Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 320

பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

1

இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது தான் – ஆனால் அபிஜித் பானர்ஜியின் நோபல் பரிசு தீர்வல்ல !

மெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி சமீபத்தில் அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ (Esther Duflo) மற்றும் மைக்கேல் கிரிமருடன் (Michael Kremer) [முதலாளித்துவ] பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்திய ஊடகங்கள் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவருடன் நேர்காணல்கள் பல எடுக்கப்பட்டன. வெளிவரவிருக்கும் அவரது நூலிலிருந்து சாராம்சங்கள் பல வெளியாகியிருக்கின்றன. அவரது தாயாரையும் ஊடகங்கள் நேர்காணல் செய்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு குறித்து மம்தா பானர்ஜியுடனான தேனிர் சந்திப்பு ஒன்றும் அவரது தாயாருடன் நடந்தேறியிருக்கிறது.

அபிஜித் பானர்ஜி

ஊடகங்கள் எதையும் சிந்திக்காமல் தனிநபர் புகழ்பாடுவது என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு இயல்பானது என்பது சரிதான். இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், மோடியை எதிர்ப்பவர்கள் இந்த நோபல் பரிசு வெற்றியை பாரதீய ஜனதா கட்சியின் மோசமான கொள்கைகளை குறை கூறும் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர்.

ஆபத்தான வகையில், பாஜகவைப் பற்றிய விமர்சனங்கள் உண்மையான ஜனநாயக விவாத வடிவத்தில் வரவில்லை. மாறாக ஒரு அதிகார மையத்திற்கு பதிலாக, மன்மோகன் சிங், இரகுராம் இராஜன், இப்போது அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட தாராளமய பொருளாதார வல்லுனர்களை மற்றொரு அதிகார மையமாக மாற்றுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது .

அபிஜித் ஒரு மோடி எதிர்ப்பாளரா ?

சான்றாக, பானர்ஜியை ஒரு சுதந்திரப் போராளி மற்றும் ஒரு புரட்சியாளர் என்பது போல ஊடகவியலாளார் வினோத் துவா (Vinod Dua) சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டினார். இது பானர்ஜியை மோடி எதிர்ப்பு அடையாளமாக மாற்றியது: ஏனென்றால் பானர்ஜி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் மற்றும் நோபல் பரிசையும் வென்றவர் என்பதால் அவரை மதச்சார்பின்மையாளார், நல்ல பொருளாதார கொள்கைகள் மற்றும் இந்திய ஏழைகளின் மீட்பனாக உருவகப்படுத்தினார். ஆனால் மோடியுடனான பானர்ஜியின் நட்புறவு நிகழ்ச்சிக்குப் பின்னர் துவாவின் ஏமாற்றத்தை ஒருவர் கற்பனை செய்யலாம்.

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

முரண்பாடாக, இந்த நோபல் பரிசு தடையற்ற விமர்சன சிந்தனையின் இன்றியமையாத தன்மை குறித்த தீர்மானகரமான முடிவு என்பது துவாவின் மையமான கருத்தாகும். ஆனால் பானர்ஜியின் ஆராய்ச்சி எதைச் சாதித்தது என்பது குறித்து நமக்கு உணர்த்த அவரது தடையற்ற விமர்சன சிந்தனையை அவர் பயன்படுத்தவில்லை. உலகின் பிற பகுதிகளைப் போலவே, துவாவும் இந்த விடயத்தில் தனது சிந்தனையை நோபல் பரிசு குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஆனால் உண்மையில், பானர்ஜியின் நோபல் பரிசை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது பார்வை நமக்கு உண்மையில் புரிகிறதா? அவருடைய அரசியல் நமக்குத் தெரியுமா? அதற்கு நாம் உடன்பட வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகளை கேட்க நம்முடைய சுதந்திரமான விமர்சன சிந்தனையை பயன்படுத்துவது இன்றியமையாதது.

முதலாளித்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை மூலம் பங்களிப்பு செய்ததற்காக பானர்ஜிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: அதாவது வறுமைக்கான காரணியை எண்ணற்ற, ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத சிறு சிறு துண்டுகளாக சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை முறை உடைக்கிறது. சான்றாக, மோசமான சுகாதார விளைவுகளுக்கான காரணி(கள்) – மருத்துவ ஊழியர்கள் வேலைக்கு வராதது, தரமற்ற மருந்துகள், தடுப்பு தடுப்பூசிகளின் பற்றாக்குறை போன்ற சிறிய காரணிகளாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காரணியும் தனித்தனியாக “ஆய்வு” செய்யப்படுகிறது.

சான்றாக, ஒரு செவிலியர் குழுவை தேர்ந்தெடுத்து வேலைக்கு ‘மட்டம்’ போடும் நாட்களில் ஊதியத்தை வெட்டுவது. இன்னொரு செவிலியர் குழுவை தேர்ந்தெடுத்து அதே காரணங்களுக்காக ஊதியத்தை வெட்டாமல் விடுவது. இதன் மூலம் செவிலியர்களை தண்டிப்பது வேலைக்கு ‘மட்டம்’ போடும் சிக்கலைத் தீர்க்குமா என்று ஆராய்ச்சி செய்ய உதவுமாம். இதே போன்றதான ஆராய்ச்சிகள் மற்ற அனைத்து சிக்கல்களுக்கும் செய்யப்பட்டு முடிவில், அனைத்து சிக்கலுக்குமான சிறிய பரிந்துரைகள் கொண்ட கொள்கை ‘பொதி’ வடிவமைக்கப்படும்.

செயற்முறை சிக்கல்கள் :

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் இம்முறையை பல வழிகளில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முதலாவதாக, சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் உருவாக்கக்கூடிய சான்றுகள் அளவில் மிகச் சிறியது. மேலும், கிடைக்கும் முடுவுகளை அளவிடுவதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன: இராஜஸ்தானில் கிராமப்புறங்களுக்கு ஏதுவான ஒரு பரிந்துரை டெல்லி பெருநகரத்திலும் வேலை செய்யுமா? எந்த இடங்களுக்கு எந்த முடிவுகள் பொருந்தும் என்பதை நாம் எப்படி அறிவது?

இரண்டாவதாக, தற்போதுள்ள பொருளாதார தரவுகளிலோ அல்லது எதார்த்தமான உலக சூழ்நிலைகளின் அடிப்படையில் கூட இந்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் நடக்காது. மாறாக ஒரு ஆய்வகத்தை போலவே நடத்தப்படும். அதே சமயம் எதார்த்த உலகமோ குழப்பம் நிறைந்ததாக உள்ளது.

மூன்றாவதாக, சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தனிநபர்களது விருப்பத்தோடு இயைந்த குறுகிய கேள்விகளில் கவனம் செலுத்துகின்றன: வேலைக்கு ஏன் வரக்கூடாது என்று செவிலியர்கள் முடிவு செய்கிறார்கள்? அதில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் ஏழைகளின் தவறுகளாக கருதப்படுவது பற்றியது. அதாவது, அவர்கள் ஏன் சேமிக்கவில்லை? அவர்கள் ஏன் தேநீர் குடிக்காமல் சோறு மட்டும் சாப்பிடக்கூடாது? அவர்கள் ஏன் விலையுயர்ந்த விவசாயக்கருவிகளை வாங்கக்கூடாது? ஏன் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்? போன்றவை.

படிக்க:
பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !
♦ முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

இங்குதான் கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன : முதலில் பானர்ஜியின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை போன்ற ஒரு அணுகுமுறையானது வறுமைக்கான அனுபவபூர்வமாக நிறுவப்பட்ட தரவுகளை புறக்கணிக்கிறது. பதிலாக, வறுமைக்கான தனிப்பட்ட காரணத்தை மையமாகக் கொண்டு, 2015 நோபல் பரிசு பெற்ற அங்கஸ் டீட்டன் (Angus Deaton) அழைத்த “விசித்திரக் கதைகள் (fairy stories)” போன்ற விளக்கங்களை பானர்ஜியின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை வழங்குகிறது.

கட்டமைப்பு காரணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன :

பானர்ஜி வசிக்கும் அமெரிக்க அரசாங்கம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 விழுக்காட்டை சுகாதாரத்துக்காக செலவிடுகிறது ( குடிமக்கள் மேலும் அதிகம் கோருகின்றனர் ). நேர்மாறாக, இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 விழுக்காடு மட்டுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் செலவிடுகிறது. அமெரிக்காவின் வளர்ச்சி என்பது என்ன, அது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பானர்ஜிக்கு தெளிவாகத் தெரியும். இந்தியாவிலும் பிற ஏழை நாடுகளில் அவரது ஆராய்ச்சியானது பெரிய கட்டமைப்பு காரணிகளை தவிர்த்து சிறிய முதன்மையற்ற காரணிகளை ஆரத் தழுவுகிறது. இந்த அணுகுமுறை வறுமையை தீர்க்காது என்பதுடன் தங்கம் போன்ற மதிப்பான அறிவியல் தரத்தை விட நன்கொடையாளரை மகிழ்விக்கும் வித்தையாகவே இது இருக்கிறது.

சுகாதார அமைப்பிற்கு குறைவான நிதியை இந்தியா ஒதுக்குவதன் எதிர்வினையாக சரி செய்யப்படக்கூடிய நோய்களால் இந்திய மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுப் பள்ளி முறை செயலிழந்துவிட்டதால் மக்களில் கணிசமானவர்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் போதுமான ஊதியம் தரும் எந்த வேலைகளும் இல்லாததால் மக்களுக்கு வருமானம் குறைவாகவே உள்ளது. வறுமைக்கான காரணத்தை இப்படி நாம் புரிந்துகொண்டால், தேவையான தீர்வுகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையானவை – மேலும் அதற்காக போராடுவது மிகவும் கடினமானது. மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைக்கு போராடுவதே பணி என்பதை நாம் கண்டவுடன், பானர்ஜி போன்ற பொருளாதார வல்லுநர்கள் சிக்கலின் ஒரு பகுதியாகிவிடுவார்கள் என்பது கண்கூடு.

பொதுத்துறைகளில் முதலீடு செய்வது தான் வறுமைக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என்று சந்தை அடிப்படைவாதத்தை மறுக்கின்ற வல்லுனர்கள் பலர் கூறுகிறார்கள். அதற்கு பதிலாக, தற்போதுள்ள முதலீடுகள் கூட மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே பானர்ஜியின் பரிந்துரை. அவரை ஏழைகளின் மீட்பனாக அறிவிப்பதற்கு முன், அவரது உலகளாவிய அடிப்படை வருமான பரிந்துரை பற்றிய பார்வையானது மாநில சேவைகளை தனியாற்கு விற்பதற்கும் அதை குறைப்பதற்குமான பரிந்துரைகளுடன் வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ( கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான ஒரு சட்டம் ) ஊதியம் வழங்குவதற்கான பானர்ஜியின் ஆதரவானது இந்தச் சட்டம் நாளடைவில் அகற்றப்பட வேண்டும் என்ற புரிதலுடன் வருகிறது.

அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு மறுவுற்பத்தி செய்யப்படுகிறது :

பானர்ஜியின் மேட்டுக்குடி சார்ந்த தாராளமய கொள்கையானது ஒரு பழமைவாத பக்கத்தைக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தாராளமய பொருளாதார வல்லுனரும், 1991 ல் தாராளமய கொள்கைகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவருமான மன்மோகன் சிங், தற்போதைய நெருக்கடிக்கு எதிரான குரலாக வியந்தோதப்படுகிறார். அந்த அழிவுகரமான பொருளாதார மறுசீரமைப்பு தான் தற்போதைய வேலையின்மை (இது ஒரு நுகர்வுப் பிரச்சினையாக தற்போது கருதப்படுகிறது) , கட்டுப்பாடற்ற நிழல் வங்கி மற்றும் வரி ஏய்ப்பிற்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. விளைவாக, சிறிய மாற்றங்களுக்கு கூட தனியார் துறைகளுக்கு துண்டு துண்டாக நாட்டை விற்பதுதான் அரசாங்கத்தின் ஒரே சாத்தியமான எதிர்வினையாக இருக்கிறது.

இந்தியாவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததனாலல்ல மாறாக பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைபடுத்தப்பட்ட காரணமாகதான். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் கட்டங்கள் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கின்றன. பல பத்தாண்டுகளாக கிடைத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, 1% பணக்கார இந்தியர்கள் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்திருக்கிறார்கள். அதே சமயம் 60% பேர் 5% க்கும் குறைவான செல்வத்தையே வைத்துள்ளனர். மோடியின் பாரதிய ஜனதா கட்சியினர் திறமையற்றவர்களாக இருந்தாலும் இந்த சூழ்நிலையை அவர்கள் உருவாக்கவில்லை. இது மோடியின் தோல்வியடைந்த பொருளாதார நிர்வாகத்தை மன்னித்து அவரை விடுவிப்பதற்காக அல்ல, ஆனால் அந்த தோல்விக்கு அவரது போட்டியாளர்களான தாராளவாத பொருளாதார வல்லுனர்களை உட்படுத்துவதும் ஆகும். இந்த நெருக்கடியை உருவாக்கிய அதே நபர்கள் இப்போது அதிலிருந்து நம்மை மீட்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அபிஜித் பானர்ஜியின் நோபலுக்கு தகுதியான பங்களிப்பானது NREGA ஊதியத்தை வழங்கக் கோரவில்லை: இது ஏற்றத்தாழ்வு மற்றும் பொதுத்துறைகள் பற்றிய விவாதங்களை வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதாக இருக்கிறது. உண்மையில், பலரும் நீண்ட காலமாகவே NREGA ஊதியத்தை அனைத்து தொழிலாளார்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர். பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் (Jean Dreze) நோபல் பரிசு வென்ற இருவருடன் சேர்ந்து பல ஆண்டுகளாகவே இதற்கு குரல் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் ஆதார் மற்றும் உலகலாவிய அடிப்படை வருமானம் (பொதுத்துறை முதலீடுகளுக்கு மாற்றாக ஒரு சிறு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை ஏழைகளின் வங்கிக்கணக்கிற்கு பரிவர்த்தனை செய்வது) ஆகியவற்றின் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறார். வறுமை ஒழிப்பிற்கான இன்றியமையாத விடயங்களுக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில் மோடி அரசாங்கத்தையும் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் யாரும் ட்ரீஸிற்காக பெருமையடையவில்லையே ஏன்? பானர்ஜி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

நிபுணர்களிடம் குருட்டு நம்பிக்கை வைத்து விட்டு சுதந்திரமான விமர்சன சிந்தனையைப் பற்றி வெறும் வாயை மெல்லுவது பலனளிக்காது.

ஜனநாயகக் கண்காணிப்பு :

பாஜகவின் அதிகாரத்தை பொருளாதார வல்லுநர்களின் அதிகாரத்துடன் மாற்றுவதற்கும், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் மாற்றுவதற்கும் பதிலாக, உண்மையான மாற்றத்திற்காக ஜனநாயக ஆய்வு மற்றும் விவாதங்களால் அவர்களது அதிகார பீடத்தை வீழ்த்த வேண்டும்.

NDTV ரவிஷ்குமாரின் நோபல் பரிசு வெற்றியை குறித்த ஒரு முன்மாதிரியான கவரேஜ் இதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. பானர்ஜியை தனது சொந்த-மோடி எதிர்ப்பு அரசியல் அடையாளமாக்குவதற்கான வாய்ப்பை எதிர்கொண்ட குமார், அதற்கு பதிலாக அதனை வறுமை ஒழிப்பு குறித்த அரசியல் மற்றும் அறிவார்ந்த விவாதமாகப் அதை பயன்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் பானர்ஜியின் பணிகள் குறித்து கருத்துத் தெரிவிக்க ஒரு மாற்று சிந்தனை கொண்ட நிபுணரையும் அத்துடன் ஒரு எச்சரிக்கையையும் கொண்டு வருகிறார்.

”யாராவது நோபலை வென்றால் குதிக்க வேண்டாம் இல்லையென்றால் அரசியல்வாதிகளின் லட்டு போன்ற இனிமையான சொற்கள் தான் நமக்கு மிச்சமிருக்கும்” என்று அவர் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை நாம் செவிமடுப்பது நல்லது.

பின்குறிப்பு : எழுத்தாளரும் கல்வியாளருமான அபர்ணா கோபாலன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமையின் மறுவுருவாக்கம் குறித்து அவரது ஆய்வு கவனம் செலுத்துகிறது.


கட்டுரையாளர் : Aparna Gopalan
மொழியாக்கம் :
சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்

 

சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

0

சிலி நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு  சுமார் 12 இலட்சம் பேர் பங்குபெற்ற பிரம்மாண்ட பேரணி முதலாளித்துவத்தின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

உலக கந்துவட்டிக் குழுமத்தின் தலைமையகமான சர்வதேசிய நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கொடுத்த அழுத்தத்திற்கு உடன்பட்ட சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா, மேற்கொண்ட பொருளாதார சிக்கன நடவடிக்கையினால் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துவிட்டன. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தையே நம்பியிருந்த மாணவ மாணவிகள் பெரும் போராட்டத்தை அரசுக்கெதிராக நடத்தத் தொடங்கினர்.

மேலும் படிக்க :
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இது மக்கள் போராட்டமாக மாறி சுமார் 12 இலட்சம் மக்கள் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அகுஸ்டோ பினோச்சே-யின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இந்தப்போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. பிஞேரா-வின் அரசோ ஒரு யுத்தத்திற்குத் தயாராவதைப் போன்று ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, பீரங்கிகளையும், இராணுவத்தையும் குவித்து போராட்டத்தை முடக்க நினைக்கிறது.

18 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்து கொண்ட அதிபர் பிஞேரா தொலைக்காட்சி மூலம் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் என்னவென்று தெளிவாகப் புரிந்து கொண்டேன்; நடந்தவற்றிற்காக மன்னிப்பு கோருகிறேன்;  மேலும் மின்சாரக் கட்டண உயர்வை இரத்து செய்ய இருக்கிறேன். அதோடு கூட குறைந்தபட்ச வருமானமாக மாதத்திற்கு 480 டாலர்கள் கிடைப்பதை உறுதி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் இவை எதுவும் வேண்டாம் என்று கோரும் மக்கள், பிஞேரா ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்கின்றனர்.  சிலி நாட்டு மக்களில் 29% மக்கள் மட்டும் பிஞேரா-வின் ஆட்சி மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் சர்வே ஒன்றில் 83% மக்கள் போராட்டத்திற்கு தங்களின் பேராதரவைத் தருவதாக அறிவித்துள்ளனர். சிலி மக்களின் போராட்டம் வெல்லட்டும், முதலாளித்துவமும் அதன் தீய சக்திகளும் ஒழியட்டும்.

Chile Protest 1அக்டோபர் 23, 2019 அன்று நடந்த ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ‘ என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, எனக்கு என் எதிர்காலம்தான் மிக முக்கியம்’ என்று எழுதிய பதாகையுடன் போராட்டக்களத்தில் இருக்கும் காட்சி.

மெரினா எழுச்சி போன்றதொரு மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் சிலி நாட்டின் தலைநகரம் சான்டியாகோ.

ஐ.எம்.எஃப் மற்றும் சிலி அதிபர் பிஞேரா இருவரும் 12 இலட்சத்திற்கும் அதிகமானோரை வீதிக்கு வரவழைத்துவிட்டனர்

மக்கள் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மிக நேர்த்தியான புகைப்படம் ஒன்று . சிலியின் மப்பூச்சே பழங்குடியினரின் கொடி உச்சத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

சாட்டிலைட் புகைப்படம்.

சிலி-யைப் புரட்டிப் போடும் மக்கள் சூறாவளி.

வீதிகளில் பாயும் மக்கள் பெருங்கடல்.

புதிய உலகை காணத்துடிக்கும் விழிகளே! சிலியைப் பார்.!

தங்கள் வாழ்வுக்காக களமிறங்கியுள்ள இளம் தலைமுறை.

போராட்டத்தின் ஒற்றைக் குரல் கூட ஓங்கி ஒலிக்கும்.

ஒரு கையில் ஆண்ட்ராய்ட் போன்; மறு கையில் தேசியக் கொடி. கண்முன்னே போராட்டத் தீ.


– வரதன்
நன்றி : Redfish

நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு

பெரியாரும் அம்பேத்கரும் இந்து மதத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து ஒரே நேர்கோட்டில் பயணித்து களமாடியவர்கள். இந்து மதம் ஒழியாமல் சாதி ஒழியாது என்று பிரகடனம் செய்த புரட்சியாளர்கள் என்பது வரலாறு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை – வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல். (நூலின் அறிமுகத்திலிருந்து)

பெருங்குடி மக்களாகிய ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்படும் நீங்கள் இன்று சமூகத்தில் கடை ஜாதி மக்களாக, கீழ்மைப் படுத்தப்பட்ட மக்களாக, உடலுழைப்பு செய்தே வாழவேண்டிய பாட்டாளி மக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். இரண்டாவது, நீங்கள் அத்துணைபேரும் தொழிலாளர்கள். இவை இரண்டைப் பற்றியும் (அதாவது கீழ்ஜாதி – பாட்டாளி மக்கள் என்பது பற்றி) பேசுதல் இந்தச் சமயத்தில் மிகப் பொருத்தமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இந்நாட்டில் எத்தனையோ அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தக்கழகங்கள் இருந்தாலும் எல்லா ஸ்தாபனங்களும், உங்களுக்கு உள்ள இழிவு, உழைப்பு பற்றிக் கவலைப்படுவதில்லை… இவை மாற்றமடைய ஏதாவது மார்க்கமுண்டா? அல்லது இப்படியே தான் நீங்கள் வாழ்ந்து மடிய வேண்டுமா? இதை நன்றாக நீங்கள் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்தால் இவ்விழிவு நீங்கும்? இவ்விழிவு உங்களுக்கு ஏற்பட்டது எதனால்? படிப்பு இல்லாததாலா? அல்லது பணம் இல்லாததாலா? அல்லது அறிவோ, உழைப்போ, ஒழுக்கமோ இல்லாததாலா? எதனால் நீங்கள் இழிமக்களாக்கப்பட்டீர்கள்? உங்களில் பொறுப்புள்ள பெரிய தலைவர்கள் இல்லாததாலா? அல்லது யோக்கியமான மக்கள் இல்லாததாலா? அல்லது உங்களுக்கு என்று ஒரு மகாத்மா, கோவில், குளம், சாமி இல்லாததாலா? இல்லை, இல்லை, முக்காலும் இல்லை. ஏன்? படிப்பு வாசனையற்ற எத்தனையோ பிற ஜாதி மக்கள் உயர் ஜாதியினராக இன்னும் இருக்கிறார்கள் அல்லவா? பணமில்லாத எத்தனையோ அன்னக்காவடிகள், பிச்சையால் பிழைப்பவர்கள் இன்றும் உயர் ஜாதியினராக இருக்கிறார்களே, எத்தனையோ அயோக்கியர்களும், பொறுப்பற்ற சோம்பேறிகளும் ஒண்ணாம் நம்பர் பித்தலாட்டக்காரர்களும் கேடிகளும், மடையர்களும் இன்றும் பெரிய ஜாதியாய் இருக்கவில்லையா?

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

… ஆகவே, இந்த இழிவின் மூலகாரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்து அவ்விழிவு உங்கள் சந்ததிக்கும் என்றென்றுமே திரும்பி வரமுடியாதபடி பரிகாரம் தேடுவதுதான் உண்மைச் சீர்திருத்தவாதியின் கடமை. இதைவிட்டு மந்திரியாகி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்றோ , கவர்னர், சட்டசபைத் தலைவர் ஆகிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்றோ நினைப்பது அசல் பைத்தியகாரத்தனம். மந்திரியாயுள்ள போதும் அவன் இழிஜாதிதான். அவ்வுத்தியோகம் உள்ளவரை அவ்விழிவு கொஞ்சம் மறைக்கப்பட்டு இருக்கலாமே தவிர, அவ்விழிவு அடியோடு நீங்கிவிடாது.

ஒருவனுக்கு மலேரியா காய்ச்சல் வந்திருந்தால் அவனுக்கு கொய்னா மாத்திரை கொடுத்துவிட்டால் மட்டும் அவ்வியாதி நீங்கிவிடுமா? அந்த சுரம் எதனால் வந்தது? என்று சிந்திக்கவேண்டும். கொசுவினால் வந்ததென்றால் அக்கொசுவைப் போக்க மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குக் கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதுமா? படுத்துக் கொள்ளும் போதுதான் கொசுவலை போட்டுக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் கொசு கடிப்பதாயிருந்தால் அதற்கென்ன செய்வது? கொசுவுக்குப் பயந்து நாள் முழுவதுமே கொசுவலைக்குள் புகுந்து கொண்டிருப்பதா? அல்லது அக்கொசுக் களை விசிறி, விளக்குமாறு கொண்டு விரட்டுவதா? அப்படித்தான் எத்தனை காலம் அவற்றை விரட்டிக் கொண்டிருக்கமுடியும்? ஆகவே, அந்தக் கொசுக்கள் எங்கு, எதனால் உற்பத்தியாகின்றன என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

… ஆகவே, நம் சமூகத்தின் வியாதிக்குக் காரணமான இவ்விழி ஜாதிக் கொசுக்கள் எந்த கசுமால ஜலதாரையில் உண்டாயின என்று நாம் ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இந்து மதம் என்ற கசுமால நீர் வருணாஸ்ரமம் என்ற சாக்கடையில் சென்று கொண்டிருப்பதால் இவ்விழி ஜாதி என்ற கொசுக்கள் தோன்றி நமக்குத் தொல்லை என்னும் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இந்து மத வருணாஸ்ரம தருமத்தை ஒப்புக் கொண்டதால்தான் நீங்கள் இன்று இழிஜாதிகளாய் இருக்கிறீர்கள்.

… நீங்கள் இழிமக்களாய் இருக்க, நீங்கள் இந்து மதத்தை ஒப்புக் கொண்டதுதான் காரணமே ஒழிய, வேறென்ன நீங்கள் செய்து விட்டீர்கள்? நாங்களென்ன பாபிகளா? பாடுபடாதவர்களா? அல்லது நோய் கொண்டவர்களா?

ஆகவே, உங்களுடைய இந்த இழிவு நீங்க வேண்டுமானால் நீங்கள் உங்களை இழி மக்களாக்கிய இந்த இந்து மதத்தை ஒன்று ஒழிக்கவேண்டும் அல்லது அதைவிட்டு நீங்கவேண்டும்.  (தந்தை பெரியார், விடுதலை – 10.12.1947. ) (நூலிலிருந்து பக். 9-13)

… சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்து மதம் மனித நல முன்னேற்றக் கோட்பாடுடையது என்று கூறுவதற்கு முடியாததாக உள்ளது. எனவேதான், பால்ஃபோரின் மொழியில் சொல்வதென்றால் இந்து மதம் ஊடுருவினால் சாதாரண மனித இனத்தின் உள்ளார்ந்த வாழ்வினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகாது. அதனால் ஏதாவது செய்ய முடியுமென்றால், அது அவர்களை முடக்கிவிடக் கூடியது மட்டுமே. சாதாரண மனித உள்ளங்களுக்கு ஊட்டமளிக்கக் கூடியதோ, சாதாரண மனிதத் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதோ, சாதாரண மனிதர்களின் நலிவுகளுக்கு உதவக்கூடியதோ இந்துமதத்தில் எதுவும் இல்லை. பயனற்ற போராட்டத்திற்குப் பின் மரணமடையச் செய்யக்கூடிய பிறப்பைத் தரும் இயற்கையின் நினைக்க முடியாத சக்தியை நேருக்கு நேராகச் சந்திக்கும் இருளில் நிறுத்துகின்றது. கொடூரமான மதப் புறக்கணிப்பை விட எவ்வகையிலும் கொடுமை யில் குறைவில்லாத வகையில் கடவுளோடு மனிதனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்து மதத்தின் தத்துவம் இத்தகையதுதான். அது உயர்ந்த மனிதனின் சொர்க்கம். சாமானிய மனிதனின் மீளமுடியாத நரகம். – அம்பேத்கர். (நூலிலிருந்து பக்.16)

நூல் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு
ஆசிரியர் : தந்தை பெரியார் – அம்பேத்கர்

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தொலைபேசி எண் : 94438 22256 | 94421 28792

பக்கங்கள்: 32
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooksudumalai

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தனித்துவத்தை படைத்த ஆசிரியர் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 01

தனிநபர் (கடைசி, 170-வது நாள்)

லா இருநூறு பக்கங்களைக் கொண்ட நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களில் எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் படிப்பு சொல்லித் தந்ததைப் பற்றியும் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் எனது மனப்பதிவுகளை நாட் குறிப்பாக எழுதியுள்ளேன். என் கண் முன்னரே அவர்கள் வளர்ந்த போதிலும் எனது வியப்பை என்னால் மறைக்க இயலவில்லை. இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு பாய்ச்சல் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கல்வியாண்டு முடிந்து நான் நீண்ட நாட்களுக்குக் குழந்தைகளிடமிருந்து விடைபெறும் போதும் ஒரு சோகமயமான மகிழ்ச்சி என்னைத் தழுவும். அவர்களுக்காக மகிழ்ச்சியடையும் நான் அதே சமயம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டியுள்ளதே என்று வருந்துகிறேன். எங்களுக்குக் கவலை தந்த விஷயங்கள், மகிழ்ச்சியளித்த சம்பவங்கள், எங்கள் ஏமாற்றங்கள், நாங்கள் எப்படி வாழ்ந்தோம், கல்வி கற்பதிலும் வளர்ப்பிலும் எப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் எங்கள் முன் தோன்றின, நாங்கள் இவற்றை எப்படிச் சமாளித்தோம் ஆகிய எல்லாமே இந்தப் பெரிய நோட்டு புத்தகங்களில் உள்ளன.

ஒவ்வொரு குழந்தையின் மன நிலையும் எப்படி உருவாகியது என்பது பற்றிய உண்மைகள் இதில் உள்ளன. என் வகுப்புக் குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒரு தனி நபராக உருவாக்க நான் முயன்றேன், ஏனெனில் மனிதர்களின் மகிழ்ச்சிக்கான நவீனப் போராளியை இந்தத் தனிநபரில் தான் நான் காணுகிறேன். இலட்சியங்கள், நோக்கங்கள், சித்தம், அறிவு, உணர்வுகள், மனிதநேயம் ஆகியவற்றின் மிகச் சிறப்பான, ஈடு இணையற்ற கலவையாகத்தான் நான் மனிதனைப் பார்க்கிறேன். எனது சின்னஞ்சிறு வகுப்பு மாணவர்களிடம் முதல் நாளிலிருந்தே இந்தக் கலவையை ஏற்படுத்த ஆரம்பித்தேன்; மூன்றாண்டுகள் கழித்து இவர்கள் பள்ளி வாழ்க்கையின் அடுத்த படியில் காலடி எடுத்து வைப்பார்கள், அப்போது எனது சக ஆசிரியர்கள் இப்பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் இந்தத் தனித்துவத்தை நான் எப்படிப் படைத்தேன்? 800 பக்கங்களில் அடங்கியுள்ள ஏராளமான விஷயங்களைப் பார்க்கிறேன்; இவை பின்வரும் முக்கிய முடிவிற்கு என்னை இட்டுச் செல்கின்றன.

தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில் தான் தனிநபர் உருவாகிறான்; குழந்தை வளர்ப்பும் கல்வி போதனையும், குழந்தையை இப்பாதையில் வழிநடத்தி, இப்போராட்டத்தில் அவன் வெற்றி பெற உதவுவதைத் தான் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கூறிய போராட்டத்தில் தோல்வி ஏற்படக் கூடும். ஆறு வயதுக் குழந்தைகளின் விஷயத்தில் மேற்கூறிய கருத்து நிலை திட்டவட்டமான உட்பொருளைப் பெறுகிறது; அதாவது பெரும் கவனம் தேவைப்படுகிறது, ஏனெனில், தன்னுடனேயே நடக்கும் இப்போராட்டம் தனிநபரின் உயர்விற்கு மட்டுமின்றி அழிவிற்கும் வழிகோலக் கூடும், மோசமான சூழலில் தன்னைத் தானே சுயமாக அறியும் குணமும், சுயமாகத் தன் நிலையை நிர்ணயிக்கும் தன்மையும் குழந்தையின் மனதில் கீழான கருத்துக்களையும் உறவு முறைகளையும் தோற்றுவிக்கக் கூடும்.

இந்த நோக்கிலிருந்து என் நாட்குறிப்புகளைத் திருப்பிப் பார்ப்பதென முடிவு செய்தேன்.

செப்டம்பர் 5. வார்த்தைகள், வாக்கியங்களின் வீரதீரம்

முன்னர் நான், வார்த்தைகளும் வாக்கியங்களும் எளியவையாக, புரியக் கூடியவையாக இருக்கின்றனவா என்று பார்த்துத் தேர்ந்தெடுத்தேன். உதாரணமாக, வார்த்தைகள் தெட்டத் தெளிவானவையாக, குழந்தைகளுக்கு புரியக் கூடியவையாக இருக்க வேண்டும் (டெஸ்க், சூரியன், வெங்காயம்); வாக்கியங்களும் இதே மாதிரியானவையாக இருக்க வேண்டும் (குழந்தைகள் முற்றத்தில் விளையாடுகின்றனர்; கீகா தோட்டத்திற்கு உலாவச் சென்றான்; அப்பா மகளுக்குப் பரிசு கொண்டு வந்தார்). இப்படிப்பட்ட வாக்கியங்களும் வார்த்தைகளும் “இதற்கென்ன பொருள்?” என்று அவர்களை சிந்திக்க வைக்காது; எனவே, இவை வார்த்தைகள், வாக்கியங்களைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுத் தர உதவுமென நான் எண்ணினேன்…

ஆனால், தாய் மொழிப் பாடத்தின் போது, அதாவது நாட்டுப் பற்றையும் தனிநபர் உணர்வுகளையும் வளர்க்க வேண்டிய பாடத்தில் இப்படிப் பட்ட முழு முறையியல் விஷயங்களை ஏன் தர வேண்டும்? உள்ளடக்கத்தில் எளிய, புரியும்படியான, ஆனால் தனிநபர் உணர்வுகளைப் படைக்கும் நிபந்தனையை உட்பொருளாகக் கொண்ட வார்த்தைகள், வாக்கியங்களைக் கொண்டே குழந்தைகள் இவற்றைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்ளலாம். தாய் மொழிப் பாடப் பயிற்சிக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதில் இப்படிப்பட்ட அணுகுமுறையை வார்த்தைகள், வாக்கியங்களின் வீர தீரக் கோட்பாடு என்றழைக்கலாமா? வார்த்தைகள், வாக்கியங்களை இந்தக் கோட்பாட்டின் படிதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென நான் கூறவில்லை, ஆனால் இது பயிற்சிகளின் சாரத்தைச் செழுமைப்படுத்தும், இவற்றிற்கு பன்முகத் தன்மையை அளிக்கும், இவற்றிற்கு வளர்ப்புப் போக்கைத் தரும்.

இன்று அட்டைவில்லைகளின் உதவியோடு பின்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினேன். “புரோமித்தியஸ் நெருப்பை எடுத்துச் சென்றான்!”

“இந்த வாக்கியத்தை எல்லோரும் சேர்ந்து ‘படியுங்கள்’!”

குழந்தைகள் ஒரே குரலில் இதைப் படித்தனர்.

“புரோமித்தியஸ் யார்?” என்று நீக்கா என்னைக் கேட்டான்.

அனேகமாக, இப்படிப்பட்ட கேள்விகள் தான் கல்வி நிபுணர்களை அச்சுறுத்தக் கூடும்; “புரோமித்தியஸ் நெருப்பை எடுத்துச் சென்றான்” என்ற வாக்கியத்திற்குப் பதில் “தாத்தா நெருப்பை மூட்டினார்” என்ற வாக்கியத்தைச் சொல்ல இவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த அச்சம் வீணானது இப்படிப்பட்ட கேள்விகள் வருவது நல்லதுதான். நான் குழந்தைகளிடம் சொன்னேன்.

“புரோமித்தியஸ்’ என்ற இப்பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வீட்டிற்குப் போனதும் புரோமித்தியஸ் பற்றிய புராணக் கதையைச் சொல்லுமாறு பெரியவர்களிடம் கேளுங்கள். சரி, இப்போது சொல்லுங்கள்: இந்த வாக்கியத்தில் எவ்வளவு வார்த்தைகள் உள்ளன?”

இந்த வாக்கியத்தில் ஒரு பண்டைய கதை அடங்கியிருப்பதானது, சரியாகச் சொன்னால், இதன் வீரதீரத் தன்மை, இதன் வார்த்தைப் பகுப்பாய்விற்கும், வார்த்தைகளை மாற்றிப் போடவும், எந்த வரிசையில் வார்த்தைகள் இருந்தால் நன்றாயிருக்கும் என்று கவனிக்கவும் சிறிது கூட இடையூறாக இல்லை.

ஒலிப் பகுப்பாய்வு முறையைக் கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு “குடிமகன்” எனும் வார்த்தையைத் தந்தேன். இதில் ஒலிகளின் வரிசையைக் கண்டுபிடித்து, வட்டக் குறியிடுவது, “பாட்டி” என்று நன்கு தெரிந்த ஒரு வார்த்தையின் விஷயத்தில் இவற்றைச் செய்வதை விட எவ்விதத்திலும் அதிகச் சிக்கலானதாக இருக்கவில்லை.

வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் பொது முறைகளை கிரகிப்பதில் எனது வகுப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க நான் சில வாக்கியங்களையும் வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்தேன்.

வார்த்தைகள்: தாய்நாடு, மனிதன், வீரன், சித்தம், உழைப்பு, கட்டுமானம், முயற்சி, போராட்டம், கடமை, மென்மை, அன்பான, நாகரிகமான, நேர்மையான, இன்ன பிற.

வாக்கியங்கள்: நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்; நல்லதைச் செய்ய விரைந்து செல்; மக்களுக்கு மகிழ்ச்சியைத் தா; உழைப்பு மனிதனை மேன்மைப்படுத்துகிறது; சிறுவயதிலிருந்தே நேர்மையானவனாக இரு.

இந்த வார்த்தைகள், வாக்கியங்களின் உட்பொருளை நான் ஒரு போதும் குழந்தைகளுக்கு விளக்க மாட்டேன். அவசியமெனில், பெற்றோர்களிடம் சென்று கேட்குமாறு சொல்வேன். “நேர்மை”, “கடமை” என்றால் என்ன, அல்லது “நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்” என்றால் என்ன பொருள் என்றெல்லாம் பெற்றோர்களிடம் கேட்கட்டும்.

படிக்க:
குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

வார்த்தைகள், வாக்கியங்களின் இப்படிப்பட்ட சாரம் குழந்தைகளுக்கு என்ன தரும்? வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் முறைகளை கிரகிக்க இது நிச்சயமாக இடையூறு செய்யாது, ஒருவேளை இன்றைய குழந்தைகள் எப்போதாவது வீரஞ்செறிந்த வகையில் சிந்திக்க உதவுக் கூடும். இவ்வாறாக, பின்வரும் முதுமொழியை” எழுதுகிறேன்:

மொழிப் பயிற்சிகளின் உட்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது இன்று குழந்தை அந்தந்தப் பேச்சு, எழுத்து முறையை கிரகிப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், வெகுவிரைவிலோ, நீண்ட காலத்திற்குப் பின்னரோ அக்குழந்தை தனி நபராக மாறுவதற்குரிய அடிப்படைகளில் ஒன்றாக இது விளங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !

2

ந்தாண்டு தீபாவளியை குழந்தை சுஜித்-ஐக் (2 வயது) காப்பாற்ற வேண்டி பிரார்த்தனைகளுடன் கழித்தனர் பெரும்பாலான தமிழக மக்கள். சுஜித்-ன் தந்தை பிரிட்டோ திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர். சுஜித்தின் தாய் கலாமேரி. மூத்த அண்ணன் புனித் ரோஷன் (வயது 4). தனது வீட்டின் அருகே விவசாயம் செய்து வந்த பிரிட்டோ விவசாயம் இல்லாத நாட்களில் கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் சொந்த தேவைகாக போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு கடந்த ஆண்டு தூர்ந்து போனதை அடுத்து அதனை மூடுவதற்காக மேல்மட்டம் வரை மண்ணை கொட்டி வைத்துள்ளார். அந்த இடத்தில் தற்போது சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையை அடுத்து கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியுள்ளது. இந்நிலையில், 25-ம் தேதி மாலை 5:30 மணி அளவில் சுஜித் அந்த கிணற்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தவன் எதிர்பாராத வகையில் அதில் தவறி விழுந்துள்ளான்.

அப்போது பிரிட்டோ கூலி வேலைக்கு சென்றிருந்தார். சுஜித் விழுந்ததைக் கண்ட கலாமேரி அலறிச் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பகுதி மக்கள் அளித்த புகாரை அடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையே தகவல் கிடைத்து பிரிட்டோவும் வந்துள்ளார். தீயணைப்புத் துறை குழந்தையை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் சுஜித்தின் நிலைமை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் துவங்கியது. #savesujith மற்றும் #savesurjith ஆகிய ஹேஷ்டேகுகளில் சுஜித் ஆழ்குழாய்க் கிணற்றில் மாட்டிக் கொண்டிருப்பது குறித்த தகவல்கள் தீயாய்ப் பரவத் துவங்கியது.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசு சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஒரு படை என அதிகார வர்க்கமும், பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு வந்து குவிந்தனர். ரஜினி கமல் துவங்கி அனைத்து நடிகர்களும், ஹர்பஜன் சிங் போன்ற விளையாட்டுத் துறை பிரபலங்களும் சுஜித் காப்பாற்றப்பட வேண்டி பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரும் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளனர். அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையின் அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

கிணறு இருக்கும் பகுதியில் நிலத்தின் கீழே பாறைகள் இருப்பதால் 26-ம் தேதி இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை மட்டுமே குழி தோண்ட முடிந்தது. எனவே மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித்-ஐ மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.

படிக்க :
திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….
♦ கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !

எனினும் குழந்தையின் கைகளில் கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. 27ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் வந்தனர். இவர்கள் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.

இரண்டு நாட்களாக பல்வேறு குழுக்கள் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் இதுவரை பலன் ஏதும் ஏற்படவில்லை. திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினரும், திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினரும் மீட்புப் பணிகளில் பங்களிக்க முன் வந்தனர்.

இதனிடையே 27-ம் தேதி மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

*****

கிசோர் கே ஸ்வாமி போன்ற ஒருசில பார்ப்பனிய விசப்பூச்சிகள் தவிர்த்து விசயம் அறிந்த அனைவரும் குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதைத்துக் கொண்டுள்ளனர். நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம். இந்தியாவில் “உள்ளவர்களுக்கும்”- “இல்லாததவர்களுக்கும்” இடையே சில பல ஒளியாண்டுகள் அளவுக்கான இடைவெளி நிலவிக் கொண்டிருக்கும் எதார்த்தத்தை சுஜித் உணர்த்துகிறான்.

படிக்க :
திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !
♦ கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் !

அடுத்து இது போன்ற ஒரு சம்பவம் நடந்த உடனேயே அதைக் குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கையாள்வதற்கான ஒரு முறைமையும் இல்லை. சுஜித் விசயத்திலேயே இரண்டு நாட்கள் இடைவெளியில் பல்வேறு குழுவினர் பல்வேறு வகைகளில் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட குழுவினரில் எத்தனை பேருக்கு தொழில்முறை நிபுணத்துவம் இருக்கும் என்பதைக் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

பல்வேறு துறைகள், பல்வேறு துறைசார் நிபுணத்துவம் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றும் வகையிலான ஒரு மீட்புப் படை அரசிடம் இல்லை – இருக்கும் குழுவிடம் போதிய கருவிகளும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகின்றது.

ஒரு திட்டத்தை முயற்சிக்கும் போதே அதன் பின் விளைவுகள், அதன் அதிகபட்ச திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றை முன்னேற்பாடு செய்து கொள்ளும் எந்த வழிமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை.  ஒரு திட்டம் தோல்வியடைந்த பின்னர்தான் அடுத்த திட்டம் குறித்து யோசிக்கிறது அதிகாரவர்க்கம்.   அதன் காரணமாகவே அடுத்த திட்டத்திற்கான கருவிகள் வரவழைப்பதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் பதிவு வெளியாகும் நேரம் வரையில் சுமார் 71 மணிநேரம் ஒரு இரண்டு வயதுச் சிறுவன் குறைவான ஆக்சிஜனோடு, தண்ணீர் இன்றி, உணவு இன்றி அந்தக் குழியில் சிக்கியிருக்கிறான்.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுவது என்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதியதாக நடைபெறும் சம்பவம் அல்ல. ஆண்டுக்கு ஒரு குழந்தையையாவது இது போன்ற சம்பவங்களில் நாம் இழந்து விடுகிறோம். இதே போல மலக்குழியில் மனிதனே இறங்கி சுத்தம் செய்யும் அவலமும், அதில் விபத்து ஏற்பட்டு ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான தாழ்த்தப்பட்டவர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர்.

தொழில்நுட்பத்தில் அமெரிக்காவையும் சீனாவையும் எட்டும் வகையில் நிலவுக்கும், செவ்வாய்க்கும் சேட்டிலைட் விடுவது தொடங்கி, ஆகஸ்ட் 15-க்கு போஸ் கொடுக்க போர் விமானங்களை வாங்கிக் குவிப்பது வரை சில லட்சம் கோடிகளை செலவு செய்யும் அரசுக்கு இத்தகைய மனித இழப்பைத் தடுக்கும் கருவிகளையும் கட்டமைப்பையும் உருவாக்கும் எண்ணம் துளியும் இல்லை. மாறாக பழைய நிலைமையே நீடிப்பது உறுதி செய்யப்படுகிறது.

குடிமக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசால் மட்டுமே இச்சமூக அவலங்களைப் போக்க முடியும். மறுகாலனியாக்க – பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்திருக்கும் ஒரு அரசுக் கட்டமைப்பிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா ?

– சாக்கியன்

ஐ.எம்.எஃப் – க்கு எதிராகக் கொதித்தெழும் இலத்தின் அமெரிக்கர்கள் !

0

லக கந்துவட்டிக் கும்பலின் தலைமை நிறுவனமான சர்வதேசிய நாணய நிதியத்திற்கு எதிராக தென்னமெரிக்க நாடுகளில் கிளர்ச்சித் தீ பரவத்தொடங்கியுள்ளது. ஈகுவடார், பொலிவியா ஆகிய நாடுகளில் எழுந்த கிளர்ச்சித் தீ சிலி நாட்டில் உக்கிரமடைந்துள்ள நிலையில் இப்போது அர்ஜெண்டினியர்களும் ஐ.எம்.எஃப்-க்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

Mauricio Macri
அர்ஜெண்டினாவின் அதிபர் மொரிசியோ மேக்ரி.

உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நிலைமை இன்று அதல பாதாளத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆதரவின் பின்புலத்தோடு இயங்கிவரும் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் அதிபர் மொரிசியோ மேக்ரி எப்படி இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ளினார் என்பதையும் இந்தக் காணொளி விவரிக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு அர்ஜெண்டீனியர்கள் வறுமையால் வாடிவருகின்றனர். உயிர்வாழ உணவும், வேலையும் தா..! எனக் கோரி இப்போது அதிபருக்கெதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஐ.எம்.எஃப் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் சில போராட்டக்காரர்களிடம் கேட்கும்போது ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ என்றும் ‘ஐ.எம்.எஃப் ஒரு திருட்டுக் கும்பல்’ எனவும் மக்கள் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கின்றனர். எதிர்காலமே இருள்மயமாகிவிட்டதாகவும்,  அரசாங்கத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், ஆளத்தகுதியற்றுப் போய்விட்டதாகவும் மக்கள் கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

படிக்க :
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
♦ ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் எரிவாயு, புவிசார் குறியீடான மேற்குத்தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ, இன்னொரு புறம் சந்திராயன் 2 என்ற பெயரில் இலட்சம் கோடி ரூபாய் வீணடிப்பு, ஆனால் மக்களின் நிலைமையோ மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது என்ற எதார்த்த நிலை நம் நாட்டிலும் நிலவி வரும் இந்தச் சூழலில் ஆள அருகதையற்று நிற்கும் அரசுகளைத் தூக்கியெறிவதைத் தவிர உழைக்கும் வர்க்கத்துக்கு வேறுவழியில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த ஆவணப்படம்.


– வரதன்

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம்!
சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும்!
புஜதொமு அரங்குகூட்டம் !

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் எனும் தலைப்பில் திருச்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக BHEL சமுதாய கூடத்தில் 22.10.19 அன்று அரங்குகூட்டம் நடைபெற்றது.

புஜதொமுவின் இணைப்புச் சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,  ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து அந்த அரங்கக் கூட்டத்தை நடத்தின.

இதற்கு முன்னதாக, அரங்குகூட்டத்தின் நோக்கத்தை விளக்கும் பிரசுரத்தின் வாயிலாக பேருந்து நிலையங்களிலும், கல்லூரிகளிலும், தொழிற்சாலைகளிலும் விரிவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இளம் மாணவர்கள், வெளியூர்களில் இருந்தும் பொருளாதார ஆய்வாளர், பேராசிரியர்களின் உரையை கேட்க பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – புஜதொமு அமைப்பின் பொதுச் செயலர் தோழர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், பேரா ச.அய்யம்பிள்ளை, தோழர் மா.சி. சுதேஷ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தோழர் உத்ராபதி, பொதுச் செயலர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – பு.ஜ.தொ.மு., திருச்சி தனது தலைமையுரையில், ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை தீவிரமாக அமல்படுத்திவருவதால், இன்று மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். உழைப்பு சமூகமயம் இலாபம் தனியார்மயம் என்று உள்ளது. சோசலிசத்தில் உழைப்பும் சமூகமயம் இலாபமும் சமூகமயம் என இருக்கும் என்று சுருக்கமாக எடுத்து கூறினார்.

இந்திய பொருளாதார நெருக்கடிகளும் அதன் காரணங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேரா.ச.அய்யம்பிள்ளை, (செயற்குழு உறுப்பினர், CCCE) அவர்கள், ”இந்திய முதலாளிகளே முதலாளித்துவத்திற்கு எதிராக உள்ளனர் என ரகுராம்ராஜன் கூறிய கருத்தையும், சமுதாயம் முழுவதும் முதலாளிகள் சுரண்டிகொண்டே இருப்பார்கள் என்று மார்க்ஸ் கூறியதையும் விளக்கினார்.  GDP-க்கும் மக்கள் நலனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் GDP உயர உயர சாதாரண மக்கள் சொத்தை இழந்தவர்களாகின்றனர். முதலாளிகள் சொத்து மேலும் அதிகரிக்கிறது. இந்த முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை மாற்றாமல் நாம் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் மக்களுக்கு நலன் விளைவிக்காது” என்றார்.

பொருளாதார நெருக்கடிகளும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் உரையாற்றிய, பொருளாதார ஆய்வாளர், முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், தனது உரையில், ”இந்த அரசுக்கு பொருளாதார அறிவு கிடையாது! முதலாளி வருமான வரி கட்டுவது அவனிடம் வேலை செய்யும் தொழிலாளியை விட குறைவாகத்தான் கட்டுகிறார்கள். இந்திய பட்ஜெட்டிலேயே பொய் சொல்லுகிறார்கள். இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன்  சமர்ப்பித்த   இந்திய பட்ஜெட்டில் ஒரு நம்பர் கூட கிடையாது. வரவு செலவு கணக்கே கிடையாது. உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைப்படி இந்தியாவுக்கு எல்லை இருக்கலாம் ஆனால் இந்தியாவிற்குள் எல்லை இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. இதுபடிதான் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கட்டாயமாக்கினார்கள். அம்பானி ஜியோ-வுக்கு இரண்டு இலட்சம் கோடி கடன் பொதுத்துறை வங்கிகளில் உள்ளது. நாளை நட்டமென்று தப்பி ஓடுனால் நஷ்டம் மக்களுக்குத்தான். இந்தியாவில் முதலீடுகள் கடந்த பத்து வருடங்களாக இல்லை. 100 கோடி மூலதனமிட்டாலும் 100 பேருக்கு கூட நிரந்தர வேலை கிடையாது. 45 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு வேலையின்மை. முதல் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையில் வந்தவர்கள்தான் ஹிட்லர், முசொலினி. பாசிசத்திற்கு சரியான களம் அந்த நெருக்கடிதான். அதே நிலைதான் இன்று  இந்தியாவுக்கு நடக்கிறது.

இந்த நெருக்கடியை முன்வைத்து, முதலாவதாக, இதனால் உருவாகும் லும்பன் கும்பல்கள் நாம் முன்வைக்கும் தீர்வை விட அவர்கள் சொல்லும் பாசிச தீர்வை நோக்கி செல்வார்கள். அதன் மூலம் அவர்களின் பாசிச கொள்கைகளை தீவிரபடுத்துவார்கள்.   இரண்டாவதாக, இந்த நெருக்கடியை காரணம் காட்டி எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் இனி விற்பார்கள். மேலும் மேலும் தனியாருக்கு கொடுத்து முடிந்த வரை கொள்ளை அடிப்பார்கள்” என்பதை எடுத்துரைத்தார்.

திவாலாகும் இந்திய பொருளாதாரம் சோசலிசமே மாற்று ! என்ற தலைப்பில் உரையாற்றிய, தோழர்.மா.சி.சுதேஷ்குமார், (மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு.), ”தொழிலாளி வர்க்கம் தினந்தோறும் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். மீனவர்கள் 12 மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க உரிமை இல்லை. விவசாயி தற்கொலை செய்கிறான். நெசவாளிக்கு நூல் இல்லை. இவ்வாறாக உழைக்கும் வர்க்கம் மரணக் குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த முதலாளி வர்க்கம்தான். நல்ல கல்வி நல்ல வேலை நல்ல சம்பளம் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. வாழ்க்கை மிகவும் வெறுத்து போனபிறகுதான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்துவிட்டான் MRF ஆலைத் தொழிலாளி முரளி. நாம் அவருக்காக இரக்கப்படகூடாது. நமக்கு வர்க்க கோபம் வர வேண்டும். அவன் இறப்புக்கு காரணமான முதலாளித்துவத்துக்கு சவக்குழித் தோண்ட வேண்டும்” என்று உணர்த்தினார்.

 

படிக்க:
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

மேலும், ”அன்று ஐரோப்பாவை ஆட்டியது ஒரு பூதம். அந்த பூதத்தைதான் இன்று உலகம் முழுவதும் தேடுகிறது. அது என்னதான் என்று! முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்று சோசலிச பொருளாதாரமே! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஓட்டை வாங்கி முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த  அமைப்பு தேவையா? அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே என்ற சோசலிசம் வேண்டுமா?

(பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்)

அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்பது இதுவரை சோசலிசத்தில்தான் நடந்துள்ளது” என்பதை விளக்கியவர், ”இந்த ஆண்டு பிப்ரவரியில் ட்ரம்ப் தலைமையில், அமெரிக்காவில் சோசலிசம் வரக்கூடாது என முதலாளிகளுடன் இணைந்து கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். ஏன் இந்த பயம்? உலகம் முழுவதும் உள்ள நெருக்கடி காரணமாக உழைக்கும் மக்கள் கம்யூனிசத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஒருநாள் பாட்டாளிவர்க்கம் இந்த முதலாளித்துவத்தை வீழ்த்தி  கம்யூனிச சமூதாயத்தை  படைக்கும்” என தனது உரையை நிறைவு செய்தார் அவர்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலர், தோழர் மணலிதாஸ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியின் இடையே ம.க.இ.க. கலைக்குழுத் தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் உணர்வூட்டின.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு: 8903042388

கட்டளைக்காக காத்திருக்கும் போர் விமானங்கள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 03

சூரியன் இன்னும் உதிக்கவில்லை. குறுகிய கோடை இரவின் மிக இருண்ட நேரம். ஆனால் போர்க்கள விமான நிலையத்தில் விமான எஞ்சின்களை சூடுபடுத்துவதற்காக அதற்குள் அவை இயக்கப்பட்டு இரைந்து கொண்டிருந்தன. காப்டன் செஸ்லோவ் பனித்துளிப் படிந்த புல் மீது வரைபடத்தைப் பரப்பி, புதிய தளத்தின் செல் வழியையும் இடத்தையும் ஸ்குவாட்ரன் விமானிகளுக்குக் காட்டினார்.

“விழிப்புடன் இருங்கள். பார்வைக்கு ஏற்பச் செயல்படுவதை விட்டுவிடாதீர்கள் நமது விமான நிலையம் மிக முன்னணியில் உள்ளவற்றில் ஒன்று” என்றார்.

ஆதவனின் முதல் கதிர்கள் வீசத் தொடங்கின. அலைபடிந்த ரோஜா நிற மூடுபனித் திடலில் இன்னும் பரவியிருந்தது. அந்த வேளையில் இரண்டாவது ஸ்குவாட்ரான் தன் கமாண்டரின் பின்னே வானில் கிளம்பிப் பறந்தது. விமானங்கள் ஒன்றையொன்று பார்வையிலிருந்து தப்பவிடாமல் தெற்கு நோக்கிச் சென்றன.

மெரேஸ்யெவும் பெத்ரோவும் தங்கள் முதலாவது சேர்ந்த பறப்பில் நெருங்கிய இணையாகச் சென்றார்கள். தன் முன்னோடியின் தயக்கமற்ற தேர்ச்சி மிக்க பறப்புத் திறமையைத் தாங்கள் பறந்த சில நிமிடங்களுக்குள் பெத்ரோவ் கண்டு கொண்டான். மெரேஸ்யெவோ வழியில் சில செங்குத்தான, திடீர் வளையங்களை வேண்டுமென்றே இட்டான். தன் பின்னோடி கூர்மையான பார்வையும் சமயோசித புத்தியும் நரம்பு உறுதியும் கொண்டிருப்பதையும் அவன் கவனித்தான்.

பெத்ரோவுக்கு ஓரளவு தயக்கமுள்ளதாயினும் நல்ல பறப்புத் திறமை இருந்தது மெரேஸ்யெவுக்கு எல்லாவற்றிலும் முக்கியமாகப்பட்டது.

புதிய விமான நிலையம் பகைவரின் துப்பாக்கி ரெஜிமென்டின் பின்புல வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்குவாட்ரன்கள் ஆயத்த நிலை இரண்டில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால் விமானிகள் தங்கள் விமான அறையிலேயே இருக்க வேண்டும், முதல் வானம் ஒளிர்ந்ததுமே வானில் கிளம்பி விட வேண்டும் என்பதாகும். விமானங்கள் பிர்ச் மரக் காட்டோரத்திற்குக் கொண்டுவரப்பட்டுக் கிளைகளால் உரு மறைக்கப்பட்டன. காளான்களின் ஈரிப்பு மணம் கமழ்ந்த குளிர் காற்று காட்டிலிருந்து வீசியது. சண்டை ஆரவாரம் காரணமாகக் கொசுக்களின் நொய்யென்ற ஒலி காதில் படவில்லை. அவை விமானிகளின் முகங்களையும் கைகளையும் கழுத்துக்களையும் உக்கிரமாகத் தாக்கின.

மெரேஸ்யெவ் தலைக் காப்பைக் கழற்றி விட்டு, சோம்பலுடன் கொசுக்களை விரட்டியவாறு, காலைக் காற்றின் நறிய செழு மணத்தை அனுபவித்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பக்கத்தில் அவனது பின்னோடியின் விமானம் இருந்தது. பெத்ரோவ் அடிக்கொருதரம் இருக்கையிலிருந்து எம்பி அதன் மேல் நின்று கொண்டு, சண்டை நடக்கும் பக்கத்தைப் பார்த்தான் அல்லது வெடி விமானங்களைப் பார்வையால் பின் தொடர்ந்தான்.

படிக்க :
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

தன் பின்னோடி அலைபாய்வதையும் கிளர்ச்சி அடைவதையும் கண்ணுற்று மெரேஸ்யெவ் சிந்திக்கலானான்: வயதில் அவர்கள் இருவரும் அநேகமாகச் சமமானவர்கள். அவனுக்குப் பத்தொன்பது வயது, மெரேஸ்யெவுக்கு இருபத்து மூன்று. மூன்று நான்கு ஆண்டுகள் வித்தியாசம் ஆண்களுக்குள் ஒரு பொருட்டாகுமா? எனினும் தன் பின்னோடியுடன் ஒப்பிடுகையில் தான் முதியவன், அனுபவசாலி, அமைதியான போக்குள்ளவன், அலுப்புற்றவன் என்று மெரேஸ்யெவுக்குப்பட்டது. அவன் விமானத்தின் தோலுறையிட்ட இருக்கையில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டான். அவன் நிம்மதியாக இருந்தான். அவனுக்குக் கால்கள் இல்லை, விமானம் ஓட்டுவது அவனுக்கு உலகில் எந்த விமானியையும் காட்டிலும் அளவிட முடியாதவாறு கடினமாக இருந்தது. ஆனால் இது கூட அவனுக்குப் பதற்றம் உண்டாக்கவில்லை. தனது திறமை அவனுக்குத் திண்ணமாகத் தெரிந்தது. எனது வெட்டுண்ட கால்கள் மேல் அவன் நம்பிக்கை கொண்டிருந்தான்.

ரெஜிமென்ட் மாலை வரையில் இரண்டாவது ஆயத்த நிலையில் இருந்தது. எதனாலோ அது சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தது. அதன் இருப்பிடத்தை உரிய நேரத்துக்கு முன்பே வெளிப்படுத்தத் தலைமை அதிகாரிகள் விரும்பவில்லை போலும்.

இரவு தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டன சிறு நிலவறைகள். ஒரு சமயத்தில் இங்கே இருந்த ஜெர்மானியரால் கட்டப்பட்டவை இவை. இவற்றில் வசித்தார்கள். சுவர்ப் பலகைகள் மேல் அட்டைகளும் மஞ்சள் நிறச் சுவற்றுத் தாள்களும் ஒட்டப் பட்டிருந்தன. காமவேட்கை வெறிததும்பும் பெரிய வாயினரான சில சினிமா நடிகைகளின் படங்கள் கூடச் சுவர்கள் மேல் அப்படியே இருந்தன. கூர்முனைக்கட்டிடங்கள் கொண்ட ஜெர்மானிய நகரங்களின் காட்சிகள் அடங்கிய பலவர்ணப் படங்களும் காணப்பட்டன.

பீரங்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. தரை அதிர்ந்தது. உலர் மணல் காகிதத்தின் மேல் பொலபொல வென்று உதிர்ந்தது. நிலவறை முழுவதும் பூச்சிகள் மொய்த்தது போல அருவருப்பூட்டும் வகையில் சரசரத்தது.

வெட்ட வெளியில் மழைக்கோட்டுக்களை விரித்துப்படுப்பது என்று மெரேஸ்யெவும் பெத்ரோவும் தீர்மானித்தார்கள். உடுப்பைக் களையாமலே படுத்துறங்கும் படிக் கட்டளை இடப்பட்டிருந்தது. மெரேஸ்யெவ் பொய்க்கால்களின் இறுக்கு வார்களை மட்டும் நெகிழ்த்திக் கொண்டு நிமிர்ந்து படுத்து வானத்தை நோக்கினான். குண்டு வெடிப்புக்களின் சிவந்த மினுக்கொளியில் நடுங்கியது வானம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

1

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது பதவியிலிருந்து நவம்பர் 17-ம் தேதி ஓய்வுபெற உள்ளதால், அதற்கு முன்பாகவே அயோத்தி தீர்ப்பு எந்தநேரத்திலும் வழங்கப்படலாம்.

40 நாட்கள் நீண்ட விசாரணையில் ஆத்திரமூட்டும் பல விசயங்கள் நடந்தன, ‘உச்சநீதிமன்றமே எங்களுடையது’ என இந்துத்துவ தரப்பினர் பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசினர்.

டெல்லி மற்றும் லக்னோவில் தங்களை ஏற்றுக்கொள்ளும் ஆட்சிகள் நடப்பதால், ‘தீர்க்கதரிசிகள்’ தங்களுடைய அடுத்த இலக்கு, காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் என அறிவிக்கிறார்கள். வெளிப்படையாக ஆத்திரமூட்டும் அறிக்கைகள் விடுவதன் மூலம் தங்களுடைய அடுத்த நிகழ்ச்சி நிரல் காசியையும் மதுராவையும் விடுவிப்பதே என அறிவிக்கிறார்கள். அவர்களின் அச்சுறுத்தல் என்னவெனில், கியான் வாபி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா ஆகியவற்றை இடிப்பதாகும்.

ராமர் கோயில் கட்டப்பட்டவுடன், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மதுரா ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி ஆகிய கோயில்களை ஒட்டியுள்ள மசூதியை கைப்பற்ற (இடிக்க எனப் படிக்கவும்) தீவிர வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அதன் தீவிரவாத துணை அமைப்பான விசுவ இந்து பரிசத், நாட்டின் அரசியலாக்கப்பட்ட சாமியார்களைக் கொண்டு முதன்மை அமைப்பான அனைத்திந்திய அகாரா பரிசத் ஆகியவை இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளன.

சமீபத்திய உச்சநீதிமன்ற சட்ட விவகாரத்தில் என்னமாதிரியான தீர்ப்பு வரும் என அவர்கள் அறிந்ததால் மட்டுமல்ல, பெங்களூருவிலிருந்து வெளியாகும் டெக்கான் ஹெரால்டில் இந்த செய்தி பதிவாக்கப்பட்டிருப்பதிலிருந்து வகுப்புவாத சண்டையும் சிறுபான்மையின மத நிறுவனங்கள் மற்றும் நபர்களை இலக்காக்குவதும் இன்னும் அதிக நிகழும் எனத் தெரிகிறது.

“பாபர் மசூதியைப் போலவே, மசூதிகள் கட்ட காசி மற்றும் மதுராவில் கோயில்கள் இடிக்கப்பட்டன… இந்த மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” என அனைத்திந்திய அகாரா பரிசத் தலைவர் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்ல, இந்தியாவின் சக்திவாய்ந்த பின்புலம் தங்களுக்குள்ளதை தெளிவாக சொன்ன கிரி, இந்துக்களுக்கு ஆதரவான அரசாங்கம் உத்தரபிரதேசத்திலும் மத்தியிலும் இருப்பதால், இரட்டை நோக்கங்களை அடைவதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

நிர்வாணி அகாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் மகந்த் தரம் தாஸ்.

“ராமர் கோயிலைப் போலவே, காசி மற்றும் மதுராவும் உலகெங்கும் உள்ள இந்துக்களால் போற்றப்படுகிறார்கள். அவர்கள் எங்களுடையவர்கள், அவர்களையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம்” என கிரி சொல்லியிருக்கிறார். மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை விட்டுத்தர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

இதில் சுவாரசியமானது, அயோத்தி நில விவகார வழக்கில் முசுலீம் தரப்பின் முக்கியமான வாதியான சன்னி வக்ஃப் வாரியம், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு முன் ‘சமரச’ திட்டத்தை முன்வைத்ததாகவும் பேச்சுவார்த்தைகளின் மூலம் சர்ச்சைக்குரிய பிரச்சினையை தீர்ப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக இந்துக்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை விட்டுத்தர வேண்டும் எனக் கோரியுள்ளது.

கிரியை போன்றவர்களுக்கும் உத்தர பிரதேச சட்டசபை மற்றும் இந்திய பாராளுமன்றத்தில் இருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் சமரசம் என்ற ஒன்று இல்லை. எனவே, அவர் இந்துக்கள் எந்த சூழ்நிலையிலும் காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை விட்டுத்தரக்கூடாது என தெள்ளத்தெளிவாக மீண்டும் ஒருமுறை கூறிவிட்டார்.

இந்து மதவெறி கும்பலால் குறிவைக்கப்பட்டிருக்கும் மதுராவிலுள்ள மசூதி.

வி.எச்.பி. மற்றும் பாஜகவின் ஒரு பயங்கரவாத தலைவரான வினய் காட்டியாரும் காசியும் மதுராவும் இந்துக்களுடையது எனச் சொன்னார்.

1980 – 1990-களில் ‘அயோத்தி மற்றும் பாபர் வெறும் முன்னோட்டம்தான். காசியும் மதுராவும் பாக்கி உள்ளது’ இரத்தவெறி முழக்கத்தை, காவி கும்பல் இந்தியாவின் பொதுவெளி எங்கும் முழங்கியது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திலும் அதன் நிறுவனங்களிலும் அரசியல் ரீதியான ஊடுருவல் முழுமையானதாக இல்லை. இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கமும் லக்னோவில் உள்ள மாநில அரசாங்கமும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வால் மட்டுமல்ல, 27-30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தீவிரத் தன்மையுடன் உள்ளன. எனவே, இந்த அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகமான தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை காட்டுகின்றன.

இந்தியா தனது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை இன்னும் அதிகமாகக் காணும் என கணிக்க முடிகிறது. அதோடு, சிறுபான்மையினரின் உயிர்கள் மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அச்சுறுத்தல்களும் அதிகமாகும்.

படிக்க:
அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !

1993-ம் ஆண்டு இந்தியா டுடே இப்படி எழுதியிருந்தது:

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது எழுந்த தூசு இன்னும் அடங்கவில்லை. ஆனால், அயோத்தி பேரழிவு நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாஹி இத்கா அடுத்த இலக்காக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

காசியும் மதுராவும் தங்களது ‘உடனடி நிகழ்ச்சி நிரலில்’ இல்லை என பாஜக சொல்லிக்கொள்கிறது. ஆனால், வி.எச்.பி.யின் பொது செயலாளர் அசோக் சிங்காலும் ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர் ராஜேந்திர சிங்கும் மதுரா தங்களுடைய திட்டத்தில் நிச்சயமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். சிங் சொன்னார்: ‘அத்வானி இது எங்களுடைய உடனடி திட்டமில்லை என்றுதான் சொன்னாரே தவிர, ஒருபோதும் இல்லை எனச் சொல்லவில்லை’. இந்துத்துவ படைகளுக்கு அது எந்த நேரம் என்பது மட்டும்தான் இப்போது உள்ள கேள்வி.

வாரணாசியிலுள்ள க்யான்வாபி மசூதி.

அயோத்தி உதாரணம் போதுமென்றால், எதுவும் நன்றாகவே நடக்கும். வி.எச்.பி, ‘அயோத்தி, மதுரா மற்றும் காசி ஆகிய இடங்களில் கொள்ளையர்களால் கட்டப்பட்ட மசூதிகளை அகற்ற வேண்டும்’ என அறைகூவல் விடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.எச்.பி. முதல் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1989 ஜூன் மாதம் பாஜக தனது தேசிய செயலாளர்கள் கூட்டத்தில் இதை முறையான தீர்மானமாக நிறைவேற்றியது.

இப்போது, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளை, மசூதிக்கு அடுத்துள்ள நான்கரை ஏக்கர் நிலத்தை மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தும் இடத்துக்காக வேண்டும் என உரிமை கோருகிறது. பாபர் மசூதி வழியில் மதுராவில் உள்ள இத்கா போவதற்கு அதிக காலம் எடுக்காது.

டிசம்பர் 1992- ஜனவரி 1993 வரை அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி சீர்குலைப்புக்கு எதிர்வினையாக எங்களுடைய இதழான ‘கம்யூனலிசம் காம்பாட்’ 1993-ம் ஆண்டு துவக்கப்பட்டது. www.sabrang.com என்ற இணையதளத்தில் இந்த இதழின் பிரதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்துமதவெறியர்களின் சதிகளை அம்பலப்படுத்தி வரும் சப்ரங் இணையதளம்.

இந்திய அரசியலின் வன்முறை திருப்பத்தை நாங்கள் பின் தொடர்ந்தது மே, 2003-ல். அதாவது, குஜராத்தின் 2002 படுகொலைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு. தாக்குதலுக்கு சாத்தியமாகக்கூடிய தெற்காசியாவின் முக்கியமான சூஃபி தளங்கள் அல்லது இசுலாமிய அடிப்படையிலான வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் பட்டியலை நாங்கள் வெளியிட்டோம்.

இந்து ராஷ்டிரத்தின் இரத்தவெறி பிடித்த படைகள் வன்முறை அழிவு மற்றும் திணிப்பு மட்டுமே தங்களுடைய வழிமுறையாக நம்புகின்றன.

மேற்கண்ட பட்டியல் ஒரு மின்னஞ்சலிலிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை நெருக்கமாக ஆய்வு செய்யும்போது, இந்தப் பட்டியல் விநியோகிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், ‘தேசியவாதம்’ என குறுகியுள்ளது. தூண்டப்பட்ட வன்முறை, மத மோதல்கள் இன்னும் அவர்களின் திட்டத்தில் உள்ளதையே இது காட்டுகிறது.

இந்தப் பட்டியல் விரிவானது ; எந்தவொரு யூனியன் பிரதேசத்தையோ மாநிலத்தையோ அதன் முன் தேர்வில் அது விட்டுவைக்கவில்லை. நமது தலைநகரமான டெல்லியில் இந்துத்துவ படைகளின் 72 இலக்குகள் உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகள், டெல்லி நிஜாமுதீனில் அழகாக பராமரிக்கப்பட்டுள்ள தர்கா உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

படிக்க:
அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !

தெலுங்கானாவில் உள்ளது. யூனியன் பிரதேசமான டையூ-விலும்கூட. சொல்லத்தேவையில்லை குஜராத்தில் பெரிய பட்டியலே உள்ளது. மேற்கு வங்க (கவனம் அங்கு ஒரு பாஜக அரசாங்கம் உள்ளது) த்தில் 120-க்கும் மேற்பட்ட ‘இலக்கு வழிபாட்டிடங்கள்’ உள்ளன. அசாமிலும். ‘கம்யூனலிசம் காம்பாட்’ சுருக்கப்பட்ட பட்டியலை மட்டுமே வெளியிட்டது; தெளிவாக இந்தப் பட்டியலில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.

இந்து மதவெறியர்களின் ”ஹிட் லிஸ்ட்”.

இந்து ராஷ்டிரத்தை முன்னிறுத்தி, புது டெல்லியில் உள்ள அரசாங்கம், 2019-ல் பல மாநிலங்களில் அரசியல் அதிகாரம் செலுத்தும் நிலையில், இந்தியாவின் முகலாய ஆட்சிகாலத்தின் புகழ்பெற்ற மசூதிகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மிருகத்தனமான வன்முறை மூலம் சிதைத்து வரலாற்றை மாற்ற நினைக்கிறது. இதன் மூலம் உயர்சாதி, பார்ப்பன, இந்துத்துவ தேசத்தை உருவாக்கலாம் எனத் திட்டமிடுகிறது.

இந்த அரசியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, இந்தியர்களின் பரந்த பிரிவினர் – மேலாதிக்க வரையறைக்குள் வராத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் – இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவார்கள். பவுத்தர்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவாளர்கள், மதச்சார்பற்றவர்கள், இடதுசாரிகள் ‘கற்பனையான இந்து தேசத்தின் எதிரிகள்’. இதில், முசுலீம்கள் மிகவும் விசம் நிறைந்த இலக்காக சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர்.

இத்தாலியின் முசோலினி, ஜெர்மனி இட்லரிடமிருந்து உத்வேகம் பெற்ற அவர், காந்தியின் வாழ்க்கை மீது நடத்தப்பட்ட முதல் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின், எம்.எஸ். கோல்வாக்கர்  We and Our Nationhood Defined (1939)  என்ற நூலை எழுதுகிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் ‘முசுலீம் இசுலாம் தேசம்’ என கொடி ஏந்தியவர்கள் ஒருங்கிணைந்த இந்திய தேசத்தை வெற்றிகரமாக கிழித்து எறிந்தார்கள். புரையோடிய காயத்துடன், இந்தியா வன்முறையாகப் பிரிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் கோல்வால்கர்.

1925-ம் ஆண்டு முதல், ஆர்.எஸ்.எஸ். இந்திய சமூகத்தை அரசு குறித்த கருத்தை மாற்றி வடிவமைக்கும் தனது திட்டத்தை தொடங்கியதிலிருந்து, அது நீண்ட பாதையை கடந்து வந்திருக்கிறது. இப்போது, அது நூற்றாண்டை கொண்டாட ஆறு ஆண்டுகள் உள்ள நிலையில், நாம் எச்சரிக்கைக்கு உள்ளாகியிருக்கிறோம்.  இந்தத் திட்டம், இந்தியாவின் குடியரசு மற்றும் அரசியலமைப்பின் அடித்தளத்தை குறைமதிப்பு செய்து, அதை பெரும்பான்மை, மதவாத அரசாக மாற்றுவதில் வெற்றி காணுமா?

இந்தியாவை தாங்கள் விரும்பிய இந்துத்துவ அரசாக கற்பனை செய்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆரம்ப கால நூல்களைப் பார்ப்போம். இதில் மற்ற அனைத்து துணை அமைப்புகளும், வி.எச்.பி. மற்றும் சாமியார்களின் அமைப்பும் இந்த தாய் அமைப்பின் அரசியல் குறிகோளுடன் இணைந்தே உள்ளன.

Bunch of Thoughts என்ற நூல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ-புத்தகமாக உள்ளது. இந்த தளம் கண்காணிக்கப்பட்டு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ். நூல்கள் இணையதளத்தில் பரவலாகக் கிடைக்கின்றன. புத்தகக் கடைகளிலும் சமூக அரசியல் சமூகங்களின் விற்பனையகங்களிலும் இவை கிடைக்கின்றன.

1939-ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த எம்.எஸ். கோல்வாக்கர் வரையறுத்த We or Our Nationhood இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. சில ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.கவினர் இந்த நூலை சொந்தம் கொண்டாட மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ இணையத்திலும் இந்த நூல் இல்லை.

எம்.எஸ். கோல்வாக்கர் வரையறுத்த We or Our Nationhood நூல்.

‘கம்யூனலிசம் காம்பாட்’டில் நாங்கள், இதன் 1947 பதிப்பின் நகலை எடுத்து வைத்திருக்கிறோம்.

2015-ம் ஆண்டு டிசம்பரி எழுதிய ஒரு பெரிய கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ எழுத்துக்களில் கூறப்பட்ட இந்து ராஷ்டிர கனவு குறித்து முழுமையாக ஆராய்ந்து எழுதினேன்.

அதிலிருந்து நினைவில் கொள்ள வேண்டிய சிலவை:

ஆர்.எஸ். எஸ். மற்றும் பாஜக அரசியலமைப்புக்கு எதிரானவை

ஆர்.எஸ்.எஸ். – உடன் கருத்தியல் ரீதியாக தொடர்புள்ள, தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக, இந்திய அரசியலமைப்பு வரையறை செய்த இந்திய தேசிய வாதம் மற்றும் இந்திய குடியுரிமை குறித்த கருத்தாக்கத்துக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படை கொள்கைகளைக் கொண்ட Bunch of Thoughts நூலின் 119-ஆம் பக்கத்தில், நூலின் ஆசிரியர் ‘பிராந்திய தேசியவாதம் என்ற கருத்து அபத்ததை முற்றிலுமாக தவறு என்கிறார்.

கோல்வாக்கர் கூறுகிறார்: அவர்கள் (அரசியலமைப்பு சபையின் தலைவர்களை சுட்டுகிறார்) இங்கே ஏற்கனவே ஒரு முழுமையான பழங்கால இந்துக்களுக்கான தேசம் இருந்ததது என்பதை மறந்துவிட்டார்கள். நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் இங்கு விருந்தினர்களாகவோ, யூதர்கள் மற்றும் பார்சிகள் அல்லது படையெடுப்பாளர்களாகவோ, முசுலீம் மற்றும் கிறித்தவர்கள்  வந்தவர்கள்அவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என எப்படி அழைக்கப்பட முடியும் என்கிற கேள்வி எழவில்லை. ஏனெனில் தற்செயலாக அவர்கள் ஒரு பொதுவான எதிரியின் ஆட்சியின் கீழ் ஒரு பொதுவான பிரதேசத்தில் வசித்தார்கள்”.

அரசியலமைப்பை ரத்து செய்வதற்கான அதன் நோக்கம் குறித்து ஆர்.எஸ்.எஸ். வெட்கம் கொள்ளவில்லை!

“…’இந்து தேசியவாதம்குறித்து பேசுவது நம்மை குறுக்கிவிடும்அவை மதவாத’, பிற்போக்குத்தனமான கருத்துக்கள் என மனித சகோதரத்துவம் குறித்த உயர்ந்த தத்துவம் கொண்டவர்கள், பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் உள்ளிட்ட பலவற்றின் பெயரால் நாம் இதுவரை முட்டாளாக்கப்பட்டோம்.

இதை ஒரு பந்தயமாக நாம் பார்க்க வேண்டும். மேலும் நமது தேசியவாதம் ஒரு பண்டைய உண்மை. பாரதத்தின் தேசிய சமூகம் இந்துக்கள் என்பதை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும். எனவே, நமது நிறுவனர், நமது அமைப்புக்கு ராஷ்டிரியஎன்ற வார்த்தையை அதை நினைவுபடுத்தும் விதமாகவே சேர்த்தார்.

நாம் மீண்டும் ஒருமுறை முழுமையான நிலையில் எழுந்து நின்று, பாரதத்தின் இந்து தேசிய வாழ்வை பெருமையுடனும் புகழுடனும் தைரியமாக வலியுறுத்த வேண்டும். இது நமது பிறப்புரிமை (எம்.எஸ். கோல்வாக்கரின் Bunch of Thoughts பக்கம் 127)

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?

மசூதிகளும் நமது ஒத்திசைவான கலாச்சாரமும் இந்த அரசியல் திட்டத்தின் மிக வெளிப்படையான இலக்குகளாக மாறியிருக்கின்றன. கலாச்சார மறு வடிவமைப்பு மிருகத்தனமானது; நவீன இன அழிப்பு. மேலும் இந்தியாவின் பரந்துபட்ட சமூகங்களின் சம உரிமை, குறிப்பாக இப்போதும்கூட அன்றாடம் பயத்தில் வாழும் முசுலீம்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்குவதாகும்.

இந்து மதவெறியர்களின் கொலை மிரட்டல்களையும் மீறி இன்றுவரை தீரத்துடன் களமாடும் தீஸ்தா சேடல்வாட்.

பயம் மற்றும் அச்சுறுத்தலின் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டி, பின் இனப்படுகொலை திட்டங்களை செயல்படுத்துவது அரசால் அனுமதிக்கப்பட்ட தன்மையை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் குடியுரிமை உரிமைகள் தொடர்பான திட்டங்கள் இதுபோன்ற அரசியல் திட்டங்களாக மாறியுள்ளன.

மசூதிகள் மற்றும் தர்காக்களை இடிப்பது என்கிற அச்சுறுத்தல்  எப்போதும் அவை தொடர்பான மக்கள், அவர்கள் நம்பிக்கை மீதான வன்முறையையும் சேர்த்தவையே. தேசிய குடிமக்கள் பதிவேடு (‘கரையான்கள்’ ‘துரோக ஊடுருவல்காரர்கள்’ என்ற பதங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது) என்ற அச்சுறுத்தலுடன் வரும் இந்த வெட்கக்கேடான முயற்சிகள், அவர்களை அடிமைகளாக்கவே செய்யப்படுகின்றன. இந்த மக்கள், ஏற்கனவே கோட்பாட்டளவில் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கட்டுரையாளர் :  தீஸ்தா செடல்வாட்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !

ரெங்கநாதன் தெரு முழுக்க சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட தையற் கடைகள். இரண்டு மெஷின் முதல் இருபது மெஷின்கள் வரை கொண்ட பலதரப்பட்ட கடைகள்… இவையில்லாமல் சுடிதார் பிளவுஸ்களில் பல அலங்கார டிசைன்கள் வைத்துத் தைக்கும் பொருட்கள் விற்கும் கண்ணைக் கவரும் கடைகள். அங்கு நுழையும்போது … “சார், சார் இங்க வாங்க……” என்று சுடிதார், பிளவுஸ் தைக்க நம்மை கூப்பிடுகிறார்கள்.

ரெங்கநாதன் தெருவில் அமைந்துள்ள தையற் வளாகங்கள்.

அதில், ‘ஓம் ஸ்ரீ டைலர்ஸ்’ என்ற கடையை அணுகினோம். கடையின் உரிமையாளர் கல்பனா, இளம் கர்ப்பிணிப்பெண். அவர் கஸ்டமர்களிடம் புதிய துணிகளை வாங்கிக்கொண்டு, அவர்களின் அங்க அளவுகளை ஒவ்வொன்றாக நீண்ட நோட்டில் குறித்துக்கொண்டிருந்தார். அவரிடம் வந்த விஷயத்தைக் கூறி,.

“நீங்கள், முகம் தெரியாத புது வாடிக்கையாளருக்குத்தான் தைப்பீர்கள், நிரந்தர வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் அளவுக்கு உங்களுக்கு அனுபவமோ, தொழில் நேர்த்தியோ கிடையாதென்று ஊர் பக்கம் டெய்லர்கள் கூறுகிறார்களே உண்மையா” என்றோம்.

அவருக்கு சடக்கென்று கோபம் வந்தது. அதை மறைத்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் “அப்படியா? யாரோ வேலையில்லாதவர்கள் சொல்லியிருப்பார்கள். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் டிசைன்கள் காட்டி அதே மாதிரி வேண்டுமென்று கேட்கும் கஸ்டமர்கள்தான் அதிகம். ஒருவருக்கு தைத்ததை வைத்து அதே டிசைனை இன்னொருவருக்கு ஒப்பேத்த முடியாது. அதில் ஆயிரம் வித்தியாசம் கேட்பார். இப்படி தையுங்கள் என்று தனது ஆண்ட்ராய்ட் போனைக் காட்டி அதில் மாடல், மாடலாக பல ஃபோட்டோக்களை கொட்டுவார். அதில் கொஞ்சம் பிசகினாலும் கோபப்படுவார்கள்.

