Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 286

தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு!

♦ அடித்தட்டு மக்கள், கூலி தொழிலாளிகள், வெளி மாநில தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்று!!

***

நான் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். மேலும், மக்கள் கோரிக்கைகளுக்காக சட்டரீதியாக உதவி செய்யும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எனும் அமைப்பின் சென்னை கிளை செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றேன்.

தமிழக அரசு கடந்த 24.03.2020 முதல் 14.04.2020 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, தற்போது 30.04.2020 வரை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ரூபாய்.1000 உதவித்தொகை, அம்மா உணவகங்கள், பொது உணவகங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால் அத்திட்டங்கள் குடும்ப அட்டை இல்லாதவர்கள், நடைபாதை வாசிகள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள் (குறிப்பாக Migarant Workers Act -ன்படி பதிவு செய்யாதவர்கள்), ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்ற பிரிவினருக்கு முறையாக சென்று சேருவதில்லை.

தமிழக அரசு (தமிழக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்) 24.03.2020 அன்று கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தேதிவரை தன்னார்வலர்கள் அரசு இணையதளத்தில் (stopcorona.tn.gov.in) பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் அதற்கு முந்தைய நாளான 23.04.2020 அன்றே சென்னை மாநகராட்சிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசி தன்னார்வலர்களாக எங்களை பதிவுசெய்திருந்தோம். மேலும் கூடுதலாக, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிடம் இணைய வழியாகவும் பதிவுசெய்திருந்தோம். ஆனால், இது நாள்வரை அரசிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கும், மண்டல அதிகாரி திரு.காமராஜ் (மண்டலம் 4 – 9445190004) அவர்களிடம் நேரில் சென்றபோதும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதும் முறையான பதில் இல்லை.

தன்னார்வலர்களாக பதிவு செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறதென்ற தகவலோ, அனுமதி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் – அமைப்புகளின் பட்டியலோ இதுவரை குறிப்பிடப்படவில்லை.
இத்தகைய நிலைமையை கருத்தில்கொண்டு 27.03.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பொதுநல வழக்கு (W.P.No.7414/2020) தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் “தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய் தடுப்பு, மருத்துவ பரிசோதனை, உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்” என்ற இடைமனுவினையும் தாக்கல் செய்திருந்தோம் (W.M.P.No. 8880/2020). இப்பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005 ன்படி மாவட்ட வாரியாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்பு “செயல்பாட்டு குழுக்களை” அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடைமுறைப்படுத்த பரிந்துரைப்பதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் அவர்கள் நீதிபதிகள் முன்பாக தெரிவித்திருந்தார்.

படிக்க:
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?
♦ கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

27.03.2020 அன்று தன்னார்வலர்கள் – தொண்டு நிறுவனங்களின் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க திரு.ச.கிருஷ்ணன் இ.ஆ.ப, டாக்டர். ஜெ.இரதாகிருஷ்ணன் இ.ஆ.ப, திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப ஆகியோர் அடங்கிய குழு (9 வது குழு – செய்தி அறிக்கை. 235) அமைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 27.03.2020 அன்றைய அறிக்கையில் (செய்தி அறிக்கை. 234)” ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம். பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்பிரிவை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்தந்த மாவட்ட நிர்வாக தனிப்பிரிவு தொடர்பு எண்கள் கொடுக்கப்படவில்லை. மேலும், உதவிப்பொருட்கள் கொண்டு சேர்க்கும் முறைகுறித்தும் தெளிவாக விளக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றமும் 31.03.2020 அன்று பிறப்பித்த உத்தரவில் தன்னார்வலர்களை உட்படுத்திட பரிந்துரைத்திருந்தது.

மதுரையில் வழக்கறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உணவுப் பொருட்களை வினியோகம் செய்தனர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள் சென்றடையாத மக்கள் இருப்பதைக்கண்டு பல தன்னார்வ குழுக்கள் உரிய பாதுகாப்போடு உணவு பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபடத்துவங்கினர்.

அந்த வகையில் நாங்களும் எங்கள் நண்பர்களோடு ஒன்றிணைந்து சென்னை (காசிமேடு, வியாசர்பாடி, முகப்பேர், நொளம்பூர், ஓசாங்குளம்,
சேத்துப்பட்டு, முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு), மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விருதாச்சலம், நாகை (சீர்காழி), புதுச்சேரி, திருச்சி, நெல்லை, திருப்பூர் (கரைப்புதூர் கிராமம்), தர்மபுரி என தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசங்கள், கையுறைகள், Sanitizer போன்ற பாதுகாப்பு உபகரணங்களோடும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் நிவாரண பொருட்களை அர்ப்பணிப்போடு வழங்கி வருகிறோம். கூடுதலாக கையுறை, முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகிறோம்.

அதிலும், நாங்கள் குறிப்பாக அரசின் பல அறிவிப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அல்லது அரசின் நடைமுறைப்படுத்துதலில் உள்ள குறைபாடுகளால் நிவாரணங்கள் சென்றடையாத சர்க்கஸ் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், காவலாளிகள் (Wachman), ஆட்டோ ஓட்டுநர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாத தொழிலாளர்கள், பதிவுசெய்யப்படாத கட்டிடத்தொழிலாளர்கள் & வெளிமாநில தொழிலாளர்கள், நடைபாதையில் வசிப்பவர்கள் என்று பயனாளிகளை கண்டறிந்து கடந்த இருபதுநாட்களாக தமிழகம் முழுவதும் 3000 குடும்பங்களுக்குமேல் உணவுப்பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகிறது. வடசென்னையில் (காசிமேடு, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, எர்ணாவூர்)மட்டும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

எங்களைபோன்றே தமிழகம் முழுதும் தன்னார்வலர்கள் – குழுக்கள், அரசு சென்றடையாத பல இடங்களிலுள்ள மக்களை கண்டறிந்து அவர்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். இத்தகைய தன்னார்வலர்களின் உன்னதமான செயல்பாடுகள்தான் இன்றளவும் பெரும் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்துவருகின்றது. ஆனால் இன்னுமும் எந்தவித உதவியும் சென்றடையாத மக்கள் வாழும் பகுதிகளும் இருக்கவேசெய்கிறது.

படிக்க:
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

இந்நிலையில் (12.04.2020) தமிழக அரசு “சில நபர்களும், சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவுக்கு புறம்பாக” செயல்படுவதாகவும் மேலும் அத்தகைய தன்னார்வலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் வெளியிட்டிருந்த அறிவிப்பானது (அரசு செய்தி அறிக்கை.265) தமிழக அளவில் பெரும் விவாதப்பொருளானது.

அதன்பிறகு, தமிழக அரசனாது (13.04.2020) “தன்னார்வலர்கள் உதவிசெய்ய தடை இல்லை எனவும், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் “2500-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களும், 58,000 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பதிவு செய்துள்ளதாகவும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படதான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யதான் அரசு வலியுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை.” எனவும் தனது அறிவிப்பில் (செய்தி அறிக்கை.266) தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தமிழக முதல்வரே பேரிடர் நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்களின் பங்கினை வெகுவாக பாராட்டியுள்ளார்.

காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.

இதனை உணர்ந்து தமிழக அரசானது தன்னார்வலர்கள் ஈடுபடுவதை தடைசெய்வதை கைவிட்டு, ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், எங்களது மேற்கண்ட வழக்கு (W.P.No.7414/2020) கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், நிவாரணப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு அரசு அதிகாரிகளை கொண்டு பயிற்சி வழங்க வேண்டும்.

கட்டுப்பாட்டு அறையினை உருவாக்கி, தன்னார்வலர்கள் தாங்கள் நிவாரணப்பணி செய்யவிருக்கும் இடம், நேரம், பொருட்கள் மற்றும் இதர அவசியமான முன் அறிவிப்பினை (அ) தகவலை வழங்குவதற்கு பொது தொலைபேசி எண்ணை வழங்கவேண்டும்.

நிவாரணப்பணிகள் நடக்கும் இடங்களை மேற்பார்வையிட்டு, பாதுகாப்பான முறையில் நலஉதவிகள் நிறைவேறுவதை உத்திரவாதப்படுத்த வார்டு அளவில் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.

இவ்வாறு மக்களுக்கான நிவாரணப்பணியில் அரசு தன்னார்வலர்களை அங்கீகரித்து அவர்களையும் இணைத்து செயல்பட்டால்தான் இந்த பேரிடரிலிருந்து நாம் மீண்டுவர முடியுமென தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,

வழக்கறிஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை கிளை செயலாளர்


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.

மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !

கியூபா ஒரு சிறிய கரிபீயன் தீவு. காலனி ஆதிக்கத்தாலும், ஏகாதிபத்தியத்தாலும் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடையாமல் இருந்த ஒரு நாடு. கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பிராந்திய பொருளாதார தடைக்கு உட்பட்ட நாடு. இன்று  கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தொற்று நோய் நெருக்கடி நிலையில்  உலக நாடுகள் அனைத்துக்கும்  கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

மார்ச் மாத இறுதி நிலவரப்படி கியூபா, தன்னுடைய மருத்துவ குழுக்களை 59 கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. இத்தாலியில்   கொரோனா  வைரஸ் தொற்று நோய் உச்சத்தில் இருந்த போது தொற்று நோயின் மையமான லோம்பார்டி பிராந்தியத்திற்கு 53 கியூப மருத்துவ நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா வைரஸ்  நெருக்கடி நிலையின் போது பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் உள்ள அண்டோரா என்ற பகுதிக்கு 39 கியூப மருத்துவ நிபுணர்கள் அடங்கிய  குழு அனுப்பப்பட்டது. மேற்கூறிய மருத்துவர்கள் அனைவரும் ஹென்றி ரீவ் என்ற மருத்துவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.

இப்படைப்பிரிவு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தொற்று நோய் தடுப்பு  மற்றும் இயற்கை பேரிடர் போது மருத்துவ பணி செய்வதற்கு பயிற்சி பெற்றவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக கியூபர்களோடு சேர்ந்து போராடிய ஹென்றி ரீவ் என்ற இளம் அமெரிக்கரின் நினைவாக இப்படைப்பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படைப்பிரிவு  கியூப முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவால் முன்மொழியப்பட்டது.

கோவிட் -19 வைரஸ்  பாதிப்புக்குட்பட்ட  5 பயணிகள், 682  பயணிகள் மற்றும் 381 பணியாளர்களை கொண்ட பிரிட்டிஷ் கப்பலுக்கு  அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதி அளிக்கமால்  இருந்ததை அடுத்து  அது ஒரு வாரம் கடலில் சிக்கித் தவித்தது. ஆனால், அப்பயணிக் கப்பலை கியூபா தன் நாட்டிற்குள் அனுமதித்ததோடு மட்டுமில்லாமல், தன் நாட்டு மருத்துவமனைகளில் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப விமானம் வரை கொடுத்து உதவியது. உலகளாவிய தொற்றுநோயை கையாள்வதில் இன்று கியூபா முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால்  உலகிலுள்ள முதலாளித்துவ அரசுகள், கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிர்வினையாக மக்களை  வீட்டிற்குள்ளே முடங்கியிருக்கச் செய்வதை மட்டும் தங்களுடைய சுகாதாரச் செயல்பாடாக சித்தரிக்கின்றன.

முதலாளித்துவத்தின் சுதந்திர சந்தை மட்டுமே செயல்திறனை உறுதி செய்யும் என்று பல ஆண்டுகளாக மக்களுக்கு கூறப்பட்ட கருத்தை, இன்றைய  உலகளாவிய சுகாதார நெருக்கடி, கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்  மூலம் கேள்விக்குள்ளாக்குகிறது.  கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது. சமூக இலாபத்தால் அளவிடப்படக்கூடியவை மட்டுமே அதிக செயல்திறனை கொடுக்க முடியும். தனியார் இலாபத்தால் கொடுக்க முடியாது  என்பதை உலகம் முழுவதும் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்  மெய்ப்பித்து வருகின்றன.

கியூபப் புரட்சிக்கு பின்னர், கியூப அரசு, உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான மருத்துவர்கள் விகிதத்தை அடைந்தது. அந்நாட்டில் ஆயிரம் பேருக்கு 8 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தியா பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவரை பெற்றிருக்கிறது. தன்னை அனைத்து நாடுகளின் தலைமை என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவால் கூட கியூபா போன்று மருத்துவர்களின் விகிதத்தை  அதிகரிக்க முடியவில்லை.

கியூபாவில் அனைத்து நிலைகளிலும் இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்கள் உலகளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கடந்த ஆறு பத்தாண்டுகளாக 40,000 கியூப மருத்துவர்கள் ஏழை நாடுகளில் சுகாதாரப் பணிக்காக வேலை செய்து வந்துள்ளனர். கியூபா தனது தொற்றுநோய்க் கட்டுப்பாடு, பேரழிவு இடர் குறைப்பு போன்றவற்றில் உலக அளவில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவங்கள் கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து வினையாற்ற பயனளிக்கிறது.

கியூபாவின் சுகாதார அமைப்பு நோய் வருமுன் தடுப்பதையே முதன்மையாக கொண்டுள்ளது. குடும்ப மருத்துவர்களின் வலைப்பின்னலானது நோயாளிகளோடு தங்கி வேலை செய்வதன் மூலம் சமூக ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இந்த தொற்று நோய்க்கு எதிராகப் போராட சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று சோதனைகள், பரிசோதனைகள், தொடர்பைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், கூடுதல்  மருத்துவ கவனம் தேவைப்படுவர்களுக்கு ஒரு பதிவேட்டை பராமரித்தல் போன்றவற்றை நடத்துகிறார்கள். நாட்டின் பொது சுகாதார இணையதளம் மற்றும்  புது செயலி –கோவிட்-19 Infocu மூலம்  பொதுக்கல்வி பிரச்சாரங்கள், அன்றாடம் வரும் புது தகவல்கள்  போன்றவை மக்களை சென்றடைகிறது.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

உயிர்த் தொழிற்நுட்பத் துறையில் கியூபாவின் சாதனை :

கியூபா உயிர்தொழிநுட்பத்துறையில் மிக பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. 1980 களின் முற்பகுதியிலேயே அந்நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளை வைரஸ் எதிர்ப்பு மருந்து (interferon)  கண்டுபிடிப்பதற்கான  பணியில் ஈடுபடுத்தியதன் மூலம், கியூப அரசு உயிர்தொழில்நுட்பத்துறையில் ஆரம்ப மற்றும் தனித்துவமான வளர்ச்சியை ஊக்குவித்தது. காஸ்ட்ரோ தலைமையிலும் அவரது தொலைநோக்கு பார்வையாலும் 1981-லேயே டெங்டை தடுப்பதற்கு இண்டர்ஃபெரான் கண்டறியப்பட்டது. முதலாளித்துவ பெரிய மருத்துவ நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B, அவற்றின் தயாரிப்புகள் ஒரு பொதுவான உட்பொருள்களை பகிர்ந்துகொள்கின்றன, ஆனால் கியூப இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B ஒரு தனித்துவமான தயாரிப்பு. கியூபர்கள் தான் இந்த மருந்தை ஒரு வெகுஜன வைரஸ் எதிர்ப்பு பொது சுகாதாரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதலில் பயன்படுத்தினர்.

முதலாளித்துவ உயிர்த்தொழிற்நுட்பத்துறையின் இலாப வேட்டை:

அமெரிக்காவில் உலகின் முதல் உயிர் தொழில்நுட்பத்துறையானது சான் பிரான்ஸ்கோவில்  ஜெனிடெக் என்ற  நிறுவனத்தின் மூலதன உதவியோடு  1976 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு ஏ.எம்.ஜென் என்ற மற்றொரு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் உயிரித்தொழிநுட்பத்துறையானது 2009 ஆம் ஆண்டு வரை அதன் தயாரிப்பு பொருட்கள் விற்பனையில் இலாபம் ஈட்டவில்லை. ஆயினும் கூட  பில்லியன் கணக்கான டாலர்கள் அத்துறையில் கொட்டப்பட்டன. பயோடெக் நிறுவனங்கள்  ஒரு இலாபகரமான தயாரிப்புகளில் மட்டுமே ஆராய்ச்சியை செலுத்துகின்றன. அதன் தயாரிப்பு இலாபத்தை நிறைவேற்றாவிட்டால் அந்நிறுவனங்களின் வளர்ச்சி தடைப்படும். மேலும் அதன் பங்கு வீழ்ச்சி அடைவதோடு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறுகின்றனர்.

கியூபாவின் உயிர்த்தொழில்நுட்பமும் அரசின் ஆதரவையையும், பொது நிதியுதவியையும் பெறுவதால் மட்டுமே  தனித்துவமானதல்ல. அந்நாட்டில் 1960 களில் இருந்தே சுகாதாரம், கல்விக்காக முன்னுரிமை கொடுப்பதற்கான உத்தியை அரசு வடிவமைத்திருப்பதோடு, பொருளாதாரத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருப்பதால் தான் கியூப உயிர்த் தொழிற்நுட்பத்துறை தனித்துவமாக இருக்கிறது.

உயிர்த் தொழில்நுட்பத் துறையில் கியூபாவின் தன்மை:

கியூபாவில் உயிர்த் தொழில்நுட்பத் துறை அமெரிக்காவின் ஜெண்டெக்கிற்கு  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அக்காலக் கட்டத்தில் பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு அத்துறையின் புதிய தொழிற்நுட்பங்களான டி.என்.ஏ மறுசீரமைப்பு, மனித மரபணு சிகிச்சை, போன்றவற்றை அணுகுவதிலும் ஈடுபடுவதிலும்  சிறிதளவே வாய்ப்பிருந்தது. ஆனால் கியூபா  பொது  சுகாதாரத் துறையிலும் தேசிய வளர்ச்சி திட்டத்திலும் தான் மேற்கொண்ட உத்தி காரணமாக  உயிர்தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடைந்தது. இத்துறைக்கு தேவையான தொழிற்நுட்பங்கள், உபகரணங்கள், பொருட்கள், நிதி மற்றும் அறிவு பரிமாற்றம்  போன்றவற்றை அமெரிக்கா தடுத்தபோதிலும் கியூபா இதை சாத்தியப்படுத்தியது. கியூப அரசுக்கு மட்டுமே சொந்தமான இத்துறை,  தனியார் நலன்கள் அல்லது ஊக முதலீடுகள் எதுவும் இல்லாமல் அரசு மூதலீட்டில் மட்டுமே நிறுவப்பட்டது. அத்துறையில் பங்குதாரர்கள் அனைவரும் அந்நாட்டின் உள்ள 11 மில்லியன் கியூபர்களே என்றார் கியூபாவின் மூலக்கூறு நோய் எதிர்ப்பு மையத்தின் தலைவர்.

படிக்க:
கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

இந்நாட்டின் உயிர்த் தொழில்நுட்பம் பொது சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது. அரசின் சுகாதாரத் துறையோடு இது ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதால் இலாபத்தை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இத்துறை ஆராய்ச்சி, கண்டுப்பிடிப்புகள், சோதனைகள், பயன்பாடுகள் என்று விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று கியூபாவில் பயன்படுத்தும் மருந்துகளில் 70% மருந்துகள் அமெரிக்காவின் தடை காரணமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

அந்நாட்டில் பல்வேறு உயிர்த் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கிடையே ஆராய்ச்சிகள் மற்றும் புதிய விசயங்கள் பகிரப்படுவதால் போட்டியை விட ஒத்துழைப்பே அவைகளுக்கிடையே நிலவுகிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் பல்வேறு வணிகத்துறையின் அறிவியலாளர்கள் குழு, அறிவியல் மூலம்  தங்களது திட்டத்தை  உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் சந்தைப்படுத்தலுக்கும் மட்டுமே  மேற்கொள்கின்றன.

கியூபன் சிகிச்சை :

இந்த தனித்துவமான கியூப  சுகாதாரஅமைப்பின் பலன்கள் என்ன? கடந்த 26 ஆண்டுகளில் கியூப வல்லுநர்கள் உலக அறிவுசார் சொத்துடைமை அமைப்பிலிருந்து (WIPO) பத்து தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். முதல் பதக்கம் 1989 ஆம் ஆண்டு மூளைத்தண்டுக் காய்ச்சல் தடுப்பூசிக்காக ( Meningitis B vaccine ) வழங்கப்பட்டது. மற்றது Hib தடுப்பூசிக்காக கொடுக்கப்பட்டது.  உலகம் முழுவதும் நீரிழிவு கால புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  422 மில்லியன் ஆகும். இந்த நோயின் சிகிச்சைக்கான மருந்தை (Heberprot-P) கியூபா கண்டுபிடித்ததன் மூலம் பத்து வருடங்களில் 71,000 கியூபர்களும், மற்ற 26 நாடுகளை சேர்ந்த 1.3 இலட்சம் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். மற்ற ஒரு WIPO விருதானது சொரியாஸிஸ் நோயின் மருந்துக்கு (Itolizumab)கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உலகம் முழுவதும்  ஒரு இலட்சம் பேர் சிகிச்சையடைந்திருக்கின்றனர்.

தாயிலிருந்து சேய்க்கு எச்.எய்.வி பரவமால்  தடுப்பதில்  கியூபா உலகில் முதல் இடத்தில் இருப்பதாக 2015ல் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தன்னுடைய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு (antiretroviral) எய்ட்ஸ் தொற்று நோயைத் தடுத்தது. கடந்த பத்து வருடங்களில் உலகம் முழுவதும் நூறு மில்லியன் கியூப ஹெபடைஸிஸ்-பி தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு முன்பே பிறவி தைராய்டு சுரப்பு குறைபாடு இல்லாத நாடாக கியூபா மாறியது. மேலும் அல்சைமர் நோய்க்கான பயோமார்கர் பரிசோதனைகளையும் அந்நாட்டின் மூளை நரம்பியல் துறை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. கியூபாவின் பயோடெக் நிறுவனங்களின் மூலம் தயாரிக்கப்படும் 200 வகையான மருந்துகள் 49 வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கியூபாவின் அரசுக்கு சொந்தமான உயிர்த் தொழிற்நுட்பத் துறைக்கும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு தொற்று நோய் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. கியூபா நம் அனைவருக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.

பிரேசிலின் முன்னாள் அதிபர்  லூலா டா சில்வா ஆட்சியின் போது பிரேசில் மக்கள் நலனுக்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான கியூப மருத்துவர்கள் பணிபுரிந்தனர். இம்மருத்துவர்கள் பிரேசில் நாடு முழுவதும் குறிப்பாக பழங்குடிகள் மத்தியில் தங்கி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றினர். ஆனால் அதன் பிறகு பிரேசிலின் வலது சாரி ஆட்சியாளர் பொல்சானரோ ஆட்சிக்கு வந்த பிறகு அவர் கொண்டு வந்த தனியார்மய சுகாதார நடவடிக்கைகளினாலும், கியூப மருத்துவர்கள் தங்கள் நாட்டில் புரட்சியை தூண்டிவிடுவதற்காக தங்கி உள்ளனர் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளினாலும் 2019 முற்பகுதியில் கியூப மருத்துவர்கள் பிரேசிலை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

இப்போது தொற்று நோய் பரவி வருவதால் பிரேசில் கடுமையான சுகாதார நெருக்கடியின் கட்டத்தில்  உள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று பிரேசிலின் சுகாதாரத் துறை செயலர் ஜோவா கபார்டோ, தங்கள் நாட்டிற்கு கியூப மருத்துவர்களை திரும்ப அனுப்புமாறு கியூப அரசைக் கேட்டுக் கொண்டார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா டா சில்வா, பிரேசில் அதிபர் பொல்சனோரா கியூப மருத்துவர்களைப் பற்றி முன்பு பொய்க்குற்றச்சாட்டை கூறியதற்காக பிரேசில் மக்களிடமும், கியூப மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் அதன் பொது சுகாதாரக் கட்டமைப்பில் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது கியூபா. முதலாளித்துவ நாடுகளிலோ சுகாதாரம் என்பது தனியார் நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வர்த்தகமாக இருக்கிறது. கொரோனா வைரஸை அழிக்கும் வல்லமை சோசலிசக் கட்டமைப்புகளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நம் காலம் ஓங்கி உணர்த்துகிறது.

– பரணிதரன்

“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !

“எங்களை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு ஆவேசமாக திட்டித் தீர்த்தபடி அடித்துக் கொண்டே இருந்தார்கள்” என்கிறார் சுராஜுத்தீன். பஞ்சாப் – ஹிமாச்சல் எல்லைப் பகுதியில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டல்வாரா பகுதியைச் சேர்ந்த சுராஜுத்தீன் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம். பாரம்பரியமாக மாடு மேய்ப்பது, பால் கறந்து விற்பது இவர்களின் தொழில். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பிரிவினரான இவர்கள் அதிக வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள். இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இந்துக்களால் தாக்கக்கப்பட்டு பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட சுமார் 80 இசுலாமியர்கள் உயிருக்கு பயந்து தற்போது சுவான் நதியின் கரையில் மறைந்துள்ளனர்.

தில்லியில் நடந்த தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வாட்சப் பல்கலைக்கழகங்களை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் கொரானா வைரசுக்கு குல்லா போட்டு சுன்னத் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இசுலாமியர்கள் திட்டமிட்டு நோயைப் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், இது “கொரானா ஜிஹாத்” என்றும் பலவாறான அவதூறுகளை பரப்பிக் கொண்டுள்ளனர். படிப்பறிவில்லாத மாட்டுவளைய மாநிலங்களைச் சேர்ந்த ‘இந்துக்கள்’ இந்த பிரச்சாரத்திற்கு பலியானதன் விளைவாகத் தான் சுராஜுத்தீனும், அவருடன் சுவான் நதிக்கரையில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி இசுலாமியர்களும் தாக்கப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“எங்களில் யாரும் இது வரை தில்லியைப் பார்த்ததே கிடையாது. அது எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஆனால், இங்கே இருப்பவர்கள் எங்களைக் கொல்லும் நோக்கத்தோடு அடித்து துன்புறுத்தினர். அரசு நிர்வாகத்திடமிருந்தும் போதிய உதவி கிடைக்கவில்லை” என்கிறார் ஷஃபி முகமது. தாக்குதலுக்கு பயந்து சுமார் 8 கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் சுமார் மூன்று நாட்களாக பசி பட்டினியோடும் அச்சத்தோடு மறைந்து வாழ்ந்துள்ளனர். சுராஜுத்தீனின் 80 வயது தாயாருக்கு மருந்து வாங்கச் சென்ற போது மருந்துக்கடையில் “நோயைப் பரப்ப வந்தீர்களா?” எனக் கேட்டு விரட்டியடித்துள்ளனர்.

படிக்க:
♦ ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

அந்தக் குழுவில் இருந்த இருவர் தங்கள் கைகளில் ஆதார் அட்டையை உயர்த்திக் காட்டி “இதை வைத்திருந்தும் கூட எந்த நன்மையும் விளையவில்லையே” என்று அப்பாவித்தனமாக கேட்கிறார்கள். சுராஜுக்கு சொந்தமான ஆறு பசுமாடுகள் செத்து விட்டன. “அதில் மூன்றை நேற்றே புதைத்து விட்டேன். இதோ இன்னும் மூன்று மாடுகள் என் முன்னே செத்துக் கிடக்கின்றன” என்கிறார் சுராஜ்.

குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்களின் ஒரே தொழில் மாடு மேய்ப்பதும், பால் கறந்து விற்பதும் தான். ஆனால், அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களோ இப்போது இவர்களிடம் பால் வாங்குவதை நிறுத்தி விட்டனர். தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் ஹோஷியாபூர் போலீசு துணை கமிசனர் அப்னீத் ராவத்தை தொடர்பு கொண்ட போது, குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று நாட்களாக பசி பட்டினியில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்தனர்.

பத்திரிக்கையாளர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற மளிகைப் பொருட்கள்.

எனினும், கிராமங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவதும் விரட்டப்படுவதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. அவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது தனக்கு தெரியும் என்று மாவட்ட கமிஷனர் தெரிவித்தாலும், அந்த பகுதியின் போலீசு துணை சூப்பிரெண்டு கவுரவ் கார்க் தனக்கு அப்படி எந்த புகாரும் வரவில்லை என்கிறார்.

கவுரவ் கார்க்கிடம் குஜ்ஜார் முசுலீம்கள் பால் விற்பதை உள்ளூர்வாசிகள் தடுப்பது குறித்து கேட்ட போது, “மக்களுக்கு அவர்களிடம் பால் வாங்குவதில் ஏதாவது அச்சம் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அது என்ன அச்சம் என்று கேட்டதற்கு “அதை நான் எப்படி சொல்ல முடியும்?” என அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார். மேலும் அத்தியாவசிய பொருளான பால் விற்பனையைத் தடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டதற்கும் அவரிடம் பதில் இல்லை.

இப்படி ஒரு புறம் அரசு இயந்திரத்தின் மௌன ஒப்புதலோடு இசுலாமியர்கள் தாக்கப்படும் நிலையில் – கீழ்மட்ட அளவில் நேரடியாகவே வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஹோஷியாபூரின் நௌஷேரா ஷிம்லி, கோட்டா, வாஸிரியா, சார்யானா, சிப்போ சாக் போன்ற பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் குருத்வாராக்களின் ஒலிபெருக்கிகளில் “இசுலாமியர்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து” குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கிராமத்தின் சாலைகளில் தடுப்பரண் அமைத்து அப்பகுதி இளைஞர்கள் கைகளில் கட்டை கம்புகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் மற்றும் முசுலீம்களை குறிவைத்து தாக்குகின்றனர்.

உலகெங்கும் கொரோனா வைரசை எதிர்த்து முறியடிக்க சுகாதாரப் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள். தமிழகத்திலும் இவ்வாறான ஒரு நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சியில் வாட்சப் செயலியில் ஏராளமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாரிதாஸ் என்கிற பொறுக்கி யூட்யூப் இணையதளத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக விசத்தைக் கக்கி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் – எனினும், இது வரை உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

“நோய்க்கு மதம் கிடையாது”, “நெருக்கடியான தருணங்களில் அரசியல் பேசக் கூடாது” – இது போன்ற பிலாக்கணங்களில் ஏதாவது பொருள் உள்ளதா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

– தமிழண்ணல்


செய்தி ஆதாரம் : த வயர்.

கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்

மூன்றாவது வாரத்தில் மனம் சோர்வடையும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் பேர் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள்.

சாலைகளில் அசாதாரணமான ஒரு நிசப்தம், அவ்வப்போது பொறுப்பற்ற சில விடலைகளின் வாகன வேகத்தால் நாராசமாகிறது.வீடுகளிலும் பேச்சு குறைந்து விட்டது. புத்தகங்கள் பாதியில் மூடப்பட்டு கிடக்கின்றன. டிவியில், கணினியில் படங்கள் ஓடவில்லை. எல்லா கண்களும் கைகளில் இருக்கும் செல்பேசியில்- விரல்களால் நீவி நீவி செய்திகளையும் பொய்களையும் பார்த்துக் கொண்டு தேதி கிழமை தெரியாத மெத்தனத்தில் வாழ்க்கை நின்று விட்டது போல் தோன்றுகிறது.

தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள். நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள். பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன.

வாழ்வை நடத்துவதே தினசரி போராட்டம் என்று பழகிய வறியவர்கள் கூட திகைத்து விட்டார்கள். தினமும் வேலை, வேலைக்கு ஊதியம், ஊதியத்தில் வாழ்க்கை எனும் இயல்பு பிரழ்ந்து விட்டது. வேலை இல்லை, வெளியே போகவும் முடியாது, பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை என்ற நிலையில் உதவிகள் எங்கிருந்து எப்போது வரும் எனும் ஏக்க எதிர்பார்ப்பில் அவர்களது நாட்கள் தேய்ந்தன.

அவர்களிடம் வேலை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர வர்க்கம் தன் வேலையைத் தானே செய்வதன் சிரமத்தை இயல்பாக லகுவில் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் பழகிய வசதிகள் இல்லாதது ஓர் இறுக்கத்தை அவர்களிடமும் ஏற்படுத்தி விட்டது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் எனும் கணக்குகளில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. வீட்டிலேயேஅடைபட்டிருக்கும் குடும்பத்தில் நெருக்கத்துக்குப் பதிலாய் இறுக்கம் கூட ஆரம்பித்தது. சிரு தவறுகள் பெரிதாய்த் தெரிந்தன, பொழுது போவது பெரும் பாரமாகியது. வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குப் பணி செய்ய இன்னமும் சிலர் இருந்தார்கள். அவர்களது இயல்பு எனும் கேளிக்கை, சமூகவலைவிரிப்புகள் மட்டுமே இல்லாமல் போயின.

படிக்க:
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
♦ கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

குடிப்பதற்கும் புகைப்பதற்கும் பழகியவர்களுக்கு அவை இல்லாமல் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே வந்தது. அதன் வெளிப்பாடு வீட்டில் இருப்பவர்களின் மீது தேவையில்லாத கோபமாய் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அறிவிக்கப்பட்ட நாடடங்கில் திட்டமிடாமல் வந்த உறவினர்கள் சில வீடுகளில் பாரமாக உணரப்பட்டனர். அவர்களுக்குப் போக முடியாமல், இவர்களுக்கும் அனுப்ப முடியாமல், செலவுகளோடு உறவுச்சிக்கல்களையும் பல வீடுகள் சமாளிக்கத் திணறின. அத்தியாவசியத்திற்கே மிகுந்த பிரயத்தனம் தேவைப்படும்போது, இளைப்பாற எந்த செலவும் சாத்தியமில்லாமல் போனது.

இதன் அடுத்த கட்டம்தான் மனநலம் பாதிக்கப்படும் நிலை. பதட்டத்தில் ஆரம்பித்து, வெறுப்பில், விரக்தியில் தொடர்ந்து, எரிச்சலாய் வெளிப்பட்டு முடிவில் மனச்சோர்வில் முடியும்.

இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் உறக்கம் கெடுதல், உணவுப் பழக்கத்தில் மாறுதல், எதிலும் நாட்டமின்மை, கவனச்சிதறல், சோகமான மனநிலை, தனிமை நாடுதல், ஆர்வம் இருந்த காரியங்களிலும் ஈடுபட முடியாத நிலை, பேசுவதும் பிறரிடம் தொடர்பு கொள்வதும் குறைதல். மெல்ல, மணிக்கொருமுறை செல்பேசியில் கணினியில் கொரோனா செய்தி தேடுவதும் குறைந்து விடும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு இது சோம்பல் போல் தெரியும். இவர்களை இதே மனச்சோர்வில் விட்டுவிட்டால் விளைவுகள் விபரீதமாகவும் முடியலாம். இப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். வெட்டியாகவாவது பேசுங்கள். அறிவுரை ஆலோசனை என்றெல்லாம் ஆரம்பிக்காமல் அடுத்த வீட்டின் பூனை பற்றி கூட பேசுங்கள். அவர்கள் உங்கள் பேச்சை விரும்பாவிட்டாலும் பேசுங்கள். அந்நேரம் அவர்களது சோகம் எரிச்சலானாலும் அது அவர்களுக்கு உதவும்.

இது பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. இதற்கான நேரம் வந்து விட்டது.

நன்றி : ஃபேஸ்புக்கில் ருத்ரன் மனநல மருத்துவர்.,

அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளைத் தாண்டி அமெரிக்க முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்க நாட்டின் சுகாதாரக் கொள்கையும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களும் “கையில் காசு வாயில் தோசை” என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஏழை அமெரிக்கர்கள் கொரானா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கருப்பின மக்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருப்பின மக்கள் அடர்த்தியாக வாழும் நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட், நியூயார்க் போன்ற நகரங்களில் கொரோனா வைரசால் மரணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இறந்தவர்கள் குறித்த இனவாரியான தகவல்களை இல்லினாய்ஸ், லூசியானா, மிச்சிகன் மற்றும் வட கரோலினா தவிர்த்த பிற மாகாண அரசுகள் வெளியிடவில்லை. அமெரிக்காவில் உள்ள “தொற்று நோய்களுக்கான தேசிய அமைப்பின்” ( National Institute of Allergy and Infectious Diseases) இயக்குநர் அந்தோனி ஃபாவ்சி ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இது மிக மோசமான சவால் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், இதற்கான காரணம் என்னவென்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார். “இப்போதைக்கு இதைக் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் (கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து) மிகவும் கவலை கொள்கிறோம். இப்போதைக்கு அவர்களுக்கு போதிய கவனிப்பை உறுதி செய்தைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஃபாவ்சி.

இனவாரியான தகவல்களை வெளியிட்டுள்ள மாகாணங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. இல்லியனாய்ஸ் மாகானத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள தொற்று உள்ளவர்களில் 28.4 சதவிதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். 10 சதவீதம் பேர் ஹிஸ்பேனிக் (ஸ்பானிய), 27.1 சதவீதம் பேர் காகாசிய இனத்தவர் (வெள்ளையினம்). இறந்தவர்களில் 42.9 சதவீதம் பேர் கருப்பினத்தவர். அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் கருப்பினத்தவரின் சதவீதம் 15 என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பரிமாணம் புரியும்.

அதே போல் மிச்சிகனின் மக்கள் தொகையில் 14 சதவீதமாக கருப்பினத்தவர்கள் உள்ளனர் – ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதமும் இறந்தவர்களில் 40 சதவீதமாகவும் உள்ளனர். நியூயார்க் மக்கள் தொகையில் 22 சதவீதமாக கருப்பினத்தவர் உள்ளனர் – ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதமாக உள்ளனர்.. கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லூசியானா மாகாணத்தில் இறந்தவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் – ஆனால், அவர்களின் மக்கள் தொகை சதவீதமோ 32 சதவீதம் தான்.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

லூசியானா மாகாண கவர்னர் எட்வர்ட்ஸ், “உண்மையில் இது மிகப் பெரிய அளவில் பாரபட்சமாக உள்ளது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்கிறார். கருப்பின மக்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், சேரிகளில் அடர்த்தியாக வாழும் நிலையில் இருப்பது ஒருபுறம் என்றால் அவர்களில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலருக்கு ஏற்கனவே நீரிழிவும் ஆஸ்துமா போன்ற நிரையீரல் பாதிப்பும் உள்ளது.

லூசியானா மாகாண சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அலெக்ஸ் பில்லியோக்ஸ், “வருத்தத்திற்குரிய வகையில் இனரீதியிலான மிகப் பெரும் பாகுபாடு உள்ளது” என ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்க மருத்துவக் காப்பீடு பெரும் கார்ப்பரேட்டுகளின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது நேரடியாக உழைக்கும் மக்களின் உயிர்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது ஒரு எதார்த்தம். இதன் விளைவாக ஏழை கருப்பினத்தவர்கள் குணப்படுத்தி விடக்கூடிய சாதாரண நோய்களுக்கும் கூட பலியாகும் சூழல் நிலவுகின்றது.

“நமக்கெல்லாம் ஏற்கனவே தெரிந்த இந்த மொத்த கட்டமைப்பின் ஓட்டாண்டித்தனமும் இப்போது பளிச்சென்று அம்பலமாகி உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க அமெரிக்க சமூகத்தின் இடையே கொரோனா வைரஸ் என்கிற கிரியா ஊக்கி நுழையும் போது அது உண்டாக்கும் பாதிப்புகள் பன்மடங்காக உயருகின்றது” என்கிறார் National Association for the Advancement of Colored People என்கிற அமைப்பின் தலைவர் டெர்ரிக் ஜோன்சன்

நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர் டெ ப்ளாஸியோ. மேலும், “நாம் பல பத்தாண்டுகளாக பார்த்து வரும் சுகாதாரத் துறை கொள்கையின் பாகுபாடுகளின் விளைவுகளை இப்போது கொரோனா வைரசின் எதிர்மறையான தாக்கங்கள், அது உண்டாக்கும் மரணங்கள், மேலும் தெளிவாக உணர்த்தி உள்ளது” என்கிறார்.

சில மாகாணங்களைத் தவிர பெரும்பான்மையான மாகாணங்கள் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த இனவாரியான தரவுகளை வெளியிடாமல் இருப்பதை கண்டிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், கருப்பினத்தவர்கள் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்து கொள்ளாமல் அரசு தடுக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

“வீட்டிலேயே முடங்கி இருங்கள்” என்கிற செய்தியைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்கிறார் ரோச்செஸ்டரின் மேயர் வாரன்.

அனைவருக்குமான இலவச பொது சுகாதார ஏற்பாடுகளைக் கொண்ட நாடுகளே கொரோனாவை எதிர்கொள்வதில் வெற்றி பெற்றுவருவதை நாம் பார்த்து வருகின்றோம். அவ்வாறான ஒரு ஏற்பாடு முதலாளித்துவத்தின் கல்லாவில் ஓட்டையைப் போட்டு விடும் என்பதால் முதலாளித்துவ உலகம் இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

தங்களது பண்டங்களை விற்க சந்தை வேண்டும் – சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் வேண்டும் – மக்கள் உயிரோடு வாழ அனைவருக்குமான பொது சுகாதாரம் அவசியம் – ஆனால், முதலாளித்துவமோ “இலவசங்களுக்கு” கொள்கையளவிலேயே எதிரானது. அங்கே மருத்துவ சேவை என்பதும் கூட விற்பனைக்கான ஒரு பண்டம் தான். இதில் மாற்றத்தைக் கொண்டு வருவது அதன் உடலில் இருந்து ஆன்மாவைப் பிடுங்கி எரிவதற்கு ஒப்பானது.

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை தான். முதலாளித்துவம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்.


– தமிழண்ணல்
செய்தி ஆதாரம் :  USA TODAY

உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

Tamil translation of Open letter of Anand Teltumbde

னக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும் ஊடகங்கள் – இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட அருவருப்பான ஒலியில் எனது குரல் கேட்காமல் போகும். இருந்தபோதிலும் இப்போது பேசுவது தேவையான ஒன்று என்றே கருதுகிறேன். ஏனெனில் எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் உள்ள என் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதிலிருந்தே எனது உலகம் தலைகீழாக மாறிவிட்டது.

எனது மோசமான கனவுகளில் கூட, எனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தது இல்லை.

பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நான் ஆற்றிய உரைக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர்களிடம் என்னைப் பற்றி விசாரித்து போலீஸ் அச்சமூட்டிய போது, நான் கூட போலீஸார் பல காலத்திற்கு முன்பு எங்கள் வீட்டை விட்டு வெளியேறிய என் சகோதரர் குறித்து விசாரிக்கிறார்கள். நான்தான் அவர் என் தவறுதலாக நினைத்து விசாரிப்பதாகவே நினைத்தேன்.

நான் ஐஐடி கரக்பூரில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு பி.எஸ்.என்.எல் ஊழியர் என்னை தொலைப்பேசியில் அழைத்தார். எனது நலம் விரும்பி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், எனது ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால், அதன் பின்பும் கூட என் சிம்கார்டை நான் மாற்றவில்லை.

படிக்க:
♦ ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

இது போன்ற கண்காணிப்புகளால் நான் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தாலும், என்னைக் கண்காணிப்பதன் மூலம் போலீஸுக்கு உண்மை புரியும்… நான் சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர்கள் புரிந்து கொள்வார்கள் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

போலீஸை கேள்வி கேட்பதால் அவர்கள் பெரும்பாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை வெறுப்பார்கள். நானும் அத்தகைய ஒருவன் என்பதால் போலீஸ் என்னை கண்காணிப்பதாக நினைத்தேன். ஆனால், என் பணி நிமித்தம் காரணமாக அவ்வாறான செயல்பாடுகளிலும் நான் ஈடுபடுவதில்லை என்பதை என்னைக் கண்காணிப்பதன் மூலம் போலீஸ் உணர்வார்கள் என நினைத்தேன்.

ஆனால், ஒரு நாள் அதிகாலை என்னை அழைத்த எனது கல்வி நிலையத்தின் இயக்குநர் போலீஸ் எங்கள் கல்வி நிலையத்தைச் சோதனை இடுவதாகவும்… நான் எங்கே என தேடுவதாகவும் கூறிய போது.. ஒரு சில விநாடிகள் வார்த்தையற்று போனேன்.

ஒரு அலுவலக வேலை காரணமாக சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் மும்பை வந்திருந்தேன். என் மனைவி எனக்கு முன்பே வந்திருந்தார்.

மேலும் சில இடங்களில் சோதனை நடந்தது என்றும், அப்படி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் நான் அறிந்த போது, சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கிருந்து மும்பை பயணித்ததால் தப்பித்தேன் என்ற நினைப்பே என்னை உலுக்கியது.

ஆனால், போலீஸூக்கு நான் எங்கு இருக்கிறேன் என தெரியும். என்னைக் கைது செய்திருக்கலாம். ஆனால், ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

போலீஸார் காவலரிடமிருந்து பெற்ற டூப்ளிகேட் சாவிக் கொண்டு வலுக்கட்டாயமாக என் வீட்டை திறந்தார்கள். வீட்டை வீடியோ பதிவு செய்தபின் மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால் எங்களது இன்னல்கள் அங்கிருந்துதான் தொடங்கியது.

எங்களது வழக்குரைஞர்களுடன் ஆலோசித்தப்பின் என் மனைவி அடுத்த விமானம் பிடித்து கோவா சென்றார். பிகோலிம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அதாவது நாங்கள் இல்லாத போது எங்கள் வீடு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. வீட்டில் ஏதாவது பொருள் வைக்கப்பட்டிருந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்பதுதான் அந்த புகார்.

இதுதொடர்பாக எங்களை விசாரிப்பதற்காக எங்கள் தொலைபேசி எண்ணையும் காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டே வந்தார்.

ஆனால், அதன் பின் போலீஸ் பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து மாவோயிஸ்ட் கதைகள் சொல்லும் காரியத்தில் இறங்கியது.

எனக்கு எதிரான ஒரு முன்முடிவை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். ஊடகத்தின் மூலம் அந்த சித்திரத்தை ஏற்படுத்தி என்னை கைது செய்ய திட்டமிட்டார்கள்

2018 ஆக்ஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், சோதனை செய்யப்பட்ட வீடுகளில் உள்ள கணிணியிலிருந்து எடுக்கப்பட்ட கடிதம்தான் எனக்கு எதிரான ஆதாரம் எனக் கூறி அந்த கடிதத்தை வாசித்தார்கள்.

ஆனால், அந்த கடிதத்தில் எதுவுமே இல்லை. நான் கல்வி தொடர்பாகக் கலந்து கொண்ட மாநாடுகள் தொடர்பான தகவல்கள் அது. அந்த தகவல்கள் அமெரிக்கன் யுனிவர்சிட்டி ஆஃப் பாரிஸ் இணையதளத்தில் இருக்கிறது.

முதலில் நான் சிரித்துக் கொண்டேன் ஆனால் அதன் பின் அந்த அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு வழக்குப் போட தீர்மானித்தேன். அனைத்தும் நடைமுறைகள்படி நடக்க வேண்டும் என்பதற்காக இதுதொடர்பாக ஒரு கடிதத்தை மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பினேன்.

ஆனால், இன்று வரை அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. உயர்நீதிமன்றம் கண்டித்தபின் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்புகள் ஒரு கட்டத்தில் நின்றது.

இந்த வழக்கின் மொத்த பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கை வெளிப்படையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளர் ரமேஷ் படாங்கே என்னை குறித்து ஒரு கட்டுரை அவர்களது பிரசார இதழான பஞ்சன்யாவில் எழுதி இருப்பதாக எனது மராத்தி நண்பர் கூறினார்.

அந்தக் கட்டுரையில் நான் ‘மாயாவி அம்பேத்கர்வாதி’ என குறிப்பிடப்பட்டு இருந்தேன். அருந்ததி ராய் மற்றும் கையில் ஓம்வெட் ஆகியோருடன் என்னை இணைத்து அந்தக் கட்டுரை புனையப்பட்டு இருந்தது. மாயாவி என்பது இந்து புராணங்களில் அழிவை உண்டாக்கும் துர்சக்தியை குறிக்கும் வார்த்தை.

எனது புனே இல்லத்தில் நான் சட்டப்படி கைது செய்யப்பட்டபோது, இந்துத்துவவாதிகளின் இணைய கும்பல் என்னை குறித்து இணையத்தில் தாக்குதல் நடத்தியது.

எனது விக்கிமீடியே பக்கம் அழிக்கப்பட்டு… அதில் பொய் தகவல்கள் சேர்க்கப்பட்டன. பல ஆண்டுக்காலமாக அந்த விக்கிமீடியா பக்கம் பப்ளிக் பேஜ் (Public Page) ஆகத்தான் இருந்திருக்கிறது. இது குறித்து எனக்கே தெரியாது.

அந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்து, “எனக்கு மாவோயிஸ்ட் சகோதரர் இருக்கிறார்… அவர் வீடு போலீஸால் சோதனை செய்யப்பட்டது… மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார்…” ஆகிய தகவகளை அதில் சேர்த்தனர்.

அதனை திருத்த எனது மாணவர்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்த போதும் அந்த கும்பலால் மீண்டும் மீண்டும் இதே தகவல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனை என் மாணவர்கள் என்னிடம் கூறினர்.

இறுதியாக விக்கிமீடியா தலையிட்டு என் பக்கத்தை மீட்டது. அந்த இந்துத்துவ கும்பலின் கருத்தும் அதில் சேர்க்கப்பட்டது.

நக்சல் நிபுணர்களைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஊடகங்களில் பொய்யையும், புரட்டையும் கட்டவிழித்துவிட்டது.

இது தொடர்பாக நான் ஊடக அமைப்புகளுக்கு, குறிப்பாக இந்தியா ப்ராட்காஸ்டிங் ஃபவுண்டேசனுக்கும் புகார் அளித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை.

என் கைபேசியில் இஸ்ரேலி ஸ்பைவேர் பொருத்தப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டதாகவும் இதிகாச கதைகள் அதன் பின்ன வெளிவந்தன. ஆனால், இதனை வைத்து ஊடக சலசலப்புகள் உடனே எழுந்தன. ஆனால், அந்த கதைகளும் பின் மரணித்தது.

நான் ஒரு எளிய மனிதன். நியாயமாக உழைத்து உண்கிறேன். எனது எழுத்தின் மூலமாக எனது அறிவை பகிர்ந்து கொண்டு பிறருக்கு உதவுகிறேன்.

ஆசிரியனாக, சிவில் சமூக செயற்பாட்டாளனாக, சமூக அறிவுஜீவியாக கடந்த ஐம்பதாண்டுகாலமாக இந்த கார்ப்பரேட் உலகத்தில் எந்த களங்கமும் இல்லாமல் சேவையாற்றி இருக்கிறேன்.

எனது எழுத்துகள் 30 புத்தகங்களாக, பல ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிவந்திருக்கிறது. சர்வதேச அளவில் என் கட்டுரைகள், எனது நேர்காணல்கள் பிரசுரமாகி இருக்கின்றன. ஆனால் என் வாழ்வின் இறுதி காலகட்டத்தில், கொடூரமான குற்றம் புரிந்ததாக சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களை தடுக்கும் கொடுமையான சட்டமான UAPA சட்டத்தில் கைது செய்யப்படுகிறேன்.

என்னை போன்ற தனிமனிதர்கள் அரசால் ஊக்கமூட்டப்பட்ட பிரசாரத்தை, அவர்களுக்கு கீழ்படியும் ஊடகங்களை எதிர் கொள்ள முடியாது. இணையத்தில் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. அதை படிக்கும் அனைவருக்கும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனப் புரிந்து கொள்ள முடியும்.

AIFRTE இணையத்தில் இது தொடர்பாகச் சுருக்கமான தகவல்கள் கிடைக்கின்றன. அதனைச் சுலபமாகப் படிக்க முடியும். இருந்த போதிலும் உங்களுக்காக இந்த வழக்கின் சுருக்கத்தை தருகிறேன்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் கணிப்பொறியில் கிடைத்த 13 கடிதங்களில் ஐந்து கடிதங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். என்னிடமிருந்து நேரடியாக எதுவும் மீட்கப்படவில்லை.

ஆனந்த் என சில கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பலருக்கு இருக்கும் பொதுவான பெயர் அது. ஆனால்,போலீஸார் எந்த கேள்வியும் இல்லாமல் என்னை அதனுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். அந்த கடிதத்திலும் பெரிதாக எதுவும் இல்லை. பல வல்லுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உட்பட இந்த சாட்சியை புறந்தள்ளி இருக்கிறார்கள். சாதாரண வழக்காகக் கூட பதியப்பட முடியாத கடிதத்தை சாட்சியாக கொண்டு கொடூரமான UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

நீங்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள இந்த வழக்கை பின்வருமாறு விவரிக்கிறேன்:

திடீரென ஒருநாள் காவல்துறை எந்த வாரண்டையும் காட்டாமல் உங்கள் வீட்டுக்குள் நுழைகிறது. உங்கள் வீட்டை சேதப்படுத்துகிறது. இறுதியில் உங்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

நீதிமன்றத்தில் ஏதேதோ சொல்கிறது. அதாவது ஒரு திருட்டு குற்றச்சாட்டை இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் விசாரிக்கும் போது, போலீஸுக்கு ஒரு பென் டிரைவ் கிடைத்ததாகவும், அதில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் கடிதம் எழுதியதாகவும், அதில் ஏதோவொரு பெயர் குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் போலீஸை பொறுத்தவரை அது நீங்கள்தான் என்றும் கூறுகிறது.

ஆழமான சதித்திட்டத்தில் உங்களை சிக்க வைக்கிறார்கள். உங்களது வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறுகிறது. உங்கள் வேலை பறிபோகிறது. உங்கள் குடும்பம் அனைத்தையும் இழக்கிறது. உங்களால் எதிர்கொள்ளவே முடியாத அளவுக்கு ஊடகங்கள் உங்களுக்கு எதிரான பரப்புரையில் இறங்குகின்றன.

போலீஸார் சீல் இடப்பட்ட கவரை நீதிபதிகளிடம் தருகிறார்கள். உங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முகாந்திரம் இருப்பதாகவும், உங்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.

நீதிமன்ற விசாரணை முடிந்தபின் உங்களைச் சிறைக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் பிணை கோருகிறீர்கள். ஆனால் நீதிமன்றம் மறுக்கிறது .

கற்பனை செய்து பாருங்கள்… நீங்கள் என்ன செய்வீர்கள்?

இந்தியாவில் ஒருவர் குற்றமே செய்யவில்லை என இறுதியில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் விசாரணை கைதியாகச் சராசரியாக நான்கிலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறையில் இருக்கிறார்.

தேசத்தின் பெயரால் கொடூரமான சட்டத்தைக் கொண்டு தனி நபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

தேசம்.. தேசியம்.. என்பதெல்லாம் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்பவர்கள் தேசத் துரோகிகளாகவும், தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும் பொருட்பட தொடங்கிவிட்டனர்.

எனது இந்தியா சிதைக்கப்படுவதை நான்பார்க்கும் இந்த நேரத்தில், பலவீனமான நம்பிக்கையுடன் இந்த கடிதத்தைக் கடுமையான தருணத்தில் எழுதுகிறேன்.

சரி… என்.ஐ.ஏ கட்டுப்பாட்டிற்குள் செகிறேன். உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

– ஆனந்த் டெல்டும்டே
தமிழாக்கம் : மு. நியாஸ் அகமது

நன்றி : ஃபேஸ்புக்கில்Niyas Ahmed

உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

த்திரப் பிரதேசம் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலையாக மாற்றப்பட்டிருப்பதை, அம்மாநில முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது அம்மாநிலத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் கும்பல் அடுத்தடுத்து ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

டெல்லியில் நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலில் தளபதிகளாகச் செயல்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீதும்; இத்தாக்குதலை நடத்துவதற்காக உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்குக் கொண்டுவரப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காலிகள் மீதும் இதுநாள் வரையில் ஒரு முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.

அதேசமயம், உ.பி.யிலோ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முசுலிம்கள் மீதும், அப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஜனநாயக சக்திகள் மீதும் அடுத்தடுத்துப் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, அவர்கள் அனைவரையும் தேசத் துரோகிகளாக, அரசின் எதிரிகளாகப் பொது வெளியில் சித்தரிக்கும் ஆள்காட்டி வேலையைச் செய்து முடித்திருக்கிறது, யோகி ஆதித்யநாத் அரசு.

உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களின் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர். சிறுவர்கள் உள்ளிட்டு 1,640 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரின் மீதும் 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. 27 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இக்கிரிமினல் வழக்குகள் உ.பி. போலீசால் புனையப்பட்ட பொய் வழக்குகள் என்பது முதற்கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகிவிட்டது. எனினும், இந்து மதவெறி பாசிஸ்டான யோகி ஆதித்யநாத்தின் பழி தீர்க்கும் வெறியோ சற்றும் அடங்கிவிடவில்லை.

உ.பி. தலைநகர் லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்துவிட்டவர்களுள் 57 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய தட்டிகளை லக்னோ நகரின் 100 இடங்களில் நிறுவி, அவர்கள் அனைவரையும் அரசின் எதிரிகளாக அடையாளப்படுத்தி அவமதிக்கும் சட்டவிரோதமான, கீழ்த்தரமான தாக்குதலை ஏவியிருக்கிறது, ஆதித்யநாத் அரசு.

இந்த ஆட்காட்டி வேலையின் தொடர்ச்சியாக, அந்த 57 பேரும் ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் இறங்கி அரசு மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி, அவர்கள் அனைவரும் 1.56 கோடி ரூபாய் நட்ட ஈடும், அத்தொகையின் மீது 10 சதவீத வசூல் கட்டணத்தையும் சேர்த்து, மொத்தத் தொகையையும் உடனடியாகக் கட்டக் கோரும் நீதிமன்றத் தாக்கீதையும் அனுப்பி வைத்திருக்கிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி விளம்பரத் தட்டிப் பிரச்சாரத்தைத் தானே முன்வந்து, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து, விடுமுறை தினமான ஞாயிறு என்றும் பாராமல் விசாரித்தது. அவ்வமர்வு இந்த ஆட்காட்டி நடவடிக்கையை, “அரசியல் சாசனப் பிரிவு 21 மற்றும் தனி மனித உரிமைக்கு எதிரானது எனச் சுட்டிக் காட்டியதோடு, அரசின் நிறச் சார்பை (colourable exercise) வெளிக்காட்டுகிறது” என்றும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தச் சுவரொட்டிகளை உடனே அகற்ற வேண்டுமென்றும், அகற்றப்பட்டது குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

உ.பி. மாநில இந்து மதவெறி அரசோ ஆட்காட்டி விளம்பரத் தட்டிகளை அகற்றுவதற்குப் பதிலாக,  அவற்றை அகற்றச் சொன்ன உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ததோடு, அந்த 57 பேர் மீதும் குண்டர் சட்டத்தை ஏவித் தனது பாசிச குரூரப் புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது.

இந்த 57 பேர் மீதான வழக்குகள் முடிவடையாத நிலையில், அவர்களுள் ஒருவர்கூட இன்னும் எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையில் அவர்களின் புகைப்படங்களையும் முகவரிகளையும் சுவரொட்டியில் அச்சிட்டு வெளியிட்டது அடிப்படையிலேயே சட்டவிரோதமானது என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

ஆனால், இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வோ, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டாலும், இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருப்பதால், அதிக எண்ணிக்கை கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரிக்கப் பரிந்துரை செய்து தீர்ப்பளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டுவிட்டது.

உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி நடவடிக்கையை அரசியல் சாசனப் பிரிவு 21-க்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய பிறகும்கூட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருக்கிறது எனக் கூறியிருப்பது இந்து மதவெறிக் கும்பலுக்குக் காட்டப்பட்ட சலுகை தவிர வேறில்லை.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !

இந்தச் சலுகையை அளித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவர் நீதிபதி யு.யு.லலித் என்பது குறிப்பிடத்தக்கது. யு.யு. லலித் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தபோது, சோராபுதின் போலி மோதல் கொலை வழக்கில் அமித் ஷாவின் சார்பாக வழக்காடி வந்தார். அதற்குச் சன்மானமாக, நரேந்தர மோடி மே 2014-இல் பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே யு.யு. லலித்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை அளித்தார் என்பது சமீபத்திய வரலாறு.

உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கைக் கூடுதல் நீதிபதிகள் விசாரிக்கப் பரிந்துரைத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து வசூலிப்பதற்கு ஏற்றவாறு போடப்பட்ட அரசு உத்தரவைச் சட்டமாக இயற்றிக் கொண்டுவிட்டது, யோகி ஆதித்யநாத் அரசு.

***

“லக்னோ நகரில் வன்முறையைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்ட இந்த 57 பேரும் செல்வாக்குமிக்க நபர்கள்; இவர்கள் தமது செல்வாக்கைக் கொண்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவார்கள்” என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதாடியது, உ.பி. அரசு. ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது.

இந்த 57 பேரில், லக்னோ-ஹஸன்கஞ்ச் பகுதியில் வசித்துவரும் இருபது வயதான கல்லூரி மாணவன் ஒசாமா சித்திக்கும் ஒருவன். சித்திக்கும் அதே பகுதியில் வசித்துவரும் வேறு பன்னிரெண்டு பேரும் 21.76 இலட்ச ரூபாய் நட்ட ஈடாகத் தர வேண்டுமென தாக்கீது அனுப்பியிருக்கிறது, உ.பி அரசு.

சித்திக்கை கலவரம் நடந்த பகுதியில் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறுகிறது, போலீசு. ஆனால், மதியம் இரண்டு மணி வரை வீட்டில் இருந்த சித்திக், தனக்குத் தேவையான எழுது பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்தபோது போலீசார் அவனைப் பிடித்துக் கைது செய்துவிட்டதாகக் கூறுகிறார், சித்திக்கின் தாய்.

“தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் தள்ளியுள்ள பகுதிக்குக் கலவரம் நடந்த சமயத்தில் வர வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு சித்திக் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, நீதிமன்றம். அதேசமயம், சித்திக் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்கோ, வன்முறையில் இறங்கியதற்கோ எந்தவிதமான நேரடியான ஆதாரம், சாட்சியங்களை போலீசும் அளிக்கவில்லை. எனினும், நட்ட ஈடு கேட்டு சித்திக்கிற்கு நீதிமன்ற நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.

சித்திக்கின் தந்தைக்கு நிரந்தர வருமானம் தரும் வேலையெதுவும் கிடையாது. அவர்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வாடகைப் பணம்தான் குடும்ப வருமானம். “இப்படிப்பட்ட நிலையில் எங்களால் எப்படி நட்ட ஈடைச் செலுத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், சித்திக்கின் தாய்.

உ.பி. அரசால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 25 பேரின் வழக்குரைஞரான ஆஷ்மா இஜ்ஜத், “தனது கட்சிக்காரர்கள் பெரும்பாலோர் தினக் கூலிகள். சிலரோ வேலையில்லாத பரம ஏழைகள். இந்த 25 பேரில் ஒருவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாசீம் சையத் சிறிய உணவகமொன்றில் உணவு பரிமாறும் தினக் கூலி. கலீம் என்பவர் ரிக்சா ஓட்டி வாழ்க்கை நடத்திவரும் ஏழைத் தொழிலாளி. நட்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டவர்களுள் இருவர் சிறுவர்கள்” எனப் பட்டியில் இடுகிறார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் முகம்மது ஆனஸ், வணிகவியல் பட்டப்படிப்புப் படித்துவரும் மாணவன். சம்பவ நாளன்று தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்று வழக்குப் போட்டதாகக் கூறுகிறார், ஆனஸ்.

உ.பி. அரசால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகம்மது தாரிக், கல்லூரி மாணவன். “தனது தந்தைக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்றதாகவும், அப்பொழுது ஆர்ப்பாட்டம் தொடங்கியிருக்கவேயில்லை” என்றும் கூறுகிறார், தாரிக்.

லக்னோவின் பரிவர்தன் சௌக் என்ற பகுதியில் இருந்து மட்டும் 15 இளைஞர்களை, அவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது பிடித்துச் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. அரசு. இவர்கள் அனைவருமே அந்தப் பகுதிகளில் உள்ள சிறு உணவகங்களில் வேலை செய்து வரும் தினக்கூலிகள். இவர்களுள் ஒரு சிலர் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசுலிம்கள் என்பதைச் சாக்காகக் கொண்டு, அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த ‘ஊடுருவிகள்’ எனக் குற்றஞ்சுமத்தி, தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது, உ.பி. போலிசு.

உ.பி. அரசால் குற்றவாளியென அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர்களுள் முன்னாள் ஐ.பி.எஸ். போலீசு அதிகாரியும் அம்பேத்கர் இயக்கமொன்றை நடத்தி வருபவருமான எஸ்.ஆர்.தாராபுரியும் ஒருவர். உ.பி. மாநிலமெங்கும் குடியுரிமைச் சட்டத் திருத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19-ஆம் தேதிக்கு முன்பே அவரை வீட்டுக் காவலில் அடைத்துவிட்டது உ.பி. போலீசு. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாளன்று அவர் தனது முகநூலில், “அரசியல் சாசனத்தைக் காப்போம்” எனப் பதிவிட்டதால், மறுநாள் காலையில் தாராபுரியைக் கைது செய்த போலீசு, தனது குற்றப்பத்திரிக்கையில் டிசம்பர் 20 அன்று இரவு ஏழு மணிக்கு தாராபுரியைப் பொது இடத்தில் வைத்துக் கைது செய்ததாகப் புளுகியிருந்தது. நீதிமன்றமும் இந்தப் புளுகை மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டு, தாராபுரியைச் சிறைக்கு அனுப்பியதோடு, அவர் அரசுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டுமென்றும் தாக்கீது அனுப்பியிருக்கிறது.

ரிஹாய் மஞ்ச் என்ற பெயரில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் மூத்த வழக்குரைஞரான முகம்மது ஷோயிப்பும் தாராபுரியைப் போலவே, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உ.பி. போலீசின் போலி மோதல் கொலைகளைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் முகம்மது ஷோயிப்பைப் பழிதீர்த்துக் கொள்ளக் காத்திருந்த உ.பி. அரசு இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியதோடு, சுவரொட்டியில் புகைப்படமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியிருக்கிறது.

உ.பி. மாநிலத்தில் மிகப் பிரபலமான ஷியா மத போதகர் கல்ரே சாதிக்கின் மகனான கல்பே சிப்தைன் நூரியும் அவரது நண்பருமான மௌலானா சாயிப் அப்பாஸும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19 அன்று இமாம்பதா என்ற பகுதியில் முசுலிம்கள் மத்தியில் அமைதியாக இருக்கும்படி பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்கள் முசுலிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததையே சாட்சியமாகக் காட்டி, கலவரத்தைத் தூண்டிய சதிகாரர்கள் என அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. போலீசு.

உ.பி போலீசால் கைது செய்யப்பட்ட ஏழை முசுலிம்களின் வாக்குமூலத்தை மட்டுமல்ல, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி, மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவரும் சமூகச் செயல்பாட்டளுருமான சதாஃப் ஜாபர் ஆகியோரும் தம்மை போலீசார் கெடுமதி நோக்கத்தோடு வழக்கில் இணைத்திருப்பதாக அளித்த வாக்குமூலங்களையும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிபதி காது கொடுத்துக் கேட்கவில்லை. மாறாக, “10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 57 பேர் மீது மட்டுமே நட்ட ஈடு கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டிருப்பது, உ.பி. போலீசின் திறமையின்மையைக் காட்டுவதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அரசனை விஞ்சிய விசுவாசி போலும் அந்நீதிபதி!

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

சுவரொட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 57 பேரில் 52 பேர் முசுலிம்கள் என்பது தற்செயலானது அல்ல. யோகி ஆதித்யநாத் அரசு தனது முசுலிம் வெறுப்பு-காழ்ப்புணர்ச்சியை இந்நடவடிக்கையின் மூலம் மிகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருப்பதோடு, யார் போராடினாலும் அவர்களுக்கும் இதே கதிதான் எனப் பீதியூட்டவும் இந்நடவடிக்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. உ.பி மாநில அமைச்சரும், அவ்வரசின் பத்திரிகை தொடர்பாளருமான சித்தார்த் நாத் சிங், “யோகி அரசுக்கு எதிராகப் போராடத் துணிபவர்களை இப்படி விளம்பரப்படுத்தி அவமானப்படுத்துவது தடுப்பு நடவடிக்கையைப் போன்றதாகும்” எனக் கூறி, இச்சட்டவிரோதச் செயலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தியிருக்கிறார்.

அவ்விளம்பரத் தட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 57 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை உ.பி. அரசு அத்தட்டிகளில் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர்களைத் தேசத்தின், அரசின் எதிரிகளாக காட்டியிருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டுத் தாக்கப்படும் அபாயகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் மீதான இன அழித்தொழிப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக, யூதர்களை இழிவான வெறுக்கத்தக்க குடிமக்களாகவும், இட்லரைத் தேவதூதனைப் போன்றும் சித்தரிக்கும் சுவரொட்டி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தமும், உ.பி.யில் அச்சட்டத்திற்கு எதிராகப் போராடத் துணிந்த முசுலிம்களை, ஜனநாயக சக்திகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்தச் சுவரொட்டிப் பிரச்சாரமும் நாடு இட்லரின் பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

– குப்பன்

ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !

போலிச் செய்திகளை வைத்து ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடாதீர்கள் !

சம்பவம் 1 – மூன்று முஸ்லிம் மீனவர்களை 10-15 பேர் கொண்ட குழு ஒன்று சூழ்ந்து கொண்டு முற்றுகை இடுகிறது. மூன்று மீனவர்களும் பயத்தோடு கைகூப்பி கெஞ்சுகிறார்கள். ‘இவர்களைத் தொடாதீர்கள்; இவர்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள்’ என்று சுற்றியிருக்கும் கும்பல் உள்ளூர் மொழியில் கூச்சலிடுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது, அதில் கிராமவாசிகளின் கைகளில் கம்புகளும், தடிகளும் உள்ளன. இந்த மீனவர்கள் கைகூப்பி மன்றாடி அழுவதை பார்க்க முடிகிறது. – இது கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவம்.

சம்பவம் 2 – ‘ஜாவேத் பாய், இங்கிருந்து கடையை எடுத்துவிடுங்கள். இங்கே கடை போட வேண்டாம். உங்களைப் போன்றவர்களிடமிருந்து இந்த நோய் பரவுகிறது. இங்கிருந்து உங்கள் கடையை எடுத்துவிடுங்கள்.’ – இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் நடைபெற்ற சம்பவம்.

சம்பவம் 3 – பெங்களூருவின் அமருதாலியில் திங்கட்கிழமையன்று ஜரின் தாஜ், தனது மகன் தப்ரெஸுடன் குடியிருப்புப் பகுதிகளில் ரேஷன் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். சிலர் அவர் விநியோகம் செய்வதை தடுத்தனர். “இந்துக்களுக்கு உணவு விநியோகிக்க வேண்டாம், உங்கள் மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மட்டும் கொடுங்கள் என்று சுமார் 20 பேர் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்யவில்லை. அருகிலுள்ள வேறொரு காலனிக்குச் சென்றுவிட்டோம். இதற்குப் பிறகு, கூட்டம் வந்து எங்களைத் தாக்கியது” என்கிறார் தப்ரேஸ். அவரது வலது கையில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. தலையிலும் சில தையல்கள் போடப்பட்டுள்ளன.

தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை முஸ்லிம்களை குறிவைத்து பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

தில்லியின் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற 8,000 பேரால் இந்த வைரஸ் நிச்சயமாக பரவியுள்ளது. ஆனால், மார்கஸில் இருந்து வந்தவர்களையும் மற்ற கோடிக் கணக்கான முஸ்லிம்களையும், மக்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய். தப்லிக் ஜமாத் கூட்டம் நடைபெற்ற பிறகு தான் கோவிட் -19 நோய்த்தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்தது என்பதும் உண்மைதான். ஆனால் இப்போது சாமானிய மக்களின் கோபமானது ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாத இஸ்லாமிய மக்கள் மீதும் திரும்பியிருக்கிறது.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மதம் தொடர்பான ஒரு அமைப்பின் தவறின் காரணமாக கோவிட் -19 நோய்த்தொற்று பரவிய முதல் நாடு இந்தியா அல்ல. தென் கொரியாவின் டேகு நகரில் உள்ள சின்ஜியோன்ஜி தேவாலயத்தின் தலைவர் லீமைன், நான்காயிரம் பேருக்கு கொரோனா பரவுவதற்கு மூலக் காரணமாக இருந்துள்ளார். அதாவது தென் கொரியாவின் மொத்த கொரொனா பாதிப்பில் 60 சதவீதம் இது. ஆனால், அதை யாரும் மதத்தோடு தொடர்புபடுத்தவில்லை.

கொரோனாவை மதத்துடன் இணைக்கும் இதுபோன்ற செயல்கள் இயல்பாக இந்தியாவில் தொடங்கவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட முறையில் போலிதகவல்கள், வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதற்காக பல போலி மற்றும் தவறாக சித்தரிக்கப்படும் வீடியோக்கள் வைரலாக்கப்படுகின்றன. வேறு எப்போதோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்தி சித்தரிக்கப்படும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஏப்ரல் 2 ஆம் தேதி சோனம் மகாஜன் ஒரு வீடியோவை ட்வீட் செய்திருக்கிறார். 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு முஸ்லிம் உணவு பொட்டலத்தின் மீது துப்புகிறார். ஆனால், இது ஒரு பழைய வீடியோ.

“இவை தற்செயலானவை அல்ல, யாரோ ஒருவர் அவற்றைத் தேடி எடுத்து தூசி தட்டி, தவறான செய்திகளுடன் வெளியிடுகிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதற்காகவே ஒரு முழு நெட்வொர்க் இயங்குகிறது. சாமானிய மக்களுக்கு ஒரே மாதிரியான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும்போது, அவர்கள் அவற்றை சுலபமாக நம்பி விடுகின்றனர்.” என்கிரார் ஆல்ட் நியூஸின் பிரதீக் சின்ஹா.

இஸ்லாமியர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ஒவ்வொருவரும் ஏழை முஸ்லிம்களின் தட்டில் மண்ணள்ளிப் போடுகிறார்கள்.


இது தொடர்பான பிபிசியின் விரிவான கட்டுரை இணைப்பு கீழே.

கொரோனா வைரஸ் தொற்று : பரவும் போலி செய்திகளும், பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம்களும்

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

கொரோனா – கருத்துப்படங்கள் !

 

கொரோனா : பணக்காரர்கள் கொண்டு வந்து பரப்பினார்கள். ஏழைகள் அதற்குப் பலியாகிறார்கள் !

கொரொனா ஒரு வைரஸ்… முதலாளித்துவம் ஒரு நோய்த்தொற்று !

கொரோனா என்றால் அமெரிக்காவும் நடுங்கும் !

நன்றி : ஃபேஸ்புக்கில் கலையரசன்

கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

கனை அழைத்து வருவதற்காக 1400 கி.மீ. டூவீலர் ஓட்டிச்சென்ற ஒரு தாயின் கதையைப் படித்தோம். இது ஊருக்குப் போய் சேர 1,700 கி.மீ. சைக்கிள் மிதித்த ஓர் இளைஞனின் கதை.

ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள Bichitrapur- ஐ சேர்ந்தவர் மகேஷ் ஜெனா. 20 வயதான இந்த இளைஞர், மகாராஷ்டிரா மாநிலம் Sangli Miraj என்ற பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையொன்றில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைப் பார்த்து வந்தார்.

மார்ச் 24-ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பலரையும் போல், இவரும் நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்து காத்திருந்தார். ஆனால், அவர் பணிபுரிந்த தொழிற்சாலை மூடப்பட்டது. கையில் பணம் இல்லை. குறைந்தபட்ச தேவைகளுடன் ஒரு மாத வாழ்க்கையை நகர்த்த அவருக்கு 6,000 ரூபாயாவது தேவை. அவரிடம் இருந்ததோ 3,000 ரூபா. ஊரடங்கு எப்போது முடியும் என்று தெரியவில்லை. மறுபடியும் நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

காத்திருப்பதில் பொருள் இல்லை என்று நினைத்த மகேஷ், ஏப்ரல் 1-ம் தேதி தன் சைக்கிளில் கிளம்பினார். சராசரியாக ஒரு நாளைக்கு 200 கி.மீ. பயணம். இடையிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தாபாவில் உணவு. ஆங்காங்கே உறக்கம். தாபாக்களில் அவர் சந்தித்த சில லாரி டிரைவர்கள், அவர் மீது இரக்கப்பட்டு சைக்கிளுடன் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். “ஆனால், இடையில் வழிமறித்த காவல்துறையினர் டிரைவர்களிடம் பெர்மிட்டை ரத்து செய்துவிடுவதாக மிரட்டியதால் அவர்கள் இறக்கி விட்டுவிட்டனர்” என்கிறார் மகேஷ்.

நான்கு மாநில எல்லைகளை கடந்து இருக்கும் தன் ஊருக்கு சைக்கிளில் கிளம்பிவிட்டாலும் இந்த இளைஞருக்கு எப்படி செல்வது என வழி தெரியாது. இருப்பினும், ரயில் நிலையங்களின் பெயர்களை நினைவில் வைத்து, அதைக்கொண்டு விசாரித்து சென்றுள்ளார்.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மகாராஷ்டிராவில் கிளம்பி… சோலாப்பூரில் இருந்து ஹைதராபாத், விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டணம்… இவ்வாறு… நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் என்ற அளவில் நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு ஒடிசா எல்லைக்குள் நுழைந்தார். அதன்பிறகு வீட்டுக்கு போன் செய்யலாம் என்றால் சார்ஜ் இல்லை. யாரோ ஒருவரிடம் போனை வாங்கி வீட்டுக்குப் போன் செய்து வந்துகொண்டிருப்பதைச் சொன்னார். வீட்டினர், மிகுந்த அச்சத்துடன் காத்திருந்தனர்.

ஏப்ரல் 7-ம் தேதி, வெற்றிகரமாக தன் சொந்த ஊருக்குச் சென்றார். ஆனால், ஊர் வாயிலிலேயே மக்கள் அவரை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனைக்குப் பிறகே ஊருக்குள் விட முடியும் என்று சொல்லி, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இப்போது அந்த இளைஞர் Bichitrapur-ல் உள்ள பள்ளிக்கூடத்தில் 10 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !

0

♦ கொரோனாவை கட்டுப்படுத்துவதைவிட பேராசிரியர். ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகாவை சிறையிலடைப்பதில் தீவிரம் காட்டும் மோடி அரசு!

♦ ஊபா (UAPA) உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய் !

***

ரும் ஏப்ரல் – 14ந் தேதி மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரை சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலாதப்பர், எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்டவர்கள் கோரினர். அதனை நிராகரித்தது மட்டுமின்றி, இவர்கள் இருவரையும் சிறையிலடைப்பதிலும் தீவிரம் காட்டுகின்றது உச்சநீதிமன்றம்.

ஆனந்த் தெல்தும்டே மற்றும் கௌதம் நவ்லகா.

பாசிச ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள அவர்களது கைதுக்கு முந்தைய பிணை (pre-arrest bail) மனுக்களை கடந்த மார்ச் 16-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு, அவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று போலீசாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. அதனை பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி என நீட்டித்தது. உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி ஒரு பொய்வழக்கு போலீசாரால் சோடிக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து விசாரணையை மேற்கொள்ளாமலேயே, பிணை மறுக்கப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர்.

2018-ஆம் ஆண்டின் பீமா கோரேகான் நிகழ்வைத் தொடர்ந்து, “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டு சதி” என்ற பெயரில் புனையப்பட்ட பொய்வழக்கில் ஏற்கெனவே சுதா பரத்வாஜ், வெர்னன் கொன்சால்வேஸ், அருண் பெரேரா, தெலுங்கு கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 9 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே பொய் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விருவரும் இப்போது பாசிச ஊபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்படுகின்றனர்.

படிக்க:
செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

மகாராஷ்டிராவின் புனே நகரப் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான முதல் தகவல் அறிக்கை, அதைத் தள்ளுபடி செய்யக்கோரி ஆனந்த் தெல்தும்டே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நிராகரிப்பு, பிணைபெறும் பொருட்டு உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம், அதை மீறி புனே போலீசாரின் கைது நடவடிக்கை, அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் தெல்தும்டே தாக்கல் செய்த கைதுக்கு முந்தைய பிணை மனுவினை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.

இப்பாசிச ஊபா சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை எவ்விதக் காரணமும் இன்றி தனிமைச் சிறையில் அடைத்து வதைக்க முடியும். வாரண்டு இல்லாமல் போலீசார்  வீட்டைச் சோதனையிட்டுப் பொருட்களைக் கைப்பற்ற முடியும். தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கமளிப்பதன் மூலம் அனைத்து அரசியல், பொருளாதார, தொழிற்சங்க போராட்டங்களையும் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து ஒடுக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலோ, ஒருவரைக் கைது செய்ய முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. நீதிபதியாகப் பார்த்து இரக்கப்பட்டால் ஒருவேளை பிணை கிடைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியுமில்லை.

இக்கொடிய ஊபா சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒருசில ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால், ஊபா சட்டத்தின் கீழ் போலீசார் ஒரு அப்பாவிக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும். இக்கொடிய பாசிச சட்டத்தின் கீழ்தான் ஆனந்த் தெல்தும்டேவும் கௌதம் நவ்லகாவும் இப்போது சிறையிடப்படுகின்றனர்.

படிக்க:
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
♦ ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

“பயங்கரவாத நக்சல்பாரிகளின் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள்”, “பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்” என்பதுவரை பல கதைகளை போலீசு சொல்லிக் கொண்டிருக்கிறது. இதன்படி, முனைவர் ஆனந்த் தெல்தும்டேவின் கணினியைச் சோதனையிட்டதில் இதற்கு ஆதாரமாகச் சில கடிதங்கள் கிடைத்துள்ளதாகப் போலீசு கூறுகிறது. பொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். பொது வெளிக்கு வந்துவிட்ட இந்தக் கடிதங்களை ஏராளமானோர் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். மோதல் மேலாண்மை நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர்கூட, இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார். ஆனாலும், வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை.

பிணை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அருண் மிஸ்ரா, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷா ஆகியோர் சார்பில் பேசிய நீதிபதி மிஸ்ரா, “நாங்கள் மார்ச் 16-லிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதிவரை இவ்விருவருக்கும் 3 வார கால அவகாசம் அளிக்கிறோம். அதன் பிறகு அவர்கள் சரணடைய வேண்டும். கைது செய்யப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டு, கடந்த ஜனவரி 2018 முதலாக ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளை இவர்கள் மகிழ்வுடன் அனுபவித்துள்ளனர்” என்கிறார்.

தான் கைது செய்யப்பட்டு சிறையிடப்படுவதையும், அதன்மூலம் தான் விரும்பி செய்து வரும் மனித உரிமைப்பனியை, எழுத்துப் பணியை செய்ய முடியாமல் போய்விடுமே என்பதை எண்ணி முனைவர் ஆனந்த் தெல்தும்டே பல நாட்கள் உறங்க முடியாத நிலையில் உள்ளார் என்று அவரது மகள்களான ராஷ்மியும் ப்ராச்சியும் எழுதியுள்ள பகிரங்கக் கடிதமே, இந்த வேதனையை உணர்த்துகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, அவர் ஒன்றரை ஆண்டுக் காலத்தை மகிழ்வுடன் அனுபவித்துள்ளார் என்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பாசிச வக்கிரத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

“இது தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல; மாறாக, நாட்டுக்கு எதிரான செயல். இதனாலேயே கைது செய்ய விசாரணையை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. இந்திய சட்டத்துறையின் பாசிச வக்கிரத்துக்கு இதைவிட வேறென்ற சான்று வேண்டும்?

மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு மிகக் கொடிய பாசிச ஊபா சட்டத்தை மோடி அரசு ஏவி விடுவதையும், அதற்கு அடிபணிந்து இந்திய அரசியல், நீதி, சட்டம் உள்ளிட்ட கட்டமைப்பே பாசிசக் காட்டாட்சிக்குப் பாதையமைத்துக் கொடுப்பதையும் நிரூபித்துக் காட்டுவதற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்?

மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் நிலமற்ற விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவரான  முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்; பொறியியல், கார்ப்பரேட்டு நிர்வாகம், சமூகவியல் – என பல துறைகளில் உயர்ந்த பொறுப்புகளிலும், காரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழக(IIT)த்தின் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது கோவா நிர்வாகவியல் கழகத்தில் முதுநிலைப் பேராசிரியராகவும், பெருந்தரவு பரிசீலனைத் துறையின் தலைவராகவும் உள்ளார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி(CPDR)யின் பொதுச் செயலாளராகவும், கல்வி பெறும் உரிமைக்கான அனைத்திந்திய அரங்கத்தின் (AIFRTE) தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

கௌதம் நவ்லகா, பத்திரிகையாளரும் ஜனநாயக உரிமை – மனித உரிமைப் போராளியுமாவார். டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைக்கான மக்கள் கழகத்தில் (PUDR) முன்னிணியாளராக இயங்கிவரும் இவர், எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழின் ஆசிரியர் குழுவின் ஆலாசகராகவும் இயங்குகிறார்.

பார்ப்பன பாசிசத்தின் இரும்புப் பிடியில் சிக்கி முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும், தொழிலாளர்களும், அறிவுத்துறையினரும், புரட்சியாளர்களும் அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற போராளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களின் கூர்முனையாக விளங்கும் அமைப்புகளும் அறிவுத்துறையினரும் “நகர்ப்புற நக்சல்கள்” என்று முத்திரை குத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.

தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்து நிரந்தரமாக சிறையில் அடைப்பது என்று இந்து மதவெறி பாசிச கும்பல் செயல்படுகிறது. அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரையும், எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட வரவரராவையும், சுதா பரத்வாஜ் போன்ற பெண் வழக்குரைஞர்களையும், உடல் ஊனமுற்று சக்கர நாற்காலியை விட்டு அகல முடியாத தோழர் சாய்பாபாவையும் ஊபா சட்டத்தில் சிறையிலிட்டு வதைப்பதற்கும், சித்திரவதை செய்து கொல்வதற்கும் பெரிய அளவில் வேறுபாடு ஏதுமில்லை.

இது வெறும் மனித உரிமை மீறல் விவகாரம் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல் ஜனநாயக நிகழ்ச்சிப் போக்கை மாற்றியமைத்து பாசிசத்தைத் திணிக்கும் நடவடிக்கையை முன்னறிவிப்பதாகும். கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆகப் பெரும்பான்மையான அறிவுத்துறையினர் மாறியிருக்கும் இன்றைய சூழலில், ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் இப்பாசிசத் தாக்குதலுக்கு எதிராக வாய்மூடிக் கிடக்கும் சூழலில், தம் வாழ்நாளை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ள இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, நமது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் காட்டும் வேகத்தைவிட இவர்களை கைது செய்து சிறையிடைப்பதில் காட்டும் வேகம்தான் மோடி அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அதிகமாக உள்ளது.  நாடும், மக்களும் பாசிச இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுவரும் சூழலில், மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, கௌதம் நவ்லகா மற்றும் பிற மனித உரிமைப் போராளிகளின் விடுதலைக்காக உரத்த குரலெழுப்புவோம்! மிகக் கொடிய ஊபா உள்ளிட்ட பாசிசச் சட்டங்களுக்கு எதிராகவும், மோடி கும்பலின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகவும் போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.

தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !

தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த சிறப்பு செயல்பாட்டு குழு அமைக்கவும், தனியார் மருத்துவமனை கட்டணக்கொள்ளைக்கு வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்யவும் கோரி – 2 பொதுநலவழக்குகள் !

***

க்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னைகிளை செயலாளர் வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன், சென்னை உயர்நீதிமன்றத்தில்,

1. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்குழு அமைத்து தேசிய நோய்த்தடுப்பு மைய வழிகாட்டுதலின்படி பருண்மையாக செயல்திட்டம் வகுத்து கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

2. கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்க்கவேண்டும் என்ற அரசாணையை ரத்துசெய்து இலவச சிகிச்சை வழங்கவும் இரண்டு பொதுநல வழக்குகள் (W.P.7414 of 2020, W.P.7456 of 2020) தாக்கல் செய்தார்.

மேற்கண்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S. பார்த்தசாரதி ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு. அரவிந்த் பாண்டியன் அவர்கள் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவின் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பான விவரங்கள் இருந்தால் தெரிவிக்கும்படியும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

• மனுதாரர் தரப்பில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், தமிழகம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கு பொது சமையற்கூடம் அமைத்து உணவு வழங்கவும், சாலையோரங்களில் வசிக்கின்ற மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கவும், வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனை பற்றியும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட, வட்டார அளவில் செயல்பாட்டு குழுக்கள் அமைத்து நிவாரணப்பணிகளை செய்யவும், இவற்றில் ஏற்கனவே அரசிடம் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ள 1100 மருத்துவர்கள், 3500 மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 45,000 பேரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என வழக்கு இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவண்
S. ஜிம்ராஜ் மில்ட்டன், வழக்கறிஞர்,
செயலாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

***

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் COVID-19 எனப்படும் தொற்றுநோயினால் உயிரிழப்புகளை சந்தித்து வரும் சூழலில், இந்நோயினை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. COVID-19 நோய் தமிழகத்தில் மூன்றாவது நிலையினை (சமூக பரவல் – community Transmit) எட்டியுள்ள நிலையில் இத்தகைய சமூகவிலக்கு என்பது (Social distancing) கட்டுக்குள் கொண்டுவரும் முறைதானெயொழிய, முழுமையான தீர்வு அல்ல.

எனவே கூடுதலாக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம்- 2005 ன் கீழ் (Disaster Management Act – 2005) தமிழக அரசு தலைமைச்செயலர் தலைமையில், சுகாதாரம், சமூகநலம், நிதி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை சார்ந்த அரசுச் செயலாளர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரம் – சமூக சேவையில் நிபுணத்துவம் உள்ளவர்களை உள்ளடக்கிய ”செயல்பாட்டுக்குழுவினை (Executive Committee)” அமைக்கவேண்டும். அதேபோல தன்னார்வலர்களை உள்ளடக்கிய மாவட்டம், தாலுக்கா/மண்டல அளவிலான செயல்பாட்டுக்குழுவை அமைக்கவேண்டும். மேலும்,

• பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள் போன்ற இடங்களை தற்காலிக மருத்துவமனைகளாகவும் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களாகவும் மாற்றவேண்டும்.

படிக்க:
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

• வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சிறப்பு முகாம்களில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் வேண்டும்.

• தனியார் மருத்துவமனைகளில் COVID-19 தொற்றுநோய்க்குஇலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

• COVID-19 தொற்றுநோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறை போன்ற அத்தியவாசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்கள் அளித்து அவர்களது பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவேண்டும்.

– ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். (W.P.No.7414/2020).

இந்த பொதுநல வழக்குடன் கூடுதலாக கீழ்கண்ட இடைக்கால கோரிக்கைகள் அடங்கிய இடைக்கால கோரிக்கைமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

1. தமிழக அரசு தனியே“COVID-19 நிவாரண நிதி (COVID -19 RELIEF FUND)”எனும் பெயரில் வங்கிக்கணக்குதுவக்கி நன்கொடைகளை பெறவேண்டும் (W.M.P.No. 8879/2020).

2. தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய்தடுப்பு, மருத்துவபரிசோதனை, உணவு வழங்கல்மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் (W.M.P.No. 8880/2020).

3. ஒவ்வொரு குடும்பஅட்டைதாரருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ளரூ.1000 நிவாரணத் தொகையினை உயர்த்தி, நகர்ப்புற குடும்பங்களுக்கு ரூ.10,000 மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ரூ.5,000 என வழங்கவேண்டும் (W.M.P.8881/2020).

4. அனைத்து மக்களுக்கும் தேவையான உணவினை உத்திரவாதப்படுத்த தாலுக்காவாரியாக மற்றும் தேவையான இடங்களில் சமூக உணவுக்கூடங்கள் (Community Kitchen) அமைத்து தன்னார்வ குழுக்கள்மூலம் வீட்டிற்கே சென்று விநியோகிக்கவேண்டும் (W.M.P.8882/2020).

5. டெங்குவிற்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தியதுபோல, COVID-19 நோய்த்தடுப்பில் பாரம்பரிய சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் பயன்படுத்தவேண்டும் (W.M.P.8883/2020).

இந்த பொதுநலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 27.03.2020 அன்று மாண்புமிகு நீதிபதிகள் சுப்பையா & பொங்கியப்பன் அடங்கிய அமர்வின் முன்பாக சிறப்பு அனுமதியின் பேரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, மேற்சொன்ன பரிந்துரைகளை சட்டரீதியாக விளக்கி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் மனுதாரரின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவும், பரிசீலிக்கவும் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறி, வழக்கு குறித்த அரசின் கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கினை இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடவும், அவசர நிலையெனில் நீதிமன்றத்தில் தெரிவித்து உடனடியாக விசாரணைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டனர்.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக் கிளை.

ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

கைபேசியைப் பயன்படுத்த இயலாமல் உங்களால் ஒரேயொரு நாளைக் கழித்துவிட முடியுமா? இணைய தளங்கள், முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு வசதிகளைப் பயன்படுத்த முடியாமல் இன்றைய இளைஞர்களால் ஒரு நிமிட நேரத்தைக் கடந்துவிட முடியுமா? தகவல் தொடர்புக்கும் பொழுதுபோக்கிற்கும் மட்டுமின்றி, கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் வியாபாரத்திற்கும்கூட கைபேசியும் இணைய தள இணைப்பும் இன்றியமையாச் சாதனங்களாக மாறிவிட்ட காலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு, இந்த நவீன சாதனங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட அச்சமூட்டக்கூடிய கொடுங்கனவாகவே இருக்கும். ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கோ இந்தக் கொடுங்கனவுதான் அன்றாடம் முகங்கொடுக்க வேண்டிய நிஜம்.

ஜம்மு காஷ்மீரில் இந்த அடிப்படையான நவீன தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்குக் கடந்த ஆண்டு ஆகஸ்டில், அரசியல் சாசனப் பிரிவு 370 முடமாக்குவதற்கு ஒரு நாள் முன்பாக விதிக்கப்பட்ட தடை, ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவருகிறது.

நெருக்கடி நிலை காலத்தில்கூடத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தொடர்பு  கொள்ளும் உரிமை ரத்து செய்யப்படவில்லை. ஆனால், இந்து சாம்ராட் மோடியோ தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் காஷ்மீரிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமையை முடக்கியது; மாநிலத் தகுதியைப் பறித்து, ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து, அவற்றைத் தனித்தனி ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது ஆகியவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்ததும் காஷ்மீரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும்.

“ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள முடியாமலும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாமலும், தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும்விட அதிகபட்ச தண்டனை இருந்துவிட முடியுமா?” எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எகத்தாளமாகப் பேசியிருப்பதே இத்தண்டனையின் அத்தாட்சி.

காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசினும் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத்தும் இந்த “தண்டனையை” ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 160 நாட்கள் கழித்து, ஜனவரி 10 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பும்கூட காஷ்மீர் மக்களின் முதுகில் குத்துவதாகவே அமைந்துவிட்டது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இரத்தினச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், “குரைக்கிற நாய் கடிக்காது” என்ற பழமொழியைத்தான் உவமானமாகக் கூற முடியும்.

130 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், குடிமக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, நடமாடும் உரிமை குறித்துப் பல்வேறு விளக்கங்களும், அவற்றைத் தடை செய்வது குறித்துப் பல்வேறு எச்சரிக்கைளும் தரப்பட்டிருப்பினும், இறுதியாக, தொலைத்தொடர்பு சேவையை காஷ்மீரிகளுக்குத் தடையின்றி வழங்கும் பொறுப்பை மோடி – ஷா கும்பலின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்துவிட்டனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

“இணையதளம் வாயிலாகக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1) (ஏ) மற்றும் (ஜி) ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை போன்ற அடிப்படை உரிமைகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (2) மற்றும் (6) ஆகியவற்றுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது கள நிலவரத்துக்கும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாக்கத்துக்கும் இடையிலான மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

“இணைய தள சேவைகளை நியாயமான காரணங்கள் இல்லாமல் தன்னிச்சையாக மட்டுமின்றி, கால வரம்பின்றியும் தடை செய்ய முடியாது.”

“144 தடையுத்தரவை நியாயமான கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், சட்டம்  ஒழுங்கிற்கு வரவிருந்த அபாயத்தைத் தடுப்பதற்குமே ஜம்மு காஷ்மீரில் 144 கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசு அளித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது மற்றும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக 144 தடையுத்தரவைப் பிறப்பிக்க முடியாது.”

படிக்க:
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

”தேசப் பாதுகாப்பு என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டாலும்கூட எதிர்ப்புக்கு ஏற்ற நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டுமெயொழிய, அதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிடக் கூடாது.”

“ஒரு மாநிலத்தில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அரசு தடையுத்தரவுகளைப் பிறப்பித்தால், அந்த உத்தரவுகள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எதிர்த்துப் பொதுமக்கள் வழக்குத் தொடர முடியும்.”

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் வரையறைகள், விளக்கங்கள். குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்யும்போது அது குறித்த ஆணையைத் தக்க காரணங்களோடு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த மோடி அரசு, “அவ்வாறு வெளியிட வேண்டுமென்று சட்டத்தில் கூறப்படவில்லையென்றும், வெளியிடாமல் இருப்பதற்கு அரசிற்குத் தனியுரிமை உள்ளதென்றும்” வாதாடியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இணைய தள சேவையைத் தீவிரவாதிகளும் பயன்படுத்துவார்கள் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டாலும், எதார்த்தமான சூழ்நிலைக்கு ஏற்ப குறைந்தபட்ச கட்டுப்பாடுகளைத்தான் விதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு குறைந்தபட்ச கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நியாயப்படுத்தும் காரணிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தடைவிதித்துப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கும்படி விரிவான, விளக்கமான அரசாணை வெளியிடப்பட்டதாகவோ, பொறுப்பான அதிகாரிகள் வாரம் ஒருமுறை கூடி அத்தடையை நீட்டிப்பதா, வேண்டாமா எனப் பரிசீலித்து முடிவெடுத்ததாகவோ எவ்விதமான ஆதாரங்களும் விசாரணையில் சமர்ப்பிக்கப்படவில்லை. எதார்த்தமான சூழ்நிலைகளுக்கு ஏற்றபடிதான் இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் மைய அரசு நிரூபிக்கவில்லை. மோடி அரசின் நோக்கமென்பது தொலைத்தொடர்பு சேவைகளைக் காலவரையின்றி ரத்து செய்து காஷ்மீரிகளைத் தண்டிக்க வேண்டும் என்பது தவிர வேறல்ல என்பதை இதன் வழியாக யாரும் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டே காஷ்மீரிகளின் மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாரதூரமான தண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்திருக்க முடியும்.

ஆனால், நீதிபதிகளோ, இந்த இயற்கை நீதிக்கு மாறாகவும், தீர்ப்பில் தாங்கள் அளித்த விளக்கங்களுக்கு எதிராகவும் நடந்துகொண்டு, இத்தடையை மறுஆய்வு செய்யும் பொறுப்பை மோடி அரசிடமே ஒப்படைத்தனர். இந்த உத்தரவுப்படி மோடி அரசு நடத்திய மறு ஆய்வோ தடை விலக்கல் என்ற நாடகத்தை அரங்கேற்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போட்டுவிட்டது.

இந்நாடகத்தின்படி, ஜம்மு காஷ்மீர் முழுவதும் “ப்ரீ பெய்டு” செல்லிடப் பேசி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இணைய தள சேவை அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு பகுதியிலுள்ள பத்து மாவட்டங்களிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரண்டு மாவட்டப் பகுதிகளிலும் “போஸ்டு பெய்டு” சேவையைப் பயன்படுத்துவோருக்கு மட்டும் 2ஜி இணைய தள சேவை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளத்தாக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் இந்தளவிற்குக்கூட இணைய தள சேவை அனுமதிக்கப்படவில்லை. சிறீநகரில் வசிப்பவர்கள் இணைய தள வசதியைப் பயன்படுத்த வேண்டுமென்றால், 300 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள ஜம்முவுக்குத்தான் செல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் 2-ஜி இணைய தள சேவை என்பதே காலாவதியாகிப் போன ஒன்று. மேலும், இந்த சேவை அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் அனைத்து இணைய தளங்களுக்கும் சென்றுவிட முடியாது. மோடி அரசு அனுமதித்திருக்கும் இணைய தளங்களை மட்டுமே பார்வையிட முடியும், பயன்படுத்திக் கொள்ள முடியும். அனுமதிக்கப்பட்ட இந்த இணைய தளங்களில் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் எதுவும் கிடையாது. முகநூல், டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. அரசின் சேவைகளை வழங்கும் தளங்கள் மற்றும் மோடி அரசைத் துதிபாடும் தளங்கள் ஆகியவற்றை மட்டுமே பார்வையிட முடியும்.

தொலைத்தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அநீதியானது என்றால், இந்தத் தடை விலக்கமோ வக்கிரமானது. மேலும், இந்தத் தடை விலக்கமும் வாரம் ஒருமுறை அரசு அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்பதால், எந்த நேரத்திலும் தொலைத்தொடர்பு சேவைகளை மீண்டும் முற்றிலுமாகத் தடைசெய்யும் வாய்ப்பு இருப்பதையும் மறுத்துவிட முடியாது.

இன்று இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலுமே அடக்குமுறைகளை ஏவிவிடும் அரசுகளுக்கு எதிராகக் கருத்துக்களைப் பரப்பிப் பொதுமக்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களைப் போராட்டக்களத்துக்குக் கொண்டு சேர்ப்பதிலும் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன. அப்படிபட்டதொரு நிலைமை ஜம்மு காஷ்மீரில் உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே தொலைத்தொடர்பு சேவைகளைத் தடை செய்திருக்கிறது, மோடி அரசு. உண்மையில், இப்பார்ப்பன பாசிசக் கும்பல் தீவிரவாதிகளைக் கண்டு அச்சப்படுவதைக் காட்டிலும், 370-ஐ முடமாக்கியதற்கு எதிராக மக்கள் திரள் போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்றுதான் கடும் அச்சம் கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்ற வட இந்திய நகரங்களில்கூட இணைய தள சேவையைத் தற்காலிகமாகத் தடை செய்யும் அடக்குமுறையை அரசுகள் கையில் எடுத்துவருகின்றன. இந்த நிலையில்தான் பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற விதத்தில் சந்தர்ப்பவாதமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி, ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களை அனுமதிப்பது ஆகிய வழக்குகளைத் தொடர்ந்து பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் புத்தாண்டு பரிசுதான் இத்தீர்ப்பு.

நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது இந்திய அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்வாழும் உரிமையைக்கூட ரத்து செய்து தீர்ப்பை அளித்த இழிபுகழ் கொண்டது இந்திய உச்ச நீதிமன்றம். தற்பொழுது, இந்து மதவெறி பாசிசக் கும்பலின் அரசியல் அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொடுக்கும் காலாட்படையாக அந்நீதிமன்றம் சேவையாற்றிவருவதைப் பார்க்கிறோம்.

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !

முன்னுரை :

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் போலவே, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரானஊரடங்கு உத்தரவையும் திடீரென அறிவித்து,  பெரும்பான்மையான மக்களை, குறிப்பாக தினக் கூலித்தொழிலாளர்களை,  புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களைத் திண்டாடவைத்துவிட்டது, மோடி அரசு.

ஊரடங்கு உத்தரவு திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்ப உ.பி. காஸியாபாத் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் திரளும்; சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லுவதற்காகப் பேருந்து நிலையங்களிலும் தொடர்வண்டி நிலையங்களிலும் குவிந்த குடும்பங்களும்; தமது கிராமங்களுக்குத் திரும்ப முடியாத வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் சென்னை தெருக்களில் தத்தளித்து நின்றதுமான காட்சிகள் அனைத்தும் மொகலாயப் பேரரசன் முகம்மது பின் துக்ளக்கை, இந்து சாம்ராட் நரேந்திர தாமோதரதாஸ் மோடி வென்றுவிட்டதை எடுத்துக் காட்டின.

பிரதமர் மோடி கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாட்டு மக்களிடம் இரண்டாம் முறையாக உரையாற்றப் போகிறார் என்ற செய்தி வந்தவுடன், இந்தக் கொள்ளை நோயால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிரிவினர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சலுகைகளை, நிதி ஒதுக்கீடை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார நிபுணர்களிடமும்கூட நிலவியது. ஆனால், மோடியோ, சலுகைகளை அறிவிப்பதற்குப் பதிலாக, ஊரடங்கு உத்தரவு மூலம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் பெரும் சுமையைப் பொதுமக்களின் தலையின் மீது சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

இந்தக் கொள்ளை நோயை மருத்துவம், பொது சுகாதாரம், சமூக நிதியுதவித் திட்டங்கள் உள்ளிட்டு பல்வேறு வழிகளில் போராடி ஒழிப்பதற்கு ஐந்து முதல் ஆறு இலட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்றும், இது இக்கொள்ளை நோய் ஏற்படுத்தவல்ல பேரழிவை ஒப்பிடும்போது பெரும் நிதிச் சுமையல்ல என்றும் ப.சிதம்பரம் உள்ளிட்டுப் பல்வேறு பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டி வரும்போது, மோடி அரசோ முதல் கட்டமாக வெறும் 15,000 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கிவிட்டு, வீட்டினுள் அடைந்து கிடப்பது மட்டும்தான் இந்த வைரஸை ஒழிக்கக்கூடிய ஒரே சாத்தியமான வழி என அறிவுரை வழங்கிவிட்டு ஒதுங்கிப் போய்விட்டது. 

சிறுதொழில், சிறு வணிகம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களின் முடக்கத்தால் ஏறத்தாழ 40 கோடி அமைப்புசாராத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 1.70 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது புதிய மொந்தை பழைய கள்ளு எனக் கூறத்தக்க மோசடி. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே மறு ஒலிபரப்பு செய்திருக்கிறது, மோடி அரசு. பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, இந்து நாளிதழ்.

பொருளாதார மந்தத்தால் உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாபம் சரிந்துவிடாமல் தூக்கி நிறுத்துவதற்காக இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரையில் வரித் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாரி வழங்கிய மோடி அரசு, பொதுமக்களின் நலன் என வரும்போதோ கஜானாவை இறுக மூடிவைக்கிறது.

மோடி மட்டுமின்றி, பெரும்பாலான நாடுகளின் அரசுத் தலைவர்கள் அனைவருமே கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைப் பொதுமக்களின் தலையின் மீதுதான் ஏற்றி வைத்து வருகின்றனர். டென்மார்க்கில் வாழ்ந்துவரும் இந்திய நாவலாசிரியரும் கல்வியாளருமான தாபிஷ் கைர் முதலாளித்துவ அரசுகளின் இந்த அணுகுமுறையின் அடிப்படையில் கரோனா வைரஸை உலகின் முதல் புதிய தாராளாவாத வைரஸ் என வரையறுக்கிறார். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தின் வழியாக அவர் வந்தடைந்திருக்கும் இந்த முடிவு இந்திய அரசுக்கும் பொருந்தும்.

கடந்த மார்ச் 24 அன்று ஆங்கில இந்து இதழில், “புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம்” (The age of the neoliberal virus) என்ற தலைப்பில் வெளியான தாபிஷ் கைர் எழுதிய கட்டுரை வாசகர்களுக்காக மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.

***

கோவிட்-19 என்ற நோயை உருவாக்கக்கூடிய கரோனா வைரஸ்தான் இந்த உலகின் முதல் புதிய தாராளவாத வைரஸ். இப்படிக் கூறுவது ஏற்கெனவே பாதுகாப்பற்று வாழும் நோயுற்றவர்களை, வயது முதிர்ந்தோரை, ஏழைகளை (பட்டினி கிடக்காமல் இவர்களால் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது) இந்த வைரஸ் எளிதாகத் தாக்கக்கூடிய அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. மாறாக, உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் இந்த வைரஸை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் சிறப்பான சமூக நல முதலாளித்துவ அரசுகளாக உள்ள, நான் வசித்துவரும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும்கூட இந்த விமர்சனம் பொருந்தக்கூடியதுதான்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளைப் போலவே டென்மார்க்கிலும் மார்ச் 12 தொடங்கி இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இயங்கி வந்தன. அறுபது இலட்சம் மக்கள் தொகை கொண்ட டென்மார்க்கில் மார்ச் 12 வாக்கில் 500 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

படிக்க:
கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

அவசியமான இந்த ஊரடங்கு நடவடிக்கையை முன்னரே எடுத்திருக்க வேண்டும். எனினும், இந்த ஊரடங்கைத் தவிர, இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மற்றைய அவசியமான நடவடிக்கைள் எதுவும், நான் இந்தக் கட்டுரையை எழுதும் தருணத்திலும், மார்ச் 17 வரை டென்மார்க்கில் எடுக்கப்படவில்லை.

மற்றைய நடவடிக்கைகளுள் மிக முக்கியமான, இன்றியமையாத ஒன்று மருத்துவப் பரிசோதனை. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே, டென்மார்க்கிலும் நோய்த்தொற்று தீவிரமடைந்த நோயாளிகளுக்கு மட்டும்தான் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. மிதமான தொற்று அறிகுறிகள் உள்ளவர்களைப் பொருத்தவரை – நூற்றுக்கும் மேற்பட்ட பிற நோய்களும் இதே போன்ற அறிகுறிகளை வெளிபடுத்தக்கூடியவைதான் – தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது. உள்நாட்டினுள் மருத்துவப் பரிசோதனை விரிவாக நடத்தப்படாத அதேவேளையில், டென்மார்க் அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கையாக, பிற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடிவிட்டது. செல்வ வளமிக்க மேற்குலக நாடுகளில் மருத்துவப் பரிசோதனையின் முடிவு தெரிவதற்கு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் வரை கால தாமதம் ஆகும் அதேவேளையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது ஆச்சரியமான விடயம்தான்.

கரோனா தாக்குதலையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிடும்போது மருத்துவ, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது என்கிறார், கட்டுரையாளர் தாபிஷ் கைர்.

ஆக, இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வதென்ன? டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் சமூக நல மற்றும் மருத்துவ வசதிக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த போதும், புதிய தாராளவாத அணுகுமுறையைத்தான் வெளிப்படுத்துகின்றன என்பதுதான் ஐயத்துக்கு இடமின்றித் தெரிகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்பின் பெரும்பகுதி, தனிமைப்படுத்திக் கொள் என்ற கட்டளையின் வழியாகச் சாதாரண குடிமகனிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சாதாரண சளித் தொல்லகளால் பீடிக்கப்பட்டவர்கள்கூடத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அறிவுரைகளையும் கட்டளைகளையும் அள்ளிவிடும் அரசுகளோ மிகக் குறைந்த அளவிற்கே நிதி ஒதுக்கியுள்ளன.

இது வியப்புக்குரியதல்ல. கடந்த இரண்டு பத்தாண்டுகளில், எப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது குறிப்பிடத்தக்க பெரிய வங்கிகளோ தடுமாறத் தொடங்கியவுடனேயே, தேசிய அரசுகள், சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பொது சேவைகளுக்கான  நிதி ஒதுக்கீடுகளை வெட்டி, அதன் மூலம் கிடைக்கும் பொதுப் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளன. இது உலகெங்கும் நடந்திருக்கிறது. இது மீண்டும் நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர்தான், டென்மார்க் அரசு கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகத் தனது நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,000 கோடி அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 3,50,000 கோடி ரூபாய்) மதிப்புடைய சலுகைகளை வழங்கியது. இத்தொற்று நோய் ஓர் அபாயமாக உருவாவதற்கு முன்னரே, அமெரிக்காவின் டிரம்ப் அரசு, தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நிதி மூலதனத் துறைக்கும் 1.5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியது. இத்தொற்று அமெரிக்காவில் பரவி, தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்ட சமயத்தில் மேலும் 70,000 கோடி அமெரிக்க டாலர்கள் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியதவியாக வழங்கப்பட்டது. இங்கிலாந்து அரசு, இத்தொற்று அபாயத்தை முழுமையாக ஏற்க மறுத்தாலும், தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 90,000 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியிருக்கிறது. மற்றைய நாடுகளிலும் இதே கதைதான்.

தேசியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காமல் தடுப்பதற்கு இத்தகைய முட்டுக் கொடுத்தல்கள் அவசியம்தான் எனினும், இதில் இரண்டு பெரிய சிக்கல்கள் உள்ளன. இந்தச் சலுகைகளின் பெரும் பகுதி வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனையோடு ஒதுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, மிகவும் குறைவான கூலி பெறும் தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் நாடுகள் கூட்டாக இணைந்து இயக்கும் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 10,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்துவிட்டது. மற்றைய நாடுகளிலும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவது நடந்து வருகிறது.

பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீட்டு கேட்டுப் போட்டியிட்டு வரும் பெர்னீ சாண்டர்ஸ் என்ற அரசியல் தலைவர் ஒருவர் மட்டும்தான், “இந்தச் சலுகைகள் மக்கட் தொகையில் 95 சதவீதமாக உள்ள உழைக்கும் மக்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்பட வேண்டுமெயொழிய, 5 சதவீத மேட்டுக் குடியினரின் பங்கு மதிப்பு வீழ்ந்துவிடாமல் முட்டுக் கொடுக்க வழங்கப்படக் கூடாது” என வலியுறுத்தி வருகிறார். மற்றொரு சிக்கல் என்னவென்றால், அநேகமாக எந்தவொரு நாடும் இதற்கு இணையான தொகையை இத்தொற்று நோயை எதிர்கொள்ளும் விதத்தில், மக்கள் நல்வாழ்வு, சமூகத் துறைகளுக்கு ஒதுக்கவில்லை.

வெள்ளையர் அல்லாத நாடுகளில் எந்தவொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அது மேற்குலக நாடுகளில் கனன்று கொண்டிருக்கும் இன வெறியைத் தூண்டிவிடும் என்பதோடு, சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பீதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனக் கும்பலைத் தமது பங்குகளை அவசர அவசரமாக விற்கும் நிலைக்கும் தள்ளியிருக்கிறது. சீனாவின் குறிப்பிடத்தக்க தொழில்துறைகளைக் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பங்குகளை வைத்திருக்கும் இந்தக் கும்பல், அப்பங்குகளை மிகவும் மலிவாக விற்பதை சீன அரசும், சீன முதலீட்டாளர்களும் வாங்கி வருகின்றனர். சீனா, தற்சமயம் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நிலையை எட்டியிருப்பதோடு, தனது நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில்துறைகளையும் முன்னைக் காட்டிலும் அதிக அளவில் கட்டுப்படுத்தும் நிலையை மீண்டும் பெற்றிருக்கிறது எனக் கூறலாம். இதன் மறுபக்கத்தில் அமெரிக்காவின் காங்கிரசு மற்றும் செனட் சபைகளைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதற்குச் சற்று முன்பே, உள்பேரத்தின் மூலம் தமது பங்குளை விற்றுக் காசாக்கிவிட்டனர். மீண்டுமொரு ஒரு புதிய தாராளவாத வைரஸ்: இந்தப் போக்கு உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வண்ணம் கணினிமயமாக்கம் (digitalisation) மற்றும் இயந்திர மனிதமயமாக்கம் (robotisation) ஆகிய துறைகளிலும் தொடரும்.

“இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பல பேர் இறப்பது தேவையானதுதான்” என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் நாடு இங்கிலாந்துதான். இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத தருணத்தில் அரசியல்வாதிகள் கூறவருவது இதுதான்: “இந்த வைரஸ் அநேகமாக வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், ஊட்டச்சத்துக் கிடைக்காத ஏழைகள் ஆகியோரைத்தான் கொல்கிறது. பொருளாதார உற்பத்திக்குப் பயனற்ற இந்தக் கூட்டம் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்பது பற்றி நாம் உண்மையில் அக்கறை கொள்ளத் தேவையில்லை.”

அரசியல் விமர்சகர்கள் அரசியல்வாதிகளின் இந்த உள்ளக்கிடக்கையை சுட்டிக்காட்டியவுடனேயே, அந்த வர்க்கம் தாம் கூறியதிலிருந்து பின்வாங்கியதோடு, ” நாங்கள் மக்களிடம் பொய் கூறாமல் தமது கடமையைச் செய்வதாக”த் தமது கூற்றுக்கு விளக்கமளித்தார்கள்.

அவர்கள் உண்மையைப் பேசுகிறார்களா? அல்லது, நிதி மூலதனத்தின் மதிப்பு மட்டுமே அக்கறைக்குரியது என்ற புதிய தாராளவாத தர்க்கத்திற்கு ஆட்பட்டுப் பேசுகிறார்களா? பசி என்ற கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்தான உணவுப் பொருட்கள் கையிலிருந்தும், ஒவ்வொரு நாளும் 8,000 குழந்தைகள் பசி என்ற வைரஸுக்குப் பலியாவது இந்தப் புதிய தாராளவாத சமன்பாட்டின் ஒரு பகுதியாகும். கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், மற்ற கொள்ளை நோய்களை எதிர்த்த போராட்டம் தவிர்க்கவியலாதவாறு பாதிக்கப்படும்.

இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்வதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இன வெறியும் தேசியவாதமும் இதற்கு உதவாது. இந்தக் கொள்ளை நோயைப் போல எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி வரக்கூடிய கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1918-இல் உருவான ஸ்பானிஷ் ஃப்ளு என்ற கொள்ளை நோய் – பிரிட்டிஷ் அல்லது நேச நாட்டுப் படையினர் மத்தியில் உருவாகிப் பரவியது – 5 கோடி மக்களைக் காவு வாங்கியது. இந்த கரோனா வைரஸை முதல் புதிய தாராளவாத வைரஸ் என்ற முறையில் அணுகி, அதற்கேற்ப செயல்படவில்லை என்றால், பெரிதாக எதுவொன்றும் நடவாது.

மொழியாக்கம்: ரஹீம்

கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்

னது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!

என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் – கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.

மனிதனாக மனிதனை மதிக்காத சிந்தனைகள், கோட்பாடுகள் – அனைத்தையும் தன்னிலையில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கின்ற தனிமனித வாதங்கள், ஒட்டுமொத்த சமூகம் குறித்தோ, இயற்கையைப் பற்றியோ, இயற்கையின் பிற உயிர்கள் குறித்தோ அக்கறையற்ற வரட்டுவாதங்கள் – இன்று எத்தனை மனிதர்களை பலியெடுத்துக் கொண்டு இருக்கின்றது. சமூகம் என்ற வகையில் நாங்கள் எல்லாம் குற்றவாளிகள். சமூகத்தை மாற்ற என்ன செய்தோம்!? இதை வரட்டுவாதம் என்று சொல்லி நகரும் உங்கள் உளவியலில், மனிதர்கள் உயிர்வாழ முடியாது மரணிக்கின்றனர். இன்று அல்ல அன்று முதல்.. யார் இதற்காக அக்கறைப்படுகின்றீர்கள்?

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

அரசுகள் முன்னெடுத்த வைரஸ் நடவடிக்கை, மருத்துவ அறிவியல், வைரஸ் பரவல் பற்றி அரசு மக்கள் முன் வைத்த வாதங்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டன. அதற்கு அமைவாக மரணங்கள், மனித துயரங்கள் எங்குமாக இருக்கின்றது. தங்கள் கொள்கை முடிவுகளை மக்களில் இருந்து எடுக்கவில்லை, பொய்கள், புனைவுகள்.. இதை இனங்கண்டு இருந்த எனக்கு – என் வீட்டுக்குள், அரசு வைரசை வலிந்து கொண்டு வந்தது.

நான் 15.03.2020 முதல் (24 நாள்), என்னைத் தனிமைப்படுத்தி இருந்த காலம். அதற்கு முதல் ஒரு மாதமாகவே எச்சரிக்கை உணர்வோடு சூழலை எதிர்கொள்ளும் எச்சரிக்கை போராட்டத்தை நடத்தியவன். பிரஞ்சு அரசு வெளியில் செல்ல அனுமதித்த வடிவத்தில் கூட, அது தவறானது என்பதால் வெளியில் செல்லவில்லை. வீட்டில் என்னுடன் இருக்கும் இரு பிள்ளைகள் (20 வயதுக்கு கூட) வெளியில் செல்லவில்லை.

எனது துணைவியார் கட்டாயம் வேலை செய்ய வேண்டி இருந்தது. சுப்பர்மாக்கற் விற்பனையாளர். இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த பின் மக்கள் வீதியில் நடந்தது போல், இங்கு சுப்பர்மாக்கற் வைரஸ்சை பரப்பும் இலாப வேட்டையில் இறங்கியது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் எந்த ஒழுங்குவிதியையும் முன்வைக்காது அரசு, மூடிய கட்டடத்தில் ஒரு சதுர மீற்றருக்கு எத்தனை பேர் என்ற வரப்பைக் கூட போடாது கொள்ளை அடிக்கத் திறந்துவிட்டது. ஒரு விற்பனையாளர் செயின் அறுபடும் அளவுக்கு 2,3 நிமிடத்துக்கு பொருட்களை வாங்குவோர் விற்பனையாளரை கடந்து சென்றனர். இந்தளவுக்கும் துணைவியார் வேலை செய்த இடத்தில் அண்ணளவாக ஐந்து விற்பனையாளர்கள். வழமையான திறந்திருக்கும் நேரமும் கூட. விற்பனையோ முன்பை விட அதிகம். வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகம். அரசு அறிவித்த தனிமைப்படுத்தல் 17.03.2020 முதல் துணைவியார் மருத்துவ விடுப்பெடுத்த 31.03.2020 வரையும் இது தான் நிலை. 31.03.2020 எனது துணைவியார் மருத்துவ வீவு எடுத்தார். அடுத்த நாள் அவருக்கு காய்ச்சல்.

இந்த இடைக் கட்டத்தில் விற்பனையாளர்களின் அச்சத்தைப் போக்க, விற்பனையாளர் முன் கண்ணாடியை போட்டதன் மூலம் வைரஸ் தொற்றாது என்ற பிரமையை உருவாக்கினர். இதன் மூலம் வைரஸ் காற்றில் அதிகம் நேரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். மக்கள் கூட்டத்தின் சுவாசம் விற்பனையாளரின் கண்ணாடியில் பட்டு, எதிரில் இருக்கும் மற்றைய விற்பனையாளரின் கண்ணாடியில் தெறித்து முகத்திற்கு நேராக கீழ் இறங்கி சுவாசிக்க விட்டனர். காற்றோட்டமற்ற மூடிய கட்டிடம், நெருக்கமாக மக்கள் .. எந்த சுகாதார ஒழுங்கும் கிடையாது, சந்தைக்கு ஏற்ப வைரஸ் பரவல் கொள்கை. இப்படித்தான் வைரஸ் என் வீட்டுக்குள் வந்து சேர்ந்துள்ளது. எம் வீட்டில் உள்ள நால்வருக்கும் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

படிக்க:
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
♦ நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !

எனது உடல்நிலை தீவிரம் காரணமாக மருத்துவரை சந்திப்பதற்காகவும், கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று பரிசோதனைக்காகவும் (07.04.2020) 6 கி.மீ நடந்து (இரண்டு மணி நேரம்) வெளியே சென்றேன். 500க்கு மேற்பட்ட மக்களை வீதிகளில் காண முடிந்தது. எந்தப் பரிசோதனையம் கிடையாது. இதன் பொருள் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் பரவுகின்றது என்பது தான். எனக்கு வைரைஸ் தொற்று சந்தேகம் – உறுதிப்படுத்தப்பட்ட சூழல், மற்றவர்களுக்கு பரவலைத் தடுக்க முகத் தடுப்பு கிடையாது. வைத்தியர் அதை எனக்கு கொடுக்கும்படி கூறிய போதும், அதைப் பெற முடியவில்லை. தொற்று என் வீட்டில் உறுதியான நிலையில், காய்ச்சல் மருந்து வாங்க நாங்களே செல்ல வேண்டும். இதன் பொருள் நோய் காவியாக இருக்கும் நாங்கள், இதை விட மாற்று எம்முன் கிடையாது.

எனக்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரண்ட இருமல். தலையிடி, தலைப்பாரம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் உதறல், இருமி துப்பும் போது இரத்தம் கலந்த சளி , உடம்பெங்கும் உளைவு, காய்ச்சல், கண் எரிவு, கண் நோவு, கண்ணீர் வெளியேறல், மூட்டு நோ .. இவை கடந்த 5 நாட்களாக கூடிக் குறைந்தளவில் வெவ்வேறளவில் காணப்பட்டது, காணப்படுகின்றது.

மருத்துவர் இனி வரும் நாட்கள் தான் கவனம், சுவாசப்பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ள கூறி உள்ளார். ஒருவர் மரணித்தால் தான், இடம் கிடைக்கும் என்ற நிலை. மருத்துவமனைகள் முட்டி வழிகின்றது. மருத்துவ உதவி அலட்சியப்படுத்தப்படுகின்றது. முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை.

அரசின் கொள்கையால் வைரஸ் தொற்று தொடர்ந்து பரவிக் கொண்டு இருக்கின்றது. என் வீட்டுக்குள் நாலு பேருக்கு தொற்று ஏற்பட்டது போல்.

குறிப்பு : யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த மருந்து, இந்த மருந்து என, யாருக்கும் – யாரும் உபதேசம் செய்யாதீர்கள். சமூகத்தை முதன்மைப்படுத்திச் சிந்தியுங்கள். இயற்கை குறித்தும், பிற உயிரினங்கள் குறித்தும் அக்கறை கொள்ளுங்கள். நாளைய சமூகத்திற்கு எதை கற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள் என்பதைப் பற்றி அக்கறைப்படுங்கள். வதந்திகளை, வாந்திகளை, நம்பிக்கைகளை கைவிட்டு, பகுத்தறிவோடு மனிதனாக சிந்திக்கவும் – வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நாளைய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும். என்னுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், இந்த எதார்த்தம் கடந்து யாரும் வாழவில்லை.

– இரயாகரன்

நன்றி: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

disclaimer