Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 131

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜனவரி – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ அதானியே நமோ நமஹா!
♦ கெஜ்ரிவால், ஒவைசி: ‘பி டீம்’களை பிரசவித்தது யார்?
♦ மீண்டும் இந்தி: வெறும் மொழித்திணிப்பல்ல!
♦ ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்கள் விரோதிகளை விரட்டியடிப்போம்!
♦ கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
♦ நூல் அறிமுகம்: சோறு தின்பவர்களின் பிரச்சினை!
♦ ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்டுகள்!
♦ ‘பெரு’வின் தேவை: இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

 

மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!

மிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 20 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 19 கல்லூரிகள் தனியார் நிறுவனங்களுக்கு கீழ் இயங்கி வருகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மட்டும் அரசு கல்லூரியாக இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு அடிப்படை கல்வி தகுதிகூட இல்லாத மணவாளன் என்பவர் தான் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வருகிறார்.

யு.ஜி.சி விதிப்படி ஒரு கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர், ரீடர் பதவிகளுக்குத் தேர்வாகக் கூடியவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால், டிப்ளோமா மட்டுமே படித்துவிட்டு கடந்த 1997-ஆம் ஆண்டு அக்டோபரில் மருத்துவ அதிகாரியாக, தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்தவர் தற்போது கல்லூரியின் முதல்வர், இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் பதவிகளை வகித்து வருகிறார். மேலும், கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக பேராசிரியர்களின் பதவியில் தனக்கு வேண்டியவர்களை முறைகேடாக பணியில் அமர்த்திய புகாரும் உள்ளது.

மேலும், கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சமீபத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி நடத்திய தணிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழல் முறைகேடு குறித்து அலசி ஆராயும்போது இவரின் மற்றொரு கேடுகெட்ட அயோக்கியத்தனம் வெளிச்சத்துக்கு வந்தது. அது என்னவென்றால், யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையே முறைகேடாக அங்கீகாரம் பெற்ற போலியான மருத்துவத்துறை என்பதுதான்.

இந்திய மருத்துவத் துறையில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, சவுரிக் இக்பால் மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள் மட்டுமே சட்ட அங்கீகாரம் பெற்று இயங்கிவருகின்றன. பின்னர் யோகா ஒரு துணை கல்வியாக உருவாக்கப்பட்டு ஆயுர்வேதத்திலும் சித்தாவிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

படிக்க :நீட் என்னும் அயோக்கியத்தனம்

இந்நிலையில்தான் அவற்றிலிருந்து யோகாவை மட்டும் தனியாக எடுத்து மேற்கத்திய இயற்கை மருத்துவத்தையும் அதனுடன் இணைத்து புதிதாக இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (Bachelor of Naturopathy and Yogic Sciences) என்ற துறையை  உருவாக்கியது அன்றைய பாஜக அரசு. மருத்துவ துறையிலேயே இல்லாமல் சென்னை அரசு யோகா மற்றும் மருத்துவ கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வரும் இந்த படிப்புக்கு, ஒவ்வொரு வருடமும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் ‘அங்கீகாரமும்’ மருத்துவ சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதனை விட அதிர்ச்சி என்னவெனில் வருடா வருடம் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவ சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது என்பதுதான்.

இந்திய மருத்துவத்துறையில் உள்ள ஐந்து துறைகளும் இந்திய மருத்துவக் கழகத்தின் கீழ் வருவதால் நீட் நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு இல்லாமலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் உயிரை காவு வாங்குகிறது என்பதனால் இந்த கல்லூரிகளுக்கு நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை சாதகமான அம்சமாக பார்க்க முடியாது. ஏனெனில் “நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவர் ஆகலாம்” (Golden opportunity to become doctor without NEET) என்றும் விளம்பரம் செய்யப்பட்டு போலியான ஒரு மருத்துவ படிப்பில் மாணவர்களைச் சேர்த்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கப்படுகிறது. இவ்வாறு, ஏழை, எளிய மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்ற இந்த போலியான மருத்துவ கல்லூரிகள் வருடா வருடம் பல லட்சம் கோடி லாபம் ஈட்டுகின்றன.

இவ்வளவு பெரிய ஊழலுக்கு பின்னாலும் மணவாளன்-தான் உள்ளார் என்றாலும் அதற்கு இந்த ஓட்டுக் கட்சிகளும் அரசு அதிகாரிகளும் துணை சென்றுள்ளனர். கடந்த அதிமுக அரசானது, தனது ஒன்றிய விசுவாசத்தைக் காட்டுவதற்காக செங்கல்பட்டில் 80 ஏக்கர் நிலத்தில் 100 கோடியில் சர்வதேச யோகா ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவியது. ஆனால், பழனியில் இடம் ஒதுக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கியபாடில்லை.  மேலும் யோகாவிற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஏற்கனவே, 2015-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாசும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக தி.மு.க-வின் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் இதை மூடி மறைத்தனர். இந்தக் கல்லூரியை திறந்து வைத்தவரும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அரசின் அடைக்கலத்தின் மூலம்தான் இவர் இவ்வளவு அயோக்கியத்தனங்களையும்  ஆர்.எஸ்.எஸ்.-யிடம் அரங்கேற்றியுள்ளார். தற்போதும் ஆர்.எஸ்.எஸ். துணையோடு கொஞ்சமும் அச்சமின்றி தைரியமாக பேசி வருகிறார். சமீப காலமாக இந்த களவாணிகளின் கூட்டங்களில் ஆர்.என்.ரவி கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

படிக்க : SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை

இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் “ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்” என்று முழங்கி வருகிறது. அதில் ஒரு அங்கமாகத்தான் யோகாவை பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் டெல்லி தெருவெங்கும் படுத்து உருண்டெழுந்து யோகா ஆசனத்தை ஐ.நா.விலும் உலகெங்கிலும் எடுத்து சென்றது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டினர் விரும்பி வாங்கக் கூடிய ஒரு பண்டமாக யோகாவும், தியானமும் மாற்றப்பட்டது.  பெரிய அளவு டாலர் புழங்கக்கூடிய ஆன்மீக சந்தை ஆனது. அதனை தொடர்ந்து பல கார்ப்பரேட் யோகா மடங்கள், யோக குருஜிகள் தோன்றினர். இன்றைய யோகக் கலையின் உலக சந்தை மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். நமது 52 இன்ச் மார்பு உடைய மோடி டெல்லி எங்கும் உருண்டு புரண்டதற்கு பின் ஒளிந்திருப்பது இவையே.

80 பில்லியன் அமெரிக்க டாலருடைய யோகா கலையின் உலகச் சந்தையின் லாபத்தை பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு லாபம் ஏற்றுவதற்கே இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என்ற மருத்துவ பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயரில் காலை 5 மணிக்கே மாணவர்களை எழுப்பி கர்மயோகா உள்ளிட்ட பெயர்களில் எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி துன்புறுத்துவது, மரம் வெட்ட சொல்வது, சமையல் செய்ய வைப்பது, காரை துடைக்க சொல்வது என பார்ப்பனிய அடிமைத்தனத்தை புகுத்துகின்றனர்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் புகுத்தப்பட்ட பின்பு மருத்துவம் என்பது கடை சரக்காக மாறியது. அதற்கு தகுந்தாற்போல் சட்டங்களைத் திருத்தி புகுத்தினர். மத்தியில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை விட்டு விரட்டியடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே வேளையில் தமிழ்நாட்டில் உள்ள 20 யோகா மற்றும் மருத்துவ கல்லூரிகள் நீட் நுழைவு தேர்வேயின்றி, போலியான மருத்துவப்படிப்பு 20 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கப்பட்டு லாபம் ஈட்டுவதோடு காவி குப்பைகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அவர்களே கொண்டு வந்த நீட் தேர்வைகூட தூக்கி எறிந்து விட்டு தங்களது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வர் என்பது அம்பலமாகிறது.

மருத்துவத் துறையில் ‘வேத மரபுகளை’ திணிப்பதற்காகவும்; ஏகாதிபத்திய கொள்ளை லாபத்திற்காகவும் மோடி கும்பலை அண்டிப் பிழைக்கும் மணவாளன் போன்ற கிரிமினல்களுக்கு எதிராக நம் மண்ணிற்கும் மரபிற்குமான அந்தந்த மாநிலங்களின் மெய்யியல் மரபு சார்ந்த மருத்துவங்களை உயர்த்திப் பிடித்து மருத்துவர்களும் ஆய்வாளர்களும் மாணவர்களும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவதே தீர்வாக அமையும்!


ஊமைத்துரை

பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!

1

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று ₹500 மற்றும் ₹1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவும், இலஞ்சம் ஊழலை தடுக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். இதன் விளைவாக ஏடிஎம் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்ததும், வரிசையில் நின்று கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து இறந்த கொடூரங்களும் நமது மனங்களில் இருந்து மறையவில்லை.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்படாத முடிவு என்பதால் அதனை செல்லாது என அறிவிக்கக் கோரி 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று விசாரணை முடிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (ஜனவரி 2, 2023) வெளியாகியுள்ளது. இதில் நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.


படிக்க: பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?


பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மத்திய அரசின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதால் அரசின் இந்நடவடிக்கையில் எந்தக் குறையையும் காண இயலவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். “ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு 26(2)-இன்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான பரிந்துரை என்பது ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிடம் இருந்து வந்திருக்க வேண்டும்; ஆனால் இப்பரிந்துரை என்பது மத்திய அரசிடம் இருந்து வந்திருக்கிறது; ரிசர்வ் வங்கி தனது மூளையை சொந்தமாக பயன்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “இது போன்ற முக்கிய முடிவுகளில் நாடாளுமன்றத்தை புறந்தள்ளக் கூடாது. ரகசியம் தேவை என்று கருதினாலும் கூட அவசர சட்டமாக நிறைவேற்றி இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

நடைமுறையில் உள்ள சட்டங்களை இந்த ஆர்.எஸ்.எஸ்–பாஜக காவி கும்பல் கழிவறை காகிதமாக பயன்படுத்துகிறது என்பதையே நீதிபதி பி.வி. நாகரத்னாவின் மாறுபட்ட தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அனைத்து நீதிபதிகளுமே பணமதிப்பிழப்பை கொள்கை என்ற அளவில் ஏற்றுக் கொள்வதைத் தான் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. மாறுபட்ட தீர்ப்பு கூட பணமதிப்பிழைப்பை சட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளாததை மட்டுமே கேள்வி எழுப்பியிருக்கிறது. ‘அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம் பாசிசத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது நீதிமன்றம்.


படிக்க: பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !


பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம். பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்காமல், இவ்வளவு தூரம் காலதாமதப்படுத்தி இருப்பதானது நீதிமன்றம் ஆளும் வர்க்கத்திற்கு துணைபோய் இருப்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறது. நீதிமன்றம் மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது!

பொம்மி

ஜனவரி 25: இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் !
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் !

ந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடி போலீசால் குண்டடிப்பட்டும் தீக்குளித்தும் நஞ்சருந்தியும் உயிர்த்தியாகம் செய்து தமிழையும் தமிழ்நாட்டையும் காத்த மொழிப்போர் தியாகிகளின் இது 58வது ஆண்டு !

நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்து காப்பற்றப்பட்ட தமிழும் தமிழ்நாடும் இப்போது எப்படி இருக்கிறது? திரும்பிய பக்கமெல்லாம் இந்தியும் ஆங்கிலமும் புரையோடிக் கிடக்கிறது.  ஆரிய – பார்ப்பன வேத எதிர்ப்பையே உயிர் நாடியாகக் கொண்ட தமிழ்ப்பண்பாட்டை சிதைப்பதற்குத்தான் மோடியின் திருக்குறள் மீதான பாசம்! பிறப்பாலே எல்லோரும் சமம் என்ற திருக்குறளுக்கு, சாதி ஷேமகரமானது என்ற பார்ப்பனீய சாயத்தை பூசுகிறார்கள். காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் புல்லுருவிகளையும் தமிழ்த் துரோகிகளையும் வளர்க்கிறது மோடி – அமித்ஷா பாசிசக்கும்பல். சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தோன்றியதாக கதைவிட்டு, தமிழ் வரலாற்றை திரித்து எழுத முயல்கிறது பார்ப்பன நரிக்கூட்டம். என்ன தகிடுதத்தம் செய்து பொய்வரலாற்றை எழுதினாலும் சரி, தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஒவ்வாதவைதான் சமஸ்கிருதமும் பார்ப்பனீய பண்பாடும்.

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக்கூட எடுத்துப்படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அரசுப்பள்ளிகளில் கூட தமிழ் வழிப்பாடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆங்கிலவழிப் பள்ளிகளாக படிப்படியாக  மாற்றமடைந்துக் கொண்டிருக்கின்றன. தமிழே தெரியாமல், படிக்காமல் ஒருவர் எல்.கே.ஜி முதல் முனைவர் பட்டம் வரை வாங்கி விடலாம் என்ற இழிநிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த கேவலமான நிலைக்குத்தான் கீழப்பழுவூர் சின்னச்சாமி , திருச்சி ரயில் நிலைய வாசலில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டாரா? “ தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” என்று முழங்கி உயிர் நீத்தாரா?

படிக்க : இந்தி – அரசு பணியில் வட இந்தியர் திணிப்பு ! ஆர்.எஸ்.எஸ்.இன் ஐந்தாம் படை வேலை | மருது வீடியோ

இந்தி படித்தவர்க்கே கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டுமென்கிறது பாராளுமன்ற நிலைக்குழுவான அமித்ஷா குழு. வங்கிகளிலும் ரயில்வேயிலும் நிரம்பி வழிகிறது இந்தி ஆதிக்கம். கடந்த எடப்பாடி ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்திலும் கூட வட இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். மத்திய ஆயுதப்படைக்கு இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசுப்பணிக்கு இந்தி தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அஞ்சலக பணிக்கு வட இந்தியர்கள் தமிழில் தேர்ச்சி பெறுகின்றனர், தமிழர்களோ தோல்வியடைகின்றனர். இப்படி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்தி படிப்படியாக புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் கருவறையிலும் தமிழ் இல்லை; கல்வியிலும் தமிழ் இல்லை.

இந்த அநீதிக்கு எதிராக 1965-க்குப்பின் மிகப்பெரிய போராட்டம் வெடிக்காததால் துளிர் விட்டுப்போன ஒன்றிய அரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் அவர்தம் அடிவருடிகளும் ”இந்தி படித்தால் தப்பில்லை” என்று பேசிக்கொண்டு தமிழ்நாட்டிலேயே துணிவாகத் திரிகிறார்கள். தமிழ்நாட்டில், ஒன்றிய அரசுப்பணிகளில் திட்டமிட்டே வட இந்திய – ஆர்,எஸ்.எஸ் பாசிஸ்டுகள் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்ப்பனீய – வேத பண்பாட்டையும் மறுகாலனியாதிக்க நுகர்வு பண்பாட்டையும் மக்களிடம் திணிக்கிறார்கள்.  இதற்காகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் ராஜேந்திரன், போலீசின் துப்பாக்கிக்குண்டுக்கு தன்னை பலி கொடுத்தாரா?

மக்கள் அதிகாரம் துண்டறிக்கை – டவுண்லோடு

உலகிலேயே தாய்மொழியைக் காப்பதற்காக  நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்தார்கள் என்றால் அது தமிழுக்காக மட்டும் தான்.

தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் ஆரிய –பார்ப்பனியம் இன்னமும் முழுமையாக வெற்றி பெற முடியாத பன்னெடுங்காலப் போர் இது. இன்னுமொரு மொழிப்போர் வந்து விடக்கூடாதென்பதற்காகத்தான் ஒன்றிய அரசு  பல்வேறு கட்டங்களாக , பல்வேறு வடிவங்களாக, மறைமுகமாக  இந்தியை திணித்து வருகின்றது. அன்று இந்தி எதிர்ப்பு பேசிய பலரும் பின்னர் ஒன்றிய அரசின் ஆட்சிப் பதவி சுகத்துக்காக விலை போய்விட்டனர். நாம் என்ன செய்வது ? அமைதியாக இந்த இழி நிலையை ஏற்றுக்கொண்டு  மானங்கெட்டு வாழப்போகிறோமா இல்லை போராடப்போகிறோமா?

தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் போன்ற கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தூண்டுகோலாக தமிழ்மொழியும் தமிழ்மண்ணும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் மொழியும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அது  கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிரானதாக மாறும் ஆகவே இந்தித்திணிப்பு காவி பாசிஸ்டுகளுக்கு மட்டுமல்ல ; கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கும் ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது.

மொழி உணர்வும் இன உணர்வும் மட்டுமே பாசிசத்தையோ  கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையோ வீழ்த்திவிட முடியாது. . மொழி, இன உணர்வுடன் பாட்டாளி வர்க்க உணர்வும் இணையும் போதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த முடியும்.

படிக்க : சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !

இது ஆர்.எஸ்.எஸ் – பிஜே.பி பாசிச கும்பலின் ஆட்சி. அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் ஆட்சி.. இவர்களை வீழ்த்த வேண்டுமென்றால் மக்களாகிய நாம் பாசிச எதிர்ப்பு முன்னணியாக, ஒன்றிணைய வேண்டும்.

தேவை மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப்போர், அது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கெதிரான போராட்டமாக இருக்க வேண்டும். இவர்கள் அரசுத்துறைகள், சாதி – மத – நிறுவனங்கள் என அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு ரவுடிகள், பொறுக்கிகள், சமூக விரோதிகள் போன்ற ஐந்தாம் படையை வைத்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க  அம்பானி அதானி பாசிச கும்பல் நாளை தமிழ்நாட்டை கைப்பற்ற முயலும் போது தமிழ்நாட்டில் உள்ள இந்த ஐந்தாம் படையும்  அவர்களுடன் இணைந்து நம்முடன் மோதும். தமிழ்நாட்டின் மீதும் இன்னொரு முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்கும் !  தப்பிச்செல்வதற்கு இடமேதுமில்லை. அங்கே நந்திக்கடல், இங்கே வங்கக்கடல். நமது மண்ணில் ஊன்றி நின்று பாசிசத்தை வீழ்த்துவோம். ஹிட்லர் – முசோலினியின் வாரிசுகளுக்கு முடிவு கட்டுவோம் !

  • இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் !
  • ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் !
  • பாசிச எதிர்ப்பு ஜனநாயகக்குடியசை கட்டியமைப்போம் !
  • பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!
  • காவி- கார்ப்பரேட் பாசிசம் முறியடிப்போம் !


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

“சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

“சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

சென்னை நுங்கம்பக்கதில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலை சம ஊதியம்”  என்ற கோரிக்கையுடன் கடந்த 27-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போரட்டத்தை அறிவித்து போராடிவருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2009- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் வேறுபாடு உள்ளது.

இந்த வேறுபாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை  டி.பி.ஐ வளாகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், தொடர்ந்து 5-வது நாளாக போராடி வந்த நிலையில், நேற்று (1.1.2023) நடந்த பேச்சு வார்த்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்களுடைய பிரச்சினையை சட்டமன்றத்தில் தனித்தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளதன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.

அரசு இதுபோன்று வாக்குறுதி அளிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 13-வருடங்களாக இவர்களுக்கு மிஞ்சியது இதுபோன்ற ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகள்தான்.

படிக்க : இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

இந்த ஊதிய வேறுபாடு எப்போதிலிருந்து ஏற்பட்டது என்று அங்கிருந்த ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது “6-வது ஊதிய குழுவிலிருந்துதான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதாவது 6-வது ஊதியக்குழுவில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியை குறைத்து, மே-31, 2009-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.8,370-ஆக இருந்த அடிப்படை சம்பளத்தை, அதற்கு பின் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200-ஆக குறைத்து அறிவித்தது தமிழக அரசு. ஒரே பணி ஒரே கல்வித்தகுதி ஆனால் ஊதியத்தில் மட்டும் வேறுபாடு இருக்கிறது. தொடக்கத்தில் இருந்த ஊதிய வேறுபாடு அதாவது அடிப்படை ஊதியத்தில் இருந்த வேறுபாடு என்பது 3170-ஆக இருந்தது, அது நாளாக நாளாக இப்போது 15,000 முதல் 17,000 வரை உயர்ந்துள்ளது. இதை எதிர்த்துதான் போராடி வருகிறோம்” என்றார்.

இது ஏதோ இன்றைக்கு தொடங்கிய போரட்டம் கிடையாது, இதற்கு முன்பு

  • ஜாக்டோ-ஜியோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் போரட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைப்பது.
  • இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தை தொடங்கியது
  • 2016-ஆம் ஆண்டில் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
  • 7-வது ஊதியக்குழு அமைக்கப்படும்போது, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
  • 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம்.
  • 2018 ஏப்ரலில் 4 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம்.
  • 2018 டிசம்பர் 23-ஆம் தேதி டி.பி.ஐ-யில் போராடினார்கள். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இந்த கோரிக்கையை ஏற்று உடனே சரி செய்ய வேண்டுமென்று அப்போதைய தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

ஒருவேளை அ.தி.மு.க அரசு செய்யவில்லை என்றால் நாங்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவோம் என்று வாக்குறுதியும் அளித்தார்.

அதன்பின்னர்  தி.மு.க-வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கை என்பதில் (அறிக்கை 311-யில்) 2009-மே மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலை சம ஊதியம்” வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி கேட்கும்போது ஒரு ஆசிரியர், “தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகிவிட்டது. இந்த 20-மாதத்தில் பலமுறை அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் எங்களுடைய கோரிக்கைகளை கொண்டுச் சென்றோம். அவர்களும் உங்களுடைய பிரச்சினை நியாயமானது, ஒரே இடத்தில் பணி செய்பவர்களுக்கு இதுபோன்று ஊதிய வேறுபாடு இருக்கக் கூடாது. இதை சரி செய்வதற்கான முயற்சியை எடுக்கிறோம் என்று கூறினாலும், இதுவரை அதற்கான எந்த உத்தரவாதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை இந்நிலையில்தான் நாங்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 27-தேதி முதல் எங்களுடைய உரிமைக்காக 6 நாட்களாக போராடி வருகிறோம் என்றார்.

இவர்கள் தொடர்ச்சியாக குழந்தைகளின் படிப்பு பாதிக்காத வகையில் பள்ளி விடுமுறை நாட்களில்தான் போரடி வருகின்றனர். இம்முறையும் அதனால்தான் விடுமுறை நாட்களை தேர்வு செய்து போராடி வருகின்றனர்.

கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என அனைவரிடமும் கோரிக்கையை கடிதமாக கொடுத்துள்ளோம். எல்லோரும் இதனை முதலமைச்சரிடம் எடுத்துச் செல்வதாகவும், அவரிடம் இது தொடர்பாக பேசி வருவதாகவும் கூறுகின்றார்களே ஒழிய, இந்த வருடத்துக்குள்  -இந்த மாதத்திற்குள்- செய்து தருகிறோம் என்று எங்களுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை. கடிதத்தின் வழியாகவோ, ஒரு அறிக்கை மூலமாகவோ உறுதியளித்தால் நாங்கள் கலைந்து செல்வோம் என ஆசிரியர்கள் இம்முறையும் எதிர்பார்ப்பது கால எல்லையுடன் கூடிய அதே வாக்குறுதியைத்தான்.

ஆனால் 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை வருத்திக் கொண்டு, குடும்பத்துடன் போராடிவரும் இவர்களை திட்டமிட்டே அரசு புறக்கணிப்பதன் நோக்கம், போராட்டத்தை சீர்குலைப்பதும், ஆசிரியர்களின் மனவலிமையைக் குறைத்து “இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை” என்ற விரக்தி மனநிலைக்குத் தள்ளி மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தடுப்பதும்தான்.

அரசின் செலவுகளை குறைப்பதற்காகத்தான் தகுதி குறைக்கப்பட்டு, சம்பளம் குறைக்கப்படுகிறது என 6-வது ஊதியக்குழுவில் சொல்லப்பட்டது. இப்போதும் அதைச் சொல்லித்தான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைப்பது, நிதிப் பற்றாக்குறை என்று நாடகமாடுவது எல்லாம் தொடர்கிறது. “ஆட்சி அமைத்து சில மாதங்களிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி  ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் செலவிடப்படுவதாக கூறியதே இதற்கு சாட்சி”

தனியார் பள்ளிகளில் 25 சதவிகத ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்லி கல்விக் கொள்ளையர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் அரசு. ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியில் 1/3 பங்கு மட்டுமே ஒதுக்குகிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு ஒதுக்குகின்ற நிதியை எடுத்து அரசுப் பள்ளி கட்டமைப்புகளை சரி செய்யலாம் இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கலாம். ஆசிரியர்களுக்கு சரியான ஊதியத்தை கொடுக்கலாம்.

ஆனால், தி.மு.க செய்வது என்ன? “இல்லம் தேடி கல்வி”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல்” திட்டம் என பல வழிகளில் புதிய கல்விக் கொள்கையை திராவிட மாடல் போர்வையுடன்  நடைமுறைப்படுத்துவது.

மேலும், “சம வேலை சம ஊதியம்” என்ற கோரிக்கையை 13 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருப்பது. 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த 70,000 பேர் இன்றுவரை பணிக்காகப் போராடி வருகின்றனர். 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நேரடி நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை டெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து வேலையை உறுதிப்படுத்திக்கொள்ளச் சொல்வது, இவையெல்லாம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் திராவிட மாடல் ஆட்சியிலும் நீடிக்கும் அவலம்தான். இதுவரை தீர்வுகாணப்படவில்லை. அந்த நோக்கமும் தி.மு.க-விற்கு இல்லை.

ஊதியக்குறைப்பு, அரசுத்துறையில் செவிலியர், துப்புரவுப் பணியாளர்களைப் போல நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்த முறையை புகுத்துவது என செலவினங்களை மிச்சப்படுத்துவதும், மறுபுறம் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதங்களிலே 2774 தற்காலிக ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் 5 மாதத்திற்கு நியமித்து காண்ட்ராக்ட் மயமாக்கும் நடவடிக்கைகளும்தான் இந்த சமூக நீதி ஆட்சி சாதித்தது.

படிக்க : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

இவையெல்லாம் கல்வித்துறையை தனியாருக்கு திறந்து விடுவது, காண்ட்ராக்ட் மயமாக்குவது என தனியார்மய – தாராளமயக் கொள்கையின் அங்கமே. இவற்றை அமல்படுத்துவதே எல்லா ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் பிறவிக் கடன், திமுக இதனை திறம்படச் செய்கிறது.

சம வேலை சம ஊதியம் கோரி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்து இடைநிலை ஆசிரியர் பணிக்காக  காத்திருப்பவர்களின்  போராட்டம், நீட் – புதியக்கல்விக் கொள்கைக்கு எதிரான மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம். என அனைத்தையும் ஒன்றிணைப்போம்.!

ஓட்டுக்கட்சிகளின் போலி வாக்குறுதிகளை நம்பியது போதும், ஒருங்கிணைந்த முறையில் கல்வித் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்!

வினவு களச்செய்தியாளர்  

‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!

சுமார் ஒன்றிரண்டு மாத கால அளவிற்குள் அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன், பிரேசில் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில், பாசிச சக்திகள் வலுவடைந்து வருகின்ற நிகழ்வுப் போக்கை காணமுடிகிறது. இது அந்நாடுகளின் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய அச்சமூட்டும் போக்காகும்.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாகவே, உலகெங்கிலும் புற்றீசல் போல பாசிச சக்திகள் வளர்ந்துவருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதேநேரம், அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறுவதற்கு, இதுநாள் வரை அந்நாட்டை ஆண்ட ‘ஜனநாயக’, ‘சோசலிச’ முகமூடி அணிந்த ஆளும் வர்க்க கட்சிகளே காரணமாக இருக்கின்றன. மேற்சொன்ன ஒவ்வொரு நாடுகளிலும் இதை நாம் பார்க்க முடிகிறது!

இத்தாலி: ஆட்சி அதிகாரத்தில் முசோலினியின் வாரிசுகள்!

1922 அக்டோபரில் பாசிஸ்ட் முசோலினி இத்தாலியில் அதிகாரத்திற்கு வந்தான். சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனது வாரிசுகள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். இத்தாலியில் சென்ற மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சி (இ.ச.க.) தலைமையிலான கூட்டணி 46 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இ.ச.க.வின் தலைவரான ஜியார்ஜியா மெலோனியை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

படிக்க : பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!

2018-இல் நான்கு சதவிகித வாக்குகளை மட்டும் பெற்ற இ.ச.க.வானது, தற்போது 26 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசு இயந்திரம் மற்றும் சமூகத்தில் ஊடுருவியுள்ள நவ-நாஜி பாசிசக் குழுக்களின் ஆதரவே இவ்வசுர வளர்ச்சிக்கு காரணமாகும். மேலும், மெலோனி முசோலினியின் பாசிசக் கட்சியின் நேரடி வழித்தோன்றலான ‘இத்தாலிய சமூக இயக்கம்’ (Movimento Sociale Italiano) என்ற அமைப்பின் இளைஞர் பிரிவிலிருந்து வந்தவராவார்.

மேலும், இக்கட்சி முழுவதும் வெறிபிடித்த வன்முறை எண்ணம் கொண்ட பாசிஸ்டுகளால் நிரம்பி வழிகிறது. காசாபவுண்ட் (Casapound) போன்ற வெறிபிடித்த நவ-நாஜி குழுக்களுடன் இக்கட்சி நெருங்கிய உறவுகளைப் பேணுகிறது.

இத்தாலியில் நீண்ட காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடிகள், ஆளுங்கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திகளைத் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்துள்ளது; நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கார்ப்பரேட் நலன்சார்ந்த பொருளாதாரத் திட்டங்கள்தான் காரணம் என்ற உண்மையை மறைத்து, புலம்பெயர்ந்தோர் – அகதிகளால்தான் இத்தாலியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொய் பிம்பத்தை அவர்கள் பரப்பியுள்ளார்கள்; முசோலினியின் காலத்திய “கடவுள்-குடும்பம்-தாயகம்” என்ற தேசிய-இனவெறி முழக்கத்தை மீண்டும் அவர்கள் உயிர்ப்பித்துள்ளார்கள்.

இக்கும்பலின் நச்சுப் பிரச்சாரத்திற்கு இத்தாலிய தொழிலாளர் வர்க்கத்தின் ஒருபகுதியும் பலியாகியிருப்பதுதான் வேதனைக்குரிய விசயம். கம்யூனிஸ்ட் மறுமலர்ச்சிக் கட்சி (Rifondazione communista) போன்ற போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் வர்க்க அரசியலைப் பரப்பாமல், ஆளும் வர்க்கக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு துரோகமிழைத்ததுதான் பாசிஸ்டுகளின் செல்வாக்கிற்கு அடிப்படையாகும்.

பிரான்ஸ், ஸ்வீடன்: வளர்ந்துவரும் நவ-பாசிஸ்டுகள்!

இத்தாலியைப் போல, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலும் பாசிசக் கும்பல்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன; இந்நாடுகளில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளிலும் இது பிரதிபலித்தது.

ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் கட்சி (Sweden Democrats) நவ-நாஜிகளால் நிறுவப்பட்டதாகும். இக்கட்சியினர் யூத இன எதிர்ப்பை தங்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பிரான்ஸில் மரின் லு பென் தலைமையிலான தேசிய பேரணி கட்சி (National Rally) வளர்ந்துவருகிற பாசிசக் கட்சியாகும். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, பிரான்ஸ் மக்களிடம் வளர்ந்துவரும் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை இவர்கள் அறுவடை செய்துகொண்டனர்.

வளர்ந்துவரும் வேலையின்மைக்கு புலம்பெயர்ந்தோரைக் காரணமாகக் காட்டுவது உலகெங்கும் உள்ள நவ பாசிஸ்டுகள் கையாளும் பொதுவான உத்தியாகும். ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் கட்சியும் பிரான்ஸின் தேசிய பேரணியும் இதை தீவிரமாக கொண்டுசெல்கின்றன. பிரான்ஸில் கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆபத்துகளைப் பற்றி அவையில் பேசியபோது, இப்பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர்கள், “ஆப்பிரிக்காவுக்கு திரும்பிப் போ” என்று அவரை நோக்கி முழக்கமிட்டுள்ளனர். புலம்பெயர்ந்த அகதிகளுக்கு எதிரான இத்தகைய வெறிப்பேச்சுகள், அடுத்தகட்டமாக அவர்கள் மீதான தாக்குதலாக மாறவும் வாய்ப்புள்ளதை இப்பாசிசக் கும்பல்களின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

இஸ்ரேல்: யூத இனவெறி பாசிசம்!

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு, யூத இனவெறி பாசிசக் கட்சியான மத சியோனிசக் கட்சியுடன் (Religious Zionism) கூட்டணி அமைத்ததன் மூலம் பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ளார்; நெதன்யாகு இப்பாசிசக் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதானது, பாலஸ்தீனர்கள் மீதான யூத இனவெறி தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துள்ளது என்றே கூறவேண்டும்.

நெதன்யாகு ஒரு யூத இனவெறியாளர். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த யூத இனவெறியைப் பயன்படுத்தித்தான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். 2021-ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பென்னட் மற்றும் லபீட் ஆகியோரும் யூத இனவெறியாளர்களே. தற்போது மீண்டும் நெதன்யாகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

போலி கம்யூனிஸ்ட் கட்சி, அரபுக் கட்சி மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சி என பல வண்ணக் கட்சிகளுடன் கூட்டணி கட்டி, 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றிய பென்னட் கும்பல் தலைமையிலான ஆட்சி நீடிக்கவில்லை. தோல்வியைத் தழுவியிருந்த நெதன்யாகு, தீவிர யூத இனவெறிப் பிரச்சாரம் செய்தார். காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு பென்னட் அரசாங்கம் பணி ஒப்புதல் வழங்கிய நாடகத்தைக் காட்டி இனவெறி தூபம் போட்டார். அதன் விளைவாக, ஆளுங்கட்சியின் கொறடாவான இடிட் சலீம், “சித்தாந்த ரீதியாக இஸ்ரேல் அரசு சமரசம் செய்வதாக”க் கூறி அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அதை எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆளும் கூட்டணி கட்சியினரே மக்கள் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஆட்சியைக் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதையே இந்நிகழ்வு பறைசாற்றியது.

இதுவரை இஸ்ரேலில் நடந்துள்ள ஆட்சி மாற்றங்கள் அனைத்தும் யூத இனவெறியர்களுக்கு இடையிலான நாய்ச்சண்டையின் வெளிப்பாடுகளே அன்றி வேறல்ல. ஆனால், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான யூத இனவெறியானது வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரம் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதான மக்களின் கோபத்தைத் திசைதிருப்பி, பாசிசத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பது புதிய போக்காகும்.

தற்போது நெதன்யாகுடன் கைகோர்த்துள்ள பாசிஸ்டுகள், நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைப்பது மற்றும் சட்டமியற்றுவர்களின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே பாசிச எதேச்சதிகாரத்தைக் கொண்டுவர எத்தனிக்கிறார்கள்.

’கடவுள்-குடும்பம்-தாயகம்’ என்ற முசோலினியின் தேசிய இனவெறி முழக்கத்தை மீண்டும் கடைவிரிக்கும் மெலோனி

அமெரிக்கா: நீறுபூத்த நெருப்பாக பாசிச அபாயம்!

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான வெள்ளை நிறவெறி பாசிச கும்பல், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரத்த வெறிபிடித்த ஓநாயைப் போல காத்துக்கிடக்கிறது. அண்மையில் நடைபெற்ற செனட் சபை தேர்தலில் பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி ஏற்கெனவே பெற்றிருந்த 21 இடங்களில் 20 இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சியை விட அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன்விளைவாக, 2024-இல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். உட்கட்சித் தேர்தல் நடத்தி அதிபர் வேட்பாளரை அறிவிப்பதுதான் அமெரிக்காவில் பின்பற்றப்படும் ஜனநாயக மரபாகும்; ஆனால் உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக, மக்கள் மத்தியில் தனக்கு உருவாகி உள்ள ஆதரவு மனநிலையை அறுவடை செய்து கொள்வதற்காக, தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டுள்ளார் டிரம்ப். அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவைப் பற்றி “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என தேசிய வெறியைத் தூண்டி பிரச்சாரம் செய்துவருகிறார்.

வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்களான பிரவுட் பாய்ஸ் (Proud boys), கு க்ளக்ஸ் கிளான் (Ku  Klux Klan), நியோ-கான்ஃபெடரேட் (Neo-Confederate), நியோ-நாஜி (Neo-Nazi), ரேசிஸ்ட் ஸ்கின்ஹெட் (Racist Skinhead), கிறிஸ்டியன் ஐடண்டிட்டி (Christian Identity) போன்ற பல வண்ண வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்கள் டிரம்ப்பை ஒருமனதாக ஆதரிக்கின்றன.

2021 ஜனவரி 06-ஆம் தேதி நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு சதி அரங்கேற்றத்திற்கு பிறகு டிரம்ப்பை ஆதரிக்கும் வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்களின் சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள் முன்பைவிட அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில், பாசிசக் கருத்துகளைப் பரப்பிய 750 சமூக ஊடகக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களைக் கண்டறிந்து நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், பாசிஸ்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்பதே நடைமுறை எதார்த்தம்.

பிரேசில்: லூலாவின் வெற்றி தற்காலிகமானதே!

பிரேசிலில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில், பாசிஸ்ட் பொல்சனாரோ தோல்வியடைந்திருப்பதையும் லூலா வெற்றி பெற்றிருப்பதையும் உலகெங்கிலும் உள்ள போலி கம்யூனிஸ்டுகள் முக்கியத்துவமுள்ள வெற்றியாக கொண்டாடிவருகின்றனர்.

எனினும், ஏழு லட்சம் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கொரோனா நோய்த்தொற்று பரவலில் அலட்சியம் காட்டியது, அமேசான் காடுகளின் பெரும்பகுதியை எரித்து அங்கிருக்கும் பழங்குடியினரை வெளியேற்றியது, நல்வாழ்வுத் திட்டச் செலவினங்களைக் குறைத்தது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை அரங்கேற்றிய பின்னரும், பொல்சனாரோவுக்கு 49.1 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

மேலும், லூலா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பொல்சனாரோ கட்சியே பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதனைப் பயன்படுத்தி லூலாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை இடுவதன் மூலம், ஆளும் கூட்டணியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி, பொல்சனாரோ கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சுவிசேஷ கிறிஸ்துவ வெறியைப் பரப்பும் பொல்சனாரோவுக்கு அம்மதப்பிரிவினர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவுதளம் உள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரங்களில் சுவிசேஷ கிறிஸ்துவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, லூலா அம்மதக் கோட்பாடுகளை ஆதரித்துப் பேசினார். ‘இடதுசாரி’ என்று அழைக்கப்படும் லூலாவின் உண்மை முகம் இதுதான்.

பொல்சனாரோவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இணைந்துள்ள ஆளும் கூட்டணிக் கட்சிகளும், கொள்கை ஏதுமற்ற பிழைப்புவாதக் கட்சிகளாகவே உள்ளன. இவையெல்லாம், எந்த நேரத்திலும் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்துடன், பொல்சனாரோ கும்பலின் தூண்டுதலில் சுவிசேஷ கிறிஸ்துவர்கள் வன்முறை கும்பல்கள் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக கலவரங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பிரேசிலின் இந்தத் தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாக, சமூக ஊடகங்களில் இராணுவ சதி மற்றும் வன்முறை எழுச்சிக்கு சுவிசேஷ கிறிஸ்துவ வெறிக்கும்பல்கள் அழைப்பு விடுத்தன. “நாங்கள் குண்டர்கள் அல்ல; நாங்கள் உங்கள் சுதந்திரத்திற்காகப் போராடும் பிரேசிலியர்கள்”, “இராணுவத் தலையீடு அல்லது கம்யூனிசம்!”, “இராணுவ தலையீடு இல்லாமல் இந்த நாட்டில் எதுவும் மாறாது!” போன்ற கம்யூனிச எதிர்ப்பு, சர்வாதிகார ஆதரவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. எனவே, லூலாவின் வெற்றி நீர்க்குமிழியை ஒத்ததே!

முகமூடிகளை கிழித்தெறிவோம்!

உலகெங்கிலும் பல நாடுகளில், பாசிசக் கும்பல்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவருகின்றன. தீவிர வலதுசாரி பிற்போக்குக் கும்பல்களும் சரி, சோசலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவினரானாலும் சரி தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தையே தங்களது கொள்கையாக வைத்துள்ளன.

படிக்க : சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!

ஆனால், மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரங்கள் மென்மேலும் கீழ்நிலைக் கொண்டு செல்லப்படுகிறது. தீவிர வலதுசாரி பாசிசக் கும்பல்கள் கார்ப்பரேட் நலன் சார்ந்த இக்கொள்கைதான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றன.

ஜனநாயக முகமூடி தரித்த கும்பல்களோ, இந்த மறுகாலனியாக்க கொள்கைகளையே நடைமுறைப்படுத்திக் கொண்டு, அவற்றை எதிர்ப்பதாக நாடகமும் ஆடுகின்றன. மேலும், ஊழல் முறைகேடுகளில் சிக்கிச் சீரழிந்துள்ளன. இந்த சீரழிவும் துரோகமும்தான், பாசிச கும்பல்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம், இத்தகைய கட்சிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிவதில் இருந்தே தொடங்கப்பட முடியும்!

அமீர்

சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!

வம்பர் 20-ஆம் தேதி அன்று, பழைய சோவியத் தயாரிப்பு ஏவுகணை ஒன்று போலந்தின் மீது விழுந்து சேதம் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா, நேட்டோ நாடு ஒன்றின் மீது ஏவுகணையை வீசியதன் மூலம் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவைத்துவிட்டது என்ற பீதியூட்டும் பிரச்சாரம் மேற்கத்திய ஊடகங்களால் பரப்பப்பட்டது.

இப்பிரச்சாரத்திற்கு ரஷ்யா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. சற்றுநேரத்தில், அந்த ஏவுகணை உக்ரைனின் வான்வழித் தாக்குதலை சமாளிக்கும் ஏவுகணைதான் (சோவியத் தயாரிப்பு ஏவுகணை உக்ரைனிடமும் உண்டு) என்றும், இலக்கு தவறி போலந்தின் மீது விழுந்துள்ளதும் தெரியவந்தது. அதன்பிறகு, போலந்தின் அதிபர், நேட்டோவின் பொதுச்செயலர், அமெரிக்க அதிபர் பைடன் என பலரும் இந்நிகழ்வை ‘எதிர்பாராத விபத்துதான்’ என்று பேட்டிகொடுக்கத் தொடங்கினர்.

இந்நிகழ்வைப் போன்றே, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் ஒன்று, புடின் ஆட்சியைத் தூக்கியெறியுமாறும் புடினைக் கொல்லுமாறும் ரஷ்யாவில் இருக்கும் பாசிச ஆதரவு தத்துவவியலாளர் அலெக்சாண்டர் டுகின் அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியிட்டது; சிறிது நேரத்தில், தான் அவ்வாறு சொல்லவில்லை என்று டுகின் மறுப்பு தெரிவித்ததால், அது போலிச்செய்தி என்று அம்பலமானது.

உலக அளவில் பரவிய இந்த இரண்டு செய்திகளும் சில மணி நேரங்களில் உலகையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கான பெரும் ‘செய்தி அணுகுண்டு’களாக திகழ்ந்தன என்றால் மிகையில்லை. எந்நேரத்திலும் மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடலாம் என்று அஞ்சுவதற்கான சூழல் உண்மையிலேயே நிலவுவதுதான் இத்தகைய போலிச் செய்திகள் பரப்புவதற்கான அடிப்படையாக உள்ளது.


படிக்க : பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!


சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தனக்கு போட்டியாக வளர்ந்துவரும் ரஷ்யாவை அடக்குவதற்காகவும் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் உலகப் போராக வளர்வதற்கான சூழலை உருவாக்குகின்றன. தற்போது ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவித்திருப்பதானது இந்த உலகப்போர் அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் அமெரிக்காவும் அணுஆயுத நாடுகளாக இருப்பதால், உலகப் போர் மூண்டால் அது அணு ஆயுதப் போராகவும் இருக்கும் என்று உலகமே பீதியில் உறைந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நாய்ச்சண்டையில், உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் மீது அநீதியான பயங்கரவாதப் போர்கள் திணிக்கப்படுகின்றன. ரஷ்யாவும் உக்ரைனும் இப்போரில் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்றாலும், இப்போர் சர்வதேச வர்த்தகத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் மறைமுகமாக எல்லா நாடுகளுமே பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ரஷ்ய-உக்ரைன் போர் என்பது ஏகாதிபத்தியங்கள் நம் மீது திணித்திருக்கும் பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் மட்டுமே. இன்னும் எண்ணற்ற தளங்களில், வடிவங்களில் ஏகாதிபத்தியங்களால் உழைக்கும் மக்கள் மீது பயங்கரவாதங்கள் ஏவப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் இனம்காணும்போதுதான், ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பு வீழ்த்தப்பட வேண்டிய அவசியத்தையும், அதை வீழ்த்தும் வழிவகைகளையும், சோசலிசத்தின் கட்டாயத்தையும் நாம் உணர்ந்திட முடியும்!

சூழலியல் அவசரநிலை: உயிர்கோளத்தையே அச்சுறுத்தும் பயங்கரவாதம்!

அண்மையில், அண்டாலாண்டிக் கண்டத்தில் உருகிவருகின்ற 120 கி.மீ. அகலம் கொண்ட ‘த்வைட்ஸ் பனிப்பாறை’ எதிர்பார்த்த காலத்தைவிட இன்னும் வேகமாக உருகி கரைந்துவிடும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பமயமாதலின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ‘காலநிலை மாற்றம்’ அல்லது ‘சூழலியல் அவசரநிலை’-இன் ஒரு அங்கம்தான் வடதுருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல். இமயமலையில் இருக்கும் பனி உருகி ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தைவிட அதிகமாக வெள்ளம் கரைபுரண்டோடுவதை நாம் பார்க்கிறோம்.

1992-இல் உருவாக்கப்பட்ட ’காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா-வின் கட்டமைப்பு மாநாட்டில்’ 165 நாடுகள் பங்கேற்றன. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்கும் வகையில், பசுமைக் குடில் வாயுக்கள் மற்றும் கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டது. இம்மாநாட்டில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக தொழில்துறையில் முன்னேறிய நாடுகள் (ஏகாதிபத்திய நாடுகள்) செய்ய வேண்டிய கடமைகள், மற்ற நாடுகள் செய்ய வேண்டிய கடமைகளை வரையறுத்து ‘கியோட்டோ நெறிமுறைகள்’ உருவாக்கப்பட்டது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையானது, 2030-ஆம் ஆண்டுக்குள் மேற்கண்ட வாயுக்களின் உமிழ்வை 50 சதவிகிதம் குறைக்க வேண்டுமென முடிவு செய்தது. இவ்வொப்பந்தம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு சார்பாக, ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் – கட்டுப்பாடுகளைக் குறைத்து கியோட்டோ நெறிமுறைகளை முறியடித்துவிட்டது.

பாரிஸ் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த எந்த நாடும் தயாராக இல்லை. இதற்காக ஆண்டுதோறும் நடக்கும் மாநாடுகள் எல்லாம் தோல்வியில் முடிவடைந்து வருகின்றன. அண்மையில், எகிப்தில் நடைபெற்ற சி.ஒ.பி-27 மாநாடு இன்னொரு அரட்டை மடமாகவே அமைந்திருந்தது.

மொத்தத்தில், உலக மக்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

காலநிலை மாற்றத்தை நாம் எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாடுகளுக்கும் பனிமலைகளுக்கும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சென்ற மாதம் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்தபோது, என்ன நடந்தது என்பதைக் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன; வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைப்போலவே, இந்த ஆண்டு அனல் காற்று வீசியபோது ஆந்திரா போன்ற மாநிலங்களில் பகலில் வெயிலில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அடிக்கடி புயல் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

இவையெல்லாம், அவசரநிலை அறிவிப்புகள் அல்லவா? இவற்றை மீறினால் நாம் உயிரிழப்புகளைச் சந்திப்போம் என்பதுதானே எதார்த்த நிலைமை. இந்த எதார்த்த நிலைமைதான் பயங்கரவாதமாகும்.

இந்த பயங்கரத்தை நம்மீது திணித்த குற்றவாளிகள் யார்? வரைமுறையின்றி இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள்; ஏரி குளம் ஆறுகளை ஆக்கிரமித்தல், அவற்றை அழித்தல்; காற்று மாசுபாட்டுக்குக் காரணமான தொழிற்சாலை, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு; கடற்கரைகள், காடுகளை அழித்து சொகுசு விடுதிகளைக் கட்டுதல் போன்ற பல நடவடிக்கைகளின் சூத்திரதாரிகள் யார். இவர்கள்தான் ஏகாதிபத்தியவாதிகள், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள். இவர்களின் லாபவெறியின் விளைவாகவே நம் மீது சூழலியல் அவசரநிலை என்ற பயங்கரவாதம் திணிக்கப்பட்டுள்ளது.

மறுகாலனியாக்க கொள்கைகளே பயங்கரவாதம்தான்!

’தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ என்ற புதிய தாராளவாதக் கொள்கை கொண்டுவரப்பட்டபோது, அதை நாம் பின் தங்கிய நாடுகளை மேல்நிலை வல்லரசுகளுக்கு அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்க கொள்கை என்றோம். அப்போது உலகெங்கும் ஆட்சியில் இருந்த தாராளவாதிகளும் போலி சோசலிஸ்டுகளும் தாம் நடைமுறைப்படுத்துவது “மனித முகம் கொண்ட தாராளமயம்” என்று வருணித்தார்கள். ஆனால் மறுகாலனியாக்கத்திற்கு மனித முகம் கிடையாது. ஏனென்றால், அது மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது.

வேலையின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவற்றில் மட்டுமல்ல, வரைமுறையற்ற இயற்கைச் சுரண்டலால், சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்; வனவிலங்குகளின் தாக்குதல் காட்டோர மக்களை அச்சுறுத்துகிறது. பழங்குடியினர் காடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர்; வேலை எப்போது பறிபோகும் என்று அச்சத்தில் உழல்கிறான் தொழிலாளி; கலவரங்களும், படுகொலைகளும் கும்பல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் நடந்துவரும் விபத்துகள், கிரிமினல் குற்றங்கள், பாலியல் அடக்குமுறைகள் இந்த சமூகம், வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டதை உணர்த்துகின்றன.

இந்த சூழல்தான் மறுகாலனியாக்க பயங்கரவாதமாகும். பயங்கரவாதம் என்பது மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருப்பதாகும். எப்போது எங்குக் குண்டுவெடிக்கும் என்று பதட்டத்திலேயே மக்களை இருக்க வைக்க ஆங்காங்கே குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவது, கலவரங்களை நடத்துவது, இனப்படுகொலைகளை அரங்கேற்றுவது பயங்கரவாதத்தின் வழிமுறைகளாகும்.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தையும் அமெரிக்காவின் கொள்கைகளையும் ஏற்கமறுக்கும் நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்துவருவதுதான் பயங்கரவாதப் போர்களாகும். நாடுகள் மீது பொருளாதாரத் தடை என்பதைவிட கொடிய பயங்கரவாதம் இருக்கிறதா? ஆப்கான், ஈராக், ஈரான், சூடான் என பல நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகள், அப்பாவிகள் எத்தனை இலட்சம் பேர். இவையெல்லாம், பயங்கரவாதம் இல்லையா?

000

1990-களில் ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பு, கல்வி என்பது அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவையாக இருந்தது. குடிநீர் அனைவருக்கும் பொதுவானது. ஆறுகள், சாலைகள் என அனைத்தையும் பொதுவாகவே பார்த்துப் பழகினோம். இவற்றை அடிப்படை உரிமைகள் என்றும் மக்களுக்கு இவற்றை இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்றும் முதலாளித்துவ அறிஞர்களும்கூட பேசினர். இவற்றை ‘நேருவின் சோசலிசம்’ என்று இந்தியாவிலும் ‘இளஞ்சிவப்பு சோசலிசம்’ என்று தென்னமெரிக்க நாடுகளிலும் பேசினார்கள்.


படிக்க : கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!


1990-களின் தொடக்கத்தில் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்டபோது அதை நாம் எதிர்த்தோம். தண்ணீரும் காற்றும் கூட தனியாராகப் போகிறது என்றோம். மெட்ரிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டபோது, இதனைக் கல்வி தனியார்மயமாக்கத்தின் ஆரம்பம் என்றோம், அரசு கல்வி வழங்குவதில் இருந்து விலகுகிறது என்றோம். பலரும் அப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டார்கள். இப்போது “குடிப்பதற்கு கேன் தண்ணீர் இல்லையா” என்று கேட்பது இயல்பாகத் தோன்றுகிறது, அரசுப் பள்ளிகளைவிட மெட்ரிக் பள்ளிகளை கவுரவமாகப் பார்க்கின்றோம். ஆம், சகல துறைகளிலும் தனியார்மயத்திற்கு நாம் அடிமைப்பட்டு விட்டோம்.

கல்வி, சாலை, மருத்துவம், தண்ணீர், காற்று அனைத்தும் தனி உடைமையாகி (முதலாளித்துவ உடைமை) மக்களிடமிருந்து அந்நியமாக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் இவற்றை தொழில்களாக்கி வளைத்துப் போடுகின்றார்கள். இத்தகைய கார்ப்பரேட் கும்பல்களுக்கு சேவை செய்வதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அது மோடி.

மறுகாலனியாக்கம் ஏவியுள்ள நுகர்வுவெறிப் பண்பாடு!

1990-களுக்குப் பின்னர் வளர்ந்து வரும் மறுகாலனியாக்க பயங்கரவாத நிலைமைகளுக்கேற்ப, ஒவ்வொரு நாட்டிலும் பிற்போக்கு சக்திகள் வளர்ந்து வந்துள்ளன. இவையும் மறுகாலனியாக்கமும் இணைந்த ஆட்சி முறைதான் பலநாடுகளில் உள்ள பாசிசக் கட்சிகளின் செல்வாக்கும் அவற்றின் வளர்ச்சியுமாகும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசமும் அத்தகையதுதான். ஆகையால், மறுகாலனியாக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் எதிர்க்காமல் பாசிசத்தை எதிர்ப்பது என்ற ஒன்று இல்லை.

இந்த மறுகாலனியாக்க பயங்கரவாதத்தையும் பாசிசத்தையும் மக்கள் உணராமல் தடுப்பதற்கு கலை, இலக்கியம், பண்பாடு, மதம், கலாச்சாரம் என பல தளங்களில் வினைபுகிறது ஏகாதிபத்தியம். மது, கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் அதிகரித்திருப்பது ஒரு வடிவம் என்றால், நுகர்வுக் கலாச்சாரம் இன்னொரு வடிவமாகும்.

சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக அன்றாடம் புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்தி சுரண்டுகிறது ஏகாதிபத்தியம். 2.0, 3.0 என்று இந்த வளர்ச்சிக்குப் பெயரிடுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் புதிய கருவியைப் புகுத்துகின்றனர். இம்மாற்றங்களைச் செய்யாமல் ஒரு நொடி கூட முதலாளித்துவத்தால் உயிர்வாழ முடியாது. நாளும் வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக தன்னியல்பாகவும் இந்த மாற்றங்கள் நடந்தேறுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடுதான், “பயன்படுத்து-வீசியெறி” (Use and Throw) என்ற கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரம்தான் இருசக்கர வாகனம் முதல் ஃபோன்வரை அனைத்திலும் கையாளப்படுகின்றன.

நுகர்வுக் கலாச்சாரத்தின் “பயன்படுத்து-வீசியெறி” என்ற இந்த பண்பு நுகர்வு வெறியை வளர்க்கிறது. பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையை புதிய நிலைமைக்கு உயர்த்தியுள்ளது. சுயநலம், ஆபாசம், ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை அனைத்தும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளைப் புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

கேரளத்தில் நபரலி கொடுத்த பின்னர், பெண் உறுப்புகளை தனியாக சமைத்து உண்டதையும், டெல்லியில் காதலியைக் கொலை செய்த காதலன் அவரது உடலை 37 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசியுள்ளதையும் அவ்வப்போது அரங்கேறும் கும்பல் பாலியல் வன்முறைகளும் இந்தவகையிலானவை. பா.ஜ.க. என்ற பாசிச கும்பல் பெண்களுக்கு எதிராக செய்துவரும் கும்பல் வன்முறைகள் இதன் பாசிச வடிவம்.

உடலும் உணர்வும் மானமும்கூட சரக்காக…

நமது குழந்தைகள் ஆண்ட்ராய்டு ஃபோனை லாவகமாக கையாள்வதைப் பார்த்து பெற்றோர்களாகிய பலரும் பூரிப்படைகின்றனர். ஆண்ட்ராய்டு ஃபோனை பயன்படுத்தத் தடுமாறுகின்ற இளைஞர்கள் கூட தங்களை ‘திறமை’யற்றவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இந்த ஆண்ட்ராய்டு ஃபோன் வழி செயல்பாடுகள் முன்னேற்றம், வளர்ச்சியின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன.

ஆனால், ஆண்ட்ராய்டு ஃபோனையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் ‘மெய்நிகர் உலகத்தில்’ வாழப் பழகிக்கொண்டோம். உரிமைகள் பறிக்கப்படுவதை, ஒரு வீடியோவாக பின்னணி இசையுடன் பார்க்கும் தொழிலாளி அதிலிருந்து பெரும் உணர்வை, மெய்யான உலகத்தில் சகதொழிலாளர்கள் போராடுவதைப் பார்த்து பெறுவதில்லை. அதனால்தான் சமூக ஊடகங்களில் புரட்சி பேசுபவர்கள் நடைமுறையில் தொழிலாளர் பாதிக்கப்படும்போது நேரில் சென்று போராடுவதில்லை. மெய்யான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், மெய்நிகர் உலகத்தின் மூலமாக உணர்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது தலைகீழ் வளர்ச்சியல்லவா?

000

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் தொடங்கியபோதே, அத்துடன் சேர்ந்து உருவான வறுமையும் பட்டினியும் தொழிலாளி வர்க்கத்தை உடல் உறுப்பு விற்பனையாளர்களாக மாற்றிவிட்டது; உடல் உறுப்புகளை திருடுவது இன்று பெரும் தொழிலாக மாறிவிட்டது. பிரபலமாக அழைக்கப்படும் சிவப்பு சந்தை (Red Market) என்பது அதுதான். உடல் உறுப்புகளைத் திருடுவதற்காகவே உலகெங்கும் வலைப்பின்னல் கொண்ட சர்வதேச மாஃபியா கும்பல்கள் பல இயங்குகின்றன.

இச்சமுதாய விரோத மாஃபியா தொழிலை எந்தவிதச் சட்டங்களைக் கொண்டும் தடுக்க முடியவில்லை. இன்னொருபக்கம், கருப்பை வாடகையும் கருமுட்டை ‘தானமும்’ இன்று சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு மட்டுமல்ல, இளம் பெண்களையும், பெண் குழந்தைகளையும் திருடி அவர்களை பாலியல் பண்டங்களாக வியாபாரம் செய்யும் அவலமும் சர்வதேச கிரிமினல் கும்பல்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆப்ரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பின் தங்கிய நாட்டு மக்களே இவர்களது சந்தைகளாக உள்ளன. பெரும் பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் தவிக்கும் ஆப்கான் மக்கள் தமது சிறுநீரகங்களையும் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளையும் இந்த மாஃபியா கும்பல்களிடம் விற்றுதான் பட்டினிக்கு நிவாரணம் தேடுகிறார்கள்.

அனைத்தையும் சந்தையாக்கிய முதலாளித்துவம் மனிதனது உடலையும் உணர்வையும் மானத்தையும் கூட சந்தைக்கானதாக, சரக்குகளாக மாற்றியுள்ளது.

டிஜிட்டல் பாசிச அடக்குமுறை!

நுகர்வுவெறிப் பண்பாடு ஒருபுறம் நம்மைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதையும் மீறி தமது உரிமைகளுக்காகவும் பறிக்கப்படும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடக் கிளம்பும் மக்களை ஒடுக்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய சகாப்தத்தில் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் புதிய அடக்குமுறையாக அமைந்திருக்கிறது டிஜிட்டல் பெருந்திரள் கண்காணிப்பு (Digital Mass Surveillance).


படிக்க : நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!


டிஜிட்டல் பெருந்திரள் கண்காணிப்பை புரிந்துகொள்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை. மோடி அரசு கொண்டுவந்த ஆதார் அட்டையே அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அடையாள அட்டையின் மூலம் குடிமக்களை டிஜிட்டல் கண்காணிப்பிற்கு கொண்டுவருவதற்காக பலநாட்டு அரசுகளும் முயன்றுவருகின்றன. ஆனால் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது. முதன்முதலாக ஆதாரின் மூலம் இதை நடைமுறைப்படுத்திய பெருமை பாசிச மோடி அரசையே சேரும்.

ஆதார் மூலம் கைவிரல் ரேகைகள், கருவிழி என அனைத்து உயிரி அடையாளங்களும் பதிவு செய்யப்படுகிறது. ஆதார் இல்லாமல் இருப்பது குற்றமாக்கப்படுகிறது. இப்போது நாம் டிஜிட்டல் கோடு (Digital Code) ஆகியிருக்கிறோம். இதன் மூலம் மறைமுகமாக நமது தனியுரிமைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் கோடுகளுக்குள் (குறியீடுகள்) அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. நாம் எங்கு இருக்கிறோம், யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம், என்ன உண்கிறோம் என அனைத்தும் தரவுகளாக (டேட்டா – Data) சேகரிக்கப்படுகின்றன.

உலக அளவில் இந்த தரவு சேகரிப்பு மிகப்பெரும் வணிகமாக உள்ளது. ஆண்ட்ராய்ட் ஃபோன்களைப் பயன்படுத்தும் அனைவரது தரவுகளும் நம்மை அறியாமலேயே சேகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அடுத்தவன் படுக்கையறைக்குள்ளே செல்வது மட்டுமல்ல, அவனது வாயிலும் வயிற்றிலும் மலத்திலும் சென்று தகவல்களை உற்பத்தி செய்து, திருடும் இந்த அயோக்கியத்தனத்திலும் ஏகபோக ஆதிக்கமும் அதற்கான போட்டியும் வந்துவிட்டது.

தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன் என்ன மனோநிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அடுத்த நொடி அவன் என்ன செய்யப் போகிறான் என்ற வரையிலும் ஊகித்து அறியும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் (Artificial Intelligence Surveillance Cameras) பெரும்பாலான நாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. நமது நாட்டிலும் அதன் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் இக்கேமராக்கள் பயன்படுகிறது என்று கூறப்பட்டாலும், இது மக்கள்திரள் புரட்சியாளர்களை இனங்கண்டு ஒடுக்குவதற்காக அவதரித்த டிஜிட்டல் அடக்குமுறைக் கருவியே.

மொத்த சமூகத்தையும் டிஜிட்டல் வலைக்குள் சிக்கவைத்து, ஆளும் வர்க்கங்களும் அரசுகளும் எங்கும் நீக்கமற தங்களது கண்காணிப்பை விரிவுப்படுத்தியிருக்கும் இந்த நிலைதான் டிஜிட்டல் பாசிச பயங்கரவாதமாகும்.

சிவப்பு: ஏகாதிபத்தியவாதிகளின் குலைநடுக்கம்! 

ஏகாதிபத்தியங்களின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்களை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. முதலாளித்துவ அறிவுஜீவிகளில் ஒருபகுதியினரும் சோசலிசத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமூக நலனை முன்னிறுத்தி சிந்திக்கக் கூடிய பிரிவினர்களும் அவற்றை எதிர்க்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மாற்றாக எதை முன்வைக்கிறார்கள்?

முதலாளித்துவத்தின் வழியே ஏகாதிபத்தியம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம். இவை இரண்டிலும் இரண்டாவது கூறுகளுக்கெதிராக, முதலாவது கூறுகளை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். தான் உருவாக்கிய சட்டங்களையும் நெறிமுறைகளையும் முதலாளித்துவமே தகர்த்தெறிய முயலும்போது, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோருபவர்கள் இவர்கள்தான்.

முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு வழிமுறையாக இருந்தது என்றால் அது படைத்தளித்திருப்பதுதான் மறுகாலனியாக்க பயங்கரவாதம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே சோசலிசத்தை அடைவோம் என்றனர் போலி கம்யூனிஸ்டுகள், இன்றோ உலகெங்கும் பாசிச பயங்கரவாதம் புற்றீசலாய் கிளம்பியிருக்கிறது.

முதலாளித்துவத்தையும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கட்டிக்காத்துக் கொண்டே பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதாக மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பது மோசடி அல்லவா? இவ்வாறு சொல்லும்போது, நமக்கு பாசிசத்தை எதிர்ப்பதைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்கின்றனர். வறட்டுவாதிகள் என்கின்றனர். நண்பர்களே, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம் வளர்கிறது என்ற உண்மை ஒரு அடிப்படை அறிவு இல்லையா?

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் நம்மை இழுப்பவர்களின் கூற்றுகள் எல்லாம் சிவப்பு சாயம் பூசப்பட்ட ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தின் வார்த்தைகளே!

இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியும்சரி லேபர் கட்சியும் சரி; அமெரிக்காவில் இருக்கும் குடியரசுக் கட்சியும் சரி ஜனநாயகக் கட்சியும் சரி – இவர்கள் நேரடியாக ஏகாதிபத்தியவாதிகள் என்று பறைசாற்றிக்கொண்டனர். இவர்கள் அனைவரது ஒருமித்த கருத்து கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதுதான். ஆனால், இன்றளவும் சிவப்பு என்றாலே அஞ்சுகின்றனர்.

உலகத்தின் பெரிய முதலாளிகளின் பட்டியலில் சீன முதலாளிகள் இடம்பெறுகின்றபோது, இந்த ஏகாதிபத்திய கொள்கையை அப்படியே பின்பற்றும் சீனா, தன்னை ‘கம்யூனிச நாடு’ என்று நாகூசாமல் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், தனது நாட்டில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி பற்றிய புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளது. சிவப்பின் போர்வையிலே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் போலிகளுக்குகூட சிவப்பென்றால் அச்சம் வரத்தான் செய்கிறது.

தம்மால் வீழ்த்தப்பட்டதாகவும், இல்லாது ஒழிந்துவிட்டதாகவும் சொல்கின்ற கம்யூனிசத்தை – சிவப்பை – பார்த்து இவர்கள் இன்றளவும் பயப்படுவதை எப்படி புரிந்துகொள்வது? ஏனெனில் சிவப்பு சாகவில்லை என்பது இந்த ஏகாதிபத்திய பிணங்களுக்குத் தெரியும். உலகெங்கும் கார்ப்பரேட் சுரண்டலையும் வல்லரசுகளின் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் கோடானகோடி உழைக்கும் மக்களின் போராட்டங்களில் சிவப்பு உயிர்வாழ்வதை நம்மைவிட நமது வர்க்க எதிரிகள் தெளிவாகப் பார்க்கிறார்கள்.


படிக்க : டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!


2018 முதல் 2022 வரை சிறிய நாடான ஹெய்தியில் நடைபெறும் மக்கள் போராட்டமாக இருக்கட்டும்; இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டமாக இருக்கட்டும்; டெல்லிச் சலோ போராட்டமாக இருக்கட்டும் – எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டக்காரர்கள் சிவப்பின் பக்கம் திரும்பினால் என்ன ஆகும் என்பதுதான், ஏகாதிபத்தியவாதிகளை அச்சுறுத்துகிறது.

இவ்வாறெல்லாம் நாம் விளக்கும்போது, “நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள். பத்துபேர் சேர்ந்துவிட்டால் புரட்சி செய்துவிட முடியுமா” என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர். “உங்களால் எதையும் செய்ய முடியாது” என்றும் கூறுகின்றனர். இது இவர்கள் நமக்கெதிராக உதிர்க்கும் வார்த்தைகள் அல்ல, சோசலிசமும் புரட்சியும் சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

முதலாளித்துவம் செத்துவிட்டது, அதன் பிணம் அழுகி நாறுவதுதான் ஏகாதிபத்தியமும் பாசிசமும், இந்தப் பிணத்தை அப்புறப்படுத்து என்று சொல்கிறது கம்யூனிசம்; இல்லை, இந்த சமுதாயத்திற்குள்ளேயே (பிணத்திற்குள்ளேயே) குடியிருக்கலாம் என்கின்றனர் ஏகாதிபத்தியவாதிகள். பிணம் புழுபுழுத்துப் போவதைக் காட்டி, இவை வளர்ச்சியின் அடையாளங்கள் என்கின்றனர், ஏகாதிபத்தியவாதிகள்; இதனுடன் சமாதான சகவாழ்வு வாழலாம் என்கிறது போலி கம்யூனிசம்.

புரட்சியெல்லாம் இனி வராது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பை இனியும் தூக்கியெறிய முடியாது என்று சொல்லிக்கொண்டே, நாடு முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்; தெருவெங்கும் கண்காணிப்புக் கேமராக்களை வைக்கின்றனர்; பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமைகளை மறுக்கின்றனர். ஜனநாயகத்தை அதன் வாசனைகூட தெரியாமல் அழிக்கின்றனர்.

சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!


தங்கம்

புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்போம்! | வழக்கறிஞர் இன்குலாப் | வீடியோ

க்களுடைய பிரச்சினைகளில் சுருக்கமாக யார் எதிரி யார் விரோதி என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகின்ற ஒரு கண்ணாடியாக புதிய ஜனநாயகம் இதழ் வெளியிவந்து கொண்டிருக்கின்றது. எனவே அனைவரும் இந்த இதழை சந்தா செலுத்தி வாங்கி படிக்கவேண்டும். இந்த இதழ் போராளிகளுக்கு ஓர் போர் ஆயுதமாக திகழ்கிறது.

புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் இன்குலாப் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

இந்தி – அரசு பணியில் வட இந்தியர் திணிப்பு ! ஆர்.எஸ்.எஸ்.இன் ஐந்தாம் படை வேலை | மருது வீடியோ

ங்கிருக்கும் தமிழகர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு அநியாய விலைக்கு வீட்டை வாடகைக்கு விடுகிறார்கள். இங்கிருக்கும் தமிழனை வேலைக்கு வைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கேட்பார்கள் என்பதனால், ஒட்டுமொத்தமாக மாதம் 5000, 10000 கொடுத்து கூலி அடிமையை போல அவனை சுரண்டுவது யார்? நீ சொல்லக்கூடிய பச்சை தமிழன் ஆந்தை தமிழன் மூத்தக்குடி தமிழ்குடி இவர்கள் தானே செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு முதலாளிகள் ஏன் வட இந்தியர்களை விரும்பிகிறார்கள் என்றால், அடிக்கடி யூரின் போகமாட்டான், விடுப்பே எடுக்கமாட்டான், வருடத்தில் ஒருமாதம் ஊருக்கு போய்விட்டு வந்துவிடுவான். எவ்வித பிரச்சினையும் பன்னமாட்டான் சங்கமாக சேரமாட்டான். இவனை கொத்தடிமையாக வைத்து சுரண்டலாம். இந்த மோசமான ஒரு சுரண்டல் நோக்கத்திற்காகத்தான் இங்கிருக்கக்கூடிய தமிழ் முதலாளிகள் அவர்களை வரவேற்கிறார்கள் வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிசத்தை வீழ்த்த நாம் தோழர் ஸ்டாலினாக மாறவேண்டும்! | சிக்கந்தர் | கனியமுதன் | வீடியோ

துரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் அவர்கள், ஸ்டாலினுக்கு விழா எடுக்கிறோம். ஆனால், பாசிசத்தை வீழ்த்த நாம் எப்போது ஸ்டாலின் ஆக மாறப்போகிறோம் என்று கேள்வி எழுப்பினார். நம்மிடம் ஒரு சோர்வு நிலவுகிறது கௌரிலங்கேஷ், கல்புர்க்கி என சுட்டுக்கொல்லப்பட்டவுடன் அமைதியாகி விட்டோம். பாசிசம் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ளது. போராடினால் அடிப்பார்கள், உதைப்பார்கள், கொல்லுவார்கள் அந்த தியாகத்திற்கு நாம் தயாராகாமல் நமது வருங்கால சந்ததியை காப்பாற்ற முடியாது. கூட்டமைப்பு கட்டுகிறோம் ஆனால் தொடர்ச்சியாக போராடுகிறோமா என்றால் இல்லை. ஆகவே பாசிசத்தை வீழ்த்த தொடர்ந்து பணி செய்ய வேண்டியுள்ளது என்பதன் அவசியத்தை உணர்த்தினார்.

படிக்க : இந்தியாவின் பாசிஸ்டுகளை தோழர் ஸ்டாலின் வழியில் வெல்லவேண்டும்! | நாகை திருவள்ளுவன் | வீடியோ

இக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் அவர்கள், போராட்டத்தின் மூலமாகத்தான் அனைவரையும் ஒன்றுபடுத்த முடியும். கற்பி! போராடு! ஒன்று சேர்! என்பதுதான் அம்பேத்கர் முன்வைத்தது. அதேபோல் பாசிசத்திற்கு எதிராக கற்பித்துக் கொண்டு போராடினால்தான் மக்களை ஒன்றுபடுத்த முடியும் என பேசி முடித்தார்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் சிக்கந்தர், கனியமுதன் ஆகியோர் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!

ணையவெளியில் மக்களிடையே பேசுபொருளாக இருக்கும் ஒன்று, டிவிட்டரில் பிரபலமாவதை (trending) நாம் பார்த்திருப்போம், இன்று டிவிட்டரே மக்களிடையே பிரபலமான விவாதப் பொருளாக மாறியுள்ளது; உலகப் பெரும்பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதிலிருந்து, ‘டிவிட்டர் 2.0’ என்ற பெயரில் மேற்கொண்டுவரும் மறுஒழுங்கமைப்பு நடவடிக்கைகளே அதற்கு காரணமாகும்.

44 பில்லியன் (4,400 கோடி) டாலர் கொடுத்து டிவிட்டரின் அதிகப் பங்குகளை வாங்கியதன் மூலம் கடந்த அக்டோபர் இறுதியில், டிவிட்டரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் எலான் மஸ்க். ஒரு கார்ப்பரேட் முதலாளி குறிப்பிட்ட நிறுவனத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு முக்கியத்துவமிக்க நிகழ்வாக இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை. ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நிகழ்வு சர்வதேச அளவில் எளிதாக கடந்து செல்லப்படவில்லை.

டிவிட்டரை கைப்பற்றிய உடன், ‘பறவை விடுவிக்கப்பட்டது’ (The bird is freed) என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் மஸ்க். மேலும், தாம் எதிர்கால சந்ததிக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தித் தர விரும்புவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்லாமல், மனித குலத்திற்கு உதவுவதற்காகவே டிவிட்டரை வாங்கியுள்ளதாகவும் பிரகடனப்படுத்தினார்.

படிக்க : கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!

ஆனால், எலான் மஸ்க் அடிப்படையிலேயே தீவிர வலதுசாரியாக அறியப்படுபவர்; சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளைக்கூட ‘இடதுசாரி அபாயம்’ என்ற அளவில் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக விரோதி; வெள்ளை நிறவெறியன்; குடியரசுக் கட்சி மற்றும் பாசிஸ்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இக்காரணங்களால் அவர் டிவிட்டரை கைப்பற்றியிருப்பது, தொழில் விரிவாக்க நடவடிக்கை என்பதைத் தாண்டி அரசியல் நடவடிக்கையாகவே அறியப்படுகிறது; மேலும் உலகெங்கும் உள்ள லிபரல் ஜனநாயகவாதிகளே, இந்நிகழ்வை அபாயகரமானதாகவும் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தானதாகவும் பார்க்கின்றனர்.

டிவிட்டர் மறுஒழுங்கமைப்பின் பின்னணி

எலான் மஸ்க் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வாரநாட்கள் முழுமையும் (7 நாட்கள்) வேலைநாட்களாகவும் வேலைநேரம் 12 நேரமாகவும் மாற்றப்பட்டது. சம்பளம், கூடுதல் வேலைநேரம், வேலை உத்தரவாதம் ஆகியவை குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது எனவும் புதிய விதிகளுக்கு கட்டுப்பட விரும்பாதவர்கள் 36 மணிநேரத்தில் தங்கள் வேலையைத் துறந்துவிட்டு வெளியேறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நடவடிக்கைகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு பிறகு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவிட்டர் ஊழியர்கள் பணியைத் துறந்து வெளியேறியுள்ளனர்.

எலான் மஸ்க்கின் இத்தகைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடகமாக அறியப்படும் டிவிட்டரை நாசமாக்கிவிடும் என்று விமர்சிக்கப்படுகிறது. ‘டிவிட்டருக்கு இரங்கல்’ (#riptwitter) என்ற ஹேஷ்டேக் பயனர்களால் பிரபலமாக்கப்பட்டது.

பிரபலங்களின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்குகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ளூ டிக் அடையாளத்திற்கு, இனி 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும், அத்தொகையை செலுத்தும் அனைவருக்கும் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, எலான் மஸ்க் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை. இந்த சந்தா சேவை அறிமுகமான உடனே டிவிட்டர் தளம் முழுவதும் போலி கணக்குகளால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. எனவே அச்சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கைகள், லாபநோக்கம் கருதி செய்யப்படும் முட்டாள்தனமான காரியங்கள் என்றே பொதுவாக அறியப்படுகிறது. இதை மறுப்பதற்கில்லை. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்களின் பணிச்சூழலைப் பற்றி தெரிந்துகொண்டால், மற்றொரு கோணத்தில், இந்நடவடிக்கை தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் மறுஒழுங்கு நடவடிக்கையாகவும் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எலான் மஸ்க் எவ்வாறு ஒரு வெள்ளை நிறவெறி கொண்டவனோ, அதைப் போலவே அவனது நிறுவனங்களில் உயர்பதவி வகிப்பவர்கள் பலரும் வெள்ளை நிறவெறியர்கள். மஸ்கின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மஸ்கின் நிறுவனங்களில் பணியாற்றி இன, நிற பாகுபாடு காரணமாக வெளியேறியவர்கள் அப்பணியிடச் சூழலை அம்பலப்படுத்தி கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இதிலிருந்து நோக்கும்போது, எலான் மஸ்க் மேற்கொள்ளும் பணி நீக்க நடவடிக்கை டிவிட்டர் நிறுவனத்தை வெள்ளை நிறவெறியர்களின் ஆதிக்கத்திற்கு கொண்டுவருவதன் ஒருபகுதியாக இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

மஸ்க் வாதாடும் ‘பேச்சு சுதந்திரம்’ யாருக்கானது?

‘பேசுவதற்கான சுதந்திரமே ஒழிய, பிரபலத்திற்கான சுதந்திரமல்ல’ (freedom of speech but not freedom of reach) என்ற பெயரில், கடந்த 18-ஆம் தேதி புதிய கொள்கையொன்றை அறிவித்தார் மஸ்க். இக்கொள்கையின்படி, வெறுப்பைப் பரப்பும் கருத்துகள் டிவிட்டரிலிருந்து நீக்கப்படும் என்றும், அதுபோன்ற பதிவுகளின்மூலம் கிடைக்கும் வருவாயை டிவிட்டர் விரும்பவில்லை என்றும் அறிவித்தார்.

கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், அடுத்தடுத்து மஸ்க் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவர் அறிவித்த கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்ததோடு, மஸ்க் வாதாடும் பேச்சு சுதந்திரம் யாருக்கானது என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது. தடைசெய்யப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது அதில் முக்கியமானதாகும்.

2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. தமது பதிவுகளின் மூலம், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அறைகூவல் விட்டார் என்பதால், அப்போதைய டிவிட்டர் நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை முடக்கியது. இன்று, டிரம்ப்புக்கு ‘பேச்சு சுதந்திரம்’ கிடைத்துள்ளது.

டிரம்ப்பை போலவே, வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் காரணமாக தடைசெய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகள் பலவற்றை மஸ்க் தற்போது விடுவித்துள்ளார். கிறிஸ்துவ மதவெறியைப் பரப்புகிற நையாண்டி வலைத்தளமான பாபிலோன் பீ மற்றும் மாற்று பாலினத்தவர் குறித்து இழிவாக பேசிய கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஜோர்டன் பீட்டர்சன், யூத எதிர்ப்பு பேச்சுக்காக விமர்சிக்கப்பட்ட அமெரிக்கப் பாடகர் கன்யே வெஸ்ட், பெண்களைப் பற்றி மிக இழிவாக பேசிய பிரிட்டன் முன்னாள் குத்துச் சண்டை வீரர் ஆண்ட்ரூ டேட் போன்றோரின் டிவிட்டர் கணக்குகள் அதில் குறிப்பிடத்தக்கவை.

மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து ஒரு வார காலம்வரை அதன் செயல்பாடுகளை ஆய்வுசெய்த ‘டிஜிட்டல் வெறுப்புகளுக்கு எதிரான மையம்’ (Centre for Countering Digital Hate) எனும் அமைப்பு டிவிட்டரில் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறுகின்றது.

இன்னொரு பக்கம், பாசிச-சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக குரலெழுப்பும் ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. அண்மையில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வந்த டிவிட்டர் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கை கொண்டாடும் பாசிஸ்டுகள்!

டிவிட்டர் உலகம் முழுவதும் சுமார் 40 கோடி (396.5 மில்லியன்) பயனர்களைக் கொண்டுள்ளது. இது மற்ற சமூக ஊடகங்களைக் காட்டிலும் குறைவே என்றாலும் அரசியல் கருத்துரையாடல்களுக்கான முக்கிய ஊடகமாக டிவிட்டர் விளங்குகிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவுத்துறை பிரபலங்கள் ஆகியோரே டிவிட்டரின் பெரும்பகுதி பயன்பாட்டாளர்கள். இணையவெளியில் பலராலும் விவாதிக்கப்படும் கருத்துக்களை பிரபலமாக முன்னிறுத்தும் ‘டிரெண்டிங்’ எனப்படும் வசதி டிவிட்டரில்தான் உள்ளது.

பிற்போக்காளர்களை அம்பலப்படுத்தவும், பாசிச-சர்வாதிகார அரசுகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் ஜனநாயக சிந்தனை கொண்ட குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கு டிவிட்டர் குறிப்பிட்ட அளவிற்கு பயன்பட்டுவந்தது. அதேநேரம், வெறுப்பு பேச்சுகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மற்ற சமூக ஊடகங்களைக் காட்டிலும் டிவிட்டர் முனைப்புக் காட்டியது. இக்காரணங்களாலேயே உலகெங்கிலும் உள்ள வலதுசாரி பிற்போக்காளர்கள் டிவிட்டரை தாக்கி வந்துள்ளனர்; ஆனால், இன்று டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதை, அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து, “டிவிட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலைநாட்டு பாசிஸ்டுகள் மட்டுமல்ல, சங்கப்பரிவாரத்தைச் சேர்ந்த கோயபல்சுகளுள் ஒருவரான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, கங்கனா ரனாவத் என நம் நாட்டு பாசிசக் கும்பலும் டிவிட்டர் 2.0-வை வரவேற்றுள்ளனர்.

படிக்க : பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு

இதற்குரிய காரண-காரியங்களை விளங்கிக்கொள்ள நாம் சிரமப்படத் தேவையில்லை. விஷயம் சுலபமானது. வெள்ளை நிறவெறியனும் பழமைவாதியுமான எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியிருப்பதால், இனி தங்களது கருத்துகளை தடையின்றி பரப்புவதற்கு ஒரு பிரச்சார பீரங்கி கிடைத்துள்ளதாக பல வண்ணப் பாசிஸ்டுகளும் பூரிப்படைகிறார்கள்.

பாசிச ஆட்சிக்கான தயாரிப்பு

கடந்த மே மாதம், நான் இனி (அதாவது, அடுத்த தேர்தலில்) ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை, குடியரசுக் கட்சியையே ஆதரிப்பேன் என்றார் எலான் மஸ்க். டிவிட்டர் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அடுத்துவரும் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக முந்திக்கொண்டு அறிவிக்கிறார் டிரம்ப். அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டதை நாம் சொல்லாமலே புரிந்துகொள்வோம்.

அதானி என்.டி.டி.வி-ஐ சதித்தனமாக கைப்பற்றியதும், டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதும் சாரம்சத்தில் ஒன்றுதான். ஊடகங்களை பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக மாற்றுவதன் மூலம் அவர்கள் மக்களிடையே தங்களுக்கு ஆதரவாக கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள விழைகிறார்கள்.

ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பானது இன்று தீர்க்க முடியாத அரசியல்-பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இனியும் ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டு தங்களது சுரண்டலை நடத்த முடியாது என்ற நிலைக்கு ஆளும் வர்க்கங்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஆளும் வர்க்கங்களில் ஆகப் பிற்போக்கான ஒரு பிரிவினர் பாசிசக் குழுக்களை ஊட்டி வளர்த்து வருகின்றனர்; பாசிச வெறியர்களை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கும் முயன்று வருகின்றனர். அவ்வாறான ஆளும் வர்க்கப் பிரிவில் குறிப்பிடத்தக்க கார்ப்பரேட் முதலாளியே எலான் மஸ்க்.

மதி

புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்போம்! | நாகை.திருவள்ளுவன் | வீடியோ

புதிய ஜனநாயகம் இதழ் மாத இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. மார்க்சிய – லெனினிய அரசியல் ஆயுதத்தை ஏந்தி உழைக்கும் மக்கள் விடுதலையை சாதிக்க வேண்டும் என்று பயணித்துக்கொண்டிருக்கிறது புதிய ஜனநாயகம். அனைத்து முற்போக்காளர்களும், ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் அவசியம் படிக்கவேண்டிய இதழ் புதிய ஜனநாயகம். இந்த இதழுக்கு ஆதரவளிப்பதும், சந்தா செலுத்தி இதழை படிப்பதும் நமது கடமை!

புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு என்ற ஊரில் மக்கள் போராடி பெற்ற நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த கொடூரம். குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, கழிவு பொருட்களை கொட்டுவது போன்ற தீண்டாமை செயல்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கெதிராக பல வழக்குகளும் போலீசுத்துறையால் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இக்குற்றங்களில் ஈடுபட்ட ஒருவராது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதுதான் கேள்வி. தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கழித்துவிட்டு வருவதுதான் மேல்சாதியா?. கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இந்த ஆதிக்கசாதி பார்ப்பனிய மனோபாவத்தை ஒழிக்க முடியாது.

புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவற்றை பற்றி ரெட் பிக்ஸ் செய்திஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!

டந்த நவம்பர் 14-ஆம் தேதி டெல்லியில் அப்தாப் என்பவன் தான் காதலித்த பெண்ணை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த செய்தி இணையத்தில் பரவியது. பலரும் இச்சம்பத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த அதே நேரத்தில், கணிசமானவர்கள் இந்த சம்பவத்தை நகைச்சுவையாகக் கடந்து சென்றனர். இவ்வாறு கடந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் அப்தாப்பையும் இந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கொடூர கொலைகாரன் அப்தாப்

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனது காதலனோடு ‘லிவிங் டூகெதர்’ (மண ஒப்பந்தமின்றி சேர்ந்து வாழுதல்) உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற 27 வயது பெண்ணின் வீட்டை தொடர்பு கொண்ட அவளது நண்பன், ஷ்ரத்தா-வை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவள் தன்னோடு பேசி பல மாதங்கள் ஆகிறது என்றும் கூறினார். இதனையடுத்து அவளது சமூக வலைத்தள பக்கங்களும் பயன்பாட்டில் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.

அவ்விசாரணையின்போது ஷ்ரத்தா ஆறு மாதங்களுக்கு முன்பே அவளது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவந்தது. இதற்கான விசாரணையில், ‘ஷ்ரத்தாவை எப்படி கொன்றேன்’ என்பது பற்றி போலீசிடம் அப்தாப் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நமது ரத்தத்தை உறைய வைக்கின்றன.

படிக்க : ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

அப்தாப் மற்றும் ஷ்ரத்தா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘பம்பிள் டேட்டிங் செயலி’ (டேட்டிங் செயலி என்பதே சாராம்சத்தில் ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் அளிக்கும் ஒரு பாலியல் புரோக்கர் செயலிதான்) மூலமாக சந்தித்துள்ளனர். இதனையடுத்து மும்பைக்கு வந்த ஷ்ரத்தா, அப்தாப்பின் கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்ந்துள்ளாள். சில மாதங்கள் கழித்து ‘லிவிங் டூகெதர்’ உறவில் இருக்க முடிவு செய்த இவர்கள் மும்பையில் வீடு எடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர்.

கடந்த மே 14-ஆம் தேதி அன்று அப்தாபும் ஷ்ரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து, வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஷ்ரத்தா தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்னதாலும் அதனை அப்தாப் மறுத்து வந்ததனாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், மே 18-ஆம் தேதி அன்று இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை அடுத்து அப்தாப் ஷ்ரத்தாவின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவளது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான்.

ஒரு கொலையைச் செய்துவிட்டு கொஞ்சமும் சலனம் அடையாத அப்தாப், ஷ்ரத்தாவின் உடலை அப்படியே புதைத்தால் மாட்டிக்கொள்வோம் என்பதனால் உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று இரவு முழுக்க கூகுளில் தேடியுள்ளான். அவளது உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்தவன், அன்று இரவு ஷ்ரத்தாவின் உடல் இருந்த அதே அறையில் படுத்து தூங்கியுள்ளான்.

மறுநாள் முன்னூறு லிட்டர் குளிர்சாதன பெட்டி, கறுப்பு நிற பிளாஸ்டிக்பைகள், கறி வெட்டும் கத்தி முதலியவற்றை வாங்கி வந்து, ஷ்ரத்தாவின் உடலை கழிவறைக்கு எடுத்து சென்று துண்டு துண்டாக வெட்டியுள்ளான். பாதிக்கு மேல் வெட்ட முடியாததால் இடையில் நிறுத்திவிட்டு சொமேட்டோ-வில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் மீண்டும் வெட்டியுள்ளான். ஏற்கெனவே தான் ஒரு சமையற்காரன் என்பதால் ஷ்ரத்தாவின் உடலை வெட்டுவது தனக்கு கடினமாக இருக்கவில்லை என்று அப்தாப் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சத்தம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக குழாயில் தண்ணீரை திறந்து விட்டு உடலை வெட்டியிருக்கிறான். இதனால் அந்த வாடகை வீட்டில் கட்டணமின்றி வழங்கப்படும் முதல் 20,000 லிட்டர் (ஏறக்குறைய ஒரு நாளுக்கு 35 வாளி) தண்ணீர் தீர்ந்ததுடன் மேலும் மாதம் 300 ரூபாய் தண்ணீர் கட்டணம் வந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஷ்ரத்தாவின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு ஏற்ற அளவில் 35 துண்டுகளாக வெட்டியுள்ளான். விரைவில் நாற்றம் அடிக்க தொடங்கிவிடும் என்பதால் அவளது ஈரல், குடல் போன்ற உறுப்புகளைத் துண்டு துண்டாக நறுக்கி அன்று இரவே காட்டில் வீசிவிட்டு, பிற பாகங்களை வெட்டி தனித்தனி பிளாஸ்டிக்பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளான். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை எரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை அவ்வப்போது ‘ரசித்து வந்திருக்கிறான்’.

அன்றிலிருந்து தொடர்ந்து 16 நாட்களுக்கு இரவு இரண்டு மணிக்கு நடைபயிற்சி செய்வது போல் சென்று ஷ்ரத்தாவின் உடல் பாகங்களைக் கொண்ட பிளாஸ்டிக் பையை அகற்றிவிட்டு சுற்றியுள்ள நகரப் பகுதியிலுள்ள நாய்களுக்கு வீசியுள்ளான். மேலும், காட்டில் வீசினால் விலங்குகள் தின்றுவிடும் என்பதற்காக பல பாகங்களைக் காட்டில் எறிந்துள்ளான்.

இந்த நாட்களில் அவனின் வீட்டிற்கு உணவு கொடுக்கும் தொழிலாளர்கள், நண்பர்கள், பெண்கள் என பலர் வந்து சென்றுள்ளனர். ஆனால், யாருக்கும் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீட்டில் இருந்தது தெரியாது. இத்தனைக்கும் கோடை காலம் என்பதால் அவளது உடல் விரைவாக அழுகி நாற்றம் எடுக்க தொடங்கியிருக்கிறது. அந்த வாடையை ஊதுபத்தி, அறை ஸ்ப்ரே போன்றவற்றால் மறைத்திருக்கிறான். நண்பர்கள் வரும்போது அவளது உடலை ஒளித்து வைத்திருக்கிறான். மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட காலம் வரையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள கணக்குகளை அப்தாபே இயக்கி வந்துள்ளான்.

ஷ்ரத்தாவின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்த அதே குளிர்சாதனப் பெட்டியில்தான் அவனுக்கு தேவையான பால், காய்கறிகள், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் இருந்திருக்கிறது. ஆனால், அவற்றை தினமும் இயல்பாக பயன்படுத்தி இருக்கிறான். கைது செய்யப்படும் வரை அவன் அந்த வீட்டில்தான் தனியாக இருந்திருக்கிறான்.

ஷ்ரத்தாவை முதன்முதலில் பார்த்த அதே ‘பம்பிள் டேட்டிங் செயலி’ மூலம் மேலும் பல பெண்களைச் சந்தித்த அப்தாப், கூறுபோடப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் அந்த வீட்டில் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடன் உடலுறவு வைத்திருக்கிறான்.

ஆனால், இதில் எதை நினைத்தும் அவன் கொஞ்சம்கூட குற்ற உணர்வு அடையவில்லை. உண்மை அம்பலமாகி அவனை போலீசு விசாரிக்கும்போது முகத்தில் எந்தவித சலனமும் இன்றி பதில் கூறியிருக்கிறான் அப்தாப். விசாரணையின்போது லாக்கப்பில் இரவு முழுவதும் அப்தாப் நிம்மதியாக தூங்கினான் என்று அவனை விசாரித்த போலீசார் கூறுகின்றனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா தொந்தரவு செய்ததால்தான் அவளைக் கொன்றதாக அப்தாபே வாக்குமூலம் கொடுத்ததோடு, “அவளைக் கொல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, நான் ஷ்ரத்தாவைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்” என்றும் கூறியுள்ளான்.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

மேலும், இதற்கு முன்பே பலமுறை அப்தாப் அவளை அடித்து தாக்கியிருக்கிறான். இதனால் 2020-ஆம் ஆண்டு “அப்தாப் தன்னை கொலை செய்துவிடுவான்” என்று ஷ்ரத்தா போலீசில் புகார் அளித்துள்ளாள். அங்கு அவள் கைப்பட எழுதிய கடிதமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

நமக்குள் ஒளிந்திருக்கும் அப்தாப்கள்!

எப்படி ஒருவனால் மூன்று ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தப் பெண்ணை இவ்வளவு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வுமின்றி இருக்க முடியும் என்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், அதனைவிட அதிர்ச்சிகரமானது என்னவெனில் நம்மில் பலரால் இதை எளிமையாக கடந்து செல்ல முடிகிறது என்பதுதான்.

செய்தி நிறுவனங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்ட ஷ்ரத்தா கொலை வழக்கு பதிவின்கீழ் வக்கிரக் கருத்துகள் கொட்டிக்கிடந்தன. “முரட்டு பசங்க தானடீ கேட்டீங்க” என்பது போன்ற கருத்துகளை ஏறக்குறைய அனைத்து கணக்கிலும் காணமுடிந்தது. மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ஷ்ரத்தா உடல் இருந்தது பற்றிய ஏராளமான மீம்கள் வைரலாகின. இதனைக் கண்டு பல முதலாளிய லிபரல் பத்திரிகைகளே அதிர்ச்சி அடைந்து, மனிதர்கள் மத்தியில் மனநிலை மோசமானதாக மாறியிருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன.

கல்லூரி மாணவர்களிடம் இதைப் பற்றி பேசும்போது சிலர், இந்த செய்தியை விரைவாக கடந்து சென்றனர். சிலர் ஷ்ரத்தாவுக்காக சிறு அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், சிலர், “ஷ்ரத்தாவின் சித்திரவதை தாங்காமல்தான் அந்த நொடி என்ன செய்வது என்று தெரியாமல் அப்தாப் கொலை செய்திருப்பான்” என்று அப்தாபுக்காகவும் வாதாடியது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, ஷ்ரத்தாவிற்கு எதிராகவும் அப்தாபை அரவணைத்தும் பேசியவர்கள் பெண்கள்தான்.

எப்படி இவர்களால் அப்தாபை அங்கீகரிக்க முடிகிறது? கொடூரமான கொலையைச் செய்த அப்தாப் எந்தவித சலனமும் இன்றி இயல்பாக கடந்து செல்கிறான். அந்த கொடூரத்தைக் கேள்விப்பட்ட இந்த சமூகமும் சலனமே இன்றி அப்தாபை கடந்து செல்கிறது. உண்மையில் அவ்வாறு அப்தாபை இந்த சமூகத்தால் கடந்து செல்ல முடிகிறதென்றால், அதன்பொருள், அனைவருக்குள்ளும் ஒரு அப்தாப் இருக்கிறான் என்பதுதான்.

அப்தாப் என்பவன் தனிமனிதன் கிடையாது. கலாச்சார ரீதியாக சீரழிந்து கொண்டு வருகின்ற ஒரு சமூகத்தின் பிரதிநிதி. அவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முழுமையாகவோ அரைகுறையாகவோ தங்களுக்குள்ளும் அப்தாப்-களை கொண்டிருக்கிற பல மனிதர்கள் இங்கு உள்ளனர்.

மனித சாரத்தை அழிக்கும் மறுகாலனியாக்கம்!

அப்தாப் அரங்கேற்றிய கொடூரத்திற்கு காரணம் தேடும் பலரும் அவனிடமே தேடலைத் தொடங்கி அவனோடே முடித்துவிடுகின்றனர். ஆனால், எப்படி ஒருவனால் தன்னை காதலித்த பெண்ணைக் கொன்று உடலை கூறு போட முடியும் என்ற கேள்வியை இந்த சமூகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

1990-களில் இந்தியா தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. பொதுவெளியில் பொருளாதாரக் கொள்கை என்று பார்க்கப்பட்ட மறுகாலனியாக்கம் அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றிலும் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியது. மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் பண்டமாகி சரக்காக மாற்றப்பட்டன. அதிலும் ஏற்கெனவே பார்ப்பனிய-ஆணாதிக்க மனநிலை கொண்ட இந்தியாவில் அது காட்டுமிராண்டித்தனமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளால் காட்டுமிராண்டியாக மாற்றப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிதான் அப்தாப். முழுக்க முழுக்க முதலாளிய சீரழிவுகளால் வளர்க்கப்பட்ட இவன், குற்றத் தொடர் நிகழ்ச்சிகளைப் (web series) பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றான அமெரிக்கக் குற்றத் தொடர் நிகழ்ச்சியான “டெக்ஸ்டர்”தான் ஷ்ரத்தாவை கொலை செய்ய தன்னை தூண்டியது என்று வாக்குமூலம் அளித்துள்ளான். இவையன்றி அப்தாபுக்கு பலவகை போதை பழக்கங்களும் இருந்துள்ளன.

மேலும், அப்தாப் ஷ்ரத்தாவை சந்தித்தது டேட்டிங் செயலியின் மூலம்தான். இந்த பாலியல் புரோக்கர் செயலிகளை அரசு எந்தவகையிலும் தடை செய்யவில்லை என்பது, இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும். இந்த செயலிகள் மட்டுமல்ல, வீடியோ கேம்கள், ஆபாச பாலியல் வீடியோக்கள் என பலவகைகளில் இந்த சமூகம் நாள்தோறும் சீரழிக்கப்படுகிறது.

ஷ்ரத்தாவை காதலிக்கத் தொடங்கிய அப்தாப், ஷ்ரத்தாவிடம் எதிர்பார்த்தது திருமண உறவை அல்ல, எந்தவித பொறுப்புகளுக்கும் கடமைப்படாத ‘லிவிங் டூகெதர்’ உறவாகும். அதாவது, பாலியல் இச்சைக்காக மட்டுமே மேற்கொள்ளும் ஒரு உறவாகும். ஆனால், ஷ்ரத்தா இந்த உறவு முறையை மீறி தன்னை திருமணம் செய்துகொள்ளும் படியும் பிற பெண்களிடம் பேச வேண்டாம் என்றும் சொன்னதெல்லாம் ’லிவிங் டூகெதர் கோட்பாட்டிற்கே எதிரானது’.

தான் விரும்பும் ஒரு கலாச்சாரத்தின் ‘நெறிமுறைகளை’ ஷ்ரத்தா மீறியதை அப்தாப்பால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி அப்தாப் அவளைக் கொலை செய்துவிட்டான்.

இந்த சீரழிவு வக்கிரக் கலாச்சாரத்திற்கு பலியானது அப்தாப் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகமும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுமிராண்டியாக மாறி வருகிறது. குற்றங்கள் யாவும் தீவிரமடைவதோடு வக்கிரமாக மாறி வருகின்றன. பாலியல் வல்லுறவுகள், கூட்டு பாலியல் பலாத்காரமாகவும் உடலை எரிப்பதாகவும் சிதைப்பதாகவும் பரிணமித்து வருகிறது. ஷ்ரத்தா கொலைக்கு பின்னரும் அதே போன்று கொன்று உடலைத் துண்டுதுண்டாக வெட்டிய இரண்டு சம்பவங்கள் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறின.

படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !

முற்போக்கு, பெண்ணியம், சுதந்திரம், நவீனம், அறிவியல், முன்னேற்றம் என்ற பெயர்களில் விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்க பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கு இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர். ஆண்ட்ராய்டு ஃபோன்களும் அதில் வரும் மெய்நிகர் உலகமும் மனிதர்கள் ஒருவரை ஒருவரிடமிருந்து பிரிக்கின்றது. கூடிவாழும் மனிதப் பண்பையே அழிக்கிறது.

இதில் இருந்து சமூகத்தையும் நம்மையும் மீட்டுக் கொள்வதற்கு ஒரே வழி, சோசலிசம்தான். அந்த உன்னத சமுதாயத்தைப் படைக்கும் போராட்டத்தின் மூலமாக மனித விழுமியங்களை மீட்டெடுக்கவும், மறுகாலனியாக்கத்தை மாய்க்கவும் வேண்டும்.

இதன் தொடக்கக் கட்டமாக, இந்த பாலியல் வக்கிரங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்; இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பொதுவிவாதங்கள் நடத்தப்பட வேண்டும்; மது-போதை சீரழிவு, ஆண்ட்ராய்டு காட்சி போதை, ஆபாச சினிமா சீரழிவு, பார்ப்பன-ஆணாதிக்கக் கலாச்சாரங்களுக்கு எதிராக சரியான மனித விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இத்தகைய பண்பாட்டு சீரழிவுகளைப் பரப்பும் ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் இதனைக் கட்டிக்காக்கின்ற இந்த அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்களின் வழியாக ஒரு சமூக மாற்றத்திற்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே தீர்வு!

துலிபா

“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!

0
பீமாகோரேகான் வெற்றித் தூண்.

“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை”
– வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மூத்த போலீசு அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்!

புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் ஜனவரி 1, 2018 அன்று வெடித்த வன்முறைக்கும், எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி நீதித்துறை ஆணையத்திடம் கூறியதாக தி வயர் டிசம்பர் 27 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் 16 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கைதுசெய்யப்பட்டு தற்போது வரை பெரும்பாலானோர் சிறையில் உள்ளனர்.

பீமா கோரோகான் போரின் 200-வது ஆண்டு நினைவுக்கான நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை இந்த 16 ஆர்வலர்கள் தான் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று போலீசுத்துறை குற்றம் சாட்டியது. அந்த நிகழ்வில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், அந்த காரணமாகவே நிகழ்ச்சிக்கு அடுத்தநாள் மிகப்பெரிய வன்முறை வெடித்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியது.

படிக்க : பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான ஒன்பது வன்கொடுமை வழக்குகளை விசாரித்து வந்த துணைப் பிரிவு போலீசுத்துறை அதிகாரி கணேஷ் மோர், அவர் அதிகார எல்லைக்குட்பட்ட ஒன்பது வழக்குகளையும் விசாரித்ததில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும், வன்முறைக்கும் எந்த தொடர்புமில்லை என்பதைக் காட்டுகிறது என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.என்.படேல் தலைமையிலான இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்திடம் கூறினார்.

சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மோரே ஜனவரி 1, 2018 அன்று அப்பகுதியில் ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான மூத்த அதிகாரியாக இருந்ததாக Rediff தெரிவித்துள்ளது. “பீமா கோரேகான் கிராமத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலையில் இருக்கும் வடு புத்ருக் என்ற கிராமத்தில் தான் பணியில் இருந்தபோது, காவிக் கொடிகளுடன் சுமார் 1,200 பேர் கொண்ட கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலைத்ததாக அவர் கமிஷனிடம் கூறியுள்ளார். இதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த சம்பவத்திற்கு முன்பு வெறுப்பு பேச்சு மூலம் இந்துமதவெறி அமைப்பின் தலைவர்களான மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் வன்முறையை தூண்டியதாக தலித் குழுக்களும் அரசியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டினார்கள்.

கடந்த 31 டிசம்பர், 2017 அன்று புனேவில் உள்ள ஷானிவார் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடத்தியதன் விளைவாக, அடுத்தநாள் ஜனவரி 1, 2018 அன்று கலவரம் நடந்ததற்கு எந்த ஆதாரமும், தகவலும் எனக்கு கிடைக்கவில்லை” என்று வன்முறையில் வழக்கு விசாரணையில் ஒருவரான வழக்கறிஞர் ராகுல் மகரே தெரிவித்தார்.

டிசம்பர் 27, 2022 அன்று, ஆணையத்திடம் இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு ஆதாரங்களை நசுக்குவதாக மகரே குற்றம் சாட்டினார். “வன்முறையில் மிலிந்த் எக்போட் மற்றும் மனோகர் குல்கர்னி என்கிற சாம்பாஜி பிடே ஆகியோரின் நேரடிப் பங்கை தெளிவாகக் காட்டும் ஆதாரங்களை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். அவர்களின் அமைப்பு பீமா கோரேகான் பகுதியில் பணியாற்றதை பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர்.கள் சுட்டிக்காட்டுகின்றன” என்றார்.

படிக்க : பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !

2018 ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களில் ஸ்டான் சுவாமி அதிகார வர்க்கத்தினரின் ஒடுக்குமுறையின் காரணமாக சிறைத் தண்டனையில் இருக்கும்போதே மரணமடைந்தார். அவரது கணினியிலும் ஸ்டான் சுவாமி, ரோனா வில்சன், வரவர ராவ், ஹனி பாபு ஆகியோரின் கணினிகளிலும் பொய்க்குற்றம் சுமத்துவதற்காக வேண்டுமென்றே ஹேக்கர் மூலம் தவறான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும் அதை தொடர்ந்து நடந்ததாக கூறப்படும் வன்முறை சம்மபவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடைக்கவில்லை என்று அதிகாரவர்க்கத்தில் இருக்கும் ஒரு போலீசு அதிகாரியே கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட காவிக் கும்பலும், அரசு அதிகார வர்க்கமும் பீமா கோரேகான் நிகழ்ச்சியை முகாந்திரமாக வைத்து ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.

கல்பனா
செய்தி ஆதாரம் : The wire, Rediff, Scroll