கருவிழி, கைரேகையை போல உடல் வாசத்தையும் தனித்துவமான அடையாளமாக பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மாட்ரிட் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஒரு புதிய உடற்கூறியல் அடையாள முறையை (biometric authentication) உருவாக்கி வருவது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் வாசம் எப்படி உருவாகிறது?
எக்கிரைன் வியர்வை சுரப்பி, அப்போக்கிரைன் வியர்வை சுரப்பி, தோல் மெழுகுச்சுரப்பி என்ற மூன்று சுரப்பிகள் மனித தோலில் உள்ளன. உடல் வெப்பநிலையை சீராக வைப்பதில் பங்காற்றும் எக்கிரைன் வியர்வை சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தின் பெரும் பகுதி நீரை உள்ளடக்கியதாகும். மூளையின் செயல்பாடான மனதின் உணர்ச்சி மாற்றத்தால் பெருமளவு தூண்டப்படும் அப்போக்கிரைன் வியர்வை சுரப்பிகள் உடலில் அக்குள் போன்ற முடியிருக்கும் பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வெளியேறும் திரவத்தில் புரதம், கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு கலந்துள்ளன. இச்சுரப்பிகளிலிருந்து வெளியேறும் திரவத்தை, தோலில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள் உட்கொண்டு வளர்சிதை மாற்றமடைய செய்வதால் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு தனிநபரின் வாசனை வகை-மாதிரியானது, MHC எனப்படும் பல்லுரு மரபணு தொகுதியிலுள்ள மரபணுக்களால் தீர்மானிக்கப்படுவதால், ஒவ்வொரு மனிதருக்கும் கைரேகை, கருவிழியைப்போல தனித்துவமான உடல்வாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி – அமைப்பில் முக்கிய பங்காற்றும் MHC மரபணுக்கள் உடல் வாசத்தைக் கொண்டு தனது இணையை தேர்ந்தெடுப்பதிலும் ஆதிக்கம் செலுத்துவது கண்டறிப்பட்டுள்ளது. ஒரு சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் இயற்கையான தனித்துவமான வாசத்தை கொண்டு எதிர் MHC மரபணு கொண்டோரை அடையாளம் கண்டு பாலியல் இணையாக தேர்ந்தெடுத்தது தெரிய வந்துள்ளது. அதாவது, செயற்கையான வாசனை திரவிய மணத்தால் மட்டும் பாலியல் உணர்வை தூண்ட முடியாது.
உடல்வாசத்தில் வயது, உணவு, பாலினம், உளவியல் மனப்பாங்கு மற்றும் மரபணு பின்புலம் ஆகியவற்றை பொறுத்து ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகள் கூட வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கின்றன. அதாவது நாம் வெளிவிடும் மூச்சு, வியர்வை, தோல், சிறுநீர், மலம் மற்றும் இனப்பெருக்க சுரப்பிகள் VOC கலவைகளின் முக்கிய மூலங்கள் எனவும் நோய் தொற்று மற்றும் உடலின் உட்புற வளர்சிதை மாற்ற குறைபாடுகள், புதிய VOC கலவைகளை உற்பத்தி செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் விகிதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
காலரா, நிமோனியா, காசநோயிலிருந்து இரத்த புற்றுநோய், கணைய மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் வரை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட வாசமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு நோய்களை முன்னறிந்து விடமுடியும் என்றும் மன நோய்களைக் கூட உடல் வாசங்களை கொண்டு அறியமுடியுமென்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பண்டைய கிரேக்கத்திலும், பண்டைய இந்தியாவிலும் நோய்களையும், விசக்கடிகளையும் உடலின் வாசம்மூலமே கண்டறியும் முறை அனுபவத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாசங்களை நுகர்ந்தறிய மின்னணு நுகர்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் இத்துறையில் ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
விலங்குலகில், உணவை கண்டறிவதிலும், சுற்றுச்சூழல் நச்சுகளை நுகர்ந்தறிவதிலும், உறவினர்கள், எதிரிகளை வேறுபடுத்திக் கொள்வதிலும் உடல்வாசம் முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்கள் உள்ளிட்டு அனைத்து பாலூட்டிகளின் குட்டிகளும் முதலில் வாசனை உணர்வின் மூலமே தனது தாயுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.
இது மட்டுமின்றி மோப்ப நாய்களைக் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உலகெங்கிலும் உடல்வாசம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒருவரின் தனித்துவமான அடையாளமாக அவரது உடல் வாசத்தை பயன்படுத்த முடியும் என்று மாட்ரிட் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர்புள்ளியியல் அங்கீகரிப்பு முறையை உருவாக்கி வருகின்றனர்.
உளவியல் மனப்பாங்கு உடல்வாசத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை ஆய்வு செய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை 28 வெவ்வேறு அமர்வுகளில், வெவ்வேறு மனநிலைகளில் சோதித்ததில் தனித்துவமான உடல்வாசத்தின் வகை-மாதிரி 85%-க்கும் மேல் நிலையானதாக, அடையாளம் கண்டுணரக்கூடியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது நடைமுறையிலிருக்கும் நுகர் உணர்கருவி தொழில்நுட்பத்தாலும் 85%-க்கும் மேற்பட்ட துல்லியத்தில் ஆட்களின் அடையாளங்களை கண்டறிந்து விடலாமாம்.
இன்னும் ஆரம்ப ஆய்வுகட்டத்தில் இருக்கும் இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது ஒரு அறையில் உணர்கருவியை பொறுத்தி, அறைக்குள் வருபவர்கள் அறியாமலேயே அவர்களது உடல் வாசத்தை பதிவு செய்யும் சாத்தியமிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஒருவர் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு வந்தாலும், மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு வந்தாலும் அவரது உடல் வாசத்தின் அடிப்படை தன்மை மாறுவதில்லை. அதே போல சாஸ்திர பஞ்சாங்கங்கள் ஜவ்வாது பூசி விட்டு வந்தாலும், ஒரு நகர சுத்தித் தொழிலாளி கால்வாயில் வேலை செய்து விட்டு வந்தாலும் அவர்களது தனித்துவமான உடல் வாசனை மாறிவிடுவதில்லை.
உண்மை இப்படியிருக்க உடலுழைப்பை செலுத்தும் உழைக்கும் மக்கள் வியர்வையின் காரணமாக அருவருப்புடன் பார்க்கும் மேட்டிமைத்தனம் உலகெங்கும் இருக்கிறது. நமது நாட்டிலோ அதற்கும் மேலதிகமாக மாட்டிறைச்சி உண்பதால் தலித் மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் பெரும்பாலும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவுவதுடன் உடல்வாசம் என்பது சமூக ஒடுக்கு முறையின் பகுதியாகவும் இருக்கிறது.
மேலும், இன்றைய முதலாளித்துவ நுகர்வு உலகில் ‘உடல் துர்நாற்றம்’ மிகப்பெரும் பிரச்சனையாகவும், அதற்கு தீர்வாக வகைவகையான சோப்புகளும், வாசனை திரவியங்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதிலும் சில வாசனை திரவியங்கள் பெண்களை பாலியல் ரீதியில் ஈர்க்குமெனவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. வாசனை திரவியங்களுக்கு பெயர் பெற்ற பாரீஸ் நகரத்தை நோக்கி உலகின் சீமான்களும், சீமாட்டிகளும் எப்போதும் படையெடுக்கிறார்கள்.
இயற்கையான, மரபுரீதியாக தொடர்புடையதும், வரலாற்று – அறிவியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உடல்வாசம் தான் அருவருப்பானதாகவும் சாதிரீதியான ஒடுக்குமுறை கருவியாகவும் இந்திய சமூகத்தில் கருதப்படுகிறது. நவீன முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமோ அதையும் மூடி மறைத்து, இருபாலினத்தவரும், எதிர் பாலினத்தவரை கவருவதற்கு விதவிதமான பொருட்களை களமிறக்கி சந்தையாக்கி விட்டுள்ளது.
ஆனால் உங்களது இயல்பான தனித்துவமான உடல் வாசனைதான் உங்களது அடையாளமாகவும், வரும் நோய்களை முன்னறிந்து சொல்வதற்கும் எதிர்காலத்தில் பயன்படப்போகிறது. ஆகவே உங்களது நாற்றத்தை போற்றுங்கள்!
சமூக விடுதலையை முன்னெடுப்போம் ! பெண் விடுதலையை சாதிப்போம்!
கொசுவை ஒழித்து நோயைத் தடுக்க துப்பு இல்லாதவர்களுக்கு மங்கள்யான் ஒரு கேடா ? –
பெண்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார இயக்கம்
மக்களிடையே விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதைப் போல, 500 கோடி ரூபாய்க்கு மங்கள்யான் என்ற ஒரு விலை உயர்ந்த பட்டாசை விண்ணில் ஏவி, மக்களின் வரிப் பணத்தைப் பொசுக்கி விட்டது, இந்த அரசு.
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். இங்குள்ள நீரையெல்லாம் பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் விற்பனை செய்துவிட்டதோடு இல்லாமல், இருக்கும் கொஞ்சநஞ்ச நீரையும் பாட்டிலில் அடைத்து ‘அம்மா’ என்ற பெயரில் காசாக்கி வருகிறது ‘ஜெ’ அரசு.
இயற்கை தந்த நீரை பாதுகாத்து மக்களுக்கு இலவசமாக வழங்காமல், தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, செவ்வாய் கிரகத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்குத்தான் மங்கள்யானை விண்ணுக்கு அனுப்பியுள்ளார்களாம். ‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பை யிலும் நெய் வடியும்’ என்பதைத்தான் நினைவு படுத்துகிறது.
குடிநீருக்காக அன்றாடம் மக்கள் அல்லல்படும்போது, ஒரு குடம் குடிநீருக்காக 8 ரூபாய் வரை கொட்டி அழும்போது, இயற்கை தந்த கொடையை, லாபவெறி கொண்டு அலையும் முதலாளிகளுக்கு அற்ப விலைக்கு அள்ளிக் கொடுத்ததை மறக்க முடியுமா? அல்லது மறைக்கத்தான் முடியுமா?
விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் கூட மக்களின் தண்ணீர் தேவைக்காக அல்ல;
எல் – டி போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் செழிக்கவே இத்திட்டத்தை திணித்துள்ளனர். மங்கள்யானுக்கான அதிகபட்ச உதிரிபாகங் கள் தயாரித்துக் கொடுத்ததே இந்த நிறுவனம்தான். இதன்மூலம் இந்நிறுவனம் கோடிக் கணக்கான ரூபாயை லாபமாக சுருட்டிக் கொண்டது. மக்கள் வரிப் பணமோ பொசுங்கி விட்டது. இப்படி பொசுங்கிப் போன மக்களின் வரிப் பணம் 500 கோடி ரூபாய். இப்போது சொல்லுங்கள், இது ஊதாரி அரசா? இல்லையா?
ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், மறுகண்ணில் வெண்ணையையும் வைப்பதுபோல, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் உழைக்காத இந்த ஊதாரிக் கூட்டங்கள் உறிஞ்சி எடுப்பதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்வதும், மறுபக்கம் உழைத்து ஓடாகத்தேயும் மக்களின் வேலையை பறித்து வறுமையிலும், பட்டினியிலும் தள்ளுவதும் கொடுமை இல்லையா? நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் இதை எப்படி எல்லோருக்குமான அரசு என்று சொல்ல முடியும்?
மேலும் கொசுவை ஒழித்து நோயைத் தடுக்க இவர்களுக்கு துப்பு இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ ஏழைகள் தான். பணக்காரர்களோ பாதுகாப்பாக ஏசி அறைகளில் பதுங்கிவிடுகின்றனர். ஏழைகளோ நாள் பூராவும் உழைத்துக் களைத்து வந்தவுடன் அயர்ந்து தூங்க முடியவில்லை. கொசுக்களின் ரீங்காரமும், அதன் கடியும் தாள முடியவில்லை. போர்த்திக் கொண்டால் புழுங்குகிறது, விலக்கினால் கடிக்கிறது. இப்படி அன்றாடம் தூங்காமல் அவதிப்படுவதோடு கொசுக்கடி யால் உருவாகும் நோய்களால் அவதிப் படுவதையும் சொல்லி மாளவில்லை.
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றால் சரியான மருத்துவம் கிடைப்பது இல்லை. வேறுவழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கு நோயை சரி செய்கிறார்களோ, இல்லையோ காசை மட்டும் ஈவு இரக்கமில்லாமல் கறந்து விடுகின்றனர்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உழைத்த பணம் முழுவதையும் தனியாருக்கு கொட்டிக் கொடுக்கிறோம். போதாக் குறைக்கு கடன் வாங்கியும் செலவழிக்கிறோம், இப்படி ஆண்டுதோறும் கடன் பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடி. இப்பணம் முழுவதும் மீண்டும் முதலாளிகளின் கஜானாவுக்கே செல்கிறது.
இது போதாதென்று இவர்கள் தயாரிக்கும் கொசுவத்தி சுருள், மேட், ஓடோமாஸ் கிரீம், லிக்கூட், கொசு பேட் போன்ற கொசு விரட்டிகளை வாங்குவதற்கும் நம் உழைப்புப் பணத்தில் கணிசமான தொகையை இழக்கிறோம். இந்த இழப்பு, இதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், ‘இதன் அருமை பெருமை’களைச் சொல்லி நம்மை ஏமாற்றி இவைகளை வாங்க வைக்கும் விளம்பர நிறுவனங்களுக்கும் லாபமாக போய் சேருகிறது.
கொசுவை ஒழிக்க ஒரு உருப்படியான நியாயமான வழிமுறையை தேடாமல், கொசுவலையையும், நொச்சிச் செடிகளையும் தரப்போகிறேன் என்கிறது ‘அம்மா’ அரசு. குடியிருக்கவே வழியில்லாத போது, எங்கு நொச்சிச் செடியை நட்டு வைப்பது?
அப்படி என்றால் இதற்கு வேறு வழியில்லையா? ஏன் இல்லை? இதோ, தென் அமெரிக்க சிறுவன் “நீர்த்தொட்டியில் ஒரு வித ரசாயன மருந்தை கலந்து விட்டால், அம்மருந்து பெண் கொசுக்களை ஈர்த்து கொன்றுவிடும். இதன் மூலம், கொசுவின் இனப்பெருக்கத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்து விட முடியும்” என்று கூறியுள்ளான்.
இச்சிறுவனுக்குள்ள சொற்ப அறிவு கூடவா, ஆற்றல் மிகுந்த நமது விஞ்ஞானிகளுக்கு தெரியாமல் போகும் ? இதைவிட இன்னும் அதிகமாகவே தெரியும். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விடுவது என்பது யாரை ஏய்ப்பதற்கு?
போகாத ஊருக்கு வழி சொல்லும் இந்த அரசுகள் அறிவிக்கும் கொள்கைகளும், திட்டங்களும் உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு அல்ல. உழைக்காத கூட்டங்கள் மேலும், மேலும் செழிப்பதற்குத்தான்.
அதனால்தான், இலவச மருத்துவத்தை படிப்படியாக ஒழித்து தனியார் மருத்துவ மனைகளை கொழுக்க வைக்கத்தான் இந்த அரசுகள் தனியார்மயத்தைப் புகுத்தி வருகின்றன. இதைத்தான் நாங்கள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பெயரில் அரங்கேறும் மறுகாலனியாக்க கொள்(ளை)கை என்கிறோம்.
மங்கள்யான் தயாரிப்பு தனியாருக்கு, தண்ணீர் தனியாருக்கு, கல்வி தனியாருக்கு, மருத்துவம் தனியாருக்கு என்று அனைத்தை யும் தனியாருக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டபிறகு, இவர்களுக்கு என்னதான் வேலை?
மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக, இவர்களின் செயல்களுக்கு எதிராக, இவர்களின் கொடுமைக்கு எதிராக, போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதே இவர்கள் வேலை. நம் விரலை எடுத்து நம் கண்ணையே குத்தும் இந்த மக்கள் விரோத அரசுகளை இனியும் நம்மை ஆள அனுமதிப்பது அவமானம். இனியும் இந்த அவமானத்தை அனுமதியோம்! இதற்கு எதிராக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
______________________________
பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மாலை 6 மணியளவில் குரோம்பேட்டையில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தெருமுனைக் கூட்டத்திற்கு தோழர் மீனா தலைமை ஏற்று நடத்தினார்.
தோழர் பேசும் போது, “கொசுக்களினால் ஏற்படக் கூடிய வியாதிகளில் குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலால் இறப்பு ஏற்படுகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு கொசுக்கடியால் வியாதிகள் வரும் போது பெண்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களது பொறுப்புகள், வேலைச் சுமை அதிகமாகிறது. அருகில் உள்ள பகுதியான செல்லியம்மன் நகரில் பெண்கள் விடுதலை முன்னணி மக்களோடு இணைந்து நடத்திய போராட்டங்களால் பெண்களுக்கான கழிப்பறை, மற்றும் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க போராடி வெற்றி பெற்றோம், இந்த அரசுகள் கொசுவைக் கூட ஒழிக்க வக்கில்லாதவர்கள், அக்கறை அற்றவர்கள். பெண்கள் போராடினல்தான் எதிலும் வெற்றி பெற முடியும்” எனப் பேசினர்.
அடுத்ததாக மாவட்ட செயற்குழு தோழர் அஜிதா பேசும் போது “அம்மா பெயரில் உணவு கடை நடத்தி பெருமைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இந்த அரசுகள் கொசுவை ஒழிக்க வழிகளை கண்டறியவில்லை. மக்களுக்கு கொசுவலை, நொச்சிசெடி கொடுப்பதாக சொல்லி ஏமாற்றுகிறது. கொசுவைத்தடுக்க, கிரீம், மேட், பேட், கொசுவர்த்திச்சுருள், லிக்விட் போன்ற பொருட்களை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கத்தான் உதவி செய்கின்றது. இங்கே இருக்கும் நீர் நிலைகளை சரிசெய்ய துப்பில்லாத இந்த அரசுகள் மங்கள்யான் அனுப்பி செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கிறார்கள். மக்கள் பணம் கோடிகோடியாக செலவழிகிறது” என்று பேசினார்.
சிறப்புரையாக பு.மா.இ.மு. தோழர் கார்த்திகேயன் பேசினர். “மக்களைப் பற்றி சட்டமன்றமோ, பாராளுமன்றமோ, எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவதில்லை, மக்கள் வர்க்கமாக இணைந்து நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும்” எனப் பேசினார்.
கூட்டத்திற்கு பகுதியிலிருந்து பெண்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், கொசுவை ஒழிக்கவும் பிற சமூக பிரச்சனைகளுக்கும் பெண்கள் அமைப்போடு இணைந்து போராடுவோம் என்கிற கருத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி
பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95.
தொடர்பு எண்: 9841658457
தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரசுக்கு எதிரான எதிர்குரல்களும், போராட்டங்களும் அதிகரிக்கின்றன. நேற்று (26.02.2014) கூட சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடியிருக்கிறது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம். அவர்கள் மட்டுமில்லை… ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பலரும் காங்கிரஸை அம்பலப்படுத்தி வருகின்றனர். இவை அரசியல் ரீதியாக இல்லை என்றாலும் அப்பாவிகள் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கயவாளிகள் மீதான வெறுப்பில் நடைபெறுகின்றனது.
சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சி கமலாலயத்திற்கு செல்லாத காரணம் என்ன?
இந்த எதிர்ப்பு சரி என்றாலும் இது காங்கிரசு மட்டுமே தொடர்பான ஒன்றல்ல. ஒட்டு மொத்தமாக இந்திய ஆளும் வர்க்கம், அதற்கு உட்பட்ட ஊடகங்கள், ஆம் ஆத்மி வரை ராஜீவ் கொலை வழக்கில் அநீதியாக தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கின்றனர்.
காங்கிரசுக்கு நிகராக ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எல்லா எதிர்ப்பு வேலைகள் செய்திருந்தாலும் ஜெயலலிதாவை தமிழ் அமைப்புகள் எதிர்ப்பதில்லை. பண்ருட்டி வேல்முருகன் நடத்திய சேலம் மாநாட்டில் பிரபாகரன் படம் வைத்து பின்னர் போலீசு மிரட்டியதும் எடுத்து விட்டார்கள். அதிமுக கூட்டணிதானே அம்மா கண்டு கொள்ளமாட்டார் என்று நினைத்து பின்னர் கண்டு கொண்டாலும் அதை கண்டிக்காமல் மேடையில் புரட்சித் தலைவி என்று புகழ்பாடினார் வேல் முருகன். இது சீமான், நெடுமாறன், வைகோ முதலான தமிழினவாதிகளுக்கும் பொருந்தும்.
ஜெயலலிதாவின் விடுதலை நாடகத்தின் கடிவாளம் மத்தியில் காங்கிரசு வசம் இருப்பது தெரிந்தும் அவர் நடத்திய நாடகத்திற்கு கைதட்டாதார் யாருமில்லை. இப்போது காங்கிரசு அரசு இதை கவுரவப் பிரச்சினையாக கருதிக் கொண்டு கொலை வெறியுடன் நீதிமன்றத்தில் பேசுகிறது. ஜெயாவின் தமிழ் உணர்வு உண்மையென்றால் இதையெல்லாம் எதிர்த்து பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டுமென்று எந்த தமிழின அமைப்புகளும் கோரவில்லை.
அப்சல் குருவை தூக்கில் போட துடித்த பாஜக இதில் ஏன் உடன் பேசவில்லை என்று கபில் சிபில் போட்டு வாங்க களத்தில் குதித்த பாஜக, தீவிரவாதி ஈவிகேஸ் இளங்கோவனை விட கடுமையாக டெல்லி ஊடகங்களில் பேசுகிறது. ஏனெனில் நிரபராதியான அப்சல் குருவை தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று பாஜக சாமியாடியதைத் தொடர்ந்து அதன் இந்துமதவெறி வாக்கு வங்கியை குறிவைத்து காங்கிரசு அரசு இதை சதித்தனமாகவும், அவசரமாகவும் நிறைவேற்றியது. பதிலுக்கு ராஜிவ் கொலை வழக்கில் தனது பிராயச்சித்தத்தை நிறைவேற்றி காங்கிரசின் இந்தி பேசும் தேசபக்தி வங்கியை பாஜக கவர நினைக்கிறது.
நிலைமை இப்படி இருக்க ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர தமிழினவாதிகள் மறந்தும் பா.ஜ.க.வை கண்டிப்பது இல்லை. அதுகுறித்துப் பேசுவது கூட இல்லை. ஆனால் மூன்று பேரை தூக்கிலிடுவதில் காங்கிரஸ் காட்டும் அதே அளவுக்கான முனைப்பை பாரதிய ஜனதாவும் காட்டி வருகிறது என்பதை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. அதனால் இரண்டு குற்றவாளிகளில் ஒன்றான காங்கிரசை மட்டும் கண்டித்து விட்டு பாரதிய ஜனதாவை தப்பிக்க விடுகின்றனர்.
“ஈழ இனப் படுகொலையில் நேரடியாக ஈடுபட்டது காங்கிரஸ் அரசு. ஆகவே காங்கிரஸ்தான் நமது முதன்மை இலக்கு. எதிர்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா அதைக் கண்டிக்கவில்லை என்றாலும், அந்தக் குற்றத்தில் பா.ஜ.க.வின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவு” என்று இதற்கு இழுத்துப் பிடித்துக் காரணம் சொல்கின்றனர். ‘2009 தேர்தலின் போதுதான் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்தது; அதனால் அப்போது அவ்வாறு பேசினார்கள்’ என்றில்லை. வாஜ்பாய் காலத்திலிருந்தே தமிழினவாதிகள் அந்தப் புள்ளியில் இருந்து இம்மியும் விலகவில்லை. காங்கிரஸ் பேரை சொன்ன உடனேயே ‘வைப்ரேட் மோடு’க்கு போகும் இவர்கள், அந்தக் குற்றத்தின் கூட்டுப் பங்காளியான பா.ஜ.க.வின் பேரைச் சொன்னால் ‘சைலண்ட் மோடு’க்கு மாறுவது ஏன்?
இந்தியாவின் மேலாதிக்க அரசியலிலேயே ஈழத்தின் வாழ்வு சிக்குண்டிருக்கிறது என்பதை இவர்கள் எந்தக் காலத்திலும் உணருவதில்லை. தங்களைப் புரிந்து கொண்ட அதிகாரிகள், கட்சி, அரசு இருந்தால் ஈழத்தை சாதித்து விடலாம் என்ற பிரமையிலேயே எப்போதும் இருக்கின்றனர். புலிகளும் அப்படித்தான் இருந்தனர் என்பது தமிழினவாதிகளின் புரிதலோடு தொடர்புடைய ஒன்று. இதுதான் இவர்கள் பாஜக-வை சந்தர்ப்பவாதமாக பார்ப்பதன் பின்னணி.
இத்தனைக்கும் காங்கிரஸ் இன்று தமிழகத்தில் செத்த பாம்பு. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க, ஓய்வு நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி கூட தயாரில்லை. இந்த நேரம் பார்த்து, எழுவர் விடுதலை விஷயம் தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளதால், அதை வைத்து அயோக்கியத்தனமான முறையில், ராஜீவ் கொலையோடு இறந்தவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா என்று இழிவாக அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி தன்னை செய்தியில் அடிபடும்படி பார்த்துக் கொள்கிறது. மேலும் சோனியா, ராகுல் காந்தி முன்னே தமது அடிமைத்தனத்தை காட்டவேண்டும் என்றும் இந்த கதர் அடிமைகள் துடிக்கிறார்கள்.
சத்தியமூர்த்தி பவன் வாசலில் சவுண்ட் கொடுக்கும் சீமானுக்கு கமலாலயம் முகவரி தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருக்கும் வைகோவிற்கு அவர்கள் எழுவர் விடுதலையை வன்மம் கொண்டு எதிர்ப்பது தெரியவில்லை. பொன்.இராதா கிருஷ்ணனை அழைத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அழகு பார்த்த பழ.நெடுமாறனுக்கு பாஜகவின் இரட்டை வேடம் தெரியவில்லை.
ஆனால் இந்துத்துவக் கும்பல் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. அவர்களின் டெல்லி தலைமை மூவர் தூக்கை ஆதரித்தும் ஏழு பேர் விடுதலையை எதிர்த்தும் தொலைக்காட்சிகளில் அர்னாப்பிற்கும், காங்கிரசுக்கும் போட்டியாக கருத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனோ, ‘மூன்று பேரைத் தூக்கிலிடக் கூடாது’ என்று அப்பட்டமான பொய்யை வெட்கமின்றி சொல்கிறார், நடிக்கிறார்.
யாராவது பாஜக குறித்து கேட்டால், ‘அதான் பொன்னார் சொல்லி விட்டாரே’ என்று சொல்லிவிடலாம் இல்லையா… இப்படிப் பா.ஜ.க.வினர் தமது பாசிசக் கருத்துக்களை தேவைக்கேற்ப மேடைக்கேற்ப உரக்கப் பேசியோ, அமைதி காத்தோ நடிக்கின்றனர். நெருக்கிப் பிடித்தால் மத்தியில் பேசப்படும் கருத்துதான் தங்களது கருத்து என்றும் அதை வெளிப்படுத்தும் விதம் வேறாக இருக்கலாம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இந்துமதவெறி போல தமிழின வெறுப்பை அப்பட்டமாக காட்ட முடியவில்லையே என்பது இந்த பார்ப்பன பாசிச கட்சியின் சிக்கல்.
பாரதிய ஜனதா என்ற இந்துவெறிக் கட்சி இந்தியாவின் எந்த தேசிய இனங்களையும், மொழிகளையும் அங்கீகரிப்பது இல்லை.
பாரதிய ஜனதா என்ற இந்துவெறிக் கட்சி இந்தியாவின் எந்த தேசிய இனங்களையும், மொழிகளையும் அங்கீகரிப்பது இல்லை. அவர்கள் தெற்கே இலங்கையையும், வடக்கே ஆப்கானிஸ்தானையும் அகண்ட பாரதத்தின் வரைபடத்திற்குள் கொண்டு வருகிறார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில் இதை வெளிப்படையாக சொன்ன மோடி மொழிவாரி மாநிலங்களையே அடியோடு எதிர்த்தார். மொழிப்போர் மரபு கொண்ட வைகோவுக்கு அது பரவாயில்லை போலும். தோற்றாலும் நாலைந்து தொகுதிகளில் நிற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை விட மொழிப் போர் உரிமை ஒன்றும் அவருக்கு மதிப்பு வாய்ந்த ஒன்றல்ல.
ஆனாலும் மோடி மேலும் பல வாய்ப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். கோவாவுக்குப் போனால் கொங்கணியில் சில நிமிடங்கள் பேசுவது, ஆந்திராவில் தெலுங்கில், மேற்கு வங்கத்தில் பெங்காலியில் என்று எந்த ஊருக்குப் போகிறாரோ அந்த ஊரின் மொழியில் ஓரிரு நிமிடங்கள் பேசி கைத் தட்டல் வாங்குகிறார் மோடி. அது மட்டுமல்ல… அந்தந்த தேசிய இனங்களின் கலாச்சார உடையையும் அணிந்துகொண்டு போஸ் கொடுக்கிறார். தேசிய இனங்களின் இருப்பையே ஏற்றுக்கொள்ளாத இந்துதேசியத்தின் முகத்தை அப்படியே உயிருடன் வைத்துக்கொண்டே, தேசிய இனங்களின் அடையாளங்களை வைத்து ஆதாயம் தேடவும் பார்க்கிறார்.
அதாவது அடையாளம் என்ற முறையில் தேசிய இனங்களை ஆதரிப்பது, அரசியல் என்ற முறையில் தேசிய இனங்களை ஒடுக்குவது இதுதான் இந்துமதவெறி பாஜக மட்டுமல்ல, காங்கிரசின் தந்திரமும் கூட.
பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர். அம்மா மெஸ், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் போன்றவைத் தமிழ்நாட்டில் பிக்&அப் ஆவதைப் பார்த்து ஆசைப்பட்டோ என்னவோ… நாடு முழுவதும் நமோ டீ கடை, நமோ மீன் கடை என்று கிளம்பிவிட்டனர். அசைவ உணவுகளின் வாசனையைக் கூட ஏற்றுக்கொள்ளாத இந்த பார்ப்பனக் கூட்டம் மீன் கடையில் நின்றபடி போஸ் கொடுக்கிறது. இல.கணேசன் என்ற தஞ்சாவூர் பார்ப்பான், கையில் மீன் பையை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கும் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தேன். நிச்சயம் கணேசனின் அன்றைய இரவுத் தூக்கம் மீன் கவுச்சியால் நிறைந்திருக்கும். ‘குஜராத் எங்கும் சைவம்தான்’ என்று அதை ஒரு பெருமை போல பீற்றிக்கொள்கிறார்கள். வாக்கு வேண்டும் என்றதும் நமோ மீன்கடை அமைக்கின்றனர்.
அதேபோல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய தருண் விஜய் சில மாதங்களுக்கு முன்பு திடீர் தமிழ்ப் பற்றாளராக மாறினார். ‘‘தமிழின் மேன்மைகளை இத்தனை ஆண்டுகளாக அறியாமல் இருந்து விட்டோமே என்று வெட்கப்படுகிறேன். தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். இதையும் சில அப்பாவி தமிழார்வலர்கள் விவரம் தெரியாமல் கொண்டாடினார்கள்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலின் தமிழ் வெறுப்பும், பகையும் மிகவும் வெளிப்படையானது. பெரியார் உருவாக்கிய அரசியல் மரபு அவர்களை எளிதில் ஊடுருவ விடாமல் தடுத்து நிற்பதால் உருவான வன்மம் அது. அதனால்தான் கோயிலில் தமிழில் பாடுவதை எதிர்க்கிறார்கள். அதனால்தான் சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதை எதிர்க்கின்றனர். அதனால்தான் பா.ஜ.க.வில் இருக்கும் சுப்பிரமணியன்சாமி, ‘தமிழ் பொறுக்கீஸ்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வன்மத்துடன் எழுதுகிறார். இப்படி முற்றுமுழுதாக அவர்கள் கரையின் அந்தப் பக்கம் இருந்தாலும் கூட இக்கரையின் மீது அக்கறை கொண்டோராக நடிக்கிறார்கள். தமிழின உணர்வின் வழியாக இந்துத்துவத்தை ஊடுருவ வைக்க முடியுமா என்றுப் பார்க்கின்றனர்.
எழுவர் விடுதலையை ஆதரிக்கும் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தவறானது, நான் அதைப் பற்றி விசாரிக்கிறேன் – ராஜ்நாத்சிங்
இது இத்தோடு முடியவில்லை. கடந்த இரண்டு மூன்று நாட்களில் ராஜ்நாத் சிங்கின் இரண்டு பேட்டிகளை நீங்கள் படித்திருக்கக்கூடும். ஒன்று, ‘குஜராத் வன்முறையில் எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்’ என்று ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது வரை மோடியின் வாயில் இருந்து இப்படிப்பட்ட சொற்கள் வரவில்லை. அவர் முஸ்லிம் படுகொலைகளை எதிர்விளைவு என்றுதான் இப்போதும் சொல்கிறார். பெரும்பான்மை இந்து வாக்குகளை ஈர்ப்பதற்கு மோடியை ‘கடப்பாரை இந்து’வாக உலவவிடும் இவர்கள், ராஜ்நாத் சிங்கை மன்னிப்பு கோர வைத்து ‘பெருந்தன்மை இந்து’வாக சித்தரித்து சிறுபான்மை வாக்குகளை கவர முயற்சிக்கின்றனர். இது வாஜ்பாயி சாஃப்ட்டானவர், அத்வானி வயலன்டானவர் எனும் முகமூடி மோசடிக்கு நிகரானது. அடிப்படையில் இந்துமதவெறி ஒன்றுதான் எனும் போது தேவை கருதி அது தனது முகங்களை பல முகமூடிகளாக அலையவிட்டு திசை திருப்புகிறது.
ராஜ்நாத் சிங்கின் மற்றொரு பேட்டி தமிழ் இந்துவில் வெளியானது. “மூவர் தூக்குப் பிரச்னையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அவர்களை தூக்கில் போடக்கூடாது” என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அவர் அப்படி சொல்லியது எங்களுக்குத் தெரியாது. ஒரு தேசியக் கட்சிக்கு மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு இருக்க முடியாது. நான் இதைப்பற்றி விசாரிக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ராஜ்நாத். அது மட்டுமல்ல… அந்தப் பேட்டியில் மேலும் பல அரியக் கருத்துக்களை உதிர்த்துள்ளார் ராஜ்நாத். கீழ்கண்ட மூன்று கேள்வி பதில்களை கவனியுங்கள்.
இறுதிப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலையைக் கண்டிக்காத நீங்கள், இப்போது காங்கிரஸ் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன்?
2009-ல் பா.ஜ.க. என்ன செய்தது என்பதுபற்றி எனக்கு நினைவில்லை. ஆனால், மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை, இலங்கை அரசு இன்னும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கு நடந்த படுகொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பல குறைபாடான உத்திகள் கையாளப்பட்டுள்ளன. இருநாட்டுப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து அவசியம். ஆனால், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு இதைச் செய்யவில்லை.
இதற்கும் முன்பாக இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?
நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என நினைவுக்கு வரவில்லை!
தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?
நோ கமென்ட்ஸ்!
– மிகவும் பச்சையாக பசப்புகிறார் ராஜ்நாத். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் பாலம் நினைவிருக்கிறது, 2009 நினைவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்ற பொய்யை நினைவில் வைத்திருக்கும் இவர்கள், உண்மைகளை மட்டும் வசதியாக மறந்துவிடுவது எதனால்? சுஸ்மா சுவராஜிடம் கேட்டால் 2009-ல் என்ன நடந்தது என்பது பற்றி, ராஜபக்சேவிடம் பரிசாக வாங்கிய நெக்லஸை தடவியபடியே பதில் சொல்லக்கூடும்.
2009-ல் நடந்தது நினைவில்லை என்று ராஜ்நாத் சொல்வதன் உண்மையான பொருள், 2002-ல் நடந்ததை நினைவில் கொள்ளாதீர்கள் என்பதுதான். இலங்கை ராஜபக்சே பற்றிப் பேசினால், இந்திய ராஜபக்சேக் குறித்தும் பேச வேண்டியிருக்கும் என்பதால் அவர் கவனமாக ஞாபக மறதியை தேர்வு செய்கிறார். மேலும் காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும்தான் ராஜபக்சேவின் நண்பர்கள் என்பதை மறுக்க முடியாது அல்லவா!
மீண்டும், மீண்டும் கேட்கப்படும்போது ‘எதுக்குப் பழசை எல்லாம் பேசிக்கிட்டு. இப்போ உள்ளதைப் பேசுங்க’ என்கிறார். வரலாற்றின் நெடியப் பக்கங்களில் குருதி தோய்ந்த காவி வரலாற்றில் அவர்களால் மறக்கப்படிக்கப்பட்ட மறைக்கப்பட்ட படுகொலைகள் எண்ணிலடங்கா. ராஜ்நாத் சிங் இப்படி ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பச்சையாக பொய் சொல்லி ஏமாற்றுவது கூட பிரச்சினை இல்லை. ஏனெனில் பாசிசமே இத்தகைய ஏமாற்று வேலைகளில்தான் பலம் பெறுகிறது. ஆனால் அதை பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுக் கூட்டணியில் இருக்கும் வைகோ போன்ற தமிழினவாதிகள் அங்கீகரிக்கின்றனர் என்பதுதான் நாம் கவனப்படுத்தி எதிர்க்க வேண்டிய துரோகம்.
போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று இந்த நிமிடம் வரை கேட்கிறார் வைகோ. ஆனால் ராஜ்நாத் ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார். பழசை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்கிறார். இந்த எழவைதானே ராஜபக்சேவும் சொல்கிறார்? ராஜபக்சே சொன்னால் ரத்தம் கொதிக்கும்; ராஜ்நாத் சொன்னால் உள்ளம் இனிக்குமா? இத்தனை கீழ்த்தரமான அரசியலை ஏற்றுக்கொண்டு அதை கொள்கை போல பேசித் திரியும் வைகோ போன்ற ஐந்தாம் படை அரசியல்வாதிகளும், அவர்களுக்கு அரசியல் தரகனாக செயல்படும் தமிழருவி மணியன்களும், அர்ஜன் சம்பத், பொன்னாரை தோளில் சுமக்கும் பழ.நெடுமாறனும் தான் தமிழினத்தின் உண்மையான பிரதிநிதிகள் என்றால் நமக்கு கோபம் வரவேண்டாமா?
இவர்கள் தமிழர் நலன், ஈழத் தமிழர் நலன் என்ற கள்ளப்பெயர்களைச் சூடிக்கொண்டு இந்துவெறியர்களுக்கு பல்லக்குத் தூக்குகின்றனர். சோ ராமசாமியும், இந்து ராமும், சுப்ரமணியன் சாமியும், குருமூர்த்தியும், ராமகோபாலனும், இல.கணேசனும், அர்ஜுன் சம்பத்தும் இதைத்தான் செய்கிறார்கள். அவர்களை தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்!
சபரி கும்பமேளாவுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளாகவே, மேளாவுக்கான தயாரிப்பு வேலைகளுக்கு மத்தியில், பிற நீண்ட கால சங்க (ஆர்.எஸ்.எஸ்) ஊழியர்களை சந்தித்து மத மாற்றங்களை விட அவர்கள் மிகவும் தீவிரமானதாக கருதிய ஒரு பிரச்சனையைப் பற்றி அசீமானந்தா விவாதித்து வந்தார். இந்தக் குழுவின் மையமாக இருந்தவர்கள் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் செயற்குழு உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூரும், இந்தூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியும்.
பிரக்யாசிங் தாக்கூர்
2003-ம் ஆண்டு துவக்கத்தில் டாங்ஸின் பா.ஜ.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயந்திபாய் கேவத் அசீமானந்தாவை தொலைபேசியில் அழைத்தார். “பிரக்யா சிங் உங்களை சந்திக்க விரும்புகிறார்” என்று கூறிய கேவத், சூரத்தின் நவ்சாரியில் உள்ள தனது வீட்டில் அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
1990-களின் இறுதியில் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர் ஒருவரின் வீட்டில் பிரக்யா சிங்கை சந்தித்ததை அசீமானந்தா நினைவு கூர்கிறார். குட்டை முடி, டி-ஷர்ட், ஜீன்சுடன் கூடிய பிரக்யா சிங்கின் தோற்றமும் அவரது தீவிர சவடால் பேச்சும் அசீமானந்தாவின் கவனத்தை ஈர்த்திருந்தன. (2006-க்குப் பிறகான ஒரு பேச்சில், “[பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும்] நாம் ஒரு முடிவு கட்டுவோம். அவர்களை எரித்து சாம்பலாக்குவோம்” என்று தனக்கே உரிய கடும் தாக்குதல் மொழியில் அவர் முழங்கினார்). நவ்சாரியில் அசீமானந்தா அவரை சந்தித்த போது, ஒரு மாதத்துக்குள் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் வாகாய் ஆசிரமத்தில் அசீமானந்தாவை சந்திக்க வருவதாக அவரிடம் கூறினார்.
இந்துத்துவாவை வளர்ப்பதற்கான அசீமானந்தாவின் இடையறா முயற்சி, அவரது “இந்துத்துவுக்கான பணி” தன்னை அவரிடம் ஈர்த்தது என்கிறார் பிரக்யா சிங். சென்ற டிசம்பர் மாதம் நாங்கள் போபாலில் சந்தித்த போது, “அவர் ஒரு மகத்தான சன்யாசி, நாட்டுக்காக மகத்தான பணிகளை செய்து வருகிறார்” என்றார் பிரக்யா சிங்.
நவ்சாரி சந்திப்புக்குப் பிறகு, பிரக்யா சிங் தான் வாக்களித்தபடி விரைவில் டாங்ஸ் வந்து சேர்ந்தார். அவருடன் மூன்று ஆண்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சுனில் ஜோஷி.
ஜோஷியை நேரில் அறிந்தவர்கள், அவரை “விசித்திரமானவர் மற்றும் துறுதுறுப்பானவர்” என்று சித்தரிக்கின்றனர். அவர் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், ஆர்.எஸ்.எஸ் மூலமாகவே அவரை சந்தித்ததாகவும் பிரக்யா சிங் கூறுகிறார். பிற்காலத்தில், ஜோஷிக்கு சபரி தாம் ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து தான் பாதுகாத்து வந்த போது, ஜோஷி நாள் முழுவதும் பஜனைகளிலும், பூஜைகள் செய்வதில் செலவழிப்பார் என்று அசீமானந்தா நினைவு கூர்கிறார். ஜோஷியும், பிரக்யா சிங்கும் அசீமானந்தாவுடன் உறவாட ஆரம்பித்திருந்த நேரத்தில் ஜோஷி மத்திய பிரதேசத்தில் ஒரு காங்கிரஸ் பழங்குடி தலைவரையும் காங்கிரஸ்காரர் ஒருவரின் மகனையும் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். அந்த குற்றத்துக்காக ஆர்.எஸ்.எஸ் அவரை அமைப்பிலிருந்து விலக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
சுனில் ஜோஷி
விரைவில் இன்னொரு உறுப்பினர் இந்தக் குழுவில் சேர்ந்தார். கனடாவில் வேலை செய்து வந்த பாரத் ராஜேஷ்வர் என்ற மேலாண்மைத் துறை ஊழியர் டாங்ஸில் அசீமானந்தாவின் பணிகள் பற்றி கேள்விப்பட்டார். தனது வெளிநாட்டு வாழ்க்கையைத் துறந்து அவருக்கு உதவி புரிய இந்தியாவுக்கு வர முடிவு செய்தார். டாங்சுக்கு அருகில் இருந்த வல்சாத் மாவட்டத்தில் ராதேஷ்வரின் வீட்டில் ஆசிரமத்துக்குப் போகும் அசீமானந்தாவின் கூட்டாளிகள் தங்கிச் செல்வது வழக்கம்.
கும்பமேளாவுக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி சந்தித்ததாக அசீமானந்தாவும் பிரக்யா சிங்கும் கூறுகிறார்கள். நாட்டில் முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ந்து வருவதைக் குறித்து அவர்கள் முக்கியமாக விவாதித்தார்கள். அது தேசத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அசீமானந்தா கருதினார். “கிருத்துவர்களைப் பொறுத்தவரை நாம் ஒன்றாக சேர்ந்து அவர்களை மிரட்டி விடலாம், ஆனால் முஸ்லீம்கள் வேகமாக பெருகி வருகிறார்கள்.” என்கிறார் அசீமானந்தா.
“தாலிபான், மக்களை படுகொலை செய்யும் வீடியோக்களை பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி நான் கூட்டங்களில் பேசுவது வழக்கம். முஸ்லீம்கள் இது போல பெருகிக் கொண்டே போனால், விரைவில் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தான் ஆக்கி விடுவார்கள். அதன் பிறகு இங்கிருக்கும் இந்துக்கள் அதே மாதிரியான சித்திரவதைகளை எதிர் கொள்ள நேரிடும்”. இதை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அந்தக் குழு ஆராய்ந்ததாக சொல்கிறார் அசீமானந்தா. இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் குறிப்பாக இந்து வழிபாட்டுத் தலங்களின் மீது நடக்கும் தாக்குதல்கள் அவர்களுக்கு ஆத்திரமூட்டின. குறிப்பாக 2002-ம் ஆண்டு குஜராத்தின் காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 30 பேரைக் கொன்ற தாக்குதல் அவர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. இந்த பிரச்சனைக்கு அசீமானந்தாவின் தீர்வு அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது என்பதுதான். அதற்கு ஆதரவாக அவர் தொடர்ந்து வாதாடி வந்தார். “பாம் கா பத்லா பாம்” – குண்டுக்கு பதில் குண்டு என்று அவர் திரும்பத் திரும்பச் சொல்வது வழக்கம்.
அசீமானந்தா கும்பமேளாவுக்கு தயாரித்துக் கொண்டிருக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குழுவின் விவாதங்கள் தொடர்ந்தன. விரைவில், மேலே கூறியது போல (முதல் பகுதியில்) மோகன் பாகவத்தும் இந்திரேஷ் குமாரும் அவர்களது திட்டத்துக்கு தமது ஒப்புதலை அளித்தனர். அவர்கள் இருவரும் மற்ற இந்து வலது சாரி தலைவர்களும் கும்ப மேளாவில் நடுநாயகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அசீமானந்தா தனது ஆசிரமத்துக்கு திரும்பினார். சங்கத்துடன் அவருக்கு நீண்ட உறவும், பிரபலமும் இருந்தாலும், பொது இடங்களில் அவர் ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பாகவத்தும் இந்திரேஷ் குமாரும் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டார். கும்பமேளாவில் பங்கேற்பதற்கு பதிலாக ரகசியமாக தாக்குதல்களுக்கு திட்டமிடுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
ராமசந்திர கல்சங்ரா
சபரி கும்பமேளா நடந்த இரண்டு மாதங்களுக்குள் வாரணாசியில் வெடித்த இரண்டு வெடிகுண்டுகள் 28 பேரைக் கொன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை படுகாயப்படுத்தின. ஒரு வெடிகுண்டு ஒரு இந்து கோயிலின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. அசீமானந்தா, பிரக்யா சிங், சஞ்சய் ஜோஷி, ராதேஷ்வர் ஆகியோர் சபரி தாமில் கூடி உடனடியாக ஒரு பதிலடி கொடுக்க முடிவு செய்தனர்.
ஜோஷியும், ராதேஷ்வரும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குப் போய் கைத்துப்பாக்கிகளும், வெடிப்பானுக்கான சிம் அட்டைகளும் வாங்கி வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அசீமானந்தா அவர்களுக்கு ரூ 25,000 கொடுத்தார். மற்ற தீவிரவாத சாதுக்களையும் இந்த சதித்திட்டத்தில் சேர்த்துக் கொளள முயற்சி செய்யும்படி அசீமானந்தா அவர்களுக்கு அறிவுரை கூறினார். ஆனால், அவர் சேர்த்துக் கொண்ட ராம பக்தர்கள் வெறும் வாய்வீச்சுக்களோடு நிறுத்திக் கொண்டார்கள். ஜார்கண்டில் ஜமதாதா மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் தனது நண்பருமான தேவேந்தர் குப்தாவை ஜோஷி தொடர்பு கொண்டார். சிம் அட்டைகள் வாங்குவதற்காக போலி ஓட்டுனர் உரிமங்களை பெறுவதற்கு அவர் உதவி செய்தார்.
ஜூன் 2006-ல் குழு ராதேஷ்வரின் வீட்டில் கூடியது. ஜோஷியும் பிரக்யா சிங்கும் வரும் போது தம்முடன் சந்தீப் டாங்கே, ராமசந்திர கல்சங்ரா, லோகேஷ் சர்மா மற்றும் அமீத் என்று மட்டும் அறியப்பட்ட ஒரு ஆள் ஆகியோர் அடங்கிய புது சதித்திட்ட உறுப்பினர்களை அழைத்து வந்தனர். “டீச்சர்” என்ற புனைபெயர் வைத்திருந்த டாங்கே மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர், கல்சங்கரா இந்தூரின் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்.
குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு ஜோஷி மூன்று செயற் குழுக்களை அமைத்தார். குண்டு வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, புகலிடம் கொடுத்து, பாதுகாப்பது ஒரு குழுவின் வேலை. இன்னொரு குழு குண்டுகளுக்கான பொருட்களை வாங்கி வரும் வேலையைச் செய்யும். மூன்றாவது குழு குண்டுகளை உருவாக்கி, தாக்குதல்களை நடத்தும். சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இழையாக தான் மட்டுமே இருப்பதாக ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். பெரும் எண்ணிக்கையிலான பாகிஸ்தானியர்களை கொல்வதற்கு சம்ஜவுதா விரைவு ரயிலை குறி வைக்கலாம் என்று அவர் ஆலோசனை சொன்னார். மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர், மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் ஆகியவற்றை அசீமானந்தா குறிப்பிட்டார்.
லெப் கர்னல் புரோகித்
டாங்ஸில் பல மாதங்கள் எந்த புதிய தகவலும் இல்லாமல் கழிந்தன. ஜோஷி தீபாவளி கொண்டாட்டங்களின் போது சபரி தாமுக்கு வந்து அசீமானந்தாவை சந்தித்தார். செப்டம்பர் 8-ம் தேதி மாலேகானில் 31 பேரைக் கொன்ற இரண்டு குண்டு வெடிப்புகளை நடத்தியது தான்தான் என்று ஜோஷி கூறியிருக்கிறார். குண்டு செய்யும் பொருட்களை வாங்கவும் குண்டுகளை உருவாக்கி, தாக்குதல்களை நடத்த டாங்கேவும், கல்சங்கராவும் ஜோஷிக்கு உதவியிருக்கின்றனர்.
2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, சிவராத்திரி நாளில் ஜோஷியும் அசீமானந்தாவும் குஜராத்தின் பால்பூரில் உள்ள கர்ட்மேஷ்வர் மகாதேவ் மந்திரில் சந்தித்தனர். அடுத்த சில நாட்களில் நல்ல சேதி வரும் என்று ஜோஷி அசீமானந்தாவிடம் கூறியிருக்கிறார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடிக்கப்பட்டது. அந்த தாக்குதலுக்கு ஓரிரு நாட்களுக்குப் பிறகு அசீமானந்தாவும் சதித்திட்டத்தின் சில உறுப்பினர்களும் ராதேஷ்வரின் வீட்டில் சந்தித்த போது தாக்குதலை நடத்தியது தனது வேலை என்று ஜோஷி கூறினார். டாங்கேவும் அவரது நண்பர்களும் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறியிருக்கிறார். அடுத்த 8 மாதங்களுக்கு தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்தக் குழு ஹைதராபாத்தின் மெக்கா மசூதியில் மே மாதம் குண்டு வைத்தது. அக்டோபரில் அவர்கள் அஜ்மீர் தர்க்காவில் குண்டு வைத்தனர்.
2007-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி பிரக்யா சிங் அவரது தங்கையுடனும் உதவியாளர் நீரா சிங்குடனும் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சம்ஜவுதா குண்டு வெடிப்பு குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். நீரா இது குறித்து சாட்சியம் அளித்திருக்கிறார். அந்த நாசச்செயல்களின் அழிவுக் காட்சிகள் நீராவை அழ வைத்தன. செத்தது அத்தனை பேரும் முஸ்லீம்கள்தான் என்பதால் அழக் கூடாது என்று பிரக்யா சிங் கூறியிருக்கிறார். சில இந்துக்களும் கொல்லப்பட்டவர்களில் இருக்கிறார்கள் என்று நீரா சுட்டிக் காட்டிய போது, “கடலையோடு சேர்த்து சில புழுக்களும் அரைபடத்தான் செய்கின்றன” என்று பழமொழி கூறியிருக்கிறார் பிரக்யா சிங். தனது தங்கைக்கும், நீராவுக்கும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து அந்த வெறிச்செயலை கொண்டாடியிருக்கிறார்.
2007-ம் ஆண்டு இறுதியில் சதித்திட்டத்தின் போக்கு அதி மோசமானது. டிசம்பர் 29-ம் தேதி மத்திய பிரதேசத்தின் தேவாஸில் உள்ள அவரது தாயின் வீட்டுக்கு அருகில் உள்ள ஆளில்லா சாலை ஒன்றில் சுனில் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜோஷியுடன் ராஜ், மேகூல், கான்சியாம், உஸ்தாத் ஆகிய நான்கு உதவியாளர்கள் எப்போதும் இருப்பார்கள். (ராஜூம் மேகூலும் 2002 குஜராத் கலவரங்களின் போது 14 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரி தாக்குதல் வழக்கில் போலீசால் தேடப்பட்டு வருபவர்கள்.) நான்கு பேருமே ஜோஷியின் கொலைக்குப் பிறகு மர்மமாக மறைந்து விட்டனர்.
ஜோஷியின் மரணம் பற்றிய செய்தி வந்ததும் அது தொடர்பான விபரங்களை பெறுவதற்கு அசீமானந்தா, ஒரு ராணுவ உளவுத் துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நாசிக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான அபினவ் பாரத்தின் கூட்டம் ஒன்றில் அசீமானந்தா லெப்டினென்ட் கர்னல் சிறீகாந்த் புரோகித்தை சந்தித்திருந்தார்.
புரோகித் ஒரு மர்மமான மனிதர். 2008-ம் ஆண்டு நிகழ்ந்த இரண்டாவது மாலேகான் குண்டு வெடிப்பை திட்டமிட்டதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். மேலதிகாரிகளின் உத்தரவின்படி தான் இரட்டை உளவாளியாக (இரு தரப்பிடமும் தான் மறு தரப்பின் மத்தியில் உளவு வேலை செய்வதாக கூறுவது) வேலை செய்ததாக அவர் சாதிக்கிறார். “நான் என் வேலையை சரிவர செய்து முடித்தேன். மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தேன். எல்லாமே ராணுவ பதிவுகளில் ஆவணங்களாக உள்ளன” என்று அவர் 2012-ம் ஆண்டு அவுட்லுக் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “உண்மையை தெரிந்து கொள்ளும் தேவை இருப்பவர்கள் அவரை கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. அவரது உண்மையான நோக்கங்கள் என்னவென்பது யாருக்கும் தெரியாது” என்கிறார் பிரக்யா சிங்கின் வழக்கறிஞர் கணேஷ் சொவானி.
ஜோஷி ஒரு பழங்குடி காங்கிரஸ் தலைவரின் கொலைக்கு காரணமாக இருந்ததால் அவர் கொல்லப்பட்டது ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று புரோகித், அசீமானந்தாவிடம் கூறியிருக்கிறார்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் ஐந்து குண்டுகள் வெடித்தன. மாலேகானில் இரண்டு, மொடாசாவில் ஒன்று என அவை ஏழு பேரைக் கொன்று 80 பேரை காயப்படுத்தின. விரைவில் சந்தீப் டாங்கே அசீமானந்தாவை தொடர்பு கொண்டு தனக்கு சபரி தாம் ஆசிரமத்தில் சில நாட்கள் பாதுகாப்பு தரும்படி கேட்டான். அசீமானந்தா குஜராத்தில் உள்ள நாதியாதுக்குப் போய்க் கொண்டிருந்தார். தான் இல்லாத போது டாங்கேவை ஆசிரமத்தில் விட்டு வைப்பது புத்திசாலித்தனமல்ல என்று அசீமானந்தா கருதினார். சபரி தாமிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயாராவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திலிருந்து தன்னை அழைத்துக் கொண்டு போய் பரோடாவில் விட்டு விடுமாறு அசீமானந்தாவிடம் கேட்டுக் கொண்டான். அசீமானந்தா டாங்கேவை வயாராவில் சந்தித்த போது அவன் மிகவும் பயத்துடன் இருந்தான், அவனுடன் ராமசந்திர கல்சங்காராவும் இருந்தான். மகாராஷ்டிராவிலிருந்து வருவதாக அவர்கள் சொன்னார்கள். பரோடா போகும் 3 மணி நேர பயணத்தின் போது அவர்கள் வாயே திறக்கவில்லை என்று அசீமானந்தா பின்னர் நினைவு கூர்கிறார்.
முக்கிய சதியாளர்களில் முதலில் பிடிபட்டது பிரக்யா சிங். இரண்டாவது மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் அவருடையது என்பதை மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு கண்டறிந்த பிறகு அவர் அக்டோபர் 2008-ல் கைது செய்யப்பட்டார். போலீஸ் பாதுகாப்பில் அவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அந்த செய்தி அசீமானந்தாவை பெரிதும் பாதித்தது. இந்த வழக்கின் அடுத்த பெரிய கைதை மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவு நவம்பர் முதல் வாரத்தில் செய்தது. புரோகித் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத செயல்களை செய்தவர்களுக்கு குண்டுகளை உருவாக்க பயிற்சி அளித்ததாகவும், ராணுவ கிடங்குகளிலிருந்து வெடிமருந்து எடுத்துக் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த மாதத்திலேயே பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தயானந்த் பாண்டே என்ற சதியாளரை கைது செய்தது. அதன் பிறகு கைதுகள் திடீரென்று நின்று போயின. புலன் விசாரணைக்கு தலைமை வகித்த மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே நவம்பர் 26 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏப்ரல் 2010 வரை பெரிதாக எதுவும் மாறி விடவில்லை. ஆஜ்மீர் குண்டு வெடிப்பை விசாரித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஜோஷிக்கும் ராதேஷ்வருக்கும் போலி அடையாளத்தை ஏற்பாடு செய்து கொடுத்த ஜார்கண்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் தேவேந்திர குப்தாவையும் இன்னும் இரண்டு பேரையும் கைது செய்தது. ஜூலை மாதம் சம்ஜவுதா விரைவுவண்டி குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு ஆணையம் ஏற்றுக் கொண்டது. இதற்கிடையில் சி.பி.ஐ மெக்கா மசூதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்து அசீமானந்தா உட்பட சதித்திட்டத்தின் பல உறுப்பினர்களை கண்காணிக்கத் தொடங்கியது.
இந்தக் கட்டத்தில், தன்னைச் சுற்றி வலை இறுகுவதை அசீமானந்தா புரிந்து கொண்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய சில மாதங்களில் அவர் மிகவும் பதற்றமாக காணப்பட்டார் என்கிறார் பூல்சந்த் பப்லூ. “செய்திகள் குறித்தும், புலன் விசாரணை குறித்தும் அவர் மவுனம் சாதித்தார், விடாப்பிடியாக மவுனம் சாதித்தார். நாங்கள் அவரிடம் எதையும் கேட்பதில்லை” என்கிறார் பப்லூ. 60 வயதை எட்டியிருந்த அசீமானந்தா கைதாவதை தவிர்க்க சபரிதாம் ஆசிரமத்தை விட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளுக்கு அலைந்து திரிய ஆரம்பித்தார். இடைவிடாத பயணங்கள் அவரை பலவீனப்படுத்தி, உடல்நிலை சீரழிந்தது. ஹரித்வாரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு புனைபெயருடன் வாழ்ந்து வந்த அவரை சி.பி.ஐ நவம்பர் மாதம் தேடி வந்தடைந்தது. “சுனிலுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் அவர்கள் கைது செய்து விட்டார்கள். நான்தான் பிடிபட்ட கடைசி நபர்” என்கிறார் அசீமானந்தா.
ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்ட அசீமானந்தா விரைவில் குற்றத்தை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். “சி.பி.ஐ.க்கு நடந்தது ஏற்கனவே தெரிந்திருந்தது” என்கிறார் அசீமானந்தா. அவர் ஏன் குற்றத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார் என்பது குறித்த ஒரு ஆச்சரியமூட்டும் கதை அசீமானந்தாவின் ஒரு வாக்குமூலத்தில் உள்ளது. கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் கலீம் என்ற பெயருடைய முஸ்லீம் சிறுவனை சந்தித்தார். அசீமானந்தால் திட்டமிடப்பட்ட மெக்கா மசூதி சதித் திட்டத்திற்காக கலீம் கைது செய்யப்பட்டிருந்தான். கலீம் அசீமானந்தாவுக்கு பணிவிடைகள் செய்வது வழக்கம். அவனது கருணை அசீமானந்தாவின் மனதை உறுத்தியது. அந்த குற்றவுணர்வில்தான் தான் வாக்குமூலம் அளிப்பதாக அசீமானந்தா கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்வை எங்கள் முதல் நேர்காணலில் நான் குறிப்பிட்டதும் அசீமானந்தா குறும்பாக பார்த்தார் “கலீம் பற்றிய செய்தி அவ்வளவு பிரபலமாகி விட்டதா?” கலீம் பற்றிய கதை முழுக்க முழுக்க போலீசால் இட்டுக் கட்டப்பட்டது என்கிறார் அவர். “நான் அதே சிறையில் இருப்பது கலீமுக்குத் தெரியும். ஆனால், அவனை நான் சந்திக்க முடியவில்லை. நான் ஒரு முஸ்லீம் சிறுவனிடம் அப்படிப்பட்ட விஷயங்களை எப்படிச் சொல்வேன்”.
தனது ஒப்புதல் வாக்குமூலங்களுக்குப் பிறகு அசீமானந்தா சம்ஜவுதா குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று இந்திய ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். “குற்றவியல் சட்ட நடைமுறையின்படி நான் தூக்கிலிணப்படுவதற்கு முன்பு ஹபீஸ் சயீத், முல்லா ஓமர், மற்றும் பாகிஸ்தானில் உள்ள பிற ஜிகாதி பயங்கரவாதிகளை மாற்ற அல்லது திருத்த விரும்புகிறேன். அவர்களை என்னிடம் அனுப்புங்கள், அல்லது என்னை உங்களிடம் அனுப்புமாறு இந்திய அரசிடம் கோருங்கள்” என்று எழுதியிருந்தார்.
– தொடரும்
நன்றி : லீனா கீதா ரகுநாத்,கேரவான் (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு
“உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? இல்லை மாஃபியா கேங்கா?” என்ற தலைப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஸ்டேட் பேங்க் அதிகாரிகளைக் கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உசிலை ஸ்டேட் பேங்கின் பிளக்ஸ் பேனரில்கடன் வாங்கி அடைக்க முடியாத தவணை தவறிய கடனாளிகளான 17 சுயஉதவிக் குழுக்களின் குரூப் போட்டோக்களை ஒட்டியுள்ளனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு, “எங்கும் போய் சொல்லிக்கோ, நாங்கள் சட்டப்படிதான் செய்திருக்கிறோம்.” என்று திமிராக வங்கி அதிகாரிகள் சொல்லி அனுப்பியுள்ளார்கள். மனம் ஒடிந்து போன ஒரு சுய உதவிக் குழுவின் தலைவர் 18.2.2014 அன்று உசிலை. வி.வி.மு. அமைப்பாளர் தோழர் குருசாமிக்கு போன் செய்து, “எங்களை ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் அவமானப்படுத்தியுள்ளார்கள். எங்கள் பிளக்ஸ் போட்டோ விளம்பரத்தை எடுப்பதற்கு உதவி செய்யுங்கள், எங்களால் வெளியில் நடமாட முடியவில்லை. அவமானமாக உள்ளது” என்று மனம் நொந்து கூறினார்.
உடனே வி.வி.மு. அமைப்பு ஸ்டேட் பேங்க் சென்று அந்த பிளெக்ஸ் பேனரை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தோம். உடனடியாக சுவரொட்டி போட்டு அம்பலப்படுத்தியுள்ளோம்.
“ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யுற, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரம், 20 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா?”
“போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி”
என்ற வாசகங்களை தாங்கி சுவரொட்டி ஒட்டப்பட்டது.
20.2.2014 அன்று காலை 10.30-க்கு ஸ்டேட் வங்கி முன்பு வி.வி.மு தோழர்களும் சுய உதவிக் குழு பெண்களும் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசுக்கு தகவல் சொல்லி, “நீங்களா போட்டோவை எடுக்குறீங்களா? நாங்க எடுக்கட்டுமா, நாங்க எடுத்தா விபரீதமா இருக்கும்” என எச்சரிக்கப்பட்டது.
உடனே காவல்துறை தலையிட்டு அரை மணி நேரத்தில் போட்டோவை அகற்றி விட்டு நம்மையும் அழைத்துச் சென்று அகற்றப்பட்டதை காட்டினார்கள்.
“வங்கியில் கடன் வாங்கி கடன் அடைக்க முடியாதவர்கள் குற்றவாளிகள் அல்ல. நாம் இவர்கள் கொடுத்த பணத்தில் நான்கு கார் வாங்கி ரோட்டுல விடல. ஆடு, மாடு வாங்கினோம், விவசாயம் செய்தோம், மழையில்லாத்தால் நமது பகுதியே வறட்சி பகுதியாக ஆகிவிட்டதால் கடன் அடைக்க முடியவில்லை. நாம் ஒன்றும் பஸ்ஸ்டாண்டு திருடர்களோ அல்லது தேடப்படும் குற்றவாளிகளோ இல்லை. அவர்களைத்தான் காவல்துறை பேருந்து நிலையத்தில் போட்டோ ஒட்டி வைப்பார்கள்.
நாம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நம்மை அவமானப்படுத்துவதன் மூலம் நம்மை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என வழக்கு தொடுக்க முடியும். நம்மை அவமானப்படுத்தய அதிகாரிகளை நாமும் அவமானப்படுத்த தயங்கக் கூடாது” என்ற விளக்கி பேசியது கூடியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கைதட்டி வரவேற்றார்கள்
ஒரு வழக்கறிஞர், “தோழரே சட்டப்படி இவர்களை நாங்க தண்டிக்க முடியாது. நீங்க செய்ததுதான் சரி” என்ற பாராட்டி நிதி கொடுத்து ஆதரித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த சுயஉதவிக் குழு பெண்கள் கண்ணீர் மல்க நம்மை பார்த்து நன்றி கூறி விடைபெற்றார்கள். சட்டம் பேசி மிரட்டும் அதிகாரிகளை விவிமு-வின் போர்க்குணமிக்க போராட்டம் பணிய வைத்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
உடனே தகவல் தெரிந்து ஆண்டிப்பட்டியிலிருந்து ஒரு மகளிர் சுய உதவிக் குழு பெண் நமது போராட்டத்திற்கு நன்றி கூறி விட்டு, “எங்கள் பகுதி மேனேஜர் என்னை எந்த நேரமும் மிரட்டுகிறார். எனது குழுவில் சிலர் பணம் கட்டாததற்கு நீதான் பொறுப்பு எனக் கூறி, உடனே கட்டு இல்லைனா நோட்டீஸ் அனுப்புவேன், போலீசை வீட்டுக்கு அனுப்புவேன் என மிரட்டுகிறார். என்ன செய்வது என தெரியவில்லை. இதனால எங்க வீட்டுல ஏன் குழுவிற்கு பொறுப்புக்கு போன என எந்நேரமும் சண்டை வருகிறது. என்ன செய்யலாம்” என ஆலோசனை கேட்டார்.
“நீங்க ஏன் கவலைப்படுறீங்க. வங்கி நம்மளோடது. அதில் உள்ள பணமும் நம்முடையது. இந்த அதிகாரி இன்றைக்கு இருப்பான். நாளைக்கு வேற ஊர் போயிடுவான். நம்மள மிரட்ட இவன் யாரு, போலீசை அனுப்ப முடியாது. அவன் ஒரு முறை திட்டினா நீங்க நாலு முறை அவன் மானம் போற மாதிரி திட்டுங்க. அனாவசியமா பேசினா வாயை கிழிச்சுப்பிடுவேன் என பேசுங்க. எதற்கும் பயப்படாதீங்க. நீங்க பேச பயப்படுகிறனாலதான் அதிகாரிகள் திமிரா பேசினா பணம் கட்டிடுவீங்க என நினைக்கிறாங்க. நீங்கள பேசறதுக்கு தயக்கமா இருந்தா எல்லா சுய உதவிக் குழுக்களையும் கூட்டி ஒரு கூட்டத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்க. நாங்கள் வந்து பேசுகிறோம்” என்றவுன் நம்பிக்கையாக நன்றி கூறி, “இனி அதிகாரி மரியாதையில்லாம பேசினா நானும் பேசுறேன், மேலும் உங்க உதவி தேவையென்றால் நாடுகிறேன்” என்று கூறி முடித்தார்.
ஆளும் வர்க்கம் புரட்சியை நசுக்கவும், புதிய சுரண்டல் முறைக்கும் ஏற்பாடு செய்த சுய உதவிக் குழுக்கள் அவர்களுக்கே எதிராக திரும்புவது உண்மை. கிராமத்து மக்களை குறிப்பாக பெண்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவத்ற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் கொண்டு வந்த மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் கணிசமான பெண்கள் திரட்டப்பட்டிருக்கின்றனர். நாமும் முதலாளிகளாகலாம் எனும் அப்துல் கலாம் டைப் ஏமாற்று மூலம் இவர்கள் தமது உழைப்பையும், செல்வத்தையும் கொடுப்பதோடு இப்படி மரியாதையும் பறி கொடுக்க வேண்டியிருக்கிறது. எனினும் இந்த ஏகாதிபத்திய சதி இனியும் தொடர முடியாது என்பதையே உசிலை போராட்டம் சுட்டிக் காட்டுகிறது.
சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (24) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அலுவலகத்திலிருந்து திரும்பாததால், அவருடன் தங்கியிருந்த தோழிகள் டி.சி.எஸ்சுக்கும், சேலம் ஆத்தூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை வந்த உமா மகேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
டி.சி.எஸ் கட்டிடம்
13-ம் தேதி இரவு 10.30 மணிக்கு டி.சி.எஸ் அலுவலகத்திலிருந்து வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த சனியன்று டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள புதர்களில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக (22-2-2014) பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இந்த சம்பவம் குறித்து சிறுசேரி டி.சி.எஸ் ஊழியர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கின்றன. “சனிக்கிழமையன்று உடலை கண்டெடுத்ததாக டி.சி.எஸ் நிர்வாகமும் போலீசும் கூறுவது முழுப் பொய். வெள்ளிக்கிழமையே சிப்காட் வளாகத்தில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி பரவியது. ஏன் தேதியை மாற்றிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். சிலர் தங்களுக்கு வியாழக்கிழமையே இந்த தகவல் தெரியும் என்று அதிர்ச்சியளித்தார்கள். இவர்களது கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக, தினகரன் மற்றும் மாலைமுரசு நாளிதழ்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் இந்தத் தகவல் பரவியதாகவும், போலீசாரை தொடர்பு கொண்ட போது அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் நிர்வாகமும், போலீசாரும் இந்த விசயத்தை மூடி மறைக்க முயன்று செய்தி வெளியே கசிந்ததும் வேறு வழியின்றி சனிக்கிழமையன்று உடலை கைப்பற்றியது போல நாடகமாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்த சம்பவத்திற்கான தனது பொறுப்பை கைகழுவி விடவும், டாடா நிறுவனம் குறித்து ஏற்றி போற்றி கூறப்படும் மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டு தங்கள் பிராண்ட் இமேஜ் சரியும் என்பதாலும் டி.சி.எஸ் நிர்வாகம் இதை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அவர்களின் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்னர் துரைப்பாக்கம் சென்னை ஒன் அலுவலக வாசலில் நடந்த விபத்தில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், புதிய ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கும் காரப்பாக்கம் அலுவலகத்தில் ஒரு ஊழியர் நெஞ்சு வலியால் மருத்துவ உதவியின்றி அங்கேயே இறந்ததாகவும் கூறும் ஊழியர்கள், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமலும், பக்கத்து அறையில் வேலை செய்பவருக்கோ கூட தெரியாமலும் பார்த்து கொண்டதை கூறி இதுதான் நிறுவனத்தின் வழக்கம் என்று கூறுகிறார்கள்.
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா
அமெரிக்காவில் 2008-க்குப் பிறகு ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து, இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு சுரண்டலும், கொத்தடிமை முறையும் அதிகமாகி வருகிறது. லாப வளர்ச்சியை பராமரித்துக் கொள்ளும் விதமாக நிறுவனத்தின் செலவில் போக்குவரத்து வசதி, இலவச காஃபி, இளைப்பாறும் அறைகள், உடற்பயிற்சி அறைகள் போன்று ஏற்கனவே அளிக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் கேள்விக்கிடமின்றி வெட்டப்பட்டன. ஊதிய உயர்வுகளும், ஊக்கத் தொகைகளும் மறுக்கப்பட்டு வந்தன.
இந்த வசதிகளெல்லாம் நிறுவனம் தந்தே ஆக வேண்டிய உரிமைகள் என்று தொழிலாளி வர்க்கம் ஓரளவு சாதித்திருப்பதைப் போன்ற சூழல் ஐ.டி துறையில் இல்லை. அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இதை சலுகையாக பார்க்கின்றனரே அன்றி உரிமையாக இல்லை. மேலும் அனைத்து ஐ.டி நிறுவனங்களும் ஊழியர்களை கவரவும், அவர்களை நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வைக்கவுமே இந்த உரிமைகளை ஏதோ தானம் தர்மம் செய்வது போல ஆரம்பத்தில் கொடுத்தன. பின்னர் ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு குறைந்த பின்னர் ஈவிரக்கமின்றி அந்த உரிமைகளை வெட்டின.
தமது செலவுக் குறைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்து தமது இமேஜை பராமரிப்பதில் டி.சி.எஸ் போன்ற தரகு முதலாளி நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.
மேலும் உமாமகேஸ்வரி விசயத்தில் மூடி மறைக்க கூடுதலான சில காரணங்களும் இருக்கலாம் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக வேலைக்கு வருபவர்கள் தகுந்த வாடிக்கையாளர் ஒப்பந்த பணியில் (புராஜெக்ட்) சேர்க்கப்படும் வரை அவர்களை காத்திருப்போர் பட்டியலில்( பெஞ்ச்) வைத்திருப்பது வழக்கம். அந்த காலகட்டத்தில் அவர்கள் பகல் ஷிப்டில் மட்டும் வேலை செய்வதால் வழக்கமான நிறுவன பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புராஜக்டில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டால் பணிக்கான அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களுக்குரிய செலவுகள் அந்த குறிப்பிட்ட எண்ணின் கீழ் வரவு வைக்கப்படும். அதாவது, பணி எண் வழங்கப்பட்டு இருந்தால்தான் குறிப்பிட்ட ஊழியருக்கு இரவு நேர சிறப்பு போக்குவரத்து முதலான வசதிகளும் செலவுகளும் செய்யப்படும். எனவே, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரவுப் பணிகளில் பயன்படுத்த முடியாது. இது நிரந்தர தொழிலாளிகளுக்கு கொடுத்தே ஆக வேண்டிய உரிமைகளை மறுப்பதற்கு ஒப்பந்த தொழிலாளிகள் என்றால் கிடையாது என்று பல நிறுவனங்கள் வைத்திருக்கும் சதித்திட்டத்திற்கு ஒப்பானதாகும்.
சமீப ஆண்டுகளில் லாப வீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களை பணி எண் கொடுக்காமல், வாடிக்கையாளர் புராஜக்டில் ஈடுபடுத்தும் பழக்கம் ஆரம்பமானது. அதாவது அந்த ஊழியர் அதிகாரபூர்வமாக வாடிக்கையாளர் பணியில் இருக்க மாட்டார், ஆனால் அதற்கான வேலைகளை செய்வார். ஒரு அனுபவம் வாய்ந்தவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் இரண்டு மூன்று புதியவர்களை பணியில் ஈடுபடுத்துகிறார்கள். இவர்களை நிழல் ஊழியர்கள் (Shadow resourse) என்று அழைக்கிறார்கள்.
உமா மகேஸ்வரி
ஏற்கனவே பார்த்தபடி, புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், அந்தப் பணிக்குத் தேவைப்படும் இரவு நேர வேலைகளை முடித்து விட்டு நிறுவனம் ஏற்பாடு செய்யும் கார் வசதி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது. 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். மிகவும் தாமதமானால் மட்டுமே மற்ற முறையான ஊழியர்கள் எடுக்கும் வாடகைக் கார் வசதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆரம்ப ஊழியர்களில் (fresher ) ஒருவர் தான் உமா மகேஸ்வரி.
இவர் நார்தன் டிரஸ்ட்( Northern Trust) என்ற வாடிக்கையாளருக்கான பணியில் நிழல் ஊழியராக வேலை வாங்கப்பட்டிருக்கிறார். மேலும் சமீபத்தில், வாடகைக் கார் வசதி கோருவதற்கான நடைமுறை சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டுக்குப் போக வாகன வசதி கிடைக்கப் பெறாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் 13-ம் தேதி இரவு அலுவலகத்திலிருந்து இரவு 10.30 க்கு கிளம்பியவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் உடல் என்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது முதல் நிர்வாகம், போலீஸ், பத்திரிகைகளால் கூறப்படும் அனைத்து தகவல்களும் முரண்பாடு நிறைந்ததாக உள்ளன.
இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் செல்ல நிறுவனத்தின் சார்பில் அந்த பெண்ணிற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்திருந்ததாகவும், ஆனால் கொலையுண்டதற்கு முந்தைய இரண்டு வாரங்களாக அந்த வசதி வேண்டாம் என்று கூறிவிட்டு இரவு 10 மணிக்கே ஆளில்லாத சாலையில் நடந்து பழைய மகாபலிபுரம் சாலைக்கு வந்து பேருந்தில் வீட்டுக்குச் சென்றதாகவும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிற்பகலில் அப்படி வேலைக்கு வரும் போது வழியில் வேலை செய்யும் வட இந்திய கட்டிட ஊழியர்கள் தொடர்ந்து இவரை கிண்டல் செய்ததாகவும், அதனால் அவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை இந்த பெண் அடித்ததாகவும், அதனால் அவர்கள் சம்பவத்தன்று தனியாக நடந்து செல்லும் போது பழிவாங்கியதாகவும் அந்த செய்தி சொல்கிறது.
அதாவது, 2 மணி ஷிப்டுக்கு வரும் போதும் போக்குவரத்து வசதி இல்லை, அதனால் வழியில் தொந்தரவில் மாட்டியிருக்கிறார். அப்படியிருந்தும் இரவில் நிறுவனம் ஏற்பாடு செய்த போக்குவரத்தை மறுத்து தனியாக நடந்து சென்றிருக்கிறார். அவருக்காக காத்திருந்த வட மாநில ஊழியர்கள் அவரை தாக்கியிருக்கின்றனர்.
“குற்றவாளிகள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:கடந்த, 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு, ‘சிப்காட்’ வளாகத்தில், உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக, நாங்கள் அவரை வழிமறித்தோம்.
அவர் எங்கள் நோக்கத்தை தெரிந்து கொண்டு, காலில் இருந்த செருப்பை கழற்றி, எங்களை அடித்தார். அதனால் நாங்கள் ஆத்திரம் அடைந்தோம்.அவரை குண்டுக்கட்டாக தூக்கி முட்புதருக்குள் சென்றோம். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி கொன்று விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து கொன்றோம். அவரிடம் இருந்து அலைபேசி, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினோம்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது, அழுகிய நிலையில் காணப்பட்டது என்றும் முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு 25-ம் தேதி அன்றிரவு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற நபர்களை விசாரித்து வருவதாக தினகரன் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், பிணம் கிடந்ததாகக் கூறப்படும் இடம் தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் நடந்து செல்லும் பாதையில் உள்ளது. ஒன்பது நாட்களாக உயிரற்ற உடல் அங்கு கிடந்தால் அழுகி நாற்றமெடுத்திருக்கும். அதை யாரும் கவனிக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
இந்த செய்திகள் இவ்வளவு முரண்பாடுகளோடு வெளிவருவதற்கு காரணம் என்ன? ஊடகங்கள் பொதுவில் கிசுகிசு ஆர்வத்தையும், பரபரப்பு மனநிலைக்கு தீனி போடவும் இப்படி செய்திகளை ஊதிப்பெருக்கி எழுதும்தான். ஆனால் இங்கே அதை விட இந்தக் கொலையை மறைப்பதற்கு அல்லது பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் இருப்பது என்று பெரும் முயற்சிகள் நடந்திருப்பதுதான் காரணம். உமா மகேஸ்வரி கொலையுண்டதை விட நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்றுவதே பிரதானமாக உள்ளது. இது குறித்து ஆரம்பத்தில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது அப்படி ஒன்றுமே இல்லையே, உங்களுக்கு எப்படி தெரியும் என்பதே அவர்களின் எதிர்வினையாக இருந்தது.
ஊடகங்கள், ஆளில்லா விமான சோதனை, சிபிசிஐடி விசாரிப்பு என பரபரப்பு தகவல்களைத் தாண்டி இந்த கொலைக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது குறித்து பேச மறுக்கின்றன. இதை வெறும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்ற பிரச்சனையாக மட்டுமே குறுக்குகின்றன. ஊழியர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான டி.சி.எஸ் நிர்வாகத்தின் மீது யாரும் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத் தொழிலாளர்கள்
கொலை யாரால், எப்போது, எதனால் செய்யப்பட்டது என்பது மட்டுமல்ல இங்கு பிரச்சினை? தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் ஊழியர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு நிர்வாகத்திற்கு இருக்கிறதா இல்லையா? டி.சி.எஸ் நிர்வாகம் தான் இந்த கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் மையமான பிரச்சனை. பல்வேறு ஊர்களிலிருந்தும் தமது பணிக்கு எடுத்து, பெருநகரங்களில் தங்க வைக்கும் நிறுவனங்கள், சிறுசேரி போன்ற ஒதுங்கிய இடங்களுக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய முறையான தங்குமிடம் (quarters), உணவு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை படிப்படியாக கைகழுவியிருக்கின்றன.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூகத்தில் பெண்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு குறைபாடுகளை நினைவூட்டுவதாகவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக வேலை செய்வதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டு தன் பொறுப்பை அயோக்கியத்தனமாக கைகழுவியிருக்கிறது டிசிஎஸ்.
இதை கண்டிக்கவோ, இதுகுறித்து முணுமுணுக்கவோ உரிமையில்லாமல், இன்னும் சொல்லப் போனால் இப்படி கண்டிப்பது தவறு என்று கருதும் மனநிலையில் தான் பெரும்பாலான ஐ.டி துறை ஊழியர்கள் இருக்கிறார்கள். பக்கத்து கேபினில் கொலை நடந்தால் கூட யாருக்கும் தெரிவதில்லை அல்லது தெரிந்தது போல காட்டிக் கொள்வதில்லை. அடுத்தவரின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள விடாமல் தனித்தனி இயந்திரங்களாக திட்டமிட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளார்கள் ஐ.டி துறை ஊழியர்கள். அப்ரைசல், ரேட்டிங் என்ற பெயரில் தன் அருகில் இருபவரையே போட்டியாளராக காட்டி அனைவரையும் ஒன்று சேரவிடாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் டி.சி.எஸ், சி.டி.எஸ் உள்ளிட்ட எல்லா ஐ.டி முதலாளிகளும், நாஸ்காம் என்ற பெயரில் சங்கமாக ஒன்றிணைந்து ஊழியர்களை சுரண்டுவதில் பரஸ்பரம் ஒத்துழைக்கிறார்கள். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் தொழிலாளர் நலச்சட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், ஊழியர்களுக்கு விரோதமாக எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று வினவில் ஏற்கனவே செய்தி வந்திருக்கிறது.
ஐ.டி துறை ஊழியர்களே, உமா மகேஸ்வரியின் கொலை குறித்து நிச்சயம் நீங்கள் வருந்தியிருப்பீர்கள். இப்படி கொலை செய்யப்பட்டுவிட்டாரே என்று உங்கள் சக ஊழியர்களும் வருந்தியிருப்பார்கள். ஆனால் முதலாளிகளின் வருத்தம் வேறுமாதிரி இருந்திருக்கும், ஊடகங்களில் செய்தி வந்து விட்டதே என்பதே அவர்களது கருணையின் பின்னணி. இந்நேரத்திற்கு அனைத்து நிறுவன எச்.ஆர் களும் மீடியாவை கையாண்டதில் என்ன தவறு என தங்களுக்குள் பேசி இருப்பார்கள். நாஸ்காமில் விவாதித்திருப்பார்கள். அதாவது உமா மகேஸ்வரிகளை காப்பாற்றவதை விட தமது நிறுவனத்தின் மதிப்பை காப்பாற்றுவதுதான் அவர்களது தலையாய பிரச்சினை.
உமா மகேஸ்வரி கொலைக்கு பின்னர் டாடா நிறுவனம் அனுப்பியிருக்கும் ஊழியர்களுக்கான கடிதம் குறித்து டிசிஎஸ் ஊழியர்கள் தெரிவித்தார்கள். அந்த கடிதத்தில், “சென்னையிலும், மும்பையிலும் இரண்டு ஊழியர்களை இழந்து விட்டோம். சமூகம் இப்படித்தான் இருக்கும், நாம்தான் பாதுகாப்பாக, கவனமாக இருக்க வேண்டும், நிறுவனத்தின் போக்குவரத்து ஏற்பாடுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள், இறந்து போன ஊழியர்களது குடும்பத்தின் வேதனையில் டாடா பங்கு கொள்கிறது” என்று டாடா நிறுவனம் தந்திரமாக பேசி தப்பித்துக் கொள்கிறது.
டி.சி.எஸ் சிறுசேரி கட்டிடம்
இனிமேல் அனைத்து பிரிவு ஊழியர்கள் குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் நிழல் ஊழியர்களாக இருந்தாலும் சரி, நிரந்தர ஊழியர்களாக இருந்தாலும் சரி இரவில் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதி உண்டு என்று டாடா உறுதி அளிக்கவில்லை. மாறாக அவரவர் பாதுகாப்பை அவரவர் ஏற்க வேண்டும் என்று பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கிறது. இலாபமா, ஊழியர் நலனா என்று கேட்டால் டாடா மட்டுமல்ல அனைத்து முதலாளிகளும் இலாபமே துணை என்றே முழங்குவார்கள்.
இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள்தான் குற்றவாளிகள் என்று போலீஸ் கூறுகிறது. அது உண்மையெனில் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையம் தீவிரமாக சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுகிறது என்று காட்டுவதற்கு ஒரு மாதத்தில் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் தமிழக காவல் துறையின் கடமை வேட்கை குறித்த சந்தேகமும் எழாமல் இல்லை. கூடுதலாக டாடா நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை டாடாவுக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் இருக்கிறது என்பதே உண்மை.
எது எப்படியோ சில கிரிமனல்கள் வசம் உமா மகேஸ்வரி சிக்கி இளம் வயதிலையே தனது கனவுகளையும், வாழ்வையும் பறிகொடுத்த பரிதாபத்திற்கு டாடா நிறுவனமே முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும். உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு, ஐ.டி நிறுவனங்கள் தமது பெண் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் செய்யத் தவறியிருக்கும் கடமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிமினல்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி போட்டு வேலை செய்யும் தமிழக அரசு, ஐடி நிறுவனங்களை அப்படி விசாரிப்பதற்கு நாம்தான் போராட வேண்டும். மேலும் இனி அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்படவேண்டுமென்றும் நாம் போராட வேண்டும்.
உமா மகேஸ்வரியின் இழப்பிலிருந்தாவது ஐடி துறை ஊழியர்கள் தமது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சுயமரியாதையை பெறுவதற்கு தொழிற்சங்கம் வேண்டும், அதுவும் முதலாளிகளின் தயவில் இருக்கும் அடிமை தொழிற்சங்கமாக இல்லாமல் புரட்சிகர அமைப்புகளின் துணையோடு இருக்கும் போர்க்குணமிக்க தொழிற்சங்கமாக இருக்க வேண்டும் என்ற உறுதியைப் பெற வேண்டும்.
இந்தியாவின் போலி ஜனநாயகத்தை காப்பாற்றத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள் அனைத்திற்கும் உள்ள பிரச்சினை, அவைகள் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்ல; காலாவதி நிலையை மறைப்பதற்கு உரிய வார்த்தைகள் கிடைக்காமலும்தான். ஜனநாயகம் குறித்த மாயைகளை பரப்புவதற்கு கொள்கை சார்ந்து நடிக்க வேண்டும். ஆனால் இதையே எத்தனை தலைமுறையாக நடிப்பது?
மூன்றாவது அணி தலைவர்கள் சந்திப்பு
விறுவிறுப்பான வெற்றியடையும் சினிமா படங்கள் கூட ஒரு வாரத்திற்கு மேல் திரையரங்குகளில் தங்காத போது மூன்றாவது அணியின் இருப்பை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் அவஸ்தை சொல்லி புரிய வைக்கும் ஒன்றல்ல.
2014 மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் 25.02.2014 அன்று துவங்கப்பட்டதாக பத்திரிகைகள் அனைத்தும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆன்மீக இணைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த செய்திக்கும் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் காட்டுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலுக்கு பிந்தைய அதிரடிக் காட்சிகள் அடங்கிய குதிரை பேரங்களுக்கு இந்த கும்பல்தான் பயன்படும் என்பதால் இப்போதே துண்டு போட்டு மரியாதை செய்கின்றன ஊடகங்கள்.
இந்த அணிக்கு பெயர் என்னவென்றே தெரியவில்லை. இது புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதன் சிரமத்தோடு தொடர்புடையது அல்ல. வேலைக்காகாத ஒரு வினோத ஜந்துவிற்கு கவர்ச்சிகரமாக, என்ன பெயர் வைக்கலாம் என்று மண்டையைக் குடையும் பிரச்சினை சாதாரணமான ஒன்றல்ல. ஏற்கனவே மூன்றாவது அணி, மாற்று அணி, தேசிய முன்னணி என்று ஏகப்பட்ட அதேநேரம் கசப்பான நினைவுகளை கொண்டிருக்கும் வார்த்தைகள் தொண்டைக் குழியை விட்டு வரமறுக்கின்றன. புதிய வார்த்தைகளை பிரசவிக்கும் சமூக யதார்த்தமின்றி, மொழியின் இலக்கணம் தவிக்கின்றது.
ஆயினும் இந்த கஷ்ட ஜீவிதத்திற்கு கடுமையாக உழைப்பது நமது கேலிக்குரிய போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். பாராளுமன்றத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்தாலும், மைக்கோ, பேப்பரோ துள்ளி வந்தாலும், “ எப்பேற்பட்ட இந்திய ஜனநாயகம் இப்படி இழிவுபடுத்தப் படுகிறதே” என்று கண்ணீர் வகுப்பவர்கள் இவர்கள்தான். அதனால்தான் பாராளுமன்ற ஜனநாயகத்திற்காக, சபரி மலைக்கு மாலை போடாமலேயே சரணம் ஜனநாயகம் சொல்லி அழுது அரற்றுவதில் மற்ற சபாநாயகர்களை விட சோமநாத் சட்டர்ஜியே முதலிடம் வகித்தார்.
சிபிஎம்-மின் பொதுச் செயலாளாராக, காலஞ்சென்ற ஹர்கிஷன் சிங் சுர்ஜித், 92 முதல் 2005-ம் ஆண்டு வரை பணியாற்றிய போதுதான் இந்திய ஜனநாயகத்தின் தரகர் திலகம் எனும் பட்டத்தை போட்டியின்றி பெற்றார். அவர் காலத்தில் இவர்களது, “ஜனநாயகத்தை காப்பாற்றும் அழுகுணி ஆட்டங்கள்”, ராஜதந்திரம் என்ற பெயரில் இன்றும் கூட ‘தோழர்களிடையே’ வியந்தோதப்படுகின்றது. இப்போது சுர்ஜித் இல்லை என்றாலும், அவர் அளவு தரகுக் கலையில் தேர்ச்சி இல்லை எனினும் பிரகாஷ் காரத் சோர்ந்து போய்விடவில்லை. புரட்சி எப்படியும் வரப்போவதில்லை, சிபிஎம் எப்படியும் புரட்சி செய்யப் போவதில்லை எனும் இரு தாரக மந்திரங்களை ஏற்று இந்த அமைப்பிற்குள்ளே “எப்படி சீர்திருத்தம் செய்யலாம்” என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சில்லறையாட்டத்தை எப்படி ஆடலாம் என்று அல்லும் பகலும் சிந்தித்து, உழைத்து வருகிறார்.
மூன்றாவது அணியில் இருக்கும் சமூகநீதிக் கட்சிகள்அனைத்தும் தமது ‘கொள்கைகளை’ ஜனரஞ்சகமாக மக்களிடையே கொண்டு செல்லும் திறமையை வைத்துத்தான் இதுவரை காலம் தள்ளின. இனி காலமே இவர்களை தள்ளும் என்றாலும் போலிக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை கொள்கையும் வரண்டிருப்பதோடு அவற்றை ஜனரஞ்சகமாக பேசும் ஆற்றலும் இல்லை. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வளைப்பதிலும், அந்த வளைப்பை சாத்தியப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தை ‘கொள்கையாக’ மாற்றும் ஆற்றலிலும் இவர்களுக்கு ஈடு இணையில்லை. என்ன இருந்தாலும் ‘கம்யூனிசம்’ கற்றுத் தேர்த்தவர்கள் அல்லவா?
ஏன் அடிக்கடி கூட்டணி மாறுகிறீர்கள், கொள்கை முக்கியமில்லையா என்று யாரும் கேட்டால், “யார் இந்தக் காலத்தில் கொள்கை பார்க்கிறார்கள்?, இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காத ஒன்றா” என்று தமது சந்தர்ப்பவாதத்தை ஒத்துக் கொள்வார்கள், இந்த சமூகநீதிக் கட்சிகள். ஆனால் போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் இந்த பிழைப்புவாதத்திற்கு கொள்கை முலாம் பேசி அந்த தலைவர்களையே அசரவைப்பார்கள். இதனால்தான் சுர்ஜித்தோ இல்லை காரத்தோ இந்த மூன்றாம் அணியின் சடங்கு சம்பிரதாயங்களை செய்யும் தலைமை புரோகிதர் இடங்களுக்கு போட்டி இன்றி கோலேச்சுகிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த சந்திப்பில் மூன்றாவது அணி வதந்தி ஆரம்பித்தது.
அதுவும் தேர்தல் காலங்களில் ‘தோழர்களுக்கு’ கூட்டணி கூடாமல் தூக்கமே வராது. கேள்வி கேட்காத கட்சி அணிகளுக்கு, பறிகொடுத்த கட்சியின் இருப்பை கணிசமாக காட்டுவதற்காகத்தான் இந்த முனைப்பு. அந்த படிக்கு இந்த தேர்தலில் சிபிஎம் கொட்டு முரசு ஒலிக்க அறிவித்திருக்கும் அணிதான் இந்த மாற்று அல்லது மூன்றாவது அணி.
பாஜக சார்பு ஊடகங்கள் இந்த அணியை ஆரம்பம் முதலே கேலி செய்து வருவதற்கு காரணம் உள்ளூர ஊறியிருக்கும் பயம்தான். பல ஊடகங்களின் தேர்தல் கணிப்பு படி பாஜகதான் அதிக உறுப்பினர் கொண்ட கட்சியாக வருமென்றாலும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரிகிறது. இதை விட மூன்றாம் அணிக்கு அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே காவிகளின் கலவரத்திற்கு காரணம். அந்த காய்ச்சல்தான் மூன்றாவது அணி ஒன்றுமே இல்லை என சும்மா லாவணி பாட வைக்கிறது. காங்கிரசைப் பொறுத்தவரை தேர்தலுக்கு பிறகு மூன்றை முதலுக்கு கொண்டு வந்து விடலாம் என்பதால் கண்டும் காணாததும் போல இருக்கிறார்கள். இப்போதே சவுண்டு விட்டால் பிறகு பாதிக்கும். பாஜகவும் தேர்தலுக்கு பிறகு இந்த முயற்சியில் இறங்குமென்றாலும் இப்போது எதிர்ப்பதற்கு காரணம் தங்களது எண்ணிக்கை தேர்தலில் குறைந்து விடக்கூடாது என்பதே.
இந்தக் கூட்டல் கழித்தல்களே மூன்றாவது அணியின் அரசியல் மரியாதையை தாங்கி வருகின்றது. அல்லது எதிரிக்கு எதிரி நண்பன் எனும் தத்துவமே மூன்றாவது அணிக்கு உள்ள சந்தை மதிப்பை தக்க வைக்கிறது. ‘இன்னைக்கு முறைப்பான், நாளைக்கு வருவான்’ என்பதால் மாற்று அணியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதற்கு ஒரு தனிச் சிறப்பான மரியாதை இல்லை.
இப்படி காங்கிரஸ், பாஜக எனும் இரு கட்சிகளது, அணிசேர்க்கை விளையாட்டின் இடைவேளை என்டர்டெயின்மெண்டை செய்கிறோமே என்ற அறிவு கூட போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை என்பதல்ல. இதுகூட இல்லை என்றால் நம்மை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்களே எனும் உயிர் வாழ்தல் குறித்த பயம்தான் அப்படி அம்மணமாக ஓட வைக்கிறது.
ஆகவே இந்த மாற்று அணிக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பும் இல்லை. பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடும் இல்லை. அல்லது மதச்சார்பின்மை என்ற நிலையும் இல்லை. அவர்கள் இருக்குமிடத்திற்கு ஏற்ப கொள்கைகளின் வார்த்தைகள் கூட்டண அகராதிப்படி எடுத்தாளப்படும். காங்கிரசில் இருந்தால் மதச்சார்பின்மை, பாஜகவில் இருந்தால் வளர்ச்சி அல்லது ஊழல் எதிர்ப்பு, அவ்வளவுதான்.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துத்தான் போலிக் கம்யூனிஸ்டுகள் முந்தைய ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் ஆதரவை விலகிக்கொண்டனர். அப்போதைய வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக நின்றவர்களில் முலாயம் சிங் முதன்மையானவர். இப்போது மூன்றாவது அணியில் முக்கியமானவர். ஆக அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள்தான் மாற்று அணியில் இடம் பெற முடியும் என்று காரத் அறிவித்தால் கடை உடன் காலியாகும்.
தேவகவுடா கட்சி பெயரில் (மதச்சார்பற்ற ஜனதாளம்) மதச்சார்பின்மை இருப்பது ஒன்றே அவர் எத்தனை பெரிய ஃபிராடு என்பதே பறைசாற்றும். முந்தைய சட்டமன்ற ஆட்சியில் பாஜக ஆதரவைப் பெற்று கர்நாடகத்தை ஆண்டு பின்னர் அவர்களது முறை வரும்போது ஆதரவை விலகிக் கொண்டு மதச்சார்பின்மை பேசும் குமராசாமியும், தேவகவுடாவிற்கும் சந்தர்ப்பவாதம் தவிர வேறு என்ன கொள்கை இருக்கிறது? மாற்று அணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இருப்பதில் என்ன மாற்று வெங்காயம் உள்ளது?
இதே போல குஜராத் கலவரத்தின் போது மத்திய ஆட்சியில் இடம்பெற்று பதவி ருசி கண்ட ஐக்கிய ஜனதா தளம் இப்போது பாஜக வேண்டாம் என்று மதச்சார்பின்மை பேசுகிறது. சரத்யாதவும், நிதீஷ்குமாரும் பாஜகவின் தயவில் பீகாரில் ஆட்சியை பிடித்து விட்டு இப்போது சண்டமாருதம் செய்கிறார்கள். இவர்கள் நாளைக்கே தேர்தல் முடிந்து காங்கிரஸ் அணிக்கு போகமாட்டார்கள் என்று காசி விஸ்வநாதரே வாக்குறுதி அளிக்க முடியாது. ஆனால் இது கொள்கை சார்ந்த அணி என்று பிரகாஷ் காரத் நம்பச் சொல்லுகிறார்.
மூன்றாவது அணிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். அதாவது, பிரதமர்கள்….
இதே போல பாஜகவுடன் காலம் தள்ளிய பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசாமில் மாணவர் போராட்டத்தை வைத்து ஆளாகி திவாலான அசாம் கணபரிஷத், பாஜகவுடன் நீண்ட தேனிலவுக் காலத்தில் திளைத்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இவர்களெல்லாம் கொள்கை சிங்கமென்று பேசுவது அசிங்கமல்லவா? ஆனால் அசிங்கத்தை பார்த்தால் அரசியல் தொழில் செய்ய முடியுமா என்று தாபாவோ இல்லை காரத்தோ சப்பைக்கட்டு கட்டுவார்கள்.
இந்தக் கூட்டணிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்து கொண்டிருக்கிறார். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் போலிக் கம்யூனிஸ்டுகளோடு பேசி காலரைக்கால் சீட்டு முடிவானால் தானம் தரப்படும் என்று ‘அம்மா’ அலட்சியமாக அறிவித்தாரல்லவா? அதில் எங்களது சுயமரியாதை ஒன்றும் இழிவுபடுத்தப்படவில்லை என்று தா பாண்டியன் கம்பீரமாக பேசியிருக்கிறார். இத்தகைய கோழைகள் கூட்டிய கூட்டத்தில் தம்பிதுரை கட்டதுரை போல இருக்கும் போது போலிக் கம்யூனிஸ்டுகள் கைப்புள்ளைதான் என்பது அழுது கொண்டிருக்கும் குழந்தையைக் கேட்டால் கூட சொல்லி விடுமே?
மேலும் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் அதிமுக, மோடியை ஆதரிக்க வேண்டும் என்று ஜெயாவின் ராஜகுரு துக்ளக் சோ சத்தியக் கடிதாசியே வெளியிட்டிருக்கிறார். அதே போன்று பாஜகவிற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அவர்கள் அம்மா பிரதமர் ஆவதற்கு முன்வரவேண்டும் என்றும் கண்டிஷன் அப்ளை வைத்திருக்கிறார். கரசேவைக்கு ஆளனுப்பிய கட்சி மட்டுல்ல, பாஜக ஆட்சிக்கு தோள் கொடுக்கும் கட்சியாகவும் இருக்கும் அதிமுகவை வைத்துத்தான் இந்த மாற்று அணி என்றால் போலிகளின் அசடு வழியும் முகத்தை துடைப்பதற்கு இந்த உலகில் துணியே இல்லை.
திமுக கூட இந்த தேர்தலில் இதுவரை காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறது. இந்தக் கொள்ளுதலில் உண்மை இல்லை என்றாலும் அது 3-வது அணியின் ஏனைய கட்சிகளுக்கும் பொருந்தும். என்றாலும் திமுகவை இந்த அணிக்குள் கொண்டு வர போலிகள் ஏன் முயலவில்லை? காரணம் திமுக, அதிமுக இரண்டில் ஒன்றுதான் மூன்றில் வர முடியும் என்பதாலும், போலிகள் ஏற்கனவே அதிமுகவின் தயவில் தமிழகத்தில் இருப்பதாலும்தான். ஒருவேளை ஒரு பேச்சுக்காக கருணாநிதி நானும் மூன்றாவது அணியில் வருகிறேன் என்று சொன்னால் அது ஜெயலலிதாவோடு, காரத்திற்கும் பெரும் தலைவலியாக இருக்கும். மூன்றாவது அணி எனும் மாபெரும் தேசிய நிர்மாண அணியில் இத்தகைய குழாயடிச் சண்டைகளே ஆட்டத்தை நிர்ணயிக்கின்றன என்றால் அதை போலிகள் மறுத்து வாதிடப் போவதில்லை. கேட்டால் பெரும் கொள்கைகளுக்காக சிறு சமாதானங்கள் என்று வியாக்கியானம் செய்வார்கள். அந்த பெரும் கொள்கைகளே சிரிப்பாய் சிரிக்கிறதே என்றால் வேறு என்ன செய்வது, காலத்தின் கோலம் என்று கடிகாரத்தின் மேல் பழி போடுவார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய காரத், “ஊழலில் திளைக்கும் கட்சியாகி விட்டது காங்கிரஸ். மதவாதசக்தியாக உள்ளது, பா.ஜ., இந்த இரண்டு கட்சிகளுமே, ஒரு நாணயத்தின், இரண்டு பக்கங்களைப் போன்றவை. எந்த வேறுபாடுகளுமே, இந்த கட்சிகளுக்கு கிடையாது. எனவே, இந்த கட்சிகளை, தோற்கடிப்பதே, எங்களது நோக்கம்.” என்று முழங்கியிருக்கிறார். ஆனால் மூன்றாவது அணியின் சீமந்திர புத்திர-புத்திரிகளைப் பார்த்தால் ஒரு நாணயத்திற்கு இனி மூன்று பக்கம் உள்ளது என்று நாம் அறிவியலைத்தான் மாற்ற வேண்டும் போல.
அதே போல யார் பிரதமர் என்பதை தேர்தலுக்கு பின்பு இந்த அணியினர் கூடி முடிவெடுப்பார்கள், கடந்த காலத்தில் அத்தகைய அனுபவங்கள் நிறைய உள்ளது என்று சமாளிக்கவும் காரத் தயங்கவில்லை. யார் பிரதமர் எனும் போட்டியில் ஜெயலலிதா, முலாயம், நிதீஷ் என்று பல அரசர்களும், அரசிகளும் அணிவகுக்கும் போது சீட்டுப் போட்டு பார்க்கும் புரோகித வேலையை காரத் செய்யவிருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான்.
சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அம்மாதான் பிரதமரா என்று கேள்விகள் வந்த போது ஓய்வுபெற்ற கம்யூனிஸ்டுகளான வலதுகள் ஆமா அதிலென்ன தவறு என்று ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இன்னமும் தரகர் பணியில் சிறந்து விளங்கும் இடதுகளை அப்படி ஒரு இக்கட்டில் சிக்கவைக்க விரும்பாத ஜெயலிலிதா உடன் மைக்கில் குறுக்கிட்டு அடுத்த பிரதமர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காரத்தை காப்பாற்றினார்.
ஆக பிரதமர் பதவிக்குரிய சண்டை, ஒருவேளை இந்த அணி அதிக இடங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் தூள் பறக்கும். அதே நேரம் சந்தர்ப்பவாதத்தின் வழியில் பதவிகளுடன் தொடர வேண்டுமென்றால் விட்டுக் கொடுத்தால்தான் முடியும் என்பதால் இவர்களுக்கிடையே சமாதான ஒப்பந்தமும் ஏற்படலாம், மறுப்பதற்கில்லை. எல்லாம் வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கையே தீர்மானிக்கும் என்பதால் இவர்களது எண்ணங்களுக்கு இங்கே எந்த முக்கியத்துவமும் இல்லை.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் பெயரைக் கொண்டிருக்கும் விஜயகாந்த் கட்சிக்கு ஏதேனும் பொருள் சார்ந்தோ, இல்லை கொள்கை சார்ந்தோ விளக்கம் தர முடியுமா? கட்சி பெயரை தீர்மானிப்பது முதல், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது வரை திருப்பதி கோவிலில் பூ போட்டு பார்க்கும் இந்த குடும்பமெல்லாம் தமிழகத்தில் ஒரு கட்சி என்று உலாவரும் போது மூன்றாவது அணிக்கு மட்டும் நாம் மரியாதை கொடுக்கக் கூடாது என்றில்லை.
ஆனால் இந்த ‘மரியாதை’யை நாட்டு மக்கள் மாற்றிப் போடுவது எப்போது?
தேசிய இனப் பிரச்சினையில் பு.ஜ.-ம.க.இ.க. -வினரின் மறுக்க முடியாத மாபெரும் அரசியல் – சித்தாந்தத் தவறுகளைக் கண்டுபிடித்து விட்டதாகப் பாவித்துக்கொண்டு சமரன் குழு பின்வருமாறு எழுதியுள்ளது:
அடிப்படை வசதிகளின்றி தகரக் கொட்டகையில் உழலும் புலம்பெயர்ந்த வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள். முதலாளித்துவ ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழின வெறியர்களால், கொலை-கொள்ளைக்காரர்களாக அவதூறு செய்யப்படும் இவர்கள் தமிழர்களின் எதிரிகளா?
“தேசிய இனப் பிரச்சினை குறித்துப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர அமைப்பு மேற்கொள்ள வேண்டிய மார்க்சிய-லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த நிலைப்பாடு பற்றி புதிய ஜனநாயகம் குழுவின் கருத்துக்கள் புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதற்குத் தடைகளாக இருக்கின்றன. புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதைச் சாத்தியமாக்கும் பொருட்டு அக்கருத்துக்களை விமர்சனம் செய்வது அவசியம் எனக் கருதுகிறோம்.” (சமரன் குழு வெளியீடு, பக்.218)
– இவ்வாறு சொல்லிக்கொண்டு 1990- ஆம் ஆண்டு ஜனவரி பு.ஜ.வில் எழுதப்பட்டிருந்த சில கருத்துக்களைச் சமரன் குழு எடுத்துக் காட்டியிருக்கிறது. அவை: “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர, பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல”; “ஒரு தேசத்துக்கோ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் “நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்கிறோம்”; “ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம்.”
இவையெல்லாம் இந்தியாவில் தேசிய இனப் பிரச்சினை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக எழுதப்பட்டவை. ஆனால் இவை, “ஈழ விடுதலைப் புலிகள் மீதும் இந்திய மக்கள் யுத்தக் குழு மீதும் இந்திய அரசு விதித்துள்ள தடைகளை எதிர்த்துப் போரிட “புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதற்குத் தடைகளாக” எப்படி இருக்கின்றன என்று சமரன் குழு கூறவேயில்லை. அப்படியே இருந்தாலும், பு.ஜ.-ம.க.இ.க.-வினரை ஒதுக்கிவிட்டுப் பிற புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதைச் சாத்தியமாக்கி” இருக்கலாமே! செய்தார்களா? அது ஒருபுறமிருக்கட்டும்.
பொதுவில் தேசிய இனப் பிரச்சினை மற்றும் ஈழ இனச் சிக்கலில் பு.ஜ.-வின் நிலைப்பாடுகளை மறுத்து, சமரன் குழு கூறும் கருத்துக்கள் யாவை? “ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் அல்ல; பாட்டாளி வர்க்கத்தினுடையதுதான். ஆகவே, அந்த முழக்கத்தைப் பாட்டாளி வர்க்கம் முதன்மையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தேசிய முதலாளிகளின் வாதங்களை (இவைதாம் தமிழினவாதிகளின் வாதங்கள்) சமரன் குழு தானும் முன்வைக்கிறது. ஆனால், லெனின் இவற்றைத்தான் முன்வைத்தார் என்று சொல்லி, அக்குழு தனது வழமையான மேற்கோள் பித்தலாட்டத்தைச் செய்கிறது. ஆனால், அதற்கு மாறாக தேசிய இனப் பிரச்சினையில் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து லெனினியம் போதித்தவற்றை இனிபார்ப்போம்:
ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசியவாதம் அநீதியானது, ஒடுக்கப்படும் ஈழ சிறுந்தேசியவாதத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நீதியானதுதான். அதற்காக இரண்டு தேசியங்களுமே முதலாளியப் பொருளாதார அடிப்படை கொண்டவை என்பது மறைந்துபோய் விடுவதில்லை. ஒடுக்கும் பெருந்தேசியவாதமானாலும் ஒடுக்கப்படும் சிறுந்தேசியவாதமானாலும் இரண்டுக்குமான பொருளாதார அடிப்படை ஒன்றுதான்.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகள் இலங்கையிலிருந்து வெளியேறி, அதிகார மாற்றம் நிகழ்ந்த பிறகு, இலங்கை முழுவதும் தனது பொருளாதார ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதில் சிங்களப் பெருந்தேசிய முதலாளிகள் இறங்கினர்; அதற்கு எதிராகத் தமது சொந்தப் பொருளாதார நலன்களைக் காத்துக் கொள்ளவும் அவற்றைத் தடைகளின்றி வளர்த்தெடுக்கவும் ஈழத் தமிழ்த் தேசிய முதலாளிகள் போராடினர். மொழி, இலக்கியம், பண்பாடு, இனவுரிமைக் கோரிக்கைகள், போராட்டங்கள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் எழுகின்றன. மேலும், அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ இலங்கை நாட்டில் தேசிய முதலாளிகளின் மேல்தட்டுப் பிரிவினர் இயல்பாகவே தரகு முதலாளிகளாவர்.
தமிழ்தேசியத்தின் பெயரால் பாசிசி இனவெறி : வெளிமாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் தஞ்சையில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்).
ஈழத்தில் முகிழ்ந்த தமிழ்த் தேசியமும் தேசிய இனப் பிரச்சினையும் முதலாளியத் தன்மையற்றது என்று கருத முடியுமா? செல்வநாயகம் – பொன்னம்பலம் தலைமையிலான ஈழத் தமிழ்த் தேசிய இயக்கங்களும் அதன் பிறகு, விடுதலைப் புலிகள் உட்பட ஈழப் போராளி அமைப்புகள், “மார்க்சியம்”, “சோசலிசத் தமிழீழம்”, “இடதுசாரி அரசியல்” என்று என்னதான் பேசியிருந்தாலும், அவர்கள் நடத்திய ஈழத் தமிழ்த் தேசிய இயக்கங்களும் ஈழ விடுதலைப் போரும் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவையா, அல்லது பொதுவில் ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கம் என்று அதைப் பார்க்க வேண்டுமா? இனவாத முதலாளி வர்க்கங்கள் தமது வர்க்க அடையாளங்களை மூடி மறைத்துக் கொண்டாலும், பாட்டாளி வர்க்கம் அவற்றை வெளிக்கொண்டு வந்து அதற்கேற்பத் தனது அணுகுமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஈழத் தேசிய இயக்கத்தின் முதலாளிய வர்க்கத் தன்மையையும் அதன் வரம்புகளையும் தமிழினவாதிகள் மட்டுமல்ல, இனவாதிகளாகச் சீரழிந்துபோன போலிப் புரட்சியாளர்களும் அடையாள அரசியலில் தஞ்சம் புகுந்து ஆதாயம் தேடுபவர்கள் என்பதால், இது குறித்துப் பேச மறுக்கின்றனர். புலிகளின் இராணுவவாதத்தில் மயங்கிப் போய் போலிப் புரட்சியாளர்களும் புலிகளின் குறுந்தேசியவாதத்தின் சகபாடிகளான தமிழினவாதிகளும் ஈழத் தேசிய இயக்கத்தின் முதலாளிய வர்க்கத் தன்மையைக் காணத் தவறுகிறார்கள்.
“சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டுச் சந்தையை முதலாளிகள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது” என்றார், லெனின். அதாவது தேசிய இயக்கம், மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி முதலாளித்துவத்துடனும் அதன் சரக்கு உற்பத்தி மற்றும் பண்டப் பரிவர்த்தனையின் தேவையுடனும் நெருங்கிய தொடர்புடையன என்றார், லெனின்.
மேலும், முதலாளிய வளர்ச்சியின் வரலாறில் தேசிய இயக்கங்களின் இரண்டு பொதுவான போக்குகளையும் அவற்றின்பால் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளையும் லெனின் பின்வருமாறு வரையறுத்துள்ளார்.
“வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப் பிரச்சினையில் இரண்டு போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று: தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராய்ப் போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும். இரண்டாவது: எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து, மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத் தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும்.
மும்பையையும், இந்தியாவையும் சேர்த்துச் சூறையாடும் மராட்டியர் அல்லாத டாடா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் நன்றியோடு வாலாட்டி விட்டு, மும்பையில் பிழைக்க வந்த ஒரு பீகாரியைச் சுற்றி வளைத்துத் தாக்கும் ராஜ் தாக்கரேவின் குண்டர் படை.
“இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகு தழுவிய விதியாகும். முன்னது, முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது, முதிர்ச்சியடைந்து சோசலிச சமுதாயமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும். மார்க்சியவாதிகளின் தேசிய இன வேலைத் திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காகப் பாடுபடுகிறது: முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்தவிதமான தனியுரிமைகளும் அனுமதிக்கப்படலாகாது என்பதற்காகவும் (மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் – இது பற்றிப் பிற்பாடு தனியே பரிசீலிப்போம்); இரண்டாவதாக, சர்வதேசியவாதம் என்னும் கோட்பாட்டுக்காகவும் முதலாளிய தேசியவாதத்தால் – மிகமிக நயமானதானாலுங்கூட- பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவும்.”
லெனினுடைய மேற்கண்ட வரையறுப்புகளின்படி, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங் களானாலும் தேசிய இன அரசுகள் அமைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளானாலும் சரி, எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவை வளர்த்து, அதைத் துரிதமாக்குதலும் தேசிய இனப் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்தலும் மூலதனத்தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்குதலும் சரி, “இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகு தழுவிய விதியாகும்.”
லெனினுடைய இந்த வரையறுப்பின் சாரம்தான் “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர, பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” என்கிற முடிவு. ஈழத் தேசிய இயக்கமானது முதலாளிய தேசிய இயக்கம் என்பது லெனினுடைய மேற்கண்ட பொது வரையறுப்புகளுக்குப் பொருந்தாததோ, விதிவிலக்கானதோ அல்ல.
“முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகப் பரிணமித்து விட்டபடியால், முதலாளித்துவம் புரட்சிகரக் குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவப் புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்டம் தொடங்கிவிட்டபடியால், பழைய வகை முதலாளித்துவப் புரட்சிக் கட்டத்தின்போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக் கடமைகளைப் பாட்டாளி வர்க்கம் எடுத்து நிறைவேற்ற வேண்டியுள்ளதால், தேசிய இனப் பிரச்சினைகளும் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்டதால், இனி தேசிய இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கம் அல்ல; அது பாட்டாளி வர்க்கத்தினுடையதாகும்” என்று இனவாதிகளாகச் சீழிந்துவிட்ட சமரன் குழு உள்ளிட்ட சில போலி புரட்சியாளர்கள் வாதிடுகின்றனர். இந்தத் திரிபின் அடிப்படையில், “தேசிய இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கம் முதன்மையான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கின்றனர், அவர்கள்.
சமரன் குழுவினர் சொல்கின்றனர், “(இது) ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தமாக இருப்பதால், அந்தந்த (காலனி, அரைக் காலனி நாடுகளின்) தேசிய விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளி வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே, இவ்வியக்கங்கள் உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக, அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறின. இப்புரட்சி முற்றுப்பெற்ற இடங்களில் இத்தேசிய இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டன.” (சமரன் வெளியீடு, பக்.70-71)
இந்த நிலைப்பாடு சரி என்றால், சமரன் குழு என்ன செய்யவேண்டும்? இதை ஈழப் பிரச்சினைக்கும் அப்படியே பிரயோகிக்க வேண்டாமா? ஈழத்தில் மட்டும் புலிகளின் முதலாளித்துவம் புரட்சிகரக் குணத்தை இழக்காமல், பிற்போக்காக மாறாமல் இருக்கிறதா? ஈழத் தேசிய விடுதலை இயக்கத்துக்கு விடுதலைப் புலிகள் உட்பட ஈழ முதலாளி வர்க்கம் தலைமை தாங்க முடிகிறதா? அதனால்தான் ஈழத் தேசிய இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கம் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகக் கொண்டு தீர்வு காண முயலாமல், விடுதலைப் புலிகள் உட்பட ஈழ முதலாளி வர்க்கம் தலைமை தாங்கட்டும், பாட்டாளி வர்க்கம் அவர்களின் தலைமைக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்களா? இவ்வாறு பு.ஜ.- ம.க.இ.க.-வினர் செய்யவில்லை என்று தானே சமரன் குழு பிரச்சாரம் செய்கின்றது!
இனவெறியர்களின் பீதியூட்டலால் கடந்த 2012 ஆகஸ்டில் உயிருக்கு அஞ்சி தென்மாநிலங்களிலிருந்து வெளியேறும் வடகிழக்கு மாநில தொழிலாளர்களும் இளைஞர்களும்.
ஆனால், முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காகிவிட்டது; தேசிய விடுதலை இயக்கங்களுக்கு முதலாளி வர்க்கம் தலைமை தாங்க முடியவில்லை; ஆகவே, தேசிய இனப் பிரச்சினையை புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகக் கொண்டு புரட்சி நடத்தி அதற்குத் தீர்வு காணப்பட்டன. இது தான் உலக வரலாற்று அனுபவம்” என்று சொல்லிக்கொண்டே, ஈழத் தேசிய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் விடுதலைப் புலிகள் உட்பட முதலாளி வர்க்கத்தை ஆதரிக்கவில்லை என்று பு.ஜ. – ம.க.இ.க.-வினரைச் சாடுகின்றனர்.
இந்தக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் தன் கையிலெடுத்து நிறைவேற்ற வேண்டிய புரட்சிக் கடமைகள், அடிப்படையில் பழையவகை முதலாளித்துவப் புரட்சிக் கட்டத்தின்போது முதலாளி வர்க்கங்களால் தலைமை தாங்கித் தீர்க்க முடியாமற் போய்விட்டவைதாம். அதாவது, தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராகவும் தேசிய இன அரசுகள் அமைத்துக் கொள்ளும் உரிமைக்காகப் போராடுவதும், எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒன்று கலத்தலை வளர்ப்பதும், பிரிவினைச் சுவர்களைத் தகர்த்து மூலதனத்தின், பொதுவாக பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் ஆகியவற்றின் சர்வதேச ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியவைதாம். இவையெல்லாம் அடிப்படையில் முதலாளி வர்க்கப் போக்குகள்தாம். இந்தக் கடமைகளை அந்த வர்க்கம் நிறைவேற்றத் தவறுவதால் – முதலாவது ஜனநாயகக் கடமை, இரண்டாவது சோசலிசப் புரட்சிக்கான சமூக அடித்தளத்தை உருவாக்குவது என்கிற காரணங்களால் -பாட்டாளி வர்க்கம் கையிலெடுத்துக் கொள்கிறது.
இருந்த போதும், தேசிய இயக்கங்களின் முதலாளித்துவ உள்ளடக்கம், தன்மைகள், வரம்புகளைத் தாண்டி பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கடமையாகிய சோசலிசப் புரட்சிக்கான தளம் அமைத்துக் கொள்ளும் வகையில் தேசிய இயக்கப் பிரச்சினையில் தலையிட்டுக் கையாளுகிறது. அதாவது, அது தேசிய இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு பகுதியாகக் கொள்கிறதே தவிர, பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகக் கொள்வதில்லை.
சாரமாக, “முதலாளித்துவ ஜனநாயக உரிமை” யாகிய அனைத்து தேசிய இனங்களுக்குமான சம உரிமையை ஆதரிக்கும் அதேசமயம், தேசிய இனப் போராட்டத்துக்கு வர்க்கப் போராட்டம் கீழானதாக இருக்க வேண்டும் என்ற முதலாளியப் பார்வையைப் பாட்டாளி வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. இதைத்தான் “முதலாளிகள் எப்போதும் தேசியக் கோரிக்கையைத் தீர்மானகரமான முறையில் முன்வரிசையில் வைக்கிறார்கள். பாட்டாளிகளைப் பொருத்தவரை இந்த கோரிக்கைகள் வர்க்கப்போராட்ட நலன்களுக்குக் கீழானவையாகும்.” என்கிறார், லெனின். (லெ.தொ.நூல்20, 410)
லெனினுடைய இந்தப் போதனைக்கு மாறாக போலி புரட்சியாளர்கள், பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் கீழானதாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், சமரன் குழுவின் தாய்க் கட்சியிலிருந்து பிரிந்துபோன திருச்சி முற்போக்கு இளைஞர் அணியினர், “தேசிய இனத்துக்கொரு தனித்தனி கம்யூனிசக் கட்சி வைத்துக் கொண்டு, தனித்தனி தேசியப் புரட்சி நடத்தி, தனித்தனி தேசிய அரசு அமைக்க வேண்டும்” என்று 1984-இல் ஒரு பிரசுரம் போட்டனர். அதை மறுத்து, “தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையும் முதலாளித்துவ தேசியவாதமும்” என்ற பிரசுரம் ஒன்றை சமரன் குழு அப்போதே வெளியிட்டது. அதில், “ஒரே அரசின் கீழ் வாழும் எல்லா தேசிய இனங்களும் ஒரே கட்சி, ஒரே போர்த்தந்திரம் வைத்துப் புரட்சி நடத்துவதே சரி” என்று எழுதினார்கள்.
திருச்சி முற்போக்கு இளைஞர் அணியின் கருத்தை மறுத்து அப்போது சமரன் குழு முன்வைத்த வாதங்களை இலங்கை-ஈழ இனச் சிக்கலுக்குப் பொருத்தினார்களா? அப்படிப் பொருத்தியிருந்தால் இலங்கை முழுவதற்கும் ஒரே கட்சி, ஒரே போர்த்தந்திரம் வைத்துப் புரட்சி நடத்துவதைத்தானே சிங்கள, ஈழ இனங்களைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்? அந்தக் கட்சியும் போர்த்தந்திரமும் சிங்களப் பாட்டாளிகளிடையே ஈழத் தமிழரின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையையும் ஈழத் தமிழரிடையே சிங்களப் பாட்டாளிகளுடன் இணைந்திருப்பதையும்தானே வலியுறுத்தியிருக்க வேண்டும்?
இந்தப் பணியைத்தான் பு.ஜ.-ம.க.இ.க.-வினர் செய்கின்றனர். ஆனால், ஈழம் பிரிந்து போவதை மட்டுமே ஒரே தீர்வென வைப்பதன் மூலமும், அதையே பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு என்று வாதிடுவதன் மூலமும் உண்மையில் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு இனவாதிகளின் குறுங்தேசியத்தையே சமரன் குழு உட்பட போலி புரட்சியாளர்கள் உயர்த்திப் பிடிக்கின்றனர். பு.ஜ.-ம.க.இ.க.-வினர் அவ்வாறு செய்யவில்லையென அவதூறும் பொழிகின்றனர்.
மேலும், புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகத் ‘தீர்வு காணப்பட்டாலும் கூட’ அத்தோடு முதலாளிய தேசியத்தால் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக எழும் எதிர்மறைப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. ஏனெனில், புதிய ஜனநாயகப் புரட்சி தேசிய முதலாளியத்தையும், அதற்கு அடிப்படையான ‘சிறு’ உற்பத்தியையும் ஒழித்து விடுவதில்லை. அவை நீடிக்கவே விடப்படுகின்றன. அவ்வாறு விடப்படும் முதலாளியம்தான் உயிர்த்தெழுந்து சோசலிச நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி, முதலாளியத்தை மீட்கும் எதிர்ப்புரட்சிகளை நடத்துகின்றன. அதனால்தான் சோசலிச நாடுகளில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் அதன் கீழான வர்க்கப் போராட்டங்களும் மாபெரும் கலாச்சாரப் புரட்சிகளும் அவசியமாகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பின்வரும் கருத்தையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
முதலாளிய தேசியத்துக்கும் பாட்டாளிய சர்வதேசியத்துக்கும் இடையிலான இவ்வாறான வேறுபாடுகளையும், தேசியப் பிரச்சினையில் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றியும் மேலும் லெனின் பின்வருமாறும் போதித்துள்ளார்; லெனினுடைய இந்தப் போதனை ஈழ முதலாளிய தேசியவாதத்துக்கும் பொருந்தும்.
“முதலாளிய தேசியவாதமும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இருவேறு முழக்கங்களாகும். இவை முதலாளித்துவ உலகம் முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்தது. தேசிய இனப் பிரச்சினை இருவேறு கொள்கைகளின் (இல்லை, இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாய் விளங்குகின்றன.
பிற்போக்கு தேசியவாதப் பெருமிதம் : தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்க்க, இலண்டனிலுள்ள தமிழ் இளையோர் அமைப்பு (TYO) எனும் புலிகள் ஆதரவு புலம்பெயர் ஈழத் தமிழர்களால் “கற்க கசடற” எனும் பெயரில் 2012-ல் நடத்தப்பட்ட கர்நாடக இசைநிகழ்ச்சி.
“தேசியவாதம் எவ்வளவுதான் ‘நியாயமானதாய்’ , ‘பரிசுத்தமான’, ‘நயமான நாகரிக வகைப்பட்டதாய்’ இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகையான தேசியவாதத்துக்கும் மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கிறது; எல்லா தேசிய இனங்களும் உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை முன்வைக்கிறது – இந்த ஒற்றுமை ஒவ்வொரு மைல் ரயில்பாதை போடப்படுவதையும் தொடர்ந்து, ஒவ்வொரு சர்வதேச டிரஸ்டும் உருவாவதைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொழிலாளர் சங்கம் நிறுவப்படுவதைத் தொடர்ந்து, (தொழிலாளர் சங்கமானது அதன் பொருளாதாரச் செயல்களிலும் மற்றும் அதன் கருத்துக்களிலும் நோக்கங்களிலும் சர்வதேசியத் தன்மை வாய்ந்தது) நமது கண்ணெதிரே வளர்ந்து வருகிறது” என்கிறார், லெனின். (தொகுதி 24)
தொழிலாளர்களின் இத்தகைய ஒன்றுகலத்தல், ஒற்றுமை மற்றும் சர்வதேசிய மயமாகுதல் நமது நாட்டில் தற்போது, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் நேபாளத் தொழிலாளர்களின் புலம் பெயர்வு காரணமாக அதிவிரைவாக நடக்கிறது. இந்தப் போக்குக்கு எதிராக த.தே.பொ.க. மணியரசன் கும்பல், பார்ப்பன – பாசிச அரசு மற்றும் போலீசுடன் கைகோர்த்துக் கொண்டு, குறுந்தேசிய இனவெறியுடன் கடுமையாகப் போராடுகிறது. தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு எதிராக மராட்டிய பாசிச சிவனோவின் அடியொற்றி குறுந்தேசிய இனவெறியைத் தூண்டி ஆதாயம் அடைய எத்தனிக்கிறது. இதைத் தமிழகத்தில் பு.ஜ.- ம.க.இ.க.-வினர் மட்டுமே தனி இயக்கமாக நின்று எதிர்ப்பதோடு, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடுவதுடன் பிற இன தொழிலாளர்களுடனான ஒற்றுமையை நிறுவி வளர்க்கின்றனர்.
த.தே.பொ.க. மணியரசன் கும்பலின் இந்தக் குறுந்தேசிய இனவெறிக்கு எதிராகச் சமரன் குழு உட்பட எந்தவொரு போலிப் புரட்சிக் குழுவும், மார்க்சிய வேடதாரிகளான தமிழினவாதக் குழுக்களும் குரலெழுப்பவில்லை. வெட்கக்கேடான முறையில் அமைதி காத்து மறைமுகமாக ஆதரிக்கின்றன.
மேலும் லெனின் சொல்கிறார்: “தேசிய இனம் என்கிற கோட்பாடு முதலாளிய சமுதாயத்தில் வரலாற்று வழியில் தவிர்க்க முடியாதது. இந்தச் சமுதாயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மார்க்சியமானது, தேசிய இன இயக்கங்கள் வரலாற்று வழியில் நியாயமுடையவை என்பதை முழு அளவுக்கு அங்கீகரிக்கிறது. ஆனால், இந்த அங்கீகாரம் தேசியவாதத்துக்கான ஆதரவு விளக்கமாக ஆகி விடாதிருக்கும் பொருட்டு, இந்த இயக்கங்களில் முற்போக்கான அம்சமாய் இருப்பதற்கு மட்டுமானதாய் இந்த அங்கீகாரம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அப்போதுதான் பாட்டாளி வர்க்க உணர்வு முதலாளிய சித்தாந்தத்தால் மழுங்கடிக்கப்படுவதற்கு இந்த அங்கீகாரம் இட்டுச் செல்லாதிருக்கும்.
“தேசிய இனப் பிரச்சினையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான, கிஞ்சித்தும் முரணற்ற ஜனநாயகத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால், தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்குமேல் செல்வது சாத்தியமன்று. ஏனெனில், இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் ‘நேர்முகச்’ செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி ஆரம்பமாகி விடுகிறது.
“முதலாளிய தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான வரம்புகளுக்கு – வரலாற்று வழியில் அமைந்த திட்டவட்டமான எல்லைகளுக்கு அப்பால் செல்வது, பாட்டாளிகளது வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும்.
“பிரபுத்துவ ஆதிக்கம் அனைத்தையும், தேசிய இன ஒடுக்குமுறை அனைத்தையும் எந்தவொரு தேசிய இனத்துக்கோ, எந்தவொரு மொழிக்கோ உள்ள எல்லாத் தனி உரிமைகளையும் ஒழித்துக் கட்டுதல் ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும், பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சயமாய் உகந்ததாகும். (திருவையாறிலும் சிதம்பரத்திலும் தமிழ் மொழிக்கு எதிரான தீண்டாமையை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்தும், வட மொழிக்கும் பார்ப்பனருக்குள்ள ஆதிக்கத் தனியுரிமையையும் எதிர்த்தும் போராடுவதன் மூலம் இந்தக் கடமையை நிறைவேற்ற பு.ஜ.- ம.க.இ.க. -வினர் முயற்சிக்கின்றனர். ஆனால், இதைச் சந்தர்ப்பவாதமாகவும் உள்நோக்கம் கருதியும் பு.ஜ.- ம.க.இ.க.-வினர் செய்வதாகத் தமிழினவாதிகளும் போலி புரட்சியாளர்களும் அவதூறு புரிகின்றனர். -பு.ஜ.) தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான பூசல்கள் இவ்வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பவை, தடுத்து மட்டுப்படுத்துகிறவை. ஆனால், முதலாளிய தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான இந்த வரம்புகளுக்கு வரலாற்று வழியில் அமைந்த இந்தத் திட்டவட்டமான எல்லைகளுக்கு அப்பால் செல்வது, பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும். இங்கு எல்லை வரம்பு இருக்கிறது, பல சந்தர்ப்பங்களிலும் இது மெல்லியதாய் இருக்கக் கூடியது …”
“எந்தவிதமான தேசிய இன ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடுதல் இது அவசியம் செய்யப்பட வேண்டிய காரியம். எந்த தேசிய இன வளர்ச்சிக்காகவும், பொதுவாகத் தேசிய இனக் கலாச்சாரத்துக்காகவும்” இதை ஒருபோதும் செய்யலாகாது. முதலாளித்துவச் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியானது, உலகெங்கும் நமக்கு முதிர்ச்சியடையாத தேசிய இன இயக்கங்களுக்கு உதாரணங்களையும், பல சிறிய இனங்களிலிருந்து பெரிய தேசிய இனங்கள் உருவாவதற்கு, அல்லது சிறியனவற்றில் சிலவற்றுக்குப் பாதகமாய் இவை உருவாவதற்கு உதாரணங்களையும், தேசிய இனங்கள் ஒன்று கலத்தலுக்கு உதாரணங்களையும் அளிக்கிறது. பொதுப்பட தேசிய இனத்தின் வளர்ச்சி – இது முதலாளிய தேசியவாதத்தின் கோட்பாடாகும். எனவேதான், முதலாளிய தேசியவாதம் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கிறது; எனவேதான், தேசிய இனப் பூசல்கள் ஓயாமல் நடக்கின்றன. ஆனால், பாட்டாளி வர்க்கம் ஒவ்வொரு தேசிய இனத்தின் தேசிய இன வளர்ச்சிக்கும் ஆதரவாக நிற்கத் தயாராய் இல்லை என்பது மட்டுமல்ல ; இதற்கு மாறாய் இம்மாதிரியான பிரமைகளுக்கு எதிராய் மக்கள் பெருந்திரளினரை எச்சரிக்கிறது; முதலாளித்துவ ஒட்டுறவுக்கு முழு அளவு சுதந்திரம் வேண்டுமென்பதை ஆதரிக்கிறது; வன்முறை அல்லது தனியுரிமைகளின் அடிப்படையில் அமைந்ததைத் தவிர்த்து, தேசிய இனங்களது ஏனைய எல்லா விதமான ஒன்று கலத்தலையும் வரவேற்கிறது.
“நியாயமான முறையில் ” வரம்பிடப்பட்ட குறிப்பிட்ட அரங்குக்குள் தேசியவாதத்தை உறுதிபெறச் செய்தல், தேசியவாதத்தை அரசியல் சட்டவழிப்பட்டதாய்” ஆக்குதல், எல்லாத் தேசிய இனங்களுக்கும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப் பிரிந்திருத்தலை விசேச அரசு நிறுவனத்தின் மூலம் உறுதியாக்கி, கெட்டி பெறச் செய்தல் ஆகிய இவைதான் கலாச்சார-தேசிய இனத் தன்னாட்சியின் சித்தாந்த அடிப்படையும் உள்ளடக்கமும் ஆகும். இந்தக் கருத்து முழுக்க முழுக்க முதலாளியத் தன்மை வாய்ந்தது, முழுக்க முழுக்கத் தவறானது. எவ்விதத்திலும் தேசியவாதம் நிலைநாட்டப்படுதலைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. இதற்கு மாறாக, தேசிய இன வேறுபாடுகளைக் குறையச் செய்து, தேசிய இனப் பிரிவினைச் சுவர்களை அகற்ற உதவுகிறவை யாவற்றையும், தேசிய இனங்களுக்கு இடையிலான பந்தங்களை மேலும் மேலும் இணைய வைப்பவை யாவற்றவையும் அது ஆதரிக்கிறது. இவ்வாறின்றி வேறுவிதமாய்ச் செயல்படுதல், பிற்போக்கான தேசியவாத அற்பர்களின் பக்கம் சென்று விடுவதையே குறிக்கும்” என்கிறார் லெனின். (தொகுதி 24)
இன்றைய உலகம் ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுமான சகாப்தமாக மாறிவிட்டது, தேசிய இனப் பிரச்சினைகளும் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்டது, முதலாளி வர்க்கங்களால் தீர்க்கப்படாதிருந்த புரட்சிக் கடமைகளைப் பாட்டாளி வர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது போன்ற காரணங்களைக் கூறி லெனினுடைய மேற்கண்ட போதனைகளை நிராகரித்து விட முடியாது. முதலாளி வர்க்கங்களால் தீர்க்கப்படாதிருந்த புரட்சிக் கடமைகளைத்தான் பாட்டாளி வர்க்கம் எடுத்து நிறைவேற்ற வேண்டுமே தவிர, லெனின் மேற்கண்டவாறு போதித்த வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த பாட்டாளிகளின் ஒன்று கலத்தலுக்கு, அதாவது சர்தேசியக் கடமைகளுக்கு எதிரான முதலாளிய தேசியவாதத்தின் சுயநலப் பிற்போக்குகளைச் சமரசமின்றிக் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்.
ஆனால்,போலிப் புரட்சியாளர்களும், இனவாதிகளும் தேசியம் என்றாலே அதன் எல்லாப் போக்குகளும் புரட்சிகரமானவை என்று சித்திரம் தீட்டுகிறார்கள். முதலாளிய பாசிசக் குறுந்தேசியவாதிகளான விடுதலைப் புலிகள் பாட்டாளிகள் தொழிற்சங்கம் அமைத்துச் செயல்படுதல், மேதினம் கொண்டாடுதல் போன்ற தொழிலாளர் நடவடிக்கைகள் மற்றும் ஈழப் பாட்டாளிகள் பிற இனப் பாட்டாளிகளுடன் ஒன்று கலத்தலைத் தேசிய இனத் துரோகமாக அறிவித்துத் தடை செய்தனர். ஆனால், தாமே ஏகாதிபத்திய, மேலாதிக்க-விரிவாதிக்கச் சக்திகளுடன் சமரசம் கொண்டனர். தேசியக் கலாச்சாரம் என்ற பெயரில் சேர, சோழ, பாண்டிய பாரம்பரிய உரிமை பாராட்டினர். பாட்டாளி வர்க்கம் எதிர்க்க வேண்டிய இவற்றை, சமரன் குழு உட்பட போலிப் புரட்சியாளர்கள் தாமும் கண்டும் காணாமல் விடுவதோடு, இவற்றை எதிர்ப்பதற்காக பு.ஜ.-ம.க.இ.க.-வினர் மீது அவதூறு பொழிகின்றனர்.
“உள்நாட்டில் ஜனநாயகவாதியா, பிற்போக்குவாதியா என்று பாராமல் ஆப்கானின் அமீரையும் தேசிய இனப் பிரச்சினையில் ஆதரிக்கும்படி ஸ்டாலின் கூறினார்; பாசிஸ்டுகள் என்றாலும் தேசிய இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது” என்று கேட்கிறார்கள். பிற்போக்காளராக இருந்தாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் போராட்டத்தில்தான் ஆப்கானின் அமீரை ஆதரிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். விடுதலைப் புலிகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்களா? அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் இந்திய விரிவாதிக்கத்துடனும் சமரசம் செய்துகொள்ளத் தானே எத்தனித்தார்கள்?
“ஏகாதிபத்தியத்தின் “நேரடி’ ஆதிக்கம் வரும்போது தான் தேசிய இன முழக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்ள முடியும்” என்ற பு.ஜ. வின் நிலைப்பாடு காரணமாக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணிதிரள முடியாமல் போனது என்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் ‘நேரடி’ ஆதிக்கம் வரும் முன் உள்ள ஒரு அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகத் தேசிய இனப் பிரச்சினை அமையும். அவ்வாறான நிலையில் தேசிய இனப் பிரச்சினை எப்படி முதன்மையானதாக இருக்கும்? ஆனால், ஏகாதிபத்தியத்தின்'”நேரடி’ ஆதிக்கம் வரும்போது இயல்பாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் புரட்சி என்கிற முறையில் தேசிய இனப் பிரச்சினை முதன்மையானதாகிறது. இப்படிச் சொல்வதால் ஏதோ தேசிய இனப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை நாம் அறியாதவர்கள் என்பதாக இனவாதிகள் காட்டுகிறார்கள்.
“இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் தமிழீழத் தனியரசு காண்பதுதான் ஒரே தீர்வு” என்ற முடிவைத் தமிழ்த் தேசிய இனவாதிகளும் போலி புரட்சியாளர்களும் நியாயப்படுத்துவற்காக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையை லெனின் வலியுறுத்தும் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறார்கள். லெனின் வலியுறுத்தினாலும் இந்த அம்சம் தேசிய முதலாளிகளுக்குச் சாதகமானது என்றாலும், எல்லா ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பது, ஜனநாயகத்துக்காக நிற்பது என்கிற முறையில் இதைப் “பாட்டாளி வர்க்கம் எதிர்மறையில் மட்டுமே ஆதரிக்கிறது” என்றார், லெனின். பாட்டாளி வர்க்க ஒன்றிணைவுக்காகவும் புரட்சிக்குச் சாதகமானது என்பதாலும் இணைந்திருக்க வேண்டிய இன்னொரு அம்சத்தையும் லெனின் வலியுறுத்துகிறார்; ஆனால், இதை அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள்.
எனவேதான், “சுரண்டலை எதிர்த்து வெற்றிபெறும் வகையில் போராட வேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் தேசியவாதத்தில் இருந்து விடுபட்டு நிற்கவேண்டும். பல்வேறு தேசிய இனங்களின் முதலாளி வர்க்கத்தாரிடையே மேல்கை பெறுவதற்காக (மேலாதிக்கத்திற்காக) நடந்து வரும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் முற்றும் முழுதான நடுநிலை வகிக்க வேண்டும்” என்றார், லெனின். (தொகுதி 20, பக்.424)
“ஒவ்வொரு தேசிய இனத்தின் காரியத்திலும் பிரிந்துபோவது பற்றிய பிரச்சினைக்கு “சரி” அல்லது :கூடாது” என்று பதிலளிக்குமாறு கோருவது மிகவும் “செயல்பூர்வமான” ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், உண்மை யில் அது அபத்தமானது, தத்துவத்தில் இது இயக்க மறுப்பியல் வகைப்பட்டது. நடைமுறையிலோ இது முதலாளி வர்க்கத்தின் கொள்கைக்குப் பாட்டாளி வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துகிறது. முதலாளி வர்க்கம் தனது தேசிய இனக் கோரிக்கைகளை எப்போதும் முன்னணியில் வைக்கிறது; மிகவும் ஆணித்தரமான முறையில் முன்வைக்கிறது. பாட்டாளி வர்க்கத்தைப் பொருத்தவரை இந்தக் கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்குக் கீழ்ப்பட்டவை. முதலாளிய ஜனநாயகப் புரட்சி (இதுவரையிலான ஈழ விடுதலை இயக்கம் இந்த வகையைச் சேர்ந்தது என்பதைப் போலி புரட்சியாளர்கள் மறுக்க முடியாது-பு.ஜ.) சம்பந்தப்பட்ட ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து செல்வதில் போய் முடியுமா அல்லது அதனுடன் சமத்துவத் தகுதிநிலை பெறுவதில் போய் முடியுமா என்பதைத் தத்துவரீதியாக முன்கூட்டியே யாரும் சொல்லமுடியாது; முடிவு இரண்டில் எதுவாயினும், தனது வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் செய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு
முக்கியமான காரியம். முதலாளி வர்க்கத்துக்கோ ‘தனது சொந்த’ தேசிய இனத்தின் நோக்கங்களைப் பாட்டாளி வர்க்க நோக்கங்களுக்கு முந்தி முனைப்பாகத் திணிப்பதன் மூலம் இந்த முன்னேற்றத்தைத் தடை செய்யவேண்டும் என்பது முக்கியமானது.
“தனது கோரிக்கைகள் ‘செயல்பூர்வமானவை’ என்ற முகாந்திரத்தால், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் முதலாளி வர்க்கமானது, அதன் சொந்த நலன்களை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு பாட்டாளி வர்க்கத்தைக் கேட்டுக் கொள்ளும். எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்பதை ஆதரிப்பதை விட, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்கு ஆதரவாக “சரி” என்று தெளிவாகக் கூறுவதுதான் மிக அதிகமாக நடைமுறை ரீதியானதாகும்!” (என்று முதலாளி வர்க்கம் கூறும்).
“பாட்டாளி வர்க்கம் இத்தகைய செயல்பூர்வத் தன்மையை எதிர்க்கிறது. சமத்துவமும் ஒரு தேசிய இன அரசுக்கு சம உரிமைகளும் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேசமயத்தில், அது எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி மக்களின் கூட்டிணைப்பை எல்லாவற்றுக்கும் மேலாக மதித்து அதிமுக்கியமானதாக முன்வைக்கிறது; எந்த ஒரு தேசிய இனக் கோரிக்கையையும் எந்த ஒரு தேசிய இனப் பிரிவினையையும் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்தே மதிப்பிடுகிறது” என்றார், லெனின்.
ஒடுக்கும் பெருந்தேசியவாதத்தின் கட்டாய இணைப்பு, ஒடுக்கப்படும் தேசிய பிரிவினைக் கோரிக்கை இரண்டையும் சமமானதாகக் கருத முடியாது. ஆனாலும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் பாட்டாளி வர்க்கம் தெரிந்தெடுக்க வேண்டும் என்று லெனின் போதிக்கவில்லை. இரண்டிலிருந்தும் மாறுபட்ட மூன்றாவதாக உள்ள தொழிலாளர்களின் ஒன்றிணைப்பு மற்றும் வர்க்கப் போராட்டப் புரட்சி நலன்களுக்குத்தான் பாடுபட வேண்டும் என்றார். ஆனால், இதை வலியுறுத்துவதற்காகத்தான் பு.ஜ. – ம.க.இ.க.-வினர் மீது தமிழினவாதிகளும் சமரன் குழு உட்பட போலி புரட்சியாளர்களும் அவதூறு பொழிகின்றனர்.
அமெரிக்காவில் குறைந்த பட்சக் கூலியை உயர்த்துவதற்காக நடந்து வரும் தொழிலாளர் போராட்டங்கள், அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் அசைத்துப் பார்த்திருக்கின்றன.
மெக்டொனால்ட்ஸ் முதலான துரித உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி 2013-ம் ஆண்டு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். 2013 நவம்பர் மாதம் மேற்குக் கடற்கரையில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சியாட்டில் மாநகருக்கு அருகில் உள்ள சீ-டேக் என்ற நகராட்சி மன்றம், மக்கள் வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்தியது.
ஜனவரி மாதம் சியாட்டில் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் 15 ஆண்டுகளாக மாநகராட்சி உறுப்பினராக இருந்த ரிச்சர்ட் கான்லின் என்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிச மாற்று (சோசலிஸ்ட் அல்டர்நேடிவ்) கட்சியைச் சேர்ந்த சாமா சாவந்த் “மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி” என்ற முழக்கத்தை மையமாக வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
டிசம்பர் மாதம் நியூயார்க்கில் மெக்டொனால்ட்ஸ் உணவகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரும் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $15 ஆக உயர்த்துவதை ஆதரித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான துணைக்குழுவை நியமித்திருக்கிறார். நகர மக்களில் 68% பேர் எந்த விதிவிலக்கும் இல்லாமல் உடனடியாக இந்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருவதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இப்போது, சியாட்டில் நகரத்தில் மணிக்கு $15 கூலி என்ற கோரிக்கையை எதிர்த்து வாய் திறப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இல்லை.
ஆனால், “வழக்கம் போல சமூகத்தின் 1%-த்தினரான முதலாளிகளும், அவர்களுக்கு ஆதரவான மாநகராட்சி உறுப்பினர்களும் இந்த நடைமுறையில் விதிவிலக்குகளையும் ஓட்டைகளையும் புகுத்துவதோடு மட்டுமல்லாமல், கால வரம்பையும் தள்ளிப் போட முயற்சித்து வருவதாக” சாமா சாவந்த் குற்றம் சாட்டியிருக்கிறார். “நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
“விதிவிலக்கு கூடாது, ஓட்டைகள் கூடாது, தாமதம் கூடாது, இப்போதே 15 டாலர் வேண்டும்” என்ற முழக்கத்துடன்
உடனடியாக கூலி உயர்வு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – நமது வீட்டு வாடகைகள் கொடுப்பதை இனியும் தள்ளிப் போட முடியாது
கூலி உயர்வை எந்த விதிவிலக்கும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் – சிறு நிறுவனங்களை பாதுகாப்பது முக்கியமானது என்றாலும் அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து செய்யப்படக் கூடாது.
டிப்ஸ் தொகையை சேர்க்காமல் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகளுடன் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $15 பெற போராடுவோம்.
இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஆளும் வர்க்கங்களை அசைத்துப் பார்த்துள்ளது. அதிபர் ஒபாமா, மத்திய அரசின் எதிர்கால ஒப்பந்ததாரர் பணிகள் அனைத்திலும் குறைந்த பட்ச கூலி மணிக்கு $10.10 ஆக இருக்க வேண்டும் என்று நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இந்தக் மோசடியான உத்தரவு அளிக்கும் கூலி உயர்வு, தொழிலாளர்களின் கோரிக்கையான மணிக்கு $15-ஐ விட குறைவானது என்பது மட்டுமின்றி, இது அமெரிக்க மத்திய அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது.
இந்த ஆண்டு பிற்பகுதியில் வரவிருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் குறைந்தபட்ச ஊதியத்தை நாடு முழுவதும் $10.10 ஆக உயர்த்துவதை தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், உழைக்கும் மக்களின் பிரச்சனையை பேசி ஓட்டுப் பொறுக்கி விட்டு அக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு எதுவும் செய்யாமல் ‘குடியரசுக் கட்சியினர் ஒத்துழைக்கவில்லை’ என்று நாடகமாடுவதுதான் ஜனநாயகக் கட்சியின் நடைமுறையாக உள்ளது.
குடியரசுக் கட்சியினரோ, ‘குறைந்த பட்ச கூலி என்பது அடிப்படை திறன் தேவைப்படும் வேலைக்கான கூலி. அவரவர் திறமைக்கு ஏற்ப பின்னர் கூடுதல் சம்பாதிக்க முடியும்’ என்று “மெரிட்” வாதம் புரிகின்றனர். ‘குறைந்த பட்ச கூலியை உயர்த்திக் கொடுத்தால் விலைவாசி கணிசமாக உயரும்’ என்றும் ‘பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்படும்’ என்றும் பயமுறுத்துகின்றனர்.
சியாட்டிலில் நடக்கும் உடனடியாக $15 போராட்டத்துக்கான திட்டமிடல் கூட்டம்.
கலிபோர்னியாவின் ஓக்லாந்து நகரின் மேயர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் டான் சீகல் $15 கூலி சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் சூழலில் அந்த ஊரின் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு, ‘குறைந்தபட்சக் கூலி $12.25 ஆக உயர்த்தப்பட வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. அதாவது முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே தொழிற்சங்கங்கள் தமது சமரச வேலையை ஆரம்பித்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சங்கங்கள், அக்கட்சிக்கு ஏற்புடையதாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போக வைக்கின்றன.
“$15 என்ற கோரிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கே வர மாட்டோம்” என்று தேசிய உணவகங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்காட் டீ ஃபீபே மிரட்டியிருக்கிறார். “அமெரிக்காவில் தொழில்துறை நலிந்த நிலையில் துரித உணவு மற்றும் சேவைத் துறைகளில்தான் வேலை வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அந்தத் துறைகளில் கூலியை உயர்த்தி வேலை வாய்ப்புகளை குறைப்பது முட்டாள்தனம்” என்று தேசிய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் மூத்த துணைத்தலைவர் டேவிட் பிரெஞ்ச் குமுறியிருக்கிறார்.
ஆனால், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்துவதன் மூலமாக துரித உணவுகளின் விலை 10% மட்டுமே உயரும் ($3 மதிப்பிலான பர்கர் விலை $3.30 வரை உயரலாம்) என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கென் ஜேக்கப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆய்வின்படி பற்றாக்குறை கூலி பெறும் துரித உணவு ஊழியர்கள் ஆண்டுக்கு $7 பில்லியன் அரசு உதவி பெறுகிறார்கள். கூலி உயர்வின் மூலம் ஊழியர்கள் அரசு மானியங்களை நாடுவதை குறைத்துக் கொண்டு அரசுக்கு பணம் மிச்சமாகும். ஆனால் முதலாளிகளின் பணத்தை சேமிப்பதற்கு மட்டும் அரசு மானியங்கள் கொடுக்கிறது. உண்மையில் இது மக்களின் நலனுக்காக கொடுக்கப்படுவது இல்லை.
மேலும், “கடந்த 90 ஆண்டு அனுபவத்தில் கூலி உயர்வு வழங்கியதால் வேலை வாய்ப்புகள் குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று தேசிய சேவைத்துறை தொழிற்சங்கத் தலைவர் திருமதி ஹென்ரி கூறுகிறார். முதலாளிகள் தமது லாப வேட்டையை அதிகரிப்பதற்காக முதலீடுகளை நாடு விட்டு நாடு கொண்டு போவதாலும், வேலைகளில் எந்திரங்களை புகுத்தி தானியக்கத்தை செயல்படுத்துவதாலும்தான் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பல துரித உணவகங்கள் ஏற்கனவே குளிர்பானங்கள் வாங்குவதில் சுயசேவை முறையை ஆரம்பித்திருக்கின்றன. கணினி திரையில் வாடிக்கையாளரே ஆர்டர் கொடுத்து சமையலறைக்கு தகவல் போவது என்ற முறையையும் செயல்படுத்தியிருக்கின்றன. எனவே, கூலி உயர்வுதான் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்ற வாதமும் தவறானது.
குறைந்த பட்ச ஊதியம்- வரலாற்று புள்ளிவிபரம்.
1930-களின் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் முதன்முதலாக குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $0.25 ஆக வரையறுக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் இன்றைய மதிப்பு $4.13. படிப்படியாக உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 1968-ல் உச்சபட்ச மதிப்பான $1.60 (இன்றைய மதிப்பு $10.72)-ஐ எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து இன்று $7.25 ஆக உள்ளது. அதாவது 1968-ஐ விட இப்போது 32% குறைவாக உள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில் தற்போதைய குறைந்த பட்ச கூலி பெறும் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கும் $19,385 டாலர் ஆண்டு வருமானத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருப்பது கூட சாத்தியமில்லை. சியாட்டிலில் வாடகைக்கு வீடு எடுக்கவும் பிற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் போதுமான ஆண்டு வருமானம் $31,000-ஐ பெறுவதற்காக மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி கேட்டு தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
“நியாயமான கூலி கொடுக்காமல் மோசடி செய்யும் மெக்டொனால்ட்சை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தோடு, “பாய்காட் மெக்பாவர்ட்டி” (மெக்வறுமையை புறக்கணிப்போம்) என்ற பெயரில் சியாட்டில் நகரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைகளுக்கு முன்பு பிப்ரவரி 20-ம் தேதி மறியல்கள் நடைபெற்றன.
சியாட்டில் போராட்டம் : வீட்டு வாடகை கொடுப்பதை தள்ளிப் போட முடியாது (மாநகராட்சி உறுப்பினர் சாமா சாவந்த்)
அந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டானி பெல்ப்ஸ் என்ற ஊழியர், “மணிக்கு $9.32 ஊதியத்தில் ஒரு குழந்தையை வளர்க்கும் அனுபவம் எப்படியானது என்று தெரியுமா? அது மிக மிகக் கொடுமையானது. நான் வேலைக்குப் போகும் போது குழந்தையை பராமரிக்கும் சேவை, குடியிருப்பதற்கு வீடு, மருத்துவ வசதி என எதுவும் கட்டுப்படி ஆவதில்லை. மாறாக 2 படுக்கையறை, 1 குளியலறை கொண்ட வீட்டை 7 பேருடன் பகிர்ந்து கொண்டு என் குழந்தையுடன் நான் வசிக்கிறேன். வாழ்வின் குறைந்த பட்ச தேவைகளை பெறுவதற்காக நான் $15 குறைந்தபட்ச ஊதியம் கோரி போராடுகிறேன்.” என்றார்.
மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்கான உத்தியாக வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பர்கர் அல்லது வறுவலை கேட்ட அளவை விட அதிகரிக்கட்டுமா (super size your order) என்று ஊழியர்களை கேட்க வைக்கும் வழக்கத்தை பின்பற்றி “என் ஊதியத்தை உடனே பெரியதாக்கு ((super size my salary now)” என்ற முழக்கம் தெருவை நிறைத்தது. அடுத்தக் கட்ட போராட்டமாக மார்ச் 7 முதல் 15 வரையிலான வாரத்தை நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தும் “நடவடிக்கை வாரமாக” கடைப்பிடிக்கப் போவதாக தொழிலாளர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த மறியல் போராட்டங்களால் கதி கலங்கிய உள்ளூர் மெக்டொனால்ட்ஸ் உணவக முதலாளிகள், ‘ஊதிய உயர்வு கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை’ என்று அறிவித்திருக்கின்றனர். இந்தப் போராட்டங்களின் தாக்கம் வாஷிங்டன் மாநிலம் முழுவதும் எதிரொலித்துள்ளது. மாநில ஆளுனர் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $13 ஆக அதிகரிப்பதை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.
ஆளும் வர்க்க கட்சிகளையும், அவர்களது ஜால்ரா தொழிற்சங்கங்களையும் புறக்கணித்து நடத்தப்படும் புரட்சிகர போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கம் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது அமெரிக்க தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் நமக்கு உணர்த்தும் உண்மை.
‘பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி’
“நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அவல வாழ்க்கை கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கேள்வி கேட்கத் துணிந்தவர்களின் அனுபவக் குரலை நாம் அறியச் செய்யும் ஒரு நூல் “பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி”.
கீழத்தஞ்சையில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக போராடிய கம்யூனிச முன்னோடி பி சீனிவாசராவ்.
ஒரு பண்ணையடிமைக் குடும்பத்தில் பிறந்து அடிமை உழைப்பு, சாதிக் கொடுமை என்ற இரட்டை நுகத்தடியை வர்க்கப் போராட்டத்தினூடாக அறுத்தெறிந்த பி.எஸ் தனுஷ்கோடியின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கும் இந்நூல், படிக்கும் எவருக்கும் ஒரு நூலைப் படித்த ‘திருப்தியை’ அளிக்காமல் ‘மன அமைதியை’க் குலைத்துச் செயலுக்கிழுக்கும் இயக்கமாகவே எதிர்ப்படும்.
‘அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?’ என்பவர்களுக்கு முதலில் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது கீழத் தஞ்சை என்பதை அறிமுகப்படுத்துகிறது நூலின் முன் பகுதி.
அன்று கீழத்தஞ்சை ஒரு திறந்த வெளி சிறைச்சாலை. அங்கு நிலவிய கொடுமைகளிலிருந்து பண்ணை அடிமைகள், தம் விருப்பப்படி வெளியேறவும் முடியாது, “அயல் நாட்டுக்கு ஓடிவிடும் பண்ணையடிமை 10 வருடம் கழித்தோ, 15 வருடம் கழித்தோ, “தன் வீட்டிற்கு ஊருக்குத் திரும்பி வரலாமா?” என்று கேட்டு தந்தைக்கோ தமையனுக்கோ கடிதம் எழுதுவான். அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட வீட்டிற்குப் போகாது. தபால்காரர் அதை நிலப்பிரபு வீட்டில் கொடுப்பார். அவர் உடனே சம்பந்தப்பட்ட நபரின் தந்தையை அழைத்து உடனே திரும்பி வரும்படி மகனுக்குக் கடிதம் எழுதும்படி கூறுவார். அயல் நாட்டிலுள்ள மகன் கடிதம் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் ஊருக்கு கப்பலில் வருவார். ஆனால் கிராமத்திற்குள் அவர் நுழைந்தவுடன் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை இழுத்துக் கொண்டு போய் பண்ணை வீட்டில் கட்டுவார்கள். வட்டியும் முதலுமாகச் சவுக்கடி கொடுக்கப்படும். மீண்டும் அந்த ஆள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு குற்றுயிராக ஆக்கப்பட்டு விடுவான்.’’ (நூல் பக்கம்34)
இப்படி ஊருக்குத் திரும்பி நிலப்பிரபுவின் காலில் விழுந்து ‘எசமான் சௌக்கியமா?’ என்று கேட்ட சிலம்பன் போன்றவர்களை வைக்கோல் பிரிசுற்றி, தீ வைத்து எரிப்பதே நிலப்பிரபுவின் முதல் விசாரணையாகவும் இருந்தது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பண்ணையடிமைகள் பலவாறு சிந்திய இரத்தத் துளிகளால் நிரம்பியதுதான் அன்றைய ‘நெற்களஞ்சியம்’.
இத்தகைய கொடுமையான சூழலில் தான் திருத்துறைப் பூண்டி வட்டத்திலுள்ள விளத்தூர் எனும் சிறிய கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார் தனிக்கொடி என்ற பி.எஸ். தனுஷ்கோடி.
உலகைப் புரிந்து கொள்ள அவரது அறிவுக் கண்ணைத் திறந்தது உமையாளின் ஞானப்பால் அல்ல. ஆண்டைகளின் சாணிப் பால். ஆம்! சாணிப்பாலும், சவுக்கடியுமாய் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கூலி விவசாயிகளின் குரலுக்கு எந்தச் சாமியும் இறங்கி வராதது கண்டு ‘கடவுளர்களை’ விடுத்து கட்சியைத் தேட ஆரம்பித்தார் தனுஷ்கோடி. அவருக்கு முதல் அனுபவமே மோசமாக முடிந்தது. கைங்கர்யம் காங்கிரசு கட்சி.
“மகாத்மா காந்திக்கு ஜே” என்று தனுஷ்கோடியும் உற்சாகம் பெருக ஊர்வலத்தில் சேர்ந்து, விளத்தூருக்குப் போய் அங்கிருந்த அக்கிரகாரத்துக்குள் நுழைந்தது ஊர்வலம். இதைக் கண்ட பிராமணர்கள் “தீண்டாப் பறையனுக வந்துட்டானுக” என்று அலறியபடியே ஓடி ஓளிந்தனர். தனுஷ்கோடியும் இதர சிறுவர்களும், பிராமணர்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருவது, கதவைத் தொட்டுப் பார்ப்பது, வீட்டிற்குள் நுழைந்து வெளியே ஓடி வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். விளைவு அய்யர் நிலப்பிரபுக்கள் கையில் புளியவிளாருடன் மாறி மாறி அடித்தனர். தனுஷ்கோடி கதறினார். இரத்தம் ஓட பொறுக்க முடியாத வேதனையுடன் தனுஷ்கோடி காங்கிரசு தலைவர் ராமு படையாச்சிடம் ஓடி வந்தார். தனது ரத்தக் காயங்களைக் காட்டினார். அந்த காங்கிரசு தலைவர் அளித்த பதில் தனுஷ்கோடியை இன்னும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. “நேத்து நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை நேத்தே குழிதோண்டி புதைச்சிருக்கணும். நீ செஞ்சது அக்ரமம்” என்றார்.” (நூல் பக்கம்: 50)
மூவர்ணக்கொடியின் நால் வர்ணவெறியை அனுபவமாகப் புரிந்து கொண்ட தனுஷ்கோடியின் எண்ணத்தை ஈர்த்தது சுயமரியாதை இயக்கம். ஆர்வத்தோடு பெரியார் பேச்சைக் கேட்க திருத்துறைப் பூண்டி போன அனுபவத்தை அவரே பின் வருமாறு விவரிக்கிறார், “அந்த ஊரில் சன்னாவூர் பக்கிரிசாமி பிள்ளை என்பவர் டீக்கடை வைத்திருந்தார். அவர் பெரியாரின் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி, குழந்தைகள் அனைவருமே, கறுப்பு உடைதான் அணிவார்கள். நான் பெரியார், அம்பேத்கார் பேட்ஜை அணிந்து கொண்டு அவரது கடைக்குள் சென்று டீ குடிக்க அமர்ந்தேன். தோற்றத்தில் இருந்தே நான் ஒரு அரிஜன் என்பது அவருக்குத் தெரிந்து விட்டது அவ்வளவுதான் . அங்கேயே என்னை புரட்டி எடுத்து விட்டார். “நான் பெரியார் கட்சிக்காரன்” என்று கத்தினேன். என்னடா பெரியார் கட்சி என்று கேட்டு அடித்தார்.” (நூல் பக்கம் 51)
இப்படி ‘அடிமேல் அடிவைத்த’ இயக்கங்களால் அடிமைத்தனத்தில் இருப்புக் கொள்ள முடியாமல் தவித்த தனுஷ்கோடியின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது கம்யூனிஸ்டு கட்சி இயக்கம். அதன் ஊழியர் தோழர் சீனிவாசராவ் சந்திப்பும் தனுஷ்கோடியை செங்கொடி இயக்கத்தின் செயல்வீரராக மாற்றியதை நிரல்படத் தொகுத்துரைக்கிறது நூலின் பகுதி.
“சவுக்கடியை நிறுத்து; சாணிப்பாலை நிறுத்து, மொட்டை மரக்காலில் கூலியை அளக்காதே” என்ற கம்யூனிஸ்டு கட்சியின் முழக்கங்களைத் தனதாக்கிக் கொண்ட தனுஷ்கோடி மெல்ல, மெல்ல மக்கள் போராட்டங்களைக் கட்டி எழுப்பும் தலைவராகப் பரிணமிப்பதை விளக்குவதோடு, இதே காலகட்டத்தில் தீண்டாமையை ஒழிப்பதில் விவசாய சங்கத்தினர் முன்னின்று நடத்திய போராட்டக் களங்களோடு, பின்னிப் பிணைந்து செல்கிறது தனுஷ்கோடியின் வாழ்க்கை. ஒரு கம்யூனிஸ்டு தன்னளவிலும் சமரசமற்ற போராளி என்பதை தனது சொந்த வாழ்விலும் அமுல்படுத்திய தனுஷ்கோடியின் திருமணம், மற்றும் தொடர் இயக்கங்களை வர்க்கம், சாதி பற்றிய உள்ள உறவுகளை, சொல்லிச் செல்கிறது நூலின் பிற பகுதிகள். எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும்.
வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது போலிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?
அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் நம்மால் சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் காணச் சகிக்க முடியாது. அசலை வெளிக் கொணர்ந்தால் நகல் நகைப்பிடமாகும்.
பி சீனிவாசராவ் நினைவு மண்டபம்
கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால், பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும், வெளியே கட்சி ஆபிசிலும் ரொக்கப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் குட்டு உடைந்து விடும். 48, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.
ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது. இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற் கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் போலிக் கம்யூனிஸ்டுகள்.
டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கும் ஜோதிபாசு எங்கே?
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல திராவிட இயக்கங்கள், தாழ்த்தப் பட்டோர் இயக்கங்களும் கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்க வரலாற்றை இருட்டடிப்பு செய்வதில் ஒத்திசைந்து நிற்கிறார்கள். காலத்தின் போக்கை மாற்றிய அந்த வரலாற்றை ஓங்கி ஒலித்தால், காலந்தோறும் அதிலிருந்து ஒதுங்கி நின்ற அவர்களது வரலாறு அம்பலப்பட்டுப் போகும் என்பதுதானே இவர்களின் இருட்டடிப்புக்குக் காரணம்!
“சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. நீலக்கொடி தராதது ஏன்?
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இதை வலது, இடது கம்யூனிஸ்டுகள் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எனினும் வரலாற்றை மாற்றியமைத்ததற்காக, வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் இந்த ‘ஆபத்தை’ விலை கொடுத்து வாங்கலாம்.
– சுடர்விழி
நூல் வெளியீடு : சவுத் விஷன்
நூல் ஆசிரியர் : என். இராமகிருஷ்ணன் விலை : ரூ 30 கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டம், 10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
________________________________________ புதிய கலாச்சாரம் ஜூலை 1998
________________________________________
நேற்று 24.02.2014, ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள். இதற்கு அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயா டி.வி.யும் பாதம் பணிந்து தவழ்ந்து வணங்கியதில் வியப்பில்லை. ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஜெயா பிறந்த நாளை பயபக்தியுடன் கொண்டாடியதும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதைக்கூட ‘நாசூ’க்காக இல்லாமல் பட்டவர்த்தனமாக சாமியாடியதைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனெனில் இந்த ஜால்ரா இசையின் சொந்தக்காரர்களைத்தான் நடுநிலைமை ஊடகங்களாக அப்பாவிகள் பலர் கருதுகின்றனர்.
ஜால்ரா இசையின் சொந்தக்காரர்களைத்தான் நடுநிலைமை ஊடகங்களாக அப்பாவிகள் பலர் கருதுகின்றனர்.
ராஜ் டி.வி. ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. தங்கத் தலைவி, தங்கத் தாரகை, தமிழகத்தை முன்னேற்ற வந்த விடிவெள்ளி, நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று எல்லாம் வர்ணித்து இரண்டு, மூன்று நிமிடத்திற்கு ஒரு படக்காட்சியை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். தமிழகத்தின் மக்கள் போராட்ட வரலாறு குறித்த காட்சிகளை ஆவணப்படுத்தவில்லை என்றாலும் ‘அம்மா’வின் சர்வ வியாபக காட்சிகளை ஊடகங்கள் பயபக்தியுடன் சேமித்து வருகின்றன. ஆனாலும் திரும்ப திரும்ப காக்கா கத்துவதையும் பிடிப்பதையும் காட்டுவதற்கு முதலில் அந்த ‘எடிட்டருக்கு’ முற்றும் துறந்த மனநிலை வேண்டும்.
தமிழ் இதழியலின் அறம் சார்ந்த ஏரியாவை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் தி இந்து தமிழ் பத்திரிகை நாலு பக்கங்களில் ஜெயலலிதாவை புகழ்வதற்கு என்றே தனி இணைப்பு வெளியிட்டது. இவர்கள் பத்திரிகை ஆரம்பித்த முதல் நாளன்றே இத்தகைய இணைப்பு போட்டு தங்களது அடிமைப் புத்தியை அம்மணமாக காட்டியவர்கள். நேற்றைய இதழில் அம்மா உணவகம் திறந்து சோறு போட்டார், சப்பாத்தி சுட்டார் என்று ஒரே ஜால்ரா ராகம். அதற்கு பிச்சையாக இல்லை எலும்புத் துண்டாக ஐந்து பக்க விளம்பரம் கிடைத்திருக்கிறது இந்துவுக்கு.
அன்றைய நாளில்தான் ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அ.தி.மு.க.வின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அந்த வெளியீட்டு விழாவில் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தை ஜெயலலிதா வெளியிட, பெற்றுக் கொண்டவர் தினத்தந்தி நிருபர். ‘‘தினத்தந்தி நிருபர் இதைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று விரும்பி அழைத்து அவரிடம் அதை அளித்துள்ளார். இதை அடுத்த நாள் தினத்தந்தி பெருமகிழ்ச்சியுடன் தன் பத்திரிகையிலேயே வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட கடவுளை பார்த்த பக்தனது மகிழ்ச்சிதான்.
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் விழா : ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தை ஜெயலலிதா வெளியிட, பெற்றுக் கொண்டவர் தினத்தந்தி நிருபர்.
தந்தியின் ஆளுங்கட்சி ஜால்ரா சத்தம் எப்போதும் பிரசித்திப் பெற்றதுதான். எப்போதும் அதை மூடி மறைக்காமல் வீரமாக சொம்பு தூக்குவதில் தினத்தந்தியை அடித்துக்கொள்ள முடியாது. அம்மணம்தான் எங்களது உடை, அடிமைத்தனம்தான் எங்களது நடை என்று தினத்தந்தி தனது இலட்சியத்தை எப்போதும் மறைப்பதில்லை.
இப்போதும் அப்படியே. பத்திரிகை நடத்திக்கொண்டு இப்படி ஒரு கட்சிக்கு சார்பாக நடந்துகொள்கிறோமே என்ற கூச்சவுணர்வு எதுவும் அவர்களுக்கு இல்லை. இதைக் கண்டிக்கும் துப்பு கருணாநிதிக்கும் இல்லை. அவர் ஆட்சி வந்தால் ஜால்ரா சத்தம் அந்தப் பக்கம் இடம் மாறிவிடும். முகப்புப் பக்கத்தில் ‘தினத்தந்தியின் ஒவ்வொரு அங்குலமும் தங்கநகை போல் அலங்கரிக்கப்படுகிறது‘ என்ற வாசகம் அவ்வப்போது இடம்பெறும். அதை, ‘தினத்தந்தியின் ஒவ்வொரு அங்குலமும் ஜங்ஜக் ஜால்ராவால் அலங்கரிக்கப்படுகிறது‘ என்று மாற்றலாம்.
ஓர் ஊடகத்திற்கு உரிய குறைந்தப்பட்ச சார்பின்மையோ அல்லது அவ்வாறு நடிக்க வேண்டிய அவசியமோ இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மிகவும் பச்சையாக ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசுகின்றனர். காவடி தூக்குகின்றனர். ஜெயலலிதாவை பாராட்டுவதற்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாத இவர்கள், அவரது மக்கள் விரோத நடவடிக்கைகளின்போது அருவருப்பான மௌனத்தை கடைபிடிக்கின்றனர். அல்லது அமுங்கிய குரலில், ‘அம்மா, நீங்கள் போய் இப்படி செய்யலாமா?’ என்று அடிமையின் உடல்மொழியில் நெளிந்து, குழைகிறார்கள். அதையும் கூட தினமலர் போன்ற அவாள் பத்திரிகைள்தான் கொஞ்சம் உரிமையுடன் செய்கின்றன. துக்ளக் சோவெல்லாம் தினத்தந்தியை விஞ்சி விட்டார்.
இப்போது ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். கூட்டணியில் காரத் கட்சியும் (சி.பி.எம்), தாபா கட்சியும் (சி.பி.ஐ.) இருக்கிறார்களே.. அவர்களுக்கு என்னக் கணக்கு என்றால், அவர்களுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டவுடன் அந்தத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஒதுங்கிக்கொள்வார் என்கிறார். எத்தனை மேட்டிமைத்தனமான பேச்சு!
இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும் என்று ‘நேர்மை’ மற்றும் ‘எளிமை’ புகழ் நல்லக்கண்ணுவே கூறிவிட்டார்.
இதுதான் கூட்டணி இலட்சணமா என்று ஓட்டுக் கட்சிகளின் ஜனநாயக தரத்திலாவது இதை கேள்விகேட்க எந்தப் பத்திரிகைக்கும் துப்பில்லை. சாதாரண நேரத்திலேயே அறிவித்த வேட்பாளரை எப்போது தூக்குவார் என்று ஜெயலலிதாவுக்கே தெரியாது. அறிவிக்கப்பட்டவர்களின் கிரைம் ரிக்கார்டை அறிவிக்கப்படாத போட்டி கும்பல்கள் வெளியிடும் போது எப்படியும் இரண்டு தலைகள் உருளும் என்பதே அ.தி.மு.க அடிமைகள் மற்றும் ஊடக அடிமைகளின் எதிர்பார்ப்பு. இப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கிரிமினல் என்று தெரியாமலே அறிவிக்கிறீர்களே, இதுதான் கட்சி நடத்தும் இலட்சணமா என்று எந்த பத்திரிகையாளனும் கேட்க மாட்டான்.
போலி கம்யூனிஸ்டுகளுக்கும், ‘அம்மா, நாங்களும் உங்க வண்டிலதான் தொங்கிக்கிட்டிருக்கோம். ரொம்ப நேரமா தொங்குறதால கை வலிக்குது. பார்த்து கொஞ்சம் பைசல் பண்ணுங்க’ என்று கேட்பதற்கான தைரியம் இல்லை. ஏற்கெனவே ஆளுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டதால் இப்போது எப்படியும் தலா ஒரு தொகுதி கொடுத்தாலே பெரிய விஷயம். பிரதமர் கனவில் வேறு இருப்பதால் ‘அந்த ரெண்டு பேரும் இரட்டை இலையிலேயே போட்டியிடுங்கள்‘ என்று கடைசி நேரத்தில் குண்டு போட்டால் அதை தாங்கும் நெஞ்சுரம் தா.பாவுக்கும், ஜி.ஆருக்கும் உண்டு. இன்றுதான் இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும் என்று ‘நேர்மை’ மற்றும் ‘எளிமை’ புகழ் நல்லக்கண்ணுவே கூறிவிட்டார்.
இனி இரண்டு போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் வேப்பிலை அடித்து சாமியாடதது மட்டும்தான் பாக்கி.
வன்னியப் போராளி பண்ருட்டி வேல்முருகன் : ‘கொஞ்ச நாளைக்கு முன்பு நாம் வேறுமாதிரி பேசினோமே’
இப்படியான நேரத்தில் ஜெயா டி.வி.யைப் பார்த்துத் தொலைத்தேன். ஜெயலலிதாவின் பல்வேறு ‘சாதனை’ முகங்களைப் பற்றி வீணை காயத்ரி, செ.கு.தமிழரசன், குமாரி சச்சு, பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியாம். விவாதம் என்றால் ஒருத்தராவது மாற்றுக் கருத்துடன் பேச வேண்டும். அவர்களுக்கு இடையே இருந்தது “யார் கூடுதலாக புரட்சித் தலைவியைப் புகழ்வது” என்ற போட்டி மட்டும்தான். ஒரு பக்கம் தலித் போராளி செ.கு.தமிழரசன், ‘‘அம்மா அனைத்து மதங்களையும், அனைத்து சாதிகளையும் சமமாகப் பாவிப்பவர். அவர் போல் இப்பூமியில் யாருண்டு?’’ என்று பொளந்து கட்டினார். மறுபக்கம் வன்னியப் போராளி பண்ருட்டி வேல்முருகனோ, ‘ஏழு பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டதன் மூலம் அம்மாவின் தாயுள்ளம் உலகத்திற்கே வெளிச்சமாகியிருக்கிறது. அவரை எதிர்த்தவர்களும் இன்று பாராட்டுகின்றனர்’ என்று அள்ளிவிட்டார். ‘கொஞ்ச நாளைக்கு முன்பு நாம் வேறுமாதிரி பேசினோமே’ என்று அவருக்கே ஞாபகம் வந்துவிட்டது போல… ‘‘அம்மாவை எதிர்த்தவர்களும் இன்று ஆதரிக்கின்றனர் என்பதற்கு நானே சாட்சி. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம்’’ என்றார். இனி சூடு, சொரணை, வெட்கம், மானம் அனைத்திற்கும் நாம் வேறு தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.
இதேக் கோமாளிக் கூத்துதான் கடந்த கருணாநிதி ஆட்சியிலும் நடந்தது. தொட்டதற்கு எல்லாம் பாராட்டு விழா நடத்தி மக்கள் பணத்தை சூறையாடினார்கள். கோடிகளில் சம்பளம் பெறும் பிரபல சினிமா நட்சத்திரங்களெல்லாம் ஆபாச ஆடையுடன் ரிகார்டு டான்ஸ் நடத்தி கருணாநிதியை மனம் குளிர பாராட்டினார்கள். வள்ளுவர் கோட்டத்தின் தூண்கள் கருணாநிதியின் புகழ்பாடும் கவிதைகளைக் கேட்டுக் கதறித் துடித்தன. கடைசியில் அந்தப் பாராட்டு விழாக்களே மக்களின் மனதில் நீங்கா வெறுப்பை விதைத்தன. கமல்ஹாசன் முதல் அஜித் முதல் சகலரையும் ஆள் வைத்து அழைத்துப் பாராட்டச் சொன்னார் கருணாநிதி.
ஆனால் ஜெயலலிதாவின் கதை வேறு. ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங் லீ, நோக்கு வர்மத்தால் கண்களை நோக்கியதும் மக்கள் ஓடிச் சென்று தாங்களாகவே அடிப்பார்கள், விழுவார்கள், சண்டையிடுவார்கள். அதுபோல, ஜெயலலிதா ஒரு நோக்கி நோக்கினாலே போதும் தமிழ் இந்து, தினத்தந்தி, விகடன், குமுதம் என்று சகலரும் ஜிங்ஜக் தட்டத் துவங்கி விடுவார்கள்.
அந்த வகையில் கருணாநிதியை விட ஜெயலலிதாதான் ஊடகங்களை பெண்டு ஒடிப்பதில் சாதனையாளர். என்ன இருந்தாலும் சர்ச் பார்க் கான்வென்டில் படித்தவரல்லவா!
20-ம் நூற்றாண்டில் இந்திய ஆளும் வர்க்கங்களால் முன்னிறுத்தப்பட்ட காந்தியம், 21-ம் நூற்றாண்டிலும் மராட்டியத்தைச் சேர்ந்த அண்ணா ஹசாரேவிற்காக அதே ஆளும் வர்க்கங்களால் இழுத்து வரப்பட்டது. ஆனாலும் காந்திக்கு இருந்த நீண்ட கால ‘ஸ்பான்சர்’ யோகம் கூட ஹசாரேவுக்கு இல்லை. இதிலிருந்தே காந்தியத்தின் ‘பவரை’ அறியலாம்.
வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.
இதன் சமீபத்திய காமடிதான் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.
காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு முதலாளிகள் பங்கு பெற்ற பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்கள்அம்பலமாகி நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் உட்பட ஆளும் அமைப்புகள் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக பலவீனமடைந்து கொண்டிருந்த நிலையில்தான் அண்ணா ஹசாரே வருகையை ‘நாடே’ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. அதன்படி 2011-ல் ஊழலை ஒழிப்பதற்கு ஜன்-லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் சீசன் – I, உண்ணாவிரதம்- சீசன் – II, உண்ணா விரதம் – சீசன் – III நடத்தி இந்திய, சர்வதேச ஊடகப் புகழ் பெற்ற அண்ணா ஹசாரே விரைவிலேயே தான் தானமாகப் பெற்ற அந்த புகழுக்கு கூட லாயக்கில்லை என்று அதே ஆளும் வர்க்கங்களால் தூக்கி எறியப்பட்டார்.
இருப்பினும் “ஓசியில் பிரபலமடைந்தவன் ஓய்ந்து கிடக்க மாட்டான்” என்ற விதிக்கேற்ப தனது காந்திய போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஆள்பவர்களுக்கான 17 அம்ச கொள்கைகள் குறித்து அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சியினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருக்கிறார் அண்ணா.
அண்ணா ஹசாரேவின் காந்திய போராட்டத்துக்கு புளூபிரின்ட் போட்டு நடத்திக் கொடுத்து, பின்னர் ஆம் ஆத்மி கட்சியாகி பிரிந்து போய் விட்ட கார்ப்பரேட் என்ஜிஓ தயாரிப்பான அரவிந்த் கேஜ்ரிவாலே கூட அந்தக் கடிதத்தை கடாசி விட்டார். வளர்த்த கடாவே பாராமுகமாக இருக்கும் போது மற்ற கட்சிகள் அவருக்கு பதில் போடாதது அதிர்ச்சியான விசயமல்ல. ஆனால், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் ராயும், ராஜ்ய சபை உறுப்பினர் கே.டி.சிங்கும் ராலேகான் சித்திக்கு நேரில் போய் அண்ணாவை சந்தித்திருக்கின்றனர். தீதி இந்த மாதிரி செல்லாத பொருட்கள் மீதேல்லாம் அரசியல் முதலீடு செய்வது ஒன்றும் புதிதல்ல. அதனால்தான் அவர் தீதி.
யாருமே சீண்டாத தனது ஆதரவை அண்ணா ஹசாரே மம்தாவுக்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.
தன் கடிதத்தை யாரும் கண்டு கொள்ளாததால் அறச்சீற்றம் அடைந்து அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கி விடலாமா, போராடினாலும் ஒரு பயல் சீந்த மாட்டான் என்று மோட்டு வளையைப் பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த அண்ணா, திரிணாமூல் கட்சி தனது அறிவுரையை கேட்க வந்து மனம் குளிர்ந்ததில், மராட்டியத்தில் மழையே வந்து விட்டதாம். பிறகென்ன, யாருமே சீண்டாத தனது ஆதரவை அண்ணா ஹசாரே மம்தாவுக்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.
அவரை டெல்லிக்குப் அழைத்துப் போன திரிணாமூல் கட்சியினர் கொல்கத்தாவிலிருந்து வந்து இறங்கிய மம்தா பானர்ஜியை, முகுல் ராயின் வீட்டில் சந்திக்க வைத்திருக்கின்றனர்.
1970-களில் காந்திய வழியில் ‘ஊழல் ஒழிப்பு’ போராட்டம் நடத்திய ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய கல்கத்தாவிற்கு வந்திருந்தார். ஜெபி கார் பானெட்டின் மீது நடனம் ஆடி தனது அரசியலை ஆரம்பித்தவர், அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த மம்தா பானர்ஜி. இப்படி ஊழலுக்கு ஆதரவாகவும், பாசிச இந்திராவுக்கு ஆதரவாகவும்தான் மம்தாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. இந்த வீரதீர காரியத்திற்கு பிறகு அவரை கட்சிக்காரர்கள் “தீதி” (அக்கா) என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர். இதெல்லாம் அண்ணா ஹசாரேவுக்கு வயசாகிவிட்டதால் மறந்திருக்கலாம் என்று அவரது பக்தர்கள் மனசாந்தி அடைந்து கொள்ளலாம்.
1990-களில் நரசிம்மராவ் அமைச்சரவையில் மனித வளத்துறை அமைச்சர், வாஜ்பாயியின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர், 2009 ஐ.மு.கூ-II அரசில் மீண்டும் ரயில்வே அமைச்சர் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசில் பங்கேற்று, இமேஜை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதுவும் கடைசி காலங்களில் பதவிகளை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தியவர் மம்தா பானர்ஜி. பொதுக் கூட்ட மேடையில் தனது தலைக்கு தானே சுருக்குப் போட்டுக் கொள்ளப் போவதாக மிரட்டுவது, நாடாளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் முகத்தில் விசிறி அடிப்பது, மாற்றுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டைக் காலரைப் பிடித்து கதறக் கதற வெளியில் இழுத்துக் கொண்டு தள்ளுவது போன்றவையெல்லாம் தீதியின் அதிரடி அரசியல் காட்சிகள்.
ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை.
ஆனால் இந்த அதிரடி காட்சிகளே வங்கத்து மக்களை திரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது. அந்த அளவுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளின் மீது அவர்களுக்கு வெறுப்பு. இத்தகைய வரலாற்று விபத்துதான் தீதியை உருவாக்கிய அரசியல் களம் மற்றும் காலம். அத்தகைய “தீதிய” போராட்டங்களின் ஒரு பகுதியாக 1997-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய திரிணாமூல் காங்கிரசை ஆரம்பித்தார் மம்தா. மேற்கு வங்கத்தில் 1977 முதல் ஆட்சியில் இருந்த ஜோதிபாசு-புத்ததேப் பட்டச்சார்யா அரசுகள் மக்களுக்கு எதிரான குற்றங்களின் சுமையில் மண்ணைக் கவ்விய போது 2011-ல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக ஆட்சி பீடத்தில் ஏறி அம்மாநிலத்தில் ‘ஜனநாய’கத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அந்த ஊட்டலில் கதற ஆரம்பித்த ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை.
கம்யூனிஸ்ட் என்று எழுதிய பேப்பரை ஒருவர் கிழித்துப் போட்டாலே, விருது வழங்கி கௌரவிக்க காத்திருக்கும் தேசிய, சர்வதேசிய ஊடகங்களில் போலிகளாக இருந்தாலும் இந்தியாவின் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளை வீழ்த்திய வீராங்கனையாக மம்தா பானர்ஜி கொண்டாடப்பட்டார். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை அவரை 2002-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. 200 ஆண்டுகள் கழித்து ஜெயமோகனது எழுத்துலக வாரிசுகள் “கம்யூனிசத்தை வீழ்த்திய தீதி” எனும் நாவல் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். ஆனால் அப்போது கொண்டாடுவதற்கு முதலாளித்துவம் இருக்காது என்பது வேறு விசயம்.
எளிமையான உடை, சிறிய வீட்டில் வசிப்பது, கார் கூட வைத்திருக்காதது போன்ற ‘காந்திய’ கொள்கைகளையும் பின்பற்றும் அவர், மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனது தீதிய பாணி ஜனநாயக ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னைப் பற்றிய கார்ட்டூன் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அம்பிகேஷ் மகாபத்ரா என்ற பேராசிரியரை அவரது கட்சிக்காரர்கள் அடித்து உதைத்து, பின்னர் போலீசால் கைது செய்ய வைத்து ஒரு நாள் லாக்-அப்பில் அடைத்ததை நியாயப்படுத்தியது, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் பெற்றுத் தருவதற்காக பொய் சொல்வதாக குற்றம் சாட்டியது, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டி வெளி நடப்பு செய்தது, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு சப்பைக்கட்டு கட்டியது, சாரதா சிட் நிதி நிறுவன மோசடியில் திரிணாமூல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் பிரமுகர்கள் அடித்த கொள்ளை என்று மூன்றாண்டுகளாக சாதனைகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து வருகிறார் மம்தா பானர்ஜி.
கேள்வி கேட்ட மாணவர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டி வெளி நடப்பு செய்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிர்க் கட்சிகளான “இடது” காரத் கட்சி மற்றும் “வலது” தா.பா கட்சியினர் வெறும் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடப் போகும் தமிழ்நாட்டு ஜெயலலிதாவின் பிரதமர் பதவி கனவுகளுக்கு அகில இந்திய அளவில் ஃபிளெக்ஸ் கட்டத் தயாராகி ஒப்புக் கொடுத்திருக்கும் நிலை தீதிக்கு கோபத்தை வரவழைத்திருக்கும் போல.
போலிகளின் போரை முறியடிக்க உறுதி கொண்ட மம்தா, 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திலும், அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களின் சில தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் ‘பெரிய’ கட்சியின் தலைவரான தான் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தேடி சமஷ்டி முன்னணியை அதிரடியாக அறிவித்திருக்கிறார். அந்த அணியில் சேருவதற்கு கொங்கு தேசிய முன்னேற்றக் கழகம், கார்த்திக் கட்சி போன்ற ஆளே இல்லாத குறுநில மன்னர்களது கட்சிகள் கூட ஆர்வம் காட்டாத நிலையில் அண்ணா ஹசாரேவின் ஆதரவுக்கு எத்தகைய மதிப்பு இருக்கும் என்பதை புரிந்து கொள்க. இதையும் சீசனுக்கு பிந்தைய கழிவு விலையில்தான் வாங்கியிருக்கிறார். அண்ணாவின் சந்தை நிலவரம் அதுதான் எனும்போது தீதி என்ன செய்ய முடியும்?
“மமதா பானர்ஜி முதலமைச்சர் ஆன பிறகும் சிறிய வீட்டிலேயே வாழ்கிறார், எளிய உணவுதான் சாப்பிடுகிறார், அவருக்கு சொந்தமாக வீடும் இல்லை காரும் இல்லை. நம் மத்தியில் இது போன்ற தலைவர்கள் தோன்றி நீண்ட காலம் ஆகிறது. இப்போது நாம் மமதா பானர்ஜியை கண்டு கொண்டிருக்கிறோம்” என்று மமதாவை பாராட்டி விட்டு, “தீதியும் என்னைப் போலவே கிராமங்களை ஆதரிக்கிறார். அவரது கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒன்றுதான்” என்று “தீதி”யவாதத்தில் ஒளிந்திருக்கும் காந்தியவாதத்தை கண்டு பிடித்து அறிவித்திருக்கிறார் அண்ணா ஹசாரே. இப்படியாக பிரபலத்திற்கு ஆசைப்படும் இரண்டு சந்தர்ப்பவாதங்கள் சங்கமித்திருக்கின்றன.
‘தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் வேலைகள் எவ்வளவு அவசியம்’ என்று ஆதிக்க சாதி மக்களுக்கு புரிய வைத்து, ‘மாட்டிறைச்சி சாப்பிடறதாலதான் தீண்டாமையை கடைப்பிடிக்கிறாங்க’ என்று தாழ்த்தப்பட்ட மக்களை சைவ உணவர்களாக்கி, சாதி பேதங்கள் நிரம்பிய ஆனால் பகைமை இல்லாத மாதிரி கிராமமாக ராலேகான் சித்தியை உருவாக்கியவர் அண்ணா. அதன் அடிநாதமான இந்துத்துவ உணர்வை தீதியிடம் கண்டிருக்கிறார். தான் போடும் உத்தரவுகளை பின்பற்றாதவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைப்பது போன்ற ராணுவ கறாருடனான ஜனநாய உணர்வையும் அவர் தீதியுடன் பகிர்ந்து கொள்கிறார்.
“தீதியை ஒரு தனிநபராகத்தான் ஆதரிக்கிறேன், அவரது கட்சியை ஆதரிக்கவில்லை. வரும் தேர்தலில் அவர் நிறுத்தும் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நான் நாடு முழுவதும் பயணிப்பேன்” என்கிறார் அண்ணா ஹசாரே.
அண்ணா ஹசாரேவின் 17 அம்ச கொள்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்யலாம்.
அரவிந்த் கேஜ்ரிவால் தனது கடிதத்துக்கு பதில் போடாததால் அவரை ஆதரிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அண்ணா ஹசாரே கூறியிருக்கிறார். ஒருவேளை பதில் போட்டாலும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவும் கிடையாது, கேசரியும் கிடையாது என்பதுதான் நிஜம். “தனது 17 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்துக்கு வேறு எந்தக் கட்சியும் பதில் போடாத நிலையில், அது குறித்து தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்திய மமதா பானர்ஜி நாட்டின் பிரதமர் ஆனால், அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தனது உண்ணாவிரத போராட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ள, “நாலு ஊடகங்களில் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களில் கவர் ஆக வேண்டும்” என்ற தனது வாழ்நாள் இலட்சியத்தை சாதித்து விட்ட அண்ணா, அடுத்த கட்டமாக தன்னை ஒரு பொருட்டாக மதித்து பதில் போட்ட திரிணாமூல் காங்கிரசின் ஆன்மீக வழிகாட்டியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். மராட்டிய ஆன்மீகமும், வங்கத்து குழாயடிச் சண்டையும் இணைந்து செய்யப் போகும் இந்த மகத்தான அரசியலை காவியமாக்க கம்பனில்லையே என்றொரு ஏக்கம் வரத்தான் செய்கிறது.
ஆனாலும், அண்ணா ஹசாரேதான் தன்னை சந்திக்க விரும்பியதாகவும் தாங்கள் அவரை நாடவில்லை என்றும் மம்தா பானர்ஜியும் அவரது கட்சியினரும் தெளிவாக சொல்லுகின்றனர். “அண்ணாவின் 17 அம்சக் கொள்கைகளில் ஓரிரண்டைத் தவிர மற்ற அனைத்தையும் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம். நிலம் கைப்பற்றல் போன்ற அம்சங்களைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்று கூறி அந்த கிராமத்து பெருசின் மனதில் சப்பணம் போட்டு உட்கார்ந்து விட்டார் மம்தா. அந்த 17 அம்ச கொள்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்யலாம்.
இதனால் பெருசினால் மம்தாவுக்கு பயனில்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்யாதீர்கள். காங்கிரஸ், பாஜக இரண்டுமே பெரும்பான்மைக்கு அருகில் வராது என்றும், மூன்றாம் அணி உள்ளிட்ட மற்ற கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்றெல்லாம் கொளுத்திப் போடும் போது அதற்கு ஜெயா, முலாயம் என்று போட்டியெல்லாம் இருக்கும் போது தீதிக்கும் தூக்கம் வராது என்ற நிலையில்தான் அண்ணா அவருக்கு தேவைப்படுகிறார்.
வடகிழக்கு இந்தியாவில் தம் சொந்த செல்வாக்கிலும் நாட்டின் மத்திய, தெற்கு பகுதிகளில் அண்ணா ஹசாரேவின் ஆலோசனையின்படியும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். எப்படியும் பிரதமர் போட்டியில் தானும் ஒரு குதிரையாகவாவது நிறுத்தப்படுவது அவசியம் என்று அவர் நினைக்க, அவரது தேரோட்டியாக அண்ணா அவதிரித்திருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணியிலோ திரிணாமூல் கட்சி சேருமா என்று கேட்கப்பட்ட போது, “இப்போதெல்லாம் பிரீ-போல் (தேர்தலுக்கு முந்தைய) கூட்டணி கிடையாது, போஸ்ட் போல் (தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி) கூட்டணிதான்” என்று பதிலளித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. தனியாக நின்று சில 10 இடங்களை பிடித்து விட்டால், தேர்தலுக்குப் பிந்தைய குதிரை பேரங்களில் தேவகவுடாவைப் போலவோ, குஜ்ராலைப் போலவோ பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட மாட்டோமா என்று தமிழ்நாட்டின் அம்மாவிலிருந்து வங்கத்து தீதி வரை ஆசை பிடித்தாட்டுகிறது.
இவ்வாறாக, அண்ணாவின் காந்திய போராட்டமும், மம்தாவின் தீதிய போராட்டமும் தத்தமது அடுத்த வளர்ச்சி கட்டத்தில் ஒன்றோடொன்று கை கோர்த்திருக்கின்றன. ஆனால், 2019 தேர்தலில் தானே 100 சுயேச்சை வேட்பாளர்களை நாடு முழுவதும் நிறுத்தப் போவதாக அண்ணா ஹசாரே கூறியிருப்பதிலிருந்து இந்த தேர்தல் கூட்டணி அதற்கான அவரது ஒத்திகை என்று அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி பரஸ்பரம் இரண்டு தரப்பிலும் உடனடி மற்றும் தொலை நோக்குத் திட்டங்களெல்லாம் உண்டு. படித்து இரசிப்பதற்குத்தான் நமக்கு நேரமில்லை.
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அவருக்கே தெரியாமல் அடங்கியிருந்த உள்ளார்ந்த அர்த்தங்களை தனது அக ஒளியால் கண்டறிந்து பதிவுகள் எழுதிக் குவித்தவர் ஜெயமோகன்.
இந்நிலையில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து தேசியக் கொடி ஆட்டியவர்கள், பானி பூரி விற்றவர்கள், நான் அண்ணா என்று தொப்பி போட்டவர்கள் இவர்கள் எல்லோரையும் விட அந்த போராட்டத்துக்குள் ஒரு சித்தாந்த அடிப்படையை கண்டு பிடித்துச் சொன்ன ஜெயமோகனுக்குத்தான் ஒரு வரலாற்றுப் பொறுப்பு இருக்கிறது.
அண்ணா ஹசாரேவை 1990-களிலேயே ராலேகான் சித்தியில் தான் போய் பார்த்திருப்பதாகவும், ஊழலுக்கு எதிரான அவரது காந்திய போராட்டம் என்பது “மெல்ல மெல்ல சமூகப் பிரக்ஞையில் வேரூன்றி கருத்தியல் மாற்றத்தை உருவாக்கி அதன்மூலம் வெற்றியை நோக்கிச் செல்வது” என்றும் “காந்தியப்போராட்டத்தில் பெரும் சோர்வுக்காலங்கள் உண்டு”, “காந்தியப்போராட்டம் என்பது எப்போதும் ஒரு சமரசத்திலேயே முடியும்”, “காந்தியத் தரப்பு அடைந்தவற்றை உறுதிப்படுத்திக்கொண்டு உடனடியாக அடுத்த கட்டத்துக்குச் செல்லும், அடைந்தவற்றை மேம்படுத்திக் கொள்ளும்.” என்றும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அவருக்கே தெரியாமல் அடங்கியிருந்த உள்ளார்ந்த அர்த்தங்களை தனது அக ஒளியால் கண்டறிந்து பதிவுகள் எழுதிக் குவித்தவர் ஜெயமோகன்.
அந்த வழியில் அண்ணாவின் காந்திய போராட்டம் மம்தாவின் திரிணமூல் காங்கிரசை நோக்கி அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கும் இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கொள்கைதான் தன் கொள்கை என்று அண்ணா ஹசாரே அறிவித்திருக்கும் நிலையில் அண்ணா ஹசாரே-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு ஆதரவாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினருடன் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதுதான் அறமாக இருக்கும். இல்லை என்றால் ‘ஒரு மாபெரும் வரலாற்று இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து சுக்கு காபி குடித்தவாறு மகாபாரதம் எழுதிக்கொண்டிருப்பதுதான் ஒரு எழுத்தாளனின் அறமா’ என்ற கேளவிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
அண்ணா ஹசாரே பற்றிய ஜெமோவின் பதிவுகளை தொகுத்து புத்தகம் போட்டு, அதற்கு பாட்காஸ்ட், விவாத விளம்பரம் எல்லாம் செய்த கிழக்கு பதிப்பக பத்ரியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறப்பணிக்கு தோள் கொடுப்பார் என்று நம்பலாம். அண்ணா ஹசரே புத்தகத்தை அவர் மலிவுப் பதிப்பில் பத்து ரூபாய் போட்ட மாதிரி, தீதி – தாத்தா கூட்டணி புத்தகத்தை ரெண்டு ரூபாய்க்கு போடுவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த புத்தக கண்காட்சியில் இதுதான் பெஸ்ட் செல்லராக இருக்கும்.
மராட்டிய அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு, வங்கத்து தீதியின் போராட்ட குணம், பார்வதிபுரத்து ஜெயமோகனது அறம், மந்தைவெளி பத்ரியின் புத்தகக் கடை எல்லாம் சேர்ந்து எழுப்பும் அந்த மகோன்னதக் காட்சியை நினைக்கும் போது……………………..!
குழந்தைக்காக காத்திருந்த ஒரு பொண்ணு தான் உண்டான விசயத்த சந்தோசமா மாமியார்கிட்ட சொன்னா. மாமியாருக்கு அளவில்லாத மகிழ்ச்சிதான், டாக்டர் குழந்தை பிறக்கும் தேதி குறிக்கற வரைக்கும்.
மருத்துவ பரிசோதனைக்கு காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்
“குழந்தை ஆரோக்கியமா இருக்கு. ஸ்கேன் ரிப்போட்ல எந்த பிரச்சனையும் இல்ல. ஜூலை மாசம் குழந்தை பிறக்கும். மருமகள நல்லா பாத்துக்கங்க பழம், பச்சை காய்கறின்னு சத்தானதா பாத்து கொடுங்க. அப்பதான், உங்க பேரப்பிள்ள ஆரோக்கியமா வளரும். எந்த பிரச்சனையும் இல்ல. தாயும் பிள்ளையும் நல்லாருக்காங்க, சந்தோசமா போய்ட்டு வாங்க” என்றார் டாக்டர்.
“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க. கண்ணடி பட்டு படுத்துப் போன ஏங்குடும்பம் இப்பதான் தலையெடுக்குது. இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்.” என்றார். என்னமோ சொசைட்டி பேங்குல அடமானம் வைச்ச நகையை எடுக்கணும்ங்கிற மாதிரி அவங்க சொன்னதெல்லாம் டாக்டரம்மாவுக்கு அதிர்ச்சியா இருக்காது. இப்படித்தானே பலரையும் பாக்குறாங்க.
வெலவெலத்துப் போன அந்த மருமகப் பெண் கலங்கிய கண்களுடன் தன்னையும் அறியாமல் குழந்தையை தடவுவது போல் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.
மருமகளுக்கு முன்னாடி அந்த அம்மாவோட பொண்ணுதான் முழுகாம இருந்தது. மகளுக்கு சித்திரை மாசம் குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மகள், மருமகள்ங்கற பேதம் இல்லாம மகளுக்கும் முன்கூட்டியே ஆப்ரேசன் செஞ்சு குழதைய எடுத்துறனுங்கற அதே மூடத்தனமான நீதியதான் முன்வச்சாங்க. மேலும் “மாசமாக இருக்கும் நீங்க ரெண்டு பேரும் (மகளும் மருமகளும்) ஒரே வீட்டில் இருக்க கூடாது ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கக் கூடாது. பெரியவங்க சாஸ்திரபடிதான் சொல்லி வச்சுருங்காங்க. மீறினா ஊனமா கொழந்தப் பொறக்கும்”ன்னு சொல்லி பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பது தெரிந்தும் மருமகளை அவர் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நிலைமை தெரிஞ்சாலும் சம்பிரதாயங்களை மீற அவருக்கு மனசில்லை.
அம்மா வீட்டில் இருந்தாலும் ஈருயிருக்காரியான அவளை இந்த சம்பிரதாயங்கள் விட்டுவைக்கவில்லை. மசக்கயால சோர்ந்து சோர்ந்து படுக்கணும் போல இருந்தாலும் அம்மா வீட்டுல இருக்க நம்பள, புருஷன் வீட்ட சேந்தவங்க அன்பா பார்க்க வாராங்கங்கற சந்தோசத்துல சோர்வையும் மீறி, அவங்கள உபசரிக்க காரக்குழம்பு வச்சு காய், ரசம்னு சமையல் செஞ்சுருந்தா அந்த பொண்ணு. வந்தவங்களோ “மொதமொதன்னு உங்க வீட்டுக்கு வந்து காரக்கொழம்பு சாப்புடக் கூடாது, உறவுக்குள்ள பகை வந்துரும், சாம்பார்தான் சாப்பிடனும் சாம்பார் செய்யி”ன்னு சொல்லிட்டாங்க. மூச்சு வாங்கறதையும் பொருட்படுத்தாம ஆசாசையா சமைச்சவளுக்கு எதுத்துக் கேக்குற துணிவில்லாமல் சாஸ்த்திரத்து மேலயும் சாம்பார் மேலயும் பயங்கரமா கோபப்பட்டாள்.
மசக்கக்காரிக்கு நாக்குக்கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் சமைச்சுப் போடலேன்னா கூட பரவாயில்லை. ஆனா அவள இப்படி கஷ்டப்படுத்தி சாம்பாரை தின்னணும்ணு சாதிச்ச அந்த சனங்களை என்ன செய்யறது?
ஒருநாள் நான் அந்த பொண்ண பாத்துட்டு வரலான்னு போயிருந்தேன். எல்லோரும் சாப்பிட்டு முடிச்சு சந்தோசமா சிரிச்சுப் பேசிட்டிருந்த ஒரு வேளையில “உனக்கு பொம்பளப் புள்ள வேணுமா ஆம்பளப்புள்ள வேணுமா, பொம்பளப் புள்ளயே பெத்துக்க அதுதான் நாளைக்கி நமக்கு முடியாதப்ப நம்ம கைவேலய வாங்கி செய்யும், நமக்கு உதவியா இருக்கும். பசங்க ஒரடி எட்டிதான் இருப்பாங்க”ன்னு விளையாட்டா சொன்னேன்.
அப்ப அந்தப் பெண்ணோட மாமியாரும் அங்க இருந்தாங்க. “எங்குடும்பத்துல யாரும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யல, நல்லதுதான் செஞ்சுருக்கோம். காச காசுன்னு பாக்காம வாரம் ஐநூறுன்னும் ஆயிரம்னும் செலவுபண்ணி எத்தன கோயிலுக்கு பூஜபண்றேன்னு தெரியுமா? என்ன காக்குற மாரியாத்தா அந்த செரமத்தெல்லாம் தரமாட்டா. எம்மருமகளுக்கு ஆம்பளப்புள்ளதான் பொறக்குன்னு” சொன்னாங்க அந்த மாமியாரம்மா. பெண் குழந்தை பொறந்தா ‘பாவச்செயல்’ன்னு சொல்றளவுக்கு அறிவை மழுங்கடிக்கும் ஆணாதிக்கமும் அதன் சமுக அமைப்பையும் கண்டு ஒரு நிமிசம் என் உச்சி மயிர் வழியாய் உயிரை பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்துச்சு. பெண் இனத்தையே கேவலப் படுத்திக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாம சாதாரணமா சொன்னாங்க.
ஆம்பளப் புள்ளையை பெத்துக்குறது புண்ணியம், பொம்பளப் பிள்ளையை பெத்தால் பாவம்னு நினைக்கிறவங்க மத்தியில மருமகளோ, அக்காவோ, பாட்டியோ இன்னும் அத்தனை பொம்பளங்களும் எப்படி நிம்மதியா வாழ முடியும் சொல்லுங்க?
வயித்துல புள்ளைய சுமக்கறப் பொண்ணுக்கு வாயிக்கி ருசியா சமைச்சுப்போட்டு மனசுக்கு இதமா பேசி பழகி அனுசரணையா நடந்துக்கணும். அப்பதான் அவளும், அவ வயித்துல வளர்ற பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கும். வயித்துல புள்ளய சொமக்குற சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் பயங்கரமான மனக் கொழப்பம், குழந்தை பிறக்கற வரைக்கும் வந்துகிட்டே இருக்கும். கர்ப்பமுன்னு முடிவான பிறகு எந்த நேரத்துலயும் கலஞ்சுருமோன்ற பயத்தால பாத்ரூம் வந்தாக்கூட போகப் பயம்மாருக்கும். எந்த கொறையும் இல்லாம நல்ல கைகாலோட பொறக்கணுமேங்கற எண்ணமும் எப்பவும் கூட இருக்கும். வயிறு பெருசாக பெருசாக பிரசவ பயம் ஆள தொலச்செடுத்துரும். எந்த வேலையையும் மனசு ஒட்டி செய்ய முடியாது.
இது உடலோட அதுவும் தாய்மையோட பிரச்சனைங்கன்னு புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணலாம். ஆனா சமூகத்தோட சம்ரதாயப் பிரச்சினைங்க ஒரு புள்ளத்தாச்சிய இப்புடிப் போட்டு வாட்டு வைதைக்கும்ணு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிஜம்.
அஞ்சாவது மாசம் அழைப்பு, ஏழாவது மாசம் பூ முடிப்பு, ஒம்பதாம் மாசம் வளைகாப்புன்னும், விதவிதமா சாப்பாடு தேடித் தேடி செய்றாங்க. தேனாமிர்தமே கொடுத்தாலும் அதவிட வயுத்து புள்ளக்காரிக்கி முக்கியமான தேவை, சுத்தியிருக்கும் குடும்பத்த சேந்தவங்களோட அன்பான பேச்சும், நாங்க இருக்குறோம் கவலப்படாத தைரியமா இரு என்ற நம்பிக்கையும் தான். அவளுக்கு ஆரோக்கியமான முறையில குழந்தைப் பெத்துக்குற தைரியத்தக் கொடுக்குங்கறத மறந்துர்ராங்க.
குழந்தையை சுமக்கும் பெண்ணின் மனநிலையை புரிஞ்சுக்காம ஏதோ இந்த ஒரு குடும்பத்துல மட்டும்தான் இப்படி பேசுறதில்ல. மதமும், சம்பிரதாயமும் தூணுலயும் இருக்கும், துரும்புலயும் இருக்கும். ‘தொப்புள் கொடி சுத்தி பொறந்தா மாமனுக்கு ஆகாது, வெள்ளிக் கிழம பொண்ணு பொறந்தா லட்சுமி கடாட்சம். வியாழக் கிழமை ஆம்பளப் பிள்ள பொறந்தா தங்காது தவறிடும், அதனால தவுடு வாங்கிக்கிட்டு தத்து கொடுத்துட்டு ஒரு நாள் இரவு முடிஞ்சதும் தூக்கிக்கனும். செவ்வாக் கிழம பொறந்த செவ்வாதோசம் இருக்கும்’ன்னும் கிராமத்துல பெரும்பாலான வீடுகள்ள இதுபோல பல காரணங்கள் சொல்லி சொல்லி கடுப்பேத்துவாங்க.
புள்ளத்தாச்சி பொண்ணுகள இப்படி நிம்மதி இல்லாம செய்றதால வயித்துல உள்ள குழந்தைக்கு பாதிப்பையும் உண்டு பண்ணிருவாங்க, பிரசவத்துக்கும் செரமத்த ஏற்படுத்திருவாங்க. இந்த சடங்கும் சம்பிரதாயமும் வயித்துல வளர்ற கருவைக் கூட விட்டு வைக்கிறதில்லை. கொழந்த பிறக்கும் போது யாராவது தற்செயலா இறந்து போனா முழு ஊரும் உறவும் பேசிப் பேசியே கொல்லும்.
இவங்களப் போல உக்கார்ரதுக்கும் படுக்குறக்கும்ன்னு தொட்டதுக்கும் சாங்கியம் பாக்கும் மனிதர்களின் வாழ்க்கை என்னைக்குமே முன்னோக்கி செல்லாது. ‘ஆண்டவன நெனைக்காத நாளே கெடையாது, உப்பு புளி வாங்கணுன்னா கூட நல்ல நாள், நல்ல நேரம் பாத்துதான் வாங்குவேன் ஆனா என் விசயத்துல கண்ணு தொறந்து பாக்கமாட்டேங்குறான் அந்த கடவுள்’ என்பார்கள். வாழ்க்கை ஓட்டத்தில் என்னனென்ன பிரச்சனை வரும் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்திருந்தாலும் பிற்போக்குத் தனமான மூட பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூளையை சிந்திக்க விடாம சுருக்கிக் கொள்கிறார்கள்.
பிள்ளைப்பேறு காலம்றது மறுஜென்மம் என்பதும் கருவுற்றவளை கவனிப்பதின் அவசியத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனும் அடங்கியுள்ளது என்பதும் அந்த அம்மாவுக்கு மட்டுமில்ல பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்சுருக்கும். தெரிஞ்சாலும் மனுசனோட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காம சாஸ்த்திரம் சம்பரதாயம்னு இல்லாத ஒண்ணுக்கு மல்லு கட்டிகிட்டு மூடத்தனத்த கொள்கையா கடைபிடிக்குறாங்க. சாமின்னும், மந்திர தந்திரம்னும் காலம் காலமா மூழ்கி கெடக்கறதால திட்டமிட்டுத்தான் இதுபோல மத்தவங்க மனசு புண்படும்படி பேச வேண்டிய அவசியமில்லை. அவங்கள அறியாமலே பேசுற பேச்சுல செய்ற செயல்லன்னு மூடநம்பிக்கையும் ஒரு அங்கமா அனிச்சை செயலா கலந்துருக்கு.
பிரவசம் இப்ப ரொம்பவே முன்னேறியிருக்கு. தாயையும், சேயையும் காப்பாத்துறதுல மருத்துவம் எவ்வளவோ வளர்ந்துருச்சு. அவரசம்னா அறுவை சிகிச்சை செஞ்சு கூட இரண்டு பேரையும் காப்பாத்தலாம். ஆனா மக்கள்கிட்ட இருக்கும் இந்த சம்பிரதாய நோயையை அழிக்கிறதுக்கு மருத்துவம் உதவாது. பகுத்தறிவை வளர்க்க கொஞ்சம் முரட்டு வைத்தியம்தான் பண்ணனும் போல.
இஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மன்னர் சவுத் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிக்கும் சவுதி பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. (படம் : நன்றி RT.com)
இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்து தாங்கள் உடனடியாக மருத்துவர்களை உள்ளே அனுமதித்து விட்டதாக கூறுகிறது. அதாவது, 12.35 மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், தாங்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக 12.45 -மணிக்கு உள்ளே அனுமதித்துவிட்டதாக மழுப்புகிறது. ஆனால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவல்கள், நிர்வாகத்தின் மேற்கண்ட தகவல் பொய் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.
அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை அசீசா யூசூஃப் மருத்துவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிர்வாகத்தை கண்டித்து “கலாச்சாரம் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிராமல் வேகமாக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகம் நமக்கு தேவையாக இருக்கிறது” என்கிறார். ஆண்களை உள்ளே அனுமதித்து சட்டத்தை மீறினால் தங்களுக்கு பிரச்சனை நேரிடலாம் என்று கல்லூரி முதல்வர் பயந்திருக்கிறார். இதனாலேயே அவர்கள் ஆம்புலன்சை அனுமதிப்பதற்கு காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆபத்து நேரத்திலும் மருத்துவர்களை அனுமதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும், அதன் இசுலாமிய அடிப்படைவாத சட்டங்களும் தான் இங்கு முதன்மையான குற்றவாளி. சவுதியின் ஷரியத் சட்டங்களுக்கு பயந்துதான் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒருக்கால் ஆண் மருத்துவர்களை அனுமதித்திருந்தால் நிர்வாக தரப்பில் உள்ளவர்களுக்கே தலை வெட்டப்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் போது யார் பொறுப்பேற்பார்கள்?
இஸ்லாமிய வகாபிய அடிப்படைவாத நாடான சவுதியில் ஆண்களும் பெண்களும் பொதுவில் கலந்து பழகுவது கறாராக தடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கும் இடங்களும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக உணவு விடுதிகளில் இவை மிகக் கறாராக பின்பற்றப்படுகின்றன. ஏனெனில் உணவு உட்கொள்ளும் போது புர்காவால் முகத்தை மறைக்கமுடியாததே அதற்கு காரணம். மேலும், ஆண் துணையில்லாமல் பெண்கள் உணவுவிடுதியினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கு அங்கே இருக்கும் மேற்கத்திய நிறுவனங்கள் கூட விதிவிலக்கல்ல. அவர்களும் ஜனநாயகம், சமத்துவத்தை விட வியாபாரமே மேல் என்பதால் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய பெண்ணியவாதிகளால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரித்து வைக்கும் சட்டம்தான் அமீனா பவஷீரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து டிவிட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபவர்கள் கூட எச்சரிக்கையாக ஒரு அச்சத்துடன் பேசுவதை காண முடிகிறது. பெண்கள் மட்டும் பங்குபெறும் ஆம்புலன்ஸ் சேவை, பல்கலைகழகத்தினுள்ளேயே போதிய மருத்துவ வசதிகளை வைத்திருப்பது என்றுதான் அவர்கள் முன் வைக்கும் தீர்வுகள் நீளுகின்றன. இசுலாமிய அடைப்பைவாதமான வகாபியிச சட்டங்களை எதிர்த்து எதுவும் பேசப்படுவதில்லை. காட்டுமிராண்டி நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு அதற்கு பழுதில்லாமல் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும்?
மெக்காவில் புர்கா அணிந்த பெண் (கோப்புப் படம்)
சவுதியில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டு மெக்காவில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது சிறுமிகள் இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து உடல் முழுவதையும் மறைக்காமல் இருந்ததாகக் கூறி மதக்காவலர்கள் எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியே தப்பிச் செல்வதை தடுத்தனர். மீட்புப் பணி ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண் மீட்பு ஊழியர்கள் பெண்களை தொட்டு காப்பாற்றுவது தவறு என்று அவர்களையும் தடுத்திருக்கின்றனர்.
“முக்கிய வாசல் வழியாக தப்பி ஓடி வந்த பெண்களை, மதக் காவலர்கள் இன்னொரு வாசல் வழியாக திருப்பி உள்ளே செல்ல கட்டாயப்படுத்தினர். மீட்புப் பணியில் எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எங்களை தாக்கி விலக்கிக் கொண்டிருந்தனர்” என்று மீட்புப் பணி ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் 15 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, கண்துடைப்பாக மதகுருமார்கள் மற்றும் மதவழிகாட்டுதல் துறையின் கீழ் இருந்த பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால், நாடெங்கிலும் பெண்களுக்கெதிரான இத்தகைய பிற்போக்கு மதவாத சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை.
அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆகவே அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதாக சொல்லி மனித உயிர்களை எடுக்கும் காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்டுள்ளன. வரலாற்றில் இவற்றை எதிர்த்து நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கேற்ப இவை கணிசமாக குறைந்துள்ளன. எனினும் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத வளைகுடா நாடுகளில் இவை இன்றும் பெருமளவு தொடர்கின்றன.
பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் வகாபியிசத்தின் தமிழக பங்காளிகளும் சவுதி எஜமானர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை தோழர் பாத்திமா விவகாரத்தில் பார்த்தோம். தோழர் பாத்திமா போன்றவர்கள் இந்த இஸ்லாமிய மதவெறி கும்பலை முறியடிக்க முடிவதற்கு காரணம் புரட்சிகர அமைப்புகளில் பெற்ற ஜனநாயக உணர்வாகும். அப்படி புரட்சிகர ஜனநாயக கருத்துக்கள் சவுதியில் நுழைந்தால் தான் இந்த வகாபிய காட்டுமிராண்டி சட்டங்களை மாற்ற முடியும்.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 3
சபரிதாம் ஆசிரமத்தில் அசீமானந்தா
டாங் மாவட்டம் குஜராத்தின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாவட்டம். மாநிலத்தின் தென்கோடியில் அமைந்த அந்த மாவட்டம் கிழக்கிலும், மேற்கிலும் மகாராஷ்டிர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்; 93 சதவீதம் பேர் பழங்குடி மக்கள். இந்தியாவின் மற்ற பழங்குடி பகுதிகளைப் போலவே இயற்கை வளங்களுக்காகவும், சித்தாந்தந்தங்களுக்காகவும் தனது அளவுக்கு மிஞ்சிய போர்களையும், போராட்டங்களையும் டாங்ஸ் என்று அழைக்கப்படும் டாங் மாவட்டம் சந்தித்துள்ளது.
1842-ல் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகள் அந்தப் பகுதியின் பழங்குடி மன்னர்களை தோற்கடித்து டாங்ஸின் தேக்கு மர காட்டு வளங்களை கொள்ளை அடிக்கும் உரிமைகளை பெற்றனர். இன்றும் அம்மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு காடுகளால் மூடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந்தப் பகுதியில் கிறித்துவ மதபோதகர்களைத் தவிர எல்லா சமூக சேவகர்களையும், அரசியல் செயல்பாட்டாளர்களையும் தடை செய்தனர். அத்தகைய மத, சமூக நடவடிக்கைகள் பழங்குடி மக்களுக்கு நிலத்தின் மீதான உரிமை உணர்வை வளர்த்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். 1905-ம் ஆண்டு மாவட்டத் தலைநகரான ஆஹ்வாவில் முதல் மிஷன் பள்ளி உருவாக்கப்பட்டது. அப்போது முதலே பல பிரிவுகளைச் சேர்ந்த கிறித்துவ மத போதகர்கள் இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தனர். கிறித்துவர்கள் டாங்ஸை “பஸ்சிம் கா நாகாலாந்து” – மேற்கின் நாகாலாந்து என்று அழைத்து வந்தனர். “வடகிழக்கைப் போன்ற பெரிய அச்சுறுத்தல் இங்கும் இருந்தது” என்கிறார் அசீமானந்தா.
அசீமானந்தா வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சார்பாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது 1996-ம் ஆண்டு முதன் முறையாக டாங்ஸ் போனார். இந்துத்துவா அமைப்பின் தலைவர்கள், அவரது வெற்றிகரமான மத மாற்ற செயல்பாடுகளை நாடு முழுவதிலும் உள்ள பழங்குடி பிரதேசங்களுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஷ்ரத்தா ஜாக்ரன் விபாக் (மத நம்பிக்கையை எழுப்பும் பிரிவு) ஒன்றை ஏற்படுத்தி அவரை அதற்கு தலைவராக நியமித்தார்கள். ஆனால், தான் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்தால் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அசீமானந்தா கருதினார். அந்த வகையில் டாங்ஸ் அவரை பெரிதும் ஈர்த்தது. “டாங்சுக்கு எனது தனிச்சிறப்பான பணி தேவைப்பட்டது. பழங்குடி மக்களிடையே தங்கி வேலை செய்வதுதான் எனக்கு விருப்பமானது. ஒருவர் தனக்கு மனத் திருப்தி கொடுக்கும் வேலையைத்தான் எப்போதும் செய்ய வேண்டும். வடகிழக்கை போல் இல்லாமல், டாங்சை கிறித்துவர்களிடமிருந்து மீட்பதற்கு இன்னும் வாய்ப்பு இருந்தது” என்கிறார் அவர்.
இருந்தாலும் முதன்மையாகவும், முக்கியமாகவும், அசீமானந்தா சங்க பரிவாரத்துக்கு விசுவாசமானவர். குஜராத்தின் காடுகளில் தங்கிக் கொண்டு தேசிய பொறுப்புகளை அவரால் கவனித்துக் கொள்ள முடியுமா என்று சங்க பரிவார தலைவர்கள் கவலைப்பட்டனர். எனவே, அசீமானந்தாவால் தான் டாங்சில் தங்கி செயல்படுவதற்கான அனுமதியை 1998 வரை பெற முடியவில்லை. ஆனால், அதற்கான அனுமதி பெற்று காட்டினுள் குடியேறிய ஒரு ஆண்டுக்குள், தலைவர்களின் கவலையை பொய்ப்பிக்கும் விதமாக தனது மதபோதக அணுகுமுறையையும், வன்முறை பிரச்சாரத்தையும் இணைத்து நாடு முழுவதும் உள்ள சங்க பரிவார தொண்டர்களை அணி திரட்டுவதை சாதித்துக் காட்டினார். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அமைப்புச் செயலாளரும் கேரளா ஆர்.எஸ்.எஸ் தலைவருமான ராவ், அசீமானந்தாவின் பணி “மொத்த தேசத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு” என்று பாரட்டியதை அசீமானந்தா நினைவு கூர்கிறார்.
கிறித்தவர்களுக்கு எதிரான டாங்ஸ் கலவரங்கள்
1998-ல் அசீமானந்தா வாகாய் என்ற இடத்தில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை ஏற்படுத்தி தங்க ஆரம்பித்த போது, டாங்சில் உள்ள பழங்குடி சமூகங்களை ஏற்கனவே மத வேறுபாடுகள் பிளவுபடுத்த ஆரம்பித்திருந்தன. 1970-களுக்கு முன்பு வரை அந்தப் பகுதியில் கிறித்துவ மத போதகர்களின் நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களின்படி அந்தப் பகுதியின் கிறித்துவ மக்கள் தொகை 1991 முதல் ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்து வந்தது. பெற்றோர்கள் இறந்த பிறகு எந்த மதத்தின் அடிப்படையில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். அசீமானந்தா அங்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் அம்மாவட்டத்தில் கிறித்துவர்கள் மீது 20 தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. 1998 முழுவதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு டஜன் பழங்குடி சிறுவர்களை தங்க வைத்து இலவச உணவும், தங்குமிடமும் வழங்கி உள்ளூர் அரசுப் பள்ளியில் படிக்க வனவாசி கல்யாண் ஆசிரமம் உதவி செய்து வந்தது. அசீமானந்தா தலைமையில் பையன்கள் ஏகதா மந்திரத்தை உச்சரிப்பதிலிருந்து ஆசிரமத்தில் ஒரு நாளைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. ஏகதா மந்திரம் என்பது பாரத மாதா மற்றும் காந்தி முதல் கோல்வால்கர் வரையிலான முக்கியமான இந்தியர்களின் புகழ் பாடும் பாடல்; ஷாகாக்களின் ஒவ்வொரு அமர்வையும் ஆரம்பிப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகர்கள் அதை பாடுவது வழக்கம். அந்த ஆசிரமத்தில் அசீமானந்தா சந்தித்த மாணவர்களில் ஒருவர் பூல்சந்த் பப்லூ. அசீமானந்தாவின் வழிகாட்டியாகவும், வலது கையாகவும் ஆகி விட்ட பப்லூதான் டாங்ஸ் பகுதியில் தனது வெற்றிகளுக்கு பெருமளவு காரணம் என்கிறார் அசீமானந்தா.
சென்ற ஆண்டு நான் வாகாய் ஆசிரமத்திற்கு போன போது பப்லூ தனது கிராமத்திலிருந்து வந்து என்னை சந்தித்தார். கொஞ்சம் குண்டான உடல்வாகு, உருண்டை முகம், முன்பின் தெரியாத ஒரு ஊரில் நம்பிக்கையாக வழி கேட்கலாம் என்பது போன்ற முகத் தோற்றம். அவர் நம் மனதை கலக்கும் நிகழ்வுகளை சொல்லும் போது கூட நட்புணர்வு குன்றாமலே அவற்றை கேட்க முடிகிறது.
அசீமானந்தா, அந்தமான் தீவுகளில் பின்பற்றிய அதே உத்திகளை இங்கும் கடைப்பிடித்தார். தன்னை வரவேற்கக் கூடிய கிராமங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அவர் பப்லூவை நம்பியிருந்தார். அதன் மூலம் புதிய தொண்டர்களை சேர்த்துக் கொண்டு அந்த வனப்பகுதியில் தனது செல்வாக்கை பரப்பத் திட்டமிட்டார். அவரும் அவரது தொண்டர்களும் எளிதில் போக முடியாத பழங்குடி கிராமங்களுக்கு மலையேறி சென்று, அங்கு ஒரு வாரம் வரை தங்கினார்கள். பழங்குடி மக்களுடன் உணவு உண்டு அவர்களது குடிசைகளில் தூங்கினார்கள். அசீமானந்தா இந்து மதப் பிரச்சாரம் செய்தார்; சாக்லேட்டுகளையும், அனுமான் லாக்கெட்டுகளையும், அனுமான் சாலீசாவையும் குழந்தைகளிடம் வினியோகித்தார். இந்து மத பஜனைகள் நடத்தி, கிறித்துவத்திற்கு ஏன் மாறக் கூடாது என்று கிராம மக்களிடம் எடுத்துரைத்தார். ஒவ்வொரு கிராமத்திலும், இந்துக்களாக மதமாற்றம் செய்ய தகுதி படைத்தவர்களின் பட்டியலை அசீமானந்தாவும் அவரது உதவியாளர்களும் தயாரிப்பார்கள். அந்த பட்டியல்களை அசீமானந்தா கவனமாக கண்காணித்து வந்தார். அவர்கள் அடுத்த குடியிருப்புக்கு புறப்படும் போது, பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பழங்குடி மக்களின் குடிசைகளின் உச்சியில் சங்க பரிவாரத்தின் கொடி பறப்பதை அவரது உதவியாளர்கள் உறுதி செய்திருப்பார்கள்.
சபரிதாம் கோயில்
அசீமானந்தா இத்தகைய ஒப்பீட்டளவில் மென்மையான அணுகுமுறையுடன், பயமுறுத்தல்களையும் சேர்த்து பயன்படுத்தினார். “வங்காள எல்லைப்புற கிராமங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அவர் விவரிப்பார். எல்லைக்கு அப்பாலிருந்து வந்து குவியும் முஸ்லீம்களால் ஒட்டுமொத்த இந்து சமூகமும் அந்த இடத்தை விட்டு ஓட வேண்டி வந்தது” என்று அவர் கூறியதை பப்லூ நினைவு கூர்கிறார். அசீமானந்தா கிறித்துவர்களுக்கு எதிரான கடும் கண்டனங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகிக்க ஏற்பாடு செய்தார். ஜூன் 1998-ல் நடக்கவிருந்த ஒரு பேரணிக்கான துண்டறிக்கையின் தலைப்பில், “இந்துக்களே வாருங்கள், திருடர்கள் ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் கீழ், “டாங் மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சனை கிறித்துவ போதகர்களால் நடத்தப்படும் அமைப்புகள்தான். சேவை என்ற முகமூடியை அணிந்து கொண்டு அந்த சாத்தான்கள் பழங்குடி மக்களை சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றல்களும்தான் அவர்களது மதம்” என்று எழுதப்பட்டிருந்தது. இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை விரைவில் வன்முறை செயல்களாக மாற்றினார் அசீமானந்தா.
1998-ம் ஆண்டு கிருஸ்துமஸ் அன்று மாலை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆஹ்வாவில் உள்ள தீப் தர்ஷன் பள்ளியை தாக்கினார்கள். 100-க்கும் அதிகமானவர்கள் அந்த சூறையாடலில் பங்கேற்றதாக அந்த பள்ளியை நடத்தும் கார்மலைட் பெண் துறவிகளில் ஒருவரான சிஸ்டர் லில்லி சொல்கிறார். அவர்கள் கல்லெறிந்து ஜன்னல்களை உடைத்து, பழங்குடி சிறுவர்களுக்கான தங்கும் விடுதியின் கூரைகளையும் நொறுக்கினர். “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது என் கண் முன்னால் நிற்கிறது. அன்று நான் மிகவும் நடுங்கிப் போயிருந்தேன்” என்கிறார் சிஸ்டர் லில்லி.
30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபீரில் இன்னொரு பள்ளி தாக்கப்பட்டது. அங்கிருந்த தானியக் களஞ்சியம் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. காத்வி கிராமத்தில் சுமார் 200 பேரைக் கொண்ட கும்பல் அந்த ஊர் கிறித்துவ தேவாலயத்தை தாக்கி நொறுக்கி, தீ வைத்தது. பின்னர் அவர்கள் பக்கத்து கிராமத்துக்குப் போய் அங்கிருந்த சர்ச்சுக்கும் தீ வைத்தனர். அதற்கடுத்த நாள் வாகி கிராமத்தின் தேவாலயம் தீயிடப்பட்டது; அந்தத் தாக்குதலில் ஒரு வனத்துறை ஜீப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் டாங்ஸ் மாவட்ட கிராமங்களில் ஆறு தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ பழங்குடி மக்களின் வீடுகள் கல் எறிந்து தாக்கப்பட்டன, கிறித்துவ மற்றும் முஸ்லீம் கடைகள் தாக்கி அழிக்கப்பட்டன, கிறித்துவ பழங்குடி மக்கள் தாக்கப்பட்டார்கள்.
10 நாட்களுக்கு இந்த நாசவேலை தொடர்ந்து நடந்தது. 1998 டிசம்பர் மத்தியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை “40,000 கிறித்துவர்கள் இந்து மதத்துக்கு மாறினார்கள்” என்று பெருமையுடன் கூறுகிறார் அசீமானந்தா. “நாங்கள் 30 தேவாலயங்களை இடித்து கோயில்கள் கட்டினோம். ஒரே கலவரமாக இருந்தது” என்கிறார் அவர்.
இந்த வன்முறை கிருஸ்துமஸ் தினத்தன்று காலையில் நடத்தப்பட்ட மூன்று ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் ஊர்வலங்களிலிருந்து தொடங்கியது. அசீமானந்தாவால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஊர்வலங்களில் ஒன்று ஆஹ்வாவிலும், மற்ற இரண்டும் பக்கத்து மாவட்டத்திலும் நடைபெற்றன. ஆஹ்வாவில் நடந்த ஊர்வலத்தில் 3,500 சங்க உறுப்பினர்கள் திரிசூலங்களும் கம்புகளும் ஏந்தி பங்கேற்றதாக டாங்ஸ் பா.ஜ.க கிளையின் அப்போதைய செயலாளர் தசரத் பவார் தெரிவிக்கிறார். அசீமானந்தாவின் கிறித்துவ எதிர்ப்பு உரைகளிலிருந்து உருவாக்கப்பட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நகரத்தின் பிரதான சாலை காவி பேனர்களால் நிரப்பப்பட்டிருந்தது. உள்ளூர் கிறித்துவ பாதிரியார்கள் மாவட்ட ஆட்சியாளர் பரத் ஜோஷியிடம் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்துமாறு மனு கொடுத்திருந்தார்கள். அவரோ, பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக ஆஹ்வாவில் நடந்த ஊர்வல மேடையில் தோன்றி இந்துத்துவா கும்பலுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்.
அசீமானந்தாவின் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை செய்யும் மோடி
ஊர்வலங்களை தொடர்ந்து நடந்த கலவரங்கள் விரிவாக பரவுவதில் அசீமானந்தாவின் ஒருங்கிணைக்கும் திறன் பெரும் பங்கு வகித்தது. அசீமானந்தா வருவதற்கு முன் அந்த மாவட்டத்தில் ஒரு சில சங்கத் தொண்டர்கள் மட்டுமே இருந்தார்கள். அசீமானந்தா இந்துத்துவா நடவடிக்கைகளுக்கு புத்துயிர் ஊட்டி அதை ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட சக்தியாக மாற்றினார். “அவரது வார்த்தைகள் உங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவாவை தட்டி எழுப்பும் சக்தி படைத்தவை.” என்கிறார் பவார்.
“மதமாற்றங்களை நிறுத்துவது எளிதான வேலை. அதற்கு மதத்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். இந்துக்களை மத வெறியர்களாக மாற்ற வேண்டும். அதன்பிறகு, மற்றதையெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என்கிறார் அசீமானந்தா.
ஹிந்து ஜாக்ரன் மஞ்சை உருவாக்கியதை தனது சாதனையாக அசீமானந்தா சொல்கிறார். முழுக்க முழுக்க பழங்குடியினருக்கான அமைப்பாக தெரியும்படி அது உருவாக்கப்பட்டது. வன்முறை தொடர்புடைய “சங்கத்தின் எல்லா வேலைகளையும் வனவாசி கல்யாண் ஆசிரமம் மூலமாக நாங்கள் செய்ய முடியாது. எனவே அதற்காக பழங்குடிகளை வைத்து ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் உருவாக்க வேண்டியிருந்தது. இந்த ஜானுபாய்க்கு (ஹிந்து ஜாக்ரன் மஞ்சின் பெயரளவு தலைவர்) எதுவும் தெரியாது. என்ன செயல்திட்டத்தை மேற்கொள்வது, துண்டறிக்கைகளில் என்ன அச்சிடுவது இது போன்ற அனைத்து முடிவுகளையும் நாங்கள்தான் எடுக்க வேண்டியிருந்தது. அவரை அமைப்பின் பழங்குடி இன முகமாக வைத்திருந்தோம். பழங்குடி மக்கள் சங்கத்தின் பணிகளை செய்து வந்தார்கள்.”
தூண்டுதல்களினாலோ, மிரட்டல்களினாலோ அசீமானந்தாவின் “தாய் மதம் திரும்பும்” நிகழ்வுகள் மேலும் மேலும் பிரபலமாகி வந்தன. மதமாற்றுவதற்கான தகுதி படைத்தவர்களாக அவர்கள் கருதுபவர்களின் 50 முதல் 100 வரையிலானவர்களின் பட்டியல் தயாரானதும், அசீமானந்தாவும் உதவியாளர்களும் அவர்களை திரட்டி லாரிகளிலும் ஜீப்புகளிலும் சூரத்தில் உள்ள உனாய் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். கோயிலுக்கு அருகில் உள்ள வற்றாத வெந்நீர் ஊற்றில் மூழ்கிக் குளித்து, ஒரு திலக பூஜை நடத்தி அந்த பழங்குடியினர் இந்துக்கள் என்று அறிவிக்கப்பட்டனர். அனுமானின் புகைப்படத்தையும், அனுமான் சாலீசாவையும் கைகளில் பிடித்தபடி அவர்கள் வண்டிகளில் திணிக்கப்படுவார்கள். திரும்பும் வழியில் ஒலிபெருக்கிகளில் பஜனைகள் முழங்கப்பட்டு மொத்த நிகழ்வும் ஒரு காட்சியாக நடத்தப்பட்டது. வாகாய் ஆசிரமம் வரை தொடரும் கொண்டாட்டங்களின் நிறைவில் அசீமானந்தா அனைவருக்கும் விருந்து அளித்து ஆளுக்கு ஒரு ஹனுமான் லாக்கெட்டை கொடுப்பார்.
சபரி கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள்
அசீமானந்தாவின் அக்கறை பழங்குடி மக்கள் இயேசு கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா அல்லது ராமனை கும்பிடுகிறார்களா என்பதைத் தாண்டி போனதில்லை. 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் த வீக் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், “ஏழ்மையை ஒழிப்பதிலோ வளர்ச்சிப் பணிகளிலோ எங்களுக்கு ஆர்வம் இல்லை. பழங்குடி மக்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்துவதற்குத்தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார் அசீமானந்தா. இந்த அணுகுமுறையுடன் அசீமானந்தாவின் மக்களோடு கலந்து பழகும் திறமையும் சேர்ந்து அவரது இயக்கத்துக்கு ஒரு வலுவான ஈர்ப்பை தோற்றுவித்திருந்தது. “சுவாமிஜியை விட அதிக கஷ்டமான வாழ்க்கையை வாழும் யாரையும் நான் பார்த்ததில்லை. அவர் ஆழமான அர்ப்பணிப்புடன் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் போய் தங்குவார். அங்கு தங்கி, அவர்களுடன் சாப்பிட்டு, அவர்களுடன் கலந்து பழகி அந்த மக்களை தனது சொந்த மக்களாக மாற்றிக் கொள்வார். இப்போது நமக்காக போராடவும் ஒருவர் இருக்கிறார் என்று மக்களுக்கு நம்பிக்கை வந்து விடும்” என்கிறார் பப்லூ.
டாங்ஸ் உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்று என்று அசீமானந்தா விவரிக்கிறார். 1990-களின் இறுதியில் அங்கு பணிபுரிந்த பல பத்திரிகையாளர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஜூன் 2013-ல் நான் அங்கு சென்ற போது காடு பழுப்பு நிறமாகவும் காய்ந்து போயும் காணப்பட்டது. அந்த பகுதியில் மலைச் சரிவுகளில் உருவாக்கப்பட்டிருந்த மைல் கணக்கிலான உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் என் கவனத்தை ஈர்த்தன. அவை அசீமானந்தாவின் மிக முக்கியமான அரசியல் புரவலர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டவை.
1998-ன் தொடக்கத்தில் அசீமானந்தா டாங்சுக்கு குடியேறிய சமயத்தில் பா.ஜ.கவின் கேசுபாய் பட்டேல் குஜராத் முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். சுதந்திரம் அடைந்த பிறகு பெரும்பாலான காலத்துக்கு அம்மாநிலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. 1998 மார்ச் மாதம் மத்தியில் வாஜ்பாயி பிரதமர் ஆனதும் இந்தியா குறித்த அவர்களது தொலைநோக்கு பார்வை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. ஆட்சி பொறுப்புக்காக அத்தகைய சித்தாந்தத்தில் சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
டாங்சில் நடந்த கிறிஸ்துமஸ் கலவரங்கள் அவர்கள் விரும்பிய மாற்றத்தின் ஒரு சிறு பகுதியாக தோன்றியது. சோனியா காந்தி ஆஹ்வாவுக்கு பயணம் செய்து, “மனதை உருக்கும்” வன்முறையை கண்டனம் செய்தது அசீமானந்தாவின் வெற்றியின் ஆரம்ப அறிகுறியாக இருந்தது. மற்ற அரசியல்வாதிகளும், பிரபலங்களும் அதில் இணைந்து கொண்டனர். இது தொடர்பான ஊடக செய்திகள் ஆர்.எஸ்.எஸ்சில் அசீமானந்தாவின் மதிப்பை உயர்த்தின. வெகு விரைவில் கோல்வால்கரின் பெயரில் வழங்கப்படும் வருடாந்திர ஸ்ரீ குருஜி விருது வழங்கி ஆர்.எஸ்.எஸ் அவரை சிறப்பித்தது.
அசீமானந்தாவின் கலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கூச்சல் குழப்பங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அதில் தலையிட வேண்டி வந்தது. “என்னுடைய மதமாற்ற நடவடிக்கைகள் தேசிய ஊடகங்களில் வெளியாகி, சோனியாகாந்தி எனக்கு எதிராக பேசிய பிறகு, ஊடகங்களில் பல விவாதங்கள் நடைபெற்றன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி என்னை கட்டுப்படுத்தி வைக்கும்படி கேசுபாய் பட்டேலிடம் சொல்லியிருக்கிறார். அவர் எங்கள் பணிகளை நிறுத்தி வைத்ததோடு, என் ஆட்களை கைது செய்யவும் ஆரம்பித்தார்” என்கிறார் அசீமானந்தா. ஆனால், அப்போதே மோடி முதல்வர் பதவியை நோக்கி தனது கத்திகளை தீட்டிக் கொண்டிருந்தார். அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மோடி அசீமானந்தாவிடம் “கேசுபாய் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார் என்று எனக்குத் தெரியும். நீங்கள் செய்து வரும் பணிக்கு ஈடு இணையே இல்லை ஸ்வாமிஜி. நீங்கள்தான் உண்மையான சேவை செய்து வருகிறீர்கள். நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார். (இது தொடர்பாக மோடியின் விளக்கத்தை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன).
2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோடி குஜராத் முதலமைச்சர் ஆனார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் குஜராத்தில் 1,200 குஜராத்திகளைக் கொன்ற மதக் கலவரங்கள் தொடங்கின. டாங்சுக்கு வடக்கே பஞ்ச்மால் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களை தான் நடத்தியதாக அசீமானந்தா கூறுகிறார். “இந்தப் பகுதியில் முஸ்லீம்களை அழித்து ஒழிக்கும் வேலையை நான்தான் செய்தேன்” என்கிறார் அவர்.
அந்த ஆண்டு இறுதியில் டாங்சுக்கு வந்த மோடி அசீமானந்தாவின் செல்வாக்கை உறுதிப்படுத்தினார். 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமனின் 14 ஆண்டு வனவாசத்தின் போது உதவியதாக நம்பப்படும் பழங்குடி பெண்ணை வழிபடுவதற்காக சபரிதாம் என்ற புனித வளாகத்தை அசீமானந்தா கட்ட ஆரம்பித்தார். அந்த வளாகத்தில் கட்டப்படவிருந்த ஆசிரமத்திற்கும் ராமர் கோயிலுக்கும் நிதி திரட்டுவதற்காக புகழ் பெற்ற கதாகாலட்சேபகர் மொராரி பாபுவின் 8-நாட்கள் ராமாயண காலட்சேபத்துக்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வு 10,000 பேரை கவர்ந்தது. முதலமைச்சர் பதவியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மோடி (கலவரங்களைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஜூலையில் அவரது அரசு ராஜினாமா செய்திருந்தது), அந்த கதாகாலட்சேபத்தை தொடங்கி வைப்பதற்காக மேடையில் தோன்றினார்.
அந்த தேர்தலில் மோடியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து மத மாற்றங்களுக்கு மாவட்ட நீதிபதியின் ஒப்புதல் கோரும் குஜராத் மத சுதந்திர மசோதா சேர்க்கப்பட்டிருந்தது. மோடியின் நம்பகமான கூட்டாளி அமித் ஷா, மாநில சட்டசபையில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் 2003-ல் சட்டமாக்கப்பட்டது. விரைவில், மொராரி, மோடி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் உதவியோடு டாங்சில் ஒரு பெரிய “தாய் மதம் திரும்பும்” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார், அசீமானந்தா.
மொராரி தனது ராமகதா காலட்சேபத்தின் இறுதியில் சபரி தாமில் ஒரு புதிய கும்பமேளா நடத்த ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்தார். தயாரிப்புகளுக்காக நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட அந்தத் திருவிழா மதமாற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவும், இந்துத்துவாவின் கொண்டாட்டமாகவும் விளங்கியது. ஆர்.எஸ்.எஸ்சுடன் சேர்ந்து இந்த மேளாவை ஏற்பாடு செய்யும் பொறுப்பை அசீமானந்தா ஏற்றுக் கொண்டார்.
2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-வது வாரம் பல பத்தாயிரக் கணக்கான இந்தியர்கள் வன கிராமமான சுபீரில் குவிந்தார்கள். சபரி தாமில் இருந்த அசீமானந்தாவின் ஆசிரமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபீரில் சபரி கும்பமேளா தொடங்கி வைக்கப்பட்டது. மற்ற நான்கு பாரம்பரிய கும்பமேளாக்களைப் போல சபரி கும்ப மேளாவும் பாவங்களை கழுவும் சடங்குகளை மையமாகக் கொண்டிருந்தது. அந்த ஊர் ஆற்றில் சம்பிரதாய கொண்டாட்டங்களுடன் முழுக்கு போடுவதன் மூலம் பழங்குடி மக்கள் இந்து மதத்தின் பிடிக்குள் தாம் திரும்பி வருவதை அறிவித்தார்கள். மத்திய இந்தியாவின் பழங்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லாரிகளில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டார்கள். கூட்டத்திற்கு போதுமான அளவு ஆற்றுக்குள் தண்ணீரை திருப்பி விடுவதற்கு குஜராத் அரசு 53 லட்சம் ரூபாய் செலவழித்தது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு ஒன்றின் மூலம் தெரிய வந்தது.
சபரி கும்பமேளா இந்துத்துவ அமைப்புகள் தமது ஒற்றுமையை பறைசாற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. பிரபல மதத் தலைவர்கள் (மோராரி பாபு, ஆசாராம் பாபு, ஜெயேந்திர சரஸ்வதி, சாத்வி ரிதம்பரா போன்றவர்கள்), ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்க பரிவார அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் (இந்திரேஷ் குமார், விஸ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத தலைவர்கள் பிரவீன் தொகாடியா, அசோக் சிங்கால் உள்ளிட்டவர்கள்), மூத்த பா.ஜ.க அரசியல்வாதிகள் (மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டவர்கள்) மேடையை அலங்கரித்தனர். நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சபரி கும்ப மேளாவை, “சாதுக்கள், சங்கம், மற்றும் சர்க்கார் (அரசு) இவற்றின் கூட்டிணைவு” என்று இரு ஆய்வாளர்கள் வர்ணித்தது மிகவும் பொருத்தமானது.
திருவிழாவின் தொடக்க விழாவில் மறுபடியும் முதலமைச்சராக ஆகி விட்டிருந்த மோடி, பழங்குடி மக்களை ராமனிடமிருந்து பிரிக்க நடக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் என்று பேசினார். மேடையின் பின்புலமாக, பத்து தலை இராவணனின் மீது அம்பு விடும் ராமனின் பிரம்மாண்டமான சுவரோவியம் தீட்டப்பட்டிருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் கே எஸ் சுதர்சன், “நாம் அடிப்படைவாத முஸ்லீம்களாலும், கிறித்துவர்களாலும் நடத்தப்படும் ஒரு கபட யுத்தத்தை எதிர் கொள்கிறோம்” என்றும் “நம் வசம் இருக்கும் அனைத்து சக்திகளையும் திரட்டி இதை எதிர் கொள்ள வேண்டும்” என்று அங்கு கூடியிருந்த சாதுக்களின் கும்பலுக்கு அறிவுறுத்தினார். 2009-ல் சுதர்சன் இறந்த பிறகு தலைமை பதவிக்கு வந்த மோகன் பாகவத், “நம்மை எதிர்ப்பவர்களின் பற்கள் உடைக்கப்படும்” என்று கூறினார்.
சுமார் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் பேர் அந்த கும்பமேளாவில் கலந்து கொண்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மதமாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. இன்றைக்கு, சபரி தாம் கோயிலுக்கு ஒரு சில பக்தர்களே போகிறார்கள். கோயிலில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கக் கூட வக்கில்லாமல் போயிருக்கிறது. அசீமானந்தா வசித்து வந்த ஆசிரமம் இடிக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் தலைமை பூசாரிக்கு உதவி புரியும் பிரதீப் பட்டேல், அசீமானந்தாவுடன் தொடர்புடையதால் கோயிலின் பெயர் கெட்டு விட்டது என்கிறார். பணக்கார குஜராத்திகளில் பலர் இந்த கோயிலுக்கு வருவதையும் நன்கொடைகள் கொடுப்பதையும் நிறுத்தி விட்டிருக்கின்றனர். கோயிலுக்கு வரும் ஒரு சில மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு 10 ரூபாய் நோட்டைக் கூட காணிக்கை பெட்டியில் போடுவதில்லை. டாங்ஸ் வந்து சேருவதற்கே அவர்களது பணம் முழுவதும் செலவாகி விடுகிறது. அசீமானந்தா “அதை சரியாக கட்டமைக்காமல் போனது என்னுடைய தவறு” என்று சொல்கிறார்.
இருந்த போதிலும் அந்த வட்டாரத்தில் பல சுறுசுறுப்பான செயல்பாடுகள் நிறைவேறி வருகின்றன. அந்த பிராந்தியத்திற்கு மிக முக்கியமான தேவை கோயில்கள்தான் என்று குஜராத் அரசு கருதுகிறது. டாங்ஸ் தனது வாழ்வாதார தேவைகளை மத சுற்றுலா மூலம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பது திட்டம். 2012-ம் ஆண்டு மாநில அரசு ராமர் பாதை திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. ராமாயண கதாபாத்திரங்கள் மேற்கொண்ட பயணத்தை கொண்டாடுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சபரி தாம் முக்கியமான இடம் வகிக்கிறது.
ராமன் பாதை திட்டத்தின் கீழ், சபரி தாமுக்கு ரூ 13 கோடி மானியம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிவன் கோயில், 4 ஊற்றுக்கள், ஒரு சேவைச் சாலையும் சுற்றுச் சுவரும், பெரியதொரு வாகனம் நிறுத்தும் இடம், உட்காரும் வளாகம், மற்றும் சுகாதார வசதிகள், தரை பாவுதல், மின் இணைப்பு, நீர் வினியோகம் கொடுத்தல் போன்ற செலவுகளுக்காக அந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, டாங்ஸ் பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுக்கும் பின் தங்கிய பகுதிகள் முன்னேற்றத்துக்கான ரூ 11.6 கோடி மானியத்துக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு சமர்ப்பிக்கவில்லை. அந்த நிதி கடந்த 6 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் தூங்குகிறது.
உள்ளூர் கிறித்துவ அமைப்புகளும் மாநில அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. “1998 முதல் நாங்கள் காந்திநகரில் தொடப்படாதவர்களாக்கபட்டிருக்கிறோம்” என்கிறார் தீப் தர்ஷன் பள்ளியின் சிஸ்டர் லில்லி. “ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் புதிய நிதி தேவைகளுக்கான கோப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையும் தருவதில்லை.”
நவ்சாரியில் அசீமானந்தா தனது மத மாற்ற நிகழ்வுகளை நடத்தி வந்த உனாய் கோயிலும் ராமன் பாதை திட்டத்தின் கீழ் ரூ 3.63 கோடி மானியம் பெற்றது. ஜூன் 2013-ல் முக்கிய கட்டிடத்தின் வேலைகள் முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய கட்டிடம் மிகப் பெரியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் உள்ளது. அசீமானந்தா பழங்குடி மக்களை மதமாற்றத்துக்காக அழைத்து வந்த எளிய பழைய கோயில் சுவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கிறது. கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது, ஆனால் வெந்நீர் ஊற்றுகள் முதல் முறையாக வற்றிப் போய் விட்டன என்று கோயில் பூசாரி சொல்கிறார்.
– தொடரும்
நன்றி : லீனா கீதா ரகுநாத்,கேரவான் (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு