Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 68

விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு!
பாசிச பாஜகவின் கருவியே தேர்தல் ஆணையம்!

மக்கள் அதிகாரம் கண்டனம்

27.03.2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே போட்டியிட்ட சின்னங்களை மீண்டும் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பம்பரம் சின்னத்தை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் வழங்க முடியும் என்று கூறியது.

பானை சின்னத்தை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியானது தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகள் உட்பட ஏறத்தாழ 6 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்காமல் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ஆனால் பாசிச பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கு மட்டும் தனிச்சின்னத்தை வாரி வழங்குகிறது தேர்தல் ஆணையம்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


வாசன் தலைமையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி மேற்கூறிய மூன்று கட்சிகள் வாங்கிய அளவில் ஓட்டில் குறிப்பிட்ட பங்கைக் கூட வாங்கவில்லை. எனினும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே 1996 இல் வழங்கப்பட்ட அதே சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஆக பாசிச பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு மட்டும் தான் தேர்தல் ஆணையம் தனிச் சின்னத்தை ஒதுக்கும் என்ற இழிவான நிலையை ‘தேர்தல் ஜனநாயகம்’ எட்டியுள்ளது.

கடந்த வருடம் ஏதேதோ சில காரணங்களை கூறி சுமார் 540-க்கும் மேற்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?

பாசிச பாஜகவின் கருவியான தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. விசிக, மதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தொடர்புடைய பிரச்சினை அல்ல என்றும் இது மக்களின் தெரிவு செய்வதற்கான ஜனநாயகம் தொடர்பான பிரச்சனை என உணர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

டந்த மார்ச் 18 அன்று, காசாவின் வடக்கு பகுதியான அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலைத் தொடங்கியது பாசிச இஸ்ரேல் ராணுவம். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் தஞ்சமடைந்திருந்த மக்கள், முதலுதவியாளர்கள் மீது விவரிக்க இயலாத வகையில் கடுமையான தாக்குதலையும், சித்திரவதைகளையும் செய்து வருகிறது பாசிச இஸ்ரேல். சுற்றியுள்ள குடியிருப்புகளையும் காலி செய்ய நிர்ப்பந்தித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

மருத்துவ வளாகத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய இராணுவப் படையினர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து வருகின்றனர். இத்தாக்குதலை நேரில் கண்ட பெண்ணான ஜமீலா அல்-ஹிசி கூறுகையில் “பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பசி, பட்டினி, சித்திரவதை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை கொடுக்கப்படுகிறது” என்கிறார்.

மேலும், சித்திரவதைக்குள்ளான ஒருவர் கூறுகையில் “எங்களுக்கு ஆறு நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்காவது தண்ணீர் வழங்க கேட்கிறோம். ஆனால் இஸ்ரேல் இராணுவம், அழுக்கு நீரையும், அழுகிய உணவையும் சாப்பிட கட்டாயப்படுத்துகிறது” என்று கூறுகிறார்.

இஸ்ரேல் இராணுவம் மருத்துவ வளாகத்தை சுற்றியுள்ள 65 குடும்பங்களை வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவ வளாகத்தை சுற்றியுள்ள பல வீடுகளை எரித்தும், குடும்பங்களை படுகொலை செய்தும், அந்த இடத்தை விட்டு துரத்தியடித்தும் வருகிறது. இதனை வேதனையோடு கூறிய ஒருவர்  “எங்கள் வீடுகளை அழித்துவிட்டு துரத்துகிறீர்கள், எங்களது உணவு பசியைப் போக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நாங்கள் எங்கே செல்வதன்று தெரியவில்லை” என்கிறார்.


படிக்க: காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!


இதுவரை, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உதவியாளர்கள், நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் என 140 பேருக்கு மரணதண்டனையை நிறைவேறியுள்ளதாக இஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிற காரணத்தை கூறிக்கொண்டு அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றனர். மருத்துவமனையை சுற்றியுள்ளப் பகுதிகளை பார்க்கும் போது முற்றிலுமாக அழிந்தது போல் காட்சியளிக்கின்றன.

மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது  இஸ்ரேல் இராணுவம். அதற்கு பல மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்களை சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றும் வருகின்றனர். அவ்வாறு மறுப்பு தெரிவித்ததற்காக, மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது மருத்துவர் முகமது ஜாஹிர் அல்-நோனோவை நோயாளி முன்பே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

போரினால் இடம்பெயர்ந்து, மருத்துவமனையை சுற்றி 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களை தெற்கு காசாவை நோக்கி கட்டாயப்படுத்தி துரத்தியடித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். ஆனால், அங்குள்ள மக்கள் தங்களுக்கு நடந்து செல்லக் கூட உடம்பில் தெம்பில்லை எனக் கூறுகின்றனர். மேலும், “நாங்கள் சோர்வாகவும், பசியிலும், பணம் எதுவும் இல்லாமலும் இருக்கிறோம். எங்கும் எங்களால் செல்ல முடியாது. தயவு செய்து இந்த போரை யாராவது நிறுத்துங்கள்” என்று அங்குள்ள பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறுகையில் “ஷிஃபா மற்றும் போரினால் இடம்பெயர்ந்த மக்களை பார்க்க உலகை அழைக்கிறேன். அங்கே யாரும் இல்லை, எல்லோரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்கிறார். மேலும், அவர் கூறுகையில் ”குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு முன்னால் தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்களின் உடன்பிறப்புகள் மற்றும் தாய்மார்களுக்கு முன்னால் வெளிப்படையாக மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது” என்கிறார்.


படிக்க: காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!


மருத்துவமனைக்கு அருகாமை வீட்டிலிருந்து தப்பிய முதியவர் கூறுகையில் “நாங்கள் மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் வசிக்கிறோம். நாங்கள் பார்த்ததும், கேட்டதும் துப்பாக்கி சூடும் குண்டு மழையும் தான்” என்கிறார். மேலும், இராணுவப் படையினர் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளின் கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்து நாயை ஏவி மக்களை துன்புறுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில் “இராணுவத்தினர் நாயை என் கணவர் மீது கடிக்க விட்டனர். அவரது மார்பு, வயிறு மற்றும் அவரது காலை மோசமாக கடித்து, அவரை முழுவதுமாக கடித்துக் குதறியது. இதனால் அதிகமான இரத்தம் வெளியேறியது. ஒரு கிலோவுக்கும் அதிகமான இரத்தத்தை இழந்தார்”. இஸ்ரேல் இராணுவப் படையினரின் அட்டூழியங்களை எவராலும் சகிக்க முடியாதவையாக இருந்து வருகின்றன.

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

மருத்துவமனையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்து வருவதை பல நாடுகளும், அமைப்புகளும் கண்டித்தாலும் இனவெறிபிடித்த நெதன்யாகு போரை நிறுத்த முன்வருவதில்லை. தொடர்ச்சியாக, ரஃபா எல்லை பகுதியைத் தாக்கி அழிக்க முனைப்புக் காட்டி வருகிறார். ரஃபா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது இஸ்ரேல். இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் மிக அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர்.


படிக்க: காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு


மார்ச் 23 அன்று ரஃபா எல்லையை பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் கூறுகையில் “7,000 உதவி ட்ரக்குகள் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேலின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. பாலஸ்தீனியர்கள் பட்டினியில் வாடி வருகின்றனர். இது, தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை” என அறிவித்துள்ளார். உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் கூறுகையில், “நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்கிறார்.

இன்று மனிதாபிமானம் காப்பாற்றப்பட வேண்டும் என கூறிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் ஜோ பைடனையும் நெதன்யாகுவையும் போர் குற்றவாளியாக அறிவிக்க தயங்குகின்றனர். மார்ச் 25 அன்று ”உடனடி போர் நிறுத்தம்” செய்யப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது; ஐ.நா-வும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. போரை துவங்கியதிலிருந்தே சிறுசிறு கண்டனங்களை தெரிவித்துவிட்டு வேடிக்கை பார்த்த அமெரிக்க அடிவருடிகளான இவர்களா உலக மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பினர், கண்டிப்பாக இல்லை. ஏகாதிபத்தியங்களின் கொள்ளை லாப வெறிக்கு மக்களை பலியிட உதவுபவர்கள் தான் இவர்கள்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் பல நாடுகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா இந்த இன அழிப்பு போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. எனவே, இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய கும்பலின் போர்வெறிக்கு எதிராகவும் சர்வதேச உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்தாக வேண்டும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பா.ஜ.க-வை எதிர்க்கிறதா அ.தி.மு.க? | தோழர் மருது

பா.ஜ.க-வை எதிர்க்கிறதா அ.தி.மு.க? | தோழர் மருது

https://youtu.be/2OiVrFWACtw

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



JNU பல்கலைக்கழக தேர்தல்: வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் | தோழர் தீரன்

JNU பல்கலைக்கழக தேர்தல்:
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் | தோழர் தீரன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழ்நாடு மீனவர்கள் கைது: தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம்

டந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 32 பேர் 5 விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, சுமார் 60 மீனவர்கள் இலங்கை சிறையில் தவித்துவரும் நிலையில், கடந்த ஓரிரு வாரங்களில் 4 முறை வெவ்வேறு இடங்களில் மேலும் பல தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது போல தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் சுமார் அரை நூற்றாண்டு காலமாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். மார்ச் 26-ஆம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்துவது எனவும், ஏப்ரல் 8-ஆம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ராமேஸ்வரம் தாசில்தாரிடம் ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்து இருந்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்காலிகமாக இப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் மீனவர்கள் என அறிவித்துள்ளனர்.


படிக்க: நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!


இதற்கிடையே, தமிழ்நாடு மீனவர்களின் கைதுக்கு இலங்கைக் கடற்படையும் இந்திய ஊடகங்களும் சொல்லும் ஒற்றைக் காரணம், “தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர்” என்பதுதான். இதே பல்லவியை இந்திய மைய ஊடகங்களும் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த பிரச்சாரத்திற்கு பலியான இலங்கைத் தமிழ் மீனவர்கள் சிலர், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகவும், இழுவைமடி வலைகளைப் பயன்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு எந்த முயற்சியும் செய்வதில்லை என்று கூறி இலங்கை அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கின்றனர் என்பதே அப்பட்டமான பொய் பிரச்சாரமாகும்.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கின்றனரா?

1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக் நீரிணைப்பு வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அவ்வுடன்படிக்கையில் உள்ள 5-வது, 6-வது சரத்துகள், கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றன.

உடன்படிக்கையின் சரத்து 5, “மேற்குறிப்பிட்டவற்றுக்கு உட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெற வேண்டுமென தேவைப்படுத்த முடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது” என்கிறது. சரத்து 6, “இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்” என்கிறது.

இவ்வாறு இரு நாடுகளிடையே கடல் பரப்பு எல்லைகள் வரையறுக்கப்பட்ட போதும், இருநாட்டு மீனவர்களும் தங்களது பாரம்பரிய உரிமையைக் கச்சத்தீவு பகுதியிலும் இருநாடுகளின் கடற்பரப்பிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவ்வுடன்படிக்கையில் ஏற்கொள்ளப்பட்ட அம்சங்களாகும். ஆனால் 1983-க்கு பிறகு தமிழ்நாடு மீனவர்கள் மீது படிப்படியாக அதிகரித்த இலங்கை கடற்படையின் அட்டகாசம் 1990-களில் தீவிரமடைந்தது. ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐம்பது தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என கணக்கெடுத்தால், அந்த எண்ணிக்கை பல நூறு பேரைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமாக உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையோ இதைவிட பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.

எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இலங்கைக் கடற்படை மேற்கண்ட ஒப்பந்தத்தை மீறி தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்தும் தாக்கியும் வருகிறது.

ஏன் இந்திய அரசு கண்டுகொள்ள மறுக்கிறது?

மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. அரசானது மீனவர்களை, மீன்பிடித் தொழிலிருந்தும் கடல்பரப்பிலிருந்தும் வெளியேற்றும் வகையில் சாகர் மாலா திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தும், இந்திய கடல் மீன் வளச் சட்டம் 2021, இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 என அடுத்தடுத்த புதிய சட்டங்களை நிறைவேற்றியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்று விவசாயச் சட்டங்களின் வாயிலாக விவசாயத்தை முழுக்க கார்ப்பரேட் பகாசுர கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல முயற்சி செய்ததைப் போல, கடல்சார் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் மீன்பிடித் தொழிலை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்ப்பது; கடற்பரப்பை கார்ப்பரேட் பகாசுரக் கம்பெனிகளின் கனிமவளக் கொள்ளைக்கும் சுற்றுலா கேளிக்கை விடுதிகளுக்கும் திறந்துவிடுவது என்ற நாசகர திட்டம் தீட்டி காத்திருக்கிறது பாசிச மோடி அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒக்கி புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படும்போது கூட எந்தவித உதவிகளையும் செய்யாமல் தனக்கே உரிய பாசிச திமிரோடு நடந்து கொள்வது என்ற திட்டமிட்டு செயல்படுகிறது மோடி அரசு.


படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !


இயற்கைச் சீற்றங்கள் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாமல், மீன்பிடித் தொழிலை விட்டு மீனவர்கள் தாமாகவே வெளியேற வேண்டும் என்று பாசிச மோடி அரசு பிணந்தின்னிக் கழுகு போலக் காத்திருக்கிறது. அதற்கேற்ப சரியான தருணங்களைப் பயன்படுத்தி மீனவர்களை வஞ்சித்து வருகிறது.

மாநிலத்தை ஆண்ட, ஆளும் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளுக்கும் கார்ப்பரேட் நலனே கொள்கையாக உள்ளது. எனவே மீனவர்கள் பாதிக்கப்படும்போது அறிக்கை விடுவது கடிதம் எழுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடுகிறது. கடந்த மார்ச் 10-ஆம் தேதி 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டபோதும் கூட ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு முதல்வர் ஸ்டாலின் அவரது வேலையை முடித்துக் கொண்டார்.

களப் போராட்டங்களே மீனவர்களைக் காக்கும்

அரசுகள் நடைமுறைப்படுத்தும் கார்ப்பரேட் நலத் திட்டங்களால் பாதிக்கப்படும் மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் என அனைவரும் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க அமைப்பாகிப் போராடுவது மட்டுமே தீர்வாக அமையும்.

வீரம்செறிந்த விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இதற்கான சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அப்போராட்டம்தான் மூன்று விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைத்தது. இப்போது, “உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறு” என்ற முழக்கத்தோடு இரண்டாம்கட்டப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்தத் தேர்தல் சமயத்தில் டெல்லி விவசாயிகளின் பாதையில், மீனவர்கள் அமைப்பாவதும் தன் வாழ்வுரிமையைக் காக்கப் போராடுவதும்தான் இந்திய அரசைப் பணியவைக்கும். பிற கட்சிகளையும் இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்த வைக்கும்.


முகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் 14/03/24 அன்று தேர்தல் நிதிப் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த நிறுவனம் எந்த கட்சிக்குப் பணம் கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள உதவும் தேர்தல் பத்திரங்களின் வரிசை எண் போன்ற முழுமையான விவரங்கள் SBI வங்கி இன்னும் வெளியிடவில்லை.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.தான் அதிகமான பணத்தைப் பெற்றிருக்கிறது என்ற உண்மை நம் யாரையும் எந்த வகையிலும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், இதை பா.ஜ.க. எந்த வழிமுறைகளைப் பயன்படுத்திச் சாதித்தது என்பதை இந்த தேர்தல் நிதிப் பத்திர விவரங்கள் மூலமாக நாம் தெரிந்துகொள்ளும் போது பா.ஜ.க.வின் பாசிசத்தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

படிக்க : தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக மிக அதிகமாக நன்கொடைகளை வழங்கியது, Future Gaming என்ற நிறுவனமாகும். இது “லாட்டரி ராஜா” என்று சொல்லப்படும் மார்டின் என்பவனின் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத் துறையின் கண்காணிப்பிலிருந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் சுமார் ரூ.410 கோடி அசையும் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுபோல், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக அதிகமாக நன்கொடைகள் கொடுத்த முதல் ஜந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளது.

நியூஸ் லாண்ட்ரி (News Laundry) செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.335 கோடி நன்கொடையாகக் கொடுத்த 30 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளது.

தேர்தல் பத்திரங்களுக்குக் கைமாறாக, நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைத் தாரை வார்த்திருக்கிறது பா.ஜ.க.

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, பிரைட்ஸ்டார் இன்வஸ்மண்ட் (Bright star Investments) என்ற நிறுவனத்திடம் அந்த மாநிலத்தின் அரசு மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார். இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கியது தற்போது அம்பலமாகி உள்ளது.

படிக்க : தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

ஆனால், டாடா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் நேரடியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.  ரிலையன்ஸ்  குறுக்கு வழியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது அம்பலமாகியுள்ளது. க்யூக் சப்ளை செயின் (Qwik Supply chain) என்ற நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான தாபஸ் மித்ரா ரிலையன்ஸின் பிற நிறுவனங்களிலும் இயக்குநராக இருக்கிறார். இந்த க்யூக் சப்ளை செயின் (Qwik Supply chain) நிறுவனத்தின் மூலமாக ரூ.410 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், முகேஷ் அம்பானியின் பழைய கூட்டாளியான சுரேந்திர லுனியா என்பவர் தொடர்புடைய சில நிறுவனங்கள் மூலமாக ரூ.50 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2019, மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்டதாகும். இதுபோன்ற பலர் தேர்தல் காலங்களில் கொடுத்த தேர்தல் நிதிப் பத்திரங்கள்தான் மோடியை இரண்டாம் முறையாக பிரதமராக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களவை தேர்தலின்போது வழக்கத்தைவிடக் கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்க அனுமதிக்கும் வகையில் மோடி கும்பல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.  இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் 2022 நவம்பர் 9 ஆம் தேதி மொத்தமாக 676 கோடி ரூபாய்க்குத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டது. அவற்றில் 87 சதவீதம் அதாவது 590 கோடி பாஜகவிற்குச் சென்றுள்ளது. இதேபோல்  2022 டிசம்பரில் மொத்தம் 232 கோடி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில், 71 சதவீதம் அதாவது 165 கோடி ரூபாய் பாஜகவிற்கு சென்றுள்ளது.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான இந்த விவரங்களை நாம் கவனிக்கும்போது, தீர்மானகரமாக மூன்று முக்கியமான முடிவுகளுக்கு வருகிறோம். ஒன்று, தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்ற திட்டத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க அரசியல் அயோக்கியத்தனத்தைச் செய்யவில்லை, அந்த திட்டம் தன்னளவிலே அயோக்கியத்தனமானதுதான். இரண்டாவது, இவையெல்லாம் முதலாளித்துவ தேர்தல் அமைப்பில் நடக்கும் மற்றொரு ஊழல் என்று பார்க்கமுடியாது. இவை பண்பளவிலும் பரிணாமத்திலும் பாசிசமயமான கட்டத்தைக் குறிக்கிறது. மூன்றாவது, தேர்தல் நிதிப் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு லஞ்சமாகக் கொடுப்பதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சொந்த நலன்களை அரசாங்க கொள்கை முடிவுகளாகச் சாதித்துக் கொள்ளும், கியிட் ப்ரோ க்யோவ் (Quid pro quo) என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பயனடைந்து கொள்வார்கள், மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்ற வாதம் பிரச்சினையின் ஒரு பகுதி  மட்டுமே.

படிக்க : தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

மற்றொரு பக்கம், பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகளை வைத்து மிரட்டி பணம் வசூலித்துள்ளது. இந்தவகையில்தான் பா.ஜ.க என்ற பாசிச கட்சி மற்ற கட்சிகளிடமிருந்து வேறுபடுகிறது. மற்ற காட்சிகளைப்போல கார்ப்பரேட் நலனை வெறுமனே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் அரசியல் இருப்பு, பா.ஜ.க என்ற பாசிச கட்சி அதன் சொந்த இருப்பிலே பாசிசத்தன்மையானது.

2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைபெற்ற எந்த தேர்தலும் “சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக முறைப்படி” நடத்தப்படவில்லை. காரணம், பா.ஜ.க தேர்தலுக்கு முன்பு, பின்பு, தேர்தலின்போது என அனைத்து வகைகளிலும் தனது பாசிச நடவடிக்கைகளின் மூலமாகத் தன்னை ஆட்சியில் தக்கவைத்துக் கொள்ளும் நிலையே இருந்தது. மேலும் இந்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்பது பா.ஜ.க பயன்படுத்தும் பலவகைப்பட்ட பாசிச வழிகளில் ஒன்று மட்டுமே.

சீனிச்சாமி

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!

பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை 167 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தின் காசா மக்கள் மீது தற்போது பட்டினிப் போரை தொடுத்துள்ளது. “காசாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு பொருட்களை வழங்க மறுத்து பட்டினியில் போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்” என ஐ.நா. மனித உரிமைகள் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், “காசாவிற்குள் அடிப்படையான உதவிகள் நுழைவதற்கு இஸ்ரேல் அரசு தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருவதும், அது தொடர்ந்து போர் விதிமுறைகளை மதிக்காமல் மக்கள்விரோத போக்கை கடைப்பிடிப்பதும், பட்டினியை ஒரு போர் முறையாக பயன்படுத்துவதுமாக இருக்கிறது, இது ஒரு போர்க்குற்றமாகும்” என கூறியுள்ளார். மேலும், காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

படிக்க : காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

வோல்கர் டர்க்கின் அறிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் கேட்டதற்கு, “அதை நாங்கள் கவனிக்கவோ அல்லது நேரில் பார்க்கவோ இல்லை” என பதிலளித்தது.  இந்த மறுப்பு காசா மக்கள் மீதான இஸ்ரேலின் பட்டினி போரை ஆதரிப்பது என்பதை தாண்டி வேறென்னவாக இருக்க முடியும்?

பட்டினி குறியீட்டை வெளியிடும் அமைப்பான சர்வதேச ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு (IPC) கூட்டமைப்பு மூலம் மார்ச் 19 அன்று காசா நிலையை பற்றி வெளியிட்ட அறிக்கையில் “பஞ்சம் நெருங்கிவிட்டது” எனவும்  ”இறப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது” எனவும் வெளியிட்டுள்ளது. ஐ.பி.சி. (IPC) மதிப்பீட்டின் படி, காசாவில் 1.1 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பட்டினியில் இறப்பை எதிர் நோக்கி இருந்து வருவதாகவும், இது ஒரு பேரழிவு நோக்கி செல்லும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், “ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பால் இதுவரை பதிவு செய்யப்பட்டதில், இது மிகப்பெரிய அளவிலான பட்டினி பேரழிவை எதிர்கொள்ளும் எண்ணிக்கையாகும்” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான குழந்தைகளே ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 12.4 முதல் 16.5 சதவிகிதம் வரை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. காசாவில் உள்ள ஒவ்வொருவரும் உணவு பற்றாக்குறையுடன் வாழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதி தற்போது உணவுப் பற்றாக்குறையுடன் “அவசர காலக்கட்டத்தில்” இருப்பதாகவும், வடக்கு காசா பகுதி ஒரு சில மாதங்களுக்குள் பஞ்சத்திற்கு தள்ளப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. பாசிச இஸ்ரேல் அரசு, ஒருபுறம் காசா மக்களை பல வழிகளில் பட்டினிக்கு தள்ளுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகளையும் தடுத்து நிறுத்தி மேலும் மேலும் காசா மக்களை பட்டினிக்குள் தள்ளுகிறது.

மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் வடக்கு காசாவிற்கான உதவிப் பணிகளில் ஈடுபட்டவர்களை இஸ்ரேல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். உதவிப் பணிகளுக்கு ஈடுபடுவதற்குச் சென்ற,  24 குழுக்களில் 11 குழுக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. மீதமுள்ள குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

ஏற்கெனவே வடக்கு காசாவில் உள்ள மக்கள் உணவு கிடைக்காமல் பறவைகள், விதைகள், விலங்குகளின் தீவனம், காட்டு புல் ஆகியவற்றை சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகள் அதை தேடித்தேடி அள்ளி செல்லும் வீடியோக்கள் மனதை உலுக்குகின்றன. இந்நிலையில்தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை அதிகரிக்காவிட்டால் வடக்கு காசாவில் 3,00,000 மக்களை பஞ்சம் தாக்கும் என அறிக்கைகள் கூறுகிறது. கூடியவிரைவில் காசாவில் ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் இறக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பிறந்தக் குழந்தைகள் மிகக் குறைந்த எடையில் பிறக்கின்றன மற்றும் பட்டினியால் மரணத்தின் விளிம்பில் குழந்தைகள் இருக்கின்றன என உலக சுகாதர அமைப்பின் செய்தி தொடர்பாளர் “மார்கரெட் ஹாரிஸ் ” கூறுகிறார்.

தற்போது இஸ்ரேல் அரசானது முதலுதவிப் பணியாளர்களை கொன்றொழிப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. அல்ஜசீராவின் சமீபத்திய தகவலின்படி, 23 முதலுதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உணவு விநியோகத் தொழிலாளர் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனோடு மட்டுமல்லாமல் அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலை நடத்தி காசா மக்கள் பலரையும் கொன்று வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

இந்நிலையில், இரஃபா எல்லையிலுள்ள மக்கள் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்  போவதாக இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சர் ரான் டெர்மர் கூறுகையில் “ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை மீறி அந்த நகரின் மீது படையெடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என கூறியிருக்கிறார். காசாவில் போரை தொடர்ந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரஃபா எல்லையில்தான் தஞ்சமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தாலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

படிக்க : காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசாவில் கடந்த 167 நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 31,988 பேர் உயிரிழந்துள்ளனர். 74,188 பேர் காயமடைந்துள்ளனர். இந்த இனஅழிப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு சதிநடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டியுள்ளது. ஜோபைடனும், நெதன்யாகுவும் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும். பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

செய்தி ஆதாரம் : Countercurrents

அருமை தோழனே பகத்சிங்! || கவிதை

0

அருமை தோழனே பகத்சிங்
நீ இன்னும் சாகவில்லை

கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களிலும்
இளைஞர்களின் நெஞ்சங்களிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

பகத்சிங் நீ ஓர் இளம்புயல்!!
உன்னை ஆளும் வர்க்கம் அச்சுறுத்தியது
ஆனால், அடங்கவில்லை
உன் தேச விடுதலை உணர்வு!


படிக்க : தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!


விடுதலைப் போராட்டத்தில்
வீரத்துடன் பங்கேற்றாய்
வீதி வீதியாய் சென்று
துண்டு பிரசுரங்களை கொடுத்தாய்!

நாட்டின் விடுதலைக்காக
குடும்பத்தை தியாகம் செய்தாய்!
காதலை தியாகம் செய்தாய்!

தியாகம் நிறைந்த
உன் வாழ்க்கையில்
போராட்டங்களுக்கு
பஞ்சமில்லை தோழனே!

போர்க்களமே
உன் வாழ்க்கையானது
போராட்டமே
உன் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத்தில்
குண்டு வீசினாய்..
அடக்குமுறை சட்டத்தை
திரும்ப பெற்றிட!

நாடாளுமன்றத்தில்
நீ எழுப்பிய முழக்கம்
நாட்டையே
திரும்பிப் பார்க்க
வைத்தது தோழனே!

இன்குலாப் ஜிந்தாபாத்
நீ எழுப்பிய முழக்கம்!
ஆங்கிலேயர்களின் தலையில்
இடியென இறங்கியது!

கைது செய்தது காவல்துறை
உன்னை கலங்கவில்லை
உன் நெஞ்சம்!

சிறைக் கம்பிகளுக்கு பின்னால்
அடைத்த போதும்
அங்கேயும் தொடர்ந்தது
உன்னுடைய போராட்டம்
சிறை கைதிகளுக்காக!

நீதிமன்றமும்
நிலைகுலைந்து போனது
உன்னுடைய வார்த்தைகளால்!

தூக்கு தண்டனை வழங்கிய போதும்
துவளவில்லை நீ!
துணிந்தே தூக்கு கயிற்றை
முத்தமிட்டாய்!

நாட்டின் விடுதலைக்காக
உன்னையே
அர்ப்பணித்துக் கொண்டாய்
தோழனே!!


படிக்க : பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்


உன்னுடைய தியாகம்
இளைஞர்களுக்கு
அரசியலை கற்றுக் கொடுத்தது….

உன்னுடைய தியாகம்
இளைஞர்களின் மனதில்
விதையாய் விழுந்தது!

கோடான கோடி
தாய்களுக்கு மகனாய்
சகோதரர்களுக்கு சகோதரனாய்
மாணவர் படையின் தலைவனாய்
இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்..
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
தோழனே!!

நன்றி: பு.மா.இ.மு, தமிழ்நாடு – முகநூலிலிருந்து…

தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

மார்ச் 23 – தோழர் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்!
தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவார் கும்பல் அதிதீவிர கார்ப்பரேட் சுரண்டலையும், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளையும் அடிப்படையாகக்கொண்ட இந்து ராஷ்டிர பயங்கரவாத அரசைக் கட்டியமைப்பதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் பார்ப்பன இந்துமதவெறியை வெகு தீவிரமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் தோழர் பகத்சிங்கின் மதம் தொடர்பான கருத்துக்களைப் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.

மதங்களின் சடங்குகள் நம்மைத் தீண்டத்தகுந்தவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிரித்துவிட்டதாக எழுதுகிறார். இந்தக் குறுகிய மற்றும் பிளவுபடுத்தும் மதங்களால் மக்களிடையே உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் உணர்ந்தார். “நம்மைப் பொறுத்தவரைச் சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவு என்று இருக்கக்கூடாது. நமது முழு சுதந்திரம் என்பது சாதி மற்றும் மதத் தடைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்வதைக் குறிக்கிறது” என்றும் கூறுகிறார்.


படிக்க : பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்


அன்றைய காலகட்டத்தில் மதக்கலவரங்களை தூண்டிய அரசியல் தலைவர்களைக் கண்டிக்கிறார். இந்திய அரசியல் தலைமை முற்றிலும் திவாலாகிவிட்டது என்று உறுதிப்படக் கூறுகிறார்.

“வகுப்பு வன்முறையைத் தூண்டுவதற்கு மற்றொரு கருவி பத்திரிகைகளில் எழுதுபவர்கள். பத்திரிகைத் தொழில் ஒரு காலத்தில் உன்னதமானதாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று அது ஒரு மோசமான குழப்பத்தில் உள்ளது. இந்த மக்கள் சமூகங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையின் நிலையான உணர்வைத் தூண்டும் தலைப்புகளுடன் மற்றொரு சமூகத்திற்கு எதிராக எழுதுகிறார்கள். இந்தக் கொந்தளிப்பான காலங்களில் தங்கள் மனதிலும் இதயத்திலும் சமநிலையைக் கொண்டிருக்கக் கூடிய சில செய்தியாளர்கள் மட்டுமே இருந்தனர்” என்று எழுதுகிறார் பகத்சிங். இது நிகழ்காலத்திலும் துல்லியமாகப் பொருந்துகிறதல்லவா? அப்படி சமநிலையைப் பேணுகின்ற பத்திரிகையாளர்கள் இன்று பாசிச மோடி கும்பலால் வேட்டையாடப்படுகிறார்கள்.

…சுதந்திரத்தை நம் கண்முன்னே பார்த்த அந்த நாட்கள் எங்கே? சுதந்திரம் என்பது மீண்டும் தொலைதூரக் கனவாகிவிட்ட காலகட்டத்தை பாருங்கள்! இந்தக் கலவரங்கள் அதன் குற்றவாளிகளுக்குக் கொடுத்த மூன்றாவதும் இறுதியானதுமான பலன் இது! ஒத்துழையாமை நாட்களில், அதன் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த அதிகாரத்துவம் இப்போது அதன் வேர்களை ஆழப்படுத்தியுள்ளது. அவை தற்போதைய சூழலில் அசைக்க முடியாததாகிவிட்டன” என்று குறிப்பிடுகிறார்.

மதக் கலவரங்கள் அடிப்படையில், சுரண்டும் வர்க்கத்திற்குத் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தும் கருவியாக இருப்பதை இன்று வெளிப்படையாகக் காண்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் என பாசிச மோடி கும்பலின் சர்வாதிகார அடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை காண்கிறோம். நூறாண்டுக்கு முன்பு தோழர் பகத்சிங் கூறியது மெய்ப்பிக்கப்படுகிறது.

பகத்சிங் மேலும் “எனவே, வகுப்புவாத கலவரங்களுக்கு ஏதேனும் தீர்வு இருந்தால், அது இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அடையமுடியும்” என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

“மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை தடுக்க வர்க்க உணர்வுதான் இன்றைய தேவை. ஏழை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் உண்மையான எதிரிகள் முதலாளிகள் என்பதைத் தெளிவாகக் கற்பிக்க வேண்டும். எனவே, நீங்கள் அவர்களின் (வகுப்பு வாதிகள்) தந்திரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்” என்று மக்களை எச்சரிக்கிறார்.


படிக்க : பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !


“உலகின் ஏழைகள், இனம், நிறம், மதம் அல்லது தேசம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே உரிமைகளைப் பெற்றுள்ளனர். நிறம், மதம், இனம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைத் துடைத்து, ஆட்சி அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துச் செல்ல ஒன்றுபடுவதுதான் உங்கள் நல்வாழ்வுக்கு அடிப்படை. அவ்வாறு முயற்சி செய்வதன்மூலம், நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. ஆனால், ஒரு நாள் உங்கள் தளைகள் உடைந்து உங்களைப் பொருளாதார அவநம்பிக்கையிலிருந்து விடுவிக்கும்” என்று தனது சர்வதேசிய பாட்டாளி வர்க்க உணர்வை வெளிப்படுத்தி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

உழைக்கும் மக்களின் முதன்மை எதிரிகளான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி ; அம்பானி – அதானி பாசிச கும்பலின் சுரண்டல் மற்றும் மதவெறி சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தோழர் பகத்சிங்கின் வழியில் நாம் இனம், நிறம், மதம் கடந்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலாளித்துவ கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதன்மூலம் ஒருகாலும் பாசிச சர்வாதிகாரத்தை வீழ்த்த முடியாது. அதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை முன்னிபந்தனையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் ஒரே வழி. அதுவே தோழர் பகத்சிங்கின் வழி!

அய்யனார்

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்! || மக்கள் அதிகாரம்

21.03.2024

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
அல்லது வெளியேற்றப்பட வேண்டும்!

மக்கள் அதிகாரம் அறிக்கை

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என அறிவித்த ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது. முதல்வரும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என்று பலமுறை உச்சநீதிமன்றம் தன் தீர்ப்புகளின் வழியாக தெரியப்படுத்தியுள்ளது.

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த வழக்கில் கூட உச்சநீதிமன்றம் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.


படிக்க : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்


பாசிச பா.ஜ.க., கடந்த 10 ஆண்டுகளில் தனக்கு ஒத்து வராத அல்லது தனது வழிக்கு வராத மாநில அரசுகளை கலைப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆளுநர்களைத்தான் பயன்படுத்துகிறது.

ஊழல் வழக்கில் பெற்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி, மேல்முறையீடு செய்ததால் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்திருந்தது. அதனால் அவர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றார். இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கு ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருந்தார்.

உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி மட்டுமே வைத்திருப்பதாகவும் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வரவில்லை என்று கூறி முதலமைச்சரின் கோரிக்கையை மறுத்திருந்தார் ரவி.

பொன்முடி ஊழல் செய்தாரா? உத்தமரா? என்பதல்ல தற்போதைய பிரச்சினை. மாநில அரசின் அனைத்து உரிமைகளையும் காலில்போட்டு மிதிக்கும் ரவியின் இன்னொரு நடவடிக்கையே இது.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ரவி அரசியலமைப்பின் படி செயல்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றும் கடும் கண்டனம் தெரிவித்து, தீர்ப்பை நடைமுறைப்படுத்த இன்று(21.03.24) ஒரு நாள் இரவு மட்டுமே ஆளுநர் ரவிக்கு கெடு விதித்துள்ளது.


படிக்க : ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்


இனியும் தமிழ்நாட்டில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை. உடனே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்

21.03.2024

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

ன்றைய தினம்(21.03.24) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து பாசிச பா.ஜ.க. அரசால் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் கெஜ்ரிவால்.

நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அதன்மூலம் வெற்றி பெறுவது என்ற பாசிச பா.ஜ.க-வின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து விதமான தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையும் செய்வதற்கு பாசிச பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய மூன்று ஏவல் துறைகளையும் ஏவி தனக்கு வேண்டாத கட்சிகளை பிளவுபடுத்துவதும் கட்சித் தலைவர்களை கைது செய்வதும் ஆட்சிகளை சீர்குலைக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

நாட்டின் அனைத்து துறைகளும் பாசிசமயமாகிவரும் இச்சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. மக்கள் போராட்டங்கள் மட்டுமே பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான தடுப்பரண்களாக அமையும்..

பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்றாலும் கூட அதற்கு மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!

டிசாவின் சிஜிமாலி பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், மோடி அரசின் ஆதரவு பெற்ற நாசகர வேதாந்தா நிறுவனத்தின் கோரப் பசியில் இருந்து தங்கள் மலைகளைக் காப்பாற்றுவதற்காக கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக் அரசின் கடும் அடக்குமுறைகளை மீறியும், மக்கள் உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சுரங்க திட்டத்தால் பாதிக்கப்படும் சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள 50 கிராம மக்கள் “சிஜிமாலி சுரக்ஷா சமிதி” என்ற அமைப்பை உருவாக்கி தங்கள் போராட்டங்களை கட்டியமைத்து வருகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று, ஒடிசா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில் சிஜிமாலியில் பாக்சைட் சுரங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கான முக்கிய தாதுப்பொருளாக பாக்சைட் உள்ளது. இந்தியாவின் பாக்சைட் இருப்புகளில் பாதிக்கும் மேல் ஒடிசாவில் உள்ளது. அவற்றில் 95 சதவிகிதம் ராயகவுடா, கோராபுட் மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் உள்ளது. சிஜிமாலி மலை ராயகவுடா மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது.

சிஜிமாலி பகுதியில் கோந்த் மற்றும் பிரஜா என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களும் தலித் பிரிவை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிஜிமாலி மலைகளையே சார்ந்து உள்ளதாலும் ஒடிசாவின் பிற பகுதிகளில் செயல்பட்டுவரும் சுரங்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்திருப்பதாலும், சுரங்க திட்டத்திற்கு எதிராக உறுதியாக போராடி வருகின்றனர். மேலும் தங்கள் போராட்டங்களுக்கு வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடித்த நியாம்கிரி மக்களிடமும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ராயகடா மாவட்டத்தின் பந்தேஜி கிராமத்தைச் சேர்ந்த லாபன்யா நாயக், “எங்கள் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஒரே ஆதாரம் சிஜிமாலிதான். சிஜிமாலி மலைகள் இல்லாமல் எங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடியாது. சுரங்க திட்டத்திற்காக சிஜிமாலி மலைகளை வேதாந்தாவிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கையை அமைதியான இயக்கத்தின் மூலம் எதிர்க்கிறோம்” என்று கூறுகிறார்.

ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் அடியாட்படையைப் போல செயல்படும் ஒடிசா மாநில போலீசு, பழங்குடி மக்கள் மீது கடும் அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது. இந்த அடக்குமுறைகள் எல்லாம் வெளிஉலகத்திற்கு பெரிய அளவில் தெரிவதில்லை. இவற்றை பற்றி ஒரு சில ஆங்கில ஊடகங்களை தவிர, பிற ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. எந்த தேர்தல் அரசியல் கட்சிகளும் இம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


எனவே, சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாநில அரசு, சுரங்க எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கிவரும் ஒன்பது போராட்டத் தலைவர்கள் மீது கொடிய பாசிச சட்டமான UAPA- வை பாய்ச்சியது. 200 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 22 பேரை சிறையில் அடைத்தது. மேலும், அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி, பொது விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த மாநில அரசு திட்டமிட்டது. அக்கூட்டத்தில் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் சுரங்க திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அறிவித்து, சுரங்க திட்டத்தை செயல்படுத்துவதற்காக சதி வேலையில் ஈடுபட முடிவு செய்திருந்தது.

போலீசின் சதித்திட்டத்தை முன் அனுமானித்த பழங்குடி மக்கள், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி பொது விசாரணையை ஒத்திவைக்குமாறு முறையிட்டனர். அக்கடித்தில் “16.10.2023 அன்று திட்டமிடப்பட்ட பொது விசாரணை வேதாந்தா நிறுவனத்தின் குண்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, சுரங்க திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல் அழிந்துவிடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே எங்கள் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறை, கட்டுப்பாடு மற்றும் எங்கள் கிராம மக்கள் சட்டவிரோதக் காவலில் இருந்து விடுவிக்கப்படும் வரை பொது விசாரணை நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படை உதவியுடன், துப்பாக்கி முனையில் பொது விசாரணையை நடத்தியது நவீன் பட்நாயக் அரசு. மக்களை பொது விசாரணைக்கு வரவிடாமல் தடுப்பதற்காக, பொது விசாரணை நடைபெறும் இடத்திற்கு சென்ற மக்கள் மீது போலீசு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. கூட்டத்திற்கு வருவதற்கு முன்னாலேயே கிராமத்திற்கு சென்று சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டியது. பொது விசாரணையைப் போல டிசம்பர் மாதத்திலும் போலீசின் துணையுடன் கிராம மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு கிராம சபைக் கூட்டங்களை நடத்தியது.

புவனேஸ்வரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நரேந்திர மொஹந்தி, “பொது விசாரணைக்குப் பிறகு, சிஜிமாலியில் உள்ள மக்களின் நிலை குறித்து அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை. அவர்கள் தங்கள் நிலத்தை மீட்பதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாங்கமும் வேதாந்தா நிறுவனத்தின் அதிகாரிகளும் தங்களுடைய வஞ்சகத்தின் மூலம் மக்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர்” என்று கூறுகிறார்.


படிக்க: ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!


இவ்வாறு சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஓர் ஆண்டாய் போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கடும் அடக்குமுறைகளை மீறியும் தங்கள் போராட்டங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் உறுதியுடன் போராடி வருகின்றனர். ஓர் ஆண்டாய் சுரங்க திட்டத்தை செயல்படுத்த முடியாததற்கு பழங்குடி மக்களின் போராட்ட உறுதியே காரணமாகும்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து காடுகளையும் மலைகளையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் கனிம வளங்களை சூறையாடுவதற்காக வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் 2023-ஐ கடந்த ஆண்டில் நிறைவேற்றி உள்ளதால் இந்நிலை மேலும் மோசமாகியுள்ளது. அதேசமயம், இந்த சூறையாடலுக்கு எதிரான பழங்குடியின மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.

அத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்களுடன் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை போன்று பிற வர்க்கங்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை இணைக்கவும் வளர்தெடுக்கவும் வேண்டும். அதில்தான் இந்திய உழைக்கும் வர்க்கத்தை கருமேகங்கள் போல் சூழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை அடங்கியுள்ளது.

நன்றி: மக்தூப் மீடியா


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!

டந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி, “தி கேரவன்”(The Caravan) பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில் “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்ற தலைப்பில் காஷ்மீரில் நடக்கும் ராணுவ அட்டூழியங்கள் குறித்தான ஒரு கட்டுரை வெளியானது. 24 மணி நேரத்திற்குள் இணையதளத்திலிருந்து அக்கட்டுரையை நீக்கவேண்டும் என்றும் நீக்கத் தவறினால் முழு இணையதளமும் தடை செய்யப்படும் என்றும் தி கேரவன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்திருந்தது ஒன்றிய பாசிச மோடி அரசு. அதே மாதத்தில் 22-ஆம் தேதி விவசாயிகள் போரட்டம் குறித்து செய்திகள் வெளியிடும் சில குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு எக்ஸ் தளத்திற்கு (ட்விட்டர்) மோடி அரசால் உத்தரவிடப்பட்டதும் அம்பலமாகியது. இதுபோன்று மோடி அரசு ஊடகங்கள் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் ஒடுக்குமுறையை ஏவுவது முதன்முறையல்ல.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெயரளவில் நிலவும் ஜனநாயகக் கட்டமைப்பை ஒழித்துவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது கருத்து சுதந்திரத்தை ஒழித்துக்கட்டுவது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் செயல்பாட்டளர்கள், பத்திரிகையாளர்கள் மீது ஊபா போடுவது; காவி பயங்கரவாதிகளை வைத்து அவர்களை படுகொலை செய்வது; தனக்கு பணியாத ஊடக நிறுவனங்களில் ரெய்டு நடத்துவது; அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மூலம் ஊடக நிறுவனங்களை கைப்பற்றுவது என மோடி அரசு பல பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. பத்திரிகை முதல் டிஜிட்டல் ஊடகங்கள் வரை எல்லா தளங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக இனி மோடி அரசின் கண்காணிப்பிற்கு உட்படாமல் எந்தவொரு கருத்தும், செய்தியும் வெளியே வராது என்ற நிலையை உருவாக்கும் விதமாக ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023 (Broadcasting Services (Regulation) Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் வரைவு அறிக்கை மீது கருத்துகளை தெரிவிக்க அளித்திருந்த காலவரம்பு இந்தாண்டு ஜனவரி 27-ஆம் தேதியோடு நிறைவடைந்துள்ளது. இம்மசோதாவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களின் தேசியக் கூட்டமைப்பு, டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா போன்ற பல்வேறு ஊடக அமைப்புகள் இந்த ஒளிபரப்பு சேவை மசோதாவை “தணிக்கைக்கான நுழைவாயில்” (Gateway to Censorship) என விமர்சித்துள்ளன.


படிக்க: தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!


ஏனெனில், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த கேபிள் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1995-க்கு பதிலாகத் தான் தற்போது ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023 முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டப்படி கேபிள் டிவி, செயற்கைக்கோள், இணைய ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு முதலியவைதான் “ஒளிபரப்பு நெட்வொர்க்” என்ற வரம்பிற்குள் இருந்தது. தற்போது புதிய மசோதாவில், நெட்ஃபிளிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி. தளங்கள் (OTT- Over The Top), டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் என அனைத்து தளங்களும் ஒளிபரப்பு நெட்வொர்க் என்ற வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சி (Programme) என்பதற்கு இம்மசோதாவில் தெளிவான வரையறை கொடுக்கப்படவில்லை. ஒளிபரப்பு நெட்வொர்க்கை பயன்படுத்தி அனுப்பப்படும் ஆடியோ, வீடியோ அல்லது ஆடியோ வீடியோ உள்ளடக்கம், அடையாளம் (Sign), சமிக்ஞைகள் (Signals), எழுத்து (Text), படங்கள் என அனைத்தும் உள்ளடங்கும் என்று மிகவும் பொதுவாக குறிப்படப்பட்டுள்ளது. அதாவது, ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், கதைகள், நாடகங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொடர்கள், நேரலைகள் இணைய தளங்களில் எழுதப்படும் கட்டுரைகள், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்கள் என அனைத்தையும் இனி மோடி அரசு தணிக்கை செய்யப்போகிறது.

பாசிசக் கும்பிலின் பிடியில் டிஜிட்டல் ஊடகங்கள்

தற்போது முன்வைக்கப்பட்ட ஒளிபரப்பு சேவை மசோதாவின்படி, ஒளிபரப்பு நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் ஒன்றிய அரசிடம் பதிவு செய்திருந்தால் மட்டுமே சேவையை வழங்க முடியும். ஓ.டி.டி. தளத்தைப் பொறுத்தவரை, தளத்தின் பார்வையாளர்கள், சந்தாதாரர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கவேண்டும்; அதுகுறித்து ஒன்றிய அரசுக்கு தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இம்மசோதாவில், “ஒளிபரப்பாளர்கள் மற்றும் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களால் சுய ஒழுங்குமுறை” (Self-regulation by broadcasters and broadcasting network operators), “சுய ஒழுங்குமுறை நிறுவனங்கள்” (Self-regulatory Organisations), “ஒளிபரப்பு ஆலோசனைக் குழு” (Broadcast Advisory Council) என மூன்று ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மூன்று கட்டமைப்பிலும் ஒன்றிய அரசுதான் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது.

முதலாவதாக, சுய ஒழுங்குமுறையின்படி, ஒவ்வொரு ஒளிபரப்பாளரும் அல்லது ஆப்ரேட்டரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட “உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டியை” (Content Evaluation Committee) நிறுவ வேண்டும். இந்த கமிட்டியில் எத்தனை பேர் இருக்க வேண்டும், அதன் செயல்பாட்டு விவரங்கள் என அனைத்தும் ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும். இதன்படி இனி “உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டி”யால் சான்றளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்ப முடியும்.

செய்தி ஊடகங்களை பொறுத்தவரை, இந்த விதிமுறையால் ஆசிரியர் குழுக்கள் செல்லாக் காசாக்கப்படும். இதுகுறித்து பேசிய “தி குயிண்ட்” இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ரிது கபூர், “செய்தி ஊடகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனங்களும் என்ன செய்தி எப்படி வெளியிட வேண்டும் என தங்களுக்கென வரையறை வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கும். இதற்கென ஆசிரியர் குழு இருக்கும். ஆனால் அதையும் மீறி உள்ளடக்க மதிப்பீட்டுக் குழு எதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!


கூடுதலாக, இந்தக் கமிட்டியால் சான்றளிக்கப்படாத நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆக, இனி என்ன சேனலில் என்ன நிகழ்ச்சி வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்போவது பா.ஜ.க. அரசுதான். ஏற்கெனவே, தொலைக்காட்சி சேனல்களில் முற்போக்கு நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டி பல சேனல்களில் இந்துத்துவத்துக்கு தோதான புராணக் குப்பைகள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இனி ஓ.டி.டி. மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படப்போகிறது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகளையோ, ஏன் முற்போக்கு கருத்துகளையோ கூட இனி எந்த இடத்திலும் ஒளிபரப்ப முடியாது.

இரண்டாவதாக, இந்த மசோதாவின்படி சுய ஒழுங்குமுறை நிறுவனங்களில் அனைத்து ஒளிபரப்பாளர்கள்/ ஆப்ரேட்டர்கள் இணைய வேண்டும். இந்த நிறுவனம் அனைத்து குறைகள், முறையீடுகள், தனிப்பட்ட ஒளிபரப்பாளர்களால் கவனிக்கப்படாத பிற விஷயங்களை நிவர்த்தி செய்து வழிகாட்டுதல்களை வெளியிடுவது, அரசால் தீர்மானிக்கப்பட்ட “விதிமுறைகள்” (codes)- இன்னும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை, அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்வது முதலியவற்றை செய்யும். இந்த விதிமுறைகளுக்கு உடன்படாத ஒளிபரப்பாளர்கள்/ ஆப்ரேட்டர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது, எச்சரிக்கை அல்லது 5 லட்சம் வரையிலான அபராதம் விதிப்பது போன்ற அதிகாரங்கள் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, மேலே குறிப்பிட்டிருந்த கமிட்டியின் தணிக்கையை மீறி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான அல்லது முற்போக்கு கருத்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால், அதற்கு எதிராக இந்த சுய ஒழுங்குமுறை நிறுவனத்தில் புகாரளிக்கலாம். இந்த புகார்கள் மீது இந்நிறுவனம் விசாரணை நடத்தி தண்டனை வழங்கும். சான்றாக, சமீபத்தில் “நெட் ஃபிளிக்ஸ்” தளத்தில் வெளியான அன்னபூரணி படத்திற்கு சங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அத்தளத்தில் இருந்து அப்படம் நீக்கப்பட்டது. இம்மசோதா நடைமுறைக்கு வந்தால் பாசிச மோடி அரசுக்கு அடங்க மறுக்கும் தளங்கள் முற்றிலுமாக முடக்கப்படும்.

மூன்றாவதாக, ஒளிபரப்பு ஆலோசனைக் குழு (Broadcasting Advisory Council) ஒன்று அமைக்கப்படும். இத்தகைய குழுவின் தலைவராக, ஊடகத்துறையில் 25 வருட அனுபவம் கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அதிகாரப்பூர்வ அதிகாரிகளும், அவர்களுடன் ஊடகம், பொழுதுபோக்கு, ஒளிபரப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், மனித உரிமை, சட்டம் போன்ற துறைகளில் அனுபவம் கொண்ட ஐந்து ‘சுயாதீன நபர்கள்’(independent persons) இக்குழுவில் நியமிக்கப்படுவார்கள். இதில் கேலிக்கூத்து என்னவென்றால் இவர்கள் அனைவரையும் ஒன்றிய அரசுதான் நியமிக்கும்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


சுய ஒழுங்குமுறை நிறுவனங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான மேல்முறையீடுகளை இந்த ஆலோசனைக்குழு விசாரிக்கும். ஆனால் ஆலோசனைக்குழுவால், பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியுமே ஒழிய முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குதான் உள்ளது. ஆக, ஒளிபரப்பு சேவை மீதான அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. வெறும் கண்துடைப்பிற்காகத்தான் இத்தனைக் குழுக்கள், நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், இவ்வரைவு மசோதா பிரிவு 31-இன் படி, ஒளிபரப்பு நெட்வொர்க்குகள் மற்றும் சேவைகளின் உபகரணங்களை ஆய்வு செய்ய, இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் பறிமுதல் செய்ய ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மேலும் பிரிவு 35-இன் படி, எந்தவொரு ஒளிபரப்பு நெட்வொர்க்கின் நிகழ்ச்சி அல்லது விளம்பரத்தை நீக்க அல்லது மாற்றியமைக்க ஒன்றிய அரசு உத்தரவிட முடியும். விதிமுறைகளை மீறும் ஒளிபரப்பு நெட்வொர்க்குகளுக்கு, குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு சேனலில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படாமல் நிறுத்திவைக்கவும் அதிகாரமளிக்கிறது. இது டிஜிட்டல் ஊடகம் (இ-பேப்பர்ஸ், நியூஸ் போர்ட்டல், இணையதளம், சமூக ஊடகம்) போன்று செய்தி மற்றும் நடப்பு விவகார நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது நபருக்கும்  பொருந்தும்.

மேலும், பாசிச அரசு‘பொது நலன் கருதி’ அவசியம் என்று கருதும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எந்த ஒளிபரப்பு சேவைகளும் வழங்காதவாறு நிறுத்தி வைக்கவும், ஒளிபரப்பு நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் செயல்படுவதை தடை செய்யவும் இம்மசோதா ஒன்றிய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. அதாவது மோடி அரசுக்கு எதிரான விஷயங்கள் பேசுபொருளாவது, பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெறுவது போன்றவற்றை தடுக்க இப்பாசிச நடவடிக்கையை மோடி அரசு மேற்கொள்ளும். இதன் மூலம், மிச்சமீதமிருந்த கருத்து சுதந்திரத்தையும் துடைத்தெறிந்து மொத்தமாக காவி, இந்துத்துவ கருத்தை திணிக்கவல்லதாக ஒளிபரப்பு சேவையை மாற்றியமைக்க இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது மோடி கும்பல்.

பாசிஸ்டுகளின் ஆட்சியில், கருத்துரிமைக்கு இடமில்லை

ஏற்கெனவே டிஜிட்டல் ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மோடி அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ (IT Rules) கொண்டுவந்திருந்தது. தற்போது ஓ.டி.டி., சமூக ஊடக நிறுவனங்கள் என எந்தெந்த தளங்களில் எல்லாம் கருத்து தெரிவிக்க முடியுமோ அவை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கேற்ப இந்த ஒளிபரப்பு சேவை மசோதாவை பாசிச மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

இவ்வாறு டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தீவிரமாக இருப்பதற்கு காரணம், பிரதான ஊடகங்கள் (Mainstream) பெரும்பாலானவை மோடி அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. தற்போது டிஜிட்டல் ஊடகங்கள்தான் இதற்கு மாற்றாக பார்க்கப்படுகின்றன. இன்று மக்கள்விரோத திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக யூடியூப் சேனல்கள் போன்ற சமூக ஊடகங்களில்தான் பெரும் விவாதங்கள் கிளம்புகின்றன. இது மோடி அரசிற்கு நன்கு தெரியும்.

பா.ஜ.க. அரசின் ஒடுக்குமுறையால் ஊடகங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களில் தங்கள் கருத்துகளை சொல்ல முடியாத பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் யூடியூப் சேனல்களில் தங்களுக்கென செய்தி ஊடகத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் மோடி அரசுக்கு எதிராக வினையாற்றும் தளமாக இருக்கக்கூடிய இந்த யூடியூப் தளத்தை, இனி “உள்ளடக்க மதிப்பீட்டு குழுவால்” கண்காணிப்புக்குட்படுத்தி தணிக்கை செய்து ஒடுக்க முடியும்.

பத்திரிகையாளர்கள், செயற்பாட்டளர்கள் மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போன்றவர்களும் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களில் மீம்கள், ட்ரோல் வீடியோக்கள் மூலமாக சமூக அநீதிகளுக்கு எதிராக வினையாற்றி வருகின்றனர். சான்றாக மணிப்பூர் கலவரத்தின்போது, இணையத்தடை மற்றும் இந்திய ஊடகங்களின் கள்ளமௌனத்தால் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் மூடிமறைக்கப்பட்டபோது சமூக ஊடகங்களின் வழியாகத்தான் அவை வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.

கடந்தாண்டு, “தொலைத்தொடர்பு மசோதா 2023”, “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023”, “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் 2023”, “தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் 2023” என கருத்துரிமையை பறிக்கும், ஊடகங்களை ஒடுக்கும், மக்களின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் பல பாசிச சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது. தற்போது கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டி, பாசிச சர்வாதிகாரத்தை செப்பனிடும் வகையில் ஒளிபரப்பு மசோதாவை கொண்டுவரத் துடிக்கிறது.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல் பா.ஜ.க குண்டர்படை அட்டூழியம்

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல்
பா.ஜ.க. குண்டர்படை அட்டூழியம்

தமிழ்நாட்டிலும் மசூதிகளை இலக்காக்கும் பா.ஜ.க குண்டர்கள்!

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் –  இந்திரா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசலில் ரமலான் நோன்பை முன்னிட்டு வழிபாடு நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை திருவெறும்பூர் பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பா.ஜ.க. குண்டர்கள் தடுத்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

“இது பூங்கா இடம்; இந்த இடத்தில் நீங்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க மாட்டோம்; அங்கு தொழுகையும் நடத்த விடமாட்டோம்” என்று சில நாட்களாகவே அங்கு வழிபாடு நடத்தச் செல்பவர்களை காவி குண்டர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றுள்ளனர். அதனால் இஸ்லாமியர்கள் அவ்விடத்தில் கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டு வழிபாடு மட்டுமே நடத்தி வந்தனர்.

மசூதி கட்டுவதற்கான இடம் உரிய பத்திரங்களோடு வைத்திருக்கும் போதே, “விதி மீறல்; பள்ளிவாசல் இந்த இடத்தில் அமையக் கூடாது; அருகில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்”  என புதுப்புது நியாயங்களை பேசிக்கொண்டே கலவரம் உண்டாக்க முயற்சித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.


படிக்க: தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் ; RSS, BJPயை தடை செய்!


இதற்கிடையே நேற்று மாலை அப்பகுதிக்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை சங்கிகளின் தூண்டுதலின் பேரில் போலீஸ் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதைக் கண்டித்து நேற்று (18-03-2024) இரவு திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெருந்திரளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பா.ஜ.க. குண்டர் படையும் அப்பகுதியில் குவிந்தது.

இதன் பிறகு வட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பேச்சுவார்த்தையில் “சட்டபூர்வமாக எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிலைநாட்டி நாங்கள் பள்ளிவாசலைக் கட்டிக்கொள்கிறோம்; அதுவரை பள்ளிவாசலில் வழிபாடு நடத்தவும், மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க-வினரிடம் இருந்து என்களை பாதுகாக்கவும்  வேண்டும்” என இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தனர்.


படிக்க: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!


வடமாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏவிவிடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல், தமிழ்நாட்டிலும் வெகுநாட்களாகவே அதற்கான செயல்திட்டத்தில் உள்ளது; தனக்கிருக்கும் அதிகார பலத்தின் துணையோடு, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கவவரத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது என்பது இந்த சம்பவத்திலிருந்து மீண்டும் நிரூபனமாகியுள்ளது.

சமீபத்தில் குஜராத் பல்கலைக்கழகத்தில் விடுதி அறையில் தொழுகையில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியது சங்க பரிவார கும்பல். இப்போது தமிழ்நாட்டிலேயே தொழுகை நடத்துவதற்கும் மசூதி கட்டுவதற்கும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்க பரிவார கும்பலின் இத்தகைய தாக்குதல்களை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்காவிட்டால் குஜராத்திலும் பசு வளைய மாநிலங்களிலும் நடந்தது போன்ற கலவரங்கள் நாளை தமிழ்நாட்டிலும் ஏற்படும் அபாயம் உள்ளது.


வினவு செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?

நிரந்தரப் பணி கோரும் தற்காலிக – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், சம வேலைக்கு சம ஊதியம் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர் – விரிவுரையாளர் பணி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு – அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக் கோரும் அமைப்புகளின் போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என கல்வித்துறை சார்ந்த போராட்டங்களும், நடவடிக்கைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. இன்னொருபுறத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஏராளமான அறிவிப்புகளும், திட்டங்களும் அரசு சார்பில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட, தமிழ்நாட்டிலேயே அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஷிவ் நாடார் குழுமம், ஒவ்வொரு ஆண்டும் பின்தங்கிய ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 200 மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பதாக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இம்மாதிரியான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், திட்டங்களின் நோக்கம் என்ன? இந்தியக் கல்வித்துறை சந்திக்கும் சவால்களின் ஆணிவேர் எது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை காணாமல், தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவோர் தீர்வை நோக்கி முன்னேற முடியாது. பிரச்சினைகளின் வெளிப்பாடுகளை மட்டும் எதிர்த்து போராடாமல் அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை உணர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும் போதுதான் உண்மையான தீர்வை நோக்கி நகர முடியும்.

கல்வித்துறை மீதான மோடி அரசின் தாக்குதல்கள்!

ஒன்றியத்தில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியிலும், கல்விசார் நிறுவனங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தனியார்மயத்தின் உச்சமாகிய கார்ப்பரேட்மயம்; மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் மூர்க்கமான காவிமயம் என இரண்டும் ஒருசேர கல்வியில் திணிக்கப்பட்டு வருகிறது. சாராம்சத்தில் இவ்விரண்டுமே, கல்வியை சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து விலக்கி, பணம் காய்க்கும் கருவியாகவும் குறிப்பிட்ட சாதி – பணக்காரப் பிரிவினருக்கானதாகவும் மாற்றும் நோக்கம் கொண்டவை.

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020, பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக ஆய்வுப் படிப்பு வரை அனைத்தையும் காவி – கார்ப்பரேட்  நலனிற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான நடைமுறைத் திட்டங்களை முன்வைக்கிறது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு; இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு; அனைத்து வகை உயர்கல்விக்கும் நீட், கியூட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகள்; அரசுக் கல்வி நிறுவனங்களைத் தன்னாட்சி அதிகாரம் கொண்டவையாக மாற்றி அரசு நிதியளிப்பை நிறுத்துவது; பல்கலைக்கழக மானியக் குழுவைக் (யு.ஜி.சி.) கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குவது; வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய அனுமதி; இணையவழிக் கல்வியைக் கட்டாயமாக்குவதன் மூலம் கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கம்; பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களைக் கற்றுத்தர என்.ஜி.ஓ., தன்னார்வலர்கள் என்ற பெயரில் காவிக் கும்பலை உள்நுழைப்பது; சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒழிப்பது; முற்போக்குக் கருத்துகளைப் பேசும் ஆசிரியர்கள் – மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி. குண்டர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது, துறைசார் நடவடிக்கை எடுப்பது; பாடத் திட்டங்களில் வரலாற்றைத் திரிப்பது, அறிவியல் கருத்துகளை நீக்குவது, புராண – இதிகாசப் புளுகுகளைச் சேர்ப்பது; கல்வித்துறை செயலர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என அனைத்து உயர்பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நியமிப்பது என கல்வித்துறையில் கார்ப்பரேட்-காவிமய நடவடிக்கைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஏற்கெனவே இருந்துவந்த கல்விசார் நடவடிக்கைகள், நிறுவனங்கள் அனைத்தையும் காவி – கார்ப்பரேட்மயத்திற்கேற்ப மறுஒழுங்கமைப்பு – மறுகட்டமைப்பு செய்வதைத் தீவிரமாக்கி வருகிறது மோடி கும்பல்.

திமுக அரசின் ‘மாநிலக் கல்விக்கொள்கை’

மோடி அரசின் இத்தாக்குதல்களை நாடெங்கிலும் உள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், போராட்டக்களத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த பின்னணியில் இருந்துதான் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து தமிழ்நாட்டிற்கென தனியாக மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், மாநிலக் கல்விக்கொள்கை வகுப்பதற்கான குழுவையும் அமைத்தது. ஆனால், “தேசிய கல்விக்கொள்கையின் ‘சரியான’ அம்சங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. இதனை அம்பலப்படுத்திதான் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேரா.ஜவஹர்நேசன் அக்குழுவிலிருந்து வெளியேறினார்.

“தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.


படிக்க: கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு


இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு பதிலேதும் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தது. மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கும் குழுவின் தலைவரோ, “இதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என புறங்கையால் தள்ளிவிட்டு கடந்து சென்றார். மேலும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே, இன்னும் ஒரு வாரத்தில் மாநில கல்விக்கொள்கையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்றுவரை அதன் நிலை என்னவென அறிய முடியவில்லை.

இதற்கிடையே, மாநிலத்திற்கென புதிதாக கல்விக்கொள்கை வகுக்கப்படும் என சொல்லிக் கொண்டே, இடைப்பட்ட காலத்தில் தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்திவரும் அனைத்து திட்டங்களும் தேசிய கல்விக்கொள்கையை அடியொற்றிய திட்டங்களாகவே உள்ளன. தமிழில் பெயர் வைத்துக் கொள்வதால் மட்டும் உள்ளடக்கம் மாறிவிடுமா என்ன?

கார்ப்பரேட்மயம் – கல்வித்துறை மறுகட்டமைப்பு

தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வியில் நடைமுறைப்படுத்தப்படும் வழக்கமான தனியார்மய நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது, இவை தற்காலத்திய நவீன வடிவத்திலான கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் ஆகும்.

1980-களின் இறுதியில் எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிக்காலத்தில் துவங்கிய கல்வி தனியார்மயமானது, அரசு கல்வி நிறுவனங்களுக்கு இணையாக தனியார் மழலையர் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை துவங்குவது, தனியார் கல்லூரிகள் துவங்குவது என்ற வகையில் இருந்தது. இது கல்வி தனியார்மயத்தின் முதல் கட்டமாக அமைந்தது.

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு சி.பி.எஸ்.இ. எனப்படும் ஒன்றிய அரசின் பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ. எனப்படும் பன்னாட்டு பாடத்திட்டம் ஆகியவற்றைக் கற்பிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகள் (இவை பெரும்பாலும் சங்கிலித் தொடர் நிறுவனங்கள் போல அமைந்தன) தொடங்கப்பட்டன. தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிப்போக்கில், பாடத்திட்டங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும், வெளிநாட்டுக் கல்வி  நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடைமுறைக்கு வந்தன. இது கல்வி தனியார்மயத்தின் இரண்டாவது கட்டமாகும்.

தற்போதைய கட்டத்தில், மேற்சொன்ன எல்லா நிறுவனங்களையும் உள்ளடக்கிய, அரசுக் கல்வி நிறுவனங்களையும் தின்று செரிக்கக்கூடிய கார்ப்பரேட்மயம் நடைமுறைக்கு வந்துள்ளது. கல்வியில் ஒவ்வொரு துறையையும் தனித்தனியே பிரித்து தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் என்ற வகையில் இந்த மறுகட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, வட இந்தியாவில், காவிகளின் நலனுக்கேற்ற வகையில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


படிக்க: அநீதிக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும் கல்வி! | பேராசிரியர் ப.சிவக்குமார்


கடந்த இரண்டாண்டுகளாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், இல்லம் தேடிக் கல்வி, எமிஸ் பதிவேடு, எண்ணும் எழுத்தும், சிற்பி திட்டம், நான் முதல்வன் திட்டம், பொதுப்பாடத்திட்டம், பொது வினாத்தாள் முறை போன்றவற்றின் உள்ளடக்கம் மேற்சொன்ன வகையிலான கார்ப்பரேட்மயமே.

கற்பித்தலை பல்வேறு பிரிவுகளாக பிரிப்பது, இல்லம் தேடிக்கல்வி திட்டம், வானவில் மன்றம், இணையவழிக் கல்வி மூலம் மாணவர்களை வழக்கமான பாடத்திட்டம் மற்றும் வகுப்பறை முறைக்கு வெளியே கொண்டு செல்வது, அதனை மையப்படுத்துவது, பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களை அதில் நுழைப்பது என்பதே தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், கார்ப்பரேட்மயமாக்கலின் நிகழ்ச்சிப்போக்காகும். இவற்றில் என்.ஜி.ஓ-க்களும், கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் பங்கெடுக்கின்றன. இதுமட்டுமின்றி, அனைத்து கற்றல் – கற்பித்தல், இதர பல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக டிஜிட்டல் தளங்களில் பதியப்பட்டு, பிக் டேட்டா (Big Data) எனப்படும் பெரும் தரவுக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒட்டுமொத்த கல்வித்துறையின் நடவடிக்கைகளைப் பற்றிய தரவுகளையும் கார்ப்பரேட்டுகளால் எளிதாகப் பெற முடிகிறது. இதிலிருந்து, கார்ப்பரேட்டுகள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

இன்னொரு பக்கத்தில், பள்ளிக் கட்டடங்கள் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள், உணவு சமைத்தல், பாதுகாப்பு என கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தையே தனித்தனியே பிரிப்பது, அவற்றை மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கீழ் கண்காணிப்பது, இப்பணிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் இயங்கும் கார்ப்பரேட்டுகள் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவது என்ற போக்கும் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கு முன்பு, அரசு – தனியார் கூட்டுத்துவ அடிப்படையிலும், கார்ப்பரேட்டுகளின் விருப்பம் சார்ந்தும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருந்தது. இத்திட்டம், கார்ப்பரேட்டுகளுக்கு அவ்வளவாக இலாபம் தரவில்லை என்பதால், புதிய வேடம் பூண்டு வந்துள்ளதே தி.மு.க. அரசு அமல்படுத்தியுள்ள அரசு பள்ளிகளில்  கார்ப்பரேட்டுகளை உள்நுழைக்கும் நம்ம ஸ்கூல் திட்டமாகும். கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொள்வது என்ற காட்ஸ் (GATS) ஒப்பந்த அடிப்படையில்தான் இவையாவும் நடந்து வருகின்றன. ஆனால், காலத்திற்கேற்ப நடவடிக்கைகளின் பரிணாமம் மாறிக்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மனப்பாடக் கல்வியை பெருமளவு ஊக்குவித்த பாடத்திட்டத்தில் இருந்து சற்று மாறுபட்டதாக சமச்சீர் பாடத்திட்டமும், செயல்வழிக் கற்றலும் அமைந்தன. ஆனால், அது போதுமானதாக இல்லை. அதிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு பாடத்திட்டங்களுமே குழந்தைகளையும் அவர்களது உளவியல் புரிதலையும் மையப்படுத்தியதாக இல்லாமல், தொழிற்துறைக்குத் தேவையான திறன் சார்ந்தவையாக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. மாணவர்களை சமூக மனிதர்களாக வளர்ப்பது, நன்னெறிப்படுத்துவதே கல்வியின் நோக்கம் என்றில்லாமல் புதிய பொருளாதார நிலைமைகளுக்கேற்ற நவீனக் கொத்தடிமைகளை உருவாக்குவதாக மாற்றப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில், மாணவர்கள் கூடிப் படிக்கும் – ஆசிரியர்கள் நேரடியாகக் கற்பிக்கும் வழமையான வகுப்பறை முறையை, இணைய வழிக் கற்றல் மூலம் பதிலீடு செய்வது என்ற போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேறுவழியற்ற நிலையில் இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்தது போலத் தோன்றினாலும், இது முற்றுமுழுதாக கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கத்தின் இலக்கிலிருந்து செயல்படுத்தப்பட்டதே. இதற்கான சான்றுதான் யு.ஜி.சி. வழிகாட்டியுள்ள கலவைமுறைக் கற்றல் முறையாகும் (Blended Learning). கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கம் அரசின் நோக்கமாக இல்லாவிட்டால், பல இலட்சம் பேர் ஆசிரியர், விரிவுரையாளர் பணிகளுக்குப் படித்துவிட்டு அற்பக்கூலிக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும், சம்பந்தமில்லாத வேலைகளிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு நாட்டில், கட்டாயமாக 40 சதவிகித பாடங்களை இணைய வழியில்தான் கற்பிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இவற்றின் பின்னே ஏகாதிபத்திய, டிஜிட்டல் கல்வி நிறுவனக் கொள்ளைதான் பிரதானமாக அடங்கியுள்ளது. இதற்கான சான்றுதான் பைஜூஸ்(Byjus) போன்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் அசுர வளர்ச்சியாகும்.

கல்வி கட்டமைப்பில் சிறுசிறு மாற்றங்களைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றுகின்ற வகையில்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. புதிதாக உருவாக்கவிருக்கும் கட்டமைப்புக்கான கொள்கை, இலக்குகள் எதையும் வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதில்லை. அவர்களின் பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து நாமே புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. சான்றாக, ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை எதை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதுகூட ஓரளவு புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆனால், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் பூடகமானவையே. இவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் கொள்கை – இலக்குகளை அவ்வளவு எளிதாக நாம் அடையாளம் காண முடியாது.

தரப்படுத்தலா, இரகசியத் திட்டங்களா?

நாடு முழுவதிலும் பல இலட்சக்கணக்கான ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர் பணியிடங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்த  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் பன்மடங்கு அதிகமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஒன்றிய, மாநில அரசுகள் இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யாமல், தற்காலிக, பகுதிநேர ஊழியர்களாக மட்டுமே நியமித்து வருகின்றன. ஆசிரியல்லாத இதர பணியிடங்களை அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்பும் போக்கும் உருவாகி வருகிறது.

மற்றொருபுறம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை அரசு தொடர்ந்து வெட்டி சுருக்குவதன் மூலமும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தின் ஊழல் முறைகேட்டாலும் கல்வித்துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 37,211 அரசுப் பள்ளிகளிகளில் பெரும்பாலானவை வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வாழ்வாதாரம் இழந்த உழைக்கும் மக்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தபோதும் அம்மாணவர்களை தக்கவைத்து கொள்ளும் அளவிற்கு கூட அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதி இல்லை என்பதே எதார்த்த நிலையாகும். கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காரணம்காட்டி அரசு பள்ளிகளை இழுத்து மூடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்சொன்ன வகையில் அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர் – ஊழியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் மாணவர்களின் கற்றல்திறன் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாத அரசு, தகைசால் பள்ளிகள் (School of Exellence), மாதிரி பள்ளிகள் (Model Schools) என ஏற்கெனவே இருக்கும் பள்ளிகள், மாணவர்களைத் தரம் பிரித்துக் கையாளத் தொடங்கியிருக்கிறது. 1000 மாணவர்களுக்கு அதிகமாகப் படிக்கும் பள்ளிகளை தகைசால் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து, போதிய ஆசிரியர் – அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் செய்து தரப்போவதாக அரசு கூறுகிறது. 10-ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், மாநில – ஒன்றிய அளவிலான திறனறி தேர்வுகளில் முன்னிலை பெறும் மாணவர்களாகப் பொறுக்கியெடுத்து மாதிரிப்பள்ளிகள், சூப்பர் 30 போன்ற பெயர்களில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து, பெரும் நிறுவனங்களில் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் உத்தரவாதம் செய்வதே அரசின் இலக்கு எனக் கூறப்படுகிறது.

1000 பேருக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு செலுத்தும் கவனத்தை இதர பள்ளிகளுக்கு அரசு கொடுக்க மறுப்பது ஏன்? அங்கெல்லாம் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்த அரசின் கருத்தென்ன? இதேபோல மாவட்டத்திற்கு சில மாணவர்களை மட்டும் வெற்றிபெற வைப்பது மட்டும் போதுமென்றால், மற்றவர்களின் நிலை குறித்து அரசின் பார்வை என்ன? இந்தப் போக்குகள்தான் மாநில அரசுக்கு ரகசியத் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்கின்றன. ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் தரப்படுத்த முயற்சி செய்யாமல், பொறுக்கியெடுத்து வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமாகத்தான் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என நாம் குற்றம் சாட்டினால், அரசால் மறுக்க முடியாது.

நமது கவனம் குவிய வேண்டியது எங்கே?

கல்வித்துறையில் மேற்சொன்னவாறான கார்ப்பரேட் – டிஜிட்டல்மயமாக்கத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? ஆரம்ப காலத்திலிருந்தே கல்வி என்பது சமூகத்தின் பொருளாதார, உற்பத்தி நிலைமைகளுக்கேற்ப கட்டமைக்கப்படுவதாகவே இருந்து வந்துள்ளது. மாறிவரும் உற்பத்திமுறைக்குப் பொருத்தமாக கல்விமுறையும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலைமையில், சமூகத்தில் உற்பத்திமுறை – பொருளாதாரத்தில் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயமே ஆதிக்கம் செலுத்துவதாக மாறி வருகிறது. தொழிற்துறை, விவசாயம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் போக்கினை வெவ்வேறு அளவுகளில் நம்மால் கண்ணுற முடிகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் கல்வித்துறையிலும் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் எனக் கோரும் தற்காலிக – பகுதிநேர ஆசிரியர்கள், சம்பள உயர்வு – ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட இதர கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளுக்குப் போராடும் ஆசிரியர் சங்கங்கள், தரமான கல்வி, உத்தரவாதமான வேலைவாய்ப்புக்காக போராடும் மாணவர் அமைப்புகள் என அனைவரும் கவனிக்க வேண்டியது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம் என்னும் போக்கையே. இப்போக்கினை எதிர்த்து இதர வர்க்கங்கள் எவ்வாறு போராடுகின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சான்றாக, டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய அரசு வெளியேற வேண்டும்; அடுத்தது, சுதந்திர வர்த்தகத்திலிருந்து (Free Trade Agreement) வெளியேற வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தின் அடிமை ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட்டதன் விளைவே சுதந்திர வர்த்தகம் என்னும் பொறியில் சிக்கியிருப்பது என்பதை விவசாய சங்கங்கள் புரிந்து கொண்டு விட்டனர். இந்த ஒப்பந்தங்களின் விளைவே விவசாயம் மற்றும் விவசாய விளைப்பொருட்கள் மீதான கட்டுப்பாடு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு செல்வதாகும். எனவே தான் பிரச்சினையின் மையக்கண்ணியான உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறார்கள் விவசாயிகள்.

கல்வித்துறைக்கான தீர்வையும் நாம் இங்கிருந்தே துவங்க வேண்டும். மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்தவே, எல்லா மாற்றங்களையும் (கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம்) கொண்டு வருவதாகவும், இதுவே வளர்ச்சிக்கான வழியென்றும் அரசுகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. கல்வி என்பதே வேலைக்காகத்தான் என்ற மனநிலைக்குத் தயார் செய்யப்பட்டுள்ள பொது சமூகமும் இது சரிதானே என்று ஏற்றுக்கொள்ளும். ஆனால் கல்வி சார்ந்து இயங்கும், மக்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மாற்றங்களுக்கு பின்னால் குழந்தைகளின் இயல்பை கொன்று அவர்களை அடிமைகளாக மாற்றுவது, கல்வியில் வர்க்க ஏற்றத்தாழ்வை உருவாக்குவது போன்ற பேரபாயங்கள் உள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த அபாயங்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதில் இருந்தே, கல்வித்துறை சார்ந்த இதர எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதை நோக்கி நாம் நகர முடியும். கல்வியை சமூகத்தின் இதர துறைகளில் இருந்து எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல்தான் நிரந்தர வேலையின்மை, ஓய்வூதியம் உள்ளிட்ட எல்லாப் பொருளாதாரக் கோரிக்கைகளையும், கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய கட்டத்தில் கல்வித்துறையில் புகுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட்மயத்தை எதிர்ப்பதில்தான் நமது கவனம் குவிக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட்மயத்தையும் காவிமயத்தையுமே இலக்காகக் கொண்டிருக்கும் தேசியகல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும். அதே சமயத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்க இருக்கும் மாநிலக் கல்விக் கொள்கை இத்தகைய அம்சங்களில் இருந்து மாறுபட்டதாக, குழந்தைகளை மையப்படுத்தியதாக, சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நோக்கியதாக, ஆசிரியர்கள் – ஊழியர்களின் நலன் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராட வேண்டும். நாம் ஏற்கெனவே வலியுறுத்தி வரும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி; அறிவியல்பூர்வமான – தாய்மொழிக் கல்வி அடிப்படையிலான பாடத்திட்டம்; அருகமைப் பள்ளி – பொதுப்பள்ளி முறை; ஆகியவற்றுடன் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை காவி – கார்ப்பரேட் பாசிச சித்தாந்தத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும் போராட வேண்டும்.

கல்வித்துறையில் எதிர்கொள்ளும் குறிப்பான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் மற்றும் குறித்த நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆசிரியர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய “மக்கள் கல்விக் கூட்டியக்கம்” போன்ற அமைப்புகள் பருண்மையாக முன்வைத்து வருகின்றன. இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து ஆதரிப்பதும், தொடர் விவாதங்கள் மூலமாக குறிப்பான பிரச்சினைகளுக்கான குறிப்பான தீர்வுகள் – நடவடிக்கைகளை நாம் செழுமைப்படுத்திக் கொண்டே முன்னேறுவதும் அவசியம்.

நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கு பின்னாலும் அரசியல் அதிகாரம் இருப்பது போல, தீர்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் அதிகாரமும் இருக்கவே செய்கிறது. நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட்மயத்தின் பின்னால் அம்பானி – அதானிகளின் நலன்களுக்கான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பாசிசக் கும்பலின் அரசியல் அதிகாரமே பாதுகாப்பாய் இருக்கிறது. இவற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் கார்ப்பரேட்மய எதிர்ப்புப் போராட்டங்களை ஒன்றிணைப்பதும், இப்போராட்டங்களின் வழியே நமக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். நாம் எடுத்து வைக்கும் சிறுசிறு அடிகளும் இத்தீர்வை நோக்கியதாக இருக்கட்டும்!


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube