Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 69

மக்களுக்கான களம் போராட்டமே!

ருவழியாக, “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்குள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள், பல மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. காஷ்மீர், மேற்குவங்கம் ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களிலும் விரைவில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும் என இந்தியா கூட்டணி கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“தேர்தலில் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான கூட்டணி வேண்டும். மாநிலங்களில் அமையும் கூட்டணியைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகளும் அமைகின்றன. எனவே, தற்போது இந்தியா கூட்டணிக் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்திருப்பது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும்” என எதிர்க்கட்சிகளாலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் பலராலும் பார்க்கப்படுகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றுவிட்டால் இனி தேர்தலே நடக்காது; பாசிச இருள் சூழ்ந்துவிடும்; எனவே பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடிப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் பேசி வருகின்றனர். அதிகாரத்திலும் சமூகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வேரூன்றியிருக்கும் சங்கப் பரிவார அமைப்புகளைக் களையெடுப்பதுடன், பாசிசத்தை வீழ்த்த கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதன் ஒரு அங்கமாக பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமெனில், இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பல ஜனநாயகச் சக்திகள் மக்களைக் கோருகின்றனர். இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே எதிர்க்கட்சிகளைக் கண்டு பாசிச மோடி கும்பல் அஞ்சி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணையாமல் தடுப்பதற்காக அமலாக்கத்துறை மூலம் வேட்டையாடுவது, குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவது போன்ற சதி வேலைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்திருப்பது, முன்னேற்றகரமானதாகவும் கூட்டணி வலுவடைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.


படிக்க: டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!


ஆனால், இந்தியா கூட்டணியானது, தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணியைப் போன்றதல்ல. தி.மு.க. கூட்டணி உறுதியாக உள்ளது, அதற்குள் தொகுதி பங்கீடு நடக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியை உருவாக்கிய பின்னர் அதன் உறுதித்தன்மை தொடர்ந்து கேள்விக்குள்ளானது. நிதிஷ்குமார் இக்கூட்டணியில் இருந்து விலகிய சூழலில், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் நீடிக்குமா என்ற நிலைமை உருவானது. மூன்றாவது கூட்டத்தைக் கூட இந்தியா கூட்டணியால் கூட்ட இயலவில்லை. ஆகையால், இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை சீட்டு பேரம் முடியவில்லை எனில் கூட்டணியே நீடிக்குமா என்ற ஐயத்தைத்தான் எழுப்பியது.

எனவே, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது, அதனால், இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கருதுவது தவறு என நடந்துமுடிந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நமக்குணர்த்திவிட்டன. இந்தியா கூட்டணி உருவாகி சந்தித்த முதல் தேர்தலான ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோன்று பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்றே கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றிபெறும் என அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட படுதோல்வியைத் தழுவியது.

உண்மையில், மக்களிடம் நிலவும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை அறுவடை செய்து கொள்வதில்தான் இந்தியா கூட்டணி கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர். அதனால், வலுவான கூட்டணி அமைப்பதைவிட தொகுதிப் பங்கீடுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

குறிப்பாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நிலைநாட்டுதல், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உரிமையாக்குதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப்பெறுதல், ஜி.எஸ்.டி. வரி, நீட் தேர்வு முதலியவற்றை ரத்து செய்தல், அதானியின் எண்ணூர், விழிஞ்சம் போன்ற நாசகர துறைமுகத் திட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்கள், கிரிமினல் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறுதல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளைத் தடை செய்தல் போன்ற எந்த மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்தும் இந்தியா கூட்டணி இன்னமும் ஒரு பொதுமுடிவுக்கு வரவில்லை.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


கூட்டணி பேரம் முடிந்த பின்னர், ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே மக்களிடம் சில வாக்குறுதிகளைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என இந்தியா கூட்டணியினர் கருதினால், சத்தீஸ்கர் தேர்தலில் ஏற்பட்ட நிலைமை அவர்களுக்கு மீண்டும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

ஆகையால், உழைக்கும் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதுதான், பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது மட்டுமின்றி, இந்தியா கூட்டணியினரைக் கூட மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்பந்திக்க முடியும். உரிமைகளுக்கான மக்களது களம் போராட்டமாகும். இதனை உணர்ந்து ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட போராட்டக் களத்தில் காத்திருக்கின்றனர். டெல்லி விவசாயிகளைப் போல, இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

காசா மீது இஸ்ரேல் நடத்திய இன அழிப்புப் போரின் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பத்து வயதான யசான் கஃபர்னா (Yazan Kafarna) மார்ச் 4 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார்.

யசானுக்கு பிறப்பிலிருந்தே பெருமூளை வாத நோய் இருந்துவந்துள்ளது. மேலும் அவருக்கு உணவு விழுங்குவது மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினையும் இருந்தது. இதனால் அவர் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் எளிமையாக விழுங்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
யசான் கஃபர்னாவின் உடல்நிலை இவ்வாறு இருக்க, யசானின் குடும்பம் வாழ்ந்த பைட் ஹனூன் பகுதி உள்ளிட்ட வடக்கு காசா பகுதிகளில் இஸ்ரேல் அரசு மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை நிறுத்தியது.

இதனால், யசான் கஃபர்னா குடும்பத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடத்திற்குச் செல்லத் தொடங்கினர். இதனால் யசான் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியுடனே இருந்தனர். இஸ்ரேல் ராணுவம் காசா மக்களை ரஃபா நகரை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இம்மாதிரியான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியினால் யசானுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்காமல், யசானின் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


யசானின் தந்தை மருத்துவமனைகளுக்குச் சென்று யசானின் உடல் நிலையை சரிசெய்ய தீவிர முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்த பல மருத்துவமனைகள் இஸ்ரேலின் திட்டமிட்ட குண்டுவீச்சின் விளைவாக ஏற்கெனவே இடிபட்டுக் கிடந்தன. போருக்கு முன்பு காசா பகுதியில் கிட்டத்தட்ட 35 மருத்துவமனைகள் இருந்தன. ஆனால் தற்போது 5 மருத்துவமனைகள் தட்டுத் தடுமாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவையும் கூட முதன்மை சிகிச்சையை மட்டுமே வழங்கும் நிலையில் தான் இருக்கின்றன.

இதனால் யசானுக்கு தேவையான மருந்துகளும் சிகிச்சையும் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் உடல் மெலிந்து போயிருந்த யசான் மார்ச் 4 ஆம் தேதி இறந்துவிட்டார்.

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யசான் இறப்பதற்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு மற்றும் பட்டினி தான் காரணம் என்பதை உணவு ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் மர்வான் சலேம் (Dr. Marwan Salem) தெளிவுபடுத்தியுள்ளார்.


படிக்க: காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!


யசான் இறந்த பிறகு சமூக ஊடகங்களில் #YazanKafarna, #AirDropFoodToGaza, #Justice4Palestine, #CeasefireNOW, #FreeGaza, H2O4GAZA போன்ற பல ஹேஷ்டேக்குகள் X- தளத்தில் முன்னணியில் இருந்தன.

ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகள் 1000 லாரிகளில் உணவு மற்றும் மருந்துகளை பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளன. ஆனால் காசாவைச் சுற்றியுள்ள ரஃபா, கரேம் அபு சலேம் மற்றும் பைட் ஹனூன் ஆகிய இடங்களில் இருக்கின்ற இஸ்ரேலிய இராணுவம் இந்த “மனித நேய” உதவிகளை தடுத்தபடி இருக்கிறது.

உலகில் பட்டினியால் வாடும் 5 பேரில் 4 பேர் காசாவில் இருப்பதாகவும், அந்த 4 பேரில் ஒருவர் கடுமையான பசியில் இருப்பதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA) கூறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் நீண்ட காலமாக, கடுமையான பட்டினியை அனுபவித்து வருவதாக உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்த பட்டினி நிலையானது பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமானவர்களிடையே தீவிர நோய்களை ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கு வழிவகுக்கும்.

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு எதிரான சர்வதேச அளவிலான வீரியமான மக்கள் போராட்டங்கள் மட்டுமே யசானை கொன்ற யூத இனவெறி இஸ்ரேலிய அரசால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!

ம்மு காஷ்மீர் மாநில சிறப்புரிமை ரத்து, அயோத்தி இராமர் கோயில் திறப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு நீண்டகாலமாக பிரச்சாரம் செய்துவரும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்”, “வந்தே மாதரம்” என கூச்சலிட்டுக் கொண்டே “உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் 2024”-ஐ நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் இச்சட்டத்தின் வரைவை தயாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான குழுக்களை அமைக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்ட இக்குழு கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி 392 சட்டப்பிரிவுகளை நான்கு பகுதிகளாக கொண்ட 172 பக்க அறிக்கையை சமர்பித்தது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே அவசர அவசரமாக, பிப்ரவரி 5-ஆம் தேதி பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரை உத்தராகண்ட் அரசு கூட்டியது. 6-ஆம் தேதி மசோதாவை தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மசோதாவை படிக்கவும் பரிசீலனை செய்யவும் அவகாசம் வழங்காமல், கேள்வி நேரத்தை (Question Hour) ரத்து செய்தும் குரல் வாக்கெடுப்பின் மூலமும் தனக்கே உரிய பாசிச வழிமுறைகளில் மசோதாவை நிறைவேற்றியது. மேலும், சட்டத்தின் வரைவை தயாரித்து மக்களிடம் முன்வைத்துக் கருத்துகள், ஆலோசனைகள் கேட்பதற்கு பதிலாக முதலில் கருத்து கேட்பதாக நாடகமாடிவிட்டு வரைவை தயாரித்தது உத்தராகண்ட் பா.ஜ.க. அரசு.


படிக்க: பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?


இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி, “திருமணம், பராமரிப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம உரிமையை பொது சிவில் சட்டம் வழங்கும். முக்கியமாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்கவும், பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் தவறான செயல்களை ஒழிப்பதற்கும் உதவும். மாத்ரி-சக்திக்கு (பெண்கள்) எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் சம உரிமையைப் பெற வேண்டும்” என்று பேசினார்.

அதாவது, பெண்களின் நலனில் பா.ஜ.க. அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்பதே முதல்வர் புஸ்கர் தாமி பேச்சின் சாரம். ஆனால், பாசிச பா.ஜ.க. கும்பல் பெண்கள் மீது கொண்டுள்ள அக்கறைக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட குஜராத் கலவரத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இன்றுவரை நீதி கிடைக்காமல் போராடிவரும் பில்கிஸ் பானுவும், மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்ட பெண்களுமே போதுமான சாட்சி. உண்மையில், காவிக்கும்பல் போடும் பெண்ணுரிமை வேடத்திற்கு பின்னால், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் உரிமைகள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டு, சட்டப்பூர்வமாக ‘ஒரே நாடு ஒரே பண்பாடு’ கொண்ட இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் சதித்திட்டமே ஒளிந்திருக்கிறது.

இஸ்லாமிய வெறுப்புணர்வு சட்டம்

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரையில், குற்றவியல் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக பின்பற்றப்படுகிறது. ஆனால், திருமணம், விவாகரத்து, மறுமணம், சொத்துரிமை, வாரிசுரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை கையாள்வதற்கு ஒவ்வொரு மதத்தினருக்கும் அந்தந்த மத நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தனிநபர் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதனை நீக்கிவிட்டு அனைத்து மதத்தினருக்கும் ‘ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை’ அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரப்போவதாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அந்த வகையில் 1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் தற்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்டில் கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டப் பிரிவுகள் “முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்கு (ஷரியத்)” எதிராக உள்ளதை சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் அம்பலப்படுத்தி உள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உத்தராகண்ட் பெண்கள் குழு போன்ற சமூக செயற்பாட்டு குழுக்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இஸ்லாமியர்களின் சட்ட நூலான ஷரியத்தே (Sharia) இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் தனிநபர் சிவில் சட்டமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில், ஒரு ஆண் தனது மனைவியின் ஒப்புதலோடு நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளும் பலதார மணம்; இஸ்லாமிய பெண்களை வயதுக்கு வந்தவுடன் (15 வயதை எட்டியிருந்தால்) திருமணம் செய்து வைக்கும் வழக்கம் உள்ளிட்டவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த அம்சங்களை குறிவைத்தே உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. கும்பல். உத்தராகண்ட் பொது சிவில் சட்டப் பிரிவு 4(1), ஓர் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதை குற்றமாக்குகிறது; பிரிவு 4(3), பெண்களின் திருமண வயதை 18 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 21 ஆகவும் நிர்ணயிக்கிறது; விபச்சாரத்தில் ஈடுபடுவது, கொடுமைப்படுத்துவது, இரண்டு ஆண்டுகள் பிரிந்து செல்வது உள்ளிட்ட பல காரணங்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை கொண்டிருந்தாலும் விவாகரத்து அளிக்கப்படலாம் எனக் கூறுகிறது. இவையெல்லாம் கேட்பதற்கு முற்போக்கானதாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்தை ஒழித்துக்கட்டி அதன்மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்குவதே பாசிஸ்டுகளின் நோக்கம்.

ஏனெனில், இஸ்லாமிய மதத்தில் மட்டுமின்றி இந்து மதம் உள்ளிட்ட எல்லா மத தனிநபர் சட்டங்களிலும் வாரிசுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட பல விதிகளில் பெண்களுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதற்கு எதிரான விதிகள் எதுவும் உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்குதான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளதென்றால், இந்துமத சட்டத்தில் மூதாதையர்களின் சொத்தில் பெண்களுக்கு சொற்ப உரிமை அல்லது உரிமை மறுக்கப்படுவது போன்ற அநீதிகளை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டலாம் அல்லவா? அவ்வாறு செய்யாமல் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை மட்டும் குறிவைப்பதிலிருந்தே இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான பாசிச தாக்குதல் என்பது தெளிவாகிறது.

மேலும், தற்போது இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்பதாக சொல்லும் பா.ஜ.க-வின் மூதாதையர்கள்தான், சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முயன்றபோது அம்பேத்கரை மூர்க்கமாக எதிர்த்தனர். 1951-இல் ஒருதார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்டத்திருத்தம் போன்ற சில திருத்தங்களை கொண்டுவருவதற்கான இந்துச் சட்ட மசோதாவை அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். காவிக்கும்பலின் கடும் எதிர்ப்பால், மசோதாவின் ஒரு பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இதனையடுத்து, “தான் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதில் அர்த்தமில்லை” என்றுக் கூறி அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த காவி கும்பல் தான் இப்போது பெண்ணுரிமை, சமத்துவம் என்றெல்லாம் நாடகமாடுகிறது.


படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!


“ஒரு முஸ்லீம் நான்கு மனைவியை வைத்துக் கொள்கிறான். நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்கிறான். வதவதவென பிள்ளைகளை பெற்றெடுத்து தங்கள் மதத்தவரின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறான். இந்துக்கள் சிறுபான்மையாகிறார்கள். முசுலீம் ஷரியத் சட்டத்தை நாட்டின் சட்டமாக கொண்டுவந்துவிடுவான்” என்பதெல்லாம் காவிக் கும்பல் நெடுங்காலமாக பெரும்பான்மை‘இந்து’ மக்களிடையே அடித்தளத்தை உருவாக்குவதற்காக செய்துவரும் வெறுப்பு பொய் பிரச்சாரங்களாகும். இதனோடு பெண்கள் மீதான அக்கறை என்ற நாடகத்தையும் இணைத்து அரங்கேற்றிதான் மோடி கும்பல் முத்தலாக் சட்டத்தையும் தடை செய்திருந்தது. முத்தலாக் முறை தடை செய்யப்பட்டபோதே அது பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே என்பதை பலரும் அம்பலப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது பாசிசக் கும்பல் பொது சிவில் சட்டத்தை கையிலெடுத்துள்ளது.

மேலும், உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் அல்லது 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட நபரை நீதிமன்ற பிடி ஆணை (வாரண்ட்) இல்லாமலேயே கைது செய்யவும் அனுமதிக்கிறது. இவ்வாறு, சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வரையறுத்துள்ளதன் மூலம் வருங்காலங்களில் இஸ்லாமிய மக்களின் மீது சட்டப்பூர்வமாகவே பாசிச அடக்குமுறைகளை செலுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளது பாசிசக் கும்பல்.

பாசிசக் கும்பலின் சோதனை முயற்சி!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க. கும்பல் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதை வைத்து நாடு முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை தூண்டிவிட்டு, அதன் மூலம் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை அறுவடை செய்துகொள்ளும்.

இன்னொருபுறம், பழங்குடி மக்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இச்சட்டத்திற்கு எதிரான பழங்குடியின மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துகிறது பா.ஜ.க. கும்பல். மேலும், இச்சட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும் பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறி பா.ஜ.க-வின் முக்கிய வாக்குவங்கியாக உள்ள அம்மக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும்.

இருப்பினும், உத்தராகண்ட் மாநிலத்தில் தற்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தி என்று மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ஏனெனில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துபோவதாக பா.ஜ.க கும்பல் அறிவித்தபோது அதற்கு பழங்குடியின மக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிலிருந்தும் கூட எதிர்ப்புகள் கிளம்பின. பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ள தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பி தோல்வி முகத்தை மேலும் ஆழப்படுத்தும் என அஞ்சும் காவிக் கும்பல் தற்காலிகமாக பின்வாங்கியது. ஆனால், தற்போது மதங்களுக்கான தனிநபர் சிவில் சட்டங்கள் பொதுப்பட்டியலில் உள்ளதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, உத்தராகண்ட் மாநிலத்தில் சோதனை முயற்சியாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி, “உத்தராகண்ட்டில் இந்த மசோதாவை பரிசோதித்துப் பார்க்க பா.ஜ.க. விரும்புகிறது. இதற்கு என்ன எதிர்விளைவுகள் என்பதையும், ஒரு சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைத்தோ, அல்லது குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று கூறியோ, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமா, நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் முன் இது நிற்குமா என்ற சட்ட அம்சங்களையும் பா.ஜ.க. ஆராய விரும்புகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இது ஒருவகையான பரிசோதனைதான். ஆனால் அதே நேரத்தில் தாங்கள் இதில் தீவிரமாக இருப்பதாக காட்டவும் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது” என்கிறார்.

அதாவது, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலையாக உள்ளதை போல தற்போது உத்தராகண்ட் மாநிலத்தை பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனைச்சாலையாக கையிலெடுத்துள்ளது பாசிசக் கும்பல். அவ்வாறு உத்தராகண்ட் மாநிலம் தேர்தெடுக்கப்பட்டதற்கு குறிப்பான காரணங்கள் உள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு சிறிய பசுவளைய மாநிலமாகும். சமவெளி முதல் மலைப்பகுதிகள் வரை எல்லா இடங்களிலும் இந்துக்கள் பரவி வசித்து வருகின்றனர். பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ், கங்கோதிரி, யமுனோதிரி போன்ற இந்துக்களின் புனித தளங்களும் இம்மாநிலத்தில் அதிகளவில் உள்ளன. இம்மாநிலத்தில் அடித்தளத்தை விரிவுப்படுத்தும் வேலையிலும் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு வருகிறது. இன்னொருபுறம் சமவெளி பகுதிகளில் வசித்துவரும் இஸ்லாமிய மக்கள் 13 சதவிகிதமே உள்ளனர். இதனால், காவி குண்டர்களால் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக கலவரங்கள், வெறுப்பு பிரச்சாரங்கள், வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்துவதற்கு ஏற்றவாறு இம்மாநிலம் உள்ளது. இவ்வாறு புவியியல் ரீதியாகவும் மக்கள் தொகை அடிப்படையிலும் இம்மாநிலம் பொது சிவில் சட்டத்தை சோதனை செய்வதற்கேற்ப உள்ளது.

உத்தராகண்ட்டை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் அமைச்சர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகான சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று கூறினர். இஸ்லாமிய எதிர்ப்பு, அந்நிய எதிர்ப்பு மனநிலை ஊறிப்போன அசாம் மாநிலத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முதல் படியாக, பிப்ரவரி 24-ஆம் தேதி “இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935”-ஐ ரத்துசெய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து பிற பசுவளைய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்பது தெளிவாகிறது.

இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் காவி பாசிஸ்டுகள்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பழங்குடியின மக்கள் போன்ற பல்வேறு பிரிவு மக்களின் வெவ்வேறு பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு ஒரே நாடு ஒரே கல்வி வரிசையில் ஒரே பண்பாட்டையும் கலச்சாரத்தையும் நிறுவுவதையே காவிக் கும்பல் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், காவிக் கும்பல் கொக்கரிக்கும் ஒரே நாடு – ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே வரி என்பதெல்லாம் அனைவருக்கும் பொதுவானதோ குறைந்தபட்சம் இந்துக்களுக்கானதோ அல்ல. மாறாக அது அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் நலனுக்கானது என்பதுதான் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டத்தின் அனுபவம். பொது சிவில் சட்டமும் அத்தகையதுதான்.

பார்ப்பன சனாதன மரபுகள், பழக்கவழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள்மீதும் திணிப்பதற்கான ஏற்பாடே பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள உத்தராகண்ட் பொது சிவில் சட்டம். காவி-கார்ப்பரேட் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என பல்வேறு சட்டத்திட்டங்களை வைத்திருக்கும் பாசிசக்கும்பல் அடுத்தக்கட்டமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளதன் மூலம், இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை வேகமாக அமைக்க தொடங்கியுள்ளது.

தற்போது வேண்டுமானால் பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பழங்குடியின மக்கள் உள்ளிட்டோருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். ஆனால், பாசிசக் கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தில் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படும் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் ஆகியோரை ஒடுக்கும் வகையிலேயே இச்சட்டம் கொண்டுசெல்லப்படும்.

எனவே, தற்போது நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டமென்பது இஸ்லாமிய மக்களின் பிரச்சினையோ உத்தராகண்ட் மாநில மக்களின் பிரச்சினையோ அல்ல. இந்திய நாட்டின் பன்முகத்தன்மை, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் சாரந்த உரிமைகள் குறித்தான பிரச்சினை. எனவே, இப்பாசிச சட்டத்திருத்தத்தின் அபாயத்தை உணர்த்தி இதற்கு எதிரான போராட்டத்தை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் உடனடியாக கட்டியமைக்க வேண்டியுள்ளது.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!

மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியதில் முக்கியபங்காற்றிய, மோடிக்கும்பலுக்கு சிப்பசொப்பனமாக திகழும் விவசாயிகள் தற்போது மீண்டும் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பாசிஸ்டுகளுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தங்களின் போராட்டத்தின் மூலம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ள விவசாயிகள் “பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை களப்போராட்டங்கள்தான்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விவாயிகள் போராட்டம் தீவிரமடைந்துவரும் சூழலில், மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும், ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் மக்களின் நலன்களை உள்ளடக்கிய இந்திய விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் இப்போராட்டம் சர்வதேச அளவில் முன்னுதாரணமிக்க போரட்டமாகும்.

டெல்லி சலோ 2.0!

கடந்த 2020-ஆம் ஆண்டு விவசாயிகள் முன்னெடுத்த டெல்லி சலோ போராட்டத்தினால் அடிபணிந்த பாசிசக் கும்பல் மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்ததோடு விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மோடி அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றாததை எதிர்த்து தற்போது மீண்டும் விவசாயிகள் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) (SKM(NP)), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM) ஆகிய விவசாய சங்கங்களின் தலைமையில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கெடுத்துள்ளன. 2020-2021 விவசாயிகள் போராட்டத்திற்கு, தலைமை தாங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) சங்கத்திற்கு கீழுள்ள பாரதிய கிசான் யூனியன் (BKU) போன்ற பல விவசாய சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய டெல்லி சலோ 2.0 போராட்டமானது, நாடுமுழுவதும் பாசிச மோடி அரசுக்கு எதிராகவும் அதன் பாசிசத் சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் போராடும் பிற வர்க்கங்களுக்கு முன்னுதாரணமிக்க வகையில் வீரதிரத்துடன் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில், 2020-2021 போராட்டத்தின்போது மோடி அரசு நிறைவேற்றுவதாக ஏற்றிருந்த வாக்குறுதிகளான குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்துவதற்கான சட்டம், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி, மின்சாரச் சட்டத்திருத்தம் 2020 ரத்து உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை விவசாயிகள் மீண்டும் முன்வைத்துள்ளனர். அதனோடு, 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்; பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலம், காடுகள், நீர் ஆதாரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வாதராத்தை பாதுக்காக்க கூடிய, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிரான முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், களப்போராட்டம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழி என்பதை நன்குணர்ந்துள்ள விவசாயிகள் பாசிசக்கும்பலுக்கு எதிராக நாடுமுழுவதுமிருந்து அணித்திரண்டு கொண்டிருக்கிறார்கள். “13 நாட்கள், 13 மாதங்கள், 13 ஆண்டுகள் ஆகினாலும் ஒன்றிய அரசு சட்டம் இயற்றும்வரை, மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் வீடு திரும்பமாட்டோம்” என்ற விவசாயிகளின் போராட்ட உறுதியைக்கண்டு பாசிசக் கும்பல் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகள் மீதான மோடி அரசின் உள்நாட்டு போர்

டெல்லி முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தவுடனேயே, கதிகலங்கிய ஒன்றிய மோடி அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது ஒடுக்கி தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக தயாரிப்புப் பணிகளில் இறங்கின. ஹரியானா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த் போன்ற கிராமங்களில் பிப்ரவரி 11 அன்று காலை 6 மணி முதல் இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் துண்டிக்கப்பட்டன.

ஒன்றிய பா.ஜ.க. அரசு டெல்லியில் ஒருமாதக் காலத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. நகரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடி நிற்க தடை விதிக்கப்பட்டது. சில கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. விவசாயிகள் டெல்லிக்குள் மெட்ரோ ரயில் வழியாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக சில மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், டெல்லிக்குள் நுழையும் போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக, டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், பேருந்துகள் போன்ற வாகனங்கள் டெல்லிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹரியானாவில், விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுப்பதற்காக அம்மாநில பா.ஜ.க. அரசு விவசாயிகள் மீது மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை செலுத்தியது. விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று போலீசு கிராமங்களில் எச்சரிக்கை விடுத்தது; டிராக்டருடன் விவசாயிகள் வெளியில் வந்தால் அவர்கள் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது; விவசாயிகளுக்கு டீசல் வழங்கக்கூடாது என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை மிரட்டியது. விவசாய சங்கத் தலைவர்களிடம் அவர்களது வங்கிக்கணக்குகள் மற்றும் நிலங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது; விவரங்களை அளிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டியது. போலீசின் அடக்குமுறையால் பல விவசாய சங்கத் தலைவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே பஞ்சாப்பிற்கு சென்றுவிட்டனர்.


படிக்க: தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!


விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர், ஷம்பு உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சிமெண்ட் மற்றும் மணல் மூட்டைகள், முள்வேலிகள், பேரிகார்டுகள், லாரிகள் போன்றவற்றின் மூலம் தடுப்புகளை அமைப்பது; டிராக்டர்களின் டயரை கிழிக்க சாலைகளில் ஆணிகளைப் புதைப்பது; டிராக்டர்கள் செல்ல முடியாத வகையில் சாலையில் பள்ளங்களை தோண்டுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான முறைகளை போலீசும் துணை ராணுவப் படைகளும் கையாண்டன. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் ட்ரோன்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகள், தடுப்புகளை நகர்த்தி வைப்பதற்கான கிரேன்கள் என விவசாயிகளை ஒடுக்க பாசிசக் கும்பலின் அடியாட்படையான போலிசும் துணை ராணுவமும் முழுத்தயாரிப்பில் இருந்தன. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டங்களை கலைப்பதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டன.

விவசாயிகளின் மீது கொடிய தாக்குதல்களை தொடுப்பதற்காக மோடி அரசு செய்துவந்த முன்தயாரிப்புகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் வெளிவந்து மோடி அரசின் கோரமுகம் அம்பலப்பட்டதோடு பெரும் பேசுபொருளானது. சமூக ஊடகங்களில், “மோடி அரசு தயாராவது விவசாயிகளின் போராட்டத்திற்கா? இல்லை உள்நாட்டு போருக்கா” என பலரும் கேள்வியெழுப்பி பாசிச மோடி அரசின் முகத்திரையை கிழித்தனர்.

அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னேறும் விவசாயிகள்

பாசிச மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகளை கண்டு அஞ்சாத விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் டெல்லி எல்லையை நோக்கி விரையத் தொடங்கினர். விவசாயிகளின் மீது போலீசு கொடிய அடக்குமுறைகளை செலுத்தி வந்தாலும் எல்லைகளில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

டெல்லி முற்றுகைப் போராட்டம் துவங்கிய 13-ஆம் தேதி அன்று, ஷம்பு எல்லைப் பகுதியில் மட்டும் 10,000 விவசாயிகள் திரண்டிருந்ததாக போராட்டத்தில் பங்கேற்ற விவசாய அமைப்பு ஒன்று தெரிவித்தது. ஒரு வாரத்திற்கு பிறகு அதே ஷம்பு எல்லையில் சுமார் 14,000 விவசாயிகள் திரண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. டெல்லி எல்லையை நோக்கி செல்வதற்காக ஒட்டுமொத்தமாக இலட்சக்கணக்கில் விவசாயிகள் போராட்டகளங்களில் குவிந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதேபோல், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். பலர் தங்கள் மாநிலத்தில் இருந்து டெல்லி எல்லைகளை நோக்கி செல்லும்போது போலீசு படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுக்கு ஆதாரவாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்கள் செல்ல செல்ல நாட்டின் ஒட்டுமொத்த விவசாய வர்க்கத்தின் போராட்டமாக டெல்லி முற்றுகை போராட்டம் உருவெடுத்தது.

விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் உதவியுடன் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். கான்கீரிட் தடுப்புகளை தங்கள் டிராக்டர்களில் கயிறுகட்டி இழுத்து சென்று அப்புறப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. சம்பு எல்லையில் மேம்பாலத்தில் இருந்த தடுப்புகளை அகற்றி கீழே தூக்கி வீசி எறிந்தனர். தடுப்புகளை மீறிச் செல்ல முடியாத நிலையில் நெடுஞ்சாலைகளைத் தவிர பிற வழிகளிலும் டெல்லிக்குள் செல்ல முயன்றனர். தண்ணீர் ஓடும் கால்வாய்களை டிராக்டர்கள் கடந்து செல்லும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகளை ஈவிரக்கமின்றி ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போலீசு தாக்கியது. பல இடங்களில் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து முகாமிட்டிருந்த பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது பாசிச பா.ஜ.க. அரசு. இதற்காக டெல்லி போலீசு மட்டும் 30,000 கண்ணீர் புகைக்குண்டுகளை கொள்முதல் செய்திருந்தது. இது பாலஸ்தீன மக்களை ஒடுக்க இஸ்ரேல் இனவெறி அரசால் கையாளப்படும் கொடூரமான வழிமுறையாகும்.

விவசாயிகள் போரட்டத்தை எப்படியாவது அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக, ரப்பர் குண்டுகள், விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பெல்லட் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிக அழுத்தத்தில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் தண்ணீர் பீரங்கிகள், செவித்திறனை பறிக்கக்கூடிய சோனிக் (ஒலி) பீரங்கிகள் உள்ளிட்ட மிருகத்தனமான ஆயுதங்களை கையாண்டது.

இவ்வாறு மோடி அரசு எதிரி நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதைப் போல விவசாயிகளின் மீது போர் தொடுத்து அவர்கள் மீது ஈவிரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நெஞ்சுரமிக்க விவசாயிகள் மோடி அரசின் கொடிய தாக்குதல்களை மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றனர். 21 வயது விவசாயி உட்பட ஆறு விவசாயிகள் பாசிஸ்டுகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். பலருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. இத்தகைய, சூழலிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால், பாசிஸ்டுகளின் கொடிய அடக்குமுறைகளிலிருந்து அனுபவப் படிப்பினைகளை எடுத்துகொண்ட விவசாயிகள், கண்ணீர்ப்புகை மூக்கினுள் புகாமல் தடுக்கக்கூடிய முகக்கவசங்கள், கண்ணீர் புகையிலிருந்து பாதுகாக்கும் மூக்குக் கண்ணாடிகள் போன்ற உபகரணங்களை பயன்படுத்தனர். ட்ரோன்களை செயலிழக்க செய்ய பட்டம் விடுவது, காஸ்கோ பந்துகளை பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றனர்.

குலை நடுக்கத்தில் மோடி-அமித்ஷா கும்பல்

அத்துணை அடக்குமுறைகளையும் மீறி விவசாயிகள் போராட்டக்களத்தை நோக்கி முன்னெறி கொண்டிருப்பது பாசிசக் கும்பலின் பீதியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இப்போராட்டத்தில் பங்கெடுக்காத சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, 21 வயது இளைஞர் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து போராட்டத்தில் குதித்தது. போலிசின் அடக்குமுறைகளை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தலைவர்களின் வீட்டு வாசலின் முன் போராட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்று வேளான் சட்டம் என்ற பாசிச அடக்குமுறைக்கு எதிராக போராடிய விவசாயிகள் இம்முறை குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுவது விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாகும். ஜனநாயக வாடையை கூட அறிந்திருந்த பாசிச கும்பலால் விவசாயிகளின் இத்தகைய ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சகித்துகொள்ள முடியவில்லை. இதனை ஆர்.எஸ்.எஸ்-இன் பத்திரிகையான “ஆர்கனைசர்”-இன் கதறல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள் போராட்டம் குறித்து தலையங்கம் எழுதிய ஆர்கனைசர் பத்திரிகை, “2020-ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு விவசாயத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்கள் காரணமாக இருந்தது. ஆனால், தற்போது அத்தகைய காரணம் எதுவும் இல்லை” என்றும், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிடவை “நியாயமற்ற கோரிக்கைகள்” என்றும் கதறியுள்ளது.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது போன்ற எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல், உத்தரகாண்ட் கலவரம் என பா.ஜ.க. கும்பல் அடுத்தடுத்த பாசிச நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தாலும், களத்தில் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிரான இளைஞர்களின் நாடளுமன்ற புகைக்குப்பி வீச்சு, பாசிசக் கும்பலை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம் என அடுத்தடுத்த மக்கள் போராட்டங்கள் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவந்தன.

தற்போது அதன் உச்சமாக ஜனநாயக உரிமைகளைகோரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, விவசாயிகளின் போராட்டம் பிற வர்க்கத்தினரிடம் பரவி பாசிச மோடி அரசிற்கு எதிரான வலுவான போரட்டமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், விவசாய போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் பாசிசக் கும்பல் தீவிரமாக உள்ளது. ஒருபுறம் போராடும் விவசாயிகள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை தொடுத்துவரும் அதேவேளையில் மறுபுறம் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் நயவஞ்சகமான முறையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தி வருகிறது மோடி அரசு.

போராட்டம் துவங்குவதற்கு முன்னாலேயே விவசாய சங்கத் தலைவர்களுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான குழுக்களை அமைப்பதாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க. அரசு. வாக்குறுதியை நிராகரித்த விவசாயிகள், “குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்கெனவே பல குழுக்கள் விவாதிட்டுவிட்டன, குழுக்களை உருவாக்குவதன் மூலம் விஷயத்தை நீட்டிக்க விரும்புகின்றனர்” என்று மோடி அரசை அம்பலப்படுத்தினர்.

நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகிய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும் என அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், “அடிப்படையில், இது ஒரு ஒப்பந்த விவசாய திட்டம். ஒப்பந்த விவசாயம் ஏற்கெனவே தோல்வியடைந்துள்ளது மற்றும் ஒப்பந்த விவசாயத்தில் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது” என்றும், “23 விளைபொருட்களில் ஐந்து விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது, மற்ற விவசாயிகளை விட்டுவிடுவது நியாயமானதல்ல” என்றும் கூறி விவசாயிகள் அவ்வாக்குறுதியை நிராகரித்தனர்.

மேலும், விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகளை தங்களுடைய பினாமி ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் இருந்து மூடிமறைப்பது; விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் எக்ஸ் பக்கத்தை முடக்குவது; போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை “காலிஸ்தான் தீவிரவாதிகள்” என்றும் “போராட்டத்தை காங்கிரஸ் தூண்டிவிட்டுள்ளது” என்றும் இழிவுப்படுத்தி பிரச்சாரம் செய்வது போன்ற பா.ஜ.க. கும்பலின் கீழ்த்தரமான நடவடிக்கைகளும் மோடி அரசின் குலைநடுக்கத்தின் வெளிப்பாடுகளே.

ஆனால் விவசாயிகள் மீது மோடி அரசு தொடுத்துவரும் கொடூரத் தாக்குதல்களும் விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்ட வழிமுறைகளும் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களிலும், ஆங்கில செய்தி ஊடகங்களிலும் நாடு முழுவதும் பரவி பாசிச கும்பலின் பொய் பிரச்சாரங்கள் புஸ்வானமாகி வருவதோடு விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

விவாசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்த போதிலும், விவசாயிகளை ஒடுக்க மோடி அரசு ஆயத்தாமாகி வருவது தொடர்ந்து ஆங்கில ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த போதிலும் எதிர்க்கட்சிகள் கருத்தேதும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்துவந்தன. 13-ஆம் தேதி விவாசாயிகள் மீது மோடி அரசு மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய பிறகுதான் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை விமர்சித்தன. நியாயமான கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தவரும் விவசாயிகளை, பா.ஜ.க. அரசு பயங்கரவாதிகள் போலத் தாக்க நினைக்கிறது என்றும் சீன எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தச் சொன்னால் டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களின் முதல் வாக்குறுதி இது. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிச்சயம் செயல்படுத்துவோம்” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதே வாக்குறுதியை ராகுல்காந்தியும் அளித்திருந்தார். மேலும் இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் அரசும் விவசாயிகளுக்கு பாலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும், இப்போராட்டத்தில் கணிசமான அளவு விவசாயிகள் கலந்துகொண்டுள்ள பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, அம்மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மன்-தான் விவசாயிகளுக்கும் ஒன்றிய மோடி அரசுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறார். இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ள கிசான் மஸ்தூர் மோர்ச்சாவிற்கும் ஒன்றிய மோடி அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். போராட்டக்களத்தில் பாசிச பா.ஜ.க-வால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 வயது இளைஞரின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடும் அவரது தங்கைக்கு அரசு வேலையும் வழங்குவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இன்னொருபுறம் இந்நடவடிக்கைகள் ஆம் ஆத்மி அரசின் மீதான அம்மாநில விவசாயிகளின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கான முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு எதிராக பிப்ரவரி 24 அன்று பாரதி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) (BKU(EU)) என்ற விவசாய சங்கத்தால் “சலோ சண்டிகர்” பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டெல்லி சலோ போராட்டத்தால் இப்பேரணி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 22 பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதாகவும் கொள்முதலை உத்தரவாதம் செய்வதாகவும் பகவந்த் மன் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது ஆம் ஆத்மி அரசு. வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிக்கையை நிறைவேற்றுவதாக தற்போது வாக்குறுதி அளித்துவரும் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், இக்கோரிக்கையானது விவசாயிகளுக்கு உயிராதாரமானது என்பதும் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே விவசாயிகள் இக்கோரிக்கைக்காக போராடி வருகின்றனர் என்பதும் நன்கு தெரியும். சொல்லபோனால், சுவாமிநாதன் கமிட்டியின் குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையை ஏற்பதற்கு அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடாப்பிடியாக மறுத்தது என்பதே உண்மை.

இதனையடுத்து விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கூறி மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக விவசாயிகளை ஏமாற்றி வருவதோடு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் மூன்று வேளான் சட்டங்கள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக விவாசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதும், வாழ்வாதாரத்தை இழந்துவரும் விவாசாயிகள் மத்தியில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கைக்கான போராட்டங்கள் அதிகரித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், தாங்கள் ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலைய நிறைவேற்றாமலும் அதற்கான வாக்குறுதிகளை அளிக்காமலும்தான் எதிர்க்கட்சிகள் இருந்து வந்துள்ளன. அவ்வாறு வாக்குறுதி அளித்த ஆம் ஆத்மி கட்சியும் அதனை விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்துகொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தியதே ஒழிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும், மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வைக்கும் வகையிலான போராட்டங்களையும் கட்டியமைத்ததில்லை.

தற்போது விவசாயிகள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பை பயன்படுத்தி மக்கள் வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்காக குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், மக்கள் இக்கட்சிகளை நம்ப வேண்டுமெனில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

விவசாயிகளின் போராட்டம் உரிமைக்கான போர்க்குரல்!

இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகிய இடுபொருள்களின் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த மானியங்களின் அளவை குறைப்பது, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள்கள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது போன்றவற்றால் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது.

குறிப்பாக, மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மறுகாலனியாக்க கொள்கைகள் மூர்க்கத்தனமாக அமல்படுத்தப்படுகின்றன. விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் வேகமாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. உலக வர்த்தக கழகத்தின் உத்தரவின்படி, கடந்த 10 ஆண்டுகால பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கான நிதிஒதுக்கீடும், உர மானியத்திற்கான நிதிஒதுக்கீடும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வேளாண் சட்டங்களின் கூறுகளை மறைமுகமாக அமல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு-பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் விவசாயத்துறைக்கான கட்டமைப்புகள் மாற்றப்பட்டு வருகின்றன.

அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு 2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை ஒப்பிடும் போது 81 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய கிசான் சபா (AIKS) தெரிவித்துள்ளது. மேலும், 2024-2025 நிதியாண்டிற்கான விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு, 2022-2023 நிதியாண்டிற்கான உண்மையான செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் 22.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், 2023-2024 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் 6 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மோடி அரசின் பத்தாண்டுகாலப் பாசிசப் பேயாட்சியில், கோடிக்கனக்கான விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பிழைக்க வழியின்றி மரணப் படுகுழியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுபடி, 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை 5.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 1,00,474 விவசாயிகள் இறந்துள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.


படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!


கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவரும் இந்த பின்னணியில் இருந்துதான், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நாம் அணுக வேண்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை என்பது, விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதன் உற்பத்திச் செலவிற்கு அதிகமாக (குறைந்தப்பட்சம் 50 சதவிகிதத்திற்கு)விலை நிர்ணயத்து அரசால் கொள்முதல் செய்யும் முறை. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை அரசு பொதுவிநியோக முறை மூலம் மக்களுக்கு வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் அவர்களின் வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யப்படும். ஆனால், இந்தியாவில் நெல், கோதுமை தவிர மற்ற வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படாத நிலையே இன்றுவரை உள்ளது. அதிலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை ஆகியவை முழுமையாக அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

பொருளை நேரடியாக உற்பத்தி செய்யாத சிறுகுறு வணிகர்களால் கூட குறிப்பிட்ட அளவிற்கு சரக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியும்போது, விவசாயிகளால் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கான விலையை தீர்மானிக்க முடியாதது என்பது அப்பட்டமான பகல் கொள்ளை. 1990-களில் மறுகாலனியாக்க கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் விவசாய தரகர்கள், இடை தரகர்கள், கமிஷன் மண்டி முதலாளிகள் சிண்டிக்கேட் அமைத்து விவசாய பொருட்களின் விலையை தீர்மானித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இன்று அந்த இடத்தை கார்ப்பரேட்டுகள் பிடித்துள்ளன.

எனவே, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்கு ஒப்பான உயிராதாரமான கோரிக்கையாகும். விவசாயத்துறையில், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டும் வகையிலான கோரிக்கையாகும்.

அதேசமயம் விவசாயிகளின் போராட்டமும் கோரிக்கையும் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கானது என்று மட்டும் பார்க்க கூடாது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவு பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதற்கான மகத்தான போராட்டம். ஏனெனில், விவசாயித்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதால் விவசாயிகள் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கமும் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்த மோடி அரசு பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. பொது விநியோக முறைக்கான பொருட்களை கொள்முதல் செய்யும் இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்களை வெட்டுவது, கொள்முதலை குறைப்பது, இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உணவு தானியங்களை மாநில அரசுகள் ஏலம் எடுப்பதற்குத் தடை விதிப்பது, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு மானியங்களை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டம் என திட்டமிட்டு பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறது. பொது விநியோக முறையை முற்றிலும் ஒழித்துக்கட்டினால், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை முழுமையாக கார்ப்பரேட் கைப்பற்ற முடியும். எனவே, விவசாயிகளின் குறைந்தப்பட்ச ஆதார விலை கோரிக்கை உத்தரவாதப்படுத்தப்பட்டால், அவர்களால் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட முடியும், பொது விநியோக முறையையும் அரசு தொடரவேண்டியிருக்கும். அதேப்போல், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உழைக்கும் மக்கள் எதிர்கொண்டு வரும் தாக்குதல்களில் முக்கியமானது, உணவுப்பொருட்களின் விலையேற்றம். இதுவும் விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப்பட்டுவருவதன் விளைவே.

எனவே விவசாயிகளின் கோரிக்கை என்பது அவர்களின் உரிமைக்கானாது மட்டும் கிடையாது, நம்முடைய உணவுக்கானது, நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு இன்றியமையாதது. விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து, வெற்றிடைய செய்ய வைப்பது இந்திய உழைக்கம் வர்க்கத்தின் கடமையாக உள்ளது.மேலும்,கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலின் விளைவாக உருவாகியிருக்கும் பருவநிலைமாற்றமும், சுற்றுச்சூழல் சீர்கேடும் இன்று உலகாளாவிய பிரச்சனையாக உருவாகியிருக்கும் சூழலில் விவாசயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து, நிலம், நீர் சுற்றுச்சுழை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருப்பது சர்வதேசளவில் முக்கியத்துவம் வாயந்தது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மறுகாலனியாதிக்க பிடியிலிருந்து விடுவிக்க கூடிய போராட்டத்திற்கான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்காக போராடுவோம்!

தேசிய நதிநீர் கொள்கை, அணைப்பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டத்திட்டங்களால் ஏரி குளம் போன்ற நீர்நிலைகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது; கிராணைட் கொள்ளை, சிப்காட் போன்ற நாசகர திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு நாசமாக்கப்படுவதால் வேளான்பரப்பு தொடர்ந்து குறைந்துவருவது; ஸ்டெர்லைட் போன்ற நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் கார்ப்பரேட் ஆலைகள், சுற்றுசூழலுக்கு கேடான பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கம், மணல் கொள்ளை ஆகிய பல்வேறு காரணங்களால் விவசாய கட்டமைப்பு பிரம்மாண்டமான அளவிற்கு அழிக்கப்பட்டுள்ளது.

இணைய வணிகம், முன் பேர வர்த்தகம், ஒப்பந்த விவசாயமுறை போன்றவற்றால் விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது; விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் காரணமாக விவசாயத்திற்கான இயற்கை உள்ளீடு பொருட்கள் அனைத்தும் ரசாயனமயமாக்கப்பட்டுள்ளது; இதனால், பூச்சிக்கொல்லி, மரபனு மாற்றப்பட்ட விதைகள் போன்ற செயற்கை உள்ளீடு பொருட்களை சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்; ஒப்பந்த விவசாயமுறை, அரசின் உத்தரவாதமற்ற கொள்முதல் போன்றவை இதை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இதனால், விவசாய கட்டமைப்பு பெருமளவு சிதைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஆதிக்கம் காரணமாக இந்த கட்டமைப்பில் விவசாயம் உயிர்பித்து வாழ்வதற்கே குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இத்தகைய குறைந்தபட்ச உத்தரவாதத்தைக்கூட மோடிக்கும்பல் கொடுக்க மறுப்பதுதான் இப்பிரச்சனையின் தீவிரமாகும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை உலக வர்த்தக கழகத்திலிருந்தும், சுதந்திர வர்த்தகத்திலிருந்தும் இந்தியா வெளியேற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளானது இப்போலி ஜனநாயக கட்டமைப்பில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை மட்டும் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பாதுகாப்பை வழங்கிவிடாது என்ற உண்மையுடன் நெருக்கமானது. இந்த போலி ஜனநாயக கட்டமைப்பிற்குள் குறைந்தபட்ச ஆதார விலையை கோரிக்கையைக்கூட முழுமையாக உத்தரவாதப்படுத்த முடியாது என்பதே எதார்த்தம். மறுகாலனியாக்க கொள்கைகளை திணிக்கும் உலக வர்த்தக கழகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு விவசாயித்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதை தடுப்பதோ, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோ நடக்காத காரியம். இதனை உணர்ந்தால்தான் “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கொடு! உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேறு! சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்!” என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் மாற்றுக்கட்டமைப்பிற்கான தேவையை தெளிவாக பறைசாற்றுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டையும் மக்களையும் மறுகாலனியாதிக்க புதைசேற்றில் தள்ளிவிட்டு, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை திணித்துவரும் பாசிசகும்பலை தூக்கியெறிவது முதன்மையானதென்றால், மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கக்கூடிய, விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பாதுகாப்பை அளிக்கக்கூடிய மாற்று ஜனநாயக கட்டமைப்பு நிறுவுப்படுவதும் அவசியமானது.

விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கக் கூடிய, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளை தடுக்க கூடிய, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக பொருளாதார கொள்கைகளை வகுத்து செயல்படக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதென்பதே இதற்கு தீர்வாகும். அங்குதான் ஒட்டுமொத்த உழைக்கும்மக்களுக்கான உரிமை நிலைநாட்டப்படுவதோடு, விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பும், மறுவாழ்வு அளித்து முன்னேற்றத்தையும் கொடுக்க முடியும்.

எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தை விவசாயிகளும் விவசாயிகளை ஆதரிக்கக்கூடிய புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் முன்னெடுப்போம்!

டெல்லி சலோ 2.0 போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வழிகோலியுள்ள பாசிசத்தை வீழ்த்தும் பாதையில் அனைவரும் ஒன்றிணைவோம்!


அமீர்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!

WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!
சூழ்ந்து நிற்கும் பேராபத்து!

ம் நாட்டில் இன்று உலக வர்த்தகக் கழகம் (WTO) ஆனது குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP), பொது விநியோக அமைப்பு (PDS) ஆகிய இரண்டுக்கும் தடைக்கல்லாக மாறியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு WTO-இல் இந்தியா நுழைந்ததன் விளைவை நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 2019-ஆம் ஆண்டில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தைச் சுரண்டி, பெரும் லாபத்தைப் பெறுவதற்கு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைத் தளமாக WTO இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உலக வர்த்தக கழகத்தில் இந்தியா இணைந்தபோது பெரிய வாக்குறுதிகள் நமக்கு அளிக்கப்பட்டன. தடையற்ற வர்த்தகத்தின் மூலம் நமது உற்பத்திப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கூடுதலான வருமானத்தை விவசாயிகள் பெற முடியும் என்றும் பொய்களைப் பரப்பினர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக, ஏழைநாடுகளின் விவசாயிகளைச் சுரண்டி, மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இதன் மூலம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. வளரும் நாடுகள் மேலும் தங்களுக்கான சந்தைகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. நீண்ட காலமாகவே தாராள வர்த்தகத்தின் அடிப்படையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான கெய்ர்ன்ஸில் (Cairns) உள்ள மேற்கத்திய நாடுகள் நெறிமுறையற்ற வர்த்தகத் தடைகளை நாடின. வளரும் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் விலைகளைச் செயற்கையாகக் குறைத்தன.

மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் பெரிய அளவிலான மானியங்களை அவர்களது நாடுகளில் பெறுகின்றன.  இந்த சலுகை நிலையில் இருந்து விவசாயப் பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை திவாலாக்குகிறது. உதாரணத்திற்கு நியூசிலாந்தில் இருந்து ஆப்பிள்களும், அமெரிக்காவில் இருந்து ஆரஞ்சுகளும் வருவதால், உள்நாட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. மேலும் நமது விவசாய விளைபொருட்கள் கார்ப்பரேட் சந்தை தரகு கும்பல்களால்தான் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு மேலும் துன்பத்தைக் கூட்டுகிறது.

WTO-வில் வர்த்தகத்தில் அளவு கட்டுப்பாடுகள் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளில் இந்தியா தோல்வியையே தழுவியது. இப்போது வளர்ந்த பணக்கார நாடுகள் நமது நாட்டின் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நிர்ப்பந்திக்கின்றன. ஏற்கனவே அமேசான், வால்மார்ட் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் நமது உள்ளூர் உணவு சந்தைகளில் ஆன்லைன் மூலம் நுழைந்து விவசாயிகள், சிறு, நடுத்தர வணிகர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், போராடுகின்ற விவசாயிகள், குறைந்தபட்ச ஆதாரவிலையை (MSP) சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான சட்டத்தைக் கோருகின்றனர்.


படிக்க: கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா


உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வெறும் வர்த்தகப் பொருளாக மட்டுமே WTO கருதுகிறது. வளரும் நாடுகளில் பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அந்நாடுகள் உணவளிக்கும் பொறுப்பை புறக்கணிக்கக் கோருகிறது. WTO விதிமுறைகளின்படி சூடான் அல்லது ஜார்க்கண்டில் உள்ள சிறு விவசாயிக்கு வழங்கப்படும் எந்த மானியமும் வர்த்தகக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது.

பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் வளரும் நாடுகளில் உற்பத்திச் செலவில் 10 சதவீதத்திற்கு மேல் மானியம் வழங்கக் கூடாது என WTO நிர்ப்பந்திக்கிறது. நம் நாட்டின் மானியங்களோ (விதைகள், மின்சாரம், டீசல், MSP ஆகியவற்றின் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது) 1986-ஆம் ஆண்டு விதிகளின்படிதான் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றன. உண்மையில் உற்பத்தி செலவு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலைமையானது மானியங்கள் அதிகம் பெறும் மேற்கத்திய நாடுகளின் விளைபொருட்களோடு எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாத நிலைக்கு நமது நாட்டின் விவசாயிகளை மாற்றியுள்ளது. உண்மையில் கொடுக்கப்படும் மானியங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெருமளவில் பயனடைவது பெரும் விவசாய வணிக நிறுவனங்களே ஆகும். இது பல லட்சக்கணக்கான  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

ஆனால் வளரும் நாடுகள் உலகச் சந்தைகளில் மிகவும் மலிவான உணவுப் பொருட்களைத் திணிப்பதாக மேற்கத்திய நாடுகள் வாடிக்கையாக குற்றம் சாட்டுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும். சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவிவசாயி, உலகச் சந்தையில் பருத்தியைக் கொட்டி அதிக லாபம் ஈட்டி, அமெரிக்க பருத்தி விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் என்பது எவ்வளவு மோசமான கற்பனை. உலக வர்த்தகக் கழகத்தின் மானியம் தொடர்பான விதிகள் ஐரோப்பிய நாடுகளையோ அல்லது அமெரிக்காவையோ கட்டுப்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வர்த்தகக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. விதைகள், உரங்கள், உணவு சந்தைப்படுத்துதல் ஆகிய எல்லா அம்சங்களிலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. கார்கில், ADM, Zenoh போன்ற ஒரு சில விவசாய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே உலக தானிய வர்த்தகத்தில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இவை செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன. 2009-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டதன் பின்னணியில் இந்நிறுவனங்களின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!


இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய உணவு தானிய சந்தையை மேற்கத்திய கார்டெல்கள் அம்பானி மற்றும் அதானி ஆகிய உள்நாட்டு கார்ப்பரேட் தரகு கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிக்க விரும்புகின்றன. அதற்காக குறைந்தபட்ச ஆதாரவிலை, பொது விநியோக அமைப்பு, மானியங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி சிதைக்கத் துடிக்கின்றன. கோடிக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தையும் மதிக்காமல் பாசிச மோடி கும்பல் செயல்படுவதற்கு இதுவே காரணமாகும்.

அதாவது உலக விவசாயச் சந்தைகளுடன் இந்திய விவசாயத்தை இணைப்பதன் தொடர் நிகழ்வாக விவசாயத்துறையை முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கும் பாதையில் விரைந்து பயணிக்கிறது மோடி அரசு.  கோடிக்கணக்கான சிறு மற்றும் குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கின்றது பாசிச மோடி கும்பல். மிக சமீபத்தில் கூட ஐஸ்லாந்து, லீச்சென்ஸ்டியன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் விவசாயத் துறை தொடர்பான தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது மோடி அரசு.

விவசாயம், சந்தை, உணவு வர்த்தகம் ஆகியவற்றை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுதல் என்பது நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி, தற்கொலைகள், வறுமை ஆகியவற்றை கற்பனைக்கெட்டாத வகையில் கொண்டு செல்வதோடு தொடர்புடையதாகும்.

உலக வர்த்தகக் கழகமானது ஒரு நடுநிலை நிறுவனம் அல்ல. உலகளாவிய அளவில் ஏழைநாடுகளின் அரசுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்,  அந்நாட்டு விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு பன்னாட்டு கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கு தரகு வேலை பார்க்கும் கைக்கூலி நிறுவனமாகும்.

பாசிச மோடி கும்பலோ உலகவர்த்தகக் கழகத்தின் ஆணைகளை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் அடிமை கும்பலாக உள்ளது.

இவற்றை போராடுகின்ற விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால்தான் ”உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறு!” என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்குமான  கோரிக்கையாகும்.


அய்யனார்

செய்தி ஆதாரம்: Countercurrents

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் சமயத்தில் தி.மு.க அரசிற்கு நெருக்கடி கொடுப்பது சரியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வித்துறை சார்ந்த பிற பிரச்சினைகள் தொடர்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் தி.மு.க. அரசிற்கு நெருக்கடி கொடுப்பது சரியா? இப்போது தி.மு.க-வை அம்பலப்படுத்துவதைவிட பா.ஜ.க-வை அம்பலப்படுத்துவதானே பொருத்தமாக இருக்கும்?

க்கேள்விக்கு புதிய ஜனநாயகம் ஏற்கெனவே நேர் பொருளில் பதிலளித்துள்ளது. இருப்பினும், தேர்தல் சமயத்தில் பொருத்தமான ஒரு பதிலைச் சொல்லலாம் என்று கருதுகிறோம்.

பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, தேர்தல் சமயத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி நெருக்கடி கொடுப்பது தவறு என்று தி.மு.க. ஆதரவாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, கல்வியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் என பல தரப்பினரும் தங்களது நீண்டகால கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை,செவி சாய்க்கவில்லை என்று   போராடிகொண்டுதான் இருக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால்தான் தி.மு.க-வை நிர்பந்திக்க முடியும்; தேர்தல் முடிந்தால் தங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று மக்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து புரிந்து வைத்துள்ளனர். இந்தாண்டு, சரியாக பொங்கல் சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதன் வெளிப்பாடுதான்.

ஆகையால், உழைக்கும் மக்கள் தங்களது உரிமைகளுக்காக தேர்தல் நேரத்தில் போராடுவதும், தி.மு.க. அரசை நிர்பந்திப்பதும்தான் சரியானது.

தேர்தல் நேரத்தில் தி.மு.க-விற்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று புரட்சிகர அமைப்புகளுக்கும் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கும் வகுப்பெடுப்பவர்கள்,  அந்த வகுப்பை முதலில் காங்கிரசிற்கும் தி.மு.க-விற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும்தான் எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில், தொகுதிப் பங்கீட்டுக்காக ஏன் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? ஏன் இந்தியா கூட்டணியை உடைக்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்க வேண்டும். ஒரு சீட்டுக்காக தொகுதி பங்கீடு இழுபறியில் இருப்பதும், கூட்டணியே உடையும் நிலைக்குப் போனதையும் நாடே பார்த்தது.

எனவே, அந்தந்த வர்க்கங்கள் தத்தங்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றன என்பதுதான் எதார்த்தம். உழைக்கும் மக்களையும் புரட்சிகர இயக்கங்களையும் மட்டும் பார்த்து, “பாசிசம் வருகிறது, எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்” என்று வகுப்பெடுப்பது அயோக்கியத்தனமானது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி

சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!

மீண்டும் ஒருமுறை பாசிச மோடி அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிகள் தனது கோரப்பற்களை அப்பட்டமாக காட்டி, அடக்குமுறையை ஏவிவிட்டதன் மூலம் விவசாயிகளின் ’டெல்லி சலோ’ பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது எந்தவகையிலும் விவசாயிகளின் போராட்ட உணர்வைக் குறைத்துவிடவில்லை.

வயல்களில் விவசாயம் செய்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக கண்ணீர்புகைக் குண்டுகளும், ரப்பர் தோட்டாக்களும், பெல்லட் குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. கன்சர்டினா கம்பிகள், ஆணிகள், கான்கிரீட் தடுப்புகள் என எல்லைகளை விவசாயிகளுக்கு எதிராக பலப்படுத்தியது பாசிச மோடி அரசு. போராட்டக்காரர்களை கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்த சிறைச்சாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

படிக்க : அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

பாசிச அரசாங்கத்தால் இத்தகைய கடும் அடக்குமுறைகள் செலுத்தப்படுகின்ற அளவுக்கு விவசாயிகளின் கோரிக்கைதான் என்ன? எம்.எஸ்.சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண்துறையைப் பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், 2020-21 போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மேற்கு உ.பி.யில் ஜேவர் விமான நிலையத் திட்டம் மற்றும் யமுனா விரைவுச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தீர்வு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் மின்கேபிள்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு என்ற வகையில் விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காகத்தான் ஒன்றிணைந்துள்ளனர். இந்தப் போராட்டம் என்பது விவசாயிகளின் வாழ்க்கையின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட புறக்கணிப்பின், ஏமாற்றத்தின் உந்துதலே ஆகும்.

உண்மையில் இந்திய விவசாயத்தை ஒரு பயங்கரமான துயரம் சூழ்ந்துள்ளது. MSP க்கான போராட்டம் என்பது வெறும் பொருளாதாரக் கோரிக்கை அல்ல; இந்தியாவில் முழு விவசாயப் பொருளாதாரத்தையும் கைப்பற்றுவதற்கு போட்டியிடும் தடையற்ற சந்தைக் கோட்பாடுகள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சவால் விடும் கோரிக்கையாகும். இந்திய கிராமப்புற விவசாயத்தின் அவலநிலையை அறிந்து கொள்ளும்போதுதான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2014-22-க்குள் 100,741 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 30 தற்கொலைகள்! மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியில், மொத்த விவசாயிகளின் தற்கொலைகள் ஆண்டுக்கு 10,281 இல் இருந்து 11,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கவலைக்குரிய வகையில், விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் ஆண்டுக்கு 4,324 இல் இருந்து 6083 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, 2047 க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது, பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது என மோடி கும்பல் சுயபுராணங்கள் பாடினாலும், முகத்தில் அறையும் உண்மை என்னவென்றால், இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரமானது மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதாகும். இதனை தொழிலாளர் ஆணையத்தின் உண்மையான ஊதியம் பற்றிய தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில் (நவம்பர் 2023 வரை) விவசாயக் கூலியானது ஆண்டுக்கு 0.2% என்ற அளவுக்கு மட்டுமே வளர்ந்துள்ளது. அதேசமயம் விவசாயம் அல்லாத ஊதியங்கள் ஆண்டுக்கு 0.9% அளவுக்கு குறைந்துள்ளது.

இந்திய விவசாயத்தில் லாபகரமான விலை கிடைக்காதது ஒரு தொடர் பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பானது (NSSO),  SAS (Statistical Analysis System) ஆல் நடத்தப்பட்ட கிராமப்புற இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள், நிலம் மற்றும் கால்நடை வைத்திருப்பவர்களின் நிலைமை குறித்த மதிப்பீட்டை வெளியிட்டது.

மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 77வது சுற்று கணக்கெடுப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் கடன் 58% அதிகரித்து, 50% விவசாயக் குடும்பங்கள் கடனில் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. விவசாய வருமானத்தின் பெரும்பகுதி கூலி என்ற அடிப்படையிலோ, விவசாயம் அல்லாத வணிகத்தின் அடிப்படையிலோதான் இருக்கிறது. இந்த அதிகரித்து வரும் போக்கானது விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களாக மாற்றுகிறது அல்லது வேறுவிதமாகக் கூறினால், விவசாயிகளிடையே பாட்டாளிமயமாக்கல் (ஓட்டாண்டிமயமாக்கல்) போக்கு அதிகரித்து வருகிறது.

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியான தேவீந்தர் ஷர்மாவின் கூற்றுப்படி, பயிர் சாகுபடி மூலம் ஒரு நாள் வருமானம் என்பது வெறும் ரூ.27 மட்டுமே. இது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் வருமானத்தைவிட குறைவானதாகும். பால் கறக்கும் பசுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட குறைவானதாகும்.

உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதாக 2014 தேர்தலின் போது வாக்குறுதி அளித்த மோடி, அதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் MSP யானது, சந்தையை சிதைத்து விடும் என்று கூறியது. அதன் பிறகு 2016, பிப்22 ல் ‘2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்று அளந்துவிட்ட வாக்குறுதியும் காற்றில் கரைந்து போனது. இந்தக் காலங்களில் விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்தி வந்தது மோடி கும்பல்.

அதேசமயம் தொழிற்துறைத் தொழிலாளர்களின் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தரவுகள் தெரிவிக்கின்றன. தனியார் முதலீடுகள் குறைவது, கண்ணியமான வருமானம் ஈட்டும் வகையில் வேலைகள் இல்லாதது ஆகியவை பலருக்கும் நெருக்கடியில் உள்ள விவசாயத்தை கடைசி புகலிடமாக்கியுள்ளது. 2017-18 மற்றும் 2022-23 க்கு இடைப்பட்ட காலத்தில் 42 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர். இது 2011-12 ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஒரு பக்கம் பெண்களின் சுயதொழில்கள் அதிகரித்துள்ளது. 95 மில்லியன் மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்வதாக தரவுகள் கூறுகின்றன.

சமீபத்திய இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விவசாயம், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகள் தேக்கநிலையிலோ அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் அபாயம் உள்ளது. இத்தகைய அவலமான சூழலில்தான் மோடியின் உதவியோடு அம்பானி, அதானி வகையறாக்களின் லாபமும், சொத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது முக்கியமானதாகும். இதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்று கூவிக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசின் சாதனை.

இத்தகைய அபாயகரமான நிலைமைகளோடு இணைத்துத்தான் விவசாயிகள் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மோடி பிரச்சாரம் செய்து வரும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற வெற்று ஜம்பத்தை விவசாயிகள் கிழித்தெறிந்துள்ளனர்.

இதே நேரத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் அரசாங்கங்கங்களைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணிகளையும், போர்க்குணமிக்க போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பெரு நகரங்களையே முடக்குகின்ற வகையில் போராடி வருகின்றனர். பிரான்ஸ், ஜெர்மனி, ருமேனியா, நெதர்லாந்து, போலந்து, லித்வேனியா, பல்கேரியா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்ப்பு பேரணிகளை நடத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்திய விவசாயிகளைப் போலவே, உறுதியளிக்கப்பட்ட மற்றும் நியாயமான விலையை மறுப்பதற்கு எதிராகவே அங்கும் போராட்டங்கள் எழுந்துள்ளன.

படிக்க : வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!

உலகம் முழுக்கவே விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை முழுமைப்படுத்தி அதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பதற்கான முனைப்புகளில் ஆளும் வர்க்க அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதும், அதற்கெதிராக உலகு தழுவிய அளவில் தங்களின் வாழ்வுரிமைக்காக பாதிக்கப்பட்ட விவசாய வர்க்கம் வீறுகொண்டெழுந்து போராடுவதும் என்ற பொதுப்போக்கு அதிகரித்துள்ளது.

இப்போராட்டங்களின் உறுதியும், இலக்கும் கார்ப்பரேட்மயமாக்கலை வீழ்த்துகின்ற பாதையில் சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படும்போது சந்தையின் மூலம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களிடமிருந்து மீப்பெரும் செல்வத்தை கொள்ளையடிக்க நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் திட்டங்கள் தவிடுபொடியாகும் என்பது உறுதி.


அய்யனார்
செய்தி ஆதாரம் : Frontier Weekly

ஊருக்கு தண்ணீர் கேட்டால் தாக்குதலா? | தோழர் செல்வராஜ்

ஊருக்கு தண்ணீர் கேட்டால் தாக்குதலா? | தோழர் செல்வராஜ்

காணொயை பாருங்கள்! பகிருங்கள்!!

சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமைக் கொலை – நெஞ்சு பொறுக்குதில்லையே!

மார்ச்-8, உலக மகளிர் தினம்; உலக அரங்கில் பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை என்ன? ஒன்பது வயது பெண்குழந்தை சுதந்திரமாக தெருவில் விளையாடக்கூட முடியாத நிலையில் எப்படி சொல்வது மகளிர் தின வாழ்த்து?

ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு ‘பாரத மாதாக்கள்’ தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.

இந்தச் சமுகத்தில் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக குழந்தை ஆர்த்தி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள். எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாத இந்தப் படுபாதகச் செயலை புரிந்த அந்த மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் மனம் ஆறாது என்பதே நமது கருத்தாகவும், மக்கள் கருத்தாகவும் உள்ளது.

படிக்க : ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு பொழியும் தினகரன் பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

தற்காலத்தில் இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் அற்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கான மூலக்காரணங்களை இந்தச் சமூகத்தில் இருந்துதான் ஆராய வேண்டும்.

நிர்பயா, ஹாசிஃபா, ஹாசினி என ஒவ்வொரு பெண்ணும், பெண் குழந்தையும் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படும்போதெல்லாம், இனி இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என மக்கள் பல்வேறு வகைகளில் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள், மனம் வெடிக்கிறார்கள். ஆனாலும், பெண்கள் பாதிக்கப்படாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு நாளிதழ்களில் பதிவாகின்ற சம்பவங்கள் அன்றாடம் வெளிவருகின்றன.

அப்படியான சம்பவங்கள் நடக்கும்போது, சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்; பாலியல் சமத்துவத்தைப் போதிக்கும் கல்விமுறை வேண்டும்; ‘குட் டச்’ ‘பேட் டச்’ சொல்லித் தர வேண்டும்; பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணித்து கவனமாக வளர்க்க வேண்டும்; பெண்கள் விழிப்புணர்வாக (போலீசுத்துறை அவசர உதவி எண் வைத்திருப்பது உள்ளிட்டவை) இருக்க வேண்டும்; தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இப்பிரச்சினைகளுக்கு மூலக்காரணமான இந்தக் குற்றக்கும்பல் எப்படி உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்யாமல் ஒரு தீர்வை நாம் எட்ட முடியாது என்பதே நிதர்சனம்.

ஆணாதிக்க மனோபாவம், பெண்களை போகப்பொருளாக பார்க்கும் நுகர்வுவெறி, பரவிவரும் போதைப்பழக்கம் போன்ற சீரழிவுகள் நமது சமூகத்தில் திணிக்கப்பட்டு, விழுமியங்கள் அற்ற தக்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சக மனிதர்களை கடித்துக் குதற தயாராக உள்ளார்கள்.

பார்ப்பனிய – சாதி – ஆணாதிக்கப் போக்கு ஆணுக்குப் பெண் என்றுமே சமம் இல்லை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் போதித்து வந்துள்ளது.

இன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் சிந்தனையே பார்ப்பனிய ஆணாதிக்க சித்தாந்தம்தான். அதனால்தான், காஷ்மீரில் ஹாசிபா எனும் எட்டு வயது குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொல்லி, தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்தியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை, இரவோடு இரவாக எரித்துக் குற்றவாளிகள் வீடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. குஜராத் கலவரத்தின்போது, தனது குடும்பத்தினரும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு, தானும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு குற்றம் இழைத்த விஸ்வ ஹிந்து பரிஷதின் காவி பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கிக் கொண்டாடியது.

இத்தகைய பாசிச பாஜக ஆட்சியில்தான் நாடெங்கும் கஞ்சா போதைக் கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. அதானி துறைமுகத்தில் டன் கணக்கில் போதைப்பொருள் கடத்தல் பிடிப்பட்டது. இதுவரை அதில் முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக பள்ளிக் குழந்தைகளிடமும் சென்றுசேரும் விதமாக போதைக் கலாச்சாரம் பல்வேறு தளங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா முதல் வெளிநாட்டு ஹெராயின் வரை பரவலாகக் கிடைக்கிறது. சமூகத்தையே கட்டுப்படுத்தி வழிநடத்திச் செல்லும் அரசின் துணையின்றி இவை எதுவும் நடைபெறாது.

இந்த நிலையில்தான் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என்ற பொதுமக்களின் புகார்களைக் கண்டுக்கொள்ளாத ஆளும் வர்க்கம்தான், தற்போது மக்கள் அதற்கெதிராகப் போராட்டத்தில் குதித்தவுடன் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாக போலீசையும் துணை இராணுவத்தையும் குவித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்குகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் கஞ்சா கலாச்சாரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்றும், தமிழகத்தில் உள்ள சிலரோடு இங்கு உள்ளவர்கள் தொடர்புகொண்டு இருப்பதினால்தான் இப்படிப்பட்ட கஞ்சா கும்பல் செயல்படுகிறது என்றும் வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க சாமியார்கள், அகோரிகள் பலரும் கஞ்சா போதையில்தான் அருளாசி வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கஞ்சா பரவலாக்கத்திற்கு அதிகார வர்க்கத்திலும் சமூகத்திலும் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல்தான் அடிப்படைக் காரணம்.

இவற்றுக்கு இணையாக இணைய உலக ஆபாசங்கள், சினிமா, சீரியல் என அனைத்தும் பெண்களை, ஆண்கள் தங்களது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நுகர்வு பண்டங்களாகவே சித்தரித்து வருகின்றன.

ஆபாச வலைதளங்கள் பன்மடங்கு அதிகரித்திருப்பதும், செக்ஸ் சேட், பெய்டு கால், பேஸ் மார்பிங் என பல்வேறு சைபர் குற்றங்களும் சமூகத்தில் அன்றாடம் நடந்து வருகின்றன.

கடத்த பத்து ஆண்டுகால பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் கஞ்சா பரவலாக்கம் உள்ளிட்ட மேற்கண்ட கூறுகள் அனைத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

படிக்க : மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா?

இதன்மூலம் உருவாக்கப்படும் பண்பாடு – விழுமியங்களற்ற தக்கை மனிதர்களில் சிலர் பல்வேறு தண்டனைகள் மற்றும் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படலாம். ஆனால், குற்றங்கள் குறையப்போவதில்லை. இப்படியான குற்றச் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கும் கஞ்சா, டாஸ்மாக் உள்ளிட்ட போதை கலாச்சாரத்தையும் பெண்களை பாலியல் பண்டமாகப் பார்க்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தையும் ஒழித்துக்கட்டி ஜனநாயக மாண்பை வளர்த்தெடுக்காமல் இதுபோன்ற வன்கொடுமைக் குற்றங்களைத் தடுக்க இயலாது.

பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைளின் முதன்மை குற்றவாளி ஆணாதிக்க – போதை – நுகர்வெறி பண்பாட்டை கட்டிக் காப்பாற்றும் இந்த அரசுதான்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஆர்த்திக்கு நீதி கேட்கும் புதுச்சேரி மக்களின் போராட்டத்தை, பார்ப்பனிய –  ஆணாதிக்க வெறியையும் போதை நுகர்வுவெறிப் பண்பாட்டையும் வளரக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுப்பது அவசியம். அதுதான் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பான சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதை நோக்கி முன்னேற்றும். அதுதான் ஹாசிபா முதல் ஆர்த்தி வரையிலான பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.

பாரிவேல்

மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: “மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி எம்.வி.முரளிதரன் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்புதான் மணிப்பூர் பற்றி எரிய காரணமாக இருந்தது. தற்போது அதே நீதிமன்றத்தால் அத்தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?

ணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழங்கிய தீர்ப்பை ஏதோவொரு தனி நீதிபதி வழங்கிய தவறான தீர்ப்பு என்று தனித்துப் பார்த்துவிடக் கூடாது. அத்தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதி நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்பையடுத்து மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிரான கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அன்று பற்றி எரிய தொடங்கிய மணிப்பூர் ஏறக்குறைய ஒரு ஆண்டாகியும் அணையவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஆக பெரும்பான்மையினர் குக்கி பழங்குடியின மக்கள். வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. பல தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மிகப்பெரிய அளவில் குக்கி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் இனவெறியர்களால் நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்டது. மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்களின் தலைமையில் மணிப்பூரில் ஒரு பேரழிவே நடத்தப்பட்டுள்ளது.

இக்கலவரத்தின் மூலம் மணிப்பூர் காடுகளை அம்பானி-அதானி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து விடலாம், அனைத்து மெய்தி இன மக்கள் மத்தியிலும் அடித்தளத்தை உருவாக்கிவிடலாம் என்று பாசிசக் கும்பல் கனவு கண்டது. ஆனால், குக்கி இன மக்களின் எழுச்சி அந்த கனவை நிறைவேறவிடவில்லை. காட்டையும் உரிமையையும் பாதுகாப்பதற்கான குக்கி இன மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சி காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் இக்கலவரம் பாசிசக் கும்பலுக்கு எதிராக திரும்ப தொடங்கியது. மெய்தி இன மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிர்ப்பு வலுத்தது.


படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?


2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், நிலைமையை ஓரளவிற்கேனும் இயல்புநிலைக்கு கொண்டுவந்தால்தான் அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தமுடியும் என்று பாசிசக் கும்பல் அஞ்சியதால்தான் இத்தீர்ப்பு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது. உண்மையில், குக்கி இன மக்களின் எழுச்சி பாசிசக் கும்பலை தற்காலிகமாக பின்வாங்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த பேரழிகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்த உள்நோக்கம் கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி முரளிதரன் மீது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் முடியாது என்பதே ‘இந்திய ஜனநாயகத்தின்’ அவலநிலை.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த தீர்ப்பானது ‘நல்ல நோக்கத்தோடு’ (Good faith) வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 77, சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பானது குற்றமாகாது என்கிறது.

ஆக, நிலகின்ற போலி ஜனநாயகத்தின்படி, நீதிபதிகள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் சமூகத்திற்கு மேலானவர்கள். இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பில் இவர்களையெல்லாம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மேலும், இந்தியாவில் நீதிபதிகள் இதுபோன்ற தீர்ப்பை வழங்குவது இது முதன்முறையல்ல. இந்தியாவில் காவி கும்பல் ஆட்சியை பிடித்ததிலிருந்து நீதிமன்றங்கள் பாசிசமயமாகி வருகிறது. இதன் விளைவாக, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பசுவளைய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் மனுவாத அடிப்படையில் பெண்களுக்கு எதிரான, பார்ப்பனிய-ஆணாதிக்கத்தின் அடிப்படையில் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்புகள் பொதுவெளியில் பேசுபொருளாகி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவற்றில் சில தீர்ப்புகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த நீதிபதிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டதில்லை. அப்படியொரு கோரிக்கையும் வலுத்ததில்லை.


படிக்க: தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?


அதேபோல், 1949-இல் பாபர் மசூதியில் சங்க பரிவார கும்பல்  திருட்டுத்தனமாக குழந்தை ராமனின் சிலையை வைத்ததை அங்கீகரித்து, 1951-இல் மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியது பைசாபாத் சிவில் நீதிமன்றம். இதனையடுத்து, பாபர் மசூதியை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் நீதிமன்றங்கள் அங்கீகரித்து அனுமதியளித்தன. இறுதியாக 1990-ஆம் ஆண்டு மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதோடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கொன்று குவித்தனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்.

இந்த 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கொல்லப்பட்டதில் நீதிமன்றங்களின் பங்கு இல்லை என்று நம்மால் மறுக்க முடியுமா? ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதே பிரதானமான கேள்வி. இதனைதான் நாம் இரட்டை ஆட்சிமுறை என்கிறோம். இதுவே, இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஜனநாயகத்தின்’ உண்மைநிலை.

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மக்க்களுக்கு மேலானவர்களாக உள்ளனர். அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையோ தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையோ மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பெயர்தான் ஜனநாயகமா. எனவே நீதிபதிகள் உள்ளிட்ட அரசின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுத்தோரைத் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உண்மையான ஜனநாயகத்தில்தான் மக்கள் விரோத தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளைத் தண்டிக்க முடியும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

மார்ச் 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – மக்களுக்கான களம் போராட்டமே!
  • டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!
  • கல்வித்துறைய விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்…
  • உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!
  • ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!
  • மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் நூல் வெளியீடு மற்றும் மாநில கலந்தாய்வரங்கம் – புமாஇமு
  • உத்தராகண்ட் கலவரம்: இஸ்லாமிய மக்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



🔴LIVE: புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை | மக்கள் போராட்டம்

🔴LIVE: புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை | மக்கள் போராட்டம்

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!

08.03.2024

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான
பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!

மக்கள் அதிகாரம் கண்டனம்

ல்வி செயற்பாட்டாளரும், மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீதான பணியிடை நீக்கத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

“எங்கே பயணிக்கிறோம் கல்வி பாதையில்” என்ற கட்டுரையை முகநூலில் பதிவிட்டதற்கு விளக்கம் கேட்பது என்ற பெயரில் விசாரணை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். குற்றச்சாட்டு குறித்து முறையாக விளக்கம் கேட்காமலேயே பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதுள்ளனர் தமிழ்நாடு அரசு கல்வித்துறை அதிகாரிகள்.

தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரக்கூடிய ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் மீதான நடவடிக்கை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒன்றிய அரசின் பாசிச – அராஜக செயல்பாடுகளை விமர்சிக்கும் திமுக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக மறுப்பாகும்.

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வியை அரசு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

அவருடைய பணியிடை நீக்கத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் சிவகாசியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தொழிலாளர்களும் சாத்தூரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மாதந்தோறும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடந்து பல தொழிலாளர்கள் உயிரிழந்தாலும் அரசினால் ஏன் இதனை தடுக்க இயலவில்லை?

ட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு முக்கியமான காரணம், அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான். இந்த விதிமீறல்களை அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர். அரசு வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக பட்டாசு ஆலைகள் அமைக்கப்பட்டிருப்பதால், விபத்துகள் நடப்பது என்பது அதன் இயல்பான அம்சமாக அமைந்துள்ளது.

ஒன்றிரண்டு விபத்துகள் நடந்தாலே, அந்தத் தொழிலில் இருக்கும் மற்ற முதலாளிகளுக்கு தங்களது ஆலையில் விபத்து நடந்துவிடுமே என்ற அச்சம் வந்திருக்க வேண்டும். ஆனால், வெடிவிபத்து நடக்காத பகுதியோ ஆலையோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கும்போது, பட்டாசு ஆலை முதலாளிகளால் விதிமுறைகளை மீறி எப்படி ஆலையை நடத்த முடிகிறது? எந்த பட்டாசு ஆலை முதலாளியும் இதுவரை விபத்துக்குள்ளாகாமல் இருப்பது எப்படி?

இந்தத் தொழிலில் கிடைக்கும் இலாப விகிதமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அரசும் அதிகாரவர்க்கமும்தான் இதற்கான முதன்மையான காரணங்களாகும். மற்றப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் மட்டும் வெடிவிபத்துகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்வதற்கேற்ப ஆலையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், பட்டாசு ஆலை வேலைக்குச் செல்பவர்கள் எல்லாரும், பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய, மாற்று தொழில்களுக்கு செல்ல வாய்ப்பில்லாத, பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை உழைக்கும் மக்கள்தான். சொந்த சாதிக்காரர்களிடம் வேலைக்குச் செல்வது, ஊரில் கட்டுப்பாடு வைத்திருப்பது, முதலாளிகள்-உள்ளூர் ஆதிக்கச் சக்திகள்-அதிகார வர்க்கம்-போலீசு கூட்டை பலமாகக் கட்டியமைத்திருப்பது போன்றவைதான், இம்மக்கள் வேறுவழியின்றி இந்த வேலைக்குத் தொடர்ந்து செல்வதற்கு காரணமாக உள்ளது. உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துகள் மூலமாகத்தான், வெடிவிபத்துகளில் உயிரிழந்த, படுகாயமுற்றவர்களின் குடும்பங்களுக்கான நட்ட ஈடுகள், அதிலும் மிக சொற்ப அளவாக வழங்கப்படுகின்றன.


படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?


சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தின்போது, விபத்து குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர், இவ்வாறு அடிக்கடி வெடி விபத்துகள் நடப்பதைத் தடுப்பதற்கு, ஃபோர்மென், சூப்பர்வைசர் ஆகியோருக்கு வெடிமருந்துகளைக் கலப்பதற்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஒவ்வொருமுறை விபத்து நேரும்போதும் வெடிமருந்து கலப்பவர்களின் தவறுதான் விபத்துகளுக்குக் காரணம் என்று அதிகார வர்க்கம் தொடர்ந்து சொல்லி வருகிறது.

இது உண்மையல்ல, பல ஆண்டுகளாகவே இந்த பொய்யான காரணங்களைக் கூறி தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அனுபவமில்லாதவர்கள், தவறுகளைச் செய்பவர்கள்தான் வெடிமருந்து கலக்கிறார்கள் என்றால் ஏன் அரசு இந்த வெடி ஆலைகளை நடத்துவதற்கு அனுமதிக்கிறது? ஆலைகள் சட்டபூர்வமாக நடக்கின்றனவா என்று கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தொழிற்சாலை ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அதிகார வர்க்கம் பதிலளிக்காது.

ஆகையால், விதிமுறைகள் மீறித்தான் ஆலைகள் நடக்கின்றன, இதன் மூலமாகத்தான் கோடிக்கோடியாக சம்பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினையில் பட்டாசுகள் அவசியமா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். நிச்சயம் பட்டாசுகள் அவசியமானவை அல்ல. ஆனால், நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்தோங்கி வரும் இன்றைய காலத்தில், பட்டாசு விற்பனை என்பது மிகவும் இலாபகரமான தொழிலாகும்.

நுகர்வுக்கலாச்சாரம், மதக் கலாச்சாரத்தின் அங்கமாக பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. பட்டாசு உற்பத்தி, வானவேடிக்கை நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையில் எதிரானதாக அமைந்துள்ளது. சமூகத்தில் மக்களிடையே ஜனநாயக உணர்வுகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தான கண்ணோட்டத்தின் வளர்ச்சிக்கேற்ப, வாணவேடிக்கைகள் நடத்துவதும், பட்டாசு வெடித்து மகிழ்வதும் குறையத் தொடங்கும். அதேவேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே அளவிற்கு அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube