Tuesday, June 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 218

டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

டெல்லியில் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

இன்று அதிகாலை முதலே உற்சாகமாக டிராக்டர் பேரணிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட விவசாயிகளை டெல்லியின் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பரண்களை வைத்து ஆயுதப்படை போலீசையும் எல்லையில் குவித்து வைத்துள்ளது மோடி அரசு.

டிக்ரி எல்லையில் உள்ளே நுழைந்த விவசாயிகள்

காலையில் 10.15 மணியளவில், சிங்கு எல்லையில் உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளின் பேரணியை தடுத்து நிறுத்த போலீசு போட்டிருந்த தடுப்பரண்களை போலீசு அகற்ற வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு 45 நிமிடங்கள் காலக் கெடுவும் கொடுத்திருந்தனர்.

டிக்ரி எல்லையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நிற்கும் டிராக்டர்கள்

45 நிமிடங்களாக போலீசு எந்த தடுப்பரண்களையும் அகற்றாத நிலையில், அங்கிருந்த தடுப்பரண்களை விவசாயிகள் அகற்றத் துவங்கினர்.

காசிபூர் எல்லையில் தடுப்பரண்களை அகற்றும் விவசாயிகள்

அதனைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசு ஏவல் படை, விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியது. அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியது.

தடுப்பரண்களை அகற்றும் விவசாயிகள் மீது போலீசு தடியடி நடத்தியது.

 

போலீசு வன்முறையைத் தூண்டினாலும், விவசாயிகள் பதட்டமின்றி தடுப்பரண்களை அகற்றிவிட்டு முன்னேறினர். சிங்கு எல்லையில் இருந்து முன்னேறிய விவசாயிகள் சிங்கு எல்லையை அடுத்த சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்கு வந்தடைந்தனர். அங்கும் போலீசு விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விவசாயிகளின் பேரணியை சீர்குலைக்கவும் அவர்களை விரட்டியடிக்கவும் முயற்சித்து வருகிறது.

தடையை தகர்த்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை டெல்லி ஸ்வரூப் நகர் மக்கள் மலர்தூவி வரவேற்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசுக்கும், கார்ப்பரேட்டுகளும் நேரெதிராக எழுந்து நிற்கின்றனர் விவசாயிகள். எப்படியாவது அவர்களை ஒடுக்கி கார்ப்பரேட்டுகளின் பாதங்களில் இந்திய விவசாய உணவுப் பொருள் உற்பத்தையை அடகு வைக்கத் துடிக்கிறது மோடி அரசு. அதனைச் செய்து முடிக்க எத்தகைய படு பாதகச் செயலையும் செய்யத் தயங்காது மோடி அரசு. விவசாயிகளுக்கு ஆதரவாக நம் குரல்களை எழுப்புவோம்.

கர்ணன்

தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

1

விவசாயிகள் படும் பாடையும் அவர்களின் துயரத்தையும் பற்றிப் பேசுகையில், “இவனோடும் சண்டை, நமக்கு இயற்கையோடும் சண்டை” என்ற துன்பியல் வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்கவே முடியாத ஒன்று. மோடி அரசின் மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளின் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளை இயற்கையும் தன் பங்குக்குத் துயரத்தில் மூழ்கடித்துவிட்டது.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டுதான் மேட்டூர் அணை பருவத்தே திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி பரப்பு அதிகமானதோடு, விளைச்சலும் ஹெக்டேருக்கு 6 டன் என்பதைத் தாண்டி, 6.2 டன்னாக அதிகரித்திருந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் மட்டும் சம்பா சாகுபடி பரப்பு 10 இலட்சம் ஏக்கரைத் தாண்டியதோடு, விளைச்சலும் நட்டமின்றி இருக்கும் என விவசாயிகளால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விவசாயிகளின் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக முடிந்துபோனது.

படிக்க :
♦ கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !

♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

குறுவை விளைச்சல் எதிர்பார்த்ததையும்விட அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் வியாபாரிகள் விளைந்த நெல் மூட்டைகளைக் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கீழாகக் குறைத்துக் கேட்டதால், விவசாயிகளுக்கு அரசிடம் விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. தமிழக அரசோ வரத்துக்கு ஏற்றபடி உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரம் பத்து நாள் எனக் காத்திருந்து நெல் மூட்டைகளை விற்க நேர்ந்தது.

நெல் மூட்டைகளைப் பல நாட்கள் திறந்த வெளியில் போட்டு வைத்திருந்ததால், அவை திடீர் மழையில் நனைந்து, நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. அதிகரித்த ஈரப்பதத்தைக் காட்டி நெல்லைக் கொள்முதல் செய்ய அதிகார வர்க்கம் மறுத்தது. இப்படித் தமிழக அரசு குறுவை நெல் கொள்முதலில் திட்டமிட்டுச் செய்த பல்வேறு “குளறுபடிகள்”, புறக்கணிப்பு, தாமதங்களின் மூலம் விவசாயிகளை நட்டமடையச் செய்தது என்றால், பருவம் தவறிப் பெய்த ஜனவரி மாத கனமழை சம்பா விளைச்சலை அடியோடு நாசப்படுத்திவிட்டது,. நிவர், புரெவி புயல்களில் தப்பிப் பிழைத்த பயிர்களைக்கூட ஜனவரி மாத கனமழை விட்டுவைக்கவில்லை.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்டு 14 மாவட்டங்களில் 8 இலட்சம் ஏக்கரில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்லும், பிற விளைபொருட்களும் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பின் வீச்சு

காவிரி டெல்டாவைச் சேர்ந்த தஞ்சை மாவட்டத்தில் 25,000 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 1,25,000 ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 1,50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்வயல்கள் நீரில் மூழ்கி, விளைச்சல் வீணாகிப் போயிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கும் மேலான நெல்வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும்; நெல்லுக்கு அப்பால் வாழை, கரும்பு, பருத்தி, மக்காச் சோளம் ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலுமாக 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தேசமடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3.34 லட்சம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டதில், தோரயமாக 1 லட்சம் ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருக்கக்கூடும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாத மழையால் சுமார் 75,000 ஏக்கரில் விளைந்து நின்ற நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும்; நெல் தவிர, சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, எள், மக்காச்சோளம் ஆகிய தானியங்களும் அழுகிவிட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களையொட்டி அமைந்திருக்கும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் குண்டு மிளகாய் எனச் சந்தையில் அழைக்கப்படும் இராமநாதபுரம் முண்டு மிளகாய் பயிரிடப்படிருந்தது. மிளகாய்ச் செடிகள் காய்க்கத் தொடங்கிய பருவத்தில் டிசம்பர் இறுதியிலும், ஜனவரி தொடக்கத்திலும் பெய்த மழையால் ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற மிளகாய்ச் செடிகள் அழுகிப் போயிருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்தும்; 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளமும்; 20 ஆயிரம் ஹெக்டேரில் பாசிப் பயறும்; மீதமுள்ள நிலங்களில் கம்பு, வெள்ளைச்சோளம், சின்ன வெங்காயம், மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, எள், குதிரைவாலி, சிவப்புச் சோளம், சீனி அவரை, கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு மானவாரிப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இவையனைத்தும் ஜனவரி மாத மழையில் நாசமாகிவிட்டன.

இந்தப் பயிர்களில் சின்ன வெங்காயம், உளுந்து, பாசி ஆகியவை மார்கழி மாதம் 10-ம் தேதியையொட்டி அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஆனால், விடாது பெய்த மழை காரணமாக உளுந்து, பாசி பயிர்களில் முதிர்ந்த காய்களின் நெத்துகள் வழியே ஈரப்பதம் ஏற்பட்டதால் முளைத்துவிட்டன. பொன் நிறத்தில் காணப்பட வேண்டிய வெள்ளைச்சோளம் கருமை நிறத்துக்கு மாறிவிட்டது. சின்ன வெங்காயம், ஈரப்பதம் காரணமாக நிலத்திலேயே அழுகி துர்நாற்றம் வீசியது. கொத்தமல்லிச் செடிகள் அதிக ஈரப்பதத்தால் குறைந்த இலைகளுடன் அழுகிப் போயின. மிளகாய் செடிகள் முளைக்காமல் போனதாகத் தெரிவிக்கிறார்கள் அம்மாவட்ட விவசாயிகள்.

தென்காசி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை விவசாயப் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் பாசிப்பயறுச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையால் நனைந்து முளைத்துவிட்டதாகக் குமுறுகிறார்கள் விவசாயிகள்.

ஒரு ஏக்கரில் நெல் பயிரிடுவதற்குத் தோரயமாக 35,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறும் விவசாயிகள், இந்தத் தொகைக்குத்தான் பயிர்க் காப்பீடும் செய்திருக்கிறார்கள். மானாவாரிப் பயிர்களை எடுத்துக் கொண்டால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யாமல் வெள்ளாமை பார்க்க முடியாது. ஒரு ஏக்கரில் 4 முதல் 5 டன் வரை உளுந்து விளைந்தால், தமக்கு 28,000 முதல் 35,000 ரூபாய் வருமானம் கிட்டும் என்றும், முதலீடுபோக குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இலாபம் கிட்டியிருக்கும் எனக் கூறுகிறார்கள், தென் மாவட்ட விவசாயிகள்.

படிக்க :
♦ கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் !

♦ கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்

விவசாயிகள் கூறும் இந்தக் கணக்குப்படிப் பார்த்தால், ஜனவரி மாத கனமழையால் நெல் விவசாயிகளும், தோட்டப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயம் அடைந்திருக்கக்கூடிய நட்டம் இரண்டாயிரம் கோடி ரூபாயைத் தொடக்கூடும். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட அழிவையும் இதோடு சேர்த்தால், இந்த நட்டக் கணக்கு மூவாயிரம் கோடியையும் தாண்டக்கூடும்.

கந்துவட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் குறு, சிறு, நடுத்தர விவசாயிகளால் இந்த நட்டத்தை எப்படித் தாங்க முடியும்? விதை நெல்லுக்குக்கூடப் பயன்படாது என்றபடி சம்பா சாகுபடி அழிந்து நிற்கும் நிலையில், எதிர்வரும் நாட்களில் சோத்துக்கு என்ன வழி? தண்ணீரில் அழுகிப் போன பயிர்கள் வைக்கோலுக்குக்கூடப் பயன்படாது என்பதால், மாட்டுத் தீவனத்திற்கு என்ன செய்வது? அடுத்த பட்டத்திற்கு யாரிடம் கடன் கேட்பது எனக் கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். நிலவுடமையாளர்களின் நிலையே இதுதான் என்றால், கூலி விவசாயத் தொழிலாளர்களின் உடனடி எதிர்காலத்தை நினைத்துப் பார்ப்பதே அச்சமூட்டக்கூடியதாக உள்ளது.

எடப்பாடி அரசின் மெத்தனம், அலட்சியம்

14 மாவட்ட விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்ட இத்துயரத்தைப் பேரிடராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மைய அரசோ இதுவரை மதிப்பீட்டுக் குழுவைக்கூட அனுப்பி வைக்கவில்லை. மதிப்பீட்டுக் குழு வந்தாலும், அதனின் கணக்கீடும் பரிந்துரையும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகத்தான் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. பாதிப்பு குறித்த கணக்கீடைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக அரசோ, இதுவரை இடைக்கால நிவாரணம் எதனையும் அறிவிக்கவில்லை.

நிவர், புரெவி புயல்களாலும் மற்றும் ஜனவரி மாத மழையாலும் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 ரூபாய் நிவராணமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி வருகிறார்கள்.

“எதிர்பார்த்திருந்தபடி நெல் அறுவடையாகியிருந்தால், நெல்லை விற்கும் காசோடு, வைக்கோலை விற்பதன் மூலமும் ஒரு தொகை கிடைக்கும். இப்பப் பயிரெல்லாம் அழுகிட்டதால வைக்கோலும் போச்சு. அதனால், எங்களடோ உழைப்பு, இலாபம் அனைத்தையும் கணக்கில் எடுத்து முழுமையான நிவாரணம் வழங்கணும்” என்கிறார், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரசேனன். எனவே, விவசாயிகள் கோரும் நிவாரணம் முப்பதாயிரம் என்பது மூலதனச் செலவுக்குக் குறைவானது மட்டுமல்ல, அவர்களின் உழைப்பின் உற்பத்தி மதிப்புக்கும் குறைவானதுதான்.

ஆனால், அ.தி,மு.க. அரசோ, விவசாயிகளின் கோரிக்கையை அடியோடு புறக்கணித்துவிட்டு, நிவர், புரெவிப் பயுல்களால் பாதிப்படைந்த ஐந்து இலட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளீட்டுப் பொருட்களுக்கான மானியத்தை அளித்துவிட்டு, “இம்மானியத்தால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000; நெல் அல்லாத நன்செய் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10,000; மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.25,000 வரை நிவாரணமாகக்  கிடைக்கும் என்றும் இம்மானியம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதிகமென்றும்” தம்பட்டம் அடித்துவருகிறது.

இந்த உள்ளீட்டு மானியம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டும் மதிப்பீட்டைவிட அதிகம் என்பதை மறுப்பதற்கில்லைதான். அதேசமயத்தில், இந்த மானியம் தமிழக விவசாயிகள் கோரிவரும் நட்ட ஈட்டிற்கு அருகில்கூட வரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. தமிழக அரசு அறிவித்திருக்கும் உள்ளீட்டு மானியத்தின்படி நெல்விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்குக் கிடைக்கும் நிவாரணம் வெறும் ரூ.8,000/-தான். மீதமுள்ள 22,000 ரூபாய் நட்டத்தை விவசாயிகள்தான் சுமக்க வேண்டும் எனக் கைக்கழுவி விட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இந்தப் பஞ்சு மிட்டாய் மானியமும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தரப்பட்டிருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது. “இந்த இரண்டு புயல்களால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 6,000 விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கணக்கு எடுக்கப்பட்டிருப்பதாக” கூறுகிறார், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலர் விமல்நாதன் (ஜூ.வி, 20.01.2021).

இன்னொருபுறத்திலோ, தமிழக அரசு, மைய அரசிடம் நிவர் புயல் நிவாரணமாகக் கோரியிருந்த 3,758 கோடி ரூபாயில் இதுவரை ஒரு சல்லிக்காசுக்கூடத் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க. அடிமை அரசும் அதை வலியுறுத்திப் போராடியதாகத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எத்தனை சீட் ஒதுக்குவது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அதிகாரச் சண்டை, சசிகலா விடுதலை, அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைப்பு என்ற பஞ்சாயத்துக்கள்தான் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்து வருகிறதேயொழிய, இரண்டு ஆளுங்கட்சிகளும் தமிழக விவசாயிகளின் வேதனையைத் துடைப்பதை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை.

மோடி மற்றும் எடப்பாடி கும்பலின் இந்த அலட்சியமும் புறக்கணிப்பும் தனது முதல் பலியை டெல்டாவில் வாங்கிவிட்டது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்ற விவசாயி, மழையால் தனது பயிர்கள் நாசமானதால் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போகுமே என்ற மன உளைச்சலின் காரணமாக ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தமிழக விவசாயிகள் அடைந்திருக்கும் வேதனை எத்துனை பாரதூரமானது என்பதைத்தான் ரமேஷ் பாபு-வின் தற்கொலை எடுத்துக் காட்டுகிறது. இந்த அகாலச் சாவுகள் ரமேஷ் பாபுவுடன் நின்றுவிடுமா அல்லது தொடர்கதையாக நீளுமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

தமிழக விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின், புயல் மற்றும் மழை நிவாரணத் தொகையை விவசாயிகள் கோருகிறபடி ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாயாக அதிகரித்துக் கொடுத்தால் மட்டும்போதாது. அவர்கள் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனங்களிடமும், கந்து வட்டிக் கும்பலிடமும் வாங்கிய கடன்களை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

படிக்க :
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

♦ நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகள் எங்கும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தீவிரமாகவும் விரிவாகவும் நடைமுறைப்படுத்துவதோடு, அதற்கான கூலியையும் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு, குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்காவது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் ரேஷனில் இலவசமாக வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். எதிர்வரும் குறுவை, சம்பா சாகுபாடிக்குத் தேவையான விவசாய வங்கிக் கடன்கள், விவசாய இடுபொருட்களுக்கான மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதன் வழியாகவே, மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் போராட்டத்திற்குத் தமிழக விவசாயிகளின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.


அறிவு

ஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்

ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் உரிமை செயற்பாட்டாளரான காஞ்சன் நானாவரெ, இன்னும் விசாரணையே துவங்காத நிலையில், சிறையிலேயே மரணமடைந்துள்ளார்.

சமூகச் செயற்பாட்டாளரான காஞ்சன் நானாவரெ-யை மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டில் கைது செய்தது போலீசு. பிறவியிலேயே இதய நோயோடு பிறந்த காஞ்சன் நானாவரெ கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதியாக இருந்து வந்துள்ளார்.

படிக்க :
♦ “ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?

செயற்பாட்டாளர் நானாவரெ மற்றும் அவரது கணவர் அருண் பெல்கே ஆகிய இருவரையும் ஆறாண்டுகளுக்கு முன்னர் ஊபா சட்டத்தில் கைது செய்தது போலீசு. அவர்கள் இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் இருவரையும் மாவோயிஸ்ட்டுகளின் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பல்வேறு வழக்குகளைத் தொடுத்தது போலீசு.  செயற்பாட்டாளர்களை ஒடுக்க அவர்கள் முசுலீமாக இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது குற்றம்சுமத்த போலீசு வைத்திருக்கும் ஆயுதம்  மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என்பதுதான்.

இந்த வகையில் நானாவரெ மீது மொத்தம் 9 வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் 6 வழக்குகளில் ஆதாரமில்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இன்னும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது கட்சிரோலி தாக்குதல், புனே மற்றும் கொண்டியா வழக்குகள் விசாரணையில் உள்ளன.

கடந்த அறு ஆண்டுகளில் பல முறை பிணை கேட்டு விண்ணப்பித்துள்ளார் காஞ்சன் நானாவரே. ஒவ்வொரு முறையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவரது வழக்கறிஞர் பார்த் ஷா. கடந்த அக்டோபர் மாதத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மோசமாகி வரும் நானாவரெவின் உடல்நிலையை முன் வைத்ததோடு கூடுதலாக அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவர்களின் பரிந்துரையையும் முன் வைத்து பிணை கேட்டுள்ளனர். ஆனால் அந்த முறையீடு இன்னும் முழுமையாக விசாரித்து முடிக்கப்படவில்லை.

மும்பை உயர்நீதிமன்றம் அவரது பிணை கோரிக்கை மனுவை கேட்பிற்கு எடுத்துக் கொண்ட போது, இருதய மாற்று அறுவை சிகிச்சை தான் அவர் உயிர் வாழ்வதற்கு ஒரே தீர்வு என்று வலியுறுத்தப்பட்டது. நீதிமன்றமும் அவரது உடல் நிலையை கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தது. ஆனால் அந்தக் குழு இதில் கவனத்தை செலுத்த பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. அச்சமயத்தில்தான் காஞ்சன் நானாவரே மரணமடைந்துள்ளார்.

ஜனவரி 24-ம் தேதிதான் அருண் பெல்கேயின் குடும்பத்தாருக்கு காஞ்சன் நானாவரேயின் உடல்நிலை மோசமாகி வருவது குறித்து சிறைத்துறை எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. அதே நாளின் பிற்பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு வந்த தொலைபேசி அழைப்பு காஞ்சன் மரணித்த செய்தியைக் கூறியிருக்கிறது.

காஞ்சன் நானாவரெ கடந்த 2004- ம் ஆண்டு முதல் மாணவர்கள் உரிமைச் செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். அவருடன் அன்று முதல் பணியாற்றி வந்த அம்ருதா சொனூலே தாங்கள் இருவரும், பிற நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் இணைந்து விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் தலித் சமூகத்தினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியதை நினைவு கூர்கிறார்.

“தேசபக்தி யுவா மன்ச்” எனும் அமைப்பில் இணைந்து இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பின்னாட்களில் “தேசபக்தி யுவா மன்ச்” அமைப்பு மாவோயிஸ்ட்களின் முன்னணி அமைப்பு என குற்றம் சாட்டப்பட்டது. நானாவரெயும் அவரது கணவர் அருண் பெல்கெயும் 2008-ம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டனர். சுமார் 7 மாதங்கள் வரை ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களிருவரும் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சிறையில் காஞ்சன் நானாவரெயின் உடல்நிலை பாதிப்படைந்து அவர் சசூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை ஒட்டி, அவரைச் சந்திக்க அம்ருத் சொனுலே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். காஞ்சனை சந்திக்க  அவரை அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பது குறித்து மட்டும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி தலைவலி வந்தது குறித்து அவர் குறிப்பிட்டதாகவும், அவருக்கு இரத்த உறைவுகள் ஏற்பட்டது குறித்தும் தெரிவித்துள்ளனர். அருண் பெல்கேவுக்கும் காஞ்சன் நானாவரேயை  சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அருண் மரணப்படுக்கையிலிருக்கும் தனது துணைவர் காஞ்சனை சந்திக்கும் முன்னரே காஞ்சன் மரணித்துவிட்டார்.

இதுவரை போடப்பட்ட எந்த வழக்குகளிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

♦ மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !

சரியாகச் சொல்வதானால், ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து அவருக்கான முறையான மருத்துவத்தை மறுத்து அவருக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கிறது போலீசு மற்றும் நீதிமன்றக் கூட்டணி. அவர் செய்த ஒரே “குற்றம்” மாணவரகள், பழங்குடியின, தலித் மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்தது மட்டுமதான். அதற்குப் பரிசுதான் ஊபா மற்றும் மருத்துவம் மறுக்கப்பட்டதன் விளைவாக நடத்தப்பட்ட படுகொலை.

சமூகச் செயற்பாட்டாளர்களான வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டே, ஸ்டான் சுவாமி,  சுதா பரத்வாஜ் உள்ளிட்டவர்களை பீமா கொரேகான் வழக்கில் ஜோடித்து இணைத்து அவர்களை ஊபா சட்டத்தில் கைது செய்து தற்போது பிணை மறுத்து வருகிறது. சிறைக்குள் விசாரணைக் கைதியாக பல்லாண்டுகள் அடைத்து வைத்து அவர்களது செயல்பாடுகளை முடக்குவதோடு, மன உளைச்சலாலும் உடல் நலிவாலும் அவர்கள் மரணிக்க வேண்டும் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் !


கர்ணன்

செய்தி ஆதாரம் : The Wire

 

 

 

வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன விவசாய சங்கங்கள்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட  ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
9176801656.

கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !

ணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் உருக்குலைந்து போயிருந்த, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்த கொரோனா பொதுமுடக்ககாலத்தில் கிட்டதட்ட அழிவின் விழும்பு நிலைக்கே சென்றுவிட்டனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெரும்பான்மையானோர்க்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடியவை இந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து அவர்களுக்கான ஊக்கத்தொகையாக ரூ. 3 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் பலன் 32 சதவீதம் பேருக்கு மட்டும்தான் சென்றடைந்திருக்கிறது என்பதுதான் இத்திட்டத்தின் இலட்சணம். இதனை லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தனியார் நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்கள், சாதாரண ஏழை மக்கள் பொதுமுடக்கத்தினால் வேலை இழந்துள்ளனர். வேலை இழப்புக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் எந்த இழப்பீடும் தரவில்லை. அரசின் நிவாரணமும் கிடைக்கவில்லை.

படிக்க :
♦ ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
♦ ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)’ வெளியிட்ட அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலை நேரம் 5.6சதவீதம், இரண்டாவது காலாண்டில் 17.3 சதவீதம்,மூன்றாவதில் 12.1 சதவீதம் குறைந்துள்ளது என கூறுகிறது. மூன்றையும் சேர்த்து சராசரியாக 11.7 சதவீத வேலை நேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் முறையே 3.1சதவீத, 27.3 சதவீத ,18.2 சதவீத வேலைநேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இழந்துள்ள வேலை நேரத்தை ஊதியமாக கணக்கிட்டால் தொழிலாளர்கள் இழந்துள்ளதன் தீவிரம் புரியும். இந்தியாவில் 16.2 சதவீத வருமானத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.

இப்படி ஒருபுறம் தொழிலாளர்கள் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில், மறுபுறத்தில் இந்தியாவின் பங்குச்சந்தை சமீப காலமாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சென்செக்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 50,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தையடைகிறது.

சென்செக்ஸ் புள்ளிகளை பார்க்கும்போது, பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக ஒருவர் நினைக்கலாம். உண்மையில் அவை இப்போதுதான் தொடங்குகின்றனஎன்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

கொரோனாவிலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய முதலாளிகள்

இத்தகைய ஏற்றத்தாழ்வு பொது முடக்கம் தளர்ந்து உற்பத்தி தொடங்கிய இன்றைய நிலைமைகளைவிட, பொதுமுடக்க காலத்தின் போது அதிகமாகக் காணப்பட்டது. உண்மையில் பொதுமுடக்கம் என்பது முதலாளிகளுக்கு பணம் பறிக்கும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதையே அவர்களே வெளியிட்டுருக்கும் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிதியாண்டின் ஏப்ரல் ஜூன் காலாண்டில் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் ரூ.1.33 லட்சம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளன என தெரிவிக்கிறது.

மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 1897 நிறுவனங்களில் கடந்த 2020 ஜூன் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டின் முடிவில் 27 சதவீத வருமான வீழ்ச்சியையும், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த காலாண்டில் 6 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்தது. வருமானம் வீழ்ச்சி அடைந்தாலும் பெரு முதலாளிகளது இலாபம் குறையவில்லை. இது எப்படி சாத்தியம் ?

பொதுமுடக்கக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் செலவினங்களை பெருமளவு வெட்டிச் சுருக்கியதே அந்த லாபத்திற்கான காரணம். குறிப்பாக, பெருவாரியான தொழிலாளர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியது; பெருமளவு பணிகளை குறைந்த கூலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்றியது; மூலப்பொருட்கள் பயன்பாடு மற்றும் இருப்பு வைத்துக் கொள்வதில் உள்ள செலவினங்களை குறைத்துக் கொண்டது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இவையே தனியார் நிறுவனங்களின் இலாப பெருக்கத்திற்கு காரணிகளாக உள்ளன.

இப்படித்தான் தொழிலாளர்களின் வாழ்நிலை கடும் பாதிப்பில் இருக்கும்போது மிகப்பெரிய முதலாளிகளின் சொத்து அதிகரிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள 1சதவீத பணக்காரர்கள் பொருளாதார நெருக்கடி, பொதுமுடக்கம், உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்றவற்றால் பாதிக்கப்படவேயில்லை.

சுவிஸ் வங்கி அறிக்கையின்படி கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டமான, 2020 ஏப்ரல் ஜுன் இடைப்பட்ட காலத்தில் உலக பணக்காரர்களின் சொத்து 27.5சதவீதம், அதாவது 10.2 டிரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 2189 ஆக உயர்ந்திருக்கிறது.

படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் ஏப்ரல் ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 423 பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக்கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள்ளது.

பெருமுதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும்தான் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள். இவர்களுக்கு சலுகைகள் வழங்குவதின் மூலம் ஏழை மக்களுக்கும் அந்த பயன் சென்றடையும் என்கிறார்கள் முதலாளித்துவவாதிகளும் ஆட்சியாளர்களும். இதனை “டிரிக்கிள் டவுன் கோட்பாடு” (Trickle Down Theory) என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, ஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது இன்று இந்தக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வின் மூலம் கண்கூடாகத் தெரிகிறது.

ஆக்ஸ்பாம்’ அறிக்கையின்படி இந்தியாவின் 1சதவீத பணக்காரர்கள் நாட்டின் 43 சதவீத சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். அடி நிலையிலுள்ள 50சதவீத மக்கள் மொத்தமாகச் சேர்த்தே வெறுமனே 2.8சதவீத சொத்துக்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய பாரபட்சமாகும்.

இந்தப் பாரிய ஏற்றத் தாழ்வின் அடித்தளம் இந்த முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக். “அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற நெருக்கடிகள் எதுவானாலும் அவை பணக்காரர்களுக்கு வாய்ப்புகளை தந்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது” எனக் கூறும் பிரபாத் பட்நாயக், “மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது” என்கிறார்.

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி இந்தியாவிலும் ஆத்மநிர்பார் எனும் பெயரில் நாட்டுச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது மோடி அரசு. கொரோனா ஊரடங்கின் மூலம் பல்வேறு கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அதில் ஒன்றுதான் தற்போது விவசாயிகள் எதிர்த்துப் போராடிவரும் வேளாண்சட்ட மசோதாக்கள். கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானியங்கள் சென்றால், இந்தியா பஞ்சம் மற்றும் பசிப் பட்டியலில் முன்னேறி சோமாலியாவை விட மோசமான நிலைமையை சந்திக்கும்.

பிரச்சினைகளின் அடிக்கொல்லியான முதலாளித்துவக் கட்டமைப்பின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதுதான் பிரச்சினைகளுக்கு நாம் தீர்க்கமாகக் காணக்கூடிய தீர்வாக இருக்க முடியும்.

மூர்த்தி

லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

4

லகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து 97 ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.

அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ? எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது ? அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன வித்தியாசம் ? இக்கேள்விகளுக்கு தோழர் லெனினின் வாழ்க்கைத் துணைவர் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா, லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் ?” என்ற நூலில் பதிலளிக்கிறார்

கற்றலில் இருந்துதான் அனைத்துமே துவங்குகிறது. ஒரு புரட்சியை சாதிக்கவல்லவராக வளர்ந்த லெனின், முதலில் மார்க்சியத்தை எவ்வாறு கற்றறிந்தார் என்பதைப் புரிந்து கொண்டால்தானே அவர் புரட்சியை எவ்வாறு சாதித்தார் எனக் கற்றுக் கொள்ள முடியும். லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் என்பதை விளக்குகிறார் குரூப்ஸ்கையா.

விளாதிமீர் இல்யீச் (லெனின்) இவற்றைத் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை) தமது நூல்களில் பயன்படுத்தினார், இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார். என்கிறார் குரூப்ஸ்கையா.

பொதுவுடைமைக் கல்வியை எப்படிக் கற்க வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் தோழர் லெனின் உரையாற்றியதையும் அந்நூலில் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.

“ “1920-ம் ஆண்டு பொதுஉடைமை இளைஞர் சங்கத்தின் மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும் போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுஉடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று விளாதிமீர் இல்யீச் கூறினார். ”

ஒரு விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதனை அதன் அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்த்தால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல, மார்க்சிய சித்தாந்தத்தைப் படிக்கும் போதும் அதனை அனைத்துக் கோணங்களில் இருந்தும் படித்து தர்க்கரீதியில் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் லெனின்.

மார்க்ஸ் எழுதியவற்றை தோழர் லெனின் படித்த முறை குறித்து குரூப்ஸ்கையா விளக்கும்போது, மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார். என்கிறார் தோழர் குரூப்ஸ்கையா.

மேலும், “ மாறுபட்ட கருத்துக்களின் விளைவாகத் தோன்றுவதே உண்மை” என்று ஒரு பிரெஞ்சுப் பழமொழி கூறுகிறது. இல்யீச் (லெனின்) இதை விருப்பத்துடன் மேற்கோள் காட்டினார். தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பல வர்க்கத்தினரின் கருத்துக்களையும் வெளிக்கொணர்ந்து அவற்றை எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப்பார்த்து ஆராய்ந்தார். லெனின் அதைத் தமக்கே உரித்தான பாணியில் செய்தார்.என்கிறார்.

பல்வேறு வர்க்கங்களின் கருத்துக்கள் என்பவை, வெவ்வேறு வர்க்கங்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் வைக்கும் விமர்சனங்களாக வெளிப்படுகின்றன.

தங்கள் மீதான விமர்சனங்களையும் கம்யூனிசத்தின் மீதான விமர்சனங்களையும் மார்க்சும் எங்கெல்சும் எப்படி எதிர்கொண்டனரோ, அதற்குச் சற்றும் குறையாமல் தம் மீதான விமர்சனங்களையும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீதான விமர்சனங்களையும் காத்திரமாக எதிர்கொண்டு கூர்மையாக பதிலளித்தார் தோழர் லெனின்.

தோழர் லெனின் விமர்சனங்களை எதிர்கொண்டது பற்றி குரூப்ஸ்கையா கூறுகையில்,

“ “விமர்சகர்களின்” கூற்றுகளை அவர் கவனமாகப் படிப்பார். மிகவும் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுவார். பிறகு அவற்றை மார்க்ஸின் கருத்துக்களோடு ஒப்பிடுவார். பலதரப்பட்ட விமரிசனங்களை விரிவாக ஆராய்ந்த அவர் அவற்றிற்கு எதிராக முக்கியமான, உடனடியாகத் தீர்க்கவேண்டிய கேள்விகளைத் தொடுத்து அவர்களது வர்க்கத் தன்மையைக் காட்ட அவர் முயன்றார். குறிப்பிட்ட சில பிரச்சினைகளை லெனின் அடிக்கடி வேண்டுமென்றே வலியுறுத்துவார். தொனி எப்படியிருந்தாலும், குறித்த பொருளினின்று நழுவாமல் இருக்கும் ஒருவர் கடுமையாகவும் முரடாகவும் இருக்கலாம் என்பதே அவர் கருத்து.

பி.. ஸோர்கேயின் கடிதங் களுக்கு முகவுரை எழுதும்போது அவர் மேரிங்கை மேற் கோள் காட்டிக் கூறுகிறார்: “மார்க்சும் எங்கெல்சும் ‘நல்ல தொனியுடன்’ எப்பொழுதும் இருக்கவில்லை என்று மேரிங்க் கூறுவது சரிதான். தாங்கள் பிறரைத் தாக்கும்போது, தொனி பற்றி வெகுவாகச் சிந்தனை செய்யாத அவர்கள் தங்களைப் பிறர் தாக்கும்போது விம்மியழவும் இல்லை.” வெடுவெடுப்பான நடை லெனினது இயல்பாகும். அவர் அதை மார்க்ஸிடமிருந்து கற்றார்.

தாமும் எங்கெல்சும் ‘சமூக ஜனநாயகவாதிகளால்’ ‘படுமோசமான’ முறையில் நடத்தப்பட்டு வந்ததை விடாது எதிர்த்ததாகவும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை அடிக்கடி கடுமையாக வெளியிட்டதாகவும் மார்க்ஸ் கூறுகிறார்” என்று லெனின் எழுதினார். கடுமையான தொனியைக் கண்டு லெனின் பயப்படவில்லை. ஆனால் விமர்சனம் மையப்பொருளிலிருந்து நழுவாமல் இருக்க வேண்டும் என அவர் கருதினார் என்று நினைவு கூர்கிறார் குரூப்ஸ்கையா.

படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

புரட்சி குறித்த மார்க்ஸ் எங்கெல்ஸின் கருத்துக்களை அன்றைய சமூக ஜனநாயகவாதிகள் அப்படியே ரசியாவிற்குப் பொருத்த முயன்றதை வன்மையாகக் கண்டித்தார் லெனின். ரசிய நிலைமைகளையும் சர்வதேச அளவில் முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தையும் எதார்த்த நிலைமையில் இருந்து மார்க்சிய கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து தீர்வை முன் வைத்தார். அதன் மூலம்தான் ரசியப் புரட்சி சாத்தியமானது.

மார்க்சியத்தின் மூல ஆசான்கள் அவர்களது காலத்திய முதலாளித்துவத்தை எந்தக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு முறையிலிருந்து பரிசீலித்தார்களோ, அந்தக் கண்ணோட்டத்தை அந்த ஆய்வுமுறையை மார்க்ஸ் எங்கெல்ஸின் எழுத்துக்களில் இருந்து லெனின் கற்றுக் கொண்டார்.

மார்க்ஸும் எங்கெல்ஸும் அவர்களது சமகாலத்து முதலாளித்துவம் குறித்து எழுதியதை அப்படியே பெயர்த்தெடுத்து ரசியாவில் அதனை லெனின் நடைமுறைப்படுத்தவில்லை. ஒருவேளை லெனின் அப்படியே எடுத்துப் பொருத்தியிருந்திருப்பாரெனில், வரலாறு ஒரு பிளக்கனோவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தோடு மட்டுமே லெனினையும் கடந்து சென்றிருக்கும். இன்று அவர் பாட்டாளி வர்க்க ஆசானாக அறியப்பட்டிருக்க மாட்டார்.

இன்று புரட்சியின் நாயகனாக முதலாளித்துவத்தாலேயே தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இடத்தில் லெனின் நிற்பதற்கான காரணம், அவர் தமது நாட்டினையும், உலக முதலாளித்துவத்தையும் பரிசீலிப்பதில் சரியான சமூக அறிவியலை மார்க்சியத்தை பிரயோகித்தார். அத்தகைய சமூக அறிவியல்பூர்வமான ஆய்வுதான் “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் லெனின் எழுதிய நூல்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்ததை முன்வைத்ததோடு லெனின் நின்றுவிடவில்லை. ஏகாதிபத்தியமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் தன்மைகளையும், அதன் பலவீனமான கண்ணியையும் கண்டறிந்தார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.

ரசிய நிலைமைகளில் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது குறித்த லெனினின் கருத்துக்களையும் தமது நூலில் சுட்டிக்காட்டுகிறார் குரூப்ஸ்கையா. மார்க்சியத்தை ரசியாவிற்குப் பிரயோகிப்பது பற்றி லெனினின் பார்வை குறித்து அவர் எழுதுகையில்,

“ “ஸோர்கேயின் கடிதங்கள்” என்ற நூலுக்கான முகவுரையில் லெனின் கூறுகிறார் :

பிரிட்டிஷ், அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் கூறிய ஆலோசனைகளை அப்படியே இலகுவாகவும் நேரடியாகவும் ருஷ்ய சூழ்நிலைகளில் உபயோகிக்கலாம் என்று எண்ணுவது, மார்க்சியத்தை அதன் ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்வதற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கங்களின் திட்டமான வரலாற்று ரீதியான தனிச்சிறப்புகளை ஆராய்வதற்கோ உபயோகிப்பது அல்ல; மாறாக அறிவுஜீவிகளைப் போல ஏதோ சில்லரை குழுப் பிரச்சினைகளின் கணக்கைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உபயோகிப்பதாகும்.” ”

நதேழ்தா க்ரூப்ஸ்கையா, “லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்” என்று குறிப்பிட்டுக் கூறுவதன் பொருள், மார்க்சிடமிருந்து மார்க்சியத்தை இம்மி பிசகாமல் எப்படி கற்றுக் கொண்டார் என்பதுதானே தவிர, மார்க்ஸின் எழுத்துக்களை எப்படி படித்துத் தெரிந்து கொண்டார் என்பது பற்றியது அல்ல.

மார்க்சின் எழுத்துக்களில் இருந்து மார்க்சியத்தை தாம் கற்றுக் கொள்வதை, “மார்க்ஸிடம் ஆலோசனை பெறுவதாக” லெனின் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டி, இக்கட்டான கொதிப்பான சூழல்களில் அவற்றுக்கான விடை காண்பதற்கு அவர் எப்படி மார்க்ஸை நாடினார் என்பது குறித்தும் இந்த நூலில் சுட்டிக் காட்டுகிறார் குரூப்ஸ்கையா.

மார்க்சின் நூல்களில் இருந்து மார்க்சியத்தைப் பயில்வது என்றால் எப்படி ? மார்க்சியத்தை சமகாலச் சூழலுக்குச் சரியாகப் பொருத்துவது என்றால் என்ன? லெனின் அதைச் செய்தார் என்று வெறுமனே சொல்லிக் கடந்து விடுவது எளிது. ஆனால் எப்படி அதைச் செய்தார் என்பதை புரட்சியை விரும்பும் ஒவ்வொரு தோழருக்கும் கற்றுத்தருவது அவசியமான மற்றும் சற்று அதிக உழைப்பைக் கோருகிற பணியுமாகும்.

அதையும் தமது நூலில் சாரமாக விளக்கியிருக்கிறார் குரூப்ஸ்கையா. மார்க்சியத்தை லெனின் கற்றுக் கொண்ட முறை பற்றிக் கூறுகையில்,

“ …. எந்த ஒரு சூழ்நிலையிலும், அதையத்த சூழ்நிலை சம்பந்தப்பட்ட மார்க்ஸின் நூல்களை எடுத்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அந்நூலில் காணப்பட்டுள்ள சூழ்நிலைமையைத் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையுடன் ஒத்துநோக்கி, இவ் விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல்முறை. லெனின் இதை எப்படிச் செய்தார் என்பதற்கு 1905 – 07 புரட்சியில் இம் முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.”

“ …… (1905-ம் ஆண்டு) புரட்சி தோல்வியடைந்ததையடுத்து ருஷ்யாவில் எழுந்த பிரச்சினைகளை பற்றி மார்க்ஸ் கூறியவற்றையும், இயங்கியல் மற்றும் வரலாற்றுரீதியான பொருள் முதல் வாதத்தையத்த விஷயங்களையும் அதே சமயத்தில் ஆராய்ந்த லெனின் வரலாற்றுரீதியான வளர்ச்சியைக் கற்றறிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை மார்க்ஸிடமிருந்து கற்றறிந்தார்.”

“……. இவ்வாறு மார்க்ஸை கற்கும் இந்த முறைதான், மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்துப் போராடவும், அதன் புரட்சிக் கருத்துக்களை உறிஞ்சி சாரமற்றதாக்கும் முயற்சிகளைத் தடுக்கவும் லெனினுக்கு உதவியது. அக்டோபர் புரட்சிக்கு ஏற்பாடு செய்வதிலும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் லெனினது “அரசும் புரட்சியும்” என்ற நூல் எத்தகைய பிரமாண்டமான பங்கு வகித்தது என்பது நமக்குத் தெரியும். அரசு பற்றிய மார்க்ஸின் புரட்சிகர போதனையை ஆழ்ந்து கற்றதின் அடிப்படையில் தோன்றியதே இந்த நூல்.”

“….. பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்துக்கு வந்துள்ள சகாப்தத்தில் லெனின், சமூகஉடைமை கட்டுமான வேலைகளில் மார்க்சியத்தைக் கொண்டுவர முடிந்தது. ஏனென்றால் மார்க்ஸ், எகெல்ஸின் ஆராய்ச்சி உரைகளில் கூறப்பட்டுள்ளனவற்றை லெனின் அப்படியே எழுத்துக்கு எழுத்து கடைபிடிக்கவில்லை. மாறாக அவற்றின் புரட்சிசாரத்தை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார்என்று குறிப்பிடுகிறார் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா.

தாம் மார்க்சியத்தைக் கற்று நடைமுறைப்படுத்தி அதனை சாதிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். மார்க்சியத்தை தொழிலாளர்களுக்கு எளிமையான வகையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தார். புரட்சியை சாதிக்கப் போகிறவர்களும், சமூக மாற்றத்தின் உந்து சக்தியாக இருப்பவர்களுமான தொழிலாளர்களுக்கு மூலதனம் முதல் பகுதியை எளிமையாக விளக்க முற்பட்டார்.

படிக்க :
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

மார்க்சியப் பார்வை என்றும், மார்க்சியத்தின் சாரம் என்றும் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? சித்தாந்தமாகட்டும், கட்சி அமைப்பாகட்டும், போராட்டங்களாகட்டும், புரட்சியாகட்டும் இவை அனைத்தையும் இயங்கியல் பொருள்முதல்வாத, வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி பார்ப்பதுவே அதன் பொருளாகும்.

லெனின் இதனை வலியுறுத்தியது பற்றிக் கூறுகையில்,

1921-ல் தொழிற்சங்கங்கள் பற்றிய விவாதத்தில், எந்தப் பொருளையும் சம்பவத்தையும் இயங்கியல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆராய்வதற்கான முறைகளைப் பற்றிப் பேசம் போது லெனின் குறிப்பிட்ட ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணமாகும். லெனின் கூறினார்: “ஒரு பொருளை உண்மையாகவே அறிய வேண்டுமானால் அதைப் பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அதைப் பற்றிய எல்லாவற்றையும், எல்லா நேரடித் தொடர்புகளையும், எல்லா மறைமுகத் தொடர்புகளையும் ஆராய வேண்டும். இதை நாம் முற்றிலும் தீரச் செய்ய முடியாது. ஆயினும் இவ்வாறு அழ்ந்து ஆராய்வதால் பெருந்தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும், உணர்ச்சியற்றுச் செயல்படுவதைத் தடுத்துக்கொள்ளலாம். இது முதலாவது;

இரண்டாவதாக, இயங்கியல் தர்க்கப்படி ஒரு பொருளை அதன் வளர்ச்சி நிலையிலும் ‘இயங்கு நிலையிலும்’ (ஹெகல் அவ்வாறு சில சமயங்களில் கூறினார்), மாறும் நிலையிலும் வைத்துக் காண வேண்டும்

மூன்றாவதாக, ஒரு பொருளை முழுமையாக ‘வரையறுக்கும்’ போது மனித குலத்தின் முழு அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த அனுபவம் உண்மையின் அளவுகோலாகவும், அப்பொருளுக்கும் மனிதனின் தேவைகளுக்குமிடையே உள்ள தொடர்பை நடைமுறையில் நிர்ணயிக்கவும் பயன்படுகிறது.

நான்காவதாக, காலஞ்சென்ற பிளெகானவ் ஹெகலைப் பின்பற்றிக் கூறியது போல் ‘புறநிலை உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை எப்பொழுதும் திட்டவட்டமானது’ என்பதை இயங்கியல் தர்க்க வாதம் கற்பிக்கிறது.”

என்று சுட்டிக் காட்டுகிறார் குரூப்ஸ்கையா.

இங்கு லெனின் பொதுவான சொல்லாடலாக “பொருள்” எனும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். நமது சமூக நிலைமைகள், கட்சி, புரட்சி என அனைத்தையும் அந்தச் சொல்லில் பொருத்தி புரிந்து கொள்ளலாம்.

தோழர் லெனின் ஒவ்வொன்றையும் தர்க்கரீதியில், இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார். தமது கற்றலையும் அவ்வழியிலேயே மேற்கொண்டார்.

ஒருவரை நினைவுகூர்வது என்பது அவரது வாழ்வை கிரகித்துக் கொள்ள முயற்சிப்பதுதான். அந்த வகையில் தோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு கூர்தலில் அவர் மார்க்சியத்தைக் கற்றுக் கொண்ட முறையைக் கற்றுக் கொள்வதற்கு “லெனின் மார்க்ஸை எவ்வாறு பயின்றார்?” எனும் நூல் கண்டிப்பாகப் பயன்படும். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

லெனின் மார்க்ஸை எவ்வாறு பயின்றார்?” எனும் நூலைப் பயில்வோம் ! தோழர் லெனினை உண்மையாக நினைவுகூர்வோம் !!

வினவு

சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்

அறிவுத் துறையினரை முடக்கத் துடிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் !

கன்னட எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியரும் பகுத்தறிவாளருமான கே.எஸ்.பகவானின் ”ராமர் கோயில் ஏன் தேவையில்லை” (Rama Mandira Yeke Beda) என்ற நூல் சமூகத்தின் ஒரு பிரிவினரின் உணர்வினை புண்படுத்துவதாகக் கூறி, பொது நூலகத்திற்கு வாங்கும் நூல் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு.

“இந்த நூல் பொதுமக்களின் (இந்துக்களின்) உணர்வினை புண்படுத்தக்கூடும். எனவே இவ்வகையான புத்தகங்களை பொது நூலகத்தில் வைக்க நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன்” என்கிறார் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார்.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

இந்துத்துவா வலதுசாரி கும்பல் சமூக ஊடகங்களில் இப்புத்தகத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கிய பிறகுதான், இப்புத்தகத்தை தேர்வு செய்த கன்னட எழுத்தாளர் டொட்டரங்கே கவுடா (Doddarange Gowda) தலைமையிலான பொது நூலக புத்தக தேர்வுக்கான கமிட்டி கே.எஸ்.பகவானின் புத்தகத்தை வாங்குவதற்கான பரிந்துரையை திரும்பப் பெற்றிருக்கிறது.

இராமாயணம் மற்றும் ராமர் கோயில் குறித்த அரசியல் விமர்சனத்தின் தொகுப்பான இப்புத்தகம், “சமூகத்தின் ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது” என்பதால் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்று புத்தக தேர்வுக்கான கமிட்டி ஜனவரி 19, 2021 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கே.எஸ்.பகவானின் ”ராமர் கோயில் ஏன் தேவையில்லை” (Rama Mandira Yeke Beda) என்ற நூல்

“பொது நூலக பட்டியலில் இருந்து எனது நூல் நீக்கப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பொது நூலகம் என்பது எல்லோருக்குமானது; அங்கு அனைத்து வாதங்களையும் படிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. பொது நூலகத்தை ஒரேயொரு சித்தாந்தத்திற்காக இந்த அரசாங்கம் எப்போதும் பணயம் வைக்க முடியாது” என்கிறார் எழுத்தாளர் பகவான்.

“இந்த இரண்டாண்டுகளில் எனது புத்தகம் ஏற்கனவே மூன்று பதிப்புகள் முடிந்து, நான்காவது பதிப்பிற்கு சென்றுவிட்டது. மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் அவர்.

‘ராமன் மது அருந்துகிறான்’ என்ற எழுத்தாளர் கே.எஸ்.பகவானின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரியைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணையதளத்தில் ஒன்றான இந்து ஜாக்ரன் வேதிகே (Hindu Jagran Vedike) கடந்த 2019-ஆம் ஆண்டே புகார் ஒன்றை அளித்திருந்தது; மேலும் அப்புத்தகத்திற்கு தடையும் கோரியது.

கே.எஸ்.பகவான்

“பதிப்பகத்தாரால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கே.எஸ்.பகவானின் புத்தகத்தினை வாங்க புத்தக தேர்வுக்கான கமிட்டி முடிவு செய்தது. அப்புத்தகம் ஒரு பிரிவினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி இருந்தாலும், வாசகர்களுக்கு பல்வேறுப்பட்ட கருத்துகளை வழங்கக்கூடும் என்பதால் இப்புத்தகம் எங்களது பொது நூலகத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கருதினோம்” என்ற கவுடா, இந்துத்துவ சக்திகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால், தற்போது நூல் பெறும் பரிந்துரையை திரும்பப் பெற்றிருக்கிறோம் என்கிறார்.

30 ஆகஸ்ட், 2015-ம் ஆண்டு அறிஞரும் கன்னட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி இந்துத்துவா கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே எழுத்தாளர் பகவானுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் பல வந்திருக்கின்றன.

2017-ம் ஆண்டில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர், கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு (SIT) நடத்திய விசாரணையில் எழுத்தாளர் பகவானைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் பின்னணியில் இருந்த இந்து யுவசேனா உறுப்பினர் ஒருவரை சரியான நேரத்தில் கைது செய்ததன் மூலம் கொலை நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிலர் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக அண்மையில் எழுத்தாளர் பகவானின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இது குறித்து எழுத்தாளர் பகவான் கூறுகையில், “மரியாதைக்குரிய விதத்தில் நான் அவர்களை வரவேற்று, ராமர் கோயில் கட்ட நிதி கொடுக்க மாட்டேன் என்றதோடு, எனது புத்தகத்தை படிக்குமாறும் பரிந்துரைத்தேன்” என்கிறார் எழுத்தாளர் பகவான்.

படிக்க :
♦ அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

சமீபத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய Walking with the comrades என்ற புத்தகம் இந்துத்துவா கும்பலின் அச்சுறுத்தலால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொது நூலகப் பட்டியலில் இருந்து எழுத்தாளர் பகவானின் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது. சகல துறைகளிலும் காலூன்றி இராமராஜியத்தை நிறுவத் துடிக்கும் பாஜக இந்துத்துவா கும்பல். கீழிருந்து மக்களைத் திரட்டி போராடுவதன் மூலமே இந்துத்துவ பாசிச சக்திகளை வீழ்த்த முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.


ஷர்மி
செய்தி ஆதாரம் : The Wire

உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜனவரி 26 குடியரசு தினத்தன்று பீரங்கிப் பேரணிக்கு இணையாக டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் 2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் போராடப்போவதாகவும் விவசாயிகள் உறுதியுடன் அறிவித்துள்ள சூழலில், இதை எப்படிக் கலைப்பது என்று தெரியாமல் திணறிவருகிறது மோடி அரசு.

போராட்டக் களத்திலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் வெளியேறுமாறு கூறி விவசாயிகளின் மேல் அக்கறைப்படுவதாகக் காட்டிக்கொண்டது உச்சநீதிமன்றம்.பெண்களை வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டியவர்களாகக் காட்டும் உச்சநீதிமன்றத்தின் ஆணாதிக்கத் திமிர் சமூக வலைத்தளங்களில் அடித்துப் பெயர்க்கப்பட்டது.

தாமாக முன் வந்து, வேளாண் சட்ட ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து, விவசாயிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும் என்றும், முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ”பணிவான” மிரட்டலோடு கேட்டது. விவசாயிகள் அக்கமிட்டி குறித்து அதன் முகத்திலேயே காறி உமிழ்ந்துவிட்டனர்.

இப்படி பல வகைகளில் மோடி அரசு போராடும் விவசாயிகள்  மீது தாக்குதல் தொடுக்க நியாயம் கற்பிக்கும் வகையிலான அனைத்து வேலைகளையும் நைச்சியமாகச் செய்து வருகிறது உச்சநீதிமன்றம்.

படிக்க :
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்கையில், கடந்த 2020 – டிசம்பர் 31-ம் தேதியன்று சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது சொந்த வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையோ உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் சேவையை விஞ்சுமளவிற்கு இருக்கிறது.

இக்கட்டுரையில் “இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் நியாயமானவை, பகுத்தறிவுள்ள எந்த அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ளும்.” என்று இந்தப் போராட்டத்தின் அவசியம் குறித்து எழுதியுள்ள சீத்தாராம் யெச்சூரி, இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக விவசாயிகளே முன் வைக்காத ஒன்றை முன் வைக்கிறார்.

“எல்லோரும் கேட்பது ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களும் இப்போது திரும்பப் பெறப்பட வேண்டும். பின்னர் விவசாயிகள், விவசாய சங்கங்கள், கார்ப்பரேட்டுகள், அனைத்து பங்குதாரர்களிடமும் விவாதித்து புதிய சட்டங்களை வடிவமைத்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அதை நிறைவேற்ற வேண்டும்.” (அழுத்தம் எம்முடையது) என்கிறார் யெச்சூரி.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திதான் விவசாயிகள் போராடுகிறார்களே ஒழிய, புதிய சட்டங்கள் தங்களுக்கு வேண்டும் என யாரும் கோரவில்லை. அப்படியிருக்கும்போது புதிய வேளாண் சட்டங்களை யாருக்காக, எதற்காக இயற்ற வேண்டும் என்கிறார் யெச்சூரி ?

அதற்கான பதில் அடுத்த வரியில் வருகிறது. இந்தப் புதிய சட்டத்தை விவசாயிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கி விவாதம் நடத்தி வடிவமைக்க வேண்டும் என்கிறார்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால் தாங்கள் கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமைகளாக்கப்படுவோம் என்பதையும் இச்சட்டங்கள் வேளாண்துறையையே கார்ப்பரேட்டுகளிடம் முற்றாக தாரைவார்க்கிறது என்பதையும் உணர்ந்துதான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மோடியின் உருவ பொம்மையுடன் அம்பானி, அதானி உருவ பொம்மையையும் சேர்த்துக் கொளுத்துகிறார்கள். அம்பானியின் ஜியோ நிறுவனத்தைப் புறக்கணிக்கிறார்கள்.

இப்படியிருக்கும் போது, “கார்ப்பரேட்டுகளையும் உள்ளடக்கி” ஒரு விவாதம் நடத்தி ‘சுமூகமாக’ பிரச்சனையை தீர்க்க சொல்கிறார் யெச்சூரி. பிரச்சினைக்குள் தலையைக் காட்டாமல் ஒதுங்கியிருந்த கார்ப்பரேட்டுகளைத் தங்களது அனுபவத்தில் இருந்து அடையாளம் கண்டு, வீதியில் நிறுத்தியிருக்கும் விவசாயிகளின் வர்க்க உணர்வை விட சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரின் வர்க்க உணர்வு பின் தங்கியுள்ளது மட்டுமல்ல. சமரசவாத, தாராளவாத கருத்தாக்கத்துக்குள் புதைந்து போய் இருக்கிறது.

மாபெரும் கார்ப்பரேட் மதயானைகளுக்கு முன்னர் விவசாயிகளை எறும்புகளைப் போல நிற்க வைக்கின்றன இச்சட்டங்கள். ஆனால் யெச்சூரியோ கார்ப்பரேட்டுகளையும் விவசாயிகளையும் ஒரே மேசையில் உட்காரவைத்துப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்கிறார். தோழரின் ‘ஜனநாயக உணர்வையும்’ ‘வர்க்க உணர்வையும்’ நினைத்தால் நமக்கே புல்லரிக்கிறது.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

மேற்கு வங்கத்தில் டாடாவின் நேனோ ஆலைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தியதோடு, அதை எதிர்த்துப் போராடிய சிங்கூர் விவசாயிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற பின்னர் இன்று வரை மேற்குவங்கத்தில் எழுந்து நின்று மூச்சுக் கூட விட முடியாத அளவிற்கு அடி வாங்கியிருந்தும், மக்களின் வாழ்வு ‘உய்ய’ கார்ப்பரேட்களின் தயவைக் காத்து நிற்பதைக் கைவிடத் தயாராக இல்லை என்பதையே யெச்சூரியின் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சி.பி.எம். கட்சியின் விவசாய அமைப்புகளும், தொழிலாளர் அமைப்புகளும் பெருமளவில் வீதியில் இறங்கி பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது உயிரை துச்சமாக மதித்து போராடும் விவசாயிகளோடு உடன் நிற்கின்றனர்.

அப்படிப்பட்ட தியாக உணர்வும் போராட்ட உணர்வும் கொண்ட இலட்சக்கணக்கான தோழர்களை அணிகளாகக் கொண்ட கட்சியின், தலைமைப் பொறுப்பில் இருப்பவரது சிந்தனையின் வலதுசாரி சரிவை விட அதைக் கண்டு கொள்ளாமல் கண்டிக்காமல் இருக்கும் கட்சியின் நிலைதான் மேலும் அபாயகரமானது.


தீரன்

செய்தி ஆதாரம்
: Frontierweekly

அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டதன் மூலம் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் மூலப் பொருட்களின் மீதான வரியை ஈடுசெய்ததன் மூலமாக அதானி குழுமம் ரூ.500 கோடி பெற வழிவகுத்ததை அம்பலப்படுத்தி “எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் வீக்லி” (ஈ.பி.டபிள்யூ) பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது.

இச்செய்தியை வெளியிட்ட  ஈ.பி.டபிள்யூ பத்திரிகைக்கு அதானி குழுமம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.  அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்டுரையை தமது இணையதளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்தது ஈ.பி.டபிள்யூ நிர்வாகக் குழு. அந்தக் கட்டுரையை எழுதியவரும், ஈ.பி.டபிள்யூ-வின் ஆசிரியருமான பரஞ்சோய் குகா தாக்குர்தா நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் அவரது கட்டுரையை தி வயர் இணையதளம் வெளியிட்டது.

படிக்க :
♦ நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

உடனடியாக தி வயர் இணையதளத்தின் மீதும், கட்டுரையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்த்தா மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்குப் பதிவு செய்தது அதானி குழுமம். இந்த வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தி வயர் இணையதளமும், பரஞ்சோய் குகா தாக்குர்தாவும் அறிவித்தனர். இந்நிலையில் கடந்த மே 2019-ல் தி வயர் இணையதளத்தின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதானி குழுமம். அப்போதும் தாக்குர்தா மீதான வழக்குகளை திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் இவ்வழக்கை விசரித்து வந்த குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட நீதிமன்றம் பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது.

தனது உத்தரவில் நீதிபதி பிரதீப் சோனி “இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500-ன் கீழ் பரஞ்சோய் தாகுர்த்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை தமக்கு முன்நிறுத்துமாறு டெல்லி நிஜாமுதீன் போலீசு நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது”. ஆனால் இது குறித்து தமக்கு எதுவும் முறையான ஆவணங்கள் இன்னும் வரவில்லை என்று பரஞ்சோய் குகா தாக்குர்த்தா தெரிவித்துள்ளார்.

அதானி வழக்கு தொடுத்த அதே நேரத்தில், ரிபப்ளிக் டிவி பங்குதாரரும் பாஜக பிரமுகருமான இராஜீவ் சந்திரசேகர், பரஞ்சோய் குகா தாக்குர்த்தா மீது வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று!


கர்ணன்
செய்தி ஆதாரம் : Scroll

Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

0
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

வுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்
அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப்பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப்படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் காமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப்படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை.

படிக்க:
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப்படும் ஆதாரங்களிலும், சொல்லப்படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு “நம்பத் தகுந்தது” எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும்படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர்.

அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.


கலையரசன்
கலையகம்

disclaimer

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

ரு மதத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள அதன் தோற்றம், வரலாறு, அதன் போதனைகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை மட்டும் வைத்துப் புரிந்து கொள்ள முடியாது.

மதம் தோன்றிய வரலாற்று சூழ்நிலை அக்காலகட்டத்தில் நிலவிய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள், நிலவிய உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், இவற்றின் மீது கட்டப்பட்ட மேல் கட்டுமானம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை, ஆளும் வர்க்கத்தின் செயல்பாடு, அன்றைய பண்பாடு, நாகரிகம் வளர்ச்சி நிலை இவற்றின் அடிப்படையில்தான் முழுமையான புரிதல் உருவாகும்.

இஸ்லாம் பிற மதங்களிலிருந்து அதன் பெயரிலேயே வேறுபடுகிறது. மனிதப் பிறவியை கடவுளாக கொள்ளாத மதம். இஸ்லாம் என்றால் அரபு மொழியில் அடிபணிதல் என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிதல்-Obedience , கீழ்ப்படிதல்-Submission, சரணடைதல்-Surrender. மனிதகுல வரலாற்றில் சமூக முன்னேற்றத்தில் ஒரு மதம் தோன்றி என்னென்ன பங்களிப்பை செய்தது, சமூக அமைப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
♦ நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

அரேபிய பாலைவனத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த பெது இன் இனக்குழுக்களின் வாழ்க்கை முறையை மனித மதிப்புகளை மாற்ற முகமது நபி விரும்பினார். நாடோடிகளாக வாழ்ந்து வந்த  இனக்குழுவினர் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தனர். கால்நடை மேய்ப்பதும் கொள்ளையடிப்பதும் இவர்களின் வாழ்க்கைத் தொழிலாக இருந்தது. பிற இனக் குழுக்களின் மீது திடீர் திடீரென படையெடுத்து சூறையாடுவது இவர்களின் பொருளாதார அடிப்படையாக இருந்தது.

உயர்ந்த பண்புகளை கொண்ட மதம், ஓர் ஆட்சி முறை, நீதிமுறை, சட்டம் ஒழுங்கை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு சித்தாந்தம், கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டில்  பெது இன் நாடோடி இன குழுக்களையும், நகரவாசிகள், தெற்கத்தி குடியேறிகளையும் ஒருங்கிணைக்கும் வழிபாட்டுமுறை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு மத அமைப்பு, மெக்காவின் அரேபியாவின் உடனடித் தேவையாக இருந்தது இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாம் தோன்றியது. “அரசியலும் மதமும்; இஸ்லாமின் தோற்றம்” என்ற கட்டுரை எண்ணற்ற வரலாற்று விவரங்களோடு ஏராளமான  சான்றாதாரங்களை முன்வைத்து இஸ்லாம் மதத்தின் தோற்றுவாய் பற்றி தெளிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் தோன்றி வளர்ந்த விதம்; முகலாயர் சாம்ராஜ்யங்கள் எவ்வாறு உருவாகின, என்ற வரலாற்று விவரங்கள் “உலகளாவிய இஸ்லாம்” என்ற கட்டுரையில் சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய அரசியல் அதன் தோற்ற காலத்திலிருந்து இன்றுவரை சமத்துவ சமநிலை கொண்ட சமூக  அமைப்பை உருவாக்க இயலவில்லை. இதர மத நாகரிகங்களைப் போலவே வர்க்க வேறுபாடுகள், இருப்பவன்-இல்லாதவன்; ஏழை-பணக்காரன்; தொழிலாளி-முதலாளி; உழைப்பை சுரண்டுபவன்-சுரண்டப்படுபவன் என்ற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்ள இஸ்லாம் அனுமதித்தது. உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) மற்றும் (Islamic Brother hood) இஸ்லாமிய சகோதரத்துவம்;  உலகு தழுவிய இஸ்லாம் அரசு Global islamic State என்ற கருதுகோள்கள் எல்லாம் கற்பனை இலட்சியத்தில் பிறந்தவை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

50-க்கும் அதிகமான இஸ்லாமிய நாடுகள் உள்ளன. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவற்றில் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம் மக்கள் கடும் ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இஸ்லாமிய நாடுகளுக்குள் மோதல்கள்; போர்கள்; ஈரான்-ஈராக் போர்; அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆதிக்கத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. முஸ்லீம்  நாடுகளுக்கு உள்ளேயே பிரிவினைப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இஸ்லாமிய நாட்டு முதலாளிகள் உலக முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து உலகளாவிய முதலாளித்துவ சந்தை முறையில் முக்கிய பங்காளிகள் ஆகிவிட்டனர். புதிய உலகமய சூழ்நிலையில், இஸ்லாமியர்கள் தங்களை புதிய சிந்தனைகளுக்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் மத வேறுபாடுகளை களைந்து கொண்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமையை இந்நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

கிறிஸ்தவர்களால் குருசேடர், முஸ்லிம்களால் புனித போர் ஜிஹாத் (Crusade Vs Jihad)என்ற சிலுவைப்போர்கள், எதனால் துவக்கப்பட்டது? அதன் அடிப்படை என்ன? ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் என்ற மதவெறி அலை வீசியது. “ஐரோப்பாவில் இஸ்லாம்” என்ற கட்டுரையில் மதவெறி அடிப்படையிலான பயங்கரவாத போர்க்களத்தை (infinite war) வரலாற்றுப் பின்புலத்தோடு இந்நூல் விவரிக்கிறது. அமெரிக்க பயங்கரவாதம் அதற்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதம் தோன்றி வளர்ந்த பின்னணியையும்; அரபுகளின் ஜீவ மரண போராட்டத்தையும் பற்றி இந்நூலின் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடியும். 2001 செப்டம்பர் 11-ல் நடைபெற்ற நியூயார்க் மீதான விமானத் தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல்தான். ஆனால் இது சிலுவை போர்-புனித போரின் ஒரு அம்சம்தான்.

இந்தியாவில் இஸ்லாம் (கிபி 712- 1858) என்ற கட்டுரை முகலாயர்கள் நடத்திய படையெடுப்புகள்; முகலாய சாம்ராஜ்யம் உருவாகிய விதம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை நமக்கு தருகிறது. இந்தியா என்ற ஒற்றை நாடு வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை; மன்னர்களிடையே முரண்பாடுகளும், மோதல்களும், மத சண்டைகளும், சாதி சண்டைகளும் நிரம்பியிருந்தன. இந்தப் பின்னணியில் முஸ்லிம் படையெடுப்பாளர்கள் விரைவில் முன்னேறி தக்காணம் வங்காளம் என்று ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட முடிந்தது.

மாமேதை மார்க்ஸ் அவர்கள் இந்தியாவைப் பற்றி 1853 ஜூலை 22-ஆம் தேதி  வெளியிட்ட கட்டுரையில் (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்) பின்வருமாறு  எழுதினார்.

“அரபுகள், துருக்கியர்கள், முகலாயர்கள் என ஒருவர் பின் ஒருவராக இந்தியாவை படையெடுத்து வந்து கைப்பற்றிய அனைவரும் வெகு விரைவில் இந்தியமயமாக்கப்பட்டனர். இப்படி படையெடுத்து வெற்றி கண்ட இந்த காட்டுமிராண்டிகள் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியர்களின் உயர்வான நாகரிகத்தால் வரலாற்றின் புற விதிகளால் அடிமையாக்கப்பட்டனர்”.
{“Arabs,Turks,Tartars,Mogals who had successively overrun India, soon became hinuized,barbarian conquerers being, by an external law of history conquered themselves by the superior civilization of their subject”  ( The future result of British Rule in India)Marx-Notes on Indian history.}

கிபி 1526-ல் இருந்து 1858 வரை சுமார் 332 ஆண்டுகள் முகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் நீடித்தது. கிபி 712-ல் முகமது பின் காசிம் சிந்து பிரதேசத்தை கைப்பற்றி, அதில் இருந்து ஏறத்தாழ ஆயிரத்து 145 ஆண்டுகள் இந்தியாவிற்கு இஸ்லாமிய தொடர்புகள் ஏற்பட்டு நிலைநாட்டப்பட்டன எனலாம்; முஸ்லிம் இந்தியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள்.

முகலாய மன்னர் பாபர் எந்த கோயிலையும் வழிபாட்டுத் தலங்களையும் இடித்து தள்ளியவர் கிடையாது. பாபர் மிகமிக நாகரீகமானவர், மதவெறி அற்றவர். பாபரின் விஜயத்தின் நினைவாக மிர்பாக்கி என்ற பாபரின் அதிகாரி அயோத்தியில் 1528-ஆம் ஆண்டு பாபர் மசூதியை கட்டினார். 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் முன்னிலையில் இந்துத்துவ வானரப் படைகள் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.

தென்னிந்தியாவில் படையெடுப்புகள் மூலமாக  இஸ்லாம் பரவவில்லை திப்பு சுல்தானுக்கு முன் முகலாயர் ஆட்சி தெற்கே கோலோச்சவில்லை. பிறகு எப்படி கேரளம் தமிழகம் கர்நாடகத்தில் கூட இஸ்லாம் பரவியது என்ற வரலாற்று விவரங்களை “தமிழகத்தில் இஸ்லாம்” என்ற கட்டுரை தெளிவுபட கூறுகிறது. கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளான சமணர்கள், பௌத்தர்கள், தீண்டாமை கொடுங்கோன்மைக்கு இலக்கான தலித் மக்கள், நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த நாடார் சாதியினர், கள்ளர் சாதியினர் தமிழகத்தில் இஸ்லாம் மதத்தை தழுவினர்.

மாப்பிள்ளை, லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் என்றெல்லாம் அறியப்பட்ட மண்ணின் மைந்தர்கள் தான் தமிழக முஸ்லிம்கள். இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் காயிதேமில்லத் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் தேசிய மொழி பற்றிய பிரச்சனையில் விவாதத்தின்போது இந்த நாட்டு மண்ணில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையானதும் தொன்மையான மொழியாக இருப்பதும் தமிழ்தான் என்று எடுத்துரைத்தார் “இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி. இதுவே தமிழ் முஸ்லிம்களின் முழக்கம்” என்றார்.

“விடுதலை இயக்கமும் முஸ்லிம்களும்'” என்ற கட்டுரையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை பற்றி; மறுக்கமுடியாத ஆதாரங்களோடு இந்த நூலில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு என்ன காரணம்? பிரிவினைக்கு வித்திட்டது யார்? தனிநாடு கேட்பதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது எதனால்? என்ற விவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் மூலமாக இந்நூலாசிரியர் ஒரு தெளிவான ஆய்வை முன்வைத்துள்ளார்.

1925-ல் விஜய தசமி அன்று மகாராஷ்டிர பிராமணர்களின் தலைமையில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.  “ஒத்துழையாமை இயக்கம் வார்த்த பாலில் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பாம்புகள் விஷம் கக்கி கொண்டிருக்கின்றன,  நாடுமுழுவதும் கலவரங்களை தூண்டி விடுகின்றனர்’’ என்று ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவார் துவக்கத்திலேயே கூறினார்; முஸ்லிம்  மக்கள் முதல் பிரதான எதிரிகளாகவும்; முஸ்லிம்களிடம் இருந்து விடுதலை பெறுவதே முழு விடுதலை என்ற கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு இந்த மதவெறி கும்பல் தங்களை வரித்துக் கொண்டது.

இந்துத்துவ பாசிச கும்பல், முஸ்லிம் வருகையால் இந்தியா இருளடைந்ததுவிட்டது  என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்து புரோகித வர்க்கம் திணித்த ஒழுங்குமுறைகள்; வர்ணாசிரம கோட்பாடுகள்; அறிவியல் ஆய்வுக்கும் பகுத்தறிவுக்கும் மனுதர்ம கும்பல் காட்டிய அலட்சியம், இந்தியாவில் விஞ்ஞான கண்டுபிடிப்பு அறிவியல் வளர்ச்சி ஏற்பட மிகப் பெரும் தடையாக இருந்தது. இவர்களது மனுதர்ம கோட்பாடு மக்களின் சுதந்திர சிந்தனைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்தது.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

இந்திய நாகரீக வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். சீனர்களின் கண்டுபிடிப்பான வெடிமருந்து, காகிதம் ஆகியவை செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். வெளிநாட்டு துப்பாக்கியை முதன் முதலில் கொண்டு வந்தவர் பாபர். கட்டிடக்கலை சிற்பக்கலை, ஓவியம், இசை போன்ற நுண்கலைகளை இந்தியாவிற்கு வழங்கியவர்கள் இஸ்லாமியர்களே. முஸ்லிம்கள் இந்தியாவை இருளுக்குள் தள்ளினார்கள் என்று சங்பரிவார் கும்பல் சொல்லும் குற்றச்சாட்டு எள்ளளவும் உண்மை இல்லை.

இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் சங்பரிவார் கும்பலின் இந்து ராஷ்டிர கனவு பலிக்காது. அதன் அடிப்படை தகர்ந்துவிடும் என்பதால் முஸ்லிம் மக்கள் மீது பொய்யையும், புனை சுருட்டும், கட்டுக்கதைகளையும் ஆர்எஸ்எஸ் கும்பல் அவிழ்த்து விடுகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இஸ்லாமியரை குறிவைத்து தாக்குதல் தொடுக்கும் அரசியல் வகுப்புவாத பாசிச அமைப்புகள் இந்தியாவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தேசிய வாழ்வின் பல துறைகளிலும் முஸ்லிம்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் தொழில் துறைகளிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை. கல்வித்துறையில் அவர்களுக்குள்ள கல்வி வாய்ப்புகள் மிகக் குறைவு. அனைத்துத் துறைகளிலும் ஒதுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இந்திய சிறைச்சாலைகளில் நிரம்பி வழிகிறார்கள். நாடெங்கும் மிகப்பெரிய வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டுள்ள இந்துத்துவ பாசிசத்தின் இருண்ட நிழல்கள் அவர்கள் மீது விழுந்து கொண்டிருக்கின்றன.

அதிகார வர்க்கத்தின் உச்சியிலும், காவல்துறையிலும் இந்துத்துவ வெறியர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். இத்தகைய உண்மையான காரணங்களால் இஸ்லாமிய சமூகம் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆகப்பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மிகவும் வறிய நிலையில் ஏழ்மையில் உழன்று வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, இராணுவம் காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றில் இஸ்லாமியர்களுடைய விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் அளித்த அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

இஸ்லாமியர்கள் அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருடனும் கைகோர்த்து ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம். முஸ்லிம்களின் தனித்தனியான முயற்சிகள் வெற்றி பெற இயலாது, மாறாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் உண்மையான அமைப்புகளில் பெருவாரியாக பங்கேற்க வேண்டும். இந்துத்துவ பாசிச சக்திகளை தனிமைப்படுத்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

தோழர் ஞானையா

இந்துத்துவ பாசிச கும்பல் தங்களது  திருவிளையாடல்களை, தமிழகத்தில் அரங்கேற்றி விடலாமென்று தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்த காலத்தில், அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மகத்தான வரலாற்று கடமை அனைத்து ஜனநாயக சக்திகள்முன் உள்ளது. காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான கருத்து ஆயுதம்  தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலை இஸ்லாமிய சகோதரர்களும் சமத்துவ போராளிகளும் ஜனநாயக சக்திகளும் படித்து பயன்பெற வேண்டும்.

வரலாற்றில் வெற்றிபெறும் சக்திகளையும் தோல்வியுறும் சக்திகளையும் மிக எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும். தன்னைச் சுற்றிலுமுள்ள தனக்கு அனுசரணையாக இருக்கக்கூடிய சக்திகளை சாதுரியமாக தன்னுடனே சேர்த்துக் கொண்டு யார் வலுபெறுகிறார்களோ அவர்களே வளர்கிறார்கள். இந்துத்துவ பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்த போர்வாள் ஆகவும் கேடயமாகவும் இந்த நூல் பயன்படும்.

{இந்நூல் ஆசிரியர்  ஞானையா அவர்கள் தபால் தந்தி ஊழியர்  இயக்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். மாஸ்கோவில் உள்ள லெனின் அக்கடமி ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் (Lenin Academy of  school of sciences) என்ற கலாசாலையில் சமூகவியல் பயிற்சி பெற்றவர். பல இஸ்லாமிய நாடுகளுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்த நீண்ட அனுபவம் கொண்டவர். சுமார் 20 அரசியல் தத்துவார்த்த நூல்களை எழுதி உள்ளார்.}

நூல் : இஸ்லாமும் இந்தியாவும்
நுல் ஆசிரியர் : ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : 336
விலை : ரூ.160.00
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்,
சென்னை – 600024.
தொடர்புக்கு : 98417 75112

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

0

விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கக்கூடிய, அவர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே அவர்கள் மீது அழுந்த திணிக்கப்பட்டிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்கக் கோரி நடந்து வரும் போராட்டம் இரண்டாவது மாதத்தை எட்டிவிட்டது. இது வரலாற்று முக்கியத்துவமிக்கது. வெறும் குறைந்தபட்ச ஆதார விலை பற்றியது மட்டுமல்ல, இப்போராட்டம். பொதுக் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுக் கட்டமைப்பின் எதிர்காலம் பற்றியதுமாகும்.

நாட்டின் தானியக் களஞ்சியமான வட இந்தியாவின் உணவுப் பொருள் உற்பத்திப் பொருளாதாரரீதியாகத் தாக்குப்பிடிப்பதை உத்தரவாதப்படுத்தாமல், பொதுக் கொள்முதல் மற்றும் விநியோக முறை தொடர்வதை உத்தரவாதப்படுத்த முடியாது. (இக்கட்டமைப்பு பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், இதுதான் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலோருக்குக் குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக உள்ளது)

காலனிய காலத்தை மீண்டும் உருவாக்குதல்

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய வடக்கத்திய தொழிற்துறை நாடுகள், தத்தமது நாடுகளைச் சேர்ந்த நுகர்வோருக்குத் தேவைப்படும் அளவிற்கு வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலப் பயிர்களை விளைவிக்க இயலாத அதேசமயத்தில், அந்நாடுகளிடம் பால் பொருட்களும், தானியங்களும் மலைபோல் உபரியாகக் குவிந்துள்ளன. அந்நாடுகளில் நிலவும் தட்பவெப்பச் சூழல் காரணமாக, அவர்களது ஒற்றைப் பயிர் நிலங்களில் இவற்றைத் தவிர வேறு எதுவும் விளையாது என்பதால், அந்நாடுகள் இந்த உபரியை விற்றுத் தீர்க்க ஏற்றுமதிச் சந்தையைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

(இதற்காக) வளரும் நாடுகள் தமது சொந்த பொதுக் கொள்முதல் முறையைக் கைவிட்டுத் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை முன்னேறிய நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதோடு, இந்தத் தொழிற்துறை நாடுகளால் விளைவிக்க முடியாத, அதேசமயம் அந்நாடுகளுக்குத் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் அந்நாடுகள் தமது உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிலங்களை ஏற்றுமதிப் பயிர்களை விளைவிக்கக் கூடிய ஒப்பந்த விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்துறை நாடுகள் வளரும் நாடுகளை இடைவிடாது தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றன. சுருங்கச் சொன்னால், காலனிய காலத்தில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி விட அந்நாடுகள் விரும்புகின்றன.

படிக்க : 
காட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !
♦ மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

ஆசியாவின் பிலிப்பைன்ஸ் தொடங்கி ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா வரையிலும் பல பத்துக்கணக்கான நாடுகள் இந்த நிர்பந்தத்திற்கு அடிபணிந்தன. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தமது தானியங்களை எத்தனால் உற்பத்திக்குப் பெருமளவு திருப்பிவிட்ட அடுத்த ஒரு சில மாதங்களிலேயே, 2007-ம் ஆண்டின் இறுதியில் உலகச் சந்தையில் தானியங்களின் விலைகள் மும்மடங்காக உயர்ந்ததால், (மேற்குலக நாடுகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்து போன) மேற்கண்ட வளரும் நாடுகள் அதற்குரிய விலையைத் தந்தன. இறக்குமதியைச் சார்ந்து நின்ற 37 நாடுகளில் உணவுக் கலகங்கள் வெடித்ததோடு, அந்நாடுகளின் நகர்ப்புற ஏழைகள் கடுமையான பஞ்சப் பராரி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பை உலகச் சந்தையிடம் ஒப்படைத்துவிடும் அளவிற்கு, அவ்விடயம் மிகவும் சாதாரணமானது அல்ல என்றபோதும், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் அந்நாடுகளின் தானிய பொதுக் கொள்முதல்-சேமிப்பின் மீது இடைவிடாத தாக்குதல் தொடுப்பது தொடர்ந்தே வருகிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா இந்த அபாயத்தில் சிக்கிக் கொள்வதிலிருந்து ஏறத்தாழ தப்பித்துக் கொண்டது. 2008-க்கு முந்தைய ஆறு ஆண்டுகளாக மெய்யாகவே தேங்கிப் போயிருந்த கொள்முதல் விலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்தப்பட்டன.

பஞ்சாபில் தேங்கிப் போயிருந்த உணவு தானிய உற்பத்தி, பொருளாதாரம் சற்று முன்னேற்றம் அடைந்ததால், மீண்டும் வளர்ச்சி கண்டது. ஆனால், “வறுமைக் கோட்டுக்குக் கீழான” குடும்ப அட்டைகளைப் பெற முடியாதவாறு உண்மையான ஏழைகளுள் பலர் ஒதுக்கி வைக்கப்பட்டதாலும்; 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து வந்த 2020 பெருந்தொற்று நோயும் உருவாக்கிய வேலைவாய்ப்பற்ற நிலையும் தற்போது ஒட்டுமொத்த நுகர்வை வரலாற்றில் காணாத அளவிற்குச் சுருக்கிவிட்டதாலும், (உற்பத்தி வளர்ச்சியடைந்த அளவிற்கு) உணவு தானியங்களை (ஏழைகள்) எடுத்துக் கொள்வதில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை.

நியாயமற்ற வர்த்தகச் சூழல்

எவ்விதமான காரணமும் இசைவும் இன்றி, நியாயமற்ற வர்த்தகத்திற்குள்,  சர்வதேச சந்தை விலையின் ஏற்றத் தாழ்வுகளுக்குள் நமது விவசாயிகள் தள்ளப்பட்டதோடு , அவை அவர்களை மீளமுடியாத கடன் வலைக்குள்ளும் துயரத்திலும் மூழ்கடித்தன. இதன் காரணமாக பஞ்சாபில் ஒரே கிராமத்தில் மட்டும் 59 விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்ட அவலம் நேர்ந்தது. வடக்கத்திய தொழிற்துறை நாடுகளுடனான வர்த்தகம் நியாயமற்றதுதான்.

ஏனென்றால், அத்தொழிற்துறை நாடுகள் 1990-களின் மத்தியிலேயே தத்தமது நாடுகளில் வழங்கப்பட்டு வந்த ஆதரவு விலை நடவடிக்கைகளை, தமது விவசாயிகளுக்கு நேரடியாகவே பணம் வழங்கும் பிரம்மாண்டமான மானியங்களாக மாற்றிக் கொண்டதோடு, தமது சுயநலத்திற்குப் பயன்தரத்தக்க வகையில் அத்தகைய மானியங்களை எள்ளளவும் குறைக்கக் கோர முடியாத கடப்பாடுகளாகக் குறிப்பிட்டு விவசாய ஒப்பந்தத்தையும் உருவாக்கிக் கொண்டன.

மற்ற வளரும் நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் இதன் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்காவைப் பொருத்தவரை, அந்நாடு தனது இருபது இலட்சத்து இருபதாயிரம் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியம் என்பது, அந்நாட்டின் மொத்த விவசாய விளைபொருள் உற்பத்தி மதிப்பில் பாதிக்கும் மேலானது என்றாலும், அம்மானியம் அந்நாட்டின் பட்ஜெட் மதிப்பில் ஒரு சதவீதம்தான். இந்தியாவைப் பொருத்தவரை, நமது நாட்டின் 12 கோடி விவசாயிகளுக்கு, நமது நாட்டின் மொத்த விவசாய விளைபொருள் மதிப்பில் கால் பகுதியை மானியமாக அளிக்க வேண்டுமென்றால், மைய அரசு தனது பட்ஜெட்டில் ஏறத்தாழ 50 சதவீதத்தை இதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும். இது பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்றது என்பதோடு, நிர்வாகரீதியாக ஒரு பேய்க்கனவாகும்.

நியாயமான விலை குறித்த பிரச்சினை இது

சில்லறைத்தனமான பண உதவிகள் எதனையும் தாங்கள் விரும்பவில்லை என்பதை விவசாயிகள் மிகச் சரியாகவே தெளிவுபடுத்திவிட்டனர். நாட்டிற்காகத் தாங்கள் விளைவிக்கும் உயிராதாரமான பயிர்களுக்குச் செய்யப்படும் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய, பகட்டில்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான வருமானத்தைத் தரக்கூடிய நியாயமான விலை கிடைப்பதைத்தான் அவர்கள் கோருகிறார்கள். இந்தியச் சூழ்நிலையில், குறைந்தபட்ச ஆதார விலைதான் உண்மையில் நடைமுறை சாத்தியமானது. பஞ்சாபில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துகொண்டே செல்வது உண்மையான பிரச்சினைதான் என்றபோதும், இதற்கான தீர்வு, அரிசி உற்பத்தியைப் பாதிக்காத, அதேசமயம் தண்ணீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கக்கூடிய, முன்னேறிய விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதுதான். தலைவலியைக் குணப்படுத்துவதற்குத் தலையை வெட்டிக்கொள்ள முடியாதுதானே!

துல்லியமாகச் சொன்னால், பயிர்களுக்கு நிர்ணயிக்கப்படும் ஆதார விலைதான் உண்மையான பிரச்சினையாகும். அதனை, முன்னேறிய நாடுகள் தன்னிச்சையாகவும் அபத்தங்கள் நிறைந்த கணக்கீடுகளின் அடிப்படையிலும் விவசாய ஒப்பந்தத்தில் உள்நோக்கத்தோடு முன்வைத்துள்ளன. 1986-88-ம் ஆண்டில் உலகச் சந்தையில் ஒரு விவசாய விளைபொருளின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டுதான் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற முகாந்திரத்தைக் கொண்டு அமெரிக்கா மே 2018-ல் உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராகப் புகார் ஒன்றைக் கொடுத்தது.

அப்பொழுது (1986-88) ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.12.50 தான். இதனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் 2013-14 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் அரிசி மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை முறையே ரூ.235, ரூ.354 ஆகத்தான் நிர்ணயிக்க முடியும். ஆனால், அவ்வாண்டில் அரிசிக்கும் கோதுமைக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை முறையே ரூ.1,348, ரூ.1,386. அமெரிக்காவின் புகார்படி பார்த்தால் ஒரு குவிண்டாலுக்கு ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் அதிகம். இந்த அபத்தமான கணக்கீடைக் கொண்டு அவ்வாண்டில் இந்தியாவில் விளைந்த மொத்த அரிசி, கோதுமை ஆகியவற்றின் மதிப்பைவிட, அரிசிக்கு 77 சதவீதம் அதிகமாகவும் கோதுமைக்கு 67 சதவீதம் அதிகமாகவும் ஆதார விலை அளிக்கப்பட்டிருப்பதாக இந்தியா மீது புகார் கொடுத்த அமெரிக்கா, இவ்வுயர்வு, 1986-88 ஆம் ஆண்டில் உலகச் சந்தையில் நிலவிய சராசரி விலையைவிட 10 சதவீதம் கூடுதலாக ஆதார விலையை நிர்ணயிக்கலாம் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு முரணானது என வாதிட்டது.

படிக்க :
♦ விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !
♦ பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

அமெரிக்கா, இது தொடர்பாக மேலும் பல புதிய கேள்விகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. எளிதில் ஏமாறக்கூடிய வளரும் நாடுகளுக்குப் பெரிய நன்மைகள் கிடைக்காத வகையில் அறக்கேடான, அபத்தமான விதிகள் விவசாய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த விலையில் விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. 2013-14 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.50 என்றிருந்ததைக் கணக்கில் கொண்டால், அன்று தரப்பட்ட ஆதார விலை உலகச் சந்தையில் நிலவிய விலையைவிட மிகக் குறைவானதாகும் என்பதோடு, அந்த ஆதார விலையின் உண்மை மதிப்பு பூஜ்யத்திற்குக் கீழானதாகும்.

சரியான மதிப்பீடு

சர்வதேச நுகர்வில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுருக்கம் என்பது அரிசி, கோதுமையின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதையும்; முன்னேறிய நாடுகள் தமது விவசாயத்திற்கு வழங்கிவரும் மானியங்கள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருப்பதையும்; அந்நாடுகள் தமது விளைபொருட்களை நமது சந்தைகளில் கொட்டுவதற்கு எதையும் செய்யக்கூடிய அவர்களது வெறித்தனம் தீவிரம் அடைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தாம் எதிர்க்கும் இப்புதிய வேளாண் சட்டங்களால் பலனடையும் திறன் கொண்டவை உள்நாட்டு நிறுவனங்கள்தான் என்பதை நமது போராடும் விவசாயிகள் மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கும் அதேசமயம், அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் மீப்பெரும் அபாயகரமானவைதான்.

பஞ்சாபிலும் அரியானாவிலும் அந்திய வேளாண் தொழிற்கழங்களோடு போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்த விவசாயத்தின் இலாப நட்டங்களை விவசாயிகள் ஏற்கெனவே அனுபவித்திருக்கின்றனர். தமக்கு உகந்தது என்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையைத் தரவும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்முதலைச் செய்யவும் மறுத்து பின்வாங்கிக் கொள்ளும் முகமற்ற, அதிகாரம் படைத்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களோடு தாம் வியாபாரம் செய்ய விரும்பவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறிவருகிறார்கள்.

பணம் வழங்குவதில் தாமதம் மற்றும் செயல் திறமையற்ற தன்மை உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தாலும், குறைந்தபட்ச ஆதார விலையில் அடிப்படையில் அரசின் முகவர்களிடம் விற்பதைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். இப்புதிய சட்டங்கள் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்களைச் சந்தையில் நுழைய அனுமதிப்பதால், பொதுக் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்ற கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என அவர்கள் எண்ணுவது மிகச் சரியானதுதான்.

பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்துவது

வடக்கத்திய நாடுகளிடமிருந்து மானியம் அளிக்கப்பட்ட தானியங்களை இறக்குமதி செய்வது இந்திய ஏழை நுகர்வோருக்குப் பலன் அளிக்கும் என இந்தியாவைச் சேர்ந்த பல அறிவுத்துறையினரும் வாதிட்டு வருகின்றனர். முன்னேறிய நாடுகளில் பசுமை ஆற்றலுக்கு ஆதரவாகவும் எத்தனால் உற்பத்திக்கு மென்மேலும் அதிக தானியங்களை ஒதுக்க வேண்டும் என்றும் பலம் வாய்ந்த குரல்கள் ஒலிப்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தொடக்கத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் தானியங்களை இறக்குமதி செய்வதை இன்று அனுமதித்தால், அது நமது விவசாயிகளை மட்டும் நாசமாக்கிவிடாது. இறக்குமதியை நம்பியிருக்குமாறு தள்ளப்பட்ட பல்வேறு வளரும் நாடுகள் அனுபவித்ததைப் போன்ற, விலை உயர்வு மற்றும் நகர்ப்புற வறுமைத் துயர் ஆகிய சூழ்நிலைக்கும் விரைவாகவே வழி வகுக்கும். கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள் மற்றும் வறிய நுகர்வோர் ஆகியோர் மீது அக்கறை கொண்டுள்ள எவரும், உள்நாட்டு மற்றும் அந்நிய தொழிற்துறை மேட்டுக்குடிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.


கட்டுரையாளர்: உத்சா பட்நாயக்
தமிழாக்கம் :  அறிவு

நன்றி : ஆங்கில இந்து, டிசம்பர் 30, 2020

அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

7

The Nation wants to Know” – டைம்ஸ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் நடுத்தரவர்க்கத்தின் உச்சிமண்டை முடியைச் சிலிர்க்கச் செய்த அர்னாப் கோஸ்வாமியின் இந்தப் பேரிரைச்சலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

ரோஜா’ திரைப்படத்தில் பற்றி எரியும் தேசியக் கொடியை, அரவிந்த் சாமி உருண்டு சென்று அணைத்து பெரிய திரையில் ஏற்படுத்திய ‘தேசபக்த’ உணர்ச்சியை, ஐந்தே வார்த்தைகளால் சின்னத் திரையில் ஏற்படுத்தியவர் அர்னாப் கோஸ்வாமி. அந்த அர்னாப் கோஸ்வாமியின் ‘தேசபக்தி’ தற்போது உலகுக்கே தெரியவந்து சந்தி சிரிக்கிறது.

அர்னாப் கோஸ்வாமி நடத்தி வரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பார்வையாளர் கணக்கீட்டுப் புள்ளியை அதிகரிக்க “ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் கவுன்சில்”ன் (BARC) முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பார்த்தோ தாஸ்குப்தாவைக் கைது செய்தது மும்பை போலீசு. அந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கையில் பார்த்தோ தாஸ்குப்தாவின் வாட்சப் உரையாடல்களையும் ஆவணங்களாக சேர்த்துள்ளது.

அந்த வாட்சப் உரையாடல்கள் வீதிக்கு வந்ததன் விளைவாக அர்னாப் கோஷ்வாமியின் தேசபக்த முகமூடி கிழிந்துள்ளதோடு மட்டுமல்லாமல், பாசிஸ்ட்டுகளின் ஆட்சி எந்த அளவிற்கு தமது பாசிச நடவடிக்கைகளுக்கு ஊடகங்களோடு இயைந்து செயல்படுகின்றன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

♦ அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்டு பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அப்போதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கும், சந்தேகம் கேட்டவர்களுக்கும் தேச விரோத முத்திரை குத்தி, நமக்கெல்லாம் காதில் இரத்தம் வரும் அளவிற்கு தேசபக்த வகுப்பெடுத்தவர் நமது அர்னாப் தான்.

இந்தத் தாக்குதல் நடந்து சரியாக ஒரு மணிநேரத்தில் ஒரு வாட்சப் செய்தியை பார்த்தோ தாஸ் குப்தாவிற்கு அனுப்புகிறார் அர்னாப் கோஸ்வாமி. “காஷ்மீரில் இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய தாக்குதல் நடந்து 20 நிமிடத்தில், சம்பவ இடத்திற்கு சென்ற ஒரே சேனல்” என்று குறிப்பிடுகிறார்.

அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் அனுப்பும் மற்றொரு வாட்சப் செய்தியில், “இந்தத் தாக்குதல் மூலம் நாம் தாறுமாறாக ஜெயித்திருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங் ஏறுவதற்காக, 40 இராணுவ வீரர்களை பலி கொண்ட ஒரு தாக்குதல் பயன்பட்டிருக்கிறது என்று யாரேனும் ஒரு மனிதன் மகிழ்ச்சியடைய முடியுமா? சம்பவ இடத்தில் இருந்து தமது சேனல் தான் முதலில் செய்தி தந்ததையும், இந்தத் தாக்குதல் தமக்கு தாறுமாறான வெற்றி என்றும் ஒரு மனிதனால் கூற முடியுமா? அர்னாப் போன்ற “தேச பக்தர்களால்” முடியும்.

அதைவிட, தாக்குதல் நடந்து 20 நிமிடத்தில் அங்கு அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைக்காட்சி சென்றிருக்கிறது என்பதே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 20நிமிடத்தில் ஒளிபரப்புச் சாதனங்களை தயார் செய்வதே கடினம் தான். ஆனால் நிகழ்வு நடந்த இடத்திற்கு அந்த நேரத்திற்குள் ரிபப்ளிக் டிவி சென்றிருக்கிறது எனில், தாக்குதல் நடத்தப்பட இருப்பது அர்னாபிற்கு முன்கூட்டியே தெரியுமா ? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக எனக் கூறி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இரவோடு இரவாகத் தாக்கி அழித்ததாகவும், அதில் பல பாகிஸ்தான் தீவிரவாதிகள் இறந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கை பயங்கர ரகசியமாக வைக்கப்பட்டு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது மோடி அரசு.

அப்படி ரகசியமாக நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் பதிலடி தாக்குதல் குறித்து அர்னாப் கோஷ்வாமி மூன்று நாட்களுக்கு முன்பே பார்த்தோ தாஸ் குப்தாவிடம் தெரிவித்திருப்பது இந்த வாட்சப் உரையாடல்களில் அம்பலமாகியிருக்கிறது.

இது குறித்து, விரைவில் பெரிய சம்பவம் ஒன்று நடக்கவிருப்பதாக பார்த்தோ தாஸ்குப்தாவிடம் அர்னாப் தெரிவிக்கிறார். அதற்கு தாஸ்குப்தா, “தாவூத்தா” என்று கேட்கிறார். அதற்கு அர்னாப் பதிலளிக்கையில், “ இல்லை சார், பாகிஸ்தான். இந்த முறை பெரிய சம்பவம் நடத்தப்படும். அதே நேரம் காஷ்மீர் மீதும் பெரிய சம்பவம் நிகழ்த்தப்படும். மக்கள் மகிழும் வகையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.” என்கிறார்.

பாலகோட் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு தாஸ் குப்தா, இதுதான் நீங்கள் கூறியதா என்று கேட்கிறார். அதற்கு அர்னாப் கோஸ்வாமி இன்னும் நிறைய வரவிருக்கிறது என்று கூறுகிறார். இன்னும் நிறைய வரவிருப்பதகாத அர்னாப் கூறுவதும் காஷ்மீர் மீதான பெரிய சம்பவம் என்பதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து பறிப்பு என்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

அரசாங்கத்தால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஒரு தாக்குதல் – இரகசிய இராணுவ நடவடிக்கை மூன்று நாட்களுக்கு முன்பே ஒரு ஊடக நிறுவனத்திற்கு தெரிந்திருக்கிறது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலும், பாலக்கோட் பதில் தாக்குதலும்தான் மோடி மற்றும் சங்கப் பரிவாரத்தின் தேர்தல் பிரச்சார ஆயுதங்களாக இருந்தன. இத்தாக்குதல்கள் தொடர்பான எதிர்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு இன்று வரை மோடி அரசு முறையான பதிலளிக்கவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் அர்னாப் பார்த்தோ தாஸ் குப்தாவின் உரையாடல்கள் அவற்றுக்குப் பதிலளிக்கின்றன. இத்தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாடகமாக இருப்பதற்கான சாத்தியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அர்னாப் கோஷ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி தாக்குதல் நடந்த 20 நிமிடத்தில் ‘ஸ்பாட்டுக்கு’ சென்றதன் ரகசியமும், 3 நாட்களுக்கு முன்னரே பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்குத் தெரியவந்ததன் ரகசியமும், ‘முறையாக’ விசாரிக்கப்பட்டால், 40 இராணுவ வீரர்களின் உயிர்ப்பலிக்குக் காரணமான கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க முடியும்.

ஆனால் யார் விசாரிப்பது ? இந்த வாட்சப் உரையாடல்களின் மூலம் தேசத்தின் பாதுகாப்பு கேலிக் கூத்தானது அம்பலமானாலும் உச்சநீதிமன்றத்தின் கண்களில் மட்டும் அது படவே இல்லை போலும். தொட்டதற்கெல்லாம் தானாக முன்வந்து (Suo Motto) வழக்குப் பதிவு செய்யும் உச்சநீதிமன்றம் போலீசின் புனையப்பட்ட ஆதாரமற்ற கட்டுக்கதைகளுக்காக பல பத்து சமூக செயற்பாட்டாளர்களுக்குப் பிணை மறுக்கும் அதே உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை அப்படியே கடந்து சென்றிருக்கிறது.

படிக்க :
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

♦ அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !

காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம் குறித்து அமித்ஷா அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாக பார்த்தோ தாஸ் குப்தாவும், அர்னாப் கோஸ்வாமியும் வாட்சப்பில் அது குறித்து பேசுகின்றனர். “அந்தச் செய்தியும் நம்முடையதுதான்” என்று குதூகலிக்கிறார் அர்னாப் கோஸ்வாமி.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்று காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகளுக்குக் கூடத் தெரியாமல் ஒரு ஊடகத் தரகனுக்குத் தெரிந்திருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.

வெளியான இந்த வாட்சப் உரையாடல்களில், அர்னாப் கோஸ்வாமி டி.ஆர்.பி ரேட்டிங்கில் தனது சேனலை மேலே கொண்டுவர பார்த்தோ தாஸ் குப்தாவின் உதவியைக் கேட்பதும், BARC-ல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் பதவிக்கு அர்னாப்பிடம் பார்த்தோ தாஸ்குப்தா அடிபோடுவதும் என பரஸ்பர ‘உதவிகள்’ செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அதிகாரவர்க்கத்தினருக்கு இடையிலான தரகர்களாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செயல்படுவது ஏற்கெனவே அம்பலமான ஒன்றுதான். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கிய நீரா ராடியா டேப், ஊடகங்கள் குறித்த புனித பிம்பத்தை முதலில் உடைத்தது. அன்று, தரகு வேலை பார்ப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதுதான் ஊடக தர்மம் என்று அதற்கு புதிய இலக்கணம் எழுதினார் பர்கா தத். இன்று அதற்கான பகிரங்கமான ஆதாரமாக வெளிவந்திருக்கிறது அர்னாபின் இந்த வாட்சப் உரையாடல்கள்.

This slideshow requires JavaScript.

பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் பதவிக்கு தன்னை நியமிக்கப் பரிந்துரைக்குமாறு பார்த்தோ தாஸ் குப்தா அர்னாப்பிடம் கேட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னர்தான், அர்னாப் கோஷ்வாமி AS –ஐ சந்திக்கப் போவதாக அவரிடம் வாட்சப்பில் கூறியிருக்கிறார். பிரதம மந்திரி அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தவல்ல நபர்தான் அந்த AS என்பதை அனுமானிக்க முடிகிறது. இவர்களது உரையாடலில் பல இடங்களில் AS வந்து செல்கிறார்.

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜத் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மற்றொரு வாட்சப் உரையாடலில், “ ‘மோட்டா பாய்’ன் ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனில் பாஜகவின் மோட்டா பாய் (பெரியண்ணன்) யார் ?

பாஜகவில் யார் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்று பாஜககாரர்கள் யாரைக் கேட்டாலும் அமித்ஷா என்று கூறிவிடுவார்கள். எனில், இந்த AS மற்றும் மோட்டா பாய் போன்ற குறியீடுகள் ஏன் Amit Shah-வைக் குறிப்பனவாக எடுத்துக்கொள்ள முடியாது ?

அரசாங்கத்தின் இலவச டிடிஎச் சேவையில் தமது சேனலைச் சேர்க்க, செலுத்த வேண்டிய ரு.52 கோடியை செலுத்தாமல் ரிபப்ளிக் டீவி முறைகேடு செய்திருப்பதாக, கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 7-ம் தேதி தூர்தர்ஷன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்தக் கடிதம் குறித்து பார்த்தோ தாஸ் குப்தா வாட்சப்பில் அர்னாப் கோஷ்வாமியிடம், “ரிபப்ளிக் தொலைக்காட்சி குறித்து சில புகார்கள் அமைச்சரவைக்கு வந்துள்ளன. அவை எங்களுக்கு அனுப்பப்படக் கூடும் என ஒரு இணைச் செயலர் கூறினார். ஆனால் அது எப்போதும் வரப் போவதில்லை என்று நினைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

அதற்கு அர்னாப், “அந்த இலவச டிஷ் டிவி விவகாரம் தானே, ரத்தோர் என்னிடம் அதுகுறித்துக் கூறினார். மேலும் அதனை அவர் புறந் தள்ளிவிட்டார்.” என்று கூறுகிறார். இங்கு குறிப்பிடப்படும் ரத்தோர், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோராகத் தான் இருக்க முடியும். ஒரு துறைக்கு வரும் புகாரைப் புறந்தள்ளும் அதிகாரம் அந்தத் துறையின் அமைச்சருக்குத்தானே இருக்க முடியும்?

ஒரு தொலைகாட்சி குறித்து வரும் புகாரை அந்த தொலைக்காட்சிக்குத் தெரிவிப்பது அமைச்சரகத்தின் ஊழியர்களோ, அரசுத்துறை அதிகாரிகளோ அல்ல, ஒரு அமைச்சரே தெரிவிக்கிறார். அதோடு அவரே அந்தப் புகாரையும் புறந்தள்ளுகிறார்.

இதை அர்னாப் என்ற தனிநபரோ அல்லது ரிபப்ளிக் டிவி என்ற தனி ஒரு நிறுவனமோ சம்பந்தப்பட்ட பிரச்சினையாக சுருக்கிப் பார்த்துவிட முடியாது.

தற்போது வெளியாகியிருக்கும் வாட்சப் உரையாடல்கள், அர்னாப் மோடி அரசுக்கு இடையிலான உறவை மட்டும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால் ஜீ நியூஸ், .பி.பி நியூஸ் என இன்னும் அம்பலப்படாத மோடியின் அடிவருடி ஊடகங்கள் எத்தனையோ ? நமக்குத் தெரியாது.

மோடி உள்ளிட்ட பாசிஸ்டுகள் அனைவரும் மக்கள் மீதான தங்களது தாக்குதல்களை வெறுமனே போலீசு மற்றும் இராணுவத்தின் துணையோடு மட்டும் அமல்படுத்துவதில்லை. மக்களின் ஒரு பிரிவினரின் அங்கீகாரத்தோடு தான் அமல்படுத்துகின்றனர். இந்த விசயத்தில் மக்களின் மத்தியில் அரசுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்க ஊடகங்கள் என்றுமே பாசிஸ்ட்டுகளுக்கு உதவி வந்துள்ளன. ஹிட்லர் முதல் மோடி வரை நமக்கு எண்ணிலடங்காத உதாரணங்கள் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பாசிச மோடி அரசின் திடீர் தாக்குதல்களான பணமதிப்பழிப்பு, எல்லை பயங்கரவாதப் பூச்சாண்டிகள், காஷ்மீர் தனிச்சிறப்பு அந்தஸ்த்து நீக்கம், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சி..., புலம்பெயர் தொழிலாளர்களை நாடோடிகளாக்கியது, வேளாண் மசோதா என அனைத்திலும் பெரும்பாலான ஊடகங்கள் மோடி அரசுடன் இணைந்து ஒத்து ஊதியிருக்கின்றன. மக்களைப் பிரிப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் மேற்கூறிய தாக்குதல்கள் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பின்னர், மோடி ஆதரவு ஊடகங்கள் அதற்கு முட்டுக் கொடுப்பதாகவே வெளிப்புறத்தில் நமக்கு ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால், தற்போது அம்பலமாகியிருக்கும் அர்னாப் வாட்சப் உரையாடல்கள் நமக்கு வேறு ஒரு கோணத்தை சுட்டிக் காட்டியிருக்கின்றன.

அதாவது, மக்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படும் முன்னரே மோடியின் பாசிச அரசு ‘உரிய’ வழிமுறைகளில் ஊடகங்களுக்கு அவர்களுக்கான பாத்திரத்தை தெளிவாக விளக்கியிருக்கிறது என்பதையே இந்த உரையாடல்கள் காட்டுகின்றன.

மக்களிடம் பாசிஸ்டுகளுக்கான ஆதரவைத் தக்க வைப்பதற்கு ஏற்ற வகையில், பாசிஸ்ட்டுகள் முன்னெடுக்கும், மத வெறி, தேசிய வெறி உள்ளிட்ட ஆயுதங்களை கணிசமான கால இடைவெளியில் மக்கள் மனதில் தூவி வளர்க்கும் வேலையை திட்டமிட்ட வகையில் மோடி ஆதரவு ஊடகங்கள் செய்து வந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட இழிதொழிலைச் செய்வதற்கு பல மோடி ஆதரவு ஊடகங்களும் தயாராக இருப்பதைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோப்ராபோஸ்ட் இணையதளம் வெளிக் கொணர்ந்த மறைபுலனாய்வு நடவடிக்கை அம்பலப்படுத்தியது.

என்.., போலீசு, சி.பி.., அமலாக்கத்துறை, நீதித்துறை என அனைத்தும் பாசிச ஆட்சியாளர்களுக்குத் துணை நிற்பதை பல்வேறு தருணங்களில் கண்கூடாகப் பார்த்துவிட்டோம்.

ஊடகங்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலானவை மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான மனநிலையில் மக்களை இருத்திவைக்கச் செய்வதற்கும், மோடி அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் கட்டுக்கதைகளைக் கட்டுவதற்கும், முன் தயாரிப்போடு செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதையே தற்போதைய வாட்சப் உரையாடல் காட்டுகிறது.

தற்போது நம் முன் அம்பலமாகி நிற்பது அர்னாப் கோஸ்வாமி மட்டுமல்ல – பாசிசம் நீடித்து நிலைப்பதற்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கும் ஊடகங்களின் பாத்திரமும் தான் !!


சரண்
நன்றி : The Wire, Newslaundry

வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு
பத்திரிகை செய்தி
டெல்லியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஜனவரி 18-ம் நாளை பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் இன்று (18.01.2021) போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை 11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

This slideshow requires JavaScript.

திட்டமிட்டபடி காலை 11.30 மணிக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த  சுமார் 100 பெண்கள் சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஒன்றுகூட முற்படும்போதே, ஆண் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை நெருங்கவிடாமல், விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி பெண்கள் முன்னேறினர்.
பெண்களை தடுத்து நிறுத்திய ஆண் காவலர்களுக்கு எதிராகவும் பெண்கள் முழக்கமிட்டவுடன், பெண் காவலர்கள் பாய்ந்து வந்து கயிறுகளை கொண்டு வளைத்துப் பிடித்து கைது செய்ய முற்பட்டனர். ஆனாலும் பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவலர்கள் பெண்களை கைது செய்து வேளச்சேரியில் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஆங்காங்கே போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்களை  போராட்டத்திற்குள் வரவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டது. தோழர்கள் போலீஸ் அராஜகத்தைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

This slideshow requires JavaScript.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடும் விவசாயிகளுக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவிக்கும் !
தகவல்
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு.

பிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை

போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் பதிவிடுவதையும் தடை செய்யும் வகையில்   பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்துப் புதிய போராட்டங்கள் பிரான்சில் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் முழுவதும் பல்வேறு இடங்களில் பத்தாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள், கோவிட்-19-லிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து கொண்டு, பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக பாரீசில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். (படம் : கிரிஸ்டோபர் எனா / AP Photo ]

கண்காணிப்பதற்கு நடைபாதை கண்காணிப்புக் கேமரா மற்றும் ட்ரோன் ஆகியவற்றைக் கண்காணிப்புக் கருவிகளாகப் பயன்படுத்துவதையும் தடை செய்யவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை (16-01-2021) அன்று பல்லாயிரம் பேர் பாரீஸ் நகரிலும், பிரான்சில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நடத்திய இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் செயற்பாட்டாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே வேறுபட்டது. பிரான்ஸ் முழுவதும் சுமார் 2,00,000 பேர் பேரணியில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், போலீசோ வெறும் 34,000 பேர்தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டது.

“எங்கேயும் போலீசு, நீதி எங்குமில்லை” மற்றும் “அவசரநிலை, போலீசு அரசு” என்பது போன்ற முழக்கங்களைக் கொண்ட பேனர்களைக் கையில் ஏந்திக் கொண்டு பனிப் பொழிவுக்கு மத்தியிலும் பாரீஸ் நகரில் பேரணிக்கு வந்திருந்தனர்.

பேரணியில் பங்கெடுத்த லில்லெ நகரின் வடப்பகுதியைச் சேர்ந்த ஃப்ரான்கோய்ஸ் என்பவர், “இது ஒருவிதமான சர்வாதிகாரம், இந்தச் சட்டத்தைக் கொண்டு அவர்கள் எவ்வளவுதூரம் செல்வார்கள் என்று ஒருவர் கேட்கிறார். மனிதனின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், நான் பிரெஞ்சுக்காரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

நாடு முழுவதும் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களில் 75 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதில் பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டார்மனின் தெரிவித்துள்ளார். போலீசு மற்றும் துணை இராணுவப்படையைச் சேர்ந்தவர்கள் 12 பேர் மோதல்களில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரிட்டனி நகரில் சுமார் 2400 பேர் பங்கேற்ற சட்டவிரோதமான புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போதான போலீசு நடவடிக்கைகள் போன்ற போலீசின் “பொறுத்தமற்ற” எதிர்வினைச் சம்பவங்கள் போராட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது.

மேலும் கடந்த நவம்பர் 21, 2020 அன்று நிராயுதபாணியான கருப்பின இசையமைப்பாளரை அவரது பாரிஸ் ஸ்டூடியோவிலேயே வைத்து வெள்ளை போலீசுக்காரர் தாக்கிய வீடியோ வெளியானதும், பிரான்சின் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான கோபம் அதிகரித்ததற்கான காரணமாகும்.  இந்தச் சட்டம் பலராலும் கண்டிக்கப்பட்டு, பலரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் வலதுசாரியாக சரிவதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் டி லா ரிபப்ளிக் (De La Republique) எனும் இடத்தில் இருந்த அகதிகள் முகாமை போலீசு வன்முறையாகக் கலைத்தது உள்ளிட்ட பல்வேறு கேமராவில் பதிவான சம்பவங்கள் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளன.

பாரீஸில் கடந்த நவம்பர் 21, 2020 அன்று இசை தயாரிப்பாளர் மிக்கேல் செக்லர் அவரது ஸ்டூடியோவின் வாயிலில் போலீசால் தாக்கப்படுகிறார். [ படம் : மிக்கேல் செக்லர் / GS Group / AFP]
முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கு அருகே நடந்து செல்லும் போலீசு அதிகாரிகள் [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பங்கேற்றவர்கள் குறித்த கணக்கீடு அதிகாரவர்க்கத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெருமளவில் வேறுபட்டது. [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதா, போலீசின் காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை மக்கள் ஆவணப்படுத்துவதை தடை செய்யும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பாரீஸ் நகரில் போராட்டக்காரர்கள் பேரணி செல்வதை போலீசு அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். போராட்டக்காரர்கள், அதிகமான கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]
“புத்தாண்டை வரவேற்க நடனமாடியதற்காக சிறையில் இருக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை பிடித்திருக்கிறார் ஒரு போராட்டக்காரர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
நாடு முழுவதும் 75 பேரை கைது செய்த்து போலீசு. பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டனர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் மற்றும் பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவால் “சுதந்திரத்துக்கான பேரணிகள் ” அறைகூவல் விடுக்கப்பட்டன. [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : Aljazeera