Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 100

இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!

ண்மைக்காலமாக, தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் ஒரு புதிய போக்கை வெளிப்படுத்துகின்றன. 90-களில் நடைபெற்றதைப் போல, மீண்டும் இப்பகுதிகளில் சாதிய மோதல்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் சாதி முனைவாக்கத்தை ஏற்படுத்துவதற்கும்; அதை தனது இந்துத்துவ பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சித்துவருகிறது.

இச்சாதிவெறித் தாக்குதல்களில் பெரும்பாலானவை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெற்றவை. கடந்த ஆகஸ்டு மாதத்தில், நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 14 சாதியப் படுகொலைகள் பதிவாகியுள்ளன. ஆனால், ஆளும் வர்க்க ஊடகங்கள் இவற்றில் பெரும்பாலானவற்றை, சாதியத் தாக்குதல்களாக பதிவு செய்யாமல் முன்விரோதம், தனிநபர் மோதல் என்ற வகைகளில் சித்தரித்தன.

இந்த சாதியத் தாக்குதல்கள் மீது தி.மு.க. அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் ஊடகங்களின் பாராமுகமும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழலை பொது விவாதத்திற்கு கொண்டுவந்துவிடாமல் தடுத்து வந்தன. ஆனால், அதையும்  மீறி இப்பிரச்சினை குறித்து பேசியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளும் வகையில், சாதிவெறிப் படுகொலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நெல்லை மணிமுத்தீஸ்வரத்தில், ஆறு பேர் கொண்ட கும்பல் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனோஜ், மாரியப்பன் என்ற இரண்டு இளைஞர்களை வழிமறித்து, அவர்களைத் தாக்கி, நகைகள், செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. மேலும், அவர்களது சாதியை விசாரித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிந்தவுடன், வெறிகொண்டு மீண்டும் அந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளது; அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

இதே மணிமுத்தீஸ்வரத்தில், தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், ஆதிக்கச் சாதிவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.


படிக்க: ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்


கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள மணக்கரையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க, மணி என்ற முதியவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அருகிலுள்ள வேப்பமரத்து அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை, எவ்வித முன்விரோதமும் இல்லாத நிலையில், இருசக்கர வாகனத்தில் திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றது.

தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் இதுபோன்ற தாக்குதல்கள், பெரும்பாலும் தேவர் சாதிவெறியர்களால், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் கூட அவ்வாறானவையே.

தென்மாவட்டங்களில் தற்போதுள்ள சமூகச் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, இந்துமதவெறிக் கும்பல், தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக மேற்கொள்ளும் சதிச் செயல்களுக்கு பலிகடாவாக்கப்படும் முக்கியமான சமூகமாக, தேவேந்திர குல வேளாளர் சமூகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் இப்பிரச்சினையில், ஒருபக்கம் நிற்பது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல்களை ஏவிவரும், சில ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு – தேவர் சாதிவெறி அமைப்புகள்; மறுபக்கம் நிற்பது, இம்மக்களின் ‘காவலர்களாக’ தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், அதே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏஜெண்டுகளாக செயல்படக்கூடிய ஜான் பாண்டியனும் கிருஷ்ணசாமியும். இந்த இருமுனைக் கத்தியால் குத்துப்பட்டுக் கொண்டிருப்பது, தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான்.

சாதிவெறி இல்லையாம்! கஞ்சா போதையாம்!

தென்மாவட்டங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சாதிவெறித் தாக்குதல்களை, ஆரம்பத்தில் கண்டும் காணாமல் விட்டுவந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும், தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல ஜனநாயகச் சக்திகளும் இப்பிரச்சினை தொடர்பாக எச்சரித்து ஆர்ப்பாட்டங்களையும் பிரச்சாரங்களையும் தொடர்ச்சியாக செய்துவருகின்றன. இந்நிலையில் இனிமேலும், இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்காமல் இருந்தால், தன் சாதி மக்களிடமே தாம் அம்பலப்பட்டு போய்விடுவோம் என்பதால், சம்மந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளே களமிறங்கியுள்ளார்கள்.

“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சியை நடத்திவரக்கூடிய ஜான் பாண்டியன், தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, நவம்பர் 20-ஆம் தேதி நெல்லை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்.

இவ்வன்முறைகள், ஆர்.எஸ்.எஸ்-ஆல் கட்டுப்படுத்தப்படும் ஒருசில தேவர் சாதிவெறி அமைப்புகளால், திட்டமிட்டே நடத்தப்படுபவை என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜான் பாண்டியன் கடந்த மாதம் 15-ஆம் தேதி இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா?

“பட்டியலின மக்களைக் குழப்புவதற்காக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை மட்டும் குறிவைத்து, இளம் அப்பாவிகளை கொலை செய்வதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது”.

“தேவரும் தேவேந்திரரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா என்றால் அப்படி இல்லை; அப்போ எப்படி இது சாதியாகும்?

கஞ்சா அதிகமாக நடமாடுகிறது; … .. கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். நத்தத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; மணிமுத்தீஸ்வரத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; இப்போ நடந்த மணக்கரை மணி, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். கஞ்சா போதையில் அதிகமாக கொல செஞ்சிருக்கான். அவ்வளவுதான்”

ஒரு பத்திரிகையாளர் இடைமறித்து கேட்கிறார்: “அப்போ ஏன் எல்லா இடங்களிலும் தேவேந்திரர்களே வெட்டப்படுகிறார்கள்?”

அதற்கு ஜான் பாண்டியன் அளித்த பதில்: “அந்தப் பகுதிகளில் தேவரும் தேவேந்திரரும் மட்டும்தான் இருக்காங்க; வேற சாதி கிடையாது. வடகரை, கீழநத்தம், ஒவ்வொரு பகுதியிலயும் நீங்க ஆராய்ஞ்சு பார்த்தீங்கன்னா, அப்படித்தான் இருக்காங்க… எதார்த்தம் என்னவோ அத பார்க்கனும்; சும்மா சித்தரிக்கக் கூடாது!”

“தேவேந்திர குல வேளார்களின் குலதெய்வமே”, “எங்களின் இதயமே” என்று ஜான் பாண்டியனுக்கு போஸ்டர் ஒட்டும் அச்சமுதாய மக்களுக்கு ஜான் பாண்டியன் அளிக்கும் பதில் இதுதான்!

இதனை சாதிவெறிப் படுகொலை என்று சித்தரிக்கக் கூடாது, வழக்கமாக நடக்கும் கஞ்சா போதைக் கொலைகள்தான் என்றால், பிறகு எதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்; அதில் எதற்கு, “தேவேந்திர குல வேளாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள்” என்று தலைப்பு. இந்த சுயமுரண்பாட்டை எவன் கேள்வி எழுப்பப் போகிறான் என்ற திமிர்தானே!

கஞ்சா அதிகமாக நடமாடுகிறது என்கிறாரே, ஜான் பாண்டியன். அதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அந்த கஞ்சாவை சப்ளை செய்வது யார்; கஞ்சாவுக்கும் சாதிவெறிக்கும், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட படுகொலைக்கும் யார் காரணம் என்று ஜான் பாண்டியனுக்கு தெரியாதா? தெரியாதெனில், நாமே விளக்குகிறோம்; ஆனால், அதற்கு ஜான் பாண்டியனோ, அவரது த.ம.மு.க. கட்சியினரோ நடவடிக்கை எடுப்பார்களா?

நேராகப் போய், தேசிய அளவில் கஞ்சா ஒழிப்புப் போராட்டத்தை நடத்துவதாக இருந்தால், டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். தமிழ்நாடு அளவோடு போராட்டத்தை வரம்பிட்டுக் கொள்வதாக இருந்தால், கமலாலயத்தை முற்றுகையிடுங்கள்; உங்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பா.ஜ.க.காரனையும் தூக்கிப்போட்டு மிதியுங்கள், கஞ்சா ஒழிந்துவிடும்!

உண்மையைத்தான் சொல்கிறோம்! கஞ்சா அனைத்துக் கட்சி கிரிமினல்களின் ‘பொதுத்தொழிலாக’ இருந்தது, பழைய காலம். இப்போது அது மாறிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால், இளைஞர்களை சீரழிப்பதற்கென்றே, கிராமங்களில் சாதிவெறி மோதல்களைத் தூண்டிவிடுவதற்கென்றே மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, கஞ்சா மாறிப்போய் இருக்கின்றது.

மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, நவம்பர் 13,14-ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மூன்று முக்கியமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அவை, ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர், ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடமும் வெளிநாட்டு தரகர் ஒருவரிடமும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா தொழிலில் முதலீடு செய்வது தொடர்பாக, பேரத்தில் ஈடுபடுவது போன்ற உரையாடல்களுடனான வாட்சப் கால் வீடியோக்கள்.

இந்த உலக மகா மாஃபியா தொழில் வெளியே கசிந்தவுடன், அது போலி வீடியோ என்று தேவேந்திர சிங் தோமர் போலீசில் புகாரளித்தார். ஆனால், கனடாவில் உள்ள ஜெகம்தீப் சிங் என்ற நபர், தன்னிடம் முழு காணொளியும் உள்ளதாகவும், தேவேந்திர சிங் தோமரிடம் பேசியது நான்தான் என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், இது 500 கோடி விவகாரம் கிடையாது; 10,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழில் என்றும்; நரேந்திர சிங் தோமர் குடும்பத்திற்கு தான் பினாமியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் அம்பலமாகி, பா.ஜ.க.வின் மாஃபியா வலைப்பின்னல் வெளியே வந்தது.

இந்த கஞ்சா தொழிலைப் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? சரி, கனடா, டெல்லி என்று தூரமாக போக வேண்டாம் என்றுகூட கருதலாம். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பாக, ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில், ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டு கார்களில் கஞ்சா கடத்தி வந்த ‘லோக்கல் செய்தி’யையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா! அதில் ஈடுபட்ட, தூத்துக்குடி பா.ம.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? கஞ்சா வியாபாரிகளும், கொலைகாரர்களும், ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வை தங்களது பாதுகாப்பான சரணாலயமாகக் கருதி தஞ்சம் புகுகிறார்களே; அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறதே தமிழ்நாடு பா.ஜ.க – அதைப் பற்றியேனும் ஏதாவது வாய்திறந்திருக்கிறாரா, இனிமேலாவது திறப்பாரா; ஒன்றுமில்லை!

‘இந்துக்களின் போர்வாள்’ குத்துவது யாரை?

அடுத்து இந்துக்களின் போர்வாள் கிருஷ்ணாசாமியைப் பார்க்க வேண்டும். “இந்து ஒற்றுமைக்காக பாடுபடுவதே என் வாழ்நாள் கடப்பாடு” என்று அறிவித்துக் கொண்ட இவர், இன்று “ஐயோ, தென் மாவட்டங்களில் தேவேந்திரர்களைக் குறிவைத்து ஒரு இனப்படுகொலையே நடத்தப்படுகிறது” என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்: அதிகரித்துவரும் இப்படுகொலைகள் ஏதேச்சையானவை அல்ல என்றும்; ஒரு பயங்கரவாதக் கும்பல் இச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும்; இஸ்ரேலில் யூதர்கள் எப்படி பாலஸ்தீன மக்களின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பதற்காக, அவர்கள் மீது இன அழிப்பை நடத்திவருகிறார்களோ, அதே போல தேவேந்திர குல வேளாளர்கள் மக்களுக்கு நடக்கின்றது என்றும் பேசியுள்ளார்.

நெல்லையில், தேவேந்திர குல வேளாளர் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி பேரணி ஒன்றையும் தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.

இதைச் சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக கருதக்கூடாது; இதற்கு பின்னால் மிகப்பெரிய வலைப்பின்னலே உள்ளது. போலீசு அதிகாரிகள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இவ்விசயத்தில் கூட்டணியாக உள்ளார்கள். இதை உடைக்க வேண்டும் – என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சி, பல்வேறு லோக்கல் சேனல்கள், யூடியூப் சேனல்கள், பி.டி.ஐ. ஆங்கில ஊடகம் ஆகியவற்றுக்கெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு பேட்டிகொடுத்துள்ளார்.

களத்திலோ, தூத்துக்குடி மணக்கரை கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளார். இப்பிரச்சினையை பேசுபொருளாக்குகிறாராம்; தேவேந்திர குல மக்களின் ‘காவலர்’ அல்லவா, அம்மக்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.

“மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்”; “தென் மாவட்டங்களை சாதிரீதியாக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக முன்வைத்துள்ளார், கிருஷ்ணசாமி.

கிருஷ்ணசாமி ஜான் பாண்டியனைப் போலல்ல; இல்லையா!

ஆமாம், ஜான் பாண்டியனைவிட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு மிகமிக ஆபத்தான கோடாரிக் காம்பு!

சரி, இந்த சாதிவெறிக் கிரிமினல்களை ஏவுவது யாராய்யா கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டால், தி.மு.க-வாம்! தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்துதான் இப்படியெல்லாம் நடக்கிறதாம். மேலும், தி.மு.க.தான் எல்லா ரவுடிகளும் கிரிமினல்களும் குடிபுகும் இடமாக இருக்கிறதாம். இவ்வாறு புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ளார்.

ஆனால், களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும்; தங்களது எதிரி யார் என்று! குறிப்பாக, கிருஷ்ணசாமியே கூட, பல்வேறு பேட்டிகளில் சூசகமாகவும் இலைமறை காய்மறையாகவும் மறவர் சாதியைச் சேர்ந்த ‘சில கூலிப்படை கும்பல்’தான் இதைச் செய்துள்ளது என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

14-11-2023 தேதியிட்டு, அவர் கட்சியின் சார்பாக விடுத்த அறிக்கையில், “மணக்கரை கிராமத்தைச் சார்ந்த சிலரது வன்முறைப் பின்புல வரலாறுகள் அனைத்தும் காவல்துறையினருக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வல்லநாடு வனக் காவலரையே வெட்டிக் கொன்றவர்களும் அந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் அந்த ‘சிலர்’, ‘அவர்களுக்கும் தி.மு.க-வுக்கும் என்ன உறவு?’ கிருஷ்ணசாமிக்கு பெயரைச் சொல்ல தொடைநடுக்கம் என்றால், நாம் சொல்கிறோம்!


படிக்க: கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்


நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வட்டாரங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் டிரோஜன் அமைப்புகளாக பல்வேறு ஆதிக்கச்சாதிவெறி அமைப்புகள் செயல்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு அமைப்பு, “இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம்”. இந்த இயக்கத்தின் தலைவரும், அடிக்கடி தனது ‘சமூகத்துக்காக’ ஏதாவது கொலைசெய்துவிட்டு உள்ளே போகும் ‘முக்குலத்தோர் குல பாதுகாவலருமான’ “பேச்சிமுத்து தேவர்”, அவரது பட்டப் பெயர் “மணக்கரை பாயாசம்”.  பச்சையான ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு! இவர்களைப் போல ஆதிக்கச் சாதி வெறியர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர்.

சனாதனம் நமது வாழ்வியல் என்றும்; இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்தப் போவதாகவும் சொல்லும் அய்யா கிருஷ்ணசாமி அவர்களே, உங்கள் ‘இந்து’ உறவின் முறையுடன் அன்பாகப் போய் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியதுதானே. ‘இந்து ஒற்றுமை’யை உயர்த்திப் பிடிக்க வேண்டியதுதானே! என்ன தயக்கம்; ‘லஷ்மண ரேகை’யைத் தாண்டிப் பேசினால், சாயம்போய்விடுமா!

நெல்லையில் நடைபெற்ற புதிய தமிழகக் கட்சியின் பேரணியில், கிருஷ்ணசாமியின் மகன், ஷியாம் கிருஷ்ணசாமி நெஞ்சு புடைக்கப் பேசுகிறார். “அடித்துக் கொள்ளும் இரண்டும் திராவிட இனம்தானே! எந்த திராவிடக் கட்சி வந்தது, இந்த ஐம்பது ஆண்டுகளில்; “தமிழ்தேசியம்” என்று புதிதாக கிளம்பியுள்ளார்களே, தமிழ் சாதிகள் அடித்துக் கொள்வதை ஏன் தடுக்கவில்லை; இந்து, இந்தியன் என்று மட்டும் நம்மை சொல்லிக்கொள்ள வேண்டும். ஆனால், ஓட்டுக்காக வருபவர்கள், தேவேந்திரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவதில்லை” என்று சீறியிருக்கிறார்.

இந்த வாதம், நூற்றுக்கு நூறு சரி என்கிறோம். முதல் இரண்டு கூற்றுகளில் நாமும் உடன்படுகிறோம். இக்கேள்விகளை ‘திராவிடம்’ பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளையும், தமிழ்தேசியம் பேசுபவர்களையும் பார்த்து நாமும் எழுப்புகிறோம். ஆனால், இந்துத்துவம் பற்றி பேசும் முன், அவரும் அவரது தகப்பனாரும் தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு, பின்னர் பேச வேண்டும்.

“நாங்கள் இந்துத்துவம் பேசியது தவறுதான்; சனாதனத்தை ஏற்றுக் கொண்டது தவறுதான்; இந்துத்துவம் நமக்கு எதிரி” என்று தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்பாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், அது வெறும் நடிப்புதான்!

“நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது! கொஞ்சம் இப்படியெல்லாம் பேசினால், தென் மாவட்டத்தில் பா.ஜ.க. நமக்கு ஒரு சீட்டாவது தருமா… இல்லை பேரம் படியாவிட்டால் சாதி கெத்தைக் காட்டி, அ.தி.மு.க.விடம் கேட்டுப்பார்க்கலாமா” என்ற கணக்கோடுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையினால்தான், ஜான் பாண்டியனைவிட, கிருஷ்ணசாமி அபாயமிக்க கோடாரிக்காம்பு என்கிறோம்.

இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள்தான் தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு உறுதுணையாக உள்ளார்கள். தங்களை தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவர்களாக காட்டிக்கொண்டே அவர்கள் மீதான தாக்குதல்களுக்கான காரணங்களை மூடிமறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். ஆதிக்கச் சாதி வெறியர்கள் நேரடியாக இம்மக்களை கொல்கிறார்கள் என்றால், இவர்கள் கூடவே இருந்து கழுத்தறுக்கின்றனர்.

“பள்ளர்”, “ஒடுக்கப்பட்ட மக்கள்”, “தலித்” என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; “இந்துக்களாக இணைய வேண்டும்” என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இன்னொருபக்கம், தேவர் சாதிவெறியர்களால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தாக்கப்படுவதும் தனித்த நிகழ்வல்ல; அதுவும் இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல்தான்!

எனவே, இந்த இருமுனை கத்திக்கு தேவேந்திர மக்கள் பலியாவதைத் தடுப்பதற்கு ஒரே வழி, இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக, புரட்சிகர சக்திகளோடு இணைந்து களமிறங்குவதே! அது ஒன்றுதான் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சாதி ஆதிக்க எதிர்ப்பு மரபின் இன்றைய வடிவம்.


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | வெற்றிவேல்செழியன்

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | பிஸ்மில்லா கான்

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | பிஸ்மில்லா கான்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ! | மீள்பதிவு | மாவோ 130

(1994-ம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரை)

மாவோ நூற்றாண்டு விழா !

மாமேதை மா சே துங் கிழக்கில் உதித்த இன்னொரு செங்கதிர். கீழைக்காற்று மேலைக்காற்றை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர். இவ்வாண்டில் சர்வதேச பாட்டாளி வர்க்கம் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

எளிய சீன விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாவோ பத்திரிகையாளனாய், கவிஞனாய், பொதுவுடைமை ஊழியனாய், இராணுவ வீரனாய் – தளபதியாய், அரசுத் தலைவனாய், தத்துவ ஆசிரியனாய், தேசிய – சர்வதேசிய தலைவனாய் உயர்ந்தவர். தத்துவம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்திலும் ஆழமான தடயங்களைப் பதித்த அவரது அசலான படைப்புகள் எதிரிகளாலும் போற்றப்படுபவை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய உலகப் பொதுவுடைமைப் பேராசான்களின் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெற்றவர், மாவோ. அவர் வழங்கிய மாவோ சிந்தனை காலத்தால் அழியாத சித்தாந்தமாக வைத்துப் போற்றப்படும். அதன் ஒளியில் பொதுவுடைமை லட்சியத்தை நோக்கி உறுதியோடு பயணத்தைத் தொடருவோமென இந்த நூற்றாண்டு விழாப்பொழுதில் சபதமேற்போம்.

மாவோ யேனான் உரை
படைப்புக் கலை: சில பிரச்சனைகள்

புரட்சிகர இலக்கியமும் கலையும் உண்மை வாழ்வினின்று வகை வகையான பாத்திரங்களைப் படைக்கின்றன; வரலாற்றை முன்னோக்கி உந்தித்தள்ள மக்களுக்கு உதவுகின்றன. கார்க்கியின் ‘தாய்’ நாவலின் பாவெல், அவனது தாய் ஆகிய இரு பாத்திரங்கள், லூசுன்னின் ஆ கியூ நாவலில் வரும் ஆ கியூ என்ற பாத்திரம் ஆகியவை இத்தகைய பாத்திரப் படைப்புகள்.

மா சே துங்
“கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!”

பசி, குளிர், பட்டினி, வறட்சி, சுரண்டல், அடக்குமுறைக் கொடுமை, தீண்டாமை, சாதிக்கொடுமை, மதவெறி – இந்த வடிவங்கள் இந்தியாவெங்கும் இருக்கின்றன; மக்கள் இதற்குள்ளேயே சிக்கி, போராடி, அன்றாட விஷயங்களாக அவற்றைப் பார்க்கிறார்கள்; ஆனால் எழுத்தாளர்களோ, கலைஞர்களோ அவ்வாறு மட்டும் பார்ப்பதில்லை; அவற்றைச் செறிவாக்கி, அவற்றுக்குள்ளே முரண்பாடுகளை, போராட்டங்களை எடுத்துக் காட்டி பொது மக்களை விழிப்புறச் செய்கிறார்கள்; சூழலை மாற்றியமைக்க ஒன்றுபட்டுப் போராடத் தூண்டும் படைப்புகளைச் செய்கிறார்கள்; இத்தகைய கலை இலக்கியப் பணி இல்லாவிடில் சமூகத்தை மாற்றும் பணி முழுமை அடையாது; குறைந்தபட்சம், அது விரைவாக முழுமையாகச் செயல்பட முடியாது.

சீன நிலைமைகளில் இதுபற்றிச் சிந்தித்த மாவோ கலாச்சாரப்படையின் அவசியத்தை வலியுறுத்தினார். யேனானின் செந்தளம் அமைந்ததும் இப்பிரச்சனைகளை விவாதிப்பதற்காக கலாச்சார முன்னணியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கூட்டப்பட்டார்கள்.

ஒருபுறம் ஜப்பானிய, ஏகாதிபத்தியம் சரமாரியாகக் குண்டுகளால் தாக்கி யேனானை அழித்துக் கொண்டிருந்தது; இன்னொருபுறம், சீன விடுதலைக்கான செந்தளமான யேனானில் கம்யூனிசப் போராளிகள் தங்கள் திட்டங்களைச் செயல் படுத்தினார்கள்; அந்த சூட்டுக்கிடையே தான் கலைஞர்கள் மத்தியில் தனது கருத்துக்களை மாவோ வைத்தார்; விவாதிக்கச் சொன்னார்.

புரட்சி, கலை இரண்டுக்கும் உள்ள உறவுகள் பற்றி பல பிரச்சினைகளை அவர் முன் வைத்தார். வர்க்க நிலைப்பாடு; குறிப்பான நிலைப்பாட்டிலிருந்து, குறிப்பான விஷயங்கள் பற்றி குறிப்பான கண்ணோட்டம்; யாருக்காக, எப்படிப் படைப்பது?; மார்க்சிய – லெனினிய சித்தாந்தக் கல்வி; சமுதாயக்கல்வி; சித்தாந்தப் போர் ஆயுதமாக விமர்சனத்துறை – என்று பல பகுதிகளாக ஆய்ந்து தன் விவாத உரையை நிகழ்த்தினார் மாவோ.

இருபத்திரண்டு நாட்களுக்கு விவாதம் நடந்தது; புரட்சிக் கலைஞர்கள், கோமிந்தாங் ஆட்சி மீது நம்பிக்கை இழந்து யேனானை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி அங்குவந்த கலைஞர்கள் ஆகியோர் தத்தம் கருத்துக்களை முன் வைத்து விவாதித்தார்கள். அதில் ஒருவர் வெல்ஸின் உலக அகராதியிலிருந்து கூட கலை இலக்கியம் என்பதற்குச் சொற்பொருள் கூறி விவாதித்தார்; விவாதங்களில் உடன் இருந்து குறிப்பெடுத்த மாவோ அவர்களிடம் புன்சிரிப்போடு சொன்னாரம்; ”கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!

இந்த விவாதத்தில் குறிப்பான ஒரு விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம். கலைஞன் படைக்கிறான்; அவ்வாறு படைக்கும் போது தன் விருப்பத்துக்கு ஏற்ப உயர்ந்த வடிவத்தில் படைப்பதா? அல்லது அதிகமாக மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனரஞ்சகமாகப் படைத்துப் பரவலாக்குவதா?

தமிழகத்தில் இந்தக் கேள்விகளை அடித்துப் புரட்டிப் போட்டு பிழிந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புரட்சிக் கலைஞர்களைத் தவிர மற்ற பலர் மிக விரிவான விவாதங்களை (ஒரு முடிவுக்கு வரக் கூடாதென்பதற்காகவே) நடத்தி வருகிறார்கள். சுருக்கமாக, அவர்களின் கருத்து; “கலை மிக உயர்ந்த வடிவத்தைப் பெறும் போதுதான் காலத்தால் அழியாத நிரந்தரத்துவத்தைப் பெறும்; மக்களுக்காக என்று சொல்லிப் பரவலாக்கினால், ஜனரஞ்சகப் படுத்தினால் படைப்பு கொச்சையாகி விடும்; நீர்த்துப் போய் விடும்”. இது சரியா? சரியல்ல, தவறு. மாவோவின் குறிப்புக்களின் ஒளியில் நமது தரப்பு வாதங்களை இனி பார்ப்போம்.

***

மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே… …”

அப்படியானால், தராதரம் – பரவலாக்குதல் இரண்டுக்கும் என்ன உறவு? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.

மாவோவின் சொற்களில் அவர்களுக்கு உடனே தேவை ‘பட்டாடைகளில் அதிக பூ வேலைப்பாடு’ அல்ல; ‘குளிர்காய விறகு’. ஆனால் மக்களுக்கு ஒரே தரத்தில் படைப்புகள் கொடுப்பது சரியா? சரியல்ல; அவர்கள் அடுத்தடுத்த உயர்ந்த தரங்களைக் கோருகிறார்கள்; அவர்களின் மட்டம் உயர்த்தப்பட வேண்டும். தரம் உயர்த்துவதைத் தீர்மானிப்பது பரவலாக்குதலே; அதேசமயம், பரவலாக்குகின்ற வேலைக்கு தரம் வழிகாட்டுகிறது.

சீனப் புரட்சி அனுபவத்திலிருந்து பார்த்தால், நேரடியாகவும் தரமான படைப்புகள் அளிக்கப்பட்டன; மறைமுகமாகவும் அத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களுக்கு உதவி செய்யும், கற்றுக் கொடுக்கும் முன்னணியாளர்களுக்கு தரமான கலை, இலக்கியம் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களின் ஊக்கமான முன்முயற்சியோடு மக்களுக்கு தரத்தை ஊட்டினார்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
“உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.”

ந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு தமிழக நிலைமைக்கேற்ப இப்பிரச்சனையை நாம் அணுகுகிறோம். இதற்கான பிரச்சாரக் கருவியாக, ‘புதிய கலாச்சாரம்’ ஏடு வெகு ஜனக் கலாசார ஏடாக நடத்தப்படுகிறது; இது கலை இலக்கிய பண்டிதர்களுக்காக, கலை இலக்கிய ஆய்வுகள் நடத்தும் பத்திரிகை அல்ல; ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று விடும் நோக்கமுடையதும் அல்ல. இதனாலேயே ‘புதிய கலாச்சாரம்’ ஒரு இலக்கிய ஏடு அல்ல என்று விமர்சிப்பவர்கள் உண்டு; இலக்கிய ஏடு என்றால் ஆழமான விஷயங்களைப் போடவேண்டும் என்கிறார்கள்.

‘புதிய கலாச்சாரம்’ ஏட்டின் வரம்பை அவ்வாறு குறுக்க முடியாது; ஒரு ‘கணையாழி’ பத்திரிகை போல குறைந்த பட்ச வாசகர்களுக்காக நடத்த முடியாது; லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைவது எப்படி என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர, அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது; இப்படிப்பட்ட ‘இலக்கியத் தவம்’ ‘இலக்கியச் சேவை’ தேவைதானா, அவசியம்தானா என்பதை சமூக அக்கறை கொண்ட கலைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

”அதிகமான மக்கள் மந்தைகள்; அது மலிவான கலாச்சாரத்தையே விரும்புகிறது; குறைந்த அளவு மக்கள் மட்டுமே புத்திசாலிகள், அவர்கள் மட்டுமே தரத்தை விரும்புகிறார்கள்” என்ற வாதத்தை அந்தப் புனித, சுத்த இலக்கியவாதிகள் வைக்கிறார்கள்.

மக்கள் மந்தைகள் அல்லர்; முட்டாள்கள் அல்லர்; தரமில்லாத மூடர்கள் அல்லர்; அனைவருக்கும் விளங்கும்படியான எடுத்துக்காட்டாக சந்தைச் சினிமாக்களின் வெற்றி, தோல்வியை அலசிப் பார்க்கலாம்.

மிக மோசமான மசாலா நெடியடிக்கும் சகலகலா வல்லவன், சின்ன தம்பி, சின்ன ஜமீன், அண்ணாமலை போன்ற படங்கள் வெற்றி அடைகின்றன; ஆபாச ஜோக்குகள், ஆபாச காட்சிகள், மசாலாக்கள் இல்லாத ஆனால் இடைத் தரப்படம் (Off-beat) என்று சொல்லப்படும் வீடு, நிர்மால்யம், மாபூமி, அங்குர், நிஷாந்த், அர்த் – சத்யா போன்ற படங்களையும் (இதில் எல்லாப் படங்களின் கருத்துக்களோடு நாம் ஒத்துப் போகாவிட்டாலும்) கனமான கருத்து, வடிவச் சிறப்பு, சொல்லப்படும் முறை போன்ற தரத்துக்காக மக்கள் வரவேற்றுப் பார்க்கிறார்கள்.

மசாலாப்படம் வெற்றிகரமாக ஓடும் போதெல்லாம் “மக்களின் தரம் மோசம், ‘இதுகளை’ மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்று பலர் சொல்கிறார்கள்; அதே மக்கள் வேறு வகைப் படங்களை வெற்றி பெறச் செய்தால் மக்களிடம் நல்ல கலையைப் புரிந்து கொள்ளும் குணம் இருப்பதாக அதே நபர்கள் சொல்கிறார்கள். இப்படி ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தாவுகின்ற இவர்களின் விமர்சனப் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது.

மோசமான படம் வெற்றி அடையும்போது கீழ்த்தரமான கலை வடிவம், கருத்து இரண்டின் ரசனைக்கும், தீனிபோடுவதை நாம் மறுக்கவில்லை; ஆனால் வேறு வகைப் படங்களை அவர்கள் வெற்றி பெற வைக்கும் அதே மக்களிடம் தரத்துக்கான வாய்ப்புகள் உள்ளன; அவர்கள் தங்கள் தரம் வளர வேண்டும், உயர வேண்டும் என்ற தாகத்தோடு, பசியோடுதான் இருக்கிறார்கள். லெனின் மொழியில் சொல்வதானால், “உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.

இவர்கள் கலை மக்களுக்காக அல்ல, கலை கலைக்காகவே என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனிதன் வீட்டைக் கட்டுகிறான்; அது வீட்டுக்காகவே, குடியிருப்பதற்காக அல்ல என்று சொல்லி ஒருவர் மனம் போன போக்கில் கட்டினால் எப்படிப் பயனற்றதாகப் போகுமோ அதுபோலவேதான் கலையும். இதே கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் “2000 பிரதிகளுக்குமேல் ஒரு பத்திரிகை நடத்தப்படுமானால் அது இலக்கியப் பத்திரிகையே அல்ல” என்று ஒரு வரம்பையே அறிவித்தார். வரம்புதான் போட்டாரே, எதற்காக 2000 என்றுதான் புரியவில்லை!

இந்த தந்தக் கோபுரவாதிகள் எப்போதுமே கீழே இறங்குவதில்லை; அதனாலேயே அவர்களுக்கு மக்களைப்பற்றித் தெரியாது; மக்களின் சமூக, கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றித் தெரியாது; மக்கள் என்ன தரத்தை விரும்புகிறார்கள் – அதன் பிரச்சனை என்ன என்றும் அவர்களுக்குப் புரியாது. (சரியாகச் சொல்வதானால், ஆபாச – மசாலாப் படங்களை உயர்ந்த தரத்தில் கொண்டு வருவதையே இவர்கள் விரும்புகிறார்கள்; எதிர்பார்க்கிறார்கள்; அதையே கலைப்படம் என்று போற்றவும் செய்கிறார்கள்.) மக்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?.

இதற்கு என்ன காரணம்? இவர்கள் தங்கள் தகுதி, மதிப்பு பற்றி எல்லாக் காலத்துக்கும், கேள்விக்கிடமற்ற, நிலையான உறுதியான இடம் என்று ஒன்றை தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள்; மக்களின் தரம் சிறுமையுடையது என்ற கண்ணோட்டம் நம் நாட்டைப் பொறுத்த அளவில் மேல் வர்க்க, மேட்டுக்குடி, மேல்சாதிக் கண்ணோட்டமே. மற்ற மக்களைத் தரம் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதால்தான் அவர்களுக்குக் கலைத் தரம் தேவையில்லை, அவர்கள் வெந்ததைத் தின்று வந்ததை வாழ்ந்தால் போதும் என்று இவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

எனவே, கலைக்கு ஒரு தரம் வேண்டும் என்று மேட்டுக்குடிக் கலைஞர்கள் சொல்வது வேறு; மாவோ சொல்வது வேறு. இரண்டும் எதிர் எதிர்ப் பாதைகள். மக்களின் உணர்வை, ரசனையை உயர்த்த வேண்டும் என்ற அக்கறை சமூக லட்சியம் உள்ளவர்களுக்குத்தான்; இவர்கள் மாவோ சொல்லும் முறையில் சமூகத்தை அறியும் வடிவமாக, யதார்த்தத்தை அளவிடும் கருவியாகக் கலை இலக்கியத்தைக் கருதுகிறார்கள்; இவர்களுக்குத் திட்டவட்டமான லட்சியம் உண்டு; அதனால், யதார்த்தத்தின் துணுக்குகளை, துகள்களை வைத்திருக்கும் எதிர்மறையான சந்தை இலக்கியத்திலிருந்து ஆய்வு செய்து கற்றுக் கொள்கிறார்கள்; அதேபோல, யதார்த்தத்திலிருந்து முற்றிலும் அறுத்துக் கொள்கிற மேட்டுக்குடிக் காரர்களிடமிருந்து இவர்களும் விலகியே நிற்கிறார்கள். இது நியாயம்தானே?

***

சந்தைச் சினிமா இயக்குனர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் காமிராவில் கண்ணைப் பொருந்தும் போதே அவரெதிரே பணம் போட்டவரின் கடுகடுவென்ற முகம் தெரிகிறது; படம் கிராமம் அல்லது நகரத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவினரை என்ன வேண்டும் என்ற சிந்தனையோடு அவர் இயங்குவதால் எதிரே அவர்கள் முகம் நிழலாகத் தெரிகிறது; இவற்றுக்கு ஏற்பவும், தன் வர்க்க வாழ்க்கையிலிருந்து உருவாக்கிக் கொண்ட கருத்து அல்லது மழுங்கிப்போன முட்டாள்தனம் ஆகியவற்றைக் கலந்தும் அவர் படம் பண்ணுகிறார்; கொஞ்சமாகவோ, கொசுறாகவோ கிராமப்புறத்து அப்பாவிக் கூலியாள், பண்ணையடிமை, ஒடுக்கப்படும் கிராமத்து உழைப்பாளிப் பெண் / குடும்பம், நாட்டுப்புறச் சொலவடைகள், கிராமப் புற விடலைகள், ரவுடிகள், கோமாளிகள், நாடோடிப் பாத்திரங்கள் என்று யதார்த்தத் துணுக்குகள் தலை நீட்டி விடுகின்றன. இது மசாலா சினிமா இயக்குநரின் தொழில்முறை. யாருக்காக என்பதில் அவர்களுக்கு ஒரு கண்ணோட்டம் உள்ளது – இது எதிர்மறை எடுத்துக்காட்டு.

லூசுன்
பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் லூசுன்.

சீனப்புரட்சி எழுத்தாளர் லூசுன் தனது அனுபவமாகச் சொன்னதை உதாரணம் கொடுக்கலாம். கடுமையான அடக்குமுறை நிலவிய காலகட்டத்தில் தன் வீடு தேடி வந்து கதைப் புத்தகம் கேட்டு வாங்க வந்த இளைஞன் தன் இதயத்தின் அருகில் இருந்த உள் பாக்கெட்டில் வியர்வை ஈரத்தில் நனைந்த பணத் தாளை எடுத்துக் கொடுத்ததை நினைவு கூறும் லூசுன், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் – இது நேர்மறை எடுத்துக்காட்டு.

யதார்த்தத் துணுக்கு சிதறியிருக்கும் சந்தைக் கலையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முனையலாம்; யதார்த்தத்தை முழுமையாகக் கொடுக்கும் லூசுன் போன்ற வரை முன்னோடிகளாகவே கொள்ளலாம். அவர்களிடம் யாருக்குப் படைக்கிறோம் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. முதலாமவருக்கு எதிர்மறைத் தேவை; லூசுனுக்கோ நேர்மறைத் தேவை இருந்தது. இவை தேவையாக இராத மேட்டுக்குடிக் கலைஞர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

மேட்டுக்குடிக் கலைஞர்கள், பல சமூக இயக்கங்களின் கலை, கலாச்சாரப் பங்களிப்பைக் கூட தரம் தாழ்ந்ததென்றே எள்ளி நகையாடுகிறார்கள். அண்மையில் சாகித்திய அகாடமியினர் “அண்ணா எழுதியது இலக்கியமே அல்ல” என்ற முடிவு எடுத்திருக்கிறார்கள்.

தி.மு.க. கலைஞர்கள் மத்தியில் வர்க்க உள்ளடக்கம் காரணமாக, நிலப்பிரபுத்துவ, குட்டி முதலாளித்துவ பிழைப்புவாதக் கண்ணோட்டம் காரணமாக வக்கிர மனோபவம் இருந்தது. இது மறுக்க முடியாத விஷயம். ஆனால் அன்று அவர்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்காமல் உயர்ந்த தரம் பற்றி மட்டுமே சிந்திதிருந்தால் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்திருக்க முடியாது.

அவர்களின் சீர்திருத்த இயக்கத்தின் பலனை அனுபவித்து கல்வி, அறிவு, கலை நுணுக்கம் பெற்றவர்கள் இன்று பார்ப்பனர்களின் கண்ணோட்டத்துக்குத் தாவிவிட்டார்கள். அவ்வாறு ‘தரமில்லாத’ அந்த இயக்கம் நடந்திராவிடில் இவர்கள் இன்னும் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

எனவே, தொகுப்பாக, மக்களைச் சென்றடையும் எந்த ஒரு சரியான கலை இலக்கியமும் தரம் பற்றிய பிரச்சனையில் மாவோ சொல்வதுபோல இயங்கியல் கண்ணோட்டத்தையே வைக்க முடியும். மக்களின் தேவையை ஒட்டியே தரம் வளர்க்கப் பட வேண்டும். ”புரட்சிகரமான உள்ளடக்கம், சாத்தியமான அதி உயர்ந்த அளவு நிறைவடைந்த கலையியல் வடிவம் – இரண்டினது ஒற்றுமையை நாம் கோருகின்றோம்” என்றார், மாவோ தனது உரையில்.

***

யாருக்காக, எப்படி எழுத வேண்டும் என்ற நிலைப்பாடு – கண்ணோட்டம் ஆகிய தெளிவுகள் மக்கள் கலைஞனுக்கு அவசியம் தேவை. அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கே மார்க்சிய – லெனினியக் கல்வியும், சமுதாயக் கல்வியும் தேவை. இந்த அறிவுத் தேட்டம் இருந்தால்தான் கடந்து போன காலத்திலிருந்து எவற்றைக் கற்பது, எப்படிக் கற்பது என்ற தெளிவு கிடைக்கும்; அதே போல நிகழ் கால கலாச்சாரப் பிரச்சனைகள் மீது சரியான விமர்சனமும் தெளிவாக வைக்க முடியும்.

மேலே பார்த்த விவாதம் சுட்டிக் காட்டும் இன்னொரு சுவாரசியமான விஷயம் சந்தை இலக்கியம், கலை கலைக்காக எனும் உயர்குடி இலக்கியம் இரண்டும் ஆளும் வர்க்க கலையின் இரு தோற்றங்களே; இரண்டு முகங்களே. 99 சதம் மக்களை சந்தை இலக்கியம் என்ற கொக்கியைப் போட்டு இழுத்து மாட்டிவிட்டு, 1 சதம் மக்களுக்கு மட்டும் போலித்தனமான கலைரசனை வித்தை காட்டுகிறார்கள். இந்த சகாப்தத்தின் முத்திரைச் சொல்: “சந்தையே கடவுள்!” இந்தக் கடவுளுக்கே 100 சதம் மக்களும் அடிமை என்று சந்தை விளம்பரம் கதறுகிறது.

இந்த சந்தைக் கலாச்சாரத்திலிருந்து உடனே மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அரூபமான, காலங்கடந்த, ‘காலத்தால் வெல்ல முடியாத’, அழிவற்ற, நிரந்தரமான அரசியல் மதிப்பீடுகளை வைத்து அவற்றை நாம் முறியடிக்க முடியுமா? முடியாது. அதை வீழ்த்தாமல் நல்ல புதிய அழகியல் ரசனையை உருவாக்கி வளர்ப்பது சாத்தியமில்லை; அதை வீழ்த்தவில்லை எனில், கலைக்கே வழியில்லை; கலை அழிந்து போகும். கலை இருந்தால்தானே தரத்தைப் பற்றியும், தரத்தை உயர்த்துவதைப்பற்றியும் பேச முடியும். புரட்சிக் கலாச்சார இயக்கம் அதற்கு என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

இந்திய, தமிழ்ச் சூழலில் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவமே சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த மனோபாவத்தை வெட்டி வீழ்த்த என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

– இராசவேல்
_____________________________
புதிய கலாச்சாரம் ஜனவரி 1994
_____________________________

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | ராஜா

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | ராஜா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் – RSS, BJPயை தடை செய்!

26.12.2023

தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீதும், தோழர்கள் மீதும்
தாக்குதல் நடத்திய காவி குண்டர்களை கைது செய்!

தாக்குதலுக்கு காரணமான RSS, BJPயை தடை செய்!

மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தூத்துக்குடியில் APC கல்லூரியின் எதிர்புறம் உள்ள பெரியார் மையத்தில் பெரியார் அமைக்கப்பட்ட தட்டி போர்டை புகார் வந்ததின் அடிப்படையில் எடுக்கச் சொல்லி சிப்காட் காவல் ஆய்வாளர் கடந்த 03.12.2023 அன்று கூறியதால் சில போர்டுகளை பெரியார் மையத் தோழர்கள் உள்ளே வைத்தனர்.

அதன்பின் வன்மம் தலைக்கேறி நேற்று (25.12.2023) மாலை 6.15 மணிக்கு மையத்தில் புகுந்த இரு காவி குண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் வாசகம் அமைக்கப்பட்ட தட்டி போர்டை கிழித்து கொடிகளை கீழே சாய்த்தனர். பெஞ்சுகளை சேதப்படுத்தினர். ‘மகளை கல்யாணம் பண்ணவன் பேர்ல என்னல மையம் வேண்டியிருக்கு. ஒழுங்கு மரியாதை ஊரைப் பாக்க ஓடிரு. நடக்கிறதே வேற’ என்று அங்கு காப்பாளராக இருந்த போஸ் என்கிற தோழரையும் மிரட்டிவிட்டு சென்றனர்.

படிக்க : தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை

அதன்பின் பெரியார் மையத் தோழர்கள் தகவல் தெரிந்து வந்தனர். போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இரு போலீஸார் இரவுப் பாதுகாப்புக்காக போடப்பட்டனர்.

இன்று (26.12.2023) பெரியார் மையத் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே போலீசு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 8 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவிக் கும்பல் கையில் அரிவாளுடன் மையத்திற்குள் நுழைந்து காப்பாளர் போஸ், தோழர் செல்வராஜ் ஆகியோரை தாக்கியது. இதில் தோழர் செல்வராஜுக்கு பின்மண்டையில் காயம் ஏற்பட்டது. இரு தோழர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்கள்.

சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டு பு.இ.மு, த.பெ.தி.க, மக்கள் அதிகாரம், ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பெரியார் மையம் சென்றோம். போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால், அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பெரியார் வாசகம் எழுதியிருந்த தட்டி போர்டை உள்ளே கொண்டு போய் வைக்கச் சொல்லி வலியுறுத்தினார். இதை தோழர்கள் மறுத்தனர்.

மேலும், போலீஸ் வேறு அமைப்பினர் யாரும் வரக்கூடாது என்று கூறியது. இதற்கு தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் பின்வாங்கியது. பெரியார் மையத்தின் அருகில் அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரிக்காமல், குற்றவாளிகளை கைது செய்யாமல் தோழர்களை கலைந்து போகச் சொல்வதிலும், பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதிலுமே போலீஸ் குறியாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில், தமிழ்நாட்டை சுற்றி வளைக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல். ஆனால், அதன் தொண்டையில் மாட்டிய முள்ளாக தமிழ்நாட்டில் பெரியாரும், அவரது பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்களும் இருக்கிறது. அதை ஒழித்துக் கட்டும் முயற்சியில் பாசிசக் கும்பல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதற்குத் தோதாக அரசு நிர்வாத்தை தங்களது செயல்பாட்டிற்காக வளைத்துப்போடுகிறது. தொடர்ச்சியாக கலவரங்களையும், தாக்குதல்ளையும் நடத்தி வருகிறது.

படிக்க : ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்து, இம்மண்ணிலிருந்து பாசிச சக்திகளை துடைத்தெறியாமல் அதன் பாசிச நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே, புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலை தடை செய்ய உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி களத்தில் இறங்கிப் போராட வேண்டிய தருணம் இது.

  • தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவி குண்டர்களை கைது செய்!
  • தாக்குதலுக்கு காரணமான RSS, BJPயை தடை செய்!


செல்வம்
மண்டலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9597494038.

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | துணைவேந்தன்

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | துணைவேந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை

தீர்க்கப்படவேண்டிய வழக்கு!

விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுறுவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை

கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்

கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!

தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைத்தூரம் வரை துவண்டே கிடந்தது

தோழர்களே,
அந்த துயர நாள் உங்களுக்கு தெரியுமா?
கைப்பேசியில் கதைப்பேசி
ஊர்கடக்கும் காரியமல்ல
சொல்லில் சுருக்கிட முடியாத

வரலாற்று சுவடு அது

தன்மீது தினிக்கும்
ஆண்டையின் உத்தரவை முடிக்க
கண் சொருகும் நாளிகை நெருங்கிடும்
உறை நெல் குத்தி
உமியை நீக்கி
ஒருபிடி சோறு உண்டு உறங்கிட
இரண்டொரு மணிகள் தான் கிடைக்கும்
மணையில் அசதியை போக்க
அசந்திட முடியாது

புலரும் முன்னே கேட்கும்
கொம்போலியின் சத்தம்
தூக்கத்தை கலைத்து

புஞ்சைக்கும் நஞ்சைக்கும் விர்ட்டும்

நீரா தண்ணி வாயிலிட்டு
வாய்க்கால் தண்ணியை முகத்தில் வாரியிரைத்து
ஊதும் குளிரில் நடுங்கும் தேகத்தை காக்க
நைந்துபோன சனல்சாக்கை உடலில் தைக்க
நிலவெளியில் அடியெடுத்து வைக்கும் கால்கள்
வளம்கொழிக்க வயல்வெளியில் விதை தெளிக்கும்
நாற்று பறிக்கும் கதிர் அறுக்கும்
நெல் அடிக்கும் நெடுக்க மூட்டை அடுக்கும்

பகல் போயும் நிமிராமல் உழைக்கும்
திண்ணை சுகம் தெரியாத பண்ணையடிமைகள்!

பெண்ணாளோ பால் கறக்கும் முன்பே
தெருவாசல் கூட்டி
பசுசானம் தெளித்து கொள்ளை வாசல் கூட்டி
கொட்டிலை வழித்து
குதிர் மெழுகி
குணிந்து கூப்பிட்டால்
குண்டு கலையத்தில் இரும்பு பித்தாளை மரக்காலில்
உண்டு கஞ்சி இல்லாமல் போனாலும்

சிண்டு பண்ணையாரின் சீண்டும் பார்வைக்கு
இணங்க வேண்டும்
முழங்கால் தெரிய முந்தானை சொருக வேண்டும்

நல்லது கெட்டதுக்கு நகர முடியாது
நாத்து நட்டாலும் களையெடுத்தாலும்
கறுக்காய் புடைத்தாலும்

கரி இருள் சூளும் போது தான்
கரையேற வேண்டும்

செம்பட்டை தலை சிறுசுகளோ
அம்மனத்தோடு அலைந்து திரியும்
பண்ணையின் ஆடு, மாடு பொழுதும் மேய்க்கும்
புல்லறுத்து போடும்
பூராண், பாம்பு புலங்கும்
வைக்கோல் போரில் ஓடி களைந்து உறங்கும்

இரவானால் ஏராளம் குழந்தையோடு விளையாடும்
குட்டி நிலாக்களின் கொஞ்சுதல்
கொஞ்ச நேரம் தான்
குடிசையில் கூரை கிடையாது
வெயில், பனியை தடுக்க
சுரையோ, பூசணி கொடியோ குறுக்க நெறுக்க படர்ந்திருக்கும்

காயோ கனியோ பூத்தால்
கரிசட்டிக்கு வராது
பண்ணையின் வாசலுக்கு தான் போக வேண்டும்
நண்டோ நத்தையோ தான் நாவுக்கு கிடைக்கும்

விடலை பருவம் அடைந்தால்
வீட்டைவிட்டு செல்ல கூடாது
தீட்டுப்பட்டு விடும் என தெருவார்கள் ஏசுவதுண்டு

ஏதோ பண்ணையிலிருந்து
வீசும் துணிதான் உடுத்த வேண்டும்
சடங்கு முடிக்க வேண்டும்
மணம் முடிந்தாலோ பண்ணையாரிடம் ஆசி வாங்க வேண்டும்
குடிசையில் நல்லது கூடாது
ஆண்டையின் ஆணை இல்லாமல் எதுவும் அசையாது

உடல் விரும்பாமல் உழவுக்கு மறுத்தாலோ
சவுக்கடியில் தப்ப முடியாது
சாணிப்பாலை துப்ப முடியாது
வரிவிழ அடிவிழும்
வயிறு நிறைய சாணிக்கரைசல் குடிக்க வேண்டும்
கப்பிகல்லில் மண்டியிட்டு செல்ல வேண்டும்
அப்பிய நெருஞ்சி முல்லில் உருண்டு புரள வேண்டும்
ஐயோ என்று சொல்ல கூடாது
ஐயா என்று தான் சொல்ல வேண்டும்

முதலியார், மண்றாடியார், தேசிகர்,
வாண்டையார், நாயக்கர் என கொடிய மிருகங்கள்
ஏவிய கொடிய செயல்கள் ஏராளம்
அத்தனை மிருகமும் நிரள செய்தது
43-ல் நெடுங்காடியில் அடியெடுத்து வைத்த
செங்கொடி இயக்கம்!
தென்கரை மடாதிபதிகளின் எச்சரிக்கை எடுத்தெரிந்து
விவசாயிகளிடம் சேர்த்தது
அரை லிட்டர் கூலி உயர்வோடு
அறுவடை செய்து செந்நெல்லை

குருதி குடிக்கவே வாழும் ஓநாய்கள்
உயிரையும் உடமையும் காக்க
நெல் உற்பத்தியாளர் சங்கமென்று
தஞ்சையில் உருவெடுத்தது

நாகை தலைமை
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ணன் நாயக்கருக்கு வரவே
தாழ்த்தப்பட்டோரை தாக்குவதும்
சேரிகளை சூறையாடுவதும்
குடிசைகளை கொளுத்துவதுமாய் இருந்தது

25.12.1968 அன்றும் அப்படிதான்
கோழை நறியின் சாதிவெறியும் சதிவெறியும்
ஈட்டி எரியெண்ணெய்

அரிவாள், கத்தி, சுளுக்கி, என
ஆட்களுடன் கீழ் வெண்மணியை சூழ்ந்தது

காலை பொழுதுக்காக கண் அயர்ந்தவர்களின் தூக்கமும்
துடித்து அழுதது

நடுராத்திரியில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல்
நாளாபுறமும் ஓடிய கூலி விவசாயிகளை
வெட்டி கொழுத்துங்கடா என்றது
ஆண்டையின் ஆணை
குத்தி குதற செய்த கூலிப்படை கொடூர தாக்குதலில்
விட்டுவிடென கெஞ்சியவர்களின்
கையறு நிலையின் கவசத்தையும்
சுட்டு வீழ்த்தியது காலி கூட்டம்

ஒருசொட்டு சுவாசத்திற்காக
ராமையாவின் குடிசைக்குள் புகுந்த
44 உயிரை தாழிட்டு தீமூட்டியது

தேகம் தீயில் சுடசுட
விளைச்சலில் தூக்கியெறிந்த
கைக்குழந்தையும் விடவில்லை
சாதி தீ திங்கதிங்க
உரிமை குரல் ஒவ்வொன்றும்
ஊமை குரலாய் ஓய்ந்தது

தோழர்களே
வெந்துதனிந்த கீழ வெண்மணி
நம்மிடம் கேட்பது ஒன்றை மட்டும்தான்
அன்று ஆண்டையால் ஒரு கிராமம்
இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தால்
பல கிராம மக்கள்
மண் காய்ந்து அதன் மனம் காய்ந்து
மரணமடைவதை காண முடியும்

ஆண்டை சாதிகளோ
அதே ரத்த வெறியோடு அலைகிறது
பிறர் சாதியினர் மீது
அன்றாடம் தாக்குதல்
கொலை, கொள்ளை, பறிமுதல் செய்கிறது

வீர மண்ணில்
செங்கொடி பறக்குமா?
சிவப்பதிகாரம் பற்றி படறுமா?
அந்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை நிலைக்குலைய வைப்போம்!
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவோம்!


தோழர் அன்பு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அடங்காத வெண்மணிகள்! | தோழர் தீரன்

அடங்காத வெண்மணிகள்! | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நூல்….! | கவிதை

brahminism-in-india

நூல்….!

கருவறைக்குள் ஒரு சாதி
கழிவு அள்ள ஒரு சாதி
சாதிக்கொரு நீதியென்று
நூல் வகுத்த நூல்

அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும்
எல்லைக் கோடு எழுதிய நூல்

அப்போது தடை
யாவரும் படிக்க
இப்போது
மந்திரங்கள் படித்தாலும்
தந்திரமாய் தடைபோடும் நூல்

ஏகலைவன்
சம்பூகன்
நந்தன்
இப்போது நமக்குமென
தகுதியெனும்
நீட்டை நீட்டிய நூல்

உண்மைகளைத் திருடி
கதையென அளந்த நூல்
கதைகளை எழுதி
உண்மையென ஒப்பாரி வைக்கும் நூல்

அதிகாரம் அகங்காரம்
ஆதிக்கம் ஆணவத்திற்கு
அரணாகி நிற்கும் நூல்

எளிதில் அறுபடும்
ஆனாலும் அந்நூலுக்கு
அவ்வளவு அதிகாரமாம்

நூலால் கட்டுண்டு
நூலுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறது
எல்லா மனங்களும்

அறிவால் அறுத்தெறிவது
நிச்சயமாக சாத்தியமாகும்..
நிச்சயமாக
அறிவால் அறிவியலால்
அரசியல் அதிகாரத்தால் அந்நூலை அறுத்தெறியலாம்…

நூற்பல கற்று
பலநூறென இணைந்து
முற்றிலும் அழித்தொழிப்போம்
நூல் மனப்பான்மையை
பல்லாயிரம் மனங்களிலிருந்து….


ஏகலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில்

“அய்யோ எரியுதே! யாராவது காப்பாத்துங்களேன்! அம்மா-அப்பா” என்ற அலறல்கள் செவிப்பறையைக் கிழிக்கின்றன. எரியும் குடிசைக்குள்ளிருந்து நீயாவது பொழைச்சுக்கோ என்று தன் குழந்தையை வெளியில் தூக்கிப் போடுகிறாள் அந்தத் தாய் எரிந்து கொண்டே. அதை மீண்டும் தூக்கி நெருப்பில் போடுகிறான் கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாரின் கூலிப்படைத் தலைவன் . “கூலியாடா வேண்டும்? செவப்புக் கொடியாத் தூக்குறீங்க? செத்துத் தொலைங்கடா!” என்கிறான். கீழ்வெண்மணியில் நடந்த இந்த படுகொலை 1968 டிசம்பர் 25 அன்று நடந்தது.

சூரியன் எழுவதற்கு முன் எழுந்து மறைந்த பின்னரும்கூட வேலை ஓயாது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும். நிலமெல்லாம் பண்ணையாருக்குச் சொந்தம். ஓய்வெடுக்க நேரமில்லை. கூலி கேட்கத் துணிவில்லை, மீறிக் கேட்டால் சாணிப்பாலும், சவுக்கடியும்தான் மிஞ்சும். சவுக்கடியால் தெறித்த ரத்தம்பட்டுக் களிமண்ணும் செம்மண்ணாகும்.

படிக்க : வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

இந்த அநியாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இருள் நிறைந்த தங்களின் வாழ்வை மீட்க வந்த கம்யூனிச இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் மக்கள். தம் குருதி தோய்ந்த செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். “உழுபவனுக்கே நிலம்; உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கம் பண்ணையார்களை நடுங்கச் செய்கிறது.

அரை லிட்டர் நெல்கூலி உயர்வு கேட்டு கீழ்வெண்மணியில் தொடங்கியது போராட்டம். வெளியூர்காரர்களை வைத்து அறுவடை செய்யலாம் என்ற ஆண்டைகளின் கனவில் மண்ணள்ளி போட்டார்கள் மக்கள். வெளியூர் ஆட்கள் வந்த வண்டிகளை மறித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். பண்ணையாரின் அடியாட்கள் மக்களைத் தாக்க, செங்கொடிகள் மக்களைக் காக்கின்றன. அடியாட்களை விரட்டுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் செங்கொடிகள் ஆண்டைகளை அச்சுறுத்துகின்றன.

பண்ணையாளர்களின் சங்கமான நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவனான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு சிவப்புக் கொடியை இறக்கிவிட்டுத் தங்களின் மஞ்சள் கொடியை ஏற்றினால் கேட்ட கூலியைத் தருவதாகக் கூறி, இல்லையேல் கீழ்வெண்மணி எரிக்கப்படும் என்று மேடைகளிக் கொக்கரித்தான். போலீசும், அரசும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தன. இனியும் இந்த அரசை நம்பிப் பயனில்லை. கீழ்வெண்மணியை செங்கொடிகள் பாதுகாத்தன. அதுவரை அடி வாங்கிய உழைக்கும் மக்கள் திருப்பியடிக்க ஆரம்பித்தார்கள்.

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

விவசாயத் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டார்கள் – இது நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்.

இரு கிராம மக்களிடையே நடந்த சண்டை – இது தமிழக அரசு. ஒரு நிலக்கிழார் தானே எரித்துக் கொலை செய்திருக்க மாட்டார் – கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு.

“உயிரை விட்டாலும் செங்கொடியை விடேன்” என்று உரிமைகளுக்காகப் போராடிய கீழ்வெண்மணியின் மரபுதான் நம் மரபு. வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்து இருக்கிற இந்த சமூகத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடாமல் ஆதிக்க சாதிவெறிக்கு, பண்ணை கொடுமைக்குக் கல்லறை கட்டமுடியாது என்பதைக் கீழ்வெண்மணி நமக்குக் கற்றுத் தருகிறது.

1980 அதிகாலையில் ஒரு நாள்…

கீழ்வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுத்தூணுக்கு அருகே 48 துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல். இது கீழ்வெண்மணி மக்களின்-நக்சல்பாரிகளின் தீர்ப்பு.

படிக்க : நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை

வர்க்க-சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அரசு எந்திரமானது உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

பண்ணைக்கு உழைத்துக் கொடுத்த மக்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கிய, ஆதிக்க சாதிவெறி பிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போன்றவர்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும், ஆதிக்க சாதிக் கட்சிகளிலும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற மதவெறி அமைப்புகளிலும் நிரம்பி வழிகிறார்கள். நம்மிடமோ கீழ்வெண்மணியின் நெருப்பு தகித்துக் கொண்டிருக்கிறது.

– மருது
புதிய மாணவன், டிசம்பர் 2015

உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்கள்! | வீடியோ

உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்கள்! – ஓர் தொகுப்பு

காசாவில் இஸ்ரேல் அரசு மிகப்பெரிய இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. அங்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 20,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளின் மீது குண்டுவீசுவது, பொதுமக்கள் மீது நேரடி துப்பாக்கிச்சூடு நடத்துவது என உலகிலேயே மிக பயங்கரமாக இரத்தவெறி பிடித்த மிருகங்கள் போல் பாலஸ்தீன மக்களை வேட்டையாடி கொன்று குவித்து வருகிறது கொலைகார நெதன்யாகு அரச படை.

”பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை உடனே நிறுத்து” என உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் பற்றி படர்ந்து வருகிறது. அதில் சில போராட்டங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

கலிபோர்னியா, அமெரிக்கா

000

000

நியூயார்க், அமெரிக்கா

000

000

மிசௌரி, அமெரிக்கா

000

கனடா

000

ஆஸ்திரேலியா

000

இஸ்ரேல்

000

லண்டன்

000

வேல்ஸ், ஐரோப்பிய ஒன்றியம்

000

ஸ்காட்லாந்து

000

ஜப்பான்

 

வினவு தொகுப்பு

பெரியார் 50-வது நினைவு நாள்: தமிழ்நாடே, உன் போர்வாளை கூர் தீட்டு!

பெரியார் 50-வது நினைவு நாள்

பார்ப்பனியம் இன்று காவி-கார்ப்பரேட் பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழ்நாட்டிற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது. இது ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்.

தமிழ்நாடே, உன் போர்வாளை கூர் தீட்டு!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பெரியார் 50-வது நினைவு தினம் | சனாதனம் ஒழிப்போம் என முழங்குவோம்!

பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்த தந்தை பெரியார் அவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (24.12.23). ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பாசிசத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கார்ப்பரேட் சேவையுடன் இணைந்த “இந்துராஷ்டிரத்தை” நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் ஒரு அங்கமான பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களை உயர்த்திப்பிடிப்போம். காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை முறியடிப்போம்; பார்ப்பனியம் – சனாதனம் – ஒழிப்போம்!

கடந்த 2023 அக்டோபர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “சனாதனம் ஒழிப்போம்” என்ற சிறப்புக்கட்டுரையை தற்போது வாசகர்களுக்கு மீள்பதிவு செய்கிறோம்.

– வினவு

***

சனாதனம் ஒழிப்போம்!
ஓட்டம் பிடித்தப் பார்ப்பன கும்பல்
தமிழ்நாடு மாடலை தேசியமயமாக்குவோம்!

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்”. கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் இவை.

ஒரு மாதம் கடந்தும் தற்போதுவரை பத்திரிகைகளில் இதுதான் பேசுபொருளாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், திரைப்பட இயக்குநர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், காவிக் கும்பல் உதயநிதியின் சனாதான எதிர்ப்பு பேச்சை இந்துமக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சாக திரித்துப் பிரச்சாரம் செய்தது. வட இந்தியாவில் ஓரிரு இடங்களில் உதயநிதியின் படத்தை எரித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பார்ப்பன எதிர்ப்பு தேனிகூட்டைக் கலைத்துவிட்ட காவி கும்பல்!

செப்டம்பர் 2-ஆம் தேதி சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி.விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார். அதைத்தொடர்ந்து அமித்ஷா, மோடி, ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள், சாமியர்கள் என ஒட்டுமொத்த சங்கப் பரிவார கும்பலும் உதயநிதியின் பேச்சை இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சாக திரித்துப் பிரச்சாரம் செய்து உதயநிதியைத் தாக்கத் தொடங்கியது.

அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான். உதயநிதியின் படத்தை அவன் கத்தியால் குத்தி கிழிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாயின.

மேலும், உதயநிதி ஸ்டாலின் மகாராஷ்டிர மாநிலத்தில் கால் வைக்க முடியாது என மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.


படிக்க: பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியா கூட்டணியின் இரண்டு மிகப் பெரிய  கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் தயாரா?” என்று “இந்தியா” கூட்டணிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா கூட்டணியினர் இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளார்கள். சனாதன கலாச்சாரத்தை ஒழிக்கும் தீர்மானத்துடன் இந்தியா கூட்டணி வந்துள்ளது” என்றார். மேலும், “சனாதனம் குறித்து யார் பேசினாலும் விடாதீர்கள், தக்க பதிலடி கொடுங்கள்” என தனது அமைச்சர்களை முடுக்கிவிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் எனவும் நாடுமுழுவதும் ஆங்காங்கே சங்கிகளால் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் தன்பங்கிற்கும் உதயநிதிக்கு ‘அறிவுரை’ வழங்கியது.

உதயநிதிக்கு எதிராகவும் “இந்தியா” கூட்டணியில் இருக்கும் மிதவாத பார்ப்பன சித்தாந்தம் கொண்ட கட்சிகளைப் பிரித்து தி.மு.க.வைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பார்ப்பன கும்பல் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கே எதிராகத் திரும்பத் தொடங்கின.

உதயநிதி ஸ்டாலின், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியதும் வடநாட்டு கொலைகார சாமியார்களுக்கு எதிராக நக்கலாக பதிலடி கொடுத்ததும் தேசிய அளவில் விவாதத்திற்குள்ளாகி உதயநிதியின் கருத்துக்கு வரவேற்பை உருவாக்கியது.

தேசிய அளவிலும் ஊடகங்களிலும் சனாதனம் என்ன சொல்கிறது என்பது பற்றி விவாதிக்கப்படுவதைப் பார்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் அதிர்ச்சியடைந்துவிட்டது. இதுநாள் வரை தாம் உருவாக்கிவைத்திருந்த இந்துமத போதை கலைந்துவிடும் என அஞ்சிய இக்கும்பல் ஒரு கட்டத்தில் தற்காப்பு நிலைக்குச் சென்றுவிட்டது.

“சனாதனத்தை ஒழிப்போம்” என்ற முழக்கம், அவர்கள் இதுநாள்வரைக் கட்டிக்காத்துவந்த, ‘இந்து ஒற்றுமை’யைக் கேள்விக்குள்ளாக்கியதைப் பார்த்து அஞ்சியது. விரைவாக இந்தப் பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைத்திருப்ப வேறு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியது. மோடியின் கர்ஜனையெல்லாம் புஸ்வானமாகிப் போனது.

தமிழ்நாட்டில் திருமாறன் ஜி, கிருஷ்ணசாமி, தினமலர், பா.ஜ.க. போன்ற சங்கிகளைத் தவிர இந்த கும்பலை சீண்டுவாரில்லை. அண்ணாமலை சனாதனத்திற்கு என்னதான் முட்டுக்கொடுத்து பேசினாலும் அவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளாலும், இயக்கங்களாலும் அம்பலப்படுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத் திறப்புவிழாவில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அனுமதிக்கப்படாதது போன்ற அண்மைகால நிகழ்வுகள் மூலமாகவும் சனாதனத்தின் உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களின் இண்டு இடுக்குகள், கேலிக்கை நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் சனாதனம் தோலுரிக்கப்பட்டது. அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் வாசிக்கப்பட்டனர். இவையெல்லாம், பார்ப்பன கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

மிதவாத பார்ப்பன கட்சிகளின் பதுங்கல்

நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்க, “இந்தியா” கூட்டணியில் காவிக்கும்பலின் பொய் பிரச்சாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்… நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன், வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறேன்” என்றார். மேலும், “உதயநிதி ஸ்டாலின் ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பது குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை” என்று கூறினார்.

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார். “சனாதன தர்மம் நித்திய உண்மை – வாழ்க்கையை வாழ்வதற்கான வழி – மனசாட்சி மற்றும் இருப்பைக் குறிக்கிறது… சனாதன தர்மத்துடன் இணைக்கப்பட்டுள்ள நாட்டின் அடித்தளம், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதற்கு எதிராக இழிவான கருத்துகளை வெளியிடும் எவரும் அது எதைக் குறிக்கிறது என்பதை அறியாதவர்” என்று சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.


படிக்க: இந்துராஷ்டிர தர்பார்!


ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “இந்தியாவில் பல்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மொழிகள் உள்ளன. இருந்தாலும் நாங்கள் ஒன்றாக வாழ்வதுதான் எங்களின் அழகு… உதயநிதி அல்லது யாராக இருந்தாலும் சனாதனம் குறித்து கருத்து சொல்லக்கூடாது” என்றார்.

காங்கிரசு தலைவர் ப.சிதம்பரம், சனாதனம் என்பதற்கு தமிழ்நாட்டில் சாதி அடிமைத்தனம், பெண் அடிமைத்தனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. வடமாநிலங்களில் இந்துமதம் என்றே இதற்கு பொருள் கொள்ளப்படுகிறது. ஆதலால், வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பொருளில் தனது அறிவுரையை வழங்கினார். காங்கிரசு கட்சி இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். சனாதனத்தை அம்பலப்படுத்திப் பேசினாலும், தினந்தோறும் அறிக்கை விடும் அதன் தேசியத் தலைவர்கள், தாமாக முன்வைந்து பார்ப்பன கும்பலை அம்பலப்படுத்தவில்லை. சடங்குத்தனமாக சில கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

மொத்தத்தில், பா.ஜ.க. எதிர்ப்புப் பேசும் பல கட்சிகளிடம் பார்ப்பனிய சித்தாந்தம் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் பா.ஜ.க.விற்கு எதிராக சனாதனம் என்பது இழிவானது என்று சொல்வதற்குப் பதிலாக, பா.ஜ.க.வின் கருத்துக்கு பலியாகி, வட இந்திய மக்கள் சனாதனம் என்றால் இந்து என்றுதான் கருதுவதாகக் கூறி ‘தற்காப்பு’ நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இது, சித்தாந்தப் போர்!

சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதிக்கு எதிராக காவிக்கும்பல் தொடுத்த தாக்குதல் என்பது உதயநிதி அல்லது தி.மு.க.-வின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று மட்டுமே பார்க்க முடியாது. உண்மையில், தமிழ்நாட்டிற்கு எதிராக சங்கப் பரிவார கும்பல் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தின் பரிமாணம் முற்றிலும் வேறானது.

கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி, தற்போது “இந்தியா” கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

அப்பொதுக்கூட்டத்திற்கு அடுத்தநாள், தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 12 பேர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பா.ஜ.க கும்பலால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. “தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம், தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது” என்று அறிக்கை விட்டார் அண்ணாமலை.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பா.ஜ.க. கும்பல் பொய் பிரச்சாரம் செய்தது, ஏதோ தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சி மீதான தாக்குதல் அல்ல. தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு சித்தாந்தம், அரசியலுக்கு எதிரான தாக்குதலாகும்.

அதைப்போல, கடந்த ஜூலை மாதம் வடலூரில் வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பத்தாயிரம் ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று அயோக்கியத்தனமாக பேசினார்.

“சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே சாத்திரச்  சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர், அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே” என 200 ஆண்டுகளுக்கு முன்னரே பார்ப்பனியத்தையும் அதன் சித்தாந்தத்தையும் தோலுரித்துக்காட்டிய வள்ளலாருக்கே காவிசாயம் பூசப் பார்த்தார், ரவி.

மேலும், பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டில்தான் சனாதன தர்மம் உருவானது என்றும் இங்கிருந்துதான் சனாதனம் பாரதம் முழுவதும் பரவியது என்றும் பச்சையாக பொய் பேசினார்.

ஏறித்தாக்கித்தான் பாசிசத்தை வீழ்த்த வேண்டும்!

இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் பார்ப்பன பாசிச பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தமும் அதன் மரபும் சிம்ம சொப்பனமாக உள்ளது. எனவே, தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தமிழ்நாட்டின் சித்தாந்தத்தை ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வேலை செய்துவருகிறது காவிக்கும்பல். அதற்காக தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றை திரித்து புரட்டுவது, தமிழ்நாட்டிற்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது போன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

ஆகவே, உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை காவி கும்பல் விஷமத்தனமாக “இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்” என திரித்துப் பிரச்சாரம் செய்தது என்பது வெறும் திசைத்திருப்பல் நடவடிக்கையோ அல்லது திமுக என்ற கட்சியின் மீதான தாக்குதலோ கிடையாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்ததைத் இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட தாக்குதலாகும்.

சனாதனம் என்பது வர்ணாசிரம அடிப்படையில் சாதிக் கட்டமைப்பை கட்டிக்காக்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தான் என்பது வரலாற்று உண்மை. அதை என்ன செய்தாலும் காவிக்கும்பலால் மூடிமறைக்க முடியாது. பா.ஜ.க முன்னெடுக்கும் பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் என்பது பெரும்பான்மையான  மக்களுக்கு எதிரானது. இந்துராஷ்டிரத்தை  கட்டியமைக்க  வேண்டுமானால் சாதிய வருணாசிரமத்தை மீட்டமைக்க வேண்டும். ஆரம்பத்தில் நேரடியாக இதை செய்தால் இடைநிலை சாதியினரின் ஓட்டுக்களை பெற முடியாது என்பதால், “நாமெல்லாம் இந்து, நமக்கு இஸ்லாமியர்கள்தான் எதிரி” எனக் கூறி இஸ்லாமிய வெறுப்பு அரசியலை முன்னெடுத்துவந்தது காவிக்கும்பல்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, சமூக அரசியல் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவியிருக்கும் இன்றைய சூழலில், விஸ்வகர்மா போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகவே வர்ணாசிரமம் அடிப்படையிலான சாதிக்கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. முன்பை விட, தனது பார்ப்பனிய சாதிவெறி சித்தாந்ததைத் மூர்க்கமாக கையிலெடுக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில்தான் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தத்தை வீச்சாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு தற்போது உறுதியாக நின்றதன் மூலம்தான், பார்ப்பன கும்பல் பின்வாங்கியது என்பது அனுபவமாகும். இந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக எதிர்க்காமல், தேர்தலில் நின்று வீழ்த்திவிடலாம் என்று கருதுவதைவிட முட்டாள்தனம் வேறில்லை.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலை எதிர்க்கும் தமிழ்நாட்டின் சித்தாந்தம் என்பது, தமிழ்மொழியின் தொன்மை, சாதி-மத மறுப்பு பண்பாடு, தமிழ்மொழியின் இலக்கண வளம் மற்றும் சித்தர்கள், வள்ளலார், பெரியார் போன்றவர்களால் பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தம்தான் காவிக்கும்பலை தொடைநடுங்கச் செய்கிறது. எனவே, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநிலங்களின் பார்ப்பன எதிர்ப்பு, ஜனநாயக மரபை ஜனநாயக சக்திகளும், இயக்கங்களும் உயர்த்திப்பிடிப்பதன் மூலம்தான் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலை வீழ்த்த முடியும்.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா: தொடர்ந்து வேட்டையாடப்படும் பத்திரிகை சுதந்திரம்

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகை சுதந்திரம் என்பது தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023” நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்த பின்பு, இம்மசோதா மக்களவையில் டிசம்பர் 21 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மோடி அரசால் டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

இந்த கருப்புச் சட்டம் குறித்து “எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா” தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இச்சட்டத்தில் உள்ள “பத்திரிகைப் பதிவாளரின் அதிகாரங்களை விரிவுபடுத்துதல், பத்திரிகைகளை வெளியிடுவதற்கு மீதான புதிய கட்டுப்பாடுகள், செய்திகளை வெளியிடுவதில் தொடர்ச்சியாக அரசின் அதிகார நுழைவு, பல விதிகளில் உள்ள தெளிவின்மை மற்றும் அதிகாரத்தைச் சுற்றியுள்ள தெளிவின்மை” முதலியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட போதே இது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியுள்ளோம். முக்கியத்துவம் கருதி அதைத் தற்போது மீள்பதிவு செய்கிறோம்.

***

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

னது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களை பல்வேறு வகையில் ஒடுக்கி வரும் பாசிச மோடி அரசு தனது அடுத்த கட்ட இலக்காக டிஜிட்டல் செய்தி ஊடகங்களைக் குறிவைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022” அதற்கான ஏற்பாடாகும்.

இம்மசோதா 2019 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. ஆனால் இதன் மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால் அப்போது நிறைவேற்றப்படவில்லை. தற்போது இம்மசோதா மீண்டும் அவைக்கு வந்திருக்கிறது.

பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் மட்டுமல்லமால் முதன்முறையாக டிஜிட்டல் ஊடகங்களையும் உள்ளடக்கி இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. இச்சட்ட மசோதா அமல்படுத்தப்பட்ட 90 நாட்களுக்குள் டிஜிட்டல் ஊடக செய்தி வெளியீட்டாளர்கள் தங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்; விண்ணப்பிக்காவிட்டால் அவர்களின் ஊடகத்திற்கு தடை விதிக்கப்படும் என்கிறார்கள்.

ஏற்கெனவே அமலில் இருக்கும் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவு சட்டம் 1867க்கு மாற்றாகவே இப்புதிய மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. இப்புதிய மசோதாவைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு முன் ஏற்கெனவே அமலில் இருக்கும் சட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.


படிக்க : உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!


1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு நிறுவன ரீதியாக தன்னை எதிர்க்கும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்காகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளை மட்டும் கட்டுப்படுத்திய இச்சட்டம் 1878-ஆம் ஆண்டிற்கு பிறகு அனைத்து வட்டார மொழி பத்திரிகைகளையும் கட்டுப்படுத்தியது. அதிகார மாற்றத்திற்கு பின்னரும் இச்சட்டம் தொடர்கிறது.

தற்போது 155 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காலனித்துவ சட்டத்தை நீக்கி புதிய சட்டம் கொண்டுவருகிறேன் என்ற பெயரில், டிஜிட்டல் ஊடங்களைக் குறிவைத்து ஒடுக்குவதற்கேற்ப புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

***

புதிய சட்ட மசோதாவின் பிரிவு 5 மற்றும் 6-இன் படி, மத்திய அரசால் பத்திரிகை தலைமை பதிவாளர் (Press Register General) நியமிக்கப்படுவார். இவரிடம் அச்சு ஊடகங்களைப் போல டிஜிட்டல் ஊடகங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த அதிகாரி ஒரு ஊடகம் தொடர்பான எந்த தகவலையும் ஆணையிட்டு பெறலாம், எந்தவொரு ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் போன்ற வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் நினைத்தால் ஒரு ஊடகத்தை தடை செய்யலாம் அல்லது அதன் மேல் அபராதம் விதிக்காலம். இவரின் தீர்ப்பே இறுதியானது. இவரும் இவருக்கு கீழ் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் யாரும் மாநில அரசுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லை.

இதுவரை எந்த சட்டவிதிகளின் கீழும் கட்டுப்படுத்தப்படாத டிஜிட்டல் ஊடகங்கள் இச்சட்ட மசோதாவின் படி நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுகின்றன.

இச்சட்ட மசோதாவின் படி, பத்திரிகையின் ஆசிரியர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பிரிவு 4 மற்றும் 11-ன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டப்படி 1967 (UAPA) தண்டிக்கபட்டவர்களும் மற்றும் அரசின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டு அதற்காக தண்டிக்கபட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-2020 வரை 10,522 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பலரும் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவர். எனவே பத்திரிகையாளர் மீது ஊபா வழக்கு பதியப்பட்டிருக்கக் கூடாது என்பது மறைமுகமாக அந்த ஊடகங்கள் பா.ஜ.க. அரசை எதிர்ப்பவையாக இருக்கக் கூடாது, அவ்வாறு எதிர்த்தால் அவர்கள் ஊடகங்களை நடத்த முடியாது என்று சொல்வதாகும்.

மோடி அரசு இச்சட்டத்தை கொண்டு வருவதற்கான முக்கியமான நோக்கம் டிஜிட்டல் செய்தி ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே. ஏனென்றால் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தற்போது மோடி அரசிற்கு எதிராக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுப்பது தி வயர், குவிண்ட், ஸ்க்ரோல் போன்று முற்போக்கு-ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் டிஜிட்டல் ஊடகங்களே.

பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என மோடி அரசின் பல சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்களே வெளிக்கொண்டு வந்துள்ளன. இதனால்தான் இவற்றை ஒடுக்கிவிடத் துடிக்கிறது மோடி அரசு.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூஸ் கிளிக், ஜூலையில் தைனிக் பாஸ்கர்,’பாரத் சமாச்சார்’ மற்றும் செப்டம்பரில் நியுஸ்லாண்டரி’ என தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள்மீது வருமான வரித்துறையை ஏவியது மோடி அரசு.

இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது. இதன்படி வலைதளங்கள் மட்டுமல்லாது செய்திகளை வழங்கும் யூடியூப் சானல்கள், முகநூல் கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும் என்பதுதான் பொருள்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழ்வது சமூக ஊடகங்களே. சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக வெகுமக்கள் சமூக ஊடகங்களையே பாவிக்கிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல உலகெங்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களில் மக்கள் சமூக ஊடகங்களையே தங்கள் கருத்துப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றிவருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.


படிக்க : நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!


பத்திரிகை சுதந்திரம் குறித்து “எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள்” எனும் உலக பத்திரிகையாளர்கள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பத்திரிகையளர்கள் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகள். பத்திரிகையாளர்களை தேசவிரோத வழக்கு, ஊபா உள்ளிட்டவைகளின் கீழ் ஒடுக்குவதை இவ்வமைப்பு வன்மையாக கண்டித்திருந்தது.

கொரோனா ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது ‘வதந்தி பரப்புகிறார்கள்’ என்று வழக்கு தொடரப்பட்டது. உத்தரப் பிரேதச மாநிலம்  ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற கேரள பத்திரிகையாளர்களை தேசத் துரோக வழக்கில் கைது செய்தது யோகி அரசு. டெல்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்ட மீடியா ஒன் தொலைக்காட்சி மீது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.

மேலும் 2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்தது மட்டுமல்லமால் அங்கு இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; மீறி செய்தி வெளியிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மோடி அரசு. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.


மதி

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube