Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 288

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க ! கருத்துப்படம்

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க !

கருத்துப்படம் : வேலன்

நன்றி : மூலப்படம் – சதீஷ் ஆச்சார்யா

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்

3

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 01

ஹிட்லர் என்ற பாசிச சர்வாதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து இந்த உலகத்தை தனது வீரத்தாலும், தியாகத்தாலும் மீட்டது சோசலிச சோவியத் ரஷ்யா. தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், ரசிய மக்களும் பெரும் தியாகங்களை ஈந்து இந்த உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டனர். இன்று இந்தியா உள்ளிட்டு உலகம் முழுவதும் வலதுசாரி பாசிச அரசுகள் உருவாகிவரும் இந்தச் சூழலில் பாசிசத்தை வீழ்த்தவல்லதாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டுமெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை தோழர் லெனின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் எனும் தனது நூலில் வரையறுத்துள்ளார்.

இந்நூலின் முதல் பகுதியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், ஜனநாயகமும் மத்தியத்துவமும் தனித் தனியே பிரிக்க முடியாதது என்பதையும்  பெயரளவிலான ஜனநாயகம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார் லெனின் !

 

அறிமுகக் குறிப்பு

தோழர் லெனினது வழிகாட்டுதலின்கீழ் எழுதப்பட்டு, தோழர் லெனின் தலைமை தாங்கிய பொதுவுடைமை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் (1921-ல்) நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம், புரட்சிகர பொதுவுடைமைவாத நிறுவனக் கோட்பாடுகளை வரையறுத்துத் தருகின்றது. “லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற நூலில் தோழர் ஸ்டாலின் இந்தப் பொதுக் கோட்பாடுகளைச் சுருக்கமாக, எளிமையாக விளக்கியுள்ளார்.

பொதுவுடைமைவாத நிறுவனங்களுக்கான கோட்பாடுகள் சாரமாக வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துவது, மையமான பெரிய நகரங்களில் குவிந்து வேலை செய்ய வேண்டும் என்பன போன்று வருகின்ற அனுபவங்களை, அந்த நாடுகளின் போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவைகளோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்குப் பொருத்தும்போது, நமது நாட்டு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நீண்டகால மக்கள் யுத்தப் பாதை எனும் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இந்த ஆவணத்தில் வருகின்ற சோசலிஸ்டுக் கட்சிகள் என்பவைகள் சீர்திருத்தவாத கட்சிகளாகச் செயல்பட்டவை; இவைகளில் ஒரு சிலவோ, அல்லது பகுதிகளோ பொதுவுடைமைக் கட்சிகளாக மாற்றம் பெற்றன.

♦ ♦ ♦

 

பாட்டாளி வர்க்கக் கட்சியின் நிறுவனமும் கட்டமைப்பும்

1.பொதுவான கோட்பாடுகள்

1. நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியினுடைய நடவடிக்கைகளின் குறிக்கோளுக்கும் பொருத்தமாகக் கட்சியின் நிறுவன அமைப்பு இருத்தல் வேண்டும். புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும், அதைத் தொடர்ந்து சோசலிசத்தை அடைவதற்கான இடைக்காலத்திலும், அதாவது பொதுவுடைமைச் சமுதாயத்தின் முதல் கட்டத்திலும் பொதுவுடைமைக் கட்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைவரிசையாகவும் விளங்க வேண்டும்.

2. முழுக்க முழுக்க தவறற்றதும் மாற்றக்கூடாததுமான ஒரு நிறுவன வடிவம் ஏதும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட சூழ்நிலைகள் தொடர்ச்சியான பரிணாம நிகழ்வு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற பொருத்தமான வடிவங்களை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையினுடைய நிறுவன அமைப்பு இடையறாது மேற்கொள்ள வேண்டும். இதுபோலவே ஒவ்வொரு நாட்டினுடைய தனிவகைப்பட்ட சூழ்நிலைகள், குறிப்பிட்ட நாட்டு கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிறுவன அமைப்பு வடிவங்களைத் தீர்மானிக்கின்றன.

ஆனால், இத்தகைய பாகுபாட்டுக்கு நிச்சயம் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. தனிச்சிறப்புத் தன்மைகள் எதுவாயினும், பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பல்வேறு இடைக்கட்டங்களிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்ட சூழ்நிலைகளின் தன்மை, உலகப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது, அனைத்து நாடுகளிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவன அமைப்புக்கு பொதுவான அடிப்படையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அடிப்படையில் பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவனத்தைக் கட்டி வளர்ப்பது அவசியம். ஆனால், இப்போது உள்ளவற்றுக்கு முற்றிலும் மாறாக, புதிய மாதிரியிலான கட்சிகளை நிறுவுவதற்கோ, முற்றிலும் முழுதான சரியான நிறுவன வடிவம் மற்றும் உன்னத அமைப்பு விதிகள் என்று ஏதோ ஒன்றுக்கு முயலவோ கூடாது.

புரட்சிக்கான கருவி

3. ஆகப் பெரும்பான்மையான பொதுவுடைமைக் கட்சிகளும், இதன் விளைவாக புரட்சிகர உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட கட்சியான பொதுவுடைமை அகிலமும், தமது போராட்டச் சூழ்நிலைகளில் பொதுவான குணாம்சத்தைப் பலம் வாய்ந்த முதலாளித்துவ வர்க்கத்தை இன்னமும் எதிர்த்துப் போரிட வேண்டியதாக இருப்பதைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதும், அதனிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுப்பதுமே – புதிய மாற்றங்கள் ஏற்படும்வரை – எல்லா பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பொதுவுடைமை அகிலத்திற்கும் வழிகாட்டுகின்ற மற்றும் தீர்மானிக்கின்ற பிரதான லட்சியமாக இருக்கும். இதற்கேற்ப முதலாளித்துவ நாடுகளில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளினுடைய நிறுவன நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் காரணி என்னவென்றால், உடைமை வர்க்கங்களின் மீதான பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றியைச் சாத்தியப்படுத்தும் மற்றும் உத்திரவாதப்படுத்தும்படியான நிறுவனங்களைக் கட்டியமைப்பதாகும்.

தலைவர்களின் நிறுவனம்

4. எந்தப் பொது நடவடிக்கைக்கும் தலைமை என்பது அவசியமான நிபந்தனை. ஆனால், உலக வரலாற்றில் அதி மகத்தான போரில் (போராட்டத்தில்) தலைமை என்பது, அதிமிக புறக்கணிக்க இயலாத ஒன்று. பொதுவுடைமைக் கட்சி நிறுவனம் என்பது, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் பொதுவுடைமைவாதத் தலைமையளிக்கும் நிறுவனம் ஆகும்.

பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும்.

சிறந்த தலைவர்களாக இருக்க கட்சி சிறந்த தலைமைப் பண்பைக் கொண்டிருக்க வேண்டும். அதையொட்டி நமது நிறுவன வேலையின் பிரதானப் பணியானது, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் தலைமையிடத்திற்குத் திறமையுள்ள பொதுவுடைமைக் கட்சிகளைக் கொண்டுவர தகுதி வாய்ந்த, நெறிப்படுத்துகின்ற உறுப்புகளின் (organs) கீழ் கல்வியளித்தல், அமைப்பாக்குதல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகும்.

5. எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் போராட்டச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொதுவுடைமைக் கட்சியும் அதன் தலைமை நிறுவனங்களும் ஆகப்பெரும் அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் வகையிலும் தனது அங்கக் சேர்க்கையைக் கொண்டிருப்பது புரட்சிகர வர்க்கப் போராட்டத்திலுள்ள தலைமைக்கு முன்நிபந்தனைகளாகும். மேலும், வெற்றிகரமான தலைமைக்குப் பாட்டாளி வர்க்கத்துடன் முற்று முழுதாக நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது அவசியம். இத்தகைய நெருக்கமான உறவு இல்லாவிடில், தலைமையானது பரந்துபட்ட மக்களுக்குத் தலைமை ஏற்றுச் செல்லாது. மாறாக, அதிகபட்சம் போனால், மக்களுக்குப் பின்னால் செல்வதாக இருக்கும்.

ஜனநாயக மத்தியத்துவத்தின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியில் அங்ககச் சேர்க்கையானது அடையப்பட வேண்டும்.

2. ஜனநாயக மத்தியத்துவம் பற்றி

இது எப்படி இருக்க வேண்டும்?

6. பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும். பொதுவுடைமைக் கட்சி நிறுவனத்தில் உள்ள மத்தியத்துவம் பெயரளவிலான மற்றும் இயந்திரகதியான மத்தியத்துவம் என்று பொருள்படாது.

படிக்க:
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
♦ மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

ஆனால், பொதுவுடைமைவாத நடவடிக்கைகளின் மத்தியத்துவமாக, அதாவது, போர் நிலைமைக்கும் அதேவேளையில் எந்த நிலைமைக்கும் மாறிக் கொள்வதற்கும் தயாராக உள்ள பலமான தலைமையை உருவாக்குவதாகும். பெயரளவிலான அல்லது இயந்திரகதியான மத்தியத்துவம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது கரங்களில் ‘அதிகாரத்தை’ மத்தியத்துவப்படுத்தும் தொழிற்துறை அதிகாரத்துவம் ஆகும். இது, பிற உறுப்பினர்கள் மீது அல்லது கட்சி நிறுவனத்திற்கு வெளியில் உள்ள புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற, பொதுவுடைமைவாதத் தலைமையை மத்தியத்துவப்படுத்துகின்ற பொதுவுடைமைக் கட்சியானது, புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக பொதுவுடைமைவாதிகளின் எதிரிகள் மட்டுமே குற்றம் சாட்டுவர். அவர்களது இத்தகைய கூற்று அப்பட்டமான பொய்யாகும். பொதுவுடைமை அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவ அடிப்படைக் கோட்பாடுகளுக்கு, அதிகாரத்துக்கான போட்டியோ அல்லது மேலாதிக்கத்துக்கான போட்டியோ அறவே பொருத்தமற்றதாகும்.

அதிகாரத்துவமும் அல்ல, பெயரளவிலான ஜனநாயகமும் அல்ல

புரட்சிகரமற்ற பழைய தொழிலாளர் இயக்க நிறுவனங்களில், முதலாளித்துவ அரசில் உள்ளது போன்ற இயல்புடைய, எங்கும் விரவிய இருமைவாதம் (இருமைவாதம் – தனித்தனியாகப் பிரிந்திருப்பது – மொழிபெயர்ப்பாளர்) அதாவது, அதிகாரத்துவத்துக்கும் ‘மக்களுக்கும்’ இடையிலான இருமைவாதம் வளர்ச்சியுற்று இருந்தது. முதலாளித்துவச் சூழலின் இந்த நச்சுச் செல்வாக்கின்கீழ் செயல்பாடுகள் பிரிந்திருப்பது – பொது முயற்சியுடைய உயிரோட்டமான அமைப்புக்குப் பதில், பயனற்ற பெயரளவிலான ஜனநாயகத்தை வைப்பதும், ஊக்கமான நிர்வாகிகள், செயல்படாத மக்கள் என்று அமைப்பைப் பிளவுபடுத்துவது – வளர்ச்சியுற்றது. முதலாளித்துவ சூழலின் காரணத்தால், புரட்சிகர தொழிலாளர் இயக்கம் கூட இருமைவாதம் மற்றும் சம்பிரதாயவாதம் என்ற போக்கைத் தவிர்க்கவியலாதபடி வழிவழியாகப் பெற்றுள்ளது.

முறையான மற்றும் விடாப்பிடியான அரசியல், அமைப்புப் பணிகள் மூலமாகவும் இடையறாது செழுமைப்படுத்துவது மற்றம் சரிசெய்வது மூலமாகவும் பொதுவுடைமைக் கட்சி இந்த எதிர்மறையான பண்புகளை அடியோடு வெற்றி கொள்ள வேண்டும்.

7. சோசலிஸ்டுக் கட்சியை பொதுவுடைமைக் கட்சியாக மாற்றியமைக்கும்போது பழைய கட்சி அமைப்பை அப்படியே விட்டு வைத்துவிட்டு தனது மத்தியத் தலைமையின் கரங்களில் அதிகாரத்தைக் குவிப்பதுடன் மட்டும் கட்சியானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. மத்தியத்துவம் ஏட்டளவில் மட்டும் இல்லாமல் உண்மையில் உணர்வு பூர்வமாகக் கடைபிடிக்கப்படுவதாக அமைய வேண்டும். இதைச் சாதிப்பது எப்போது சாத்தியமாகும் என்றால், தமது பொது நடவடிக்கைகளிலும், போராட்டத்திலும் இந்த அதிகாரம் (Authority) அடிப்படையிலேயே திறனுள்ள கருவியாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் உணரும்போதுதான். அப்படியில்லையெனில், மத்தியத்துவமானது பரந்துபட்ட மக்களுக்கு, கட்சிக்குள்ளேயே உள்ள அதிகாரத்துவமாகத் தோன்றும். எனவே, இது அனைத்து வகையான தலைமைக்கும் அனைத்து வகையான உருக்குக் கட்டுப்பாட்டுக்கும் எதிர்ப்புணர்வைத் தூண்டுவதாக அமையும். அராஜகவாதமானது அதிகாரத்துவத்தின் எதிர்துருவமாகும்.

கட்சி நிறுவனத்தில் வெறும் பெயரளவிலான ஜனநாயகம் இருப்பது அதிகாரத்துவ போக்குகளையோ அல்லது அராஜகவாதப் போக்குகளையோ ஒழிக்காது. ஏனெனில், பெயரளவிலான ஜனநாயகம்தான் அந்தப் போக்குகளுக்கு செழுமையான விளைநிலமாக இருக்கிறது. எனவே, பெயரளவிலான ஜனநாயகத்தினை அடிப்படையாகக் கொண்டு கட்சி நிறுவனத்தின் மத்தியத்துவம், அதாவது பலமான தலைமையைப் படைக்கும் நோக்கம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட முடியாது. கட்சிக்குள்ளேயே தலைமை நிறுவனங்களுக்கும் உறுப்பினர்களுக்கு இடையிலேயும்  – அதுபோலவே கட்சிக்கும் வெளியில் உள்ள திரளான பாட்டாளி வர்க்கத்துக்கும் கட்சிக்கும் இடையிலும் உயிரோட்டமான இணைப்புகளையும் பரஸ்பர உறவுகளையும் வளர்ப்பதும் நிலைநிறுத்துவதும் இதற்கான மிக அவசியமான முன்நிபந்தனைகள் ஆகும்.

(தொடரும்)

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !

குடியுரிமை திருத்தச்சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என இந்தியா முழுவதும் பார்ப்பனப் பாசிசம் தலைவிரித்தாடும் இந்த அரசியல் சூழலில் மதவெறிக்கு எதிரான தோழர் பகத்சிங்கின் பார்வையை வினவு வாசகர்களின் முன் வைக்கிறோம் ! தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே

“பகத்சிங் சிறையில் இருந்தபோதுதான் மார்க்சியத்தை கற்றுக் கொண்டார்; போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற போதும் அவர் தனி நபர் பயங்கர வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்; உண்மையான புரட்சிகர சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்போது அவருக்கு நம்பிக்கையிருக்கவில்லை” என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லது நம்பிக் கொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையை சற்று கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும்.

ஏனென்றால் இக்கட்டுரை அவர்களது முன் கணிப்புகளில் பல அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இது, சாண்டர்ஸ் கொலைக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இக்கட்டுரையில் மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே என்பதை ஒரு தீர்க்கமான மார்க்சிய வாதியின் வர்க்கப் பார்வையுடன் முன் வைக்கிறார். இக்கட்டுரை 1928 ஜுன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.

♦ ♦ ♦

மதக் கலவரங்களும் நமது கடமையும்

இந்தியாவின் நிலைமை தற்போது வருந்தத்தக்க ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஜென்ம விரோதிகளாக ஆகிவிட்டனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மட்டுமே நீங்கள் மற்ற மதத்தவர்களுக்கு எதிரியாக கருதப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பவில்லையென்றால் தயவுசெய்து லாகூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களைப் பாருங்கள். சீக்கியர்களையும் இந்துக்களையும் எவ்வளவு கொடூரமாக முஸ்லீம்கள் கொலை செய்தனர். சீக்கியர்களும் அதே விதத்தில் பதிலுக்குச் செய்தனர். இந்தக் கொலைகள் சில மனிதர்கள் குற்றம் செய்துவிட்டார்கள் என்பதற்காக நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். முஸ்லீம்களால் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் சீக்கியர்களாகவோ இந்துக்களாகவோ இருந்தாலே போதும். அதே போன்று இந்துக்களாலும் சீக்கியர்களாலும் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலே போதும்.

மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது. இந்த மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன. இந்த வெறுப்புகளின் பிடியில் இருந்து நாடு என்றைக்கு விடுபடும் என்று ஊகிக்க முடியவில்லை. இந்தக் கலவரங்கள் உலகத்தின் பார்வையில் இந்தியாவின் நன்மதிப்பை குலைத்து விட்டன. இந்த மதவாத வெறுப்பு எங்கும் பரவிக் கிடக்கும் நிலையில் வெகுசில முஸ்லீம்கள், சீக்கியர்கள் அல்லது இந்துக்கள் மட்டுமே தங்களது மனதை அமைதியாக வைத்திருப்பதைக் காணமுடிகிறது. மற்றவர்கள் தங்கள் கைகளில் எப்போதும் கம்புகளோடும் கத்திகளோடும் வாட்களோடும் தங்களது மதங்கள் என்று சொல்லப்படுவதை பாதுகாக்கத் தயாராக இருக்கின்றனர். முடிவில் ஒருவரையொருவர் கொன்று குவிக்கின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்களில் சிலர் தூக்குமேடையில் மரணமடைகின்றனர் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஏராளமான இரத்தம் சிந்தப்பட்ட பிறகு பிரிட்டிஷாரின் குண்டாந்தடிகள் இந்த மதவெறிபிடித்த மனிதர்களின் தலைகளைப் பிளக்கும் போதுதான் அவர்கள் தங்களது சுயநினைவுக்கு வருகின்றனர்.

மதக்கலவரங்களைத் தூண்டுவது மதவாதிகளும் செய்திப் பத்திரிக்கைகளுமே

பொதுவாக, மதவாதத் தலைவர்களும் செய்திப் பத்திரிக்கைகளுமே இக்கலவரங்களுக்குப் பின்னணியில் இருக்கின்றனர். இந்தியத் தலைவர்கள் நமக்கு மிக மோசமான துரோகம் செய்துவிட்டனர். யாரும் இதை மறுக்க முடியாது. இந்தியாவை விடுதலை செய்வதற்கான பொறுப்பை உடைய இத்தலைவர்கள், “ஒரே தேசியம்” (Common Nationality) “சுயராஜ்யம்” போன்ற முழக்கங்களை முழங்கினர். ஆனால் இவர்கள் ஒன்று தங்களது மௌனத்தின் மூலம் மதக்கலவரங்களில் முனைப்புடன் இருக்கின்றனர் அல்லது குருட்டுத்தனமான மதவெறிவாத நீரோட்டத்தின் போக்கில் நீந்திக் கொண்டுள்ளனர். மௌனமாக இருக்கும் தலைவர்களின் எண்ணிக்கை குறைவானது அல்ல. ஆனால் மதவாத இயக்கத்தில் சேர்ந்த தலைவர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் அதிகம். அனைத்து மக்களின் நன்மையை விரும்பும் தலைவர்கள் வெகுசிலரே. இந்த மதவாதப் பேரலை அவர்கள் அனைவரையும் அடித்துச் சென்று விட்டது. வழிகாட்டும் தலைமை இல்லாத நாடாக இந்தியா ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது.

தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.

இத்தலைவர்களைத் தவிர, மதக்கலவரங்களைத் தூண்டிவிடும் மற்றவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஒருகாலத்தில் உன்னதமான தொழிலாக கருதப்பட்ட பத்திரிக்கையாளர் தொழில் இன்று மிக மோசமாக சீரழிந்து விட்டது பத்திரிக்கைகள் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உண்டாக்குகின்றன. பத்திரிக்கைகளில் வெளிவந்த உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுரைகளால் வெடித்த கலவரங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அமைதியாக இருக்கும் எழுத்தாளர்கள் வெகுசிலரே.

மக்களுக்கு அறிவூட்டுவதும், குறுகிய மனப்பான்மையிலிருந்து அவர்களை விடுவிப்பதும், அவர்களது மதவாத உணர்வுகளை மட்டுப்படுத்தி மத நல்லிணக்கத்தை ஊக்குவித்து அனைவருக்கும் பொதுவான ஒரே (இந்திய) தேசியத்தை கட்டியமைக்க வேண்டியதும் பத்திரிக்கைகளின் கடமை. ஆனால் அவர்கள், மக்கள் மத்தியில் அறிவீனத்தையும், குறுகிய மனப்பான்மையையும் மதவாதத்தையும் பரப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உண்டாகும் அத்தகைய கலவரங்களின் மூலம் ஒரே (இந்திய) தேசியத்தைச் சிதைக்கின்றனர். பத்திரிக்கைகளின் இச்செயலின் விளைவாக இந்தியாவின் இன்றைய நிலையை நினைக்கும் போது நமது கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி நம் இதயத்தைப் பிளக்கின்றது.

ஒத்துழையாமை இயக்க காலத்தின் போது மக்களிடம் இருந்த கிளர்ச்சி உணர்வைப் பார்த்தவர்களுக்கு இன்றைய சூழ்நிலை பெரும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது. அன்றைய காலத்தில் சுதந்திரம் நமது வாயிற்படி வரை வந்ததை நாம் காணமுடிந்தது. இன்றோ அது வெறும் கனவாக மட்டுமே ஆகிவிட்டது. இது பிரிட்டிஷார் பெற்ற வெற்றிகளுள் ஒன்று. தனது இறுதிக் கட்டத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் ஒரு பாறையைப் போல் உறுதி பெற்றுவிட்டது.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையே

இந்த மதக்கலவரங்களின் ஆணிவேர் எங்கிருக்கிறது என்று நாம் ஆழமாகச் சென்று பார்த்தால், அவை பொருளாதாரக் காரணங்களில் இருப்பதை நாம் காணலாம். தலைவர்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது நிறைய தியாகங்கள் செய்தனர். அவர்களது பொருளாதார நிலைமை சீரழிந்து போனது. ஆனால் ஒத்துழையாமை இயக்கம் தோல்வியடைந்ததால் அவர்கள் நம்பிக்கையிழந்தனர். தங்களது வேலைகளை இழந்த பெரும்பாலான மதவாதத் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி தங்களது தொழிலை மறுபடியும் தொடங்கினர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக பொருளாதாரப் பிரச்சனையே இருக்கும். இது கார்ல் மார்க்ஸின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று. இதுவே, நிலைமையை மோசமானதாக்கிய, தாப்லிக் (Tablique), தாம்கீன் (Tamkeen), சுத்தி (Shuddhi) போன்ற அமைப்புகள் உருவானதற்கான காரணம்.

எனவே, இத்தகைய கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே, ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து, மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் (Marta kya na karta) என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேயப் பேரரசால் ஆளப்படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

மதக்கலவரங்களுக்குத் தீர்வு

வர்க்க உணர்வை உருவாக்குவதே நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும். ஏழை உழைப்பாளிகளும் விவசாயிகளும் தங்களது உண்மையான எதிரிகள் முதலாளிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முதலாளித்துவவாதிகளின் கைப்பாவை களாக ஆகி விடக்கூடாது. தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.


அந்த வீரன் இன்னும் சாகவில்லை ! கோவன் பாடல்!


ரஷ்யாவின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்களது நிலைமையும் நம்முடைய நிலைமையைப் போன்றே இருந்தது என்பதை அறிவார்கள். ஜாரின் ஆட்சியின்போது நம்மைப்போலவே அந்த மக்களும் பல குழுக்களாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஒட்டுமொத்த சூழ்நிலையே மாறிவிட்டது. இப்பொழுது அங்கே, கலவரங்கள் நடப்பதில்லை. பொருளாதார வறுமையின் காரணமாகவே ஜார் ஆட்சிக் காலத்தில் கலவரங்கள் ஏற்பட்டன. (சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு இப்பொழுது அவர்களது பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளது. “மனிதர்கள்” ஒவ்வொருவரும் “மனிதர்களாகவே” நடத்தப்படுகின்றனர். அவர்கள் “பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக” நடத்தப்படுவதில்லை. மக்கள் வர்க்க உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே இப்பொழுது அங்கே கலவரங்கள் பற்றிய செய்தியை எங்குமே கேட்க முடியாது

வர்க்கப் போராட்டங்களே மக்களின் ஒற்றுமையை சாதிக்கும்

மாறாக நமது நாட்டில் கலவரங்களின் போது பொதுவாக நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யும் செய்திகளே நமக்கு வருகின்றன. ஆனால் கல்கத்தா கலவரங்களில் ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்குத் தென்படுகிறது. அங்கே, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இந்து முஸ்லீம் தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததுடன் கலவரங்களை அமைதிப்படுத்தவும் முயன்றனர். அவர்கள் வர்க்க உணர்வு பெற்றவர்களாக இருந்ததனாலேயே அவர்களால் இதைச் செய்ய முடிந்தது. அவர்களுடைய நலன் எதில் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வர்க்க உணர்வு மட்டுமே இத்தகைய கலவரங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி.

வெறுப்பை விதைக்கும் மதங்களில் இருந்து நமது இளைஞர்கள் விலகியிருக்கின்றனர் என்பது நமக்குக் கிடைத்த மற்றொரு நல்ல செய்தி. அவர்கள் திறந்த மனதுடன் மனிதர்களை மதிப்பிடுகின்றனர். அவர்கள் மக்களை ஹிந்துக்களாக அல்லது முஸ்லீம்களாக அல்லது சீக்கியர்களாகப் பார்ப்பதில்லை. முதலில் மனிதர்களாகவும், பின்னர் இந்தியர்களாகவுமே மக்களை மதிப்பிடுகின்றனர். இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இந்த கலவரங்களைக் கண்டு அஞ்சக் கூடாது. மாறாக இது போக கலவரங்களே இனி ஏற்படாதவாறு அத்தகைய வர்க்க உணர் தட்டியெழுப்புவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசியலிலிருந்து மதம் பிரித்து வைக்கப்பட வேண்டும்

1914-1915ம் ஆண்டுகளின் தியாகிகள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்திருந்தனர். மதம் என்பது தனிநபர்களின் விவகாரம். அதனை சமூக வாழ்க்கையில் கலக்க விடக்கூடாது. ஏனென்றால் அது சமூகம் ஒன்று படுவதற்கான வளர்ச்சிப் போக்கை தடைப்படுத்துகிறது என்றனர். அவர்களது இந்த நிலைபாட்டின் காரணமாகவே கெதார் கட்சி ஒன்றுபட்டதாகவும் வலிமையானதாகவும் இருந்தது. அக்கட்சியின் கீழ் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவருமே நாட்டிற்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

தற்காலத்தில் ஒருசில தலைவர்கள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மக்களிடையே உள்ள வெறுப்புகளை மட்டுப்படுத்த இது சரியான வழியே. நாங்கள் அவர்களது முயற்சிகளை ஆதரிக்கிறோம். அரசியலில் இருந்து மதம் பிரித்து வைக்கப்பட்டு விட்டால், நாம் நமது மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றுபட முடியும்.

இந்தியாவின் உண்மையான நலம் விரும்பிகள், நாங்கள் முன்வைக்கும் இந்த வழிமுறைகளைப் பற்றி ஆழமாக சிந்திப்பார்கள் என்றும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்தியாவைக் காப்பாற்றுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். (கேளாத செவிகள் கேட்கட்டும்… நூலிலிருந்து பக்.104-110)

சமன்லால் தொகுத்து வெளியிட்ட “பகத்சிங்கின் முழு ஆவண தொகுப்பு” எனும் ஹிந்தி நூலில் இருந்து நமது நாக்பூர் தோழர் க. ஜாம்தாரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர் தமிழாக்கம். இது பின்னர் K.C. யாதவின் தொகுப்பில் இருந்த மொழிபெயர்ப்புடன் ஒப்பிடப்பட்டு சீர் செய்யப்பட்டது. உட்தலைப்புகள் நம்முடையவை.

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

மீண்டும் இயங்குகிறது வினவு தளம் !

35

தேதி: 23.3.2020

ன்பார்ந்த வாசகர்களே, நண்பர்களே!

எமது வினவு இணைய தளத்தின் ஆசிரியர்குழு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி “விடைபெறுகிறோம் வினவு ஆசிரியர் குழு’’ என தமது விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்.

தற்போதைய அரசியல் சூழலில் கடந்த ஒரு மாத காலமாக தளம் செயல்படாததற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வினவு தளம் அரசியல் அரங்கில் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் கருதியும், வினவின் வாசகர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வினவை விரைந்து செயல்பட வைக்குமாறு கோரிய வகையிலும் நான் பொறுப்பாசிரியராக இருந்து வினவு தளத்தை இயக்கத் தொடங்கியுள்ளோம். இதுவரை எமக்கு உறுதுணையாக இருந்து வந்த வாசகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

வினவு பொறுப்பாசிரியர்,
காளியப்பன்.

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

80

அன்பார்ந்த தோழர்களே,                                                            24.02.2020

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும், இவையன்றி வேறு சில பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்த நான், எல்லா பொறுப்புகளிலிருந்தும், குறிப்பாக, இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகுகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற காரணத்தினாலும், தமிழகமெங்குமுள்ள அமைப்புத் தோழர்களுக்கு எனது விலகலையும்  அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதற்கு வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், அவசியமான விவரங்களை மட்டும் கோடிட்டுக் காட்டி எனது விலகலைத் தவிர்க்கவியலாமல் பொதுவெளியில் அறிவிக்கிறேன்.

எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

தோழர் மருதையன்

அயோத்தி தீர்ப்பு, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று மோடி அரசின் பார்ப்பன பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், எங்களது இந்த விலகல் அறிவிப்பு பலருக்கு வருத்தமளிக்கலாம், சிலருக்கு அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கலாம். நாடெங்கும் மாணவர்களும் முஸ்லிம் பெண்களும் இன்னும் பல்வேறு தரப்பினரும், அஞ்சாநெஞ்சினராய் பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதென்பது காலத்தின் தேவை. அத்தகைய முயற்சியில் முன்நிற்க வேண்டிய அமைப்பின் தலைமைத் தோழர்கள், அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே என்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.

சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்குப் பின்னர், எமது அமைப்புகளிலிருந்து சிலர் வெளியேறியதையும், வெளியேற்றப்பட்டதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு “பதிலிப்போர்” நடத்தினர்.

“1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்திவிட்டேன் 2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன் 3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன். 4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன் 5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன் 6. மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். (கீற்று இணையதள கட்டுரை மற்றும் எழில்மாறன் உள்ளிட்ட சிலரின் முகநூல் பதிவுகள்). இவை தவிர தரம் தாழ்ந்த பல அவதூறுகளையும் கடந்த ஓராண்டாக வாய்வழியே பரப்பி வந்தனர்.

தங்களுக்கு உவப்பில்லாத அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் ஒரு சதிக்கோட்பாடாக மாற்றி, “குற்றத்தை” என் தலையில் சுமத்தினர். “போம்பழியெல்லாம் அமணன் தலையோடே” என பழி எதுவாகிலும் அதனைச் சமணர் தலையில் சுமத்திய ஆழ்வார்கள் நாயன்மார்களின் தந்திரம் இது.

அவதூறு செய்தவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர்.  அவ்வாறு முடிவெடுத்த பிரதிநிதிகள் அனைவருமே “செட் – அப் செய்து கொண்டுவரப்பட்ட மோசடிப்பேர்வழிகள்” என்று அனைவரையும் தூற்றினர். இந்த நபர்களை “சீர்குலைவு சக்திகள்” என்று அமைப்பின் தலைமை அறிவித்தது. அத்தகைய சிலர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

னால், வேறு சிலர் இதே அவதூறுகளை, அமைப்புக்குள் இருந்தபடியே ஓராண்டாகப் பரப்பி வந்தனர். சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரைத் தூண்டிவிடுவதே அமைப்பிற்கு உள்ளே இருக்கும் இந்த “தந்திரசாலிகள்”தான் என்று தலைமைக்குழுவுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும். இவர்கள்தான் சீர்குலைவு நடவடிக்கைகளின் ஆணிவேர் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தலைமைக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவு காகிதத்தில் இருக்கிறது.

இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு “குற்றமற்றவர்கள்” என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள்.

அமைப்பை அவதூறு செய்தவர்களுக்குத் தலைமை சூட்டிய பெயர் “சீர்குலைவு சக்திகள்”. அத்தகைய சீர்குலைவு நடவடிக்கையைத் தூண்டியவர்களைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசிய தலைமைக்குழுவினை என்ன பெயரிட்டு அழைப்பது? இப்படியொரு தவறை கீழ்மட்டத்தில் யாரேனும் செய்திருந்தால், “சீர்குலைவு சக்திக்கு துணைபோனார்கள்” என்று குற்றம்சாட்டி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அமைப்பின் காவலர்களாக இருந்திருக்க வேண்டிய தலைமைக்குழுவின் பெரும்பான்மைத் தோழர்கள் சீர்குலைவின் காவலர்களாக நடந்து கொண்டிருக்கிறார்களே, என்ன செய்வது?

“அமைப்பின் பொதுமேடையில் அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் தலைமைக்குழுவினரை விசாரிப்பதுதான் நியாயமான அமைப்புமுறை” என்று நானும் வெறு சில முழுநேர ஊழியர்களும் வலியுறுத்தினோம். “தாங்கள்தான் அமைப்பின் அதி உயர் தலைமை” என்பதால், தவறு செய்தவர்கள் தங்களுக்குள் சுயவிமர்சனம் செய்து பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் அமைப்புமுறை  என்பது தலைமைக்குழு பெரும்பான்மையினரின் நிலை.

முதலாளித்துவ நீதிமுறையாலேயே ஒப்புக்கொள்ளப்படாத, “எனக்கு நானே நீதிபதி” என்ற நெறியை, இதுதான் பாட்டாளிவர்க்க அமைப்புமுறை என்று கூறியதை எங்களால் ஏற்கமுடியவில்லை. “பொறுப்புகளிலிருந்து விலகுகிறோம். சாதாரண உறுப்பினராக செயல்படுகிறோம்” என்று அக்டோபர் 16 அன்றே கடிதம் கொடுத்து விட்டோம். அதற்குப் பின்னரும் அவர்கள் நிலையில் மாற்றமில்லை. “உங்கள் தவறை அணிகள் மத்தியில் ஒப்புக்கொள்ளாவிட்டால், நாங்கள் அமைப்பிலிருந்தே வெளியேறுவோம்” என்று நாங்கள் கூறவில்லை. “இந்த முறைகேட்டுக்கு உடன்பட்டு தலைமைப் பொறுப்புகளில் நாங்கள் நீடிக்க முடியாது. உறுப்பினராக வேலை செய்கிறோம்” என்று மட்டுமே வலியுறுத்தினோம்.

எங்களது பதவி விலகல் அணிகளுக்குத் தெரிந்தால், ஏன், எதற்கு என்ற கேள்வி எழுமே, தங்களது தவறுகளும் தவிர்க்கவியலாமல் வெளியே வருமே என்பது அவர்களது கவலை. இதனால்தான் எனது கடிதத்தின் மீது முடிவே எடுக்காமல் 4 மாதங்களாக இழுத்தடித்தார்கள். நான் ம.க.இ.க வின் செயலராக இருக்கும்போதே என்னை மாநாட்டுப் பணிகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைத்து எனக்குப் “பாடம்” புகட்டினார்கள். “மருதையன் எங்கே” என்று கேட்ட தோழர்களிடம் நான் ஆய்வுப்பணியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்தார்கள். தலைமையின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் அணிகளும் இதையெல்லாம் நம்பினார்கள்.

தாங்கள் செய்த முதல் தவறு அணிகளுக்குத் தெரிந்துவிடாமல் மறைப்பதற்காக, “அமைப்புமுறை” என்ற திரைக்குள் மறைந்து கொண்டு, அவர்கள் செய்த அடுத்தடுத்த தவறுகள், முதல் தவறைப் பன்மடங்கு விஞ்சிவிட்டன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக, அவர்களிடம் வெளிப்பட்ட நேர்மையின்மையும் அதிகாரத்துவப் போக்கும் அவர்களது இன்னொரு முகத்தை எனக்கு அறியத்தந்தன.

னது விலகலுக்கான காரணம் இதுமட்டுமேயல்ல. “அம்பேத்கரியம் + பெரியாரியம் + மார்க்சியம்” என்று அமைப்பின் கொள்கையை  கள்ளத்தனமாக மாற்றுவதற்காகத்தான்  “நீலநிற ஜீன்ஸ், கருப்பு சட்டை, தலையில் சிவப்பு துணி” என்று ம.க.இ.க கலைக்குழுவின் சீருடையை மருதையன் மாற்றிவிட்டார்” என்று ஒரு பிரச்சாரத்தை சென்ற ஆண்டு திருச்சி மாநாட்டிற்குப்பின் மேற்சொன்ன தந்திரசாலிகள் சமூக ஊடகங்களில் அவிழ்த்துவிட்டனர். இது ஒரு மலிவான அவதூறு என்று நான் விளக்கிய பின்னரும், தலைமைக்குழுவின் முக்கியத் தோழர்கள் இந்த சந்தேகப் பார்வையிலிருந்தே என்னை அணுகினர். அமைப்புக்குள் இருந்துகொண்டே இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்பியவர்கள் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டையே எதிர்ப்பவர்கள் என்பது தலைமைத் தோழர்களுக்குத் தெரியும். இருப்பினும் தலைமைத் தோழர்களின் “சந்தேகப்பார்வை” என்மீது இருந்ததேயொழிய, பார்ப்பன பாசிசம் என்ற அரசியலையே எதிர்ப்பவர்கள் மீது இல்லை.

“அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி”, “சதி நடக்கிறது”, “முக்கியத் தோழர்களை ஒதுக்கும் முயற்சி” என்பன போன்ற சொற்கள் என்னைக் குறிவைத்து ஓராண்டாகவே பேசப்பட்டு வருகின்றன. அவற்றை அப்போதெல்லாம் பொருட்படுத்தாத நான், இப்போது அந்தச் சொற்களின் முழுப்பொருளை புரிந்து கொள்கிறேன். இவை குறித்த விவரங்கள் தலைமைக்கு நான் எழுதிய கடிதங்களில் உள்ளன. மேற்கண்ட சொற்கள் அனைத்தும் எழில்மாறன் என்பவரின் கடிதத்தில் இடம்பெற்றிருப்பவை என்பதை மட்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இறுதியாக, சனவரி,11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20 பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். “எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல். எங்களுக்குக் கொடுங்கள், விளக்கமளிக்கிறோம்” என்று கேட்டுவிட்டோம். தரமறுக்கிறார்கள்.

ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அதிகாரவர்க்கம், அதனை கேள்விக்குள்ளாக்குகின்ற செயல்பாட்டாளர்களை (whistle blowers) அவதூறு செய்து, பொய்வழக்கு போட்டு “உள்ளே” தள்ளுவது போல, என்மீது “பொய்வழக்கு” தொடுத்து “வெளியே” தள்ளுவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். எனக்கெதிரான விமர்சனங்களை எனக்குத் தெரிவிக்க மறுத்து, என் முதுகுக்குப் பின்னால் மற்றவர்களிடம் சுற்றுக்கு விடுகிறார்கள். “அமைப்பு நலனை முன்னிட்டு இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது” என்று இந்த முறைகேட்டுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள்

தனிப்பட்ட தாக்குதலைச் சந்திப்பது எனக்குப் புதிய அனுபவமல்ல. அமைப்பின் முகமாக நான் அறியப்பட்ட காரணத்தினால், அமைப்பில் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் என் தலை உருண்டிருக்கிறது. இதை அமைப்பின் முன்னணித் தோழர்கள் அறிவார்கள். பல சந்தர்ப்பங்களில் நமது அமைப்பை விமர்சிப்பவர்களுக்கு எளிய தாக்குதல் இலக்காக நான் இருந்து வந்திருக்கிறேன்.

மொத்த அமைப்பின் தலைமை நானல்ல என்ற போதிலும், பார்ப்பனத்தலைமை என்ற விமர்சனத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து என்னை மையப்படுத்தி பலர் வைத்திருக்கின்றனர். அப்படி விமர்சித்தவர்கள் யாருக்கும் என்மீது தனிப்பட்ட பகை கிடையாது. அது அவர்களது அரசியல் பார்வை. அத்தகைய பார்வை வருவதற்கான சமூக எதார்த்தமும் உள்ளது என்ற காரணத்தினால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் காட்டியதில்லை. பொதுமேடையில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது, தி.க வைச் சேர்ந்த எனது நண்பர்கள், அங்கேயே தமது கட்சியினரை மறுத்து வாதாடியிருக்கிறார்கள்.

அவர்கள் காட்டிய நேர்மை நமது அமைப்பின் முக்கியத் தோழர்களிடம் இல்லை. தம்மை விமர்சித்த ஒரே காரணத்துக்காக என் மீது தரம்தாழ்ந்த தாக்குதல் தொடுக்கவும்,  பொய்ப்பழி சுமத்தவும் இவர்கள் தயங்கவில்லை. எதுவாக இருந்தாலும் விமர்சனத்தை வெளிப்படையாக நேருக்குநேர் என்னிடம் சொல்லும் நேர்மை, அமைப்புக்குள்ளே இருந்து கொண்டு பதிலிப்போர் நடத்துவோரிடமும் இல்லை. தலைமைத் தோழர்களிடமும் இல்லை.

நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். “தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன்” என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்துவிட்டேன். நான் “வெளியேறுகிறேன்” என்று சொல்வதை விட, “வெளியேற்றப்படுகிறேன்” என்பதே உண்மை.

“இந்த அரசியல் தருணம் விலகுவதற்கு ஏற்றதல்ல” என்று பலரும் கருதலாம். ஆனால் இந்த அரசியல் – அமைப்புத் தலைமை மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். 35 ஆண்டுகள் முழுநேரமாகப் பணியாற்றி விட்டு, தவறை நேர்மையாக விமர்சித்த குற்றத்துக்காக, “சதிகாரன் – பதவி வேட்டைக்காரன் என்பன போன்ற அவதூறுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அமைப்பில் நீடிப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நான்கரை மாதங்களில் தலைமைக்குழுவுடனான எனது கடிதப் போக்குவரத்து, முன்னணித் தோழர்கள் குழுவின் கூட்டக் குறிப்புகள், எனக்கே தரப்படாத என் மீதான விமர்சனக் கடிதம் ஆகியவை உங்களுக்கு வாசிக்க கிடைக்குமானால் என்னுடைய கூற்றில் இருக்கும் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

தலைமையின்மீது நம்பிக்கை வைத்து, அதற்குக் கீழ்ப்படிந்து உழைக்கும் தோழர்களிடம், தலைமை தனது தவறுகளை மறைக்கிறது. நேர்மையின்றி நடந்து கொள்கிறது. “அமைப்பில் எல்லோரும் சமம்” என்று ஏட்டளவில் கூறிக்கொண்டாலும், “சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” என்ற கருத்து தலைமைத் தோழர்கள் மனதில் இருக்கிறது. இவ்வாறு சிந்திப்பவர்கள், தங்கள் தவறை அணிகளுக்கு மறைப்பதும் கூட “அமைப்புநலனை முன்னிட்டுத்தான்” என்று நம்புகிறார்கள். தவறு வெளியில் தெரிந்தால் “தங்கள் மீது அணிகள் நம்பிக்கை இழக்கக் கூடும்” என்பது அவர்கள் கவலை. ஆனால் “அமைப்பின் மீது நம்பிக்கை போய்விடும்” என்று அதை சித்தரிக்கிறார்கள். “அணிகள்தான் அமைப்பு – தாங்கள் பிரதிநிதிகள் மட்டுமே” என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

அமைப்பு என்பது சிலரின் உடைமையல்ல. தலைமையால் தனது அதிகாரத்தின் துணை கொண்டு,  தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும். எத்தகைய கண்காணிப்புகளை உருவாக்கினாலும், “சரி – தவறுக்கிடையே நடுநிலை வகிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்” பலர் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது ஏட்டில் மட்டுமே இருக்க முடியும். இது இப்பிரச்சனையில் நான் பட்டுத் தெரிந்து கொண்ட கசப்பான உண்மை.

நான்கரை மாதங்களாக அமைப்புக் கட்டுப்பாடு கருதி நான் தோழர்கள் யாரிடமும் பேசவில்லை. இப்போது பேசுகிறேன். “பார், அமைப்பு விசயங்களைப் பொதுவெளியின் பேசுகிறான், சீர்குலைவு சக்தி” என்று அவர்கள் என்னை அழைக்கக்கூடும். அவர்களால் இவ்வாறு அழைக்கப்படுவதை ஒரு நகைச்சுவையாகவே நான் எடுத்துக் கொள்வேன். “அமைப்பின் கவுரவத்தைக் குலைக்கிறேன்” என்று குற்றம் சாட்டுவார்கள். தங்கள் போலி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைப்பின் கவுரவத்தை சந்திக்கு கொண்டு வந்திருப்பவர்கள் அவர்கள்தான் என்பதே எனது பதில்.

பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு –  அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது. “அமைப்பு நலன்”, “அமைப்பு முறை” என்ற இரு சொற்றொடர்களைத் தங்களது தவறை மறைப்பதற்கான கேடயமாகவும், விமர்சிப்போரை வீழ்த்துவதற்கான வாளாகவும் இந்தத் தலைமை தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊன்றி நின்று போராடிப் பாருங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

நாங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகுகிறோம். நாற்பதாண்டு அமைப்பு வாழ்க்கையில் தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை. இன்று அவை வெறும் நினைவுகள் மட்டுமே.

நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன.

எனினும் நினைவுகளில் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய நிஜம் இதுதான்.

விடைபெறுகிறேன் தோழர்களே!

தோழமையுள்ள,
மருதையன்

 ________________

 அன்பார்ந்த தோழர்களே,

சுமார் 30 ஆண்டுகளாக முழு நேர ஊழியராக அமைப்பில் செயல்பட்டு வருகிறேன். புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறேன். வினவு தளத்தை உருவாக்கி நடத்தி வருவதில் முக்கியப் பங்காற்றி வருகிறேன். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.

கடந்த நான்கரை மாதங்களாக தோழர் மருதையனுடன் இணைந்து தலைமையின் நேர்மையின்மைக்கும் அதிகாரத்துவத்துக்கும் எதிராக நானும் போராடினேன். அவரது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதே காரணங்களுக்காக,  நானும் ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் விலகுகிறேன்.

தோழமையுள்ள,
நாதன்

_______

ன்று 24.2.2020 தேதியன்று எமது கோரிக்கையின் பேரில் கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் எமது விலகலை முன்வைத்தோம். மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிராகரித்தனர். ம.க.இ.க. செயலராக மருதையனும், மாநில செயற்குழு உறுப்பினராக நாதனும் செயல்படுவதில் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லாத நிலையில், உங்களுக்கும் எங்களுடனான உறவில் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலையில் நீங்கள் இருவரும் தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க விரும்பிய போதிலும் தவிர்க்கவியலாத நிலையில் எமது இந்த விலகலை அறிவிக்கிறோம். மாநில செயற்குழு உறுப்பினர்களும் ம.க.இ.க தோழர்களும் புரிந்து கொள்ளுமாறும் எமது விலகலை அங்கீகரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள
மருதையன்
நாதன்

தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி

டந்த 2016-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பின் (DE MONETISATION) நோக்கம் – சிறுதொழில், விவசாயத்தை கார்ப்பரேட் நலனுக்கு பலியாக்குவது

2019-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமையழிப்பின் (DE CITIZENISATION) இலக்கு – முஸ்லிம் சமூகத்தினர் மட்டும்தானா?

பணமதிப்பழிப்பு கருப்புபண பேர்வழிகளைத்தான் பாதிக்கும் என்று மோடி சொன்னார். ஏமாந்தீர்கள்….

படிக்க :
♦ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
♦ நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
♦ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
♦ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

குடியுரிமை அழிப்பின் பாதிப்பு முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்கிறார்கள். மீண்டும் நம்பி ஏமாறப்போகிறீர்களா?

இந்த அரசமைப்புக்கு இறையாண்மையை வழங்கியவர்கள் மக்கள்.    மக்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டா?

இந்தியாவைக் கொள்ளையடிக்க சவுதி இளவரசரின் மூலதனம் எல்லை தாண்டி வரலாம். வங்க தேசத்திலிருந்து முஸ்லிம் தொழிலாளி உழைத்துப் பிழைக்க இங்கே வரக்கூடாதா?

கீழடி நாகரிகத்தின் மைந்தனே!
நீ இம்மண்ணின் குடிமகனா என்பதை டில்லியிலிருந்து
ஒரு அகர்வாலோ, அணில்வாலோ தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்கிறாயா?

ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ,    அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்…

எச்சரிக்கிறது… கேள்விகளை எழுப்புகிறது… விடை தேடுகிறது… தோழர் மருதையனின் இந்த உரை.

பாருங்கள் ! பகிருங்கள் !

அஞ்சாதே போராடு ! மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் !!

PP Letter head

தேதி: 21-2-2020

பத்திரிக்கைச் செய்தி

ன்புடையீர், வணக்கம்,

வரும் 23-2-2020 ஞாயிறு மாலை 5-00 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மாநகராட்சி திடலில், மக்கள் அதிகாரம் சார்பில் CAA – NRC – NPR  வேண்டாம், கல்வி வேலை ஜனநாயகம் வேண்டும், அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. போலீசாரின் உத்திரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாரின் உத்திரவை ரத்து செய்து மாநாடு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைத்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சி.ஏ.ஏ – என்.பி.ஆர். தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கைகாக தமிழகம் தொடர் போராட்டங்களால் குமுறி கொண்டே இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் இரவு பகலாக போராட்ட களத்தில் இருப்பது அனைவரும் பின்பற்ற தக்கவையாக உள்ளது.

தமிழக முதல்வர் சட்டமன்ற உரையில் சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ஆதாரம் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், வரலாற்று ஆய்வாளர்கள், மெத்த படித்த உயர்கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள் கடந்த இரண்டு மாதமாக குடியுரிமை சட்டத்தின் அபாயத்தை விளக்கி களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் வரை பலியாகி உள்ளனர். உலக நாடுகள் பல கண்டித்திருக்கின்றன. அசாமில் கண்முன்னே பல லட்சம் மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு வதை முகாமை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் குடியுரிமையை நிரூபிக்க சொல்லி ஆதார் அட்டையை ரத்து செய்து ஆயிரம் முசுலீம்களுக்கு நோட்டிசு அனுப்பி உள்ளனர். எனவே, என்.ஆர்.சி-யின் முன்தயாரிப்பான  என்.பி.ஆர். திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் :

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உயர்திரு. கோபால கவுடா அவர்கள்
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்கள்.

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட ஆட்சியர் திரு. சசிகாந்த் செந்தில்,

எழுத்தாளர் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கின்
கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர். பாலன்,

திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி,

தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர். தியாகு,

டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தலைவர்,
ஆராய்ச்சி மாணவர் திரு. சாய் பாலாஜி,

மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். சி. ராஜு ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழக கலைக் குழுத் தோழர்கள் கோவன் தலைமையில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

சி.ஏ.ஏவை எதிர்த்து பாடி வரும் ராப் பாடகர். தெருக்குரல் அறிவு அவர்களும் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

மாநாட்டிற்கு மக்கள் அதிகார பொருளாளர் தோழா். காளியப்பன் அவர்கள் தலைமை தாங்கவும்,  கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்கள் வரவேற்புரை வழங்கவும், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் அவர்கள் நன்றியுரை வழங்கவும் உள்ளார்கள்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் பாசிச பா.ஜ.க ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும் போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வே தனது பாசிச நடவடிக்கையால் அதை துரிதபடுத்துகிறது. தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியால் வாழ முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் முன்வைக்காமல் துன்பப்படும் மக்களை மேலும் மேலும் அடக்கி ஒடுக்க முனைகிறது. இன்று நாட்டில் நிலவுகின்ற அமைதியற்ற சூழல் அனைத்திற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க தான். கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது.

மாநாட்டிற்கு பத்திரிக்கை ஊடக தொலைகாட்சி நண்பர்கள் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கோருகிறோம். பொது மக்கள் அனைவரும் மாநாட்டிற்கு குடும்பத்தோடு பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இருகரம் கூப்பி அழைக்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பங்கேற்பாளர்கள் :
1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
2. காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள்  அதிகாரம்.
3. மருது, செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்.
4. கோவன், புரட்சிகர பாடகர், ம.க.இ.க
5. லெ. செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை-083.
E-mail : ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn

சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !

1
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 05

முதல் பாகம்

சோழர் ஆட்சியில் அறப் போர்கள் (தொடர்ச்சி…)

« முந்தைய பாகம்

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது.

இது மட்டுமல்ல; போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும், கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரிகொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ’சிவத் துரோகி’ என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்’ என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையைப் படைகளின் பாதுகாப்போடும், மதக் கொள்கைகளின் அனுசரனை யோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவு மீறும் போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல.

அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர் தொழிலாளிகளின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தியான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும், அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு :- அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவ்வந்தியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.

இதேபோலத் தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், மன்னனது கவனத்தை ஈர்க்கவும், சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தவும், பணி செய்யவும். தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி, சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்ந்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு.

படிக்க:
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள். பஞ்சக்காலத்தில் நிலமிழந்தவர்களும், வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்று விடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ, தமையனோ அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும் போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும், அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான திருவீதிப் பணி செய்வாரும் திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள் முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள், நாட்டார் கட்டளையை எதிர்த்தனர்! சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.

அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும்.

அதற்கு ஒரு உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன், வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல், எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள். இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது (கோயில் சாசனங்கள் முன்னுரை).

பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள்கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும், நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும், சபையாரின் முடிவுகளும், கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால், இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் – சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ, சாண்டேசுவரா பெயராலேயோ, செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதைக் குறிப்பிடமாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்து விட்டதையும், மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி.

இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, உடையாளூர் சாசனத்தையும், தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5-ம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்). இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைக் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள் அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.

இக்கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும், பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா

“கலை – கலாசாரத்தில் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், கலாச்சாரத்தை ஒரு ஜனநாயக உரையாடலாகவே யாரும் யோசிக்கவேயில்லை. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டுமென நினைக்கிறோம். கலாச்சாரம், கலை குறித்து அப்படி நினைத்ததில்லை. மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?” – டி.எம். கிருஷ்ணா

பேட்டியிலிருந்து ஒரு பகுதி :

கே : மிருதங்கம் செய்பவர்களிடமும் வாசிப்பவர்களிடமும் பேசும்போது, ஜாதி தொடர்பான அம்சங்கள், பாகுபாடுகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதா?

ப : இதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதில் உள்ள நுணுக்கம், கண்ணுக்குத் தெரியாத அம்சங்கள்தான். அதை யாரும் பொதுவாகப் பார்ப்பதில்லை. அவர்கள் சிந்தனையிலேயே இந்தப் பாகுபாடு குறித்த கவனம் இல்லை.

மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான உறவே வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருக்கும். ஒரு பக்கம் பிராமணர்கள். அவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழக்கமான சமுதாயத்தில் என்ன ஓர் உறவு இருக்கிறது? ஒன்றும் இல்லை. அதிகபட்சம் கடைகளில் ஏதாவது வாங்கியிருப்பார்கள்.

ஆனால், இங்கே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. ஏனென்றால் மிருதங்கம் என்பது வெறும் இசைக்கருவி அல்ல. அது ஒரு உணர்வுரீதியான கருவி. இம்மாதிரி உணர்வுள்ள ஒரு இசைக் கருவி மூலமாக இரு சமூகத்தின் இடையிலேயும் ஓர் உறவு ஏற்படுகிறது. இந்த உறவு நிச்சயம் சிக்கலானதாகத்தான் இருக்கும். எளிதாக, சாதாரணமானதாக இருக்க முடியாது.

ஆகவே மிருதங்கம் என்பது வெறும் இசைக் கருவி மட்டுமல்ல. உறவுக்கான பாலமாகவும் இருக்கிறது. சாதாரணமாகத் தெரியும் விஷயங்களுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்று சிந்திக்க எனக்கே இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

படிக்க:
♦ ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்
♦ காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !

***

கர்நாடக இசையில் உள்ள ஜாதிப் பாகுபாடு, தன்னுடய புதிய புத்தகம் ஆகியவை குறித்து டி.எம். கிருஷ்ணாவின் விரிவான பேட்டி கீழே லின்கில்…

ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்

ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – பாகம் 01

மலையாள இலக்கிய எழுத்தாளர், விமர்சகர், கல்வியாளருமான எஸ்.குப்தன் நாயர் எழுதிய முன்னுரை:

தகழி சிவசங்கரன் பிள்ளை.

நாவல், மத்தியதர வர்க்கத்தினரின் – அல்லது பூர்ஷ்வா (முதலாளித்துவ) வர்க்கத்தினரின் – கலையுருவமாகத்தான் பிறவி எடுத்தது. மத்தியதர வர்க்கத்தினரின் உயர்வு தாழ்வுகள், கனவுகள், இவற்றின் சீரழிவு – ஆகியவற்றையே இந்தக் கலையுருவம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து வந்திருக்கிறது. சமூகமென்ற பெரும் கோட்டையின் நடுவில் யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்ற தனிமனிதனே, பழைய நாவலின் இடையறாத மையக் கருத்து. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொழில் புரட்சியின் விளைவாக, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதியதொரு மத்தியதர வர்க்கம் உருப்பெற்றது; இன்றைய நாவல் இலக்கியம் பிறந்ததும் இந்நாடுகளில் தான். மாறுபட்ட சூழ்நிலையில், வாழ்வது என்பதே மத்தியதர வர்க்கத்தினருக்குச் சாகசம் மிக்க ஒரு செயலாகிவிட்டிருந்தது. இந்தச் சாகசங்களைச் சித்திரிப்பதில் தான் அன்றைய நாவலாசிரியர்கள் ஆர்வம் காட்டினார்கள். ராபின்ஸன் குரூஸோ, டான் க்விக்ஸாட், பிக்விக் ஆகியோர் இந்தச் சாகசங்களின் பிரதிநிதிகளேயாவர்.

இலக்கியத்தில் தோன்றிய நாவல் என்ற இந்த நவீன இலக்கிய வடிவம் நம் நாட்டில் உதயமானபோது, அது புராணங்களின் சாயல் உடையதாக இருந்தது. மலையாளத்தில் எழுதப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படும் ‘குந்தலதா'(1887), ஒரு புராணத்தின் பண்புகளை உடையதாகவே இருக்கிறது. அதில் பல சிறப்பம்சங்கள் இருக்கலாம்; ஆனால் கேரள நாட்டுப் பண்பாடு என்ற அம்சம் மட்டும் அதில் அறவே காணப்படவில்லை. அது கலிங்க நாட்டில் நடைபெற்ற ஒரு கதை என்று அந்த நாவலாசிரியர் நம்மை நம்ப வைக்க முயல்கிறார். கலிங்கம், அல்லது வங்கம், அல்லது மாளவம் ஆகிய எந்த ஒரு தேசத்தில் அது நடைபெற்றதாக இருந்தாலும் நமக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் கதை புனைய வேண்டுமென்ற நோக்கத்தைத் தவிர, அந்த ஆசிரியருக்கு வேறு எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்று எவரும் வாசிக்க விரும்பாததும், இலக்கிய வரலாற்றுப் பட்டியல்களில் மட்டுமே இடம் பிடித்துக் கொண்டிருப்பதுமான ஒரு நாவலாக ‘குந்தலதா’ விளங்குவதற்கு இதுவே காரணமாக இருக்கவேண்டும்.

அடுத்தாற்போல, குந்தலதாவை அடுத்து-1888ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இந்துலேகா’ என்ற நாவலை இன்றும் ஏராளமான மக்கள் விரும்பிப் படிக்கின்றனர். லார்ட் பீக்கன்ஸ்ஃபீல்ட் என்பவர் எழுதிய ’ஹென்ரீடா டெம்பிள்’ என்னும் நாவலை முன்மாதிரியாகக் கொண்டே இந்துலேகாவை அதன் ஆசிரியர் சந்து மேனன் உருவாக்கினாரென்றாலும், அந்த நாவல் முழுக்க முழுக்கக் கேரளத் தன்மை கொண்டதாகவே விளங்குகிறது. பழையதொரு தாய்வழி உறவுக் குடும்பத்தின் கதையைத் தான் சந்து மேனன் அந்நாவலில் கூறுகிறார். வேறு எந்தச் சமூத்திலும் நடைபெறாத ஒரு திருமண முறை, உயர் மட்டத்திலுள்ள அன்றைய நாயர் குடும்பங்களில் நடைமுறையில் இருந்து வந்தது. ஜாதி உயர்வினை மட்டும் ஆதாரமாகக் கொண்டு நம்பூதிரிப் பிராமணர்களுக்கு நாயர் பெண்களை மணம் செய்து கொடுக்கும் முறையே அது. இப்படி மணந்து கொள்ளும் நம்பூதிரிகளில் பலர் வயோதிகர்களாகக்கூட இருப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் திருமணம் வைதீகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறவு. அவர்கள் மனைவி வீட்டில் மிகவும் மதிக்கப்படுகின்ற விருந்தினர்களாக இருந்தார்கள். இந்தத் திருமண முறை அவ்விரு வகுப்பினரையுமே – குறிப்பாக அந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களை – சீரழிக்கத்தான் உதவிற்று என்பதைச் சமூக சீர்திருத்தவாதிகள் உணரவில்லை. உணர்ந்தவர்கள் பகிரங்கமாக அதைச் சொல்லவும் இல்லை.

அவர்கள் மனத்திலே பதிந்துவிட்ட எண்ணங்களுக்குச் சக்தி மிக்க, மறைமுக வர்ணனைகளால் அழகியதோர் உருவம் கொடுத்தார் சந்து மேனன். அதுதான் இந்துலேகா! மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதொரு காதல் கதையாகவே தோற்றமளிக்கிறது. கதையைவிட எளிமையாக இருக்கிறது. அதைச் சொல்லப் பயன்படுத்தியுள்ள மொழி. ஓர் இலக்கியப் படைப்பினை உருவாக்குகிறோம் என்ற உணர்வே அவருக்கு இருக்கவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இந்த எளிமைக்கும் சாதாரணத் தன்மைக்கும் பின்னால் பிரமிப்பூட்டும் ஒரு வேகமும், என்றும் மங்காத ஒரு புதுமையும் மறைந்திருக்கின்றன. அதனால் தான் இன்றும் மக்கள் அந்த நாவலை ஆர்வத்துடன் படிக்கிறார்கள். அந்த நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கிற பாத்திரங்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்த மனிதர்கள் என்று நமக்குத் தோன்றுவதில்லை; மாறாக, நமது கிராமங்களில் ஆங்காங்கே இன்று கூடப் பார்க்க முடிகிற, நமக்கு நன்கு அறிமுகமான சில மனிதர்களாகவே அவர்கள் காட்சி தருகின்றனர்.

குந்தலதா நாவல்.

மேற்கத்திய நாகரிகத்துக்கே உரிய அழகிய சில அம்சங்களைப் பலவந்தமாக இந்த நாட்டின் சூழலில் புகுத்தியிருக்கிறார் சந்து மேனன். பியானோ வாசிக்கிற ஒரு கதாநாயகியை எண்பது வருடங்களுக்கு முன்னால் கற்பனை செய்து பார்த்தார் அவர். இன்றைய நாவலாசிரியர்கள் தங்கள் கதாநாயகிகளை வீணைதான் வாசிக்கவைப்பார்கள்.

பஞ்சாலை, ஏலத் தோட்டம் ஆகியவை பற்றி இந்துலேகாவில் சொல்லப் பட்டிருக்கிறது. நாத்திகவாதத்தை ஆசிரியர் பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும், டார்வின், தாமஸ் ஹக்ஸ்லி ஆகியோரின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் சர்ச்சை செய்திருக்கிறார். சுருங்கக் கூறின், சந்து மேனன் ஒரு புரட்சிவாதியாகவே இருந்திருக்கிறார்.

மலையாள நாவலாசிரியர்களிலேயே மிகப் பெரிய கற்பனைத் திறன் படைத்தவராயிருந்த சி.வி.ராமன் பிள்ளை (1858-1922), வரலாற்றுக்குக் கதை உருக்கொடுப்பதில் தான் தம் ஆற்றலைக் காண்பித்தார். ராமன் பிள்ளை ஒரு சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை. ஸனாதனவாதியாக, ராஜபக்தராக, தம் ஜாதியைப்பற்றிப் பெருமையுள்ளவராக, பண்டைய அறநெறிகளைப் பின்பற்றுகிறவராக, வீரர்களை வணங்குபவராக இருந்திருக்கிறார். புதிய தலைமுறையினர் அவரை ஒரு பிற்போக்குவாதி என அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சி.வி.ராமன் பிள்ளை அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்திருந்த, அல்லது வாழ்ந்து வருகின்ற, எந்த ஒரு நாவலாசிரியருக்கும் இல்லாத ஒரு திறன் படைத்தவராயிருந்தார் – அது தான் ஒரே சமயத்தில் மூன்று காலங்களையும் பார்த்தறியவல்ல கண் – all seeing eye. ஹென்ரி ஜேம்ஸின் வார்த்தைகள் இவை.

எஸ்.குப்தன் நாயர்.

இருநூறு வருடங்களுக்கு முன்னாலுள்ள, நிகழ்ச்சிகள் நிறைந்த திருவாங்கூரின் வரலாற்றைப் பெரும் பிரதாபசாலிகளான மாவீரர்களைச் சுற்றிப் புனையப்பட்ட கதைகள் மூலம் வரைந்து காட்டினார் சி.வி.ராமன் பிள்ளை. கற்பனை வளம் மிக்க அந்தப் படைப்பாளியின் கண்ணெதிரில், புராதனமான நிகழ்காலம், ஆடை அணிகலன்களுடன் ஆடம்பர மேள தாளங்களுடன் நடனமாடியது. வியப்பைத் தருகின்ற எத்தனை எத்தனைக் காட்சிகள்! நிகழ்காலமென்னும் திரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்ட எத்தனை எத்தனை உக்கிரமான மூர்த்திகள்! மலையாளத்தில் மாபாணி (grand style) என்று ஒன்று உண்டானால் அது சி.வி.யின் பாணிதான். அவர் படைத்தது எல்லாமே மகத்தானவை; விரிவானவை. ‘மாத்தாண்டவர்மா’, ’தருமராஜா’, ‘ராமராஜ பகதூர்’ என்ற அந்த மூன்று படைப்புகளின் ஆழமும், வரலாற்றுப் பரப்பும், ஸ்காட்டையல்ல, டால்ஸ்டாயைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. குழந்தைபோல் தடுமாறித் தடுமாறி நடை பயின்று கொண்டிருந்த மலையாள நாவல் இலக்கியத்தைப் பிரபஞ்ச இலக்கியத்தின் ராஜ தர்பாருக்கு அவர் அழைத்துச் சென்றார் எனலாம்.

இவ்விரு மாமேதைகளின் காலத்துக்குப் பிறகு பல வருடங்கள் வரையில் மலையாள நாவல் இலக்கியம் இரண்டாந்தர எழுத்தாளர்களின் விளையாட்டு அரங்கமாக விளங்கியது. அப்பன் தம்புரான், கே.எம்.பணிக்கர் முதலியோர் சில சரித்திர நாவல்களைப் படைத்தனர் என்றாலும், அவர்களால் சி.வி.யின் அருகில் கூட நெருங்க முடியவில்லை. 1930-ஆம் வருடத்துக்குப் பிறகு தான் புதிய சில அசைவுகள் தென்படத் தொடங்கின. புகழ்பெற்ற சிந்தனையாளரும், பத்திரிகை ஆசிரியருமான ஏ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய கட்டுரைகள் வாயிலாக, யதார்த்தவாதம், மனோ தத்துவம் போன்ற புத்தம் புதிய உத்திகளைப் பற்றி எழுத்தாளர்கள் அறிந்துகொண்டனர். பாலகிருஷ்ண பிள்ளையின் சீடர் குழாமைச் சேர்ந்த சில இளம் எழுத்தாளர்கள் புதிய படைப்பு முறைகளைச் சோதித்துப் பார்க்கத் துணிந்து முன்வந்தனர். அவர்களில் ஒருவர்தாம் தகழி சிவசங்கரன் பிள்ளை. தொழிலாளர் இயக்கங்களிலே பங்கு பெற்றவரான கேசவதேவ், அவற்றின் வாயிலாகப் புதியதோர் இலக்கியப் பாதையை வகுத்துக்கொண்டார். பொட்டேகாட், பஷீர் ஆகியோர் மாறிவரும் காலத்தின் தவிர்க்க இயலாத தூண்டுதலால் சிறு கதைகளிலே புதிய உத்திகளைப் புகுத்திப் பார்க்க முயன்று கொண்டிருந்தனர்.

சி.வி.ராமன் பிள்ளை.

இவர்கள் அனைவரும் சிறுகதைகளையும், குறுநாவல்களையுமே முதலில் எழுதினர். தகழியின் ‘பதிதபங்கஜம்’, ’தியாகத்தின் பிரதிப் பயன்’ ஆகிய கதைகள், நவீன உத்திகளாலும், உள்ளடக்கத்தின் விசேஷ குணாதிசயங்களாலும், சொல்முறையின் மேன்மையினாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தன. இவர்களைப் புகழ்ந்தவர்கள் இருந்ததுபோல இகழ்ந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். நச்சு இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள், ஆட்சேபங்கள் பல கிளம்பின. தகழி மட்டுமன்றி, கேசவதேவ், பஷீர் போன்றவர்களும் இத்தகைய ஆட்சேபங்களுக்கு இலக்காயினர். இவர்களுடைய படைப்புகளிலே வறுமை, சமூகக் கொடுமை ஆகியவற்றின் சித்திரங்கள் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வண்ணங்களில் தீட்டப்படவில்லை என்று சொல்ல முடியாது. இத்தகைய மிகைப்படுத்திக் கூறும் தன்மை, விக்டர் ஹயூகோ, எமிலி கோலா போன்றவர்களின் படைப்புகளில் கூட இருக்கத்தானே செய்கிறது?

மேற்சொன்ன நாவலாசிரியர்கள் எவருமே, பழங்காலத்து ஆசிரியர்களைப் போல், தங்கள் கதாபாத்திரங்களை வாழ்க்கை எனும் நாடகத்தின் துவக்கம் முதல் இறுதி வரையிலுமுள்ள எல்லாக் காட்சிகளையும் நடிக்க வைக்க முற்படவில்லை. சிறுகதையைவிடச் சற்றே அதிகமான விஸ்தாரத்தை இவற்றில் பார்க்கமுடியும், அவ்வளவுதான். ஏறத்தாழ 1945-ம் வருடம் வரையிலும் நிலைமை இவ்வாறாக இருந்து வந்தது. பிறகு இலக்கியம் திசை மாறிச் சஞ்சரிக்கத் தொடங்கியது. முற்போக்கு இலக்கியம் உருவெடுக்கத் தொடங்கியது. விஷயங்களை விரிவாக, முன்னை விடப் பகிரங்கமாக எடுத்துரைக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்தக் கால கட்டத்திலேதான் ’சாக்கடையிலிருந்து’, ‘இரண்டு படி’, ‘தோட்டி மகன்’, ‘குழந்தைப் பருவத் தோழி’, ‘விஷக்கன்னிகை’ முதலிய புகழ்பெற்ற நாவலகள் நமக்குக் கிடைத்தன. இந்த நாவல்கள் அனைத்திலுமே ஆசிரியர்களின் சொந்த அனுபவங்கள் பெருமளவில் கலந்திருக்கின்றன. வறுமை எனும் புதிய அம்சம் இந்த நாவல்களில் தான் முதல் முதலாகக் காட்சி தருவதை நாம் பார்க்கிறோம். ரிக்சாக்காரன், தோட்டி, குட்டநாட்டு விவசாயத் தொழிலாளியான புலையன் ஆகியோர் இதற்கு முன்புள்ள காலகட்டங்களில் வெளிவந்த மலையாள நாவல்களில் இடம் பெறவில்லை. புதியதொரு வாழ்க்கை முறைக்காகத் தாகமுற்றுக் குமுறியெழுகிற தொழிலாளியும், விவசாயியும் சமூகத்தின் மேல் தட்டினை நோக்கி மெல்ல மெல்லக் கிளர்ந்தெழுந்து வரும் தோற்றத்தை இந்த நாவலாசிரியர்களே முதல் முதலில் வெளிக்காட்டினர். இந்தக் கைங்கரியத்தைச் சிறுகதைகள் வாயிலாக இவர்கள் ஏற்கனவே செய்தவர்கள் தாம். ’இந்துலேகா’விலிருந்து ’இரண்டு படி’ வரையிலுமுள்ள தூரம், பிரமுக நாயர் குடும்பங்களின் மாடி வீட்டிலிருந்து விவசாயத் தொழிலாளியின் மண் குடிசை வரையிலுமுள்ள தூரமேயாகும்.

செம்மீன் நாவல்.

இங்குள்ள நாவல் இலக்கியம் பூர்ஷ்வா (முதலாளித்துவ) வாழ்க்கை முறையிலிருந்து புராலிடேரியன் (தொழிலாளி வர்க்க) வாழ்க்கை முறையை நோக்கி முழுதும் நடந்தேறிச் சென்றதென்று இதனால் அர்த்தம் கொள்ளக்கூடாது. இந்த நாவல் – ஆசிரியர்களில் பெருவாரியினர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் இயற்கையாகவே அந்த வர்க்கம் நாவலின் பின்னணியாகத் தோன்றிக் கொண்டிருந்தது. தகழி, பொட்டேகாட், உரூப் ஆகியோரின் நாவல்களிலே குறிப்பாக இந்தக் குணாம்சத்தைப் பார்க்கலாம். ஆயினும், அவர்கள் புதிய அரங்கங்களை, சமூகத் துறைளைக் கண்டுபிடிக்க நிரந்தரமாக முயன்று கொண்டிருந்தனர். தகழி செம்படவர்களின் வாழ்க்கைத் துறைக்குள்ளும் (செம்மீன்), உரூப் மலபார் முஸ்லிம்களின் வாழ்க்கைத் துறைக்குள்ளும் (உம்மாச்சு), பொட்டேகாட் கோழிக்கோடு நகரத்தின் இருள் சூழ்ந்த கீழ்ப்பகுதிகளுக்குள்ளும் (தெருவின் கதை) நுழைந்து பார்த்தது இவ்வாறாகத்தான்.

இந்த நாவல்களெல்லாம் வெவ்வேறு வகைளில் இலக்கிய உலகிலே அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிற நிகழ்ச்சிகளாகப் பரிணமித்தன என்று சொல்வதில் தவறு இல்லை. ஒரு நாவலாசிரியருக்கு இரண்டு விதமான பார்வைகள் இன்றியமையாதவை எனச் சொல்லப்படுகிறது: பௌதீகமும் ஆன்மிகமுமான இரண்டு பார்வைகள். மேற்சொன்ன நாவல்களில் இவ்விரு பார்வைகளும் சிறப்பான முறையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

படிக்க:
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

தகழியின் ‘செம்மீன்’ நாவல் செம்படவர்களின் வாழ்க்கைப்பற்றிய ஒரு செய்திக் கதிர் (டாகுமெண்டரி) சித்திரமன்று. அவர்கள் வாழ்க்கையின் எத்தனையோ துறைகளை அவர் அந்நாவலில் தொடவில்லை. அது அவசியமும் இல்லை. செம்மீன் செம்படவச் சமூகத்தைப் பற்றிய அடிப்படை உண்மையின் சாரம் என்று நம்மை நம்ப வைக்கத் தகழியால் முடிந்தது. அதுதான் அந்த நாவலின் வெற்றி. நான் குறிப்பிட்ட ஏனைய நாவல்களைப் பற்றியும் இதையே கூறலாம். உரூபின் ‘சுந்தரிகளும், சுந்தரன்மார்களும்’ என்ற படைப்பைப் பொறுத்தவரையில் ஒரு தகவல் திரைப்படத்தின் தன்மை இதில் அதிகம் காணப்படுகிறது. மலபாரில் நடைபெற்ற மாப்பிள்ளைக் கலவரத்தின் பின்னணியில் அங்குள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறு சீர்குலைந்த தென்பதையும், அந்தச் சீர்குலைவிலே எத்தனையோ குடும்பங்கள் சின்னா பின்னமாகி, எத்தனையோ நபர்கள் வேறு மதத்தைத் தழுவி மாறுபட்ட வாழ்க்கை முறையைத் தேடிக் கண்டுபிடித்தனரென்பதையும் உரூப் சித்திரித்துக் காட்டுகிறார். கண்ணிகள் அறுந்து போகாமல், தேவையற்ற ஒட்டு வேலைகளைச் செய்யாமல், மனித மகிமையின் இனிமையுடன், மூன்று நான்கு தலைமுறையினரின் கதையை அவர் விவரித்துள்ளார். உரூபின் இந்த நவீனம், தேசச் சுதந்திரத்துக்குப் பின் படைக்கப்பட்ட மிகவும் அருமையான இலக்கிய சிருஷ்டி என்ற முறையில், இவ்வாசிரியருக்குச் சாகித்திய அகாதெமிப் பரிசைப் பெற்றுக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.

(தொடரும்)

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

கொரோனா அப்டேட்ஸ் : கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ?

வீடு, பொது இடங்கள், மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் முறைகள் குறித்த பதிவு…

Isolation, Infection control ஆகிய இரண்டும் கொள்ளை நோய் தடுப்பின் இரு கண்கள் போன்றவை. இவற்றில் Isolation என்பது நோய் குறி இருப்பவர்களை உடனே தனிமைப்படுத்துவது.

Quarantine என்பது நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்படுபவர்களை அவர்களுக்கு நோய் அறிகுறி ஆரம்பிக்கும் முன்னமே தனிமைப்படுத்துவது.

சீனாவில் இருந்து இங்கு வந்த பயணிகளில் கோவிட்-19 நோய்குறி இருப்பவர்கள் அனைவரும் isolation செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருந்து வந்த பயணிகளில் நோய் குறி இல்லாதவர்கள் அனைவரும் quarantine செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொள்ளை நோய் தடுப்பின் மற்றொரு கண்… Infection control (தொற்றை நீக்குதல்)

கொரோனா வைரஸ் தனது மூதாதையர்களான SARS-CoV மற்றும் MERS-CoV ஐ பெரும்பாலும் ஒத்துப்போகின்றது. மேலும் இதுவும் வவ்வால் இனத்திடம் இருந்து தான் மனிதனுக்கு தாவியுள்ளது.

மேலும் 80% கொரோனா நோய் தொற்றுகள் Fomite infection எனப்படும் கைகளால் வைரஸ் தொற்றுள்ள பகுதிகளை தொடுவதாலேயும்; அந்த கிருமி பாதித்த கைகளை மூக்கு, வாய் போன்ற பகுதிகளுக்கு கொண்டு போவதாலுமே பரவுவதாக
கண்டறியப்பட்டுள்ளது. 20% கொரோனா தொற்று தான்.. நேரடியாக மற்றவர் மீது தும்முவது இருமுவது மூலம் பரவி இருக்கிறது.

சமீபத்திய ஆய்வில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 41% பேர் கொரோனா நோய் தொற்றை வூஹானின் மருத்துவமனைகளில் இருந்து பெற்றுள்ளனர். இதை Nosocomial infection என்போம்.

இதற்கு காரணம் இதோ..

கொரோனா வைரஸ் குடும்பத்தின் முந்தைய வைரஸ்களை வைத்து செய்யப்பட்ட 22 ஆராய்ச்சிகளின் சாராம்சம். உங்களுக்காக..

கொரோனா குடும்ப வைரஸ்கள் வெளி உலகில் அது இரும்பாக, பொருளாக இருக்கட்டும், கண்ணாடியாக இருக்கட்டும் அல்லது நெகிழி எனப்படும் ப்ளாஸ்டிக்காக இருக்கட்டும், குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் இருந்து அதிக பட்சம் 9 நாட்கள் வரை உயிருடன் இருந்து நோயை பரப்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

படிக்க :
நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

30 முதல் 40 டிகிரி வெப்ப நிலையில் இந்த உயிருடன் வாழ்ந்து நோய் பரப்பும் கால அளவு கனிசமான அளவு குறைகிறது. (இது தான் இந்திய தீபகற்பத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் கொரோனா நோய் பரவாமல் இருக்க காரணமாக இருக்கலாம்)

மேலும் 4 டிகிரி வெப்பம் கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் 28 நாட்கள் வரை கூட வெளிப்புறத்தில் வாழும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கிருமிகள் வெளிப்புறத்தில் உயிரோடு அதிக நாள் இருப்பதற்கு மூன்று விசயங்கள் உதவி புரிகின்றன

1. வெப்பம்
2. ஈரப்பதம்
3. இருமல் துளியில் இருக்கும் மொத்த வைரஸ்களின் எண்ணிக்கை.

வெப்பம் குறைவாக இருந்து, ஈரப்பதம் அதிகமாக இருந்து, பல பேருக்கு ஒரே நேரத்தில் நோய் பரவினால் கொரோனா வைரஸ்க்கு கொண்டாட்டம் தான். நமது பாடு தான் திண்டாட்டம் ஆகும்.

சரி.. இப்போது நாம் முறையாக அறிவியல் பூர்வமாக எப்படி இந்த வைரஸ் தொற்றை அழிக்கலாம் என்று பார்க்கலாம்:

நமது வீடுகளில் உள்ள டாய்லெட் மற்றும் பாத்ரூம்களை கட்டாயம் ஒரு முறையேனும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு வீட்டு பாத்ரூம்களை சுத்தம் செய்ய
நமது ப்ளீச்சிங் பவுடர் அல்லது 1% லைசால் உபயோகிக்கலாம்.

ப்ளீச்சிங் பவுடர் கரைசலை தண்ணீருடன் ஒன்றுக்கு 99 பங்கு விகிதத்தில் கலந்து பாத்ரூம் டாய்லெட்டுகளை கழுவி சுத்தம் செய்யவேண்டும்.

அதாவது 10 கிராம்/மில்லி ப்ளீச்சிங் பவுடர்/திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தால் 1% ப்ளீச்சிங் திரவம் கிடைத்து விடும். அன்றாடம் உபயோகிக்கும் சட்டை துணி மணி , பெட்ஷீட், தலையணை கவர் போன்றவற்றை டிடர்ஜெண்ட் போட்டு
துவைத்து 60-90 டிகிரி வெப்பமுள்ள நீரில் மூழ்கி எடுக்க வேண்டும்.

லைசால் (Lysol) உபயோகிக்கிறீர்கள் என்றால், வீடுகளுக்கு 1% லைசால் தேவை
(ஒரு லிட்டர் லைசாலை 49 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).

மருத்துவமனைகளுக்கு 5% லைசால் தேவை (ஒரு லிட்டர் லைசாலை 9 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்)

பஸ் ஸ்டாண்டுகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு
2.5% லைசால் (ஒரு லிட்டர் லைசாலை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்)

இந்த திரவங்களை ஊற்றி குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட வேண்டும்.

படிக்க :
குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !
♦ கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா

மருத்துவ ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு

மருத்துவமனை ஊழியர்கள் 7.5% பாவிடோன் ஐயோடின் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு சுத்தம் செய்கையில் கட்டாயம் 15 விநாடிகள் நேரம் எடுத்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 7.5% பாவிடோன் ஐயோடின் திரவம் 15 நொடிகளில் MERS, SARS போன்ற கொரோனா வைரஸ்களை கொல்வதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD.

குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !

0

மாதவிலக்கு இல்லை என நிரூபிக்க 68 இளங்கலை மாணவர்களின் உள்ளாடைகளை அகற்றுமாறு ஃபிப்ரவரி 13 அன்று குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக அகமதாபாத் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மாதவிலக்கு சமயத்தில் இந்து மத விதிமுறைகளை மாணவர்களில் சிலர் மீறுவதாக விடுதி மேற்பார்வையாளார் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததையடுத்து புஜ் நகரில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் (Shree Sahajanand Girls Institute) இந்த வக்கிர நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிரந்திகுரு ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மா கட்ச் பல்கலைக்கழகத்தின் (Krantiguru Shyamji Krishna Verma Kutch University) கீழ் இயங்கும் இந்த கல்லூரி 2012 இல் தொடங்கப்பட்டது. இதை சுவாமிநாராயண் மந்திரைப் (Swaminarayan Mandir) பின்பற்றுபவர்கள் நடத்துகிறார்கள். இதன் விதிகளின்படி மாதவிடாய் சமயத்தில் கோயில் மற்றும் சமையலறை வளாகங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. விடுதி மாணவிகள் ஒருவருக்கொருவர் சேர்ந்து பழக கூட அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் மாதவிலக்கு சமயங்களில் மூன்று நாட்களுக்கு தரைத்தளத்திலுள்ள அறையில் பூட்டி வைத்து உணவு வழங்கப்படுவதாகவும் விடுதி மாணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூரி நேரத்தில் தங்கள் வகுப்பறைகளை விட்டுவிட்டு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாணவர்களில் ஒருவர் அகமதாபாத் மிரரிடம் கூறினார். “கல்லூரி முதல்வர் எங்களை அவமதித்ததுடன் எங்களில் யாருக்கெல்லாம் மாதவிலக்கு இருக்கிறது என்று கேட்டார். மாதவிலக்கு இருப்பதாக நானும் மற்றொருப்பெண்ணும் ஒப்புக்கொண்டாலும் நாங்கள் அனைவருமே குளியலறைக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு பெண் ஆசிரியர்கள் எங்கள் உள்ளாடைகளை தனித்தனியாக அகற்றினால் தான் நாங்கள் மாதவிடாய் இருக்கிறோமா என்று சோதிக்க முடியும் என்று கூறினார்கள்” என்று மேலும் கூறினார்.

படிக்க:
வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

விடுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலான மாணவர்கள் வெகு தொலைவிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று மற்றொரு மாணவர் கூறினார். “மாதவிலக்கு பிரச்சினை தொடர்பாக கல்லூரி முதல்வர், விடுதிக்காப்பாளார் மற்றும் அறங்காவலர்கள் தொடர்ந்து எங்களை துன்புறுத்துகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார். “நாங்கள் மாதவிலக்கில் இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறோம். அவர்களின் மத விதிகளை நாங்கள் பின்பற்றினாலும் இது நிகழ்கிறது. எங்களில் சிலருக்கு மாதவிலக்கு இருப்பதாகவும் அந்த நேரத்தில் மற்றவர்களுடன் பழகியதாகவும் சந்தேகித்ததால் எங்கள் அனைவரது உடைகளையும் கலைய சொன்னார்கள். கடைசி அவமானமாக இது இருக்கட்டும். இதற்கு மேலும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.

விடுதியை காலி செய்த பிறகே சட்ட நடவடிக்கை எடுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் இருப்பதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினரான பிரவீன் பிண்டோரியா மாணவர்களிடம் கூறினார். மேலும் அத்தகைய நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை என்று ஒரு கடிதத்தில் கையெழுத்திட பிண்டோரியா கட்டாயப்படுத்தியதாக அந்த மாணவர் குற்றம் சாட்டினார்.

கல்லூரி நிர்வாகத்தின் மூன்று அதிகாரிகள் மற்றும் விடுதி மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பூஜின் போலீஸ் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். “இரண்டு பெண் அதிகாரிகளும் பெண் மாணவர்களுடன் பேசியுள்ளனர்” என்று ஒரு அதிகாரி ANI இடம் கூறினார்.

“நாங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதன் அதனடிப்படையில் வெறுமனே பேருக்காக ஒரு சிறிய கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம்” என்று கல்லூரி அறங்காவலர் பி.எச்.ஹிரானி கூறினார். “இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு கோயில் இருப்பதால், மாணவர்களுக்கு இந்த மதப்பிரிவின் விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்களுக்கு நடந்தது நியாயமற்றது. நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். குஜராத் சுவாமி நாரயண் மந்திரை சேர்ந்த சாமியார் ராதாராமனுடம் ஐந்து பேர் கும்பல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டதற்காக 2019, நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பொறுப்பாளர் தர்ஷனா தோலாகியா உறுதியளித்தார். பின்னர் இந்த நிகழ்வு விடுதியுடன் தொடர்புடையது என்றும், யாரும் மாணவிகளை தொடவில்லை என்றும் அவர் ANI -யிடம் கூறினார். “இதற்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார். “மாணவிகளின் அனுமதியின் பேரில் தான் இது நடந்தது. யாரும் அதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை” என்று அவர் கூறினார்.

படிக்க:
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ தொடரும் நேபாளப் பெண்களின் மாதவிடாய் அவலம்

மாணவர்களைச் சந்தித்து ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் குழுவை தேசிய பெண்கள் ஆணையம் அமைத்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த “வெட்கக்கேடான செயல்முறையின்” காரணத்தை விளக்குமாறு ஆணையம் அதிகாரிகளிடம் கேட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தோலகியா மற்றும் காவல்துறை இயக்குனரையும் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மாநில மகளிர் ஆணையமும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்தோ-ஆசியன் செய்திச் சேவை (IANS) கூறியது.

இந்த நாரயண் மந்திர் உலக மகளிர் தினத்தை கொண்டாடவும் அழைப்பு கொடுத்துள்ளது தான் இதில் இன்னும் கொடுமை.

இந்து மதத்திற்கு சீர்திருத்தம் வேண்டும் என்று இன்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்து மதத்தின் நம்பிக்கைகள், விதிமுறைகள் ஒன்று, இரண்டு… என்று நீங்கள் பட்டியலிட்டு பாருங்கள். அத்தனை விதிகளுமே பார்ப்பனியப் பிற்போக்கு சடங்குகளாகவும், ஆபாசப் புளுகுககளாகவும், புராணக்கதைகளாகவும் தான் இருக்கும். இந்த பிற்போக்குத்தனத்திற்கும் இதர பெரும்பாலான இந்து மக்களுக்கும் சம்மந்தமே இருக்காது.


சுகுமார்
நன்றி :  ஸ்க்ரால். 

ஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

ள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் புத்தகங்களை தாறுமாறாக தரையில் எறிந்தேன். ஒருவருமே என்னை திரும்பி பார்க்கவில்லை. அம்மா குனிந்தபடி அரிவாளில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். என் அண்ணன்மாரைக் காணவில்லை. அக்கா சங்கீத நோட்டுப் புத்தகத்தை திறந்துவைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். என் சின்னத் தங்கச்சி வாய்துடைக்காமல் தள்ளாடி நடந்து வந்து தன்கையை என்வாய்க்குள் நுழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். நான் என் பிரகடனத்தை வெளியேவிட்டேன். ‘இன்று முதல் நான் மச்சம், மாமிசம் சாப்பிடமாட்டேன். இனி மேல் என் உணவு மரக்கறிதான்.’ அப்பவும் அம்மா நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு வயது எட்டு.

அன்று குடுமி வாத்தியார் வகுப்பில் பாடம் எடுத்தபோது சொன்ன கதை மனதில் பதிந்துவிட்டது. ஒன்றும் புரியாமல் அன்றும் திருக்குறளை பாடமாக்கி ஒப்புவித்தோம். ஒருமுறை எங்கள்வாத்தியார் கடலில் விழுந்துவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் ஆனால் உடம்பில் காயம்பட்டு ஒரு துளிரத்தம் சிந்திவிட்டது.  சுறாமீன்கள் அவரை நோக்கி வரத்துடங்கின. சுறாக்களுக்கு ரத்தம் கால்மைல் தூரத்துக்கு மணக்கும். அவைக்கு நாலுவரிசைப் பற்கள். ஒரு பல்போய்விட்டால் இன்னொருபல் அந்த இடத்தை நிரப்பிவிடுமாம்.  சுறாக்களின் செட்டைகள் குவிந்து கும்பிடுவது போல தோற்றமளிக்க நாலுதரம் வாத்தியாரை சுற்றிவிட்டு அவை போய்விட்டனவாம். ஏன் தெரியுமா?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.”
என்ற குறள் தான்.

என் தம்பி அடாவடித் தனமானவன். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான். அவன் கேட்டான், ‘சுறாக்களுக்கு வாத்தியார் மரக்கறிக்காரர் என்பது எப்படித் தெரியும். ஏன் நாலு வரிசைப்பல்லை வைத்துக்கொண்டு அவரை கடித்துக் குதறவில்லை.’ ‘மக்கு, மக்கு. ரத்தத்துளியை அவை மணந்துதான் வந்தன. அது மரக்கறி ரத்தத்துளி என்பது அவைக்கு தெரியாதா? நீபோ’ என்று தள்ளினேன். அவன் எரிச்சலோடு திரும்பும்போது ‘சுறாக்களுக்கு மணக்கவும் தெரியும்.  திருக்குறளும் தெரியும்’ என்றான்.

அன்றிரவு சாப்பாட்டுக்கு நான் உட்கார்ந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது.  எங்கள் குடும்பத்தில் நாங்கள் சகோதரங்கள் ஏழு பேர்.  எல்லோரும் நிரையாக அவரவர் தட்டுகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தட்டில் மீன்குழம்பு கமகமவென்று மணந்தது.  தரையிலே கொஞ்சம் இடைவெளிவிட்டு சின்ன வாழைஇலை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் இடியப்பம், சம்பல், கத்தரிக்காய் குழம்பு என்று பரிமாறப்பட்டிருந்தது. நான் அம்மாவை பார்த்தேன். அவர் சாப்பிடு என்பதுபோல தலையை ஆட்டினார். அப்படித்தான் நான் மரக்கறிக்காரன் ஆனேன்.

அதன் பின்னர் அம்மா எனக்காக தனிச் சமையல் செய்ய ஆரம்பித்தார். தனித்தனி சட்டி பானைகள், தனியாக வாழை இலை.  அடுப்புக்கூட தனி அடுப்பு என்றால் நம்பமுடியாது தான்.  அகப்பையை அக்கா கவனயீனமாக மாறிப்பாவித்துவிட்டால் அதைதூக்கி எறிந்துவிட்டு அம்மா புது அகப்பைவாங்குவார்.  வீட்டிலே என் மகத்துவம் திடீரென்று உயர்ந்தது.  எல்லோரும் நிரையாக உட்கார்ந்து சாப்பிடும்போது எனக்கு நடக்கும் பிரத்தியேக கவனிப்பும் உபசரிப்பும் எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பிவிடும்.  ஒருதடவைஐயா,  ‘ஒரு தடியெடுத்து முழங்காலுக்கு கீழே நாலு அடிகொடுக்காமல் செல்லம் கொடுக்கிறீர்’ என்றார். அம்மா, ‘வாத்தியார் நல்லது தானே செய்தார். உயிர் கொலை பாவம் தானே.  அவனை தடுத்தால் அந்தப்பாவம் என்னைத்தானே வந்து சேரும்’ என்றார்.

படிக்க:
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

நான் மரக்கறிக்கு மாறியதில் என் மகிமை வரவர உயர்ந்து கொண்டே போனது.  பக்கத்து வீட்டில் இருந்து யாராவது வந்தால் என் புகழ் பாடாமல் அம்மா அவர்களை திருப்பி அனுப்பமாட்டார்.  எதோ நான் பள்ளிக்கூடத்தில் முதல் பரிசு பெற்றதுபோல பாராட்டுவார். மரக்கறி சாப்பிட்டால் சுறாக்கள்கூட கும்பிடுமாம்.  அப்பிடி வாத்தியார் சொல்லியிருக்கிறார். இது வீட்டிலே பெரும்புயலைக் கிளப்பியது.  எல்லோருடைய எரிச்சலையும் செயலாக மாற்றியது என் தம்பி தான்.

எனக்கு முன் வந்து உடம்பை நெளித்தபடி ‘ஓ, எங்களுக்கு இன்றைக்கு வாளை மீன் கறி. உனக்கு பாவம் வாழைக்காய் வெள்ளைக்கூட்டு’ என்று விட்டு வயிற்றைப் பிடித்துச் சிரிப்பான். அடுத்த நாள் ‘எங்களுக்கு இன்றைக்கு றால் பொரியல்.  உனக்கு முசுட்டை இலை வறை. பாவம்’ என்பான்.  இன்னொருநாள் எட்டத்தில் நின்று தன் பின்பக்கத்தை காட்டி நெளிப்பான்.  பின்னர் முன்னுக்கு வந்து நின்று நாலுபக்கமும் வளைவான்.  நான் பாய்ந்து கைகளைப் பிடித்து மிரட்டுவேன்.  விட்டதும் நாடாச்சுருள் போல தானாகச் சுழன்று உள்பக்கம் ஓடிவிடுவான். ‘ஓ, பாவம் உனக்கு பூசணிக்காய்.  பினைந்து பினைந்து சாப்பிடு. எங்களுக்கு ஆட்டு இறைச்சி வறுவல்.’ எனக்கு தாங்க முடியவில்லை.  நான் சேர்த்து வைத்த புகழ் எல்லாம் இவனால் சேதம் அடைந்து கொண்டே போனது.

அரிதட்டு

ஒரு நாள் பின்னேரம் அம்மா அரிதட்டில் மாவை இட்டு இரண்டு கைகளையும் முழுக்கநீட்டி அரித்துக் கொண்டிருந்தார். அருமையான சமயம். இரண்டு கைகளும் வேலையில் இருப்பதால் அடிப்பதற்கு அவை உதவப்போவதில்லை. கெஞ்சுவதுபோல குரலை மாற்றி அம்மாவிடம் முறைப்பாடு வைத்தேன். அவையளுக்கு நல்லநல்ல இறைச்சிக்கறி, சாப்பாடு, எனக்குபூசணிக்காயா? தம்பிகூடச் சிரிக்கிறான். நான் பேசிக் கொண்டேபோக அம்மா ஒன்றுமே சொல்லாமல் உடம்பிலேமா படாமல் அரித்துக் கொண்டே இருந்தார். எனக்கு அது துணிச்சலைக் கொடுத்தது.  அவர்களுக்கு இறைச்சி என்றால் எனக்கு உருளைக்கிழங்கு. அந்தக் காலத்தில் உருளைக் கிழங்கு சரியான விலை. அதன் ருசிக்கு ஈடுஇணை கிடையாது. மீன் என்றால் எனக்கு கத்தரிக்காய் குழம்பு. றால் பொரியல் என்றால் எனக்கு வாழைக்காய் பொரியல். நண்டுக்கு ஈடு முருங்கைக் காய். இப்படி நீண்ட பட்டியல் தயாரித்து சமையல் சுவற்றில் சோற்றுப்பசையால் ஒட்டிவைத்தேன். அம்மா அதைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை.

அதன் பிறகு பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் என் உணவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் என் மனம் சிலவேளைகளில் தடுமாற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாள்படலையை திறந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன். நண்டுக் குழம்பு வாசனை மூக்கிற்குள் நுழைந்து வயிற்றுக்குள் போய் விட்டது. வாய் ஊறத் தொடங்கியது. நண்டுக் காலை அம்மா ஒவ்வொன்றாக உடைத்துத்தர நான் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. நான் அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தேன். அம்மா ‘நண்டு தானே. ஒரு சின்னக் காலை உடைத்துதாறேன், கொஞ்சம்சாப்பிடு’ என்று சொல்லியிருந்தால் என் வைராக்கியம் உடைந்து சிதறியிருக்கும். அம்மா என்னைக் கண்டதும் ஊர்ப் பெரியவரைக் கண்டது போல சட்டியை சட்டென்று மூடி மணம் என் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டார். பட்டியலில் நான் எழுதியபடி பக்கத்து அடுப்பில் முருங்கைக்காய் வேகிக் கொண்டிருந்தது.

படிக்க:
நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை
♦ பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

ஒரு நாள் அம்மாவுக்கு பெரிய சவால் ஒன்று வந்தது. எங்கள் ஊரில் சாம்பல் கணவாய் அருமையாகத் தான் கிடைக்கும். அதன் ருசி தனியாக இருக்கும். கணவாய் சமைப்பதில் அம்மாவுக்கு ஒரு ரகஸ்யத் திறமை இருந்தது. அம்மாவினுடைய சமையலை ஐயா பாராட்டினதே கிடையாது. ஆனால் கணவாய் சமைத்தால் அந்தப் பாராட்டுக் கிடைக்கும். அன்று ஐயா எப்படியோ சிரமப்பட்டுத் தேடி வாங்கிவந்த சாம்பல் கணவாயை அம்மா தன் முழுத் திறமையை பாவித்து சமைத்தார். கணவாய் சமைக்கும் போது இரண்டு பிடிமுருங்கை இலைபோட வேண்டும். அதுருசியைகூட்டும். அம்மா எங்கேயோ அலைந்து முருங்கை இலை சம்பாதித்து கணவாய் கறியை சமைத்து முடித்து விட்டார். அது எழுப்பிய மணத்திலிருந்து உச்சமான ருசியை அது கொடுக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிட்டது. அம்மா ருசி பார்ப்பதே இல்லை. மணத்தை வைத்தே அவருக்கு தெரிந்து விடும்.

கணவாய்கறி சமைக்கும் நாட்களில் அம்மா வேறு ஒரு கறியும் வைப்பது கிடையாது. கணவாயும், வெள்ளை சோறும் மட்டுமே. அப்போழுதுதான் அதன் முழுச்சுவையையும் உள்வாங்கி அனுபவிக்க முடியும். கணவாய் என்றால் அம்மா ஒரு சுண்டு அரிசி கூடப் போட்டு சமைத்திருப்பார். எல்லோரும் இரண்டு மடங்கு சாப்பிடும் நாள் அது. முழுச் சமையலையும் முடித்து ஓய்ந்த போது தான் அம்மாவுக்கு திடுக்கிட்டது. எனக்கு என்ன சமைப்பது என்று அவர் தீர்மானிக்கவில்லை. சுவரிலே ஒட்டிவைத்த நீண்ட பட்டியலைப் பார்த்தார். அதிலே கணவாய் கிடையாது. அம்மாவுக்கு பதற்றம் தொற்றியது. என்ன சமைப்பது? நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.

கணவாய் கறி – மாதிரிப்படம்.

அன்று மத்தியானம் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா எனக்கு தனியாக வாழை இலை போட்டு வெள்ளைச் சோறும் அதன்மேல் ஒருவித குழம்பும் ஊற்றியிருந்தார். எனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த என் தம்பி விளிம்பு உடைந்த என்னுடைய பீங்கான் கோப்பையை தனதாக்கியிருந்தான். ஏராளமான மக்கள் கூடியிருப்பதுபோல பெரும்கூச்சலுடன் கணவாய் கறியை சப்பி..சப்பி சாப்பிட்டனர். எனக்கு முன் இருப்பது என்ன என்று எனக்கு தெரியாது. பெயர் தெரியாத ஒன்றை நான் அதுவரை உண்டது கிடையாது. ஒரு வாய் அள்ளி வைத்தேன். என் எட்டு வயது வாழ்க்கையில் அதுபோல ஒன்றை நான் ருசித்தது கிடையாது. முன்னரும் இல்லை. பின்னரும் இல்லை. கணவாய் கறிபோலவே சதுரம்சதுரமாக வெட்டியிருந்தது. மிருதுவாகவும் அதேசமயம் இழுபடும்தன்மையுடனும் இருந்தது. கடிக்கும் போது சவ்வு சவ்வாக ருசியை நீடித்தது. கணவாய் போல வேகுணம், மணம் ருசி. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ருசி என்றென்றும் என் நாவில் தங்கிவிட்டது. அதன் பின்னர் அப்படியான ருசி என் வாழ்வில் மறுபடியும் கிடைக்கவே இல்லை.

என்னுடைய ராச்சியம் இப்படி சில வருடங்கள் ஓடியது. பின்னர் அம்மா இறந்துவிட்டார். பத்து வருடங்களுக்குப் பின்னர் அக்கா அந்த ரகஸ்யத்தை சொன்னார். சமையல் கட்டிலிருந்து அம்மா வெறி பிடித்தவர்போல வெளியே ஒடினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்கு என்ன சமைப்பது என்று அவரால் முடிவெடுக்க முடியவில்லை. அவர் என்ன சமைத்தாலும் அது கணவாய்க் கறியின் ருசிக்கு சமானமானதாக இருக்க வேண்டும். எங்கள் வளவில் 20 -25 தென்னை மரங்கள் நின்றன. அதிலே வெவ்வேறு மரங்களில் 12 இளம் காய்களை பறிப்பித்தார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக அவரே வெட்டித் திறந்து ஆராய்ந்தார். சிலதிலே வழுக்கை தண்ணீர்போல படர்ந்திருந்தது. சில கட்டிபட்டு தேங்காயாக மாறியிருந்தன. இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஒரு தேங்காயை கண்டுபிடித்து அந்த வழுக்கையை பக்குவமாக தோண்டி எடுத்தார். அது தோல் போல மெத்தென்று இருந்தது. அதை ஐந்து தரம் தொட்டு அது ஆட்டுச் செவிப்பதம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். சதுரம் சதுரமாக வெட்டி ஒரு கணவாய்க் கறி சமைப்பதுபோல பக்குவமாகச் சமைத்தார்.

அன்று எல்லோரும் நிரையாக உட்கார்ந்த பிறகு எனக்கு பரிமாறினது அது தான். முதலும் கடைசியுமாக அதைசாப்பிட்டேன். அதன் பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனென்றால் ஒருவருக்கும் அப்படி ஓர் உணவு இருப்பது தெரியாது. ஒரு பழ இலையான் போல பிறந்த அன்றே அது மறைந்துவிட்டது.

இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். ஒரு வார்த்தை பேசாமல் ஒரு தாய் தன் 8 வயது மகனை திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்தார். உலகத்தில் பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறுமாதிரி இருப்பார்கள். தாய்மார் எல்லாம் ஒன்றுதான்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 57

வர்க்கங்களும் வருமானங்களும்

அ.அனிக்கின்

திப்புத் தத்துவம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது என்பது நமக்குத் தெரிந்ததே. விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது என்பவை இத்தகைய கேள்விகளாகும். முதல் கேள்விக்கு ஸ்மித் பகுதியளவுக்குச் சரியான பதிலைக் கூறினார்; ஆனால் அதை யதார்த்தத்தோடு சமரசப்படுத்த முடியவில்லையாகையால் பிறகு கொச்சையான கருத்து நிலையை மேற்கொண்டார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை வளர்க்கும் பொழுது இரண்டாவது கேள்விக்கு விஞ்ஞான ரீதியாகத் தீர்வு காண்பதில் அவருடைய பங்கும் இருந்தது. ஆனால் அது மறுபடியும் முரண்பாட்டைக் கொண்டிருந்தது.

ஸ்மித் “பூர்வீக சமுதாயம்” என்று சொல்லும் பொழுது எவ்விதமான அர்த்தத்தில் அதைக் கையாள்கிறார்? அது அநேகமாக ஒரு கற்பனையே என்று அவர் கருதியபோதிலும் அந்தக் கற்பனை ஒரு முக்கியமான அர்த்தத்தைக் கொண் டிருப்பதாக அவர் நினைத்தார். அது தனிச் சொத்துடைமை இல்லாத சமூகம் என்று அவர் நினைத்தாரா? அநேகமாக அப்படி நினைத்திருக்க மாட்டார். மனிதகுலத்தின் கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில் இத்தகைய ஒரு “பொற்காலத்தை” ஸ்மித் காணவில்லை. அவர் அநேகமாக தனிச் சொத்துடைமை உள்ள, ஆனால் வர்க்கங்கள் இல்லாத ஒரு சமூகத்தையே மனதில் எண்ணியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூகம் சாத்தியமா அல்லது எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறதா என்பது முற்றிலும் வேறு வகையான கேள்வியாகும்.

பத்து லட்சம் விவசாயிகளைக் கொண்ட ஒரு சமூகத்தை நாம் கற்பனை செய்வோம். அங்கே ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே போதுமான நிலமும் உழைப்புக் கருவிகளும் வைத்திருக்கிறார், தன்னுடைய குடும்பத்தின் நுகர்வுக்கும் பரிவர்த்தனைக்கும் மட்டுமே போதுமான அளவுக்கு உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர்களைத் தவிர, அந்த சமூகத்தில் இன்னொரு பத்து லட்சம் சுதந்திரமான கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த உழைப்புக் கருவிகளைக் கொண்டும் மூலப் பொருள்களைக் கொண்டும் பாடுபடுகிறார்கள். இந்தச் சமூகத்தில் கூலி உழைப்பு என்பது கிடையாது.

கெனேயின் கருத்தின்படி இந்த சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன. ஸ்மித்தின் கருத்தில் ஒரே ஒரு வர்க்கம் மட்டுமே இருக்கிறது. ஸ்மித்தின் அணுகுமுறையே அதிகம் சரியானதாக இருக்கிறது. ஏனென்றால் வர்க்கங்கள், அந்த வர்க்கங்களை அமைக்கின்ற மக்கள் பொருளாதாரத்தின் எந்தத் துறையில் உழைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடுவது கிடையாது, உற்பத்திச் சாதனங்களோடு இவர்கள் கொண்டிருக்கும் உறவைப் பொறுத்தே இந்த வேறுபாடு ஏற்படுகிறது. மேலே கொடுக்கப்பட்ட உதாரணத்தில் பண்டங்களின் பரிவர்த்தனை உழைப்பின் மதிப்புக்குத் தகுந்தவாறு நடைபெறுகிறது, உழைப்பின் மொத்த உற்பத்திப் பொருள் (அல்லது அதனுடைய மதிப்பு) தொழிலாளிக்குச் சொந்தமாக இருக்கிறது என்று ஸ்மித் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அதைப் பகிர்ந்து கொள்வதற்கு யாரும் இன்னும் தோன்றவில்லை. ஆனால் அந்தக் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது. நிலம் நிலவுடைமையாளர்களின் தனிச் சொத்தாக மாறிவிட்டது, பட்டறைகளும் தொழிற்சாலைகளும் முதலாளிகளின் உடைமைகளாக இருக்கின்றன. இதுதான் நவீன சமூகமாகும். அது கூலித் தொழிலாளர்கள், முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் என்ற மூன்று வர்க்கங்களைக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையேயும் பல்வேறு இடைநிலை அடுக்குகளையும் குழுக்களையும் இனம் காண்பதற்குரிய அளவுக்கு ஸ்மித் யதார்த்தவாதியாக இருக்கிறார். ஆனால் கோட்பாட்டளவான பொருளாதார ஆராய்ச்சியில் ஒருவர் இந்த அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு மூன்று வர்க்கங்கள் என்ற மாதிரிப்படிவத்திலிருந்து முன்னேறலாம்.

படிக்க:
♦ தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

இன்று ஒரு தொழிலாளி யாரோ ஒருவருடைய நிலத்தில் யாரோ ஒருவருடைய மூலதனத்தின் உதவியைக் கொண்டு பாடுபடுவது ஒரு விதியாகவே இருக்கிறது. எனவே அவருடைய உழைப்பின் மொத்த உற்பத்திப் பொருளும் இனியும் அவருக்குச் சொந்தமாக இருப்பதில்லை. இந்த உற்பத்திப் பொருளிலிருந்து அல்லது அதனுடைய மதிப்பிலிருந்து நிலவுடைமையாளரின் குத்தகைப் பணம் முதலில் கழிக்கப்படுகிறது. இரண்டாவதாக, தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொண்டு அவர்களுடைய வேலைக்குத் தேவையான கருவிகளையும் பொருள்களையும் கொடுக்கின்ற முதலாளியின் லாபம் கழிக்கப்படுகிறது.

உபரி மதிப்பு என்பது முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் உழைப்பைச் சுரண்டுவதன் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளுகிற அளவுக்கு ஸ்மித் நெருங்கி வருகிறார். எனினும் மார்க்சுக்கு முன்பிருந்த எல்லாப் பொருளியலாளர்களையும் போலவே அவர் உபரி மதிப்பை ஒரு தனிவகையான இனமாகப் பிரித்துக் கூறவில்லை; முதலாளித்துவ சமூகத்தின் மேற்பரப்பில் அது மேற்கொள்ளும் ஸ்தூலமான வடிவங்களான லாபம், குத்தகை, வட்டி என்பவற்றை மட்டுமே அவர் ஆராய்ந்தார். ஸ்மித் நாடுகளின் செல்வத்தில் ஒரு காலத்தில் தொழிலாளிக்குச் சொந்தமாக இருந்த உழைப்பின் முழு உற்பத்திப் பொருள் பிறகு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டதைக் குறிப்பிடுகின்ற ஐந்து இடங்களை பி. டக்ளஸ் எடுத்துக் காட்டுகிறார். இந்தச் சொற்றொடர் “சோஷலிசச் சிந்தனையின் வரலாற்றில் மிகவும் அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது, அதை ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தில் காண்பது அதிகமாகக் குறிப்பிடக் கூடியதாகும்…” (1)  என்று டக்ளஸ் எழுதுகிறார். இது மிகவும் உண்மையே. நாடுகளின் செல்வம் புத்தகத்தை அறிஞர்கள் மிக நுட்பமான சோதனைக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவ்வளவு அதிகமான அளவுக்கு மாறுபட்ட – முரண்பாடாகவும் இருக்கின்ற வாசகங்களைக் கொண்ட மாபெரும் இலக்கியங்கள் மிகச் சிலவே.

ஸ்மித்தினுடைய சிந்தனையில் மற்றொரு கருத்தோட்டம் கூலி, லாபம், வாரம் ஆகிய வருமானங்களின் மொத்தமே மதிப்பு என்ற அவருடைய அபிப்பிராயத்திலிருந்து தோன்றுகிறது. லாபமும் வாரமும் ஒரு பண்டத்தின் மதிப்பைப் படைக்கின்றன என்றால் அந்தப் பண்டத்தின் முழு மதிப்பிலிருந்து அவற்றைக் கழிக்க முடியாது என்பதே உண்மையாகும். இங்கே வருமானங்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் காண்கிறோம். உழைப்பு, மூலதனம், நிலம் என்ற ஒவ்வொரு உற்பத்திக் காரணியும் (இந்தச் சொல் பிற்காலத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது) பண்டத்தின் மதிப்பைப் படைப்பதில் பங்கு கொள்கின்றன, அதற்குரிய பங்கை இயற்கையாகவே கோருகின்றன என்பது இக்கருத்தாகும். தன் கருத்துக்கு ஆதரவான வாதத்தைக் கொடுத்த பொருளியலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பறைசாற்றிய “மூலதனத்தின் தெய்விக உரிமை” என்பது இங்கேயிருந்து வெகு தூரத்தில் இல்லை.

வருமானங்களிலிருந்து மதிப்பை உருவாக்கிக் கொண்ட பிறகு ஸ்மித் ஒவ்வொரு வருமானமும் நிர்ணயிக்கப்படுகின்ற இயற்கையான விகிதத்தை ஆராய்வதற்கு முடிவு செய்கிறார், அதாவது சமூகத்தின் வர்க்கங்களுக்கிடையே தனிப்பட்ட பண்டம் மற்றும் மொத்த உற்பத்திப் பொருளின் மதிப்பு எந்த விதிகளின்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை ஆராய்வதற்கு முடிவு செய்கிறார்.

முக்கியமான மூன்று வருமானங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்த பிறகு ஸ்மித் மறுபடியும் ஓரளவுக்கு அவருடைய உபரி மதிப்புத் தத்துவத்துக்குத் திரும்புகிறார். கூலியைப் பற்றிய அவருடைய கருத்து இன்றைக்கும் கூட அக்கறை கொள்வதற்கு உரியதாக இருக்கிறது. கூலியைப் பற்றிய அவருடைய தத்துவம் பல அம்சங்களில் திருப்திகரமாக இல்லை என்பது சரியே, ஏனென்றால் தொழிலாளி முதலாளியிடம் தன்னுடைய உழைப்புச் சக்தியை விற்பனை செய்வதில் அடங்கியுள்ள உறவுகளின் உண்மையான தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர் நடைமுறையில் உள்ள உழைப்பையே பண்டம் என்றும் அதன் காரணமாக அதற்கு ஒரு இயற்கையான விலை இருப்பதாகவும் அனுமானித்தார். ஆனால் அவர் இந்த இயற்கையான விலையை மார்க்ஸ் உழைப்புச் சக்தியின் மதிப்பை வரையறுத்த அதே விதத்தில் – தொழிலாளியும் அவருடைய குடும்பமும் உயிரோடிருக்கத் தேவையான சாதனங்களின் மதிப்பின் மூலமாகஉண்மையாகவே வரையறுத்தார். ஸ்மித் இதற்கு யதார்த்த ரீதியான, முக்கியமான சேர்ப்புகளின் தொடரையும் கொடுத்தார்.

படிக்க:
♦ “அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்
♦ ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

முதலாவதாக, உழைப்புச் சக்தியின் மதிப்பு (”இயற்கையான கூலி” என்பது அவருடைய சொற்றொடர்) உயிரோடிருக்கத் தேவையான சாதனங்களின் குறைந்த பட்சத்தினால் நிர்ணயிக்கப்படுவது மட்டுமல்லாமல், கால, நேர நிலைமைகளையும் பொறுத்திருக்கிறது, அதில் வரலாற்று ரீதியான, கலாச்சார ரீதியான கூறுகளும் அடங்கியிருக்கின்றன என்பதை முன்பே உணர்ந்திருந்தார். தோலினால் செய்யப் படும் காலணிகளை ஸ்மித் உதாரணமாகக் காட்டினார். இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது அவசியமிக்க பொருள், ஸ்காட்லாந்தில் ஆண்களுக்கு மட்டும் அது அவசியமான பொருள், பிரான்சில் இருபாலாருக்குமே அது அவசியமான பொருளல்ல. பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்ற பொழுது தேவைகளின் வட்டம் விரிவடைகிறது, உண்மையான பண்டங்களில் எடுத்துரைக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஒருவர் வருவது இயற்கை.

இரண்டாவதாக, தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட குறைவான கூலிக்கு அது குறைந்த பட்சத்தை ஒட்டியே இருந்தது – முக்கியமான காரணங்களில் ஒன்று முதலாளியோடு ஒப்பிடுகின்றபொழுது அவர்களுடைய பலவீனமான நிலைமையே என்பதை ஸ்மித் தெளிவாகப் பார்த்தார். அவர் இதைப் பற்றி மிகவும் வன்மையாக எழுதினார். தொழிலாளர்களின் ஸ்தாபனமும் ஒருமைப்பாடும், அவர்களுடைய எதிர்ப்புமே தொழிலதிபர்களின் பேராசையைக் கட்டுப்படுத்தும் என்று ஒருவர் முடிவு செய்வது இயற்கையே.

கடைசியில் மூன்றாவதாக, அவர் கூலியில் ஏற்படும் போக்குகளை நாட்டின் பொருளாதார நிலைமையோடு இணைத்தார்; முற்போக்கான பொருளாதாரம், பிற்போக்கான பொருளாதாரம், மாற்றமில்லாத பொருளாதாரம் என்று நாட்டின் பொருளாதாரத்தில் மூன்று வகைகளைப் பிரித்துக் காட்டினார். முதல் வகையில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் காரணமாக உழைப்புக்கு அதிகமான தேவை ஏற்பட்டுக் கூலி அதிகரிக்கும் என்று அவர் நம்பினார். வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு உண்மையாகவே உதவியாக இருப்பதை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பிற்காலத்திய வளர்ச்சி எடுத்துக் காட்டியிருக்கிறது.

அரசியல் பொருளாதாரத்தில் லாபத்தை ஒரு விசேஷமான பொருளாதார இனமாகப் பிரித்துக் காட்டுகின்ற பணியை ஸ்மித் பூர்த்தி செய்தார். ”மேற்பார்வையிடுதல் மற்றும் இயக்குதல்” என்ற விசேஷமான வேலை ரகத்துக்குக் கொடுக்கப்படும் கூலியே லாபம் என்ற கருத்தை அவர் அடிப்படையில் நிராகரித்தார். லாபத்தின் அளவு மூலதனத்தின் அளவினால் நிர்ணயிக்கப்படுவதையும் இந்த உழைப்பிலுள்ள சிரமத்தைப் பற்றிக் கற்பனையாகச் சொல்லப்படுவதற்கும் அதற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையென்பதையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். இங்கும் இன்னும் சில பகுதிகளிலும் லாபம் என்பது சுரண்டுபவருடைய வருமானம், அது உபரி மதிப்பின் முக்கியமான வடிவம் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

இந்தக் கருத்துக்குப் பக்கத்திலேயே லாபத்தைப் பற்றிய மேலெழுந்தவாரியான முதலாளித்துவக் கருத்தையும் நாம் பார்க்கிறோம். லாபம் என்பது ஆபத்தை மேற்கொள்வதற்காக, தொழிலாளி பிழைப்பதற்குரிய சாதனத்தைக் கொடுப்பதற்காக, தவிர்ப்பு என்று சொல்லப்படுவதற்காக முதலாளிக்குத் தரப்படுகின்ற இயற்கையான வெகுமதி என்றும் எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  Adam Smith, 1776-1926, “Lectures to Commemorate the 150th Anniversary of the Publication of The Wealth of Nations”, Chicago, 1928, p. 96.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

டந்த பத்தாண்டில் ஒவ்வொரு வருடத்தின் மே மாதத்திலும் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவதும், சர்வதேசம் முழுவதும் பேசப்படுவதுமான ஒரு பூமி உண்டெனில் அது முள்ளிவாய்க்கால்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் பதினெட்டாம் திகதி வரைக்கும் ‘மனிதாபிமான நடவடிக்கை’ எனும் பெயரில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் குருதி சிந்திய நிலம் முள்ளிவாய்க்கால்.

முள்ளிவாய்க்கால் மனிதப் புதைகுழிகள் இன்றும் கூட முற்கம்பி வேலிகளுக்குள் அரச பாதுகாப்புப் படையினரின் காவலின் கீழ் இருப்பதைக் காண நந்திக்கடல் களப்பைத் தாண்டி புதுக்குடியிருப்பை நோக்கிப் பயணித்தால் போதுமானது. இப்போதும் தமிழர்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டிருப்பது அரச தீவிரவாதத்தின் இன்னும் முற்றுப் பெறா சர்வாதிகாரத்தின் பெயரிலேயே அன்றி நல்லாட்சிக்காகவல்ல.

முள்ளிவாய்க்கால் கூட்டுப் படுகொலையின் சாட்சிகளான சடலங்களின் சிதிலங்களையும் கூட புல்டோஸர்களைக் கொண்டு அழித்து விட்டது இராணுவம். மக்கள் இருந்தார்கள் என்பதற்கு அடையாளமாக அந் நிலங்களில் கைக் குழந்தைகளின் நைந்த ஆடைகள், சிறிய பாதணிகள், தாய்மார்களின் கந்தல் சேலைத் துண்டுகள், பீங்கான் தட்டுக்கள், கோப்பைகள் போன்றவைகள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவுகூர ஒவ்வொரு மே மாதத்திலும் தமிழ் மக்கள் முனையும் போதெல்லாம் அரசாங்கத்தின் அதிகாரக் கரங்கள் அதைத் தடுத்திடக் காத்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இந்த வன்முறை இன்று வரைக்கும் தீர்ந்த பாடில்லை.

2012 ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் திகதி பளை கத்தோலிக்க தேவாலயத்துக்குள் திடீரென நுழைந்த இராணுவம், இறுதி யுத்தத்தின் போது மரித்தவர்களை நினைவுகூரும் விதமான எவ்விதப் பூஜைகளும் நிகழ்த்தப்படக் கூடாதென அங்கிருந்த அருட்தந்தையிடம் உத்தரவிட்டது. அது மஹிந்த ராஜபக்‌ஷவின் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்த காலம். அவர் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டு, மரித்தவர்களை நினைவுகூரும் மனிதாபிமானத்துக்கெதிராகக் கிளர்ந்து நின்ற நாள் அது.

அது மாத்திரமல்லாது 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் சிறைக் கைதிகளான வவுனியா கணேஷன் நிமலரூபன், யாழ்ப்பாணம் தில்ருக்‌ஷான் மரியதாஸ் ஆகியோரது சடலங்களும் கூட ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அக் காலத்தில் அச்சுறுத்தின. அந்த உடல்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வாரக் கணக்கில் தாமதப்படுத்தியது அரசாங்கம். இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னரும் கூட இறுதிச் சடங்குகளை எவ்வாறு எளிமையாக நடத்த வேண்டும் என்று தீர்க்கமாக உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறாக, அக் காலத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தமிழர்களின் சடலங்களைக் கூடக் கண்டு பயந்தது போலத்தான் கடந்த நல்லாட்சி அரசாங்கமும் கூட, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவைக் கையில் வைத்துக் கொண்டு யுத்தத்தில் மரித்தவர்களின் பெயர்கள் தாங்கிய கற்பதாகைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறது.

படிக்க:
♦ ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

எவ்வாறாயினும், தமிழர்கள் ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்‌ஷவின் மோசமான சர்வாதிகார ஆட்சியை தோற்கடிக்கச் செய்து தாம் கனவு கண்ட சுதந்திரமான நல்லாட்சியைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் 2015 ஜனவரி மாதம் எட்டாம் திகதி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க, தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

அதன் பலனாக 2015 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு, யுத்தத்தில் மரித்த தம் சொந்தங்களை நினைவுகூர அனுமதி கிடைத்தது. 2016 ஆம் ஆண்டும் கூட முள்ளிவாய்க்காலிலும், கிளிநொச்சியிலும் இன்னும் வடக்கின் பல இடங்களிலும், கிழக்கிலும் தமிழர்கள் தாம் இழந்த உறவுகளை நினைவு கூர்ந்து விளக்கேற்றி பூஜை செய்தார்கள். அதற்கு அப்போது எவ்வித தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அப் பூஜைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் கூட ஏற்படவில்லை.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந் நிலைப்பாடு தடம் புரண்டது. இலங்கையில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்வதற்காக அவர்களது பெயர் விபரங்கள் கற்பதாகைகளில் பொறிக்கப்பட்டு அவை முள்ளிவாய்க்கால் தேவஸ்தானத்துக்கு அண்மித்த நிலத்தில் புதைக்கப்பட்டு, மரணித்தவர்களை நினைவுகூரும் சடங்கிற்கெதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி நீதிமன்றத் தடையை இட்டது.

வருடத்துக்கொரு தடவை தமது உறவுகளை நினைவுகூறும் அச் சடங்கு தீவிரவாதக் கொண்டாட்டம் எனக் கூறியவாறு ராஜபக்‌ஷவின் அடிச் சுவட்டிலேயே தமது பாதங்களைப் பதித்துச் சென்று மரித்தவர்களை நினைவுகூர்வதற்கான தடையுத்தரவை நீதிமன்றத்தினூடாகப் பெற்றுக் கொண்டது கடந்த அரசாங்கம். இதன் மூலமாக ‘நல்லாட்சி’ எனும் பெயரில் ஒளிந்து கொண்டிருந்த அரசின் கோரமான நிஜ முகமும், மஹிந்தவின் மோசமான எண்ணக் கருக்களும் வெளிப்பட்டிருந்தன. இவ்வாறாக கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களை நினைவு கூர்வதைத் தடுக்க நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டிருந்த ஒரு அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான நல்லாட்சியை எதிர்பார்த்திருக்க முடியும்?

படிக்க:
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!
♦ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்

முள்ளிவாய்க்காலில் படுகொலையான ஆயிரக்கணக்கான மக்களுக்கென்று 2017-ம் ஆண்டு வரைக்கும் ஒரு கல்லறை கூட இருக்கவில்லை. அதுவரைக்கும் மரித்தவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் மெழுகுதிரி ஏற்றி வைத்து பூக்களிட்டு வழிபட்டதெல்லாம் தாமாக மனதில் வைத்துப் பூஜித்து வந்த கல்லறைகளின் முன்புதான். குரூரமான இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மனிதர்களில், இருநூற்றைம்பது பேரை அவர்களது உறவுகளின் சாட்சிகளோடு இனம் கண்டு பெயர், முகவரி, வயது, காலமான தினம் போன்ற தகவல்களைத் திரட்டியெடுத்து அவற்றை கருங்கல் பதாகைகளில் தமிழில் பொறித்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவிடத்துக்கருகிலேயே புதைக்க ஏற்பாடு செய்தது ஒரு அரச சார்பற்ற நிறுவனம். அந்த இடம் 2017-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பதினேழாம் திகதி இரவு அதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மரணித்தவர்களை நினைவுகூர்வது மக்களின் உரிமை என்றபோதும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவில் ‘நாட்டின் ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை’ ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினரால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவுக்கேற்ப எதிர்காலத்தில் மீண்டும் தலைதூக்கக் கூடிய தீவிரவாதப் போக்கை உத்தேசித்து இத் தடை உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

பல மணித்தியாலங்களாக நீடித்த வாதப் பிரதிவாதங்களின் பின்னர் முள்ளிவாய்க்கால் தேவாலயத்தினுள்ளே மாத்திரம் மரித்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய அனுமதித்த நல்லாட்சி அரசாங்கம் கற்பதாகைகள் பொறிக்கப்பட்டிருந்த நிலத்தில் எவ்விதப் பூஜையையும் செய்ய அனுமதிக்கவில்லை.

இந்த நிலைப்பாடு கடந்த 2018-ம் ஆண்டு வேறொரு விதத்தில் தொடர்ந்தது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற செய்தி மாநாடொன்றில் வைத்து அமைச்சர் ராஜித, யுத்த கால கட்டத்தில் பொதுமக்களும் கூட கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டுமென்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து தீப்பற்றிக் கொண்ட ஊடகங்கள், சமூக வலைத்தளங்களினூடாக பற்றியெரியத் தொடங்கியிருந்தன.

இந் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி கடற்கரையில் ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்ந்து மெழுகுதிரி ஏற்றி வைத்து அமைதியாக பிரார்த்தித்தார்கள். அந்த அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாத சிங்கள சமூக வலைத்தள வீரர்கள் அங்கு இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வைக் கண்டு தமது இராணுவத்தின் பெருமை பாடத் தொடங்கினார்கள்.

அதாவது மரித்தவர்களை நினைவு கூர வந்த தமிழ் மக்களுக்கு, இலவச குளிர்பானங்களை வழங்கிக் கொண்டிருந்தது இராணுவம். அதனைக் கருத்திற்கொண்டு மீண்டும் இராணுவத்தின் புகழ்பாடி அதனை உச்சத்திலேற்றிக் கொண்டாடித் தீர்த்தன சிங்கள சமூக வலைத்தளங்கள்.

விடயம் அதுவல்ல. இன்றும் கூட தமிழர்களின் இடங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் இராணுவம், இன்றும் கூட அப் பகுதிகளில் இராணுவ முகாம்களை நிறுவி வரும் இராணுவம், மரித்தவர்களின் கல்லறைகளையும் கூட புல்டோஸர்களால் அழிக்கும் இராணுவம், கிளிநொச்சியில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ‘எம்மிடம் அவ்வாறானதொரு பட்டியல் இல்லை’ எனக் கூறும் இராணுவம், உண்மையில் மரித்தவர்களை நினைவுகூர வந்த தமிழ் மக்களுக்கு இவ்வாறாக இலவச குளிர்பானங்களை வழங்கியது ஏன்?

கொலைநிலமான முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதை தெற்கிலிருக்கும் சிங்கள மக்களில் அனேகமானவர்கள் எதிர்க்கும்போது வடக்கின் இராணுவம், நினைவுகூர வருபவர்களுக்கு இலவச குளிர்பானங்களை வழங்கியது ஏன்?

சித்திரவதைகளையும், படுகொலைகளையும் முற்றுமுழுதாக எதிர்க்கும் பௌத்த மதத்தை முன்வைத்து தம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள இராணுவம் முயற்சிப்பதை வடக்கில் பரவலாக வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகளின் மூலமாகக் காணலாம். உண்மையில், இராணுவம் வடக்கில் இன்றும் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இவ்வாறுதான்.

இராணுவத்தின் அவ்வாறானதோர் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே இந்த இலவசக் குளிர்பானத் திட்டம். முள்ளிவாய்க்காலில் கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கொல்லப்பட்டார்கள். அது இலங்கை இராணுவத்துக்கு நன்றாகத் தெரியும். அந்தக் குற்ற உணர்விலிருந்து விடுபட அது எடுக்கும் முயற்சிகளில் ஒன்றே இவ்வாறான ‘நற்சேவை’.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். இலங்கை இராணுவமானது தனது குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டிச் செய்யும் இவ்வாறான நற்கருமங்கள் மீண்டும் மீண்டும் வடக்கின் தமிழ் மக்களது சுதந்திரத்தைப் பறிப்பதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

எனவே தற்போதைய அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழர்கள் கூடுமிடங்களிலெல்லாம் இராணுவத்தைக் கொண்டு இலவச குளிர்பானங்களைப் பகிர்வதல்லாது, தமிழர்களது இடங்களிலிருந்து இராணுவத்தையும், இராணுவ முகாம்களையும் முற்றுமுழுதாக அகற்றி அம் மக்களுக்கு பரிபூரணமான சுதந்திரத்தை வழங்குவதுதான். இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதுவும், முள்ளிவாய்க்காலின் அடிப்படை உரிமையை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுவும்தான் உண்மையில் இலங்கையின் சிறந்த ஆட்சியாக அமையும்.

– எம். ரிஷான் ஷெரீப்

disclaimer