Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 827

அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!

மன் மோகன் சிங்அணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

இச்சட்டத்தை நிறைவேற்றினால்தான், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.  ஏனென்றால், அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து நிறுவப்படும் அணு மின் நிலையங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்திற்கு அணு உலைகளை/தொழில்நுட்பத்தை விற்ற அமெரிக்க நிறுவனங்கள் மீது நட்ட ஈடு கேட்டோ, கிரிமினல் குற்றம் சுமத்தியோ வழக்குத் தொடரக் கூடாது; அந்த அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள்தான் விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்கா விதிக்கும் நிபந்தனை.  இச்சட்டம் இப்படிபட்ட பாதுகாப்பை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அணு உலை இயந்திர பாகங்களை இந்தியாவிற்கு விற்க முன்வரும் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கிறது.

மன்மோகன் சிங் இச்சட்டத்தை நிறைவேற்றிய கையோடு, “அமெரிக்காவின் நலன்களுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை” எனச் சத்தியம் செய்யாத குறையாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.   ஆனால், இப்படிபட்ட சட்டம் எதுவுமில்லாமல் ரசிய உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணு உலைகள், மன்மோகன் சிங்கின் புளுகுணித்தனத்தையும், இச்சட்டம் அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் கொண்டு வரப்படுகிறது என்பதையும் ஒருசேர நிரூபிக்கின்றன.  இது மட்டுமல்ல, அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

அணு விபத்துக் கடப்பாடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.  பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை எதிர்த்ததால், அம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

‘‘அணு உலையை விற்ற நிறுவனம் அல்லது அதன் ஊழியர்களின் திட்டமிட்ட கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்திருந்தால், அணு உலையை இயக்கும் நிறுவனம் உலையை விற்ற நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு கோரலாம்” என்ற விதி (17ஆ) அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவும் இம்மசோதாவை எதிர்த்தது.  இந்த விதியை நிரூபித்து நட்ட ஈடு பெறுவது கடினம் என்ற போதிலும் அமெரிக்கா இந்த விதி சேர்க்கப்பட்டதை விரும்பவில்லை.

அமெரிக்கா முகஞ்சுளிப்பதை மன்மோகன் சிங்கால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் இந்த விதியை நீக்கக் கோரும் அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.  உறுப்பினர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்தது ஒருபுறமிருக்க, மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிவருடித்தனமும் அம்பலப்பட்டுப் போனதால், அவரது அரசு, “இது எங்களின் ஆலோசனைதான்” என்று கூறி இந்நீக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இம்மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் அணு உலை மற்றும் இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவதற்கான விதி 17(ஆ)-வில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.  இதன்படி, தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுடைய சாதனங்களை, பழுதான சாதனங்களை விற்றதால் விபத்து நேர்ந்ததாக நிரூபிக்கப்பட்டாலும், அணு உலையை இயக்கும் நிறுவனம் இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈட்டுத் தொகையைப் பெற முடியும் என்பது உள்ளட்ட 18 திருத்தங்களை முன்வைத்தது, நாடாளுமன்ற நிலைக்குழு.  போலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தவிர, பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் திருத்தங்களோடு, மசோதாவைச் சட்டமாக்க ஒப்புக் கொண்டனர்.

இப்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று விட்டு, அவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட ஆவணத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே தெரியாமல், ஒரு போர்ஜரி வேலை செய்தார் மன்மோகன் சிங். அம்மசோதாவில் தனித்தனியாக இருந்த 17(அ) என்ற விதிக்கும், 17(ஆ) என்ற விதிக்கும் இடையில் “மற்றும்” (and) என்ற விகுதியைச் சேர்த்து இரண்டையும் இணைத்தார்.  இதன் மூலம், அணு உலை இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடம், அணு உலையை இயக்கும் நிறுவனம் 17(ஆ) பிரிவில் காணப்படும் அம்சங்கள் குறித்துத் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே, நட்ட ஈடு பெற முடியும் என்ற நிபந்தனை நைச்சியமாக உருவாக்கப்பட்டது.  நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் “மற்றும்” (and) என்ற வார்த்தை மட்டும் அச்சிடப்பட்ட தாளை யாருக்கும் தெரியாமல் செருகியதன் மூலம் இந்த ஃபோர்ஜரி வேலையை நடத்தி முடித்தது, மன்மோகன் சிங் கும்பல்.

இந்த விசயத்தை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியதன் விளைவாக மன்மோகன் சிங் அரசின் போர்ஜரி வேலை சந்தி சிரித்தது. இதனையடுத்து மசோதாவிற்கு ஆதரவளிக்கச் சம்மதித்திருந்த பா.ஜ.க. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என அறிவித்தது.  ஃபோர்ஜரி அம்பலமாகி மாட்டிக் கொண்ட மன்மோகன் சிங் கும்பலோ, அதற்காக வெட்கப்படாமல், ஏதோ நாணயஸ்தர்கள் போல,”உறுப்பினர்களுக்கு விருப்பமில்லையென்றால், அந்த வார்த்தையை விலக்கிக் கொள்கிறோம்” எனக் கூறி அந்த வார்த்தையை நீக்கியது.

ஆனாலும் அக்கும்பல் அசராமல் அடுத்த சதியில் இறங்கியது.  நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்த திருத்தங்களைப் பரிசீலனை செய்வது என்ற பெயரில், “அணு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அணு உலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அதன் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர் என அணு உலையை இயக்கும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்” என்ற விதியை 17(ஆ) பிரிவில் சேர்த்தது மைய அமைச்சரவை.  மன்மோகன் சிங் கும்பலால் முன்னர் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைவிட அயோக்கியத்தனமானது இது.  ஏனென்றால், ‘விபத்து’ நேரிடும் எனத் தெரிந்திருந்தும், தனது இலாபத்திற்காக பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் திட்டமிட்டே புறக்கணித்தது என்பதை நிரூபிக்க ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதும், அதனை வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, இந்திய உச்சநீதி மன்றம்கூட ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதானே துரோக வரலாறு.

மன்மோகன் சிங் கும்பல் புகுத்திய இந்தப் புதிய விதியையும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால், அந்த விதியையும் கைவிட்டு, பின் பா.ஜ.க.-வின் ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, காங்கிரசு.  இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அடுத்தடுத்துப் பல மோசடிகளையும், சதிகளையும், பொகளையும் அவிழ்த்துவிட்டு அம்பலமாகி நிற்கும் மன்மோகன் சிங், அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை.  எதிர்க்கட்சிகளும் அவருடைய நாணயத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.  ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த ஒற்றுமைதான், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி அமெரிக்காவிற்காக மாமா வேலை செய்யலாம் என்ற துணிவையும், திமிரையும் மன்மோகனுக்கு வழங்கயிருக்கிறது.

சி.பி.எம். கோரியதைப் போல் நட்ட ஈட்டு வரம்பை 10,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தியும் விபத்துக்கான முழு பொறுப்பை அணு உலைகளை விற்கும் நிறுவனங்கள் மீது சுமத்தியும் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, இச்சட்டத்தை நாட்டு நலனை விரும்புவோர் ஆதரித்துவிட முடியாது.  ஏனென்றால், அமெரிக்க முதலாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்ல இச்சட்டத்தின் நோக்கம்.  இந்திய அணுசக்தித் துறையின் சுயசார்பான வளர்ச்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் மன்மோகன் சிங் கும்பலின் நோக்கம்.

அணுஉலை விபத்துத் தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெத்துப் போட சம்மதம் தெரிவித்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.  இந்த உடன்படிக்கை அணு விபத்திற்கு அணு உலை உபகரணங்களை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதைத் தடை செய்கிறது; 2,100 கோடி ரூபாய்க்கு மேல் நட்ட ஈடு கோருவதைத் தடை செய்கிறது.  அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டால்,  இந்தியச் சட்டம் வழங்கியிருக்கும் அற்ப பாதுகாப்புகளும் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டப்படும்.  அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் சிங் ஆசையும் பிசகில்லாமல் நிறைவேறிவிடும்.

______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது.  இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம்.  அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது.  அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர்.  அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.  இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான்,  இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

காஷ்மீர்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘காணாமல் போனவர்களின்’ புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின்  ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை.  இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது.  அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.  உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது.  காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர்.  இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின.  இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா.  கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள்.  ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர்.  இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.  அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான்.  ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர்
காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா?  விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது.  இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர்.  விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை.  இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

____________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!

சோராபுதின் போலி மோதல் கொலை: முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!

சோராபுதின் ஷேக்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் ஷேக் என்ற முசுலீம் ‘தீவிரவாதியின் ஆவி’, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. மிரட்டிப் பணம்பறிப்பது, ஆயுதங்களைக் கடத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்து உள்ளூர் தாதாவான சோராபுதின் ஷேக் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.  குஜராத் போலீசாரால் சோராபுதினோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ ‘காணாமல்’ போனார்.

சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் இம்மோதல் கொலை பற்றி  உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதையடுத்து, அக்கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசுக்கு ஜனவரி 21, 2007 அன்று உத்தரவிட்டது. மோடி அரசு ஒரு கேடி அரசு எனத் தெரிந்திருந்த நிலையிலும், விசாரணை பொறுப்பை குஜராத் அரசிடமே உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பெருந்தன்மை நம்மை வியக்கத்தான் வைக்கிறது.

மோடி அரசு தனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.  ஒருபுறம் தனது சி.ஐ.டி. பிரிவு போலீசாரைக் கொண்டு விசாரணை என்ற நாடகத்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் சாட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையையும் திறம்படச்    செய்தது.

உதாரணத்திற்குச் சொன்னால், இப்போலி மோதல் கொலையின் முக்கிய சாட்சியான சோராபுதினின் கூட்டாளி பிரஜாபதி கொல்லப்பட்டதைக் கூறலாம்.  தனது மனைவியோடு ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவிற்குச் சென்று கொண்டிருந்த சோராபுதினை குஜராத், இராசஸ்தான், ஆந்திர மாநிலப் போலீசார் கூட்டணி அமைத்துக் கொண்டு கடத்தியபொழுது, பிரஜாபதியும் அவர்களோடு பயணம் செய்து வந்தான். சோராபுதினையும் அவரது மனைவி கவுசர்பீயையும் குஜராத்திற்குக் கடத்திய குஜராத் போலீசார், பிரஜாபதியை இராசஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்துச் சிறையில் அடைத்தனர்.

இப்போலி மோதல் கொலை விசாரணையைத் தலைமையேற்று நடத்திவந்த கீதா ஜோரி என்ற போலீசு அதிகாரி பிரஜாபதியை விசாரிப்பதற்கு அனுமதி கோரியவுடன், தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த டி.ஜி. வன்சாரா – சோராபுதினைச் சுட்டுக் கொன்ற போலீசு கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் – குஜராத் மாநில எல்லைப் பிரிவுக்குத் திடீரென மாற்றப்பட்டார்.  வன்சாரா இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டாவது வாரத்திலேயே பிரஜாபதி, டிசம்பர் 28, 2006 அன்று குஜராத் – இராசஸ்தான் எல்லையையொட்டிய நகர் ஒன்றில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுவொருபுறமிருக்க, “விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு தனக்கு குஜராத் அரசு நெருக்கடி தருவதாக” விசாரணை அதிகாரி கீதா ஜோரி உச்ச நீதிமன்றத்திடம் புகார் செய்தார்.  மோடி அரசோ இப்புகார் பற்றி அலட்டிக் கொள்ளாததோடு, தன் மீது புகார் கொடுத்த கீதா ஜோஹ்ரியை சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடித்தது.

இதன்பின், தங்களுக்குத் தலையாட்டுவார் என்ற எண்ணத்தில் ரஜ்னீஷ் ராய் என்ற அதிகாரியை சி.ஐ.டி. பிரிவின் துணைத் தலைவராக நியமித்தது, மோடி அரசு.  ஆனால் ரஜ்னீஷ் ராய், கீதா ஜோரி ஏற்கெனவே தயாரித்து அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்த டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.  இதனையடுத்து ரஜ்னீஷ் ராயும் சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.  இப்படி பிரஜாபதி என்ற சாட்சி கொல்லப்பட்டதையும், விசாரணை அதிகாரிகள் பந்தாடப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்ததேயொழிய, இப்போலி மோதல் கொலை பற்றிய விசாரணையை உடனடியாக குஜராத் அரசிடமிருந்து பறிக்கும் எந்த நடவடிக்கையினையும் அப்பொழுதே எடுக்கவில்லை.

இதனிடையே கீதா ஜோஹ்ரிக்கும் குஜராத் அரசிற்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு, அவர் மீண்டும் சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட்டு, சோராபுதின் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.  குஜராத் அரசின் வனத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது கணவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கிடப்பில் போடுவது என்ற உடன்பாட்டின் அடிப்படையில்  கீதா ஜோஹ்ரி, “சோராபுதின் கொலையில் அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பில்லை; போலீசார் பதவி உயர்வு மற்றும் பண வெகுமதிக்கு ஆசைப்பட்டு இக்கொலையைச் செய்ததாக” அறிக்கை தயாரித்து உச்ச நீதிமன்றத்திடம் அளித்தார்.

அப்பொழுதே, சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் விசாரணை என்ற பெயரில் நடந்திருக்கும் இந்த மோசடிகளைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவிலேயே சோராபுதின் மற்றும் கவுசர் பீ கொலைகளுக்கும், குஜராத் அரசின் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இருக்கும் தொடர்புகளையும் குறிப்பிட்டிருந்தார்.  குஜராத் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஓட்டைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையைத் தொடராமல் நிறுத்தி வைக்குமாறு அக்.1, 2008-இல் உத்தரவிட்டது.  அதன் பின் 15 மாதங்கள் கழித்து, ஜனவரி 2010-இல்தான்  இவ்வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் மாற்றும் உத்தரவை அளித்தது.

இப்போலி மோதல் கொலை தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் மறுவிசாரணையில் மேலும் பல உண்மைகள் அம்பலமாகி வருகின்றன.  குறிப்பாக, ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் கல்லை வெட்டியெடுக்கும் சுரங்க அதிபர்களின் தூண்டுதலினாலேயே, குஜராத் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளும் பா.ஜ.க. அமைச்சர்களான அமித்ஷா (குஜராத்) மற்றும் குலாப் சாந்த் கடாரியா (ராஜஸ்தான்) ஆகியோரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, மார்பிள் கல் முதலாளிகளிடமிருந்து 10 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, சோராபுதினையும் அவரது மனைவி கவுசர் பீயையும் குஜராத்திற்குக் கடத்திவந்து, சோராபுதினைப் போலி மோதல் மூலமும், அவரது மனைவியை விஷ ஊசி போட்டும் தீர்த்துக் கட்டினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

***

குஜராத் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலேயே சோராபுதின் போலி மோதலில் கொல்லப்பட்டார் என்பது அம்பலமான பிறகும், குஜராத் அரசே உச்ச நீதிமன்றத்தில் சோராபுதினின் மனைவி கவுசர் பீ குஜராத் போலீசாரால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட பிறகும் நரேந்திர மோடி, “தனது அரசையும் குஜராத்தியர்களையும் களங்கப்படுத்துவதற்காக காங்கிரசு செய்யும் சதி இது” எனப் பிரச்சாரம் நடத்தி வருகிறார். “போலி மோதல் கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லாதபொழுது, குஜராத் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பித் தனது பிரச்சாரத்தை நியாயப்படுத்தி வருகிறார், மோடி.

மோடியின் இந்த வாதம், அரைகுறையான உண்மைகளைக் கூறித் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகளின் உத்தியாகும். முதலாவதாக, மோடியின் குஜராத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பல மோதல் கொலைகள் நடந்திருந்தாலும், வெறும் இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் நடைபெறும் போலி மோதல் கொலைகள் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவதற்கு மேல், அக்கொலைகளுக்கு அரசியல் நியாயம் கற்பிக்கப்படுவதில்லை.  ஆனால், குஜராத்திலோ ஒவ்வொரு போலி மோதல் கொலையும், நாட்டைப் பாதுகாக்கும் முசுலீம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டு, அதன் மூலம் மோடியை நாட்டையே காக்க வந்த இரட்சகனாகக் காட்டும்  இந்து மதவெறிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.   இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப் போலத்தான் குஜராத்திலும் போலி மோதல் கொலைகள் நடத்தப்படுவதாக மோடி கதையளப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

மோடியை ஆதரிக்கும் சாக்கில், போலி மோதல் கொலைகள் மூலம்தான் இசுலாமிய பயங்கரவாதிகளையும் கிரிமினல் மாஃபியா கும்பல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்று இந்து மதவெறி பாசிஸ்டுகளில் ஊதுகுழலான துக்ளக் “சோ” வாதிடுகிறார்.  “சோ”வும் அவரை ஆதரிக்கும் கும்பலும் போலி மோதல் கொலைகள் தேசநலன்/பாதுகாப்பிற்காகவே நடத்தப்படுவதாக நியாயப்படுத்த முயன்றாலும்,  அவற்றின் பின்னணியில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே பல வழக்குகளில் அம்பலமாகியிருக்கிறது.

உதாரணத்திற்கு, குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ‘தீவிரவாதி’ சோராபுதின் வழக்கையே எடுத்துக் கொள்வோம். சோராபுதின் மார்பிள் சுரங்க முதலாளிகளின் நலனுக்காகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டாரேயொழிய, தேச நலனுக்காக அல்ல என்பது இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.  இந்த உண்மையான நோக்கம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உள்ளூர் தாதாவான சோராபுதினை முசுலீம் தீவிரவாதியாகவும், நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு சோராபுதின் குஜராத்திற்குள் நுழைந்ததாகவும் கதை பின்னப்பட்டது.

அது மட்டுமல்ல, ஆயுதக் கடத்தல் பேர்வழி, தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்றெல்லாம் இந்து மதவெறிக் கும்பலால் அன்று குற்றம் சுமத்தப்பட்ட சோராபுதினுக்கும் மோடிக்கு நெருக்கமான குஜராத் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா மற்றும் போலீசு துணை கமிசனர் அபய் சுடாசாமா ஆகியோருக்கும் இடையே தொழில் உறவு (சுரங்க அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது) இருந்து வந்திருப்பது இன்று அம்பலமாகியிருக்கிறது. சோராபுதினைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம் இக்கும்பல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைத் தட்டியிருக்கிறது.  ஒன்று, சுரங்க அதிபர்கள் அள்ளிக் கொடுத்த‘‘சுபாரி” பணம்; மற்றொன்று, தங்களது இரகசியத்தைத் தெரிந்த கூட்டாளி ஒழிந்தான் என்ற நிம்மதி.

அமித் ஷா கும்பலின் நிம்மதியை சோராபுதினின் தம்பி ருபாபுதின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கெடுத்துவிட்டது.  அது மட்டுமல்ல, இக்கும்பலின் இரகசியங்களையெல்லாம் அறிந்த என். கே. அமின் என்ற போலீசு அதிகாரி “அப்ரூவர்” ஆக மாற சி.பி.ஐ.-யிடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.  இதனால், மோடி கும்பல் இந்த அதிகாரி நடத்திய பழைய போலி மோதல் கொலை வழக்கை விசாரணைக்காகத் தூசு தட்டி எடுத்திருக்கிறது. போலீசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்குப் பயன்படும் போலி மோதல் கொலைகள், அவர்களைப் பழி வாங்கவும் பயன்படுத்தப்படும் எனக் காட்டியிருக்கிறார், மோடி.

குஜராத்தில் நடந்த மற்றொரு போலி மோதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த  இர்ஷத் ஜஹன், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியா, இல்லை அப்பாவி கல்லூரி மாணவியா என்பது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை.  எனினும், இந்து மதவெறிக் கும்பல், “அவர் முசுலீம் தீவிரவாதிதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது நியாயம்தான்’’ என்று மூர்க்கமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறது.  இது மட்டுமின்றி, சோராபுதின், இர்ஷத் ஜஹன் கொலைகளைக் காட்டி, பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் இசுலாமிய பயங்கரவாதத்தால் மோடியின் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருப்பதாகவும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மோடியும், பா.ஜ.க.வும் சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதைக் காட்டி, “முசுலீம் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வரும் மோடியைக் கொலைகாரனாகக் காட்டும் நோக்கத்தோடு, காங்கிரசும் அதன் உளவு நிறுவனங்களும் கதைகட்டி விடுவதாகவும், நாட்டின் மிகப் பெரிய அபாயமான இசுலாமிய பயங்கரவாதத்தோடு காங்கிரசு ஓட்டுக்காகச் சமரசம் செய்து கொள்வதாகவும்” குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஆனால், உண்மையில் சோராபுதின் போலி மோதல் கொலைக்கு எதிராக காங்கிரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. மேலும், அணுஉலை விபத்து கடப்பாடு மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க., காங்கிரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதற்கு ஈடாக, சோராபுதின் கொலை வழக்கில் மோடியை மாட்டி விடுவதில்லை என காங்கிரசு உறுதியளித்திருப்பதாக முலயம் சிங்கும் லல்லுவும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்கிலோ காங்கிரசு இளைய பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான இர்ஷத் ஜஹன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி; அவர் மோடியைக் கொல்லும் நோக்கத்துடம் குஜராத்துக்கு வருவதாக குஜராத் அரசின் புலனாய்வுப் பிரிவிடம் போட்டுக் கொடுத்ததே காங்கிரசு அரசுதான்.  இப்போலி மோதல் கொலை வழக்கு அம்பலமாகி விசாரணைக்கு வந்த பின்னால், காங்கிரசு அரசு  தான் அப்படிச் சொல்லவில்லை என்று பல்டி அடித்துவிட்டது என்பதுதான் உண்மை.

இந்தப் போலி மோதல் கொலைகள் குறித்து இவ்வளவு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், பா.ஜ.க.வும் மோடியும் கொஞ்சம்கூட அசராமல், சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் குறித்து பொய் மூட்டைகளையே உண்மையைப் போல கட்டமைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வர முடிகிறதென்றால், அதற்குக் காரணம் போலி மோதல் கொலைகள் குறித்தும், இசுலாமிய     பயங்கரவாதம் குறித்தும் பெரும்பாலானவர்கள் இந்து மதவெறி பாசிச கும்பலின் கருத்துக்களையே கொண்டுள்ளனர் என்பதுதான்.

குறிப்பாக, மேல்தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் போலி மோதல்கள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தையும், கிரிமினல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்ற கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளன.  இந்தக் கருத்துதான் ஒவ்வொரு போலி மோதல் கொலைக்கும் சமூக அங்கீகாரத்தை வழங்கி விடுகிறது.

போலி மோதல் கொலை வழக்குகளில் நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்றால், அதனை நடத்திய போலீசாரையும், அப்போலீசாரைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றங்களையும் எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது;  பொதுமக்கள் மத்தியில் ‘மோதல்’ கொலைகள் பற்றி உருவாகியிருக்கும் இந்த பாசிச கருத்தையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும்.

_______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!

நிலத்தடியில் நீர் இல்லாத பூமி. நினைத்த நேரத்தில் கண்ணாமூச்சி காட்டும் மின்சாரம். இவற்றுக்கிடையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கருணாநிதி அறிவித்திருக்கும் சுதந்திர தினப் பரிசு – இலவச மின்சார மோட்டர் பம்புசெட்டுகள்!

குறிஞ்சி, மருதம், முல்லை, நெதல் என்ற திணைகள் மருவி அனைத்தும் பாலையையா மாறிக்கொண்டிருக்கும் தமிழகத்தில், தமிழ் மரபின் பெருமையை நினைவூட்டுவதற்காக எம்.எஸ்.சாமிநாதனின் பொறுப்பில் கருணாநிதி அமைக்கவிருக்கும் அருங்காட்சியகங்களுக்குப் பெயர் – ஐந்திணைப் பூங்காக்கள்!

இருபது ஆண்டுகளில் தமிழகத்தின் பயிரிடும் பரப்பு 90 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 70 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்து கொண்டே வந்தபோதிலும், அதனினும் வேகமாகக் கிராமப்புற உழைப்பாளர்களின் எண்ணிக்கை வீழ்ந்து வருவதனால், விதைப்புக்கும் அறுப்புக்கும் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கும் எந்திரங்கள்!

விவசாயத்தின் அழிவும், சூறைக்காற்றா சுழன்றடிக்கும் நகரமயமாக்கமும், தமிழகத்தின் கிராமத்து இளைஞர்களை வாரிக்கொண்டு வந்து நகர்ப்புறத்தில் குவித்துக் கொண்டிருக்க, உறுதியற்ற ஓலைக் குடிசைகளை அகற்றி விட்டு ஊரகப் பகுதிகளில் கருணாநிதி கட்டித்தரவிருக்கும் ‘உறுதியான’ கான்கிரீட் வீடுகள்.

மன்மோகன் சிங் அரசால் தொடுக்கப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதலும், அதன் கூட்டணிக் கட்சியாகவும் கூட்டுப் பங்குக் கம்பெனியாகவும் விரிவடைந்து வரும் திருக்குவளை முன்னேற்றக் கம்பெனியின் சாம்ராச்சிய நலன்களும், “ஒரு ரூபாய் அரிசி-கலர் டிவி” யில் தொடங்கி, பிற ஆளும் வர்க்கக் கட்சிகளே அசந்து வாய்பிளக்கும் வண்ணம் மக்கள் மீது அடுக்கடுக்காக கருணாநிதி எது வரும் இலவச ஏவுகணைகளும், தமிழகம் முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா என்று புரிந்து கொள்ள முடியாத புதிரானதொரு சித்திரத்தைத் தோற்றுவிக்கின்றன.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சுக்குப் பாலிசிதாரர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் என்ற இரண்டு மாங்காகளை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘கல்’லின் பெயர் கலைஞர் காப்பீடு. உலக வங்கியின் ஆணைக்கு இணங்க நாளை இலவச மின்சாரத்தை ஒழித்துக் கட்டுவதற்காக இன்று ஏவப்படும் ஆயுதத்தின் பெயர் இலவச மின் மோட்டார். விவசாயிகள் நகர்ப்புறத்திலேயே குடியேறிவிடுவதைத் தடுக்க, அவர்களுடைய ஒரு காலை இழுத்து கிராமப்புறத்தில் உறுதியாகக் கட்டிப்போடுவதற்கு கான்கிரீட் வீடுகள்.

கான்கிரீட் வீடுகளை உருவாக்கப்போகும் கட்டுமானக் கம்பெனிகள், சிமென்டுக் கம்பெனிகள் யார்? மின்சார மோட்டார்களை வழங்கப்போகும் கம்பெனி எது? எடைக்கு எடை அரசு மானியத்தை வாங்கிக்கொண்டு, நோக்கியா, ஹூண்டா, செயின்ட் கோபென் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தளபதிகளுக்கும் கனிமொழிகளுக்கும் அழகிரிகளுக்கும் வழங்கியிருக்கும் பங்குப் பத்திரங்களின் எடை எவ்வளவு? இந்த உண்மைகளை யாரும் எக்காலத்திலும் அறிய இயலாது.

கொள்ளையில் கூட்டுக் குடும்பமாகவும், பங்கு பிரிப்பதில் தனிக் கம்பெனிகளாகவும் பிரிந்தும் இயங்கும் திருக்குவளைக் கொள்ளைக் கூட்டத்தின் ஆதாயத்தையும், தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் இலாபத்தையும், ‘இலவசத் திட்டங்கள்’ என்ற இனிப்பு மிட்டாகளுக்கு உள்ளே ஒளித்து வழங்குகின்ற கலையில், கலைஞர் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார். டாக்டர் புரட்சித்தலைவி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி ‘டாக்டர்கள்’ செய்வதறியாமல் திகைக்கிறார்கள்.

தங்களுடைய முன்னேற்றம் மற்றும் தரகு முதலாளிகளின் முன்னேற்றத்தின் விளைபொருளாக தமிழகமும் முன்னேறித்தான் ஆகவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதுவதால், “தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக ஆக்காமல் ஓயமாட்டேன்” என்று சூசகமாகச் சபதம் செய்கிறார்.

மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) தொழில்துறையின் பங்கு மிக அதிகமாக இருக்கும் மாநிலமான மகாராட்டிரத்துக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்திருப்பதாகவும், தொழில்துறை வேலைவாய்ப்பின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை எட்டியிருப்பதாகவும், சிறப்புச் சலுகைகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகம் ஈர்த்திருக்கும் அந்நிய முதலீடு ரூ.60,000 கோடி என்றும், ஆக்ஸ்போர்டு அனலடிக்காவின் ஆவின்படி அந்நிய முதலீட்டாளர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம்தான் என்றும், பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் (எகனாமிக் டைம்ஸ், மார்ச், 10, 2010). இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கமான எஃப்.ஐ.சி.சி.ஐ. வெளியிட்டிருக்கும் ‘சாதகமான தமிழகம்’

(Advantage Tamilnadu) என்ற நூலை வெளியிட்டு தளபதி ஆற்றிய உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மருமகனின் பெருமைக்கு அடித்தளம் அமைத்தவர் மாமன் மாறன்தான் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. வாஜ்பாயி அரசில் அவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தபோதே இதற்கான வழியை வகுத்து விட்டார். 2005-இல் மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, 2003-ஆம் ஆண்டிலேயே சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான கொள்கையை வகுத்த மாநிலம் தமிழகம். சென்னைக்கு அருகில் உள்ள மகிந்திரா உலக நகரம்தான் இந்தியாவில் இயங்கத் தொடங்கிய முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்.

தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன், அமைய இருப்பனவற்றையும் சேர்த்து, மொத்தம் 139 சி.பொ.மண்டலங்களுக்கான பணிகளைத் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறது தி.மு.க அரசு. இவற்றுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் பணி தமிழக அரசுக்குச் சொந்தமான சிப்காட், டிட்கோ ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்நிறுவனங்கள் இதுவரை சுமார் 25,000 ஹெக்டேர் நிலத்தை

விவசாயிகளிடமிருந்து வாங்கியிருக்கின்றன. விவசாய விளைபொருளை அரசாங்கம் கொள்முதல் செய்வதைத்தான் உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள் தடை செய்திருக்கின்றன என்பதால், விளைநிலத்தையே கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் அரசு முழுமூச்சாக இறங்கியிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமின்றி, நீர்வளமிக்க பகுதிளை பண்டைக்காலத்தில் அக்கிரகாரங்களும் சர்வமானியங்களும் பிரம்மதேயங்களும் ஆக்கிரமித்ததைப் போல, இன்று ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகளை அடுக்கு மாடி அபார்ட்மென்டுகளும், பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய மதில்சூழ் குடியிருப்புகளும் (Gated Communities) ஆக்கிரமித்து வருகின்றன.

விளைநிலங்களை ஆக்கிரமித்து முடிவின்றி விரிந்து கொண்டே செல்லும் நகரங்கள், நட்சத்திர கேளிக்கை விடுதிகள், கட்டுமானத் தொழிலின் பேப்பசிக்குத் தீனி போடுவதற்காகப் பெருகிவரும் செங்கல் சூளைகள், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் சீரான இடைவெளியில் விளைநிலங்களை வளைத்துப் போட்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள் – என தமிழகத்தின் விளைநிலங்கள் வெகுவேகமாக விழுங்கப்படுகின்றன.

2001-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி நகரமயமாக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருந்தது. அன்றைய கணக்கின்படியே தமிழ்நாட்டின் மக்கட்தொகையில் 44.04% நகரமயாகியிருந்தது. இன்று அது 50 விழுக்காட்டையும் விஞ்சியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

போராட்டமோ இரைச்சலோ இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமான சில எதிர்ப்புகளுடன், விவசாயத்திலிருந்து நெட்டித் தள்ளப்பட்டு, விதி விட்ட வழி என்று நகர்ப்புறங்களை நோக்கி மவுனமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, பிற மாநிலங்களில் தோன்றியதைப் போன்ற தன்னெழுச்சியான எதிர்ப்பை தமிழக விவசாயிகளிடம் நாம் காணமுடியவில்லை.

இந்த எதிர்ப்பின்மைக்குக் காரணம், தொழில்மயம் எனும் முன்னேற்றப் பாதையில் செலுத்தப்படுகிறோம் என்று விவசாயிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையல்ல; விவசாயம் இனி நமக்கு சோறு போடாது என்ற அவநம்பிக்கை.  எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி வார இதழில் (பிப்ரவரி, 6, 2010) எம்.விஜயபாஸ்கர் எழுதியுள்ள ஒரு ஆய்க்கட்டுரை, தமிழகத்தில் நாம் காணும் இந்நிகழ்ச்சிப்போக்கின் பின்புலத்தை ஆராவதுடன், அவசியமான பல தரவுகளையும் வழங்குகிறது.
***
நீர்வளமும் இரு போகம் அல்லது முப்போக விளைச்சலும், வேலைவாய்ப்புக்கு விவசாயம் தவிர வேறு தொழிலற்ற சார்பு நிலையும் கொண்ட சிங்கூர், நந்திகிராமம் போன்ற பகுதிகளின் சிறு- நடுத்தர விவசாயிகளும், முதலாளித்துவச் சந்தையின் சூறையாடலுக்கு நேரடியாக ஆட்படாமல், காடுகளையும் தற்சார்பு விவசாயத்தையும் இன்னமும் சார்ந்திருக்கும் சட்டீஸ்கர், ஜார்கண்ட் பழங்குடி மக்களும் தமது நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். புதிய தாராளவாதக் கொள்கையினால் ஊனும் உதிரமும் உறிஞ்சி எடுக்கப்பட்ட விதர்பாவின் பருத்தி விவசாயிகளோ வெளியேறும் வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பாசன வசதி இன்றி, நிலத்தடி நீரின்றி, பம்பு சேட்டுக்கு மின்சாரமின்றி, அரசுக் கொள்முதல் இன்றி, விளைவித்த பொருளுக்கு விலையும் இன்றி விவசாயத்தில் நிற்கவும் முடியாமல் காலை எடுக்கவும் முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாகவே தவித்துக் கொண்டிருந்த தமிழக விவசாயிகள், மெல்ல மெல்ல விவசாயத்திலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
தமிழக விவசாயிகளை கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு, சல்வாஜூடும் போன்ற ஆயுதம் தரித்த கூலிப்படைகள் தேவைப்படவில்லை. 1990-களின் துவக்கம் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமைதி வழியில் அதனை சாதித்திருக்கின்றன.

நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் விவசாயத்தின் அழிவு என்ற நிகழ்ச்சிப்போக்கில் தமிழகம் பிடித்திருக்கும் முதலிடம், தற்போது நிகழ்ந்துவரும் நகரமயமாக்கத்திற்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. 1993-94-இல் தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் (எகுஈக) விவசாய வருவாயின் பங்கு 24.82%. 2005-ஆம் ஆண்டில் இது 13.3% என வீழ்ந்தது. இந்திய மாநிலங்களிலேயே மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு ஆகக் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். தமிழகம் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. புவியியல் அமைப்பிலும் பயிரிடும் பரப்பிலும் தமிழகத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத கேரளத்துடன் கடைசி இடத்திற்குத் தமிழகம் போட்டி போடுகிறது.

2002-03 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் சராசரியாக ஒரு உழவனின் குடும்பம் விவசாயத்தில் முதலீடு செய்த தொகை ஆண்டொன்றுக்கு ரூ. 8597. விளைபொருளை விற்று எடுத்த தொகை ரூ. 7908. அந்த விவசாயியின் குடும்பம் ஒரு ஆண்டு முழுவதும் தன் நிலத்தில் சிந்திய வியர்வைக்கும் உழைப்புக்குமான ஊதியம் இதில் கணக்கிடப்படவில்லை. அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர். இந்தப் புள்ளி விவரத்தின்படி ஒரு விவசாயக் குடும்பம், ஊதியமே இல்லாமல் ஒரு ஆண்டு காலம் உழைத்திருப்பதுடன், கையிலிருந்து சுமார் 700 ரூபாயையும் விவசாயத்தில் தொலைத்திருக்கிறது.

நட்டமடைந்த இந்தத் தொகையை அவர்கள் ஈட்டியது எப்படி? ஒரு ஆண்டுகாலம் அந்தக் குடும்பம் உண்டு, உயிர்வாழ்ந்தது எப்படி? சராசரியாக ஒரு இந்திய உழவனின் குடும்பம் ஈட்டுகின்ற ஆண்டு வருவாயில் 45% விவசாயத்திலிருந்து பெறப்படுகிறது என்கிறது அனைத்திந்தியக் கணக்கீடு. ஆனால் தமிழகத்திலோ ஒரு உழவன் தனது ஆண்டு வருமானத்தில் 30 விழுக்காட்டை மட்டுமே விவசாயத்திலிருந்து பெறுகிறான். விவசாயம் சாராத பிற தொழில்களில் ஈடுபட்டுத்தான் ஒரு தமிழக விவசாயி தனது ஆண்டு வருமானத்தின் 70 விழுக்காட்டை ஈட்டி வருகிறான்.

கடன்பட்ட விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் இடத்தில் ஆந்திரம் இருக்கிறது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் 75% கிராமப்புறக் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கியிருக்கின்றன. புதிய தாராளவாதக் கொள்கை விவசாயத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பொதுவானதாக இருந்தாலும், தமிழக விவசாயியைக் கடனில் அமிழ்த்துவதில் தண்ணீர் முக்கியப் பாத்திரமாற்றுகிறது.

தமிழகத்தின் தற்போதைய மொத்தப் பாசனப்பரப்பில் 44% கிணற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கிறது. பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து 1970 முதல் நாடெங்கும் பரவிய ‘பம்புசெட் புரட்சி’யிலும், அனைத்திந்திய அளவில் ஆந்திரத்துக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தில் தமிழகமே இருக்கிறது. பாசனப் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பணிகளிலிருந்து அரசு விலகிக் கொண்டதன் விளைவாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவது விவசாயியின் சொந்தப் பொறுப்பாக மாற்றப்பட்டுவிட்டதனால் தமிழகத்தில் தற்போது இயங்கும் விவசாய பம்புசெட்டுகள் 19 இலட்சம். இவற்றில் 15 இலட்சம் பம்புசெட்டுகள் சிறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை (தினமணி, 17.8.2010). ஏற்கெனவே வற்றிவரும் நிலத்தடி நீரை, நகரமயமாக்கம் மற்றும் தொழில்மயமாக்கம் தோற்றுவித்துள்ள வகைதொகையற்ற நிலத்தடி நீர்க் கொள்ளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதால், பல இடங்களில் 1000 அடிக்கும் கீழே சென்று கொண்டிருக்கும் கிணறுகள் விவசாயிகளைக் கடன் குழியில் தள்ளுவதில் பெரும் பாத்திரம் ஆற்றியிருக்கின்றன.

அனைத்திந்தியப் புள்ளிவிவரப்படி 1991-இல் விவசாயக் கடன்களில் 75% வங்கிகளின் மூலம் பெறப்பட்டவையாக இருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கிகள் விவசாயிகளைப் புறக்கணித்து வருவதால், கந்துவட்டிக்காரர்களின் பிடி அதிகரித்திருக்கிறது. விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய உள்ளீடு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்த போதிலும், விவசாய விளைபொருட்களின் விலையை அதற்கேற்ப உயர்த்த அரசு மறுப்பதும், தானியக் கொள்முதலிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டு வருவதும் விவசாயிகள் மீதான கடன் சுமையை அதிகரிப்பதில் பெரும் பாத்திரமாற்றியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்த தானிய விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே அரசு கொள்முதல் செய்வதால், விவசாயிகளின் மீது கந்துவட்டி, கமிசன் மண்டிக்காரர்களின் பிடி மேலும் இறுகியிருக்கிறது.

நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் முதலாளித்துவச் சந்தையின் சூதாட்டத்தில், “இந்த முறை விலை கிடைக்கும், அடுத்த முறை விலை கிடைக்கும்” என்று நம்பிச் சூதாடி மென்மேலும் கடன் வலையில் சிக்கிய தமிழக விவசாயிகள், இந்தச் சூதாட்டத்திலிருந்து விலகுவதற்கே திரௌபதையைப் பணயம் வைக்கிறார்கள். கடனிலிருந்து தப்ப நிலத்தை விற்கிறார்கள்.

நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் ஆந்திரமும் தமிழகமுமே முன்னணியில் இருக்கின்றன. 2003-04 கணக்கீட்டின்படி இந்திய அளவில் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் கிராமப்புற மக்கள் தொகையில் 31%. தமிழகத்திலோ நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 55.43%. விவசாயத்தின் அழிவு, நிலமற்ற கூலி விவசாயிகளை மட்டுமின்றி, சிறு விவசாயிகளையும் கூட நகர்ப்புறங்களை நோக்கி விரட்டுகிறது.

1990-களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றுவரை விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ந்து வரும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான். ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமப்புற ஆண் உழைப்பாளர்களில் 40% பேர் விவசாயம் அல்லாத தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். தேசிய அளவில் தமிழ்நாடு அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

பிற மாநிலங்களைக் காட்டிலும் பரவலான அளவில் நகரங்களையும் சிறு நகரங்களையும் பெற்றிருக்கிறது தமிழகம். ஒரு சதுர கி.மீ க்கு 0.68 கி.மீ நீள சாலை என்பது இந்திய சராசரியாக இருக்கும் நிலையில், தமிழகத்திலோ இது 1.6 கி.மீ ஆக இருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் இந்தச் சாலைகள், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. தனது மறைமுகச் சுரண்டலால் நிலவளத்தைப் பறித்துக் கொண்ட முதலாளி வர்க்கம், விற்பதற்கு உழைப்பைத் தவிர வேறு ஏதுமற்றவர்களாகப் பரிதவிக்கும் இந்த மனிதவளத்தை, சாலைகள் எனும் கால்வாய்கள் வழியே நகர்ப்புறத்தை நோக்கிப் பாச்சுகிறது.

‘சாதகமான தமிழகம்’ என்ற இந்தியத் தரகு முதலாளிகளின் கணிப்பில் தவறில்லை. தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் பாதகமாக இருந்தால் மட்டுமே ஒரு கொள்கை முதலாளி வர்க்கத்துக்குச் சாதகமாக அமையமுடியும் என்ற உண்மையை மறைத்து, எல்லா வர்க்கங்களுக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதனைப் புரிந்து கொள்ளாமல் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.

(தொடரும்)

_______________________________________________

-மருதையன், புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

75

சாந்தி மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பவது ஏன்?

எதிர்பார்த்தபடியே பதிவர் சாந்தி எழுதிய கட்டுரையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு பதிவுலகத்தினர் கண்டித்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. எதிர்பார்த்தபடியே சிலர் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நீர்த்து போக வைப்பதற்கு முயல்கிறார்கள். சாந்தியின் முழு ஜாதகத்தையும் தோண்டி வெளியே இழுத்துப் போடுவதன் மூலம் இந்த பிரச்சினையை திசை திருப்புவதற்கும் சிலர் முனைகிறார்க்ள்.

நண்பர்களே, பதிவர் சாந்தி பதிவுலகில் அரசியல் சார்பாகவோ, மொக்கையாளராகவோ, முற்போக்கனாவராகாவோ இருந்தாரா என்பதல்ல பிரச்சினை. அவரே குறிப்பிட்டுள்ளது போல சீரியசான விவாதங்களையும், எளிமையாக அணுக வேண்டி மொக்கை போட்டதையும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளார். இங்கே பிரச்சினை என்னவென்றால் அவருடன் சில பொதுவிவாதங்களில் ஈடுபட்ட இருவர் அதற்கு பழிவாங்கும் வண்ணம் புனைவு எழுதி தமது வக்கிரத்தை காட்டியிருக்கிறார்கள் என்பதே. அந்த பொதுவிவாதங்களில் பதிவர் சாந்தி தனக்கு நியாயம் என்று கருதிய விசயத்தை கேட்டிருக்கிறார். புலவன் புலிகேசி கவிதைக்காக பதிவர் முகிலன் எழுதிய கவிதையில் ஏழைகளையும், ஏழை எழுத்தாளரளையும் இழிவு செய்திருக்கிறார் என்று அவர் கேட்கக்கூடாதா என்ன? இதில் சாந்தியின் தனிப்பட்ட நலன் எதுவமில்லையே? ஆனால் முகிலன் இதை தனிப்பட்ட நலனுக்காக பழிவாங்கும் வண்ணம் மிரட்டலைக் கையிலெடுக்கிறார். இரும்புத்திரை அரவிந்த அதை தொடர்கிறார்.

ஒரு பெண் பதிவர் தனிப்பட்ட நட்பு காரணமாகவும், நம்பிக்கை காரணமாகவும் பலருடன் பேசுகிறார், சாட் செய்கிறார், தன்னைப் பற்றிய விவரங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்கிறார். அதே உரிமை காரணமாக மாற்று கருத்து இருக்கும் போது விவாதிக்கிறார். இதில் மற்ற விசயங்களில் அவரோடு நட்புடன் பழகும் சில ஆண்கள், அந்த பெண் பதிவர் விவாதிக்க ஆரம்பித்த பிறகு தமது ஆணாதிக்க வக்கிரத்தை ஆயுதமாக ஏந்துவது என்ன நீதி?

ஒரு பெண்பதிவரை குறிப்பிட்ட ஆண்பதிவர் தகாத முறையில் பேசுகிறார். இதை இன்னொரு ஆண் பதிவர் தட்டிக் கேட்காமல் அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவரின் எழுத்து ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்டால் இந்த பிரச்சினையை பேச நினைக்கும் நம்மைப் போன்றவர்கள் என்ன நினைப்போம்? அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவருக்கு வக்காலத்து வாங்கும் அவரது நண்பரை கண்டிப்போம். இதைத்தான் சாந்தி செய்தார். ஆனால் மதார் என்ற பெண்பதிவரோ அப்படி தட்டிக் கேட்க கூடாது என்கிறார். எனில் ஒரு கேள்வி வருகிறது. நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

சந்தர்ப்பவாதத்தில் வளரும் நட்புதான் பூமிக்கு பாரம்!

பதிவுலகில் சிலர் நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். வலைப்பதிவுகள் மூலம் நம்மிடம் நட்பு அரும்புவதும், அது விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்க விசயம்தான். ஆனால் அதன் அளவு கோல் என்ன? சமூகத்தில் நிலவும் குறைந்த பட்ச மதிப்பீடுகளோ, நாகரீகமோ, மக்கள் நலனோ இருக்க வேண்டுமா, கூடாதா? அய்யா, ஒரு பதிவர் பலரை நண்பராக பெற்றவர்,” தலித் இளைஞர்களுக்கு என்னதான் வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களை மாற்ற முடியாது, அவன் பிறவி புத்தி அப்படி” என்று சொல்கிறார் என வைப்போம். அந்த பதிவரோடு நாம் இதற்கு மேலும் நட்பு பாராட்டி ஒன்றாக தண்ணி அடிப்பதற்கு முனைவோமா? இல்லை அவரை வன்மையாக கண்டித்து மன்னிப்பு கேட்க சொல்வோமா? இங்கே எது தீர்மானிக்கிறது? நட்பா, கொள்கையா?

ஒரு பதிவர் தனது திருமணத்தில் மிகுந்த வரதட்சணை வாங்கி பின்னர் தனது மனைவியை மேலும் வரதட்சணைக்காக துன்புறுத்துகிறார் என்ற செய்தி அவரது பதிவுல நண்பர்களுக்கு தெரிய வருகிறது என்று வைப்போம். ” இது தமது நண்பனின் தனிப்பட்ட பிரச்சினை, இதில் நாம் தலையிடுவது சரியல்ல” என்று முடிவு செய்து கொண்டு அந்த நட்பு தொடர்கிறது என்றால் இதை காறி உமிழ்வோமா, இல்லை முன்னுதாரணமாக கொண்டாடுவோமா?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவெளியில் ஒருவர் தவறிழைக்கிறார் என்றால் அந்த தவறின் தன்மையைப் பொறுத்து அதன் சமூக விளவைப் பொறுத்து அதை கண்டிக்கவேண்டாமா, இல்லையா? பூக்காரி புனைவு எழுதியவர் வினவு மேல் நல்ல நம்பிக்கை கொண்டிருக்கலாம். பதிவர் சங்கம் பிரச்சினையின் போது சங்கம் ஆரம்பிப்பது தொடர்பாக வினவு தோழர்களையும் உள்ளிட்டு கலந்தாலோசிக்க வேண்டுமென்று கூட அவர் எழுதியிருக்கிறார். இப்படி எங்களை மதிப்பவரை அவர் செய்த தப்பு காரணமாக கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் போயிருந்தால் அவர் இன்னும் எங்களை நெருங்கியிருக்கலாம். நாளையே எங்கள் அரசியல் நிகழ்வுக்காக அவரிடம் நன்கொடை கேட்டிருந்தால் ஒரு பெரிய தொகை கூட அவர் கொடுத்திருக்கலாம்.

ஆனால் பூக்காரி புனைவை படித்த பிறகு அதிலுள்ள வன்மும், வக்கிரமும், சாதி துவேஷமும் கண்ட பிறகு எங்களது கண்ணுக்கு அவை மட்டுமே தெரிந்தன. அதை வன்மையாக கண்டிப்பதோடு, பதிவுலகில் அது ஒரு மோசமான முன்மாதிரியாக அம்பலப்படுத்தப்படவேண்டும் என்பதற்குத்தான் முயற்சி செய்தோம். இதையெல்லாம் செய்யாமல் அவருடன் நட்பு பாராட்டியிருந்தால், அல்லது அந்த பிரச்சினையை ஒதுக்கியிருந்தால் எங்கள் பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல. அதற்கு சந்ததர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள் என்று பெயர். தோழர் பைத்தியக்காரன் கூட கொள்கைக்காக தனது நட்பை தூக்கி ஏறிந்ததை பலர் இன்னும் சீரணிக்க முடியாமல் அதை துரோகம் என்று ‘பொங்கி’ வருகின்றனர். பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு ஒத்தூதும் இத்தகைய நட்புகளை நாங்கள் வெறுக்கத்தக்க அறுவறுப்புகள் என்றே கருதுகிறோம்.

நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இனிய மாலை நேரத்தில் மதுவருந்தும் இன்பம்தான் முக்கியமே அன்றி அந்த இன்பத்தை ரத்து செய்யக்கோரும் கொள்கைப் பிரச்சினைகள் எங்களுக்கு தேவையில்லை என்பவர்களை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நாங்கள் மதிக்கவில்லை என்பதற்காக கள்ளக்காதல் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பியவர்களையும் நாங்கள் அறிவோம். நட்புக்காக ஒரு பெண்ணை எழுத்தில் இழிவுபடுத்துவதோடு, பின்ன்ர் அதைக் கண்டிப்பவர்களை அவதூறு செய்து தங்கள் மேலான நட்பை பாதுகாக்க விரும்பும் அக்மார்க் சுயநல பிழைப்புவாதிகளால் இந்த சமூகத்திற்கு எந்த பயனுமில்லை. அவர்களெல்லாம் பூமிக்கு பாரமாகத்தான் வாழமுடியுமே அன்றி பூமித்தாய் பெருமை கொள்ளத்தக்க வாழ்வை அவர்களால் கனவிலும் தரவியலாது.

உழைக்கும் மக்களின் பண்பாடும், உலக இலக்கியவாதிகளின் தரமும்!

இங்கே ஒரு உண்மையை உரக்க கூறுகிறோம். சந்தனமுல்லை,  சாந்தி என்ற அநீதி இழைக்கப்பட்ட இரு பெண்களுக்காக நாங்கள் களத்தில் இறங்கியதால் எங்கள் நட்பு வட்டம் அழிந்து விடவில்லை. முன்பை விட வினவுக்கு வாசகர்களும் நண்பர்களும் அதிகமாயிருக்கிறார்கள். குறிப்ப்பிட்ட பிரச்சினையில் இனி யாரும் நடுநிலைமை என்ற பாதுகாப்பான சந்தர்ப்பவாதத்தை பின்பற்ற முடியாது என்ற வகையில் இங்கே அனைவரும் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற தார்மீக அற உணர்வு குறித்த பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் பிரச்சினைகளுக்காக எங்களை ஆதரிக்கும் சிலர் இதில் எதிர் அணியில் இருக்கலாம். அல்லது நேற்று எதிர் அணியில் இருந்தவர்கள் இன்று தவறை உணர்ந்து அணி மாறியிருக்கலாம். நீண்ட கால நோக்கில் நீதிக்கான அணிதான் வளரும். நட்பு என்பதை வெறும் தண்ணி அடிக்கும் நிகழ்வாக மட்டும் கவலைப்படும் அல்லது பயப்படும் கோழைகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

பதிவரசியல் பிரச்சினைகளில் நாங்கள் இறங்குவதால் எங்களது அரசியலுக்கு ஆள் பிடிக்க முனைகிறோம் என்று வினவை அடையாளம் காட்டுகிறார் ஜ்யோவராம் சுந்தர். முதலில் ஒன்றை அவர் புரிந்து கொள்ளட்டும். புரட்சிக்காக ஆள் பிடிப்பதுதான் எங்கள் வேலை. அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. அதுதான் எங்கள் அடையாளம். ஆனால் இந்த ஆள்பிடிப்புக் கலையில் சந்தர்ப்பவாதத்தை கடைபிடித்திருந்தால், அனைவருடனும் விமரிசனமற்ற முறையில் முதுகு சொறிந்து கொண்டிருந்தால் எங்களுக்கு நிறைய ஆட்கள் கிடைத்திருப்பார்கள். அந்த வட்டத்தில் சுந்தரும் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் அரசியல் உள்ளிட்டு அனைத்திலும் மக்கள் நலனுக்கான நோக்கில்  கறாரான விமரிசனத்தை வைத்து வரும் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக நட்பு கிடைத்துவிடுவதில்லை. ஆனால் இந்த நீண்ட கால போராட்டத்தில் எங்களுக்கு கிடைக்கும் நட்பு என்பது வைரத்தை போன்று உறுதியானது. அதனால் அந்த நட்புகளும் மக்களுக்கான சேவையில் வெளிச்சத்தை வழங்கும் அழகான வைரமாக ஜோலிக்கிறார்கள். இன்று சந்ததர்ப்பவாதிகளின் அணி பெரிதாக இருக்கலாம். ஆனாலும் அது காக்காய் கூட்டமென்பது ஒரு பிரச்சினை வரும் போது புரியும்.

பதிவர் சாந்தி வினவின் அரசியல் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டால்தான் அவரது பிரச்சனையை பேசுவோம் என்பதையெல்லாம் நிபந்தனையாக நாங்கள் வைக்கவில்லை. இதை சாந்தியும் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  சாந்தி எங்களது அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றை ஏற்காமல் இருக்கலாம். கவலையில்லை. அன்னை தெரசாவை கடும் விமரிசனம் செய்து வந்திருக்கும் எங்களது கட்டுரையைப் படித்தால் அவர் வினவின் மீது கோபம் கூட கொள்ளலாம். பாதகமில்லை. இங்கே அவரை புனைவு என்ற வசதியான வடிவத்தை வைத்துக் கொண்டு இரண்டுபேர்கள் வன்முறை செய்கிறார்கள்.

தெருவில் இந்த வன்முறையைப் பார்த்துக் கொண்டு அதில் அடிபடுபவர் எங்கள் அரசியலை ஏற்றுக் கொண்டவரா என்று நேர்காணல் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு தலையிட்டால் அது கட்டப்பஞ்சாயத்து. கண்ணெதிரே நடக்கும் வன்முறையை தன்னலத்தின் சாதக பாதகத்தை அளவிடாமல் தட்டிக் கேட்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாடு. இந்த விசயத்தில் நாங்கள் மக்களின் வழியை பின்பற்றுகிறோம். உலக இலக்கியம் கற்றுத்தேர்ந்தவர்கள்தான் மக்கள் பிரச்சினைக்களுக்காக பொங்காமல் தங்களது அற்ப விசயங்களுக்காக குடித்துவிட்டு நண்பனின் மூக்கை உடைப்பார்கள். அப்படி மூக்குடைபட்டவர்கள் முதலில் தங்களது யோக்கியதை என்னவென்று பார்க்கட்டும். பிறகு எங்களை தராசில் நிற்கவைத்து தராதரம் பார்க்கலாம்.

ஆணாதிக்கத்திடம் சரணடையும் பதிவர் மதார்!

பதிவர் மதார் நாட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் ஏதோ கூறுகிறாள் என்பதற்காக பலரும் வந்து ஆதரவு தருகிறார்கள் என்று கவலைப்படுகிறார். இவ்வளவு நாட்களும் அவரோ இல்லை முகிலனோ இல்லை இரும்புத்திரை அரவிந்தோ நாட்டுப்பிரச்சினைகளுக்காகத்தான் கதறி அழுது போராடியிருக்கிறார்கள் போலும். வினவில் வரும் எல்லா இடுகைகளும் என்ன பிரச்சினையை பேசுகின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். ஏன் வினவின் அரசியல் எதிரிகள் கூட இங்கே சமூக பிரச்சினைகள்தான், பொது நலனுக்கான கட்டுரைகள்தான் வருகின்றன என்பதை மறுக்கமாட்டார்கள்.

இப்படிபொது நலனுக்கான பிரச்சினையைப் பேசத்தெரிந்தவர்களுக்கு இரண்டு மொக்களைகள் எழுதியிருக்கும் புனைவு பற்றி ஒன்றுமே தெரியாதாம். சாந்தி ஏதோ தவறாக எங்களை உசுப்பிவிட்டு பயன்படுத்திக் கொள்கிறாம். இதற்கெல்லாம் ட்யூஷன் எடுக்குமளவுக்கு மதாருக்கு பொறுப்புணர்வு இருந்தால் உண்மையில் வரவேற்கிறோம். ஆனால் சாந்தியைப் பற்றி இருவர் எழுதியிருக்கும் புனைவு எல்லாம் ஒரு விசயமே இல்லை என்று மதாரால் எப்படி கடந்து போக முடிகிறது?

இல்லை அந்த இருவர் எழுதியிருக்கும் புனைவின் பொருள் என்ன என்று மதாரே பொழிப்புரை எழுதட்டும். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு அவருக்கு என்ன் உரிமை இருக்கிறது? இந்த புனைவு சாந்தியைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று மதார் கூறவில்லை. அது பெரிய விசயமில்லை என்பதே அவரது நிலை. நல்லது, அது பெரிய விசயமா, இல்லை சிறிய விசயமா என்று சொல்லுவதற்கு சாந்திக்கு மட்டுமே உரிமை உண்டு. அந்த புனைவாலும் அதன் பின் சாந்தியின் அந்தரங்கத்தை வெளியிடுவதாக வந்த மிரட்டலாலும் சாந்தி எந்த அளவு புண்பட்டிருப்பார் என்பதை உணர்வதற்கு கூட அருகதை இல்லாத மொக்கையாக முடங்கி போனதற்கு மதார்தான் வெட்கப்படவேண்டும்.

இதில் சாந்திக்கு பக்குவம் இல்லை என்று மதார் வருத்தப்படுகிறார். மேலும் ஒரு பெண் என்ற முறையில் விட்டுக் கொடுத்து போகவேண்டுமென்றும் கூறுகிறார். அப்படி விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் அதன்பெயர் அடிமைத்தனம் அல்லது சராணாகதி. அதன் விளைவு ஆண்டாண்டு காலத்திற்கும் ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்க்க முடியாது என்ற பாடம்தான்.  ராமன் சந்தேக்ப்பட்டான் என்பதற்கு சீதையை தீக்குளிக்க வைத்து கொன்றதை கதையாக பெருமைப்படும் நாடுதானே இது? சாந்தியும் அப்படி தீக்குளிப்பதுதான் பக்குவம் என்று மதார் மன்றாடுகிறார்.

குழந்தைகளை வயிற்றில் சுமந்து பின் வளர்த்தெடுத்து தன் வாழ்க்கையை கரைத்துக் கொள்ளும் அநேக பெண்களுக்கு தாய்மையின் அருமை பற்றி விளக்கத் தேவையில்லை. ஆனால் இந்த தாய்மை என்ற அந்த தன்னலமற்ற பண்பை உடலாலும் சமூக நிலைமையாலும் பெறாத ஆண்களுக்கு வேண்டுமானால் அது புரியாமல் இருக்கலாம். இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் சாந்தி எத்தனை தடவை யோசித்திருப்பார், தயங்கியிருப்பார், மென்று புழுங்கியிருப்பார்.

இங்கே ஒரு உண்மையினை பகிர்ந்து கொள்கிறோம். முதலில் இந்த பிரச்சினையை சாந்தி எங்களுக்கு தெரிவித்த போது,  இதை இப்போதைக்கு விட்டுவிட்டு பொருத்தமான தருணத்தில் அந்த பதிவர்களை அம்பலப்டுத்துவோம் என்றுதான் கூறினோம். அப்போது கூட அவர் அதை மறு வார்த்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். பின்னர் நடந்த பிரச்சினை என்னவென்று சில பதிவர்கள் மூலம் அறிந்த பிறகுதான் இதை வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சிப் போக்கில் சாந்தியிடம் வெளிப்பட்டது அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்ப்பதை விட இனி எந்த பெண்ணுக்கும் இது நேரக்கூடாது என்ற ஆதங்கம்தான். இதையெல்லாம் வலிந்தோ, செயற்கையாகவோ சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சாந்தியின் கட்டுரையில் ஒரு விசயம் வருகிறது. வேறு ஒரு குழுமத்தில் ஒருவர் சாந்தியை தாய்லாந்தில் விபச்சாரம் செய்வதாக கூறியிருக்கிறார். பின்னர் அது தவறு என்பதை மனதார மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த மன்னிப்பை ஏற்கும் பெருந்தன்மையும், பக்குவமும் சாந்தியிடம் இருக்கிறது. ஆனால் அத்தகைய கயவர்களை கண்டிப்பதற்க்கான பக்குவம் அல்லது சுயமரியாதை மதாரிடம்தான் இல்லை. புனைவு எழுதிய அரவிந்தும், முகிலனும் அதன்பின்னர் அதை நியாயப்படுத்தியதோடு, மேற்கொண்டு இரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். இதை எப்படி எதிர் கொள்வது என்ற அவநம்பிக்கையில்தான் சாந்தி பலருக்கும் மடல் அனுப்பி நியாயம் கேட்கிறார். அப்போதுதான் பதிவுலகம் இந்த பிரச்சினையைக்கூட தட்டிக்கேட்பதற்கான ஆரோக்கியமான சூழலில் இல்லை என்ற உண்மை அவருக்கு புரிகிறது. இதற்குத்தான் நாம் வெட்கப்படவேண்டுமே அன்றி சாந்தி அல்ல.

தோழர் மாதவராஜ் ஏன் அவமானப்படுகிறார்?

மாதவராஜ் அப்படி பதிவுலகம் சார்பாக தான் அவமானப்படுவதாக எழுதியிருக்கிறார். இதை நன்கு கவனியுங்கள், இதில் சம்பந்தப்பட்ட புனைவு எழுதிய பதிவர்கள் வெட்கித் தலை குனியவேண்டுமென்று அவர் எழுதவில்லை. அவர்களிடமெல்லாம் அப்படி ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்த முடியாது என்பதற்காக அத்தகைய குற்றமெதனையும் செய்யாத மாதவராஜ் தன்னை முன்வைத்து தலைகுனிகிறார். ஒரு ஆண் என்ற முறையில் அவர் அவமானப்படுகிறார். வேதனைப்படுகிறார். ஆணாதிக்கம் குறித்த சமூகப் பார்வை கொண்ட எந்த மனிதனும் செய்யக்கூடிய நேர்மையான சுயவிமரிசனம் அது. அப்படியெல்லாம் மாதவராஜ் நடந்து கொள்ள எது தூண்டியது? இப்படி எழுதிய ‘ குற்றத்துக்காக’ அவரை கடித்துக் குதறக் காத்திருக்கும் ஆணாதிக்க மொக்கைகள் ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்க்கட்டும். மாதவராஜுக்கும் வினவுக்கும் பாரதூரமான அரசியல் வேறுபாடு இருக்கிறது. அவர் சார்ந்திருக்கும் கட்சி மீது எங்களுக்கு கடும் விமரிசனமிருக்கிறது. அதைப் போல எங்கள்மீது அவரது கட்சிக்கும் கடும் பகை இருக்கிறது.

இருப்பினும் இந்த பிரச்சனையை வைத்து  வினவை  தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்க அவர் முயலவில்லை. சொல்லப்போனால் சந்தனமுல்லை, சாந்தி இருவரது பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததால் அவர் தனது நட்பு வட்டத்தைத்தான் நிறைய இழந்திருக்கிறார். அவரது நேர்மைக்கும், கொள்கைக்காக நட்பு வட்டாரத்தை தக்கவைப்பதற்கு தலைவணங்காத அவரது உறுதிக்கும் தோழமை உணர்வுடன் தோள் கொடுப்போம். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவை எதிர்த்தவர்கள் இப்போது வினவை வஞ்சம் தீர்க்க முயல்வதை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம்.

வினவுத் தோழர்களை ஆண்கள் என்ற முறையில் ஒரு பெண் சந்தேகப்படலமா?

பதிவுலகில் புதிதாக ஒரு பெண்பதிவர் எழுத வருகிறார். பின்னர் வினவு செயல்பாட்டை வைத்து எங்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார். அப்போது மூத்த பெண்பதிவர் ஒருவர்,”வினவு தோழர்கள் முற்போக்காக இயங்கினாலும் அவர்களிடமும் ஜாக்ரதையாக இருங்கள். அவர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை பகிர்வதை தவிருங்கள், பதிவுலகில் வினவு தோழர்களே ஆனாலும் அவர்களும் சராசரியான ஆண்களாக இருக்கலாம், கவனம்” என்று சொல்வதாக வைப்போம். இது எங்களது கவனத்திற்கு வருகிறது. உடனே இதை எதிர்த்து நாங்கள் பொங்க வேண்டுமா? அவசியமில்லை. எல்லா ஆண்களையும் ஒரு பெண் சந்தேகப்படுவது சரியா,தவறா என்பது பிரச்சினை அல்ல. அப்படி சந்தேகப்படும் பட்சத்தில் அப்படி நாம் இல்லை என்றால் அதை நிரூபிப்பது நம் கடமைதானே அன்றி அந்த பெண் சந்தேகப்படுவதே தவறு என்று கூற வேண்டிய தேவையில்லை.

சந்தேகப்படுவதற்கு எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது என்பது சமூகத்தின் தரம்தாழ்ந்த நிலைமையை காட்டுகிறதே அன்றி அந்த பெண்ணின் தவறல்ல. எனில் அப்படி சந்தேகப்படக்கூடியதற்க்கு வாய்ப்புள்ள அந்த எல்லா ஆண்கள் பட்டியலில் நாங்களும் இடம் பெறுவோம் என்பது ஒரு சமூக உண்மைதானே? அதில் நாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்பதில் எங்களுடைய வாழ்க்கையில் இடம்பெறும் ஆணாதிக்கமும் அடக்கம்தான். இவ்வளவிற்கும் அதை பரிசோதிப்பதற்கான அமைப்பு முறையில்தான் நாங்கள் செயல்படுகிறோம் என்றாலும் பொது வெளியில் அதை வைத்து நாங்கள் ஆணாதிக்கத்தை கடந்தவர்கள் என்று சுயதிருப்தி அடையவேண்டிய அவசியமில்லை. வாழ்க்கை எனும் சமூக இயக்கத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது சாகும் வரை தொடர வேண்டிய போராட்டம். அதில் இத்தனை வருடம் கடந்திருந்தால் கம்யூனிஸ்ட் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என்ற அபத்தமான கருத்து எங்களிடம் இல்லை. இதை நண்பர் அப்துல்லா புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

முன்னாள் பெண்ணுரிமை ‘போராளி’ முகிலனின் மனசாட்சிக்கு சில கேள்விகள்!

சாந்தியை அக்கா என்று அழைத்து பழகி பின்பு புனைவு எழுதிய முகிலன் கூட ஒரு காலத்தில் கம்யூனிச இயக்கத்தின் தொடர்பில் இருந்ததாக அறிகிறோம். இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கப்படும் நக்சல்பரி இயக்கம் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் யுத்தக் கட்சி என்ற பெயரில் இயங்கியது. அந்த கட்சியின் அரசியலை ஆதரிக்க கூடிய பெண்கள் அமைப்பொன்று ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இயங்கி வந்தது. அப்போது அந்த இயக்கத்தின் பெண் தோழர்கள் பெண்களை இழிவு படுத்தும் ஆபாச இலக்கிய, திரைப்படங்களை எதிர்த்து ஒரு போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி ஆபாச படம் ஓடிய மதுரை திரையரங்கு ஒன்றில் நுழைந்து படச்சுருளை கைப்பற்றி முழக்கமிட்டவாறு தீவைத்துக் கொளுத்தினர். அந்த போராட்டத்தில் இந்த முகிலன் கலந்து கொண்டு போலீசிடம் அடிபட்டாராம். இதில் போலீசிடம் அடிபடுமளவு அந்த பெண்கள் தீவிரமாக போராடுவது குறித்து தனக்கு தெரியாது என்று முகிலன் வருத்தப்படுகிறார். இந்த பெண்கள் அமைப்பு ம.க.இ.க சார்பு அமைப்பு என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார். இல்லை ம.க.இ.கவிற்கும் அந்த பெண்கள் அமைப்பிற்கும் தொடர்பில்லை. சொல்லப்போன்னால் அந்த பெண்கள் அமைப்பு ஆதரிக்கும் மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் குறித்து ம.க.இ.கவிற்கு பெரும் விமரிசனங்கள், வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் மாவோயிஸ்ட்டு கட்சியை மாக்சிய லெனினிய இயக்கம் என்ற முறையில் தோழமையுடன்தான் அணுகுகிறோம்.

இப்போது அது பிரச்சினை அல்ல. முகிலனுடன் போராடிய அந்த பெண் தோழர்கள் பின்ன்ர் தரும்புரியில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற வழக்கு காரணமாக பல வருடங்கள் சிறையில் இருந்தனர். சிறையில் அவர்களது இளமை குன்றிய காலத்தில் முகிலன் படித்து ஆளாகி பின்னர் அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாகிவிட்டார். இன்று வசதியான அமெரிக்க வாழ்க்கை தந்த ஆணவத்தின் காரணமாக புலவன்புலிகேசி என்ற பதிவர் சமூக அக்கறை காரணமாக எழுதுவதைக் கூட கேலி செய்து அகமகிழும் உயர்ந்த இரசனைக்கு மாறிவிட்டார்.

முகிலன் நீங்களும் ஒரு காலத்தில் தோழர் முகிலனாக இருந்திருக்கிறீர்கள் என்ற உண்மையினை வைத்து கேட்கிறோம். உங்களுடன் சிறை சென்ற தோழர்கள் நினைத்திருந்தால் உங்களைப்போன்ற வசதியான வாழ்க்கையை எட்டியிருக்கலாம். அவர்களோ பல ஆண்டுகள் சிறை சென்றதோடு பல உடல் உபாதைகளோடு எந்நேரமும் தொடரும் போலீஸ் தொல்லையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொலைவில் தண்டகாரன்யாவில் உங்கள் முன்னாள் தோழர்கள் பழங்குடி மக்களுக்காக தனதுயிரை பணயமாக வைத்து எந்நேரமும் சாவை எதிர்பார்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய அமைப்பின் தொடர்பில் இருந்த நீங்கள் இன்று புனைவு எழுதியும், புலவன் புலிகேசியை கேலி செய்தும் உங்கள் ஓய்வு நேரத்தை இன்பமாக கழித்து வருகிறீர்கள். புரட்சியும், ஏழைகளும், தோழர்களும் இன்று உங்கள் பார்வையில் மட்டமான பொருட்களாகிப்போனார்கள். தோலர் என்றும் புர்ச்சி என்றும் அழைப்பது உங்களுக்கு அளவிலா மகிழ்வை தருகிறது. இரும்புத்திரை என்ற பெயரில் இயங்கும் மண்குதிரையான அரவிந்தைப் பற்றிக்  நாங்கள் கவலைப்படவில்லை.

ஆனால் ஒரு காலத்தில் இத்தகைய வாசனையுடன் உங்களது இளமையின் ஒரு பகுதியை செலவிட்ட நீங்கள் இன்று ஒரு பெண்ணையும், சமூக அக்கறை கொண்ட ஒரு இளைஞனையும் இழிவுபடுத்துகிறீர்கள் என்பது எத்தகை பரிணாம வளர்ச்சி முகிலன்? நாளை உங்களது வரலாற்றை நினைவு கூறும் போது இவற்றில் எதனை பெருமையாக கருதுவீர்கள்? ஆபாச திரைப்பட்த்தை எரிப்பதற்கு உடன் வந்த நீங்கள் இன்று இப்படி ஒரு புனைவை எழுதியிருக்கிறீர்கள் என்பதை அந்த பெண்கள் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்? அது குறித்தெல்லாம் உங்களுக்கு கவலை இல்லை என்றால் நீங்கள் யார் என்று தெரிவியுங்கள் முகிலன்.

கிடைத்திருப்பது நமக்கு ஒரு வாழ்க்கைதான் முகிலன். அதில் பணமும், ஆடம்பரமும், வசதியும், அதற்கு உகந்த நட்பும் கிடைத்திருக்கலாம். ஆனால் சமூக விடுதலைக்காக அந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் தம்து வாழ்க்கையை இணைத்துக் கொள்பவர்களே மனித வாழ்க்கையின் முழுமையை கம்பீரத்துடன் அடைகிறார்கள். மனித குலத்தின் வரலாறு அதற்காக தியாகம் செய்த முன்னோடிகளால்தான் முன்னேறுகிறது. அந்த முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்காமல் அப்ப்டி பயணிப்ப்வர்களின் கால்களை தட்டிவிடுவதில் இன்பம் காணாதீர்கள். உங்களிடம் இன்னமும் நேர்மை என்று ஏதாவது குடியிருந்தால், கடுகளவாவது மனசாட்சியிருந்தால் நடந்தவற்றிக்கு மனதார வருந்துங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அதனால் நீங்கள் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.

தனது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் மனிதன்தான் வாழ்க்கை எனும் உலைக்களத்தில் புடம்போடப்ப்ட்டு மனநிறைவான வாழ்வை வாழமுடியும். அத்தகைய நிம்மதி வேண்டுமா இல்லை வாழ்க்கை முழுவதும் பின்தொடரக்கூடிய குற்ற உணர்வு வேண்டுமா முடிவு செய்யுங்கள். இந்த விவகாரத்திற்கு செலவிடப்பட்டுள்ள நேரத்தினை அர்த்தமுள்ளதாக்குங்கள். இந்த கோரிக்கையை உங்களிடம்தான் வைக்க முடியும் என்ற வகையில் இன்னமும் நாங்கள் உங்களிடம் சிறு நம்பிக்கையை கொண்டிருக்கிறோம். சாந்திக்கும் அந்த நம்பிக்கையை உருவாக்குவது உங்கள் கையில். மற்றபடி இரும்புத்ததிரை அரவிந்த் போன்ற உலக ‘அறிவாளிகளிடம்’ இதை புரியவைக்கமுடியாது.

பெண்களால் ஆண்கள் பாதிப்படைவதில்லையா? உண்மை என்ன?

அடிமைத்தனத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு நடக்கும் பெண்களாலேயே பல ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பின் மூலத்தை அந்த ஆண்கள் உணருவதில்லை. மாறாக பெண்களால் ஆண்கள் பாதிக்கவில்லையா என்று சரிக்கு சமமாக பார்க்கிறார்கள். அடிமைத்தனத்திலேயே ஊறித்திளைத்திருக்கும் பெண்களிடமும் ஜனநாயகத்தின் வாசனை கூட அறிமுகமாயிருக்காது. அதனால் அவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்காது. பெண்கள் பொது வாழ்வில் ஒன்று கலப்பதும், சமூக,பொருளாதார தளங்களில் சுயேச்சை நிலையை அடைவதும்தான் அதற்கான மாற்றத்தை கொண்டுவரும். தனது வீட்டு குடும்ப் பெண்களை சமையலறைக்கும், வேலைக்குச் சென்றால் ஏ.டி.எம் எந்திரமாகவும் கருதும் ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்களால் பாதிப்பில்லையா என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

இத்தகை நிலைமையினை பல விடயங்களில் காணலாம். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை வைத்து தாங்கள் தவறாக குற்றம் சாட்டப்படுவதாக ஆதிக்க சாதியினர் இந்தியாவெங்கும் கூவுகின்றனர். ஆனால் இதுவரை இந்தியாவில் இந்த சட்டப்படி தண்டிக்கப்பட்டோரை எங்கும் கண இயலாது. கூடவே கயர்லாஞ்சி, மேலவளவு போன்ற கொடுமைகள் அன்றாடம் நடக்கின்றன. கோவைக் கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனையை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் அதை விட கொடுமையான கயர்லாஞ்சி படுகொலைகளுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதில்லை.

இத்தகைய முரண்பாடு சுட்டும் உண்மை என்னவென்றால் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஆதிக்க சாதியினரை தண்டிக்க முடியாது என்ற சமூக யதார்த்தத்தைத்தான். அது போல சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசுகள் பல சலுகை கொடுப்பதாக இந்து மதவெறியர்கள்கூறுகின்றனர். ஆனால் முன்பு பொடா சட்டத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்கள்தான் கைது செய்யப்பட்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு பிடிப்பதிலும், அல்லது ஒரு வேலைக்கு செல்வதிலும் முசுலீம் என்ற காரணத்தினால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலாக குஜராத் போன்ற சமீபத்திய இனப்படுகொலைகளுக்கு காரணமான ஒரு இந்து மதவெறியர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இத்தகைய நிலைமைதான் பாலினம் என்ற வகையில் பெண்களுக்கும் இருக்கிறது. ஆகவே தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்பாலினம் என்ற வகையில் இருக்கும் பிரச்சினைகளை அதன் எதிர் தரப்புக்கும் இல்லையா என்று கேட்கும் குரல் அநேகமாக ஆதிக்கவாதிகளின் குரலாகத்தான் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் எத்தனை பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது?

ஆண் பாதிப்படைவதும் பெண் பாதிப்படைவதும் சமமானவைகளா?

அடுத்து ஒரு பெண் பாதிக்கப்படும் போது அவளது பெண்மையை இழிவுபடுத்தும் கதைகள், கிசுகிசுக்கள், புனைவுகள் சுலபமாய் பிறக்கின்றன. சில பெண் பதிவர்களிடம் ஒரு வக்கிர ஆண் பதிவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றால் உடனே சம்பந்தப்பட்ட பெண்பதிவர்களைப் பற்றிய கதைகள் வெகுவேகமாய் புனையப்ப்ட்டு  பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அதாவது அந்த பெண்பதிவர் அப்பாவியல்ல, அந்த ஆண் பதிவர் பொறுக்கியுமல்ல என்று பேசுகிறார்கள். சாந்தி தனது பதிவில் ஒரு விசயத்தை நறுக்கென்று குறிப்பிடுகிறார். ஒரு பெண் விபச்சாரியே ஆனாலும் அவளை கற்பழிப்பதற்கு எந்த பொறுக்கிக்கும் உரிமையில்லை. அவளது சம்மதமின்றி யாரும் அவளை தொட நினைப்பது கூட பாலியல் வன்முறைதான். ஆனால் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தவறாக பேசினான் என்றால் அந்த பெண்ணின் நடவடிக்கை சரியல்ல என்று பேசுவது காலம் காலமாய் தொடரும் ஆணாதிக்க தந்திரம். முல்லைக்கு ஏற்ப்பட்ட பிரச்சினையில் சூட்டோடு சூடாக எத்தனை உள்ளங்கள் கிசுகிசுக்களை பரப்பினார்கள் என்பதை அறிவோம். இன்றும் கூட அவை வெட்கம் கெட்ட முறையில் பேசப்படுவதையும் பார்க்கிறோம்.

அடுத்து பாதிக்கப்ப்ட்ட பெண்கள் அதை தைரியமாக வெளியே சொல்லமாட்டார்கள் என்பதை வைத்து தன்னை யோக்கியன் என்று அசால்ட்டாக சொல்லிக் கொள்ள முடியும்தான். அந்த பெண்ணே அதற்குரிய ஆதாரத்தை வெளியடாத வரை சம்பந்தப்பட்டவரை நாம் குற்றம் சாட்டுவது தவறா, இல்லையா என்பதைத்தான் இங்கே பலரும் பார்க்கிறார்களே அன்றி பாதிக்கப்பட்ட பெண்கள் அதை வெளியே சொல்ல முடியாத நிலை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் சம்பந்தப்பட்ட பெண்கள் அதை கூறாமல் இருந்தால்தான் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்குமென்று பலர் நினைக்கிறார்கள். எனில் நாம் எந்தக் காலத்திலும் ஆணாதிக்கத்தை வீழ்த்த்முடியாது என்று ஆகிறது. எனவே இதை ஒரு சட்ட சிக்கல் என்று பார்க்காமல் சமூக சிக்கல் என்றுபார்ப்பதும், அதில் பெண்களின் தரப்பை புரிந்து கொண்டுஆதரிப்பதும்தான்  நாம் செய்ய வேண்டிய சரியான அணுகுமுறையாக இருக்கும். இதை சாமர்த்தியாமன வக்கீல்களைப் போன்று ஆதாரத்தை வைத்து மடக்கி பேசுவதால் நாம் பெறப் போவது தண்டிக்க இயலாதா ஆணாதிக்கத்தின் வெற்றியைத்தான். இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

எல்லாவற்றும் மேலாக பெண்களின் பாதுகாப்பற்ற சமூக சூழ்நிலை காரணமாக அவர்கள் பாதிக்கப்படும் சமூக பரிமாணத்தை உள்ளது உள்ளபடி ஏற்கவேண்டும். ஆனால் இந்த பாதிப்பு ஆண்களுக்கு என்று வரும்போது அதன் சமூக பரிமாணம் அத்தனை கவலைப்படத்தக்கதாக இல்லை. ஊர் மேயும் ஆண்களை அவர்களது இயல்பு என்றுபார்க்கும் சமூகம்தான் அது பெண் என்றால் உடனே ஒழுக்க சாட்டையை கையில் ஏந்தி வீசுகிறது. அதில் மட்டும் இருபாலாருக்கும் ஒரே மாதிரி சவுக்கடி கிடைப்பதில்லை. ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒழுக்கம் குறித்த அளவு கோல்கள் இங்கு வேறானவை என்பதைக் கூட உலக இலக்கியம் படித்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இலக்கியம் குறித்த நமது பார்வையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

இனி நாங்கள் எழுத்தில் மட்டும் போராடப்போவதில்லை!

இறுதியாக பதிவர் சாந்தி எழுப்பியிருக்கும் பிரச்சினையை ஒரு சமூகப்பிரச்சினையாக பார்ப்பதும், அதை தனிப்பட்ட விவரங்களை வைத்து திசைதிருப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட கட்டுரையை ஒரு முழு இரவு முழுவதும் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கள் அரசியல் பணிகளுக்கிடையே இதையும் ஒரு பணியாக கருதியே ஈடுபட்டிருப்பதால் ஏதோ நேரத்தை வீணாக்கினோம் என்ற குறை எங்களிடத்தில் இல்லை. ஆனால் இந்த நேரம் இன்னும் முக்கியமான பிரச்சினைகளுக்கு பயன்படவேண்டும் என்பதை சிலர் வலியுறுத்தலாம். இதெல்லாம் நாம் விரும்பியபடி அமைவதில்லை.

பதிவர் சாந்தி எழுப்பியிருக்கும் பிரச்சினையினை மட்டும் பரிசீலித்துப் பார்த்தால் அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியினை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை புரிந்து கொள்வதற்கு கூட உலகம் தோன்றிய காலத்திலிருந்து வருவோம் என்று ஆரம்பித்தால் நாம் அதை இலக்கில்லாமல் பேசிக் கொண்டே இருக்கலாம். எனவே பதிவர் முகிலனிடம் வினவு சார்பில் முன்னர் வைத்த கோரிக்கையை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு இப்போதைக்கு முடிக்கிறோம். இது தொடருமா, எழுதித்தீருமா என்ற கேள்விக்கு நாங்களோ சாந்தியோ பதில் சொல்வது இயலாது.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!

161

வினவு குறிப்பு: பதிவுலகில் பெண்களை புனைவால் குதறும் வக்கிரம் தொடர்கிறது…!

இருவாரங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டிலிருக்கும் பதிவர் ‘புன்னகைதேசம்’ சாந்தி எங்களைத் தொடர்பு கொண்டார். அவரை இருபதிவர்கள் புனைவு என்ற வடிவில் தாக்கி எழுதியிருக்கும் விசயத்தை சொன்னார். இது தொடர்பாக வேறு சில பதிவுலக நண்பர்களும் தொடர்பு கொண்டு அதன் முழு பின்னணியை தெரிவித்தார்கள். இதில் அநீதி இழைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு புரியவந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். முதலில் சம்பந்தப்ப்ட்ட பதிவரே இந்த விவகாரம் குறித்து எழுதி வினவில் வெளியிட்டு பதிவுலக நண்பர்களிடம் நியாயத்தை கேட்கலாம் என்று முடிவு செய்தோம். இரண்டு, சட்டபூர்வமாக இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை வழக்கறிஞர்களிடம் பேசி வருகிறோம்.

பதிவர் சாந்தி இந்த பிரச்சினையில் பாதிக்கப்ப்ட்டு மன உளைச்சலோடு இருந்தாலும் இதை உறுதியாக எதிர்த்து போராடவேண்டும் என்பதில் தளரவில்லை. பதிவுலகில் ஒரு பெண்பதிவர்  சமையல் குறிப்பையும், மொக்கைகளையும் எழுதினால் பிரச்சினை இல்லை. மாறாக சமூக அக்கறை கொண்டு சில கருத்துக்களை தெரிவித்தால் ” ஒரு பெண்ணா, இப்படி பேசுகிறாள்” என்று சில ஆண் பதிவர்கள் சீறுகின்றனர். அதையும் விவாதமாகவோ, கருத்துப் போராட்டமாகவோ வைக்க வக்கின்றி வக்கிரமாக புனைவு எழுதி தமது ஆணாதிக்கத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். அதை எதிர்த்தால் மேலும் பல அந்தரங்களை விடப்போவதாக மிரட்டுகின்றனர்.

ஒரு பெண் ஏதாவது ஒரு புகார் தெரிவித்தால் ஏது என்ன்வென்று விசாரிக்கமாலேயே பல ஆண் பதிவர்கள் ஆதரவு அளிக்க வருகின்றனர் என்று ஒரு மூடநம்பிக்கை இங்கே நிலவுகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம். எனினும் இந்த உலகில் எந்த பிரச்சினையும் இருபாலினத்தாருக்கும் சமமாக அமைவதில்லை.   பெண்ணைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினை என்றாலும் அவளது பாலினம் என்ற முறையில் கூடுதலாக அலட்சியமாக இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதைக்கூட உலக இலக்கியம் படித்த சிகாமணிகளே  புரிந்து கொள்ளவில்லை. எனில் மொக்கைகளைப் பற்றி விரித்துரைக்க தேவையில்லை.

எமது அரசியல் பணிகளில் ஒன்றாகவே பதிவுலகில் ஆணாதிக்க அடாவடித்தனத்தை ஒழிப்பதையும் வைத்திருக்கிறோம். இது எழுதுவதோடு மட்டுமல்ல சட்டபூர்வ நடைமுறைகளுக்குட்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனினும் இந்தப் போராட்டத்தை எங்களது அமைப்பு தோழர்களின் செல்வாக்கை வைத்து செய்யப்போவதில்லை. மாறாக பதிவர்களையும், வாசகர்களையும் திரட்டி அவர்கள் மூலமாகத்தான் போராடுவோம். ஏற்கனவே சந்தனமுல்லைக்கு அநீதி நடந்த போது பதிவுலகின் பெரும்பான்மை அதை தட்டிக் கேட்டார்கள் என்பது நமக்கு உவப்பளிக்கும் செய்தி. எனவே பதிவர் சாந்தி இந்த வக்கிரக்காரர்களின் புனைவுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இயங்குவார், இயங்க வேண்டும். இனி சாந்தியின் கதையை அவரது எழுத்திலேயே கேளுங்கள்!
————————————————————————————————————————————————–

பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!

—————————————————————-
தமிழ்நாட்டை விட்டு வெளியேறி 15 வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கை நிமித்தம், குடும்பம் நிமித்தம் வெளிநாட்டிலேயே வாழ வேண்டிய சூழல். தாய்மொழி பேசிடவோ, சொந்தங்கள், நட்புகளுடன் உறவாடவோ வாய்ப்பற்ற நிலையில் இணையத்திற்கு வந்தேன். இழந்த தமிழக வாழ்க்கையை அளிக்கும் வாய்ப்பிணை இணயம் தந்தது. எத்தனை நல்ல உள்ளங்கள், ஆறுதல் தந்த இதயங்கள், வழி நடத்திய பெரியவர்கள், தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்…… அதுவரை குடும்பம், குழந்தைகள்  வேலை என்றிருந்த என் உலகம் பரந்து விரிந்தது.

பல குழுமங்கள், பல விஷயங்கள், பல பெரியவர்கள் என அந்த உலகம் தொடர்ந்து விரிந்தவாறே இருந்தது. வயசு வித்தியாசமின்றியும், இளவயது துடிப்புடன் பழகிய தருணங்கள், மனதார சிரித்து மகிழ்ந்த தருணங்கள், சிந்தனையை தூண்டி ஆக்கப்பூர்வமான கருத்துக்களைபரிமாறிக் கொண்டவை என்று அந்த மகிழ்ச்சியான உலகத்தை என்னால் அளவிட முடியவில்லை.

இணையம் என்பது எனக்குபாடசாலை, பயனுள்ள இடம். நம் சுற்று வட்டாரத்தில் சந்திக்க முடியாத அறிஞர் பெருமக்களையும், அனுபவசாலிகளையும் குழுமங்கள், பதிவுகள் மூலம் எளிதாக  உரையாட வைத்த இடம். நூற்றுக்கணக்ககான மடல்களுடன் குழும கருத்தாடல்கள் செய்த இடம். விரைவாக வாசிப்பதில், கருத்துக்களை பகிர்வதில், வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்த இடம்…

இத்தகைய இணைய சூழலில் இப்போது பெண்களை சில வக்கிரக்காரர்கள் புனைவு மூலம் குதற ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும், இனி இந்த பாதிப்பு எவருக்கும் வரக்கூடாது என்ற உறுதியோடுதான் வினவு தளம் மூலம் உங்களை சந்திக்கிறேன். அந்த வக்கிரக்காரக்ளை நரகல் என்று சகித்து கொண்டோ, ஒதுங்கிக் கொண்டோ போக முடியாது என்ற நிலையிலேயே இதை எழுதுகிறேன். “பூக்காரி” என்ற வார்த்தையை கேட்ட் மாத்திரத்திலேயே வலியும், வேதனையும் வருவதை நானும் ஒரு பெண் என்ற முறையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் “பூக்காரிகளை” வன்மத்துடன் இழிவுபடுத்தும் வக்கிரக்காரர்கள் புதிது புதிதாக  முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி என்கதையை எழுதுகிறேன்.

தமிழ் வலைப்பதிவர் குழுமம் எனும் இணைய தளத்தில் நல்ல கருத்துக்கள் பரிமாறப்படும் என்ற ஆர்வத்தில் இணைந்தேன். ஆரம்பத்தில் நாம் எளிமையாக அணுகவேண்டுமென்று மொக்கை போட்டதுண்டு, மிக சீரியஸான விவாதங்களும் நடந்ததுண்டு.. சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அவற்றை நாகரீகமாக வைத்தே பேசியிருக்கிறேன்.

http://groups.google.com/group/tamizhbloggersforum/browse_thread/thread/9d11ba9ecbd9314c/dc9f2943012625a7?hl=en&q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&lnk=ol&

ஆனால் நான் ஒரு ஆணில்லை என்ற உண்மை காரணமாக சிலரால் வெறுப்புடன் நோக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன். இதை எனக்கு உணர்த்தியவர்கள் பதிவுகள் எழுதும் ‘பதிற்றல்கள்’ முகிலன் மற்றும் ‘இரும்புத்திரை’ அரவிந்த். குழுமத்தில் என்னை அக்கா என்று அழைத்தவர்கள் பிறகு என்னை புனைவில் துகிலுரிந்தார்கள்.

குழுமத்தில் மதார் என்ற பெண்பதிவர், அவருடன் சாட்டில் வந்த ஆண்பதிவர் முறைகேடாக பேசியதை குறிப்பிட்டிருந்தார். இது குறித்து இரும்புத்திரை அரவிந்திடம் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அரவிந்திடம் பேசும்போது அவர் இதை ஒரு அநீதி என்று எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் ஆர்வத்திற்குப்பதில் அந்த சர்ச்சை குறித்த விவரங்களை, யார் என்ற ஆவலை ஒருகிசு கிசு ஆர்வலன் போலத்தான் அணுகினார். இது எனக்கு பிடிக்கவில்லை. மதாரிடமும் அதை சொல்லிவிட்டேன். அடுத்து இந்த இரும்புத்திரை அரவிந்த் எழுதும் பதிவுகளில் மற்றவர்களை அருவருப்பாக தாக்கி எழுதுவார் என்பதால் இது குப்பை என்று ஒதுக்கிவிட்டேன்..இதில் என்ன தவறு கண்டார்கள்?.நான் தியாகு என்பவருக்கு பதில் போட்டால் இவருக்கு பிடிக்காதம். நர்சிம் பிரச்சினையின் போது இந்த அரவிந்த் நர்சிம்முக்குத்தான் முழு ஆதரவு என்று எழுதியமையால் பதிவுலகமே பயந்து போயிருப்பதாக இப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்வார். அதனால்தானோ என்ன்மோ இவரது கருத்துக்களுக்கு எதிர்வாதம் செய்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.இப்பத்தான் புரிகிறது, இவர் நர்சிம்மின் அடியாள் என்று. ஏன்னா பதிவர் தீபா எது எழுதினாலும் உடனே எனக்கு லிங்க் அனுப்பி பார்க்கச் சொல்வார். இது எதுக்குன்னு ரொம்ப நாள் புரியாம இருந்தது. என்னை பதிவுலகில் அறிந்தவர்கள் மிக கம்மி. என் பங்களிப்பு குழுமத்தில்தான் அதிகம். எனக்கு யாரிடமும் தனிப்பட்ட பகையோ, எந்த அரசியலுமோ கிடையாது. அரவிந்த் அவருடைய அடியாள் வேலைக்கு நான் உடன்படவில்லை என்பதும் அதை தட்டிக் கேட்டதும்தான் அவருக்கு பிரச்சினை.

பதிவர் ‘ பிதற்றல்கள்’ முகிலன் என்பவர் பதிவர் புலவன் புலிகேசியைப் பற்றி கேவலமாக ஒரு கவிதை எழுதினார். அதில் ஏழைகளைப் பற்றியும், அந்த ஏழைகளுக்காக போராடுபவர்களையும் இழிவு படுத்தியிருந்தார். இதை நான் யதார்த்தமாக பின்னூட்டத்தில் கண்டித்தேன். புலவன் புலிகேசியின் சமூக அக்கறையை இவர்கள் கொச்சைப்படுத்துவது எனக்கு கோபத்தை வரவழைத்தது. இன்னும் சொல்லப்போனால் என் தனிப்பட்ட இகழ்ச்சியை விட இது அதிக வேதனை தந்தது..இதிலும் நான் ஒரு பெண்தானே என்ற உண்மை முகிலனை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. முகிலனின் அந்த வக்கிரமான கவிதையை கீழே படியுங்கள்,

——————————————————————————————–
புலவன் – புரட்சி எழுத்தாளன்
பிதற்றியது முகிலன் on Tuesday, August 17, 2010
வகைப்படுத்துதல் எதிர் வினை

அருமையான ப்ளாக் டெம்ப்ளேட்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

அடடா போட வைக்கும் எழுத்து நடைதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?

இடுகை படித்து பின்னூட்டமிட்டு
தமிழ்மணத்தில் ஓட்டையும் போட்டு
இண்டர்நெட் லிமிட்டை எக்சீட் செய்து

அடுத்த வேளை ரீசார்ஜ் செய்ய நண்பனின்
பாக்கெட்டைத் தடவ வேண்டிய நிலை

ஒவ்வொரு இடுகை வெளியீட்டின் போதும்
இது இயல்புதான்

அதற்காக புலவர் வந்து உனக்கு
ரீசார்ஜ் செய்தாரா?

நாட்டின் வறுமையை இடுகையில்
விளக்கும் புலவன்

உண்மையில் அதை ஒழிக்க
கெண்டைக்கால் மயிரேனும் பிடுங்கியிருப்பாரா?

ஓசி ப்ளாக்கரில் அவர்கள்
ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.

________________________________________

இதுதான் முகிலன் எழுதிய கவிதை. முகிலனுக்கு ஏழை என்றால் இளக்காரமா ?.  வெளிநாட்டில் போய் நாலு காசு பார்த்துவிட்டால் யாரை வேணா இழிவுபடுத்தலாமா?.
நமக்கு/நம் பிள்ளைகளுக்கு நாளை அந்த நிலைமை வராது என்று என்ன நிச்சயமுங்க?..இந்த வக்கிரமான கவிதையை எழுதிய முகிலனை நான் கண்டித்தது அவருக்கு கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை.
இது நடக்கும்போதும் குழும நடத்துனர் கேபிள் இடையில் வந்து தன் புத்தக விழா பற்றி சொனனாரேயொழிய ஒரு குழும மட்டுறுத்தனராய் பிரச்னையை பற்றி கண்டுகொள்ளவேயில்லை..அதே போல் மணிஜீயும்..இடையில் வந்து மழையில் நனைய சொல்லி போய்விட்டார்..குழுமத்தில் நியாயம் பேச தெரியாவிட்டால் , தட்டி கேட்காவிட்டால்  உங்களுக்கெதுக்கு குழுமம்.?.உங்க சொந்த விளம்பரத்துக்காக மட்டுமா?..  பதிலேயில்லை..

ஆனால் ஜானகிராமன் , அருள் ஸ்டீபன், புலிகேசி வந்து பேச ஆரம்பித்ததும்தான் தவறை உணர்ந்து தோற்றுப்போனர் அர்விந்தும் , முகிலனும்….

ஆக ஒரு பெண்ணிடம் தோற்று போக ஈகோ இடம் தருவதில்லை.. நியாயமென தெரிந்தாலும் அவளை மட்டம் தட்டி ஓட விரட்டணும்.. இப்படி இழிவுசெய்துதான் அவளுக்கு துணிவே தருகின்றீர்கள் என்பதையும் நியாபகம் வையுங்கள்..

இப்படிகருத்தை கருத்தால் சந்திக்க முடியாத பதிவர்கள் முகிலன், அரவிந்த் இருவரும் என்னைப்பற்றி புனைவு எழுதி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்கள். அதில் என்னைப் பற்றிய விவரங்கள் அவை நானே சொன்னதுதான், அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள். நான் நீச்சல் அடிப்பது, வேகமாக கார் ஓட்டுவது, என்.சி.சியில் துப்பாக்கி சுடுவதில் முதலிடம் வந்தது இதெல்லாம் நான் என்னைப்பற்றி சொல்லிய விவரங்கள்தான். இன்றும் நான் டென்னிஸ், ஸ்குவாஷ் விளையாடுகிறேன். என் தந்தையும் என்னை சிறுவயது முதல் அப்படித்தான் வளர்த்திருக்கிறார். 42 வயதில் இருக்கும் நான் இவற்றையெல்லாம் ஒரு பெண் இப்படி சம்பிரதாதயமுறைகளில் இருந்து மாறுபட்டு இருந்திருக்கிறேன் என்ற அடிப்படையில்தான் சொன்னேன். பெண் என்றால் சமையலறை சடங்குக்காக விதிக்கப்பட்டவள் என்ற அடையாளத்தை உடைத்திருக்கிறேன் என்பதைத்தான் அப்படி சொன்னேனே தவிர இது என்னை ஹீரோயிசமாக காட்டுவதற்கு அல்ல. பதிவுலகில் ஒரு பெண் அப்படி ஹீரோயினாகிட முடியுமா என்ன?

என்னைப் பற்றி நான் சொன்னது முகிலனுக்கு சுயசொறிதல் என்று தெரிந்ததாம். பரவாயில்லை, நான் என்னுடைய சுயத்தைத்தானே வெளியிட்டிருக்கிறேன், என்று அதை பெரிதுபடுத்தவில்லை. அடுத்து முகிலன் தனது மனைவியின் வீடியோவை இணைத்திருந்தார். பதிவுலகில் இத்தகைய காட்சிகள் தேவையில்லை, அது பெண்களுக்கு பாதுகாப்பனது அல்ல என்ற முறையில் அதை கண்டித்திருந்தேன். இதை அவர் தப்பாக புரிந்து கொண்டதோடு அது குறித்து விசமப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்..முதலில் என்னைப் பற்றி புனைவே எழுதவில்லை என பொதுவில் சொன்னவர் பிறகு அதை திசைதிருப்ப அவர் மனைவியைப்பற்றி தப்பாகப் பேசினேன் என்று பச்சைப் பொய்யை பரப்ப ஆரம்பித்தார். ஒரு பெண்ணை இழித்துரைக்க இன்னொரு பெண்தான் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறாள் போல. என்ன புனைவு எழுதினார்கள்? அதை நீங்களே படியுங்கள்….

[[  மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள். அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ் கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
—————————————————————————-
அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது. ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். ]]

ந்ததப் புனைவில் தாய்லாந்து பெண்ணாகவும், ஜான்சி அக்காவாகவும் என்னையே எழுதியிருக்கிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன். தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் என்னை அக்கா என்று அழைத்தவர்கள் இந்த புனைவில் என்னை ரூட் விடும் பெண்ணாகவும்,  காதலுக்கு அலைபவளாகவும், கவிதைகளை பொறுக்கி எடுக்கும் அற்பமாகவும், சித்தரித்திருக்கிறார்கள். இன்னொரு புறம் என்னையே ஜான்சி அக்காவாக உருவகம் செய்து, நான் என்னைப்பற்றிக் குறிப்பிட்ட என்.சி.சி, துப்பாக்கி சுடுதல் விவரங்களை வைத்து அல்லு விடச் செய்யும் பயங்கரமான வில்லியாகவும் எழுதியிருக்கிறார்கள்.

இதைப்படித்ததும் இது சந்தனமுல்லை விவகாரம் போல இருக்கிறதே என்று நினைத்தேன். குழுமத்தில் சிலரிடம் கேட்டேன்.. வடகரை வேலன் போன்றோரிடம். பதிலே இல்லை.

சிலர் கண்டுக்காதீங்க அக்கா என சொன்னதால்  சின்ன பசங்கள் என்று மன்னித்து விட்டுவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. இப்போது இந்த புனைவு எழுதிய அந்த பதிவர்கள் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த புனைவை நியாயப்படுத்துவதோடு, என் அந்தரங்க விசயங்களை வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். அவர்களது நோக்கம்தான் என்ன? என்னைப்பற்றிய அந்தரங்க விசயங்கள் போலத்தான் அவர்களது மனைவி, தாயின் அந்தரங்கமும் இருக்கும். அதை யாராவது வெளியிடுவது என்று ஒரு பேச்சு வந்தால் இந்த வக்கிரக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

நான் பெண் என்ற நிலையினை தாண்டி ஒரு சுயேச்சையான மனுஷியாக என்றோ மாறிவிட்டேன். எனது பணி நிமித்தம் காரணமாக பல ஆண்களுடன் வேலை செய்திருக்கிறேன். இரவு பணி செய்திருக்கிறேன். என் அலுவலக பணி காரணமாக உடன் பணிபுரியும் ஆண்களோடு விடுதிகளில் தங்கியும் இருந்திருக்கிறேன். ஒரே வாகனத்தில் பல ஆண்களோடு ஒட்டிக்கொண்டே பயணித்திருக்கேன்..தாய்லாந்து நாடு பெண்களை மிகவும் மதிக்கும் நாடு. விபச்சாரத்திற்காக நினைவுக்கு வரும் தாய்லாந்தில்தான் பெண்களையும் நாகரீகத்தோடு நடத்தும் பழக்கமும் இருக்கிறது. இங்கு பெரிய லாரிகளைக்கூட பெண்கள் ஓட்டுவது சர்வசாதாரணம். பொதுவெளியில் தாய்ப்பால் கொடுப்பார்கள் திறந்த மார்போடு.. அதை புனிதமாக கண்டு அந்த தாய்க்கு இடைஞ்சல் வராமல் விலகிச்செல்லும் ஆண்கள் நிறைந்த நாடிது..இங்கு பதிவுலகில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஈடாக எழுதும் காம வெறியர்கள் போன்றவர்கள் இங்கில்லை. யாரும் யாரையும் கிண்டல் செய்வதில்லை..இந்த சூழ்நிலையில்தான் நான் என்னுடைய அலுவலக பணிகளை செய்து முன்னேறியிருக்கிறேன்.

பணி காரணமாக ஒரு நாளைக்கு 700 கி.மீட்டர்கள் வரை அப்போது மாதவிடாய் என்றாலும் கூட கார்களை ஓட்டுவேன். அந்த நாட்களின் வலியையும், எரிச்சலையும் உணர்ந்த ஆண் நண்பர்களுக்காகவே இதை கூறுகிறேன். பெண்ணாக குனிந்து வாழ்ந்த காலம் என்றோ முடிந்து போனது என்ற கொள்கையின்படியே நான் வாழ்கிறேன். ஆனாலும் இதற்குமுன் என்வாழ்வில் இத்தகைய வக்கிரபுத்திக்காரர்களை நான் சந்தித்ததில்லை. மொழி தெரியா, வேற்றுதேசத்தவர்களிடமிருந்து வராத ஆபத்து என்னுடைய தமிழ்மொழி பேசும் நபர்களிடமிருந்து வருகிறது.ஆயிரம் ஆண்டானாலும் இந்த ஆணாதிக்க வக்கிர புத்தி தமிழ்நாட்டில் நீங்காது என்பது சாபக்கேடுதானே?…

இனி என் அலுவலக பணிகளை வைத்து நான் பல ஆண்களுடன், எனது அலுவலக நிர்வாகிகளுடன்  சோரம் போனதாக கூட அவர்கள் எழுதுவார்களோ, தெரியவில்லை. :))  . சிலவேளை சிரிப்புத்தான் வருகிறது இந்த கீழ்தரமான மனிதர்களோடு நான் இறங்கி பழக வேண்டியதாயிற்றே என..இந்த மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்லை. இவர்களால் என்ன் செய்துவிட முடியும்? இவர்கள் நோக்கம்தான் என்ன? ஒரு பெண் பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவளது அனுமதியின்றி அவளை தொடுவதற்கு எவனுக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை ஒரு பாலியல் தொழிலாளிப் பெண்ணை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம், அதில் தவறு இல்லை என்பதுதான் விசயம். இரண்டு பிள்ளைகளுக்கு தாயான என்னை, கடித்துக்கதறுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். அதை புனைவு எழுதி தீர்த்துக் கொள்கிறார்கள். அக்கா என்று அழைத்தவர்கள் இப்போது தவறானமுறைகளில் அழைக்கிறார்கள். இதை நான் தட்டிக் கேட்டால் அது தப்பா? இது போன்று நடப்பது எனக்குமுதல்முறையல்ல.சரி இந்த முறை தட்டிக்கேட்டதால் என் அந்தரங்கம்.. அடுத்தடுத்த முறைக்கு என்ன செய்வீர்கள் தம்பிமாரே.? .. 99 வயது கிழவி நடந்து போனாலும் கூடி நின்று கிசுகிசு பேசி தன் மனதின் வக்கிரத்தை தீர்த்துக்கொள்ளும் மன நோயாளிகள்தானே இங்கே அதிகம்.?..

தமிழமுதம் குழுமத்தில் ஒருவர் என்னை விபச்சாரி என்றும் தாய்லாந்தில் தொழில் நடத்துபவள் என்றும் எழுதியிருந்தார். பின்னர் தான் செய்த தவறை மனசார உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். இப்போதும் என்னுடன் நட்பாகவே உள்ளார். ஆனால் முகிலனும், இரும்புத்திரை அரவிந்தும் என்னை புனைவு எழுதியதோடு அது சரிதான் என்பது போல எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். தவறையும் செய்துவிட்டு பின்னர் அதை நியாயப்படுத்துபவர்களை என்ன செய்யலாம்.. நிரந்தரமாக இவர்கள் பெயர்கள்  வலையுலகில் பதியப்படவேண்டும்.. இனி எழுத வரும் பெண்களுக்கு இந்த சாக்கடைகளை அறிமுகப்படுத்தணும்..

கடந்த சில நாட்களில் மிகுந்த மனவேதனையோடும், உளைச்சலோடும்தான் இருந்து வந்தேன். சில பதிவுலக நண்பர்களிடம் நியாயம் கேட்டேன். இதற்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் முயன்றேன். சென்னை சைபர் கிரைம் போலிசிடம் பேசிய போது இது குறித்து தாய்லாந்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்கள். சில வழக்கறிஞர் நண்ப்ரகளை கேட்ட போது இதை சட்டப்படி மன உளைச்சலுக்காக புகார் அளிக்க சொன்னார்கள். அது குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்..

இறுதியில்தான் வினவு நண்பர்களைக் கேட்டேன். அவர்கள் இந்த விசயத்திற்க்காக தளராமல் போரடாலாம், அஞ்சவேண்டாம் என்று நம்பிக்கை கொடுத்தார்கள். இவ்வளவிற்கும் சந்தனமுல்லை பிரச்சினையின் போது நான் வினவை ஆதரிக்கவில்லை. அப்போது குழுமத்தில் வினவைப் பற்றி தவறான தகவல்களை தந்தார்கள். இன்று அவையும் புனைவு என்று அறிந்து கொண்டேன்.பல பதிவர்கள் தனிமடலில் எனக்கு ஆதரவை அளித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

இணைய உலகில் பெண்களை இப்படி புனைவின் மூலம் வன்முறை செய்பவர்களை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்க்காகவே இதை எழுதுகிறேன். சந்தனமுல்லை அவரது கட்டுரையில் இந்த பிரச்சினை அவரோடு முடிந்து போகவேண்டும் என்றுஎழுதியிருந்தார். ஆனால் அது அவரோடு முடியவில்லை. அடுத்த பலிகடாவாக நான்.இன்று நானும் இது என்னோடு போகவேண்டும் என்று விரும்புகிறேன். என்னை போல எல்லா வசதிகளும் உள்ள ஒரு பெண்ணுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு தமிழ்நாட்டிலிருந்து இணையத்திற்கு வரும் ஏதுமற்ற பெண்ணுக்கு  என்னென்னவெல்லாம் நடக்கும் என்று அஞ்சுகிறேன். பதிவுலகில் நான் புரிந்துகொண்டது…

ஒரு பெண்,

  1. திற்மையாகவும், தனித்தன்மையோடும், சமூக அக்கறையோடும் இருக்கக் கூடாது..
  2. அப்படியே இருந்தாலும் தப்புகளை பொதுவில் தட்டி கேட்கக்கூடாது.. அதுவும் முக்கியமாக ஆண்களை..
  3. பிரச்சனையில்லாமல் ( மொக்கையாகவே ) நீடிக்க வக்கிரம் பிடித்தவர்கள், கயவர்கள் , அடாவடித்தனம் செய்பவர்களோடான நட்பும் ஆதரவும் மிக மிக அவசியம்..
  4. ஒரு ஆணிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொள்ளும் ஆண்கள் , பெண் என்று வந்துவிட்டால் வார்த்தையில் மன்னிப்பும், எண்ணத்தில் வக்கிரமுமாக பழிவாங்க துடிக்கின்றனர்
  5. அதுவே அவளின் அந்தரங்கம் வெளியிடப்படுவதாக மிரட்டல்… இல்லை இருக்கவே இருக்கு கள்ள காதல்… காமம்.. , விவாகரத்து , நோய், கிசு கிசு… புனைவு.. இத்யாதிகள்…..

தமிழ் பதிவுலக நண்பர்களிடம் இனி இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குமாறும், பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பெண்கள் இதை உரிய வழிகளில் எதிர் கொள்வதற்கான முறைகளையும் உருவாக்குமாறும் பணிவுடன் கோருகிறேன். கடந்த நாட்களில் நான் பட்ட மனவேதனை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்திலோ எனக்கோ ஏதாகிலும் பிரச்னை வந்தால் அதற்கு இரும்புத்திரை அரவிந்த், முகிலன் இவர்களே காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறேன்..

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கருணாநிதியின் வம்சம் 24×7

59
கருணாநிதி 24x7
வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள்.  இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியிலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜசோழன் காலத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஆக அரசியலிலும், தொழில்களிலும் முத்துவேலர் வம்சம் கொடி கட்டிப் பறக்கிறது.

எண்பதுகளில் இந்தியாவையே கபளீகரம் செய்த நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் கருணாநிதி. இந்தியா என்ன நேரு குடும்பத்தின் சொத்தா? என்றெல்லாம் கேட்டவரின் குடும்பம் நேரு குடும்பத்தையே விஞ்சி விட்டது. மகள், மகன், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என்று கிளம்பி வந்து தமிழகத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் குறுநில மன்னர்களோ அவர்கள் சக்திக்கு வட்டம், மாவட்டம், வட்டாரம் என்று பங்கு போட்டு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘வட போச்சே’ என்பது போல சசிகலா குடும்பமோ  அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது இந்தத் தொழில்களை எப்படிக் கைப்பற்றுவது என்று கைபிசைந்து நிற்கிறது.

தமிழின் சினிமாவில் ஒரு காலத்தில் சிறு சிறு தயாரிப்பாளர்கள் கூட சினிமாத் தொழிலில் முதலிட முடியும் என்ற நிலை மாறி சன் தொலைக்காட்சி கேட்கிற விலைக்குள் படத்தை எடுத்து முடித்து அதற்குள் லாபம் பார்க்கிற ஒருவரால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும் என்ற நிலை. இதை மீறுகிறவர்களோ, சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை நம்பி படம் எடுக்கலாம் என்று நினைக்கிறவர்களோ அதிகாரமற்றவர்களாக இருந்தால் கோடம்பாக்கத்தில் எதுவுமே செய்ய முடியாத நிலை. அல்லது எல்லோரும் மணிரத்னமாகப் பிறந்திருக்க வேண்டும்.  ஒரு மாறன் இல்லை என்றால் சோனி நிறுவனத்திடம் பேரம் பேசி விற்கும் தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆக விருத்தியான பார்ப்பன, திராவிட வம்சங்களில் பிறக்க வாய்ப்பில்லாதவர்கள் கருணாநிதியின் வம்சத்தின் முன் அடங்கி நடக்க வேண்டும். இதுதான் மாமன்னர் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சி.

இவர்கள் முதன் முதலாக கைப்பற்றியது கேபிள் தொலைக்காட்சியை. திமுகவின் கட்சிப் பணத்தை எடுத்து பேரன்களுக்குக் கொடுத்து பூமாலை என்னும் வீடியோ பத்திரிகையைத் துவங்கினார் மாமன்னர். பின்னர்தான் அதிகாரமும் வந்து சேர, பூமாலை தன் வலையை விரித்து கேபிள் தொடங்கி இப்போது தென்னிந்தியாவையே 17 சேனல்களால் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தூர்தர்ஷனை உடைத்த கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் தூர்தர்ஷனை விட படுமோசமான நஞ்சு போதையை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இவர்களை மீறி எந்த ஒரு தொலைக்காட்சியும் கேபிள் வழி மக்களைச் சென்றடைய முடியாத நிலை. இவர்களை விமர்சித்து ஏதாவது நிகழ்ச்சி தயாரித்தால் அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடையாது. காரணம் 70% கேபிள் இணைப்புகளை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் வைத்திருக்கிறது. மீதியை அழகிரிக்குச் சொந்தமான நிறுவனம் வைத்திருக்கிறது.  இது கேபிள் தொலைக்காட்சியின் நிலை. வம்சங்களுக்கிடையில் பிளவு வந்த போது அரசுத் தொலைக்காட்சி துவங்கி உமசாங்கரை பொறுப்பாகப் போட்டு பின்னர் வம்சம் இணைந்ததும் அவரை பலிகடாவாக்கியதுதான் வம்சத்தின் இயல்பான குணம். வம்சம் பிரிந்த போது ஒரு தொலைக்காட்சிதான் இருந்தது. வம்சம் இணைந்த பின் செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல  சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள்.

சினிமாவை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று நினைத்த மாறன் சகோதரர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்க, ஸ்டாலினின் மகனோ ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தைத் துவங்கினார். அழகிரி மகனோ கிளவுட் நைன் நிறுனத்தை துவங்கினார். இன்று கோடம்பாக்கத்தில் இந்த மூன்று சினிமா நிறுவனங்களும் வைப்பதுதான் சட்டம். மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்களுக்கு பத்து கோடி சம்பளம் ஏற்றி விட்டதோடு, எந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுப்பது, எந்தப் படத்தை எப்போது வெளியிடுவது, தொலைக்காட்சி ரைட்ஸ் எவ்வளவு என தீர்மானிப்பது எல்லாம் இவர்கள்தான்.

இந்த வம்சத்தின் அரஜாகத்திற்கு துணை போகும் சூப்பர் ஸ்டார்கள், சுப்ரீம் ஸ்டார்கள், புரட்சி நாயகர்கள். படங்களில் இந்த புர்ரச்சி வீரர்கள் காண்பிக்கும் வீரம் நிஜத்தில் கோபாலபுரத்தில் கொத்தடிமைகளாக நடமாடுகின்றன. கருணாநிதி வம்சம்  எடுக்கிற சினிமாவைத்தான் விநியோகஸ்தகர்கள் வாங்க வேண்டும், தியேட்டர்காரர்கள் திரையிட வேண்டும், ரசிகர்கள் பார்க்க வேண்டும். இது போக எடுக்கப்படுகிற எல்லா சினிமாக்களையும் தங்கள் தொலைக்காட்சிகளுக்கே கேட்கிற விலைக்கே விற்க வேண்டும் என்ற மறைமுக நெருக்கடி வேறு. ஆக கருணாநிதி வம்சத்தின் அந்தப்புரமாக கோடம்பாக்கம் மாறி விட்டது.

அடுத்து பத்திரிகை. தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையுமே கட்டுப்படுத்துவது, அல்லது பத்திரிகை துவங்குவது என்று துவங்கி இப்போது இருக்கும் எல்லா ஊடகங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது கருணாநிதி வம்சம்.  குமுதம் செட்டியாருக்கும் வரதராஜனுக்கும் வந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்த கருணாநிதி இரு தரப்பையுமே தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டார். செட்டியார் இனி எப்போதும் கருணாநிதிக்கு எதிராக எழுத முடியாது. வரதராஜனின் குமுதம் ரிப்போர்ட்டரோ எழுதிய அடுத்த நிமிடமே பழைய எப்.ஐ.ஆர் தூசு தட்டி எடுக்கப்படும் நிலையில் நிரந்தரமான கத்தியை செட்டியாருக்கும், பார்ப்பனருக்கும் சேர்த்தே தொங்க விட்டு விட்டார் கருணாநிதி.

மிச்சமிருப்பது ரியல் எஸ்டேட். கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து குடிகாரராக இருந்த இவர் நீண்டகாலமாக கருணாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கூட கருணாநிக்கு எதிராக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பதவியேற்ற உடனேயே முத்துவை சேர்த்துக் கொண்டார். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி கொடி கட்டிப் பறக்கிறார்.  இன்றைய தேதியில் தமிழக விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை மிரட்டி வாங்கி பிரமாண்ட குடியிருப்புகளை அமைப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை மக்களை மிரட்டி வாங்கிக் கொடுப்பதும்தான் அறிவுநிதியின் தொழில். ஒரே நாளில் பல கோடி ரூபாய், இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் அறிவு நிதி சினிமாவிலும் அவ்வப்போது போலீஸ் மாமா கேரக்டரில் நடித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறார்.

முத்துவேலர் வம்சம் தழைத்தோங்கி செழித்தோங்கி ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆக்டோபஸ் போலப் படர்ந்திருக்கிறது. ஆனால் கருணாநிதி முன்னர் எப்போதையும் விட தனது வாரிசுகளை நினைத்து பெருமை கொள்கிற ஒரு தகப்பனாக வம்சத்தின் அரசனாக இருக்கிறார். இது தொடர்பான அதிருப்தி எல்லா தரப்பிலும் எழுவதை உணர்ந்திருக்கும் கருணாநிதி அதை அலட்சியத்துடன் ஒதுக்குகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகர், நடிகைகள், தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டும் திட்டத்தை துவங்கும் விழாவில் கலந்து கொண்டு தன் பெயரை தானே அந்த சினிமா ஏழை நடிகர்களின் நகருக்கு வைத்து, அதை தானே திறந்து வைத்துப் பேசிய கருணாநிதி இந்தியாவில் உள்ள எல்லா வாரிசுகளையும் சுட்டிக்காட்டி இப்படி எல்லோரும் வாரிசாக இருக்கும் போது ‘‘என் மனைவி மட்டும் மலடியாக இருக்க வேண்டுமா? ’’ என்று கேட்டிருக்கிறார். மேலும் தான் திராவிட மக்களுக்காக உழைப்பதாலேயே இப்படித் திட்டப்படுவதாக வேறு தன் வழக்கமான திராவிட, பார்ப்பனப் பல்லவியைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாசார தூதுவரும் பார்ப்பன நாட்டிய மாமேதை பத்மா சுப்ரமணியத்தின் ராஜராஜசோழன் ஆயிரமாண்டு ஸ்பெஷல் மானாட மயிலாட டான்ஸ் ரிகல்சலுக்குச் சென்றதாகக் கேள்வி.

புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூக அமைப்பில் சினிமா தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை வாரிசுகளின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வாரிசுகள் தங்களின் திறமைகளால் வந்தவர்களில்லை. அரசு, சினிமாத்துறைகளின் பிரமாண்டமான இரும்புக் கதவுகள் இவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்காகவும் திறக்கவும் இல்லை. ரவுடி அழகிரி மத்திய மந்திரியானதும், அழகிரி மகன் தயாரிப்பாளராகவும், ஸ்டாலின் மகன் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளராகவும், தயாநிதி எம்.பி, அமைச்சரானதும், இலக்கியவாதி கனிமொழி ஓவர்நைட்டில் பாராளுமன்ற உறுப்பினராக ஆனதும் வம்சத்தின் அதிகார செல்வாக்கில்தான். இந்த வம்சத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதால்தால் ரஜினி வம்சம், கமல் வம்சம், போன்ற சினிமா வம்சங்கள் வாழ்கின்றன.

இப்போது வம்சம் தனது சாம்ராஜ்ஜியத்தை அதிகாரப்பூர்வமாகவும், வியாபார நிமித்தமாகவும் நிலைநாட்டி விட்டது. அரசியலோ, சினிமாவோ, பத்திரிகையோ எல்லாம் வம்சத்தின் தயவில் வாழ்கின்றன. வம்சத்தை எதிர்த்துக் கொண்டு ஒரு தமிழன் கூட தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் வம்சத்தின் இருப்பிற்கேற்ப புதிய விளக்கம் பெறுகின்றன.

சட்டபூர்வமாகவோ, சட்டமன்ற தேர்தல் மூலமாகவோ இந்த வம்சத்தை வீழ்த்திட முடியாது. சுரணையும், சுயமரியாதையும், வார்த்தையைத் தாண்டி வாழ்க்கையில் வரும்போது தமிழக மக்க்ளால் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அந்த நாள் தானாக வருமென்று காத்திருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். அந்த நாளை தனது போராட்ட இலக்காக கொண்டு போராடுபவர்கள் அதிகரிக்கும்போது வம்சம் அதன் அடிப்படையற்ற டாம்பீகத்திலிருந்து வேரும் விழுதுமாய் நீக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்

 

காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?

வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.  இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை.  கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.

…………………………………………………………….

நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.

ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.

ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.

வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.

தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.

இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌  உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.

க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம்.  காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.

இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.

காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.

சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?

த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்?

காசுமீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மீக‌ நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.

கையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும் இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் துவ‌க்கு(Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக‌க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.

த‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி(Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.

உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்துகொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காசுமீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காசுமீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.

எந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்றார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.

பெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.

சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம் என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். என‌து  அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன் ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவ‌ர்க‌ளில் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் அவ‌னுக்கு ஆங்கில‌த்தில்  அவ‌னுக்குத் தெரியும்.இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.

பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காசுமீர் துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காசுமீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்ட‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

காசுமீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காசுமீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காசுமீரிக‌ளை பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு, PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும். இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காசுமீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா?, அல்ல‌து காசுமீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா?. அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்?

க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காசுமீர்க‌ளுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காசுமீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காசுமீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.

காசுமீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காசுமீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காசுமீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.

1990க‌ளில் காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காசுமீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.

என்னை பொருத்த‌வ‌ரை காசுமீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ஒரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காசுமீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காசுமீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியை பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவ‌ர்க‌ள் பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காசுமீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.

ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்)  என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காசுமீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன் என்றிருக்கும் போராட்ட‌ நிலையில் என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.

“பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காசுமீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர  ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌தாயில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை. இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிர‌ச்ச‌னையை காசுமீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி காசுமீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி  தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும் இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.

ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.

இந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காசுமீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காசுமீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ ப‌க‌திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காசுமீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.

இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காசுமீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை.

________________________________________________________________________________

மூலப்பதிவு : http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp

த‌மிழாக்க‌ம். ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா?

78

இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.

கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.

இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதை நீர்த்துப்போக வைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் தண்ணீர் ஏகபோக நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தன. ஏனெனில், இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய, கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் அழைக்கின்றன. கடந்த ஆண்டில், எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன. இந்தக் கம்பெனிகள், உலகின் தண்ணீர் ஆதாரங்களில் 5% அளவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால், இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றிக் கொண்டால் அவற்றின் இலாபம் எவ்வளவு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 % மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.

இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. இந்தியாவில் நடந்துவரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபா என்கிறது ஒரு ஆய்வு. தண்ணீர் தனியார்மயத்தை உள்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்திவரும் இந்திய அரசு, உலக அரங்கில் தண்ணீர் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை விவகாரங்களில் முற்போக்கு நாடகமாடிக் கொண்டு பித்தலாட்டம் செய்து வருகிறது.
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தாத வெறும் காகிதத் தீர்மானம்தான். கட்டுப்படுத்தும் என்றால் இத்தனை நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், பெயரளவிலான இத்தீர்மானத்தைக் கூட ஏகாதிபத்திய தண்ணீர் ஏகபோக நிறுவனங்கள் எதிர்த்து நின்று சதி செய்கின்றன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆபத்து என்று அலறுகின்றன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பிற நாடுகளில் தலையீடு செயும் ஏகாதிபத்தியங்கள், மிகச் சாதாரண தண்ணீர் பெறும் உரிமையை நிலைநாட்டக் கோரும்போது, அதை நிராகரித்து எதிராக நிற்கின்றன. மனித உரிமை என்றெல்லாம் தமது ஆதிக்க நலன்களிலிருந்துதான் ஏகாதிபத்திய நாடுகள் கூச்சலிடுகின்றனவே தவிர, மக்கள் நலனிலிருந்து அல்ல.
மனித இனம் குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஏகபோக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கும் சூறையாடலுக்கும் எவ்வித சிறு இடையூறும் நேரக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் நியாயவாதம். இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமை!

________________________________________________

குமார், புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2010
________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

10


புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. இதைவிட  வக்கிரம் இருக்க முடியுமா?
  2. அணு விபத்து கடப்பாடு சட்டம்:  சந்தி சிரித்தது மன்மோகனின் களவாணித்தனம்!
  3. போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு! புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை
  4. காஷ்மீர் இந்திய இராணுவமே வெளியேறு!
  5. சோராபுதின் போலி மோதல் கொலை: முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
  6. நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்…
  7. தொடரும் அரசியல் கூத்துக்கள்
  8. நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா
  9. செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது!   -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!
  10. இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக….     தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள்
  11. நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்
  12. நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்!
  13. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/09/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><img class=”aligncenter size-full wp-image-8337″ title=”bhopal-special-issue” src=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/07/bhopal-special-issue.jpg” alt=”” width=”500″ height=”699″ /></a>

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/09/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற இங்கே அழுத்தவும்</strong></a>
<ol>
<li>போபால்: நீதியின் பிணம்</li>
<li>போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்</li>
<li>மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…</li>
<li>விபத்தா, படுகொலையா?</li>
<li>உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்</li>
<li>அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை</li>
<li>ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!</li>
<li>ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து</li>
<li>அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?</li>
<li>யோக்கியன் வர்றான்..போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டிகாங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.</li>
<li>இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?</li>
<li>அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு – பேரரசின் நீதி</li>
<li>பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் – பி.சாய்நாத்</li>
<li>டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்</li>
<li>ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா</li>
<li>அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?</li>
<li>இதற்குப் பெயர் நிவாரணமா?</li>
</ol>
<strong> </strong><a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/09/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற இங்கே அழுத்தவும்</strong></a><strong> </strong>

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
<ul>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US’);” href=”http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US” target=”_blank”>வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…</a></strong></li>
<li><strong><a href=”http://www.facebook.com/vnavu” target=”_blank”>பேஸ்புக்கில் வினவு</a>
</strong></li>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://twitter.com/vinavu’);” href=”http://twitter.com/vinavu” target=”_blank”>வினவை டிவிட்டரில் தொடர்க</a></strong></li>
<li><strong><a href=”../support/” target=”_blank”>வினவை ஆதரியுங்கள்</a></strong></li>
</ul>
<strong>தொடர்புடைய பதிவுகள்</strong>
<ul>
<li><strong><a href=”https://www.vinavu.com/category/politics/puja/” target=”_blank”>புதிய ஜனநாயகம் கட்டுரைகள் </a></strong></li>
<li><strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>புதிய ஜனநாயகம் ஜூன் 2010</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!” href=”../2010/05/13/puja-may-2010/”>புதிய ஜனநாயகம் மே, 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!” rel=”bookmark” href=”../2010/04/02/puja-april-2010/”>புதிய ஜனநாயகம் ஏப்ரல், 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/03/04/puja-mar-2010/”>புதிய ஜனநாயகம் மார்ச் 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/02/05/puja-feb-2010/”>புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/01/12/puja-jan-10/”>புதிய ஜனநாயகம் ஜனவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/12/07/puthiya-jananayagam-december/”>புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/11/04/puthiya-jananayagam-november-2009/”>புதிய ஜனநாயகம் நவம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/10/14/puthiya-jananayagam-october-2009/”>புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/09/09/puja-sep-09/”>புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/08/11/puja-aug-2009-download/”>புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009</a></strong></li>
</ul>
<strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>
</a></strong>

<abbr title=”2010-06-04T08:03:18+0000″></abbr>

உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்…

29

உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்று அவரை டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு. பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கியிருக்கிறது கருணாநிதி அரசு.

உமாசங்கரின் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவர் எழுப்பியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை கோரியும் கடந்த வாரம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 12 மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த்து. கோட்டைக்கு முன் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தது. மக்கள் சக்தி கட்சி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, பசுபதி பாண்டியன் ஆகியோரும் இப்பிரச்சினை தொடர்பாகப் போராடி வருகின்றனர்.

இத்தகைய பின்புலத்தில்தான் திமுக அரசின் இந்த முடிவு வந்திருக்கிறது. இம்முடிவில் நேர்மையோ நாணயமோ கடுகளவும் கிடையாது. தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்று மறுப்பதுடன் உமாசங்கர் நிறுத்திக் கொள்ளவில்லை. ராசாத்தி அம்மாள், அழகிரி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், தற்போதைய தலைமைச் செயலர் மாலதி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அவர் சந்திக்கு இழுத்திருக்கிறார். தொடர்ந்து அவர் தற்காலிகப் பணி நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தால், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார், பேசுவார். அவருக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. இவை அனைத்தையும் நிறுத்துவதற்கு தற்போது திமுக அரசு செய்யக்கூடிய ஒரே காரியம் இதுதான்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன் பொய்யான சாதிச்சான்றிதழ் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகை இறுதியாக்கப்பட்டு, அவருக்கு எதிரான இலாகா பூர்வமான விசாரணை தொடங்க இருப்பதனால் உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் திரும்ப பெறப்படுவதாக கூறுயிருக்கிறது அரசின் உத்தரவு. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்,3) அதாவது, இது வழமையான நடவடிக்கைதானாம். மீசையில் மண் ஒட்டவில்லையாம்!

அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுவிட்டதா, அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது, அதற்கு உமாசங்கர் அளிக்கும் பதில் என்ன என்பன போன்ற விவரங்கள் இனி பொதுமக்கள் பார்வைக்கு வராது. பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற முறையில், சட்டப்படி அவர் இனி பொதுவெளியில் பேசவும் கூடாது. அந்த அளவில் கருணாநிதி அரசுக்கு நிம்மதி.

யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட போர்க்களத்திலிருந்து பின்வாங்குவது என்ற உத்தியைத்தான் கையாண்டிருக்கிறது கருணாநிதி அரசு. இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்க கூடாது. உமா சங்கருக்கு வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவரது வேலை பறிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அப்படியே இருக்கிறது.

எல்காட் ஊழல், சன் குழுமத்தின் கிரிமினல் நடவடிக்கைகள், குவாரி ஊழல், வீட்டு வசதிவாரிய ஊழல.. என பல்லாயிரம் கோடி ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தினர், அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள்.

ஊழல் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களது ஒத்துழைப்புடன் ஆளும் வர்க்கமும் ஆளும் கட்சியினரும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவும் உருவாக்கப் பட்டிருக்கும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (Directorate of Vigilance and Anti Corruption) அப்படியே இருக்கிறது.

ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதைத் தடுத்து, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முதல்வர் தலைமையிலான குழு பெற்றிருக்கும் முறைகேடான (ஆனால் சட்டபூர்வமான) அதிகாரம் அப்படியே இருக்கிறது.இவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வந்த உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கழுதையின் முதுகில் ஏற்றப்பட்ட சுமையை அப்படியே வைத்துகொண்டு, ஒரே ஒரு துணியை மட்டும் எடுத்து அதன் முகத்துக்கு எதிரே ஆட்டிவிட்டால், சுமை குறைந்து விட்டதாக நம்பி, சந்தோசமாகப் பொதியைச் சுமந்து செல்லுமாம் கழுதை.

இது கழுதைகளின் வரலாறு. கழுதையினத்துக்குக் கூட வரலாறு உண்டா என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். தனக்கு வரலாறு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இனம் கழுதையினமாக இருக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கருணாநிதியின் ‘அற’வழியும் மார்க்சிஸ்ட்டுகளின் அசட்டு வழியும் !!

21

தானைத்தலைவர், தமிழ்த்தாயின் தலைமகன், முன்னவர், மூத்தவர், முதல்வர் டாக்டர் கலைஞர் மார்க்சிஸ்டுகள் மீது வெறுப்பையும் சத்துணவு ஊழியர்கள் மீது நெருப்பையும் கக்கியிருக்கிறார். பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர்கள் அறிவித்த கோட்டை முற்றுகைப் போராட்டம்தான் அவரது வெறுப்புக்கு காரணம்.

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதற்கடுத்து மறியல் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்… அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம்…”

“அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போர்முனைக்கு வாருங்கள் என்று திமுகவோ, திகவோ ஒரு போதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில் அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

தட்டிக் கேட்க ஆளில்லைன்னா அண்ணன் சண்டப்பிரசண்டன்தான். அறவழி தவிர “பிறவழி” எதுவுமே தெரியாத தலைவரின் வாரிசுக்கு எதற்கு தளபதி பட்டம்? எதற்கு இந்த போர்க்கள முத்திரை? எந்த தலையானங்கனத்தின் செறுவென்ற செழியன் அவர்?

திக வுல இருக்கும் போது அண்ணாத்துரைக்கு பேரும் தளபதி அண்ணாதான். “உங்க தளபதி எங்கய்யா படை நடத்துறாரு?” ன்னு எம்.ஆர்.ராதா அன்று கேலி செய்தார். திக விலிருந்து விலகி திமுக ஆரம்பிச்சதும் “தளபதி” அப்டியே “அறிஞர்” ஆயிட்டாரு. நாளைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அடுத்த தளபதி உதயநிதியாக இருக்கும்.

போராட்டத்துக்கு போர்க்கள முத்திரை குத்துகிறார்களாம் கம்யூனிஸ்டுகள்! அதுவாவது பரவாயில்லை. மத்தியான சாப்பாட்டுக்கப்புறம் 3 மணி நேரம் தூங்கி, வீங்கின மூஞ்சிக்கு ரோஸ் பவுடர் போட்டு, மீசைக்கு மை தடவி, ராத்திரி பொதுக்கூட்டத்துல வந்து வாய்ச்சிலம்பம் ஆடுற அண்ணன், தம்பியெல்லாம், தம் பேருக்கு முன்னால தளபதி, பிரிகேடியர், அவில்தார், சுபேதார்னு எதுனா ஒரு போர்க்கள முத்திரையை  குத்திக்கொண்டு திரிகிறார்களே, அறவழி அண்ணன் அதுக்கென்ன சொல்கிறார்?

தம்பி பேரு தளபதியாம் அண்ணன் அஞ்சாநெஞ்சனாம். ஆனா அவுக வழி மட்டும் அறவழியாம். அஞ்சாநெஞ்சன் மதுரையில நடத்தற கட்டப்பஞ்சாயத்தெல்லாம் அறவழியில்தான் நடக்கிறதோ?

திமுகவுக்கு அறவழியத் தவிர “பிறவழி” எதுவும் தெரியாதாம். உடன்பிறப்புகளின் அறவழிப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இதயம் வெடித்துத்தான் அண்ணன் தா.கிருஷ்ணனும் லீலாவதியும் தற்கொலை செய்து கொண்டார்களோ? மதுரை தினகரன் ஆபீசில் மேயர் தலைமையில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி ஒரு போராட்டம் நடத்தினாரே, அதுவும் கூட அறவழிப் போராட்டம்தானா? அறவழிப் போராட்டத்தின் விளைவாக 3 பேர் உயிர் விட வாய்ப்பில்லை என்பதனால்தான் நீதிதேவன் எல்லோரையும் விடுதலை செய்து விட்டாரோ?

திமுக வின் உட்கட்சி தேர்தல் ஒவ்வொண்ணுலயும் கழக உடன்பிறப்புகள் கையில் தக்கிளியும் பஞ்சும் வைத்துக் கொண்டுதான் திரிகிறார்களோ? திருச்சி கிளைவ் ஆஸ்டல் தாக்குதல், சிம்சன் தொழிலாளிகள் மீதான தாக்குதல், அண்ணாமலைநகர் உதயகுமார் படுகொலையில் தொடங்கி, சமீபத்தில் செட்டிநாட்டரசருக்காக 3 வெளிமாநில மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கொலை செய்யப்பட்டது வரை அத்தனையும் அறவழிப் போராட்டங்கள்தானோ!

“சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கோட்டையை முற்றுகையிடுவார்கள், நாங்கள் இவர்கள் படைக்கு முரசு கொட்டி வரவேற்பு வழங்க வேண்டுமா?” என்று கேட்கிறார் கருணாநிதி. பதவிப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தோடு சோனியா வீட்டுக்குப் படையெடுத்தாரே தலைவர், அது முற்றுகைப் போராட்டம் இல்லையா?

சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் நெட்வொர்க், சினிமா கொட்டகைகள், கலாநிதி, தயாநிதி, உதயநிதி மற்றும் பிற நிதிகளின் சினிமாக் கம்பெனிகள், சிமென்டு கம்பெனிகள், சாராயக் கம்பெனிகள், ரியல் எஸ்டேட், மந்திரி பதவிகள் என்று திருக்குவளைக் குடும்பம் தமிழகத்தையே முற்றுகையிட்டிருக்கிறதே இது முற்றுகையில்லையா?

இதெல்லாம் அற வழியாம். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் அறம் கொன்ற வழியாம்!

அரசுக்கு எதிராக எப்ப போராட்டம் நடத்தினாலும் அமைதியாக அறவழியில்தான் திமுக போராடுமாம். அதென்னமோ உண்மைதான். அதிகாரத்தில் அம்மா அமர்ந்திருந்த சூழ்நிலையில், அடிவாங்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் அந்த மாதிரி நேரத்திலெல்லாம் அண்ணன் காட்டும் வழி அறவழிதான். “தலையையே எடுப்பேன்” என்று வேதாந்தி மிரட்டினாலும், “மண்டை போனால் போகட்டும் உடன்பிறப்பே, மகுடம் முக்கியம்” என்று மவுனம் காத்தாரே கலைஞர், அப்பவும் அறவழிப் போராட்டம்தான். அவ்வளவு ஏன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் எந்த எடுபட்ட காங்கிரசுக்காரன் கழகத்தலைவரின் முகத்தில் காறித்துப்பினாலும் கலைஞருக்கு கோபம் வராது. அடுத்த தேர்தல் முடியும் வரைக்கும் அண்ணன் வழி அறவழிதான்.

ஆனால், சத்துணவு ஊழியர்கள், மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளிகள், ஸ்ரீபெரும்புதூர் மக்கள் போன்ற இளித்தவாயர்கள் போராடும்போது மட்டும் கதை வேறு. பாராளுமன்றத்தில் பேசவே முடியாத அழகிரிக்கு முழு சம்பளம். அவர் முழுநேரப் பணியாளர். அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால் இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்.

உலக முதலாளிகள் உடல் நோகாமல் வந்து இறங்குவதற்கு இவர்கள் இன்டர்நேசனல் ஏர்போர்ட் கட்டுவார்கள். அதற்காக உள்ளூர் தமிழர்களெல்லாம், மாடு கன்று மரம் மட்டை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பாயைச் சுருட்டிக் கொண்டு “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு செம்மஞ்சேரிக்கோ கம்மஞ்சேரிக்கோ கிளம்பிவிடவேண்டும். இல்லாவிட்டால் அடித்து உரித்து விட்டு அப்புறம் அறவழியை வலியுறுத்தி இப்படி ஒரு அறிக்கை விடுவார் கருணாநிதி.

காந்தி நேரு ரேஞ்சில் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட திருவுருவமாக தமிழ்நாடே தன்னைக் கொண்டாடவேண்டும் என்பது முதியவர் கருணாநிதியின் ஆசை. அவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் பிம்பத்தின் மீது சத்துணவு ஊழியர் மாதிரி சாதாரண ஆட்கள் லேசாக உரசி விட்டால் போதும், உடனே “எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்று பாட்சா கருணாநிதியின் குரல் அவருக்கே தெரியாமல் வெளியே வருகிறது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒருநாள் சோறு போடத் தவறிய குற்றத்துக்காக நூறுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறார் கருணாநிதி. அப்பனுக்கு சாராயம் ஊற்றிக் கொடுக்கத் தவறினாலும் குற்றம், பிள்ளைக்கு சத்துணவு போடத் தவறினாலும் குற்றம்! மனுநீதிச் சோழன் அரசாட்சியா கொக்கா?

____________________________________________________________________

இந்தப் போடு போட்ட பிறகாவது மார்க்சிஸ்டுகளுக்கு கோவம் வராதா, கருணாநிதியை நறுக்காக நாலு கேள்வி திருப்பிக் கேட்கமாட்டார்களா என்று ஆவலுடன் நேற்றைய நாளிதழைப் புரட்டினால், கருணாநிதிக்கு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் மார்க்சிஸ்டு செயலர் இராமகிருஷ்ணன்.

மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை எதிர்த்து மார்க்சிஸ்டு கட்சி போராடிக் கொண்டிருக்கிறதாம். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் மம்தா பானர்ஜியை கருணாநிதி கண்டிக்கவில்லையாம். போராட்டத்தை கருணாநிதி திசை திருப்புகிறாராம். சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டுமாம். இதுதான் ராமகிருஷ்ணனின் அறிக்கை.

“முதல்வரின் கருத்து துரதிருஷ்டவசமானது. முதல்வர் இனிமேல் இத்தகைய தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோவையில் பேசியிருக்கிறார். வலது கம்யூ தலைவர் ஏ.பி.பரதன்.

அடி வாங்கினவன் பேசுகிற பேச்சு மாதிரியா இருக்கிறது? அடடா, எப்பேர்ப்பட்ட அரசியல் நாகரிகம்! இப்படிப்பட்ட அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கச் சொல்லித்தானே கலைஞர் கரடியாக கத்துகிறார்.

வலது, இடது கட்சிகளின் அணிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. வாங்க வேண்டிய அடியை வாங்கியாகிவிட்டது. திருப்பி அடிக்க முடியாவிட்டாலும், நச்சென்று நாலு கேள்வியாவது திருப்பிக் கேட்டிருக்கலாம்.

அப்படி ஒரு கோபம் மார்க்சிஸ்டு தலைவர்களுக்கு வந்திருக்காது என்று சொல்ல முடியாது. நிலைமை அவர்களுடைய வாயைக் கட்டியிருக்கிறது. 80 களில் எதைக்கேட்டாலும் வங்கத்தைப் பார் என்பார்கள். இப்போது வேறு எந்தக் கட்சிக்காரனாவது வங்கத்தைப் பார் என்று பேச ஆரம்பித்தால் இவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கிறது. மேற்கு வங்கத்தில் தொகுப்பூதியம் கொடுத்துக்கொண்டு இங்கே வந்து பணி நிரந்தரம் கேட்கிறாயா என்று மடக்குகிறார் கருணாநிதி. “சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று சீண்டுகிறார். இதுக்கெல்லாம் மார்க்சிஸ்டுகள் ஆமாம்னு சொல்லவும் முடியாது. இல்லைன்னு சொல்லவும் முடியாது. “நாங்கள் மாவோயிஸ்டுகள் அல்ல” என்பது மட்டும்தான் அவர்கள் தைரியமாகச் சொல்ல முடிந்த பதில். அதை சொல்லிவிட்டார் இராமகிருஷ்ணன்.

முன்னர் ஒருமுறை ஜனசக்தி பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய திரைப்பட இயக்கநர் வி.சேகர், “கருணாநிதி உங்களுக்கெல்லாம் ஏன் ரெண்டு சீட் – ஒரு சீட் கொடுக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ஒரு கணம் பேச்சை நிறுத்தியிருக்கிறார்.

“இந்தப் புதிருக்குத்தானய்யா விடை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று மேடையில் இருந்த நல்லகண்ணு முதல் மார்க்சிஸ்டு தலைவர்கள் வரையிலானோர் ஆவலுடன் சேகரின் வாயைப் பாத்திருக்கின்றனர். “ஏன்னா, அரை சீட்டுன்னு ஒண்ணு இல்லை. இருந்தா அதைத்தான் உங்களுக்கு கொடுத்திருப்பார்” என்று சொல்லி சிரித்தாராம் சேகர்.

_______________________________________________________________________________________________________

விக்கிரமாதித்தனின் சரியான பதிலைக் கேட்ட பின்னரும், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. முருங்கை மரத்தை வேண்டுமானால் நாம் வெட்டலாம். ஆனால் தலைகீழாய்த் தொங்கியே பழக்கப்பட்ட வேதாளத்தை நிமிர்த்துவது ரொம்ப கஷ்டம்.

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?

45

யத்த ஆடைகள் உருவாக்கத்தின் தொடக்கமென்பது நூல் உள்ளே வந்து இறங்குவதிலிருந்து தொடங்குகிறது.  அதுவே பின்னலாடையாக மாற்றம் பெறுவதற்கு பின்னலகம் என்ற நிட்டிங் எந்திரங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது.  மார்பு அளவுகளைப் பொறுத்து தனித்தனியாக உள்ள எந்திரங்கள் மூலம் தேவைப்படும் அளவிற்கு துணியாக உருவாகின்றது.  இப்போது அந்த துணி இரண்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.  வெள்ளை என்றால் சலவை பட்டறை.  பல நிற வண்ணமென்றால் சாயப்பட்டறைகள்.

வெள்ளையை மட்டும் உருவாக்கி கொடுப்பவர்களுக்கு எளிய மூதலீடுகள் போதுமானது..  வணணமாக்க ஐம்பது லட்சத்தில் தொடங்கி நூறு கோடி வரைக்கும் அவரவர் தகுதியைப் பொறுத்து உருவாக்கி வைத்துருப்பார்கள். 10 கிலோ துணி கொள்ளவு முதல் ஆயிரம் கிலோ வரைக்கும் எட்டு மணி நேரத்தில் விரும்பும் நிறமாக வெளியே தள்ளும் ராட்சச எந்திரங்கள் நவீன எந்திரங்கள் உண்டு. எந்திரங்களுக்கான முதலீடு தவிர தேவைப்படும் மற்ற வசதிகளுக்குத்தான்  பணத்தை வாரி இறைக்க வேண்டும்.

கை படாத ரோஜாவாக பளபளவென்ற பட்டாடை போல அடித்து துவைத்து நிறமாக்கி உலர வைத்து வெளியே தள்ளும்.  வேண்டிய அளவுகளில் விதவிதமாய் ரகரகமாய் ஜொலிப்பாய் மடிப்பு கலையாத புத்தம் புது ரோஜா போல் வந்து சேரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நவீனம்.  ஆனால் அத்தனையும் வெளிநாட்டு மூளைகளின் நளினம். ஒரே கூரையின் கீழ் மொத்த வசதிகளையையும் வைத்திருப்பவர்கள் விடாத மழை என்றாலும் கவலைப்படாது கப்பலில் 365 நாளும் ஏற்றிக் கொண்டே இருக்க முடியும். அவர்களின் வங்கிக் கணக்கு என்றுமே சொங்கிப் போய்விடாது.

என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல  பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே.  ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே?  அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்.

நீங்கள் பத்திரிக்கைகள் படிப்பவரா? ஒரு பக்கவாட்டில் இந்த சாயப்பட்டறை குறித்து துணுக்கு செய்திகளாக படித்து இருக்க வாய்ப்புண்டு. திருப்பூரில் ஆயத்த ஏற்றுமதி தொழில் சூடு பிடிக்காமல் இருந்த 1984 ல் இந்த துறையில் சுமாராக 30 நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கலாம். தொடக்கத்தில் பெரிய அளவிற்கு நவீன உபகரணங்கள் இல்லை. ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும்.  சொந்த இடம், வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து எவர் வேண்டுமானாலும் இந்த தொழிலில் இறங்கலாம் என்ற சூழ்நிலை.

செவ்வக வடிவில் ஒரு இரும்புத் தொட்டி.  70 லிட்டரில் தொடங்கி 700 லிட்டர் முதல் அதிகபட்ச கொள்ளவு வரைக்கும் கிலோ பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தொட்டியின் மேல் கம்பி உருளைகள்.  இதனை இயக்க மின்சார மோட்டார் மற்ற உபகரணங்கள்.  கம்பி உருளையில் கொண்டு வரப்படும் துணிகள் ஏற்றப்பட்டு, சுழன்று அது தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டிருக்கும்.

தண்ணீரில் நன்றாக மூழ்கி வந்து கொண்டிருக்கும் துணி தன்னுடன் வைத்திருக்கும் பஞ்சு போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை உதறித்தள்ளும்.  நனைந்த துணியில் பிற்பாடு ஊற்றப்படும் வெட்டிங் ஆயில் தான் சாயம் கலப்பதற்கு முன் செய்யப்படும் சடங்கு மந்திரம் போன்றது.

ஆனால் இந்த தொழிலுக்கு முக்கியத் தேவை தண்ணீர் வசதி. சிலருக்கு இயல்பாக நிறுவனங்களுக்குள் ஆழ் குழாய் வசதிகள் இருக்கும்.  வசதி இல்லாதவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நீருக்கு பக்கத்து ஊரில் உள்ள விவசாய கிணற்றில் இருந்தது டேங்கர் லாரி கொண்டு வந்து சேர்க்கும். தொடக்கத்தில் வயல் விவசாயத்தை விட இந்த தண்ணீர் விற்று பணக்காரர் ஆனவர்கள் பலபேர்கள்.

ஆனால் இப்போது எல் அண்டு டி நிறுவனம் உள்ளே வந்து இதற்கென்று ஒப்பந்தம் எடுத்து மிகப் பெரிய தொழிலாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு லிட்டர் ரெண்டு பைசா என்று விற்றுக் கொண்டுருந்தவர்கள் இப்போது ஆறு பைசா வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.  இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு என்பது பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது.  பவானி ஆற்றை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள்.

சாய்பபட்டறைகளுக்குள் பெரிய மூதலீடுகளை போட்டு வராக்கடன்களை வசூலித்து தம் கட்ட வசதியிருந்தால் வாய்ப்புகள் தேடி வரும். இதுவே இந்த தொழில் தொடங்க போதுமானது. முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரைக்கும் தங்களுக்குள் இருக்கும் அனுபவம் மட்டுமே மிகப் பெரிய முதலீடு என்று நம்பி ஜெயித்தவர்கள்.  அதை வைத்துக் கொண்டு தான் சாதித்து மேலேறினார்கள்.

இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப்பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர்,திருவண்ணாமலை,இராமநாதபுரம், மதுரை, சிவகெங்கை, கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை உடைய இளைஞர்கள்..படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல் வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரைக்கும்.  மிகப் பெரிய ஆச்சரியம் கடைசி வரைக்கும் உடல் உழைப்பாளியாகவே இருந்து விடுவது தான்.  விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் சிலர் மேலேறி வருகிறார்கள்.   .

சாயமேற்ற வேண்டிய 20 கிலோ நனைந்த துணியை தூக்குவதற்கு சாதாரணமானவர்களுக்கு தனிப் பயிற்சி வேண்டும்.  ஆனால் நம் மக்கள் அட்டாகாசமாக தூக்கிக் கொண்டு விஜயகாந்த் கதையை பேசிக் கொண்டு நகர்ந்து கொண்டிருப்பார்கள்.  பார்க்கும் நமக்கு மூச்சுப் பிடிப்பு வந்து விடும்.

முதலாளிகளும் பெரிய படிப்பு படித்தவர்களோ, கெமிக்கல் இன்ஜினியரிங் அறிவு பெற்றவர்களோ அல்ல. ஒன்று ஏதோ ஒரு இடத்தில் பணிபுரிந்து இருப்பார்கள்.  அல்லது பார்த்துக் கொண்டு வந்து ஆசையில் தொடங்கியிருப்பார்கள். தொடக்கத்தில் உள்ளே வராத நவீனங்கள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. அவரவருக்குண்டான அயராத உழைப்பே அத்தனையும் வெற்றியாக்கியது.
ஒவ்வொரு முதலாளிகளும் பெற்ற வெற்றிகள் அவர்களை பணக்காரர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியது. கல்லு பூமியெல்லாம் இவர்கள் கடைக்கண் பட்டு காசு கொழித்த பூமியாக மாறியது. ஆனால் விவசாய பூமிகளை மட்டுமே நம்பி வாழ்ந்த சமூகத்தின் முகவரியே இன்று மொத்தமாய் மாறி அலற வைத்து விட்டது.

ஒரு கிலோ துணியை விரும்பும் நிறத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால் எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு கிலோ என்பது மூன்று அல்லது நான்கு ஆடைகளை உருவாக்க உதவும். துணிகள் நிறமான பிறகு வெளியேற்றப்படும் அந்த நீர் என்பது மற்றொரு போபால் விஷ வாயுவுக்கு சமமானது.  உப்பும், அமிலமும், காரத் தன்மையும் கலந்து சகிக்க முடியாத நாற்றத்துடன் பூமியில் கலக்க வைத்து விடுவார்கள்.

துணிகள் மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலவாணியைத் ஈட்டித் தந்தாலும் இதற்குப் பின்னால் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு முதல் நரம்பு பிரச்சனைகள் வரைக்கும் உருவாக்கும். இன்று வந்துள்ள நவீனங்கள் முடிந்தவரைக்கும் கட்டுப்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை, சலவைப்பட்டறைக்கு தேவைப்படும் கொதிநீருக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காடுகளில் இருந்து விறகு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. டீஸல் போட்டு நீரை கொதிக்க வைக்க முடியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் விறகு தான் வரப்பிரசாதம். சில நிறுவனங்கள் பயன்படுத்தும் இது போன்ற கொதிகலன்கள் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் உயர் அதிக அழுத்தம் உடையது.  ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து வெடித்து சிதறினால் சுற்றிலும் உள்ள இடங்களை சர்வநாசமாக்கி விடும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வை பட்டபிறகு தான் இங்குள்ள சாயப்பட்டறை முதலாளிகளுக்கு ஜுரம் வரத் தொடங்கியது. இது திருப்பூர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.  கரூர், ஈரோடு வரைக்கும் பரந்து பட்டு இடையில் இருக்கும் அத்தனை விளைநிலங்களையும் பாழாக்கிய பெருமை இந்த சாயம் போன முதலாளிக்கேச் சேரும். தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டு ஓடி இன்று இங்குள்ள பல நிறுவனங்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாகி விட்டது.

சாயப்பட்டறை முதலாளிகளின் கூட்டங்கள். ஏற்றுமதியாளர்களின் சங்கங்கள், எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்று மும்முனை போராட்டமாக முடிவே தெரியாமல் இன்று வரை போய்க் கொண்டே இருக்கிறது. விவசாயிகளின் எதிர்பபால் நீதிமன்றம் வரைக்கும் சென்று கடைசியில் டெல்லி உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்ற போதிலும் எந்த மாற்றமும் இல்லை. சவ்வு போல் இழுவையாக முதலாளிகளும் விவசாயிகளும் இரண்டு பக்கம் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிகளுக்கு அரசாங்க மானியம் வேண்டும்.  விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கணக்கு வேண்டும்.

திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி. நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

வைரமுத்து சொன்ன எட்டில் பிரித்த வாழ்க்கை போல் துணிகளை சாயமேற்ற எட்டு விதமாக அலசி துவைக்க இறுதியில் விரும்பும் நிறத்தில் வந்து விடுகின்றது.

துணிகளை சாயமேற்ற இரண்டு வகையான உத்திகள் உண்டு.

அதிக நவீனம் இல்லாத வின்ஞ் என்பது ஒரு இயல்பான முறை. சற்று மேம்பட்ட நவீன வசதிகள் என்பது சாப்ட் புளோ, தொட்டிக்குள்  திணிக்கப்பட்ட துணிகள் தண்ணீருடன் கலந்து உள்ளே வெளியே என்று குதியாட்டம் போடும்.  தற்போது வந்துள்ள நவீன உபகரணங்கள் என்பது கணினி வழியே கட்டுப்படுத்தி கனகச்சிதமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வண்ணத் துணியாக மாற்றிவிட முடியும்.

தொட்டியில் நீர் நிரப்பி துணியை நனைக்க வெட்டிங் ஆயில் என்ற வஸ்துவை ஊற்றி தண்ணீர் துணிகளில் நன்றாக ஊடுருவ வைக்கிறார்கள். பிறகு தான் வேதியல் சமாச்சரங்களை அளவோடு கலந்து விடுகிறார்கள். ஒவ்வொரு சாயமாக சேர்த்துக்கொண்டே வரவேண்டும்.

துணியை இளக்க, இளக்கிய துணியை சாயத்தோடு ஒட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியை தரமாக்க, வண்ணத்துணியை அதன் தராதரம் பார்க்க இறுதியில் சிறிய அளவிலான துண்டு வெட்டி சரி பார்த்துக் கொள்கிறார்கள். சேர்த்த கலவை சரியில்லை என்றாலோ சேராத சாயங்கள் சிரித்தாலோ எட்டு அலசலுக்குப் பிறகு மேற்கொண்டு இரண்டு அலசலில் அந்த துணி வண்ணமாய் ஈரத்தோடு சிரிக்கும்.

ஓவ்வாரு அலசலுக்கும் பிறகு அந்த தண்ணீர் தேவையில்லாமல் வெளியேற்றப்படுகின்றது. மீண்டும் புதிய தண்ணீர்.  ஒவ்வொரு முறை வெளியேறும் தண்ணீரும் சோடாவாக, ஆசிட்டாக, அடர்வேதியல் சாயமாக, குழாய் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. குழாய்கள் வழியே செல்லும் இந்த சாயத்தண்ணீர் அருகே உள்ள சாக்கடை வழியே சென்று இறுதியில் நொய்யல் ஆற்றில் கலந்து கரூர் வரைக்கும் சென்றடைகின்றது. ஈரோடு என்றால் பவானி தாண்டி பயணிக்கும்..

பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறையால் ஆனது. சில இடங்களில் நூறு அடிகளில் ஆழ் குழாய் இறங்கும். ஆனால் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறும். இத்தனை இறுக்கமான பூமியில் மிச்சமான பாறைக்குழி என்ற வட்ட வடிவ குளம் போன்ற குட்டைகள் இங்கு ஒவ்வொரு இடங்களிலும் அதிகம் உண்டு,

இந்த இடம் தான் இன்று வரையிலும் பல சாய நிறுவனங்களுக்கு பொக்கிஷம். கழிவு நீர் வெளியேற்ற எந்த வசதியும் செய்யாமல்  இருக்கும் முதலாளிகள் நடு இரவில் டேங்கர் வண்டியில் சாயத் தண்ணீரை  கொண்டு வந்து ஊற்றி விட்டு காணாமல் போய் விடுவார்கள். அருகே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் விழித்து பார்ப்பதற்குள் அந்த குட்டை நீரில்  வாழ்ந்த உயிர்கள் செத்து மிதந்து கொண்டிருக்கும்.

ஒரத்துப்பாளையம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், எதிர்ப்பு காட்டிய விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இன்று பொது சுத்திகரிப்பு நிலையம், தனியாருக்குச் சொந்தமாக சுத்திகரிப்பு நிலையம் என்று பல வசதிகள் வந்து உள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் இருக்கும் சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் இந்த கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். சுத்திகரித்த பிறகு உப்பில்லாத சாயமில்லாத தண்ணீராக பயன்படுத்த முடியும்.  ஆனால் செலவு பிடிக்கும் சமாச்சாரம்.  பின்பற்ற விரும்பாமல் கொள்ளை லாபம் வேண்டி இன்று வரைக்கும் பலரும் நடு இரவு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாதமானால் மாமூல்.  சென்னையில் இருப்பவர்களுக்கு தேவைப்படுவது மாதாந்திர அறிக்கை.

இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்.

ஒரு நாளைக்கு திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக பத்தாயிரம் கோடி லிட்டர். 1400 நிறுவனங்கள் சுறுசுறுப்பாக சாயமேற்றி சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.  நல்ல அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் ராக்கோழி போல திடீர் வருகை தந்து இன்று 700க்கும் குறைவான நிறுவனங்களே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிலர் செலவு செய்ய முடியாமல் இழுத்து மூடி விட்டு சென்று விட்டனர்.  பலர் அதிகாரிகள் எப்போது எந்த பாதையில் வருவார்கள் என்று ஆட்கள் வைத்து தடம் கண்டு கொண்டு இருக்கின்றனர்.

கற்பனையில் கொண்டு வாருங்கள். உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ? இந்த சாய நீர் பயணித்து வரும் பாதை மட்டுமல்லாமல் பயணிக்காத பாதையிலும் இதன் கெமிஸ்ட்ரி உருவாக்கும் கழிவுகள் அத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்?

அகமதாபாத்தில் குடிசை தொழிலாக தொடங்கிய சாயங்கள் தரம் வாரியாக தகுதியான நிறுவனங்களால் முத்திரை குத்தப்பட்டு உள்ளே வந்து கொண்டே இருக்கிறது.  நாளுக்கு நாள் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.  அதுவே இன்று குறிப்பிட்ட சாயங்கள் தான் உபயோகிக்க வேண்டும் என்ற பன்னாட்டு சட்டதிட்டங்களால் ஸ்விஸ் முதல் ஜெர்மனி வரை அத்தனை நாடுகளிலும் இருந்து சாயங்கள் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது.

எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசும்ப வைத்ததாலும் பல லட்சம் மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.

திருப்பூருக்கு என்று ஒரு ராசி. எல்லா ஊர்களிலும் மழை வராதா என்ற ஏக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இங்கோ வந்த மழை எப்போது நிற்கும் என்று ஏக்கமாய் இருக்கும். காரணம் சாயமேற்றப்பட்ட ஆடைகளுக்கு வெயில் இருந்தால் தான் சிறப்பு. மழை தொடர்ந்து கொண்டே இருந்தால் ஈரமாக இருக்கும் ஆடைகளை உலர வைக்க காசு செலவழிக்க வேண்டும்.

மழை தொடர பல ஏற்றுமதி நிறுவனங்களின் வங்கிக் கணக்கும் ஒழுகத்தொடங்கி பல சமயம் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும்,  மழை நிற்கும் போது திருப்பூரைச் சுற்றியுள்ள அத்தனை வயல்பிரதேச தண்ணீரும் ஒன்றாக ஓடி வந்து கால்வாயில் கலக்கும் போது நமக்கு அந்த கலங்கிய சாயத் தண்ணீர் பலவற்றையும் புரிய வைக்கும். சென்னையைப் போலவே திருப்பூரையும் மழை வந்து தான் ஒவ்வொரு முறையும் சுகாதாரப்படுத்தி விட்டுச் செல்கின்றது.

மொத்த நிறுவனங்களின் சாயக் கழிவுக்ளும் கடைசியில் சென்றடையும் இடம் ஓரத்துப் பாளையம் அணை தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக குளித்தலை வரைக்கும் சென்று விடும் போலிருக்கிறது.பல நாட்கள் காத்து இருந்து மழை பெய்ய, வந்து சேரும் நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட அத்தனையும் பாழாகிப் போய்விடுகின்றது..

சாயப்பட்டறை கழிவுநீரால் நிரம்பி வழியும் ஒரத்துப்பாளையம் அணை

ஓரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயர்வு,சாயக்கழிவு கலந்த நீரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

செய்தித்தாளில் படிக்கும் போது பலருக்கும் இதன் விபரீதம் புரிவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வருகின்ற தண்ணீரை தேக்கிவைக்க அனுமதியில்லை. தண்ணீரை நம்பி வாழும் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களின் தற்போதைய நிலையை விரைவில் நாம் ஆவண படமாக பார்க்க வாய்ப்புள்ளது.

காரணம் மழை நீரை தேக்கி வைத்தாலும் கலந்து வருகின்ற சாய நீரால் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஜீவன்கள் இறந்து உருவாக்கும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு மக்களும் வாழப் பழகிவிட்டார்கள். அரசாங்கமும் அமைதியாய் இருக்கிறது..

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமே முதல் குறி.  உள்ளுரில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் வந்து இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும்படி தனியாகவே குட்டி உற்பத்திக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் விரும்பும் உற்பத்தியையும் தரத்தையும் கொடுக்கின்றார்கள்

ஆனால் உள்ளுரில் இருக்கும் எந்த பெரிய நிறுவனங்களும் இந்த சாயக்கழிவால் அடுத்து வருகின்ற தலைமுறையே அழியப் போகும் அவலத்தை செய்து கொண்டுருக்கின்றோம் என்பதை உணர்வதே இல்லை. டாலர் சிட்டியின் இலாபம் நீரின் சுத்தத்தை அழிக்கும் வில்லனாக உள்ளது.  இங்கே ஒற்றுமையும் இல்லை.  உரக்கச் சொல்ல தைரியமும் எவரிடமும் இல்லை,

___________________________________________________________
– ஜோதிஜி
___________________________________________________________

//குறுக்கு வெட்டு – 25.08.2010// பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

13

பரிசோதனை எலிகளா இந்தியக்குழந்தைகள்?

“உத்தரப் பிரதேசத்தில் 4 குழந்தைகள் சாவு: பிரேத பரிசோதனையில் காரணம் தெரியவில்லை உத்தரப் பிரதேசத்தின் மோகன்லால்கஞ்சில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை  4 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 9 மாதத்துக்கும் குறைவான
4 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்த பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மருத்துவமனைகளுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால்  மருத்துவமனை செல்வதற்குள் குழந்தைகள் இறந்துவிட்டன. தட்டம்மை மருந்து கொடுத்த பின்னர்  குழந்தைகள் இறந்ததால் தங்களது குழந்தைகளுக்கு கெட்டுப்போன மருந்தை கொடுத்ததாகவும், அந்த மருந்தே தங்களது குழந்தைகளின் உயிரை பறித்துவிட்டதாகவும் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.” – தினமணி செய்தி

நோய்நொடி இல்லாமல் தடுத்து ஆரோக்கியமான வாழ்வை  தமது குழந்தைகளுக்கு  தருவதற்கு தடுப்பூசி போட நினைத்ததுதான் பெற்றோரின் தவறா? தடுப்பூசி போடுமுன்னர் தான் இவ்வாறு நிகழுமென்று அவர்கள் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டுமா?  தடுப்பூசி போட்டதற்காக நான்கு குழந்தைகள் இறந்து போனார்கள் என்ற சம்பவம் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடக்க முடியுமா?

அல்லது இந்தியக் குழந்தைகள் தான் பரிசோதனை எலிகளா? வல்லரசு நாட்டுக் குழந்தைகளின் நலனுக்காக மூன்றாம் உலக நாடுகள்தான் பரிசோதனைக்கூடங்களா?
________________________________________________________________________________

ஈராக்கிலிருந்து வாபஸ்! அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்பு எது?

ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் 50 ஆயிரத்திற்க்கும் குறைவான எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் ஒபாமா ஏற்கனவே அறிவித்தது போல் ஆகஸ்ட் – 31க்குள் பெரும்பாலான அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என சொல்கிறார்கள். ஆனால் இதிலிருந்து ஈராக்குடனான ராஜ்ஜிய உறவுகளில் எந்த பாதிப்பும் வாரது என துணை அதிபர் கூறியிருக்கிறார்.

ஈராக்கில் நினைத்தது போல நாட்டையும் மக்களையும் அடக்குவதற்கு அமெரிக்காவால் முடியவில்லை. புதைகுழிக்குள் புதைந்து கொண்டே போனதன் விளைவுதான் இந்த படை திருப்பம். நினைத்தது போல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் போதுமான அளவில் ஈராக்கின் எண்ணெயை குடிக்க முடியவில்லை. படை இருக்கும் செலவுக்கு ஏற்ற ரிடர்ன்ஸ் கிடைக்க வில்லை. அதே சமயம் அரசியல் ரீதியாக ஈராக் என்பது அமெரிக்காவின் காலனி நாடாக மாற்றப்பட்டது. வளைகுடாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க நிலையிலிருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை.

ஈராக்கிலிருந்து வாபஸ் என்றாலும் அமெரிக்க படைகள் அடுத்து ஆக்கிரமிக்கப் போகும் நாடு எது? ஈரானா, வடகொரியாவா?
________________________________________________________________________________________

“கேப்டனிடம் கருப்புப் பணம்!” கலைஞரிடம் இருப்பது வெள்ளையா?

அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள் என்று விஜயகாந்த் சொன்னது கலைஞருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தாங்கள் ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. நீ மட்டும் யோக்கியமா என்று விஜயகாந்த் கருப்பு பணமாக வருவாயை பெருக்கியிருப்பதை கேட்கிறார். அடுத்து சினிமா படங்களுக்கு வசனம் எழுதி வந்த பணத்தையும், கோபாலபுரம் வீட்டையும் மக்களுக்கு வழங்கியதை ஒரு பண்ணையாருக்குரிய பெருமையோடு பட்டியலிடுகிறார்.

வசனம் எழுதுவதற்கு இந்தியாவிலேயே அதிக வருமானம் பெறுபவர் நம்ம கலைஞர்தான். இருந்தாலும் வசனம் எழுதுவதை விட தமிழின் எல்லா படங்களும் கலைஞர் குடும்ப வாரிசுகளால்தான் ரிலீஸ் செய்யப்படுகிறது. வசனத்திற்கே இவ்வளவு வருமானமென்றால் படத்தயாரிப்பு, வினியோகத்தில் எவ்வளவு இலாபம் கிடைக்கும்? அதெல்லாம் வெள்ளையா, கருப்பா, சிவப்பா யாருக்கும் தெரியாது. மேலும் தான் சில்லறைகளை வீசி தானம் செய்ததை பட்டியிலிடும் கருணாநிதி தனது குடும்ப வாரிசுகளின் மொத்த சொத்து, வருமானங்களை ஏன் பட்டியலிடவில்லை?

கேப்டன் கருப்பில் வாங்கியது உண்மைதான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதை சொன்னவரின் உள்ளம் மட்டுமல்ல வெளியேயும் இருப்பது கருப்புதான்.
_____________________________________________________________

மக்கள் தாலியறுத்தா புதிய விமான நிலையம்?

ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன் பீல்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியிரிடம் மனு கொடுக்க வந்த மக்கள் மீது போலிஸ் தடியடி பிரயோகிக்கப்பட்டது. இதையெல்லாம் வளர்ச்சி திட்டங்களுக்கு காண்பிக்கப்படும் எதிர்ப்பு, இதனால் மக்களுக்குத்தான் இழப்பு என்று கருணாநிதி பேசுகிறார்.

ஏற்கனவே மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கிறது. இது போக புதிய விமான நிலையத்தின் அவசியம் என்ன? அரசுப் பேருந்துகளிலும், இரயில்களிலும் மந்தை போல அடைத்துக் கொண்டு பயணம் செல்லும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய அழகுமிகு பச்சைப் பசுமையான விமானநிலையம் என்பது ஆபாசமில்லையா? பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளின் கண்களுக்கு குளிர்ச்சியாக விமானநிலையம் அமைப்பதைத்தான் அரசுகள் விரும்புகின்றன. அதற்கு தடையாக இருக்கும் கிராமங்களும், மக்களும் கேள்வி கேட்பாரின்றி தூக்கி எறியப்படுவர். ஆனாலும் இந்த ஆட்டம் இப்படியே நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலம் வரும். இப்போது தூக்கி எறியப்படுபவர்கள் இந்த அரசுகளை தூக்கி எறிவார்கள்!
_________________________________________________________

ஊதிய உயர்வும், சுயமரியாதையும்!!

புதிய ஊதிய உயர்வின் படி படிகள் எல்லாம் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் மொத்தம் 1.40 இலட்சம் ரூபாய்கள். இது கூட போதாது என்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இரகளை செய்தார்கள். ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள். சபையையே முடக்கினார்கள். அவர்களது ஊதிய உயர்வின் நியாயம் குறித்து பல வாதங்களை முன்வைத்தார்கள்.

மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு அதிக பணம் தேவை என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் கவலை எல்லாம் அரசுத்துறை செயலர் 80,000 ரூபாய் சம்பளம் வாங்கும் போது தங்களுக்கு மட்டும் 50,000 ரூபாய்தானா என்றுதான் கொந்தளித்தார்கள். உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்தெல்லாம் அவர்கள் அவமரியாதையாக எண்ணவில்லை. ஆப்டரால் ஒரு செக்கரட்டரி சம்பளம் கூட எங்களுக்கு இல்லையா என்பதே அவர்களைப் பொறுத்தவரை இழிவாக கருதப்படுகிறது.

மற்றபடி பாராளுமன்றம் முன்னெப்போதை விடவும் அரட்டை அரங்கமாக மாறிவரும் நிலையில், கேள்வி கேட்பதற்கு கூட பணம் வாங்கிக் கொண்டு செயல்படும் நிலையில், நம்பிக்கை வாக்களிப்பிற்காக குதிரை பேரத்தில் ஈடுபடும் நிலையில் இவர்களைப் பற்றி மக்களுக்கு எந்த ஆர்வமோ, மரியாதையோ இல்லை. அதனால் ஊதிய உயர்வு என்பது விலைவாசி உயர்வினால் தத்தளிக்கும் பெரும்பான்மை மக்களிடம் மேலும் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும். எனினும் அதைப்பற்றிக் கூட சுரணையற்ற இந்த ஜந்துக்கள் கவலைப்படப் போவதில்லை.
_______________________________________________________________________

ரக்ஷா பந்தன் – பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

ரக்ஷா பந்தன் விழா என்றால் சைட்டடிக்கும் இளைஞர்களை கலாய்ப்பதற்காக பெண்கள் கையில் கையிறு கட்டி அண்ணன்களாக்கி நோகடிப்பார்கள் என்ற அளவுதான் இங்கே அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாக்களிலும் அவ்வாறே காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையில் ரக்ஷா பந்தன் விழா வடக்கில்தான் முதன்மையாக கொண்டாடப்படுகிறது. தெற்கில் இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் பிரபலமாக்க முயற்சிக்கிறது. அப்படி இந்த கயிறு கட்டலின் வரலாறு என்ன?

பெண்கள் தங்கள் மானம், உயிர், கற்பு, உடமை அனைத்திற்கும் தனது சகோதரனே காப்பு என்று கயிறு கட்டுவதுதான் இதன் வரலாற்று வழக்கம். பெண்களையே சாதி, இன, மத கௌரவமாக ஆணாதிக்க சமூக அமைப்பு வைத்திருக்கிறது. குழுச் சண்டையில் கூட எதிர்க்குழுவின் பெண்ணை பாலியல் வன்முறை செய்வதே பெரிய நடவடிக்கையாக இருக்கிறது. அப்படி எல்லா கௌரவங்களையும் சுமந்து திரியும் பெண்களது கற்பை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்.

தனது கற்பையும், உயிரையும் தனது சகோதரனது பாதுகாப்பில்தான் ஒரு பெண் காப்பாற்ற முடியுமென்றால் அந்த சமூகம் எவ்வளவு பெரிய வன்முறை சமூகமாக இருக்க வேண்டும்? கூடவே ஆண்களின் கவுரவப் பாதுகாப்பில்தான் பெண்களின் உயிர் சிக்கியிருக்கிறது என்பது பச்சையான அடிமைத்தனமாக இருக்கிறது. பார்ப்பனியம் கற்றுத் தந்த எல்லா பண்டிகைகளையும் அதன் வரலாற்று பொருளோடு புரிந்து கொண்டால் அவற்றை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.

_______________________________________________

செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

//குறுக்கு வெட்டு – 24.08.2010// கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!

11

அரிசிக் கடத்தலுக்கு தண்டனை! நாட்டையே கடத்துபவர்களுக்கு?

ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஆறு பெண்கள் கைது ‍‍‍: ‍ தினமணி செய்தி

இதை படிக்கும் நம் அனைவரின்  மனதிலும் “என்ன தைரியம், இந்த காலத்துலே பொம்பளைங்களுக்கு” என்ற வரி நிச்சயம் ஓடியிருக்கும். “எல்லாம் அரிசி கிலோ 1 ரூபாய்க்கு கொடுக்கறதாலேதான்” என்றும் “ஒரு கிலோ ஒரு ரூபா‍ன்றதாலே மாசம் 30 கிலோ வாங்கி சந்தோஷமா மக்கள் வாங்கி சாப்பிடுறாங்க’ என்றும் கருத்துகள் வெளிப்படலாம்.

இது நிச்சயம் நமக்கு புதிதல்ல. அவ்வப்போது நாம் கேள்விப்படுவதுதான். ஆந்திரத்துக்கு கடத்தல், கேரளத்துக்கு கடத்தல் என்றும் மாவட்ட அளவிலான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்படுவதும் புதிதல்லதான்.  இங்கு குறைந்த விலையில் வாங்கப்படும் அரிசி  வெளியில் பாலீஷ் செய்யப்பட்டு  அதிக விலைக்கு விற்கப்படுவதற்காகவே  கடத்தப்படுகிறது. இதில், நிச்சயம் ரேஷன்கடை அதிகாரிகளும், ஊழியர்களுக்கும், வட்டார பெரும் புள்ளிகளுக்கும் பங்கு இருக்குமென்று நிச்சயம் ஆருடம் சொல்லலாம்தான்.

எதற்காக கடத்தவேண்டும்?

மலிவு விலை அரிசிக்கும் அதை வெளிமார்கெட்டில் விற்பதற்கும் தேவை இருக்கின்றது என்பது கடத்தலை விட கவலைப்படவேண்டிய விசயம். தமிழக மக்கள் மலிவு விலையில் வாங்கும் அரிசியை அண்டை மாநில மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். சந்தையில் பகிரங்க விலைக்கு வாங்கப்படும் அரிசியின் பின்னே பதுக்கலும், கடத்தலும் மாபெரும் தொழிலாக கோலேச்சுகிறது.

நமது பொருளாதார மேதை மன்மோகன்சிங், உள்துறையில் கோலோச்சும் சிதம்பரம்,  செங்கோல் வழுவாதபடி அரசாளும் சோனியா,  விலையுயர்வால் சற்றும் பாதிப்படையாத தரகு‍‍ முதலாளிகள், ‘மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது’ என்று மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் கும்பல் என்று  இவர்கள் யாரும் ரேஷன் அரிசியை சாப்பிடுவதில்லை.   விலைவாசி உயர்வால் பாதிப்படைவதுமில்லை.  விலைவாசி உயர்வால் ஆதாயம் அடையும் பெருச்சாளிகளின் பிரதிநிதிகள்தானே, இவர்கள்?

தாரளமயமாக்கல், ஆன்லைன் வர்த்தகம், பொருட்கள் பதுக்கல், அசகாயமாக உயரும் அத்தியாவசிய பண்டங்களின் பகாசுர விலைகள், உயர்ந்து வரும் பணவீக்கம், இவற்றை விடவா அரிசிக் கடத்தல் முக்கிய விசயமாகப் போகிறது?

அரிசியைக் கடத்தும் நபர்களை கைது செய்து தண்டிக்க முடியும். ஆனால் நாட்டையும், மக்களையும் திருடி விற்பனை செய்யும் கயவர்களை யார் தண்டிப்பது?
_______________________________________________________________

கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!

//என் மகன், பேரன்கள் என்று வரிசையாக கலைத்துறையில் வருவதை ஏன் கேலி செய்கிறார்கள். எனக்கு வாரிசுகள் இருக்கக்கூடாதா?  கபூர் குடும்பத்தில் அனைவரும் சினிமாவுக்கு வரலாம். ரஜினியின் மருமகன் தனூஷ், மகள்கள் சினிமா வாரிசுகளாக வரலாம். கருணாநிதியின் சந்ததி மட்டும் வரக்கூடாதா? நான் திராவிட இனத்துக்காக வாழ்கிறேன் என்பதாலேயே இந்த பாரபட்சம்.// என்று வரலாற்று சொற்பொழிவை  கலைஞர் ஆற்றி உள்ளார் .

திராவிட இனத்துக்காக பாடுபடும் கலைஞர் பதிலுக்கு திராவிட இனத்திடமிருந்து ரிடர்ன்ஸ் எதிர்பார்ப்பது தவறில்லைதான். ஆனால் திரவிட இனத்துக்குரிய டி.வி, சினிமா அத்தனையிலும் அவரது வாரிசுகள் மட்டுமே கோலேச்சுவதற்கு அவர் என்ன செய்வார்? அவரது வாரிசுகள் அத்தகைய திறமையாளர்களாக சட்டபூர்வமாகவே வெற்றியை ஈட்டி ஏகபோகமாக வளர்ந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இந்த திறமை இல்லை என்றுதானே அர்த்தம்?

ஒரு வாரம் தீராத விளையாட்டு பிள்ளை வருகிறது என்றால் மறுவாரம் விண்ணை தாண்டி வருவாயா அப்புறம் வேட்டைக்காரன், சுறா, சுறா தூக்கினால் சிங்கம், சிங்கம் எடுத்தால் மதராசப்பட்டினம் , பையா இதை எடுத்தால் தில்லாலங்கடி  அதற்க்கு அடுத்த வாரம்  வம்சம் , இந்த வாரம் ” நான் மாகான் அல்ல” . இப்படி வாரா வாரம் எல்லாப் படங்களையும் கலைஞர் கம்பெனி ரிலீஸ் செய்கிறது. திரையுலகில் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை அழித்து விட்டு ஏகபோக ஆட்சி நடத்தும் கலைஞர் கம்பெனியின் தலைமை பிதாமகர் கருணாநிதி அடுத்து வசனம் எழுதும் படம் “இளைஞன்”. கதையின் கருப்பொருள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாம்.

தொழிலில் ஏகபோகம். கலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு. நல்ல நியாயம்தான்.
_____________________________________________________________

ரெட்டிக்கு எடியூரப்பா, விவசாயிகளுக்கு கோயிந்தா!

மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.

அர்க்காவதி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 2100 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த உள்ளது. இந்நிலத்தில் பகுதியளவில் திராட்சை, வாழை, உருளைக்கிழங்கு பயிரிடலும், குவாரி தொழிலும் நடந்து வருகிறது. மே 28, 2008 ல் மைய அரசு தனது கெஜட்டில் மாநில அரசுகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தரிசு நிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி வழிகாட்டி உள்ளது. இதனை மீறிதான் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது. உள்நாட்டுக்கு தேவையான விவசாயமா வெளிநாடுகளுக்கு தேவையான சேவைத்துறையா என்ற கேள்வி வருகையில் விவசாயத்தை புறக்கணித்துதான் அரசு முடிவு எடுத்துள்ளது.

ஆனால் ரெட்டி சகோதரர்களின் குவாரிகளை கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் எடியூரப்பா அரசு மறுத்து வருகிறது. ரெட்டிகளுக்கு பேச எடியூரப்பா இருக்கிறார். கர்நாடக விவசாயிகளுக்காக பேச யாருமில்லை.
_______________________________________________________________

பிராண்டு மோகம்! பிராடு வேகம்!!

பாலாஜி (32), பெங்களூருவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நேற்று மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். சென்னைக்கு வேலை தேடி வந்தவர், பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவிற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். ஏற்கெனவே கார் உற்பத்தி அதிகமான நிலையில் பழைய கார் விற்பனை மந்தமானது.

புதிய மாடல் கார்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக ஒரு மோசடியை அரங்கேற்ற முனைந்தார். இதற்காக “நடிகைகள் அவ்வப்போது சந்தையில் வரும் கார்களை வாங்குவதற்காக சமீபத்தில் வாங்கிய கார்களை விற்று விடுவார்கள், அதைத்தான் உங்களுக்கு தருகிறேன்” என்று கூறி சிலரிடம் முன்பணமும் பெற்றுக் கொண்டார். இப்படி ஏமாந்தவர்களில் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரும் ஒரு பொறியாளரும் அடக்கம்.

கிடைத்த பணத்தில் ஓட்டல்களிலும் சினிமாவிலும் நடனமாடிக் கொண்டிருந்த பாலாஜி சமீபத்தில் மதுரையில் ஒரு திரையரங்கில் தனது மோசடி வேலையை நடத்தியதில் கைது செய்யப்பட்டார். புதிய தொழில்நுட்ப வசதிகளை செய்து தருவதாக கூறி அங்கும் மோசடி செய்துள்ளார். பத்து லட்ச ரூபாய் அளவுக்கு இம்மோசடி நடந்துள்ளது.

ஏமாற்றியவன் செய்த தவறை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். “குறைந்த விலைக்கு பிராண்டட் கார் கிடைக்குதுன்னு போனவங்க மேலதான் தப்பு” என்றார் அவர். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஆடி தள்ளுபடிக்காக அவர் பிராண்டு ஷர்ட்டுக்காக அலைந்த கதை எனக்கல்லவா தெரியும்! ஒரு சட்டைக்கே இவ்வளவு பிராண்ட் மோகம் இருக்கும் போது கார்களுக்கும் அதை கைப்பற்ற துடிக்கும் கனவான்களுக்கும் எவ்வளவு இருக்கும்? ஆக மொத்தம் பாலாஜிகளுக்கு யோகம்தான்.
__________________________________________________________

பிளாக்பெர்ரி: திருடன் போலீஸ் விளையாட்டு!

பிளாக் பெர்ரி செல்பேசியின் சேவைகளை -சமிக்ஞைகளை கண்டு பிடிக்க முடியாது என்பதால் மத்திய அரசு அதை மாற்றுவதற்கு அந்த நிறுவனத்திடம் பேசி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி தீவிரவாதிகள் திட்டம் போட்டால் என்ன ஆகுமென்பது அரசின் கவலை. ஆனால் பிளாக்பெர்ரியின் தனிச்சிறப்பே அதன் பிரைவசியின் பாதுகாப்பில்தான் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த தனிச்சிறப்பே அரசுக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த உள்முரண்பாடை எப்படி புரிந்து கொள்வது?

புதிய செல்பேசி வாங்குபவர்களிடம் அடையாள அட்டை சரிபார்த்து விற்க வேண்டும் என்று அரசு கூறினாலும் இதையெல்லாம் வாடிக்கையாளர்கள் தொந்தரவாக கருதுவார்கள் என்பதால் விற்பனையாளர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அந்த கணக்கில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று எல்லோரும் நினைத்த போது வாங்கலாம். வாங்குபவரின் அடையாளத்தை விட விற்பனை முக்கியம் என்பதால் இந்த திருடன் போலிஸ் விளையாட்டு இப்போதைக்கு தீராது!
____________________________________________________________

சாராயக்கடை மூடப்பட்டது!

சென்னை சேத்துப்பட்டில் மக்கள் குடியிருப்பில் ஒரு டாஸ்மார்க் கடை முன்னர் தனியாருக்கு சொந்தமாக இருந்த காலத்திலிருந்து இயங்கி வருகிறது. இதை மூடுவதற்கு மனு கொடுத்து பலனில்லை என்பதால் ம.க.இ.க தோழர்கள் மக்களைத்திரட்டி பூட்டுபோடும் போரட்டத்தை நடத்தினர். ஆனால் இந்த சாராயக்கடையின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு போலீஸ் தோழர்களை கைது செய்தது. இந்த போராட்டத்தோடு கூடவே நீதிமன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியோடு வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அந்த கடை மூடப்பட்டது. ஒரு சரக்குக் கடையை மூடுவதற்கே மக்கள் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும் சேத்துப்பட்டு மக்கள் தோழர்களின் நீண்ட போராட்டத்தில் கடைசி வரை கைகோர்த்தார்கள். இந்த சாராயக்கடையை நடத்துவதற்கு பாதுகாப்பு அளிக்க முயன்ற லோக்கல் தாதாக்கள் இப்போது கையைப்பிசைகின்றனர். மக்கள் சக்தி சேர்ந்தால் தாதா, சரக்கு எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கலாம் போலும்!
________________________________________________________

கேப்டனின் ரேட்டு என்ன?

மதுராந்தகம் அருகே மாமண்டூரில் தன் பெயரில் ஒரு திருமண மண்டபத்தை விஜயகாந்த் திறந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசும் போது தே.மு.தி.க ஊழல் இல்லாத கட்சிகளோடு கூட்டணி சேரும், தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும், தே.மு.தி.க இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கேப்டன் பிளந்து கட்டியிருக்கிறார்.

தன்கட்சியில் ஊழல் செய்யாதவன்தான் சேர முடியும் என்று அறிவித்தால் கேப்டன் கட்சியே கலைந்து விடும். தி.மு.க, அ.தி.மு.க என்று கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அங்கேயும் இருக்கின்றனர். இதுவரை செய்த செலவுக்கு கேப்டனும், அவர்களும் கணக்கு வைத்திருக்க கூடும். அதனால்தான் தங்கள் ரேட்டுக்கு கட்டுப்படியாகும் கூட்டணியை எதிர்பார்க்கிறார்கள். அதை ஓபனாக சொல்வதை விடுத்து இப்படி ஊழல், கீழல் என்ற சீனெல்லாம் கேப்டனது வீரத்துக்கு அழகாக இல்லையே?
______________________________________________________

தொடர்கிறது அமெரிக்கா திவால்!!

சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் அமெரிக்காவில் எட்டு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 118 வங்கிகள் திவாலாகியிருக்கின்றன. இந்த வேகத்தைப் பார்த்தால் சென்ற ஆண்டு 140 வங்கிகள் திவாலாகியிருக்கும் ரிக்கார்டு முறியடிக்கப்படும் போலத் தெரிகிறது. பூலோக சொர்க்கத்தில் வேலை இழப்பு அதிகரித்து கடன் அடைபடும் வழி முடங்கி வங்கிகள் இப்படி ராக்கெட் வேகத்தில் திவாலாகி வருகின்றன. உலகத்துக்கே படியளந்த பெருமாள் இப்போது தனது உண்டக் கட்டிக்கே திண்டாடுகிறார்.
_______________________________________________

செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்