ஐக்கிய முன்னணி அரசின் சாதனைகளில் ஒன்றாக போற்றப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அந்தச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் நடக்கும் குளறுபடிகளை வெளியில் கொண்டு வந்து ஊழலற்ற ஜனநாயகத்தை கட்டி அமைக்கிறார்கள் என்று பத்திரிகைகளும் ஆளும் கட்சி பேச்சாளர்களும் வியந்தோதுகிறார்கள். நடைமுறையில் அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த நேரடி அனுபவம் ஒன்று:
‘சார் அடுத்த திங்கள் கிழமை மாநில தகவல் ஆணையர் அலுவலகத்துக்கு என்னை வரச் சொல்லி லெட்டர் வந்திருக்கு சார். தப்புத்தப்பா தகவல் தந்தாங்கன்னு நான் அனுப்பிய புகாரை விசாரிக்க வரச்சொல்லியிருக்காங்க. நான் கிளம்பி வருகிறேன்’.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக பல தொண்டு நிறுவனங்கள் பெருமளவு ஊழல் செய்து விட்டதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்டியதாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு நிறுவனம் உண்மையில் 2178 வீடுகள்தான் கட்டினார்கள் என்றும், கட்டப்பட்ட வீடுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற அரசாணைக்குப் புறம்பாக காப்பீடு செய்யயாமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்த கனகசபை சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார். ஆதாரங்களாக பத்திரிகைச் செய்திகள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய மனுக்கள், போராட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
தொலைபேசியில் மேல் விபரங்கள் கேட்டுக் கொண்டோம். ‘பலபேருக்கு வீடு கட்டிக் கொடுத்ததாக கணக்கு எழுதி காசு அடித்து விட்டாங்க சார், இன்சூரன்சு செய்யாமலேயே இன்சூரன்சு செய்ததாக காட்டிவிட்டாங்க, பெரிய ஊழல் நடந்திருக்கு. இதற்கு ஒரு தீர்வு காணாமல் விட மாட்டேன்’ என்று சொன்ன அவர், சொன்னதற்கு ஏற்ப விடாமல் வாரத்துக்கு இரண்டு முறை தொலைபேசி விபரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரது தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு கட்டமாக மாவட்ட நிர்வாகம் தவறான தகவல் கொடுத்ததாக அவர் அனுப்பிய புகாரின் மீது மாநில தகவல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
மாநில தகவல் ஆணையத்தில் நடக்கவிருக்கும் விசாரணைக்கு அவருடன் போவதாக ஒத்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை மதியவாக்கில் தொலைபேசினார்.
‘இன்னைக்குக் சாயங்காலம் கிளம்பி வாரேன் சார், நீங்கதான் உதவி செய்யணும். காலையில ஒம்பதரை மணிக்கு தேனாம்பேட்டையிலை தியாகராயர் சாலையில் இருக்கும் தகவல் ஆணைய அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. கோயம்பேட்டில் இறங்கியதும் உங்களுக்கு போன் செய்கிறேன்’.
ஒன்பதரை மணிக்கு தேனாம்பேட்டை தியாகராயர் சாலையில் இருக்கும் மாநில தகவல் ஆணைய அலுவலகத்துக்குப் போய் விட்டோம். புதிய கட்டிடம். நவீன கார்பொரேட் அலுவலகம் போல இருந்தது. உள்ளே நுழைந்தால் வரவேற்பு பகுதியில் நாற்காலிகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் கனகசபை யார் என்று தெரியவில்லை. அவரது தொலைபேசியை அழைத்தால் பதில் இல்லை. இன்னொரு தொலைபேசி இணைப்பே இல்லை. ஒவ்வொருவரையும் இவராக இருக்குமா அவராக இருக்குமா என்று பார்த்துக் கொண்டு நின்றேன். செக்யூரிட்டியிடம் ‘இப்படி வந்தவர் எங்கு காத்திருப்பார்’ என்று கேட்டால் இங்குதானாம்.
எல்லோரையும் பதிவேட்டில் பெயர் எழுதி கையெழுத்து போட்டு விட்டு மேலே முதல் மாடிக்குப் போகச் சொன்னார்கள். குள்ளமாக, சிவப்பாக, சட்டை டக் இன் செய்து, இடுப்பில் மொபைல் செருகி ஸ்டைலாக ஒருவர் வந்தார். ஒரு கையில் சில கோப்புகளும், இன்னொரு கையில் அடக்கமான பயணப்பையும். வெளியூர்க்காரர் போலத் தெரிந்தார்.
‘நீங்கதான் கனகசபையா?’ என்று விசாரித்தோம்.
‘கையில அரசாங்க பைல் வைச்சிருக்கேன், ஏன் அப்படி கேட்கறீங்க’ என்று கடுப்பானார்.
‘சாரி சார், கனகசபை என்று ஒருவரைப் பார்க்க வந்தோம். தொலைபேசியில்தான் பேசியிருக்கிறோம், நேரில் பார்த்ததில்லை, அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் அதான்’ என்று வருத்தம் தெரிவித்தேன். ‘நீங்க இங்கதான் வேலை பார்க்கிறீர்களா’ என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.
பின்னர்தான் தெரிந்தது அவர்தான் பிரதிவாதி. தவறான தகவல் கொடுத்ததாக கொடுத்த புகார் பற்றிய விசாரணைக்கு பதில் சொல்வதற்கு மாவட்ட அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். அவரில் ஒருவர் இவர். கனகசபையை இன்னும் காணவில்லை. மணி 9.45 ஆகி விட்டிருந்தது. அவர் உள்ளே போய் விட்டிருந்தால் முடித்து விட்டு வரட்டும், நாம் காத்திருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
அப்போது கனகசபை தொலைபேசியில் அழைத்தார். அலுவலகத்துக்கு முன்பு நிற்கிறாராம். எங்கோ கோயிலுக்குப் போயிருந்தாராம்.
‘கறுப்பு கலர் பேகும், துணிக்கடை பையும் வைத்திருப்பேன்’ என்று அடையாளம் சொன்னார்.
இரண்டு கைகளில் இரண்டு பைகளோடு வந்தார். கறுப்பான, உயரமான, உறுதியான உடல் வாகு. கண்கள் தூக்கமின்மையால் சிவந்திருந்தன. கைகளில் வைத்திருந்த பைகளின் கனம் பார்க்கும் போதே தெரிந்தது. துணிக்கடை பை நிறைய ஆவணங்கள். அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள், அவற்றிற்கு கிடைத்த பதில்கள், பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள், தபால் வந்த உறைகள் என்று எல்லாவற்றையும் பத்திரமாக சேர்த்து வைத்திருந்தார்.
அவர் ஒரு ஓட்டுனர். லாரி ஓட்டுனர் வேலை செய்கிறாராம். முன்பு இந்தியா முழுவதும் ஓட்டப் போவார். இப்போது, உள்ளூரில் மட்டும்தான் ஓட்டுகிறார். ஊர்த்தலைவராக இருந்தார். சுனாமி சமயத்தில் அவர்தான் தலைவர். அவரது வீடு கடற்கரையிலிருந்து 800 மீட்டரில்தான் இருக்கிறதாம். சுனாமி அன்று முதலில் தண்ணீர் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் வரை வந்திருக்கிறது. என்ன என்று பார்க்கப் போய் பாலத்துக்கு அப்பால் போன பிறகு மீண்டும் தண்ணீர் உள்ளே வந்து வீட்டை எல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அவரது தங்கை மகள் மரத்துக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார்.
ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து வந்து குழந்தைகளை போட்டோ எடுத்துக் கொண்டு போவார்கள். மாதா மாதம் அது நடக்கவே அந்த வீட்டுக் காரர்கள் இவரிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள். ‘போட்டோ எடுத்து அதை வைத்து காசு பார்க்கிறாயா, இவங்களுக்கு அதை கொடுக்கணும் இல்லை என்றால் போட்டோ எல்லாம் திரும்பிக் கொடு’ என்று அவர்கள் பைக்கை பிடித்து வைத்துக் கொண்டாராம். அவன் போய் போலீஸில் புகார் கொடுத்து இவர் மீது போலீஸ் கேஸ் ஒன்று போட்டு 15 நாட்கள் சிறையில் வைத்து விட்டார்கள். 6 மாதம் போய் கையெழுத்து போட்டு விட்டு வந்தார். இவரை சிறையில் வைத்து விட்டு வீட்டுக்கு 50 போலீஸ் காரங்க வந்து ரெயடு. அதையெல்லாம் பார்த்துட்டு ஊர் மக்கள் பயந்து ஒதுங்கி விட்டார்கள்.
இந்தப் போராட்டத்தில் இப்போது அவருக்கு யாரும் ஆதரவு இல்லை. வீட்டில் குழந்தைகள் வேறு வேலை இல்லையா என்று திட்டுகிறார்கள். இரண்டு பையன்கள் படித்து வேலை பார்க்கிறார்கள்.
இரவு முழுவதும் பேருந்து பயணம் செய்து காலையில் தெருவோர குழாயில் குளித்து தயாராகி, அரசு அலுவலகத்துக்குப் போவதற்கான மிடுக்குடன் தயாராகியிருந்தார். கீழே வருகைப் பதிவில் பெயர் எழுதி கையெழுத்து போடச் சொல்லி விட்டு முதல் மாடிக்குப் போனோம். காத்திருக்கும் பகுதி நவீனமாக வசதியான நாற்காலிகள் போடப்பட்டு விசாலமாக இருந்தது. மேலே மின்விசிறி, குடிதண்ணீருக்கு பிளாஸ்டிக் பாட்டில் டிஸ்பென்சர் என்று இருந்தது. முன்பே வந்திருந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
அழைப்பு வந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். ‘நீங்கள் தகவல் கேட்ட மனுவுக்கு தவறான தகவல் தந்தது குறித்த விசாரணைக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வரவும்’ என்று கடிதம். ‘10.30க்கு விசாரணை. அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விட வேண்டும்.’ அலுவலக உதவியாளர் வந்து வருகை பதிவு செய்து கொண்டு, படிவத்தை நிரப்பி வைத்துக் கொள்ளச் சொன்னார். செல்பேசியை அணைத்து விட வேண்டும்.
அவரது ஆவணங்களைப் பார்த்ததில் தகவல் மனுவில் கேட்ட கேள்விகளில் இரண்டு தவறான தகவல்கள்.
1. கிராமத்தில் தொண்டு நிறுவனம் எத்தனை வீடுகள் கட்டியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு 50 வீடுகள் என்று பதில் சொல்லியிருந்தார்கள். உண்மையில் 23 வீடுகள்தான் கட்டப்பட்டிருந்தன. இன்னொரு ஆவணத்தில் அந்த தகவல் வந்திருந்தது.
2. வீடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டது என்று தகவல். நிரந்தர வீடுகளுக்கு காப்பீடு கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. ஆனால் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு இழப்புத் தொகை தரவில்லை. கேட்டால் சுனாமிக்கு மட்டும்தான் காப்பீடாம்.
மீனவர்களுக்கு கட்டுமரம் நிவாரணம் வழங்குவதில் பொய்யான பெயர்களைச் சேர்த்து கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஒரே ஆளுக்கு இரண்டு மூன்று தடவை நிவாரணம் அளித்திருக்கிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ‘இதைச் சொல்ல முடியாது, இந்த விசாரணையில் தவறான தகவல் கொடுத்ததை மட்டும்தான் பேச முடியும்’.
சரியாக 10.30க்கு அழைத்து விட்டார்கள். விசாரணைக் கூடம் 1க்குள் போக வேண்டும். உள்ளேயிருந்து ஒரு அம்மா வந்து ஊரிலிருந்து வந்திருந்த அதிகாரிகளுடன் பேசி உட்கார வைத்தார். நானும் கனகசபையும் நின்று கொண்டிருந்தோம். உயரமாக, 50 வயதுகளில் ஆணையர், விசாரணை கூடத்துக்கு உள்ளே போயிருந்தார். எவ்வளவு நேரம் நிற்பது போய் உட்காரலாம் என்று நாற்காலிக்குப் போனதும் அழைத்தார்கள்.
முதலில் நாங்கள் இரண்டு பேரும் போனோம். மேடை போன்ற இடத்தில் உயரமான இருக்கையில் ஆணையர். கீழே இரண்டு பக்கமும் நாற்காலிகள், நடுவில் குறிப்பெடுப்பவரின் இருக்கை. ஆணையருக்கு வலது புறம் வாதிகள், நாங்கள் இரண்டு பேரும் போய் உட்கார்ந்தோம். இடது புறத்தில் பதில் சொல்ல மூன்று அரசு அதிகாரிகளும் வந்தார்கள். ஒருவர் முதலில் பார்த்த குள்ளமான சிவப்பான இளைஞர், இன்னொருவர் திராவிட கறுப்பில் ஒல்லியாக நடுத்தர வயதினர். இன்னொருவர் குண்டான ஒரு அம்மா.
‘சொல்லுங்க‘ என்று எங்கள் பக்கம் கேட்டார் ஆணையர்
‘ஐயா நிறைய முறைகேடு நடந்திருக்குங்க, பொய்யான தகவல்களை தந்திருக்காங்க‘ என்று ஆரம்பித்தார்.
‘அலிகேஷன் எல்லாம் சொல்லக் கூடாது. அப்படி எல்லாம் பேசினா வெளியேற்றி விடுவேன். என்ன தகவல் தவறு என்று மட்டும்தான் நான் விசாரிக்க முடியும். எந்த மனு குறித்து புகார் சொல்லப் போறீங்க என்று தெளிவா புரிஞ்சுக்கோங்க. சுனாமி நிவாரண பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது என்று எனக்கும் தெரியும், ஆனால அதை எல்லாம் இங்கே விசாரிக்க முடியாது. தகவல் தருவதில் இருந்த தவறுகள் மட்டும்தான் விசாரணை. எந்த மனுவைப் பற்றி பேசுறீங்க? 21 கேள்விக்கான மனுதான் விசாரணைக்கு’ என்று ஒரு போடு போட்டார்.
‘சரிங்கய்யா, சரிங்கய்யா’ என்று கையெடுத்து கும்பிட்டார்.
21 கேள்விகளுக்கு பதில் அனுப்பியிருந்த மனுவை எடுத்து கையில் கொடுத்தோம். முதல் கேள்விக்கு 50 வீடுகள் கட்டியிருப்பதாக தகவல்.
‘ஐயா, அது தவறுதலா ஆகிப் போச்சு. இன்னொரு சேவை நிறுவனம் கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை இவங்க கட்டினதா சொல்லிட்டோம். இதற்கு முன்பு இன்னொரு மனுவுக்கு சரியான தகவல் சொல்லியிருக்கிறோம்’ என்று அதைக் காட்டினார் சிவப்பாக குள்ளமாக இருந்தவர்.
‘என்னய்யா பேசுறீங்க, தவறா எப்படி தகவல் கொடுப்பீங்க. இங்க என்ன விளையாடிட்டு இருக்கீங்களா‘ என்று சரமாரியாக அவர்களைத் திட்டித் தீர்த்தார்.
கனகசபை ‘ஐயா இத்தோடு தொடர்புடையது, 4 வது விடையில்…’ என்று ஆரம்பித்ததும் முறைத்தார். நான் ஒவ்வொரு கேள்வியாகத்தான் பார்ப்பேன். இடையிடையே பேசக் கூடாது என்று ஒரு மிரட்டல். மாவட்டம் முழுவதும் 2173 வீடுகள்தான் கட்டியிருப்பதாக தகவல் கொடுத்திருந்தார்கள். ஆனால், தொண்டு நிறுவனம் 3500 வீடுகள் கட்டியதாக பலகை வைத்திருக்கிறார்கள். இந்த நூலைப் பிடித்துக் கொண்டு இழுத்தால் அந்த விவகாரமும் வெளியில் வரும் என்பதைச் சொல்ல விடவில்லை.
அடுத்த கேள்வி காப்பீடு குறித்து, ‘காப்பீடு இருக்கிறது என்று பதில். அது சரிதானா? சரி என்றால் காப்பீடு செய்த விபரங்கள் காண்பியுங்கள்’ என்று அதிகாரிகளைக் கேட்க கொண்டு வந்திருக்கவில்லை.
‘மூணு பேர் எதுக்குய்யா வந்தீங்க, இங்க கத்திரிக்கா விளையுதுன்னு பறிச்சுட்டுப் போக வந்தீங்களா? பேப்பர்ஸ் இல்லாம ஏன் வந்தீங்க’ என்று காய்ச்சி எடுத்தார்.’அலுவலகத்தில் இருக்கிறது, தொண்டு நிறுவனத்திடம் இருக்கிறது‘ என்று சமாதானம்.
கனகசபை வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம் வந்து பேருந்து பிடித்து இரவு முழுவதும் பயணம் செய்து காலையில் கார்பொரேசன் குழாயில் குளித்து விட்டு பை நிறைய ஆவணங்களோடு வந்திருக்கிறார். பயணச்செலவுக்கு லாரி ஓட்டி சம்பாதித்த காசை செலவழிக்கிறார். இந்த மூன்று அதிகாரிகளும் அரசு செலவில் பயணப்படி, தங்கும் செலவு வாங்கிக் கொண்டு கையில் ஒரே ஒரு தாளுடன் நிற்கிறார்கள். தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் இல்லை.
‘மூணுபேர் எதுக்குய்யா வந்தீங்க! மூணு பேர் ஏன் வந்தீங்கன்னு சொல்லுங்க’ என்று இன்னொரு அதட்டல்.
தொண்டு நிறுவனங்கள் கட்டும் வீடுகளுக்கு காப்பீடு கட்டாயம் வேண்டும் என்று அரசாணை இருப்பதாக பின்னால் ஒரு பதில் இருந்தது. ஆனால், தீ விபத்துக்குள்ளான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஏனென்றால் காப்பீடு சுனாமிக்கும் நிலநடுக்கத்துக்கும் மட்டும்தான், தீவிபத்துக்கு இல்லை.
‘உங்களுக்கு இன்சூரன்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா குறிப்பிட்ட நிகழ்வுக்குத்தான் இன்சூரன்ஸ் எல்லாத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாது’ என்று கனகசபைக்கு ஒரு மிரட்டல்.
அரசாணைப் படி முழுமையான காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பேச தயாராக இல்லை. ‘காப்பீடு விண்கல் தாக்குவதற்கு மட்டும்தான் என்று செய்திருந்தால் இன்னும் செலவு குறைந்திருக்கும்’ என்று அடுத்த தடவைக்கு யாராவது தொண்டு நிறுவனத்துக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்.
வரிசையாக ஒவ்வொரு கேள்வியாக டிக் அடித்துக் கொண்டே வந்தார். ‘மேல் முறையீடு விபரங்கள் இல்லை. மேல் முறையீடு செய்து விட்டுதான் நீங்க வந்திருக்க வேண்டும்‘ என்று ஒரு மிரட்டல். கடைசியில் சுனாமி நடந்த தேதியில் ஆணையராக இருந்தது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கவில்லை.
‘சரி, நீங்க வந்தீங்க! இந்த இன்சூரன்சு தொடர்பான பேப்பர்களை அவங்க ஆபிசில் போய் பார்க்க அனுமதி தரச் சொல்லி உத்தரவு போடுகிறேன். அதுக்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாம். என்றைக்குப் போக முடியும்’. எழுத்தரை நோக்கி, ‘இந்தாம்மா எழுதிக்கோ, இனம் 4ல் குறிப்பிட்ட இன்சூரன்சு தொடர்பான பேப்பர்களைப் போய்ப் பார்க்க மனுதாரருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். இனம் 19ல் கேட்கபட்ட ஆணையரின் பெயரை தெரிவிக்க வேண்டும். இந்த லெட்டர் உங்களுக்கு வந்து விடும். போய்ப் பாருங்க’
‘ஐயா, கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை தவறாக சொன்னது குறித்து எதுவும் ஆர்டர் இல்லையா’
‘அதுதான் சொல்லிட்டாங்களே, தப்பாக் கொடுத்துட்டோம் என்று. இன்னொரு ஆவணத்தில் சரியா சொல்லியிருக்காங்க. இல்லைன்னா அவங்களை காய்ச்சி எடுத்திருக்கலாம்’
‘இல்லைங்கய்யா, முழுப்பூசணியை சோத்தில மறைக்கப் பார்க்கிறாங்க. மாவட்டம் முழுக்க பல நூறு வீடுகள் கட்டாமலேயே கட்டினதா கணக்குக் காட்டியிருக்காங்க. அதில் ஒரு பகுதிதான் இந்த கிராமத்தில் நடந்த விவகாரம். இதில் எப்படியாவது நியாயம் வேணும் அய்யா. இதன் மூலமா நீங்க ஒரு உத்தரவைப் போட்டு விஷயங்களை வெளியில் கொண்டு வர முடியாதா’
‘அதெல்லாம் முடியாதுங்க! சுனாமியில எவன் எவன் எவ்வளவு அடிச்சான்னு எனக்கே தெரியும். நானும் அந்த மாவட்டத்துக்காரன்தான். ஒரு ஐஏஎஸ் அதிகாரி, பேர் சொல்ல மாட்டேன், மாவட்ட அதிகாரியா இருந்தார் என்று கூடச் சொல்கிறேன், முடிஞ்சா கண்டு பிடிச்சுக்கோ. சுனாமி நிவாரணத்தில் அடிச்ச பணத்தை வச்சு வடநாட்டில ஒரு மெடிக்கல் காலேஜே கட்டி விட்டான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும். தகவல் அறியும் உரிமையில் தகவல் தெரிவிப்பதையும் அதில் நடந்த தவறுகளையும்தான் விசாரிக்க முடியும். சமூகத்தையே திருத்தி விட முடியாது’
‘இதை நான் விடப் போவதில்லை சார். எப்படியாவது ஒரு முடிவு காணாம விடப்போவதில்லை’ என்று சொல்லி விட்டு கனகசபை மாலை பேருந்தை பிடித்து ஊர் திரும்ப தயாராகிறார். அது வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம். வெளியில் வந்து அவருக்கு ஒரு காபி வாங்கிக் கொடுத்து விட்டு வரும் போது மூன்று மாவட்ட அதிகாரிகளும் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்து ஆட்டோ ஒன்றில் ஏறுகிறார்கள். பெண் அதிகாரியை அழைத்துப் போக இரு சக்கர வண்டியில் ஒருவர் வந்திருக்கிறார். மாநகரில் செய்ய வேண்டிய மற்ற பணிகளை முடித்து விட்டு அவர்களும் மாலை அல்லது அடுத்த நாள் முன்பதிவு செய்யப்பட்ட, ரயில் பயணத்தை மேற்கொண்டு ஊர் திரும்பி விடலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆணையர் அலுவலகம் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
( பாதுகாப்பு காரணமாக பெயர், ஊர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.)
– வினவு செய்தியாளர்.








இக்கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமைகள், பிராந்திய நலன்களைக் கைவிட்டுச் சுமுகமாகப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவில் உபதேசிக்கின்றன. அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கில் இரு மாநிலப் பிரிவுகளையும் தனித்தனியே தூண்டிவிடுகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்களிடம் நிலவும் தமிழக விரோதப் போக்கை மட்டுமின்றி, அவர்களால் விதந்தோதப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சந்தர்ப்பவாதத்தையும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றன.
அச்சுதானந்தனின் இனவெறி நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, மத்தியத் தலைமை. தமிழகத்திலுள்ள போலி மார்க்சிஸ்ட் தலைமையோ துரோகத்தனமான மௌனம் சாதிக்கிறது. இங்கே, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளும் இங்குள்ள போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையோ, அச்சுதானந்தனின் தமிழர் எதிர்ப்பு இனவெறிப் பிரச்சாரம் குறித்தும், அதற்கு அங்குள்ள வலது, இடது போலிகளின் ஆதரவு குறித்தும் மூடிமறைத்துக் கொண்டே தமிழக உரிமைக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மறுத்ததோடு, போலி மார்க்சிஸ்டு கட்சியின்
அதேநேரத்தில் அணையின் உறுதியைச் சோதிப்பதற்காக தற்போது வந்திருந்த உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவிடமும் கேரள அதிகாரிகள் அடாவடித்தனம் செய்திருக்கின்றனர். தமக்கு சாதகமான முடிவு வராத வரை, எத்தகைய நடுநிலை வல்லுநர்களின் முடிவுக்கோ, தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட முடியாது என்பதே கேரள அரசின் நிலை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 1979இல் அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணையைத் தகர்ப்பதன் மூலம், வனவளமிக்க அப்பகுதியைத் தமது சுற்றுலாக் கொள்ளைக்கு விழுங்கிக் கொள்ள முனைகிறார்கள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள். சொல்லப்போனால், பழைமையான அரை வட்ட வடிவிலான 500 மீட்டருக்கும் மேல் உயரமான இடுக்கி அணைதான் ஒப்பீட்டளவில் அபாயகரமானதும், அவர்கள் அச்சுறுத்துவதைப் போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் உடையக்கூடியதும் ஆகும். எனினும், இந்த உண்மைகள் எதுவும் காதில் ஏறாத அளவுக்கு கேரள மக்கள் மத்தியில் திட்டமிட்டே பீதி பரப்பப்பட்டிருக்கிறது.


இதனையடுத்து இந்தியக் கடலோரக் காவல்படை இவ்வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரமாண வாக்குமூலப் பத்திரமொன்றை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “சிங்களக் கடற்படையினர் ஒருபோதும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கியதில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதும், தடை செய்யப்பட்ட வலைகளை மீன் பிடிக்கப் பயன்படுத்துவதும்தான் இப்பிரச்சினைக்குக்” காரணமெனத் தெரிவித்திருப்பதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, “தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய இலங்கை சர்வதேச கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும்; இதனை மீறும் மீனவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாகவே ஒப்புக் கொள்வோம். இக்‘குற்றம்’ பற்றி கடலோரக் காவல்படைக்குத் தகவல் கொடுக்கும் சிங்களக் கடற்படை, அம்மீனவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்காமல், அடித்துத் துரத்துவதையும் சுட்டுக் கொல்வதையும் எந்தச் சட்டம் நியாயமென்று கூறுகிறது? இந்திய இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இதுவரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே? தமிழக மீனவர்களுக்கு எதிராக கடலோரக் காவல்படை காட்டும் ‘ஆதாரங்கள்’ குறித்து இவை போல பல கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினால், அப்படை அசடு வழிய நிற்கத்தான் முடியும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது பற்றி தமிழக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்திய அரசு இப்புகார்கள் பற்றி எந்தவிதமான மேல்நடவடிக்கையும் எடுக்காமல் குப்பையாகப் போட்டு வைத்திருப்பதை மறைத்துவிட்டு, தமிழக மீனவர்கள் தம் மீதான தாக்குதல் பற்றி புகார் கொடுக்காமல், ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என அபாண்டமாகப் பழி போடுகிறது, கடலோரக் காவல்படை. தமிழக மீனவர்கள் தாங்கள் தாக்கப்படுவதையும், சகோதர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், தமது படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் நாசப்படுத்தப்பட்டதையும் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லையென்றால், இந்திய அரசு இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றல்லவா சாதித்திருக்கும்?


டேராடூனில் பயிற்சி முடித்ததும் அஞ்சலி குப்தா விமானப்படை பிரிவின் பெண் அதிகாரியாக 2001ல் பெங்களூருவில் சேர்ந்தார். அங்கு அவர் ஒருவர் மட்டுமே பெண் அதிகாரி. எனவே மூன்று ஆண் அதிகாரிகள் அஞ்சலியை மனதளவிலும், உடலளவிலும் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்திருக்கின்றனர். இதை யாரிடம் புகாராக சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை. விமானப்படை பிரிவின் விதிகளின்படி புகார்கள் அவரது கமாண்டிங் அதிகாரி வழியேதான் வெளிவர வேண்டும். ஆனால், அந்த கமாண்டிங் அதிகாரி மீதுதான் அஞ்சலியின் புகார் இருந்தது.
இதன்படி பார்த்தால், இந்திய விமானப்படையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியே கூறவே முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படிச் சொன்னால் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் முதலில் நிராகரிக்கப்படும். பின்பு, புகார் மனு அளித்தவரின் பாதுகாப்புக்காக என்று கூறி அவரை வீட்டுச் சிறையில் அடைப்பார்கள். பிறகு, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் பொய்யான தகவல்களையும் சேர்த்து குற்றம்சாட்டியவரையே பணியிலிருந்து நீக்கம் செய்துவிடுவார்கள். இறுதியில், அதிகார வர்க்கத்தின் திமிரோடும் ஆணாதிக்கக் கொழுப்போடும் விமானப்படையை விட்டு துரத்திவிட்டு குற்றத்தின் நிழல் கூட படாமல் இந்திய தேசக்கொடியை பெருமையுடன் பட்டொளி வீசி பறக்க விடுவார்கள்.
பெண்கள் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் முன்பைவிட அதிகமாக இருக்கிறார்கள், இன்றைய நவநாகரிக சமூகத்தில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் நுழைந்துவிட்டார்கள். ஆணுக்கு சரிசமமாக போட்டியிடுகிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.









“”இந்தியாவுடனான நட்புறவுக்குப் பெரிதும் முயற்சித்தவரும், ஆப்கான் அமைதி நடவடிக்கைக்கான உயர் தலைவருமான முன்னாள் ஆப்கான் அதிபர் பர்ஹானுதீன் ரப்பானி கொல்லப்பட்ட பிறகு போடப்படும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பும் பெரும் முன்னேற்றத்தை அளிக்கும்” என்று இந்திய ஆட்சியாளர்கள் ஏற்றிப் போற்றுகின்றனர். “”2 பில்லியன் டாலர் அளவுக்கு ஆப்கானுக்கு உதவி செய்து, இந்தியா மிக முக்கிய கொடையாளராக உள்ளது என்று ஆப்கான் மக்கள் பாராட்டுகின்றனர். மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் வர்த்தகத்துக்கும் அடிக்கடி ஆப்கானியர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். சினிமா நடிகர்நடிகைகள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் படங்களைத் தங்கள் கடைகள், வீடுகளில் ஒட்டி வைக்கும் அளவுக்கு இந்திய சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஆப்கான் மக்களிடம் பெருத்த வரவேற்பு உள்ளது. இந்துஸ்தான் எங்களது நண்பன், பாகிஸ்தான் எங்களது எதிரி என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் உளமாறக் கூறுகின்றனர்” என்று ஊடகங்கள் இந்தப் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை ஆப்கானியர் வரவேற்பதாக வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றன.
பாகிஸ்தானின் மேற்குப் பகுதி தாலிபான்களின் புகலிடமாக இருப்பதால், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அங்கு பெருமளவு படைகளை பாகிஸ்தான் குவிக்க வேண்டியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள இந்தியாவுடன் முறுகல் நிலை இருந்தால், இந்திய எல்லையில் மேலும் படைகளைக் குவிக்க வேண்டியிருக்கும் என்பதால், தற்காலிகமாக இந்தியாவுடன் முறுகலற்ற நிலையை மேற்கொள்ள பாக். விரும்புகிறது.
மேலும், ஏற்கெனவே அமெரிக்க பொம்மையாட்சிக்கு ஆதரவாக உள்ள இந்தியாவை எதிர்க்கும் தாலிபான்கள் ஆப்கானிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, இந்தியக் கட்டுமானப் பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்கான் ஆட்சியாளர்களுடனான இந்தியாவின் கூட்டு வலுப்பட்டுள்ள நிலையில் தாலிபான்களின் தாக்குதல் ஆப்கானில் மட்டுமின்றி, இந்தியாவிலும் தொடர்வதற்கான பேரபாயமும், இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் அமெரிக்க எதிர்ப்பாளர்களின் தாக்குதல் இலக்காக இந்தியா மாறும் பேரபாயமும் ஏற்பட்டுள்ளது.



