Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 97

இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

20.07.2023

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை
நிர்வாணப்படுத்தி ஊர்வலம் –  கூட்டுப் பாலியல் வன்கொடுமை – கொலை!

இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

கண்டன அறிக்கை

ணிப்பூரின் பழங்குடியின பெண்கள் மெய்தி இன வெறியர்களால் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்ணும் அவரது தந்தையும் சகோதரனும்  கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ நேற்றைய தினம் வெளியாகி ஒவ்வொரு மனிதரையும் உலுக்கி எடுத்து இருக்கிறது. நமது கண்ணில் பெருகி வரும் கண்ணீர் இதற்குக் காரணமான பா.ஜ.க –  ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலை சுட்டெரிக்க வேண்டும்.

இதுதான் மோடி உருவாக்கிய புதிய இந்தியாவா என்று காரி உமிழ்கிறார்கள் மக்கள். அந்த வீடியோவில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்,  தங்களை அந்தக் கொடூர கும்பலிடம் கொண்டு போய் சேர்த்தது மணிப்பூர் போலீஸ்தான் என்கிறார். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், போலீஸ், அரசு நிர்வாகமே சேர்ந்து பழங்குடியின மக்களை கொன்று குவித்தும் சித்தரவதை செய்தும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியும் இருக்கிறது என்றால் இனியும் இந்த பாசிச நடவடிக்கைகளை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


மணிப்பூரின் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடுமை தங்களுக்கே நேர்ந்ததாக இந்த நாடே கவலையுறுகிறது. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இனியும் வரலாம். பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்களோ? எத்தனை பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களோ? இதுவரை விவரம் ஏதுமில்லை. ஆனால் பழங்குடியின மக்கள் மீது திட்டமிட்டு இந்தக் கலவரத்தை ஏற்படுத்திய பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக  கும்பலை இனியும் இந்த நாட்டில் விட்டு வைத்திருப்பது இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அவமானம்.

இந்தக் கொடூர சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலவரத்தை முன் நின்று நடத்திய அந்த மாநில அரசு இதுவரை கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது ஒன்றிய அரசு.

மனித குலத்துக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிரான பழங்குடியின மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்பதே நம்முடைய கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை
9962366321

தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

0

டந்த ஜூன் 23 அன்று, அமெரிக்க இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான அமேசான், இந்தியாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தது. இதன்மூலம் அனைத்துத் தொழில்களிலும் அந்நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடு 26 பில்லியன் டாலராக உயரும்.

எத்தனை வேலைகளை உருவாக்குகிறது என்பதைவிட தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதைத்தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும். அமேசான் தனது தொழிலாளர்களை, குறிப்பாக அதன் கிடங்குத் தொழிலாளர்களை (warehouse workers), எவ்வாறு கசக்கிப் பிழிகிறது என்பதற்கு டெல்லியில் உள்ள அமேசான் கிடங்குத் தொழிலாளர்களின் அவல நிலையே சான்று.

அமேசான் இந்தியா அதன் கிடங்குத் தொழிலாளர்களை ’அசோசியேட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. டெல்லி அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் அங்கு நிலவும் பணிச் சூழலால் மிகுந்த உடல் சோர்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

”கொளுத்தும் வெயிலில் பெரிய கிடங்கில் முன்னும் பின்னுமாக நடந்து சென்றது என் தோலின் வெளிப்புற அடுக்கை உரித்துவிட்டது. நான் நிர்வாகத்திடம் சென்று விடுப்புக் கோரினேன். எனக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா? அவர்கள் என்னை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். அமேசான் இந்தியா கிடங்குகளில் இதுபோன்ற பிரச்சினைகளின்போது வழக்கமாகக் கையாளப்படும் நடைமுறை இதுதான்”. இது 21 வயதான கிடங்குத் தொழிலாளியான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் அனுபவம்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர், ஐந்து சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தவர். ஒரு வருடத்திற்கு முன்பு, தனது சொந்த மாவட்டத்தில் தீன் தயாள் உபாத்யாய் கிராமீன் கவுசல்யா யோஜனா (Deen Dayal Upadhyay Grameen Kaushalya Yojana) திட்டத்தில் பதிவுசெய்து கொண்டார். அவரது ஒரே நோக்கம் அவரது குடும்பத்திற்கு நிதி ஆதரவு அளிப்பதாக இருந்தது.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால்  (Ministry of Rural Development) இத்திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு திறன் கற்பித்தல் திட்டங்கள் மூலம் விளிம்புநிலை கிராமப்புற இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்குவதற்காக  இத்திட்டம் தொடங்கப்பட்டதாக அரசால் கூறப்படுகிறது. வேலை தேடிப் புலம் பெயர்ந்து செல்லும் நபர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றும் அரசு கூறுகிறது.

அமேசான் இந்தியாவின் மானேசரில் உள்ள கிடங்கில் ”தேர்வு” (picking) துறையில் சேர்ந்த நிஷா, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணி ஒன்றில் மூழ்கடிக்கப்பட்டார். கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது அவரது பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

”நான் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 25-30 கிலோமீட்டர் நடக்க நேரிடுகிறது. நான் உணர்விழந்து போனதுபோல் உணர்கிறேன். வேலையின் இடையே அரை மணி நேரம் இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும்; ஆனால் அதனையடுத்து நான் 4-5 மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டும்” என்று நிஷா கூறினார்.

நிஷா தாங்க முடியாத கால் வலியால் அவதிப்பட்டாலும் அவரால் விடுப்புப் பெற இயலவில்லை. ஒரு நாள் விடுப்பு எடுக்கவேண்டும் என்றாலே அவர் ராஜினாமா தான் செய்ய வேண்டும். நிறுவனத்திலிருந்து அவரது அடையாள அட்டை தடை (block) செய்யப்படும். அமேசான் இந்தியாவின் கொள்கையின்படி, தொழிலாளர்களுக்குப் பெயரளவில் ஆண்டுக்கு 14 விடுப்புகள் வழங்கப்படும்; ஏழு மருத்துவ விடுப்புகள் (sick leaves) மற்றும் ஏழு தற்செயல் விடுப்புகள் (casual leaves). உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகக் கூடுதல் விடுப்பு எடுத்துவிட்டால் கிடங்கில் அவர்களின் வேலையே கேள்விக்குறியாகிவிடும் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“குளிரூட்டும் இயந்திரங்கள் இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தின் காரணமாகக் கிடங்கில் வேலை செய்பவர்களுக்கு மயக்கம் மற்றும் சோர்வு ஏற்படுவது பொதுவான நிகழ்வாகிவிட்டது. யாராவது சோர்வு குறித்துப் புகார் செய்தால், அவர்களுக்கு ஒரு வலி நிவாரணி கொடுக்கப்பட்டு 10-15 நிமிடங்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நேரம் கெஞ்சினால், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் செல்ல நிர்வாகம் தொழிலாளர்களை அனுமதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கூட விடுப்பு என்பது அனுமதிக்கப்படுவதில்லை” என்று நிஷா மேலும் கூறினார்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


இது தொடர்பாக அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் 8 பேரிடம் நியூஸ் கிளிக் பேசியபோது, அமேசான் நிறுவனத்தால் தாங்களும் கசக்கிப் பிழியப்படுவதாகத் தெரிவித்தனர். இதன் விளைவாக அவர்களின் உடல்நலமும் மோசமடைந்துள்ளது. அமேசானுக்கு உலகம் முழுவதும் 175 கிடங்குகள் உள்ளன; அவற்றில் 20 கிடங்குகள் இந்தியாவில் உள்ளன.

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ’பேக்கேஜிங்’ துறையில் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரது வேலை அவரை 4-5 மணி நேரம் நிற்கச் செய்கிறது. இது முதுகு மற்றும் கால் தசை வலிக்கு வழிவகுக்கிறது.

”வலி என்னை அடிக்கடி மருத்துவர்களைச் சந்திக்க வைத்தது. சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுக்கத் தரையில் உட்காரும் வசதி கூட இல்லை. கழிவறையைப் பயன்படுத்தக் கூட சரியான இடைவெளி கிடைப்பதில்லை. ஓய்வு நேரம் (idle time) ஐந்து நிமிடங்களைக் கடந்து விட்டால், பி.ஏ (Process Assistant) தொழிலாளியை நோக்கிக் கத்தத் தொடங்கிவிடுவார்,” என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் அமேசான் நிறுவனத்தில் நிலவும் வேலை நிலைமைகள் குறித்து தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கம் (Amazon India Workers’ Association – ஏ.டபிள்யூ.ஏ) கடந்த மே மாதம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு சங்கத்தில் (Constitution Club) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமேசானின் கிடங்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமேசான் கிடங்குகளில் நிலவும் வேலை நிலைமைகளுக்கு அந்நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர். கருத்தரங்கில் ”மேக் அமேசான் பே” (Make Amazon Pay) என்ற பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் செயற்பாட்டாளர் நிக் ருடிகாஃப் (Nick Rudicoff) கலந்து கொண்டார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அமேசானின் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிரான போராட்டங்களின் நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

”இந்த வெற்றிகரமான பிரச்சாரத்தின் விளைவாக, தொழிற்சங்கம் உருவாகக்கூடாது என்பதற்காகப் பல மில்லியன் டாலர் செலவு செய்து அமேசான் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, அமேசானின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கும் உரிமையைத் தொழிலாளர்கள் பெற்றனர். இது ஒரு வரலாற்று வெற்றி. தொழிற்சங்கம், தொழிலாளர்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், அமேசானில் நடைபெறும் தொழிலாளர் உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சக்திகளின் கவனத்தையும் ஈர்த்தது” என்று ருடிகாஃப் கூறினார்.


படிக்க: அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!


அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (ஏ.டபிள்யூ.ஏ) கூற்றுப்படி அமேசான் இந்தியா அதன் மானேசர் மையத்தில் சுமார் 1,400 ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள்; சுமார் 70 சதவிகிதத்தினர் இளம் பெண்கள்.

ஏ.டபிள்யூ.ஏ-உடன் நெருக்கமான தொடர்புடையவரான தர்மேந்திர குமார் ”கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் கண்ணியமான வேலைகள் இல்லாதது இளைஞர்களை கடினமான பணிச்சூழல்களைக் கொண்ட வேலைகளை நோக்கித் தள்ளுகிறது. அமேசான் வேலை தரநிலைகளைக் (working standards) குறைத்துள்ளது. இந்த மோசமான பணிச்சூழலில் பணிபுரிய அமேசான் நிறுவனம் வேலை தேடும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களைத் தேர்வு செய்கிறது” என்று கூறினார்.

இந்தக் கூற்றை மானேசரில் உள்ள அமேசான் இந்தியாவின் மையத்திற்கு அருகில் வசிக்கும் இரண்டு இளம் பெண் தொழிலாளர்கள் உறுதிப்படுத்தினர். இளம்தொழிலாளர்களான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் குர்பிரீத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் தங்கள் வீட்டில் உள்ள நிதி நெருக்கடி குறித்துப் பகிர்ந்து கொண்டனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது என்றும் கூறினர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த திவ்யா (22), நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவர். வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பி.டி.இ ஆசிரியராக வேண்டும் என்ற தனது லட்சியத்தைக் கைவிட வேண்டியிருந்தது. இவரது தந்தை ஒரு விவசாயி; தாய் ஒரு கைவினைஞர். தான் பள்ளியில் படித்த காலம் முதலே தனது குடும்பம் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

”பட்டப்படிப்பை முடித்ததும், பி.டி.இ (PTE) ஆசிரியராக விரும்பினேன். ஆனால் பி.எட் படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு ₹28,000 ஆகும். அதைச் செலுத்தும் நிலையில் எங்கள் குடும்பம் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

குர்பிரீத்தின் (19) கதையும் இதே போன்றதுதான். ஹரியானா மாநிலம் ஜிந்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கவுஷல் யோஜனா திட்டத்தில் அவர் பயிற்சி பெற்றார். தந்தையை இழந்த அவருக்கு இப்பயிற்சித் திட்டத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

”பயிற்சித் திட்டத்தில், அவர்கள் அமேசான் கிடங்குகளில் உள்ள வேலைகளைப் பற்றி எங்களுக்குக் கற்பித்தனர். பிற திறன் தொகுப்புத் திட்டங்களும் இருந்தன; ஆனால் பயிற்சித் திட்டத்தின் பெரும்பகுதி கிடங்கு வேலைகளில் கவனம் செலுத்துவதாய் இருந்தது”, என்று குர்பிரீத் கூறினார்.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளாமல், பெரு நிறுவனங்களுக்கு மலிவான கிராமப்புற தொழிலாளர்களை வழங்குவதில் அரசாங்கம் முன்முயற்சியோடு செயல்பட்டிருப்பதை குர்பிரீத்தின் கூற்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சாதாரண மனிதராலும் நிறைவேற்ற இயலாத அளவுக்கு மிக அதிகமாக இலக்குகள் (targets) நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த இலக்குகளை நிறைவேற்ற பி.ஏ மூலம் அதிக அழுத்தம் தரப்படுகிறது. இலக்குகளை நிறைவேற்ற முடியாதபோது நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடுகிறது.


படிக்க: தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளின்படி இந்திய மக்கள் தொகையில் 52 சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் கீழானவர்கள். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டமோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் அமேசான் கிடங்கு வேலை போன்ற இரத்தத்தை உறிஞ்சும் வேலைகளில் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அரசாங்கமும் தனது பல்வேறு திட்டங்களின்மூலம் இளைஞர்களை இதற்குத் தயார் செய்கிறது.

பாசிச மோடி அரசு மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திவருவதால் நமது தொழிலாளர்கள் அவலமான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர். படித்த வேலையில்லாத இளைஞர்கள் (cheap labour) அதிக அளவில் இருப்பதாலும், அமெரிக்கா – சீனா மேலாதிக்கப் போட்டியினால் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளாலும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘வளர்ச்சி நாயகன்’ மோடியும் சிவப்புக் கம்பளத்துடன் தயாராக உள்ளார்.

இது தற்போது இருப்பதைவிட கார்ப்பரேட் சுரண்டலை மேலும் தீவிரமடையச் செய்யும். எனவே, பாசிச மோடி அரசையும், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடாமல் தொழிலாளர்களுக்கு விடிவு இல்லை.


பொம்மி
செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக்

தேசிய மனித உரிமை ஆணையம் தேர்தல் ஆணையத்தால் அம்பலப்பட்ட மோடி!

னித உரிமை ஆர்வலரும், 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் நீதிக்காவும் அயராது போராடிவரும் போராளியான தீஸ்தா சீதல்வாட், மோடிக்கு எதிராக பொய்களை இட்டுக்கட்டிக் கூறியுள்ளதாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் “அரசியல்வாதியின் கருவி” என்றும் குஜராத் கலவரம் தொடர்பான அவரது குற்றச்சாட்டுகள் “நரேந்திர மோடியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும்” கூறி கடந்த ஆண்டு தீஸ்தா கைது செய்யப்பட்டார். அப்போது தீஸ்தா தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த தீஸ்தா இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு ஜூன் மாதம் மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தபோது அதனைக் குஜராத் நீதிமன்றம் நிராகரித்தது.

உயர்நீதிமன்றத்தில் தீஸ்தாவுக்கு எதிர்த்தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர் மிதேஷ் அமீன், “மனுதாரர்(தீஸ்தா) தனது இரண்டு கருவிகளைக் (போலீஸ் அதிகாரிகள் ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட்) கொண்டு பெரிய சதி செய்யகிறார்” என்றார்.


படிக்க: தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!


தற்போது (ஜூலை 19 அன்று) தீஸ்தாவை உடனடியாக சரணடையுமாறு கூறிய குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அவருக்கு நிபந்தனைகள் ஏதுமற்ற வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆனால் குஜராத் படுகொலையை நிகழ்த்தியதில் மோடிதான் முதன்மை குற்றவாளி என்று தீஸ்தா மட்டுமல்ல, தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தற்போது மோடி அரசின் கையாளாக வேலை செய்யும் இந்தியத் தேர்தல் ஆணையமுமே குஜராத் கலவரத்தின் போது அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு அதில் பங்கு இருக்கிறது என்று தனது விசாரணை அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கின்றன.

குஜராத்தில் படுகொலை நடந்தவுடனேயே முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணையம் கலவரம் குறித்து மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டதோடல்லாமல், நேரடியாகக் களத்திற்கும் சென்றது. நீதிபதி கே.ராமசாமி, நீதிபதி சுஜாதா மனோகர் மற்றும் வீரேந்திர தயாள் ஆகியோர் குஜராத் சென்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

நேரில் கண்டதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

“குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில், குஜராத் மக்களின் உயிர், சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் காக்க மாநில அரசு தவறிவிட்டது”.

“குஜராத் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், கோத்ரா இரயில் விபத்தில் பலியான இந்து குடும்பங்களுக்கு ரூ. இரண்டு லட்சமும் நிவாரணம் எனப் பாரபட்சம் காட்டியது மோடி அரசு” என்று குற்றம்சாட்டியது ஆணையம்.


படிக்க: அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்


தேர்தல் சமயத்தில் குஜராத்தில் கலவரம் நடந்ததால் அங்கு தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என முடிவு செய்ய தேர்தல் ஆணையம் நேரடியாகக் களத்திற்குச் சென்றது. அது தொடர்பான அறிக்கையில், “மாநில அரசு தெரிவித்தவற்றுக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது. ஒருபுறம் 12 மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துவிட்டு மறுபுறம் 20 மாவட்டங்களுக்கு இலவச ரேஷன்களை வழங்கிவருகிறது” என தேர்தல் ஆணையம் அப்போது அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், “புகார் அளிக்கவந்த நபர்கள் எத்தனை, வழக்கு பதியப்பட்டவர்களின் விபரம், கைது செய்யப்பட்டவர்களின் விபரம், வழக்குப் பதியப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர்கள் பற்றிய விபரம் குறித்தான தகவல்களை வழங்குவதை மாநில அரசு தவிர்த்து வருகிறது” என்றும் தெரிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க நானாவதி-மேத்தா ஆணையத்தை மாநில அரசு நியமித்தது. அதே ஆணையம்தான் பின்னர் குஜராத் படுகொலை குறித்தும் விசாரணை மேற்கொண்டது.

நானாவதி-மேத்தா ஆணையமானது, கலவரத்தைத் தடுக்க அரசு நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கோத்ரா விபத்து முன்னரே திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அதுகுறித்து முன்னரே தெரிந்திருந்ததா என்ற கோணத்திலும் ஆய்வு செய்தது.

2004-ஆம் ஆண்டு ஆணையம் அதன் விசாரணையை, அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, அவரது அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை விரிவாக ஆய்வு செய்தது.

அதேபோல், குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி வழக்கில் (இக்கலவரத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்) குற்றம் சாட்டப்பட்டவர்களை மறுவிசாரணை செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.என். கரே, “குஜராத் அரசு மீது தனக்கு நம்பிக்கை இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பிறகு மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பில், “அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் எரியும் போது நவீன கால நீரோக்கள் வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். குற்றம் புரிந்தவர்களை எப்படிக் காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்” என்றது நீதிமன்றம்.

ஆக, தீஸ்தா சீதல்வாடின் வழக்கால்தான் மோடி பிம்பம் சரிகிறது என்று சங்கிகள் குற்றம்சாட்டுவது அப்பட்டமான பொய். தேர்தல் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையங்கள் ஏற்கனவே மோடியின் முகமூடியைக் கிழித்திருக்கின்றன.


தாரகை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!

ன்று (ஜூலை 20) காலை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கூட இருக்கிறது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் விலையேற்றம், மணிப்பூர் பற்றியெறிவது, எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை சட்டவிரோதமாக ஏவுவது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்களின் சர்வாதிகாரப் போக்குகள் போன்ற பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் முறையாக விவாதிக்கப்படும் என்ற நம்பிக்கை எந்தக் கட்சிகளுக்கும் இல்லை.

பொதுசிவில் சட்டத்தை இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், வழக்கம் போல அதை திசைத்திருப்புவதற்கான அனைத்து வேலைகளிலும் பா.ஜ.க. ஈடுபடும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. இதுதான் நடக்கும் என்று நாட்டுமக்களுக்கும் தெரியும்.

பிரதமர் எனப்படுபவர் எந்தப் பிரச்சினைக்கும் வாயைத் திறக்கமாட்டார். 2004-2014 வரை நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் போன்ற ஒரு “கல்லுளி மங்கன்” மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்திற்கே வராத “ஊர்சுற்றி” என்பதும் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.


படிக்க : விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்


அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் “அம்மா” ஆட்சியை போல, மோடியின் ஆட்சி. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், எங்களை வாழவைத்த தெய்வம் என்ற பல்லவியை பேரவையில் ஜெயலலிதா முன்னிலையில் சுதிதப்பாமல் பாடிவிட்டு அமைச்சர்கள் பேசத் தொடங்கினர்; எதிர்க்கட்சிகள் பேசும் போதெல்லாம், சம்பந்தமே இல்லாமல், அம்மா புகழைப் பாடி நேரத்தை வீணடித்தனர்; அந்தக் காட்சிகளுக்கு சற்றும் குறையாமல்தான், தற்போது நாடாளுமன்றக் கூட்டங்கள் நடக்கின்றன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதோ, பேசும் போதே, பா.ஜ.க.வினர் எழுந்து நின்று “மோடி, மோடி”, “ஜெய்ஸ்ரீராம்” என்று எந்த சம்பந்தமும் இல்லாமல் கூச்சலிடுவார்கள்.

நாட்டின் சொத்துக்களை எல்லாம் அம்பானிக்கும் அதானிக்கும் தாரை வார்க்கிறார் பிரதமர். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், சட்டப்படிதான் நடக்கின்றன. இந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரப்படிதான் நடக்கிறது என்றாலும் மோடி மீது மட்டும்தான் எதிர்க்கட்சிகளுக்கு கோபம் வருகிறது.

பாசிச பா.ஜ.க.வின் சதிராட்டங்களை அங்கீகரித்து அதன் பாசிச நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சட்டபூர்வமாக இந்துராஷ்டிரத்தை அரங்கேற்றுவதே இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.

தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றும் வழிமுறை, மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கும் “கல்லுளி மங்கன்” வழிமுறை, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை “டிராய்” போன்ற தீர்ப்பாயங்களுக்கு மாற்றிவிட்ட சர்வாதிகாரப் போக்கு போன்றவை அனைத்தும் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியிலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட சர்வாதிகாரப் போக்குகள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க பாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசியல் சாசனத்தையும் இந்த அரசு கட்டமைப்பையும் மறுவார்ப்புச் செய்து, கார்ப்பரேட் அரசு என்று சொல்லப்படுகின்ற புதியவகையான பாசிச அரசை உருவாக்கிய கட்சிகள்தான் பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, தொல்பொருள் துறை தளப்பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தபால் சேவை மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவும் மசோதா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் பட்டியலின, பழங்குடியின மக்கள் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இந்த கூட்டத் தொடரில் உத்தேசிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை.

இவையன்றி, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெறப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2022, எளிதில் வணிகம் செய்யவும் சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை மாற்றும் ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா, நிலைக்குழு கூட்டுக்குழு பரிசீலனையில் இருக்கும் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட இரு மசோதாக்கள், மத்தியஸ்த மசோதா போன்றவையும் நிறைவேற்றப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த சட்டங்கள் குறித்தும் இவற்றின் சரத்துகள் குறித்தும் நாமறிந்தவரை எந்த ஊடகங்களும் விவாதிக்கவில்லை; எதிர்க்கட்சிகள் இவை குறித்து எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. மற்றொருபுறம், பாசிச மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து திசைத்திருப்பும் வகையிலும், தனது இந்துராஷ்டிரத்தை நிறுவும் வகையிலும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை பா.ஜ.க., சங்கப் பரிவார கும்பல் மேற்கொள்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதைப் பொருத்தவரை, எதிர்க்கட்சிகள் ஒப்பாரி வைப்பது போல, மீண்டும் ஒருமுறை ‘ஜனநாயக கேலிக்கூத்தாக’த்தான் அமையப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக தினமணி, தினமலர் உள்ளிட்ட பத்திகைகள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியும், சில நடுநிலைப் பத்திரிகைகள் இரண்டு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கியும், எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகைகள் பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கு எதிராக கண்டனங்களையும் பதிவு செய்தும் வருகின்றன.

இன்றைக்கு தொடங்கி ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை என்ன நடக்கப்போகிறது என அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கோரிக்கையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க பா.ஜ.க. அனுமதிக்கப் போவதில்லை. வழக்கம் போல வெளிநடப்பு, அமைதி ஊர்வலம் போன்ற மொன்னையான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவார்கள். மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் எந்த விவாதமும் இல்லாமல் அரங்கேறும்.

ஆனால், இவர்கள் யாருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்கள் அமைதியாக நடக்கப் போவதில்லை என்று நன்கு தெரியும். அமைதியாக நடக்காத இந்த போக்கு என்பதே, சொல்லிக்கொள்ளப்படும் நாடாளுமன்ற மரபுகளைத் தூக்கியெறிந்து கார்ப்பரேட் அரசு அரங்கேற்றத்தின் ஒரு அங்கம். இந்த கார்ப்பரேட் அரசு அரங்கேற்றத்தை இந்துராஷ்டிர அரங்கேற்றமாக பாசிச பா.ஜ.க. மாற்றிவிட்டதைத்தான் எதிர்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம்”, “ஜனநாயகத்தை மீட்போம்” என்று முழங்குகின்றன.

ஆகையால், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் எல்லாம் வெற்றுக்கூச்சல்களே; நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எல்லாம் மொன்னையானவையே.


படிக்க : காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!


முக்கியமாக, சொல்லிக்கொள்ளப்படும் நாடாளுமன்ற மரபின் மீது எதிர்க்கட்சிகளுக்கும் நம்பிக்கையில்லை, மக்களுக்கும் நம்பிக்கையில்லை. பா.ஜ.க. இந்த மரபை தூக்கியெறிந்து இந்துராஷ்டிரத்தைக் கொண்டுவருவதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த பாசிச அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கு ஜனநாயகத்தை வழங்குகின்றதே இந்த நாடாளுமன்றம், அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனவா? ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தடைசெய்ய வேண்டும் என்று இவர்கள் முழங்குவார்களா?

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

ஆகையால், இந்த கரையான் புற்றைப் பாதுகாப்பது மக்களின் பிரச்சினை அல்ல. கருநாகங்களான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. போன்ற பாசிசக் கட்சிகளுக்கு ஜனநாயகம் அளிப்பதைவிட கொடியது எதுவும் இல்லை. அக்கட்சிகளைத் தடை செய்து, மக்கள் பிரச்சினைகளை முறையாக விவாதித்து, மக்கள் தீர்ப்பளிக்கும் வகையிலான, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு வாய்ப்பளிக்கின்ற ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் நாம் முழங்கவேண்டிய தருணமாகும். முழங்குவோமாக!

 


தங்கம்

மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! | பு.மா.இ.மு போஸ்டர்

தகுதி, திறமை, மோசடி – பா.ஜ.க!
மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்!

மாணவர்களே, இளைஞர்களே!

ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி!

மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை!

வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களில் ஏழு பேர் பாஜக எம்.எல்.ஏ வின் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள்!

மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது!

ஊழலும் அதிகார முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பிஜேபி கும்பலின் உத்தமர் வேடத்தைத் திரை கிழிப்போம்!

புரோக்கர்களாக மாறிப்போன கோச்சிங் சென்டர்களையும் அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தாமல் தகுதி – திறமை என்பதெல்லாம் மோசடிதான்!

கல்வி – வேலை – ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை களத்தில் முன்னெடுப்பதன் மூலமே நமக்கான உரிமையைப் பெற முடியும்!


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு – 9444836642

கொலைகார அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழையவிடாதே! | மக்கள் அதிகாரம்

19.07.2023

தூத்துக்குடி தியாகிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிய
மார்வாடிகளுக்கு எச்சரிக்கை!

கொலைகார அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் நுழைய அனுமதி இல்லை!

கண்டன அறிக்கை

தூத்துக்குடி மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராடிய 15 பேரை சுட்டுக் கொன்ற அனில் அகர்வால் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னைக்கு வருகிறான். 2018-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தாவின் உரிமையாளரான அனில் அகர்வால் தான் முழு பொறுப்பு. இப்படிப்பட்ட குற்றவாளி தமிழ்நாட்டுக்கு வருவது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சவால்.

இதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தூத்துக்குடி மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை அமைத்து அந்த நாட்டின் மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கியவன். அதற்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக் கொண்ட கொலைகாரன். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள், பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்காத போலீசு ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற கூலிப்படைகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுராணா ஹை டெக் இன்டர்நேஷனல் பள்ளியின் நிகழ்ச்சிக்கு  06.08.2023 அன்று இந்தக் கொலைகார கொள்ளைக்கார அனில் அகர்வால் வருகை தருகிறான்.


படிக்க: தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சி வாழுகின்ற இந்த மார்வாடி கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறது என்றால்,  இந்த மார்வாடி கும்பலின் கொழுப்பையும் திமிரையும் அடக்க வேண்டியது தமிழ்நாட்டின் பொறுப்பு.

தமிழ் மக்களின்,  உலக மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வால் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீசு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறது.

அதையும் மீறி அனில் அகர்வால் தமிழ்நாட்டுக்குள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நுழைந்தால் அதற்கான கடும் பதிலடி தமிழ்நாட்டு மக்களால் கொடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
9962366321

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேலூர்: பிரியாணி – மாவீரன் – போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

வேலூர்: பிரியாணி மாவீரன் போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!

0

லகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022-ஆம் ஆண்டில் 78.3 கோடி பேர், அதாவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமானோர், பட்டினியால் வாடியதாக ”உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலவரம்” (State of the Food Security and Nutrition in the World – எஸ்.ஓ.எஃப்.ஐ) என்ற ஐ.நா ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organization – எஃப்.ஏ.ஓ), விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் (International Fund for Agricultural Development – ஐ.எஃப்.ஏ.டி), ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund – யுனிசெஃப்), உலக சுகாதார அமைப்பு (World Health Organization – டபிள்யூ.எச்.ஓ) மற்றும் உலக உணவு திட்டம் (World Food Programme – டபிள்யூ.எஃப்.பி) ஆகிய ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஐந்து சிறப்பு முகமைகள் இணைந்து ஜூலை 12 அன்று இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டன.


படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!


ஏற்கனவே கடந்த ஜனவரியில் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உலகம் முழுவதிலும் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது. உலகெங்கிலும் 82 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக அவ்வறிக்கை கூறியது. தற்போது வெளியாகியுள்ள ஐ.நா ஆய்வறிக்கையும் இதை உறுதி செய்கிறது.

இந்த ஐ.நா அறிக்கையில், ”கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. பட்டினி கிடந்தோரின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைவிட 2022-ஆம் ஆண்டில் 12.2 கோடி அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் 14.8 கோடி குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட கோடிக் கணக்கான குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட 14.8 கோடி குழந்தைகள் (22.3 சதவீதம்) வளர்ச்சி குன்றியுள்ளனர் (stunted); 4.5 கோடி குழந்தைகள் (6.8 சதவீதம்) வயதுக்கேற்ற எடை அற்றவர்களாக உள்ளனர் (wasted); மேலும் 3.7 கோடி குழந்தைகள் (5.6 சதவீதம்) அதிக எடையுடன் (overweight) இருந்தனர்.


படிக்க: பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !


கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு வகையான உறுதியற்ற பொருளாதார தன்மையை எதிர்கொண்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்றால் விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மேற்கு ஆசியா, கரீபியன், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் இன்னும் மீளவில்லை. மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரினால் உணவு தானிய விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, பல நாடுகளில் வானிலை சீரற்றதாகவும், சில நேரங்களில் எதிர்மாறாகவும் இருந்தது. இவற்றின் காரணமாக உழைக்கும் மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுகின்றனர்.

இலாப வெறியால் உந்தித் தள்ளப்படும் முதலாளித்துவம் தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது. அதன் விளைவாகத்தான் உழைக்கும் மக்கள் தாங்கள் வாழ்வதற்கான குறைந்தபட்ச உணவைக் கூடப் பெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு மட்டும்தான். ஆனால், பெருமுதலாளிகளின் சொத்துகளின் மதிப்புகளோ, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் கூட அதிகரித்துத்தான் உள்ளது. இதை ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. சுரண்டலால் உயிர்வாழும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கு முடிவு கட்டாமல் பட்டினியை ஒருபோதும் ஒழிக்க முடியாது.


பொம்மி

ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!

0

ப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அன்றிருந்து இன்று வரை தாலிபான்களின் ஆப்கானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மேலும் தீவிரமடைந்து கொண்டே வருகின்றன.

ஆகஸ்ட் 2021-இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, தாலிபான்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதித்தனர். பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லவும் தடை விதித்தனர். அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்குத் தடை விதித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியவும் பெண்களுக்கு தடை விதித்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

பொது வெளியில் பெண்களை நடமாடவிடாமல் செய்து, பொருளாதார ரீதியாகவும் கல்வி அறிவு ரீதியாகவும் எவ்வித அறிவும் கிடைக்காமல் அவர்களை அடிமைப்படுத்துவதற்கே இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் தாலிபான்கள். தற்போது அழகு நிலையம் வைத்திருக்கும் பெண்கள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறார்கள்.

2023 ஜூலை 4-ஆம் தேதியன்று, நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை ஒரு மாதத்திற்குள் மூட வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இது பெண்களை பொது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாகும்.


படிக்க: தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!


இந்த உத்தரவு பெண்களால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான வணிகங்களை நிறுத்துவதற்கு கட்டாயப்படுத்தும். இதுதான் பெரும்பாலும் குடும்பங்களுக்கு ஒரே வருமான ஆதாரம். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான சில வாய்ப்புகளில் ஒன்றை சட்டவிரோதமாக்கும்.

“இந்தச் சமூகத்தில் பெண்கள் இல்லாமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று காபூலில் இருந்த ஒரு அழகு நிலையத்தின் மேலாளர் கூறினார். “நாங்கள் ஆப்கானிஸ்தானில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன்” என்றார் அவர்.

காபூலில் வசிக்கும் சஹர், சில வாரங்களுக்கு ஒருமுறை தனது தலைமுடி மற்றும் நகங்களை வெட்டிக்கொள்வதற்காக ஒரு அழகு நிலையத்திற்குச் செல்வார். பொது வெளிக்குச் செல்லும் இறுதி வழியும் இப்போது துண்டிக்கப்பட்டதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.

“பெண்கள் பூங்காக்களில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே நாங்கள் எங்கள் நண்பர்களைச் சந்திக்க ஒரு நல்ல இடமாக அழகு நிலையம் இருந்தது… ஒருவரையொருவர் பார்க்கவும், மற்ற பெண்களைச் சந்திக்கவும், மற்ற பெண்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், இதுதான் எங்களுக்கு கிடைத்த ஒரே இடம்” என்று அவர் கூறினார்.

“இப்போது அவர்களை எப்படி சந்திப்பது, அவர்களை எப்படிப் பார்ப்பது, ஒருவருக்கொருவர் எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. இது எங்களுக்கும் ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

புருவங்களை வடிவமைத்தல், ஒரு பெண்ணின் இயற்கையான கூந்தலை அதிகரிக்க மற்றவர்களின் தலைமுடியைப் பயன்படுத்துதல் மற்றும் மேக்-அப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இஸ்லாமுக்கு எதிரான நடைமுறைகள் என்று தாலிபான்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!


இந்தத் தடை குறைந்தது 60,000 பெண்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பெண்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். “இந்த நாட்டில் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை” என்று ஒரு அழகு நிலைய உரிமையாளர் கூறினார்.

தாலிபான்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் பெண்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் ஆச்சரியமில்லை.

ஆப்கான் பெண்கள் பொதுவெளிக்கு செல்ல பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பதின்ம வயதுப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் 80% தற்கொலை முயற்சிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் பெண்கள் மிக அதிக அளவிலான உளவியல் துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மனநல ஆலோசகர்கள் பெண்களை இன்னும் தடை செய்யப்படாத சில செயல்பாடுகளைத் தொடர ஊக்குவித்து வருகின்றனர். ஆனால் தடைகளின் வட்டம் பெரிதாகி வருவதால் பரிந்துரைகள் செய்யமுடியாத நிலையே தற்போது நிலவுகிறது.

ஒரு பயங்கரவாத மத அடிப்படைவாத அமைப்பு ஒருநாட்டைக் கைப்பற்றியிருப்பது என்பது ஒரு கொடூரமான நிகழ்வு. அந்த பங்கரவாத தாலிபான்களின் இரண்டாண்டுகால ஆட்சியில் பசி-பட்டினி-வறுமை ஆகியவற்றில் சிக்கித் தவிக்கிறார்கள் ஆப்கான் உழைக்கும் மக்கள். பெண்களை சமூகப் புறக்கணிப்பு செய்யும் பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி அவர்களை மனநல பாதிப்பிற்கும் தற்கொலைக்கும் தூண்டிவருகிறது ஆகக்கொடுரமான தாலிபான் அரசு. ஆப்கான் பெண்கள் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை.


காளி

மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

0

காராஷ்டிரா மாநிலம் ஜல்கானின் எரண்டோல் தாலுகாவில் உள்ள ஜும்மா மசூதியின் உள்ளே முஸ்லீம் ஆண்கள் கூடி தினமும் ஐந்து முறை தொழுகை நடத்தி வந்தனர். வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இம்மசூதி, 800 ஆண்டுகள் பழமையானது. வடக்கு மகாராஷ்டிராவில் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது.

இம்மசூதி ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்று சங்கப் பரிவார அமைப்பு ஒன்று அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டல் இந்த மசூதியில் வழிபாடு நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இம்மசூதி திடீரென முஸ்லீம்கள் அணுக முடியாததாக மாறிவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், மசூதி வளாகத்தில் தொழுகை நடத்த உடனடியாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அப்பகுதியில் போலீசைக் குவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இம்மசூதியை ”சர்ச்சைக்குரியது” என்று கூறிய மாவட்ட ஆட்சியர், அதை நிர்வகிக்கும் பொறுப்பை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இடைக்காலத் தடை உத்தரவு மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான அவரது அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளையால் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை குழுவின் தற்காலிக உறுப்பினர்களில் ஒருவரான அஸ்லம், “முன்னெப்போதும் இல்லாத விதத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, மாநிலத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான இம்மசூதியை வகுப்புவாதமயமாக்குவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாண்டவ்வாடா சங்கர்ஷ் சமிதி (Pandavwada Sangharsh Samiti) என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு அளித்த புகாரின் பேரில் பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மசூதி திடீரென சர்ச்சைக்குரிய இடமாக மாற்றப்பட்டுள்ளது. புகார்தாரர் பிரசாத் மதுசூதன் தண்டவாடே, கடந்த மே மாதத்தில் ஜல்கான் மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டலிடம் புகார் மனுவை அளித்தார். தண்டவாடே (அவரின் பேஸ்புக் சுயவிவரத்தின்படி) ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் பஜ்ரங் தள் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். தண்டவத்தே தனது புகாரில், இம்மசூதி ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது கட்டப்பட்டது என்றும், இது சட்டவிரோதமானது என்றும், இதை மாநில அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை இந்த இடத்தை ’சட்டவிரோதமாக’ ஆக்கிரமித்துள்ளதாகவும் புகார்தாரர் கூறியுள்ளார்.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை உறுப்பினர்கள் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஜூன் மாத இறுதியில் நோட்டீஸ் வரும் வரை இந்தக் கூற்றுகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். அறக்கட்டளை குழுவின் தற்காலிக உறுப்பினரான அஸ்லம் ”குறுகிய காலத்தில், எங்கள் வழக்கை வாதாடுமாறு எங்களிடம் கோரப்பட்டது. இந்நிலையில் திடீரென, ஜூலை 11 அன்று, மாவட்ட ஆட்சியர் ஒரு தடை உத்தரவை பிறப்பித்து விட்டார்” என்று கூறினார்.

மசூதியின் அறக்கட்டளை குழுவுக்கு மட்டுமல்லாமல் வக்பு வாரியம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கும் (ஏ.எஸ்.ஐ) மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு பழங்கால அமைப்பு என்ற அறக்கட்டளையின் கூற்றுகளை ஏ.எஸ்.ஐ-யும் அங்கீகரித்துள்ளது. 1986-ஆம் ஆண்டில் தொல்லியல் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்ட காலத்திலிருந்து, மசூதி வளாகத்திற்குள் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசூதி காலங்காலமாக முஸ்லீம்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இடம்தான் என்பதைத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

வக்பு சட்டத்தை மேற்கோள் காட்டி, புகாரை விசாரிக்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை எதிர்த்து வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்ததுள்ளது.

வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொயின் தாசில்தார் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”தடை உத்தரவு பிறப்பிக்கும் மாவட்ட ஆட்சியரின் முடிவு அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், இது வக்பு தீர்ப்பாயத்தின் சட்ட அதிகார வரம்பை மீறுவதாகும் என்றும் கூறினார். இங்குச் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதில் மாவட்ட ஆட்சியர் தலையிடலாம்; மற்றவை அனைத்தும் வக்பு வாரியத்தின் பொறுப்பு. இந்த மசூதி 2009-ஆம் ஆண்டு முதல் வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்தாக உள்ளது, அதில் எந்த குழப்பமும் இல்லை” என்று மொயின் தாசில்தார் தெளிவுபடுத்தினார். மேலும், வாரியம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த பதிலில், சட்ட ரீதியான நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் போது வக்பு கூறியதை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து விட்டதாக மொயின் தாசில்தார் குற்றம்சாட்டினார்.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


”இடைக்கால உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம்” என்று மொயின் தாசில்தார் மேலும் கூறினார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இடைக்காலத் தடை உத்தரவு அடுத்த விசாரணை வரை தொடரும்.

இதற்கிடையில், மஸ்ஜித் அறக்கட்டளை பிரிட்டிஷ் இந்திய அரசாங்க காலங்களிலிருந்து அவ்வப்போது வழங்கப்பட்ட உத்தரவுகள் அடங்கிய ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ”நியாயமான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முன்வரவில்லை. மனுதாரரிடம் இருந்து எதையும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. மனுதாரருக்கு வாய்ப்பளிக்காமல் 11.07.2023 அன்று ஜல்கான் மாவட்ட ஆட்சியர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 மற்றும் 145-ன் கீழ் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்” என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மஸ்ஜித் அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது.

கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று மதவெறியைத் தூண்டி அதன்மூலம் தனது செல்வாக்கை விரிவு படுத்திக்கொள்ளும் உத்தி காவி பாசிஸ்டுகளால் தொடர்ந்து கையாளப்பட்டுவரும் ஒன்றுதான். ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்துத்துவ கும்பல்கள் தொடர் பேரணிகளை நடத்தி வருகின்றன; அங்கு ‘பசுப் பாதுகாப்பு’ கொலைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் அரசு எந்திரத்தின் துணையுடன் நடந்தேறி வருகின்றன. அம்மாநிலத்தில் மத முனைவாக்கத்தை சங்கப் பரிவார கும்பல் துரிதப்படுத்துவதையே தற்போது நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!

0

மிழ்நாட்டிலேயே முதன்முறையாக Public Private Partnership (PPP) என்ற பெயரில் தனியார் பங்களிப்போடு நீரேற்று மின் நிலையங்களை அமைக்கப்போவதாக  திமுக அரசு சென்ற ஆண்டு  அறிவித்திருந்தது.

இவ்வாண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் மேற்கண்ட PPP திட்டத்தில் 15 நீரேற்று மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் 14500 MW அளவிலான மின்உற்பத்தியை உருவாக்க ரூ.77000 கோடி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

மேற்கண்ட மின் நிலையங்கள் அமைக்கும் ஆணையை ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான BHEL-க்கு வழங்காமல் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து, RSS-BJP-யின் தொழிற்சங்க பிரிவான BMS (பாரதீய மஸ்தூர் சங்கம்) பல்வேறு கட்ட கவனஈர்ப்பு போராட்டங்களை திருச்சி பெல் ஆலைப் பகுதிகளில் நடத்தி வருகிறது.

படிக்க : தேவாலயங்களின் மீது அதிகரித்து வரும் காவிகளின் தாக்குதல்கள்!

தனியார்மயத்தை நாடு முழுவதிலும் அசுர வேகத்தில் அமல்படுத்தி வருகிறது பாஜக. அதன் தொழிற்சங்கமான BMS தனியார்மயத்தை எதிர்ப்பதாகவும், பொதுத்துறைகளை காக்கப் போராடுவதாகவும் சொல்வது “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை”யாக இருக்கிறது.

நாடு முழுவதும் சுமார் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான 1824 அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மோடி அரசே தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே, மின் உற்பத்தி, துறைமுகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் கொழிக்க அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களையே கொண்டு வந்து மிக வேகமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

“நாட்டின் மின்துறையை மேம்படுத்த அரசு தனியார் கூட்டு (PPP) திட்டங்கள் அவசியம்” என்று பிரதமர் மோடி வெளிப்படையாகவே பேசி வருகிறார். நாட்டின் மின்துறையை மொத்தமாகத் தனியார்மயமாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வரும் மோடி அரசு, மாநில அரசுகளையும் நிர்பந்தித்து வருகிறது. அதற்காகவே “உதய் மின் திட்டம்”, “புதிய மின்சார திருத்தச் சட்டம்” போன்ற திட்டங்களை அடுத்தடுத்து ஏவி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை மின் உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனம் நலிவடைய அடிப்படைக் காரணங்களே மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகள் தான்.

உதாரணமாக, பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை உள்ளிருந்தே செயல்படுத்தவதற்கு, பெல் நிறுவனத்தின் இயக்குநர்களாக நேரடியாகவே பாஜக ஆட்களை நியமித்து வருகிறது.

மேலும் “ஆத்ம நிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா)என்ற கொள்கைகளால், பொதுத்துறை நிறுவனங்கள் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான சூழல் பாதகமாகவும் நட்டம் ஏற்படும் வகையிலும் மாறியுள்ளது.

இதனால் தனியார் நிறுவனங்களோடு கடுமையான போட்டி போட வேண்டிய சூழல் பெல் நிறுவனத்திற்கு உருவாகியுள்ளது. மேற்கண்ட குறிப்பிட்ட தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளையும், தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளையும் மிகத்தீவிரமாக மோடி அரசு அமல்படுத்தியது தான் பெல் நிறுவனம் நலிவடையக் காரணங்களாகும். BMS சங்கம் இதைப்பற்றியெல்லாம் இதுவரை வாய் திறந்ததில்லை.

மேலும், பொதுத்துறைகளை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்று ஒரு தனித் துறையையே (Department of Investment and Public Asset Management (DIPAM) உருவாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு சேவைசெய்து வருகிறது மோடி அரசு. Strategic sale என்ற பெயரில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கடந்த 9 ஆண்டு காலத்தில் மொத்தமாகவே தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் (National Monetisation Pipeline) “தேசிய பணமாக்கல் திட்டம்” என்ற பெயரில் பொதுத்துறை மற்றும் அரசின் சொத்துக்களை பல வருடங்களுக்கு தனியாருக்கு குத்தகை எனும் பெயரில் தாரைவார்க்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் “தொழில்களை நடத்துவது அரசின் வேலையல்ல; அது தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் வேலை” (“Government has ‘no business to be in business”) என்கிறார் மோடி.

ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜகவை கண்டுகொள்ளாத BMS சங்கம், நீரேற்று மின்திட்ட விவகாரத்தில் திமுகவிற்கு எதிராக மட்டும் போர்க்கொடி பிடிக்கிறது. இங்கே திமுக அரசின் தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்பதாக காட்டி பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிறுவிக்கொள்ள முயலும் BMS, ஒன்றிய RSS-BJP அரசின் மேற்கண்ட கார்ப்பரேட் ஆதரவு தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருபோதும் இதுபோல போராடியது கிடையாது.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களில் கூட ஒருபோதும் BMS கலந்துகொண்டது கிடையாது.

படுமோசமான ஊழல் கட்சியும், கார்ப்பரேட் சேவையில் உலகில் நிகரற்ற பாசிச தன்மையும் கொண்ட பாஜக-வின் தொழிலாளர் அமைப்பு, தனியார்மயத்திற்கு எதிராக பொதுத்துறை பாதுகாப்பு என கூச்சல் போடுவது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில கட்சிகளை ஒழித்துக்கட்டவும், தொழிலாளர்களை ஏய்த்துப் பிழைக்கவும்  நடத்தும் நாடகமேயன்றி வேறொன்றுமில்லை.

BMS-ன் இந்த இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்ய வேண்டியது இன்று நாட்டில் நிலவும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

படிக்க : கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

அதே நேரம் திமுக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. 12 மணி நேர வேலைச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தபோது அதை தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்து முறியடித்ததுபோல, திமுக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் போராட வேண்டும்.

பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.

எனவே, திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்த தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகளின் செயலொற்றுமை தான், பாசிச சக்திகளை தமிழக உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒன்றிய பாசிச பாஜக அரசையும் கார்ப்பரேட் சூறையாடல்களையும் எதிர்த்து முறியடிக்க உதவும்.


பாரி

கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

0

மீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் இருந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், கட்சியின் கொடி, சின்னம் அனைத்தும் தங்களின் அணிக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், பா.ஜ.க இது போன்ற கட்சித் தாவல்களை இருமுறை நடத்தியுள்ளது.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தமுள்ள 55 சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியைவிட்டு விலகினர். அதனையடுத்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (Maharashtra Vikas Aghadi – MVA) அரசு ஆட்சியை இழந்தது. பின்னர், ஷிண்டே பா.ஜ.க-வோடு கூட்டணியமைத்து முதல்வராகப் பதவியேற்றார்.

கட்சித் தாவல்களின் வரலாறு

கட்சித் தாவல் என்பது பாசிச இருள் சூழ்ந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் நடைபெற்றுவரும் புதியதொரு நிகழ்வல்ல. அது ‘சுதந்திர’ இந்தியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும். ‘சுதந்திர’த்திற்குப் பின்பு, காங்கிரஸ் சோசலிச கட்சி மற்றும் ஜனா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கட்சித் தாவலின் மையங்களாக விளங்கின. 1960-களில், குறிப்பாக 1967-ஆம் ஆண்டில், காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தபோது கட்சித் தாவல் சம்பவங்கள் அதீத அளவில் நடைபெற்றன.

ஆரம்பத்தில் கட்சித் தாவல்களின் மையமாக இருந்த ஹரியானாவில் இருந்துதான் ”ஆயா ராம் கயா ராம்” என்ற பிரபலமான சொற்றொடர் தோன்றியது. கயா லால் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு வருடத்திற்குள் பல அரசாங்கங்களைக் கவிழ்க்க உதவினார். கயா லால் ஒரே நாளில் 3 மூன்று முறையும், 15 நாட்களில் 4 முறையும் கட்சி தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-களில் பஜன் லால் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஹரியானாவின் கயா லாலாக மாறினார். ’பண்ணைவீடு அரசியல்’ (farmhouse politics) என்ற சொல் கூட ஹரியானாவில் தோன்றியதுதான். ஏனெனில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சிகளுக்குத் தாவாமல் தடுப்பதற்காகப் பண்ணை வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இது தற்போதைய ’ரிசார்ட்’ அரசியலின் முந்தைய வடிவமாகும்.

‘சுதந்திர’த்திற்குப் பிறகு, முதல் நான்கு தசாப்தங்களில் காங்கிரஸ் பல கட்சி தாவல்களை நடத்தியுள்ளது. மத்தியில் வலுவான காங்கிரஸ் அரசாங்கம் இருந்த போதெல்லாம், மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் காங்கிரசுக்குத் தாவினர். 1971-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஆட்சியில் இந்தியா முழுவதும் கட்சித் தாவலினால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. மேலும், 1980-ஆம் ஆண்டில் இந்திரா ஆட்சி மீண்டும்  அமைந்தபோது இம்மாதிரியான ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகள் மீண்டும் நடத்தப்பட்டன.

மொரார்ஜி தேசாய் அரசாங்கத்திலிருந்து 76 எம்.பி-க்கள் கட்சி தாவியதன் மூலம் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியமைத்தார். அதனையடுத்து, கம்யூனிஸ்ட் அல்லாத எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்து நாடு தழுவிய அளவில் பல மாநிலங்களில் அரசாங்கங்களை அமைக்க இந்திரா காந்திக்கு உதவினர். உதாரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் ஜனதா கட்சி காங்கிரசில் இணைந்தது; இதேபோல், ஹரியானாவில் 21 எம்.எல்.ஏ-க்களுடன் பஜன் லால் காங்கிரசுக்குத் தாவினார். அதேசமயம், 1980-களில் ஆட்சியில் நீடிப்பதற்காகக் காங்கிரஸை விட்டு வெளியேறவும் பஜன் லால் போன்றவர்கள் தயங்கவில்லை.


படிக்க: இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!


இந்த கட்சித் தாவல்களுக்கு அதிகார‌ ஆசை போன்ற காரணங்கள் இருந்தாலும் பல கட்சி அரசியல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக காங்கிரஸின் தனித்துவமான இருப்பு என்பதுதான் முதன்மைக் காரணமாக அமைந்தது. இந்திய அரசியல் சக்திகள் காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு என இரு பிரிவுகளாகப் பிரிந்தன.

காங்கிரஸில் கருத்தியல் அடித்தளம் இல்லாதது கட்சி தாவல்களுக்கு முக்கியக் காரணமாகும். எடுத்துக்காட்டாக, 1980-களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவும் கட்சி தாவல்களில் இருந்து தப்பின. இதற்கு நேர்மாறாக, பிற சாதி அடிப்படையிலான, குடும்ப அடிப்படையிலான கட்சிகளால் இதிலிருந்து தப்ப முடியவில்லை.

கட்சித் தாவலை அதிகமாக அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சிதான் 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி  ஆட்சியில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அதன் பின்னரும் கட்சித் தாவல்கள் தடையின்றி நடைபெற்றன. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று ஆரம்பத்தில் இருந்தது. பின்னர், அது 2003-ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றப்பட்டது.

பாசிச பா.ஜ.க பெரும்பான்மை பெற்ற பின்பு

2014-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பு, பா.ஜ.க ஒப்பீட்டளவில் பல மாநிலங்களில் வலுவாக இருந்தது. மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் கோவாவில் அரசாங்கங்களைக் கொண்டிருந்தது; பீகார் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களின் அரசாங்கங்களில் ஒரு கூட்டாளியாக இருந்தது.

2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்ததும் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-விற்கு கட்சித் தாவல்கள் தொடங்கிவிட்டன. மக்களவையில் காங்கிரஸை 44 இடங்களாகக் குறைத்த ‘மோடி அலை’யில் சவாரி செய்ய பல தலைவர்கள் கட்சி மாறி பா.ஜ.க-வில் இணைந்தனர். ஹரியானா, அசாம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்குக் காங்கிரஸில் நடந்தேறிய இந்த கட்சி விலகல்கள் முக்கியமானவை.

அதே நேரத்தில், தனது ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’(காங்கிரஸ்-முக்த் பாரத்) திட்டத்தைத் தொடங்கியபோது, எம்.எல்.ஏ-க்களை ஈர்க்க திருத்தப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் உதவியை நாடியது பா.ஜ.க. ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறினால் அது தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்காது என்பதால் அதைத் தனது இலக்காக பா.ஜ.க நிர்ணயித்துக் கொண்டது.

அருணாச்சல பிரதேசத்தில் 2014 தேர்தலில் காங்கிரஸ் 47 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் பெமா காண்டு மற்றும் பிற எம்.எல்.ஏ-க்கள் அருணாச்சல மக்கள் கட்சிக்கு (People’s Party of Arunachal) தாவினர். இதனால் காங்கிரஸின் பலம் ஒரு இடமாகக் குறைந்தது. பின்னர், காண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து முதல்வராகத் தொடர்ந்தார்.


படிக்க: டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


மணிப்பூரில் 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற பின்னர் பா.ஜ.க இதேபோன்ற ஒன்றைச் செய்தது. நாகா மக்கள் முன்னணி (என்.ஜி.எஃப்) மற்றும் தேசிய மக்கள் கட்சி‌ (என்.பி.பி) ஆகிய பிராந்திய கட்சிகளுடனும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் ஆதரவுடனும் பா.ஜ.க அரசாங்கத்தை அமைத்தது. கட்சி மாறிய அந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து விலகவில்லை. மாறாக அவர் புதிய அரசாங்கத்தில் அமைச்சரானார்.

கர்நாடகாவில் 2008-ஆம் ஆண்டில் பா.ஜ.க ‘ஆபரேஷன் லோட்டஸ்’-ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு 2019-ஆம் ஆண்டில் அங்கு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசாங்கத்தைக் கவிழ்த்து, 2018-இல் இழந்த ஆட்சியை பா.ஜ.க மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 13 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மூவர் மற்றும் கே.பி.ஜே.பி-யைச் (KPJP) சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ ஆகியோர் பா.ஜ.க-வுக்குத் தாவினர்.

2014-ஆம்‌ ஆண்டு முதல் 405 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகியதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) 2020-ஆம் ஆண்டு அறிக்கை கண்டறிந்துள்ளது. அவர்களில் 182 பேர் (44.9%) பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த 405 எம்.எல்.ஏ-க்களில் 170 பேர் (42%) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பெருந்தொற்று இந்தியாவின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தபோது, பா.ஜ.க மற்றுமொரு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தனர். இது கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. தேர்தலில் தோல்வியடைந்த மற்றுமொரு மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

பாசிச பா.ஜ.க-வும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் பெரும்பான்மை இருந்தால் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க முடியும். மோடி ஆட்சியில் இந்த நிலைமை மாற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும் அதன் தலைவர்கள் மத்திய புலனாய்வு முகமைகளால் துன்புறுத்தப்படுகின்றனர். 2014-ஆம் ஆண்டு முதல், அமலாக்கத்துறை சுமார் 121 அரசியல் தலைவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இவர்களில் 115 பேர் (95%) பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பா.ஜ.க-வுக்குத் தாவ முடிவு செய்தால் மத்திய புலனாய்வு முகமைகளின் விசாரணைகள் வலுவிழந்து விடுகின்றன. காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி எனப் பலரின் மீதான வழக்குகள் பா.ஜ.க-வில் அவர்கள் இணைந்ததும் கிடப்பில் போடப்பட்டன; கைவிடப்பட்டன.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடையின்றித் தொடர்ந்தது. சி.பி.ஐ-யும் (CBI) அமலாக்கத்துறையும் (EB) இணைந்து எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மீது பல வழக்குகளைப் பதிவு செய்கின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும், அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுவது இதற்கு ஒரு உதாரணம். மற்றொரு உதாரணம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. இதுபோன்ற பல வழக்குகளில் அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கடுமையான விதிகளை அமலாக்கத் துறை பயன்படுத்துகிறது.

இந்த செயல்முறையை பா.ஜ.க வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, சுவேந்து அதிகாரி, நாராயண் ரானே போன்ற தலைவர்கள் பா.ஜ.க-வுக்குத் தாவிய நிலையில், கட்சி மாறாத மற்றவர்கள் விசாரணை மற்றும் தண்டனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி, 2022-ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கத்தை பா.ஜ.க கவிழ்த்தது. யாமினி ஜாதவ், பாவனா கவாலி, பிரதாப் சர்நாயக் போன்ற சிவசேனா தலைவர்கள் ஷிண்டே முகாமில் சேருவதற்கு முன்பு அவர்கள் மீது அமலாக்கத் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல், சமீபத்தில் கட்சி தாவிய தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் இருந்தன.


படிக்க: இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!


எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய ஒரு கட்சிக்கு வலுவான காரணம் இருந்தாலும், தகுதி நீக்க மனுக்கள் மீதான முடிவுகளைத் தாமதப்படுத்த சபாநாயகரின் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. ஷிண்டே அணி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த தகுதி நீக்க மனுக்கள் மீது மகாராஷ்டிரா சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை; எடுக்கவும் போவதில்லை.

முக்கியமான தேர்தல்களுக்கு முன்பு மத்திய புலனாய்வு முகமைகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது சோதனை நடத்துவதென்பது ஒரு பொதுவான போக்காக உருவெடுத்து உள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினரும் இதேபோன்றதொரு தாக்குதலை எதிர்கொண்டனர்.

கேரள தேர்தலுக்கு முன்பு, தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவு மற்றும் வற்புறுத்தலின் பேரில் அந்தக் குற்றத்தைச் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ சோதனை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே காங்கிரஸில் அதிகார மோதல் ஏற்பட்டபோது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கூட்டாளிகளின் வீடுகளில் பல சோதனைகள் நடத்தப்பட்டன.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மீது, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நிலம் கையகப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க உடனான கூட்டணியை விட்டு வெளியேறியபோது அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கட்சி மாற வைக்க பா.ஜ.க கையாளும் இழிவான வழிமுறைகளை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்கள்’ என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன. எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் செய்யப்படுவது ‘சாணக்கிய தந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டதால், பாசிச பா.ஜ.க இந்த இழிவான உத்திகளைப் பயன்படுத்துவது மேலும் அதிகரிக்கும் என்பது திண்ணம்.

நாம்‌ இதில் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று‌, கட்சித் தாவல் குறித்து; மற்றொன்று மத்திய புலனாய்வு முகமைகளின் அதிகாரம் குறித்து.

இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் கட்சித் தாவும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்களுக்கு அதிகாரம் இல்லை. இதனால் கட்சி தாவும் பேர்வழிகள் கலக்கமோ அச்சமோ இல்லாமல் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்சி தாவுகிறார்கள்.

அதேபோல், இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்திய புலனாய்வு முகமைகளுக்கு சட்டத்தின் மூலம் வழங்குகிறது. இந்த மத்திய புலனாய்வு முகமைகளைக் கொண்டுதான் பாசிச பா.ஜ.க எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறது. சட்ட வழிமுறைகளின் மூலம் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுதான் பாசிசம் மேன்மேலும் செழித்து வளர்கிறது.

எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பினுள் தீர்வைத் தேடுவதை விடுத்து, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்.


பொம்மி