Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 274

போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

0

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென எச். ராஜாவும், பொன்னாரும் அனைவரையும் முந்திக் கொண்டு அறிவித்தனர்.

ஊடகங்களும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களென இரண்டு இசுலாமிய இளைஞர்களின் பெயர்களை உச்சரித்தன. அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பில் உள்ளவர்கள் என்று விறுவிறுப்பைக் கூட்டின. இப்போது தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் குற்றப் பின்னணி உள்ள முஸ்லிம் பெயர் தாங்கிய பலரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது. முதலில் கைது செய்யப்பட்டவர்களும் கூட வேறு சில வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களனைவருமே போலீசின் வளையத்தில் எப்போதும் இருப்பவர்கள் என்று அறிய முடிகிறது.

கொலை நடந்த குறிப்பிட்ட சோதனைச் சாவடியின் வழியாக குமரி மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து எடுக்கப்படும் எம்/பி – சேண்ட் பொடிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வெவ்வேறு அளவுகளில் உடைக்கப்படும் பாறைக்கற்கள் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்பட்ட போது ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் பகுதி மக்களுக்கு இருக்கிறது. ஆனால் விசாரணையின் பரப்பெல்லையில் அது வரவில்லை.

இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட திசைவழியில் விசாரணையை கொண்டு செல்ல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கூட்டம், அரசுக்கும் போலீசுக்கும் வழங்கும் அழுத்தங்களை அம்பலமாக்கி உள்ளது. இந்த வழக்கு அதன் தர்க்க முடிவை எட்டுவது பற்றி ஆர்.எஸ்.எஸ் – பிஜேபிக்கு எந்த கவலையும் இல்லை. எவ்வளவு தாமதமாகிறதோ அவ்வளவு காலத்துக்கு இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சலிட முடியும் என்று கருதுகிறது. அநேகமாக குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பிஷப்புக்கு பொன்னார் தொலைபேசி செய்து ஆதரவு தெரிவித்திருப்பார். ‘ஒரு பொய்யாவது சொல்லுங்கள் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு அஞ்சிக் கிடக்கிறோமென; அந்த வாய்ப்பில் ஒரு கலவரத்தை செய்து விடுகிறோம்’ என்று கெஞ்சாத குறையாக தங்கள் சதி நோக்கத்துக்கு கிறிஸ்தவர்களை ஆர்.எஸ்.எஸ் அழைக்கிறது.

எஸ்.எஸ்.ஐ வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இச்சம்பவத்தை பகடையாக பயன்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கெதிராக ஒரு மனநிலையை குமரி மாவட்ட கிறிஸ்தவர்களிடம் வளர்க்க ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியினர் பகுதியளவில் முயன்று வருவது குறித்த எச்சரிக்கை உணர்வு அவசியம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ -க்கள் மற்றும் எம்.பி ஆகியோர் கிறிஸ்தவரான கொலையுண்ட வில்சனை கைவிட்டு விட்டதாக ஆர்.எஸ்.எஸ் ஒப்பாரி வைக்கிறது. மாநில அளவில் இச்சம்பவத்தை வைத்து தமிழகம் முஸ்லீம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டதற்கு உதாரணமாக பொன்னார் ஊடகங்களில் கூறி வருகிறார். இச்சம்பவத்தை பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தார்மீக அடிப்படையில் பலமிழக்க செய்வது எச். ராஜா, பொன்னார் வகையறாவின் திட்டமாக இருக்கிறது.

வில்சன் மரணத்துக்கு ‘நீதி’ கேட்டு ஊர்வலம் போவது, கூட்டங்கள் போடுவதை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தனது அன்றாட அரசியல் நடவடிக்கையாக குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்றி உள்ளது. “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும்” அவலச்சுவையை இந்த போராட்டங்களில் நாம் கண்டுணர முடிகிறது. தம்மிடம் ஆர்.எஸ்.எஸ் கொள்ள விரும்பும் நட்பு தந்திரமும், தற்காலிகமுமானது என்ற புரிதல் கிறிஸ்தவ மக்களிடம் இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

படிக்க :
நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

எஸ்.எஸ்.ஐ வில்சன் வீடமைந்திருக்கும் வெட்டுமணியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நித்திரவிளையில் எட்வின் ராஜ் என்ற கிறிஸ்தவ இளைஞன் தனது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தியதற்காக 2012-ம் ஆண்டு பிஜேபி மாவட்டத் தலைவர் தர்மராஜ் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஏ-1 குற்றவாளியான தர்மராஜுக்கு ஆதரவாக மார்த்தாண்டத்தில் மறியல் செய்தவர் பொன்னார். பின்னர் அந்த நபருக்கு 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த லட்சணத்தில் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி வில்சன் கொலை விவகாரத்தில் தலையிடுவது நீதியின்பாற்பட்டது என்று யார் நம்புவர்?

இசுலாமிய பயங்கரவாத பிரச்சாரத்தை கையிலெடுக்கும் இந்து தீவிரவாதிகள்.

முஸ்லீம்களுக்கு எதிரான  செயல் திட்டத்தில் கிறிஸ்தவர்களை தற்காலிகமாக இணைத்துக் கொள்ள குடியுரிமை திருத்த மசோதாவை ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறி இருப்பதை சாதகமானதாக ரங்கராஜ் பாண்டே போன்றோர் பார்ப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சில தீவிர கிறிஸ்தவர்கள் மத்தியகால சிலுவைப்போர் நினைவுகளை கொண்டிருப்பதோடு அமெரிக்க – ஈரான் போர்ப் பதற்றத்தை கிறிஸ்தவ – முஸ்லிம் நாடுகளின் பிரச்சினையாக பார்க்க முயல்பவர்கள். தவ்ஹீத்-ஜம-ஆத் போன்ற அமைப்புகளில் இருப்பவர்களும் கிறிஸ்தவ நம்பிக்கையின் மும்மைக் கொள்கையை கேலி செய்பவர்கள்.

அடித்தட்டு மக்களிடம் இந்த பார்வைகள் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் அந்த மாற்றத்தை மக்கள் அடைய மதவாதிகள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள் என்பதால் ஒரு விழிப்புநிலை எப்போதும் அவசியமாகிறது. கோவையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் செல்வராஜ் ஓர் கிறிஸ்தவர். அவர் இறந்த பிறகு அவரை இந்துவாக்கி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு பெரும் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். 98–ல் அரங்கேற்றியது. அந்த கசப்பனுபவத்தை நினைவில் கொள்வது நல்லது.

– ராஜ்

சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

0

இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்…

கலையரசன்

ருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, நான் பெல்ஜிய‌ க‌ம்யூனிஸ்ட் தொழிலாள‌ர் க‌ட்சி ஒழுங்கு ப‌டுத்திய‌ கோடை கால‌ முகாமில் ப‌ங்குப‌ற்றி இருந்தேன். அப்போது எம‌க்கு வ‌குப்பெடுத்த‌ க‌ட்சியின் பிர‌தான‌ உறுப்பின‌ர் ஒருவர் பின்வ‌ரும் த‌க‌வ‌லை தெரிவித்தார்:

“பெல்ஜிய‌த்தில் உள்ள‌ இராணுவ‌ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் நெருக்க‌மாக வாழும் ப‌குதிக‌ளை அண்டியே உள்ள‌ன‌. இது ஒன்றும் த‌ற்செய‌ல் அல்ல‌. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற‌ கால‌ங்க‌ளில் தான் எதிரி நாடுக‌ளுட‌ன் யுத்த‌ம் செய்வார்க‌ள்…”

படிக்க :
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !
சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

உண்மையில் இந்த‌த் த‌க‌வ‌ல் அன்று என‌க்கு ம‌ட்டும‌ல்லாது, பல பெல்ஜிய‌ தோழ‌ர்க‌ளுக்கும் நம்புவ‌த‌ற்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. எம‌து ச‌ந்தேக‌த்தை நேரடியாகக் கேட்டோம். அத‌ற்கு அவ‌ர் பின்வ‌ரும் ப‌திலைக் கூறினார்:

“உதார‌ண‌த்திற்கு 19-ம் நூற்றாண்டின் இறுதிப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ பாரிஸ் கம்யூன் புர‌ட்சியை எடுத்துப் பாருங்க‌ள். அந்த‌ நேர‌த்தில் “ஜென்ம‌ விரோதிக‌ளான‌” பிரெஞ்சு இராணுவ‌மும், ஜெர்ம‌ன் இராணுவ‌மும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌.

பாரிஸ் க‌ம்யூன் புர‌ட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜெர்ம‌ன் இராணுவ‌மும், பிரெஞ்சு இராணுவ‌மும் தமது “ஆயிர‌ம் வ‌ருட‌ கால‌” ப‌கைமையை ம‌ற‌ந்து ஒன்று சேர்ந்து விட்ட‌ன‌.

முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த்.

அன்று “எதிரி” நாட்டுப் ப‌டைக‌ளின் ஒத்துழைப்பு இருந்த‌ ப‌டியால் தான், பிரெஞ்சு இராணுவ‌ம் இல‌குவாக‌ பாரிஸ் புர‌ட்சியை ந‌சுக்க‌ முடிந்த‌து. அது முடிந்த‌ பின்ன‌ர் இர‌ண்டு நாட்டுப் ப‌டைக‌ளும் வ‌ழ‌மை போல‌ மீண்டும் யுத்த‌திற்கு திரும்பிச் சென்று விட்டன.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள‌ வேண்டிய‌ பாட‌ம் ஒன்றுள்ள‌து. இந்த முத‌லாளித்துவ‌ தேச‌ங்க‌ள் ஒன்றையொன்று விழுங்கும் அள‌வு ப‌கைமை பாராட்டினாலும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சி ந‌ட‌க்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்க‌ள்.”

இந்தியாவில் புதிதாக‌ முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த் “இராணுவ‌த்தைக் க‌ண்டு ம‌க்க‌ள் அஞ்ச‌ வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். இத‌ன் மூல‌ம், எதிரி நாடான‌ பாகிஸ்தானுட‌ன் யுத்த‌ம் செய்வ‌தை விட‌, சொந்த‌ நாட்டில் புர‌ட்சி ஏற்ப‌ட‌ விடாம‌ல் த‌டுப்ப‌து தான் இந்திய‌ இராணுவ‌த்தின் த‌லையாய‌ ப‌ணி என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லி இருக்கிறார்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !

CAA, NRC, NPR -க்கு எதிராக திருவண்ணாமலையில் திரண்ட மக்கள் !

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றின் பேராபத்துகளைப் புரிய வைப்பதற்காகவும், இவற்றை எதிர்த்துப் போராடுவதன் அவசியம் குறித்து விளக்குவதற்காகவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.

thiruvannamalai prpc Conferenceமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சு.கண்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் இராம. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் துரை பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் ஜோதி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஞானவேல், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநிலப் பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் பொன். சேகர் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ஐ. சேகர் நன்றி கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு இந்திய மக்கள் மிகப் பெறும் துயரங்களை சந்தித்து வரும் வேளையில் அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரானப் போராட்டம்.

படிக்க:
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
♦  அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள், இரயில்வே உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, நீட் போன்ற தேர்வுகள் மூலம் உயர் கல்வி உரிமை பறிப்பு, புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி முறையை புகுத்துதல், இந்தி – சஸ்கிருதத் திணிப்பு, தேசிய இன ஒடுக்குமுறை, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு மூலம் பார்ப்பன மேலாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிப்பு, காஷ்மீருக்கான 370 சிறப்புத் தகுதி நீக்கம், அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு அநீதி என அடுக்கடுக்கான மக்கள் விரோதச் செயல்களை மோடி-அமித்ஷா கும்பல் நேரடியாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் அரங்கேற்றி வருகிறது.

தற்பொழுது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள், பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்போர் என பலரையும் குடியுரிமையற்றவர்களாக்கி அவர்களை முகாம்களில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்தியாவில் வாழுகிற மக்கள் – அவர்கள் அகதிகளாக இருந்தாலும் சமமாக நடத்தப்பட்ட வேண்டும்; அவர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு. ஆனால் இதற்கு மாறாக ஒருசாராரை ஏற்றுக் கொள்வதும் மற்றொரு சாராரை ஒதுக்குவதும் இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 14, 17 மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிரானது; பாரபட்சமானது; தீண்டாமை நோக்குடையது.

பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுதற்காகவும், தங்களது அகண்ட பாரதம்-இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதற்காகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். அதன் ஒரு பகுதிதான் மோடி-அமித்ஷா கும்பல் நடைமுறைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி இவற்றை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைவர்கள் பேசினார்கள்.

ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் மூலம் இக்கருத்தரங்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் திருவண்ணாமலை மக்களிடையே CAA, NRC, NPR குறித்து ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்வத்தோடு பலரும் கலந்து கொண்ட அரங்கு நிறைந்த இக்கருத்தரங்கம் திருவண்ணாமலை மக்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை.

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை ! பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை !

ப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேலும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.

அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.

படிக்க :
♦ தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
♦ கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஷ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். ஆவணங்கள் கேட்கிறார்கள். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள், நீங்களாக போர் புரிந்தீர்கள், எங்களைச்சுற்றி நீங்களாக எல்லைகளை மாற்றிக் கொண்டீர்கள். இப்போது மட்டும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ஆவணங்களை..? என்று கேட்டேன்.

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முகாமுக்கு போகச்சொல்கிறார்கள். வேறு வழி என்ன இருக்கிறது. சரி என்று சொல்வதைத்தவிர..?

நன்றி : Samsu Deen Heera முகநூல் பதிவிலிருந்து…

disclaimer

கனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 06

புதுக் கோட்டு இல்லாமல் தீராது என்பதை அப்போது தான் அக்காக்கிய் உணர்ந்தான். அவன் இதயத் துடிப்பு நின்றது போல் ஆகிவிட்டது. எப்படித் தைத்துக்கொள்வது? எதைக் கொண்டு? எந்தப் பணத்தால்? விழாக் கால சிறப்பூதியம் ஒருவேளை கிடைக்கலாம் என்பது உண்மையே. ஆனால் அந்தப் பணத்தைத்தான் முன் கூட்டியே பங்கீடு செய்து ஒதுக்கி வைத்தாகி விட்டதே. புதுக் காற்சட்டை வாங்காமல் முடியாது; அப்புறம் பழைய காலணிகளுக்குப் புதிதாக மேல்தோல் தைத்துக்கொடுத்த செம்மானுக்குக் கடனைத் தீர்த்தாக வேண்டும்; தையல்காரியிடம் மூன்று சட்டைகளும், பெயர் குறிப்பிட முடியாத உள்ளாடைகளும் தைக்கக் கொடுக்க வேண்டும்; ஆகமொத்தம் போனஸ் பணம் பூராவும் ஒரு காசு பாக்கியில்லாமல் செலவழித்தாக வேண்டும். ஒருவேளை இயக்குநர் பெரிய மனது பண்ணி விழாக்கால போனஸ் தொகையை நாற்பதுக்குப் பதில் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது ரூபிள் ஆக்கினார் என்றே வைத்துக் கொண்டாலுங்கூட, மிஞ்சுவது என்னவோ, மேல்கோட்டுக்கு வேண்டிய முதலோடு ஒப்பிட்டால் கடலில் துளி போலச் சொற்பந்தானே.

பெத்ரோவிச் சில வேளைகளில் வெறி கொண்டவன் போல அளவு மதிப்பில்லாமல் வாய்க்கு வந்த விலையைச் சொல்லிவிடுவான் என்பது அவனுக்குத் தெரியும். தையல்காரனின் மனைவிகூட, “எய், மூளை புரண்டுபோச்சா, கேட்கிறேன், மடையா! மற்றச் சமயங்களில் அடிவிலைக்குச் செய்து கொடுக்க ஒத்துக் கொள்றே. இப்ப என்னடான்னா உன் பெறுமானத்துக்கும் அதிகமான தொகையைக் கூசாமல் கேட்கிறே!” என்று விளாசுவாள். இதெல்லாம் அக்காக்கிய் அறிந்தது தான். எண்பது ரூபிளுக்குக் கோட்டு தைத்துக்கொடுக்க பெத்ரோவிச் இணங்குவான் என்பதை அவன் அறிந்திருந்தான். இருந்த போதிலும், எண்பது ரூபிளுக்கு எங்கே போவது? இந்தத் தொகையில் பாதி வேண்டுமானால் கிடைக்கும்: பாதித் தொகையைச் சிரமமின்றித் தேடிவிடலாம். ஒருவேளை பாதித் தொகைக்குக் கொஞ்சம் கூடுதலாகவே கிடைத்துவிடும். மற்றப் பாதிக்கு எங்கே போவது?

பாதித் தொகை எங்கிருந்து கிடைக்கும் என்பதை வாசகர்கள் முதலில் தெரிந்துகொள்வது அவசியம்.

செலவழிக்கும் ஒவ்வொரு ரூபிளிலும் அரைக்காசை, பூட்டிய உண்டியல் பெட்டியில் போட்டு வைப்பது அக்காக்கியின் வழக்கம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சேர்ந்த செப்புக் காசுகளையெல்லாம் வெள்ளி நாணயங்களாக மாற்றிக்கொள்வான். இப்படி அவன் நீண்ட காலமாகச் சேர்த்துவந்த படியால், பல ஆண்டுகளில் நாற்பது ரூபிளுக்கும் மேலே சேர்ந்துவிட்டது. ஆகவே தேவைப்பட்ட தொகையில் பாதி அவன் கையிலிருந்தது; ஆனால் மறு பாதிக்குப் போவதெங்கே? இன்னும் நாற்பது ரூபிள் எங்கிருந்து கிடைக்கும்?

அக்காக்கிய் திரும்பத் திரும்ப யோசனை செய்தபின், குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சாதாரணச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்; அதாவது மாலை நேரத் தேநீரை நிறுத்த வேண்டும்; இரவில் மெழுகுவத்தி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், வேலை இருந்தால் வீட்டுச் சொந்தக்காரியின் அறைக்குப் போய் அவளது விளக்கு வெளிச்சத்தில் செய்ய வேண்டும்; தெருவில் போகும் போது, காலணி அடிப்பாகம் சீக்கிரம் தேய்ந்து விடாமலிருக்க கூழாங்கல்லோ தட்டைக்கல்லோ பாவிய இடங்களில் முடிந்த வரை மெதுவாக அடி வைத்து, நுனிக்காலால் நடப்பது போல நடக்க வேண்டும்; துணிகளை அபூர்வமாக எப்போதாவது தான் வெளுக்கப் போட வேண்டும்; அவை நைந்து விடாமலிருக்கும் பொருட்டு, ஒவ்வொரு தடவையும் வீடு திரும்பியதுமே அவற்றைக் களைந்துவிட்டு, ட்வில் அங்கியை மட்டுமே (காலமே இரக்கங்கொண்டு விட்டு வைத்திருந்த மிகப் பழைய ஆடை இது) அணிய வேண்டும் என நிச்சயித்தான்.

உண்மையாகச் சொன்னால், அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு இம்மாதிரி கட்டுச் செட்டாக இருப்பது முதலில் மிகவும் கஷ்டமாகத் தானிருந்தது; பின்னால் அவனுக்குப் பழக்கமாகிவிடவே எல்லாம் சுளுவாய்ப் போயிற்று; மாலையில் பட்டினி கிடப்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை, ஏனெனில் அவனது எண்ணங்களெல்லாம் வரப்போகும் மேல்கோட்டைப் பற்றிய யுக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாலேயே நிறைந்திருந்தபடியால் ஆன்மீக உணவு அவனுக்கு ஏராளமாகக் கிடைத்துவந்தது. தன்னுடைய வாழ்வே முன்னைவிட இப்போது அதிக முழுமை பெற்றது போலவும் தான் மணந்து கொண்டுவிட்டது போலவும் தன் அருகே யாரோ இருப்பது போலவும் தான் தனியாள் அன்று என்பது போலவும் அன்புக்குகந்த தோழி ஒருத்தி தனது வாழ்க்கைத் துணைவியாக இணங்கி விட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது – இந்தத் தோழி வேறு யாருமல்ல, கனமாகப் பஞ்சு வைத்து, என்றுங் கிழியாதபடி அழுத்தமான உள்துணி கொடுத்துத் தைத்த அதே மேல்கோட்டுத்தான்.

படிக்க :
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

அவன் முன்னைக் காட்டிலும் அதிகக் குதூகலமாகவும், திட்டவட்டமான லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி முன்னேறுகின்ற சுபாவத்தில் அதிக உறுதியுடனும் விளங்கினான். அவன் முகத்திலிருந்தும் செயல்களிலிருந்தும் ஐயப்பாடும் நிச்சயமின்மையும், சுருக்கமாகச் சொன்னால் அவன் சுபாவத்திலிருந்த உறுதியற்ற ஊசலாட்டமெல்லாம் தானாகவே மறைந்து போயிற்று. சிற்சில சமயம் அவன் விழிகளில் ஒளிசுடரும், மூளையில் மிகமிக அடாத, துணிகரம் நிறைந்த கருத்துகள் மின்வெட்டுப் போலப் பளிச்சிடும். அதாவது, மார்ட்டன் மென்மயிர்த் தோல் காலருக்கே ஆர்டர் கொடுத்து விட்டால் என்ன என்று. புது மேல்கோட்டைப் பற்றிய இந்தச் சிந்தனைகள் எல்லாம் அலுவலக வேலையில் அவன் மனம் அநேகமாக ஈடுபடாதவாறு அடித்து விட்டன. விளைவாக ஒரு முறை ஓர் ஆவணத்தை நகலெடுக்கையில் பிழை செய்ய இருந்து “ஐயையோ!” என்று உரக்கக் கத்தி, சிலுவைக் குறி இட்டுக்கொண்டான். மாதம் ஒரு முறையாவது பெத்ரோவிச்சைச் சென்று கண்டு, மேல் கோட்டைப் பற்றியும், துணியை எங்கே வாங்குவது நல்லது, எந்த நிறத்தில், என்ன விலையில் என்றெல்லாம் சர்ச்சை செய்து விட்டு, முகத்தில் ஓரளவு கவலை தென்பட்ட போதிலும், விரைவில் இதையெல்லாம் வாங்கி விடுவோம், மேல் கோட்டு தயாராகிவிடும் என்ற மனத் திருப்தியுடன் வீடு திரும்புவான்.

குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சாதாரணச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்; அதாவது மாலை நேரத் தேநீரை நிறுத்த வேண்டும்; இரவில் மெழுகுவத்தி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், தெருவில் போகும் போது, காலணி அடிப்பாகம் சீக்கிரம் தேய்ந்து விடாமலிருக்க கூழாங்கல்லோ தட்டைக்கல்லோ பாவிய இடங்களில் முடிந்த வரை மெதுவாக அடி வைத்து, நுனிக்காலால் நடப்பது போல நடக்க வேண்டும் …

உண்மையில் அவன் கனவு கண்டதை விட வெகு முன்னதாகவே எல்லாம் நடந்தேறியது. அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக இயக்குநர் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு நாற்பதோ நாற்பத்தைந்தோ அல்ல, முழுதாக அறுபது ரூபிள் போனஸ் வழங்கினான்! இவனுக்கு மேல் கோட்டு தேவை என்பதை இயக்குநர் ஊகித்துக்கொண்டானா தற்செயலாக இப்படி நிகழ்ந்ததா, தெரியாது. எப்படியோ இந்த வகையில் மட்டுமே அதிகப்படியாக இருபது ரூபிள் கிடைத்து விட்டது. இது வேலையைத் துரிதப்படுத்தியது. மேற்கொண்டு இரண்டு மூன்று மாதங்கள் குறைப் பட்டினியாகக் கழித்தபின் அவனிடம் ஏறக்குறைய எண்பது ரூபிள் உண்மையாகவே சேர்ந்து விட்டது. சாதாரணமாக நிம்மதியாயிருக்கும் அவன் நெஞ்சு படபட வென்று அடித்துக்கொண்டது. மறுநாளே பெத்ரோவிச்சையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனான். மிக அருமையான துணி வாங்கினார்கள். இதில் வியப்பொன்றுமில்லை: ஆறு மாதங்களுக்கு மேலாக முன்யோசனை செய்து, மாதந்தவறாமல் கடைகளில் சுற்றிப் பார்த்து விலையை நிதானப்படுத்திக் கொண்ட விஷயமாயிற்றே இது! இதன் விளைவாகத்தான், பெத்ரோவிச்சே கூறினான்: “இதைக் காட்டிலும் உயர்வான துணி கிடையவே கிடையாது”. உள்ளே கொடுத்துத் தைப்பதற்குக் காலிக்கோதான் என்றாலும் நல்ல ரகத்தில் உறுதியான துணி வாங்கினார்கள். அது பட்டைவிட எவ்வளவோ மேல் என்றும் உண்மையாகவே பார்வைக்கு அதிக எடுப்பாகவும் மழமழப்பாகவும் இருக்கிறதென்றும் பெத்ரோவிச் சொன்னான். மார்ட்டன் மென்தோல் மெய்யாகவே கிராக்கி ஆனபடியால் அவர்கள் அதை வாங்காமல் அதற்குப் பதிலாக, கடைவீதியில் உள்ளவற்றுள் மிகமிக உயர்வான பூனைத் தோலை – தூரப் பார்வைக்கு மார்ட்டன் போலவே காணப்படும் – வாங்கிக் கொண்டார்கள். பெத்ரோவிச் இரண்டே வாரங்களில் தைத்து முடித்துவிட்டான் – அதுவும் ஏகப்பட்ட பஞ்சுப் பற்றை உள்ளே கொடுக்க வேண்டி இருந்தது, இல்லாவிடில் இன்னும் முன்னதாக முடித்திருப்பான். தன் வேலைக்குக் கூலியாகப் பன்னிரண்டு ரூபிள் வாங்கிக் கொண்டான் – கூலியை மேலும் குறைப்பதற்கு வழியே இல்லை; மெல்லிதாக இரட்டை மடிப்புக் கொடுத்து முழுதும் பட்டு நூலால் தைத்து, அப்புறம் ஒவ்வொரு மடிப்பையும் பற்களால் அழுத்திச் சீர்படுத்தி, மடிப்புக்களின் மேல் பலவிதத் தடங்களைப் பதிய வைத்திருந்தான் பெத்ரோவிச்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !

240 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் காலத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துவங்கங்கப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடந்த 5 ஆண்டுகள் முன்னர் வரை பன்மடங்கு வளர்ந்து, பல்கிப் பெருகியது. ஆனால், பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து ஐந்தே ஆண்டுகளில், 140 தோல் பதனிடும் நிலையங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. (இஸ்லாமியர்களின், சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை, மாடு வெட்டுவதைத் தடை செய்தது மூலம் இந்தத் தொழில் நேரடியாக பாதிப்புக்குள்ளானது)

வரலாற்றுப் பின்னணி:

1778-ல் கிழக்கிந்தியக் கம்பெனி கான்பூரில் அடியெடுத்து வைத்தபோது, தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலைகள் பில்க்ராம் எனும் நகரில் முகாமிட்டிருந்த அவர்கள், அவத் நவாப் அனுமதியுடன் தங்களது இராணுவ முகாமை கான்பூருக்கு மாற்றினர். அந்த ஊரின் தலித் சமூகத்தைச் சேர்ந்த கைவினைஞர்களைக் கொண்டு தங்கள் குதிரைகளுக்குச் சேணம், பிற தோல் பொருட்கள் தயாரிப்பும் செய்தனர்.

முகாமிட்ட 20 ஆண்டுகளில், அதாவது, 1798-க்குள், கான்பூர் மொத்தமும் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தோல் தொழிலும் செழித்து வளர்ந்தது. அதில் குறிப்பாக மஷ்க் எனப்படும் பொருள் (தண்ணீர் எடுத்துச் செல்லும் தோல் பை) தோல் பதனிடும் தொழிலை வளர்த்தது. பபூல் மரப்பட்டைகளை வைத்துத் தோலை பதனிட்டு வந்தனர். 1840ல், கான்பூரில் தயார் செய்யப்பட்ட சேணம், இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1857 கலகத்துக்குப் பின், ராணி விக்டோரியாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொழில் கொழித்து வந்த சமயம், 1859-ல் கர்னல் ஜான் ஸ்டீவார்ட் என்பவரால் முதல், அரசு சேண மற்றும் கவச தொழிற்சாலை நிறுவப்பட்டது. விரைவிலேயே, கூப்பர் ஆலன், போன்ற நிறுவனங்களும் முளைத்தன.

1902-ல் முதல் தோல் தொழிற்சாலை, ஜஜ்மாவில் தொடங்கப்பட்டு வளர்ந்தது. தொடக்கத்தில் அவை அனைத்துமே இஸ்லாமியர்கள் வசம் இருந்தது. பிறர், துணி / மாவு மில் / சணல் போன்ற தொழிலைச் செய்துவந்தனர். இந்த அதிவேக வளர்ச்சி, கான்பூரை கிழக்கின் மான்செஸ்டராக மாற்றியது.

நையேர் ஜமால் என்பவர் தனது பரம்பரைத் தொழிலான தோல் பதனிடும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்தார். ஆனால் இன்றோ அவர் வேலையின்றி, தனது சக தொழில் செய்வோருடன் கூடி தம் தொழில் நசிந்து போனது பற்றி புலம்பி வருகிறார். 1947, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 13 பதனிடும் தொழிற்சாலைகளே இருந்தன. 1995ல் 175 ஆகவும், பின்னர் 402 ஆகவும் உயர்ந்தது. கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட நசிவு காரணமாக, 260 தொழில் நிலையங்களே உள்ளதாக ஜமால் கூறுகிறார்.

விவாதப் பொருளும் அதன் விளைவுகளும் :

ப்ரயாக்ராஜில் 2019 கும்பமேளாவில், பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவர். தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கங்கையில் கலப்பது, விழாவை பாதிக்கும் என்று கூறி, மார்ச் 2019க்குள் 250 தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவிட்டது. (கங்கை சுத்திகரிப்புக்கு ஒதுக்கிய நிதி பற்றிப் பேசினால் நாம் தேச விரோதி) வழக்கமாக, கும்பமேளா முடிந்த பிறகு மீண்டும் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். இம்முறை அவ்வாறு நடக்கவில்லை. இதற்கு மேல் கான்பூரில் தொழில் நடத்துவது சாத்தியமில்லையென, தோல் தொழில் முதலாளிகள் மேற்கு வங்கத்துக்குக் குடிபெயர்வது பற்றி யோசித்து வருகின்றனர். மேற்கு வங்க அரசு தோல் தொழில் நடத்த உகந்த கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும், இழந்த வாழ்வை மீட்க அது உதவும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

தொழில் முடக்கத்தால் 3000 கோடி நட்டமடைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கான்பூர், ஏற்றுமதி மூலம், 6000 கோடி வருவாய் ஈட்டி வந்தது. தொழிலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை, பழைய ஆர்டர்களையும் முடிக்க இயலவில்லை. ஹாங்காங்கில் நடைபெறும் தோல் கண்காட்சிக்கு மாதிரிகளை அனுப்பக்கூட முடியாத துயரமான சூழல் நிலவுகிறது. வருடத்துக்குப் 12000 கோடி வருவாய் ஈட்டித் தந்தது கான்பூர்! (இன்று அதில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் பிழைப்பதே பெரிய காரியமாகிவிட்டது)

தொடர்ந்து இயங்குவதில் மிகக் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வரும், கான்பூரின் ஜஜ்மாவு நகர, தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தங்களிடம் இருக்கும் பதனிடப்படாத தோலை, உன்னாவோ நகரில், இயங்கும் நிலையில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கின்றன. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 முதல் 20 லட்சம் மதிப்புள்ள ட்ரம்கள், இயங்காமல் இருந்தால் கெட்டுப்போகும். அவை வங்கிக்கடன் மூலம் வாங்கப்பட்டவை. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இவை ஏலம் போகும் நிலை ஏற்படும். (இப்படி பாடுபட்டுக் கட்டும் வங்கிக் கடன்கள் பெரு முதலாளிகளின் கைக்கிப் போய் சேர்ந்து இறுதியில் வராக்கடன்களாகி வங்கிகளையே திவாலாக்குகின்றன).

எஞ்சியுள்ள தோலை ஏலம் போட்டு வங்கிகள் தமக்குச் சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொள்கின்றன. ஜஜ்மாவு தொழிற்சாலைகள் மட்டும் ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. தொழில் நட்டமடைந்த நிலையில், அதில் வேலை செய்து வந்த பல தொழிலாளிகளும் பிழைப்புத் தேடிப் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். 1000 கோடி அளவிலான வெளி நாட்டு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டன.

(ஆக, மோடியின் வெளி நாட்டுப் பயணங்களால் விளைந்த ‘நன்மை’ இவைதான் போலும்!)

தற்போதைய நிலை:

தோல் தொழில் முதலாளிகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு மே 23, 2019 அன்று நீதிமன்றத்துக்கு வருவதாகத் தகவல் வந்தது. தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய அம்மாநில அரசு, 225 தொழிற்சாலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தது. இதை எதிர்த்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையைப் பல மணி நேரம் மறித்துப் போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்கள் கல்லெறிவதைத் தடுக்கவும், கூட்டத்தைக் கலைக்கவும் போலீஸ் தடியடி நடத்தியது.

தொழிற்சாலை வளாகத்தில் பல குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ரமலான் மாதத்தில் இப்படியான நடவடிக்கை மிகுந்த சிரமத்தை தருமெனவும் கூறினர். திசம்பர் மாதம் முதல் 225 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 28 ஆலைகள் பாதித் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. ஆலைக் கழிவுகள் கான்பூரிலிருந்து அலகாபாத் சென்று கங்கையில் கலக்க 3 நாட்கள் ஆகும். எனவே, ஷாஹி ஸ்னான் எனப்படும் கும்பமேளா புனித நீராடலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தாங்களே ஆலையை மூடிவிடுவதாகக் கூறுகின்றனர், ஆலை முதலாளிகள்.

தொழிற்சாலை நடத்துவோர், உ.பி ஜல் நிகாம், பசுமைத் தீர்ப்பாயம் ஆகியன இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன. இதில் பிரதான புகார் கங்கை அசுத்தமாவது தான். (2014 – 2019 கங்கையைத் தூய்மை செய்யும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் ஊழல் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்). அனைத்து ஆலைகளும் ஒரு நாளைக்கு 6 மில்லியன் லிட்டர் கழிவை வெளியேற்றுகிறது. முதலில் இந்தக் கழிவுகள் ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு, வஜித்பூரில் இருக்கும் பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கு (CTEP) அனுப்பப்படுகிறது. அதன் பின்னரே அது கங்கையில் கலக்கிறது.

தொழிற்சாலை நடத்துவோரும், ஜல் நிகாமும் இணைந்து நடத்துவது தான் CTEP. ஆலைகள் கழிவு சுத்திகரிப்புக்கு மாதாந்திர தொகை கொடுக்கின்றனர். அதன் மொத்தத் திறன் 36 மில்லியன் லிட்டர் ஆகும். இது உ.பி ஜல் நிகாம் எனப்படும் மாநில அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தோல் தொழிற்சாலைகள் அதன் முழு திறன் அளவுக்குக் கழிவு நீரை வெளியேற்றாமல் அது எப்படி நிறைகிறது? என்று ஒரு கேள்வி வருகிறது. மற்ற ஆலைகள், குடியிருப்புப் பகுதியிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் இதில் கலந்தாலும், தோல் தொழிலே குறி வைத்து தாக்கப்படுகிறது.

அரசியல் விளையாட்டு :

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, “பெக் பாக் விரைவில் காணாமல் போகும்”. அது உண்மையாகி வருகிறது. ஏற்கெனவே பல கடைகள் துணிக்கடைகளாக மாறிவிட்டன. அந்தக் கழகத்தில் இருந்த 500 உறுப்பினர்களில் பாதிப் பேர் தொழிலை விட்டு நீங்கிவிட்டனர். மற்றவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். வாரம் ஒருமுறைதான் தோல் வந்து இறங்குகிறது. விலையும், ஒரு லோடு 15 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. பாதிக்குப் பாதி விலை வீழ்ந்த நிலையில், குறைந்தபட்சம் போட்ட முதல் கூட திரும்பப் பெற முடியாததால், தொழிலைத் தொடர்வது சாத்தியமில்லை என்கின்றனர்.

கான்பூர் வாசியான, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, டாக்டர். இம்ரான் ஐட்ரிஸ் கூறும்போது, இத்தொழிலில் பிரதானமாக இஸ்லாமியரே ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பெரும்பாலானோர் தலித்துகள். தொடக்கம் முதலே, கால்நடைகளின் தோலைத் தொட்டு வேலை செய்ய இந்த இரு பிரிவினரே முன் வந்தனர். ஏனையோருக்கு மத ரீதியான ஒரு ‘புனிதத்துவம்’ இத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் தமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்த பா.ஜ.க., இத்தொழிலை நலிவடைய வைத்தது. அதற்கு கங்கையின் புனிதமும், பசு புனிதமும் முன்னிறுத்தப்பட்டது.

இதன் விளைவுகள் தொலைதூர கிராமங்களிலும் பிரதிபலிக்கின்றன. செத்த மாட்டுத் தோலை உறிப்பது தலித்துகள் தான். தோலை உறித்து எடுத்து வரும்போது தாக்கப்படுவோமென அஞ்சி அதை செய்யாமல் தவிர்க்கின்றனர். அதனால் நிவர்த்தியின்றி தொழில் முடங்கிவிட்டது.


மொழிபெயர்ப்பு:
பிரியா
நன்றி : சப்ரங் இந்தியா
new-democrats தளத்தில் வெளியான கட்டுரை.

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் (FATTY LIVER)  என்றால் என்ன ? – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் !

பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய ஆணோ, பெண்ணோ
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக தென்படும் “ஃபேட்டி லிவர்” என்ற கண்டுபிடிப்பு.

இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில் Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த “கல்லீரலில் கொழுப்பு ஏறிய நிலை” நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால் இது நார்மல் என்று ஆகிவிடாது.

நம் உடலுக்குள் நேரும் வளர் சிதை மாற்றக்குளறுபடியால் (metabolic syndrome) கல்லீரல் அடிவாங்குகிறது என்பதும். அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயை கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. எதற்கும் அசையாத ஒரு உறுப்பு. தான் உண்டு. தன் வேலையுண்டு என்று வேலை பார்க்கும்.

அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது.
கல்லைக்கூட செரிமானம் செய்யக்கூடியது. ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த கல்லீரல் கொழுப்பு படியும் நோய்.

இரண்டு நிலைகளில் நம் கல்லீரலில் கொழுப்பு படியும்.

முதல் நிலை – மது அருந்துபவர்களுக்கு நேருவது.

இதை Alcoholic Fatty liver என்போம். தமிழகத்தின் முன் டாஸ்மாக் காலத்தில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் என்று மருத்துவர் கண்டறிந்தால் அவர் நிச்சயம் அவ்வப்போது மது அருந்துபவராகவே இருப்பார். மதுவால் கல்லீரலின் செல்கள் பழுதாகி அதில் குளறுபடி ஏற்பட்டு கொழுப்பு படியும் நிலை.

ஆனால் இதன் இரண்டாவது நிலை – மது அருந்தாதவர்களுக்கும் வர ஆரம்பித்து விட்டது.

இதை Non Alcoholic Fatty liver disease என்று தனிப்பெயரிட்டு அழைக்கிறோம். சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டுதான் போனேன்.

படிக்க :
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
♦ ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !

கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா?

கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. நல்லதன்று, நிச்சயம் கெட்டது. இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக்கொள்வோம்.

எதனால் கல்லீரலில் கொழுப்பு சேர வேண்டும்?

கல்லீரலின் பிரதான வேலைகளில் சில:

  • க்ளூகோசை கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது.
  • லைபோ புரதங்களை உருவாக்குவது.

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யுங்கள். ஒரு கிலோ மாவு கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார். மீதமான மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது அம்மாவுக்கு தெரியும்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்க தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..!

ஆனால் அடுத்தநாள் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??

இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும்.

இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!

ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்.

மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். அது வரம்பு மீறி சென்றால் நம் கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும்.

மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல.

உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை / பால் போன்றவற்றை நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு / கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை முற்றும்.

இதன் படிநிலைகள் (grades) பின்வருமாறு:

அல்ட்ரா சவுண்ட ஸ்கேன் என்பது நுண் ஒலி அலைகளை பீய்ச்சி அந்த அலைகள் நம் உள்ளுறுப்புகள் மேல் பட்டு பிரதிபலிக்கும் பிம்பத்தைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை-சாம்பல் (white-grey) நிற படங்களை வைத்து உருவாக்குவது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், கல்லீரல் தான் நடுநிலை நாயகம். அதாவது கல்லீரலின் பிம்பம் தான் நடுநிலை.

கல்லீரலை விட குறைவாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hypoechogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட அதிக பழுப்பு (more greyer than liver) நிறத்தில் இருக்கும்.

கல்லீரலை விட அதிகமாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hyper echogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட குறைந்த பழுப்பு நிறத்தில் (less greyer) இருக்கும்.

ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால், இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும்.

இதில் Grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை.

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein) இது அடுத்த கட்டம்.

Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது. இது முற்றிய நிலை.

படிக்க :
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
♦ 60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !

இந்த கல்லீரிலில் படியும் கொழுப்பானது பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம். (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதன் செல்லப் பெயர் NASH.

மேலும் கல்லீரலில் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் , கல்லீரல் விரிந்து விரிந்து ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது.

இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய் (HEPATO CELLULAR CARCINOMA) அல்லது கல்லீரல் செயலிழப்பு (LIVER FAILURE) வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.

நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில் மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும். ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை.

நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்…

குழந்தைகள் எதை உண்ண வேண்டும். எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஃபேட்டி லிவரை ரிவர்ஸ்/ சரி செய்ய இயலும்.. எப்படி??

ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா. பிரச்சினை மாவுச்சத்து அடங்கிய குப்பை உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. அதை உடனே நிறுத்த வேண்டும். இனிப்பு சுவை தரும் அனைத்து பொருட்களையும் நிறுத்த வேண்டும்.

குறை மாவு நிறை கொழுப்பு உணவுக்கு மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

எப்படி????

1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.

2. இந்த உணவு முறையில் உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து காணாமல் போய் விடும்.

3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும்.

முடிவாக :

உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள்.

அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள்.

ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது.

எதைத்தின்றதால் அது வந்ததோ அதை நிறுத்த வேண்டும்.

முடிவுரை :

முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஃபேட்டி லிவர் “குறை மாவு நிறை கொழுப்பு (பேலியோ)” உணவுமுறையால் கட்டுப்படும். இந்த முடிவுரையை தங்களுக்கு நல்அறிவுரையாக ஏற்பது அவரவர் தம் சுயவிருப்பம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

அவர்கள் வருகிறார்கள்

வர்கள் உன் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்
அவர்கள் என் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்
அவர்கள் நம் வீடு நோக்கித்தான்
வந்துகொண்டிருக்கிறார்கள்

ஒவ்வொரு முறையும்
அதுதான் அவர்கள் கடைசி இலக்கு
என்று நம்புகிறீர்கள்
இல்லை
அவர்கள் ஒவ்வொரு அரணாக
தகர்த்துக்கொண்டு வருகிறார்கள்
கைபர் கணவாயின் வழியாக
முதல் ஊருடுவல் நிகழ்ந்தது
பிறகு அவர்கள் ஒருபோதும்
வீடு திரும்பவே இல்லை

அவர்கள் முதலில்
தேசத்தின் எல்லைகளை ரத்த ஆறுகளால் வரையறுத்தார்கள்
பிறகு வழிபாட்டிடங்களை இடித்தார்கள்
பிறகு கர்ப்பத்திலிருக்கும் சிசுவை
வாளால் கீறி எடுத்தார்கள்
பிறகு ஓவியக்கூடங்களில் ஓவியங்களை எரித்து
ஓவியனை நாடு கடத்தினார்கள்
பிறகு கலவரத்தில் ‘ மற்றவர்களின்’ கடைகளை உடைத்து
பொருள்களை திருடினார்கள்
பிறகு ‘ மற்ற ‘ பெண்களின் ஆடைகளை பலவந்தமாக களைந்தார்கள்
பிறகு சிந்தனையாளர்களை துப்பாக்கியால்
தெருவில் வைத்து சுட்டார்கள்
பிறகு நீதிக்கு போராடுகிறவர்களை
தேசவிரோதிகள் என சிறைக்கு அனுப்பினார்கள்
பிறகு மாட்டு மாமிசம் உண்பவர்களின்
மாமிசத்தை உண்டார்கள்
இப்போது கல்விக்கூடங்களில்
முகமூடியணிந்து ஆயுதங்களுடன் நுழைகிறார்கள்

ரத்தம் சிந்தும் புகைப்படங்கள்
பரவலாகக் காணக்கிடைக்கின்றன
நாசிகளின் புதிய குழந்தைகள்
கடைவாயில் கோரைப் பற்களுடன்
சிரிக்கும் புகைப்படங்களும் கிடைக்கின்றன
அவர்களுக்கான எதிர்ப்பின் காணொளிகளும்கூட
கிடைக்கின்றன
கோபத்தின் முகங்கள்
அனல் போல் தகிக்கின்றன

அவர்கள் இலக்கு கடைசியாக
உங்கள் வீடுகளுக்குள் நுழைவது
உங்கள் வீட்டை எடுத்துக்கொள்வது
உங்களை வரலாற்றின் விஷவாயுக்கூடங்களுக்கு
அனுப்புவது
உங்கள் குழந்தைகளை
உங்களிடமிருந்து பிரித்து அகதிகளாக்குவது
நீங்கள் என்றால் யார்?
அவர்களோடு இல்லாத எல்லோரும்தான்
அப்போது மதமோ இனமோ
ஒரு பொருட்டில்லை என்றாகிவிட்டிருக்கும்
நீதியின் பக்கம் நிற்கும்
எல்லோர் கரங்களையும்
பின்புறமாகப் பிணைத்து
தெருவில் நடத்திச் செல்வார்கள்
அல்லது நீங்கள் காணாமல் போனவர்களின்
புகைப்படங்களில் ஒரு படமாகிவிடுவீர்கள்

நம்புங்கள்
நான் உங்களை அச்சுறுத்தவில்லை
அஞ்சுவதால் எதுவும் மாறப்போவதில்லை

அவர்கள் எங்கெல்லாம் வர முடியாது என
நம்புகிறீர்களோ
அங்கெல்லாம் வருகிறார்கள்
எதெல்லாம் உங்கள் பாதுகாப்பென்று நினைக்கிறீர்களோ
அது எல்லாவற்றையும் உடைக்கிறார்கள்

முகமூடி அணிந்து தடியுடன் நிற்கும் ஒருவர்
ஆணா பெண்ணா என்று குழப்பமாக இருக்கிறது
தலை முடியும் உடலின் நளினமும்
அது பெண்ணாக இருக்கக்கூடும் என்ற
சாத்தியத்தை அளிக்கிறது
ஆனால் ஒரு பெண் அதைச் செய்யமாட்டாள் என
என் இந்திய மனம் நம்ப விரும்புகிறது
இந்த தேசம் குறித்த எல்லா நம்பிக்கைகளும்
இப்படித்தான் உடைகின்றன

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்
தெருவிளக்கின் வெளிச்சத்தில்
பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என
படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய வெளியீடுகள் :

ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!

ட்டுரையாளர் சௌ.குணசேகரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணை பேராசிரியராக பணியாற்றிவருகிறார். ஜே.என்.யு குறித்து வினவு தளத்துக்கு இவர் எழுதிய கட்டுரைத் தொடரினை கீழைக்காற்று வெளியீட்டகம் தனி நூலாக கொண்டு வந்திருக்கிறது.

ஜே.என்.யு. பல்கலையில் கல்வி கட்டண உயர்வு மற்றும் ஏற்கெனவே அமலில் இருந்த சில நடைமுறைகளை தன்னிச்சையாக ரத்து செய்த நடவடிக்கைகளை எதிர்த்த போராட்டமாக தொடங்கியது. உள்ளிருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், பாராளுமன்றம் நோக்கி பேரணி என 40 நாட்களை கடந்து மாணவர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது.

நாட்டிலுள்ள மற்ற பல்கலைகழகத்தின் வளாகச் சூழலிலிருந்து ஜே.என்.யு. பல்கலைக் கழகம் எவ்வாறெல்லாம் மாறுபட்டது? ஜே.என்.யு.வுக்கென்றே உள்ள தனிச்சிறப்பான சட்டவிதிகளின் (JNU Ordinance) அடிப்படை அம்சம் என்ன? மாணவர்களுக்கான தேர்தல் முறையில் கடைபிடிக்கப்படும் வெளிப்படைத்தன்மை, பிரதிநிதித்துவம் மற்றும் அதன் முன்னுதாரணமான அம்சங்கள் என்ன? தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழக்கமாக கடைபிடிக்கப்படும் முறைகளிலிருந்து மாறுபட்டு மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடபட்டார்கள்? சுதந்திமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும், கவுரமான முறையிலும் மாணவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? என்பதை பல்வேறு நடைமுறை உண்மையிலிருந்து விளக்குகிறார்.

மேலும், இதுபோன்ற ஜே.என்.யு.வின் தனித்துவம் வாய்ந்த அதன் சிறப்பியல்புகளை சிதைக்கும் வகையில் தற்போதைய துணைவேந்தர் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டார், அதன் அரசியல் பிண்ணனி என்ன? பின்னிருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுகிறார், கட்டுரையாளர்.

பக்கங்கள்: 24
விலை: ரூ.20.00


சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் !
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!

புதிய ஜனநாயகம் இதழில் ஏப்ரல், மே, நவம்பர் – 2018 மற்றும் ஜனவரி – 2019 மாதங்களில் தொடராக வெளியான கட்டுரை.

ஃபிரட் எங்ஸ்ட் உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் 2017, ஏப்ரல் 7-ம் தேதியன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார். 1952-இல் பிறந்த ஃபிரட் எங்ஸ்ட், சீன பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலராக இருந்தவர். பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆலைத் தொழிலாளியாக சீனத்தில் பணியாற்றியவர். தற்பொழுது, பெய்ஜிங் பல்கலைகழகமொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

துருக்கியில் பிறந்த ஒனுர்கான் உல்கர், பீகிங் பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, சீனத்தில் ஆய்வாளராகவும், ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

பக்கங்கள் : 40
விலை: ரூ. 30.00


மறுபதிப்பு :

பிரடெரிக் எங்கெல்ஸ் : – வி.இ.லெனின்.

வம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். இவ்வாண்டை சிறப்பாக்கும் வகையில், எங்கெல்சை அரசியல்ரீதியாக அறிமுகம் செய்யும் லெனின் எழுதியுள்ள இந்த நூலை மறுபதிப்பு செய்திருக்கிறது, கீழைக்காற்று வெளியீட்டகம்.

இந்நூலில், தொழிலாளி வர்க்கத்துக்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வகுத்தளித்த விடுதலை தத்துவத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளவும் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.

”தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.” என்கிறார் லெனின்.

பக்கங்கள்: 16
விலை: ரூ.15.00


 

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி குண்டர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

***

திருச்சியில் டெல்லி JNU மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி 08.01.2020 அன்று பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்லூரி வளாகத்துக்குள் இருந்த தந்தை பெரியார் சிலை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் “ABVP – சோலிய முடி! RSS – சோலிய முடி! BJP – சோலிய முடி!” என்று முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

***

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய யோகேந்திரா தலைமையிலான  ABVP குண்டர்களை கைது செய்யக்கோரி, 07.01.2020 அன்று, கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தினர். மேலும் இப்போராட்டத்தின்போது ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குவோம் என்றும், ABVP குண்டர்களை கைது செய்யக்கோரியும் முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கும்பகோணம். தொடர்புக்கு : 89408 75070.

ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

1
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 06

முதல் பாகம்

நாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்

ண்டைய இந்திய நாத்திகம், பண்டைய கிரேக்க நாத்திகம், தற்கால ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக் குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கி முழுமையாக்குகிறது.

“பண்டைக் கால நாத்திகத்தின் முக்கியமான பலவீனம் என்ன?” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்று நிரூபிக்க உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத் தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே! மேலும் மேலும் பக்தர்கள் கடவுளை நம்புகிறார்களே! இது ஏன் என்று இந்திய நாத்திகர்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாயத் தோற்றம், மக்கள் மனத்தை இவ்வளவு வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன்?

ஃபயர்பாக்.

கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை. மார்க்ஸ் தான் கடவுள் என்ற கருத்தும், வேறு எல்லாக் கருத்துக்களும் எவ்வாறு தோன்றின என்று விளக்கினார்.

ஃபயர்பாக் என்ற தத்துவவாதியின் பொருள்முதல் வாதம், ஹெகல் என்ற ஆன்மீகவாதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பொலியாக ஒலித்தது. ஃபயர்பாக்கின் பொருள்முதல் வாத உள்ளடக்கத்தை மார்க்ஸ் பெரிதும் போற்றினார். ஆனால் பிரபஞ்சத்தின் வளர்ச்சியை பொருள்முதல்வாத அடிப்படையில் அவர் விளக்கவில்லை. பொருள் முதல்வாத அடிப்படையில் ஃபயர்பாக் உலக இருப்பையும், மனித மனத்தின் உள்ளடக்கத்தையும் ஆராய்ந்தார்.

மார்க்ஸ் ஃபயர்பாக்கை பின்வருமாறு விமர்சிக்கிறார்:

“ஃபயர்பாக் மதத்தினால் அந்நியவயமாகி இவ்வுலகு இரண்டாக; பொய்யான மத உலகாகவும், உண்மையானப் புற உலகாகவும் பிரிகிறது. அவருடைய தத்துவ முயற்சியெல்லாம் இப்பொய்யுலகை, உண்மையான உலகிற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது. இப்படிச் செய்யும் பொழுது மிக முக்கியமான தத்துவ முயற்சியை அவர் ஒதுக்கி விட்டார். உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாத பொழுது, அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன. உலகிலுள்ள முரண்பாடுகள் – தீர்வு பெறாதவரை, அவற்றில் இருந்து தோன்றி விண்ணில் இருப்பதாகக் கருதப்படும் மாயத் தோற்றங்கள் கலையாது. உலகக் குடும்பமே தெய்வக் குடும்பத்தின் அடிப்படை என்பதைக் கண்டு கொண்டால் இவ்வுலக வாழ்க்கை முரண்பாடுகளை ஆராய்ந்து நடைமுறையால் புரட்சிகரமாக மாற்ற முடியும்.”

ஃபயர்பாக் பற்றிய விமர்சன எழுத்துக்களில் மார்க்ஸ் கூறிய கருத்தை, எங்கல்சோடு சேர்ந்து மேலும் விளக்கினார்:

ஹெகல்.

“மனிதர்களுடைய செயலூக்கமான நடைமுறைச் செயல்களோடு, அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைப் படைப்புகள், உணர்வு என்ற மூளையின் படைப்புகள் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை நடைமுறைச் செயல்களால் தொடர்பு கொள்ளுகிற மனிதர்களின் உறவுகளின் விளைவேயாகும். உண்மையான வாழ்க்கையின் நிஜமான அல்லது வக்கிரமான பிரதிபலிப்புக்களே எல்லாச்சிந்தனைகளும் என்று நாம் அறிதல் வேண்டும். இவை பொருளுற்பத்தி என்ற மனிதர் செயல்களில் இருந்துதான் தோன்றுகின்றன. மனிதனது உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கின்றனவோ, அதற்கேற்ப சமூக உற்பத்தி உறவுகளின் பிரதிபலிப்புகளாகச் சிந்தனைகள் தோன்றுகின்றன. மூளையில் தோன்றுகிற தெளிவற்ற எண்ணங்கள் கூட, வாழ்க்கையில் இருந்து பிரிந்து சுதந்திரமாக இருப்புக் கொள்ளவில்லை. இவைகூட சமூக இருப்பின் அடிப்படையில் தோன்றிய மேற்கோப்புகள் தாம். இவ்வடிப்படை புலனறிவுக்குப் புலப்படுபவையே. இவ்வாறாக ஒழுக்கம், மதம், அப்பாலைத் தத்துவங்கள் முதலிய கருத்துக் கட்டமைப்புகளாகிய (Idealogy) உணர்வுருவங்கள் (Forms of Consciousness) சுதந்திரமானவையல்ல. அவை பொருளுற்பத்தி என்னும் மனிதர் செயலான அடிப்படையின் மீது எழுப்பப்பட்டவையே. பொருளுற்பத்தி வரலாற்றில் இருந்து பிரித்து உணர்வுருவங்களின் சரித்திரத்தை அறிய முடியாது. மனிதர்கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்துக் கொண்டு, உற்பத்தி அமைப்புகளையும், சமூக அமைப்புகளையும் மாற்றுகிறபோது அவ்வடிப்படையின்மீது எழுப்பப்பட்டிருக்கும் மேற்கோப்பு உருவங்களும் மாறுகின்றன.” “உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” என்பது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகம்.

இவ்வுலக நோக்குத்தான் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படை. ஒவ்வொரு சமுதாய அமைப்பின் உற்பத்தி முறைதான் நமது வரலாற்று ஆராய்ச்சியின் துவக்கப்புள்ளி. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் மனிதர்கள் எவ்வித உறவு கொள்ளுகிறார்கள் என்பது உற்பத்திமுறை அமைப்பைப் பொறுத்தது. உற்பத்தி முறையின் தொடர்ச்சியான மாறுதல்கள், இவற்றால் மாறுகிற மனிதர் உறவுகள், அவற்றின் தொடர்ச்சியான போக்குகள் இவற்றை வரலாறு விளக்கவேண்டும். இவற்றில் மனப்படைப்புகள், பொருளாதார அடிப்படையிலிருந்து விலகிச் செல்வதை அறிகிற விமர்சனம் செய்வது போதாது. விமர்சனம் மட்டுமல்ல, உற்பத்தி சக்திகள் வளரும் வகையில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும். அடிப்படையானதும், மிகவும் முக்கியமானதுமான சமூக மாறுதல் புரட்சியாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அவ்வளர்ச்சிக்கேற்ப, சமூக அமைப்பு மாற்றப்படுவதுவே வரலாற்றின் இயக்கு சக்தியாகும். உற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை விளக்கும் வரலாறே, தத்துவம், மதம் முதலிய எண்ணக் கட்டமைப்புகளின் வரலாற்றுக்கும் அடிப்படையாகும்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவரும் மேற்கூறிய கருத்துக்களை 1845-46 இல் உருவாக்கினர். அதன் பின்னர் நூறாண்டுகளில் தொல்பொருள் ஆய்வும், மானிட ஆய்வும் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. இவையாவும், இக்கருத்துக்களை செழுமைப்படுத்துகின்றன.

மார்க்ஸ் மதத்தைச் சிந்தனையில் இருந்து அகற்றத் தர்க்கத்தைக் கையாளவில்லை. சிந்தனை நிலையில் மதக் கருத்துக்களை நமது பண்டைய நாத்திகர்கள் எதிர்த்தது போல், மார்க்ஸ் செய்யவில்லை. மார்க்ஸ், ’மனிதன் மதத்தைப் படைத்தான்’ என்று போதித்தார். மனிதனது உட்கிடையான தன்மை, தெய்வீகமானது என்ற கருத்தை அவர் எதிர்த்தார். கடவுள் நம்பிக்கை, அதைத் தோற்றுவித்த சமூக அடிப்படை மாறும்போது மறையும் என்று கூறினார். வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது புறவய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே மனிதன் மதத்தைப் படைத்தான், தனது ஆற்றலால் விளைச்சலை அதிகப்படுத்த முடியவில்லை. மழை பெய்யச் செய்ய முடியவில்லை, வேட்டை விலங்குகளைக் கொல்லமுடியவில்லை, போரில் வெற்றி பெற முடியவில்லை என்று உணர்ந்த மனிதன், மந்திர தந்திரங்களையும், கடவுள்களையும் தனது ஆற்றலை மிகுவித்துக் கொள்ளப் படைத்தான், இக்கருத்துக்கள் மனித வரலாற்றில், மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும் போது, இயலாமையை உணரும்போது, தன்னைவிட அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத் தனது கற்பனையால் படைத்து அவற்றிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான்.

இவ்வாறு மனிதன் மதத்தைப் படைத்தான். மனிதன் உலகத்திற்கு வெளியே வாழும் விலங்கு அல்ல. தற்காலப் பரிணாமவாதம் மனிதனது தோற்ற மூலத்தை விளக்குகிறது. மிகவும் சிக்கலான இயற்கை மாற்றங்களுக்குப் பின்னர், இம்மாற்றங்களின் விளைவாக மனிதன் தோன்றினான். பிற விலங்குகளைப் போல அவனும் இயற்கையின் ஒரு பகுதிதான். மனிதன் தோன்றிய பின் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு தன்மை மாற்றம் அடைந்தது. விலங்குகள் இயற்கையோடு இசைந்து போகின்றன. இயற்கையின் வலிமைக்கு இணங்கித் தங்களது உறுப்புக்களை மாற்றிக் கொள்ளுகின்றன. இயற்கையோடு அவற்றின் உறவு, செயலூக்கமற்றது (Passive) தான். இயற்கையளிக்கும் காய்கனிகளை அவை உண்கின்றன. உணவைத் தேடிப் பெற்றுக் கொள்பவையாக (food gatherers) அவை இருக்கின்றன. செயலூக்கத்தோடு உணவை உற்பத்தி செய்வதில்லை. குளிர்தாங்க உரோமத்தை இயற்கை சில விலங்குகளுக்கு அளித்துள்ளது. இயற்கையை அவை தங்கள் வாழ்க்கையால் மாற்றிய போதிலும், அம்மாற்றங்கள் அவற்றின் உணர்வில் பதிவதில்லை. அவை பற்றி அவை சிந்திப்பதில்லை. மனிதனது தோற்றம் ஒரு விலங்குதான் என்றாலும், பிற பிராணிகளைப் போல இயற்கையோடு அவன் கொண்டுள்ள தொடர்பு செயலூக்கமற்றதல்ல. தனது உயிரியல் உறுப்புகள் (கை, கால், வாய், பல் முதலியன) இயற்கையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அவன் உணருகிறான். தனக்குத் தேவையான மாறுதல்களை இயற்கையில் ஏற்படுத்துவதோடு அவற்றை நெறிப்படுத்தவும் மனிதனால் முடியும். இப்பொழுதுதான் அறிபவன், அறியப்படுவது (Subject, Object) என்ற கருத்துக்களுக்குப் பொருளான உண்மைகள் தோன்றுகின்றன.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? மனிதன் தனது, உயிரியல் கருவிகளைப் (Biological equipment) பயன்படுத்துகிறான். முக்கியமான உறுப்புகளின் மூளை, கைகள், பேச்சுறுப்புகள் இவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்றைச் செயல்படுத்தும் போது விளையும் ஆற்றல் தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு, பற்றுகின்றனர். ஆனால் மனிதன் உழைப்பு என்னும் ஆற்றலால் இயற்கை மீது தனது செயலைத் துவக்கி, இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்.

மின்னல் மின்னும் போதும், மழை பெய்யும் பொழுதும், சில ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை இயற்கை நிகழ்ச்சிகள். விலங்குகளும், மனிதனும் அஞ்சியோடுகின்றன. ஆனால் மனிதன் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது என்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்று சிந்திக்கிறான். அவன் இயற்கையோடு தொடர்பு கொண்டதால் அவன் மூளையில் படைத்துக் கொண்ட ரசாயன அறிவைப் பயன்படுத்துகிறான். காற்றில் ஆக்ஸிஜன், நைட்ரஜன் என்ற வாயுக்கள் உள்ளன. மின்னல் வெளிப்படும் பொழுது மின்னாற்றல் பாய்ச்சல் (discharge) வாயுக்களின் ஊடே செல்லுகிறது. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் கூடுகின்றன. மழைத் தண்ணீரில் இக்கூட்டுப் பொருள் (நைட்ரிக் ஆக்ஸைடு) கரைந்து ஒரு அமிலம் ஆகிறது. இது பூமியினுட் செல்லுகிறது. பூமியினுள் உலோகத் தாதுப் பொருள்கள் உள்ளன. அவற்றோடு இவ்வமிலம் எதிர்வினை செய்து உரப்பொருள்கள் இயற்கையில் கிடைக்கின்றன.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !
CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

இயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்த மனிதன், முன் இயற்கையில் தலையிட்டுக் கிடைத்த அனுபவம், அனுபவத்தில் இருந்து முன் கிடைத்திருக்கும் கொள்கையறிவு இவற்றைப் பயன்படுத்தி இயற்கைப் போக்கில் தலையிடுகிறான்; காற்றிலுள்ள வாயுக்களைச் சேரவைக்கும் அளவு வெப்பத்தை மின் ஆற்றலால் உண்டாக்குகிறான். ‘மின் ஆற்றல் ஆர்க்’ என்ற ‘மின் வெப்பக் கருவியின் கரித்துண்டுகள் ஜூவாலிக்கும் போது காற்றை உட்செலுத்துகிறான். வாயுக்கள் கூடி நைட்ரிக் ஆக்ஸைடு உண்டாகிறது. இதனை நீரில் கரைக்கிறான். இந்த அமிலத்தை அம்மோனியா வாயுவோடு சேர்க்கிறான். இது கூட ‘ஹைட்ரஜன், நைட்ரஜன்’ ஆகிய இரு வாயுக்கள் கூடிக் கிடைத்த கூட்டுப் பொருளே. இது கூட இயற்கையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தித் தனக்குத் தேவையான பொருளாக மனிதன் செய்து கொண்டதே.

மேற்கூறிய, “இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்” என்ற எங்கல்ஸின் வாசகத்துக்கு இது மிக நல்ல உதாரணம்.

இவ்வாறு இயற்கையை மாற்றும் பொழுது மனிதனும் மாறுகிறான். பொருள்களின் யாந்திரிக, ரசாயன, பௌதீக இயல்புகளை அறிந்து அவற்றைத் தனது தேவைக்கேற்ற பண்புகளாக மனிதன் மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு மனிதனது அறிவு அவனது கை, கால், மூளைபோல அவனது உறுப்புகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதனால் முன்னிலும் அதிகமான ஆற்றல் பெற்றவனாக மனிதன் ஆகிறான்.

இது குறித்து கார்டன் சைல்டு என்ற தொல்பொருள் பேராய்வாளர் கீழ்வருமாறு கூறுகிறார். “இயற்கையையும், இயற்கையோடு போராட மனிதன் புனைந்து கொண்ட கருவித் தொகுதிகளையும், மனிதனது உடல்புற உறுப்புக்கள் (Extra Corporeal Organs)” என்று அவர் அழைக்கிறார். இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன. ஒரு முறிந்த மரக்கிளை, கூர்மையாக்கப்பட்ட கல் இவை போன்றவை தாம் மனிதன் பயன்படுத்திய “பண்டைக் கருவி.” கருவிகளைச் செய்யும் ஆற்றல் மூளையின் திறத்தால் மனிதனிடம் வளர்ச்சியடைந்தன. இச்சிறு கருவியைச் செய்த மனிதன், தனது உழைப்பால், இன்று விண்கலங்களை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அனுப்புகிறான். அவை கோடிக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள விண்கோளங்களை படம் பிடித்து உடனே சில ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு அனுப்புகின்றன. இவ்வளவு தூரத்தில் உள்ள கோளங்களின் படங்கள், மனிதன் அவற்றைக் கண்ட மறுநாளே தினசரிகளில் வெளியாகின்றன. இன்று மனிதன் தனது உடலுழைப்பாலும், மூளை உழைப்பாலும், இயற்கையாற்றல்களில் பல கூறுகளை தனது தேவைகளுக்காக வென்றுள்ளான்.

இவ்வாறு இயற்கையோடு போராட கருவிகளைச் செய்து உற்பத்திச்சக்திகளை முன்னேற்றிய மனிதன், விஞ்ஞானத்தை வளர்த்தான். பொருள் உற்பத்தியில் முன்னேறிய மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது பல நம்பிக்கைகளையும் படைத்தான். அவனது உற்பத்தி அமைப்பு முறையின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சில நம்பிக்கைகள் தோன்றின..

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !

0

புது தில்லியில் உள்ள ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து இந்தியா முழுதும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை (06.01.2020) மாலை அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐ.ஐ.எம்.ஏ) வெளியே அமைதியான போராட்டத்தை நடத்தினர்.

ஐ.ஐ.எம்.ஏ (IIMA), சி.இ.பி.டி (CEPT) பல்கலைக்கழகம், அகமதாபாத் பல்கலைக்கழகம், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் குஜராத் வித்யாபித் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜே.என்.யூ. வாயிலில் மாணவர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

“மாணவர்களை கொடூரமாக நடத்துவதற்கு எதிரானவர்கள் நாங்கள். மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்தியை தெரிவிக்கவே நாங்கள் இன்று வாயில் துணியைக் கட்டியுள்ளோம். கேள்வி கேட்டாலே மாணவர்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்று கூடினார்கள்” என்று அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் சர்தாக் பாகி கூறினார்.

ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வட்கம் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கோரினார்.

“குற்றவாளிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தாக்குதல் நிரூபித்துள்ளது. காவல்துறையும் அரசாங்கமும் தங்களுக்கு சொந்தமானது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த குற்றவாளிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார் என்று நான் நம்புகிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி தவிர வேறு யாராலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியாது” என்று மேவானி கூறினார்.

“ஜே.என்.யூவில் இரத்தம் வழிகிறது”, “பார்ப்பனிய பயங்கரவாதத்தை நிறுத்து”, “ஜே.என்.யுவைக் காப்பாற்றுங்கள்”, “ஜே.என்.யூ-வுடன் நிற்கிறோம் – பாசிசத்தை எதிர்கிறோம்”, “வளாகங்களை போர் மண்டலங்களாக ஆக்குவதை நிறுத்து” மற்றும் “மாணவர்களைக் காப்பாற்று-ஜனநாயகத்தை காப்பாற்று” போன்ற முழக்கப் பதாகைகளை வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி ஏராளமான காவல்துறையினர் இருந்தனர்.

மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபித்தின் சில மாணவர்கள் காதியில் நெய்த அசோக சக்கரத்தை எதிர்ப்பின் அடையாளமாக காட்டினார்கள். சமீபத்தில் கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) சர்ச்சையின் மையமாக இருந்த ஃபைஸ் அகமது ஃபைஸின் புகழ்பெற்ற ‘ஹம் தேக்கேங்கே’ கவிதையை மற்ற ஆர்பாட்டக்காரார்கள் முழக்கமிட்டனர்.

“தற்போதைய அரசாங்கம் அதன் கொள்கைகளுடன் உடன்படாத மக்களை விரும்பவில்லை என்பதையே ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் காட்டுகிறது. ஆனால், ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவு முழு நாடும் இருப்பதை சொல்ல நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இது இந்த நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம். நாங்கள் ஏன் எதிரிகளைப் போல நடத்தப்படுகிறோம்? ” என்று மாணவ போராட்டக்காரர்கள் கேட்டனர்.

படிக்க :
ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் !
♦ ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

போராட்டம் நடைபெற்றபோது, ஏபிவிபியுடன் தொடர்புடைய சிலர் சாலையின் எதிர் பக்கத்தில் கூடி ஜே.என்.யூ தாக்குதல் ‘இடதுசாரி’மாணவர்களால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகக் கூறும் “இடதுசாரிகள் ஜே.என்.யூவை தாக்குகிறார்கள்” மற்றும் “ஜே.என்.யூவில் சிவப்பு பயங்கரவாதம்” போன்ற செய்திகளைக் கொண்ட பதாகைகளை காட்டினார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு ஏபிவிபி உறுப்பினர்களை போலீசார் தடுத்து வைத்ததாக போலீஸ் கண்காணிப்பாளார் எச்.எம். வியாஸ் கூறினார்.

“இங்கு போராட்டம் நடத்த இவர்களிடம் அனுமதி இல்லை. ஒரு முன்னெச்சரிக்கைக்காகவே இவர்களை தடுத்து வைத்தோம்.” என்று வியாஸ் கூறினார்.

ஜே,என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஞாயிற்றுக்கிழமை இரவில், கட்டைகள் மற்றும் கம்பிகளுடன் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியது. ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் (St Stephen’s College) மாணவர்களும் ஆசிரியர்களும் திங்களன்று ஜே.என்.யூ, ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளை குறித்து கவலை தெரிவித்தனர்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு ஒரு “நீண்டகால” எதிர்ப்பிற்கு திட்டமிட அவர்கள் அங்கு கூடினார்கள்.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து பதிவான வன்முறை சம்பவங்களை கண்டித்து, தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் இயக்கத்திற்கு இந்த கூட்டம் அழைப்பு விடுத்தது.

ஜே.என்.யூ-வில் நடந்த வன்முறைக்கு எதிராக தமிழகத்தின் சில பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் திங்கள்கிழமை போராட்டங்களை நடத்தினர். சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர் பாதாகைகளுடன், குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு ஆகியவற்றிற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

மாணவர்களின் ஆர்பாட்டத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவை வழங்கியதுடன், “மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் போன்றது. இது தொடரக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய மாணவர் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்புடன் பல மாணவர் நல அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

“எழுத்தாணிகள் லத்திக்கள் அல்ல” மற்றும் “நாங்கள் ஜே.என்.யூவுடன் இருக்கிறோம்” என்று பலரும் பதாகைகளை வைத்திருந்தனர். ஏராளமான போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டனர்.

ஏபிவிபி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ இரண்டையும் தடை செய்ய கோரி தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லூரியின் மாணவர்களும் போராட்டம் நடத்தினார்கள்.


சுகுமார்
நன்றி : த வயர். 

இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

மசூதிக்கு அடியில் கோயில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

லகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாபர் மசூதிக்கு அடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் அடிப்படையில் தொல்லியல் துறை அளித்த அறிக்கையைச் சார்ந்துதான் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

2003-ல் தொல்லியல் துறை அளித்த இந்த அறிக்கையும், அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் ஏன் தவறானவை என்று சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள் எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி இதழில் 2010-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர்.

1861-இல் முதன்முதலாக அகழ்வாய்வு நடத்திய அன்றைய தொல்லியல் துறையின் இயக்குநர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன் தொல்லியல் துறையின் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்ற போதிலும், பல தொல்லியல் ஆய்வாளர்கள் அதனை அம்பலப்படுத்தாமைக்குக் காரணம் உள்ளது. இந்தியர்களோ, வெளிநாட்டவரோ இந்தியாவில் எந்த இடத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என்றாலும், அதற்குத் தொல்லியல் துறையின் அனுமதி வேண்டும் என்ற காரணத்தினால்தான் பலரும் அமைதி காக்கின்றனர் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

“மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று கூறுவதற்கு முக்கியமாக 3 சான்றுகளைக் காட்டுகிறது தொல்லியல் துறை. முதலாவதாக மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சுவர். மேற்குப் பகுதி சுவரைப் பார்த்துத்தான் இசுலாமியர்கள் நமாஸ் செய்வார்கள். கோயிலின் கட்டமைப்போ முற்றிலும் வேறுவிதமானது. இரண்டாவதாக, 50 தூண்களின் அடிப்பாகங்கள் காட்டப்படுகின்றன. இவை செட்டப் செய்து திணிக்கப்பட்ட ஆதாரங்கள் என்பதை நிரூபித்துப் பல புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்” என்கிறார் வர்மா. மூன்றாவதாகக் கட்டுமான சிதிலங்கள். இவை மசூதி இடிக்கப்பட்டபின் அங்கே போடப்பட்டவை.

1861-ல் பாபர் மசூதி அருகே முதன்முதலாக அகழ்வாய்வு நடத்தியவர் அன்றைய தொல்லியல் துறையின் இயக்குநர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். புத்தமதத் தூண்களும், ஒரு புத்த விகாரையும் இருந்தன என்றுதான் அகழ்வாய்வு நடத்திய அவர் கூறுகிறார். அந்த வட்டாரத்தில் சில கோயில்கள் இருந்தன என்று அப்பகுதி மக்கள் கூறுவதாக அவர் பதிவு செய்திருக்கிறாரேயன்றி, அகழாய்வுச் சான்றுகள் எதுவும் கிடைத்ததாகக் குறிப்பிடவில்லை.

1969-ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை சார்பில் மசூதிக்கு அருகே அகழாய்வு நடத்தப்பட்டது. பண்டைக்காலத்திலும் மத்திய காலத்திலும் அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன என்றுதான் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கும் அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.

படிக்க:
காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு

“மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததாக அறிக்கையின் எந்த இடத்திலும் விவாதிக்கப்படவில்லை. கடைசிப் பத்தியில், வெறும் மூன்று வரிகளில் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் காட்டுகின்ற அதே சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் சிறிய மசூதிகள்தான் இருந்தன என்பதை நாங்கள் நிறுவியிருக்கிறோம்” என்கிறார்கள் சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !

ந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக 55 லட்சம் கி.மீ. சாலைகள் ஓடுகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 1 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தற்போதைய கணக்குப்படி நாளொன்றுக்கு 24 கி.மீ நீளமுள்ள சாலைகள் புதிதாக போடப்படுகின்றன. இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்து, பெரும் தொகையை விழுங்கும் துறை இதுதான். இப்படி இருந்தும் இந்தியா முழுக்க உள்ள 531 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டொன்றுக்கு 73 ஆயிரம் கோடி டோல்கேட் கட்டணமாக அரசு வசூலிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை, நீளத்தில் 7-வது இடத்திலும் டோல்கேட் வசூல் தொகையில் 4-வது இடத்திலும் உள்ளது. உதாரணம் மகாராட்டிர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 15,456 கி.மீ. ஆனால் அதன் டோல்கேட் எண்ணிக்கை 45. வருமானம் 2,700 கோடி. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை நீளம் 5,381 கி.மீ. அதன் டோல்கேட் எண்ணிக்கை 46. வருமானம் 2,400 கோடி. இது தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்.

போரூர் சுங்கச்சாவடி

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் பகற்கொள்ளை, நாற்புறத்தையும் சுற்றி தொழிற்முறைத் திருடர்களினால் நடக்கும் செயின் பறிப்புக்கு நிகரானது. 21 கி.மீ இடைவெளியில் 3 டோல்கேட்டுக்கு கப்பம் கட்டும் மதுரை – ஊத்தங்குடி – கப்பலூர் ஒரு உதாரணம்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறையின்படி, டோல்கேட் மையங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 60 – 75 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். டோல் அமைந்துள்ள 6 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு கட்டண விதிவிலக்கு அளிக்க வேண்டும். இன்னும் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு பாதுகாப்பு மேம்பாட்டு வசதிகளைச் செய்து தரவேண்டும். இந்த விதியெல்லாம் அதன் கட்டண ஒப்புகை ரசீது பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது. இதன் எல்லா விதிகளும் அந்த டோல்கேட் வாசலிலேயே அகால மரணமடைந்து பல மாமாங்கம் ஆகிவிட்டது.

பேப்பரில் மட்டும் இருக்கும் சலுகைகள்.

52 கி.மீ பயணத்திற்கு இலகுரக வாகனங்களுக்கு ரூ.60, இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளுக்கு ரூ.95, கனரக வாகனங்களுக்கு ரூ.195, பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 என்று கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் அரசு புள்ளிவிவரப்படி ஆண்டுக்கு வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 10 சதவீதம் கூடிக்கொண்டே போகின்றது. இதன்படி டோல்கேட் வருமானமும் பொங்கி வழிகிறது.

படிக்க:
♦ வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
♦ பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

இந்தியா முழுவதும் 70% டோல்கேட் மையங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமாகிவிட்டன. L&T, ரிலையன்ஸ், பி.வி.ஆர் நிறுவனங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றன. இவர்கள் காட்டும் ‘வருமானமான காந்தி கணக்குதான்’ இந்திய புள்ளிவிவரங்களாக ஆண்டுதோறும் பட்ஜெட்டை அலங்கரிக்கின்றது.

தற்போதைய கணக்குப்படி இந்திய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இருக்கும் கடன் 1.88 லட்சம் கோடி ரூபாய். இதற்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 14,000 கோடி. ஆக, மக்களிடம் சாலையில் வசூலிக்கும் கட்டணக்கொள்ளையை உலக வங்கி மொத்தமாக சந்துமுனையில் இருந்து பறித்துக்கொள்கிறது. மறுபுறம், தேசிய நெடுஞ்சாலைகளோ எவ்வித பராமரிப்பும் வசதியுமின்றி பயணிக்கும் சாலை, மரணிக்கும் சாலையாக வாய்பிளந்து கிடக்கிறது.

ஃபாஸ்டேக் அட்டை வாங்க காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பதுபோல சாலைகளில் எவ்வித வசதிகளும் செய்யாமலே மீண்டுமொருமுறை பகற்கொள்ளையை அரங்கேற்றி நெடுஞ்சாலை ஆணையத்தைக் கட்டுப்படுத்துகிறது பி.ஜே.பி அரசு.

ஃபாஸ்டேக் அதிவிரைவு பயணம், அதிக பாதுகாப்பு என்ற பெயரில் மக்களது மேல் பாக்கெட், கீழ்பாக்கெட் என்று அனைத்தையும் கைவிட்டு துழாவுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் 4 சக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவரும் டிசம்பர் 15-க்குள் ஃபாஸ்டேக் டோல்கேட் அனுமதி அட்டையை வாங்கி தங்கள் வங்கிக் கணக்குடன் அதை இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வட்டையுடன் வரும் வண்டிகள் மட்டுமே இனி, ஃபாஸ்டேக் ட்ராக்குகளில் அனுமதிக்கப்படும். இல்லையானால் அபராதமாக 2 மடங்குக் கட்டணத்துடன் ஒதுக்கப்பட்ட சாதாரண கட்டண ட்ராக்கில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற உத்தரவும் அமுலுக்கு வந்துவிட்டது.

இந்த அறிவிப்பின் கெடுபிடி நெருங்க நெருங்க சென்னையின் எல்லா டோல்கேட்டுகளிலும் ஃபாஸ்டேக் அட்டை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. சென்னை – போரூர் சாலையில் இருக்கும் டோல்கேட்டை நாம் கடந்த போது, அங்குக் காத்திருந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அனுகினோம். அவர்களது மனக்குமுறலை கேளுங்கள்.

***

ஷியாம், IT ஊழியர்

இருக்குற ஓட்ட ஒடசலான பழைய ரோட்டத்தான் புதுசா ஃபாஸ்டேக்குன்னு பேர மாத்துறாங்க. – ஷியாம், ஐடி ஊழியர்.

“என் வீடு தாம்பரம்; ஆபீஸ் அம்பத்தூர். டெய்லி இந்த டோல்கேட்டை கிராஸ்பண்ணிதான் போகணும். என் டிராவல் டைம், அப் அன்ட் டவுன் 2 மணி நேரம். பீக் அவர்ஸ்ல பல தடவ டோல்கேட்டிலேயே டைம் வேஸ்ட்டாயிடும். இனிமேல் அது குறையுமுன்னு சொல்றாங்க. அத நம்ப முடியல. நம்மல ஏமாத்துறாங்கன்னு தெரியுது. இருக்குற ஓட்ட ஒடசலான பழைய ரோட்டத்தான் புதுசா ஃபாஸ்டேக்குன்னு பேர மாத்துறாங்க.

இந்த ரூட்டுல 15 வருசமா வண்டி ஓட்டுறேன். இதுவரைக்கும் டோல்கேட்டுல வசூலித்த பணத்த வெள்ளை அறிக்கையா அரசு வெளியிடுமா? கொள்ளை அடிக்கிறாங்க. ஒரே வழி இந்த டோல்கேட்டை மொத்தமா இடிச்சுத் தள்ளுறதுதான்.

இப்ப இவங்களோட PAY-TM காரனும் சேர்ந்துட்டான். இனி அவன்தான் நமக்கு பணம் கட்டுவான். அவனுக்கு நாம முன்கூட்டியே ஒரு பஃபர் அமவுண்ட் (நிரந்தர வைப்பு) ரூ.150-ம் ப்ராசசிங்க் சார்ஜ் ரூ.50-ம்னு மொத்தம் ரூ. 200 கட்டணம். இது பேங்க் அக்கவுன்ட்ல இருக்குற மினிமம் பேலன்ஸ் மாதிரி. அத உபயோகப்படுத்த முடியாது. நாம போகவர தனியா ரிசார்ஜ் பன்னணும். இது கொடுமை” என்றார்.

“தெரிந்தே ஏன் இப்படி ஏமாறுகிறீர்கள்?” என்றோம்.

அவர் எரிச்சலுடன், “வேறு வழி? இனி தினமும் டிராஃபிக் ஜாம் ஆகி சண்ட சச்சரவு இருக்காது. பணம் கொடுத்து ரசீது வாங்குற தொல்லை இல்லை” என்றார்.

படிக்க:
♦ தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

***

திலீப், ஓட்டுநர் ( புகைப்படம் தவிர்த்தார் )

நான் லோக்கல்லதான் வண்டி ஓட்டுறேன். இருந்தாலும் மாதம் 1 அல்லது 2 தடவ காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற சொந்த ஊருக்குப் போவேன். அதுக்குத்தான் இப்ப க்யூவில நிக்கிறேன்.

எப்போதோ ஒருமுறை ஊருக்குப் போக, இந்தச் தண்டச்செலவு தேவையான்னு கேப்பீங்க. இந்த அட்டய வாங்கலன்னா அபராதம் கட்டணும்பாங்க. அப்புறம் ஆர்டினரி டிராக்குனு அலக்கழிப்பாங்க. குடும்பத்தோட செல்லும்போது எரிச்சல் சண்டை வரும். அது தேவையா? என்றார்.

***

பாலு, வியாபாரம் ( புகைப்படம் தவிர்த்தார் )

நான் செங்கல்பட்டு தாண்டி அச்சிறுப்பாக்கத்தில் இருக்கேன். எனக்கு சென்னையில்தான் வேலை. ஒவ்வொரு முறையும் எல்லா டோல்கேட்டையும் தாண்டி வர்ற வரைக்கும் ஒரே சண்டை சச்சரவுதான். டோல்கேட்ட கடக்கும்போது, நான் முன்னே, நீ முன்னேன்னு சண்டை வரும். வேணுமுன்னே பக்கத்துல வண்டிய கொண்டுவந்து முட்டுவானுங்க. நெரிசலில் வண்டிய இன்ஞ் இன்சா நகர்த்த வேண்டியிருக்கும். இந்த அட்டை வாங்கின பிறகு இந்த அரிபரி இருக்காது, ஹாயா போகலாமுன்னு சொல்றாங்க என்றார்.

***

கிருஷ்ணமூர்த்தி, தனியார் நிறுவன இயக்குநர்

ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார், எனது நண்பர். – கிருஷ்ணமூர்த்தி

எனக்கு அம்பத்தூர்ல கம்பெனி. வேலூர், வாலாஜா, ஆம்பூர்னு அடிக்கடி போக வேண்டி வரும். இந்த கார்டை இப்ப அவசியமாக்கிட்டாங்க. இதனால எந்த மாற்றமும் வராதுன்னு தெரியுது. இருக்குற ரோட்ட சீர்பண்ண மாட்டேங்குறாங்க. கேட்டா போலீச வரவழைச்சு உதைப்பாங்க. ஏற்கெனவே 2 தடவை வேலூர் டோல்கேட்டுல ஸ்ட்ரைக் பண்ணி போலீசுகிட்டே அடிவாங்குனோம். இவங்கல்லாம் கூட்டுக்களவாணிங்க. இந்த கார்டுனால எவ்வளவு ப்ராடு நடக்குமுன்னு தெரியல.

என்னோட ஃபிரெண்ட் லாரி ஓனர். செங்கல்பட்டுக்காரர். 6 மாதம் முன்னாடியே அவரது சரக்கு லாரிக்கு ஃபாஸ்டேக் கார்ட வாங்கி அக்கவுண்ட்ல இணைச்சிட்டாரு. திடீர்னு அவரது போனுக்கு ஒரு மெஸ்சேஜ். ஆந்திரா தடா டோல்கேட்ட அவரது சரக்கு லாரி சில நிமிடங்களுக்கு முன் கடந்ததாகவும் அதற்கான கட்டணமாக ரூ.350 – அக்கவுண்ட்டிலிருந்து கழிக்கப்பட்டதாகவும் இருந்தது. அந்த மெஸ்சேஜை பார்த்து பதறிப் போயிருக்கிறார். காரணம் அவரது கண் முன்னே அவரது வீட்டிலேயே அந்த லாரி நின்றுகொண்டிருந்தது. இந்தக் கட்டணத் திருட்டை கையும் களவுமாக நிரூபிக்க வேண்டும் என்று அவர் உசாரானார். உடனே தன் வீட்டின் பக்கத்தில் இருக்கும் டோல்கேட்டில், தானே லாரியை ஓட்டிச் சென்று உள்நுழைந்து ரசீது வாங்கிக் கொண்டார். இதே நேரத்தில் தடாவில் எப்படி எனது வண்டி கடக்க முடியும்? என்று அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து ஒரு வழி பண்ணினார். இது மாதிரி ஆயிரம் கூத்துக்கள் இனி நடக்கும் என்றார்.

படிக்க:
♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
♦ சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

***

சபரி, டிராவல்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்

டோல்கேட் கட்டணம் என்ற பெயரில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறாங்க. டோல்கேட் எடுத்து நடத்துற முதலாளிங்க, ஏலம் விட்ட அதிகாரிங்க, அரசியல்வாதிங்க இவங்களோட இங்கிருக்கிற போலீசும் இதுல கூட்டு. கலெக்சன்ல கவர்ன்மென்டுக்கு பாதிதான் கணக்கு காட்டுறாங்க. இன்னும் 4 டிராக் ரோட்டுல 6 டிராக் கட்டணத்த வசூல் பண்றாங்க. திடீர்னு வேல்முருகன், சீமான் போன்றவங்க டோல்கேட்டுக்கு எதிரா சவுண்ட் விட்டு இப்ப கப்சிப்னு அடங்கிட்டாங்க. ஏன்னா, இந்த கூட்டுதான்.

டோல்கேட்ட ஏலம் எடுத்தவன், எல்லாருக்கும் சகட்டுமேனிக்கு இறைக்கிறான். எங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்கதான் கடைசி வரைக்கும் சாலை வரி, சும்மா இருக்குற வரின்னு கட்டிட்டு வண்டி ஓட்டியே சாகுறோம் என்றார்.

***

டோல்கேட்டிற்கு கப்பம் கட்டிய நிலையிலும் போலீசாரால் மடக்கப்படும் சரக்கு வண்டிகள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

தமிழ் தெரியாத வட இந்தியர்களால் நிரப்பப்பட்ட டோல்கேட் பூத்துகள். கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இதுதான் நிலைமை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு

தோழர் ஸ்டாலின்…

ரஷ்யாவை குறுகிய காலத்தில் எல்லா தளங்களிலும் வலுவான நாடாக்கி காட்டியவர், வறிய நாடுகளின் குழந்தைகள் அறிவைப் பெற பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மிட்டாய் வாங்கும் காசில் புத்தகங்கள் கிடைக்க செய்தவர், அவர்கள் மொழியிலேயே கிடைக்கச் செய்தவர்.

உலகை ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து காத்தவர், அதன் காரணமாக ரஷ்யா லட்சக்கணக்கான வீரர்களையும் மக்களையும் இழந்தது, அதில் ஸ்டாலினின் மகனும் அடக்கம்.

அந்தக் கொடிய இரண்டாம் உலகப்போர் காலத்தில்தான் ரஷ்யாவை நிஜமான வல்லரசாக மாற்றிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளித்துவத்தால் உலகில் அதிகம் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்பட்ட தலைவர், அதிகம் வாசிப்பு இல்லாத கம்யூனிஸ்ட்களே நம்பும் அளவுக்கு இருந்தன அத்தகைய பிரச்சாரங்கள்.

அப்படி முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த தோழர் ஸ்டாலினின் நூல்களின் தொகுப்பு அலைகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது, பதிப்புக்கு ஆதரவளியுங்கள், ஸ்டாலினை வாசியுங்கள்.

அவரை உலகம் புரிந்துகொள்ள வேண்டியது முன்னெப்போதையும்விட இன்று அவசியமாகிறது.

படிக்க :
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

முகநூலில் – வில்லவன் ராமதாஸ்