Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 66

தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள பொட்டலூரணி கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களை நிரந்தரமாக அகற்றக்கோரி போராடி வருவதோடு தற்போது தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களான ஜெனிஃபா இந்தியா,மேக்ஸ் மென் போன்ற பெரும் நிறுவனங்கள் கழிவு மீன்களை கொண்டு வந்து அதனுடன் சில வேதிப்பொருட்களை சேர்த்து விலங்கு தீவனங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது வெளிவரும் துர்நாற்றத்தால் கிராமமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நடு இரவில் இந்த கழிவு மீன் ஆலைகளிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் திறந்து விடப்படுகிறன. இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவதுடன் மூச்சுத்திணறல் உண்டாகி வாந்தி, மயக்கம் என கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிகளவில் சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படுவதோடு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புள்ளது.

இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் இந்த கழிவு மீன் நிறுவனங்கள் இத்தோடு நின்று விடாமல் ஆலைகளின் மீன் கழிவுநீரை கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் கலந்து விட்டு சென்றுவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் விவசாயம் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் துர்நாற்றம் காரணமாக பாதியிலேயே தங்களுடைய வேலைகளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு ஓடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்தால் அங்கேயும் சுத்தமான காற்றை சுவாசிக்கமுடியாமல் அப்பகுதி மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும் கிராம மக்கள் வளர்க்கும் கோழிகள் ஆடுகள் போன்ற கால்நடைகளும் காகங்கள், மயில்கள் போன்ற பறவைகளும் இந்த துர்நாற்ற வாயுக்களை சுவாசிப்பதால் இறந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.


படிக்க: சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்


இப்படி பிரச்சனை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீடிக்கவே மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களுக்கும் என சுமார் 11 துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பொட்டலூரணி பொதுமக்கள் சார்பாக பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இதுவரை எந்த ஒரு முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இப்படி பல ஆண்டுகளாக போராடியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதால் தற்பொழுது ஊர் பொதுக்கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு இந்த தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஊரை சுற்றி பதாகைகள் அமைத்தும் கருப்பு கொடிகள் கட்டியும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அடுத்த கட்டமாக கிராம மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முயன்ற போது காவல்துறை உடனே அனைத்திற்கும் தடை விதிக்கிறது.

ஆகவே இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாவட்ட ஆட்சியர் இப்பகுதி மக்களை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்டமாக சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது வாக்களிப்பது குடிமகனின் ஜனநாயகக் கடமையெனில் வாக்களித்த மக்களுக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை. அதனை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீறும்போது தாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வது குற்றமல்ல. தேர்தலை புறக்கணிப்பது தங்களது உரிமை என்று கூறுகின்றனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பா.ஜ.க வின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் | தோழர் மருது

பா.ஜ.க வின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம்
தோழர் மருது

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா? | தோழர் வெற்றிவேல்செழியன் | தோழர் அமிர்தா

கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாசிச பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் குடந்தை அரசன் ஆகியோரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தகராறு செய்துள்ளது. இந்த பாசிச கும்பலுக்கு ஆதரவாக இருந்த போலீசு பரப்புரையை முடித்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. எனினும், போலீசுக்கும், பாசிச கும்பலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து பிரச்சாரத்தை தோழர்கள் மேற்கொண்டனர்.

பாசிச கும்பலை கண்டித்து தோழர் வெற்றிவேல் செழியன் மற்றும் தோழர் அமிர்தா ஆற்றிய உரை.

தோழர் வெற்றிவேல்செழியன்

தோழர் அமிர்தா

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!

லங்கையில் சீன – அமெரிக்க மேலாதிக்க போட்டாப்போட்டியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் திவால் அடைந்தது. 2022 ஜனவரியில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், எரிபொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எழுச்சி உருவானது. வெகுண்டெழுந்த மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி, அப்போதைய ஜனாதிபதியான, சீன அடிவருடி கோத்தபய ராஜபக்சேவை நாட்டைவிட்டு விரட்டியடித்தனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரைக் கூட கொண்டிராத அமெரிக்க கைக்கூலி ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதியாக்கியது.

அதன் பிறகு, அரசியல் குழப்பங்கள், கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களைக் காட்டி 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது ரணில் கும்பல். இந்த இரண்டாண்டுகளில் மக்கள் மீது கடும் வரிச்சுமைகளை ஏற்றுவது, ஐ.எம்.எஃப்-இன் கடுமையான கட்டளைகளை அமல்படுத்துவது, போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவது என ஓர் எதேச்சாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது ரணில் அரசு.

இந்நிலையில்தான், இந்தாண்டு செப்டம்பர்-நவம்பர் மாதங்களுக்குள்ளாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்பட்டு, சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயக வழிமுறைகள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது அந்நாட்டு ஆளுவர்க்க கும்பல். இந்தியாவிலும் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதிர்க்கட்சிகள் மீது பாசிச அடக்குமுறைகளை ஏவிவருகிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்நிலையில், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஒன்றான இலங்கையிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் சக்திகள் மத்தியில் முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது.


படிக்க : ரணில்: இலங்கையின் மோடி!


அமெரிக்க-இந்திய மேலாதிக்கவாதிகள் உருவாக்கிய புதிய அடிமை ஜே.வி.பி.
கடந்த டிசம்பர் மாதத்தில், இலங்கையைச் சேர்ந்த சுகாதாரக் கொள்கை நிறுவனம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்குள்ளது என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு 30 சதவிகித வாக்குகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13 சதவிகித வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு 6 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. ஆனால், பலரும் எதிர்பாராத வகையில், ஜே.வி.பி. என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் (Janatha Vimukthi Peramuna) தலைவரும் சிங்கள இனவெறி பௌத்த மதவெறி போலி கம்யூனிஸ்டுமான அனுர குமார திசநாயக்கே-விற்கு 51 சதவிகித வாக்குகள் கிடைத்திருப்பதுதான் கவனிக்கத்தக்க முக்கிய விசயமாகும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்கு பிறகு, அனைத்து கட்சிகளின் மீதும் இலங்கை மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இந்நிலையில், ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இலங்கை மக்கள், தங்கள் போராட்டத்தின் மூலம் விரட்டியடித்த கோத்தபய ராஜபக்சேவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜபக்சே கும்பலின் ஆதரவுடனே ரணில் பதவியேற்றார். ஐ.எம்.எஃப்-இன் கட்டுப்பாடுகளை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அதுவரை, நாட்டை மறுகாலனியாக்குவதாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் எழுச்சிக்குப் பின்னர் அடக்கி வாசிக்கத் தொடங்கின.

இந்நிலையில், ஆளும் வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அதன் புதிய விசுவாசிதான் இந்த திசநாயக்கே. சென்ற ஆண்டுவரை, 3 சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத கூட்டணிதான், ஜே.வி.பி-யின் தலைமையில் இலங்கையில் இருக்கும் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை இணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட “தேசிய மக்கள் சக்தி” (என்.பி.பி.) என்ற கூட்டணியாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நாட்டை அடகு வைக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்க அரசியலை மக்கள் வெறுத்து வந்த நிலையில், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்ட இந்த கும்பலை ஆளும் வர்க்கம் புதிய முகமாக முன்தள்ளுகிறது.

ஒருபுறம் மக்களிடம் இருக்கும் ஆளும் வர்க்க எதிர்ப்புணர்வையும் இன்னொருபுறம் மக்களிடம் எழுந்துவரும் இடதுசாரி ஆதரவுப் போக்கையும் அறுவடை செய்து கொள்வதுதான் திசநாயக்கேவை ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஆளும் வர்க்கத்தின் கடைக்கண் பார்வை தன் மீது திரும்பியுள்ளதை அடுத்து, ஜே.வி.பி. தலைமையில் அமைக்கப்பட்ட என்.பி.பி. கூட்டணியில் இளைஞர்களை இணைப்பது, சமூக வலைதளங்களில் திசநாயக்கேவை “வளர்ச்சி நாயகனாக”, “பொருளாதார மீட்பராக” முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. இத்துடன் இலங்கையின் முன்னணி ஆளும் வர்க்க ஊடகங்கள், ஜே.வி.பி. 1980-களில் நிகழ்த்திய “இனப்படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா”, என்றெல்லாம் விவாதங்களைக் கட்டமைத்து, ஏ.கே.திசயநாயக்கேவைப் புனிதப்படுத்தி, அவரை அனைவருக்குமான தலைவராக ஏற்க வைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1


இந்திய நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இலங்கை
இலங்கையின் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்த்துவதற்காக சீன எதிர்ப்பு, இந்திய ஆதரவு அடிவருடியைத் தேடிக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு நாடுகள், ஜே.வி.பி-யின் தலைவர் ஏ.கே.திசயநாக்கேவை தமக்குத் தேர்ந்த அடிமையாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளன. இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்ற நிலைமையில், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதே இவரை தங்களது நாட்டிற்கு அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் பாசிச மோடி அரசின் அழைப்பின் அடிப்படையில், ஏ.கே.திசநாயக்கே பிப்ரவரி 5 முதல் 10-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். இச்சுற்றுபயணத்தின் போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோரைச் சந்தித்தார். இத்துடன், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜே.வி.பி. அதன் தொடக்க காலத்திலிருந்தே இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தது. 1980-களில் “இந்திய விரிவாக்கம்” என்ற கட்சி ஆவணத்தை எழுதி முன்வைத்த ஜே.வி.பி., இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. “அமைதிப் படை” என்ற பெயரில் இலங்கைக்குள் அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தை எதிர்த்தது. 2021-ஆம் ஆண்டு கிழக்கு கொள்கலன் முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதை எதிர்த்து இலங்கையில் நடந்த போராட்டத்திலும் ஜே.வி.பி. கலந்துகொண்டது. ஆனால், இவையெல்லாம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பது, ஆளும் கட்சியாக மாறிவிட்ட பின்னர் ஆதரிப்பது என்ற கார்ப்பரேட் அரசியலின் பிழைப்புவாத சீரழிவு என்பதை ஜே.வி.பி-யின் நடவடிக்கை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அண்மை காலங்களாக, இந்தியாவுடனான ஜே.வி.பி-இன் அணுகுமுறை மாறி வருவதோடு இந்தியாவுடன் இணக்கம் பாராட்டுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 2023-இல் “தி இந்து” பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்த திசநாயக்கே, “எங்கள் நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாங்கள் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி எப்போதும் அக்கறை காட்டுவோம்” என்றார். இதுமட்டுமின்றி, இவர் பொது இடங்களில் இந்திய ஆட்சியாளர்களை புகழ்ந்து பேசுவதும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கோத்தபய, ரணில் வரிசையில் திசநாயக்கேவும் இந்திய ஆதிக்கத்தின் தேர்ந்த அடிமை என்பதையே அவரது செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2


குஜராத் முதல்வரையும் அம்மாநிலத்தின் உள்ளூர் கார்ப்பரேட் முதலாளிகளையும் தனது இந்தியப் பயணத்தின் மூன்றாவது நாளன்று சந்திக்க ஏ.கே.திசயநாயக்கேவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மோடியின் “குஜராத் மாடல்” பற்றிய விளக்கக்காட்சியும் அவருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகளுடனான திசநாயக்கேவின் இச்சந்திப்பின்போது, “முதலில் அண்டையர்கள்” (Neighbour First) மற்றும் “சாகர்” (SAGAR) உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டங்கள் குறித்து திசநாயக்கேவுடன் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட இந்தியா, சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. மேலும், இலங்கையை கடனிலிருந்து ‘மீட்க’ பாடுபடுவதாக நாடகமாடுவதன் மூலம், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது. அமெரிக்க அடிவருடி ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது, இந்தியாவிற்கு மேலும் சாதகமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, இலங்கையில் இந்திய முதலீடுகளும் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது.

ரணில் ஆட்சிக்கு வந்த பிறகு கோத்தபய ஆட்சியில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்திவைக்கபட்ட மன்னார் எரிசக்தித் திட்டம் மீண்டும் அதானிக்கு வழங்கப்பட்டது; இந்தியா-இலங்கை இடையிலான உறவு தொடர்பாக இந்தியா முன்வைத்த “கூட்டுப் பார்வையை” (joint vision) இலங்கை ஒப்புக்கொண்டது; இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருவது; இந்திய ரூபாயில் வத்தகம் செய்ய இலங்கை முயற்சித்து வருவது போன்றவை இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதற்கான சான்றுகளாகும். தற்போது, இந்த ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஏ.கே.திசநாயக்கேவை இந்தியா ஆதரிப்பதும் அமைந்துள்ளது.

ஏ.கே.திசயநாயக்கேவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு, இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கும் தெற்குப் பகுதிகளுக்கும் தனித்தனியாக பயணம் மேற்கொண்டார். அவரை பிப்ரவரி 15-17 வரையிலான நாட்களில், வட இலங்கையின் முன்னணி தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். குறிப்பாக, இலங்கை தமிழ்கட்சிகளை இந்தியாவிற்கு வரவழைத்துப் பேச இருந்த திட்டம் கைவிடப்பட்டு பின்னர், இந்த சந்திப்புகள் நடந்தேறின. அந்தவகையில், பிழைப்புவாத தமிழினக் கட்சிகளைக் கொண்டு, ஏ.கே.திசநாயக்கேவிற்கு ஆதரவு திரட்டும் வேலையை இந்தியாவே முன்னின்று செய்வதை இந்த சந்திப்புகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் இலங்கையின் அரசியலில் இந்தியா முழுமையான தலையீட்டைக் கொண்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அண்மையில், மாலத்தீவு அதிபராக பதவியேற்றுகொண்ட முகமது முய்சு முதல் அதிகாராப்பூர்வ பயணமாக சீனாவிற்குச் சென்று சீனாவின் மேலாதிக்கத்திற்கு முன்னுரிமைக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா மாலத்தீவுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், இலங்கையைப் பொருத்தவரை, 2021 கடும் பொருளாதார நெருக்கடியே அமெரிக்க-சீன போட்டாபோட்டின் விளைவாக உருவானதாகும். இந்தப் போட்டியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இலங்கையின் அரசியலை தனது மேலாதிக்கத்தின் கீழ் இந்தியா கொண்டுவந்திருப்பதையே அண்மைகால இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3


வளர்ந்துவரும் இன-மத முரண்பாடுகள்
இவைமட்டுமின்றி, ஈழத் தமிழ் மக்களின் எதிரியாக இருந்து செயல்பட்ட ஜே.வி.பி. கட்சி இத்தனை ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திலேயே ஜே.வி.பி. கட்சிக்கு பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டிருப்பது இத்தமிழினக் கட்சிகளின் துரோகத்தை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவாகும் சூழலில், சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அடிப்படையிலான அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையில் அதிகரித்து வந்தன. சான்றாக, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று மூன்று கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி சிங்கள இனவெறி, பௌத்த மதவெறியைத் தூண்டிவிடும் போக்குகள் அதிகரித்தன. முக்கியமாக, இந்தத் தாக்குதலின் விளைவாக இலங்கைக்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இது, இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியில் முக்கியப் பங்காற்றியது.

ஆனால், இத்தாக்குதலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு உறுதியளித்த கோத்தபய கும்பலும், ரணில் கும்பலும் தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை விமர்சிக்கும் முன்னணி ஊடகங்கள், இதில் சதிக்கோட்பாடுகள் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளன.

மேலும், இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பின்னர் ஓரளவிற்கு குறைந்திருந்த சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அரசியல் நடவடிக்கைகள், தற்போது மீண்டும் மேலோங்கி வருவதை அண்மைகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது பின்னர், இலங்கையிலும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.


படிக்க : ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!


வளர்ந்து வரும் புதிய பாசிசக் கும்பல்
இலங்கை மற்றும் பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் திசநாயக்கேவை தங்களது சுரண்டலுக்கான புதிய முகமாக கருதுகின்றன. அந்த முகம் இடதுசாரி வேடம் தரித்திருப்பது தற்போதைய இலங்கை மக்களின் மனநிலைக்கும் பொருத்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதுவர்களும் முக்கிய தலைவர்களும் ஜே.வி.பி. அலுவலத்தில் திசநாயக்கேவை சந்தித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி ஒரே சமயத்தில், பாலஸ்தீனம், துருக்கி, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தனர். மார்ச் 8 அன்று கியூப நாட்டு தூதுவர் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தார். மார்ச் 13-ஆம் தேதி இலங்கைக்கான கனடாவின் உயரதிகாரி எரிக் வால்ஷ்-வும் 19-ஆம் தேதி ஜப்பான் தூதுவர் மிசுகோஷியும் திசநாயக்கேவை சந்தித்தனர்.

ஆளும் வர்க்கத்தால் தான் முன்னிறுத்தப்பட்டிருப்பதை தனது வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள துடிக்கும் திசநாயக்கே, பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கவும் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுகொண்டிருக்கிறார். அண்மையில், கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க திசநாயக்கே கனடா சென்றது அதற்கான சான்றாகும். இவை மட்டுமின்றி, ஸ்வீடன், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் திசநாயக்கேவின் அடுத்தடுத்த பயணப் பட்டியலில் அடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திசநாயக்கேவும் ஜே.வி.பி-யும் ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டு, அக்கும்பலுக்கு ஆதரவு வளர்ந்து வருவதை சிலர் அடியோடு மறுக்கின்றனர். ஜே.வி.பி. சமூக வலைதளக் கட்டமைப்பில் பலமாக இருப்பதால் இவ்வாறு முன்னிறுத்தப்படுகிறது; தற்போது வெளியாகியுள்ள கருத்துகணிப்பு ஜே.வி.பி-யை இனவாதக் கட்சியாக பார்க்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் எடுக்கப்படாததால் அவர்களின் உணர்வு கருத்துகணிப்பு முடிவில் எதிரொலிக்கவில்லை, எனவே, திசநாயக்கே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் உண்மை இருப்பதைப் போலத் தோன்றினாலும், பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜே.வி.பி. வளர்ந்து வருவதும் அதனை அமெரிக்க ஆதரவு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஊக்குவிப்பதையும் மறுக்க முடியாது. அதேவேளையில், இலங்கை ஆளும் வர்க்கங்களும் இலங்கையைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் ஏகாதிபத்தியங்களும் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் இலங்கை மக்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கும் ஒரு வல்லமைமிக்க அரசியல் தலைவரை முன்னிறுத்தி, அவரை வெற்றிப் பெறச் செய்து, “நிலையான ஆட்சி”யை அமைக்க வேண்டியுள்ளது. இந்த உண்மையில் இருந்துதான் மொத்த நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும்.


படிக்க : மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி


தேவை, பாசிச எதிர்ப்பு அரசியல் பார்வை!
எனவே, திசநாயக்கே போன்றதொரு இனவெறி கும்பலை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு இலங்கை ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்கள் அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் மேற்கொள்ளும். மேலும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பலும் அதன் தலைமையிலான ஆட்சியும் இலங்கையில் ஜனநாயகமான முறையில் மாற்றம் உருவாவதைத் தடுத்து தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளதையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆகையால், பாசிசக் கூறுகளை கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி., இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும். தற்போதைய நிலையில், அதன் அரசியல் வெற்றியை முறியடிப்பது மட்டுமின்றி, இலங்கை பேரெழுச்சி உருவாக்கிய ஒற்றுமை உணர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றும் வகையிலான அரசியல் செயல்தந்திரங்களை வகுத்து முன்னேறுவது இலங்கையில் உள்ள புரட்சிகர சக்திகளின் கடமையாகும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் வங்கதேசம், பாகிஸ்தானை அடுத்து இந்தியாவில் மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி அமைவதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள், இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி ஜே.வி.பி. தலைமையிலான ஓர் ஆட்சி அமைவதை முறியடிப்பதற்கு இலங்கை உழைக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக் கும்பலின் கைக்கருவி

தேர்தல் நிதிப்பத்திர முறையானது வெளிப்படைத்தன்மையற்று இருப்பதால், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றுக் கூறி அம்முறையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையிலான நன்கொடையாளர்கள் – நிதி வாங்கிய கட்சிகளின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. இதன் பிறகு, தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க. அதிகமான நன்கொடை பெற்றிருப்பதும், மிரட்டிப் பணம் வசூலித்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளன. பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர நோக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை எவ்வாறு வடிவமைத்தது, செயல்படுத்தியது என்பதைப் பரிசீலிப்பதன் மூலமே அதன் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் நிதிப்பத்திரங்களும் நன்கொடைகளும்:

தேர்தல் நிதிப்பத்திரங்கள் 2018-ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வந்த நிலையில், 2019 ஏப்ரல் முதல் தற்போது வரையிலான விவரங்களை வெளியிட்டால் போதுமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தேர்தல் ஆணையத்தில் ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களில் இருந்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய தொகை ரூ.12,769.1 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், பிசினஸ் டுடே இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் “மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கிடைத்த மொத்த நிதி ரூ.16,518.11 கோடி என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கூறும் விவரங்களின் படி 2018 முதல் 2024 வரையிலான காலத்தில், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை திரட்டுவதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த கட்சிகள்: பா.ஜ.க. – ரூ.8,451.41 கோடிகள், காங்கிரஸ் – ரூ.1,950.90 கோடிகள், திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,707.81 கோடிகள், பாரதீய ராஷ்ட்ரிய சமிதி – ரூ.1,407.30 கோடிகள், பிஜூ ஜனதா தளம் – ரூ.1,010.5 கோடிகள்.

2019 ஏப்ரல் முதல் கணக்கீடு செய்தாலும் 47.7% நிதியை அதாவது 6,060 கோடி ரூபாயை பா.ஜ.க. வசூலித்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இதுவரை அளிக்கப்பட்ட நன்கொடைகளில் சரிபாதிக்கும் அதிகமாக பா.ஜ.க. மட்டும் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளை விட பா.ஜ.க.வுக்கு அதிக நன்கொடை கொடுக்கப்பட்டு வருவது குறித்த புள்ளி விவரங்கள் எல்லாம் ஏற்கெனவே ஓரளவு அறியப்பட்டவை தான். எனினும், தற்போது ஸ்டேட் வங்கி வெளியிட்ட விவரங்களில் இருந்து அரசியல் கட்சிகளிடையே காரசாரமான விவாதங்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கட்சிகளின் இந்த விவாதங்கள், விமர்சனங்களில் தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள், கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானத்தில் ஒரு பகுதி தான் என்பதைப் பற்றி எவரும் பேசுவதில்லை. காரணம், தேர்தல் நிதிப்பத்திரங்கள் அல்லாத வகையிலும் ஏறக்குறைய இதே  அளவுக்கான தொகையை அரசியல் கட்சிகள் திரட்டி வருகின்றன. இதுவும் கூட தேர்தல் ஆணையத்திடம் அவை காட்டும் கணக்கில் உள்ளவைதான். மற்றபடி, கணக்கில் வராதவை எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதை அக்கட்சிகள் மட்டுமே அறியும். ஏனென்றால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் ரூ.55,000 – ரூ.60,000 கோடிகள் செலவிடப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தக் கணக்குகளை வைத்துப் பார்க்கும் போது, தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் இதுவரை அனைத்து தேசிய, மாநிலக் கட்சிகளும் திரட்டிய தொகையான ரூ.16,518 கோடிகள் என்பது மிகச்சிறியதே.

பொதுவாகவே, எந்தவொரு நிறுவனத்திற்கு அரசாங்க ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டாலும் குறைந்தது 40 சதவிகித கமிஷனைக் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக இருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி 40 சதவிகித கமிஷன் ஆட்சி, கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி 40 சதவிகித கமிஷன் ஆட்சி என்று அப்பட்டமாக அம்பலமாகியதெல்லாம் நாமறிந்ததே. எனவே, பல இலட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு சில நூறு, ஆயிரம் கோடி ரூபாய்களுடன் பா.ஜ.க.வும் பிற கட்சிகளும் திருப்தி அடைந்து விடும் என நம்புவது முட்டாள்தனம். பா.ஜ.க. உருவாக்கிய தேர்தல் பத்திரங்களின் இலக்கு வெறும் நன்கொடை மட்டுமல்ல என்பதில் இருந்தே அவற்றை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.


படிக்க: தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!


தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு முன்பு

தேர்தல் நிதிப்பத்திரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பும் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடை வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால்,  தனிநபரிடமிருந்து ரூ.20,000-க்கும் மேல் நன்கொடை பெற்றால் கணக்குக் காட்ட வேண்டும்; வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற முடியாது; நிறுவனங்கள் தமது லாபத்தில் 7.5 சதவிகிதம் மட்டுமே கட்சிகளுக்கு நன்கொடையாகத் தர முடியும் போன்ற பெயரளவிற்கான கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் மீறி கார்ப்பரேட்டுகளிடம் அரசியல் கட்சிகள் பணம் வாங்குவதும், அதை எதிர்த்து சமூக செயல்பாட்டாளர்களும் குடிமை அமைப்புகளும் வழக்கு தொடுப்பதும் நடந்து வந்தன.

கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து  காங்கிரசும், பா.ஜ.க.வும் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து பல கோடிகளை நன்கொடையாகப் பெற்றன. அப்போது வேதாந்தா வெளிநாட்டு நிறுவனமாக வரையறுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்  செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், அந்நன்கொடைகள் வெளிநாட்டு நிதிதான் என்றும், அவ்வாறு நிதிபெற்ற கட்சிகள் மீது ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2014 மார்ச் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைக் காங்கிரசும், பா.ஜ.க-வும் கிடப்பில் போட்டன.

1976 ஆகஸ்ட் 5-க்குப் பிறகு வாங்கிய எந்த நன்கொடையும் சட்டவிரோதமானது அல்ல என்று 2018-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விவாதங்களின்றி, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்கமைப்புச் சட்டத்தை முன் தேதியிட்டு திருத்தியது பா.ஜ.க.. இத்திருத்தத்தின் மூலம் காங்கிரசும், பா.ஜ.க.வும் வேதாந்தாவிடம் பெற்ற நன்கொடைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. இவ்வாறு, சட்டத்திருத்தத்தின் மூலம் ஊழலை சட்டப்பூர்வமாக்க வாய்ப்பிருக்கும் போது புதிதாக தேர்தல் நிதிப்பத்திரம் எதற்கு? என்ற கேள்வி எழாமல் இல்லை.

தேர்தல் நிதிப்பத்திரம் என்ற ஆயுதம்

காங்கிரசால் தனியார்மய-தாராளமய-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதிலிருந்தே,  ‘குஜராத் மாடல்’  ‘வளர்ச்சி நாயகன்’ என மோடியின் பிம்பம் ஊதிப் பெருக்கப்பட்டு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இக்காலகட்டமானது அரசியல்-பொருளாதார ரீதியாக ஒரு மாறுதலைக் குறிக்கக் கூடியதாகும்.

மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு ஏற்ப அரசுக் கட்டுமானங்களில் மாற்றம் செய்வது; பெயரளவிலான ஜனநாயகம் – நாடாளுமன்ற முறை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது; அம்பானி-அதானி கும்பலின் ஏகபோகத்திற்கான இந்துராஷ்டிரம் என்ற பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதே மோடி அரசின் நோக்கமாகும். மறுகாலனியாக்கத்தின் அரசு வடிவமாக ஆணையங்களும் நிதி ஆயோக் போன்றவையும் கொண்டு வரப்பட்டன. துறைசார் அமைச்சர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடமாக பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டது. அரசுச் செயலர்கள், ஆணையங்கள், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசுக் கட்டுமானங்களிலும் அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றில் தேர்வுகள் மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் ஆகப்பெரும்பான்மையாக ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் – ஆதரவு சக்திகள் நிரப்பப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஓர் அங்கமாகவே தேர்தல் நிதிப்பத்திரமும் கொண்டு வரப்பட்டது.  அதுவும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், குறுக்குவழியில், விவாதங்களைத் தடுக்கும் விதமாக பணமசோதாவாக 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தேர்தல் நிதிப்பத்திரம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2018-ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரம் நடைமுறைக்கு வந்தது. தொடக்கத்தில் தேர்தல் ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இப்பத்திரத் திட்டத்தை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம், 1 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே நன்கொடை பெற முடியும். இந்தக் கட்டுப்பாடு சிறிய கட்சிகளை படிப்படியாக ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்டது. யார் வேண்டுமானாலும் உச்சவரம்பின்றி நிதி கொடுக்கலாம், அதை பொதுவெளியில் சொல்லத் தேவையில்லை; அரசியல் கட்சிகளும் இவற்றை தேர்தல் ஆணையத்திற்கு கணக்குக் காட்டத் தேவையில்லை என்பதன் மூலம் கட்டற்ற வகையில் கார்ப்பரேட்டுகள் மூலம் பணம் பெறும் ஊழலுக்கான சட்டப்பூர்வ ஏற்பாட்டை செய்தது பா.ஜ.க.. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு, கருப்புபணப் புழக்கம் ஒழிந்து, நாட்டின் அரசியல் நிதி அமைப்பு முறை தூய்மைப்படும் எனக் கூறியது, மோடி அரசு. ஆனால், தனக்கு சாதகமான கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்குவதை மறைப்பதற்கு மட்டுமல்ல, எதிர்த்தரப்பிலுள்ள முதலாளிகளையும் மிரட்டி வசூல்வேட்டை நடத்துவதற்கான ஆயுதம்தான் தேர்தல் நிதிப்பத்திரம் என்பதை மோடி கும்பல் நடைமுறையில் நிரூபித்திருக்கிறது.


படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி! 


பாசிசக் கும்பலின்  “வசூல் ஏஜெண்டுகள்

அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளைத் தமது ஏவல் படையாகப் பயன்படுத்தி வருகிறது பாசிசக் கும்பல். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்திற்காக ஏவியிருந்தாலும், தற்போது தன்மைரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியான பிறகு, இந்த ‘தன்னிச்சையான’ விசாரணை அமைப்புகள் மோடி அரசின் வசூல் ஏஜெண்டுகளாக மாறியிருப்பது அம்பலமாகியிருக்கிறது. பொருளாதார ரீதியாக, பா.ஜ.க.வுக்கு நிதி கொடுக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது தனது அடியாட்களான இவ்விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, பணம் பறித்திருக்கிறது மோடி அரசு.

கார்ப்பரேட் நிறுவனங்களில் ரெய்டுகள் நடத்தியிருப்பதும், அதன்பிறகு அந்நிறுவனங்கள் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாங்கியிருப்பதும், அவற்றில் பெரும்பாலானவை பா.ஜ.க.விற்கு அளிக்கப்பட்டவை என்பதும் பல்வேறு முதலாளித்துவ ஊடகங்களில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக அம்பலாகியிருக்கின்றன. அதன்படி, ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை வெளியிடப்பட்டுள்ள இப்பத்திர விவரத்தில் முதலிடத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ், மேகா பொறியியல் & உள்கட்டுமான நிறுவனம், ஹெட்டிரோ பார்மா குழுமம் உள்ளிட்ட 41 நிறுவனங்களில் விசாரணை அமைப்புகள் மூலம் ‘ரெய்டு’கள் நடத்தி ரூ.2,471 கோடிகளை பா.ஜ.க.வுக்காக மோடி அரசு வசூலித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

தற்போது கூட, வருமான வரித்துறை மூலம் பல ஆண்டுகளுக்கு முந்தைய வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்திருப்பதாக கூறி பல நூறுகோடி ரூபாய்களை கட்டச் சொல்லி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி தொடர்ச்சியாக நெருக்கடி அளித்து வருகிறது. ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்களைக் கைது செய்வதற்கு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது. இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், இந்தத் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் எதிர்க்கட்சிகளும் ஆதாயம் அடைந்தனர், ஆனால் அவை தற்காலிகமானவை.


படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !


எதிர்க்கட்சிகள்: ஆதாயங்களும் விமர்சனங்களும்

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க. சரிபாதி நன்கொடைகளைப் பெற்றது என்றால், மீதமுள்ள சுமார் ரூ.8,000 கோடிகளை பிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வாங்கியிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் பலமுறை ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் சோதனைகளுக்கு ஆளான லாட்டரி மார்ட்டின் குழுமம், பா.ஜ.க.வுக்கு ரூ.100 கோடி மட்டுமே நன்கொடை கொடுத்துள்ளது. லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதியுள்ள மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கொடுத்துள்ளது. சிக்கிம் மாநிலத்திலும் ஆளுங்கட்சிக்கு ரூ.11 கோடி கொடுத்துள்ளது. ஆனால், லாட்டரிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கொடுத்திருக்கிறது. இதேபோல லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு ரூ.149 கோடிகளைக் கொடுத்திருக்கிறது. வெளிப்படையாக எந்த ஆதாயமும் இல்லாமல் இத்தனை கோடி ரூபாய்களை ஏன் கொடுக்க வேண்டும்? தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக லாட்டரி விநியோகம் நடந்து வருகிறது என்றால், ஆந்திராவிலோ, நிதி நெருக்கடி காரணமாக லாட்டரி மற்றும் சூதாட்டத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து 2021-2022 காலகட்டத்தில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது என்பதை இணைப்புப் புள்ளிகளாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2018-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடந்து, வேதாந்தா நிறுவனம் அம்பலப்பட்டு நிற்கும் நிலையிலும் கூட, அதனிடமிருந்து பா.ஜ.க.வை விட அதிக தேர்தல் நன்கொடையை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இது மட்டுமின்றி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் எதிர்க்கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ள விவரங்கள் அம்பலமாகியுள்ளன. கார்ப்பரேட் – அரசியல் கட்சி இடையிலான கள்ளக்கூட்டின் வடிவமாக, தேர்தல் நிதிப்பத்திரங்களை பா.ஜ.க. தனக்கு சாதகமாக உருவாக்கினாலும் எதிர்க்கட்சிகளும் குறிப்பிட்ட அளவுக்குப் பயனடைந்துள்ளன.

ஆனால், “தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் (ஹஃப்தா வசூலி) கும்பலை நடத்தியவர் நரேந்திர மோடி”  என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதில் சொன்ன அமித் ஷா, “காந்தியும் ரூ.1,600 கோடி பெற்றார். அந்த ‘ஹஃப்தா வசூலி’ எங்கிருந்து கிடைத்தது என்பதை அவர் விளக்க வேண்டும். இது வெளிப்படையான நன்கொடை என்று நாங்கள் கூறுகிறோம், ஆனால் அவர் அதை வசூலி என்று சொன்னால், அவர் விவரங்களை அளிக்க வேண்டும்”என்று சி.என்.என். நியூஸ் 18 நடத்திய உச்சிமாநாட்டில் பேசினார்.

பா.ஜ.க. விசாரணை அமைப்புகளை ஏவி மிரட்டிப் பணம் பறிக்கிறது என்று விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையோ, ஒரு மாநிலக் கட்சி எதற்கு தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் ரூ.656 கோடி நிதி பெற வேண்டும் என்று கேள்வியெழுப்பினார். பாசிசக் கும்பலின் இக்கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை.

எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கார்ப்பரேட்டுகளிடம் நிதி வாங்குவது பிரச்சினை இல்லை. மாறாக தங்களது எஜமானர்களான ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பிரிவு கார்ப்பரேட்டுகளை விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பா.ஜ.க. பணம் பறித்திருப்பதே பிரச்சினை. இவ்வாறு விசாரணை அமைப்புகளை ஏவி பா.ஜ.க. பணம் பறிப்பதால், தங்களுடைய உரிமை பறிக்கப்படுவதையே ஜனநாயகம் பறிக்கப்படுவதாகக் கூப்பாடு போடுகின்றன எதிர்க்கட்சிகள். எனவேதான் “தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் சரியாக கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிப்படையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தையும், சமநிலையையும் மீட்டெடுத்துள்ளது. இந்த தீர்ப்பு தேர்தல் அமைப்பின் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது” என்று கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

மற்றபடி, கார்ப்பரேட்டுகள் நாட்டைக் கொள்ளையிடுவதும், மக்கள் வாழ்வைச் சூறையாடுவதும், வரி ஏய்ப்பு செய்வதும், இவற்றுக்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் ஊழல்படுத்துவதும் இவர்களுக்குப் பிரச்சினை இல்லை. பா.ஜ.க.வுக்கு மட்டும் ஆதாயம் தருவதாக இல்லாமல் அனைவரும் இவ்வாறு ஊழல் செய்வதற்குப் பொருத்தமான கட்டமைப்பு வேண்டும் என்பது தான் இவர்களது கோரிக்கை.


படிக்க: காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !


தேர்தல் நிதிப்பத்திரம்: நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானது!

தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம் கார்ப்பரேட்டுகளிடமிருந்து கட்சிகள் பெற்ற நிதி விவரப் பட்டியல் வெளியான அதேநேரத்தில், இதற்கு கைமாறாக அரசுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும், சாதகமான சூழலியல் சட்டத் திருத்தங்களையும் கார்ப்பரேட்டுகள் சாதித்துக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது. ஆனால் இவையெல்லாம் விவாதப் பொருளாகவில்லை.  “பா.ஜ.க.விற்கு நிதி வழங்கிய 33 நிறுவனங்கள், மொத்தமாக 172 முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும், திட்டத்திற்கான அனுமதியையும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.3.7 லட்சம் கோடியாகும். ஆனால், கார்ப்பரேட்டுகள் கொடுத்த நிதி வெறும் ரூ.1,751 கோடி” என்கிறார் பிரசாந்த் பூஷன்.

இப்பத்திரத்தின் மூலம் 35 மருந்து நிறுவனங்கள் பல்வேறு கட்சிகளுக்கு சுமார் ரு.1,000 கோடி நிதியளித்திருக்கின்றன. இவற்றில், ஹெட்டிரோ (கொரோனா மருந்து ரெம்டெசிவிர்), டோரண்ட் (டெப்லாட்-150, லோசார்-எச், லோபாமைடு), சைடஸ் ஹெல்த்கேர்,  க்ளென்மார்க், சிப்லா (ஆர்.சி. இருமல் மருந்து, சிப்ரெமி), ஐ.பி.சி.ஏ. லெபாரர்ட்டிஸ் (லாரியாகோ) உள்ளிட்ட 7 நிறுவனங்களின் மருந்துகள் தரமற்றவை என்று மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சகத்தால் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த மருந்துகளெல்லாம், வயிற்றுப்போக்கு, இதய நோய், இரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்று, சளி, இருமல் போன்றவற்றிற்காக மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்துபவையே. இந்நிறுவனங்கள் தங்களின் லாபவெறிக்காக தரமற்ற மருந்துகளைத் தயாரித்து, இந்தியா மற்றும் உலக நாடுகளின் அப்பாவி மக்களை படுகொலை செய்கின்றன. பிற நாடுகளில் இந்திய இருமல் மருந்துகள் மற்றும் கண் களிம்புகளால் மரணங்களும், நோய்த் தொற்றுகளும் ஏற்பட்டதும், அமெரிக்க அரசும் இந்திய மருந்துகள் தரமற்றவை என்று குற்றஞ்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பா.ஜ.க.விற்கும், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கும் நிதிப்பத்திரங்கள் வழங்கியதில் சுரங்க நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, பகாசுர வேதாந்தா நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக, கொரோனா ஊரடங்கு காலத்திலும், அதன் பிறகும் சுரங்கங்களின் உற்பத்தியை 50 சதவிகிதம் கூடுதலாக அதிகரித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது மோடி அரசு. ராஜஸ்தானில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு மக்களின் கருத்துகள் தேவையில்லை என சுற்றுச்சூழல் விதி மாற்றப்பட்டிருக்கிறது. ரித்விக் தத்தா போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு சி.பி.ஜ. பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சேவைக்காக பா.ஜ.க.விற்கு, கடந்த 2016 முதல் 2020 வரை இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி கொடுத்திருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

எனவே, இந்நிதிப்பத்திரத்தை ஒரு ஊழல் என்று மட்டும் சொல்லமுடியாது.  தனது அதிகாரத்தைக் கொண்டு, இந்திய நாட்டின் இயற்கை- மனித வளங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்திருக்கிறது பாசிசமோடி அரசு. தேர்தல் நிதிப்பத்திரமானது, கார்ப்பரேட்டுகள்-அரசியல் கட்சிகள்-அரசு இயந்திரம் ஆகியவற்றின் கள்ளக்கூட்டிற்கு ஏற்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ ஏற்பாடேயாகும். குறிப்பாக, பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர நோக்கத்திற்கான பாசிசக் கருவியாகும். அந்த வகையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானவையாகும். இதுகுறித்து உச்சநீதிமன்றத்திற்குக் கவலையில்லை, தேர்தல் நிதிப்பத்திரத்தில் வெளிப்படைத் தன்மையில்லாததுதான் பிரச்சினையாக இருக்கிறது. எனவேதான்  வெளிப்படைத்தன்மையில்லாத இந்நிதிப்பத்திர முறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசெம் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளது சங்கங்களோ, அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இருப்பது தங்களுக்கு ஆபத்தானது என்று கூக்குரலிடுகின்றனர்.

எனவே, தேர்தல்  நிதிப்பத்திரத்திற்கு பதிலாக வேறு புது வழிகள் கண்டுபிடிக்கப்படலாம்.  இப்பத்திரங்கள் இருக்கும் போதே பல வழிகளில், அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுகின்றன. அதற்காகவே பல சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த அரசுக்கட்டமைப்பிற்குள்ளேயே அரசியல் கட்சிகள்-கார்ப்பரேட்டுகளின் கள்ளக்கூட்டை ஒழிக்க முடியாது.  அதுவும் அம்பானி-அதானிகளின் ஏகபோகத்திற்காக அரசுக்கட்டுமானம் முழுவதும் பாசிசமயமாகி வரும் சூழலில், இந்த அரசுக் கட்டமைப்பானது, மக்களுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கும், அவர்களை ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவுக்குமே எதிரானதாக மாறியிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பதும், மக்களுடன் இணைந்து மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குகிற – அரசே தேர்தலை நடத்துகிற ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்காக போராட வேண்டியதும் அவசியமாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நடந்தது ரோட் ஷோவா? லாஸ்ட் ஷோவா?

நடந்தது ரோட் ஷோவா? லாஸ்ட் ஷோவா?

 

டோரேமான்: நேற்று சென்னையில் பாசிச மோடியின் ரோட் ஷோ நடந்தது.

நோபீடா: பிரதமர் மோடி என்றல்லவா சொல்லவேண்டும்?

டோரேமான்: அவர் மொழியில் சொன்னால், அவரைப் பிரதமர் என்று சொல்வது தவறாகும்.

நோபீடா: ஏன்?

டோரேமான்: காலனியாதிக்க மனநிலையில் இருந்து வெளிவரவேண்டும் என்று சொல்றார். இந்திய அரசியல் சட்டங்கள் அனைத்தும் காலனியாதிக்கவாதிகள் உருவாக்கியது என்கிறார். எதை எடுத்தாலும் நேருவைக் கூப்பிடுகிறார். அப்படி இருக்கும் போது, பிரதமர் என்ற அடைமொழி இவருக்குப் பொருந்தாது அல்லவா?

இன்னொரு அர்த்தத்திலும் இவர் இந்த வார்த்தைக்குப் பொருத்தமானவர் அல்ல.

நோபீடா: எப்படி?

டோரேமான்: பிரதமர் என்றால் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் எதிர்க்கட்சிகள் கேட்க்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இவருக்கு அந்த அளவிற்கு தைரியம் கிடையாது என்பது மட்டுமல்ல, இவர் பிரதமருக்குரிய இந்த மரபையும் மதிக்காதவர். பிறகு இவரைப் பிரதமர் என்று எப்படி அழைப்பது?

நோபீடா: இதுசரிதான். ஆனால், பாசிச மோடினு சொல்றது சரியா?

டோரேமான்: மாட்டுக்கறி வச்சிருக்கான்னு சொல்லி, அக்லக்கை அடிச்சே கொன்னானுங்க, தலித் இளைஞர்களை கட்டிவைச்சி அடிச்சாங்க, மணிப்பூரை எரிச்சானுங்க, பெண்களை நிர்வாணமா இழுத்துக்கிட்டு போனாங்க, மல்யுத்த வீரர்களை மானபங்கப்படுத்துனானுங்க… இந்த ரவுடி கும்பலுக்கெல்லாம் தலைமைதான் பா.ஜ.க. அதன் தலைவருதான், மோடி.

அம்பானி சொத்து வளருது, அதானி சொத்து வளருது. பணமதிப்பிழக்க நடவடிக்கைனு சொல்லி பேங்க் வாசல்ல கியூல நிக்கவச்சே சாகடிச்சாரு. கொரானா ஊரடங்குனு சொல்லி பல ஆயிரம் பேர நடக்கவச்சே சாகடிச்சாரு. கொரானாவுக்கு மருந்து இல்ல, இலட்சக்கணக்கில் ஆக்ஸிஜன் கொடுக்காமலேயே கொலை செஞ்சாரு, ஜி.எஸ்.டி.னு சொல்லி சிறுதொழில ஒழிச்சானுங்க, இப்படி டிஜிட்டல் இந்தியானு சொல்லி எல்லா தொழிலையும் ஒழிக்கிறானுங்க… இதையெல்லாம் இவரு ஆட்சியின் வெற்றிகளாம்.

அதனாலதான் இவரு பாசிஸ்ட்!


படிக்க: அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா


000

நோபீடா: சரி. இந்த ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்வோம், நேத்து ரோட் ஷோ வெற்றிதானே?

டோரேமான்: விளையாட்டில் வெற்றி தோல்வியை இறுதிவரை சொல்லமுடியாது. ஆனால், அரசியலில் அப்படியல்ல.

வெற்றியில் தொடங்கி வெற்றியிலேயே முடிவதும் உண்டு, வெற்றியில் தொடங்கி தோல்வியில் முடிவதும் உண்டு. ஆனால், இது தோல்வியில் தொடங்கி, தோல்வியில் முடியும் காட்சி.

வடநாட்டு ஊடகங்களும், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் டிவி போன்ற தமிழ்நாட்டு சங்கி ஊடகங்களும் மாபெரும் ரோட் ஷோ என்று வர்ணிக்கின்றன. சில பார்ப்பனர்களை அழைத்துப் பேட்டி கேட்டு வெளியிடுகின்றன.

மாமிகள் பலரை முன்வரிசையில் நிற்க வைத்து, பூக்களைக் கொடுத்து மோடி ரோட் ஷோவின் போது வீதியில் வீச வைக்கின்றது பார்ப்பன கூட்டம்.

கட்சித் தலைவர்கள் கூலிக்கு ஆள்வைத்து செய்வதை, மாமிகளை வைத்து ஓசியில் செய்ய வைத்ததுதான் பார்ப்பன யுக்தி. இதனைத்தாண்டி இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நோபீடா: கூட்டம் சேர்ந்துச்சா இல்லையா? அதை சொல்லுங்க.

டோரேமான்: இது என்ன கூட்டம், சில்க் சுமிதாவை காட்டுறாங்கனு சொன்னதும், “மார்க் ஆண்டனி”க்குக் கூடாத கூட்டமா. நமிதாவைக் கூட்டிவந்து கூட்டம் காட்டுறவனுங்க இந்த பா.ஜ.க. காரனுங்க.

நோபீடா: நீங்க, அதுக்குன்னு ரொம்ப மட்டம் தட்டுறீங்க.

டோரேமான்: இருக்கிறததானே சொன்ன.
ஒரு நாட்டோட பிரதமர் வருகிறார், ஆனா, அந்த மரியாத தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியல.

நோபீடா: கூட்டம் வந்ததா, இல்லையா?

டோரேமான்: சுத்தமா, ஒரு அஞ்சாயிரம் பேர் இருப்பாங்களா, அதுவும் ரோட் ஷோவோட கூடவே நடந்து வருது ஒரு கூட்டம் மிச்சமீதி மாமிகள். மயிலாப்பூர், மாம்பலம், தி.நகர் மாமிகள் இவ்வளவுதான். இதற்கு மேல டிவியில நீ பார்த்ததெல்லாம் எல்லாம் விடியோ செட்டப்பு.

நோபீடா: பெரிய ரோட் ஷோனும் சொல்றாங்க?

டோரேமான்: ரோட் பெருசுதான், ஷோவும் பெருசுதான். ஆனால், கூட்டம் எல்லாம் ரொம்ப கம்மி.


படிக்க: ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்


000

டோரேமான்: சரி, இதையெல்லாம் பிறகு பார்ப்போம்.
எதுக்கு தமிழ்நாடே கதினு, இங்கேயே சுத்தராரு? மழைவெள்ளம் வந்துச்சி, திரும்பிப் பார்த்தாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்புன்னா ஏதாச்சும் கேட்குறாரா? இவரையெல்லாம் பிரதமர்னு மக்கள் மதிப்பாங்களா?

இவர் இலட்சக்கணக்குல செலவு செஞ்சு கோட் சூட் போட்டு ரோட் ஷோ காட்டுறத தன்மானமுள்ள மக்களால பார்க்கமுடியுமா? இது வக்கிரம் இல்லையா?

ராமர் கோவில்ங்கிற பேருல, ஆன்மிக சுற்றுலா; வெட் இன் இந்தியா என்ற பெயரில திருமண சுற்றுலா; அப்புறம் மருத்துவச் சுற்றுலா… இப்படி நாட்டையே சுற்றுலா தளமாக்கி, வெளிநாட்டு ஊதாரிகளை கவர்வதற்கு பேரு என்ன? இதுதான் புதிய இந்தியாவா, புரோக்கர் வேலைதான் தேச முன்னேற்றமா?

இதுமாதிரிதான் இந்த ரோட் ஷோவும் இருக்கு.


படிக்க: கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா


000

டோரேமான்: மோடியின் பத்தாண்டுகால ஆட்சியால் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை ஓங்கியிருக்கு. டெல்லியை முற்றுகையிட்டு விவாசாயிகள் நிற்கிறார்கள். குறைந்தபட்ச ஆதாரவிலையைச் சட்டமாக்கு என்கின்றனர்.

லடாக் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பழங்குடியின மாநிலமாக அறிவி என்று கேட்கின்றனர். மராத்தாவினர் இட ஒதுக்கீடு கேட்டு மஹாராஷ்டிராவில் முற்றுகையிட்டுள்ளனர்.

இது, கோ பேக் மோடினு மூத்திர சந்தில் விரட்டிய தமிழ்நாடு.

தோல்வி பயத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல், தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கிறது என்று பலரும் கருதுகின்றனர். இது உண்மயல்ல.

இவர்களுக்கு இருப்பது, சூதாட்ட மனநிலை. தோற்றுக்கிட்டே இருந்தாலும் பெட்டு கட்டனும்னு தோனும். அதுமாதிரி, தமிழ்நாட்டை வெல்லனுங்கிற மோடி-அண்ணாமலை மைண்ட் செட், தோல்வியடைந்தவர்களின் நப்பாசை!

ஆகையால், மோடியின் இந்த ரோட் ஷோ, அவரது பத்தாண்டுகால ஆட்சின் லாஸ்ட் ஷோ!


வினவு செய்திப்பிரிவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?

09.04.2024

கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?
ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தும்!

டந்த 10 ஆண்டுகளில் நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கியது மோடி – அமித்ஷா பாசிச கும்பல். நாடு முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்களின் முன் தோற்று நிற்கிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பல். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டினைக் குறிவைத்து பிஜேபி வேலை செய்து வந்தாலும் டெபாசிட்டுக்கு கீழே அக்கட்சியை மக்கள் வைத்திருக்கிறார்கள்.

எனினும், அதிகார வர்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு பாசிச பா.ஜ.க, தங்களை அம்பலப்படுத்துபவர்களை தொடர்ந்து மிரட்டுகின்ற வேலையிலே ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாசிச பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி பரப்புரையை மேற்கொண்டு வந்த தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் குடந்தை அரசன் ஆகியோரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தகராறு செய்துள்ளது. இந்த பாசிச கும்பலின் பேச்சைக் கேட்டு பரப்புரையை முடித்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்தியுள்ளது போலீசு. எனினும், பாசிச கும்பலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து பிரச்சாரத்தை தோழர்களும் மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் கோட்டையை போலவும் அங்கே மோடியைப் பற்றியும் பா.ஜ.க-வை பற்றியும் விமர்சனம் செய்ய முடியாது என்பதைப் போலவும் போலீசை வைத்துக்கொண்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றது பா.ஜ.க கும்பல். இந்த பாசிச – ரவுடி – பொறுக்கி கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

கோயம்புத்தூர் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

இதையும் பாருங்கள்:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா

மோடியின் பத்தாண்டுகால ஆ(ட்)சியில் உலக பணக்காரராக வளர்ந்த முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்து முடிந்துள்ளது. மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடந்த இந்நிகழ்வு, முதலில் திருமணம் என்று சொல்லப்பட்ட நிலையில் பின்னர், இதுவரை இல்லாத புதிய நிகழ்வாக “திருமண முன்னோட்டம்” (அ) “திருமண ஒத்திகை” என்று கூறப்பட்டது. தற்போது திருமணம் ஜூலை மாதம் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘திருமண முன்னோட்டத்தை’ நடத்துவதற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும், 3,000 ஏக்கரில் புதிய காட்டையும் அம்பானி குழுமம் உருவாக்கியது. அந்நகரில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்ட இந்த மூன்று நாள் நிகழ்விற்கு, ஹாலிவுட் நடிகர்கள், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா,  டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், டிஸ்னியின் நிர்வாக அதிகாரி பாப் இகர், பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட சர்வதேச ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகள், உலக முன்னணி பிரபலங்கள் என 1,200 பேர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உலகில் வேறெங்கும் நடந்திராத வகையில், அம்பானியின் விருந்தினர்களான இந்த உல்லாச ஊதாரிகள் குஜராத்தின் ஜாம்நகருக்கு தனியார் ஜெட் விமானங்களில் வந்திறங்குவதற்கு உகந்தவகையில் விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்தை பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமான நிலையமாக மாற்றியது மோடி அரசு. “பொழுதுப்போக்கு பூங்காவில் ஒரு மாலை” (ஒன் ஈவினிங் இன் எவர்லேண்ட்) “காட்டுப்பகுதியில் ஒரு உலா”, “ஹஸ்தாக்ஷர்” (கையெழுத்து – இந்திய கலாச்சாரத்தின் மீது) என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கருப்பொருளை உருவாக்கி அதற்கேற்ப இந்த ஊதாரிகள் ஆடை அலங்காரங்கள் செய்து பங்கேற்கும் வகையில், ஆயிரக்கணக்கான சிகையலங்கார நிபுணர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஊதாரிகளும் இவர்களுக்கான இந்த ஒப்பனைக் கலைஞர்களும் தங்குவதற்கு உல்லாச நடசத்திர விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.


படிக்க: உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரத் திமிர்


இத்திருமண முன்னோட்டத்தின் தொடக்க நிகழ்வாக 75 கோடி ரூபாய் செலவில் பிரபல அமெரிக்க பாப் பாடகர் ரிஹானாவின் கலைநிகழ்ச்சி; ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகிய பாலிவுட் நடிகர்கள் ஒன்றாக இணைந்து ஆடிய கேலிக்கை நடனம்; பிரபல சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைக்கப்பட்ட 2,500-க்கும் அதிகமான ஆடம்பர உணவு வகைகள்; இந்த ஊதாரிகளுக்கு வழங்குவதற்காக விலையுயர்ந்த ஆடம்பர பரிசுப் பொருட்கள்; ஆபாச நடனங்கள், கூத்துகள் என மொத்தமாக இந்நிகழ்விற்கு மட்டும் சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தில் கூட இல்லாத அளவிற்கு பொருளாதார, வர்க்க ஏற்றத்தாழ்வு நம் நாட்டில் தலைவிரித்தாடும் நிலையில் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து திருமணத்திற்கான ‘ஒத்திகை’ நடத்தப்பட்டிருப்பது வக்கிரத்தின் உச்சமாகும். இந்நிகழ்வானது அன்றாட உணவிற்கே அல்லல்படும் கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அப்பட்டமான ஆடம்பரத் திமிரன்றி வேறொன்றுமில்லை. ஆனால், சில சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களே இந்தியாவில் நிலவும் வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுடன் அம்பானியின் இந்த உல்லாச திருமண ஒத்திகையை ஒப்பிட்டு இந்த வக்கிரத்தைக் கண்டித்திருந்த நிலையில், கார்ப்பரேட் கும்பலின் அடிமைகளாகிப்போன பெரும்பாலான இந்திய ஊடகங்கள் வெட்கமின்றி ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வை அருவருக்கத்தக்க வகையில் மெச்சிப் புகழ்ந்து பிரச்சாரம் செய்தன.

இன்னொருபுறம், “அம்பானி நினைத்திருந்தால் மகன் திருமணத்தை பிற கோடீஸ்வரர்களை போல வெளிநாட்டில் நடத்தியிருக்க முடியும், இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காகவே அவர் சொந்த ஊரான குஜராத்தில் திருமணத்தை நடத்தியுள்ளார்” என்று சங்கிகளும் அம்பானியின் கூலி அடிமைகளும்  உச்சிமுகர்ந்தனர். உண்மையில், அம்பானி இத்திருமண நிகழ்வை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்தியதற்கு பின்னால் மோடி-அம்பானி கூட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் கொள்ளை திட்டம் அடங்கியுள்ளது.


படிக்க: அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!


திருமணம் முன்னோட்டம்அல்ல கேளிக்கை விளம்பரம்

திருமண நிகழ்வை ஜாம்நகரில் நடத்தியது குறித்து பேசிய அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, அதற்கு இரண்டு காரணங்களை முன்வைத்தார். ஒன்று, ஜாம்நகர் ஆனந்த் அம்பானி வளர்ந்த இடம்; மற்றொன்று, பிரதமர் மோடியின் “வெட் இன் இந்தியா”(Wed in India) அழைப்பு. அதாவது, இந்தியாவிலேயே திருமணம் செய்யுமாறு பணக்காரர்களுக்கு மோடி விடுத்த அழைப்பு.

2023 நவம்பரில் மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி, வெளிநாட்டில் திருமணத்தை நடத்துவதற்கான இந்திய கோடீஸ்வரர்களின் மோகம் அவருடைய மனதிற்கு மிகுந்த வலியை தருவதாக சொன்னார். மேலும், இந்திய மண்ணில், இந்திய மக்கள் மத்தியில், திருமண விழாக்களைக் கொண்டாடினால் நாட்டின் பணம் நாட்டிலேயே இருக்கும் என்றும் இந்த திருமண சீசனில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் மாதத்தில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த உச்சிமாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் திருமணம்” என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களும் பிரபலங்களும் வெளிநாடுகளில் திருமணத்தை நடத்துவதைத் தவிர்த்து இந்தியாவிற்குள்ளேயே திருமணத்தை நடத்த வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT) ஆய்வு முடிவு, நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரையிலான வெறும் 23 நாட்களைக் கொண்ட குளிர்கால திருமண சீசனில், சுமார் 38 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்றும், அதன்மூலம் 4.74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கும் என்றும் கூறியது. இதனால், திருமணங்களுக்கு தேவையான ஆடம்பர மாளிகைகள், உல்லாச நட்சத்திர விடுதிகள், திருமண அரங்குகள், நிகழ்வு மேலாண்மை, அலங்காரம், புகைப்படம் மற்றும் வீடியோ ஷூட்கள், பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி, உள்ளிட்ட திருமணத்திற்கான சேவைத் துறையிலும், ஆடைகள், நகைகள், உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆடம்பர பரிசுப் பொருட்கள், சாராயம், போதை, விபச்சாரம் போன்ற பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படும் ஊதாரித்தனமான செலவினங்களிலும் மிகப்பெரிய வர்த்தக உந்துதலை ஏற்படுகிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமான அளவு அதிகமாகும்.


படிக்க: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!


மன்-கி-பாத்-இல், இந்த திருமண சீசனில் 5 லட்சம் கோடி வரை வர்த்தகம் நடக்கும் என்று மோடி சொன்ன வழிவகை இதுதான். இந்த வர்த்தக மூலதனத்தை குறிவைத்தே மோடி இந்தியாவிலேயே திருமணம் செய்யுங்கள் என்று உலக கோடீஸ்வரர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். இந்த ‘அறைகூவலுக்கான’ செயல்முறை விளக்கமாகத்தான் தற்போது குஜராத்தின் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, தற்போது நடந்து முடிந்தது திருமணமும் அல்ல; திருமணத்திற்கான முன்னோட்டமும் அல்ல; “இந்தியாவில் திருமணம்” என்ற மோடி அரசின் முன்னெடுப்பிற்கான கேளிக்கை விளம்பரம் மட்டுமே. ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்து பிற பணக்காரர்களையும் உள்நாட்டிலேயே திருமணம் செய்துகொள்ள தூண்டும் வகையில் ஊடகங்களில் செய்தி வெளியானதே அதற்கான எடுத்துக்காட்டு. ஜூலை 1 அன்று நடக்க இருக்கும் அம்பானி வீட்டு திருமணக்கூத்து இம்மூன்று நாள் கூத்தின் அடுத்தக்கட்டமாக அமையும் என்பதையும் இன்னும் பல சர்வதேச பிரபலங்களும் ஊதாரிகளும் படையெடுப்பார்கள் என்பதையும் தனியாக விளக்க வேண்டியதில்லை.

000

1990-களில் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு பிறகு இந்தியாவில் பணக்காரர்களின் உல்லாச திருமண நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வணிக சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. திருமணம், திருமண வரவேற்பு, திருமணத்துக்கு முந்தைய பிந்தைய புகைப்படப்பிடிப்பு, மெஹந்தி, சங்கீத் (ஒன்றாக பாடுவது), ஒத்திகை விருந்து, வரவேற்பு பார்ட்டி, பேச்சுலர் பார்ட்டி என வெவ்வேறு பெயர்களில் நாளுக்கு நாள் திருமணங்களில் குடி-கூத்தின் பரிணாமங்கள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. இந்தவகையில், ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் சுமார் 200 விருந்தினர்களை அழைத்து கோடிஸ்வரர்களும் பிரபலங்களும் இரண்டு நாட்கள் நடத்தும் ஊதாரித்தனமான திருமண நிகழ்ச்சிக்கு மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்று இத்துறை சார்ந்த வணிக நிறுவனங்கள் மதிப்பிட்டு அதற்கேற்ப தங்களது ‘தொழிலை’ விரிவுப்படுத்திக் கொள்கின்றன.

இன்னொருபுறம், பத்தாண்டுகால மோடியின் கார்ப்பரேட் ஆட்சியில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு பலமடங்கு அதிகரித்துள்ளது. 2022 கணக்கெடுப்பின்படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 161-ஆக உள்ள நிலையில், 2027-ஆம் ஆண்டில் 195-ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: ஹூரன் ஆய்வறிக்கை: பணக்காரர்களை உரமிட்டு வளர்க்கும் மோடி அரசு


சமீபத்தில், ஹூரன் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆசிய பணக்காரர்களின் மையமாக இருந்த சீனாவின் பெய்ஜிங் நகரை பின்னுக்கு தள்ளி 92 பில்லியனர்களுடன் இந்தியாவின் மும்பை நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு, உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட மூன்றாவது நகரமாகவும் மாறியுள்ளது இதற்கு கூடுதல் சான்று. ஆனால், இக்கோடீஸ்வரர்கள் பெரும்பாலானோர் துருக்கி, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, துபாய், பாரிஸ் போன்ற வெளிநாடுகளிலேயே திருமணம் செய்துகொள்கின்றனர்.

இவர்களை வெளிநாட்டில் திருமணம் செய்வதை தடுத்து இந்தியாவிலேயே திருமணம் செய்யவைப்பதன் மூலமாக உள்நாட்டு பொருளாதாரத்திலும் சுற்றுலாத்துறையிலும் பல லட்சம் கோடி வரை லாபம் பார்க்க முடியும் என்பதுதான் மோடியின் புதிய இந்தியாவிற்கான திட்டம். எனவே, தேச வளர்ச்சி, புதிய இந்தியா என்பதெல்லாம், இந்தியாவை சர்வதேச உல்லாச, ஊதாரித்தனமான விபச்சார விடுதியாக்கும் திட்டமாகும். இதன் விளைவாக, நாடு முழுவதும் போதை-பாலியல்-கலாச்சார சீரழிவும் கூட்டு பாலியல் வல்லுறவுகளும் தீவிரமடைவதை தவிர்க்க முடியாது.

ஏற்கெனவே மோடி- யோகி கும்பல்,  அயோத்தி ராமன் கோவிலை வைத்து உலகின் பிடித்தமான சுற்றுலா மையமாக உத்தரப்பிரதேசத்தை மாற்றும் “பிராண்ட் உ.பி.” (Brand UP) திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. ராமர் கோவில் என்பது பாசிச மோடி கும்பலுக்கு சுற்றுலா பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டத்தின் ஒரு அங்கம். அதைப்போலவே, “இந்தியாவில் திருமணம்” என்ற மோடியின் முன்னெடுப்பும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் சர்வதேச உல்லாச, ஊதாரி கும்பல்களுக்கு நாட்டை திறந்துவிடுவதற்கான ஏற்பாடே.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது

பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஏப்ரல் 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா
  • 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!
  • தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக் கும்பலின் கைக்கருவி
  • பு.ஜ. உடன் ஓர் உரையாடல்…
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
    பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!
  • விவசாயத்துறையில் ”ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!
  • அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!
  • ஸ்டெர்லைட் உச்சநீதிமன்ற தீர்ப்பு: தொடரும் மக்கள் போராட்டம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி ஆட்சி – உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

மோடி ஆட்சி – உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்!
| தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா
  • 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!
  • தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக் கும்பலின் கைக்கருவி
  • பு.ஜ. உடன் ஓர் உரையாடல்…
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
    பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!
  • விவசாயத்துறையில் ”ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!
  • அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!
  • ஸ்டெர்லைட் உச்சநீதிமன்ற தீர்ப்பு: தொடரும் மக்கள் போராட்டம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? | தோழர் மருது

மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? |
தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அல்-குத்ஸ் தினத்தன்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணிகள்

ல்-குத்ஸ் தினமான இன்று (05-04-2024) உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளியன்று உலக அளவில் கடைபிடிக்கப்படும் ஒற்றுமை நாள் தான் அல்-குத்ஸ் தினம்.

அல்-குத்ஸ் தினம் பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும், தற்போதைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச தினமாகும். ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடினர்.

வெள்ளிக்கிழமையான இன்று  தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பேரணிகளில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் பதாகைகளுடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்  என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

பலர் தங்கள் கைகளில் “இஸ்ரேல் ஒழிக” என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர்.  மற்றவர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை தீயிட்டு எரித்தனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே அல்-குத்ஸ் தின பேரணியின் போது முழக்கங்களை எழுப்பிய மக்கள்.
ஆயிரக்கணக்கான ஹவுதி ஆதரவாளர்கள் பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் இந்த நாளை நினைவுகூரும் பேரணியில் பங்கேற்றனர்.
டமாஸ்கஸில் உள்ள யர்மூக் அகதிகள் முகாமில், குத்ஸ் தின நினைவுகளைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பில் சிரிய அரசு சார்பு அணியைச் சேர்ந்த பாலஸ்தீனிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் நடந்த அணிவகுப்பின் போது ஏராளமான காஷ்மீரி முஸ்லிம்கள் பாலஸ்தீனக் கொடிகளையும் பலகைகளையும் ஏந்திச் சென்றனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியின் போது, அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்ற மக்கள்.
லெபனானின் பெய்ரூட்டில் உள்ள புர்ஜ் அல்-பரஜ்னேஹ் பாலஸ்தீனிய அகதிகள் முகாமில் அணிவகுப்பின் போது ஒரு பாலஸ்தீனியப் பெண் வெற்றியின் சின்னத்தை தனது கைவிரல்களால் சைகை செய்கிறார்.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அதாமியா மாவட்டத்தில் சன்னி முஸ்லிம்கள் அபு ஹனிஃபா மசூதிக்கு வெளியே அல்-குத்ஸ் தினத்தைக் குறிக்கும் பேரணியில் கலந்துகொண்டு காசாவிற்கு ஆதரவைக் தெரிவிக்கின்றனர்.
பாக்கிஸ்தானின் பெஷாவரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளின் மீது நிற்கும் மக்கள்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளின் மீது நடந்து சென்ற மக்கள்.

நன்றி: அல்-ஜசீரா


‌ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பா.ஜ.க தான் மக்களின் முதல் எதிரி | எம்.யாகூப் | தோழர் அமிர்தா

பா.ஜ.க தான் மக்களின் முதல் எதிரி | எம்.யாகூப் | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube