Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 132

மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது: எழுதி வாங்கும் சென்னை பல்கலை! | தோழர் துணைவேந்தன்

மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது: எழுதி வாங்கும் சென்னை பல்கலை! | தோழர் துணைவேந்தன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்

மாம், அவர் பிரதமராக இருக்கிறார். ஆகையால், நாம் கண்ணியமாக பேசவேண்டும். பிரதமரை கண்ணியமாக விமர்சித்தாலும் உங்கள் மீது “ஊபா” போன்ற கருப்புச் சட்டங்கள் பாயும். ஆண்டுக்கணக்கில் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் வைக்கப்படுவீர்கள். இருப்பினும், கண்ணியமாக விமர்சிக்க நீங்கள் கற்றுக்கொண்டாக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கெல்லாம் தடைவிதிக்கப்பட்டிருப்பதால், நீங்கள் கண்ணியமாக விமர்சிக்க வேண்டும்.

பிரதமரை அவதூறு செய்துவிட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் மீது பொய்வழக்குப் பதிவு செய்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள், ஆனாலும் நீங்கள் கண்ணியமாக விமர்சிக்க வேண்டும்.

மணிப்பூர் பற்றி எரிகிறது என்று ஊடகங்கள் எல்லாம் சொல்லி வந்தன. 77 நாட்களாக அந்த நபர் வாயைத் திறக்கவில்லை. குக்கி இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வன்முறைக் காட்சி வீடியோ வெளியானதை அடுத்து அவர் வாயைத் திறந்துவிட்டார். 78-வது நாளில் அவர் வாயைத் திறந்து பேசியதை, தி டெலகிராப் இதழ் தனது முதல்பக்கத்தில் 77 சிறிய முதலைகளைப் போட்டு 78-வது முதலை கண்ணீர் வடிப்பது போல படத்தை வெளியிட்டிருக்கிறது. மிகவும் கண்ணியமான விமர்சனம்.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


“அவமானத்தால் உடலே நடுங்கிறது…” என்று “மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்க, ‘உலகத்தின் சக்திவாய்ந்த தலைவர்’ எனச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு சுமார் 78 நாள்கள் ஆகியிருக்கின்றன. நம் சகோதரிகள் சிலர் நிர்வாணமாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியான பிறகே, வேறு வழியில்லாமல் மௌனம் களைந்திருக்கிறார் மோடி… இதைவிடக் கொடுமை வேறென்ன இருக்கப் போகிறது?” மிகவும் கண்ணியமாகவே விமர்சனம் செய்திருக்கிறது ஜூனியர் விகடன்.

தினகரனை எடுத்துக் கொள்வோம்.

“இந்நிலையில் தான் பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்வது போன்று சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூரத்தின் உச்சமாக கருதப்படும் இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்த பேரணியின் போது அரங்கேறியுள்ளது. இதில் இரு பெண்களையும் வயல்வெளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு உச்சநீதிமன்றம் உள்பட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி முதன்முறையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள் குறித்து வெளியே பரவாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு அம்மாநிலத்தில் இணைய சேவையை துண்டித்தது. இருந்தாலும் விளையாட்டு வீராங்கனை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆகியோர் இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று கதறி கெஞ்சினர்.

உண்மை நிலவரத்தை எப்போதும் மறைக்கமுடியாது என்பது போன்று தற்போது பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடுமைக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்.” என்று விரிவாக தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனைவிட கண்ணியமாக பிரதமரை விமர்சிக்க முடியாதுதான்.

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் “மணிப்பூர் சம்பவம் வேறு மாதிரியானது. அதுகுறித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கரையும் ராஜஸ்தானையும் இதோடு இணைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? சத்தீஸ்கர் மாநிலத்தை அவதூறு செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி துரதிர்ஷ்டவசமானது. முதலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிறகு மணிப்பூர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் முதன்முறையாக ஊடகங்கள் முன்பு வந்த பிரதமர் மோடி பொய் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். பிரதமரே இந்தப் பேச்சுகளை நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்” என்று மோடி உரையின் திசைதிருப்பும் வேலையை அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


“உங்களது குரல் (Articulation) உங்களது மவுனத்தைவிட வெட்ககரமானது” என்றார் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா சிரினட்.

“இரண்டு பெண்கள் மீதான தாக்குதலுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பிரதமர் அற்ப அரசியலில் ஈடுபடுவதை குறிப்பிட்டு காங்கிரசின் ஊடகத்துறைத் தலைவர் பவன் கேரா, “இந்தியாவுக்கு இதயம் கொண்ட பிரதமர் தேவை” என்று கூறினார்” என டெலிகிராஃப் ஆங்கில ஏடு தெரிவிக்கிறது.

“மணிப்பூரில் மனிதத்தன்மை மடிந்துவிட்டது. மோடி அரசாங்கமும் பா.ஜ.க.வும் ஜனநாயகத்தை மாற்றிவிட்டனர். சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக கும்பலாதிகத்தைக் கொண்டுவந்து மாநிலத்தின் மிகவும் நேர்த்தியான சமூகக் கட்டமைப்பை அழித்துள்ளனர். மோடிஜி, உங்களது மவுனத்தை இந்தியா மன்னிக்காது. உங்கள் அரசாங்கத்திற்கு மனசாட்சி ஒரு சிறு துளி மீதம் இருந்தால், நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை தேசத்திற்குச் சொல்லுங்கள். நீங்கள் உங்களது அரசியலமைப்பு பொறுப்பை கைவிட்டுவீட்டீர்கள்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவரான கார்க்கே.

காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “1,800 மணி நேரத்திற்கும் மேலாக புரிந்து கொள்ள முடியாத மற்றும் மன்னிக்க முடியாத அமைதிக்குப் பிறகு, இறுதியாக மொத்தம் 30 வினாடிகள் மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேசினார். அதன்பிறகு, குறிப்பாக எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் சமப்படுத்தி, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தவிர்த்ததன் மூலம் மணிப்பூரில் நடந்த மாபெரும் நிர்வாகத் தோல்விகள் மற்றும் மனிதாபிமான துயரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பிரதமர் முயன்றார்.” என்றார்.

மேலும் அவர் பேசும் போது, “முதலாவதாக, நடந்து கொண்டிருக்கும் இனக்கலவரத்தின் பிரச்சினையை அவர் முற்றாக ஒதுக்கிவிட்டார். அவர் அமைதிக்காக எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. மணிப்பூர் முதல்வரை பதவி விலகுமாறு கேட்கவில்லை. தற்போது வெளிவந்துள்ள இந்த காணொளி ஒன்று குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்முறை சம்பவங்களுக்கு இது ஒரு சான்று மட்டுமே. இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளுடன் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை சமப்படுத்த முயற்சிக்கிறார். அங்கெல்லாம் இந்தக் குற்றங்களைச் செய்துள்ளவர்கள் 24 மணி நேரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


தீக்கதிர் நாளிதழில், “பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலும் பிரிவினை அரசியலும் தான் குக்கி பழங்குடியின மக்கள் மீது, மெய்தி மக்கள் குழுவினர் இத்தகைய தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்பதும் அதனால் பா.ஜ.க. மாநில அரசு கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதும் ஒன்றிய அரசும் கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதும் தெளிவானது. மொத்தத்தில், நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஆட்சியில் இருப்பது துரியோதனாதியர்களின் கவுரவர்கள் கூட்டம். இது கவுரவமான ஆட்சியல்ல!” என்று குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில், மணிப்பூர் விசயத்தில் பிரதமர் மோடியும் அவரது கட்சியான பா.ஜ.க.வும் செய்தது என்ன?

