Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 287

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !

2014 இல் மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் ஆர்.எ.ஸ்.எஸ். பிரச்சாரக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராஜேஷ்வர் சிங், டிசம்பர் 31, 2021 உடன் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் துடைத்தெறியப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தார். அது உதிரி  சக்திகளின் வெறித்தனமான பேச்சு என்றும் பொருட்படுத்தத்தக்கது அல்ல என்றும் அன்று ஒதுக்கித் தள்ளப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ்வர் சிங்

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இன்று, மோடி அரசு அந்தப் பிரகடனத்தை உண்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருவதற்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த மற்ற சிறுபான்மை  மதத்தினர் அனைவருக்கும் அவர்கள் அங்கே மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று இச்சட்டத் திருத்தம் கூறுகிறது. அதாவது, மேற்சொன்ன நாடுகளில் இஸ்லாமிய  மதத்தில் பிறந்த ஒருவர்  வேறு எந்த விதத்தில் துன்புறுத்தப்பட்டாலும், அவர் இந்தியாவுக்குள்  நுழையவோ குடியுரிமை பெறவோ முடியாது என்கிறது இந்த சட்டத் திருத்தம்.

1947-இல் நாட்டுப் பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள், முஜாகிர்கள் (வந்தேறிகள்) என்று பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து அங்கே போராடிவரும் “முத்தா ஹிதா குவாமி” இயக்கம் என்ற கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை காரணமாகத் தலைமறைவாக இருப்பவர். இவர் இந்தியாவில் அடைக்கலமும் குடியுரிமையும் கோரிய அடுத்த சில நாட்களில் இங்கே இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதுதான் ஒரு விசித்திரம்! ஹூசேனுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கி விட்டது.  ஆனால், இந்திய அரசு அவருடைய கோரிக்கையை என்ன செய்தது என்று நமக்குத்  தெரியவில்லை.

படிக்க:
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

“குடியுரிமைச் சட்ட திருத்தத்தைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்துத்தான் பார்க்க வேண்டும்” என்று ஏற்கனவே அமித் ஷா தெளிவாகப் பேசியிருக்கிறார். அதாவது, ஒரு இந்தியர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் தனது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லையென்றால், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெறுகின்ற வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆனால், முஸ்லிம்களுக்கு மட்டும் இது பொருந்தாது என்கிறது மோடி அரசின் சட்டத் திருத்தம். அதாவது, தேசியக் குடிமக்கள் பதிவேடும், குடியுரிமைச் சட்டத் திருத்தமும் முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குகின்றன. இந்தியாவில் தற்போது வசித்து வருகின்ற முஸ்லிம்களைத் தவிர்த்த மற்றவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டத் தவறிய போதிலும், அவர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடையாது.

யாருக்கெல்லாம் தந்தையர் நாடாகவும்,  மதரீதியான புண்ணிய பூமியாகவும் இந்தியா இருக்கிறதோ, அவர்கள் மட்டும்தான் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியும். தந்தையர் நாடாக இந்தியா இருந்த போதிலும், புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாக நம்புகிறவர்களை  (மெக்காவைப் புனித பூமியாகக் கருதும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜெருசலேமைப் புனித பூமியாகக் கருதும் கிறிஸ்தவர்கள்)  “உண்மையான இந்தியர்களாகக் கருதவியலாது” என்பது கோல்வால்கரின் கருத்து.

மதத்தின் அடிப்படையில் குடிமக்களைப் பாகுபடுத்தி, இஸ்லாமியர்களை இந்தியரல்லாதவர்கள் ஆக்குகின்ற கோல்வால்கரின் கருத்தையும், இந்து மகாசபா தலைவர் சாவர்க்கரின் கருத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது மோடி அரசின் குடியுரிமைச் சட்டம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், “செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் பெரும்பான்மை இந்து மதத்தினரின் தயவில் வாழ வேண்டும்” என்பதுதான் இதன் பொருள்.

நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை என்ற தலைப்பில் கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இந்துஸ்தானில் (இந்தியாவில்) வசிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் மாறிக்கொள்ள வேண்டும். இந்து மதத்தைப் புனிதமாகக் கருதவும் மதிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். இந்து இனத்தையும் அதன் கலாச்சாரத்தையும் போற்றிப் புகழ்வதைத் தவிர வேறு விதமாகச் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். இந்த மண்ணுக்கும் இதன் தொன்மையான பாரம்பரியத்துக்கும் எதிரான சகிப்பின்மையையும் நன்றி கெட்டத்தனத்தையும் கைவிட்டு, இவற்றின்பால் நேசத்தையும் பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  சுருங்கக் கூறின், வெளிநாட்டுக்காரர்களாக நடந்து கொள்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். அல்லது அவர்கள் இந்து தேசத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இங்கே தங்கியிருக்கலாம். மற்றபடி, அவர்கள் இங்கே எந்தவித சலுகைகளையும் கோர முடியாது. குடியுரிமையையும் கோர முடியாது. இதைத் தவிர வேறெந்த விதமான வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்படக்கூடாது. நாம் ஒரு புராதனமான தேசம். புராதனமான தேசங்கள் தமது நாட்டில் குடியேறிய அந்நிய இனத்தாரை எப்படி நடத்துகின்றனவோ, எப்படி நடத்த வேண்டுமோ அவ்வாறு நடத்துவோம்.”

அதேபோல, இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவர்க்கர், “யார் இந்து?” என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: சிந்து நதியில் தொடங்கி சமுத்திரங்கள் வரை பரவியிருக்கும் பாரத வர்ஷம் எனப்படும் இந்த மண்ணைத் தனது தந்தையர் நாடாகவும், தனது மதத்தின் தொட்டிலாகவும் புனித பூமியாகவும் கருதுபவனே இந்து. ஒரு பொது தேசம் (ராஷ்டிரம்), ஒரு பொது இனம் (ஜாதி), ஒரு பொது நாகரிகம் (கலாச்சாரம்) இவைதான் இந்துத்துவத்தின் அத்தியாவசியமான கூறுகள். இவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிந்துஸ்தானம் என்பது எவனொருவனுக்கு பித்ரு பூமியாக (தந்தையர் நாடாக) மட்டுமின்றிப் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ, அவனே இந்து. இந்துத்துவ தேசத்தின் முதல் இரண்டு கூறுகளான தேசம், இனம் ஆகியவை தந்தையர் நாடு என்பதைக் குறிக்கின்றன. புண்ணிய பூமி என்பது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. எந்த மதச் சடங்குகளும் புனித நூல்களும் இந்த மண்ணைப் புனித மண்ணாக ஆக்குகின்றனவோ, அவையனைத்தையும்தான் கலாச்சாரம் என்கிற சொல்லால் குறிக்கிறோம்.

படிக்க:
சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
♦ இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !

பாகிஸ்தான் என்ற கோரிக்கையை ஜின்னா வைப்பதற்குச் சற்று முன்னரே, புண்ணிய பூமி என்ற அடிப்படையில் இந்தியாவைத் துண்டாடும் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டு விட்டது. தங்களது புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாகக் கருதுகிறவர்கள் இந்து தேசத்தின் அங்கமாக இருக்க முடியாது என்றால், மற்றவர்களெல்லாம் தனியொரு நாடாக அமைகிறார்களா? அப்படியானால், இந்தியாவுக்குள்ளேயே இரண்டு தேசங்கள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆதித்ய முகர்ஜி.

இதற்கான விடை 1937-இல் இந்து மகாசபாவில் சாவர்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இருக்கிறது என ஆர்.எஸ்.எஸ்ஸும், பள்ளிப் பாடநூல்களும் மகாத்மா காந்தி கொலையும் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் முகர்ஜி. “இந்தியாவை ஒன்றுபட்ட ஒரு படித்தான தேசமாகக் கருத முடியாது. மாறாக, இந்து – முஸ்லிம் என்று இந்தியாவுக்குள் பிரதானமாக இரண்டு தேசங்கள் உள்ளன” என்று அந்த உரையில் கூறுகிறார் சாவர்க்கர். பண்பாட்டு ரீதியாகவும், மத ரீதியாகவும், தேசம் என்ற அடிப்படையிலும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல நூற்றாண்டுகளாக முரண்பாடு நிலவி வருவதாகக் கூறி, இரண்டு தேசங்கள் என்ற தனது கருத்தை நிறுவுகிறார், சாவர்க்கர். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தேசத்தில் வாழ முடியாது என்கிறார். இதே கருத்தைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வலியுறுத்துகிறது.

“முத்தா ஹிதா குவாமி” கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன்

பாகிஸ்தானில் ஷியா பிரிவு மற்றும் அகமதியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து ஊடகங்கள் ஏராளமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தம் மேற்சொன்ன முஸ்லிம் மதப் பிரிவினருக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறுக்கிறது. அது மட்டுமல்ல, பிரிவினைக் காலத்தில் இந்தியப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்களும், அங்கே முஜாகிர்கள் (வந்தேறிகள்) என இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுபவர்களும், அல்தாஃப் ஹுசேனின் தலைமையில் திரண்டிருப்பவர்களுமான ஏழை முஸ்லிம்கள் யாரேனும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிட விரும்பினால், அவர்களுக்கும் கதவைச் சாத்துகிறது இந்தச் சட்டத்திருத்தம்.

மதத்தின் அடிப்படையிலான தேசியம் என்பது பித்ரு பூமி (தந்தையர் நாடு) புண்ய பூமி என்கின்ற சாவர்க்கரின் கருத்துகளிலிருந்துதான் வருகிறது. இந்தச் சட்டத்திருத்தம் உதவுவதற்கானதேயொழிய, யாரையும் ஒதுக்குவதற்கானது அல்ல என்கிறார் அமித் ஷா. இதை நான் மறுக்கிறேன். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மட்டும் பார்த்தால், அதனால் ஆபத்தில்லை என்பது போலத் தோன்றும். ஆனால், அதனைத் தனியே பார்க்கவியலாது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதன் இலக்கு சமூகத்தில் ஒரு பிரிவினரை நாடற்றவர்களாக மாற்றுவதாகும். அசாமில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகப் போய்விட்டன. அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்துக்களின் குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும். முஸ்லிம்களை நிராகரிக்க வேண்டும். அதனால்தான் ஏற்கனவே கிடப்பில் போட்டு வைத்திருந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் முகர்ஜி.

அசாமில் வாழும் பெங்காலி முஸ்லிம்களைக் கரையான்கள் என்று சாடினார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அந்தக் கரையான்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பிடிக்க முடியாமல் மாட்டிக்கொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்பின் முடிவுகள் முற்றிலும் வேறுவிதமாக அமைந்து விட்டன. இந்தக் கணக்கெடுப்பால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து கரையான்களை மதரீதியாகப் பிரிக்கமுடியவில்லை. “குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது” என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வாளர் ரிஸ்வான் குவைசர்.

கோல்வால்கரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் ஒரே ஒரு வேறுபாடு. நாம் இந்த நாட்டை ஆளக்கூடிய காலம் ஒன்று வரும் என்று கூட அவர் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது அவருடைய கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மட்டுமல்ல, நம் எல்லோருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது. “1952-இல் இந்து மகாசபா சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலத்திலேயே, அதன் ஆகப் பெரும்பான்மையான வேட்பாளர்களால் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை. பிந்தைய நாட்களிலும்கூட தேர்தலில் அவர்கள் தோல்வியைத்தான் தழுவினர். ஏனென்றால், இந்த வெறுப்பரசியலை அன்றைய இந்து சமூகம் அங்கீகரிக்கவில்லை. இன்றைய இந்து சமூகம் வெறுப்பரசியலை அங்கீகரிப்பதோடு நிற்கவில்லை, அதற்கு மேலேயும் சென்று விட்டது” எனக் குறிப்பிடும் ரிஸ்வான் குவைசர், இந்த சட்டத்தை முறியடிப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இல்லையேல், இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டும்தான் என்ற சாவர்க்கர், கோல்வால்கரின் கனவு நனவாகிவிடும் என எச்சரிக்கிறார்.

கோல்வால்கர்: ஆர்.எஸ்.எஸ். -ஸும்  இந்தியாவும் என்ற நூலின் ஆசிரியரான ஜோதிர்மயா சர்மா இது தொடர்பாக ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார். 1954-இல் சிந்தி இனத்தவர் மத்தியில் பேசிய கோல்வால்கர், நாக்பூரில் அவர் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாராம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த பிரச்சினைகளைப் பேசுவதற்கு அங்கே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அந்தக் கூட்டத்துக்கு அவர் சென்றிருந்தாராம். இவர் உள்ளே நுழையும்போது அங்கே ஒரு முஸ்லிம் உரையாற்றிக் கொண்டிருந்தாராம். துணுக்குற்றுப்போன கோல்வால்கர், இந்தக் கூட்டத்திற்கு ஒரு முஸ்லிமை எப்படி அழைத்தீர்கள்? என்று கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் கேட்டாராம். அதற்கு அவர்கள், முஸ்லிம்களும் பார்ப்பனரல்லாதவர்கள்தானே என்று பதிலளித்தார்களாம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதவர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருக்கலாம். அது இந்து சமூகத்துக்குள் இருக்கும் பிரச்சனை. ஆனால், முஸ்லிம்கள் பிராமணர்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல, மொத்த இந்து சமூகத்துக்குமே எதிரிகள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், முஸ்லிம்களை மட்டும் விலக்கி வையுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினாராம் கோல்வால்கர்.

அன்று கோல்வால்கர் எதைச் சொன்னாரோ அதைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் இன்று அமல்படுத்துகிறது.

(ஃபிரண்ட்லைன், ஜன.3, 2020 இதழில் ஜியா உஸ் சலாம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

மொழியாக்கம்: கதிரவன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !

விவசாய இடுபொருட்களுக்கான செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய விவசாயிகள் கோரி வரும் வேளையில், இந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில் உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏறத்தாழ 9,000 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, வெட்டப்பட்ட அத்தொகையை இந்திய விவசாயிகள் தமது சொந்தக் காசிலிருந்து செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உர மானியத்தை வெட்டியதோடு திருப்தி கொள்ளாத மோடி அரசு, விதைகளுக்குச் சான்றளிப்பது, சந்தைப்படுத்துவது தொடர்பாக புதிய விதை மசோதா ஒன்றையும் தயாரித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தயாராகி வருகிறது. இம்மசோதா சட்டமானால், “குறைந்த விலையில் தரமான விதைகள்” என்ற விவசாயிகளின் உரிமை காலாவதியாகிவிடும்.

இந்திய அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பிறகு இந்திய விதைச் சந்தையை இந்தியச் சட்டங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை விதிகளும் கட்டுப்படுத்தி வருகின்றன. இவற்றின் அடிப்படையில், 2001-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டம்”, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடமை உரிமைகள் மற்றும் புதிய பயிர் வகைகள் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் ஆகியவற்றை மறுதலிக்காத அதேசமயம், இந்திய விவசாயிகளின் உரிமைகளையும் ஓரளவு பாதுகாப்பதாக அமைந்தது.

இந்திய விதைச் சந்தையின் மதிப்பு ஏறத்தாழ 15,000 கோடி ரூபாயாகும். இதில் 50 சதவீதத்தைத் தனியார் நிறுவனங்கள்தான் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி வருகின்றன. தனியார் நிறுவனங்களிலும், மான்சாண்டோ, டௌ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நான்கு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் 34 சதவீத விதைச் சந்தையைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

“விதைகளின் விலைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும், விதைகளின் தரத்திற்குத் தாமே சான்றளித்துக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், விதைகளின் மூலக்கூறுகளைச் சுதந்திரமாக ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும், அறுவடை செய்யப்பட்ட தானியங்களைச் சேமித்து விதைகளாகப் பயன்படுத்தும் இந்திய விவசாயிகளின் உரிமையைக் கட்டுப்படுத்த வேண்டும்” என இப்பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கோரி வந்ததை நிறைவேற்றித் தரும் விதமாக இப்புதிய மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இந்திய விவசாயிகளின் மீது “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை” ஏவிவிடும் அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

விதை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகள் என்ற வரையறைக்குள் வராதவாறு முந்தைய விதைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்த விலக்கை இப்புதிய மசோதா விலக்கிக் கொண்டுவிட்ட அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்களையும் விவசாயிகள் என வரையறுப்பதற்கு ஏற்ப தொளதொளப்பான விளக்கத்தை அளித்திருக்கிறது. இதன்படி, விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருப்பவர்களையும் மைய மற்றும் மாநில அரசுகளால் வரையறுக்கப்படும் விவசாயம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களையும் விவசாயிகள் என வரையறுக்கிறது புதிய மசோதா.

இந்த வரையறையின்படி விதை உற்பத்தியில் ஈடுபடும் பாயர், மான்சாண்டோ உள்ளிட்ட பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும்கூட விவசாயிகள் எனக் கருதப்பட்டு, புதிய விதை மசோதாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள், விலக்குகளை இந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

2002-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டத்தின்படி, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் விதைகளை மூலமாகக் கொண்டு அதனினும் மேம்பட்ட விதையைத் தனிநபரோ, நிறுவனமோ சந்தைப்படுத்தினால், அம்மேம்படுத்தப்பட்ட விதை விற்பனை வழியாகக் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியைத் தேசிய விதை வங்கிக்கு வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இப்புதிய மசோதாவில் அவ்விதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபம் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய வீரியமிக்க, மேம்பட்ட விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தாம் கண்டுபிடித்த விதைகள் எந்த மூல விதையிலிருந்து வந்தன என்பதையோ, அதில் விவசாயிகளின் பங்கு குறித்தோ குறிப்பிடத் தேவையில்லை எனச் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இனி, பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு நமது நாட்டின் பாரம்பரிய விதைகள் அனைத்தையும் திருடிக்கொண்டு, அவற்றைப் புதிய மேம்படுத்தப்பட்ட விதைகளாகச் சந்தைப்படுத்தும் அயோக்கியத்தனத்தில் சட்டபூர்வமாக ஈடுபடக் கூடும்.

2001-ஆம் ஆண்டு சட்டப்படி, புதிய மேம்படுத்த விதைளை உருவாக்கும் நிறுவனங்கள் அவ்விதை மீது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உரிமை கோர முடியாது. ஆனால், புதிய விதை மசோதா அக்காலக்கெடுவை ரத்து செய்து, தனியார் நிறுவனங்கள் எத்துணை முறை வேண்டுமானாலும் தமது விதைகளுக்குத் திரும்பத்திரும்பச் சான்றிதழ் பெற்றுச் சந்தையில் விற்றுக்கொள்ள அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் விதை நிறுவனங்களின் நீண்ட கால ஏகபோக கொள்ளைக்குச் சட்டபூர்வ தகுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

2001 சட்டப்படி பயிர் செய்யும் பருவ காலங்களில் சந்தையில் விதைத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுத்துப் போதுமான அளவு விதைகள் விற்பனை செய்யப்படுவதையும், அக்காலங்களில் விதைகளின் விலைகளை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தும் அதிகாரமும் உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிய விதை மசோதாவில் இவை இரண்டுமே உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களும் வியாபாரிகளும் விதைகளைப் பதுக்கிக் கொள்ளவும், விதைகளின் விலைகளைச் செயற்கையாக ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் வழி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது.

அறுவடைக்குப் பின் விதைகளைச் சேமித்து வைத்து அடுத்த மகசூலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், அதனை விவசாயிகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளவும் இப்புதிய மசோதா விவசாயிகளை அனுமதித்தாலும், விவசாயிகள் தமது விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கிறது. விவசாயிகள் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் சோதனையிடவும் போலீசு அதிகாரிகளுக்கு நிகரான அதிகாரங்களுடன் கூடிய அமைப்பு உருவாக்கப்பட்டு, விதைகளின் மீதான விவசாயிகளின் சுதந்திரமும் உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.

தரமற்ற விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நட்டமடையும்போது அவர்களைப் பாதுகாப்பதற்கு 2001-ஆம் ஆண்டு சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தன. புதிய மசோதாவின்படி, இப்படிப்பட்ட பிரச்சினைகளில் அரசு நேரடியாக விவசாயிகளின் பக்கம் நிற்காது. மாறாக, விவசாயிகள் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட விதை தரமற்றது என நிரூபித்து நட்ட ஈடு பெற்றுக் கொள்ள வேண்டுமென என நட்டாற்றில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். மேலும், தரமற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் அபராதத்தை மிகக் குறைவாக நிர்ணயித்திருக்கும் இம்மசோதா, சான்று பெறாத விதைகளை விற்கும் விவசாயிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்து ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது.

தரமான விதை, சான்றிதழ் பெற்ற விதை என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குகிறது இம்மசோதா. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து வருகிறார், மோடி. ஆனால், அவரது அரசு கொண்டு வந்திருக்கும் இம்மசோதாவோ கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதற்கு வழி ஏற்படுத்தித் தருகிறது.

பரணிதரன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !

“கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டிலேயே தனித்திருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்து கொள்வது, விட்டமின் சி கொண்ட ஆரோக்கியமான உணவு, இத்தியாதி, இத்தியாதி..” – சமீபமாக இது போன்ற அறிவுரைகளை அதிகமாக கேட்டு வருகின்றோம்.

இதில் உண்மை உள்ளதை மறுக்க முடியாது. மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்க் கிருமியை அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது தான் ஒரே தீர்வு. ஆனால், இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமா?

இயக்க நிறுத்தம் (Lock down) அறிவிக்கப்பட்ட பின், கையில் இருக்கும் காசுக்கு தகுந்தாற் போல் மளிகை சாமான் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி ஓரிரு மாதங்களுக்கு சேமித்து வைத்து வைத்துள்ளனர் பலர். ஆனால், அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்வார்கள்? அவர்கள், கும்பலாக ரேஷன் கடைகளில் கூடி அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது. பல்வேறு வட இந்திய மாநிலங்களில் இருந்து தில்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு அத்துக் கூலிகளாய்ச் சென்ற ஏழைத் தொழிலாளிகள் தங்கள் ஊர்களை நோக்கி கால் நடையாகவே புறப்பட்டு விட்டனர். சுட்டெறிக்கும் வெயிலில் தார் உருகி ஓடும் சாலையில் அறுந்து போன செருப்புகளோடு அவர்கள் நடந்து சென்றனர். முதுகில் துணி மூட்டைகள், தலையில் சிறு சிறு பாத்திரங்கள், தோளில் குழந்தைகளோடு அவர்களை ‘வல்லரசு’ இந்தியா நடக்கவிட்டு அழகு பார்த்ததை உலகம் மௌனமாய்க் கடந்து சென்றது.

“நாங்கள் கட்டிடக் கூலித் தொழிலாளிகள். நாங்கள் அழைத்த போது எங்களது மேஸ்திரி தொலைபேசியை எடுக்கவில்லை. எங்களுக்கு கூலியும் கிடைக்கவில்லை. கையில் காசும் இல்லாமல், சாப்பிட வழியும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அது தான் வேறு வழியின்றி கால்நடையாகவாவது ஊருக்கே போய் விடலாம் என நடக்கத் துவங்கினோம்” என்கிறார் மத்திய பிரதேசத்தின் பெடூல் மாவட்டத்தைச் சேர்ந்த தயாள் மண்டல்.

நடந்தே போய்ச் சேர்ந்து விடலாம் என அவர்கள் கடக்க நினைத்த தொலைவு – 800 கிலோ மீட்டர்கள்.

படிக்க:
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

இவரோடு சேர்த்து மொத்தம் ஐம்பது தொழிலாளர்கள். அவர்கள் மொத்த பேரும் ஹைதராபாத்தின் துக்கூகுடா எனும் பகுதியில் ஒரு கட்டிடத்தில் கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் சொகுசு கட்டிடங்களைக் கட்டும் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்துள்ளனர்.

இவர்கள் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்த அங்கூரம் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இவர்களை அணுகி விசாரித்துள்ளனர். 800 கிலோ மீட்டர்கள் நடந்து சொந்த ஊருக்குப் போகும் தீர்மானத்தில் இவர்கள் இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து அருகில் உள்ள தற்காலிக உறைவிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், சமைப்பதற்கான மளிகைப் பொருட்களைகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கி உள்ளது.

மாதிரிப் படம்

“அவர்களிடம் சொற்பமான அளவுக்கு மளிகைப் பொருட்கள் இருந்தன. போகும் வழியில் ஆங்காங்கே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளும் தீர்மானத்தில் இருந்தனர். நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் போகாராமில் உள்ள தற்காலிக உறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களை அங்கேயே வைத்திருப்பது கடினம். எப்பாடு பாட்டாவது சொந்த ஊருக்குப் போயே தீர வேண்டும் என்கிற உறுதியில் இருக்கின்றனர். அதற்காக 800 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை என்கிற முடிவில் உள்ளனர்” என்கிறார் அங்கூரம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுமித்ரா.

“என் மனைவியும் பெற்றோரும் பயந்து போய் உள்ளனர். அவர்களுக்கு இந்த சூழலில் ஊருக்கு திரும்புவது கடினம் என்று தெரியும். ஆனால், வெளியே எங்கேயும் இருப்பதை விட எப்படியாவது வீட்டுக்கு வந்து விட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். எங்கள் குடும்பங்கள் பயந்து போய் உள்ளன. எனவே இந்த லாக்டவுன் நீக்கப்படும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது.. எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடும். எனவே என்னவானாலும் சரி, நாங்கள் நடந்தாவது ஊருக்குப் போய் விடுகிறோம். நாங்கள் இது பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமும் போலீசிடமும் பேசப் போகிறோம்” என்கிறார் மோகன். இவர் நடைபயணம் மேற்கொண்ட குழுவில் உள்ள ஒரு தொழிலாளி.

தங்குவதற்கு இடமும், சாப்பிட உணவும் இருந்தும் கூட அந்த தொழிலாளர்கள் ஏன் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்கிறார்கள்?

***

உலகமயமாக்கல், புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை போன்றவற்றின் விளைவாக அதிகரித்துள்ள நகரமயமாக்கலுக்கு அத்துக்கூலிகள் அவசியம். குறைந்த கூலிக்கு அசாதாரணமான உழைப்பை உறிஞ்சி சுரண்ட கொத்துக் கொத்தாக பின் தங்கிய மாநிலங்களில் இருந்து படிப்பறிவில்லாத, ஏழை தொழிலாளிகளை ஏஜெண்டுகள் மூலம் பெரு நகரங்களுக்கு அள்ளி வந்து கொட்டுகின்றனர் காண்டிராக்டர்கள். இவர்களிடம் இருந்து உழைப்பை சுரண்டிக் கொண்டு உயிர் பிழைத்துக் கிடப்பதற்கு மட்டுமே போதுமான கூலியைக் கொடுக்கின்றனர்.

தங்கள் உழைப்பால் அழகூட்டப்படும் நகரங்களிலேயே அந்நிய மனிதர்களாக தகரக் கொட்டகைகளுக்குள் விலங்குகளைப் போல வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நகரங்கள் தம்மைக் காப்பாற்றாது என்பதையும், தங்களது குடும்பங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைக்கான நம்பிக்கையும், வேர்களும் ஏதோருவொரு மாட்டுவளைய மாநிலத்தின் பின் தங்கிய கிராமத்தில் தான் உள்ளது என்பதையும் இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். எனவே தான் ஆபத்துக் காலத்தில் சிறிய உயிர்கள் தங்களது வளைகளைத் தேடி மருண்டு ஓடுவதைப் போல் இடம்பெயர் கூலித் தொழிளர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி ஓடுகின்றனர்.

உழைக்கும் இடத்தில் மட்டுமல்ல – பிழைக்கச் சென்ற ஊரிலும் இந்த மனிதர்கள் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை “வந்தேறிகள்” என்றும், தங்களது வாய்ப்புகளைப் பறிக்க வந்த வடநாட்டு “சதிகாரர்கள்” என்றும் தமிழ் நாஜிகள் அவ்வப் போது குறிப்பிடுவார்கள்.


தமிழ் அண்ணல்
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?

ரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு  மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன. இப்போராட்டங்களின் வளர்ச்சிப்போக்கு இந்திய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லதாக இருக்கும்.

மோடியும் அவரது ஆதரவாளர்களும் வெற்றி அடைந்தால், மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல் உணர்வு ஆகிய மதிப்பீடுகளெல்லாம் இந்தியாவில் பெயருக்குக்கூட இல்லாது ஒழிக்கப்படும். அதற்கு மாறாக, மக்கள்திரள் போராட்டங்கள் வெற்றியடைந்தால், அவ்வெற்றி புதிய இந்தியாவைப் படைப்பதற்கான வாசலைத் திறந்துவிடுவதாக அமையும்.

இந்தப் போராட்டத்தைத் தோற்கடிக்கப் பார்ப்பன பாசிசக் கும்பலும் அவர்களது அடிவருடிகளும் இரண்டு வழிகளில் முயலுகிறார்கள். ஒன்று, மிகக் கொடூரமான, மிருகத்தனமான அடக்குமுறை; மற்றொன்று, அவதூறுகளின் மூலமும் பொய் வழக்குகளின் மூலமும் போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்துவது. எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் அதனைத் தொடர்ந்து வரவுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றையும் எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்த இரட்டைத் தாக்குதல்களை எதிர்கொண்டு தொய்வின்றி நடந்துவருகின்றன.

  • “இந்துக்களும் முசுலீம்களும் இணைந்துவிட்டால், நாஜியால் என்ன செய்துவிட முடியும்?”
  • “பாசிசத்திலிருந்து விடுதலை!”
  • “நாங்கள் குடியுரிமைக்கான சான்றுகளைத் தரமாட்டோம்; நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்!”
  • “எனது குடியுரிமையை நிரூபிக்குமாறு கேட்க நீ யார்?”

இவையெல்லாம் போராட்டத்தில் எதிரொலிக்கும் முழக்கங்கள்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் உரையாற்றிய ஒரு முஸ்லிம் மாணவன், “நான் இறக்கும் தருவாயில் மீண்டும் இங்கேயே பிறக்க அல்லாவிடம் வேண்டுவேன்” எனக் கூற, அதற்கு மற்றொரு மாணவன், “முஸ்லிம் மதத்தில் மறுபிறவி என்ற நம்பிக்கை கிடையாது” எனக் கிண்டல் செய்ய, அதற்கு அம்முஸ்லிம் மாணவன், இருக்கலாம்; “நான் பெங்காலியும்கூட” எனப் பதில் அளிக்க, அப்போராட்டக் களமே வெடிச்சிரிப்பில் மூழ்கியது.

மகாராஷ்டிராவில் மும்பய் நகரிலுள்ள கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் உடை அணிந்து நெற்றியில் குங்குமமும் இட்டு வந்த இளம் பெண், “உங்களை எது அதிகமாகக் காயப்படுத்துகிறது? எனது ஹிஜாபா, அல்லது நான் ஹிஜாப் அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டிருப்பதா?” எனக் கேட்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அக்கேள்வியை எதிரொலித்தார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதம் கடந்து உருவாகி வரும் இந்த ஒற்றுமையும், ஜனநாயக உணர்வும்தான் பார்ப்பன பாசிசக் கும்பலை அச்சங்கொள்ள வைக்கிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., பொருளாதார மந்தம், வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம், 370 முடக்கம் ஆகிய தாக்குதல்களைச் சகித்துக்கொண்டதைப் போன்று, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு  ஆகியவற்றையும் இந்திய மக்கள் பொறுத்துப் போவார்கள் என்ற அவர்களின் கனவு மண்கோட்டையாகச் சரிந்துவிட்டது.

படிக்க:
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
♦ நிதி மூலதன ஆட்சி !

***

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு என்ற இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்து நிற்பதில் முஸ்லிம்கள் முன்னணியில் நின்றாலும், இப்போராட்டம் முஸ்லிம் மத அடையாளத்தை முன்னிறுத்தி நடத்தப்படவில்லை. அவர்கள் பச்சைக் கொடிக்குப் பதிலாக மூவர்ண தேசியக் கொடியைக் கையில் ஏந்தி வருகிறார்கள்.

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டாம்” எனக் கூறிய டெல்லி ஜும்மா மசூதி இமாம் அகமது புகாரியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, பழைய டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம்கள் உ.பி.யைச் சேர்ந்த தலித் தலைவர் சந்திரசேகர் ராவணன் தலைமையில் திரண்டு போராடினார்கள். “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கம் அப்போராட்டத்தில் கேட்கவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தின் முகவுரையை முழக்கமாக எழுப்பினார்கள்.

டெல்லியில் மட்டுமல்ல, இராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா திவான் சையத் சைனுல் ஹுசைன் சிஸ்டியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, இராஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பிற மதத்தினரோடு கலந்துகொண்டார்கள்.

இந்த இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்த போராட்டம் முஸ்லிம் மாணவர்கள் பெருவாரியாகப் பயிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டும் நடைபெறவில்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உ.பி. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் எனப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லூரிகளிலும் நடைபெற்றிருக்கிறது, நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசு இந்து மதவெறியோடு நடத்திய தாக்குதல்தான் இப்போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றியது.

மத வேறுபாடுகளைக் கடந்து, பல்வேறு வர்க்கங்கள் மற்றும் சமூகத் தட்டுக்களைச் சேர்ந்த பொதுமக்களை, குறிப்பாக, மாணவர்களை, இளைஞர்களைப் பெருவாரியாக ஈர்த்து, நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்து மதவெறிக்கு எதிராக மதச்சார்பின்மையையும், பாசிசத்திற்குப் பதிலாக ஜனநாயகத்தையும் முன்வைக்கின்றன என்றால், இப்போராட்டத்தை ஒடுக்க முயலும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இந்து மதவெறியையும் அரசு பயங்கரவாதத்தையும் இணைத்துக் கொண்டுள்ளன.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலும்; உ.பி. முஸ்லிம்கள் மீது யோகி ஆதித்யநாத் அரசு கட்டவிழ்த்துவிட்டு வரும் அடக்குமுறைகளும்; மோடி, அமித் ஷா தொடங்கி எச்ச.ராஜா வரையிலான பா.ஜ.க. தலைவர்கள் இப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்திக் கூறும் அவதூறுகளும் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.

***

.பி. முசுலீம்கள் மீது ஆதித்யநாத் அரசு நடத்திவரும் இந்து மதவெறி அரசு பயங்கரவாதக் கூட்டுத் தாக்குதலை, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தில் நடத்திய முஸ்லிம்படுகொலையோடு ஒப்பிட முடியும். “இந்துக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாது” என குஜராத் இனப்படுகொலையின்போது மோடி போலீசு அதிகாரிகளிடம் கூறினார் என்றால், “முசுலீம்களைப் பழிக்குப் பழித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என இந்து மதவெறியைக் கக்கித் தாக்குதலை நடத்திவருகிறார், ஆதித்யநாத்.

குஜராத்தில் பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் முசுலீம்கள் மீது நடத்திய தாக்குதலை குஜராத் போலீசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது என்றால், உ.பி.யிலோ போலீசு நண்பர்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்து மதவெறி குண்டர் படையும் போலீசும் இணைந்து முசுலீம்கள் மீது தாக்குதலை நடத்திவருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் அவர்களது கையாட்களும் போலீசு நடத்திய தாக்குதலின் தளபதியாகச் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முசாஃபர் நகரில் முசுலீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மைய இணை அமைச்சருமான சஞ்ஜீவ் பல்யான் வந்து போலீசைத் தூண்டிவிட்ட பிறகுதான் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முசுலீம்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஏழை முசுலீம்களைச் சுட்டுக் கொல்வதும், வசதியான முஸ்லிம் குடும்பங்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கிக் கொள்ளையிடுவதும்  உ.பி.யில் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

படிக்க:
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

***

ஃபெரோசாபாத் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான இருபத்தாறு வயதான ரஷீத் ஒப்பந்தத் தொழிலாளி; தனது கூலியை வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார் ரஷீத். முப்பது வயதான ஹரூன் தனது எருதை விற்றுவிட்டுத் திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முசாஃபர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான நூர் முகம்மதுவின் கூலியை நம்பித்தான் அவரது குடும்பமே காலத்தை ஓட்டிவருகிறது. இவர் போலீசின் துப்பாக்கிக்குப் பலியானரா அல்லது ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானரா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போகவில்லை. காப்பாற்றுவதற்கு வாய்ப்பிருந்தும்கூட நூர் முகம்மதுவிற்கு முசாஃபர் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், அவரை மீரட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து போனார்.

குண்டடிபட்ட மீரட் நகரைச் சேர்ந்த முகம்மது மோசின், ஆசிப் உள்ளிட்ட மூன்று பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் இரத்தப் போக்கு நிற்காமல் இறந்து போனார்கள்.

“குண்டடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாதென மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக” வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 வயதான அப்துல் ஜலீலும், 24 வயதான நௌஷினும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டடிபட்ட அந்த இருவரையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொரு முஸ்லிமையும், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் சிகிச்சை அளிக்கமாட்டார்கள் என முன் அனுமானித்து, முஸ்லிம் மருத்துவர் நடத்தும் ஹைலாண்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

இந்த ஒரு காரணத்துக்காகவே, மங்களூரு போலீசு அந்த மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து உள்நோயாளிகளைத் தாக்க முயன்றதோடு, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் மருத்துவமனை வளாகத்தில் வீசியது. போர்ச் சூழலில்கூட மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாதென்ற சர்வதேச நியதியைக் காலில் போட்டு மிதித்திருக்கிறது, மங்களூரு போலீசு.

முசாஃபர் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த அன்றைய இரவில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு, உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் துணையோடு, அவர்கள் அடையாளம் காட்டிய முஸ்லிம் வீடுகளுக்குள் எல்லாம் புகுந்த போலீசு அவ்வீடுகளில் இருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி, பணம் நகைகளைத் திருடிச் சென்றிருக்கிறது.

தனது பேத்திகளின் திருமணத்திற்காக எடுத்து வைத்திருந்த ஐந்து இலட்ச ரூபாய் பெறுமான நகைகளை “போலீசு திருடிச் சென்றுவிட்டதாக”க் குற்றஞ்சுமத்துகிறார், முசாஃபர் நகரைச் சேர்ந்த ஹமீத் ஹசன்.

மீரட் நகரில் தெற்கு சிவில் லைன்ஸ் பகுதியில் செல்ஃபோன் / கணினி விற்பனை நிலையம் நடத்திவரும் நசீர் கான், ஆஸிஃப் ஆகிய இருவரும், “ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமது கடையிலிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பெறுமான மின்னணுப் பொருட்களை அடித்து நொறுக்கியும் திருடியும் சென்றுவிட்டதாக” போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உ.பி. மாநில போலீசு அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். அடியாள் படை என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. தற்பொழுது, யோகியின் ஆட்சியில் அவ்வரசுப் படை மிகவும் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். விசுவாசியாக மாறி, முஸ்லிம்களை வேட்டையாடியிருக்கிறது.

மீரட் நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் என்.சிங், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறியனுக்கே சவால் விடும் வகையில், உ.பி. முசுலீம்களை பாகிஸ்தானுக்கு ஓடுமாறு பேசி, அம்மதவெறிப் பேச்சை சமூக வலைத்தளங்களில் ஒளிப்படமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்த உ.பி. மாநில போலீசார், “இனி இந்த வீடெல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம். குடியுரிமைச் சட்டம் உங்களை பாகிஸ்தானுக்குத் துரத்திவிடும்” எனக் கூறியிருக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆத்திரமூட்டி, அவர்களை வன்முறையில் இறங்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, மதரீதியான கொச்சையான அவதூறுகளை உ.பி. மாநில போலீசு ஆர்ப்பாட்டத்தின்போது சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்களின் சுன்னத் மதச் சடங்கைக் கேலி செய்யும் வகையில், முக்கா துலுக்கன் என வார்த்தைக்கு வார்த்தை கூறி முஸ்லிம்களை அவமானப்படுத்தியிருக்கிறது.

மங்களூரு நகரில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை ஆய்வாளர் சாந்தாராம் குந்தர், “இத்துணை முறை சுட்ட பிறகும் ஒருத்தன்கூட சாகவில்லையே” என வன்மத்தோடு சக போலீசுக்காரர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

மைய அரசின் துணை நிதியமைச்சர் அனுராக் தாக்குர், “துரோகிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்றும்; பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “முஸ்லிம்கள் இந்துக்களின் வீடு புகுந்து நமது மகளை, சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்றும்; மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ், “எமது அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை நாயைப் போல சுட்டுக் கொன்றது” என்றும் விஷமத்தனமாகப் பேசியிருப்பதெல்லாம், முஸ்லிம்களை வன்முறையில் இறங்கச் செய்து, அவர்களைத் தனிமைப்படுத்திவிட வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்டவையாகும்.

நியாயப்படியும், சட்டப்படியும் பார்த்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கர்நாடகா மற்றும் உ.பி. மாநில முஸ்லிம்கள் மீதும் அலிகர் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் இந்து மதவெறியோடு அரசு பயங்கரவாத வன்முறையை ஏவிவிட்ட உ.பி., கர்நாடகா மற்றும் டெல்லி போலீசு மீதும்; அவ்வரசுப் படையை வழிநடத்திச் சென்ற ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. தலைவர்கள் மீதும்தான் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு எதிராக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குச் சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற முஸ்லிம்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள் ஆகியோர் மீது பிணையில் வெளிவரமுடியாதபடி பொய்வழக்குகளைப் போட்டுச் சிறையில் அடைத்திருக்கிறது, பார்ப்பன பாசிசக் கும்பல். இதன் மூலம் போராடிய முஸ்லிம்களை வன்முறையாளர்களாகச் சித்திரிக்கும் சதியை அரங்கேற்றியிருக்கிறது.

***

மிழகத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி உருவானதைப் போன்றே, ஒரு வெகுமக்கள் எழுச்சி நாடு தழுவிய அளவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உருவாகியிருக்கிறது. இந்த மூன்றும் ஆர்.எஸ்.எஸ்.  இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் முன்னெடுப்பு என்பதை உணர்ந்து இந்த எழுச்சி நடைபெற்று வருவதுதான் இதனின் தனிச்சிறப்பு.

இப்போராட்டத்திற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவளித்தாலும், இந்த மக்கள் எழுச்சி எதிர்க்கட்சிகள் உள்ளிட்டு எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் தலைமையிலும் நடைபெறவில்லை என்பதைப் பல்கலைக்கழக- மாணவர்களின் போராட்டங்களும் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம், கொல்கத்தா சர்க்கஸ் பார்க் போராட்டம் ஆகியவையும் உணர்த்துகின்றன.

போராட்டங்கள் தன்னெழுச்சியாகவும், துண்டு துண்டாகவும் நடைபெறுகின்றன; ஒருங்கிணைப்பு இல்லை என்பதையெல்லாம் பலவீனமாகக் கருதிக் கவலை கொள்வதைக் காட்டிலும், தேர்தல் அரசியல் கட்சிகளின் செயலின்மைக்கும், தேர்தல் அரசியலுக்கு வெளியே மாற்று அரசியல் தலைமை எதுவும் உருவாகாத வெறுமை நிலைக்கும் இடையில், இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டும் முந்திக்கொண்டும் செல்லும் மக்களின் உணர்வு நிலையை எண்ணி மகிழ்ச்சியடைவதே பொருத்தமாக இருக்கும்.

1917 மார்ச்சில் ரசியப் பெண்கள் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் நடத்திய போராட்டம் அக்டோபர் புரட்சியின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

பார்ப்பன பாசிஸ்டுகளை இந்திய சமூக, அரசியல் அரங்கிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என விருப்பங்கொண்டுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் களத்தில் நிற்கிறார்கள். “என்னை எதிர்த்து நிற்கும் தலைவன் யார்?” என்று காங்கிரசுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் சவால் விட்ட மோடி, தன்னை எதிர்த்து நிற்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களை, மாணவர்களை, தாய்மார்களைக் கண்டு திகைத்து நிற்கிறார். புதிய தலைமைகளை இந்தப் போராட்டம் நிச்சயம் உருவாக்கித் தரும்.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020 


பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை தாமதமாக ஏப்ப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கு வருந்துகிறோம்.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !

உ.பி. மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களைத் தொடர்ந்து 1,240 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்; 5,558 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்; 370 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டன; பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 498 பேருக்கு தண்டம் விதித்தோ அல்லது அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவோ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, தீ வைத்தல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்டுப் பல்வேறு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீது வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சதாஃப் ஜாபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாரபுரி, தலித் விரிவுரையாளர் பவன் ராவ், மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், அவரது உதவியாளர் ராஜீவ் யாதவ் உள்ளிட்டுப் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும், போராட முன்வரும் அனைவரையும் வன்முறையாளர்களாகப் பழி சுமத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்பது முதல் கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகி வருகிறது.

எடுத்துக்காட்டாக, நாகினா என்ற ஊரில் நடந்த போராட்டத்தையடுத்து 83 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது, போலீசார் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அரசு மற்றும் தனியார் சொத்துக்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 83 பேரில் 48 பேருக்குப் பிணை வழங்கியிருக்கும் பிஜ்னோர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம், தனது உத்தரவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலிருந்து போலீசை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எவ்விதமான ஆதாரத்தையும் அரசு தரப்பு தரவில்லை. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதையும் அரசு தரப்பு காட்டவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 13 போலீசார் கடுமையாகக் காயமடைந்ததாக அரசு தரப்பு கூறினாலும், அவர்களுள் 12 பேருக்கு சாதாரண சிராய்ப்புகள் மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் அரசின் புளுகு மூட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறது.

படிக்க:
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

இது போல ராம்புர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை ஆகிய கிரிமினல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தது, போலீசு. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சுமத்தப்பட்ட 34 பேரில் 26 பேர் மீதான குற்றச்சாட்டுக்களை போலீசே கைவிட்டுவிட்டது.

முசாஃபர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சதாஃப் ஜாபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாரபுரி ஆகிய இருவரின் பிணை மனுக்கள் லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என போலீசே ஒப்புக்கொண்டு குற்றச்சாட்டுக்களைக் கைவிட்டுவிட்டது.

சுடலை

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

நிதி மூலதன ஆட்சி !

பொருளாதார மந்தத்தால் இந்திய மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளை, நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மோடி அரசு, இந்த மந்தத்தால் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு நேர்ந்துவிட்ட நெருக்கடிகளைக் களையக் கிடைத்த வாய்ப்பாக பட்ஜெட்டையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பெருநிறுவன வரிச் சீர்திருத்தங்களின் மூலமும், பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதன் மூலமும், பொதுமக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய மானியங்களுக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதன் மூலமும் நிதி மூலதனக் கும்பலின் மனதைக் குளிரவைத்து, தம்மை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தாசாதி தாசனாக, மற்ற ஆளும் வர்க்கக் கட்சிகளை விஞ்சிய முதலாளித்துவ சேவகனாகக் காட்டிக்கொண்டுவிட்டது.

பொருளாதார மந்தம் எனக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிப் போக்கின் உண்மையான பொருள் வேலையிழப்பு, ஆட்குறைப்பு, வேலையின்மை, கூலிவெட்டு ஆகியவைதான். இந்தப் பொருளில் மட்டும்தான் சாமானிய உழைக்கும் மக்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும்.

வேலையிழப்பும், வேலையின்மையும், கூலி வெட்டும் இந்திய உழைக்கும் வர்க்கத்தைத் தாக்கிய அதேவேளையில், கடந்த நவம்பர் மாதம் தொடங்கியே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வும் அவர்களைத் தாக்கியது. இது இந்திய உழைக்கும் மக்களின் மீது இறங்கியிருக்கும் இரட்டைத் தாக்குதல்.

இதனை மந்த வீக்கம் எனப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் எந்தளவிற்கு வயிற்றைச் சுருக்கிக் கொள்கிறதோ அந்தளவிற்கு மட்டுமே அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பதுதான் மந்த வீக்கம் எனப்படுவதன் பொருள்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பாக வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடே குமுறிக் கொண்டிருந்த வேளையில், “நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம் அதிகம் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்” என நாடாளுமன்ற விவாதத்தின்போதே பார்ப்பன சாதித் திமிரோடு பதில் அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, மோடி அரசின் மனோநிலையே இதுதான். அதனைப் பிரதிபலிக்கும் விதமாக, உணவு மானியத்தையும் அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தையும் கைவிட வேண்டுமென பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை ஆலோசனை கூறியிருக்கிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் காய்கறி 60 சதவீதமும், பருப்பு வகைகள் 15 சதவீதமும், முட்டை 8.79 சதவீதமும், மீன், இறைச்சி உள்ளிட்டவை 9.57 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மோடி அரசு, உணவுப் பொருள் பதுக்கலையும் கள்ளச் சந்தை வியாபாரத்தையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தைக் கைகழுவிவிட விரும்புகிறது.

உணவு மானியத்தைக் கைவிடுவது என்பது நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என்பதோடு, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை, வருமானத்தைச் சந்தை சூதாடிகளின் கையில் ஒப்படைப்பதாகும்.

இப்படிப்பட்ட “நல்லெண்ணம்” கொண்ட மோடி அரசிடமிருந்து உழைக்கும் மக்கள் “அச்சே தின்” – நல்ல காலம் எதையும் சிறிதளவும் எதிர்பார்க்க முடியாது.

அதனை நிரூபிக்கும் விதத்தில்தான், மந்த வீக்கத்தால் ஓர் அரைப்பட்டினி நிலையை இந்திய உழைக்கும் வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பாரதூரமான நிலையில்கூட, ரேஷன் பொருட்களுக்குத் தரப்படும் உணவு மானியத்தையும், விவசாயிகளுக்குத் தரப்படும் இடுபொருட்களுக்கான மானியத்தையும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஊட்டச்சத்துத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் அதிகரித்துக் கொடுக்க மறுத்திருக்கிறது மோடி அரசு.

***

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதைத் தேசிய மாதிரி புள்ளிவிவர ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையே அம்பலப்படுத்துகிறது. இந்தப் பாரதூரமான வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்வதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலாளித்துவ நிபுணர்கள் பலரும் பட்ஜெட்டுக்கு முன்பிருந்தே மோடி அரசிற்குச் சுட்டிக் காட்டி வந்தனர். இந்தத் திட்டத்திற்குக் குறைந்தபட்சமாக 76,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் கூறி வந்த நிலையில், மோடி அரசோ இந்த பட்ஜெட்டில், கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட (71,000 கோடி ரூபாய்) ஒதுக்காமல், 10,000 கோடி ரூபாயை வெட்டிவிட்டு 61,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியிருக்கும் நிலையில் உணவு, எரிபொருள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கடந்த பட்ஜெட்டைவிட 0.24 சதவீதம் மட்டுமே கூட்டி வழங்கப்பட்டிருக்கிறது.

இடுபொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் உரத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மானியத் தொகை கடந்த பட்ஜெட்டை ஒப்பிடும்போது (79,997 கோடி ரூபாய்) 8,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டு, 71,309 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சியின்றி நோஞ்சான் குழந்தைகளின் தலைநகராக இந்தியா உருவாகியிருக்கும் சூழலில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைக்கான நிதி 27 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 22 ஆயிரம் கோடியாகவும்; மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி 11 ஆயிரம் கோடியிலிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நிதியையும் மோடி அரசு முழுமையாகச் செலவு செய்யும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 27.86 இலட்சம் கோடி ரூபாய் நிதியில் 9.66 இலட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டில் செலவழிக்கப்படாத தொகை 7.83 இலட்சம் கோடி ரூபாய். இப்படிச் சதித்தனமாக மிச்சம் பிடிக்கப்படும் நிதி, பற்றாக்குறையை ஈடுகட்டப் பயன்படுத்தப்படுகிறது.

***

பொதுமக்கள் விடயத்தில் பற்றாக்குறை என மூக்கைச் சிந்தி வரும் மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தள்ளுபடியோ சலுகையோ வழங்கும்போது எந்தக் கணக்கு வழக்கும் பார்ப்பதில்லை. பட்ஜெட்டுக்கு முன்பாகவே கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு 1.50 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரித் தள்ளுபடியை அறிவித்திருந்த மோடி அரசு, அதுவும் போதாதென்று இந்த பட்ஜெட்டில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு ஈவு வரியைத் தள்ளுபடி செய்திருக்கிறது. ஏகாதிபத்திய அரசுகள் இந்தியாவின் அடிக்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்தால், அம்மூதலீடு ஈட்டும் இலாபத்தின் மீதான வரி மற்றும் பங்கு ஈவு வரிகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

வருமான வரி ஏய்ப்பு வழக்குகளை கிரிமினல் சட்டங்களின் கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக அவ்வழக்குகளை சிவில் வழக்குகளாக நடத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், முதலாளி வர்க்கத்தினர் மீது வரி ஏய்ப்பு வழக்குகளைத் தொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு வரி வசூலில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக, பொது மன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வரித் தொகையைச் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மார்ச் 31, 2020 செலுத்த முன்வந்தால், அவ்வரித் தொகை மீதான வட்டி, அபராதத் தொகை மட்டுமின்றி, அந்நிறுவனங்களின் மீதான வழக்குகளும் கைவிடப்படும். வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவை வரியில்லாத சொர்க்க பூமியாக அறிவிக்கவும் நரேந்திர மோடி தயங்க மாட்டார் போலும்!

நரேந்திர மோடி இரண்டாம் முறையாகப் பதவியேற்ற இந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான வரித் தள்ளுபடிகள், சலுகைகளை வாரிக் கொடுத்திருக்கிறார். மேலும், 2019 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வருமான வரியில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரை துண்டு விழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அரசிற்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுகட்ட ஏற்கெனவே ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.75 இலட்சம் கோடி ரூபாயைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது மைய அரசு. மேலும், இந்த பட்ஜெட்டில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டில் மட்டும் 48,436 கோடி ரூபாயை மதிப்பீட்டு உபரியாக ஈட்டியிருக்கும், 31.11 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை நிர்வகித்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவு நிதி மூலதனக் கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கறி விருந்து என்றுதான் சொல்ல முடியும்.

***

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சர்வதேச நிதி மூலதன நிறுவனங்களின் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றும் முகமாக நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் என்றொரு சட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது, இந்திய அரசு.

பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி வரம்பிற்குள் வைப்பது என்பதன் பொருள் கார்ப்பரேட் முதலாளிமார்களுக்கும் சலுகை அளிக்கக்கூடாது என்பதல்ல. மாறாக, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக வெட்டி முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதுதான்.

பா.ஜ.க.விற்கு முந்தைய அரசுகளும் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்துதான் பட்ஜெட்டைத் தயாரித்தார்கள் என்றாலும், பார்ப்பன பாசிஸ்டுகளைப் பொருத்தவரை, பொதுமக்களுக்கு மானியம் வழங்குவது, மானிய விலையில், கட்டணத்தில் சேவைகளை வழங்குவதையெல்லாம் அடியோடு நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமும்கூட.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்றும் இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது என்றும் இழிவுபடுத்தி வரும் இக்கும்பல், முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்ச்சிக்கான தூண்டுகோல்கள் (stimulus packages) என நாமகரணம் சூட்டிப் புனிதப்படுத்துகிறார்கள்.

சமையல் எரிவாயுவுக்கும் உரத்திற்கும் தரப்படும் மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையெல்லாம் மானியங்களை வெட்டும் நோக்கில்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறதே ஒழிய, முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்படவில்லை. தண்ணீரை விலைக்கு வாங்கப் பழக்கப்படுத்திவிட்டதைப் போல, இவற்றையும் சந்தை விலைக்கு வாங்கும் மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிடும் சூது நிறைந்தது இந்த நடைமுறை.

இந்த அடிப்படையில்தான் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் யார் குடி அழிந்தாலும் நிதி மூலதனக் கும்பலின், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபம் சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பொது மக்களுக்கான மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன; வரித் தள்ளுபடிகளும் வரி சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இலாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் நிதி மூலதனக் கும்பலின் ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

“அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி” எனத் தேனொழுகப் பேசி அதிகாரத்தைக் கைப்பற்றிய நரேந்திர மோடியின் ஆட்சியில் வலுத்தவர் மென்மேலும் கொழுத்ததைத்தான் கண்டோம். உண்மையில் நரேந்திர மோடி அரசு, நிதி மூலதனக் கும்பல் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்வதென்றால், ராகுல் காந்தி பயன்படுத்திய வார்த்தைகளைத்தான் திரும்பக் கூற வேண்டும் – “சூட்-பூட் கி சர்க்கார்!”

– புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கு வருந்துகிறோம்.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !

“இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தேவையையும் மருத்துவர்களின் பற்றாக்குறையையும் ஈடுகட்டும் அளவிற்கு மைய, மாநில அரசுகளிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அரசு – தனியார் கூட்டு (PPP) அடிப்படையில் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தனியாரை அனுமதிக்கலாம்” என கடந்த ஜனவரி மாதத்தில் நிதி ஆயோக் பரிந்துரைத்தது. இந்த அபாயகரமான பரிந்துரைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்த பின்னும் அது பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், நிதி ஆயோக்கின் பரிந்துரையை பட்ஜெட் அறிவிப்பாகவும் வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு.

இப்பரிந்துரையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மைய அரசு நிதியுதவியும் அளிக்கும் என்ற தூண்டிலையும் போட்டிருக்கிறது, மைய அரசு.

தனியாரிடம் ஒப்படைக்கப்படும் அம்மருத்துவமனைகளில் கட்டணமில்லா இலவச சிகிச்சை மற்றும் கட்டணத்துடன் கூடிய சிகிச்சை என இரண்டுவிதமான சிகிச்சைகள் வழங்கப்படுமென்றும், கட்டணத்துடன் கூடிய சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அம்மருத்துவமனைகளைத் தனியார் நிர்வகிப்பார்கள் என்றும் நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரத் துறையைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லவும் மைய அரசு திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் சதி என்பதோடு, மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி மருத்துவத் துறையில் தனியார்மயத் திட்டங்களை நிறைவேற்றவும் இந்த மாற்றம் மைய அரசிற்குப் பயன்படும்.

***

கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் எனக் கீழிருந்து மேலாக உருவாக்கப்பட்டுள்ள வலைப்பின்னலைக் கொண்டுதான் தமிழகத்தில் சுகாதாரத் துறை இயங்கிவருகிறது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்குவது கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதமாகும்.

இந்தியாவில் கேரளாவைத் தவிர்த்து, மற்ற பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பொது சுகாதாரமும் நோய்த்தடுப்பு சிகிச்சைகளும் சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பொதுமக்களுக்குக் கிடைத்துவருவதற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்புதான் அடிப்படை ஆதாரமாக உள்ளது. இவ்வலைப் பின்னலின் ஒரு முக்கிய ஆதாரத்தைப் பிடுங்கித் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் இந்தக் கட்டமைப்பையே சிறுகச்சிறுக வீழ்த்தத் திட்டமிடுகிறது, நிதி ஆயோக்.

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், கிராமப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் இலவச சிகிச்சை கிடைக்க வழியின்றிக் கட்டண சிகிச்சை என்ற வலைக்குள் தள்ளப்படுவார்கள். இந்த அபாயத்தை உணர்ந்துதான் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரும் சென்னை மருத்துவக் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியருமான அமலோற்பவநாதன், மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார் நிர்வகிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் எனத் தனது எதிர்ப்பைப் பகிரங்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

படிக்க:
எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ் – ரே, ஸ்கேன் உள்ளிட்ட சில ஆய்வக சேவைகளைக் கட்டணச் சேவைகளாக மாற்றி, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்திருப்பது; கீழ்மட்ட ஊழியர்களை அவுட் சோர்சிங் என்ற முறையில் தனியார்மயபடுத்தியிருப்பது; மிக முக்கியமாக, அனைத்து வகை அறுவைச் சிகிச்சைகளுக்கும் மருத்துவக் காப்பீடைக் கட்டாயமாக்கியிருப்பது என்ற வகைகளில் தனியார்மயம் ஏற்கெனவே இந்தக் கட்டமைப்பை அரிக்கத் தொடங்கிவிட்டது. இதனின் அடுத்த கட்டமாக, மருத்துவமனை நிர்வாகத்தையே தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எதிர்ப்புகளையும் மீறி அடாவடித்தனமாக எடுத்திருக்கிறது, மைய அரசு.

இத்தீமை 2017 -ஆம் ஆண்டிலேயே சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத். “சித்தூரிலுள்ள மாவட்ட மருத்துவமனையை அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது” எனச் சுட்டிக்காட்டும் அவர், “நாடு முழுவதும் உள்ள 1,50,000 துணை சுகாதார நிலையங்களை,  நல மற்றும் சுகாதார மையங்கள் என பெயர் மாற்றி, அவற்றை கார்ப்பரேட் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கவும்; ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நடத்து (Run a PHC) என்ற திட்டத்தின் மூலம் அதனை  கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும்” நிதி ஆயோக் சதியாலோசனைகளை வைத்திருப்பதாக எச்சரிக்கிறார்.

அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்தால் சிகிச்சையின் தரம் மேம்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை குஜராத் மாநில அனுபவம் உணர்த்துகிறது. மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை அறிமுகப்படுத்தியதன் விளைவாக அம்மாநில அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு நிகராகக் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் பத்திரிக்கையாளர் ரேமா ரங்கராஜன்.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தக் கோரிப் போராடுவதுதான் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்வாக அமையுமே தவிர, குறைபாடுகளைக் காட்டியோ, வேறு காரணங்களை முன்வைத்தோ அவற்றைத் தனியார்மயமாக்குவது, கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மூடத்தனத்திற்கு ஒப்பானது.

“அரசாங்கம் எதற்குத் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்?” எனக் கேட்டுப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்றார்கள். அடுத்ததாக, நட்டம், நிர்வாகச் சீர்கேடுகளைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்றார்கள். இப்பொழுது எல்.ஐ.சி.யின் மீது கைவைக்கத் துணிந்திருக்கும் ஆளுங்கும்பல், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவையும் அறிவித்திருக்கிறது. முந்தைய அரசுகள் ஆட்டை, மாட்டைக் கடித்தால், மோடி அரசோ மனுசனையும் கடிக்கத் துணிகிறது. இதனை அனுமதித்தால், ஏழைகளுக்குச் சிகிச்சையும் பொது சுகாதாரமும் இனி எட்டாக்கனிதான்.

பூங்குழலி

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

லேரியாவுக்கு பயன்படுத்தப்படும் Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு உலகின் பல நாடுகள் கையாள்கின்றன. இது, பலன் அளிக்கிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருந்தாலும், ’கிடைக்கும் மருந்துகளில் ஓரளவுக்கு பயன் தரக்கூடியது’ என்ற அடிப்படையில், இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.

இந்த Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி அனைத்துவிதமான மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கும் இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடியுடன் பேசி, தாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மருந்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஆரம்ப கட்ட செய்திகள் வந்தன. ஆனால், இப்போது ட்ரம்ப் அப்பட்டமாக இந்தியாவை மிரட்டியிருக்கிறார்.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?

“உனக்கு குடுத்துட்டு, நாளைக்கு எங்க நாட்டுல பிரச்னைன்னா மருந்துக்கு எங்கே போறது? அதெல்லாம் தர முடியாது” என்று சொல்லப் போகிறாரா, அல்லது ‘அனுப்பி வைன்னா அனுப்பிடப் போறேன். அதுக்கு ஏன் இப்படி மிரட்டி, வேஸ்ட்டா எனர்ஜியை வீண் பண்றீங்க என் தெய்வமே..’ என்று கமுக்கமாக மருந்துகளை அனுப்பிவிட்டு, ‘பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பி வைத்தோம்’ என்று சொல்லப் போகிறாரா தெரியவில்லை.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அனுப்பி வைப்பதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வரத் தொடங்கிவிட்டதாக Livemint பத்திரிகையின் இணையச் செய்தி தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக இன்னும் வரவில்லை.

இந்தியாவுக்கு உரிய அளவில் கையிருப்பு இருக்கும்பட்சத்தில் இந்த மருந்தை அனுப்பி வைப்பதில் தவறேதும் இல்லை. நமக்கு நாளை, வேறு ஏதேனும் ஒரு மருந்துப் பொருள் தேவையெனில், அமெரிக்காவிடமோ, வேறு எந்த நாட்டிடமோ கேட்கத்தான் வேண்டியிருக்கும். இப்போதே வெண்டிலேட்டர்ஸ் போன்ற உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

உலகின் அனைத்து நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாராள மனதுடன் ஒருவருக்கு ஒருவர் அள்ளிக்கொடுக்க முடியாது என்றாலும் இடர்காலத்தில் கொடுத்து உதவுவது அவசியம்தான்.

ஆனால், இப்போது கேள்வி அமெரிக்காவின் அணுகுமுறை குறித்தது. இப்போது உலகிலேயே அதிக கொரோனா பாதித்தவர்கள் இருப்பது அமெரிக்காவில். மரண எண்ணிக்கையில் அந்நாடு மிக விரைவில் உச்சம் தொடும் அபாயமும் இருக்கிறது. இப்படி ஒரு இக்கட்டில் இருக்கும்போது, ‘நான் கேட்டதை குடுக்கலன்னா, விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று மிரட்டுகிறது. இது, டொனால்ட் ட்ரம்ப் என்ற தனிப்பட்ட நபரின் அணுகுமுறை அல்ல. இதுதான் அமெரிக்கா.

இந்த திமிருக்கு அடிபணிந்து போகவில்லை எனில், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை தடுத்து நிறுத்துவார்கள். ஈரானுக்கும், வெனிசூலாவுக்கும், கியூபாவுக்கும் இன்று என்ன நடக்கிறதோ, அது நாளை இந்தியாவுக்கும் நடக்கும்.

ஆனால், நாம் கவலைப்படத் தேவையில்லை. கண்டிப்பாக மோடி இந்தியாவை அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டுசெல்ல மாட்டார். அடிபணிவார்; ட்ரம்ப் கேட்டதை அனுப்பி வைத்து தன் விசுவாசத்தை பறைசாற்றுவார். சப்இன்ஸ்பெக்டர் சவுண்ட் விடுறது எல்லாம் உள்ளூர் ஸ்டேஷன்லதான். ஐ.ஜி.கிட்ட உதார் விட்டா தூக்கிப்போட்டு மிதிப்பானா இல்லையா? அந்த பயம் வந்து போகும்ல…

குறிப்பு: நமது நம்பிக்கையை மோடி ஏமாற்றவில்லை. இந்தப் பதிவு எழுதப்பட்டு அரை மணி நேரத்தில் வந்திருக்கும் செய்தி, ஏற்றுமதிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

மினாஸ் கரெய்ஸ் மாநிலத் தலைநகரான பெலோ ஒரிசோன் நகரின் உணவு விடுதியொன்றில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உணவு பரிமாறுபவராகபா பணியாற்றி வருகிறார் ஏய்மே அகியுனா. முப்பது வயது கியூப தொழிலாளியான இவர் ஓட்டல் தொழிலாளியாக மாறுவதற்கு முன் பிரேசில் மாநிலமொன்றின் தொலைதூரத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் நாளொன்றுக்கு இருபது நோயாளிகளுக்குக் குறையாமல் சிகிச்சையளித்த மருத்துவர். பிரேசிலின் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், 2018 நவம்பரில் கியூபாவுக்கும் பிரேசிலுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் வேலை இழந்தவர் அகியூனா. ஏதாவதொரு படிப்பைத் தொடரும் நோக்கில் பிரேசிலில் தங்க முடிவு செய்து, வயிற்றுப் பாட்டுக்காக ஓட்டல் பணியாளராக வேலை செய்தார்.

Jair-Bolsonaro
போல்சனாரோ

ரத்து செய்யப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் வழியாக பிரேசிலுக்கு வந்து, இப்போது பிரேசிலில் தங்கிவிட்ட 1800 மருத்துவர்களில் திருமதி அகியூனாவும் ஒருவர். 21 கோடி மக்கள் கொண்ட இந்த நாட்டில், கொரோனா கிருமி எங்கும் பரவி வருவதன் காரணமாக அதன் மருத்துவக் கட்டமைப்பு இதுவரை கண்டிராத மருத்துவ நெருக்கடியை சந்திக்கும் நிலையில், இப்போது கியூபா அரசின் உதவியை நாடி வருகிறது பிரேசில்.

பிரேசில் மத்திய அரசு மருத்துவ கட்டமைப்பில் கியூபா மருத்துவர்களை ஒன்றிணைக்கப் போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கேட்ட திருமதி அகியூனா ‘ஒரு மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டுள்ளேன். இங்கு நோய் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். அபாயம் நிறைந்த, தொலை தூரங்களில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கில் 2013 இல் அன்றைய பிரேசில் ஜனாதிபதி தில்மா ரௌசெப் தொடங்கிய “அதிக மருத்துவர்கள்” என்ற திட்டத்தின் கீழ் கியூபா மருத்துவர்கள் பிரேசில் வந்தனர். ஐந்தே ஆண்டுகளில் 3,000 நகராட்சிகளில் உள்ள அடிப்படை நலவாழ்வு மையங்களில் 8000 கியூபா மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 2018 தேர்தலில் “கம்யூனிஸ்ட் கியூபா மருத்துவர்களை விற்பனை செய்கிறது” எனப்பிரச்சாரம் செய்த போல்சொனாரோ ஜனாதிபதியானதைத் தொடர்ந்து கியூபா பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து பெரும்பாலான மருத்துவர்கள் கியூபா திரும்பினர். ஆனால் திருமதி அகியூனா போன்ற சிலர் சில்லரை வேலைகளைச் செய்வது அல்லது மேலும் படிப்பது என பிரேசிலிலேயே தங்கிவிட்டனர். தற்போது 9200 பேருக்கு மேல் கொரோனா தொற்றி, 365 பேர் இறந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த பிரேசில் கியூபாவிடம் கையேந்தி நிற்கிறது. அவர்களும் உதவி செய்ய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

படிக்க:
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

‘மருத்துவ பணியாற்றவும், உதவி செய்யவுமான பேரார்வம் மிக அதிகமாக இருக்கிறது’ என்கிறார் பிரேசிலில் தங்கியுள்ள கியூப மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் நூர்காபெரெஸ். ‘நாடு நெருக்கடியில் இருக்கிறது. எங்களை எப்போது அழைக்கப் போகிறார்கள் என்று இன்னமும் தகவல் இல்லை’ என்கிறார் பெரஸ்.

உள்ளூர் மருத்துவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்த 5811 மருத்துவர்களை நியமிக்கப் போவதாக பிரேசில் நலவாழ்வு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அடுத்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் கியூப மருத்துவர்கள் வேலைக்கு அழைக்கப்படக் கூடும். கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது. இதுவரை உதவி கிட்டாத மக்களுக்கு உதவி கிடைக்கவும், நலவாழ்வு உத்திரவாதப்படவும் இத்திட்டம் அவசியமானது. திடீரென திட்டம் தடைபட்டதால் பல சமூகக் குழுக்கள் குறிப்பாக உள்நாட்டு மக்கள் மருத்துவ உதவி இல்லாமல் கைவிடப்பட்டனர். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.” என்கிறார் சாவோ பவ்லோ பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் டெனிஸ் பிமென்டா.

‘1.15 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவிடமிருந்து மருத்துவர்களை அழைப்பது பிரேசிலுக்கு தேவையாகி விட்டது. பிரேசிலில் மருத்துவக்கல்வி மேட்டுக்குடி தன்மை கொண்டது’ என்கிறார் விளிம்புநிலை மக்களிடம் விரிவாகப் பணியாற்றிய திருமதி பிமென்டா. ‘பெரும்பாலான மருத்துவர்கள் சலுகை பெற்ற பின்னணி கொண்டவர்களாகையால், தொலைதூரப் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன’ என்கிறார் பிமென்டா. மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிக ஊதியம் பெறும் மருத்துவர்கள் பிரேசிலில் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பெருநகர மையங்களையும், அங்குள்ள வசதிகளையும் விட்டுவிட்டு மோசமான நிலையிலுள்ள, புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. ஆனால் உலகின் கழிசடைப் பகுதிகள் எனக் கருதப்படும் பகுதிகளுக்கும் சென்று கியூப மருத்துவர்கள் பணியாற்றினர்.

படிக்க:
கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
♦ எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

கொரோனா பெருமளவில் பரவி வரும் இன்று, தனியார் மருத்துவ மையங்கள் முன்னரே நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், நாட்டின் ஒருங்கிணைந்த நல வாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மருத்துவமனைகளையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். 2016இல் ஜனாதிபதி ரௌசெப் பதவி நீக்கம் செய்யப் பட்டதிலிருந்து இத்திட்டம் பெருமளவான நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. நடைமுறையிலிருக்கும் இந்த ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம்தான் இப்போதுவரை மிகச் சிறந்த திட்டம். கியூப மருத்துவர்கள் இத்திட்டத்தின் வழிகாட்டுதலுடன் முழுதும் ஒன்றிணைந்தவர்கள். அவர்கள் திரும்ப வந்தால் தொலைதூரப் பகுதிகளுக்கும், குடிசைப் பகுதி போன்ற புறநகர் பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவார்கள் என்கிறார் திருமதி பிமென்டா.

ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்ட மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கும் நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அபாயம் உள்ளது. சாவோ போலோ மாநிலம் போலவே சுமார் 600 மருத்துவப் பணியாளர்கள் தொற்றுக்கு உள்ளானதாக அஞ்சப்படுகிறது. இந்தக் கொள்ளை நோயிலிருந்து உயிர் பிழைக்க குடிசைப் பகுதி மக்கள் தாங்களே முகமூடிகளைத் தயாரித்துக் கொள்வதோடு, தனியார் சேவையையும் பயன்படுத்துகின்றனர். உலகு தழுவி இந்நோய் பிரேசிலில் உச்சத்தையடைய இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் சிதைந்து கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைத் தாங்கிப்பிடிப்பதற்கு கியூப மருத்துவர்கள் திரும்பி வர பிரேசில் மக்கள் நீண்ட நாள் காத்திருக்க முடியாது.


கட்டுரையாளர் : ஷோபன் சக்சேனா

தமிழாக்கம் : காளியப்பன்
நன்றி : THE HINDU. 

கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

“வைரலாகிவிட்டது” என்ற வார்த்தையை சிறிதேனும் அச்சமின்றி நாம் யாரேனும் இனி பயன்படுத்த இயலுமா?

நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள், படைபடையாக அப்பிக் கொண்டிருக்குமோ என்றெண்ணி பீதியடையாமல், ஒரு கதவின் கைப்பிடியையோ, ஒரு அட்டைப்பெட்டியையோ, ஒரு காய்கறிப் பையையோ இனிமேலும் நம்மால் தொட முடியுமா?

அறிமுகமில்லாத ஒருவரை முத்தமிடலாம் என்றோ, பேருந்தில் தாவி ஏறலாமென்றோ, குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமென்றோ, அச்சம் சிறிதுமின்றி நம்மால் இனி யோசிக்க முடியுமா? சின்னச் சின்ன சந்தோசங்களாகக் கூட இருக்கட்டும். அவற்றில் பொதிந்திருக்கும் அபாயங்களை எடை போட்டுப் பார்க்காமல் அத்தகைய சந்தோசங்களைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? நாம் ஒவ்வொருவருமே இப்போது போலி தொற்றுநோய் வல்லுநர்கள் (Quack), போலி நச்சுயிரி வல்லுநர்கள், போலி புள்ளிவிவர வல்லுநர்கள் ஆகிவிட்டோம், இல்லையா? ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?

வைரஸ் ஒருபுறம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் நகரங்கள் அனைத்திலும் பறவைகளின் இசை ஓங்கி ஒலிப்பதையும், சாலைச் சந்திகளில் மயில்கள் நடனமாடுவதையும், அமைதியான வானத்தையும் கண்டு மனக்கிளர்ச்சி கொள்ளாதவர்கள் நம்மில் யார்?

உலகெங்கும் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தில் பத்து லட்சத்தைக் கடந்து விட்டது. 50,000 பேருக்கு மேல் இறந்து விட்டனர். உயிரிழப்பின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. சர்வதேச வர்த்தகத்தின் பாதைகளின் வழியே, சர்வதேசத் தலைநகரங்கள் அனைத்திற்கும் சுதந்திரமாகப் பயணம் செய்திருக்கிறது இந்த வைரஸ். அது தோற்றுவித்த கொடிய நோய், மனிதர்கள் அனைவரையும் தத்தம் நாட்டுக்குள், தமது நகரத்துக்குள், தமது வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டது.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

இந்த வைரஸ் பல்கிப் பெருக விரும்புகிறது. ஆனால் எல்லை கடந்து பாயும் மூலதனத்தைப் போன்ற லாபவெறி இந்த வைரஸுக்கு இல்லை. அதனால்தானோ என்னவோ, மூலதனம் பாயும் திசைக்கு எதிர்த்திசையில் இந்த வைரஸ் பாய்ந்திருக்கிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள், பயோமெட்ரிக் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்புகள், சகலவிதமான தகவல் பகுப்பாய்வுகள் ஆகிய அனைத்தையும் கேலிப்பொருளாக்கி விட்டு, உலகின் வலிமை வாய்ந்த பணக்கார நாடுகளுக்குள் நுழைந்து அவர்களைத்தான் இந்த வைரஸ் இதுவரையில் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. முதலாளித்துவத்தை இயக்கிச்செல்லும் எந்திரமான அவர்களைத் திடுமென உலுக்கி நிறுத்தியிருக்கிறது. இதுவொரு தற்காலிகமான நிறுத்தம் மட்டுமே என்பது உண்மைதான். ஆனால் இந்த முதலாளித்துவ எந்திரத்தின் உறுப்புகளைப் பிரித்துப் பார்த்து, இதையே சீர் செய்வதற்கு நாம் உதவ வேண்டுமா, அல்லது இதனைத் தலைமுழுகிவிட்டு, வேறொரு நல்ல எந்திரத்தைத் தேடவேண்டுமா என்று ஆராய்வதற்கு இந்த இடைநிறுத்தம் வழங்கியுள்ள அவகாசம் நமக்குத் தாராளமாகப் போதும்.

இந்தப் பெருந்தொற்று  நோயை  சமாளிக்கும் அதிகாரத்தில் அமர்ந்திருப்போருக்கு, போர் பற்றிப் பேசுவதுதான் மிகவும் பிடிக்கும். போர் என்ற சொல்லை ஒரு உருவகமாக அவர்கள் பயன்படுத்தவில்லை. உண்மையிலேயேதான் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு  யுத்தம்தான் என்றால், அமெரிக்காவைக் காட்டிலும் யுத்தத்துக்குத் தயார் நிலையில் இருக்கவல்ல நாடு எது? கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தின் படையணியாய் முன்வரிசையில் நிற்பவர்களுக்குத் தேவைப்படுவன, முக கவசங்களாகவோ கையுறைகளாகவோ இல்லாமல், துப்பாக்கிகள், குறிதவறாக் குண்டுகள், நிலவறை தகர்க்கும் குண்டுகள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள், அணு குண்டுகள் போன்றவையாக இருப்பின் அமெரிக்காவில் அதற்குப் பற்றாக்குறை வந்திருக்குமா என்ன?

இரவுகள் தோறும் நியூயார்க் நகரின் ஆளுநர் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியை, பூமியின் இந்தப் புறத்திலிருந்து நம்ப முடியாத ஆச்சரியத்துடன் நாம் பார்க்கிறோம். புள்ளி விவரங்களைக் காண்கிறோம். அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழியும் கதைகளைக் கேட்கிறோம். குறைந்த ஊதியத்துக்கு மிதமிஞ்சி உழைக்கும் செவிலியர்கள், முகக் கவசங்கள் கிடைக்காமல், குப்பைக் கூடைக்குப் பயன்படுத்தப்படும் பாலித்தின் பேப்பர்களையும், பழைய மழைக்கோட்டுகளையும் வைத்து முகக் கவசம் தயாரித்துக் கொள்வதையும், நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக தங்களையே பணயம் வைப்பதையும் பார்க்கிறோம். வென்டிலேட்டர்களை வைத்திருக்கும் மாநிலங்கள் அவற்றை ஏலம் விடுகின்றன. பற்றாக்குறையாக உள்ள மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் தருவது – யாரை வென்டிலேட்டர் இல்லாமல் சாக விடுவது என்று தீர்மானிக்க முடியாத மருத்துவர்களின் ஊசலாட்டத்தையும் பார்க்கிறோம். “கடவுளே, இதுதான் அமெரிக்காவா?” என்று நமக்குள் அதிர்ந்து உறைகிறோம்.

***

ந்தப் பெருந்துயர் உண்மையானது, உடனடியானது, பிரம்மாண்டமானது, நம் கண்முன்னே விரிந்து கொண்டிருப்பது. ஆனால் புதியது அல்ல. இது பல ஆண்டுகளாகத் தடம் புரண்டு தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த ரயிலுக்கு நேர்ந்திருக்கும் விபத்து. கைகழுவப்படும் அமெரிக்க நோயாளிகள் குறித்த வீடியோக்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவற்றை மறக்க முடியுமா? பின்புறம் நிர்வாணமாகத் தெரிகின்ற மருத்துவமனை உடை அணிவிக்கப்பட்ட நிலையிலேயே, (பணம் கொடுக்க முடியாத) பல நோயாளிகள் கள்ளத்தனமாக மருத்துவமனையிலிருந்து விரட்டப்பட்டு தெருவோரத்தில் வீசப்படுவதில்லையா? அமெரிக்க மருத்துவமனைகளின் கதவுகள் ஏழை அமெரிக்க குடிமக்களுக்கு எந்தக் காலத்தில் திறந்திருக்கின்றன? ஏழைகளுடைய நோயையோ, துயரையோ மருத்துவமனைகள் எப்போதாவது பொருட்படுத்தியிருக்கின்றவா?

இதுவரை இல்லை. ஆனால் இப்போது? இந்த கொரோனா வைரஸின் யுகத்தில், ஏழை மனிதனின் நோய், பணக்கார சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதே! ஆயினும் என்ன, இப்போதும் கூட, “அனைவருக்கும் மருத்துவம்” என்ற கோரிக்கைக்காக விடாப்பிடியாகப் போராடிவரும் செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், வெள்ளை மாளிகைக்கு உள்ளே நுழையக்கூடாதவர் என்றுதானே கருதப்படுகிறார் – அவருடைய சொந்தக் கட்சியினரே அப்படித்தானே கருதுகிறார்கள்!

இந்தப் பக்கமும் கொஞ்சம் ஒளியைக் காட்டுங்கள் ஐயா! பிபிஇ பரிசோதனை கருவியின் இருப்பை சோதிக்க வேண்டியிருக்கிறது!

என்னுடைய நாட்டின் கதை என்ன? நிலப்பிரபுத்துவத்துக்கும் – மத கடுங்கோட்பாட்டுவாதத்துக்கும், சாதிக்கும் – முதலாளித்துவத்துக்கும் இடையிலான ஏதோ ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டு, தீவிர வலதுசாரி இந்து தேசியவாதிகளால் ஆளப்பட்டு வரும் என்னுடைய ஏழ்மை நிறைந்த பணக்கார நாடான இந்தியாவின் கதை என்ன?

டிசம்பரில் வூகானில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக சீனா போராடிக் கொண்டிருந்தது. இங்கே பல்லாயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட, அப்பட்டமான ஓரவஞ்சனை கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். இந்திய அரசு இந்தப் போராட்டத்தை கையாண்டு கொண்டிருந்தது.

அமேசான் காடு தின்னியும், கொரோனா மறுப்பாளருமான பிரேசில் அதிபர் பொல்சானரோ, நமது குடியரசு தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விடைபெற்றுச் சென்ற சில நாட்களில், அதாவது ஜனவரி 30 அன்று இந்தியாவின் முதல் கொரோனா தொற்று குறித்த செய்தி வெளியானது.  இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் ஆளும் கட்சியால் கொரோனாவுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது. பிப்ரவரி இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகார பூர்வ விஜயம். குஜராத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தில் பத்து லட்சம் பேர் கொண்ட கூட்டத்தை உங்களுக்கு கூட்டிக் காட்டுகிறோம் என்று டிரம்ப்புக்கு ஆசை காட்டியிருந்தார்கள். இதற்கெல்லாம் பெருமளவு பணத்தை மட்டுமல்ல, நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது.

அப்புறம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஏறி அடிக்காவிட்டால் பாஜக தோற்றுவிடும் என்று கணிப்புகள் கூறின. பாஜக ஏறி அடித்தது. வரைமுறையற்ற வன்மம் நிறைந்த இந்து தேசவெறியைத் தூண்டியதுடன், வன்முறையில் இறங்குவோம் என்றும்  துரோகிகளைச் சுட்டுக் கொல்வோம் என்றும் பிரச்சாரம் செய்தது.

படிக்க:
பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !
♦ கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்

இருந்த போதிலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து, இந்த அவமானகரமான தோல்விக்குக் காரணமான டெல்லி முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கும் படலம் தொடங்கியது. வட கிழக்கு டில்லியின் உழைக்கும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், ஆயுதம் தாங்கிய இந்து காலாட்படையினர் போலீசின் உதவியுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளிகள் எரிக்கப்பட்டன. இப்படி ஒரு தாக்குதல் வரும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடினார்கள். 50 க்கும் மேற்பட்டோர் – முஸ்லிம்களும் சில இந்துக்களும் – கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் கல்லறைகளில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். டில்லியின் நாற்றமெடுத்த பாதாள சாக்கடைகளிலிருந்து சிதைந்து போன உடல்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் கொரோனா வைரஸ் தொடர்பான முதல் கூட்டத்தை அரசு அதிகாரிகள் நடத்தத் தொடங்கினர். ஹாண்ட் சானிடைசர் என்றொரு திரவியம் இருப்பதாக பெரும்பாலான இந்தியர்கள் அப்போதுதான் கேள்விப்படத் தொடங்கினர்.

மார்ச் மாதத்திலும் அவர்களுக்கு வேலை அதிகம். முதல் இரண்டு வாரங்கள், ம.பி காங்கிரசு அரசைக் கவிழ்த்து பாஜக அரசை நிறுவும் பணிக்கு செலவிடப்பட்டன. கோவிட்-19 அல்லது கொரோனா என்பது உலகு தழுவிய பெருந்தொற்று (பாண்டமிக்) என்று உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று அறிவித்தது. இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 13 அன்று கொரோனா தொற்று நோயை சுகாதார அவசரநிலைப் பிரச்சனையாக கருதவியலாது” என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

இறுதியாக மார்ச் 19 அன்று இந்தியப் பிரதமர் தேசத்துக்கு உரையாற்றினார். அவர் அதிகம் மெனக்கிடவில்லை. பிரான்சும் இத்தாலியும் என்ன செய்தார்களோ அதை அப்படியே கடன் வாங்கிக் கொண்டார். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். (சாதியப் பண்பாட்டில் ஊறிய இந்த சமூகத்துக்கு சமூக இடைவெளி என்பது எளிதில் புரியக் கூடியதே.) மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு என்று அறிவித்தார். இந்த நெருக்கடியை சமாளிக்க தனது அரசு என்ன செய்யப் போகிறது என்று அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக, எல்லோரும் பால்கனியில் நின்று மணியடிக்க வேண்டும் என்றும் பாத்திரங்களையும் தட்டுகளையும் தட்டி மருத்துவப் பணியாளர்களுக்கு தமது மரியாதையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், அந்த மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கியிருக்க வேண்டிய பாதுகாப்புக் கவசங்களையும், மருத்துவமனைகளுக்கு ஒதுக்க வேண்டிய சுவாச மீட்புக் கருவிகளையும் அந்தக் கணம் வரை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது என்ற விசயத்தை மட்டும் அவர் சொல்லவில்லை.

நரேந்திர மோடியின் வேண்டுகோள் பெருத்த உற்சாகத்துடன் நிறைவேற்றப்பட்டதில் வியப்பில்லை. பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பிய வண்ணம் ஊர்வலங்களும், கும்பல் நடனங்களும் ஊர்வலங்களும் நடந்தன. சமூக இடைவெளி என்பதெல்லாம் காற்றில் பறந்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் புனிதமான சாணம் நிரம்பிய தொட்டிகளில் பலர் குதித்தனர். பாஜக ஆதரவாளர்கள் பசு மூத்திரம் குடிக்கும் விழாக்களை நடத்தினர். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லை என்று சொல்லும் விதமாக, பல முஸ்லிம் அமைப்புகள் இசுலாமிய மக்களை மசூதிகளில் திரளுமாறும், வைரஸை ஒழிக்க வல்லவன் அல்லா மட்டும்தான் என்றும் அறைகூவல் விடுத்தனர்.

***

மார்ச் 24 ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினார். நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு என்று அறிவித்தார். சந்தைகள் மூடப்படும். பொதுப் போக்குவரத்து, தனியார் போக்குவரத்து ஆகிய எதுவும் அனுமதிக்கப்படாது என்றார்.

பிரதமர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு குடும்பத் தலைவனாகவே இந்த முடிவினை நான் எடுத்திருக்கிறேன் என்று அவர் கூறினார். சரிதான். 138 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசம் முழுவதும், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், ஊரடங்கின் விளைவாக எழும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய  பொறுப்பில் இருக்கும் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதென்று வேறு யாராவது இப்படி முடிவெடுக்க முடியுமா?  இந்தியாவின் பிரதமர் தன்னுடைய குடிமக்களை நம்பத்தகாதவர்களாக, எதிர்பாராமல் தாக்கி வீழ்த்தப் படவேண்டிய பகை சக்திகளாகவே கருதுகிறார். இதுதான் மோடியின் வழிமுறைகளிலிருந்து அவரைப்பற்றி நாம் பெறுகின்ற சித்திரம்.

படிக்க:
முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை !
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

அனைவரும் ஊரடங்கின் கீழ் கொண்டுவரப் பட்டுவிட்டோம். சுகாதாரத்துறை வல்லுநர்களும் கொள்ளைநோய் மருத்துவர்களும் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். ஒரு கோட்பாடு என்ற வகையில் அவர்களது கூற்று சரியானதுதான். ஆனால் உலகின் மிகப்பெரிய ஊரடங்கு நடவடிக்கையான இது, போதுமான திட்டமிடலோ, முன்தயாரிப்போ இல்லாத காரணத்தினால், மிகக் கொடிய தண்டனையாக மாறிவிட்டதை, ஊரடங்கின் நோக்கத்துக்கு நேர் எதிரான விளைவை அது உருவாக்கிவிட்டதை அவர்கள் யாரும் ஆதரிக்கவியலாது.

அதிசயங்களை நிகழ்த்துவதில் பெருங்காதல் கொண்ட மனிதரான மோடி, அதிசயங்கள் அனைத்துக்கும் தாய் போன்றதொரு நிகழ்வை உருவாக்கிக் காட்டி விட்டார்.

இந்த ஊரடங்கு ஒரு வேதியல் சோதனையைப் போல வேலை செய்தது. இதுகாறும் கண் மறைவாக இருந்த பல விசயங்களின் மீது அது ஒளியைப் பாய்ச்சியது. கடைகள், உணவு விடுதிகள், ஆலைகள், கட்டுமானத் தொழில்கள் ஆகிய அனைத்தும் இழுத்து மூடப்பட்ட பின், செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தத்தம் குடியிருப்புகளுக்குள் தம்மைப் பாதுகாத்துக் கொண்ட பின், நமது நகரங்களும் பெரு நகரங்களும் தமது உழைக்கும் வர்க்க குடிமக்களையும், புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும், தேவையின்றி சேர்ந்து விட்ட சுமையாகக் கருதி, அவர்களைப் பிதுக்கி வெளியேற்றத் தொடங்கின.

அவர்களில் பலர் தமது முதலாளிகளாலும், வீட்டு உரிமையாளர்களாலும் வெளியேற்றப்பட்டவர்கள்.  பசியாலும் தாகத்தாலும் வாடிய ஏழைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், என லட்சக்கணக்கான மக்கள், போக்கிடம் ஏதும் இல்லாமல், பொதுப் போக்குவரத்தும் இல்லாமல், தத்தம் கிராமங்களை நோக்கி ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்கள். பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆக்ரா, பதுவான், ஆசம்கார், அலிகார், லக்னோ, கோரக்பூர் என்ற ஊர்களை நோக்கி நாள் கணக்கில் நடந்தார்கள். சிலர் போகும் வழியிலேயே இறந்தும் போனார்கள்.

வீட்டை நோக்கிச் சென்ற அனைவருக்கும் நாம் அரைப்பட்டினி நிலையை நோக்கித்தான் செல்கிறோம் என்று தெரியும். தாங்கள் வைரஸை சுமந்து செல்லக்கூடும் என்பதும், ஊரில் இருக்கும் தம் குடும்பத்தினரையும் பெற்றோரையும் பாட்டன் பாட்டிகளையும் தாங்கள் சுமந்து செல்லும் நோய் தொற்றிக் கொள்ளக்கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனினும் தமக்குத் தெரிந்த மனிதர்கள் வாழும் இடத்துக்குப் போய்விட வேண்டுமென அவர்கள் தவித்தார்கள். பாசமோ அன்போ கிடைக்கவில்லை என்றாலும், குடியிருக்க ஒரு வீடும், கவுரவமும், சோறும் கிடைக்கின்ற இடத்துக்குப் போய்விடவேண்டுமென அவர்கள் தவித்தார்கள்.

ஊரடங்கை கறாராக அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த போலீசாரால், கால்நடையாகச் சென்ற அந்த மக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள், அவமானப் படுத்தப்பட்டார்கள். நெடுஞ்சாலையில் தவழ்ந்து செல்லுமாறும், தவளை போல தத்திச் செல்லுமாறும் இளைஞர்களை போலீசார் துன்புறுத்தினர். பரேலி நகருக்கு வெளியே மக்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து அவர்கள் மீது இரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.

நகரத்திலிருந்து வெளியேறும் மக்கள் இந்த வைரசை கிராமத்துக்குப் பரப்பி விடுவார்களோ என்ற ஐயம் சில நாட்களுக்குப் பின் அரசுக்கு வந்துவிட்டது. உடனே மாநில எல்லைகளை மூடினார்கள். நடந்து செல்பவர்களைக் கூட அனுமதிக்கவில்லை. நகரங்களிலிருந்து கிளம்பி  நாள் கணக்கில் நடந்து வந்த மக்கள், எந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார்களோ அதே நகரத்திற்கு – அங்கு அமைக்கப்பட்ட முகாம்களுக்கு – திரும்பிச் செல்லுமாறு விரட்டப்பட்டார்கள்.

1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானபோது, பெருந்திரளான மக்கள் புலம் பெயர்ந்த நினைவுகளை இது முதியவர்களிடையே கிளர்த்திவிட்டது. அன்றைய புலம்பெயர்தலுக்கு மதப் பிளவு அடிப்படையாக அமைந்திருந்தது. வர்க்கப் பிரிவினை இந்தப் புலம்பெயர்தலைத் தீர்மானித்தது. இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களை இந்தியாவின் கடைக்கோடி ஏழை மக்கள் எனக் கூற முடியாது. இவர்களுக்கு இதுநாள் வரை நகரத்தில் ஒரு வேலை இருந்தது. திரும்பிச் செல்வதற்கு கிராமத்தில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் வேலை கிடைக்காதவர்களும், வீடற்றவர்களும், கதியற்றவர்களும் – கிராமம் ஆயினும் சரி, நகரமாயினும் சரி – எங்கே இருந்தார்களோ அந்த இடத்தை விட்டு அகலவில்லை. இந்த அவலம் நிகழ்வதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே, அவர்கள் மீளாத துயரில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொடிய நாட்களின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுமக்கள் பார்வையிலேயே தென்படவில்லை.

டில்லியிலிருந்து இந்த நடைபயணம் தொடங்கிய நாட்களில், நான் அடிக்கடி எழுதுகின்ற ஒரு பத்திரிகையின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்திக் கொண்டு, டில்லி –  உ.பி எல்லையில் இருக்கும் காசிபூருக்கு வாகனத்தில் சென்றேன்.

நான் கண்ட காட்சி விவிலியத்தின் சித்தரிப்பை நினைவூட்டியது. அப்படிக்கூட சொல்ல முடியாது. இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை விவிலியம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது. உடல் ரீதியான விலகியிருத்தலை உத்திரவாதப் படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அதற்கு நேரெதிரான விளைவைத் தோற்றுவித்திருந்தது. எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவுக்கான ஜன நெரிசலை அது தோற்றுவித்திருந்தது. புலம் பெயர்ந்தோரின் கூட்டத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் நகரங்கள் பெருநகரங்கள் அனைத்திற்குள்ளும் நிலவும் உண்மை இதுதான். நகரங்களின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி இருக்கலாம். ஆனால் சேரிகளின் எட்டடிக் குச்சுகளுக்குள் ஏழைகள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

நடந்து சென்ற மக்களிடம் நான் பேசினேன். என்னுடன் பேசிய அத்தனை பேரும் கொரோனா வைரஸ் குறித்து கவலை தெரிவித்தார்கள். ஆனால் அச்சுறுத்தும் வேலையின்மை, பட்டினி, போலிசின் வன்முறை ஆகியவைதான் அவர்களது வாழ்வின் எதார்த்தமாக இருந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசுக்கு அவர்கள் வாழ்வில் இடமில்லை, வைரஸ் என்பது அவர்களது வாழ்க்கையில் அந்த அளவுக்கு உண்மையான அச்சுறுத்தலாகவும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த முஸ்லிம் தையற்கலைஞர்கள் சிலர் உள்ளிட்ட பலருடன் நான் பேசினேன். அவர்களில் ஒரு மனிதரின் சொற்கள்தான் என்னைப் பெரிதும் துன்புறுத்தின. அவர் ஒரு தச்சர். பெயர் ராம்ஜித். நேபாள எல்லையில் இருக்கும்  கோரக்பூருக்கு டில்லியிலிருந்து நடந்தே செல்வது என்ற திட்டத்துடன் கிளம்பியிருந்தார்.

“மோடிஜி இதனைச் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், எங்களைப் பற்றி யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களைப் பற்றி அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என்றார் ராம்ஜித்

“எங்களை” என்று அவர் குறிப்பிட்டாரே, அவர்களின் எண்ணிக்கை சுமார் 46 கோடிப் பேர்.

***

ந்த நெருக்கடியான காலத்தில் இந்தியாவின் மைய அரசைக் காட்டிலும் (அமெரிக்காவைப் போலவே) மாநில அரசுகள்தான் புரிதலையும் அக்கறையையும் காட்டியிருக்கின்றன. தொழிற்சங்கங்களும், தனிப்பட்ட குடிமக்களும் பிற அமைப்புகளும் மக்களுக்கு உணவையும் அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கின்றன. மாநில அரசுகள் பணம் வேண்டும் என்று கதறிய போதிலும், மைய அரசின் எதிர்வினை மெத்தனமாகவே இருந்து வருகிறது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் பணம் இல்லையெனத் தெரிகிறது. இதற்குப் பதிலாக “பிரதமரின் கருணை” என்று பெயரிடப்பட்ட மர்மமான கணக்கில்  பணம் வந்து குவிகிறது. மோடியின் முகம் அச்சிடப்பட்ட தயார் நிலை உணவுப் பொட்டலங்கள் ஆங்காங்கே தலை காட்டுகின்றன.

இவை தவிர, தன்னுடைய யோக நித்திரையைக் காட்டும் வீடியோக்களையும் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அனிமேசன் முறையில் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோக்களில் கச்சிதமான உடற்கட்டு கொண்ட மோடி பல யோகாசனங்களைச் செய்து காட்டி தனிமை தோற்றுவிக்கும் மன அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிக்க உதவுகிறார்.

இந்த சுயமோகத்தை சகிக்க முடியவில்லை. வேண்டுகோள் ஆசனம் என்றொரு ஆசனத்தை மோடி செய்தால் நன்றாக இருக்கும். அந்த ஆசனத்தின் மூலம் பிரெஞ்சு பிரதமரிடம் மோடி ஒரு வேண்டுகோள் வைக்கலாம். பிரச்சனைக்குரிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அதில் கிடைக்கும் 60,000 கோடி ரூபாயை பட்டினியில் வாடும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு அவரிடம் கோரலாம். பிரெஞ்சுக்காரர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

இதோ, ஊரடங்கின் இரண்டாவது வாரம் தொடங்குகிறது. நாடெங்கும் பொருள் விநியோக நடவடிக்கைகளின் சங்கிலி அறுந்து விட்டது. மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ளின் விநியோகத்தில் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. சோறும் தண்ணீரும் இல்லாமல் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவடைக்குத் தயாராக நிற்கும் பயிர்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடி கண் முன்னே அச்சுறுத்துகிறது. அரசியல் நெருக்கடியோ ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மைய நீரோட்ட ஊடகங்கள் 24 மணி நேரமும் தாங்கள் மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்குள் கொரோனா கதையை செருகி விட்டனர். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டத்தை நடத்திய தப்லிக் ஜமாத் என்ற அமைப்பு முதன்மையான “நோய் பரப்பி” ஆகிவிட்டது. முஸ்லிம்களை கொடியவர்களாக சித்தரிப்பதற்கும் பழிதூற்றுவதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது.

