Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 130

தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா T.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள விசைத்தறி, ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்கள் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 2-ம் தேதியில் இருந்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்கள் 50% கூலி உயர்வு, 20% போனஸ், காப்பீடு உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளையும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் முன்னிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி நெசவாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 13 சதவீதமும் ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு கோரியிருந்தனர். ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆதலால் சப் கலெக்டர் இந்த கூலிஉயர்வை அமல்படுத்த ஒரு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு கூலி உயர்த்தப்படவே இல்லை. 4 வருடத்திற்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே கூலி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத முதலாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து மக்களிடம் கேட்டதற்கு:
“இங்கு வசிப்பவர்களுக்கு நெசவுத் தொழிலைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. காலையில் 5 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 8 மணி வரை வேலை செய்வோம், எட்டு மணி நேர வேலை என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது ஆனா எங்க கூலி தான் ஏறவே மாட்டேங்குது; நாலு வருஷத்துக்கு முன்ன கொடுத்த கூலி இப்ப கட்டுமா? நாங்கள் ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்ப தானே கூலி கேட்கிறோம்?” என்று சுப்புலாபுர நெசவாளர்கள் தங்கள் கையறுநிலையை வெளிப்படுத்தினர்.


படிக்க: சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !


அதேபோல் கொரோனா காலகட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட  எந்தவித  நிவாரணமும் நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை. நூல் விலை ஏற்றத்தால் ஒரு மாதமாக முடங்கிய போதும் எந்த வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இந்த பகுதியில் 40 முதல் 45  நிறுவனங்கள் இருக்கிறது, மாதத்திற்கு சுமார் ஒரு கோடி வரை வருமானம் வருகிறது. ஆனால் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் நெசவாளர்கள் சேலையில் பாக்கா பிணைப்பதற்கு அடிப்படை கூலி தர வேண்டும் என்றும் கோரிக்கையில் முன்வைக்கின்றனர்.

முதலாளிகளும் கூலி உயர்த்தாததற்கு ஜி.எஸ்.டி, கொரோனா, உபகரணங்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களே என்று மக்களிடம் கேட்டதற்கு: “முதலாளிகளுக்கு எப்போதும் கட்டாதுன்னுதான் சொல்லுவாங்க;  முதலாளிகள் வாங்கும் கடையில் தான் நாங்களும் தறிக்கு தேவையான பொருட்களை வாங்குகிறோம். விலைவாசி உயர்வால் நாங்களும்தான் பாதிப்பை அனுபவிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் கூலி உயர்வு கிடைப்பதில்லை” என்று கூறினர்.


படிக்க: கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !


முன்பு 400 ரூபாய் க்கு விற்ற காட்டன் நூல் இன்று 600 ரூபாய் வரை விலையேறியுள்ளது. ஆனால் தொழிலாளிக்கு  மட்டும் கூலி அதே நிலையிலேயே நீடிக்கிறது.

இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திண்டுக்கல்லில் இன்று (9.1.2023) தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆணையர் மற்றும் தேனி மாவட்ட சப்-கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எங்கள்  கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.நெசவாளர்களுக்கு ஆதரவாக ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நெசவாளர்களும் ஜன.6-ம் தேதியில் இருந்து போராடி வருகின்றனர். உழைத்து உழைத்து உக்கி போன நெசவாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

ந்த 21-ஆம் நூற்றாண்டிலும் “தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்” என்பது புத்தக-ஏட்டில் மட்டுமே உள்ளது.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தன.

பாராட்டிற்குரியதுதான்; ஆனால் அது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அனைவரும் இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்..

சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகியும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய முடியாத நிலைமையே நீடிக்கிறது. இது ஏன்?

இரட்டை குவளை முறை இன்னும் பின்பற்றப்படுவது ஏன்?

ஆதிக்க சாதி வெறியர்கள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது ஏன்?

‘இப்பெல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க’ என்பவர்களுக்காக தான் இந்த பதிவு!

இவ்வாறு சென்னை பு.மா.இ.மு தோழர் யுவராஜ் அவர்கள் சாதி-தீண்டாமையின் இருப்பை கேள்வி எழுப்பியுள்ளார்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

2014 மக்களவை தேர்தலில் ஆண்டுக்கு 2- கோடி  பேருக்கு வேலை  தருவோம் என  பிரதமர் மோடி வாக்குறுதிஅளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன. வாக்குறுதிப்படி வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, வேலையில் இருந்தவர்கள் வீதிக்கு  விரட்டப்பட்டதோடு புதிய வேலைவாய்ப்புகளும் அருகிவிட்டன. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்  வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதம் 8சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பரில் 8.30சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 16 மாதங்களோடு ஒப்பிடும் போது இதுவே அதிகபட்ச அளவாகும்.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கு அறிஞர்கள், மற்ற கட்சியினர் முன்வைத்த எந்த ஆலோசனையையும் மோடி அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாறாக இந்த நெருக்கடியை பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளையடித்துக் கொடுத்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க எந்தவொரு நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. இதனால் பெரும்பாலான சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிந்து போய் மூடப்பட்டுவிட்டன.

படிக்க : “சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காத மோடி அரசு, ‘ஆத்மநிர்பர்’ என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது பணமயமாக்கல், உள்கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்த்து வருகிறது.

கொரோனா வருவதற்கு முன்பும் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருந்தது. மோடி ஆட்சிக்கு வரும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பேன் என்றார். ஆனால், தற்போது வரை வேலைவாய்ப்பு அதிகரித்ததாக தெரியவில்லை. ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்களும் தற்போது துரத்தப்பட்டு வருகின்றனர். ஐ.டி நிறுவனங்களில் கூட லே-ஆஃப் என்ற பெயரில் வேலையில் இருந்து ஊழியர்கள் துரத்தப்படுகிறார்கள். படித்தப் பட்டதாரி இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் உதிரி வேலைகளைச் செய்துவருகின்றனர்.

இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ச்சவடாலடித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதிகாரத்திற்கு வந்தபின்பு “பக்கோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். இதையே ஆர்.எஸ்.எஸ் “வேலைக்காக காத்திருக்காமல் சுயத்தொழில் தொடங்கி பிழைக்க வேண்டும்” என வேறு வார்த்தையில் சொல்கிறது.

வேலையின்மை, கடன், வியாபார நெருக்கடி பிரச்சினை காரணமாக 2018 முதல் 2020 ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 ஆகும். வறுமை காரணமாக அண்ணன், தங்கை தற்கொலை, பணியைவிட்டு நீக்கியதால் புகைப்படக் கலைஞர் தற்கொலை, கடன் தொல்லை அவதியால் விவசாயி பலி, வேலையின்மையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு” என தற்கொலைகளெல்லாம் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.

படிக்க : அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

வேலையின்மை என்பது பொருளாதார பிரச்சினையாக மட்டுமின்றி ஆழமான சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது. படித்த இளைஞர்கள் வேலையின்மை காரணமாக கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் ஆரம்பிக்கின்றனர். போதைப் பழக்கம் அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக வேலையின்மை பிரச்சினை அமைந்துதுள்ளது.

இந்த வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும். அதனை அமல்படுத்தும் இந்த பாசிச மோடி அரசை படித்த இளைஞர்களும், கடன் சுமையால் தவிக்கும் சிறு-குறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து  இந்த அரசையும், இந்த நாசகார மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் தகர்த்துத்தெரியாமல் நாம் இந்த வேலையின்மையால் அதிகரிக்கும் தற்கொலை பிரச்சினையில் இருந்து மீள முடியாது.

சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!

0

த்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியை ஆர்.எஸ்.எஸ் மதக் கலவரத்திற்கான புதிய மையமாக உருவாக்கியுள்ளது. கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று நாராயண்பூர் நகரில் ஒரு கும்பல் தேவாலயத்தை சூறையாடியது; தடுக்க முயன்ற போலீசுகாரர்களையும் தாக்கியது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் திட்டமிட கூட்டம் ஒன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த வன்முறை சம்பவம் அரங்கேரி உள்ளது.

இதற்கு முன்னதாக, ஜனவரி 1-ஆம் தேதியன்று, கோரா (Gorra) கிராமத்தில் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவர்-அல்லாத பழங்குடிகளுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் கிராம மக்கள் பலரும் போலீசுகாரர்களும் காயமடைந்தனர். அதேபோல டிசம்பர் 18 அன்று, நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் ‘தாய் மதம் திரும்புதல்’ (Ghar Wapsi) என்பதற்கு உடன்படாத பழங்குடிகள், கிட்டத்தட்ட 500 பேர், அப்பகுதிகளில் இருந்து வன்முறை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணம், ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச் (Janjati Suraksha Manch) என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பே ஆகும். ஒரு வருட காலமாக, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ-ஆன போஜ்ராஜ் நாக் (Bhojraj Nag) தலைமையேற்று இப்பகுதியில் மத முனைவாக்கத்தை உருவாக்கியதன் விளைவே தற்போது நடைபெற்று வரும் இக்கலவரங்கள்.

நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் பல்வேறு பேரணிகளை நடத்திய போஜ்ராஜ் நாக், கடந்த நவம்பர் 6 அன்று “பழங்குடிகளுக்காக வழங்கப்படும் ஆதாயங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது கிறிஸ்தவர் என்றோ இஸ்லாமியர் என்றோ அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதை நிறுத்த வேண்டும். அதற்காக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்” என்று கூறினார். ஒருபுறம் நீதிமன்றத்தை நாடுவதாக கூறிவிட்டு மற்றொருபுறம் கலவரத்தை தொடங்கிவிட்டனர்.


படிக்க: அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!


சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30.6 சதவிகிதத்தினர் பழங்குடிகள் ஆவர். காலனிய காலத்திலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ அமைப்புகள் பழங்குடிகளை ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் செய்து வருவதாகக் கூறி ஆர்.எஸ்‌.எஸ் கிறிஸ்தவ வெறுப்பை பரப்பி வருகிறது. இதற்காக வனவாசி கல்யாண் ஆசிரமம் (Vanavasi Kalyan Ashram) என்ற ஒரு அமைப்பை வடக்கு சத்தீஸ்கரில் 1952 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பின் மூலம் ‘தாய் மதம் திரும்புதல்’ (Ghar Wapsi) என்ற பெயரில் சடங்குகளை நடத்தி கிறிஸ்தவ பழங்குடிகளை இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து வருகிறது.

பழங்குடி மக்களை இந்து அடையாளத்தைக் கொண்டு விழுங்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ். பழங்குடிகளை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடாமல் ‘வனவாசி’ என்றே ஆர்.எஸ்.எஸ் குறிப்பிடுகிறது. அதாவது, “பழங்குடியினர் என்பவர்கள் ‘பிற்பட்ட இந்துக்கள்’; சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் அவர்களை இந்து மதத்திற்குள் இணைத்துக் கொள்ளலாம்” என்பதே அவர்களின் நிலைப்பாடு.

2006 ஆம் ஆண்டில், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின்(VKA) ஒரு முன்னெடுப்பாக ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச் தொடங்கப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டில், 15 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி முடிவு பெற்று காங்கிரஸ் ஆட்சி தொடங்கிய பின்புதான் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்தது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் வடக்கு பஸ்தர் பகுதியைச் சேர்ந்த நாராயண்பூர், கொண்டகான் மற்றும் காங்கேர் மாவட்டங்களில் வீரியமாக செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் (Chattisgarh Christian Forum) தலைவர் பன்னாலால் “15 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கிறித்தவர்கள் மீது 18 தாக்குதல்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 380 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன” என்று கூறினார்.


படிக்க: தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!


கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நான்கு நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்று வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த திலீப் சிங் ஜூடெவ் (Dilip Singh Judeo) சிலையை திறந்து வைத்தார். திலீப் சிங் ஜூடெவ் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிரானவர்; பழங்குடியினரை இந்துத்துவா கருத்தாக்கத்திற்கு ஆட்படுத்த வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டவர். மோகன் பகவத், ஜூடெவ்-ஐ நினைவு கூர்வது என்பது “பழங்குடிகள் அனைவரையும் இந்து அடையாளம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வருவோம்” என்று பிரகடனம் செய்வதாகும்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடிகள் உரிமைகள் பறிக்கப்பட்டு காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை.

பொம்மி

சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!

ழை எளிய உழைக்கும் மக்கள் உயிர்பிழைத்துக் கொள்ள இருக்கும் ஒரே கடைசி வாய்ப்பு அரசு மருத்துவமனைகள் தான். அங்கு சென்றாவது எப்படியாவது உயிர்பிழைத்து கொள்ளலாம் என்று வரும் உழைக்கும் மக்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களோ சரியான உபகரணங்களோ அரசு மருத்துமணைகளில் கிடையாது. தேவையான மருத்துவர்கள், கருவிகள் இல்லாத காரணத்தால் முறையான சிகிச்சை பெற முடியாமல் தினம்தோறும் அப்பாவி உழைக்கும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லை அரசே இலவசமாக அவர்களை கொலை செய்துக் கொண்டிருக்கிறது.

02-01-2023 அன்று திருவாரூர் அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் பவித்ரா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து பிரசவம் அறுவை சிகிச்சை செய்ததில் பவித்ரா மூச்சி திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி பவித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள நாகை அரசுப் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பவித்ராவிற்கு சிகிச்சை அளிக்கப்போதியா மருத்துவ வசதிகள் இல்லாததால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.


படிக்க : திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!


02-01-2023 திங்கள் அன்று அதிக காலையில் திடீரென்று பவித்ராவிற்கு மூச்சி திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை அறைக்குக் கூட அழைத்து செல்லாமல் பவித்ரா படுக்க வைக்கப்பட்ட சாதரண வார்டிலே மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு தெரியாமல் திரைசீலை இட்டு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். பிரசவத்தின் போது அதிக மூச்சி திணறல் ஏற்பட்டுள்ளது அதை சரி செய்யும் உபகரணங்களும் அதை முறையாக கையாளும் மருத்துவர்களும் அருகில் இல்லாததால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலே பவித்ரா இறந்துள்ளார். இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் பிறந்த உடன் ஒரு குழந்தையும் சில மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு குழந்தையும் இறந்துள்ளது. பவித்ரா இறந்த சில மணி நேரத்திலே சம்பவம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று போலீஸை மருத்துவ நிர்வாகம் வரவைத்து பவித்ரா உடலில் ஏற்கெனவே உடல் நிலை பிரச்சனை இருந்தது அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்று போலீஸை வைத்து சமாளித்துள்ளது.

பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணத்தலே பவித்ரா உயிரிழந்துள்ளார் என்று பவித்ராவின் தம்பி கூறியுள்ளார். அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லாமல் அலட்சியமாக சாதரண வார்டில் வைத்து பவித்ராக்கு அறுவை சிகிச்சை செய்ததும், அதனுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் யாரும் இல்லாததுமே பவித்ரா இறப்பிற்கு முக்கிய காரணமாகும். இவ்வளவு அலட்சிய போக்காக செயல்பட்ட மருத்துவர்களையும் செவிலியர்களை கைது செய்யாமல் அவர்களை பாதுகாத்து வருகிறது போலீசுத்துறை.

பிரசவத்தின்போது இறப்பு நடப்பது இந்த மருத்துவமணையில் இது முதல் முறை அல்ல. இதுபோல் பல இறப்புகள் பிரசவத்தின்போது நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிரசவத்தின் போது மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மற்றும் பயிற்சி இல்லாத மருத்துவ மாணவர்கள் இணைந்து  பிரசவம் பார்ப்பதாலும் அதை முறைபடி கையால திறனற்ற அலட்சிய போக்கால் நடந்துள்ளது.

பிரசவ வார்டிற்கு பொறுப்பாளராக இருக்கும் பிரபாவதி என்ற மருத்துவரும் இதை கண்டு கொள்ளாமல்  விட்டுவிடுகிறார். இவ்வளவு இறப்புகள் நடந்து இருந்தாலும் அதற்காக நடவடிக்கை எடுக்கபடாமல் இருக்கிறது. அவர் பெரும்பால நேரம் இந்த பிரசவ வார்டிற்கு வருவதே கிடையாது. மற்ற மருத்துவர்களும் வீடியோ கால் மூலம்தான் மருத்துவ மாணவர்களுக்கும், செவிலியர்களுக்கு பிரசவம் பார்க்க சொல்லி தருகிறார்கள். மருத்துவர்கள் இங்கு வந்து கர்ப்பிணி பெண்களை பார்ப்பது சிகிச்சை அளிப்பது என்பது அறிதாக இருக்கிறது. இந்த மருத்துவ நிர்வாகமும் முதல்வரும் இதை துளியும் கண்டுகொள்வது கிடையாது.

முதல்வர் ஜோசப் அவர்களும் உடலில் சிறு பிரச்சினை என்றவுடன் TMC தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்துவிட்டு வருகிறார். முதல்வரோ இந்த அரசு மருத்துவமனையை நம்பாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அப்பொழுது இந்த மருத்துவமனை எந்த கதியில் இருக்கிறது என்பது நமக்கு திரை கிழித்து காட்டுகிறது. இதில் அப்பாவி உழைக்கும் மக்கள்தான் மாட்டி கொள்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறப்பது என்பது அந்த குழந்தைக்கு மட்டும் அல்ல, அந்த தாய்க்கும் மறு பிறப்புதான். ஆனால், அந்த உயிர் போகும் வலி கொண்ட நேரத்தில் கூட பிரசவம் பார்த்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என்பது திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவல நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது திருவாரூர் என்ற ஒற்றை அரசு மருத்துவமனையின் அவல நிலை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையின் நிலையும் இதுதான்.

திருவாரூர் அரசு மருத்துவமணையில் போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ கிடையாது மிக மிக குறைந்த எண்ணிகையிலே மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ளனர். அவர்களிலும் பாதி பேர் தற்காலிக பணியாளர்கள் தான், அவர்களாலும் எல்லா நோயாளிகளையும் பார்த்து சிகிச்சை அளிக்க முடிவதில்லை. மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் முக்கியமான மருத்துகள் வாங்க கூட வெளியில்தான் செல்லவேண்டி இருக்கிறது. ஒரு  MRI SCAN  எடுக்கனும் என்றால் கூட வெளியில் 6000 செலுத்திதான் எடுக்க வேண்டியிருகிறது. மருத்துவமனைக்கு காலை 8 மணிக்கு வரும் மருத்துவரும் கூட நோயாளியை தொட்டு கூடா பார்க்காமல் சும்ம நோயாளியின் அட்டையை பார்த்துவிட்டு சென்று விடுவதாகவும் வரக்கூடியவர்களில் யார் உண்மையான மருத்துவர்? யார் மருத்துவ கல்லூரி மாணவர்?  என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று நோயாளிகள் புளம்புகின்றனர்.

போதிய மருத்துவர் வசதி இல்லாததால் அதிக நேரம் மருத்துவக் கல்லூரி மாணவர்களே நோயாளிகளை பார்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பயிற்சி நேரம் போக அதிகபடியான நேரம் மருத்துவ மாணவர்களே இந்த வேலையை செய்வதால் மாணவர்களும் மன உளைச்சல் அடைகின்றனர். 2022 ஆகஸ்டு மாதம் 5 ஆம் ஆண்டு மருத்துவம் படித்துவந்த காயத்திரி என்ற மாணவி அதிக வேலை சுமை காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதையும் இந்த மருத்துவ நிர்வாக முறையாக விசாரிக்காமல் வேறு காரணத்தால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அந்த மாணவியின் மரணத்தை மூடி மறைத்துள்ளது.

உடலில் எதாவது நோய் என்று வரும் நோயாளிகளையும் இங்கு சிகிச்சைக்கான கருவிகள் இல்லை தனியார் மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். எலுப்பு முறிவு சிகிச்சை என்றால் கூட மருத்துவர் நேரில் வராமல் வாட்சப் மூலம் வீடியோ அனுப்பி அதனை பார்த்து சிகிச்சை அளிக்கின்றனர். மற்ற மருத்துவர்களும் மருத்து கல்லூரியோடு சேர்ந்து இயங்கிவரும் மருத்துவமனையே போதிய வசதிகள் இல்லாமல் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.

அதிக மருத்துவமனைகளும், அதிக மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்று பெருமைபட்டு கொள்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவமனைகளின் உண்மை நிலை என்பது வேறாக இருக்கிறது. மருத்துமனைகளில் போதிய மருத்துவர்களோ போதிய செவிலியர்களோ கிடையாது. எந்த அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் இது இல்லை அது இல்லை என்று மக்களை வேறு வேறு மருத்துவமனைக்கு அலைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

20 பேர் படுக்க வைக்கும் அறையில் 40 மேற்பட்ட நோயாளிகளை ஆட்டு மந்தையை போல் அடைத்து வைத்து இருக்கின்றார்கள். பெரும்பால மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எலிகள் மற்றும் பூச்சிகள் மத்தியில் தான் அரசின் அதி நவீன சிகிச்சையை அப்பாவி மக்கள் பெற வேண்டி இருக்கிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு!


உலகளவில் சுகாதாரத்துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.3 சதவீதம் மட்டுமே சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்ற ஆண்டு 2021-2022 மக்கள் நல்வாழ்வுதுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.18,931.60 கோடி. ஆனால் இந்த ஆண்டு 2022-2023 அதை ரூ.17,901.73 கோடியாக குறைத்துள்ளது தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறைக்கு ரூ.19.420 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அதை ரூ.18,931 கோடியாக குறைத்துள்ளது. தமிழ்நாட்டின் GDP-யில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துறைக்கு என்று நிதி ஒதுக்கப்படுகிறது.

கல்வியும், சுகாதாரமும்தான் தி.மு.க-வின் இரண்டு கண்கள் என்று பேசிவரும் இவர்கள்தான் குறைந்த நிதியை மருத்துவக் கட்டமைப்புக்கு ஒதுக்கி திட்டமிட்டே மருத்துவக் கட்டமைப்பை சீரழித்து வருகின்றனர்.

மக்களின் அடிப்படை தேவையான மருத்துவமனைகளிலும் நிரந்திர மருத்துவர்கள், நிரந்திர செவிலியார்களை நியமிக்காமல் எல்லவற்றையும் தனியாரிடம் ஒப்படைப்பதன் தொடர்ச்சியேதான் கால்பாந்து வீரங்கனை மற்றும் பவித்ராவின் மரணம்.

ஆண்டிற்கு, ரூ.100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும். ஆனால், தனியார் முதலாளிகளில் சேவகனான இவர்கள் அரசு மருத்துவக் கட்டமைப்பை முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்க திவீரமாக வேலை செய்துவருகிறார்கள். மக்களின் அடிப்படை தேவையான கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்ற மூன்றில் ஒன்றை  கூட சரியாக தரமுடியாமல் வக்கற்று நிற்கிறது இந்த தமிழக அரசு.

பாவெல் கார்க்கி

ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?

இடிக்கப்படும் வீடுகள் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர்! பரிபோவது வாழ்விடமா.? வாழ்க்கையா..?

த்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் உழைக்கும் மக்களின் பகுதிகளை ரயில்வேக்கு சொந்தமான பகுதி என டிசம்பர் 2022 அன்று அறிவித்தது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம். ஒரு வார காலத்திற்குள் அனைவரும் வெளியேறுமாறும் தவறினால் வலுகட்டாயமாக அகற்றப்படுவார்கள் என்றும் செய்தித்தாள் மூலம் அறிவித்து மக்களை அச்சுறுத்துகிறது ரயில்வே நிர்வாகம்.

இப்பகுதியில் வாழும் 50,000-க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களில் 4,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கும் மேலாக இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக வீட்டுவரி, தண்ணீர் வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்தி வருகின்றனர்.‌ தீடிரென்று ரயில்வே நிர்வாகம் ஒருவரைபடத்தை காண்பித்து இந்த பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காலங்காலமாக குடியிருக்கும் மக்கள் தங்களிடம் உள்ள பல்வேறு ஆவணங்களை சமர்பித்த போதும் ஏற்றுக்கொள்ள மறுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

படிக்க: முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

ரயில்வே நிர்வாகம் கூறியபடி, “நிலம் அவர்களுக்கு சொந்தம் என்றால் ஏன் இவ்வளவு காலம் குடியமர்த்தி எங்களிடம் வரி பெற்றுக்கொண்டீர்கள்” என அரசை நோக்கி அம்மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதுபோக ஹல்த்வானி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் பாதையை ஒட்டிய பகுதியில் 29 ஏக்கர் நிலத்திற்கு ரயில்வே நிர்வாகம் உரிமை கோரியிருந்தது. ஆனால் தற்போது செய்தித்தாள் அறிவிப்பில் 78 ஏக்கர் பரப்பளவில் உள்ள அனைவரும் வெளியேற்றவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் இந்நிலத்திற்கு உரிமைக் கொண்டாடியபோது உத்தரகாண்ட் மாநில அரசு, ஒரு பிரமாணப்பத்திரம் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் “நசுல் சொத்து” என்று 2016-ல் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் பொருள் நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதே. ஆனால், தற்போது அந்த சொத்து ரயில்வேக்கு சொந்தமானது என்றும், அதில் எந்த மாற்று கருத்தும் அரசுக்கு இல்லை என்றும் கூறி மக்களை விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து 4,365 குடும்பங்களுக்கு ரயில்வே நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

“இந்த குளிர்காலத்தில் எங்களை உடனே வெளியேற சொல்வது மனித தன்மையற்ற செயல்; குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதுபோக இப்பகுதியை சுற்றியுள்ள சிறு வணிகர்களிடத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தோம். எனவே அரசு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு திட்டமும் இல்லாமல் எங்களை வெளியேற்றினால் அது எங்களை நரகத்தில் தள்ளிவிடுவதாகத்தான் இருக்கும்” என மனவேதனையடைந்தனர் அப்பகுதி மக்கள்.

படிக்க: சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஜனவரி 5 ஆம் தேதியன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், மாநில அரசையும், ரயில்வே துறையையும் நடைமுறை தீர்வை(practical solution) பற்றிய பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நைனிடால் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ.க கட்சி தோல்வியடைந்த ஒரே சட்டமன்றத் தொகுதி ஹல்த்வானி என்பது குறிப்பிடத்தக்ககது.

ஒட்டுமொத்த இந்தியாவையே ஆக்கிரமித்திருக்கும் அதானி – அம்பானியை விட்டுவிட்டு, இஸ்லாமிய மக்களை வேட்டையாட உத்தரவிடுகிறது உத்தரகாண்ட் நீதிமன்றம்.

இஸ்லாமிய மக்கள் போராடினாலும் சரி போராடாவிட்டாலும் சரி பாசிஸ்டுகளின் துப்பாக்கிகள் எப்போதும் அவர்களையே குறிவைக்கின்றன. புல்டவுசர் நீதியில் துவங்கி ’ஆக்கரமிப்பு அகற்றம்’ வரை இஸ்லாமியர்கள் வாழ்க்கை காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளால் சுறையாடப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

டேவிட்

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

07.01.2023

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா?
ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு!

பத்திரிகை செய்தி

மிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் ஒழிக்கும் நோக்கத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டதே காசி தமிழ்ச் சங்கமம். அந்த நிகழ்ச்சியை   நடத்திய   அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய தமிழின விரோதியான ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத ரவியின் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இது இந்தி எதிர்ப்பு மொழிப்போரின் 58 ஆம் ஆண்டு! தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 67 நினைவு ஆண்டு!


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ


தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் தமிழினத்தையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று நமக்கு சவால் விடுகிறது.

தமிழையும் தமிழ் பண்பாட்டையும் தமிழ்நாட்டையும் ஒழித்துக்கட்டும் இந்த இந்துராஷ்டிரத்துக்கான போரின் பாசிச உளவாளியான ரவி,  ஆளுநராக பதவி ஏற்றது முதல் தொடர்ச்சியாக தமிழ் நாட்டரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு எதிர்க்கும் அனைத்துத் திட்டங்களையும் பார்ப்பனிய – இந்துமதவெறி சக்திகளையும் தூபம் போட்டு தமிழ்நாட்டில் இன்னொரு இணை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் மிகப்பெரிய எதிர்ப்பு தமிழ்நாட்டில் எழுந்தபோதும் அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் இப்பொழுது தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார் இந்த பார்ப்பன பாசிஸ்டு. இப்படி சொல்வதற்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் வேண்டும்?


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள் ஒருபுறம் காசி தமிழ் சங்கமம் என்று மக்களை ஏமாற்றுவதும், இன்னொரு புறம்  தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கொக்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த அக்கிரமத்தை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. பாசிச உளவாளி ஆர்.என்.ரவி.யின் கொட்டத்தை அடக்குவதற்கான போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321

மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!

0

டந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அதானி எலக்ட்ரிசிட்டி நவி மும்பை லிமிடெட் நிறுவனம் (Adani Electricity Navi Mumbai Limited‌) இணை மின்விநியோக உரிமம் (parallel licensing) வழங்கக்கோரி மகாராஷ்டிர மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. அதானி நிறுவனத்துடன் டொரண்ட் பவர் (Torrent Power) நிறுவனமும், டாடா பவர் (Tata Power) நிறுவனமும் மகாராஷ்டிராவின் வேறு சில பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய விண்ணப்பித்து இருந்தன. இதனை எதிர்த்து மகாராஷ்டிர மாநில மின்வாரியத்தின் 86 ஆயிரம் ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்தத்தை ஜனவரி 4 நள்ளிரவில் துவங்கினர்.

அன்று (ஜனவரி 4) பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மின் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிடுவதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மாநில அரசின்கீழ் மாநில மின்விநியோக கம்பெனி லிமிடெட் (Maharashtra State Electricity Distribution Co. Ltd), மின்சார உற்பத்தி கம்பெனி லிமிடெட் (Maharashtra State Electricity Generation Co Ltd) மற்றும் மாநில மின் தொகுப்பு கம்பெனி லிமிடெட் (Maharashtra State Electricity Transmission Co Ltd) ஆகிய மூன்று நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதானி நிறுவனம் இணை உரிமம் கேட்டு விண்ணப்பித்ததானது இந்த அரசு நிறுவன ஊழியர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

மின்‌ துறையை தனியார்மயப் படுத்தினால் குறுக்கு-மானிய (cross subsidy) முறை ஒழித்துக் கட்டப்படும் என்றும், அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் போராடிய ஊழியர்கள் தெரிவித்தனர். குறுக்கு மானிய முறை என்பது நகர்ப்புறம் மற்றும் தொழிற்சாலை சார்ந்த நுகர்வோருக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்று, அதன்மூலம் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மானிய விலையில் மலிவாக மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடாகும்.


படிக்க: உ.பி: ஊதிய முரண்பாடுகள் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை எதிர்த்து மின் ஊழியர்கள் போராட்டம்!


இப்பிரச்சினை குறித்து நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு பேட்டியளித்த மகாராஷ்டிர சுயமரியாதை மின் தொழிலாளர் சங்கத்தின் (Maharashtra Electricity Swabhimani Workers Union) துணை பொதுச்செயலாளர் விவேக் மஹாலே, “அதானி நிறுவனம் நவி மும்பை மற்றும் தானே போன்ற பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய இணை உரிமம் கேட்டுள்ளது. இப்பகுதிகள் மாதத்திற்கு ரூ.1350 கோடி வருமானம் ஈட்டித்தரும் பகுதிகளாகும். தனியார் நிறுவனங்கள் தாமாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், அரசு உருவாக்கியுள்ளவற்றை பயன்படுத்திக் கொண்டு லாபம் ஈட்டப் பார்க்கின்றன; அதிலும் குறிப்பாக, அதிக இலாபம் தரும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து மின் விநியோகம் செய்ய உரிமம் கோருகின்றன. ஏற்கெனவே பெரும் கடன்களை பெற்றுள்ள அதானி நிறுவனம் தனது கடன்களை நுகர்வோர் மீது சுமத்தும் அபாயமும் உள்ளது” என்று கூறினார்.

மேலும், “35,000 தொழிலாளர்கள் இணைந்து நாக்பூர் சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதைத்தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் 12,000 தொழிலாளர்களைக் கொண்டு பேரணி நடத்தினோம். எங்களை சந்திக்க வந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-யிடம் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற வேண்டியது அவரது கடமை என்று வலியுறுத்தினோம்” என்று கூறினார்.

அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மகாராஷ்டிர மாநிலச் செயலாளர் அஜித் நவாலே “மின்சார கட்டணங்கள் உயர்ந்தால் உணவு உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலைகள் உயரும். ஏற்கெனவே விதை, யூரியா, பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் விலைகள் அதிகமாகத்தான் உள்ளன. இந்நிலையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார். மேலும், “கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்றவற்றை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து AIKS இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றது. கொரோனா சமயத்தில் அரசு மருத்துவமனைகள் ஆற்றிய பங்களிப்பு பற்றி நமக்கு தெரியும். எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்துவிட்டால் ஏழைகளால் எந்த சேவையையும் பெற முடியாது” என்று கூறினார்.

சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் தனது அறிக்கையில், “ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றத் துடிக்கிற புதிய மின்சார திருத்த சட்ட மசோதா 2022, இந்திய மின்சாரத் துறையை முழுமையாக அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு வழிவகை செய்கிறது என்பதை மகாராஷ்டிர அரசின் நடவடிக்கை உணர்த்துகிறது” என்று சுட்டிக்காட்டினார்.


படிக்க: மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!


மகாராஷ்டிர அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் (Maharashtra Essential Services Maintenance Act, 2017 – MESMA) போன்ற அரக்கத்தனமான சட்டங்களைக் கொண்டு தொழிலாளர்களை சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) – பா.ஜ.க கூட்டணி அரசு அச்சுறுத்திப் பார்த்தது. ஆனால், போராட்டத்தின் வீரியத்தைக்கண்டு தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட மின்சார சட்டம் 2003, போட்டியை ஊக்குவிப்பதாகக் கூறி தனியார் நிறுவனங்களுக்கு மின்விநியோகத்திற்கான இணை உரிமம் வழங்க அனுமதி அளித்தது. இந்நிலையில், மோடி அரசால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூர்ந்தாய்வில் உள்ள மின்சார திருத்தச் சட்டம் 2022 அமலுக்கு வந்தால், மின்துறை முற்றிலுமாக தனியார்வசம் சென்றுவிடும். ஏழை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மானிய-இலவச மின்சாரம் ஒழித்துக் கட்டப்படும். அதானி போன்ற தனியார் முதலாளிகள் லாபம் கொழிப்பதற்கான வழிவகை சட்டரீதியாகவே ஏற்படுத்தப்படுகிறது. இதுதான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை!

பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்

Adani Namo Namaha!

In the recently concluded winter session of Parliament, Su Venkatesan, CPI(M) MP from Tamil Nadu, spoke about drug trafficking. He spoke about the seizure of expensive drugs like heroin, that was smuggled from abroad, at Adani’s Mundra port. Suddenly, the mic was turned off. This was an insult and no national media had condemned it.

If one thinks that what happened to Su Venkatesan during parliamentary debates, which usually happens to everyone, is because that the provided time limit is over, is wrong; his mic has been turned off just because he spoke about Adani. This is not the first time in the Parliament that the mic has been turned off and the right to freedom of speech has been snatched for speaking about Adani.

In the 2021 winter session of Parliament, the VCK MP Thol. Thirumavalavan exposed in detail about the drug smuggling that took place at Adani’s Mundra port. “The privatization of vital ports of the country, such as the Mundra port, is leading to such anti-national activities”, he alleged.

Replying angrily to his question, Nirmala Sitharaman said, “It is not justified to call a port, not just Mundra port, to be referred as Their Port using the name of industrialists whom one does not like”. Moreover, “You say drugs have come in through a privatised port, and you say that this is a danger to this country. I wish to humbly state that to speak this way is not good for the nation. Not only this, 16 kg of heroin were seized in Delhi”, she said. She absolutely supported Adani.

Forgetting that she is a Minister belonging to the ruling party, she said that drugs were seized even from public sector undertakings.


Also read: Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! Conference | Pamphlet


Thirumavalavan, who tried to respond to Nirmala Sitharaman’s allegations, was not given a chance to speak. For two or three minutes, he attempted to speak again; but the speaker did not even inform him of the denial of permission and humiliated him.

Drug trafficking at Adani’s port is not similar to the usual issue that the opposition parties accuse against the ruling parties; It is blatantly anti-national.

In September 2021, 3,000 kg of heroin worth ₹21,000 crore was seized at Mundra port. These were smuggled out of Afghanistan, which is ruled by the Islamic terrorists – the Taliban; In June 2021, 25,000 kg of heroin worth ₹1,75,000 crore entered India, Congress spokesperson Supriya Shrinate alleged; In July 2022 too, 75 kg of heroin worth ₹375 crore was seized.

The country’s largest port is being continuously used for drug trafficking. When questioned about this, Finance Minister Nirmala Sitharaman averted by saying, “NIA is investigating”. Given that the trafficking continues even after the case has been registered makes us think that the NIA investigation is just an eyewash. They arrest some goons who get trapped while smuggling drugs, and conduct a namesake ‘trial’ so as to save Adani.

Officials from Anti-terrorist Squad (ATS) say that the drugs smuggled by the mafia gangs of countries such as Afghanistan, Pakistan and United Arab Emirates are being brought into Gujarat, and are transported to Punjab, and gets distributed across the country.


Also read: Saffron-Corporate coalition regime looting the country!


In 2018, it was estimated that India has 2.3 crore opioid users; this count has now increased manifold. India’s count is three times higher than the worldwide average. The youth form a significant proportion among those who are being ruined by drugs. North-eastern states like Mizoram, Nagaland, Arunachal Pradesh and Sikkim have the highest consumption of drugs.

The BJP created an impression that strenuous efforts are being made to curb drug trafficking in these states; this is one of the reasons for BJP’s gain in influence in these regions. The reason that the BJP gave for extending the jurisdiction of the BSF in Punjab and West Bengal is drug trafficking.

The actions of the BJP in this Mundra port issue has exposed its ostensible disguise. On the other hand, Mundra port, located along the border, is India’s largest cargo port. The constant seizure of drugs in that port does not seem like a coincidence; doubts also arise as to whether Adani and the international drug mafia have a collusion; the upcoming days may answer this question!

Campaigns like ‘national security’ and ‘foreign threat’ are all tactics used by fascists to achieve their objectives. The ‘Chinese danger’ will come to the fore when they need it and they will remain mute on China when they don’t need it. During the current Parliamentary session, when most of the opposition parties raised their voice that the government should speak about ‘Chinese occupation’, the BJP leaders did not pay any heed to it. The saffron clique does not care about the nation; even Lord Rama is just a political tool for building a Hindu Rashtra.

Adani is their only Kaliyug hero whom they worship with all their heart; if so, can they tolerate if Adani is called a drug mafia? That’s why the saffron gang is raging!


Puthiya Jananayagam
Editorial
January 2023

புதிய ஜனநாயகம் – ஜனவரி2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜனவரி – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ அதானியே நமோ நமஹா!
♦ கெஜ்ரிவால், ஒவைசி: ‘பி டீம்’களை பிரசவித்தது யார்?
♦ மீண்டும் இந்தி: வெறும் மொழித்திணிப்பல்ல!
♦ ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்கள் விரோதிகளை விரட்டியடிப்போம்!
♦ கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
♦ நூல் அறிமுகம்: சோறு தின்பவர்களின் பிரச்சினை!
♦ ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்டுகள்!
♦ ‘பெரு’வின் தேவை: இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதா: தேவை, ஒரு மக்கள் போராட்டம் !

ஆன்லைன் சூதாட்டத் தடை மக்கள் விரோதிகளை விரட்டியடிப்போம்!

மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள், கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மக்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டுமென்றக் கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அதற்கு அடிபணிந்து தமிழக அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆளுநருக்கு பா.ஜ.க. கும்பலும் வக்காலத்து வாங்கி வருகிறது.

அதிகரிக்கும் தற்கொலைகளும் மீளமுடியாமல் தவிக்கும் மக்களும்

2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 100 பேர் ஆன்லைன் சூதாட்டத்தினால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்கொலை எண்ணிக்கையானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள் கடன் தொல்லையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தாண்டி, கொள்ளையடிப்பது, குடும்பத்தினரைக் கொலை செய்வது என இதனால் விளையும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது.

ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் வங்கி மேலாளர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது; கல்லூரி மாணவர் ஒருவர் மூதாட்டியைக் கொலை செய்து நகையை கொள்ளையடித்தது; திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் “என்னுடைய மரணத்துக்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிகப் பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தகவல் போட்டுவிட்டு ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது; தென்காசியில் வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பது போன்ற சம்பவங்கள் அதற்கான சில சான்றுகளாகும்.

இதுபோன்ற தற்கொலைகள் எல்லாம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீள வழி தெரியாமல், மனநிலை பாதிக்கப்பட்டுதான் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் இரு மனிதர்களுக்கிடையே போட்டி நடைபெறுவதில்லை; மாறாக, மனிதருக்கும் ஆர்.என்.ஜி. (RNG Random number generator) எனப்படும் மென்பொருளுக்கும் (அல்காரிதம்) இடையேதான் போட்டி நடக்கிறது. செயற்கை தொழில்நுட்ப அறிவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை வெல்வது மிக மிகக் கடினம். இது மக்களை அடிமையாக்கி, அவர்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!


தொடக்கத்தில், இந்த ஆன்லைன் சூதாட்ட செயலி (App) சொற்பத் தொகையிலான வெற்றிகளைத் தந்து பங்கேற்பாளர்களைத் தொடர்ந்து விளையாட உற்சாகமூட்டும். நாளடைவில், தோல்வி அடைந்தவுடன் எவ்வளவு துரிதமாக மற்றொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்; தங்களுடைய விளையாட்டுக் கணக்கில் பண இருப்பு தீர்ந்தவுடன் எவ்வளவு துரிதமாகப் பணத்தைச் செலுத்துகிறார் என்பதைப் பொறுத்து, அவர் அடிமையாகிவிட்டாரா? இல்லையா? என்பதை எல்லாம் இந்த மென்பொருள் முடிவு செய்து அதற்கேற்ப விளையாடும்.

ஆன்லைன் சூதாட்ட செயலியில் இருந்து வெளியேறினாலும், அவர்களுடைய கணக்கிற்கு சூதாட்ட செயலியே குறைந்த அளவிலான தொகையை வைப்பு வைத்து, ஆசையைத் தூண்டி, அவர்களை மீண்டும் விளையாட அழைக்கும். எனவே, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் முறையான மனநல மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர் கண்காணிப்பு இல்லாமல் அதன் கோரப்பிடியில் இருந்து மீண்டுவர முடியாது. அவ்வாறான முயற்சியும் வாய்ப்பும் இல்லாததன் விளைவாகவே அதிகப்படியான  தற்கொலைகள் நடக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டத்திற்கெதிராக ஒன்றுபட்டு நிற்கும் தமிழகம்

தற்போது ஆன்லைன் சூதாட்டமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினையாக மாறியுள்ளது. இதன் விளைவாகவே தமிழக மக்கள் இக்கொடூரங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல், ஆன்லைன் சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். இதை தடை செய்யாவிட்டால் மக்கள் எதிர்ப்பிற்கு உள்ளாக வேண்டும் என அஞ்சி, ஆளும் தி.மு.க அரசும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தி.மு.க. அரசாங்கமோ அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே தவிர, புதிய சட்டத்தை இயற்ற முயற்சி செய்யவில்லை. அவ்வழக்கும் உச்சநீதிமன்றத்தால் கண்டுக்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்ட போதும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய தி.மு.க. கூட்டணி முன்வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலைகள் நிகழத் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அதை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இன்றுவரை ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய முடியவில்லை; சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைக்கூட நிறுத்தமுடியவில்லை. குறிப்பாக, யூடியூப் செயலில் பெரும்பாலான பதிவுகளில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களே முன்வந்து நிற்கிறது. ஆகையால், சட்டப்பூர்வமாக இந்த விளையாட்டைத் தடை செய்வதே தீர்வு.


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ


ஆன்லைன் சூதாட்டத்தில் ஆதாயம் தேடும் பிணந்திண்ணி கழுகுகள்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவிடாமல், தடைக்கல்லாய் முன்வந்து நிற்பதில் முதன்மையானவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு, இன்றுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். இந்த மசோதாவிற்கு மட்டுமல்ல, இதுவரை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அதில் சில தமிழக மாணவர்களின் கல்வி சம்மந்தப்பட்ட மசோதாக்களும் அடங்கும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் ஆளுநரின் நடவடிக்கைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வக்காலத்து வாங்குகிறார். இம்மசோதாவில் விளக்கம் கோரப்பட்டு ஆளுநரால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சட்டத்தை சரியாக வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து கேட்கப்பட்டவை அல்ல. மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ள ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய விடாமல் தடுப்பதன் மூலம், இச்சூதாட்டம் தடை செய்யப்படாமல் இருப்பதற்கு ஆளும் தி.மு.க. அரசுதான் காரணம் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தி.மு.க.வைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம்.

தமிழக அரசால் இயற்றப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில், தமிழக அரசிடம் ஆளுநர் மசோதாவில் சந்தேகம் இருப்பதாக விளக்கம் கேட்டது; மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைப் பற்றி பேசாமல், அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தமிழக அரசு அரசாணை வெளியிடாததைப் பெரிதுப்படுத்தி அண்ணாமலை பேசியது போன்ற இவர்களது நடவடிக்கைகளும் மேற்கண்ட நோக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டவையே.

தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை என்பதை பெரிதுப்படுத்தி பேசும் அண்ணாமலை, அதை அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த மறுநாளே அது குறித்து பேசவில்லை; ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் அவசரச் சட்டத்திற்கு எதிராக தொடுத்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறியது விவாதப் பொருளாகி, அன்புமணி மற்றும் உதயகுமார் ஆகியோர் தமிழக அரசின் இச்செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது கூட அண்ணாமலை வாயைத் திறக்கவில்லை.

தமிழக மக்கள் மத்தியில் இருந்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் எதிர்ப்பு கிளம்பிய போதுதான், “மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மீது போட்டு தி.மு.க. தப்பிக்க முடியாது” என அண்ணாமலை அரசாணையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். மேலும், “ஆளுநர் சட்டம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே, ஆளுநர் மீது குற்றம் சுமத்த முடியாது” எனப் பேசுகிறார். அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகள் அப்பட்டமாக திசைதிருப்பும் நடவடிக்கைகளே தவிர வேறொன்றுமில்லை.

இத்துடன் நில்லாமல், சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று எந்த முகாந்திரமும் இல்லாத, அப்பட்டமான அவதூறைக் கூறினார், அண்ணாமலை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இரகசியமாக ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டபோது, கருத்து எதுவும் கூறாமல் அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என நழுவிவிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு பக்கபலமாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை, “ஆன்லைன் ரம்மி சூதாட்டம் அல்ல, திறமை சார்ந்த விளையாட்டு” என உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமும், சுமார் ஒரு ஆண்டு கழித்தே விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் அவ்வழக்கை விசாரணையை இழுத்தடிக்கும் என்று தெரியவில்லை.

மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையானது, “18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதற்கு பெற்றோர்கள்தான் பொறுப்பு” என ஒரு வழக்கில் கூறியுள்ளது. ஒழுக்கக்கேடுகளையும் மக்களைச் சுரண்டுவதையும் நியதியாகக் கொண்டுள்ள பார்ப்பனிய மரபில் வந்த நீதிமன்றங்களிடம் இதுபோன்ற தீர்ப்புகளை தவிர, வேறெதை நாம் எதிர்பார்க்க முடியும்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், மத்திய அரசானது ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகிதமாக உயர்த்த ஆலோசித்துக் கொண்டிருப்பதுதான். ஜி.எஸ்.டி வரியை அதிகரிப்பதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்கள் மீதான பொதுமக்களின் மோகத்தை ‘தணிக்க’ இயலும் என்று மத்திய அரசு கூறும் காரணம் கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்ற கதையாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கும் விதமாக, நடிகர்களும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள். இத்தகைய விளம்பரங்கள் ஒன்றும் அறியாத பாமர மக்களை குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையைத் தூண்டி ஆன்லைன் சூதாட்டத்திற்குள் இழுத்துவருகிறது. இந்நடிகர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது மட்டுமல்லாமல் திமிர்த்தனமாகவே நடந்துக்கொள்கின்றனர். பணத்தாசையில் இதுபோன்ற விளம்பரங்களில் மீண்டும் நடிக்கவே செய்கின்றனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


இவர்களில் முக்கியமானவர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார். “குடும்பத் தகராறில் தற்கொலை செய்துக்கொண்டவர்களை எல்லாம் ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள், உண்மையில் ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு” “நான் சொல்வதால் அனைவரும் கேட்டு விடுவார்களா என்ன? ஓட்டு போடுங்கள் எனக் கூறினேன். ஓட்டு போடவில்லை. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் எனக் கூறியபோதும் கேட்கவில்லை. இதையெல்லாம் கேட்காத நிலையில் நான் ரம்மி விளையாடுங்கள் எனக் கூறினால் மட்டும் கேட்டுவிடுவார்களா என்ன?” என அயோக்கியத்தனமாக பேசி வருகிறார்.

ஒன்றிய அரசு, நீதிமன்றங்கள், தமிழக ஆளுநர், அண்ணாமலை, சரத்குமார் போன்ற ஆன்லைன் சூதாட்ட ஆதரவாளர்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுத்தன்மை, மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எத்தனை குடும்பங்கள் சீரழிந்தாலும் கவலையில்லை என்ற பார்ப்பன மனநிலையும், அவரவரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற காரியவாத, பிழைப்புவாத உணர்வும்தான்.

“இவர்களை யார் ஆன்லைன் சூதாட்டத்தை ஆடச் சொன்னது, அதுதான் குடும்பத்தைப் பாதிக்கிறதென்று தெரிகிறதல்லவா?” “அவனவன் பார்த்துத் திருந்த வேண்டும்” என்று இந்த பார்ப்பன மேட்டுக்குடி கும்பல்கள்தான் மக்களுக்கு உபதேசம் செய்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு மட்டுமல்ல, குடிப்பழக்கம், புகைப்பழக்கம் முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு வரை அனைத்து சமூகக் கேடுகளுக்கும் மக்களைக் குற்றவாளிகளாக்கி, இவற்றால் கொள்ளையடிக்கின்ற கார்ப்பரேட் சூதாடிகளையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கின்றன.

இந்த அரசியல்-சமூகக் கட்டமைப்புதான் ஆன்லைன் சூதாட்டத்தை வளர்க்கிறது, பாதுகாக்கிறது. இந்தக் கட்டமைப்பிலுள்ள ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்றால், அதற்குச் சட்டப் போராட்டங்கள் தீர்வாகாது, சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டம் இல்லாமல் விடிவு பிறக்காது!


அமீர்
புதிய ஜனநாயகம்
ஜனவரி 2023

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

மது முன்னோர்கள் உயிர்தியாகம் செய்து பாதுகாத்த நமது தமிழ்மொழியையும் பண்பாட்டையும் நாமும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை நாம் பெறவேண்டும். எப்போது இந்தி மொழி நம்மீது தாக்குதல் தொடுத்தாலும் நாம் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்கே இப்பிரச்சார இயக்கம் மக்கள் அதிகாரம் சார்பாக முன்னெடுக்கப்படுகிறது.

மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

அதானியே நமோ நமஹா!

டந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன், போதைப் பொருள் கடத்தல்கள் குறித்து உரையாற்றினார். அப்போது, அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போன்ற விலையுயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைப் பற்றி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மைக் ஆஃப் செய்யப்பட்டது. இவ்வாறு அவரை அவமானப்படுத்தியது குறித்து, எந்த தேசிய ஊடகங்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்ற விவாதங்களின்போது, கொடுக்கப்பட்ட நேர வரம்பு முடிந்தால் வழமையாக எல்லோருக்கும் நேர்வதுதான் சு.வெங்கடேசனுக்கும் நடந்திருக்கிறது என்று யாராவது நினைத்தால் அது தவறு; அதானியைப் பற்றி பேசினார் என்பதற்காகவே அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதானியைப் பற்றி பேசியதற்காக மைக்கை ஆஃப் செய்து பேச்சுரிமையைப் பறிப்பது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நடப்பதுமல்ல.

கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் வி.சி.க. நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் கடத்தல் பற்றி விரிவாகவே அம்பலப்படுத்தினார். “முந்த்ரா துறைமுகத்தைப் போன்று நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களைத் தனியார்மயப்படுத்துவது இதுபோன்ற தேசவிரோதச் செயல்களுக்கு வழிவகுக்கிறது” என்றும் குற்றஞ்சாட்டினார்.


படிக்க : தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!


அவரது கேள்விக்கு கோபமாக பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அந்தத் துறைமுகத்தின் பெயர் முந்த்ரா துறைமுகம்தான், தங்களுக்குப் பிடிக்காத தொழிலதிபர்களது பெயரைப் போட்டுக் குறிப்பிடுவது நியாயமில்லை” என்றார்; மேலும் “தனியார்மயத்திற்கும் போதைப் பொருள் கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றும், “டெல்லி விமானநிலையத்தில் கூட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன; அது பொதுத்துறைதானே” என்றும் அதானிக்கு வக்காளத்து வாங்கிப் பேசினார்.

தான் ஒரு ஆளும்கட்சி அமைச்சர் என்பதையும் மறந்து, ‘பொதுத்துறை நிறுவனங்களில்கூடத்தான் போதைப் பொருட்கள் பிடிபடுகிறது’ என்று பேசியதெல்லாம் கேவலத்தினும் கேவலம்!

நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முயன்ற திருமாவளவனுக்கு, பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை; இரண்டு, மூன்று நிமிடங்கள் அவர் பேசுவதற்குப் போராடியும், அனுமதி மறுப்பதைக் கூடத் தெரிவிக்காத அவைத்தலைவர், கத்தவைத்து இழிவுபடுத்தினார்.

அதானியின் துறைமுகத்தில் நடந்துள்ள போதைக் கடத்தல் என்பது, ஆளும் கட்சிகளுக்கு எதிராக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்ற வழக்கமான லாவணிப் பிரச்சினை அல்ல; அப்பட்டமான தேசவிரோதச் செயலாகும்.

2021 செப்டம்பரில் 3,000 கிலோ ஹெராயின் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது. இவை, இஸ்லாமிய பயங்கரவாதிகளான தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டவை; மேலும் ஜூன் மாதம் 25,000 கிலோ ஹெராயின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.; கடந்த ஜூலையிலும் 350 கோடி மதிப்புள்ள, 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தலுக்குப் பயன்படுகிறது; இதுபற்றி கேள்விகேட்டால், ‘என்.ஐ.ஏ விசாரித்துக் கொண்டிருக்கிறது’ என்று பதில் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். வழக்கு பதிவுசெய்யப்பட்ட பிறகும், கடத்தல்கள் தொடர்ந்து நடைபெறுவதைப் பார்க்கும்போது, என்.ஐ.ஏ விசாரணை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்போ என்று கருதவேண்டியிருக்கிறது. போதைப் பொருட்கள் கடத்திவரும்போது மாட்டிக்கொண்ட எடுபிடிகள் சிலரைக் கைதுசெய்துவிட்டு, அதானியைக் காப்பாற்றுவதற்கு ‘விசாரணை’ நாடகமாடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் மாஃபியா கும்பல்களால் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் குஜராத்திற்கு கடத்திவரப்பட்டு, அங்கிருந்து பஞ்சாப் கொண்டு செல்லப்படுவதாகவும் அங்கிருந்து நாடுமுழுவதும் விநியோகிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-terror Force) அதிகாரிகள்.

நமது நாட்டில், 2018இல் 2.30 கோடியாக இருந்த தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. போதை மருந்துகளின் பயன்பாடு சர்வதேச சராசரியைவிட இந்தியாவில் மூன்றுமடங்கு அதிகமாக உள்ளது. போதைப் பொருட்களால் சீரழிக்கப்படுபவர்களில் கணிசமானவர்கள் இளைஞர்களாவர். மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் போதைப் பொருட்களின் நுகர்வு மிக அதிகம்.

இம்மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான முயற்சிகள் எடுத்துவருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கியது, அங்கு பா.ஜ.க. செல்வாக்கு பெறுவதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்றாகும். பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பி.எஸ்.எஃப் படை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. கூறும் காரணம், போதைப் பொருள் கடத்தல்தான்.


படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !


இவையெல்லாம் வெளிவேடம் என்பதைத் திரைகிழித்துக் காட்டியிருக்கிறது, முந்த்ரா துறைமுகம் விவகாரத்தில் பா.ஜ.க.வின் செயல்பாடு. இன்னொருபக்கம், இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் முந்த்ரா துறைமுகம், இந்தியாவின் மிகப்பெரிய சரக்குப் பெட்டகத் துறைமுகமாகும். அங்கு தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் பிடிபடுவது ஏதேச்சையானதாகப் படவில்லை; அதானிக்கும் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பல்களுக்கும் கள்ளக்கூட்டு உள்ளதா என்ற ஐயமும் எழுகிறது; எதிர்வரும் நாட்கள் இதற்கு விடைதரலாம்!

‘தேசப்பாதுகாப்பு’, ‘அந்நிய அச்சுறுத்தல்’ போன்ற பிரச்சாரங்கள் எல்லாம் பாசிஸ்டுகள் தங்கள் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக கையாளும் தந்திரமே. அவர்களுக்கு தேவைப்படும்போது ‘சீன அபாயம்’ முன்னுக்கு வரும், தேவைப்படாதபோது பேசமாட்டார்கள். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பெரும்பாலான எதிர்கட்சிகள் ‘சீன ஆக்கிரமிப்பு’ குறித்து பேசவேண்டும் என்று குரலெழுப்பியபோது, பா.ஜ.க. தலைவர்கள் அதைச் சீண்டக்கூட இல்லை. “தேசமாவது, வெங்காயமாவது”.. காவிக் கும்பலுக்கு ராமனே இந்துராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான அரசியல் கருவிதான்.

அவர்கள் ஆத்மார்த்தமாக வணங்கும் ஒரே கலியுக நாயகன் அதானி மட்டுமே; அப்படியிருக்க, அதானியை போதைப்பொருள் மாஃபியா என்று சொன்னால், பொறுத்துக் கொள்ளமுடியுமா? அதனால்தான் பொங்கியெழுகிறது காவிக் கும்பல்!


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
ஜனவரி 2023

நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்

ரே நாடு, ஒரே மொழி, ஒரே கார்டு, ஒரே வரி, ஒரே சட்டம், ஒரே கல்வி” என தங்களது நீண்ட நாள் இலக்கான இந்துராஷ்டிரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிசக் கும்பல்.

ஒருபுறம் மாநில உரிமைகள், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது; கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு இந்த நாட்டையே தாரை வார்ப்பதால் மக்கள் சொல்லொணா துயரத்தில் தவிக்கிறார்கள். எந்த மக்கள் காவி-கார்ப்பரேட் பாசிசத்தால் பாதிக்கப்படுகிறார்களோ அதே மக்களை இந்துமத வெறியூட்டியும், ஆதிக்கசாதி வெறியூட்டியும் அப்பாவி இஸ்லாமியர்கள், கிறித்துவர்களுக்கு எதிராக முனைவாக்கம் செய்கிறது காவி கும்பல்.

இச்சூழலில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவாரங்களைச் சித்தாந்த ரீதியாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களிடமிருந்து காவிக் கும்பலை அந்நியப்படுத்த வேண்டியது முற்போக்கு – ஜனநாயக – புரட்சிகர சக்திகளின் அவசர அவசிய கடமையாகி இருக்கிறது. வரலாற்றாசிரியர்களும், முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களும் சங்கப் பரிவார அமைப்புகள் குறித்து எழுதியும் பேசியும் வருகின்றனர், அவற்றையெல்லாம் மக்களிடையே பரப்புவது தேவையாக உள்ளது.

படிக்க : பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

அந்த வரிசையில், கன்னட இலக்கியவாதிகளில் முதன்மையானவரும், பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தேவனூர மகாதேவா கன்னடத்தில் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்து, “ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்” என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் கொண்டுவந்துள்ளது.

40 பக்கங்களையும் ஐந்து தலைப்புகளையும் கொண்டிருக்கிற இச்சிறுநூல், ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தத்தையும், அதன் செயல்பாடுகளையும் பற்றிய சுருக்கமான விமர்சனப் பார்வையை வாசகர்களுக்கு எளிதான மொழியில் வழங்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம், அதன் இலக்கு மற்றும் சுதந்திரம், கடவுள், சிறுபான்மையினர் இடம், அரசமைப்புச் சட்டம், ஒன்றிய அரசு குறித்த ஆர்.எஸ்.எஸ்-இன் பார்வை ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளான கோல்வால்கர் மற்றும் வி.டி.சாவர்க்கர் ஆகியோர் எழுதிய பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி எழுதப்பட்டிருக்கிறது.

மேலும், மோடி அரசு கொண்டுவரும் ஒவ்வொரு சட்டங்களும் ஆர்.எஸ்.எஸ்-இன் இறுதி இலக்கான இந்துராஷ்டிரத்தை நோக்கிச் செல்வதற்கான படிக்கட்டுகளாய் இருக்கின்றன என்பதை நடைமுறையோடு உணர்த்துகிறது. இந்துராஷ்டிரம் என்பது வேறல்ல; ஈராயிரம் ஆண்டுகளாய் நம்மை அடிமைப்படுத்திய, மனுநீதியை சட்டமாகக் கொண்டு நிறுவப்படும் நால்வருண சாதியக் கட்டமைப்பே என்று நிறுவுகிறது இந்நூல்.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் – கொள்கை – இலக்கு பற்றியும், ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை நடைமுறையில் நிறைவேற்றுகிற சாரதிதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதையும் இந்நூலைப் படிக்கும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள, “…நாட்டின் பிரதமருக்கு தனித்திறமை இருந்திருந்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும், வேலையின்மை குறைந்திருக்கும், வெளிநாட்டுக் கடன்கள் குறைந்திருக்கும்…” போன்ற கருத்துகள்; இந்தக் கட்டமைப்பின் மீதான மாயை; தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தைப் பற்றிய புரிதலின்மை போன்றவற்றைத் தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ் பற்றி ஆரம்பநிலையில் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் பயனளிக்கும். பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.

பூங்குழலி

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜனவரி – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ அதானியே நமோ நமஹா!
♦ கெஜ்ரிவால், ஒவைசி: ‘பி டீம்’களை பிரசவித்தது யார்?
♦ மீண்டும் இந்தி: வெறும் மொழித்திணிப்பல்ல!
♦ ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்கள் விரோதிகளை விரட்டியடிப்போம்!
♦ கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
♦ நூல் அறிமுகம்: சோறு தின்பவர்களின் பிரச்சினை!
♦ ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்டுகள்!
♦ ‘பெரு’வின் தேவை: இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!