Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 359

இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 9

டோக்ளியாட்டி

பாசிசத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இன்று தோற்றுவிக்கப்படவில்லை; அவை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் முன்னேறவில்லை. எப்போதும் போலவே இப்போதும் இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளன.

இதனை நாம் மனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பாடம் நெடுகிலும் இதனை நாம் வலியுறுத்துவோம்; ஏனென்றால் பாசிசத்தின் இன்றைய வாய்ப்புகள் நிலையானவை, நிலைநாட்டப்பட்டவை, நீடிக்கக்கூடியவை, நிரந்தரமானவை என்று நாம் கருதினோமானால் நாம் அத்துடன் ஒழிந்தோம். அரசு எந்திரம் என்பது வர்க்க உறவுகளிலிருந்து தோன்றும் ஓர் அரசியல் மேல் கட்டுமானமே அன்றி வேறல்ல என்பதை நாம் எப்போதுமே மனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தை விளக்குவதற்கு இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.

இந்த ஆய்வை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறேன். முதல் காலகட்டம் ரோம் படையெடுப்பு வரையிலும் 1922-ம் ஆண்டு வரையிலுமானது. இரண்டாவது காலகட்டம் 1922 முதல் 1925 வரையிலானது. சர்வாதிகாரமல்லாத ஒரு பாசிச ஆட்சியை அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டம் என இதனைக் கூறலாம்; மூன்றாவது காலகட்டம் 1925 முதல் 1930 வரையிலானது. இந்தக் காலப் பகுதியில்தான் சர்வாதிகாரத்திற்கு அடித்தளமிடப்பட்டது. மாபெரும் பொருளாதார நெருக்கடி இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்கிற்று.

ரோம் நகர் பேரணியில் முசோலினி மற்றும் கருஞ்சட்டைப் படையினர்.

ரோம் படையெடுப்பு வரையிலான காலகட்டத்தின் ஒரு முக்கியமான அம்சம், பாசிசம் எத்தகைய உறுதியான, தெளிவான திட்டத்தையும் கொண்டிராததுதான். 1919 முதல் 1922 வரை பாசிசம் மேற்கொண்ட தொடர்ச்சியான நிலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் அவை தொடர்ந்து மாறி வந்திருப்பதைக் காணலாம். இந்தக் காலப்பகுதியில் எத்தகைய நிலைமை நிலவியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைப் பற்றி நாம் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தின் முக்கிய அம்சங்களை இங்கு மீண்டும் கோடிட்டுக் காட்டுகிறோம்; ஆழமான புரட்சிகர நெருக்கடி; அடிப்படை அரசியல் அமைப்புகளின் முறிவு; முக்கியமாக மிகப் பெரும்பாலான தொழிலாளர்களிடையேயும் விவசாயிகளிடையேயும் பொதுவான அதிருப்தி; நிலைமையில் மாற்றம் ஏற்படும் பொருட்டு ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என்று புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திடமும் விவசாயிகளிடமும் ஏற்பட்ட உந்துதல் போக்கு முதலியவை.

இந்தக் காலகட்டத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பூர்ஷுவா வர்க்கம் மேற்கொண்ட திட்டம் என்ன? அவர்கள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திட்டங்களைக் கைக் கொண்டனர்.

இவற்றில் முதல் திட்டம் நிட்டியினுடையது 2: நிட்டி, நிதி மூலதனத்தின் பிரதிநிதி. பல வங்கிகளின் பிதாமகர். மிகப்பெரிய இத்தாலிய வங்கியான டிஸ்கவுன்ட் வங்கியை நிறுவியவர். அதே சமயம் அவர் தீவிர முற்போக்காளர்; ஜனநாயக மனோபாவம் கொண்டவர். நிட்டியின் திட்டத்தில் இரண்டு அம்சங்கள் அதாவது நிதிமூலதனத்தின் மேலாண்மையும் ஒரு ஜனநாயகத் திட்டமும் இணைந்திருப்பதைக் காண்கிறோம். எடுத்தஎடுப்பில் பார்க்கும்போது இந்த இரண்டு அம்சங்களும் பரஸ்பரம் முரண்பட்டவையாகத் தோன்றக்கூடும். முந்தையது நிதி மூலதனத்தை ஆதரிக்கிறது. பிந்தையது சமூக வளர்ச்சிகளைக் கிளர்த்திவிடும் மிகவும் முன்னேற்றமடைந்த அம்சத்தைக் குறிக்கிறது.

பிரான்செஸ்கோ சாவரியோ நிட்டி (Francesco Saverio Nitti)

இந்தத் திட்டம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று? நெருக்கடி நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காணும் பூர்ஷுவாக்களின் முயற்சியை அது பிரதிநிதித்துவப்படுத்திற்று. சமுதாயம் மிக ஆழமான மாற்றத்தைக் காணும் என்று நிட்டி முன்னுணர்ந்தார். குடியரசு வடிவிலான அரசாங்கத்துக்கு மாறக் கூடிய வாய்ப்பு இருப்பதை அவர் மறுக்கவில்லை; அரசியல் நிர்ணய சபை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறையும் அவர் நிராகரிக்கவில்லை. பாபுலர் கட்சியுடன் மட்டுமன்றி சோஷலிஸ்டுகளுடனும் ஒத்துழைக்க அவர் தயாராக இருந்தார்.

சில பிரிவினரைத் தன்பக்கம் ஈர்க்கும் பொருட்டு அவர்களுக்கு சலுகைகள் அளிக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். எனினும் இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தி, முற்போக்கு சக்திகளுக்கும் சலுகைகள் வழங்க ஆரம்பித்தார்.

பூர்ஷுவாக்களில் மிகவும் பிற்போக்கான பகுதியினரின் விருப்பத்துக்கிணங்க “ராயல் கார்ட்” எனும் காவற்படையை அவர் உருவாக்கினார். பின்னர் இதனைத் தன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அதேசமயம் சமூக ஜனநாயகவாதிகளுடனும் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அவர்களுடன் விவாதித்தார்.

பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ.

அவருடைய திட்டத்தை பாஸ்சி டி கம்பாட்டிமென்டோவின் 1919-ம் வருட பியஸ்ஸா சான் செபல்குரோ திட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவை கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் ஒத்திருப்பதைக் காணலாம். பாஸ்சி திட்டம் ஒரு குடியரசுத் திட்டம்; நிட்டி திட்டத்திலும் குடியரசுப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாஸ்சி திட்டம் அரசியல் நிர்ணய சபையைப் பற்றிப் பேசுகிறது. நிட்டியும் இதில் சற்றும் பின்வாங்கிவிடவில்லை; முதலாளிகள் மீது படிப்படியாக வரி விதிப்பது போன்ற பல முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகள் முந்தைய திட்டத்தில் அடங்கியிருக்கின்றன. பிந்தைய திட்டமும் இத்தகைய நடவடிக்கைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளது.

மிகவும் முன்னேறிய அரசியல் சாகசச் செயல்கள் மூலம் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு 1919-ம் ஆண்டிலும் 1920-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களிலும் இத்தாலியப் பூர்ஷுவாக்கள் மேற்கொண்ட முயற்சியை இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 1919-ம் வருட பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ திட்டத்தில் இந்த முயற்சி பிரதிபலிப்பதையும் காணலாம்.

நிட்டியின் திட்டம் தோல்வியடைந்தது. அது செயல்படுத்தப்படவில்லை, அதனை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது நிலைமை உருவாகியிருந்தது. பல முரண்பட்ட அம்சங்களுடன் அது மோதிற்று. சமாளிக்க முடியாத அரசியல் இடையூறுகள் காரணமாக அது தவிர்க்க இயலாதபடி முடிவுக்கு வந்தது.

படிக்க:
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

உண்மையில் நிட்டியின் திட்டத்தைச் சீர்குலைத்தவர்கள் பாட்டாளி வர்க்கத்தினரும் தென்பகுதி விவசாயிகளும்தான். பூர்ஷுவாக்களின் சீர்த்திருத்த தந்திரோபாயங்களுக்கு இலக்கான இந்த மக்கள் இன்னும் மிகத் தீவிரமான பிரச்சினைகளை எழுப்பினர். மின்விசைப் பிரச்சினை, நிலங்களைக் கைப்பற்றுதல் போன்றவை இவற்றில் அடங்கும். அச்சமயம் தொழிற்சங்க நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த பிராந்தியம் எமிலியா என்பது. இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் எழுப்பி வந்த பிரச்சினைகள் கிராமப்புறத்தில் தனிச் சொத்துரிமையின் அடித்தளங்களையே ஆட்டி அசைத்துக் குலுக்குவதாக இருந்தன. சமுதாயத்தின் சகல அஸ்திவாரங்களையும் ஆட்டங்காணச் செய்வதாக இருந்தன. நிட்டியின் திட்டம் வெறும் கற்பனாவாதத் திட்டமாக இருந்தது. எனவே, அது தவிர்க்க முடியாதபடித் தகர்ந்து போயிற்று.

கியோவான்னி கியோலிட்டி (Giovanni Giolitti)

அடுத்து, பூர்ஷுவாக்கள் மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். யுத்தப் பிற்காலத்தில் தோன்றிய இக்கட்டான நிலைமையிலிருந்து கியோலிட்டியின் 3 துணை கொண்டு மீள்வதே பூர்ஷுவாக்களது இந்த இரண்டாவது முயற்சியின் நோக்கம். கியோலிட்டி ஒரு பழம்பெரும் பூர்ஷுவா ராஜதந்திரி. போரின்போது தோல்வி மனப்பான்மை கொண்ட ஒரு துரோகியாக மாறினார்(!). அவரும்கூட அரைகுறையான குடியரசு நிலைகளை மேற்கொண்டார். உதாரணமாக, டொரனேரோவில் அவர் நிகழ்த்திய உரையில் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை அரசிடமிருந்து விலக்கிக் கொள்வதற்கு அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று யோசனை கூறினார். அதேசமயம் முடியாட்சியின் கடைந்தெடுத்த ஆதரவாளராகவும் இருந்துவந்தார். முடியாட்சியை நவீன முறையில் மாற்றியமைத்தவரே அவர்தான் என்றுகூடக் கூற வேண்டும். இவ்வாறெல்லாம் இருந்துங்கூட அவர் குடியரசு நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்கினைக் கடைப்பிடித்தார்.

ஆனால் கியோலிட்டியின் திட்டம் நிட்டியின் திட்டத்திலிருந்து சில அம்சங்களில் மாறுபட்டதாக இருந்தது. நிட்டியின் திட்டம் ஏற்கெனவே தோல்வியடைந்துவிட்ட நிலைமையில் கியோலிட்டி அதிகாரத்துக்கு வந்தார்.

கியோலிட்டியின் திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்; ஒருபுறம் பாசிசத்துக்கும், பாட்டாளி வர்க்கத்தை நசுக்குவதற்கு அதனை ஓர் ஆயுதந்தாங்கிய இயக்கமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தல்; மறுபுறம் சோஷலிஸ்டுக் கட்சியை அடக்கி ஒடுக்குவதற்கும் புரட்சியாளர்களை நாட்டைவிட்டு விரட்டுவதற்கும், சீர்திருத்தவாதிகளைத் தனிமைப்படுத்தி அவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் திட்டமிடுதல் ஆகியவையே அந்த இரண்டு அம்சங்கள்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

2. பிரான்செஸ்கோ சாவரியோ நிட்டி, (1868-1953), லுகானியாவைச் சேர்ந்த பொருளாதாரவாதியும் தீவிர அரசியல்வாதியுமாவார். 1919 ஜூன் முதல் 1920 ஜூன் வரை இத்தாலியின் பிரதம மந்திரியாக இருந்தார்.

3. கியோவான்னி சியோலிட்டி (1842-1928) 1892-93, 1906-09, 1911-14, 1920-21 ஆண்டுகளில் பிரதம மந்திரியாக இருந்தார். 20-ம் நூற்றாண்டு துவக்கத்திற்குப்பின் இத்தாலிய அரசியலில் மிகப் பிரபலமான புள்ளியாக இருந்தார். அல்குனி டெமி டெல்லா குயிஸ்டியோனி என்ற முற்றுப் பெறாத தமது கட்டுரையில் கிராம்ஸி கியோலிட்டியின் முன்னேற்றத்தைப் பற்றியும் அவரது உள்நாட்டுக் கொள்கையின் அடிப்படை பற்றியும் மிகத் தெளிவான, துல்லியமான பரிசீலனையை அளித்துள்ளார்.

ரத்தக்களறியான 1890-1900 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் ஒதுங்கி நிற்கும், முற்றிலும் பலாத்காரம், முற்றிலும் சர்வாதிகாரம் – இவற்றை பூர்ஷுவாக்கள் கைவிடவேண்டியிருந்தது. தெற்கேயுள்ள விவசாயிகளும் வடக்கேயுள்ள தொழிலாளிகளும் ஒரே சமயத்தில் – ஒன்றிணைந்து செயல்படாவிடினும் – கலகத்தில் எழுந்தனர்; புதிய நூற்றாண்டில் ஆளும் வர்க்கம் புதிய கொள்கையை துவக்கியது.

அதாவது, வர்க்க கூட்டணிகள், வர்க்க அரசியல் அணி, பூர்ஷுவா ஜனநாயகம், அது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: கிராமப்புற ஜனநாயகமா – அதாவது தெற்கத்திய விவசாயிகளுடன் கூட்டணியா அல்லது சுதந்திரமான வியாபாரம், வயது வந்தோருக்கு வாக்குரிமை, நிர்வாகம் கீழ்மட்டத்திற்கு அதிகாரம் வழங்குதல், உற்பத்திச் சரக்குகளுக்கு குறைந்த விலைகள் ஆகியவையா? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை இல்லாமல் ஒரு முதலாளித்துவ – விவசாயி அணி, சுங்கவரி பாதுகாப்பு, மையப்படுத்தப்பட்ட அரசு (விவசாயிகள் மீது, குறிப்பாகத் தெற்கிலும் தீவுகளிலும் உள்ளவர்கள் மீது, பூர்ஷுவா ஆட்சியின் வெளிப்பாடு) ஊதியம், தொழிலாளர் உரிமைகள் பற்றிய சீர்திருத்தவாதக் கொள்கை. அது இரண்டாவது தீர்வைத் தேர்ந்தெடுத்தது. பூர்ஷுவாக்களின் ஆட்சியை கியோலிட்டி உருவகப்படுத்தினார்.

ஸ்குவாட்ரிஸ் மோ (Squadrismo)

1919 அக்டோபர் 19-ம் தேதி டிரோனேரோவில் கியோலிட்டி ஆற்றிய உரை இத்தாலியின் யுத்தபிற்கால நெருக்கடியை தீர்ப்பதற்கான மிக முற்போக்கான பூர்ஷுவாத் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.  யுத்தத்தில் இத்தாலி தலையிட்டதை கியோலிட்டி விமர்சித்தார். 1914-15 ஆண்டுகளில் அவர் எடுத்த நடுநிலைமைக் கொள்கையை நினைவுபடுத்தினார் (கியோலிட்டியை “ஒரு தோல்வி  மனப்பான்மை கொண்ட தேசத்துரோகி” என்ற தேசியவாதிகளின் குற்றச்சாட்டை பற்றி டோக்ளியாட்டி அப்பொழுது குறிப்பிட்டது) யுத்தப் பிரகடனம் செய்ய அரசருக்கும் மந்திரி சபைக்கும் உள்ள உரிமையை எடுத்துவிட்டு அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்க, கார்ல் ஆல்பர்டின் அரசியல் சட்டத்தின் 5-வது ஷரத்தை திருத்த வேண்டுமென்று கூறினார்.

படிப்படியான வருமானவரி, சொத்துரிமை வரி திட்டத்தைக் கொண்டு வருவதாகவும் நிறுவனங்களின் பங்குகள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். நீர் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசின் தலையீடு சாத்தியம் என்று தனியார் தொழில்களைப் பயமுறுத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை முன்வைத்தார். அரசின் அடித்தளத்தை விரிவுபடுத்தி லிபரல் ஜனநாயகக் கட்டுக்கோப்பிற்குள் பூர்ஷுவாக்களின் பொருளாதார அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் திட்டத்திற்கு டிரோனேரோவின் அவரது உரை உருக்கொடுக்கிறது. இதன்மூலம் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தை கூர்மழுங்கச் செய்ய முடியும் என்று கருதினார்.

எனினும் 1920-ல், மீண்டும் கியோலிட்டி பிரதம மந்திரியாக இருந்தபோது, நிலைமை ஏற்கனவே மாறியிருந்தது. வளர்ந்து வரும் பாசிஸ்டு இயக்கம், புரட்சிகர இயக்கத்திற்கு மட்டுமின்றி அவர் பாதுகாக்க விரும்பிய லிபரல் அரசுக்கும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தியதை இந்த வயது முதிர்ந்த ராஜதந்திரியால் கண்டுகொள்ள முடியவில்லை. தொழிலாளர் இயக்கத்திற்கு எதிர்சக்தியாக ஸ்குவாட்ரிஸ்மோவை பயன்படுத்த கியோலிட்டி முயன்றார். 1921 தேர்தலில் அவர் அமைத்த தேர்தல் கூட்டணியில் பாசிஸ்டுகளைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

புவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 22

அத்தியாயம் நான்கு – புவாகில்பேர் : காலமும் பணியும்
அ.அனிக்கின்

“மார்க்ஸ் தன்னுடைய பொருளாதார ஆரய்ச்சிகளைப் பாரிஸ் நகரத்தில் 1843-ம் வருடத்தில் தொடங்கினார்; முதலில் புகழ்பெற்ற ஆங்கில, பிரெஞ்சுப் பொருளியலாளர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தார்”(1) என்று எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தைச் சேர்ந்த புவாகில்பேர் என்ற பொருளியலாளரை அப்பொழுது அநேகமாக மறந்து விட்டிருந்தார்கள், எனவே அவருடைய புத்தகங்களைப் படிக்குமாறு மார்க்சைத் தூண்டியது எது என்று சொல்வது கஷ்டமானது. ஒருவேளை இது தற்செயலாகவும் நடைபெற்றிருக்கலாம். ஏனென்றால் 18-ம் நூற்றாண்டின் முதற்பாதியைச் சேர்ந்த பிரெஞ்சுப் பொருளியலாளர்களின் நூல்களின் தொகுப்பு ஒன்று 1843-ம் வருடத்தில் பாரிசில் வெளியிடப்பட்டிருந்தது; நூற்று முப்பது வருடங்களுக்குப் பிறகு புவாகில்பேரின் கட்டுரைகள் முதன்முறையாக அந்தத் தொகுப்பில் மறுபதிப்புச் செய்யப்பட்டிருந்தன.

புவாகில்பேர் (Boisguilbert)

பிரெஞ்சும் ஜெர்மனும் கலந்த நடையில் எழுதப்பட்டிருந்த இந்தக் கட்டுரைகளின் விரிவான பொழிப்பைத் தெரிந்து கொண்ட பிறகு மார்க்ஸ் அவற்றைச் சுருக்கமாகக் குறித்துக் கொண்டார்; பிறகு அவற்றைப் பற்றிச் சிந்தித்தார். பதினான்காம் லுயீயின் ஆட்சிக் காலத்தில் ருவான் நகரத்திலிருந்த ஒரு நீதிபதியின் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் – அவை அந்தக் காலத்துக்கு மிகவும் வளர்ச்சியடைந்தவையாகும் – இந்தச் சிந்தனைகளை நோக்கி மார்க்சை இட்டுச் சென்றன.

இந்த விரிவான பொழிப்பு இதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அநேகமாகப் பயன்பட்டிருக்க வேண்டும். அவர் இந்தப் புத்தகத்தில் “பிரிட்டனில் வில்லியம் பெட்டி மற்றும் பிரான்சில் புவா கில்பேர் ஆகியோரிடமிருந்து தொடங்கி, பிரிட்டனில் ரிக்கார்டோவுடனும், பிரான்சில் ஸிஸ்மான்டியுடனும் முடிவடைகின்ற ஒன்றரை நூற்றாண்டுக் கால மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தை” (2) முதல் தடவையாக ஆழமான மதிப்பீட்டுக்கு உட்படுத்தினார்.

புவாகில்பேர் ஒரு அறிவாளி, ஒரு எழுத்தாளர் என்ற முறையில் மட்டும் மார்க்சைக் கவரவில்லை. அறிவும் நேர்மையும் நிறைந்த இந்த மனிதர் – அவர் சர்வாதிகார முடியாட்சியின் அரசு இயந்திரத்தில் “ஒரு சிறு திருகாணியாக” மட்டுமே இருந்தார் என்ற போதிலும் – ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெரும்பான்மையினரான பிரெஞ்சு மக்களுக்கு ஆதரவாகப் பேசினார்; அதற்காகத் துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

பிரெஞ்சு ஏழைகள்

பதினான்காம் லுயீயின் ஆட்சியின் முதல் இருபதாண்டுகளின் போது கொல்பேர் என்ற அமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தைக் கவனித்து வந்தார். அவர் தொழில்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபடியால் அதன் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டார். கொல்பேர், விவசாயத்தை அரசுக்கு நிதி வருமானத்தைக் கொடுக்கும் ஊற்றுக்கண் என்பதாக மட்டுமே கருதி வந்தார். அதனால் சிற்சில தொழில்துறைப் பிரிவுகளில் ஏற்பட்ட வளர்ச்சி விவசாயத்துக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தது. கொல்பேரின் கொள்கை நிலப்பிரபுத்துவ உறவுகளை அப்படியே விட்டு வைத்தது அதிலிருந்த முக்கியமான குறைபாடாகும். இந்த நிலப்பிரபுத்துவ உறவுகள் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சியைத் தடுத்து வந்தன.

படிக்க:
பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?
♦ சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

அரசர், கொல்பேருக்கு ஒரு முக்கியமான பொறுப்பைக் கொடுத்திருந்தார். அது மட்டும் இல்லையென்றால் கொல்பேரின் முயற்சிகள் ஒருவேளை அதிகமான வெற்றியடைந்திருக்கும். பெரும்புகழ் அடைய விரும்பிய அரசர் லுயீ ஓயாது நடத்திய யுத்தங்களுக்கும்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர் செய்து வந்த ஊதாரித்தனமான செலவுகளுக்கும்; எப்படியாவது பணம் திரட்ட வேண்டிய பொறுப்பு கொல்பேருக்கு இருந்தது – கொல்பேரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய கொள்கையால் ஏற்பட்ட சிற்சில சாதனைகள் வேகமாக மறைந்தன; அவற்றின் குறைகள் இரண்டு மடங்கு பலத்தோடு வெளிப்பட்டன.

1701-ம் வருடத்தில் பிரான்சுக்கு அதிகமான தோல்வியையும் அழிவையும் ஏற்படுத்திய ஸ்பானிஷ் வாரிசுரிமைப் போர் என்று சொல்லப்படுகிற போர் தொடங்கியது. இந்தப் போரில் இங்கிலாந்து, ஹாலந்து, ஆஸ்திரியா இன்னும் சில சிறிய அரசுகளின் கூட்டணிக்கு எதிராக பிரான்ஸ் போர் புரிந்தது.

பதினான்காம் லுயீக்கு வயது அதிகரித்த பொழுது, அவர் அரசை நடத்திச் செல்வதற்குத் தகுந்த திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் மதி நுட்பத்தை இழந்தார். கொல்பேர் சுறுசுறுப்பானவர், கடுமையாக உழைத்தவர். அவருக்குப் பிறகு அவருடைய பதவியைச் சாதாரணமான நபர்களே வகித்தார்கள்.

பதினான்காம் லுயீ

பதினான்காம் லுயீயின் காலத்திலும் அவருக்குப் பிறகு வந்த இரண்டு புர்போன் அரசர்கள் காலத்திலும் நிதித்துறையின் பொதுப் பொறுப்பாளர்தான் மிக முக்கியமான மந்திரியாக இருந்தார். அவரிடம் அரசாங்க நிதித் துறை, நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு விவகாரங்கள், நீதி இலாகா, சில சமயங்களில் இராணுவ விவகாரங்களும் கூட குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உண்மையில் பிரதம மந்திரி என்றுதான் சொல்ல வேண்டும்; ஆனால் அவர் அரசரின் முடிவைத்தான் நிறைவேற்ற வேண்டும்.

பொருளாதாரத் துறையில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் நிதித்துறைப் பொதுப் பொறுப்பாளரால்தான் முடியும். புவாகில்பேர் இதை நன்றாக அறிந்திருந்தார். எனவே அவர் 17-ம் நூற்றாண்டின் கடைசிப் பத்து வருடங்களிலும், 18-ம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களிலும் இந்தப் பதவியை வகித்த போன்ஷர்ட்ரேன் மற்றும் ஷமில்லார் ஆகியோரிடம் தன்னுடைய திட்டங்களின் மூலம் ஏற்படக் கூடிய நன்மைகளைப் பற்றி ஓயாது சொல்லிவந்தார். ஆனால் அவர்கள் அதைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

போன்ஷர்ட்ரே-னுடைய பேட்டி கிடைத்த பொழுது புவாகில்பேர், ”அமைச்சர் அவர்கள் முதலில் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கக்கூடும். ஆனால் என்னுடைய கருத்துக்களைக் கேட்ட பிறகு உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வீர்கள்” என்று பீடிகையாகச் சொன்னார். அவர் கருத்துக்களைச் சில நிமிடங்கள் கேட்ட பிறகு அமைச்சர் பலமாகச் சிரித்தார். ”நீ முதலில் சொன்னது சரி தான்; பேச்சைத் தொடர வேண்டாம்” என்றார்.

விசேஷமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் (பிரபுக்கள், மதகுருக்கள் ஆகியோர்) அல்லது அரசாங்கத்திடம் பணம் கொடுத்து மக்களிடம் விருப்பம் போல வரிவசூலிப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள், கொடுக்கல் வாங்கல் செய்து வந்த பணக்காரர்கள் ஆகியோரது நலன்களை பாதிக்கக் கூடிய சீர்திருத்தங்களைப் பற்றிக் கேட்பதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சீர்திருத்தங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தைத் தீவிரமான நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும். பிடிவாதம் கொண்ட ருவான் நீதிபதியின் திட்டங்கள் இதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

அந்தக் காலத்தில் பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் ஆபத்தான நிலைமையைப் பற்றியும், 75 சதவிகிதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு புவாகில்பேரின் எழுத்துக்கள் மிக முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன.

ஆனால் இதைப் பற்றி வேறு பலரும் எழுதியிருக்கிறார்கள். சிறப்புமிக்க அரசியல், பொருளாதார எழுத்தாளரான மார்ஷல் வொபான் 1707-ம் வருடத்தில் பின்வரும் மதிப்பீட்டைச் செய்திருந்தார். பிரான்சின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் வகையற்றவர்களாக வறுமையிலும் 50 சதவிகிதத்தினர் வறுமையின் விளிம்பிலும் 30 சதவிகிதத்தினர் நெருக்கடியில் சிக்கியும் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிட்டார். 10 சதவிகிதத்தினரான மேல் வர்க்கத்தினர் மட்டுமே நல்லமுறையில் வாழ்க்கை நடத்தினர்; மிக ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திய சில ஆயிரம் பேர்களும் இதில் அடங்குவர்.

படிக்க:
குழந்தை வளர்ப்பை முரணின்றி ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது எப்படி ?
♦ நொறுங்கிய பாதங்களுடன் 18 நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் தப்பிய வீரன் !

புவாகில்பேருக்கும் மற்ற விமரிசகர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் இந்த நிலைமையின் அடிப்படையான காரணங்களை அவர் ஓரளவுக்கு அறிந்திருந்ததே. எனவே அவர் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்கு அதிகமாக உதவி செய்ய முடிந்தது. அவர் கிராமப்புறப் பகுதிகளைப் பற்றி அதிகமாகச் சிந்தித்தது தற்செயலானதல்ல.

பிரான்சில் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான திறவுகோல் இங்கேதான் இருந்தது. அரசரும் பிரபுக்களும் திருச்சபையும் இந்தத் திறவுகோலைப் பிடிவாதமாகப் புதைத்து வைத்திருந்தார்கள். கடைசியில் அந்த நூற்றாண்டின் இறுதியில் புரட்சி வெடித்தது; பூட்டுகள் நொறுங்கின. இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரெஞ்சு விவசாயி சொந்த வாழ்க்கைச் சுதந்திரத்தை அடைந்திருந்தான், ஆனால் நிலம் அவனுக்குச் சொந்தமல்ல; அவன் உழைத்துப் பிழைத்த நிலம் அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. ”நிலப்பிரபு இல்லாமல் நிலம் இல்லை” என்ற மத்தியகாலக் கொள்கை இன்னும் முழு வேகத்தோடு இயங்கிவந்தது ; அதன் வடிவங்கள் மட்டும் மாறியிருந்தன.

அதே சமயத்தில் இங்கிலாந்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளித்துவக் குத்தகை விவசாயிகள் என்ற பலமான புதிய வர்க்கம் பிரான்சில் ஏற்படவில்லை. பிரெஞ்சு விவசாயிகள் மூன்று சுமைகளைத் தாங்கித் துன்பமடைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய நிலவுடைமையாளர்களுக்கு வாரம் கொடுத்ததோடு வேறு பல நிலப்பிரபுத்துவ பாக்கிகளையும் கட்டிக் கொண்டிருந்தார்கள்; தங்களுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை திருச்சபைக்குக் கொடுத்து எண்ணற்ற பாதிரியார்களையும் மதகுருக்களையும் ஆதரித்து வந்தார்கள்: அரசருக்கு வரி கட்டியதும் அவர்கள் மட்டுமே.

கொல்பேர் தன்னுடைய எழுத்துக்களிலும் அறிக்கையிலும் பன்முறை குறிப்பிட்டது போல, இந்தப் பொருளாதார அமைப்பு நிலத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் விவசாயிக்குச் சிறிதும் ஊக்கமளிக்கவில்லை.

மக்களிடமிருந்து அதிகமான வரி வாங்குவது மட்டுமே பொருளாதாரக் கொள்கையின் ஒரே நோக்கமாக இருந்ததனால், அரசு நிலப்பிரபுத்துவ மிச்சங்களை இதற்குப் பயன்படுத்திக் கொண்டது. அவற்றை அழிப்பதைப் தாமதப்படுத்தியது. பிரான்ஸ் முழுவதுமே தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, வெளியே கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு ஒவ்வொரு எல்லையிலும் சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டன. இது உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சியையும் முதலாளித்துவத் தொழில் முயற்சியையும் தடுத்தது.

நகரங்களில் கைவினைஞர்களின் குழுக்கள் இன்னும் நீடித்ததும் இவற்றில் பழைய காலத்துச் சலுகைகளும், கறாரான விதிகளும் குறைவான உற்பத்தியும் பின்பற்றப்பட்டதும் இன்னொரு தடையாக இருந்தது. இது அரசாங்கத்துக்கு லாபகரமானதாக இருந்தது. ஏனென்றால் அது அதே பழைய – சலுகைகளைக் கைவினைஞர்கள் குழுக்களுக்கு விற்பனை செய்து பணம் பெற முடிந்தது. கொல்பேர் ஏற்படுத்திய சிற்சில பெரிய பட்டறைத் தொழில்களும் கூட 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நசிக்கத் தொடங்கின.

1685-ம் வருடத்தில் பதினான்காம் லூயீ ஒரளவுக்கு மத சுதந்திரத்தை அனுமதித்த நான்ட் பிரகடனத்தை ரத்துச் செய்தார். அதன் விளைவாகப் புரோட்டெஸ்டெண்டு மதப்பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஹூகெனோட் குடும்பங்கள் -கைவினைஞர் களும் வர்த்தகர்களும்- தங்கள் பணத்தையும் திறமைகளையும் தொழிலூக்கத்தையும் எடுத்துக் கொண்டு பிரான்சை விட்டு வெளியேறினார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, Capital, Vol. 2, Moscow, 1967, p. 7.
(2) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, 2, 52.

 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !

கேள்வி: //தீதும் நன்றும் பிறர் தர வாரா? இவை எவ்வகை கருத்து? நன்மையும் தீமையும் அவர் அவர் என்று பூங்குன்றனார் சொல்லுகிறார்? ஆனால் எல்லா பிரச்சினையும் சமூகத்தில் இருந்துதான் பிறக்கிறது என்று சொல்லிக்கிறது? நாம் எப்படி பார்ப்பது?//

– பா.அருண்

அன்புள்ள அருண்,

சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றானாரின் இந்தப் பாடல் புறநானூற்றுப் பாடலில் இடம் பெற்றுள்ளது.

முழுப்பாடல்:

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)”

பொருள்:

“எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால், பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.”
(நன்றி: தமிழ் விக்கிபீடியா)

நீங்கள் சொல்வது போல நன்மை தீமைகளை நாமே உருவாக்கிக் கொள்வதில்லை, மட்டுமல்ல, அப்படி உருவாக்கவும் முடியாது. நன்மை, தீமைகளும், இன்ப துன்பங்களும் முதன்மையாக நம்மைச் சுற்றியுள்ள சமூக உறுப்பினர்களால் வருவது. வாழ்வின் அடிப்படை பிரச்சினைகளாகன உணவு, உடை, இருப்பிடம் உட்பட அனைத்தும் நமது சாமர்த்தியங்களாலேயே கிடைத்து விடுவதில்லை. அதன் பொருட்டே இந்த உலகில் ஏழ்மை, பணக்காரர்கள் என்ற வர்க்கப் பிரிவு இருப்பதோடு உலகமயச் சூழலில் அந்த வேறுபாடு அதிகரித்தும் வருகிறது.

எனில் கணியன் பூங்குன்றனார் ஏன் அப்படிச் சொல்கிறார்? அவரது காலமான சங்ககாலம் என்பது புராதன இனக்குழுச் சமூக அமைப்பில் இருந்து வர்க்க ரீதியான பிரிவினைகளோடு மாறிய காலமது. இனக்குழு தலைவர்கள் போய், இனக்குழு ஜனநாயகம் மறைந்து குறுநில மன்னர்களும், ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கப்படும் வர்க்கம் என சமூகம் பிரிய ஆரம்பிக்கிறது. சொத்துடமையின் பிரிவால் தோன்றிய இந்த வளர்ச்சி சமூகத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது. திருட்டு, பொய், புறம் பேசுதல், அதிகாரத்தால் அடக்குதல், தண்டனை என்று சொத்துடமை சமூகத்தின் பண்புகள் மக்களிடையே பல்வேறு குழப்பங்களை தோற்றுவிக்கின்றன.

அந்தக் குழப்பங்களில் இருந்து மக்களை ஆற்றுப்படுத்தும் பணியினை சங்ககால இலக்கியங்கள் செய்கின்றன. அதாவது சமூகத்தால் தோன்றும் பிரச்சினையில் பாதிக்கப்படும் தனிமனிதனிடம் அந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் குறிப்பிட்ட தனிநபர்களே என்பதாக எடுத்துரைக்கின்றன. திருக்குறள் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களின் வரலாற்றுக் காரணம் இப்படித்தான் இருக்கின்றது. இன்றும் இத்தகைய எண்ணங்களை இலக்கியம், சுயமுன்னேற்றம், மதம், அறநெறிகள் போன்றவற்றில் செல்வாக்கோடு இருப்பதைக் காணலாம்.

படிக்க:
♦ பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
♦ கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?

♦ ♦ ♦

கேள்வி: //தீவிரவாதிகள் என்பவர்கள் யார்? இதில் ஏன் இஸ்லாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதிகளா? இந்தியாவில் தீவிரவாதிகள் இருக்கீறர்களா? தீவிரவாதிகள் நல்லவர்களா? கெட்டவார்களா?.//

– பா.அருண்

அன்புள்ள அருண் தீவிரவாதிகள் வேறு, பயங்கரவாதிகள் வேறு. கொள்கையில் தீவிரமாக இருந்து இயக்கம் நடத்துபவர்களை தீவிரவாதிகள் என்கின்றனர். உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டத்தை முன்வைத்து மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு பாடுபடும் இடதுசாரிக் குழுக்கள் இப்படியாக அழைக்கப்படுகின்றனர்.

நம்மூரில் மாவோயிஸ்டுகளை இப்படிக் கூறுகிறார்கள். பயங்கரவாதிகளைப் பொறுத்த வரை அவர்கள் தமது இனம், சாதி, மதம், நிறம் சார்ந்த ஆதிக்கத்தை முன்னிறுத்தும் வண்ணம் மற்ற இன, சாதி, மத, நிற மக்களை பயங்கரவாத செயல்களால் கொல்கின்றனர்.

சொர்க்கத்தில் அல்லா நமக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்று மூளைச் சலவை செய்யப்படும் முஸ்லீம் இளைஞர்கள் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து செயல்படுகின்றனர். இத்தகைய முஸ்லீம் பயங்கரவாத குழுக்களை அமெரிக்காவே தோற்றுவித்தது.

கு – கிளாக்ஸ் கிளான் பயங்கரவாத அமைப்பு.

அதே போன்று அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி, கிறித்தவ மதவெறி போன்றவற்றை முன்னிறுத்தி மற்ற நாட்டவர்களை கொல்லும் கு – கிளாக்ஸ் கிளான் போன்ற இயக்கங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தீவிரமாக இயங்கி வந்தன. தற்போதும் ஆங்காங்கே இவர்களது வன்முறைகள் நடப்பதுண்டு.

ஆரிய இனத்தின் மேன்மை என்று பேசிய ஹிட்லரின் நாஜிப்படைகள் அப்படித்தான் யூத இன மக்கள் கொடூரமாக இலட்சக்கணக்கில் கொன்றனர். இந்தியாவில் இந்துமதவெறி அமைப்புக்கள் பலவும் கூட பயங்கரவாத அமைப்புக்கள் தான். ஆர்.எஸ்.எஸ்., ஹிட்லரின் நாஜிக் கட்சி போன்றவை அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதல்ல. தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.

ரோஹங்கியா முஸ்லீம்கள் கொன்று குவிக்கும் மியன்மரின் பௌத்த பயங்கரவாதத்தில் பலிகடாக்களாக முஸ்லீம்களே இருக்கின்றனர். எனினும் உலக அளவில் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகம் இருப்பதால் அவர்கள் மட்டும்தான் பயங்கரவாதம் என்பதான தோற்றம் இருக்கிறது.

முஸ்லீம் மக்களோ, கிறித்தவ மக்களோ, இந்துக்களோ அனைவரும் தத்தமது பெயரில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும் மதம் என்ற பெயரில் சாத்வீகமாகவே தமது மதங்களின் சிறப்புத் தன்மையை நம்புகிறார்கள். இதுதான அந்தந்த மதங்களின் பயங்கரவாத குழுக்கள் ஒன்றுபடும் புள்ளியாக இருக்கிறது.

பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் போபாலின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கோட்சே தேசபக்தர் என்கிறார். எனில் அந்த தொகுதியின் இந்துக்கள் தார்மீக அளவில் பிரக்யாவிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்றுதானே பொருள்!

படிக்க:
♦ வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
♦ இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

♦ ♦ ♦

கேள்வி: //தோழர், நாம் தமிழர் கட்சியை பத்தி அக்குவேற ஆணிவேரனு பிரிச்சி சொல்லுங்க.. ஒரே கண்ப்யூசனா இருக்கு.. அவிங்கள புரிஞ்சிக்க வழிகாட்டுங்க.. ஆன் தி வேல.. மே 17 பத்தியும் கம்பேர் பண்ணேல்னா தேவல..பதிலுக்கு மரணவெய்டிங்..//

– ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

நாம் தமிழர் குறித்த வீடியோக்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் இணையத்தில் ஏராளம் இருக்கின்றன. அது போல மே 17 இயக்கம் குறித்தும் இருக்கின்றன. அவை குறித்து நீங்கள் விரிவாக படித்து கேட்டுவிட்டு என்ன சந்தேகம் என்பதை கேளுங்கள். அவற்றை அறியாமலேயே போகிற போக்கில் அவர்களைப் பற்றி நாங்கள் சொல்லி நீங்கள் அறிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

♦ ♦ ♦

கேள்வி: //முன்பு டிஜிட்டல் இந்தியா -இப்போ புதிய இந்தியா என்பதோடு- எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. என்கிறாரே மோடி – அப்படியா.. எந்த விதத்தில்…?//

– எஸ். செல்வராஜன்

அன்புள்ள செல்வராஜன்,

330 இடங்களை வென்று வலுவாக ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம் என்கிறார்.

அரசியல் சாசனப்படி ஒரு பிரதமரோ, ஒரு மத்திய அரசாங்கமோ நாங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆட்சி செய்வோம் என்று சட்டப்படி கூற இயலாது.

அந்த சட்டரீதியான உண்மையை ஏதோ போனால் போகிறது என்று இரக்கப்பட்டு கூறுகிறார் மோடி. இதிலிருந்தே அவரது ஆட்சி இந்து ராஷ்டிரத்து ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது என்பது தெளிவு.

அவர் பதவி ஏற்ற பிறகு அடுத்து வந்த சில நாட்களிலேயே முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான தாக்குதலாக இருக்கட்டும், அவர்களை எதிர்த்து எழுதுபவர்களை (யோகி ஆதித்யநாத் – உத்திரப்பிரதேசம்) கைது செய்வதாக இருக்கட்டும் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சொல்லில் சமூக நல்லிணக்கம், செயலில் துவேஷம் இதுதான் மோடி அரசின் மந்திரம்.

♦ ♦ ♦

கேள்வி: //முதல் இந்து தீவிரவாதி என்ற விவாதம் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டதை மறைப்பதற்கா?//

– மனோ

அன்புள்ள மனோ,

கமலஹாசன் தற்செயலாக பேசிய இந்த விசயத்தின் பின்னே அவர் பாஜக-வின் பி டீம் என்ற பெயரை மாற்றுவதற்காக இருந்திருக்கலாம். மற்றபடி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை விடுத்து சினிமா அரசியல்வாதிகளின் தடாலடி பேச்சுக்களை பேசுபொருளாக்குவது ஊடகங்கள்தான்.

கமலஹாசன் கட்சி ஆரம்பித்த் போதே நான் பினரயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவாலை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் பார்ப்பேன் என்றவர். நான் வலதும் அல்ல, இடதும் அல்ல மையம் என்பதன் மூலம் மறைமுகமாக தான் வலது என்று நிற்பவர்.

பொதுவில் ஊழல் எதிர்ப்பு, சுத்தபத்தமான அரசியல் என்று பேசி பொழுதைக் கழிக்கிறார். அதற்குள் பிக்பாஸ் சீசன் 3 வந்துவிட்டது. இதே ஊடகங்கள் மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தையோ இன்ன பிற மக்கள் போராட்டங்களையோ கமல்ஹாசனுக்கு ஒதுக்கும் முக்கியத்தவத்தோடு காட்டாது.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !

0

ண்ணல் அம்பேத்கருக்கே காவி வண்ணம் அடித்த, சங் பரிவாரங்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில தலைவர்களையும் காவிக்கு பலிகொடுக்க கிளம்பியுள்ளனர். வரலாற்றை திரிப்பது, சிதைப்பதின் மேல் சங்கிகள் கட்டியெழுப்பும் இந்துத்துவ அதிகாரத்துக்கு பல சீர்திருத்தவாதிகளும்கூட இரையாகிவிட்டனர். இப்போது வங்கத்தின் கவிஞர் தாகூரை திரிக்கக் கிளம்பியிருக்கிறது சங்கி கூட்டம். அதை தோலுக்கிறது இந்தக் கட்டுரை…

மீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் இசுலாமிய மதத்தை விமர்சித்து ரவீந்திரநாத் தாகூர் எழுதியிருந்ததாகக் கூறி, பல மேற்கோள்கள் தொகுக்கப்பட்டிருந்தன. என்னுடைய நண்பர் இவையெல்லாம் உண்மையா என அறிய விரும்பினார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த மின்னஞ்சல் செய்தி ;

“நாம் உலக கவிஞரான ரவீந்திரநாத்தை துதிக்கிறவர்கள். அவர் இசுலாம் குறித்தும் முசுலீம்கள் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். இசுலாமிய மதத்தை அமைதி மற்றும் மனிதாபிமான மதம் என்றும் அனைத்து மதங்களும் சமமானவை என்றும் சொல்லிக்கொள்பவர்களைக் காட்டிலும் ரவீந்திரநாத் அறிவார்ந்த மனிதர். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்…” இப்படித் தொடங்கி, கேள்வியோடு இறுதியில் முடிகிறது…

ரவீந்திரநாத் தாகூர்

“இப்படியான கெட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ரவீந்திரநாத் போன்ற கவிஞர் முசுலீம்களின் இயல்புகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்போது, இந்து-முசுலீம்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நாம் ஆச்சரியத்துடனும் பேச்சு மூச்சற்றும் விடப்பட்டிருக்கிறோம்”.

மின்னஞ்சல் செய்தியில் ரவீந்திரநாத் எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கோள்களில் சிலது, அமியா சக்ரவர்த்திக்கும் ஹெமந்தபால தேவிக்கும் எழுதிய கடிதங்கள் மற்றும் இந்திய வரலாறு குறித்த கட்டுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அனைத்து மேற்கோள்களையும் என்னால் சரிபார்க்க இயலவில்லை. எட்டு மேற்கோள்களில் ஐந்து மேற்கோளை சரிபார்த்தேன். அவை அனைத்து தாகூர் கூறியவற்றை திரித்து எழுதப்பட்டுள்ளவை.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

தாகூர் சொன்னதாக மின்னஞ்சல் தெரிவித்த மேற்கோள்கள் ஒன்று சிதைக்கப்பட்டவையாகவோ அல்லது தாகூரின் நோக்கத்தை திரிக்கும் நோக்கத்தில் எடுத்தாளப்பட்டவையாகவோ இருந்தன. ஒரு மேற்கோள், தாகூர் இப்படி எழுதியதாக கூறியது…

“ஒவ்வொரு நாளும் கீழ்சாதி இந்துக்கள் முசுலீம்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பண்டிட்டுகள் அதை ஏற்றுக்கொள்வதில்லை”. இந்த வாக்கியத்தில் விடுபட்ட முந்தைய வாக்கியங்கள் என்ன தெரியுமா?

“ஒவ்வொரு நாளும் சமூக விலக்கம் என்னும் அவமானத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள கீழ்சாதி இந்துக்கள்…” என ஆரம்பிக்கிறது. அதாவது சமூகத்தில் உள்ள இந்து மத சாதி ஒடுக்குமுறைகளை பேசுகிறார் ரவீந்திரநாத். இசுலாமை பற்றி அல்ல!

இன்னொரு உதாரணத்தைக் காண்போம்.. தாகூர் சொன்னதாக ஒரு மேற்கோள் இப்படி சொல்கிறது…

“இந்த மதம்(இசுலாம்) எங்கு சென்றாலும் அது தன்னை எதிர்க்கும் மதங்களை நசுக்க அது ஒருபோதும் தயங்கியதில்லை. பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த இந்தக் கொடூரமான தாக்குதலை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது”. இந்த மேற்கோள் தாகூரின் சாந்திநிகேதன் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

நான் இந்தக் கட்டுரையைப் பார்த்தேன். இந்த வாக்கியங்கள் இருந்தன. ஆனால், அவர் சொல்ல வந்த பொருள் வேறு. நான் முழுமையாக அந்தக் கட்டுரையைப் படித்தேன். அந்த கட்டுரையில் தாகூர் மேலும் இப்படிச் சொல்லியிருக்கிறார்…

உ.பி -யில் அம்பேத்கர் சிலைக்கு காவி வர்ணம் பூசிய இந்துத்துவ கும்பல்.

“முசுலீம்களின் வருகையின்போது விழித்தெழுந்த புனிதர்களின் (நானக், ரவிதாஸ், தாது போன்றவர்களை தாகூர் குறிப்பிடுகிறார்) கருத்துக்களை விவாதித்தால், இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு பாரதம் அதன் உள்ளார்ந்த உண்மையை மறைத்து தாங்கிநின்றது… முசுலீம் மதத்தை எதிர்க்கத் தேவையில்லை என்பதை பாரதம் அப்போது காட்டியது”.

தாகூரை நாம் உண்மையாக அறிவோம். அவர் இந்து மற்றும் முசுலீம்களின் நலன் விரும்பியாக இருந்தார். அவர்களின் ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் ஆர்வமுள்ள ஒருவராக இருக்கவே அவர் விரும்பினார். ஆனால், வகுப்புவாத ஒற்றுமையை வளர்ப்பதில் உள்ள முரண்பாடுகளையும் அவர் காணத் தவறியதில்லை. இந்துக்களும் முசுலீம்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய விருப்பத்தை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

வங்காளதேசத்தின் ஷேக் முஜுபூர் ரஹ்மன் தன்னுடைய சுயசரிதையில், பிரிட்டீஷ் இந்தியாவில் இந்து வங்காள தலைவர்களில் மூவர் மட்டுமே வகுப்புவாதத்துக்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தாகூர், சித்ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ் ஆவர்.

வரலாற்றாசிரியர் சுமித் சர்கார், 1905-ல் வங்காள பிரிவினையை எதிர்த்து நடந்த சுதேசி இயக்க போராட்டத்தின்போது இந்து ஜமீன்தாரர்கள் இசுலாமிய விவசாய தொழிலாளர்களை ஒடுக்கியவிதம், தேசியவாத இயக்கத்திலிருந்து தாகூருக்கு எத்தகைய விலக்கத்தை கொடுத்தது என்பது குறித்து விளக்கமாக பேசுகிறது.

இப்போது மேற்குவங்க இந்துக்களை கவர முசுலீம்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட, கேலியாக்கப்பட்ட தாகூரைக் காணும்போது எனக்கு அதிர்ச்சியாகிறது.

படிக்க:
♦ வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
♦ மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !

பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்கத்தில் பெற்ற மக்களவை தொகுதிகள் அதிகமாகியுள்ளன. வங்கத்தில் உள்ள நகர்ப்புற, படித்த நடுத்தர மக்களிடையே இந்து மத உணர்வுகளைப் பயன்படுத்தி மதவாதம் ஊடுருவியுள்ளது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அதிகமாகும். அது விசாரணைக்குரியதும்கூட.

1947 முதல் மேற்கு வங்கத்தில் மதவாத பிரச்சினைகள் ஆழமான வடுக்களை விட்டுச் சென்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இப்போதிருக்கும் நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்துக்களிடையே முசுலீம்களுக்கு எதிரான மனநிலை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தாகூரின் மேற்கோள்கள் திரிக்கப்பட்டு உலவ விடப்படுகின்றன.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சி வகுப்புவாத பிரிவினைகளால் பிரிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று அல்ல. மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ள ஒரு பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மைவாத அரசியலை செய்ய முனைவது அமைதியை உருவாக்காது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் நன்மை செய்யலாம்; அதனால் மீன்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?


கட்டுரை : தீபேஷ் சக்ரவர்த்தி
அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா

பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

பூண்டும் வெங்காயமும் இஸ்கானும் …

ரு முழு அசைவ விருந்தில், ‘யாராவது சைவம் சாப்பிடுவோர் வரக்கூடும்’ என கருதி, கொஞ்சம் பேருக்கு சைவமும் சமைக்கப்படும். ஆனால், ஒரு முழு சைவ விருந்தில் இப்படி அசைவம் சாப்பிடுவோரைக் கருதி என்னைக்காவது அசைவமும் சேர்த்து சமைத்திருக்கிறார்களா?

‘பீடி இழுத்தா புகை வரும். புகை இழுத்தா பீடி வருமா?’ன்ற மாதிரி இருந்தாலும் இதுல ஒரு லாஜிக் இருக்குல்ல… கறிக்கஞ்சி குடிக்கலாம்னு நாலு பேர் வந்து ஏங்கிப் போவானேன்னு என்னைக்காவது இந்த சுத்த சைவ கும்பல் நினைச்சிருக்கா?

அசைவத்துக்கு ஆகும் செலவு, ‘அசைவம் சாப்பிடும் அனைவரும் சைவம் சாப்பிடுவார்கள் என்பதால்….’ என்ற லாஜிக்… அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… அப்படி ஒரு சிந்தனையே இவர்களுக்கு கிடையாது.

பெருந்தன்மையா சைவமும் சமைக்கிறவன்கிட்ட வந்து, ‘பாத்திரம் எல்லாம் தனியா புழங்குனதுதானே..’ன்னு விசாரணை வேற. அவ்வளவு சுத்தபத்தம். இந்த சுத்தபத்த கும்பல்தான், இப்போது கர்நாடகாவில் கடையை திறந்திருக்கிறது.

பூண்டும், வெங்காயமும் உனக்குப் பிடிக்கலேன்னா நீ திங்காதே… அதுக்காக ஊர்ல எவனுமே தின்னக்கூடாதா என்ன? அதுவும் மதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள Akshaya Patra Foundation-APF நிறுவனம்.

International Society for Krishna Consciousness (ISKCON) என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்த Akshaya Patra என்ற என்.ஜி.ஓ., இந்தியாவெங்கும் 12 மாநிலங்களில் 42 இடங்களில் 17.6 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்நாடகாவில், 2,814 அரசுப் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 4 லட்சத்து 43 ஆயிரம் குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கும் ஒப்பந்தப் பணியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. செலவை அரசும், அக்ஷய பாத்ரா-வும் பகிர்ந்துகொள்கின்றன. கர்நாடகாவில், ஒரு மதிய உணவுக்கு 14.33 ரூபாய் செலவாகிறது. இதில், அரசின் பங்கு 5.87 ரூபாய். அக்ஷய பாத்ராவின் பங்கு 8.46 ரூபாய். இதை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது அந்த என்.ஜி.ஓ.

ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதோ அல்லது விண்ணப்பத்திலோ, ‘பூண்டு வெங்காயம் பயன்படுத்த மாட்டோம்’ என எந்த நிபந்தணையும் அவர்கள் வைக்கவில்லை. மாறாக அரசுத் தரப்புதான், ‘ஒரு வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் உணவில் வெங்காயம் பயன்படுத்த வேண்டும்’ என நிபந்தனை விதித்தது. இஸ்கான் தவிர, ஒப்பந்தத்தை பெற்றுள்ள இதர நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிபந்தனையை நிறைவேற்றுகின்றன.

படிக்க :
♦ சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !
♦ மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

இஸ்கான் மட்டும் மறுப்பது ஏன்? “ஏனெனில், பூமிக்கு கீழே விளையும் பூண்டு, வெங்காயம் போன்றவை ஒருவரின் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கும்; எதிர்மறை சிந்தனையை தூண்டும்.” என்கிறார் இஸ்கான் நிறுவனத்தின் ஆதரவாளரான ஜனானந்த கோஸ்வாமி மகராஜ்.

“உண்மையில், பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் எதையும் உண்பதில்லை என்பது ஒரு சமண நம்பிக்கை. பூமிக்கு கீழே விளையும் கிழங்குகள் மற்றும் காய்கறிகளை பூமிக்குள் புதைத்துவைத்தால் அது மறுபடியும் விளைச்சல் தரும். அப்படியானால், அதற்கு உயிர் இருக்கிறதுதானே? அதை உண்பது உயிர்கொலையில் வந்துவிடும் என்பது சமணர்கள் இதை தவிர்ப்பதற்கான காரணம். பழங்காலத்தில், சமணர்களின் பண்பாட்டு பழக்கங்களை பிராமணர்கள் தனதாக்கிக்கொண்டதால், இந்த பூண்டு, வெங்காய தவிர்ப்பு இவர்களுடன் சேர்ந்துவிட்டது’’ என வரலாற்றுக் காரணம் சொல்கிறார் மருத்துவர் ஷாலினி.

இப்போது பிரச்னை… பூண்டு, வெங்காயம் இல்லாத உணவின் சுவை அதை சாப்பிடும் மாணவர்களுக்கு அடியோடு பிடிக்கவில்லை என்பதுதான். “அப்படியே கீழே கொட்டிவிடுவோம்” என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பள்ளிகளுக்கான மொத்த உணவுப்பொருள் விநியோகம் குறைந்துபோனதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில்தான் இந்த பிரச்சினையே வெளியே வந்தது.

கடந்த 2018 டிசம்பரில் இந்த சிக்கல் தொடர்பாக இஸ்கான் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இஸ்கான் நிறுவனம், ‘நாங்கள் பூண்டு, வெங்காயம் பயன்படுத்த மாட்டோம். அதற்கு இணையான சத்து கொண்ட மற்ற பொருட்களை பயன்படுத்துகிறோம்’ என திமிராக மறுத்தது. நியாயமாக அரசு, இந்த நிலையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். மாறாக கர்நாடக அரசு, APF-ன் மெனுவை National institute of Nutrition (NIN)-க்கு ஆய்வுக்கு அனுப்பியது. 2019 பிப்ரவரியில் NIN, மேற்படி பூண்டு, வெங்காயம் இல்லாத மெனு சிறப்பாக உள்ளதாகவும், சத்தானது என்றும் ஒப்புதல் தந்தது. ஆகவே இஸ்கானின் அட்டகாசம் தொடர்கிறது.

உனக்கு கவுச்சி ஆகாது. அதனால வாயை மூடிக்கிற… ஓ.கே.. அதுல ஏதோ ஒரு லாஜிக் இருக்கு. பூண்டு, வெங்காயம் எல்லாம் கூடாதுன்னு சொன்னா… அதுல ஏதாவது லாஜிக் இருக்கா? பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா?

நன்றி : முகநூலில் பாரதி தம்பி

இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !

ஊடக அறிக்கை

நாள் : 08.06.2019

முஸ்லீம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கண்டிக்கின்றது !

சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் கடந்த எழுபது ஆண்டுகளில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக்கும் அவ்வப்போது முஸ்லீம் மக்களுக்கும் எதிராக வாய் பிளந்து இரத்தம் குடித்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத வெறிபிடித்த சக்திகள், இப்போது முஸ்லீம் மக்கள்மீது முழுமையாகப் பாய்ந்துகொண்டு நிற்கின்றன.

கடந்த ஏப்ரல் 21 ஈஸ்ரர் தின குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாத வன்முறைகள், சொத்து அழிவுகள் அனைத்து முஸ்லீம் மக்களையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. அத்துடன் சந்தேகத்தின்பேரில் சுமார் இரண்டாயிரத்து முன்னூறு வரையான சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வயது வேறுபாடின்றிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இனவாத ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் மிக மோசமான முஸ்லீம் விரோதப் பரப்புரைகளை முன்னெடுத்தும் வருகின்றன.

கடந்த காலத்தில் அரசாங்க சுற்றுநிருபத்தின் மூலம் அரச பணிகளில் ஈடுபடும் ஆண்கள் நீளக் காற்சட்டையுடன் சேட் அல்லது தேசிய உடை அணியவேண்டும் எனவும், பெண்கள் சேலை மாத்திரமே அணியமுடியும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லீம் பெண்களின் பாரம்பரிய உடையான ஹபாயா எனப்படும் முழு நீள ஆடை நிராகரிக்கப்பட்டது. பின்பு இச் சுற்றுநிருபம் பல்வேறு தரப்பினரினதும் எதிர்ப்புகளால் இரத்துச் செய்யப்பட்டாலும், இச்செயற்பாட்டின் மூலம் முஸ்லீம் விரோதப் போக்கும், ஆணாதிக்க சிந்தனையும் வெளிப்பட்டு நின்றது கண்கூடு.

அதேபோன்று முஸ்லீம் விரோதத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் பேரினவாத வெறித்தன நோக்குடனேயே அண்மையில் கண்டியில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த துறவியும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரரின் மூன்று நாட்கள் இடம்பெற்ற உண்ணாவிரதம் அமைந்திருந்தது.

இதில் அண்மையில் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட இன்னொரு பௌத்த துறவியான ஞானசார தேரரின் வன்முறைப் பிரச்சாரமும் பரவலாக இடம்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.

இவர்களால் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் முஸ்லீம் மக்கள் பயப் பீதியுடனும், பதற்றத்துடனும் தமது அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய துன்ப நிலை தொடர்கின்றது.

ஞானசார தேரோ

இத்தகைய முஸ்லீம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களை எமது புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் இவ் அவல நிலைக்குக் காரணமான இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளின் வன்முறைகளையும் கண்டித்து நிற்கின்றது.

சிங்கள பௌத்த மத அடிப்படைவாத சக்திகள் இப்போது வெறித்தனமாக முஸ்லீம் மக்கள் மீது அபாண்டங்களையும் அச்சுறுத்தல்களையும் சுமத்தி மக்கள் மத்தியில் இன, மத அடிப்படையிலான வன்முறைகளுக்குத் தூபமிட்டு வருவதையும் எமது கட்சி கண்டிக்கின்றது.

நாட்டின் பிரதான முரண்பாடாக இருந்துவரும் தேசிய இனப் பிரச்சினையின் உள்ளடக்கமான வடக்குக் கிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் ஆகிய சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்துவங்களும், பண்பாட்டு அடயாளங்களும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் நியாயமான அரசியல் தீர்வு காணப்பட்டிருப்பின் இன்றைய அவல நிலை தோன்றியிருக்காது.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.

மத அடிப்படைவாத சிந்தனை நான்கு மதங்களுக்குள்ளும் இருந்து வருவது வெளிப்படை. இதில் ஒன்றை எதிர்த்து, ஏனையவற்றை நியாயப்படுத்த யார் முற்பட்டாலும், அத்தகையோர் மக்களுக்கு விரோதமானோரேயாவர்.

படிக்க:
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
♦ இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

முஸ்லீம் மக்கள் தனியே மத அடயாளத்திற்கு மட்டும் உரியவர்கள் இல்லை. அவர்கள் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஆவர். அவர்கள் அநேகர் இந்நாட்டையும் ஏனைய இன, மத மக்களையும் நேசிப்போராகவும், முற்போக்கு ஜனநாயக சிந்தனை உடையோராகவும் இருந்துவருகின்றனர்.

மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் அந்நிய ஏகாதிபத்திய தலையீடுகளிற்கும், பிற்போக்கான ஆட்சி அதிகாரங்களுக்கும் எதிராக மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாகச் சிரியாவின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் இடதுசாரி மாக்சிச லெனினிசக் கட்சியைச் சேர்ந்த போராளிகள் ஏனைய தரப்புகளுடன் இணைந்து போராடியே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து தமது பிராந்தியத்தையும் மக்களையும் பாதுகாத்தனர். குர்திஸ்தான் போராளிகளும் முஸ்லீம்களே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க சூழலில் நாட்டின் அரசியல் பற்றியும், பேரினவாதக் கட்சிகள் பற்றியும் முஸ்லீம் மக்களுக்கான மாற்று அரசியல் மார்க்கம் பற்றியும் முஸ்லீம் மக்கள் தூரநோக்குடன் சிந்திப்பது அவசியம். அடயாள அரசியலுக்கு அப்பால், முஸ்லீம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை உணர்ந்து, அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்குப் பொருத்தமான அரசியல் மார்க்கம் எது என்ற ஆய்வை மேற்கொள்வது இன்றைய இளம் தலைமுறையின் அவசியமானதொரு கடமையாகவுள்ளது.

இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளோடு இணைந்து முன்செல்லக்கூடிய மாற்று அரசியல் நிலைப்பாடு முஸ்லீம் மக்களுக்கு அவசியமானதொன்று என்பதை எமது கட்சி இவ்வேளை சுட்டிக்காட்டுகின்றது.

இவ் அறிக்கையானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
பு.ஜ.மா.லெ கட்சி.

நூல் அறிமுகம் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை

மிழகத்தின் தலைசிறந்த நீரியல் அறிஞர்களில் ஒருவரான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்கள் ”தமிழக ஆறுகளில் பல ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையின் விளைவாக தமிழகத்தின் வளங்களும் நலன்களும் எத்தகைய பாதிப்புக்குள்ளாகி வருகிறது” என்பதை ஆய்ந்து ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார்.

ஆறுகளைக் காப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை போடப்பட்டுள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இந்நூலின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். (பதிப்பாளர் குறிப்பிலிருந்து…)

ஆறுகள் தண்ணீரை மட்டுமன்றி செழிப்பான வண்டலையும் மணலையும் அள்ளித்தருகின்ற. அளவுடன் பயன்படுத்தினால் தொடர்ந்து இந்த வளங்கள் நமக்குக் கிடைக்கும். ஆனால் தற்போது தண்ணீரும் மணலும் வணிகப் பொருளாகிவிட்டன. தமிழ்நாட்டில் ஆறுகளில் மணல் வளத்தைப் பாதுகாக்கப் போட்ட சட்டங்களும் அவை எப்படி வளைக்கப்பட்டு மணல் கொள்ளை தற்போதைய உச்சகட்டத்தை அடைந்த வரலாற்றை காணலாம்.

ஆறுகளைக் காப்பதற்காக 1884-ல் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. இன்றும் அச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தின் தொடர்பாக இடப்பட்ட அரசு ஆணை எண் 123/24-8/15.4.1911-ன் படி (இணைப்பு-1)

* ஆற்றின் இருபுறமும் வெள்ளக்கரைகளுக்கு அப்பால் 100 அடிவரை (தனியார் நிலங்கள் உட்பட) மண் அல்லது மணல் அள்ளக்கூடாது.

* தேவைக்காக மணல் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட ஆற்றுக்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அந்த அலுவலர் மணல் எடுக்க உத்தேசித்திருந்த இடத்தைப் பார்வையிட்டு மணல் எடுப்பதனால் ஆற்றின் பாதுகாப்பிற்கு இடையூறு உள்ளதா என்பதை ஆய்வு செய்தபின் சில விதிகளுடன் அனுமதி வழங்குவார். மணல் எடுப்ப்தை எப்போது வேண்டுமானாலும் தடுக்கும் அதிகாரம் அந்த அலுவலருக்கு உண்டு. விதிகளை மீறி மணல் அள்ளினால் சிறைத்தண்டனையுடன் ரூபாய் 50 அபராதமும் விதிக்கப்படும். (1911-ல் ரூபாய் 50 -ன் மதிப்பை எண்ணிப்பாருங்கள்) …

சென்னை பஞ்சாயத்துகள் சட்டம் 1958 (Madras Panchayat Act 1958) சட்டப்பிரிவு 84-ன் படி, பஞ்சாயத்துகளுக்கு ஏரி குளங்கள் மீது உரிமைகள் இருந்தன. எனவே ஆறு, குளங்களில் மணல் அள்ளுவதை அனுமதிப்பது கிராமப்பஞ்சாயத்துகளின் அதிகார வரம்பிற்குட்பட்டது. 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட 73-வது திருத்தப்படி பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் சட்டம் இயற்றின. இதன்படி சென்னை கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் 1958-லிருந்து பிரிவுகள் 83 மற்றும் 85, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தில் பிரிவு 132 மற்றும் 133 ஆகவும் சேர்க்கப்பட்டன. பஞ்சாயத்துகளுக்கு நீர்நிலைகளிலிருந்த உரிமை வழங்கிய பிரிவு 84 புதிய பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் நீக்கப்பட்டது. பிரிவு 85-ல் வழங்கப்பட்டிருந்த அதிகாரம் புதிய பஞ்சாயத்துகள் சட்டத்தின் பிரிவு 133ன்படி மாவட்ட ஆட்சியாளருக்கு அளிக்கப்பட்டது. அதோடு நீர்நிலைகள் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்படாமல் பஞ்சாயத்து ஒன்றியங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பஞ்சாயத்துகளிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் அளிக்கப்பட்டதன் விளைவு ஆறுகளில்  நடைபெறும் மணற்கொள்ளையைப் பார்த்தாலே தெரியும்.

படிக்க:
குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !
பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?

1957-ல் மத்திய அரசு ஆற்று மணலை சிறு கனிமம் என்று வகைப்படுத்தியது. இந்திய அரசின் சுரங்கங்கள் கனிமங்கள் (பயன்பாடும் கட்டுப்பாடும்) 1957 சட்டத்தின் வழிகாட்டுதலில் உருவான தமிழ்நாடு சிறுகனிமங்கள் பயன்பாட்டு விதிகளின்படி ஆற்றில் உள்ள மணல் ”சிறு கனிமம்” Minor Mineral என்று வரையறுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு மணல் உரிமையாக்கப்பட்டது. ஆறுகளில் மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, இச்சட்டம் மணல் அள்ளுவதைக் குத்தகைக்கு விடுவதைக் குறித்த சட்டமாகக் கருதப்படுகிறது. ஆற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதை இச்சட்டம் அனுமதிக்கவில்லை. பிறகு 19.04.2004 இல் ஒரு அரசு ஆணையின்படி அரசு தொழில்துறை செயலாளர் அனுமதியுடன் இயந்திரங்கள் பயன்படுத்தலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது. (இணைப்பு-2) எல்லா இடங்களிலும் இராட்சச இயந்திரங்கள் மூலம் மணல் சுரண்டப்படுவதைக் காண்கிறோம். யாருக்காக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது? ஆனால் அப்பாவி விவசாயிகள் குளங்களில் தூர் வாரினால் அவர்களைக் கைது செய்ய இச்சட்டம் வருவாய்த்துறையால் பயன்படுத்தப்படுகிறது…

1996-ல் காவிரி ஆற்றில் மாயனூர் பகுதியில் இராட்சத இயந்திரங்களின் உதவியுடன் மணல் அள்ளப்பட்டது. வெளியாட்கள் எளிதில் உள்ளே போகமுடியாது. இந்த இடத்தில் 25 எக்டேர் பரப்பில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மணல் அள்ள ஏதுவாக நடு ஆறு வரை ரோடு போட்டு சிறிய அணையே உருவாகியிருந்தது. நாளொன்றுக்கு 300 லாரிகள் கோவை – ஈரோடு பகுதிகளில் அதிக விலைக்கும் அதைவிட அதிக விலையில் கேரள மாநில பாலக்காட்டிலும் விற்கப்பட்டது. அந்த கிராம மக்களுக்கு அவர்களுடைய குடிதண்ணீர் ஆதாரத்திற்கு ஆபத்து வந்ததும் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை அடக்க குண்டர்களை கொண்ட கூலிப்படை மணல் கொள்ளையர்களால் ஏவிவிடப்பட்டது. பணம் மற்றும் மிரட்டல் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை ஏவிவிட்டு  அவர்கள் மூலம் ”மணல் அள்ளுவதைத் தடுத்தால் பெரிய போராட்டம் வெடிக்கும்” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சாதிக்கலவரம் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இந்த நிலையில் கரூர் வழக்கறிஞர் திரு பி.ஆர். குப்புசாமி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 09.02.1996 அன்று அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நில – நீரியல் வல்லுனர் குழுவினரை திரு. பி.ஆர். குப்புசாமி அவர்கள் அங்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், அவர்களை மாபியா கும்பல் வழிமறித்தனர். அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் குழுவினரை திரும்பிப் போகும்படி வேண்டினார். அவரும் பயத்தில் இருப்பது தெரிந்தது. இந்த சூழ்நிலையில் தங்களுடைய அறிக்கையை குழுவினர் அளித்தனர். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கரூர் மாவட்ட ஆட்சியாளருக்கு மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. கரூர் மாவட்ட ஆட்சியாளர் மணல் எடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ததுடன் இரண்டரைக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். மணல் கொள்ளை அப்போது நின்றது. சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மணல் கொள்ளை அங்கு ஆரம்பித்துவிட்டது… (நூலிலிருந்து பக்.5-9)

நூல் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை
ஆசிரியர் : முனைவர் பழ. கோமதிநாயகம்

வெளியீடு : தமிழ்க்குலம்,
33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை – 600 004.
தொலைபேசி எண்: 044 – 2464 0575.

பக்கங்கள்: 84
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 14

முன்மொழிவுகள், கேள்விகள்

…பெற்றோர்கள் எந்த விதமான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கின்றனர், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது சம்பந்தமாக எப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களிடம் உதிக்கின்றன என்பது சுவாரசியமானது. மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில் அவர்களை செயல்முனைப்போடு ஈடுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா? முந்திய ஆண்டுகளில் பல பெற்றோர்கள் இதில் பெரும் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள், இந்த அனுபவம் இன்று எனக்கு ஊக்கமளித்தது, எனவே தான் நானே உருவாக்கிய “முது மொழிகளைத்” துணிவாகப் பெற்றோர்கள் முன் வைத்தேன்.

அவர்கள் என்ன செய்வதாக வாக்களிக்கின்றனர், அவர்களது கருத்துக்கள் யாவை?

முதலில் வாக்குறுதிகளைப் பார்ப்போம்,

“நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல என்னால் முடியும், ஜார்ஜியாவின் பண்டைய தலைநகரமாகிய மித் ஸ்ஹேத்தாவிற்கு அவர்களை அழைத்துச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைக் காட்ட முடியும். இது அவர்களுக்கு நிச்சயமாகச் சுவாரசியமாக இருக்கும்.” கோத்தேயின் பாட்டி.

2-3 -ம் வகுப்புகளில் இப்படிச் செய்யலாமே!

“என்னால் ஆண்டிற்கு இருமுறை பேருந்திற்கு ஏற்பாடு செய்ய இயலும். நகரத்திற்கு வெளியே சுற்றுலா செல்லலாம். இரண்டு வாரத்திற்கு முன் சொன்னால் போதும்.” கியோர்கியின் தந்தை.

இது நல்லது! அக்டோபர் மாதம் நகரத் தாவரவியல் பூங்காவிற்கு முதல் சுற்றுலாச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இலையுதிர் காலத்தில் இயற்கை எப்படி மாற்றமடைகிறது என்று கவனிக்கலாம்.

“குழந்தைகளுக்காக ஒரு மின்சார போர்டு செய்ய முடியும், பல்வேறு மின் உபகரணங்களையும் செய்ய இயலும். எப்படிப்பட்ட பாடச் சாதனங்கள் வகுப்பிற்குத் தேவை என்று மட்டும் சொல்லுங்கள்.” தேயாவின் தந்தை.

இந்த வாரமே தேயாவின் தந்தையோடு பேச வேண்டும்.

“நானும் என் மனைவியும் இசையமைப்பாளர்கள். ஒரு சிறு குழந்தைகள் ஒப்பேராவை எங்களால் தயாரிக்க முடியும். பாட நேரத்திற்குப் பின் நாங்களே ஒத்திகைகளை நடத்துவோம். எல்லாக் குழந்தைகளும் இதில் பங்கேற்பார்கள்.” கோச்சாவின் பெற்றோர்கள்.

பெரிதும் சுவாரசியமான முன்மொழிவு. “இரண்டு மூன்று பெற்றோர்கள் உதவினால் வகுப்பறையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி உற்சாகமாயும் சுவாரசியமாயும் இருக்கும்படிச் செய்ய இயலும்.” தாம்ரிக்கோவின் தந்தை .

இதைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும். “நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். பெற்றோர்களின் முறை அலுவலுக்கு ஏற்பாடு செய்ய இயலும். என்னால் தாழ்வாரத்தில் ரோந்து வர முடியும், எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவுவோம்.” மாயாவின் பாட்டி. பெற்றோர்களின் முறை அலுவல் தேவையான ஒரு விஷயம். இந்த முன்மொழிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

“வகுப்பறைக்காக ஸ்டேன்டு, சிறு மேசைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.” ஏக்காவின் தந்தை.

ஒரு சுவர் முழுவதும் வரும்படியாக ஸ்டேன்டு செய்தால் நன்றாயிருக்கும். எல்லாக் குழந்தைகளின் குழந்தைப்பருவப் படங்களையும் இதில் மாட்டலாம். பின் ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாள் வரும் போதும் அக்குழந்தையின் புகைப்படத்தை மாட்டலாம்.

“குழந்தைகளை அச்சகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் எப்படி அச்சிடப்படுகின்றன என்று காட்ட முடியும்.” எலேனாவின் அம்மா.
குழந்தைகள் 2-வது வகுப்பிற்கு வந்ததும் நிச்சயம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்…

“எங்கள் வீட்டில் சிறு தோட்டம் உள்ளது. அங்கு பல்வேறுவிதமான பூச்செடிகள் இருக்கின்றன. வகுப்பறைக்காக சில பூந்தொட்டிகளில் இச்செடிகளைக் கொண்டு வர முடியும். குழந்தைகள் இவற்றிற்கு நீர் ஊற்றி வளர்க்கலாம். அவ்வப்போது இவற்றை முறையாக மாற்றி வேறு பூச்செடிகளைக் கொண்டு வருவேன். குழந்தைகள் பல்வேறு விதமான மலர்களோடு அறிமுகமாகலாம்.” நீயாவின் தாய்.

சுவாரசியமான விஷயம். இதை உடனே செய்யும்படி அவரிடம் கூற வேண்டும்.
டேப்ரிக்கார்டர், கிராமபோன், மீன் தொட்டி போன்றவற்றை வகுப்பறைக்குப் பரிசளிப்பது; படம் வரைய சொல்லித் தருவது, பல்வேறு விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது, தாழ்வாரத்தில் திரைகளைத் தொங்க விட்டு அழகுபடுத்துவது, குழந்தைகளைப் படமெடுத்து மாட்டுவது போன்ற பல்வேறு மற்ற முன்மொழிவுகளும் வந்தன. இவற்றையெல்லாம் தேவையானபோது நான் பயன்படுத்திக் கொள்வேன்.
அடுத்து, பெற்றோர்களின் கேள்விகள், ஆலோசனைகளைப் பார்ப்போம்.

“ஆறு வயதுக் குழந்தைகளை ஏன் பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர் என்று விளக்குவீர்களா? நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்?” நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன்.

“இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது!” இந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.

“அடிக்கடி குழந்தைகளைக் காற்றாட அழைத்துச் செல்வீர்களா?” கண்டிப்பாக, ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வேன்.

“காலை வேளைகளில் முரண்டு பிடிக்காமல் நன்கு சாப்பிடும்படி குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் நன்கு கேட்பார்கள்.” சரி… காலையில் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக் கூடாதென குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.

“உங்களது கல்வி முறையின் சாரம் என்ன என்று விளங்குமாறு தயவுசெய்து சொல்லுங்கள். திட்டவட்டமான உதாரணங்களோடு பாடங்களை எப்படி நடத்தப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்!” ஆம், இதற்கு பெற்றோர்களுக்கு முழு உரிமையுண்டு. முதல் வாய்ப்பு கிட்டியதுமே இதைச் செய்ய வேண்டும்.

“பெற்றோர்கள் பாடங்களுக்கு வரலாமா?” ஓ, வரலாமே. இப்படிப்பட்ட பொதுவான பாடங்கள், திட்டவட்டமான உதாரணங்களோடு நமது கல்வி முறையைப் பற்றிப் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க உதவும். தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளுக்கான இப்படிப்பட்ட பொதுவான பாடவேளைகள்தான் எனக்கும் ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் இடையில் பரஸ்பர மன ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழி.

படிக்க:
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்

“மனிதாபிமான வளர்ப்பைப் பற்றி நீங்கள் கூறியதெல்லாம் மிக சுவாரசியமானவை. ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?”

மனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது? இவர்களின் குழந்தைகள் வளர்ந்து, மாற்றமடையும்போது ஒருவேளை இதை நம்புவார்களோ?

குழந்தைகளே, கட்டாயம், நிர்ப்பந்தமின்றி உங்களை வளர்க்க இயலும் என்று நிரூபிக்க நீங்கள் எனக்கு உதவுவீர்களா? “சரி!” எதற்காக ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “சரி” என்று ஒரே குரலில் கூறுவதை மாற்ற வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் !

0

ன்பார்ந்த வாசகர்களே,

இந்த வார வாசகர் புகைப்படத் தலைப்பு – பாதையோர உணவகங்கள் !

சென்ற முறை கோடையும் தண்ணீரும் என்ற தலைப்பில் கேட்டிருந்தோம், அத்தலைப்பில் படங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. இந்த வாரம் பாதையோர உணவகங்கள் குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்புமாறு கோருகிறோம்.

நகரத்து நெரிசலிலும், நேரமின்மையிலும் சாப்பிட்டே ஆக வேண்டிய கடமையை உடன் நிறைவேற்றுவதற்கு பாதையோர உணவகங்கள் உதவுகின்றன. மலிவான விலையில், சட்டென நின்று உண்டு முடித்து விட்டு செல்வதற்கு இந்த உணவகங்கள் உதவுகின்றன. மறுபுறம், சென்னை போன்ற மாநகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்தக் கடைகள் அவர்களுக்கு பிழைப்பை அளிக்கின்றன.

சுயதொழில் தொடங்குவதாக இருந்தால் மக்களுக்கு முதலில் கை கொடுக்கும் தொழிலாக இக்கடைகள் விளங்குகின்றன. காலை உணவுக்காக மட்டும் செயல்படும் கடைகள், மதிய உணவுக்கான கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக இக்கடைகள் செயல்படுகின்றன. மக்களுக்கு வேலையளிக்க வழியற்றுப் போன இந்த அரசமைப்பில் இத்தகைய கடைகளே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன.

உங்கள் பகுதியில் செயல்படும் அத்தகைய கடைகளை நன்கு படெமடுத்து அனுப்புங்கள். கூடவே கடை, கடை உரிமையாளர், தொழிலாளிகள் பற்றிய சிறு குறிப்பையும், அவர்களின் சிறப்பம்சங்களையும் மறவாமல் குறிப்பிட்டு அனுப்புக. வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாதையோர கடைகள் பிரபலமாய் இருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டின் தேசிய அடையாளமாய் தனித்துவமாய் விளங்கக் கூடிய பாதையோர உணவகங்களுக்கென்றே உலக நாடுகளின் நகரங்களில் தனித்துவமான தெருக்களும், பகுதிகளும் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது நவீன கேமராவுடன் வெளியே சென்றால் இத்தகைய கடைகளை ஆங்காங்கே காணலாம். அனுப்புங்கள். காத்திருக்கிறோம்.

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20.06.2019
மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com
வாட்ஸ்அப் எண்:
(91) 97100 82506

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!

நட்புடன்
வினவு


புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:

♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.

♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.

♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.

♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.

♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.

♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.

♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.

♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.

♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.

♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.

♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).


புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !

திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தன் மகளையும், மருமகனையும் ‘பேண்ட் வாத்தியம்’ முழங்க வரவேற்க வேண்டும் என நினைத்தார் அந்த தந்தை. இது ஒரு குற்றமா? ஆனால், அந்த கிராமத்தில் பேண்ட்-வாத்தியம் வைப்பது ’பெரிய’ சாதிக்கு உரியது; தலித்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.

எதிர்ப்பை மீறி, போலீஸ் பாதுகாப்புடன் திருமணத்தை நடத்திய அந்த தந்தை மகளையும், மருமகனையும் பேண்ட்-வாத்தியம் முழங்க வீட்டுக்கு வரவேற்றார். அந்த சத்தம் பெரிய சாதியின் காதுகளை தீயாய் சுட்டது. விளைவு, தலித்கள் நீர் எடுக்கும் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றிவிட்டார்கள். இந்த கொடுங்கோடையின் தகிப்பில் ஒரு குடம் நீருக்கு வழியின்றி மக்கள் எங்கும் பரிதவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்தான் குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணை ஊற்றியிருக்கின்றன இந்த ‘பெரிய சாதி பருப்புகள்’.

ஆதிக்க சாதியினரால் நாசம் செய்யப்பட்ட கிணறு. (இடம் : மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டம், மனா கிராமம்) நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சாதிய வன்முறை அந்த ஒரு மாநிலத்துக்கு உரியதோ, அந்த ஒரு சாதிக்கு உரியதோ அல்ல. தனக்கும் கீழே ஒரு சாதி இருக்கிறது என கருதும் அனைத்து சாதிகளிடமும் இந்த மனநிலை இருக்கிறது.

பேண்ட் வாத்தியம் இசைக்கக்கூடாது என்று சொல்வது நமக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால், இதே தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், தலித்கள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வளர்த்தால், அவர்கள் வீட்டு பெண் நாயை மேட்டர் செய்துவிடுமாம். நாய்களிடையே சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடுமாம்.

கடந்த வாரம் நீர்ப்பஞ்சம் நிறைந்த ஒரு தென் மாவட்டத்துக்கு சென்றபோது, ஊற்றுநீர் எடுப்பதில் வெளிப்படும் சாதிய அணுகுமுறையை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. இதனால் ‘பகலில் நீ; இரவில் நான்’ என்ற, சச்சரவை தவிர்க்கும் ஓர் உடன்பாட்டுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். எல்லோருக்கும் குடிநீர் கொடுக்க வக்கற்ற அரசை நோக்கி கோபம் திரும்பாமல், சாதிய முரண்பாடுகளுக்குள் சிக்கி சீரழியுமாறு இந்து மதம் பணித்திருக்கிறது.

படிக்க :
♦ மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!
♦ குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

இத்தகைய ஆகக்கீழான உதாரணங்களை தேடிக் கண்டுபிடித்துதான் இந்த சாதி வெறியர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதோ, இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்றால் மட்டுமே இச்சாதிவெறி பொருட்படுத்தத்தக்கது என்பதோ அல்ல… அன்றாடம் வெளிப்படும் சின்னஞ்சிறு சொல்லில்; ஆகச்சிறிய செயல்பாட்டில் இவர்களின் மரபுரிமை சாதித்திமிர் வெளிப்படுவதை உணரலாம். இப்போது அந்த வெறி ஒரு பாதுகாப்பான எல்லையை சென்று சேர்ந்திருக்கிறது.

படம் : ஓவியர் முகிலன்

துரத்தப்படும் ஓர் வெறிநாய் மூச்சிரைக்க ஓடி தன் உரிமையாளரின் ஏரியாவை அடைந்ததும், ‘இப்ப அடிடா பார்க்கலாம்’ என்பதுபோல் ஒரு லுக் விடும் இல்லையா… அப்படி பாஜக-வின் பக்கத்தில் ஓடிச்சென்று நிற்கிறது சாதிவெறி. தன் வளர்ப்பு மிருகத்தை தடவிக்கொடுக்கும் ஓனரின் வாஞ்சைடன் அதைத் தடவிக்கொடுக்கிறது பாஜக.

‘ஓனரா இருந்தா ஓரமா போ’ என தமிழ்நாடு சொல்கிறது என்றாலும், இந்த மேற்பரப்பு பரவசத்தில் நாம் லயித்துவிடக்கூடாது. அங்கே பேண்ட் வாத்தியம் என்றால், இங்கு அதைப்போன்று பல. இந்த சாதி வெறியை ஒருங்கிணைக்கவும், பயன்படுத்திக் கொள்ளவும்தான் அரசியல் கட்சிகள் முயல்கின்றனவேயன்றி, இதை நீர்த்துப்போகச் செய்யும் எந்த நிகழ்ச்சிநிரலும் இவர்களிடம் இல்லை.

மலையை வெடி வைத்து தகர்ப்பதைப்போல, சமூகத்தை பிளவுப்படுத்தி, ஒரு பகுதி மக்களின் பிரதிநிதியாய் தன்னை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிலபஸ் பாஜகவிடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அத்தகைய பிளவை உருவாக்க இப்போது சாத்தியமில்லை என்பதன் பொருள், எப்போதுமே சாத்தியம் இல்லை என்பதல்ல.

மேலும், அவர்களின் நோக்கம் வெறும் வாக்கரசியல் மட்டுமல்ல. சமூக நல்லிணத்தை காணாப்பொணமாக்குவதே அவர்களின் தேவை. ஒருவேளை, எதிர்காலத்திலும் தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை கூட தாண்டாமல் போகலாம். ஆனால், மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ இங்கு ஒரு திட்டவட்டமான வெறுப்பரசியலை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். கேங்லீடர் வருவதற்கு முன்பு ஃபீல்டை க்ளீயர் செய்வதைப்போல. பிறகு பெரியண்ணன் வந்து மொத்த ஊரையும் கொத்துபுரோட்டா போடுவார்.

படிக்க :
♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
♦ ஒரு வரிச் செய்திகள் : 10/06/2019

இந்து மதவாதிகளின் அடிப்படை நோக்கம், இந்தியாவெங்கும் இந்து மதத்தை பரப்புவது அல்லது அகண்ட பாரதத்தை அடைவது. இந்த லட்சியத்தை அடைய, அவர்கள் தேர்தல் அல்லாத வழிகளில் பல பத்தாண்டுகளாக முயற்சித்துப் பார்த்தனர். ஆனால், இந்தியாவின் தனித்துவமான நிலவியல் வேறுபாடு அதற்கு அனுமதிக்கவில்லை.

நூற்றுக்கணக்கான மொழிகள், ஆயிரக்கணக்கான பண்பாட்டு வாழ்முறைகள், மாநில எல்லைகள்… இவற்றினூடாக இந்து மக்களை ஒரே இழையில் இணைத்து, அதை அனைவருக்குமானதாக மாற்ற அவர்களால் முடியவில்லை. எனவே தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அதன் வழியே இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவது என்பது, அவர்களுக்கு தவிர்க்கவியலாத ஒரு வழிமுறையாக இருக்கிறது. தேர்தல் அரசியல் களத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்கச் செய்வது ஏன் அவசியம் என்பதற்கு இப்படி கண்ணோட்டமும் இருக்கிறது.

ஆனால், ஜனசங் தோற்றுவித்தபோது இருந்த நோக்கங்கள் இன்றும் அதே நிலையில் இருக்கவியலாது. இன்று, சாதிய பாகுபாட்டின் தாயான இந்து மதம், பொருளாதார பாகுபாட்டின் தாயான நவீன தாராளவாத கொள்கைகளுடன் இணைந்து நிற்கிறது. இது மேல பார்த்தா காவி. உள்ளப் பார்த்தா கார்ப்பரேட். இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மை நோக்கி குறிபார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி : முகநூலில் பாரதி தம்பி

நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும், கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள்.

இன்று அரியானாவில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தி விட்டு சோளத்தைப் பயிரிடச் சொல்கிறது அம்மாநில பா.ஜ.க அரசு.

அரியானாவின் மொத்த விவசாய விளைநிலமான 35 லட்சம் ஹெக்டரில் 13.5 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.

அரியானா விவசாயிகள் கரீப் பருவத்திற்காக நெல் விதைப்பிற்கு தயாராகி வருகிறார்கள். அரியானா அரசு,  ஏழு மாவட்டங்களில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தச் சொல்லி அறிவித்திருக்கிறது. இதற்கு அம்மாநில அரசு கூறும் காரணம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறதாம்.

நெல் சாகுபடியில் அதிக நீர் செலவாகிறதாம். சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிரிடுவதனால் அதிக அளவு நீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் இது மண்வளப் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும் கூறி வரும் கரிஃப் பருவத்தில்  சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிர்செய்ய, ஒரு சோதனைத் திட்டத்தை அறிவித்திருத்திருக்கிறார் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ 4,500 மதிப்பிலான சோள – பருப்பு விதைகள் இலவசம், ஹெக்டருக்கு ரூ 766 பயிர்க் காப்பீட்டு திட்டம், விளைச்சலை அரசே குறைந்தப் பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும்  என்றும் கூறியிருக்கிறது.

படிக்க:
விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை
♦ அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விவசாயிகளுக்கு  உள்ளீடு விலைகள் நெல் சாகுபடிக்கு அதிகமாக இருந்தாலும், ஏக்கருக்கு ரூ 50,000 முதல் 55, 000 வரை வருவாய் கிடைக்கும். ஆனால் சோளத்தில் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ 25,000 முதல் ரூ 30,000 தான் கிடைக்கும் என்று முன்னாள் வேளாண்மை விரிவாக்க அதிகாரி ரஜ்ஜித் சிங் கூறுகிறார்.

தானேசர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்தப் சிங், அரசே கொள்முதல் செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு வாய்மொழி வாக்குமூலமாகவே இருக்கிறது என்கிறார்.

அரியானா முதலமைச்சர் தெளிவாகக் கூறுவது இதைத்தான் :

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே 50,000 ஹெக்டரில் நெல் விவசாயத்தை இல்லாமல் செய்துவிட்டு சோளத்தையும் பயிர்வகைகளையும் பயிர் செய்வதுதான். இதுதான் இந்தியாவின் பயிர்கள் மாற்றி பயிரிடுவதற்கான முதல் சோதனைத்திட்டம்.

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

நிலத்தடி நீர் உயர்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்க லாயக்கற்ற அரியானா அரசு, விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு அதிக நீர் செலவாவதாக வகுப்பு எடுக்கிறது.  பயிரின் குறைந்தப் பட்ச ஆதரவு விலையே அரசு அறிவிக்கும் திட்டத்தில்தான் சாத்தியம் என்பதும் இத்திட்டத்தில் அம்பலமாகிறது. மேலும், விவசாயிகளை கட்டாயமாக பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

விவசாயிகள் எதை சாகுபடி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தில் காலனிய பிரிட்டிஷ் அரசும், மறுகாலனியாக்கத்தை தீவிரமாக  அமுல்படுத்தும் பா.ஜ.க அரசும் வேறு வேறல்ல!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
Haryana’s plan to wean farmers away from paddy comes a cropper
Haryana to discourage paddy crop
Haryana offers paddy farmers incentive to grow maize, pulses

பாசிசத்தை எடைபோடுவதில் நாம் எவ்விதத் தவறுகளைச் செய்திருக்கிறோம் ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 8

டோக்ளியாட்டி

விரிவுரை 2

பூர்ஷுவாக்களின் “புது மாதிரியான கட்சி”

பாசிசம் என்றால் என்ன என்பதற்கு நமது பாடத்தின் முதல் பகுதியில் பொருள் வரையறை செய்தோம். சர்வதேச ஆவணங்களையும் இத்தாலிய அனுபவத்தையும் கொண்டு இந்த நிர்ணயிப்பைச் செய்தோம். பாசிச சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்களை விளக்கிக் கூறினோம், அதன் வர்க்க இயல்பைச் சுட்டிக் காட்டினோம். இதுதான் பூர்ஷுவாக்களின் மிகப் பிற்போக்கான அம்சத்தின் பட்டவர்த்தனமான வெளிப்பாடாகும். குட்டி பூர்ஷுவா வெகுஜன இயக்கத்தை இந்தப் பாசிச சர்வாதிகாரத்தால் எவ்வாறு கவர்ந்து ஈர்க்க முடிகிறது என்பதையும் பார்த்தோம்.

பாசிசத்தை எடைபோடுவதில் நாம் பல தவறுகள் செய்திருக்கிறோம். பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கையும் அதன் பல்வேறு அம்சங்களையும், அவற்றிடையே உள்ள பரஸ்பரத் தொடர்பையும் நாம் காணத் தவறியிருக்கிறோம். இந்தத் தவறுகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவற்றைக் களைவதில் முழுக் கவனம் செலுத்தியிருக்கிறோம். இப்பாடம் முழுவதும் இப்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பாடத்தின் இன்னொரு பகுதி பாசிச சித்தாந்தத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது. இந்தச் சித்தாந்தம் பாசிச இயக்கத்தைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவாப் பகுதிகளை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு குழப்பமான, கதம்ப சித்தாந்தம் என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம்.

திட்டமிடுதல் சம்பந்தப்பட்ட தவறுகளைப் பற்றி எச்சரித்தோம். அவ்வாறே, திட்டமிடுதல் தொடர்பான தவறுகள் குறித்து மீண்டும் எச்சரித்து, இன்று என் விரிவுரையைத் தொடங்க விரும்புகிறேன்; இத்தாலியில் பாசிச வரலாற்றுப் பிரச்சினைகளில் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவையே இந்தத் தவறுகள்.

நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பாசிசம் இந்தப் பாதையை மேற்கொள்ள நேர்ந்தது, பாசிசம் வேறு எந்தப் பாதையையும் மேற்கொண்டிருக்க முடியாது. அது தேர்ந்தெடுத்துள்ள பாதை தவிர்க்க முடியாதது என்ற … கண்ணோட்டத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.

சர்வாதிகார ஆட்சியை நிறுவும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் 1920-ம் ஆண்டிலோ அல்லது ரோம் படையெடுப்பு காலத்திலிருந்தோ பாசிசம் பிறந்தது என்று நினைப்பது மிகப் பெரிய தவறாகும்; ஏனென்றால் இத்தகைய ஆட்சியை அமைக்க கடந்த பத்தாண்டுகளாகத்தான் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதை இன்று நாம் காண்கிறோம். எனவே, இது ஒரு பெரும் தவறு என்பதில் ஐயமில்லை.

பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்ட எல்லா வரலாற்று உண்மைகளும் இந்தக் கருத்தை மறுதலிக்கின்றன. தவிரவும் இந்தக் கருத்தை ஆதரிப்பவர்கள் பாசிச சித்தாந்தம் விரிக்கும் வலையில் தவிர்க்க முடியாதபடி விழுகிறார்கள், அதாவது அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்கெனவே பாசிசத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. தாங்கள் இதுவரை செய்திருப்பவை எல்லாம் முன்கூட்டியே வகுக்கப்பட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்று காட்டுவதற்குப் பாசிஸ்டுகள் முயன்று வருவதைப் பார்க்கிறோம்.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இது உண்மை அல்ல. இந்தத் தவறை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அரசியல் துறையில் நேரிடக்கூடிய பிறழ்வுகளை, பிழைபாடுகளை எதிர்த்துப் போராடுபவர்களாகிறோம். ஆதலால் இந்தத் தவறை எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும் பொருட்டு இப்பிரச்சினையை ஆழமாக ஆராய்வது அவசியம்.

இந்தத் தவறான கண்ணோட்டத்திற்கு எதிராகப் பாசிச சர்வாதிகாரம் குறித்த மெய்யான, சரியான கண்ணோட்டத்தை நாம் முன்வைக்க வேண்டும். பாசிச சர்வாதிகாரம் இன்றைய அதன் வடிவங்களை மேற்கொள்ள நேர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அகநிலை அம்சங்களையும், உள்ளார்ந்த அம்சங்களையும், பொருளாதார நிலைமையையும், அதனால் உண்டான வெகுஜன இயக்கங்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். இதை வைத்து, ஸ்தாபன ரீதியான பணிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று நாம் கூறுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. ஆனால் அதே சமயம் இந்த அம்சத்துடன் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எதார்த்த நிலைமையை புறக்கணித்தோமானால் நாம்தான் சிரமப்படுவோம். பூர்ஷுவா வர்க்கத்தைப் பொறுத்தவரையில் ஸ்தாபன ரீதியான அம்சம் என்ற முறையில் அது என்றுமே தலையிட்டு வந்திருக்கிறது.

நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால், அரசியல் சாத்தியக் கூறுகளை நாம் துல்லியமாகக் கணிக்க முடியாது. நாம் எத்தகைய செயற்பாட்டு வழியைப் பின்பற்ற விரும்புகிறோம் என்பதை வகுத்துக் கொள்ள இயலாது; மேலும் இந்த வழிதான் கட்சியின் செயற்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கும். இதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்: ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு வெகுஜன இயக்கம் எந்த முறையில் தலையிடுகிறது என்பதைப் பொருத்து சர்வாதிகாரம் வெவ்வேறு வடிவங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ரோம் நகர் அணிவகுப்பில் படையினருடன் முசோலினி.

மாட்டியோட்டி நெருக்கடியின் போது 1 வெகுஜனங்கள் தாங்கள் உண்மையில் செய்ததற்கு மாறாக வேறுவிதமாகத் தலையிட்டிருந்தார்களேயானால் நிலைமை வேறுபட்டதொரு திருப்பத்தை அடைந்திருக்கும். இந்த உண்மையை இன்றுங்கூட நாம் பார்க்கலாம். நாம் மிகவும் செயலூக்கத்துடன் தலையிடும்போது, சில குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடுமையாக எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்தை அது பாசிசத்துக்கு ஏற்படுத்துகிறது. தொழிற்சங்கக் கட்டமைப்பில் மாறுதல் செய்தல், பொது மன்னிப்பு, இளம் பாசிஸ்டுகள் பிரச்சினை, தேசிய பாசிஸ்டுக் கட்சியை மறுசீரமைத்தல், சமூக ஜனநாயகத்துடன் சமரசம் செய்துகொள்ள முயற்சித்தல் போன்றவை இப்பிரச்சினைகளில் அடங்கும்.

வெகுஜன இயக்கங்கள் சம்பந்தமாகப் பாசிசம் கைக்கொள்ளும் போக்கைப் பொறுத்தே இந்தப் பிரச்சினைகளில் அது தனது அனைத்து நிலைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த உண்மையைக் காணத் தவறுபவர்கள் தவிர்க்க முடியாதபடி பாசிசத்தின் செல்வாக்குப் பொறியில் இடறி விழுகிறார்கள். சோர்வுவாதத்துக்கு இரையாகிறார்கள். இத்தகைய சோர்வுவாதம் இத்தாலியில் குட்டி பூர்ஷுவாப் பகுதியினரிடையே மிகப் பரவலாகக் காணப்படுகிறது. நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பாசிசம் இந்தப் பாதையை மேற்கொள்ள நேர்ந்தது, பாசிசம் வேறு எந்தப் பாதையையும் மேற்கொண்டிருக்க முடியாது. அது தேர்ந்தெடுத்துள்ள பாதை தவிர்க்க முடியாதது என்ற கருத்தை இப்பகுதியினர் ஏற்று ஆதரிக்கின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இதனை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் பாசிசத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு, வளங்கள், பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நாம் காண முடியும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti)

1. கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

ரோம் நகருக்கு வெளியே வீசப்பட்டிருந்த கியாசோமோ மாட்டியோட்டி உடலை சுமந்து வரும் போலீசார்.

எனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவியிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் –  நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! மின்னிதழ்
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?

வாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

கருத்துரிமையை காலில் மிதிக்கும் போலீசு !

  • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை !
  • தமிழகத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிப்போம் !

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321.

*****

மக்களை வாழவிடு! காவிரி டெல்டாவை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!

அன்பார்ந்த தமிழக மக்களே!

ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. பரப்பளவு, பரங்கிப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரை 2,574 சதுர கி.மீ. பரப்பளவு என கடற்கரை ஓரம் இரண்டு மண்டலங்கள் ஸ்டெர்லைட் வேதாந்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை 231 சதுர கி.மீ. ஒரு மண்டலம் ஓ.என்.ஜி.சி -க்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீத்தேன் எடுக்க, ஷேல்கேஸ் எடுக்க தனித்தனியாக உரிமம் பெற வேண்டும் என்பதை மாற்றி ஒரே வகையான திறந்தவெளி உரிமத்தைப் பெறுவதன் மூலம் பல ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பனில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என பா.ஜ.க அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்ததற்காக கைது செய்யப்பட்ட விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

பூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஈத்தேன், பியூட்டேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் பொதுப்பெயர் தான் ஹைட்ரோ கார்பன். மூவாயிரம் முதல் ஏழாயிரம் மீட்டர் ஆழம் வரை நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு, பல்வேறு ரசாயனங்களைக் கலந்து, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியிலிருந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி, நிலக்கரிப் படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல்கேஸையும், வெளியே பிரித்து எடுக்கப் போகிறார்கள்.

நீரியல் விரிசல் முறை என்று பெயர். ஒரு முறை ஒரு எண்ணெய்க் கிணற்றில் ஹைட்ரோகார்பன் எடுக்க, நீரியல் விரிசல் முறையில் 12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. 400 டன் மணல் தேவை. 5 லட்சம் லிட்டர் ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் விளைநிலங்கள் பாழாகும்.

ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நீரியல் விரிசல் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடுகிறார்கள். இங்கிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு அருகில் எடுக்க எந்த நாட்டிலும் அனுமதி இல்லை. ஆந்திராவில் கோதாவரிப் படுகையில் எரிவாயு, எண்ணெய் எடுத்ததால் நிலப்பரப்பு 5 அடி அளவிற்கு தாழ்ந்து கடல் நீர் உட்புகுந்து விட்டது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா விவசாயம் அழிவது மட்டுமல்ல, கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்படும். நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு நிலம் பாலைவனமாகும். கடல் நீர் உட்புகுந்துவிடும். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள். மீன்வளம் அழிந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

படிக்க:
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

காவிரி டெல்டா படுகை அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு கனரக லாரிகள், ரசாயன தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கம், எரிவாயு எண்ணெய் ஏற்றுமதி, பெரிய துறைமுகங்கள், விமானத்தளம், ராணுவ வாகனங்கள் என தமிழகமே கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய காவிரி டெல்டா விவசாயம் என்பது நாளடைவில் அழிந்து உணவுக்காக வெளிநாடுகளில் தமிழகம் கையேந்தும் நிலை ஏற்படும்.

ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய கெமிக்கல் முதலீட்டு மண்டலம் ஆகியவற்றோடு இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படும் சாகர்மாலா திட்டத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். மேற்கே குஜராத் முதல் கிழக்கே வங்காளம் வரை கடல் மாலைபோல் உருவாக்குவது சாகர்மாலா திட்டம். பல ஆயிரம் கி.மீ. கடற்கரையில் சாலை, கடல் வழித்தடம், ரயில் வழித்தடம், ஆற்று வழித்தடம், பல ஆயிரம் கி.மீ. எண்ணெய் எரிவாயுக் குழாய்கள், தமிழகத்தில் சீர்காழி, இணையம் உட்பட நாடு முழுவதும் 6 துறைமுகங்கள். இராணுவ போர் விமானங்கள் இறங்கி செல்லவும், இராணுவ டாங்கிகள் தாராளமாக செல்லவும் பல நூறு மீட்டர் அகலமான சாலைகள் என சாகர்மாலா ஆங்கில படத்தை மிஞ்சும் பிரம்மாண்டத்தோடு வரவுள்ளது.

இவற்றால் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சுற்றுச்சூழல் மாசடைந்து பேரழிவுதான் நடக்கும். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். காவிரிப் படுகையில் உள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயுவைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்.

மேலும் கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 49 கிராமங்களில் 57,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 92,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ரசாயனத் தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளார்கள். கடலூர் முதல் கிழக்குக் கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையங்கள், துறைமுகம், உரத்தொழிற்சாலை, ஹைட்ரோ கார்பன், சாயப் பட்டறைகள், பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் என கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான திட்டங்கள்தான் அமல்படுத்தப்பட இருக்கின்றன. பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் வேலை இழந்தவர்கள்தான் அதிகம். இருக்கும் வாழ்வை இழந்தவர்கள் மிக அதிகம். சில ஆயிரம் பேர் வளர்ச்சியின் பயனை அனுபவிக்க பெரும்பான்மை மக்கள் சாக வேண்டுமா? தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது.

காவிரி டெல்டாவை நம் கண்முன்னே அழிக்க வருகிறார்கள். நாம் போராடாமல் அமைதி காக்க முடியுமா? தீர்ப்புகள், சட்டங்கள், விதிமுறைகள், சுற்றுச்சூழல், மக்களின் சுகாதாரம் என எதையும் மயிரளவும் மதிக்காதவர்கள்தான் கார்ப்பரேட் கம்பெனிகள். விவசாயம், வேலைவாய்ப்பு, இயற்கை வளங்கள் மீதான உரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்திலும் மத்திய – மாநில அரசுகளின் கொள்கை முடிவை தீர்மானிப்பதில் பெரும்பான்மை மக்களுக்கு உரிமை வேண்டும். நம்மை கேட்காமல் பாஜக பெட்ரோலிய அமைச்சர் டெல்லியில் ஸ்டெர்லைட் வேதாந்தா முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து, நமது விவசாயிகள், நமது மீனவர்களுக்கு எதிராக, நம்ம ஊரில் அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்கள் இவர்களுக்கு அடிமைகளும் அல்ல; பிழைக்க வந்த அகதிகளும் அல்ல.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். வாழத்தகுதியற்ற நிலைக்கு நிலம், நீர், காற்று மாறிவிட்டால் என்ன செய்ய முடியும்? மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கால்நடைகளுடன் அகதிகளாக ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. உணவு உற்பத்தியில் – சுயசார்பு தன்னிறைவு என்பதை புறக்கணித்து, சுற்றுச்சூழலை சீர்குலைத்து, சில ஆயிரம் பேர் மட்டுமே பயனடையும் ஹைட்ரோ கார்பன் போன்ற எதையும் வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வருவதை ஏற்க முடியாது.

கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்த்து ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசா பழங்குடியின மக்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் போராடி துரத்தி அடித்துள்ளனர். நெடுவாசல் மக்கள் மீத்தேன் திட்டத்தை விரட்டி உள்ளனர். கதிராமங்கலம் பகுதி மக்கள் போராடி பல இடங்களில் ஓ.என்.ஜி.சியின் அத்துமீறலை தடுத்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகள் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளனர். சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக, மக்கள் போலீசாரின் அடக்குமுறைகளை தன்னந்தனியாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டு போராடியதால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது தமிழகமே டெல்லிக்கு எதிராக எழுந்து நின்று உரிமையை நிலைநாட்டியது.

எதிரியை வெற்றி கொள்ள முடியுமா என்ற முன்நிபந்தனையோடு உலகில் எந்த மக்கள் போராட்டங்களும் துவங்குவதில்லை. மக்களுக்கான நியாயமான கோரிக்கைதான் போராட்டத்திற்கு தேவை. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிப்போம். மண்ணையும் மக்களையும் காக்க எந்தவித தியாகத்திற்கும் தயங்காமல் போராடினால் எத்தகைய அரசுகளையும் பணிய வைக்க முடியும்.

  • விவசாயிகள், மீனவர்கள் வாழ்வை சூறையாட வரும் ஹைட்ரோகார்பன், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், சாகர்மாலா திட்டங்களை அனுமதிக்காதே!
  • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடு!
  • பாசன வாய்க்கால்கள், ஏரி குளங்களை தூர்வார மக்கள் பங்களிப்போடு, அவர்கள் கண்காணிப்பில் திட்டங்களை அமல்படுத்து!
  • காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் போதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு உடனே ஆவண செய்!
  • உணவு உற்பத்தியில் சுயசார்பு, தன்னிறைவு என்ற அடிப்படையில் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவான புதிய விவசாய கொள்கையை உருவாக்கு!

மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இணையுங்கள்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321.
ppchennaimu@gmail.com
fb.com/ppchennaimu


நாள் : 9-6-2019

பத்திரிகைச் செய்தி

மிழக டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜுன் 12 அன்று நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அதில் மக்கள் அதிகாரம் அமைப்பும் பங்கேற்கும்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை சுமார் 5,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா (ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம்) மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு பா.ஜ.க. மோடி அரசும், அதிமுக எடப்பாடி அரசும் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அனுமதி அளித்துள்ளன. போராடுபவர்களை பல வகைகளில் அச்சுறுத்தி ஒடுக்க முயல்கின்றன.

ஏழாயிரம் அடிவரை நிலத்தடி நீரை வெளியேற்றி கோடிக்கணக்கான லிட்டர் நீரில் பல்வேறு ரசாயனங்களைக் கலந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப்பாறைகளிலிருந்து ஷேல்கேசையும் நீரியில் விரிசல் முறையில் வெளியே பிரித்து எடுக்கப்போகிறார்கள்.

இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவே பாலைவனமாகும். கடல் மீன்வளம் அழியும். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அழியும். நிலப்பகுதியில் கடல் நீர் உட்புகும். எதிர்காலத்தில் காவிரிப்படுகை மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும். இப்போது போராடி தடுத்து நிறுத்தாவிட்டால் நம் எதிர்காலத் தலைமுறையினர் மோசமான அழிவில் தள்ளப்படுவார்கள்.

இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகிற 12.6.2019 புதன் கிழமை மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவித்துள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரிப்பதுடன் அதில் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும் என கோருகிறோம்.

தோழமையுடன்
வழக்குரைஞர் இராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
9962366321

திராவிடம் தீரரை வளர்ப்பது ! ஆரியம் அழிவைத் தருவது !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 02

ந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேகச் சான்று தருகிறது. புராண இதிகாசகால மன்னர்கள் ரிஷிகளிடமும், முனிவர்களிடமும், பயபக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டனர்; தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர்; அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம்.

சரித்திரகால மன்னர்களிடம் சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும் திருவிதாங்கூருக்கு யார்  திவான்? சர்.சி. பி. ஐயர்தானே, பரோடாவிலே சர். T.V.கிருஷ்ணமாச்சாரி, மேவாரிலே சர். விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப் செக்ரடிரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர் ஒரு S.V.இராமமூர்த்தி ஐயர்தான்! நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஓர் இராஜ கோபாலாச்சாரியார்தான்! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் ஒரு சர் அல்லாடி ஐயர்தான்! ஆபி டியூபா 1807-ல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம் – கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். இதுதான் பொருத்தமான உபமானம்!

அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!

திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி, அவர்களைக் கட்டுப்படுத்தும் ”சக்தி”யை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேண்டினர் வேதியரை என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார். இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள் !

பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகாப் பாவம்’ என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? ஆபி  டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலையின் நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.

அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடனூர்ந்த மாவே!”  –     (ஐங்குறுநூறு)

”அம்மா, அவர் குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!”

”யாரடி வருவது?”

”பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரி மீதேறி வருகிறார்.”

”சரி அதிலென்ன வியப்புக் காண்கின்றாய்?”

”அந்தக் குதிரை தலையை அசைத்துக் கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!’

“அதிலென்னடி வேடிக்கை! மகா வேடிக்கை.”

”குதிரை தலையை அசைக்கும் போது கொத்தாக, இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”

“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?”

“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப் போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!”

“போடி குறும்புக்காரி!”

வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன் ! குதிரை தலையசைக்க அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்! கண்டதையும் கொண்ட கருத்தையும் தலைவிக்கு கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்துக் கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது. எடுத்துக்கட்டியதுமல்ல! ஈரோட்டுச் சரக்குமல்ல!

ஒரு காலம் இருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ , ஆரியரைப் போன்ற புத்திக் கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!

ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று! “வேதம் ஸ்மிருதி என்பவற்றுக்கு மேனாட்டார் எவ்வளவு மதிப்புத் தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரவிடக் கேளீர்!” என்று பேசினர், பூரித்தனர். ஆபி  டியூபா போல், ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர். இந்தியாவிலேயே முதன் முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்கள்தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி மிகப்பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஒரு நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலை குலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை.

படிக்க:
நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?

இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும் உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறிய போதுதான், மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும், கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்தி, கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகுமுன்னம் திராவிடர் அறிவுத்துறையிலேயே ஆர்வங் கொண்டிருந்தார்களேயல்லாமல், கண்ணுக்குப் புலனாகாததும், எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப்படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்துவராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சியாளர்களால் விளக்கப்பட்டது.

ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதேயல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப்படவில்லை . சாதாரணக் கல்வியும் பொது அறிவும் அதிகம் பரவாத திராவிட சமுதாயத்திடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற் போய்விட்டது. ஆகவேதான், ஆரியம் அழிவைத் தருவது, திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நம் இனத்தவரிடையே புகவில்லை.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

நாங்கள் எல்லோருமே இங்கே கொஞ்சகாலந்தான் இருப்போம் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 3

ரு வாரமாக இரண்டாம் வார்டில் நான்கு பேர் இருந்தார்கள். ஆனால், ஒரு நாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா கவலையில் ஆழ்ந்தவளாக இரண்டு மருத்துவமனை ஊழியர்களுடன் வந்து இன்னொரு நோயாளிக்கு இடம் கொடுப்பதற்காக அவர்கள் கொஞ்சம் நகர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தாள். ஸ்தெபான் இவானவிச்சின் கட்டில் ஜன்னலின் அருகே நகர்த்தப்பட்டது. இதனால் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். குக்கூஷ்கின், ஸ்தெபான் இவானவிச்சின் பக்கத்தில் மூலைக்கு மாற்றப்பட்டான். இவ்வாறு காலியான இடத்தில் ஒரு கட்டில் போடப்பட்டது.

இந்தச் சமயத்தில் ஐந்தாவது நோயாளி கொண்டு வரப்பட்டான்.

அவன் மிகவும் கனமான ஆள் போலும். ஏனெனில் ஊழியர்களின் அடிவைப்புக்கு இசைய வெகுவாக வளைந்து தாழ்ந்தவாறு ஸ்டிரெச்சர் கிரீச்சிட்டது. தலையணை மீது தன் வசமற்ற நிலையில் புரண்டது மழுங்கச் சிரைக்கப்பட்ட உருண்டைத் தலை. மெழுகு பூசப்பட்டது போன்று மஞ்சள் பாரித்த உப்பிய முகம் உயிரற்றுக் காட்சி தந்தது. பருத்த வெளிறிய உதடுகளில் வேதனை உறைந்து நின்றது.

புதியவன் உணர்விழந்து இருந்ததுபோலத் தோன்றியது. ஆனால், ஸ்டிரெச்சர் தரையில் வைக்கப்பட்டதுமே நோயாளி கண்களைத் திறந்தான். முழங்கைகளை ஊன்றி நிமிர்ந்து வார்டை ஆவலுடன் நோட்டமிட்டான். ஸ்தெபான் இவானவிச்சை நோக்கி எதற்காகவோ கண்சிமிட்டினான் – ‘வாழ்க்கை எப்படி, மோசமில்லையே’ என்று கேட்பது போல. பின்பு கட்டைக் குரலில் இறுமினான். அவனது கனத்த உடலில் பலத்த அடிபட்டிருந்தது, அதனால் அவனுக்குக் கொடிய வலி உண்டாயிற்று என்பது தெரிந்தது. ஊதிப்போயிருந்த இந்தப் பருத்த மனிதனை முதல் பார்வையிலிருந்தே மெரேஸ்யெவுக்கு எதனாலோ பிடிக்கவில்லை. இரண்டு ஊழியர்களும் மருத்துவத்தாதிகளும் சேர்ந்து முயன்று மிகுந்து சிரமத்துடன் அவனைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தியதை மெரேஸ்யேவ் பகைமையுடன் கவனித்தான். புதியவனின் அடிமரம் போன்ற காலை ஊழியர்கள் எக்கச்சக்கமாகப் புரட்டியபோது அவனது முகம் திடீரென்று வெளிறியதையும் குப்பென்று வியர்த்துவிட்டதையும் வெளிறிய உதடுகள் வேதனையுடன் சுளித்ததையும் அலெக்ஸேய் கண்டான். ஆயினும் புதியவன் பற்களை நெருநெருக்க மட்டுமே செய்தான்.

கட்டிலில் கிடத்தப்பட்டதும் அவன் கம்பளி அடித் துணியின் ஓரத்தைக் கம்பளி விளிம்புக்கு வெளியே ஒழுங்காக இழுத்துவிட்டான், தன்னுடன் எடுத்துவரப்பட்ட புத்தகங்களையும் குறிப்பு நோட்டுக்களையும் சிறு மேஜை மேல் அடுக்கி வைத்தான், மேஜையின் அடித்தட்டில் பற்பசை, ஒடிகொலொன், சவர சாதனங்கள், சோப்புப் பெட்டி முதலியவற்றைக் கச்சிதமாக வைத்தான். பின்பு தன்னுடைய இந்த வேலைகளை நிர்வாக நோக்குடன் பார்வையிட்டான். அக்கணமே தான் வசதியாக ஏற்பாடு செய்துகொண்டதாக உணர்ந்தவன்போல, அதிர்ந்து ஒலிக்கும் கட்டைக்குரலில் முழங்கினான்:

“எங்கே, அறிமுகம் செய்து கொள்வோம். ரெஜிமெண்டுக் கமிஸார் ஸெம்யோன் வரபியோவ் நான். அமைதியான ஆள், புகை குடிக்காதவன். உங்கள் குழுவில் என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

வார்டில் இருந்த மற்றவர்களை நிதானமாக, ஆர்வத்துடன் பார்வையிட்டான். அவனுடைய குறுகிய, பொன்னிறமான, மிகவும் உன்னிப்புள்ள விழிகள் தன்னைக் கூர்ந்து ஆராய்வதை மெரேஸ்யேவ் கண்டு கொண்டான்.

“நான் உங்களுடன் கொஞ்ச காலமே இருப்பேன். யாருக்கு எப்படியோ தெரியாது, ஆனால், எனக்கு இங்கே படுத்துக்கிடக்க நேரம் இல்லை. என் குதிரைப்படையினர் என்னை எதிர்பார்த்திருக்கிறார்கள். இதோ பனிக்கட்டி அகன்று விடும், பாதைகள் வளரும் – அவ்வளவுதான், நான் புறப்பட்டுவிடுவேன்.”

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?

“நாங்கள் எல்லோருமே இங்கே கொஞ்சகாலந்தான் இருப்போம். பருவநிலை சீர்பட்டதுமே நாங்களும் புறப்பட்டு விடுவோம்… ஐம்பதாவது வார்டுக்கு, கால்களை முன்னே நீட்டியவாறு” என்று சுவர்புறம் ஒரேடியாகத் திரும்பிக்கொண்டு பதில் சொன்னான் குக்கூஷ்கின்.

மருத்துவமனையில் ஐம்பதாவது வார்டு இருக்கவில்லை. நோயாளிகள் சவ அறையைத் தங்களுக்குள் அப்படி அழைத்தார்கள். கமிஸாருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்க முடியாது எனினும் இந்தக் கிண்டலின் ஏக்கம் நிறைந்த அர்த்தத்தை அவர் சட்டெனப் புரிந்துகொண்டார். இதற்காக அவர் வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை. குக்கூஷ்கினை வியப்புடன் நோக்கி, “உங்களுக்கு என்ன வயது, அருமை நண்பரே? அட தாடியே, தாடியே! வேளைக்கு முன்பே ஏனோ முதுமை அடைந்துவிட்டீர்கள் நீங்கள்” என்று மட்டுமே கூறினார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை