Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 235

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 08

முதல் பாகம்

பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது

ந்த முறையில் பொதுவுடைமைவாதச் செல்வாக்கின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட புதிய தலைமையானது, செயலூக்கமுள்ள தொழிலாளர் குழுக்களை ஒன்றுகுவிப்பதன் மூலமாக புதிய சக்தியாக்கிக் கொள்கிறது. சோசலிஸ்ட் கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமையை உந்தி முன்தள்ளுவதற்கு அல்லது அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கு இந்தச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

நமது கட்சி மிகச் சிறந்த நிறுவனங்களைப் பெற்றும் அதன் கோரிக்கைகளுக்காக மிகப்பெரும் ஆதரவைப் பெற்றும் உள்ள தொழிற்பகுதிகளில், உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்துறை கவுன்சில்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட நிர்பந்தத்தைக் கொடுப்பதன் மூலம் அப்பகுதிகளில் அங்குமிங்குமாக நடைபெறுகின்ற பொருளாதாரப் போராட்டங்களையும் இதுபோலவே பிற குழுக்களின் வளர்ந்துவரும் போராட்ட இயக்கத்தையும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டமாக வெற்றிகரமாக இணைக்க வேண்டும்.

இதன் பின்னர் இந்த இயக்கமானது, குறிப்பிட்ட தொழிற்கிளை நலன்களுக்கு அப்பாற்பட்டு ஆரம்ப நிலை கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைத்து இவற்றை நிறைவேற்றுவதற்கு போராட முன்வர வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள எல்லா நிறுவனங்களின் ஒன்றுபட்ட சக்திகளையும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய இயக்கத்தில் போராட்டத்திற்குத் தயாராக உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரின் தலைவனாக பொதுவுடைமைக் கட்சி தன்னை நிரூபித்துக் கொள்ளும். ஆனால், இத்தகைய ஒன்றுபட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தை எதிர்க்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவமும் “சோசலிஸ்ட்” கட்சியும் அவற்றின் சொந்த நிறத்தைக் காட்டி அரசியல் ரீதியில் மட்டுமின்றி, நடைமுறை நிறுவன ரீதியிலான கண்ணோட்டத்திலும் தம்மை அம்பலப்படுத்திக் கொள்ளும்.

ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை முன்னெடுத்துச் செல்வது எப்படி?

34. புதிய இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்ற கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது மக்கள்திரளினரைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பொதுவுடைமைக் கட்சி முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடுவதைத் தவிர்த்து சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நேரடியான வேண்டுகோள் விடுப்பது மிகச் சிறப்பானதாக அமையும். தீர்மானகரமான போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட அவர்களது அதிகாரத்துவத் தலைவர்கள் எத்தணிப்பதையும் மீறி எவ்வாறு வறுமையும் ஒடுக்குமுறையும் அவர்களைத் தமது எஜமானர்களுக்கு எதிராக வேறுவழியின்றிப் போராடும்படி தள்ளி வருகின்றன என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்சியின் பத்திரிகைகள் குறிப்பாக தினசரி ஏடுகள், நாள்தோறும் வலியுறுத்த வேண்டியது என்னவெனில், அப்போதைய நெருக்கடியான நிலையில் பொதுவுடைமையாளர்கள் நிராதரவான தொழிலாளர்களின் எதிர்வரும் மற்றும் நடைமுறைப் போராட்டத்திற்குத் தலைமையேற்கத் தயாராய் இருக்கிறார்கள், ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்களின் போரிடும் நிறுவனம் உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறது – என்பதையே. இந்தப் போராட்டங்கள் இன்றி – பழைய நிறுவனங்கள் இப்போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் அவற்றுக்குத் தடையேற்படுத்துவதற்கும் எவ்வளவுதான் முயன்ற போதிலும் – தொழிலாளர்களின் வளர்ந்துவரும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை என்பதை நாம் நாள்தோறும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பொதுவுடைமைவாத பிராக்சன்கள் பொதுவுடைமையாளர்கள் சுயதியாகத்துக்குத் தயாராய் இருப்பதையும் இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதையும் சக தொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எப்படியாயினும், அப்போதைய நிலைமையில் எழுகின்ற எல்லா போராட்டங்களையும், இயக்கங்களையும் ஒன்றுபடுத்துவதும், உறுதிப்படுத்துவதும் பிரதானக் கடமையாகும். போராட்டத்தில் ஈர்க்கப்பட்டுள்ள தொழிற்துறை மற்றும் கைவினைத் தொழிலில் உள்ள கருக்குழுக்கள், பிராக்சன்கள் அனைத்தும் தமக்குள் நெருக்கமான இணைப்புகள் வைத்திருப்பது மட்டுமின்றி, வெடித்து எழக்கூடிய எல்லா இயக்கங்களுக்கும் தலைமை அளிக்கவும் வேண்டும். போராட்டத்தை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், அதைப் பரவலாக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கரம் கோர்த்து பணியாற்றக் கூடிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்புள்ள ஊழியர்களை உடனுக்குடன் அனுப்பி மாவட்டக் கமிட்டிகளும் மத்தியக் கமிட்டிகளும் இயக்கத்துக்குத் தலைமை அளிக்க வேண்டும்.

அவசியமானால், அரசியல் வழியில் பிரச்சினைக்குப் பொதுத் தீர்வு காணும் கருத்தை வளர்ப்பதற்காக அனைத்து வகைப்பட்ட போராட்டங்களின் பொதுத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதும், வலியுறுத்துவதும் ஒவ்வொரு இடத்திலுமுள்ள நிறுவனத்தின் பிரதான கடமையாகும். போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து பொதுத்தன்மை பெறுகையில் போராட்டத் தலைமைகளை ஒரே மாதிரியான அமைப்புகளாக உருவாக்குவது அவசியமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவ வேலை நிறுத்தத் தலைவர்கள் தோல்வியுறும் இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்கள் உடனடியாக முன்வந்து நடவடிக்கைக்கான தீர்மானகரமான நிறுவனத்தை – சாதாரண ஆரம்ப நிறுவனத்தை – உத்திரவாதம் செய்ய வேண்டும். பிராக்சன்கள் மற்றும் தொழில் கவுன்சில்களின் கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட தொழில்களின் பொதுக் கூட்டங்களிலும் விடாப்பிடியாக வலியுறுத்துவதன் மூலம், செயல்திறனுள்ள போர்க்குணமிக்க தலைமையின் கீழ் இதனைச் சாதிக்க முடியும்.

இயக்கம் பரவலாகி முதலாளிகளின் நிறுவனங்களின் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத் தலையீட்டால் அரசியல் தன்மையைப் பெறும்போது, தொழிலாளர்கள் கவுன்சில்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பப் பிரச்சாரம் மற்றும் நிறுவன வேலையைத் தொடங்க வேண்டும். அத்தருணத்தில் இவை சாத்தியமாகவும் அவசியமானதாகவும் ஆகலாம்.

இங்குதான் கட்சி உறுப்புகள் அனைத்தும் தொழிலாளர் வர்க்கம் தனது சொந்தப் போராட்ட ஆயுதங்களை வார்த்தெடுப்பதன் மூலமே தனது சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சாரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கோ அல்லது பழைய சோசலிஸ்ட் கட்சிகளுக்கோ இம்மியளவும் கருணை காட்டக் கூடாது.

35. ஏற்கெனவே பலமாக வளர்ந்துள்ள, குறிப்பாக மக்கள்திரளுடைய பெரிய பொதுவுடைமைக் கட்சிகள் மக்கள்திரள் நடவடிக்கைக்குத் தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும். பரந்துபட்ட மக்கள்திரளினருடன் நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான அரசியல் ஆர்ப்பாட்டங்கள், பொருளாதார இயக்கங்கள் மற்றும் இதுபோன்ற உள்ளூர் நடவடிக்கைகள் அனைத்தின் அனுபவங்களை எப்போதும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். தலைமை நிர்வாகிகள், பொறுப்புள்ள கட்சி ஊழியர்கள், நம்பிக்கைக்குரிய பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் எல்லா பெரிய இயக்கங்களிலும் பெற்ற அனுபவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். இம்முறையில் வலைப்பின்னல் போன்ற தொடர்பு தொடர்ச்சியாக அதிகரிக்கும், பலப்படும், நம்பிக்கைக்குரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் மேலும் போரிடும் உணர்வுடன் எழுச்சியுறுவர். தலைமை நிர்வாகிகள் மற்றும் பொறுப்புளள கட்சி ஊழியர்களுக்கும் பணிமனைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பரஸ்பரம் நம்பிக்கையான தொடர்புகள் (உறவுகள்) இருப்பதானது காலம் கனிவதற்கு முந்திய மக்கள்திரள் அரசியல் நடவடிக்கை இராது என்பதற்கும் சூழ்நிலைகளுக்கும் கட்சியின் உண்மையான பலத்துக்கும் ஏற்ற நடவடிக்கைகளே இருக்கும் என்பதற்கும் நிச்சயமான உத்திரவாதமாகும்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

கட்சி நிறுவனங்களுக்கும் பெரும் மக்கள்திரள் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பாட்டாளி வர்க்கத்தினருக்குமிடையே நெருக்கமான இணைப்புகளைக் கட்டியமைக்காமல் உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு இயக்கத்தை வளர்க்க முடியாது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த சந்தேகத்திற்கிடமற்ற புரட்சிக் கொந்தளிப்பு – தொழிற்சாலைகளைக் கைப்பற்றுவதில் இது தெளிவாக வெளிப்பட்டது – அகாலமாக வீழ்ச்சியுற்றது. இதற்குப் பெருமளவு காரணமாக இருந்தது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகம் – நம்பிக்கை வைக்கத் தகுதி இல்லாத அரசியல் தலைவர்கள் – ஆகியவையாகும். கட்சிக்கும் தொழிலுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் அறவே இல்லாதது, அதாவது, கட்சி நலனில் அக்கறையுள்ள அரசியல் அறிவுமிக்க தொழில் நிலையப் பிரதிநிதிகள் இல்லாதது இதற்கு ஓரளவு காரணமாகும். இவ்வாண்டு (1921) ஆங்கிலேய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் சந்தேகத்துக்கு இடமின்றி இதே குறைபாடு அளவுக்கு அளவுக்கதிகமாக இருந்ததால் தோல்விக்கு உள்ளாயிற்று.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன் | பாகம் – 2

முதல் பாகத்துக்கு

மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே 2015ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் சித்து விளையாட்டைத் தொடங்கினார்கள். அங்கே ஆளுநராக வந்த ஜெ.பி. ராஜ்கோல்வா சட்டமன்ற கூட்டத்  தொடர் நடக்கும் தேதியை அவரே முன்கூட்டியே அறிவித்து சட்டசபையைக் கூட்டச் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை மெஜாரிட்டி இல்லை என்று டிஸ்மிஸ் செய்தார். காங்கிரசிலிருந்து அதிருப்தியாளர்களை இழுத்து ஒரு பொம்மை ஆட்சியை ஆளுநர் உருவாக்கினார்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவை நீக்கம் செய்தது. “ஒரு ஆளுநர் தனது சொந்த விருப்பத்துக்காக சட்டமன்றத்தைக் கூட்டுவது, ஆளுநரின் வேலையல்ல. சட்டமன்ற செயல்பாடுகளில் குறுக்கிடுவதாகும்” என்று கூறியது உச்சநீதிமன்ற அமர்வு. தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த ஜனநாயக விரோத மீறல்களை அம்மாநில ஆளுநர் அரங்கேற்றியபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு தவறைத் திருத்தியது. ஹரிஷ்ராவத் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 69 காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மாநில ஆளுநர் கே.கே. பவுல் – ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்தார். சட்டமன்றத்துக்குள் ஆட்சியின் மெஜாரிட்டி எண்ணிக்கையை நிரூபிக்க வாய்ப்பு தராமல் ஆட்சியை கலைத்தது தவறு என்றது உச்சநீதிமன்றம்.

2017ஆம் ஆண்டு கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆளுநர் பா.ஜ.க.வின் ஏஜெண்டுகளாக மாறி காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை நிறுவிட தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினர். 2017இல் பீகாரிலும் இதுதான் நடந்தது. ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான கேசரிநாத் திரிபாதி, தனிப்பெரும்பான்மை கொண்டிருந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்த நித்திஷ்குமார், லல்லு பிரசாத்தின் இராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார். திடீரென்று லல்லு கட்சியின் உறவைத் துண்டித்துக் கொண்டு பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வந்தபோது ஆளுநர் அரசியல் கட்சிக்காரர் போலவே செயல்பட்டார்.

ஆளுநர்கள் தங்களின் ‘கைப்பாவையாக’ செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக மோடி பிரதமரானவுடன் நான்கு ஆளுநர்கள் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். எம்.கே. நாராயணன் (மே. வங்கம்), அஷ்வனிகுமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி.). சேகர் தத்தா (சத்திஸ்கர்) ஆகியோர் அந்த ஆளுநர்கள். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவார் – அங்கிருந்து மிசோராம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டு, பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரேன்பேடி, டெல்லி மாநிலத்துக்கான தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தவர். இப்போது புதுச்சேரியின் ‘நியமன முதல்வராக’ செயல்பட்டு வருகிறார். ஆட்சியின் அன்றாடப் பணிகளில் குறுக்கிட்டு, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போடுவதும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதும் அவரது வாடிக்கையாகிவிட்டது. இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று மாநில முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியும் முதல்வர் கடிதத்தைக் குப்பைக் கூடையில் வீசி விட்டார் மோடி.

கடந்த மே 8, 2018 அன்று புதுவை முதலமைச்சர் அரசு ஆணை ஒன்றை பிறப்பித்தார். ஆளுநர் அல்லது ஆளுநர் அலுவலகம் வழியாக அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரோடு கலந்து பேசி அவர்களின்  ஒப்புதலைப் பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் என்று அந்த ஆணை கூறுகிறது.

இப்போது டில்லி யூனியன்  பிரதேச வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரேன் பேடிக்கு எழுதிய கடிதம் கடுமையாக எச்சரிக்கிறது.

“உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது உங்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு உங்கள் தவறுகளை சரி செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது போன்ற உங்களது செயல்பாடுகள் தொடருமேயானால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டிய நிலை உருவாகும்” என்று கடுமையாக எச்சரிக்கிறது அந்தக் கடிதம். “உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பளித்துள்ளதால்   இந்தத் தீர்ப்பு டெல்லி மாநில ஆட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரின் அதிகாரங்களை வரையறுத்துள்ள தீர்ப்பாகும்” என்று வாதிடுகிறார், புதுவை முதல்வர் நாராயணசாமி.

தமிழக அரசுக்கோ இத்தகைய அரசியல் நிகழ்வுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து எல்லாம் அவர்கள் பார்வைக்குச் சென்றிருக்குமா என்பதுகூட தெரியவில்லை. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமித்ஷா பேசினால்கூட “அப்படி எல்லாம் அவர் பேசியிருக்க மாட்டார், அவர் இந்திப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழி பெயர்த்திருப்பார்கள்” என்று விளக்கம் கூறும் பரிதாப நிலையில்தான் தமிழக அரசு அடிபணிந்து கிடக்கிறது.

படிக்க :
தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !
கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

ஆளுநர்கள் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளாகவே செயல்படுவது ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சிகளே நடந்ததால் முரண்பாடுகளுக்கு வாய்ப்புகள் இல்லை; எனவே பிரச்சினைகள் எழவில்லை; அவ்வளவுதான்.

1970களிலும் 1980களிலும் இந்திராவுக்கு எதிராக செயல்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திராகாந்தி கலைத்தார். மொரார்ஜி தலைமையில் ஜனதா அமைச்சரவை பதவி ஏற்ற 1977ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலங்களை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கலைத்து, அதே தவறைச் செய்தார்கள்.

உலகத்திலேயே மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிபாத் தலைமையில் 1957இல் ஏப்.5ஆம் தேதி அமைந்தது. போதிய மெஜாரிட்டி எண்ணிக்கை இல்லாத நிலையில் அய்ந்து சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அமைச்சரவையை இரண்டே ஆண்டுகளில் 1959, ஜூன் 31இல் அன்றைய நேரு ஆட்சி டிஸ்மிஸ் செய்தது. அந்த அமைச்சரவை கொண்டு வந்த நில சீர்த்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு மதவாதிகளிடையே எழுந்த எதிர்ப்பு இதற்குக் காரணமாகக் காட்டப் பட்டது. இந்தியாவில் ‘356’ ஆவது விதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஜனநாயகப் படுகொலையைத் தொடங்கி வைத்தது நேருதான். அவருக்கு இந்த விபரீத ஆலோ சனையைக் கூறியவர் அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த அவரது மகள் இந்திரா காந்தி.

இந்தியாவில் ஒரே கட்சி ஆட்சி என்ற நிலை மாறி, மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரத் தொடங்கின. அடுத்தக்கட்டமாக கூட்டணி ஆட்சிகளின் ‘யுகம்’ மத்தியிலும் மாநிலங்களிலும் தொடங்கியது. இப்போது ஆளுநர் பதவியும் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் முக்கியத்துவமும் அதிகரித்து விட்டன.

ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையிலேயே கடும் விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களைப் படித்தால், மாநிலங்களைக் கண்காணிக்கக்கூடிய மத்திய அரசின் ஒற்றர்களாக செயல்படுவதற்கே ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்து விடலாம். அரசியல் சட்ட உருவாக்கத்திற்கான நகல் வரைவுக் குழு ஆளுநர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தனது வரைவில் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து நடந்த விவாதத்தில் இந்த நடைமுறை இரண்டு முதலமைச்சர்களை உருவாக்குவதாகிவிடும் என்று கூறி இந்த முடிவு புறந்தள்ளப்பட்டது. கவர்னர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்து சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று பட்டியலிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்பது இரண்டாவது ஆலோசனையாக முன் வைக்கப்பட்டது. இந்த முறையினால் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்தான் ஆளுநராக வர முடியும். பிறகு மாநில அரசும் ஆளுநரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்பதால் இந்த ஆலோசனையும் புறந்தள்ளப்பட்டது.

ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பிரிந்து செல்லும் வாய்ப்புகள் உருவாகிவிடலாம் என்ற அச்சமும் அதைத் தடுப்பதற்கான வலிமையான சட்டப் பிரிவுகளை உருவாக்கிட வேண்டும் என்ற துடிப்புமே அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் தலைவர்களின் உளவியலாக இருந்தது. அந்த உணர்வுகளே அரசியல் சட்ட உருவாக்கத்துக்கு அடிநாதமாக இருந்தன. மாநிலத்து மக்களுக்கு நெருக்கமான ஒருவரை ஆளுநராக வரவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். ஆளுநர் அந்த மாநிலத்துக்கு தொடர் பில்லாதவர்களாக வேறு மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நேரு வலியுறுத்தினார். 1949 மே 31 அன்று நிர்ணய சபையில் நேரு இவ்வாறு கூறினார்.

“ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருந்தால் மாகாணப் பிரிவினை உணர்ச்சிகளையும், குறுகிய மாகாண உணர்வுகளையும் ஊக்கப்படுத்திவிடும்” என்றார்.

மற்றொரு உறுப்பினரான பி.எஸ். தேஷ்முக் வெளிப்படையாகவே கேட்டார்:

“முதல்வரும், ஆளுநரும் எல்லா பிரச்சினையிலும் ஒன்றுபட்டு நின்று, மத்திய அரசை எதிர்ப்பதிலும் அவர்கள் ஒன்றுபட்டு நின்றால், பிறகு என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் ஆணைகளையும் கட்டளைகளையும் மாநில அரசு செயல்படுத்த மறுத்தால் என்ன செய்வது? மத்திய அரசு மாநில அரசு மீது படை எடுத்துச் செல்லுமா?” என்று கேட்டார்.

இறுதியாக ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவராகவே இருப்பார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான திருத்தத்தை இறுதியாகக் கொண்டு வந்தவர் பிரஜேஸ்வர் பிரசாத்.  “மத்திய அரசின் அதிகாரம் அனைத்து மாகாணங்களிலும் நிலை நாட்டப்பட்டாக வேண்டும். இது அவசியமானது” என்பது தீர்மானத்துக்கு அவர் கூறிய காரணம்.

படிக்க :
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

பிரிட்டிஷ் இந்தியாவில் 1935ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ‘மாகாண ஆட்சி’களைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் ‘சுதந்திரத்துக்கு’ப் பிறகும் அறுக்க முடியாத அடிமைச் சங்கிலியாக ஆளுநர் பதவி தொடருகிறது. ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் குறைத்து அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று சட்டம் அவர்களுக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினாலும் ஆளுநர்கள் தங்கள் ‘உசிதம்போல்’ செயல்படக் கூடிய அதிகாரங்களை சட்டம் வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரங்கள் எவை என்ற வரையறைகளும் சட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. இப்போது ‘உசிதம்போல்’ என்பது தான் சார்ந்துள்ள கட்சித் தலைமையின் ‘உசிதம்போல்’ செயல்படுதல் என்ற நிலைக்கு வந்து விட்டது.

ஆளுநர் மாளிகை ஆடம்பரங்களில் வீண் செலவுகளில் கொழுத்துப் போய் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி பண்டிட், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம் பணியாற்றி, பிறகு பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவிக்குக் கிடைக்கிற அதிக ஊதியமும், வசதிகளுமே ஒருவரை அப்பதவிக்குத் தூண்டுகின்றன. ஆளுநர் பதவி பயனற்றது. அரசமைப்புச் சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை அகற்றி விடவேண்டும்” என்று பதவி விலகியதற்குப் பிறகு அவர் துணிந்து கூறினார்.

‘ஆட்டுக்குத் தாடி தேவை இல்லை; அதுபோல் ஆளுநர் பதவியும் நாட்டுக்குத் தேவை இல்லை’ என்பதே தொடக்கக்கால தி.மு.க.வின் கொள்கையாகவும் இருந்தது.

மத்திய மாநில அரசுகளின் உரிமைகள் மறுபரிசீலனைக்குள்ளாக்கப்பட வேண்டிய சூழல் இப்போது உருவாகிவிட்டது. இது குறித்து ஆராய ஏற்கனவே பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டன. ஆந்திராவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலிருந்த முதல்வர் என்.டி.ராமாராவ் வெளிநாடு சிகிச்சைக்குச் சென்ற காலத்தில் அவரது கட்சியிலிருந்து சில துரோகிகளைப் பிடித்து அன்றைய பிரதமர் இந்திரா, ‘தெலுங்கு தேச’க் கட்சி ஆட்சியைக் கவிழ்த்து, ‘பாஸ்கர் ராவ்’ என்ற துரோகியை ஆளுநரைப் பயன்படுத்தி முதல்வராக்கினார். ஆந்திராவே கொந்தளித்தது. மக்கள் எழுச்சிக்கு அடி பணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட இந்திரா காந்தி மீண்டும் என்.டி. ராமராவை முதல்வராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது மக்கள் சக்தி நிகழ்த்திய வரலாற்றுச் சாதனையாகும். மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப சர்க்காரியா ஆணையத்தையும் உடனே இந்திரா நியமித்தார். மாநில உரிமைகளை வலியுறுத்திய அந்த ஆணையத்தின் பரிந்துரை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

மாநிலக் கட்சிகள் மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகின்றன தேசியக் கட்சிகள். ‘இந்தியாவின் தேசிய முரண்பாடுகளில்’ தங்களை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் சிதறிக் கொண்டிருக்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட சூழலில் இருந்த இந்திய தேசியத்தின் அடையாளம், இப்போது மாநிலங்களின் தன்னாட்சி  அடையாளமாக உருத்திரட்சிப் பெற்று வருகிறது. சர்க்காரியா ஆணையம் மட்டுமல்ல; மத்திய மாநில உறவுகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த நிர்வாக சீர்திருத்த ஆணையம் (1966), அரசியல் சட்ட செயல்பாடுகளை மறு ஆய்வுக் குள்ளாக்கும் தேசிய ஆணையம் (2000), புஞ்சி ஆணையம் (2007) என்று பல்வேறு ஆணையங்கள் நியமிக்கப்பட்டு மாநிலங்களின் உரிமைகளுக்கான பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன.

மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்த தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய டாக்டர் பி.வி. இராசமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றது. அதனடிப்படையில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் தமிழ்நாடு சட்டசபையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

“இராஜமன்னார் குழு பரிந்துரைகள் மீது தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத் துரைகளை ஏற்று மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.

1974இல் கூட்டாட்சிக்கும் சுயாட்சிக்கும் குரல் கொடுத்த அதே தமிழக சட்டப் பேரவை இப்போது ஒற்றையாட்சிக்கு வாழ்த்துப் பா பாடிக் கொண்டிருப்பது நகை முரண்!

மாநிலங்களின் தனித்துவங்கள்  அழிக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் ஒற்றை ஆட்சி என்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகுழிக்குள் தமிழினம் புதைக்கப்பட்டும் வருகிறது.

மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களில் இதற்கான தீர்வுகள் நிச்சயமாக இல்லை. அன்னிய இந்திய பார்ப்பனிய எதிர்ப்புக் களங்களை நோக்கி மக்களைத் திரட்டுவதே இதற்கான விடியலை உருவாக்கும்.

(முற்றும்)

விடுதலை இராசேந்திரன்

ஆதாரங்கள் :

Front Line, Economic and Political Weekly, மாநில சுயாட்சி – முரசொலி மாறன், மலர்க மாநில சுயாட்சி – கு.ச. ஆனந்தன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘மக்கள் முன்னணி’

disclaimer

கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

கொரோனா பேரிடரைக் காரணமாகக் காட்டி, மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதிலேயே மும்முரமா இருந்து வருகிறது. இதில், “யானை புகுந்த சோளக்கொள்ளையைப் போல” சிறு குறு தொழில் செய்வோர் தங்களது வாழ்வு நசுக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல நூறுகளையோ, சில ஆயிரங்களையோ முதலீடுகளாய் போட்டு தொழில் செய்யும் நடைபாதை வியாபாரிகளின் நிலையைச் சொல்லவா வேண்டும்.

அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டவர்களின் வாழ்விலிருந்து …

***

ஜோதியப்பன், வயது 70.

நகராட்சி மருத்துவமனை வாசலில் மரத்தடி நிழலில் வீட்டுக்குத் தேவையான சிறு பொருட்களை விற்பவர்.

கொரோனா 60 வயசுக்கும் மேலானவர்களை அதிகம் தாக்கும், வெளியில் நடமாடக் கூடாது என்று அரசு சொல்கிறதே, உங்களுக்குத் தெரியாதா என்றோம். அவர் நம்மை ஏற இறங்கப் பார்த்தார்.

சார் அரசு சொல்றத நான் கேட்டுக்கிறேன், என் வயிறு கேக்குதில்லயே சார். நான் என்ன பண்றது. ரோட்டுல கடைய போடாதேன்னு டெய்லி போலீசு தொறத்துது; வயிறு ரோட்டுக்குப் போடான்னு தொறத்துது. யார் சொல்றத சார் நான் கேக்குறது? என்றார் பரிதாபமாக.

பூட்டு, கீ செயின், ஸ்பேனர், நகவெட்டி, ஊசி, தாயக்கட்டை, கத்திரி இப்படி, நான் விக்கிறதே 50 ரூபா பொருள்தான். இதையும் 10, 20 கம்மியா கொடுன்னு பேரம் பேசுறாங்க. கேக்குறவுங்க மேலே கோபப்பட்டு பிரயோஜனமில்லை. அவங்ககிட்டே பணம் இருந்தாத்தானே கேக்குறத கொடுப்பாங்க.

எனக்கு வீடு வேளச்சேரியில. காலையிலே சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சா, சைதாப்பேட்டை வந்து சேர ஒன்னவர் ஆகும். 10 கிலோமீட்டர். இங்கே வந்து எடத்த பெருக்கி சுத்தம் பண்ணி முடிக்கும்போது, உடம்பு அப்பாடான்னு ஆயிடும். அப்புறம் அம்மா மெஸ்ஸில 6 இட்லி சாப்பிடுவேன். வகையான சாப்பாட்டை நிறுத்தி நாலு மாசமாச்சு. சாயாந்திரம் 7 மணிக்கு கடையை சாத்திட்டு திரும்பவும் சைக்கிளை மிதிப்பேன். இப்படியே போகுது என்னோட வாழ்க்கை.

பொண்டாட்டி மட்டும்தான் கூட இருக்கா. எங்க 2 பேருக்கே இவ்வளவு கஷ்டமுன்னா கொழந்த குட்டிகளோடு இருக்குறவுங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்! நினைப்பதற்கே பயமாயிருக்கு என்றார்.

படிக்க:
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

அங்கப்பன், வயது 50.

மோதிரங்கள் மற்றும் பழைய காசுகளை விற்பவர்.

எந்தக் கேள்வி கேட்டாலும் பேச மறுத்தார். அருகே அமர்ந்தும் நெருக்கமாகப் பேசியும் பார்த்தோம், போ… போ… என்று கையால் சைகை காண்பித்தார்.

இந்த ராசிக்கல் மோதிரக்காரர், மோதிரங்களை கைப்பெட்டியில் வைத்து 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களாக இவருக்கு ஒரு வியாபாரமும் இல்லை. தற்போது மதியம் ஒரு மணி வரையில் ஒன்றுகூட போனியாகவில்லை.

“தினமும் தவறாமல், கடையைப் போடுகிறார். வெறுமனே உட்கார்ந்துவிட்டு வெறுங்கையோடு போகிறார். எங்களோடு கூட அதிகம் பேசுவதில்லை. நாங்கள் சாப்பிடும்போது எங்களிடம் இருப்பதைக் கொடுப்போம். அதைக்கூட சிலநேரம் வாங்க மறுத்து விடுவார்.

இன்னைக்கு காலையில ஒரு டீ வாங்கிக் கொடுத்தோம். இதுவரை அவர் வேறு எதுவும் சாப்பிடவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் ரோட்டில் போவோர் வருவோர் கொடுத்த சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டு வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு யாரும் எதுவும் கொடுப்பதில்லை. வீட்டிலும் யாரும் என்னிடம் பேசுவதில்லை என்று வருத்தப்படுவார்.

கொரோனா வந்தால்கூட ஒரேயடியாகப் போய்ச்சேரலாம், இப்போ எதுவும் இல்லாமலேயே செத்துக்கொண்டிருக்கிறோம் என்று மனம் நொந்து போவார். அந்த நிலைமைதான் சார் எங்களுக்கும்” என்றார்கள் அருகில் இருந்த அனைவரும்.

ஊருக்கெல்லாம் ராசிக்கல் விற்றவர், ஊரிலிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டத்தைக் கேட்டவர், இப்போ அவரோட கஷ்டத்தைக் கேட்க யாருமில்லையே என்று பக்கத்துக் கடைக்காரர்கள் உருகினர்.

கொரோனா நோய்த்தொற்று தோற்றுவித்திருக்கும் சமூக அவலங்களின் ஆழம், நம்மால் மதிப்பிட முடியாத அளவிற்கு போய்விட்டது. மோடி – எடப்பாடி விதித்திருக்கும் ஊரடங்கு மனிதத்தை குழிதோண்டி புதைத்துவிட்டது. ஆதரவுக் கரம் நீட்டவேண்டிய அரசு, வாய்க்கரிசி போடவும் வக்கற்று இருக்கிறது.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும் !

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 07

முதல் பாகம்

ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்கம் போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும்

33. உள்நிறுவன பலமும், சோதிக்கப்பட்ட நிர்வாகிகள் படையும், மக்கள் திரளினரிடையே கணிசமாக எண்ணிக்கையும் உறுதியானவர்களையும் கொண்டுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் விரிவான இயக்கங்களின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது துரோகத்தனமான சோசலிஸ்ட் தலைவர்களுக்குள்ள செல்வாக்கை முழுமையாக வெற்றி கொள்ளவும், பொதுவுடைமைப் பதாகையின் பின்னே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள்திரளினரை அணிதிரட்டவும் விரிவான இயக்கங்கள் வாயிலக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிலைமை தீவிரமாகப் போராடுவதற்கு ஏற்றதா அல்லது அது தற்காலிகமாகத் தேக்கமான காலமா என்பதைப் பொருத்து பல்வேறு வழிகளிலும் இயக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சாதகமான நிலைமையானால், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையில் முனைப்புடன் தம்மை நிறுத்திக் கொண்டு அக்கட்சிகள் செயல்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிறுவன முறைகளைத் தெரிந்தெடுப்பதற்கு கட்சியின் கட்டமைப்பு ஒரு தீர்மானகரமான காரணியாகும்.

எடுத்துக் காட்டாக, “பகிரங்கக் கடிதம்” வெளியிடுவது என்ற முறை ஜெர்மனியில் – மற்ற நாடுகளில் சாத்தியப்படாத இம்முறை – சமுதாய ரீதியில் தீர்மானகரமான பாட்டாளி வர்க்கப் பிரிவுகளை வென்றெடுப்பதற்குப் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. யுத்தத்தின் அழிவு அதிகரித்துக் கொண்டும், வர்க்க மோதல்கள் தீவிரமாகிக் கொண்டும் இருந்த தருணத்தில், துரோகத்தனமான சோசலிஸ்ட் தலைவர்களது முகமூடியைக் கிழிப்பதற்காக ஜெர்மன் பொதுவுடைமைக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் பிற எல்லா மக்கள்திரள் அமைப்புகளை நோக்கி இத்தகு பகிரங்கக் கடிதங்களை வெளியிட்டது. பலமான நிறுவனங்கள் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அவை பொதுவுடைமைக் கட்சியுடன் ஒத்துழைத்து போராட்டங்களை எடுக்கத் தயாரா என்பதை பாட்டாளி வர்க்கத்தின் முன்னிலையில் அவைகளிடமிருந்து கோரும் நோக்கத்திற்காக ஜெர்மன் கட்சி அவ்வாறு செய்தது.

பாட்டாளி வர்க்கம் பராரியாக்கப்படுவதற்கு எதிராகவும் மிகச் சிறு கோரிக்கைகளுக்காகவும், ஏன், துண்டு ரொட்டிக்காகவும் கூட பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து போராட முன்வருமாறு அவைகளை பகிரங்கக் கடிதம் கோரியது.

இது போன்ற இயக்கத்தை பொதுவுடைமைக் கட்சி முன்முயற்சி எடுத்துத் துவக்கும்போது, தொழிலாளர் வர்க்கத்தின் பரந்துபட்ட மக்கள்திரளினரிடையே இத்தகைய நடவடிக்கை சென்றடையும் நோக்கத்திற்காக கட்சியானது முழுமையான நிறுவன ரீதியான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் அதிமுக்கிய கோரிக்கைகளின் திரட்சியான உருவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கட்சியால் முன்வைக்கப்படும் கோரிக்கையை கட்சியின் அனைத்து தொழிற்சாலைக் குழுக்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் அடுத்து வருகின்ற தமது தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கக் கூட்டங்களில் அதுபோலவே பொதுக்கூட்டங்களிலும் – இத்தகைய கூட்டங்களுக்கான தயாரிப்புகளை முழுமையாகச் செய்துகொண்டு – விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பரந்துபட்ட தொழிலாளர்களின் உத்வேகத்தைச் சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட பிரகடனங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை எங்கும் விநியோகிக்க வேண்டும். நமது கருக்குழுக்கள் அல்லது தொழிலாளர் குழுக்கள் நமது கோரிக்கைகளை மக்கள் ஆதரிக்கச் செய்ய முயற்சிக்கும் இடங்களில் மேலும் சிறப்பாக விநியோகிக்க வேண்டும். இத்தகைய இயக்கம் நடைபெறும்போது இந்த இயக்கத்தின் பிரச்சினைகளைப் பற்றி இடையறாத விளக்கங்களை கட்சிப் பத்திரிகைகள் தர வேண்டும். இடையறாது தினசரி சிறு விளக்கங்கள் அல்லது விளக்கமான கட்டுரைகள் பிரச்சினையின் பல்வேறு படிநிலைகளையும் சாத்தியமான ஒவ்வொரு கருத்தோட்டத்திலிருந்தும் பத்திரிகைகள் அவற்றை விளக்க வேண்டும். இத்தகைய கட்டுரைகளுக்கான விசயதானங்களை கட்சி நிறுவனம் தொடர்ந்து பத்திரிகைக்கு அளிக்கவும் கட்சியின் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு பத்திரிகை ஆசிரியர்கள் தமது முயற்சிகளைக் கைவிட்டுவிடாமல் தமது கவனத்தைச் செலுத்துமாறும் நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களும், நகராட்சி உறுப்பினர்களும் திட்டவகைப்பட்ட முறையில் வேலை செய்ய வேண்டும். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி தீர்மானங்கள், பிரேரணைகள் மூலம் பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களிலும் இயக்கத்தைப் பற்றி விவாதத்துக்குக் கொண்டுவர அவர்கள் முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரதிநிதிகள் தம்மைப் போராடும் மக்கள் திரளினரின் முகாமில் அவர்களுக்காக வாதிடுபவர்களாகவும், அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளாகவும், கட்சி ஊழியர்களாகவும் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும்.

நிறுவன ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் அனைத்து சக்திகளின் நடவடிக்கைகளும் வெற்றி பெறுமானால், ஒருசில வாரங்களுக்குள் நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானங்கள் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் அங்கீகரிக்கப்படுமானால், நமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக காட்டப்பட்ட மக்கள்திரளினரை உறுதிப்படுத்துவது கட்சியின் மிகப் பாரதூரமான நிறுவன ரீதியிலான கடமையாகும். இந்நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத் தன்மையை இயக்கம் அடையுமானால், நமது செல்வாக்கை அதிகரிப்பது என்பதை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் முயற்சிக்க வேண்டும்.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை: அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு!
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும்!

இந்த நோக்கத்திற்காக உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களின் செல்வாக்கை முறியடிக்கச் செய்வது அல்லது நமது கட்சியினுடைய கோரிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராட நிர்ப்பந்திப்பது என்ற நோக்கத்தை ஈடேற்ற தொழிற்சங்கங்களில் உள்ள நமது குழுக்கள் அவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நேரடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். தொழிற்சாலை கவுன்சில்கள், தொழிற்துறை கமிட்டிகள் அல்லது இதுபோன்ற நிறுவனங்கள் இருக்குமிடங்களில் எல்லாம், நமது குழுக்கள் அந்நிறுவனங்களின் விரிவான கூட்டங்களில் செல்வாக்கு செலுத்தி அதன் வாயிலாக அவற்றைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானிக்கச் செய்ய வேண்டும். பொதுவுடைமைக் கட்சித் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தின் மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளுக்காகப் (நலன்களுக்காகப்)  போராடுவதற்கான இயக்கத்தை ஆதரிக்கும்படி எண்ணிறந்த உள்ளூர் நிறுவனங்கள் செய்யப்பட்டுவிட்டால், அவற்றை ஒரு பொது மாநாட்டில் பங்கெடுக்க அழைக்க வேண்டும். இவற்றுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றிய தொழிற்சாலைக் கூட்டங்களின் சிறப்புப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை

0

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 08

முதல் பாகம்

நா. வானமாமலை

மூடுதிரை

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க.கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித்தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வதற்கோர் வழிகாட்டியாக உள்ளது. இம்முயற்சி மிகவும் போற்றத்தக்கது. ஆயினும் அவருடைய வரையறுப்புகளிலிருந்து நான் பல விஷயங்களில் மாறுபடுகிறேன். கண்ணோட்டம் ஒன்றாயினும் அது ஆதாரங்களை வரிசைப்படுத்தும்போது வேறுபடக் கூடும். அது கண்ணோட்டத்திலுள்ள குறைபாடாகவோ ஆதாரங்கள் போதிய அளவு சேகரிக்கப்படாததாலோ இருக்கலாம். இது அவருடைய கட்டுரைக்கு மட்டுமல்ல, என்னுடைய இச்சிறு கட்டுரைக்கும் பொருந்தும். இதுபோன்ற பல கட்டுரைகள் வெளியாகுமாயின், நமது கருத்துக்களைத் தொகுத்து விவாதித்து நமது பொதுவான கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டு ஆதாரங்களை ஆராய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதனை எழுதுகிறேன் – நா. வா.)

நாயன்மாரது பக்தி வெள்ளமான இலக்கியத்தின் அடித்தளத்தைக் காண ’நாடும் நாயன்மாரும்’ என்ற கட்டுரை முயலுகிறது. இம்முயற்சி மிகவும் கடினமானது. கடினமான இப்பணியை மேற்கொண்ட கைலாசபதி அவர்களின் துணிவை நாம் போற்ற வேண்டும். அம்முயற்சி இத்துறையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினால், அதுவே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும். இப்பயனை இக்கட்டுரைத் தோற்றுவிக்கும் என்பதே என் நம்பிக்கை.

இக்கட்டுரையில் சைவம் தனக்கு முன் தமிழ் நாட்டில் வேரூன்றி நின்ற இரண்டு சமயங்களை எதிர்த்துப் போராடி வளர்ந்தது என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அதனைப் பற்றி அவர் தரும் முடிவுகளே பின்னர் சைவம் இவ்விரு சமயங்களை எதிர்க்க எத்தத்துவத்தை உருவாக்கிக் கொண்டது என்பதை விவரிக்க அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே இவ்விரு சமயங்களின் சமூக அடிப்படையை விரிவாக ஆராய்தல் அவசியம்.

கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டில் குலங்களும், குடிகளும் அழியத் தொடங்கி நிலவுடைமை முறை தோன்றத் தொடங்கிவிட்டது. அம்முறையின் அரசியல் வடிவம் குறுநில மன்னர் ஆட்சி, தென் தமிழ் நாட்டில் பொருநைக் கரையிலும், காவிரிக் கரையிலும், பெருவிளைச்சல் காரணமாக அரசுகள் எழுந்தன. இதுவும் இரண்டாம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்ததென ஆதாரத்தோடு சொல்லலாம்.(1)

குலங்களையும், குடிகளையும் விழுங்கிவிட்ட சிற்றரசுகள் தம்முள் போட்டியிட்டு மூன்று முடியரசுகளாயின. அவை, சிதைவைத் தவிர்க்க பெளத்தத்தைக் கருவியாக்கிக் கொண்டன. பௌத்தம் இணைப்புக் கருவியாகப் பயன்பட்டது. குழுக்களிலுள்ள மாற்ற முடியாத பழைமைப் பற்றை ஒழிக்கப் பௌத்தம் பயன்பட்டது. குழுவினுள் அடங்கிச் சிறு தெய்வ வணக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை பெளத்தம் தனது ஜாதகக் கதைகளினாலும், எழுத்தறிவினாலும், நீதி போதனையாலும், புத்தனைக் கடவுளாக வழிபடும் வணக்க முறையைப் புகுத்தியதாலும், புதிய அகன்ற உலகத்தை கற்பனையில் காண உதவிற்று.(2)

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலைமையையும், தமிழ் நாட்டில் கி.மு.2, 1-ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன. வர்க்கப் பிரிவினைகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. உணவுக்குத் திண்டாடிய நாட்டில் தேவைக்கு மிஞ்சும் உற்பத்தி தோன்றிவிட்டது. அதன் காரணமாக உள்நாட்டு வாணிபமும் தலைதூக்கத் தொடங்கிற்று. முதலில் நிலக்கிழாரில் ஒரு பகுதியினரே வாணிபத்துறையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம்தானே தேவைக்குப் போக எஞ்சிய தானியம் இருக்கும்? விவசாய உற்பத்தி அதிகமாக வாணிபமும் செழித்தது. பல புதிய பொருள்களுக்குத் தேவை பிறந்தது. இத்தேவை வணிக வர்க்கத்தை வளர்த்தது. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டுவரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம். (3)

இந்நிலையில் பௌத்தம் தமிழ் நாட்டில் பரவியது. பிராமி சாசனங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது உண்மையானால் அது அக்காலத்தில் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம். ஆனால் செல்வாக்கு பெறவில்லை. அது தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் கி.மு.6-ம் நூற்றாண்டில் தோன்றிய தர்ம பாதையாக வரவில்லை. 6-ம் நூற்றாண்டில் சமூக மாறுதல்கள், பெளத்த தத்துவங்களையும் மாற்றியிருந்தது. இங்கு வந்த தத்துவம் ‘ஹினாயன’ தத்துவம். இதில் விக்ரக வணக்கம் உண்டு. சக்ரவர்த்திகளும் போதி சத்துவர்களும் சமமாகக் கருதப்படுகிறார்கள். சக்கரவர்த்திகள் பல பிறப்புகளில் செய்த புண்ணியம் காரணமாக அப்பதவியடைகிறார்கள் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆணைச் சக்கரமும், தர்ம சக்கரமும் இணைக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவம் வடநாட்டில் பரவி பேரரசு தோன்றிய காலத்தில் அதற்கு ஆதரவாகத் தோன்றிய தத்துவம் இது. இதுதான் தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளருவதற்கும் அவசியமான தத்துவமாக இருந்தது. இக்காலத்தில் போர் அவசியமில்லை. ஆகவே அஹிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட ’ஹினாயன பௌத்தம்’ ஆளும் வர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சமணம் தமிழ்நாட்டில் பின்னரே தோன்றியது. தோன்றும் காலத்தில் அது பேரரசு தோன்றவே ஆதரவான கொள்கைகளைக் கொண்டிருந்தது. பெருங்கதை முதலிய முற்காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும் கதாநாயகர்களது பண்புகளும் இதற்குச் சான்று. சீவக சிந்தாமணி பேரரசு ஆதரவில் மிக மிக முன்னேறிச் சென்றது.(4)

இவையாவும் சமணக் காப்பியங்களாயினும், உலகியலில் கெளடலியத்தைப் பின்பற்றுகின்றன. பேரரசுகள் நிலைக்கவே சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மையே.

இவ்விரு சமயங்களும், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் சாதித்த மாறுதல்கள் எவை?

1. சிறு குழு உணர்வைத் தகர்த்தன.
2. பேரரசு தோன்றத் துணை செய்தன.
3. வாணிபம் வளரவும், வணிக வர்க்கம் தோன்றவும் துணை செய்தன.
4. குழுக்களையும் சாதிகளையும் ஓரளவு ஒன்றாக இணைத்தன.
5. மொழி வளர்ச்சிக்கு உதவின.
6. புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குப் பாதை அமைத்தன.
7. ஒரே தமிழ்நாடு என்ற அமைப்பை மக்களும், மன்னரும் வணிகரும், நோக்கமாகக் கொள்ள உதவின.
8. இதன் மூலம் கலாச்சார ஒருமையை வளர்த்தன.
9. காவியங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டோடு , தமிழ் நாட்டின் பண்பாட்டை இணைத்தன.
10. போரைத் தவிர்த்து வாணிப வளர்ச்சிக்கு உதவின.

இம்மாறுதல்களின் காரணமாக சமூகச் சித்திரம் மாறுபாடடைந்தது. மன்னர்கள், நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுவடைந்தால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டார்கள். சமூக மாறுதல்களால் தோன்றிய நிலமற்ற உழவரும், நிலத்தொடர்பிழந்த கைத்தொழிலாளரும், விதிக் கொள்கையால் உயர் வர்க்கங்களின் பிடிப்புக்குள்ளாயினர். அவற்றை எதிர்க்க முடியாதபடி விதிக்கொள்கை அவர்களைச் செயலற்றவராக்கியது.

களப்பிரர் காலத்தில் (இக்காலத்தில் தமிழ் மொழி இலக்கண அடிப்படை பெற்றது.) ஆரம்ப இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. காவிய காலத்தின் தொடக்கமும், நீதி நூல்களின் ஆரம்பக் காலமும் அதுவே. இம்மாறுதல்கள் நெருக்கடியை நோக்கி விரைந்தன. நிலப் பிரபுத்துவ வர்க்கம், நிலத் தொடர்புடைய தொழில் புரியும் மக்களைத் திரட்ட முயன்றது. இவ்வர்க்கங்கள் சமூக அடிப்படை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் வர்க்கப் போராட்டம் முற்ற ஆரம்பித்தது. இச்சமயம் உழைக்காத ஆயிரக்கணக்கான பிரபுக்களும், திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகளும், உணவு பெற பள்ளிச்சந்த நிலங்களை அரசர் உதவியால் பெருக்கிக் கொண்டனர். விகாரைகளும், சைத்தியங்களும் சமணப் பள்ளிகளும் நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாயின. இவை வணிக வர்க்கத்தாரோடு பொருளாதாரத் தொடர்பு பூண்டன. அவர்கள் நிலத்தில் விளைந்தவற்றை வணிகர் வாங்கி விற்றனர். அல்லது கச்சாப் பொருளாக வாங்கிச் செய்பொருள்களைச் செய்தனர். இவை தவிர நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர்கள் ஏராளமாக இருந்தனர். சமண, பௌத்த சமய நிறுவனங்கள் பெரும் சுரண்டல் ஸ்தாபனங்களாயிருந்தன. அவைதாம் நேரடியாகச் சுரண்டும் உழவர்கள், தமது செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர் ஆகிய பகுதியினரின் வெறுப்புக்களாயின. தம்மை ஆதரிக்கும் வியாபாரிகளின் நலனுக்காகவே மத ஸ்தாபனங்கள், நிலங்களை நிருவகித்தன. ‘மத்தவிலாசப் பிரகசனம்’ பௌத்த விகாரைகளின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் கூறுகிறது.

இவ்வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண, பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. வெளிப்படையாக அது எந்த நலனையும் ஆதரிக்காவிட்டாலும் சமண, பௌத்த, எதிர்ப்பு – பொருளாதாரத் துறையில் வாணிக வர்க்க எதிர்ப்பாகவே சாராம்சத்தில் இருந்தது.

நிலப்பிரபுத்துவ சமூக அடிப்படையை விரிவுபடுத்த எல்லோரையும் ஆகர்ஷிக்கும் வண்ணம், மக்கள் அனைவரும் சகோதரர்கள், ஒரே குலம் என்ற தத்துவத்தை சமயம் பரப்பியது. கொள்வினை, கொடுப்பு வினை செய்துகொள்ள ஆதரவு காட்டியது. உறவில்லாத உறவை சிருஷ்டித்தது. (Idyllic relations) சிவனை, விதியை வெல்ல வழி காட்டும் மூலத் தலைவனாக்கியது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலால் ஏற்படும் வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் விகாரைகளும், பள்ளிகளும் காரணமயிருந்ததால், அவற்றை எதிர்த்து அவர்களுடைய விதிக் கொள்கையை எதிர்த்து, மக்களைத் திரட்டுவதற்காக வேதனை நீக்கச் சிவனிடம் சரணடையும்படி சைவம் கோரியது. விதியை வெல்லச் சிவனிடம் சரணடையக் கோரியது.

‘நமச்சிவாயம்’ என்ற சொல்லே இகபர செல்வங்களையெல்லாம் அளிக்குமென்றது. மக்கள் புரிந்து கொள்ள இது எளிதாயிருந்தது. புத்த சமண தத்துவச் சுழல்கள் ஆரம்ப சைவ சமயத்தில் இல்லை. சிவன் யாரும் வழிபடக் கூடிய பொதுக் கடவுளாயிருந்தார். பிறவிப் பெருங்கடலை நீந்த பிரபுக்களின் தர்ம போதனையோ, சமணக் குரவர், குரத்தியரது துணையோ தேவையில்லை. சைவ மடங்களும் அப்பொழுது தோன்றவில்லை.

சைவம் தழைக்கப் பணி செய்த முதன் நாயன்மார்கள் நாடு முழுவதும் அலைந்து மக்களிடையே வழங்கி வந்த இனிய பண்களில் மனித உணர்வை உருவமாக்கிச் சிவனை மனிதருக்கு மட்டும் எட்டும் தந்தையாக, தாயாக வருணித்துப் பாடினார்கள். அறிவைப் பின் தள்ளி உணர்ச்சியை ஆழமாக்கி பக்தி வெள்ளத்தில் நாட்டை மூழ்கடித்தார்கள்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை!

இந்நிலையில் வாணிக வர்க்கம் பலம் குன்றியிருந்தது. மூவரசுகளிடையே வாணிகத் தடைகள் தோன்றியிருந்தன. மேனாட்டு வாணிபம் சீர்குலைந்தது. இஸ்லாமிய வளர்ச்சியாலும், வெற்றியாலும் அண்டை நாடுகளில் இவர்களது வாணிபம் நின்றது. நாட்டுக்குள் முடங்கிய வணிக வர்க்கம் வலிமை குன்றி இத்தாக்குதலைச் சமாளிக்க இயலாது நின்றது.

இந்நிலையில் சைவம் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் பல்லவர் நாட்டிலும் பரவிற்று. சமூக ஒற்றுமைக்கு அது துணை செய்தது. சமண பௌத்த மடங்கள் செல்வாக்கிழந்தன. அரசர்கள் செல்வாக்குப் பெற்ற சைவத்தை ஆதரிக்கத் தொடங்கினர். சமண பௌத்த மடாலயங்களின் சொத்துக்கள் புதிதாகத் தோன்றிய சிவாலயங்களுக்கு மாறின. புதிய தேவதானங்களும், பிரம தேசங்களும் சிருஷ்டிக்கப்பட்டன. பாண்டி நாட்டின் வேள்விக்குடி செப்பேடுகளும் திருநெல்வேலி செப்பேடுகளும் களப்பிரர் காலத்தில் அந்தணர்களிடமிருந்து பறித்துக் கொண்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கு உரிமையாக்கியதைக் கூறுகின்றன. மகேந்திரன், மாமல்லன் காலத்துச் சாசனங்கள், காஞ்சி கைலாயநாதர் கோவிலுக்கு, பண்டைச் சமணப் பள்ளிகள் விகாரைகளின் நிலங்களை உரிமையாக்கியதைக் கூறுகின்றன. இவ்வாறு சிவன் கோயில்கள் படிப்படியாக நிலவுடைமை ஸ்தானங்களாயின. இம்முறை நாடு முழுதும் பரவிற்று. ஊர் நிலத்தின் பெரும் பகுதி கோயில்களுக்குச் சொந்தமாயிற்று. அதற்கடுத்தாற்போல நிலமுடைய பெருநிலக்கிழார்கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும் நாட்டினராகவும், அதிகாரம் பெற்றனர்.(5) இப்படி ஒரு புதிய நிலவுடைமை முறை உருவாகியது. வாணிக வர்க்கத்தினரும் தமிழ்நாடு முழுவதும் வாணிபம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெற சைவத்தை அனுசரித்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் வீர சைவர்களாயினர். இது நிலவுடைமை வர்க்கத்தினரோடு வணிக வர்க்கத்தினர் நட்புறவு கொண்டதையே காட்டுகிறது. 8-ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வணிக வர்க்கத்தினர், பல சிவன் கோயில்களுக்குப் பொன்னளித்ததும், மகமை முறைகள் ஏற்படுத்தியதும் சமகாலச் சாசனங்களால் புலனாகின்றன. கூட்டுச் சுரண்டலுக்கு இவ்வுறவு காரணமாயிற்று.

அடிக்குறிப்புகள்:
♦ தமிழ் நாடும் மோரியரும் – நா. வா. (தாமரை பொங்கல் மலர் 1961)
♦ Philosophies of India – Essay on Buddihism Zimmer.
♦ சிலப்பதிகாரத்தில் வர்க்கப் போராட்டம், ….நா. வா. (ஜனசக்தி, மே. மலர் 1957)
♦ காவியக் கதைத் தலைவர்கள் – நா.வா. (தாமரை)
♦ South Indian Polity – K.S.Krishnaswamy Iyengar உத்தரமேரூர் சாசனம்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன்

க்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஒரு அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆளுநர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின்  அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு.

தமிழ்நாடு அரசோ, ஆளுநர் அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டுகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தரவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக்கூட அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டாலும் அதைத் தட்டிக் கேட்கத் தயாராக இல்லை தமிழக அரசு. சி.பி.எஸ்.இ. நீட் தேர்வுக்கான ‘தமிழ் வினாத்தாளில்’ 49 தவறுகள்.

இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வு எழுதிய தமிழ்நாட்டைச் சார்ந்த 24,720 பேரில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 460 பேர் மட்டுமே. மதுரை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கால் தமிழ் வழியில் தேர்வு எழுதியவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது. நியாயமாக தமிழக அரசு தொடர்ந்திருக்க வேண்டிய வழக்கு இது. இப்போது ‘சி.பி.எஸ்.இ.’ மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் போன நிலையிலும் தன்னையும் ஒரு மனுதாரராக தமிழ்நாடு அரசு இணைத்துக் கொள்ள முன்வராமல் சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டையே நடுவண் ஆட்சிக்கு அடிமையாக்கி விட்டார்கள். எதிர்பார்த்தது போல் சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தடையும் வாங்கி மதுரை நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவிட்டது.

இராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை, தமிழக அமைச்சரவை தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161 ஆவது பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய முன் வந்தது. அந்த பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர்  இரண்டு ஆண்டுகளாக அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். கேட்டால் ஆளுநருக்கு இதில் முடிவெடுப்பதில் கால நிர்ணயம் எதுவும் இல்லையென்று கூறுகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

படிக்க :
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?
ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !

நீதிபதிகள் ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார்கள், அரசியல் சட்டத்தில் உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிற ஆளுநர் போன்றவர்கள் இத்தகைய பிரச்சனைகளில் முடிவெடுப்பதற்கு அரசியல் சட்டம் கால நிர்ணயம் எதுவும் செய்யாததற்கு காரணம் இந்த உயர் பதவியில் இருப்பவர்கள்  உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பியதால்தான் என்று சுட்டிக்காட்டினார்கள். ஆனால் ஆளுநர் இதில் வரம்பு மீறி அப்பட்டமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையை கவிழ்ப்பதற்கு பாஜக கட்சி மாறல்களை ஊக்குவித்து குறுக்கு வழியில் கவிழ்த்தபோது அந்த மாநில ஆளுநர் எப்படியெல்லாம் பலிகிடாவாக செயல்பட்டார் என்பதையும் அன்மையில் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் நடக்கும் ஆம் ஆத்மி’ ஆட்சி ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராக உறுதியுடன் களமிறங்கியது. இப்போது ஆளுநர் அதிகாரத்துக்கு கடிவாளம் போடும் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழியாகப் பெற்றிருக்கிறது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஜூலை 4, 2015இல் உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு கூட்டாட்சி தத்துவம் என்ற கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய சார்பிலும், நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் சார்பிலும் தீர்ப்பு எழுதியிருக்கிறார். நீதிபதிகள் டி.ஒய்.சந்திர சூட் மற்றும் அசோக் பூஷன் இணைந்து தனியாக தீர்ப்பு எழுதினார்கள். அனைவரது தீர்ப்பின் மய்யக் கருத்தும் ஒரே குரலை பேசியிருக்கின்றன)

உச்சநீதிமன்றம் ஒருமித்தத் தீர்ப்பாகக் கூறியிருப்பது என்ன?

  • ஒன்று – டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்துக்கான தலைவர் முதலமைச்சரே தவிர, ஆளுநர் அல்ல.
  • இரண்டு – அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு உண்டு. அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட வேண்டும்.
  • மூன்றாவது – குடியரசுத் தலைவரிடம் ஆளுநர், அனைத்து அமைச்சரவை முடிவுகளுக்கும் விளக்கம் கேட்கக் கூடாது. தவிர்க்க வியலாத சூழ்நிலையில் கருத்து மாறுபாடுகள் நியாயமானவையாக இருந்தால் மட்டுமே அப்படி விளக்கம் கேட்க முடியும். கடைசி வாய்ப்பாக மட்டுமே ஆளுநர்இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; குடியரசுத் தலைவர் கருத்தை அப்படியே செயல்படுத்த வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு.
  • நான்காவதாக – அமைச்சரவை எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் ஒப்புதல் பெற்றாக வேண்டும்  என்ற அவசியமில்லை. முடிவுகளை ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு அமைச்சரவைக்கு உண்டு.

– இவை தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு தனித் தகுதி உண்டு. சட்டமன்றம், அமைச்சரவை உள்ளிட்ட சிறப்புத் தகுதிகளை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட் டுள்ளன. அந்தமான் நிக்கோபர், இலட்சத் தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டய்யூ, சண்டிகார் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றங்கள் கிடையாது. நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் (பிரிவு 239ஏ) சட்டசபை அதிகாரங்கள் வழங்கப்பட்ட யூனியன் பிரதேசம்

இரண்டாவது வகை. புதுச்சேரி மாநிலம் இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. நாடாளுமன்ற சட்டத்தை பயன்படுத்தாமல் அரசியல் சட்டத்தையே திருத்தி, அதன் வழியாக சட்டசபை மற்றும் அமைச்சரவை அதிகாரம் பெறுவது.

மூன்றாது வகை. டெல்லி யூனியன் பிரதேசம் இந்த சிறப்புப் பிரிவின் கீழ் வருகிறது. (1991-இல் சட்டத்தில் 69-ஆவது திருத்தத்தின் வழியாக டெல்லி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது) இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை டெல்லி யூனியன் பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். டெல்லி யூனியன் பிரதேச குடிமக்களின் ஜனநாயக, சமூக, அரசியல் அதிகாரங்களை உறுதி செய்வதற்காகவே டெல்லி யூனியனுக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் 2016 ஆகஸ்ட் 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக டெல்லிக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் அது ஒரு யூனியன் பிரதேசமாகவே கருத வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்தது. வேறு வழியின்றி உச்சநீதிமன்றம் போகும் நிலைக்கு ஆம் ஆத்மி தள்ளப்பட்டது.

சொல்லப்போனால் ஆம் ஆத்மிக்கும் நடுவண் அரசுக்குமிடையிலான மோதல் – மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அய்க்கிய முன்னணி ஆட்சிலேயே தொடங்கிவிட்டது. 2014-ஆம் ஆண்டு மெஜாரிட்டி பலமின்றி வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்ற கெஜ்ரிவால், ரிலையன்ஸ் குழும நிறுவனர் அம்பானி, மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மற்றும் முரளி தியோரா மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழியாக ஊழல் வழக்குப் பதிவு செய்தார். எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் உடன்பாட்டுடன் நடந்த ஊழலுக்கு எதிரான வழக்கு அது. இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும், டெல்லி மாநில ஊழல் ஒழிப்புத் துறைக்கு மத்திய  அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர உரிமை இல்லை என்றும் அன்றைய அய்க்கிய முன்னணி ஆட்சி நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.

அம்பானியின் மீது கை வைத்தால் மோடி ஆட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியும் சும்மா விடாது. மோடியின் தேசிய முன்னணி பதவிக்கு வந்தவுடன் இன்னும் ஒரு அடி மேலே சென்று மத்திய அரசு ஊழியர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக டெல்லி ஊழல் ஒழிப்புத் துறைக்கு இருந்த வழக்குப் போடும் உரிமையையே பறித்து தாக்கீது வெளியிட்டது. இதற்குப் பிறகு 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. கெஜ்ரிவால் முதல்வரானார். மோடி ஆட்சி தாக்கீதை எதிர்த்து நீதிமன்றம் போனார். அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி மாநில அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு இருந்த அதிகாரத்தைப் பறித்து மோடி ஆட்சி வெளியிட்ட அறிவிப்பு ‘சந்தேகத்துக்கு’ வழி வகுக்கிறது என்று கூறியதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று மே 25, 2015-இல் தீர்ப்பளித்தது.

படிக்க :
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !
பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !

மோடி ஆட்சி விடவில்லை; அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வந்தால் அதைப் பதிவு செய்ய  காவல் நிலையங்களுக்கு உரிமை கிடையாது என்று அறிவித்தது (டெல்லி மாநில அரசுக்கு காவல்துறை, பொது ஒழுங்கு, நிலம் குறித்த உரிமைகளில் அதிகாரம் கிடையாது. எனவே காவல்துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது) அதைத் தொடர்ந்து டெல்லி மாநில அரசுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் ஆளுநருக்கு வழங்கியது மோடி ஆட்சி.

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியை ஆளுநரே நியமித்தார். அதிகாரிகளை மாற்றம் செய்யும் உரிமைகளும் நியமிக்கும் உரிமைகளும் மாநில ஆட்சியிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் போனார் கெஜ்ரிவால். இந்த வழக்கில் 2016-இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஆளுநருக்கே அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு இல்லை என்று 2015-இல் வழங்கிய தீர்ப்பை அப்படியே புரட்டிப் போட்டது. தீர்ப்பு ஆளுநருக்கு சாதகமாக வந்தது.

டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை ஆளுநர் முடக்கினார். அதிகாரிகள், முதல்வர் உத்தரவை ஏற்று செயல்பட மறுத்தனர். தலைமைச் செயலாளராக இருந்த அன்ஷீ பிரகாஷ், மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கினார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து முதல்வர் தன்னை உடல் ரீதியாகத் தாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக புகார் கூறினார். ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே நேரில் கொண்டு போய் சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்களை முடக்குவதற்காகவே இத்தகைய பொய்ப் புகார்கள் உருவாக்கப்படுகின்றன என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியினர் பிறகு ஆளுநர் மாளிகையிலேயே 24 மணி நேரமும் ‘அமரும்’ முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இறுதியில் உச்சநீதிமன்றம் மாநிலத்தின் உரிமைக் கதவுகளைத் திறந்து விடும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஓட்டெடுப்புக்கு முன்பே பதவி விலகி ஓடினார்.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்

disclaimer

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !

PP Letter head

பத்திரிகைச் செய்தி

14.08.2020

ன்பார்ந்த மக்களே !

மார்ச் 24-ம் தேதி போடப்பட்ட ஊரடங்கு நூற்றி ஐம்பதாவது நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள் அதிகம்.

ஊரடங்கு என்றால் எல்லோருக்கும் பொதுவானதுதானே. ஆனால் இந்த ஊரடங்குக்காலத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கார்ப்பரேட் கொள்ளைக்காக காடுகள், மலைகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதே சட்டத் திட்டங்களாகிவிடும்.

இந்த கொரோனா காலத்தில் விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயை 2021 -க்குள் தனியார்மயமாக்க வேண்டும் என்கிறார் மோடி. புதியக்கல்விக்கொள்கையின் மூலம் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் கொள்ளை லாபத்துக்காக காவியாக்கப்பட்ட நவீன கொத்தடிமைகளை உருவாக்க 3ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பேரில் நவீன குலக் கல்வித்திட்டம் கொண்டு வரப்படுகின்றது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையோ 49% ஆகிவிட்டது. ஆக, தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்களில் சரிபாதி பேருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ரேசன் அட்டைக்கு ஆயிரம் ரூபாயும் அரிசியும் பருப்பும் கொடுத்தால் மட்டும் ஒரு குடும்பத்தை ஓட்ட முடியுமா என்ன?

படிக்க :
அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அம்பானியோ தன்னுடைய ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி கடனை அடைத்து உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 4-வது இடத்திற்கு சென்றுவிட்டார். சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை இறங்கிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 ரூபாய் வரை வரி விதிக்கப்படுகிறது. கொரோனா தொற்று நோயில் இருந்தும் ஊரடங்கில் இருந்தும் மக்களை மீட்டெடுப்பதற்கான உருப்படியான எந்த வேலைகளையும் செய்யாத அரசு, கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடக்கூடாது என்பதற்காக ஊரடங்கினை அமல்படுத்தி வருகின்றது.

ஊரடங்கு மூலமாக மட்டுமே கொரோனாவை ஒழித்துவிட முடியும் என்பது இயலாத ஒன்று என்கிறது உலக சுகாதார நிறுவனம்.130 கோடி மக்கள் வாழும் நாட்டில் எத்தனை மருத்துவமனைகள், உயிர்காக்கும் கருவிகள் இருக்கின்றன? மருத்துவர்கள் செவிலியர்கள் இருக்கிறார்கள்? தடுப்பூசி கண்டறியப்படாத வரை கொரோனா பரவத்தான் செய்யும். இந்த அரசு எப்போது தடுப்பூசி கண்டு பிடிப்பது? நாம் எப்போது வேலைக்குச் செல்வது? அதுவரைக்கும் பட்டினியால் சாக முடியாது. மக்களுக்கு வேலை கொடுத்து வாழவைக்க துப்பில்லாத அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்குத்தான் இந்த ஊரடங்கைப் போட்டிருக்கிறது.

அரசும் ஆளும் வர்க்கமும் தனது கார்ப்பரேட் – காவி பாசிச நடவடிக்கைகளை கொஞ்சமும் நிறுத்தவில்லை. ஆனால் மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகப் பேசக்கூடாது என்று ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே வருவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டுமென்றால் பொது சுகாதரக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் சாத்தியமே இல்லை.

ஊரடங்கிற்கு முடிவு கட்டு !பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற முழக்கத்தை முன்னெடுப்போம். அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தை நிறைவேற்றி நாட்டையே மீண்டும் அடிமையாக்கும் இந்த அரசுக்கு எதிராக ஒன்றிணைவோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

மக்கள் அதிகாரம் – தொடர்புக்கு : 99623 66321

நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே

ஏ.எஸ்.கே

முதல் மனிதன் சுகாரின் 1962ல் விண்வெளி – அகண்ட காஸ்மாசில் (cosmos) சென்றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி.ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டில் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை; கூறாமலே அது விளங்கும்!

… ஆகவேதான், சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தொழிலாளி வர்க்கம், பிற்போக்கு அமைப்பிற்கு இருப்பிடமாயுள்ள ஜாதி, சமயம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அறவே ஒழிக்க வேண்டும்.

” … இன்றைய சமூக அமைப்பு பல லட்சக்கணக்கான உழைப்பாளி, விவசாயி மக்களை அறியாமை இருள், மூடப்பழக்க வழக்கங்களில் அழுத்தி வைத்திருக்கிறது. இந்தப் பிடிப்புகளில் இருந்து இவர்களை விடுதலையடையச் செய்ய ஒரே வழி, தூய்மையான மார்க்சியக் கல்வியறிவைப் புகட்டுவதுதான் என்று ஒரு மார்க்சியவாதி நினைத்தால், இதைவிட மிகப்பெரிய இமாலயத் தவறு வேறெதுவும் இருக்க முடியாது. மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடக்கிற இந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நாம் நாத்திகப் பிரச்சாரத்தின் எளிமையான, அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பல வழிகளையும் கடைபிடிக்க வேண்டும். அவர்களின் சொந்த வாழ்க்கையிலிருந்து பல நிகழ்ச்சிகளின் உதாரணங்களை எடுத்துக் காட்டி, மதத்தின் மாயையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். பல கோணங்களிலிருந்து பிரச்சாரம் செய்து அவர்களின் உள்ளத்தில் ஆர்வத்தை எழுப்பிட வேண்டும்.” (முன்னுரையிலிருந்து – பக்கம் 10, 11)

ஐரோப்பாவில் 17-18வது நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதம் தழைத்தோங்கி வளரத் தொடங்கியது. பேக்கன், கலிலியோ, ஹாப்ஸ், பினோசா, லாக் முதலியோர் பிரசித்தி பெற்ற பொருள்முதல்வாதிகளாக விளங்கினர். அப்போதுதான் இளம்பருவத்தில் இருந்த முதலாளித்துவத்தின் அஸ்திவாரத்தின் மீது பொருள்முதல்வாதம் வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி விஞ்ஞானத்தின் மீது பொருள்முதல்வாதம் ஆதாரப்பட்டு நின்றது. வளர்ந்துவரும் முற்போக்கு பூர்ஷுவா வார்க்கத்தின் நல உரிமைகளைப் பேணிக்காக்கும் முறையில், பொருள்முதல்வாதம் பழைய மூடப்பழக்க வழக்கங்களையும், மடாதிபதிகளின் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடியது. மிக விரைவாக வளர்ந்துவரும் தொழிற்நுட்பவியலுடனும் (Mechanics) கணித சாஸ்திரத்துடனும் சேர்ந்து வளர்ந்த 17-18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் இயல்பாகவே யாந்திரீகமாக இருந்தது. அது இயற்கையை பல்வேறு பாகங்களாக்கி பிரிவு ஆராய்ச்சி செய்ததே தவிர, இவற்றை இவ்வாராய்ச்சிக்குப் பின் ஒன்றுசேர்ந்து ஒட்டுமொத்தமான நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை. 18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு பொருள்முதல்வாதியான ஹால்பாக், ஹெல்வீடியஸ் ஆகியோர் அசைவு பொருளின் இன்றியமையாத குணம் என்றனர். இவ்வாறு கூறியதன் மூலம் 17ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதிகளின் பல முரண்பாடுகளையும் தகர்த்தெறிந்தனர். எல்லாவித பொருள்முதல்வாதத்திற்கும், நாஸ்திகத்திற்கும் உள்ள ஜீவ பிணைப்பை 18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதிகளிடம் காணலாம்.

புவர்பாக் (Feurebach) பொருள்முதல்வாதியாக இருந்தும் தியான சிந்தனையில் மூழ்கிப் பிரிந்து கிடந்தார்.

19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்ய நாட்டு பொருள்முதல்வாதிகள் புரட்சிகர ஜனநாயகவாதிகளாக காட்சி அளிக்கின்றனர் – பெலின்ஸ்கி, ஹெர்சான், செர்னிசாவஸ்கி முதலியோர். இவ்வாறிந்த பொருள்முதல்வாதம் பரிணாம வளர்ச்சியில் தர்க்க இயல் பொருள்முதல்வாதமாகக் காட்சியளிக்கிறது.

எனவே, நாஸ்திகம் பொருள்முதல்வாதத்திற்கு இனிறியமையாததாகும். (நூலில் பக்கம் 17)

“தர்க்க இயல் புரட்சியின் கணித சாத்திரம்” என்று அன்றே கூறப்பட்டது. ஆனால் ஹெகல் எண்ணம் (கருத்து) முதல்வாதியாக இருந்ததன் காரணமாக அவரது தத்துவம் மேற்கொண்டு முன்னே செல்ல முடியாமற் போய்விட்டது.

காரல் மார்க்சும் (1818-1883), பிரடெரிக் எங்கெல்சும் (1820-1895) தலைகுப்புற இருந்த ஹெகலின் தத்துவத்தை எதிர்த்து தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தை வலியுறுத்தினர். “தத்துவ ஞானிகள் உலகத்தை வியாக்கியானம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றியமைப்பதே” என்று மார்க்ஸ் கூறினார். மார்க்சும், எங்கெல்சும் முதன் முதலாக தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தை முழுக்க உபயோகப்படுத்தினார்கள். ஆனால், தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி மார்க்சோ, எங்கெல்சோ விளக்க நூல் எதுவும் எழுதவில்லை. எங்கெல்ஸ் “டயலிக்டிக்ஸ் ஆப் நேச்சர் (Dialectics of Nature) இயற்கையின் தர்க்க இயல் என்றதோர் அரிய நூலை இயற்றி உள்ளார். ஆனால் மார்க்சும், எங்கெல்சும் அவர்கள் எழுதிய எண்ணற்ற நூல்களிலும் தர்க்க இயல் பொருள் முதல்வாதத்தை அஸ்திவாரமாகக் கொண்டு, பிரபஞ்சத்தையும் உலகத்தையும், மனித சமுதாயத்தையும் விளக்கிக் கூறி, மனித வர்க்கத்தின் தலையாய கடமை இவ்வுலகத்தை மாற்றியமைப்பதுதான், அதை எவ்வாறு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை பசுமரத்தில் பதிந்த ஆணி போல் கூறி உள்ளனர்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
நூல் அறிமுகம்: தமிழா! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்

தர்க்க இயல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிஸ சமுதாயத்தையும், இயற்கையையும் புரிந்து கொள்ள அது ஒரே வழியாகும். அதன் வெளிச்சத்தில் உலகில் உள்ள அநீதியையும், அக்கிரமத்தையும் நோக்கி, சுரண்டலற்ற உன்னதமானதோர் சமுதாயத்தைச் சமைக்க முடியும் என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது.

… இயற்கையும், உலகமும் இயங்கி வருவதிலிருந்து தர்க்க இயல் விதிகளை உணர முடியும். இதற்கு நேர்மாறாக தர்க்க இயல் விதிகள் முதலில் ஏற்பட்டன என்றும் அதன்படி இயற்கையும் உலகமும்  இயங்கி வருகின்றன என்றும் ஹெகல் கூறுவது “எண்ணம் முதல்” வாதத்தை வலியுறுத்துவதுதான் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

ஒவ்வொரு பொருளிலும் முரண்பாடு உண்டு. இம்முரண்பாடுதான் பொருளுக்கு அசைவையும், உயிரையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. முரண்பாடு இல்லையேல் அசைவில்லை, உயிரில்லை, வளர்ச்சியில்லை. இதற்கு நேர்மாறாக “கடவுள் ஒருவர் உண்டு, அவர்தான் எல்லா உயிருக்கும் உத்தரவாதமளிப்பவர், இவர் இன்றி ஓரணுவும் அசையாது” என்று எண்ணம் முதல்வாதிகள் கூறிவருகின்றனர். (நூலில் பக்கம் 19-20)

ஆகவே, தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தைக் கொண்டு, பொருள் என்றால் என்ன, உயிர் என்றால் என்ன, மனிதன் எவ்வாறு தோன்றினான், உலகம் எப்படித் தோன்றிற்று, அதன் அசைவு என்ன, அது மறையும் காலமுண்டா, மனிதன் மரணமடைந்தால் அதன் பொருள் என்ன. வேறு ஜன்மமுண்டா, கடவுள் உண்டா என்பன போன்ற எண்ணற்ற தத்துவ ஞானிகளின் பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலை அறிய முடிகிறது. எனவேதான் மார்க்சிசம் உலக மக்களைக் கவரக்கூடிய தத்துவமாகக் காட்சியளிக்கின்றது. இவைகளைத்தாம் இக்கட்டுரையில் விளக்க விரும்புகிறோம். (நூலில் பக்கம் 21)

நூல் : கடவுள் கற்பனையே
ஆசிரியர் : ஏ.எஸ்.கே

வெளியீடு : எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
தொலைபேசி எண்: 04259 – 226 012, 98650 05084

பக்கங்கள்: 136
விலை: ரூ. 90.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 06

முதல் பாகம்

5. அரசியல் போராட்டத்திற்கான நிறுவனம்

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது?

31. பொதுவுடைமைக் கட்சியைப் பொருத்தவரை, அதன் கட்சி நிறுவனம் அரசியல் நடவடிக்கையைச் செய்ய இயலாத காலம் என்று எதுவும் இருக்க முடியாது. எந்த ஒரு அரசியல் பொருளாதார நிலைமையையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக – இதுபோலவை இந்த நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக – ஸ்தாபனத்தின் போர்த்தந்திரங்களும் செயல்தந்திரங்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கட்சி எவ்வளவு பலவீனமாக இருந்தபோதிலும் முறைப்படி திட்டமிட்டும் சிறப்புத் தேர்ச்சியுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரமான பிரச்சாரத்தின் மூலம் எழுச்சியூட்டுகின்ற அரசியல் நிலைமைகளையும் அல்லது முழு பொருளாதாரக் கட்டமைவையும் பாதிக்கும் பரந்து விரிந்த வேலை நிறுத்தங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது முடியும். ஒரு குறிப்பிட்ட நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வது என்று கட்சி தீர்மானித்தவுடன் தனது உறுப்பினர்கள் அனைவரின் மற்றும் கட்சி முழுவதன் சக்தியையும் இந்த இயக்கத்தில் ஒன்றுகுவிக்க முனைய வேண்டும்.

மேலும், ஒரு வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியான மேல் நடவடிக்கைகளுக்கும் அரசியல் முக்கியத்துவம் உடைய மையங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும் கட்சியானது தனது கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் வேலைகளின் மூலம் பெற்ற அனைத்து தொடர்புகளையும் பயன்படுத்த வேண்டும். கட்சியின் பேச்சாளர்கள் பொதுவுடைமைவாதம் மட்டுமே போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர இயலும் என்று கூட்டத்தில் உள்ளவர்கள் ஏற்கும்படி செய்ய தம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். இத்தகைய கூட்டங்களுக்கான முற்று முழுதான தயாரிப்பை விசேடமான குழுக்கள் செய்ய வேண்டும். ஏதோ சில காரணங்களினால் கட்சி தானே இத்தகைய கூட்டங்களை நடத்த முடியாமல் போகுமானால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர்களோ அல்லது போராடும் தொழிலாளர்களின் ஒரு பிரிவினரோ ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களில் பொருத்தமான தோழர்கள் உரையாற்ற வேண்டும்.

கூட்டத்தின் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான பகுதியினர் நமது கோரிக்கையை ஏற்கச் செய்யத் தூண்டிவிடுவது சாத்தியப்படும்போது, அவை நன்கு உருவாக்கப்பட்டு மற்றும் தீர விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் முடிவுகளாக நிறைவேற்றப்பட வேண்டும். இவை அதே இடத்திலோ அல்லது வேறு பகுதிகளிலோ அதே பிரச்சினையின் மீது பலமான சிறுபான்மையினரான மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இம்மாதிரியான தீர்மானங்களை நிறைவேற்றச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வழியில் நாம் உழைக்கும் மக்கள்திரளினரை அப்போதைய இயக்கத்தில் உறுதிப்படுத்தவும் நமது தார்மீக செல்வாக்கின் கீழ் கொண்டுவரவும் அவர்கள் நமது தலைமையை அங்கீகரிக்கச் செய்யவும் இயலும்.

இத்தகைய கூட்டங்கள் முடிந்த பின்னர், இவற்றுக்கான நிறுவன தயாரிப்புகளில் ஈடுபட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய கமிட்டிகள் ஒரு மாநாடு நடத்தி, கட்சியின் மேல்மட்டக் கமிட்டிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்துக்கான சரியான முடிவுகளை, அனுபவங்கள் அல்லது தவறுகளிலிருந்து பெற்ற முடிவுகளைக் கொண்டதாக அந்த அறிக்கை இருக்க வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட நிலைமைக்கும் ஏற்ப பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அன்றாட கோரிக்கைகள், சுவரொட்டிகள், அச்சிடப்பட்ட பிரசுரங்களில் (பிரகடனங்களில்) வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு அவை தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கொள்கைகள் அந்த நிலைமைக்கு எப்படிப் பொருத்தமானவையாகவும் குறிப்பிட்ட நிலைமைக்குப் பிரயோகிக்கப்படக் கூடியதாகவும் இருக்கிறது என்பதைத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய சொந்தக் கோரிக்கைகள் வாயிலாக நிரூபிக்க வேண்டும். சுவரொட்டிகளை விநியோகிக்கவும், பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்யவும், ஒட்டுவதற்கான சரியான நேரத்தைத் தீர்மானிக்கவும் விசேடமாக அமைக்கப்பட்ட குழுக்கள் தேவை. அச்சிடப்பட்ட பிரகடனங்கள் தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும், வாயிலிலும், தொழிலாளர்கள் கூடப்போகின்ற அரங்குகளிலும், வேலை தேடித்தரும் அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையம் போன்று நகரின் முக்கியமான இடங்களிலும் விநியோகிக்கப்பட வேண்டும். இத்தகைய துண்டுப் பிரசுர விநியோகத்தைத் தொடர்ந்து உழைக்கும் மக்கள் திரளினர் அனைவரிடையிலும் சுலபமாக பரவுகின்ற கவனத்தை ஈர்க்கின்ற விவாதங்களும் முழக்கங்களும் தொடர வேண்டும். சாத்தியமானால் அச்சிட்ட விவரமான துண்டுப் பிரசுரங்களை அரங்குகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அல்லது பிற இடங்களில் அதாவது, எங்கு இந்த அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அங்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

படிக்க:
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

எல்லா தொழிற்சங்கங்களிலும் பிரச்சினை முட்டிமோதும் காலத்தில் நடக்கின்ற தொழிற்சாலைக் கூட்டங்களிலும் நாம் செய்கின்ற இணையான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். நமது தோழர்களாலோ அல்லது நம்மை ஆதரிப்பவர்களாலோ ஏற்பாடு செய்யப்படும் இக்கூட்டங்களில் பொருத்தமான நமது பேச்சாளர்களும் ஆற்றல்மிகு வாதிடுவோர்களும் வாய்ப்பைப் பயன்படுத்தி பரந்துபட்ட மக்கள் நமது கருத்தோட்டத்தை ஏற்குமாறு செய்ய வேண்டும். நமது கட்சி செய்திப் பத்திரிகைகள் இத்தகைய விசேடமான இயக்கத்திற்கு அதிகமான பக்கங்களையும் அதேபோல் அதனை சிறந்த முறையில் நியாயப்படுத்துவதற்கான வாதங்களுக்கு முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும். செயலூக்கமுள்ள நமது கட்சி நிறுவனங்கள் அப்போதைக்குத் தற்காலிகமாக இத்தகைய இயக்கத்தின் பொது நோக்கத்திற்காக சேவை செய்து இதில் பணியாற்றும் தோழர்கள் குன்றாத ஆற்றலுடன் செயலாற்ற உதவ வேண்டும்.

நிலைமைக்கு ஏற்ப இயங்கும் தலைமையும், தொழிற்சாலை செல்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பும் வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான உத்திரவாதங்கள்

32. ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நிலைமைக்கேற்ப இயங்கும் தலைமை மற்றும் சுயதியாகத் தலைமை அவசியம். குறிப்பிட்ட நடவடிக்கையின் நோக்கத்தை நெருக்கமாகக் கவனித்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் அதிகபட்சம் சாத்தியமான விளைவை ஏற்படுத்தி விட்டதா என்று கணிக்கின்ற ஆற்றல் படைத்த தலைமை அல்லது ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தங்கள், ஏன், ஒரு பொது வேலைநிறுத்தம் என்று மக்கள்திரள் நடவடிக்கையின் மூலம் இயக்கத்தை அந்தக் குறிப்பிட்ட நிலைமையில் தீவிரப்படுத்துவது உகந்ததா என்று தீர்மானிக்கின்ற தலைமை அவசியம். யுத்தத்தின் போது நடத்திய சமாதானத்துக்கான ஆர்ப்பாட்டங்கள் நமக்குக் கற்பித்தது போல இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கலைந்த பிறகுகூட ஒரு கட்சி – ஒரு போரிடும் பாட்டாளி வர்க்கக் கட்சி – எவ்வளவுதான் சிறியதாக அல்லது சட்டவிரோதமானதாக இருந்தாலும் எழுப்பியுள்ள பிரச்சினை முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், மிகப்பெரும் அளவிலான மக்கள்திரளினருக்குக் கூடுதலான ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் இதிலிருந்து கவனத்தைத் திருப்பிடவோ, அல்லது அமைதியாய் இருக்கவோ கூடாது. பெரிய தொழிற்சாலைகளை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டால், தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்துகின்றன. சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட நமது கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் வாய்வழியான, மற்றும் அச்சிட்ட பிரகடனங்கள் மூலமான பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு குறிப்பிட்ட அளவு சிந்தனை மற்றும் நடவடிக்கைக்கான ஒற்றுமையைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்று இருக்குமானால், நிர்வாகக் கமிட்டியானது தொழிற்சாலையில் உள்ள நம்பிக்கைக்குரிய கட்சி உறுப்பினர்களையும் கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து விவாதித்து திட்டமிட்ட நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நேரம் மற்றும் வேலையை இறுதியாக்கவும், மேலும் முழக்கங்களைத் தீர்மானிக்கவும், ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தும் வாய்ப்புகள், நிறுத்துவதற்கான மற்றும் கலைந்து செல்வதற்கான தருணம் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் வேண்டும். நன்கு அறிவுறுத்தப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் குழு ஆர்ப்பாட்டத்துக்கு முதுகெலும்பாக அமைக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டம் தொழிற்சாலையில் இருந்து தொடங்குவது முதல் கலையும் வரை மக்களிடையில் அவர்கள் கலந்திருக்க வேண்டும். மக்களிடையில் பொறுப்பான கட்சி ஊழியர்கள் திட்டவகைப்பட்ட முறையில் கலந்திருக்க வேண்டும். நிர்வாகிகள் அவர்களுக்குள் உயிரோட்டமான தொடர்புகள் வைத்திருக்கவும், அவ்வப்போது உறுப்பினர்களுக்குத் தேவையான அரசியல் அறிவுறுத்தல்கள் தரவுமான நோக்கத்திற்கு இது வசதிப்படும். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான, நிலைமைக்கேற்ப இயங்கும் அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இத்தகைய தலைமையைக் கொண்டிருப்பது பெரிய பெரிய மக்கள்திரள் நடவடிக்கைகளை மிகப்பயனுள்ள முறையில் இடையறாது புதுமைப்படுத்தவும் அடுத்தடுத்து தீவிரப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

பென்னாகரம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0

“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும்!” என்ற தலைப்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 12.08.2020 அன்று, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பாலன் தலைமை தாங்கினார். தனது உரையில் “மோடி அரசு கடந்த 2015-ல் இருந்து இந்தக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வந்தனர். இது மட்டுமின்றி இந்த கோரோனா சூழலில் 196 சட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது…” இந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அடுத்து உரையாற்றிய திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார் “மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது மோடி அரசு. அன்றைக்கு ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து பெரியார் அன்று அதனை முறியடித்தார், இன்று மோடி தலைமையிலான பிஜேபி அரசு மீண்டும் குலத்தொழிலை திணிக்கிறது. இதனை எதிர்த்து போராடவேண்டும்” என்றார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா. “இந்தக் கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கல்வியை மறுக்கின்றது. தாய்மொழி வழியில் படித்தவர்கள் தான் இன்றைக்கு பல துறையில் சாதிக்கின்றனர். ஆனால் மோடி அரசு யாரும் பேசாத மொழியான சமஸ்கிருதத்தை திணிக்கிறது, இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கின்றனர். ஆனால் இந்தி படித்த பல வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் தான் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இந்த அரசு ஏன் வேலை கொடுக்கவில்லை? இதை எதிர்த்து பேசினால் பல முற்போக்காளர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கிறது. இந்த பாசிச அடக்குமுறையை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்து உரையாற்றிய தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் முனுசாமி “பரவலாக்கப்பட்ட கல்வி அறிவை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் முன்னேறுகின்றனர். நாம் கல்வியறிவை பெறக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி கும்பலின் நோக்கம். நமது கல்வியை பறிக்கின்ற கல்விக் கொள்கை தான் இந்த புதிய கல்விக் கொள்கை. நாம் கல்வியைப் பெற வேண்டுமானால் இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும்.” என்று கூறினார்.

படிக்க :
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

அடுத்து உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் லட்சுமணன் “மோடி அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்க கூடாது என்று தான் இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்துகிறது. அன்றைக்கு பெரியார் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றிணைத்து இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார். இன்று நாமும் பெரியார் – அம்பேத்கர் வழியில் போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி -யின் கொள்கைகளை திணித்துக் கொண்டு இருக்கின்றன. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும்.” என்றார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் “பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது பிஜேபி கும்பல். குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது; குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவது. என பல சட்ட விதிகளை தனக்கு ஏற்ப மாற்றுகின்றனர். மக்களின் கடவுள் நம்பிக்கை வைத்து நம்மை பிளவுபடுத்துகிறனர். இந்த புதிய கல்விக் கொள்கையும் அதுபோன்ற ஒன்றுதான்.” என்று விளக்கினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தனது உரையில் “பாசிச மோடி அரசு சமீபகாலமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது; அரசு கலை கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து! இணையவழிக் கல்வி முறை! கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! உயர்கல்வி ஆணையம்! இப்படி பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் வகையில் இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.

அதேபோன்றுதான் இந்த புதிய கல்விக் கொள்கை 450 பக்கங்களைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் நோக்கத்தில் 3,5,8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.

ஏற்கனவே இடைநிற்றல் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மை மாணவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள். குடும்பச் சூழலின் காரணமாக உயர்கல்வி செல்வதே பெரிய விஷயம், இந்த நிலையில் இந்த பொதுத்தேர்வு முறை என்பது பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும். அதோடு மட்டுமல்லாமல் கூலித் தொழிலாளர் முறையை அதிகரிக்கும்.

தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் அரசு பள்ளி கல்லூரிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி இயங்குகிறது. குடிநீர் கழிப்பறை போன்ற வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் படிக்கின்றனர் அரசுப் பள்ளி – கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, அந்த கட்டமைப்புகளை சரிசெய்வது என்று இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அரசு துணை நிற்கிறது. குறிப்பாக ஒரு செங்கல்லை கூட நடாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, உலகத் தரச் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளது.

படிக்க :
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

இவை இன்றி ஏர்டெல் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தரச் சான்றிதழ் இனி உள்ளூர் முதலாளிகள் கொள்ளை அடித்தது போதும், கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்கு இந்த புதிய கல்விக் கொள்கை அடித்தளம் இடுகிறது. இதுமட்டுமின்றி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எந்த மாநிலத்திலும் பேசாத; வழக்கத்தில் இல்லாத செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்திற்கு அதனுடைய மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மோடி ஆட்சி ஏற்றுக் கொண்ட 2014-ல் இதற்கு ஒரு வாரம் விழா நடத்துவது, அதைத் தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை கட்டாயமாக்குவது என தொடர்ச்சியாக சமஸ்கிருத திணிப்பை செய்தது. அதுபோன்றுதான் சமீபத்தில் திருப்பூரில் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்துகிறது. புராண இதிகாசங்களை மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும் என்று கூட்டம் நடத்துகின்றனர். இந்த புராண இதிகாசங்களை மாணவர்கள் படித்தால் என்ன நடக்கும்? மருத்துவதுறை எப்படி இருக்கும்? நோய் வந்தால் அந்த நோய்க்கு மாட்டு மூத்திரம், அப்பளமும், சாணியும், சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.

நீதிபதிகள் தீர்ப்பு எப்படி எழுதுவார்கள் “குற்றவாளிகளை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுங்கள்..” இப்படி புராண இதிகாசங்களை கொண்டு, கல்வியில் விஞ்ஞானத்துக்கு புறம்பான குப்பைகளை கொண்டு வந்து திணிக்கிறது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல பார்ப்பன மனுநீதி கல்வி கொள்கை. ஆகவே இந்தக் கல்விக் கொள்கையை நாம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும். கல்வி இல்லாதவன் கலர் நிலத்துக்கு சமம் என்றார் வள்ளுவர், நம்மை களர் நிலம் ஆகும் மோடி அரசின் இந்த கல்விக் கொள்கையை எதிர்த்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராடுவோம்!” என்று அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் நன்றியுரை கூறினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி. தொடர்புக்கு : 63845 69228.

101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

ந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க “ஆத்ம நிர்பார்” (சுயசார்பு) இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதத்தில் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக இராணுவத் துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் அறிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்த தடையானது 2020 முதல் 2024-ம் ஆண்டுக்குள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும், துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 2020-21-ம் நிதியாண்டுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவத் தளவாடங்களின் கொள்முதலுக்காக ரூ.52,000 கோடியையும் ஒதுக்கியுள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்க்க இறக்குமதியின் அளவைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையாகவே ஆத்மநிர்பார் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால் சொல்லொன்றாக செயல் வேறாக இருப்பதுதான் மோடி அரசின் தனிச்சிறப்பான இயல்பு. அந்த வகையில், ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் அதை இந்தியாவும், இந்திய நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்நிய நிறுவனங்களின் மூலதனத்தை பெறுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இந்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25 சதவிகிதமாக குறைத்தது. மேலும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் அவர்களுக்கான விதிமுறைகளை மேலும் தளர்வு செய்யவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சாதாரண உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் நிலைமையே இப்படி இருக்கையில், ராணுவ தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்ற பிதற்றலை பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறையில் உள்நாட்டுத் தயாரிப்பு எந்த அளவு சாத்தியம் என்பதையும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டங்களின் நிலைமையையும் சிறிது பார்த்தாலே இது வெறும் சவடால்தான் என்பது தெரியவரும்.

படிக்க :
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டுப் பங்களிப்பிற்கான இதைப் போன்றதொரு அறிவிப்பை கடந்த 2013 மற்றும் 2018 காலகட்டங்களில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு தொழில்நுட்பக் கண்ணோட்டம் மற்றும் செய்திறன் திட்டம் (TPCR) என்று பெயரிட்டிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும், 2018-ம் ஆண்டு பாஜக ஆட்சியிலும்தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தின்படி இராணுவத் தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை சாதிக்க இயலவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு மோடி அரசால் அறிவிக்கப்பட்ட TPCR-2018 திட்டத்தின்படி, சுமார் 221 இராணுவத் தளவாட பாகங்களை “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் 2020-களின் பிற்பகுதிக்குள் உள்நாட்டிலேயே தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் வெற்றி பெறவில்லை.

எனில் தற்போது 101 இராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் போவதாக மோடி அரசு அறிவித்ததன் பின்னணி என்ன ? இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டது இந்த அறிவிப்பு. இதற்கான பின்னணி வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு உதாரணங்களை அதற்குப் பார்க்கலாம். ஒன்று உலகமே காறித்துப்பிய ரஃபேல் விமான ஒப்பந்தம், மற்றொன்று சி-295 ரக போக்குவரத்து விமான உற்பத்தி ஒப்பந்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சத்தை பார்ப்போம். ரஃபேல் விமானத் தயாரிப்பு உரிமையையும், அதற்கான தொழில்நுட்பத்தையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்றுதான் காங்கிரஸ் ஆட்சியில் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

ஆனால் ஆதம்நிர்பார் நாயகர் எனப் புகழப்படும் ‘தேசபக்தர்’ மோடி ஆட்சிக்கு வந்ததும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டுமல்லாமல் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வழங்கப்படாது என்ற டஸால்ட் நிபந்தனைக்கு உட்பட்டுதான் இந்த ஒப்பந்தத்தைப் போட்டது மோடி அரசு. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் (HAL) மிகப்பெரிய வருவாய் ஆதாயத்தையும், விமான உற்பத்திக்கான தொழில்நுட்பத்தையும் இழந்தது. இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி.

படிக்க :
நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

அதே போல இந்திய இராணுவத்திற்கான போக்குவரத்து விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான பணியை எடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவியலாமல் எச்.ஏ.எல் (HAL) நிறுவனம் முடக்கப்பட்டது. சி-295 ரக போக்குவரத்து விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் டாட்டா – ஏர்பஸ் நிறுவனங்களுக்கு இடையே போடப்பட்டது. எச்.ஏ.எல் நிறுவனம் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு தனியார் நிறுவனமான டாட்டாவுக்கு இந்தப் பணியாணை வழங்கப்பட்டிருப்பதுதான், மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலட்சணம்.

தற்போது ‘மேக் இன் இந்தியா’வை சற்றுப் பெயர் மாற்றி ‘ஆத்ம நிர்பார்’ என்று வைத்துள்ளார் மோடி. அவ்வளவுதான் வித்தியாசம். ஆத்மநிர்பார் இந்தியா – அதாவது சுயசார்பு இந்தியா என்றால் உள்நாட்டு முதலாளிகளின் மூலதனத்தில் பிரதானமாக உள்நாட்டின் தேவைக்காகவும், இரண்டாம்பட்சமாக ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செய்வது என்று பொருள். ஆனால் மோடியின் இலக்கணப்படி, உள்நாட்டு நிறுவனத்தில் அந்நிய நிறுவனங்களின் முதலீடும், பங்கும் இருந்தாலும், இந்தியாவில் பதிவு செய்திருந்தால் அது இந்திய நிறுவனம்தான். அது ஆத்மநிர்பார் தான்.

இந்தியாவில் அந்நிய முதலீடுகளை பொறுத்த வரையில் மொரீஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, UAE உள்ளிட்ட நாடுகள் முதன்மையாக உள்ளன. மேலும், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருக்கும் தொலைதொடர்பு மற்றும் மின்னணு சேவைத்துறை சமீபத்தில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கடந்த 2017-19 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மட்டும் சுமார் 8,809 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அந்நிய முதலீடு குவிந்துள்ளது. உற்பத்தித்துறையில் சுமார் 7,066 மில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத் துறையிலும் வெளிநாட்டு முதலீடு குவிந்துவருகிறது. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் 2017-18-ம் ஆண்டில் மட்டும், சுமார் 4,478 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிச்சேவைகள் துறையில் சுமார் 4,070 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், வணிக சேவைகள், கணிணிச் சேவைகள், கட்டுமானம், மின்சாரம், எரிசக்தி உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன.

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, தொழிலாளர் நலச்சட்ட ஒழிப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு நிதிச் சலுகை என அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கும் மோடி அரசு மற்றொரு பக்கம் சுயசார்பு பொருளாதாரம் என்ற பெயரில் பூச்சு பூசும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலமாகவோ, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிருக்கும் மூலதனத்தை இந்த நாட்டிலிருந்து வெளியே அள்ளிச் செல்ல வழிவகுத்துக் கொண்டே ஆத்மநிர்பார் எனக் கூவுவது, வெறும் நாடகம் தானே அன்றி உண்மையான சுயசார்பு குறித்த அக்கறை மோடி அரசிடம் துளியும் கிடையாது. மாறாக பொதுத் துறைகளையும் தனியார் மயமாக்கி, சொந்த மக்களையே சுரண்டுவதற்கான திட்டம்தான் இது என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியே 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி குறித்த மோடி அரசின் அறிவிப்பாகும் !


 எல்லாளன்
செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

3
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 07

முதல் பாகம்

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில்(1960-களில்) தமிழக வரலாற்றுச் சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.

வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.

தமிழக வரலாற்றுத் துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல் – சமூக சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொருத்ததாகி விடுகிறது.

நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன? எச்சூழ்நிலையில் அவை எழுந்தன? அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.

இந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார்.

ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிடையாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து – முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர், இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.

இந்நூல்கள் தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூல நூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

தமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.

தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதிய எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார்.

தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில், அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேத நூல்கள், உபநிஷத தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துக்கள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்து அவற்றைப் பெருமையோடு போற்றினர். ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம் மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் பிராமணர்கள் என்று அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:

  • “தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது. வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றி தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்திய சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றி ‘ஸ்த பாத பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீப காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.
  • கிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிற மக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்கு பிராமணர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் நாட்டில் முன்னேறியதற்குக் காரணம்.”

இந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.

இனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.

ஹீராஸ் பாதிரியார்

தமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள் நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் அறிவாளி வர்க்கமாகத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துக்கள் தாம். தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டுப் பெருமையைக் கண்டார்கள். தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் மொகெஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்துக்களை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.

வரலாற்று நிகழ்ச்சிகளை திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால், இவர்கள் கற்காலம் முதல், தமிழ்நாடும் திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரிய திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்ரீவனையும் அனுமானையும் ஆரிய அடிவருடிகளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க திராவிட வீரனாக்கினர். ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப் பெருமை பேசுவர். ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

இவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.

தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டு வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

தமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்றுத் தொடக்ககால முதல் ஆராய்வதற்கு சிற்சில பிராமிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவ சமய நூல்களும் ஓரளவு உதவி புரியக் கூடும். பல்லவர் காலத்திற்குப்பின் ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருள்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டுப் பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.

இவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்து பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது. இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவுத் தேட்டத்தின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெறியர் தூண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவோடும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.

இவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன.

ஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு; தேய்வுறும் அம்சங்களும் உண்டு. பண்பாட்டுக் கலப்பு நிகழும் போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்து பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா.

இதை மனத்துட் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக் கண்ணோட்டமோ சாதிக் கண்ணோட்டமோ உண்மையைக் காண உதவாது. வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானங்களின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிட இயல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூக இயல், அரசியல், பொருளாதாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும். இலக்கியமும் கலைகளும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சரித்திரம் எழுதத் துணையாகும்.

இத்தகைய கண்ணோட்டத்தை உருவாக்குவது உண்மை வரலாறு காண விரும்புவோர் கடமையாகும்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 05

முதல் பாகம்

சீர்திருத்தவாதத் தலைவர்களை பருண்மையாக அம்பலப்படுத்துவது

26. சமூக ஜனநாயகவாத மற்றும் குட்டி முதலாளித்துவ தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், இதுபோலவே பல்வேறு வகையான தொழிலாளர் கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு வெறுமனே எடுத்துக் கூறுவதன் மூலம் அதிகமாக சாதித்துவிட முடியும் என்று நம்ப முடியாது.

இவர்களுக்கு எதிரான போராட்டம் மிகமிக ஆற்றல்மிக்க வகையில் நடத்தப்பட வேண்டும். அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களை இல்லாமல் செய்வது, முதலாளித்துவத்தின் தாளத்துக்கு ஆடும், துரோகத்தனமான சோசலிஸ்டு தலைவர்களின் உண்மைச் சொரூபத்தை தொழிலாளர்களுக்குக் காட்டுவது இதற்கு மிகச் சிறந்த வழியாகும். தலைவர்கள் என்று கூறப்படும் இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கும் அதற்கடுத்த மிகவும் ஆற்றலுள்ள பாணியில் அவர்களைத் தாக்கி வீழ்த்துவதற்கும் பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

முதலாளித்துவத்தின் தாளத்துக்கு ஆடும், துரோகத்தனமான சோசலிஸ்டு தலைவர்களின் உண்மைச் சொரூபத்தை தொழிலாளர்களுக்குக் காட்டுவது இதற்கு மிகச் சிறந்த வழியாகும். தலைவர்கள் என்று கூறப்படும் இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கும் அதற்கடுத்த மிகவும் ஆற்றலுள்ள பாணியில் அவர்களைத் தாக்கி வீழ்த்துவதற்கும் பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

ஆம்ஸ்டர்டாம் தலைவர்களை* (சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களை) மஞ்சள் தலைவர்கள் என்று கூறுவது மட்டும் போதாது. தொடர்ச்சியான மற்றும் நடைமுறை ரீதியிலான விளக்கங்களுடன் அவர்களது துரோகத்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்களில் அவர்களது நடவடிக்கைகள், உலக நாடுகள் லீகின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் அவர்களது நடவடிக்கைகள், முதலாளித்துவ அமைச்சரவைகள் மற்றும் நிர்வாகத்தில் அவர்களது நடவடிக்கைகள், மாநாடுகள் மற்றும் நாடாளுமன்றங்களில் அவர்கள் ஆற்றும் துரோகத்தனமான உரைகள், அவர்களது எழுத்துபூர்வமான அறிவிப்புகள் மற்றும் பத்திரிகைகளில் உள்ள ஆலோசனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து போராட்டங்களிலும், ஏன், மிகக் குறைவான கூலி உயர்வுக்கான போராட்டங்களிலும் வெளிப்படும் அவர்களது ஊசலாட்டம் மற்றும் தயக்கம் – இவை அனைத்தும் எளிய உரைகளிலும் தீர்மானங்களிலும் ஆம்ஸ்டர்டாம் தலைவர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு இடையறாத வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருக்கின்றன.

பிராக்சன்கள் தங்களது நடைமுறை முன்னணி இயக்கத்தைத் திட்டமிட்ட பாணியில் நடத்த வேண்டும். கீழ்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் காட்டும் அற்ப சமாதானங்களை பொதுவுடைமையாளர்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் என்னதான் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும் தங்களது பலவீனம் காரணமாக சட்டங்கள், தொழிற்சங்க முடிவுகள், மேல்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் கட்டளைகள் ஆகியவற்றின் பின்னால் அடிக்கடி நின்றுகொண்டு, தொழிலாளர்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கிறார்கள். மாறாக, தொழிலாளர்களது வழியில் அதிகாரத்துவ எந்திரத்தால் வைக்கப்படுகிற உண்மையான அல்லது கற்பனையான தடைகளை நீக்கும் விசயத்தில் தங்களுக்கு திருப்தி ஏற்படும்வரை பொதுவுடைமைவாதிகள் கீழ்மட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளை வற்புறுத்த வேண்டும்.

பிராக்சன்கள் எவ்வாறு வேலை செய்ய வேண்டும்?

27. தொழிற்சங்க நிறுவனங்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பொதுவுடைமையாளர்கள் பங்கேற்க எச்சரிக்கையான தயாரிப்புகளை பிராக்சன்கள் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, அவைகளை தாங்கள் வைக்கப்போகும் முன்மொழிதல்களை அலசி ஆராய வேண்டும். பேச்சாளர்களையும் ஆலோசகர்களையும் தெரிவு செய்ய வேண்டும். திறமையான அனுபவமிக்க செயல்திறனுள்ள தோழர்களை (தொழிற்சங்க) வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

தமது பிராக்சன்கள் வாயிலாக பொதுவுடைமை நிறுவனங்கள் அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டங்கள், தேர்தல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் விழாக்கள் இன்னும் இதுபோன்று, பொதுவுடைமைவாத விரோத நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் எச்சரிக்கையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். பொதுவுடைமையாளர்கள் தமது சொந்த தொழிலாளர் கூட்டங்களைக் கூட்டும்போதெல்லாம், கூட்டத்தினரிடையே போதுமான அளவு பொதுவுடைமையாளர்களின் குழுக்கள் விரவி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் மனநிறைவு தரும்படியான விளைவுகளை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான தயாரிப்புகள் அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும்.

தொழிலாளர் நிறுவனங்கள் அனைத்திலும் வேலை செய்வது

28. நிறுவனமயமாக்கப்படாத மற்றும் பின்தங்கிய தொழிலாளர்களை நிரந்தரமாகக் கட்சியின் அணிவரிசைகளில் ஈர்ப்பதற்கும் பொதுவுடையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நமது பிராக்சன்களின் உதவியோடு தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் சேர்க்கவும் நமது கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கவும் தூண்ட வேண்டும். பிற நிறுவனங்களை – கல்விக் கழகங்கள், ஆய்வு வட்டங்கள், விளையாட்டு மன்றங்கள், நாடக மன்றங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், நுகர்வோர் சங்கங்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் அமைப்புகள் இன்னும் இதுபோன்றவை – நமக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் நிறுவனங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவுடைமைக் கட்சி சட்டவிரோதமாக வேலை செய்யும் இடங்களில் கட்சி உறுப்பினர்களின் முன்முயற்சியால் தலைமைக் கட்சி உறுப்புகளின் ஒத்துழைப்போடும் அவற்றின் கட்டுப்பாட்டிலும் இத்தகைய தொழிலாளர் கழகங்களை (ஆதரவாளர்கள் தலைமையிலான சங்கங்களை) அமைக்கலாம்.

கல்வி வகுப்புகள், வாசகர் வட்டங்கள், சுற்றுலாக்கள், விழாக்கள், ஞாயிறு உலாக்கள், இன்னும் இதுபோன்றவை மூலமாகவும், பிரசுரங்கள் விநியோகிப்பது, கட்சிப் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இன்னும் இதுபோன்றவை மூலமாகவும் பின்தங்கியவர்களை ஈர்க்க முடியும். பொது இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாக தொழிலாளர்கள் தம்மைத்தாமே தமது சிறு முதலாளித்துவ சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வர்.

அரசியலில் அக்கறை காட்டாத பாட்டாளி வர்க்கத்தினரின் நலன்களைத் தட்டி எழுப்பவும் பின்னர் அவர்களைக் கட்சியில் ஈர்க்கவும் பொதுவுடைமைவாத இளைஞர் மற்றும் மகளிர் நிறுவனங்களும் உதவுவதாக இருக்கலாம். கல்வி வகுப்புகள், வாசகர் வட்டங்கள், சுற்றுலாக்கள், விழாக்கள், ஞாயிறு உலாக்கள், இன்னும் இதுபோன்றவை மூலமாகவும், பிரசுரங்கள் விநியோகிப்பது, கட்சிப் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இன்னும் இதுபோன்றவை மூலமாகவும் பின்தங்கியவர்களை ஈர்க்க முடியும். பொது இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாக தொழிலாளர்கள் தம்மைத்தாமே தமது சிறு முதலாளித்துவ சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வர்.

குட்டி முதலாளித்துவப் பிரிவினரை வென்றெடுப்பது

29. தொழிலாளர்களில் அரைப் பாட்டாளி வர்க்கப் பிரிவினரை புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின்பாலான ஆதரவாளர்களாக வென்றெடுக்க, அவர்களுக்கு நிலவுடைமையாளர்களுடனும் முதலாளிகளுடனும் முதலாளித்துவ அரசுடனும் உள்ள விசேடமான முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட குழுக்கள் பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையைப் போக்கி வென்றெடுக்க இது அவசியம். இதற்கு அவர்களது தேவைகளின்பால் அறிவுபூர்வமான ஆதரவளிப்பது, அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படும்போது உதவியும் ஆலோசனையும் வழங்குவது, அவர்களது கல்வியை முன்னேற்ற வாய்ப்புகள் அளிப்பது, இன்னும் இது போன்றவை இதற்கு அவசியமாகலாம். இவையனைத்தும் பொதுவுடைமை இயக்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். நமக்கு எதிரான இயக்கங்களின் நச்சு செல்வாக்கை எதிர்க்கவும் பொதுவுடைமையாளர்கள் முயல வேண்டும். அவை சில மாவட்டங்களில் பலமான செல்வாக்கு செலுத்துபவையாக அல்லது குட்டி முதலாளித்துவ உழைக்கும் விவசாயிகளிடையே செல்வாக்கு உடையவையாக இருக்கலாம். இவை குடிசைத் தொழில்களில் வேலை செய்வோர் மற்றும் பிற அரைப் பாட்டாளி வர்க்கங்களிடையே செல்வாக்கு செலுத்தலாம். சுரண்டப்படுபவர் தமது சொந்த கசப்பான படிப்பினைகளிலிருந்து இந்த நிறுவனங்கள் கொடூரமான முதலாளித்துவக் கட்டமைவின் பிரதிநிதிகள் என்பதையும் அதன் மொத்த உருவங்கள் என்பதையும் அறியும்படியாக அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும். பொதுவுடைமைவாத கிளர்ச்சியின் போக்கில் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை பற்றிய குட்டி முதலாளித்துவ கற்பனைகளுடன் அரசு அதிகார வர்க்கம் மோதுகின்ற அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்தையும் மதிநுட்பமான மற்றும் ஆற்றல் மிக்க முறையில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாட்டுப்புற கட்சி நிறுவனமும் தமது மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், பண்ணை குடியிருப்புகளிலும் – தொலைதூரக் குடியிருப்புகளிலும் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் வேலைகளை தனது உறுப்பினர்களுக்குள் கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

இராணுவத்தினரிடையே வேலை செய்வது

30. தரைப்படை மற்றும் கப்பல் படையினரின் மத்தியிலான பிரச்சார முறைகள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறப்பான நிலைமைகளுக்கு பொருந்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். சாந்தப்படுத்தும் இயல்புடைய இராணுவ எதிர்ப்புக் கிளர்ச்சி மிகமிக கேடு விளைவிக்கக் கூடியதும், பாட்டாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் முயற்சிகளுக்கு உதவக் கூடியதுமாகும். முதலாளித்துவ அரசு எந்திரத்தின் எவ்வகையான இராணுவ நிறுவனங்களையும் பொதுவாக முதலாளித்துவ வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கம் கோட்பாடு அடிப்படையில் நிராகரிக்கிறது. தனது சக்தி அனைத்தையும் கொண்டு எதிர்த்துப் போரிடுகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் வரக்கூடிய புரட்சிப் போர்களுக்கு தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நோக்கத்திற்காக இந்த நிறுவனங்கள் (இராணுவம், துப்பாக்கி சுட பயிற்சியளிக்கும் கிளப்புகள், குடிமக்கள் பாதுகாப்பு நிறுவனம், இன்னபிற) அனைத்தையும் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு எதிராக தீவிரமான கிளர்ச்சிகள் நடத்தக்கூடாது. தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடிய ஒவ்வொரு சாத்தியப்பாட்டையும் நாம் மிக ஆர்வமுடன் நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை: அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு!
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும்!

இராணுவத்தில் வெளிப்படுகின்ற வர்க்கப் பகைமைகளை – பொருளாதார ரீதியில் மிகவும் சாதகமான நிலையில் அதிகாரிகள் இருப்பதற்கு எதிரிடையாக சாதாரணப் படை வீரர்கள் மோசமாக நடத்தப்படுவதையும், சமூக வாழ்வில் உத்திரவாதம் ஏதுமின்றி இருப்பதையும் – படைவீரர்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டியாக வேண்டும். இத்துடன் சுரண்டப்படும் வர்க்கங்களின் தலைவிதியோடு அவர்களது எதிர்காலம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற உண்மையை கீழ்மட்டத்தினர் உணரும்படியாக கிளர்ச்சிகள் இருக்க வேண்டும். புரட்சிக் கொந்தளிப்பு ஆரம்ப நிலைக்கு முந்திய காலத்தில் எல்லா படைத்தலைவர்களும் படை வீரர்களாலும், மாலுமிகளாலும் ஜனநாயகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், படை வீரர்கள் கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி கிளர்ச்சி செய்வதானது, முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களைக் குழிபறிப்பதற்கு மிகவும் சாதகமானதாக விளங்கும்.

முதலாளித்துவ வர்க்கத்தினர் வர்க்க யுத்தத்தில் பயன்படுத்தும் பொறுக்கி எடுத்த படைகளுக்கு எதிராக, குறிப்பாக அதன் தொண்டர் படைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்கையில், மிக நெருக்கமாகக் கண்காணிப்பதும் அதிகபட்சம் கவனம் செலுத்துவதும் எப்போதும் அவசியம்.

மேலும், இந்தப் படைகளின் சமூக சேர்க்கையும் ஊழல்மிக்க நடத்தையும் கிளர்ச்சி நடத்துவதற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் சீர்குலைவுகள் ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். எங்கெல்லாம் இராணுவம் தனது தனிச்சிறப்பான முதலாளித்துவ வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கிறதோ, எடுத்துக்காட்டாக அதன் அதிகாரிகள் பட்டாளத்தில், அங்கெல்லாம் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு அதன் விளைவாய் தனக்குத்தானே சீர்குலைந்து போகுமளவிற்கு அனைத்து மக்களின் முன் அதன் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும். மக்கள் அதனை மிகவும் வெறுக்கும்படியும் எதிர்க்கும்படியும் செய்ய வேண்டும்.

(தொடரும்)


குறிப்பு:

* ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் தொழிற்சங்கத் தலைவர்கள் :
1919 ஜூலையில் ஆம்ஸ்டர்டாமில் இது ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களையும் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனத்தையும் இது உள்ளடக்கி இருந்தது. ஆம்ஸ்டர்டாம் அகிலம் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையை மேற்கொண்டது. முதலாளித்துவத்துடன் வெளிப்படையாகவே கூடிக்குலாவியது. தொழிலாளர் இயக்கத்தில் ஐக்கிய முன்னணியை எதிர்த்தது. சோவியத் யூனியனுக்கு எதிராகப் பகைமையான கண்ணோட்டத்தைக் கடைபிடித்தது. இவைகளின் விளைவாக, தொழிலாளர் இயக்கத்தில் அதன் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது. இரண்டாவது ஏகாதிபத்திய உலகப் போர் சமயத்தில் இந்த அகிலம் ஏறத்தாழ செயலற்றுப் போனது. 1945-ல் உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பு உருவாகியதைத் தொடர்ந்து இது கலைந்து போனது. இந்த அகிலத்தின் தலைவர்கள்தான் ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் தொழிற்சங்கத் தலைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மூணாறு பெட்டி முடி நிலச்சரிவினால் ஏற்பட்ட மரணங்கள், இயற்கைப் பேரழிவு அல்ல, டாடா நிர்வாகம் மற்றும் கேரள அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, 12.08.2020 அன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிர்களுக்கும் தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  • உயிரிழந்த, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வாதார பாதுகாப்பிற்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
  • மாஞ்சோலை, மூணாறு, வால்பாறை, நீலகிரி – என அனைத்துப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
  • தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.

 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !

0

த்திய அரசு கொண்டுவரும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், பெற்றோர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 12/08/2020 அன்று சென்னை கிளையின் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் தலைமையில் சென்னை பாடநூல் கழகம் ( DPI ) பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தேசிய கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல். இந்த கல்விக் கொள்கையால் படிப்பறிவு இல்லாத குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உருவாகக்கூடும். மீண்டும் குலக்கல்வியை கொண்டுவரவும், தொழில் கல்வியை ஊக்குவித்து முதலாளிகளின் லாபத்தை நேக்கத்திற்கு தேவையாக அடிமைகளை உருவாக்கவே இக்கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிராக உள்ளது. எனவே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

படிக்க:
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

தமிழக அரசு இரு மொழி கொள்கையை அமுல்படுதுவோம் என்று உறுதியாக உள்ளது என்றும், இதற்கென ஒரு ஆய்வு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் முடிவு வந்த பின்னர் தங்களது முடிவை அறிவிப்பதாகவும், இந்த மனுவை பரிசீலித்து முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.