‘ஓம் ஸ்ரீ டைலர்ஸ்’ கடை உரிமையாளர் கல்பனா.

சில நேரத்தில், ‘நான் கொடுத்த துணியைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் தைக்க வேண்டாம்…. ஆயிரம் ரூபாய் மெட்டீரியலைக் கெடுத்துவிட்டீர்கள்’ என்று அழும் காலேஜ் பெண்கள்கூட உண்டு. அவர்களை சமாளித்து அவர்கள் சொல்லும் திருத்தங்களை செய்து கொடுத்தால் கூலி மட்டும்… பஜார் கூலியிலிருந்து ஐந்து பைசா அதிகம் தர மாட்டார்கள். ஆனால் ஆயிரம் அலங்கார வேலைகளை  சொல்லி வேலையை கூட்டுவார்கள். அதற்கு கூலி பத்துரூபாய் அதிகம் கேட்டால், ‘துணியே…… ஐந்நூறூ, ஏழுநூறு…. கூலி இவ்வளவ்வா….’ என்று டக்கென்று வேறு டெய்லரிடம் தாவி விடுவார்கள்….

இதனால் பல ஆண்டுகளாக கூலியை கூட்டவேயில்லை…. சாதா சுடிதார் தைச்சா நூற்றி இருபது, லைனிங் வைச்சி தைக்க இருநூத்தி நாப்பது, லைனிங் மெட்டீரியல் நாங்களே போட்டா மூன்னூற்றி அறுபது எனக் கூலி வாங்குவோம். இதில் அவர்கள் கழுத்து, கையில் எக்ஸ்ட்ரா வேலை ஸ்பிரில், அம்பரெல்லா ரிச் மாடல் என ஆயிரம் சொல்லுவார்கள்.

படிக்க :
♦ திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
♦ அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

சிலர் பார்ட்டி, பங்ஷன், பர்தேடேக்குன்னு தைக்க சொல்லுவார்கள். சுடிதாரில், சமிக்கி, கல், ஆரம் தனியாக வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு மட்டும் நாங்கள் கூலியை அதிகம் கேட்போம். இப்படி எங்கள் வேலையைப் பார்த்து பிடித்துப்போய் தொடர்ந்து வரும் கஸ்டமர்களும் உண்டு. வேலை பிடிக்காமல் சாபம் விடும் கஸ்டமர்களும் உண்டு. எல்லோரையும் அனுசரித்துப் போனால்தான் இங்கு தொழில் செய்ய முடியும்.

இந்த இடத்தில் டெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும். அவர்கள் என்ன கேட்டாலும் கோபம் வராமல் சிரித்துப் பக்குவமாகப் பதில் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான், நமது வேலையில் சிறு குறை இருந்தாலும், அனுசரிப்பார்கள். அதுதான் இந்த வேலையின் இரகசியம்.

இந்த ஏரியாவில் தொழில் செய்வதற்கு பல லட்சங்களைக் கொட்டியிருக்கிறோம். இந்த கடை பத்துக்கு பத்து. இதற்கு பகடி (அட்வான்ஸ்) மட்டும் பத்து லட்சம். கடை வேண்டாம் என்றால் நாமே இன்னொருவருக்கு கை மாற்றி போட்ட பணத்தை எடுக்க வேண்டும். பகடி அப்போதைய மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து கூடவும், குறையவும் செய்யும். இதில்லாமல் மாத வாடகை பதினெட்டாயிரம் ரூபாய். தனியாக மெயின்டனன்சு ஆயிரம், கரண்ட் பில் ஆறாயிரம் வரும். கடையில் வேலை செய்பவர்களுக்கு அட்வான்ஸ் தனி. கட்டிங் மாஸ்டருக்கு ஐம்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம். டெய்லருக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம். தெருவில் நின்று கஸ்டமர்களை அழைத்துவரும் பீஸ் பிடிப்பவர்களுக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் – இவை நிரந்தர அட்வான்ஸ்.

இவையில்லாமல், எல்லோருக்கும் அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ப பீஸ் ரேட் தனி. ஒரு சுடிதாருக்கு டெய்லர், கட்டிங் மாஸ்டர், பீஸ் பிடிப்பவர் என்று எழுபது ரூபாயிலிருந்து நூற்றிருபது வரை போய்விடும் மீதிப்பணத்தில்தான் நாங்கள் இவ்வளவு செலவையும் செய்ய வேண்டும். சமயத்தில் எங்கள் கூலியையும் சேர்த்துப் பார்த்தால், எதுவும் மிஞ்சாது.

ஆண்டுக்கு ஆறு மாதங்கள்தான் வேலையே; மீதியை பண்டிகை நாட்களில்தான் சரிகட்ட வேண்டும். ஆனால் அப்போது தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள். மாவு உரலில் நாய் தலைய விட்டக் கதைதான் எங்க வேலை. வேறு தொழிலுக்கு போகவழியில்லை என்பதால் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்” என்றார்.

கட்டிங் மாஸ்டர் ரவி :

ரவி, கட்டிங் மாஸ்டர்

இந்தத் தொழில் எனக்கு நாப்பது வருட அனுபவம். இவ்வளவு நாள் நிக்கணும்னா கஸ்டமரையும் முதலாளியையும் மனசு நோகாம நாங்க வைச்சிருக்கணும். அவங்க என்ன டிசைன் கேட்டாலும் கட் பண்ணி காண்பிக்கணும். டம்மி மாடல் கட் பண்ணுவதற்கு ஒரிஜினல் துணி தேவையில்லை, பழைய பேப்பர் வைத்தே கட் பண்ணி காண்பிப்போம். சுடிதார், பிளவுஸ் எதுவாக இருந்தாலும், கஸ்டமருக்கு கச்சிதமா பொருந்தணும். பிளவுஸ்னா பாடி, ஆர்ம்ஸ்; சுடிதாருன்னா, இடுப்பு, பாட்டம் நச்சுன்னு இருக்கணும். அதுக்கு துல்லியமா வெட்டணும். லைனுக்கு (டெய்லர்களுக்கு) சளைக்காம கட் பண்ணி கொடுத்துக்குனு இருக்கணும்.

நான் இதற்கு முன் சவுகார் பேட்டையில் வேலை செய்தவன். அதனால இந்த இடத்தில் வேலை செய்யறது சாதாரணம். மார்வாடிங்க உடம்ப தூணு மாதிரி வைச்சிக்கிணு, தைக்கிற துணி மாட்டுனா செப்பு சிலை மாதிரி தெரியுணும்னு நினைப்பாங்க…. அவங்க வந்தாங்கன்னா நம்மகிட்ட சிலை வடிக்கிற சிற்பிகிட்ட, சொல்ற மாதிரி – இப்பிடி, அப்பிடியினு இன்ச், இன்சா  சொல்லுவாங்க. நம்ம வேல அவங்களுக்கு பிடிச்சிப்போச்சினா, ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி டஜன் கணக்குல துணி தைப்பாங்க.

இங்க தி. நகர்ல கூலி கம்மி ஆனா வேலை நிரந்தரம். ஒரு பீஸ் கட் பண்ணா சராசரியா முப்பது ரூபாய் கிடைக்கும். கொறஞ்சது இருபது பீஸ் கட் பண்ணாத்தான் வீட்டுக்கு எதாவது கொடுக்க முடியும். சில நேரத்துல கடன் வாங்கி செலவுப் பண்ணறது நடக்கும். ரொம்ப டல் அடிக்கும்.

டெய்லர் சிவா :

சிவா, டைலர்

முப்பது வருச அனுபவம். விடிஞ்சா இந்த மெஷின்லத்தான் கண் முழிக்கிறேன். பண்டிகை சீசனுக்கு ஒரு நாளைக்கு மூணு மணி நேரங்கூட தூங்க மாட்டோம். வேலைன்னு வந்தா உடம்பு தானே சுறுசுறுப்பாயிடும். நாங்க தொழில் கத்துக்கினதெல்லாம் இப்ப மாதிரி இல்ல…. அப்ப எல்லாம் குருக்கிட்ட மந்திரத்தை கத்துக்கிட்ட மாதிரி கத்துக்கிட்டோம். மெஷின்ல கால் வைக்கிறதுக்கு தவம் கிடப்போம். மொதலாளி பழைய துணிய எங்ககிட்ட ஓரம் அடிக்க கொடுக்கறதுக்கே மூணு வருசமாகும்.

படிக்க :
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
♦ சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

எனக்கு படிப்பு வராததால எங்க ஆயா, நடையா நடந்து இந்தத் தொழில்ல விட்டாங்க…. தொழிலுக்கு புதுசுல டீ கிளாசு கழுவுறதுதான் வேல. டீ வாங்கறதுக்கு ஒரு சீனியர் இருப்பான், நான் கடைய பெருக்கணும், மெஷின  துடைக்கணும், கிளாசக் கழுவணும். இதுதான் ஒரு வருசம் என் வேலை. சாயங்காலம் வீட்டுக்குப்போகும் போது மொதலாளி ஐம்பது பைசா கூலி கொடுப்பாரு…. அதுவும் சில நாள் வேல இல்லடானு இருபது பைசாவாக்கிடுவாரு….. மொதலாளிக்கு மொகம் கோணாம இப்படி வேல செஞ்சா… கொக்கி, பட்டனு கட்றது, எம்மிங் பண்ணறது, காஜா எடுக்கறதுனு ஒரு வருசம் போச்சு. அதுக்கு அப்புறம் புடவைய ஓரம் அடிக்கற வேலய கொடுத்தாங்க…. புதுசா மெஷுனுல உட்கார்ந்தவுடன் தலைகால் புரியாது. பெருமையா இருக்கும்….. அப்படி கத்துக்கிட்டோம் இந்த வேலையை….

ஆனா, இப்ப வர்றதுங்க…. மெஷின்ல எப்படி உட்காரதுன்னே தெரியாம நான்தான் டெய்லருன்னு காலர தூக்கி விட்டுக்குதுங்க…… அவங்கதான் மொதலாளியினு நிக்கறாங்க…. எல்லாம் காலத்துக்கேத்த கோலம்….” என்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

0

“நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல நீட் தேர்வே மோசடி !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் சிதம்பரம் ஆறுமுகநாவலர் அரங்கத்தில் கடந்த அக்-23 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலர் தோழர்  மணியரசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி. ராஜூ; பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன்; விழுப்புரம் – அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர் மதுரை வீரன்; கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் பால்ராஜ்; மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான் என்பதையும்; வியாபம் ஊழலை தேசியமயமாக்கியிருக்கிறது என்பதையும்; இவர்கள் முன்வைக்கும் தகுதி திறமை என்ற வார்த்தைகளுக்குப் பின் ஒளிந்துள்ள அரசியலையும் அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம். நீட் தேர்வு, தேசியக் கல்விக்கொள்கை என அடுத்தடுத்து மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது, இக்கருத்தரங்க நிகழ்வுகள்.

இக்கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கியோரின் பேச்சுக்களின் சாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தோழர் மணியரசன்,
மாவட்ட செயலர், பு.மா.இமு. கடலூர்.

”நீட் தேர்வு கொண்டு வரும்பொழுது மருத்துவக் கல்வியில் உள்ள ஊழலை ஒழிப்பதும், தரமான மருத்துவ மாணவர்களை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் நீட் தேர்வு முன் நிறுத்தப்பட்டது. ஆனால் நீட் தேர்வால் இன்று பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். நீட் தேர்வை பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம் நம்ப வைத்து ஏமாற்றியது விளைவு மாணவி அனிதாவின் மரணம் அதைத் தொடர்ந்து பல்வேறு மாணவிகள், பெற்றோர்கள் இறந்தனர். ஆனால், இன்றோ நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து தகுதியுடைய ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தும் மருத்துவராக முடியாமல் உள்ளனர்.

தோழர் மணியரசன், மாவட்ட செயலர், பு.மா.இமு. கடலூர்.

காரணம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மருத்துவ சீட் உறுதி என்ற நிலைதான் மருத்துவ கல்வியில் உள்ளது. அப்போது கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மருத்துவராகலாம் என்றால் தகுதியுடைய ஆயிரக்கணக்கான மாணவர்களுடைய மருத்துவ கனவு என்னவாவது? இறந்துபோன மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன ? என்பதுதான் நாம் அரசின் முன்  வைக்கக்கூடிய கேள்வியாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஆள்மாறாட்ட ஊழல் என்பது தமிழகம் மட்டுமல்லாது இந்திய முழுமைக்கும் உள்ள மாநிலங்கள் அனைத்துமே உள்ளடக்கப்பட்டது தான் அந்த அடிப்படையில் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்தை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தவித மாற்றங்கள் இன்றி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மீண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை இனி நடைமுறைப்படுத்த வேண்டும்”

மதுரை வீரன் ,
மாணவர், அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, விழுப்புரம்.

மதுரை வீரன்.

”நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி தான். அதில் நேர்மை என்பது துளிகூட கிடையாது. ஏனென்றால் பணம் கொடுத்தால் மருத்துவச் சீட்டு. பணம் இல்லை என்றால் மருத்துவ சீட்டு கிடையாது என்பதுதான் நீட் தேர்வு வந்த பின்பு நடக்கும் அவலமாக இருக்கிறது.

குறிப்பாக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டண கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி இருக்கிறது. அதில் மாணவர்கள் முதலீடு செய்கிறார்கள். மருத்துவராக தேர்ச்சி பெற்ற பின்பு அந்த முதலீடு மீண்டும் பெறுவதற்கு பணம் மட்டுமே இவர்களின் நோக்கமாக மாறுகிறதே ஒழிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது என்பதுதான் இந்த நீட் தேர்வு இந்த சமூகத்திற்கு சொல்லித் தரக்கூடிய பாடமாக இருக்கிறது. இந்த அவலநிலையை நீக்க மாணவர்கள் நாம் ஒன்றுபட வேண்டும்”

பால்ராஜ் ,
மாணவர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.

பால்ராஜ்.

”தகுதி திறமை என்று சொல்லக்கூடிய நீட் தேர்வு  கட்டணக் கொள்ளை கூடாரங்களாக மாறிவிட்டது. நீட் தேர்வு பயிற்சி மையம் என்ற பெயரில் நாமக்கல் கிரீன் பார்க் தனியார் பள்ளியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூபாய் 50 கோடி அளவில் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திலே இவ்வளவு தொகை என்றால் இந்தியா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் எவ்வளவு? அங்கே நடக்கும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள்  இன்னும் எவ்வளவு கோடி பணம் பெற்றோர்களிடம் கொள்ளை  அடிக்கிறது என்று நினைத்து பார்க்கவே அதிர்ச்சி அளிக்கிறது.

மோடி அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன், ஒரே தேர்தல் என்ற கோஷத்தின் அடிப்படையில் இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தேர்வாம்? இது நீட் தேர்வில் இருந்து எப்படி தகுதியான மாணவர்களின் மருத்துவ கனவை அடைய விடாமல் தடுத்ததோ. அதேபோன்று இனி பெரும்பான்மை ஏழை மாணவர்கள் உயர்கல்வியை தகுதி இருந்தும் பெற முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட போகிறது.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டண கொள்ளை அடிப்பது போல்   நாடு முழுக்க இனி பயிற்சி மையங்களின் கட்டணக் கொள்ளை அதிகரிப்பதும்,கல்வி உரிமையை பறிக்கப் போகிறது.”

பாரதிதாசன் ,
மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

”தமிழகத்தில் கல்வியை காமராஜர் காலம்தொட்டு தொடங்கியபோது கல்வியை அனைவரும் பயிலவேண்டும் என மதிய உணவு திட்டத்தை அனைவருக்குமான கல்வி ஆக மாற்றுவதற்கு கொண்டுவந்தனர். அதன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தினர். ஆனால் இன்று நீட் தேர்வு கல்வியே கூடாது என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது. மருத்துவ கல்வியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் தேர்வில் மாற்றத்தை கொண்டு வரக்கூடாது; பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்; அதுதான் சரி. ஆனால் அதிகாரிகள் இதை தவறாக செய்துள்ளனர். தண்டனையை அனுபவிப்பது மாணவர்கள் ஆகிய நாங்கள்தான். தமிழகத்தில் 23  மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது இதில் 2335 மருத்துவ சீட் உள்ளது வெளிமாநிலத்தில் இருந்து கைப்பற்ற இவர்கள் வந்தால் நாம் வேடிக்கை பார்ப்பதா? யாருக்கும் கிடைக்காத கல்வியை தீயிட்டு கொளுத்துவோம் என பெரியார் சொன்னார் நாமும் அதை பின்தொடர வேண்டியிருக்கிறது.

பாரதிதாசன் , மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

நீட்டுக்கு முன்பு சில இலட்சங்கள் கருப்புப் பணமாக கொடுத்து மருத்துவ சீட் வாங்கினார்கள். ஆனால் நீட் வந்த பின்பு ஒரு வருடத்திற்கு 20 இலட்சம் என 5 வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நாம் படிப்பதற்கு தரவேண்டும். நீட்டிற்கு முன்பு கறுப்பாக இருந்த பணம் இன்று நீட்டிற்கு பின்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருப்பதுதான் நீட் தேர்வின் சாதனையாக இருக்கிறது. இங்கே உள்ள பாடத்திட்டம் தகுதி அற்றது என கூறுகிறார்கள். இலண்டனில் உள்ள பாடத்திட்டம் தகுதியான சிறப்பான பாடத்திட்டம் தான் அதற்காக இலண்டனில் உள்ள பாடத்திட்டத்தை இங்கு கொண்டு வந்து வைத்தால் இலண்டன் மாணவர்கள்தான் மருத்துவர் ஆவார்கள். அதற்காக அவர்களை நாம் சேர்த்துக் கொள்ளலாமா” என கேள்வி எழுப்பினார்.

வழக்குரைஞர் சி. ராஜு ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

”நீட் தேர்வில் மாணவிகள் பெற்றோர்கள் என ஆறு பேர் தொடர்ச்சியாக இறந்துள்ளனர். நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் புரோக்கர்கள் மட்டும்தான் என இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார்கள். ஆனால்  அப்படியில்லை. அதற்குப் பதிலாக, அகில இந்திய மருத்துவக்கல்வி மருத்துவ கவுன்சில் அதனை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலை தாண்டும் மிகப்பெரிய ஒரு ஊழல் முறைகேடு.

வழக்குரைஞர் சி. ராஜு , மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நீட்டை எதிர்த்து யார் போராடுகிறார்கள் மருத்துவ கனவு கொண்ட மாணவர்கள் மட்டும் அல்லாது மற்ற அனைத்து தரப்பினரும் தமிழகமும்  எதிர்க்கிறது. நீட் எதிர்ப்பு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை எதிர்ப்பு ஆகியவை சமத்துவத்திற்கான அடிப்படையில் அறிவார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பது தமிழகம் மட்டும்தான் மற்ற மாநிலங்கள் போராட்டங்களை முன்னெடுப்பது இல்லை. அதனை தர்க்க ரீதியாகவோ,  பகுத்தறிவு அடிப்படையிலோ பார்க்க தவறுவதுதான் மற்ற மாநிலங்கள் போராட்டம் நடத்தாமல் இருப்பதற்கு காரணங்களாக இருக்கின்றன. அனிதா பிறப்பால் வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர் ஆக இருக்கலாம். ஆனால் அவர் மருத்துவராக வந்திருந்தாள் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஊர் மக்களுக்கு தான் மருத்துவ சேவை ஆற்றுவார். ஆனால் நீட் தேர்வு படிக்கும் மாணவர்கள் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கின்றனர். அதனால் தான் நீட் தேர்வை சாதாரணமான மக்கள் கூட எதிர்த்து நின்று போராடி வருகிறார்கள் தமிழகத்தில்.

படிக்க:
மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

நீட் கோச்சிங் என்பது பிராய்லர் கோழியை உருவாக்குவது. ஆனால் படிப்பு என்பது கற்றல் கற்பித்தல்  முறையில் படிப்பதாகும். நீட் தேர்வு கொண்டு வந்தது இங்கே நிகழ்ந்து வந்த சமத்துவத்தையும், சமுகநீதியையும் சுக்குநூறாக உடைத்து எறிந்திருக்கிறது.

இனி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகள் செல்லமாட்டார்கள். இதன் விளைவு அரசு மருத்துவமனை தனியார்மயமாக்கப்படும் என்பதுதான்.

நீட் எதிர்த்து போராடுபவர்களை இது அரசியலைமைப்பு சட்டத்துக்கு எதிரானது என பேசுகிறார்கள். இந்த சட்டகத்துகுள் இருந்து பேசுவதை தான் பாஜக விரும்புகிறது. பெரும்பான்மை பலத்தை கொண்டு சட்டத்தையே திருத்துகிறது.

மோடி அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் காஷ்மீர் மாநில உரிமையை பறித்து இருக்கிறது. நிதி ஆயோக் WTO கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகள் உணவு , உடை, இருப்பிடம் என அனைத்தையும் மக்களுக்கு தர மறுக்கிறார்கள்.

ஒவ்வொரு கொள்கை சார்ந்த சட்டம் நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் எடுக்கக்கூடிய பெரும்பான்மைதான் அரசியல் முடிவு என சொல்கிறார்கள். களத்திலே  திட்டங்களை  எதிர்த்துப் போராடும் மக்களின் எதிர்ப்புதான் பெரும்பான்மை என ஜனநாயக அடிப்படையில் தான் அந்த திட்டத்திற்கான முடிவை எடுக்க வேண்டும்.

போராட்டங்களுக்கு வெற்றி தோல்வி அளவுகோல் அல்ல, கோரிக்கையின் நியாயம் தான் அளவுகோல். அரசின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் வகையில்தான் நமது முழக்கத்தை முன்நிறுத்தி  போராடுவதுதான் மக்களுக்கு அதிகாரம், மாணவர்களின் அதிகாரம், தொழிலாளர்களின் அதிகாரம், விவசாயிகளின் அதிகாரம்”

தோழர் த. கணேசன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

”தமிழகத்தில் மட்டும்தான் நீட், தேசிய கல்வி கொள்கை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு மக்களை பாதிக்கக்கூடிய மோடி அரசின் பல திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. காரணம் வடமாநிலங்களில் மாணவர்களையும், மக்களையும் பார்ப்பன இந்துமத கட்டுக்கதைகள் அவர்களை சிந்திக்க விடாமல் வைத்துள்ளது. வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் அதற்கு நேர் எதிரானது. குறிப்பாக எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களும் சரி, மாணவர்களும் சரி பகுத்துப் பார்ப்பது, கேள்வி கேட்பது என்பதோடு  தவறுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுப்பது ஆரம்ப காலம் தொட்டு இருந்து வருகிறது.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மட்டுமல்ல, நீட் தேர்வு ஒரு மோசடி. சர்வதேச மாஃபியா கும்பலே இதில் இருக்கிறது என்பதை இன்று நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம். அன்றாடம் செய்திகளில் தகவல்களை நாம் படித்து வருகிறோம். நமக்கு தெரிந்த அளவில் ஐந்து மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளனர் என்பது தெளிவு. இது தமிழகத்தில் மட்டும்தான் நடந்து உள்ளது என்று திட்டமிட்டு இந்த ஊடகங்களால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இது நாடு முழுவதும் மாஃபியா கும்பலாக செயல்பட்டு புரோக்கர்கள் ஏஜென்சிகளை கொண்டு நீட் தேர்வை நடத்துகிறார்கள். 2016-ல் நீட்தேர்வு நடத்தியது ஒரு அமெரிக்க தனியார் நிறுவனம்தான் முதல் முறைகேட்டில் ஈடுபட்டது.

படிக்க:
நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இவர்கள் சொல்லக் கூடிய தகுதி திறமை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இங்கு எந்த வித அங்கீகாரமும் கொடுக்கப்படவில்லை.  அரசு பள்ளியில் நீட் பயிற்சி பெற்ற 40,000 மாணவர்களில் இருந்து ஒரே ஒரு மாணவர்தான் அரசுபள்ளி மாணவன். இவர்கள் சொல்லும் திறமை என்பது, பெரும்பான்மை கிராமப்புற ஏழை மாணவர்களை வடிகட்டுவது அவர்களின் மருத்துவ கனவை சிதைப்பது தான்.

நன்றியுரை : தோழர் மோகன், அமைப்பாளர், புமாஇமு, புதுச்சேரி.

ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி கிடையாது; பணம் உள்ளவர்களுக்கும், பணக்கார வீட்டுப் பிள்ளைகளையும் மெட்டீரியல் மூலதனமாக பார்க்கிறது நீட் தேர்வு முறை. உண்மையில், நவீன மருத்துவ பிக்பாக்கெட் கொள்ளையர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.”

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு : 97888 08110, 91593 51158, 81244 12013

நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்

லகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவை எல்லாம் பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.

எதுபோலெவென்றால், சுமார் 40, 50 ஆண்டுகளுக்குமுன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக் கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது” என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞவல்கியர் ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முந்தியதாகும் என்பது ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு. யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும் கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன. (நூலிலிருந்து பக்.4)

படிக்க:
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?
சிதம்பரம் நடராசர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி !

… “பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத்தையும் கருதி கோவில் களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்” என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ஆபி டூபாய்’ ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார். மேலும், சாணக்கியர் கூறுவதாவது:

“அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும்.”

“அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி, அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“ஒரு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.”

“இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுனம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

அத்திவரதரை தரிசிக்க குவிந்த மக்கள் கூட்டம்.

“தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும் ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும். சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் அதிகமாகப்பலனை அளிக்கின்றது. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. (நூலிலிருந்து பக்.5)

… கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பான பாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும், மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டு சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி, பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்தப் பணத்தைக் கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும்.

முன் காலத்தில் இருந்த அரசர்கள் – மூடர்களும் அயோக்கியர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆட்சியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும் அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காக பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். (நூலிலிருந்து பக்.16)

நூல் : கோவில்கள் ! இங்கு கொள்ளையடிக்கப்படும்
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : சுயமரியாதை பதிப்பகம்,
அம்மன் காம்ப்ளக்ஸ் முதல் தளம், யாழ் தையலகம் எதிரில், வ.உ.சி. வீதி, உடுமலைப்பேட்டை – 642 126.
தொலைபேசி எண் : 97883 24474

பக்கங்கள்: 16
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 11

“என் அப்பாவாக இருங்கள்…”

…திடீரென, “பாருங்கள், வெண்பனி விழுகிறது!” என்று சாஷா சந்தோஷமாகக் கூச்சலிட்டான்.

தி பிலீசி நகரத்தில் மார்ச் மாத ஆரம்பத்தில் திடீரென வெண்பனி விழுமென நான் எதிர்பார்க்கவில்லை. குளிர் காலம் பூராவும் வெண்பனியில் விளையாட வேண்டுமென்ற என் வகுப்புக் குழந்தைகளின் கனவு நிறைவேறவேயில்லை; சூரிய ஒளி மிக்க நாட்களையடுத்து மழை நாட்கள் வந்தன, குளிருக்குப் பின் கதகதப்பான நாட்கள் வந்தன. வெண்பனி, வெண்பனிப் பொம்மைகள் பற்றியும், குளிர் காலத்தில் வெண்பனியில் பனிச் சறுக்கு விளையாடுவது பற்றியும் குழந்தைகள் கவிதைகளைப் படித்தனர், கதைகளைக் கேட்டனர், ஆனால் வெண்பனி விழவேயில்லை…

”வெண்பனி, வெண்பனி, வெண்பனி !” என்று குழந்தைகள் கத்தியபடி ஜன்னல்களை நோக்கி ஓடுகின்றனர்.

வெண்பனி பெரும் திட்டுத் திட்டாக மேகத்திலிருந்து கொட்டுகிறது. பள்ளி முற்றம் வெண்பனியால் நிரம்புகிறது. நாங்கள் எவ்வளவு நாட்களாக இதற்காகக் காத்திருந்தோம்! ஒருவேளை எனது வகுப்புக் குழந்தைகளில் சிலர் இந்த அற்புதமான காட்சியை முதன் முதலாகப் பார்த்திருக்கலாம்.

“வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா?” என்று நான் கேட்கிறேன்.

இதில் என்ன சந்தேகம், எல்லோருக்கும் சம்மதம்!

குழந்தைகள் மேலாடைகளை அணிகின்றனர். வரிசையாக நிற்குமாறு நான் வற்புறுத்தவில்லை. அவசரமாகச் செல்ல வேண்டுமே. நாங்கள் முற்றத்திற்கு வருகிறோம்.

மகிழ்ச்சியை வருணிக்க வார்த்தையே இல்லை!

கலைப் பாடத்திற்குப் பதில் வெண்பனியை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுகிறோம், வெண்பனியில் படுத்துப் புரள்கிறோம்.

பெரிய இடைவேளையின் போது ஒரு பெரும் வெண்பனிப் பொம்மையைச் செய்கிறோம்.

உழைப்புப் பாடத்திற்குப் பதில் பூங்காவிற்குச் சென்று பனிச் சறுக்கு விளையாட்டு விளையாடுகின்றோம்.

நேயாவுடன் சேர்ந்து பனிப் பொம்மையைச் செய்கிறோம்.

“எனக்கு உங்களுடன் ஒரு விஷயம் பேச வேண்டும்!”

அவள் ஒரு பிர் மரத்தடியில் நிற்கிறாள். அந்த மரத்தைப் பற்றி நான் குலுக்க அதன் மீதுள்ள வெண்பனி அவள் மீது விழுகிறது. அவள் சிரிக்கிறாள், கீழே விழுகிறாள். சாப்பிடப் போகலாமா? இல்லை, இது நேரமில்லையே!

மரங்களின் மீதுள்ள வெண்பனியையும் சுற்றிலும் வெள்ளை வெளேரனக் காட்சியளிப்பதையும் பார்த்து ரசிக்கிறோம்.

நாங்கள் களைத்து விட்டோம். வெண்பனி கொட்டுவது நிற்கிறது. திரும்பி வருகிறோம்.

எவ்வளவு மகிழ்ச்சிகரமான முகங்கள்! கன்னங்கள் எப்படிச் சிவந்து விட்டன!

விரல் நுனிகளும் மூக்கு நுனியும் உறைந்து விட்டனவா? பயப்பட ஒன்றுமில்லை ! – விரைவில் எல்லாம் சரியாகிவிடும்.

ஆனால் நமக்கு இன்று எவ்வளவு மறக்க இயலாத அனுபவங்கள் கிட்டியுள்ளன!

நேயா என்னை விட்டுப் பிரியாமல் என் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.

“எனக்கு உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும், பிறகு சொல்வேன்” என்று திரும்பி வரும் பாதையில் செல்கிறாள்.

வகுப்பறையில் எங்களைச் சுத்தம் செய்து கொள்கிறோம்.

“சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் அல்லவா! சிறுமிகளுக்கு உதவுங்கள்!”

சிறுமிகள் மேல் கோட்டுகளைக் கழட்டவும் காலணிகளை மாற்றிக் கொள்ளவும் சிறுவர்கள் உதவுகின்றனர்.

சிறுமிகள் சிறுவர்களின் முகங்களைத் துண்டுகளால் துடைத்து விடுகின்றனர்.

“எவ்வளவு நன்றாக உள்ளது!”

“எவ்வளவு அருமையாக உள்ளது!”

“வெண்பனி ராணியைப் பற்றிய ஒரு கதையை உங்களுக்குச் சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள்!…”

“டெஸ்கில் வசதியாக உட்காருங்கள்… கேளுங்கள்!…”

மெதுவாக, ரகசியம் சொல்வது போன்ற குரலில் தொடங்குகிறேன்: “ஒரு காலத்தில்….”

அது ஒரு பெரிய கதை. குழந்தைகள் அசைவின்றி கவனமாகக் கேட்கின்றனர், பலர் குனிந்து, கண்களை மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தூங்கிவிட்டதைப் போலிருக்கிறது.

ஆனால் சாஷா தூங்கவில்லை. அவன் கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறான். எப்போதும் ஜன்னலையே பார்த்தபடி இருக்கிறான். திடீரென கதையின் குறுக்கே வருத்தத்தோடு கூவுகிறான்: “பாருங்கள், வெண்பனி கரைகிறது!”

குழந்தைகள் கதையைப் பற்றி மறந்து விட்டு மீண்டும் ஜன்னல்களை நோக்கிப் பாய்ந்தனர்.

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. சிறிது நேரத்திற்கு முன் முற்றம் முழுவதும் நிறைந்திருந்த வெண்பனி கண்கள் முன்னரே உருகி ஓடுகிறது.

சூரியன் தோன்றுகிறது .

“இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது!” என்று சாஷா கூறுகிறான்.

குழந்தைகள் உருகியோடும் வெண்பனியை வருத்தத்தோடு பார்க்கின்றனர்.

“நமது வெண்பனிப் பொம்மையைப் பார்த்தால் பாவமாய் உள்ளது! அது எப்படி உருகுகிறது!”

“போய் வா, குளிர்காலமே!” என்கிறாள் நேயா.

“போய் வா, குளிர்காலமே!” என்று குழந்தைகள் திரும்பச் சொல்கின்றனர்.

இன்று இரண்டு மணி நேரத்தில் நாங்கள் குளிர் காலத்தை வரவேற்று வழியனுப்பி விட்டோம்.

இவ்வாறாக இயற்கையன்னை அந்த அற்புதமான 122 வது பள்ளி நாளன்று போகின்ற போக்கிலேயே எனது முழு இசைக் குறியீட்டை மாற்றியமைக்கும்படி நிர்ப்பந்தித்தாள்.

“எனக்கு உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!” என்று சிறு உதடுகள் என் காதில் முணுமுணுக்கின்றன, இன்னமும் சில்லிட்டிருந்த ஒரு சின்னஞ்சிறு கரம் என்னை ஜன்னலிருந்து பிரித்து வகுப்பறையின் மூலைக்கு இட்டுச் செல்கிறது.

“உட்காருங்கள்!”

டெஸ்கில் உட்காருகிறேன். சின்னஞ்சிறு கைகளால் என் கழுத்தைக் கட்டிப் பிடித்து என் வலது காதருகே சிறு உதடுகளை வைத்து ஏதோ சொல்கிறாள். வெப்பமான மூச்சுக் காற்றோடு வார்த்தைகள் நடுங்கியபடியே வெளிவருகின்றன:

“வந்து….. நான் என்ன சொல்ல, விரும்புகிறேன் தெரியுமா… நீங்கள் ஏன் எனக்கு அப்பாவாக இருக்கக் கூடாது?.. அப்போது அம்மா என்னை போர்டிங் பள்ளியில் சேர்க்க மாட்டாள், நானும் உங்களுடனே இருந்து விடுவேன்.”

ஆனால் அது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அம்மா கல்லைப் போல் உறுதியாக இருக்கிறாள்.

நல்ல அன்பான வார்த்தைகளை நான் தேடுகிறேன்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

“நீ கவலைப்படத் தேவையில்லை, போர்டிங் பள்ளியில் மோசமாக ஒன்றும் இருக்காது . அங்கு எப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்களும் குழந்தை வளர்ப்பாளர்களும் உள்ளனர் என்று எனக்குத் தெரியும். அவர்கள் உன்னிடம் அன்பாக நடப்பார்கள், உனக்கும் அவர்களை உடனே பிடித்துவிடும். நானும் மற்றவர்களும் உனக்குக் கடிதங்களை எழுதுவோம். நான் உன்னை வந்து பார்ப்பேன். உனக்கு அங்கே அலுப்பே ஏற்படாது.”

“அப்படியெனில், எனது அப்பாவாக இருக்க உங்களுக்கு விருப்பமில்லையா!” என்றாலும் அவள் என் கன்னத்தில் முத்தமிடுகிறாள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?

2

நாளிதழ் ஒன்றில் வெளியான அந்த விளம்பரத்தை காண நேரிடும்போது நேரில் சென்று நான்கு அறை விடலாமா என்ற ஆத்திரம்தான் பிறந்தது. ”பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு” என்ற தலைப்பில் வெளியான விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ”பிராமின்ஸ் மட்டும்” என்ற வாசகம்தான் ஆத்திரத்திற்கான காரணம்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மேலூர் லட்சுமிநகர் பகுதியில் ஸ்ரீசக்தி ரெங்கா என்ற பெயரிலான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டவிருக்கிறது, ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கட்டுமான நிறுவனம். வீட்டை கட்டுவதற்கு முன்பாகவே, அந்நிறுவனத்தின் சார்பில் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த விளம்பரம்தான்,  சுயமரியாதை உணர்வை சீண்டிப் பார்க்கிறது.

”ஸ்ரீரங்கம் தெய்வீகமான இடம். ஆச்சாரமான இடத்தில் அசைவம் புழங்கலாமா? அதனாலதான் அப்படி ஒரு ஏற்பாடு. இது எப்படி சாதி துவேஷமாகிவிடும்” என்று எதிர்கேள்வியெழுப்பும் அதிபுத்திசாலிகளுக்கெல்லாம் அரைநூற்றாண்டுக்கும் முன்னரே பதிலுரைத்துவிட்டார், தந்தைப் பெரியார்.

”ஒரு தெருவில், 4 வீடுகள் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டின் முன்பு, இது பதிவிரதை – பத்தினி வீடு” என்று பெயர்ப் பலகை தொங்கவிடப்பட்டால், மற்ற வீட்டாரைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்? அதுபோல, ஒருவன் பிராமணன்’ என்று தம்பட்டம் அடித்தால், மற்றவனை சூத்திரன்’ – கீழ் வர்ணத்தவன் என்று கூறுவதுதானே! … சூத்திரன்’ என்பதற்கு விபச்சாரி மகன் என்ற பொருள் உண்டே! (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415).” (விடுதலை, ஜூன்-15, 2018)

“‘ஆலயங்களில் நுழைய முடியாது! அபார்ட்மெண்டிலும் நுழைய முடியாது?… பிராமின்ஸ் மட்டும் என்று விளம்பரம் கொடுத்த சாதிப் பிரிவினைவாதிகளே, அந்த அபார்ட்மென்டில் கக்கூஸ் கழுவவும், அடைப்பு எடுக்கவும் பிராமின்களை மட்டுமே பயன்படுத்துவாயா?” என்று கேள்வியெழுப்பி நகர்முழுதும் சுவரொட்டி அடித்து ஒட்டி அம்பலப்படுத்தியுள்ளனர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர். மேலும், ஸ்ரீரங்கம் போலீசு நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாரளித்துள்ளனர்.

இந்த விளம்பரம் என்றில்லை, தமிழகத்தின் பல இடங்களிலும் குறிப்பாக சென்னையில் அநேக இடங்களில் வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இவை போன்ற அறிவிப்புகள் ‘இயல்பாய்’ கடந்துபோகும் ஒன்றாய் மாறிவிட்டதென்று.

வீட்டுக்கு வெளியே காம்பவுண்ட் கேட்டிலேயே அட்டை ஒன்றில் எழுதி தொங்க விட்டிருப்பார்கள் ”சைவம் மட்டும்”, ”வெஜிடேரியன் மட்டும்” ”PURE VEG” என்று. அதிலும் கவனிக்க பச்சை கலர் ஸ்கெட்ச் பேனாவில்தான் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும். ரோட்டில் கிடக்கும் பசுஞ்சாணியை எடுத்து வீசியெறிந்துவிட்டு வரலாமா? என்றுதான் தோன்றும் அதைப் பார்க்கிற சுயமரியாதையுள்ள எவருக்கும்.

இப்படி ”பச்சை” யாக, ”பிராமினாள் மட்டும், சைவம் மட்டும்” என்று அட்டை கட்டி தொங்கவிட்டும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் அளவிற்கும் இவர்களுக்கு வந்துள்ள துணிச்சல்தான் இங்கே கவனிக்கத்தக்கது.

கடந்த 2012-ம் ஆண்டில் இதே ஸ்ரீரங்கம் பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு  “ஸ்ரீ கிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகப் போராடியதற்காக, திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 112 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது, ஸ்ரீரங்கம் போலீசு. இவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஜூன், 13 அன்று தீர்ப்பளித்த, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி திருவாளர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், ”கடைகளுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் 19(1) ஏ மற்றும் 19(1) ஜி உரிமை வழங்கியுள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.” (விடுதலை, ஜூன்-15, 2018)  என்று சட்ட பாயிண்டுகளை அள்ளிப்போட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

அதோடு அவர் நிற்கவில்லை, ”இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு “ஸ்ரீ கிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே” எனப் பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால், இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை. மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை எனக் குறிப்பிட்ட சமூகங்கள், ஜாதிகளைக் குறிப்பிடும் வகையில் பல ஓட்டல்கள் உள்ளன. சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் அய்யங்கார் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி, காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன்.” (விடுதலை, ஜூன்-15, 2018) என்று நீட்டி முழக்கியவர், ஆனபடியால், “ஜாதிப் பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை” என்று மனுநீதியை தீர்ப்பாகவே வழங்கினார் அவர்.

நால் வர்ண பேதத்தையும், பார்ப்பன உயர்சாதித் திமிரையும் ஒருங்கே குறிக்கும் வகையில் ”பிராமணாள் கபே” என்று பெயரிடுவது தவறில்லை என்று உயர்நீதிமன்றக்கிளையே தீர்ப்பளித்துவிட்டது என்ற தைரியத்தை தாண்டி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அதிகாரமிக்க உயர் பதவிகள் பலவற்றில் ”அவாள்” இருப்பதும்; சுப்ரமணியசுவாமி போன்ற அதிகாரத் தாழ்வாரங்களில் கோலோச்சுபவர்களாகவும் ”அவாள்” இருப்பதும்தான் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளிவந்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, அப்பட்டமான சாதிவெறிப் பேச்சுகளும், சாதித் தீண்டாமைக் கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன. அக்கணநேர சலனத்தைத் தாண்டி தமிழகத்தில் பெரியதாய் எதிர்வினை எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்ற யதார்த்தமும் அவர்களுக்கு அந்தத் துணிச்சலை வழங்கியிருக்கிறது, என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி சமயமற்ற பண்பட்ட நாகரிகத்தோடு தமிழ்ச்சமூகம் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகளை கீழடி அகழாய்வு வழங்கியிருப்பதாக பெருமை பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்தான், இந்த மானக்கேடும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

1941-லேயே இரயில்வே உணவு விடுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பிராமணாள் – இதராள் என்று இருந்த பேதத்தை ஒழிப்பதில் தொடங்கி, 1956-ல் தமிழகமெங்கும்  ‘பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டத்தை இயக்கமாகவே முன்னெடுத்து சாதித்தும் காட்டியவர் தந்தை பெரியார். நீதிக்கட்சியும், பெரியாரும் களமாடிய காலத்திற்கு, தமிழ்ச்சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது, பார்ப்பன சாதித் திமிர். தமிழ்ச்சமூகத்தின் மனநிலையை சோதித்துப் பார்க்கும் வகையில் சாதிப் பெருமை பேசுவதும்; பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை பின்னொட்டாக போட்டுக்கொள்வதும்; பிராமினாள் கபே, பிராமின்ஸ் மட்டும் போர்டு மாட்டுவது என தலைதூக்கிவருகிறது. கருத்தியல் தளத்திலும் களத்திலும் எதிர்வினைக்காக காத்திருக்கிறது, தமிழகம்.

இளங்கதிர்.

சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

“மேடம்….. மேடம்… தைக்கணுமா? மேடம் வாங்க … சுடிதார், பிளவுஸ் ஒன் ஹவர்தான் வாங்க மேடம் வாங்க…”

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் செல்லும் யாரும் இந்தக் குரல்களைக் கேட்காமல் கடந்து செல்ல முடியாது. பை வைத்திருப்பவர்கள் தங்கள் குரலுக்கு செவி மடுத்தார்களா இல்லையா என்று கவலைப்படுவதில்லை. புதுப் பையோடு இறங்கும் நபரின் இன்னொரு லக்கேஜ்போல் இவர்களும் ஒட்டிக் கொள்கிறார்கள்; ‘மேடம்… மேடம்’ என்று கூடவே ஓடுகிறார்கள். அவர்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் நகர்ந்தாலும் கவலையில்லை. திரும்பவும் இன்னொருவர் பின்னால் ஓடுகிறார்கள், ‘மேடம், மேடம்… ஒன்னவர்ல தைக்கலாம் மேடம்’.

“ஒரு நாளைக்கு இப்படி ஆயிரம் பேர் பின்னாடி சளைக்காமல் ஓடினால்தான் ஐந்து பேராவது தேருவார்கள்” என்கிறார்கள். இந்தத் தொழிலை பதினைந்து ஆண்டு காலமாக அதே சுறுசுறுப்புடன் தொடர்கிறார்கள். இப்படி முன்னூறு பேருக்கு மேல் இருக்கிறார்கள். அதில் ஆண்களும், பெண்களும் சரிபாதி. இவர்களுக்கு பெயர் பீஸ் பிடிப்பவர்கள்.

பீஸ் பிடிக்கும் சமீராவிடம் நாமும் ஓடிக் கொண்டே பேசினோம்.

“ஏங்க கொஞ்சம் நில்லுங்க… ஏன் இப்படி ஓடுறீங்க… இப்படி மதிக்காம போறாங்களே … அவங்க பின்னால் ஏன் ஓடுறீங்க….?” என்றோம். அவர் காதில் வாங்கவே இல்லை. அவருடைய எல்லையான பதினைந்து அடி தூரத்தை கஸ்டமர்கள் தாண்டியவுடன் அவரை விட்டுவிட்டு “மேடம், மேடம்” என்று இன்னொருவருக்கு குறிவைத்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்தவர்… ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம் மீது பரிதாபப்பட்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.

“இப்படி ஓயாமல் ஓடுவதால், என்ன கிடைத்துவிடும். இதுவும் ஒரு வேலையா?” என்றோம்.

அவர் நம்மை முறைத்து, “இதுதான் எங்க பொழப்பு… எங்க வேலை…” என்றார் அழுத்தமாக.

“ஒரு நாளைக்கு இப்படி ஆயிரம் பேர் பின்னாடி சளைக்காமல் ஓடினால்தான் ஐந்து பேராவது தேருவார்கள்” என்கிறார் சமீரா.

“உங்கள் குரலுக்கு பதில் சொல்லாமல் திமிராக நடந்து போகிறவர்கள் பின்னால், கேட்டுக்கொண்டே ஓடுவதைப் பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இப்படி ஆட்களை பிடித்துக்கொடுத்தால், உங்களுக்கு என்ன கொடுப்பார்கள் டெய்லர் கடைக்காரர்கள்?” என்றோம்.

“அது, நாங்கள் பிடித்துக்கொடுக்கும் கஸ்டமர்கள் என்ன தைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து. சாதா சுடிதார் ஒன்று தைத்தால் கடைக்காரர் எங்களுக்கு இருபது ரூபாய் கொடுப்பார். லைனிங், சுடிதார், பிளவுஸ் தைத்தால் எங்களுக்கு முப்பது கிடைக்கும். ஒருத்தரே நாலைந்து சுடிதார் பிளவுஸ் தைத்தால் சமயத்தில் நூறு ரூபாய்கூட கிடைக்கும். எல்லாம் ஆண்டவன் நமக்கு அன்னைக்கி அளக்கறதப் பொறுத்துதான். ஒரு நாள் ஐநூறூ கிடைக்கும், ஒரு நாளைக்கு ஒண்ணுமே இருக்காது”.

ஏராளமான டெய்லர் கடைகள் இருக்கக்கூடிய ரெங்கநாதன் தெருவின் குறுக்குத் தெருக்களில் ஒன்று.

“இதற்கா, இப்படி ஓடுறீங்க; கம்பெனி வேலைக்குப் போனால் மதிப்பாக இருக்குமே” என்றோம்.

“மதிப்பு யாருக்கு வேணும். அத வைச்சிக்கினு என்ன பண்றது… இங்க கடைக்காரர்கள் முப்பதாயிரம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுப்பார்கள்… அங்கே கொடுப்பார்களா? அந்த அட்வான்ஸ நாங்க விருப்பப்பட்டத்தான் கழிப்போம். சமயத்தில பல மாசம் ஒரு பைசாக்கூட கழிக்க மாட்டோம். ஏதாவது அவசர செலவுன்னா கழிச்சப் பணத்தையும் கேட்டு வாங்கிடுவோம்…. எங்க பேர்ல எப்பவுமே நிரந்தரமா முப்பதாயிரம் கடன் இருந்துக்கினே இருக்கும்… இந்தச் சலுகை கம்பெனியில கிடைக்குமா?

படிக்க :
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
♦ கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

உடம்பு சரியில்லனா ரெண்டவரோட வேலைய முடிச்சிப்போம். பண்டிகை நேரம், முக்கியம்… மத்த நாள்ல விருப்பமா வருவோம். வந்தா துட்டு… வரலனா ரெஸ்ட்டு…. ஏன் வரலனு எவனுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல… அய்யய்யோ… அதிக நேரம் உங்ககிட்ட பேசிட்டேனே… இப்படியே பேசிட்டு இருந்தா பொழப்பு போய்டும்…. நீங்க டெய்லர் கடைக்குப்போய் எங்க ஓனர்க்கிட்ட மத்தத கேட்டுக்குங்க…” மேடம்…, மேடம்…. என்று புது துணிப்பைகளுக்குப் பின்னால் ஓடினார்.

கையில் விசிட்டிங் கார்டுகளுடன், பீஸ் பிடிக்கும் இன்னொரு பெண்ணை புகைப்படம் எடுக்க கேமராவைத் திருப்பினோம். பக்கத்தில் நின்ற, அதே வேலை செய்யும் இளைஞன், “சார் ஃபோட்டோ புடிக்காதீங்க” என்று நம்மைத் தடுத்தவர் மேலும் தொடர்ந்தார்.

“நீங்க பாட்டுக்கும் ஃபோட்டோ புடிச்சி நெட்டுல ஏத்திடுவீங்க, அவங்க குடும்பத்துக்குத் தெரிஞ்சா என்னாவுறது. எல்லாம் குடும்பப் பெண்கள் சார். நெறைய பேரு வீட்டுக்குத் தெரியாமத்தான் இங்கே வந்து வேலை செய்யிறாங்க. ஏதோ அவங்க குடும்பச் சுமையைக் குறைக்க தொண்ட தண்ணி வத்த கத்திகிட்டிருக்காங்க; அதுக்கும் உலைவச்சிடுவீங்க போலிருக்கே” என்றார் கோபமாக.

ஆட்கள் நடமாட்டமில்லாத தி.நகர் ரெங்கநாதன் தெருவில் காலை வேலையிலேயே தங்களது வேலையைத் தொடங்கிவிட்டார்கள், பீஸ் பிடிக்கும் தொழிலாளர்கள்.

அந்த இளைஞனின் கோபத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இதுவரை ஒழுக்கம் என்று போதிக்கப்பட்டவை, இன்று ஒழுங்கீனமாகிவிட்டது. இதுவரை குடும்பம் – கட்டுக்கோப்பான வாழ்க்கை என்றிருந்த நிலைமை இன்று உடைந்து சிதறிக் கொண்டிருக்கிறது. இதுவரை, இது அவமானமாகக் கருதப்பட்ட தொழில், இன்று மானத்தோடு வாழ அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஆனாலும், அந்த இளைஞனின் கோபம் நியாயமானதுதான், செலுத்த வேண்டிய திசைதான் வேறு.

மதியத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் ரெங்கநாதன் தெரு.

 

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்