Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 137

மங்களூர் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் குண்டுவெடிப்புகள் ஒருபோதும் நிற்காது !

ர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19 ஆம் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குண்டுவெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும் குக்கர் குண்டுடன் பயணித்த ஷாரிக் என்பவரும் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்ட சம்பவமானது அடுத்து சில மாதங்களில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் தற்போது குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் முக்கிய பங்கிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் கர்நாடகவின் டிஜிபி “இது ஒரு பயங்கரவாத சம்பவம்” என்று அறிவித்தார். உடனேயே ஷாரிக் எங்கெங்கெல்லாம் சென்றார் என்று ஊர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஊடகங்களில் பரப்பப்பட்டது. தமிழ்நாட்டில் நாகர்கோயில், மதுரை, ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு அவர் வந்ததாகவும் கூறின ஊடகங்கள். ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கிக்கொடுத்த ஆசிரியர் ஒருவரை தமிழ்நாடு போலீசு விசாசித்து முடித்து இப்போது கர்நாடக போலீசு விசாரித்துக்கொண்டு இருக்கிறது.

குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டதும், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு பரிந்துரை செய்ததும் என அடுத்தடுத்து இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இசுலாமிய பயங்கரவாத சம்பவமாக இது இருக்க வாய்ப்பில்லை என்றோ காவி பாசிஸ்டுகளின் சதியாக இருக்குமோ? என எதையும் உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

மதச்சார்பின்மை பேசுவோரும் அறிவு ஜீவிகளும் இப்படிப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் – இசுலாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் எனும்போது – நடைபெறும்போது முசுலீம்களுக்கு அறிவுரை கூறுவதும் முசுலீம் இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக் கூடாது என்றும் புலம்பி வருகின்றனர். ஆனால் முசுலீம் இளைஞர்கள் இசுலாமிய பயங்கரவாதத்தை நோக்கிச் செல்வதற்கு ஊற்றுக்கண் எது என்பதை பேசுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்க சாதியினர் தாக்குதலின்போது “இரண்டு பேரும் அமைதி காக்கவும்” என்பதற்கு ஒப்பான அறிவுரைகள். பாதிக்கப்பட்டோருக்கு வர்க்க மற்றும் சமூக நல்லிணக்க அரசியலின் மீது நம்பிக்கை இன்றி பயங்கரவாத செயல்கள் மீதே நாட்டம் ஏற்படும்.

நீங்கள் சாலையில் அல்லது பேருந்தில் அல்லது ரயிலில் சென்றுகொண்டு இருக்கிறீர்கள். யாரையும் சோதனையிடாத போலீசு நீங்கள் தாடி வைத்திருப்பதனாலேயும் குல்லா அணிந்திருப்பதனாலேயும் மட்டுமே சோதிக்கப்படுகிறீர்கள். அச்சுறுத்தப்படுகிறீர்கள் புகைப்படம் எடுக்கப்படுகிறீர்கள், அலைக்கழிக்கப்படுகிறீகள், முசுலீம் என்பதலேயே நீங்கள் சந்தேகப்படுவதற்கும் நிராதரவாக இருப்பதற்கு தகுதியானவராகிறீர்கள். உங்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளுகு எதிராக இச்சமூகம் அமைதியாக இருக்கும், உங்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்தும் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதிலிருந்து இப்பிரச்சினையை பார்க்கத்தொடங்க வேண்டும்.

எவ்விதப் பிரச்சினைக்கும் தனிநபர் பயங்கரவாதம் தீர்வாகப்போவதில்லை. ஆனால் தனிநபர் பயங்கரவாதம் உருவாகுவதற்கான அடிப்படைகள் என்ன என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். “இப்படிப்பட்ட முசுலீம்களின் பயங்கரவாத நடவடிக்கைகளே ஆர்.எஸ்.எஸ்–ஐ வளர்த்துவிடுகிறது” என்று தலைகீழாக சிந்திப்பது என்பதே பார்ப்பனிய – காவி மன நிலையே.

“தாழ்த்தப்பட்ட மக்கள் சங்கம் அமைத்து உரிமைகளுக்காக போராடுவதால்தான் ஆதிக்க சாதியினரின் கொடுமைகள் அதிகமாக இருக்கின்றன, தொழிற்சங்க கூலி உயர்வுப் போராட்டமே முதலாளிகளின் அடக்குமுறைக்கு காரணம், கம்யூனிஸ்டுகள் விவசாயிகளை தூண்டிவிட்டதால்தான் கீழ்வெண்மணி சம்பவம் நடைபெற்றது”. இப்படி காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் மீது பழியைத் தூக்கிப்போடும் பழக்கம் ஒன்றும் புதிதல்ல. அதன் தொடர்ச்சியாகவே இசுலாமிய பயங்கரவாதத்தால் காவி பயங்கரவாதம் வளர்கிறது என்ற பொய்யான கருத்து -அது பொய்யாக இருந்தாலும்- பலர் மனதில் நிலைபெற்றுவிட்டது.

மோடி தன்னுடைய எட்டாண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். இந்த எட்டாண்டுகளில் சிறுபான்மையினர் குறிப்பாக முசுலீம்கள் இழந்த உரிமைகள் சொல்ல முடியாது. காசுமீரின் சிறப்புரிமை பறிப்பு – கொடும் அடக்குமுறைகள் – ராணுவத்தாக்குதல்கள், பாபர் மசூதி பறிப்பும் தீர்ப்பளித்த பின்னர் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்தும் – அடுத்து காசி, மதுரா மசூதிகள் இடிபடுவதற்கு காத்திருப்பு, உத்தரபிரதேசத்தில் தொழுகை நடத்தவும்-பாங்கு ஓதவும் தடை, ஹிஜாப் தடை – இது தொடர்பான வழக்கில் நீதிமன்றங்களின் அணுகுமுறை, மாட்டுக்கறி சாப்பிட்டார் – மாடு வைத்திருந்தார் என்று கூறி அடித்துக் கொல்லப்பட்ட (mob lynching) முசுலீம்கள் ஏராளம், ஒரு கண்ணியமான வாழ்வை இனியும் இந்த மண்ணில் எதிர்பார்க்க முடியாது என்றே சூழலை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிசத்தை ஒழித்துக்கட்டாமல் அல்லது ஒழித்துக்கட்டுவதற்கான தீர்க்கமான முன்னெடுப்பை முசுலீம் அல்லாத மற்றவர்கள் முன்னெடுக்காமலேயே அல்லது நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை உருவாக்காமலேயே முசுலீம்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட குண்டுவெடிப்புகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நடத்தப்பட்டதென்பது உலகறியும். ஷிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் நாடெங்கு நடைபெற்ற பயங்கவாதத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்-க்கு பங்கு இருப்பதை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த சதீஷ் மின்னி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் முழுநேர ஊழியர் இது தொடர்பாக நூலே எழுதியுள்ளார். ஆனாலும் நாடு அமைதியாகத்தானே இருக்கிறது.

நாடெங்கும் ஆயுத பயிற்சி எனும் ஷாகாக்கள் நடத்தப்படுகின்றன, ஆயுத பயிற்சி எனும் ஷாகாக்கள் நடத்தப்படுகின்றன, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நாடெங்கும் தயாரித்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நேரடியான உள்நாட்டுப்போரை தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். அதற்கெதிராக மக்கள் அரசியல் ரீதியாகவும் படையாகவும் திரட்டப்படாமலிருக்கும் போது, பாதிக்கப்படும் தனது சமூக மக்களுக்கு தன்னால் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு முசுலீம் இளைஞன் என்ன செய்வார்?

வழிதவறி அவர் போக வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம். அதன் மூலம் தான் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூறியே மக்களை பிளவுபடுத்தவும் முடியும்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட குண்டுவெடிப்புகள் பற்றி முன்னாள் ஊழியர் ஒப்புதல் வாக்குமூலம்!

ஆர்.எஸ்.எஸ் பாசிச அமைப்பிடம் படை உள்ளது, ஆயுதம் உள்ளது, இராணுவம் உள்ளது ஏன் ஒட்டு மொத்த அரசே அவர்களிடம் தான் உள்ளது. நிராயுதாபாணியாக இருக்கும் மதசார்பற்ற மற்றும் பாசிச எதிர்ப்பாளர்களை நம்பி வருவதற்கு என்ன இருக்கிறது? பார்ப்பன – இந்து மதவெறி பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டாமல் இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.

விரக்தியடைந்த முசுலீம் இளைஞனிடம் “பொறுமையாக இரு தேர்தல் வரை” என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருப்பதன் பயன் என்ன?. அந்த இளைஞன், ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு, அதை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்-ன் முதல் இலக்கு முசுலீம்கள் என்பதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்பட்டால் தாங்கள் எப்போதும் வேண்டுமானாலும் அகதிகளாக்கப்படுவோம் என்பதும் அவன் நன்கு அறிவான்.

தேர்தலை நம்பிக்கொண்டு திட்டமும் இலக்கும் இல்லாதவர்களுக்கு, வழி தவறும் முசுலீம் இளைஞர்களைப் பார்த்து குறை கூறுவதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்ன?

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச சக்திகளுக்கெதிரான உண்மையான தடுப்பரணை கட்டுவது இன்றைய தலையாயக்கடமை. பாசிஸ்டுகளை வீழ்த்த ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும், தொழிற்சாலையிலும் என அனைத்து இடங்களிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து பாசிஸ்டுகளை களத்தில் சந்திக்க வேண்டும் என்பதை திட்டமாக்குவோம். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிஸ்டுகளுக்கு எதிரான தடுப்பரணை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவோம்.

மருது

ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்

யார் ரிஷி சுனக்?

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் இந்தியரா, பாகிஸ்தானியரா, ஆப்பிரிக்கரா, பிரித்தானியரா, இந்துவா, கிறித்துவரா, பார்ப்பனரா, பார்ப்பனர் அல்லாதவரா, பார்ப்பன அடிமையா, மாட்டுக்கறி சாப்பிடுவாரா, இந்திய மருமகனா, இடதுசாரியா, வலதுசாரியா, பணக்காரரா என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை ஒன்று உண்டு.

அந்த உண்மை என்னவெனில், இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அவர் ஒரு வந்தேறி. வந்தேறி என்ற சொல் பயன்படுத்துவதற்கு வக்கிரமாக அல்லது இழிவான பொருள் தருகிறது என்ற உணர்வு இருக்குமானால், குடியேறி (அல்லது புலம்பெயர்ந்தவர்) என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்ளலாம். Immigrant என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ச் சொல்லே குடியேறி.

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் ரிஷி சுனக்கின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் குடியேறி பின்னர் பிரிட்டனின் குடியேறியபோது அங்கு பிறந்தவர் தான் ரிஷி சுனக். பின்னர் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை திருமணம் செய்து கொண்டதின் மூலமும் தனது இந்திய அடையாளத்தை வலுப்படுத்திக் கொண்டார் ரிஷி சுனக். மற்றபடி அவருக்கும் இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தற்போதைக்கு அவர் பிரிட்டனின் பிறந்து வளர்ந்த பிரிட்டன் குடிமகன். பிரிட்டனில் பிறந்ததால் அவருக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைத்ததே அன்றி, அவர் இனத்தால் பிரித்தானியர் அல்ல. வழிவழியாக பிரிட்டனில் வசித்த குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல. பிறப்புவழி பிரிட்டன் குடியுரிமை கொண்டவராக ரிஷி சுனக் இருப்பினும், பிரிட்டனைப் பொறுத்தவரையில் அவரது முதன்மை அடையாளம் வந்தேறி.


படிக்க : அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி! | புஜதொமு


உலகின் பெரும்பகுதியை கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம் கட்டி ஆண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வெள்ளையர் அல்லாத ஆசிய வம்சாவளியைச் சார்ந்த குடியேறி ஒருவர் பிரதமராக பதவியேற்றதின் பின்னணியையும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் விவாதிப்பது மிக தேவையான ஒன்றாக மாறியிருக்கிறது.

வந்தேறி சூழ் உலகு:

நாகரிகமும் தொழில்நுட்பமும் வளராத காலம் தொட்டு இன்று வரை வெளிப் பிரதேச மக்களின் குடியேற்றத்தை (அதாவது வந்தேறிகளைச்) சந்திக்காத எந்த ஒரு நிலப்பரப்பும் இந்த பூமிப் பந்தில் இல்லை. ஏனெனில் மனிதர்கள் வளமான வாழ்க்கையை தேடி புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர் என்பதற்கு வரலாற்று சாட்சியங்கள் எண்ணற்றவை உண்டு. எவரும் எந்த ஒரு நாட்டின் நிரந்தர குடியாக இருந்ததே இல்லை. தேசியம் என்ற கருத்தாக்கம் வளருவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே குடியேற்றம் நடந்து வருகிறது.

தேசியமும் நாகரிகமும் தொழில்நுட்பமும் வளராத காலத்தில் நடந்த வெளி நாட்டவர் குடியேற்றத்தினால் உருவான பிரச்சினைகளும், தேசியமும் நாகரிகமும் தொழில் நுட்பமும் வளர்ந்த தற்காலத்தில் வெளி நாட்டவர் குடியேற்றத்தினால் உருவாகும் பிரச்சினைகளும் வெவ்வேறானவை.

தேசியமும் நாகரிகமும் தொழில் நுட்பமும் வளருவதற்கு முந்தைய காலத்தில், வெளிநாட்டவர் இன்னொரு நாட்டில் குடியேற அரசியல் தடைகள் பெருமளவு ஏதும் இல்லையெனினும், இன்றைய நவீன போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் குடியேறுவது மிகக் கடினமான ஒன்றாகவே நீண்ட காலம் இருந்தது.

போக்குவரத்து வசதிகள் வளர்ந்த பின்னர் தேசியம், தேசிய எல்லைகள் என திட்டவட்டமான தடைகள் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிராக உருவாகியுள்ளன. ஆனால் வெளிநாட்டவர் குடியேற்றங்கள் குறைந்து விட்டனவா? இல்லை. மாறாக நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் நடைபெற்ற குடியேற்றத்தை காட்டிலும் தற்போது அதிகமான குடியேற்றம் சட்ட ரீதியாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் நடைபெறுகிறது.

பிரிட்டனின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 சதவீத மக்கள் குடியேறிகள் (வந்தேறிகள்). அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், வெளிநாட்டு குடியேறிகள் மற்றும் அவர்களின் (அமெரிக்காவில் பிறந்த) குழந்தைகள் எண்ணிக்கை தோராயமாக 84.8 மில்லியன் மக்கள், அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 26 சதவீதம் வந்தேறிகளே. கனடா, ஆஸ்திரேலியா, சௌதி அரேபியா, அமீரகம், ஜெர்மனி, சிங்கப்பூர் என எந்த பொருளாதார வலுவுள்ள நாட்டை எடுத்துக் கொண்டாலும், வந்தேறிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2020-இல் உலகளாவிய அளவில் 280.6 மில்லியன் வந்தேறிகள் இருந்தனர் – இது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் (7.8 பில்லியன் மக்களில் 4 சதவீதம். வந்தேறிகளை இணைத்து ஒரு நாட்டை உருவாக்கினால், சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு (மற்றும் இந்தோனேசியாவை விட சற்று பெரிய), உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அது இருக்கும்.

வந்தேறிகளும் தேசியமும் முதலாளித்துவமும்:

வந்தேறிகளை தேசியமும் தேசிய எல்லைகளும் தடுத்தாலும் வந்தேறிகளின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் அதிகரித்துக் கொண்டே போகிறது.  ஏனெனில் மூலதனச் சுரண்டல் காரணமாக வளர்ந்த நாடுகளில்தான் அதிக வேலைவாய்ப்பும், நல்ல அடிப்படை வசதிகளுடன் கூடிய வாழ்க்கைச் சூழலும் உள்ளன. மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும்மோசம். எனவே வளராத அல்லது சுரண்டப்பட்ட நாடுகளில் இருந்து பொருளாதார வலுவான நாடுகளை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை தேசியமும் தேசிய எல்லைகளும் தடுத்துக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் முதலாளித்துவம் தேசியம் என்ற தடைக்கு எதிராக வெளி நாட்டவர் குடியேற்றத்தை ஆதரிக்கிறது. ஏனெனில் வந்தேறிகளால் முதலாளித்துவம் லாபம் ஈட்டுகிறது. எனவே தேசியமும், தேசிய எல்லைகளும் சுவர் கட்டித் தடுத்தாலும், தாராளமயமாக்கம் மற்றும் உலகமயம் என்னும் முதலாளித்துவ கொள்கைகள் தீவிரமாக உலகெங்கும் செயல்படுத்தப்படுவதின் தவிர்க்க இயலாத விளைவாக வளரும் நாடுகளில் இருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு குடியேறும் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலைவாய்ப்பு, உயர்கல்வி, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வறிய நாடுகளில் இருந்து வளமான நாடுகளுக்கு எண்ணற்றோர் குடியேற விரும்புகின்றனர். அவர்களில் கணிசமானோரால் குடியேறவும் இயலுகிறது. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்க வெளிநாட்டவர்களுக்கு வேலை தருகின்றன. ஏனெனில் அவர்கள் உள்நாட்டவர்களை விட குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய தர தயாராக உள்ளனர். அது மட்டுமின்றி, உலகமயமாக்க பிண்ணனியில், தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக பெரு நிறுவனங்கள் தங்களின் வேலைகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு Outsourcing செய்கின்றன. Outsourcing மூலம் பெருத்த லாபத்தை பெருநிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. ஏனெனின் (Cheap Labor) குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய எண்ணற்றோர் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கிடைக்கின்றனர்.

“மூலதனம் (முதலாளித்துவம்) 10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும். 20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது. 50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லாக் கெடுதலையும் செய்யத் துணிவு கொள்கிறது. 100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது. 300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும். தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்” என்றார் கார்ல் மார்ஸ். வெளி நாட்டவருக்கு வேலைகளை தருவதின் மூலம் இலாபம் அதிகரிக்கும் என்றால் முதலாளித்துவ நிறுவனங்கள் சும்மா இருக்குமா?

முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கு லாபம். தொழிலாளர்களுக்கு ஒப்பிட்டளவில் வளமான எதிர்காலம். இரண்டும் இணையும்போது, வெளி நாட்டவர் குடியேற்றம் நிகழ்கிறது. இவ்வாறாக வேலை வாய்ப்பு, கல்வி, நல்ல வளமான வாழ்க்கைச் சூழல் காரணமாக வெளி நாட்டில் இருந்து வந்து பணக்கார நாட்டில் குடியேறும் மக்கள், அந்தந்த நாடுகளில் குடியுரிமை வாங்கவும் முயற்சிக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் கிடைக்கிறது. இதன் விளைவாக வெளி நாட்டவர் (குடியேறிகள்) மக்கள்தொகை அதிகரிக்கிறது. இது தவிர்த்து, உள் நாட்டுப் போர் உள்ளிட்ட மற்ற காரணங்களுக்காக அகதிகளாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் ஏழை நாடுகளில் இருந்து பணக்கார நாடுகளுக்கு குடியேறுகின்றனர்.

வெளி நாட்டவருக்கு தரப்படும் வேலைகள், வெளி நாடுகளுக்கு மாற்றப்படும் வேலைகள், அதிகரிக்கும் குடியேறிகள் மக்கள் தொகை என வெளி நாட்டவரை முன்வைத்து நடக்கும் அரசியல், கடந்த பல பத்தாண்டுகளாக பொருளாதார வலுகொண்ட மேலை நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை செலுத்திவருகிறது. இதன் விளைவாக வெளிநாட்டவர் குடியேற்றத்தை எதிர்க்கும் கண்ணோட்டம் (Anti Migration) கொண்ட கட்சிகள் வளர்கின்றன. வெளி நாட்டவர் குடியேற்றத்தை எதிர்க்கும் கட்சிகள் குடியேறி மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன. குடியேறி மக்கள் வேலை வாய்ப்புகளை பறித்து விடுவதால் அந்த நாட்டின் நீண்ட நாள் குடிமக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற பிரச்சாரம் மேலை நாடுகளில் செல்வாக்கு பெறுகின்றன.

இதை வேறு வார்த்தைகளில் சரியாகச் சொல்வதானால், முதலாளித்துவம் தனது லாபத்திற்காக வந்தேறிகளை உருவாக்கியதால், வளர்ந்த நாடுகளில் “குடிமக்கள் நலன் என்ற பெயரில்” வலதுசாரித் தேசியவாதம் வளர்கிறது. முதலாளித்துவத்தின் இலாபவெறி வந்தேறிகளுக்கும் வளர்ந்த நாடுகளின் பாரம்பரிய குடிமக்களுக்கும் இடையே ஒரு முரண்பாட்டை உருவாக்கிவிட்டது.

அதாவது, மேலை நாட்டுகளின் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் மக்களை அத்துக்கூலிகளாக மாற்றுவதன் மூலமே முதலாளித்துவம் தனது சுரண்டலை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற முதலாளித்துவத்தின் விதியே அதற்கு எதிராக மாறிவிட்டது.

வலதுசாரித் தேசியவாதம்:

வலதுசாரித் தேசியவாதம் வந்தேறிகளை உருவாக்கிய முதலாளித்துவத்தோடு மோதாமல், பிழைப்புக்காக குடியேறும் மக்களோடு மோதுகிறது. ஐரோப்பிய யுனியனில் இருந்து உடனடியாக பிரிட்டனை பிரிப்பேன் (Get Brexit Done) என்ற முழக்கத்தை முதன்மையான தேர்தல் முழக்கமாக வைத்து 2019 தேர்தலில் வென்று பிரிட்டன் பிரதமரானார் போரிஸ் ஜான்சன். ஐரோப்பாவின் ஏழை நாடுகளான உக்ரைன், போலந்து, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பிரிட்டனுக்கு வேலை நிமித்தமாக குடிபெயர்வதின் காரணமாக பிரிட்டனில் வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் உருவாகின்றன என்ற கோஷத்தை முன்வைத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை வெளியேற்றத்தை விரைவு படுத்தியதின் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றினார் போரிஸ் ஜான்சன்.


படிக்க : பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !


இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் அமெரிக்க குடியேற்றத்தை குறைக்கவே H1B விசா விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். மெக்சிகோவை சேர்ந்த ஏராளமானவர்கள் எல்லை வழியாக ஆண்டுதோறும் சட்ட விரோதமாக ஊடுருவுவதை தடுக்க, அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்பது அதிபர் டிரம்பின் கனவு திட்டம். மெக்சிக்க எல்லையில் சுவர் கட்டுவேன் என்ற கோஷம் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் துருப்புச் சீட்டுகளில் ஒன்று. வெற்றி பெற்றபின்னர் சுவர் எழுப்பவும் முயன்றார். தடுப்புச் சுவர் கட்டும் பணி முழுமையடவில்லையெனிமும், சுவர் பிரச்சினை அமெரிக்கத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

உள்நாட்டவர் (குடிமக்கள்) வேலைகளை வெளிநாட்டினர் (வந்தேறிகள்) பறிக்கின்றனர் என்ற வாதம் சிங்கப்பூர் எதிர்க்கட்சிகளின் மிக முக்கியமான தேர்தல் வாதங்களில் ஒன்று. வெளி நாட்டவரை பணியமர்த்துவதை குறைத்து உள் நாட்டவரை கூடுதலாக பணியமர்த்துவதை சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு வீசா (Employement Visa) விதிமுறைகளை சிங்கப்பூர் அரசு பலமுறை திருத்தியுள்ளது. வந்தேறிகளுக்கு நிரந்தர குடியிருப்பு விசா (Permanent Resident Visa) வழங்குவதில் பல கட்டுப்பாட்டுகளை கொண்டு வந்தது சிங்கப்பூர்.

சுருக்கமாகச் சொன்னால், உலகின் பல வளர்ந்த நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினையாக, வெளி நாட்டவர் குடியேற்றம் (Immigration) இருந்து வருகிறது. குடியேற்றத்திற்கான காரணங்களாக எதைச் சொன்னாலும், குடியேற்றத்தை தவிர்க்க எவ்வித தடைகளை ஏற்படுத்தினாலும் வெளிநாட்டவர் குடியேற்றங்களை எவராலும் தடுக்க முடியவில்லை.

வெளிநாட்டு மக்களின் குடியேற்றம் தவிர்க்க முடியாதபடி ஆகிவிட்டதால், குடியேறிய நாடுகளில் அவர்களில் குறிப்பிடத்தகுந்த தொகையினர் குடிமக்களாக மாறுவதும் தவிர்க்க இயலாததாகி விட்டது. குடியேறிய நாட்டில் குடிமக்கள் ஆகும் வரை, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட சில வாய்ப்புகளைத் தவிர்த்து, ஓட்டுரிமை உள்ளிட்ட பெரிய அரசியல் உரிமைகள் குடியேறிகளுக்கு கிடையாது. குடியுரிமை கிடைத்த பின்னர் ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்து அரசியல் உரிமைகளும் கிடைக்கும் போது குடியேறிகள் தாங்கள் குடியேறிய நாட்டில் அரசியல் அதிகாரங்களை கேட்பதும் இயல்பே. இந்த வகையில் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல குடியேறிகள் அரசியல் அதிகாரங்களை பெறுவதும் தவிர்க்க இயலாத மாற்றம். அதன் உதாரணமாக அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணும், அவரைத் தொடர்ந்து பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக்கும் தற்போது பதவியேற்றுள்ளார். அந்த வகையில் இது ஒரு எதார்த்தம். ஆனால் வலதுசாரிகள் சும்மா இருப்பார்களா?

வளர்ந்த நாடுகளில் வலது சாரிகளின் எழுச்சி:

ஒருபுறம் முதலாளித்துவம் உருவாக்கிய வந்தேறிகள், மறுபுறம் முதலாளித்துவத்தால் உள் நாட்டில் ஏற்படுகின்ற வேலைவாய்ப்பின்மை, உழைப்புச் சுரண்டல், பொருளாதார ஏற்றத் தாழ்வு, விலைவாசி என இருபக்கமும் வளர்ந்த நாடுகளின் குடிமக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த வாழ்வாதார பிரச்சினைகளை பயன்படுத்திக் கொண்டு வலதுசாரிகள் “நாடு, நாட்டுப்பற்று” போன்ற வெற்றுக் கோஷங்களை முன்வைத்து தேர்தலைத் சந்தித்து வெற்றியும் பெருகின்றனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன், இத்தாலியின் ஜியார்ஜியா மெலானி, இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு, ஸ்விடனின் வலதுசாரி கூட்டணியின் தேர்தல் வெற்றிகளை எடுத்துக் கொள்ளலாம். சமீபத்தில் டென்மார்க்கில் நடந்த பொதுத் தேர்தலிலும், ஆட்சியை பிடிக்காவிடினும் வலதுசாரித் தேசியவாத கட்சிகள் குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றுள்ளன. 2022 ஏப்ரல் மாதத்தில் நடந்த பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரித் தேசிய வாதம் பேசிய மரைன் லு பென் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தான் தோற்றார்.

பிரிட்டனில் மூன்று பேர் அடுத்தடுத்து தங்கள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்கள். அதைதொடர்ந்து ரிஷி சுனக் பதிவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

வலதுசாரி தேசியவாதத்தின் விளைவாகத்தான் இந்த ரிஷி சுனக் வந்திருகிறார் என்பது உண்மை. இந்தியா மட்டுமல்ல அமெரிக்க, பிரிட்டன் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ச்சிக்கும், ரிஷி சுனக் பிரிட்டனின் பதிவி ஏற்றிருக்கிறார் என்பதற்கும் மிகவும் தொடர்பு இருக்கிறது.

தீர்வு உண்டா?

முதலாளித்துவம் ஏற்கனவே ஏற்படுத்தி வரும் நெருக்கடிகளுடன் இணைந்து, கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் மோதல் போன்ற பிரச்சினைகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் உருவாகியுள்ளன. மேலும் 2008-2009 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பெருமந்தம் போல் ஒரு பொருளாதாரப் பெரு மந்தம் ஏற்படுவது போன்ற நெருக்கடியான சூழலும் உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடிகளுக்கு மேற்கு ஐரோப்பிய – வட அமெரிக்க பணக்கார நாடுகளில் உடனடியாக கிடைக்கிற தீர்வு “தீவிர வலதுசாரித் தேசியவாதம்”.

தீவிர வலதுசாரித் தேசியவாதம் முதலாளித்துவம் உருவாக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. மாறாக பிரச்சினையின் தீவிரத்தை கூர்மைப்படுத்தும். அதற்கான சான்று பிரிட்டனின் சமிபத்திய தேர்தல் பிரச்சார விவாதங்களிலும், ரிஷி சுனக் அமைச்சரவையின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் நடவடிக்கைகள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும்.

வேலையின்மை, பணவீக்க உயர்வு, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, தனியார்மயக் கொள்கைகள் ஏற்படுத்திய தீய விளைவுகள், உக்ரைன்  – ரஷ்யா போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள், ஊழல் என பல பிரச்சினைகள் இருந்தாலும், பிரதமர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ்ஸும் ரிஷி சுனக்கும் இங்கிலாந்தின் முதன்மை எதிரியாக சீனாவை பிரகடனம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து விட்டதால், அதை முன்னிறுத்த வாய்ப்பில்லாமல் போனதால் சீனாவைத் தேர்ந்தெடுத்தார்கள் போலும். அதேபோல் ரிஷி சுனக் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுயெல்லா பிரேவர்மேனின் முதல் அரச நடவடிக்கை “வந்தேறிகளுக்கு எதிராக” பேசியது தான். சுயெல்லா பிரேவர்மேனும் ஒரு வந்தேறி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரிஷி சுனக் போலவே, சுயெல்லா பிரேவர்மேனக்கும் மொரிசியஸ், கென்யா, இந்து, தமிழ், கிறித்துவர், இந்தியா, கோவா என பல அடையாளங்கள் இருக்கின்றன. அவரே வந்தேறியாக இருப்பினும் அவர் தீவிர வந்தேறி எதிர்ப்பு கொள்கை கொண்டவராக இருக்கிறார். சொந்த நாட்டில் வாழ வக்கற்று, உயிரைப் பணயம் வைத்து, கடல் மார்க்கமாக சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் அகதிகளின் வருகையை “பிரிட்டன் மீதான படையெடுப்பு” என்று வர்ணித்தார் சுயெல்லா பிரேவர்மேன்.


படிக்க : சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !


அகதிகள் உள்ளிட்ட வந்தேறிகள் விஷயத்தில் பிரதமர் ரிஷி சுனக் தனது உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை விட எவ்விதத்திலும் தாராளமயக் கொள்கை கொண்டவர் அல்ல. குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு குடியேற விரும்பும் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பும் ரிஷி சுனக், “படகு மக்களை” பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்றார். வந்தேறிகள் விஷயத்தில் போரிஸ் ஜான்சனும், ரிஷி சுனக்கும், டிரம்பும், ஜியார்ஜியா மெலானி, பெஞ்சமின் நேதன்யாகு வெவ்வேறானவர்கள் அல்ல. மேலும் வந்தேறிப் பிரச்சினை தனி நபர் பிரச்சினையும் அல்ல. முதலாளித்துவம் உருவாக்கும் தொடர் பிரச்சினை.

முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.

சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும் முதலாளித்துவ உலகை வீழ்த்தி, சமூகப் பொருளாதாரச் சமநிலையை உருவாக்கும் சோசலிச சமுகத்தை அமைக்கும் போதுதான் வந்தேறிப் பிரச்சினை தீரும். அதுவரை போராடுவது நம் கடமை.

சு.விஜயபாஸ்கர்

 

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!

0

டந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ்-இன் ஆர்.டி.ஐ தகவல் தற்போது இதை அம்பலப்படுத்தி உள்ளது.

மோடி அரசால் ‘பெரிய சீர்திருத்தம்’ என்று மெச்சிக்கப்பட்ட திவால் சட்டம் 2016-இன் (Insolvency and Bankruptcy Code, 2016) படுதோல்வியை இது எடுத்துக்காட்டுகிறது. கார்ப்பரேட்டுகள் இச்சட்டத்தை ஏன் கொண்டாடினார்கள் என்பதைத் தற்போது புரிந்து கொள்ள முடிகிறது. 87 சதவிகித கடன் ஹேர்கட் (இந்நிறுவனங்களிடமிருந்து கடனை மீட்க முடியவில்லை என்று வங்கிகளின் நட்டக்கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் தொகை) ஆகிறது என்றால் கார்ப்பரேட்டுகளுக்கு உற்சாகம் ஏற்படாமலா இருக்கும்.

கொல்கத்தாவை மையமாக வைத்து தொழில் புரியும் பிரபல தொழிலதிபர் ஒருவர், திவால் சட்டத்தை யார் சாதுரியமாக பயன்படுத்துகிறார்கள் என்பது நகரில் ஒரு போட்டியாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். கார்ப்பரேட்டுகள் சராசரியாக 90 சதவிகிதம் கடனிலிருந்து ஹேர்கட் மூலம் தப்பிவிடலாம் என்றும் அவர் கூறினார். அவர் கூறியது உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்பதை தற்போது கிடைத்துள்ள ஆர்.டி.ஐ தகவல் வெளிப்படுத்துகிறது.


படிக்க: ’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !


ரூ.10 லட்சம் கோடியில் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே மீட்கப்படுகிறது என்றால் அச்சட்டம் நடைமுறையில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கடன் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அதனைத் திருப்பி செலுத்தாவிட்டால், கடன் அளித்த வங்கிகள் கடனாளியின் சொத்துகளின் உரிமைகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றை விற்பதன் மூலம் வங்கிக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்து கொள்ளலாம்.

87 சதவிகிதம் ஹேர்கட் என்பது இச்சட்டம் பயனற்றது என்பதையே காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை தங்களின் நிறுவனங்களுக்கு வெளியே எடுத்துச் சென்று, வேண்டுமென்றே தங்கள் நிறுவனங்களை திவாலாக்கி, நீதிமன்றம் சென்று திவால் சட்டத்தின் கீழ் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு வங்கிகளில் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள். வெளித்தோற்றத்திற்கு இந்நிறுவனங்கள் நட்டமடைந்தது போல தோற்றம் அளிக்கும். ஆனால், அதிக இறக்குமதி செய்தது போல போலிக் கணக்கு காட்டிவிட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்து விடுவார்கள். இதுதான் கார்ப்பரேட்டுகள் காலங்காலமாக பின்பற்றும் வழிமுறை. அரசின் அரசியல் எதிரிகளை துரத்தி வேட்டையாடும் அமலாக்கத்துறை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதே வீரியத்தை ஒருபோதும் காட்டுவதில்லை.

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் (wilful defaulters) பட்டியலை வெளியிட வேண்டும் என்றும், அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ரிசர்வ் வங்கியோ கடன் செலுத்தத் தவறிய கார்ப்பரேட்டுகளின் பட்டியலை இரகசியமாக வைத்துக் கொண்டது.


படிக்க: ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !


இச்சட்டம் ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கூடுதல் பின்னடைவைச் சந்தித்தது. கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை எடுத்துக்கொள்ள கடன் கொடுத்த வங்கிகள் வேண்டுகோள் விடுத்தால் அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (National Company Law Tribunal) விருப்பம் என்பதுதான் அந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு வங்கிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தள்ளி வைக்கப்பட்ட கடன்களில் 70 சதவிகிதம் பொதுத் துறை வங்கிகளில் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வங்கிகள் கடன்களை தள்ளிவைப்பதற்காக (write off) அரசாங்கம் பல லட்சம் கோடிகளை வங்கிகளுக்கு அளிக்க வேண்டியுள்ளது. அதாவது, மக்களின் வரிப்பணம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஓடிப் போன கார்ப்பரேட்டுகளின் கடனை சரிகட்ட பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்கள் மூலம் அந்நிறுவனங்களின் சொத்துகளை விற்று மீட்டெடுப்பது என்பது மிக சொற்பமான அளவாகவே உள்ளது. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசு தங்களை காப்பாற்றும் என்ற தைரியத்தில் கார்ப்பரேட்டுகள் மீண்டும் கடன் வாங்குகிறார்கள்.

பொம்மி

நன்றி: தி வயர்

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!

வம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆதரவை தெரிவித்தனர். திருமங்கலத்தில் ஒரு கடை பாக்கி இல்லாமல் முழுவதுமாக அடைத்து ஆதரவு தந்தார்கள் வியாபாரிகள்.

***

கப்பலூர் சுங்கச்சாவடியில், திருமங்கலம் பகுதிகளுக்கு மட்டுமல்ல நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல், சுங்கச்சாவடி வழியாக இப்பகுதியை கடக்கும் (ராஜபாளையம், தென்காசி பகுதிகளில் இருந்துவரும்) உள்ளூர் வாகனங்களையும் கட்டாயமாக மிரட்டி வசூல் செய்யும் வழிப்பறி கொள்ளை இங்கு அரங்கேறி வருகிறது. இந்தப் பிரச்சினையால் இந்த சுங்கச்சாவடியில் பலமுறை கலவரம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை துப்பாக்கிச்சூடு கூட நடைபெற்றது. அந்த அளவுக்கு சுங்கச்சாவயில் வழிப்பறியில் ஈடுபடும் நிர்வாகம், குண்டர்களை வைத்து உள்ளூர் வாகன ஓட்டிகளை மடக்குவது, மிரட்டுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்ற  ரவுடித்தனங்களை இங்கே அரங்கேற்றுகிறது.

மக்களிடம் தொடர் ரவுடித்தனத்தை அரங்கேற்றும் இந்த சுங்கச்சாவடியை முன்பு பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூலிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் முன்பு நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பின்வாங்குவது போல் நாடகமாடும் சுங்கச்சாவடி நிர்வாகம், மீண்டும் மீண்டும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பது, மிரட்டுவது போன்ற ரவுடித்தனங்களை அறங்கேற்றி வருகிறது.

தற்போதும் கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து உள்ளூர் வாகனங்கள் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும்; அதாவது ஒவ்வொரு வாகனமும் மாதம் ரூ.310 செலுத்த வேண்டும் என்று வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சுங்கச்சாவடி நிர்வாகம்.

தொடர்ந்து உள்ளூர் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி மிரட்டி கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடி நிர்வாதத்தின் மீது மிகுந்த கோவமும் ஆத்திரமும் அடைந்திருக்கும் பொருமக்கள் சங்கமாய் ஒன்றிணைந்து, சங்கமாய் சேர்ந்து இந்த ஒருநாள் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவு தந்ததால் முதல் கட்ட வெற்றி அடைந்துள்ளது. இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கலெக்டர் தலைமையில் மந்திரிகள் போராட்ட கமிட்டி தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள் உள்ளூர் வாகனங்களுக்கு இனி கட்டணம் வசூலிப்பதில்லை என்று மீண்டும் முடிவானது.

ஆனாலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நிரந்தரமாக இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்; சட்டப்படி நகராட்சியில் இருந்து நான்கு கிலோமீட்டருக்கு அப்பால்தான் சுங்கச்சாவடி அமைய வேண்டும் என்பது சட்ட விதி; ஆனால் இந்த கப்பலூர் சுங்கச்சாவடி இரண்டு கிலோமீட்டரில்தான் உள்ளது என்பதாலும் கட்டாயம் இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று உள்ளூர்வாசிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

அந்தப் போராட்டம் மீண்டும் மீண்டும் தொடரும் என்பதுதான் உண்மை. தனியார்மயம் வந்த பின்புதான் இலவச சேவை என்பதை நிறுத்திவிட்டு கட்டணம் வசூலிக்கும் இந்த டோல்கேட் முறை வந்துள்ளது. தனியார்மயம் திட்டம் ஒழிக்கப்படும் வரை இந்த போராட்டம் ஓயாது என்பதுதான் நிதர்சனம். இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சுவரொட்டிகளை ஒட்டி ஆதரித்தும் தோழர் சிவகாமு, பரமன், நாகராஜ் போன்ற தோழர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!

0

டிசா மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்று (22.11.2022) 60,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு கோரியும் அரசு ஊழியராக தகுதி வழங்கக் கோரியும் அவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தலைநகர் புவனேஸ்வரில் நேற்று (21.11.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அம்மாநில சட்டசபையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியராக மாற்றப்படுவதுடன், அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை ரூ.18,000 ஆகவும் உதவியாளர்களின் ஊதியத்தை ரூ.9,000 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

“ரூ.5,000 ஓய்வூதியம் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால், வேலைநிறுத்தம் தொடரும்” என்று அனைத்து ஒடிசா அங்கன்வாடி பெண் ஊழியர்கள் சங்கத்தின் (All Odisha Anganwadi Lady Workers) தலைவர் சுமித்ரா மொஹாபத்ரா கூறியுள்ளார்.

பணிக்காலத்தின் போது உயிரிழந்த அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்துப் பேட்டியளித்த அனைத்து ஒடிசா அங்கன்வாடி பெண்கள் சங்கத்தின் செயலாளர் ஜுனுபாமா சத்பதி, “இன்று இரண்டாவது நாள். போராட்டத்தின் முதல் நாளான நேற்று 50,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். இதேபோல 314 வட்டாரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அங்குள்ள வட்டார அலுவலகங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று கூறினார்.

மாநில அரசின் முன்னோடித் திட்டங்களான மமதா யோஜனா மற்றும் ஹரிஸ்சந்திரா யோஜனா போன்றவை அங்கன்வாடி ஊழியர்களால்தான் வெற்றியடைந்தன என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும் தங்கள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிருப்தியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.


படிக்க: அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !


அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் அவர்களுக்கு மாதம் ரூ.7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது என்று மொஹாபத்ரா குற்றம் சாட்டினார்.

அகில பாரதிய அங்கன்வாடி மகா சங்கத்தின் அமைப்பு செயலாளர் அஞ்சலி படேல், “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியுள்ளோம். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக, அரசாங்கம் எங்களை அவமதிக்கும் விதமாக எங்களின் பணிச்சுமையை கூட்டியுள்ளது. அரசுக்கு 15 நாள் நோட்டீஸ் கொடுத்த பின்பு தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினார்.

இப்போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பசந்தி ஹெம்ப்ராம் (Basanti Hembram), “மாநில அரசு அங்கன்வாடி ஊழியர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளது. அவர்களின் ஊதியமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பகிர்வு அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போதைய கோரிக்கைகள் குறித்து ஒடிசா அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி உட்பட நாடு முழுவதிலும் அங்கன்வாடி ஊழியர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

பொம்மி

சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக,
சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

1997-ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவ்வளவு விரிவாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. கர்ணன் திரைப்படம் கொடியங்குளம் கலவரம் பற்றிப் பேசியது. அது ஜெயா ஆட்சியின் முதல் கட்டத்தில் நடந்த கொடூரம். அந்த சாதியக் கோரத் தாண்டவத்தின் கொடூரங்கள் மறையும் முன் தி.மு.க. ஆட்சியில் விடுதலைப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி தீரன் சுந்தரலிங்கனார் பெயரை பேருந்துக்குச் சூட்டியதை முன்வைத்து ஆதிக்க சாதி வெறியர்கள், குறிப்பாக தேவர் சாதி வெறியர்கள் மிகப் பெரும் கலவரங்களை நடத்தினார்கள். அதற்கு முன்னதாக மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது மட்டுமின்றி, பதவியிலும் அமர்ந்த முருகேசன் உட்பட தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரச் செயலும் ஆதிக்க சாதி வெறியர்களால் அரங்கேற்றப்பட்டிருந்தது.

இந்த சாதி – தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 1997 செப்டம்பர் முதல் நவம்பர் முடிய மூன்று மாத கால இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. பொதுக் கிணற்றில் நீர் அள்ளும் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம், ஊர்த்தெருவில் செருப்பு அணிந்து நடக்கும் போராட்டம் என பல்வேறு வடிவங்களில் சாதி – தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சாதி –  தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்களும் நடத்தப்பட்டன.

ஏனெனில் சாதியின் இருப்பும், இறுக்கமும் அகமண முறையில் கட்டுண்டு கிடக்கிறது. சுய சாதிக்குள் மட்டுமே மண உறவுகள் என்ற மனுதர்மம் சமூகத்தில் நிலைநாட்டப்பட்டிருந்தது. அதை மீறியவர்கள் சண்டாளர்கள், பாவத்தில் எல்லாம் மிகக் கொடிய பாவம் செய்தவர்கள் என கொன்றொழிக்கப்பட்டார்கள். இன்றும்கூட கிராமங்களில் பெருசுகள் ’அடே சண்டாளப் பாவி’ என திட்டுவதை கேட்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு சாதியின் கொடூரமும் வேர்களும் மக்கள் மனங்களில் புரையோடிப் போயுள்ளன.

படிக்க : சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

சாதியை மறுத்து, காதல் மணம் புரிந்தவர்களை சண்டாளர்கள் என நரவேட்டையாடிய அதே கொடூரக் கொலைகளைத்தான் இன்று ‘கௌரவக் கொலைகள்’ என்ற பெயரில் ஆதிக்க சாதி வெறியர்கள் நாடெங்கும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன. 1997ல் நடந்த சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின்போது விழுப்புரத்தில் ஏழு ஜோடிகளுக்கு சாதி – தீண்டாமை மறுப்பு, புரட்சிகர மண விழா நடத்தி, மாட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது.

பார்ப்பன பாசிசம் தனது கொடுங்கரத்தை விரித்து வரும் வேலையில் இந்த சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்களின் 25ம் ஆண்டை நினைவு கூர்வது பாசிசத்திற்கு எதிரான நமது போராட்ட உணர்வை கூர் தீட்டிக் கொள்ள உதவும் என்ற வகையில், ஒரு நினைவூட்டல் கட்டுரையை வாசகத் தோழர்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

000

இன்றைக்கு யார் சார் சாதி பார்க்கிறார்கள் என பொதுவில் பலரும் பேசுவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்றுக் கீறிப்’பார்த்தால் சாதியை எல்லாம் ஒழிக்க முடியாது சார் என அடித்துப் பேசுவார்கள். தற்போது ஆர்.எஸ்.எஸ் – சங்கி கும்பல் ஒன்றிய அரசாங்கத்தில் இருந்து தனது பாசிசப் பேயாட்சியை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் சாதிச் சங்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் சங்கிக் கும்பல் தனக்கான இடம் சாதிச்சங்கங்களில்தான் உள்ளது என சரியாகவே அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில் வன்னியர் சாதிக் கட்சியான பா.ம.க. இயல்பாகவே சங்கி கும்பலின் கூட்டாளியாக தொடர்ந்து கூடிக் குழாவி வருகிறது. அ.தி.மு.க. என்ற கழிசடைக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் கொடியங்குளம் கலவரம் உட்பட பல்வேறு சாதிக் கலவரங்கள் ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டது.

சாதி பார்க்காதவர்களால் இந்த சாதிக் கலவரங்களை அரங்கேற்ற முடியுமா? ஆக, ஒரு பேச்சுக்குக் கூட யாரு சார் சாதி பார்க்குறாங்க என சொல்ல முடியாத சூழல் பாசிச இருளாகப் பற்றிப் படர்ந்து வருகிறது. சீர்திருத்த திருமணச் சட்டம் நடைமுறையில் உள்ள தமிழகத்தில்தான், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இச்சட்டத்தை கேள்விக்குளாக்கும் வகையிலான தீர்ப்பொன்று வந்துள்ளது; சாதி, சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடக்கும் திருமணங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்பதே அந்தத் தீர்ப்பு!

நீதிமன்றமே சட்டத்தை மீறுவதால்தானோ என்னவோ, சிதம்பரம் தீட்சிதர்கள் தமது சாதிக்குள் நடக்கின்ற குழந்தைத் திருமணத்தை ‘தொன்றுதொட்டு நடந்து வரும் சம்பிரதாயம்’ என அங்கீகரிக்கக் கோரி போராடத் தொடங்கியுள்ளனர். தெரிந்தே சட்டத்தை மீறிப் போராடுகின்ற இந்தத் துணிவு தீட்சிதர்களுக்கு எப்படி வந்தது? அல்லது மக்களுக்கான பொதுச் சட்டம் தமக்குப் பொருந்தாது என தீட்சிதர்கள் முடிவு செய்து விட்டார்களா? சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட அனுமதி மறுக்கும் தீட்சிதர்கள் தமது பிற்போக்குத்தனமான செயலின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்கள். போராடாமல் மக்களின் ஜனநாயக உரிமைகள் ஒருபோதும் கிடைப்பதில்லை. போராடிக் கிடைத்ததுதான் சுயமரியாதைத் திருமணச் சட்டம்.

பெரியார் அவர்களால் 95 ஆண்டுகளுக்கு முன்பே சீர்திருத்தத் திருமணம் என்ற பெயரில் தமிழகம் முழுதும் பார்ப்பன சடங்கு சம்பிரதாயங்களை மறுத்து, ஆடம்பரம், செலவுகள் இன்றி எளிமையான வாழ்க்கை ஒப்பந்தங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. 1968ல் தி.மு.க. ஆட்சியில் முதல்வர் அண்ணாத்துரை அவர்களால், இந்த திருமணங்களுக்கு சுயமரியாதைத் திருமணம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று நீதிமன்றம் இந்த சட்டத்தைக் கேள்விக்குளாக்கும் பிற்போக்கானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பார்ப்பன பாசிசம் அனைத்து அரங்குகளிலும் தனது ஆக்டோபஸ் கொடுங்கரங்களை விரித்து வருகின்ற இந்த தருணத்தில்தான் சாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக நடந்த புரட்சிகர மணவிழாவை நினைவு கூர்வது முக்கியத்துவம் பெருகிறது.

000

1997 நவம்பர் 7ல் நடத்தத் திட்டமிட்ட புரட்சிகர மணவிழா பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு நவம்பர் 22ல் நடைபெற்றது. அமைப்புத் தோழர்களால் பல பகுதிகளிலும் புரட்சிகர மணவிழாக்கள் அவ்வப்போது நடந்துவிட்டதால் இந்த விழாவுக்கு மணமக்களைத் தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு காரணம். மொத்தம் ஏழு ஜோடி திருமணங்கள் நடைபெற்றன. அதில் இரண்டு பெண் தோழர்களுக்கு அது மறுமணம். பாதிக்கும் மேற்பட்ட மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்பதிலிருந்தே மணவிழா ஏற்பாட்டின் சிரமத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சாதி – தீண்டாமையை, பார்ப்பன பிற்போக்கு சடங்குகளை மறுத்து புரட்சிகர மணவிழா, அதிலும் மறுமணம் என்பது இன்னும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகவே தமிழகத்திலும் நிலவுகின்ற வினோதத்தை எப்படிப் புரிந்து கொள்வது? பெரியார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதிலும் இப்படிப்பட்ட வாழ்க்கை ஒப்பந்த விழாக்களை நடத்தி வந்த சூழலில், இவை இயல்பான ஒன்றாக இல்லாமல் போனது ஏன்? தான், தனது குடும்பம், தனது சுற்றம் என்ற குறுகிய சுய நல வட்டத்தை சமூகம் இன்னும் இயல்பாகக் கடந்துவிடவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது என்பதைத் தவிர வேறு உண்மை ஏதுமில்லை.

ஒரு மணமகன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகளைத் திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயன்றனர். நீதிபதி குடும்பத்திற்கு, பொறியியல் படிப்பு முடித்த ஒருவர், அதிலும் முதுகலை பொறியியல் படித்தவர் மருமகனாகக் கிடைத்தால்போதும், மணம் முடித்ததும் இருவரையும் மூட்டை கட்டி அமெரிக்காவிற்கு அனுப்பி விடுவது என்ற முடிவிலிருந்து மாப்பிள்ளை தேடுகின்றனர். நமது தோழரோ அது முற்றும் தேசத் துரோகம் என்ற முடிவிலிருந்தும், வர்க்க வேறுபாடு காரணமாகவும் கறாராக மறுத்துவிட்டார். நீதிபதி எளிய விவசாய வர்க்கப் பின்னணி கொண்டவர் என தோழரை ஏற்க வைக்க முயன்றபோது, அது உண்மையாகவே இருக்கட்டும், அந்தப் பெண் ஒரு நீதிபதியின் மகள், அந்த வர்க்க குணம் தனது இயல்புக்கு ஒத்துவராது என மறுத்து விட்டார்.

குடும்பம் எப்படி சிந்திக்கிறது என்பதற்கு இது ஒரு வகைமாதிரி. அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்த அந்தத் தோழர் தனது 39-ம் வயதில் தனது உறவினர்கள் ஊரில் விவாகரத்து பெற்ற ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்தபோது, அந்த தந்தை தம்மை இழிவுபடுத்தவே இந்த திருமண ஏற்பாடு என வர மறுத்துவிட்டார்.

உள்ளூர் தோழரின் குடும்பமும் இந்தத் திருமண ஏற்பாடே தமது குடும்பத்தை இழிவுபடுத்த என்று கூறி, உள்ளூரில் இருந்து கொண்டே வர மறுத்து விட்டனர். திருச்சியில் ஒரு பெண் வீட்டில் திருமணம் பற்றிக் கூறி பேசி வந்தபோது சி.பி.எம். கட்சிக் காரரிடம் அந்த பெண் குடும்பம் ஆலோசித்துள்ளது. அந்த சி.பி.எம்-காரர் தாலி, சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாத இந்தத் திருமணங்கள் எல்லாம் செல்லாது என அன்றே ‘தீர்ப்பு’ சொல்லி, அப்பெண் குடும்பத்தை தடுத்து விட்டார்.

ஆனால் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இல்லாமல் இன்றைக்கு இயல்பாகவே இளைய தலைமுறையினர் சாதி கடந்து மணம் புரிவதும், அதில் சில கௌரவக் கொலைகளில் முடிவதும் நடந்து கொண்டுதான் உள்ளன. புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களுக்கு அமைப்பு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த சிக்கல் இல்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தப் புரட்சிகரத் திருமணங்களின்போது, தனது குடும்பம் சமூக மாற்றத்திற்குப் போராடும் என உறுதிமொழி ஏற்றுக் கொள்கின்றனர். இது ஒப்புக்கு சொல்வதல்ல என்பதைத் தோழர்கள் நடைமுறையில் நடத்திக் காட்டுகின்றனர். எந்த வர்க்கத்திலிருந்து வந்தவரானாலும் இயல்பாக எளிய பாட்டாளி வர்க்க வாழ்க்கை முறைக்கு தம்மை மறுவார்ப்பு செய்து கொள்வது மட்டுமின்றி, பாட்டாளி வர்க்க விடுதலைக்கான தமது போராட்டங்களைத் தொடர்கின்றனர்.

குடும்ப வாழ்வில் சமரசம் செய்யத் தொடங்கினால், அது பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சிகர நடைமுறையிலும் எதிரொலித்து, ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராகப் போய் விடுவதும் நடக்கிறது. நமது அமைப்பிலும் இது விதிவிலக்கல்ல. மகிழ்ச்சி என்பது என்ன என்ற கேள்விக்கு மார்க்ஸ் கொடுத்த விடை போராட்டம் என எழுதுவது எளிது. போராட்டத்தினூடே வாழ்ந்து காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இப்போது அமைப்பில் உள்ள தோழர்கள் பலரும் இப்படிப்பட்ட எளிய வாழ்விலும் கடுமையான போராட்டத்திலும் வாழ்ந்து கொண்டுள்ளனர். மூத்த தோழர்கள் தமது வாரிசுகளையும் தாம் கொண்ட கொள்கைக்காக போராட வேண்டும் என ஏற்றுக் கொள்ள வைத்துள்ளனர், ஏற்றுக் கொள்ள வைக்க போராடி வருகின்றனர்.

தமது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் இல்லை என சேர்ப்பதே ஒரு போராட்டம்தான். அறிவுத் துறையினர் பலர் இன்றும் இதை ஏற்க மறுத்து வாதிட்டு வருகின்றனர். சாதி, மத, வர்க்கம் அற்ற ஒரு சமூகத்தைப் படைப்பதற்குப் போராடிவரும் ஒருவர் இந்த சாதிய சமூகத்திலேயே அதை மறுத்து வாழ்ந்து காட்டுவதே பெரும் போராட்டம்தான். கட்டிட வேலை செய்யும் ஒரு எளிய பெண் தொழிலாளி, தோழர்கள் குடியிருந்த வாடகை வீட்டில் சில கட்டுமான வேலைகள் செய்ய வந்திருந்தபோது, பெண் தோழர் இயல்பாக உதவிகள் செய்ய, வீட்டிலிருந்து தண்ணீரும் வாங்கிக் குடித்துள்ளார் அந்தப் பெண் தொழிலாளி; மதியம் சாப்பாட்டின்போது பேச்சு வாக்கில் அவர் என்ன சாதி எனக் கேட்க, பெண் தோழரோ எங்களுக்கு சாதி, மதம் இல்லை என்று கூறியபோது, அந்த தொழிலாளியோ ‘அப்ப அண்ணன், தம்பிய கட்டிக்குவிங்களா’ என கோபமாக சண்டை போடத் தொடங்கிவிட்டார். ‘நீங்க செய்விங்க போல’ என தோழர் கேட்க பேச்சுவார்த்தையே முறிந்து போனது. அன்னம்-தண்ணீர் புழங்குவதற்குகூட இங்கு சாதி உள்ளது என்பதையே மேற்படி சம்பவம் காட்டுகிறது.

தோழர்கள் போராடி சிறை செல்லும்போதும் இந்த சாதிச் சண்டை விடுவதாயில்லை. தடிக் கம்பை வைத்துக் கொண்டு, ‘அப்ப உன் அப்பன் சாதி என்ன’ என கேள்வி சீறிக் கொண்டு வரும். நீங்கள் ஏப்ப சாப்பையாகவோ, தனியாகவோ இருந்தால் தடியடி நிச்சயம். பார்ப்பன பாசிசத்தின், மனுவின் கொடூரத்தை நீங்கள் ஒவ்வொரு கணமும் எதிர்த்துப் போராடியே ஆக வேண்டும். பொதுவில் பார்த்தால் நகரத்தில் அவ்வளவு வெளிப்படையாக சாதியின் கோரத்தைக் காண முடியாதுதான். ஆனால் அது மேலோட்டமான பார்வை.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த நேரத்தில் விழுப்புரத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சமூகத்தில் இட ஒதுக்கீட்டு சலுகைகளுக்காக BC, MBC என சொல்லிக் கொள்ளும் சாதியினர்தான் சமூகத்தில் தங்களை ‘சத்ரிய வம்சம்’, ‘ஆண்ட பரம்பரை’ என பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.

படிக்க : சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!

அதே விழுப்புரத்தில் சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாவினை நடத்தியபோது அந்தப் பெரிய மண்டபம் நிரம்பி வழிந்ததோடன்றி, மணவிழா உரைகளை சலசலப்பின்றி கூட்டம் உள்வாங்கியது. டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்திய ஒரு ஓட்டுனர், கடைசிவரை உரைகளைக் கேட்டது மட்டுமின்றி, நிதியும் கொடுத்து ஆதரவு தந்தார். மண்டபத்தை சுத்தம் செய்யும் பெண் ஒருவர் துவக்கத்தில் எல்லா திருமணங்கள் போல இதுவும் ஒரு விழா என வேலைகள் செய்து வந்தவர், உரைகளைக் கேட்கக் கேட்க ஆர்வமாகி முழுமையாக கவனிக்கத் தொடங்கினார். கூட்டம் முடிந்த பின் நமது தோழர்களை அணுகி, ‘எங்கள் வீட்டிலும் ஒரு பெண் உள்ளார், உங்கள் தோழர்கள் யாராவது திருமணம் செய்து கொள்வீர்களா’ என்ற கேள்வியாக கேட்டார் என்பதில் இந்த மண விழாவின் இலக்கைக் காண முடிந்தது.

மாட்டுக்கறி விருந்து பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்றைக்கு பசு வளையப் பகுதிகளில் தெருவிலேயே அடித்துக் கொல்லும் கோரங்களை சங்கி கும்பல் அரங்கேற்றி வரும் வேளையில், அன்றைக்கு தமிழகத்தில் இது ஒரு சிக்கலே இல்லை. ஆனால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் விருந்துண்டார்கள் எனச் சொல்லி விட முடியாது என்பதுதான் உண்மை. வந்திருந்த உறவினர்களில் பலபேர் முதல் முறையாக சுவைத்துச் சாப்பிட்டனர் என்பதும் மறுக்கவியலாத உண்மை.

பார்ப்பன பாசிசம் ஒரு நொடியில் வீழ்ந்து விடும் என்ற கற்பனை அமைப்பில் உள்ள யாருக்கும் இல்லை. பார்ப்பன பாசிசத்தின் வேர் ‘சண்டாளப் பாவி’ என்ற வசைச் சொல் வரை ஆழமாக ஊடுருவி இருக்கின்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பும் இதையே வேறு வார்த்தைகளில் உறுதிப்படுத்துகிறது. பார்ப்பன பாசிசக் கொடூரம் இன்று காவி – கார்ப்பரேட் பாசிசமாக கோலோச்சும் போது சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்களின் தேவை இன்னும் கூடுதலாகிறது. நாம் சுவாசிப்பதைப் போல இவற்றை அன்றாட நிகழ்வாக மாற்றுவதில்தான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் சாதனையும் நிற்கிறது. சாதி – தீண்டாமையின் வேர்களை அகமண முறைகள் பாதுகாக்கின்றன. அவற்றைத் தகர்த்தெறியும் வரை போராட்டங்களைத் தொடர உறுதி ஏற்போம்!


அசுரன்

சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

தொண்ணூருகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடத்தப்பட்ட சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக ம.க.இ.க-பு.மா.இ.மு-வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா நவம்பர் 22, 1997 அன்று நடத்தப்பட்டது.

அன்றைய பார்ப்பன பாசிசம் இன்று காவி பயங்கரவாதமாக பரிணமித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சாதி-தீண்டாமை மறுப்பு திருமணங்களை ஓர் இயக்கமாக தமிழகத்தில் கட்டியமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் எமது புரட்சிகர அமைப்புகள் நடத்திய சமுதாயப் புரட்சிப் பிரகடனமாக அரங்கேற்றப்பட்ட “சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா”வின் 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்.

அந்த சமுதாயப் புரட்சிப் பிரகடனத்தை பற்றி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த எமது புதிய ஜனநாயகம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையை தற்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம்!

– வினவு

***

சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

கத்திருமண முறை – அதாவது, ஒரே சாதிக்குள் மணமுடிப்பது சாதிய இருத்தலுக்கான அடிப்படைகளுள் ஒன்று. சாதி ஒழிப்புப் பணியில் சாதி மறுப்புத் திருமணங்களின் இன்றியமையாமையை பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் வலியுறுத்தியுள்ளனர். இதை மனதிற்கொண்டு, ம.க.இ.க – பு.மா.இ.மு – வி.வி.மு இம்மூன்று அமைப்புகளும் நடத்தி வரும் சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, “சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழா” நடத்தப் பெற்றது.

கடந்த நவம்பர் 22-ஆம் தேதி விழுப்புரம் நகரமே வியந்து நிற்கும் வண்ணம் சாதி -தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாவில் ஆறு திருமணங்கள் நடந்து முடிந்தன. இதில் மூன்று திருமணங்கள் மறுமணங்களாகவும் அமைந்தது இன்னும் சிறப்பு.

திருமண நிகழ்ச்சி காலையில் கருத்தரங்காகவும், மாலையில் மணமக்கள் ஊர்வலம், மணவிழா வாழ்த்துரை, கலைநிகழ்ச்சி என இரு பிரிவாக நடந்தது. கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய ம.க.இ.க தோழர் கதிரவன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, திருமணங்களில் பார்ப்பன மயம் என்பது பற்றிப் பேசினார். மதுரை வீரன் கதை, முத்துப்பட்டன் கதை என நாட்டுப்புற இலக்கியங்களில் பதிவாகியுள்ள பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி- தீண்டாமை மறுப்புத் திருமணங்களை எடுத்துக் கூறினார். இன்றைக்கோ அனைத்துச் சாதியினரும் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவதை ஒரு கௌரவமாக கருதுவதைச் சாடினார்.

அடுத்து பேசிய ஈரோடு வழக்கறிஞர் தோழர் திருமலைராசன் இந்து திருமணச் சட்டமும் பிற மதங்களின் திருமணச் சட்டங்களும் எப்படி மனிதத் தன்மையற்றுள்ளன என்பதைத் திரைக்கிழித்தார்.

படிக்க : மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !

வரலாற்று ரீதியாக திருமணச் சட்டங்கள் மாறி வந்ததை விளக்கினார். 1968-இல் தி.மு.க ஆட்சியின் போதுதான் பார்ப்பனன் இல்லாமல் நடக்கும் பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப் பட்டதைக் குறிப்பிட்டார். அதற்கு முன்னர் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் இந்து சட்டப்படி செல்லாதவை. பிறக்கும் குழந்தைகள் கள்ளக் குழந்தைகள் என ஆதிக்க சாதிகளோடு அரசும் சேர்ந்து கொண்டு முத்திரை குத்தியதை எடுத்துக் கூறினார்.

“1968 சட்டத்திலும் பல ஓட்டைகள் உள்ளன. தற்போது இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். சாதி – தீண்டாமை மற்றும் மத மறுப்புத் திருமணங்களை இச்சட்டம் இன்னும் அங்கீகரிக்கவில்லை” எனத் தெளிவுபடுத்திய அவர், “சொத்துரிமை அடிப்படையிலேயே திருமணச் சட்டங்கள் நிலை கொண்டிருப்பதை”க் கோடிட்டுக் காட்டினார்.

சாதி மறுப்புத் திருமணமும் புரட்சிகர நடைமுறையும் என்ற தலைப்பில் பேசிய தோழர் மருதையன் ஆதிக்க சாதியினர் தென் மாவட்டங்களில் நடத்துகின்ற கலவரங்களைக் குறிப்பிட்டு இங்கும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் திருமணங்கள் மூலம் சாதி – தீண்டாமைக்கு எதிராக கலகம் செய்கிறோம் என்றார்.

பெரியார் தொடங்கிய சுயமரியாதைத் திருமணங்களை இந்த அளவு பிரச்சாரம் செய்து நடத்த வேண்டிய வெட்கக் கேடான நிலையில் நாமிருக்கிறோம் என்பது அவமானகரமானது. சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் பிற மாநிலங்கள் பலவற்றில் இல்லை. சட்ட அங்கீகாரமிருந்தும் இப்போக்கு ஏனிங்கு வளரவில்லை? ஏனிங்கு சாதிய மோதல்கள்? அனைத்தும் பார்ப்பனமயமானதுதான் காரணம். பெரியார் பண்பாடு பரவவில்லை. மாறாக, ஆடம்பரமும் பார்ப்பனியச் சடங்குகளும் பரவியுள்ளன என்றார்.

“கிராம அளவில் நிலவிய சாதிய உறவுகள் மாநில அளவிற்கு வளர்ந்து, உறுதிப்பட்டுள்ளன. சாதிச் சங்கங்கள் இவற்றுக்கு உரமிடுகின்றன. இங்கு நடக்கும் திருமணம் புரட்சிகரமானது. மேடையோடு முடிவதில்லை. இப்போதுதான் தொடங்குகிறது. வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக திகழும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும். குடும்பத்தினுள் சுயநலத்தை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். அமெரிக்க குடும்பங்கள் சிதைவதற்கு சுயநலன் மேலோங்கியதே காரணம்.”

“விஞ்ஞான வளர்ச்சியில் மூட நம்பிக்கை ஒழிகிறது. ஆனால் சாதியம் ஒழியாது. இது சுரண்டலுடனும் ஆதிக்கத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தே திட்டமிட்டு சாதி பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது நடக்கும் சாதி – தீண்டாமை மறுப்பு மணங்கள் எங்கோ ஒன்றிரண்டு என உள்ளன. இவை பல்கிப் பெருகும். அன்று சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் காட்டுமிராண்டித்தனம் என்றாகி, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். இது நிச்சயம் எனக் கூறி, தோழர் மருதையன் தனது உரையை முடித்தார்.

மாலையில் பெரியார் சிலையில் இருந்து மணமக்கள் ஊர்வலம் தொடங்கி, சென்னை நெடுஞ்சாலை வழியாக திருமண மண்டபத்தை அடைந்தது. ஊர்வலத்தில் சாதி அரக்கன் இருவரை செருப்பால் அடித்துச் செல்ல, அதன் பின் பறைமுழக்க கருவிகள் எழுச்சிமிகு இசையெழுப்ப மணமக்களும், அதன்பின் திரளான கூட்டமுமாக வந்த மண விழா ஊர்வலம் விழுப்புரம் நகரையே உலுக்கியது. சாதி – தீண்டாமை மறுப்பு முழக்கங்கள் மக்களின் செவிகளில் எதிரொலித்தன.

உத்தமபாளையம் வட்ட வி.வி.மு செயலர் தோழர் மோகன் மணவிழாவிற்கு தலைமை, ஏற்றுப் பேசினார். அதன் பின் திருமுதுகுன்றம், பு.மா.இ.மு தோழர் ஜெயகாந்த் சிங், ஆண்டிபட்டி வி.வி.மு செயலர் செல்வராசு, சங்கராபுரம் வி.வி.மு தோழர் கதிர்வேலன், விழுப்புரம் வழக்கறிஞர் தயாநிதி, தமிழக கலப்புமணத் தம்பதிகள் சங்க மாநிலத் தலைவர் திரு. ஆர். வைத்தியநாதன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தூய தமிழ் சொல்லாக்க அகர முதலிகள் துறை தலைவர் தோழர் ப. அருளி, சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் சத்யா, ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர். வைத்தியநாதன், ‘சாதி – தீண்டாமை மறுப்பு மணம் புரிபவர்களை சாதியற்றவர்கள் என அரசு பதிவு செய்து அங்கீகரிக்க வேண்டும். இவர்களுக்கு சலுகைகள், ஒதுக்கீடுகள் வழங்கி சாதி ஒழிப்புக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும் எனப் பலத்த கரவொலிக்கிடையே வேண்டுகோள் விடுத்தார்.

படிக்க : தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !

தோழர் ப. அருளி பேசும் போது, ‘பார்ப்பனர்கள் மக்களுக்குப் புரியாத தேவபாடையில் திருமண மந்திரங்களை உச்சரிக்கிறார்களே அதன் ஆபாச, வக்கிர, மோசடிகளைத் திரை கிழித்தார். இது தமிழனின் பண்பாடுமல்ல என்று விளக்கினார். இத்திருமணங்கள் கண்கொள்ளாக் காட்சி; இதைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; பெரியாரின் சீர்திருத்தத்தையும், பெருஞ்சித்தரனாரின் தமிழுணர்வையும் இங்கு பார்க்கிறேன்’ எனக் கூறி மணமக்களை வாழ்த்தினார்.

வாழ்த்துரைக்குப் பின் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மேடையில் அமரவைக்கப் பட்டனர். அவர்கள் முன்னிலையில் மணமக்கள் தோழர் மோகன் தலைமையில் மணவிழா உறுதிமொழி ஏற்று மாலை மாற்றிக் கொண்டனர். தாலி, சடங்கு, சீர் ஏதுமின்றி எளிய விழாவாக, கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளிடையே மணவிழா இனிது முடிந்தது. மணமக்களுக்கு போராட்டக் குழு வாழ்த்து மடல் அச்சிட்டு வழங்கியது. மண்டபத்தில் தமிழகமெங்கும் வந்து கூடிய 3500-க்கும் மேற்பட்டோர் தமது வீட்டுத் திருமணம் என உற்சாகமாக மணவிழாவில் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி.

இதைத் தொடர்ந்து ம.க.இ.க மையக் கலைக்குழு வழங்கிய புரட்சிகர கலை நிகழ்ச்சி, மக்களின் புரட்சிகர உணர்வுகளைத் தட்டி எழுப்பியது.

முத்தாய்ப்பாக மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. ‘முற்போக்கு முகாம்’ என்போர் உட்பட பலரிடமும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது அழைப்பிதழின் இறுதியில் அச்சிடப்பட்ட இவ்வரிகள் தான்.

பார்ப்பனியக் கருத்தியல், சாதி – தீண்டாமைக்கெதிரான கலகம் சரியான முறையில் நடந்தேறியது.

1998-ஆம் ஆண்டு வெளிவந்த புதிய ஜனநாயகம் (தொகுதி-13; இதழ்1-4) இதழிலிருந்து…

அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை | வீடியோ

தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு! | வீடியோ

தென்காசிக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார்.

இதுகுறித்து உண்மையை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் பேரா. இரா.முரளி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார்,மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் வழக்கறிஞர் ஆ.ஜான்வின்சென்ட், வழக்கறிஞர் ச.மனோகரன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்(CPCL), வழக்கறிஞர் முனைவர் கரு.சித்தார்த்தன், மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் அடங்கியக் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

கணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

கல்வித் துறையை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்!

ந்திய பள்ளிகளை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் பணியில் தற்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதைப் பல்வேறு முனைகளில், பள்ளி பாடத்திட்டத்திலும் மாணவர்கள் மத்தியிலும் திணிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ள அமினாபாத் இன்டர் காலேஜ் பள்ளியில் இந்துத்துவத்தைத் திணிக்கும் விதமாக A என்றால் இனிமேல் Apple இல்லை அர்ஜுனா (Arjuna), B என்றால் பலராமன்  (Balarama), C என்றால் சாணக்யா (Chnakya) என்று பள்ளி மாணவர்களிடையே இந்துத்துவ – பார்ப்பன மதவெறி ஊட்டப்பட்டு வந்தது அம்பலமானது.

இது குறித்து அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, படிக்கும்போதே குழந்தைகளுக்கு இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றை கதை, பாடல்கள், நாடகங்கள் இதர வழிமுறைகளின் மூலம் கற்றுத்தர வேண்டுமென்றும், அதற்காகத்தான் இந்த மாதிரியான முயற்சிகளை எடுத்திருக்கிறோம் என்றும் கூறினர். அர்ஜுனன் பலராமன் சாணக்கியன் ஆகியோர்தான் இந்தியாவின் விழுமியங்களா? சணக்கியரின் விழுமியங்கள் நமக்குத் தெரியாதா என்ன? இந்த விழுமியங்களைத் தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தப் போகிறார்களாம்!

ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்சி செய்யவில்லை. பார்ப்பன – இந்து பயங்கரவாத கலாச்சாரத்தை மேம்படுத்தவே இவ்வாறான முயற்சிகளை வெளிப்படையாகவோ அல்லது  மறைமுகமாகவோ வலுக்கட்டாயமாகச் செய்து வருகிறது. இது மாதிரியான பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அதற்குப் பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான்; இராமனைப் போல் மறைந்திருந்து அம்பு எய்கிறது.

படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இல்லை; கர்நாடகாவிலும் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அந்தமானில் சிறையில் இருந்த சாவர்க்கர் புல்புல் பறவையில் அமர்ந்து இந்தியாவுக்கு பறந்து வந்ததாக எழுதப்பட்டிருந்தது. புல்புல் பறவை வேண்டுமானால் சிறைக்குள் செல்லும் அளவிற்குச் சிறியதாக இருந்திருக்கலாம். ஆனால், சாவர்க்கர் இறக்கையில் அமர்ந்து செல்லும் அளவிற்கு மந்திரவாதியா என்ன? இந்த மந்திரவாதியின் உண்மையான வரலாற்றை மறைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவனை சுதந்திரப் போராட்ட வீரராக காட்டுவது போன்று பல சாணக்கியத்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ‘அழகு’ என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சாவர்க்கர் சொன்னதால்தான் வேலூர் கலகம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னோடியாக அமைந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாவர்க்கரை ஒரு வரலாற்றாசிரியர் என்றும் கூட எழுதப்பட்டிருந்தது. இது உத்தரப்பிரதேசத்திலோ கர்நாடகாவிலோ நடந்தது அல்ல தமிழ்நாடு அரசின் பாடநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழக மண் பெரியாரின் மண்; இம்மண்ணில் காவிகளுக்கு இடமில்லை என்று கழக கண்மணிகள் சிலாகித்துக் கொண்டிருக்கின்றன. (கழக கண்மணிகள் காவிகளுடன் சமரசம் செய்து கொண்டிருப்பது தனி கதை) ஆனால் தமிழக வரலாற்றையே மாற்றி எழுதிக் கொண்டு இருக்கின்றன ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க பாசிச கும்பல். இவ்வாறு காஷ்மீர் முதல் குமரி வரை கல்வித்துறையை பாசிச கும்பல் கவ்விக்கொண்டு வருகின்றது.

மேலும், பள்ளிகளின் முதல்வராகவோ அல்லது நிர்வாகியாகவோ சங்கர மடத்தின் ஆசியுள்ளவரை பாசிச கும்பல் நியமித்து வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் இந்துராஷ்டிரத்தை அமைப்பதில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுகிறது.

படிக்க: ‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்க வைப்பதற்காக சில மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக மேளம்(Drums) வாசிக்கப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதேபோல், கராத்தே பயிலும் மாணவர்களையும் பேரணிக்கு அழைத்துச் செல்வதற்குத் தயார் செய்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பகலில் எந்தப் பயிற்சியும் கொடுப்பதில்லை. இரவு நேரங்களில் 8 அல்லது 9 மணி போலத்தான் பயிற்சிக் அளிக்கப்படுகிறது.

இரவில் இவ்வளவு தாமதமாகப் பயிற்சி என்ற பெயரில் பள்ளிக்கு வரச்சொல்வதைப் பற்றி விசாரிப்பதற்காக ஒரு மாணவரின் பெற்றோர் பள்ளியின் முதல்வரிடம் கேட்டப்போது, பள்ளியின் முதல்வர் கூறியது, “இந்த மாதிரி இரவில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று எனக்கு எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார். இந்த விசயத்தைப் பற்றி உடற்கல்வி ஆசிரியரிடம் கேட்ட போதும் அவர் தனக்கும் எதுவும் தெரியாது என்றும், தான் சில நாட்களாக விடுமுறையில் இருப்பதாகவும் கூறினார். பிறகு தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்பதும் வெளியில் இருந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. வெளியிலிருந்து பள்ளிக்குள் ஒருவர் வந்து மாணவர்களுக்கு இதுபோன்று பயிற்சியளிப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் இரகசிய சாகா பயிற்சிக்கான சான்றாக அமைந்துள்ளது.

இதில் மோசமான விசயம் என்னவென்றால், அந்த மாணவர்களுக்கு நாம் எதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் ஆர்.எஸ்.எஸ்–இன் ஊர்வலத்திற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான பயிற்சிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இது ஏதோ சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் மட்டும் நடப்பது அல்ல; தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இது போன்ற சாகாப் பயிற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.

அசரத்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து அகற்ற கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை நவம்பர் 22 செவ்வாய் அன்று நடத்த உள்ளனர்.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் நான்கு வழி சாலையில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இந்த டோல்கேட் ஆரம்பிக்கப்படும் சமயத்தில் திருமங்கலம் நகர் எல்லைப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்ததால் அதனை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி திருமங்கலம் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை அடுத்து திருமங்கலம் நகர் எல்லைக்கு மிகவும் அருகில் விதிகளுக்கு முரணாக கப்பலூர் டோல்கேட் அமைக்கப்பட்டு இருப்பதை ஒப்புக்கொண்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அப்போது மக்களின் கடுமையான எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 28 பயணிக்கும் டீ கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வரை உள்ளூர் வாகனங்கள் இலவசமாக பயணம் செய்ய அன்றைய ஒப்பந்ததாரர் ஒத்துழைப்புடன் அனுமதி அளித்தது.

படிக்க : நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது. தடுப்பு அரண்கள் அமைத்து ரவுடிகளை வைத்துக்கொண்டு சாதாரணமாக பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் மிரட்டும் துணியில் வழிப்பறி செய்து வருகின்றது.

வாகன ஓட்டிகள், அரசு ஊழியர்கள், கார் வைத்திருப்பர் என உள்ளூர் வாசிகள் தினந்தோறும் அவமானப்படுத்தப்பட்டு மிரட்டப்பட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் வருகிற 22.11.2022 செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு மற்றும் 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். இதில் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தனியார் மையக் கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அடிமையிகளாக மாற்றப்பட்டு வருவதற்கு எதிரான போராட்டம் பல இடங்களில் பல வடிவங்களில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இந்த தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையிலும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

0

சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி பிரியா பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற கால்பந்து வீராங்கனை. குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கால்பந்து விளையாட்டில் அவர் சாதனைகள் பல படைப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில்தான் விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தால் முழங்கால் ஜவ்வு கிழிந்துள்ளது. அதை சரி செய்ய கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாமல் காலை துண்டிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றது. காலை அகற்றிய போதும் உடலின் உறுப்புகள் செயல் இழப்பது தொடர்ந்தது இறுதியாக பிரியா உயிரிழந்தார்.

வீராங்கனை பிரியாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், இவர்களை மட்டும் குற்றவாளி கூண்டில் ஏற்றும் இந்த அரசின் யோகிதை என்ன?

வீராங்கனை பிரியாவின் பயிற்சியாளராக இருந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பேசும்போது, “இதேபோல எனது நண்பன் ஒருவனுக்கும் காலில் ஜவ்வு கிழிந்தது. ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த பிரச்சினையை சரி செய்து விட்டான். ஆனால் பிரியாவின் குடும்பம் அந்தப் பணத்தைக் கூட செலவு செய்ய முடியாத பின்னணி கொண்டது. அதனால்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவர் உயிருடன் திரும்பவில்லை” என கூறியுள்ளார்.


படிக்க : சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!


ஒரு தேசிய அளவில் விளையாடக்கூடிய வீராங்கனையை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்துள்ளார்கள் என்பது அந்தப் பயிற்சியாளரின் பேச்சு அழுத்தமாக பதிவு செய்கிறது.

கிரிக்கெட் என்ற விளையாட்டை எடுத்துக் கொண்டால் அதில் விளையாடும் வீரர்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குகிறார்கள். அவர்களுக்கு அடிபட்டால் உடனடியாக மிகப்பெரும் மருத்துவமனைகளில் தனிச்சிறப்பான கவனம் கொடுத்து சரி செய்கிறார்கள். அவர்களின் ஆடம்பரங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் செலவு செய்யும் பணத்தில் சொற்பமான அளவு ஒதுக்கி இருந்தால்கூட இன்று பிரியாவின் உயிர் பிரிந்து இருக்காது.

கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் சதுரங்கப்போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்த தமிழக அரசு செய்த செலவு ரூ.92 கோடி என்கிறார்கள். சென்னை முழுவதும் விளம்பர பேனர்கள், வரவேற்பு பாடல், கலை நிகழ்ச்சிகள் என குதூகளித்தார்கள். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒதுக்கி இருந்தால் கூட இன்று பிரியா  காப்பாற்றப்பட்டிருப்பார்.

சென்னை சதுரங்கத்திற்கு உலகின் 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வருகிறார்கள். அந்த நாட்டின் பார்வை அனைத்தும் தமிழகத்தின் மீது படும். அங்கிருந்து முதலீடுகளைக் தமிழகத்தில் குவிப்பார்கள். அதனால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம்.

கார்ப்பரேட் நிறுவனங்களை இங்கு கொண்டுவந்து குவிப்பதற்காக ரூ.100 கோடிகள் செலவு செய்யலாம். அதேபோல, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் விளம்பரங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதிக்கலாம். இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கத்துடன் இணைக்கப்படும் விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கு ஆடம்பரங்களும் சுபபோகமான வாழ்க்கையும் உத்தரவாதம். அந்த நிலைக்கு உயராத நடுத்தர வர்க்கத்திற்கு சொந்தக் காசில் ஓரளவு அவர்களே சிகிச்சை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், உழைக்கும் வர்க்கத்து வீட்டு பிரியா போன்றவர்கள் அரசு மருத்துவமனையை நம்பி மிகவும் வறிய பின்னணியிலேயே வாழ்கின்றனர்.

இதுபோக கார்ப்பரேட்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடிகளை வரிசலுகைகளாக வாரி வழங்கும் அரசுகள். கல்வி சுகாதாரம் மருத்துவம் போன்ற அனைத்திலும் வறிய ஏழை நாடுகளை காட்டிலும் குறைந்த அளவே நிதி ஒதுக்குகின்றனர். இதன் விளைவு டாக்டர்கள் பற்றாக்குறை மருத்துவமனைகள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை என அனைத்தும் தலை விரித்தாடுகிறது. மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறுவது கூட சிரமமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.


படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


தனியார்மய-தாராளமய-உலகமய ஆதிக்கத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட்டுகளிடம் மருத்துவத்தை ஒப்படைக்கும் வேலையைத்தான் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதற்கு திராவிட மாடல் அரசும் விதிவிலக்கல்ல. உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறார்கள். நமது உரிமைகளையும் தேவைகளையும் நாம்தான் போராடி பறித்தெடுக்க வேண்டும்.

வீராங்கனை பிரியா மருத்துவமனையில் இருக்கும் போது, தனது நண்பர்கள் உறவினர்கள் என பல இடமும் பேசும்போது மீண்டும் “மாஸாக என்ட்ரி” கொடுத்து திரும்ப வருவேன்  என உறுதியாக கூறியுள்ளார். ஆனால் பிரியா திரும்பவில்லை. இன்னும் இதுபோல பல பிரியாக்களை நாம் இழக்க வேண்டுமா? உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் “மாஸாக என்ட்ரி”கொடுத்து களத்திற்கு வருவதுதான் கார்ப்பரேட் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான வழி, வர்க்க பகைமையை தீர்க்க வழி. அதுவே பிரியாவிற்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

ரவி

நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

கில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டிருப்பதும், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பதும், MASA சார்பில் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற திட்டமிடப்பட்டதும், நவ.2 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்திருந்தோம்.

பு.ஜ.தொ.மு (மா.ஒ.கு) சார்பில் இந்த பேரணியில் பங்கேற்க சுமார் 40 பேர் கொண்ட குழு (முன்னணியாளர்களது குடும்பத்தினர் உள்பட) 11.11.2022 இரவு டெல்லிக்கு புறப்பட்டது. 13.11.2022 அதிகாலை 5.30 மணியளவில் நடுங்கும் குளிரில் டெல்லி மாநகராட்சி சமூக கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் நமது தோழர்கள்  இணைந்து கொண்டனர்.

படிக்க : நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

காலை 11 மணியளவில் துவங்கப்போகும் பேரணிக்கு உடனடியாக தயார் செய்து கொண்டனர்.  பேரணி துவங்குமிடமான ராம்லீலா மைதானத்தில் 16 உறுப்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாமும் கலந்து கொண்டோம்.

டெல்லியில் 144 தடை உத்தரவு இருப்பதால் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கிய பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், ராம்லீலா மைதானத்திலேயே பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், மதியம் 2 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, தடையை மீறி குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கிய பேரணியை முன்னெடுப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

நண்பகல் 12 மணியளவில் துவங்கிய பொதுக்கூட்டத்தில் நமது அமைப்பு சார்பில் தோழர் அமிர்தா உரையாற்றினார்.

“நாங்கள் தமிழகத்திலிருந்து வந்திருக்கிறோம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கமான MLU (மெட்ராஸ் லேபர் யூனியன்) துவங்கப்பட்ட மண்ணிலிருந்து வந்திருக்கிறோம். காலனிய இந்தியாவிலும், அதற்குப் பிந்தைய இந்தியாவிலும் பல்வேறு போர்க்குணமிக்க தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்த, செறிந்த அனுபவம் வாய்ந்த மண்ணில் ஆட்டோமொபைல் துறை துவங்கி ஐ.டி துறை வரை; அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் துவங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை; பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் பயின்ற அனுபவத்திலிருந்து எமது முன்மொழிதல்களையும், இந்திய தொழிற்சங்க இயக்கம் கருத்தில் கொள்ள வேண்டிய முதன்மை அம்சங்களையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

மாசா முன்வைத்துள்ள 7 அம்ச முதன்மை கோரிக்கைகள், எஞ்சிய துணைக் கோரிக்கைகள் ஆகியவற்றுடன் முழுமையாக எமது அமைப்பு உடன்படுகிறது. எனினும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகிய இரண்டு அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும்போது, ஆலையின் உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் பணி நிலைமைகள், நாம் உருவாக்கும் இலாபத்தில் நமக்குரிய பங்கு ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். இந்த இரண்டு அடிப்படை உரிமைகளே ஏனைய கோரிக்கைகளுக்கு திறவுகோலாகவும் அமையும்.

இந்திய தொழிலாளி வர்க்கம் மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது சாதாரண விசயமல்ல. நாம் இங்கே பல்லாயிரக்கணக்கில் கூடி இருக்கிறோம். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். உங்களில் பலர் பீகாரிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ, மேற்கு வங்கத்திலிருந்தோ, தேசிய தலைநகர பிராந்தியம் எனப்படும் NCR மண்டலத்திலிருந்தோ, வேறு ஏதேனும் மாநிலத்திலிருந்தோ வந்திருக்கிறோம்.

நாம் மொழியாலும், பண்பாட்டாலும், நிலப்பரப்பாலும், இன்னபிறவற்றாலும் பிரிந்து கிடக்கிறோம். நம் அனைவரையும் ஒற்றைச் சொல், ஒற்றை உணர்வு  ஒன்றிணைக்கிறது. அதுதான் “வர்க்க உணர்வு” என்கிற ஒற்றை சொல்லும்,உணர்வுமாக இருக்கிறது.

பல்வேறு கூறுகளால் பிளவுபட்டிருக்கும் நாம்  ஒற்றை உணர்வால் ஒன்றுபடுகிறோம். இந்த ஒன்றுபடுதல் கீழிருந்து துவங்க வேண்டும். ஆலைக்குள்ளிருந்து மட்டுமல்ல, ஆலைக்கு வெளியில் இருந்தும் துவங்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தை குடியிருப்புகள், தொழிற்பேட்டைகள் என ஆலைக்கு வெளியில் அணி திரட்டுவோம். குடும்பங்களோடு அணி திரட்டுவோம். என் முதலாளி – உன் முதலாளி என தனித்தனியாக எதிர்த்து நிற்காமல் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பொது எதிரி முதலாளி வர்க்கம் என்கிற அடிப்படையிலிருந்து நமது வர்க்கப் போராட்டத்தை கட்டியமைப்போம்… வாருங்கள் தோழர்களே…!” என்கிற அறைகூவவலுடன் தோழர் அமிர்தாவின் உரை நிறைவுற்றது. அடுத்தடுத்து நடந்த உரைகளுடன் பொதுக்கூட்டம் முடிவுற்றது.

கருத்துரைகளுக்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தின. நம் தரப்பில் காஞ்சிபுரம் பகுதி தோழர்கள் “நான் உலகம்! நானே உலகம்!” பாடலை எழுச்சியுடன் பாடினர்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மதியம் 3 மணிக்கு பேரணி துவங்கியது. ராம்லீலா மைதானத்துக்கு வெளிப்புறம் வந்தடைந்த பேரணியின் வரிசையில் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு ஏழாமிடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விண்ணதிர முழக்கமிட்டது. இந்தி மொழியில் பிரதான முழக்கம் அமைந்த நிலையில் நமது முழக்கம் தமிழிலும், ஆங்கிலத்திலும் அதிர்ந்தது.

படிக்க : நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

பேரணி மைதானத்தின் வெளிச் சுற்றுப்புறத்தில் முன்னேறியபோது டெல்லி போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது. தடைக்கான காரணங்களைச் சொன்னதோடு, 16 அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட 5 பிரதிநிதிகள் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வருகின்ற பிரதிநிதிகள் குடியரசுத்தலைவர் இல்லத்தில் MASA அமைப்பின் கோரிக்கைகளை கடிதமாக தர முன்வர வேண்டும் எனவும் டெல்லி போலீசு சொன்னது.

இதையடுத்து 16 அமைப்புகளின் கூட்டுக்குழுவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவர் இல்லத்துக்கு சென்றனர். அங்கு கோரிக்கை பட்டியலை கொடுத்துவிட்டு வரும் வரையில் பேரணியில் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் அமர்ந்து தலைவர்களது அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

இறுதியாக MASA தலைமைக்குழு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பேரணி நிறைவடைந்தது.

இந்த போராட்டம் பல்வேறு புதிய அனுபவங்களை கொடுத்திருக்குறது. நமது கடந்தகால அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வைத்திருக்கிறது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஏப்ரல் 2021-ல் பிளவுபடுவதற்கு முந்தைய காலத்தில் முன்னெடுத்த நிகழ்வுகள், பிளவுக்குப் பிறகு பு.ஜ.தொ.மு-வின் வாரிசாக மாநில ஒருங்கிணைப்புக்குழு இயங்கி வருவதை நிலைநாட்டியுள்ளோம்.


இவண்,
பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக்குழு.

கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!

0

ங்கள் பள்ளிக் காலங்களில்  வகுப்பறைக்கு வரும் ஆசிரியர் எங்களிடம் உங்கள் வருங்கால கனவு என்ன என கேட்கும்போது எங்களில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகப் போகிறோம் என்று பதில் கூறுவர்.

அர்ப்பணிப்போடும் சமூக அக்கறையோடும் சக நண்பன் போல்ச் செயல்படும் சில ஆசிரியர்களைப் பார்த்து சில மாணவர்கள் இப்படிச் சொல்வதுண்டு.  ஆனால் இன்று ஆசிரியர் பணி என்றாலே முகம் சுழிக்கும் அளவிற்கு ஆசிரியர் பணியை மிகவும் நலிந்த நிலைக்கு மாற்றி வைத்துள்ளது அரசு. எப்போது பணி நிரந்தரம் செய்யப்படும்  என்ற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்  தற்காலிக ஆசிரியர்கள்.

நிரந்தர பேராசிரியருக்கு நிகராக அனைத்துத் தகுதிகளும் பெற்றிருந்த போதிலும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்பது சொற்பம் தான். பணிப் பாதுகாப்பு என்பதோ அரசு சலுகைகள் என்பதோ துளியும் இவர்களுக்குக் கிடையாது. நாள் தோறும் தினக் கூலிகளைப் போல வேலை செய்யும் இவர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு  நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். இவர்கள் அரசைக் கேள்வி கேட்டால் உடனடியாக  வேலையை விட்டு துரத்தியடிக்கப்படும் நிலையில்தான் அரசு இவர்களை வைத்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சம வேலை, சம ஊதியம், பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை  என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு  செவி சாய்க்காத அரசு, அவர்கள் தற்காலிகமாக  பணி செய்யும் வயதை அல்லது கூலி அடிமையாய் மட்டும்  வேலை செய்யும் வயதை  60 -ஆக நீட்டித்துள்ளது. தன்னுடைய உரிமைகளைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களையும் போராட்டத்தை விடுத்து பணிக்குத் திறும்பவில்லை என்றால் இருக்கும் தற்காலிக வேலையையும் பறிக்கப்படும் என்று அரசு ஆசிரியர்களை மிரட்டுகிறது. நிரந்தர பணி கிடைக்குமென TET, SET ,NET என விதவிதமான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகளை இவர்கள் எழுதினாலும்  இவர்களுக்கு நிரந்தர பணி கொடுக்க அரசு மறுக்கிறது.  பெயரளவில் மட்டும் தேர்வுகளை நடத்தி விட்டு ஆசிரியர்களை அரசு ஏமாற்றி வருகிறது.  2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி இந்நாள் வரை வழங்கப்படவில்லை. நிரந்தரமாக கூலி வேலையாட்களாய் மட்டுமே அரசு இவர்களை மாற்றி வைத்துள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாமல் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு, கடன் தொல்லையில் வாழும் இவர்களின் கண்ணீர் ஓலங்கள் இந்த அரசின் காதுகளுக்கு  இன்னும் எட்டவில்லை.

படிக்க: கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!

அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது அரசு.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு. வி. க  அரசு கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்களுக்கு நிகரான எண்ணிக்கையில்  கௌரவ விரிவுரையாளர்கள்  உள்ளனர். திரு.வி. க கல்லூரியைச் சேர்ந்த காட்சி தொடர்பியல் துறையில் துறைத் தலைவரைத் தவிர்த்து அனைத்து ஆசிரியர்களும் கௌரவ விரிவுரையாளர்கள் தான். இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் இருந்தாலும் இவர்களை நிரந்தரம் செய்ய அரசு முன்வரவில்லை. இதனால் பிஎச்டி சேர‌‌ வரும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அடுத்து இதழியல் துறையைப் பொறுத்தவரை இங்கு 100க்கும்  மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதும், ஆண்டிற்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகாரித்து வரும் போதும், இந்தத் துறையில் நிரந்தர பேராசிரியர்கள் என்று யாருமே கிடையாது; எல்லா ஆசிரியர்களும் தற்காலிக பணியாளர்கள் தான். விலங்கியல் துறையில் போதைய ஆசிரியர்கள் கிடையாது; இருக்கும் குறைந்தபட்ச ஆசிரியர்கள் தான் எல்லாப் பாடங்களையும் நடத்தி வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் 30-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி புரிகின்றனர். இதே நிலைதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் நிரந்தரம்  செய்து விடுகிறேன் என்று சொன்ன திமுக  அரசு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் அதிமுக செய்த அதே வேலையைத் திரும்பச் செய்கிறது.

ஆண்டுதோறும் வறுமையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு புகலிடமாக இருந்து வருவது அரசு கல்லூரிதான். இந்த அரசு கல்லூரிகள்தான் தன் வாழ்க்கை என நம்பி அனைத்து ஏழை மாணவர்களும்  அரசு கல்லூரியை நோக்கி வருகின்றனர். ஆனால் கல்வியை கடைச் சரக்காக்கி விற்றுக் கொண்டிருக்கும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் கண்களுக்கு அரசு கல்லூரிகள் என்பது தூசிபோல் கண்களில் உருத்திக் கொண்டிருக்கிறது.

கடைக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுவன் எப்படி கடைகளில் உள்ள அனைத்துப் பொருட்களையும் வாங்கச் சொல்லி அடம் பிடிப்பனோ, அதே போல் இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய கார்ப்பரேட்  முதலாளிகள் எப்படியாவது எல்லாத் துறைகளையும்  வாங்கிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க: 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’

அதன் ஒருபகுதியாகத்தான், எப்படியாவது அரசு கல்வி கட்டமைப்பை நொறுக்கி விட்டு மாணவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் வேலையில் தனியார் முதலாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களின் நம்பிக்கையாக இருக்கும் அரசு கல்வி கட்டமைப்பையும் செல்களை போல தினம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். அதற்கு, மேலும் படையல் இடும் வகையில்தான் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை மட்டும் நியமித்தது இந்தக் கல்விக் கட்டமைப்பை நொறுக்கி வருகிறது அரசு.

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். குறைந்த  மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட இக்கல்லூரிகளை எளிதில் அரசு மூடிவிடும். இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டமும்.

இவை எல்லாவற்றையும் கண்டித்து கடந்த ஆண்டு சென்னை DPL அலுவலகத்தின் முன் போராட்டம் , தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் போராட்டம், அக்டோபர் மாதம்  மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரி போராட்டம் மற்றும் திருவாரூர் திரு.வி.க கலைக் கல்லூரியில் போராட்டம் என கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டம் தொடர் கதையாகி உள்ளது. இதற்குத் தீர்வு ஆசிரியர்கள் கைகளில் மட்டும் இல்லை; ஆசிரியர்கள் போராட்டத்தோடு மாணவர்களும் கைகோர்க்காவிட்டால் நாளைய ஏழை மக்களின் பிள்ளைகளுக்குக்  கல்வி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

பாரி

மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

துரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நவம்பர் 17 அன்று காலை முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி விடுதிகளுக்கான கட்டிடங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதுதொடர்பாக மாணவர்கள் பலமுறை புகார் அளித்தும், போராடியும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரி அமைந்துள்ள பகுதி நீர்நிலைப் பகுதியாக இருக்கிறது. கல்லூரியின் கட்டிடங்கள் தரம் மற்றும் நீண்ட நாட்களுக்கு தாங்கும் உறுதித்தன்மை இல்லாததால் விரைவில் சிதலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை அடைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாணவியர் தங்கும் விடுதியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எவ்விதப்பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகு கட்டிடத்தை ஆய்வுசெய்த பொதுப்பணித்துறை, இந்த கட்டிடம் பயன்படுத்த தகுதியற்றது எனக் கூறியது. அதனை தொடர்ந்து மாணவியர்கள் வெளியேற்றப்பட்டு விடுதிக் கட்டிடம் இழுத்துமூடப்பட்டது. அதேபோல், சென்ற ஆண்டு மழை வெள்ளம் காரணமாக மாணவர்கள் தங்கும் விடுதியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்ததால், அந்த கட்டிடமும் இழுத்துமூடப்பட்டது.

படிக்க : மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

நீர்நிலை(கண்மாய்) நிரம்பியதால் கல்லூரி வளாகம் முழுவதும் மழைநீரில் சூழ்ந்தது. இத்தருணம் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை, கல்லூரியின் நூலகம், ஆய்வகம், கலையரங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் பயன்பத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்துவிட்டதாக கூறியது. எனவே மாணவர்களுக்கு மாற்று ஏற்பட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு கல்லூரிக்கு சில காலம் விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் கல்லூரியின் தரக் குறைபாட்டை சரிசெய்யாமல் மீண்டும் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் புதிய கட்டிடத்துக்கான வேலையை தொடங்க தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர். மாணவர்கள் கோரிக்கை வைக்கும் போதும் போராடும் போதும், அவ்வப்போது ஏதேனும் காரணம் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளது அரசு. இச்சூழ்நிலையில் தற்போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசிடம் சிதலமடைந்த கல்லூரியை சீர்செய்ய கோரிக்கை வைக்கவேண்டிய கல்லூரி நிர்வாகமோ மாணவர் போராட்டத்தை பிளவுப்படுத்தி சீர்குலைக்க முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் ஒரேஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியான திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி பல ஆண்களாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இருக்கிறது. அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை. தற்போது மாணவரக்ள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் ஆதரிக்கவேண்டும்.

தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.