Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 789

சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!

பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு.  இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது.  தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி  மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.

விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.

கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.

மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், “இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்” இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு,  தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.

ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல்  கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.

மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து   18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

“சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.

ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன்  தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, “இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.

நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி.  ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.

ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

__________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 

 

 

 

தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்

விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.

இத்தண்ணீர் வியாபாரத்தால் எதிர்காலத்தில் உருவாகும் அபாயங்களை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அப்பொழுதே அத்தண்ணீர்க் கொள்ளையர்களை எதிர்த்து ஊர்வலம், சாலை மறியல் எனப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்நிறுவனத்தை மூடக் கோரி மக்களின் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் திறக்கப்பட்ட உடனேயே இழுத்து மூடப்பட்டது.

தற்போது அதே பகுதியில் மீண்டும் தண்ணீர்க் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பெயர்ப் பலகையின்றி, இரவில் நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதும், பகலில் தண்ணீரை ஏற்றிச் செல்வதுமென தண்ணீர் வியாபாரம் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து விருதை மினரல்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட விருத்தாச்சலம் நகராட்சி இப்பொழுது தண்ணீர்க் கொள்ளையர்களுக்குச் சலாம் போடுகிறது.

ஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.

இந்நிலையில் எம்.ஆர்.கே. பகுதியில் இயங்கும் தண்ணீர் கம்பெனியை அகற்றக் கோரியும், மக்கள் நலனில் அக்கறையின்றி இத்தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 29.10.2010 அன்று விருத்தாசலம் – பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்டோரும், குடியிருப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
_______________________________________________
– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

டாடா குழுமத்தின் கோர முகம் -2

டாடா குழுமத்தின் கோர முகம்

டாடா குழுமத்தின் கோரமுகம் -1

டாடா குழுமத்தின் கோர முகம்நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.

ஜூக்சாலை-கழிவுப் பொருட்களின் மலைகள்:

ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.

ஜோடா சுரங்கங்கள்:

டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

கரிக்குழம்புகளின் குவியல்:

மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.

பேராபத்து விளைவித்த நிகழ்வுகள் – நிறுவனர் நாள் தீ:

1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.

டாடா குழுமத்தின் தொழிலாளர் விரோத முன்னுதாரணங்கள்

1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.

தொழிலாளர் தற்கொலைகள்:

1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர்.

1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளர் முறை ஒப்பந்தம் – வேலைப் பாதுகாப்பின்மையைப் புகுத்துதல்:

செலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

கதவடைப்பு:

தொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தொழிற்சங்கங்களை உடைப்பது:

1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீடித்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.

படுகொலைகள்:

குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.

டாடாவுக்கு டாடா:

நாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

ஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.

டாடாக்களின் தரகு வரலாறு போதை மருந்து கடத்தல்:

1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போவிட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)

எம்ப்ரஸ் (பேரரசி):

1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.

பிரிட்டானிய விரிவாக்கத்துக்குத்  தூபம் போடும் வேலை:

முதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”

பிரிட்டானியப் படைக்கு டாடா சப்ளை:

1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.

(முற்றும்)
(போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.)

அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!

12
நீரா ராடியா
நீரா ராடியா

மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள்,  அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.

2009-இல் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது,  யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி, என்ன துறை ஒதுக்கப்படும், தொலைத்தொடர்பு அமைச்சர் நியமனத்தின் பின்னணியில் அம்பானியும் டாடாவும் எப்படி  கா நகர்த்துகிறார்கள் என்ற விவரங்களும், நீரா ராடியா இதில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அவரது தொலைபேசி உரையாடல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன. பத்மசிறீ விருது பெற்ற என்.டி.டிவி-யின் நிர்வாக ஆசிரியரான பர்கா தத், பிரபல பத்திரிகையாளரான வீர் சங்வி ஆகியோர் நீரா ராடியாவுடன் நடத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள், பத்திரிகையாளர்கள் எப்படி கார்ப்பரேட் தரகர்களாக உள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் கள்ளக்கூட்டுச் சேர்ந்து உருவாக்கும் செய்திகளே நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பிரபலமாக்கப்படுவதையும் இது நிரூபித்துக் காட்டுகிறது.

முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டுச் சில ஊடகங்களுக்கு கோடிகளை வாரியிறைத்ததன் விளைவாக, இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம் தரகுப் பெருமுதலாளியான டாடா, தனது நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளராக – அதிகாரத் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இரகசியமாகப் பதிவு செய்து, அலைக்கற்றை ஊழலுக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட விவகாரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் என்று சாடுகிறார். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகத் தனிநபர் உரிமையையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதால்,  நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் உரையாடியாதை ஊடகங்களில் வெளியிடுவது தன்னுடைய தனிநபர் உரிமையில் தலையிடும் மனித உரிமை மீறலாகும் என்று சீறுகிறார். அரசின் பொறுப்பிலுள்ள இந்த உரையாடல் பதிவுகளை வெளியே கசிய விட்டது யார், அல்லது யார் திருடினார்கள் என்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் திரட்ட அரசே இத்தகைய அதிகாரத் தரகு நிறுவனங்களை அமர்த்திக் கொண்டது. அந்தத் தரகர்கள் மூலம் பல அந்நியக் கம்பெனிகள் கோடிகளை விழுங்கிக் கொள்ளையடிக்க அரசே உடந்தையாக நின்றுள்ளது. அது நியாயம் என்றால், அதே தரகு வேலையைச் செய்துள்ள நீரா ராடியா மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்?  இப்போது அமலாக்கப்பிரிவும் மையப்புலனாவுத் துறையும் நீரா ராடியாவிடம் விசாரிப்பதாக ஊடகங்கள் பரபரப்பூட்டினாலும், கொள்ளையடித்த முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யவோ, தண்டிக்கவோ அடிப்படை ஏதாவது இருக்கிறதா?  டாடா போன்ற தரகுப் பெருமுதலாளிகளின் பொதுக்கருத்துக்கு எதிராக அரசும் நீதித்துறையும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்பத்தான் முடியுமா?

__________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஊழல் பற்றி ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்த போதிலும், இதில் மக்களின் கவனம் திரும்பிவிடாதபடி காங்கிரசும் தி.மு.க.வும் கவனித்துக் கொண்டன. கருணாநிதி குடும்பச் சண்டையில் இந்த ஊழல் மீண்டும் புகையத் தொடங்கிய போதிலும், பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட தற்காலிக சமரசத்துக்குப் பின்னர் அது ஈரப் போர்வையால் மூடப்பட்டது. நீதிமன்றத்தின் கண்டங்கள், கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த தொலைபேசி உரையாடல்கள் முதலானவற்றைத் தொடர்ந்து இந்த ஊழல் மீண்டும் பரபரப்பாகி, தொலைத்தொடர்புத் துறையின் தி.மு.க. அமைச்சரான ராசா இப்போது பதவி விலகியுள்ளார்.

ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா செல்போன்கள் இயங்க ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கற்றைக் கதிர்கள் அவசியம். வான்வெளியில் உள்ள ரேடியோ ஃபிரீக்வன்சி ஸ்பெக்ட்ரம் எனும் அலைவரிசையைக் கொண்டு செல்போன்களை இயக்க முடியும். தனியார்மயமும் தாராளமயமும் திணிக்கப்பட்ட பிறகு, 2001 முதல் பொதுச்சொத்தான அலைக்கற்றைத் தனியாருக்கு ஒதுக்கித் தரப்பட்டதில் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கோடிகளைக் குவித்துக் கொண்டன.

பின்னர், புகைப்படங்கள் – வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளும் புதிய அம்சங்கள் கொண்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) அறிவியல் வளர்ச்சியில் வந்தது. இதற்கான ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சரான ராசா, தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ரூ. 1,76,000  கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய ராசாவோ, “நான் எந்தக் கையாடலும் செய்யவில்லை, சட்டபூர்வமாகத்தான் செய்துள்ளேன், பிரதமரிடம் தெரிவித்துவிட்டுத்தான் செய்தேன்” என்கிறார்.

ஆனால், 2ஜி அலைக்கற்றை விற்பனை குறித்து அரசின் தணிக்கைச் செயலாளரின் யோசனைகள், பிரதமரின் கடிதம், சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களின் கருத்துக்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கள் எனப் பலவற்றையும்  அமைச்சர் ராசா புறக்கணித்துள்ளார். 2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். வெளிப்படையான ஏல முறையைப் புறக்கணித்து முதலில் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம் என்ற அடிப்படையில் 122 பேருக்கு ஒரே நாளில் அதிரடியாக உரிமம் வழங்கினார்.  தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத பெயர் தெரியாத தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் வீட்டுமனை நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அந்த நிறுவனங்கள் அடுத்த நிமிடமே அந்த ஒதுக்கீட்டை வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள தாராள அனுமதியும் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராசா இதுவரை பதிலளிக்கவில்லை. இதில் ராசாவும் ராசாவுக்குப் பின்னால் உள்ளவர்களும் ஆதாயமடைந்தது எத்தனை கோடிகள் என்பதும் இதுவரை தெரியவில்லை.

ராசாவின் ஒப்புதலுடன்தான் தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் முதலான வீட்டுமனை நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன.  ஷாகித் பாவ்லா, வினோத் கோயங்கா ஆகியோருக்குச் சொந்தமான ஸ்வான் டெலிகாம், 1,537 கோடி கொடுத்து 13 தொலைத்தொடர்பு வட்டங்களைப் பெற்றது. மொரீஷியசைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது 44.73 சதவீதப் பங்குகளை ரூ.3,217 கோடிகளுக்கு விற்றது. இதன்படி பார்த்தால், ஸ்வான் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் மதிப்பு ரூ.7,192 கோடிகளாகும். இப்படி யுனிடெக், எஸ் டெல், டாடா டெலிசர்வீஸ்  – எனப் பல்வேறு நிறுவனங்கள் தமது பங்குகளைப் பல்லாயிரம் கோடிகளுக்கு உடனடியாகவே விற்று ஏப்பம் விட்டன. இந்த உத்தேச மதிப்பை வைத்துத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அரசுக்குக் கிடைத்ததோ வெறும் ரூ.9,014 கோடிகள்தான்.

ஒரு முதலாளி இலஞ்சம் கொடுத்து உரிமம் அல்லது ஒப்பந்தத்தைப் பெறுவது தவறல்ல; அது அந்த முதலாளியின் தொழில் முனைப்பு; அந்த உரிமத்தை அந்த முதலாளி ஊக வணிகத்தில் விட்டு, கூடுதலாக மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளலாம், இலாபமடையலாம்; அது தவறில்லை என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை. அதன்படியே 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அதை ஊக வணிகத்தின் மூலம் பல்லாயிரம் கோடிகளுக்குபப் பல முதலாளிகள் விற்றுக் கொழுத்த ஆதாயம் அடைந்திருப்பதை எப்படித் தவறானது, முறைகேடானதென்று குற்றம் சாட்டமுடியும் என்பதுதான் தனியார்மயத் தாசர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் எழுப்பும் கேள்வி.

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம்-தாராளமயம் தொடங்கப்பட்ட 1991-92 ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ,3442 கோடிகள். 2000 ஆண்டு முதல் 2002 -க்குள் பால்கோ, இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம், வி.எஸ்.என்.எல், ஐ.பி.சி.எல், உள்ளிட்ட 9 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றபோது, அந்நிறுவனங்களின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பையும் முதலாளிகளுக்குக் கொழுத்த ஆதாயத்தையும் ஏற்படுத்தியதாக அரசின் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையே குற்றம் சாட்டியது.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்  தொலைத்தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கு வசதியாக தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அப்போது நடந்த ஏலத்தில் அடுத்த பத்தாண்டுகளில்  ரூ.9,45,000 கோடி வருமானம் தரத்தக்க இச்சேவைப் பிரிவுகள் டாடா, எஸ்ஸார், ரிலையன்சு, பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு வெறும் 1,15,000 கோடி ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான தொலைத்தொடர்புத் துறையின் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொண்டு கொழுத்த ஆதாயமடைந்த இத்தகைய நிறுவனங்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை நிலுவையான ஏறத்தாழ 8,000 கோடிகளைக்கூடத் தள்ளுபடி செய்ய வைத்து ஏப்பம் விட்டன. பின்னர் வந்த வாஜ்பாய் அரசு தனியார்மய-தாராளமயத்தைத் தீவிரப்படுத்தி புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையால் அடுத்த பத்தாண்டுகளில் அரசுகக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்த போதிலும் அவசரஅவசரமாக இதை அறிவித்து முதலாளிகளின் கொள்ளைக்குக் காவடி தூக்கியது, பா.ஜ.க.

இப்படி காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சிகள் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி, காடுகள், மலைகள், கனிம வளங்கள், ஆறுகள், குளங்கள், மணல், தண்ணீர் முதலான அனைத்தையும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தன. கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகையை அம்பானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோடு, வரிச் சலுகைகளையும் வாரியிறைத்தது அரசு. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி  ரிலையன்சு நடத்திய மோசடியால் அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போதிலும், ரிலையன்சுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. போஸ்கோ நிறுவனம், ஒரிசாவில் ஆலையை நிறுவுவதற்கான வெகுமதியாக, ஓராண்டுக்கு ஏறத்தாழ 96,000 கோடி மதிப்புடைய இரும்புத் தாதுவை அள்ளிச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டது.

அதேபோலத்தான் விண்வெளியில் உள்ள பொதுச் சொத்தான அலைக்கற்றையும் அற்ப விலைக்கு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்த சுக்ராம், பிரமோத் மகஜன், தயாநிதி மாறன் ஆகியோர் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்குத் துணைநின்று ஆதாயமடைந்துள்ளனர். பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார். பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்ட பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகுப் பெருமுதலாளித்து கும்பல்களும், அதிகார வர்க்கமும், காங்கிரசும், ஊடகங்களும் இப்போது விவகாரம் அம்பலமானவுடன், பந்தி பரிமாறிய ராசாவை மட்டும் பலிகொடுத்துவிட்டு, மற்றவர்களைத் தப்புவிக்க முயற்சிக்கின்றன. ஊழல் மோசடியில் சிக்கியுள்ள அமைச்சர் ராசாவைத் தண்டிப்பதென்பது மொத்த விவகாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இத்தகைய தனியார்மயச் சூறையாடல்களைக்  கொள்கையாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தி வருவதுதான் அதைவிட முக்கியமானது.

இத்தகைய கொள்ளைகள் அம்பலமாகி, விசாரணையின் போது நீதித்துறை கேள்விகள் எழுப்புவதை வைத்து ஏதோ கிடுக்கிப்பிடி போடுவதாகவும் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என்பது போலவும் ஊடகங்கள் சூடேற்றுகின்றன. நீதித்துறையின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால்,விசாரணயின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்பு வேறு விதமாகவே உள்ளது. அரசுத்துறை நிறுவனங்கள், பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று காசாக்குவது என்பதுதான் அரசின் கொள்கை. அக்கொள்கை விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதுதான் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் நீதித்துறை தெரிவித்துள்ள கருத்து. தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையிடுவது சட்டப்படி குற்றமல்ல, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் வர்த்தகச் சுதந்திரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கோகோ கோலாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது, கேரள உயர்நீதிமன்றம்.

இப்போது நாடாளுமன்றத்தில் பெருங்கூச்சல் போடும் ஓட்டுக்கட்சிகள் எவையும் அலைக்கற்றை ஊழலால் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.76 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த பெருமுதலாளிகளிடமிருந்து அதனைப் பறிமுதல் செய் என்று கோரவில்லை. தொடரும் இத்தகைய பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் காரணமான தனியார்மய -தாராளமயக் கொள்கையை எதிர்க்க முன்வரவுமில்லை. மாறாக, கூட்டுச் சேர்ந்து கும்மியடிக்க நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவை நிறுவக் கோருகின்றன. ஆனால், 1987-இல் போபர்ஸ் ஊழல் தொடங்கி இதுவரை அமைக்கப்பட்ட நான்கு நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்களின் விசாரணையில் ஒருவர்கூடக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

பெருகிவரும் இத்தகைய கொள்ளைகளுக்கும் ஊழல்களுக்கும் மோசடி முறைகேடுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது, தனியார்ம-தாராளமயக் கொள்கை. அதைச் சட்டபூர்வமாக்குவதுதான் இன்றைய முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை. இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கு உரிமம் கோருவதுதான் ஓட்டுச்சீட்டு முறை. மோசடிகளை மூடிமறைக்கவும், ஊழலில் ஊறித்திளைக்கவும்தான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறையும் அதன் சட்டம், நீதி, போலீசு, புலனாவு அமைப்புகளும் துணை நிற்கின்றன. இந்நிலையில், ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மயம்-தாராளமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவது ஒன்றுதான், தொடரும் இத்தகைய தனியார் பெருமுதலாளிகளின் கொள்ளையையும் சூறையாடல்களையும் தடுப்பதற்கான ஒரேவழி.

__________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!
வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள்.

மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை.  இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை.  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.

ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.  அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது வீட்டிற்குச் செல்லவில்லை.  மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.  உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.

அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.  வெல்லட்டும் அவரது போராட்டம்!  வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !

டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே ரகளையில் ஈடுபட்டதோடு, சையத் ஷா கீலானி, அருந்ததி ராய் ஆகியோரைத் தாக்கவும் முனைந்தது.  இக்கருத்தரங்கையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஷ்மீரின் வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அடித்து நொறுக்கியது, அக்கும்பல்.

தில்லி போலீசின் அனுமதி பெற்று, சட்டபூர்வமான முறையில்-அமைதியான வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கருத்தரங்கின் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய இக்கும்பல், அக்கருத்தரங்கில் உரையாற்றிய அருந்ததி ராயையும் சையத் ஷா கீலானியையும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சாமியாடி வருகிறது.  சில ‘தேசிய’ப் பத்திரிகைகள் இந்துத்துவா கும்பலின் இந்த பாசிச கோரிக்கைக்கு ஆதரவாக செய்திகளையும், தலையங்கக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.  சில தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து புதுப் பணக்கார கும்பலைக் கூட்டிவைத்து “டாக் ஷோ’’க்களை நடத்தித் தூபம் போட்டன.

அருந்ததி ராய் அக்கருத்தரங்கில், காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்தை, இந்தியாவின் மையப் பகுதியில் நக்சல்பாரிகள் நடத்தும் போராட்டத்தோடும், நர்மதை அணையை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டத்தோடும் ஒப்பிட்டுப் பேசியதோடு,  “போராடும் பழங்குடியின மக்களின் கரங்களில் உள்ள வில்லும் அம்பும், காஷ்மீர் இளைஞர்களின் கரங்களில் உள்ள கற்களும் அவசியமானவைதான்.  ஆனாலும், அதற்கு மேலும் நமக்குத் தேவைகள் உள்ளன.   நாகலாந்து, மணிப்பூர், சட்டிஸ்கர், ஒரிசா, காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீதிக்காகப் போராடி வரும் மக்கள் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை’’த் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து அம்மாநில மக்களின் கருத்தை அறிவதற்காக மைய அரசு நியமித்துள்ள மூவர் குழுவைப் புறக்கணிக்கக் கோரி அக்கருத்தரங்கில் அறைகூவல் விடுத்த சையத் ஷா கீலானி, “சுயநிர்ணய உரிமை, காஷ்மீர் மக்கள் அனைவரின், காஷ்மீரில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரின் அடிப்படை உரிமையாகும்;  காஷ்மீர் மக்களின் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் ஆதரிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும்” என உரையாற்றினார்.

நீர், நிலம், கனிம வளம் என நாட்டின் பொதுச் சொத்துகள் அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பது தேசத் துரோகமா? இல்லை, அந்த அநீதியைத் தடுப்பதற்குப் போராடி வரும் மக்களிடம் ஐக்கியப்பட்டுப் போராடுங்கள் எனக் கோருவது தேசத் துரோகமா?  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பகுதிபகுதியாக ஆட்சியாளர்கள் பட்டா போட்டுக் கொடுப்பதைக் காட்டிலும், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் எனக் கோருவது எந்த விதத்தில் தேசத் துரோகமாகிவிடும்?

சண்டிகரில் காஷ்மீர் தொடர்பான கூட்டத்தை அச்சுறுத்திய இந்துத்வ கும்பல்

இந்துத்துவா கும்பலோ அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதை நியாயப்படுத்துவதற்காக, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை ” என அருந்ததி ராய் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசியதாகவும் குறிப்பிடுகிறது.  சில முதலாளித்துவ அறிஞர்கள், “அருந்ததி ராய் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியிருந்தாலும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை; எனவே, அவரைக் கைது செய்ய வேண்டியதில்லை” என இப்பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இந்த இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று எதிரானது போலத் தோற்றமளித்தாலும், சாரத்தில் இந்துத்துவா கும்பலும், இந்த முதலாளித்துவ அறிஞர்களும் காஷ்மீரின் வரலாற்றை மூடிமறைக்கிறார்கள் என்பதே உண்மை.

‘‘காஷ்மீர் 1947-இல் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டதே தவிர, அம்மாநிலம்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது கிடையாது” என்பது அருந்ததி ராயின் சொந்தக் கற்பிதம் கிடையாது.  அது ஒரு வரலாற்று உண்மை.  மேலும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அப்பொழுது இந்திய அரசு ஒத்துக் கொண்டது.  இந்த வரலாற்று உண்மைகளை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடம் எடுத்துக் கூறுவதல்ல, அவ்வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட  முயலுவதுதான் துரோகமும் நயவஞ்சகமும் ஆகும்.

டைம்ஸ் நௌ, நியூஸ் 24, பயோனீர் உள்ளிட்ட சில ஊடகங்கள் அருந்ததி ராயைத் தண்டிக்கக் கோரும் விவகாரத்தில் இந்துத்துவா கும்பலைவிடக் கேவலமாக நடந்து கொண்டன.  அருந்ததி ராய் அக்கருத்தரங்கில் இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்ததாக இந்த ஊடகங்கள் செய்திகளைத் தயாரித்து வெளியிட்டன.  அருந்ததி ராய் இந்த அண்டப்புளுகை அம்பலப்படுத்திய பின்னும், இந்திய தேசியவெறி பிடித்த இந்த ஊடகங்கள் ஒரு புளுகுணிச் செய்தியை வெளியிட்டதற்காக வெட்கப்படவுமில்லை; மறுப்பு வெளியிடவும் இல்லை.

அக்கருத்தரங்கில் காஷ்மீருக்குச் சென்று மடிந்து போகும் ஏழை இந்தியச் சிப்பாய்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருந்ததி ராய், அதற்கு மாறாக, இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்துப் பேசியிருந்தாலும்கூட  அதில் தவறொன்றும் காண முடியாது.  துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களை வீசும் காஷ்மீர் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டுபோ அதற்குத் தண்டனையாக அவர்களின் விரல் நகங்களைப் பிடுங்கி எறியும் இந்திய இராணுவம், காஷ்மீரத்துப் பெண்களிடம் மட்டும் கண்ணியத்துடன் நடந்து கொண்டிருக்குமா?

அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது.  பின்னர், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக மைய அரசு கூறினாலும், எந்த நேரத்திலும் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடுக்கும் நிலையில்தான் இப்பிரச்சினையை தில்லி போலீசிடம் விட்டு வைத்துள்ளது.  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இப்பிரச்சினை பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் டெல்லி போலீசுக்கு உண்டு” எனக் கூறியிருப்பதில் இருந்தே காங்கிரசின் கபடத்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

காங்கிரசின் இந்த ஜனநாயக வேடத்தைக்கூட இந்துத்துவா கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  அருந்ததி ராய் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடக் கோரி அக்கும்பல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

ஏதோ சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் கண்ணியவான் போல வழக்குத் தொடுத்துள்ள இந்துத்துவா கும்பல், இன்னொருபுறம் தனது மகளிர் அணியை இறக்கிவிட்டு அருந்ததி ராய் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்து, அவரை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது.  இத்தாக்குதல் ஏதோ யாருக்கும் தெரியாமல் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் அல்ல.  “ஓவியர் ஹுசைனை வேட்டையாடியதைப் போலவே அருந்ததி ராயையும் வேட்டையாடுவோம்” என பஜ்ரங் தள் கும்பல் பத்திரிகைகளுக்கு செய்தியளித்துவிட்டு நடத்திய தாக்குதல் இது.

குறிப்பாக, என்.டி.டிவி., டைம்ஸ் நௌ, நியூஸ் 24 ஆகிய மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாகவே அருந்ததி ராயின் வீட்டின் முன் குவிந்துவிட்டனர்.  இதனைத் தாக்குதல் செய்தியை முதல் ஆளாக ஒளிபரப்பிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறாகப் பார்ப்பதா? இல்லை,  இந்துத்துவா கும்பலுக்கும் சில தேசிய செய்தி ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் காட்டும் சான்றாகப் பார்ப்பதா?  மைய அரசு, முன்னரே அறிவித்துவிட்டு நடந்த இத்தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன் மூலம், இவ்விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்படுவதாகக் கூறலாம்.

அருந்ததிராயின் வீட்டையும் அவரையும் தாக்க முயற்சித்த இந்துத்வ கும்பல்

டெல்லிக்கு அடுத்து, ஒரிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் நடந்த காட்டு வேட்டைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அருந்ததி ராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிய இந்துத்துவா கும்பல், அக்கருத்தரங்கை நடத்தவிடாமல் ரகளையிலும் இறங்கியது.  இவ்வன்முறையில் ஐந்து பேர் காயமுற்றனர்.  அருந்ததி ராய், இந்துத்துவா கும்பலின் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாததோடு, காஷ்மீர் பிரச்சினை குறித்து தான் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் அறிவித்திருக்கிறார்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் காஷ்மீர் பிரச்சினை குறித்த நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு, உரையாற்றத் தொடங்கும் முன்பே ரகளையில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பல், அவரை நெட்டித் தள்ளி வன்முறையில் இறங்கியது.  “அவரின் அரசியல் கருத்துக்களுக்காகத்தான் மிர்வாயிஸ் தாக்கப்பட்டதாக’’க் கூறி, இந்துத்துவா கும்பலின் இந்த வன்முறையை விசிறிவிட்டுள்ளார், காங்கிரசின் கூட்டாளியும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் பாரூக்.

அருந்ததி ராயும், சையத் ஷா கீலானியும், மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் காஷ்மீர் பிரச்சினை குறித்து என்ன பேசி வருகிறார்களோ, அதுதான் காஷ்மீர் மக்களின் பொதுக் கருத்தாகும்.  இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைக்கு எதிரான இக்கருத்தைப் பேசுபவர்கள் மீது வழக்கு பாயும்; தாக்குதல் தொடுக்கப்படும் என ஒருபுறம் காட்டிவிட்டு, இன்னொருபுறம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, காங்கிரசு கும்பல்.

இந்துத்துவா கும்பலோ, முசுலீம் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதில், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் காங்கிரசைவிடத் தனக்குத்தான் அதிக அக்கறை உண்டு எனக் காட்டிக் கொள்ள தற்பொழுது காஷ்மீர் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது.  அருந்ததி ராயின் பேச்சை மட்டுமல்ல, காங்கிரசு அரசு அமைத்துள்ள மூவர் குழுவின் சில்லறை ஆலோசனைகளை எதிர்ப்பதன் மூலமும்; அருந்ததி ராயைக் கைது செய்யாத காங்கிரசு அரசு, அஜ்மீர் வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைக் கைது செய்வதாகப் புலம்புவதன் மூலமும் தனது இந்து-இந்திய தேசிய வெறியைக் காட்டி வருகிறது, அக்கும்பல்.
_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.     முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
2.     2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
3.    அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்
4.    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!
5.    நோக்கியாவின் கொலைக்கரங்கள்
6.    தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
7.    தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
8.    பிரம்மரத மரியாதைக்குத் தடை: ஒடுங்கியது பார்ப்பனத் திமிர்! வென்றது புரட்சியாளர்களின் போராட்டம்!!
9.    தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்
10. அமெரிக்க பயங்கரவாதம்: புதைக்கப்பட்ட உண்மைகள்  பூதமாகக் கிளம்பின!
11.   விக்கிலீக்ஸ் தோண்டியெடுத்த ”அடுத்த பூதம்!”
12.  வெள்ள  நகரமானது, கடலூர் நகரம்!
13.  டாடா குழுமத்தின் கோர முகம் (சென்ற இதழின் தொடர்ச்சி…)
14.  இந்தியா, அமெரிக்காவின் சுமைதாங்கியானது
15.  ”ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! தேசிய அவமானம்!!” -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
16.  போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்
17.  காஷ்மீர்:  காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!
18.  வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

வீரபாண்டிய கட்டபொம்மன்

நாள் : 17.10.1799
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”

“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.

– கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

_______________________________________________

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.

_______________________________________________

இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.

இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.

பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.

_______________________________________________

கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.

1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.

நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.

_______________________________________________

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.
இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.

கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத்தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத் தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டை

கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.

தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.

இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!

ரத்தன் டாடா

ரத்தன் டாடாஉலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை.

“இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையை உத்திரவாதம் செய்கிறது. உயிர் வாழும் உரிமை என்பது ஒரு குடிமகன் தனது தனிப்பட்ட இரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையையும் (right to privacy) உள்ளடக்கியது.. தனிப்பட்ட உரையாடல்கள் பொது அரங்கில் அம்பலமாகாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என்று முறையிட்டார் டாடாவின் வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.

“தனிப்பட்ட உரையாடல் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?” என்று திடீரென்று நீதிபதி கேட்டுவிடவே, “எப்போது இரவு விருந்து அருந்தப் போகிறீர்கள், என்பன போன்ற உரையாடல்களை சொல்கிறேன்” என்று சமாளித்து விளக்கமளித்தார் டாடாவின் வக்கீல்.

இந்த பதிலைக் கேட்டு சட்ட அறிவும், ஜனநாயக உணர்வுமற்ற பாமரர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் சிரிக்கவில்லை. உரையாடலைப் பதிவு செய்த மத்திய அரசுக்கும், அவற்றை வெளியிட்ட அவுட்லுக், ஓபன் போன்ற பத்திரிகைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நகைக்கத்தக்கதாயினும் இதுதான் நடந்திருக்கும் உண்மை.

ரூ. 1,76,000,00,000,000 என்று உயிரற்ற பூச்சியங்களால் குறிக்கப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து, வாய்க்குள் உயிரையும் ஊதி விட்டிருக்கிறார் நீரா ராடியா என்ற அதிகாரத் தரகு தேவதை. கருணாநிதி குடும்பத்துக்குள் நடக்கும் குத்துவெட்டு சீரியல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நேயர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போதே, “தன்னுடைய உயிர் வாழும் உரிமை பறிபோய் விட்டது” என்று அலறுகிறார் டாடா.

விபச்சார விடுதித் தலைவியின் டயரியிலிருந்து உதிரும் அமைச்சர்கள், நடிகைகள், தொழிலதிபர்களின் தொலைபேசி எண்களைப் போல, ராடியாவின் ஒலிநாடா பல உண்மைகளை உதிர்க்கிறது. ராஜா, கனிமொழி, மாறன், வெங்கைய நாயுடு முதலான அரசியல்வாதிகள், சோனியா, ராகுல், புத்ததேவ், மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பர்க்கா தத், வீர் சங்வி முதலான பத்திரிகை தூண்கள், பேஜாவர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், கடைசியாக நீதிபதிகள்…!

இந்திய ஜனநாயகத்தின் ஏட்டு முதல் எஸ்.பி வரை அனைவரும் முச்சந்தியில் நிற்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்புகள், பத்திரிகையாளர்களின் அறச்சீற்றங்கள், எம்.பிக்களின் நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டவை என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.

இத்தகைய தனிப்பட்ட உரையாடல்கள் அம்பலமாவது இந்திய ஜனநாயகத்தின் உயிர் வாழும் உரிமையையே பறிக்கும் விபரீதமல்லவா? ஸ்பெக்ட்ரம், கோதாவரி எரிவாயு, சிங்குர் விளைநிலம், காடுகள், கனிவளங்கள் என பொதுச்சொத்துகளைக் கொள்ளயடித்துத்தான் முதலாளித்துவம் உயிர்வாழ்கிறது எனும்போது, அந்தக் கொள்ளையின் சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் வெளியிடுவது முதலாளித்துவத்தின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தும் அமெரிக்காவின் ‘இராஜதந்திரப் பரிமாற்றங்கள்’ உலகெங்கும் விரவியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறித்துவிடும் என்று அலறியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். உண்மைகளும் கூட உலகமயமாகித்தான் இருக்கின்றன!

“உயிர் வாழும் உரிமை என்பது விலங்குகளைப் போல உயிர் தரித்திருக்கும் உரிமை அல்ல, மனித கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை” என்று குடிசை இடிப்பை எதிர்த்துத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் முன்னொரு காலத்தில் வியாக்கியானம் அளித்திருக்கிறது.

“பசி என்ற விலங்குணர்வை ஆற்றிக் கொள்வதற்கு புழுத்துப் போகும் அரிசியை ஏழைகளின் வயிற்றில் எறியக்கூடாதா?” என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேட்டபோது, அவ்வாறு இலவசமாகக் கொடுப்பது முதலாளித்துவ சந்தையின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகும் என்பதால் கொதித்தெழுந்து எதிர்த்தார் மன்மோகன் சிங். அந்த உரிமைதான் இப்போது டாடா கேட்கும் உரிமை. பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?

_____________________________________________

– புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 2010
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி!

பூலித்தேவன்
பூலித்தேவன்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். “தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?” என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப், மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.

எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை, பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்த கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.

திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதர் அலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.

பூலித்தேவனின் மரபுவழி ஆயுதங்கள்
வெள்ளையரின் துப்பாக்கிப் படைகளை முறியடித்த பூலித்தேவனின் மரபு ரீதியான ஆயுதங்கள்

இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன், 1760 – 61ஆம் ஆண்டுகளில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.

அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.

பூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள், பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு, அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது. அதேசமயம் இன்றைக்கு நடராஜன் (சசிகலா) போன்ற அரசியல் தரகர்களும், செந்தில், கார்த்திக், விவேக் போன்ற சாதிவெறிக் கோமாளிகளும், திருநாவுக்கரசர், மதுரை ஆதீனம் போன்ற அரசியல் வாழ்வில் கேவலமான பண்புகளின் ‘சொந்தக்காரர் களும்’ சாதியின் பெயரால் பூலித் தேவனுக்கு நினைவு விழா எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

இதுவரை

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்
ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

ஹைதர் அலி
ஹைதர் அலி - பிரெஞ்சு ஓவியம்

“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும்….”
ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை, ஜனவரி, 1782.

முகலாய சாம்ராச்சியம் நொறுங்கி, அதன் கவர்னர்களாக ஆங்காங்கே நியமிக்கப்பட்ட நிஜாம், ஆற்காட்டு நவாப் போன்றவர்கள் தம்மை மன்னர்களாகப் பிரகடனம் செய்து கொள்ள, அவர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களும் சிற்றரசர்களும் அவர்களது அதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுக்க, முடிவில்லாத போர்களால் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் சின்னாபின்னமாக்கப்பட்டுவந்த காலம்தான் ஹைதர் காலம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியான இந்தக் காலகட்டத்தில் இந்துஸ்தானத்தின் பல்வேறு இடங்களில் தம் வணிக மையங்களை உருவாக்கியிருந்தனர் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர். இந்துஸ்தானத்தின் பிரபுக்குலம் தமக்குள் கட்டி உருண்டு கொண்டிருந்ததால், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவந்த ஆடம்பரப் பொருட்களை இங்கே சந்தைப்படுத்தவும் முடியாமல், மலிவான தரமான இந்தியத் துணிகளின் ஆக்கிரமிப்பால் தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் தொழில்வளர்ச்சியைக் காப்பாற்றவும் முடியாமல் ஆங்கிலேய ஆளும் வர்க்கங்கள் தவித்து வந்த காலமும் அதுதான்.

‘இந்துஸ்தானத்’தின் பொருட் சந்தையைக் காட்டிலும் போர்ச்சந்தை பெரிதாக இருப்பதால், வணிகம் செய்து பொருளீட்டுவதைக் காட்டிலும், அந்த வணிகத்தைப் பாதுகாப்பதற்காகத் தாம் கொண்டுவந்த படையை வாடகைக்கு விட்டுப் பொருளீட்ட முடியும் என்பதை கும்பினிக்காரர்கள் புரிந்து கொண்டார்கள். போரிடும் சமஸ்தானங்களின் சார்பில் கூலிப்படையாய்ச் சென்றார்கள். வரி கட்டாத பாளையக்காரர்களை மிரட்டி வரி வசூலிக்கும் அடியாள் படை வேலையும் செய்தார்கள். பாளையக்காரர்களிடம் வரி தண்டும் உரிமையையும் வணிகம் செய்யும் உரிமையையும் பெற்றார்கள்.
கட்டுப்படாத பாளையங்கள் மீது படை நடத்திப் போர் புரிந்து வரி வசூலிக்கும் ‘சிரமம்’ கூட இல்லாமல், உட்கார்ந்த இடத்திலிருந்து கூலிப் படையை வைத்தே இராச்சியம் ஆள முடியுமென்ற இந்த அரிய வாய்ப்பை நழுவவிட விரும்பாத நவாப்பு, பூலித்தேவனுக்கெதிராகக் கும்பினிப் படையை ஏவிவிட்ட காலமும் அதுதான்.

ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்”. அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.

எனவே ‘இந்துஸ்தானத்’தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலப்பிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹைதரின் கொள்ளுப்பாட்டன் ஒரு தர்காவின் பணியாள். தாழ்தப்பட்ட முசுலிம்களின் சூஃபி வழிபாட்டு முறையையே ஹைதரின் குடும்பம் பின்பற்றியது என்பதிலிருந்து அவரது சமூகப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள இயலும். ஆற்காடு திப்பு மஸ்தான் தர்ஹாவில் நேர்ந்து கொண்டு அவர் நினைவாகத் தன் மகனுக்குத் திப்பு என்று பெயர் சூட்டினார் ஹைதர்.

குதிரைப்படை வீரனாக மைசூர் உடையார் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது மூன்றாவது கர்நாடகப் போர்களில், உடையாரின் குதிரைப்படைத் தளபதியாக பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து போரிட்ட ஹைதர், திண்டுக்கல்லின் பவுஜ்தாராக (கவர்னர்) உடையாரால் நியமிக்கப்பட்டார்.

ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்
ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்

மன்னன் இறந்த பின் அரண்மனைச் சொகுசை அனுபவிப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத மன்னனின் வாரிசுகளை ‘கவுரவமான அரியணையில்’ ஓரமாக அமர்த்திவிட்டு மைசூர் அரசை விரிவுபடுத்தத் தொடங்கினார் ஹைதர்.

1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

படைகளுக்கும் வரிவசூலுக்கும் பாளையக்காரர்களின் தயவைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு மையப்படுத்தப்பட்ட இராணுவத்தையும் அரசையும் உருவாக்குவதை நோக்கித் திரும்பியது ஹைதரின் கவனம். மைசூர் அரசின் கீழிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாளையக்காரர்களை நீக்கிவிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யும் மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை உருவாக்கினார் ஹைதர்.

சிப்பாய்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் என்னும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ஹைதர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஹைதருடைய படைவீரர்களின் எண்ணிக்கையோ 1,80,000. துப்பாக்கிகள் பீரங்கிகள் ஆகியவற்றை உருவாக்கவும் இயக்கவும் 210 ஐரோப்பியர்களையும் பணிக்கு அமர்த்தியிருந்தார் ஹைதர்.

1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அதனைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி:

“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.”  ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

முதல் போரில் தோல்வி கண்டபின் நிஜாமுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க ஆங்கிலேயர்கள் ஹைதரை அழைத்தபோது அவர் அதற்கு இணங்கவில்லை. அதேபோல, பிளாசிப் போரில் ஆங்கிலேயர் வென்றுவிட்ட செய்தியறிந்த கணம் முதல் மராத்தியர்களையும் ஹைதர் எதிரியாகக் கருதவில்லை.

1780இல் தொடங்கி 1784இல் முடிந்த இரண்டாவது காலனியாதிக்க எதிர்ப்புப் போர்தான் ஹைதரின் கனவுப்போர். தன்னந்தனியே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்திக் கொண்டே, மராத்தாக்களையும் நிஜாமையும் இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஆங்கிலேயரைத் துடைத்தொழிக்க முயன்றார் ஹைதர். ஆனால், முதுகெலும்பில் தோன்றிய புற்றுநோய் அவரை 60வது வயதில் காவு கொண்டுவிட்டது.

மரணத்திற்குச் சில மணி நேரங்கள் முன், 1782 டிசம்பர் சித்தூர்ப் போர்க்களத்தில் இருந்தபடியே, மலபாரில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த தன் மகன் திப்புவுக்கு ஹைதர் எழுதிய கடைசி கடிதம் நெஞ்சை உருக்கும் ஓர் ஆவணம்.

அந்தக் கடிதத்தில் மைசூர் அரசின் பாதுகாப்பைப் பற்றி ஹைதர் கவலைப்படவில்லை. ஆசியாவில் கவுரவமான இடத்தைப் பெற்றிருந்த ‘இந்துஸ்தானம்’ சிதறிச் சின்னாபின்னமாகி விட்டதே என்று கலங்குகிறார். ‘இந்துஸ்தானத்’தின் மக்களுக்கு நாட்டின் மீதான நேசம் போய்விட்டதே என்று வருந்துகிறார். கவுரவத்தை இழந்து அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களின் துரோகமும், சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பும் காலனியாதிக்க எதிர்ப்புணர்வாக ஹைதரிடம் கருக்கொள்வதை நாம் காண்கிறோம்.

ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டி முனையாக மைசூர் விளங்கவேண்டும் என்பதுதான் திப்புவுக்கு ஹைதர் விட்டுச் சென்ற உயில்.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

விடுதலைப் போரின் வீர மரபு

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம். வரும் வாரம் முழுவதும் இந்த தொடர் வெளியிடப்படும்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006
______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்
 ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்
இந்திய இராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் நடத்தி வரும் மனித உரிமை மீரல்களை அம்பலப்படுத்தி பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

  • தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.
  • இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
  • இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
  • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
  • இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
  • இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
  • ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஐரோம் சர்மிளாஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.

சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.

அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.

இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்: