Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 136

எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!

டகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூர், கடந்த மே முதல் வாரத்திலிருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மேய்தி மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்தான், அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது.

தலைநகரான இம்பாலைச் சுற்றியுள்ள சமவெளிப்பகுதிகளில் மேய்தி இனத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் மேய்திக்கள் சுமார் 53 சதவிகிதமாக உள்ளனர். கல்வி, அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் மேய்தி இன மக்களே செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர். மாநில அரசாங்கத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 சட்டமன்ற உறுப்பினர்கள் மேய்திக்கள்.

இவ்வாறு மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தும் மேய்திக்கள், 2013ஆம் ஆண்டு தொடங்கி தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19, 2023 அன்று, மேய்திக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசிற்கு தனது பரிந்துரைகளை மாநில அரசு வழங்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.

ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதியினர் இடஒதுக்கீடுகளை மேய்திக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, தற்போது மேய்திக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும், அதைவிட முக்கியமாக மலைப்பகுதிகளில் தங்களுக்குள்ள உரிமைகள் பறிபோகும் என்றும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர்.


படிக்க: மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!


மேய்திக்களுக்கு சாதகமாக அமைந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை எதிர்த்து, பழங்குடி அமைப்புகள் போராடத் தொடங்கினர். பழங்குடியினரின் போராட்டங்களை மேய்திக்களும் எதிர்க்கத் தொடங்கினர். இப்படி இருதரப்புக்கு இடையில் மோதல் போக்கு மூண்டெழுந்துள்ளது.

மேய்திக்களில் ஆகப்பெரும்பான்மையோர் இந்துக்கள். நாகா, குக்கி போன்ற பழங்குடியினரில் ஆகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள். ஆகவே, மேய்திக்களுக்கும் குக்கிகளுக்குமான மோதல் இந்து, கிறித்தவ மோதலாகவும் மாற்றப்பட்டுவருகிறது.

சிதைந்து கிடக்கும் மணிப்பூர்!

பல்வேறு பழங்குடியினங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்பான “அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கம்” சார்பாக கடந்த மே 3 அன்று பேரணி நடத்தப்பட்டது.  தலைநகர் இம்பால் உள்ளிட்டு சுரசந்த்பூர், தெங்னௌபால், சந்தல், கங்போக்பி, நோனி, உக்ருள் ஆகிய பகுதிகளில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, குக்கிகள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டம் மற்றும் தலைநகர் இம்பால் போன்ற இடங்களில் வன்முறை வெடித்தது. இவ்வன்முறையில் குக்கிக்களும் மேய்திக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இம்பாலில் மெய்தி மக்களின் மதக்கொடிகள் உள்ள வீடுகளை விட்டுவிட்டு குக்கிகளின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன.

சுரசந்த்பூரில் சிறுபான்மையாக உள்ள மேய்திகளின் வீடுகள் தாக்கப்பட்டன. அதேவேளையில், குக்கிகளைச் சேர்ந்த சிலர் மேய்திகள் மீது தாக்குதல் தொடுத்தபோது, அங்கிருந்த குக்கி இனப் பெண்கள் மேய்தி மக்களை அரணாக சூழ்ந்து நின்று அவர்களைக் காப்பாற்றிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தொடர்ச்சியான வன்முறைக் கலவரங்களால், வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பள்ளிக் கூடங்கள், அங்கன்வாடிகள், கடைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குக்கி இனத்தைச் சேர்ந்தவரின் மருத்துவமனையும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. குக்கிகள் கிறித்தவர்கள் என்பதால், இதுவரை 120க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன; அவற்றுள் சில தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரசந்த்பூர் பகுதியில் அமைந்திருந்த, குக்கி பழங்குடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் நடத்திய வரலாற்றுப் புகழ்பெற்ற நூற்றாண்டு நினைவுச் சின்னமும் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.


படிக்க: இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!


மே 3-இல் நடைபெற்ற வன்முறையால், 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் மற்றும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு புலம்பெயர்ந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையை மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை.

இவ்வன்முறையால் போதிய உணவோ, மருந்துகளோ இன்றி சுகாதாரமற்ற முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளிகள், கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இணைய வசதி முடக்கப்பட்டிருக்கிறது. இராணுவமும், துணை இராணுவமும் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. “மணிப்பூரின் நிலைமை, ஒரு உள்நாட்டுப் போர் நடந்ததைப் போல இருக்கிறது” என்கிறார் சுரசந்த்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் தன்னார்வலருமான ஜான் மாமாங்க். மேலும், இம்பால் மற்றும் இதர பகுதிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட கும்பலை போலீசார் தடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் உள்ளூர் மக்கள்.

மேலும், மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றபோது, மோடியால் தேசத்தின் பெருமையாகப் புகழப்பட்ட மல்யுத்த வீராங்கனை மேரிகோம், “எனது மாநிலம் பற்றி எரிகிறது; உதவுங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு டிவிட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மோடியோ கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பஜ்ரங் பலி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “இது ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை” என்று பல பத்திரிகையாளர்களும் மோடியை விமர்சித்திருந்தனர்.

காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை

அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் போன்ற மேய்தி இனத்தைச் சார்ந்த இனவெறி அமைப்புகளே குக்கிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளன என்பதற்கான சான்றுகள் தற்போது வெளிவந்துள்ளன. இக்குண்டர் படை அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவையாகும்.

“அரம்பை தெங்காலும் மேய்தி லீபனும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைப் போன்றவை. கருப்பை உடையில் இருந்த இக்கும்பல்கள், துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்றனர். காவல் நிலையங்களுக்குள் நுழைந்து ஆயுதங்களை சூறையாடினர். அதுனூடாக தேவலாயங்களை எரித்தனர். கிராமங்களை சூறையாடினர்” – என்று மணிப்பூரில் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறையைப் பற்றி விவரிக்கிறார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

மன்னர் காலத்திய மணிப்பூரின் பெருமையையும், மெய்திக்களின் பண்பாடான சனமகி (Sanamahi) பண்பாட்டை மீட்டமைக்க வேண்டும் என்ற கொள்கையையும் உடைய கருஞ்சட்டை அணிந்த இனவெறிக் கும்பல்தான் அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் கும்பல்களாகும்.

மேய்திக்களின் கொடியான சனமகி கொடிதான் மணிப்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இவ்வன்முறைக் கும்பலுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் உள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த 300 வருடங்களுக்கும் மேலாக, மேய்திகளின் பண்பாடான சனமகி பண்பாடும், பார்ப்பன இந்துப் பண்பாடும் ஒன்றுகலந்திருக்கிறது. மேய்திக்களின் பண்பாட்டில் இந்துமதப் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மேலோங்கி இருக்கின்றன. மேய்திகளின் பண்பாட்டை இந்துத்துவமயமாக்கி, அவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று, குக்கிகளுக்கும் மேய்திகளுக்கும் இடையேயான இன வன்முறையை தூண்டிவிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவிக் கும்பல்.

நிலம் யாருக்கான பிரச்சினை?

சமவெளிப் பகுதிகளில் உள்ள மேய்திக்களுக்கும், மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான இன மோதல்களுக்கு அடிப்படையாக இருப்பது நிலம்தான் என்று பல்வேறு முதலாளித்துவ அறிவுஜீவிகளும், ஊடகங்களும் முன்வைக்கிறார்கள். மேய்திக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோருவதற்குக் காரணம், மலைப்பகுதிகளில், பழங்குடியினர் அல்லாதவர் நிலம் வாங்க முடியாது என்பதாலும், தங்களை பழங்குடியினராக வகைப்படுத்தினால் மலைப்பகுதிகளில் தங்களால் நிலம் வாங்க முடியும் என மேய்திக்கள் கருதிகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

கூடுதலாக, எல்லைப்பகுதி மாநிலமான மணிப்பூரில், வங்கதேசம், மியான்மர் ஆகிய அண்டைநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக குடியேறுகின்றனர். இதனால், சமவெளிப்பகுதிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

“மெய்தி-குக்கி மற்றும் இதர இன மக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு நிலம்தான் அடிப்படையாக இருக்கிறது. இடப்பெயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது” என்று மனித உரிமை வழக்கறிஞரும், வடகிழக்கு மாநிலங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருபவரான நந்திதா ஹஸ்கர் நியூஸ்கிளிக் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் பிரச்சினையின் ஒருபகுதான். உண்மை என்னவெனில் மலைப்பகுதி நிலப்பரப்பில் சொத்து வாங்குவது, அனைத்து மேய்தி இன மக்களது கோரிக்கை அல்ல. மேய்தி இனத்தைச் சேர்ந்த ஆதிக்க வர்க்கங்களது கோரிக்கையாகும். எப்படி, தலித்துகளது இடஒதுக்கீட்டால்தான், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஆண்டசாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்கள் பிரச்சாரம் செய்கிறார்களோ, அதைப் போன்றதொரு பிரச்சாரமே மேய்திக்களின் பழங்குடியினர் பட்டியல் கோரிக்கையாகும்.


படிக்க: அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !


மேய்திக்களிலேயே அதிகாரத்தில் உள்ள, பணம் படைத்த வர்க்கம் சொத்து வாங்கிக் கொழுப்பதற்காகவும் கார்ப்பரேட்டுகளுக்கு தரகுவேலை பார்ப்பதற்காகவும் எழுப்பும் கோரிக்கை, இனவெறியால் ஒட்டுமொத்த மேய்திக்களின் கோரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அடிப்படையை புரிந்துகொண்ட சங்கப்பரிவாரக் கும்பல், மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலை மணிப்பூரில் மிக லாவகமாக அமல்படுத்திவருகிறது.

தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கிருஷ்ணசாமி போன்றவர்கள் எழுப்பிய கோரிக்கையை ஆதரித்து, அவரை கோடாரிக்காம்பாக வைத்தே அச்சமுதாய மக்களை ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாட்படையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதைப் போன்ற ஒன்றாகவே மணிப்பூர் விவகாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

காவி பயங்கரவாதம் மட்டுமல்ல, கார்ப்பரேட் சதியும்கூட!

ஆளும் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததிலிருந்து, பெரும்பான்மை மேய்திக்களுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை பழங்குடியினருக்கு எதிராகவும் செயல்படுவதாக குக்கி இனத்தைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

குக்கிகள் பெரும்பாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசாவைப் பயிரிடுகின்றனர். இதிலிருந்து அபின் என்ற போதைப் பொருள் தயாரிக்க முடியும். இதைவைத்துக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ஆக்கிரமிப்பு, போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் குக்கிகளுக்கு எதிரான அரச வன்முறையைக் கட்டவிழித்திருக்கிறது பிரேன் சிங் அரசு.

மேலும், குக்கி-மேய்தி மோதல் அரங்கேறிய பிறகு, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “குக்கிகள் அனைத்து பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களையும் ஆக்கிரமித்து கசகசா பயிரிடுகின்றனர் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றனர்” என ஒட்டுமொத்த குக்கி இன மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கியிருக்கிறார் பிரேன் சிங். இது குக்கிகள் மத்தியில்கூடுதல் பதற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் 2022-இல் சுரசந்த்பூர் மாவட்டத்தில் அமைந்திருந்த 38 கிராமங்களை வனப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கூறி வெளியேற்றியுள்ளது பிரேன் சிங் அரசு. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 20 அன்று சுரசந்த்பூரில் உள்ள சாங்ஜாங் என்ற கிராமத்தையும் காலி செய்திருக்கிறது. இக்கிராமங்கள் 50-60 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் என்கிறார், பழங்குடியின அமைப்புத் தலைவரான முவன் டாம்பிங்.

குக்கிகளுக்கு எதிரான பிரேன் சிங் அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த மார்ச் 10-இல், சுரசந்த்பூர், உக்ருள், காங்போக்பி, தெங்னௌபால், ஜிரிபம் மற்றும் தமீங்லாங் போன்ற மலைப் பகுதியிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த குக்கிகள் மாபெரும் பேரணி நடத்தியிருக்கின்றனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற குக்கிகள் மீது போலீசார் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

கடந்த மார்ச் 29-ஆம் தேதியன்று, வனப்பாதுகாப்புச் சட்டம் 1980-இல் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இத்திருத்தத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு – இராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணப்பயிர் வேளாண்மை செய்யவும், காடுகளுக்கு அடியில் உள்ள வளங்களைக் கொள்ளையிடவும் அனுமதியளித்திருக்கிறது. இத்திருத்தத்தின் மூலம், வனப்பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி, வனங்களை கார்ப்பரேட்டு கொள்ளைக்குத் திறந்துவிடுவதற்கானதாக மாற்றியமைத்திருக்கிறது மோடி அரசு.

இந்தப் பின்னனியில்தான், பல்வேறு மாநிலங்களுடைய பழங்குடிகளும் அவர்கள் வாழ்விடமான காடுகள் – மலைகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரின் வனப்பகுதிகளில் அரசே டிரோன்களை வைத்து குண்டுவீசி, பழங்குடி மக்களை அச்சுறுத்தி விரட்டும் விசயம் அண்மையில் அம்பலமாகியிருக்கிறது. சத்தீஸ்கருக்கு டிரோன் என்றால், மணிப்பூருக்கு இனச் சண்டை.

சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒழித்ததன் மூலம், காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று தம்பட்டமடித்தது காவிக் கும்பல். ஆனால், இன்று காஷ்மீரில் ஜக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனமானது பெரிய மால் தொடங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறது என்று தனது பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் நந்திதா.காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அக்கனிம வளத்தைக் கொள்ளையிட காத்திருக்கின்றன அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கழுகுகள். காஷ்மீரின் நிலைதான் நாளை மணிப்பூருக்கும்.

இனவெறிக் கும்பலும், மதவெறிக் கும்பலும், கார்ப்பரேட் கழுகுகளும் சுரண்டிக் கொழுப்பதற்காக அப்பாவி மேய்தி இன மக்களும், குக்கி இன மக்களும் பகையாளிகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.


அப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்

20.06.2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள்  மீது சித்திரவதை!
பாலியல் வன்கொடுமை!

ஆந்திரா சித்தூர் போலீசை தூக்கில் போடு!

கண்டன அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள குறவர் இனத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 7 பேரை, ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசு கடந்த 11ம் தேதி  விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போதே சித்திரவதை செய்துள்ளது.

ஆந்திர போலீசு  மீது புகார் செய்த அந்த கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் இரவோடு இரவாக மீண்டும் அதே சித்தூர் போலீசு  கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தாமல்  காவல்நிலையத்தில் ஒருவார காலமாக வைத்து, விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது பல்வேறு சித்திரவதைகள் செய்துள்ளது சித்தூர் போலீஸ்.

முகங்களை பிளாஸ்டிக் கவர்களால் மூடியும் பிளாஸ்டிக் பைப்களை கொண்டு  கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தியுள்ளனர். மேலும் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் முயற்சிகள் மூலமாக கைது செய்யப்பட்ட 10 பேர்களில் 8 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இருவர் சிறையில்  உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


படிக்க: இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !


உச்ச நீதிமன்றம்  பல்வேறு தீர்ப்புகளின் மூலம் கைது செய்வதற்கான விதிமுறைகளை வகுத்தளித்த போதும் அவை ஒருபோதும் இந்த நாட்டின்  சாதாரண மக்களை கைது செய்யும் போது பின்பற்றப்படுவதில்லை.

போலீஸ், ராணுவம், துணை ராணுவ படையினர் மேற்கொள்ளக்கூடிய குற்றங்களுக்கான தண்டனை என்பது பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட பல மடங்கானதாக இருக்கும் வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே தமிழ்நாடு அரசு ஆனது,  குற்றம் இழைத்த ஆந்திர சித்தூர் போலீசை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  இக்குற்றம் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் அமைத்து தொடர்புடைய போலீசுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர்.சி வெற்றி வேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
9962366321

பிலிப்பைன்ஸ்: விவாகரத்து உரிமைக்காகப் போராடும் பெண்கள்!

ரு நாடு மதவாதிகளால் ஆட்சி செய்யப்பட்டால் அது எந்த அளவிற்குக் கலாச்சார ரீதியாக பின்னோக்கி  இழுக்கப்படும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பிலிப்பைன்ஸ் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை அங்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. மத அடிப்படைவாதம் ஆதிக்கம் செலுத்துவதால், அங்குப் பெண்கள் விவாகரத்து பெரும் உரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த ஸ்டெல்லா சிபோங்கா என்ற பெண் திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு, அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விருப்பம் இல்லாத திருமண வாழ்வை முறித்துக்கொள்ள முடிவெடுத்தார்.

ஆனால் அங்குள்ள யதார்த்த நிலைமை அவருக்கு எதிராக இருந்தது. அவர் “கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக அமர்ந்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் அவ்வாறு விவாகரத்து கிடைப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. குறிப்பாக இங்கு மத அடிப்படையில் விவாகரத்து செய்வது என்பதே சட்டவிரோதமானது தவறானது என்ற நிலை உள்ளது. ஒருவேளை விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்று முறையிட்டால் தீர்வு கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதுதான் இந்த நாட்டின் தற்போதைய நிலைமையாக உள்ளது” என்று கூறினார்.

வாடிகனுக்குப் பிறகு விவாகரத்து உரிமையை மறுக்கும் நாடாக பிலிப்பைன்ஸ் இருக்கிறது. மேலும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தன் வாழ்க்கைக்கு உகந்த வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாத அளவுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பெரும் தடையாக அமைந்துள்ளது. வன்முறைகளில் ஈடுபடும் கணவர்களிடம் இருந்து மீள முடியாத நிலைமைக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களைத் தள்ளிவிடும் வேலையைத்தான் இந்நாட்டு அரசும் செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  விவாகரத்து பெறுவது என்பது கடினமான வேலையாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர் விவாகரத்து உரிமைக்காக வாதாடக்கூடிய வழக்கறிஞர்கள்.


படிக்க: இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!


இதுபற்றி பேசிய ஸ்டெல்லா சிபோங்கா “விவாகரத்து உரிமைக்கான சட்ட செயல்முறைகள் என்பது மிக மெதுவாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. வறுமையில் வாடும் நாட்டில் வழக்குகளுக்காக எப்படி பல ஆயிரம் டாலர்கள்  செலவு செய்ய முடியும். அப்படி ஒருவேளை செலவு செய்து வழக்கு தொடர்ந்தால் கூட வெற்றிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை” என்கிறார்.

மேலும் “கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு இங்கு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை,” என்று ஆதங்கத்தோடு கூறுகிறார் சிபோங்கா. இது சிபோங்காவின் நிலை மட்டுமல்ல; அனைத்துப் பெண்களுக்கும் இதே இழிநிலை தான்.

பெண்களுக்கு எதிராக மத நம்பிக்கைகள் ஆற்றும் பங்கு குறித்துக் கூறுகையில் “கடவுள் இணைத்ததைப் பிரிக்க முடியாது என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள். அது உண்மையல்ல. என் கணவர் என்னைக் கொல்ல முயன்றாலும், உளவியல் ரீதியாகத் துன்புறுத்தினாலும்  அனைத்தையும் சகித்துக் கொண்டு எப்படி அமைதியாக நான் வாழ முடியும். இது போன்ற செயல்களுக்குப் பின்னும் எனக்கு  விவாகரத்து  அனுமதிக்கப்படவில்லை என்றால் இவர்களின் நோக்கம் மத நம்பிக்கைகளை அமல்படுத்துவதே அன்றி பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல” என்றார் சிபோங்கா.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை பிலிப்பைன்ஸ் என்ற ஒரு மதவாத அரசாங்கம் செய்யும் நிகழ்வாக மட்டும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மத அடிப்படையில் நாட்டை ஆளத்துடிக்கும் அல்லது ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அரசாங்கங்களின் நடவடிக்கைகள் இயல்பாகவே பெண்களை ஒடுக்குவதாகத் தான் இருக்கும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை, ஈரான் நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை எல்லாம் இவ்வகையிலானதே.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


இந்தியாவின் நிலையும் படுமோசமாகத்தான் உள்ளது. பல மாதங்களாக பாலியல் கொடுமைகளுக்கு எதிராகத்  தெருவில் அமர்ந்து போராடிய மல்யுத்த வீராங்கனைகளை அடித்து இழுத்து கைது செய்தது இந்திய அரசு.

இன்று வரை எல்.ஜி.பி.டி.க்யூ என்ற வெவ்வேறு பாலின இயல்புகள் கொண்டவர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்காது மறுத்து வருகிறது இந்திய அரசு. மேலும் நாடு முழுக்க பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறை வழக்குகளை இந்து மனுதர்ம நூல்களின் அடிப்படையில்  விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. பெண்கள் கோவில்களுக்குள் நுழைவதைத் தடுப்பது எனப் பாலின சமத்துவத்திற்கெதிராக  தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இவர்கள் நிறுவத் துடிக்கும் மனுதர்ம அடிப்படையிலான இந்து ராஷ்டிரம்  இந்தியாவில் அமைந்துவிட்டால் பிலிப்பைன்ஸ் நாட்டை விடப் பன்மடங்கு ஒடுக்குமுறைகளை நம் பெண்கள்  சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


சித்திக்

இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!

0

த்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழலில் அம்மாநிலத்தில் உள்ள விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், தேவபூமி ரக்ஷா அபியான் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஜூன் 15 அன்று முஸ்லீம்களை அச்சுறுத்தும் வகையில் ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக புரோலா நகரில் ஒரு மகா பஞ்சாயத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அரசு நிர்வாகம் அந்நிகழ்வுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

கடந்த மே 26 அன்று சிறுமி ஒருவரை இருவர் (ஒருவர் இந்து மற்றொருவர் முஸ்லீம்) கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த மே 29 அன்று இந்துத்துவ கும்பல்கள் பேரணி ஒன்றை நடத்தின. அதில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும்’, ‘இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள், இஸ்லாமியர்களை விரட்டியடியுங்கள்’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உத்தரகாண்டிலேயே பிறந்து வளர்ந்த முஸ்லிம் ஒருவர் “இந்த முழக்கங்களைக் கேட்ட என்னுடைய 10 வயது மகள் நம்மை பற்றி இவ்வாறு ஏன் பேசுகிறார்கள் என்று என்னிடம் கேட்டார். என்னிடம் அதற்குப் பதில் இல்லை; எனது மகள் அழத் தொடங்கிவிட்டார். பேரணியின் போது, தாங்களும் அப்பேரணியில் கலந்து கொள்வதைப் போல் போலீசு அவர்களுடன் நடந்து சென்றது” என்று கூறினார்.

“உத்தரகாசி மக்கள் வகுப்புவாதிகள் இல்லை. சில கும்பல்கள் வேண்டுமென்றே வெறுப்புப்பேச்சு பேசுகின்றனர்; நில உரிமையாளர்களை மிரட்டி முஸ்லீம்களின் கடைகளை காலி செய்ய வைக்கின்றனர். இப்பகுதியில் மொத்தம் 38 கடைகள் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவற்றில் 12 கடைகளிலிருந்து நில உரிமையாளர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.


படிக்க: மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!


இதன் தொடர்ச்சியாக, ஜூன் 15-ஆம் தேதி மகா பஞ்சாயத்து நடத்தவிருப்பதாகவும், அதற்குள் முஸ்லீம்கள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும், காலி செய்யாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தேவபூமி ரக்ஷா அபியான் சார்பாக புரோலா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதேபோல, பார்கோட் (Barkot) நகரில் முஸ்லீம் கடைகளுக்கு வெளியே கதவுகளில் கருப்பு நிறத்தில் “X” என்ற குறியீடு இடப்பட்டது.

பா.ஜ.க தொண்டரான சலீம் அகமது என்பவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். “நான் எனது வீட்டை விற்றுவிட்டு டேராடூனுக்கு குடிபெயர இருக்கிறேன். இப்படி ஒரு நிலைமையை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார். பா.ஜ.க தொண்டராக இருந்தாலும் அவரும் ஒரு முஸ்லீம் தானே!

இங்கு வகுப்புவாத பதட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருபவர்கள் இந்துத்துவ சாமியார்கள்.

உத்தரகாண்டில் தற்போது நிலவுகின்ற வகுப்புவாத பதட்டம் குறித்து சுவாமி ஆதி யோகி என்ற இந்துத்துவ சாமியார் தி வயர் வலைத்தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார். ஆதி யோகி முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசி வரும்  தர்ஷன் பாரதியின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆதி யோகி தனது பேட்டியில், “இந்நிலம் கடவுள்கள், முனிவர்கள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமானது. சேவைக்காகவே மக்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் (முஸ்லீம்கள்) இறைச்சி உண்கின்றனர்; எங்கள் பெண்கள் மீது தேவையற்ற பார்வையைச் செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

அப்படியானால் உத்தரகாண்டில் முஸ்லீம்களைப் புறக்கணிக்கிறீர்களா என்று தி வயர் கேட்டதற்கு, “இல்லை, இல்லை. இந்த இடம் எங்களுக்கு மெக்கா போன்றது. மெக்காவுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி உண்டா? அதேபோலத்தான், இது எங்கள் மதத்தின் புனிதத்தலம். 2024-ஆம்‌ ஆண்டுக்குள் உத்தரகாண்டில் ஜிகாதிகளின் செல்வாக்கைத் துடைத்தெறிவோம்; அனைத்து இறைச்சிக் கடைகளையும் புறக்கணித்து மூடச்செய்வோம். 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி இங்கிருந்து துவங்கும்” என்று கூறினார்.

மகா பஞ்சாயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்குச் சுவாமி ஆதி யோகி, “இந்த விசயம் மத ரீதியாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அரசாங்கம் எங்கள் புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறினார்.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


இப்படி ஒரு அச்சமூட்டும் நிலையில்தான் உத்தரகாண்ட் மாநிலம் தற்போது உள்ளது. நடக்கவிருந்த மகா பஞ்சாயத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (Association for Protection of Civil Rights – APCR) உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றமோ “உயர் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லையா?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, வழக்கை முறைப்படி உயர் நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றம், ‘தான் கறார்’ என்பதை வெளிப்படுத்திக்கொண்டது.

அடுத்ததாக ஏ.பி.சி.ஆர்-இன் மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், சட்ட ஒழுங்கைப் பாதுகாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், உத்தரகாசி மாவட்டத்தின் புரோலாவில் இந்துத்துவ கும்பல்கள் ஏற்பாடு செய்திருந்த மகா பஞ்சாயத்து குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தியது.

மாநில பா.ஜ.க அரசாங்கம் மகா பஞ்சாயத்தைத் தடுத்து விட்டதாக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், உத்தரகாசியில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்னிலை வகிக்கும் தேவபூமி ரக்ஷா அபியான் சங்கத்தின் (Devbhoomi Raksha Abhiyan Sangathan) நிறுவனரும் இந்துத்துவ சாமியாருமான தர்ஷன் பாரதியின் கூற்று, பா.ஜ.க அரசாங்கம் இந்து மதவெறி கும்பல்களுக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

முன்னதாக தர்ஷன் பாரதி “மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ‘நில ஜிகாத்’ குறித்து விவாதித்தோம். அதன் பின்னர் தான் அவர் ‘நில ஜிகாத்’ குறித்த சட்டங்களை இயற்றினார். இதன் விளைவாகத்தான் 300-க்கும் மேற்பட்ட முஸ்லீம் கல்லறைகள் (mazars) இடிக்கப்பட்டன” என்று கூறியுள்ளார். புஷ்கர் சிங் தாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்பு ‘மசார் ஜிகாத்’ – ‘நில ஜிகாத்’ என்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து முஸ்லீம் கல்லறைகளை இடித்ததை தர்ஷன் பாரதி இங்கு சுட்டிக் காட்டுகிறார்.


படிக்க: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!


வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உத்தரகாசியில் வசிக்கும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்குப் பஞ்சம் இல்லை.

சான்றாக, பா.ஜ.க-வின் உத்தரகாசி மாவட்ட  எஸ்.சி பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளர் பிரகாஷ் குமார் தப்ரால் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களை (முஸ்லீம்களை) இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்; கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டோம். தாமாகவே அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்” என்று கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் முஸ்லீம் விரோத வெறுப்பு அரசியலால் சூழப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து முஸ்லீம்களுக்கு எதிரான பேரணிகள் இந்துத்துவ அமைப்புகளால் சுதந்திரமாக அரசின் துணைகொண்டு நடத்தப்படுகின்றன. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பேரணி நடந்தவாறே உள்ளது. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது. காவி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.


பொம்மி

“இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?”: அல் ஜசீரா ஆவணப்படத்திற்குத் தடை!

0

ஜூன் 14 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் அல் ஜசீராவின் “இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?” (India… Who lit the fuse?) என்ற செய்தி ஆவணப்படத்தை ஒளிபரப்பவோ வெளியிடவோ தடை விதித்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவில் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் வன்முறை தொடர்பான செய்தி ஆவணப்படமாகும். இது ஏற்கெனவே அரபு மொழியில் ஜூன்‌ 3 அன்று அல் ஜசீரா அரபி (@AJArabic) டிவிட்டர் பக்கத்தில்  வெளியாகிவிட்டது.

‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து இத்துறை தொடர்பான அதிகாரிகள் அங்கீகரிக்கும் வரை ஒளிபரப்போ வெளியீடோ செய்யப்படாமல் இருப்பதை மத்திய அரசும் அதன் கீழ் செயல்படும் உரிய அதிகாரிகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் சமூக நல்லிணக்கத்தையும் தேசப் பாதுகாப்பையும் இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைத் தொடுத்துள்ள ‘சமூக ஆர்வலர்’ என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சுதிர் குமார், இந்த ஆவணப்படத்தை நீதிமன்றம் தடை செய்யும் பொருட்டு பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளார். அதில் முதன்மையானதாக அவர் கூறியதாவது: “இந்த ஆவணப்படம் பல்வேறு மதப் பிரிவுகளிடையே வெறுப்பை விதைத்து இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அழிவை ஏற்படுத்தக்கூடும். சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி பொது ஒழுங்கு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும்.”

“இந்தியாவின் சிறுபான்மை முஸ்லீம்கள் அச்ச உணர்வுடன் வாழ்வதாகவும் பொது மக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் விதத்திலும் ஒரு சீர்குலைவு நோக்கம் கொண்ட கதையாடலை முன்வைக்கிறது. இந்திய அரசை சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானதாக எதிர்மறையாகச் சித்தரிக்கிறது” என்று சுதிர் குமார் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் தான் நீதிமன்றம் இந்த ஆவணப்படத்திற்குத் தடை விதித்துள்ளது. “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமையாக பேச்சுரிமையை அங்கீகரிக்கிறது. ஒளிபரப்பும் உரிமையும் பேச்சுரிமை – கருத்துரிமையில் அடங்கும். ஆனால் சரத்து 19(2)-இல் அதற்கான எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அல் ஜசீராவுக்கு 48 மணி நேரத்திற்குள் ‌நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 6 அன்று விசாரிப்பதாகக் கூறியுள்ளது.


படிக்க: முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை. ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்த பி.பி.சி-இன் செய்தி ஆவணப்படம் கடந்த ஜனவரியில் வெளியான போது அவசரநிலை காலகட்டத்தில் பயன்படுத்தும் ஐ.டி சட்ட விதிகளைப் பயன்படுத்தி பாசிச மோடி அரசு அதைத் தடை செய்தது. அந்த ஆவணப்படம் தொலைக்காட்சியில் திரையிடப்படவில்லை; அதேபோல அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அது முடக்கப்பட்டது.

இந்தியாவில் பாசிச தாக்குதல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் அவல நிலையைப் பற்றி பேசுவதென்பது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும்; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க‌ பாசிஸ்டுகள் குறித்துப் பேசுவது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும். ஆனால், தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற ‌ இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படங்கள் வெளியாவதென்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதாகும். இதுதான் ‘இந்து ராஷ்டிர நீதி’.


பொம்மி

ஏகாதிபத்திய போர்களினால் அகதிகளாக இடம்பெயரும் மக்கள்!

ஷ்ய – உக்ரைன் போர் மற்றும் சூடானில் நடந்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றால், 11 கோடி மக்கள் (110 மில்லியன்) அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 1.9 கோடி மக்கள் (19 மில்லியன்) தங்களது வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் எனவும், இது அந்த ஆண்டு இறுதியில் 10.84 கோடியாக (108.4 மில்லியன்) உயர்ந்தது எனவும் ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஆணையம் 14.06.2023 அன்று தெரிவித்தது.

பாதுகாப்பைத் தேடி தங்களது சொந்த நாட்டிற்குள்ளே அலைந்தவர்களும், நாட்டு எல்லையைவிட்டு வெளியேறியவர்களும் இந்த அதிகரித்த எண்ணிக்கையில் அடங்குவர். இதில் அகதிகளானவர்கள் மற்றும் புகலிடம் தேடியவர்கள் கிட்டத்தட்ட 37.5 சதவிகிதம் பேர் என்று அறிக்கைக் கூறுகிறது.

படிக்க : டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

இரண்டு மாதங்களுக்கும் மேலாக சூடானில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால்தான், அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11 கோடியாக அதிகரித்தது என்கிறார் ஐ.நா. அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி.

“இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானதாக உள்ளது. சர்வதேச பதட்டங்கள் மனிதாபிமான பிரச்சினைகளில் விளையாடும், மிகவும் துருவப்படுத்தப்பட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்” என்கிறார் ஃபிலிப்போ கிராண்டி.

2011 ஆம் ஆண்டு நடந்த சிரியா பிரச்சினைக்கு முன்பு, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக 4 கோடி (40 மில்லியன்) என மாறாமல் இருந்தது. ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போர், வர்க்க – இன பாகுபாடு, வன்முறை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவை மக்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் அகதிகளை அந்நாட்டிற்குள் நுழைவதற்கு பல கட்டுப்பாடுகளும் கடுமையான விதிகளும் விதிக்கப்படுகிறது என்கிறார் கிராண்டி.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப் பகுதிகளுக்கு வரும் அகதிகளை போலந்தும், ஹங்கேரியும் தங்கள் நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன. அதேபோல, அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அந்நாட்டில் இருக்கும் வலதுசாரி கட்சிகள் செய்து வருகின்றன என்கிறார் கிராண்டி.

பெரும்பான்மையான மக்கள் அகதிகளாக வெளியேறுவது உக்ரைன், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்துதான் என்கிறது புள்ளிவிவரம். ரஷ்ய – உக்ரைன் போர் கடுமையாக நடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில், 1.1 கோடி (11.6 மில்லியன்) உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதில், 59 லட்சம் (5.9 மில்லியன்) மக்கள் உள்நாட்டிலும், 57 லட்சம் (5.7 மில்லியன்) மக்கள் வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

படிக்க : திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!

கிரீஸ் அருகே கவிழ்ந்த அகதிகள் படகு

வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாகக் கடந்த ஜூன் 14 ஆம் தேதி லிபியாவில் இருந்து இத்தாலிக்குக் கடல்வழியாக பயணித்துள்ளார்கள். 750 பேரை ஏற்றிவந்த சிறிய படகு கிரீஸ் அருகே கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. படகில் பெண்களும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர். பலரது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் – உள்நாட்டுப் போர் – காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான். சொந்த நாட்டிற்குள்ளும், உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். உணவு – தங்குமிடம் ஏதும் இல்லாமல் செத்து மடிகின்றோம்.

தங்களது இலாபவெறிக்காக உழைக்கும் மக்களைப் பலிகொடுக்கும் இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தாமல், நம்மால் வர்க்க-இன பாகுபாடற்ற – வறுமையற்ற – பாதுகாப்பான வாழ்க்கையை  உருவாக்க முடியாது. உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்!

ஆதிலா

டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி நிர்வாகம் தலைநகரின் பல இடங்களை ‘அழக்காக்கும்’ பணியில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி மார்க் விகாஸ் மற்றும் யமுனை நதிக்கரையோரங்களில் வசித்துவரும் ஏழைக் குடும்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. உழைக்கும் மக்களை அப்புறப்படுத்தி ‘டெல்லியை அழகுபடுத்தும்’ நடவடிக்கையால் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த 40 குடும்பங்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளன.

இப்பகுதியில் பிறந்து வளர்ந்த 40 வயதான ராஜூ பால் என்பவர், அவரது சிறு வயதில் இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால், இயற்கை சூழலாலும் அரசின் நெருக்கடியாலும் பலர் இப்பகுதியினை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

படிக்க : ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடந்தபோது பல குடும்பங்கள் யமுனை நதிக்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பும்படி மிரட்டப்பட்டன. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இப்பகுதியை விட்டால் வேறு வழியேதுமில்லை. அப்பகுதியில் வசித்த பலர் அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்றும், அங்குப் பிழைக்க வழியேதுமில்லாததால் மீண்டும் யமுனை நதிக்கரைக்கே திரும்பியுள்ளனர்.

தற்போது டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.

காமன்வெல்த் போட்டி நடந்தபோது முன் அறிவிப்பு ஏதுவுமின்றி அதிரடியாக மக்களைக் குடிசைகளை விட்டு அப்புறப்படுத்தியதை போலவே, தற்போதும் முன் அறிவிப்பு ஏதுவுமின்றி அப்புறப்படுத்தும் பணியில் டெல்லி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், “நாங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்படலாம்” என்று கூறும் அவரிடம் அடுத்து எங்கே செல்வது என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. “இங்கு வசிக்கும் பலரும் தினக்கூலிகள்தான்; கிடைக்கும் வேலைகளைச் செய்பவர்கள். நாங்கள் இருக்க இடம் தேடிச் செல்ல ஒருநாள் கூலியைவிட்டுச் செல்லவேண்டும். இல்லையெனில், புல்டோர்சர்கள் எங்கள் வீடுகளைத் தரைமட்டமாக்கும் வரை இங்கேயே பிழைப்பைப் பார்த்திருக்க வேண்டும்” என்கிறார் ஆதங்கத்துடன்.

படிக்க : மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

நகரங்களை ‘அழக்காக்கும்’ பணி என்றாலே அதற்குப் பலிகடா உழைக்கும் மக்கள்தான். கடந்த ஆண்டு, ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றபோது அதற்காக மும்பையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வெளிநாட்டுப் பிரதிகளில் கண்ணில் படாதவாறு குடிசை பகுதிகள் ஜி-20 மாநாட்டுப் பேனர்களாலேயே திரையிட்டு மறைக்கப்பட்டன. அதேபோல், 2020 ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது காந்திநகரிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் சாலையில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் குடிசைவாழ் பகுதி மக்களை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டே வந்திருக்கின்றன. பாசிச பாஜக ஆட்சியில் இதன் வீரியம் அதிகம். வானுயர கட்டடங்களையும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் குப்பைகளையும், மனித கழிவுகளையும் அகற்றி நாட்டை சுத்தமாக வைத்திருக்கும் உழைக்கும் மக்கள்தான் ஆளும் வர்க்கங்களின் பார்வைக்கு ‘அசிங்கம்’. இவர்களை அகற்றுவதுதான் இவர்களது அகராதியில் ‘நாட்டை அழகாக்குவது’.

உண்மையில், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஏவிவிடும் பாஜக அரசும் ஆளும் வர்க்கங்களும்தான் இந்நாட்டைப் பீடித்திருக்கும் அசிங்கங்கள், அழுக்குகள். குப்பை கூளங்களோடு இவர்களையும் அகற்றுவோம்!

தங்களது பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் 40 குடும்பங்களில் ஒரு குடும்பம்.

000

எப்போதுவேண்டுமானாலும் குடிசைகள் தகர்க்கப்படும் என்ற நிலையிலும் அன்றைய தேவைக்காக நகர்ப்புறத்துக்கு பிழைப்புத்தேடி செல்லும் வியாபாரி.

000

புல்டோர்சர்கள் வந்தால் எதுவும் மிஞ்சாது என்ற அச்சத்தில் தங்களது தட்டுமுட்டு சாமான்களை தயாராக வண்டியில் ஏற்றிவைத்திருக்கும் காட்சி.

000

மாசுபட்ட, சுகாதார சீர்கேடாக இருக்கக்கூடிய யமுனை நதிக்கரை.

தாரகை
நன்றி: த வயர்

ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கு கடந்த 10.04.2023 அன்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட்டின் சதி நோக்கத்திற்கு துணை புரியும் வகையிலான இத்தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் எதிர்த்ததால் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழுவே கழிவுகளை அகற்றும் என்று உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.

இந்நிலையில், 12-06-2023 அன்று கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமானது ஊடகங்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Expression of Interest (EOI) இன் அடிப்படையில் கட்டட, கட்டமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு, ஆலை மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல் / புதுப்பித்தல் / மாற்றுதல், வடிவமைக்கப்பட்ட திறன் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை அடைய ஆலை மற்றும் இயந்திரங்களை இயக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்த நிறுவனங்களை அழைத்துள்ளது.

இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் தமிழ்நாடு அரசின் இறையாண்மையையும் கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கையாகும். அதிகாரத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலை தனது கைக்குள் வைத்திருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர்தான் ஸ்டெர்லைட்டின் இந்த விளம்பரத்திற்கு அடிப்படையாகும்.

படிக்க : மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

ஸ்டெர்லைட் ஆலையை சதித்தனமான வழிமுறைகளின் மூலம் மீண்டும் இயக்க முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. 15 உயிர்களை பலி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய நாள் முதல் இன்று வரை மீண்டும் திறப்பதற்கான சதிகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். ஒருபோதும் இம்முயற்சியை தூத்துக்குடி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் தூத்துக்குடி மக்களோடு இருக்கிறது.

எனினும், கொலைகார வேதாந்தாவின் நயவஞ்சக முயற்சிகளை தீர்மானகரமாக முறியடிப்பதற்கு ஒரே வழி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்காக தனிச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதுதான்.

“தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று” என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
13.06.2023

செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்

14.06.2023

செந்தில் பாலாஜி கைது!
இது ஊழல் பிரச்சினை அல்ல;
மோடியை எதிர்க்கும் அனைவருக்கும் இனி இதுவே நடக்கும்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதும் அவசர அவசரமாக இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் ஒன்றிய அரசு மோடிக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் இதுதான் கதி என்று கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நாம் கருத வேண்டி உள்ளது. ஆகவே ஒன்றிய அரசின்  நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை என்று கூறி ஒரு நாள் முழுவதும் அவருடைய வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் துணை ராணுவப் படையின் உதவியோடு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பதும் செந்தில் பாலாஜி மீதான கைது என்பதும் எவ்விதமான சட்ட, ஒழுங்கு, விதிமுறைகளுக்கு எதிரானதாகவே உள்ளது.

ஒரு மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ளே புகுந்து ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையுடன்  சோதனை செய்வதற்கு  முன்பு அந்த மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், மாநில அரசுக்கு எங்கே உரிமை உள்ளது? இதை தடுக்கக் கூட முடியாத அளவில் தான் மாநில அரசின் உரிமை உள்ளது என்பதே உண்மை. இப்படிப்பட்ட உரிமைகள் ஏதுமற்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.

ஒரு அமைச்சர் ஊழல் செய்துவிட்டார், அவர் மீது நடத்தப்படும் சோதனை தொடர்பான பிரச்சனையாகக் கருத முடியாது.

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரணை நடவடிக்கைகளும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்


நாடு முழுவதும் வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் பல்வேறு சோதனைகளை தினம்தோறும் செய்து வருகின்றன.பாசிச மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் ஏவல் துறைகளாக செயல்பட்டு எதிர்க் கட்சிகள் மீது தாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நபர் எப்படிப்பட்ட குற்றம் செய்திருந்தாலும் அவர்  நாட்டின் அரசியலமைப்பு வழங்கி உள்ள அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டின்  உழைக்கும் மக்களும் உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்போரும் எவ்வித வழிமுறை இன்றியும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் வருமான வரிச் சோதனை, அமலாக்கச் சோதனை போன்ற  சோதனைகள் நடந்து முடிந்தவுடன் அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து முறையான சம்மன் அனுப்பி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது என்பது முறையான நடவடிக்கை. அப்படிப்பட்ட முறைப்படியான நடவடிக்கை செந்தில் பாலாஜி விவகாரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

முறையற்ற கைதும் முறையற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது திமுகவை மிரட்டுவதற்காக மட்டுமல்ல;

இதன் மூலம் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பையோ,  ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச எதிர்ப்பையோ யார் மேற்கொண்டாலும் அவர்களை இப்படித்தான் அணுகுவோம் என்று பாசிச மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட கைதுகளும் சோதனைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு மட்டும் நிறைவுறப் போவதில்லை.

அடுத்தடுத்த இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் திமுக அரசினை நிலை குலைய  வைத்து அதன் மூலம் ஆதாயம் அடைவது பாசிச ஆர் எஸ் எஸ்  –  பாஜகவின் திட்டம் .இப்படிப்பட்ட பல்வேறு  திட்டங்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பாசிச சக்திகள் எண்ணுகின்றன.


படிக்க: விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி


மாநிலங்கள் உரிமைகள் ஏதுமற்ற இந்து ராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாறிக்கொண்டிருப்பதையும் பாசிச பாஜகவுக்கு தேர்தலில் எதிராகச் செயல்படும் கட்சி அல்லது ஒரு மாநில அரசையே இப்படி மிரட்டும் என்றால் பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ்- ஐ எதிர்க்கக்கூடிய மற்ற அமைப்புகளையும் தனி நபர்களையும் ஜனநாயகவாதிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு இனி எந்த நிலைக்கும் பாசிச மோடி அரசு செல்லும் என்பதே உண்மை.

இப்படி  எல்லோரையும் ஒழித்துக் கட்டிவிட்டு ’ஜனநாயகப் பூர்வமான’  தேர்தல் நடத்தி அதில் தன்னை மாமன்னராக முடி சூட்டிக்கொள்ள பாசிச மோடி காத்திருக்கிறார்.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மாநில உரிமைகள் ஒழிக்கப்படுவதும்  எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவதும் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் ஒன்றிய அரசின் ஏவல் துறைகள் மாநில அரசின் அனுமதி இன்றி தமிழ்நாட்டில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்துள்ள பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க , பாசிச மோடி அமித்ஷா கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!

திருச்சி பெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெல் மருத்துவமனையின் செவிலியர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வரவில்லை என்று கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.

தனியார் மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட பிறகு கார்ப்பரேட்டுகள் கொடூர சுரண்டலுக்கு உள்ளாகுபவர்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

ஒப்பந்த முறையில் உழைப்பாளி மக்கள் மீதான கொடூர சுரண்டல் அரசுத்துறைகளிலும் பொதுத்துறைகளிலும் சமீப காலமாகவே தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகராக அதிகரித்து வந்துள்ளது.


படிக்க: திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்


காண்ட்ராக்ட் ஒப்பந்த முறையால் கடுமையாக சுரண்டப்பட்டு எத்தனை ஆண்டுகாலமானாலும் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அத்து கூலிக்கு மாரடிக்கும் நிலையில் ஊதியமும் சரியாக கிடைக்காது போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தனியார் நிறுவனங்களைப் போல அரசுத் துறைகளிலும் அதிகரித்து வருகிறது.

மகாரத்ன  நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்திலும்  ஒப்பந்த முறை ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே எல்சிஎஸ் எனும் பெல் நேரடியான ஒப்பந்த ஊழியர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் நிரந்தரப் படுத்தப்படாமல் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் மூலமாக பெல் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கு தான் மாதாமாதம் சரியாகச் சம்பளம் வழங்கப்படுவதில்லை; அவர்களது வருங்கால வைப்பு நிதியும் பிஎஃப் கணக்கில் கட்டப் படுவதில்லை; கருணைத்தொகையும் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை; ஒப்பந்ததாரர்களை இதற்கு  எதிராகக் கேள்வி கேட்டால் கேள்வி கேட்கும் ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி நீட்டிப்பு செய்கின்றனர்.

இவையனைத்தும் பெல் நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். முதன்மை வேலை அளிப்பவர் என்ற முறையில் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பெல் நிர்வாகம், தனது பொறுப்பைக் கை கழுவி விட்டிருக்கிறது. ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் அவலநிலையை எத்தனை முறை முறையிட்டாலும் கண்டுகொள்ளாமல் இந்ந காண்ட்ராக்ட் சுரண்டலை ஒப்பந்ததாரர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறது திருச்சி பெல் நிர்வாகம்.


படிக்க: திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்


திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் சார்பாக இப்பிரச்சினைகளை பெல் நிர்வாகத்திடமும், திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நான்கு மாதங்களாகச் சம்பளம் வராததால் வீட்டு வாடகை கட்டவும், உணவுக்கும், குழந்தைகளின் கல்வச் செலவுக்கும் பணம் இல்லாத அவல நிலைக்கு அவ்வூழியர்கள் தள்ளப்பட்டனர்.

தொழிற்சங்க உரிமைகள் செல்லாக்காசாக்க பட்டுள்ள இன்றைய சூழலில் ஒப்பந்ததாரர்களோடு கூட்டு வைத்துக்கொண்டு சுரண்டலில் ஈடுபடும் பெல் நிர்வாகத்தை எதிர்த்து மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தனித்துப் போராடி வருகின்றனர்.

தங்களது சுகாதாரக் கட்டமைப்போடு தொடர்புடைய இந்த தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து கொள்ளாத நிலைமையிலும் அறிந்துகொள்ளவும் விரும்பாத நிலையிலும் பெல் நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர்.

பெல் ஆலையில் இயங்கும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இதுபற்றி எந்த குற்ற உணர்வும் இன்றி வர்க்க உணர்வற்றுப் போய் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகும் ஒப்பந்த தொழிலாளர்களின் அவல நிலைக்குத் திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களின் நிலைமை ஒரு சோற்றுப் பதம்.


வினவு களச் செய்தியாளர்

பாசிச மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ!

ருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் பாசிச நடவடிக்கையை வெளிகொண்டு வந்திருக்கிறார் டிவிட்டர் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி. இவரது கூற்று இந்தியா ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று பீற்றித் திரியும் பாசிச மோடி அரசின் முகத்திரையை நார்நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடியதன் விளைவாய் மோடி அரசு பின்வாங்கியது. விவசாயிகளின் இம்மாபெரும் போராட்டத்தை ஒழித்துக் கட்டும் சதி வேலையில் இறங்கியது மோடி அரசு.

“காங்கிரஸ் தூண்டிவிடும் போராட்டம்”, “காலிஸ்தானிகள் போராடுகிறார்கள்” “மாவோயிஸ்டு பின்னணி” போன்ற நச்சுப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிடுவதன் மூலம் ஆரம்பத்திலேயே இப்போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஒடுக்கிவிடலாம் எனப் பகற்கனவு கண்டது மோடி அரசு. இது வெளிப்படையாக மோடி அரசு செய்த வேலை. மறைமுகவும் பல வேலைகளைச் செய்திருக்கிறது மோடி அரசு. விவசாயிகளின் போராட்டத்தினை ஒடுக்கவும் அவர்களுக்கு ஆதரவாக எழும் சக்திகளை ஒழித்துக் கட்டவும் இறங்கியது. அதில் ஒன்றுதான் டிவிட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிடப்படும் பதிவுகளை நீக்க டிவிட்டரை மிரட்டியது.


படிக்க: டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்


இதுகுறித்து டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி பிரேக்கிங் பாய்ன்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், “மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அது போன்ற ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது டிவிட்டரில் அது குறித்து ஏராளமானோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில் சில பத்திரிகையாளர்கள் அரசை எதிர்த்து விமர்சித்தனர். விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது.

எங்களுடைய டிவிட்டருக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. ஆனால், அரசின் நிர்ப்பந்தத்தை ஏற்காத போது, எங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும், அரசு சொல்வதை ஏற்காவிட்டால் எங்கள் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் மிரட்டல் வந்தது. ‘உலகில் பெரிய மக்களாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடான இந்தியா’வில்தான் இது நடந்தது. 2021 பிப்ரவரியில், விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளை வெளியிட்ட தனிநபர்களது, அமைப்புகளது, ஊடகங்களது சமூக வலைத்தள பக்கக் கணக்குகள் முடக்கப்பட்டன” என்கிறார் ஜேக் டார்சி.

ஜேக் டார்சியுனுடைய கருத்தினை மறுத்து அதைப் பொய் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர். ஆனால் மோடி அரசின் இத்தகைய மறுப்பினை உழைக்கும் மக்களுக்காகச் செயலாற்றும் பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒருபோதும் நம்பப்போவதில்லை.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


மக்கள் போராட்டத்தை வெளிகொண்டுவரும் பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தளப்பக்க பதிவுகள் முடக்கினால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்கிவிட முடியும் எனப் பகற்கனவு கண்ட மோடி அரசின் நடவடிக்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியடைந்தது விவசாயிகளின் மாபெரும் போராட்டம். சமூக ஊடகங்களில் கருத்து போராட்டம் நடத்தும் அதேநேரத்தில் களத்தில் பாசிச பாஜகவை நேரடியாக எதிர்க்க வேண்டியது அவசியம். இதுவே விவசாயிகளின் போராட்டம் நமக்கு உணர்த்தும் கள அனுபவம்.


தாரகை

காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!

0

டந்த ஜூன் 9 அன்று, அரசியல் விஞ்ஞானிகளான சுகாஸ் பால்சிகர் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி) அரசியல் விஞ்ஞான பாடப்புத்தகத்தில் இருந்து தங்கள் பெயர்களை நீக்குமாறு வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

இவ்விருவரும் 2006–2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட என்.சி.இ.ஆர்.டி-இன் 9 – 12 வகுப்புகளுக்கான அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்திற்கான தலைமை ஆலோசகர்களாகப் பணியாற்றினர். தற்போது பாடப்புத்தகங்களில் பாசிச மோடி அரசு செய்துள்ள மாற்றங்களைக் கண்டிக்கும் விதமாக தங்களது பெயர்களை அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்தத் திருத்தங்களை எதிர்த்து “சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் ஆகியோர் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.

என்.சி.இ.ஆர்.டி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் பால்சிகர் மற்றும் யாதவ் “பாடப்புத்தகத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை; மாற்றங்கள் குறித்து தகவல்களைக்கூடத் தெரிவிக்கவில்லை. அடிக்கடி செய்யப்படும் இந்த தொடர் மாற்றங்கள் தர்க்கமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன” என்று கூறியுள்ளனர்.


படிக்க: என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!


மேலும், “நாங்கள் பங்களிப்பு செய்த 6 பாடப்புத்தகங்களில் இருந்து எங்களை விலக்கிக் கொள்கிறோம். பாடப்புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அவற்றை அடையாளம் தெரியாத அளவிற்குச் சிதைத்து விட்டன. இதனால் எங்கள் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி விடுமாறு என்.சி.இ.ஆர்.டி-யிடம் கோருகிறோம்” என்று அவர்கள் கூறினர்.

முன்னதாக பள்ளிப் பாடத்திட்டங்களை எளிமையாக்குவதாக் கூறி அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்தில் இருந்து என்.சி.இ.ஆர்.டி பல பகுதிகளை நீக்கியது. 12-ஆம் வகுப்பு அரசியல் விஞ்ஞானம் பாடத்திட்டத்தில் இருந்து 2002 குஜராத் கலவரம் குறித்த பகுதியும், 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, முக்கிய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய பகுதிகளும், 8-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து தேசத்துரோகம் குறித்த பகுதியும் நீக்கப்பட்டது.

அதேபோல், என்.சி.இ.ஆர்.டி 12-ஆம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக்கப்பட்டது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு நீக்கப்பட்டது.

இந்நிலையில், பால்சிகர் மற்றும் யாதவ் ஆகியோரின் கடிதத்திற்குப் பதில் அளித்த என்.சி.இ.ஆர்.டி “இவ்விருவரின் பங்களிப்புகளை என்.சி.இ.ஆர்.டி அங்கீகரிக்கிறது. இவர்களின் பங்களிப்புகள் கூட்டு முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதால் இவர்களின் பெயர்களை நீக்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று கூறிவிட்டது. மேலும், இவர்களின் ஆலோசகர் பதவி புத்தகங்கள் வெளியிடப்பட்ட உடனேயே காலாவதியாகிவிட்டது என்றும் கூறியுள்ளது.


படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!


ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு மாணவர்களுக்குச் சுமையாக உள்ள பகுதிகளைத் தற்காலிகமாக நீக்கிக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. அதனைக் காரணமாக வைத்துக்கொண்டு காவிக் கும்பலுக்கு ஒவ்வாத பல பகுதிகள் அப்போது நீக்கப்பட்டன. இந்நீக்கங்கள் தற்போது நிரந்தரமாக்கப் படுகின்றன.

பாடத்திட்டத்தில் நீக்கங்கள் செய்யப்படுவது குறித்துப் பேசிய ‘சுயேச்சை அமைப்பான’ என்.சி.இ.ஆர்.டி-இன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி “தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல் படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்படுத்துகிறோம்” என்று கூறியுள்ளார். அதாவது, பாசிச மோடி அரசின் காவி கல்விக் கொள்கையைத்தான் அமல்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.

புதிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்ட போதே அதில் தங்களின்  பரிந்துரைகளில் 60 – 70 சதவிகிதம்  இடம் பெற்றுள்ளன என்று ஆர்.எஸ்.எஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான் தற்போது என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் செய்து வரும் மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை இளம்பருவத்திலேயே இந்துத்துவ சித்தாந்திற்கு ஆட்படுத்தும் பொருட்டே பாடத்திட்டத்தில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


பொம்மி

ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை

டிசா ரயில் விபத்து நடைபெறாமல் தடுத்திருக்க முடியுமா? ஆம். கடந்த ஆண்டு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பானது (Comptroller and Auditor General of India (CAG)) இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியது. இக்குறைபாடுகளைக் கருத்தில் கொண்டிருந்தாலே இக்கோர விபத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

கடந்த ஆண்டே, இந்த அமைப்பானது இந்திய ரயில்வே துறையில் பயன்படுத்தப்படுகிற தடைகள் மற்றும் இடர் கட்டுப்பாட்டு கருவிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஒன்றிய அரசை எச்சரித்திருந்தது. இந்த கருவியானது இந்திய ரயில்வே-யின் பல்வேறு துறைகளில், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சி.ஏ.ஜி அமைப்பானது கண்டறிந்த பல்வேறு குறைபாடுகளில்  பராமரிப்புக் குறைபாடுகளே முதன்மையானதாக இருக்கிறது. வெளிப்படையாகவே, ஒன்றிய அரசானது பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததே, பாலாசூரில் இந்த பேரழிவுமிக்க துயரச் சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.  இந்த சி.ஏ.ஜி அமைப்பானது, 2021- ஆம் ஆண்டுக்கான இந்திய தொடர்வண்டி துறையில் நிகழும் தடம் புரள்வு- என்ற தலைப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ரயில்கள் தடம் புரள்வது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த கண்காணிப்பு நிறுவன முறைகள் என்ற ஒன்றே இல்லை என்று முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடப்பட்டிருந்தது.

படிக்க : பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு! | பு.மா.இ.மு. கண்டனம்

“கடந்த காலத் தவறுகளிலிருந்து, தவறுகளைத் திருத்திக் கொள்வதில் உள்ள குறைபாடுகளே, ரயில்கள் தடம் புரள்வதைத் தடுக்க முன்வைக்கப்படும் அறிக்கைகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

“ஒவ்வொரு ரயில் விபத்திலும், ரயில்கள் தடம் புரள்வதற்கு ஒரு துறை சார்ந்த காரணிகளோ அல்லது கூட்டாக பல்வேறு துறை சார்ந்த காரணிகளோ காரணமாக அமைகின்றன. பெரும்பாலான ரயில்கள் தடம்புரண்டது என்பது ஒரே நேரத்தில் ஐந்து துறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளாலே நடந்தன. அந்த ஐந்து துறைகளாவன: 1. விதிகள் மற்றும் கூட்டு   நடைமுறை ஆணைகள் (Rules and Joint Procedure Orders (JPOs)), 2. பணியாளருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை (Training/Counselling of staff),  3. செயல்பாடுகள் மீதான மேற்பார்வை ( Supervision of operations), 4. பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு  (Coordination and communication between staff of different departments) மற்றும் 5. திட்டமிட்ட ஆய்வுகள் (Scheduled Inspections)” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

“இந்த ரயில்வே நிர்வாகமானது, விசாரணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட விபத்து முன்தடுப்பு குறித்த கண்காணிப்பு ஆலோசனைகளை நிறைவேற்றுவதில்லை. இதே நிலைமைதான், இணைய கண்காணிப்பு சேவையான, பாதுகாப்பு தகவல் மேலாண்மை அமைப்பிலும் (Safety Information Management System ) நீடிக்கிறது “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தண்டவாள பராமரிப்பு அமைப்பு (Track Management System (TMS)) என்கிற இணைய வழி செயலியானது தண்டவாள பராமரிப்புச் செயல்பாடுகளை இணைய வழியில் கண்காணிப்பாதாகும். ஆனால், இந்த தண்டவாள பராமரிப்பு அமைப்பின் இணையதளமானது பயன்பாட்டிலேயே இல்லை” என்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.

மிக முக்கியமானது என்னவென்றால், தண்டவாள ஆய்வுகள் வெளிப்படையாகவே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. குறைபாடுடையவைகளாக அடையாளப்படுத்தப்பட்ட  350 தண்டவாளங்களில் வெறும் 181 மட்டுமே சரிசெய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த எண்ணிக்கையிலான தண்டவாள கார் (Track Recording Car) ஆய்வால் பெரும்பாலான தண்டவாளங்கள் தரமற்றதாக இருந்ததால், அந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரயில் போக்குவரத்திற்கும் ஆபத்தானதாக இருந்திருக்கிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் மட்டும் 217 ரயில் விபத்துகள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 75 ரயில்கள் தடம்புரண்டதால் ஏற்பட்டவையாகும் என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும், 211 ரயில் விபத்துகள் சிக்னல் பிரச்சனையால் ஏற்பட்டவையாகும்.

படிக்க : மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய ரயில் பாதுகாப்பு நிதி அமைப்பின்  (Rashtriya Rail Sanraksha Kosh) வழிகாட்டுதல் நெறிமுறைக்கு எதிராக முக்கியவத்துவமற்ற வேலைகளுக்கு செலவு செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. நிதிப்பற்றாக்குறையால் ரயில் பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட்டன என்பதன் மூலம், ரயில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு நிதியின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்கிறது இந்த அறிக்கை.

சி.ஏ.ஜியால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான மற்றொரு குறைபாடானது போதிய பணியாளர்கள் இல்லாததாகும். இந்திய ரயில்வே துறையானது காலிபணியிடங்கள் மற்றும் பெயரளவிற்கான அவுட்சோர்சிங் மூலமாகவே பாரமரிப்பு பணிகளை நிர்வகித்தது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோர ரயில் விபத்தின் குற்றவாளி ஒன்றிய அரசுதான் என்பதையும் மறைமுகமாக நிரூபிக்கிறது இந்த சி.ஏ.ஜி அறிக்கை (எமது கருத்து).

(குறிப்பு: மே 13 அன்று தெலுங்கானா டுடே-வில், “Odisha train accident was waiting to happen, indicates CAG report” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

அப்பு

மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமையுரையில், “கள்ளச்சாராயம் போலீசுக்கு தெரிந்தே தான் நடக்குகிறது. திமுக அரசு 2016-யில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்லிவிட்டு 2021-யில் நான் இப்போது சொல்லவில்லையே என்று மாற்றி பேசுகிறது. டாஸ்மாக் மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன், “கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்வார்கள், இரண்டு மாதங்கள் கழித்து என்ன நடக்கும் மீண்டும் வெளியே வந்து சாராயம் காய்ச்சுவார்கள். அதிகாரிகளுக்கு இடமாற்றம் என்பதெல்லாம் ஏமாற்று. மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார்.

கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன், “போலீசு இருக்கும் வரை சாராயத்தை ஒழிக்க முடியாது. போதை என்பது மக்களின் சிந்தனையை சீரழிக்கிறது. சமூகத்தில் முறையான வாழ்க்கையை இல்லாமல் சீரழிக்க வைக்கிறது இந்த ஆளும் வர்க்கம். மக்கள் போராட்டமே தீர்வு” என்று பேசினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்

பெல் நிறுவன குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் ஒரே நாளில் 6 வீடுகளில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்த தொழிலாளர்கள். பள்ளி விடுமுறைக் காலமாதலால் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர்.

அந்த சமயம் பார்த்து ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து, திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ஒரு வீட்டில் வைத்திருந்த சுமார் 10 சவரன் நகை திருடு போயுள்ளது.

மற்றொரு வீட்டில் 1 சவரன் நகை கொள்ளை போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து அந்த பதட்டம் தணிவதற்குள் பெல் நிறுவன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் 6 சவரன் நகை ஸ்பிரே அடித்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் சில வருடங்களாக இப்பகுதியில் அதிகரித்துள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு சில வீடுகளில் புகுந்து 30 க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

பெல் ஊழியர் கூட்டுறவு வங்கியில் 1.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இப்படிப்பட்ட குற்ற சம்பவங்களை தடுக்கக் கோரியும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்தும் அவற்றை தடுக்க எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பெல் நிர்வாகத்தைக் கண்டித்தும் CITU சங்கம் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்; பாதுகாவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; ஊரகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.

பெல் ஊரகப் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் வெகுநாட்களாகத் தொடர்வதாக சிஐடியு சங்கத்தினரும் பெல் ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் அச்சுறுத்தும் விதமாகச் சுற்றித் திரியும் நாய், மாடு, குதிரை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தவும் நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் ஊழியர்கள்.

மேலும் குடியிருப்பு வீடுகள், பள்ளிக் கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை பராமரிக்கவும் போதிய நிதியை ஒதுக்குவதில்லை என்கின்றனர்.

பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக உழைக்கும் வர்க்கத்திலேயே சலுகை பெற்ற வர்க்கமாக இதுநாள்வரை வலம் வந்த பெல் ஊழியர்களின் இன்றைய நிலை உத்தரவாதமற்றதாக மாறியிருக்கிறது.

பொதுத்துறை தனியார்மயம்; தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிப்பு உள்ளிட்ட தன்னுடைய வர்க்க நலன்களைப் பாதிக்கும் காவி கார்ப்பரேட் பாசிச அரசின் நடவடிக்கைகளைக் கூட அரசியல் ரீதியில் புரிந்துகொள்ள இயலாத மனநிலையில் இருந்தனர் பெல் ஊழியர்கள்.

ஆனால் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப் போல இந்த சமூகமே வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிற இன்றைய மறுகாலனியாக்க சூழலில், தாம் மட்டும் தப்பிப்ப பிழைத்துவிட முடியும் என்று நம்பி இறுமாந்திருக்க முடியாது என்பதையே நடந்த திருட்டு சம்பவங்கள் காட்டுகின்றன.

பெல் ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்களாகட்டும் இன்னபிற நடுத்தர வர்க்கத்தினர் ஆகட்டும் அவர்களின் எதிர்காலம் அமைதியானதாக இருக்க வேண்டுமெனில் நல்லதொரு சமூகம் அமைந்தால் தான் சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்காகச் சிறு துரும்பைக் கிள்ளிப் போடுவதற்காகவாவது மாற்றத்திற்கான அமைப்புகளில் அவர்கள் ஒருங்கிணைய வேண்டும்.


வினவு களச் செய்தியாளர்