இப்படி ஒரு வைரசை கண்டுபிடித்து அதனை வேண்டுமென்றே சமூகம் முழுவதும் பரப்புவதை ஜிகாத்தின் இன்னொரு வடிவமாக இசுலாமியர்கள் செய்து வருகிறார்கள் என்ற கருத்தை உருவாக்கும் விதத்தில் இந்த பிரச்சாரத்தின் தொனி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்தொற்று ஒரு மாபெரும் நெருக்கடியாக உருவெடுப்பதென்பது இனிமேல்தான் நடக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு நடக்காமலும் போகலாம். நமக்குத் தெரியாது. ஒருவேளை அப்படியொரு நெருக்கடி வரும் பட்சத்தில், சாதி – மத – வர்க்க ரீதியான காழ்ப்புகள் என்னவெல்லாம் சமூகத்தில் தற்போது நிலவுகின்றவோ, அவற்றின் அடிப்படையில்தான் இந்த நெருக்கடியும் அணுகப்படும் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

இன்றைய (ஏப்ரல் 2) கணக்குப்படி  நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் 2000 பேர். இறந்தவர்கள் 58 பேர். மிகவும் குறைவான அளவில் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில்தான் இந்த புள்ளிவிவரங்கள் தரப்படுகின்றன ஆகையால், இவை நம்பத்தக்கவை அல்ல. வல்லுநர்களின் கருத்துகளும் பெரிதும் வேறுபடுகின்றன. சிலர் லட்சக்கணக்கில் பாதிப்பு வரும் என்கிறார்கள். பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். நெருக்கடியை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அப்போதும் கூட அதன் பரிமாணமும் வீச்சும் என்ன என்பது ஒருபோதும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்குத் தெரிவதெல்லாம் ஒன்று மட்டும்தான். மருத்துவமனைகளை நோக்கி மக்கள் கும்பல் கும்பலாக ஓடும் நிலை இன்னும் தொடங்கவில்லை.

இந்தியாவின் பொதுமருத்துவமனைகள் மற்றும் தனியார் சிகிச்சையகங்களின் நிலை என்ன? வயிற்றுப்போக்கு, ஊட்டச் சத்துக் குறைவு மற்றும் பிற உடல்நலக் குறைவுகளினால் ஆண்டுக்கு பத்து லட்சம் குழந்தைகள் இறப்பதை இவற்றால் தடுக்க முடியவில்லை. லட்சக்கணக்கான காச நோயாளிகளை (உலகின் கால்பங்கு) குணப்படுத்த முடியவில்லை. சாதாரண நோய்களே உயிரைப் பறித்துவிடும் என்ற அளவுக்கு ரத்த சோகையினாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாத இந்திய மருத்துவத்துறையால் இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் எதிர்கொண்டு வரும் நெருக்கடியைப் போன்றதொரு நெருக்கடியை சமாளிக்க முடியுமா?

கொரோனாவுக்கு சேவை செய்யும் பொருட்டு மற்றெல்லா நோய்களுக்குமான மருத்துவ சேவைகளை எல்லா மருத்துவ மனைகளும் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன. டெல்லியிலுள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவே மூடப்பட்டுவிட்டது. புற்று நோய் அகதிகள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான கான்சர் நோயாளிகள் அந்த பிரம்மாண்டமான மருத்துவமனையின் வாசலில் நெடுநாட்களாய்க் குடியிருந்து வருகிறார்கள். இன்று அவர்களெல்லாம் ஆடுமாடுகளைப் போல அடித்து விரட்டப்படுகிறார்கள்.

நோய்வாய்ப்படும் மக்கள் பலர் வீட்டிலேயே இறக்கக் கூடும். அவர்களின் கதை நமக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. அவர்களால் புள்ளி விவரங்களிலும் இடம்பிடிக்க முடியாது. குளிர்ந்த வானிலைதான் கொரோனாவுக்குப் பிடிக்கும் என்று கூறும் ஆய்வுகளின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர (மற்ற பல ஆய்வுகள் இதனை மறுத்த போதிலும்) நமக்கு வேறு வழியில்லை. கோடைகாலத்தில் வெயில் தீயாய் தகித்தால் நன்றாக இருக்குமே, என்று அறிவுக்குப் புறம்பான முறையில் இந்திய மக்கள் முன்னெப்போதும் ஏங்கியிருக்க மாட்டார்கள்.

என்ன இது? நமக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இது ஒரு நச்சுக்கிருமி. ஆம். அந்தக் கிருமிக்கு அறம் ஏதும் கிடையாது. ஆனால் இது வெறும் நச்சுக்கிருமி அல்ல. நிச்சயம் அதற்கு மேலே ஏதோ ஒன்று. இது மனிதர்களுக்கு கடவுள் கற்பிக்கும் பாடம் என்று சிலர் நம்புகிறார்கள். தனது ஆதிக்கத்தின் கீழ் உலகத்தைக் கொண்டு வருவதற்கு சீனா செய்கின்ற சதி என்று சிலர் கூறுகிறார்கள்.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கொரோனா வைரஸ் எல்லாம் வல்லவர்கள் எனப்படுவோரை மண்டியிட வைத்திருக்கிறது. வேறு எதனாலும் சாதிக்க முடியாத வகையில் உலகத்தின் அசைவை நிறுத்திக் காட்டியிருக்கிறது. நமது சிந்தனை பின்னும் முன்னும் அலைபாய்கிறது. இயல்பு நிலை திரும்பாதா என்று ஏங்குகிறது. நம்முடைய எதிர்காலத்தை நம்முடைய கடந்த காலத்துடன் எப்படியாவது இழுத்துப் பிடித்துத் தைத்து விட முடியாதா என்று நம் சிந்தனை முயற்சிக்கிறது. இழைகள் அறுபட்டுக் கிழிந்து தொங்குகின்ற எதார்த்தநிலையை நம் சிந்தனை அங்கீகரிக்க மறுக்கின்றது. அங்கீகரிக்க மறுத்தாலும், முறிவு இருக்கத்தான் செய்கிறது. நம்பிக்கைகள் தகர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நமது இறுதித் தீர்ப்பினை எழுதுவதற்கு நம் கைகளால் நாமே உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்திரம் குறித்து மீளாய்வு செய்து பார்ப்பதற்கு இந்த முறிவு நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. இயல்புநிலை என்று சொல்கிறோமே, அந்த இயல்புநிலை அப்படியே திரும்புவதுதான் மிகமிக ஆபத்தானது.

பெருந்தொற்று நோய்கள் கடந்த காலத்திலிருந்து முறித்துக் கொண்டு, தங்களது உலகை புதிய முறையில் கற்பனை செய்து பார்க்க மனித குலத்தை நிர்ப்பந்தித்திருக்கின்றன. இது வரலாறு. இன்று நாம் எதிர்கொள்ளும் சூழலும் அப்படிப்பட்டதே. இதோ இது ஒரு திறப்பு. ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிச் செல்வதற்கான நுழைவாயில்.

நாம் இதற்குள் நுழைந்து கடந்து செல்லலாம். அவ்வாறு போகும்போது, நமது தப்பெண்ணங்கள், வெறுப்புகள், பேராசைகள், நமது தரவுக் கிடங்குகள் – மக்கிப்போன கருத்துகள், நமது செத்துப்போன ஆறுகள் – புகை மண்டிய வானங்கள் அனைத்தையும் நம்முடனே இழுத்துச் செல்லலாம்.

அல்லது அவற்றையெல்லாம் துறந்து விட்டு, கடந்த காலத்தின் சுமைகள் ஏதுமின்றி, புதியதோர் உலகினைக் கற்பனை செய்த வண்ணம், மிதந்தும் செல்லலாம். புதிய உலகிற்காகப் போராடுவதற்கும் ஆயத்தமாகலாம்.

நன்றி: அருந்ததி ராய், பைனான்சியல் டைம்ஸ்.
தமிழாக்கம்: முத்து
பைனான்சியல் டைம்ஸ், ஏப்ரல் 3, 2020 நாளேட்டிலிருந்து…

கம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02

3.பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி

கட்சி உறுப்பினரின் கடமை

8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.

கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாகக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.

9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

10. பொதுவுடைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.

ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது

11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக் ஷன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.

உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டஙெகளில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப்படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.

ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்

12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.

பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக் ஷனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது.

பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்ஷனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொது மக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.

13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.

இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.

பொதுவுடைமைவாத செல்களை (Cell) எப்படிக் கட்டியமைப்பது?

உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.

14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக் குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.

பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்ஷன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.

சோதித்தறிவது

15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும் – தலைமையின் மையக் கடமை

16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.

17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது

18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்ஷனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.

வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.

பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்ஷன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்ற அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

கொள்ளை நோயில் A , B , C & D type மக்கள் உண்டு. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். உதாரணத்திற்கு, கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு விமான நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில்
காய்ச்சல் இருக்கிறதா ? என்று சோதிக்கப்பட்டு அவருக்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதியானதும் அவருக்கு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுரை கூறி அவரிடம் இருந்து சுயப் பிரமாணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம்.

அவர் வீட்டில் இருக்கிறார். இதற்கு நடுவில் அவரது வீட்டிற்கு சில உறவினர்கள் வந்து அவரை பார்த்து செல்கின்றனர். அவரும் தனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கருதி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறார். இன்னும் ஒரு வாரம் சென்ற பிறகும் அவருக்கு காய்ச்சல் எதுவும் வராததால் அவருக்கு பிரச்சனை இல்லை என்று முடிவு செய்து அவரது குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கித்தர வீட்டுக்கு கறி எடுக்க மனைவியுடன் கோயிலுக்கு கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கும் சென்று வந்திருப்பார் …

இப்போது இரண்டாவது வாரத்தின் இறுதியில் அவருக்கு காய்ச்சல் அடிக்கும்.
உடனே பயந்து அஞ்சி சுகாதாரத்துறைக்கு போன் செய்வார். அவரை உடனே தனிமைபடுத்தும் வார்டில் அட்மிட் செய்து நோய் தொற்று அறியப்படும்.
இவரே டைப் A ஆவார்.

இவருடன் நேரடி தொடர்பில் இருந்த இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சென்று பார்த்த உறவினர் வீட்டு மக்கள் மற்றும் அவர் சென்று பார்த்த அவரது தாய் தந்தை , மற்றும் அந்த திருவிழாவில் அவர் கண்ட அவரால் அடையாளம் காண முடிந்த உறவினர்கள், அவர் சென்ற மிட்டாய் கடை வைத்திருப்பவர், கறி கடை வைத்திருப்பவர் இவர்கள் அனைவரும் “Type C”

மேற்சொன்னவர்கள் அனைவரைப் பற்றியும் நமக்கு தெரிந்திருப்பதால் நம்மால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். எனவே இது நம் கையில் இருக்கும் விசயம்.

இப்போது நம் கையில் இல்லாத டைப் B மற்றும் டைப் D மக்களுக்கு செல்வோம். யாரெல்லாம் டைப் B?

அந்த நபர் மிட்டாய் வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று வேறு பொருட்கள் வாங்க வந்த நபர்கள் அவர் கறி வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று கறி வாங்கிய நபர்கள் அந்த திருவிழாவில் அவருக்கு இதுவரை தொடர்பில் இல்லாமல் இவர் அருகில் வந்து சென்ற மக்கள். அவர் தாய் தந்தையை பார்க்க பேருந்தில் சென்றிருந்தால் அந்த பேருந்தில் முன் சீட் பின் சீட் பயணித்த அடையாளம் காண முடியாத மக்கள் இவர்கள் அனைவரும் டைப் B.

இந்த டைப் B மக்களை அந்த பாதிக்கப்பட்ட டைப் A நபரால் கூட அடையாளம் கூற முடியாது. மேலும் அந்த டைப் B நபர்களுக்கும் தாங்கள் நோயைப் பெற்றுள்ளோம் என்பது தெரியாது. இவர்கள் சமூகத்தில் தங்களை அறியாமல் தொற்றைப்பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் மூலம் தொற்றைப் பெறுபவர்கள் தான் Type D மக்கள். இந்த டைப் D மக்களிடம் இருந்து நோய் தொற்றை பெறுபவர்கள் B1 , B2 என்று சாரை சாரையாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

சரி இந்த கொள்ளை நோய் சங்கிலித்தொடரை எப்படி முறிப்பது? சமூகம் தனித்திருப்பதனால் மட்டுமே இதனை செய்ய முடியும். காரணம்
டைப் A மற்றும் டைப் C-ஐ மட்டும் தனிமையில் வைத்திருந்து டைப் B மற்றும் டைப் D வெளியில் உலாவிக்கொண்டிருந்தால் கொள்ளை நோய் வீரியமாக காட்டுத்தீ போல் பரவும்.

எனவே அனைவரையும் வீட்டில் இருக்கச்சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டைப் B மற்றும் டைப் D மக்கள் தங்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த உடன்
வெளியே மருத்துவமனைகளை நாடுவார்கள். உடனே அவர்களது வீட்டை முழுமையாக இன்னும் கடினத்தன்மையுடன் தனிமைப்படுத்திட வேண்டும்.

படிக்க:
கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்
கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

இப்படியாக நோயின் காத்திருப்பு காலமான 14 முதல் 21 நாட்களை நாம் கடந்தால் முழுமையாக டைப் B மற்றும் டைப் D மக்களை வெளியே கொண்டு வந்து கண்டறிந்து தனிமைப்படுத்திட முடியும். இதனால் கொள்ளை நோய் பரவுவது தடுக்கப்படும். இதுவே இந்த 21 நாள் ஊரடங்குக்கு பின்னால் உள்ள சூத்திரமாகும்.

இதை உணர்வோம் தெளிவோம். தனித்திரு!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD.

மூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 58

மூலதனம்

அ.அனிக்கின்

மார்க்சுக்கு முந்திய காலகட்டத்தைச் சேர்ந்த பொருளியலாளர்கள் (மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளியலாளர்களும் இதில் அடங்குவர்) மூலதனம் என்பது கருவிகள், மூலப் பொருள், பிழைப்புச் சாதனங்கள், பணம் ஆகியவற்றின் சேமிப்புக் குவியல் என்று கருதினார்கள். மூலதனம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. இனியும் எப்போதும் இருக்கும், ஏனென்றால் அப்படிப்பட்ட சேமிப்பு இல்லாமல் உற்பத்தி என்பது சாத்தியமல்ல என்பதே இதன் பொருளாகும்.

மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் என்று விளக்கமளித்ததன் மூலம் மார்க்ஸ் இந்தக் கருத்தை மறுத்தார். உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக மாறும் பொழுது, உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளியும் உழைக்கக் கூடிய சக்தியைத் தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி உழைப்பாளியும் சமூகத்தின் முக்கியமான நபர்களாக இருக்கும் பொழுது மட்டுமே மூலதனம் தோன்றுகிறது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். இந்த சமூக உறவின் வெளியீடு தான் மூலதனமாகும். அது எப்பொழுதுமே இருந்து வந்திருக்கவில்லை, என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதும் அல்ல. மூலதனத்தைப் பண்டங்கள், பணத்தின் மொத்தம் என்று கருதலாம். ஆனால் அப்பொழுதும் அவை முதலாளியால் ஒதுக்கிக் கொள்ளப்படுகின்ற, கூலி உழைப்பாளிகளின் கூலி கொடுக்கப்படாத (உபரி) உழைப்பைக் கொண்டிருக்கின்றன, இந்த உழைப்பின் புதிய பகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன என்ற பொருளில் மட்டுமே அவ்வாறு கருத முடியும்.

கார்ல் மார்க்ஸ்

ஸ்மித்தின் புத்தகத்தில் ஒரு இடத்தைப் பற்றி, இங்கே ஸ்மித் உபரி மதிப்பின் உண்மையான பிறப்பிடத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று மார்க்ஸ் எழுதுகிறார். அந்தப் பகுதி கீழே தரப்படுகிறது: “குறிப்பிட்ட சில நபர்களின் கைகளில் பணம் குவிந்தவுடன், அவர்களில் சிலர் சுறுசுறுப்பான நபர்களுக்கு வேலை கொடுப்பதற்கு அதை இயற்கையாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுடைய உழைப்புப் பொருள்களை விற்பனை செய்து லாபமடைவதற்காக அல்லது அவர்களுடைய உழைப்பின் மூலம் தங்களுடைய பொருள்களின் மதிப்பை அதிகப்படுத்துவதற்காக பொருள்களையும் உயிரோடிருக்கத் தேவையான கூலியையும் அவர்களுக்குக் கொடுப்பார்கள்” (1)  இங்கே ஸ்மித் மூலதனம் தோன்றிய வரலாற்று ரீதியான நிகழ்வுப் போக்கையும் அது ஏற்படுத்துகின்ற சமூக உறவுகளின் சாராம்சம் சுரண்டும் தன்மையைக் கொண்டிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

எனினும் தமது இரண்டாவது புத்தகத்தில் மூலதனத்தைப் பற்றி தனி வகையான ஆராய்ச்சிக்கு முன்னேறுகின்ற பொழுது இந்த ஆழமான கருத்து நிலையை ஸ்மித் அநேகமாக முற்றிலுமே கைவிட்டுவிடுகிறார். மூலதனத்தைப் பற்றிய அவரது தொழில் நுட்ப ஆராய்ச்சி டியுர்கோ செய்த ஆராய்ச்சியைப் போலவே இருக்கிறது. ஆனால் நிலையான மூலதனம், செலாவணியாகும் மூலதனம், மூலதனத்தின் முதலீட்டில் வெவ்வேறு துறைகள், கடன் மூலதனம் மற்றும் கடன் வட்டி முதலிய பிரச்சினைகளை ஸ்மித் டியுர்கோவை அல்லது வேறு யாரையும் காட்டிலும் அதிகமான விவரத்தோடும் முறைப்படியாகவும் ஆராய்கிறார்.

படிக்க:
♦ கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

ஸ்மித்தை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவருடைய மொத்த விரிவுரைக்குமே ஒரு வகையான வன்மையைக் கொடுப்பது பொருளாதார முன்னேற்றத்தின் தீர்மானமான காரணியாக மூலதனக் குவிப்புக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமே எனலாம். குவித்தலே ஒரு நாட்டின் செல்வத்துக்குத் திறவுகோல், சேமிப்பவர்கள் ஒவ்வொருவரும் நாட்டைக் காப்பவர்கள், ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் ஒவ்வொருவரும் நாட்டின் எதிரி என்று நிரூபிப்பதற்கு ஆடம் ஸ்மித் அதிகமான கொள்கை மாறாமையோடும் விடாமுயற்சியோடும் பாடுபடுகிறார். தொழில் துறைப் புரட்சியின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினையை அவர் எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நவீன ஆங்கிலப் பொருளியலாளர்களின் மதிப்பீடுகளின்படி, பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்தில் சேமிப்பு விகிதம் (தேசிய வருமானத்தின் குவிக்கப் பட்ட பகுதி) சராசரியாக 5 சதவிகிதத்துக்கு அதிகமல்ல. தொழில்துறைப் புரட்சி அதன் மிகத் தீவிரமான கட்டத்தை சுமார் 1790-ல் அடைகின்ற வரையிலும் சேமிப்புவிகிதம் அநேகமாக அதிகரிக்கத் தொடங்கவில்லை. ஐந்து சதவிகிதம் என்பது மிகவும் குறைவுதான். இன்று சேமிப்பு விகிதம் 12 முதல் 15 சதவிகிதமாக இருந்தால் அது ஏறத்தாழ திருப்திகரமான நிலைமை என்று வழக்கமாகக் கருதப்படுகிறது. 10 சதவிகிதம் என்றால் அது அபாயத்தின் அறிகுறி. 5 சதவிகிதம் என்றால் விபத்து என்று பொருள். சேமிப்பு விகிதத்தை எப்பாடுபட்டாவது அதிகப்படுத்துங்கள்! நவீனமான சொற்களில் ஸ்மித்தின் வேண்டுகோள் இதுவே.

யாரால் சேமிக்க முடியும்? யார் சேமிக்க வேண்டும்? முதலாளிகள், பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோர் தான். இது அவர்களுடைய முக்கியமான சமூகக் கடமை என்று ஸ்மித் கருதுகிறார். ஸ்மித் முன்பே தம்முடைய கிளாஸ்கோ விரிவுரைகளில் மூலதனத்தின் உள்ளூர்ப் பிரமுகர்களின் “இன்பமறுப்பைப்” பாராட்டிக் கூறியிருக்கிறார். அந்தப் பெரிய நகரம் முழுவதும் தேடினால் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வேலைக்காரனை வைத்திருக்கும் பணக்காரரைப் பார்க்க முடியாது. பயன் தருகின்ற தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதன் மூலம் ஒரு நபர் பணக்காரராக முடியும்; அதே நபர் வெறும் வேலைக்காரர்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏழையாவார் என்று ஸ்மித் எழுதினார். இது நாடு முழுமைக்கும் மொத்தத்தில் பொருந்தக் கூடியதே. மக்கள் தொகையில் பயனுள்ள உழைப்பில் ஈடுபடாத பகுதியை இயன்ற அளவுக்குக் குறைவாக வைத்திருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பயன் கொடுக்கும் உழைப்பைப் பற்றிய ஸ்மித்தின் கருதுகோள் சமூகத்திலிருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளையும் அவற்றோடு இணைந்த- அரசாங்க அதிகார வர்க்கம், இராணுவம், திருச் சபை ஆகியோர் ஒவ்வொருவரையும் வன்மையாகத் தாக்கியது. மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, உற்பத்தியின் மீது பெருஞ்சுமையாகவும் மூலதனக் குவிப்புக்குத் தடையாகவும் இருந்த இக்கும்பலைப் பற்றிய ஸ்மித்தின் விமர்சன அணுகுமுறை அந்தக் காலகட்டத்திலிருந்த முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் ஆகிய இரண்டு தரப்பினரின் கருத்து நிலையையும் பிரதிபலித்தது.

படிக்க:
♦ கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

ஸ்மித் பின்வருமாறு எழுதினார்: “உதாரணமாகச் சொல்வதென்றால் அரசரும் அவரின் கீழ் பணியாற்றும் நீதித்துறை, யுத்தத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், மொத்த இராணுவத்தினரும் கடற்படையினருமே பயனில்லாத உழைப்பைச் செய்கின்ற தொழிலாளர்களாவர். அவர்கள் மக்களின் ஊழியர்கள்; மற்ற மக்களின் கடும் உழைப்பினால் கிடைக்கும் வருட உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியைக் கொண்டு அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.. இதே ரகத்தில் தான் முக்கியத்துவமும் பொறுப்பும் நிறைந்த சில தொழில்களையும் பொழுதுபோக்கான வேறு தொழில்களையும் மதகுருக்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், எல்லா ரகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கோமாளிகள், பாடகர்கள், இசை நாடகக் கலைஞர் கள், நடனக்காரர்கள், இன்னும் பலரையும் சேர்க்க வேண்டும்”.  (2) 

ஆக, அரசரும் கோமாளிகளும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்! அதிகாரிகளும் மதகுருக்களும் மற்றவர்களுடைய இரத்தத்தைக் குடித்து வாழ்பவர்கள்! ஸ்மித்தும் ஒரு எழுத்தாளரே, ஆனால் பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்பொழுது ”எல்லா ரகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள்” பயனில்லாத உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களே என்று ஸ்மித் ஒத்துக் கொள்வது அவருடைய அறிவுத் துறை நேர்மையைக் காட்டுகிறது. மேலே தரப்பட்ட பகுதியில் துணிவும் கிண்டலும் இருக்கின்றதென்பதில் சந்தேகமில்லை; எனினும் ஒரு பேராசிரியரின் கருத்தாழத்திலும் புறநிலைச் சிந்தனையிலும் அது நன்றாக மறைந்திருக்கிறது. அது தான் ஆடம் ஸ்மித்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  A. Smith, The Wealth of Nations, Vol. II, p. 42.
 (2)  A. Smith, The Wealth of Nations, Vol. I, London, 1924, p. 295.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்

PP Letter head24.03.2020

♦ அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணை!

♦ புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்று!

♦ போர்க் கால அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை வழங்கிடு!

♦ குடும்பம் ஒன்றிற்கு இருபதாயிரம் நிவாரணத் தொகை அளித்திடு!

♦ கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அனைத்து வகையிலும் அரசு செயல்பட குரல் எழுப்புவோம்!

அன்பார்ந்த மக்களே,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு இலட்சம் பேருக்கு மேல் தாக்கி உள்ளது. இதுவரை பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கி உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவி வரும் வேகம் இனி எத்தனை உயிர்கள் போகும் என தெரியவில்லை. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் என மருத்துவம், தொழில்நுட்பம், நிதிவளம் மிக்க நாடுகளே திணறிவரும் நிலையில், மக்களை பற்றி கவலைப்படாத பாசிச பா.ஜ.க அரசால் இந்தியாவில் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் பன்மடங்கு இருக்கப் போகின்றது.

கடந்த மூன்று மாதங்களாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சீனா எவ்வாறு போர்க்கால முறையில் கையாண்டது என்ற அனுபவத்தை மோடி அரசு அலட்சியம் செய்துள்ளது. நோய் தொற்றலுடன் இந்தியாவிற்குள் நுழைவோரை பரிசோதித்து மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல்; சந்தேகப்படும் நிலையில் உள்ளோரை விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகிலேயே அரசு காப்பகங்களை உருவாக்கி 14 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரித்தல்; அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடத்தி நோய் தொற்றுயில்லை என உத்திரவாதப்படுத்தி வெளியே விடுதல் என இந்திய அரசு துவக்க நிலையிலேயே செயல்பட்டிருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

சீனாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை.

கோவிட்-2019 கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்ததாகும். சீனாவைத் தொடர்ந்து ஈரானுக்கும், சில அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருந்த நிலையிலேயே, அரசு இயந்திரத்தை ஒருங்கிணைந்த முறையில் முடுக்கி விட்டு மேற்கூறிய நடவடிக்கைகளை செய்திருந்தால் பிறருக்கு கொரோனா பரவியதை தடுத்திருக்கலாம். சமூக பரவலாக்கல் (community transmission) ஆகியுள்ளதா என கண்டறிய கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்கள் தொகையினரை ஒரே நேரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம். இவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக செய்வதை விடுத்து, அது குறித்து விவாதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, கையை கழுவுவது எப்படி, தும்முவது எப்படி என்ற பிரச்சாரத்தில் மக்களை முழ்கடித்து தனிநபர் ஒழுங்கு தான் தீர்வு என நிலைநாட்டி வருகின்றன அரசு நிர்வாகங்களும், ஊடகங்களும். கொரோனா வைரஸ் பரவல் போன்ற திடீர் தாக்குதல்களை எதிர்கொள்கின்ற வகையில் நம் அரசு மருத்துவ கட்டமைப்போ, பரவலான மருத்துவ பரிசோதனை செய்யும் வசதிகளோ நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.

ஸ்பெயின் நாட்டில் நோய்பரவல் தீவிரமான நிலையில், வீட்டிற்குள் தங்களை முடக்கிக் கொண்ட மக்கள், பொதுவெளியில் நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடிகளில் நின்று கைதட்டினர். அந்நாட்டு மக்களின் இந்த உணர்வெழுச்சி வடிவத்தினை, ஒரு பாசிஸ்டுக்கே உரிய நயவஞ்சக விளம்பர உத்தியுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு நாள் மக்கள் ஊரடங்கு என்றும், கைத்தட்டுங்கள் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மோடி. இந்த 14 மணி நேர ஊரடங்கால் வைரஸ் பரவல் தடுத்து நிறுத்தப்படும் என இரஜினிகாந்த் உள்ளிட்ட சங்கி முட்டாள்கள் மருத்துவ அறிவியலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் மீட்பராக மோடியை காட்ட முயற்சித்தனர். மருத்துவர்களோ கைத்தட்டல் வேண்டாம் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க உபகரணங்களை தாருங்கள் என மன்றாடுகின்றனர். இருந்த போதிலும் மேட்டுக்குடியினரும், சங்பரிவாரங்களின் பிரச்சாரத்தில் பலியான மக்களும் தேசியக் கொடியுடன் அருகருகில் நின்று கரவொலி எழுப்பினர். இப்போது மேலும் இரு வாரங்கள் ஊரடங்கினை அமுல்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது.

படிக்க:
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா
கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை போன்ற மாநகரங்களில் தஞ்சமடைந்து இருந்த மக்கள்  கொத்துக்கொத்தாக வெளியேறுகிறார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் சொந்த ஊர்களுக்கே செல்கிறார்கள். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் நிலையங்களிலேயே படுத்துக்கிடக்கிறார்கள்.  மாவட்ட எல்லைகளை மூடுவது, பொதுப் போக்குவரத்தினை துண்டிப்பது, தொழிற்சாலை – நிறுவனங்களுக்கு விடுமுறை, அரசு நிறுவனங்களை குறைவான ஊழியர்களை கொண்டு இயக்குவது எனப் புதுப்புது அறிவிப்புகளை அரசு நிர்வாகம் வெளியிட்டுக்கொண்டே உள்ளது. சமூக விலக்கல் தூரத்தினை (Social distancing) எவ்வாறு பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற பொது வழிகாட்டுதல் வழங்கி ஒரு பரிசோதனை முயற்சியினை கூட செய்யாமல், சமூகத்தின் இயக்கம் மொத்தமாக முடக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்ட மோடி அரசு, இப்போது ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத மக்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதினை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.

பல இலட்சம், பல்லாயிரம் என சம்பளம் வாங்கும் ஐ.டி. ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கும், பணக்கார மேட்டுக்குடியினரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டார்கள். அவர்கள் எத்தனை மாதங்கள் வீட்டில் முடங்கினாலும் கவலையில்லை. தொழிற்சாலை முதலாளிகள் கம்பெனிகளை மூடுவதால் பெயிலவுட் என அறிவித்து தொழில்நட்டம் என அரசிடம் நட்ட ஈடு பெற்றுக்கொள்வார்கள்.    (2008-இல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது பல நிறுவனங்கள் இப்படி செய்துள்ளன.)  ஆனால், பெரும் பாதிப்படையும் ஏழை மக்களுக்கு அரசு என்ன செய்யப் போகின்றது. தினக்கூலிகள், வீடற்ற ஏழை மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், வாகன ஒட்டுநர்கள், சிறுவியாபாரிகள் என வருமானம் இன்றி, உணவின்றி முடங்கப் போகும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பேற்பது. சுனாமி, கனமழை –பெருவெள்ளம், சூறாவளி, புயல்,வறட்சி போன்ற இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பொருளாதார நெருக்கடி, தொழில் முடக்கம், ஆலை மூடல் – வேலையின்மை போன்றவைகளானாலும் ஏழைகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மற்ற நாடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும் போது, தொலைக்காட்சியில் நீட்டி முழங்கிய மோடி இது குறித்து அன்றும் பேசவில்லை. தற்சமயம் உரையாற்றிய போது இது குறித்து நிதி அமைச்சர் தலைமையில் கமிட்டி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி மாநில பங்குத் தொகை பல ஆயிரம் கோடிகளை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையினால் தடுமாறுகின்றது. சுமார் ஐந்து லட்சம் கோடி நிதி ஒதுக்கினால்தான் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

அரசு மருத்துவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவலம்.

சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் கொரோனா பாதிப்பில் இருந்து நோயாளிகளை எப்படி காப்பது என்பதினை விட, சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கைகள் இல்லாத நெருக்கடியான நிலை கண்டு தான். தனியார் மருத்துவமனைகளையும் உள்ளடக்கி இது தான் மொத்த நிலை எனும் போது, அரசோ தனியார் மருத்துவமனைகளை ரூ.4500 மிகாமல் பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கிறது. உங்களிடம் வருவோருக்கு மருத்துவம் பாருங்கள், பணம் தருகிறோம் என தனியாரிடம் பேரம் பேசுகிறது. அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, போர்க் கால நடவடிக்கையாக இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படுவதும் உடனடித் தேவையாக உள்ளது. இவ்வாறான நெருக்கடியான தருணத்தில் பாசிசத்தின் தலைமையிலான அரசு கட்டமைப்பினை அம்பலப்படுத்தி போராடாமல், கொரோனாவின் பாதிப்பிலிருந்தோ, அதனால் ஏற்படயுள்ள பொருளாதார இழப்புகளிலிருந்தோ மக்களை சிறிதளவெனினும் நம்மால் பாதுகாத்திட இயலாது.

மத்திய, மாநில அரசுகளே!

♠ கொரோனாவில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, போர்க் கால அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை வழங்கிடு!
♠ மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ உபகரணங்களையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கிடு!
♠ வீடற்றவர்கள், போக்குவரத்து முடக்கத்தால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முடங்கியோருக்கு உணவு, குடிதண்ணீர், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்திடு!
♠ குடும்பம் ஒன்றிற்கு இருபதாயிரம் நிவாரணத் தொகை அளித்திடு!
♠ தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடு!
♠ ஜி.எஸ்.டி. வரி, வங்கி கடனுக்கான வட்டி, வங்கி கடன் தவணை, மகளிர் சுய உதவி குழு கடன் என அனைத்து வரி, கடன் வசூல் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்க உத்திரவிடு!
♠ கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் விபரம், சிகிச்சை விபரம், நோய் பரவல் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்திடு!

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !

பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழின் மின்பதிப்பை மிகவும் தாமதமாக மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இந்த இதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்த பதிவுகளில்  அவை வெளியிடப்படும்.

– வினவு

எழுகிறது புதிய இந்தியா !
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !

1. ”கார்ப்பரேட் விவசாயி”களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா!

2. நிதி மூலதன ஆட்சி!

3. மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை தனியார்மயம்: ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…!

4. சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா?

5. சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்: பல்லிளிக்கும் பொய் வழக்குகள்!

6. ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!

7. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள்!

8. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

9. தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

10. டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!

11. அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி: கார்ப்பரேட்மயமாக்கும் சதி!

12. கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் …

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart