன்றும் ஆகாது!”

“எது எப்படியானாலும் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவதென எங்களுக்கு ஒரு முறை உள்ளது. இவையெல்லாம் இல்லாமலேயே கொண்டாடுவோம்.”

அவள்: “அநாவசியம். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும், அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நீங்களும் அவர்களுக்கு சந்தோஷம் தரத்தானே விரும்புகின்றீர்கள்! இதோ உங்கள் வகுப்புக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோஷம்!”

மணியடித்து, குழந்தைகள் அனைவரும் வகுப்பறையிலிருந்து வெளியே வந்தனர். “அதிகாரத் தொனியுள்ள அம்மா” உடனேயே அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினாள். குழந்தைகள் முன் அந்த அம்மாவுடன் சச்சரவை வளர்க்க நான் விரும்பவில்லை. குழந்தைகள் கேக், சாக்லேட் ஆகியவற்றோடு அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனுடைய பிறந்த நாளையும் “சாப்பிட்டனர்”, ஆம், அச்சிறுவனின் பாலான தம் உறவையோ, அவனைப் பற்றிய கருத்தையோ சிறிது கூட மாற்றவில்லை.

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

இதைப் பற்றி நான் நிறைய நினைக்கிறேன். அப்போது தாழ்வாரத்தில் நான் எப்படி நடந்திருக்க வேண்டும்? இன்னும் கடுமையாக, உறுதியாக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? குழந்தைகள் இனிப்புகளை வாங்கக் கூடாதென தடுத்திருக்க வேண்டுமோ? ஆனால் இப்போது இது முக்கியமல்ல, குழந்தையின் தன்மையை மேற்கொண்டு எப்படி உருவாக்குவது என்பது தான் முக்கியம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !

7

ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு திடீரென திருவள்ளுவர் பாசம் பொங்கிப் பீறிடுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை தாய் மொழியில் வெளியிட்டார். அதே நேரத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் பூசி அவர் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் பூசி சமூக வலைத்தளங்களில் அலப்பறையை ஆரம்பித்து வைத்தது தமிழக பாஜக-வின் ஐ.டி விங். பக்கவாத்தியமாக மைலாப்பூர் பார்த்தசாரதிகள் குடுமியை இழுத்துக் கட்டிவிட்டு களத்தில் இறங்கினர்.

“வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தர்ம, அர்த்த, காம, மோட்ச…  ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தான் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என தனது குறளை எழுதினார். சொல்லப் போனால் பிராமனிய விழுமியங்களின் படி திருக்குறள் எழுதப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் நிச்சயம் ஒரு பிராமனராகத் தான் இருந்திருக்க வேண்டும்” என்பது மையிலை மாமா ஒருவரின் துணிபு. மேற்படி பதிவின் பின்னூட்டங்களில் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருந்த சூத்திர சம்பத்துகளில் ஒருவர் “சாமி, காமத்துக்கு பின்னே மோட்சம் ஏன் திருக்குறளில் இல்லை?” என கேட்டு மண்டையைச் சொறிந்தது தனிக் கதை.

சமீப நாட்களாக ராஜராஜ சோழனின் பெருமை, அங்கோர்வாட் சூரியக் கோயில், தமிழின் பெருமைகள் என காக்கி டவுசர்கள் சப்பளாக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டு அலைவதை நாம் எல்லோரும் அறிவோம். இதனால் பிஜேபியின் “பி” டீமான சீமானின் திருவோட்டில் விழுந்த ஓட்டையின் விட்டம் எவ்வளவு என்பது  தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று.

நிற்க.

நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவானேன்?

***

ற்கெனவே பல மாநிலங்களிலும் தேசிய அளவிலும் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்த ஒரு உத்தியை கையிலெடுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. அதாவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பெருமையும் இந்துப் பெருமையும் வேறு வேறல்ல என இரண்டையும் முடிச்சுப் போடுவது; பின்னர் இந்துத்துவத்தை எதிர்த்தால் அதை இந்துமத எதிர்ப்பாக மடைமாற்றி அப்படியே அந்த குறிப்பிட்ட மாநிலப் பண்பாட்டுக்கு எதிரானதாக நிறுவுவது. இந்த அடிப்படையிலான முழக்கங்கள் தான் “குஜராத்தி அஸ்மிதா” மற்றும் “மராத்தி மானூஸ்” போன்ற முழக்கங்கள். இந்த வரிசையில்தான் தற்போது தமிழுக்கு பூணூல் மாட்டும் முயற்சி.

படிக்க:
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

ஒருபக்கம் தமிழுக்கு காவி வண்ணம் பூசி அதை இந்துமயமாக்குவது – பின்னர் அப்படியே இந்துத்துவ போர்வையால் மூடுவது. இன்னொரு பக்கம் இதற்கு எதிர்ப்பு வரும் திசையில் இருப்பவர்களை கேலி கிண்டல் செய்து முடக்குவது. இப்போதைக்கு பாஜக தமிழகத்தில் வகுத்திருக்கும் தேர்தல் உத்திகளுக்கு குறுக்கே நிற்பது திமுகதான். திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரியத்தில் இருந்து கணிசமாக விலகிச் சென்று விட்டாலும் தேர்தல் அரசியல் நலன் என்கிற வரம்புக்குள் நின்று பாஜக – இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொண்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகளுக்கே உரிய சமரங்கள் மற்றும்  போதாமைகள் ஒருபுறம் இருக்க தமிழகத்தைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் இந்துத்துவத்தின் நேரடி வெற்றியை தாமதப்படுத்தும் காரணிகளில் பிரதானமாக திமுக இருக்கிறது.

காங்கிரசு மற்றும் ராகுல் காந்தியை கையாள தேசிய அளவில் பாஜக எந்த ஆயுதத்தை பயன்படுத்தியதோ அதே அயுதத்தை திமுக மற்றும் முக ஸ்டாலினை நோக்கி நீட்டியுள்ளது. முதலில் திமுக என்கிற கட்சியின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பது – இரண்டாவது அதன் தலைவரை காமெடியன் போல காட்டுவது – மூன்றாவது கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் திமுக ஏற்படுத்தி வைத்துள்ள அடையாளங்களை கைப்பற்றுவது.

இதில் முதல் அம்சமாக திமுக-வின் மேல் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்த பல்லாண்டுகளாக பார்ப்பன லாபி திமுகவை நோக்கி கட்டமைத்து வந்த “ஊழல் கட்சி” என்கிற பிம்பத்தை ஊதிப் பெருக்குவது. இதற்கு துணை செய்யும் விதமாகத் தான் முரசொலி பத்திரிகையின் கட்டிடம் பஞ்சமி நிலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்கிற புகார். கடந்த சில மாதங்களாக (வருடங்களாகவே) தொலைக்காட்சிகளில் நடக்கும் அனைத்து விவாதங்களும் திமுகவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யும்  விதமாகவே நடந்துள்ளன என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளையோ அரசுகளையோ நோக்கி இந்த ஊடகங்கள் சிறிய முணுமுணுப்பைக் கூட எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இரண்டாவது அம்சமாக ராகுல் காந்தியை “பப்பு” என கிண்டல் செய்ததைப் போலத் தான் முக ஸ்டாலினை கிண்டல் செய்யத் துவங்கியுள்ளனர். மூன்றாவது அம்சத்தில் தான் திருவள்ளுவர் வருகிறார். திமுகவின் அடையாளங்களில் முக்கியமானது அந்தக் கட்சியின் மீது இருக்கும் தமிழ் அடையாளம் – குறிப்பாக திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு கன்யாகுமரியில் கற்சிலை, வள்ளுவர் கோட்டம், பேருந்துகளில் திருக்குறள், கலைஞர் எழுதிய குறளோவியம் என தமிழ்சார்ந்த (குறிப்பாக திருக்குறள் சார்ந்த) கலாச்சார அடையாளங்களை திமுக நிறுவியுள்ளது. இந்த அடிப்படைகளை தகர்ப்பதன் மூலம் திமுகவை பலகீனப்படுத்துவது அந்த இடைவெளியில் தமிழகத்தின் அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றுவது என்பதுதான் பாஜகவின் வியூகம்.

***

தேர்தல்களை மைக்ரோ அளவிலும் மேக்ரோ அளவிலும் அணுகி வியூகம் வகுப்பது; அதில்  வெற்றி பெறுவது என்பதில் பாஜகவுக்கு நிகரான கட்சி இன்றைய தேதியில் இந்தியாவில் இல்லை. வரலாற்றுரீதியில் இந்துத்துவ அரசியல் நுழையவே முடியாது என்று நம்பப்பட்ட மாநிலங்கள், பிரதேசங்களில் எல்லாம் பாரதிய ஜனதா வெற்றிகரமாக நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு சவாலான மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் நிற்கின்றன கேரளமும், தமிழகமும். இதில் குறிப்பாக தமிழகத்தின் மீது பாஜகவுக்கும் அதன் மூளையாகச் செயல்படும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் தீராத ஆத்திரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
♦ #GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

வடக்கில் பாரதிய ஜனதா பரீட்சித்துப் பார்த்த இந்த உத்திகள் தமிழகத்தில் செல்லுபடியாகுமா?

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றம்ச அணுகுமுறையில் ஒவ்வொன்றிலும் பாரதிய ஜனதா கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. முதலில் திமுகவை ஊழல் கட்சியாக காட்டி மக்களின் அவநம்பிக்கையை அக்கட்சியின் மீது திருப்பும் முயற்சிக்கு முதல் தடையாக இருப்பது இங்கு நடக்கும் அதிமுக ஆட்சி. கடந்த ஒன்பதாண்டுகளாக மாநில நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் அதிமுகவின் ஆட்சி ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் என மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.

முரசொலி அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலமா இல்லையா என்பதைப் பொறுத்தவரை சாதாரண மக்களின் கேள்வி “அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளில் அறிக்கை மட்டும் விடுவது ஏன்?” என்பதாகத்தான் உள்ளது.

ஸ்டாலினை கேலிக்குரியவராக காட்டும் உத்தியின் விளைவாக அவர்கள் எதிர்பார்ப்பது “நம்பிக்கைக்குரிய மாற்று யாரும் இல்லை” (TINA – There Is No Alternative) என்பதை நிறுவுவதே. தேசிய அளவில் மோடி Vs ராகுல் காந்தி என்கிற தெரிவுகள் மக்கள் முன் இருந்த நிலையில் ராகுலை “பப்பு” என கிண்டல் செய்தது பாஜகவுக்கு நல்ல பலனைக் கொடுத்தது – இதற்கு முக்கிய காரணம் ராகுலுக்கு எதிரே நின்றது நரேந்திர மோடி.

மக்களை சிந்திக்கவிடாத வகையில் பேசுவது, சவடால், கண்ணீர் காட்சிகள் என பிரச்சார மேடைகளில் மோடி நடத்திய நாடகங்கள் ஒருபுறம் என்றால், “சின்ன வயதில் முதலையைப் பிடித்து விளையாடிய வீரன், ராஜாவீட்டு கன்றுக்குட்டி ராகுலை எதிர்க்கும் எளிய டீக்கடைக்காரரின் மகன்” போன்ற பிம்பங்களை ஊடகங்களின் உதவியோடு பல ஆண்டுகால முயற்சியில் கட்டமைத்திருந்தது பாஜக. “மோடி என்கிற விண்ணை முட்டும் ஒரு ஆளுமையை எதிர்க்கும் ராகுல் என்கிற கற்றுக்குட்டி” என்ற இந்த உத்தி மிகச் சிறப்பாக பலனளித்தது.

ஆனால், தமிழகத்தின் நிலை வேறு. கலைஞர் அளவுக்கு மு.க. ஸ்டாலின் பேச்சாற்றல் இல்லாதவர் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை திமுகவுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளிலும் அவ்வாறான பேச்சாளர்கள் இல்லை என்பது. பழனிச்சாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தையே கரைத்துக் குடித்த அறிவாளி என்றாலும் சேர்ந்தாற் போல் நான்கு வரிகளை பேசும் ஆற்றல் அவருக்கு இல்லை.

தர்மயுத்த்தம் தோற்ற அன்றே ஓபிஎஸ்-ன் பிம்பமும் தகர்ந்தது. இவர்களைத் தவிர்த்து பார்த்தால், ஜெயக்குமார் போன்றோர்தான் உள்ளனர். தன்னை விட கட்சியில் எவனும் / எவளும் அறிவாளியாக இருந்து விடக்கூடாது என்கிற புரட்சித் தலைவி அம்மாவின் கொள்கையின் வளர்க்கப்பட்ட இயக்கம் என்பதால் அண்ணா திமுக மேலிருந்து கீழ் வரை செல்லூர் ராஜூக்களால் நிரம்பி உள்ளது.

பாரதிய ஜனதா தானே நேரடியாக ஹெச்.ராஜா, நாராயணன், எஸ்.ஆர் சேகர் உள்ளிட்ட தன்னுடைய ஆளுமைகளை தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி விடலாம். ஆனால், அப்படி மட்டும் நடந்து விட்டால் திமுக பிரச்சாரத்திற்கே போகாமல் வென்று விடும் – தன்னைப் பற்றிய இந்த உண்மை பாஜகவுக்கும் தெரியும். இப்போதைக்கு ரஜினியை நம்பிக் கொண்டுள்ளனர். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ரஜினியின் வாயைத் தைத்து மண்டையின் இருபுறமும் மிச்சமிருக்கும் முடியைக் கோதுவதோடு நிறுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். மீறி ரஜினி வாயைத் திறந்து பேசி விட்டால் திமுகவுக்கு பிடி கிடைத்து விடும் – ரஜியைப் பற்றிய இந்த உண்மையும் பாஜகவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இறுதி அம்சமாக வருகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு பட்டையும் கொட்டையும் சாட்டியாகி விட்டது – ஆனால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற குறளின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பிறப்பினடிப்படையில் வேற்றுமை பாராட்டும் இந்துத்துவத்தை கைவிட வேண்டியிருக்கும். இந்துத்துவம் தமிழை வரித்துக் கொள்வதை அரசியல் உத்தியாக கையில் எடுத்தால் இந்தித் திணிப்பையும் சமஸ்கிருதமயமாக்களையும் கைவிட வேண்டி வரும்.

எனினும் ஒரு குறைந்தபட்ச அளவில் “திருவள்ளுவர் ஒரு துறவி”, “தமிழின் பெருமை அதன் பக்தி இலக்கியங்கள்” என ஜல்லி அடிக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது. ஆழ்ந்த வாசிப்பறிவற்ற இளம் தலைமுறையினரில் ஒரு சிறிய பிரிவினர் இதற்கு பலியாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை வெறுமனே திமுக எதிர்கொள்ளும் சவால் என்று மட்டும் குறுக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழகம் பல நூற்றாண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வந்த ஒரு சகிப்புத் தன்மை மற்றும் மனிதநேயத்தை வேரறுக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதை முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துத்துவ பாசிஸ்டுகள் நம் கலாச்சாரத்தை கைப்பற்ற வருகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் சில கேள்விகள் உண்டு.

  • வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
  • திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
  • கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
  • சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
  • தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
  • உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
  • சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
  • தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
  • இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
  • தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.


சாக்கியன்

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 07.11.2019

பத்திரிகை செய்தி

  • மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையாக நடத்துக!
  • யாரை நியமிக்க சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுகின்றன?
  • முந்தைய துணைவேந்தர் திரு. செல்லத்துரை காலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

1. கடந்த 31.05.2019 அன்று வெளியான அறிவிப்பின்படி மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கான விண்ணப்பங்கள் 21.06.2019-க்குள் அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் படிவத்தில் தங்கள் மீது குற்ற/துறை ரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் இல்லை என விண்ணப்பதாரர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலிக்கக் குழு அமைக்கப்பட்டு 25.07.2019 அன்று 20 பேராசிரியர்கள் நேர்காணலுக்கு வரத் தகுதியானவர்கள் எனப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலே குளறுபடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. Dr.Paul Mary Deborrah என்பவர் பெயர் இருமுறை(1,7) இறுதி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் திரு.ஓ.ரவி மற்றும் கர்ணமகாராஜன் ஆகியோர் “தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டுள்ளனர்” (Provisionally Shortlisted) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகச் சட்டப்படி தற்காலிகமாக இறுதி செய்தல் சட்டவிரோதம்.

மேலும் பல்கலைக் கழகத் தேர்வாணையர் திரு.ஓ.ரவி மீது துறைரீதியான நடவடிக்கையும், ரூபாய் 40 லட்சம் அரசுப் பணத்தை மோசடி செய்ததாக கு.எண்.09/2017 என்ற கிரிமினல் வழக்கு 21.06.2019-ல் உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் நிலுவையிலிருந்தது. பேராசிரியர் திரு.கர்ணமகாராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தது. சட்டப்படி இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கப்பட்டு, இவர்களில் திரு.ஓ.ரவி மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்குரிய காரணத்தை துணைவேந்தர் விளக்க வேண்டும்.

2. செப் 23, 2019 அன்று பதிவாளர் நேர்காணல் (Interview) என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காரணம் அறிவிக்கப்படவில்லை. 23.09.2019 அன்று நடந்த பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் அரசின் பிரதிநிகளை நேர்காணல் குழுவில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிண்டிகேட் உறுப்பினர்களின் எதிர்ப்பால் நேர்காணல் குழு உறுப்பினர்கள் குறித்த அஜண்டா (Item no.65) ஒத்திவைக்கப்பட்டது.

3. உச்சகட்ட விதிமீறலாக MKU ACT-CHAPTER VI- SEC.1-ன்படி நேர்காணல் குழுவை சிண்டிகேட் இறுதி செய்யாமலே, நவம்பர் 7, 2019 அன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதனை சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்த்ததால் இன்று நடைபெற இருந்த நேர்காணலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ரத்து செய்யப்பட்டது.

4. மேற்கண்ட நடைமுறைகள் துணைவேந்தருக்கோ, அதிமுக அமைச்சர்களுக்கோ வேண்டிய நபரை பதிவாளராக்குவதற்கான வேலைகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இதற்கு துணைவேந்தர் விளக்கமளிக்க வேண்டும்.

படிக்க:
கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
♦ காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

துணைவேந்தரின் செயல்பாடுகள் பல்கலைக் கழகத்தை மேம்படுத்துமா?

02.01.2019 அன்று பொறுப்பேற்ற துணைவேந்தர் திரு.கிருஷ்ணன், பத்து மாதங்களை  நிறைவு செய்துள்ளார். பல்கலைக் கழகத்தில் நிலவிவரும் முறைகேடுகளை அகற்றுவதே தனது முக்கியப் பணி என்றார். இன்று நிலைமை என்ன?

1. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்மலாதேவி பிரச்சனையில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்பும், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, குழு கூட அமைக்காததேன்?

2. செனட், சிண்டிகேட்டிற்கான Academic council- தேர்தல்கள் நடத்தப்படாதது ஏன்?

3. பல்கலைக் கழக சட்டப்படி உதவிப் பதிவாளர் தகுதியில் உள்ள ஒருவரே, பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள அறிவழகன் என்பவர் தனது அரசியல் செல்வாக்கால் தொடர்ந்து 5 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். துணைவேந்தர் மவுனம் காப்பதேன்?

4. நிர்மலாதேவி பிரச்சனையில் விசாரிக்கப்பட்ட பேராசிரியர் கலைச்செல்வன், தற்காலிகப் பதிவாளர் பேராசிரியர் சுதா, பல்கலை ஊழியரை மிகவும் தரக்குறைவாகப்பேசி மிரட்டியது தொடர்பாக பதிவாளர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஏன்? பதிவாளர் நிலைமையே இதுதான் என்றால் நிர்வாகம் எப்படி நடக்கும்?

மேற்கண்ட கேள்விகளுக்கு துணைவேந்தர் உரிய விளக்கமளித்து அறிக்கை வெளியிட வேண்டும். 31.05.2019 தேதிய பதிவாளர் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து, புதிதாக வெளியிட வேண்டும். தேர்வுமுறை, தேர்வு நடவடிக்கைகள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். பல்கலைக் கழக சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
முகவரி:384, முதல் தளம்,
கிழக்கு 8-வது தெரு,
கே.கே.நகர், மதுரை-20.  
தொடர்புக்கு : 98653 48163.

வழக்கறிஞர் சே. வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

பேரா.அ. சீனிவாசன்,
தலைவர்

ம. லயனல் அந்தோணிராஜ்,
செயலர், மதுரைக் கிளை

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள் : பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

ருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டிருப்பதை ஆதரிக்கும் அனைவரும், “தகுதி இல்லாதவர்கள்” மருத்துவர் ஆவதைத் தடுப்பதற்காகத்தான் தேசிய அளவிலான ஒரே தேர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அத்தகுதித்  தேர்வின் நோக்கம் பொருளாதாரரீதியாகவும், சாதிரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் –  கவனிக்க, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் பின்தங்கியவர்கள் அல்ல –  மருத்துவர் ஆவதைத் தடுப்பதுதான் என்பது நீட் அமலுக்கு வந்த அதே ஆண்டில் நடந்த அனிதாவின் தற்கொலை மூலம் அம்பலமானது.

வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு ஒரே தேர்வுமுறை அநீதியானது என ரத்தத்தால் எழுதிப் போராடும் மாணவர்கள். (கோப்புப் படம்)

நீட் தேர்வு முறை அதன் தன்மையிலேயே ஒருதலைபட்சமானது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி மாநிலப் பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படுவது; நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துத் தயாரிக்கப்படுவது; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் அவ்வினாத்தாள் வழங்கப்பட்டாலும், அவற்றில் ஏதாவது தவறுகள் நேர்ந்தால் ஆங்கில வினாத்தாள்தான் இறுதியானது என நியாயத்திற்குப் புறம்பான முறையில் மட்டையடியாக ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு +2 மதிப்பெண்களைக் கணக்கிலே கொள்ளாமல், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை மட்டுமே தகுதியாகக் கொண்டிருப்பது ஆகிய இவை அனைத்துமே இத்தேர்வு முறையின் ஓரவஞ்சனையை எடுத்துக்காட்டுகின்றன.

இவை காரணமாக அத்தேர்வு, அதன் இயல்பிலேயே அரசுப் பள்ளிகளில், அதுவும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு எதிராக அமைகிறது.  மேலும், தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கில் வழியில் பயிலும் மாணவர்கள்கூட நீட் தேர்வு எழுதுவதற்குத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுவதைக் கட்டாயமாக்கி, +2 பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.

படிக்க:
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து ! 

இத்தனியார் பயிற்சிப் பள்ளிகளும்கூட ஒருபடித்தானவை கிடையாது. பத்தாயிரம், இருபதாயிரம் கட்டணம் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. இலட்சக்கணக்கில் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. மேலும், இத்தனிப் பயிற்சிப் பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளை எடுத்துக்கொண்டால், அவை ஒரு வருட பயிற்சித் திட்டம், இரண்டு வருட பயிற்சித் திட்டம், எட்டாம் வகுப்பு தொடங்கியே நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டம் என காசுக்குத் தக்கபடி விதவிதமாக உள்ளன.

நீட் தேர்வு வந்த பிறகு அத்தேர்வை மூன்று முறை எழுதவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருப்பதால், +2 முடித்த பிறகும்கூட ஓரிரு ஆண்டுகள் நீட் தேர்வுக்காகத் தனிப் பயிற்சி எடுத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு பொருளாதார வசதி படைத்த மாணவர்களுக்குக் கிட்டியிருக்கிறது.

ஏழை மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் தமது பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புக்களையும் அரசு நடத்தும் தனிப் பயிற்சி வகுப்புக்களையும்தான் நீட் தேர்வு எழுதுவதற்கு நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களால் நீட் கோச்சிங்கிற்காக பல பத்தாயிரக் கணக்கில் பணம் செலவு செய்யக்கூடிய பணக்கார மாணவர்களோடு எப்படிப் போட்டியிட முடியும்?

ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித் சூர்யா (இடது) மற்றும் இர்ஃபான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுள் பெரும்பாலோர் ஆதிக்க சாதியினராகவும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினராகவும் இருப்பது எதார்த்தமான உண்மை. அது போல சாதிரீதியாகவும் பொருளாதார ரீதியாவும் பின்தங்கிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். எனவே, நீட் தேர்வு அதன் தன்மையிலேயே அடித்தட்டு வர்க்கத்தினரைப் புறக்கணிப்பதாகவும், உயர்சாதி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குச் சாதகமாகவும் அமைகிறது. மேலும். இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளிலும் கூடப் பத்தாயிரக் கணக்கில் பணம் செலவழித்துத் தனிப்பயிற்சிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள்தான் மருத்துவராகும் கனவைக்கூடக் காண முடியும்.

இவை ஒருபுறமிருக்க, மிக மிக வசதியான குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வாரிசுகள் நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்திருந்தாலே போதும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் அல்லது தனியார் மருத்துவப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பல இலட்சங்களை வீசியெறிந்து இடத்தைப் பிடித்துவிட முடியும்.

ஆகவே, நீட் தேர்வு எதிர்பார்க்கும் தகுதி என்பது பிரதானமாகப் பணம்தான். தற்பொழுது தமிழகத்தில் அம்பலமாகியிருக்கும் ஆள் மாறாட்டங்கள், பாதாளம் வரை பாயக்கூடிய பணபலத்தின் முன் நீட் தேர்வெல்லாம் சப்பை மேட்டர் என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும், நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசியத் தேர்வு முகமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அமைப்பும் இம்மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் தோற்றுப்போய்விட்டது.

♦ ♦ ♦

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, இர்ஃபான், ராகுல், பிரவீன், பிரியங்கா ஆகிய ஐந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இம்மாணவர்களுள் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; மற்ற மூன்று பேர் வெவ்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆள் மாறாட்டத்தின் மூலம் சேர்ந்து படித்து வந்தனர்.

உதித் சூர்யாவிற்குப் பதில் வேறொரு நபர் நீட் தேர்விலும், மருத்துவக் கலந்தாய்விலும், பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கையின் போதும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் உதித்சூர்யாவினுடையது. கல்லூரி தொடங்கிய பிறகு உதித்சூர்யா வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

மாணவிகளின் துப்பட்டாவையும், கொண்டை ஊசியையும் கூட பிடுங்கிக் கொண்டு ‘கடுமையாகச் சோதித்த’ நீட் தேர்வு அதிகாரிகள். பேனைத் தேடி பொருச்சாளியை விட்ட கதை.

பிரவீனும் ராகுலும் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அதேசமயத்தில், அவர்களது பெயர் மற்றும் முகவரியில் போலி நபர்களும் வடநாட்டு மையங்களில் அவர்களுக்காகத் தேர்வு எழுதியிருக்கிறார்கள். பிரவீனும் ராகுலும் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அவர்கள் இருவரும் போலியான நபர்கள் எடுத்த அதிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தித் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் கண்காணிப்பு, கெடுபிடிகள் நடத்தப்படும்போது, வடநாட்டு மையங்களில் ஆள்மாற்றாட்டம் சர்வசாதாரணமாக நடைபெற்றிருக்கிறது. தமிழகம் மைய அரசால் ஓரவஞ்சனையாகவும் சந்தேகக் கண்ணோடும் நடத்தப்படுகிறது என்பதை இந்தப் பாரபட்சமான அணுகுமுறை நிரூபிக்கிறது.

படிக்க:
நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

இந்த ஆள்மாறாட்டத்தை நீட் தேர்வை நடத்தும் அதிகாரம் கொண்ட தேசியத் தேர்வு முகமையோ, மருத்துவ மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்கக்கூடிய இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட வேறு அதிகார அமைப்புக்களோ கண்டுபிடிக்கவில்லை. மேலும், அரசு நடத்தும் கலந்தாய்வு உள்ளிட்ட இடங்களிலும் இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக, படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவனான உதித் சூர்யா பற்றிய விவரங்கள் சமூக ஊடகம் வழியாகக் கசிந்து வெளியில் வர, அதன் பிறகுதான் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமானது.

♦ ♦ ♦

திகார வர்க்கத்திற்கு இலஞ்சம் கொடுத்து போலியான இருப்பிடச் சான்றிதழைப் பெற்று தமிழகத்தைச் சேராத 150 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாகியிருக்கிறது. மேலும், இம்மோசடியில் ஈடுபட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இந்த ஐந்து பேர் மட்டும்தானா,  மற்ற மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடைபெற்றிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஏனென்றால், இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் பீகாரைச் சேர்ந்த நிதிவர்மன் என்ற இரண்டு மாணவர்கள் போலியான மாணவர் சேர்க்கைச் சான்றிதழ் கொடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்று பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தில்லியில் உள்ள கும்பல் ஒன்றிடம் பணம் கொடுத்து இந்தப் போலிச் சான்றிதழ்களை வாங்கியதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

போலி சேர்க்கைச் சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ், ஆள் மாறாட்டங்கள் என்பவையெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆள் மாறாட்டங்களில் ஈடுபட்டு நீட் தேர்வை எழுதிய நபர்கள் கேரளாவையும் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உதித் சூர்யாவும் இர்ஃபானும் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்ற சென்னை அண்ணா நகரிலுள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டருக்கும் இம்மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தமிழக போலீசு கூறியிருக்கிறது.

இந்த ஆள் மாறாட்ட மோசடிக்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் குழும அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரூபாய் ரொக்கமும் 150 கோடி ரூபாய்க்குக் கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீட் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கிரீன் பார்க் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 30 கோடி ரூபாய் பணமும், 150 கோடி ரூபாய் பெறுமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இவை ஒருபுறமிருக்க, 2017-ம் ஆண்டு ஆள்மாறாட்டம் செய்த நான்கு மாணவர்கள் கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சீதாதேவி என்ற மாணவி குறுக்கு வழியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் அம்பலமானது. 2013-ம் ஆண்டிலிருந்தே வட இந்திய மாநிலங்களில் நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஒரு கிரிமினல் கும்பல் இந்தியா முழுமைக்கும் வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டு, அதிகார வர்க்கம், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கோச்சிங் சென்டர்கள் ஆகியோரைக் கையில் போட்டுக்கொண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி வருவது தெளிவாகிறது.

தமிழக போலீசு விசாரித்து வரும் இந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கு அக்கிரிமினல் கும்பலை, அதற்குத் துணையாக நிற்கும் அதிகார வர்க்கத்தைக் கைது செய்யும் திசையில் இதுவரை நகரவில்லை. உதித் சூர்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் கீழ்மட்டத்திலுள்ள மூன்று தரகர்கள் கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த மோசடியின் சூத்திரதாரிகள் யார் என்று இதுவரையிலும் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசோ, இது மைய அரசின் பிரச்சினை என ஒதுங்கிக் கொள்கிறது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை உள்ளிட்ட மைய அரசின் நிறுவனங்களோ இம்மோசடி பற்றி வாயே திறக்க மறுக்கின்றன. இவை யாவும் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்களோடு வழக்கை முடித்துவிடுவார்களோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

♦ ♦ ♦

மோடி அரசு நீட் தேர்வைத் தமிழகத்தின் மீது திணித்தபோதே, இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலைத் தேசியமயமாக்குவதில்தான் முடியும் என அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம். அது இப்பொழுது உண்மையாகியிருக்கிறது.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வின் போது காப்பியடிக்க உதவுவது, விடைத்தாளை மாற்றுவது, தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வெளியிடுவது, போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பது எனப் பல வகைகளில் பல ஆண்டுகளாக வியாபம் முறைகேடு மத்தியப் பிரதேசத்தில் நடந்து வந்தது. அம்முறைகேட்டின் பின்னே ஒரு பெரிய மாஃபியா கும்பல் இருந்ததும், மாநில ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் என அதிகாரம் படைத்த பலருக்கும் அம்முறைகேட்டில் நெருங்கிய தொடர்பிருந்ததும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

வியாபம் ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., 2000-க்கும் அதிகமானவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்திருப்பதைத் தாண்டி, வேறெதையும் இதுவரை சாதிக்கவில்லை. இம்முறைகேடுகளை அம்பலப்படுத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்களுள் ஒருவரான ஆனந்த் ராய், “விசாரணையைத் தாமதப்படுத்துவதன் மூலம், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. முயலுகிறது” எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பு வரை சென்ற வியாபம் ஊழலின் விசாரணைக்கே இதுதான் கதி எனும்போது, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மினி வியாபம் ஊழலின் விசாரணை மட்டும் ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களையும் தாண்டி, இந்த ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் கிரிமினல் கும்பலையும் அதிகார வர்க்கத்தினரையும் தண்டித்துவிடும் என நம்புவதற்கு இடமில்லை.

இந்த ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமான பிறகு, நீட் தேர்வில் பயோ- சோதனையைப் புகுத்த வேண்டும் எனக் கோரியிருக்கிறது, தமிழக அரசு. இது கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற விவாதத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம்.

நீட் தேர்வு பலி கொண்ட மாணவிகள் அனிதா மற்றும் பிரதீபா.

இம்முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தொடங்கி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எந்தளவிற்கு அவசியமானதோ, அதனைவிடப் பலமடங்கு அவசியமானது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை. ஏனென்றால், நீட் தேர்வு அதன் தன்மையிலேயே ஏழை மாணவர்களின், தாய்மொழியில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளை முளையிலேயே நசுக்கிவிடும் ஓரவஞ்சனைமிக்கது. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் பணம் படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமானது. தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைத் தமிழகத்தைச் சேராத மாணவர்கள் குறுக்குவழியில் அபகரித்துக்கொள்ளும் அபாயமிக்கது.

மேலும், ஊழல், முறைகேடுகளால் புரையோடிப் போயிருக்கும் இந்த அமைப்பு முறை எத்தனை கண்காணிப்புகள், சோதனைகளைக் கொண்டுவந்தாலும், அதிலெல்லாம் ஓட்டைபோட்டுப் பணத்தை வீசியெறிபவர்களுக்குச் சாதகமாகச் செயல்படவே செய்யும்.

எனவே, இனியும் அனிதா போன்ற மருத்துவராகும் தகுதி படைத்த ஏழை மாணவ – மாணவிகள் நீட்டால் ஏமாற்றமடைந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றால், நீட்டை அடியோடு ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் எழ வேண்டும்.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

இந்த நாளைப் பற்றி எத்தனை எத்தனை முறைகள் அவன் கனவு கண்டிருந்தான் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04b

மெரேஸ்யெவின் விமானம் ஒரு புறம் தள்ளப்பட்டது. அது நெருப்புப் பிழம்பு ஒன்றின் அருகாகப் பாய்ந்து சென்றது. விமானத்தைச் சமநிலையில் திருப்பியவாறு மெரேஸ்யெவ் வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். அவனது பின்னோடி வெள்ளைச் சோப்பு நுரையை ஒத்த மேகப் படிவுகளுக்கு மேலே எல்லையற்ற நீல வானில் தொங்கியபடி வலப்புறமாக அவனைத் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தான். சுற்றிலும் வெறுமையாக இருந்தது. தொடுவானில் மட்டுமே, தொலைதூர மேகங்களின் பின்னணியில் நாற்புறமும் சிதறி ஓடிய “செருப்புக்காலிகள்” வரையுருக்கள் தென்பட்டன. மெரேஸ்யெவ் கடிகாரத்தைப் பார்த்தவன் ஆச்சர்யம் அடைந்தான். சண்டை குறைந்தது அரை மணி நேரம் நீடித்திருக்க வேண்டும் என்றும் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. உண்மையிலோ, எல்லாவற்றிற்கும் மூன்றறை நிமிடங்களே பிடித்திருக்கின்றன என்று கடிகாரங்கள் காட்டின.

வலப்புறம் சம மட்டத்துக்கு வந்து அருகாகப் பறந்த பின்னோடியைப் பார்த்து, “உயிரோடு இருக்கிறாயா?” என்று கேட்டான் மெரேஸ்யெவ்.

பல்வகை ஒலிகளின் குழப்பத்தினூடாக, எங்கோ தொலைவிலிருந்துபோல் ஒலித்தது வெற்றிக் குரல்.

“உயிரோடிருக்கிறேன்!… தரை… தரையில் பாருங்கள்…..”

கீழே, மிதித்துத் துவைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டிருந்த கல்லுங்கடுரடுமான பள்ளத்தாக்கில் புகைமண்டிய பெட்ரோல் நெருப்புக்கள் சில இடங்களில் மூண்டெரிந்தன. வீசாமல் அசைவற்றிருந்த காற்றில் அவற்றின் கொழும் புகை தூண்களாக எழுந்தது. ஆனால் மெரேஸ்யெவ் பகை விமானங்களின் இந்த எரியும் பிணங்களைப் பார்க்கவில்லை. போர்க்களம் அனைத்திலும் விரிவாகப் பரவி ஓடிக் கொண்டிருந்த சாம்பல் – பசுமைநிற வண்டுகளையே அவன் நோக்கினான். இரு குறுகிய பள்ளங்கள் வழியே அவை பகைவர்களின் இடங்களைத் தாக்கிப் புகுந்து விட்டன. ஜெர்மன் பீரங்கிகளின் குண்டுகள் அவற்றின் பின்னே இன்னும் வெடித்துக் கொண்டிருந்தன, எனினும் அவை ஜெர்மன் அரண்வரிசைகளைக் கடந்து மேலே முன் சென்றன.

பகைவர்களின் தகர்ந்த அரணிடங்களுக்கு உள்ளே நூற்றுக் கணக்கான இந்த டாங்கிகள் புகுந்து தாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை மெரேஸ்யெவ் புரிந்து கொண்டான்.

படிக்க:
அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்

அன்று நிகழ்ந்ததைப் பற்றி மறுநாள் சோவியத் மக்களும், விடுதலை விரும்பும் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் செய்தித்தாள்களில் படித்தனர்.

கூர்ஸ்க் பிரதேசத்தின் ஒரு பகுதியில், இரண்டு மணி நேரம் பலத்த பீரங்கித் தாக்குதலுக்குப் பிறகு சோவியத் சேனை ஜெர்மானிய அரண்வரிசையை உடைத்து எல்லாப் படைகளுக்கும் வழியைச் செப்பம் செய்தன.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரனில் இருந்த ஒன்பது விமானங்களில் இரண்டு அன்று விமான நிலையம் திரும்பவில்லை. விமானச் சண்டையில் ஒன்பது “செருப்புக் காலிகள்” சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்பதுக்கு இரண்டு என்பது விமானங்களைப் பற்றிப் பேசுகையில் சந்தேகமின்றி நல்ல கணக்குத் தான். எனினும் இரண்டு தோழர்களை இழந்தது வெற்றிக் களிப்பில் துயர நிழல் படியச் செய்தது. விமானங்களிலிருந்து வெளியே குதித்த விமானிகள் ஆரவாரிக்கவில்லை, கத்தவில்லை, சண்டையின் சிக்கல்களைப் பற்றி உற்சாகத்துடன் விவாதித்து, கடந்துவிட்ட அபாயத்தை மீண்டும் அனுபவித்தவாறு கைகளை வீசி ஆட்டவில்லை. வெற்றிகரமான சண்டைக்குப் பின் வழக்கமாகச் செய்யும் இந்தக் காரியங்களை அன்று அவர்கள் செய்யவில்லை. அலுவலகத் தலைவரைச் சுளித்த முகங்களுடன் அணுகி, விளைவுகள் பற்றிய வரையறுத்த, சுருக்கமான தகவலைக் கொடுத்துவிட்டு ஒருவரை ஒருவர் நேரிட்டு நோக்காமலே பிரிந்து சென்றார்கள்.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ரெஜிமென்டுக்குப் புதியவன். கொல்லப்பட்டவர்களின் முகங்கள் கூட அவனுக்குப் பழக்கமில்லை. எனினும் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த சோகம் அவனையும் தொற்றிக் கொண்டது. எதற்காகத் தனது சித்தவுறுதி முழுவதையும் மனோபலம் அனைத்தையும் ஈடுபடுத்தி முயன்றானோ, அவனது வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான அந்த நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. அவனது அடுத்துவரும் வாழ்க்கை முழுவதையும் நிர்ணயிப்பது இந்த நிகழ்ச்சி, உடல் நலமுள்ள முழு மதிப்பு வாய்ந்த மனிதர்களின் அணிகளில் அவன் மீண்டும் சேரப் புரிவது. மருத்துவமனைக் கட்டிலிலும், பிறகு நடக்கவும் நடனமாடவும் கற்றுக்கொள்ளும் போதும், இழந்துவிட்ட விமானமோட்டும் தேர்ச்சியை விடாப்பிடியான பயிற்சிகளால் மீண்டும் பெற்ற போதும் எத்தனை எத்தனை முறைகள் அவன் இந்த நாளைப் பற்றிக் கனவு கண்டிருந்தான்! இப்போது, அந்த நாள் வந்துவிட்டது. இரண்டு ஜெர்மன் விமானங்கள் அவனால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சமஉரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான். அவன் எல்லோரையும் போலவே அலுவலகத் தலைவரை அணுகி, தான் வீழ்த்திய விமானங்களின் எண்ணிக்கையைக் கூறி, நிலைமைகளை விவரித்து, பெத்ரோவைப் புகழ்ந்து விட்டு அப்பால் போய், அன்று திரும்பாத விமானிகளைப் பற்றிச் சிந்தித்தவாறு பிர்ச் மரப்பந்தரின் கீழ் நின்றான்.

பெத்ரோவ் மட்டுமே தலைக்காப்பு இன்றி, வெளிர் முடிகள் கலைந்து பறக்க, விமானத் திடலில் ஓடி, வழியில் எதிர்ப்பட்டவர்கள் எல்லாருடைய கைகளையும் பற்றிக் குலுக்கி, விமானச் சண்டையை விவரிக்கலானானன்:

“..பார்க்கிறேனோ, பகை விமானங்கள் பக்கத்தில் வந்து விட்டன., கையை நீட்டினால் பிடித்துவிடலாம் போல! கேளு…. பார்த்தேன்: சீனியர் லெப்டினன்ட் முன் விமானத்தைக் குறிவைத்துத் தாக்கிவிட்டார். நான் பக்கத்து விமானத்தைக் குறிவைத்தேன். ஒரே அடி, விமானம் கயா!”

அவன் மெரேஸ்யெவிடம் ஓடி அவன் காலருகே மென்மையான புல்லடர்ந்த பாசி மீது விழுந்து கால்களை நீட்டிக் கொண்டான். இந்த அமைதியான கிடை அவனுக்குச் சகிக்கவில்லை. எனவே உடனே துள்ளி எழுந்தான்.

“நீங்கள் தாம் இன்று எப்பேர்பட்ட வளையங்கள் இட்டீர்கள்! வெகு நேர்த்தி! என் கண்கள் அப்படியே இருண்டு விட்டன….. ஜெர்மன்காரனை இன்று எப்படி அடித்து வீழ்த்தினேன் தெரியுமா? கேளுங்கள்…. உங்கள் பின்னாலேயே பறந்தவன் திடீரென்றுப் பார்த்தேன், அவன் கிட்டே வந்துவிட்டான், கையை நீட்டித் தொட்டுவிடலாம் போல. இதோ, நீங்கள் நிற்கிறீர்களே, இதே மாதிரி…. ”

அலெக்ஸேய் தன் சட்டைப் பைகளைத் தட்டிப் பார்த்தவாறு அவன் பேச்சை இடை முறித்தான்: “பொறு, தம்பி. கடிதங்கள், கடிதங்கள்… அவற்றை எங்கே வைத்துவிட்டேன்?”

தனக்கு அன்று கிடைத்த, தான் இன்னும் படிக்காத கடிதங்களை அவன் நினைவு கூர்ந்தான். பைகளில் அவற்றைக் காணாமையால் அவனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அப்புறம் சட்டைக்குள் மார்பின் மீது சரசரத்த உறைகளைத் தொட்டுணர்ந்து அவன் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டான். ஓல்காவின் கடிதத்தை எடுத்து, பிர்ச் மரத் தடியில் உட்கார்ந்து, வெற்றிக் கிளர்ச்சி கொண்ட தன் நண்பனின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உறையை ஜாக்கிரதையாகப் பிரிக்கலானான்.

அந்தச் சமயத்தில் வாணக்குழல் டப் பென உரக்க ஒலித்தது. சிவப்புப் பொறிகள் சிந்திய பாம்பு விமானத் திடலுக்கு மேலே வானில் நெளிந்து சென்று, மெதுவாகக் கலைந்து சிதறிய சாம்பல் தடத்தை விட்டுவிட்டு அணைந்தது. விமானிகள் துள்ளி எழுந்தார்கள். போகிற போக்கிலேயே அலெக்ஸேய் கடித உறையைச் சட்டைக்குள் மார்பருகேச் செருகிக் கொண்டான். கடிதத்தின் ஒரு வரியைக் கூட படிக்க அவனுக்கு வாய்க்கவில்லை. உறையைப் பிரித்த போது அதற்குள் காகிதங்கள் தவிர ஏதோ கடினமான ஒன்றும் அவனுக்கு தட்டுப்பட்டது. ஏற்கனவே பழக்கமாகிவிட்ட வழியில் அணிக்கு முன்னே பறந்தவாறு அவன் அவ்வப்போது உறையைத் தொட்டுப் பார்த்தான். அதில் என்ன இருந்தது?

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

ண்மைக் காலத்தில் பார்ப்பனியமானது வள்ளுவரை இந்துத்துவாவிற்குள் உள்வாங்கும் முயற்சியில்  முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரதீய சனதா கட்சியானது  காவி உடையுடனும், பட்டைப் பூச்சுடனும் வள்ளுவரின் உருவத்தினையே மாற்றி வெளியிட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பனியமானது நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் ஒரு முறை ஒன்றுள்ளது. அதாவது தன்னால் எதிர்த்து நின்று அழிக்க முடியாத ஒன்றினை உள்வாங்கி அழிப்பது என்பதே அந்த முறையாகும். இதனை அவர்கள் தங்களது புராணங்களிற்கேற்ப ‘திருராட்டிர ஆலிங்கனம்’ என்பார்கள் {போரில் தோற்கடிக்க முடியாத வீமனைத் துரியோதனின் தந்தையான திருராட்டிரன்  ஆசி வழங்குவது போல அணைத்துக் கொல்ல முயன்ற கதை}. இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் என்பதனையே வள்ளுவன் பின்வரும் குறளில் கூறியிருப்பார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.  –குறள் 828

இன்றைக்குத் திருக்குறளைத் தனதாக்கும் முயற்சியிலீடுபடும் பார்ப்பனியமானது கடந்த காலத்தில் எவ்வாறு எல்லாம் திருக்குறளை எதிர்த்து வந்துள்ளது எனப் பார்ப்போம்.

திருக்குறளை காலகாலமாக எதிர்த்துவந்த பார்ப்பனியம் :

அண்மையில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் எச்.ராஜா திருக்குறளினை மேற்கோள் காட்டி, குறளானது ஒரு வைதீக நூலாகும் எனக் கூறியிருந்தார்.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.’ (குறள் 3)

என்ற குறளில் வள்ளுவன் வீடு பேறு (மோட்சம்) பற்றிப் பேசியிருப்பதால், இது ஒரு இந்து நூலாகும் என்கின்றார். இதற்கான பதிலாக  இந்துக்களின் உலகக்குருவான (ஜகத் குரு) சங்கராச்சாரியாரது (சந்திரசேகரேந்திர சரசுவதி) முன்பொரு முறை கூறிய  கூற்றினையே பதிலாகக் கொடுக்கலாம்.

“திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன.  வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாது” என்கின்றார்.  இதோ உலகக்குருவே ‘திருக்குறள் வீடுபேறு பற்றிப் பேசவில்லை’ என்று கூறிவிட்டார்.  இது தெரியாமல் எச்.ராஜா ஏதோ கதை விடுகின்றார்.

சங்கராச்சாரியார் தனது திருக்குறள் மீதான வெறுப்பினை இதனுடன் நிறுத்தவில்லை. கீழுள்ள ஆண்டாள் பாடலைக் கேள்விப் பட்டிருக்கலாம்.  திருப்பாவையின் இரண்டாவது பாடல், ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காளே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குரலை சென்றோதோம்

இப் பாடலின் இறுதி வரியான ‘தீக்குரலை சென்றோதோம்’ என்ற வரிகளின் பொருள் ‘கோள் (தீக்குரல்) சொல்ல மாட்டோம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இதனை மாற்றித் ‘தீக்குறளை (தீய குறளான திருக்குறளை)’ ஒதோம் என ஆண்டாள் குறிப்பிட்டதாகப் பொய் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

படிக்க:
கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இவ்வாறான ஒரு புரட்டினை சங்கராச்சாரியார் ஆத்திசூடியிலும் செய்துள்ளார்.  ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ , ‘ஆறுவது சினம்’  என அ, ஆ, இ… என எழுத்துவரிசையில் இடம்பெறும்.

இந்த எழுத்து வரிசையில் ய, ர, ல, வ –க்கு

இயல்பு அலாதன செய்யேல்’

அரவம் ஆட்டேல்’

இலவம் பஞ்சில் துயில்’

வஞ்சகம் பேசேல்’

வரிகள் வந்துவிட்டன (ட,ண .. போன்ற எழுத்துகள் முதலெழுத்தா வராத போது, இரண்டாம் எழுத்தா வரும்).

அடுத்த எழுத்து ‘ற’. இது (ற) முதல் எழுத்தாக வரமுடியாது என்பதால் இரண்டாம் எழுத்தாகவே வரும்.

‘அறனை மறவேல்’ என்பதே எழுத்துவரிசைப்படி சரியாக அமையும்.

அறனை மறவேல் = அறம் (Ethics) மறக்காதே!

இங்குதான் சங்கராச்சாரியார் புகுந்து விளையாடினார். ‘ற’ வினை ‘ர’ ஆக மாற்றி, “அறன்” -> “அரன்” எனக் கடவுளாக மாற்றிவிட்டார். இவரது தில்லுமுள்ளினை அடுத்த வரியான ‘அனந்தல் ஆடேல்’ (ன) காட்டிக்கொடுத்துவிட்டது.  இவ்வாறு மதத்தின் பெயரால் பல தமிழ்க்கொலைகள் நடந்துள்ளன. இலக்கணப்படி ‘அறனை மறவேல்’ என்பதே சரியானது என வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெய்வத்தின்_குரல் முன்னால் தமிழ் எல்லாம் எடுபடவில்லை.

‘திருக்குறள் வைத்திருக்கும் வீடு உருப்படாது’ என்றொரு புரளியும் இவர்களால் பரப்பப்பட்டது. திருக்குறளில் முதல் பத்துக் குறள்கள் மட்டுமே படிக்கக்கூடியவை என்றும், ஏனையவை எல்லாம் கவர்ச்சி மிகு திரைப்படங்கள் போலானவை (காமத்துப் பால் குறித்து) என்றெல்லாம் காலத்திற்கு காலம் சங்கராச்சாரியார் குறள் மீது குறை பட்டுக்கொண்டே வந்துள்ளார்.  இத்தகைய பார்ப்பனர்களின் முந்திய கால ஒவ்வாமையே திருக்குறள் ஒரு வைதீக நூலன்று என்பதனைத் தெளிவாக்கும்.

திருக்குறளிற்கான பொய் விளக்கவுரைகள் :

வைதீக மதத்தினர் ஒரு புறத்தே திருக்குறளினை எதிர்த்துக் கொண்டே, மறுபுறம் குறளிற்கான வைதீகம் சார் பொய் உரைகளை எழுதிக்கொண்டுமிருந்தார்கள். கடவுள் வாழ்த்து எனப் பின்நாளில் பெயரிடப்பட்ட முதல் பத்துக் குறள்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தவும் முனைந்தார்கள். இது பற்றி ஏற்கனவே வினவுத் தளத்தில் நான் ஒரு கட்டுரை  (திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம்: பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) எழுதியுள்ளதால் அதனைக் கடந்து விடுகின்றேன்.

அவற்றினை விட ‘வாமண அவதாரம்’ பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என்கின்றார்கள். எங்கே எனப் பார்த்தால் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”- (610)

இதில் எங்கே வாமண அவதாரம். ‘அடி அளந்தான்’ என்றாலே வாமண அவதாரமா?  எனது  பாட்டி முன்பு,  நான் சிறுவனாகவிருக்கும் போது அருகிலிருக்கும் கடையில் போய் பொருட்களை வாங்கி வா என்பதனை ‘ஒரு நாலடி நடந்து வாங்கிட்டு வா’ என்பார். நல்லவேளை இதனையே 4 இற்குப் பதில் 3 அடி எனக் கூறியிருந்தால், அதனையும் வாமண அவதாரம் எனப் பொருள் கொண்டிருப்பார்கள். மன்னன் திருமாலின் மூன்றடி போல உலகினையே பெறுவான் எனில் இரண்டாவது அடியாகத் திருமால் வானிலே கால் வைத்த மாதிரி மன்னன் வானையும் கைப்பற்றுவானா!

இன்னொரு இடத்தில் ஊழ் என்று வருகின்றதாம். வரட்டுமே அதனால் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” .  (குறள் 619)

இங்கு வள்ளுவர் தெய்வத்தால் முடியாததும் உன் முயற்சியால் முடியும் என்கின்றார்.  உடனே மற்றொரு குறளைக் காட்டுவார்கள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”.  (குறள் 380).

இங்கு ஊழ் எல்லாவற்றையும் விடப் பெரியது எனப்படுகின்றதே! இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம்.  இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

படிக்க:
திருவள்ளுவரை  அவமதித்த  கா(வி)லி  கும்பலை  கண்டித்து  ஆர்ப்பாட்டம் !
♦ திருவள்ளுவரை  விழுங்கத்  துடிக்கும்  காவிப் பாம்பு  !

மேலே  வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே. அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள். அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.  வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு. எனவே குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழ்’ என்பது பார்ப்பனியம் குறிப்பிடும் ‘விதி’ அன்று.

அடுத்ததாக வள்ளுவர் மறுபிறப்பு பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு கதை விடுகின்றார்கள்.  அதற்காக அவர்கள் காட்டும் குறள் இதோ.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” (குறள்  398)

இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் யாதெனில் ஒருவருடைய கல்வியானது ஏழு பிறப்புக்களிற்கும் (ஜன்மங்களிற்கும்) தொடர்ந்து வரும் என்பதாகும். யாராவது பிறக்கும் போது ஏதாவது முற்பிறப்புக் கல்வி அறிவுடன் பிறக்கிறார்களா என்ன!  எல்லோருமே அ, ஆ இலிருந்து தானே தொடங்குகின்றார்கள். அவ்வாறாயின் அதன் உண்மையான விளக்கம் என்ன?

இவை ஒரு வகைச் சித்தர்களின் கோட்பாடு அல்லது ஆசிவகக்கோட்பாடு.  அங்கு அவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள ஏழு நிலைகளைக் குறிக்கின்றனவே தவிர, ஆன்மாவுடன் தொடர்புடையதல்ல. இதனையே களவாடி ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி, ஏழு பிறப்புக்களாக்கி, இப் பிறப்பில் சூத்திரனாகப் பிறந்தாலும் அதனையேற்று உனது கடமையினைச் செய்தால் மறுபிறவியில் உயர்நிலையினை அடையலாம் (கீதை) எனக் கதை கட்டிவிட்டனர்.

ஆசிவகத்திலோ சித்தர்களை அவர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகளை கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு, மண்ணிறம், வெள்ளை, நீர்வண்ணம் என 7 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. இதில் ஒவ்வொரு நிலையினை அடைதலும் ஒவ்வொரு பிறப்பு ஆகும்.  இக் கோட்பாட்டினை இன்றும் தமிழ்நாட்டின் ஊர்களிலுள்ள ஐயனார் சிலைகளின் நிறங்களை கூர்ந்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் {சில ஊர்களில் காலப்போக்கில் இடைநிலை நிறங்கள் மாறுபட்டிருக்கலாம்}.

இந்த சித்தமரபுக் கோட்பாட்டினை வலியுறுத்தி வள்ளுவனும் ஆறு குறள்களைத் தந்துள்ளார். அவையாவன;

♦ “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்” (குறள் -62)

♦ “எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு ”(107)

♦ “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 126)

♦ “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 398)

♦ “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”- (538)

♦ “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு”- (835)

இக் குறள்களிற்கும் பரிமேலழகர் போன்ற வைதீகச் சார்பாளர்கள் மனிதனின் ஏழு ஜன்மக்கோட்பாட்டிற்கு ஆதரவாக உரை எழுதிவைத்துவிட்னர். ஆனால் ஆன்மா மூலம் ஒருவர் பெற்ற கல்வி அடுத்த பிறவிக்குப் பயன்படுமா எனில் இல்லை. மறுபுறத்தே இக் குறள்களை சித்தமரபுக் கோட்பாட்டிற்குப் பொருத்திப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்தும் அல்லவா!!!

இவ்வாறு வைதீகப் புரட்டுக்களைத் தோலுரித்துக் கொண்டே போகலாம். அது மிக நீண்டு செல்லும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

குறள்களிற்கு  சங்கிகள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால், எனக்கு கவிக்கோ எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வருகின்றது.

வள்ளுவரும் மாணவரானார்
திருக்குறளில் தேர்வு எழுதப்போனார்
முடிவு வெளியாச்சு பெயிலானார்
காரணம் அவர் படிக்கவில்லை கோனார்”.

–கவிக்கோ

{கோனார் உரை = குறளிற்கு எழுதப்படும் உரைகள். வள்ளுவனிற்கே இவர்கள் எழுதிய உரைகள் விளங்காது ஏனெனில் அவர் எழுதியது அறம்+பொருள்+காமம் என்பனவே. வீடு (ஆன்மீகம்) அல்ல. இக் கவிதை பரிமேலழகர் உரைக்கும் பொருந்தும்}

குறளிற்கு வள்ளுவனே ஒரு உரை எழுதியுள்ளான் தெரியுமா!  என்ன வள்ளுவனே தனது குறளிற்கு உரை எழுதினாரா! என வியக்கவேண்டாம். ஒரு குறள்தான் அந்த உரை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. (423)

வள்ளுவரின் உடையின் நிறம் :

இப்பொழுது கட்டுரை தொடங்கிய இடத்திற்கே வந்தால் வள்ளுவனின் வடிவம் கற்பனை என்ற போதிலும், அவனது உருவத்திற்குப் பொருத்தமான உடை நிறம் வெள்ளையே ஆகும்.  நாம் மேலே பார்த்த நிறக் கோட்பாடுகளிற்கமைய அறிவின் உச்சியிலிருக்கும் வள்ளுவனைக் குறிக்க வெள்ளையே பொருத்தமான நிறமாகும்.  மேலும் தமிழர்களின் மரபுரீதியான ஆடையாகவும் வெள்ளை நிற வேட்டியே காணப்படுகின்றது.

இதனாலேயே ‘வெளிது’ என்ற பெயரில் சங்க காலத் தமிழரின் ஆடை அடையாளங் காட்டப்படுகின்றது {வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி` – புறநானூறு 279}. இதுவே தமிழக அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமும் ஆகும். இதனைக் காவியாக்குவதோ அல்லது கருப்பு ஆக்குவதோ தேவையற்ற வேலை.

வி.இ.  குகநாதன்

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 5.11.2019 அன்று கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய அரசின் அடியாளான காவல்துறையை கண்டித்து, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதன் விளைவாக வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.

காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்கையும் நியமித்தது. 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று (05.11.2019) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
♦ திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். மேலும் “காவல்துறையினரால் படுகாயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உரிய நிதி உதவியையும், இந்த சலசலப்புக்கு காரணமாக இருந்த காவல்துறையினரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை ( protection of advocates act ) அமல்படுத்த வேண்டும்.” என்று மாணவர்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாக கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே திட்டமிட்டு தாக்கப்பட்டனர். பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் காவல்துறைக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. விசாரணைக் கமிஷன்கள் மூலமாக எந்த ஒரு தீர்வையும் அடைய முடியாது. இதுபோல சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். இதற்கான ஒரேவழி மாணவர்கள், மக்கள், மற்றும் பல தரப்பினர் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக, அவர்களின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம்.

கெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42

2

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 42

பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர்

அ.அனிக்கின்

ரசரின் ஆசை நாயகிக்கு வயது முப்பதுக்கு மேல் சற்று அதிகமாகியிருந்தது. அவள் உல்லாசப் பிரியரான அரசரின் தயவை இழந்து கொண்டிருந்தாள். பிறகு அவள் அரசரின் அந்தப்புர நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கான நிலையைக் கடைசிவரையிலும் காப்பாற்றிக் கொண்டாள்.

பிரான்சில் அதிகமான அதிகாரத்தை வகித்த இந்த இருவருக்கும் அடுத்தபடியாக சீமாட்டி பாம்பதூரின் சொந்த மருத்துவரும் அரசரின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் கெனே இருந்தார். அவர் உருண்டையான தோள்களைக் கொண்டவர், எளிமையான உடையணிந்தவர், எப்பொழுதும் அமைதியாகத் தோன்றுவார்; ஆனால் அவரிடம் லேசான ஏளனம் இருந்தது. அவர் அரசாங்க இரகசியங்கள் பலவற்றை அறிந்திருந்தார். ஆனால் அவற்றை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றுவதற்கும் அவருக்குத் தெரியும். மருத்துவத் தொழிலில் அவருடைய திறமையைப் போல இந்த குணமும் பாராட்டுதலைப் பெற்றது.

அரசருக்கு போர்டோ மதுவின் மீது ஆசை அதிகம்; ஆனால் அரசருடைய வயிற்றுக்கு அது ஒத்துவராது என்பதால் அதைக் குடிக்கக் கூடாது என்பது கெனேயின் உத்தரவாகும். அரசர் வேறு வழியில்லாமல் அந்த மதுவைக் குடிப்பதை நிறுத்தியிருந்தார். எனினும் இரவு உணவின் போது அரசர் அதிகமாக சாம்பேன் மதுவைக் குடித்து விட்டு கால்கள் தள்ளாட சீமாட்டி பாம்பதூரின் இருப்பிடத்தை நோக்கிச் செல்வார். அவர் பல தடவை மயங்கி விழுவார்; டாக்டர் கெனே அவருக்கு உடனே மருந்து கொடுப்பார்.

பாம்பதூர் சீமாட்டி

சாதாரணமான மருந்துகளைக் கொண்டே நோயாளியை உடனே குணப்படுத்திவிடுவார். தன்னுடைய படுக்கையில் அரசர் மரணமடைந்துவிடுவாரானால் அடுத்தாற் போல என்ன நடக்கும் என்பதை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கும் சீமாட்டி பாம்பதூருக்கும் அவர் தைரியம் சொல்லுவார். அரசர் மரணமடைந்தால் அந்தச் சீமாட்டியே அதற்குப் பொறுப்பு என்பது நிச்சயம். அந்த ஆபத்து ஏற்படாதென்று கெனே அவளிடம் உறுதியளித்தார். அரசருக்கு வயது நாற்பது; அவருக்கு அறுபது வயதாகியிருக்குமானால் கெனேயால் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. அவர் அறிவாளி, அனுபவம் மிகுந்தவர்; அரசவைப் பிரமுகர்களுக்கும் விவசாயிகளுக்கும், இளவரசிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் சிகிச்சை அளிப்பவர்; சீமாட்டி பாம்பதூரை அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவர் மருத்துவத் துறையில் அதிகமான அளவுக்கு இயற்கையில் நம்பிக்கை கொண்டவர்; சாதாரணமான இயற்கை மருந்துகளையே அவர் அதிகம் உபயோகித்தார். அவருடைய சமூக, பொருளாதாரக் கருத்துக்கள் அவருடைய குணத்திலிருந்த இந்த அம்சத்தோடு முழுமையாகப் பொருந்தியிருந்தன. ஏனென்றால் “பிஸியோக்ரஸி” என்ற சொல்லுக்கு “இயற்கையின் சக்தி” என்பது பொருள் (கிரேக்கச் சொல்லான “பிஸிஸ்” என்றால் இயற்கை; ”கிராடோஸ்” என்றால் சக்தி).

பதினைந்தாம் லுயீ கெனே மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்; அவரை ”என்னுடைய சிந்தனையாளர்” என்றே கூப்பிடுவார். அவர் தன்னுடைய மருத்துவருக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்தார்; அதற்குரிய இலச்சினையையும் அவரே தேர்ந்தெடுத்தார். அரசரின் உடற்பயிற்சிக்காகக் கையால் அச்சிடுகின்ற சிறு இயந்திரத்தை கெனே ஏற்பாடு செய்திருந்தார். அதில் கெனே எழுதிய பிரசுரத்தின் முதல் பிரதிகளை அரசர் தாமே கைப்பட அச்சிட்டார். பொருளாதார அட்டவணை என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிரசுரம் கெனேக்கு அதிகமான புகழைத் தேடித் தந்தது. ஆனால் கெனேக்கு அரசரைப் பிடிக்காது; தன் மனதில் அவரைப் பற்றி ஆபத்தான அனாமதேயம் என்று நினைத்திருந்தார்.

பிஸியோகிராட்டுகளின் பார்வையில் இலட்சிய அரசர் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும்; அரசுச் சட்டங்களை மதிநுட்பத்தோடு பயன்படுத்துகின்ற நாட்டின் பாதுகாவலர் அவர். இந்த இலட்சியத்துக்கும் பதினைந்தாம் லுயீக்கும் எத்தகைய ஒற்றுமையும் கிடையாது. கெனே அரண்மனையில் நிரந்தரமாக இருந்தார்; அரசவையில் தமக்கிருந்த செல்வாக்கை உபயோகித்து பதினைந்தாம் லூயீயின் மகனும் வாரிசுமான இளவரசரை அப்படிப்பட்ட அரசராக மாற்றுவதற்குப் படிப்படியாக முயற்சி செய்தார்; இளவரசரின் மரணத்துக்குப் பிறகு அரசரின் பேரனும் புதிய இளவரசரும் எதிர்கால பதினாறாம் லுயீயுமான இளைஞரை மாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

படிக்க :
♦ வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?
♦ பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !

1694 -ம் வருடத்தில் வெர்சேய்க்கு அருகிலுள்ள கிராமத்தில் நிக்கோலஸ் கெனே என்பவரின் எட்டாவது மகனாக அவர் பிறந்தார். அவர் தந்தைக்கு மொத்தம் பதிமூன்று குழந்தைகள். நிக்கோலஸ் வழக்குரைஞராக அல்லது நீதித்துறை அதிகாரியாக இருந்ததாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. டாக்டர் கெனேயின் மரணத்துக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை முதலாவதாக எழுதியவரும் அவருடைய மருமகனுமான எவேன் என்ற மருத்துவர் இந்தக் கட்டுக் கதையைப் பரப்பினார் என்று பிற்காலத்தில் தெரிய வந்தது; டாக்டர் கெனேக்கு அதிக கௌரவமான குடும்பப் பின்னணியைக் கொடுப்பது அவருடைய நோக்கம். நிக்கோலஸ் ஒரு சாதாரண விவசாயி; எப்பொழுதாவது சிறு அளவுக்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவதுண்டு என்ற விவரங்கள் இன்று ஆதாரத்தோடு தெரியவந்திருக்கின்றன.

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

பதினொரு வயது வரை கெனே எழுதப் படிக்கத் தெரியாமலிருந்தார். பிறகு ஒரு அன்பான தோட்டக்காரர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இதன் பிறகு கிராமத்தின் குருவிடம் பாடங்களைக் கேட்டார்; பக்கத்திலிருந்த சிற்றூரில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலும் போய்ப் படித்தார். இந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் வயலிலும் வீட்டிலும் கடுமையாகப் பாடுபட்டார்; அவருக்குப் பதிமூன்று வயதாகிய பொழுது அவருடைய தகப்பனார் இறந்துவிட்டதனால் அவர் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது என்று எவேன் எழுதுகிறார். புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு அதிகமான ஆர்வம் இருந்தது; அவர் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பி பாரிசுக்கு நடந்தே போவார், அங்கே புத்தகத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் நடந்து இரவு நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவார். இத்தனைக்கும் அவர் கிராமத்திலிருந்து பாரிஸ் பல டஜன் கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. கிராமவாசிகளைப் போல அவர் ஆரோக்கியமும் உடல் வலிமையும் கொண்டிருந்தார். இளம் வயதிலிருந்தே கீல்வாதம் அவரைத் துன்புறுத்திவந்தது என்பதை ஒதுக்கிவிட்டால் கடைசி வரையிலும் அவர் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கெனே தனக்குப் பதினேழு வயதாகும் பொழுது, அறுவை மருத்துவராக வேண்டுமென்று முடிவு செய்து உள்ளூர் மருத்துவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் உடலிலிருந்து இரத்தத்தை எடுப்பது தான் சர்வரோக நிவாரணியாக இருந்தது. அவரும் அதையே முக்கியமாகக் கற்றுக் கொண்டார். அவருக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் அவர் தீவிரமாக உழைத்துப் படித்தார். 1711 முதல் 1717 வரை அவர் பாரிசில் இருந்தார்; ஒரே சமயத்தில் உலோகத்தில் படம் செதுக்கும் கடையில் வேலை செய்து கொண்டும் மருத்துவ நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டுமிருந்தார். இருபத்து மூன்று வயதுக்குள்ளாகவே அவர் வேரூன்றிவிட்டார் என்று சொல்ல வேண்டும்; ஏனென்றால் அவர் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைக்காரரின் மகளை அதிகமான சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

அறுவை மருத்துவர் தகுதிச் சான்றிதழ் பெற்றதும் பாரிசுக்கு அருகில் மான்ட் என்ற நகரத்தில் தொழில் செய்ய ஆரம்பித்தார். அவர் அங்கே பதினேழு வருடங்கள் இருந்தார்; அவருடைய திறமையும் உழைப்பும், நோயாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் அவர் கொண்டிருந்த விசேஷமான ஆற்றலும் அந்த மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவர் என்ற பெயர் அவருக்குக் கிடைக்குமாறு செய்தன. அவர் பிரசவம் பார்த்தார் (பிரசவ வைத்தியத்தில் அவர் குறிப்பிடக் கூடிய புகழடைந்திருந்தார்), இரத்தத்தை வெளியேற்றினார், பல் வைத்தியம் செய்தார்; அந்தக் கால நிலைமைகளை நினைக்கும் பொழுது சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகளையும் செய்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மேன்மக்களும் படிப்படியாக அவரிடம் சிகிச்சை பெற ஆரம்பித்தார்கள்; பாரிஸ் நகரத்தில் பிரபலமானவர்களோடு பழகினார்; மருத்துவத் துறையில் சில புத்தகங்களை வெளியிட்டார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்
♦ கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

1734-ம் வருடத்தில் கெனே – அவர் இப்பொழுது மனைவியை இழந்தவர், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனார் – மான்டை விட்டுப் போய் வில்லெருவா கோமகனின் குடும்ப மருத்துவரானார். அந்த நூற்றாண்டின் முப்பதுக்களிலும் நாற்பதுக்களிலும் அரசாங்கச் சட்டத்துக்கு எதிராக அறுவைச் சிகிச்சையாளர்கள் நடத்திவந்த போராட்டத்தில் அதிகத் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு பழைய சட்டத்தின் படி அறுவைச் சிகிச்சையாளர்கள் நாவிதர்களைப் போன்றவர்களே; எனவே அவர்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. “அறுவைச் சிகிச்சையாளர்கள் கட்சிக்கு” கெனே தலைவரானார்; இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்தக் காலத்தில் அவர் தமது முக்கியமான இயற்கை விஞ்ஞானப் புத்தகத்தை எழுதினார். அது அடிப்படையான மருத்துவப் பிரச்சினைகளை, தத்துவத்துக்கும் மருத்துவ நடைமுறைக்கும் உள்ள உறவை, மருத்துவ ஒழுக்கம் முதலியனவற்றைப் பற்றி எழுதப்பட்டிருந்த மருத்துவத் தத்துவஞான ஆராய்ச்சி நூலாகும்.

1749-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டி கெனேயைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கோமகனிடம் “இரந்து” வாங்கிக் கொண்டாள். அது கெனேயின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சியாகும். வெர்சேய் அரண்மனையின் மாடியில் ஒரு பகுதியில் கெனே தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. அவர் இப்பொழுது பெரும் பணக்காரராகியிருந்தார்.

அவருடைய வாழ்க்கையிலும் பணிகளிலும் மருத்துவம் அதிகமான இடத்தைப் பெற்றிருந்தது. மருத்துவத்திலிருந்து தத்துவஞானம் என்ற பாலத்தின் வழியாக அரசியல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறினார். மனித அமைப்பும் சமூகமும். இரத்தத்தின் சுற்றோட்டம் அல்லது வளர்சிதை மாற்றமும் சமூகத்தில் ஒரு பொருள் செலாவணியாவதும். உயிரியல் தொடர்புடைய இந்த ஒத்த உறவு கெனேயின் சிந்தனையைக் கிளறிவிட்டதோடு இன்றைய நாள் வரையிலும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

வெர்சேய் அரண்மனை.

வெர்சேய் அரண்மனையின் மாடியின் ஒரு பகுதியிலிருந்த அறைகளில் கெனே இருபத்தைந்து வருடங்கள் வசித்தார். பதினைந்தாம் லுயீ மரணமடைந்தவுடன் புது அரசர் இறந்தவருடைய ஆட்சியின் ஒவ்வொரு எச்சத்தையும் அரண்மனையிலிருந்து அகற்றிய பொழுது அவரும் அரண்மனையை விட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது; அது கெனேயின் மரணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தணிவாகவும் ஓரளவுக்கு இருட்டாகவும் இருந்த ஒரு பெரிய அறை, இதைத் தவிர சாமான்கள் வைத்திருக்கும் இரண்டு இருட்டறைகள் – இவை தான் அந்த அரண்மனையில் கெனேக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதி. எனினும் அந்த அறை வெகு சீக்கிரத்திலேயே “இலக்கியக் குடி யரசு” விரும்பிக்கூடும் அறையாக மாறியது.

18-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் “கலைக் களஞ்சியத்தைச்” சுற்றித் திரண்டிருந்த எழுத்தாளர்கள், அறிவாளிகள், தத்துவஞானிகள் அங்கே வழக்கமாகக் கூடினார்கள். டாக்டர் கெனே தன்னுடைய கருத்துக்களை முதலில் பத்திரிகைகளில் வெளியிடவில்லை, இந்த அறையில் கூடிய நெருக்கமான நண்பர்கள் மத்தியில் தான் வெளியிட்டார். அங்கே அவரோடு ஒத்த கருத்துடையவர்களும் மாணவர்களும் மட்டுமல்லாமல், எதிர்க் கருத்துடையவர்களும் வருவது வழக்கம். கெனேயின் இருப்பிடத்தில் நடைபெற்ற கூட்டங்களைப் பற்றிய தத்ரூபமான வர்ணனையை மார்மன்டெல் எழுதியிருக்கிறார்:

“அந்த மாடி அறைக்குள் புயல் மேகங்கள் திரண்டு வரும்; கலைந்துபோகும். அந்த நேரத்தில் கெனே விவசாயப் பொருளாதாரத்தைப் பற்றித் தனது கருதுகோள்களையும் கணக்குகளையும் தயாரித்துக் கொண்டிருப்பார். அரசவையின் நடவடிக்கைகளிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் தள்ளியிருப்பவரைப் போல அவர் அமைதியோடும் அலட்சியத்தோடும் நடந்து கொள்வார். கீழே அரசவைப் பிரமுகர்கள் யுத்தம், சமாதானம், தளபதிகளை நியமித்தல், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களை முடிவு செய்து கொண்டிருப்பார்கள்; ஆனால் அவருடைய அறையில் நாங்கள் விவசாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம், நிகர உற்பத்தியை மதிப்பிடுவோம் அல்லது சில சமயங்களில் டிட்ரோ , ட அலம்பேர், டுக்ளோ, ஹெல்வெடிய ஸ், டியுர்கோ, புஃபான் ஆகியோரோடு ஆனந்தமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்போம். இவ்வளவு தத்துவஞானிகளையும் தன்னுடைய வரவேற்பு அறைக்குள் ஈர்க்க முடியாமற்போன பாம்பதூர் சீமாட்டி தானே அங்கு வந்து அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ச்சியடைவாள்.”  (1)

பிற்காலத்தில் கெனேயின் குழு அங்கே கூடிய காலத்தில் அந்தக் கூட்டங்களின் தன்மை சற்று மாறியிருந்தது. அங்கே அமர்ந்திருப்பவர்கள் பிரதானமாக கெனேயின் மாணவர்களாக, அவரைப் பின்பற்றுவோராக இருந்தனர் அல்லது ஆசானுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகக் கூட்டிக் கொண்டு வரப்பட்ட நபர்களாக இருந்தனர். 1766-ம் வருடத்தில் ஆடம்ஸ்மித் இங்கே வந்து சில மாலைப் பொழுதுகளைக் கழித்தார்.

கெனே எப்படிப்பட்டவர்?

அவருடைய சமகாலத்தவர்கள் எழுதியுள்ள அநேகமாக ஒன்றுக்கொன்று முரண்படுகிற வர்ணனைகளிலிருந்து சூழ்ச்சியான ஒரு அறிவாளியைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர் தன்னுடைய ஆழமான அறிவை எளிமையான தோற்றத்திலே மறைத்துக் கொண்டார்; பலர் அவரை சாக்ரடிசோடு ஒப்பிட்டனர். அவர் எளிதில் புலப்படாத ஆழமான உட்பொருளைக் கொண்ட உருவகக் கதைகளை விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அவர் அதிகமான எளிமையுடையவர்; தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்; தன்னுடைய கருத்துக்களைத் தன் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்கள் என வெளியிட்டு கௌரவமடைவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

அவருடைய தோற்றம் சாதாரணமாக இருந்ததனால் அந்த அறைக்கு முதன் முறையாக வருபவர்கள் அங்கே விருந்தளித்து விவாதங்களுக்குத் தலைமை வகிப்பவர் யார் என்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவதுண்டு. அவரோடு பேசிய மிராபோ பிரபுவின் சகோதரர் “பேய்த்தனமான அறிவுடையவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார். அவர் கூறிய கதையைக் கேட்ட அரசவைப் பிரமுகர் ஒருவர் ”குரங்கைப் போலத் தந்திரமானவர்” என்று அவரைப் பற்றி அபிப்பிராயம் கூறினார். 1767-ம் வருடத்தில் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தில் ஒரு அவலட்சணமான சாதாரண முகத்தைக் காண்கிறோம்; அந்த முகத்தில் உலகத்தைப் பார்த்து ஏளனமான புன்சிரிப்பு தவழ்கிறது; கண்கள் அறிவுக் கூர்மையோடு ஊடுருவிப் பார்க்கின்றன.

கெனே “அரண்மனையில் வாழ்ந்தாலும் தத்துவஞானி; அவர் படிப்பதிலும் தனிமையிலும் பொழுதைக் கழித்தார்; அங்கே பேசப்படுகின்ற மொழியை (2)  அவர் அறியார், அதைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சிறிதளவு கூட முயற்சி செய்ததில்லை, ஏனென்றால் அங்கே இருந்தவர்களோடு அவருக்கு எத்தகைய தொடர்பும் கிடையாது; அவர் எவ்வளவு அதிகமான அறிவு கொண்ட நீதிபதியாக இருந்தாரோ அந்த அளவுக்குப் பாரபட்சம் இல்லாத நீதிபதியாகவும் இருந்தார்; அரண்மனையில் அவர் பார்த்தவையும் கேட்டவையும் அவரைச் சிறிது கூட பாதிக்காதபடி இருந்தார்” (3) 

அரசர் மீதும் சீமாட்டி பாம்பதூர் மீதும் அவருக்கு இருந்த செல்வாக்கை, இப்பொழுது அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரியங்களின் நன்மைக்காகப் பயன்படுத்தினார். அவரும் டியுர்கோவும் சேர்ந்து செய்த முயற்சிகளின் பலனாகச் சட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னோடு ஒத்த கருத்துடைய நண்பர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தார்; லெமெர்ஸியேவை ஒரு முக்கியமான பதவியில் நியமிக்குமாறு செய்தார், அந்தப் பதவியிலிருக்கும் பொழுது தான் லெமெர்ஸியே முதல் தடவையாக பிஸியோகிராட் பரிசோதனையைச் செய்ய முயன்றார். 1764-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டியின் மரணம் இந்தப் பொருளியலாளர்களின் நிலையை ஓரளவுக்கு பலவீனப்படுத்தியது; ஆனால் கெனே அரசரின் சொந்த மருத்துவராக நீடித்தார், அரசரும் அவரைத் தொடர்ந்து ஆதரித்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) Oeuvres completes de Marmontel, t. I, Paris, 1818, pp. 291-92.

(2) அரண்மனைகளில் வழக்கமாக நடைபெறும் சூழ்ச்சி களும் வம்புப் பேச்சும் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. 1, p. 240.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983