மோடிக்கு குஜராத் என்றால், பைரன் சிங்கிற்கு மணிப்பூர்!

2002-ஆம் ஆண்டில் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது என்ன செய்தாரோ அதை அப்படியே அச்சுப்பிசகாமல் பைரன் சிங் மணிப்பூரில் செய்துள்ளார். அங்கே நடந்த இனப்படுகொலைக்கு பலியானவர்கள் முசுலீம்கள். இங்கே இனப்படுகொலைக்கு பலியானவர்கள் குக்கி பழங்குடியின மக்கள்.

அங்கேயும் இங்கேயும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.சும்தான். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு பலத்தை பயன்படுத்தி, குக்கி இன மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

குஜராத் படுகொலையின் குற்றவாளிகள் இன்று வெளியில் சுதந்திரமாகத் திரிகின்றனர். அந்த படுகொலையில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான் இன்று நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர்களாகவும் உள்ளனர். இவர்கள் மீது குற்றஞ்சுமத்தியவர்கள், தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் வழக்கை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இதுதான், இந்துராஷ்டிரம்.

“அப்போது படுகொலைக்கான குற்றவாளி, மரண வியாபாரி இன்று பிரதமர்” (சோனியா காந்தி சொன்னது). குற்றவாளியிடம் வாயைத்திற, கலவரத்தைக் கட்டுப்படுத்து என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். 78 நாட்கள் கழித்து அவர் 30 விநாடிகளில் பேசிய பேச்சுக்கள், குற்றவாளிக்குரிய தண்டனையைவிட கொடிய தண்டனையை வழங்கக் கோருகிறது.

இருப்பினும், அவர் பிரதமராக இருக்கிறார்.

அதிகாரமும் அரசியல் பலமும் அவரது பரிவாரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நீதி கேட்டுப் போராடுபவர்கள், வெளியே வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

“பிரதமரே, வாயைத் திறந்து பேசுங்கள், கலவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்” என்று இனியும் கவுரவமாக முழக்கமிடுவதற்கான வாய்ப்பையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

அவர் நடந்து கொள்வதையெல்லாம் பார்த்தால், யோக்கியர்கள் யாரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது.

என்ன செய்யப் போகிறோம்?


தங்கம்

மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!

பிரதமர் மோடி பிரான்சுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரங்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூரில் கலவரங்களை அடக்கத் தவறியதற்காகப் பிரதமர், உள்துறை அமைச்சரை அதுவரை கண்டித்து வந்த ‘நடுநிலை’ ஊடகங்கள் சில (ஆனந்த விகடன்) ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட வார்த்தைகளில் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. இது மேற்கத்திய நாடுகளின் காலனியாதிக்க மனநிலை என்றும் விமர்சனங்களைச் செய்திருந்தனர்.

இத்துடன், “ஆனந்த விகடன்” இதழ், “மணிப்பூரின் உண்மை நிலவரத்தை உணராமல் கற்பனையாக ஒரு கோணத்தில் சித்தரிக்க முயன்றதாக விமர்சனம் செய்துள்ளது. குறிப்பாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினரான குக்கி சமூகத்தினருக்கும் மோதல் நிலவிவருகிறது. நில உரிமை தொடர்பான முரண்பாடு நீண்டகாலமாக இரண்டு சமூகங்களுக்கு இடையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மெய்தி இன மக்களைப் பழங்குடியினராக அங்கீகரிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பே, இந்த முரண்பாட்டைக் கூர்மையாக்கி மோதலுக்கு வித்திட்டது. ஆனால், மணிப்பூர் கலவரத்துக்கு மதச்சாயம் பூசுகிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்” என்று குறிப்பிடுகிறது.

இக்கருத்து, மணிப்பூர் கலவரங்கள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம், இந்தியாவைக் கண்டிக்கும் போக்கில் இப்பிரச்சினை குறித்து ஆனந்த விகடன் தெரிவித்திருந்தது என்றாலும், மணிப்பூர் கலவரத்திற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மணிப்பூர் கலவரத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கருத்தின் வேறுவடிவமாகும்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


விகடன் குழுமம் மட்டுமல்ல, மணிப்பூர் கலவர விவகாரத்தில் பிரதமரையும் அமித்ஷாவையும் கண்டிக்கும், மிகவும் நடுநிலையாளர்கள் போல நடிக்கும் பல பார்ப்பன, கார்ப்பரேட் ஊடகங்களில் கருத்துகள் இத்தகையவையே. இதன் மூலம், இனவெறி, மதவெறி படுகொலை குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைக் காப்பாற்றுகின்றன.

கிருத்தவர்களும் பழங்குடி இனத்தினருமான குக்கி மக்களுக்கு எதிராக மதரீதியாக வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான கலவரங்களை அரங்கேற்றியது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான்.

மணிப்பூர் முதல்வரும் பா.ஜ.க. கும்பலும் இந்தக் கலவரங்களை நியாயப்படுத்தியும் இவற்றை தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். மோடிக்கு குஜராத் என்றால், பைரன் சிங்கிற்கு மணிப்பூர். தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றார் போல பல்வேறு பிரித்தாளும் அணுகுமுறைகளை மேற்கொண்டுவருகிறது என்பதற்கு மணிப்பூர் துலக்கமான சாட்சியாகும்.

இதனால்தான் இதுநாள் வரை பிரதமர் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறக்கவில்லை. குக்கி இன மக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட போது கூட உள்துறை அமைச்சகம் இதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்காக அமித்ஷா கும்பல் ஒரு விசாரணை நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமரை விமர்சிக்கும் சாதாரண பத்திரிகையாளர்களை மோப்பம்பிடிக்கும் இந்திய புலனாய்வு முகமை குக்கி இன மக்கள் மீதான மெய்தி வன்முறையாளர்களை அடையாளம் காட்டவில்லை. இதுமட்டுமல்ல, கலவரத்திற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பிய போது, முதல்வர் பைரன் சிங், பதவி விலகுவதாக அப்பட்டமான ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தனது கட்சியினர் வலியுறுத்துவதால் பதவியில் தொடர்வதாகக் கூறி, எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தினார்.


படிக்க: போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!


தற்போது இரண்டு நாட்களாக உலகையே உலுக்கி வருகிறது, குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் கொடுமையான வீடியோ. இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களில் ஒருவர், “எங்கள் கிராமத்தை அந்தக் கும்பல் தாக்கியபோது போலீஸாரும் அங்கிருந்தனர். கிராமத்திலிருந்து எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், அந்தக் கும்பலிடம் எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்” என்று பேட்டியளித்துள்ளார்.

இந்த ஒரு வன்முறையில் மட்டுமல்ல, இதுவரையிலான அனைத்து வன்முறைகளிலும் குக்கி இன மக்களுக்கு எதிராக மெய்தி இனவெறி கும்பலுடன் போலீசும் அரசு அதிகாரமும் சேர்ந்து கொண்டுதான் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைப் பற்றிப் பேசிய மணிப்பூர் முதல்வர் பைரன்சிங், இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடப்பதாக மிகவும் அலட்சியமாகக் கூறியிருப்பது என்பது, பா.ஜ.க. அரசின் ஆசியுடன் தான் இந்த வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை உணர்த்துகின்றன.

ஆனால், ‘நடுநிலை’ போர்வையில் இருக்கும் பல ஊடகங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பல ஊடகங்கள்கூட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அரசு கூட்டாக நடத்தும் வன்முறை வெறியாட்டம் என்பதை திட்டமிட்டே மறைத்து வருகின்றன.

ஆகையால், மணிப்பூர் குக்கி இன மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிராக திருப்பப்பட வேண்டும்.

“ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைத் தடை செய்” என்பதுதான் மணிப்பூர் பிரச்சினையில் மக்களின் முழக்கமாகும்!


தங்கம்

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ! | தோழர் அமிர்தா

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

0

மே 3 முதல் (80 நாட்களுக்கும் மேலாக) மணிப்பூர் மாநிலத்தில் இன முரண்பாடு காரணமாக வன்முறை நடந்து வருகிறது. 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் தனது அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ் பயணங்களில் கவனத்தைக் குவித்திருந்தார். பாவம் அவர்தான் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் உழைப்பவர் ஆயிற்றே, முன்னாள் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியதைப் போல. அவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.

நேரில் செல்லாதது மட்டுமல்ல, ’சிறந்த பேச்சாளரான’ மோடி மணிப்பூர் பிரச்சினை குறித்து வாயைக் கூடத் திறக்கவில்லை. ஜூலை 20-அன்று காலையில்தான் மணிப்பூர் பிரச்சினை குறித்து அவர் தனது வாயை முதன்முறையாகத் திறந்துள்ளார். வாயைத் திறக்க அவருக்கு 79 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மணிப்பூரில் நடந்த இந்த சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானகரமானது” என்று கூறினார்.

மோடி இங்குக் குறிப்பிடும் சம்பவம், மணிப்பூரில் குக்கி – மைதேயி இடையே வன்முறை தொடங்கிய அடுத்தநாள் (மே 4 அன்று) நடைபெற்றது. பாதுகாப்புக்காகக் காட்டுக்குள் தப்பி ஓடிய குக்கி மக்களின் ஒரு குழுவைப் போலீசு மீட்டது. மைதேயி கும்பல் ஒன்று இடைமறித்தபோது. போலீசு குக்கி மக்களை அக்கும்பலிடமே ஒப்படைத்துவிட்டது. குக்கி ஆண்கள் இருவரைக் கொலை செய்த அக்கும்பல், பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்தது.


படிக்க: மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி


இந்த சம்பவம் குறித்து போலீசு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, அதாவது மே 18 அன்றே, வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜூன் 12-ஆம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்தில் இச்சம்பவம் உட்பட 6 பாலியல் சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஊடக அறிக்கைகளிலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மணிப்பூர் அரசாங்கம் தனக்குத் தெரியாது என்று கூறுவதென்பது பித்தலாட்டமாகும். பிரதமர் மோடியின் கட்சியைச் சேர்ந்தவரான மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ஒரு அரசியலமைப்புத் தலைவராக இல்லாமல் மைதேயி இனத்தவராகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் மோடிக்குத் தெரியாதது அல்ல. இக்குற்றச்சாட்டை மட்டுமல்ல, மணிப்பூர் வன்முறையையே மோடி கண்டுகொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

குக்கி பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட காணொலி வைரலான பின்புதான் பிரதமரும் மணிப்பூர் முதல்வரும் தங்களது வாயைத் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

இப்பிரச்சினை குறித்து வாயைத் திறந்த முதல்வர் பிரேன் சிங் பொய்யைத் தான் உமிழ்ந்தார். போலீசு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததாகக் கூறியதன்மூலம் இரண்டு மாதகால போலீசுத் துறையின் செயலின்மையை மூடிமறைக்க முயன்றார்.

பிரதமர் மோடியோ பிரேன் சிங்கை கேள்விக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தானோ சத்தீஸ்கரோ மணிப்பூரோ – எந்த மாநிலமாக இருந்தாலும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்திப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாகும். நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல அங்கும் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்முறைகள் நடந்தேறுகின்றன. இக்கொடூரங்கள் இந்தியாவின் பார்ப்பனிய – ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும். மேலும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மணிப்பூரைப் போல பற்றி எரிந்து கொண்டிருக்கவில்லை.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


முன்னதாக ஜூலை 15 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட நாகா பெண் ஒருவர் தனது பழங்குடி அடையாளத்திற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து வன்முறை மற்றொரு சமூகத்திற்கும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டது.

மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

மே 3-ஆம் தேதி முதல் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. ஆயுதங்களைக் கொள்ளையடித்தல், இறப்புகள் மற்றும் காயங்கள் குறித்தான செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடியோ மணிப்பூரில் எதுவுமே நடக்காததைப் போலவும், தற்செயலாக ஏதோவொரு தனித்த சம்பவம் மட்டும் நடந்துவிட்டதைப் போலவும் பேசியுள்ளார்.

அதேபோல், மோடி தனது உரையில் மணிப்பூரில் அமைதியை வலியுறுத்தியோ, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து மட்டுமே பேச மோடி விரும்பினார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, மணிப்பூரில் நடைபெற்ற மற்ற பாலியல் வன்முறைகள் குறித்து அவர் வாய் திறக்கவில்லை. ”இதுபோல 100 சம்பவங்கள் நடக்கின்றன” என்று மணிப்பூர் முதல்வரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே மோடி தனது வாயைத் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். மணிப்பூர் வன்முறை என்பது மத்திய மாநில பா.ஜ.க அரசுகளின் துணைகொண்டு நடந்தது என்பதை மறைப்பதுதான் அவரது நோக்கம். எனவே, முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்.


பொம்மி

மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி

ணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே வகுப்புவாத அடிப்படையிலான கலவரம் நடைபெற்று வருகிறது. பரவலான வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், பல நூற்றுக்கணக்கான வழிப்பாட்டுத் தளங்கள் இடிக்கப்பட்டன. சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உயிர் பிழைப்பதே சிரமமான சூழலில் பலரும் அம்மாநிலங்களை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் திட்டமிட்டுத்  தொடங்கி வைத்த பா.ஜ.க அரசாங்கம் கலவரங்களை அடக்க முயற்சிக்காமல் அவற்றை வளர விட்டு வேடிக்கை பார்த்து ’ரசித்தது’. அது மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து கலவரங்களை தீவிரப்படுத்தியது. அதனுடைய இறுதி விளைவு மாநில அரசோ, மத்திய அரசோ இக்கலவரங்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் மக்களிடையே இன ரீதியிலான பிரச்சினை வேகமெடுத்தது.

அதன் வெளிப்பாடாக மைதேயி இனவெறியர்கள் தங்கள் கண்களில் பட்ட குக்கி மக்கள் பலரையும்  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதோடு நூற்றுக்கும் மேற்பட்டோரை அடித்தே கொலை செய்தனர். இதுபோன்ற கொடுஞ்செய்களில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் உச்சக்கட்ட மனித தன்மையற்ற செயல்தான் தற்போது காணொளியாக வெளியாகி  நம் அனைவரையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. சரியாக கூற வேண்டுமெனில் அதுதான் தற்போது  மணிப்பூர் பிரச்சினை பற்றி நம் அனைவரையும் வாய் திறக்க வைத்திருக்கிறது.

அந்த காட்டுமிராண்டித்தனமான செயல் என்னவென்றால் மெய்தி இனவெறியர்கள் திரண்டு  குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட அவர்களை ஊர்வலமாக கூட்டிச் சென்று பட்டப்பகலில் பொதுவெளியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பல முறை அப்பெண்கள் கெஞ்சியும் விடாது தொடர்ந்து அனைவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடுமையான செயலை எதிர்த்த அப்பழங்குடியின பெண்களின் தந்தையும், சகோதரனும் சம்பவ  இடத்திலேயே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

“இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் எங்களை மீட்டு செல்வதாக கூறினார்கள்.  நம்பி அவர்களுடன் சென்றோம். கிராமத்தின் எல்லையில் வழிமறித்த கலவரக்காரர்கள் எங்களை இறங்கச் சொல்லி மிரட்டியதும் போலீஸ்காரர்கள் எங்களை இறங்கும்படி கூறி அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டார்கள்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். இதுதான் அங்கு போலிஸ்துறை செயல்பட்ட லட்சணம்.


படிக்க: இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?


இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தொடர்ந்து உடனடியாக தேசிய மகளிர் ஆணையத்தில் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. உச்சநீதிமன்றமோ மணிப்பூர் பிரச்சினையில் தலையிட வலியுறுத்தி பழங்குடி அமைப்பினர் வழக்கு தொடுத்தபோதும் அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தது. இப்படி அனைத்து அரசு நிறுவனங்களும் கண்களை இறுக்க மூடிக்கொண்டன.

இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேல் செயல்பட்டது மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கம். நடக்கும் பிரச்சினைகளை பாதுகாப்பு படை கொண்டு நிறுத்துவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து வெளியிடும் இணையதள சேவைகள் அனைத்தையும் துண்டித்து மணிப்பூரை தனி தீவாக மாற்றி கலவரத்தின் பாதிப்பை வெளி உலகிற்கு தெரியவிடாமல் மூடி மறைத்தார்.

இதுபற்றி தற்போது வாய்திறந்த முதல்வர் பிரேன் சிங் இது போன்ற சம்பவங்கள் 100-க்கும் மேற்பட்டவை நடந்துள்ளன. அதில் ஒரு காணொளி தற்போது பொதுமக்களிடம்  பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்று காணொளி வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் மாநிலம் முழுவதும் இணைய சேவைகளை முடக்கினோம் என வெளிப்படையாக பேசுகிறார்.

ஒருபுறம் கலவரத்தை தூண்டிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் மணிப்பூர் மாநில அரசாங்கம். மற்றொரு பக்கம் நாட்டில் ஒரு மாநிலம் பற்றி எரிகிறதே என்ற கவலையற்ற பிரதமர். பிரச்சினை தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே அன்றி மணிப்பூர் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மன் கீ பாத் நிகழ்ச்சியில் “மனம் திறக்கும்” மோடி மணிப்பூர் பற்றி வாய் திறக்கவில்லை. முடிந்த அளவு தனக்கு வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டு வலம் வந்தார்.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


தற்போது 77 நாட்கள் கழித்து  இந்த காணொளி புகைப்படங்கள் வெளியானதும் “இது இந்திய நாட்டிற்கே அவமானம்,குற்றவாளிகளை உடனே கைது செய்யுங்கள் மணிப்பூர் சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என முதலைக்கண்ணீர் வடிக்கிறார்”. திட்டமிட்டு மெய்தி குக்கி இனப் பிரச்சனையை உருவாக்கி அவர்களின் உயிரை பறித்த முதல் குற்றவாளியே மோடிதான். தற்போது  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது மணிப்பூர் ஆனாலும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆனாலும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றார்.

அவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் அது காங்கிரஸ் கட்சி  ஆட்சி செய்யும் மாநிலம் என்பதே. அங்கேயும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, ஏதோ இங்கு மட்டும் நடக்கவில்லை என மணிப்பூர் பிரச்சினையை மடை மாற்றும் நரித்தனத்தில் இறங்கிவிட்டார்.

இப்படி ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பையும் தனக்கு இசைவாகப் பயன்படுத்திக் கொண்டு இணக்கமாக இருந்த மெய்தி குக்கி மக்களிடையே பிளவை உண்டாக்கி அதை மத, இனக்கலவரமாக மாற்றி அம்மாநில மக்களின் நீண்டகால ஒற்றுமையையே சீர்குலைத்து விட்டது காவி பாசிச மோடி அரசு. அவர்களுடைய இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் காவி பயங்கரவாதிகள் என்பதற்கு மணிப்பூர் சம்பவமே துலக்கமான சான்று.


சித்திக்

பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இணையம்!

19 வயதான கல்லூரி மாணவி அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டார். அனுஷ்காவின் படம் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு அவரது ஆண் நண்பன் ஒருவனால் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டது. அப்படம் கல்லூரி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டதால் அவமானம் தாங்காமல் அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டார். இணையவழியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, எண்ணற்ற இளம்பெண்களில் ஒருவர்தான் அனுஷ்கா.

இணையவழியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறுவது குறித்து நிபுணரும் சைபர் துறையில் நிகழும் துன்புறுத்துதல்கள் குறித்து ஆராயும் ஆய்வாளருமான அஞ்சலி ரங்கசுவாமி, 111 இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 400 மாணவர்களிடம் ஆய்வினை நடத்தியிருக்கிறார்.

அந்த ஆய்வில் இணையவழியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என தெரியவந்திருக்கிறது. 60 சதவிகித பெண்களும் 8 சதவிகித ஆண்களும் இத்தகைய இணையவழி அச்சுறுத்தல்களால் தினசரி பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.

படிக்க : தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

பெண்களது படங்களை ஆபாசமாக, நிர்வாணமாக மார்ஃபிங் செய்வது, பாலியல் ரீதியாக மிரட்டுவது, வெளிப்படையாக பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்வது என இணையவழி தாக்குதல்கள் பல வடிவங்களில் அரங்கேறுகிறது. குறிப்பாக, நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தள பக்கங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களில் முதன்மை பங்கு வகிக்கின்றன.

இணையவழியில் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களில் சமூக செயற்பாட்டாளர்களாக உள்ள பெண்களே அதிகம். பெண்களை ‘அடக்கி ஆள’ ஒரு மோசமான ஆயுதமாக அவர்களது படங்களை மார்ஃபிங் செய்வதையும், கொச்சை, ஆபாச வார்த்தைகள் கொண்டு திட்டுவதையுமே ‘கெத்தாக’ பார்க்கிறது பார்ப்பன – ஆணாதிக்க மனோபாவம்.

இத்தகைய நபர்களால் இணையத்தில் பதிவிடப்படும் ஆபாச படங்கள் பலருக்கும் பரப்பப்பட்டு உலகின் மூலைமுடுக்கில் இருப்பவர் வரை சென்று சேருகிறது. இதனால் பாதிப்படையும் பெண்கள் மனரீதியான பிரச்சினைகளுக்குள்ளாகுகிறார்கள். மனப் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் பலரும் தாங்கள் மேற்கொண்டிருந்த கல்வியையும், பணியையும் விட்டு விலகும் நிலையும் ஏற்படுகிறது.

படிக்க : இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள்தான் இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நிகழும் இடமாக இருக்கிறது என ஆய்வாளர் அஞ்சலி நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஆயிரமாயிரங் காலமாக அடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த பெண்கள், தொழில்நுட்பங்கள் வளர வளர நவீன முறையில் பாலியல் சுரண்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். நிலவுகின்ற பார்ப்பன – ஆணாதிக்க சமூகத்தை தூக்கியெறியும் போராட்டத்தில் பெண்கள் களத்தில் நிற்க வேண்டும். புதிய சமுதாய பிறப்பில்தான் பெண்கள் விடுதலையும் பிறக்கும்!


ஆதிலா

இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

20.07.2023

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை
நிர்வாணப்படுத்தி ஊர்வலம் –  கூட்டுப் பாலியல் வன்கொடுமை – கொலை!

இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

கண்டன அறிக்கை

ணிப்பூரின் பழங்குடியின பெண்கள் மெய்தி இன வெறியர்களால் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்ணும் அவரது தந்தையும் சகோதரனும்  கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ நேற்றைய தினம் வெளியாகி ஒவ்வொரு மனிதரையும் உலுக்கி எடுத்து இருக்கிறது. நமது கண்ணில் பெருகி வரும் கண்ணீர் இதற்குக் காரணமான பா.ஜ.க –  ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலை சுட்டெரிக்க வேண்டும்.

இதுதான் மோடி உருவாக்கிய புதிய இந்தியாவா என்று காரி உமிழ்கிறார்கள் மக்கள். அந்த வீடியோவில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்,  தங்களை அந்தக் கொடூர கும்பலிடம் கொண்டு போய் சேர்த்தது மணிப்பூர் போலீஸ்தான் என்கிறார். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், போலீஸ், அரசு நிர்வாகமே சேர்ந்து பழங்குடியின மக்களை கொன்று குவித்தும் சித்தரவதை செய்தும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியும் இருக்கிறது என்றால் இனியும் இந்த பாசிச நடவடிக்கைகளை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


மணிப்பூரின் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடுமை தங்களுக்கே நேர்ந்ததாக இந்த நாடே கவலையுறுகிறது. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இனியும் வரலாம். பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்களோ? எத்தனை பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களோ? இதுவரை விவரம் ஏதுமில்லை. ஆனால் பழங்குடியின மக்கள் மீது திட்டமிட்டு இந்தக் கலவரத்தை ஏற்படுத்திய பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக  கும்பலை இனியும் இந்த நாட்டில் விட்டு வைத்திருப்பது இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அவமானம்.

இந்தக் கொடூர சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலவரத்தை முன் நின்று நடத்திய அந்த மாநில அரசு இதுவரை கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது ஒன்றிய அரசு.

மனித குலத்துக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிரான பழங்குடியின மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்பதே நம்முடைய கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை
9962366321

தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

0

டந்த ஜூன் 23 அன்று, அமெரிக்க இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான அமேசான், இந்தியாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தது. இதன்மூலம் அனைத்துத் தொழில்களிலும் அந்நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடு 26 பில்லியன் டாலராக உயரும்.

எத்தனை வேலைகளை உருவாக்குகிறது என்பதைவிட தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதைத்தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும். அமேசான் தனது தொழிலாளர்களை, குறிப்பாக அதன் கிடங்குத் தொழிலாளர்களை (warehouse workers), எவ்வாறு கசக்கிப் பிழிகிறது என்பதற்கு டெல்லியில் உள்ள அமேசான் கிடங்குத் தொழிலாளர்களின் அவல நிலையே சான்று.

அமேசான் இந்தியா அதன் கிடங்குத் தொழிலாளர்களை ’அசோசியேட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. டெல்லி அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் அங்கு நிலவும் பணிச் சூழலால் மிகுந்த உடல் சோர்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

”கொளுத்தும் வெயிலில் பெரிய கிடங்கில் முன்னும் பின்னுமாக நடந்து சென்றது என் தோலின் வெளிப்புற அடுக்கை உரித்துவிட்டது. நான் நிர்வாகத்திடம் சென்று விடுப்புக் கோரினேன். எனக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா? அவர்கள் என்னை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். அமேசான் இந்தியா கிடங்குகளில் இதுபோன்ற பிரச்சினைகளின்போது வழக்கமாகக் கையாளப்படும் நடைமுறை இதுதான்”. இது 21 வயதான கிடங்குத் தொழிலாளியான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் அனுபவம்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர், ஐந்து சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தவர். ஒரு வருடத்திற்கு முன்பு, தனது சொந்த மாவட்டத்தில் தீன் தயாள் உபாத்யாய் கிராமீன் கவுசல்யா யோஜனா (Deen Dayal Upadhyay Grameen Kaushalya Yojana) திட்டத்தில் பதிவுசெய்து கொண்டார். அவரது ஒரே நோக்கம் அவரது குடும்பத்திற்கு நிதி ஆதரவு அளிப்பதாக இருந்தது.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால்  (Ministry of Rural Development) இத்திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு திறன் கற்பித்தல் திட்டங்கள் மூலம் விளிம்புநிலை கிராமப்புற இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்குவதற்காக  இத்திட்டம் தொடங்கப்பட்டதாக அரசால் கூறப்படுகிறது. வேலை தேடிப் புலம் பெயர்ந்து செல்லும் நபர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றும் அரசு கூறுகிறது.

அமேசான் இந்தியாவின் மானேசரில் உள்ள கிடங்கில் ”தேர்வு” (picking) துறையில் சேர்ந்த நிஷா, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணி ஒன்றில் மூழ்கடிக்கப்பட்டார். கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது அவரது பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

”நான் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 25-30 கிலோமீட்டர் நடக்க நேரிடுகிறது. நான் உணர்விழந்து போனதுபோல் உணர்கிறேன். வேலையின் இடையே அரை மணி நேரம் இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும்; ஆனால் அதனையடுத்து நான் 4-5 மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டும்” என்று நிஷா கூறினார்.

நிஷா தாங்க முடியாத கால் வலியால் அவதிப்பட்டாலும் அவரால் விடுப்புப் பெற இயலவில்லை. ஒரு நாள் விடுப்பு எடுக்கவேண்டும் என்றாலே அவர் ராஜினாமா தான் செய்ய வேண்டும். நிறுவனத்திலிருந்து அவரது அடையாள அட்டை தடை (block) செய்யப்படும். அமேசான் இந்தியாவின் கொள்கையின்படி, தொழிலாளர்களுக்குப் பெயரளவில் ஆண்டுக்கு 14 விடுப்புகள் வழங்கப்படும்; ஏழு மருத்துவ விடுப்புகள் (sick leaves) மற்றும் ஏழு தற்செயல் விடுப்புகள் (casual leaves). உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகக் கூடுதல் விடுப்பு எடுத்துவிட்டால் கிடங்கில் அவர்களின் வேலையே கேள்விக்குறியாகிவிடும் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“குளிரூட்டும் இயந்திரங்கள் இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தின் காரணமாகக் கிடங்கில் வேலை செய்பவர்களுக்கு மயக்கம் மற்றும் சோர்வு ஏற்படுவது பொதுவான நிகழ்வாகிவிட்டது. யாராவது சோர்வு குறித்துப் புகார் செய்தால், அவர்களுக்கு ஒரு வலி நிவாரணி கொடுக்கப்பட்டு 10-15 நிமிடங்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நேரம் கெஞ்சினால், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் செல்ல நிர்வாகம் தொழிலாளர்களை அனுமதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கூட விடுப்பு என்பது அனுமதிக்கப்படுவதில்லை” என்று நிஷா மேலும் கூறினார்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


இது தொடர்பாக அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் 8 பேரிடம் நியூஸ் கிளிக் பேசியபோது, அமேசான் நிறுவனத்தால் தாங்களும் கசக்கிப் பிழியப்படுவதாகத் தெரிவித்தனர். இதன் விளைவாக அவர்களின் உடல்நலமும் மோசமடைந்துள்ளது. அமேசானுக்கு உலகம் முழுவதும் 175 கிடங்குகள் உள்ளன; அவற்றில் 20 கிடங்குகள் இந்தியாவில் உள்ளன.

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ’பேக்கேஜிங்’ துறையில் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரது வேலை அவரை 4-5 மணி நேரம் நிற்கச் செய்கிறது. இது முதுகு மற்றும் கால் தசை வலிக்கு வழிவகுக்கிறது.

”வலி என்னை அடிக்கடி மருத்துவர்களைச் சந்திக்க வைத்தது. சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுக்கத் தரையில் உட்காரும் வசதி கூட இல்லை. கழிவறையைப் பயன்படுத்தக் கூட சரியான இடைவெளி கிடைப்பதில்லை. ஓய்வு நேரம் (idle time) ஐந்து நிமிடங்களைக் கடந்து விட்டால், பி.ஏ (Process Assistant) தொழிலாளியை நோக்கிக் கத்தத் தொடங்கிவிடுவார்,” என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் அமேசான் நிறுவனத்தில் நிலவும் வேலை நிலைமைகள் குறித்து தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கம் (Amazon India Workers’ Association – ஏ.டபிள்யூ.ஏ) கடந்த மே மாதம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு சங்கத்தில் (Constitution Club) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமேசானின் கிடங்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமேசான் கிடங்குகளில் நிலவும் வேலை நிலைமைகளுக்கு அந்நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர். கருத்தரங்கில் ”மேக் அமேசான் பே” (Make Amazon Pay) என்ற பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் செயற்பாட்டாளர் நிக் ருடிகாஃப் (Nick Rudicoff) கலந்து கொண்டார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அமேசானின் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிரான போராட்டங்களின் நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

”இந்த வெற்றிகரமான பிரச்சாரத்தின் விளைவாக, தொழிற்சங்கம் உருவாகக்கூடாது என்பதற்காகப் பல மில்லியன் டாலர் செலவு செய்து அமேசான் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, அமேசானின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கும் உரிமையைத் தொழிலாளர்கள் பெற்றனர். இது ஒரு வரலாற்று வெற்றி. தொழிற்சங்கம், தொழிலாளர்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், அமேசானில் நடைபெறும் தொழிலாளர் உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சக்திகளின் கவனத்தையும் ஈர்த்தது” என்று ருடிகாஃப் கூறினார்.


படிக்க: அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!


அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (ஏ.டபிள்யூ.ஏ) கூற்றுப்படி அமேசான் இந்தியா அதன் மானேசர் மையத்தில் சுமார் 1,400 ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள்; சுமார் 70 சதவிகிதத்தினர் இளம் பெண்கள்.

ஏ.டபிள்யூ.ஏ-உடன் நெருக்கமான தொடர்புடையவரான தர்மேந்திர குமார் ”கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் கண்ணியமான வேலைகள் இல்லாதது இளைஞர்களை கடினமான பணிச்சூழல்களைக் கொண்ட வேலைகளை நோக்கித் தள்ளுகிறது. அமேசான் வேலை தரநிலைகளைக் (working standards) குறைத்துள்ளது. இந்த மோசமான பணிச்சூழலில் பணிபுரிய அமேசான் நிறுவனம் வேலை தேடும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களைத் தேர்வு செய்கிறது” என்று கூறினார்.

இந்தக் கூற்றை மானேசரில் உள்ள அமேசான் இந்தியாவின் மையத்திற்கு அருகில் வசிக்கும் இரண்டு இளம் பெண் தொழிலாளர்கள் உறுதிப்படுத்தினர். இளம்தொழிலாளர்களான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் குர்பிரீத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் தங்கள் வீட்டில் உள்ள நிதி நெருக்கடி குறித்துப் பகிர்ந்து கொண்டனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது என்றும் கூறினர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த திவ்யா (22), நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவர். வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பி.டி.இ ஆசிரியராக வேண்டும் என்ற தனது லட்சியத்தைக் கைவிட வேண்டியிருந்தது. இவரது தந்தை ஒரு விவசாயி; தாய் ஒரு கைவினைஞர். தான் பள்ளியில் படித்த காலம் முதலே தனது குடும்பம் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

”பட்டப்படிப்பை முடித்ததும், பி.டி.இ (PTE) ஆசிரியராக விரும்பினேன். ஆனால் பி.எட் படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு ₹28,000 ஆகும். அதைச் செலுத்தும் நிலையில் எங்கள் குடும்பம் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

குர்பிரீத்தின் (19) கதையும் இதே போன்றதுதான். ஹரியானா மாநிலம் ஜிந்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கவுஷல் யோஜனா திட்டத்தில் அவர் பயிற்சி பெற்றார். தந்தையை இழந்த அவருக்கு இப்பயிற்சித் திட்டத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

”பயிற்சித் திட்டத்தில், அவர்கள் அமேசான் கிடங்குகளில் உள்ள வேலைகளைப் பற்றி எங்களுக்குக் கற்பித்தனர். பிற திறன் தொகுப்புத் திட்டங்களும் இருந்தன; ஆனால் பயிற்சித் திட்டத்தின் பெரும்பகுதி கிடங்கு வேலைகளில் கவனம் செலுத்துவதாய் இருந்தது”, என்று குர்பிரீத் கூறினார்.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளாமல், பெரு நிறுவனங்களுக்கு மலிவான கிராமப்புற தொழிலாளர்களை வழங்குவதில் அரசாங்கம் முன்முயற்சியோடு செயல்பட்டிருப்பதை குர்பிரீத்தின் கூற்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சாதாரண மனிதராலும் நிறைவேற்ற இயலாத அளவுக்கு மிக அதிகமாக இலக்குகள் (targets) நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த இலக்குகளை நிறைவேற்ற பி.ஏ மூலம் அதிக அழுத்தம் தரப்படுகிறது. இலக்குகளை நிறைவேற்ற முடியாதபோது நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடுகிறது.


படிக்க: தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளின்படி இந்திய மக்கள் தொகையில் 52 சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் கீழானவர்கள். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டமோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் அமேசான் கிடங்கு வேலை போன்ற இரத்தத்தை உறிஞ்சும் வேலைகளில் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அரசாங்கமும் தனது பல்வேறு திட்டங்களின்மூலம் இளைஞர்களை இதற்குத் தயார் செய்கிறது.

பாசிச மோடி அரசு மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திவருவதால் நமது தொழிலாளர்கள் அவலமான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர். படித்த வேலையில்லாத இளைஞர்கள் (cheap labour) அதிக அளவில் இருப்பதாலும், அமெரிக்கா – சீனா மேலாதிக்கப் போட்டியினால் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளாலும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘வளர்ச்சி நாயகன்’ மோடியும் சிவப்புக் கம்பளத்துடன் தயாராக உள்ளார்.

இது தற்போது இருப்பதைவிட கார்ப்பரேட் சுரண்டலை மேலும் தீவிரமடையச் செய்யும். எனவே, பாசிச மோடி அரசையும், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடாமல் தொழிலாளர்களுக்கு விடிவு இல்லை.


பொம்மி
செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக்

தேசிய மனித உரிமை ஆணையம் தேர்தல் ஆணையத்தால் அம்பலப்பட்ட மோடி!

னித உரிமை ஆர்வலரும், 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் நீதிக்காவும் அயராது போராடிவரும் போராளியான தீஸ்தா சீதல்வாட், மோடிக்கு எதிராக பொய்களை இட்டுக்கட்டிக் கூறியுள்ளதாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் “அரசியல்வாதியின் கருவி” என்றும் குஜராத் கலவரம் தொடர்பான அவரது குற்றச்சாட்டுகள் “நரேந்திர மோடியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும்” கூறி கடந்த ஆண்டு தீஸ்தா கைது செய்யப்பட்டார். அப்போது தீஸ்தா தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த தீஸ்தா இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு ஜூன் மாதம் மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தபோது அதனைக் குஜராத் நீதிமன்றம் நிராகரித்தது.

உயர்நீதிமன்றத்தில் தீஸ்தாவுக்கு எதிர்த்தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர் மிதேஷ் அமீன், “மனுதாரர்(தீஸ்தா) தனது இரண்டு கருவிகளைக் (போலீஸ் அதிகாரிகள் ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட்) கொண்டு பெரிய சதி செய்யகிறார்” என்றார்.


படிக்க: தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!


தற்போது (ஜூலை 19 அன்று) தீஸ்தாவை உடனடியாக சரணடையுமாறு கூறிய குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அவருக்கு நிபந்தனைகள் ஏதுமற்ற வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆனால் குஜராத் படுகொலையை நிகழ்த்தியதில் மோடிதான் முதன்மை குற்றவாளி என்று தீஸ்தா மட்டுமல்ல, தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தற்போது மோடி அரசின் கையாளாக வேலை செய்யும் இந்தியத் தேர்தல் ஆணையமுமே குஜராத் கலவரத்தின் போது அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு அதில் பங்கு இருக்கிறது என்று தனது விசாரணை அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கின்றன.

குஜராத்தில் படுகொலை நடந்தவுடனேயே முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணையம் கலவரம் குறித்து மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டதோடல்லாமல், நேரடியாகக் களத்திற்கும் சென்றது. நீதிபதி கே.ராமசாமி, நீதிபதி சுஜாதா மனோகர் மற்றும் வீரேந்திர தயாள் ஆகியோர் குஜராத் சென்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

நேரில் கண்டதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

“குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில், குஜராத் மக்களின் உயிர், சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் காக்க மாநில அரசு தவறிவிட்டது”.

“குஜராத் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், கோத்ரா இரயில் விபத்தில் பலியான இந்து குடும்பங்களுக்கு ரூ. இரண்டு லட்சமும் நிவாரணம் எனப் பாரபட்சம் காட்டியது மோடி அரசு” என்று குற்றம்சாட்டியது ஆணையம்.


படிக்க: அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்


தேர்தல் சமயத்தில் குஜராத்தில் கலவரம் நடந்ததால் அங்கு தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என முடிவு செய்ய தேர்தல் ஆணையம் நேரடியாகக் களத்திற்குச் சென்றது. அது தொடர்பான அறிக்கையில், “மாநில அரசு தெரிவித்தவற்றுக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது. ஒருபுறம் 12 மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துவிட்டு மறுபுறம் 20 மாவட்டங்களுக்கு இலவச ரேஷன்களை வழங்கிவருகிறது” என தேர்தல் ஆணையம் அப்போது அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், “புகார் அளிக்கவந்த நபர்கள் எத்தனை, வழக்கு பதியப்பட்டவர்களின் விபரம், கைது செய்யப்பட்டவர்களின் விபரம், வழக்குப் பதியப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர்கள் பற்றிய விபரம் குறித்தான தகவல்களை வழங்குவதை மாநில அரசு தவிர்த்து வருகிறது” என்றும் தெரிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க நானாவதி-மேத்தா ஆணையத்தை மாநில அரசு நியமித்தது. அதே ஆணையம்தான் பின்னர் குஜராத் படுகொலை குறித்தும் விசாரணை மேற்கொண்டது.

நானாவதி-மேத்தா ஆணையமானது, கலவரத்தைத் தடுக்க அரசு நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கோத்ரா விபத்து முன்னரே திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அதுகுறித்து முன்னரே தெரிந்திருந்ததா என்ற கோணத்திலும் ஆய்வு செய்தது.

2004-ஆம் ஆண்டு ஆணையம் அதன் விசாரணையை, அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, அவரது அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை விரிவாக ஆய்வு செய்தது.

அதேபோல், குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி வழக்கில் (இக்கலவரத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்) குற்றம் சாட்டப்பட்டவர்களை மறுவிசாரணை செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.என். கரே, “குஜராத் அரசு மீது தனக்கு நம்பிக்கை இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பிறகு மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பில், “அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் எரியும் போது நவீன கால நீரோக்கள் வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். குற்றம் புரிந்தவர்களை எப்படிக் காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்” என்றது நீதிமன்றம்.

ஆக, தீஸ்தா சீதல்வாடின் வழக்கால்தான் மோடி பிம்பம் சரிகிறது என்று சங்கிகள் குற்றம்சாட்டுவது அப்பட்டமான பொய். தேர்தல் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையங்கள் ஏற்கனவே மோடியின் முகமூடியைக் கிழித்திருக்கின்றன.


தாரகை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!

ன்று (ஜூலை 20) காலை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கூட இருக்கிறது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் விலையேற்றம், மணிப்பூர் பற்றியெறிவது, எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை சட்டவிரோதமாக ஏவுவது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்களின் சர்வாதிகாரப் போக்குகள் போன்ற பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் முறையாக விவாதிக்கப்படும் என்ற நம்பிக்கை எந்தக் கட்சிகளுக்கும் இல்லை.

பொதுசிவில் சட்டத்தை இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், வழக்கம் போல அதை திசைத்திருப்புவதற்கான அனைத்து வேலைகளிலும் பா.ஜ.க. ஈடுபடும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. இதுதான் நடக்கும் என்று நாட்டுமக்களுக்கும் தெரியும்.

பிரதமர் எனப்படுபவர் எந்தப் பிரச்சினைக்கும் வாயைத் திறக்கமாட்டார். 2004-2014 வரை நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் போன்ற ஒரு “கல்லுளி மங்கன்” மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்திற்கே வராத “ஊர்சுற்றி” என்பதும் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.


படிக்க : விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்


அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் “அம்மா” ஆட்சியை போல, மோடியின் ஆட்சி. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், எங்களை வாழவைத்த தெய்வம் என்ற பல்லவியை பேரவையில் ஜெயலலிதா முன்னிலையில் சுதிதப்பாமல் பாடிவிட்டு அமைச்சர்கள் பேசத் தொடங்கினர்; எதிர்க்கட்சிகள் பேசும் போதெல்லாம், சம்பந்தமே இல்லாமல், அம்மா புகழைப் பாடி நேரத்தை வீணடித்தனர்; அந்தக் காட்சிகளுக்கு சற்றும் குறையாமல்தான், தற்போது நாடாளுமன்றக் கூட்டங்கள் நடக்கின்றன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதோ, பேசும் போதே, பா.ஜ.க.வினர் எழுந்து நின்று “மோடி, மோடி”, “ஜெய்ஸ்ரீராம்” என்று எந்த சம்பந்தமும் இல்லாமல் கூச்சலிடுவார்கள்.

நாட்டின் சொத்துக்களை எல்லாம் அம்பானிக்கும் அதானிக்கும் தாரை வார்க்கிறார் பிரதமர். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், சட்டப்படிதான் நடக்கின்றன. இந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரப்படிதான் நடக்கிறது என்றாலும் மோடி மீது மட்டும்தான் எதிர்க்கட்சிகளுக்கு கோபம் வருகிறது.

பாசிச பா.ஜ.க.வின் சதிராட்டங்களை அங்கீகரித்து அதன் பாசிச நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சட்டபூர்வமாக இந்துராஷ்டிரத்தை அரங்கேற்றுவதே இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.

தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றும் வழிமுறை, மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கும் “கல்லுளி மங்கன்” வழிமுறை, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை “டிராய்” போன்ற தீர்ப்பாயங்களுக்கு மாற்றிவிட்ட சர்வாதிகாரப் போக்கு போன்றவை அனைத்தும் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியிலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட சர்வாதிகாரப் போக்குகள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க பாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசியல் சாசனத்தையும் இந்த அரசு கட்டமைப்பையும் மறுவார்ப்புச் செய்து, கார்ப்பரேட் அரசு என்று சொல்லப்படுகின்ற புதியவகையான பாசிச அரசை உருவாக்கிய கட்சிகள்தான் பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, தொல்பொருள் துறை தளப்பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தபால் சேவை மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவும் மசோதா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் பட்டியலின, பழங்குடியின மக்கள் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இந்த கூட்டத் தொடரில் உத்தேசிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை.

இவையன்றி, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெறப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2022, எளிதில் வணிகம் செய்யவும் சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை மாற்றும் ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா, நிலைக்குழு கூட்டுக்குழு பரிசீலனையில் இருக்கும் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட இரு மசோதாக்கள், மத்தியஸ்த மசோதா போன்றவையும் நிறைவேற்றப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த சட்டங்கள் குறித்தும் இவற்றின் சரத்துகள் குறித்தும் நாமறிந்தவரை எந்த ஊடகங்களும் விவாதிக்கவில்லை; எதிர்க்கட்சிகள் இவை குறித்து எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. மற்றொருபுறம், பாசிச மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து திசைத்திருப்பும் வகையிலும், தனது இந்துராஷ்டிரத்தை நிறுவும் வகையிலும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை பா.ஜ.க., சங்கப் பரிவார கும்பல் மேற்கொள்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதைப் பொருத்தவரை, எதிர்க்கட்சிகள் ஒப்பாரி வைப்பது போல, மீண்டும் ஒருமுறை ‘ஜனநாயக கேலிக்கூத்தாக’த்தான் அமையப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக தினமணி, தினமலர் உள்ளிட்ட பத்திகைகள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியும், சில நடுநிலைப் பத்திரிகைகள் இரண்டு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கியும், எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகைகள் பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கு எதிராக கண்டனங்களையும் பதிவு செய்தும் வருகின்றன.

இன்றைக்கு தொடங்கி ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை என்ன நடக்கப்போகிறது என அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கோரிக்கையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க பா.ஜ.க. அனுமதிக்கப் போவதில்லை. வழக்கம் போல வெளிநடப்பு, அமைதி ஊர்வலம் போன்ற மொன்னையான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவார்கள். மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் எந்த விவாதமும் இல்லாமல் அரங்கேறும்.

ஆனால், இவர்கள் யாருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்கள் அமைதியாக நடக்கப் போவதில்லை என்று நன்கு தெரியும். அமைதியாக நடக்காத இந்த போக்கு என்பதே, சொல்லிக்கொள்ளப்படும் நாடாளுமன்ற மரபுகளைத் தூக்கியெறிந்து கார்ப்பரேட் அரசு அரங்கேற்றத்தின் ஒரு அங்கம். இந்த கார்ப்பரேட் அரசு அரங்கேற்றத்தை இந்துராஷ்டிர அரங்கேற்றமாக பாசிச பா.ஜ.க. மாற்றிவிட்டதைத்தான் எதிர்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம்”, “ஜனநாயகத்தை மீட்போம்” என்று முழங்குகின்றன.

ஆகையால், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் எல்லாம் வெற்றுக்கூச்சல்களே; நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எல்லாம் மொன்னையானவையே.


படிக்க : காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!


முக்கியமாக, சொல்லிக்கொள்ளப்படும் நாடாளுமன்ற மரபின் மீது எதிர்க்கட்சிகளுக்கும் நம்பிக்கையில்லை, மக்களுக்கும் நம்பிக்கையில்லை. பா.ஜ.க. இந்த மரபை தூக்கியெறிந்து இந்துராஷ்டிரத்தைக் கொண்டுவருவதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த பாசிச அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கு ஜனநாயகத்தை வழங்குகின்றதே இந்த நாடாளுமன்றம், அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனவா? ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தடைசெய்ய வேண்டும் என்று இவர்கள் முழங்குவார்களா?

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

ஆகையால், இந்த கரையான் புற்றைப் பாதுகாப்பது மக்களின் பிரச்சினை அல்ல. கருநாகங்களான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. போன்ற பாசிசக் கட்சிகளுக்கு ஜனநாயகம் அளிப்பதைவிட கொடியது எதுவும் இல்லை. அக்கட்சிகளைத் தடை செய்து, மக்கள் பிரச்சினைகளை முறையாக விவாதித்து, மக்கள் தீர்ப்பளிக்கும் வகையிலான, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு வாய்ப்பளிக்கின்ற ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் நாம் முழங்கவேண்டிய தருணமாகும். முழங்குவோமாக!

 


தங்கம்

மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! | பு.மா.இ.மு போஸ்டர்

தகுதி, திறமை, மோசடி – பா.ஜ.க!
மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்!

மாணவர்களே, இளைஞர்களே!

ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி!

மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை!

வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களில் ஏழு பேர் பாஜக எம்.எல்.ஏ வின் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள்!

மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது!

ஊழலும் அதிகார முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பிஜேபி கும்பலின் உத்தமர் வேடத்தைத் திரை கிழிப்போம்!

புரோக்கர்களாக மாறிப்போன கோச்சிங் சென்டர்களையும் அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தாமல் தகுதி – திறமை என்பதெல்லாம் மோசடிதான்!

கல்வி – வேலை – ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை களத்தில் முன்னெடுப்பதன் மூலமே நமக்கான உரிமையைப் பெற முடியும்!


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு – 9444836642

கொலைகார அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழையவிடாதே! | மக்கள் அதிகாரம்

19.07.2023

தூத்துக்குடி தியாகிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிய
மார்வாடிகளுக்கு எச்சரிக்கை!

கொலைகார அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் நுழைய அனுமதி இல்லை!

கண்டன அறிக்கை

தூத்துக்குடி மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராடிய 15 பேரை சுட்டுக் கொன்ற அனில் அகர்வால் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னைக்கு வருகிறான். 2018-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தாவின் உரிமையாளரான அனில் அகர்வால் தான் முழு பொறுப்பு. இப்படிப்பட்ட குற்றவாளி தமிழ்நாட்டுக்கு வருவது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சவால்.

இதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தூத்துக்குடி மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை அமைத்து அந்த நாட்டின் மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கியவன். அதற்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக் கொண்ட கொலைகாரன். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள், பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்காத போலீசு ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற கூலிப்படைகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுராணா ஹை டெக் இன்டர்நேஷனல் பள்ளியின் நிகழ்ச்சிக்கு  06.08.2023 அன்று இந்தக் கொலைகார கொள்ளைக்கார அனில் அகர்வால் வருகை தருகிறான்.


படிக்க: தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சி வாழுகின்ற இந்த மார்வாடி கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறது என்றால்,  இந்த மார்வாடி கும்பலின் கொழுப்பையும் திமிரையும் அடக்க வேண்டியது தமிழ்நாட்டின் பொறுப்பு.

தமிழ் மக்களின்,  உலக மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வால் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீசு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறது.

அதையும் மீறி அனில் அகர்வால் தமிழ்நாட்டுக்குள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நுழைந்தால் அதற்கான கடும் பதிலடி தமிழ்நாட்டு மக்களால் கொடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
9962366321

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேலூர்: பிரியாணி – மாவீரன் – போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

வேலூர்: பிரியாணி மாவீரன் போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!