Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 100

கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!

ற்போது காவிரி டெல்டா உட்பட தமிழ்நாட்டின் ஆறு இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் இராட்சத அரவை ஆலைகளை நிறுவி, நேரடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அதனை அரைத்து, அரிசி விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதற்காக வருகிற ஜூன் 27ம் தேதி 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையானது, நெல்லை சாகுபடி செய்யும் செலவுகளுடன் ஒப்பிடும்போது குறைவு தான். அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்யும்போதே நெல் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

குறிப்பாக டெல்டா பகுதிகளில் தான் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்தால், இதுவரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாமல் போய்விடும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் அந்த விவசாய  நிலங்களை எளிதாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும்.


படிக்க: ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!


இந்த மாத தொடக்கத்தில் இருந்து பொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து அரிசி ரகங்களும் விலை உயர்ந்துள்ளன. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது.

வணிகத்திற்கு தேவையான அளவு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி இல்லாமல் இருப்பதும் அரிசியை பதுக்கல் செய்வதும் தான் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று

அரசு கூறுகிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை பதுக்கி அரிசி விலையை செயற்கையாகவே அதிகரிக்க செய்யவும் முடியும்.

மேலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அரிசியை அதிக விலைக்கு அரசிடமே விற்பனை செய்யக்கூடிய நிலையும் உருவாகும். இதனால்

நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யும் இலவச அரிசியும் ரத்து செய்யப்படும்.

அரசே நெல் கொள்முதல் செய்யும்போதே இந்த நிலை எனில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்து, அரிசியாக விற்பனை செய்யும் போது நிலமை மிகவும் மோசமாகும்.

ஒருபுறத்தில் அரசு நிர்ணயித்து வைத்துள்ள நெல்லுக்கான ஆதார விலையை விட குறைவான விலையே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இன்னோரு புறத்தில் அரிசியின் விலை தற்போது உள்ளதை விட இன்னும் அதிகமான விலையில் தான் மக்களுக்கு கிடைக்கும்.


படிக்க: மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!


ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க- விற்கு சற்றும் சளைக்காமல் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது திராவிட மாடல் அரசாங்கம்.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தைப் போல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடக்கூடிய விவசாயிகளின் போராட்டத்தை கட்டி அமைக்காமல் இது போன்ற கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க முடியாது.

செய்தி ஆதாரம் – தி இந்து தமிழ்


ராஜன்

மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!

ந்தியாவின் தானிய சேமிப்பு கிடங்கிலிருந்து அரிசி கோதுமை போன்ற உணவு தானிய பொருட்களை இனி மாநில அரசாங்கங்களுக்கு விற்கக் கூடாது என இந்திய உணவு கழகத்திற்கு ஆணையிட்டுள்ளது பாசிச மோடி அரசு. இந்த உத்தரவு மாநிலங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவு கழகமானது (எப்.சி.ஐ) விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களைச் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைத்து, அவற்றை மாநிலங்களின் உணவுப் பொருட்களின் தேவைக்கேற்ப பிரித்து வழங்கும். இந்த நிலையில்தான் மாநிலங்களுக்கு நேரடியாக எந்த விற்பனையும் செய்யக்கூடாது என எப்.சி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளது மோடி அரசாங்கம்.

கர்நாடக தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ இலவச அரசி நியாயவிலைக்கடை மூலம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. தேர்தல் வெற்றிக்குப் பின் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் முதல் திட்டமாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கையெழுத்திட்டது.

அதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசாங்கம் ஜீன் 9 அன்று இந்திய உணவு கழகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்க உள்ளதால் கூடுதலாக 2.28லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை இருப்பதாகவும் விலை நிர்ணயம் செய்துள்ள படி குவிண்டாலுக்கு ₹ 3,400 கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் கூறியிருந்தது.

படிக்க: உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!

கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜீன் 12-ஆம்  தேதி இந்திய உணவு கழகம் பதில் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ஜீன் 13 ஆம் தேதி, ஒன்றிய மோடி அரசு மாநிலங்களுக்கு அரிசி கோதுமைகளை இந்திய உணவு கழகம் இனி விற்கக் கூடாது என உத்தரவிட்டது. காங்கிரஸ் அரசின் திட்டத்தைத் தடுக்கும் வகையில் அரிசி கோதுமை வழங்குவதை மறுப்பதாகக் கூறி மோடி அரசைக் கண்டித்து கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இது ஏதோ கர்நாடக அரசை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் அல்ல. இந்த அறிவிப்பால் அனைத்து மாநிலங்களின்  நியாயவிலைக்கடைகளுக்கு தேவையான  அரிசி கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் முறையாகக் கிடைப்பதில் பெரும் பிரச்சினை உருவாகும். ஆனால் இதற்கு விளக்கம் அளிக்கும் ஒன்றிய மோடி அரசோ உணவுப் பொருள்களின் தற்போதைய இருப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுப் பொருட்களின்  விலைவாசியைக் கட்டுப்படுத்தவுமே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்கிறது.

இவ்வாறு கூறும் மோடி அரசுதான் 15 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள எப்.சி.ஐ-க்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் போகிறார்களாம். ஏற்கனவே தமிழ்நாட்டின் உணவு தானிய பற்றாக்குறை என்பது 50,000 டன் ஆக உள்ளது. இதுபோன்ற ஒன்றிய அரசின்  முடிவால் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநிலங்களும் தள்ளப்பட்டுள்ளன.

படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!

ஆனால் உண்மையில் ஒன்றிய அரசிடம் உணவு தானிய இருப்பு பற்றாக்குறையா இருக்கிறதா எனப் பார்த்தால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. அண்மையில்  நிதிஆயோக் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்டுக்கு 30.9 லட்சம் டன் உணவு தானியங்கள் உபரியாக அரசிடம் உள்ளதாகவும், பெட்ரோல் போன்ற எரிபொருட்களில் 20% எதான் கலப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1.06 லட்சம் டன் அரிசி விற்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

மேலும் இவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம் “பருவநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது; எனவே எதிர்வரும் காலங்களுக்காக உணவு தானியங்களைச் சேமிக்கிறோம்; இதில் என்ன தவறு இருக்கிறது” என்பதாகும். ஆனால், உண்மை என்ன என்பதை மத்திய விவசாயத்துறை அமைச்சகமே சொல்லியிருக்கிறது. 2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உணவு தானிய உற்பத்தி குறையவில்லை; மாறாக விவசாயிகளிடமிருந்து இந்திய உணவு கழகம் விவசாய பொருட்களைக் கொள்முதல் செய்வதுதான்  குறைந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களை நோக்கி விவசாயிகளை விசிறியடிக்கும் நோக்கத்திலும் விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலும் இதுபோன்ற செயல்களை மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கிறது. மற்றொரு பக்கம் தனியார்மய தாராளமய உலகமய கார்ப்ரேட் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவு.

இதன் வெளிப்பாடுதான் விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு பற்றாக்குறை நிலவுவதாகக் கூறி நியாயவிலைக்கடைகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கை.


சித்திக்

 

செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!

மலாக்கத்துறை ரெய்டு –  அடிதடி –  செந்தில் பாலாஜி-  கைது  – நெஞ்சு வலி – பைபாஸ் அறுவை சிகிச்சை – உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுகவும் அமலாக்கத்துறையும் மாறி மாறி வழக்குகள் எனத் தினமும் பரபரப்பூட்டும்  சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

செந்தில் பாலாஜி மீதான கைது,  அது தொடர்பான நடவடிக்கைகள் பாசிச நடவடிக்கைகள் என்றே நாம் கூறுகிறோம். ஏனெனில் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் திமுகவை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி அதன் வழியே தேர்தல் நடத்துவது திட்டம்  என்பதால் அவ்வாறு கூறுகிறோம் .அதனாலேயே செந்தில் பாலாஜி நல்லவர் என்றோ தூய்மையின், நேர்மையின் உரு என்றோ நாம்  கூறவில்லை. ஆனால் இப்போது உள்ள சூழலில் செந்தில் பாலாஜி மீதான தவறுகளையோ ஊழலைப் பற்றியோ யாரும் பேசக்கூடாது அப்படிப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் அஜெண்டாவின் கீழ் வேலை செய்கிறார்கள்  என்கிறார்கள் கிரியா ஊக்கிகள்.

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை என்பது திமுகவுக்கு பாசிச ஆர் .எஸ். எஸ் மற்றும் பாஜக வைத்திருக்கும் பலமான புதைகுழி. இந்த புதைகுழியில் இருந்து திமுக தப்பிக்க வழி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

ஏனென்றால் செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட புதைகுழியிலிருந்து தப்பிக்கும் பொழுது அருகில் இன்னொரு அமைச்சர் சிக்க வைக்கப்படுவார்.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்


எதிரியின் உடனான  மோதலின் போது எதிரியின் பலவீனமான கண்ணியின் மீது தான் முதலில் தாக்குதல் நடத்தப்படும். மேலும் அந்த கண்ணியானது மொத்த சங்கிலியை உடைப்பதாகவும்  இருக்கும்.

எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின்படி திமுக என்ற சங்கிலியைப் பலவீனப்படுத்தவும் உடைக்கவும் செந்தில்  பாலாஜி என்ற பலவீனமான கண்ணியைப் பிடித்திருக்கிறது பாஜக.

யார் இந்த செந்தில் பாலாஜி?

மதிமுக, அதிமுக, அமமுக என இறுதியில் தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் பேசி வழக்கை முடிக்க முயன்றார் செந்தில் பாலாஜி. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஆனது இந்த வழக்கை 40 நாட்களுக்குள் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.

அதற்குப் பிறகு அவசர அவசரமாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் திடீரென்று சோதனை செய்தது. சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளுமுள்ளை மிகப்பெரிய வீர தீரமிக்க நடவடிக்கையாகப் பலரும் புகழ்ந்து கூறினர். அதற்கு எதிர் நடவடிக்கையாக திடீரென்று அதிகாலையில் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை ஒரு நாள் முழுவதும் சோதனை செய்து இறுதியில்  கைது செய்தது. செந்தில் பாலாஜியின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து இப்போதைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜியை  வைத்து கொங்கு மண்டலத்தைக்  கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது திமுகவின் திட்டம். கொங்கு மண்டலத்தில் தான் அதிமுகவும் பாஜகவும் வலுவாக இருக்கின்றன. அந்த இடத்தில் திமுகவின் அமைப்புகளை உருவாக்குவதும் திமுகவின் கட்டுப்பாட்டிற்குள் கொங்கு  மண்டலத்தைக் கொண்டு வருவதும் தங்களது இருப்புக்கு ஆபத்து என்பதைப் பாசிச பாஜக நன்கு அறியும்.

ஒரே கல்லிலேயே பல மாங்காய் என்பது போல செந்தில் பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் கொங்கு மண்டலத்திலிருந்து திமுகவை அகற்றுவதும் திமுகவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையைக் கொடுப்பதுமாக  இந்த வேலையைச் செய்திருக்கிறது.

கொள்கைகளைத் தூக்கிப்போடு
‘திறமைக்கு’ இடம் கொடு!

செந்தில் பாலாஜிக்கு  எந்த திறமையின் அடிப்படையில் கொங்கு மண்டலத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலை கொடுக்கப்படுகிறது? செந்தில் பாலாஜி திராவிட கொள்கையில் ஊறித் திளைத்தவரா? சுயமரியாதை உணர்வில் ஊன்றி நிற்பவரா ?இல்லை. அதிமுக எந்தெந்த வகையில் எல்லாம் தன்னுடைய அமைப்புகளை உருவாக்கி இருக்கிறதோ அது போன்ற வகையில் ஓட்டு பெறுவதும் ஆட்களை வளைப்பதிலும் கில்லாடி அவர். பணபலம் மற்றும் அதிகார பலம்  மூலம் முறைகேடுகளை அவிழ்த்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை திமுகவின் தலைமைக்குச் சமர்ப்பித்தவர். இது போன்ற செயல்களால் குறுகிய காலத்திலேயே தலைமைக்கு நெருக்கமான நபராகவும் திமுகவில் அசைக்க முடியாத நபராகவும் மாறிப் போனார். இனி கொள்கை, கோட்பாடு, சுயமரியாதை என்று பேசிக்கொண்டு இருப்போரை எல்லாம் மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு திமுகவெங்கும் செந்தில் பாலாஜிக்களை நிறைத்திருப்பதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும், நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்று கணக்குப் போடுகிறது திமுக. செந்தில் பாலாஜிக்கள் நிறைந்திருக்கும் போது தான் திமுக அரசையும் கட்சியும் காப்பாற்ற முடியும் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைத்து எதிர்க்கட்சிகளை அச்சத்தில் வைத்திருக்கும் போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.கவின் தேவை. மோடியின் கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் பட்ட துயரங்கள் சொல்லி மாளாதவை. இந்து ராஷ்டித்தை அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஒருபுறம் மக்களின் மத்தியிலும் அரசு உறுப்புகளிலும் ஊடுருவி முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் காவி பாசிச மற்றும் கார்ப்பரேட் பாசிச திட்டங்களினால் மக்கள் அடைந்துள்ள இன்னல்களும் ஏராளமானவை. அதன் விளைவைப் போராட்டக் களங்களிலும் தேர்தலிலும் பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ் கும்பல் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !


மொத்த நாட்டையும் அதானி, அம்பானி பாசிச கும்பலுக்குத் தாரை வார்த்த நடவடிக்கைகள் பெட்ரோல் –  டீசல்  – சிலிண்டர் விலை  உயர்வு, சிஏஏ, மணிப்பூர் கலவரம் எனச் சுற்றிச் சுற்றி சுழன்று திருப்பி அடிக்கிறது.

கர்நாடகத் தேர்தல் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தென்னிந்தியாவில் இந்து ராஷ்டிரத்தின் சோதனை சாலையாகக் கர்நாடகாவை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளான புர்கா தடை,  மத மாற்றத் தடை சட்டம் எனப் பல  கொண்டுவரப்பட்ட போதும் பாஜக கட்சியிலிருந்த உள்ளடி சண்டை, லிங்காயத்துகளின் எதிர்ப்பு, 40% கமிஷன், கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு, எழு கர்நாடகா என்ற பாசிச எதிர்ப்பு அமைப்புகளின் இயக்கம் ஆகியவை பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க வைத்திருந்தாலும் அவற்றின் அடித்தளத்தை இழக்கச் செய்யவில்லை. பாசிச கும்பல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற இன்னும் பல்வேறு சித்து வேலைகளைக் கண்டிப்பாக மேற்கொள்வர்.

திமுகவைக் குழியில் தள்ளும் கண்ணி வெடிகள் !

தமிழ்நாட்டின் திமுகவின் செல்வாக்கைக் குறைத்து திமுக ஆட்சியின் மீது அதிருப்தியை உருவாக்கி படிப்படியாக எதிர்ப்பலையைத் தோற்றுவித்து அதன் இறுதியில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் திட்டம் .உடனடியாக ,அதிரடியாக திமுக அரசு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் அது பூமராங்காக திருப்பி மாறும் என்பதைப் பாசிச கும்பல் நன்கு அறியும்.

தற்போது திமுகவின் தூண்களாக இருக்கக்கூடிய பலரும் அதிமுகவிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் மீது பல ஊழல் புகார்களை ஏற்கனவே திமுக எழுப்பி இருக்கிறது. அவர்கள் திமுகவின் கொள்கையாலும் கோட்பாட்டு நடைமுறைகளாலும் முன்னேறி தங்களுடைய இடத்தை பிடித்தவர்கள் அல்ல. அதிமுகவில் இருக்கும் பொழுது என்னென்ன வேலைகளைச் சிறப்பாகச் செய்தார்களோ அதையே சிறப்பாகவும் சீராகவும் திமுக கட்சியிலும் அரசிலும் மேற் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்கள். அதற்காக எப்படிப்பட்ட தகிடு தத்தங்களை  மேற்கொண்டு கொடுக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவர்.

இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல. அவர்களின் ஊழல் காரணமாக மக்களிடம் நாறிப்போனவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களே திமுக கட்சியிலும் அரசிலும் முக்கிய தூண்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் இருப்பையும் செயல்பாட்டையும் முடக்குவதன் மூலம் பாஜக தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வது மட்டுமின்றி திமுகவில் ஓட்டையைப் போட்டு அதன் மூலம் கட்சியில் உள்ள மேல்மட்ட தலைவர்களிடம் அச்சத்தையும் அரசியல் ஒரு ஆட்டத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மீது மக்களுக்கு எவ்விதமான நற்பெயர் இல்லை. தான் செய்த ஊழலை மறைக்க அவர் மேற்கொண்ட முயற்சியில் சிக்கிக்கொண்டார். இதிலிருந்து அவர் வெளியே வரவே முடியாது. செந்தில் பாலாஜி என்ன முயன்றாலும் திமுகவால் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் பாஜக இப்படிப்பட்ட முறைகேடுகளிலும் ஒட்டுமொத்த அரசை கைக்குள் வைத்திருப்பதிலும் பழம் தின்று கொட்டை போட்டது. வேறு வழியின்றி திமுக செந்தில் பாலாஜியைக் கழற்றி விட்டால் திமுகவில் உள்ள மேல்மட்டத் தலைவர்கள் ஆடிப் போய் விடுவார்கள். செந்தில் பாலாஜியைக் காப்பாற்றச் சென்றால் இப்படிப்பட்ட வழக்குப் புயல்களில் சிக்கிக் கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜி நல்லவர், வல்லவர் என்று திமுகவினர் செல்லும் பிரச்சாரங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எவ்வித நற்மதிப்பையும் பெறப்போவதில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி டிசைனில் ஆப்புகள் தயார்!

பாசிசத்தின் தடையரண் என்று சொல்லப்பட்ட எதிர்க்கட்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைனில் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க ஆப்பு வைத்திருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகப் பேசினால் மக்கள் சிரிப்பார்கள். எதிராகப் பேசினால் பாஜகவுக்குச் சாதகமாகப் போய்விடும் இன்று கிரியா ஊக்கிகளும் மிரட்டுகிறார்கள். செந்தில் பாலாஜி போல இன்னும் நான்கு அமைச்சர்களுக்கு பாஜக குறி வைத்து விட்டால் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். ஒரு அமைச்சரைக் காப்பாற்றவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் திமுக நிலைமை என்னவாகும்?

செந்தில் பாலாஜிக்குப் பதில் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக ரைடு நடவடிக்கை ஏவி விட்டிருந்தால் தமிழ்நாடு தனக்கு எதிராக மாறும் என்பதை பாஜக நன்கு அறியும். அதனால் தான் ஊழல்வாதிகளையும் மக்களிடம் அவப்பெயர் உள்ளவர்களையும் முதலில் தூக்குவார்கள்.

இப்படி ஊழல்வாதிகளை பாஜக குறி வைத்து இயங்கும்போது நாம் ஊழல்வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தான் பாஜக பாசிசத்தை ஒழிக்க முடியும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் கண்டிப்பாக நம்முடைய இருப்பையும் இழப்போம்.

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்றால் நாம் ஆர்.எஸ்.எஸ்-  பா.ஜ.க-வைப் போன்று மக்கள் மத்தியில் கிளை வேர்களைப் பரப்பிச் செயல்படக்கூடிய  அமைப்புக்களை உருவாக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் காவி  – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மாபெரும் இயக்கங்களைக் கட்டியமைப்பதே  தமிழ்நாட்டை பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் நெருங்குவதற்கான தடையரண்.

மதவெறியா? ஊழலா?

கோ பேக் மோடி என்ற இயக்கம் திட்டமிடாமல் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் விளைவு திட்டமிட்ட அளவில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க – அ.தி.மு.க கும்பலைத் தோற்கடித்தது. கோ பேக் மோடி போன்ற இயக்கங்களை அமைப்புக்களாக உருவாக்கி பாசிஸ்டுகளுக்கு எதிரான களத்தில் நாம் நிற்க வேண்டும். அதை விட்டுவிட்டு செந்தில் பாலாஜிக்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. செந்தில் பாலாஜி போன்ற பலவீனமான கண்ணிகளை உற்பத்தி செய்வது முறைகேடுகளும் ஊழலும் என்றால் அதற்கெதிராகப்போராடுவதும் தானே பாசிச எதிர்ப்பின் கடமைகளுள் ஒன்றாக இருக்க முடியும்.

மதவெறியா? ஊழலா என்றால் நான் முதலில் மதவெறியைத்தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுவேன் என்று பலரும் தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள். ஊழல் முக்கியமல்ல என்று கூறுவோர் கடந்த காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் ஊழலும் நிர்வாக சீர்கேடு தொடர்பான பிரச்சாரங்களும் என்பதையும்  அறிந்தேதான் இருக்கின்றனர்.

கர்நாடகத்தேர்தலில் பாஜக தோற்றதற்கு 40 % கமிசன் என்பது முக்கிய காரணமல்லவா? மக்களிடம் சென்று ஊழல் முக்கியமல்ல மதவெறியைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று கூறினால்  என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை கூட்டணி அரசாங்கம் 2024 தேர்தல் மூலம் அமைந்தாலும் கூட அந்த அரசாங்கம் ஊழல் அற்றதாக இருந்தால் தானே பாசிச பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றாமல் இருக்க முடியும்?

ஊழலில் ஊற்றுக்கண்ணான பாசிசம் எதைப் பயன்படுத்திக்கொண்டு நுழைகிறது? அய்யோ ஊழல், அய்யோ ஊழல் என்று கத்திக்கதறிக்கொண்டு தான் தன்னுடைய மூக்கை நீட்டுகிறது. அப்படித்தான் அன்னா ஹசாரே, கிரண்பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்கள் கிளம்பினார்கள். அதன் பலனை பாஜகவே அறுவடை செய்தது என்பதுதான் உண்மை. பாசிச எதிர்ப்பு கூட்டணியில் ஊழல் எதிர்ப்பும் முக்கிய அம்சம்தான். நிபந்தனையின்றி பாசிசத்திடம் சரணடைவது ஒருபுறம் என்றால் நிபந்தனையின்றி பாசிச எதிர்ப்பில் ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைய வேண்டும் என்றால் அக்கட்சிகளும் அடுத்து ஆட்சிக்கு வந்து பாசிச நடவடிக்கைகள் மேற்கொள்ளாது என்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது.

UNCONDITIONAL LOVE & UNCONDITIONAL SUPPORT

கணவன் அடித்தாலும் உதைத்தாலும் அவனோடுதான் வாழவேண்டும் . ஏனென்றால் ஒரு பெண் தனியாக வாழமுடியாது. குடும்பத்தை விட்டு வெளியே சென்றால் ரவுடிகளும் பெண் பித்தர்களும் இருக்கிறார்கள் அது மட்டுமல்ல; நீ வீட்டை விட்டு வெளியேறினால் எதிரிகள் உன் கணவனை நிர்மூலமாக்கிவிடுவார்கள் என்ற நிலையில் ஒரு பெண் எதைத் தெரிவு செய்ய வேண்டும்? உன்னோடு நான் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் எனக்குச் சுயமரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கேட்பது சரியா?

அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. மொத்த வீடும் அழிந்து போனால் உன் குழந்தைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வர் என்ற வாதத்தை முன்வைப்பது தவறல்லவா? சேர்ந்து வாழ்தல் என்பதில் பிரிந்து போவதற்கான உரிமையுமல்லவா இருக்க வேண்டும். இந்த உரிமைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பேசப்படுகின்ற வார்த்தை UNCONDITIONAL LOVE.

CONDITIONAL LOVE என்பது என்ன? என்னுடைய சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்காத வரை உன்னோடு வாழ்வேன் என்பது தானே.

அது போல UNCONDITIONAL SUPPORT  என்பதே தவறு. உன்னுடன் கூட்டுச் சேர வேண்டுமென்றால் நீ என்னுடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மாட்டாய் என்றால் என்ன பயன் என்ற கேள்வியைக் கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

பொது எதிரிக்கு எதிராக நாம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக இயக்கங்கள், அமைப்புகள், சிறிய கட்சிகள் எல்லாம் எவ்விதமான நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்பது தானே. அப்படி நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட UN CONDITIONAL SUPPORT கும்பல்தான் இப்போது செந்தில்பாலாஜிக்களை நிபந்தனை இன்றி ஆதரிக்க வேண்டும் என்கிறது. அப்படி ஆதரிக்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் செயல்படுவோர் அல்லது அடி முட்டாளாக மட்டுமே வரையறுக்கிறது. ஆனால் வரலாறு இந்த UN CONDITIONAL SUPPORT கும்பலைக் கைக்கூலிகளாக மட்டுமே பதிவு செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.


மருது

மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!

மிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக்குழுவில் இருந்து, அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜவஹர் நேசன் பதவி விலகியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையின் மூலம், மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இரகசியமாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலைக் கல்விக்குழு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார்.

தீர்வினை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதல்வரிடமும் கடிதம் சமர்பித்தேன். எனது கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் “மாநிலக் கல்விக்கொள்கை” பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


படிக்க: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!


மாநில உயர்நிலைக் கல்விக் குழுத் தலைவர் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், “தவறானது, அடிப்படை ஆதாரமற்றது” எனக் கூறி ஜவஹர் நேசன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜவஹர் நேசன் மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிற்கான ஒருங்கிணைப்பாளர் கிடையாது, துணைக் குழுக்களுக்குதான் ஒருங்கிணைப்பாளர் எனப் பச்சையாகப் பொய்யுரைத்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையின் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் ஜவஹர் நேசன். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினை பற்றி வாய்திறக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, இரண்டு உறுப்பினர்களை கல்விக்குழுவில் கூடுதாக நியமித்துவிட்டு, குழுவில் “அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை” என்று விவாதத்தை தட்டிக்கழித்துவிட்டார். ஜவஹர் நேசன் முதல்வருக்கு எழுதியதாகக் கூறும் கடிதம் தங்களுக்கு கிடைத்ததா, அல்லது கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டது பற்றி அரசினது கருத்து என்ன என்று எவைபற்றியும் வாய்திறக்கவில்லை.

இவர்கள் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை; அவரது குற்றச்சாட்டுகளை மறுக்கவும் முடியாது. ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசினால், இன்னும் துல்லியமாக என்னென்ன முயற்சிகள் நடக்கின்றன என்று உண்மைகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், இதனை இப்படியே ஊற்றி மூடிவிட வேண்டும் என்பதுதான் ஆளும் தி.மு.க. அரசின் அணுகுமுறையாகும்.

தி.மு.க.வின் போலி வேடம்

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., புதிய கல்விக் கொள்கையை மறுப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. 13-08-2021 அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கென தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதத்தில் குழுவையும் அமைத்தது.

அக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர் நேசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், யுனிசெஃப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டு 12 பேர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், இக்குழு அமைக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை கவர்ச்சிகரமான பெயர்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் வந்ததுள்ளது. “இல்லம் தேடிக் கல்வி”, “கலா உத்சவ்”, “நான் முதல்வன்”, “எண்ணும் எழுத்தும் திட்டம்”, “வானவில் மன்றம்”, “நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” போன்ற அனைத்துத் திட்டங்களிலும் கார்ப்பரேட் மயமாக்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதே இதற்கான சான்றுகளாகும்.


படிக்க: நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!


இவை மட்டுமின்றி, கல்வித்துறையில் புதுப்புது திட்டங்களாக வெளியில் தெரியாதபடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை 80 சதவிகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி கடந்த டிசம்பர் மாதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவை மேலும் அதிகரித்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதெல்லாம், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ஆனால், நரகலில் நல்லரிசி தேடும் விதமாக, “புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்வோம்” என கல்வித்துறை அமைச்சர்கள் இருவரும் கூச்சமின்றி விளக்கமளித்தனர்.

இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி போலி வேடம் போட்டு வந்துள்ளதை பேராசிரியர் ஜவஹர் நேசனின் பதவி விலகலானது இன்று திரைகிழித்துக் காட்டியுள்ளது.

கார்ப்பரேட்மயம் + காவிமயம் = புதிய கல்விக் கொள்கை

தி.மு.க அமல்படுத்த இருக்கும் மாநில கல்விக் கொள்கையில், கல்வித்துறையை நேரடியாக காவிமயமாக்கும் திட்டங்களான இந்தித் திணிப்பு, சாதி ஏற்றத்தாழ்வுகளை போதிக்கும் வர்ணாசிரம கோட்பாடுகளை புகுத்துதல், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு போன்ற விஞ்ஞானப்பூர்வமான அறிவியல் பகுதிகளை நீக்குதல், வரலாற்றை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சாதகமாக திருத்துதல், பாடத்திட்டங்களில் பகவத் கீதை போன்ற புராணக் குப்பைகளை சேர்த்தல் போன்ற காவி கும்பல்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை.

பேராசிரியர் ஜவஹர் நேசனின் கூற்றும் அதைத்தான் தெளிவுபடுத்துகிறது. “மும்மொழிக் கொள்கை, நீட் போன்ற போட்டித் தேர்வுகளை தவிர தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள எல்லா அம்சங்களையும் மாநிலக் கல்விக் கொள்கையில் கொண்டுவருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆனால், புதிய கல்விக் கொள்கை, கல்வித்துறையை காவிமயமாக்குவதை மட்டும் உள்ளடக்கியது அல்ல. கார்ப்பரேட்மயமாக்கத்தையும் உள்ளடக்கியது. கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு. வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் அதற்கு துலக்கமான சான்றுகளாகும்.

கல்வித்துறையில் என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வி வழங்குவதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொள்வது, கல்வியை தனியார் – கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றியமைப்பது என புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு கூறுகளைக் கொண்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது தி.மு.க. அரசு.

கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது, மறுகாலனியாக்கக் கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முன்னேறிய, அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். கல்வித்துறையை பல துறைகளாகப் (தனிச்சிறப்புமயமாக்கல் – Specialization) பிரித்து, அவற்றை அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் செய்வது ஆகும்.

கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகள், மறைமுகமாக காவிமயமாக்கத்திற்கு தான் வழிவகுக்கும். சான்றாக, என்.ஜி.ஓ.க்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், என்.ஜி.ஓ.க்கள் என்ற போர்வையில் காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைய சாதகமாக அமையும்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட “அகஸ்தியா” என்ற தொண்டு நிறுவனத்திற்கு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் நடத்த அனுமதி அளித்தது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

“இல்லம் தேடிக் கல்வி” திட்டமும் தன்னார்வலர்களைக் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டது. தன்னார்வலர்கள் என்ற போர்வையில் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். எனவே, இதன் மூலமும் காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்தத் துடிக்கும் காவிக் கும்பல், இதை தங்களுக்கு சாதகமான வாய்ப்பாகவே கருதி பயன்படுத்தி இருக்கும்.

மேற்கூறியவை சில சான்றுகள்தான். கல்வித்துறையில் என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைவதும் அதிகரிக்கும். அதன் மூலம் காவிக் கும்பலின் நச்சுக் கருத்துகள் மாணவர்களின் மனதில் விதைக்கப்படும். இது மறைமுகமாக கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கை ஆகும்.

இதுதானா திராவிட மாடல் ஆட்சி?

காவி கும்பல் நமது நாட்டிற்கு ஆபத்தானது என்றும், தாங்கள்தான் சமூக நீதிக் காவலர்கள் என்றும் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. ஆனால், இந்த சமூக நீதிக் காவலர்கள்தான் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அமல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையை காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலுக்கு திறந்துவிடுகிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் பா.ஜ.க கும்பலுக்கு எதிரான வெறுப்புணர்வுதான் தி.மு.க வெற்றி அடைய முக்கியக் காரணமாகும். ஆனால், புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, இரண்டாண்டுகளாக புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதும், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையையே நடைமுறைப்படுத்த விழைவதும் தி.மு.க. அரசு மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

திராவிட மாடல், சமூகநீதி ஆட்சியின் அவலம் இதுதான். இந்த கேடுகெட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள தி.மு.க.தான் பாசிசக் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறதாம். நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

பாசிசக் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற தி.மு.க.வை விட்டால் வேறுவழியில்லை என்று தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.வின் நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.


பிரவீன்

சிறுவணிகத்தை அழிக்கும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக களமிறங்குவோம்! | தோழர் ரவி

சிறுவணிகம் வளர்ந்து வருவதைத் தடுத்து பெருவணிக நிறுவனங்கள் வளர பல சலுகைகள் அளிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா. 3500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லு லு மால்களை அனுமதிக்கும் தமிழக அரசு எப்படி இங்குள்ள சிறு குறு வணிகர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும்.லு லு மால் கோயமுத்தூரில் அமைய இருப்பதைக் கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊடகங்களில் என்ன கூறினார். எங்கள் கட்சியை மீறி ஒரு செங்கற்களை கூட லு லு நிறுவனத்தால் வைக்க முடியாது என்றால் ஆனால் இன்று அந்நிறுவனம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இன்னும் மௌனம் காத்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

இப்படி அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதன் பின்னணியில் இருப்பது தனியார்மய தாராளமய உலகமய பன்னாட்டு கார்ப்ரேட் கொள்கைகள் இதை முறியடிப்பதன் மூலமே சிறு குறு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க முடியும். ஆகவே அதற்கெதிராக உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!

வேதனை அளிக்கும் இந்த வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ராணுவம், மத்திய அமைப்புகள் உட்பட அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மணிப்பூரின் அமைதியை பற்றி ஆர்.எஸ்.எஸ்க்கு திடீர் அக்கறை ஏன் வருகிறது. அக்கறையெல்லாம் ஒன்றுமில்லை, அது மோடி அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கை செய்தி!

எங்கள் மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, அது குறித்து மோடி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரேடியோ பெட்டியை உடைத்து “மன்கி பாத்” நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் மணிப்பூர் மக்கள், தீப்பந்தம் ஏந்தி போராடினார்கள் பெண்கள். போராடுபவர்கள் எல்லாம் மேய்தி இன மக்கள் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது.

நான் தொட்டதெல்லாம் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று வரம் கேட்டவன், தன் தலையிலேயே கை வைத்துக் கொண்டதுபோல் ஆகியிருக்கிறது காவிக் கும்பலின் நிலை.

எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக  உருத்திரண்டு எழுந்தபோது, “அரசுக்கு எதிரான நீண்ட காலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவை அதிகரித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றது ஆர்.எஸ்.எஸ். (இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக் கட்டுரை 20.11.2021)

தற்போது மணிப்பூர் வன்முறை குறித்து ஆர்.எஸ்.எஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதனோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரண்டுமே பீதியின் வெளிப்பாடுகள். தங்களது நிகழ்ச்சி நிரல் தங்களுக்கே எதிராய் மாறிப்போவதை எதிர்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடுகள்!

மதவெறி பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம். ஆனால் உழைக்கும் மக்களோ அமைதியை விரும்புகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!

புதிய ஜனநாயகம் முகநூலிலிருந்து…

மோடியின் அமெரிக்கப் பயணம்: பெரியண்ணன் அமெரிக்காவின் சிவப்புக் கம்பளம் எதற்காக?

“கிழக்கில் உதித்த ஹிட்லர் மோடி”, “பைடன், மோடியின் பாசிசத்தை நிறுத்து” – இப்படிப்பட்ட முழக்கங்களால்தான் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வெள்ளை மாளிகைக்கு முன்பு போராட்ட ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ட்விட்டரில் “மோடியை வரவேற்கவில்லை” (#Modi_not_welcome) என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், பைடன் மோடியை இதுபோல் ஒரு அதிகாரப்பூர்வமான சந்திப்பிற்கு அழைத்திருப்பது இதுதான் முதல் முறையாகும். பைடனின் இந்த அழைப்பும், ஐ.நா.வில் மோடி யோகா செய்து காட்டுகின்ற நிகழ்வும் உலக அரங்கில் மோடி இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்திருப்பதாக சங்கிகளால் இணைய வெளியில் ஓதிவிடப்படுகிறது.

பைடன் மோடி இடையிலான இந்தச் சந்திப்பில் ஆயுத உற்பத்தித் துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்துவது பற்றி பேசப்படலாம் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

படிக்க : மோடியின் மௌன ஆசனம் | கேலிச்சித்திரம்

உண்மையில், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்திற்கு சீனாவும் ரஷ்யாவும் சவாலாக தோன்றியுள்ள இன்றைய உலகச் சூழ்நிலையில், சீனாவுக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி, தன்னுடைய ஆதிக்கக் கால்களை பசுபிக் கடல் பிராந்தியத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக “தென்கிழக்கு ஆசியாவின் உக்ரைனாக” இந்தியாவை மாற்றும் சதி திட்டத்தின் ஒரு அங்கம்தான் பைடனின் அழைப்பு.

அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.

இஸ்லாமிய மக்களை நான்காம்தர குடிமக்களாக்கி இந்துத்துவ பாசிசத்தை திணித்துவரும் மோடி “கிழக்கின் ஹிட்லர்” மட்டுமல்ல, மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கையில் அதைப்பற்றி ஒரு வார்த்தை வாயைத் திறந்து பேசாமல், கண்டும் காணாமல் அமெரிக்காவுக்கு ஓடிப்போன மோடி “இந்தியாவின் நீரோவும்” கூட!

புதிய ஜனநாயகம் முகநூலிலிருந்து…

மோடியின் மௌன ஆசனம் | கேலிச்சித்திரம்

மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதை இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதி பெருக்கிவருகின்றன. மோடி அங்கு சர்வதேச யோகா தினத்தை ஜோ பைடனுடன் கொண்டாடி மகிழ்கிறார். ஆனால், உண்மை நிலைமை என்ன? அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், “கிழக்கில் உதித்த ஹிட்லர் மோடி”,  “பைடன், மோடியின் பாசிசத்தை நிறுத்து” என்று பதாகைகளை ஏந்தி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோடி அமெரிக்கா சென்றுள்ள நேரமானது, நாடே கொந்தளித்து கொண்டிருக்கும் நேரம். பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறைகளில் பல அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மணிப்பூரைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் காவி பயங்கரவாதிகளின் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான மோடி இதைப் பற்றி எதுவும் வாயேத் திறக்காமல், தற்போது மௌன ஆசனத்தில் இருக்கிறார்.

மேனகா
கேலிச்சித்திரம் : நியூஸ் கிளிக்

எரிகிறது மணிப்பூர்: பற்ற வைத்தது காவி! | தோழர் அமிர்தா

ணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல்.

அங்கு மெய்த்தி, குக்கி, நாகா போன்ற பழங்குடி இனக்குழுக்குள் 40 நாட்களுக்கு மேலாக கலவரம் மூண்டு கொண்டிருக்கிறது. வீடு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கிறார்கள். மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மோடி அரசு மணிப்பூர் பிரச்சனையை சுமூகமாக அணுகித் தீர்த்து வைப்பதற்கு பதில் இருவரையும் மோத வைத்து பகையாளியாக்கும் வேலையை செய்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!

டகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூர், கடந்த மே முதல் வாரத்திலிருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மேய்தி மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்தான், அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது.

தலைநகரான இம்பாலைச் சுற்றியுள்ள சமவெளிப்பகுதிகளில் மேய்தி இனத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் மேய்திக்கள் சுமார் 53 சதவிகிதமாக உள்ளனர். கல்வி, அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் மேய்தி இன மக்களே செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர். மாநில அரசாங்கத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 சட்டமன்ற உறுப்பினர்கள் மேய்திக்கள்.

இவ்வாறு மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தும் மேய்திக்கள், 2013ஆம் ஆண்டு தொடங்கி தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19, 2023 அன்று, மேய்திக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசிற்கு தனது பரிந்துரைகளை மாநில அரசு வழங்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.

ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதியினர் இடஒதுக்கீடுகளை மேய்திக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, தற்போது மேய்திக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும், அதைவிட முக்கியமாக மலைப்பகுதிகளில் தங்களுக்குள்ள உரிமைகள் பறிபோகும் என்றும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர்.


படிக்க: மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!


மேய்திக்களுக்கு சாதகமாக அமைந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை எதிர்த்து, பழங்குடி அமைப்புகள் போராடத் தொடங்கினர். பழங்குடியினரின் போராட்டங்களை மேய்திக்களும் எதிர்க்கத் தொடங்கினர். இப்படி இருதரப்புக்கு இடையில் மோதல் போக்கு மூண்டெழுந்துள்ளது.

மேய்திக்களில் ஆகப்பெரும்பான்மையோர் இந்துக்கள். நாகா, குக்கி போன்ற பழங்குடியினரில் ஆகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள். ஆகவே, மேய்திக்களுக்கும் குக்கிகளுக்குமான மோதல் இந்து, கிறித்தவ மோதலாகவும் மாற்றப்பட்டுவருகிறது.

சிதைந்து கிடக்கும் மணிப்பூர்!

பல்வேறு பழங்குடியினங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்பான “அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கம்” சார்பாக கடந்த மே 3 அன்று பேரணி நடத்தப்பட்டது.  தலைநகர் இம்பால் உள்ளிட்டு சுரசந்த்பூர், தெங்னௌபால், சந்தல், கங்போக்பி, நோனி, உக்ருள் ஆகிய பகுதிகளில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, குக்கிகள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டம் மற்றும் தலைநகர் இம்பால் போன்ற இடங்களில் வன்முறை வெடித்தது. இவ்வன்முறையில் குக்கிக்களும் மேய்திக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இம்பாலில் மெய்தி மக்களின் மதக்கொடிகள் உள்ள வீடுகளை விட்டுவிட்டு குக்கிகளின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன.

சுரசந்த்பூரில் சிறுபான்மையாக உள்ள மேய்திகளின் வீடுகள் தாக்கப்பட்டன. அதேவேளையில், குக்கிகளைச் சேர்ந்த சிலர் மேய்திகள் மீது தாக்குதல் தொடுத்தபோது, அங்கிருந்த குக்கி இனப் பெண்கள் மேய்தி மக்களை அரணாக சூழ்ந்து நின்று அவர்களைக் காப்பாற்றிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தொடர்ச்சியான வன்முறைக் கலவரங்களால், வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பள்ளிக் கூடங்கள், அங்கன்வாடிகள், கடைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குக்கி இனத்தைச் சேர்ந்தவரின் மருத்துவமனையும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. குக்கிகள் கிறித்தவர்கள் என்பதால், இதுவரை 120க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன; அவற்றுள் சில தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரசந்த்பூர் பகுதியில் அமைந்திருந்த, குக்கி பழங்குடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் நடத்திய வரலாற்றுப் புகழ்பெற்ற நூற்றாண்டு நினைவுச் சின்னமும் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.


படிக்க: இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!


மே 3-இல் நடைபெற்ற வன்முறையால், 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் மற்றும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு புலம்பெயர்ந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையை மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை.

இவ்வன்முறையால் போதிய உணவோ, மருந்துகளோ இன்றி சுகாதாரமற்ற முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளிகள், கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இணைய வசதி முடக்கப்பட்டிருக்கிறது. இராணுவமும், துணை இராணுவமும் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. “மணிப்பூரின் நிலைமை, ஒரு உள்நாட்டுப் போர் நடந்ததைப் போல இருக்கிறது” என்கிறார் சுரசந்த்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் தன்னார்வலருமான ஜான் மாமாங்க். மேலும், இம்பால் மற்றும் இதர பகுதிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட கும்பலை போலீசார் தடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் உள்ளூர் மக்கள்.

மேலும், மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றபோது, மோடியால் தேசத்தின் பெருமையாகப் புகழப்பட்ட மல்யுத்த வீராங்கனை மேரிகோம், “எனது மாநிலம் பற்றி எரிகிறது; உதவுங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு டிவிட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மோடியோ கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பஜ்ரங் பலி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “இது ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை” என்று பல பத்திரிகையாளர்களும் மோடியை விமர்சித்திருந்தனர்.

காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை

அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் போன்ற மேய்தி இனத்தைச் சார்ந்த இனவெறி அமைப்புகளே குக்கிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளன என்பதற்கான சான்றுகள் தற்போது வெளிவந்துள்ளன. இக்குண்டர் படை அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவையாகும்.

“அரம்பை தெங்காலும் மேய்தி லீபனும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைப் போன்றவை. கருப்பை உடையில் இருந்த இக்கும்பல்கள், துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்றனர். காவல் நிலையங்களுக்குள் நுழைந்து ஆயுதங்களை சூறையாடினர். அதுனூடாக தேவலாயங்களை எரித்தனர். கிராமங்களை சூறையாடினர்” – என்று மணிப்பூரில் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறையைப் பற்றி விவரிக்கிறார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

மன்னர் காலத்திய மணிப்பூரின் பெருமையையும், மெய்திக்களின் பண்பாடான சனமகி (Sanamahi) பண்பாட்டை மீட்டமைக்க வேண்டும் என்ற கொள்கையையும் உடைய கருஞ்சட்டை அணிந்த இனவெறிக் கும்பல்தான் அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் கும்பல்களாகும்.

மேய்திக்களின் கொடியான சனமகி கொடிதான் மணிப்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இவ்வன்முறைக் கும்பலுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் உள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த 300 வருடங்களுக்கும் மேலாக, மேய்திகளின் பண்பாடான சனமகி பண்பாடும், பார்ப்பன இந்துப் பண்பாடும் ஒன்றுகலந்திருக்கிறது. மேய்திக்களின் பண்பாட்டில் இந்துமதப் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மேலோங்கி இருக்கின்றன. மேய்திகளின் பண்பாட்டை இந்துத்துவமயமாக்கி, அவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று, குக்கிகளுக்கும் மேய்திகளுக்கும் இடையேயான இன வன்முறையை தூண்டிவிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவிக் கும்பல்.

நிலம் யாருக்கான பிரச்சினை?

சமவெளிப் பகுதிகளில் உள்ள மேய்திக்களுக்கும், மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான இன மோதல்களுக்கு அடிப்படையாக இருப்பது நிலம்தான் என்று பல்வேறு முதலாளித்துவ அறிவுஜீவிகளும், ஊடகங்களும் முன்வைக்கிறார்கள். மேய்திக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோருவதற்குக் காரணம், மலைப்பகுதிகளில், பழங்குடியினர் அல்லாதவர் நிலம் வாங்க முடியாது என்பதாலும், தங்களை பழங்குடியினராக வகைப்படுத்தினால் மலைப்பகுதிகளில் தங்களால் நிலம் வாங்க முடியும் என மேய்திக்கள் கருதிகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

கூடுதலாக, எல்லைப்பகுதி மாநிலமான மணிப்பூரில், வங்கதேசம், மியான்மர் ஆகிய அண்டைநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக குடியேறுகின்றனர். இதனால், சமவெளிப்பகுதிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

“மெய்தி-குக்கி மற்றும் இதர இன மக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு நிலம்தான் அடிப்படையாக இருக்கிறது. இடப்பெயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது” என்று மனித உரிமை வழக்கறிஞரும், வடகிழக்கு மாநிலங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருபவரான நந்திதா ஹஸ்கர் நியூஸ்கிளிக் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் பிரச்சினையின் ஒருபகுதான். உண்மை என்னவெனில் மலைப்பகுதி நிலப்பரப்பில் சொத்து வாங்குவது, அனைத்து மேய்தி இன மக்களது கோரிக்கை அல்ல. மேய்தி இனத்தைச் சேர்ந்த ஆதிக்க வர்க்கங்களது கோரிக்கையாகும். எப்படி, தலித்துகளது இடஒதுக்கீட்டால்தான், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஆண்டசாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்கள் பிரச்சாரம் செய்கிறார்களோ, அதைப் போன்றதொரு பிரச்சாரமே மேய்திக்களின் பழங்குடியினர் பட்டியல் கோரிக்கையாகும்.


படிக்க: அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !


மேய்திக்களிலேயே அதிகாரத்தில் உள்ள, பணம் படைத்த வர்க்கம் சொத்து வாங்கிக் கொழுப்பதற்காகவும் கார்ப்பரேட்டுகளுக்கு தரகுவேலை பார்ப்பதற்காகவும் எழுப்பும் கோரிக்கை, இனவெறியால் ஒட்டுமொத்த மேய்திக்களின் கோரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அடிப்படையை புரிந்துகொண்ட சங்கப்பரிவாரக் கும்பல், மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலை மணிப்பூரில் மிக லாவகமாக அமல்படுத்திவருகிறது.

தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கிருஷ்ணசாமி போன்றவர்கள் எழுப்பிய கோரிக்கையை ஆதரித்து, அவரை கோடாரிக்காம்பாக வைத்தே அச்சமுதாய மக்களை ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாட்படையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதைப் போன்ற ஒன்றாகவே மணிப்பூர் விவகாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

காவி பயங்கரவாதம் மட்டுமல்ல, கார்ப்பரேட் சதியும்கூட!

ஆளும் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததிலிருந்து, பெரும்பான்மை மேய்திக்களுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை பழங்குடியினருக்கு எதிராகவும் செயல்படுவதாக குக்கி இனத்தைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

குக்கிகள் பெரும்பாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசாவைப் பயிரிடுகின்றனர். இதிலிருந்து அபின் என்ற போதைப் பொருள் தயாரிக்க முடியும். இதைவைத்துக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ஆக்கிரமிப்பு, போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் குக்கிகளுக்கு எதிரான அரச வன்முறையைக் கட்டவிழித்திருக்கிறது பிரேன் சிங் அரசு.

மேலும், குக்கி-மேய்தி மோதல் அரங்கேறிய பிறகு, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “குக்கிகள் அனைத்து பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களையும் ஆக்கிரமித்து கசகசா பயிரிடுகின்றனர் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றனர்” என ஒட்டுமொத்த குக்கி இன மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கியிருக்கிறார் பிரேன் சிங். இது குக்கிகள் மத்தியில்கூடுதல் பதற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் 2022-இல் சுரசந்த்பூர் மாவட்டத்தில் அமைந்திருந்த 38 கிராமங்களை வனப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கூறி வெளியேற்றியுள்ளது பிரேன் சிங் அரசு. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 20 அன்று சுரசந்த்பூரில் உள்ள சாங்ஜாங் என்ற கிராமத்தையும் காலி செய்திருக்கிறது. இக்கிராமங்கள் 50-60 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் என்கிறார், பழங்குடியின அமைப்புத் தலைவரான முவன் டாம்பிங்.

குக்கிகளுக்கு எதிரான பிரேன் சிங் அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த மார்ச் 10-இல், சுரசந்த்பூர், உக்ருள், காங்போக்பி, தெங்னௌபால், ஜிரிபம் மற்றும் தமீங்லாங் போன்ற மலைப் பகுதியிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த குக்கிகள் மாபெரும் பேரணி நடத்தியிருக்கின்றனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற குக்கிகள் மீது போலீசார் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

கடந்த மார்ச் 29-ஆம் தேதியன்று, வனப்பாதுகாப்புச் சட்டம் 1980-இல் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இத்திருத்தத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு – இராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணப்பயிர் வேளாண்மை செய்யவும், காடுகளுக்கு அடியில் உள்ள வளங்களைக் கொள்ளையிடவும் அனுமதியளித்திருக்கிறது. இத்திருத்தத்தின் மூலம், வனப்பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி, வனங்களை கார்ப்பரேட்டு கொள்ளைக்குத் திறந்துவிடுவதற்கானதாக மாற்றியமைத்திருக்கிறது மோடி அரசு.

இந்தப் பின்னனியில்தான், பல்வேறு மாநிலங்களுடைய பழங்குடிகளும் அவர்கள் வாழ்விடமான காடுகள் – மலைகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரின் வனப்பகுதிகளில் அரசே டிரோன்களை வைத்து குண்டுவீசி, பழங்குடி மக்களை அச்சுறுத்தி விரட்டும் விசயம் அண்மையில் அம்பலமாகியிருக்கிறது. சத்தீஸ்கருக்கு டிரோன் என்றால், மணிப்பூருக்கு இனச் சண்டை.

சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒழித்ததன் மூலம், காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று தம்பட்டமடித்தது காவிக் கும்பல். ஆனால், இன்று காஷ்மீரில் ஜக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனமானது பெரிய மால் தொடங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறது என்று தனது பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் நந்திதா.காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அக்கனிம வளத்தைக் கொள்ளையிட காத்திருக்கின்றன அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கழுகுகள். காஷ்மீரின் நிலைதான் நாளை மணிப்பூருக்கும்.

இனவெறிக் கும்பலும், மதவெறிக் கும்பலும், கார்ப்பரேட் கழுகுகளும் சுரண்டிக் கொழுப்பதற்காக அப்பாவி மேய்தி இன மக்களும், குக்கி இன மக்களும் பகையாளிகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.


அப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்

20.06.2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள்  மீது சித்திரவதை!
பாலியல் வன்கொடுமை!

ஆந்திரா சித்தூர் போலீசை தூக்கில் போடு!

கண்டன அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள குறவர் இனத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 7 பேரை, ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசு கடந்த 11ம் தேதி  விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போதே சித்திரவதை செய்துள்ளது.

ஆந்திர போலீசு  மீது புகார் செய்த அந்த கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் இரவோடு இரவாக மீண்டும் அதே சித்தூர் போலீசு  கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தாமல்  காவல்நிலையத்தில் ஒருவார காலமாக வைத்து, விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது பல்வேறு சித்திரவதைகள் செய்துள்ளது சித்தூர் போலீஸ்.

முகங்களை பிளாஸ்டிக் கவர்களால் மூடியும் பிளாஸ்டிக் பைப்களை கொண்டு  கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தியுள்ளனர். மேலும் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் முயற்சிகள் மூலமாக கைது செய்யப்பட்ட 10 பேர்களில் 8 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இருவர் சிறையில்  உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


படிக்க: இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !


உச்ச நீதிமன்றம்  பல்வேறு தீர்ப்புகளின் மூலம் கைது செய்வதற்கான விதிமுறைகளை வகுத்தளித்த போதும் அவை ஒருபோதும் இந்த நாட்டின்  சாதாரண மக்களை கைது செய்யும் போது பின்பற்றப்படுவதில்லை.

போலீஸ், ராணுவம், துணை ராணுவ படையினர் மேற்கொள்ளக்கூடிய குற்றங்களுக்கான தண்டனை என்பது பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட பல மடங்கானதாக இருக்கும் வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே தமிழ்நாடு அரசு ஆனது,  குற்றம் இழைத்த ஆந்திர சித்தூர் போலீசை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  இக்குற்றம் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் அமைத்து தொடர்புடைய போலீசுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர்.சி வெற்றி வேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
9962366321

பிலிப்பைன்ஸ்: விவாகரத்து உரிமைக்காகப் போராடும் பெண்கள்!

ரு நாடு மதவாதிகளால் ஆட்சி செய்யப்பட்டால் அது எந்த அளவிற்குக் கலாச்சார ரீதியாக பின்னோக்கி  இழுக்கப்படும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பிலிப்பைன்ஸ் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை அங்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. மத அடிப்படைவாதம் ஆதிக்கம் செலுத்துவதால், அங்குப் பெண்கள் விவாகரத்து பெரும் உரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த ஸ்டெல்லா சிபோங்கா என்ற பெண் திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு, அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விருப்பம் இல்லாத திருமண வாழ்வை முறித்துக்கொள்ள முடிவெடுத்தார்.

ஆனால் அங்குள்ள யதார்த்த நிலைமை அவருக்கு எதிராக இருந்தது. அவர் “கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக அமர்ந்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் அவ்வாறு விவாகரத்து கிடைப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. குறிப்பாக இங்கு மத அடிப்படையில் விவாகரத்து செய்வது என்பதே சட்டவிரோதமானது தவறானது என்ற நிலை உள்ளது. ஒருவேளை விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்று முறையிட்டால் தீர்வு கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதுதான் இந்த நாட்டின் தற்போதைய நிலைமையாக உள்ளது” என்று கூறினார்.

வாடிகனுக்குப் பிறகு விவாகரத்து உரிமையை மறுக்கும் நாடாக பிலிப்பைன்ஸ் இருக்கிறது. மேலும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தன் வாழ்க்கைக்கு உகந்த வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாத அளவுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பெரும் தடையாக அமைந்துள்ளது. வன்முறைகளில் ஈடுபடும் கணவர்களிடம் இருந்து மீள முடியாத நிலைமைக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களைத் தள்ளிவிடும் வேலையைத்தான் இந்நாட்டு அரசும் செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  விவாகரத்து பெறுவது என்பது கடினமான வேலையாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர் விவாகரத்து உரிமைக்காக வாதாடக்கூடிய வழக்கறிஞர்கள்.


படிக்க: இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!


இதுபற்றி பேசிய ஸ்டெல்லா சிபோங்கா “விவாகரத்து உரிமைக்கான சட்ட செயல்முறைகள் என்பது மிக மெதுவாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. வறுமையில் வாடும் நாட்டில் வழக்குகளுக்காக எப்படி பல ஆயிரம் டாலர்கள்  செலவு செய்ய முடியும். அப்படி ஒருவேளை செலவு செய்து வழக்கு தொடர்ந்தால் கூட வெற்றிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை” என்கிறார்.

மேலும் “கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு இங்கு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை,” என்று ஆதங்கத்தோடு கூறுகிறார் சிபோங்கா. இது சிபோங்காவின் நிலை மட்டுமல்ல; அனைத்துப் பெண்களுக்கும் இதே இழிநிலை தான்.

பெண்களுக்கு எதிராக மத நம்பிக்கைகள் ஆற்றும் பங்கு குறித்துக் கூறுகையில் “கடவுள் இணைத்ததைப் பிரிக்க முடியாது என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள். அது உண்மையல்ல. என் கணவர் என்னைக் கொல்ல முயன்றாலும், உளவியல் ரீதியாகத் துன்புறுத்தினாலும்  அனைத்தையும் சகித்துக் கொண்டு எப்படி அமைதியாக நான் வாழ முடியும். இது போன்ற செயல்களுக்குப் பின்னும் எனக்கு  விவாகரத்து  அனுமதிக்கப்படவில்லை என்றால் இவர்களின் நோக்கம் மத நம்பிக்கைகளை அமல்படுத்துவதே அன்றி பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல” என்றார் சிபோங்கா.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை பிலிப்பைன்ஸ் என்ற ஒரு மதவாத அரசாங்கம் செய்யும் நிகழ்வாக மட்டும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மத அடிப்படையில் நாட்டை ஆளத்துடிக்கும் அல்லது ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அரசாங்கங்களின் நடவடிக்கைகள் இயல்பாகவே பெண்களை ஒடுக்குவதாகத் தான் இருக்கும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை, ஈரான் நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை எல்லாம் இவ்வகையிலானதே.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


இந்தியாவின் நிலையும் படுமோசமாகத்தான் உள்ளது. பல மாதங்களாக பாலியல் கொடுமைகளுக்கு எதிராகத்  தெருவில் அமர்ந்து போராடிய மல்யுத்த வீராங்கனைகளை அடித்து இழுத்து கைது செய்தது இந்திய அரசு.

இன்று வரை எல்.ஜி.பி.டி.க்யூ என்ற வெவ்வேறு பாலின இயல்புகள் கொண்டவர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்காது மறுத்து வருகிறது இந்திய அரசு. மேலும் நாடு முழுக்க பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறை வழக்குகளை இந்து மனுதர்ம நூல்களின் அடிப்படையில்  விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. பெண்கள் கோவில்களுக்குள் நுழைவதைத் தடுப்பது எனப் பாலின சமத்துவத்திற்கெதிராக  தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இவர்கள் நிறுவத் துடிக்கும் மனுதர்ம அடிப்படையிலான இந்து ராஷ்டிரம்  இந்தியாவில் அமைந்துவிட்டால் பிலிப்பைன்ஸ் நாட்டை விடப் பன்மடங்கு ஒடுக்குமுறைகளை நம் பெண்கள்  சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


சித்திக்

இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!

0

த்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழலில் அம்மாநிலத்தில் உள்ள விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், தேவபூமி ரக்ஷா அபியான் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஜூன் 15 அன்று முஸ்லீம்களை அச்சுறுத்தும் வகையில் ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக புரோலா நகரில் ஒரு மகா பஞ்சாயத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அரசு நிர்வாகம் அந்நிகழ்வுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

கடந்த மே 26 அன்று சிறுமி ஒருவரை இருவர் (ஒருவர் இந்து மற்றொருவர் முஸ்லீம்) கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த மே 29 அன்று இந்துத்துவ கும்பல்கள் பேரணி ஒன்றை நடத்தின. அதில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும்’, ‘இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள், இஸ்லாமியர்களை விரட்டியடியுங்கள்’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உத்தரகாண்டிலேயே பிறந்து வளர்ந்த முஸ்லிம் ஒருவர் “இந்த முழக்கங்களைக் கேட்ட என்னுடைய 10 வயது மகள் நம்மை பற்றி இவ்வாறு ஏன் பேசுகிறார்கள் என்று என்னிடம் கேட்டார். என்னிடம் அதற்குப் பதில் இல்லை; எனது மகள் அழத் தொடங்கிவிட்டார். பேரணியின் போது, தாங்களும் அப்பேரணியில் கலந்து கொள்வதைப் போல் போலீசு அவர்களுடன் நடந்து சென்றது” என்று கூறினார்.

“உத்தரகாசி மக்கள் வகுப்புவாதிகள் இல்லை. சில கும்பல்கள் வேண்டுமென்றே வெறுப்புப்பேச்சு பேசுகின்றனர்; நில உரிமையாளர்களை மிரட்டி முஸ்லீம்களின் கடைகளை காலி செய்ய வைக்கின்றனர். இப்பகுதியில் மொத்தம் 38 கடைகள் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவற்றில் 12 கடைகளிலிருந்து நில உரிமையாளர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.


படிக்க: மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!


இதன் தொடர்ச்சியாக, ஜூன் 15-ஆம் தேதி மகா பஞ்சாயத்து நடத்தவிருப்பதாகவும், அதற்குள் முஸ்லீம்கள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும், காலி செய்யாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தேவபூமி ரக்ஷா அபியான் சார்பாக புரோலா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதேபோல, பார்கோட் (Barkot) நகரில் முஸ்லீம் கடைகளுக்கு வெளியே கதவுகளில் கருப்பு நிறத்தில் “X” என்ற குறியீடு இடப்பட்டது.

பா.ஜ.க தொண்டரான சலீம் அகமது என்பவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். “நான் எனது வீட்டை விற்றுவிட்டு டேராடூனுக்கு குடிபெயர இருக்கிறேன். இப்படி ஒரு நிலைமையை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார். பா.ஜ.க தொண்டராக இருந்தாலும் அவரும் ஒரு முஸ்லீம் தானே!

இங்கு வகுப்புவாத பதட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருபவர்கள் இந்துத்துவ சாமியார்கள்.

உத்தரகாண்டில் தற்போது நிலவுகின்ற வகுப்புவாத பதட்டம் குறித்து சுவாமி ஆதி யோகி என்ற இந்துத்துவ சாமியார் தி வயர் வலைத்தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார். ஆதி யோகி முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசி வரும்  தர்ஷன் பாரதியின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆதி யோகி தனது பேட்டியில், “இந்நிலம் கடவுள்கள், முனிவர்கள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமானது. சேவைக்காகவே மக்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் (முஸ்லீம்கள்) இறைச்சி உண்கின்றனர்; எங்கள் பெண்கள் மீது தேவையற்ற பார்வையைச் செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

அப்படியானால் உத்தரகாண்டில் முஸ்லீம்களைப் புறக்கணிக்கிறீர்களா என்று தி வயர் கேட்டதற்கு, “இல்லை, இல்லை. இந்த இடம் எங்களுக்கு மெக்கா போன்றது. மெக்காவுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி உண்டா? அதேபோலத்தான், இது எங்கள் மதத்தின் புனிதத்தலம். 2024-ஆம்‌ ஆண்டுக்குள் உத்தரகாண்டில் ஜிகாதிகளின் செல்வாக்கைத் துடைத்தெறிவோம்; அனைத்து இறைச்சிக் கடைகளையும் புறக்கணித்து மூடச்செய்வோம். 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி இங்கிருந்து துவங்கும்” என்று கூறினார்.

மகா பஞ்சாயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்குச் சுவாமி ஆதி யோகி, “இந்த விசயம் மத ரீதியாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அரசாங்கம் எங்கள் புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறினார்.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


இப்படி ஒரு அச்சமூட்டும் நிலையில்தான் உத்தரகாண்ட் மாநிலம் தற்போது உள்ளது. நடக்கவிருந்த மகா பஞ்சாயத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (Association for Protection of Civil Rights – APCR) உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றமோ “உயர் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லையா?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, வழக்கை முறைப்படி உயர் நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றம், ‘தான் கறார்’ என்பதை வெளிப்படுத்திக்கொண்டது.

அடுத்ததாக ஏ.பி.சி.ஆர்-இன் மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், சட்ட ஒழுங்கைப் பாதுகாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், உத்தரகாசி மாவட்டத்தின் புரோலாவில் இந்துத்துவ கும்பல்கள் ஏற்பாடு செய்திருந்த மகா பஞ்சாயத்து குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தியது.

