அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற தலைப்பில் பிப்-23 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டை தடுத்து நிறுத்துவதற்கு சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது, அடிமை எடப்பாடி அரசின் போலீசு.
மாநாட்டின் நோக்கம் குறித்து பேருந்துகள், இரயில்கள், கடைவீதிகள் மற்றும் தெருமுனைகளிலும் என மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சுவரொட்டி ஒட்டியதற்காக கைது; சுவரெழுத்து எழுதியதற்காக கைது; பிரசுரம் விநியோகித்ததற்காக கைது என அரசின் அடக்குமுறை தொடர்ந்த போதிலும் ”எதிர்த்து நில்!” என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது!
கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்த மாநாட்டை தடை செய்து திருச்சி மாநகர காவல்துறை பிறப்பித்திருந்த தடையை எதிர்த்து நேற்று முன்தினம் (12-02-19) உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தோம். “காவல்துறையின் ஆணை செல்லத்தக்கதல்ல” என்று நேற்று 13-02-19 மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.
மாநாட்டைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டதால் பிரச்சாரத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காவல்துறை. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தால் ஆத்திரமடைந்துள்ள பா.ஜ.க. வினர் ஆங்காங்கே பிரச்சாரத்தை தடுக்க முயற்சித்தனர். எல்லா இடங்களிலும் அவர்களுக்கு மக்களே சரியான முறையில் பதிலடி கொடுத்து அடக்கியிருக்கின்றனர்.
பா.ஜ.க. வினரால் நிறுத்த முடியாத எங்களது பிரச்சாரத்தை தடுக்கும் பொறுப்பை இப்போது போலீசார் ஏற்றிருக்கின்றனர். எல்லா ஊர்களிலும் கடை வீதிகள், குடியிருப்புகளில் மாநாட்டுக்கான துண்டறிக்கை விநியோகிப்பதை காவல்துறை தடுத்து வருகிறது. சுவர் விளம்பரங்களை அழிக்குமாறும் சுவரொட்டிகளை கிழிக்குமாறும் மிரட்டுகிறது.
தஞ்சையில் கைது செய்யப்பட்ட தோழர்கள்.
நேற்று தஞ்சை பேருந்து நிலையத்தில் மாநாட்டு துண்டறிக்கை விநியோகித்துக் கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தொண்டர்கள் 9 பேர் கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர். என்ன வழக்கு எதற்காக கைது என்பது கைது செய்த காவல்நிலைய அதிகாரிகளுக்கே தெரியவில்லை. பிறகு மேலிடத்திலிருந்து வந்த உத்தவின்படி, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள், உருட்டுக்கட்டை கொண்டு தாக்க வந்தார்கள் என்று இந்திய தண்டனைச் சட்டம் 505 1(b), 353, 147, 506(2) ஆகிய பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.
மேலும், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோவில்பட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 5 தொண்டர்களை வீடு புகுந்து கொண்டு சென்றிருக்கிறது தூத்துக்குடி காவல்துறை. கைது நடவடிக்கை குறித்து பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தபோதிலும், அவை எதையும் மதிக்காமல் என்ன வழக்கு, எதற்காக கைது என்ற எந்த விவரத்தையும் சொல்லாமல், சட்டவிரோதமான முறையில் ரவுடிகளைப் போல இந்த ஆள்கடத்தலை போலீசு நடத்தியிருக்கிறது.
“காவல்துறையின் மேல்மட்டம் பா.ஜ.க.-வின் உத்தரவுக்கு ஆடுவது எல்லை மீறிப் போய்விட்டது” என்று போலீசார் வெளிப்படையாகவே புலம்பும் அளவுக்கு எடப்பாடி அரசு மோடியின் எடுபிடி அரசாக மாறி இருக்கிறது.
எங்களது பிரச்சாரத்தை போலீசாரே முன்னின்று முடக்க முயல்வதன் மூலம், தனது சட்ட விரோத கைது நடவடிக்கைகளின் மூலமும், இது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரச்சாரப் பணியை போலீசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
இனி நாங்கள் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றுதான் – எதிர்த்து நில்!
#கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில் #ResistCorporateSaffronFascism
தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321
தங்களது வாழ்விடங்களை விழுங்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால், அவர்களை “நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்றும் “நக்சலைட்டுகள்” என்றும் ஆளும் வர்க்கங்களும் அடிவருடி ஊடகங்களும் சித்தரிக்கின்றன. வளர்ச்சிக்கு எதிராக அவர்கள் ஏன் இருக்கிறார்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
பழங்குடிகளின் கடுமையான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பிறகும் அவர்களது இடங்களை வலுக்கட்டாயமாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்ததும் பழங்குடிகளுக்கு என்ன நேர்ந்தது? வளர்ச்சி அவர்களுக்கோ அவர்களது இடங்களுக்கோ பயனளித்ததா?
கடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் கூட நிறுவனங்களால் எப்படி பழங்குடிகளது வாழிடங்களை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது என்பதை புரிந்து கொள்ள அப்படியான இடங்களுக்கு நேரில் செல்வது இன்றியமையாதது. மாநில அரசுகள் மற்றும் காவல்துறையின் உதவியினாலேயே இத்தகைய ஆக்கிரமிப்புகள் சாத்தியமானது. இந்நடவடிக்கையில் மக்களின் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் சிறைச்சுவர்களுக்குள்ளே அடைக்கப்பட்டனர்.
இப்பின்னணியில் இது போன்ற இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஒடிசாவின் காஷிபூர் (Kashipur) தொகுதியை சேர்ந்த குச்சைபடார் (Kuchaipadar) கிராமம் அதற்கு பதிலளிக்கிறது.
மண்ணின் மைந்தர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக 1992 -ம் ஆண்டில் டாடாவும் பிர்லாவும் பாக்சைட்சுரங்க மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தொடரும் திட்டங்களை அங்கே கைவிட்டனர். பின்னர், உட்கல் அலுமினா (Utkal Alumina – ஹிண்டால்கோ மற்றும் கனடிய நிறுவனம் ஒன்றின் கூட்டு நிறுவனம்) அங்கே நுழைந்தது. இம்முறையும் மக்கள் எதிர்த்தனர். ஆனால், மாநில அரசாங்கம் அந்நிறுவனத்தை அனுமதித்தது. கூடுதலாக மக்கள் கருத்தை அரசாங்கம் கேட்பதாய் கூறியது.
1992-லிருந்து பல்வேறு போராட்டங்களில் பகவான் மஜ்ஹி கலந்து கொண்டிருக்கிறார். 1996 லிருந்து பிரக்ருதிக் சம்பத்தா சரக்ஷ பரிஷத் (Prakrutik Sampada Suraksha Parishad) என்ற 24 கிராமங்களை உள்ளடக்கிய இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துக் கேட்பு நிகழ்வில் பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் உட்கால் அலுமினா நிறுவனத்திடம் சாய்ந்துவிட்டனர். போலீஸ் பட்டாளமும் நிரந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர். இளைஞர்கள் பணத்திற்கும் வேலைக்கும் விலை போயினர். அப்பா மகன், அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என குடும்பங்களுக்குள்ளும் மோதல்கள் உருவாக்கப்பட்டன. வாக்குறுதிகளுக்கு இணங்கி பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் இருந்து விலகி விட்டனர். இயக்கம் சிதறடிக்கப்பட்டது.
தொடர்ந்து போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் வீடு திரும்பியதும் உடைந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பதில் மூழ்கி விட்டனர். சொற்ப மக்கள் மட்டுமே சுரங்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்தனர். கடைசியில், 2004 -ம் ஆண்டில் உட்கால் அலுமினா நிறுவனம் தன்னுடைய சுத்திகரிப்பு ஆலையை குச்சைபடாரில் தொடங்கியது.
இயற்கை சார்ந்த வாழ்வு அழிக்கப்பட்டது எப்படி?
திருட்டோ, கொள்ளையோ அல்லது பாலியல் கொடுமைகளோ எதுவும் பல நூறு ஆண்டுகளாக குச்சைபடார் அறியாமல் இருந்தது. மக்கள் அமைதியாகவும் ஒருவருக்கொருவர் நட்பாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தங்களது நிலங்களில் நெல் அறுவடை செய்து வந்தனர். காட்டிற்கோ, மலைகளுக்கோ அல்லது நீர்வீழ்ச்சிகளுக்கோ தனியாக செல்ல பெண்கள் ஒருபோதும் அப்போது அச்சம் கொண்டதில்லை.
அவர்கள் இயற்கையை வழிபட்டனர். பருவகால திருவிழாக்களில் ஆடியும் பாடியும் கொண்டாடினர். ஒரு குடும்பத்திற்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மொத்த சமூகமும் அதற்கு உதவி செய்தது. மகிழ்ச்சி என்றாலும் கூட மொத்த கிராமமும் பகிர்ந்து கொண்டது.
தண்ணீர் எடுப்பதற்கு கும்பலாக செல்லும் காஷிபூர் பெண்கள்
வீடுகள் ஒருபோதும் பூட்டப்படவில்லை. பரஸ்பர நம்பிக்கை உணர்வு நிலவியது. உட்கல் அலுமினாவின் சுத்திகரிப்பு நிறுவனம் அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கிராமத்தில் பதிவாகியுள்ளது. திருட்டுகள் அப்பகுதியில் அதிகரித்தது. தங்கள் நிலங்களுக்கு தனியாக செல்ல மக்கள் தயங்க தொடங்கினர்.மேலும், பெண்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று தனியே குளிப்பதற்கு அஞ்சினர்.
பெண்களும் சிறுமிகளும் பட்டப்பகலிலேயே கடத்தப்பட்டனர். மேலும், பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகினர். அவர்களது வாழ்க்கைமுறை முற்றிலும் மாறியது. ஒரு பயங்கர சூழல் உருவானது. நீர்வீழ்ச்சிகளுக்கும் வயல்களுக்கும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ஆண்களும் கூட காடுகளுக்கு கூட்டாக சேர்ந்து செல்ல தொடங்கினர். வீடுகளை பூட்டத் தொடங்கினர்.
பழங்குடிகளது கலாச்சாரம் நொறுங்கியது எப்படி?
குன்றுகள், காடுகள் மற்றும் நீரூற்றுகளை கொச்சைப்படார் மக்கள் வழிபடுகின்றனர். மலைகள், நீரோடை மற்றும் நீரூற்றுகள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனை தெய்வங்கள் பழங்குடிகளுக்கு இருக்கின்றன. அவை அனைத்தும் வழிபட்டு கொண்டாடப்பட்டன.
சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமைந்த பிறகு, பழங்குடிகளில் சிலர் தங்கள் தெய்வங்களில் நம்பிக்கை இழந்தனர். வெளியில் இருந்து வந்த அந்த கடவுளை வலிமையானது என்று கருதியதால் அதை வழிபடத் தொடங்கினர். புதிய கடவுளை வழிபட்டால் தாங்களும் வலிமையானவராகலாம் என்று வேறு சிலர் நம்புவதை போல நம்பத் தொடங்கினர்.
பழங்குடிகளின் விடுகளில் துளசி செடி.
சிலர் அருகிலிருக்கும் நகரத்திற்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு துளசி விதைகளை கொண்டு வந்து தங்களது வீடுகளில் வளர்த்தனர். பெண்களில் சிலர் காயத்ரி பூஜை செய்யத் தொடங்கினர். இன்று கிராமத்திலிருக்கும் பெரும்பாலான வீடுகளில் காயத்ரி பூஜை செய்யப்படுகிறது. பழங்குடி நம்பிக்கைகளும் கலாச்சாரமும் அவர்களது மனங்களில் தரம் தாழ்ந்து விட்டது.
எவ்விதமான வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்?
முறையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு குறித்து பன்னாட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்று சிர்குடா (Shriguda) கிராமத்தை சேர்ந்த மனோகர் மஜஹி கூறுகிறார். “யாருடைய வளர்ச்சியை குறித்து அவர்கள் பேசுகிறார்கள்? நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா? அப்படியானால் எங்களுக்கான முன்னுரிமையை உள்ளடக்கிய வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை?” என்று அவர் கேட்கிறார்.
ஒரு நிறுவனம் எங்கு சென்றாலும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தை திருப்பி விடுகிறது என்று அவர் கூறுகிறார். “போலீசுடன் வந்து வலுக்கட்டாயமாக அந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் வழி செய்து கொடுத்து போராட்டக்காரர்களை சிறையில் தள்ளுகிறது. கூடுதலாக அந்நிறுவனமும் குண்டர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் உடன் அழைத்து வருகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை காலில் இட்டு மிதித்து நீர்வளம், காடுகள் மற்றும் ஆறுகள் என அனைத்தையும் அழிக்கிறார்கள். மக்களது வாழ்க்கை திடீரென்று முழுமையாக மாறுகிறது” என்று அவர் கூறுகிறார்.
பாக்சைட் எடுத்துச்செல்வதற்காக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை.
பாக்சைட் தாதுப்பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதால் கிட்டத்தட்ட 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பாக்ரிஜோலா (Bagrijhola) கிராமத்தை சேர்ந்த நதோ ஜானி கூறினார். “மலையில் சுரங்க எல்லைக்குள் இருப்பதால் 85 கிராமங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே சுரங்க வேலைகள் தொடங்கி விட்டன. சுரங்கப்பணிகள் மலையில் தொடங்கிய பிறகு வாழ்நிலை மோசமானால் மக்கள் தாமாகவே ஓடி விடுவார்கள் என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கலாம்.” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சுத்திகரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு விவசாயம் செய்வது சாத்தியமில்லாததாகிவிட்டது என்று அவர் கூறுகிறார். மாசு அதிகரித்த பின்னர் எங்களது வயல்கள் மலடாகிவிட்டன. “இந்த அளவுக்கு மோசமாக நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று ஜானி கூறுகிறார்.
அனைத்தையும் அழித்த பிறகு அவர்கள் சென்று விடுவார்கள் :
சுத்திகரிப்பு நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தின் போது மக்கள் எப்படி பிளவுபடுத்தப்பட்டார்கள் என்று குச்சைபடார் கிராம தலைவர் கூறுகிறார். போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களிடம் ஒவ்வொரு மாதமும் 1,800 ரூபாய் தருவதாக கூறிய நிறுவனம் அவர்களை அதிலிருந்து விலக வலியுறுத்தியது. “ஒன்றன் பின் ஒன்றாக கிராமங்கள் சதிவலையில் விழுந்து விட்டன; போராட்டமும் வலுவிழந்துவிட்டது. பணத்தின் வலிமைக்கு முன்பு மக்களது போராட்ட உணர்வு நொறுங்கி விட்டது” என்று அவர் கூறினார்.
“சில இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தில் தற்காலிக வேலை கிடைத்தது. ஆனால், சுரங்கம் முடிந்ததும் அவர்களது வேலைகளும் போய் விடும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்த இளைஞர்களால் விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் வேலையைத் தேடி இடம் பெயர்ந்து சென்று விடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.
“முன்பு வேலைகளில் அனைவரும் பங்கெடுத்து கொள்வார்கள். அது கிராமத்திற்கு உதவியாக இருந்தது. இனிமேல் அது நடக்காது. ஒருநாள் அனைத்தையும் அழித்த பிறகு மலடான இந்த இடத்தை விட்டு விட்டு இந்நிறுவனம் சென்று விடும். யார் இதன் அழகை மீட்டு வருவார்கள்? முன்னர் இருந்ததை போன்ற வாழ்க்கையை எங்களுக்கு யார் இனி தருவார்கள்?” என்று அந்த கிராமத் தலைவர் தொடர்ந்து விசும்புகிறார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுமதி மறுத்திருக்கும் போலீசு, அதற்கான காரணங்களில் ஒன்றாக, “ ம.க.இ.க-வின் கோவன் அங்கு பாடுவார். அந்தப் பாடல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தது.
மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் அப்படி என்ன பாடலை பாடப் போகிறார் தோழர் கோவன் ?
உண்மையில் வானைத் தொடும் பாடல்தான் அது .. விண்ணைத் தொடும் பட்டேல் சிலையும், விண்ணைத் தொடும் ரஃபேல் விமான பேர ஊழலும்தான் பாஜகவையும், அதன் எடுபிடி போலீசையும் அப்பாடலைக் கண்டு மிரளச் செய்திருக்க வேண்டும்..
பாடல் வரிகள் :
உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…
அதுக்கு உள்ளே போயி ஒழிய பாக்குது ரஃபேலு…
அம்பானி அடிச்சான் கோலு…
அறுந்து தொங்குது ரீலு…
30,000 கோடி அம்பானிக்கு ரஃபேலு..
மோடிஜி ஆசியோட நீரவ் மோடி அம்பேலு..
சீனா கிட்ட செஞ்சு வாங்குன “Made in China” பட்டேலு
இதான் “Make in india”வாம்… கேட்டுக்கடா கோவாலு…
கடந்த 10-02-2019 அன்று மோடி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து பாஜக கூட்டத்தில் பேசியது அனைவரும் அறிந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு வேறு ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதுவும் பலருக்கு தெரிந்து இருக்கலாம். இந்த அரசு விழாவை பொறுத்தவரை முற்றிலும் அரசாங்கச் செலவு. இந்த அரசு விழாவானது மொத்தம் பத்து நிமிடம் மட்டுமே நடந்தது. வெறும் பத்து நிமிட மோடியின் விளம்பரத்திற்காக அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.
இந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தின் (ESI) மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுதல், திருச்சி விமான நிலையத்தில் ஒரு ஒருங்கிணைத்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை விமான நிலையம் நவீனப்படுத்தும் திட்ட தொடக்கம், சென்னை மெட்ரோ திட்டத்தின் சிறு வழித்தடத்தினைத் தொடங்கி வைத்தல், சென்னையில் மற்றுமொரு ESIC மருத்துவமனையைத் திறந்து வைத்தல், சென்னையில் நெடுஞ்சாலை ஒன்றை நாட்டுக்கு அர்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திருப்பூரில் அமைக்கப்பட்ட மேடை அரங்கு போக, இந்தத் திட்டங்கள் தொடங்கும் இடங்களிலும் சிறு மேடை அரங்கு, LED திரை என மக்கள் பணத்தில்தான் முழுச்செலவும். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அடிக்கடி வெளிநாடு செல்வதும், இந்தியாவில் இருக்கும் நேரங்களில் ஏதாவது திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக விழாவில் கலந்து கொள்வதுமாகவே இருந்து வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்வது தனது கார்ப்பரேட் நண்பர்களின் இலாப நலனுக்காக என்றால், உள்ளூர் விழாக்களில் கலந்து கொள்வது தனது விளம்பரத்திற்காக. இது மட்டுமா, 4 துடைப்பம் 40 புகைப்பட கலைஞர்கள் சகிதம் ஊர் ஊருக்கு சென்று குப்பையே இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி கூட்டி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் கூத்து வேறு.
இவை அனைத்துமே மக்கள் பணத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு மட்டும் வெறும் விளம்பரத்திற்காக ரூ. 536 கோடி செலவழித்துள்ளது இந்த அரசு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். ஏற்கனவே கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதும், கட்டி முடிக்கப்படாத திட்டத்திற்குத் திறப்பு விழா நடத்துவதும் இந்த ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, வெறும் பத்தே கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையைக் கூட ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளும் இங்குதான் நடந்து வருகிறது. பட்டேல் சிலை, அதிவிரைவு நெடுஞ்சாலைகள், தொழிலக ரயில் பாதைகள் என மோடி தொடங்கிய பல திட்டங்கள் முழுக் கட்டுமான பணிகளும் முடிவடையாதவை. அந்த வகையில் சென்னையில் பிப் 10-ம் தேதி தொடங்கிய மெட்ரோ சேவையும், திருப்பூர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும் அடங்கும்.
மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த மெட்ரோ சேவை வழித்தடமானது ஆயிரம் விளக்கில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவுக்கானது ஆகும். ஊடகங்கள் அனைத்தும் இது முதல் வழித்தடத்தில் இறுதி பகுதி என்று பொய் கூறி வருகின்றன. இந்தப் பத்து கிலோமீட்டருடன் இந்த வழித்தடம் முடிவுக்கு வருகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் வரையில் மேலும் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதற்கு இன்னொரு தொடக்க விழா மக்கள் பணத்தில் நடக்கும்.
திருப்பூர் மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. இந்த மருத்துவமனைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றது. இதற்கான நிலம் வாங்கியதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. இப்போதும் அந்தச் சட்ட சிக்கல் முடிவுக்கு வரவில்லை. மேலை நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது தெரிந்தும் மோடி அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி இருக்கிறார். அதுவும் மக்கள் பணத்தில்.
இந்திய தொழிலாளர் காப்பீடு நிறுவனம் திருப்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று அதற்குத் தேவையான நிலங்களை விலைக்கு வாங்கும் பணியில் இறங்குகிறது. இது அரசின் நேரடி திட்டம் இல்லை என்பதால் அரசால் நேரடியாக நிலம் கையகப்படுத்திக் கொடுக்க இயலாது. இந்த நிறுவனமே நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கிய நிலத்தில் ஒரு பகுதி கோவில் நிலம். இந்தக் கோவில் நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. இதனை எதிர்த்துக் கோவில் குருக்கள் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். கீழை நீதிமன்றமானது அறநிலையத்துறை செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது. ஆனால் அந்தக் கூட்டம் மேல்முறையீடு செய்து கடந்த ஆறு வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது.
தொழிலாளர் காப்பீடு நிறுவனம் ஒரு அரசு இயந்திரம், அறநிலையத்துறை ஒரு அரசு இயந்திரம். இந்த இரண்டுக்கும் இடையே நிலம் கைமாற்றப்படுகிறது, அதுவும் தொழிலாளர் நலனுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு. இந்த மருத்துவமனை உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருப்பூரை பொறுத்தவரை இன்றைய தேதியில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேர்த்து இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் பயனாளிகள் இந்த காப்பீட்டு சேவைக்கு தகுதியானவர்கள். ஆனால் இந்த நகரில் இரண்டு ESI மருத்துவமனை மட்டுமே உள்ளது. பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனையிலோ அல்லது கோவைக்கோ சென்றுதான் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலம் எட்டு வழி சாலையை எதிர்த்து போராடிய விவசாய மக்களைக் காவல் துறையை ஏவி அடித்து ஒடுக்க நினைக்கிறது எடுபிடி அரசு. நாட்டின் நலனுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று காவி கும்பல் உபதேசம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொழிலாளர் நலனுக்காகக் கட்டப்படும் மருத்துவமனையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் முட்டுக்கட்டையை தூக்கி எறிய இந்த மாநில அரசுக்கும் துப்பு இல்லை, மத்திய அரசுக்கும் துப்பு இல்லை. மோடியோ இது எதுவுமே நடக்காதது போல அடிக்கல் நாட்டி விட்டு போகிறார். நாம் ஆடும் நாடகங்கள் மக்களுக்குத் தெரியவா போகிறது, தெரிந்தால் மட்டும் என்ன செய்து விடுவார்கள் என்ற ஒரு நினைப்புதான். சொந்த உழைப்பிலா இதெல்லாம் செய்கிறார், மக்கள் பணம்தானே.
ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை கொடுக்கப் பணம் இல்லை; தமிழக அரசின் கடன் 3 லட்சம் கோடியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது; நாட்டில் அடுத்த ஆண்டின் போலியோ சொட்டு மருந்துக்கான பணம் இல்லை; ஆனால், வெறும் பத்து நிமிட விளம்பரத்திற்காக ஊருக்கு ஒரு மேடை போட்டு நிகழ்ச்சி நடத்த மட்டும் பணம் இருக்கிறது. தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.
அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்! நீதிமன்ற உத்தரவை மீறி மாநாட்டுக்குத் தடை!
திருச்சியில் 23.02.2019 அன்று நடக்கவிருந்த எமது மாநாட்டுக்கு, சட்டவிரோதமான காரணங்களைச் சொல்லி, திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மோடி – எடப்பாடி அரசுகளின் கீழ் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட மக்களோ, அவர்களுக்காக போராடும் இயக்கங்களோ தமது உரிமை பற்றி பேசக்கூட முடியாது என்ற சூழ்நிலை கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த திட்டங்களுக்கு எதிராக தமது கருத்தைப் பேசினாலோ, துண்டறிக்கை விநியோகித்தாலோ கூட கைது செய்யப்படுகின்றனர். இதனை எதிர்த்து, “அடக்குமுறைதான் ஜனநாயகமா?” என்ற தலைப்பில் திருச்சியில் மாநாடு நடத்த கடந்த செப்டம்பர் மாதத்தில் அனுமதி கேட்டிருந்தோம். அன்று அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
அனுமதி மறுப்புக்கு எதிராக நாங்கள் தொடுத்த வழக்கில், போலீசின் உத்தரவை ரத்து செய்து 21.12.2018 அன்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் மேற்சொன்ன மாநாட்டை நடத்த விண்ணப்பித்திருந்தோம். “காவி பாசிசம் என்று கூறுவது தேசியக் கொடியை அவமதிப்பதாகும்” “கோவன் மீது வழக்கு இருப்பதால் அவர் பாடக்கூடாது” “உங்களால் விமரிசிக்கப்படும் கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” – என்பன போன்ற சட்டவிரோதமான காரணங்களைக்கூறி மீண்டும் எமது மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.
“தமிழ்நாட்டில் எச்.ராஜா போன்ற காவி பாசிஸ்டுகளும், ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டும்தான் பேசலாம். அவர்களை எதிர்க்கும் தமிழ்மக்கள் பேசக்கூடாது” என்பது எழுதப்படாத சட்டமாக அமல்படுத்தப்படுகிறது. “அரங்குகளில் கூட்டம் நடத்த போலீசின் அனுமதி தேவை இல்லை. ஆனால் அரங்க உரிமையாளர்களை மிரட்டி தடுத்து வருகிறது. கூட்டம் நடத்த யார் அனுமதி கேட்டாலும் ஒரு நீண்ட வினாத்தாளைக் கொடுத்து, “கூட்டத்தில் யார் என்ன பேசப்போகிறார்கள்? மேடையில் பாடவிருக்கும் பாடல்களின் வரிகள் என்ன? பொதுமக்கள் எத்தனை பேர் வருவார்கள் – அவர்களுடைய முகவரி என்ன?” என்று தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட பல கேள்விகளை காவல்துறை எழுப்புகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அங்கேயும் காவல்துறை சட்டப்படியான காரணங்களை சொல்வதில்லை. பேச்சாளர்கள் செயல்வீரர்கள் மீது டஜன் கணக்கில் பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக் கொண்டு “பேச்சாளர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் பல வழக்குகள் உள்ளன” என்று கூறி அனுமதி மறுக்கிறது. ஒரு சுவரொட்டி ஒட்டினால் அதற்கு எதிராக பல காவல்நிலையங்களில் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நடத்தப்படும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும், போராட்டத்திற்கும் ஒரு வழக்கு பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகிறது. வழக்கு இருப்பவர்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்றால் அதிமுகவும், பா.ஜ.கவும் எப்படி பேசுகிறார்கள்.?.
கூட்டம் நடத்துவதை தடுப்பது மட்டுமல்ல துண்டறிக்கை, சுவரொட்டி, ஓவியம், பாடல் என்று அனைத்துக்கும் தடை – வழக்கு என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.
எதைக்கேட்டாலும் சட்டப்படியான விளக்கத்தை சொல்வதற்குப் பதிலாக, “மேலிடத்து உத்தரவு” என்று காவல்துறை உயரதிகாரிகள் பதிலளிக்கிறார்கள். அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு “மேலிடத்தின் ஆட்சி”தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த “மேலிடம்”. நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை மாநாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நிரூபிக்கிறது.
மக்களின் வாழ்வைப் பறிப்பது மட்டுமல்ல, அவ்வாறு வாழ்வைப் பறி கொடுத்தவர்கள் எதிர்த்துக் குரலெழுப்பவும் கூடாது என்ற இந்த ஒடுக்குமுறையை முறியடிக்க தமிழக மக்கள், கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனக் கோருகிறோம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டோர் :
வழக்கறிஞர்.சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் தோழர்.காளியப்பன், பொருளாளர், மக்கள் அதிகாரம். தோழர். கற்பகவிநாயகம், தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.வெற்றிவேல்செழியன், தலைமைக்குழு உறுப்பினர். தோழர்.அமிர்தா, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர். தோழர்.மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம். தோழர்.கோவன், ம.க.இ.க. கலைக்குழு.
தோழமையுடன், வழக்கறிஞர். சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.
தொழு நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக எனது மாமியாரை சென்னையிலிருந்து செங்கலபட்டு திருமணி தொழு நோய் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அவரைப் பார்த்து வருவதற்காக சென்றிருந்தேன். தொழு நோய் என்பது தோலில் உணர்ச்சியற்ற நிலை மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, தொழுநோயின் முழுமையான பாதிப்புக்ளையும் அது ஏற்படுத்தும் ரணத்தையும் கண்முன்னே காட்டியது திருமணி தொழுநோய் மருத்துவமனை.
என் மாமியாரின் படுக்கைக்கு அருகே ஒரு இளம் பெண். இரவு முழுவதும் ஒரு சொட்டுக்கூட தூக்கம் இன்றி கதறுகிறாள். உடம்பெல்லாம் கொப்புளம் போட்டு தூக்க மாத்திரைகள், சிராய்ட் மாத்திரைகள் கொடுத்தும் தூங்காமல் “உடம்பெல்லாம் எரியுதே, எரியுதே” என்று கதறுகிறாள். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உடம்பில் உள்ள துணியை எல்லாம் அவிழ்த்து அழுகி்றாள். அவளது கதறல் என் மனதை அறுக்கத் தொடங்கியது. காரணம் அதே பருவ வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அம்மாவை நினைத்து, அருகில் இருந்த என்னை அழைத்து பெருங்குரல் எடுத்து கதறுகிறாள்.
******
அந்த இளம்பெண்ணின் பெயர் திலகவதி. பத்தொன்பது வயது. பன்னிரண்டாவது படித்தவர். சொந்த ஊர் தர்மபுரி. பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். கடந்த ரெண்டு வருசமா கம்பியூட்டர் கம்பெனியில் வேலை செய்து பெற்றோரின் குடும்ப பாரத்தில் பங்கெடுத்த பெண். தொடர்ந்து காலேஜில் படிக்க முடியாமல் போனாலும், படிப்பு ஆர்வத்தால் தொலைதூரக் கல்வியில் தற்போது டிகிரி படிக்கிறார்.
ஒரு வருசத்துக்கு முன்னாடி கம்யூட்டர்ல தொடர்ந்து வேலை செய்ய முடியாம விரல்கள் முடங்குது. தனியார் மருத்துவமனையில் பார்க்கிறார். விரல்கள் முடக்கத்துடன் உடல் முழுவதும் கொப்புளங்கள் கிளம்புகின்றன. ஆரம்பத்தில் அம்மை என்று நினைத்து அதற்கான வைத்தியம் எடுக்கிறார்கள். டாக்டர்களும் கொப்புளங்களை பல டெஸ்ட் எடுக்குறாங்க …. கொப்பளத்தை கீறி, தசை எடுத்து கல்ச்சர் டெஸ்டுக்கு அனுப்பி, கொப்பளம் இருந்த இடத்துல தையல் போடறாங்க….. இது போல பல டெஸ்டுகள். பணம் கரையுது.
“என் பொண்ணுக்கு என்ன நோய்னு கண்டுபிடிக்கவே இவ்ளோ செலவும், நாளும் ஆகுதே…”என திலகவதியின் அம்மாவுக்கு வேதனையாகுது. நிலைமை மோசமாகுது. ஒரே பொண்ணு. செல்லமான பொண்ணு.என்ன நோய்ன்னே தெரியாம, பல ஆயிரங்களை செலவு பண்ணியும், குழந்த படற வேதனையைப் பார்க்க முடியாம, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறாங்க.
“டாக்டருங்களாலத்தான் முடியல… கடவுளையாவது நம்புவோம்ன்னு தொடர்ச்சியா பிரேயர், பிரேயர் பிரேயர்னு செபிச்சம்மா…. அதிலயும் தீர்வு இல்லம்மா”என்று மனம் உடைந்து அழுகிறார் திலகவதின் அம்மா… நிலைமை இன்னும் மோசமாக மாறுகிறது. பிறகுதான் ஒரு டாக்டர் செங்கல்பட்டு திருமணி தொழு நோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். இங்க வந்ததும் தொழுநோய்க்கான டெஸ்ட் நடந்தது. திலகவதிக்கு, “ஈஎன்எல் ரியாக்சன்”எனும் தொழுநோய் இருப்பது உறுதி ஆனது.
குடும்பமே நிலைகுலைஞ்சி போகுது. தாங்க முடியாத துயரம். பயத்தை வெளியில் காட்டினால் மகள் உடைந்து விடுவாளே…! என்ன செய்வது? ஏற்கனவே பக்கத்திலிருக்கும் நோயாளிகளைப் பார்த்தே பயந்திருக்கும் மகளுக்கு ஆறுதல் சொல்லுவதா? உனக்கும் இதே நோய்தான் என்று சொல்லுவதா? குழம்பித் தவிக்கிறது குடும்பம்.
தொழு நோயால் பாதிக்கப்பட்ட கை – மாதிரி படம் (படம் கூர் மழுங்கச் செய்யப்பட்டுள்ளது)
இவ்வளவு நாள், வலியின் கொடுமை எந்த ஆஸ்பத்திரிலயும் குறையல… இங்க வந்து பரவாயில்லையா இருக்கு…… என்பதால் திலகவதி ஆஸ்பிட்டல்லில் தங்க ஒத்துக்கிட்டாங்க. பக்கத்தில் இருக்கும் தொழு நோயாளிகளும், அங்கு வேலை பார்ப்பவர்களும் அவரிடம் அன்போடு, நம்பிக்கையையும் கொடுத்ததால் சரியான இடத்திலதான் இருக்கோம்னு உணர்ந்தாங்க…
சிகிச்சைச் செய்யும் டாக்டர்கள், அவருக்கு தொடர்ச்சியாக சிராய்ட் மருந்தை இன்ஜக்சன் ஆகவும் டெகட்ரான் மருந்தும் போடப்போட உடலில் கிளம்பும் கொப்பளங்கள் வெடிக்காமல், உள்ளுக்குள் அழுந்தி விடுகிறது. ஓரளவு வலியிலிருந்து மீள்கிறார் திலகவதி. ஆனால் கைகள் திடீரென மறத்துப் போகின்றன. அதற்கும் பிசியோவில் சிறு, சிறு எக்சசைஸ் செய்கிறார்.
மருந்தின் பக்க விளைவுகள் மேலும் வேதனையை தருகிறது. உடல் எடை கூடுகிறது. சில நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்ற பிறகு திலகவதிக்கு மாதத்திற்கான மாத்திரையுடன் ஸ்டிராய்ட் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். திலகவதியும், பெற்றோர்களும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வீடு திரும்புகின்றனர்.
வீட்டில் தினமும் ஸ்டிராய்ட் மாத்திரையை சாப்பிட்டும் பலனின்றி நோயின் தீவிரம் பலமடங்கு அதிகமாகிறது. இடது கைவிரல்களும், மடங்கி உணர்ச்சியற்று, மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு அழுதுக்கொண்டே வருகிறார்கள்.
உடல் முழுவதும் கொப்பளம். நோய், ஸ்டிராய்ட் மருந்துக்கு அடங்க மறுக்கிறது. தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி அதில் தூக்கமின்மையும் சேர்கிறது. வேதனையில் துடிக்கிறார் திலகவதி. இரவு முழுவதும் தூங்காமல் உடம்பெல்லாம், எரியுது, எரியுது என்று பிதற்றுகிறார். உணவையும் சாப்பிட மறுக்கிறார். அதைக் காண சகிக்க முடியாமல் அவரது தாய் தேவி கதறுகிறார்.
எவ்வளவு நோயாக இருந்தாலும் வயசு பெண்கள் தன் உடம்பை மருத்துவரிடம் காண்பிக்க தயங்குவார்கள். தன்னிலை மறந்து தன் முழு உடலையும் பெண்கள் காண்பிக்கும் ஓரே இடம் பிரசவ அறை. ஆனால் திலகவதி உடல் மீது எந்த துணியும் வேண்டாம். உடம்பெல்லாம் எரியுது, வலிக்குது என்று சிறு துணியை போர்த்தினாலும் அழுகிறார். திலகவதியை பார்த்து அனைவருக்கும் வேதனை.
“திலகவதி தொடர்ந்து இரண்டு வாரங்களாக இதே நிலையில் தன்னிலை மறந்து கிடக்கிறார் . தற்போது, மஞ்சள் காமாலையும் அவளுக்கு சேர்ந்து விட்டது.அதற்கான சோதனையும் அவளுக்கு இங்கு செய்ய வசதியில்லை .வெளியில் அனுப்பிய ரிப்போர்ட், நோயை உறுதிப்படுத்தியது” என்கிறார் அங்கு பல ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர்.
கடைசியில் எழுந்திருக்கவும் முடியாமல், “தயவு செய்து என்னை விட்டுடுங்க, எவ்வளவு நோவு தாங்கறது, என்னால நோவு தாங்க முடியல… அம்மா வா, வீட்டுக்கு போய்டலாம்.நான் செத்துப் போனாலும் பரவாயில்லை” என்று கூறி அதிகாலை 3 மணிக்கு எழுந்து, நடக்க முடியாமல் தடுமாறும் திலகவதியைப் பார்த்து, வார்டு தொழு நோயாளிகள் கண்கள் கலங்கி ஆறுதல் சொல்கின்றனர். அதை ஏற்கும் நிலையிலோ, காதில் வாங்கும் நிலையிலோ திலகவதி இல்லை.
மீண்டும் அதிகாலை நாலு மணிக்கு ரொம்ப துடிக்கிறாங்க. மருத்துவமனை ஊழியர்கள் கேலமைன் லோஷன் தடவினா ஜில்லுனு இருக்கும்னு தடவுறாங்க…. தடவும் போது தன்னிலை மறந்து ஒட்டு துணியில்லாம தன் உடல் முழுவதும் தடவச் சொல்லி அழுகிறார் திலகவதி. நடுவில் டுயுட்டி டாக்டருக்கு போன் செய்யப்படுகிறது. எந்த ரெஸ்பான்சும் இல்லை… விடியற்காலை நாலு மணிக்கு செய்த போனுக்கு 8 மணிக்கு விளக்கம் கேட்கிறார் டாக்டர்.
”இந்த டாக்டர்கள் எல்லாம் எப்போதுமே இப்படித்தானா?”, அருகாமையில் இருந்த நோயாளி ஒருவரிடம் எரிச்சலுற்றுக் கேட்டேன்.
“இதுவரை, மத்திய அரசின் செங்கற்பட்டு திருமணி ஆஸ்பத்திரி தொழு நோயாளிகளின் தாய்வீடாக இருந்து. அவர்களின் உடல்நிலை மட்டுமல்ல வாழ்நிலையையே மாற்றியமைத்த பெருமைக்குரியது. நோயாளிகளுக்கு நோய் தீர்த்து, வேலை கொடுத்து, வீடு கொடுத்து, அவர்களின் வாரிசுகளை வளர்த்தெடுக்கவும் உதவி செய்தது. பல ஆண்டுகள் இங்கு தங்கி சிகிச்சை எடுத்து வரும் நான் பல அனுபவங்களை நேரில் பார்த்திருக்கிறேன். 700 ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கும் தொழுநோய் மீட்பு கருணை இல்லம் இது. காரணம், அப்போ இருந்த அர்பணிப்புள்ள டாக்டர்கள், ஊழியர்களின் வேலைப்பாங்கு”என்றார் அந்த நோயாளி.
”அப்போன்னா எப்போ? இப்ப நடக்குறதெல்லாம் பாக்கும் போது, நீங்க சொல்றது எதுவும் சமீபத்துல நடந்த மாதிரி தெரியல..” என்றேன். அந்த நெடுநாள் நோயாளி விரிவாகக் கூறத் தொடங்கினார்…
*****
பல சம்பவங்கள் உதாரணத்துக்கு சொல்லலாம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பச்சையம்மாள் தொழுநோயில் சாகும் நிலையில் வந்தார். நோயைக் கண்டறிந்த மருத்துவர் டாக்டர் வாசு அவரின் நோயை ஆய்வுக்குட்படுத்தி, பல கட்டத்தில் சோதித்தறிந்து, பின் விளைவுகள் இல்லாமல் தொழு நோயை எப்படிப் போக்கலாம் என்று மெனக்கெட்டார்.
மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து வீடு திரும்பி போகும்வரை பச்சையம்மாளின் அசைவுகளை கண்காணிப்பார். ஆதரவு கூறுவார். அவரை சிரிக்க வைக்க கிண்டல் பண்ணுவார். உடல் முழுவதும் போட்ட கொப்புளங்களை வெடிக்க வைத்து தொடர்ச்சியாக கவனித்து ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற மருந்துகளை பல அளவுகளில் கொடுப்பார்.
உடல் முழுவதும் கொப்புளமாகி வெடித்து சீழ் வடிந்து காணவே கொடுமையாக மாறும். பிறகு, மாயம்போல், உடல் மாறும். அவரின் மருத்துவ கவனிப்பாலும், மருத்துவ ஊழியர்களின் அரவணைப்பாலும், கண்ணெதிரே படிப்படியாக தேறினார் பச்சையம்மாள்.வீடு சென்ற அவர் கம்பெனி வேலைக்கு சென்று தன் காலில் நிற்கிறார். 45 வயதாகும் பச்சையம்மா, தன்னை காப்பாற்றிய டாக்டரை அப்பா என்றே இன்றும் நினைவு கூறுவார்.
இப்படி பல நோயாளிகள். திக்கற்றவர்களாக வந்தவர்களுக்கு நோய் தீர்த்த நீண்ட வரலாறு திருமணி தொழு நோய் ஆஸ்பத்திரிக்கு உண்டு.
ஆனால், இப்போது திலகவதி போலவே இன்னொரு நோயாளி ராஜா…. 16 வயது.
அவனுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு நோய் கண்டறியப்பட்டது. அதிகமான ஸ்டிராய்ட் கொடுக்கப்பட்டது. வலியால் துடித்தான். ஸ்டிராய்ட்டுக்கு கட்டுபடவில்லை என்பதால், டிஎல்டி கேப்சூல்களை தர ஆரம்பித்தார்கள். இந்த மருந்தைப் கொடுப்பதற்கு முன்பு நோயாளிகளை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இது விதி.
இனி எதிலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில் நோயாளியின் பெற்றோர்களின் ஒப்புதலுடனும், பிள்ளை பெற்றுக் கொள்ள கூடாது என்ற கண்டிசனுடனும்தான் மருந்து போடுவார்கள். வயதானவர்களுக்கே இதுதான் நிலைமை.
ஆனால், இப்போது வந்த டாக்டர்கள் பதினாறு வயதான ராஜாவுக்கு அதிக வீரியமுள்ள டிஎல்டியை இனிப்பு மிட்டாய் மாதிரி வாரிக் கொடுக்கிறார்கள். மாத்திரை போட்டதும் வலி பறந்து போகும். போதை பொருள் சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும். தூக்கம், தூக்கம். எதையும் மறக்கும் தூக்கம். இதை அனுபவித்து விட்டால், நோயைத் தாங்கும் தன்மை உடம்புக்கு இல்லாது போகும். டிஎல்டி மட்டும் இருந்தால் போதும் என்ற நிலைக்கு நோயாளிகள் வந்துவிடுவார்கள். இப்போது 16 வயது ராஜாவை ஒரு வருடத்தில் 30 வயது முதியவர் ஆக மாற்றி விட்டார்கள். எந்த வலியையும் தாங்க முடியாமல் மாத்திரையை நிறுத்தினால், அதிர்ச்சியாகி விடுகிறான். எதாவது காரணம் சொல்லி மாத்திரையை வாங்குகிறான். தற்போது சர்க்கரை நோய்க்கும் ஆளாகி அதற்கும் மாத்திரை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதுதான் இன்று திருமணி ஆஸ்பத்திரியின் நிலை.
நோயாளிகளின் நாட்பட்ட புண், புழுவைத்து எலும்புகள் அழுகி நொறுங்க ஆரம்பிக்கும். மீதி காலையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் கால் மூட்டுக்கு கீழே காலை வெட்டும் அறுவை சிகிச்சை செய்வார்கள். வெகு நாட்களாக ஆறாத புண்ணுக்கு பல சிகிச்சைகள் செய்வார்கள்.
இன்று செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் நோயாளிகளை காக்க நடத்தப்படுவது இல்லை. ஆபரேஷன் தியேட்டருக்கு கணக்கு காட்டவே நடத்தப்படுகிறது. தியேட்டரில் ஆபரேசன் லிஸ்ட் பெரியதா இல்லை என்றால், கேட்கும் நிதி பல கோடி கிடைக்காது என்கிறார்கள்.
இன்று மருத்துவமனைகளும் மருத்துவர்களும் நோயாளிக்கானதாக இல்லை
கைகால் முடமான நோயாளி, புட்டத்தால தேய்ச்சி நகர்ந்துப் போகும் நோயாளி, கண்ணு தெரியாம சுவரை தடவிக்கொண்டு நகரும் நோயாளி, இப்படிப்பட்டவர்களை தனி கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ ஒதுக்கும் பணத்தில் கமிஷன் பார்க்கவும் தங்கள் அலுவலக அறையை நட்சத்திர விடுதியாக மாற்றவும் செலவழிக்கிறது. ஏசி அறை, டைல்ஸ் சுவர், நடக்கும் வழிக்கு குரோட்டன்ஸ் தோட்டம் என்று வாழ்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அனைத்தையும் திரும்பவும் இடித்து ஆஸ்பத்திரியை தனக்கான அரண்மனையாக மாற்றிக் கொள்கிறது.
மருத்துவ தேர்வுக்கான நீட்டால என்ன பிரச்சனை? தனியார்ல படிச்ச டாக்டரால என்ன பிரச்சனை? என்று கேட்பவர்களுக்கு ஏழை நோயாளிகளின் துயரம் தெரிவதில்லை. இத்தேர்வுகள் மூலம் வரும் டாக்டர்களின் வேலையைப் பார்க்கும்போது ரொம்பவும் பயமா இருக்கு. ஏழ்மையில் உழலும் நோயாளிகளை அவர்கள் தீண்டதாகதவர்களாக நடத்துகிறார்கள். இதனுடன் நோயாளிக்கு தொழுநோயும் சேர்ந்தால் அவர்கள் கதி என்ன ஆவது?
அதிகப்படியான தொழுநோய் தொற்றுடன் வரும் நோயாளிகளை உடனே பார்க்க டாக்டர்கள் விரும்புவதில்லை. அதை கட்டு கட்டும் ஊழியர்கள் பாதி சரி செய்து, நோய் முக்கால்வாசி ஆறியப்பிறகு, தியேட்டருக்கு அந்த நோயாளிகளை அனுப்பி நாடகமாடுகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் தொழு நோயாளிகளுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் வருவது இல்லை. பெரும்பாலும் கைவிடப்பட்டவர்கள். அநாதைகள், பிச்சை எடுப்பவர்கள். எனவே அவர்கள் இறந்தாலும் அவர்களை யாரும் உரிமை கோருவது இல்லை. இந்த தைரியத்தில்தான், மேட்டுக்குடி வகுப்பைச் சேர்ந்த இந்த டாக்டர்கள் அவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.
வாரத்துக்கொருமுறை வார்ட் ரவுண்ட்ஸ் வரும் டாக்டர்கள் நோயாளிகள் தங்கள் வலிகளை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே, தங்களுக்குள் ஆங்கிலத்தில், “இப்ப அழுது நடிக்கப் போகுது பாரு” என்று கேலி பேசுகிறார்கள். தோல் மட்டுமே உணர்ச்சியற்ற இந்த நோயாளிகளை சுய உணர்ச்சியற்றவர்களாக, தன்மானம் அற்றவர்களாக நினைக்கிறது இந்த புது மருத்துவ கும்பல்.
ஆனால், பணியில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பல அலவன்சுகளையும் அரசு சலுகையையும் இவர்கள் தேடித்தேடி அலைகிறார்கள். அதை உடனடியாக அடைவதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்கள். வருடாந்திர சுற்றுலா, எல்டிசி எங்கே போகலாம், ஒவ்வொரு வருசத்துக்கும் புதுப் புது அலவன்சுகளை வாங்குவது எப்படி?
மாதத்திற்கு லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு, மேலும் உயர் கல்வி கற்பதற்கு எப்படி அனுமதி பெறுவது? என்று இதற்காக தங்களுக்கு ஒதுக்கிய ரெஸ்ட் ரூமுக்குள் அதிவேக இண்டர்நெட்டுடன் கணினி, ஏசி என்று மொத்தத்தில் தொழுநோயாளிகளின் உடம்பில் உயிர்வாழும் ஒட்டுண்ணி புழுவாக திரிகிறார்கள்.
நாங்களும் நோய் தீர்க்கிறோம் என்று நோயாளிகளின் வேதனையை தற்காலிகமாக குறைத்து பின் விளைவுகளைப் பற்றி கவலையின்றி மருத்துவம் பார்ப்பது, “என்னுடைய டூட்டியில் எந்த பிரச்சனையும் வரவில்லை” என்ற எண்ணத்தில் செயல்படுவது, மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கித் தருவது ஆகியவை தவிர வேறு ஒன்றும் செய்யாமல் சினிமாவில் வரும் டாக்டர்களாக வலம் வருகிறார்கள்.
ஆனால். சிறிது காலத்திற்கு முன்பு நடந்தது வேறு. ரவி என்று ஒரு டாக்டர். நோயாளிகளின் நோயை போக்குவதில் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுத்து பேசுவதிலும் ஸ்பெஷலிஸ்ட். எங்களைப் போன்ற நோயாளிகளே எங்களுக்கு மருந்து, மாத்திரை வேண்டாம், ரவி டாக்டரை வரச்சொல்லுங்கள் என்று வேண்டுவோம். இப்படிப்பட்டவர்களை இனி நாம் எங்கு காண்பது!”
ஏக்கத்தோடு சொல்லி முடித்தார் அவர்.
சமீபத்தில் இறந்த 5 ரூபாய் டாக்டர் பத்தி தமிழ்நாட்டு மக்கள் தொடங்கி, மோடி வரைக்கும் பேசினார்கள். இனி அது போன்ற மருத்துவர்களை பார்க்க நாம் வானுலகுதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறது. எம்.டெக் படித்த பட்டதாரிகள் தமிழக தலைமை செயலக துப்புரவு பணிக்கு விண்ணப்பித்திருப்பதும் மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் அரசு கேண்டீனில் மேசை துடைக்கும் பணிக்கு விண்ணப்பித்திருந்ததும் கடந்த வாரம் வெளியான செய்திகள். பி.எஸ்ஸி. பி.எல் பட்டதாரி ஒருவர் விவசாயம் செய்து கடனாளி ஆன யதார்த்த கதையும்கூட வெளியானது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு பட்டதாரி, ‘படித்தும் முட்டை விற்கிறேன் எனில், பட்டப் படிப்பினால் என்ன பயன்?’ என கேட்கிறார். அல்ஜசீரா வெளியிட்டுள்ள இந்த சிறப்பு கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் மோடி அரசின் வேலைவாய்ப்பற்ற ‘வளர்ச்சி’யை தோலுரிக்கிறது.
*****
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் கடுமையான முகத்துடன் முட்டையை வைத்து திண்பண்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். அவ்வப்போது, தனது வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய பண்டத்தின் ருசி எப்படி இருக்கிறது எனவும் விசாரிக்கிறார்.
இந்தி பேசும் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலமான உத்திர பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ள நொய்டாவில் உள்ள திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் படிக்கும் 21 வயது சாகர் குமார், கோபத்துடன் இருக்கிறார்.
படித்தும் முட்டைக் கடைதான் வைக்க வேண்டுமெனில் பட்டப் படிப்பு எதற்கு ?
தனது சகோதரர்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டவும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு டயாலிசிஸ் செய்யவும் சாலையோரங்களில் உணவுகளை விற்றுக்கொண்டிருக்கிறார் இவர். அரசு வேலை கிடைக்கும் என்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லை.
“இரவில் படிப்பேன். மற்ற நேரங்களில் இந்த தள்ளுவண்டி உணவுக்கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 500 சம்பாதிக்கிறேன். பட்டம் படித்துவிட்டு, சாலையோரத்தில் முட்டையை விற்கிறேன். நான் வாங்கிய வணிகவியல் பட்டத்துக்கு என்ன பயன்?” என கேட்கிறார் சாகர்.
டெல்லியின் துக்ளகாபாத் பகுதிகளில் பகுதி நேரமாக சமையல் பணி செய்யும் 24 வயதான சீமா, அலுவலக செயலாளர் பணி கிடைக்கும் என காத்திருக்கிறார்.
“என்னுடைய தட்டச்சு வேகம் மிகவும் சிறப்பாக உள்ளது. உ.பி.யின் பாதாயூன் பகுதியிலிருந்து என் பெற்றோர் டெல்லிக்கு வந்துவிட்டார்கள். அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்ய விருப்பம். ஆனால், எனக்கு இதுவரை அந்த அதிருஷ்டம் கிடைக்கவில்லை. இங்கே பெண்ணாக வேலை தேடுவதும்கூட பாதுகாப்பற்றதாகவே உள்ளது” என்கிறார் சீமா.
எங்களுக்குவேலைவேண்டும்
முன்னதாக, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்திலிருந்து ஊடகங்களில் கசிந்த, மோடி அரசால் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.
இந்த ஆய்வறிக்கை மட்டுமல்லாது, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு கடந்த டிசம்பரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதே அமைப்பு மார்ச் 2018-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் 31 மில்லியன் இந்தியர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
அதற்குப் பின் வெளியான அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை 2016-ல் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, 3.5 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டதாக சொன்னது.
இந்த பணி இழப்புகளின் பின்னணியில் இந்தியாவில் அரசு வேலைகளின் மீது கவனம் திரும்பியது. இந்திய ரயில்வே சமீபத்தில் 63 ஆயிரம் பணிகளுக்கு 19 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது. இந்த விண்ணப்பங்கள் துப்புரவு மற்றும் ரயில்வே தண்டவாளங்களை தூய்மையாக்கும் பணிகளுக்காக விநியோகிக்கப்பட்டது.
மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு
பீகார் மாநிலத்தின் மாதேபுராவிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சாகர், ஏராளமான அரசு பணிகளுக்கு விண்ணப்பித்ததாக தெரிவிக்கிறார். அதில், பட்டப்படிப்பு அவசியமில்லாத ரயில்வே பணியும் அடங்கும்.
வாக்களிக்கும் வயதில் உள்ள அவர், ‘யார் அடுத்து அரசு அமைக்க இருக்கிறார்களோ அவர்கள் எங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்’ என்கிறார்.
“எங்களுக்கு வேலை வேண்டும். அது முடியவில்லை என்றால், சம்பாதிக்க உதவுங்கள். தொழில் முனைவோருக்கான கடன் வாங்கி தொழில் செய்யவும் முயற்சித்தேன். ஆனால், அதுவும் கொடுங்கனவாக இருக்கிறது. எங்கு போகவும் எங்களுக்கு வழியில்லை. வேலையும் கிடைக்கவில்லை; சிறுதொழில் தொடங்க கடன் கிடைப்பதும் எளிதாக இல்லை” என்கிறார் சாகர்.
இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையை பொருளாதார நிபுணர்கள் ‘வேலையற்ற வளர்ச்சி’ என்கிறார்கள்.
“வேலையில்லா பிரச்சினை மோசமான நிலையில் உள்ளது. நடுத்தர மற்றும் சிறு தொழிற் துறையினரும் விவசாயிகளும்தான் நம் நாட்டின் அதிகமான தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறவர்கள். தவறாக செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியாலும் 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தாலும் இந்தத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முறைசாரா தொழில்களையும் இவை நொறுக்கின” என்கிறார் பொருளாதாரவியலாளர் பிரசன்ஜித் போஸ்.
மேலும் அவர், “இந்த அரசின் கீழ் அமைப்பு சார்ந்த தொழில்களும்கூட வளர்ச்சியடையவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் இருந்தபோது, அது வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை” என்கிறார்.
“உண்மை என்னவென்றால் பொருளாதார வளர்ச்சி தகவல் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையிழப்பு இருக்கும் போது ஜிடிபி 7 % எப்படி சாத்தியமாகும்? இந்த முரண்பாட்டிற்கு வேறு எந்த விளக்கமும் தேவையில்லை”.
உலகிலேயே மக்கள் தொகையில் பாதியளவை எட்டக்கூடிய நிலையில் 25 வயதுக்குக் குறைவான இளைஞர்களைக் கொண்ட நாட்டில், வேலைவாய்ப்பின் அளவு குறைந்து வருகிறது.
சாகர், சீமாவின் விசயத்தில் நிலையற்ற தொழிலாளர் சந்தையும் சமூக பொருளாதார காரணிகளும் அரசு வழங்கும் சேவைகளின் குறைபாடும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
வறுமைக்கு காரணமாக உள்ள வருமான குறைவினால், சமத்துவமின்மை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். வேகமான அதேசமயம் சீரற்ற பொருளாதார வளர்ச்சியால், கடந்த பத்தாண்டுகளில் கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்குமான எல்லைகள் மங்கலாகிவிட்டன. அதே நேரத்தில் குடிபெயர்வு, மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் தங்களைக் காட்டிலும் மற்றவர்களின் வாழ்க்கைத்தரம் வேகமாக மேம்படுகிறது என்பதையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
மகாராட்டிரம், குஜராத், அரியானா மற்றும் ராஜஸ்தானில் நில உரிமையாளர்களாக உள்ள உயர் சாதியினர் அரசு பணிகளில் இடஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.
எங்கும் வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லா இளைஞர்களை சமாளிக்க வேண்டிய அழுத்தம் காரணமாக, உயர் சாதியினருக்கு அரசு பணிகளிலும் கல்வியிலும் 10 % இடஒதுக்கீட்டை அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது அரசு.
வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத் திறன் இல்லாத நிலையில் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. தனியார் துறைகளில் போதுமான வேலை உருவாக்கமும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
“Demonetisation and the Black Economy” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார், ‘2011-12 ஆண்டுகளில் இருந்ததைவிட இந்திய பொருளாதாரத்தில் முதலீடுகள் தேக்கமடைந்திருக்கின்றன. மேலும், முறைசாரா தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளது’ என்கிறார்.
“வேளாண் துறையில் இருக்கும் நெருக்கடிகளை அரசு எதிர்கொள்ள வேண்டும். முறைசார தொழில்துறைக்கு ஊக்கம் தேவைப்படுகிறது, அவர்களுக்கு கடனும் வழிகாட்டுதலும் தேவை. முறைசாரா தொழில்துறை புத்துணர்வு பெறும்போது, அது தானாகவே தேவைகளை உருவாக்கும்” என்கிறார் அருண்குமார்.
வேலைவாய்ப்பின்மை (unemployment) மற்றும் வேலையின்மைக்குமான (under-employment) வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார் அருண் குமார். “இந்தியாவில் நமக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஒருவர் வேலையை இழக்கும்போது, இனி வேலை செய்ய மாட்டேன் என அவரால் சொல்ல முடியாது. எல்லோரும் ஏதோ வேலை பார்க்கிறார்கள். பட்டதாரிகள்கூட தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டிருப்பதை பார்க்க முடியும். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையைக் காட்டிலும் வேலையின்மை அதிகம். என்ன பிரச்சினை எனில், முறைசாரா தொழில் துறையைச் சார்ந்த பணியாளர்களில் 93% பேர், பணிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, இந்த துறை நெருக்கடிகளில் உள்ளதால் 93% பேர் வேலையிழக்கிறார்கள்”.
தேர்தல்முக்கியத்துவம்பெறக்குடியவிசயம்இது!
இதனால்தான் ஆளும் பாஜக அரசு, தேர்தலை எதிர்கொள்ள திணறிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மோடி, ‘பக்கோடா விற்பதுகூட ஒரு வேலைதான். அந்த வேலையில் நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்க முடியும்’ என்றார்.
இந்தப் பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியது. மக்கள் வேலை வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கும்போது, மோடி கொஞ்சம் கூட உணர்வற்று பேசிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில், வேலை தருவேன் என மோடி சொன்ன வாக்குறுதி என்ன ஆனது என அனைத்து தரப்பிலும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் என அறிவித்துள்ளது.
இந்தியாவின் உடைந்திருக்கிற அரசியல் பரப்பில், டசனுக்கும் மேலான மாநில கட்சிகளும் சாதி கூட்டணிகளும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
சாகர், சீமா போன்றவர்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளைக் காட்டிலும், மாநில மற்றும் சாதி அரசியல் வாக்களிப்பதில் பெரிய தாக்கத்தை செலுத்தும். அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்துக்கும் அதன் கருத்தியல் உறவைக் காட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதே முக்கியமான பணியாக இருக்கும்.
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர் உயர் படிப்பு படிக்கும் மாணவி. அவரைச் சந்திப்பதற்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முயற்சி செய்தேன். அவர் என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல; அவருடைய வகுப்பு நேரங்கள் அப்படி. சிலநாட்களில் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவார். சில நாட்கள் அவர் திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். இன்ன நாள் சந்திப்போம் என ஒரு தேதி தருவார், பின்னர் அவசரமாக அதை மாற்றுவார். இறுதியில் ஒருநாள் காலை 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அவருடைய வகுப்பு 10.30-க்கு. அதற்கிடையில் என்னுடைய சந்திப்பை முடிக்கவேண்டும்.
அவர் கனடாவிற்கு வந்து குடியேறிய ஆப்பிரிக்கப் பெண். பெயர் மாரியாட்டு கமாரா. அவர் எழுதிய புத்தகம் “The Bite of the Mango” சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து பத்திரிகைகள் எல்லாம் அதுபற்றி சிறப்பாக எழுதியிருந்தன. உள்நாட்டுப் போரில் கலகக்காரர்கள் அவருடைய இரண்டு கைகளையும் துண்டித்துவிட்டார்கள். அப்போது மாரியாட்டுவுக்கு 12 வயது. இந்த நூல் அவருடைய கதையை சொல்கிறது. இப்படியான கொடிய தண்டனை கிடைப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார் என்பது அவருக்கு புரியாத ஒன்று.
அவர் எழுதிய புத்தகத்தை படித்த நேரம் தொடங்கி மாரியாட்டுவை எப்படியும் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவரைச் சந்தித்த அன்று காலை முதல் வேலையாக அவர் எழுதிய புத்தகத்தை நீட்டி அவருடைய கையெழுத்தை பெற்றேன். மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளையும் இணைத்து பேனையை நடுவில் செருகிக்கொண்டு புத்தகத்தில் இப்படி எழுதினார்:
‘குழப்பத்துக்கு மன்னிக்கவும். என்னை சந்திக்க வந்ததற்கு நன்றி.
அன்புடன் மாரியாட்டு கமாரா’
மாரியாட்டு கமாரா
அப்படியே இரண்டு கைகளையும் சுழற்றி பேனையை என்னிடம் நீட்டினார். அவர் புத்தகத்தின் சரியான பக்கத்தை திருப்பியதும், பேனையை உரிய இடத்தில் நிறுத்தி எழுதியதும், அதை நழுவவிடாமல் இறுக்கிப் பிடித்ததும் ஒரு மந்திரவித்தைபோல கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது. அவருடைய கையெழுத்து என்னுடையதிலும் பார்க்க நல்லாகத்தான் இருந்தது.
ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோர நாடான சியாரா லியோனில் ஒரு பின்தங்கிய கிராமம். 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 வயதுச் சிறுமி மாரியாட்டு தன் சிநேகிதிகளுடன் பக்கத்துக்கு கிராமத்துக்கு புறப்படுகிறாள். அவள் கிராமத்தை நோக்கி பெரிய ஆபத்து வருவது அவளுக்கு தெரியாது. கலகக்காரர்கள் ஒவ்வொரு கிராமமாக பிடித்து முன்னேறி வந்தார்கள். அவர்களுடைய நோக்கம் தலைநகருக்கு போய் ஆட்சியை கைப்பற்றுவது. என்னென்ன குரூரமான வழிமுறைகள் உள்ளனவோ அத்தனையையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.
ஒரு கிராமத்தை அவர்கள் முற்றுகையிடும்போது முதலில் உணவுப்பொருள்களை பறிமுதல் செய்வார்கள். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றுவிடுவார்கள். சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்வார்கள். அவர்களை பழக்குவது சுலபம். கட்டளைகளுக்கு கேள்வியில்லாமல் கீழ்ப்படிவதுடன் விசுவாசமாகவும் இருப்பார்கள்.
மாரியாட்டு திரும்பியபோது அவளுடைய கிராமம் கைப்பற்றப்பட்டுவிட்டது. படையினரில் ஒன்றிரண்டு பேர் மூத்தவர்கள், மீதிப் படையினர் அவளிலும் பார்க்க சற்று வயது கூடியவர்கள். மேல்சட்டை இல்லாமல், காக்கி கால்சட்டை மட்டுமே அணிந்து, தோள்களில் மூன்று நான்கு துப்பாக்கிகளைக் காவியபடி உலாவினர். சிலருடைய கைகளில் நீண்ட கத்திகள். துப்பாக்கி குண்டு மாலைகள் அணிந்து ஏதோ களியாட்ட விழாவுக்கு போய்வந்தவர்கள்போல மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள்.
மாரியாட்டுவையும் அவளுடன் வந்த சிநேகிதிகளையும் கைகளைக் கட்டி இருத்தினார்கள். அவர்கள் கண்முன்னே பெரியவர்களை நிற்கவைத்து சுட்டுக் கொன்றார்கள். சிலரை கத்தியினால் வெட்டி சாய்த்தார்கள். ஒருவரை கல்லினால் அடித்துக் கொன்றார்கள். இருபதுபேரை குழந்தைகளுடன் ஒரு குடிசைக்குள் வைத்து பூட்டி அதற்கு நெருப்பு வைத்தார்கள். இதுவெல்லாவற்றையும் கதிகலங்கிப்போய் பார்த்தபடி தன் முறைக்காக மாரியாட்டு காத்திருந்தாள்.
மாதிரிப் படம்
தலைவன்போல காணப்பட்டவன் மாரியாட்டுவைப் பார்த்து ‘நீ போ, உனக்கு விடுதலை’ என்றான். அவளால் நம்பமுடியவில்லை. அவள் சிறிது தூரம் நடந்ததும் மறுபடியும் கூப்பிட்டு ‘ஒரு தண்டனை அனுபவித்துவிட்டு நீ உயிருடன் போகலாம்’ என்றான். ‘நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.’ மாரியாட்டு மௌனமாக நின்றாள். ஒருவன் அவளை பிடிக்க, மற்றவன் அவள் வலது கையை பாறையோடு அழுத்திப் பிடித்து மணிக்கட்டோடு வெட்டினான். வெட்டில் போதிய விசை இல்லாததால் இரண்டுமுறை வெட்டவேண்டி நேர்ந்தது. வெட்டப்பட்ட கை துள்ளிப் பறந்து நிலத்திலே விழுந்த பிறகும் துடித்தது. இடது கையையும் மூன்று வெட்டில் துண்டித்தார்கள். அவர்கள் பலமாகச் சிரித்து பெரிய வெற்றியை கொண்டாடுவதுபோல ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டார்கள். ‘உன் கையை நாங்கள் வெட்டியது நீ வோட்டுப் போடக்கூடாது என்பதற்காக. நாங்கள் செய்ததை உன் ஜனாதிபதியிடம் போய் காட்டு.’ ஜனாதிபதி என்றால் என்ன என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே மாரியாட்டு மயக்கம் போட்டு விழுந்தாள்.
ஒரு முழு இரவு மயங்குவதும் விழிப்பதுமாக காட்டுக்குள் கழித்தாள். நிறைய ரத்தம் பெருகி உடையை நனைத்துவிட்டது. வழி தெரியாமல் காட்டுக்குள் அலைந்து ஒரு குளத்தை கண்டுபிடித்தாள். மிருகங்கள் குடிப்பதுபோல படுத்திருந்து வாயால் உறிஞ்சி நீர் பருகினாள். அவள் கண்களில் ஒருவருமே படவில்லை. அந்த நேரம் கடவுளின் தூதுவன்போல நெடுப்பமான ஒரு மனிதன் தனியாக தோன்றினான். மாரியாட்டு தன்னை காப்பாற்றும்படி அவனிடம் கெஞ்சினாள். அவனுடைய தாயாரைக் கொன்றுவிட்டார்கள். அவனுடைய மனைவி புதருக்குள் ஒளித்திருந்தாள். அவன் மாரியாட்டுவிடம் ஒரு மாம்பழத்தை கொடுத்து ‘இதைச் சாப்பிடு. இந்தப் பாதையால் நீ நேரே போனால் ஆஸ்பத்திரி வந்துவிடும். அங்கே போ, இல்லாவிட்டால் செத்துப்போவாய்’ என்றான்.
மாரியாட்டு எப்படியோ ஆஸ்பத்திரியை அடைந்து அங்கேயிருந்து தலைநகரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். சிகிச்சை முடிந்த பிறகு அவளை அகதி முகாமில் சேர்த்துவிட்டார்கள். அவளைப்போல 400 சிறுவர் சிறுமிகள், எல்லோரும் கைகள் வெட்டப்பட்டவர்கள், அங்கே இருந்தார்கள். தங்குவதற்கு இடம் மட்டும்தான். பகல் நேரத்தில் கூட்டமாய் வெளியே போய் பிச்சை எடுப்பார்கள், இரவு சமைத்து உண்ணுவார்கள். இந்த உலகத்திலேயே 400 கையில்லா சிறுவர்களும் சிறுமிகளும் ஓர் இடத்தில் தங்கினார்கள் என்றால் அது அங்கேயாகத்தான் இருக்கும்.
மாரியாட்டுவின் பெற்றோர் அவளை சாலியே என்ற கிழவருக்கு இரண்டாம் மனைவியாக ஏற்கனவே நிச்சயித்திருந்தனர். கிராமத்து வீட்டில் இந்த மனிதர் ஒருநாள் இரவு அவளை பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமிக்கு விவரம் தெரியாத வயது. அகதி முகாமில் அவள் கர்ப்பம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகாமை பார்வையிட வந்த பத்திரிகைக்காரர்கள் மாரியாட்டுவின் கதையை வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினார்கள். ‘கலக்காரர்கள் கைகளை வெட்டியதுமல்லாமல் சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டார்கள்’ என்ற தலைப்பின் கீழ் அவளுடைய படத்தையும் பிரசுரித்திருந்தார்கள். கனடாவில் பில் என்பவர் அந்தப் படத்தை பார்த்து பரிதாபப்பட்டு ஏதாவது செய்யவேண்டுமென தீர்மானித்தார். மாரியாட்டு கனடா வந்து சேர்ந்தததற்கு அவர்தான் காரணம்.
‘சிறுவயதில் இருந்து நிறைய இன்னல்கள் அனுபவித்துவிட்டீர்கள். நீங்கள் உங்களை ஆகக்கீழாக உணர்ந்த தருணம் எது?’
‘அகதி முகாமில் இருந்தபோதுதான். காலையில் நாங்கள் கூட்டமாக பிச்சையெடுக்க நகரத்திற்குள் செல்வோம். சிலர் ‘ஏ பிச்சைக்காரி’ என்று என்னை அழைத்து பிச்சை போடுவார்கள். நான் ஓர் ஏழைக் குடும்பதிலிருந்துதான் வந்தேன். ஆனாலும் நாங்கள் பிச்சை எடுப்பதை கேவலமாக நினைத்தோம். என் கைகளை வெட்டியபோது கூட நான் அவ்வளவு வேதனையை அனுபவித்தது கிடையாது.’
‘ஆகச் சோகமான தருணம் எது?’
‘அகதி முகாமில் எனக்கு ஆண் பிள்ளை பிறந்தது. நான் ஆசையாக அப்துல் என்று பெயர் சூட்டினேன். பத்து மாதங்கள்தான் குழந்தை உயிர்வாழ்ந்தது. சத்தான உணவு இல்லாததால் இறந்துபோனது என்று சொன்னார்கள். நான் தற்கொலை செய்ய முயன்றேன், ஆனால் என்னை தடுத்துவிட்டார்கள். அந்த இழப்பு என்னால் தாங்கமுடியாததாக இருந்தது.’
‘கனடாவுக்கு வரமுன்னர் உங்களுக்கு கனடா பற்றி ஏதாவது தெரியுமா?’
‘ஒன்றுமே தெரியாது. அது பெரிய முன்னேறிய நாடு என்பது தெரியும். உப்புத்தூள் போல பனி பொழியும் என்று சொன்னார்கள்.’
‘யந்திரக் கை பொருத்த விருப்பப்படவில்லையா?’
‘எத்தனையோ தரம் கேட்டார்கள். இப்பொழுது தேவையில்லை. என் காரியங்களை நானே செய்கிறேன். மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது இல்லை. சமைக்கிறேன், சாப்பிடுகிறேன், உடைமாற்றுகிறேன், தலை சீவுகிறேன், எழுதுகிறேன், கதவை பூட்டுகிறேன்.’
‘உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?’
‘படிப்பை முடித்துவிட்டு முதுகலை பட்டம் பெறுவது. அதுதான் என் இலக்கு.’
‘அதற்கு பிறகு?’
‘நான் UNICEF-க்காக வேலை செய்கிறேன். போரினால் சீரழிந்த குழந்தைகளுக்காகவும், தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தீங்கிழைத்த குழந்தை போராளிகளின் சீர்திருத்தத்துக்காகவும் பாடுபடுவேன். நானூறு சிறுவர் சிறுமிகளின் கைகளை ஒரு காரணமும் இன்றி அவர்கள் வெட்டிக் குவித்தபோது உலகம் சும்மா பார்த்துக் கொண்டிருந்தது, குரல் எழுப்பவில்லை. நான் எழுப்புவேன்.’
‘இது மிகப் பெரிய பணி அல்லவா? இரண்டு கைகளும் இல்லாதது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா?’
‘அவர்கள் என் கைகளைத்தான் எடுத்தார்கள். என் குரலை எடுக்கவில்லை.’
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு: இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
சென்னை ம.க.இ.க தோழர்கள் புதிய கலாச்சாரம் – ஜனவரி மாதத்திற்கான “மோடியை கொல்ல சதியா?” இதழை தாம்பரம் – கடற்கரை இரயிலில் விற்பனை செய்து வந்தனர். இது போன்ற விற்பனையின் அவ்வப்போது பார்ப்பனர்கள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு, பொதுமக்களிடையே வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு.
இந்த முறை ஒரு மோடி பக்தாள், ’வாலண்டியராக’ வந்து வாயைக் கொடுத்திருக்கிறார். ”ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி எப்படி தவறாக பிரச்சாரம் செய்யலாம்?” என்று கேட்டுக் கொண்டே, விற்பனையில் ஈடுபட்ட தோழர்களை வீடியோ எடுக்கத் தொடங்கியிருக்கிறார் அந்த பக்தாள். விற்பனைக்கு சென்ற தோழர்கள், “ஒரு நாட்டின் பிரதமரை விமர்சிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு” என்று கூறி மக்களிடையே அந்த பக்தாளையும் மோடியையும் அம்பலப்படுத்தி பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினர்.
விடாமல் அடுத்த பெட்டிக்கும் வந்து நின்ற மோடி பக்தாள், அங்கும் மோடிக்கு எதிராக எப்படி பேசலாம் என ’சவுண்டு’ கொடுக்கத் தொடங்கினார். இந்த முறை நமது ம.க.இ.க தோழர்கள் வாய் திறப்பதற்கு முன்னால், பொதுமக்கள் வாய் திறந்துவிட்டனர்.
அந்த சூழலில் பல வகைப்பட்ட எதிர்வினைகளைக் காண முடிந்தது. ”அவர்களை ஏன் நிறுத்தச் சொல்கிறீர்கள், உங்களுக்கு மோடி நல்லவர் என்றால் அதை தனியாகப் பேசுங்கள். அவர்களை நிறுத்தச் சொல்லாதீர்கள்” என்றார். இன்னொருவரோ, மோடியை கழுவி ஊற்றிவிட்டு, பக்தாளை அமைதியாக இருக்கும் படி எச்சரித்தார். ஒரு வேளை மோடியை மக்கள் அசிங்கமாகப் பேசி அதனைக் காது குளிர கேட்கவேண்டும் என நெடுநாள் ஆசையில் அந்த பக்தாள் இருந்தாரோ என்னவோ, தெரியவில்லை. பக்தாள் முகத்தில் ஈயாடவில்லை.
ஒரு இளைஞர் பக்தாளிடம் நேரடியாகப் போய், மோடி என்ன செய்தார் தெரியுமா? உனக்கு பட்டியலிடட்டுமா? என்று கேள்வி எழுப்பினார். வேறு வழியின்றி அந்த பக்தாள் செருப்படி படாத குறையாக அப்பெட்டியிலிருந்து வெளியேறினார்.
விற்பனையில் ஈடுபட்டிருந்த தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பொதுமக்கள் பாராட்டிச் சென்றனர்.
*****
மோடியைக் கொல்ல சதியா ? – பக்கங்கள் : 80 விலை ரூ. 30.00
புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
முறைசாரா தொழிலாளர்களுக்கான ஒரு ஓய்வூதிய திட்டத்தை தன்னுடைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆரவாரமாக மோடி அரசு அறிவித்துள்ளது. 10 கோடி பயனாளிகளுடன் உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய திட்டமாக ஏற்கனவே இது வியந்தோதப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் ஆண்டிலேயே மோடி அரசால் ஆரவாரமாக தொடங்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களின் தலைவிதியைப் புரிந்து கொள்வது நல்லது. இதே போன்ற ஆரவாரத்துடன் இதே வகை தொழிலாளர்களுக்காக ”ஸ்ரீமேவ் ஜெயதே” என்ற திட்டம் அன்றும் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலாளர்களுக்கு அடையாள எண் அட்டைகள் (Unorganised Workers Identification Number cards) வழங்கப்படுவதாக இருந்தன. “சுகாதார காப்பீடு மற்றும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதற்காக சமூக பாதுகாப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும்” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2015 பிப்ரவரியில் மின்ட் வணிக செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. பாஜக அமைச்சர்களும் மாநாடுகள் பல நடத்தி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை குப்பைகளாக்கினர்.
புதிய திட்டத்திற்கும் இதே தலைவிதிதான் நேரும். இதே துறையை மையப்படுத்தி கடந்த 2015, மே 9 அன்று “அடல் ஓய்வூதிய திட்டம்” (Atal Pension Yojna) இதே போன்ற ஆரவாரத்துடனும் அம்சங்களுடனும் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டம் தொடக்கம் முதலே ஆட்டம் கண்டது. 2015 முடிவிற்குள் தோராயமாக 2.2 கோடி மக்களை சென்று அடைவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆயினும் குறித்த நாளுக்குள் 6.5 % இலக்கு மட்டுமே எட்டப்பட்டது.
தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் அதில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1.1 கோடியாக இருக்கிறது. இது ஒரு கணிசமான எண்ணிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் 41.6 கோடி முறைசாரா தொழிலார்களின் எண்ணிக்கையை (2011-12-ம் ஆண்டிற்கான தேசிய மாதிரி சர்வே அறிக்கையின் படி) ஒப்பிடும் போது இது அற்பசொற்பமான எண்ணிக்கையே. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியிலான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கு புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கணக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் தோற்றுப்போன முந்தைய திட்டத்தின் அதே அம்சங்களை ஏறக்குறைய கொண்டுள்ளது.
நம்ப முடியாத இலக்குகள்:
இரண்டு இன்றியமையாத நடைமுறை அம்சங்களில் சமீப வரவு மோடியின் புதிய இந்தியாவில் விமர்சிக்கப்படுகிறது. முதலாவது, ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு என்பது தொழிலாளர்களின் வேலைவாய்ப்புடன் தொடர்புடையதாக இல்லை. மாறாக தன்னார்வ பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் இத்திட்டத்தை வரவேற்கவில்லை. 60 வயது கடந்த பிறகே பூத்து குலுங்க போவதாய் சொல்லிக்கொள்ளப்படும் இந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை நுகர்வதற்கு பெரும்பான்மையான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்.
நாடுய் முழுவதும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலைமை மோசமான நிலையிலேயே உள்ளது
இந்தியா உட்பட உலகெங்கிலும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வேலை வாய்ப்புடன் தொடர்புடயதாகவே இருக்கின்றன. சமூக பாதுகாப்பிற்காக தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் அதே நேரத்தில் முதலாளிகளிடமிருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. எனினும் புதிய திட்டத்தின்படி தொழிலாளர்கள் மட்டுமே பங்களிப்பை செலுத்த வேண்டும். தொடர்ந்து 20-30 ஆண்டுகள் பங்களிப்பு செலுத்த சொல்வது முறைசாரா தொழிலாளர்களால் இயலாத காரியம்.
20-30 ஆண்டுகளில் கிடைப்பதாய் சொல்லப்படும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர்கள் தங்கள் பாடுபட்டு சேர்த்த சொற்ப காசியிலிருந்து பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எதார்த்தமற்றது. சான்றாக, இன்றும் கூட தற்காலிக தொழிலாளர்களிடமிருந்து அவர்களுக்கு தெரியாமலேயே வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை வைத்து இதை புரிந்து கொள்ளலாம். உரிமை கோருபவர்கள் இல்லை என்பதால் தொழிலாளர்களின் சேமிப்பை சுரண்டி தொழிலாளர் வைப்பு நிதி மேலாண்மை நிறுவனங்கள் கொழுக்கின்றன.
இதற்கு மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இதே போல பங்களிப்பு சார்ந்த ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியிருக்கின்றன. ஆனால் அவை செயலிழந்து விட்டதால் தொழிலாளர்களின் பங்களிப்பை திரும்ப கேட்பது என்பது ஒருபோதும் நடவாத காரியம்.
60 வயதுக்கு பிறகு ஓய்வூதிய திட்டம் பூத்து பலன்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் 20-30 ஆண்டுகளாக பங்களிப்பை செலுத்தும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அறுவடைக்கு முன்பே மரணித்து விடுகின்றனர். தூசியும் தும்மலுமான உண்மையான இந்தியாவும் லூடென்ஸ் டெல்லியும் (இந்திய பிரதமரின் அரண்மனை வீற்றிருக்கும் இடம்) எப்படி பிரிந்து கிடக்கின்றன என்பதற்கு இது ஒன்றே சாட்சி.
ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு வேண்டுமென்றால் 60 வயதென்பது உவப்பாக இருக்கலாம் ஆனால் கடும் உடலுழைப்பை செலுத்தும் முறைசாரா தொழிலாளர்களுக்கு முற்றிலும் இது எதார்த்தமற்றது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது 68.8 ஆண்டுகள் அதுவே கிராமப்புறங்களில் 65 ஆண்டுகள். எப்படி ஆயினும் இந்த சராசரி ஆயுட்கால புள்ளி விவரங்கள் சமூக பொருளாதார அடிப்படையில் மாறுபடுகின்றன. இந்திய முறைசாரா தொழிற்துறைக்கு அதிகப்படியான பங்களிப்பு செலுத்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது நடுத்தர ஆதிக்கசாதி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலத்தை விட மிகவும் குறைவு.
மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த S.K மொஹந்தி மற்றும் F.ராம் இருவரும் சேர்ந்து “இந்தியாவின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரிவினரின் சராசரி ஆயுட்காலம் (Life Expectancy at Birth Among Social And Economic Groups in India)” என்ற தலைப்பில் மக்களைத்தொகை ஆய்வொன்றை வெளியிட்டனர். அதன்படி 2006 ஆண்டில், பங்குடியினரின் சராசரி ஆயுட்காலம் 60.3 ஆண்டுகளாகவும் அதுவே அவர்களில் ஏழைகளின் ஆயுட்காலம் மிகக்குறைவாக 56.9 ஆண்டுகளாகவும் இருந்தன. முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களே இந்தியாவின் ஏழைகள் என்று கருத முடியும். தலித்துக்களின் சராசரி ஆயுட்காலம் 63 ஆண்டுகள் என்று அது கூறுகிறது.
சராசரி ஆயுட்காலம் கடந்த பத்தாண்டுகளில் சற்று அதிகரித்திருப்பினும் இவ்விரண்டு பிரிவிலும் உள்ள ஆண்களின் ஆயுட்காலம் தேசிய சராசரியை விட குறைவாகவே இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களை பல்வேறு வகைகளில் மாற்றலாம். ஒன்று மட்டும் தெளிவு. முறைசாரா துறையின் பெரும்பாலான தொழிலாளர்கள் பலன்களை பெறுவதற்கு 60 வயது வரை உயிரோடு இருக்க மாட்டார்கள்.
உண்மையில், கட்டுமானம், செங்கல் சூளைகள், குவாரிகள் உள்ளிட்ட உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடும் முறைசாரா தொழிலாளர்களின் ஆயுட்காலம் என்பது அதனினும் குறைவு. இது போன்ற கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதற்கு அதிகபட்சம் வயது 40 என்பதை சற்று மேம்போக்காக பார்த்தாலே தெரியும். 40 வயதை கடந்த பிறகு அந்த வேலைகள் கிடைக்காது. முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என்பது 55 வயது அல்லது அதற்கு முன்னதாக தொடங்க வேண்டும்.
ஆனால் முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க வேறு எந்த வழியும் இல்லையா? சில நல்ல திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மகாராஷ்டிராவின் மாதாடி மற்றும் ஏனைய உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம், 1969 (The Maharashtra Mathadi and Other Manual Workers Act 1969) அத்தகைய ஒன்று. இன்று தொழிலாளர்கள் மாதாடி வாரியங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டாலும், மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாதாடி வாரியங்கள் இலட்சக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை அளிக்கின்றன.
இச்சட்டமானது, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை முறைப்படுத்துவதற்கும், தொழிலாளர்-முதலாளி உறவை ஏற்படுத்துவதன் மூலம் சமூக பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கிறது. வேலைவாய்ப்பை முறைப்படுத்துவது, முதலாளி – தொழிலாளி உறவை ஏற்படுத்துவது மற்றும் அதனுடன் சமூக பாதுகாப்பை இணைப்பது – இம்மூன்றும் எந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் அடிப்படையானது. இல்லையெனில் வெறும் ஜூம்லாக்கள் மட்டுமே மிஞ்சும்.
நன்றி : தி வயர்
கட்டுரையாளர் : சுதிர் கட்டியார்
தமிழாக்கம் : சுகுமார்
“அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால்…” (ONE FEARLESS STEP AGAINST THE UNDECLARED EMERGENCY…) என்ற தலைப்பின் கீழ்,
“பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்”
“ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவை கைது செய்யாதே”
“பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!” – ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC) சார்பில் மதுரையில் பிப்.8,2019 அன்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டமும், கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரா. கிருஷ்ணசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் முரளி தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையின் தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியும், வழக்கறிஞரும், பியூசிஎல் அமைப்பின் தேசியச் செயலருமான சுதா பரத்வாஜின் மகளின் கடிதத்தை படித்துக் காண்பித்தார். மேலும் அவர் பேசுகையில், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கைது, ஊபா சட்டத்தில் சிறை ஆகியவை எல்லாம் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. இந்தியா முழுவதும் போராடுகிறார்கள், நாமும் நமது குரலை எழுப்பினால்தான் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவையாவது காப்பாற்ற முடியும். எனவே தொடர்ந்து போராடுவோம் என்றார்.
வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
1 of 9
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
அடுத்து உரையாற்றிய எழுத்தாளர் லிபி ஆரண்யா, மோடி ஆட்சியையும், ஹிட்லர் ஆட்சியையும் ஒப்பிட்டு விளக்கினார். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே அவர்களின் சமூகப் பங்களிப்பு, குறிப்பாக ஏகாதிபத்தியம் குறித்தும், தலித், கம்யூனிச இயக்கங்களின் நிறை – குறைகள், இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்? ஆகிய அனைத்து குறித்தும் தெளிவான நிலைப்பாட்டை ஆனந்த் முன்வைத்துள்ளார். ஆனந்தின் இந்த அறிவுப்பூர்வமான பங்களிப்பு அரசை அச்சப்பட வைக்கிறது. அதேபோல் மக்களை ஆர். எஸ். எஸ். உணர்வுத்தளத்தில் இருந்து திரட்டுகிறது. முற்போக்கு இயக்கங்கள் அறிவுத் தளத்தில் இருந்து திரட்டுகிறோம். மக்களை அவர்கள் நன்கு உள்வாங்கியுள்ளார்கள். அதையும் நாம் புரிந்து செயலாற்ற வேண்டும். மத அடிப்படைவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும், அனைத்து தலித், கம்யூனிச, பெரியாரிய இயக்கங்களும் இணைய வேண்டும்” என்றார்.
பேச்சாளர்கள்
1 of 6
பேராசிரியர் கிருஷ்ணசாமி
எழுத்தாளர் லிபி ஆரண்யா
பேராசிரியர் முரளி
கலந்து கொண்டவர்கள்
பேராசிரியர் சீனிவாசன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
இறுதியாக உரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சி நாதன், இடதுசாரி அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்வதற்கு மிகப்பெரிய சதிப் பின்னணி உண்டு. கடந்த அக்டோபர் 2015-ல் ராய்ப்பூரில் கூடிய ஆர். எஸ். எஸ் உள்ளிட்ட 35 இந்துத்துவா அமைப்புகள், தேசியம் – எதிர் – தேச விரோதம் என்ற கருத்தாக்கத்தை முன் வைத்து மோடி – பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்க முடிவெடுத்தன. 2015-ல் டெல்லி தேர்தலில் தோற்றபின் எடுக்கப்பட்ட முடிவு இது.
இந்தக் கருத்தாக்கம் முதலில் பிப்ரவரி 2016-ல் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் அமல்படுத்தப்பட்டது. மாணவர் போராட்டத்தில் ஏபிவிபி அமைப்பின் மாணவர்களை வைத்து பாகிஸ்தான்,காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக கோசம் எழுப்ப வைத்து கண்ணையா குமார் உள்ளிட்டவர்கள் தேச விரோதிகள் எனப் பிரச்சாரம் செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகாவில் திப்பு சுல்தான் விழாவில் கலவரம் செய்தனர். பசுப் பாதுகாப்பு என கொலைகள் செய்தனர். இந்துத்துவத்தை உறுதியாய் எதிர்த்தவர்களை சனாதன் சன்ஸ்தா மூலம் கொலை செய்தனர்.
இவர்களின் நோக்கம் நாம் மோடி அரசின் தோல்விகள் குறித்து பேசக்கூடாது என்பதோடு, மக்களுக்கு ஆதரவான அறிவுத்துறையினர் இருக்கவே கூடாது என்பதும்தான். ஹிட்லரும் இதைத்தான் செய்தான். தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் செய்து நம்மை களைப்படையச் செய்யும் உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். நாம் சோர்ந்து விடக்கூடாது. அரசியலமைப்பு நிறுவனங்களே மோடியிடம் அஞ்சுகின்றன. பெரும்பான்மை சமூக நிலைப்பாடுகளுக்கு அரசியலமைப்பு இணங்கிச் செல்ல வேண்டும் என மிரட்டுகிறார்கள். அதுதான் சபரிமலை வன்முறை. எனவே இதனை எதிர்கொள்ள மக்கள், சிவில் சமூகப் போராட்டமே தீர்வு. நாம் மோடி-ஆர். எஸ். எஸ் கும்பலின் பயங்கரவாதத்தையும், அவர்கள்தான் மதரீதியாக நாட்டைப் பிளக்கும் பிரிவினைவாதிகள் என்பதையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்வினைக்குத் தள்ள வேண்டும்” என்றார்.
நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் சீனிவாசன், பேராசிரியர் ஆனந்த் கைதுக்கு பல்கலை, கல்லூரிப் பேராசிரியர்கள் குரல் எழுப்பாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி நன்றி சொன்னார்.
தினேஷ், ஒரு விவசாயி ஆனது ஒரு விபத்தாக நடந்தது. திருத்தணி அரசு கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் படித்து முடித்ததும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்தார். ஒரு போலீசு வழக்கு காரணமாக அவரால் வழக்கறிஞர் ஆக முடியவில்லை என்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் போதையில் தன்னை தாக்கியதாகவும் வேறுவழியில்லாமல் அதை தடுக்கும்பொருட்டு திரும்பித் தாக்கியதாகவும் சொல்கிறார் தினேஷ்.
தனது குடும்பத்துக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம்தான் இவருடைய வருமான ஆதாரம்.
மாதிரி படம்
தனக்கு அருகில் இருந்த ஆனந்தன் உள்ளிட்ட பலர் கத்திரிக்காய் விளைவித்து கிலோ ரூ. 30க்கு விற்பதைப் பார்த்தார் தினேஷ். எண்ணைய் கத்திரிக்காய், கொத்சு, பொடி கத்திரிக்காய், கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு என குறைந்தபட்சம் 15 பிரபலமான உணவு பதார்த்தங்கள் கத்திரிக்காயை வைத்து தயாரிக்கப்படுகின்றன என்பதால் தமிழ்நாட்டில் கத்திரிக்காய்க்கு எப்போதுமே தேவை இருக்கும் என்கிற முடிவில் தனது நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டார் தினேஷ்.
இதற்காக தினேஷ் ரூ. 40 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால், கத்திரிக்காய்களின் விளைச்சல் ஜீரோ.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கத்திரிக்காய் விளைச்சலை முற்றிலுமாக பாதிக்கும் ஆறு நோய்களை இனம் கண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழக இணையதளம் இந்த நோய்களைத் தாங்கக்கூடிய சில கத்திரிக்காய் வகைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால், தினேஷுக்கு இந்த நோய்கள் குறித்தோ அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்றோ எதுவும் தெரியவில்லை.
“நோய் வந்தவுடன், ஒரு செடியை பிடிங்கிக் கொண்டுபோய் பூச்சிமருந்து விற்கும் கடைக்காரரிடம் காட்டினேன். அவர் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்தார். இந்தப் பகுதியில் இருந்த 10 விவசாயிகளில் 2 பேர் மட்டுமே இந்த நோயை ஒழித்து, தங்களுடைய விளைச்சலை காப்பாற்றினார்கள். எட்டு பேரால் முடியவில்லை” என்கிறார் தினேஷ்.
மாதிரி படம்
தினேஷுக்கு அந்த 10 விவசாயிகளும் எந்த பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தார்கள் என்பதும் தெரியவில்லை. அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயரும் அவருக்கு நினைவில்லை.
அதன் பிறகு, அந்த இளம் விவசாயி வெண்டைக்காய் விளைவித்தார். ஆனால், அவை நல்ல விலைக்கு விற்கப்படவில்லை. அடுத்து, அவருக்கு பண்ணை மீன் வளர்ப்பு செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டது. விரால், கட்லா, ரோஹு போன்ற மீன் வகைகளை வளர்த்து இடைத்தரகர்களிடம் கிலோ ரூ. 80க்கு விற்க முடியும். இந்த முறை பண்ணைக் குட்டைகள் உருவாக்க ரூ. 50 ஆயிரத்தை முதலீடு செய்தார்.
மீன்கள் வளர்ந்தன; சிறப்பாக வளர்ந்தன. ஒரு நாள் அத்தனையும் காணாமல் போயின.
“இங்கே திருட்டு அதிகம். மக்கள் திருட்டுத்தனமாக உள்ளே போய் மீன்களை பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். குட்டைகளை எல்லா நேரத்திலும் பாதுகாக்க முடிவதில்லை. ஒருமுறை காவலரை நியமித்து பார்த்தேன். ஆனால், அவரும் திருடர்களுடன் சேர்ந்து மீன்களை பிடித்துக்கொண்டு ஓடிவிட்டார்” என்கிறார்.
உள்ளூர் வட்டிக்காரர்களிடம் ரூ. 4 லட்சம் கடனை தற்போது சுமந்து கொண்டிருக்கிறார் தினேஷ். வட்டியாக மட்டும் ரூ. 12 ஆயிரத்தை மாதந்தோறும் அவர் கட்ட வேண்டும். ஒரு நிலையான, விவசாயம் அல்லாத வருவாய் கிடைத்தால் அவருக்கு வாழ்க்கை எளிதாக இருக்கும். இப்போது தனது மனைவி கல்பனாவை நம்பியிருக்கிறார். கல்பனா ஒரு ஸ்டேஷனரி கடையுடன் இணைந்த போட்டோ ஸ்டுடியோ-வில் பணியாற்றுகிறார்.
அந்தக் கடை நோக்கிச் செல்லும் சாலை, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரியைக் கடந்து போகிறது. அது இந்த டவுனிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. வழியில் ஒரு பெரிய திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது. திருமண இணையரின் இடதுபுறம், நடிகர் விஜய் முரசு கொட்டுகிறார். விஜய்யின் அப்பாவும் அந்த பேனரில் இடம்பெற்றிருக்கிறார். பேனரின் வலதுபுறம் இரண்டு பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பேனர்களை வைத்தவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியதற்காக கொண்டாடப்படும், இந்தியாவின் அரசியலமைப்பை வடிவமைத்த பீமாராவ் அம்பேத்கரின் படங்களும் உள்ளன. சந்தையில் அம்பேத்கரின் சிலைகள் இருப்பதை பல இடங்களில் காண முடிந்தது.
சந்தைப்பகுதியில் கல்பனாவின் கடை, பேருந்து நிலையத்துக்கு அடுத்து இருந்தது. போட்டோ ஆல்பங்களை உருவாக்குவது, ஸ்டிக்கர் பொட்டு, வளையல், பேனா மற்றும் பென்சில்களை விற்பதுதான் அவருக்கான பணி!
சில ஆண்டுகளுக்கு முன் விவசாயப் பணியிலிருந்து தொழிற்சாலை பணிக்கு போன பின், வாழ்க்கை நன்றாகவே இருந்தது. சென்னையிலிருந்து 200கி.மீ தள்ளியிருக்கும் அரியலூர் மாவட்டத்தில் அவர் வளர்ந்தார். அவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர். அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. விவசாய கூலி வேலைக்கு அவர் போனார். அவருடைய ஐந்து சகோதரிகளும் முந்திரி தொழிற்சாலையில் முந்திரி ஓடுகளை உடைக்கும் பணிக்கும், நல்ல முந்திரிகளை பொறுக்கி எடுக்கும் பணிக்கும் போனார்கள்.
கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளையடித்துச் சென்ற நோக்கியா நிறுவனம். (கோப்புப் படம்)
ஒரு நாள், நோக்கியா நிறுவனம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருப்பதாக தொலைக்காட்சி விளம்பரத்தை பார்த்தார் கல்பனா. அவர் விண்ணப்பித்தார். எட்டாயிரம் நிரந்தர ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு ஆலையாக இருந்த நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியும் கிடைத்தது. அப்போது இந்த நிறுவனம் மாதத்துக்கு 15 மில்லியன் போன்களை தயாரித்தது. ஆனால், தமிழக அரசுடன் ரூ. 17,658 கோடி ரூபாய் அளவிலான இரண்டு வரி முறைகேடுகளில் ஈடுபட்ட காரணத்தால், இந்த நிறுவனம் ஆலையை மூடிவிட்டு வியட்நாமுக்குச் சென்றுவிட்டது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.
2009-ம் ஆண்டு கல்பனா இந்நிறுவனத்தில் சேர்ந்தபோது ரூ. 3500 மாத சம்பளம் பெற்றார். 2014-ம் ஆண்டு வேலையை இழக்கும்போது அவர் வாங்கிய சம்பளம் 16,500 ரூபாய்.
கல்பனா தற்போது பணியாற்றும் கடை குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு எடுக்கப்பட்ட முயற்சி. அவர் போதுமானதை இதுவரை சம்பாதிக்கவில்லை. “நான் போட்ட பணத்தை திரும்ப எடுக்கிறேன். விற்கும்போது கிடைக்கும் பணம், மீண்டும் போட்டு, வளையல்களை வாங்குவதற்கே முதலீடு செய்கிறேன்” என்கிறார் கல்பனா.
குறிப்பு : பத்திரிகையாளர் கவுதம் தாஸ் எழுதிய Jobonomics: India’s Employment Crisis and What the Future Holds என்ற நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம், விவசாயத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது போன்ற பசுமைவிகடன் வகையறா மினுமினுப்புப் படங்களை நம்பி, விவசாயம் பணம் கொழிக்கும் தொழில் போலவும், விவரம் தெரியாத விவசாயிகள் மட்டுமே தோல்வி அடைவது போலவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு தினேஷின் வாழ்க்கை ஒரு முன்னெச்சரிக்கை
சென்னையில் அமைந்திருக்கும் கல்லூரி ஒன்றில் கடந்த வாரம் படித்து முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவர் கலந்து கொண்ட விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி சில ஆண்டுகள் நிரப்பப்படாமல் இருந்ததால் இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான மாணவர்களுக்கு தேர்ச்சிப் பட்டம் ஒரே நாளில் வழங்கப்பட்டது. மாணவப் பட்டதாரிகளும், பெற்றோர்களுமாக சுமார் மூன்றாயிரம் பேர் திரண்டிருந்தனர். இது பெரிய சந்தடியை கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தியது. பட்டம் பெறும் மாணவர்கள், முக்கிய விருந்தினர் மற்றும் முக்கிய நிர்வாகத்துறையினர் ஆகியோர் மேலங்கி அணிந்து வித்தியாசமாக தோன்றினர். மாணவர்கள் தங்கள் தோற்றப் பொலிவில் உற்சாகம் கொண்டு கைகளிலிருந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் ஃபோட்டோ மற்றும் செல்ஃபிக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவின் தீவிர ஆச்சாரம் அவர்களின் உற்சாகத்துக்கு தடைபோட்டது. துணைவேந்தரின் பட்டமளிப்பு செய்திக்கு பின்னர் மாணவர்கள் பட்டங்களை பெறத் தொடங்கினர். பட்டங்களை பெறும் போது கரவொலிகள் எழுந்தன. துறை வாரியாக பட்டங்களை பெற்ற மாணவர்கள் மறுபடியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர மறுத்தனர். தங்கள் கைகளில் இருந்த அலைபேசிகள் மூலம் பல்வேறு சூழல் பின்னணியில் ஃபோட்டோக்களை தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் எடுக்கத் தொடங்கினர். ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட மறுத்தனர். அனைவருக்கும் பட்டங்களை வழங்கிய பின்னர் உறுதிமொழி ஏற்பின் போது மிகக்குறைந்த எண்ணிகையிலான மாணவர்களே அரங்கில் இருந்தனர். இது நிர்வாகத் தரப்புக்கு மொத்த நிகழ்ச்சி குறித்து ஒரு தோல்வி மனப்பான்மையை வழங்கியது. தமது சங்கடத்தை ஆத்திரமாக ஆசிரியர்கள் மீது காட்டத் தொடங்கியது.
பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு ஆசிரியர்களை வீட்டிற்கு செல்ல அனுமதி மறுத்து கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். என்ன தவறு? என்பதை விவாதிப்பது போல் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் விரைவிலேயே கல்லூரியின் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக தொடங்கினர். குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் இரண்டாண்டு நிகழ்ச்சியை ஒரே நாளில் நடத்தியதால் ஏற்பட்ட கூட்ட நெருக்கடி என்று காரணம் கூறியதை கல்லூரி முதல்வர் ஏற்கவில்லை. மாணவர்களை கட்டுப்படுத்தும் கடமையை ஆசிரியர்கள் ஒழுங்காக செய்யவில்லை என்ற தவறை கண்டுபிடித்து வெளியிட்டார். பட்டமளிப்பு நாளின் புனிதம் கெட்டு விட்டதாக துக்கித்தார். இத்தனைக்கும் ஒரு நாள் முன்பாகவே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பட்டம் பெறப்போகும் அனைவரும் அழைக்கப்பட்டு அடுத்த நாள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.
உண்மையில் எங்கு தவறு நடந்தது?
இந்த கேள்விக்கான பதிலை எங்கிருந்து பெறுவது என்பது முக்கியமானது. படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சமூகத்தில் என்னவாக இருக்கிறது? வேலைவாய்ப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்திருப்பதாக தேசிய மாதிரி அளவெடுப்பின் (NSSO) மிகச் சமீபத்திய புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. 45 வருட காலத்தில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும், 15 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களின் வேலை வாய்ப்புகள் மிகக் குறைந்துள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நகர்ப்புற பெண்கள் வேலையின்மை 27 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. வேலையின்மை அதிகரித்திருப்பதோடு தொழிலாளர்கள் வேலை இழப்பதும் கூடியுள்ளது. பக்கோடா விற்பதை பெரிய தொழில் வாய்ப்பாக பிரதமரே முன்மொழியக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். இவையெல்லாம் தாம் பெற்ற கல்வி மற்றும் சான்றிதழ்களின் பயன்பாடு சார்ந்த மதிப்பு குறைந்ததற்கு முக்கியப் புறநிலை காரணமாக விளங்குகிறது.
தனியார் கல்லூரிகள் கல்விக் கடைகளாக கடந்த சில பத்தாண்டுகளில் மாயிருப்பது யாவரும் அறிந்த ரகசியம். கடையில் பொருள் வாங்கிய நபரிடம் கடைக்காரர் கட்டுப்பாடுகள் விதிப்பதை வாடிக்கையாளர் ஏற்பாரா? கல்விக் கட்டணம் என்ற வகையில் மட்டுமல்ல; தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் மற்றும் நிகழ்ச்சிக் கட்டணம் என அனைத்தையும் வசூலித்து விட்டு மாணவர்களிடம் வேறு வகையான ஒரு அணுகுமுறையை எதிர்பார்க்க முடியுமா?
பல கல்லூரிகள் நவீனச் சிறைச்சாலைகள் போன்று செயல்படுகின்றன. பனோப்டிக்கன் சிறை விடுதிகள் 18-ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஒன்று. அதனை வடிவமைத்தவர் ஜெரேமி பெந்தாம் என்ற இங்கிலாந்து சிந்தனையாளர். அதன்படி வட்டவடிவில் சிறை கட்டப்பட்டு அதன் நடுவில் உயரமான தூண் ஒன்று கட்டப்பட்டு இருக்கும். சிறைவாசிகளை கண்காணிப்பதற்கான ஏற்பாடு அது. அதில் ஒருவர் அமர்ந்து கொண்டு அனைவரையும் கண்காணிக்கும் வகையிலானது. சிறைக் காவலர்கள் என்று பலர் தேவையில்லை. அந்த ஒருவரும் கூட எப்போதும் இருக்கத் தேவையில்லை. சிறைவாசிகளுக்கு தாம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதான அச்சத்தை அந்த தூண் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
இன்று கல்வி நிறுவனங்களில் அந்த வேலையை கண்காணிப்பு கேமராக்கள் செய்கின்றன. உடனடி நடவடிக்கைகள் அவற்றை கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதான அச்சம் சுதந்திரமாக கற்பதற்குரிய மனதை கட்டுப்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது.
பனோப்டிக்கன் சிறை
மாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில்தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும். ஆனால் இந்த கண்காணிப்புகள் சிறைபட்டிருக்கும் அனுபவத்தை வழங்குகிறது. அவர்களின் சிந்தனையில் விலங்கை மாட்டியிருக்கிறது. மாணவர்கள் பற்றிய எல்லா விபரங்களும் சேகரிக்கப்பட்டு தாமதமாக வருவது, விடுப்பு எடுப்பது, தேர்வில் தோற்பது ஆகியவை கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன.
மாணவ-மாணவியர் ஒன்றாக சுற்றுவது, பேருந்து, ரயில் நிலையங்களில் காத்திருப்பது ஆகியவை சுடுசொற்களால் விமர்சிக்கப்படுகின்றன. ஆசிரியச் செயல்பாடு என்பது நிழல் போலீஸ் தன்மைக்கு மாறியுள்ளது. எளிதில் கையாளத்தக்க பிண்டங்களாக மாணவர்கள் மாறுவதுதான் சிறந்த ஒழுக்கமாக கருதப்படுகிறது. எனவே இதற்கெதிரான கலக சிந்தனை என்பது மாணவப்பருவத்தில் மிக இயல்பாக எழும் ஒன்று.
மாணவர்களின் இந்த புழுக்கத்தை தணிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தவும் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் மென்போர்ன் தன்மை கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகின்றன. காதல், பெண்கள், ஆண் – பெண் உறவு சார்ந்த புரிதலற்ற வேட்கைகள் இதன் மூலம் தூண்டப்படுகின்றன. ஒரு பக்கம் கடுமையான கட்டுப்பாடுகள் மறுபுறம் கேளிக்கை, சினிமா நிகழ்ச்சிகள் என்று புதிரீடான மனப் பதநிலைக்கு ஒரு மாணவன் உள்ளாக்கப்படுகிறான். இது அவனது அறிவார்த்த ஆளுமையை சிதைக்கிறது. அர்த்தப்பூர்வமான உரையாடலை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.
கருத்தரங்குகள், பட்டறைகள் ஆகியவை பேருக்கு சடங்குத்தன்மையுடனும், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் முழு ஈடுபாட்டுடனும் நடத்தப்படுகின்றன. பின்னர் அவை அனைத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளாக ஆவணப்படுத்தப்படுகின்றன. அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்துக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.
தனியார் கல்லூரிகளுக்குள் ஒரு நாள் நுழைந்து விட்டால் பின்னர் நடுவில் அங்கிருந்து வெளியேறுவது என்பது இயலாத காரியம். ஒரு வகுப்பில் இருப்பதா? வேண்டாமா? என்று தேர்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு இருப்பதில்லை. தங்கள் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி அமர வைக்கப்படுவதாக எண்ணுவதால் அவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற அதிக பயம் தங்களுக்கு விழும் ஆப்சண்ட் பற்றியது. தாங்கள் விடுப்பு எடுக்கும் நாட்கள் போகவும் கல்லூரியில் நடத்தை காரணமாகவும் ஆப்சண்ட் விழுகின்றன. வருகைப் பதிவு குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழே இருந்தால் அவர்களால் தேர்வெழுத முடியாது.
ஒரு கல்லூரி எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுப்பது சிக்கலாக தோன்றலாம். ஆனால் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருத்தல் நல்லது.
ஒரு வீட்டின் இன்றியமையாமை குறித்து ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்க கவிஞன் ஒரு பணியாளரின் மரணம் (The Death of a Hired Man) என்ற நீள்கவிதையில் விவாதித்திருப்பார். ஒரு கணவன் மனைவி மற்றும் பணியாளன் ஆகியோர் அக்கவிதையில் வருவார்கள். சிலாஸ் என்ற பணியாளன் ஒரு முக்கியமான நேரத்தில் அந்த வீட்டிலிருந்து வெளியேறி இருப்பார். பின்னர் சாகும் தருவாயில் அந்த வீட்டிற்கு மறுபடியும் வருவார். அதனை வீட்டின் உரிமையாளரான வாரன் எதிர்ப்பார். உறவினரிடத்தில் செல்ல வேண்டியது தானே என்று எரிந்து விழுவார். சிலாஸ் தனது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதாக மனைவி மேரி உரைப்பார். பிறகு வீடு என்பதற்கு ஒரு விளக்கத்தை மேரி கொடுப்பாள். ‘வீடு என்பது நீங்கள் செல்ல விரும்பும் நேரத்தில், அதிலுள்ளவர்கள் உங்களை அணைத்துக் கொள்ள வேண்டும்’ என்பார். அறமின்றி ஒரு வீட்டை கட்ட இயலாதது போன்றது தான் ஒரு கல்லூரியை நிர்வகிப்பதும்.
பட்டமளிப்பு விழாக்களில் அங்கி மற்றும் தலைப்பாகை அணிவது மத்தியக்கால இங்கிலாந்தில் உருவானது. பாதிரிகளின் கட்டுப்பாட்டில் கல்வி அப்போதிருந்ததால் அவர்களின் உடைகளை பின்பற்றி கொண்டு வரப்பட்ட பழக்கமாகும். 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கி அணிவதை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அதன் விதிமுறைகளில் ஒன்றாக பின்பற்ற தொடங்கியது. டவுன் அன்ட் கவுன் (Town and gown) என்ற சொல்லாட்சி பெரும்பான்மை நகர மக்களுக்கும் கவுன் அணிந்த படித்த வர்க்கத்துக்கும் இடையேயான முரணை விளக்கப் பயன்படுத்தப்படுவதாகும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானதே நகரவாசிகளுக்கும் ஆக்ஸ்ஃபோர்டில் படித்த சிலருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புதிய கல்வி நிறுவனம் என்று சொல்லப்படுவதுண்டு. கால ஓட்டத்தில் அது பழமையின்/காலனியத்தின் எச்சமாக மட்டுமே தொடர தகுதி படைத்த ஒரு வழக்கமாகும். மேலங்கி அணிவது காலனிய எச்சம் என்றுரைத்து 2010-ம் வருடம் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய வனமேலாண்மை நிறுவனத்தின் (IIFM) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தனது அங்கியை கழற்றி வீசினார்.
பட்டமளிப்பு விழாக்களுக்கு கொடுக்கப்படுகின்ற அதீத முக்கியத்துவம் தேவையற்றது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதல் தலைமுறை பட்டப்படிப்பு என்பது இன்னமும் முழுமையடையாமலே இருக்கிறது. 8.15 சதவீத மக்களுக்கு தான் உயர்கல்வி வாய்ப்பு இந்தியாவில் கிடைப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பட்டமளிப்பு விழாக்களுக்கு இருக்கின்ற மாணவர்கள் ஈர்ப்பும், ஈடுபாட்டுணர்வும் புரிந்து கொள்ளக் கூடியது. பெற்றோர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு குழந்தைகளின் பட்டமேற்பை காண வருவது அதற்கு சாட்சியாகும்.
ஆனால், அதற்கு புனிதம் இருப்பதாக கருதுவதெல்லாம் 12-ம் நூற்றாண்டின் பழமையின் சுமையை தூக்கி கொண்டாடுவதாகும். உயர்கல்வி என்பது அறிவு சமூகத்தை படைப்பதென்ற யுனெஸ்கோவின் எண்ணத்தை அழிப்பதாகும். அறிவுத்துறை தற்குறித்தனம் உயர்கல்வித் துறையை ஆட்டிப்படைக்கிறது. 21-ம் நூற்றாண்டில் கல்லாமை என்பது எழுதப் படிக்கத் தெரியாமலிருப்பதல்ல; மாறாக புதிதாக கற்றுக் கொள்ளாமலிருப்பதும்; கற்றதை சரிபார்த்துக் கொள்ளாமலிருப்பதும்; ஏற்கனவே கற்றதை மறுபரிசீலனை செய்து கொள்ளாமலிருப்பதும் தான் என்கிறார் ஆல்வின் டொஃப்ளர் என்ற நவீன சிந்தையாளர்.
மாணவர்களை கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது எல்லாம் தனிப்பட்ட ஆசிரியரின் திறன் என்று சுருக்கப்படுகிறது. அதற்கு பின்னணியில் ஆசிரியர் – மாணவர்கள் பிரச்சினைகளோடு தொடர்புடைய பல்வேறு கண்ணி இழைகளை அது காண மறுப்பதாகும்.
மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டங்களைக் கண்டித்து சென்னை பத்திரிகை நிருபர்கள் சங்கத்தில், சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இடம் : பத்திரிக்கை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை நாள் : 09/02/2019 – மாலை 4மணி
கருத்துரையாளர்கள்:
மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
கிராந்தி சைதன்யா, CLC, ஆந்திரா
பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், NCHRO
பேராசிரியர் கருணாநந்தன், CPDR-TN
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு
வழக்கறிஞர் பாரதி, சனநாயக வழக்கறிஞர் சங்கம்
வழக்கறிஞர் ராஜா, குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
வழக்கறிஞர் மில்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
வழக்கறிஞர் புகழேந்தி, இயக்குநர், சிறைக்கைதிகள் உரிமை மய்யம்
CPDR - TN
1 of 2
1
2
படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
இந்தியாவில் காலனிய ஆதிக்க காலகட்டம் முதல் நடைமுறையில் உள்ள பல்வேறு கருப்புச் சட்டங்கள் மூலம் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஊபா உள்ளிட்ட இத்தகைய கருப்புச் சட்டங்கள், மக்களின் கருத்துரிமையை பறிப்பதோடு, அவர்களது உயிர்வாழும் உரிமையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
இத்தகைய கருப்புச் சட்டங்களை நீக்க உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது. அதனை விரிவாக எடுத்துரைக்கவிருக்கும் இந்தக் கருத்தரங்கத்தில், அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.