Friday, May 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 369

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா ? மதுரை அரங்கக் கூட்டம் !

ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்… தமிழக அரசே… மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக அரங்கக் கூட்டம் கடந்த டிசம்பர்- 30 அன்று மாலை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள இராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் கம்பம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தன்னுடைய வரவேற்புரையில், ”இன்று மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு புதிய முறையை கையாண்டு கொண்டிருக்கிறது. அதாவது போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது என்பதுதான் அது. ஏனெனில் அவர்களிடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. எனவே, அடிப்படை தேவைகளுக்காக போராடுபவர்களை கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி மக்களை பயமுறுத்துவது, தேச துரோகிகள் என தனிமைப்படுத்துவது என்று குறிப்பாக பி.ஜே.பி கும்பல் செயல்படுகிறது. எனவே முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தனித்தனியாக செயல்படுவதை விட்டு, ஒன்றிணைய வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து இங்கே வருகை தந்துள்ள பேச்சாளர்களை வரவேற்கிறேன்” என பேசினார்.

இதற்கு பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 14 தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமையுரையில் தோழர் மோகன் அவர்கள் ” தூத்துக்குடி மக்களின் இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தையும் அங்கே 14 பேர் மக்கள் கொல்லப்பட்டதையும் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள், வெறும் சம்பவமாக மட்டுமே பார்க்கின்றனர். தூத்துக்குடியில் தற்போது மிக தீவிர அளவில் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையில்தான் இந்த பசுமைதீர்ப்பாய உத்தரவு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக ஆலையை திறக்கலாம் என வந்திருக்கின்றது. இதை கேட்டு தமிழகம் போர்க்களமாக ஆகியிருக்க வேண்டாமா? இவ்வாறு மக்கள் மவுனமாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தியாவிலேயே காஷ்மீருக்கு பிறகு அதிகமாக எண்ணிக்கையில், சுமார் 25 ஆயிரம் போராட்டங்கள் ஒரு ஆண்டுக்கு நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைக்கு பதில் சொல்லாமல், தீர்வை தேடாமல், சமூக விரோதிகள் தூண்டி விடுவதாகவும், அச்சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து கலவரம் உருவாக்கியதால்தான் தற்காப்புக்காக போலீசு சுட்டதாகவும், மற்றபடி அந்த மக்களுக்கு ஸ்டெர்லைட்டால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதாகவும் பத்திரிக்கை, செய்தி தொலைக்காட்சிகள், அறிவுஜீவிகளை வைத்து பொய்பிரச்சாரம் செய்கின்றது மத்திய மாநில அரசுகள்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? இதற்கு முன்பே கூட பல கட்ட ஆய்வுகள் நடந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுற்று சூழலை மிக மோசமாக பாதிப்படைய வைத்துள்ளதாக நிரூபித்துள்ளது. இதை ஒட்டித்தான் ஏற்கனவே 100 கோடி ரூபாயை ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதை கூட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், தூத்துக்குடி நகரத்திலும் பூங்காக்கள் அமைக்க செலவழித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். மேலும், கடந்த மார்ச் மாதம் நடந்த ஆய்வில் மொத்தம் 15 இடங்களில் கந்தக அமில ரசாயனக் கழிவுகளை எந்த வித பாதுகாப்புமின்றி வெட்ட வெளியில் கொட்டி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வறிக்கையை கூட வெளியிடாமல் வைத்திருந்தார்கள்.

தோழர் மோகன்

பல சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூலம் பெற்றுத்தான் இந்த விசயங்கள் தெரிய வந்துள்ளது. இன்னொரு விசயம் நீங்கள் கவனித்து பார்த்தால் இது எடப்பாடியே சொல்வது போல் அவருக்கே தெரியாமல் தமிழக உள்துறை செயலர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் மூலம் இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூட்டு சேர்ந்து செய்த திட்டமிட்ட சதி என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் மரக்கானா சுரங்க தொழிலாளர்கள் நடத்திய அமைதியான உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 34 பேரை படுகொலை செய்துதான் அப்போராட்டத்தை ஒடுக்கியது. அந்த போராட்டக்குழு தலைவரின் முகத்தில் மட்டும் 14 குண்டுகள் பாய்ந்திருந்தன. அப்போது ஆங்கிலோ இந்தியன் நிறுவனம் என்கின்ற அந்த சுரங்க ஆலையில் நிர்வாக அதிகாரியாக இருந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் ஸ்டெர்லைட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஒரு மாத குறுகிய காலத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த ஆங்கிலோ இந்தியன் நிறுவனத்தில் 23% பங்கை வைத்திருப்பவர் வேறு யாரும் அல்ல ஸ்டெர்லைட்டின் முதலாளி அதே அனில் அகர்வால்தான்.

படிக்க:
கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை
பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?

’உலகத்தில் பூமிக்கடியிலிருந்து சுரங்கம் தோண்டி என்ன வளத்தை வெளிக்கொண்டு வந்தாலும் அதில் எனக்கு ஒரு பங்கு வருமாறு நான் எல்லா நாடுகளிலும் சுரங்கத்தொழிலில் முதலீடு செய்துள்ளேன்’ என்று இவன் திமிராக சொல்கிறான். இவனுடைய இந்த திமிருக்கு காரணம் நம்முடைய அமைதிதான். அதை உடைத்தெறிந்து மக்களை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அணி திரட்டுவதே இந்த அரங்க கூட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் குமரன், நாணல் நண்பர்கள் குழுவை சேர்ந்த தோழர் துளிர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் கனியமுதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். (தோழர்களின் உரைகள் தனித் தனி பதிவுகளில் வெளிவரும்)

இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் மருது நன்றியுரை கூறினார். இடையிடையே பாடப்பட்ட புரட்சிகர பாடல்களும், தோழர்களின் உரைகளும் கூடியிருந்தவர்களுக்கு உயிர் வாழ வேண்டுமெனில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.


தகவல் : மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்


இதையும் பாருங்க…

தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

எதிர்வரும் 2019, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன.

ஏன் இந்த வேலைநிறுத்தம்? இந்த வேலைநிறுத்தத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

மோடி அரசின் தேசவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை எதிர்த்தே இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம் பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போதே போராடி வென்றெடுத்த பல்வேறு உரிமைகள் 44 சட்டங்களாக இருக்கின்றன. இந்தச் சட்டங்களையெல்லாம் செல்லாக் காசாக்கும் நோக்கத்தில் 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுவதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன் வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு. தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தம் என்கிற பெயரில் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையை செய்து வருகின்ற மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையூறின்றி தொழில் நடத்துவதை மேற்படி சட்ட திருத்தங்களை அமலாக்குவதன் மூலம் உத்திரவாதப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளது.

தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த முயற்சியாக மத்திய தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த விதிமுறைகளை மாற்றி, ஆர்.எஸ்.எஸ் சார்புடைய பி.எம்.எஸ் மட்டுமே இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக திணிக்கப்படும் நிலையை உருவாக்கி வருகிறது. ஜெர்மனியில் இட்லரும், இத்தாலியில் முசோலினியும் அந்தந்த நாட்டின் தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டி, பாசிச கட்சிகளது தொழிற்சங்கத்தை ஒரே தொழிற்சங்கமாக மாற்றிய அதே உத்தியை இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கையாள்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) தேசிய மாநாட்டைக் கூட்டி, மத்திய மற்றும் துறைவாரி தொழிற்சங்கங்களது பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களது பிரச்சினைகளை விவாதிக்கின்ற நடைமுறையை 2015-ம் ஆண்டு முதல் புறக்கணித்து வருகிறது மோடி அரசு. அதேபோல மத்திய அமைச்சர்களது குழுவுடனோ (Group of Ministers) துறைவாரி அமைச்சர்களுடனோ தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வழக்கத்தினையும் புறக்கணித்து விட்டது. அதே நேரத்தில் தினம் ஒரு கார்ப்பரேட் முதலாளியை சந்திப்பது, வாரத்திற்கொரு ஒப்பந்தம் போடுவது, மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் போடுவது என்கிற வகையில் கார்ப்பரேட் முதலாளிகளது பிரதமராக மட்டுமே செயல்பட்டு வருகிறார், மோடி.

வரம்புக்குட்பட்ட காலத்துக்கான வேலைவாய்ப்பு (FTE), குடும்பம் நடத்துகின்ற தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது போன்ற சமீபத்திய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் நிரந்தர, பாதுகாப்பான வேலைகளை ஒழித்துக் கட்டிய மோடி அரசு, சம வேலைக்கு சம ஊதியம், தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய பென்சன் போன்றவற்றில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளையும் அமல்படுத்த மறுக்கிறது.

நாட்டின் அரைகுறை வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் துணையாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒழிப்பதில், இதற்கு முந்தைய காங்கிரசு அரசு செயல்பட்ட வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வருகிறது, மோடி அரசு.

ஒருபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களை செயல்பட முடியாமல் முடக்குகிறது. உதாரணமாக, பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிறுவனம் 5ஜி செல்பேசி சேவையைத் துவங்குவதற்கு தேவையான அலைக்கற்றையை ஒதுக்கிட மறுப்பது, பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்களை அதிகரிக்க வைத்து அவற்றை இணைப்பது என்கிற பெயரில் செயல்பாட்டை முடக்குவது, இலாபமீட்டும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் நிதியை கார்ப்பரேட்டுகள் திவாலாக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்ய நிர்ப்பந்திப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது. மறுபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை விற்பனை செய்து, பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கயவர்களுக்கு பலியிடுவது என்கிற கயமையை செய்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ 2.09 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்த மோடியின் அரசு அந்தப் பணத்தின் பெரும்பகுதியை கார்ப்பரேட்டுகளது நலனுக்காகவே செலவிட்டுள்ளது. அரசுக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சுயேச்சையான செயல்பாட்டுக்கும் மேலாக ஒழுங்குமுறை ஆணையம் என்கிற அதிகார அமைப்பை உருவாக்கி கார்ப்பரேட் சேவையை தீவிரமாக்கி வருகிறது.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி என்கிற பெயரில் இலட்சக்கணக்கான சிறுதொழில்களை ஒழித்துக்கட்டி, கோடிக்கணக்கானவர்களை வேலையற்றவர்களாக்கிய மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுப்பதற்கு அவற்றை பலியிடுவது என்கிற போக்கை தீவிரமாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கி வந்த வேலைவாய்ப்புகளை முடக்கியதுடன், சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இல்லாமல் செய்துவிட்டது. அதற்கு உதவியாக, எல்லா வேலைகளையும் காண்டிராக்ட் மயமாக்குதல், சட்டவிரோத ஆலைமூடல்- ஆட்குறைப்புகளுக்கு அனுமதியளிப்பது போன்ற துரோகத்தனத்தை செய்து வருகிறது

இவ்வாறு கொழுக்க வைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிகளில் கூட பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா-பார்சி முதாலளிகள் அடைந்த வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த பேருண்மை புரியும். இந்த பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகள்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு அடிநாதமாக விளங்குகின்றனர். நாட்டின் அனைத்து தொழில்களையும் பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகளே கைப்பற்றி உள்ளனர்.

மேக் இன் இந்தியா, தொழில் செய்வதை சுலபமாக்குவது (Ease of Doing Business), ஸ்டார்ட் அப் இந்தியா (Start up India) என்ற பல்வேறு பெயர்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான திட்டங்களை அமல்படுத்துகிறது. அதே தருணத்தில், நாடே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், முதலாளிகளுக்கு இலாபமீட்டித் தருவது ஒன்றே நாட்டின் ஒரே செயல்பாடு என்பதாகவும் மத்திய – மாநில அரசுகள் இதனை செய்து முடிக்கும் கங்காணிகளாகவும் இருக்கும் வகையில் இந்த கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

தொழிலாளி வர்கத்தை காண்டிராக்ட்மயமாக்குதல், கட்டுப்பாடற்ற வேலைபறிப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத – மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி கும்பலை வீழ்த்துகின்ற வரலாற்றுக் கடமை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. நமது வர்க்கக் கடமையை நிறைவேற்ற இருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தி முடிப்போம்.

தொழிலாளர் உரிமைகள் மீட்க; பாசிச RSS-BJP கும்பலை வீழ்த்த
2019 ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!

அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை RSS-BJP அரசாங்கம் செல்லாக்காசாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமான 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுகிறது

இதற்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு பு.ஜ.தொ.மு அறைகூவி அழைக்கிறது.

இப்படிக்கு :


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு : 94444 42374

நன்றி : New Democrats

கொடுமையே வாழ்க்கையின் நியதியாகிவிடுகிறது !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 48

மாக்சிம் கார்க்கி
நிகலாய் இவானவிச் அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான். அவனது தலை கலைந்து போயிருந்தது; கையில் ஒரு புத்தகம் இருந்தது.

”அதற்குள்ளாகவா?” என்று உற்சாகமாகக் கூறினான் அவன். ”நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான பேர்வழிதான்!”

அன்பு ததும்பும் கண்கள் அவனது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே படபடவென்று இமை தட்டி விழித்தான். அவளது மேல் கோட்டைக் கழற்றுவதற்கு அவளுக்கு உதவினான். அன்பு நிறைந்த புன்னகையோடு அவளது முகத்தைப் பார்த்தான்.

“நேற்றிரவு நம் வீட்டைச் சோதனை போட்டார்கள்” என்றான் அவன். “அதைக் கண்டு, போன இடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நான் பயந்து போனேன். ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. உங்களைக் கைது செய்திருந்தால் என்னையும் அவர்கள் நிச்சயம் கொண்டு போயிருப்பார்கள்.”

அவளைச் சாப்பாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். போகும்போதே ஒரே உற்சாகத்தோடு பேசிக்கொண்டே போனான்.

”என் வேலை போய்விடும். அது நிச்சயம்தான். ஆனால், அது என்னைக் கொஞ்சம்கூடப் பாதிக்கவில்லை. மேஜையடியிலே உட்கார்ந்து, குதிரைகள் வைத்திராத விவசாயிகளைக் கணக்கு எடுத்து எடுத்து எனக்கே எரிச்சலாய்ப் போய்விட்டது.”

யாரோ ஒரு ராட்சதன் திடும் வெறியோடு வெளியிலிருந்து சுவர்களை உலுக்கி வீட்டிலுள்ள சாமான்களையும் உருட்டித் தள்ளிய மாதிரி. அந்த அறையே ஒரே அலங்கோலமாய்க் கிடப்பதைத் தாய் கண்டாள். படங்கள் எல்லாம் தரைமீது இறைந்து கிடந்தன. சுவரில் ஒட்டியிருந்த காகிதங்களெல்லாம் கிழிபட்டு, துண்டு துண்டாக நாடாக்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்தன. ஒருபுறத்தில் தரையில் பதிந்திருந்த பலகை அகற்றப்பட்டுக் கிடந்தது. ஒரு கண்ணாடிச் சட்டம் தகர்த்தப்பட்டிருந்தது. அடுப்புக் கரியும் சாம்பலும் தரையில் பரவிக்கிடந்தன. தனக்கு ஏற்கெனவே பழகிப்போன இந்தக் காட்சியைக் கண்டு தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நிகலாயின் முகத்திலே தோன்றும் ஒரு புதிய தன்மையை உணர்ந்து அவனையே கூர்ந்து நோக்கினாள்.

ஆறிப்போன தேநீர் பாத்திரம், கழுவப்படாத ஏனைய தட்டுக்களோடு மேஜை மீது அப்படியே இருந்தது. தட்டுக்களில் வாங்கிவராமல், தாளில் பொட்டலம் கட்டி வாங்கிவந்த பாலடையும். சாஸேஜும் அந்தந்த காகிதத்தில் அப்படியப்படியே கிடந்தன. மேஜைத்துணி முழுவதிலும் அடுப்புக் கரியும் ரொட்டித் துண்டுகளும், புத்தகங்களும் குவிந்து கிடந்தன. தாய் லேசாகச் சிரித்தாள், நிகலாவும் பதிலுக்குக் குழப்பமாகப் புன்னகை புரிந்தான்.

“இந்த மாதிரிக் குழப்பத்தில் என் பங்கும் உண்டு. ஆனால், அது சரியாய் போயிற்று, நீலவ்னா! அவர்கள் திரும்பவும் வரக்கூடும் என்று நினைத்தேன். எனவேதான் நான் இவற்றை ஒழுங்குபடுத்தவில்லை. சரி, அது கிடக்கட்டும். நீங்கள் போய்வந்த விவரத்தைச் சொல்லுங்கள்.”

அந்தக் கேள்வி அவள் இதயத்தில் திடுக்கென விழுந்து உலுப்பியது. மீண்டும் அவள் கண் முன்னால் ரீபினின் உருவம் தோன்றியது. வந்தவுடனேயே அவனைப் பற்றிப் பேசாதிருந்ததைக் குற்றம் என்றே அவள் உணர்ந்தாள். அவள் நிகலாயின் பக்கமாகக் குனிந்து தான் போய்வந்த விவரத்தை அமைதியாக ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினாள்.

“அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள்……”

நிகலாயின் முகத்தில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

”அப்படியா?”

அவனைக் கையமர்த்திவிட்டு, தான் ஏதோ நியாய தேவதையின் சந்நிதியில் நிற்பது போலவும், அந்த தேவதையிடம் ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதையைப் பற்றி வாதாடி வழக்காடுவது போலவும், அவள் மேலும் பேசத் தொடங்கினாள். நிகலாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டும், வெளிறிய முகத்தோடு அடிக்கடி உதட்டைக் கடித்துக்கொண்டும் அவள் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் தன் கண்ணாடியை மெதுவாகக் கழற்றியெடுத்து அதை மேஜை மீது வைத்தான், தன் முகத்தில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத நூலாம்படை படிந்துவிட்டது போல் முகத்தைத் துடைத்து விட்டுக்கொண்டான்.

அவனது முகபாவம் திடீரெனக் கூர்மை பெற்றது. கன்ன எலும்புகள் புடைத்துத் துருத்தின, நாசித் துவாரங்கள் நடுநடுங்கின. இந்த மாதிரி என்றுமே அவனை அவள் பார்த்ததில்லை; அவனது தோற்றம் அவளை பயமுறுத்தியது.

அவள் பேசி முடிந்த பிறகு அவன் எழுந்து தனது முஷ்டிகளைப் பைகளுக்குள் அழுத்தி ஊன்றியவாறு கீழும் மேலும் நடந்தான்.

“அவன் ஒரு மகா புருஷனாய்த்தானிருக்க வேண்டும்” என்று பற்களை இறுகக் கடித்தவாறே அவன் முணுமுணுத்தான். ”சிறையில் இருப்பது அவனுக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும், அவன் போன்ற ஆட்களுக்கு அது சிரமம்தான்.”

அவன் தனது முஷ்டிகளை அழுத்தியவாறே தனது உணர்ச்சி வேகத்தைத் தணித்துப் பார்த்தான். எனினும் அவனது நிலைமையைத் தாய் உணர்ந்துகொண்டாள்; அது தாய்க்குத் தானாகவே தெரிந்தது. அவன் தன் கண்களைச் சுருக்கினான். கண்கள் கத்தி முனையைப் போல் நீண்டு சுருங்கின. மீண்டும் அவன் மேலும் கீழும் நடந்தவாறே அடங்கிக் குமுறும் கோபத்தோடு பேசத் தொடங்கினான்.

”இந்தப் பயங்கரத்தை எண்ணிப்பாருங்கள். ஜனங்களின் மீது தமக்குள்ள ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற வெறியுணர்ச்சியில், ஒருசில அயோக்கிய நபர்கள் ஒவ்வொருவரையும் உதைக்கிறார்கள், நெரிக்கிறார்கள், நசுக்குகிறார்கள். காட்டுமிராண்டித்தனம் பெருகி வருகிறது, கொடுமையே வாழ்க்கையின் நியதியாகிவிடுகிறது! இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களில் சிலர் ஜனங்களை அடித்து நொறுக்கி, மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறார்கள். ஏனெனில் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சித்ரவதை செய்வதில் அவர்கள் மோகவிகாரம் கொண்டு திரிகிறார்கள். அடிமைகளின் அடங்காத பைத்திய வெறியைப் பயன்படுத்தி, அந்த அடிமை மக்களின் அடிமை உணர்ச்சிகளையும், மிருக்குணங்களையும் அவற்றின் பரிபூரண வேகத்தோடு பாய்ந்து குதறும்படி அவிழ்த்துவிட்டு விடுகிறார்கள். வேறு சிலர் பழிக்குப்பழி வாங்கும் விஷ ஆசைக்கு ஆளாகிறார்கள். தாம் வாங்கிய அடி உதைகளால் ஊமையாகவும் செவிடாகவும் போகிறார்கள், சிலர். மக்கள் குலத்தையே சீர்குலைத்துவிட்டார்கள்!”

அவன் பேச்சை நிறத்திவிட்டு மெளனமாகப் பற்களைக் கடித்தான்.

“இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது!”

அவன் தன் உத்வேகத்தை அடக்கியாண்டவாறே அழுதுகொண்டிருந்த தாயின் பக்கமாக அமைதியோடு திரும்பி, தனது கண்களில் பிரகாசிக்கும் நிலையான ஒளியோடு அவளைப் பார்த்தான்.

”நாம் நேரத்தை வீணில் போக்கக்கூடாது, நீலவ்னா. நாமே முன்னின்று நமது காரியங்களைக் கவனிக்கலாம் ……..”

படிக்க:
மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

சோகம் நிறைந்த புன்னகையோடு அவள்பக்கமாகச் சென்று அவள் கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கேட்டான்:

“உங்கள் பெட்டி எங்கே?”

”சமையலறையில்.”

”நம் வீட்டு வாசலில் உளவாளிகள் திரிகிறார்கள். அதிலுள்ள அவ்வளவையும் அவர்கள் கண்ணில் படாமல் நாம் வெளியே கொண்டு போக முடியாது. அவற்றை மறைத்து வைப்பதற்கும் இடமில்லை. இன்று ராத்திரி அவர்கள் மீண்டும் சோதனை போட வருவார்கள் என்றே நினைக்கிறேன். – எனவே எவ்வளவு வருத்தம் தரத் தக்கதாயிருந்தாலும் சரி – நாம் அவற்றைச் சுட்டுப் பொசுக்கிவிட வேண்டியதுதான்.”

“எவற்றை ?”

“டிரங்குப் பெட்டியிலிருக்கிறதே – அவற்றை!”

தாய் புரிந்து கொண்டாள். அவள் எவ்வளவுதான் வருத்தங்கொண்டிருந்த போதிலும், தனது காரிய சாதனையை எண்ணி அவள் மனத்தில் ஏற்பட்ட பெருமையுணர்ச்சி புன்னகையாக உருவெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

”அதில் ஒன்றுமே கிடையாது. அதில் ஒரு துண்டுக் கடுதாசிகூடக் கிடையாது!” என்று கூறிவிட்டு, அதன் பின்னர்தான் ஸ்திபான் சுமக்கோவைச் சந்தித்த விவரத்தையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே ஆர்வத்தோடு கேட்டான், ஆனால் அந்தச் சுழிப்பு சீக்கிரமே மறைந்து, அவன் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது. இறுதியில் அவன் உணர்ச்சிப் பரவசமாகி அவள் பேச்சில் குறுக்கிட்டுக் கத்தினான்:

”அபாரம்! மாபெரும் வேலை!”

அவன் அவள் கைகளை இறுகப் பற்றி மெதுவாகச் சொன்னான்:

”உங்களுக்கு ஜனங்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது …… உங்களை நான் என் சொந்தத் தாய்போலவே நேசிக்கிறேன்!” அவன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உற்சாகமடைகிறான் என்பதைப் புரிய முடியாமல் அவனை வியப்போடு கூர்ந்து நோக்கியவாறே புன்னகை புரிந்தாள் தாய்.

”பொதுவாக, இது மகத்தான காரியம்!” என்று கூறிக்கொண்டே அவன் தன் கைகளைத் தோய்த்துக்கொண்டான். மெதுவாகச் சிரித்தான். ”கடந்த சில நாட்களில், எனக்குப் பொழுது மிகவும் அருமையாகக் கழிந்தது. முழுநேரமும் தொழிலாளர்கள் மத்தியிலேயே கழிந்தது; அவர்களுக்கு நான் பாடம் சொன்னேன்: அவர்களோடு பேசினேன்; அவர்களைக் கண்டுணர்ந்தேன். என் இதயத்திலே ஏதோ ஒரு புனிதமான பரிபூரணமாக வியப்பூட்டும் உணர்ச்சி நிறைந்து ததும்புகிறது. அவர்கள் எவ்வளவு அருமையான மனிதர்கள், நீலவ்னா! நான் வாவியத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசுகிறேன். அவர்கள் எவ்வளவு பலமும். உணர்ச்சியும் அறிவுத் தாகமும் பெற்றவர்களாயிருக்கிறார்கள்! அவர்களைப் பார்க்கும்போது என்றாவது ஒரு நாள் ருஷ்ய தேசம்தான் உலகிலேயே தலைசிறந்த ஜனநாயக நாடாக விளங்கப்போகிறது என்ற எண்ணம்தான் நமக்கு உண்டாகும்!

அவன் தன் கூற்றை அழுத்தமாக ஆமோதிப்பதைப்போல், சபதம் எடுப்பதுபோல் கரத்தை நீட்டினான். பிறகு ஒரு கணநேரம் கழித்து மேலும் பேசத் தொடங்கினான்.

”இந்தப் புத்தகங்களோடும் உருவங்களோடும் உட்கார்ந்து உட்கார்ந்து எனக்குப் புளித்தே போய்விட்டது. சுமார் ஒரு வருஷகாலம் இந்த மாதிரி வாழ்க்கையை – பயங்கர வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று. நான் தொழிலாளரோடு வாழ்ந்து பழக்கப்பட்டவன். ஆனால், நான் மிகுந்த சிரமத்தோடும், பதனத்தோடும் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போதோ நான் மீண்டும் சுதந்திர புருஷனாக வாழ்கிறேன். நான் இனிமேல் முழு நேரம் அவர்களோடு வாழவேண்டும்; அவர்களோடு உழைக்க வேண்டும். நான் சொல்வது புரிந்ததா? இளமை நிறைந்த சிருஷ்டி சக்தியின் முன்னிலையிலே, புதிய சிந்தனைகள் என்னும் பிள்ளைத் தொட்டிலருகேயே நான் வளர்ச்சி பெறவேண்டும். அது அபூர்வமான அழகான வளர்ச்சி, பிரமாண்டமான உணர்ச்சிக் கிளர்ச்சி. அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு மனிதனை இளைஞனாக்குகிறது; பலசாலியாக்குகிறது. அதுவே வாழ்க்கையின் செழிப்பு நிறைந்த மார்க்கம்!”

அவன் ஆனந்தப் பரவசத்தோடும் குழப்பத்தோடும் சிரித்தான். அவனது ஆனந்தத்தைத் தானும் உணர்ந்து, அதில் பங்கெடுத்துக்கொண்டாள் தாய்.

“மேலும் – நீங்கள் ஓர் அற்புதமான பிறவி” என்றான் நிகலாய் ”எவ்வளவு தெள்ளத் தெளிவாக மக்களைப் பற்றி வருணிக்கிறீர்கள்! எவ்வளவு நன்றாக அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!”

 

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

மோடி – பாஜகவின் சிறந்த ஜால்றா யார் ? சிறப்பு விருதுகள் – 2018 !

டந்த டிசம்பர் 2018 இறுதியில் நான்கு நாட்களில் வாசகர் இணையக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் விருதுகளுக்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யுமாறு வாசகர்களை கோரினோம்.

  1. பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
  2. பாஜக கொள்கை பரப்பும் நம்பர் 1 தமிழ் நாளிதழ் எது ?
  3. மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார்?
  4. தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

வினவு தளம் மட்டுமல்ல, டிவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று மாலை வரையில் இந்தத் தளங்களில் பதிவான வாக்குகளில் அடிப்படையில் தற்போது இந்த விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

***

முதலில், பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சிக்கான தேடல்…

இந்த விருதுக்கான பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள்..

  • புதிய தலைமுறை
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • தந்தி டிவி
  • நியூஸ் 7 தமிழ்
  • பாலிமர் நியூஸ்
  • நியூஸ் ஜே

முதல் இடம் : தந்தி டிவி (60% வாசகர்களின் தெரிவு)
விருது: “காவி லென்சுல உட்றாண்டா உடான்சு”

சிறப்புப் பரிசுகள் :

  • அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் ஆண்டு முழுவதும் தரப்படும்.
  • ”மோடியின் எம்மாம் பெரிய பொய்” – எக்ஸ்குளூசிவ் நேர்காணல் – 6 மாதத்திற்கு ஒருமுறை..

இரண்டாம் இடம்: புதிய தலைமுறை (16% வாசகர்களின் தெரிவு)
விருது:  “விடுறான்டா உடான்ஸு காவி லென்சுல”

சிறப்புப் பரிசுகள் :

  • அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் ஆறு மாதம் தரப்படும்
  • அடேங்கப்பா அமித்ஷாவின் பில்டப் – எக்ஸ்குளூசிவ் நேர்காணல் ஒன்று


மூன்றாம் இடம்: நியூஸ் 7 தமிழ் (14% வாசகர்களின் தெரிவு)
விருது: “உடான்ஸு விடுறாண்டா லென்சு காவியில”

சிறப்புப் பரிசுகள்:

  • அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் மூன்று மாதம் தரப்படும்
  • ரிவால்வர் ரீட்டா நிர்மலா சீதாராமனின் – எக்ஸ்குளூசிவ் நேர்காணல் மாதம் ஒன்று நிச்சயம்.

ஆறுதல் பரிசு: பாலிமர் நியூஸ் (4% வாசகர்களின் தெரிவு)
விருது: “லென்சு காவியில வுடுறாண்டா உடான்ஸு”

சிறப்புப் பரிசுகள் :

  • தி நகர், பனகல் பார்க் கடை விளம்பரங்கள் தினசரி தரப்படும் (விளம்பரம் தர மறுத்தால் ரெய்டுக்கு ஏற்பாடு செய்யப்படும்)
  • அண்ணாச்சி பொன்னாரு, அக்கா தமிழிசை பிரஸ் மீட் அன்றாடம் கிடைக்கும்

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1817 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் தந்தி டிவிக்கு 1092 வாக்குகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக புதிய தலைமுறைக்கு 288 வாக்குகளும், நியூஸ் 7-க்கு 243 வாக்குகளும் கிடைத்துள்ளன. பாலிமர் நியூஸ் 79 வாக்குகளும்,  நியூஸ் 18 – தமிழ்நாடு 56 வாக்குகளும், இதர தொலைக்காட்சிகள் அனைத்தும் சேர்ந்து 59 வாக்குகளும் பெற்றுள்ளன.

***

பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 தமிழ் நாளிதழுக்கான பந்தயத்தில் பங்கேற்போர்:

  • தினத்தந்தி
  • தினமலர்
  • இந்து தமிழ் திசை
  • தினமணி

முதல் இடம்: தினமலர் (66% வாசகர்களின் தெரிவு)
விருது: ”கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா”

தினமலருக்கான சிறப்புப் பரிசுகள் :

  • மோடியுடன் மீடியா டீமாக உலகம் சுற்றலாம்.
  • அமித்ஷாவின் வீட்டுத் திருமணம் முதல் அக்கா தமிழிசையின் பிரஸ் மீட் வரை முதல் பக்க விளம்பரங்கள் 365 நாட்களும் தரப்படும்

இரண்டாம் இடம்: தினத்தந்தி (17% வாசகர்களின் தெரிவு)
விருது: “கூவுறாண்டா கொடுத்த காசுக்கு மேல”

சிறப்புப் பரிசுகள் :

  • அமித்ஷாவின் மீடியா டீமாக இந்தியா சுற்றலாம்.
  • அதானி டென்டர் முதல் பிஆர்பி குவாரி டென்டர் வரை ஆறு மாதம் அரை பக்க விளம்பரம் தரப்படும்

மூன்றாம் இடம்: தினமணி (11% வாசகர்களின் தெரிவு)
விருது: “மேல கூவுறாண்டா கொடுத்த காசுக்கு”

சிறப்புப் பரிசுகள் :

  • பொன்னாருடன் மீடியா டீமாக தமிழகம் சுற்றலாம்.
  • கமலாலயத்தில் நடக்கும் கூட்ட விளம்பரங்கள் மூன்று மாதம் கால் பக்கத்திற்கு தரப்படும்.

ஆறுதல் பரிசு: இந்து தமிழ் திசை (6% வாசகர்களின் தெரிவு)
விருது: “காசுக்கு கூவுறாண்டா”

சிறப்புப் பரிசு :

  • மாதம் 5 விமான பயணம், 50 ரயில் பயணங்கள், 100 கார் பயணங்கள் இலவசம்

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1054 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 699 வாக்குகள் பெற்று தினமலர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்ததாக் 178 வாக்குகள் பெற்று தினத்தந்தி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 120 வாக்குகள் பெற்று தினமணி மூன்றாம் இடத்தையும், 57 வாக்குகள் பெற்று இந்து தமிழ் திசை ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளது.

***

அடுத்ததாக, மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்கான பந்தயத்தில் பங்கேற்பவர்கள் :

  • ரஜினிகாந்த்
  • கமல்ஹாசன்
  • விஷால்
  • சூர்யா

முதல் இடம்: ரஜினிகாந்த் (77% வாசகர்களின் தெரிவு)
விருது: “மோடி பக்தன்டா பிஜேபி பித்தன்டா”.

சிறப்புப் பரிசுகள் :

  • ரெய்டு ஃபீரி – வருமான வரி ரெய்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்
  • கலைத்துறை விருதான தாதா சாகேப் வாழ்நாள் விருது வழங்கப்படும்.

இரண்டாம் இடம் : கமல்ஹாசன் (16% வாசகர்களின் தெரிவு)
விருது: “பிஜேபி பித்தன்டா மோடி பக்தண்டா”

சிறப்புப் பரிசுகள் :

  • ரெய்டு ஃபீரி – கண்டிசன்ஸ் அப்ளை
  • கலைத்துறைக்கான ராஜ்ஜிய சபா எம்.பி பதவி அளிக்கப்படும்

மூன்றாம் இடம்: சூர்யா (4%) ” |
விருது: ”பக்தன்டா மோடிக்கு, பித்தன்டா பிஜேபிக்கு

சிறப்புப் பரிசுகள் :

  • ரெய்டு வருவோம் – ஆனா நடவடிக்கை எடுக்க மாட்டோம்
  • ஸ்வச்ச பாரத்தின் தென்னிந்திய அம்பாசிடர் பதவி உண்டு

ஆறுதல் பரிசு: நடிகர் விஷால் (3% வாசகர்களின் தெரிவு)
விருது: “பித்தன்டா பிஜேபிக்கு, பக்தன்டா மோடிக்கு”

விஷாலுக்கான சிறப்புப் பரிசுகள்:

  • ரெய்டு வந்தாலும் வருவோம் – நீ நடந்துக்குறத பொறுத்து
  • சென்சார் போர்டு உறுப்பினர் பதவி வழங்கப்படும்

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1219 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 938 வாக்குகள் பெற்று ரஜினிகாந்த் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்ததாக 197 வாக்குகள் பெற்று கமல்ஹாசன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 47 வாக்குகள் பெற்று சூர்யா மூன்றாம் இடத்தையும், 30 வாக்குகள் பெற்று விஷால் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளனர். 7 வாக்காளர்கள் பிற நடிகர்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

***

இறுதியாக, தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமிக்கான தேடலில் போட்டியாளராக பங்கேற்பவர்கள் :

  • ரங்கராஜ் பாண்டே
  • சமஸ்
  • வைத்தியநாதன்
  • மாலன்
  • ஜெயமோகன்

முதல் இடம்: ரங்கராஜ் பாண்டே (65%வாசகர்களின் தெரிவு)
விருது: ”இன்னாடா இவ்ளோ சவுண்டு உட்றான்”

சிறப்புப் பரிசுகள் :

  • தனி சானல் வைக்க அனைத்து உதவிகளும் இனாமாக செய்யப்படும்
  • மோடி அமித்ஷா தமிழகம் வரும்போது பேசும் உரைக்கு திரைக்கதை – வசனம் தயாரிக்கும் வாய்ப்பு

இரண்டாம் இடம்: மாலன் (13% வாசகர்களின் தெரிவு)
விருது: “உட்றான் சவுண்டு இவ்ளோ இன்னாடா”

மாலனுக்கான சிறப்புப் பரிசுகள் :

  • பணிபுரியும் சானல் – நிறுவனத்தில் சிஇஓ பதவி வாங்கித் தரப்படும்.
  • பொன்னார் – தமிழிசை பேசும் உரைகளுக்கு பொழிப்புரை அளிக்கும் வாய்ப்பு தரப்படும்.

மூன்றாம் இடம்: பத்திரிகையாளர் சமஸ் (8%வாசகர்களின் தெரிவு)
விருது: ”இவ்ளோ சவுண்டு வுட்றான் இன்னாடா”

சமஸுக்கான சிறப்புப் பரிசுகள் :

  • தலைமை செய்தி ஆசிரியர் பதவி வாங்கித் தரப்படும்.
  • மோடி மீடியாவின் தமிழக ட்ரோல்களுக்கு பயிற்சி அளிக்கும் கான்ட்ராக்டு அளிக்கப்படும்.

ஆறுதல் பரிசு: வைத்தியநாதன் (7%),  ஜெயமோகன் (7%)
விருது: “இவ்ளோ உட்றான் சவுண்டு இன்னாடா”

இவர்கள் இருவருக்குமான சிறப்புப் பரிசுகள்:

  • மீடியாவில் விரும்பிய வேலை விரும்பிய நிறுவனத்தில் விரும்பிய சம்பளத்தில் வாங்கித் தரப்படும்
  • எச்ச ராஜா, எஸ்.வி.சேகர் அடங்கிய பார்ப்பன கிச்சன் கேபினட்டின் மீடியா இன்சார்ஜாக வாய்ப்பு தரப்படும்.

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1457 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 949 வாக்குகள் பெற்று ரங்கராஜ் பாண்டே முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்ததாக 194 வாக்குகள் பெற்று மாலன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 110 வாக்குகள் பெற்று சமஸ் மூன்றாம் இடத்தையும், 107 வாக்குகள் பெற்று வைத்தியநாதன் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார். 97 வாக்குகள் பெற்றாலும் சதவித அடிப்படையில் கிட்டத்தட்ட வைத்தியநாதனை எட்டிப் பிடித்ததால், ஜெயமோகனுக்கும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

***

வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி !
உங்களது நல்ல நோக்கம் நிறைவேற எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்

ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !

Layoff-in-it-tear-letter-Slider

பணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம் !

Appraisal ௭திர்பார்ப்பு :

பிப்ரவரி மாதம் 2017-ல், ஐ.டி மக்களில் அநேகரை போல நானும் அப்ரைசலிற்காக காத்துக்கொண்டு இருந்தேன். புதிதாய் திருமணமான அந்த வருடம், “௭னக்கு அப்ரைசல் நல்லபடியாக வரும், பதவி உயர்வு வரும்” என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அது அதிர்ச்சியை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், டிசம்பர் வரையில் என்னை “star performer” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் திடீரென என்னை under performer என்று 4th bucket கொடுத்திருந்தார்கள்.

Appraisal meeting :

appraisal-NDLF-IT-Unionஐ.டி.-யில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. இதுபோன்ற அப்ரைசலுக்குப் பிறகு அதைப்பற்றி மேனேஜருடன் விவாதிப்பது ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விவாதம் எனக்கும் நடந்தது. அந்த விவாதத்தில் எனது மேனேஜர் என்னிடம் சொன்ன வார்த்தை “நீங்கள் செய்த வேலை திருப்திகரமாகத்தான் இருந்தது அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நமது கம்பெனியில் இந்த வருடம் 7 சதவிகித ஊழியர்களுக்கு 4th bucket, கொடுப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. அதனால்தான் உங்களுக்கும் அது கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதுமட்டுமல்ல இதுபோன்ற செயல்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்காக செய்யப்படும் முதற்கட்ட செயல்பாடு என்பதையும் அவரே எச்சரித்தார்.

Appraisal-க்கு பிறகான பகுப்பாய்வு :

அவர் எச்சரித்த அந்த நொடி என் மனதில் ஏற்பட்டது பணிநீக்கம் மட்டுமல்ல, “நாம் எப்படி வேலை செய்தாலும் நமக்கு மேல் இருக்கும் மேல் மட்ட குழுதான் நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றால் அந்தக் குழு எதற்காக அப்படி செய்கிறது? லாப நோக்கம், இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். எனவே ஒரு நிறுவனத்தில் mass lay off எதற்காக நடைபெறுகிறது என்பதைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

layoffஅப்பொழுதுதான் எனது நிறுவனத்திலேயே மேல்மட்ட குழுவில் பல ஊழல்கள் நடைபெற்று இருப்பதும், அது வெளியே தெரிந்தவுடன் பங்குதாரர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதும் எனக்கே தெரிந்தது. அதுமட்டுமல்ல ஊழியர்கள் மத்தியில் தான் பணி நீக்க நடவடிக்கை என்பது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பங்குதாரர்கள் மத்தியில் அல்லது பங்குச்சந்தையில் இதுபோன்ற ஐ.டி கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கை என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. பங்குதாரர்களின் நன்மதிப்பைப் பெற கம்பெனிகள் பணிநீக்க நடவடிக்கையை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.

இப்பொழுது என் தேடலுக்கு பதில் கிடைத்துவிட்டது. எனது கம்பெனியில் மேல் மட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் அதனால் பங்குதாரர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகளை சமாளிக்கவே 2017 -ம் வருடம் அந்தப் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எனக்கு தெள்ளத் தெளிவாகி விட்டது.

படிக்க:
♦ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
♦நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?

பணி நீக்க மனநிலைக்கு எதிராக :

அதுவரையில் பணி நீக்கம் என்பதை ஒரு சம்பிரதாயம் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு அது ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதி என்பது அப்போதுதான் உறைத்தது. எவனோ ஒருவன் மேல்மட்டத்திலிருந்து செய்த ஊழலுக்காக கீழ்மட்டத்தில் உள்ள 25,000 ஊழியர்களை தண்டிப்பது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. என் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்த நான் ஒருவேளை பணிநீக்க நடவடிக்கைக்கு நாம் ஆளாக்கப்பட்டால் அதை எதிர்த்தே தீருவது என்ற முடிவிற்கு வந்து அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள தயாரானேன்.

NDLF – ஐ.டி. அறிமுகம் :

இப்படி பணி நீக்க நடவடிக்கையை எதிர்க்க தீர்மானித்த பிறகு என் மனதில் வந்த முதல் விஷயம் 2014-ம் ஆண்டு TCS நிறுவனத்தை எதிர்த்து ஒரு பெண் நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றார் என்பதுதான். எனவே அது எப்படி சாத்தியமானது என்பதை பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் அந்தப் பெண் FITE சங்கத்தின் உதவியுடன் நீதி மன்றத்தை நாடினார் என்பதும் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அந்த வழக்கை வென்றார் என்பதும் தெரிந்தது. உடனடியாக நாமும் அந்த சங்கத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு இது பற்றி பேசிய பொழுது கோயம்புத்தூரில் இன்னும் நாங்கள் சங்க நடவடிக்கைகளை பெரிதாக துவங்கவில்லை எனவே அந்த முயற்சிகளை கூடிய விரைவில் நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம் அப்பொழுது உங்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.

பணிநீக்க நடவடிக்கைக்கு நாமும் உடனடியாக ஆளாகலாம் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததால் உடனடியாக வேறு ஏதாவது சங்கங்கள் கோயம்பத்தூரில் செயல்படுகிறதா என்பதை தேட ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் NDLF என்ற சங்கம் ஐ.டி கிளைகளை வைத்துள்ளது என்பதையும் அது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். உடனடியாக அவர்கள் ஐ.டி பிரிவின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தேன். அப்பொழுதுதான் எனது கம்பெனியில் வேலை செய்யும் பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே சங்கத்தில் இணைந்து செயல்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டேன். உடனடியாக அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து அவர்களின் whatsapp குரூப்பில் இணைந்து கொண்டேன்.

தொழிலாளர் துறை அலுவலகம் :

Combat-layoffஏற்கனவே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான மற்றும் என்னைப்போல் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாக இருக்கின்ற பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து தொழிலாளர் துறையை அணுகி புகார் கொடுக்கும்படி சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் நானும் சக ஊழியர்களும் தொழிலாளர் துறையை அணுகினோம். கம்பெனியில் நடைபெறும் அநீதிகளைப் பற்றி எடுத்துரைத்தோம், அதைப்பற்றி புகார் கொடுத்தோம்.

இதுபோன்று ஐ.டி துறையில் ஏற்படும் விஷயங்களெல்லாம் தொழிலாளர் துறையில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு புது அனுபவமாக இருந்தது என்பதை கண்கூடாக பார்த்தேன்.

தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வந்த மனிதவள அதிகாரி:

தொழிலாளர் துறையின் வழக்கத்தின்படி எங்களிடமிருந்து எழுத்து மூலமாக வாங்கப்பட்ட புகார்கள் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களை பேச்சுவார்த்தைக்காக தொழிலாளர் துறைக்கு அழைத்து ஒரு கடிதம் தொழிலாளர் துறையின் சார்பில் இருந்து அனுப்பப்பட்டது.

சரியாக 15 நாட்கள் கழித்து எங்கள் கம்பெனியின் HR, துறையிலிருந்து பேச்சுவார்த்தைக்காக தொழிலாளர் துறைக்கு வந்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் வெறுமெனே விஷயத்தை மட்டும் கேட்டுவிட்டு கம்பெனியில் விசாரித்துவிட்டு இதைப்பற்றிய முழு தகவல்களை தெரிவிப்பதாக சொல்லி விட்டு சென்றுவிட்டனர்.

அடுத்த பேச்சுவார்த்தை மீண்டும் 15 நாட்கள் கழித்து வைக்கப்பட்டது அதிலும் வந்தவர்கள் மழுப்பல் பதில்களையே கூறிவிட்டு காலம் தாழ்த்துவதிலேயே குறியாக இருந்தனர். கிட்டத்தட்ட நான்கு மாதம் இழுத்தடிக்கப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது. இதுவரை பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகாத ஊழியர்கள் கொடுத்த புகார்களில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும், அவர்கள் எந்த பணிநீக்க நடவடிக்கைக்கும் ஆளாக மாட்டார்கள் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

இது ஒருபுறம் எனக்கு மன நிம்மதியை கொடுத்தாலும் எங்களது குழுவில் இருந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான வேறு சில ஊழியர்களின் புகார்கள் இன்னமும் அப்படியே இருப்பது கவலை அளிக்கத்தான் செய்தது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் புகார்கள் :

என்னதான் எனது பிரச்சினை தீர்ந்து விட்டாலும் அவர்களுக்கும் ஒரு moral support கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்த காரணத்தினால் அவர்களின் புகார்களில் நடக்கும் விசாரணை மற்றும் அதன் போக்குகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன்.

Unethical-Layoffஇதுபோன்று பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்களின் மேல் வைக்கப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு என்னவென்றால் அவர்களாகவே ராஜினாமா செய்துவிட்டு கம்பெனியின் நற்பெயரை கெடுக்க இங்கு வந்து புகார் தெரிவிக்கிறார்கள் என்பதுதான். இதையெல்லாம் கேட்க கேட்க கம்பெனிகள் இதுபோன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை திரும்பி பணியில் அமர்த்துவது ஒரு கௌரவ குறைச்சலாக பார்க்கிறது என்று நம்பினேன். அவர்களின் வழக்கம் அதுபோன்ற ஒரு திசையில்தான் பயணித்தது.

ஆனால் சில மாதங்கள் கடத்திய பிறகு இதுபோன்ற புகார்களை மறைக்க, HR, ஊழியர்கள் காட்டிய உத்வேகம், கம்பெனியின் board members தொழிலாளர் துறை முன்வந்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட பயம், அந்த புகார்களை திரும்பப் பெற 10 லட்சம் வரையில் கொடுக்க முன் வந்த விதம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒருவேளை HR, ஊழியர்கள்தான் ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் எழத்தான் செய்தது.

எது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.

இதுபோன்ற கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து போராடுவது சிரமமான காரியம் என்றாலும் அது காலத்தின் கட்டாயம்.


வருண்குமார்
நன்றி : new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

எச்.ஐ.வி பாதித்த இளைஞர் தனது ரத்தத்தால் கர்ப்பிணித்தாய்க்கு தொற்று பரவி விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து இறந்திருக்கிறார். அந்த இளைஞருக்கு ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்து இந்த கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். நடந்தது என்ன? புதிதாக படிப்பவர்களுக்கான ஒரு சின்ன பின்னோக்கு பயணம்

நவம்பர் 30,2018 ஒரு இளைஞர் ரத்தம் கொடையாக வழங்குகிறார்.  டிசம்பர் 3,2018
அவர் வழங்கிய ரத்தம், அது தேவைப்படும் ஒரு கர்ப்பிணி தாய்க்கு ரத்த சோகையை சரி செய்ய ஏற்றப்படுகிறது.

டிசம்பர் 16, 2018 தான் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இடத்தில் மருத்துவ பரிசோதனை செய்தவர்கள். ரத்தத்தில் “எச்.ஐ.வி” தொற்று இருப்பதாக தகவல் தருகிறார்கள். உடனே தனது ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் தடுக்க வேண்டும் என்ற உந்துதலில் மீண்டும் ரத்த வங்கிக்கு தொடர்பு கொள்கிறார். ஆனால் காலம் கடந்துவிட, அந்த உதிரம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுவிட்டிருக்கிறது.

டிசம்பர் 17, 2018 அந்த கர்ப்பிணிக்கு ரத்த பரிசோதனை செய்தததில் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ரத்தம் மூலம் ” எச்.ஐ.வி” தொற்று பரவியிருப்பது கண்டறியப்படுகிறது. இந்த விசயம் பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணிக்கு நஷ்ட ஈடு, நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் மீடியாக்களால் கையில் எடுக்கப்படுகிறது.

“மூன்றாவது கண்ணாக” மாறி வரும் அதிகமான மக்கள் இயங்கும் முகநூல் மற்றும் டிவிட்டர் மீடியாவும் இந்த விசயம் பரவலாக பேசப்பட்டது. பேசப்படுகிறது.

இந்த விசயத்தில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் நானும் ஒரு பதிவு செய்தேன். ஆனால் இது அனைத்தையும் முடிவு செய்ய வேண்டியது துறை சார்ந்த ஆய்வு முடிவு மட்டுமே. ஆகவே, நாம் எப்போதும் நடுநிலையுடனே இந்த பிரச்சனையை ஆய்வு செய்வோம்

சந்தர்ப்பம் 1
ஒரு வேளை அந்த ஆய்வக நுட்புணர்கள், கொடையாக அளிக்கப்பட்ட ரத்தத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் கர்ப்பிணி பெண்ணுக்கு அளித்திருந்தால் அது அந்த ஆய்வக நுட்புணர்களின் மிகப்பெரும் தவறு.
அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சந்தர்ப்பம் 2
ஆய்வக நுட்புணர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்தும் பரிசோதனையில் நெகடிவ் என வந்திருந்தால் அது விண்டோ பீரியடினால் ஏற்பட்ட மருத்துவ பரிசோதனை பிழை ( Error in medical test) என்ற ரீதியில் அணுகப்பட்டு , இந்த பிழைகள் இன்னும் குறைக்கப்பட அரசு ஆணவ செய்ய வேண்டும்.

அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அப்பாவிகள் இரண்டு பேர் ஒருவர்
தனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாமல் ரத்தம் கொடையாக கொடுத்த அந்த இளைஞர். மற்றொருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான அந்த கர்ப்பிணி.

இந்த இருவரில் அந்த இளைஞர் தனக்கு தொற்று இருப்பது தெரிந்ததும், தானாக இந்த விசயத்தை பற்றி அறிய ரத்த வங்கிக்கு தொடர்பு கொள்கிறார். தனது ரத்தம் பிறருக்கு ஏற்றப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே அவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

அந்த ஒரு நற்செயலாலேயே அவர் இந்த மாய சுழுலுக்குள் சிக்கி இறக்கவும் செய்கிறார்.

ஆம்..

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட செய்தி அறியாமல் அவர் செய்த ரத்தக்கொடைக்கு அவரை பலிகடாவாக இன்று பலி கொடுத்திருக்கிறோம்

ஒருவருக்கு எச்.ஐ.வி கிருமி தொற்று என்று கண்டறியப்பட்டால் விதிகளின்படி அவரது நெருங்கிய சொந்தங்களுக்கு கூட( அவரது மனைவி உட்பட) அவரது விருப்பம் இன்றி தெரியப்படுத்தக்கூடாது.

காரணம் ??

நமது சமூகத்தில் ” எச்.ஐ.வி” என்றாலே விபச்சாரம் / பாதுகாப்பற்ற உடலுறவு இவற்றால் மட்டுமே வரும் நோய் என்ற மூடநம்பிக்கை ஆள்மனதில் ஆணியாக அடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மை நிலவரம் வேறு எச்.ஐ.வி தொற்று – ரத்தம் ஏற்றுதல் மூலம், காயமுற்ற ஒருவர் பயன்படுத்திய ரேசர், பிளேடு போன்றவற்றை பிறர் பயன்படுத்தும் போது கீறிவிடுதல், தாயிடம் இருந்து பிள்ளைக்கு(perinatal transmission) , மருத்துவ துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எச்.ஐ வி பாதித்த ஊசி குத்தி(Needle stick injury) என இன்னும் சில வழிகளில் பரவியிருக்கலாம்.

ஆனால் நாம் ஒருவருக்கு எச்.ஐ.வி என்று தெரிந்தால் உடனே அவரது நடத்தை / கற்பொழுக்கம் போன்றவற்றை பேசுபொருளாக மாற்றி அவர்களை தனிமைப்படுத்தி நாதியற்றவர்களாக மாற்றி விடுகிறோம்.

சமீபத்தில் வெளியான “அருவி” எனும் திரைப்படம் கூட ஒரு விபத்து மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட கதையின் நாயகியை அவரது குடும்பமே எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது. சமூகம் அவரை எப்படி நடத்துகிறது என்று காண்பித்திருப்பார்கள்.

மெடிக்கல் துறையில் ஒரு சொற்பதம் உண்டு. அனைத்து மருத்துவ ஊழியர்களும் நோயாளியை பார்க்கும் போதும் ஊசி போடும் போதும் Universal safety precautions ஐ கடைபிடிக்க வேண்டும் என்று ஏனென்றால் “Unless proved otherwise , all should be considered HIV positive is the rule என்று பழக்கப்படுத்தப்பட்டோம்

ஆம்.. நீங்களோ? நானோ? யாரோ ? ரத்த பரிசோதனை மூலம் நிரூபிக்காத வரை HIV தொற்று அற்றவர்கள் என்று கூறமுடியாது இதுவே நிதர்சனம். இந்த காரணத்தினால் தான் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அவர்கள் கர்ப்ப காலத்தில் முதல் ரத்த பரிசோதனையில் கட்டாயம் எச்.ஐ வி பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களது கணவர்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது.

அவர்களுக்கு இருந்தால் குழந்தைக்கு பரவுவதை தடுக்க ஆவண செய்ய வேண்டும் என்பதற்காக. மேலும் அனைத்து காச நோய் பாதித்தவர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது (TB – HIV co infection).

எந்த தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி.. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும் சரி… அதன் மருத்துவ பரிசோதனைகளில் எச்.ஐ.வி கண்டறிதலும் இருக்கும்.

இதன் மூலம் நான் கூற வருவது “ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது என்பது அவரை எந்த விதத்திலும் ஒழுக்கம் கெட்டவராக ஆக்கிவிடாது”. மேலும் பிறரது ஒழுக்கத்தை எள்ளிநகையாடும் முன் நமது ஒழுக்கத்தை அனைவரும் பேணுதல் சிறப்பு.

இந்த சம்பவத்தில் அந்த இளைஞன் எந்த தவறும் செய்யாமல் சமூகம் தந்த அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கிறார். எலி பாசானம் (Rat killer poisoning) என்பது ரத்தம் உறைதலை தடுக்கும் (warfarin ) வகையைச் சேர்ந்தது. அந்த வகை பாசானங்களை பொது வெளியில் தடை செய்வது சிறந்தது.
காரணம் தற்போது அந்த பாசானம் உண்டு மக்கள் இறக்கும் நிகழ்வு அதிகமாகிவருவதை காணமுடிகிறது.

சரி.. விசயத்துக்கு வருவோம்..

அந்த இளைஞரை கொன்றது எலிப்பாசானம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஆனால் அவரைக்கொன்றது “ஈவு இரக்கமற்ற நமது சமூகமே” என்றால் யாரும் மறுப்போருண்டோ?

அவரது பெயர், ஊர், இருப்பிடம் என்று அத்தனையையும் அம்பலமாக்கி அவரை கூனிக்குறுகச்செய்து கடைசியில் அவரது கதையையும் முடித்து விட்டாயிற்று. உண்மையில்.. எச்.ஐ.விக்கு எதிரான நமது ART (anti retro viral therapy ) அதிவேக முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பல மக்கள் சரியான மருந்துகள், ஊட்டச்சத்து உணவுகள் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது ஆயுட்காலமும் நீண்டு வருகிறது.

எச்.ஐ.வி வந்தால் ஐந்து வருடத்தில் இறந்து விடுவோம் என்ற காலமெல்லாம் மலையேறிப்போய்விட்டது. இந்த நிலையில் எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வு ,
அது பாதித்தோர் மீது நாம் காட்டும் அரவணைப்பு இவற்றின் மூலம் அறிவார்ந்த சமூகமாக நாம் வளர முடியும்.

எச்.ஐ.வி பாதித்த ஒருவரையும் புறம்தள்ளிவிட வேண்டாம்….

அந்த இளைஞரின் இறப்பு மூலம் நாம் அடையும் பாடமாக அது இருக்கட்டும் …

***

கட்டுரையின் கீழ் வந்த பின்னூட்டங்களில் வந்த கேள்விகளுக்கு விடையளிக்குமாறு இந்த கட்டுரையை எழுதுகிறேன்

கேள்வி 1

ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதில் இருந்து எத்தனை நாளில் நம்மால் அதை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் ??

நமது generation 4 ELIZA antigen antibody test kits களை வைத்து நாம் எச்.ஐ வி உள்ளே நுழைந்த 28 நாட்களுக்கு பின் கண்டு பிடிக்கலாம். generation 3 ELIZA kits களை கொண்டு மூன்று மாதத்திற்கு பின் மிகத்துள்ளியமாக கண்டறிய முடியும்.

இதற்கு முன்னமே கண்டறிய வேண்டும் என்றால் அதற்கு NAAT எனும் பரிசோதனை உள்ளது. Nucleic Acid Amplification Test இந்த பரிசோதனை மூலம் உள்ளே வந்த எச்.ஐ.வி கிருமியில் உள்ள ஜீன்களை பெருக்கம் செய்து கண்டறிவார்கள். இது துள்ளியமானது. இதே NAAT எனும் பரிசோதனையை தற்போது காச நோய் எனும் Tuberculosis பாதித்த மக்களுக்கு கூட்டு சிகிச்சைக்கு கட்டுப்படாத காச நோயை கண்டறிய பயன்படுத்துகிறோம்(Multidrug resistant TB).

இந்த பரிசோதனையை அனைத்து இந்திய ரத்த வங்கிகளிலும் கட்டாயமாக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா?

அதில் சிக்கல் உள்ளது. இந்த NAAT எனும் இந்த பரிசோதனையை Rapid test ஆக செய்ய முடியாது. இது நேரம் எடுக்கும் ஒரு பரிசோதனை. மேலும் இந்த பரிசோதனைக்கு ஆகும் செலவு இப்போது இருப்பதை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.

சரி செலவு ஆனால் ஆகிவிட்டுப்போகிறது. நமக்கு எச் .ஐ.வி தொற்று பரவக்கூடாது என்பதே தலையாய நோக்கம். ஆகவே பல லட்சங்களில் விற்கும் இந்த NAAT மெசின்களை ரத்த வங்கி முழுவதும் வாங்கி வைத்து பரிசோதனை செய்யலாம்.

நிச்சயம் அந்த காலம் கூடிய விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளில் அந்த பரிசோதனை செய்யப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

காரணம் மருத்துவம் சார்ந்த விசயங்களில் நாம் தான் நாட்டுக்கே முன்னோடி ஆகவே இதிலும் நாமே முன் செல்வோம். சரி இப்போது NAAT இல் உள்ள ப்ராக்டிகல் பிரச்சனை என்ன தெரியுமா? அது ஒரு Highly sensitive test.

sensitive ஆ? அப்படியென்றால் என்ன? ஆய்வக பரிசோதனைகளை பொறுத்த வரை sensitivity & specificity என்ற இரு பதங்கள் பேசப்படும்.

ஒருவன் ரொம்ப சென்சிடிவாக இருக்கிறான் என்று எப்போது கூறுவோம்?சிறிய விசயத்துக்கெல்லாம் மூக்குக்கு மேல் கோபம் வருபவனை தான் சென்சிடிவ் என்று கூறுவோம். அதே போல்.. ஒரு கருத்தை பேச மேடை ஏறியவர்.. தொன தொனவென்று பேசிக்கொண்டிருந்தால் அவரை நாம் என்ன சொல்வோம் Be specific please என்போம்.

இந்த இரண்டும் தான் பரிசோதனைகளுக்கும் தேவை அதாவது ஒரு பரிசோதனைக்கு sensitivity அதிகம் என்றால் அது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுள் நோய் இருப்பவர்களை மிக மிக துள்ளியமாக காட்டும். True positive கேஸ்களை கனக்கச்சிதமாக பிடித்துவிடும்.

sensitivityஐ மிக அதிகமாக வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? நோய் இருப்பவர்களை நோய் இருப்பவர்கள் (true positive) என்று காட்டும் கூடவே பல நோய் இல்லாதவர்களையும் நோய் இருப்பவர்கள்(false positive) என்று காட்டி விடும்.

specificity அதிகம் உள்ள ஒரு பரிசோதனையை தேர்ந்தெடுத்தால்
அது என்ன செய்யும் தெரியுமா? பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நோய் இல்லாதவர்களை சரியாக இவர்களுக்கு நோய் இல்லை(True negative) என்று காட்டி விடும். ஆனால் அதனுடன் சேர்ந்து நோய் இருப்பவர்கள் சிலரையும் நோய் இல்லாதவர்கள்(False negatives) என்று காட்டும்.

இதில் நமது NAAT எனும் இந்த ஜீன் எக்ஸ்பர்ட் பரிசோதனை Highly sensitive category இல் வருகிறது. இந்த NAAT க்கும் window period ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் (குறைந்த பட்சம் 7 முதல் 10 நாட்கள்). இன்று எச்.ஐ.வி தொற்று பெற்ற ஒருவர் ஒரு வாரத்துக்குள் ரத்தம் கொடுத்தால் அவருக்கு NAAT பரிசோதனையே செய்தாலும் Negative என்று வரலாம். காரணம் Window period.

இந்த NAAT எனும் பரிசோதனை மேலைநாடுகளில் Genexpert என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள பாதகம் யாதெனில் இது ஒரு Highly sensitive test. இதை எச்.ஐ.வி கிருமி கண்டுபிடிக்க உபயோகித்தால் நோய் இருப்பவர்களை நோய் இருப்பவர்கள்( true positive) என்று துள்ளியமாக காட்டும்.

அது பிரச்சினையில்லை. கூடவே நோய் இல்லாத பலரையும் நோய் இருப்பவர்கள் (False positive) என்றும் காட்டிவிடும். இப்படி நோய் இல்லாத ஒருவர் ரத்தம் வழங்கிவிட்டு வீட்டுக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அவருக்கு NAAT முறைப்படி பரிசோதனை செய்யப்படுகிறது. அது Highly sensitive test ஆதலால் false positive ஆக அந்த நோயற்ற நபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உடனே ரத்த வங்கியில் இருந்து கால் பறக்கும். உடனே ரத்த வங்கிக்கு வாருங்கள். இவர் அரக்கப்பறக்க ஓடுவார்.

ரத்த வங்கி அதிகாரி “சார். வீ ஆர் சாரி டு சே திஸ். யூ ஆர் ஹேவிங் எச்.ஐ.வி இன் யுவர் ப்ளட் .. ICTCக்கு உடனே போங்க.. ART ஸ்டார்ட் பண்ணுவாங்க” என்பார்.

நம்ம ஆளுக்கு தலை கிறு கிறுவென சுத்தும். இதை வீட்டிலும் சொல்ல முடியாது. எங்கும் பகிர்ந்து கொள்ள முடியாது. நேரே ICTC க்கு சென்று Antiretro viral therapy ஆரம்பிப்பார்.

வீட்டிற்கு இந்த விசயம் சில நாட்களுக்கு பின் தெரியவந்தால் வீட்டில் பெரிய கலவரமே நடக்கும். காரணம் எச்.ஐ.வி தொற்று என்றாலே தகாத உறவு முறை மூலம் மட்டும் தான் வரும் என்ற பொதுக்கற்பிதம் இன்றும் உள்ளது. அந்த நபரின் மானம் பறிபோகும். வீட்டின் அமைதி பறிபோகும்.

மனைவி குழுந்தைகளுடன் தனது ஊருக்கு சென்று விடுவார். இவர் மது அருந்த ஆரம்பிப்பார். இன்னும் மனம் லேசானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைக் கூட எடுப்பார்கள். ( இவையெல்லாம் எனது அரசுப்பணியில் நான் எனது நேரடி கண்காணிப்பில் பார்த்த எச்.ஐ.வி நோயாளிகளுக்கு நடந்தவை. கதையோ கற்பனையோ அல்ல).

திரும்பவும் கூறுகிறேன். ஜீன் எக்ஸ்பர்ட் கூறிய ஒரு தவறான முடிவு. ஒருவரின் வாழ்க்கையை தடம்புரளச்செய்து விடும் அளவு சக்தி வாய்ந்தது. சரி . ஜீன் எக்ஸ்பர்ட் ஒருவரை நோயாளி என்று முத்திரை குத்திவிட்டால் அது தான் இறுதியானதா?

இல்லை இல்லை. இல்லவே இல்லை.

ஜீன் எக்ஸ்பர்ட் ஒருவரை நோயாளி என்று சொன்னாலும் மூன்று மாதங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ELIZA antibody test தான் confirmatory ஆகும். எனவே NAAT எனும் இந்த பரிசோதனையை எச்.ஐ.வி கண்டறிய பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உண்டு. அதைக்களைந்து நிச்சயம் ஒரு நாள் NAAT தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்.

கேள்வி 2

எடுக்கப்பட்ட ரத்தத்தை எச்.ஐ.விக்கான அதன் window period ( 28 நாட்கள்) வரை வங்கியிலேயே வைத்திருந்து பிறகு பரிசோதனை செய்து அதை ஏற்றலாமே ? என்று பலரும் கேட்கின்றனர்.

window period என்பது ஒரு கிருமி ஒரு உயிருள்ள உடலுக்குள் நுழைந்ததில் இருந்து அந்த நோய்க்கான ரத்த பரிசோதனையில் பாசிடிவ் என வரும் வரை உள்ள இடைப்பட்ட காலம் window period ஆகும்.

இது உயிருள்ள உடலுக்குள் மட்டுமே பொருந்தும். வெளியே எடுத்த ரத்தத்திற்கு பொருந்தாது. காரணம் ஒருவருக்கு நேற்று எச்.ஐ வி தொற்று ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

இன்று அவர் ரத்தம் கொடையாக தருகிறார். அவருக்கு எச் ஐ வி பரிசோதனை செய்யப்படுகிறது. அது நெகடிவ் என்று வருகிறது. அதே ரத்தத்தில் 28 நாட்கள் கழித்து எடுத்தாலும் Negative என்று தான் வரும்.

ஆனால் அதே நபருக்கு இப்போது எச்.ஐ வி பரிசோதனை செய்தால் positive என்று வரலாம். காரணம் அவரது ரத்தம் இப்போது உடலுக்குள் இல்லை. அந்த கிருமிக்கு எதிராக எதிர்வினை செய்யும் உடலின் நொதிகள் இல்லை. ஆகவே ரத்தம் எடுக்கப்பட்ட போது எத்தனை கிருமிகள் அந்த ரத்தத்தில் இருந்ததோ. அதை விட கொஞ்சம் பெருகியோ அல்லது அதே அளவு தான் இருக்கும்.

காரணம் ரத்தத்தோடு அது உறையாமல் இருக்க ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அந்த ரசாயனம் ரத்தத்தை அது எடுத்த போது எப்படி இருந்ததோ..அதே போன்று வைக்கிறது..

உண்மையில் எடுக்கப்பட்ட ரத்தத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ? 21 நாட்கள் முதல் அதிகபட்சம் 35 நாட்கள் மட்டுமே.

ஒருவர் தரும் முழு ரத்தமானது (whole blood)
1. மலேரியா
2. எச்.ஐ வி 1&2 வைரஸ்
3. சிஃபிலிஸ்
4. ஹெப்பாடைடிஸ் பி&சி

போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதில் நெகடிவ் என்று தெரிந்த பிறகே ஏற்றப்படுகின்றன.

தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் முழு ரத்தம் மட்டுமல்லாமல்
ரத்தத்தின் தனித்தனி பாகங்கள் பிரிக்கப்பட்டு தேவைப்படுவோர்க்கு ஏற்றப்படுகின்றன.

முழு ரத்தமானது (Whole blood ) குளிர் நிலையில் 21 முதல் 35 நாட்கள் வைக்கப்படலாம். இப்போது உள்ள டிமாண்டில் ஒரு வாரத்திற்குள் நாம் கொடுத்த ரத்தம் உபயோகப்படுத்தப்பட்டுவிடும். ரத்தத்திற்கான டிமாண்ட் அவ்வளவு அதிகம். Packed cell unit என்போம். அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை மட்டும் பிரித்து எடுத்து அதை மட்டும் ஏற்றுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போதும். ரத்த சோகையை சரிசெய்யவும் இது போன்று ஏற்றப்படும். இந்த சிவப்பு அணுக்களை 6 டிகிரி செல்சியஸில் 42 நாட்கள் வைத்திருக்கலாம்.

ரத்த தட்டணுக்களை (Platelets transfusion) மட்டும் ஏற்றும் முறையும் இருக்கிறது.
டெங்கி போன்ற நோய் பாதித்தவர்கள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த தட்டணுக்களை ஏற்றலாம்.

அடுத்தது “ப்ளாஸ்மா ட்ரான்ஸ்ப்யூசன்” எனும் முறை. இதில் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் யாவும் எடுக்கப்பட்டு ப்ளாஸ்மா மட்டும் ஏற்றப்படும்.

விபத்தில் அடிபட்டவர்கள், தீக்காயமுற்றவர்களுக்கு இது உதவும். இதிலும் Cryoprecipitate என்ற முறையில் ரத்தம் உறைய வைக்க தேவையான clotting factor VIII மற்றும் fibrinogen மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு ஏற்றப்படுகிறது. இது hemophilia போன்ற ரத்த உறைதல் பிரச்சனை இருப்போருக்கு உபயோகமாக இருக்கின்றது.

ப்ளாஸ்மா மற்றும் க்ரையோ ப்ரிசிபிடேட்டை ஒரு வருடம் கூட உறை நிலையில்(freezed) வைத்திருக்கலாம். நாம் தந்த முழு ரத்தத்தை இவ்வாறு componentகளாக பிரிக்கும் நவீன கருவிகள் நமது அரசு மருத்துவக்கல்லூரிகளில் உண்டு.

கேள்வி 3

20,000 பேருக்கு இந்தியாவில் கடந்த வருடம் ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ வி வந்துள்ளது என்று நோயாளிகள் வாயிலாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் கூறுகின்றன. இது இந்திய மக்கள் தொகையை கணக்கிடுகையில் மற்றும் ரத்தம் ஏற்றப்படும் மக்களின் அளவைக்காட்டிலும் மிக குறைவு என்று கூறினேன்
அதற்கு சிலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது.

எனது பதில் இதுவே இந்தியாவில் வருடம் ஒன்றிற்கு 90 லட்சம் யூனிட் ரத்தம் கொடையாக வழங்கப்பட்டு அது தேவைப்படும் மக்களுக்கு ஏற்றப்படுகிறது.

ரத்தம் ஏற்றுதல் என்பது உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒருவருக்கும் அது தேவைப்படும் ஒருவருக்கும் அத்தியாவசிய உயிர் காக்கும் சிகிச்சை.

இந்தியாவின் வருடாந்திர ரத்த யூனிட் தேவை 1.25 கோடி. ஆனால் கிடைப்பதோ 90 லட்சம் யூனிட்கள் தான். அதுவும் அனைத்து இடங்களிலும் சரிசமமாக கிடைப்பதில்லை. டெல்லி போன்ற பெருநகரங்களில் 200 % க்கு மேல் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் அதுவே பிஹார் போன்ற மாநிலங்களில் 85% கிடைப்பதே இல்லை.

ஒரு கார் ஆக்சிடண்ட்டில் கால் உடைந்த நோயாளிக்கே 100 யூனிட் ரத்தம் தேவைப்படும் நிலை இருக்கிறது. பிரசவ காலத்தில் ரத்தப்போக்கு நேர்ந்தால் அதை நிறுத்த 20 யூனிட் முதல் 50 யூனிட் ரத்தம் ஏற்றி தாய் பிழைத்த சம்பவங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் பயிற்சி மருத்துவனாக இருந்த நேரத்தில் பிரசவத்தில் ரத்தப்போக்கு சென்ற தாய்க்கு இருபது யூனிட் ரத்தம் ஏற்றியும் பிழைக்காமல் போனதையும் பார்த்துள்ளேன்.

ஒரு ரத்த வங்கிக்கு இன்று முப்பது யூனிட் ரத்தம் வருகிறதென்றால், அதே நாள் தேவை – 40 யூனிட்டாக இருக்கும். மேலும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு தேவைப்படும் வங்கிக்கு ரத்தம் பறந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு யூனிட் ரத்தமும் அது கிடைக்கும் பல உயிர்களை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. 50 கோடி இளைஞர்கள் ரத்தம் தர தகுதிகள் இருக்கும் நாட்டில் வெறும் 90 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே ரத்தம் வருடம் கிடைக்கிறது. மேலும் 20,000 பேருக்கு ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ.வி வந்தது என்று கூறியிருப்பது. நோயாளிகள் அவர்கள் வாய்மொழி வழி கூறியது.

தகாத உறவு மூலம் வந்த எச்.ஐ.வி தொற்றைக்கூட நோயாளிகள் மறைத்து ரத்தம் மூலம் வந்தது என்று கூறவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்தம் மூலம் எச்.ஐ.வி வந்தவர் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும்.

130 கோடி மக்கள் வாழும் நாட்டில் வருடந்தோறும் 1.2 கோடி பேர் ரத்தம் கொடுக்க தேவையுள்ள நாட்டில் 20000 என்பது குறைந்த எண்ணிக்கை இதை பெரிய எண்ணிக்கையாக பார்ப்பவர்கள் பின்வரும் எண்ணிக்கையையும் பாருங்கள்.

இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் வாகன விபத்துகளில் சாகின்றனர்
ஆண்டொன்றிற்கு சுமார் 1.5 லட்சம் மக்கள் வாகன விபத்துகளில் உயிரை இழக்கின்றனர். ஆறு லட்சம் பேர் விபத்துகளால் முடமாகின்றனர். இவற்றை விபத்துகள் என்ற கேட்டகரிக்குள் கொண்டு வந்து அனைவரும் மெளனிகளாக வாழ்கிறோம்

ஆனால் ரத்தம் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 20,000 பேருக்கு எச்.ஐ.வி வந்தது என்றால் இந்த உயிர் காக்கும் சிகிச்சை மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு எதிராகவும் கூக்குரல் எழுப்புகிறோம்

ஏன் இந்த ரெட்டை நிலை?

முடிவுரை

ஒரு உயிருக்கும் தெரிந்தே தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே நீதி. ஆனால் விபத்துகள் அனைத்து துறைகளிலும் நடக்கின்றன. நமது பதிவின் நோக்கம் யாதெனில் மருத்துவத்துறையில் நடக்கும் விபத்துகளை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்குவது தவறு.

தவறுகள் நடந்திருந்தால் அதை சரிசெய்யும் பொருட்டு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு / வாழ்வாதாரத் தேவை/ உயர்தர சிகிச்சை போன்றவற்றை அரசு உறுதி செய்யும்.

ஆகவே அரசு மருத்துவமனைகள் மீது காழ்ப்புணர்ச்சி வேண்டாம். அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானது மட்டுமன்று. அனைவருக்குமானது. நல்ல நிலையில் இருக்கும் நீங்கள் இன்று அரசு மருத்துவமனைகள் மீதும் ரத்தம் ஏற்றுதல் மீதும் கல்லெறிந்தால் ரத்தம் கிடைப்பது இன்னும் குறையத்தான் செய்யும்.

ஒருநாள் நீங்கள் மகிழ்வுந்தில் சத கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்று எங்கேனும் ஆள் அரவமில்லா இடத்தில் சாலை விபத்து நடந்தால் அங்கு உங்களை காப்பாற்ற 108 இலவசமாக ஓடி வரும். அருகில் பெரிய தனியார் மருத்துவமனைகள் இருக்காது.

அரசு மருத்துவமனைக்கு 108 செல்லும். அங்கு ரத்த வங்கியில் இருக்கும் கடைசி பை ரத்தம் தான் உங்களை காப்பாற்றும் ஒன்றாகக் கூட இருக்கலாம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை

மிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.

வடக்கே அயோத்தியில் ராமனுக்குக் கோவில் தெற்கே சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குத் தடை ஆகிய பிரச்சனைகளைக் கையிலெடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து மதக் கலவரத் தீயை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நவம்பர் 25-ல் அயோத்தியில் திரண்ட மதவெறியர்கள் ‘ராமனுக்கு முதலில் ஆலயம் அதன் பிறகே அரசு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தடையை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ராமர் கோவில் கட்ட தனிச்சட்டம் தயார் என்று ஆர். எஸ். எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் அறிவிக்கிறார்.

ஆர். எஸ் . எஸ் . இந்துமத வெறியைத் தூண்டும் சதியை அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைத் சனாதன் சன்ஸ்தா என்ற மதவெறி அமைப்பு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

பழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.

”சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!” என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.

முதல் பாகம் :

இரண்டாம் பாகம் :

முகநூலில் பார்க்க :

முதல் பாகம் :

இரண்டாம் பாகம் :

 


தொகுப்பு: வினவு களச் செய்தியாளர்கள்.

தாகம் கொண்ட நிலமாக மக்கள் காத்து கிடக்கின்றனர் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 47

மாக்சிம் கார்க்கி
தாய் சுவரின் மீது சாய்ந்து, தலையைப் பின்னால் சாய்த்து, அவர்கள் சொல்லும் ஆழமும் அமைதியும் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தத்யானா எழுந்திருந்து, சுற்றும் முற்றும் பார்த்தாள், மீண்டும் உட்கார்ந்துகொண்டாள். அந்த முஜீக்குகளை வெறுப்போடும் கசப்புணர்ச்சியோடும் நோக்கிய அவளது பசிய கண்கள் வறட்சியாகப் பிரகாசித்தன. திடீரென்று அவள் தாயின் பக்கம் திரும்பினாள்.

”உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவோ துயரங்களை அனுபவித்திருக்க வேண்டும்” என்று சொன்னாள்.

”ஆமாம்” என்று பதில் சொன்னாள் தாய்.

”உங்கள் பேச்சு, எனக்குக் கேட்கக் கேட்கப் பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகள் இதயத்தையே இழுத்து நீட்டுகின்றன. நீங்கள் பேசும்போது நான் எனக்குள் ‘கடவுளே, இவள் பேசுகின்ற மனிதர்களை நான் கொஞ்ச நேரமேனும் பார்க்கக் கொடுத்துவைக்க மாட்டாயா? வாழ்க்கையையே நான் காண மாட்டேனா?’ என்று நினைத்துக் கொள்கிறேன். இங்கு நாங்கள் வாழ்க்கையில் என்னத்தைக் காண்கிறோம்? வெறும் ஆட்டு மந்தையாகத்தான் நாங்கள் இருக்கிறோம். உதாரணமாக, என்னையே பாரேன், எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். புத்தகங்களைப் படிக்கிறேன். எதை எதைப் பற்றியெல்லாமோ சிந்திக்கிறேன். சமயங்களில் சிந்தித்துச் சிந்தித்தே இரவெல்லாம் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனால் என்ன லாபம்? நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டால், ஒன்றுமற்று வாடி வதங்கி நாசமாய்ப் போவேன். சிந்திப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அதனாலும் எனக்கு எந்தப் பயனும் இல்லை.”

பேசும்போது அவளது கண்களில் கேலி பாவமே பிரதிபலித்தது. சமயங்களில் அவள் தான் பேசும் வார்த்தைகளை ஏதோ ஒரு நூலைக் கடித்துத் துண்டாக்குவது மாதிரி உச்சரித்தாள். அந்த முஜீக்குகள் எதுவும் பேசவில்லை. காற்று ஜன்னல் கதவுகளின் மீது வீசியடித்தது. புகைக் கூண்டு வழியாக லேசாக முணுமுணுத்து வீசியது, வீட்டுக்கூரை மீது சலசலத்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது, எப்போதாவது இடையிடையே மழைத் துளிகள் வேண்டா வெறுப்பாக ஜன்னலின் மீது விழுந்து தெறித்தன. விளக்கின் சுடர் படபடத்துக் குறுகி, அணைவது போல் இறங்கியது. மீண்டும் சுடர் வீசி எழுந்து அதிக பிரகாசத்துடன் நிலையாக நின்று எரிந்தது.

“நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது, ‘இதற்காகத்தான் மக்கள் வாழ்கிறார்கள்’ என்று எனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவையெல்லாம் எனக்கே தெரிந்த விஷயங்கள் மாதிரி உணர்ந்தேன், அதுவே எனக்கு ஓர் அதிசயம். ஆனால், இந்த மாதிரி யாரும் அதுவரை பேசி நான் கேட்டதில்லை. நானும் இந்த மாதிரி எண்ணங்களைச் சிந்தித்துப் பார்த்ததில்லை……..”

“ஏதாவது சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் விளக்கை அணைப்பது நல்லது, தத்யானா” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மெதுவாகச் சொன்னான் ஸ்திபான்: “சுமகோவின் வீட்டில் இரவு அகாலம் வரையிலும் விளக்கு எரிவதை ஜனங்கள் கண்டு கொள்ளக்கூடும். அதனால் நமக்கு ஒன்றுமில்லை. ஆனால் நமது விருந்தாளியின் நலத்துக்கு அது உகந்ததல்ல…”

தத்யானா எழுந்து அடுப்பருகே சென்றாள்.

”ஆ – மா – ம்” என்று புன்னகை புரிந்தான் பியோத்தர். “இப்போதெல்லாம் நாம் உஷாராய்த்தானிருக்க வேண்டும். இந்தப் பத்திரிகைகள் ஜனங்கள் மத்தியிலே மீண்டும் தலைகாட்டியவுடனே…”

“நான் என்னைப் பற்றி நினைக்கவே இல்லை. அவர்கள் என்னைக் கைது செய்து கொண்டு போனாலும், எனக்கு அதனால் பெரிய நஷ்டம் ஏதும் விளையப் போவதில்லை.”

அவன் மனைவி மீண்டும் மேஜையருகே வந்து சொன்னாள்:

”கொஞ்சம் எழுந்திரு.”

அவன் எழுந்திருந்து ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொண்டான்: மேஜையின் எல்லாவற்றையும் அவள் ஒழுங்குபடுத்துவதையே கவனித்துக்கொண்டிருந்தான்.

“சகோதரர்களே – உங்களையும் என்னையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒரு ஐந்து கோபெக்தான் மதிப்பு. ஆமாம், நம்மைப் போன்றோர் நூறு பேர் சேர்ந்தாலும் இப்படித்தான்” என்று கிண்டல் நிறைந்த புன்னகையோடு சொன்னான் அவன்.

தாய் அவனுக்காக வருந்தினாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவனை மேலும் மேலும் அவளுக்குப் பிடித்துப் போயிற்று. தனது பேச்சுக்குப் பிறகு அன்றைய கோர சம்பவத்தின் மனப்பாரத்தை இறக்கிவைத்த உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் தனக்குத் தானே மகிழ்ந்து கொண்டாள். எல்லோரும் நல்லபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்து நிரம்பி வழிந்தது.

“தோழனே, நீங்கள் சொல்வது தவறு” என்றாள் அவள். ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் உங்களை மதிப்பிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது. நீங்கள் உங்களையே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். உங்களது இதயத்துக்குள் இருப்பதைக் கொண்டு, உங்கள் நண்பர்களைக் கொண்டுதான் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிரிகளைக் கொண்டு அல்ல.

“எங்களுக்கு எந்த நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று அந்த முஜீக் மெதுவாகக் கூறினான். “நண்பர்கள் – ஒரு வாய் ரொட்டிக்கு நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துச் சண்டை போடுகிறவரையிலும்தான், நண்பர்கள் எல்லாம்!”

“இல்லை. சாதாரண மக்களுக்கும் நண்பர்கள் உண்டு என்று நான்தான் சொல்லுகிறேன்.”

“இருக்கலாம்; ஆனால் இங்கு அப்படி ஒருவருமே இல்லை. அதுதான் விஷயம்” என்று எதையோ நினைத்துக்கொண்டு சொன்னான் ஸ்திபான்.

படிக்க:
♦ தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்
♦ அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல் நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்

”ஏன் இங்கேயும் கூட நண்பர்களை நாம் தேடிக்கொள்ளக் கூடாதா?”

ஸ்திபான் பதில் சொல்வதற்கு முன் ஒரு கணம் யோசித்தான். பிறகு சொன்னான்

“ஹும்! ஆமாம், தேடித்தான் பார்க்க வேண்டும்.”

”சரி, உட்காருங்கள். சாப்பாடு தயார்” என்று அழைத்தாள் தத்யானா.

தாய் தங்களிடம் கூறிய பேச்சினால் இழுக்கப்பட்டு சிந்தை இழந்திருந்த பியோத்தர் சாப்பிடும்போது மீண்டும் உற்சாகம் பெற்றான்.

”அம்மா, நீங்கள் அதிகாலையிலேயே போய்விட வேண்டும், அப்போதுதான் யார் கண்ணிலும் படாமல் போகலாம்” என்றான் அவன். “பக்கத்து ஊர் வரையிலும், வண்டியிலேயே போக வேண்டும். ஆனால் நகருக்குள் போகக்கூடாது. ஒரு தபால் வண்டியை அமர்த்திக் கொள்ளுங்கள்.”

”அவள் ஏன் அமர்த்த வேண்டும்? நானே அவளுக்கு வண்டியோட்டுகிறேன்” என்றான் ஸ்திபான்.

“இல்லை, நீ ஓட்டக்கூடாது. அவர்கள் யாராவது உன்னைப் பார்த்து, ‘இவள் இரவு உன் வீட்டில் தங்கினாளா?’ என்று கேட்டால், நீ என்ன சொல்வாய்? ‘ஆமாம், தங்கினாள்’ என்பாய். ‘இப்போது எங்கே போகிறாள்?’ என்றால், ‘நான் அவளைப் பக்கத்து ஊர் வரையிலும் கொண்டுவிடப் போகிறேன்’ என்பாய். உடனே, ‘ஓஹோ… நீதான் அவள் தப்பித்துக் கொண்டுபோக வழி செய்தாயா?’ என்று சொல்வார்கள், ‘அப்புறம் நீ சிறைக்குப் போக வேண்டியதுதான்’. சிறைக்குப் போவதற்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை. எல்லாம் அதனதன் காலத்தில் தானே நடக்கும். சாகிற காலம் வந்துவிட்டால் ஜார் அரசனும்கூட சாகத்தான் செய்வான் என்பது பழமொழி. ஆனால் நான் சொல்கிறபடி செய்தால், அவளாக எங்கோ இரவைக் கழித்துவிட்டு, ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு போவது மாதிரி இருந்தால் நல்லது. நம்முடைய கிராமம் ராஜபாட்டைக்கு அருகிலிருப்பதால், எத்தனையோ பேர் இரவில் இங்குத் தங்கிப் போவார்கள்.”

“பியோத்தர்! இவ்வளவு தூரம் பயப்படுவதற்கு நீ எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று குத்தலாகக் கேட்டாள் தத்யானா.

“ஏனம்மா எப்படியெப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்ளவுமா கூடாது?” என்று தன் முழங்காலில் தட்டிக்கொடுத்தவாறே சொன்னான் பியோத்தர். ”எப்போது பயப்பட வேண்டும், எப்போது தைரியமாயிருக்க வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துதான் வைத்திருக்க வேண்டும். நினைத்துப்பார், அந்தப் பத்திரிகையை வைத்திருந்ததற்காக வாகானவைப் ஜில்லா அதிகாரி என்ன பாடுபடுத்தினார் என்பது உனக்குத் தெரியாதா? அப்புறம் காசுக்காகட்டும், ஆசைக்காகட்டும் – அவன் கையிலே ஒரு புத்தகத்தைக் கொடுக்க முடியுமா? கொடுத்தால் வாங்கத் துணிவானா? அம்மா, நீங்கள் என்னைப் பரிபூரணமாக நம்பலாம். நான் என்னவோ கொஞ்சம் அடாபிடிக்காரன். இருந்தாலும், நான் நீங்கள் தரும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஆள் பார்த்து, இடம் பார்த்து விநியோகிக்கிறேன். எங்கள் ஜனங்களில் பெரும்பாலோர் மிகவும் பயந்தவர்கள், படிப்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், பலமாக மூடிய கண்களைக் கூட, பலவந்தமாகப் பிதுக்கித் திறந்து உண்மையைப் பார்க்கும்படி செய்யும் காலம் வரத்தான் போகிறது. இந்தப் பிரசுரங்கள், விஷயத்தை மிகவும் சுளுவாகச் சொல்லிவிடுகின்றன. விஷயம் இதுதான்: ‘சிந்தித்துப் பார், மூளைக்கு வேலை கொடு’ – என்பதுதான். சமயங்களில் படித்தவர்கள் புரிந்து கொள்வதைவிடப் படியாதவர்களே அதிகமாகப் புரிந்து கொள்கிறார்கள். அதிலும் படித்தவர்களுக்குத் தொந்தி விழுந்து சோற்றுக் கவலையில்லாது போய்விட்டால் அவர்களுக்குப் புரியவே புரியாது. இந்த வட்டாரத்தில் நான் எவ்வளவோ பிரயாணம் செய்திருக்கிறேன். எவ்வளவோ பேரைக் கண்டிருக்கிறேன். நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அகப்பட்டுக் கொள்ளாதவாறு, மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்துகொள்வதற்குக் கொஞ்சம் மூளையைச் செலவழிக்க வேண்டும், அவ்வளவுதான். நிர்வாகிகள் தாங்கள் கத்திமீது அமர்ந்திருப்பது போலவே உணர்கிறார்கள். எவனாவது ஒரு முஜீக் அதிகாரிகளைக் கண்டு புன்னகை புரிவதையோ, அன்பு காட்டுவதையோ நிறுத்திவிட்டால், அவனது வழக்கத்துக்கு மாறான அந்தத் தன்மையைக் கண்டு, அவன் அதிகாரிகளுக்கு எதிராகச் செல்கிறான் என்று கருதி, அவனை லேசாக மோப்பம் பிடித்துவிடுகிறார்கள்.

அன்றைக்கு இப்படித்தான் ஸ்மல்யகோவோவிலே — அதுவும் பக்கத்துக் கிராமம் — அதிகாரிகள் வரி வசூல் செய்வதற்காக வந்திருந்தார்கள். உடனே அங்குள்ள முஜீக்குகள் கம்பும் தடியும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். போலீஸ் தலைவனுக்கு அதைப் பற்றிக் கொஞ்சம்கூடப் பயமில்லை, ‘ஏ, நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் ஜார் அரசனுக்கு எதிராகக் கிளம்புகிறீர்கள்?’ என்று ஊளையிட்டான்.

அங்கே ஸ்பிவாகின் என்று ஒரு முஜீக் அவன் முன்னாலேயே வந்து பதில் சொன்னான். “உன் ஜாரோடு நீயும் நாசமாய்ப் போ. அவன் எப்படிப்பட்ட ஜாராம்? உடம்பிலே ஒத்தைத் துணிகூட இல்லாமல் உரித்துப் பிடுங்குகிறவன்தானே!” என்று கூறினான். எனவே, காரியங்கள் இவ்வளவு தூரத்துக்குப் போயிருக்கிறது, அம்மா அவர்கள் ஸ்பிவாகினைப் பிடித்துச் சிறையில் போடத்தான் செய்தார்கள். இருந்தாலும் அவன் வார்த்தைகளைச் சிறையில் போட முடியுமா? சின்னஞ்சிறு பிள்ளைகளுக்குக்கூட அவன் பேச்சு ஞாபகத்தில் இருக்கிறது. அவன் பேச்சு என்றென்றும் ஒலிக்கிறது, என்றென்றும் வாழ்கிறது”

அவன் எதுவுமே சாப்பிடாமல் விறுவிறுவென்று ரகசியக் குரலில் பேசியவாறே, தன்னைச் சுற்றிக் குறுகுறுவென விழிக்கும் இருண்ட கண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் தாயிடம் பொலபொலவென்று உதிர்த்துத் தள்ளினான்.

ஸ்திபான் இடையே இரண்டுமுறை குறுக்கிட்டுப் பேசினான்:

“நீ முதலில் ஏதாவது சாப்பிடப்பா.”

அந்த இரண்டு முறையும் பியோத்தர் ஒரு ரொட்டித் துண்டையும் கரண்டியையும் கையில் எடுத்ததுதான் மிச்சம்; அவற்றைக் கையில் வைத்தவாறே உல்லாசமாகப் பாடும் வானம்பாடி மாதிரி தனது கதைகளையே சொல்லிக்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்தவுடன் அவன் திடீரெனத் துள்ளியெழுந்து நின்று பேசினான்.

“சரி… நான் போவதற்கு நேரமாகிவிட்டது. வருகிறேன், அம்மா” என்று கூறிவிட்டு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான். “ஒருவேளை நாம் இருவரும் மீண்டும் சந்திக்க இயலாமலே போகலாம். இருந்தாலும் உங்களைச் சந்தித்ததும் உங்களோடு பேசியதும் என்றென்றும் மறக்க முடியாத இனிய விஷயங்கள் என்பதை மட்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். சரி அந்த டிரங்குப் பெட்டியில் பத்திரிகைகளைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? கம்பளிச் சவுக்கம் ஏதாவது? ரொம்ப நல்லது — கம்பளிச் சவுக்கம்தானே? ஞாபகம் வைத்துக்கொள், ஸ்திபான். இவன் இன்னும் ஒரு நிமிஷத்தில் டிரங்குப் பெட்டியைக் கொண்டு வந்து சேர்ப்பான். புறப்படு, ஸ்திபான். வருகிறேன், அம்மா, உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!”

அவர்கள் சென்ற பிறகு சுவர்க் கோழிகளின் இரைச்சல்கூடத் தெளிவாகக் கேட்டது. காற்று கூரையின் மீது சலசலத்தது, புகைக் கூண்டு வழியாகப் படபடத்தது. மெல்லிய மழைத் தூவானம் ஜன்னலின் மீது பெய்து வழிந்தது. தத்யானா அடுப்புக்கு மேலாக இருந்த பரணிலிருந்து சில போர்வைகளை எடுத்து, ஒரு பெஞ்சின் மீது விரித்து, தாய்க்குப் படுக்கை தயார் பண்ணிக் கொடுத்தாள்.

”அவன் ஓர் உற்சாகமான பேர்வழி என்று கூறினாள் தாய்.”

”பெரிய வாயளப்புக்காரன். சத்தம் போடுவதுதான் மிச்சம்.”
”உன் கணவன் எப்படி?” என்று கேட்டாள் தாய்.

“அவன் ஒழுங்கானவன்தான். ஓரளவு நல்லவன்தான். குடிப்பதில்லை. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். அவனிடம் பலவீனமான குணம்…”

அவள் நிமிர்ந்து நின்றாள்.

”அதற்கு இப்போது நாங்கள் என்ன செய்வது?” என்று ஒருகணம் கழித்துச் சொன்னாள் அவள். “நாங்களெல்லாம் போராடி எழ வேண்டாமா? போராடத்தான் வேண்டும். அதைப் பற்றித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஒவ்வொருவனும் தனக்குத் தானே நினைத்துக்கொள்கிறான். ஆனால், அதை வெளிப்படையாக நினைத்துப் பார்க்க வேண்டும். யாராவது முதலில் துணிந்து காலடி எடுத்து வைக்க வேண்டும் ……..”

அவள் பெஞ்சின் மீது உட்கார்ந்து தாயைப் பார்த்துக் கேட்டாள்.

”சீமான் வீட்டு வயசுப் பெண்கள் கூட, தொழிலாளிகளோடு கலந்து பழகுவதாகவும், அவர்களுக்குப் பாடம் சொல்வதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வளவுக்கு, அப்படிச் செய்வதற்கு அவர்களால் முடியுமா? அவர்களுக்குப் பயமாயிருக்காது?”

அவள் தாயின் பதிலைக் கேட்டு ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். பிறகு தன் கண்களையும் தலையையும் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்.

“ஏதோ ஒரு புத்தகத்தில் அர்த்தமற்ற வாழ்க்கை” என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது. அந்த மாதிரி வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். அதில் கருத்துக்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. எனினும் சம்பந்தா சம்பந்தமற்று, தொடர்பு இல்லாமல் இருக்கின்றன. மேய்ப்பவன் இல்லாத ஆட்டுமந்தை மாதிரி கட்டி மேய்க்க ஆளில்லாமல் தான்தோன்றியாய்த் திரிகின்றன. அதுதான் அர்த்தமற்ற வாழ்க்கை. என்னால் முடியுமானால், இந்த மாதிரி வாழ்க்கையிலிருந்து திரும்பியே பார்க்காமல் ஓடிவிடுவேன். அதிலும், உண்மை இதுதான் என்று உணர்ந்த பிறகும் அந்த வாழ்க்கையில் என்னால் கால் தரித்து நிற்க முடியாது.”

அவளது பசிய கண்கள் வறண்ட பிரகாசத்திலும், மெலிந்த முகத்திலும், அவளது குரலின் தொனியிலும் தோன்றிய வேதனையைத் தாயால் உணர முடிந்தது; அவளைத் தழுவி ஆசுவாசப்படுத்தி ஆறுதலளிக்க விரும்பினாள் தாய்.

படிக்க :
♦ இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்
♦ வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று !

”அடி பெண்ணே! என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிகிறதே……..”

“ஆனால் எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டும்” என்று குறுக்கிட்டாள் தத்யானா. ”சரி, படுக்கை தயாராகிவிட்டது.”

அவள் மீண்டும் அடுப்பருகே சென்று அங்கே சிந்தனைவயப்பட்டு மெய்மறந்து ஆடாமல் அசையாமல் அமைதியாக நிமிர்ந்து நின்றாள். தாய் தன் உடையைக்கூடக் கழற்றாமல் அப்படியே படுத்துக்கொண்டாள். அவளது எலும்புகள் அசதியினால் வலித்தன; அவள் லேசாக முனகினாள். தத்யானா விளக்கை இறக்கி அணைத்தாள். அறை முழுவதும் இருள் பரந்து கவிந்த பின்னர் அவள் நிதானமாகத் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த இருட் படலத்திலிருந்து எதையோ துடைத்தெடுப்பது போல் அவள் பேச்சு ஒலித்தது.

“நீங்கள் பிரார்த்திப்பதாகத் தோன்றவில்லையே. நானும் கடவுள் ஒருவர் இருப்பதாக நம்பவில்லை. அற்புத லீலைகளிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.”

தாய் நிலை கொள்ளாமல் பெஞ்சின் மீது புரண்டு படுத்தாள். ஆழங்காண முடியாத அந்த இருட்டிலும் ஜன்னலின் வழியாக அவளை நோக்கி வாய் திறந்து கொட்டாவி விட்டது. மங்கிய சப்தங்கள் இருளின் ஊடாகத் தவழ்ந்து வந்தன. அவள் பயத்தோடு ரகசியம் போலப் பேசினாள்.

“கடவுளைப் பொறுத்தவரை – எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் நான் கிறிஸ்துவை நம்புகிறேன். அவரது வாசகத்தை ‘அயலானையும் உன்னைப்போல் நேசி’ என்ற வாசகத்தை – நான் நம்புகிறேன்.”

தத்யானா மௌனமாக இருந்தாள். அடுப்பின் இருண்ட புகைப் புலத்திலே அவளது மங்கிய உருவத்தைத் தாயால் காண முடிந்தது. அவள் அசைவற்று நின்றுகொண்டிருந்தாள். தாய் துயரத்தோடு கண்களை மூடிக்கொண்டாள். திடீரென்று அந்தப் பெண்ணின் கசப்பான குரல் ஒலித்தது.

”என்னுடைய குழந்தைகள் செத்துப்போனதற்காக நான் கடவுளாகட்டும், மனிதனாகட்டும் இருவரையும் மன்னிக்க மாட்டேன், ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்!”

பெலகேயா ஆர்வத்தோடு எழுந்தாள். அப்பெண்ணின் வார்த்தைகளால் சுருக்கென்று தைக்கும் வேதனையுணர்ச்சியைத் தனது இதயத்தில் உணர்ந்தாள்.

“நீங்கள் இன்னும் சின்னவர்தானே, உங்களுக்கு இனிமேலும் குழந்தைகள் பிறக்கும்” என்று அமைதியாகச் சொன்னாள்.

அந்தப் பெண் இதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பிறகு மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

“ஒருக்காலும் நடக்காது. என்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறதாம். எனக்கு இனிமேல் குழந்தைகளே பிறக்காது என்று வைத்தியர் சொன்னார்.”

ஒரு சுண்டெலி தரையில் குறுக்கே விழுந்தோடியது. அந்த அமைதியை மின்னல் மாதிரி கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ படாரென்று ஒரு ஓசையெழுந்தது. மீண்டும் கூரையின் வைக்கோலில் எதையோ பயந்து நடுநடுங்கும் மெல்லிய விரல்களால் துழாவித் துழாவித் தேடுவதுபோல் மழை பெய்தது. தண்ணீர் சொட்டுச் சொட்டாகத் தரையில் வழிந்தது. அந்த இலையுதிர்கால இரவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது….

தூக்கக் கிறக்கத்திலும் தாயின் காதில் அந்த மெல்லிய காலடியோசை வாசற்புறத்தில் நெருங்கி வருவது கேட்டது. கதவை ஜாக்கிரதையுடன் திறந்து கொண்டு யாரோ உள்ளே நுழைந்தார்கள்.

“தத்யானா, நீ படுத்துவிட்டாயா?”

“இல்லை,”

”அவள் தூங்கிவிட்டாளா?”

“அப்படித்தான் தெரிகிறது.”

விளக்கின் சுடர் ஓங்கியது. ஒரு நிமிஷம் அந்த இருளில் திக்கித் திணறிப் படபடத்தது. அந்த முஜீக் தாயின் படுக்கையின் அருகே வந்து, தனது கோட்டை எடுத்து அவளது பாதங்களைப் பதனமாகப் போர்த்தி மூடினான். அவனது பணிவிடையின் எளிமை தாயின் உள்ளத்தைத் தொட்டுவிட்டது; அவள் புன்னகையோடு தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள். ஸ்திபான் ஒன்றுமே பேசாமல் உடுப்புகளைக் கழற்றிவிட்டுப் பரணின்மீது ஏறிப் படுத்தான். மீண்டும் எங்கும் அமைதி நிலவியது.

தாய் அசையாமல் படுத்தவாறே இருளின் கனவுக் குரலை கேட்டுக்கொண்டு கிடந்தாள். அப்போது அவளது கண் முன்னால் ரத்தம் தோய்ந்த ரீபினின் முகம் நிழலாடித் தெரிந்தது.

மேலே பரணில் உசும்பும் சத்தம் கேட்டது.

“இந்த மாதிரி வேலையில் எப்படிப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள், பார்த்தாயா? வாழ்க்கை முழுவதும் சோகத்தையே அனுபவித்து அனுபவித்து உழைத்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வயசிலே இவர்கள் ஓய்வெடுக்க வேண்டியதுதான் நியாயம். அனால் அதற்குப் பதிலாக இந்த மாதிரிக் காரியங்களில் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள். நீயும் இளமையாகவும் துடிப்பாகவும்தான் இருக்கிறாய் …….. இருந்தும் என்ன, ஸ்திபான்……..”

அந்த முஜீக்கின் பதில் ஆழ்ந்த செழுமையான குரலில் ஒலித்தது.

”இறங்குவதற்கு முன்னால் முதலில் யோசிக்க வேண்டாமா?”

”இந்த மாதிரி நீ முன்னாலேயே சொல்லியிருக்கிறாய்.”

இருவர் குரலும் ஒரு நிமிஷ நேரம் நின்றுபோயின. பிறகு ஸ்திபானின் குரல் ஒலித்தது.

”இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் முஜீக்குகளிடம் தனித்தனியாகப் பேச வேண்டும். உதாரணமாக, அலெக்சி மாகவிடம் பேசத் தொடங்குவோம். அவன் படித்தவன், உணர்ச்சி நிறைந்தவன். அதிகாரிகளால் துன்பத்துக்கு ஆளானவன். செர்கேய்ஷோரின் அவனும் ஒரு புத்திசாலியான முஜீக்தான். கினியாசெவ் நேர்மையானவன்; பயப்பட மாட்டான். ஆரம்பத்திலே இவர்கள் போதும். அவள் நமக்குச் சொன்னாளே, அந்த மாதிரி மக்களை நாமும் பார்க்கத்தான் வேண்டும். நான் ஒரு கோடரியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, விறகு பிளந்து கொடுத்துக் கொஞ்சம் மேல் வரும்படி சம்பாதிக்கப் போகிறவன் மாதிரி நகருக்குப் போய் வருகிறேன். நாம் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஒரு மனிதனின் மதிப்பு அவன் செய்யும் வேலையில் இருக்கிறது என்று அவள் சொன்னாளே, அது ரொம்ப சரி. இன்று அந்த முஜீக் நடந்து கொண்டானே, அந்த மாதிரி. கடவுளின் முன்னால்கூட அவனைக் கொண்டுவந்து நிறுத்திப் பாரேன். அவன் தன் பிடியிலிருந்து கொஞ்சம்கூடத் தவறமாட்டான். சரி. நீ அந்த நிகீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? மனச்சாட்சிக்கு ஆட்பட்டவன். இல்லையா? சரி.”

“உங்கள் கண் முன்னாலேயே அவர்கள் ஒரு மனிதனை அடித்து நொறுக்குகிறார்கள். நீங்களானால் வாயைப் பிளந்து கொண்டு வெறுமனே வேடிக்கை பார்க்கிறீர்கள்.”

”அவசரப்படாதே. அந்த மனிதனை நாங்களும் சேர்ந்து கொண்டு அடிக்காமல் விட்டோமே. அதை நினைத்து நீ சந்தோஷப்பட வேண்டும்.”

அவன் வெகு நேரம் வரையிலும் ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். சமயங்களில் சத்தத்தை மிகவும் குறைத்துப் பேசினான். எனவே தாய்க்கு அநேகமாக ஒன்றும் கேட்கவில்லை. சமயங்களில் உச்ச ஸ்தாயியிலும் பேசினான். அப்படி பேசும்போது அவனது மனைவி அவனைத் தடுத்து நிறுத்துவாள்.

”உஷ்! அவளை எழுப்பி விட்டுவிடப் போகிறாய்?”

தன்னைக் கவிந்து மேகம் போல் சூழ்ந்து வந்த தூக்கத்துக்குத் தாய் ஆளாகித் தூங்கலானாள்.

மங்கலான அருணோதயப் பொழுது அந்தக் குடிசையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் வேளையில், ராத்திரிக் காவல் ஓய்ந்ததை அறிவிக்கும் தேவாலய மணியோசை மிகுந்து ஒலித்த நேரத்தில், தத்யானா தாயை உசுப்பி எழச் செய்தாள்.

“நான் தேநீர் தயாரித்து விட்டேன். முதலில் ஒரு கோப்பை தேநீரைக் குடியுங்கள். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் நேராகச் சென்றால் குளிர் உறைக்கும்.”

ஸ்திபான் தனது சிக்கலான தாடியைக் கோதிவிட்டவாறே தாயிடம் அவளது விலாசத்தைக் கேட்டான். ராத்திரியில் தோன்றியதைவிட, இப்போது அந்த முஜீக்கின் முகம் தெளிவாகவும் பரிபூரணமாகவும் தோன்றுவதுபோலத் தாய்க்குப் பட்டது.

“நடந்ததையெல்லாம் எண்ணிப் பார்க்க எவ்வளவு வியப்பாக இருக்கிறது!” என்று அவர்கள் தேநீர் பருகும் சமயத்தில் சிரித்துக்கொண்டே சொன்னான், அவன்.

“என்னது?” என்று கேட்டாள் தத்யானா.

“நாம் ஒருவருக்கொருவர் பழகிப்போனதுதான் எவ்வளவு எளிதாக…”

“நமது வேலையோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமே ஓர் அதிசயமான எளிமை இருக்கத்தான் செய்கிறது” என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னாள் தாய்.

தாயிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது அவர்கள் எந்தவிதமான பரபரப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அவளிடம் பேசாமலே, தாங்கள் செய்யும் சின்னஞ்சிறிதான பற்பல செயல்களின் மூலம் அவளுக்குச் சௌகரியம் செய்து கொடுப்பதில் தாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டவர்கள் என்பதைக் காட்டிக்கொண்டார்கள்.

தபால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுமே, தாய் நினைத்தாள். ஸ்திபான் ஒரு வயலெலியைப் போல் மிகுந்த ஜாக்கிரதையோடும் சத்தமின்றியும், களைப்படையாமலும் வேலை செய்யத் தொடங்குவான். அவனது மனைவியின் குறைபாடுகள் அவன் காதுகளில் என்றென்றும் ஒலிக்கும். அவளது பசிய கண்களின் கூரிய ஒளி மறையவே மறையாது. தனது இறந்துபோன குழந்தைகளை எண்ணி, தாய்மையுணர்ச்சியோடு உறுமிக் கொண்டிருக்கும் அவளது பழிவாங்கும் எண்ணம் அவள் உயிர் வாழ்கின்றவரையிலும் தீரவே தீராது.”

அவள் ரீபினைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். அவனது ரத்தத்தை, அவனது முகத்தை, அவனது கனன்றெரியும் கண்களை, அவனது பேச்சையெல்லாம் நினைத்துப் பார்த்தாள். அந்த அகோரமான மிருகத்தனத்தை எண்ணி அவளது மனத்தில் நிர்க்கதியான நிலைமையின் கசப்புணர்ச்சி புகுந்து, அவளது இதயத்தைக் கசக்கி இறுக்கியது. நகருக்கு வந்து சேருகிறவரையிலும் வழியெல்லாம் அந்தக் காலைப் பொழுதின் மங்கிய பகைப்புலத்திலே மிகயீலின் உருவம்தான் அவள் கண்முன்னே உருவாகிக் கொண்டிருந்தது. அவனது கட்டுமஸ்தான, கரிய தாடிகொண்ட உருவத்தை, கந்தல் கந்தலாகக் கிழிந்த சட்டையோடும், பின்புறமாகக் கட்டிய கைகளோடும், பறட்டைத் தலையோடும் அவள் கண்டாள். எந்த உண்மைக்காக அவன் போராடுகிறானோ அதன்மீது கொண்ட நம்பிக்கையும், அது தாக்கப்படுவதால் எழுந்த கோபமும் நிறைந்து பொங்கும் மனிதனாக அவனைக் கண்டாள். பூமியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணிறந்த கிராமங்களையும், அந்தக் கிராமங்களிலே நியாயத்தின் திக்விஜயத்தை வரவேற்க ரகசியமாகக் காத்திருக்கும் ஜனங்களையும், எந்தவித எதிர்ப்புமின்றி, எதிர்கால சுபிட்சத்தில் எவ்வித நம்பிக்கையுமின்றி அர்த்தமற்ற உழைப்பிலேயே தமது வாழ்நாளையெல்லாம் போக்கிவிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.

குன்றுகள் பெருத்துக் கரடு முரடாக, உழவற்றுக் கிடக்கும் நிலத்தைப் போல், உழுபவனை எதிர்நோக்கி ஆர்வத்தோடும் மெளனத்தோடும் அங்காந்து காத்திருக்கும் தரிசு நிலம் போன்ற வாழ்க்கையை அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள்.

அந்தத் தரிசு நிலம் சுதந்திரமான, நேர்மை நிறைந்த மனிதர்களை நோக்கி, “என்மீது சத்தியத்தையும் அறிவையும் விதைத்துப் பயிராக்குங்கள்; நான் உங்களுக்கு உங்கள் உழைப்புக்கு நூறு மடங்காகப் பலன் அளிக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது.

தன்னுடைய சொந்த முயற்சிகளால் தான் பெற்ற வெற்றியை அவள் மீண்டும் நினைவுகூர்ந்தபோது, அவளது உள்ளம் ஆனந்த வெறியால் அமைதியாகப் படபடத்தது. அந்த ஆனந்தத்தை அவள் நாணிக் கோணி உள்ளடக்கிக்கொண்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட பாஜக அனுமதி ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

megathathu dam issue dharampuri PP Protest (5)

“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகவிற்கு பாசிச பாஜக அனுமதி! தமிழகத்தை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் 03.01.2019 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுக்கட்சினர் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரசுரங்கள், நூற்றுக்கணக்கான சுவரொட்டி, கிராமங்கள்தோறும் தெருமுனைப்பிரச்சாரம் என வீச்சான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் அதிகாரம் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தினார். அவர் பேசுகையில்; “ஏற்கனவே தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் கொடுக்காததால் ஊருக்கே சோறுபோட்ட டெல்டா விவசாயிகள் சென்ற ஆண்டு மட்டும் 400 பேர் கருகிய பயிரை பார்த்து நெஞ்சுவெடித்து இறந்தனர். இன்றைக்கு கஜா புயலால் மிச்சமிருந்த விவசாயத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் மீண்டெழவே 20 ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில், சொந்த நாட்டிலேயே சோத்துக்கு கையேந்தி நிற்கின்றனர்.

இந்த நிலையில் அணையைக்கட்டினால் தமிழகம் பாலைவனமாகும். அடுத்ததாக நிலத்தடிநீர் ஆணைய மசோதாவை நிறைவேற்றப் போகிறார்கள். எனவே இனியும் வேடிக்கை பார்க்காமல், மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசை நம்பாமல் கிராமங்கள், நகரங்கள்தோறும் போராட்டத்தைக் கட்டிஎழுப்புவதுதான் தீர்வு.” என்று பேசினார்.

அவரைத்தொடர்ந்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில், “மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கான காரணம், அரசாங்கத்தின் கொள்கையே தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்காகவே இருப்பதுதான். 1991-ல் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை வளர்ச்சி என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறார்கள்.

megathathu dam issue dharampuri PP Protest (5)“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர் அப்படி எல்லா உயிருக்கும் ஆதாரமாக இருக்கும் தண்ணீரைதான் விற்பனை செய்கிறார்கள். அதற்காகதான் மேகதாதுவில் அணையை கட்டத் துடிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் தண்ணீர் கொள்ளயடிப்பதை நாம் வேடிக்கை பார்க்கமுடியுமா? உயர்கல்வி ஆணையம், மருத்துவ ஆணையம், நிலத்தடி நீர் ஆணையம் என்று.. எல்லாம் ஆணையம் என்கிற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்கிறார்கள். எல்லாமே காசு என்றால் கவர்மெண்டு எதற்கு, நாம் கட்டும் வரிபணம் எங்கே போகிறது, எனவே மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா பேசுகையில், “ஒருபக்கம் 2019 புத்தாண்டை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம். இன்னொரு பக்கம் விவசாயிகளின் ஏக்கம், பரிதவிப்பு என ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காவிரிப் பிரச்சினைதான் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அணையை கட்டி தமிழகத்து தண்ணீர் கொடுக்கிறோம் என்று கூறிகிறார்கள், ஆனால் இன்றைக்கு உள்ளூரில் பல கிராமங்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகமல் பல மைல்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது.

பலமுறை மனுக்கொடுத்தாலும் அதிகாரிகள் திரும்பி பார்ப்பதில்லை அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் இவர்கள் எப்படி மாநிலப்பிரச்சினையை தீர்ப்பார்கள் எனவே தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை வாழ்வாதரத்தை அழிக்கும் வேலையில் பிஜேபி-யும் அதிமுக-வும் இறங்கியிருக்கிறார்கள். எனவே அனைத்துப் பிரச்சினைக்கும் போராடினால்தான் வாழ்வு! இல்லையென்றால் சாவுதான் மிஞ்சும்..” என்று எச்சரித்தார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார், அவரது உரையில் “தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம். மற்ற மாவட்டங்களை காட்டிலும் பருவமழையும் 52 % குறைந்துள்ளது. மழை குறைந்தால் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். எனவே, நம்பி இருப்பது காவிரிநீரைத்தான். தண்ணீர் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுச்சொத்து அதனை என்னுடைய சொத்து என்று கர்நாடகா உரிமை கொண்டாடுகிறது. அதற்கு மோடியும், தீர்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகுதான் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். அதனை ஆணையம் தலையிட்டு தடுக்காமல் மாதம் மாதம் கூட்டம் நடத்துவது என்று தமிழகத்திற்கு துரோகம் செய்வார்கள். ஆனால் இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

கர்நாடகாவில் அணையை கட்டி அங்குள்ள தண்ணீரை கார்ப்பரேட்டுகள், சொகுசு பங்களாக்கள் மேட்டுக்குடிகள் ஆகியோர் கும்மாளமிடுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள், எனவே 10 லட்சத்துக்கு கோட்டு போடும் மோடியும், பல ஆயிரம் கோடிகளை கொள்ளையிடும் பி.ஜே.பி அமைச்சர்களும், அவர்களின் எடுபிடியான தமிழக அரசும்; உயர்மின் கோபுரம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை பறிப்பதற்கு எதிராக 8 மாவட்ட விவசாயிகள் 12 நாட்களாக போராடியும் கண்டுகொள்ளவில்லை.

தாயிடம் அழுதால் பால் கிடைக்கும், பேயிடம் அழுதால் சாவுதான் கிடைக்கும் என்பதைதான் இந்த அரசாங்கம் நமக்கு காட்டுகிறது, எனவே 40 ஆண்டுகளாக தீர்ப்புகளை நம்பி ஏமாந்து விட்டோம். இனியும் ஏமாறக்கூடாது.

மக்கள் போராட்டம் மூலம் ஸ்டெர்லைட்டை மூடியதும், ஜல்லிக்கட்டை வென்றெடுத்ததும் தமிழர்கள்தான். எனவே தமிழகத்துக்கு அப்படிப்பட்ட போராட்ட பாரம்பரியம் இருக்கிறது எனவே ஜல்லிக்கட்டு போராட்டம் போல், வடமாநில விவசாயிகள் போராட்டத்தை போல கட்சி பாராமல் ஒருங்கிணைந்து போராடினால்தான் இப்பிரச்சினையை தீர்க்கமுடியும்” என்று அறைகூவல் விடுத்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பின்னர் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், “கர்நாடகாவில் அணையை கட்ட பிஜேபி அனுமதி அளித்து தமிழகத்தின் எதிரி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறது. அணையைக்கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது. 22 மாவட்டங்கள் குடிநீர் இல்லாமல் பாலைவனமாகும். இதனை எதிர்த்து போராடுவதற்கு அனுமதி இல்லை காரணம் சட்டம் ஒழுங்கு பாதிக்குமாம்.

ஆனால் இங்கே சந்து பொந்துகள் தோறும் சாராயம் விற்பதற்கு மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காதாம். எல்லா அதிகாரிகளும் மூன்று வேலை சோறு தின்பது விவசாயிகளின் வியர்வை, உழைப்பில்தான். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் சட்ட வகையில் போராடுவோம் என்று கூறுவது கர்நாடகா அணைகட்டுவதற்குதான் உதவும். காவிரி எங்களுக்கு சொந்தம் என்று கர்நாடகா சொல்வதற்கும், மோடி சொல்வதற்கும் பின்னால் கார்ப்பரேட்டுகளின் கூட்டு அடங்கியிருக்கிறது.

அணையை கட்டினால்தான் டெல்டாவில் இருக்கும் மீத்தேன், ஹட்ரோகார்பன், போன்ற கனிமவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க முடியும், மேலும் 8 வழிச்சாலை, 6 வழிச்சாலைக்கு எதிராக போராடினால் கடுமையாக ஒடுக்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையை பறிப்பவர்களிடம் எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்.

மக்களின் வீரம் செறிந்த போராட்டம்தான் ஸ்டெர்லைட்டை மூடியது, வீரம் செறிந்த போராட்டம்தான் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது. எனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நம்முடைய போராட்டதை தொடங்குவோம்! காவிரி உரிமையை மீட்டெப்போம்.” என்று அறைகூவி அழைத்தார்.

இந்த  ஆர்ப்பாட்ட நிகழ்வை திரளான மக்கள் இறுதிவரை நின்று கவனித்தனர். அணையை கட்டினால் தமிழகம் சுடுகாடாக மாறும் அபாயத்தை உணர்த்தும் வகையிலும், காவிரி தீர்ப்புகள், ஆணையங்கள் மூலமும் தீர்வு கிடைக்காது, மாற்று மக்கள் எழுச்சிதான் தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.


தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 97901 38614

சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !

3

பரிமலை கோவிலுக்குள் இரண்டு பெண்கள் சென்று வழிபட்டதன் மூலம் அக்கோவிலில் பெண்களின் உரிமையை நிலைநாட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவில் நடையை மூடி தீட்டுக் கழிக்கும் சடங்கை மேற்கொண்டுள்ளனர் சபரிமலை தந்திரிகள். கேரளா முழுவதும் பல இடங்களில் சங்க பரிவார காலிகள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலைக் கோவிலுக்குள் நுழைந்து தமது உரிமையை நிலைநாட்டிய இரண்டு பெண்களுக்கும் ஆதரவு தெரிவித்து, வாழ்த்தும் விதமாகவும், பெண்களின் நுழைவை தீட்டு எனக் கூறி பரிகார பூஜை செய்த தந்திரிகளைக் கண்டித்தும், கேரளாவில் மதக்கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ், பிஜேபி ௧ாலி௧ளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பந்தளம் மன்னர் குடும்பத்தையும், கோவில் தந்திரிகளையும், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக சிதம்பரம் கஞ்சித் தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.

பேரணியின் வழி நெடுகிலும் RSS, BJP, காவி கும்பலுக்கு எதிராகவும், தந்திரியின் தீண்டாமை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பேரணியின் இறுதியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மா.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – கடலூர்
தொடர்புக்கு – 97888 08110

பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?

கேள்வி: ஆகப் பிற்போக்கான பார்ப்பனியமும்; பெண் கல்வி, கருத்து சுதந்திரம், தொழில் அமைதி ஆகியவற்றை வேண்டும் முதலாளியமும் இப்படியே முரண்பாடில்லாமல் இந்தியாவில் நீடிக்க முடியுமா?

–  மதியழகு

அன்புள்ள மதியழகு,

நிலவுடமை சமூகத்தினை அழித்து விட்டுத் தோன்றிய முதலாளித்துவ சமூகம் ஆரம்பத்தில்தான் முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. பின்னர் மதம், இதர நிலவுடமை சமூக பிற்போக்குகளை எதிர்க்காமல், அவை அப்படியே நீடித்து இருந்தால் நல்லதென்று  முடிவு செய்தது. புரட்சிகரமாய் எழுந்து வரும் பாட்டாளி வர்க்கத்தை, மட்டுப்படுத்தி பிற்போக்காய் வைத்திருப்பதற்கு மதம் உதவும் என முதலாளித்துவ சமூக அமைப்பு தன்னை தகவமைத்துக் கொண்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போது திருச்சபையின் அனைத்து அதிகாரங்களும் பிடுங்கப்பட்டன. கல்வி, திருமணம் இதரவற்றில் கத்தோலிக்க மதம் கொண்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு மதச்சார்பற்ற அரசிடம் கொடுக்கப்பட்டன. சிவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. நெப்போலியனது ஐரோப்பியப் படையெடுப்பின் போது இந்த விசயங்கள் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப் படுத்தப் பட்டன.

பிரெஞ்சு புரட்சி

இதில் இருந்து விழித்துக் கொண்ட முதலாளித்துவம் உடனடியாக தனது முற்போக்கு முகத்தைக் ஆங்காங்கே சில நாடுகளில் கை கழுவத் துவங்கியது. இங்கிலாந்தில் வாட்டிகனின் கத்தோலிக்க மதம் மறுக்கப்பட்டாலும், நாட்டளவில் ஒரு புரட்டஸ்டண்ட் கிறித்தவ மதம் இங்கிலாந்து அரச வம்சத்தை தலைமையாக்கி நிலைநிறுத்தப்பட்டது. பெண்களுக்கான கல்வி, வாக்குரிமை எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் முதலாளித்துவ நாடுகளில் அமல்படுத்தப்பட்டன. அதிலும் சோவியத் நாடுதான் பாலியல் சமத்துவத்தில் முன்னுதாரணமாக இருந்தது. மற்ற நாடுகள் அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டன.

1917 ரசியப் புரட்சிக்குப் பிறகே முதலாளித்துவ சமூகம் தனது முற்போக்கு அம்சங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைகழுவியது எனலாம். இல்லையென்றால் இவை வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் மற்றும் உலக சோசலிச முகாமிற்கு வலு சேர்க்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போதைய முதலாளித்துவம், சமூக வெளியில் பெண்களுக்கு இடம் கொடுப்பது எப்படி நடக்கிறது?

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலாளித்துவ வளர்ச்சிக்கேற்ப பணிபுரியும் தொழிலாளர்களில் மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் தேர்ந்த திறமை கோரும் வேலைகளில் காலம் செல்லச் செல்ல தேர்ச்சியற்ற மற்றவரும் சேர்க்கப்படுவர். அதற்கு ஏற்றாற் போல உற்பத்தி கருவிகளில் நவீன கண்டுபிடிப்புகள் சேர்க்கப்படும். அப்போது தேர்ந்த திறமை கொண்ட தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை தேர்ச்சியற்ற தொழிலாளிக்கு கொடுக்கலாம். இதனால் ஒவ்வொரு வேலையாக அதில் குறைவான சம்பளம் கொடுக்கப்படும் நிலை வரும்போது சமூகத்தில் இருக்கும் நலிந்த பிரிவினருக்கு தேவை எழுகிறது.

இதை ஒரு இந்திய நிலைமையோடு பார்ப்போம். தமிழக நகர்ப்புறங்களில் பெண்களும், வட இந்திய இளைஞர்களும் அதிகம் வேலை பார்க்கும் துறைகளைக் கவனியுங்கள்.

பதினாறு வயதுக்குட்பட்ட சிறாரை பணியில் அமர்த்தக் கூடாது என குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு உணவகங்களில் பாத்திரங்கள், மேசை துடைக்கும் வேலைகளுக்கு பெண்கள் அதிகம் எடுக்கப்பட்டார்கள். குழந்தைத் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் அதே குறைவான சம்பளத்தை பெண்களுக்கும் கொடுக்கலாம் என்பதால்தான் இந்த மாற்றம். மேலும் குறைவான சம்பளத்தைக் கொண்டிருக்கும் வேலைக்கு தேர்ச்சியுடைய ஆண் தொழிலாளிகள் வரமாட்டார்க்ள் என்பதாலும் இந்த மாற்றம் நடைபெற்றது. பிறகு வட இந்திய தொழிலாளிகள் அதிகம் வரத் துவங்கியதும் அதே வேலையில் அவர்களும் இடம் பெறுகிறார்கள்.

மட்டுமல்ல, கட்டுமானத்துறை, உணவகங்கள், தேநீர்க்கடைகள், சிறு தொழில்கள், சேவைத் தொழில்கள் அனைத்திலும் இன்று வட இந்திய தொழிலாளிகள் இருக்கின்றனர். ஒரு தமிழகத் தொழிலாளிக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் பாதியோ அதற்கும் குறைவாகவோதான் இவர்களுக்கு தரப்படுகிறது. அதே போன்று இன்று பெண்கள் பணி புரியும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்கெட்டுகள், கடைகள் அனைத்தும் குறைவான ஊதியம் காரணமாகவே பெண்களை எடுக்கின்றன. திருப்பூரில் ஊதியம் குறைந்த ஆயத்த ஆடை வேலைப் பிரிவுகளில் பெண்களே அதிகம் இருப்பார்கள். இப்படித்தான் வங்கதேசத்திலும் நடக்கிறது. இதனால் தேசிய இனங்களுக்கிடையே உள்ள பேதங்களை முதலாளித்துவம் ஒழிக்கிறது என்பதல்ல.

முதலாளித்துவம் அமல்படுத்தும் இந்த மாற்றங்கள் அனைத்தும் சுரண்டலோடு தொடர்புடையவை. அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் இத்தகைய சாதி – மத – இன பேதங்களை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். மேற்குலகில் தற்போது புதிய புதிய நாஜிக் கட்சிகள் தோன்றி இனவெறியைத் தூண்டி அரசியல் பேசுகின்றன. இவர்களுக்கு கணிசமான பன்னாட்டு நிறுவனங்களும் புரவலர்களாக இருக்கின்றனர். காரணம் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் அகதிகளோடு உள்ளூரில் வெள்ளையரிடையே அதிகரித்து வரும் வேலையின்மையும் சேர்ந்து தொழிலாளிகளிடையே சமூக பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. தொழிலாளிகளை பிரித்து சண்டையிடச் செய்வதற்கு புதிய நாசிக் கட்சிகள் முயல்கின்றன. அதை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதே போன்று இந்தியாவிலும் பிற்போக்கான பார்ப்பனியத்தின் இருப்பை முதலாளித்துவமும் விரும்புகிறது. இது குறித்து முன்னர் வந்த கேள்வி பதில் கட்டுரையை பார்க்கவும்.

படிக்க:
♦ பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
♦ பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

எப்படி பிற்போக்கான கத்தோலிக்கம் மற்றும் இசுலாமை மேலை நாடுகளிலும், அரபுலகிலும் வைத்துக் கொண்டாடுகிறார்களோ அதே போன்று இங்கே பார்ப்பனியத்தையும் கொண்டாடுகிறார்கள். சவுதி ஷேக்குகளின் பிற்போக்கான சட்டங்கள், அடக்குமுறையை ஏற்றுக் கொண்டுதான் அவர்களது எண்ணெய் துரப்பண பணிகளையும், முதலீடுகளையும் மேற்குலகில் முதலாளித்துவம் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கிறது. சமூகத்தில் எழும் சின்னச் சின்ன கோரிக்கைகளுக்கு ஒரு தேவை உருவாகும்போது பெண்கள் கார் ஓட்டலாம் என்று பெரிய மனதுடன் ஷேக்குகள் இறங்கி வருகிறார்களே அன்றி வேறு அல்ல. அதே போன்று தொட்டதுக்கெல்லாம் அமெரிக்க அதிபர்கள் ‘கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்’ என்று கூறுகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவிற்கும் பொருந்தும்.

தாலியும் நகைகளும் பெண்களின் அடிமைத்தனத்தை பண்புரீதியாக நிலைநிறுத்துகிறது என்றால் முதலாளித்துவம் அதை அக்‌ஷய த்ரிதியை என்று சந்தைப்படுத்துகிறது. சலவை எந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரங்களில் பெண்களே குடும்பத்தின் மகிமையை எந்திரங்களின் உதவியோடு காக்கிறார்கள். இத்தனை நாளாக காஃபி விளம்பரங்களில் கூட தலைவலியோடு வரும் கணவனுக்கு மனைவிதான் காஃபி போடுகிறாள். தொண்டையை இதமாக்கும் ஹால்ஸ் விளம்பரங்களிலும் அசத்தலான ஆண்களுக்கு அடிபணியும் விட்டில் பூச்சிகளாகத்தான் பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். பிறகு சமூகத்தில் சில போல எதிர்ப்புகள் வரும் போது கணவன் காஃபி போடுகிறான், அவ்வளவே !

கருத்துரிமையைப் பொறுத்தவரை தமக்கு ஆபத்தில்லாத பட்சத்தில் முதலாளிகள் அதை ஆதரிப்பார்கள். இல்லையென்றால் தடை செய்வதோடு சிறையிலும் அடைப்பார்கள். சவுதி அரச குடும்பத்தின் ஏற்பாட்டில் ஒரு சவுதி பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார். அதற்காக அமெரிக்கா சவுதி அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனெனில் பத்திரிகையளாரின் உயிரை விட ஷேக்குகளின் முதலீடு அமெரிக்காவிற்கு முக்கியம். இன்றும் அமெரிக்காவில் வெளிப்படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்குவது சிரமம்.

இந்தியாவிலோ இந்த கருத்துச் சுதந்திரத்தின் அவலத்தை சொல்லவே வேண்டியதில்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் அவர்களின் ஊடகங்களே அதை சாதாரண நிகழ்வாக கடந்து போகின்றன. வெண்டி டோனிகரின் “இந்துத்துவம் ஒரு மாற்று வரலாறு” நூல் தடை செய்யப்படுகிறது. இதை எதிர்த்து சில எழுத்தாளர்கள், அமைப்புகள்  பேசுவதைத் தாண்டி முதலாளித்துவ வர்க்கம் இதை கருத்துச் சுதந்திரத்திற்கு கேடு என்று பேசவில்லை. சுரண்டலுக்கு பாஜக அரசின் தயவு தேவை என்பதால் அவர்கள் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

இதே முதலாளித்துவ வர்க்கம் சீனாவிலோ, வட கொரியாவிலோ கருத்துச் சுதந்திரம் பாதித்துவிட்டது என கூப்பாடு போடுவார்கள். பொருளாதார அரங்கில் சீனா முன்னேறி வருவதும், அங்கே பெயரளவுக்கு ஒரு கம்யூனிசக் கட்சி இருப்பதும் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. வட கொரியாவின் ஆயுத பலத்தோடு கூடிய இறையாண்மையை ஒரு ஏகாதிபத்தியம் என்ற முறையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் அங்கும் ஜனநாயகம் இல்லை, கருத்துச் சுதந்திரம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அதே அளவு கோலை வளைகுடா ஷேக்குகளுக்கு கொடுப்பதில்லை. அரபுலகம் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு இருப்பதால் பிர்ச்சினையில்லை. கட்டுப்படவில்லை என்பதால் ஈரானையும் கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே முற்போக்கு கருத்துக்கள் எவையும் முதலாளித்துவத்தோடு தொடர்புடைய ஒன்றல்ல. அந்த வகையில் முதலாளித்துவம் முற்போக்கு கருத்துக்களை ஒழிக்கவே விரும்பிகிறது. அதனால் பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒத்த கருத்துடைய சக்திகளே அன்றி முரண்படுபவை அல்ல!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன் ? மருத்துவர் ஃபருக் அப்துல்லா

1. தவறான உணவு முறை ( மிக அதிக மாவுச்சத்து உணவு முறை)

ஜங்க் ஃபுட் , ஃபாஸ்ட் ஃபுட் , குளிர்பானங்கள், பொறித்த உணவுகள் போன்றவற்றை அளவின்றி உண்பது. தெருக்குத் தெரு முளைத்திருக்கும் வடை பஜ்ஜி கடைகள் , பேக்கரிகளில் கிடைக்கும் கேக், பப்ஸ்கள், எண்ணெயில் பொறித்த பரோட்டாக்கள்.
ஒருகாலத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே சாப்பிட்ட இட்லி இப்போது தமிழனின் தேசிய உணவானது. இப்படி நாளுக்கு நாள் வருமானம் கூடக்கூட தீனியும் கூடிக்கொண்டே செல்கிறது.

ஒருகாலத்தில் சரியான எடையில் இல்லாமல் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் அதிகம் பார்த்து வந்தது போய் இப்போது குழந்தைகள் அனைத்தும் குண்டாகி வருகின்றன. childhood obesity மேற்கத்திய நாடுகளை விட இங்கு அதிகமாகி வருகிறது.

ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு – பல தொற்று நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

2. உணவுக்கேற்ற உடலுழைப்பு இல்லை

உணவு உண்பது அதிகமாகிக்கொண்டே வர வர .. உடலுழைப்பு மிக மிக குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட அனைவருக்குமே டேபிள் சேர் உத்தியோகம் தான். வெயில் தோலில் படுவதே அரிதென்று ஆகிவிட்டது. சிறு நடை கூட பாரதூரமாகிவிட்டது. ஆனால் உணவு , ஸ்நாக்ஸ் மட்டும் வேளைக்கு உள்ளே சென்று விடுகிறது. இதனால் உடல் கனக்கிறது. வயிற்றின் சுற்றளவு மெல்ல மெல்ல கூடுகிறது.

3. பெருகிவரும் குடிப்பழக்கம்

புகை மற்றும் குடி போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். நட்பு வட்டாரங்களில் இருந்து வரும் அளவு கடந்த அழுத்தத்துக்கு ஆளாகி தினமும் குடிக்கு அடிமையாகும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.

ஒருகாலத்தில் குடி பழக்கம் என்பது சமூகத்தால் வெறுக்கப்பட்டு வந்த நிலை போய் இப்போது ஃபேஸ்புக் , வாட்சப்பில் கூட தான் குடித்து கும்மாளமடிப்பதை வெளிப்படையாக இளைஞர்கள் பகிர்ந்து வருவதை பார்க்கிறோம்.

“சோசியல் ட்ரிங்கிங்” என்ற பெயரில் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இளைஞர்கள் இன்று மிக அதிகம்.

4. அதிவேக ஊர்திகளும் அதனால் வரும் விபத்துகளும்

தனது மகனுக்கு 18 வயது ஆகிவிட்டதா என்பதைக் கூட முழுதாக கவனிக்காத தந்தைமார்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகளை வாங்கிக்கொடுக்கின்றனர்.

அதற்குரிய லைசன்சும் இல்லாமல் , தலைக்கவசமும் இல்லாமல், சைடு மிரர் கூட இல்லாமல் வண்டியை சர்ர் சர்ர் என்று நெடுஞ்சாலையில் கூட ரூல்ஸ் தெரியாமல் ஓட்டும் பல டீனேஜ் மாணவர்கள் ஒருநாள் மார்ச்சுவரியில் பிணங்களாக பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

5. பணம் மட்டுமே குறிக்கோளாய் மாறிப்போன சமுதாயம்

ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்ய அத்தியாவசியத்தேவை என்ன ? பையன் பொறுப்பானவனாக இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது.
கலகலப்பாக இருக்க வேண்டும். ஒரு டீசண்ட்டான வேலை அல்லது தொழிலில் இருக்க வேண்டும். அவனது குடும்பம் நல்லதாக இருக்க வேண்டும். இது தான் இதற்கு முந்தைய தலைமுறை வரை ஒரு திருமணத்திற்கு தேவையானதாக இருந்தது.

ஆனால் இப்போது என்னென்ன பார்க்கிறோம் ? பையன் எத்தனை இலக்க சம்பளம் வாங்குகிறான். அவன் பேரில் லோன் கடன் ஏதும் இருக்கிறதா? சொந்த வீடு இருக்கிறதா? வீட்டில் ஏசி இருக்கிறதா? கார் இருக்கிறதா?
என்று நமது லிஸ்ட் பெரிதாக பெரிதாக அவன் மேல் விழும் ஸ்ட்ரெஸ் மிக அதிகமாகிறது. ஸ்ட்ரெஸ் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். அதை சரிவர கவனிக்காமல் விட்டால் உயிரை எடுத்து விடும்.

6. இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஆபத்தான மருத்துவம் தொடர்பான போலி பரப்புரைகள்

ஒரு பக்கம் ரத்த கொதிப்பு , இளவயது இதய நோய் , இளவயது ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நோய்கள் சமூகத்தில் பெருகி வருகின்றன. ஆனால் அதற்கு ஈடாக இளைஞர்கள் சமுதாயத்தில் போலி மருத்துவப் பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அவற்றுள் பிரபலமான சில. பின்வருமாறு சுகர் ஒரு நோயே அல்ல. டயாபடிஸ் என்பது மருந்து மாபியா கண்டுபிடித்த நோய். எவ்வளவு ரத்த சர்க்கரை இருந்தாலும் சரி.. சிறுநீரில் சர்க்கரை வெளியானாலும் சரி. கவலைபடத்தேவையில்லை.

வெள்ளை சர்க்கரை தான் கெட்டது. நாட்டு சக்கரை நல்லது . நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்டால் சுகர் ஏறாது. ரத்த கொதிப்பு என்பது நோயே அல்ல. உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள ரத்த கொதிப்பை வரவழைக்கிறது.

காய்ச்சலுக்கு சிகிச்சை தேவையில்லை. வீட்டில் பிரசவம் பார்ப்பது சிறந்தது. சிசேரியன் என்பது பணம் பறிக்கும் நாடகம் என்று மருத்துவம் சார்ந்த பல போலி பரப்புரைகளை உண்மை என்று நம்பி அதனால் உயிர் விடும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

பல இளைஞர்கள் தங்களுக்கு வரும் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை துச்சமென ஒதுக்கி விட்டு நோய் முற்றியதும் மருத்துவமனைக்கு வரும் நிலை அதிகமாகி வருகிறது. இங்கே இளைஞர்கள் என்று மட்டும் குறிப்பிடக்காரணம்.

இளைஞிகளுக்கு இயற்கை தரும் கொடை யாதெனில் அவர்களின் இனப்பெருக்க காலமான 15 வயது முதல் 50 வயது வரை இது போன்ற ஸ்ட்ரெஸ், உணவு முறை மாற்றம், உடலுழைப்பின்மை, தூக்கமின்மை என்று அனைத்து ரிஸ்க் ஃபேக்டர்களும் இருந்தாலும் இளைஞர்களைப் போல இளைஞிகள் இளம் வயதில் அதிகமாக இறப்பதில்லை.

அவர்களை இயற்கையானது, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து காக்கிறது. இது இயற்கையாக மனித இனம் தொன்றுதொட்டு தளைக்க உருவான ஏற்பாடு. 50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்குமான ரிஸ்க் சரிசமமாகிவிடுகிறது.

பெண்ணின் உடலில் இனப்பெருக்க காலம் முழுவதும் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் இந்த முக்கிய ஹார்மோன் அவளை பல இதயம் மற்றும் மூளை சார்ந்த ஆபத்துகளில் இருந்து காக்கிறது. இந்த பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லை.பெண்கள் ஆண்கள் போல அதிகம் குடிப்பதில்லை. புகைப்பதில்லை. (குறைந்தபட்சம் தமிழகத்திலாவது அப்படி இல்லை) யுவதிகள் யுவன்களைப்போல வாகனங்களில் எல்லை மீறி பறப்பதில்லை. இந்த காரணங்களும் இளைஞிகள் மரணிப்பதை குறைக்கிறது.

மேலும், தற்கொலை செய்து உயிர் நீப்பதிலும் ஆண்கள் தான் பெண்களை விட முந்துகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் செய்யும் தற்கொலை முயற்சி என்பது எதிர் இருப்பவரை மிரட்டுவதற்காகவே இருக்கிறது அல்லது பெண்கள் தற்கொலை முடிவுக்கு அத்தனை எளிதாக செல்வதில்லை. ஆனால் ஆண்கள் செய்யும் தற்கொலை முடிவானது. பெரும்பாலும் வெற்றிகரமானதாகிவிடுகிறது.

இளைஞர்கள் தற்கொலை செய்யுமுன் அதில் வெற்றி பெற பல ஹோம்வொர்க்குகள் கூட செய்யத் தவறுவதில்லை. எந்த பாய்சனை சாப்பிட்டால் காப்பாற்றவே முடியாது என்றெல்லாம் படித்து விட்டு வேளையில் இறங்குகிறார்கள்.

ஆகவே, அதிகமான சூசைடு அட்டம்ப்ட்களை பெண்களும் அதிகமான வெற்றிகரமான சூசைடுகளை இளைஞர்களும் புரிகிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் அது ஆண்களுக்கு எளிதில் பிரச்சனைக்குள்ளாகும் ஒன்று.

அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய மாற்றத்தைக் கூட ஆண்களின் சிஸ்டம் அவ்வளவு எளிதில் ஏற்காது. ஆனால் பெண்களின் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பெரிய மாற்றங்களைக்கூட எளிதில் ஏற்கும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தான் இளைஞர்களை விட இறப்பில் இளைஞர்கள் முந்துகிறார்கள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

என் மகனை சைபீரியாவுக்கு நாடு கடத்தினாலும் தப்பி வந்து மீண்டும் வேலை செய்வான்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 46

மாக்சிம் கார்க்கி
போதாய் வாசலருகே சென்று தன் கையைக் கண்களுக்கு அருகே உயர்த்திப் பிடித்துக் குடிசைக்குள் கூர்ந்து பார்த்தாள். அந்தக் குடிசையில் கொஞ்சம்தான் இடம் இருந்தது. என்றாலும் கண்ணைக் கவரும் சுத்தத்துடன் இருந்தது. ஓர் இளம் பெண் அடுப்பு மூலையிலிருந்து திரும்பி அவளைப் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டாள். ஆனால் ஒன்றும் பேசாமலே மீண்டும் திரும்பிவிட்டாள். மேசைமீது ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

வீட்டுச் சொந்தக்காரனான அந்த முஜீக் மேஜையருகே உட்கார்ந்து தனது கை விரல்களால் மேஜை மீது தாளம் போட்டுக் கொண்டிருந்தான். தாயின் கண்களையே அவன் வெறித்துப் பார்த்தான்.

“உள்ளே வாருங்கள்” என்று சிறிது நேரம் கழித்துச் சொன்னான் அவன். “தத்யானா, போய் பியோத்தரை வரச் சொல்லு. சீக்கிரம் போ.”

அந்தப் பெண் தாயை ஏறிட்டுப் பார்க்காமல் வெளியே சென்றாள். தாய் அந்த முஜீக்குக்கு எதிராக ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் கண்ணைத் திருப்பினாள். அவளது டிரங்குப் பெட்டியை அங்கு எங்கும் காணவில்லை. அந்த அறை முழுவதிலும் ஒரு பயங்கர அமைதி நிலவியது. இடையிடையே விளக்குத் திரி பொரிந்து விழுவதைத் தவிர வேறு சத்தமே இல்லை. ஒருவித அக்கறையோடு நெரித்து நோக்கும் அந்த முஜீக்கின் முகம் தாயின் கண் முன்னால் மங்கலாக நிழலாடியது. அவளது மனத்தில் அதே கணத்தில் ஒரு பெருங் குழப்பவுணர்ச்சி லேசாக முளைவிட்டது.

”என் பெட்டி எங்கே?’ என்று திடீரென்று உரத்த குரலில் கேட்டாள். அந்தக் கேள்வி அவளுக்கே திடுமென்று ஒலித்தது.

அந்த முஜீக் தன் தோள்களைக் குலுக்கினான்.

”அது ஒன்றும் தொலைந்து போகாது” என்று அவன் கூறினான். பிறகு தணிந்த குரலில் பேசினான்: “கடையிலேயேதான் அது காலியாயிருக்கிறது என்று அந்தப் பெண்ணின் காதில் விழும்படி நான் வேண்டுமென்றுதான் சொன்னேன். அது காலியாய் ஒன்றுமில்லை. ரொம்பக் கனமாக இருக்கிறது.”

”சரி, அதனால் என்ன?’’ என்று கேட்டாள் தாய்.

அவன் எழுந்து தாயிடம் வந்து குனிந்து நின்று ரகசியமாகக் கேட்டான்.

”அந்த மனிதனை உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?”

”ஆமாம்” அந்தக் கேள்வி அவளை வியப்புறச் செய்தது. எனினும் அவள் உறுதியான குரலில்தான் பதில் சொன்னாள். அந்தச் சிறு வார்த்தை அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கி, இதயத்தில் மூண்டிருந்த இருளையும் போக்கியது. பெஞ்சின் மீது அசையாது உறுதியோடு உட்கார்ந்தாள்.

அந்த முஜீக் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தான்.

”நீங்கள் அங்கே இருந்து அவனுக்குச் சைகை காட்டியதைப் பார்த்ததுமே நான் ஊகித்துக்கொண்டேன். அவனும் பதிலுக்குச் சைகை காட்டினான். அவனிடம் நான் ரகசியமாகக் கேட்டேன். ‘அதோ வாசல் முகப்பில் நிற்கிறாளே, அவளை உனக்குத் தெரியுமா’ என்று கேட்டேன்.’’

“அதற்கு அவன் என்ன பதில் சொன்னான்?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் தாய்.

‘’அவனா? ‘எங்கள் கோஷ்டியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என்றான் அவன்.”

அந்த முஜீக் எதையோ கேட்கும் பாவனையில் அவளது கண்களையே கூர்ந்து நோக்கினான். மீண்டும் புன்னகை புரிந்துவிட்டுப் பேசத்தொடங்கினான்:

”ஒரு பலசாலியான தைரியமான ஆசாமி கிடைத்திருக்கிறான். ‘நான்தான்’ என்று அவன் எவ்வளவு தைரியமாகச் சொல்கிறான். அவர்கள் அவனை எவ்வளவுதான் அடிக்கட்டுமே தான் சொல்ல விரும்பியதை அவன் சொல்லியே தீர்க்கிறான்.”

அவனது குரலைக் கேட்டுத் தாய்க்கு வரவர மனப்பாரம் குறைந்து வந்தது. அவனது குரல் பலமற்றும் நிச்சயமற்றும் அவனது கள்ளமற்ற கண்களின் பார்வையால் அவளுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. அவளது பயபீதியும் கலக்கமும் மறைந்து அவளது மனத்தில் ரீபினின் மீது ஓர் ஆழ்ந்த பரிவுணர்ச்சி இடம் பெற்றது.

“மோசக்காரர்கள்! மிருகங்கள்!’’ என்று கசப்பு நிறைந்த ஆக்ரோஷத்தோடு கத்தினாள், உடனே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அந்த முஜீக் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்று சென்றான்.

“இதோ, அதிகாரிகள், தமக்கு நல்ல நண்பர்களைத் தயாரித்துக்கொண்டார்கள்!”

அவன் மீண்டும் தாயை நோக்கித் திரும்பி அமைதியாகச் சொன்னான்.

“அந்த டிரங்குப் பெட்டியிலே பத்திரிகைகள்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. என் ஊகம் சரிதானே?”

“ஆமாம்” என்று தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னாள் தாய். “நான்தான் அவனுக்குக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தேன்.”

அந்த முஜீக் தன் முகத்தைச் சுழித்தான். தாடியைக் கையில் இறுகப் பற்றிப் பிடித்தவாறு ஒரு மூலையையே வெறித்து நோக்கினான். கடைசியாகப் பேசத் தொடங்கினான்.

”அவை எங்களுக்கும் கிடைத்து வந்தன. புத்தகங்களும் கிடைத்து வந்தன. அந்த மனிதனை எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவனைப் பார்த்திருக்கிறோம்.”

அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஒரு கணம் சிந்தித்தான்.

“அதை வைத்துக் கொண்டு – அந்த டிரங்குப் பெட்டியை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.

”உங்கள் வசம் ஒப்புவித்துவிட்டுப் போகிறேன்” என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னாள் தாய்.

அவன் மறுதலிக்கவில்லை; வியப்புணர்ச்சியையும் காட்டவில்லை.

”எங்களிடம்?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

சொன்னதை ஏற்றுக்கொண்ட பாவனையில் அவன் தலையை அசைத்தான். மேஜையருகே உட்கார்ந்து, தனது தாடியைக் கைவிரல்களால் சிக்கெடுக்க ஆரம்பித்தான்.

படிக்க:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?

ரீபினுக்கு இழைக்கப்பட்ட மிருகத்தனமான கொடுமையைக் கண்ட காட்சி தாயின் மனத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிந்து நினைவிலெழுந்து அவளைப் பயமுறுத்தியது. அந்த உருவம் அவளது மனத்தில் குடிகொண்டிருந்த எண்ணங்கள் யாவற்றையும் விரட்டியோட்டியது. அந்த மனிதனுக்காக வேதனையும் மனத்தாங்கலும் அவள் இதயத்தை நிரப்பின. எனவே அவள் டிரங்குப் பெட்டியைப் பற்றியோ வேறு எதையும் பற்றியோ சிந்திக்கச் சக்தியற்றுப் போனாள். அவளது கண்ணீர் தாரை தாரையாகத் தங்கு தடையற்று வழிந்திறங்கியது. அவளது முகம் சுண்டிக் கறுத்தது. ஆனால் தடுமாறாத குரலிலேயே அவள் பேசினாள்:

”மனிதப் பிறவிகளை இப்படி மண்ணோடு மண்ணாய் இழுத்து உதைத்துக் கொள்ளையிடும் பாவத்துக்கு அவர்கள் என்றென்றும் நாசமாய்ப் போகட்டும்!”

”அவர்கள் பலசாலிகளாயிற்றே’’ என்று அமைதியாகச் சொன்னான் அந்த முஜீக். “அவர்கள் மிகுந்த பலசாலிகள்!”

“அவர்களுக்கு அந்தப் பலம் எங்கிருந்து வருகிறது?” என்று கலங்கிய குரலில் சொன்னாள் தாய். “நம்மிடமிருந்துதான், பொதுமக்களிடமிருந்துதான் அவர்கள் பலத்தைப் பெறுகிறார்கள். பலத்தை மட்டுமல்ல, எல்லாவற்றையுமே நம்மிடமிருந்துதான் பெறுகிறார்கள்!”

”அந்த முஜீக்கின் பிரகாசமான, ஆனால் புதிர்போடும் முகத்தைக் கண்டு, தாய்க்கு எரிச்சல் வந்தது.

“ஆமாம்” என்று இழுத்தான் அவன்: ”இது ஒரு சக்கரம்தான்…”

திடீரென அவன் உஷாராகி நிமிர்ந்து, வாசல் பக்கமாகச் செவியைச் சாய்த்துக் கேட்டான். அவர்கள் வருகிறார்கள்” என்றான்.

‘யார்?”

”நண்பர்கள்…”

அவனது மனைவி உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னால் இன்னொரு முஜீக் வந்தான். அந்த முஜீக் தன்னுடைய தொப்பியை ஒரு மூலையில் விசிறியெறிந்துவிட்டு அந்த வீட்டுக்காரனிடம் அவசர அவசரமாக வந்து நின்றான்.

“சரிதானே?” என்று கேட்டான் அவன்.

வீட்டுக்காரன் தலையை அசைத்தான்.

”ஸ்திபான்!” என்ற அடுப்பு முன்னாலிருந்தவாறே கூப்பிட்டாள் அவன் மனைவி. ”விருந்தாளிக்குச் சாப்பிட ஏதாவது வேண்டுமா?”

“ஒன்றும் வேண்டாம். மிகுந்த நன்றி, அம்மா” என்றாள் தாய்.

இரண்டாவதாக வந்த முஜீக் தாயிடம் வந்து உடைந்த குரலில் பரபரப்போடு பேசினான்.

“என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். என் பெயர் பியோத்தர் இகோரவிச் ரியபீனின். பட்டப் பெயர் ‘தமர் உளி.’ உங்கள் வேலையைப் பற்றி எனக்கும் ஒன்றிரண்டு விஷயங்கள் தெரியும். எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். சொல்லப்போனால் நான் முட்டாளல்ல……..”

தாய் அவனை நோக்கி நீட்டிய கரத்தை அவன் பற்றிப் பிடித்துக்கொண்டே வீட்டுக்காரன் பக்கம் திரும்பிப் பேசினான்:

”நீயே பார்த்துக்கொள், ஸ்திபான்” என்றான் அவன். “வர்வாரா நிகலாயவ்னா ஓரளவுக்கு நல்லவள்தான். இருந்தாலும், இந்தக் காரியத்தை முட்டாள்தனமென்றும் ஆபத்தானதென்றும் அவள் கருதுகிறாள். என்னவோ இளைஞர்கள், மாணவர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு, மக்களது மூளையில் முட்டாள்தனத்தையே புகுத்தி வருவதாக அவள் கருதுகிறாள். ஆனால், நீயும் நானும் இன்று கைதான அந்த முஜீக்கை அறிவோம். அவன் முழுக்க முழுக்க நல்லவன். முஜீக்குக்கே அவன்தான் சரியான உதாரணம். ஆனால், இதோ பார், இந்த அம்மாள் ஒன்றும் இளவயதானவள் இல்லை; மத்திம வயதுதான். எப்படிப் பார்த்தாலும் இவள் அந்தச் சீமாட்டி வர்க்கத்தவரைச் சேர்ந்தவளல்ல. நான் கேட்கிறேன் என்று வித்தியாசமாய் நினைக்காதீர்கள். நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?”

அவன் விரைவாகவும் தெளிவாகவும் மூச்சுவிடவே அவகாசம் பெறாமலும் பேசினான். அவனது தாடி நடுங்கியது. கண்கள் தாயின் முகத்தையும் உருவத்தையும் கண்டு கொண்டிருந்தன. அவனது துணிமணிகள் கிழிந்து கந்தலாய்ப் போயிருந்தன. தலைமயிர் உலைந்து போயிருந்தது. அவன் இப்போதுதான் ஏதோ கைச் சண்டையில் கலந்து, தன் எதிரியை மண்ணைக் கவ்வச் செய்த உற்சாகத்தோடு திரும்பி வந்து நிற்கிற மாதிரி இருந்தான். அவனது ஆர்வத்தைக் கண்டவுடனேயே தாய்க்கு அவனைப் பிடித்துப்போய்விட்டது. மேலும் அவன் கள்ளங் கபடமற்று எளிமையோடு பேசினான். அவனது கேள்விக்குப் பதில் சொல்லும்போது அவள் அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள். அதன் பின்னர் அவன் மீண்டும் ஒருமுறை அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் கலகலவென்று சிரித்தான்.

”இது ஒரு புனித காரியம் ஸ்திபான்!” என்றான் அவன். “இது ஓர் அருமையான காரியம். இந்தக் காரியம் மக்களிடமிருந்தேதான் தோன்றுகிறது என்று நான் சொல்லவில்லையா? ஆனால் அந்தச் சீமாட்டி – அவள் உனக்கு உண்மையைச் சொல்லவில்லை. அவள் உண்மையை உன்னிடம் சொல்லிவிட்டால், தனக்கே தீங்கு செய்து கொள்வாள், அவளை நான் மதிக்கத்தான் செய்கிறேன். அது உனக்கு நான் சொல்லாமலே தெரியும். அவள் நல்லவள். நமக்கெல்லாம் உதவி செய்ய எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய நிலைமைக்குக் குந்தகம் விளையாமல் உதவி செய்ய நினைக்கிறாள். ஆனால், சாதாரணமான பொதுமக்களோ? அவர்கள் நேராகச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் ஆபத்தையோ கொடுமையையோ எண்ணி அஞ்சி ஒதுங்கவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததா? அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமே துன்பத்தைத்தான் பெறுகிறார்கள். என்ன செய்தாலும், அவர்கள் மனம் புண்படத்தான் செய்கிறது. அவர்களுக்கு திரும்பிச் செல்லுவதற்கு வேறு மார்க்கமே இல்லை. எந்தெந்தத் திசையிலே திரும்பினாலும் ‘நில்!’ என்ற குரல்தான் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.”

“எனக்குத் தெரிகிறது” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் ஸ்திபான். உடனேயே, “இவள் தனது டிரங்குப் பெட்டியை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாள்” என்றான்.

பியோத்தர் தாயை நோக்கி எதையோ புரிந்துகொண்ட பாவனையில் கண்ணைக் காட்டினான்.

”கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதலான குரலில் சொன்னான் அவன். “எல்லாம் நல்லபடி நடக்கும், அம்மா. டிரங்குப் பெட்டி என் வீட்டில்தான் இருக்கிறது. நீங்களும் இந்த இயக்கத்தில் பங்கெடுக்கிறவள்தான் என்றும், அந்த அடிபட்ட மனிதனை உங்களுக்குத் தெரியும் என்றும் இன்று இவன் வந்து என்னிடம் சொன்னபோது நான் சொன்னேன்: ‘ஸ்திபான், நன்றாகக் கவனி’ என்றேன். இந்த மாதிரி விஷயங்களில் தவறிவிடக்கூடாது பார்.’ நாங்கள் இருவரும் உங்கள் பக்கத்திலே நின்று கொண்டிருந்தபோது நீங்களும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தீர்கள். நேர்மை குணமுள்ளவர்களை எந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால், அப்படிப்பட்டவர்கள் அநேகம் பேர் உலகில் இருக்க முடியாதல்லவா? சரி, நீங்கள் டிரங்குப் பெட்டியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்………”

படிக்க:
இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !

அவன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து கேட்கும் குறியுடன் அவளையே பார்த்தான். பிறகு கேட்டான்:

“அதற்குள் உள்ள பொருள்களை யாரிடமாவது தள்ளிவிட்டால் நல்லது என்று தோன்றினால், அந்த விஷயத்தில் நாங்கள் மனமகிழ்ச்சியோடு ஒத்துழைக்கத் தயார். அந்தப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே.”

”அவள் எல்லாவற்றையுமே நம்மிடம்தான் விட்டுச் செல்ல விரும்புகிறாள்” என்றான் ஸ்திபான்.

”அம்மா, அப்படியா? ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. நாங்கள் அதற்கு ஒரு சரியான இடம் பார்க்கிறோம்.”

அவன் ஒரு சிரிப்போடு தன்னிடத்தை விட்டுத் துள்ளியெழுந்து அங்கும் இங்கும் அவசர அவசரமாக உலாவினான்.

“சாதாரணமானதென்றாலும் இது ஓர் அபூர்வமான விஷயம். எனினும் ஒருபுறத்திலே தொடர்பு அற்றுப்போகும்போது, இன்னொரு புறத்திலே தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அது ரொம்ப சரி. அந்தப் பத்திரிகை ரொம்ப நல்ல பத்திரிகை, அம்மா. அது நல்ல சேவை செய்கிறது. மக்களின் கண்களைத் திறக்கிறது. அதைப் பற்றிச் சீமான்கள் ஒன்றும் பிரமாதமாக எண்ணவில்லை. இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சீமாட்டியிடம் தச்சு வேலை பார்த்து வருகிறேன். அவள் கண்ணியமானவள்தான். அவள் எனக்கு எத்தனையோ தடவை தன் புத்தகங்களைத் தந்து உதவியிருக்கிறாள். சமயத்தில் ஏதாவதொன்றைப் படிக்கும்போது திடீரென்று நமது அறியாமையை அது நீக்கிவிடுகிறது. பொதுவாகச் சொன்னால் அவளுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். ஒரு தடவை அவளிடம் நான் இந்தப் பத்திரிகையைக் கொண்டு கொடுத்தேன். உடனே அவளது மனம் புண்பட்டுப்போயிற்று. ‘பியோத்தர்’ இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் படிக்காதே. ஏதோ சில உதவாக்கரை பள்ளிக்கூடத்துப் பையன்கள்தான் இப்படி எழுதித் தள்ளுகிறார்கள். இதைப் படிப்பதால் உனக்குத் தொல்லைகள்தான் மிஞ்சும். சைபீரியாவுக்கோ, சிறைக்கோ உன்னை இவை அனுப்பிவைத்துவிடும்!” என்றாள் அவள்……..

மீண்டும் அவன் ஒரு கணநேரம் மௌனமாயிருந்தான். பிறகு கேட்டான்.

“அம்மா. அந்த அடிபட்ட மனிதன் இருக்கிறானே – அவன் உங்கள் சொந்தக்காரனா?”

“இல்லை” என்றாள் தாய்.

பியோத்தர் சத்தமின்றி சிரித்தான். எதையோ கேட்டுத் திருப்தியுற்றவன்போல தலையை அசைத்துக்கொண்டான். ஆனால் மறு நிமிஷத்திலேயே ரீபினுக்கும் தனக்கும் சொந்தமில்லை என்று கூறிய வார்த்தையால், ரீபினையே புண்படுத்திவிட்டதாகத் தாய் உணர்ந்து கொண்டாள். எனவே உடனே சொன்னாள்:

“அவன் எனக்குச் சொந்தக்காரனில்லைதான். இருந்தாலும் அவனை நான் வெகு காலமாக அறிவேன். அவனை என் சகோதரனாகவே — அண்ணன் போலவே மதிக்கிறேன்.”

அவளது உணர்ச்சியை வெளியிட அவளுக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதைக் கண்டதும் அவளுக்கு ஆற்றொணாத் துயரம் நெஞ்சில் பெருகியது. மீண்டும் அவள் அமைதியாகக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். அழுத்தமும் ஆர்வமும் நிறைந்த அமைதி அந்தக் குடிசையில் நிலவியது. பியோத்தர் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் குனிந்து நின்றான். ஸ்திபான் தன் முழங்கைகளை மேஜை மீது ஊன்றியவாறே உட்கார்ந்து மேஜையைப் படபடவென்று கொட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அடுப்பின் முன்னால் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் பார்வை தன் முகத்தின் மீதே நடமாடுகிறது என்பதைத் தாய் உணர்ந்துதானிருந்தாள். தாயும் சமயங்களில் அவளை ஒரு பார்வை பார்த்தாள். அவளது நீள் வட்டக் கரிய முகத்தின் நேரிய மூக்கும், கூர்மையான மோவாயும் அவள் கண்ணில் பதிந்தன. அவளது பசிய கண்களில் கூர்மையும் கவனமும் மிகுந்திருந்தன.

“அப்படியானால் அவன் உங்கள் நண்பன்தான்” என்று மெதுவாகச் சொன்னான் பியோத்தர். “அவன் தனக்கென ஒரு தனிக்குணம் படைத்த ஆசாமி. தன்னைப் பற்றி மிகவும் சரியாகவும் உயர்வாகவும் நினைக்கிறான். ஏ, தத்யானா, எப்படிப்பட்டவன் அவன்?”

“அவனுக்குக் கல்யாணமாகியிருக்கிறதா?” என்று தனது சிறிய வாயின் உதடுகளை இறுக மூடியவாறே குறுக்கிட்டுக் கேட்டாள் தத்யானா.

“அவன் மனைவி இறந்துவிட்டாள்” என்று துக்கத்தோடு சொன்னாள் தாய்.

”அதனால்தான் அவன் அத்தனை தைரியமாயிருக்கிறான்” என்று செழுமை நிறைந்த ஆழ்ந்த குரலில் சொன்னாள் தத்யானா: ”குடும்பஸ்தன் என்றால் இந்த மாதிரி மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கவே மாட்டான், பயப்படுவான்.”

“ஏன், நானில்லையா?” என்று கத்தினான் பியோத்தர்: ‘நான் கிரகஸ்தன் இல்லையா?”

”அடடா…” என்று அவனது கண்களைப் பார்க்காமலே உதட்டைக் கோணிச் சிரித்துக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். “நீ என்ன செய்கிறாய்? என்னவோ பேசுகிறாய். சமயங்களில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறாய். நீயும் ஸ்திபானும் ஓர் இருண்ட மூலையில் இருந்து கொண்டு ரகசியமாக வாசிப்பதும் போவதும் ஜனங்களுக்கு என்ன நன்மையை உண்டாக்கிவிடப் போகிறது? ஒன்றுமில்லை.”

”என்னுடைய பேச்சை எவ்வளவு பேர் கேட்கிறார்கள் தெரியுமா?” என்று அவளது ஏளனத்தால் மனம் புண்பட்டு, அவள் கூற்றை அமைதியான குரலில் எதிர்த்தான் அந்த முஜீக். “நான் இங்கே என்னவோ ஈஸ்ட்* மாதிரி வேலை பார்ப்பதாக சொல்லலாம். நீ அப்படி நினைக்கக் கூடாது ……….”

* ஈஸ்ட் (yeast) — உணவுப் பண்டங்களைப் புளிக்க வைக்க உதவும் பொருள். – மொ-ர்.

ஸ்திபான் வாய் பேசாது தன் மனைவியைப் பார்த்தான்; தலையைத் தொங்கவிட்டுக்கொண்டான்.

”ஒரு முஜீக் எதற்காகக் கல்யாணம் செய்து கொள்கிறான்?” என்று கேட்டாள் தத்யானா, “அவனுக்காக வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று கூறுகிறார்கள். வேலை நல்ல வேலைதான்.”

”உனக்கு இருக்கிற வேலை காணாதா?” என்று சோர்வுடன் கேட்டான் ஸ்திபான்.

”இந்த வேலையைப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நாளுக்கு நாள் அரைப்பட்டினி கால் பட்டினியாய்க் கிடந்து வாழ வேண்டியதுதான் என் வேலை. தன் வயிற்றைக் கழுவ வசதி தராத இந்த உழைப்பு. பிறக்கும் குழந்தைகளைக் கவனிக்கவும் விடுவதில்லை.”

அந்தப் பெண் எழுந்து வந்து தாயின் அருகே உட்கார்ந்து மூச்சுவிடாமல் பேசினாள். எனினும் அவளது பேச்சில் தன் குறைபாடுகளையோ துக்கத்தையோ காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை இரண்டு வயசாயிருந்தபோது தன்மீது கொதிக்கிற வெந்நீரை இழுத்துக் கொட்டிக் கொண்டு செத்தது. இன்னொன்று குறைமாதப் பிறவியாக, பிறக்கும்போதே செத்துப் பிறந்தது. எல்லாம் இந்த நாசமாய்ப் போகிற வேலையால்தான். இந்த வேலையினால் எனக்கு எதாவது மகிழ்ச்சி உண்டா? முஜீக்குகள் கல்யாணம் பண்ணுவதில் அர்த்தமே இல்லையென்றுதான் நான் சொல்வேன். எந்தவித இடைஞ்சலுமின்றி, நல் வாழ்வுக்காகத் தனிமையாக இருந்து போராடுவதை விட்டுவிட்டு, தங்கள் கைகளைத் தாங்களே கட்டிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் தனியாக இருந்தால், அந்த மனிதன் மாதிரி சத்தியத்தை நாடி நேராக முன்னேறிச் செல்ல முடியும். நான் சொல்வது சரிதானே, அம்மா?”

“சரிதான்” என்றாள் தாய். “நீ சொன்னது சரிதான், கண்ணே. இல்லையென்றால் வாழ்க்கை இப்படியேதான் போய்க்கொண்டிருக்கும். மாறுதலிருக்காது………”

‘உங்களுக்குக் கணவர் இருக்கிறானா?”

“இல்லை. செத்துப்போனான், ஒரு மகன் இருக்கிறான்.”

”அவன் உங்களோடு வாழவில்லையா?”

”அவன் சிறையிலிருக்கிறான்’’ என்றாள் தாய்.

இந்த வார்த்தைகளைக் கூறியதுமே, அந்த வார்த்தைகள் அவள் மனத்தில் எழுப்பும் வழக்கமான துயர உணர்ச்சியோடு ஒரு பெருமித உணர்ச்சியும் தோன்றுவதைத் தாய் உணர்ந்தாள்.

”அவனைச் சிறையில் போட்டது இது இரண்டாவது தடவை. கடவுளின் சத்தியத்தை மக்களிடம் பரப்பியதுதான் அவன் சிறை சென்றதற்குக் காரணம். அவன் இளைஞன், அழகன், புத்திசாலி. அவன்தான் உங்களுக்காகப் பத்திரிகை போட வேண்டும் என்று முதன் முதல் நினைத்தவன்; மிகயீல் இவானவிச் அவனைவிட வயதில் இரண்டு மடங்கு மூத்தவன்தான். என்றாலும் மிகயீலை இந்த உண்மையான பாதையில் இழுத்துவிட்டவன் என் மகன்தான். சீக்கிரமே என் மகனுக்குத் தண்டனை கொடுத்து அவனைச் சைபீரியாவுக்கு நாடு கடத்திவிடுவார்கள். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி, திரும்பவும் இங்கு வந்து தன் வேலையைத் தொடர்ந்து நடத்துவான்…”

அவள் பேசும்போது அவளது உள்ளத்தில் பெருமை உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வளர்ந்தது. அவளது மனத்தில் எழுந்த வீர சொரூபத்தை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் பொங்கி வந்தன. தொண்டை அடைத்தது. அன்றைய தினத்தில் அவள் கண்ணால் கண்ட இருண்ட சம்பவத்தை — அந்த இருளின் அர்த்தமற்ற பயங்கரமும், வெட்ககரமான கொடுமையும் அவளது மூளைக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருக்கும் தவிப்பை — சமனப்படுத்துவதற்கு, அவளுக்கு வேறொரு ஒளி மிகுந்த நல்ல விஷயம் தேவைப்பட்டது. எனவே அவள் அப்படிப் பேசினாள். தனது ஆரோக்கியமான ஆத்மாவின் தூண்டுதல்களுக்கெல்லாம் தன்னையுமறியாமல் பணிந்து கொடுத்து தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அந்த விஷயங்களெல்லாம் ஒன்றுகலந்து புனிதமும், பிரகாசமும் நிறைந்த ஒரு பெருந் தீப ஒளியாகத் திரண்டெழுந்து, தனது அக்கினி வேகத்தால் அவள் கண்களையே குருடாக்குவது மாதிரி ஒளி வீசிப் பிரகாசித்தன.

படிக்க:
ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !
குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?

“அவன் மாதிரி இப்போது எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நாளுக்கு நாள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அந்திம தினம் வரையிலும் சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டே இருப்பார்கள்………”

அவள் எச்சரிக்கையற்றுப் பேசினாள். எனினும் அவள் யாருடைய பெயரையும் வாய்விட்டுச் சொல்லிவிடவில்லை. மக்கள் சமூகத்தை பேராசையென்னும் பெருவிலங்கிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்காக நடைபெறும் ரகசிய நடவடிக்கைகளைப் பற்றித் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவள் சொல்லித் தீர்த்தாள். தனது பிரியத்துக்குப் பாத்திரமான நபர்களைப் பற்றி வருணிக்கும்போது அவள் தான் பேசும் வார்த்தைகளில் தனது பலத்தையெல்லாம் பெய்து பேசினாள். இத்தனை காலத்துக்குப் பிறகு அவளது மனத்திலே வாழ்க்கை அனுபவங்கள் மலரத் தொடங்கிய அபரிமிதமான அன்பையெல்லாம் அந்தப் பேச்சில் சொரிந்தாள். தனது மனக்கண் முன்னால் ஒளிப் பிழம்பாய் எழுந்து தனது உணர்ச்சியால் கெளரவிக்கப்பட்டு விளங்கும் அந்த மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கே ஆனந்தம் கரைபுரண்டு விம்மியது.

”இதே காரியம் உலகம் எங்கிலும், சகல நகரங்களிலும், சகல ஊர்களிலுமுள்ள நல்லவர்களால் ஒரே ரீதியில் நடத்தப்பெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவில்லை, அளவில்லை. நாளுக்கு நாள் இந்த இயக்கம் வளர்கிறது. நமக்கு வெற்றி கிட்டுகின்ற நிமிஷம் வரையிலும் இது வளர்ந்துகொண்டுதான் போகும்…”

அவளது குரல் நிதானமாகப் பொழிந்து வந்தது. இப்போது அவள் வார்த்தைகளுக்காகச் சிரமப்படவில்லை. அன்றைய சம்பவத்தின் ரத்தமும் புழுதியும் படிந்த கறையைத் தன் இதயத்தை விட்டுக் கழுவிப் போக்க வேண்டும் என்ற ஆசையெனும் பலத்த நூலிலே, அவளது வாய் வார்த்தைகள் வர்ணஜாலம் வீசும் பாசிமணிச் சரம் போல் வரிசை வரிசையாக வந்து விழுந்து கோத்துக்கொண்டிருந்தன. தான் சொன்ன விஷயங்களைக் கேட்டு அந்த முஜீக்குகள் இருந்த இடத்திலேயே முளை அறைந்தாற்போல் அசையாதிருப்பதை அவள் கண்டுகொண்டாள். அவர்கள் ஆடாமல் அசையாமல், அவளை இமை தட்டாமல் பார்த்தவாறே இருந்தார்கள். தனக்கு அருகிலிருந்த பெண் சிரமப்பட்டு மூச்சு வாங்குவதையும் அவளால் கேட்க முடிந்தது. இவையனைத்தும் தான் சொல்லும் விஷயத்திலும், தான் அந்த மக்களுக்கு உறதியளிக்கும் விஷயத்திலும் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியது…

”கஷ்ட வாழ்க்கைக்கு ஆளானவர்கள் அனைவரும், அடக்கு முறையாலும் தேவையாலும் அலைக்கழிக்கப்பட்டு நைந்துபோன மக்கள் அனைவரும் பணக்காரர்களாலும் பணக்காரரின் கைக் கூலிகளாலும் தரையோடு தரையாய் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் – மக்களின் நலத்துக்காகப் படுமோசமான சித்திரவதைக்கு ஆளாகி சிறைக்குள்ளே கிடந்து அழிந்து கொண்டிருக்கும் அந்த மக்களோடு, ஒன்றுசேர வேண்டும். தங்களைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிது கூட இல்லாமல் அவர்கள் சகல மக்களுக்கும் சுபிட்சப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், ‘இந்தப் பாதை கரடு முரடானதுதான்’ என்று கூறுகிறார்கள். இந்தப் பாதையில் வரும்படி எவரையும் அவர்கள் நிர்ப்பந்திப்பதில்லை. ஆனால், ஒரு மனிதன் அவர்களோடு போய்ச் சேர்ந்துகொண்டால் அவனே அவர்களை விட்டுப் பிரிந்து செல்லமாட்டான். ஏனெனில், அதுவே சரியான பாதையென்பதையும், அதைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்பதையும் அவன் கண்டு கொள்வான்!’’

அவனது மனத்தில் நீண்ட நாளாக இருந்துவந்த ஆசையை – அதாவது அவளே மக்களுக்கு உண்மையைப் போதிக்க வேண்டும் என்னும் அவளது விருப்பை – அன்று நிறைவேற்றிக்கொண்டபோது அவளுக்கு ஒரே ஆனந்தமாயிருந்தது.

“அம்மாதிரி மனிதர்களோடு சேர்ந்து செல்வதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படவே தேவையில்லை. அந்த மனிதர்கள் அற்பசொற்ப வெற்றியோடு திருப்தியடைய மாட்டார்கள். சகல ஏமாற்றுக்களையும், சகல பேராசைகளையும், சகல தீமைகளையும் ஒழித்துக் கட்டினாலன்றி அவர்கள் தமது இயக்கத்தை நிறுத்தமாட்டார்கள். அனைத்து மக்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரே குரலில், நான்தான் அதிகாரி, நான்தான் சகல மக்களுக்கும் சமமான பொதுவான சட்டதிட்டங்களை உண்டாக்குவேன்’ என்ற கோஷத்தைக் கிளப்புகிறவரையிலும், அவர்கள் ஓய்வு கொள்ள மாட்டார்கள்!”

களைப்புணர்ச்சி தோன்றவே, அவள் பேச்சை நிறுத்திக் சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் பேசியது வீண் போகவில்லை என்ற அமைதியான நம்பிக்கையுணர்ச்சி அவள் உள்ளத்தில் நிரம்பி நின்றது. அந்த முஜீக்குகள் இன்னும் எதையோ எதிர்நோக்கி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். பியோத்தர் மார்பின்மீது கைகளைக் கட்டியவாறு, கண்களைச் சுருக்கி விழித்தான். அவனது உதடுகளில் ஒரு புன்னகை உருவாகி அசைந்தது. ஸ்திபான் முழங்கையொன்றை மேஜை மீது ஊன்றி, தனது உடம்பு முழுவதையுமே முன்னோக்கித் தள்ளி, இன்னும் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் இருந்தான். அவனது முகம் இருண்ட பக்கமாக இருந்தது. எனவே அது ஒரு பரிபூரண உருவம் பெற்றதுபோல் தெரிந்தது. அவனது மனைவி தாய்க்கு அடுத்தாற்போல் உட்கார்ந்து முழங்காலின் மீது முழங்கைகளை ஊன்றிக் குனிந்து, தரையையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“இப்படித்தான் இருக்கிறது” என்று அடி மூச்சுக் குரலில் கூறிக்கொண்டே பியோத்தர் மெதுவாகப் பெஞ்சின் மீது உட்கார்ந்தான்.

ஸ்திபான் நிமிர்ந்து உட்கார்ந்து, தன் மனைவியைப் பார்த்தான். அங்குள்ளவர்கள் அனைவரையுமே அணைத்துக்கொள்ளப் போகிறவன் மாதிரி கைகளை அகல நீட்டினான்.

“இந்த மாதிரி விஷயத்தில் ஒருமுறை தலையைக் கொடுத்துவிட்டால், அப்புறம் அதற்காகவே தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து, முழு மூச்சுடன் ஈடுபடத்தான் நேரும்……” என்று ஏதோ நினைவிலாழ்ந்தபடி கூறத்தொடங்கினான் அவன்.

”ஆமாம், உண்மைதான் திரும்பிப் பார்க்கிற வழக்கமே கூடாது” என்று வெட்கத்தோடு கூறிக்கொண்டான் பியோத்தர்.

”இந்த இயக்கம் பேரளவில் வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது” என்றான் ஸ்திபான்.

“உலகளவில்” என்றான் பியோத்தர்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு

0

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்திற்காக (National Tobacco Control Programme) 2016-ம் ஆண்டு இறுதிவரை 400 முழுநேர ஊழியர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. மேலும் 2015-ம் ஆண்டு அவர்களுக்காக ரூ.40 கோடி செலவிட்டிருக்கிறது.

பீடி புகைப்பதால் ஏற்பட்ட அகால மரணங்களாலும் உடல்நல குறைபாட்டினாலும் இந்தியா கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் ரூ.80,000 கோடியை இழந்திருக்கிறது என்பதை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள். கொச்சியில் இயங்கும் ‘பொது கொள்கைக்கான ஆராய்ச்சி மைய’த்தைச் (Centre for Public Policy Research) சேர்ந்த ரிஜோ எம்.ஜான் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை புகையிலை கட்டுப்பாடு (Tobacco Control) எனும் சஞ்சிகையில் வெளி வந்துள்ளது.

“பீடி புகைப்பது பொதுநலத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தல்” என்கிறார் ஜான். வரி விதிப்பு நடவடிக்கை, பீடி புகைப்பதை கட்டுப்படுத்தும் பயனுள்ள வழிமுறை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருந்தும் இதுவரையில் இந்தியாவில் பெரிதாக இதை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

பீடிக்கு அதிக வரி போடாமல் இருப்பதற்கு பின்னணியில் அரசியல் காரணிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. “இதற்கு பின்னால் கண்டிப்பாக ஒரு அரசியல் காரணி இருக்கிறது. பீடி அதிகம் புகைப்பதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை தாங்க வேண்டிய நிலை ஏழைகளுக்கு ஏற்படுகிறது.  இதை அனுமதிப்பது அவர்களின் வருமானத்தின் ஒரு பெரிய பங்கை இழப்பதற்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

எனவே ஏற்கனவே உள்ள 22% வரியிலிருந்து உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 75% அளவிற்கு வரியை உயர்த்த வேண்டும் எனக் கூறுகிறார் ரிஜோ.

பீடி புகைப்பதற்கு தரப்படும் விலையை தேசிய மற்றும் சர்வதேசிய புள்ளி விவரங்களை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். இந்த ஆய்வு 2017-ம் ஆண்டில் புகைப்பதால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளையும் 30-69 வயதிலேயே ஏற்பட்ட அகால மரணங்களையும் அறுதியிட்டு கணக்கிட்டுள்ளது. நோய்க்கான நேரடி சிகிச்சை செலவுகள், மறைமுக நோய்கள் மற்றும் அகால மரணங்களால் ஏற்படும் செலவுகள் உள்ளிட்டவை ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

படிக்க:
♦ அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
♦ பீடித் தொழில் – ஒரு பார்வை

நோய் கண்டறியும் சோதனைகள், மருந்துகள், மருத்துவர்கள், மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை நேரடி செலவுகளில் அடங்கும். மொத்த செலவில் இவை 20.9% (16,870 கோடி ரூபாய்) பிடித்துக் கொள்கின்றன. மீதமுள்ள ~ 79% – மறைமுக செலவுகள் – உறவினர்கள் மற்றும் கவனிப்பாளர்களுக்கான விடுதி செலவு மற்றும் குடும்ப வருவாய் இழப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

“பீடி புகைப்பதனால் ஏற்படும் மொத்த பொருளாதார செலவு (இழப்பு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் அரை விழுக்காடு ஆகும். அதே நேரத்தில் அதனால் கிடைக்கும் வரி வருவாய் அதன் பொருளாதார இழப்பில் அரை விழுக்காடு மட்டுமே ஆகும்” என்று ஜான் கூறினார். பீடி குடிப்பதனால் ஏற்படும் செலவானது இந்தியாவின் மொத்த சுகாதார செலவில் 2.24 விழுக்காடாக இருக்கிறது.

ஏனெனில் ஏழைகள் மட்டுமே பீடி குடிக்கிறார்கள். இது அவர்களது ஏழ்மையை மேலும் அதிகரிக்கிறது. மொத்த புகையிலை பயன்பாட்டில் பீடி 81 விழுக்காடு என்கிறது அதிகாரப்பூர்வ விவரம் ஒன்று. கிட்டத்தட்ட 15 வயதில் வழக்கமாக பீடி குடிப்பவர்கள் 7.2 கோடி பேர் இருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் பீடி- சிகரெட்

“புதிய உலகளாவிய வயது வந்தவர் புகையிலை ஆய்வின் (Global Adult Tobacco Survey) படி பீடி விற்பனையானது 4.3:1 என்ற விகிதத்தில் சிகரெட்டை விட முன்னிலையில் இருக்கிறது” என்று ஜான் கூறுகிறார். “பெரும்பாலான மாநிலங்களில் பீடி குடிப்பது சிகரெட் குடிப்பதை விட அதிகமாக இருக்கிறது. மாறாக கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சிகரெட் பிடிப்பது அதிகமாக உள்ளது” என்று மேலும் கூறினார்.

சிகரெட்டை விட பீடி அதிகம் தீமை தராது என்று பலர் நினைக்கிறார்கள். பீடி குடிப்பது வாய், குரல்வளை, உணவுக்குழாய் மற்றும் நுரையீரல்களில் புற்றுநோய் ஏற்படுத்தும். மேலும் நாள்பட்ட மூச்சுகுழாய் ஒவ்வாமை, காசநோய் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்களையும் அதிகரிக்கும்.

ஜானுடைய ஆய்வு அதிகம் தெரிந்திராத பின்வரும் சிக்கல்களையும் அழுந்தக்கூறுகிறது,

  • பீடியில் சிகரெட்டை விட புகையிலை குறைவாக இருக்கும். ஆனால் நிக்கோட்டீன் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகம் இருக்கும்.
  • பீடியின் குறைவான புகையால் புகைப்பாளர்களை அது மிக ஆழமாக இழுக்க வைக்கிறது. விளைவாக சிகரெட்டை விட அதிகமான கார்பன் மோனாக்சைடு, நிக்கோட்டீன் மற்றும் ஏனைய புகையிலை மூலக்கூறுகளை சுவாசிக்கிறார்கள்.
  • ஒவ்வொரு நான்கு ஆண்களில் (30-69 வயது) ஒருவர் பீடி புகைப்பதால் இந்த பழக்கம் மொத்த ஆண் தொழிலாளர்களில் ஒரு பங்கினை குறைக்கிறது.
  • இந்தியாவில் ஐந்தில் ஒரு குடும்பம் சுகாதார செலவுகள் காரணமாக பொருளாதார பேரழிவை சந்திக்கின்றன.
  • கூடுதலாக, பீடி புகைப்பதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மக்களை அதிகம் ஏழ்மையில் தள்ளுகின்றன.

விளைவாக, 1.5 கோடி இந்திய மக்கள் புகையிலை மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏழ்மையை சந்திக்கின்றனர். இத்தகைய செலவினங்கள் உணவு மற்றும் கல்விக்காக ஏழை மக்களிடம் உள்ள செலவில் பெருஞ்சுமையை ஏற்றி விடுகின்றன.

படிக்க:
♦ தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்
♦ மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்

கேரளா அரசு போதுமான புகையிலை கட்டுப்பாடு திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? என்றால், COTPA சட்டம் கேரளாவில் போதுமான அளவில் இல்லை தான்.  ஆனால் ஏனைய இந்திய மாநிலங்களை விட கேரளாவில் இதன் நடைமுறை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கிறது என்று என்னால் கூற முடியும்” என்கிறார் ஜான்.

இந்த அதிக வரி விதிப்பு தொடர்பான பேச்சுக்கள், பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை மைய அரசு 2017-ம் ஆண்டு ஜூலையில் கொண்டுவந்த பிறகு மாறி விட்டது. தற்போது மாநில அரசுகள் வரிகளை கட்டுப்படுத்துவது கிடையாது. விளைவாக, “தற்போது மாநில மட்டத்திலான புகையிலை கட்டுப்பாட்டு செயல்திட்டங்களை எடுப்பது முடியாத காரியமாகும். அதிக எழுத்தறிவு உள்ளதால் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கேரளாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்

COTPA விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு மற்ற நடவடிக்கைகளுக்கிடையே விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்தி குடிமை சமூக பணிகளை மாநில அரசுகள் முடுக்கி விட வேண்டும்.

சென்ற மாதத்தில் “புகையிலை கட்டுப்பாடு” சஞ்சிகையில் வேறு ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வறிக்கை ஒன்றும் வெளியானது. அதில் 1999-2000 முதல் 2011-12 ஆண்டுகளுக்கிடையே பீடி மற்றும் சிகரெட் பிடிப்பது ஒட்டுமொத்தமாக குறைந்திருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இலண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியை (Imperial College London) சேர்ந்த கியாரா சி.எம். சாங் தலைமையிலான இக்குழு 2007-2009 ஆண்டுகளுக்கிடையில் 42 மாவட்டங்களில் பீடி-சிகரெட் பிடிக்கும் குடும்பத்தினரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டது.

NTCP நடைமுறைபடுத்தப்படாத மாவட்டங்களின் விவரங்களை மேற்சொன்ன மாவட்டங்களின் விவரங்களோடு இவர்கள் ஒப்பிட்டு பார்த்தபோது நிலைமைகள் மோசமாகவே இருந்தன. கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களை ஒப்பிடும் போது NTCP மாவட்டங்களில் சிகரெட்-பீடி பழக்கம் கொண்ட குடும்பங்களின் விகிதாச்சாரம் குறைந்திருக்கவில்லை.

அவர்களது ஆய்வில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்கள்.

“முன்னதாக NTCP-யின் செயல்பாடுகள், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் எந்த முன்னேற்றத்தையும் காட்டியிருக்காது. இந்தியாவின் புகையிலை கட்டுப்பாட்டு நோக்கங்களுக்கான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு (Framework Convention for Tobacco Control objectives in India) நேரெதிராக மோசமான செயல்திறனைக் கொண்டிருப்பதையே காட்டியிருக்கிறது என்பதை எங்களின் ஆய்வு சுட்டுகிறது.

இந்தியா இந்த கூட்டமைப்பை 2004-ல் தொடங்கியது. ஆய்வாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது,

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தேசிய மற்றும் சர்வதேச சிறுவர் நலன் மற்றும் நோய் தொற்றில்லா அகால மரணங்களை குறைக்கும் இலக்குகளை அடைவதற்கு புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவது மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் இன்றியமையாமையையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்த கண்டுப்பிடிப்புகள் முற்றிலும் புதியன அல்ல. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலுள்ள ஆண் மாணவர்களிடம் புகையிலை பொருட்கள் பயன்பாடு 50.4 – 74.4% வரை இருப்பதாகவும் பெண் மாணவர்களிடம் 32 – 56.4% வரை இருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை (Indian Council of Medical Research) சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் கூறினர்.

நொய்டாவை சேர்ந்த 7-12 வகுப்புகளை சேர்ந்த 4,786 மாணவர்களில் 537 (11.2%)  மாணவர்களிடம் புகையிலை பழக்கம் இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சஞ்சிகையின் வெளியீடு (Indian Journal of Medical Research) ஒன்றின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பயங்கரமான உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. எனவே NTCP உண்மையிலேயே எவ்வளவு வேலை செய்கிறது? என்ற கேள்வியை கேட்பது அவசியமாகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாம் அடைகிறோமா?

இந்த ஆய்வு கவனிக்கத் தவறும் விடயம் என்ன? பீடி பிடிக்கும் தொழிலாளிகள்தான் இந்தியாவில் ஆகப்பெரும்பான முறைப்படுத்தப்படாத தொழில்களில் பணி புரிகிறார்கள். கடுமையான உழைப்பு, குறைவான கூலி, குறைந்த பட்ச வாழ்க்கைத் தரம் கூட இல்லாமை, குடும்பத்தை நடத்துமளவு பொருளாதாரம் இல்லாமை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. 8 மணி நேர வேலை, அதற்குரிய கூலி, ஓய்வு நேரம், குடியிருப்பு வசதிகள் என்று எவையும் இவர்களுக்கு இல்லை. பீடியை விடுங்கள், அதிக உழைப்பிற்கும், தொடர்ந்து கண் விழித்து பணியாற்றும் சீசன் நேரங்களின் போதும் இத்தொழிலாளிகள் பான்பராக் இன்னபிற கூடுதல் புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிறகு இருக்கவே இருக்கிறது, மது. பணியின் போது புகையிலை, பணி முடிந்த பிறகு மது. இப்படித்தான் நமது முறைசாராத் தொழிலாளிகள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பீடிக்கு வரி போடச் சொல்லும் கனவான்கள் இத்தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. அதை மாற்றாமல் அது குறித்து ஆயாமல் பீடி மீது மட்டும் குறைபட்டு என்ன பயன்?

கட்டுரையாளர் : கே.எஸ். பார்த்தசாரதி
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்

ஆதித் தாய் | அ.முத்துலிங்கம்

ன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். பிறந்தநாள்போல, சோதனையில் சித்தியடைந்த நாள் போல, வேலை கிடைத்த நாள்போல, திருமண நாள் போல, முதல் பிள்ளை பிறந்த நாள்போல முக்கியமானது. என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன். அதாவது 1,60,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த ஒரு தாய்தான் என்னுடைய வம்சத்தின் ஆரம்பம்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
என்னுடைய வம்ச வழியை அப்படியே பின்னோக்கி 5000 தலைமுறைகள் தள்ளிக்கொண்டே போனால் அந்த தேடல் இந்த தாயாரில் கொண்டுபோய் சேர்க்கும். விஞ்ஞானிகள் இந்த தாயை ஆதித்தாய் Mitochondrial Eve என்று சொல்கிறார்கள்.

National Geographic நடத்தும் genographic project ல் பங்குபெற விரும்பி நான் அவர்களுடன் தொடர்புகொண்டேன். இந்த புரோஜெக்ட் என்னவென்றால் அது உங்கள் மரபணுவை சோதித்து உங்கள் மூதாதையர் எங்கே, எப்பொழுது தோன்றினார்கள், எந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்ந்தார்கள், அந்தப் பயணம் அவர்களை எங்கே எங்கேயெல்லாம் இட்டுச் சென்றது என்பதை விஞ்ஞானமுறைப்படி ஆராய்ந்து விவரங்களை வரைபடமாகத் தருவார்கள்.

அவர்கள் கேட்டுக்கொண்டபடி என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து, 99 டொலர் காசோலையுடன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பரிசோதனை முடிய ஆறு வார காலம் எடுக்கும். நான் பொறுத்திருந்தேன். முடிவுகள் கிடைத்தது இன்றுதான். சோதனையில் இரண்டு வழித்தேடல் உள்ளது. ஒன்று தாய்வழித் தேடல், மற்றது தந்தைவழித் தேடல். தாய்வழித் தேடல் உங்கள் தாயில் ஆரம்பித்து உங்கள் வம்சவழியின் ஊற்றுக்கண்ணை தேடிக்கொண்டே போகும். தந்தைவழித் தேடல் உங்கள் அப்பா, அப்பாவின் அப்பா என்று பின்னோக்கி நகர்ந்து உங்கள் ஆகக்கடைசி தலைமுறையைச் சேர்ந்த தந்தையில் நிற்கும். நான் விண்ணப்பத்தில் கேட்டது தாய்வழித் தேடல்.

மாதிரிப் படம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் 3.6 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் பெற்ற முதல் மனிதன் நடமாடியதற்கான சான்றுகள் உள்ளன. தன்சேனியாவில் உள்ள லேரோலி என்ற இடத்தில் நிமிர்ந்து நடந்த இரண்டு மனித காலடித் தடங்களை இன்றைக்கும் பாதுகாக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றது பெண். அவர்கள் பக்கத்து பக்கத்தில் நடந்து போயிருக்கிறார்கள். பெண்ணின் கால் தடம் கொஞ்சம் ஆழ்ந்து போய் இருப்பதால் அவள் ஒரு குழந்தையை காவினாள் என்பது விஞ்ஞானிகள் ஊகம்.

200,000 வருடங்களுக்கு முன்னர் அதே கிழக்கு ஆப்பிரிக்காவில் அதே ஆதி மனிதர்களிலிருந்து முதல் நவீன மனிதன் Homo sapiens தோன்றினான். இன்றைய மனிதனின் குணாம்சங்கள் கொண்ட முதல் மனிதன் இவன். 40,000 ஆண்டுகள் கழித்து, அதாவது 160,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே இடத்தில் ஓர் ஆதித்தாய் தோன்றினாள். இன்று உலகில் வாழும் அத்தனை மனித உயிரும் இந்த ஆதித்தாயில் இருந்தே தோன்றினர். மற்ற தாய்களுக்கு என்ன நடந்தது? இவர்களில் இருந்து தொடங்கிய சந்ததி சங்கிலி இயற்கை உற்பாதத்தில் அழிந்தோ, சந்ததி இல்லாமல் அறுந்தோ போய்விட ஒரேயொரு தாய் மட்டும் எஞ்சினாள். அவளிலிருந்து தொடங்கிய சந்ததிச் சங்கிலி இன்றுவரை தொடர்ந்தது இயற்கையில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

விஞ்ஞானிகள் எப்படி இந்த தாயை கண்டுபிடித்தார்கள்? ஒரு கதை. நாலாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சோதனை எழுதும்போது ஒரு மாணவன் ‘சைபீரியா’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘கைபீரியா’ என்று தவறுதலாக எழுதிவிட்டான். அவனைப் பார்த்து கொப்பியடித்த இன்னொரு மாணவனும் ‘கைபீரியா’ என்றே எழுதினான். அடுத்த மாணவனும். அதற்கு அடுத்தவனும். இப்படியாக நாலு மாணவர்கள் ‘கைபீரியா’ என்று எழுதியதை வைத்து ஆசிரியர் முதல் பிழையை யார் எழுதினார் என்பதை கண்டுபிடித்தார். அதே போல ஆதிமனித மரபணுவில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு வழிவழியாகத் தொடர்ந்தது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு போனபோது எல்லா வழிகளின் ஆரம்பமும் ஒரு தாய் என்பதைக் கண்டுபிடித்தனர்.

எனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த இந்த தாயிடமிருந்து ஆரம்பத்தில் இரண்டு குழுக்கள் பிரிந்தன. L0, L1 ஆகிய இருகுழுக்களும் ஆப்பிரிக்காவில் பரவின. பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் உருவான L2 குழு மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியது. 80,000 வருடங்களுக்கு முன்னர் L3 குழு தோன்றியது. இது ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு பரவியது. 60,000 வருடங்களுக்கு முன்னர் L3 ல் இருந்து இரண்டு  குழுக்கள் பிரிந்தன. இதில் ஒன்று N குழு. இது வடக்கு பக்கமாக விரிந்து பரவி ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. அடுத்த குழுவான M குழு முதல் முறையாக கடல் தாண்டிய சாகசமான குழு. இது செங்கடலைத் தாண்டி, அரேபியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளம், பர்மா, மலேயா, அவுஸ்திரேலியா ஆகிய தூர இடங்களுக்கு பரவியது. என்னுடைய மூதாதையர் இந்த M குழுவைச் சார்ந்தவர்கள் என்று என்னுடைய மரபணு ஆராய்ச்சி சொல்லியது. இதன் பெயர் Haplogroup M.

இந்த குழுவைச் சார்ந்தவர்கள் அதிகமாக அங்க தேசத்திலும் (Bihar) கலிங்க தேசத்திலும் (Orissa) வங்கதேசத்திலும் ( Bengal ) மற்றும் இந்தியாவின் வடபகுதிகளிலும் காணப்படுகிறார்கள். தமிழ் நாட்டிலோ, கேரளத்திலோ, இலங்கையிலோ இருப்பவர்கள் இதன் உபகுழுக்களில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உதாரணமாக உபகுழு M2 தமிழ்நாட்டிலும், உபகுழு M6 கேரளத்திலும், உபகுழு M69 இலங்கையிலும்.

வரலாற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன், தென் இந்தியாவிலோ இலங்கையிலோ Haplogroup M ஏன் காணப்படவில்லையென்று. அவர் விடை மகாவம்சத்தில் இருக்கிறது என்றார். மகாவம்சம் அரைவாசி கட்டுக்கதை அல்லவா என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். ‘வங்கதேசத்து அரசன் கலிங்க அரசகுமாரியை மணமுடிக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகள் காட்டுக்குச் சென்று சிங்கத்துடன் கூடி ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுக்கிறாள்.

படிக்க:
♦ அணு மரபணுவான கதை !
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

அவர்கள் பெயர் சிங்கபாகு, சிங்கசிவலி. சிங்கபாகு தகப்பனாகிய சிங்கத்தை கொன்று தன் சகோதரியான சிங்கசிவலியை மணமுடித்து ராச்சியத்தை ஆள்கிறான். அவர்களுக்கு பிறந்த அரசகுமாரனான விஜயனையும் அவனுடைய கூட்டாளிகள் 700 பேரையும் அரசன் ஒரு கப்பலில் நாடு கடத்துகிறான். அவன் இலங்கையில் வந்து இறங்கி அதைக் கைப்பற்றி அரசாண்டான். அவனுடைய வம்சவழி ரத்தத்தில் வங்கமும் கலிங்கமும் இருக்கிறது. உங்களுடையதிலும் இருக்கிறது.’

‘வங்கமும், கலிங்கமும் என்றால் பரவாயில்லை. சிங்கமும் அல்லவா இருக்கிறது?’ என்றேன். என் எதுகையையோ, கேள்வியை அவர் ரசிக்வில்லை. விடையையும் கூறவில்லை.

சரித்திர புத்தகங்களையே வாழ்நாள் முழுக்கப் படித்துவரும் நண்பர் ஒருவர், 1215ல் கலிங்கத்திலிருந்து படையெடுத்து பொலநறுவையை பிடித்து ஆண்ட செகராஜசேகர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக நான் இருக்கலாம் என்று சொல்கிறார். கலிங்க ரத்தம் மட்டுமல்ல, ராச ரத்தமும் என் உடம்பில் ஓடுகிறது. அதை நம்புவதற்கும் ஆசை கூடுகிறது. யாராவது இந்த துறை விற்பன்னர் இதை ஆராய்ந்தால் எனக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

*****

நான் முன்னரே கூறியமாதிரி என் விண்ணப்பத்தில் தாய்வழி தேடல் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு விடையாகத்தான் மேற்கூறிய வரைபடம் வந்தது. தகப்பன் வழி தேடலையும் நான் கேட்டிருக்கலாம். அது என்னுடைய தகப்பன், தகப்பனின் தகப்பனென்று தேடிக்கொண்டு போய் ஆதித் தகப்பனில் சேர்க்கும். விஞ்ஞானிகள் ஆதித்தாய் இருப்பதுபோல ஓர் ஆதி ஆண் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் ஓர் ஆதி ஆணிலிருந்து உருவானவர்தான்.

ஒரு மனித உடம்பில் 23 சோடி குரோமசோம்கள் உள்ளன. இதில் ஒரு சோடியில் இரண்டு x குரோமசோம்கள் இருந்தால் அது பெண்; ஒரு சோடி குரோமசோமில் ஒரு  x குரோமசோமும், ஒரு y குரோமசோமும் இருந்தால் அது ஆண். பெண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து x ம் பெறும். இரண்டும் சேர்ந்தது பெண். ஆண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து ஒரு y ம் பெறும். இரண்டும்  சேர்ந்தது ஆண். y குரோமசோம் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படும். மகளுக்கு கடத்தப்படுவதில்லை. அதனால்தான் பழைய காலத்து அரசர்கள் வம்சம் தழைக்க மகன் வேண்டும் என்று தவம் கிடந்தார்கள்.

ஆதி ஆணிலிருந்துதான் இன்று உலகத்திலிருக்கும் ஆண்கள் எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் அவனுக்கு இட்ட பெயர் Y chromosomal Adam. இவன்  வாழ்ந்த காலம் 60,000 வருடங்களுக்கு முன்னர் என்று  கணக்கிட்டிருக்கிறார்கள். என்னுடைய அப்பா, அப்பாவின் அப்பா,  அவரின் அப்பா, அவரின் அப்பா என்று 2000 தலைமுறைகள் தேடிக்கொண்டே பின்னோக்கி போனால் அது என்னை இந்த ஒரேயொரு ஆதி ஆணில் கொண்டுபோய் சேர்க்கும். மற்ற ஆண்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கலாம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுடைய சந்ததிச் சங்கிலி அறுந்துவிட்டது. எஞ்சியது இது ஒன்றுதான்.

இன்னொரு முக்கியமான கேள்வி உண்டு. ஆதித்தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாள். ஆதி ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான். இடையே 100,000 ஆண்டுகள் ஆண்களே இல்லையா? அப்படியானால் சந்ததி எப்படி பரவியது? ஆணும் பெண்ணும் ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள். விஞ்ஞானிகள் தேடிய ஆகப் பிந்திய தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள். ஆகப் பிந்திய ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அதற்கு முந்தைய தொடர்ச்சிகள் எல்லாம் எப்படியோ அழிந்துபோயின.

ஆதி ஆணில் ஆரம்பித்து எனக்கு முன் வந்த தலைமுறையினர் எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்று அறியவேண்டுமானால் நான் மறுபடியும் என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து Genographic Project க்கு அனுப்பிவைக்கவேண்டும். அப்படி அனுப்பும்போது ‘தந்தை வழி புலம்பெயர்வு’ என்று மறக்காமல் குறிப்பிட்டு 99 டொலர் காசோலையையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் சோதனையை முடித்துவிட்டு என்னுடைய தப்பன் வழி முன்னோர் எங்கே தொடங்கி எங்கேயெங்கே எல்லாம் நகர்ந்தார்கள் என்ற வரைபடத்தை எனக்கு அனுப்பிவைப்பார்கள். என்னுடைய தகப்பன் பாதையும் தாயின் பாதையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்திருக்கும். கட்டாயம் கண்டுபிடிக்கவேண்டிய சங்கதிதான். முதலில் என் கைக்கு 99 டொலர் வந்து சேரட்டும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)