Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 321

இந்தப் பெண் நல்ல அழகி … தம்பி !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 2அ

கிழவி கமறிக்கொண்டும் சிடுசிடுப்புடன் ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டும் பரணிலிருந்து இறங்கி வந்தாள். அந்தக் கணமே இறைச்சிப் பணியாரத்தை ஒரு கை பார்க்க ஆயத்தமாகி விட்டாள். சமாதான காலத்தில் இறைச்சிப் பணியாரத்தின் மேல் அவளுக்குக் கொள்ளை ஆசையாம், சொல்லிக் கொண்டாள்.

நால்வரும் மேஜையைச் சுற்றி அமர்ந்து, உறங்குவோரின் பல்வகைக் குறட்டை ஒலிகளுக்கும் நடுவே பசியுடன் நன்கு சுவைத்துச் சாப்பிட்டார்கள். அலெக்ஸேய் வாய் ஓயாமல் பேசினான், கிழவியைச் சீண்டினான், மரீனாவுக்குச் சிரிப்பூட்டினான். தனக்குப் பழக்கமான படையினர் வாழ்க்கைச் சூழ்நிலையில் இருந்தமையால் சுற்றித் திரிந்த பின் சொந்த வீடு திரும்பியவன் போல உணர்ந்தான் அவன்.

சாப்பாடு முடிவதற்குள் நண்பர்கள் பல விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள்: ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் ஜெர்மன் படை அலுவலகம் இருந்தது. அதனால் தான் இது அழியாமல் தப்பியது. சோவியத் சேனை தாக்கத் தொடங்கியதும் பகைவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள். அந்த அவசரத்தில் கிராமத்தை அழிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. கிழவியின் மூத்த மகளை ஜெர்மானியர்கள் பலவந்தமாகக் கற்பழித்துவிட்டார்கள். அப்புறம் அந்தப் பெண் குளத்தில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டாள். அதன் பிறகு கிழவிக்கு மூளை பிசகிவிட்டது.

ஜெர்மானியர் இந்த வட்டாரங்களில் இருந்த எட்டு மாதங்களையும் மரீனா வீட்டுப் புறக் கடையில் வெற்றுக் களஞ்சியத்துக்கு உள்ளே பதுங்கி, வெளியிலேயே வராமல் வைத்தாள். களஞ்சியத்தின் வாயில் வைக்கோலாலும் தட்டு முட்டுச் சமான்களாலும் மறைக்கப்பட்டது. ஒவ்வோர் இரவிலும் தாயார் சாப்பாடும் தண்ணீரும் கொண்டுபோய்ச் சிறு ஜன்னல் வழியே அவளுக்குக் கொடுத்து வந்தாள். மரீனாவுடன் அலெக்ஸெய் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப் பேசினானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் பெத்ரோவைப் பார்த்தாள். மகிழ்வும் கூச்சமும் கொண்ட அவளது பார்வையில் பாராட்டு மறைக்க முடியாதவாறு புலப்பட்டது.

எப்படிச் சாப்பிட்டோம் என்று கவனிக்காமலே எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள். மிஞ்சிய உணவுப் பண்டங்களை மரீனா செட்டாகக் காகிதத்தில் சுற்றி, படைவீரனுக்கு எல்லாம் பயன்படும் என்று சொல்லியவாறு மெரேஸ்யெவின் சாமான் பைக்குள் வைத்தாள். அப்புறம் கிழவியிடம் ஏதோ கிசுகிசுத்துவிட்டுத் தீர்மானமாகக் கூறினாள் :

“கேளுங்கள். உங்களை அதிகாரி எப்போது இங்கே தங்க வைத்து விட்டாரோ நீங்கள் இங்கேயே தங்குங்கள், நீங்கள் அடுப்பு பரணில் படுத்துக்கொள்ளுங்கள். அம்மாவும் நானும் சாமான் உள்ளில் படுக்கை போட்டுக் கொள்கிறோம். பிரயாணக் களைப்பு தீரப் படுத்து உறங்குங்கள். நாளை உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்வோம்.”

முன்போலவே தூங்குபவர்களுக்கு இடையே வெறுங்கால்களால் அனாயசமாக நடந்து முற்றத்திலிருந்து பனிக்காலக் கோதுமை வைக்கோல் கட்டு ஒன்றை எடுத்து வந்து அகன்ற பரண் மேல் தாராளமாகப் பரப்பினாள். எவையோ துணிகளைச் சுருட்டித் தலைக்குயரமாக வைத்தாள். இவை எல்லாவற்றையும் மளமளவென்று, லாவகமாக, சந்தடி செய்யாமல், பூனை போன்ற நயப்பாட்டுடனும் செய்தாள்.

மூட்டுகள் சுடக்கு விடும்படி வைக்கோல் மீது அப்பாடா வென்று உடம்பை நீட்டிப் படுத்து, “இந்தப் பெண் நல்ல அழகி, தம்பி!” என்றான் மெரேஸ்யெவ்.

“மோசமில்லை” என்று அலட்சிய பாவநடிப்புடன் சொன்னான் பெத்ரோவ்.

“உன்னைத்தான் எப்படி விழுங்கிவிடுபவள் போலப் பார்த்தாள்!…”

“பார்த்தாள் என்று நன்றாய் சொன்னீர்கள்! ஓயாமல் உங்களுடன் தானே பேசிக் கொண்டிருந்தாள்…..”

ஏதோ பயங்கரமான உணர்ச்சியுடன் விழித்துக் கொண்டான் அலெக்ஸேய். என்ன நேர்ந்தது என்று அவனுக்கு உடனே விளங்கவில்லை. எனினும் இராணுவ வழக்கத்தால் உந்தப்பட்டு அக்கணமே துள்ளி எழுந்து ரிவால்வரை எடுத்துக்கொண்டான். எங்கே இருக்கிறோம், தனக்கு என்ன ஆயிற்று என்பது அவனுக்கு ஒன்றும் நினைவில்லை. காந்தும் புகை எங்கும் கவிந்து குமைந்தது. குப்பென்று வீசிய காற்று புகைப் படலத்தை விலக்கியதும் தலைக்கு மேலே விந்தையான, பளிச்சென மினுமினுக்கும் பிரமாண்டமான விண்மீன்களை அலெக்ஸேய் கண்டான். பகல் போல வெளிச்சமாயிருந்தது. வீட்டின் கட்டைகள் நெருப்புக் குச்சிகள் போலச் சிதறிக் கிடந்தன. கூரை ஒரு பக்கம் சரிந்து விழுந்திருந்தது. உத்தரங்கள் இளித்த பற்கள் போலத் தெரிந்தன. சற்றுத் தொலைவில் உருவமற்ற ஏதோ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முனகல்களும் தலைக்கு மேலே அலைகள் போன்ற முழக்கமும் விழும் வெடிகுண்டுகளின் பழக்கமான, அருவருப் பூட்டுகிற, எலும்புகள் வரை துளைக்கும் ஊளையொலிகளும் அவனுக்குக் கேட்டன.

இடிபாடுகளின் நடுவே நின்ற பரண் மீது முழந்தாள்களை ஊன்றி எழுந்து பேந்தப்பேந்த விழித்தவாறு சுற்றிலும் பார்த்தான் பெத்ரோவ். “படு!” என்று அவனை அதட்டினான் அலெக்ஸேய்.

அவர்கள் பரணில் செங்கல் தளத்தில் விழுந்து அதோடு ஒண்டிக்கொண்டார்கள். அந்தச் சமயத்தில் பெரிய வெடிகுண்டுச் சிதர்த் துண்டு ஒன்று அடுப்புப் புகைபோக்கியைத் தாக்கி வீழ்த்தி இருவர் மீதும் செம்புழுதியைக் கொட்டியது. அவர்கள் உலர் களிமண் மணத்தை உணர்ந்தார்கள்.

துள்ளி எழுந்து ஓட வேண்டும் – எங்கேயோ தெரியாது எனினும் இயங்கிக் கொண்டிருக்கவாவது முடியுமே – என்ற அடக்க முடியாத ஆசை அலெக்ஸேய்க்கு உண்டாயிற்று. இரவு விமானத் தாக்குக்களின் போது மனிதனுக்கு எப்போதுமே உண்டாவது இந்த ஆசை. ஆனால் இந்த ஆசையை அடக்கிக் கொண்டு, “இடத்திலிருந்து அசையாதே, படுத்துக்கிட!” என்று உத்தரவிட்டான் அலெக்ஸேய்.

வெடி விமானங்கள் புலப்படவில்லை. அவை தாம் வீசிய ஒளி வாணங்களுக்கு மேலே இருளில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் வெட்டி வெட்டி மின்னிய வெள்ளொளியில் கருந்துளிகள் போன்ற வெடிகுண்டுகள் வெளிச்சப் பகுதிக்குள் பாய்ந்து வர வர அளவில் பெருத்தவாறு கீழே விழுந்ததும், செந்தழல்கள் கோடைகால இருளில் குபீரென்று மூண்டு பரவியதும் தெட்டத் தெளிவாகப் புலனாயின. தரை பல பகுதிகளாகப் பிளந்து “ர்-ர்-ர்ஹ்! ர்-ர்-ர்ஹ்!” என நீண்ட இடி முழக்கம் செய்வது போலத் தோன்றியது.

விமானிகள் இருவரும் ஒவ்வொரு வெடியதிர்ச்சிக்கும் அசைந்து தூக்கிப் போட்ட பரண் மேல் உடல்களைப் பரப்பியவாறு கிடந்தார்கள். அதற்குள் புதைந்து அதன் பகுதியாக – ஒன்றாகிவிட இயல்பூக்கம் காரணமாக முயன்றவாறு உடலையும் கன்னத்தையும் கால்களையும் அதன் மேல் அழுத்திக் கொண்டார்கள் அவர்கள். பிறகு விமான என்சின்களின் கடகடப்பு தொலைவில் அகன்றது. பாராசூட்களில் தொங்கியவாறு தாழ இறங்கிவிட்ட ஒளி வாணங்கள் சீறலுடன் எரியும் ஓசையும், தெருவின் மறுபுறம் இடிபாடுகள் மீது பற்றிக் கொண்ட நெருப்புச் சுவாலைகள் சடசடப்பதும் கேட்டன.

படிக்க:
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அமைதியுள்ளவன் போன்ற நடிப்புத் தோற்றத்துடன் உடுப்பிலும் காற்சட்டைகளிலுமிருந்தும் வைக்கோலையும் களிமண் புழுதியையும் தட்டிப் போக்கியவாறு, “இந்தப் பயல்கள் நமக்குச் சுறுசுறுப்பு ஊட்டிவிட்டார்கள்” என்றான்.

“அவர்கள், இங்கே உறங்கியவர்கள் என்ன ஆனார்கள்? மரீனா என்ன ஆனாள்?” என்று அச்சத்துடன் கூச்சலிட்டான் பெத்ரோவ். நரம்புக் கிளர்ச்சியால் வலிப்புக் கண்டு கோணிய தாடையை நேராக வைத்திருக்கவும் தன்வசமின்றி உண்டான விக்கல்களை அடக்கவும் அரும்பாடுபட்டான் அவன்.

பரணிலிருந்து இறங்கினார்கள். மெரேஸ்யெவிடம் டார்ச் லைட் இருந்தது. தகர்த்து சிதறிய குடிலின் தரைமேல் பலகைகளுடன் கட்டைகளும் குவியல்களாகக் கிடந்தன. டார்ச் வெளிச்சத்தில் அவற்றின் ஊடாக பார்த்தார்கள். அங்கே ஒருவரையும் காணோம். விமானத் தாக்கு அபாயச் சங்கொலியைக் கேட்டு விமானிகள் வெளியே ஓடிக் காப்பிடங்களில் பதுங்கிக் கொண்டார்கள் என்ற விவரம் அப்புறம் தெரியவந்தது.

பெத்ரோவும் மெரேஸ்யெவும் இடிபாடுகளைத் துருவி ஆராய்ந்தார்கள். மரீனாவும் கிழவியும் எங்குமே தட்டுப்படவில்லை. விமானிகள் கூவி அழைத்தார்கள், பதிலே இல்லை. தாயும் மகளும் எங்குதான் போய்விட்டார்கள்? ஓடிவிட்டார்களா? அவர்களால் தப்ப முடிந்ததா?

ரோந்துப்பணிக் காவலர்கள் வீதிகளில் நடந்து ஒழுங்கை நிலை நாட்டத் தொடங்கி விட்டார்கள். சேப்பர்கள் நெருப்புகளை அணைத்து, இடிபாடுகளில் குடைந்து தேடிப் பிணங்களை அப்புறப்படுத்தினார்கள், காயமுற்றவர்களை வெளியே எடுத்தார்கள். அஞ்சல்காரர்கள் விமானிகளைப் பெயரிட்டுக் கூவி அழைத்தவாறு இருளில் ஓடிச் சாடினார்கள். ரெஜிமென்ட் விரைவாகப் புது இடத்துக்கு மாற்றப்பட்டது. விமானிகள் விடியற்காலையில் தங்கள் விமானங்களை ஓட்டிச் செல்ல ஆயத்தமாக விமான நிலையத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டார்கள். பணியினருக்கு ஏற்பட்ட இழப்பு மொத்தத்தில் அதிகமல்ல என்று ஆரம்பத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. ஒரு விமானி காயமடைந்தான், இரண்டு டெக்னீஷியன்களும் விமானத் தாக்கின் போது காவல் பணி ஆற்றிய சில பாராக்காரர்களும் கொல்லப்பட்டார்கள். கிராமவாசிகள் நிறையப் பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என அனுமானிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேர் என்பதை இருட்டிலும் அமளி குமளியிலும் திட்டவட்டமாகக் கணக்கிட முடியவில்லை.

விடியும் தருவாயில் விமான நிலையத்துக்குப் போகும் வழியில் மெரேஸ்யெவும் பெத்ரோவும் தாங்கள் இராத்தங்கிய வீட்டின் இடிபாடுகளின் அருகே தம் வசமின்றியே தயங்கி நின்றார்கள். கட்டைகள், பலகைகளின் குழப்பக்குவியலிருந்து சேப்பர்கள் ஒரு ஸ்டிரைச்சரை எடுத்து வந்தார்கள். இரத்தக் கறை படிந்த துப்பட்டியால் போர்த்தப்பட்ட ஏதோ ஒன்று ஸ்டிரெச்சரில் கிடந்தது..

“யாரை எடுத்துப் போகிறீர்கள்?” என்று துயர் நிறைந்த முன்னுணர்வால் முகம் வெளிற விசாரித்தான் பெத்ரோவ்.

“நிலவறையில் தோண்டிப் பார்த்த பொழுது ஒரு கிழவியும் இளம் பெண்ணும் கிடந்தார்கள். கற்கள் சரிந்து விழுந்து கொன்று விட்டன. உடன் மரணம். பெண் சிறுமியா அல்லது மங்கையா என்று கண்டுகொள்ள முடியவில்லை. சின்னப் பெண். அழகாக இருந்திருப்பாள் என்று தோன்றியது. மார்பில் கல் விழுந்து சிதைத்து விட்டது. ரொம்ப அழகான பெண், சின்னக் குழந்தைப் போல” என்று முதிய மீசைக்கார சேப்பர் பதில் அளித்தார்.

…அன்று இரவு ஜெர்மன் சேனை தனது கடைசிப் பெருந்தாக்கைத் தொடங்கியது. சோவியத் படைகளின் அரண் அமைப்புகளைத் தாக்கி, கூர்ஸ்க் பிரதேசப் போரை ஆரம்பித்தது அது. ஜெர்மன் சேனையின் இறுதி அழிவுக்கு வித்திட்டது இந்தப் போர்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

0

கலையரசன்

தென் அமெரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும், பெருமளவு படித்த மத்தியதர வர்க்க இளம் தலைமுறையினரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாதவாறு கலவர பூமியாக காட்சியளிக்கிறது. ஒரு மெட்ரோ ரயில், 16 பேருந்து வண்டிகள் கொழுந்து விட்டு எரிந்தன. பத்துக்கும் குறையாத சூப்பர் மார்க்கெட்கள், மருந்துக் கடைகள் சூறையாடப்பட்டன. கலவரத்திற்குள் அகப்பட்டு பதினொரு பேர் கொல்லப்பட்டனர்.

சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா “நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம்” என அறிவித்துள்ளார். “ஒரு பலமான, இணக்கமாக போக முடியாத, எவரையும் மதிக்காத, வன்முறை பிரயோகிக்கத் தயங்காத எதிரியுடன்” இந்த யுத்தம் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

சிலியில் நடந்த இராணுவ சர்வாதிகார காலகட்டத்திற்குப் (1973 – 1990) பின்னர், முதல் தடவையாக இராணுவம் வீதிகளில் ரோந்து சுற்றுகிறது. தலைநகர் சான்டியாகோ உட்பட எட்டு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா.

யார் இந்த பிஞேரா? எழுபதுகளில், சர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் காலத்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதித்தவர். அதாவது, பினோச்சே காலத்தில் வந்த நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கையால் பலனடைந்த கோடீஸ்வரன். அப்படியான ஒருவர் சொந்த நாட்டு மக்கள் மீதே யுத்தப் பிரகடனம் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஜனநாயக ஆட்சி நடந்தாலும், பாசிச சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் பணக்கார வர்க்கத்தின் நலனுக்காகவே அரசு இயங்குகிறது.

இந்த மக்கள் எழுச்சிக்கு நேரடிக் காரணம், அரசு கொண்டு வந்த மெட்ரோ ரயில் டிக்கட் விலை அதிகரிப்பு. பிற தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாதச் சம்பளம் அதிகம். ஆனால் மாத வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்து செலவுகளுக்கு சென்று விடுகிறது.

குறிப்பாக பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் மாணவர்கள் வெகுண்டெழுந்து இலவசமாக பயணம் செய்யத் தொடங்கினார்கள். மெட்ரோ நிலைய டிக்கட் மெஷின், தடைக் கம்பங்களை அடித்து நொறுக்கினார்கள்.

மெட்ரோ டிக்கட் விலை உயர்வை மீளப் பெறுவதாக ஜனாதிபதி பிஞேரா அறிவித்தும் கலவரம் அடங்கவில்லை. அதற்குக் காரணம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல. மிகப் பலமான இடதுசாரி கட்சிகளால், நன்றாக அரசியல்மயப் படுத்தப் பட்ட இளம் தலைமுறையினர் எந்த வித சமரசத்திற்கும் தயாராக இல்லை.

நிச்சயமாக, சிலி அரசுக்கு இது ஒரு இக்கட்டான கால கட்டம். அடுத்த மாதம் Apec நாடுகளின் உச்சி மகாநாடு நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஸிஜின்பிங் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் சிலிக்கு வர இருக்கிறார்கள். அதற்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம்.

எதற்காக இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் மட்டுமல்லாது, ஓரளவு வசதியான மத்தியதரவர்க்க இளைஞர்களும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்?

1973-ல் நடந்த இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் சிலி நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கையின் பரிசோதனைச் சாலையாக கருதப்பட்டது. பொருளாதாரம் நூறு சதவீதம் தனியார்மயப்படுத்தப்பட்டது. பொருட்களின் விலைகள் மிக அதிகம். ஆனால் செலவிடுவதற்காக மக்களின் கையிருப்பில் பணம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. கல்வி, மருத்துவ செலவுகள் ஏழைகளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். வசதி இல்லாதவர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம்.

நவ- தாராளவாத பரிசோதனைச் சாலையில் பிறந்த பிள்ளைகள் தான் இன்று முதலாளித்துவத்திற்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்த இளைஞர்கள் மத்தியில் நவ- தாராளவாதம் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை போன்று கருதப் படுகின்றது.

முன்பு இராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடந்த இனப்படுகொலையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் தேடி அழிக்கப் பட்டனர். பாசிச ஆட்சியாளர்கள் கம்யூனிசத்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்டதாக இறுமாப்புடன் இருந்தனர்.

பனிப்போர் முடிவில், “கம்யூனிசம் இறந்து விட்டது” என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், 1990-ம் ஆண்டு ஜனநாயகம் மீட்கப்பட்டது. அரசியல் கட்சிகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. பொதுத் தேர்தல் நடந்தன.

ஒற்றை ஆளாய் நின்று இராணுவ வாகனத்தை வழிமறிக்கும் தீரம்!

அதே நேரம், சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல புதிய தலைமுறை கம்யூனிஸ்டுகள் தோன்றினார்கள்.

புதிய சிலி கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி சில வருடங்களில் பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாகியது. அத்துடன், அனார்க்கிஸ்டுகள், ட்ராக்கிஸ்டுகள், இன்னும் பல சோஷலிச அமைப்புகளும் உருவாகின. குறிப்பாக அனார்க்கிஸ்டுகள் முதலாளித்துவத்தை மட்டுமல்லாது, அரசு என்ற கட்டமைப்பையே எதிர்ப்பவர்கள்.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்

கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஆரம்பத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக போராடிய மாணவர்கள், கூடவே நியோ லிபரல் சிஸ்டத்தையும் எதிர்க்கக் கற்றுக் கொண்டனர். தற்போது முதலாளித்துவத்தை வீழ்த்தி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பது என்று கிளம்பி விட்டார்கள்.

கம்யூனிஸ்டுகள் வேறு யாரும் அல்ல. அவர்களும் முதலாளித்துவம் வளர்த்து விட்ட பிள்ளைகள் தான். சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிவிட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன.

இது “கம்யூனிசம் 2.0”!

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு !

ராயல் என்ஃபீல்டு ஆலையில் வாகன சோதனை தொழிலாளர்களுக்கோ வேதனை !

ம்பீரமாகவும்  கண்ணை கவரும்  பல வண்ணங்களில்  சாலைகளில்  கடந்து செல்லும் ராயல் என்ஃபீல்டு  நிறுவனத்தின்  இரு  சக்கர வாகனத்தை  நம்மில் பலரும் பார்த்திருப்போம். இந்த  வாகனத்தின்  தொழிற்சாலை  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஒரகடம்  தொழிற்பேட்டையில்  இயங்கி வருகின்றது. இங்கு ஐந்தாயிரத்திற்கும்  மேற்பட்ட  தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள்.

கடந்த  18.10.19 அன்று  டெஸ்ட்  டிரைவிங்  என்ற அடிப்படையில்  வாகனத்தை  சோதித்த போது      நடந்த விபத்தில்  NEEM தொழிலாளி ஜீவாவின் வலது கால் முறிந்து போனது. குறிப்பாக  காலின்  முட்டி பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  பிளேட்  வைக்கப்பட்டுள்ளது. முழங்காலில் எலும்பு உடைந்திருக்கின்றது அதற்கு (ஸ்குரு போட்டு  இணைத்து ) கட்டு போடப்பட்டுள்ளது.

விபத்து  குறித்து  நிர்வாகத் தரப்பில், ” டெஸ்ட் டிரைவிங்க்காக  வண்டியை  குறிப்பிட்ட  வேகத்தில்  ஒட்டிச் செல்லும்போது நாய்  குறுக்கே  வந்து விட்டதால் எதிர்பாராமல்  இந்த  விபத்து ஏற்பட்டு விட்டது” என்கிறார்கள். காயமடைந்த தொழிலாளி ஜீவா படப்பை  பகுதியில்  உள்ள  சாய் என்கிற தனியார் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து  என்பதே  எதிர்பாராமல்  நடப்பதுதான். ஆனால்,  ஏற்கெனவே நடந்த  விபத்துகளில் இருந்து பெற்ற படிப்பினையின்  அடிப்படையில்தான் தகுந்த   முன் எச்சரிக்கையும்   வேகத் தடைகளும்  ஏற்படுத்தி  விபத்தைத்  தடுக்க  முனையும்  அரசின்  அறிவிப்புகளை  நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளிலும்  குறுக்கலான மலை பாதைகளிலும் பார்க்கின்றோம்.

அப்படியான  அனுபவம்  நிர்வாகத்திற்கு  இல்லை  என்று சொல்ல முடியுமா ?  கண்டிப்பாக  முடியாது. ஏனெனில்,  இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  விபத்து ஏற்பட்டு  கை  கால்கள்  முறிந்து போவது   அன்றாட  நிகழ்வாகிவிட்டது. சென்ற மாதம் கூட  ஒரு நிரந்தர  தொழிலாளியின் கை உடைந்திருக்கின்றது. ஆக இது  போன்ற  விபத்துகள்  ஏற்படுவதற்கான  அடிப்படையான  காரணம்  என்ன  ?  ஷிப்ட்  ஒன்றுக்கு  500 – பைக்குகள் தயாராகின்றது.  இந்த  500 பைக்கை  10 பேர்  தலா 50 பைக்கை  டெஸ்ட்  செய்ய வேண்டும்.  டெஸ்ட் செய்வதென்றால்  ஒவ்வொரு  வாகனத்திலும் உள்ள  குறைபாட்டை கண்டறிய வேண்டும்.

வேகம், பிரேக்,  கிளர்ச்சி,  கியர்  ஆகிய  ஒவ்வொன்றின் செயல்பாட்டை அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சோதிக்க வேண்டும். மேலும் விசாலமான இடத்தில் 4 – 5 கி.மீ. துரம்  ஒட்டி பார்ப்பது என்று இல்லாமல்  ஒன்றறை  கிலோமீட்டர்  துரமே  உள்ள  சாலையில்தான்  இந்த  சோதனையும்  இலக்கையும்  எட்டவேண்டும். அதாவது விபத்து ஏற்படுவதற்கான வேலை சுமையும் அதற்கான சூழலை கொடுத்து விட்டு அதனை விபத்து என்று சொல்வதே மோசடிதான்.

ஒவ்வொரு ஆலையின் உற்பத்தி வளாகத்தில்  SAFETY  FIRST  WORK MUST என்ற வாசகங்கள்  எழுதப்பட்டிருக்கும்.  அதாவது  வேலையின்  போது பாதுகாப்புதான் முதன்மையானது  என பீற்றிக் கொள்வார்கள். ஆனால்  நடப்பதோ  TARGET FIRST    SAFETY  NEXT  என்பதுதான்  யதார்த்த  உண்மையாகும்.  முதலாளித்துவம்  தம்பட்டம்  அடித்துக் கொள்ளும்  தரம் நேர்த்தி  விலை குறைவு  என்பதற்கு பின்னால்   விபத்து என்ற  பெயரில் ஜீவா போன்ற ஆயிரக்கணக்கான  தொழிலாளர்களின் உடலின் பாகங்களை  இழந்து   பலரின் உயிரும்  பறிக்கப்படுகின்றது.

படிக்க:
ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !

சான்றாக  சாலை விபத்தில்  ஒருவர் இறந்தாலோ  விபத்தில் கை – கால்களை  இழந்தாலோ  பெயரளவில்  இருக்கும் சட்டங்களை  பயன்படுத்தி  நட்ட ஈடு கோருகின்றோம். ஆனால்  ஜீவாவின் விஷயத்தில் நடந்தது  என்ன ?  அறுவை சிகிச்சை  செய்து   மருத்துவமனையில்  படுத்த படுக்கையாக  இருப்பவரை  ஸ்டெர்ச்சரில் படுக்க வைத்து  ஆம்புலன்ஸ்  மூலம்   கொண்டு  வந்து  படுத்தபடியே  கை விரலால்  பிங்கர் பிரிண்ட்  வைத்து    சம்பந்தப்பட்ட தொழிலாளி  குணமாகி  ஆலைக்கு வந்து விட்டார். பிறகு சொந்த காரணங்களுக்காக வேலையை விட்டு நின்று விட்டார்.  என்ற  சதியுடன் நிர்வாகம் செயல்படுவதை  புரிந்து கொண்டு  தொழிலாளர்களின்   எதிர்த்த பிறகே கூடுதலாக  இரண்டு நாள் மருத்துவமனையில்  சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

நிர்வாகம்  என சொல்லும் போது  ராயல் என்ஃபீல்டு  நிர்வாகத்தை மட்டும்  அல்ல  NEEM  ஸ்கீமில் தொழிலாளர்களை  மூன்று வருட ஒப்பந்தத்தில்  நிர்வகிக்கும்  TVS –குழுமத்தையும் சேர்த்துதான் சொல்கின்றோம். (இந்த TVS –குழுமம்  ஹூண்டாய்  செயின்ட் கேபின்  அசாகி இந்தியா  இன்னும் பல் வேறு ஆலைகளில் குறிப்பிட்ட துறைகளை அவுட்சோர்சிங் அடிப்படையில் ஆயிரக்கணக்காண ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு  வேலையில் ஈடுபடுத்தி வருகின்றது.)

இந்நிறுவனத்தின் சூப்பர்வைசர் சிவா என்பவர்  பெயருக்கு  பார்த்து விட்டு பிறகு மருத்துவமனை பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. ராயல் என்ஃபீல்டு  நிறுவனத்தின் குவாலிட்டி ( QUALITY ) அதிகாரியான  நவீனுக்கு இந்த நிகழ்வு  கொசுக்கடிக்கு ஒப்பனாது.  வாகனத்தின் QUALITY – விட  மனித உயிர் ஒன்றும் மதிப்பு வாய்ந்தது   இல்லை என்ற முதலாளித்துவ நியதியை தவறாது கடைபிடிப்பவர். எப்படி என்கிறீர்களா ? பாதிக்கப்பட்ட  தொழிலாளியிடம்  தவறியும் போன் மூலம் கூட விசாரிக்கவில்லை.

நாம்  கடைகளில்  செல்போனோ  தொலைக்காட்சியோ   வாங்குவது  என்றால்  கையில் இருக்கும்  பணத்திற்கு ஏற்ப திட்டமிடுகின்றோம்.  ஆனால்  ஆலையில்  நடப்பது என்ன ? ஒரே வேலையை நான்கு விதமான  தொழிலாளர்கள் கொண்டு அதாவது நான்கு விதத்தில் உழைப்பை விலை பேசி உற்பத்தியை நடத்தும் முதலாளித்துவம் உழைப்புக்கேற்ற கூலியை மறுக்கும். மறுபுறம்  பொருளின்  தரத்திற்குகேற்ப விலை என்று சோல்வதே   மோசடிதான்.

காண்டிராக்ட் தொழிலாளி,  NEEM – தொழிலாளி,  CTA தொழிலாளி,  (அதாவது கம்பெனி அப்ரெண்டீஸ்)  இவர்கள் யாருக்கும் தொழிற்சங்க உரிமை கிடையாது.  குறைந்த பட்சம் ஊதிய சட்டத்தின்படி ஊதியம்  இல்லை.  தொழிலாளர் சட்டத்தின் படியான பலா பலன்கள் கிடையாது.   குறிப்பாக வேலை நிரந்தரம் கிடையாது. அப்படியென்றால்  அடிமைகள் என்று  வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதற்காகத்தான்  நாகரிகமான  பெயரை வைத்து  தொழிலாளர்களை ஏய்க்கின்றார்கள். இவர்களை தவிர்த்து  நிரந்தர  தொழிலாளர்கள்  என்ற சொற்ப பிரிவும் அருகி  வருகின்றது. இந்தப்  பிரிவினை சட்டப்படியானதுதான்   ஒன்றும்  செய்ய  முடியாது.  இழப்புகள் வந்தால் நாம்தான்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற  கருத்து இளம் தொழிலாளர்கள்  மத்தியில்  ஆழமாக  அன்றாடம் பதியவைக்கப்படுகின்றது.

கன்வேயரின் ஓயாது இயக்கத்தின் ஒவ்வொரு வினாடியும் உழைப்பு சுரண்டலில் மையம் கொள்கின்றது. தொழிலாளர்களின்  இயற்கைத் தேவையான  தண்ணீர் – தேநீர் குடிக்க  உணவு  உன்ன  இதற்கே நேரம் சரியாக  கொடுக்காத போது  தொழிலாளர்கள் இயல்பாய் சிந்திக்கும் திறன் அறுத்தெறியப்படுகின்றது  இந்நிலையில் நிர்வாகத்தால்  தனது வேலை குறித்து சொல்லப்படும்  விளக்கங்கள் பிற வியங்கள் என… இவையெல்லாம் சரிதானா  என  சோதித்து பார்க்கும்  திறனை  இழக்கும் நிலைக்கு  தொழிலாளர்களை  தள்ளுகின்றது முதலாளித்துவம்.

குறிப்பாக  NEEM – தொழிலாளி  CTA தொழிலாளி  ஆகிய பிரிவனர்  20 – 23  வயதுடைய  இளம் தொழிலாளர்கள். இளமைக்கே  உரிய துடிப்பு  கிராமபுறத்தில் வந்திருப்பதால்  கஷ்டத்தை மனமுகந்து ஏற்றுக் கொள்ளும்  மன பக்குவம்  ஆகியவை  தங்கள் மீதான அடக்குமுறையை  ஏற்றுக்கொள்ள செய்கின்றது.

இவைகளில்   இருந்து விடுபட்டு தொழிலாளர்கள் சிந்திக்க  தொடங்கும் நேரம் அதற்குள் 1 – 2 வருடம்  ஆக வேலையும் பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதும் அடுத்த செட்டு ஆலைக்குள்ளே நுழைவதும்  இவர்களுக்கும் அதே நிலை.   ஒரு செடி நட்டு வேர் பிடிக்கும் நிலையில் பிடுங்கி எறியப்படுவதை  போலத்தான்  தொழிலாளர்கள்  வெளியேற்றப்படுகின்றனர்.  நிறுவனம் வழங்கியிருக்கும் வேலை தன்னை வளப்படுத்த அல்ல என்பதை கரு வடிவில்  உணரும் தருவாயில்  வெளியேற்றப்படும் நடைமுறை வித விதமான முறையில் அரங்கேற்றப்படுவதால்  முதலாளித்துவத்திற்கு  எதிரான  கோபம்  செயலாக  மாறாமல்   மடைமாற்றப்படுகின்றது.

இது போன்றுதான்   தொழிலாளர்களை வழி நடத்த வேண்டும்  இதற்கு கேற்ப சட்டங்களை  மாற்ற வேண்டும்  என்பதுதான் கார்ப்ரேட்  முதலாளிகளின் இலக்காக உள்ளது. இதைத்தான்  தொழில் துவங்குவதற்கு  உகந்த  நாடு  என ஏகாதிபத்திய  நிறுவனங்கள் அறிவிக்கும்  அறிவிப்பினை பாசிச மோடி கும்பல் பெருமையடித்துக் கொள்கின்றது.

ஒரகடம்  தொழிற் பேட்டையை  அடுத்து வல்லம்  ஆகிய இடங்களில்  தனது  ஆலையை  விரிவுப்படுத்தி தனது கொள்ளையைத் தொடரும்   ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட  பன்னாட்டு நிறுவனங்கள்  மேற்குறிப்பிட்ட  காரணங்களால் தொழிலாளர்கள் அமைதியாய் போவதாக நினைத்து மகிழ்ச்சியில்  திளைக்கலாம்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

ஆனால்,  அடிமைத்தனத்திற்கெதிராகவும்  அநீதிக்கெதிராகவும் போராடுவதும்  புரட்சியை நடத்தி முடிப்பதும்  தொழிலாளி வர்க்கத்தின்  இயல்பு எதிர்பாராமல்  நடக்கும்  விபத்து அல்ல  அப்படிபட்ட  நோக்கதிற்காக தொழிலாளி வர்க்கத்தை அறை கூவி அழைக்கின்றது காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி !   கூடவே  தொழிலாளி ஜீவாவிற்கு  பூரணமாக  குணமாகும் வரையில் சிகிச்சையளிக்கவும்  குரல் கொடுப்போம்.


தகவல்: காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

பிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40

0
American-Revolution-pic

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 40

பிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம்

அ.அனிக்கின்

சுதந்திரப் போருக்கு (1775-1783) முன்பு அமெரிக்க பொருளாதாரச் சிந்தனை குடியேற்றங்களுக்கும் தலைமை நாட்டுக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றிய முக்கியமான, சூடான பிரச்சினைக்கு அப்பால் சிறிதளவே முன்னேறியிருந்தது. இது பிராங்க்ளினுக்கும் கூட பெருமளவுக்குப் பொருந்தக் கூடியதே.

சுதந்திரமான அரசு ஏற்பட்டதன் விளைவாக சமூகச் சிந்தனையின் வளர்ச்சிக்குப் புதிய வானங்கள் திறந்து விடப்பட்டன. எனினும் 18-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 19-ம் நூற்றாண்டின் முற்பாதியிலும் அமெரிக்க அரசியல் பொருளாதாரம் குறுகிய பிராந்தியத் தன்மையைக் கொண்டிருந்தது, இங்கிலாந்திலிருந்தும் பிரான்சிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்களையே பெருமளவுக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தது. ஆனால் மேற்கு ஐரோப்பாவின் அதிகமான வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும் பொழுது ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குப் பிறகு தான் அமெரிக்காவில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் “முழு வேகத்தோடு” வளர்ச்சியடைந்தன. எனவே ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோரின் மரபாகிய மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அங்கே போதுமான அடிப்படை இருக்கவில்லை.

இங்கிலாந்தின் மூலச்சிறப்புடைய மரபினரிடம் பாரபட்சமற்ற வர்க்க ஆராய்ச்சியும் கண்டிப்பான சூக்குமமான சிந்தனையும் குறியடையாளமாக இருந்தன. அவர்களுடைய தத்துவம், செயல்முறை ஆகியவற்றின் மீது விமர்சன ரீதியான அணுகுமுறை அமெரிக்காவில் பின்பற்றப்பட்டது. மூலச் சிறப்புடைய மரபினர் முன்வைத்த பொருளாதாரக் கொள்கையில் சுதந்திரமான வர்த்தகமும் மிகக் குறைவான அளவுக்கு அரசின் தலையீடும் முக்கியமான கோட்பாடுகளாக இருந்தன. அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் இருந்த அரசைச் சேர்ந்த முதலாளிகளில் பெரும்பான்மையோருக்கு இவை அங்கீகரிக்க முடியாதவையாகவும் இருந்தன. அங்கே உள் நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாக்க அந்நிய இறக்குமதிகளுக்கு அதிகமான சுங்க வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காப்புவாதிகளின் குரலே மேலோங்கியது. அரசியல் பொருளாதாரத்தின் இந்த செய்முறைப் பிரச்சினையே பொருளாதார எழுத்துக்களின் மையமாக இருந்தது. அமெரிக்கப் பொருளியலாளரான டர்னர் கூறியிருப்பது போல, ”1880-ம் வருடத்துக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரச் சிந்தனை என்பது சுங்கப் பிரச்சினையைப் பற்றிய ஆராய்ச்சியின் துணைப் பொருள் என்பதற்கு மேல் சிறிதும் அதிகமாக நினைக்க முடியாதவாறு இருந்தது”.(1) 

American Revolution 1775 - 1783உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் முன்னோடியும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மிதவாதியும் ஓரளவுக்கு பிஸியோக்கிராட்டுமான பிராங்க்ளினால் கூட அமெரிக்காவில் செல்வாக்குள்ள பொருளாதார மரபை நிறுவ முடியவில்லை. 19-ம் நூற்றாண்டின் முதற் பாதியில் அலெக்ஸாந்தர் ஹாமில்டன் அமெரிக்கப் பொருளாதாரச் சிந்தனையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் பழமைவாதக் கருத்துக்களைக் கொண்ட ராஜியவாதி; அரசாங்கம் பொருளாதாரத்தில் கணிசமான அளவுக்குத் தலையிட வேண் டும் என்ற கருத்தைக் கொண்டவர்; இவர் அமெரிக்காவில் காப்புவாத மரபை நிறுவினார்.

ஹாமில்டனைப் பின்பற்றியவர்களில் ஒருவரான டேனியல் ரேய்மான்ட் அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி முறையாக எழுதப்பட்ட முதல் புத்தகத்தின் ஆசிரியர். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனைகள் என்ற தலைப்புக் கொண்ட அந்தப் புத்தகம் 1820-ம் வருடத்தில் வெளியிடப்பட்டது. ஸ்மித்துக்கும் மூலச்சிறப்புடைய மரபினர் அனைவருக்கும் எதிராகவும் ரேய்மான்ட் தன்னுடைய “அமெரிக்கப் பொருளாதார முறையை” நிறுவுவதற்கு முயற்சி செய்தார் (அவர் தீவிரமான தேசியவாதி). அவர் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தையும் லாபத்தைப் பற்றி ஸ்மித்தின் கருத்துக்களையும் (லாபம் என்பது முதலாளிகளுக்குக் கிடைக்கும் கூலி என்று அவர் கருதினார்) பொருளாதார மிதவாதத்தையும் தாக்கி எழுதினார்.

கடைசியாக, ஹென்ரி சார்ல்ஸ் கேரி வருகிறார். இவர் கொச்சையான அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளில் ஒருவர். அது மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்திலிருந்து வேறுபட்டது. முதலாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரிப்பதையும் முதலாளித்துவம் நீதி நிறைந்தது, வளம் பெறக்கூடியது என்று காட்டுவதையும் உணர்ச்சி பூர்வமான நோக்கமாகக் கொண்டிருந்தது. இதைச் செய்வதற்கு இவர் ஓரளவுக்குத் தகுதியையும் பெற்றிருந்தார்.

