Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 830

கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!

ராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு, செப்டம்பர் மாத இறுதியில் சாதி இந்துக்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

கயர்லாஞ்சி கிராமத்தில் போட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்டிக் கொள்ள பையாலால் விரும்பினார். ஒரு தாழ்த்தப்பட்டவன் கல் வைத்த வீடு கட்டுவதை விரும்பாத அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறியர்கள், பையாலால் குடும்பத்தின் நியாயமான விருப்பத்தை வன்மத்துடன் எதிர்த்து வந்தனர். மேலும், பையாலாலுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து இரண்டு ஏக்கர் நிலத்தைக் கிராமத்தின் பொதுப் பாதைக்குத் தேவை என வஞ்சகமாகப் பறித்துக் கொண்டனர்.
அபகரிக்கப்பட்ட அந்த நிலம், பையாலாலின் நிலத்தையொட்டியுள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்த அக்கிராமத் தலைவரின் நிலத்திற்குள் டிராக்டர்கள், வண்டிகள் சென்று வருவதற்கான பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்பை பையாலாலின் மனைவி சுரேகா எதிர்த்து வந்தார்.

கயர்லாஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள துசாலா கிராமத்தில் வசிக்கும் சுரேகாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களான சித்தார்தும், ராஜேந்திராவும், அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை சுரேகாவிற்குப் பெற்றுத் தரும் நோக்கத்தோடு, கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதி பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில், சுரேகாவுக்கும் அவருக்காகப் பரிந்து பேசிய சித்தார்த்துக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும்; சுரேகா கள்ளச் சாராய வியாபாரி என்றும் கதை கட்டினர்.

கயர்லாஞ்சிக்கு 03.09.2006 அன்று நியாயம் கேட்க வந்த சித்தார்தை, ஆதிக்க சாதி வெறியர்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் துரத்தியடித்துத் தாக்கினர். சாதிவெறியோடு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 29.09.2006 அன்று 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்றே (29.09.2006) பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் கயர்லாஞ்சி வன்கொடுமை தாக்குதல் நடந்தது.

விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் சித்தார்தைத் தேடி துசாலாவுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்து கொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து கயர்லாஞ்சி நோக்கிச் சென்றது. அக்கூட்டத்துடன் கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதி இந்துக்களும் சேர்ந்து கொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் சென்றனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.

குடிசைக்குள் புகுந்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி, கையோடு கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டு வந்து பையாலாலின் மனைவியையும், மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களுள் ஒருவரும் இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை.

பிறகு, ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண்குறிகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு அவர்களை அரைகுறை உயிரோடு வானத்துக்கும் பூமிக்குமாகத் தூக்கியெறிந்து பந்தாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை இந்த “விளையாட்டு’ நடந்தது.

குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.

மிகவும் வக்கிரமான முறையிலும், கொடூரமான முறையிலும் நடத்தப்பட்ட இவ்வன்கொடுமைத் தாக்குதல் சம்பவம், அதன் முழு பரிமாணத்தோடு வெளியே தெரிவதற்குக்கூடப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. குறிப்பாக, மகாராஷ்டிர போலீசும், மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் – இந்த அதிகாரிகளுள் பலர் “தலித்’கள் என்பதுதான் வெட்கக்கேடு – இவ்வன்கொடுமையை மூடிமறைத்துவிடுவதிலும், பூசி மெழுகுவதிலும் குறியாக இருந்து செயல்பட்டனர். அதிகாரி தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும்கூட, அவரும் சாதிய சமூகம் விதித்திருக்கும் மன ஓட்டத்தின்படிதான் செயல்படுவார் என்பதையே கயர்லாஞ்சி எடுத்துரைக்கிறது.

இச்சம்பவம் நடந்த அன்றிரவே பையாலால், சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் போலீசு நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அன்றிரவு 11.00 மணிக்கு கயர்லாஞ்சி கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என சாதி இந்துக்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னதையே போலீசார் தேவ வாக்காக எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டனர். கயர்லாஞ்சியில் வசிக்கும் பிற தாழ்த்தப்பட்ட குடும்பங்களிடமோ, கோண்டு பழங்குடியினர் மத்தியிலோ விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் போலீசுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.

புரட்சிகர அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் நடத்திய நேரடி விசாரணை; அவ்வமைப்புகள், ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி நடத்திய போராட்டங்கள்; அப்போராட்டத்தை ஒடுக்க போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நடந்த ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனின் மரணம்; போராட்டத்தை முன்னின்று நடத்திய முன்னனியாளர்கள் பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டது; நக்சல்பாரிகள்தான் இப்போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறி, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்திய மகாராஷ்டிர அரசின் திமிர் — இவற்றையெல்லாம் தாண்டிதான் கயர்லாஞ்சி வன்கொடுமை தாக்குதல் சம்பவம் வெளியுலகுக்குத் தெரிந்தது.

அதிகார வர்க்கம் விசாரணை நிலையிலேயே இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது. போட்மாங்கேயின் மனைவி, மகள், இரு மகன்கள் ஆகிய நால்வரின் சடலங்கள் உருக்குலைந்து போயிருந்ததால், ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனை செய்ய இயலவில்லை என் மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.

தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக, அந்த நான்கு பேரின் சடலங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால், “காலம் கடந்துவிட்ட’தால் இந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது. போலீசார் தமது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர்.

கயர்லாஞ்சி கிராமத்தில் வாழும் ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு இந்த வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்பிருந்தாலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மையப் புலனாய்வுத் துறை 46 பேரிடம் மட்டுமே விசாரணையை மேற்கொண்டது. அவர்களுள் 35 பேர் விசாரணை நிலையிலேயே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; 11 பேர் மீது மட்டுமே கொலை, சதி மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பதினொரு பேரில் எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கிறது. இந்த எட்டு பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; மீதி மூன்று பேர் குற்றமிழைத்ததற்குச் சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரில், பையாலாலிடமிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்ட கயர்லாஞ்சி கிராமத் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்ட மூவருமே ஓட்டுக்கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனத் தீர்ப்பின் பின் சுட்டிக் காட்டியுள்ளார், பையாலால்.

எனினும், தண்டிக்கப்பட்ட எட்டு பேரில் ஒருவர்கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. முகேஷ் புஸம், சுரேஷ் கான்தாதே என்ற இருவரும், “பையாலாலின் மனைவி சுரேகாவையும், அவரது மகள் பிரியங்காவையும் சாதி பெயரைச் சொல்லிக் கேவலமாகத் திட்டியதைக் கேட்டதாக” நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தனர். ஆனால், விசாரணை நீதிமன்றம் அவ்விருவரின் சாட்சியத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதன் மூலம் இந்தக் கொலைகள் சாதிய வெறியினால் நடந்தது என்பது மறுக்கப்பட்டு, ஏதோ தனிப்பட்ட சொத்துத் தகராறில் நடந்த கொலை; முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்குவதற்காக நடைபெற்றுள்ள கொலை எனக் குறிப்பிட்டு, உரிய நீதி கிடைப்பதை மறுத்துவிட்டது. மேலும், குற்றவாளிகள் இக்கொலைகளைச் செய்வதற்கு எவ்விதச் சதித் திட்டமும் தீட்டவில்லை எனத் தீர்ப்பு அளித்திருப்பதன் மூலம், இவ்வக்கிரமான படுகொலைகள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட அசாம்பாவிதம் போலப் பூசி மெழுகியிருக்கிறார் நீதிபதி எஸ்.எஸ். தாஸ்.

சிவ்லால் பராடே மகராஜ் என்பவர்தான், போட்மாங்கேயின் மகளான பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் கால்வாயில் மிதப்பதாக போலீசாரிடம் தகவல் கொடுத்தார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீசுகாரர் கூறியிருந்தார். ஆனால், விசாரணை நீதிமன்றமோ சுரேகாவும், பிரியங்காவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லை என்பதோடு, அவர்கள் மானபங்கப்படுத்தப்பட்டதற்குக்கூட ஆதாரமில்லை எனக் கூறிவிட்டது.

இராசஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது. கயர்லாஞ்சி வழக்கில் இராசஸ்தான் நீதிமன்றத்தின் அந்த ஆதிக்க சாதித் திமிரை, ”ஆதாரமில்லை” என்ற வார்த்தைகளில் கக்கியிருக்கிறார், நீதிபதி தாஸ். இது மட்டுமின்றி, நீதிபதி தாஸ் இத்தீர்ப்பை எழுதும் போது கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது. அது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வழிந்த கண்ணீர். இந்திய நீதிமன்றங்களிடம் தீண்டாமை மனோபாவம் எத்தனை தூரம் வேர்விட்டுப் பரவியிருக்கிறது என்பதற்கு தாஸின் கண்ணீரே சாட்சி.

மாண்புமிகு நீதிபதிகளும், புனிதமானதாகக் கூறப்படும் இந்திய நீதிமன்றங்களும் வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதொன்றும் புதிய விசயம் கிடையாது. இக்குற்றச்சாட்டுக்கு மேலும் ஆதாரம் வேண்டும் என்று ‘நடுநிலையாளர்கள்’ விரும்பினால், மேலவளவு வழக்கிலும், திண்ணியம் வழக்கிலும் நீதிமன்றங்கள் அளித்திருக்கும் தீர்ப்பைப் புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும்.

இதே பண்டாரா மாவட்டத்திலுள்ள சுரேவாடா கிராமத்தில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியையாக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவர் மாறுதல் செய்யப்பட்டவுடன் பொறுப்பேற்றுக் கொண்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆசிரியர், அப்பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது ”கோமியத்தை”த் தெளித்துப் ‘புனித’ப்படுத்தியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம், ”மாணவர்கள் மீது தெளிக்கப்பட்டது பசு மூத்திரம்தான் என்பதற்கு ஆதாரமில்லை; எனவே, இவ்வழக்கு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது” எனக் குறிப்பிட்டு, வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார்.

”மகாராஷ்டிராவில் குற்றங்கள் 2007” என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலப் புலனாய்வுப் போலீசார் தயாரித்துள்ள அறிக்கையில், ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 2 சதவீதத்துக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாக”க் குறிப்பிட்டுள்ளது. ‘தேசிய’ அளவில் எடுத்துக் கொண்டாலும் இதில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, பார்ப்பன சத்திரிய சாதியினரும், ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்தவர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, ”தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதனால் அச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும்” என்று கோரி வருகிறார்கள். அதிகார வர்க்கமும் நீதிமன்றங்களும் வழக்குப் பதிவதிலும், விசாரணை நடத்துவதிலும், தீர்ப்பு வழங்குவதிலும் இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம், சாதி இந்துக்களின் அக்கோரிக்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதற்கு கயர்லாஞ்சி, மேலவளவு, திண்ணியம், சுரேவாடா வழக்குகளில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளே சாட்சியங்களாக உள்ளன.
____________________________________________

வினவு குறிப்பு: 2008 ஆம் ஆண்டு இறுதியில் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் மீது செசன்ஸ் நீதிமன்றம் (பந்தாரா அமர்வு நீதிமன்றம்) அளித்த தீர்ப்பைத்தான் மேலே கட்டுரையில் பார்த்தீர்கள். இதை எதிர்த்து அந்த குற்றவாளிகள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன்படி தூக்கு தண்டனை பெற்ற ஆறு பேருக்கும், ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேருக்கும் அத்தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு, 25 வருடங்கள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது. இது பையாலால் போட்மாங்கேவுக்கும், தலித் – மனித உரிமை – புரட்சிகர அமைப்புகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

அரசுத் தரப்பு வேண்டுமென்றே ஆதிக்க சாதி குற்றவாளிகளை காப்பாற்றும் வண்ணம் இந்த வழக்கில் செயல்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் இப்படி தீர்ப்பு வழங்குவதற்கு தோதாகத்தான் முந்தைய நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருந்தன. அதைத்தான் புதிய ஜனநாயகம் அன்றே குறிப்பிட்டிருந்தது.

போபாலுக்கே நீதி வழங்கப்படாத பொழுது ஒரு அப்பாவி தலித்துக்கு மட்டும் நீதி வழங்கப்படுமா என்ன? மிகக் கொடூரமான முறையில் போட்மாங்கே குடும்பத்தினரை கொன்ற ஆதிக்க சாதியினர் இனி மற்ற ஊர்களில் இதை வைத்தே சட்டப்பூர்வமாகவே எல்லா கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர்.

ஆம். இந்தியாவில் தலித்துகளுக்கு சட்டப்படி எந்த நீதியும் கிடைக்காது. எனில் அந்த சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு நமக்கான நீதியையே நாமே பெறுவது ஒன்றுதான் வழி!
_____________________________________________________

ஈழம்: உடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்!!

37

ன்புள்ள உடன்பிறப்பே…

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, வருமானம் கோபாலபுரத்திற்கு.. !!

தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். அறிவாலாயம் துவங்கி அண்டார்டிகா வரை திருக்குவளையாரின் குடும்பம் செழிக்க, வலுக்க, பெருக்க அல்லும் பகலும், காலையிலும் மாலையிலும், பகலிலும் இரவிலும், தூணிலும் துரும்பிலும் தள்ளாத வயதிலும் பாடுபடும் தானைத் தலைவர், தமிழினம் இனி காணமுடியாத தவப்புதல்வன் செய்திருக்கும் ஈடு இணையற்ற, அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எடுத்துக்காட்டிற்கு கூட எடுத்தியம்ப முடியாத அந்த வெற்றிச் செய்தினை பகிர்ந்து கொள்கிறோம். படித்ததும் கொலை வாளினை எடுத்து கொடியோர் சங்கை அறுத்திட புறப்படு!

இலங்கைத் தீவில் ஆழி சூழ் விதியில் சிக்கித் தவிக்கும், மானாட மயிலாடாவைக் கூட பார்த்துக் களிக்க இயலாமல் நமதருமை தொப்புள் கொடி மக்காள் படும் துன்பத்தினைக் கண்டு வாடி சினிமா வசனம் எழுதும் சிரமமான பணிக்கிடையிலும் தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார் என்பது நீ அறிந்ததே.

எழுத்தும் ஓர் ஆயுதமென்று அரிஸ்டாட்டில் முதல் அண்ணாவரை செய்து காட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கலைஞரும் ஜூலை 17ஆம் தேதி பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “கடந்த 9ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன்  வாழ்வதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் இயன்ற வரையில் தாங்கள் மேற்கொள்வதாக தாங்கள் உறுதி அளித்திருப்பதற்கு நன்றி. இத்தருணத்தில் இந்திய அரசாங்கம், இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூதரக தொடர்புகள் மூலமாக ஒருவரையோ அல்லது ஒரு சிறப்பு பிரதிநிதியையோ அனுப்பி அங்கு நிலவும் உண்மையான சூழலை மதிப்பிட்டு அறிந்து வரச் செய்யலாம்.” என்று குறளோவியம் போல கலைஞர் தனது வேதனையையும் தீர்வையும் நச்சென்று நாலு வரியில் வடித்திருந்தார்.

டெல்லிக்கு பல பல கடிதங்கள் வகை தொகையின்றி ஏனோ தானோவென்று குவிந்தாலும் கலைஞரின் கடிதமென்றால் அண்டமே நடுநடுங்கும். அய்யாவின் கடிதம் கண்ட கொய்யா மன்மோகன் சிங் உடனே சாப்பிடக்கூட செய்யாமல் அன்னை சோனியாவை தரிசித்து ஆலோசனை பெற்று பதில் எழுதியிருக்கிறார்.

அதில், “தாங்கள் 17 ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு நன்றி. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டிவரும் ஆர்வத்தின் காரணமாகவும்இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்.” என்று கூறப்பட்டிருக்கிறது.

தமிழக வரலாற்றுக் களஞ்சியத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வெற்றிச்செய்தியினை உனக்கு விம்மிய நெஞ்சுடன் அளிக்கிறேன். இமயத்திலே புலிக்கொடி பறக்க விட்ட தமிழனுக்கு பிறகு இப்போதுதான் வடக்கில் நமது கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. வருமானம்தான்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இரசியா, சீனாவை எதிர்க்க வேண்டும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு முழங்கிய தம்பி சீமான், காலியாகிவரும் கட்சித் தலைவன் அண்ணன் வைகோ போன்றவர்கள் பேச்சிலே காட்டும் காகித வீரத்தை நமதருமைத் தலைவர் செயலிலே காட்டியிருக்கிறார் என்றால் உன் மகிழ்வுக்காக நீ டாஸ்மாக் சென்றாலும் கொண்டாடமுடியாத கூத்து அது.

சுப.வீரபாண்டியன் போன்ற வேலையில்லாத முன்னாள் பேராசிரியர்கள் ஒரு ஐம்பது பேர் கொண்ட மாபெரும் அரங்கக்கூட்டங்களில் இந்த வெற்றிச் செய்தியினை உலகமே வியப்புறும் வண்ணம் ஆய்வு செய்து வீர உரையாற்றி வருகிறார்கள். அந்நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து பிரம்மாஸ்திர ஏவுகணையாக கொழும்புவுக்கு பறக்க இருக்கும் அந்த வெளியுறவு அதிகாரி பெருமானின் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே உனக்கு தருகிறேன்.

சிறப்பு விமானத்தில் அந்த அதிகாரி இந்தியாவின் பலத்தைக் காட்டும் வண்ணம் சுற்றம், கொற்றம், முற்றம், மற்றும் குடும்ப பரிவார சகிதம் கொழும்பில் தரையிறங்குகிறார். ஹைபுவான் சொல்லி சிங்கள தேசத்தின் அழகுத் தாரகைகள் அவரை வரவேற்க, கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றிலை மடித்து தரும் மாபெரும் அதிகாரி ஒருவர் நம்மவரை அழைத்துச் செல்கிறார்.

கொழும்பு கடற்கரையில் இருக்கும் ஷெர்ட்டன் எனும் அழகிய நட்சத்திர விடுதியின் பிரசிடண்சியல் சூட்டில் நம்மவர் தங்குகிறார். இந்த அறைக்கு வாடகை மிக அதிகம் என்பது தமிழனின் கௌரவத்திற்கு ஒரு சான்று. நன்று மேலே போவோம்.

முதலில் மகிந்த ராஜபக்சேவை காலை சிற்றுண்டியுடன் சந்திக்கிறார். முள்ளிவாய்க்கால் வெற்றிக்காக சிங்கள மக்கள் இராணுவ வீரர்களுக்கு ஊட்டிய பால்சோறு இங்கே தமிழினின் தன்மானத்திற்காக கிண்ணத்தில் இறைஞ்சுவது நிச்சயம். தலைவர் கலைஞரின் விருப்பத்திற்கேற்ப வந்துள்ள நம்மவரை புன்முறுவலுடன் மறித்த இலங்கை அதிபர் ஒரு புவியியல் சிறப்புள்ள அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வன்னி முகாமில் உள்ள மக்களுக்கு தினசரி தலா 1 லிட்டர் நீர் வழங்கிய அரசு இனி ஒன்றேகால் லிட்டர் வழங்கும் என்பதாகும். குவார்ட்டரில் மூழ்கும் உனக்கு இந்த குவார்ட்டர் வெற்றியின் மகத்துவத்தை விரித்துரைக்கத் தேவையில்லை.

பின்னர் இலங்கை அதிகாரிகளை நம்மவர் சந்திப்பார். தமிழனின் மானம் காக்க அங்கே செல்போன் டவர்களை எழுப்பி வரும் ஏர்டெல் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பார். ஏர்டெல்லும் இனி தமிழ் மக்கள் அவர்களுக்கிடையில் குமுறி அழுதவற்கு நிமிடத்திற்கு 50 காசு என்ற எவரெஸ்ட் சலுகையை அறிவிக்க இருக்கிறது. எதிர்காலத்தில் கலைஞர் சீரியல்களும் மலிவான விலையில் செல்பேசிச் சேவையில் இடம்பெறும் என்று பேச்சு அடிபடாமல் இல்லை.

பின்னர் தனி ஹெலிகாப்டரில் நம்மவர் வன்னிக்கு செல்கிறார். பறக்கும் போதே முகாம் மக்களுக்கு கனிந்த இதயத்துடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு உணர்வுடன் அவர் டாடா காண்பிப்பார். முகாமில் சாமி கும்பிடுவதற்காக புதிதாக கட்டப்பட்ட கோவிலையும், இறந்தோர் புதைக்க கட்டப்பட்டுள்ள மாபெரும் மயானத்தையும் திறக்கிறார். இந்த மயானம்தான் ஆசியாவிலேயே பெரியது என்பது நமது தமிழனித்தின் வலிமையினைக் காட்டிடும் என்றால் நீ என்ன சொல்வாய்?

இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார். நம்மவரை பக்சேவின் அமைச்சர் டக்ளஸ் வரவேற்று விருந்தளிக்கிறார். கலைஞர் எழுதிட்ட எல்லா புத்தகங்களும் தலா 1000 பிரதிகள் யாழ் நூலகத்திற்கு அளிக்கும் திட்டத்தினை நம் தூதர் அறிவிப்பார். யாழ்ப்பாணத்தில் சன்.டி.வி தெளிவாக தெரியவில்லை எனும் மக்கள் கோரிக்கையைத் தீர்ப்பதாக அறிவிப்பார். எந்திரன் படம் அங்கேயும் ரிலீசாவதற்கு உத்திரவாதத்தையும் அளிப்பார்.

இப்படியாக தமிழனின் குரலை உயர்த்திட்ட பணி முடித்த பின் கொழும்பில் டூடி ஃபிரி அங்காடிகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி விட்டு இந்தியா திரும்புகிறார். வழியில் சென்னையில் இறங்கி கலைஞருடன் சந்தித்து விட்டு சிங்கள தேசத்தில் தமிழன் பெற்ற வெற்றியினை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவார். அதை சன், கலைஞர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. அன்று மட்டும் நீ டாஸ்மாக் போகும் நேரத்தை சற்று மாற்றிக் கொண்டு அந்த வரலாற்று வெற்றியினை பகிரும் காட்சியினை ஆசை தீர பருகிட வேண்டும் என்று கலைஞர் கேட்பதாக இருக்கிறார்.

ஒரு கடிதம் என்னவெல்லாம் சாதித்திருக்கிறது என்பது குறித்து உடன்பிறப்பே நீ மறவாதிரு! வாங்கும் கட்டிங்கில் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கினை அனுப்ப மறுக்காதிரு!!

தமிழ் வாழ்க! தமிழனின் தன்மானம் ஒழிக! உடன்பிறப்பின் அம்மணம் ஓங்குக!

– வினவு

தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!

204

வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.

_________________________________________________________

அதிர்ச்சியில் உறைந்து போனோம்!

மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.

கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.

நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.

நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!

‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.

இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !

ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.

என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.

இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.

விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?

மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு  நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”

இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.

ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.

மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!

எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.

இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.

சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப்.

தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.

காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.

அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.

இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.

காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.

தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.

நோக்கியா சுரண்டலுக்கு அடியாள் வேலை செய்யும் தி.மு.க!

இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள்.  தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.

வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.

ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு போபால்?

இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.

விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?

தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!

அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?

இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.

உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.

சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.

இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.

நோக்கியாவின் காலன் ட்யூன்!

நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.

கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.

நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.

காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

________________________________________________________________________

கட்டுரை, புகைப்படங்கள், கள ஆய்வு – வினவின் செய்தியாளர்கள் குழு, சென்னை.

________________________________________________________________________

 

800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!

9

நேற்று வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பழங்குடி மக்களின் தாலியறுக்கும் அநீதியை எழுதியிருந்தோம். அதில் பழங்குடி மக்களின் கடைசி நபர் இருக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அச்சாரமாக தூத்துகுடியிலிருந்து ஒரு இனிய செய்தி தற்போது வந்திருக்கிறது.

தூத்துக்குடியில் 1997ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் தாமிரம் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் தாமிரா உருக்காலை நிறுவனத்தை கடும் எதிர்ப்புக்கிடையில் ஆரம்பித்தது. அந்த போராட்டம் தோல்வியடைந்ததற்கு ஓட்டுக்கட்சிகள் காசு வாங்கிக்கொண்டு துரோகமிழைத்ததும், அரசியல் ரீதியில் தன்னாவர்க் குழுக்கள் போராட்டத்தை வழிநடத்தியதும் ஆகும்.

இந்நிலையில் மக்கள் விரோதமாக உற்பத்தியை ஆரம்பித்த ஸ்டெர்லைட் நிறுவனம் பல மோசடிகளை செய்து வந்தது. எல்லா மோசடிகளையும் அரசின் உதவி கொண்டும், பணபலத்தின் செல்வாக்கிலும் கையாண்டது. சிலநாட்களுக்கு முன்னர் ஒரு வரி ஏய்ப்பு வழக்கில் இந்த நிறுவனம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்திருந்ததற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய கலால் துறை இந்நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக மற்றொரு வழக்கு பதிவு செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கம்பிகள், தாமிர கேத்தோடுகள் போன்ற தாமிரப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இருந்து தாமிரத்தாது இறக்குமதி செய்யப்படுகிறது. தாதுப் பொருளை இறக்குமதி செய்துவிட்டு அதே நாடுகளுக்கு தாமிரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும்.

ஆனால் இந்தியாவிலேயே தாமிரப்பொருட்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுமதி செய்யாமலேயே செய்ததாகக்கூறி வரிச் சலுகை பெற்று வந்தது. இதன்மூல் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடிக்கு அந்த நிறுவனம் இறக்குமதி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித் துறையினருக்கு தெரிய வந்தது. அதனால் இத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சோதனை செய்து வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதன் பொருட்டு ஸ்டெர்லைட்டின் துணை தலைவர் வரதராஜன் என்பவரை போலீசின் உதவியுடன் கைது செய்து கலால் துறை சனிக்கிழமை காலை தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட வழக்கறிஞர்கள் பெருமளவில் கூடினர். அதில் குறிப்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்ற வாயிலில் முழக்கமிட்டனர். “கோடிக்கு ஒரு நீதி, சேரிக்கு ஒரு நீதியா, வரதராஜனை தேசிய பாதுகாப்பு செட்டத்தில் அடை, ஸ்டெர்லைட்டே தூத்துக்குடி  மண்ணை விட்டு வெளியேறு” போன்ற முழக்கங்களை வழக்கறிஞர்கள் முழங்கினர்.

வேதாந்தா நிர்வாகி வரதராஜனுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ஏராளமான வழக்கறிஞர்களை இறக்கியிருந்தது. ஆயினும் முற்போக்கு வழக்கறிஞர்களின் போராட்டக்குரலை செவியுற்ற நீதிபதி மோசடி செய்த நிர்வாகி வரதராஜனை சிறையில் அடைக்குமாறு உத்திரவிட்டார். சமூக அக்கறையுடன் குழுமிய வழக்கறிஞர்களை பாராட்டவும் செய்தார்.

பின்னர் போலீசார் வரதராஜனை வெளியே கொண்டு வந்த போது வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் புகைப்படம் எடுக்க முயன்றபோது, ஸ்டெர்லைட் குண்டர் படை காவல்துறையுடன் தடுத்தது. இதனால் ஆத்திரமுற்ற வழக்கறிஞர்கள் முழக்கமிட்டவாறே வரதராஜனை அடிப்பதற்கு முயன்றனர். பெரும் முயற்சிக்கு பின்னரே காவல்துறை வரதராஜனை மீட்டது. இதனால் நீதிமன்றம் பெரும் பரபரப்பிற்குள்ளானது. இந்த வழக்கிற்காக இலண்டனில் இருக்கும் வேதாந்தா தலைவர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டுமென்றும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

இலண்டனில் இருக்கும் அனில் அகர்வாலுக்கு இந்த வரதராஜன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு சாதாரண வரியைக்கூட கட்டாமல் இப்படி 750 கோடிக்கு ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

போராட்டத்தை முன்னெடுத்து ஒரிசா மக்களின் நீதிக்கு உதவிடும் வண்ணம் செயல்பட்ட தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!!

_________________________________________________________________
– தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.
_________________________________________________________________

வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

96

சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலை கீழாய் மாற்றமடைந்தது. அமெரிக்காவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் துரப்பணத்தை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டது, சில மாற்றங்களுடன் இன்றும் அது தொடர்கிறது.

அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெய் பாயத்தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளாய் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர்.

துபாயின் புறநகரில் உள்ள சோனாபூர் கொத்தடிமை கூடாரத்தில் பன்னாட்டு தொழிலாளர்கள்

சௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்கமுடியாது. சொந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடி பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும், நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது. மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ, அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் கூட சுற்றுமுற்றும் பார்த்து தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.

இந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை எதிர்பார்த்துவிட முடியும்?
குறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் இங்கு கிடையாது. நிறுவனத்திற்கேற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஒரே வேலையைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின் தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென எண்ணிவிடமுடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.

துப்புறவுத் தொழிலாளி ஒருவருக்கு எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை ஊதியம் கிடைக்கும், பிலிபைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்கு கூட ஆட்கள் வருகிறார்கள் (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபாய்) இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்று கூடக் குறைய இருக்கும்.

ஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை அடகுவைத்து பெரிய தொகையை தரகனிடம் தந்துவிட்டு அதைவிட பெரிய கனவுடன் வந்திறங்கியதும் முள்ளாய் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.

ஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில் 60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும் வேலைக்குச் செல்ல தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக் கூடாது, போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்ட்பூர்வமாக கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி தருவார்கள். வேலை நாளாக இருந்தால் ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும் சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர எனையவை இதை கண்டு கொள்வதில்லை.

சௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். 12 மணி நேர வேலை கட்டாயம். ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊதியம். இங்கு அடிக்கும் வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு வந்துவிடும், அந்த வெயிலில் காலைமுதல் மாலை வரை நின்று வேலை செய்ய வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால் போய்வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை அடைக்கப்பட்டிருப்பர்.

சாலைகளில், வீதிகளில் துப்புறவுத் தொழிலாளர்களோ, பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பர்தாவை பிசகாமல் பின்பற்றுகிறவர்களாய் இருப்பார்கள். கண்களையும், கைகளையும் தவிர ஏனைய அனைத்தையும் துணிகளால் சுற்றி மூடி மறைத்திருப்பார்கள். வெயிலின் தாக்கம் அப்படி.

யார் எங்கு வேலை செய்தாலும் அந்தந்த சூழலைப்பொருத்து சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் சௌதியில் நேரிடுபவைகளை இந்த ரீதியில் வகைப்படுத்திவிட முடியாது. எந்த உரிமையும் இன்றி வேலையை மட்டும் செய் என்பதுதான் இங்குள்ள நிலை. தொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் பதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும் இல்லாத பிரச்சனை இது.

துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய உபகரணங்களை தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றிருக்கிறார்கள். இவை சாதாரணமான சிறிய சலுகைகள் தான் என்றாலும் இவைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் போராடி பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால் சௌதியைப் பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களின் பொறுப்பிலிருக்கும் தொழிலாளர்கள் குறித்து அரசு எந்த விதத்திலும் தலையிடுவதில்லை.

லேபர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்க்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக்கொள்வதில்லை. தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்கு பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.

அண்மையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த 15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும் நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என விதி உண்டு) அளித்த புகாரை லேபர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும் புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (லேபர் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால் அதே நாளின் இரவில் யாருக்கும் தெரியாமல், அவனது சொந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், கொடுக்கவேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான பலன்களோ எதுவுமின்றி ஊருக்கு அனுப்பப்பட்டான்.

தூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்திய தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும், அவமதிப்பும்தான் வரவேற்கும். கடவச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர வேறெதற்கும் அங்கு செல்வதில் ஒரு பயனும் இல்லை. இது இந்திய தூதரகத்திற்கு மட்டுமல்ல இங்கு தொழிலாளர்களாக இருக்கும் எந்த ஆசிய நாட்டு தூதரகமும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன.

துபாய்-சோனாபூர் கொத்தடிமை கூடாரத்திலிருந்து

ஓவர்டைம் என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. இந்த மாதம் எத்தனை மணி நேரம் உபரி வேலை செய்திருக்கிறோம் என்பது மாதக் கடைசியில் மகிழ்வையும் நிம்மதியையும் தரக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். சம்பளம் மட்டும் தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி, குடும்பச்செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும் சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. இங்கு வேலை செய்யும் அனேகம் பேர் சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்துவிடாமல் அப்படியே ஊருக்கு அனுப்பவேண்டும் என்று வைராக்கியமாகவே இருப்பார்கள். அவர்களின் தேவைக்கு எல்லாம் உபரி வேலை தான் ஒரே வழி. உபரி வேலைக்கு சட்டப்படியான ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள் என்பன போன்ற எதுவும் அவர்களைப் பாதிக்காது.

ஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் உபரிவேலைக்கு செல்ல ஆயத்தமாய் இருப்பார்கள். இதில் இன்னொரு உளவியல் காரணமும் இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலியல் தேவைகளை அசட்டை செய்துவிட்டு வந்தவர்கள் தாம். கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் இளம் மனைவியிடம், முகம் பார்க்கா குழந்தையிடம் தொலைபேசியில் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தாம். அறையில் இருந்து ஆசைகளின் அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட வேலைக்குச் சென்று அந்த வியர்வையை தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.

ஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்று தங்களது தொழிலாளர்களை வைத்து செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தவிர்க்க முடியாத தருணங்களைத்தவிர உபரி வேலை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் டபுள் டூட்டி எனும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.

அதாவது ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம் உபரி வேலை என்பதைவிட மாதத்தில் எல்லா நாளும் வேலை இரட்டைச் சம்பளம் என்று கூறி சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால் முதல் வேலைக்கு மட்டுமே ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச்சம்பளம் மட்டுமே. நிரந்தரமான உபரி வேலைக்கு வழி செய்கிறோம் என்று எட்டு மணி நேரம் வேலை வாங்கி விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஊதியம் கொடுக்கிறார்கள் (முழு ஊதியமே அவர்களின் வேலைக்கு போதுமானதாக இருப்பதில்லை என்பது வேறு விசயம்)

இதுபோன்ற உபரிவேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு மணி நேர வேலை போதும் வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே. ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்) ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு.

ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன.

குப்பைத்தொட்டியில் பெப்சி கேன் தேடும் தொழிலாளி

வியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச் சந்திக்கலாம். குப்பைத்தொட்டிகளைக் கூட வீடு வைக்காமல் கிளறித்தேடி பெப்ஸி டப்பாக்களை சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையாய் அலைபவர்கள் தாம். யாரும் பெப்ஸி குடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் சற்று தூரத்தில் இவர்களும் நின்று விடுவார்கள். ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுத்தது போலும் ஆகிவிடும், ஒரு பெப்ஸி டப்பா கிடைத்தது போலும் ஆகிவிடும். ஒரு பெப்ஸியின் அடக்கவிலையில் குடித்துவிட்டுத் தூக்கி எறியும் டப்பாவுக்காக 60 விழுக்காட்டை வசூலிக்கும் பெப்ஸி நிறுவனம், சாதாரணமாக 50 டிகிரியைத் தாண்டும் தகிக்கும் வெயிலில் அலைந்து சேகரிக்கும் பெப்ஸி டப்பாக்களை கிலோ ஒன்றரை ரியாலுக்கு வாங்கிக் கொள்வதை மெய்யாகவே கொல் வதை என்று சொல்லவேண்டும்.

இன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி அட்டை விற்பவர்கள், ஓட்டுனர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டுமணி நேர வேலைக்குப் பிறகு கரணம் அடித்துக்கொண்டிருக்கும் யாரையும் சந்தித்து நாளின் பெரும்பாலான நேரத்தில் உழைத்தே தேய்ந்து கொண்டிருக்கிறீர்களே உங்களின் சூழ நிகழ்பவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்பு “ஊரில் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே” என்பதுதான் பதிலாக இருக்கும்.

மொழி தெரியா ஒரு அன்னிய நாட்டில் பதினெட்டு மணி நேரம் வரை உழைத்தாலும், அந்த உழைப்பின் பலனில் பெரும் பகுதி உழைப்பவனைச் சேர்வதில்லை என்பதற்கு சொந்த நாடு அன்னிய நாடு என்பதெல்லாம் பேதமில்லை. உழைப்பவன் சுரண்டப்படவேண்டியவன் என்பதே பொது மொழி. சில கோடியே மக்கள் தொகையுள்ள இந்த நாட்டில் எண்ணெய் வளத்தின் மூலம் செல்வம் கொழித்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.

சௌதிகள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான வித்தியாசம் படு வேகமாக அதிகரிப்பதையடுத்து முதலில் எந்த நிறுவனமும் 7 விழுக்காடு அளவில் கட்டாயம் சௌதிகளுக்கு வேலை வழங்கவேண்டும் என்றும் பின்னர் இது 15 விழுக்காடாகவும் இது உயர்த்தப்பட்டது. அதையே வாய்ப்பாகக் கொண்டு இங்குள்ள நிறுவனங்கள் சௌதிகளுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பள வரம்பான 3000 ரியால் என்பதை நீக்கிவிட்டன. சௌதி பெண்கள் இப்போது துப்பறவு பணியாளராக 1800 ரியாலுக்கு பணி புறிகிறார்கள்.

அண்மைக் காலங்களில் இந்தியாவில் அறிமுகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பெரு நிறுவனக்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட நகரியங்கள் ஆகிய அனைத்தும் நீண்ட காலமாகவே சௌதியில் செயல் பட்டு வருகின்றன. விளைவு வர்க்கக் கோடு தன்னை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. மக்கள் ஐந்து வேளை தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை(முத்தவ்வா) அமைத்த அரசு அவர்கள் வளமாக வாழுகிறார்களா என்பதை கண்காணிக்க எதையும் செய்யவில்லை.

முன்பொருமுறை தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னை புதுப்பிக்கும் போது அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.
______________________________________________________
–    வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.
_______________________________________________________

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15

புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

  1. போபால்: நீதியின் பிணம்
  2. போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்
  3. மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
  4. விபத்தா, படுகொலையா?
  5. உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்
  6. அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை
  7. ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!
  8. ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து
  9. அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?
  10. யோக்கியன் வர்றான்..போபால் படுகொலை தீர்ப்பைக்   காட்டிகாங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.
  11. இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?
  12. அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு – பேரரசின் நீதி
  13. பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் – பி.சாய்நாத்
  14. டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்
  15. ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா
  16. அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?
  17. இதற்குப் பெயர் நிவாரணமா?

புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

 

காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

61

“அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!”– என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. காஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் விசமத்தனம்.

அமர்நாத்தில் உள்ள செட்டப் செய்யப்பட்ட பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களை தாக்குவதற்காக பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்துவிட்டு தாக்குதலுக்கான உத்திரவை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தினமணி கூறுகிறது. இதற்கு ஆதாரமென்ன? எதுவுமில்லை.

அடுத்து தினமணி கூறுவதை அப்படியே தருகிறோம்

” பாலஸ்தீனத்துப் போராளிகள் இன்டிஃபாதா என்ற முறையில் கற்களை வீசி தாக்கியதைப்போல காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.”

“போலீசாரை அடித்து காயப்படுத்தும் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ரொக்கப்பணம் தந்து ஊக்குவிக்கின்றனர். உள்ளூரில் இருக்கும் அவர்களுடைய ஏஜெண்டுகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் பெருந்தொகைகளை அவர்களுக்குத் தருகின்றனர். இதனால் பல இளைஞர்கள் மேற்படிப்பு, வேலை என்று எதிலும் அக்கறை காட்டாமல் காஷ்மீரின் முழு விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.”

“இந்தத் தாக்குதல் எல்லை மீறி அதிகரித்துக் கொண்டே வருவதால் இப்போது ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் தன் பொறுப்பில் காஷ்மீரப் பள்ளத்தாக்கை எடுத்துக்கொண்டுவிட்டால் பிறகு ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி தரப்படும் என்பதால் அவர்களுடைய கவனத்தைச் சிதறவைக்கவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் ஹிந்துக்களான அமர்நாத் யாத்ரிகர்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவிக்குமாறு பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டி வருகின்றனர்.” – தினமணி, 12.07.2010

கடந்த மாதம் முழுவதும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் துணை இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்து மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். ஆனால் அந்தப் போராட்டம்
பாக் ஆதரவு பயங்கரவாதிகளால் தூண்டி விடப்படுகிறதாம். கல்லெறிவதற்கு கூட பணம் கொடுக்கப்படுகிறது என்று தினமணி கூசாமல் பொய் சொல்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட மக்கள் போலீசு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் பணத்துக்காக செத்திருக்கிறார்கள் என்றால் தினமணி எவ்வளவு நயவஞ்சகமாக பேசுகிறது பாருங்கள்!

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ” இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. அது இந்திய இராணவம் மற்றும் துணை இராணுவத்தை எதிர்த்து மக்கள் வீரஞ்செறிந்த முறையில் போராடுவதின் அடையாளம். அதை உண்மைதானா என்று பார்த்தறிய விரும்பினால் தினமணி ஆசிரியர் நேரில் சென்று விசாரிக்க வேண்டும்.

இறுதியாக அமர்நாத் பக்தர்கள் இதுவரை 2.90 இலட்சம் பேர் பதிவு செய்து அதில் 1.35 பக்தர்கள் பயணத்தை முடித்திருப்பதாக தினமணி கூறுகிறது. எனினும் இதுவரை இவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நிகழவில்லை. அதற்கு பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தினமணி கூறுகிறது. அதையும் வதந்தி போல அல்லாமல் நேரிடையாக பயங்கரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்டது போல எழுதுகிறது.

மேசையில் இருந்து கொண்டு காஷ்மீரைப் பற்றிய இத்தகைய செய்திகளை தினமணி மட்டுமல்ல, ஏனைய தேசிய பத்திரிகைகளும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. ஆனால் இவர்களின் அவதூறைப் புறந்தள்ளி காஷ்மீர் மக்களின் போராட்டம் அன்றாடம் வளர்ந்து வருவது கண்கூடு.

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

20

டுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு.

இருபதாயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.  ஐந்து லட்சத்துக்கும் மேலானோர் முடமாக்கப்பட்டனர் மற்றும் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர்.  1989-ம் ஆண்டின் ரூபாய் மதிப்பில் இழப்பீடாக தலைக்கு வெறும் 12,414 ரூபாய்கள் மட்டுமே. (470 மில்லியன் டாலர் அல்லது ரூ.713 கோடிகள். இது பாதிக்கப்பட்ட 5,74,367 பேருக்குப் பங்கு வைக்கப்படுகிறது).  கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகக் காத்திருப்பு.  இதெல்லாம் யூனியன் கார்பைடின் இந்தியத் துணை நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குத்தானோ?  ஆகப்பெரும் பொறுப்பாளியான அமெரிக்கத் தலைமை நிறுவனத்தின் ஒரு அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை.

இருப்பினும் குற்றவாளி என்ற முறையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரத் தவறிய செயல் போபாலில் வீழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்ற கருத்துரை சற்றே கேலிக்குறியதாக இருக்கிறது. 1984 போபால் விஷவாயுப் பேரழிவு பகாசுரத் தொழிற்கழகங்களின் கொடுங்கோன்மையை அப்பட்டமாய் வெளிக்காட்டியது.  இதிலிருந்து படிப்பினை பெறுவதைத் தவிற்கும் முயற்சி முழுமையாய் நடந்தேறுகிறது. இந்நிறுவனத்தின் மித்தேன் ஐசோசயனைடு வாயு 20000 மக்களை (பெரும்பாலும் பரம ஏழைகள்) படுகொலை செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன.  இருந்தும் இந்த கார்பைடு நிறுவனத்தின் கொலை பாதகச் செயலுக்கான விலையை போபால் இன்னமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  (விஷ வாயுவால் தாக்கப்பட்டோரின் நீண்டகால உடல் பாதிப்புகளும் மற்றும் மூடப்பட்ட கர்பைட் ஆலையைச் சுற்றியுள்ள நஞ்சாக்கப்பட்ட நிலமும், நிலத்தடி நீரும் இதற்கு சான்று பகர்கின்றன).  இந்த நிலையில், அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா, நிறைவேற்றப்படுமானால், அது நாடெங்கிலும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதாக அமையும்.

படுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு. மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் துரப்பணப் பணியில் ஏராளமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுவருகிறது – ஒரு நாளைக்கு 30,000 முதல் 80,000 பேரல்கள் அளவுக்கு எண்ணை கடலில் கசிவதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தும் லாபம் ஈட்டலாம் என்று வெறிகொண்டு அலைந்து வரும் தொழிற்கழகங்களின் நடவடிக்கைகளிலேயே உச்சம் இது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் மீதான பாரக் ஒபாமாவின் ‘கடுஞ்சொற்கள்’ எல்லாம் பெரிதும் நவம்பருக்கு முந்திய வெற்றுத் தேர்தல் அமளியே தவிர வேறல்ல.  கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளில் படுத்துப் புரண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் இளைப்பாறுதல் பெறலாம்.

இத் தீர்ப்புகளில் முதலாவது 2008-ல் வழங்கப்பட்டது.  எக்சான் வேலிஸ் எண்ணை நிறுவனம் தொடர்பான அதுவரையிலான வரலாறு காணாத (அல்லது ஒப்புக்கொள்ளப்படாத) எண்ணைக் கசிவு பற்றிய வழக்கில் வந்த தீர்ப்பு அது. எளிமையாகச் சொன்னால், பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்சான் வேலிஸின் எண்ணைக் கசிவுக்கு நிகரான கசிவை சுமார் எட்டு நாட்களுக்கு ஒரு முறை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிகழ்த்திக் காட்டுகிறது. எக்சான் வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகை விதித்து 1994-ல் ஜூரிகள் தீர்ப்பு வழங்கினர்.  ”மேல் முறையீட்டு நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் அந்த அபராதத் தொகையை 2.5 பில்லியன் டாலர்கள் என்று பாதிக்குப் பாதியாகக் குறைத்தது” எனவும்  ஜூன் 2008-ல், “உச்ச நீதிமன்றமோ அபராதத் தொகையை வெறும் 500 மில்லியன் டாலர்களாக மேலும் 80% குறைத்தது – பாதிக்கப்பட்ட வாதிகளுக்குக் கிடைக்கப்போவது தலா 15000 டாலர்கள் மட்டுமே” என்று கவுண்டர்பஞ்ச்.ஆர்க் –ல் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஷரோன் ஸ்மித். இந்த அபராத வழக்கை விடாப்பிடியாக நடத்திய எக்சான் நிறுவனத் தலைமை இயக்குனர் லீ ரேமாண்ட் மொத்தமாக 400 மில்லியன் டாலர்களைத் தனக்காக மட்டும் பெற்றுக்கொண்டு பணிஓய்வு பெற்றார்.

நாங்கள் 33000 பேர் பகிர்ந்துகொள்ளும் தொகையை ஸ்மித் மட்டுமே சுருட்டிக்கொண்டு போய்விட்டார் என அவர் பற்றி எக்சான் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தொகை முதல் தீர்ப்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டில் சுமார் 10 சதவீதத்துக்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் பெறப்போகும் சுமார் 15000 டாலர்களுக்கும் சமமானது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வால் ஸ்டிரீட் மூலதனச் சந்தை சூதாடிகள் [kleptocrats] புகழார்ந்த வகையில் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுத்தச் செய்தனர்.  அவர்களது செயல் அமெரிக்கர்களும் ஏனைய உலக மக்களுமான பல பத்து லட்சம் பேர்களின் வேலைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உலை வைத்தது.  எனினும், அதே ஆண்டிலேயே அமெரிக்கத் தலைமை இயக்குனர்கள் பலர் போனசாகப் பல நூறு கோடி டாலர்களை அள்ளிச் சென்றனர்.  தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு கூட, “அமெரிக்கக் கருவூலத் துறை என்றும் காணாத பேரழிவில் இருந்து தேசத்தின் மாபெரும் வங்கிகளில் ஒன்பதைக் காப்பாற்ற மக்களின் வரிப்பணத்தில் இருந்து 125 பில்லியன் [12500 கோடி] டாலர்களைக் கொடுத்த சில வாரங்களிலேயே, அத்தொகையின் பெரும் பகுதியை வங்கி இயக்குனர்கள் தங்களது செயல்பாட்டுக்கான ஊக்கப்பரிசு என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை சுருட்டிச் செல்கின்றனர்”  என்று தனது சிறப்புத் தலையங்கத்தில் எழுதியது. (அதே தேர்தல் ஆண்டில் தான், ஆழ்கடல் எண்ணைத் துரப்பண நடவடிக்கையை ‘தோண்டு கண்ணு, தோண்டு’ என்ற குத்தாட்ட முழக்கத்துடன் குதியாட்டம் போட்டு வரவேற்றன பகாசுர எண்ணைக் குழுமங்கள். [Big Oil] இப்போது என்ன சொல்வது? ‘கசியட்டும் கண்ணு கசியட்டும்… கடலே கூவமாகட்டும்’ என்பதா?)

இவ்வாண்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்சிகோ வளைகுடாவையே குழம்பிய குட்டையாக்குவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சிடிசன்ஸ் யுனைடட்-க்கும்  தேசிய தேர்தல் ஆணையத்துக்கும்  இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்களின் பலத்துக்கு மேலும் வலு சேர்த்தது.  “ஏற்கனவே வெள்ளமெனப் பாயும் [கார்ப்பரேட்] பணத்தில் மிதந்துகொண்டிருக்கும் தேர்தல் களத்தில் இப்போது இந்தத் தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்கள் நேரடியாகவே ஏராளமான பணத்தைக் கொட்ட முடியும் … பிராந்திய, மாநில, தேசிய அளவுகளிலான பதவி நாற்காலிகளைப் பிடிக்க எத்தனிக்கும் எந்த நபரையும் இனி இவர்கள் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ முடியும்” என்கிறார் ரால்ப் நதிர்.   “இத்தீர்ப்பின் பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், தொழிற்கழகம் என்பது மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுடனும் [கடமைகள் என்று ஏதும் இல்லையாயினும்]  கூடிய ஒரு ‘சட்டவகை மனிதன்’; இவ்வாறாக, அது பேச்சுரிமையைப் பெற்றுள்ளது; மேலும், பணக் கொடை என்பது பேச்சின் ஒரு வடிவமே” என்று கவுண்டர்பஞ்ச் செய்திக் கடிதத்தில் மேசன் ஜாஃப்னி விளக்குகிறார். எனவே துவளாதே பிரிட்டிஷ் பெட்ரோலியமே, துடித்தெழு.. வாய்ப்புகள் இன்னும் கைநழுவி விடவில்லை.  காங்கிரஸ் மற்றும் செனட் நாற்காலிகளை அலங்கரித்திருப்பவர்களில் பெரும் எண்ணைக் குழுமங்களின் பணமூட்டைகளைப் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா, எண்ணிப்பார்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடர்பான எண்ணைக் கசிவுப் பிரச்சினையில் கவனம் செலுத்தும் இந்த தருணத்தில், இவ்வாறான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் வெள்ளைத் தோலர்களும் அல்லாத பிற மக்களைப் பற்றியும் சிறிது சிந்தித்துப் பார்க்கலாமே. ’அயலுறவுக் கொள்கை பற்றிய பார்வை’ [Foreign Policy in Focus ]யின் கட்டுரையாளர் கான் ஹல்லினன் குறிப்பிடுவது போல, “நைஜீரிய அரசின் புள்ளிவிவரப்படி 1970-ம் ஆண்டுக்கும்  2000-ம் ஆண்டுக்கும்  இடைப்பட்ட காலத்தில் 9000 –க்கும் மேலான எண்ணைக் கசிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன.  நடப்பில் உள்ள அதிகாரபூர்வமான எண்ணைக் கசிவுப் பகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 2000”.  அப்படியெனில் ஆப்பிரிக்க மக்களின் உயிருக்கு மதிப்பே இல்லையா?

போபால் பேரழிவு நிகழ்ந்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் உலக வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லாரி சம்மர்ஸ் கொடூரமானதொரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், பிற விசயங்களுக்கு மத்தியில், “நமக்குள்ள வச்சுக்குவோம், இந்த அசிங்கம் பிடிச்ச தொழிற்துறைகளை எல்லாம் பெருமளவில் வளர்ச்சி குன்றிய நாடுகள் தலையில் தள்ளிவிட உலக வங்கி உந்துதல் அளிக்கக் கூடாதா?” என்ற இக்கருத்தையும் எழுதியிருந்தார்.  “அபாயகரமான நச்சுக் கழிவுகளை வருமானமில்லாத ஏழை நாடுகளில் கொண்டு கொட்டுவதற்கான பொருளியல் காரணங்கள் முற்றிலும் சரியானவையே. அதற்கு நாம் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்றும் சம்மர்ஸ் பரிந்துரை செய்தார்.

கேலியாகவும், கிண்டலாகவும், இன்ன பிறவாகவும் தான் எழுதிவிட்டதாக சம்மர்ஸ் பின்னர் சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படியும் அவரது அந்த இரைஞ்சல்களைக் கொள்வார் இல்லை.  ஆயினும், பின்னாளில் அவர் ஹார்வர்ட் தலைவர் ஆனார், இன்னாள் அதிபர் ஒபாமாவின் தலைமை பொருளியல் ஆலோசகராகவும் இருக்கிறார்.  அவரது அன்றைய குறிப்பின் சாரமே உலக எதார்த்தமாக இருக்கிறது. போபால் நிகழ்வில் தொடங்கி துல்லியமாக இதுதான் நடந்திருக்கிறது.

அரசின் ஒழுக்கம் 1984-ல் இருந்த அதன் கேடுகெட்ட நிலையில் இருந்து சற்றும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையே போபால் தீர்ப்புக்கான ஐ.மு. கூட்டணி அரசின் எதிர்வினை காட்டுகிறது.  போபாலுக்கு அழுவதும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை சட்டமாக்கத் துடிப்பதும் ஒத்துப்போக முடியாத இரட்டை வேடம்.  போபால் பேரழிவில் பாதிக்கப்பட்டோரின் நியாயம் நடந்துவிட்டதற்குப் பின் செய்யப்பட்ட விற்பனை. அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா விசயத்திலோ இது அரசு செய்யும் முன்பேர விற்பனை.  1984 போபால் பேரழிவு தொடர்பாக மறைப்பதற்கு ஏதோ வைத்திருப்பது இந்த அரசுகள் மட்டும்தானா?  விபத்து நடந்த அந்த சமயத்தில் கூட, “கார்பைட் ஊழியர்களின் சதிவேலையால்”  இப்பேரழிவு நிகழ்ந்து விட்டது என்ற திட்டமிட்ட வதந்திகளை மகிழ்ச்சியாய்ப் பரப்பின செய்தித்தாள்கள்.  நான்கு ஆண்டுகள் கழித்து, யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு ’ஆய்வு’, ஆலையில் வேலைசெய்த அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளியால் நிகழ்ந்துவிட்ட போரழிவே இது என்று கண்டுபிடித்துவிட்டதாக கூறிக்கொண்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாதபடி கார்பைடு நிறுவனம் உத்தரவாதப்படுத்திக் கொண்டது.  இந்த வழக்கை நடத்துவதற்கு சரியான இடம் இந்திய நீதிமன்றங்களே என்று நானி பல்கிவாலா உள்ளிட்ட இந்தியாவின் சட்டத்துறை ஒளிவட்டங்கள் சிலர் அமெரிக்க நீதிமன்றங்களை ஏற்கச் செய்தனர். (அதன் விளைவுகளை நாம் இன்று சந்திக்கிறோம்) அமெரிக்க நீதிமன்றங்கள் விதித்திருக்கக் கூடிய ஒப்பீட்டளவில் கூடுதலான இழப்பீட்டுத் தொகையில் இருந்து இச்செயல்கள் கார்பைட் நிறுவனத்தை விடுவித்தன.

அடுத்த பத்தாண்டுகளிலேயே, தாராளமயம் என்ற புதிய சகாப்தத்தின் குறியீடாக என்ரான் பரிணமித்தது.  இந்த என்ரான் கும்பல் எவ்வளவு பரிசுத்தவான்கள் என்பதை நமக்கு எடுத்துச் சொல்ல மெத்தப் படித்த மேதாவிகளும், ‘வல்லுனர்களும்’, கட்டுரையாளர்களும் கடுமையாக உழைத்தனர். இவை எல்லாம், என்ரான் ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் கிளம்பிய பெருத்த விமர்சனங்களுக்குப் பின்னர்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மக்களிடையே கருத்துருவாக்கம் செய்வோர், சட்டம் இயற்றுவோர் போன்றவர்களுக்குக் “கற்பிப்பதற்கு” என்ரான் நிறுவனம் இறக்கிவிட்ட பல பத்து மில்லியன் டாலர்கள் நிதி செய்த மாயத்தால் இந்த திடீர் மன மாற்றம் சாத்தியமானது போலும். விளம்பரங்களும் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டன. ஆதரவு ஆரவாரம் செய்வோரில் ஒருவராக மாறிக்கொள்ள வேண்டியே என்ரான் பற்றிய கடுமையான விமர்சகராகத் தொடக்கத்தில் களம் இறங்கியது ஒரு பிரபலமான பத்திரிகை.  மேலும் பலரும் கூட அவ்வாறே செய்தனர். இப்படிப்பட்ட நிதிகளும் கூட பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்று நான் ஊகிக்கிறேன். மகாராட்டிரத்துக்கும் இந்தியாவுக்கும் அது பேரழிவைக் கொண்டுவந்தது. முன்பு லாபகரமாக இயங்கிய அம் மாநில மின்சார வாரியம் – என்ரான் வருகைக்குப் பின் – நட்டக் கணக்கை மலையெனக் குவிந்தது. அதன் விளைவாக, மாநில அரசு சேவை மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதியைத் தாருமாறாகக் குறைத்தது. என்ரான் நிறுவனம் தனது ஊழல் நடவடிக்கையால் அமெரிக்காவில் வீழ்ச்சியுற்றது. அதன் தலைமையில் இருந்த சிலர் சட்டத்தின் முன் நில்லாது தப்பி ஓட்டம் பிடித்தனர்.  ஆனால் அந்த நிறுவனம் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டும் இன்றளவும் நம்மை வதைக்கின்றன.  சி.ஐ.டி.யூ வும் அபய் மேதாவும் கொணர்ந்த என்ரான் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தூக்கி வெளியே வீசிய போதே இந்தப் பேரழிவில் இருந்து தப்ப இருந்த ஒரே வாய்ப்பும் தொலைந்துவிட்டது.

நிற்க, ஒபாமாவின் வாய்ச் சவடால்கள் பிரிட்டிஷ்  சகபாடிகளின் மனங்களைப் புண்படுத்திவிட்டது போல் தோன்றுகிறது.  கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நிதியும், ஆதரவும் நல்கி பேருதவி புரிந்திருக்கிறது அமெரிக்கா என்பதே உண்மை.  அலெக்சாண்டர் காக்பர்ன், “வரலாற்றில் மாபெரும் கைதூக்கிவிடல்” எனச் சித்தரிக்கும் நிகழ்வில், 1953ம் ஆண்டு ஈரானின் முகமது மொசாதிக் அரசின் தொல்லைகளில் இருந்து விடுபட கேவலமான ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது அமெரிக்க சி.ஐ.ஏ.  ஈரானிய பாராளுமன்றம் தனது ஒருமித்த வாக்களிப்பின் மூலம் கடுமையாகச் சுரண்டி வந்த ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனியை தேசவுடைமை ஆக்கியிருந்தது.  எனவே மொசாதிக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  அவரது இடத்தில் மேலை நாட்டு எண்ணைக் கம்பெனிகளின் வளர்ப்புப் பிராணியான ஷா ரிசா பஹல்வி சர்வாதிகாரியாக அமர்த்தப்பட்டார். ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனி தனது பழைய சலுகைகளில் நாற்பது சதவீதத்தை மீளப் பெற்றது.  பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெயர் மாற்றத்துடன் சர்வதேசக் குழுமம் ஆனது. பெரும் தொழிற்கழகங்களால் ஆதரவளிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளின் பட்டியலோ பெரிதாய் நீண்டு கிடக்கிறது.

போபாலில் யூனியன் கார்பைடின் செயலும், அது பழுதின்றித் தப்பியதும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்கிறது.  ஆனால், நிச்சயமாக வியப்பளிக்கவில்லை.  அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு காலத்திலும் தொழிற்கழகங்களின் பலம் கணிசமாக உயர்ந்தே வந்திருக்கிறது.  தொழிற்கழகங்களை சமுதாயத்திற்கு மேலானதாகவும், தனிநபர் ஆதாயத்தை பொது நலனுக்கு மேலானதாகவும் மதிக்கும், அனுமதிக்கும் சமூகப் பார்வை நீடிக்கும் வரை போபால்கள் பல தொடரத்தான் செய்யும்.  இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.

போபாலில் பாதிக்கப்பட்டோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு முக்கியமான விசயத்தையும் நினைவில் நிறுத்துங்கள்.  “மீண்டும் இவ்வாறான கொடுமை நிகழ முடியாதவாறு உறுதிசெய்வோம்” என்பதே அது.  எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுசக்தி விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் தற்போதைய உருவில் இருக்கும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா மூலமாக அற்ப இழப்பீட்டுடன் தப்பிச் செல்லும்.  தற்போது போபால் பேரழிவில் ஒரு குற்றமாக அணுகப்படும் இழப்பீடு பற்றிய புரிதல் எதிர்காலத்தில் வெறும் சட்ட வழிமுறையாக மட்டுமே எளிமைப்படுத்தப்படும்.  லாரி சம்மர்ஸ் அவர்களே, மீண்டும் வருக.
__________________________________________________
–    பி.சாய்நாத், நன்றி தி ஹிந்து, 15.6.2010
–    தமிழில்: அனாமதேயன்

__________________________________________________

செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

58

vote-012முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்..  எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை  தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது.

அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய  கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!

இது சுயவிளம்பர மாநாடு அல்ல என்று ஜெயலலிதாவுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. “சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. கலைஞர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அழகிரி அழைக்கிறார் என்று தனித்தனியாக போஸ்டர் அடித்து எதிர்கோஷ்டியின் பொல்லாப்பை சம்பாதிப்பதை விட குடும்பம் என்று குறிப்பிடுவது பாதுகாப்பானதல்லவா?

செம்மொழி மாநாட்டின்  இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுவதற்குப் போடப்பட்டிருந்த மேடையில் நாற்காலிகள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர் பெருமக்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்றபடி பேரணியை எக்கி எக்கிப் பார்த்தனர் என்று எழுதி அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தது ஜூனியர் விகடன். சாலையில் “இனியவை நாற்பது”. மேடையில் “இன்னா நாற்பது” என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்

லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற தனது நூலில், பிரான்சில் திடீர்புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய லும்பன் கூட்டத்தைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியது நினைவுக்கு வருகிறது.

“அதிகமான கூச்சல் போட்டுக் கொண்டு கவுரவம் என்பதே சிறிதுமில்லாமல் பிடுங்கித் தின்பதைப் பிழைப்பாகக் கொண்ட கூட்டம்… கோமாளித்தனமான கம்பீரத்தோடு, விலையுயர்ந்த கோட்டுகளுக்குள் உடலைத் திணித்துக் கொண்டு.. அரசவைக்குள், மந்திரிசபைக்குள், நிர்வாகத்தின் தலைமையான இடத்துக்குள்.. முண்டியடித்துக் கொண்டு நுழைகிறது… இந்தக் கூட்டத்திலேயே மிக நல்லவர்களைக் கூட அவர் எங்கே இருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்கிறது மார்க்ஸின் வருணனை.

மன்னார்குடி குடும்பத்துக்குப் பொருந்தக் கூடிய இந்த வருணனை கோபாலபுரம் குடும்பத்துக்குப் பொருந்தாதா என்ன? நீ மந்திரியா நானும் மந்திரி; நீ கவிதாயினியா, நானும் கவிதாயினி; உன் மகன் சினிமா தயாரிப்பாளனா, என் மகனும் சினிமா தயாரிப்பாளன்; நீ கேபிள் டிவியா, நானும் கேபிள் டிவி; உனக்கு வி.ஐ.பி நாற்காலியா, எனக்கும் வி.ஐ.பி நாற்காலி; உனக்கு வலப்புறமா, எனக்கு இடப்புறம்; உனக்குத் தலைமாடா, எனக்கு கால்மாடு… என்ற இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை?  மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே தமிழ்த்தாய் செய்த தவப்பயன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் பதினைந்து இருபது நிமிடம் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கத்தை மட்டும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பேன். “இப்படியொரு கூட்டத்தை யார் கூட்டமுடியும், கலைஞரே நீர் கூட்டமுடியும்” – இது அப்துல் ரகுமான். “மேகங்களே நீங்கள் அங்கிருந்தே கைதட்டுங்கள், கீழே தமிழர்கள் இருக்கிறார்கள் கைதட்டுவதற்கு”- இது வைரமுத்து. “நீங்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததனால்தான் தண்டவாளமும் தமிழ் கற்றுக் கொண்டது” – இது ந.முத்துக்குமார். இவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம், அழகிரியின் மகள் கயல்விழியை மட்டும் கவிஞர் இல்லை நிராகரித்துவிடுமா?

தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியில், ஹீரோவின் பாட்டையும் அய்யனார் சிலையின் குளோசப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுவது போல, கலைஞரைப் புகழ்ந்து பாடப்படும் ஒவ்வொரு வரிக்கும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் கலைஞரின் முகத்தை நோக்கி காமெரா திரும்பியது. பெரும்பாலும் கலைஞரின் முகத்தில் சலனம் இல்லை.

“ஒன்று இரண்டு என்று வகைப்படுத்தி என்னைப் பாடு” என்று சிவபெருமான் சொன்னவுடனே கே.பி.சுந்தராம்பாள் “ ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..” என்று பாடுவதையும், அதற்கு சிவபெருமான் ரியாக்சன் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒரு அவ்வையார் பாடினால் ரியாக்சன் கொடுக்கலாம். இருபது முப்பது அவ்வையார்களை மேடையேற்றி விட்டு, அடுத்தடுத்துப் பாடவிட்டால் எப்பேர்ப்பட்ட சிவாஜி கணேசனாக இருந்தாலும் முகபாவம் காட்டுவது கஷ்டம்தானே?  “முடியலடா சாமி” என்று கலைஞர் எழுந்து போய்விடுவார் என்றுதான் நினைத்தேன். இல்லையே.

ரியாக்சன் காட்டவில்லை என்ற காரணத்தினால், இத்தகைய “முகத்துதிக் கவிதைகளை  கலைஞர் விரும்பவில்லை போலும்” என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருபவர்கள் வரலாறு தெரியாதவர்கள். அல்லது மாநாட்டில் கலைஞர் ஆற்றிய துவக்கவுரையைக் கேட்காதவர்கள். அஞ்சுகம் முத்துவேலருக்கு மகனாகப் பிறந்து, அரை டவுசர் போட்ட காலத்திலேயே தமிழ்த்தொண்டாற்றி.. என்று தனது உரையைத் தொடங்கினார் கலைஞர். இந்தக் கதையை எத்தனை ஆயிரம் முறை கூறிய பின்னரும் “போதும்” என்று அவருக்குத் தோன்றவில்லை. இது தெரிந்திருப்பதனால்தான் ரத்தம் வரும் வரை சொறிகிறார்கள் கவிஞர்கள்.

இருப்பினும் எந்தப் புகழுரையைக் கேட்டாலும், நினைவாற்றல் மிக்க கலைஞருக்கு அது ஏற்கனவே எங்கேயோ கேட்டது போலப் பொறி தட்டுகிறது. 460 கோடியை வாரி இரைத்தும் கலைஞரை முகம் மலரச் செய்யும் ஒரு கவிதை வரியைக் கூட கவிஞர்களால் துப்பமுடியவில்லை. கலைஞர் முகம் மலர்வது இருக்கட்டும். கூட்டத்திடமிருந்து கூட கைதட்டல் வாங்கமுடியவில்லை. முகத்துதியில் ஒருவரை ஒருவர் முந்த முயன்று மூச்சிரைத்த கவிஞர்களுக்கும் கூட “முடியலடா சாமி” என்ற நிலைதான்.

அன்றாடம் புதிது புதிதாக மன்னனைப் புகழ்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அரசவைக் கவிஞர்கள் எனப்படுவோர், தம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் என்னபாடு பட்டிருப்பார்கள், தமிழ் என்னபாடு பட்டிருக்கும் என்ற கோணத்தில், தமிழின் வரலாற்றையும், தமிழனின் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்க்கு ஏற்ற மிகச்சிறந்த காட்சி விளக்கமாக அமைந்திருந்தது கவியரங்கம்.

“கலைஞருக்குக் கொஞ்சம் கூடக் கூச்சமாக இருந்திருக்காதா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். கூச்சமா?  வசனத்துக்கு வாயசைக்கும் நடிகன் தனக்கு ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளக் கூச்சப்படுகிறானா? தெருமுனைக்குத் தெருமுனை தனது திருமுகத்தையே டிஜிட்டல் பானரில் பார்த்துக் கொள்ள தலைவர்கள் கூச்சப்படுகிறார்களா? லஞ்சம் கேட்க போலீசார் கூச்சப்படுகிறார்களா?  பேராசிரியப் பெருமக்கள் வட்டிக்கு விடக் கூச்சப்படுகிறார்களா? ஐந்திலக்க சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ய கூச்சப்படுகிறார்களா? அதிகாரிகளும் அறிஞர் பெருமக்களும் அழகிரிக்கு கூழைக்கும்பிடு போடக் கூச்சப்படுகிறார்களா? கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

அப்படியெல்லாம் கூச்சப்படுவதென்றால் அதற்கு ஒரு பண்பாடு வேண்டும். அந்தப் பண்பாட்டுக்கு ஒரு அறமும் சில விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் அந்தச் சமூகத்தின் உளவியலில் கொஞ்சமாவது எஞ்சியிருக்க வேண்டும். இருக்கிறதா?

இந்தக் கூத்தில் பங்கேற்ற ஆன்றோர்கள், சான்றோர்கள். அறிஞர்களில் எத்தனை பேர் அடிக்கு பயந்து வந்தவர்கள். எத்தனை பேர் அப்படி சொல்லிக் கொள்கின்ற காரியவாதிகள்?  யாராவது கண்டுபிடிக்க முடியுமா?

ஈழத்தமிழனுகாகக் குரல்கொடுத்த தமிழர்களையெல்லாம் தடாவில் தூக்கி உள்ளே போட்ட காலத்தில்தான் தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார் ஜெயலலிதா. சிவத்தம்பி அதற்கும் வர விழைந்தார். எனினும் விரட்டப்பட்டார். இன்று ஈழத்தின் கல்லறை மீது நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து “அரசியல் வேறு – தமிழ் வேறு” என்று  தத்துவம் கூறுகிறார். இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடத்தினால் அதற்கும் அவரே தலைவர். ஒருவேளை தனி ஈழம் கண்டு அங்கே ஒரு உலகத்தமிழ் மாநாட்டை தம்பி நடத்தியிருக்கக் கூடுமானால், அதற்கும் அவரே தலைமை தாங்கியிருக்க கூடும்.

கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்பட வேண்டும்?

தான் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுக்கு உரிய மரியாதையை வழங்கத் தெரியாத தமிழனுக்கு, அவன் வரிப்பணத்திலிருந்தே தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் கலைஞரும், நியாயமான முறையில் பாகம் பிரிக்கப்படாத தங்களது பிதுரார்ஜித சொத்தாக தமிழகத்தைக் கருதும் அவரது குடும்பத்தினரும் எப்படிக் கூச்சப்பட முடியும்?  கனிமொழிதான் பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டு கூச்சப்படுகிறார்.

இலக்கியவாதிகள் முகத்தில்தான் என்ன கம்பீரம்! வார்த்தைகளால் நக்கிய புலவர் பெருமக்களின் மீசையில்தான் எத்தனை முறுக்கு? மேடையை அலங்கரித்த நாற்காலிகளுக்குத்தான் எத்தனை மிடுக்கு!

யாரும், எதுவும் கடுகளவும் கூச்சப்பட்ட மாதிரி தெரியவில்லை. நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும் – அவை தமிழனுக்கு எதற்கு? திராவிட இயக்கத்தின் நிழலில் தழைத்த புலவர் பெருமக்களின் பாரம்பரியம் மிக்க பிழைப்புவாதம் ஒருபுறம். தாராளமயக் கொள்கைகளால் அதிகாரபூர்வப் பண்பாடாக ஞானஸ்நானம் பெற்றிருக்கும் புதிய பிழைப்புவாதம் ஒருபுறம். செம்மொழி மாநாடு முன்னைப் பழைமையும் பின்னைப் புதுமையும் இணைந்த புதியதொரு வீரிய ஒட்டு ரகத் தமிழ்ப் பண்பாட்டை நம் கண்முன்னே விரித்துக் காட்டியது.

இதுதான் தமிழகம்.

“ஈழப்படுகொலைக்குப் பின்னரும் திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது எப்படி?” என அன்று வியந்தோர் உண்டு. “தமிழர்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்கள்” என்பது பாதி உண்மைதான். “விற்றுக் கொள்ள முன்வந்தது” மீதி உண்மை. அன்று ஈழப்படுகொலைக்கு எதிராகப் பாமரத் தமிழர்கள் சிலர் தீக்குளித்தார்கள், பலர் சிறை சென்றார்கள். இன்று படித்த அறிஞர்கள் யாரும் “குற்றம் குற்றமே” என்று முழங்கிச செம்மொழி மாநாட்டை எதிர்த்துச் சிறை சென்றதாகத் தகவல் இல்லை.

பாலைவனச் சோலை போல மதுரை வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரி உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். சென்னை வழக்குரைஞர்கள் தொடர்ந்தார்கள். “நீதிமன்ற வளாகத்துக்குள் நீதியின் குரலையும் காக்கையின் குரலையும் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது சட்டவிரோதம்” என்று நீதியரசர்கள் கூறிவிட்டார்கள். “வளாகத்துக்கு வெளியே காக்கையின் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது செம்மொழிக்கு விரோதம்” என்று காவல்துறை கூறிவிட்டது. எனவே, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ், தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக ரிமாண்டில் வைக்கப்பட்டு மாநாடு முடியும் வரை பாதுகாக்கப்பட்டது.

“சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று உடன்பிறப்புகள் கூறியிருந்த உண்மையை மொழிபெயர்த்து, “இது கருணாநிதியின் குடும்பவிழா”என்று சுவரொட்டி ஒட்டினார்கள் ம.க.இ.க தோழர்கள். “அதை நாங்க சொல்ல்லாம். நீ சொல்லக்கூடாது” என்று சிறை வைக்கப்பட்டார்கள்.

தமிழகமெங்கும் தேடுதல் வேட்டை, கியூ பிரிவின் கண்காணிப்பு. ஒரு பகுதியில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் குதித்து தமிழ் விரோதிகளான ம.க.இ.க தோழர்களைத் தேடியது போலீசு. திருச்சியில் ரயில்வே பிளாட்பார்மில் சுமை இறக்கிக் கொண்டிருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேரை, அங்கேயே போலீசு வளைத்துப் பிடித்தது. சென்னையில் சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை முன்னணியின் செயலர், ஊடகங்களைத் தொலைபேசியில் அழைத்து செய்தி சொன்னபோது, “அம்மா நாங்கள் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக எந்தச் செய்தியும் கவர் பண்ணுவதில்லை” என்று பதிலளித்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள். ஊடகங்கள் செம்மொழியால் எப்படி கவர் பண்ணப்பட்டிருக்கின்றன என்பது தினமணி தலையங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததே! தினமலர் பரவாயில்லை, “செம்மொழி மாநாட்டை எதிர்த்த நக்சலைட்டுகள் கைது” என்று செய்தி போட்டு, தமிழின விரோதிகளைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது.

வழக்குரைஞர் போராட்டத்தைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட ஜெயலலிதா, உடனே ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதில் தோழமைக் கட்சிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார். வலது, இடது கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலா 4 கொடியுடன் கலந்து கொண்டனர் . ராஜாவும் எச்சூரியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். கூட்டணியால் வேறுபட்டாலும் தமிழால் ஒன்றுபடுவது என்பது இதுதான் போலும்!

“தமிழர்களே, கலைஞர் அழைக்கிறார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து  செம்மொழி மாநாட்டில் ஒன்றுபடுவோம் வாரீர்!” என்று திமுகவினர் சென்னையில் ஒரு விளம்பரத் தட்டி வைத்திருந்தனர். மொழி வேறுபாட்டைக் கடந்த மொழி உணர்வு! அடடா, எப்பேர்ப்பட்ட கவிதை! “சூடு, சொரணை, சுயமரியாதை கடந்து” என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம். விசேடமாகக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல என்று உடன்பிறப்புகள் எண்ணியிருக்கக் கூடும்.

ஐந்து நாள் மாநாடு, கவியரங்கம், ஆய்வரங்குகள், 998.4 ஆய்வுக் கட்டுரைகள், ரகுமானின் யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஆகிய அனைத்தின் சாரப்பொருளையும் ஒரே வரியில் கூறிவிட்டது, உடன்பிறப்புகளின் விளம்பரத்தட்டி உதிர்த்திருந்த அந்தக் கவிதை.

அம்மா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கும் அய்யா நடத்திய செம்மொழி மாநாட்டுக்கும் என்ன வேறுபாடு? அம்மா நடத்திய குடும்ப விழாவுக்கும் அய்யா நடத்தியிருக்கும் அரசு விழாவுக்கும் என்ன வேறுபாடு? அம்மா ஆட்சிக்கும் அய்யா ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?

“கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்.

மாநாட்டின் இறுதியில் தமிழுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கலைஞர். அப்படியானால் ஏற்கெனவே செம்மொழி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 460 கோடி?

அதுதான் கோலின் முனையில் கட்டப்பட்ட வாழைப்பழம்.

அப்போ இந்த வாழைப்பழம்? அதாண்ணே  இது.

______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முள்ளிவாய்க்கால் – போபால்

vote-0121983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும்  நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.

போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது

ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன்சிங் கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.

தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும்,  இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.

– புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!

25

vote-012செம்மொழி மாநாடு என்ற பெயரில் 500 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் கருணாநிதி நடத்தும் ஜால்ரா மாநாட்டின் காட்சிகளை பார்த்து தமிழகமே காறித் துப்பி வருகிறது. செம்மொழி மாநாட்டினை அம்பலப்படுத்தியும், கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் எமது தோழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் நகரங்கள், கிராமங்கள், பேருந்துகள், ரயில்கள் என்று எல்லா இடமும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த ஜனநாயக உரிமை கூட நமக்கு இல்லை எனும் விதமாக கருணாநிதி அரசு பாசிச வெறியுடன் பல இடங்களில் தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும், செய்தித்தாட்களும் மூச்சு விடவில்லை. தோழர்கள் அது பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தாலும் அவற்றை படிப்பதற்கே பத்திரிகை முதலாளிகள் அச்சப்படுகின்றனர்.

சென்னை குரோம் பேட்டையை சுவரொட்டிகளால் நிறைத்து தோழர்கள் செய்த பிரச்சாரத்தைக் கண்டு உறுமிய போலீசு, பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை அமைப்பாளர் தோழர் உஷாவையும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் இரு தோழர்களையும் வீடு தேடிக் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறது. பல தோழர்களது வீடுகளுக்கு சென்று அவர்கள் இல்லாத காரணத்தினால் அச்சுறுத்தியும் ஆட்டம் போட்டிருக்கிறது.

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடும் வழக்குறைஞர்களை ஆதரித்து சுவரொட்டி ஒட்டியிருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த போலீசு இரு தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. கடலூரில் இதே காரணத்திற்காக பு.மா.இ.மு அமைப்பாளரான தோழர் பாலு உட்பட இரு தோழர்கள் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் போலீசு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீரமுடன் பகுதி மக்களிடம் துண்டறிக்கை விநியோகித்த மக்கள் கலை இலக்கிய கழக கோவை அமைப்பாளர் தோழர் மணிவண்ண்ணையும் வேறு இரு தோழர்களையும் கோவை போலீசு கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. காங்கேயத்தில் போபால் பிரச்சினைக்காக சுவரொட்டி ஒட்டிய இரு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாநாடு நடக்கும் போது எந்த சுவரொட்டியும் அரசை எதிர்த்து ஒட்டக்கூடாது என்று காங்கேயம் போலீசு அதற்கு ‘ஜனநாயக’ முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறது.

திருச்சியில் சுமை பணி பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நான்கு தோழர்கள் ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவெறும்பூரிலும் தோழர்கள் கைது. திருச்சி நகரமெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மெனக்கெட்டு கிழித்து வருகிறது திருச்சி நகர போலீசு. கோவில்பட்டியில் நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விளாத்திகுளத்தில் ஒரு தோழரைக் கைது செய்ய முடியாத போலீசு அவரது ஆட்டோவை கொண்டு சென்று வீட்டாரை அச்சுறுத்தியிருக்கிறது. மதுரையில் இந்த முழக்கங்களை அச்சிடுவதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை.

இது போக இன்னும் பல இடங்களிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரங்கள் எமக்கு கிடைக்கவில்லை. செம்மொழி மாநாட்டை எதிர்த்து ஒரு சிறு எதிர்ப்பு கூட வரக்கூடாது என்பதற்காக கருணாநிதியின் காட்டு தர்பார் தொடர்கிறது.

செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே கருணாநிதியின் நிழலுக்கு கூட ஆபத்து வரக்கூடாது என்று தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது.ஆனாலும் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கும் இந்த மக்கள் விரோத ஆடம்பர கேளிக்கையை எமது தோழர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவார்கள். அடக்குமுறைக்கும், கைது, சிறையடைப்புக்கும் அஞ்சமாட்டார்கள்.

______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

______________________________________________

கருணாநிதி அரசை அம்பலப்படுத்திய எமது முழக்கங்கள் கீழே:

தமிழால் ஏய்த்து தமிழினத் துரோகத்தால் கொழுத்த கருணாநிதி குடும்பத்தாரின் இல்லத் திருவிழாவே செம்மொழி மாநாடு!!

கலைஞர் என்பது பெயரல்ல… அது தமிழினத் துரோகத்தின் வரலாறு!
கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

பள்ளிகளில் தமிழ் இல்லை
கல்லூரிகளில் தமிழ் இல்லை
நீதிமன்றத்தில் தமிழ் இல்லை
தமிழில் படித்தால் வேலை இல்லை
தமிழ் கற்ற தமிழனுக்கு திருவோடு –
உயர் தனிச் செம்மொழிக்கு மாநாடு!
***
அமெரிக்கா பறக்கிறான் ஐ.டி. தமிழன்
சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன்
துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன்
அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன்
உள்ளூர்த் தமிழா … ஊர் ஊராய் ஓடு!..
உலகத் தமிழா …! கோவையில் கூடு!..
***
விவசாயித் தமிழனுக்குத் தண்ணியில்ல…
நெசவாளித் தமிழனுக்கு நூல் இல்ல…
தொழிலாளித் தமிழனுக்கு உரிமையில்ல..
பட்டதாரித் தமிழனுக்கு வேலையில்ல…
மாணவத் தமிழனுக்கு கல்வியில்ல…
மீனவத் தமிழனுக்கு கடல் இல்ல…
தமிழன் வாழாமல் தமிழ் வாழுமா?
தண்ணியே இல்லாமல் மீன் வாழுமா?
***
மழலையர் வாயிலிருந்து
அம்மா அப்பாவை பிடுங்கிவிட்டு
மம்மி டாடியை ஊட்டியவர் யார்?
தமிழைப் படிப்பது தரக்குறைவு என்று
தமிழனையே சிந்திக்கத் தூண்டிய
தலைமகன் யார்?
கொள்ளையர் மனம் குளிர
கோவிந்தராசன் கமிட்டி அமைத்த
கொற்றவன் யார்?

’’தண்ணி’’யையே பிளேடாக்கி
தமிழச்சிகளின் தாலியறுத்த
தவப் புதல்வன் யார்?
உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட
உண்ணாவிரதமிருந்த வழக்குரைஞர்களை
உள்ளே தள்ளி அழகு பார்த்த
காவல் தெய்வம் யார்?
அவர் தான் கலைஞர்…
அவ்ர் தா………ன் கலைஞர்!.
***
ஃபோர்டுக்கு சேர நாடு
சோனிக்கு சோழ நாடு
கோக்குக்கு பாண்டிய நாடு
ஹூண்டாய்க்கு தொண்டை நாடு
நாதியற்ற தமிழனுக்கு
நாலுநாள் மாநாடு!
வள்ளலுக்கு வள்ளலாம்
கலைஞருக்கு ஓ போடு!
***
மம்மி டாடி படிக்கும் நர்சரிகளே!
மெட்ரிக் படிக்கும் ஸ்டூடண்டுகளே!
கான்வெண்டில் தமிழ் கற்ற கனிமொழி
அழைக்கிறார்!
“கோவைக்கு வெல்கம்!”
***
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

______________________________________________

மேலும் தொடர்புடைய பதிவுகள்

செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!

35


______________________________________________
• ரவி, அன்பு
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!

vote-012கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது. கோவை மக்கள் அகலமாக்கப்படும் சாலைகளைப் பற்றியும் புதைந்துபோன வீடுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கோவைக்கு வரப்போகும் உள்கட்டமைப்பு வசதிகளைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். பொதுவாக கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் ஒருவரும் தமிழைப் பற்றி மறந்தும்கூட பேசுவதில்லை.

தொன்னூற்று மூன்றாம் வருடம் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். அப்போது எனக்கிருந்த அறிவுக்கு மாநாடு என்றால் அதில் என்ன செய்வார்கள் என்பது பற்றி எந்த ஆர்வமும் எழவில்லை. ஊரைச் சுற்றி போடப்பட்ட சாலைகளும் ஒரு மிதவைப்பாலமும் ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட பொன்னி அரிசி சாதமும் மட்டுமே நான் விவாதிக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதே மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தமிழ் மாநாட்டின்போது ஜெயலலிதாவின் கட் அவுட்டுக்கள் தஞ்சை நகரெங்கும் பயமுறுத்தின இப்போது அதே நிலைதான் நீடிக்கிறது. கருணாநிதி ஸ்டாலினின் மண்டைகளைப் பார்க்காமல் நீங்கள் இங்கு கால் கிலோமீட்டர்கூட பிரயாணம் செய்ய முடியாது, அத்தனை பேனர்கள் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது.அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் ’தேவையை’ அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருப்பார்கள் என்ற தகவல் அவருக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது. நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.

அதன் பிறகு சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத் தமிழ் ஆய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் ‘ மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்‘. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும். சட்டமன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் எண்ணத்திலிருந்த கருணா இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இவ்வளவு குறுகிய காலம் போதாது என்று அறிஞர்கள் கோரியதன் பிறகு மாநாடு ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. முத்தமிழ் செக்யூரிட்டிக்கு ( காவலருங்க) ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்திரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப் போல எளிமையானதான தோன்றியதை என்னவென்று சொல்வது?

தமிழை ஒழித்துக்கட்டும் முயற்சி ஏதோ ஜெயலலிதா காலத்தில் துவங்கி கருணாநிதி காலத்தில் நிலை பெற்றதாக பலர் கருதுகிறார்கள், சில தமிழறிஞர்கள் உட்பட. தமிழ் மொழி காமராஜர் அண்ணாதுரை காலம்தொட்டே அரசினால் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அண்ணாதுரையை அரியாசனத்தில் அமர்த்தியது. தமிழின் வளர்ச்சிக்கு அவர் செய்தது என்ன ? இன்னும் சொல்லப்போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் மாணவர்ளை காட்டிக்கொடுக்கும் வேலையைத்தான் செய்தார். லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 1968ல் அண்ணதுரையால் நடத்தப்பட்ட இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான சிலைகள் சென்னையில் திறக்கப்பட்டன அலங்கார ஊர்திகள் மாநாட்டில் ஊர்வலம் சென்றன, வேறென்ன நடந்ததென்றால் யாருக்கும் தெரியாது. நாடகத்துறையில் இருந்தவர் என்பதால் அரங்கம் அமைபதைத் தவிர வேறெதையும் அவரும் செய்யவில்லை.

அதன் நீட்சியாக கருணாநிதியும் மொழிக்கு அவர் செய்யப்போகும் சிறப்பு பற்றி ஒரு எழவும் பேசியதாகக் காணோம் எப்போதும் மாநாட்டுப் பூங்காவில் தொடங்கி அரசுக் கழிப்பிடம் கட்டுவது வரையிலான கட்டுமான விவகாரங்களைப் பற்றித்தான் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப்பிழைத்தது. அண்ணாதுரை காலத்தில் துவங்கிய ஜனரஞ்சகமான மாநாடு எனும் பழக்கம் இப்போது கருணாநிதியின் கதை வசனம் எழுதப்பட்ட படங்களைப் போல சகிக்க முடியாததாக வளர்ந்திருக்கிறது. மொழியைக் காப்பதற்கு ஏதாவது செய்பவர்தானே அதை வளர்ப்பதற்கும் தகுதியுடையவராவார் ? கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்? தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது ( இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன ) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் மயிரளவுகூட தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?

தாய்மொழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டுமே நடத்த முடியும். பொதுவாகப் பார்க்கையில் அரசுப்பள்ளிகளது தரம் குறைவது என்பது எதேச்சையானது அல்ல. இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அரசின் கல்விச் செலவினத்தை குறைக்கவும் இன்னொருபுறம் தனியார் வசம் கல்வியை ஒப்படைக்கவுமே அரசு விரும்புகிறது. இப்போது அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை ஏற்க மறுத்து பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அரசை மிரட்டும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சொல்வது என்ன ? நாங்கள் இல்லாவிட்டால் பின்னாளில் தரமான கல்வி பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிறது. ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தும் அரசுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா ? ஓராண்டுக்கு முன்பு கல்வியாளர் வசந்திதேவியால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவே அல்லது புரிந்துகொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.

பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள். நிர்வாகப்பணியையே செய்யத் திணறும் ஆசிரியரால் எப்படி ஐந்து வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் ? இப்படியான சூழலில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பாடச்சுமையை எப்படி எதிர்கொள்வார்கள்? பெரும் சதவிகிதமான மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிவதற்குள் படிப்பிலிருந்து விலகுகிறார்கள். அரசும் அதையே விரும்புகிறது. ஏழைகள் எல்லோரும் படிக்கத்துவங்கினால் பிற்பாடு அவர்கள் உயர்கல்வி கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே அரசுப்பள்ளிகளை தரமில்லாமல் வைத்திருப்பது அரசுக்கு மிக அவசியம். இந்த ஆண்டு +2 தேர்வில் மிக அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அரசுக் கல்லூரிகூடக் கிடையாது. கேட்டால் சிறிய மாவட்டம் அதனால் அரசுக் கல்லூரி அமைக்க முடியாது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால் அங்கு ஏறத்தாழ இருபது தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இப்படி வறிய மக்கள் போகக்கூடிய ஒரே இடமான அரசுக் கல்லூரிகள் இல்லாத பட்சத்தில் ஏழைப் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவார்கள் ?

மற்றொரு வாதம் தமிழ்வழிக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை என்பது. இது ஏறத்தாழ உண்மையே. ஆயினும் மக்களை அந்த சூழலுக்கு தள்ளியவர்கள்தான் தமிழ்நாட்டை நாற்பதாண்டுகளாக ஆள்கிறார்கள். இவர்கள்தான் ஆளுக்கொருமுறை தமிழ் மாநாட்டை நடத்தினார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட எந்த ஒரு உயர்கல்வியும் தமிழில் இல்லாததால் மக்கள் எல்லோரும் இயல்பாகவே ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவெடுக்கவே செய்வார்கள். ஒருவேளை தமிழ் வழியிலேயே தமது பிள்ளைகளை படிக்கவைக்க விரும்புபவர்களுக்கு இங்கு போதுமான பள்ளிகளும் கிடையாது. ஆக ஏழை மக்களாக இருந்தாலும் சரி தமிழ்வழியில் தம் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்பும் நடுத்தரவர்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவது உறுதி. இப்படி சிறுகச்சிறுக மக்கள் தமிழ் வழிக் கல்வி மீது அலட்சியத்தை உருவாக்கிய அரசுதான் இப்போது செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.

இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ் மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாக!! ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை ஆக தமிழ் வழியில் படிக்கவும் வாய்ப்பு கிடையாது படித்தவனுக்கும் வாய்ப்பு கிடையாது.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் நாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை அணுகவேண்டும். தமிழ் மொழியை இந்தத் தலைமுறையோடு தலைமுழுக வைக்கும் காரியங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்க முடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வை தமிழில் எழுதி படாதபாடுபட்டார் மருத்துவர் ஜெயசேகர், அது எப்படி முடியும் என எள்ளி நகையாடியவர் திமுகவின் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன். இப்போதும் தமிழ் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புக்களில் பல ஆங்கிலத்தில் இருப்பதாக தினமலரே சொல்கிறது. மாநாடுக்காக துவங்கப்பட்ட வலைதளம் பல மாதங்களாக முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. இம்மாநாடு ஒரு சதவிகிதம்கூட தமிழுக்காக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

எத்தனை சான்றுகளை கொட்டினாலும் இக்கட்டுரை முடியாது. இது கருணாநிதி தனது ஓய்வுக்கு முன்பு சர்வதேச அளவில் நடத்திக்கொள்ள விரும்பும் ஒரு பாராட்டுவிழா முயற்சி. தான் விரும்பியது யாவையும் உடனே கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பணக்கார இளைஞர்களைப் போல கருணாவும் தன் வாழ்நாள் கனவுகளை தனது ஆட்சிக்குள் அல்லது ஆயுளுக்குள் செய்துகொள்ள விரும்புகிறார். கட்சிக்கு கிடைக்கும் கட்டுமான கமிஷனையும் கோவை வட்டாரத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இதில் இணைத்ததில்தான் கருணாநிதியின் சாணக்கியத்தனம் இருக்கிறது. மற்றபடி இது தமிழுக்காக செய்யப்படும் முயற்சி என்றால் அதை திமுககாரன்கூட நம்பமாட்டன். ஆறு மாதத்தில் வீணாகப்போகிற சாலைகளும் ஜுலை மாதத்திலிருந்து கவனிப்பாரில்லாதுபோகும் பூங்காக்களுமே கோவை மக்களுக்கு மிச்சமாகப் போகிறது.

சரி நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது. இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரென்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கிலான மக்களுக்கு அன்றாட உணவையே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்துமட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.

ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.

______________________________________________
வில்லவன்
புதிய கலாச்சாரம் ஜூலை 2010
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

vote-012“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”

இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,

“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,

அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
இடைப்பட்ட மணித்துளியில்
அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,

ஈழத்தமிழர் செத்த பின்பு
போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
கருணாநிதிச் சோழனின்
மற்ற கைங்கர்யங்களாவன:

சோழநாடு சோறுடைத்ததைப்
பின்னுக்குத் தள்ளி
ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
பகை முடித்தார்!

வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
மகப்பேறு உதவித்தொகை…
எனக் குடிதானம் ஏராளம்.
மக்களைத் தானாக வாழவிடாமல்
தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
மற்றபடி,
இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
வாக்காள பெருங்குடிக்கு
பொன்முடிப்பு தாராளம்!

காணியுடையோராய் இருந்த
தொல்குடிகள் நீக்கி,
காடு, மலை, நதியென
அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
வேண்டுவன தட்டாமல் வழங்கும்
தகைமையில் விஞ்சுவாரின்றி
கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!

அறக்கொடைகள் அம்மட்டோ!

வேளாண்வகை ஏரிகள் மாற்றி
பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!

திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!

சிறுவணிகத்தை மடைமாற்றி
ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.

பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
அண்டி நிற்கும் வீரமணிக்கும்
அவ்வப்போது அறச்சாலாபோகம்!

இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
இன்னும் கொடுப்பதற்காய்
தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!

சாதனைகள் சொல்ல
செப்பேடு போதாது…!

காவிரிக்கு குறுக்கேதான்
கல்லணை அமைத்தான் கரிகாலன்..
காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
பிரச்சினை நிரம்பி வழியாமல்
பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!

பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
பழைய வேந்தர்கள்,
வாடிக்கிடக்கும் தமிழரையே
டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
‘குடி’மகன்களை பாடவைத்துத்
தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!

ஊனாடும்
ரோமாபுரி அடிமைப் பெண்களை
அந்தப்புரத்தில் ஆடவைத்து
தான்மட்டும் கண்டுகளித்தனர்
பழைய மன்னர்கள்

‘மானாட மயிலாட’ என
மற்றவரையும் பார்க்க வைக்கும்
தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
தந்திரம் முன்
பராந்தகச் சோழனே பயந்து போவான்!

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
இரண்டகத் திறமையில்
பார்ப்பன குலமே மயக்கமுறும்!

இயற்றமிழ் அழகிரி
இசைத்தமிழ் கனிமொழி
நாடகத்தமிழ் தளபதி
என முத்தமிழையும் வளர்த்து
தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
முயலும் திறமை முடியுமோ யாராலும்?

பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
வாரிசு வரைக்கும்
மதுரை தினகரன் அலுவலகத்தில்
கொலையான ஊழியர்கள்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
இருப்பினும் வாழும் வள்ளுவர்…

திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
அழகிரியின் அதிகாரத்திற்கும்
உரையெழுதும் திறமுடையார்!

இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
அகமும், புறமும், மணிமேகலை,
சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!

வழிபாட்டுக் கருவறையில்
தமிழன் நுழைய முடியவில்லை..
வழக்காடு மன்றத்தில்
தமிழ் நுழைய முடியவில்லை..
என்னடா இது வீண் இரைச்சல்
என்று சாலையைப் பார்த்தால்…

கூஜாக்கள் குலுங்க…
ஜால்ராக்கள் சிணுங்க…
கோடம்பாக்கத்து காக்கைகள்
குறிபார்த்துக் கரைய…
பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
கரைவேட்டி முதலைகள்
மத்தளம் கொட்ட
வயிற்றெரிச்சலோடு
கொடநாட்டு மதயானை பிளிற…
களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
கோவையலங்காரம்…

பேச்சு மறுக்கப்பட்ட
கோவை சிறுதொழில் உதடுகளில்
அறுந்து கிடக்கும்
ஓசையற்ற கைத்தறியில்
இறந்து கிடக்குது நம் தாய்மொழி…

தமிழகத்தை உய்ப்பிக்க
உழைக்கும் மக்களிடமிருந்து
உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…

______________________________________________
– துரை. சண்முகம்
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்