மாநில பா.ஜ.க அரசாங்கம் மகா பஞ்சாயத்தைத் தடுத்து விட்டதாக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், உத்தரகாசியில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்னிலை வகிக்கும் தேவபூமி ரக்ஷா அபியான் சங்கத்தின் (Devbhoomi Raksha Abhiyan Sangathan) நிறுவனரும் இந்துத்துவ சாமியாருமான தர்ஷன் பாரதியின் கூற்று, பா.ஜ.க அரசாங்கம் இந்து மதவெறி கும்பல்களுக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

முன்னதாக தர்ஷன் பாரதி “மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ‘நில ஜிகாத்’ குறித்து விவாதித்தோம். அதன் பின்னர் தான் அவர் ‘நில ஜிகாத்’ குறித்த சட்டங்களை இயற்றினார். இதன் விளைவாகத்தான் 300-க்கும் மேற்பட்ட முஸ்லீம் கல்லறைகள் (mazars) இடிக்கப்பட்டன” என்று கூறியுள்ளார். புஷ்கர் சிங் தாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்பு ‘மசார் ஜிகாத்’ – ‘நில ஜிகாத்’ என்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து முஸ்லீம் கல்லறைகளை இடித்ததை தர்ஷன் பாரதி இங்கு சுட்டிக் காட்டுகிறார்.


படிக்க: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!


வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உத்தரகாசியில் வசிக்கும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்குப் பஞ்சம் இல்லை.

சான்றாக, பா.ஜ.க-வின் உத்தரகாசி மாவட்ட  எஸ்.சி பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளர் பிரகாஷ் குமார் தப்ரால் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களை (முஸ்லீம்களை) இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்; கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டோம். தாமாகவே அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்” என்று கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் முஸ்லீம் விரோத வெறுப்பு அரசியலால் சூழப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து முஸ்லீம்களுக்கு எதிரான பேரணிகள் இந்துத்துவ அமைப்புகளால் சுதந்திரமாக அரசின் துணைகொண்டு நடத்தப்படுகின்றன. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பேரணி நடந்தவாறே உள்ளது. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது. காவி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.


பொம்மி

“இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?”: அல் ஜசீரா ஆவணப்படத்திற்குத் தடை!

0

ஜூன் 14 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் அல் ஜசீராவின் “இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?” (India… Who lit the fuse?) என்ற செய்தி ஆவணப்படத்தை ஒளிபரப்பவோ வெளியிடவோ தடை விதித்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவில் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் வன்முறை தொடர்பான செய்தி ஆவணப்படமாகும். இது ஏற்கெனவே அரபு மொழியில் ஜூன்‌ 3 அன்று அல் ஜசீரா அரபி (@AJArabic) டிவிட்டர் பக்கத்தில்  வெளியாகிவிட்டது.

‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து இத்துறை தொடர்பான அதிகாரிகள் அங்கீகரிக்கும் வரை ஒளிபரப்போ வெளியீடோ செய்யப்படாமல் இருப்பதை மத்திய அரசும் அதன் கீழ் செயல்படும் உரிய அதிகாரிகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் சமூக நல்லிணக்கத்தையும் தேசப் பாதுகாப்பையும் இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைத் தொடுத்துள்ள ‘சமூக ஆர்வலர்’ என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சுதிர் குமார், இந்த ஆவணப்படத்தை நீதிமன்றம் தடை செய்யும் பொருட்டு பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளார். அதில் முதன்மையானதாக அவர் கூறியதாவது: “இந்த ஆவணப்படம் பல்வேறு மதப் பிரிவுகளிடையே வெறுப்பை விதைத்து இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அழிவை ஏற்படுத்தக்கூடும். சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி பொது ஒழுங்கு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும்.”

“இந்தியாவின் சிறுபான்மை முஸ்லீம்கள் அச்ச உணர்வுடன் வாழ்வதாகவும் பொது மக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் விதத்திலும் ஒரு சீர்குலைவு நோக்கம் கொண்ட கதையாடலை முன்வைக்கிறது. இந்திய அரசை சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானதாக எதிர்மறையாகச் சித்தரிக்கிறது” என்று சுதிர் குமார் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் தான் நீதிமன்றம் இந்த ஆவணப்படத்திற்குத் தடை விதித்துள்ளது. “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமையாக பேச்சுரிமையை அங்கீகரிக்கிறது. ஒளிபரப்பும் உரிமையும் பேச்சுரிமை – கருத்துரிமையில் அடங்கும். ஆனால் சரத்து 19(2)-இல் அதற்கான எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அல் ஜசீராவுக்கு 48 மணி நேரத்திற்குள் ‌நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 6 அன்று விசாரிப்பதாகக் கூறியுள்ளது.


படிக்க: முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை. ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்த பி.பி.சி-இன் செய்தி ஆவணப்படம் கடந்த ஜனவரியில் வெளியான போது அவசரநிலை காலகட்டத்தில் பயன்படுத்தும் ஐ.டி சட்ட விதிகளைப் பயன்படுத்தி பாசிச மோடி அரசு அதைத் தடை செய்தது. அந்த ஆவணப்படம் தொலைக்காட்சியில் திரையிடப்படவில்லை; அதேபோல அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அது முடக்கப்பட்டது.

இந்தியாவில் பாசிச தாக்குதல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் அவல நிலையைப் பற்றி பேசுவதென்பது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும்; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க‌ பாசிஸ்டுகள் குறித்துப் பேசுவது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும். ஆனால், தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற ‌ இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படங்கள் வெளியாவதென்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதாகும். இதுதான் ‘இந்து ராஷ்டிர நீதி’.


பொம்மி

ஏகாதிபத்திய போர்களினால் அகதிகளாக இடம்பெயரும் மக்கள்!

ஷ்ய – உக்ரைன் போர் மற்றும் சூடானில் நடந்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றால், 11 கோடி மக்கள் (110 மில்லியன்) அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 1.9 கோடி மக்கள் (19 மில்லியன்) தங்களது வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் எனவும், இது அந்த ஆண்டு இறுதியில் 10.84 கோடியாக (108.4 மில்லியன்) உயர்ந்தது எனவும் ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஆணையம் 14.06.2023 அன்று தெரிவித்தது.

பாதுகாப்பைத் தேடி தங்களது சொந்த நாட்டிற்குள்ளே அலைந்தவர்களும், நாட்டு எல்லையைவிட்டு வெளியேறியவர்களும் இந்த அதிகரித்த எண்ணிக்கையில் அடங்குவர். இதில் அகதிகளானவர்கள் மற்றும் புகலிடம் தேடியவர்கள் கிட்டத்தட்ட 37.5 சதவிகிதம் பேர் என்று அறிக்கைக் கூறுகிறது.

படிக்க : டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

இரண்டு மாதங்களுக்கும் மேலாக சூடானில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால்தான், அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11 கோடியாக அதிகரித்தது என்கிறார் ஐ.நா. அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி.

“இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானதாக உள்ளது. சர்வதேச பதட்டங்கள் மனிதாபிமான பிரச்சினைகளில் விளையாடும், மிகவும் துருவப்படுத்தப்பட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்” என்கிறார் ஃபிலிப்போ கிராண்டி.

2011 ஆம் ஆண்டு நடந்த சிரியா பிரச்சினைக்கு முன்பு, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக 4 கோடி (40 மில்லியன்) என மாறாமல் இருந்தது. ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போர், வர்க்க – இன பாகுபாடு, வன்முறை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவை மக்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் அகதிகளை அந்நாட்டிற்குள் நுழைவதற்கு பல கட்டுப்பாடுகளும் கடுமையான விதிகளும் விதிக்கப்படுகிறது என்கிறார் கிராண்டி.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப் பகுதிகளுக்கு வரும் அகதிகளை போலந்தும், ஹங்கேரியும் தங்கள் நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன. அதேபோல, அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அந்நாட்டில் இருக்கும் வலதுசாரி கட்சிகள் செய்து வருகின்றன என்கிறார் கிராண்டி.

பெரும்பான்மையான மக்கள் அகதிகளாக வெளியேறுவது உக்ரைன், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்துதான் என்கிறது புள்ளிவிவரம். ரஷ்ய – உக்ரைன் போர் கடுமையாக நடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில், 1.1 கோடி (11.6 மில்லியன்) உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதில், 59 லட்சம் (5.9 மில்லியன்) மக்கள் உள்நாட்டிலும், 57 லட்சம் (5.7 மில்லியன்) மக்கள் வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

படிக்க : திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!

கிரீஸ் அருகே கவிழ்ந்த அகதிகள் படகு

வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாகக் கடந்த ஜூன் 14 ஆம் தேதி லிபியாவில் இருந்து இத்தாலிக்குக் கடல்வழியாக பயணித்துள்ளார்கள். 750 பேரை ஏற்றிவந்த சிறிய படகு கிரீஸ் அருகே கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. படகில் பெண்களும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர். பலரது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் – உள்நாட்டுப் போர் – காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான். சொந்த நாட்டிற்குள்ளும், உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். உணவு – தங்குமிடம் ஏதும் இல்லாமல் செத்து மடிகின்றோம்.

தங்களது இலாபவெறிக்காக உழைக்கும் மக்களைப் பலிகொடுக்கும் இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தாமல், நம்மால் வர்க்க-இன பாகுபாடற்ற – வறுமையற்ற – பாதுகாப்பான வாழ்க்கையை  உருவாக்க முடியாது. உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்!

ஆதிலா