முறைசாரா தொழிலாளர்களுக்கான ஒரு ஓய்வூதிய திட்டத்தை தன்னுடைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆரவாரமாக மோடி அரசு அறிவித்துள்ளது. 10 கோடி பயனாளிகளுடன் உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய திட்டமாக ஏற்கனவே இது வியந்தோதப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் ஆண்டிலேயே மோடி அரசால் ஆரவாரமாக தொடங்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களின் தலைவிதியைப் புரிந்து கொள்வது நல்லது. இதே போன்ற ஆரவாரத்துடன் இதே வகை தொழிலாளர்களுக்காக ”ஸ்ரீமேவ் ஜெயதே” என்ற திட்டம் அன்றும் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலாளர்களுக்கு அடையாள எண் அட்டைகள் (Unorganised Workers Identification Number cards) வழங்கப்படுவதாக இருந்தன. “சுகாதார காப்பீடு மற்றும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதற்காக சமூக பாதுகாப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும்” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2015 பிப்ரவரியில் மின்ட் வணிக செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. பாஜக அமைச்சர்களும் மாநாடுகள் பல நடத்தி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை குப்பைகளாக்கினர்.
புதிய திட்டத்திற்கும் இதே தலைவிதிதான் நேரும். இதே துறையை மையப்படுத்தி கடந்த 2015, மே 9 அன்று “அடல் ஓய்வூதிய திட்டம்” (Atal Pension Yojna) இதே போன்ற ஆரவாரத்துடனும் அம்சங்களுடனும் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டம் தொடக்கம் முதலே ஆட்டம் கண்டது. 2015 முடிவிற்குள் தோராயமாக 2.2 கோடி மக்களை சென்று அடைவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆயினும் குறித்த நாளுக்குள் 6.5 % இலக்கு மட்டுமே எட்டப்பட்டது.
தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் அதில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1.1 கோடியாக இருக்கிறது. இது ஒரு கணிசமான எண்ணிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் 41.6 கோடி முறைசாரா தொழிலார்களின் எண்ணிக்கையை (2011-12-ம் ஆண்டிற்கான தேசிய மாதிரி சர்வே அறிக்கையின் படி) ஒப்பிடும் போது இது அற்பசொற்பமான எண்ணிக்கையே. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியிலான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கு புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கணக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் தோற்றுப்போன முந்தைய திட்டத்தின் அதே அம்சங்களை ஏறக்குறைய கொண்டுள்ளது.
நம்ப முடியாத இலக்குகள்:
இரண்டு இன்றியமையாத நடைமுறை அம்சங்களில் சமீப வரவு மோடியின் புதிய இந்தியாவில் விமர்சிக்கப்படுகிறது. முதலாவது, ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு என்பது தொழிலாளர்களின் வேலைவாய்ப்புடன் தொடர்புடையதாக இல்லை. மாறாக தன்னார்வ பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் இத்திட்டத்தை வரவேற்கவில்லை. 60 வயது கடந்த பிறகே பூத்து குலுங்க போவதாய் சொல்லிக்கொள்ளப்படும் இந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை நுகர்வதற்கு பெரும்பான்மையான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்.
நாடுய் முழுவதும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலைமை மோசமான நிலையிலேயே உள்ளது
இந்தியா உட்பட உலகெங்கிலும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வேலை வாய்ப்புடன் தொடர்புடயதாகவே இருக்கின்றன. சமூக பாதுகாப்பிற்காக தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் அதே நேரத்தில் முதலாளிகளிடமிருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. எனினும் புதிய திட்டத்தின்படி தொழிலாளர்கள் மட்டுமே பங்களிப்பை செலுத்த வேண்டும். தொடர்ந்து 20-30 ஆண்டுகள் பங்களிப்பு செலுத்த சொல்வது முறைசாரா தொழிலாளர்களால் இயலாத காரியம்.
20-30 ஆண்டுகளில் கிடைப்பதாய் சொல்லப்படும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர்கள் தங்கள் பாடுபட்டு சேர்த்த சொற்ப காசியிலிருந்து பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எதார்த்தமற்றது. சான்றாக, இன்றும் கூட தற்காலிக தொழிலாளர்களிடமிருந்து அவர்களுக்கு தெரியாமலேயே வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை வைத்து இதை புரிந்து கொள்ளலாம். உரிமை கோருபவர்கள் இல்லை என்பதால் தொழிலாளர்களின் சேமிப்பை சுரண்டி தொழிலாளர் வைப்பு நிதி மேலாண்மை நிறுவனங்கள் கொழுக்கின்றன.
இதற்கு மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இதே போல பங்களிப்பு சார்ந்த ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியிருக்கின்றன. ஆனால் அவை செயலிழந்து விட்டதால் தொழிலாளர்களின் பங்களிப்பை திரும்ப கேட்பது என்பது ஒருபோதும் நடவாத காரியம்.
60 வயதுக்கு பிறகு ஓய்வூதிய திட்டம் பூத்து பலன்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் 20-30 ஆண்டுகளாக பங்களிப்பை செலுத்தும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அறுவடைக்கு முன்பே மரணித்து விடுகின்றனர். தூசியும் தும்மலுமான உண்மையான இந்தியாவும் லூடென்ஸ் டெல்லியும் (இந்திய பிரதமரின் அரண்மனை வீற்றிருக்கும் இடம்) எப்படி பிரிந்து கிடக்கின்றன என்பதற்கு இது ஒன்றே சாட்சி.
ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு வேண்டுமென்றால் 60 வயதென்பது உவப்பாக இருக்கலாம் ஆனால் கடும் உடலுழைப்பை செலுத்தும் முறைசாரா தொழிலாளர்களுக்கு முற்றிலும் இது எதார்த்தமற்றது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது 68.8 ஆண்டுகள் அதுவே கிராமப்புறங்களில் 65 ஆண்டுகள். எப்படி ஆயினும் இந்த சராசரி ஆயுட்கால புள்ளி விவரங்கள் சமூக பொருளாதார அடிப்படையில் மாறுபடுகின்றன. இந்திய முறைசாரா தொழிற்துறைக்கு அதிகப்படியான பங்களிப்பு செலுத்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது நடுத்தர ஆதிக்கசாதி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலத்தை விட மிகவும் குறைவு.
மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த S.K மொஹந்தி மற்றும் F.ராம் இருவரும் சேர்ந்து “இந்தியாவின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரிவினரின் சராசரி ஆயுட்காலம் (Life Expectancy at Birth Among Social And Economic Groups in India)” என்ற தலைப்பில் மக்களைத்தொகை ஆய்வொன்றை வெளியிட்டனர். அதன்படி 2006 ஆண்டில், பங்குடியினரின் சராசரி ஆயுட்காலம் 60.3 ஆண்டுகளாகவும் அதுவே அவர்களில் ஏழைகளின் ஆயுட்காலம் மிகக்குறைவாக 56.9 ஆண்டுகளாகவும் இருந்தன. முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களே இந்தியாவின் ஏழைகள் என்று கருத முடியும். தலித்துக்களின் சராசரி ஆயுட்காலம் 63 ஆண்டுகள் என்று அது கூறுகிறது.
சராசரி ஆயுட்காலம் கடந்த பத்தாண்டுகளில் சற்று அதிகரித்திருப்பினும் இவ்விரண்டு பிரிவிலும் உள்ள ஆண்களின் ஆயுட்காலம் தேசிய சராசரியை விட குறைவாகவே இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களை பல்வேறு வகைகளில் மாற்றலாம். ஒன்று மட்டும் தெளிவு. முறைசாரா துறையின் பெரும்பாலான தொழிலாளர்கள் பலன்களை பெறுவதற்கு 60 வயது வரை உயிரோடு இருக்க மாட்டார்கள்.
உண்மையில், கட்டுமானம், செங்கல் சூளைகள், குவாரிகள் உள்ளிட்ட உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடும் முறைசாரா தொழிலாளர்களின் ஆயுட்காலம் என்பது அதனினும் குறைவு. இது போன்ற கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதற்கு அதிகபட்சம் வயது 40 என்பதை சற்று மேம்போக்காக பார்த்தாலே தெரியும். 40 வயதை கடந்த பிறகு அந்த வேலைகள் கிடைக்காது. முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என்பது 55 வயது அல்லது அதற்கு முன்னதாக தொடங்க வேண்டும்.
ஆனால் முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க வேறு எந்த வழியும் இல்லையா? சில நல்ல திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மகாராஷ்டிராவின் மாதாடி மற்றும் ஏனைய உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம், 1969 (The Maharashtra Mathadi and Other Manual Workers Act 1969) அத்தகைய ஒன்று. இன்று தொழிலாளர்கள் மாதாடி வாரியங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டாலும், மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாதாடி வாரியங்கள் இலட்சக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை அளிக்கின்றன.
இச்சட்டமானது, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை முறைப்படுத்துவதற்கும், தொழிலாளர்-முதலாளி உறவை ஏற்படுத்துவதன் மூலம் சமூக பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கிறது. வேலைவாய்ப்பை முறைப்படுத்துவது, முதலாளி – தொழிலாளி உறவை ஏற்படுத்துவது மற்றும் அதனுடன் சமூக பாதுகாப்பை இணைப்பது – இம்மூன்றும் எந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் அடிப்படையானது. இல்லையெனில் வெறும் ஜூம்லாக்கள் மட்டுமே மிஞ்சும்.
நன்றி : தி வயர்
கட்டுரையாளர் : சுதிர் கட்டியார்
தமிழாக்கம் : சுகுமார்
“அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால்…” (ONE FEARLESS STEP AGAINST THE UNDECLARED EMERGENCY…) என்ற தலைப்பின் கீழ்,
“பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்”
“ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவை கைது செய்யாதே”
“பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!” – ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC) சார்பில் மதுரையில் பிப்.8,2019 அன்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டமும், கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரா. கிருஷ்ணசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் முரளி தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையின் தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியும், வழக்கறிஞரும், பியூசிஎல் அமைப்பின் தேசியச் செயலருமான சுதா பரத்வாஜின் மகளின் கடிதத்தை படித்துக் காண்பித்தார். மேலும் அவர் பேசுகையில், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கைது, ஊபா சட்டத்தில் சிறை ஆகியவை எல்லாம் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. இந்தியா முழுவதும் போராடுகிறார்கள், நாமும் நமது குரலை எழுப்பினால்தான் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவையாவது காப்பாற்ற முடியும். எனவே தொடர்ந்து போராடுவோம் என்றார்.
வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
1 of 9
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
அடுத்து உரையாற்றிய எழுத்தாளர் லிபி ஆரண்யா, மோடி ஆட்சியையும், ஹிட்லர் ஆட்சியையும் ஒப்பிட்டு விளக்கினார். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே அவர்களின் சமூகப் பங்களிப்பு, குறிப்பாக ஏகாதிபத்தியம் குறித்தும், தலித், கம்யூனிச இயக்கங்களின் நிறை – குறைகள், இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்? ஆகிய அனைத்து குறித்தும் தெளிவான நிலைப்பாட்டை ஆனந்த் முன்வைத்துள்ளார். ஆனந்தின் இந்த அறிவுப்பூர்வமான பங்களிப்பு அரசை அச்சப்பட வைக்கிறது. அதேபோல் மக்களை ஆர். எஸ். எஸ். உணர்வுத்தளத்தில் இருந்து திரட்டுகிறது. முற்போக்கு இயக்கங்கள் அறிவுத் தளத்தில் இருந்து திரட்டுகிறோம். மக்களை அவர்கள் நன்கு உள்வாங்கியுள்ளார்கள். அதையும் நாம் புரிந்து செயலாற்ற வேண்டும். மத அடிப்படைவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும், அனைத்து தலித், கம்யூனிச, பெரியாரிய இயக்கங்களும் இணைய வேண்டும்” என்றார்.
பேச்சாளர்கள்
1 of 6
பேராசிரியர் கிருஷ்ணசாமி
எழுத்தாளர் லிபி ஆரண்யா
பேராசிரியர் முரளி
கலந்து கொண்டவர்கள்
பேராசிரியர் சீனிவாசன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
இறுதியாக உரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சி நாதன், இடதுசாரி அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்வதற்கு மிகப்பெரிய சதிப் பின்னணி உண்டு. கடந்த அக்டோபர் 2015-ல் ராய்ப்பூரில் கூடிய ஆர். எஸ். எஸ் உள்ளிட்ட 35 இந்துத்துவா அமைப்புகள், தேசியம் – எதிர் – தேச விரோதம் என்ற கருத்தாக்கத்தை முன் வைத்து மோடி – பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்க முடிவெடுத்தன. 2015-ல் டெல்லி தேர்தலில் தோற்றபின் எடுக்கப்பட்ட முடிவு இது.
இந்தக் கருத்தாக்கம் முதலில் பிப்ரவரி 2016-ல் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் அமல்படுத்தப்பட்டது. மாணவர் போராட்டத்தில் ஏபிவிபி அமைப்பின் மாணவர்களை வைத்து பாகிஸ்தான்,காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக கோசம் எழுப்ப வைத்து கண்ணையா குமார் உள்ளிட்டவர்கள் தேச விரோதிகள் எனப் பிரச்சாரம் செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகாவில் திப்பு சுல்தான் விழாவில் கலவரம் செய்தனர். பசுப் பாதுகாப்பு என கொலைகள் செய்தனர். இந்துத்துவத்தை உறுதியாய் எதிர்த்தவர்களை சனாதன் சன்ஸ்தா மூலம் கொலை செய்தனர்.
இவர்களின் நோக்கம் நாம் மோடி அரசின் தோல்விகள் குறித்து பேசக்கூடாது என்பதோடு, மக்களுக்கு ஆதரவான அறிவுத்துறையினர் இருக்கவே கூடாது என்பதும்தான். ஹிட்லரும் இதைத்தான் செய்தான். தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் செய்து நம்மை களைப்படையச் செய்யும் உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். நாம் சோர்ந்து விடக்கூடாது. அரசியலமைப்பு நிறுவனங்களே மோடியிடம் அஞ்சுகின்றன. பெரும்பான்மை சமூக நிலைப்பாடுகளுக்கு அரசியலமைப்பு இணங்கிச் செல்ல வேண்டும் என மிரட்டுகிறார்கள். அதுதான் சபரிமலை வன்முறை. எனவே இதனை எதிர்கொள்ள மக்கள், சிவில் சமூகப் போராட்டமே தீர்வு. நாம் மோடி-ஆர். எஸ். எஸ் கும்பலின் பயங்கரவாதத்தையும், அவர்கள்தான் மதரீதியாக நாட்டைப் பிளக்கும் பிரிவினைவாதிகள் என்பதையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்வினைக்குத் தள்ள வேண்டும்” என்றார்.
நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் சீனிவாசன், பேராசிரியர் ஆனந்த் கைதுக்கு பல்கலை, கல்லூரிப் பேராசிரியர்கள் குரல் எழுப்பாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி நன்றி சொன்னார்.
தினேஷ், ஒரு விவசாயி ஆனது ஒரு விபத்தாக நடந்தது. திருத்தணி அரசு கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் படித்து முடித்ததும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்தார். ஒரு போலீசு வழக்கு காரணமாக அவரால் வழக்கறிஞர் ஆக முடியவில்லை என்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் போதையில் தன்னை தாக்கியதாகவும் வேறுவழியில்லாமல் அதை தடுக்கும்பொருட்டு திரும்பித் தாக்கியதாகவும் சொல்கிறார் தினேஷ்.
தனது குடும்பத்துக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம்தான் இவருடைய வருமான ஆதாரம்.
மாதிரி படம்
தனக்கு அருகில் இருந்த ஆனந்தன் உள்ளிட்ட பலர் கத்திரிக்காய் விளைவித்து கிலோ ரூ. 30க்கு விற்பதைப் பார்த்தார் தினேஷ். எண்ணைய் கத்திரிக்காய், கொத்சு, பொடி கத்திரிக்காய், கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு என குறைந்தபட்சம் 15 பிரபலமான உணவு பதார்த்தங்கள் கத்திரிக்காயை வைத்து தயாரிக்கப்படுகின்றன என்பதால் தமிழ்நாட்டில் கத்திரிக்காய்க்கு எப்போதுமே தேவை இருக்கும் என்கிற முடிவில் தனது நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டார் தினேஷ்.
இதற்காக தினேஷ் ரூ. 40 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால், கத்திரிக்காய்களின் விளைச்சல் ஜீரோ.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கத்திரிக்காய் விளைச்சலை முற்றிலுமாக பாதிக்கும் ஆறு நோய்களை இனம் கண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழக இணையதளம் இந்த நோய்களைத் தாங்கக்கூடிய சில கத்திரிக்காய் வகைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால், தினேஷுக்கு இந்த நோய்கள் குறித்தோ அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்றோ எதுவும் தெரியவில்லை.
“நோய் வந்தவுடன், ஒரு செடியை பிடிங்கிக் கொண்டுபோய் பூச்சிமருந்து விற்கும் கடைக்காரரிடம் காட்டினேன். அவர் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்தார். இந்தப் பகுதியில் இருந்த 10 விவசாயிகளில் 2 பேர் மட்டுமே இந்த நோயை ஒழித்து, தங்களுடைய விளைச்சலை காப்பாற்றினார்கள். எட்டு பேரால் முடியவில்லை” என்கிறார் தினேஷ்.
மாதிரி படம்
தினேஷுக்கு அந்த 10 விவசாயிகளும் எந்த பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தார்கள் என்பதும் தெரியவில்லை. அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயரும் அவருக்கு நினைவில்லை.
அதன் பிறகு, அந்த இளம் விவசாயி வெண்டைக்காய் விளைவித்தார். ஆனால், அவை நல்ல விலைக்கு விற்கப்படவில்லை. அடுத்து, அவருக்கு பண்ணை மீன் வளர்ப்பு செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டது. விரால், கட்லா, ரோஹு போன்ற மீன் வகைகளை வளர்த்து இடைத்தரகர்களிடம் கிலோ ரூ. 80க்கு விற்க முடியும். இந்த முறை பண்ணைக் குட்டைகள் உருவாக்க ரூ. 50 ஆயிரத்தை முதலீடு செய்தார்.
மீன்கள் வளர்ந்தன; சிறப்பாக வளர்ந்தன. ஒரு நாள் அத்தனையும் காணாமல் போயின.
“இங்கே திருட்டு அதிகம். மக்கள் திருட்டுத்தனமாக உள்ளே போய் மீன்களை பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். குட்டைகளை எல்லா நேரத்திலும் பாதுகாக்க முடிவதில்லை. ஒருமுறை காவலரை நியமித்து பார்த்தேன். ஆனால், அவரும் திருடர்களுடன் சேர்ந்து மீன்களை பிடித்துக்கொண்டு ஓடிவிட்டார்” என்கிறார்.
உள்ளூர் வட்டிக்காரர்களிடம் ரூ. 4 லட்சம் கடனை தற்போது சுமந்து கொண்டிருக்கிறார் தினேஷ். வட்டியாக மட்டும் ரூ. 12 ஆயிரத்தை மாதந்தோறும் அவர் கட்ட வேண்டும். ஒரு நிலையான, விவசாயம் அல்லாத வருவாய் கிடைத்தால் அவருக்கு வாழ்க்கை எளிதாக இருக்கும். இப்போது தனது மனைவி கல்பனாவை நம்பியிருக்கிறார். கல்பனா ஒரு ஸ்டேஷனரி கடையுடன் இணைந்த போட்டோ ஸ்டுடியோ-வில் பணியாற்றுகிறார்.
அந்தக் கடை நோக்கிச் செல்லும் சாலை, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரியைக் கடந்து போகிறது. அது இந்த டவுனிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. வழியில் ஒரு பெரிய திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது. திருமண இணையரின் இடதுபுறம், நடிகர் விஜய் முரசு கொட்டுகிறார். விஜய்யின் அப்பாவும் அந்த பேனரில் இடம்பெற்றிருக்கிறார். பேனரின் வலதுபுறம் இரண்டு பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பேனர்களை வைத்தவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியதற்காக கொண்டாடப்படும், இந்தியாவின் அரசியலமைப்பை வடிவமைத்த பீமாராவ் அம்பேத்கரின் படங்களும் உள்ளன. சந்தையில் அம்பேத்கரின் சிலைகள் இருப்பதை பல இடங்களில் காண முடிந்தது.
சந்தைப்பகுதியில் கல்பனாவின் கடை, பேருந்து நிலையத்துக்கு அடுத்து இருந்தது. போட்டோ ஆல்பங்களை உருவாக்குவது, ஸ்டிக்கர் பொட்டு, வளையல், பேனா மற்றும் பென்சில்களை விற்பதுதான் அவருக்கான பணி!
சில ஆண்டுகளுக்கு முன் விவசாயப் பணியிலிருந்து தொழிற்சாலை பணிக்கு போன பின், வாழ்க்கை நன்றாகவே இருந்தது. சென்னையிலிருந்து 200கி.மீ தள்ளியிருக்கும் அரியலூர் மாவட்டத்தில் அவர் வளர்ந்தார். அவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர். அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. விவசாய கூலி வேலைக்கு அவர் போனார். அவருடைய ஐந்து சகோதரிகளும் முந்திரி தொழிற்சாலையில் முந்திரி ஓடுகளை உடைக்கும் பணிக்கும், நல்ல முந்திரிகளை பொறுக்கி எடுக்கும் பணிக்கும் போனார்கள்.
கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளையடித்துச் சென்ற நோக்கியா நிறுவனம். (கோப்புப் படம்)
ஒரு நாள், நோக்கியா நிறுவனம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருப்பதாக தொலைக்காட்சி விளம்பரத்தை பார்த்தார் கல்பனா. அவர் விண்ணப்பித்தார். எட்டாயிரம் நிரந்தர ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு ஆலையாக இருந்த நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியும் கிடைத்தது. அப்போது இந்த நிறுவனம் மாதத்துக்கு 15 மில்லியன் போன்களை தயாரித்தது. ஆனால், தமிழக அரசுடன் ரூ. 17,658 கோடி ரூபாய் அளவிலான இரண்டு வரி முறைகேடுகளில் ஈடுபட்ட காரணத்தால், இந்த நிறுவனம் ஆலையை மூடிவிட்டு வியட்நாமுக்குச் சென்றுவிட்டது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.
2009-ம் ஆண்டு கல்பனா இந்நிறுவனத்தில் சேர்ந்தபோது ரூ. 3500 மாத சம்பளம் பெற்றார். 2014-ம் ஆண்டு வேலையை இழக்கும்போது அவர் வாங்கிய சம்பளம் 16,500 ரூபாய்.
கல்பனா தற்போது பணியாற்றும் கடை குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு எடுக்கப்பட்ட முயற்சி. அவர் போதுமானதை இதுவரை சம்பாதிக்கவில்லை. “நான் போட்ட பணத்தை திரும்ப எடுக்கிறேன். விற்கும்போது கிடைக்கும் பணம், மீண்டும் போட்டு, வளையல்களை வாங்குவதற்கே முதலீடு செய்கிறேன்” என்கிறார் கல்பனா.
குறிப்பு : பத்திரிகையாளர் கவுதம் தாஸ் எழுதிய Jobonomics: India’s Employment Crisis and What the Future Holds என்ற நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம், விவசாயத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது போன்ற பசுமைவிகடன் வகையறா மினுமினுப்புப் படங்களை நம்பி, விவசாயம் பணம் கொழிக்கும் தொழில் போலவும், விவரம் தெரியாத விவசாயிகள் மட்டுமே தோல்வி அடைவது போலவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு தினேஷின் வாழ்க்கை ஒரு முன்னெச்சரிக்கை
சென்னையில் அமைந்திருக்கும் கல்லூரி ஒன்றில் கடந்த வாரம் படித்து முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவர் கலந்து கொண்ட விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி சில ஆண்டுகள் நிரப்பப்படாமல் இருந்ததால் இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான மாணவர்களுக்கு தேர்ச்சிப் பட்டம் ஒரே நாளில் வழங்கப்பட்டது. மாணவப் பட்டதாரிகளும், பெற்றோர்களுமாக சுமார் மூன்றாயிரம் பேர் திரண்டிருந்தனர். இது பெரிய சந்தடியை கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தியது. பட்டம் பெறும் மாணவர்கள், முக்கிய விருந்தினர் மற்றும் முக்கிய நிர்வாகத்துறையினர் ஆகியோர் மேலங்கி அணிந்து வித்தியாசமாக தோன்றினர். மாணவர்கள் தங்கள் தோற்றப் பொலிவில் உற்சாகம் கொண்டு கைகளிலிருந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் ஃபோட்டோ மற்றும் செல்ஃபிக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவின் தீவிர ஆச்சாரம் அவர்களின் உற்சாகத்துக்கு தடைபோட்டது. துணைவேந்தரின் பட்டமளிப்பு செய்திக்கு பின்னர் மாணவர்கள் பட்டங்களை பெறத் தொடங்கினர். பட்டங்களை பெறும் போது கரவொலிகள் எழுந்தன. துறை வாரியாக பட்டங்களை பெற்ற மாணவர்கள் மறுபடியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர மறுத்தனர். தங்கள் கைகளில் இருந்த அலைபேசிகள் மூலம் பல்வேறு சூழல் பின்னணியில் ஃபோட்டோக்களை தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் எடுக்கத் தொடங்கினர். ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட மறுத்தனர். அனைவருக்கும் பட்டங்களை வழங்கிய பின்னர் உறுதிமொழி ஏற்பின் போது மிகக்குறைந்த எண்ணிகையிலான மாணவர்களே அரங்கில் இருந்தனர். இது நிர்வாகத் தரப்புக்கு மொத்த நிகழ்ச்சி குறித்து ஒரு தோல்வி மனப்பான்மையை வழங்கியது. தமது சங்கடத்தை ஆத்திரமாக ஆசிரியர்கள் மீது காட்டத் தொடங்கியது.
பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு ஆசிரியர்களை வீட்டிற்கு செல்ல அனுமதி மறுத்து கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். என்ன தவறு? என்பதை விவாதிப்பது போல் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் விரைவிலேயே கல்லூரியின் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக தொடங்கினர். குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் இரண்டாண்டு நிகழ்ச்சியை ஒரே நாளில் நடத்தியதால் ஏற்பட்ட கூட்ட நெருக்கடி என்று காரணம் கூறியதை கல்லூரி முதல்வர் ஏற்கவில்லை. மாணவர்களை கட்டுப்படுத்தும் கடமையை ஆசிரியர்கள் ஒழுங்காக செய்யவில்லை என்ற தவறை கண்டுபிடித்து வெளியிட்டார். பட்டமளிப்பு நாளின் புனிதம் கெட்டு விட்டதாக துக்கித்தார். இத்தனைக்கும் ஒரு நாள் முன்பாகவே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பட்டம் பெறப்போகும் அனைவரும் அழைக்கப்பட்டு அடுத்த நாள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.
உண்மையில் எங்கு தவறு நடந்தது?
இந்த கேள்விக்கான பதிலை எங்கிருந்து பெறுவது என்பது முக்கியமானது. படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சமூகத்தில் என்னவாக இருக்கிறது? வேலைவாய்ப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்திருப்பதாக தேசிய மாதிரி அளவெடுப்பின் (NSSO) மிகச் சமீபத்திய புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. 45 வருட காலத்தில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும், 15 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களின் வேலை வாய்ப்புகள் மிகக் குறைந்துள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நகர்ப்புற பெண்கள் வேலையின்மை 27 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. வேலையின்மை அதிகரித்திருப்பதோடு தொழிலாளர்கள் வேலை இழப்பதும் கூடியுள்ளது. பக்கோடா விற்பதை பெரிய தொழில் வாய்ப்பாக பிரதமரே முன்மொழியக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். இவையெல்லாம் தாம் பெற்ற கல்வி மற்றும் சான்றிதழ்களின் பயன்பாடு சார்ந்த மதிப்பு குறைந்ததற்கு முக்கியப் புறநிலை காரணமாக விளங்குகிறது.
தனியார் கல்லூரிகள் கல்விக் கடைகளாக கடந்த சில பத்தாண்டுகளில் மாயிருப்பது யாவரும் அறிந்த ரகசியம். கடையில் பொருள் வாங்கிய நபரிடம் கடைக்காரர் கட்டுப்பாடுகள் விதிப்பதை வாடிக்கையாளர் ஏற்பாரா? கல்விக் கட்டணம் என்ற வகையில் மட்டுமல்ல; தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் மற்றும் நிகழ்ச்சிக் கட்டணம் என அனைத்தையும் வசூலித்து விட்டு மாணவர்களிடம் வேறு வகையான ஒரு அணுகுமுறையை எதிர்பார்க்க முடியுமா?
பல கல்லூரிகள் நவீனச் சிறைச்சாலைகள் போன்று செயல்படுகின்றன. பனோப்டிக்கன் சிறை விடுதிகள் 18-ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஒன்று. அதனை வடிவமைத்தவர் ஜெரேமி பெந்தாம் என்ற இங்கிலாந்து சிந்தனையாளர். அதன்படி வட்டவடிவில் சிறை கட்டப்பட்டு அதன் நடுவில் உயரமான தூண் ஒன்று கட்டப்பட்டு இருக்கும். சிறைவாசிகளை கண்காணிப்பதற்கான ஏற்பாடு அது. அதில் ஒருவர் அமர்ந்து கொண்டு அனைவரையும் கண்காணிக்கும் வகையிலானது. சிறைக் காவலர்கள் என்று பலர் தேவையில்லை. அந்த ஒருவரும் கூட எப்போதும் இருக்கத் தேவையில்லை. சிறைவாசிகளுக்கு தாம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதான அச்சத்தை அந்த தூண் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
இன்று கல்வி நிறுவனங்களில் அந்த வேலையை கண்காணிப்பு கேமராக்கள் செய்கின்றன. உடனடி நடவடிக்கைகள் அவற்றை கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதான அச்சம் சுதந்திரமாக கற்பதற்குரிய மனதை கட்டுப்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது.
பனோப்டிக்கன் சிறை
மாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில்தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும். ஆனால் இந்த கண்காணிப்புகள் சிறைபட்டிருக்கும் அனுபவத்தை வழங்குகிறது. அவர்களின் சிந்தனையில் விலங்கை மாட்டியிருக்கிறது. மாணவர்கள் பற்றிய எல்லா விபரங்களும் சேகரிக்கப்பட்டு தாமதமாக வருவது, விடுப்பு எடுப்பது, தேர்வில் தோற்பது ஆகியவை கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன.
மாணவ-மாணவியர் ஒன்றாக சுற்றுவது, பேருந்து, ரயில் நிலையங்களில் காத்திருப்பது ஆகியவை சுடுசொற்களால் விமர்சிக்கப்படுகின்றன. ஆசிரியச் செயல்பாடு என்பது நிழல் போலீஸ் தன்மைக்கு மாறியுள்ளது. எளிதில் கையாளத்தக்க பிண்டங்களாக மாணவர்கள் மாறுவதுதான் சிறந்த ஒழுக்கமாக கருதப்படுகிறது. எனவே இதற்கெதிரான கலக சிந்தனை என்பது மாணவப்பருவத்தில் மிக இயல்பாக எழும் ஒன்று.
மாணவர்களின் இந்த புழுக்கத்தை தணிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தவும் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் மென்போர்ன் தன்மை கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகின்றன. காதல், பெண்கள், ஆண் – பெண் உறவு சார்ந்த புரிதலற்ற வேட்கைகள் இதன் மூலம் தூண்டப்படுகின்றன. ஒரு பக்கம் கடுமையான கட்டுப்பாடுகள் மறுபுறம் கேளிக்கை, சினிமா நிகழ்ச்சிகள் என்று புதிரீடான மனப் பதநிலைக்கு ஒரு மாணவன் உள்ளாக்கப்படுகிறான். இது அவனது அறிவார்த்த ஆளுமையை சிதைக்கிறது. அர்த்தப்பூர்வமான உரையாடலை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.
கருத்தரங்குகள், பட்டறைகள் ஆகியவை பேருக்கு சடங்குத்தன்மையுடனும், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் முழு ஈடுபாட்டுடனும் நடத்தப்படுகின்றன. பின்னர் அவை அனைத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளாக ஆவணப்படுத்தப்படுகின்றன. அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்துக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.
தனியார் கல்லூரிகளுக்குள் ஒரு நாள் நுழைந்து விட்டால் பின்னர் நடுவில் அங்கிருந்து வெளியேறுவது என்பது இயலாத காரியம். ஒரு வகுப்பில் இருப்பதா? வேண்டாமா? என்று தேர்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு இருப்பதில்லை. தங்கள் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி அமர வைக்கப்படுவதாக எண்ணுவதால் அவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற அதிக பயம் தங்களுக்கு விழும் ஆப்சண்ட் பற்றியது. தாங்கள் விடுப்பு எடுக்கும் நாட்கள் போகவும் கல்லூரியில் நடத்தை காரணமாகவும் ஆப்சண்ட் விழுகின்றன. வருகைப் பதிவு குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழே இருந்தால் அவர்களால் தேர்வெழுத முடியாது.
ஒரு கல்லூரி எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுப்பது சிக்கலாக தோன்றலாம். ஆனால் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருத்தல் நல்லது.
ஒரு வீட்டின் இன்றியமையாமை குறித்து ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்க கவிஞன் ஒரு பணியாளரின் மரணம் (The Death of a Hired Man) என்ற நீள்கவிதையில் விவாதித்திருப்பார். ஒரு கணவன் மனைவி மற்றும் பணியாளன் ஆகியோர் அக்கவிதையில் வருவார்கள். சிலாஸ் என்ற பணியாளன் ஒரு முக்கியமான நேரத்தில் அந்த வீட்டிலிருந்து வெளியேறி இருப்பார். பின்னர் சாகும் தருவாயில் அந்த வீட்டிற்கு மறுபடியும் வருவார். அதனை வீட்டின் உரிமையாளரான வாரன் எதிர்ப்பார். உறவினரிடத்தில் செல்ல வேண்டியது தானே என்று எரிந்து விழுவார். சிலாஸ் தனது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதாக மனைவி மேரி உரைப்பார். பிறகு வீடு என்பதற்கு ஒரு விளக்கத்தை மேரி கொடுப்பாள். ‘வீடு என்பது நீங்கள் செல்ல விரும்பும் நேரத்தில், அதிலுள்ளவர்கள் உங்களை அணைத்துக் கொள்ள வேண்டும்’ என்பார். அறமின்றி ஒரு வீட்டை கட்ட இயலாதது போன்றது தான் ஒரு கல்லூரியை நிர்வகிப்பதும்.
பட்டமளிப்பு விழாக்களில் அங்கி மற்றும் தலைப்பாகை அணிவது மத்தியக்கால இங்கிலாந்தில் உருவானது. பாதிரிகளின் கட்டுப்பாட்டில் கல்வி அப்போதிருந்ததால் அவர்களின் உடைகளை பின்பற்றி கொண்டு வரப்பட்ட பழக்கமாகும். 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கி அணிவதை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அதன் விதிமுறைகளில் ஒன்றாக பின்பற்ற தொடங்கியது. டவுன் அன்ட் கவுன் (Town and gown) என்ற சொல்லாட்சி பெரும்பான்மை நகர மக்களுக்கும் கவுன் அணிந்த படித்த வர்க்கத்துக்கும் இடையேயான முரணை விளக்கப் பயன்படுத்தப்படுவதாகும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானதே நகரவாசிகளுக்கும் ஆக்ஸ்ஃபோர்டில் படித்த சிலருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புதிய கல்வி நிறுவனம் என்று சொல்லப்படுவதுண்டு. கால ஓட்டத்தில் அது பழமையின்/காலனியத்தின் எச்சமாக மட்டுமே தொடர தகுதி படைத்த ஒரு வழக்கமாகும். மேலங்கி அணிவது காலனிய எச்சம் என்றுரைத்து 2010-ம் வருடம் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய வனமேலாண்மை நிறுவனத்தின் (IIFM) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தனது அங்கியை கழற்றி வீசினார்.
பட்டமளிப்பு விழாக்களுக்கு கொடுக்கப்படுகின்ற அதீத முக்கியத்துவம் தேவையற்றது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதல் தலைமுறை பட்டப்படிப்பு என்பது இன்னமும் முழுமையடையாமலே இருக்கிறது. 8.15 சதவீத மக்களுக்கு தான் உயர்கல்வி வாய்ப்பு இந்தியாவில் கிடைப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பட்டமளிப்பு விழாக்களுக்கு இருக்கின்ற மாணவர்கள் ஈர்ப்பும், ஈடுபாட்டுணர்வும் புரிந்து கொள்ளக் கூடியது. பெற்றோர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு குழந்தைகளின் பட்டமேற்பை காண வருவது அதற்கு சாட்சியாகும்.
ஆனால், அதற்கு புனிதம் இருப்பதாக கருதுவதெல்லாம் 12-ம் நூற்றாண்டின் பழமையின் சுமையை தூக்கி கொண்டாடுவதாகும். உயர்கல்வி என்பது அறிவு சமூகத்தை படைப்பதென்ற யுனெஸ்கோவின் எண்ணத்தை அழிப்பதாகும். அறிவுத்துறை தற்குறித்தனம் உயர்கல்வித் துறையை ஆட்டிப்படைக்கிறது. 21-ம் நூற்றாண்டில் கல்லாமை என்பது எழுதப் படிக்கத் தெரியாமலிருப்பதல்ல; மாறாக புதிதாக கற்றுக் கொள்ளாமலிருப்பதும்; கற்றதை சரிபார்த்துக் கொள்ளாமலிருப்பதும்; ஏற்கனவே கற்றதை மறுபரிசீலனை செய்து கொள்ளாமலிருப்பதும் தான் என்கிறார் ஆல்வின் டொஃப்ளர் என்ற நவீன சிந்தையாளர்.
மாணவர்களை கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது எல்லாம் தனிப்பட்ட ஆசிரியரின் திறன் என்று சுருக்கப்படுகிறது. அதற்கு பின்னணியில் ஆசிரியர் – மாணவர்கள் பிரச்சினைகளோடு தொடர்புடைய பல்வேறு கண்ணி இழைகளை அது காண மறுப்பதாகும்.
மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டங்களைக் கண்டித்து சென்னை பத்திரிகை நிருபர்கள் சங்கத்தில், சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இடம் : பத்திரிக்கை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை நாள் : 09/02/2019 – மாலை 4மணி
கருத்துரையாளர்கள்:
மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
கிராந்தி சைதன்யா, CLC, ஆந்திரா
பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், NCHRO
பேராசிரியர் கருணாநந்தன், CPDR-TN
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு
வழக்கறிஞர் பாரதி, சனநாயக வழக்கறிஞர் சங்கம்
வழக்கறிஞர் ராஜா, குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
வழக்கறிஞர் மில்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
வழக்கறிஞர் புகழேந்தி, இயக்குநர், சிறைக்கைதிகள் உரிமை மய்யம்
CPDR - TN
1 of 2
1
2
படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
இந்தியாவில் காலனிய ஆதிக்க காலகட்டம் முதல் நடைமுறையில் உள்ள பல்வேறு கருப்புச் சட்டங்கள் மூலம் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஊபா உள்ளிட்ட இத்தகைய கருப்புச் சட்டங்கள், மக்களின் கருத்துரிமையை பறிப்பதோடு, அவர்களது உயிர்வாழும் உரிமையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
இத்தகைய கருப்புச் சட்டங்களை நீக்க உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது. அதனை விரிவாக எடுத்துரைக்கவிருக்கும் இந்தக் கருத்தரங்கத்தில், அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
கங்கை நதி சுத்தம் செய்யப்பட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்த படங்கள் உண்மையா?
கங்கை நதியை சுத்தம் செய்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது என்று தென் இந்தியாவில் சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
#5YearChallenge மற்றும்#10YearChallengeஎன்ற ஹாஷ்டாகுடன் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படமானது பகிரப்பட்டுள்ளது. கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அந்த சமூக ஊடக பகிர்வு கூறுகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனும் அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். கங்கை நதியின் மாற்றத்தை பாருங்கள். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போதும், 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் போது எப்படி உள்ளது என்று பாருங்கள் என்கிறது ட்வீட்.
ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.
கங்கையின் நிலை என்ன?
கங்கை நதியை சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை என்கிறது பாராளுமன்ற நிலைக் குழுவின் கடந்தாண்டு அறிக்கை.
கங்கையை சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய பசுமை ஆணையமும் அரசை குற்றஞ்சாட்டி உள்ளது.
கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த பாகத்தில் மூலதனத்தின் தோற்றம், புராதனத் திரட்சி, வாணிப ஊக்கக் கொள்கை போன்றவைகளை நூலாசிரியர் அறிமுகப் படுத்துகிறார். முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் மூலதனம் எப்படி வந்தது? சிக்கனமாக வாழ்ந்து செல்வத்தை சேமித்துத்தான் தொழிலை துவங்கினார்களா? இல்லை என்றால் எப்படி என்று பதிலளிக்கிறார் ஆசிரியர். ஒரு நாட்டின் செல்வச் செழிப்பு அந்நாட்டில் இருக்கும் உலோகத்தின் மதிப்பிலா இல்லை அன்னிய நாடுகளோடு செய்யும் வர்த்தகத்திலா என்பதெல்லாம் ஆரம்ப கால முதலாளித்துவ அறிஞர்கள் புரிந்து கொண்டதை இப்பாகம் விளக்குகிறது. சுருங்கச் சொன்னால் முதலாளித்துவத்தின் தோற்றம் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றினூடாகவா இல்லை சில தனிநபர்களின் மேலான பண்புகளினாலா என்ற கேள்விக்கு விடையளிக்கிறது. கட்டுரையின் முடிவில் உள்ள வீட்டுப் பாட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலுங்கள்!
– வினவு
தங்க வழிபாடும் விஞ்ஞான ஆராய்ச்சியும் : வாணிப ஊக்கக் கொள்கையினர் !
அ.அனிக்கின் ஐரோப்பியர்கள் இந்தியாவின் வாசனைத் திரவியங்களைத் தேடிப்புறப்பட்டதன் விளைவாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தங்கம், வெள்ளியின் மீது வைத்திருந்த அடக்க முடியாத ஆசையினால் அமெரிக்காவை வென்றனர்; அந்த நாட்டின் எல்லாப் பகுதிகளையும் நன்கு ஆராய்ந்தனர். பூகோள ரீதியான மாபெரும் கண்டு பிடிப்புகள் வர்த்தக மூலதனத்தின் வளர்ச்சியோடு இணைக்கப்பட்டிருந்தன; அவை தம் பங்குக்கு இந்த மூலதனத்தின் எதிர்கால வளர்ச்சியை அதிகமாக ஊக்குவித்தன. வரலாற்றுரீதியாக வர்த்தக மூலதனமே மூலதனத்தின் ஆரம்ப வடிவம். இந்த வடிவத்திலிருந்துதான் தொழில்துறை மூலதனம் வளர்ச்சியடைந்தது.
பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை (பதினெட்டாம் நூற்றாண்டிலும் அதிக அளவில்) பொருளாதாரக் கொள்கையிலும் பொருளாதாரச் சிந்தனையிலும் வாணிபஊக்கக்கொள்கையே முக்கியமான போக்காக இருந்தது. அதைச் சுருக்கிப் பின்வருமாறு சொல்லலாம்: பொருளாதாரக் கொள்கை – விலையுயர்ந்த உலோகங்களை மிகவும் அதிகமான அளவுக்குத் திரட்டி நாட்டிலும் அரசாங்கக் கருவூலத்திலும் குவித்து வைப்பது; தத்துவம் – செலாவணியின் (வர்த்தகம் மற்றும் பணப் புழக்கத்தின்) செயல் எல்லையில் பொருளாதார விதிகளைத் தேடுதல்.
”உலோகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் துணிய வேண்டும்” என்றார் கதே. தங்கம் என்ற போலிக் கடவுளை வழிபடுவது முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக் காலம் முழுவதிலும் இருந்தது; முதலாளித்துவ வாழ்க்கை முறை, சிந்தனையில் அது இணைந்த பகுதியாக இருந்தது. எனினும் வர்த்தக மூலதனம் மேலோங்கியிருந்த காலத்தில் இந்த தெய்வத்தின் பிரகாசம் மிக அதிகமாக இருந்தது. வாங்குவதும் அதிக விலைக்கு விற்பதும் வர்த்தக மூலதனத்தின் கொள்கை. வாங்கிய விலைக்கும் விற்பனை செய்த விலைக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த மஞ்சள்நிற உலோகத்தின் வடிவத்தில் வைத்திருந்தனர். இந்த வித்தியாசம் உற்பத்தியின் மூலமாக, உழைப்பின் மூலமாக மட்டுமே ஏற்பட முடியும் என்பது இன்னும் ஒருவருக்கும் தோன்றவில்லை. வெளி நாட்டில் வாங்கியதைக் காட்டிலும் அதிகமான அளவில் வெளிநாட்டில் விற்பனை செய்வது – இதுவே வாணிப ஊக்கக் கொள்கையின் அரசு ஞானத்தின் உச்சம் எனக் கூறலாம். அரசாங்கத்தை நடத்தியவர்களும், அவர்களுக்காகச் சிந்தனை செய்து எழுதியவர்களும் இந்த வித்தியாசத்தை வெளிநாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்குள் வருகின்ற தங்கம் (அல்லது வெள்ளி) வடிவத்தில்தான் மறுபடியும் பார்த்தார்கள். நாட்டில் ஏராளமான பணம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.
புராதனத் திரட்சி
முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்
வாணிப ஊக்கக் கொள்கை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முந்திய வரலாறு என்பது போல புராதனத் திரட்சி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் முந்திய வரலாறு ஆகும். புராதனத் திரட்சி என்ற சொற்றொடரை ஆடம்ஸ்மித் உருவாக்கினார் எனத் தோன்றுகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள பல உற் பத்திப் பிரிவுகளின் வளர்ச்சியின் மூலமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைகின்ற நிலையை மூலதனத்தின் புராதனத் திரட்சி ஏற்படுத்தியது என்று அவர் எழுதினார் (அதை ”சென்ற காலத்திய திரட்சி” என்று கூறினார்).
மார்க்ஸ் ”புராதனத் திரட்சி என்று சொல்லப்படுவது” என்று எழுதினார். ஏனென்றால் ஸ்மித் காலம் முதல் இந்தச் சொற்றொடர் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் வேரூன்றியிருந்ததோடு, முதலாளி வர்க்கத்தினர் இதற்கு ஒரு விசேஷமான, நன்னெறி சார்ந்த பொருளையும் கற்பித்து வந்தனர்.
புராதனத் திரட்சியின் மொத்தப் போக்கின் விளைவாகத்தான் சமூகத்தில் முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று வர்க்கங்கள் பிரிந்தன. ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் புராதனத் திரட்சியின் மொத்த நிகழ்வையும் ஒரு வனப்புமிக்க வாழ்க்கையாகச் சித்திரிக்கின்றனர். வெகு காலத்துக்கு முன்பு சுறுசுறுப்பானவர்கள் – குறிப்பாக புத்திசாலித்தனம், சிக்கனம் ஆகியவற்றைக் கடைப்பிடித்த உயர்ந்தவர்கள் – ஒரு பக்கத்தில் இருந்தார்கள்; மறுபக்கத்தில் தங்களிடமிருந்தவற்றையும் இன்னும் மற்றவற்றையும் ஊதாரித்தனமாகச் செலவழித்த சோம்பேறிகளான கீழ்மக்கள் இருந்தார்கள்… முதலில் சொல்லப்பட்டவர்கள் செல்வத்தைக் குவித்தனர்; பின்னால் சொல்லப்பட்டவர்கள் எல்லாவற்றையும் இழந்தனர்; அவர்களிடம் விற்பனை செய்வதற்குத் தங்கள் உடம்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த வசீகரமான வாழ்க்கையில் அறமும் நீதியும் ஆட்சி புரிகிறது; உழைப்புக்கு வெகுமதியும் சோம்பேறித்தனத்துக்கும் ஊதாரித்தனத்துக்கும் தண்டனையும் தரப்படுகிறது.
இதைக் காட்டிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று இருக்க முடியாது. மூலதனத்தின் புராதனத் திரட்சி என்பது ஒரு உண்மையான வரலாற்றுப் போக்காக இருந்தது. ஆனால் அது மூர்க்கத்தனமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது. அதில் ஒடுக்குமுறையும் பலாத்காரமும் மோசடியும் கையாளப்பட்டன.
இது மனிதனுடைய தீய நோக்கத்தினால், ”ஆதியிலிருந்தே” அவன் பலாத்காரத்தைச் சார்ந்திருப்பவன் என்பதன் காரணமாக ஏற்பட்ட விளைவு அல்ல. புராதனத் திரட்சியின்போது ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு முதலாளித்துவத்துக்கு மாறுகின்ற புறவய வரலாற்று விதி இயங்கத் தொடங்கியிருந்தது. இந்தப் போக்கு சமூகத்தின் பொருளாதார வரலாற்று வளர்ச்சியை ஊக்குவித்தபடியால் அது சாராம்சத்தில் முற்போக்கானதாகும். புராதனத் திரட்சி நடைபெற்ற காலம் ஒப்புநோக்கில் உற்பத்தி வேகமாகப் பெருகிய காலம், ஆலைத்தொழில் நகரங்களும் வர்த்தக நகரங்களும் வளர்ச்சியடைந்த காலம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்த காலம், ஆயிரம் வருடங்களாகத் தேங்கிக் கிடந்த பிறகு நுண்கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்ந்த மறுமலர்ச்சிக் காலம்.
இந்தக் காலத்தில் பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகள் வீழ்ச்சியடைந்து அவைகளின் இடத்தில் புதிய, முதலாளித்துவ உறவுகள் ஏற்பட்டு வந்த காரணத்தால் விஞ்ஞானமும் கலாச்சாரமும் வேகமாக வளர்ச்சி அடைய முடிந்தது. கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் அழிக்கப்படும் பொழுது, அரை நிலப்பிரபுத்துவ, அரை சுதந்திரமான நில உடைமையாளர்கள் நகரங்களிலும் கிராமப்பகுதிகளிலும் பாட்டாளி வர்க்கத்தினராக மாற்றப்படும் பொழுது அந்த வாழ்க்கையில் வனப்பு ஏது? பணம் சேர்ப்பதையே மதமாகக் கொண்ட முதலாளித்துவச் சுரண்டல்காரர்களின் வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வனப்புமிக்க வாழ்க்கையைப் பற்றிப் பேச முடியுமா?
காலனிகளைத் தேடிய பயணம் – கொலம்பஸ்
பதினாறாம் நூற்றாண்டில் சில ஐரோப்பிய நாடுகளில் – இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலமான – முடியாட்சியைக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட தேசிய அரசுகள் வளர்ச்சியடைந்தன. பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தில் மன்னர்கள் முரண்டு செய்த பிரபுக்களைத் தோற்கடித்து அவர்களை அடக்கி விட்டார்கள். நிலப்பிரபுத்துவ காலத்தில் பிரபுக்கள் வைத்திருந்த ஆயுதந்தாங்கிய படைகளும் பரிவாரங்களும் கலைக்கப்பட்டன; அவர்களுக்கு இப்பொழுது “வேலையில்லாத நிலை” ஏற்பட்டது. அவர்கள் விவசாயத் தொழிலாளிகளாக மாற விரும்பவில்லை என்றால் இராணுவத்தில் அல்லது கடற் படையில் சேர்ந்து, அமெரிக்கா அல்லது கிழக்கிந்தியத் தீவுகளில் இருக்கும் கற்பனையையும் மிஞ்சிய செல்வங்களைத் தேடிக் காலனிகளுக்குப் புறப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களாக மாறியிருந்தால் அவர்கள் நிலவுடமையாளர்களைப் பணக்காரர்களாக்கியிருப்பார்கள்; வெளிநாட்டுக்குப் போனதன் மூலம் அவர்கள் வியாபாரிகளை, தோட்டச் சொந்தக்காரர்களை, கப்பல் முதலாளிகளைப் பணக்காரர்களாக்கினார்கள். அவர்களில் சிலர் ”ஏணியில் மேலே ஏறிச் சென்றனர்”; அதிகமாகப் பணம் சேர்த்துக் கொண்டு தாங்களே வியாபாரிகளாக அல்லது தோட்டச் சொந்தக்காரர்களாக மாறினார்கள். இன்னும் சிலர் கடலில் கொள்ளையடித்தும் நேரடியாகவே திருடியும் அதிகமான பணத்தைச் சேர்த்தார்கள்.
அரசர்கள் பிரபுக்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கைத்தொழில், வர்த்தக முதலாளிகளும் நகரவாசிகளும் அரசர்களை ஆதரித்தனர், நேசசக்திகளாகத் துணை புரிந்தனர். இந்தப் போராட்டத்தின் போது நகரங்கள் அரசர்களுக்குப் பணமும் ஆயுதங்களும் சிலசமயங்களில் நபர்களையும் கொடுத்து உதவி செய்தன. பொருளாதார வாழ்க்கையின் மையம் நகரங்களுக்கு மாறியதனால் நிலப்பிரபுக்களின் அதிகாரமும் செல்வாக்கும் இற்றுப் போனது. உதவி செய்த முதலாளிகள் தங்கள் பங்குக்கு நிலப்பிரபுக்கள், ”சாதாரண மக்கள்’ ‘, அந்நியப் போட்டியாளர்கள் ஆகியோருக்கு எதிராகத் தங்களுடைய நலன்களை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்று கோரினர். அரசும் இந்த ஆதரவைக் கொடுத்தது. வர்த்தகக் கம்பெனிகளும் கைத்தொழில் குழுக்களும் அரசர்களிடமிருந்து பலவிதமான சிறப்பு உரிமைகளையும் ஏகபோக உரிமைகளையும் பெற்றன. ஏழை மக்கள் உற்பத்தியாளர்களிடம் வேலை செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கின்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வேலை செய்யவில்லையென்றால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும். அதிகபட்சக் கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. வாணிப ஊக்கக் கருத்தினரின் பொருளாதாரக் கொள்கை நகர முதலாளிகளின், குறிப்பாக வர்த்தக முதலாளிகளின் நலன்களுக்கு ஆதரவாகப் பின்பற்றப்பட்டது. வாணிப நிறுவனங்களின் வளர்ச்சி பல சமயங்களில் பிரபுக்களின் நலன்களுக்கும் சாதகமாக இருந்தது. ஏனென்றால் அவர்களுடைய வருமானங்கள் ஏதாவதொரு வகையில் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டிருந்தன.
எல்லாத் தொழில் முயற்சிக்கும் ஆதாரமாக, திருப்புமுனையாகப் பணம் இருக்கிறது. அதை வைத்திருப்பவர் மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கு அல்லது மறுபடியும் விற்பனை செய்வதற்குப் பண்டங்களை வாங்குவதற்காக அதை உபயோகிக்கிறார்; தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்க அதை உபயோகிக்கிறார். அப்பொழுது அது பண மூலதனமாக மாறுகிறது. இந்த உண்மையே வாணிப் ஊக்கக் கொள்கையின் அடிப்படை; அதன் நோக்கமும் சாராம்சமும் நாட்டுக்குள் பணத்தை – விலையுயர்ந்த உலோகங்களைக் கவர்ந்திழுப்பதாகும்.
வாணிப ஊக்கக் கொள்கையின் ஆரம்பகாலத்தில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பூர்வீகமாக இருந்தன. அந்நிய நாட்டு வியாபாரிகள் தங்கள் பொருள்களின் விற்பனையில் கிடைத்திருப்பதை அந்த நாட்டுக்குள்ளாகவே செலவழித்துவிட வேண்டும் என்று கட்டாயம் செய்யப்பட்டனர். அவர்கள் அப்படிச் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக விசேஷமான ”மேற்பார்வையாளர்கள்” நியமிக்கப்பட்டனர். அவர்கள் சில சமயங்களில் மாறுவேடமணிந்து வருவதுமுண்டு. தங்கம் மற்றும் வெள்ளியை ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டது.
பின்னர், அதாவது பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய அரசுகள் இன்னும் ஆக்கபூர்வமான, வளைந்து கொடுக்கக்கூடிய கொள்கைக்கு மாறின. ஒரு நாட்டுக்குள் பணத்தைக் கவர்ந்திழுப்பதற்கு மிகவும் நம்பிக்கையான வழி ஏற்றுமதிப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதும் இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதுமே என்பதை ஆட்சி செய்தவர்களும் அவர்களுடைய ஆலோசகர்களும் உணர்ந்து கொண்டனர். எனவே அரசு தொழிலுற்பத்தியை ஊக்குவிக்க ஆரம்பித்தது, உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தியது, அவற்றுக்கு உதவியளித்தது.
வாணிப ஊக்கக் கொள்கையில் ஏற்பட்ட இரண்டு கட்டங்களும் அதன் பொருளாதாரக் கொள்கையின் வளர்ச்சியில் இரண்டு கட்டங்களோடு ஒத்து வருவதைக் காணலாம். ஆரம்பகால வாணிப ஊக்கக் கொள்கை-அதற்குப் பணவியல்முறை என்றும் பெயருண்டு – நாட்டுக்குள் பணத்தை வைத்திருப்பதற்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளை விளக்கியதற்கு அப்பால் போகவில்லை. வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கை நாட்டின் செல்வ வளத்தின் தோற்றுவாய்களைப் பூர்வீகத் திரட்சியில் பார்க்கவில்லை; அந்நிய வர்த்தகத்தின் வளர்ச்சியிலும், சாதகமான வர்த்தக சமநிலையிலும் (இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்க வேண்டும் எனப்படுவது) அதைப் பார்த்தது. தனக்கு முந்தியவர்கள் ”நிர்வாக நடவடிக்கைகளில் காட்டிய தீவிரத்தை” அது அங்கீகரிக்கவில்லை. வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கைவாதிகள், அரசின் தலையீடு அவர்களின் கருத்துப்படி இயற்கைச்சட்டத்தோடு பொருந்தியிருந்தால் மட்டுமே அதை அங்கீகரித்தார்கள். இயற்கைச் சட்டத் தத்துவஞானம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான செல்வாக்கைப் பெற்றிருந்தது. இந்த விஞ்ஞானமே இயற்கைச் சட்டக் கருத்துக்களின் சுற்று வட்டத்துக்குள் வளர்ச்சி அடைந்தது என்றும் ஓரளவுக்குச் சொல்லலாம்.
அரிஸ்டாட்டில் மற்றும் ஏனைய பண்டைக்கால சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட இயற்கைச் சட்டக் கருத்துக்கள் புதிய யுகத்தில் புதிய உள்ளடக்கத்தைப் பெற்றன. இயற்கைச் சட்டத் தத்துவஞானிகள் கருத்தளவான “மனிதனின் இயற்கை”, அவனுடைய ”இயற்கையான” உரிமைகள் ஆகியவற்றிலிருந்து தங்களுடைய கொள்கைகளைப் பெற்றுக் கொண்டார்கள். மத்திய காலத்தில் இருந்த மதச் சர்வாதிகார ஆட்சி, மதச் சார்பற்ற சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றோடு இந்த உரிமைகள் அதிகமான அளவுக்கு முரண்பட்டிருந்தபடியால், இயற்கைச் சட்டத் தத்துவம் முக்கியமான முற்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த மனிதாபிமானிகள் இயற்கைச் சட்டக் கருத்து நிலையை ஏற்றுக்கொண்டனர்.
அரசைப் பொறுத்தவரை அது மனிதனின் இயற்கையான உரிமைகளை-இவற்றில் தனிச் சொத்துரிமையும் பாதுகாப்பும் அடங்கும்-உத்தரவாதம் செய்யக் கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்று இந்தத் தத்துவஞானிகளும் அவர்களைப் பின் தொடர்ந்த வாணிப ஊக்கக் கொள்கை யின் தத்துவாசிரியர்களும் கருதினார்கள். முதலாளித்துவச் செல்வத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தக் கொள்கைகளின் சமூக அர்த்தமாகும்.
பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இயற்கைச் சட்டத்துக்கும் உள்ள தொடர்பு பிற்காலத்தில் வாணிப ஊக்கக் கொள்கையிலிருந்து மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தோடு ஏற்பட்டது. ஏனென்றால் மூலச் சிறப்புடைய மரபினரின் (இங்கிலாந்தில் ஆடம் ஸ்மித்தைப் பின்பற்றியவர்களும் பிரான்சில் பிஸியோகிராட்டுகள் என அழைக்கப்பட்டவர்களும்) வளச்சிக் கட்டத்தின் போது முதலாளி வர்க்கத்துக்கு முன்பிருந்த மாதிரி அரசாங்கப் பாதுகாப்பு தேவைப்படவில்லை; மேலும் அது பொருளாதாரத்தில் அதிகமான அரசுத் தலையீட்டை எதிர்த்தது.
(தொடரும்…)
கேள்விகள்:
இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடிக்கப்பட்டதற்கு வர்த்தக மூலதனம் காரணம் – ஏன்?
15 – 18 நூற்றாண்டுகளில் நிலவிய வாணிக ஊக்கக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக் காலத்தில் தங்கத்தை வழிபடும் போக்கு இருந்ததற்கு காரணம் என்ன?
புராதனத் திரட்சி என்று கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகளாக நூலாசிரியர் கூறுவது எவை?
புராதானத் திரட்சி ஒரு மூர்க்கமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது என்று நூலாசிரியர் கூறுவதை விளக்குக!
சொத்து, அதிகாரமிழந்த நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ சமூக அமைப்பில் தங்களது நிலையை எப்படி மாற்றிக் கொண்டனர்? சான்றுடன் விளக்குக!
17 – 18-ம் நூற்றாண்டுகளில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் இருக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய அரசுகள் புரிந்து கொண்டதற்கு காரணம் என்ன?
Newspaper Carriers (Work disgraces) by Georg Scholz. 1921. Courtesy Wikipedia
மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? நல்லவர்களா, கெட்டவர்களா? இந்தக் கேள்விக்கு கருப்பு வெள்ளையாக பதில் சொல்ல முடியாதல்லவா? எனினும், இதற்கான பதிலைத் தேடி வரலாறு நெடுகிலும் தத்துவஞானிகளும், மெய்ஞானிகளும் கடும் முயற்சிகளைச் செய்துள்ளனர். மார்க்சியத்தை பொறுத்த வரை சமூகச் சூழலும், வர்க்க பின்னணியும் ஒரு நபரின் ஆளுமையை தீர்மானிக்கிறது. நவீன மருத்துவத் துறை சார்ந்த உளவியல் நிபுணர்களும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதர்களின் நடத்தை குறித்த முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உளவியல் துறையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கீழ்கண்ட பத்து முடிவுகள் கிட்டியுள்ளன.
இந்த ஆய்வுகள் உடல்ரீதியாகவும், சமூக நடைமுறை ரீதியாகவும் இருக்கின்றன. சில ஆய்வுகள் சர்வே அடிப்படையிலும், சில ஆய்வுகள் பாவனை, பிரதிபலிப்பு, வினை மாற்றம் இன்ன பிற முறைகளிலும் இருக்கின்றன. எனினும் இந்த ஆய்வு முடிவுகளின் உண்மைகைள நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியமானது. அதை உளவியல் மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மட்டும் முடிவு செய்வது சாத்தியமில்லை. மருத்துவம் மனித குலத்தின் உடலியல் வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கூறுகிறது. சமூகவியல் வரலாற்றை அறியும் போதுதான் ஒரு தனிநபர் ஏன் இப்படி நடக்கிறார் என்பதை கண்டறிய முடியும்.
மனிதர்களின் நடத்தைகள் கூட வர்க்க ரீதியாக வேறு வேறு காரணங்களால் பிரிந்திருக்கிறது. அன்பு, பாசம், தாய்மை, நட்பு ஆகிய உணர்ச்சிகள் கூட ஒரே மாதிரியாக அனைவரிடமும் இருப்பதில்லை. தனது மனைவியின் கால் புண்ணாகியது என்று வருந்தும் ஒரு அமெரிக்க அதிபர், ஆப்கானில் கொல்லப்படும் அப்பாவி மக்கள் குறித்து மூடு அவுட் ஆக மாட்டார். ஆய்வு முடிவுகளின் கீழ் எமது கருத்துக்கள் தனியே பச்சை வண்ணத்தில் தரப்பட்டுள்ளன.
மனிதர்கள் சிறுபான்மையினரையும், பாதிப்புக்கு உள்ளானவர்களையும் மனிதத் தன்மையோடு அணுகுவதில்லை. மாணவர் குழு ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் மூளை நரம்பு மண்டலத்தை ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆய்வின் போது வீடற்றவர்கள், போதை அடிமைகள் போன்றோரின் புகைப்படங்களைக் காட்டிய போது சக மனிதர்களைக் குறித்து சிந்திக்கும் மூளையின் பகுதி செயலற்று இருந்துள்ளது. அதே போல் இளைஞர்கள் முதியவர்களையும், அரபு மக்களின் குடியேற்றங்களை எதிர்ப்பவர்கள் இசுலாமியர்களையும் மனித தன்மையோடு கருதவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், வேறு பிரதேசங்களையும் எதிர் பாலினங்களைச் சேர்ந்தவர்களையும் சக மனிதர்களாக கருதாத போக்கு இளம் வயதிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது.
சிறு வயதில் இருந்து யாரெல்லாம் கெட்டவர்கள் என்ற படிமம் நமது சூழலால் நம்மிடம் பதியப்படுகிறது. அந்தக் கால ஆனந்த விகடன் உருவாக்கிய பட்டி டிராயர், கைலி, பட்டை பெல்ட், மீசை, கிருதா வைத்த தோற்றம் உள்ளவர்களை ரவுடிகள் என்று நேற்றைய தலைமுறை நினைத்து வந்தது. இன்று கோட்டு சூட்டு போட்ட கிரிமினல்களே அதிகம் இருந்தாலும் மேற்கண்ட வகையிலான தோற்றம் கொண்டவர்களை ரவுடிகள், வன்முறை கொண்டவர்கள் என்று நம்புவது ஆழ்மனதில் இருக்கத்தான் செய்கிறது. முசுலீம்கள், தலித் மக்கள், வேறு தேசிய இனத்தவர், பெண்கள் குறித்த பல்வேறு ஸ்டீரியோ டைப் பொதுப்புத்திகளின் தோற்றுவாய் இப்படித்தான் உண்மை என்று நம்பப்படுகிறது.
மற்றவர்களின் துன்பத்தில் இன்பமடையும் போக்கு (Schadenfreude) நான்கு வயதிலேயே துவங்கி விடுவதாக கூறுகிறது, 2013 -ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. குறிப்பிட்ட ஒரு மனிதர் துன்பத்துக்கு ஆளாக வேண்டியவர் தான் என்கிற மதிப்பீட்டுக்கு வரும் குழந்தை அவருக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு இரசிக்கின்றது. மேலும், சமீபத்தில் நடந்த இன்னொரு ஆய்வின் படி ஆறு வயதுக் குழந்தைகள் ”கெட்டவர்கள்” தாக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புவது தெரிய வந்துள்ளது.
இன்றைய நகர வாழ்க்கையின் முதன்மை அம்சமே போட்டிகள் நிறைந்த உலகில் மற்றவரை முந்தி ஓட வேண்டும் என்பதே. இந்தப் போட்டிகளோடு பார்ப்பனிய சமூகத்தின் பிற்போக்கும், சாதி-மத-பாலியல் வெறுப்புக் கருத்துக்களும் இணையும் போது ஒரு நபர் தனது எதிர்த்தரப்பினரான குழுவைச் சேர்ந்தவர் துன்பமடைய வேண்டும் என்று விரும்புகிறார். இது நேர்மறையான முற்போக்கு கருத்து உள்ளவர்களுக்கும் வேறு மாதிரி இருக்கும். சான்றாக மோடிக்கோ, பாண்டேவுக்கோ ஏதாவது கெட்டது நடந்தா நல்லா இருக்குமே என்று நமக்குத் தோன்றாதா என்ன?
மனிதர்கள் தலைவிதியை நம்புகின்றனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு துயரத்திலிருக்கும் தனது சக மனிதனின் நிலை அவனது தலைவிதி என்று மக்கள் நம்புவதை 1966 -ல் அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மெல்வின் லெர்னர் மற்றும் கரோலின் சிம்மன்ஸ் நடத்திய ஆய்வு நிரூபித்தது. அவர் நடத்திய ஆய்வின் போது பார்வையாளர்களுக்கு எதிரே ஒரு பெண்ணை அமர வைத்து சில கேள்விகள் கேட்டனர். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒருமுறை மின்னதிர்ச்சி (குறைந்த அளவில்) வழங்கப்பட்டது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதை மீண்டும் பார்க்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் நடந்த வேறு சில ஆராய்ச்சிகளில், பல்வேறு நோய்களுக்கும் வறுமைக்கும் ஆளானவர்களின் தலைவிதியே அவர்களின் நிலைமைக்கு காரணம் என்று நம்புவது தங்களுடைய நல்ல நிலைமைக்கான (பொருளாதார ரீதியில்) நியாயப்படுத்தலாக மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
நெடுங்காலமாக மக்கள் வறுமை, நோய், இயற்கை அழிவு ஆகியவற்றை அந்தந்த மக்களின் தலைவிதி என்றே நம்பி வந்துள்ளனர். நவீன சமூகத்தில் இந்த தலைவிதி வேறு விதமான வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சாதி, மதம், பாலியல் போன்றவைகளே வறுமை, தொழிலுக்கான தலைவிதி என்று நம்பியவர் இன்றும் கூட அந்த நம்பிக்கைகளை வைத்துள்ளார். கூடுதலாக நவீன முதலாளித்துவ உலகில் ஏழ்மை என்பது ஒருவர் நன்றாக படிக்கவில்லை, கடினமாக உழைக்கவில்லை, கலாச்சாரம் – நாகரீகம் இல்லை போன்ற காரணங்களால் இருப்பதாக நடுத்தர வர்க்கம் நம்புகிறது. அப்படி அந்த வர்க்கத்தின் நம்பிக்கையை பல்வேறு சமூக நிறுவனங்கள் உருவாக்குகின்றன.
பணக்காரர்களைப் பொறுத்த வரை தாம் சேர்த்த பணம் என்பது சாதாரண மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக தனது ‘உழைப்பினால்’ கிடைத்த பலன் என்றும், அப்படி உழைக்க இயலாத சோம்பேறிகளே ஏழை – பணக்காரன் என்று இருமை பேசுவதாக கூறுவார்கள்.
மனிதர்களுக்கு கடிவாளமிட்ட பார்வையும் இறுமாப்பும் உள்ளது. ஒருவரின் கருத்து நமக்கு உவப்பானதில்லை என்றால் அதை தரவு ரீதியாக மறுத்துப் பேச வேண்டும் என்று மனிதர்கள் நினைப்பதில்லை. 1979 -ல் நடந்த ஒரு ஆய்வின் போது தங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர் கொண்டிருப்பது தனது சொந்த அடையாளத்துக்கே ஆபத்தானது என்று மனிதர்கள் கருதுவது தெரிய வந்தது. மேலும், நாம் கொண்டிருக்கும் கருத்து மட்டுமே சரியானது என்கிற அதீத நம்பிக்கையும் மனிதர்களிடையே உள்ளது. எனவே பிறருடைய கருத்தைக் கேட்பதற்கும் தமது சொந்த அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் மனிதர்கள் முன்வருவதில்லை என்கிறது இந்த ஆய்வின் முடிவு.
கடிவாளமிட்ட பார்வை – இறுமாப்பிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒடுக்குமுறை செய்பவர்கள் ஒடுக்கப்படுபவர்களின் கருத்தை எந்தக் காலத்திலும் கேட்பதில்லை. கூடவே ஒடுக்கப்படும் மக்கள் பேசுவதையோ, போராடுவதையோ அடக்கித்தான் அவர்கள் தமது அதிகாரத்தை அமல்படுத்துகிறார்கள். இந்த வகையிலான நபர்களுக்கு கருத்து ரீதியான உரையாடல் என்பது என்னவென்றே தெரியாது.
ஒடுக்கப்படும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் யதார்த்தத்தில் ஒடுக்குபவரின் அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கூட கேட்க முடியாத நிலையில் மனதளவிலாவது ஒடுக்கபவர்கள் ஒழிய வேண்டும் என்று விரும்புவார்கள். ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே தமது கருத்து சரி என நிரூபிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். அதனால் இவர்களும் ஒடுக்கும் கருத்துடையோரின் கருத்துக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இப்படி கடிவாளத்திற்கே இரு துருவக் காரணங்கள் இருக்கின்றன.
2014 -ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஆய்வு ஒன்றின் போது, அதில் பங்கேற்றவர்களில் 67 சதவீத ஆண்களும், 25 சதவீத பெண்களும் அமைதியான உரையால் சிந்தனையில் நேரம் செலவழிப்பதை காட்டிலும் மின்னதிர்ச்சிக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதே மேல் என கருதுவது தெரியவந்தது.
இந்த ஆய்வின் பின்னணி தெரியவில்லை. பொதுவில் சிலநேரம் நமக்கு நம்மை சுயவதை செய்து கொள்வதாக கற்பனை செய்வதில் விருப்பம் வரலாம். வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பும் தற்கொலை ஒரு தீவிர மன அழுத்தத்தாலோ அல்லது திடீரென ஒரு முடிவாகவோ கூட வரலாம். சுயவதை என்பது புறநிலை வாழ்வோடு போராட முடியாத கோபத்தை இப்படி தன்வதையால் ஆற்றுப்படுத்தும் உடலின் ஒரு செயற்பாடு. போதை பொருள் மூலம் வரும் மயக்கம் ஒரு இன்பமாக, எந்தக் கவலை இல்லாமலும் இருப்பதான நிலையாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு இலட்சிய சமூகத்தில் அப்படி எந்தக் கவலையும் இல்லாத வகையில் ஒரு சமூக அமைப்பு இருக்கும் போது நாம் இயல்பாகவே மகிழ்ச்சியாக நமது கடமைகளில் கவனம் செலுத்தலாம் அல்லவா!
மனிதர்கள் தகுதியற்றவர்களாகவும் அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவேளை மனிதர்களின் பிற்போக்கு சிந்தனைகளும், இறுமாப்பும் கொஞ்சம் மனிதத் தன்மையோடும், சுய மதீப்பீட்டுடனும் வெளிப்படும் போது கூட மோசமாக இருக்காது. ஆனால், தமது தகுதி மற்றும் யோக்கியதைகளைக் குறித்து அதீதமான மதிப்பீடுகளை மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள். இதில் இருப்பதிலேயே திறமைக் குறைவோடு இருக்கும் மனிதர்களே தங்களைக் குறித்து அதீத மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றனர். ஆக கீழ்மையான குணம் கொண்டிருப்பவர்களே தங்களை அதி உயர்வான நியாயவான் எனக் கருதிக் கொள்கின்றனர். குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் மிக கொடிய கிரிமினல்கள் கூட தங்களை சாதாரண மக்களைக் காட்டிலும் கருணை மிக்கவர்களாகவும், நேர்மையானவர்களாக கருதிக் கொள்கின்றனர்.
எதிர்மறையான கருத்துக்களா தோற்றமளிக்கும் இந்த ஆய்வின் முடிவுகளை உற்று நோக்கினால் அது அப்படி இல்லை என அறியலாம். வர்க்க ரீதியாகவே மக்கள் பிரிந்திருக்கிறார்கள். அம்பானியின் மகனோ, அமித்ஷாவின் மகனோ தமது சொந்த திறமை – தகுதி காரணமாக பெரும் நிறுவனங்களில் சிஇஓ-களாக பணியாற்றவில்லை. அது பில்லியனர் மற்றும் கட்சி தலைவரின் மகன் என்ற வாய்ப்பினால் வருவது. இத்தகைய நபர்கள் தமது தகுதி யோக்கியதை குறித்து அதீதமான மதிப்பீடு இருப்பதில் ஆச்சரியமில்லை. இதை துக்ளக் சோ, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்றோரிடமும் காணலாம். எடப்பாடி, ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின், விஷால் போன்ற தமிழக சான்றுகளிடமும் காணலாம்.
மறு புறம் ஆளும் வர்க்கத்தின் வடிவமைப்பில் வாழும் நடுத்தர வர்க்கமும் இத்தகைய அதீத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் முதலாளி போல வசதியான வாழ்வை கனவில் கொண்டிருக்கும் இந்த வர்க்கம் அதற்கேற்றாற் போல இன்றைய பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு அதுவே தமது அறிவின் மேதமை என்று நினைக்கிறது. சாதி மத பாலியல் ஏற்றத்தாழ்வுகளை முதலீடாக்கி இந்தியாவின் மக்களை வடிவமைத்திருக்கும் பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் இங்கே வறுமையில் இருப்போரும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் மேற்கண்ட அதீத நம்பிக்கைளையும், ரவுடிகளாக இருப்போர் தமக்கும் அறவிழுமியங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.
அதிகமாக நீடிக்கும் தாழ்வு மனப்பான்மை இத்தகைய ஸ்டீரியோ டைப்பான உள்ளீடற்ற அகந்தையை வளர்த்துக் கொள்கிறது. மோடிக்கு கூட நிறைய தாழ்வு மனப்பான்மை இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அல்பத்தனமாக அவர் செல்ஃபி எடுப்பதும், தப்பும் தவறுமாக வரலாறு, இதர விவரங்களை கூறுவதும், மானிட்டரை பார்த்து படித்து விட்டு இன்ஸ்டெண்ட்டாக பேசுவதான பாவனையாகட்டும் அத்தனையும் ஒரு பாசிஸ்டுக்கே உரிய தாழ்வு மனப்பான்மைதான்.
சாதாரண மக்கள் கூட தமது இருப்பை மறந்து தமது பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு சாதி, மத அடிப்படையில் சில கற்பனை விழுமியங்களை வைத்துக் கொள்கின்றனர். ஏழை வன்னியர், ஏழை பறையரை தாழ்வாக நினைக்கிறார். வன்முறை செய்யும் கூலிப்படைகளிடமும் கூட இந்த எண்ணம் இருக்கிறது. “அண்ணன் மது, மாது தொட மாட்டாரு, ரேப் பண்ணினாலும் கொலை செய்ய மாட்டாரு, கை காலை முறிப்பாரே ஒழிய கொலை செய்ய மாட்டாரு, பெண்கள் – குழந்தைகள் தவிர மற்றவர்களை கொலை செய்வாரு” என்று ஏகப்பட்ட மேதமைக் கருத்துக்கள் ரவுடி உலகில் வலம் வருகின்றன. தமிழ் சினிமாவிலும் இதை நிறையக் காணலாம். நிருபயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டோரும் கூட இப்படித்தான் தம்மைக் கருதுகின்றனர்.
மனிதர்கள் போலித்தனமான விழுமியங்களைக் (moral hypocrites) கொண்டவர்கள். பிறருடைய தவறுகளைக் குறித்து அதீதமாக கூச்சலிடுபவர்கள் தங்களுடைய சொந்த தவறுகள் என்று வரும் போது அடக்கியே வாசிக்கின்றனர். தனக்குப் பழக்கமானவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் கெட்ட பண்புகளே காரணம் என்று சொல்லும் ஒருவர், அதே போன்ற ஒரு சூழலில் அதே போன்ற ஒரு தவறைத் தானும் செய்யும் போது அதற்கு தனது கெட்ட பண்புகளே காரணம் என்று சொல்லிக் கொள்வதில்லை (actor-observer asymmetry). தன்னோடு பழகும் ஒருவரின் நடத்தைகளில் எவற்றையெல்லாம் சுயநலமானது என்று ஒருவர் வகைப்படுத்துகிறாரோ அதே போன்ற காரியங்களை இவர் மற்றவரிடம் பழகும் போது வெளிப்படுத்துகிறார்; எனினும், தனது நடத்தையை சுயநலம் என்று வகைப்படுத்துவதில்லை. ஒரு காரியத்தை தனக்குப் பழக்கமில்லாதவர்கள் செய்யும் போது அதில் உள்ள தவறுகளை சரியாக அடையாளம் காட்டுவது – அதே காரியத்தை தானோ தனக்குச் சார்ந்தவர்களோ செய்யும் போது கண்டும் காணாமலும் விடுவது என்கிற இந்த இரட்டை நிலைப்பாட்டின் காரணமாகவே ”சமூகம் கெட்டு விட்டது” என்று பழியை சமூகத்தின் மேல் சாட்டுகின்றனர்.
கம்யூனிஸ்டு கட்சிகளில் இருப்போர் விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது குறித்து ஆசான் மாவோ கூறிய கருத்துக்கள் இந்த ஆய்வு முடிவை புரிந்து கொள்ள உதவும். கூடுதலாக ஒரு நபர் தனது வாழ்க்கை தனது சொந்த திறமையினால் கிடைத்தது என்று வர்க்க சமூகம் எண்ண வைக்கிறது. சோசலிச சமூகத்தில் ஒரு நபர் தனது வாழ்க்கையை இந்த சமூகம் கொடுத்தது என நினைக்கிறார். இந்த இரண்டு சமூகப் பிரிவில் வரும் மனிதர்களின் ஈகோவும் ஒன்று அல்ல. எந்த பதவி அல்லது உறவில் இருந்தாலும் தனது உரிமைகள் – கடமைகள் – விதிகள் அனைத்தும் மக்களின் கண்காணிப்புக்கு உட்பட்ட ஜனநாயக முறைகளில் இருக்கும் போது எந்த நபரும் தனது தவறு குறித்து சுயவிமர்சனம் செய்வது பிரச்சினை இல்லை.
மாறாக இன்றைய சமூகத்தில் அப்படியான ஜனநாயக முறைகளும், நிறுவனங்களும் இல்லை. இருப்பதெல்லாம் மக்களுக்கு உரிமையற்ற போலி ஜனநாயக நிறுவனங்களே. அதனால்தான் ஒரு குடும்பத்தில் அப்பா எனும் நபர் பார்ப்பனியத்தின் தந்தை வழி ஆணாதிக்க அதிகாரத்தைக் கொண்டு வாரிசுகளை அடக்கி ஒடுக்குகிறார். அதன் தவறுகளை மற்றொரு தந்தை கூறினால் கூட காது கொடுத்து கேட்க மாட்டார். இதை போலீசு, நீதிபதி, கலெக்டர், ஹெச்.ராஜா, மோடி என விரித்துப் பார்த்தால் இவர்களது திமிருக்கும் மற்றவரின் கருத்துக்களைத் தட்டிக் கழிக்கும் அலட்சியத்திற்கும், தவறுகளை ஒப்புக் கொள்ளாமலும், தவறே செய்யாத மக்களை குற்றவாளிகள் எனக் கூறுவதற்குமான காரணங்களை, இணைப்பை அறியலாம்.
மனிதர்கள் இயல்பாகவே இணைய பொறுக்கித்தனத்திற்கு (Internet Troll) ஏதுவானவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஒரு பாதுகாப்பான முகமூடியை வழங்குவதால் மெய் உலகில் சாதுவானவர்களாக அறியப்படுகின்றவர்களும் கூட மெய் நிகர் உலகினுள் நுழையும் போது தங்களது குரூரங்களை இயல்பாக அரங்கேற்றுகின்றனர்.
தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதற்கோ தேவையோ வாய்ப்போ இல்லை. போயஸ் தோட்டத்தின் அதிகாரத்தை யாரும் தட்டிக் கேட்க முடியாது எனும் போது அங்கே ஜெயலலிதா யாரையெல்லாம் அடித்தார், உதைத்தார் என்று அறிய முடியாது. அறிந்தாலும் அதை பொது வெளியில் பேசி தண்டிக்க முடியாது.
எனவே இன்றைய ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பின் சாதகங்களை அனுபவிப்போர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தண்டிக்க முடியாது எனும் போது அவர்கள் இணைய பொறுக்கித்த்தனத்தில் ஈடுபவது வியப்பல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ட்ரோல்கள் முன்னணியாக செயல்படுவதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம். மறுபுறம் பார்ப்பனியம் தோற்றுவித்த சாதி, மத, பாலியல் ஆதிக்க எண்ணங்களும் இணையத்தில் அரங்கேறுவதை புரிந்து கொள்ளலாம். சேலம் வினுப்பிரியாவின் படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக மாற்றிய நபரின் செய்கை அதற்கோர் சான்று.
சைக்கோத்தனமான குணங்களைக் கொண்டுள்ள திறமையற்ற தலைவர்களையே மனிதர்கள் விரும்புகின்றனர். டான் மெக் ஆடம்ஸ் என்கிற உளவியல் நிபுணர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து நடத்திய ஆய்வின் இறுதியில் இந்த தீர்மானத்திற்கு வருகிறார். அந்த் ஆய்வின் முடிவுகளை நியூ யார்க்கில் உள்ள நிதி நிறுவனங்களுடைய தலைமைச் செயல் அலுவலர்கள் மீது பொருத்திப் பார்த்த போது, பெரும்பாலும் நிறுவனங்களின் தலைமைப் பதவியை அடைகின்றவர்களுக்கு முடிவெடுக்கும் அறிவுத்திறனை விட சைக்கோத்தனமான சிந்தனைப் போக்குகளே மிகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சைக்கோ என்பதை விட வில்லனாக பேசுபவர்களை மக்கள் ஏன் ரசிக்கிறார்கள் என்று பார்க்கலாம். அதிபர் ட்ரம்ப் முதலாளித்துவத்தின் தீவிரமான ஆதரவாளர் என்பதை தனியே விளக்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளையின தொழிலாளிகளிடம் வேலை இழப்பு பற்றி பேசும் போது அதற்கு காரணமான சீனாவை ஒழிப்பேன் என்று கூறுகிறார். கூடவே அமெரிக்காவின் அமைதியான – அதாவது ஜாலியான – வாழ்வில் திகில் காட்சிகளை கொண்டு வரும் முஸ்லீம் பயங்கரவாதிகளை ஒழிப்பேன், விசாக்கள் கொடுக்க மாட்டேன் என்று கூறும் போதும் மக்கள் ரசிக்கிறார்கள்.
சரி, ட்ரம்ப் உண்மையிலேயே அமெரிக்க முதலாளிகளை பகைத்துக் கொண்டு வெளிநாட்டு உற்பத்திகளை ஒழிக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போன்று சவுதி அரச குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் ஆதரிப்பவரும் இவர்தான். பத்திரிகையாளர் ஒருவரைக் கொன்ற சவுதி அரச குடும்பத்தைக் காப்பாற்றுவதும் அமெரிக்க அரசுதான். இந்தியாவில் பால் தாக்கரே கூட அவரது மராட்டிய மாநிலத்தில் இத்தகைய வில்லன் பேச்சுக்களை பேசியவர்தான். ஆனால் அதை மராட்டிய இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சினை என்ற முகாந்திரத்தில் பேசினார். முசுலீம்கள், தமிழர்கள் மீதான வன்மம் அப்படித்தான் அவரால் பற்ற வைக்கப்பட்டது.
பொருளதாரப் பிரச்சினைகளின் போது இத்தகைய இன – மத – நிறவெறிப் பேச்சுக்கள் மக்களை திசை திருப்பும் வண்ணம் கிளப்புகின்றன. இதில் யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களை மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் இறுதியில் இந்த வில்லத்தனத்தை மக்கள் புரிந்து கொள்ளும் போது பழைய வில்லன்கள் காலாவதியாகிறார்கள். புதிய வில்லன்கள் வருகிறார்கள். இன்று மோடி முதல் உலகம் முழுவதும் புற்றீசல் போல உருவாகியுள்ள நாஜிக் கட்சிகளும் அப்படித்தான்.
இறுதியாக, எதிர்மறையான ஆளுமைகளைக் கொண்டவர்களின் மீது ஒரு இயல்பான ஈர்ப்பு ஏற்படுவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.
எதிர்மறையான ஆளுமைகள் மீதான ஈர்ப்பு மீது ஒருவிதமான பரபரப்பு மட்டுமே. அமைதியான வாழ்வில் அமைதியாக சென்று கொண்டிருக்கும் மக்கள் ஏதோ ஒரு அளவில் இத்தகைய எதிர்மறைகளை கண்டு வியக்கிறார்கள். வியத்தலின் காரணமாக வரும் ஈர்ப்பு பற்றாக ஆக வேண்டுமென்பதில்லை.
இலக்கியவாதிகள் சிலர் நாடறிந்த அரசியல் கட்சிகள், தலைவர்களை கண்ணியமாக பேசுவார்கள். ஆனால் சாதாரண மக்கள், தொழிலாளிகளை எழுத்தில் இல்லாத கெட்டாத வார்த்தைகளில் பேசுவார்கள். அல்லது ஆபாச வார்த்தைகளை, கட்டுப்படே இல்லாமல் பாலியல் விசயங்களை எல்லாரும் பேசுவார்கள். கேட்பவர்களும் இவர் பெரிய கலகக்காரர் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் தொடை நடுங்கிகள் என்பதுதான் உண்மை. எனவே எதிர்மறை ஆளுமை ஈர்ப்பு என்பது நேரடி பொருளில் புரிந்து கொள்ளத் தேவையில்லை.
*****
மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்டவை. இவற்றின் முடிவுகள் மக்களிடையே இருக்கும் பிற்போக்கான கருத்துக்கள், முடிவெடுக்கும் தன்மை, தலைவர்களின் மீதான நம்பிக்கை போன்றவற்றுக்கான காரணங்கள் சிலவற்றை முன்வைக்கின்றன. குறிப்பிட்ட சமூகச்சூழலில் உருவாகும் மக்களின் பண்புகள், கருத்துக்கள், நம்பிக்கை அனைத்தும் அதே சூழலின் பாதிப்போடுதான் இருக்கும் என்பது ஒரு உண்மை. மேற்கண்ட முடிவுகளை வெறுமனே முடிவுகள், திட்டவட்டமான போக்குகள், மக்கள் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று முடிவு செய்து கொள்வது தவறு. மாறாக அந்த முடிவுகளுக்கான சமூகக் காரணங்களைத் தேடினால் நாம் இன்னும் தெளிவாக இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ளலாம்.
முதலாளித்துவ உலகின் நிச்சயமின்மை மனிதர்களின் அற விழுமியங்களை மிகப் பாரிய அளவில் பதித்துள்ளது. வேலையிழப்பு, வேலையின்மை, பிழைப்புக்காக அதீத உழைப்பு, வேலையைத் தக்க வைத்துக் கொள்ள கழுத்தறுப்புப் போட்டி, சமூக பாதுகாப்பின்மை, இவற்றின் விளைவாய் ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் மற்றும் உடல் ரீதியான நோய்கள் என ஒரு தனிமனிதனைச் சுற்றிலும் அபாயகரமான சூழல் வளர்ந்து வருகிறது. முதலாளித்துவ சமூகம் தோற்றுவித்துள்ள பிழைப்புக்கான போராட்டம் தனி மனிதர்களிடமிருந்து சக மனிதர்களை நேசிக்கும் பண்பினை மறக்கச் செய்து வருகிறது.
இவற்றைக் கொண்டு மொத்தமாக மனித சமூகமே சீரழிந்து விட்டதாக முடிவு செய்து விட முடியுமா?
ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த நாட்களில் பகலென்றும் இரவென்றும் பாராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மெரீனா கடற்கரையில் குவிந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக குவிந்த அந்தப் போராட்டத்தின் போது ஒரு பாலியல் அத்துமீறல் இல்லை, திருட்டு இல்லை.காரணம் ஒரு பொதுநோக்கத்திற்கான இந்தப் போராட்ட ஒன்று கூடல் மக்களிடையே இருக்கும் நல்லெண்ணங்களை, விழுமியங்களை குறிப்பிட்ட சூழலில் உயர்ந்த அளவில் வெளியே கொண்டு வருகிறது. இந்த போராட்டச் சூழல் முடிந்து மக்கள் வழமையான வாழ்விற்கு திரும்பும் போது அவர்களிடையே இருக்கும் பிற்போக்கான கருத்துக்கள் வெளியே வரலாம். கூடவே புதிய முற்போக்கு கருத்துக்களை அவர்கள் எண்ணிப் பார்க்கும் வழக்கத்தினையும் துவங்கியிருக்கலாம்.
மெரினாவில் கூடியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றியோ, தமிழர் பாரம்பரியம், பெருமைகள் உள்ளிட்ட இன்னபிற பிரச்சினைகள் குறித்து முழுவதும் தெரிந்திருக்காது. தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான பார்ப்பனிய இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து வீழ்த்துவது என்கிற அரசியலும் மக்களை அங்கே இணைத்திருக்கிறது. மோடி அரசின் தொடர் தாக்குதலுக்கான எதிர்விளைவாகவும் இதை நாம் கொள்ளலாம். ஜல்லிக்கட்டு என்கிற வடிவத்தை எடுத்த போராட்டத்தில் மக்கள் ஒரு புதிய நடைமுறையை மேற்கொண்டு தமது நிலையை கொஞ்சம் மாற்றுகிறார்கள்.
யார் நல்லவர், கெட்டவர் என்பதை முடிவு செய்வதை பொதுமைப்படுத்துவதை விட குறிப்பான சூழலில் பரிசீலிக்கலாம். பொதுவாக பரிசீலிக்கும் போது கூட இத்தகைய தனித்தனி அம்சங்களிலிருந்து முழுமையை நோக்கி ஆய்வு செய்யலாம்.
கட்டுரையின் துவக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகள் அச்சுறுத்தக் கூடியவையே என்றாலும் அது முதலாளித்துவ சமூக அமைப்பு ஒரு தனி மனிதனிடம் உண்டாக்கியிருக்கும் சீரழிவுகள் தாம். இந்த குறிப்பிட்ட சமூக அமைப்பு மாறும் போதோ அல்லது மாற்றுவதற்கான போராட்டத் தருணங்களிலோ ஒரு நபர் தன்னை வேறு விதமாக ஒரு சமூக மனிதராக, சமூகம் குறித்து அக்கறைப்படுபவராக வெளிப்படுத்திக் கொள்கிறார், உணர்கிறார்.
அப்போது தனிப்பட்ட உணர்ச்சிகளை சமூக உணர்வு செல்வாக்கு செலுத்துகிறது. அந்த சமூக உணர்வில் ஒருவன்/ள் தொடர்ந்து தோய்ந்து நிற்கும் போது மெல்ல மெல்ல தனிப்பட்ட உணர்ச்சிகளும் ஆற்றுப்படுத்தப்பட்டு அவன்/அவள் பக்குவமடைகிறார்கள். அதன் பின் அவனது தனிப்பட்ட சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் “நல்லவைகளாக” ஆகின்றன. ஏனெனில் அவை தனித்துவமாக இருந்தாலும் அவற்றின் தோற்றுவாய் ஒரு சமூகம் என்பதால்!
இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்திக் கொள்ளும் மாணவர்கள்.
அரசுப் பள்ளி என்ற தலைப்பில் வாசகர் துன்மதி குமரவேல் அனுப்பிய படங்கள் இவை. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை எனக் காரணம் காட்டி படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற எத்தனையோ அரசுப் பள்ளிகள் நமக்கு தெரியமலேயே இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.
இப்பள்ளிகள் பல அந்தந்த ஊர்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்களின் முன்முயற்சியால் சிறப்பாக நடக்கின்றன. அலங்காரங்கள் ஏதுமின்றி அழகாக செயல்படும் பள்ளிகளை நாம் முதலில் பார்வையிட வேண்டும்.இங்கே நாம் பார்ப்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளின் புரட்டு சாதனைகளை விளம்பரங்களாக திணிப்பார்கள். அரசுப் பள்ளிகளின் சாதனையை நாம்தான் பரப்ப வேண்டும்.
திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – பசுமையாக இருக்கிறது.பள்ளிக்கு ஆர்வத்தோடு வரும் மாணவர்கள்.இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்தும் மாணவர்கள். குறைவான மாணவர்கள் இருந்தாலும் அணிவகுப்பின் நேர்த்திக்கு குறைவில்லை!“நீ ஏன் அந்த மாணவியுடன் பேசினாய்” என்று ஆண் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கின்றன தனியார் பள்ளிகள். ஆனால், ஆண் – பெண் பேதமின்றி அருகருகே உட்கார வைத்து சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்கிறது அரசுப் பள்ளிகள்.ஏழெட்டு பேர் பைக்குகளில் சாகசம் காட்டுவது, வானத்திலிருந்து பாதுகாப்பாக கடலில் விழுவது என ’சாகசங்களுக்காக’ பல கோடி ரூபாய்கள் செலவு செய்து கோட்டைகளில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. மறுபுறம், கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள்.நீங்கள் நினைவுகூறும் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…இன்றைய செய்தி, அறிவிப்புகள், பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் காலை வணக்க நிகழ்வில் உண்டு. பங்கேற்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பும் உண்டு.
படங்கள்: துன்மதி குமரவேல்
நீங்களும் புகைப்படம் அனுப்ப வேண்டுமா? அடுத்த வாரம் விளையாடும் குழந்தைகள் எனும் தலைப்பில் படமெடுத்து அனுப்புங்கள்! விவரங்களுக்கு இணைப்பை அழுத்துங்கள்!
ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைமையும், துக்ளக் குருமூர்த்தி சூப்பர் தலைமையும் இணைந்து,10-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி 2019, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னையில் நடத்தின. சென்னை தாம்பரம் வேளச்சேரி சாலையில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள குருநானக் கல்லூரி வளாகத்திற்குள் 400 கடைகளை உள்ளடக்கியது இக்கண்காட்சி. அப்பட்டமான பிற்போக்கு சிந்தனை – பண்பாடுகளை முன்னிறுத்தும் இக்கண்காட்சிக்கு அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வரிசையில் இலவச விளம்பரங்களை அளித்தன.
ஜீவராசிகளை பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியரை வணங்குதல், பெண்மையை போற்றுதல், சுற்றுச்சூழலை பராமரித்தல், நாட்டுப்பற்று வளர்த்தல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், என்ற தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. தலைப்புக்கள் இப்படி இருந்தாலும் ஒவ்வொன்றிலும் இந்துத்துவாவின் மறைமுக பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் அப்பட்டமாக இருந்தன.
மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழகத்தின் சாதிய அமைப்புகள் அனைத்தும் அங்கு கடை போட்டன. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு வேளாளர், ராஜ கம்பளத்தார், மறவர், வெள்ளாள முதலியார், கவுண்டர், வன்னியர், இன்னும் தமிழகத்தின் பல சாதி அமைப்புகளும் தங்களுடைய சாதிய பராக்கிரமங்களை பல்வேறு மாடல்களில் கடைவிரித்தன.
(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )
இந்நிகழ்ச்சியை காண நாம் சென்றபோது அங்கு கண்டகாட்சி நம்மை திடுக்கிட வைத்தது. நடைபயில ஆரம்பிக்கும் பள்ளி குழந்தைகள் இருந்து பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை ஏறக்குறைய கூட்டத்தில் பாதிப்பேர் பள்ளி சீருடையில் வந்திருந்தனர். உயர்ஜாதி கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் கேன்டீனில் வாங்கிய டில்லி அப்பளத்தை கடித்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர். வயதான மாமிகளும் கறுப்பு சூத்திரர்களும் ஆன்மீகத்தை தேடி இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர்.
நவராத்திரி பூஜை, ஸ்ரீ கிருஷ்ண சம்ஸ்கார யோகா, பாரதிய சம்ஸ்கார, பரதமுனிவர் நடனம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், திருவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மங்கள தீர்த்தம், கலச யாத்திரை என்று தெருகோடி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் மொத்தம் ஆன்மீக மற்றும் சேவை நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. அறிவியல், சுதந்திரம், பண்பாடு, என்று வார்த்தைகளைத்தூவி பல்வேறு பார்ப்பன, ஆதிக்க சாதிய பெருமைகள் ஒலி, ஒளி காட்சியாக ஓடிக்கொண்டிருந்தன.
கார்ப்பரேட் சாமியா ரவிசங்கரின் வாழும் கலை மகாமித்தியங்கள், ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா வகைப்பட்ட சூட்சுமங்கள், மாதா அமிர்தானந்தமயி-யின் சென்டிமெண்ட் கட்டிப்பிடி வைத்தியங்கள், ஆர்.எஸ்.எஸ்.-ன் பழங்குடி அமைப்பான வனவாசி சேவா கேந்திராவின் காட்டுக்குள்ளே இந்துத்துவா…. இந்தப் பெரிய கம்பெனிகளோடு சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபா, ஸ்ரீ பூர்ண மகா மேரு டிரஸ்ட், பிரணவ ஆசிரமம், இந்து தர்மா வித்யாபீடம், சம்ஸ்கிருத பாரதி, ஸ்ரீ ஓம்காரம் இறை பணி மன்றம், இப்படி பல நூறு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சில்லறை அமைப்புகள் தமிழகத்தின் பலமூலைகளிலிருந்து வந்து இந்துத்துவ பார்ப்பனியத்தின் மகிமையை மணம் பரப்பின. கூடவே யோகக்கலையை இரண்டு வினாடியில் கற்றுக் கொள்வது எப்படி? உடலின் அனைத்து உபாதைகளையும் மூச்சுப் பயிற்சியில் தீர்த்துக்கொள்வது எப்படி? என்று பாடம் எடுத்தனர்.
ஞானோதயம் யோகா, உடல் பாதுகாப்பு உயர்தவம், ஆனந்தம், இறைநிலை, முக்தி அடைவது எப்படி? அதற்கு தேவைப்படும் காலம் பணம் எவ்வளவு என்று விளக்கம் கொடுத்தனர். அஸ்வினி யோகி என்ற பெண் தொண்டர், தன் உடலை வளைத்து நிகழ்த்தும் யோகக்கலையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து வழவழ தாள்களில் விநியோகித்தனர்.
பழந்திருக்கோயில்களில் திருப்பணி சங்கம், தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு என்று திடீர் அமைப்பினர் நமது பாரம்பரியமான திருக்கோயில் கோபுரத்தில் காவி கொடியை பறக்கவிட வேண்டும், கிராமப்புறங்களில் கோயில் இல்லாத இடங்களில் திருக்கோயில்களில் கட்டித்தர வேண்டும் அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும், ஒவ்வொருவரும் நம் குலதெய்வ கோயிலை மீட்போம், இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இந்து சாம்ராஜ்யம் படைத்திடுவோம், என்று இவர்கள் தினுசு தினுசாக பயமுறுத்தினர். இந்த இந்து திருக்கோயில் கூட்டமைப்புகள் எந்த அரசியல் சார்ந்தது இல்லை என்று பல கலர்களில் பிரசுரம் வினியோகித்து பேசிப்பார்த்தால் தங்களை அப்பட்டமான அம்பி சங்கிகளாக காட்டிக் கொண்டனர். ஐயரு மரு வெச்சு மாறு வேசத்துல வந்து பேசுறாராம்.
கண்ணன் வழி நடப்போம் காமதேனுவாக பசுக்களை பேணி பராமரிப்போம், ‘அர்ஜென்ட் டு சேவ் கவ்ஸ்’, இலாபகரமாக கோசாலை ஒரு வழிகாட்டி, பஞ்சகவ்விய பொருட்கள் தயாரிப்பு முறைகள், வாஸ்து தோஷம் நீக்கி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் கோமதி சக்கரம், கோமாதா பசுவின் சக்தி இந்த கோமதி சக்கரத்தில் உள்ளதால் புண்ணியம் கிடைக்கும்,அயோத்தியா, மதுரா, ஹரிதுவார், காசி, காஞ்சி, துவாரகை போன்ற ஏழு சாஸ்திரங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று வந்திருக்கும் மக்களை கவர இன்ஸ்டன்ட் ஆன்மீக பலன்களை அள்ளி விட்டனர். இரண்டே நிமிடத்தில் மாகி நூடில்ஸ் போல, ப்ரூ காஃபி போல இரண்டே மணிநேரத்தில் இந்தக் கண்காட்சியில் சுற்றினால் நமது நனவிலி மனதில் இந்துத்துவம் வேராய் நுழைவது உறுதி.
தயாரிக்க தேவையான பொருட்கள் கோமூத்திரம் 2 லிட்டர், இதே மாதிரி ஷாம்பு தயாரிக்க தேவையான கோமூத்திரம், கோமூத்திரத்தில் உள்ள தாதுப் பொருட்கள், பசு பாதுகாப்பு மற்றும் பசு பொருள் தயாரிப்பு பயிற்சி ஆலோசனை மையம் என்று கண்காட்சியில் மூத்திரத்தை ஏமாந்தவர்களின் தலையில் கட்டினர்.
அடுத்து பியூர் பிரேயர் செய்வது எப்படி? தன்வந்திரி ஹோமம், நவ சண்டி ஹோமம், சுத்த புருஷ ஹோமம் செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொள்ள ஶ்ரீ யூ ட்யூப் சேனலை இலவசமாக பாருங்கள்! அதில், சபரிமலை உட்பட பல கோயில்களில் ஐதீகங்கள் உடைக்கலாமா? இந்து தெய்வங்கள் அவமானப் படுத்தலாமா? சங்க இலக்கியங்களும் இதிகாசங்களும் திருமுறைகளும் வேதங்களும் சிதைக்கலாமா? இந்து ஆலயங்கள் சூறையாடப்படலாமா? இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் மோசடி நடக்கலாமா? ஆசை காட்டி அச்சுறுத்தி ஏமாற்றி அப்பாவி இந்துக்கள் மதம் மாற்றபடலாமா?
நம் தாய்மொழி அழிவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா ? இந்து வேறு தமிழ் வேறு என்பது சரியா? விடை காண ஶ்ரீ யூ ட்யூப் டிவி சேனலில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், என்று போவோரை வழி மறித்தனர்.
அடுத்த கடையில், நவகிரக ஸ்தலங்களைப் பார்க்க விரும்புவோர் கீழே உள்ள எண்ணுக்கு அழைக்கவும் என்றனர். அடுத்தக் கடையில் 10 நாளில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது எப்படி? கட்டணமும் இல்லை! சமஸ்கிருத மொழியில் முன் அனுபவமும் தேவை இல்லை! என்றனர்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் விடுவதாக இல்லை. சுவாமி விவேகானந்தா ‘ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் எஜிகேசன். அவைல் டேக்ஸ் எக்ஸம்சன்‘ கடைகள். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் ஆலய திருப்பணிக்கு கைங்கரியம் கொடுங்கள் 10,000 வழங்குபவர் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று சொல்லும் கடைகள்.
யாருமே அறியாத சிவரகசியம்! இன்புற வாழ மனிதனுக்கு அறிவு போதாது! இந்த தத்துவமும் அடங்கிய 10 சிடி, சிறப்பு சலுகை ஆயிரம் ரூபாய் இல்லை, வெறும் 400 ரூபாய்! என அழைக்கும் கடைகள். ஸ்ரீ லட்சுமி இயற்கை மூலிகை ஒரு மண்டலம், 48 நாட்கள் அருந்தி வர கிடைக்கும் பயன்கள்! அவற்றை ருசி பார்க்க சாம்பிள் கொடுக்கும் கடைகள்.
அகில உலக இந்து சேவா சேனாவில் இந்து திருக்கோயில் இறைப்பணி, சித்த மருத்துவம், தற்காப்பு, பாரம்பரிய கலைகள், இயற்கை வாழ்வியல், சட்ட விழிப்புணர்வு, மனித உரிமை பெற அனைத்து இந்து சமூகத்தை சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் இறை பக்தர்கள் அனைவரும் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அகில உலக இந்து சேவா சேனாவில் இணைந்து இறைத்தொண்டு புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம். உடனே அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்! என்று அழைக்கும் கடைகள்.
ஓம் நமோ நாராயணி ஸ்ரீ நாராயணி பீடம். ஸ்ரீ நாராயணி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்… இப்படிக்கு ஸ்ரீநாராயணி பக்த சபா. என்று அறிவிக்கும் கடைகள். கோயில் இறைவன் கோயில் இறைப்பணி செய்ய கீழ்கண்ட வங்கிகளில் காணிக்கை செலுத்துங்கள். இப்படிக்கு பழந்திருக்கோயில்கள் திருப்பணி சங்கம், சிவாலயங்களில் விளக்கு ஏற்றும் குழு.. என்று முகவரி கொடுக்கும் கடைகள்.
இவ்வளவு நாளும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கைலாச நாதர் கோயில் திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்! அதன் மூலம் அவர்களைத் தங்கள் அடியாளாக பயன்படுத்துவதுதான்! அதை கறுப்பு சூத்திரர்களிடமிருந்து மறைக்க இந்த கண்கட்டு வித்தை. ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் தங்களை மறைக்க முகத்தில் மரு ஒட்டியிருந்தாலும் வழக்கம்போல் தங்கள் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்!
கண்காட்சியை சுற்றி வந்த நாம் நமக்கும் ஒரு கடை வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கண்காட்சி நிர்வாகியிடம் பணிவாக பிட்டுப் போட்டோம். அவர் நீங்கள் எந்த ஊர் என்று விசாரித்து சரி உங்கள் பெயரில் ட்ரஸ்ட் பதிவு பண்ணியிருக்கீறீர்களா? அது இருந்தால் இங்கு நுழையலாம் அப்படி வந்துவிட்டால் கடைக்கு வாடகை கிடையாது. மொத்தமும் இலவசமாக கிடைக்கும். கடையில் வேலைச் செய்யும் இருவருக்கு தினமும் சாப்பாடும் இலவசம். அப்படி இல்லையென்றால் நீங்கள் குறைந்தது ஏதாவது தர்ம காரியங்கள் செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவாரப்பணி போல் கோயில் பராமரிக்கும் பணி இப்படி ஏதாவது செய்திருந்து அதற்கு போட்டோ அல்லது ஏதாவது அதற்கு அத்தாட்சி (விளம்பரம் நகல்) இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நீங்கள் மொத்தமாக வெறும் 5,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், இப்போதே அதற்கான அப்ளிகேஷன் கொடுத்தால்தான் அடுத்த கண்காட்சியில் இடம் கிடைக்கும்.
நாங்களும் உங்களைப்பற்றி முழுமையாக விசாரித்து தான் (உள்ளூர் சங்கிகளின் அத்தாட்சி கடிதம் அவசியம்) முடிவெடுப்போம். ஏனென்றால் போன ஆண்டு கண்காட்சி நடத்துவதற்கு எங்களுக்கு ஆன செலவு வெறும் இரண்டரைகோடி (ரூபாய்) தான் இந்த ஆண்டு செலவு ஐந்து கோடி ஆகி விட்டது! நாங்களும் சமாளிக்க வேண்டும் இல்லையா? எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர்வாள்தான் செய்கிறாள்.
எதுவும் இங்கு மறைவாக கிடையாது. எல்லாவற்றுக்கும் ப்ளக்ஸ் அடித்து இங்கு வைத்திருக்கிறோம் பாருங்கோ… என்றார். என் போன் நம்பர் இதுதான் மேற்கொண்டு பேசுவோம் என்றார். சரி என்று நாமும் விடைபெற்றோம்!
வெளியில் அந்த பிளக்ஸ் பேனரைத் தேடினோம். உண்மையாகவே இருந்தது. ஆனால், அந்த கணக்கு உண்மையா என்று தெரியாது! அப்படியே அங்கு நிறுத்தியிருந்த பல ரதங்களை பார்த்து பிரமித்தோம். நாம் வீட்டு வாசலில் நாம் செருப்பு விடுவதுபோல் ஒவ்வொரு சாமியாரும் அவர்கள் வந்ததற்கு அடையாளமாக ஒரு ரதத்தை நிறுத்தியிருந்தனர். அதில் அமர்ந்திருந்த அந்த ரத ஓட்டுனரிடம் (டிரைவர்) பேச்சுக் கொடுத்தோம். ஒருவருக்கும் தமிழ் புரியவில்லை. இந்தி, தெலுங்கு என்று பல பாஷைகளில் நம்மை விசாரித்தனர். கடைசியில் தெலுங்குக்காரர் நம்மிடம் மாட்டினார். பேசினோம்.
ஈ வண்டி ஏ மாடல்? ஈ வண்டி அந்தும் பெநத்த மாடல் எய்சர். ஈ வண்டி டப்பு எந்த தேலுசா? 10 லேக்ஸ்! அன்னி ஈ டேகரேசன் 20 லேக்ஸ்! மா ஊரு தெலுங்கானா. ஈ வண்டி ஆ கவமெண்ட் சப்ளை சேசின்னு.. மா க்கூட கவர்மர்ன்ட் ஸ்டாப். என்று பாதி ஆங்கிலத்தில் கலந்து நமக்கு புரிய வைத்தார்.
ஒரு ரதத்திற்கு இருபது இலட்சம் செலவழிக்கும் இந்த காவி பண்ணையார்கள் மக்களிடம் உண்டியலில் காசு வசூலித்து கட்சி நடத்தும் கம்யூனிஸ்களைப் பார்த்து, கிண்டல் செய்வதற்கு ஒரு அடிப்படை நியாயம் இருக்கிறதல்லவா! மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டினோம்.
வரும் வழியில் பல காட்சிகள் மனதில் ஒடின! கண்காட்சியில் பசு புனிதம் பற்றி விளக்கி காட்சிக்கு வைத்திருந்த பல படங்களில் நாட்டில் வாழும் மொத்த சூத்திரர்களையும் பசு மாதாவின் ரத்தத்தைக் குடிக்கும் அசுரர்கள் போல் காட்சிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கண்காட்சியின் அஜெண்டா நமக்கு தெளிவாக புரிந்தது. அவர்கள் கொண்டையை வழக்கம் போல் ஆன்மீகம், சேவைக் கண்காட்சி என்ற வார்த்தைகளைக் கொண்டு மறைக்கிறார்கள்.
எடப்பாடியின் ஆட்சியில் எட்டுத் திக்கும் சங்கிகள் வளர்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியை முற்போக்கு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து மக்களை அணிதிரட்டி மூடுவதற்கு வழி உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் சாதா இந்துக்கள் சங்கி இந்துக்களாக மாற்றப்படுவார்கள், எச்சரிக்கை!
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மதுரையில் எதிர்வரும் பிப்ரவரி 08, 2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணியளவில் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்த கண்டனக் கூட்டம், மதுரை மாநகர், கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் …
பீமா கோரேகன் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்! வழக்கை ரத்து செய்!
ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்யாதே!
பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!
அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!
கண்டனக் கூட்டம்
இடம் : கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை.
நேரம் : பிப்ரவரி 08, 2019, வெள்ளிக் கிழமை , மாலை 05.00 மணி
நிகழ்ச்சி நிரல்
தலைமை : பேராசிரியர் முரளி வரவேற்புரை : பேரா.கிருஷ்ணசாமி
உரை :
எழுத்தாளர் லிபி ஆரண்யா
வழக்கறிஞர்.நாகை.திருவள்ளுவன்
எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்
நன்றியுரை: பேரா.சீனிவாசன்
*****
நண்பர்களே,
பீமா கொரேகான் வழக்கில், பிப். 2, 2019 அன்று அதிகாலையில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டு, தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்.12-க்குப் பின் மீண்டும் கைதாக வாய்ப்புள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரும் பீமா கொரேகான் வழக்கில், ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பீமா கொரேகான் நிகழ்வு : 1818, ஜனவரி 1 அன்று மகாராட்டிர மாநிலம் பீமா கொரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர் 31, 2017 அன்று நூற்றுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்களை உள்ளடங்கிய எல்கர் பரிசத்(Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி. பி. சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.
சாதி ஆதிக்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான தலித் மக்களும் – முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கொரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக, சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் ஜன 1, 2018 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர் எஸ் எஸ் – பாஜக-வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.
இந்தக் கைதுகள் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. பீமா கொரேகான் போன்ற பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட பேராசிரியர் சாய்பாபா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார். வழக்கு, கைதின் வதை குறித்து பேரா. ஆனந்தின் வார்த்தைகளைக் கேளுங்கள்…
“என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிறநிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும். பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்து கொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.
ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன். என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் ஆடம்பரமான வாழ்க்கை எனக்கு எளிதாகவே கிடைத்திருக்கும்.
இருப்பினும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் மட்டும் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான்.
எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.
இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.
இப்போது பீமா கோரேகன் வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாககைது செய்யப்படலாம்என்பது துயரத்தைத் தருகிறது. இது போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை.
நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும்.
எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் … உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மேற்கண்டவாறு ஓர் உருக்கமான, எதார்த்தமான கடிதத்தை நாட்டு மக்களின் பார்வைக்கு முன்வைத்துள்ளார். அறிவுத்துறை சார்ந்த உரிமை செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்து அச்சமின்றி ஓர் அடி முன் வைப்போம். வாருங்கள் நண்பர்களே !
இவண்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), தொடர்புக்கு :94438 52788
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்(PRPC), தொடர்புக்கு :73393 26807
சின்னத்தம்பி என்று பேர்வைக்கப்பட்ட யானை இன்னும் உயிரோடிருப்பதால் ஒருவாரமாக லைவிலும் நம் டைம்லைன்களிலும் விடாப்பிடியாக பொறுமையாக யாருக்கும் தொந்தரவின்றி நடந்துகொண்டேயிருக்கிறான். இல்லையென்றால் சின்னத்தம்பிக்கான கவன ஆயுள் ஒன்றரை நாள்தான்.
பொதுவாக இப்படியெல்லாம் ஆவதில்லை. தன் வழித்தடங்களை இழந்துவிட்ட சின்னத்தம்பிகள் தண்டவாளங்களில் சிக்கியோ ரயில்மோதியோ, மின்வேலிகளைத் தீண்டியோ மரணிப்பதுதான் வழக்கம். கோவைப்பகுதியில் அப்படி தன் குட்டிகளோடு மரணித்த எத்தனையோ சின்னத்தம்பிகளின் கதைகள் உண்டு.
பேர்தான் பேருயிர்… ஆனால் மிகமிக அவமானகரமான மரணங்கள்தான் நம்முடைய யானைகளுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சின்னதம்பிக்கு அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சிலநாள்களாக மனம் பதைபதைக்கிறது.
கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்
பிரதமர் தொடங்கி முதலமைச்சர் வரை ஆதரவு திரட்டி காடுகளை வளைத்துப்போட்டு ஆன்மிகம் வளர்க்கிற ஜக்கி காருண்யா மாதிரியான பெரியதம்பிகளின் மெகா ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்காமல் விட்டால் இன்னும் பல சின்னத்தம்பிகளும் இப்படி திக்குத்தெரியாது நாட்டில் அலைய நேரிடும். போலவே, எல்லா சின்னத்தம்பிகளுக்கும் இப்படி பிழைத்திருக்கும் வாய்ப்புகளும் அமையாது.
வன ஆக்கிரமிப்புகள் பற்றியும், யானை வழித்தடங்கள் குறித்தும், காட்டுயிர் குறித்த சிந்தனைகள் குறித்தெல்லாம் நிறைய நிறைய உரையாடுவதற்கான வாய்ப்பை சின்னத்தம்பி உருவாக்கியிருக்கிறான். ஆனால், சின்னத்தம்பியும் இன்னுமொரு டிக்டொக் வைரல் வீடியோவாகவே நம்மிடம் கடந்துசெல்கிறான். காட்டுயிர்களுக்கான வாழ்விட உரிமை குறித்த விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.
அது எப்படி பெருவணிக நிறுவனங்களின் மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24 மணிநேரமும் நம்மால் பேச முடிகிறது?
சின்ன தம்பி…. காடுகளின் பேருயிரான யானைகளின் வாழ்வு எவ்வளவு பரிதாபத்திற்குரியதாகவும், போராட்டத்திற்குரியதாகவும் மாறியிருக்கிறது என்பதற்கு நம் கண்முன்னே… நிறுத்தப்பட்டிருக்கும் துயர்மிகுந்த சாட்சி. மயக்க ஊசியால் அதன் நினைவை சிதைத்து, பொக்லைனால் தந்தங்களை உடைத்து, கும்கியால் உடலை கிழித்து ஏதோ… அடிமைகளை வதைத்து நாடு கடத்துவதைப் போல, அந்த கம்பீரமான காட்டு யானையை அதன் வாழ்விடத்திலிருந்து அகற்றிய காட்சி, யானைகளுக்கு எதிராக தொடரும் அரக்கத்தனத்தின் நீட்சியாக ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.
அத்தனை கொடூர வதைகளுக்குப் பிறகும், அந்த யானை தன் வாழ்விடம் தேடி தவிப்போடு அலைகிறது. ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி வரும் செய்திகள் பதைபதைக்க வைக்கும் வேளையில் இதே போன்ற முயற்சிக்கு சில ஆண்டுக்கு முன் பரிதாபமாக பலியான மதுக்கரை மகாராஜா நினைவில் வந்து அச்சுறுத்துகிறது. சின்ன தம்பியை அதன் போக்கில் விட்டால் மனிதர்களுக்கு ஆபத்து என்று பதறுகிறார்கள் சிலர். சின்ன தம்பியை அதன் இடத்திலேயே விட்டுவிடுங்கள் என்று கதறுகிறார்கள் சிலர். ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த தமிழகத்திலும் உணர்வுப் போராட்டைத்தை மூட்டியிருக்கிறது சின்ன தம்பி. ஏன் இந்த அவலம்.? இது சின்ன தம்பிக்கு மட்டுமான பிரச்னையா? இல்லை, சின்ன தம்பியால் மட்டுமே வந்த பிரச்னையா?
சூழலியலாளர் சலீம் அலி இவ்வாறு எழுதுகிறார்… ‘மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், ‘ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், ‘யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களோ, பயிர் வயல்களில் நுழைந்துவிட்ட யானைகளை விரட்டியடிக்கிறார்கள். பயிர்கள் நாசமான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வேதனையில் யானைகள் மீது சினம்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. யானைகள் ஒன்றும் பொழுதுபோகாமல் ஊருக்குள் ‘வாக்கிங்’ வரவில்லை.
அவற்றுக்கு உணவு வேண்டும். அத்தனை பெரிய உடலின் முழுமையான இயக்கங்களுக்கு, ஒரு யானைக்கு நாளன்றுக்கு சுமார் 200 கிலோ உணவு தேவைப்படும். அந்த அளவு உணவு காட்டில் கிடைக்காதபோது, அவை நகர்ந்து வேறு இடங்களுக்கு வருகின்றன. இந்த எளிய உண்மையை நாம் தொடர்ந்து மறுத்துவருகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழக வனப்பகுதியில், வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி, அதைக் கறாராக நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள்.
பொதுமக்கள் காடுகளுக்குள் நுழைவது பல அடுக்குகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. துப்பாக்கி உரிமங்கள் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழகக் காடுகளில் ‘வேட்டை’ என்பது கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு, வனவிலங்குகளின் எண்ணிக்கைப் பெருகத் தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தில் வனத்துறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விலங்குகளின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருகவில்லை. ஒரு யானையின் மேய்ச்சலுக்குத் தோராயமாக 2 ஏக்கர் தேவை என்று வைத்துக்கொள்வோம். புதிதாக 300 யானைகள் உருவாகியுள்ளன என்றால், 600 ஏக்கர் தேவை. ஆனால், நம்மிடம் உள்ள காடுகளின் பரப்பளவில் மாற்றம் இல்லை. சொல்லப்போனால், பல இடங்களில் தேயிலை எஸ்டேட், ரியல் எஸ்டேட் என்று அவை அழிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், குறைந்த மேய்ச்சல் நிலத்தை அதிக யானைகள் பங்கிட்டுக்கொள்ளும்போது இயல்பாகவே உணவுப் போட்டியும் பற்றாக்குறையும் உருவாகும். இதனால் காட்டில் உணவு உள்ள மற்ற இடங்களைத் தேடி யானைகள் நகர்ந்து செல்கின்றன. அப்படித்தான் காடுகளை ஒட்டியுள்ள ஊர்களுக்கும், பயிர் வயல்களுக்கும் யானைகள் வருகின்றன. அப்படி அவை வருவது, கால் போன போக்கில் வருவது அல்ல.
மேட்டுப்பாளையம் பகுதியில் சமீபத்தில் ஒரு யானை நள்ளிரவில் வந்து நின்றது. விசாரித்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அது யானை வழித்தடமாக இருந்துள்ளது. யானைகளின் ஜீன்களில், அதன் பாரம்பரிய வழித்தடங்களின் பாதைகள் பொதிந்துள்ளன. பல தலைமுறைகளுக்கு முந்தைய வழித்தடத்தைக்கூட ஒரு யானையால் கண்டடைய முடியும். ஆனால், அந்த வழித்தடங்கள் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. காடுகளுக்குள் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்களைக் கட்டி யானைகளின் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் குழம்பிப்போகும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வருவதும் நடக்கிறது.
எப்படி இருப்பினும் இந்த விஷயத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது… யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது என்றால் ஒன்று… அதன் வழித்தடம் மறிக்கப்பட்டதால் வழிமாறி வந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடம் அதன் பாரம்பரிய வழித்தடத்தில் வருகிறது என்று பொருள். அவற்றை அப்படியே விட்டால், அதன்போக்கில் கடந்துசென்று, ஏதோ ஓர் இடத்தில் காட்டுடன் இணைந்துவிடும். மாறாக விரட்டிவிடுகிறேன் என்று வெடி வெடித்து விரட்டினால், வழித்தடம் குழம்பி மேற்கொண்டு அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும்.
இன்று தமிழ்நாட்டில் சுமார் 3,000 யானைகளும், கேரளாவில் சுமார் 2,000 யானைகளும், கர்நாடகாவில் சுமார் 1,500 யானைகளும் உள்ளன. இவை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உணவு கிடைக்கும் இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன; நகர வேண்டும். அதுதான் ஆரோக்கியமான காட்டுக்கு அழகு. இதற்கு இடையூறு செய்யும் வன ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். யானைகளின் பாதுகாப்புக்கு இதுவே முதல்படி!”
இந்த முதல்படியில் அடியை எடுத்து வைக்காமல் சின்ன தம்பியை கும்கியாக மாற்றுவதாலோ… கொடூரமான முறையில் காட்டுக்குள் விரட்டுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது. ஏனென்றால், இது ஒரே ஒரு சின்ன தம்பி யானையின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த யானைகளின் தீராத வலியும் வேதனையும்; கேள்விக்குள்ளாகியிருக்கும் அவற்றின் எதிர்கால வாழ்வும்!
காந்தி, 1948 ஜனவரி 30-ஆம் தேதி அன்று நாதுராம் கோட்சேவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்து நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி 3-ஆம் தேதி கோல்வாக்கர் கைது செய்யப்பட்டார். மறுநாள் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அரசின் அறிவிக்கை, ஆர்.எஸ்.எஸ். ஏன் தடை செய்யப்பட்டது என விளக்கியது. “விரும்பத்தகாத மற்றும் மிக மோசமான ஆபத்தான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்” என கூறியது அந்த அறிக்கை. விவரமாக அந்த அமைப்பின் படுபயங்கரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டது.
“ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கலவரம் செய்தல், கொள்ளை, கொலை, வழிப்பறி, சட்டவிரோதமாக ஆயுதங்களை வெடிபொருட்களை சேகரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் தீவிரவாத செயல்களைத் தூண்டுவிதமாக துண்டுச்சீட்டு விநியோகித்து மக்களை கொலை செய்யவும் ஆயுதங்களை சேகரிக்கவும் அரசு, போலீசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியதும் தெரியவந்துள்ளது” என்றது அரசின் அறிவிக்கை.
எம்.எஸ்.கோல்வால்கர்
அரசின் நடவடிக்கைகள் ஆர்.எஸ். எஸ். இருப்புக்கு சவாலாக இருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்சலக் (அகில இந்தியத் தலைவர்)-ஆக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், இந்த நெருக்கடி நிலையிலிருந்து இந்த அமைப்பை காப்பாற்றத் திறமையுடன் காய் நகர்த்தினார். அடுத்த ஆண்டுக்குள் அந்த அமைப்பு பழைய நிலைக்கு வந்தது. இதைச் செய்ய, அறிக்கைகள், விவாதங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான முயற்சிகள் மூலம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கலவையான அணிதிரட்டல்களை பயன்படுத்தினார். அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல், இந்த அமைப்பின் இருப்பை தக்கவைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
ஆர்.எஸ். எஸ். தடைசெய்யப்பட்ட அடுத்த நாள், கோல்வால்கர் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டே அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது” என்றார்.
“அரசு, ஆர்.எஸ்.எஸ்-ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவித்த நிலையில், தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ கலைத்து விடுவதே நல்லது. ஆனால் அதே நேரத்தில் இந்த அமைப்புக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மறுக்கிறோம்” என்றது கோல்வால்கரின் அறிக்கை.
‘ஆர்.எஸ்.எஸ்-சின் ஆரம்ப நாட்கள்’ என்ற நூலில் வால்டர் ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி தம்லே, “இந்த அறிவுத்தல் மற்றும் தடையையும் மீறி, அதிக எண்ணிக்கையிலான சுவயம் சேவக்குகள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) சந்தித்துக் கொள்வதைத் தொடர்ந்தார்கள்” என்று பதிவு செய்திருக்கின்றனர். இந்த அமைப்பின் அனைத்து மட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், இளம் உறுப்பினர்கள் அமைப்பின் ரகசிய இயந்திரத்தை கட்டியெழுப்பி, பராமரித்தார்கள் என்கிறது அந்த நூல்.
காந்தி படுகொலைக்கான உடனடி திட்டம் இந்து மகாசபையின் ஒரு பிரிவினரால் தீட்டப்பட்டு, குற்றம் நடப்பதற்கான சூழலை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றியது சில நாட்களில் தெளிவாக தெரிய வந்தது.
1948 ஜூலை 18-ஆம் தேதியிட்டு, இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி, உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி படுகொலையில் இந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கை எழுதியிருந்தார்.
காந்தி – கோட்சே
“இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக, குறிப்பாக அந்த முன்னாள் உறுப்பினர் (கோட்சே) மூலம் நாட்டில் இத்தகைய சூழல் உருவாகி, இந்த சோகம் நடக்க காரணமாகி விட்டது. இந்து மகா சபையில் தீவிரமாக இயங்கிய ஒரு பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டது குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள் அரசுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. நாங்கள் திரட்டிய தகவல்களின்படி, தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட இந்த செயல்பாடுகளை நிறுத்தியிருக்க முடியாது.” என சியாம் பிரசாத்தின் கடிதம் சொன்னது.
ஆர்.எஸ்.எஸ். வன்முறையை தூண்டியதற்கு இவை ஆதாரங்களாக இருந்த போதிலும் ஆர்.எஸ்.எஸ்-சின் உறுப்பினர்களுக்கு காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்பிருந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. எனவே, பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.
பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது, அரசு ஒப்புதல் இல்லாமல் எதையும் அச்சிட்டு வெளியிடக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் கோல்வால்கரும் ஆகஸ்டு மாதம் விடுவிக்கப்பட்டார். அதே ஆண்டின் இறுதியில் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் குறித்து கோல்வாக்கருக்கு எழுதினார். அதில், “இந்துக்களை ஒருங்கிணைப்பது அவர்களுக்கு உதவுவது ஒரு விசயம். ஆனால், இவர்களுடைய துன்பங்களுக்காக அப்பாவியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பழிவாங்குகிறேன் என்பது வேறு விசயம்” என்றார் பட்டேல்.
“காங்கிரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நச்சுத்தனமான கருத்துக்களை எந்தவித நாகரிகமும் பாராமல் ஆளுமைகளை அவமதிக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்வது மக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது” எனவும் அந்தக் கடித்ததில் எழுதுகிறார்.
இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் பேச்சு முழுமையும் “மத விசத்தை” பரப்புக் கூடியவை என்கிற பட்டேல், இந்துக்களை கவரவும் அவர்களை பாதுகாக்கவும் இத்தகைய விசத்தை பரப்ப வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
“இதன் விளைவாகத்தான் காந்தியின் மதிப்பில்லா உயிரை தியாகம் செய்து நாடு துயரப்படுகிறது. இப்போது அரசும் மக்களும் ஆர்.எஸ். எஸ்-ஐ எதிர்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காந்திஜியின் கொலையை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன.” (பட்டேலின் உள்ளே இருக்கும் இந்துத்துவம் வெளிப்படுவதை இதில் காணலாம்.)
“இந்த நிலையில் அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ளும் எனக் கருதியது அரசு. ஆனால், பழையபடி அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை தொடர்கிறார்கள் என்றே எனக்கு தகவல் வருகிறது” என்றது பட்டேலின் கடிதம்.
அக்டோபர் மாதம், கோல்வால்கருக்கு விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது. டெல்லிக்குச் சென்று அரசுடன் விவாதித்தார், ஆனால் பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோல்வாக்கார் மீண்டும் கைதுசெய்யப்பட்டார், நாக்பூருக்கு திரும்பினார்.
இந்த இக்கட்டான மற்றும் குழப்பான சூழ்நிலையில், கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்காலத்துக்காக திட்டமிட்டார். ஆர்.எஸ்.எஸ்-ஆதரவாளர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. அதில், “ஆர்.எஸ்.எஸ்-ஐ அரசியல் கட்சியாக மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படும். பக்தியுடனான கலாச்சார பணிகள் எதையும் செய்ய முடியாது என்பதே அந்த யோசனை. இது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்ற கோல்வால்கர், “கலாச்சார பணிகள், அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியோடு இணைந்திருக்கக் கூடாது. எனவே, இந்த யோசனை மக்களுக்கு விருப்பமானது அல்ல என தெரிவிக்கிறேன்” என நிராகரிக்கிறார்.
ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க சத்தியாகிரக போராட்டத்தை டெல்லியில் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கினார் கோல்வாக்கர். இது அவருக்கு கைக் கொடுத்தது. கிட்டத்தட்ட 6000 பேர் அதில் கலந்துகொண்டார்கள் என ஆர். எஸ்.எஸ். கூறுகிறது. பட்டேலும் அதனுடன் நெருக்கம் காட்டுவதில் ஆர்வமாக இருந்தார்.
அந்த சமயத்தில் அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மத்திய குழு உறுப்பினராக இருந்த ஏக்நாத் ரனாடே-விடம் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்து அக்கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டுமானத்துக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டதாக ஆண்டர்சன் மற்றும் தம்லே தங்களது நூலில் சுட்டிக் காட்டுகிறார்கள். நேருவின் சில கொள்கைகளை எதிர்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பட்டேல் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் என அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அம்மைப்பின் தலைவர் சொன்னதாக நூலாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறிவரும் கருத்துக்கு ஆதாரம் தரும்படி கோல்வால்கர், தொடர்ந்து பட்டேலுக்கு எழுதிக் கொண்டிருந்தார். துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த பட்டேலுக்கு அரசிடமிருந்த ஆதாரங்கள் குறித்து தெரியும். ஆனால், ஏன் அவர் அதை கோல்வால்கருக்கோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவிக்கவில்லை என்பது புலனாகவில்லை.
ஆர்.எஸ். எஸ். மீதான பட்டேலின் ஆர்வம், அடுத்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டதில் தெரிந்தது. நேரு வெளிநாட்டில் இருந்த போது, ஆர்.எஸ். எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய அக்கட்சி அனுமதித்தது. இந்த முடிவு பட்டேலின் ஆதரவாளர்களால் ஆதரிக்கப்பட்டது, நேருவின் ஆதரவாளர்களால் எதிர்க்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து, நேரு நாடு திரும்பியவுடன் ஆர்.எஸ். எஸ்-சிலிருந்து விலகினால் மட்டுமே கட்சியில் சேர முடியும் என்ற திருத்ததுடன் அந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.
ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க அரசு ஒரு நிபந்தனையை விதித்தது. அந்த அமைப்பு தனது கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதே அது. அப்போது கோல்வாக்கர், “இந்த சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமூக, கலச்சார துறைகளில் மட்டுமே இது சேவை செய்யும்” என எழுதினார். அதோடு, அமைப்பின் உறுப்பினர்கள், தனி நபர்களாக எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்றும் தேசிய நலன்களை தவிர்த்து, வன்முறை அல்லது தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் மத, இன வெறுப்பை தூண்டும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
சிறையில் அடைத்த ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சாவர்க்கர் வழி வாரிசுகள், தங்களுடைய தடையை நீக்க இந்திய அரசிடமும் சரணடைந்து ஒரு பம்மாத்து அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். காந்தி கொலையை திட்டமிட்டார்கள், அதை விரும்பினார்கள் என்பதும் இயக்கம் மீதான தடை வந்த பிறகு தடை செய்தவன் காலில் விழுவதும் ஒரு பாசிஸ்டின் குணநலன்கள். மேலும் காங்கிரசின் இந்துத்துவ சார்பும் இந்த பிரச்சினையில் இருக்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரித்த வல்லபாய் பட்டேல் அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்க பாடுபட்டதும், இன்று குஜராத்தில் அவருக்கு மோடி அண்ட் கோ சிலை எழுப்புவதும் நடந்திருக்கிறது.
மேலும் தடையை நீக்க நாங்கள் அரசியல் கட்சியாக மாற மாட்டோம், காங்கிரசிடம் சேருவோம் என்றெல்லாம் இந்த ‘வீரர்க்ள்’ ஜெயா காரில் விழும் ஓபிஎஸ்-ஐ போல விழுந்திருக்கிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் இந்திராவால் தடை செய்யப் பட்ட போதும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் இதே போன்றதொரு கடிதத்தை இந்திரா காந்திக்கு அனுப்பியிருந்தார். அதில் இந்திராவை காளி, துர்க்கை, பாரதமாதா என்றெல்லாம் புரட்சித் தலைவியை வழிபடும் ஈ.பி.எஸ் போல கவிதை பாடியிருக்கிறார். இப்படி ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு காந்தியை கொலை செய்து அதை ஒட்டிய தடையை ’சாமர்த்தியமாக’ நீக்கி பிறகு இந்திய வரலாற்றில் நாடெங்கும் பார்ப்பனியத்தின் பேரில் கலவரங்களும் படுகொலைகளும் நிகழ்த்தி வருகிறார்கள்.இந்த வரலாற்றுக்கு பொருத்தமாகத்தான் காந்தி கொலைக்கு பிறகு இவர்கள் மீதான தடை நீக்கம் நடந்திருக்கிறது.
– வினவு
கட்டுரை : ஹர்தோஷ் சிங் பால்
தமிழாக்கம் : கலைமதி நன்றி:கேரவன்
வில்லவன்குழந்தைகளை அடித்து வளர்ப்பது குறித்த இருவேறு கருத்துக்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கின்றன. ஆனால் யதார்த்தத்தில் ஆகப்பெரும்பான்மையோரால் அடிக்காமல் பிள்ளைகளை வளர்க்க முடிவதில்லை. பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் என் அறிவுக்கு எட்டியவரை எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கும் வழக்கம் இருக்கிறது. (அதி மேட்டுக்குடி பள்ளிகளில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்) வீடுகளிலும் இதே நிலைதான்.
இன்றைய பெற்றோர்கள் பலரும் அடிவாங்கி வளர்ந்தவர்கள். அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள். ஆகவே அவர்களில் பலர் ஒரு புதிய நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் ”பிள்ளைகளை வேறு யாரும் அடிக்கக்கூடாது” என்பதுதான் அது. இப்படியான குழப்பங்கள் ஆசிரியர்களிடம் இல்லை. அடிக்கக்கூடாதுங்கறது கருத்தளவில் சரிதான், ஆனால் இன்றைய பிள்ளைகளை அடிக்காமல் திருத்த முடியாது எனும் தீர்மானத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பள்ளிகளில் தண்டனை கடுமையாக இருந்த காலத்தில் கல்வித் தரம் சிறப்பாக இருந்ததாக அவர்கள் தீர்மானமாக நம்புகிறார்கள்.
இப்போது பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன். பத்து வயது சிறுமி தன்னை அடித்த ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார் (நான் காணாமல் போக போகிறேன். என்னை $%@ மிஸ் திட்டிவிட்டார் – இதுதான் கடிதம்). கடுமையாக அடித்துவிட்டு அறைக்கு வந்த பின் பயந்து புலம்பிய ஆசிரியர்களை பார்த்ததுண்டு (இனிமே எதுவும் பண்ணக்கூடாது சார். யாரு எக்கேடு கெட்டா என்னன்னு இருக்கணும்).
சென்னிமலை அரசு பள்ளியில் மாணவர்களை அடித்த ஆசிரியையை தண்டிக்கக்கோரி திரண்ட பெற்றோர்கள்.
இதைத்தவிர வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அடிக்கு மட்டுமே அடங்கிப் பழகிய மாணவர்கள் பூஞ்சையான, அடிக்க யோசிக்கும் ஆசிரியர்கள் வரும்போது கட்டுப்பாடற்று குறும்பு செய்கிறார்கள். அடித்தால்தான் இங்கே குப்பை கொட்ட முடியும் எனும் எண்ணத்தை அது வலுப்படுத்துகிறது. அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த டெக்னிக்கும் பள்ளிகளில் இல்லை. ஆரம்பப்பள்ளியில் அடித்து மாணவர்களை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கிறது. அதே மாணவர்கள் மேல் வகுப்புக்களுக்கு வரும்போது அடிப்பது பெருமளவு உதவுவதில்லை.
குழந்தைகளை அடிப்பது எனும் செயலை மூன்று வேறுபட்ட கோணங்களில் நம்மால் விவாதிக்க இயலும்.
• உடல்ரீதியாக தண்டிப்பதை ஏன் நம்மால் தவிர்க்க முடியவில்லை? • அடிக்காமல் வளர்ப்பது சாத்தியமா? • அடித்து வளர்ப்பதன் பின்விளைவுகள் என்ன?
உடல்ரீதியான தண்டனைகளே பிள்ளைகளை திருத்தும் எனும் அழுத்தமான நம்பிக்கை நம் சமூகத்தில் இருந்தது. ஆகவே அதனை எந்த குற்ற உணர்வும் இன்றி நாம் செய்து வந்திருக்கிறோம். இப்போது அது தவறோ எனும் சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது. இவை அறிவியல்பூர்வமான தரவுகளை மட்டுமே வைத்து எழுபவை அல்ல. குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாக சுருங்கியிருக்கிறது. அவர்கள் மீது செய்யப்படும் முதலீடு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதீத எதிர்பார்ப்பு மற்றும் அதீத பயம் ஆகியவை மிகை முதலீட்டின் தவிர்க்க முடியாத பக்கவிளைவுகள். பிள்ளைகளை அடிப்பதால் எதிர்பார்த்தது கிடைக்காமல் போய்விடுமோ அல்லது முதலீட்டுக்கு சேதம் வந்துவிடுமோ எனும் அச்சம் வருகிறது (அடிச்சு ஏதாவது ஆயிடுச்சுன்னா? அடிச்சதால கோபப்பட்டு ஏதாவது பண்ணிக்கிட்டான்னா?). கூடுதலாக, அடிப்பது நல்லதல்ல எனும் செய்தியும் அவர்களை அரைகுறையாகவேனும் வந்தடைகிறது.
மிகை முதலீடு, மிகை எதிர்பார்ப்பு ஆகியவை பெற்றோருக்கு கடுமையான பதட்டத்தை உருவாக்குகிறது. முன்பிருந்த இணக்கமான சமூக சூழல் இன்று இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட குழந்தைகள் தெருவில் அதிக நேரம் விளையாடவும் அருகே வசிக்கும் குடும்பத்தவரால் பார்த்துக்கொள்ளப்படவுமான சூழல் இருந்தது. இப்போது பார்த்துக்கொள்வது என்பது முற்று முழுதாக பெற்றோர்களின் சுமை. தெருக்கள் விளையாட உகந்ததாக இல்லாத பாதுகாப்பற்ற இடமாகியிருக்கிறது. ஆகவே சிறார்கள் தமது குறும்பை முழுமையாக வீட்டுக்குள்ளேயே காட்டவேண்டிய நிலை உருவாகிறது. இவை எல்லாம் சேர்ந்து பெற்றோரின் மன அழுத்தத்தை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.
பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன்.
இத்தகைய பெற்றோர்கள் மிக சுலபத்தில் கோபப்பட்டு குழந்தைகளை அடிக்கிறார்கள் (காரணம் அவர்கள்தான் எளிய இலக்கு). மிகச்சிறு வயதிலேயே உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதால் அடிவாங்கினால் மட்டுமே கட்டுக்குள் வரும் பிள்ளைகளை கணிசமாக உருவாக்கி பள்ளிக்கு அனுப்புகிறது நமது சமூகம். இப்படியான பிள்ளைகளை கட்டுப்படுத்த எல்.கே.ஜி. ஆசிரியருக்கு மாற்று வழிகள் இல்லை. ஒருவேளை அவர் மிகைக் குறும்பு குழந்தைகளை மன்னித்து அவகாசம் கொடுத்து திருத்த முற்பட்டால், அந்த குழந்தைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் அந்த ஆசிரியரை தொலைத்துவிடுவார்கள் (மற்ற பிள்ளைகளை முரட்டுத்தனமாக அடிக்கின்ற குழந்தைகள் எல்லா பள்ளிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். யாராவது அடித்தால் நீயும் திருப்பி அடி என பெற்றோர் சொல்லிக்கொடுப்பதால் ஆரம்ப வகுப்புக்களிலேயே சண்டைகள் தீவிரமாகிறது என்கிறார் 21 ஆண்டுகளாக கேஜி வகுப்புகளைக் கையாளும் மூத்த ஆசிரியர் ஒருவர்).
முன்பு குறிப்பிட்ட கடுமையான புறச்சூழல் பெற்றோருக்கு மட்டுமானதல்ல, ஆசிரியர்களும் அவ்வாறான நிலையில்தான் வாழ்கிறார்கள். ஆகவே அவர்களும் நிதானமாக நிர்வகிக்க முடியாதவர்களாகி குழந்தைகளை அடித்து மட்டுமே கையாளும் நிலைக்கு செல்கிறார்கள்.
இதன் விளைவுகள் பலவும் மோசமானவை. முதலில் மாணவர்களை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சிக்கலாகிக்கொண்டே வருகிறது. ஒரு ஆசிரியரின் கண்காணிப்பு இல்லா நிலையில் வகுப்பறைகள் எந்த அசம்பாவிதமும் நிகழலாம் எனும் அளவுக்கு செல்கிறது. ஓடி விளையாடி காயமடைவது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது என்பது மட்டுமின்றி இதில் பங்கேற்காத மாணவர்களும் காயமடைவது நடக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் முரட்டுக்குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். அவர்களை அடித்து ஒழுங்குபடுத்துவது எனும் தற்காலிக தீர்வை ஆசிரியர்கள் கைக்கொள்ளும்போது அவர் தன்னை அறியாமல் மேல் வகுப்புகளின் சூழலை மோசமாக்குகிறார்.
அடிப்பதன் மூலம் நம்மால் பிரச்சினையை ஒத்தி வைக்க மட்டுமே முடியும். அந்த கால இடைவெளியில் அப்பிரச்சினை தீவிரமாகிவிடுகிறது. சகிக்க முடியாத அளவுக்கு குறும்பு (அல்லது வேறு சேட்டைகள்) செய்யும் மாணவர்கள் வீட்டிலும் பள்ளியிலும் நிறைய தண்டனை பெறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அப்படி அடிவாங்கி திருந்திய மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. அப்படி யாரையேனும் பார்த்தவர்களையும் நான் பார்த்ததில்லை.
மேல் வகுப்புகளில் அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த வழிகளும் இருப்பதில்லை. இன்னும் கடுமையாக அடிப்பது மற்றும் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிப்பது இதுமட்டுமே மேல்/உயர் நிலை வகுப்புக்களில் உள்ள வாய்ப்பு. சமயங்களில் மாணவர்களுக்கு இடையேயான சண்டை பெற்றோர்கள் இடையேயான சண்டையாக மாறுகிறது. பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தும் மாணவர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் தங்களால் வகுப்புகளை கையாளவே முடிவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு ஆண் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் இத்தகைய வேலைகளை எந்த வகைப் பள்ளிகளிலும் செய்ய முடிவதில்லை என்பதே கள நிலவரம்.
இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்த பின்விளைவுகள். இன்னொரு விளைவு இன்னும் ஆபத்தானது. அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள். சக மாணவர்களிடம் ”கெத்து” காட்டுவதற்காகவே ஆசிரியரை எரிச்சலுக்கு உள்ளாக்கும் மாணவர்கள் பலர் உண்டு. பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் ‘’இங்க வாடா’’ என அழைத்தபோது “என் மேல கைவச்சா காலி” எனும் சினிமா பாட்டை பாடிக்கொண்டு வந்திருக்கிறார். “என்ன சொன்னே?” என கேட்டபோது “சும்மா பாடினேன் சார்” என பதில் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அடித்தாலும் பரவாயில்லை எனும் தயாரிப்போடு செய்யப்படும் ஹீரோயிசம். இப்படியான மாணவர்களிடம் இயல்பாகவே ஒரு குழு சேர்ந்துகொள்கிறது. இவர்கள் மற்ற மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதால் வகுப்பறைக்குள்ளும் பூசல்கள் முளைக்கின்றன.
போய்த் தொலைங்க சனியனுங்களே எனும் விரக்தி நிலைக்கு ஆசிரியர்கள் செல்லும்போது அது கற்கும் ஆர்வமுள்ள மாணவர்களையும் பாதிக்கின்றது. கற்பிக்கும் சூழலை கொண்டுவருவதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருப்பதால் பாடத்திற்கான அவகாசம் குறைகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சராசரி மாணவர்கள்தான். அவர்களால் இந்த சேட்டைக்கார கும்பலிலும் சேர முடியாது; விரைவாக நடத்தப்படும் பாடங்களும் புரியாது. ஒரு வகுப்பறை எல்லா தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் இப்படி அடிவாங்க துணிந்த கட்டுப்படாத மாணவர்கள் மூலம் வகுப்பறையின் சமநிலை குலைகிறது. இத்தகைய மாணவர்களையே பள்ளிகள் அதிகமாக ஆற்றுப்படுத்துனரிடம் அனுப்புகின்றன. நானறிந்தவரை எந்த ஆற்றுப்படுத்துனரும் இப்படியான மாணவர்களிடம் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடிந்ததாக சொல்லவில்லை.
அடிப்பதை சட்டபூர்வமாக தடுத்து அதனை கடுமையாக பின்பற்றினால் என்ன நடக்கும்?
அப்படி பின்பற்றப்படும் இடங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டால் இது உருப்படியான யோசனையா எனும் முடிவுக்கு வரலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு அடிக்கவே அடிக்காத பள்ளி என அறியப்பட்ட பிரீமியம் பள்ளியொன்றில் இப்போது அந்த ”சட்டம்” பயன்பாட்டில் இல்லை. அதில் கறாராக இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிலைப்பதில்லை. அதி மேட்டுக்குடி பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் போகும் வாய்ப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியான பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் வகுப்புப் பாடங்களை எழுதாத மாணவர்களின் நோட்டை வீட்டுக்கு எடுத்துசென்று அவரே எழுதிக்கொண்டு வருகிறார். அடித்து கண்டிக்க முடியவில்லை பள்ளிக்கும் பதில் சொல்ல வேண்டும் எனும் நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு மட்டுமே மிச்சமாக இருக்கிறது. மிக ஆபாசமான கமெண்ட்டுகளை கேட்டுவிட்டு அதை கவனிக்காததுபோல சென்றுவிடுகிறோம் என சில ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் (இந்த நிலை எலீட் பள்ளிகளில் மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான அரசுப்பள்ளி மாணவர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று அவர்கள் ஆசிரியர் வகுப்பில் இருக்கையிலேயே அவரை சுற்றி ஆடிப்பாடுவதை காட்டியது. அப்போதும் ஆசிரியர் அமைதியாக அவர் வேலையை பார்க்கிறார்).
இத்தகைய அதி மேட்டுக்குடி பள்ளிகளில் உள்ள மிகைக் குறும்பு மற்றும் மோசமான நடத்தை கொண்ட மாணவர்களால் பாதிக்கப்படும் மாணவர்களை பாதுகாக்க உருப்படியான எந்த வழியும் இல்லை. அப்படியான பள்ளி ஒன்றில் இருந்து “நல்லா அடிக்கிற” பள்ளியை தேடி வந்து சேர்ந்த மாணவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். இப்போதான் பயமில்லாம பள்ளிக்கு வருகிறேன் என மகிழ்கிறார் அவர் (கெடுவினையாக அங்கேயும் அவர் மகிழ்ச்சி நீடிப்பதற்கான வாய்ப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவு).
அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள்.
மாணவர்கள் அளவுக்கு மீறி குறும்பு செய்வது, விரும்பத்தகாத நடத்தைகள் மற்றும் உடல்ரீதியாக தண்டிப்பது ஆகியவை பல்வேறு காரணிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் விளைவுகள். அதனை ஒற்றைப் பிரச்சினையாக கருதுவதே அறிவீனம். அதனை ஒற்றை சட்டத்தின் மூலம் களைய முனைவது இன்னும் கோமாளித்தனமான முடிவு. மாணவர்கள் தொடர்பான எந்த ஒரு முடிவும் பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடனான விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகே செய்யப்பட வேண்டும். தான்தோன்றித்தனமான முடிவுக்குப்பிறகான கடும் உழைப்புகூட சொதப்பும் என்பதற்கு நமது 11-ம் வகுப்பு புதிய பாடங்கள் ஒரு உதாரணம்.
நீட்டை மனதில் வைத்து பாடங்கள் கடுமையானதாக மாற்றப்பட்டிருக்கிறது. (உயிரியல் பாடம் மொத்தமாக ஆயிரத்து சொச்சம் பக்கங்கள், இயற்பியலில் வாக்கியங்கள் குறைக்கப்பட்டு சமன்பாடுகளும் கணக்கீடுகளும் மிகுந்திருக்கின்றன). ஆனால் அதே நீட் கணிதம் – உயிரியல் – வேதியியல் பாடப் பிரிவின் டிமாண்டை குறைத்திருக்கிறது (சேர்க்கையில் ஏறத்தாழ 30 சதம் வீழ்ச்சி). அக்கவுண்டன்சி, காமர்ஸ் போன்ற பிரிவுகளுக்கு அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் செல்வதால், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் முதல் குரூப்பை நாடுகிறார்கள். அதாவது நன்றாக படிப்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் எளிய பாடமும் சுமாராக படிப்பவர்களுக்கு மிகக்கடுமையான பாடச்சுமையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாட்டால் ஆசிரியர் மாணவர் என இரு தரப்பும் தண்டனை அனுபவிக்கின்றன. போன ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த சிக்கல் பூதாகரமாக வெளிப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மதிப்பெண் தாராளமாக வழங்கப்பட்டு நிலைமை தற்காலிகமாக சமாளிக்கப்பட்டது. இந்த வருடம் +2 தேர்வுகள் நியாயமாக மதிப்பிடப்பட்டால் கணிதம் & அறிவியல் பிரிவில் 60% தேர்ச்சியே அதிகம்.
அரசு பள்ளியொன்றில் மனநல மருத்துவரின் ஆலோசனை.
இப்படித்தான் கல்வி சார்ந்த பல மாற்றங்கள் பயன்பாட்டுக்கு ஆகாததாக செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அடிக்காமல் வளர்ப்பது என்பது இன்றைய பள்ளிச் சூழலில் சாத்தியமே இல்லாதது. காரணம் அதில் பெற்றோர், அரசு, பள்ளி என பல தரப்பும் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகமாக நமது நம்பிக்கை, பழக்கம், அறஉணர்வு ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. இவை எது குறித்தும் கவலைப்படாமல் அதனை ஒரு ஆசிரியரின் கடமை என தள்ளிவிட்டால் நம்மால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக அதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்விச்சூழலை நீங்கள் இன்னும் மோசமாக்குவீர்கள்.
பின்குறிப்பு : ஒரு ஆற்றுப்படுத்துனராக எனது பணி அனுபவத்தின் மூலமும் ஏனைய ஆற்றுப்படுத்துனர்கள் பகிர்ந்தவற்றின் மூலமும் எழுதப்பட்ட கருத்துக்கள் இவை. பெருமளவு மத்திய மற்றும் உயர்மத்தியதர வர்க்க பிள்ளைகள் உள்ள பள்ளிகளின் சூழலில் இருந்து பெறப்பட்ட தரவுகளே இதன் அடிப்படை. வேறு வகையான பள்ளிகளில் சூழல் வேறாக இருக்கலாம். அங்கிருக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிந்துரைகள் முற்றிலும் வேறாக இருக்கலாம். எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடிய சில ஆலோசனைகளும் (பெற்றோர்கள் – ஆசிரியர்களுக்கானவை) இருக்கின்றன. ஆனால், அதற்கு கல்விப் புலத்தில் இருக்கும் ஏனைய பிரச்சினைகளை ஓரளவுக்கு புரிந்துகொள்வது அவசியம். அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றை பார்த்துவிட்டு இதற்கு நாம் என்ன செய்யலாம் எனும் பரிந்துரைகளை விவாதிக்கலாம்.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்”எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
ஐ.டி. ஊழியர்கள் மட்டுமல்ல, மக்களும் கூட சினிமாவில் ஹீரோ ‘கெத்து’ காட்டுவதை விரும்புகின்றனர். இதில் ஐ.டி ஊழியர்களுக்கு அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், மல்டிப்ளக்ஸ் என கூடுதல் வாய்ப்புகள் உண்டு. வெள்ளித்திரையில் கொடுமை கண்டு பொங்கும் ஹீரோக்களின் ஆக்சன் காட்சிகளை ரசிப்பவர்கள், தாங்கள் பணி நீக்கம் செய்யப்படும்போது ஹாரர் மூவி (Horror Movie) போல பலிகடா ஆவது ஏன் ? இதோ ஒரு அனுபவம் !
12 ஆண்டுகாலமாக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் எனது ஐ.டி. துறை வாழ்க்கையில் Lay Off என்ற பயங்கரத்தை நேரில் கண்டதில்லை. “அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள், இவரை துரத்தி விட்டார்கள்” என்பது போன்ற இரண்டாம் கட்ட ஆதாரங்களை மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர் மதியம் என்னோடு உணவு உண்டவர் இன்று என்னோடு அலுவலகத்தில் இல்லை. இப்போது வீட்டில் இருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். எத்தனை நாள் வீட்டில் இருக்க அவரால் இயலும்? அவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க மனம் பதறுகிறது. திடீரென ஒருவர் எப்படி செல்லாக்காசாக மாறிவிட்டார் என்பதை நம்ப மனமில்லை. பதற்றம் நிறைந்த சூழல்.
ஜனவரி 30-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி எங்களுக்கு மூன்று நாட்கள் கழித்துதான் தெரிந்தது. தெரிந்தவுடன் எனக்குள் பதற்றம். இப்படி கருவேப்பிலை போல் உயிருள்ள ஓர் மனிதனை எப்படி திடீரென குப்பையாக மாற்ற முடிகிறது என்ற கேள்வியும் பதற்றமும் என்னுள் எழுந்தது, என்னால் இயல்பாக இருக்க இயலவில்லை.
நிறுவனங்களின் இலாபவெறி கண்டு வெறுப்படைந்தேன். மனிதத்தன்மையற்ற, நேர்மையற்ற இதுபோன்ற செயல்பாடுகளால் எரிச்சலடைந்தேன். அந்த நபரின் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்து, வரும் பதற்றத்தை கண்டுணர்ந்தேன்.
அந்த நபரோடு, அவர் LayOff பண்ணப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் எனக்கு அறிமுகம். தான் LayOff பண்ணப்படலாம் என்ற முன்பயம் அவருக்கு இருந்தது.
ஏனெனில், கடந்த இரு (Performance Rating Cycle) பணி தரநிலைகளில், வேலையில் முன்னேற்றம் தேவை (Need Improvement) என்ற மதிப்பீடு தரப்பட்டு இருந்தது. மேலும் கடந்த ஆண்டிற்கான பணித்தரநிலை மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்து தோல்வியடைந்திருந்தார். எனவே, பணி நீக்கம் இன்றோ நாளையோ என்ற மனநிலையில்தான் அவர் இருந்தார். இது போன்ற சூழலில் அவரை சிலர் (என்னைப் பற்றி அறிமுகம் இருந்த பரஸ்பர நண்பர்கள்) என்னிடம் அறிமுகப்படுத்தி ஆலோசனை பெற அறிவுறுத்தினர்.
அலுவலகத்தில் அரசியல், தொழிலாளர் நல உரிமை, சட்டங்கள் பற்றி மற்றவர்களிடம் பேசுவதுண்டு. எனவே, அந்த அடிப்படையில் அவர் என்னைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், அதையும் மீறி பணி நீக்கம் செய்யப்பட்டால் அதை எதிர்ப்பது எப்படி என்றும், NDLF, FITE போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர் சங்கங்கள் பற்றியும், கடந்த சில ஆண்டுகளில் பெருநிறுவனங்களை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கதை பற்றியும் எடுத்துச் சொன்னேன். NDLF, FITE ஆகியவற்றின் தொடர்பு எண்களைத் தந்து அவற்றில் ஏதாவது ஒன்றில் (அவருக்கு எது பிடிக்கிறதோ அதில்) சேரச் சொன்னேன்.
(கோப்புப் படம்)
பணி நீக்கம் செய்யப்படும் சூழல் வருமாயின் அது போன்ற HR உடனான சந்திப்புகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், என்ன சொன்னாலும் “பணிவிலகல் கடிதம் கொடுக்காதே” என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அப்படியே பணி நீக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்தால் அவர்களை (நிறுவனத்தை) பணிநீக்க ஆணையை அனுப்பச் சொல் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். மேலும், இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வாய்ப்புள்ள ஆதாரங்களை திரட்டவும் அறிவுறுத்தினேன்.
இவ்வளவு அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்குப் பின்னரும் ஏன் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் “இவரைப் போன்ற தன்னுரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத அடிமைகள் இருக்கும் வரை” இலாபவெறி பிடித்த, நேர்மையற்ற தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கிள்ளுக்கீரை போன்று நடத்துவது தொடரும் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.
நடந்தது என்னவெனில் பணிநீக்கம் செய்யபடப்போகிற அந்த நாளின் காலையிலே (HR) மனிதவள துறை நிர்வாகியோடு சந்திப்பு உறுதியாகிவிட்டது. அந்த சந்திப்பு பணிநீக்கம் தொடர்பானது என்று அவர் கணித்துள்ளார். அன்று மதிய உணவை எங்களோடு இணைந்துதான் உண்டார். அப்போது பதற்றத்தில் இருந்தார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எங்களோடு எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. அன்று மாலை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மனிதவள நிர்வாகியுடனான சந்திப்பில் “உங்களை பணி நீக்கம் செய்யப்போகிறோம், நீங்கள் பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிடுங்கள்” என்று மனிதவள நிர்வாகி சொல்லியுள்ளார். அதற்குப் பதிலீடாக மூன்று மாத சம்பளம் தருவோம் என்ற உத்திரவாதத்தை தந்துள்ளனர்.
பணிவிலகல் கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்ட அடுத்த நிமிடம் அவரிடம் இருந்து அடையாள அட்டையைப் (ID Card) பெற்றுக்கொண்டு காவலாளி (Security) துணைகொண்டு அவரை அலுவலக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
(கோப்புப் படம்)
அதன்பின்னர் அவர் அலுவலகம் வராததால் இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை. பின்னர் ஒருவழியாக மூன்றாம் நாள் அவரைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், “இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, NDLF நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள், அவர்களோடு இணைந்தால் வழிபிறக்கும் என்று (Guide) அறிவுறுத்திய போதும், “இன்னும் சில நாட்களில் பதிலீட்டுத் தொகையை (Compensation package) பெற்றுக்கொண்ட பின்னர் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்று சொன்னவரை பணிநீக்கம் செய்யாமல் என்ன செய்வார்கள்?
என்ன நண்பர்களே, இவரைப் போன்று தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?
உங்களுக்கு சந்தேகம் உண்டா? எனக்கு இல்லை.
உள்ளம் நிறைந்த அன்புடனும், நெஞ்சம் நிறைந்த நன்றியுடனும்,