படிக்க:
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

பிராங்க்ளினைப் போலவே கேரியின் கருத்துக்களும் அடிப்படையில் வட அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் தனிவகையான கூறுகளோடு நெருக்கமாக இணைந்திருந்தன. எனினும், அமெரிக்காவில் பொருளாதார விஞ்ஞானத்தை நிறுவிய பிராங்க்ளினுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு எழுதியவர் கேரி. இந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில் நாட்டின் தோற்றமும் அதன் சமூக நிலைமைகளும் மாறியிருந்தன. தந்தை வழி விவசாயிகளையும் கைவினைஞர்களையும் கொண்டிருந்த நாடு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகளைக் கொண்ட நாடாக மாறிவிட்டது. கேரியின் நீண்ட வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் மொத்த தொழிலுற்பத்தியின் அளவில் அமெரிக்கா இங்கிலாந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அமெரிக்காவில் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருந்த அபரிமிதமான வாய்ப்புக்களும் உயர்ந்த வளர்ச்சி விகிதங்களும் கேரியின் கருத்துக்களிலடங்கியிருந்த எதிர்கால நம்பிக்கைக்குக் காரணமாகும். முதலாளித்துவ வளர்ச்சிக்கு எல்லையற்ற வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதைப் பற்றி அவர் முழு உற்சாகமும் நம்பிக்கையும் கொண்டிருந் தார். வட அமெரிக்காவில் முதலாளித்துவ வளர்ச்சியின் விசேஷமான நிலைமைகள், முதலாளித்துவ சமூகத்திலிருக்கும் குறைகளும் முரண்பாடுகளும் மறைந்துவிடக் கூடியவை, விசேஷமான கவனத்துக்கு உரியவை அல்ல என்று கேரி நினைப்பதற்குக் காரணமாக இருந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் எதிர்மறையான அம்சங்கள் (தீவிரமான வர்க்கப் போராட்டமும் பொருளாதார நெருக்கடிகளும்) தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டிருந்தன; ஆனால் அமெரிக்காவில் இவற்றைத் தவிர்த்துவிட முடியும் என்று அமெரிக்காவின் தனித்துவம் என்று சொல்லப்படும் தத்துவம் கருதியது. இத்தத்துவத்தோடு கேரியின் பெயர் இணைந்திருக்கிறது. இந்தத் தத்துவம் இன்றளவும் கூட முழுமையாக மறைந்து விடவில்லை.

கேரி ”முக்கியமான அமெரிக்க உறவுகளை சூக்குமமான வடிவத்தில் எடுத்துரைத்தார்; அதிலும் பழைய உலகத்துக்கு எதிரான நிலையில் எடுத்துரைத்தார்…”(2)   என்று மார்க்ஸ் அவரை ஓரளவுக்குப் பாராட்டுகிறார்.

Henry charles carey Political Economy
ஹென்றி சார்லஸ் கேரி.

இங்கிலாந்திலிருந்த சமூக உறவுகள் இயல்பு மீறியவை; ”இலட்சிய வடிவத்திலுள்ள” முதலாளித்துவத்துக்கு (அதாவது அதன் அமெரிக்கப் பதிப்புக்கு) அந்நியமான கூறுகள் அங்கே அவற்றின் வளர்ச்சியைக் குறுக்கிவிட்டன என்று கூறி அமெரிக்க சமூக உறவுகளை இங்கிலாந்தின் சமூக உறவுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவருடைய ஆராய்ச்சியின் பிரதான முறையாக இருந்தது. இங்கிலாந்தில் இன்னும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்சங்கள் இருந்தன; அவை உண்மையிலேயே பலமானவையாக, பெருஞ்சுமையாக இருந்தன. கேரி இவற்றைக் குறிப்பிட்டிருந்தால் அவர் சொல்வது ஓரளவுக்குச் சரியாக இருந்திருக்கும். ஆனால் அவர் வரிகளையும் தேசியக் கடனையும் முதலாளித்துவ வளர்ச்சியில் உள்ளீடான வேறு சில நிகழ்வுகளையுமே “இயல்பான நிலைமைகளைத் திரிப்பதாகக்” குறிப்பிட்டார்.

முதலாளிகளின் வர்க்க நலன்களும் பாட்டாளிகளின் வர்க்க நலன்களும் எதிரானவை என்பதை மறுத்து முதலாளித்துவ சமூகம் வர்க்கங்களின் உண்மையான சங்கமத்தை ஏற்படுத்துகிறது என்னும் ”நலன்களின் ஒத்திசைவு” என்ற தத்துவத்தின் மூலமே அவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஆனால் மிக ஆரம்பத்திலேயே, 19-ம் நூற்றாண்டிலேயே இந்தத் தத்துவம் தவறானதென்று உண்மையான சம்பவங்கள் நிரூபித்தன. 19-ம் நூற்றாண்டின் எண்பதுக்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட வலிமை மிக்க தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் அங்கே நவீன தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தோற்றுவாய்களில் ஒன்றாகும்.

ரேய்மான்ட், ஸ்மித்தைத் தாக்கியதைக் காட்டிலும் அதிகமான தீவிரத்தோடு கேரி ரிக்கார்டோவைத் தாக்கினார். அவர் ரிக்கார்டோவின் தத்துவம் வர்க்கங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துகின்ற ஒன்று என்றார்; சுதந்திரமான வர்த்தகத்தைப் பற்றிய அவருடைய கருத்துக்களும் அமெரிக்க முதலாளிகளைத் தனிப்படத் தாக்குவதாகும் என்று கூறலாம் என்றார். ஆங்கில முதலாளியும் நேர்மையான மனிதரும் மாபெரும் அறிவாளியுமான ரிக்கார்டோ அவருக்கு ஒரு சோஷலிஸ்டாக, கிளர்ச்சிக்காரராக, அழிவில் நம்பிக்கை கொண்டவராகத் தோன்றினார்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மிக முக்கியமான தோற்றுவாய்களில் கேரியின் எழுத்துக்களும் ஒன்று என்பது மார்க்சின் கருத்து. பொருளாதார விஞ்ஞானத்தில் கடன், வாரம், இன்னும் சில பிரச்சினைகளைப் பற்றி கேரி மிகச் சிறப்பான வகையில் சரிவர ஆராய்ந்திருக்கிறார் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். சோவியத் நிபுணரான எல். ஆல்டெர் அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பற்றிய தமது புத்தகத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, ருஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதாரச் சிந்தனையில் கேரியின் செல்வாக்கின் அளவையும் தன்மையையும் எடுத்துக் கூறியுள்ளார்.(3)  

19-ம் நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும், ஆங்கில மற்றும் பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசத்தின் தாக்கத்தின் விளைவாகவும் தொழிலாளி வர்க்க இயக்கம் வளர்ச்சியடைந்ததின் தொடர்பாகவும் அமெரிக்காவில் பொருளாதாரச் சிந்தனையில் முதலாளித்துவ எதிர்ப்புப் போக்குகள் முதன்முறையாகத் தோன்றின. அந்த இளம் முதலாளித்துவ ஜனநாயக அரசில் மக்கள் குடியேறாத நிலங்கள் மிகவும் ஏராளமாக இருந்தபடியால் பழைய உலகமான ஐரோப்பாவைச் சேர்ந்த பல கற்பனாவாதிகளுக்கும் சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் அது “சொர்க்க பூமியாகத்” தோன்றியது.

ராபர்ட் ஓவன் அமெரிக்காவில் தன்னுடைய கம்யூனைத் தொடங்கினார்; பிரெஞ்சுக் கம்யூனிஸ்டான எட்டியேன் கபே அங்கே பல வருட காலம் பிரச்சாரம், செயல்முறை நடவடிக்கைகள் ஆகியவற்றைச் செய்து வந்தார். அங்கேயிருந்த சில கம்யூன்களில் சார்லஸ் ஃபூரியேயின் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிகள் செய்யப்பட்டன. இவற்றின் விளைவாகப் பல புத்தகங்கள் வெளிவந்தன; இவற்றின் ஆசிரியர்கள் கற்பனாவாத சோஷலிசத்தின் பல்வேறு போக்குகளின் கருத்து நிலையிலிருந்து பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்தார்கள். ஐரோப்பாவில் இந்தப் போதனைகளை நிறுவியவர்கள் கூறிய முக்கியமான கருத்துக்களுக்கு அப்பால் இவர்கள் புதிதாக எதுவும் சொல்லவில்லை. (அச்சு நூலில் – பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் அத்தியாயங்களைப் படிக்கவும்).

Robert_Owen_Political_economy
இராபர்ட்டு ஓவன்

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்குத்திசையிலுள்ள புதிய நிலங்களை நோக்கிப் பெருந்திரளான மக்கள் புறப்பட்டார்கள். அது ஒரு இயக்கமாக மாறியது. அது அமெரிக்காவின் சமூகச் சிந்தனையில் ஒரு விசேஷமான கற்பனாவாதப் போக்கை ஏற்படுத்தியது. பெரிய அளவு தொழில் துறை, வங்கிகள், வர்த்தகச் சூதாடிகள் இல்லாத, சுதந்திரமான விவசாயிகளையும் கைவினைஞர்களையும் மட்டுமே கொண்ட ஒரு ஆனந்தமான சமூகத்தைக் கற்பனை செய்தார்கள். அங்கே மக்களை ஒடுக்கும் அரசியல் இயந்திரம் இருக்காது. இத்தகைய கற்பனைகள் சமூக வளர்ச்சியின் யதார்த்தமான போக்குகளுக்கு முற்றிலும் விரோதமான வகையில் இருந்தன; எனவே அவை தோல்வியடைந்தது இயற்கையே. எனினும் அமெரிக்காவில் விவசாயக் கைத்தொழிற் சமூகங்களைப் பற்றிய கற்பனைகள் மிக அதிகமான வரவேற்பைப் பெற்றன.

19-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் அமெரிக்காவில் முதல் மார்க்சிய ஸ்தாபனங்கள் தோன்றின. மார்க்ஸ், எங்கெல்சின் நண்பர்களும் அவருடைய இலட்சியங்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் அவற்றுக்குத் தலைமையேற்றார்கள். அவர்கள் 1848-49 -ம் வருடப் புரட்சிக்குப் பிறகு ஜெர்மனியிலிருந்து தப்பி வந்தவர்கள். அமெரிக்காவில் முதன் முதலாக விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பியவர்களில் முன்னணியிலிருப்பவர்களில் ஒருவர் பிரெடெரிக் ஸோர்கே. இவர்களும் இந்த ஸ்தாபனங்களும் அமெரிக்காவில் மார்க்சிய பொருளாதார போதனையைப் பரப்பத் தொடங்கினர்.

எனினும் பல்கலைக்கழகங்களிலும் பத்திரிகைகளிலும் கல்வித் துறையிலும் அரசியல் துறையிலும் முதலாளித்துவ சித்தாந்தம் ஆதிக்கம் வகித்த காலத்தில் முதலாளித்துவ அமைப்பைக் குறை கூறியவர்களுடைய பலமும் வாய்ப்புக்களும் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கு மிக்க மரபுகள் தோன்றின; இவை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவுக்கும் உலகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) Quoted from J. Bell, A History of Economic Thought, N.-Y., 1953, p. 484.

(2)  K. Marx, Fondements de la critique de l’économie politique, Vol. 2, Paris, 1968, pp. 549-50.

(3)  எல். ஆல்டெர், அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மாஸ்கோ, 1971, பக்கங்கள் 108-126 பார்க்கவும் (ருஷ்ய மொழியில்).

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்

0

யோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த உச்சநீதிமன்ற  வழக்கில் முசுலீம் தரப்பின் வழக்கறிஞர் ராஜீவ் தவான். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. அண்மையில் இந்த வழக்கின் இறுதி வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது. விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இறுதி வாதத்தின் போது, ராமர் பிறந்த இடம் என உரிமை கோரும் இந்துத்துவ அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், நூல் ஒன்றையும் அதனுடன் ஒரு வரைபடத்தையும் சமர்பித்தார். அதை வாதத்தின் போது கிழித்தெறிந்ததாக வைரல் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.  காவி டிரோல்களின் தாக்குதலுக்கு உள்ளானார் ராஜீவ் தவான்.

இதுகுறித்து தனது தரப்பை விளக்கி அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. கூடவே, அயோத்தி வழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார் இந்தக் கட்டுரையில்….

♦ ♦ ♦

ராஜீவ் தவான்.

நான் வாதிட்ட ஒரு வழக்கின் இறுதி முடிவு வரும்வரை அந்த வழக்கு குறித்து பொது வெளியில் பேசுவதில்லை என்பது என் கொள்கை முடிவு. குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாதபட்சத்தில் இதை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என வாதிட்டு ஒரு வரைபடத்தை கிழித்தது ஊடக சர்ச்சையானபோதும் அந்தக் கொள்கையை உடைக்க விரும்பவில்லை. ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில் அதை வெட்டி விட்டு, என்னுடைய கிழித்தெறியும் செயல் சமூக ஊடகங்களில் வைரலானது. அவரிடம் நான் அனுமதி கேட்டதும், அவர் அளித்ததும் அதைக் கிழித்தெறிந்ததும் அதன்பின் அவருடைய கருத்தும் வைரலாகி இருக்க வேண்டும். அது இந்த சர்ச்சையை நிறுத்தியிருக்கும்.

இந்தச் செய்திக்குப் பின்னால், எனக்கு நிறைய சாபங்கள், உயிருக்கு ஆபத்தான குறுஞ்செய்திகளும் வந்தன. ராமரின் பெயரால் வந்த சாபங்களையும் மிரட்டல்களையும் நான் பாராட்டுக்களாக எடுத்துக்கொண்டேன்.

நடுவர்குழு சர்ச்சையின் பின்னணி

திட்டமிடப்பட்டு இறுதி நாளின் வாதத்தில் வெளியான ‘வெற்றிகரமான’ நடுவர் குழு குறித்து எழுத விரும்புகிறேன். அதற்கு முன்னதாக பின்னணியை நினைவுகூர்வோம்.

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பும் பின்பும் அயோத்தி வழக்கில் நடுவர் குழு வழியாக தீர்வு காணும் பல முயற்சிகள் நடந்தன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன் இந்த வழக்கு இருந்தபோதும் அது நடந்தது.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !

இந்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில் இந்துத்துவ முகாம் ‘கோயில் அந்த இடத்தில்தான் கட்ட வேண்டும்’ என்பதில் பிடிவாதமாக இருந்தன. இந்துத்துவ தரப்பினர் அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கோ, அதுதான் ‘ராமர் பிறந்த இடம்’ என்பதற்கோ ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அத்வானி – ஜோஷியின் யாத்திரையால் ஒரு கூட்டு நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த முடிந்ததைத் தவிர, வேறெந்த விளக்கத்தையும் அவர்களால் வழங்க முடியவில்லை.

லால் தாஸ் மற்றும் ஞான் தாஸ்.

1985-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பல சாமியார்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்கள். இந்த அறக்கட்டளை 1989-ம் ஆண்டு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. விரைவில், அயோத்தி பணத்தாலும் அதிகார பலத்தாலும் நிரப்பப்பட்டது. பல கோயில்கள் உருவாக்கப்பட்டன, அவை செல்வத்தை குவித்தன. அங்கு வன்முறையைப் பரப்ப பல குண்டர்களும் தோன்றினார்கள்.

அயோத்தில் உள்ள ஒரு பெரிய கோயிலின் தலைமை குருவாக இருந்த லால் தாஸ், 1993-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் ராம் ஜென்ம பூமி இயக்கத்தை எதிர்த்தவர்; மத நல்லுறவை வலியுறுத்தியர்.

நடுவர் குழுவுக்கு இங்கே இடமிருக்கிறதா?

அனைத்து தரப்பின் ஆதரவோடு எந்தவொரு பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு போற்றத்தக்க வழியாக நடுவர் குழு இருக்கும். நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண உச்சநீதிமன்றம் ஒரு நல்ல முயற்சியை பிப்ரவரி 26, 2019-ம் ஆண்டு முயற்சித்தது. அந்த நிலையில், முசுலீம் தரப்பினர் மேற்கொண்டு நடுவர் குழு தீர்வுக்கு ஒப்புக்கொண்டனர். இந்து தரப்பினரும்கூட (முதலில் நிர்மோகி அகாரா ஒப்புக்கொள்ளவில்லை, பின்பு தனது நிலையை மாற்றிக்கொண்டது) ஒப்புக்கொண்டனர்.

2019, மார்ச் 8-ம் தேதி உச்சநீதிமன்றம் நடுவர் குழுவை நியமித்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா (தலைவர்), ஆர்ட் ஆஃப் லிவிங் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா (தலைவர்), ஆர்ட் ஆஃப் லிவிங் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு.

மார்ச் 10-ம் தேதி நடுவர் குழு முதல் கூட்டத்தை நடத்திய பின்னர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்ப்பு எழுந்தது. அவர் இந்த இடம் இந்துக்களுக்கு போக வேண்டும் என ஏற்கனவே ஒரு கருத்தைக் கொண்டிருந்தார். ஒரு பக்கச் சார்புள்ள நடுவர் மத்தியஸ்தம் செய்யமுடியாது என்றபோதிலும் தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ளவில்லை.

நடுவர் குழுவின் கலந்துரையாடலின்போது, நாங்கள் சேர்ந்திருந்தோம், இந்து தரப்பினர் தங்கள் தரப்பில் பிடிவாதமாக இருந்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த உலேமா இ இந்த் மற்றும் சில முசுலீம் தரப்பினர் சில முன்மொழிவுகளை வைத்தனர். ஊடகங்களில் வெளியாகும் வரை எங்களுக்கு அந்த விவரங்கள் தெரியவரவில்லை.

படிக்க:
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !
ஒற்றுமையின் சின்னம் அயோத்தி !

இரு தரப்பினரிடையே நடக்கும் பேரத்தில், இந்த விசாரணையில் ஒரு வழக்கறிஞராக கலந்துகொள்ள முடியாது எனத் தெளிவாக சொல்லிவிட்டேன்.  சிவில் வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் விசாரிப்பதற்கு பதிலாக, அந்தக் குழு அனைவரிடமும் கருத்து கேட்டது.  ஒரு எம்.பி.யின் தலையீடு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்றாலும், அவர் ”500 மசூதிகள் கோயில்களை இடித்து கட்டப்பட்டவை, அவற்றை மீட்க உடனடியாக நடவடிக்கை வேண்டும்” என்றார்.

அயோத்தியில் ராமர் கோயிலை எழுப்ப ‘கரசேவகர்கள்’ குவித்து வைத்துள்ள தூண்கள்.

ஆயினும், 2019 மே 7-ம் தேதி நீதிபதி கலிஃபுல்லா விசாரணையை நீடிக்கக் கோரினார். உச்சநீதிமன்றமும் ஆகஸ்டு 15-ம் தேதி வரை நீடித்தது. ஆனால், காலக்கெடுவுக்கு முன்னதாக ஜூலை 11-ம் தேதி உச்சநீதிமன்றம் அவரிடம் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்கக் கேட்டது. இந்தக் கோரிக்கை ஜூலை 18-ம் தேதி மீண்டும் எழுப்பப்பட்டது. இதற்கு ஆகஸ்டு 2-ம் தேதி பதிலளித்த நடுவர் குழு, நடவடிக்கைகள் தோல்வியுற்றதென்றும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறியது.

இதன் அடிப்படையில், நடுவர் குழு முடிவுக்கு வந்தது. அதனால் எந்தவொரு முறையான உத்தரவையும் பிறப்பிக்க முடியவில்லை.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் செப்டம்பர்- 18 பிறப்பித்த ஒரு உத்தரவின் மூலம் நடுவர் குழு புதுப்பிக்கப்பட்டது:

“மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கும் மேல்முறையீட்டின் விசாரணை, தடையின்றி தொடரும்.  அதே சமயம், இந்த விவகாரங்களை தீர்ப்பதற்கு தொடர்புடைய தரப்பினர் முன்பு அமைக்கப்பட்ட நடுவர் குழு முன் தீர்த்துக்கொள்ள விரும்பினால், அவர்கள் அதை செய்யலாம். அந்த முடிவை அவர்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கலாம்.

தீர்வுக்கான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், நடுவர் குழு தொடர்பாக இரகசியத்தன்மை காக்கப்படும் என மார்ச் 8, 2019-ம் ஆண்டு மார்ச்-8 வெளியிட்ட உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்”  என்றது அந்த உத்தரவு.

உ.பி. சன்னி வஃக்பு வாரிய  தலைவர் ஸூஃபர் ஃபரூக்கி.

உ.பி. சன்னி வஃக்பு வாரிய  தலைவர் ஸூஃபர் ஃபரூக்கி, பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என சொன்னதாக பொதுவெளியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது.  நாங்கள் முன்னதாகவே ஃபரூக்கி மீது வழக்கு உள்ள நிலையில், ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசாங்கத்தின் அழுத்தம் உள்ளதாக தெரிவித்திருந்தோம்.

மத்தியஸ்தம் செய்யவோ, தீர்த்துக்கொள்ளவோ தனக்குத் தரப்பட்ட அதிகாரம் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காக, இந்த வழக்கோடு தொடர்புடைய விவகாரத்தில் எந்த முடிவெடுக்கவும் முழு அதிகாரத்தையும் வாரியம் தனக்கு தந்துள்ளதாகச் சொன்னார் அவர்.

ஆனால், ஃபரூக்கி ஒரு கட்டத்திற்கு மேலே சென்று, வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவரான ஷகில் அகமது சையதிடம், வழக்கை கைவிட்டு, வாரியத்தின் சார்பில் இருந்த மற்றொரு வழக்கறிஞரான ஷாகித் ரிஸ்வியிடம் வழக்கை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞரை மாற்றும் இந்தக் கோரிக்கையின் தாக்கம், வழக்கில் வாதாடிக் கொண்டிருக்கும்போதே நானும் ஜாபர்யாப் ஜிலானியும் நீக்கப்படலாம் என்பதாகும். ஆனால், இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பின்னர் வாரியத்தின் தலைவரே என்னுடைய வாதங்களுக்காக என்னைப் பாராட்டினார்.

நடுவர் குழுவின் முயற்சிகள் எப்படிப்பட்டவை?

உச்சநீதிமன்ற நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸ்ரீராம் பஞ்சு, நாகலாந்து உள்ளிட்ட பல நடுவர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர்.  மத்தியஸ்தம் தொடர்பாக அவர் நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இதில் அவர் நிபுணரும்கூட.  நடுவர் குழு விவாதத்தின்போது பங்கேற்ற சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார். குழுவின் முறையான நடவடிக்கைகளின்போது இது முறையாக செய்யப்பட்டதா அல்லது முறைசாரா முறையில் செய்யப்பட்டதா என அறியமுடியவில்லை. ஆகஸ்டு 2-ம் தேதிக்கு முன்னர் நடுவர் குழு சந்திப்பில் கலந்துகொண்ட முக்கிய வாதிகளுக்கு அதன்பின் அழைப்பு விடுக்கப்படவேயில்லை.

அக்டோபர் 2-ம் தேதி ‘மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நடுவர் குழு’வின் அங்கீகரிப்பட்ட அதிகாரி சார்பில், சில தரப்பினரின் வழக்கறிஞர்களுக்கு அக்டோபர் 9, 10 தேதிகளில் நடுவர் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள நோட்டீசு அனுப்பப்பட்டது.

படிக்க:
அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !
அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !

இந்தக் கூட்டங்களில் யார் கலந்துகொண்டனர் என்ற விவரம் எங்களிடம் இல்லை, ஏனெனில் இதுவரை அனைவருக்கும் அழைக்கப்பட்ட அழைப்பு இந்த முறை அனுப்பப்படவில்லை.  இந்த நடுவர் குழு, வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், கேமராவிடமிருந்து மட்டுமல்ல அனைத்து தரப்பினரிடமிருந்தும் மறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் நாங்கள் சேர மாட்டோம் என இந்து தரப்பு ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

நிர்வானி அகாராவின் தரம் தாஸ்தாஸ்.

இதில் கலந்துகொண்டவர்கள் என, சன்னி வக்ஃப் வாரியத்தின் ஃபருக்கி, நிர்வானி அகாராவின் தரம் தாஸ்தாஸ் (இவர் வெளிப்படையாக நீதிமன்றத்துக்கு வெளியே மற்ற இந்து தரப்பினரை குற்றம்சாட்டினார்; நீதிமன்றத்தில் தலைமை பொறுப்புள்ளவர் என்றும் சொல்லிக்கொண்டார்), இந்து மகாசபையை சேர்ந்த சக்ரபாணி ஆகிய மூவர் மட்டுமே கலந்துகொண்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.  என் பார்வையில் இந்த நடுவர் குழு அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறினாலும்  அதைச் செய்யாத தரப்பினரைக் கொண்டு மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

2019, அக்டோபர் 14-ம் தேதி, நடுவர்கள், உச்சநீதிமன்றத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள். அச்சுறுத்தல் காரணமாக ஃபரூக்கிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. அந்த நாளில், இந்தியாவின் தலைமை நீதிபதி, உ.பி.யின் கூடுதல் வழக்கறிஞர் முன்னிலையில், சன்னி வக்ஃப் வாரிய தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க அமர்வின் சார்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

விசாரணையின் இறுதி நாளுக்கு முன்பு, நடுவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேலும் ஒரு தகவலை அளித்தனர். அதில் என்ன அளிக்கப்பட்டது என்பது குறித்து தலைமை நீதிபதி வெளிப்படுத்தவில்லை. இது மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் அல்லது என்ன நடந்தது என்பதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

ரகசிய விவரங்கள் கசிந்தது எப்படி?

இந்த இரகசிய விவரங்கள் ஏன் கசிந்தன? இதன் பின்னால் உள்ள சக்திகள் யார்? இரகசியத்தன்மை குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் முகத்தில் அறைந்துள்ளது இந்த கசிவு. இந்த நேரத்தில்தான் இதை வெளியிட வேண்டும் என முடிவு செய்தது யார்?

தீர்ப்பு எதுவாயினும் ‘கலவரம்’ நடத்தக் காத்திருக்கும் காவி கும்பல்!

வருந்தத்தக்க விதமாக, பல ஊடக நிறுவனங்கள், குறிப்பாக இந்த விவரங்களை வைத்திருக்கும் இந்தி டி.வி. சானல்கள் இந்த உண்மையை கூறவில்லை. இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான கட்சிகளுடனான ஒரு வரையறுக்கப்பட்ட பேச்சுவார்த்தை மட்டுமே; அனைத்து இந்து மற்றும் முசுலீம் தரப்பினரால் இது ஆதரிக்கப்படவில்லை என்ற விளக்கத்தை அவை கூறவில்லை.

நடுவர் குழு தொடர்புடையவர்களாலும் அரசியல் தொடர்புடையவர்களாலும் இந்த கசிவு நடந்திருக்கலாம். ஆனபோதும், இந்த பேச்சுவார்த்தை சில தரப்பினருக்கிடையே மட்டுமே நடந்தது என்கிற விளக்கத்தை நடுவர் குழு பதிவு செய்திருக்க வேண்டும்.

சட்டத்தின் எந்த அடிப்படையும் பின்பற்றப்படவில்லை!

எனது கருத்துப்படி, மத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவது’ நடந்தது. அதாவது, இந்தக் கசிவின் விளைவு உண்மையான சட்ட நடவடிக்கையில் ஒரு நிழலை ஏற்படுத்தியது.

இந்த கசிவு வெளியான பின், அனைத்து முசுலீம் மனுதாரர்களும் வெளிப்படையாகத் தீர்வு என சொல்லப்பட்ட இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்து தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங்.

இது சரியான பேச்சுவார்த்தை (இல்லை என்றபோதும்) என்று கருதினால் இந்த கசிந்த ஒப்பந்தத்தை எப்படி சட்ட முடிவாக மாற்ற முடியும்? சிவில் நடைமுறை விதி, ஆணை 23-ன் படி, “ஒரு வழக்கு நிறுவப்பட்ட பின்னர் எந்த நேரத்திலும் வாதி (இந்த வழக்கில் சன்னி வக்ஃப் வாரியம்) அனைத்து பிரதிவாதிகளும் தனது வழக்கை கைவிடலாம் அல்லது நீதிமன்றத்தின் விடுப்புடன் தனது கோரிக்கையின் ஒரு பகுதியை கைவிடலாம்”.

பின்னர், இதில் நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும். மேலும், இது பொருத்தமானது என கருதும் விதிமுறைகளின் அடிப்படையில், வழக்கு மற்றும் உரிமை கோரலின் ஒரு பகுதியை திரும்பப் பெறுதல் அல்லது செலவுகளை செலுத்துவதற்கான உரிமை கோரலை சரி செய்தல் ஆகியவற்றுடன் திரும்பப் பெறுங்கள் எனக் கூறலாம்.

ஆனால், இது திரும்பப் பெறல் அல்ல சமரசம் என்றால், நீதிமன்றம் முடிவு செய்ய அனைத்து தரப்பினரும் கையெழுத்திட வேண்டும். ஆனால் இது மட்டுமில்லை. வேறொரு வகையான வழக்கு உள்ளது, அங்கு ஒரு சிறப்பு நடைமுறை அனைவரையும் பிணைக்கிறது (உத்தரவு 1 விதி 8). இதில் முசுலீம் வழக்கு 4, முசுலீம்களின் பிரதிநிதியாக அனைத்து இந்து தரப்பினருக்கும் எதிரான பிரதிநிதியாக இருந்தது. நீதிமன்றம் அனுமதித்தால் தவிர, அத்தகைய வழக்குகளில் சமரசம் செய்ய முடியாது. ஆணை 23 விதி 3 B இப்படி கூறுகிறது.

சந்தி சிரிக்கும் நீதித்துறையின் ‘நடுநிலை’!

“பிரதிநிதிகள் சார்பான வழக்கு நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டு உடன்படிக்கையோ அல்லது சமரசமோ செய்ய முடியாது. அத்தகைய ஒப்பந்தம் அல்லது சமரசம் நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டுச் செய்தால் அது செல்லுபடியாகாது”

இந்த சமரசம் தவறானது, மதிப்பில்லாதது என சட்டமே சொல்லியிருந்தாலும் ஊடகங்களும் பொதுமக்களும் பொய்களால் நிரப்பப்படுகின்றனர்.

நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கக்கூடிய வழக்கில் நான் எதுவும் சொல்ல முடியாது.  நீதிமன்ற ஆணையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோதமான ‘சமரசம்’ என்பதற்கு தரப்பட்ட முக்கியத்தும் குறித்து மட்டுமே நான் கருத்து தெரிவிக்கிறேன். ‘விவகாரம் சமரசத்தை எட்டியது’ என ஊடகங்கள் கத்துகின்றன. ஆனால், இது வழக்கு இல்லை!

படிக்க:
ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அனைத்து விவரங்களும் பொது தளத்தில் கொண்டுவரப்பட வேண்டிய வழக்காக இது இருக்கும் என நான் நினைக்கிறேன்.


தமிழாக்கம்: கலைமதி
நன்றி: தி வயர்

ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

தி திராவிடர் மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி தருவதற்காக உருவாக்கப்பட்டது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department – ADTWD). இத்துறை மூலம் நிதி ஒதுக்கி மாணவர்களின் அடிப்படை தேவைகள், கல்வி உரிமைகள் முதலானவற்றை நிறைவேற்றித் தர வேண்டியது அரசின் கடமை.

தமிழ்நாட்டிலுள்ள  இத்துறை நடத்தும் பெரும்பான்மையான மாணவர் விடுதிகளில் உள்ள  கட்டிடங்கள், சுகாதார வசதி, உணவு வசதி, குடிநீர் வசதி  போன்றவை இம்மாணவர்கள் விடுதிகளின் அவல நிலைகளுக்கு சாட்சியாக பல வருடங்களாக இருக்கிறது. இவ்விடுதிகளைப் பற்றி ஒரு கட்டுரையை இந்து ஆங்கிலப் பத்திரிகை அக்டோபர் 13-ம் தேதி வெளியிட்டு இருந்தது.

அதில், இத்துறை நடத்தும் சில மாணவர் விடுதிகள் பற்றி தமிழ்நாட்டில் உள்ள  பல்வேறு செயல்பாட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட உண்மைத் தகவல்களைப்  பட்டியலிடுகிறது.

திருச்சி திருவெறும்பூரில் ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காக மாணவர்கள் படும் அன்றாடத் துயரத்தையும், கோடம்பாக்கம் விடுதியில் அளிக்கப்படும் தரமற்ற உணவு பற்றியும், கானங்கரையில் பள்ளியின் விடுதிக்கு கட்டிடமே இல்லாததையும், அதனால் மாணவர்களுக்காக வாங்கப்பட்ட கட்டில்கள் துருப்பிடித்துப் கிடக்கிறது என்றும்  மதுரையில் உள்ள  விடுதிகளில் படிப்பிற்காக எந்தவித உதவியோ மற்றும் சிறப்பு பயிற்சிகளோ இல்லை என்றும் அக்கட்டுரை தெரிவிக்கிறது.

கொங்கடையில் உள்ள பழங்குடியின மாணவர் பள்ளியில் கட்டமைப்பு வசதி இல்லாததால் இப்பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்கள் வேலைக்குப் போவது, இடைநிற்கும் மாணவிகள் திருமணம் செய்து  செல்வது என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் ஒரு தன்னார்வலர் கூறுகிறார். (2018-ல் ஒன்பதாம் வகுப்பில் 49 பழங்குடியின மாணவர்கள் படித்து வந்தனர். 2019-ல் பத்தாம் வகுப்பில் வெறும் 17 மாணவர்கள்தான் படிக்கின்றனர்)

டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் வேலைப் பார்க்கும் ஒரு கல்வியாளர், தான் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தங்கியிருந்த போது உள்ள விடுதியின் மோசமான நிலை இன்னமும் மாறாமல் அப்படியே தொடர்வதாகக் கூறுகிறார். கோடம்பாக்க விடுதியை சேர்ந்த ஒரு மாணவர்  ஒருவர், தான்  அறை எடுத்து தங்குவதற்கு வசதி இல்லாததால் அங்கு தங்கியிருப்பதாகவும், பகுதி நேர வேலையாக கேட்டரிங் வேலைக்குப் போவதாகவும், இவ்விடுதியில் அளிக்கப்படும் உணவு சாப்பிடுவதற்கு மிகவும் மோசமாக இருப்பதால், தான் விடுதியில் சாப்பிடுவதில்லை என்றும் கூறுகிறார்.

வார்டன்களின்  முறையற்ற நியமனம், பரவலான ஊழல்,  கண்காணிப்பு முறைகள் இல்லாதது, சரியான கணக்கீடு இல்லாதது, மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி நிதி மோசடி செய்வது போன்ற முறைகேடுகளே விடுதிகளின் மோசமான நிலைமைகளுக்கு காரணம் என்று செயல்பாட்டாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

இவ்விடுதிகளின் மாணவர்கள் பட்டினியாகக் கிடந்து பள்ளிக்குச் செல்வதும், தண்ணீருக்காக அவதிப்படுவதும், அழுக்கடைந்த கட்டிடங்களிலும் வசிப்பதும், அதன் கழிப்பறை, செப்டிங் டேங்குகளாக இருப்பதும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பள்ளிகள் முதல் முதுநிலை கல்லூரிகள் வரை  ATWD-ன் கீழ் இயங்கும் விடுதிகளின் எண்ணிக்கை 1,675 இருக்கிறது. இதில்  மொத்தம் 1,25,602 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் பள்ளி மாணவர்களுக்கு உணவிற்காக மாதம் ஒன்றுக்கு ரூ. 900 ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 30 (ஒரு வேளை உணவிற்கு  ரூ. 10) இதுவே கல்லூரி மாணவர்களுக்கு என்றால் ஒரு மாதத்துக்கு ரூ. 1000 ஒதுக்கப்படுகிறது. சோப்பு மற்றும் எண்ணெய்க்காக  பள்ளி மாணவர்களுக்கு ரூ 50-ம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ 75-ம் ஒதுக்கப்படுகிறது. ஒருவேளை உணவிற்காக பத்து ரூபாய் செலவில் மாணவர்கள் எவ்வாறு சத்துள்ள உணவை உண்ண முடியும்?

மாணவர்களின் ஒரு வேளை உணவிற்காக அரசு ஒதுக்கும் இந்த பத்து ரூபாயும் கூட, முழுமையாக போய்ச்சேருவதில்லை. துறை அதிகாரிகள் தொடங்கி விடுதி வார்டன் உள்ளிட்டு சமையலர் வரையில் தங்களது பங்கை ஒதுக்கிக்கொண்டது போக எஞ்சிய தொகைதான் விடுதி மாணவர்களுக்கு செலவிடப்படுகிறது.

எவ்வாறு ஆரோக்கியமாக படிப்பில் கவனம் செலுத்த முடியும்? இப்படி இம்மாணவர்களின் உணவு செலவிற்காக  இந்த அரசு நிதி ஒதுக்கவதில் இருந்தே இம்மாணவர்களைப் பற்றிய இந்த அரசின் கண்ணோட்டம் வெளிப்படுகிறது.

மாணவர்கள் இதை அனைத்தையும் சகித்துக் கொண்டு கல்வி கற்க வேண்டும்  இல்லையெனில் அவர்கள் விடுதியில் இருந்தும், ஏன் கல்வியில் இருந்தும் வெளியேற வேண்டியதாக உள்ளது.

ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளின் நிலைமை அடிப்படை வசதிகள் கூட  இல்லாமல்  இருக்கிறது. அவ்வப்போது எங்காவது ஒரு இடத்தில்  விடுதிக்கு பெயிண்ட் அடிப்பதை தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்விடுதிகளின் அவலநிலையை இத்தனை வருடங்களாக மாற்ற முடியாத அரசோ, ADTWD தன் விடுதிகளை முழுவீச்சில் சீர்படுத்துவதாக பொய் பேசி வருகின்றது.

படிக்க:
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

நான்கு மாதத்திற்கு முன்பு துடியலூர் அருகேயுள்ள வெள்ளைகிணறு பகுதியில் உள்ள ஐ.டி.ஐ. மாணவர்கள் தங்கும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரத்திற்கு எதிராக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு அதிகபட்சமாக அவ்விடுதியின் சமையல்காரர் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டார். மனு அளிப்பதன் மூலம் விடுதிகளின் அவலநிலை மாறப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவமே சாட்சி.

பொதுவில் அரசு விடுதிகள் அனைத்திலுமே இவ்வகையான குறைபாடுகள், போதுமான நிதிஒதுக்கீடுகள் இல்லாத நிலை இருப்பினும் அவற்றுடன் ஒப்பிடுகையில் ஆ.தி.நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளின் நிலை அதற்கும் கீழானதாகத்தான் இருந்து வருகிறது. இன்றளவும் ஊரும் சேரியும் பிரிந்து கிடப்பதைப் போல இத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளை பாரபட்சமாகத்தான் அரசே நடத்தி வருகிறது என்பதையும் மறுக்கமுடியாது. இது அரசே கடைபிடிக்கும் நவீனத் தீண்டாமை.

இவ்விடுதிகளின் நிலைமைக்கு எதிராக  மாணவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்களினால் தற்காலிக தீர்வுகூட எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. தற்காலிக தீர்வுகளைத்  தாண்டி, மாணவர்கள் தங்கள் கல்வி உரிமையை நிலைநாட்ட வேறு விதத்தில் போராட வேண்டிய சூழலை அரசே  ஏற்படுத்துகிறது. ”எத்தனை முறைதான் போராடுவது” என்று மாணவர்கள் சலித்துக்கொள்வதாலோ, ”ஒன்றும் செய்துவிடமுடியாது” என ஒதுங்கிச் செல்வதாலோ தீர்வு கிட்டாது.

இதற்கு பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் தங்களுடைய சுகாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக நடத்திய போராட்டம் நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.

பிரேசில் பழங்குடியினர் தங்களுடைய வாழ்வுரிமையை பாதிக்கும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல கட்டமாகப் போராடி வருகின்றனர். பிரேசில் அரசை எதிர்த்து பல போராட்ட வடிவங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிரேசில் அரசு அம்மக்களை வஞ்சிக்கும் விதமாக, அம்மக்களின் சுகாதார  உரிமையை பறிக்க முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரேசில் பழங்குடியினரின்  மத்தியில் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத்திடமிருந்து வந்த கியூப மருத்துவர்களை கியூபா நாட்டிற்கு  திரும்ப அனுப்பவதற்கான திட்டத்தை செயல்படுத்திவருகிறது.

பிரேசில் பழங்குடியினருக்கு அளிக்கப்படும் மருத்துவ நிதிகளை குறைப்பது, சுகாதாரத் துறையை தனியாருக்கு அனுமதிப்பது போன்ற பிரேசில் அதிபர் பொல்சனாரோ கொண்டுவந்த சுகாதார கொள்கையை எதிர்த்து, பிரேசில் பழங்குடியினப் பெண்கள் ஆயிரக்கணக்கானவர்கள்  வில், அம்புகளோடு சுகாதார அமைச்சகத்தை நோக்கிப் பேரணி சென்றனர். பேரணியின் இறுதியாக 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் அரசின் சுகாதார அமைச்சகத்திற்குள் புகுந்து சுகாதார அமைச்சர்  உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தோடும் பழங்குடியினர்களின் சுகாதார உரிமைகளைப் பாதிக்கும் கொள்கையை கைவிட வேண்டும்  என்று அமைச்சகத்தின் உள்ளேயே  தங்கிப் போராடினர். அமைச்சகத்தின் உள்ளேயும், வெளியேயும்  தங்களுடைய பராம்பரிய நடனங்களை ஆடினர். பெண்களால் மட்டுமே நடத்தப்பட்ட இப்போராட்ட வடிவத்தை கண்டு பீதியடைந்த பிரேசில் சுகாதார அமைச்சகம்,  பழங்குடியினத் தலைவர்கள் உடனான பேச்சுவார்தைக்குப் பிறகு பின்வாங்கியது.

படிக்க:
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்

மாணவர்களும் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும்  நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது.  பிரேசில் பழங்குடியினப் பெண்களின்  போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது. கல்வித்துறை அலுவலகத்தை மாணவர்கள் ஆக்கிரமித்து விடாப்பிடியாக போராடுவதன் மூலம்தான் விடுதிகளின் அவலநிலையை மாற்ற முடியும். அதற்கு முதற்கட்டமாக  புரட்சிகர மாணவர் அமைப்புகளில் ஒருங்கிணைய வேண்டியது அவசியமாகிறது.


– பரணிதரன்.
செய்தி ஆதாரங்கள் :thehindu | bbc | apib

உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !

0

ந்துத்துவ ஆட்சியில் முசுலீம்கள் எத்தகைய ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஃபர்கான் அலி மற்றுமொரு உதாரணம் ஆகியிருக்கிறார்.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள அரசாங்க தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஃபர்கான் அலி. கடந்த வாரம் வழக்கமாக பள்ளி காலை வணக்கக் கூட்டத்தில் புகழ்பெற்ற கவிஞர் முகமது இக்பாலின் ‘லப் பே ஆத்தி ஹய் துவா’ என்ற பாடலை குழந்தைகள் பாடினர். இந்தக் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியது.

ஃபர்கான் அலி

உடனே காவி கும்பல், இந்தப் பாடல் மதராசாக்களில் பாடப்படுவது என்றும் ‘இந்தியாவுக்கு எதிரானது’ என்றும் பரப்பத்தொடங்கினர். விசுவ இந்து பரிசத் புகார் அளித்ததன் பேரில் உடனடியாக தலைமை ஆசிரியர் எவ்வித விசாரணையும் இன்றி நீக்கப்பட்டார்.

பள்ளி மதிய உணவில் ரொட்டிக்கு, தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியான போது, அதை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப் போட்டது ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு. இந்தச் செய்தி கண்டனத்துக்குள்ளான பின், இதை விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது காவி அரசு.

ஆனால், காவி கும்பலின் புகாருக்கு உடனடியாக வினையாற்றும்விதமாக, எவ்வித விசாரணையும் இன்றி ஃபர்கான் அலி நீக்கப்பட்டுள்ளார். ‘மதரசா’, ‘இந்தியாவுக்கு எதிராக’, ‘ஃபர்கான் அலி என்ற இசுலாமிய பெயர்…’ இவை மட்டுமே ஒருவரை எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப் போதுமானவையாக உள்ளன. காவி அரசாங்கத்தின் அதிரடி தீர்ப்பு இது.

படிக்க:
ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

உண்மையில், ஃபர்கான் அலி பள்ளி குழந்தைகளை மதராசாவில் பாடப்படும் பாடலை பாடச் சொன்னாரா? கவிஞர் முகமது இக்பால், குழந்தைகளுக்காக 1902-ம் ஆண்டு இயற்றிய பாடல் இது. ‘இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வர கடவுளிடம் வேண்டுவது’ போல இயற்றப்பட்டது இந்தப் பாடல். இந்தப் பாடல் பல புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடப்பட்டு வந்தது, பாடப்படுகிறது.

கவிஞர் முகமது இக்பால், இந்திய தேசியவாதியாக இருந்தவர். இவர் தீவிர இந்திய தேசியவாதியாக இருந்தபோது இவர் இயற்றியதே ‘சாரே ஜஹான் சே அச்சா’ (1904) என்ற புகழ்பெற்ற பாடல். சுதந்திர தினத்தின்போதும், குடியரசு தினத்தின் போதும் இந்தப் பாடல் இசைக்கப்படாமல் இருந்ததில்லை. இத்தகைய பின்னணி உள்ளவரின் பாடலை பாடக்கூடாது என்பது ‘முசுலீம்- இசுலாம்’ இவற்றின் மீது காவிகளுக்குள்ள ஆழமான வெறுப்புணர்வையே காட்டுகிறது.

கவிஞர் முகமது இக்பால்

ஃபர்கான் அலி, கவிஞர் இக்பால் அகமதுவின் பாடலை மட்டும் பாடவில்லை. இந்து கடவுளான சரஸ்வதி துதிக்கும் பாடலையும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்ற முழக்கத்தையும் பள்ளியில் காலை வணக்கக்கூட்டத்தில் வழக்கமாகக் கூறி வந்துள்ளனர் பள்ளி குழந்தைகள்.

இவை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஃபர்கான் அலி இசுலாமியர் என்பதாலேயே பணி நீக்கம் செய்யப்பட்டார். இது கண்டனத்துக்குள்ளான நிலையில், அந்தப் பள்ளியில் பணி ஒதுக்காமல், வேறொரு பள்ளிக்கு பணி மாற்றி உத்தரவிட்டுள்ளது ஆதித்யநாத் அரசாங்கம்.

“நானும் அந்தப் பள்ளியில் சேருவேன்” என்கிறார் ஃபர்கான் முன்பு பணியாற்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவர்.

“அவர் ஒரு சிறந்த ஆசிரியர். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். அவர் அனைவரிடத்திலும் அன்பாக நடந்துகொள்வார். எங்களை அவர் அடிக்கவே மாட்டார்” என்றும் அந்த மாணவர் ஃபர்கான் குறித்து பேசுகிறார்.

படிக்க:
நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

“என்னுடைய குழந்தைகள் மாஸ்டர் சாகேப் தன்னுடைய கைக் காசைப் போட்டு காய்கறிகளை வாங்கி வருவார் என சொல்வார்கள். அவர் பணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாள் காலையிலும் குழந்தைகள் எழும்போது அழத் தொடங்கி விடுகிறார்கள்; பள்ளிக்குச் செல்ல மறுக்கிறார்கள்” என்கிறார் கவிதா. இவருடைய மகன் இரண்டாவது வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

மற்றொரு பெற்றோரான பூனம், வட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் ஒன்றை அளிக்க இருப்பதாக தெரிவிக்கிறார். “நாங்கள் படித்தவர்கள் இல்லை. ஆனால், அவரை பள்ளிக்கு அழைக்க என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம்” என்கிறார் அவர். இவருடைய மகன் இரண்டாவது படிக்கிறார்.

இளம் வயதில் போலியோ தாக்குதலால் கால் பாதிப்புக்குள்ளானவர் அலி. இதனால் இளம் வயதிலேயே அமைதியாக புத்தகங்களுடன் பொழுதை கழிப்பார் அலி என்கிறார் அவருடைய தந்தை இர்ஃபான் அலி.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள அரசாங்க தொடக்க பள்ளி.

“அவன்தான் என்னுடைய மருத்துவ செலவை கவனித்துக் கொள்கிறான். அவனுடைய ஆறு தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்கிறார் அவர்.

“எங்களுக்கெல்லாம் பெரியவர் என்பதால் எங்களை அவர் கவனித்துக்கொள்வார். அவருக்கு குழந்தைகள் என்றால் பிரியம் அதிகம். குழந்தைகளும் இவரிடம் உடனடியாக ஒட்டிக்கொள்வார்கள். இதனால்தான் பள்ளியிலும் குழந்தைகளிடம் அவர் நல்லபடியாக நடந்துகொள்கிறார்” என்கிறார் ஃபர்கானின் தங்கை கஜாலா.

“குழந்தைகளை அவர் நிற்கச் சொன்னால், உடனே நிற்பார்கள். காரணம் பயத்தினால் அல்ல, அன்பினால். அவர் நீக்கப்பட்டதிலிருந்து பள்ளியில் மாணவர்களின் வருகை குறைந்துபோயிருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு ஆசிரியர் 150-200 மாணவர்களை கட்டுப்படுத்தியது பெரிய விசயம்” என்கிறார் கடைநிலை ஊழியர் பிரேம் நாராயணன்.

ஃபர்கான் நீக்கப்பட்ட அடுத்த நாள் பள்ளிக்கு ஐந்து மாணவர்களே வந்திருந்தனர். தன்னுடைய குழந்தைகள் பள்ளிக்குப் போவதற்கு மறுப்பதாகச் சொல்லும் கவிதா, “இந்த நிர்வாகம் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது. நாங்கள் ஏழைகள் என்பதற்காக எங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை” என்கிறார்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதில் மோசடி செய்து பச்சிளம் குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. காவி அரசாங்கம், குழந்தைகள் காப்பாற்ற முனைந்ததற்காக மருத்துவர் கபீல் கானை பணி நீக்கி, இன்னமும் பணி வழங்காமல் அலைக்கழிக்கிறது. அவர் முசுலீம் என்பதற்காகவே பழிவாங்குகிறது ரவுடி சாமியார் அரசாங்கம். அதேபோலத்தான் தற்போது தலைமை ஆசிரியர் ஃபர்கான் அலிக்கும் நடந்துகொண்டிருக்கிறது.


– அனிதா
நன்றி: ஸ்க்ரால், இந்தியன் எக்ஸ்பிரஸ்.

நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு

ணு மின்சாரத்திற்கு மாற்றாக சூரிய ஒளி மின்சாரம் பேசப்பட்டுவரும் தருணத்தில், அதனை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களில் முன்னணித் தொழில் நுட்பமாக இருக்கும் ஒன்றில் கேட்மியம் டெல்லுரைடு என்ற வேதிப் பொருளால் ஏற்படும் நோய்கள் (இடாய் இடாய் நோய்) பற்றியும், அதனால் எற்படும் சூழல் சீர்கேட்டையும் நிச்சயம் “சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு” பேசும்.

… அணுசக்திக்கு எதிராக சூரிய ஒளி மின்சாரம் பிரபலமாகப் பேசப்படும் வேளையில், எப்படி நாம் பெறப்போகும் (?) மெல்லிய ஃபிலிம் தொழில் நுட்பத்தின் சூரிய ஒளி மின்சாரம் என்பது வெளிநாடுகளில் நட்டத்தை சந்தித்து வருகிறது; குறைந்த மின்மாற்றுத் திறன் கொண்டது; சுற்றுச்சூழல்/சுகாதார சீர்கேட்டை அதிகம் ஏற்படுத்துவது; அதிக நிலப்பரப்பு தேவைப்படுவது; அதிக அளவில் பாழ்படுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு உபகரணங்களுக்கான சந்தையை இங்கே ஏற்படுத்தி அவர்களுக்கு அதிக இலாபமும், இங்குள்ள தொழில் முனைவோர்க்கு பாதிப்பும் ஏற்படுத்துவதாக இருப்பதைக் கணக்கில் கொண்டால், மாற்றுத் திட்டங்கள் (Alternate) கூட பன்னாடு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் சாதகமாக இருப்பதைக் கணக்கில் கொண்டு, எந்தத் தொழில் நுட்பத்தை நம் நாட்டில் கொண்டு வந்தாலும் அதன் முழு சாதக பாதகங்களை மக்களுக்கு முழுமையாகத் தெரியப்படுத்தி, அதன்படி விரிவான விவாதம் மேற்கொண்டு, மக்களைக் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே மக்களுக்கு (குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு) சாதகமாக அமையும். அந்த வகையில் இந்த நூலின் பங்கு அளவிடற்கரியது. (நூலின் முன்னுரையிலிருந்து…)

… வால்மார்ட்டும், மான்சான்டோவும்தான் 60 சத சூரிய மின் தகடு விற்பனையில் இருக்கின்றனர் என்றபோது ஆய்வுக்குப் புதிதாக ஆர்வம் பிறந்தது. தமிழக அரசு, மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு எப்படி மேற்குலக வணிக “அரசர்களுக்குத் ” தமிழக மக்களின் வளத்தை விற்கின்றது என்பதும், இதில் தமிழகத்தின் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களைப் பிழிந்து, உலகச் சந்தையில் தடுமாறிக் கொண்டிருக்கும் மேற்குலக அந்நிய முதலாளிகளைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்பதும் புரிந்தது..

தமிழகத்தின் நிலத்தை மட்டுமல்ல. நீரையும், மக்கள் நல்வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் மான்சான்டோவும், வால்மார்ட்டும் காலூன்றிக் கடை விரிக்க வழி திறந்திருக்கும் அரசின் கொள்கைதான் தமிழக அரசின் சூரிய மின்சக்திக் கொள்கை என்பதனை மக்களின் ஆய்வுக்கு வைப்பது எங்கள் கடமை. அதனை நிறைவேற்றுகிறது இந்த நூல். (நூலாசிரியரின் உரையிலிருந்து…)

தமிழக சூரிய ஒளி மின் கொள்கை நாம் கண்டறிய வேண்டியவை :

♦ சூரிய ஒளி மின் கொள்கையின் காரணமாகக் தமிழகத்தின் தொழில் மற்றும் வணிகத் துறையும், மின்சார வாரியமும், தமிழகத்தின் நிலப்பயன்பாட்டு முறையும், சுற்றுச் சூழலும் பெரும் மாற்றங்களைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசின் இன்றைய மின் பகிர்மான நடைமுறையானது தமிழகத்தை இரண்டு வகை சமூகங்களாகப் பிரித்துள்ளது. மின்சார வளம் கொண்ட சமூகமாக சென்னைப் பகுதியையும், மின்சாரப் பற்றாக்குறை மிகுந்த பகுதிகளாக மாநிலத்தின் பிற பகுதிகளையும் அது வகைப்படுத்தியுள்ளது. இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ள இரண்டு வகை சமூகங்களை அரசின் சூரிய ஒளி மின் கொள்கையானது எவ்வகையில் பாதிக்கும் என்பதைக் கண்டறிய வேண்டும்.

படிக்க:
இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?

இந்தியாவிலேயே அதிக நட்டத்திற்குள்ளான மின் வாரியம் என்ற பெயரைத் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது. அதன் மின் பகிர்மானக் கட்டமைப்புகளைத் தனியாரிடம் விற்பதனை வழிவகை செய்யும் மத்திய அரசின் கடன் மறு சீரமைப்பு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் கையொப்பமிட்டுள்ளது. 2013 டிசம்பருக்குள் மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களின் மின் பகிர்மானக் கட்டமைப்புகளைத் தனியாரிடம் விற்பதைச் சாத்தியப்படுத்தும் முன் வரைவு ஆய்வுகளை மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தாக வேண்டும் என்பது இந்த உடன்பாட்டிற்கான அடிப்படை நிர்ப்பந்தகளில் ஒன்றாகும். எனவே, தனியார்மயமாக்கப்படும் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் மின்சாரவாரியத்தின் மீது சூரிய ஒளி மின் கொள்கையானது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனை நாம் கண்டறிய வேண்டியுள்ளது.

♦ சூரிய ஒளி மின் கொள்கையால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 3000 மெகாவாட் நிறுவுதிறனை அடைய 15,000 – 20,000 ஏக்கர் நிலங்கள் அவசியமாகும். நிதி நிலையில் பின் தங்கியுள்ள தென் தமிழகத்தின் இந்த நிலங்கள் சூரிய மின் நிலையங்களை அமைக்கப்போகும் நிறுவனங்களின் கைகளில் செல்லவிருக்கிறது. இதனால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளையும் நாம் கண்டறிய வேண்டும்.

♦ சூரிய ஒளி மின் கொள்கையினை நிறைவேற்றிடத் தேவைப்படும் மின் உற்பத்தி உபகரணங்களால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனை உலகின் பிற நாடுகளில் இது குறித்து நடந்துவரும் விவாதங்களில் இருந்து அறிகிறோம். இந்த பாதிப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் நாம் கண்டறிய வேண்டியுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் வலையக் கட்டமைப்பு (Grid) தோராயமாக 11,000 மெகாவாட்டை அதிகபட்சமாகக் கையாளுகிறது.இது காற்றாலையின் நிலையற்ற மின்சாரத்தையும் உள்ளடக்கியதாகும். அத்துடன் சூரிய மின்சாரம் என்ற 3000 மெகாவாட் நிலையற்ற மின்சாரமும் சேர்ந்து கொண்டால், மின்வலைக் கட்டமைப்பில் நிலையான மின்சாரத்தின் அளவைவிட நிலையற்ற மின்சாரத்தின் அளவு கூடிப்போகும்; அல்லது சமமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தொழில்நுட்ப ரீதியாகக் கையாள முடியுமா என்பது குறித்தும் அறிந்தாக வேண்டும்.

♦ பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தில் இன்று நிலவும் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை. எனவே, இந்தக் கொள்கையினால் ஏற்படப் போகும் பிற மாற்றங்களை ஆய்வது தேவையாகிறது. (நூலிலிருந்து பக்.48-50)

நூல் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு
ஆசிரியர் : சா. காந்தி

வெளியீடு : சமூக விழிப்புணர்வு பதிப்பகம்,
68, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 94885 76166

பக்கங்கள்: 138
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 10

மாயா மட்டும் நோய்வாய்ப்படாதிருந்தால்….

… என்றும் போல் இன்றும் எனது பாடங்களுக்கான திட்டத்தை மேசையில் வைத்து, இதன் பல அம்சங்கள். மனப்பாடமாகத் தெரியும் என்ற போதிலும் அடிக்கடி பார்ப்பேன்.

குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை எனது முழு இசைக் குறியீடுதான் வழி நடத்த வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லை, ஏன் ஒரு வேளை இது அவசியமற்றதாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எனது முழு இசைக் குறியீடு குழந்தைகளின் உண்மையான உணர்வுகள், அக்கறைகள், புதியவற்றை அறியும் ஆர்வங்கள் முதலியவற்றை பிரதிபலிக்கும், இவர்களுக்கு மகிழ்ச்சிகரமான பள்ளி நாளை வழங்கும், இவர்களின் முன்னோக்கிய அணி நடையை வழிநடத்தும், சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையின் அடிப்படையில் அவர்களை வளர்க்கும். எனது பூர்வாங்க யோசனைகளுக்கும் குழந்தைகளின் விருப்பங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றினால் அப்போது நான் தேர்ந்தெடுத்த முறையின் குறைகள் உடனே வெளிப்படும். இது குழந்தை வளர்ப்பின் புறவயப் பொருளாக குழந்தைகளையும் அகவயப் பொருளாக என்னை நானேயும் ஆழமாக அறிந்து கொள்ள அடிப்படையைத் தரும்.

நான் கரும்பலகையில் கணிதப் பாடத்திற்கான கடைசிக் கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். தாழ்வாரத்திலோ ஏற்கெனவே பள்ளி நாள் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேன்மேலும் வலுத்து வரும் குழந்தைக் குரல்களில் ஒரு சில தனிப்பட்ட வார்த்தைகள் மட்டும் காதில் விழுகின்றன.

“பத்து முக்கோணங்கள்!”

“இல்லை, எட்டுதான், என்ன பந்தயம்!”

“இங்கே என்ன வார்த்தை வருமென நான் கண்டு பிடித்து விட்டேன்!”

“இது என்ன பெரிசு! நானும் தான் கண்டு பிடித்து விட்டேன்!”

“சொல்!“

“விண்வெளி!”

“இல்லை, வானொலி!”

“இங்கேயுள்ளதை என்னால் வாசிக்க முடியும்:111, 111.”

“இந்த எழுத்துகளைக் கொண்டு நான் மூன்று வார்த்தைகளை உருவாக்கி விட்டேன்.”

“இது என்ன பெரிசு! ஐந்து வார்த்தைகளை உருவாக்கு, அப்போது பெருமையடித்துக் கொள்ளலாம்.”

“இதோ பார், எவ்வளவு சுவாரசியமான கணக்கு!”

“இதை நாம் கணிதப் பாடத்தில் போடுவோம்.”

“இந்த எண்கள் ஏன் சதுரங்களுக்குள் எழுதப்பட்டுள்ளன என்று சொல்லட்டுமா?”

“வேண்டாம், நானே கண்டுபிடிப்பேன்!”

சிலர் தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையை விட்டு அகல, புதிதாக சிலர் வந்து, இதுவரை நடந்த விவாதத்தைத் திரும்ப வேறு விதங்களில் நடத்துகின்றனர்.

இனிய மின்சார மணி ஒலிக்கிறது.

“குழந்தைகளே, வகுப்பறையினுள் வாருங்கள்! சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

கணிதப் பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

“குழந்தைகளே, வணக்கம்!”

“வணக்கம்!”

“என்ன புது விஷயங்கள்?”

மாயா: “எனக்கு ஜூரமாக உள்ளது. அம்மா விடமாட்டேன் என்றாள். ஆனாலும் நான் கேட்காமல் வந்துவிட்டேன்.”

நான்: “ஜூரமா? இப்போது உனக்கு எவ்வளவு ஜூரம் என்று பார்ப்போம்.”

ஆசிரியரே! நீங்கள் வகுப்பறையில் எப்போதும் முதலுதவிப் பெட்டியை வைத்திருங்கள், குழந்தைகளின் நோய்களைப் பற்றி, குறிப்பாகத் தொற்று நோய்கள் பற்றியும் இவை எப்படித் தோன்றுகின்றன என்பது பற்றியும் அறிந்திருங்கள்! ஆசிரியரே! நீங்கள் முதலுதவி மருத்துவராயும் இருக்க வேண்டும்.

மாயா: (பயந்தபடியே) “எனக்கு ஜூரம் இருந்தால் நீங்கள் என்னை வீட்டிற்கு அனுப்பி விடுவீர்களா?”

நான்: “பார்ப்போம். நீ அம்மா சொல்வதைக் கேட்க வேண்டும்!”

“நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா?” என்று அவள் கேட்கிறாள்.

“சொல்!” என்கிறேன் நான். அவள் ஓடி வருகிறாள்.

“ஆனால் காதில் தான் சொல்வேன்” என்று அவள் கூறுகிறாள்.

நான் குனிய, அவள் என் காதருகே வருகிறாள். ஆனால் ஒன்றும் பேசாமல் மௌனம் சாதிக்கிறாள்.

“இல்லை, அப்புறம் சொல்வேன்” என்று சொல்லி விட்டுத் தன்னிடத்திற்கு ஓடுகிறாள். ,

லேலா: “நான் ஒரு புதிய படம் வரைந்திருக்கிறேன். இதை வகுப்பறையில் மாட்டலாமா?”

நான்: “உனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் மாட்டலாமே.”

என் வரைவகுப்புக் குறியீட்டின் இரண்டாவது பகுதிக்கு வருகிறேன்: “நாம் இன்று என்ன படிக்கப் போகின்றோம் தெரியுமா?”

நான் என்னென்ன கணக்குகள், பயிற்சிகளை அவர்களுக்குத் தயாரித்துள்ளேன் என்று குழந்தைகள் கேட்டதும், விரைவிலேயே பாடத்தைத் துவங்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குத் தோன்றுகிறது.

“முதலில் மாயாவிற்கு எவ்வளவு ஜூரம் என்று பார்ப்போம்.”

அவள் வெப்பமானியை என்னிடம் நீட்டுகிறாள். அதில் 38.3°C உள்ளது. உடனே மருத்துவரைக் கூப்பிட வேண்டும், பெற்றோர்களை வரவழைக்க வேண்டும்!

மாயா பதட்டப்படுகிறாள்: “வீட்டிற்குப் போக மாட்டேன்!”

“இரண்டு, மூன்று நாட்கள் படுத்திருந்தால் சரியாகி விடும். பின் பள்ளிக்கு வரலாம்” என்று நான் சாந்தப் படுத்துகிறேன்.

குழந்தைகளும் பதட்டப்பட்டு, அவளை சாந்தப்படுத்துகின்றனர்:

“நோயோடு விளையாடக் கூடாது!”

“நான் உனக்கு போன் செய்து, வகுப்பில் நடந்ததை எல்லாம் சொல்வேன்.”

“மாயா, புத்திசாலிப் பெண்ணாயிரு!”

மருத்துவர் வந்து சிறுமியை அழைத்துச் செல்கிறார்.

“பார்த்தீர்களா, மாயா எப்படிப்பட்டவள், அவள் உங்கள் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள், பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள்! எனவே தான் ஜூரம் இருந்தும் இங்கு வந்திருக்கிறாள், உங்களுடன் சேர்ந்து இருக்க ஆசைப்படுகிறாள்!”

இராக்ளி: “அவளைப் பார்த்தால் பாவமாயுள்ளது!”

சூரிக்கோ: “அவளுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாகி விடும்!”

நான்: “வாருங்கள், பாடத்தைத் தொடருவோம்!”

ஆனால் ஏற்கெனவே 15 நிமிடங்கள் கழிந்து விட்டன. எனவே, நான் திட்டமிட்டிருந்ததில் 1/3 பங்கை (கவன உணர்வை வளர்க்கும் பயிற்சிகள்) சுருக்கமாக நடத்துகிறேன். எஞ்சிய பகுதி திட்டமிட்டபடியே நடக்கிறது.

“பாடம் எப்படி இருந்தது?” என்று பாட இறுதியில் நான் கேட்டதற்கு லாலி பின்வருமாறு பதில் சொன்னாள்:

“மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமான தாயிருக்கும். நான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு இப்போது எப்படியுள்ளது என்று தெரிந்து கொள்ள முடியுமா?”

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

நாங்கள் எல்லோருமே மாயாவிற்காகக் கவலைப்பட் டோம் என்று தெரிந்தது.

இதோ மருத்துவர் வருகிறார்.

“மாயாவிற்கு எப்படியுள்ளது?”

“பயம் ஒன்றுமில்லை. அவளுக்கு ஜலதோஷம். அம்மா வந்து அழைத்துச் சென்று விட்டாள். பாடத்தை விட்டுச் செல்வதற்காக அவள் அழுது கொண்டிருந்தாள்.”

குழந்தைகள் அமைதியடைந்தனர். முதல் 10 நிமிட இடைவேளை திட்டமிட்டபடியே உற்சாகமாகக் கழிந்தது. கரும்பலகையிலிருந்த கணக்குகளைப் போட்டோம். அடுத்து தாய் மொழிப் பாடத்தைத் துவக்குகிறேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்து

டந்த 2019 அக்டோபர் 17 அன்று தமிழகத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.எம்.)யின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி, “வரும் அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100-ஆவது ஆண்டாகும். இதை ஓராண்டுக் காலத்துக்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது” என்று கடந்த அக்டோபர் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு, அக்டோபர் 17 அன்று விழாக்களும் நடந்துள்ளன.

சீதாராம் யெச்சூரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.

***

ந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.

அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.

எஸ்.ஏ. டாங்கே மற்றும் சிங்காரவேலர்

வெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய அறிவுத்துறையினரில் சிலர் மகத்தான சோசலிசப் புரட்சியால் உந்தப்பட்டு கம்யூனிசப் புரட்சியை இந்தியாவில் சாதிக்க வேண்டுமென்ற உணர்வோடு கம்யூனிசக் கோட்பாடுகளைப் படிப்பதும் பரப்புவதுமாக இருந்தனர். ரஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே, ரஷ்ய போல்ஷ்விக் கட்சித் தோழர்களுடனும் தோழர் லெனினுடனும் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தங்கியிருந்த எம்.என். ராய், ரஷ்ய போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு மெக்சிகோவில் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்கினார். பின்னர், அவர் லெனின் தலைமையிலான கம்யூனிச அகிலத்தின் கிழக்கத்திய நாடுகளுக்கான பிரிவில் அங்கம் வகித்து, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ முயற்சித்தார்.

கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு, அகிலத்தின் நிர்வாகக் குழுவானது ஒரு துணைக் கமிட்டியை உருவாக்கியது. அது, காலனியாதிக்கத்திலிருந்து கிழக்கத்திய நாடுகளின் விடுதலைக்காக, அப்போதைய சோசலிச சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருந்த அஜர்பெய்ஜானின் தலைநகரான பாகூ நகரில், “கிழக்கத்திய மக்களின் விடுதலை”க்கான முதலாவது மாநாட்டை செப்டம்பர் 1920-ல் நடத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே அக்.17,1920-ல் அப்போதைய சோவியத் சோசலிசக் குடியரசில் சுயாட்சிப் பிரதேசமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தானின்) தலைநகர் தாஷ்கண்ட் நகரில் எம்.என்.ராய் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் –  எம்.என். ராய், அவரது துணைவியார் ஈவ்லின், அபானி முகர்ஜி, அவரது துணைவியார் ரோசா, அகமது ஹசன் எனப்படும் முகம்மது அலி, முகம்மது ஷபீக் சித்திகி, எம்.பி.டி. ஆச்சார்யா ஆகிய 7 பேர் – கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கும் கூட்டத்தை நடத்தினர்.

படிக்க:
மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி (The Indian Communist Party) என்று கட்சிக்குப் பெயரிடப்பட்டது. ஷபீக் செயலாளராகவும், எம்.என். ராய் துருக்கேஸ்தானில் உள்ள கட்சிக் கமிட்டியின் செயலாளராகவும், ஆச்சார்யா தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அகிலத்தின் முடிவுகளைச் செயல்படுத்துவது, கட்சித் திட்டத்தை இந்திய நிலைமைகளுக்கேற்ப தொகுத்து எழுதி முடிப்பது, கட்சி உறுப்பினர் விதிமுறைகளைத் தொகுத்து எழுதுவது, கட்சியை அகிலத்துடன் இணைக்க ஆவன செய்வது – என்று தீர்மானித்த இந்தக் கூட்டம், சர்வதேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

இந்தியாவில் அப்போது “கிலாபத்” இயக்கத்தைச் சேர்ந்த பலர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை முறியடிக்க அகண்ட இஸ்லாம் (Pan-Islam) சித்தாந்தத்துடன், ஆப்கானைக் கடந்து மேற்கு ஆசியாவுக்கும் துருக்கிக்கும் சென்று, அங்கிருந்து படை திரட்டி பிரிட்டிஷாரை வீழ்த்த முற்பட்டனர். “முகாஜிர்”கள் என்றழைக்கப்பட்ட இத்தகையோர் இடைத் தங்கலாக தாஷ்கண்ட் நகரில் இருந்தபோது, அவர்களிடம் அன்றைய சோவியத் சோசலிசக் குடியரசின் அதிகாரிகளும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தினர். இதில் எம்.என். ராயும் அவரது துணைவியாரும் முக்கிய பங்காற்றினர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய முஸ்லிம்களிடம் பேசி அவர்களையும் கம்யூனிசத்துக்கு ஆதரவாளராக்கினர்.

எம்.என். ராய்

தாஷ்கண்ட் நகரில் இந்திய ராணுவப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பலர் இணைந்து பயிற்சி பெற்றனர். முகம்மது ஷபீக், முகம்மது அலி முதலான முன்னாள் இளம் முகாஜிர்கள் எம்.என். ராய் மூலம் கம்யூனிஸ்டுகளாக உயர்ந்தனர். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முகாஜிர்களில் சிலர் மாஸ்கோவுக்குச் சென்று, “கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக”த்தில் சேர்ந்து கம்யூனிச சித்தாந்தத்தைக் கற்றறிந்தனர். அவர்களில் சிலர் இந்தியாவுக்கு இரகசியமாகத் திரும்பி வந்து, உழைக்கும் மக்களை கட்சிக்கு அணிதிரட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, பெஷாவர் சதி வழக்கிலும் கான்பூர் சதி வழக்கிலும் கைதாகி, சிறை – சித்திரவதைக்கு ஆளாகினர்.

எம்.என். ராய் அப்போது மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் பொறுப்பை ஏற்றிருந்ததால், அவர் அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் பங்கேற்றார். எம்.என். ராய் குழு பிரிட்டிஷ் காலனியாட்சியின் அடக்குமுறை காரணமாக இந்தியாவில் செயல்பட முடியவில்லை. இருப்பினும் கம்யூனிச அகிலமானது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக அல்லாமல், இந்தியாவின் ஒரு கம்யூனிசக் குழுவாக எம்.என். ராய் குழுவை அங்கீகரித்ததோடு, மூன்றாவது காங்கிரசில் இக்குழுவிடம் கலந்தாலோசனைகளையும் நடத்தியது.

இதேபோல, அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள இந்திய அறிவுத்துறையைச் சேர்ந்த விரேந்திரநாத் சட்டோபாத்தியாயா தலைமையில் பூபேந்திரநாத் தத், முகம்மது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் ஒரு குழுவாக இணைந்து, போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டி நாட்டை விடுதலை செய்ய விழைந்தனர். அமெரிக்காவிலும் கனடாவிலுமுள்ள சீக்கியர்கள் “கெதார் கட்சி”யில் இணைந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியதோடு, சோசலிச ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு கம்யூனிசப் பாதையில் நாட்டை விடுதலை செய்ய முயற்சித்தனர்.

மேலும், 1921 முதல் 1924 வரையிலான காலத்தில், போல்ஷ்விக் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்த கம்யூனிச குழுக்கள் மீது 3 சதி வழக்குகள் – பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு – ஆகியன தொடுக்கப்பட்டு முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். முசாபர் அகமது, நளினி குப்தா, சௌகத் உஸ்மானி, டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் கம்யூனிச இயக்கம் செயல்பட முடியாமல் பெரும் பின்னடைவுக்குள்ளானது.

படிக்க:
நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism
♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!

இதன் பின்னர், டிசம்பர் 25,1925-ல் கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவரது முயற்சியால் கம்யூனிஸ்டுகளின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில்தான் பல்வேறு கம்யூனிச குழுக்கள் ஒன்றிணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தன. அளவில் சிறியதாக, ஏறத்தாழ 500 பேர் பங்கேற்ற இம்மாநாடுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டதை அறிவிப்பதாக இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்கண்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது முறையாக இயங்கவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும். பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.

எஸ்.வி. காட்டே (இடது பக்கம் நிற்பவர்)

“ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும், அது நீடித்து நின்று செயல்படவேயில்லை. ஏனெனில், அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.

“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்” என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.

“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார். அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்; மற்றபடி, இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம். சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்” என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Frontline , Volume 29 – Issue 09, May 05-18, 2012)

இந்த வரலாற்று ஆதாரங்களின்படி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும். சி.பி.எம். கட்சி வறட்டுத்தனமாகவும் வீம்புக்காகவும் 1920-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுவது தவறானதும், அணிகளைக் குழப்புவதுமாகும்.

மறுபுறம், கட்சித் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் வகுப்பதாகத் தீர்மானித்த எம்.என். ராய் குழுவானது, இறுதிவரை அதனைச் செயல்படுத்தவேயில்லை. அதற்கு மாறாக, 1921-ல் அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சியின் மாநாட்டின் போது, எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் தங்களது கொள்கை விளக்க அறிக்கையை அனுப்பி வைத்து, பிரபல உருது கவிஞர் ஹசரத் மொஹானி மூலமாக முழு விடுதலையுடன் கூடிய சுயராஜ்யத்தை காங்கிரசின் லட்சியமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் காந்தி – காங்கிரசுத் தலைமை இதை நிராகரித்தது.

அதன் பிறகு எம்.என். ராய், ஏகாதிபத்தியமானது காலனிய நீக்கக் (decolonisation) கொள்கையைப் பின்பற்றுவதாகவும் – அதாவது, ஏகாதிபத்தியமானது காலனிய நாடுகளில் தொழில்மயமாக்கத்தைச் செய்வதன் மூலம் காலனிய நாடுகள் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருப்பதை பலவீனப்படுத்தி வருவதாகவும், காலனியாதிக்கத்தை படிப்படியாகக் கைவிடும் சீர்திருத்தப் பாதையில் செல்வதாகவும் மார்க்சிய – லெனினியத்துக்கே எதிரானதொரு கோட்பாட்டை முன்வைத்தார். 1928-ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் இந்தக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நவீன காவுத்ஸ்கியாக எம்.என். ராய் மாறிவிட்ட போதிலும், பிற்காலத்தில் அவரது கருத்தை எல்லா வண்ணத் திரிபுவாதிகளும் ஏற்றுக்கொண்டு வெவ்வேறு மொழிகளில் வியாக்கியானம் செய்தனர். பின்னாளில் எம்.என். ராய் கம்யூனிச சித்தாந்தத்தையே கைவிட்டு, முற்போக்கு மனிதநேயம் பற்றி உபதேசிக்கத் தொடங்கினார்.

1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை.

இந்தியாவில் ‘கம்யூனிஸ்ட்’ கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளாகிவிட்டன. இந்திய கம்யூனிச இயக்கமானது, வலது, இடது சந்தர்ப்பவாதங்களில் மாறி மாறி விழுந்து இந்தியப் புரட்சிக்குத் தொடர்ந்து துரோகமிழைத்துள்ளதை இந்த 95 ஆண்டு கால வரலாறு விளக்குவதோடு, எண்ணற்ற படிப்பினைகளையும்  வழங்கியுள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எதிர்மறை படிப்பினைகளாக இவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சரியான, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி உருவாவது காலத்தின் கட்டாயம்.

அய்யனார்

மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !

துரை மாவட்டம், ஜல்லிக்கட்டுப் புகழ் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவன் சரவணக்குமார். வயது 14. அவனுடன் படிக்கும் தேவர் சாதியைச் சேர்ந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவனால் நடு முதுகில் பிளேடால் கொடுரமாக வகிரப்பட்ட சம்பவம் அண்மையில் செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பானது.

9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் மனதில் ஆதிக்க சாதி மனப்பான்மை கொழுந்துவிட்டு எரிந்துள்ளது என்பதை அறிந்தபோது மனம் பதறியது. நடந்தது என்ன என்பதை அறிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், எம்.டி.ராஜசேகரன்  மற்றும் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பெரியசாமி, முருகன் ஆகியோர் 15-10-2019 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பாலமேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் உள்ளது மறவர்பட்டி கிராமம். சுமார் 600 குடும்பங்கள் வாழும் சிற்றூரில் 60 அருந்ததியர் குடும்பங்கள் காலனியில் (சேரி) வசிக்கின்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்த சரவணக்குமாரை அங்கே சந்தித்தோம். அவனுடைய அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.

மாணவர் சரவணகுமாரின் குடும்பம்.

நடந்த சம்பவத்தைப் பற்றி சரவணக்குமாரிடம் கேட்டோம். “அன்றைக்கு (11-10-2019) சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் பஸ்ஸுக்காக நின்னுக்கிட்டிருந்தோம். என்னோட நண்பன் மோகன் ராஜோட புத்தகப் பையை எங்க கூடப் படிக்கிற மகா ஈஸ்வரன் ஒளிச்சு வச்சுட்டான். பையக் குடுடா சொங்கிப் பயலேன்னு சொன்னேன். மகா ஈஸ்வரன் என்கிட்ட வந்து ‘ஏண்டா சக்கிலிய கூ… மவனே உனக்கு அவ்வளவு திமிரா’ ன்னு திட்டி, அடிச்சு கையில வச்சிருந்த பிளேடால முதுகில கிளிச்சுட்டான். சட்டை ரெண்டா கிழிஞ்சிட்டு, ரத்தமா கொட்டுச்சு. நான் கதறி அழுதேன். மகா ஈசுவரன் வெட்டிட்டு ஓடிட்டான். அங்க இருந்தவங்க என்னைய போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கு அப்புறம் என்னோட அம்மா வந்தாங்க. போலீஸ்காரங்க எங்க அம்மாவோட என்னைய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சாங்க ” என்று கூறினான்.

சட்டையைக் கழற்றச் சொல்லிப் பார்த்த போது கழுத்திலிருந்து அடி முதுகு வரை முதுகுத்தண்டு மேல் நீளமாக கிழிக்கப்பட்ட காயம் இருந்தது. பிளேடு என்பதால் பையன் தப்பித்தான். இதுவே கத்தியாக இருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அதன் பிறகு சரவணக்குமாரின் அம்மா ராஜாத்தி பேசினார். “இதுக்கு முன்னாடியும் ரெண்டு தடவை இதே பையன் என் பையனோட சண்டை போட்டு காயத்தை ஏற்படுத்தி இருக்கான். நான் அதைப் பெரிது படுத்தவில்லை. கேட்கப் போனால் நம்ம மேல தான் பழியப் போடுவாங்க. அவங்க மேல்சாதிக்காரங்க… ஒன்னா சேந்துக்கிட்டு அடிக்க வருவாங்க என்று பயந்து தான் நான் கேட்கவில்லை. என்னோட வீட்டுக்காரர் வெளியூருல பெயிண்டிங் வேல பாக்குறார். எனக்கு இவன் ஒரே மகன். இவனாச்சும் படிக்கட்டுமேன்னுதான் பல பிரச்சினைகளுக்கு மத்தியில படிக்க வைக்குறோம். இப்பகூட இந்த சம்பவத்துக்குப் பிறகு சமரசத்துக்கு வந்தாங்க. காயத்துக்கு மருந்துபோட 500 ரூபா கொடுக்குறோம்னு சொன்னாங்க. சமுதாயத் தலைவர்கள் வந்து சமரசமாகப் போகச் சொல்லி வற்புறுத்தினாங்க. நாந்தான் முடியாதுன்னுட்டு போலீசுல புகார் கொடுத்தேன். அதுக்கும் பல மிரட்டல்… இந்த பிரச்சினை இத்தோட முடியட்டும்னு தான் நான் புகார் கொடுத்தேன்” என்று கூறினார்.

காலனி பகுதியில் 60 குடும்பங்கள் இருந்தாலும் எல்லோரும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப் போகும் அளவுக்கு அங்கே சாதி ஒடுக்கு முறை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் என்ற அருந்ததியர் இளைஞரை தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் என்கின்றனர். கட்சிகள் மற்றும் ஊர் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லோரும் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். எல்லோராலும் ஒடுக்கப்படுகிறவர்கள் காலனி மக்கள்.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

இவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமுதாயக் கூடத்திற்குப் போகக்கூடாது. செருப்பு அணிந்து மேல் சாதியினர் தெருவில் நடக்கக்கூடாது. கோவில் திருவிழாவில்கலந்துகொள்ளக்கூடாது. சொந்த நிலம் கிடையாது. சுடுகாடு இல்லை. தெரு விளக்கு இல்லை. குடி நீர் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. அரசின் எல்லா பொது நலத் திட்டங்களும் இவர்களுக்கு கிடைத்தால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. யாரிடமும் கேட்க முடியாது. கொத்தடிமைகளைப் போல இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாலமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். இருபாலர் பள்ளி. ஆசிரியர்கள், அலுவலர்கள் 40 பேர் வரை பணியாற்றுகின்றனர். ஜான் பாக்கியம் செல்வம் தலைமை ஆசிரியராக உள்ளார். பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களிடையே சாதி ஆதிக்க மனப்பான்மை பரவிக்கிடப்பதாகவும் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் சுதந்திரமாகக் கல்வி கற்க முடியவில்லை என்றும் தேவர் சாதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்தார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த அலங்காநல்லூர் முருகன் என்பவரும் நம்முடைய களப்பணியில் நம்மோடு இணைந்து வந்தனர். பள்ளி மாணவர்களிடையே சாதி வெறி மட்டுமல்லாமல் கஞ்சா போன்ற போதைப் பழக்கமும் பரவலாக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிரட்டுவது, பொருட்களைப் பறிப்பது, சைக்கிள் டயரை கத்தியைக் கொண்டு கிழிப்பது, மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களை கேலி செய்கின்ற அளவுக்கு ஆதிக்க சாதி மாணவர்களில் ஒரு கும்பல் சீரழிந்துள்ளனர். ஆசிரியர்களால் மட்டும் அல்ல பெற்றோர்களாலும் தட்டிக்கேட்க முடியாத நிலை உள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பாலமேடு காவல் நிலையத்தில் குற்ற எண்:156/19 ஆக சட்டப் பிரிவுகள் 294(b) 324 IPC R/w 3(1)(r) 3(1)(s)3(2)(va) POA Act வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பள்ளியிலிருந்து கல்விச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பாலமேடு காவல் நிலையம் வாடிப்பட்டி தாலுகா சரகத்துக்கு உள்பட்டது. இது பற்றி கேட்டதற்கு அங்கிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.

( முதல் தகவல் அறிக்கையின் நகல் )

மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய  மாவட்டங்கள் சாதிக்கொடுமைக்குப் பேர்போன மாவட்டங்கள். பட்டியல் இன மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் அடிமைகளைப் போல வாழ்ந்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் அருந்ததி வகுப்பைச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர் சமைத்தால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று இடை நிலைச் சாதியினர் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த கொடுமை அரங்கேறியது.

மதுரை, தேனி மாவட்டங்களில் சில கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் சாதி அடிப்படையில் பிள்ளைகள் பிரித்து வைக்கப்பட்டு பாடம் கற்றுத் தரப்படுகிறது. உசிலம்பட்டி அருகே வடுகபட்டி என்ற ஊரில் செருப்பு அணிந்து சென்ற தலித் மாணவனின் தலையில் செருப்பைச் சுமக்க வைத்து இழிவு படுத்தினர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் பட்டதாரி தலித் இளைஞன் கால் மேல் கால் போட்டு தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்ததினால் “ஏண்டா  நாயே, எம்ம்புட்டு திமிர் இருந்தா நான் வரும்போது கால் மேல கால்போட்டு உக்காந்திருப்ப” என்று சொல்லி கத்தியால் தலையில் வெட்டப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் தலித் மக்கள் தேவர் சாதியினர் முன்பு பேருந்தில் உட்கார்ந்து செல்ல முடியாத நிலைமை இப்போதும் இருந்துவருகிறது.

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
♦ கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

உசிலம்பட்டி அருகே பூதிப்புரம், பன்னியான் போன்ற ஊர்களில் சாமி கும்பிடுவதில் தலித்களுக்கு காலங்காலமாக இருந்து வந்த உரிமைகள் கூட தற்போது இளைய தலைமுறைகளால் மறுக்கப்பட்டு வருகிறது. இது போன்று எண்ணற்ற கொடுமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சாதிக்கட்டமைப்பைப் பேணிக் காக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அடிமை அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தமிழ் நாட்டின் ஊர்கள் தோறும் “ஆயுத பூஜை” ஊர்வலங்கள் நடத்திவருகிறது.

பா.ஜ.க. அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை – 2019 , பள்ளிக் கல்வியை முடிக்கும் முன் மாணவர்கள் ஆறு பொதுத் தேர்வுகளைக் கடக்கச் சொல்கிறது. அல்லது தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வியைத் திணிப்பது அல்லது கல்வியை விட்டே வெளியேற்றுவது என்பதில் தீவிரமாக உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகள் தமிழக அரசுக்குத் தெரியாமலே பா.ஜ.க.அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கூடங்களில்  நிலவிவரும் சாதிக் கொடுமைகளைத் தடுக்க முன்வருவார்கள் என்று நம்பமுடியுமா ? இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை சக்திகள் பெரும்பான்மையுடன் செல்வாக்குப் பெற்றுள்ள ஐ.ஐ.டி, ஜே.என்.யு. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கூட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நிர்வாகத்துடன் இணைந்து அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். ஜனநாயகவாதிகளின் ஒன்றுபட்ட கடுமையான போராட்டத்தின் மூலமாகவே இதனை முறியடிக்க முடியும் என்பதை அனைவருக்கும் முதலில் உணர்த்த வேண்டியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கள ஆய்வு :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 73393 26807 

தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது !

போலிசு நிலையத்தில் கைதிகளை விசாரிப்பதைப்போல் நம்மிடம் அலட்சியமாகப் பேசினார் முதிர் இளைஞர் ராஜ். டீ.எஸ் ஸ்போர்ட்ஸ் என்ற இளைஞர்களுக்கான விளையாட்டு ஆடைகள் தயாரிக்கும் சிறு நிறுவன முதலாளி. சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில் பிரபரல சரவணா ஸ்டோருக்கு  பின்புறம். பரபரப்பான இடம். மூன்று மாடித் தளத்தில் கீழே விற்பனை – தயாரிப்புக்கூடமும், மேலே கிளாத் பிரிண்டிங் மற்றும் டிசைனிங் பிரிவும் வைத்துள்ளார்.

நாங்கள் சென்றபோது முதலாளி ராஜ் கணினியில் கிளாத் பிரிண்டிங் செய்வதற்கான டிசைனிங் வேலையில் மூழ்கியிருந்தார். “உங்களைப் போன்ற குறுந்தொழில்கள் கொள்ளை நோய் தாக்கிய நோயாளிபோல் நலிந்து வருகின்றனவே காரணம்” என்ன என்றோம்.

டீ.எஸ் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ராஜ்.

அதற்கு அவர், “நலிஞ்சிப் போச்சா… குறுந்தொழிலா… நோய் தாக்கிடுச்சா… அப்பிடியா… ஏன்?” என்று நக்கலாக நம் கேள்வியையே தனித் தனியாக பிரித்து மேய்ந்தார். போலீசு மாதிரியே நம்மை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தார். நாம் ஒரு அடி பின்வாங்கி ஒதுங்கி நின்றபடி… அவருடைய போலீசு உடல்மொழியை பார்த்து அவரிடம் எப்படி பதில் வாங்குவது என்று தவித்தோம்… எங்கள் நிலையைக் கண்டு மனம் இரங்கினார்.

பிறகு இரகசிய குரலில், “சார் தொழில் தெரியாதவன், மொதலாளின்னு ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது. தெரியாத தொழிலுக்கு மொதலாளி ஆவுறவன்தான் அழிஞ்சிப்போவான். என்னைய எடுத்துக்குங்க…. எனக்கு தெரியாததுன்னு எதுவும் கிடையாது…. பிச்சை எடுக்க சொன்னாக்கூட ஒழுங்கா செய்வேன்…. சோகமா அய்யோன்னு நமக்கு பைசா போட்றவன பாக்கணும்…. அப்பதான் பாக்கறவன் பிச்ச போடுவான்…. நீ ஏனோ, தானோன்னு பார்த்தா, கேட்டா எவன் போடுவான்….. செய்யற தொழில்ல நேர்மை வேணும்…. சின்சியரா இருக்கணும். இப்படி இருந்தா எந்தத் தொழிலும் நலிவடையாது. அதுக்கு நானே உதாரணம்.

இதுக்கு முன்ன ஹெட்கான்ஸ்டபிளா ஒர்க் பண்ணேன். நான் நேஷனல் லெவல் ஸ்போர்ட்ஸ்மேன் வேற. அங்க வேலை புடிக்கல. ஸ்போர்ட்ஸ்மேன் என்றதால விதவிதமா ஸ்போர்ட்ஸ் டிரஸ் போடுவேன். அப்புறம் அதையே அரம்பிச்சிடலாம்னு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்.

ஸ்கிரீன் பிரிண்ட் வேலை செய்யும் விஜய்.

இங்க தொண்ணூறு பர்சன்ட் நான் தொழிலாளிதான்… பத்து பர்சன்ட்தான் மொதலாளி. கடையில எவன் வேலைக்கு வர்லனாலும் டான்னு ஒன்பது மணிக்கு கடைய தொறந்துடுவேன்… கஸ்டமர் நாள் முழுக்க இல்லன்னாலும், இரவு ஒன்பது மணி வரைக்கு கடையில இருப்பேன். வேல செய்யற ஆள் ஒரு  இடத்துல  இல்லன்னா அந்த இடத்துல போய் நான் நிப்பேன்.. துணி மூட்டயகூட தூக்குவேன்… லேபர்கூட லைன்ல நின்னு துணிக்கு பிரிண்டிங் பண்ணுவேன்… நானே கம்ப்யூட்டர்ல டிசைனிங்கும் பண்ணுவேன். அப்பத்தான் வேலைக்காரனுங்க பயப்படுவானுங்க… இந்த ஆளுக்கு நாம முக்கியம் கிடையாது… நாம இல்லன்னாலும் வேல நிக்காதுனு பதறிக்கினு நமக்கு முன்ன வந்து நிப்பான்.

படிக்க :
♦ இந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை
♦ மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை

தொழிலாளின்னா யாரு? கூலி வாங்குறவன். மொதலாளிக்கு லாபம் சம்பாதிக்கிறது அவன் வேலை இல்ல…. அவன் நம்மள பாத்துப்பானு நாம போனா… நம்ம பிச்ச எடுக்க வேண்டியதுதான்….. பிறகு மொதலாளி நலிஞ்சிட்டாரு… நொடிஞ்ச்சிட்டாருனு… சொன்னா அது வேஸ்ட்.

ஜி.எஸ்.டி வந்து தொழில் பெருசா பாதிக்கல… ஒவ்வொரு தொழிலையும் பலபேர் பங்குப்  போட்டுக்கறதாலே மொத்தத்துல தொழில் குறைஞ்சிப்போச்சி… விலவாசியெல்லாம் தனியா எதுவும் ஏறல…. பொதுவா.. எல்லா விலயும் பத்து பர்சென்ட் ஏறியிருக்கு… ஒருபக்கம் சரக்கு வெலய ஏத்தி வாங்குனா… நம்மசரக்க அதுக்குமேல ஏத்தித்தானே விக்கிறோம்… அதுதானே வியாபாரம்.

விளையாட்டிற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

முன்ன ‘வாட்’ என்ற பேர்ல வரி இருந்தது… இப்ப “ஜிஎஸ்டி”னு பேர் மாத்திக்கிட்டான். தொழில் பண்ணா வரிக் கட்டித்தான் ஆவணும்… அப்பப்ப வர்ற பிரச்சனைய சமாளிச்சித்தான் ஆவணும்… நீ விக்கிற பொருளுக்கு மட்டும் ஜிஎஸ்டி கட்டுனா போதும். வாங்குன பொருளுக்குக் கட்டண ஜிஎஸ்டிய கழிச்சி ரிட்டர்ன் எடுக்கலாமே… அந்த வசதி ஜிஎஸ்டியில இருக்கு இல்லையா? அது தெரியாதவங்க… ஜிஎஸ்டிய ரொம்ப கொழப்புறாங்க….

எப்பவும், வெலவாசி ஏறிடிச்சி…. வியாபாரம் படுத்திடுச்சி…னு வியாபாரிங்க சொல்லிக்கினுத்தான் இருப்பாங்க… இது வியாபாரத்தில ஒரு தந்திரம். தொழில் நொடிஞ்சதுக்கு ஜி.எஸ்.டி.-ய காட்றது தப்பு… தொழில் தெரியாதவனெல்லாம் மொதலாளி ஆவணும்னு நினைக்கிறான்…பாரு…! அதனால வந்த வினை…”

ஸ்கிரீன் பிரிண்ட் செய்வதற்குத் தேவையன மை.

நாம் இடைமறித்துப் பேசினோம் : “செய்யிற தொழிலுக்கு பர்மிஷன் கொடுக்கிறது யாரு? அரசுதானே… அரசு பணத்த தூக்கிக்கினு வெளிநாட்டுக்கு ஓடுறவனெல்லாம் பெரிய மொதலாளின்னு சொன்னது அரசுதானே! சொன்னது மட்டுமில்ல, அவனுக்கு அரசு மானியமும்; வங்கிக் கடனும் கொடுத்தது. ஆனா சிறு மொதலாளி சொந்த பணத்த தொழில்ல போட்டு நட்டமாகி வீட்டுச் சொத்த வித்து நடுத்தெருவுல நிக்கிறான். ஆனா, அரசு நம்ம நாட்டு மொதலாளினு அவன சொல்லல… கொள்ள அடிச்சிட்டு ஓடுனவனத்தான் பெரிய மொதலாளியினு நமக்கு கைக்காட்டுது”. என்றோம்.

“சார் உலகத்தப் பத்தி பேசாதீங்க…. என் தொழில பத்தித்தான் நான் பேச முடியும்… நான் ஏன் முன்னேறலன்னு என் காரணத்தத்தான் நான் சொல்ல முடியும். இருக்கிறத எல்லாம் முடிச்சிப் போடாதீங்க….. நான் அதுக்கு வர்ல…” என்றார்.

“சரி, உங்க தொழில் ஓ..ஓஹொன்னு செழித்து வளர்ந்துள்ளது என்று உங்கள் பேச்சிலிருந்து தெரிந்துக்கொண்டோம். ஏறியுள்ள விலைவாசியை சமாளித்து பெரும் வெற்றியாளராக நீங்கள் வளர்ந்த இரகசியத்தை மற்றவர்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். இவ்வளவு காலம் தொழில் செய்யிறீங்க? வீடு, கார், பங்களான்னு… நீங்க சம்பாதிச்ச வெவரத்தை கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றோம்.

ஸ்கிரீன் பிரிண்ட் செய்யப் பயன்படும் துணிப்பலகை.

அவர், தீடிரென ரிவர்சாகி “சார் நான் பணம் இருந்தா ஏன் சார் மூத்திர சந்துல  கடைய தொறந்து நடத்திகிட்டிருக்கப் போறேன்…. சாதாரணமாகவே இந்த பின் பக்கம் எவனும் வர மாட்டான். நாறுது, கப்படிக்குதுனு இந்த இடத்த கிராஸ் பண்ணும்போதே மூக்க மூடிக்குவான்…. சுத்தமா தொழில் இல்லன்னு கடனுக்குத்தான் சார் மெஷின வாங்கிப்போட்டேன். அதுக்குக் கொடுத்த செக்க ஹானர் பண்ண முடியல….. இப்ப அது பவுண்ஸ் ஆவுது… சரக்கு வித்தப் பணமும் வரல. இருந்தாலும்… அந்தக் கத வேற…. தொழில் தெரியாதவனெல்லாம் புகுந்துத்தான் இந்தத் தொழிலே நாசமாப்போச்சு….

நான் இன்னிக்கும் கடைக்கு தேவையான சாமான் மூட்டைகள, நாலு பொட்டியினாலும் சளைக்காம தனியா தூக்குவேன்; இன்னிக்கு வரைக்கும் அப்படித்தான் தொழில் செய்யறேன். ஆனா, இப்ப வர முதலாளிங்க அவன் கைப்பைய தூக்கவே நாலு ஆளு வைக்கிறான்… அவன்தான் பெரிய முதலாளியின்னு அவன் பின்னாடி ஒடுறானுங்களே சார்? எப்படி சார்…?” என்றார் கண்கள் விரிய…

முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், முரட்டு தங்கச் சங்கிலி… அணிந்து பவுண்ஸர் மாதிரி தோற்றம் தரும் அந்த முன்னாள் தலைமைக் காவலர் கடைசியில் பிரியத்துடன் நம்மை வழியனுப்பி வைத்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்

தில்லை கோயிலை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற கோரியும், கணக்கில்லாமல் வசூல் வேட்டை நடத்தி வரும் தீட்சிதர்கள் மீது சிபிஐ ரெய்டு நடத்தக்கோரியும், சிதம்பரம் காந்தி சிலை அருகில் 14.10.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் இணைச் செயலர் வழக்கறிஞர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, திரு சந்திரசேகர் (பா.ம.க), வி.சி.க மாவட்ட செயலர் பால அறவாழி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணியரசன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலர் புஷ்ப தேவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக :

1) ஆயிரங்கால் மண்டபத்தை பணத்திற்காக, சிவகாசி ஸ்டாண்டர்டு – ரத்னா ஸ்டோர்ஸ் தம்பதியினருக்கு திருமணத்திற்கு நட்சத்திர விடுதியாக மாற்றி கோயிலின் புனிதத்தை கெடுத்த தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடு! சம்பந்தப்பட்டவர்கள் மீது சிதம்பரம் போலீசார் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

2) திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கிய தீட்சிதர்கள் மீது உடனடியாக சி.பி.ஐ ரெய்டு நடத்த வேண்டும்.

3) கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து கைப்பற்றி இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

படிக்க:
தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி
♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

4) நடராஜர் கோயிலில் இருந்த நந்தனார் சிலையை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

5) தீண்டாமையின் அடையாளமாக நிற்கும் தெற்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது. அது உடனடியாக திறக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் ; சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் தீட்சிதர்களின் அடாவடித்தனங்களை, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆதாரப்பூர்வமாக நிறுவி தீட்சிதர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பட்டத்தின் இடையே தீட்சிதர்களை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
விருதை : 9360061121.
சிதம்பரம் : 9842341583.
கடலூர் : 9842396929.

மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 02

துரு துருவென்று செயல் புரியத் துடித்த சீனியர் லெப்டினன்ட் சாப்பாட்டு அறையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைக் கடைசி வரை ஆர அமர இருந்து சாப்பிட பெத்ரோவை விடவில்லை. வழியே சென்ற பெட்ரோல் லாரியில் ஏறி உட்கார்ந்து அவர்கள் ஊருக்கு வெளியே காட்டோரமாக இருந்த விமான நிலையம் சென்றார்கள். ஸ்குவாட்ரன் கமாண்டர் காப்டன் செஸ்லோவுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர் பேசாவாயராக உர்ரென்றிருந்தார். ஆனால் மட்டுமீறிய நல்லியல்பு வாய்ந்தவர் என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. பேச்சை வளர்த்தாமல் அவர், லாடவடிவில் அமைந்து முகட்டில் புல் பரப்பியிருந்த காப்பிடத்துக்கு அவர்களை இட்டுச் சென்றார். மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது “லா-5” ரக விமானங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. அவற்றின் வால்கள் மீது “11”, “12”, என்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. புதியவர்கள் அவற்றையே ஓட்ட வேண்டியிருந்தது. நறுமணமுள்ள பிர்ச் மரச் சோலையில் புட்கள் கூட்டாக இசைத்த கீச்சொலி விமான எஞ்சின்களின் பெரு முழக்கத்துக்கும் மேலாக ஆர்த்தது. புதியவர்கள் தங்கள் புதிய மெக்கானிக்குகளுடன் வார்த்தையாடி, ரெஜிமென்ட் வாழ்க்கை நிலவரங்களைக் கேட்டறிந்தவாறு, எஞ்சிய மாலை நேரத்தை இந்தக் காட்டில் கழித்தார்கள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரேயடியாக ஈடுபட்டு விட்டமையால், கடைசி லாரியில் அவர்கள் ஊர் திரும்பியபோது இருட்டிவிட்டது, மாலைச் சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டது. இதனால் அவர்கள் பெரிதும் வருந்தவில்லை. வழிச் சாப்பாட்டுக்காகத் தரப்பட்ட உணவுப் பண்டங்கள் அவர்களிடம் பத்திரமாக இருந்தன. இராத்தங்க இடம் பிடிப்பதுதான் கடினமாகத் தென்பட்டது. களைப் பூண்டுகள் அடர்ந்து ஆளரவம் அற்றிருந்த வெற்றுவெளிகளின் நடுவே பாலைவனச் சோலை போலத் திகழ்ந்த அந்தச் சிற்றூரில் இருவிமானப் படை ரெஜிமென்ட்டுகள் இருந்தன. அவற்றைச் சேர்ந்த விமானிகளும் அலுவலக ஊழியர்களும் அங்கே இருக்க இடமின்றி நெளிந்தார்கள். இருப்பிட வசதிப் பொறுப்பதிகாரி, பிதுங்கப் பிதுங்க நிறைந்து வழிந்த கிராம வீடுகளுக்குள் ஒவ்வொன்றாக நுழைந்து பார்த்தார். புதிதாகத் தங்க வருபவர்களைப் புகவிட விரும்பாத வீட்டுக்காரர்களுடன் சச்சரவிட்டார், வீடுகள் விருப்பப்படி நீட்டிக்கொள்ள வசதியாக ரப்பரால் கட்டப்படவில்லையே என்று தமக்குத் தாமே தத்துவ விசாரம் செய்தார், அப்புறம் எதிர்பட்ட முதல் “வீட்டுக்குள்” புதியவர்களைப் புகச் செய்தார்.

“இராப் பொழுதை இங்கே கழியுங்கள். காலையில் பார்ப்போம்” என்றார்.

அந்தச் சிறு குடிலில் ஏற்கனவே ஒன்பது ஆட்கள் அடைந்திருந்தார்கள். சிலர் கட்டில்களிலும் பெஞ்சுகளிலும் இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தரையில் தீனிப் புல்பற்றைகளைப் பரப்பி மலைக்கோட்டுகளை அவற்றின் மேல் விரித்து அருகருகாக முடங்கியிருந்தார்கள். தற்காலிகமாகத் தங்கியிருந்த ஒன்பது பேர் தவிர வீட்டுச் சொந்தக்காரியான கிழவியும் அவளுடைய வயது வந்த மகளும் வேறு தங்கி இருந்தார்கள். ருஷ்ய முறைப்படி அடுப்புக்கு உயரே அமைந்த பரணில் அவர்கள் இருவரும் படுத்திருந்தார்கள்.

புதியவர்கள் படுத்துறங்கும் இந்த எல்லா உடல்களையும் எப்படித் தாண்டிச் செல்வது என்று தெரியாமல் கணப்போது நிலைவாயிலில் தயங்கி நின்றிருந்தார்கள். அடுப்புப் பரண் மேலிருந்து கிழவியின் எரிச்சல் மண்டும் குரல் அவர்களை அதட்டியது:

“இடமில்லை! இடமே இல்லை! பார், செம்மச் செம்ம நிறைந்திருக்கிறது. விட்டத்தில் படுப்பீர்களா என்ன?”

பெத்ரோவ் தெருவுக்குத் திரும்பிச் செல்லத் தயராகக் கதவருகே அசட்டுப் பிசட்டென்று தயங்கி நின்றான். ஆனால் மெரேஸ்யெவா பதபாகமாக அடி வைத்து உறங்குபவர்களை மிதித்துவிடாதிருக்க முயன்றவாறு குடிலின் மறு பக்கத்திலிருந்த சாப்பாட்டு மேஜையை அணுகிவிட்டான்.

“அம்மா, எங்களுக்குச் சாப்பிட மட்டும் இடம் கிடைத்தால் போதும். பகல் பூராவும் நாங்கள் சாப்பிடவில்லை. ஒரு தட்டும் இரண்டு கோப்பைகளும் கிடைத்தால் நன்றாயிருக்கும், ஊம்? இராப் பொழுதை நாங்கள் வெளியே கழித்துக் கொள்வோம். உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த மாட்டோம். கோடை காலம் ஆயிற்றே” என்றான்.

கிழவி ஏதோ முணுமுணுத்தாள். ஆனால் அதற்குள் அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து யாருடையவோ இரண்டு சிறு வெறுங்கால்கள் வெளியே துருத்தின. கொடி போன்ற மெல்லிய ஓர் உருவம் பேசாமல் பரணிலிருந்து வழுகி இறங்கிற்று. தூங்குபவர்களுக்கு மேலே லாவகமாக உடலைச் சமப்படுத்திக் கொண்டு அறைக்கு வெளியே சென்று மறைந்தது. அடுத்த கணமே தட்டுக்களையும் மெல்லிய விரல்களில் கோத்த பல்வண்ணக் கோப்பைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பியது.

அவள் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுமி என்று பெத்ரோவுக்கு முதலில் தோன்றியது ஆனால் அவள் மேஜையை நெருங்கியதும் புகை படிந்த விளக்கின் மஞ்சள் ஒளி அவள் முகத்தை இருள் மங்கலிலிருந்து தெளிவாகப் புலப்படச் செய்தபோது அவள் பருவ மங்கை, அழகியவள், புத்திளமை முகையவிழும் வயதினள் என்பதை அவன் கண்டுகொண்டான். பழுப்பு நிற ஜாக்கெட்டும் நற்சணல் ஸ்கர்ட்டும், தலையையும் மார்பையும் மூடி, கிழவிகள் போல முதுகுப்புறம் முடிச்சிடப்பட்டிருந்த கிழிந்த தலைக் குட்டையும் தாம் அவளது வனப்பை வெகுவாகக் கெடுத்தன.

“மரீனா, மரீனா, வா இங்கே, இழிமகளே!” என்று பரணில் இருந்தபடி சீறினாள் கிழவி.

ஆனால் பெண் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. மேஜைமேல் துப்புரவான செய்தித்தாளை லாவகமாக விரித்தாள், பெத்ரோவைக் கடைக்கண்ணால் சட்டெனப் பார்த்துவிட்டு பாத்திரங்களையும் முள்கரண்டிகளையும் அதன் மேல் ஒழுங்காக வைத்தாள்.

“வயிராரச் சாப்பிடுங்கள். உங்களுக்கு எதையேனும் நறுக்கவோ சூடுபடுத்தவோ வேண்டுமோ ஒருவேளை? இதோ நொடியில் சூடுபடுத்திவிடுகிறேன்” என்றாள்.

“மரீனா, வா இங்கே!” என்றுக் கூப்பிட்டாள் கிழவி.

“அம்மாவை கவனிக்காதீர்கள். அவளுக்கு மனது கொஞ்சம் சரியாயில்லை. ஜெர்மானியர்கள் அவளைக் கிலி கொள்ளச் செய்து விட்டார்கள், ராத்திரி வேளையில் படை வீரர்களைக் கண்டுவிட்டால் போதும், என்னைப் பத்திரமாக மறைத்து வைப்பதே குறி ஆகிவிடுகிறாள். அவள் மேல் கோபித்துக் கொள்ளாதீர்கள். இரவு வேளையில் மட்டுமே இப்படி. பகலில் அவள் நல்லவள்” என்றாள் நங்கை.

மெரேஸ்யெவின் சாமான் பையில் இறைச்சிப் பணியாரமும் டப்பியிலிட்ட உணவுப்பண்டங்களும் மெலிந்த விலாக்களில் உப்புப் பூத்திருந்த இரண்டு பூவாளை மீன்களும் இராணுவ ரொட்டியும் இருந்தன. பெத்ரோவ் செட்டு குறைந்தவன் போலும். அவனிடம் இறைச்சியும் ரஸ்குகளும் மட்டுமே இருந்தன. மரீனாவின் சிறு கைகள் இவற்றை எல்லாம் கூறு போட்டு, நாவில் நீர் ஊறும்படி தட்டுக்களில் ஒழுங்காக வைத்தன. நீண்ட இமைமயிர்களால் மறைக்கப்பட்டிருந்த அவளுடைய மின் விழிகள் பெத்ரோவின் முகத்தை மறுபடி மறுபடி பார்த்தன. பெத்ரோவும் மறைவாக அவளை நோக்கலானான். இருவர் விழிகளும் சந்தித்த போது இருவரும் முகஞ்சிவந்து, களிப்புடன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்கள். தவிர இருவரும் மெரேஸ்யெவ் மூலமாகவே உரையாடினார்கள், தமக்குள் நேரில் பேசிக் கொள்ளவில்லை. அவர்களைப் கவனிப்பது மெரேஸ்யெவுக்கு வேடிக்கையாக இருந்தது. அதே சமயம் அவனுக்குச் சற்று ஏக்கமும் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் புத்திளைஞர்களாக இருந்தார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் தான் கிழவன், களைத்துச் சோர்ந்தவன், நிரம்ப வாழ்ந்து விட்டவன் என்று அவனுக்குத் தோன்றியது.

“இந்தா அம்மா, மரீனா, வெள்ளரி ஊறுகாய் இருக்குமா?” என்று கேட்டான்.

“இருக்கும்” என்று மென்முறுவலுடன் விடையளித்தாள் அவள்.

“வெந்த உருளைக் கிழங்குகள் இரண்டொன்றாவது கிடைக்குமா?”

“கேளுங்கள் கிடைக்கும்.”

உறங்குபவர்களிடையே லாவகமாக அடிவைத்து, ஓசையின்றி, வண்ணத்திப் பூச்சி போன்று லேசாகத் துள்ளிச் சென்று மறுபடி மறைந்துவிட்டாள் அவள்.

படிக்க:
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“தோழர் சீனியர் லெப்டினன்ட், அவளிடம் இப்படிப்பேச உங்களால் எப்படி முடிகிறது? முன்பின் தெரியாத மங்கை, அவளை ஒருமையில் கூப்பிடுகிறீர்கள், வெள்ளரி ஊறுகாய் கேட்கிறீர்கள்….” என்று வியப்புடன் கேட்டான் பேத்ரோவ்.

அவன் பேச்சைத் தொடரும்முன் மெரேஸ்யெவ் கட கடவென்று சிரித்தான்.

“ஏன் தம்பீ, எங்கே இருப்பதாக உன் நினைப்பு? நாம் போர்முனையில் இருக்கிறோமா இல்லையா?” என்று சொல்லி விட்டுக் கிழவியை விளித்து, “பாட்டீ, முணுமுணுத்தது போதும். இறங்கி வா. சாப்பிடுவோம். ஊம்?” என்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !

“நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தை மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி”யாகப் புகழ்ந்து தலையங்கம் தீட்டியிருக்கிறது, தினமணி. நடுநிலை நாளேடு என வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தினமணியே இந்த ஊது ஊதியிருக்கிறதென்றால், சங்கிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.

“ஹூஸ்டன் நிகழ்ச்சி, ஐ.நா. உரை, பாகிஸ்தானை ஓரங்கட்டியிருப்பது” ஆகிய முப்பெரும் சாதனைகளை நரேந்திர மோடி அமெரிக்க மண்ணில் நிகழ்த்தியிருப்பதாகப் பீற்றிக் கொண்டிருக்கிறது, துக்ளக்.

மைய அமைச்சர் ஜிதேந்திர சிங்கோ, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்ததை ஏற்காதவர்களை இந்தியர்களாகக் கருத வேண்டாம்” என ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும், விளம்பரம் தேடிக் கொள்வதிலும் நரேந்திர மோடிக்கு இணையாக வேறொரு அரசியல் தலைவர் சமீபகால அரசியல் வரலாற்றில் கிடையாது. அவரின் இந்த அற்பத்தனத்திற்கு இன்னொரு சான்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த “மோடி நலமா!” நிகழ்ச்சி.

இந்தியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வரும் சூழலில் மோடி நலமா என்ற தலைப்பே வக்கிரமானது, அருவெருக்கத்தக்கது. அந்நிகழ்ச்சியோ ஆடல், பாடல், செல்ஃபி, ஒருவருக்கொருவர் முதுகு சொறிவது என மூன்றாந்தர நட்சத்திர கலைநிகழ்ச்சி போல நடந்து முடிந்தது.

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் நடத்தியிருக்கும் இத்தகைய கூத்துக்களை வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்திருக்கும் அவாள் பத்திரிகைகள் மோடி நலமா நிகழ்ச்சியை விமர்சித்து ஒருவரி கூட எழுதவில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் டிரம்பை மேடையில் ஏற்றியதை மோடியின் வெற்றியாகக் குறிப்பிடுகின்றன.

படிக்க:
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

“தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்தியாவில் கட்சித் தலைவர்களுக்கு முன்னால் அவர்களது வேட்பாளர்கள் கைகூப்பி நிற்பது போல, அமெரிக்க அதிபரை நரேந்திர மோடி நிற்க வைத்ததைப் பார்த்து உலகமே வியந்தது, அதிர்ந்தது” எனக் கூச்சமின்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது, தினமணி. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற ரேஞ்சில் நரேந்திர மோடிக்குப் புதிய பட்டம் எதனையும் சூட்டாததுதான் கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி.

மோடி நலமா நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டது, தினமணி குறிப்பிடுவது போல இந்தியாவிற்கோ, மோடிக்கோ தனி மரியாதை கொடுக்கும் நல்லெண்ணம் கொண்டதல்ல. மாறாக, அது டிரம்பின் தேர்தல் உத்தி. அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாகப் போட்டியிடவுள்ள டிரம்பிற்கு, அமெரிக்க இந்தியர்களின் வாக்குகள் தேவை. கடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்க இந்தியர்களில் வெறும் 16 சதவீதத்தினர்தான் டிரம்பிற்கு வாக்களித்திருந்தனர். இம்முறை அதனை அதிகரித்துக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மோடியைப் பயன்படுத்திக் கொண்டார், அவர். மோடியோ வாங்கிய காசுக்கு மேல் கூவிய கதையாக, “இந்த முறையும் டிரம்ப் சர்க்கார்தான்” (அப் கி பார், டிரம்ப் சர்க்கார்) என முழக்கமிட்டதன் மூலம், தான் டிரம்பின் நட்சத்திர பிரச்சாரக் எனக் காட்டிக்கொண்டார். ஒரு நாட்டின் பிரதமர், தனது தகுதியைக் கடாசிவிட்டு இப்படி இறங்கிப்போய் தேர்தல் பிரச்சாரம் செய்த கேவலத்தைக் கண்டுதான் உலகம் அதிர்ந்து போனது.

ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் உரையாற்றுவதற்காகத்தான் மோடி அமெரிக்கா சென்றதாகக் கூறப்பட்டாலும், இந்தப் பயணம் வேறு நோக்கங்களையும் கொண்டிருந்தது. ஒன்று, காஷ்மீர் பிரச்சினை; மற்றொன்று, அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினை.

நரேந்திர மோடியும் டிரம்பும் பாய்-பாய் என்றபடி ஒருவரையொருவர் ஆரத்தழுவி போஸ் கொடுத்தாலும், பெரிய அமெரிக்க முதலீடுகள் எதுவும் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. மாறாக, இந்தியப் பொதுத்துறை நிறுவனமான பெட்ரோநெட், அமெரிக்காவின் எல்.என்.ஜி. நிறுவனத்தில் 17,688 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. அமெரிக்காவைத் திருப்திப்படுத்த மோடி எழுதியிருக்கும் மொய்ப்பணம் இது!

இவ்வர்த்தகப் பேச்சுவார்த்தையினூடாக அமெரிக்காவின் சலுகை பெற்ற வர்த்தகக் கூட்டாளி என்ற தகுதியை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென்பதும், அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பேசி முடித்துவிட வேண்டுமென்பதும் மோடி அரசின் முக்கிய விருப்பங்களாக இருந்தன. இந்தியா இறங்கிவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாலும், முழுத் திருப்தி கிடைக்கும் வகையில் ஒப்புக்கொண்டால்தான் உடன்பாடு என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால், நரேந்திர மோடி வெறுங்கையோடுதான் இந்தியாவிற்குத் திரும்பினார்.

எனினும், ஐ.நா. பொதுக்குழுவில் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறாததைக் காட்டி, மோடியின் பயணத்தை வெற்றியாகக் காட்ட முயலுகிறார்கள், அவரது ஆதரவாளர்கள். ஆனால், காஷ்மீர் பிரச்சினையிலோ முதுகுக்குப் பின்னிருந்துகொண்டு பெப்பே காட்டும் தந்திரத்தோடு நடந்துகொண்டு, மோடியைக் கோமாளியாக்கவிட்டார், டிரம்ப்.

ஹூஸ்டன் நிகழ்ச்சியிலும் ஐ.நா.வின் பொதுக்குழுவிலும் காணக் கிடைக்காத அமெரிக்காவின் உண்மை முகம் இம்ரான் கானும் டிரம்பும் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளிச்சத்திற்கு வந்தது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பாக். தீவிரவாதத்தைக் கண்டித்து மோடி ஆற்றிய உரையை, “முரட்டுத்தனமான பேச்சு” என அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சித்ததோடு, “இரண்டு நாடுகளும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் நான் மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக”வும் அறிவித்தார், டிரம்ப்.

“நான் பாகிஸ்தானை நம்புகிறேன். ஆனால், எனக்கு முன்பு இருந்தவர்கள் நம்பவில்லை. பாகிஸ்தானியர்கள் என்ன செய்தார்கள் என அவர்களுக்குத் தெரியாது” எனக் கூறி, பாகிஸ்தானை ஆசிர்வதித்தார். இவை அனைத்தும் டிரம்ப் மோடிக்கு வைத்த ஆப்புகள். பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றிகள்.

“டிரம்பின் இந்தக் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பீர்களா?” எனப் பத்திரிகையாளர்கள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, மோடி-டிரம்ப் சந்திப்பின்போது ஆட்சேபணை தெரிவிக்கப்படும் என வீராப்பாக அறிவித்தார்கள். அச்சந்திப்பு நடந்ததேயொழிய, டிரம்பின் கருத்துக்களுக்கோ, மத்தியஸ்த விருப்பத்திற்கோ மோடி மறுப்பு தெரிவித்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

ஐ.நா.வின் பொதுக்குழுவில் பாக். பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரைக்குப் பதில் அளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அதிகாரி விதிஷா மைத்ராவும்கூட, அந்த எல்லைக்கு அப்பால் சென்று வினயமாகக்கூட டிரம்பின் விமர்சனங்களுக்கும் விருப்பங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
♦ காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

அதேசமயம், ஐ.நா.வில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கான் பிரச்சினையில் அமெரிக்கா சுயநலத்தோடு பாகிஸ்தானைப் பயன்படுத்திக்கொண்டதைக் குறிப்பிட்டதோடு, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்துதான் தவறு என்றும், டிரம்ப் தாலிபான்களோடு மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்றும், 19 ஆண்டுகளாக உங்களால் வெல்ல முடியாதபோது இன்னும் 19 ஆண்டுகளானாலும் உங்களால் வெல்ல முடியாது என்றும் விமர்சித்து, அமெரிக்காவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும் சீனாவையும் தவிர்த்து ஏனைய உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில் கருத்துச் சொல்லவில்லை என்பது உண்மைதான். இதன் பொருள் அந்நாடுகள், குறிப்பாக மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது அல்ல.

“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இனி, பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் காஷ்மீரை மீட்பதுதான் இந்திய அரசின் அடுத்த இலக்கு” என்றவாறு மோடி அரசு உதார்விட்டு வருகிறது. ஆனால், இதற்கு மாறாக, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை இன்னும் இரு தரப்புப் பிரச்சினையாகவே கருதி வருகின்றன. டிரம்போ தனது தலைமையில் மத்தியஸ்தம் என அதற்கு அப்பால் செல்லுகிறார். மோடி அரசோ வாய் கொள்ளாத பெரிய எலும்புத் துண்டை முழுங்கிவிட்டு, அதனை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துப் போய் நிற்கிறது.

– குப்பன்