Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 322

பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 13

நீர்மேல் குமிழிபோல் உருவாக்கப் பெற்ற இந்த ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற குமிழியை ‘மனித உற்பத்தி நூல்’ வல்லவர்கள் தங்கள் ஆராய்ச்சியால் சிதைத்துவிட்டார்கள். எப்படியென்றால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமுள்ள மக்கள் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்களே என்றும், ஆரியர் ஒரு சிறு வகுப்பார்தான் என்றும் மனித உற்பத்தி ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

இதனால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியிருந்த மாபெரும் ஆரிய வகுப்பினர் ஒரு சிறிய கூட்டமாகக் குறைந்து விட்டார்கள். ஆரியரின் பூர்வீக நாட்டைப் பற்றி பாஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் பால்டிக் கடலோரம் என்றும், இத்தாலி ஆசிரியர் செர்ஜி ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் ஐரோப்பா மீது படையெடுக்கும் போது காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் மனித உற்பத்தி சாஸ்திர வல்லுநரான டாக்டர் ஹாடன், ஐரோப்பிய மக்களின் பூர்வ வரலாற்றைப் பற்றி 1991-ல் எழுதிய நூலில் இந்த “ஆரியர்’’ என்ற பேச்சையே எடுக்கவில்லை. எனவே ஐரோப்பாவைப் பொறுத்தவரை ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற கற்பனை புதைக்கப்பட்டு விட்டதெனலாம்.

ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுப்பினை இல்லாத எண்ணிறந்த வகுப்புகளைக் கொண்ட தற்கால இந்து சமூகத்தில் உயர்ந்த ஜாதிகள் எனப்படுவோர் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆரியர் படையெடுத்து வந்து இந்திய மக்களை நாகரிகப்படுத்தினார்களென்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்து கூறிய போது, அது தங்களுக்குப் பெருமை தருவதென்று இந்த மேல் ஜாதிக்காரர்கள் அந்தக் கற்பனையை உற்சாகத்துடன் ஆதரிக்க முற்பட்டனர். இப்படித் தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்கிற இந்த மேல் வகுப்பினர் தங்கள் நரம்புகளில் சாதாரணச் சிவப்பு ரத்தமல்ல, நீல நிறமான ஆரிய ரத்தமே ஓடுகிறதென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா என்பதைத் தற்கால முறைப்படி ஆராய்ச்சி செய்யலாமே? என்றால் மற்றெல்லாரையும் விட இந்த ‘மேல் ஜாதிக்காரர்கள்’தான் அவ்வித ஆராய்ச்சியைப் பலமாய் ஆட்சேபிக்கிறார்கள்.

வேதங்களிலே, ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வந்ததாக ஒரு குறிப்பேனும் காணப்படவில்லை. மேலும் தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களிலும் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளில் வாழ்ந்திருந்தனர். இரதங்கள், குதிரைகள், ஆடு, மாடுகள் முதலியன அவர்களிடம் ஏராளமாயிருந்தன. ஆரியர்கள் அதைப்பற்றிப் பொறாமைப்பட்டு, திராவிட நகரங்களைக் கொள்ளையடிக்க நினைத்ததுண்டு என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திராவிட நாட்டு நிலையை உணராதாருக்கு 1940-ல் திருப்பதியில் நடைபெற்ற 10-வது அகில இந்திய கீழ்நாட்டுக் கலை மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, திருவாளர் T.A. இராமலிங்க செட்டியார் அவர்களின் சொற்பொழிவு விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் விரிவுரையைக் கீழே பிரசுரிக்கின்றோம்.

“ஜெர்மனியில் இன்று ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், உலகத்துக்கே அவர்கள் நாகரிகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் சொல்லி வருவது யாவர்க்கும் தெரியும். இதனால் மிகவும் பயங்கர முடிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை .

இந்து சமவெளிப் பிரதேசத்திலும், மொஹஞ்சதாரோ பிரதேசத்திலும் வெட்டி எடுக்கப்பட்ட பண்டைக்காலத்துச் சின்னங்களிலிருந்து, ஆரிய நாகரிகத்திற்கு முன் ஒரு நாகரிகமிருப்பது நன்கு விளங்கும்.

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடல் ஓரமாகவும் வட இந்தியாவிலும்தான் பண்டைய நாளையில் சிறந்த நாகரிகமடைந்த மக்களிருந்து வந்தனர் என்று சொல்லப்படுமானால், இந்தியாவில் ஆரியர்கள் வரவால் நாகரிகம் புகுத்தப்பட்டதென்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமோ? என்பது யோசிக்க வேண்டியதாகும்.

நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்குத் திக்கை நோக்கியோ அல்லது அதற்கு நேர் எதிராகவோ பரவியிருக்கக்கூடும்.

படிக்க:
தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !

பழைய கால நிர்ணய நூல் பிரகாரம் பார்த்தால், ஆரியர்கள் இந்தியாவுக்கு மிகப் பிந்திய காலத்திலே வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

தென்னிந்தியாவின் பழக்க வழக்கங்களை நம்பினால் தெற்கே ஓர் உபகண்டமிருந்ததாகவும், அதன் பெரும் பாகத்தைக் கடல் கொண்டுவிட்டதாகவும். அப்பாகங்களில் உலகிலே தலை சிறந்ததாகக் கருதப்படும் நாகரிகம் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

தமிழ்க் கலைகள், மக்கள் சுதந்திரத்தோடு இருந்து வந்ததாகவும், மக்கள் எத்தகைய துன்பத்தையும் கண்டறியாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பழைய பெருமையைக் குறித்துப் பேசுவதில் பலனில்லை என்று நாம் கருதுகிறோம்.

நமது முன்னோர்கள் கலையாச்சாரத்தைக் குறித்தோ, மொழியைக் குறித்தோ சிறிதும் கவனம் செலுத்தியதில்லை தெற்கே எங்கும், பழைய நாகரிகத்தைக் கண்டறியக் கூடிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆரியர்கள்தான் குரு, சமஸ்கிருத மொழிதான் உயர்ந்த மொழி என்று கொண்டதால்தான், மற்றவை மூலமாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்பது அடியோடு புறக்கணிக்கப்பட்டது.

T.A. இராமலிங்க செட்டியார்.

இதைக் குறித்து ஏதோ, அங்கொருவர் இங்கொருவர் ஆட்சேபிக்கிறார்களேயல்லாது, சமீப காலம் வரை யாரும் பலமாகத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவேயில்லை. இந்தியாவில் உள்ள பலதிறப்பட்ட ஜாதிகள் கலந்து விட்டனவென்றாலும், ஜாதியில் உள்ள உயர்வு தாழ்வு ஒரு சிலரைத் தாங்கள்தான் சுத்தமான ஆரிய வம்சத்தினர் என்றும், சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழியென்றும் மற்ற மொழிக்கும், கலைக்கும், நாகரீகத்திற்கும் தாங்கள்தான் பாதுகாப்பாளர் என்றும் சொல்லும்படி செய்து வருகின்றது.

இந்த நிலையை இப்படியே விட்டுக்கொண்டு போனால், இதனால் வரும் பலன் மிக்க பயங்கரமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான், சமஸ்கிருத மொழியாளர்கள் (ஆரியர்கள்) நிர்வாகிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வரமுடிந்தது; அவர்களால், தங்கள் ஸ்மிருதியைப் புகுத்த முடிந்தது. அதன் பின்தான் ஸ்மிருதியில் கண்டதே சட்டமாயிற்று.

இதனால் நான் ஏதாவது துவேஷம் கற்பிப்பதாகக் கொள்ளலாகாது.

இந்நாட்டின் பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள் என்னவென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் தாங்கள் புகுத்தும் முறைகள் சிறந்தவை என்று நம்பி விடுவதும் உண்டு.

ஸ்மிருதி புகுத்தப்பட்டதினால் வந்த பலனை அறிய ஒரே ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறேன். அதாவது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்குச் சிரார்த்தம் என்பதே என்ன என்று தெரியாத மக்களுக்குக் காட்டுப் பிண்டம் (சிரார்த்தத்தில் ஒரு வகைச் சடங்கு) எடுப்பதை ஆதாரமாக வைத்து நீதி வழங்கப்படுகிறது. இன்னும் வினோதம் என்னவென்றால், ஒரு பார்ப்பனன் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத் தக்கதென்றும், ஒரு பார்ப்பனரல்லாதான் ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத்தகாதென்றும் கூறுவதாகும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் !

சத்யபாமா பல்கலைக் கழக  – வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியங்கள் மற்றும் ஊழியர்கள் சங்க – ஊதிய உயர்வு போராட்டம் வெல்லட்டும் !

சென்னை செம்மஞ்சேரி OMR சாலையில் இயங்கி வரும் ‘காலஞ்சென்ற முன்னாள் மந்திரி’ ‘திருவாளர்’ ஜேப்பியார் அவர்களின் சுயநிதி பொறியியல் கல்லூரி குழுமத்தின் முதன்மை நிறுவனமான சத்யபாமா பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து, உணவகம், அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி என பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது.

சத்யபாமா பல்கலைக்கழகம்.

பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கு ரூபாய் 200-க்கும் குறைவாகவே உயர்வு போடப்பட்டுள்ளது. மிகச் சொற்பமான சீனியர்களுக்கு மட்டுமே ரூபாய் 500-வரை ஊதிய உயர்வு போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதே நடைமுறையிலேயே ஊதிய உயர்வைக் கொடுத்து வருகிறது நிர்வாகம்.

2018-ம் ஆண்டு நிர்வாகம் இதே போன்ற ஊதிய உயர்வை வழங்கியதை தொழிலாளர் தரப்பு நிர்வாகத்தின் சேர்மேனிடம் நேரில் பார்த்து முறையிட்டது. அதன் காரணமாக இப்பிரச்சினையில் முன்னின்ற முன்னணி தொழிலாளிகளை பல்வேறு பொய்க்குற்றச் சாட்டுகளின் பேரில் ‘ஒழுங்கு நடவடிக்கை’ என்ற பெயரில் வெளியேற்றி பழிவாங்கியது.

அதுமட்டுமின்றி, பொய்க்குற்றச்சாட்டு சுமத்த முடியாத சங்க முன்னணியாளர்களை இந்தியாவின் கடை கோடி வட மாநிலங்களில் உள்ள காசி-வாரணாசி, அசாம் போன்ற இடங்களுக்கு தற்காலிக பணிமாறுதல் செய்தது. அதுவும் அவர்கள் பணிமுடித்து வீடு புறப்படும் தருனத்தில், “நீங்கள் நாளைமுதல் வாரணாசிக்கு அல்லது அசாமுக்கு போக வேண்டும்” என ரயில் டிக்கட்டுடன் பணிமாற்ற ஆணையையும் வழங்கி பழிவாங்கியுள்ளது நிர்வாகம்.

படிக்க:
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
♦ சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !

மேற்படி செயல் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக உரிமையைப் பற்றி பேசும் தொழிலாளர் அனைவரையும் ஒழித்துக்கட்டியுள்ளது நிர்வாகம். மேற்கண்ட வடிவத்தில் மட்டும் இதுவரை 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வழக்குகள் போட்டு அலைகழித்திருக்கிறது நிர்வாகம். போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ‘மாண்புமிகு’ உயர் நீதிமன்றதில் கிடப்பில் கிடக்கின்றது.

10 ஆண்டுக்கு முன் தொழிற்சங்கத்தின் மூலம் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு தொழிற்தாவாவும் இன்றுவரை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தீர்க்கப்படாதவண்ணம் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம். கடந்த 3 ஆண்டுகளாக ஏரிவரும் விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, தொழிலாளர் குடும்பங்கள் வாழ உகந்த ஊதிய உயர்வை அளிக்காததுடன், இது பற்றி பேசும் தொழிலாளரையும் தனது பழிவாங்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஒழித்துக்கட்டி வருகின்றது.

சத்தியபாமா நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளிகள் 10 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் ஒரு தொழிலாளி என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டதுடன் எந்தவித அடிப்படை உரிமையும் இல்லாமல் கொத்தடிமையைப் போல வேலை வாங்குவதும்; உரிமைக் கேட்டால் அடுத்த நாள் கேட்டிலேயே தடுத்து “வேலை இல்லையென நிர்கதியாக துரத்தப்பட்டது”; என தொழிலாளிகள் அலைகழிக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் வந்தனர்.

அதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உதவியுடன் எதிர்கொண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக கல்வி நிறுவனத்தில் சங்கம் துவங்க வழிகோலும் விதம், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கி பதிவு செய்தனர் தொழிலாளிகள்.

உரிமை கோரியதற்காக 20-க்கும் மேற்பட்ட முன்னணித் தொழிலாளிகளை தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றிய நிர்வாகத்தின் செயலுக்கெதிரான வழக்குகள் சிலவற்றில் வெற்றி பெற்றும் வேலை தராமல் மேல்முறையீடு என்ற பெயரில் வழக்குகளை இழுத்தடித்து வருகின்றது நிர்வாகம்.

நிர்வாகத்தின் அனைத்து பழி வாங்கும் நடவடிக்கைக்கும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடி பணி நிரந்தர உரிமையை நிலை நாட்டியது சங்கம். இதன் விளைவாக கல்வி நிறுவனங்கள் “சேவை நிறுவனம்” என ஏமாற்றிவந்த கல்வி முதலாளிகளின் பல கல்வி நிறுவனங்களில் சங்கம் கட்டப்பட்டதுடன் பணி நிரந்தரமும்; சில சட்டப் பூர்வ அங்கீகாரமும் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி வர்க்கம் பெற வழி அமைக்கப்பட்டது.

அடுத்தபடியாக மாதாந்திர சம்பளத்திற்கான ரசீது வழங்க 6-ஆண்டுகாலம் சட்டப் போராட்டம் நடத்தி அதில் வென்றது சங்கம். பிறகு சம்பள ரசீதில் தொழிலாளிக்கு வழங்கும் விடுப்பைப் ( EL, CL ) பதிவு செய்யவைக்கப் போராடியதின் அடிப்படையில் தற்போது வெறும் CL –விடுப்பை மட்டும் பதிவு செய்துள்ள நிர்வாகம். வருடத்திற்கு 180 நாட்கள் மட்டுமே கல்லூரி நடப்பதால் EL – வழங்க இயலாது என தவிர்த்து வருகின்றது.

தொழிலாளர் தரப்பு எமது ஒரு நாள் வேலை நேரம் என்பது காலை 6.00 மணி முதல் இரவு 7.00மணிவரை என்பதால் அதற்கு OT – யோ விடுப்போ வழங்காத நிலையில். எமது வேலை என்பது சுமார் 270 நாட்களுக்கும் மேல் என்பதால்,  EL  வழங்க வேண்டும் என்பதற்கான தொழிற்தாவாவை தொழிலாளர் ஆய்வாளர் மூலம் நடத்தப்பட்டு வழங்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டும், அதனை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றது நிர்வாகம்.

இதே போல் தொழிலாளிகளுக்கான ஓய்வறையை ஒதுக்காமல் பேருந்திலும், கட்டிட நிழல்களிலும் அலைய விட்டுவந்த நிர்வாகம். தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக இப்போது டிரான்ஸ்போர்ட் தொழிலாளிக்கு மட்டும் ஓய்வறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

அந்த வகையில் தனது சோரம் போகாத தொழிலாளிவர்க்க உணர்வால் எந்தவித இழப்பிற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடிவரும் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியங்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தை ஒழித்துக்கட்ட நினைக்கிறது நிர்வாகம்.

பெரும்பான்மை தொழிலாளர்களை வேலை பயம் ஏற்படுதுவதின் மூலம் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாத நிலையில், நிர்வாகமே தொழிலாளர் நல ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர்கள் மூலம், தொழில்முறை தரகு வேலை மூலம் ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி; தொழிலாளிகளை மிரட்டி அதன் உறுப்பினர்களாக சித்தரித்து வருகின்றது.

இதில் தொழிலாளர் இருக்க வேண்டும் என்பதற்காக கல்விப் படியென ஆண்டிற்கு ரூபாய் 2500 வரையும், பண்டிகைப் பணம் என்ற பெயரில் ரூபாய் 1000, 500 எனவும் முறையற்ற கணக்குகள் மூலம் அந்த தொழிலாளிகளுக்கு மட்டும் வழங்கி, அதற்கான கையொப்பம் பெற்று, அதையே சங்கத்தின் பொதுக்குழுவாக சோடித்து நமது சங்கத்திற்கு எதிராக தொடர்ந்து நிறுத்திவருகின்றது நிர்வாகம். இந்த அற்பத்தனங்கள் எதற்கும் எப்போதும் சோரம் போகாத நமது உறுப்பினர்கள் தங்களின் சட்டப் பூர்வ உரிமைகளுக்காக உறுதியாக நின்று போராடி நிலை நாட்டி வருகின்றார்கள்.

படிக்க:
♦ மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !
♦ டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !

மேற்படி சத்தியபாமா நிர்வாகம் தொழிலாளர் உரிமைக்கான போராட்டம் படிப்படியான வெற்றியை பெற்று வரும் நிலையில் பழைய தொழிலாளர்கள் ஓய்வு பெரும் வயதை தொடும் நிலையிலும், அடுத்ததாக ESI, உரிமை போனசு, ஊதிய உயர்வு ஒப்பந்த உரிமைக்கு என தங்கள் 10 ஆண்டுகால நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளார்கள்.

நமது சங்கம் ESI கோரி எடுத்த நடவடிக்கையை முறியடிக்க 400 சுய நிதி கல்வி முதலாளிகள் சேர்ந்து வழக்கு தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தங்கள் போராட்ட பலன்களை தங்களது வருங்கால தொழிலாளி வர்க்கத்திற்கும் நிலைக்கும்படி நிலைநாட்டி வருகின்றார்கள் சத்யபாமா பல்கலைக் கழக தொழிலாளர்கள்.

தொழிலாளர் போராட்டங்கள் நிலவும் அரசுக் கட்டமமைப்பிற்குள் ஜனநாயகப் பூர்வமாகத் தீர்க்க, தொழிலாளர் வாழ்நாளே போதாது என்பதைத்தான் மேற்கண்ட வழக்கு விவரங்கள் உணர்த்தும் உண்மைகள்.

எனவே தொழிலாளி வர்க்கத்தின் தனித்தனியான போராட்ட முறைகள் இனி தீர்வாக முடியாது. மாற்று அரசுக் கட்டமைப்பிற்கான போராட்டமே தீர்வு.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சத்தியபாமா பல்கலைக் கழகக் கிளை

உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9-அ

ரு நாள் இரவு நேரத்தில், வஸீலிய் வஸீலியெவிச்சின் நெடிய உருவம் ஆளோடியின் கோடியில் தென்பட்டது. கைகளை முதுகுப்புறம் வைத்தவாறு மெதுவாக நடந்தார் அவர். அவரது மேலங்கிப் பொத்தான்கள் போடப்படாமல் இருந்தன, தலையில் தொப்பி இல்லை, அடர்ந்த நரைமுடிக் கற்றைகள் நெற்றிமீது புரண்டன.

தனிவகை அமைப்புள்ள பொய்க்கால்கள் பற்றிய தனது திட்டத்தை அப்போதுதான் கமிஸாருக்கு விவரித்திருந்த அலெக்ஸேய், “வஸீலிய் வருகிறார்” என்று கிசுகிசுத்தான்.

வஸீலிய் வஸீலியெவிச் கால் இடறிவிட்டது போலச் சட்டென நின்று சுவர் மீது கையைத் தாங்கலாக அழுத்திக் கொண்டார். ஏதோ மூக்கால் முனகினார். பின்பு சுவற்றிலிருந்து விலகி நாற்பத்து இரண்டாவது வார்டுக்குள் நுழைந்தார். வார்டின் நடுவே நின்று எதையோ நினைவுப்படுத்திக் கொள்ள முயல்பவர் போல நெற்றியைத் தடவினார். அவரிடமிருந்து ஸ்பிரிட் வாடை அடித்தது.

“உட்காருங்கள், வஸீலிய் வஸீலியெவிச். சற்று பேசுவோம்” என்றார் கமிஸார்.

உறுதியின்றி அடிவைத்து, கால்களை இழுத்துப்போட்டவாறு தலைமை மருத்துவர் கமிஸாரின் கட்டிலை நெருங்கி, அதன் வில் கம்பிச் சுருள்கள் கிரீச்சிட்டு நெளியும்படி பொத்தென்று உட்கார்ந்தார், கன்னப் பொருத்துக்களைத் தேய்த்துக் கொண்டார். முன்னரும் அவர் நோயாளிகளில் கமிஸாருக்கு வெளிப்படையாகத் தனி மரியாதை காட்டிவந்தார். எனவே இந்த இரவு வருகையில் விந்தையானது எதுவும் இல்லை. ஆயினும் இந்த இரு மனிதர்களுக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட உரையாடல் நடக்கப் போகிறது என்றும் அதை மூன்றாமவன் கேட்க வேண்டியதில்லை என்றும் அலெக்ஸேய் எதனாலோ உணர்ந்தான். அவன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாவனை செய்தான்.

“இன்று ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி. அவனுடைய பிறந்த நாள். அவனுக்கு முப்பத்தாறு வயது நிறைந்து விட்டது இல்லை, நிறைந்திருக்க வேண்டும்” என்று தணித்த குரலில் சொன்னார் தலைமை மருத்துவர்.

கமிஸார் போர்வைக்கு அடியிலிருந்து பெருத்த, உப்பிய கையை மிகுந்த சிரமத்துடன் வெளியில் எடுத்து வஸீலிய் வஸீலியெவிச்சின் கரத்தின் மேல் அதை வைத்தார். அப்போது நேர்ந்தது நம்ப முடியாத நிகழ்ச்சி: தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.

“போர் முனைக்குப் போகுமுன்பு அவன் என்னிடம் வந்தான். தொண்டர் படையில் பெயர் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, யாருக்குத் தன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதையும் கேட்டான். அவன் இங்கேயே, என்னோடு வேலை செய்து வந்தான். எனக்கு ஏற்பட்ட திகைப்பில் நான் அவனை அதட்டக் கூடச் செய்தேன். மருத்துவ இயல் பி.எச்.டி. பட்டம் பெற்றவன், திறமை வாய்ந்த விஞ்ஞானி எதற்காகத் துப்பாக்கி பிடிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் அவன் சொன்னது வார்த்தைக்கு வார்த்தை நினைவுக்கு வருகிறது அவன் சொன்னான்: ‘அப்பா, மருத்துவ இயல் பி.எச்.டி.க்கு துப்பாக்கி பிடிக்க வேண்டிய வேலையும் உண்டு’. இப்படிச் சொல்லிவிட்டு, ‘யாருக்கு வேலையை ஒப்படைப்பது?’ என்று மறுபடி கேட்டான். நான் டெலிபோன் செய்யவேண்டியது தான், ஒன்றுமே, எதுவுமே நடந்திருக்காது, புரிகிறதா, எதுவுமே! எனது மருத்துவமனையில் ஒரு பிரிவுக்கு அவன் தலைவனாக இருந்தான், இராணுவ மருத்துவ மனையில் வேலை செய்து வந்தான், இல்லையா?”

வஸீலிய் வஸீலியெவிச் பேசாதிருந்தார். அவர் சிரமப்பட்டு, கரகரத்த ஓசையுடன் மூச்சு விடுவது கேட்டது.

“….வேண்டாம், அன்பரே. என்ன நீங்கள், என்ன நீங்கள்! கையை எடுங்கள். அசைவது உங்களுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பது எனக்குத் தெரியும்….. ஆயிற்றா. நான் இரவு முழுவதும் சிந்தித்தேன். போன் செய்யாமலே இருந்துவிட்டேன்…”

“இப்போது அதற்காக வருந்துகிறீர்களா?”

தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.

“இல்லை. இது வருந்துவது ஆகுமா? நான் எண்ணமிடுகிறேன்: எனது ஒரே மகனின் கொலையாளியா நான்? இப்போது அவன் இங்கே, என்னுடன் இருந்திருப்பான். நாங்கள் இருவரும் நாட்டிற்கு மிகவும் பயனுள்ள காரியம் செய்து கொண்டிருப்போம். அவன் இயல்பான திறமைசாலி – உயிரோட்டமுள்ள, துணிவுமிக்க, ஒளிவீசும் திறமை அவனிடம் இருந்தது. அவன் சோவியத் மருத்துவ இயலுக்கே பெருமையாகத் திகழ்ந்திருப்பானே… அப்போது நான் மட்டும் போன் செய்திருந்தால்!”

”போன் செய்யாததற்கு வருந்துகிறீர்களா?”

“என்ன கேட்கிறீர்கள்? அடே, ஆமாம்… தெரியவில்லை , எனக்குத் தெரியவில்லை.”

“இப்போது எல்லாம் மீண்டும் திரும்ப நிகழ்வதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்பீர்களா?”

மெளனம் குடிகொண்டது. உறங்குவோரின் ஒரு சீரான மூச்சுவிடுகை கேட்டது. கட்டில் லயத்துடன் கிரீச்சிட்டது – தலைமை மருத்துவர் சிந்தனையில் ஆழ்ந்தவராக இப்புறமும் அப்புறமும் அசைந்தாடினார் போலும். வெப்பமூட்டு நீராவிக் குழாய்களில் தண்ணீர் மந்தமாகக் களகளத்தது.

“ஊம், என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் கமிஸார். எல்லையற்ற பரிவு அவர் குரலில் தொனித்தது…

“எனக்குத் தெரியவில்லை….. உங்கள் கேள்விக்கு உடனே பதில் சொல்வது இயலாது. ஆனால் எல்லாம் திரும்ப நிகழ்ந்தால் நான் முன்போலவே நடந்து கொண்டிருப்பேன் என்றே தோன்றுகிறது. எவ்வளவு பயங்கரமானது இது – யுத்தம்…… அட, இதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன….”

தலைமை மருத்துவர் எழுந்தார், கட்டில் அருகே சற்று நின்று கமிஸாரின் கையைப் பதபாகமாகப் போர்வைக்குள் வைத்து இழுத்துப் போர்த்தினார். பின்பு மெளனமாக வார்டிலிருந்து வெளியேறினார். இரவில் கமிஸாரின் நிலைமை மோசம் ஆயிற்று. உணர்விழந்த நிலையில் பற்களை நெறுநெறுப்பதும் முனகுவதுமாகக் கட்டிலில் புரண்டார். பின்பு விரைப்பாக நீட்டிப் படுத்து அமைதியாகக் கிடந்தார். முடிவு நெருங்கி விட்டது என எல்லோருக்கும் பட்டது. மகன் இறந்த நாள் முதல் தமது பெரிய வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் குடிவந்து தமது சிறு அறையில் சோபாவில் படுத்துத் தூங்கிய வஸீலிய் வஸீலியெவிச் விஷயத்தை அறிந்து வார்டுக்கு வந்து பார்த்தார். கமிஸாரின் நிலை மிகவும் மோசமாயிருப்பதைக் கண்டு அவரை மற்றவர்கள் பார்க்காதபடி படுதாவால் மறைத்துவிடும் படி உத்தரவிட்டார். அந்திக் காலத்தில் நோயாளிகளை இவ்வாறு படுதாவால் மறைப்பது வழக்கந்தான்.

கற்பூரத்தைலம், ஆக்ஸிஜன், இவற்றின் உதவியால் கமிஸாரின் நாடித் துடிப்பு சீர்பட்டதும் முறைவேலை மருத்துவரும் வஸீலிய் வஸீலியெவிச்சும் இரவின் எஞ்சிய பகுதியை உறங்கிக் கழிக்கச் சென்றுவிட்டார்கள். படுதாவுக்குள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே இருந்தாள். அவள் அழுத முகத்துடன் ஒரே கலவரம் அடைந்து காணப்பட்டாள். மெரேஸ்யெவும் உறங்கவில்லை. “இதுதான் முடிவா என்ன?” என்று திகிலுடன் எண்ணினான் அவன். கமிஸார் பெருத்த வதைபட்டுவிட்டார். ஜன்னியில் அவர் புரண்டு அலை பாய்ந்தார். முனகலோடு கூடவே ஏதோ ஒரு சொல்லைக் கம்மிய குரலில் பிடிவாதமாகக் கூறினார். “குடிக்க, குடிக்க, குடிக்க!” என்று அவர் கேட்பது போல மெரேஸ்யெவுக்கு தோன்றியது.

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா படுதாவுக்கு உள்ளிருந்து வெளிவந்து நடுங்கும் கைகளால் கண்ணாடித் தம்ளரில் நீர் ஊற்றினாள்.

படிக்க:
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !

ஆனால் நோயாளி நீர் பருகவில்லை. தம்ளர் அவர் பற்களில் வீணே இடித்தது, தண்ணீர் ததும்பித் தலையணையில் வழிந்தது. கமிஸாரோ, வேண்டுவதும் கோருவதும் உத்தரவிடுவதுமாக அதே சொல்லைவிடாது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கேட்பது “குடிக்க” அல்ல “பிழைக்க” என்பதே என அலெக்ஸேய் திடீரெனப் புரிந்து கொண்டான். இந்தக் கத்தலில் அந்த விறல் வாய்ந்த மனிதனின் உள்ளமும் உயிரும் எல்லாம் சாவுக்கு எதிராக உணர்வின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது.

அப்புறம் கமிஸார் அமைதியுற்று விழிகளைத் திறந்தார். “ஆண்டவன் காப்பாற்றினான்!” என்று ஆறுதலுடன் கிசுகிசுத்துப் படுதாவைச் சுருட்டத் தொடங்கினாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.

“வேண்டாம், படுதா இருக்கட்டும்” என்ற கமிஸாரின் குரல் அவளைத் தடுத்தது. “வேண்டாம் அருமைச் சகோதரி. படுதா இருப்பது நமக்கு அதிகச் சௌகரியம். அழவும் வேண்டாம். உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே… அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி!.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை

காலை 10 மணியிருக்கும். குறுகலான சந்துக்குள் இருந்த ஓலைக்குடிசையை நோக்கினோம். சென்னை வெயில் அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலிருந்தும், மரக்கிளைகளுக்கு இடையிலிருந்தும் புகுந்து அந்தக் குடிசையைத் தாக்கிக் கொண்டிருந்தது.

ஓலைக் குடிசை நிழலின் தணலில் குத்துக்காலிட்டு, பீடியை ஒட்ட உறிஞ்சிகொண்டிருந்தார் அந்தக் கைவினைஞர். உருட்டி வைத்த மண்ணைச் சுமந்தபடி சுழல்வதை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது சக்கரம்.

பீடித் துண்டை எறிந்த கைகள், களிமண்ணை அணைத்துக்கொண்டது. பின் சக்கரம் சுழல, தானும் கூடவே சுழன்றுகொண்டிருந்தார், 63 வயதான ஆனந்தன். சென்னையிலிருந்து திருவேற்காடு போகும் வழியில் உள்ளது வடக்கு நொளம்பூர் கிராமம்.
அவரிடம் தொழில் அனுபவம் பற்றி கேட்டபோது,

வடக்கு நொளம்பூர் – சேமித்து வைக்கப்பட்டிருக்கும் களிமண் குவியல்.

இந்த ஊர்ல மட்டும் கிட்டத்தட்ட 40 குடும்பங்கள் பானை செய்யும் தொழிலை செய்து வருகிறோம். சின்ன வயசுல 2 ரூபாய் கூலிக்கு வேலைக்கு சேந்தேன். இப்ப சுமார் 20 வருஷமா சொந்தமா தொழில் செஞ்சிகிட்டிருக்கேன். இது எங்களோட பரம்பரை தொழிலு.

எங்கப்பா காலத்துலே நேமம் ஏரி, கூட்டு ரோடு, போரூர் ஏரி இப்படி பக்கத்துல உள்ள ஏரிகளிலிருந்து மாட்டு வண்டியிலதான் மண்ணு எடுத்து வருவோம். இப்போ டிப்பர் லாரியில எடுத்து வர்றோம். ஒரு லோடு ஏழாயிரம் ரூபா. ஒரு தடவ எடுத்து வந்தா ஒரு வருஷத்த ஓட்டிடுவோம். அதுவும் எப்பவும் கிடைக்காது, ஏலம் விடுற நேரம் பாத்து போகணும்.

கொண்டுவர்ற களிமண்ண ஒரு எடத்துல சேத்து வச்சிப்போம். திடீருன்னு மழையேதும் வந்தா ஓலையைப் போட்டு மூடி வைப்போம். மழைக்கு கரைஞ்சது போக மீதியைத்தான் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்குத் தேவையான மண்ணை எடுத்து தண்ணீரில் ஊறவைத்துவிடுவோம்.

ஆணி, கூழாங்கற்கள், சிறு சிறு குச்சிகள் நீக்கப்பட்டு நன்றாக பிசைந்து மண்ணை இலகுவாக்குகிறார்.

பிறகு களிமண்ணோடு சவுட்டு மண்ணையும் சேர்த்து நல்லா பெசைஞ்சி பதப்படுத்துவோம். (இந்த மண் சேர்க்கைதான் அதன் தரத்தைத் தீர்மானிக்கிறது. சில இடங்களில் செம்மண்ணும், சில இடங்களிலில் வண்டல் மண்ணும் பயன்படுத்தப்படுகிறது) அப்போது, சின்னச் சின்ன குச்சி, கல்லு, கண்ணாடித் துண்டுக ஒன்னுகூட இல்லாம நீக்கிடுவோம். ஏன்னா சக்கரத்த வேகமா சுத்தி பானை வனையும்போது, அந்த வேகத்துல கைய பதம்பாத்துடும். ஈரத்துலேயே ஊறுன கையில்லையா? சில நேரம் விரல் துண்டாகூட போயிடும். எனக்கு சின்னச் சின்ன கீரல் மட்டும் விழுந்திருக்கு, மருந்தெல்லாம் எடுத்துக்கிறதில்லை. தானாவே ஆறிடும்.

தீட்டிய கத்தி கொண்டு எடுத்தாற்போல் கட்டைவிரலால் நீவி எடுக்கப்பட்ட பதமான களிமண் கலவை.

மழைக்காலங்களில் வேலை செய்ய மாட்டோம். நல்லா வெயிலடிக்கணும். ரொம்பவும் வெயிலா இருந்தா வீறல் விட்டுடும். சில நேரம் திடீருன்னு மழை வந்திடுச்சின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் ஓடிவந்து உள்ளே எடுத்து வச்சி உதவி பண்ணுவாங்க.

ஒரு நாளைக்கு 50, 60 பானைச் சட்டிகள் செய்வேன். பானை மட்டுமே தனியாக செய்றதில்ல. குழம்புச் சட்டிகள் போன்ற சின்னச் சின்ன பாத்திரங்களோட சேர்த்துதான் செய்ய முடியும். ஏன்னா பானை செய்ய நேரம் அதிகம் புடிக்கும்.

சக்கரத்தில் திரட்டி வைக்கப்பட்ட மண்ணுக்கு உருக்கொடுக்க தனது முழு பலத்தையும் செலுத்த வேண்டியிருக்கிறது.

சின்ன வயசுல பானைச் சட்டி செஞ்சி மாட்டு வண்டியிலதான் பக்கத்து கிராமங்களுக்கு விக்க கொண்டுபோவோம். ஒரு படி நெல்லுக்கு ஒரு கொழம்புச் சட்டி கொடுப்போம். அப்புறம் தங்கச்சாலை, மண்ணடின்னு டவுனு பக்கமும் லாந்தர் வௌக்க கட்டிகிட்டு விக்கப் போவோம். இன்னைக்கு நெலம தலைகீழா மாறிப்போச்சு. கோடம்பாக்கத்திலேருந்து எப்படா ஆர்டர் வருமுன்னு காத்துகிட்டிருப்போம். ஒரு தடவைக்கு கடைக்காரங்க 200, 300 சட்டிங்க, பூந்தொட்டிங்க ஆர்டர் கொடுப்பாங்க. அவங்களுக்கு 45 ரூபாய்க்கு கொடுப்போம், அவங்க 80, 100 -ன்னு விப்பாங்க. இதைச் செய்யிறதுக்கே எனக்கு ஒன்ற.. ரெண்டு மாசங்..கூட ஆகும்.

ஒருமுறை வேகமாக சுற்றப்பட்ட சக்கரத்தின் சுழற்சி நிற்பதற்குள் ஒரு குழம்புச்சட்டி தயாராகிவிடுகிறது.

அடுத்த தலைமுறை ஆளுங்க, களிமண்ணுல பானை செய்வாங்களான்னு கேப்பாங்க போல. என்ன செய்யிறது… பானை செய்யிறேன்னு சொன்னா எங்க சாதிக்காரங்களே கேவலமா பாக்குறாங்க; பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க. இனி யாருதான் இதச் செய்யப்போறாங்க; எங்களோடவே இந்தத் தொழிலும் அழிஞ்சிரும்போல என்றார்.

உடல் முழுவதும் சொட்டியது முத்துத் துளிகள்,
அது வியர்வையல்ல, ஆற்றாமையின் கண்ணீர்.

வெயிலுதான் நல்லா அடிக்குதே, அப்புறம் ஏன் நடுப்பொழுதே வேலையை முடிச்சிகிட்டீங்க. எப்போதும் அரை நாள்தான் வேலை பாப்பீங்களா என்றதும்,

ஃபேன் போட்டால் விரைவில் மண் உலர்ந்துவிடும்; சிந்தும் வியர்வையைக் கூடத் துடைக்காது, பானையின் வடிவத்திலே கவனம் செலுத்தியாக வேண்டும்.

இல்லையில்லை… ஒடம்பு சரியில்லாம நாலு நாலா ஹாஸ்பிட்டல்ல தங்கியிருந்தேன். இப்போ சரியாயிருச்சான்னு பாக்குறதுக்காக கொஞ்ச நேரம் வேலை செஞ்சி பார்த்தேன் என்றார். சிலருக்கு பொழுது போக்குவதே வேலையாக இருக்கிறது; இவருக்கோ வேலையே பொழுதுபோக்கு.

ஏடறிந்த வரலாற்றுக்கு முன்பே தோன்றிய மட்பாண்டத் தொழில் இன்று அழியும் தறுவாயில்… அதில் வேலை செய்யும் அனைவரையும் 55 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களாகவே பார்க்க முடிகிறது. மட்பாண்டப் பயன்பாடு மிகவும் சுருங்கி விட்டது. வருடம் ஒருமுறை பொங்கல் விழாவிலும், கல்யாண மண்டபங்களிலும், மால்களிலும் வண்ணம் தீட்டப்பட்ட அலங்காரப் பொருட்களாகவே காட்சியளிக்கிறது.

ஆனந்திடம் நடத்திய 2 மணிநேர உரையாடலில் நலிந்துபோன விவசாயியை ஞாபகப்படுத்திச் சென்றார்.

தோட்டம் தொரவுன்னு அனைத்தையும் இழந்த போதிலும் விவசாயி, தனது வீட்டு வாசலில் ரெண்டு குழியைத் தோண்டி பரங்கி, சுரைக்காய் என்று ஏதேனும் சில விதைகளைத் தூவி தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது போல; நூல் விலகிய தறியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படையை நீவிக்கொண்டிருக்கும் நெசவாளியைப் போல; இன்று, பானை வனையும் கைவினைஞர்களின் வாழ்நிலைமை. லாபம் நட்டம் எதுவும் பார்க்க முடியாது, களிமண்ணை பிசைந்து கொண்டே இருந்தால் போதும். அந்த மண்ணின் ஈரத்தில்தான் அவர்களது உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு மூங்கில் பத்தையும் கைவிரல்களுமே பானை வனையும் கலைஞனின் கருவிகள்.

பத்து விரல்களும் சிம்பொனி இசையைப்போல ஒத்திசைவோடு லாவகமாக வளைந்து நெளிந்து வடிவம் கொடுக்கிறது.

உலர்த்தப்படும் பச்சைச் சட்டிகள். அதிக வெயில் பட்டால் விரிசல் விழுந்துவிடும். பதத்தோடு வைத்து எடுக்க வேண்டும்.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சட்டிகள்.

போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ?

0

ரூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 2018- 2019 –ம் கல்வியாண்டில் B.A வரலாறு பிரிவில் தனது படிப்பை முடித்தார் மாணவர் சுரேந்திரன்.

படிப்பை முடித்த பின்னர் இந்த ஆண்டில், M.A வரலாறு பிரிவில் மேற்படிப்பை அதே கல்லூரியில் தொடர்வதற்கு சுரேந்திரன் விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 12. 07. 2019 அன்று நடந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார் சுரேந்திரன். கலந்தாய்வில் மாணவர் சுரேந்திரனுக்கு சீட் கொடுக்க முடியாது என மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம்.

படிக்க:
பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

“சீட் வழங்க மறுத்ததற்கு என்ன காரணம்?” என சுரேந்திரன் கேட்டதற்கு, “உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தைக் கல்லூரி நிர்வாகக் கவுன்சில் கமிட்டியில் கூடி பரிசீலித்தோம். அப்படிப் பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது” எனத் திமிராக பதில் கூறியிருக்கிறார், கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன்.

கல்லூரி விதிப்படி ஒரு  கவுன்சில் கமிட்டி கூறுவது என்றால் கல்லூரியின் வளர்ச்சிக்காக  யோசிக்க  மட்டும்தான்  கமிட்டி கூட வேண்டும். ஆனால் தனி நபருக்காக அந்த கமிட்டி கூடக் கூடாது. ஆனால் போலீசு காலால் இட்ட ஆணையை தலையால் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்காக கமிட்டிக் கூட்டம் நடந்திருக்கிறது.

கமிட்டிக் கூட்டத்திலும் கூட பல பேராசிரியர்கள், “மாணவர் சுரேந்திரன் பெயரில் கல்லூரியில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த ஒழுங்கு நடவடிக்கையிலும் அவர் தண்டிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கின்றனர். அவர் படிக்கும் வரலாற்றுத் துறையில் இருக்கும் பேராசிரியர்கள், சுரேந்திரனை மீண்டும் கல்லூரியில் சேர்ப்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் திட்டமிட்டு சுரேந்திரனை மீண்டும் கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்ற தங்களது முடிவை கமிட்டி முடிவாக மாற்றி மாணவர் சுரேந்திரனின் M.A விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.

சுரேந்திரனை கல்லூரியில் இருந்து நீக்க இவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டவேண்டும் ?

ஏனெனில் மாணவர் சுரேந்திரன், கல்லூரி மாணவர்களுக்கு,

  1. பஸ் பாஸ் கேட்டு மாணவர்களைத் திரட்டி போராடியிருக்கிறார்.
  2. அனிதா மரணம், நீட் தேர்வுக்கு எதிராக போராடியிருக்கிறார்.
  3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர்களைத் போராடியிருக்கிறார் .
  4. கரூர் அரசு கலை கல்லூரியில் ஏழு வருடங்களாக பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவனின் அக்கிரமத்தை மாணவர்களை ஒன்றுதிரட்டி கல்லூரிக்கு வெளியே போராடி அந்தக் கிரிமினலை சிறைக்கு  அனுப்பவும் செய்தார்.

இது மட்டுமின்றி, கல்லூரியில் மாணவ மாணவியருக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றிற்காகவும் போராடி பெற்றுத் தந்திருக்கிறார்.

இது போன்ற காரணங்களினால் மாணவன் சுரேந்திரனின் மேற்படி விண்ணப்பத்தை திட்டமிட்டு தடுத்து அவர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரனும், விலங்கியல்துறைத் தலைவர் ராதாகிருஷ்ணனும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் செய்த சதிதான் மாணவர் சுரேந்திரனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம்.

படிக்க:
18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !
அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் !

மாணவர்கள் தங்களது உரிமைக்காகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடக் கூடாது. அப்படி யாராவது போராடினால், அவர்களை திட்டமிட்டு கல்லூரியை விட்டு நீக்குவது, மீண்டும் அனுமதிக்க மறுப்பது என்ற நிலைப்பாட்டையே கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ளது.

இது ஒரு மாணவரின் கல்வி உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாணவர்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. மாணவர்களின் போராடும் உரிமைக்கும், கருத்துரிமைக்கும் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை.

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் !


தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு: 9629886351

ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27

3

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 27

அத்தியாயம் ஐந்து – சாகஸக்காரரும் தீர்க்கதரிசியுமான ஜான் லோ
அ.அனிக்கின்

ஜான் லோ பிரபலமானவர். இந்தப் புகழ்மிக்க ஸ்காட்லாந்துக்காரரின் முதல் வாழ்க்கை வரலாறு அவருடைய வாழ்நாளின் போதே வெளியிடப்பட்டிருந்தது. பிரான்சில் ”லோவின் திட்டம்” சீர்குலைந்ததும் அவரைப் பற்றி எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் எழுதப்பட்டது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அரசியல் எழுத்தாளர் யாரும் அவரைக் குறிப்பிடத் தவறுவதில்லை.

19-ம் நூற்றாண்டில் நவீன வங்கிகள் ஏற்பட்டு கடன் வசதிகளும் பங்குச் சந்தை ஊக வாணிகமும் விரிவாக வளர்ச்சியடைந்ததோடு சேர்ந்து, கடன் வசதியின் உணர்ச்சிகரமான தலைவராகிய ஜான் லோவின் கருத்துக்கள், செயல்களைப் பற்றி புதிய அக்கறை ஏற்பட்டது. அவர் ஒரு சிறப்பான சாகஸக்காரர் மட்டுமே என்று யாரும் இனிமேல் நினைப்பதில்லை; அவர் புகழ் மிக்க பொருளியலாளராகவும் இருந்தார் என்றே நினைக்கிறார்கள்.

”பண வீக்கத்தின் நூற்றாண்டாகிய” இருபதாம் நூற்றாண்டு இந்தக் குறிப்பிடத்தக்க நபரிடம் ஒரு புது அம்சத்தைக் கண்டு பிடித்தது. அபரிமிதமான கடன் வசதி, அதிகமான காகிதப் பணம் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று அவர் நம்பினார். இந்தக் கருத்து தான் (வேறு வடிவத்தில்) நவீன முதலாளித்துவ அரசின் நெருக்கடி எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையாக இருக்கிறது.

முதலாளித்துவ ஆராய்ச்சியாளர்கள் லோவுக்கும் கெய்ன்சுக்கும் உண்மையாகவே மெய்யுணர்வு ரீதியான ஒற்றுமையைக் கண்டு வருகின்றனர். ”பிரெஞ்சு நிதித்துறையின் பொதுப் பொறுப்பாளராக இருந்த லொரி ஸ்டோனைச் சேர்ந்த ஜான் லோவுக்கும் (1671-1729) ஜான் மேனார்ட் கெய்ன்சுக்கும் இடையே உள்ள இணையான அம்சங்கள் மிக ஆழமானவையாகவும் விரிவான தளத்தைக் கொண்டவையாகவும் இருக்கின்றன; அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலிருக்கும் சிற் சில அம்சங்களில் கூட இந்த ஒற்றுமை இருக்கிறது; எனவே லோ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கெய்ன்சாக மறு பிறவி எடுத்தார் என்று ஒரு ஆன்மீகவாதி சொல்லுவது கூட சாத்தியமே.” (1)

லோவைப் பற்றி அண்மையில் வெளிவந்திருக்கின்ற புத்தகங்களின் தலைப்புக்களும் கூட தனிச் சிறப்போடு அமைந்திருக்கின்றன : ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர், கடன் மந்திரவாதி மற்றும் வங்கியாளர். லோவின் அசாதாரணமான வாழ்க்கை. அதே சமயத்தில் அவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற கனமான புத்தகங்களில் சிறப்பு மிக்க இடத்தைப் பெற்றிருக்கிறார்.

ஆபத்தான வாழ்க்கைப் பயணமும் துணிவான கருத்துக்களும்

ஜான் லோ 1671-ம் வருடத்தில் ஸ்காட்லாந்தின் தலை நகரமான எடின்பரோவில் பிறந்தார். அவர் தகப்பனார் பொற்கொல்லராக இருந்ததோடு, அந்தக் காலப் பழக்கத்தின்படி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

ஜான் லோ

1683 ம் வருடத்தில் அவர் லொரி ஸ்டோன் என்ற சிறு பண்ணையை விலைக்கு வாங்கினார்; அதன் மூலம் நில வுடைமையாளர்களில் ஒருவரானார். ஜான் லோ-விடம் பணமும் தோற்றப் பொலிவும் கவர்ச்சியும் இருந்தது. எனவே அவர் வெகு சீக்கிரத்திலேயே போக்கிரி, சூதாடி என்று பெயரெடுத்தார். அவருக்கு இருபது வயதான பொழுதே அவர் “எல்லா விதமான சிற்றின்பப் பழக்கங்களிலும் அதிகமான அனுபவமுள்ளவராக இருந்தார்” என்று அவருடைய கூட்டாளி ஒருவர் எழுதியிருக்கிறார்.

லோவுக்கு எடின்பரோ சிறிய நகரமாகத் தோன்றியது. எனவே அவர் லண்ட னுக்குப் புறப்பட்டார். ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் ஒரே மன்னரின் கீழ் இருந்த போதிலும் மற்ற எல்லா அம்சங்களிலும் ஸ்காட்லாந்து இன்னும் சுதந்திரமான அரசாகவே இருந்தது.

லண்டனில் இந்த இளைஞர் சீக்கிரத்தில் லோ பெருமகனார் என்ற பட்டப் பெயரோடு எல்லோருக்கும் அறிமுகமானார். 1694 ஏப்ரல் மாதத்தில் அவர் வாட்சண்டையில் தன்னுடைய எதிரியைக் கொன்றார். நீதிமன்றம் அவர் கொலை செய்ததாகத் தீர்ப்புக்கூறி லோ பெருமகனாரை சிரச்சேதம் செய்யுமாறு தண்டனை வழங்கியது . செல்வாக்குள்ள நபர்கள் தலையிட்டு உதவி செய்தபடியால் அரசர் மூன்றாம் வில்ஹெல்ம் அவருக்கு மன்னிப்பளித்தார். ஆனால் செத்துப் போனவரின் உறவினர்கள் லோ மீது புது வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிராமல் லோ நண்பர்களின் உதவியோடு சிறையிலிருந்து தப்பினார். அவர் முப்பது அடி உயரத்திலிருந்து கீழே குதித்த பொழுது கணுக்கால் முறிந்தது. இனிமேல் இங்கிலாந்தில் இருக்க முடியாது; எங்காவது வெளி நாட்டுக்குத் தான் போக வேண்டும். அவர் ஹாலந்து நாட்டுக்குப் போக முடிவு செய்தார்.

படிக்க:
♦ மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !
♦ ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு

லண்டனில் தங்கியிருந்த மூன்று வருடங்களில் அவர் குடிகாரர்களோடும் பெண்களோடும் உல்லாசமாகப் பொழுது போக்கியதாக மட்டுமே நினைக்கக் கூடாது. அவர் செய்முறையான கல்வியைப் பெற்றிருந்தார்; கணக்குப் போடுவதிலும் பல விதமான பண விவகாரங்களிலும் அபாரமான திறமைசாலியாக இருந்தார். 1688-89 புரட்சிக்குப் பிறகு லண்டனில் பணக்கார வியாபாரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள். லோ அவர்களோடு பழகினார். இதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து வங்கி துவக்கப்பட்டது; இது ஆங்கில முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.

லோ வங்கித் தொழிலைப் பற்றி அதிகமான புத்தார்வக் கற்பனைகள் கொண்டிருந்தார். புத்தார்வக் கற்பனையும் வங்கித் தொழிலும் என்று சொல்வது இன்று வினோதமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில், முதலாளித்துவக் கடன் வசதிகளின் வைகறைப் பொழுதில், அதன் வாய்ப்புக்கள் பலருக்கும் முடிவில்லாதவையாகவும் அதிசய மானவையாகவும் தோன்றின்.

லோ தன்னுடைய கட்டுரைகளில் வங்கிகள் ஏற்பட்டுக் கடன் வசதிகள் வளர்ச்சியடைந்ததை “இந்தியாவைக் கண்டுபிடித்ததோடு”, அதாவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடல் வழிப் பாதை கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக விலையுயர்ந்த உலோகங்களும் அபூர்வமான பொருள்களும் ஐரோப்பாவுக்குக் கொண்டு வரப்பட்டதோடு திரும்பத் திரும்ப ஒப்பிடுகிறார் என்பது காரணமில்லாமல் அல்ல.

தான் நடத்தப் போகும் வங்கியின் மூலம் வாஸ்கோடகாமா, கொலம்பஸ் அல்லது பிஸாரோ செய்ததைக் காட்டிலும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்று அவர் தன் வாழ்க்கை முழுவதும் மனப்பூர்வமாக நம்பினார். ஜான் லோ இன்னும் பரிசோதிக்கப்படாத பலத்தைக் கொண்டிருந்த கடன் வசதியின் ஆர்வலராக, கவிஞராக, தீர்க்கதரிசியாக இருந்தார்.

அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வங்கிyஆக இருந்த ஆம்ஸ்டர்டாம் வங்கி. (படம் : நன்றி – விக்கிபீடியா)

இது இங்கிலாந்திலே ஆரம்பமாகி ஹாலந்திலே தொடர்ந்தது. அங்கேயிருந்த ஆம்ஸ்டர்டாம் வங்கி ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வங்கி; அதிகமான செல்வாக்கோடு அது இயங்கி வந்தது. அதன் அமைப்பை லோ ஆராய்ந்தார். 1699-ம் வருடத்தில் அவரைப் பாரிசில் பார்க்கிறோம். அங்கிருந்து அவர் இத்தாலிக்குப் புறப்பட்டபொழுது திருமணமான ஒரு பெண்ணையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றார். காத்தரின் சென்னியேர் என்ற பெயருடைய அந்தப் பெண் இங்கிலாந்திலே பிறந்தவள். அன்று முதல் எல்லாப் பயணங்களிலுமே அந்தப் பெண் அவரோடிருந்தாள். புது வகையான ஒரு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே லோ 1704-ம் வருடத்தில் காத்தரினோடும் அவர்களுடைய ஒரு வயது மகனோடும் ஸ்காட்லாந்துக்குத் திரும்பினார். அங்கே தன்னுடைய கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்டார்.

அன்று நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. வர்த்தகத்தில் தேக்கம் ஏற்பட்டு நகரங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. தொழில்களை ஏற்படுத்துவதில் ஊக்க உணர்ச்சி நசுங்கிப் போயிருந்தது. அதுவும் நல்லதே! 1705-ம் வருடத்தில் எடின்பரோவில் லோ வெளியிட்ட நூலில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தன்னுடைய திட்டத்தை விளக்கினார். தேசத்துக்குப் பணம் கொடுப்பதற்கான ஆலோசனையோடு பணத்தையும் வர்த்தகத்தையும் பற்றி என்பது அந்த நூலின் தலைப்பாகும்.

லோ, எந்த விதமான விரிவான அர்த்தத்திலும், ஒரு தத்துவாசிரியரல்ல. பொருளாதாரத்தில் அவருடைய ஈடுபாடுகள் பணம், கடன் வசதி ஆகியவற்றுக்கு அப்பால் ஒரு போதும் போனதில்லை. ஆனால் தன்னுடைய திட்டத்துக்காகத் தீவிரமாகப் போராடிய பொழுது இந்தப் பிரச்சினையைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் பொருளாதார விஞ்ஞானத்தில் அதிகமான, மிகவும் முரண்பாடான பாத்திரத்தை வகித்தன.

லோவின் பொருளாதாரக் கருத்துக்களை அவருடைய செய்முறைப் பணிகளோடு சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது உண்மையே. அவருடைய செய்முறைப் பணிகளின் விளைவுகள் மாபெரும் அளவில் இருந்தன. அவருடைய பிற்காலத்திய எழுத்துக்களைப் போலவே இந்தப் பணிகளிலும் தாம் எடின்பரோவில் வெளியிட்ட புத்தகத்திலிருந்த அடிப்படையான கருத்துக்களையே அவர் செயல்படுத்தினார், வளர்த்துச் சென்றார்.

”அவர் ஒரு முறையை உருவாக்கும் மனிதர்” என்று சான் – சிமோன் கோமகன் அவரைப் பற்றி எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தில் தனி மனிதர் என்ற முறையில் லோவைப் பற்றி சில முக்கியமான தகவல்கள் கிடைக் கின்றன. தன்னுடைய திட்டத்தின் ஆதாரக் கருத்துக்களை முடிவு செய்தவுடன் லோ சிறிதும் ஊசலாட்டம் இல்லாத பிடிவாதத்தோடும் கொள்கைப்பற்றோடும் அதைப் பிரச்சாரம் செய்து அமுல் நடத்தினார்.

ஒரு நாட்டில் அபரிமிதமான பணப் பெருக்கமே பொருளாதார வளத்தின் திறவுகோல் என்று லோ எடுத்துக் கூறினார். அவர் பணத்தையே செல்வமாகக் கருதியதாக முடிவு செய்யக் கூடாது; உண்மையான செல்வம் என்பது பண்டங்கள், தொழிற்சாலைகள், வர்த்தகமே என்பதை அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார். ஆனால் அவருடைய கருத்தின்படி நிலம், உழைப்பு, தொழில் திறமை ஆகியவற்றை முழு அளவுக்குப் பயன்படுத்துவதைப் பணப்பெருக்கம் உறுதிப் படுத்துகிறது.

படிக்க:
♦ 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

”உள்நாட்டு வர்த்தகம் என்பது மக்களுக்கு வேலை கொடுப்பதும் பொருள்களைப் பரிவர்த்தனை செய்வதுமாகும். உள்நாட்டு வர்த்தகம் பணத்தை நம்பியிருக்கிறது . அதிகமான அளவு பணம் குறைவான பணத்தால் இயன்றதைக் காட்டிலும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்கும்….. பணம் அதனால் முடிந்த அளவுக்கு முழுச் செலாவணியை ஏற்படுத்துவதும் நாட்டுக்கு அதிகமான லாபத்தைத்தரக் கூடிய துறைகளில் அது ஈடுபடும்படி நிர்ப்பந்திப்பதும் நல்ல விதமான சட்டங்களினால் முடியும். ஆனால் சட்டங்களினால் மட்டும் அதிகமான வர்களுக்கு வேலை கொடுக்க முடியாது. அதிகமான எண்ணிக்கையுள்ளவர்களுக்குக் கூலி கொடுக்கும் வகையில் அதிகமான பணத்தைச் செலாவணியில் ஈடுபடுத்தாமல் இது முடியாது ….” (2) என்று லோ எழுதினார்.

லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார் என்பது நிச்சயமானதாகும். அவரும் பொருளாதார வளர்ச்சியின் விசையைச் செலாவணியின் எல்லைக்குள் தேடுகிறார் என்றாலும் கூட, அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.

இதற்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கெய்ன்ஸ் தங்கப் பணத்தைக் “காட்டு மிராண்டிக் காலத்தின் எச்சம்” என்று கூறினார். லோவும் இதைப் போல சொல்லியிருக்கக் கூடியவரே. பணம் உலோகமாக இருக்கக் கூடாது. அது பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப வங்கி உருவாக்குகின்ற கடன் வசதியாக இருக்க வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் காகிதப் பணமாக இருக்க வேண்டும். ”பணத்தை அதிகரிப்பதற்கு வங்கிகளை உபயோகப்படுத்துவது இதுவரை பின்பற்றப்பட்டிருக்கும் வழிகளில் மிகச் சிறந்ததாகும்.” (3)

லோவின் முறை இன்னும் இரண்டு கோட்பாடுகளைக் கொண்டிருந்தது; அவற்றின் முக்கியத்துவத்தை மிகைப் படுத்திச் சொல்வது கடினமே. முதலாவதாக, வங்கிகள் கடன் விஸ்தரிப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றார். அதாவது வங்கியில் இருக்கின்ற உலோகப் பணத்தின் அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகக் கடன்கள் வழங்க வேண்டும் என்றார். இரண்டாவதாக, வங்கியை அரசு நடத்த வேண்டும், அரசின் பொருளாதாரக் கொள்கையை அது அமுலாக்க வேண்டும் என்று கோரினார்.

இதை விளக்கி எழுதுவது அவசியம். ஏனென்றால் இன்று இதே மாதிரியான பிரச்சினைகள் -வெவ்வேறான நிலைமைகளிலும் வடிவங்களிலும் விசேஷமாக ஏற்பட்டிருக்கின்றன. ஒரு வங்கியின் உரிமையாளர்கள் தங்கத்தில் ஒரு மில்லியன் பவுன் மூலதனம் போட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர ஒரு மில்லியன் பவுன் மதிப்புடைய தங்கம் அவர்களிடம் இருப்புநிதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கி ஒரு மில்லியன் பவுன் மதிப்புடைய நோட்டுகளை அச்சிட்டு அவற்றைக் கடன் கொடுக்கிறது. அந்த வங்கியின் இருப்பு நிலைக் கணக்கு பின்வரும் விதத்தில் இருக்கும் என்று வாணிபக் கணக்குமுறையைப் பற்றி மிகக் குறைவாகத் தெரிந்தவர்கள் கூட அறிந்திருப்பார்கள். 

சொத்துக்கள் கடன் பொறுப்புகள்
தங்கம் 2 மில்லியன்

 

கடன்கள் 1 மில்லியன்

சொந்த மூல தனம் 1 மில்லியன்

 

இருப்பு நிதி 1 மில்லியன்

 

வங்கி நோட்டுகள் 1 மில்லியன்

மொத்தம் 3 மில்லியன் மொத்தம் 3 மில்லியன்

 

இந்த வங்கியை நிச்சயமாக நம்பலாம் என்பது தெளிவு. ஏனென்றால் அதன் தங்க வைப்பு எந்த நேரத்திலும் தங்கத்துக்காகக் கொடுக்கப்படக் கூடிய வங்கி நோட்டுகளையும் அதன் இருப்பு நிதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட வங்கியினால் என்ன பயன் என்று லோ கேட்கிறார். அவர் கேள்வியும் நியாயமானதே. இந்த வங்கியினால் ஓரளவுக்குப் பயன் ஏற்படுவது உண்மையே. அது வழங்கீடுகளுக்கு உதவி செய்கிறது; தங்கம் தேய்ந்து விடாமல் அல்லது தொலைந்து விடாமல் பாதுகாக்கிறது. எனினும் இந்த வங்கி அதிகமான நோட்டுகளை, உதாரணமாக, 10 மில்லியன் பவுன் மதிப்புள்ள நோட்டுகளை வெளியிட்டு அவற்றைப் பொருளாதாரத்துக்குள் புகுத்தினால் அதிகமான பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்யும்பொழுது பின்வரும் வகையில் கணக்கு இருக்கும்: 

சொத்துக்கள் கடன் பொறுப்புகள்
தங்கம் – 2 மில்லியன்

 

கடன்கள் 10 மில்லியன்

சொந்த மூல தனம் 1 மில்லியன்

 

இருப்பு நிதி 1 மில்லியன்

 

வங்கி நோட்டுகள் 10 மில்லியன்

மொத்தம் 12 மில்லியன் மொத்தம் 12 மில்லியன்

 

இந்த வங்கி ஓரளவுக்கு ஆபத்தோடுதான் இயங்கக் கூடும். வங்கி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மூன்று மில்லியன் மதிப்புள்ள நோட்டுகளைப் பரிவர்த்தனைக்குக் கொடுத்தால் என்ன ஆகும்? வங்கி முறிந்துவிடும் (அல்லது லோவின் காலத்தில் சொல்லப்பட்டது போல, இன்றும் சொல்லப்படுவது போல வங்கி வழங்கீடுகளை நிறுத்திவிடும்). ஆனால் அது அவசியமான, நியாயமான ஆபத்தே என்று லோ நம்புகிறார். இதற்கு மேலும் சென்று, வங்கி குறைந்த காலத்துக்கு வழங்கீடுகளை நிறுத்திவிட நேர்ந்தால், அது ஒன்றும் அவ்வளவு ஆபத்தான தல்ல என்றும் கூறுகிறார்.

மேலே கொடுத்த உதாரணத்தில் வங்கியின் தங்க இருப்பு அது வெளியிட்டுள்ள நோட்டுகளின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதம் மட்டுமே; இருப்புநிதிகளையும் சேர்த்தால் தங்க இருப்பின் சதவிகிதம் இன்னும் குறைந்துவிடும். இது பகுதி இருப்புக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது; முழு வங்கித் தொழிலுக்கும் இதுவே ஆதாரம். இதன் மூலம் வங்கிகள் கடன்களை நெகிழ்ச்சியோடு விஸ்தரிக்கவும் செலாவணியை அதிகரிக்கவும் முடிகிறது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியில் கடன் வசதி மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இதை முதன் முதலில் தெரிந்து கொண்ட சிலரில் ஜான் லோவும் ஒருவர்.

ஆனால் இதே கோட்பாடு வங்கி அமைப்பின் நிலையுறுதிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. வங்கிகள் ”ஒரேயடியாகப் போக” முற்படுகின்றன; லாப நோக்கத்தினால் கடன்களின் அளவை உயர்த்தி விடுகின்றன. எனவே வங்கிகள் முறிந்துவிடுவதும் சாத்தியமே, அது பொருளாதாரத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். !

வங்கியினால் ஏற்படும் நன்மையை அரசு தவறான வகையில் உபயோகிப்பது இன்னொரு ஆபத்து அல்லது அதே ஆபத்தின் மற்றொரு அம்சம் என்று சொல்லலாம். வங்கி நாட்டுப் பொருளாதாரத்தின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்கிற விதத்தில் நோட்டுகளை வெளியிடுவதற்குப் பதிலாக நாட்டின் வரவு-செலவுத் திட்டத்திலுள்ள பற்றாக் குறையை மறைப்பதற்காக அதிக அளவில் நோட்டுகளை வெளியிடுமா று நிர்ப்பந்திக்கப்பட்டால் என்ன நடக்கும்? ”பண வீக்கம்” என்ற சொல் அன்று இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் ஜான் லோவின் வங்கிக்கும் அது இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டுக்கும் அந்த ஆபத்து ஏற்படும்.

கடன் வசதியினால் ஏற்படக் கூடிய சாதகங்களை லோ கண்டார்; ஆனால் அதிலிருக்கின்ற ஆபத்துக்களை அவர் பார்க்கத் தவறினார் அல்லது பார்க்க மறுத்தார். அவருடைய திட்டத்திலிருந்த முக்கியமான செய்முறைக் குறை இது ; அது வீழ்ச்சியடைந்ததற்கு இறுதியான காரணமும் இதுவே.

லோ வெகுளித்தனமாகக் கடன் வசதியையும் பணத்தையும் மூல தனத்துக்குச் சமமென்று கருதியது அவருடைய கருத்துக்களிலிருந்த தத்துவரீதியான குறையாகும். ஒரு வங்கி கடன் வசதிகளை விஸ்தரித்துப் பண நோட்டுகளை அதிகமாக வெளியிடுவதால் மூலதனத்தைப் படைக்கிறது, அதன் மூலம் செல்வத்தையும் வேலை வாய்ப்புக்களையும் பெருக்குகிறது. என்று அவர் கருதினார்.

எனினும் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு உண்மையான உழைப்பும் பொருளாயத செல்வாதாரங்களும் அவசியம்; எப்படிப்பட்ட கடன் வசதியும் இதற்கு ஈடாகாது. – ஜான் லோ தன்னுடைய முதல் புத்தகத்தில் எதிர்நோக்கிய கடன் வசதியை அதிகரிக்கின்ற நடவடிக்கைகள்இவற்றை 10-15 வருடங்களுக்குப் பிறகு அவர் மிகவும் பிரம்மாண்டமான அளவில் அமுலாக்கினார்- அவருடைய திட்டத்துக்கு நிதித்துறையில் ஆர்ப்பரிப்போடு கூடிய வீரசாகஸத் தன்மையைக் கொடுக்கின்றன.

லோ ”கடன் வசதியின் பிரதான கருத்தறிவிப்பாளர்” என்று மார்க்ஸ் அவரை வர்ணித்துவிட்டு, இப்படிப்பட்ட நபர்கள் “மோசடிக்காரன், தீர்க்கதரிசி ஆகிய இரண்டு பேர்களின் குணாம்சங்களின் இனிய கலவையைக்”(4) கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாக எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) F. Zweig, Economic Ideas. A Study in Historical Perspectives, |N.-Y., 1950, p. 87.

(2) J. Law, Oeucores completes, Vol. 1, Paris, 1934, pp. 14-16.

(3)  Ibid., p. 46.K. 

(4) Marx, Capital, Vol. 3,Moscow, 1971, p. 441

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

இத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 24

டோக்ளியாட்டி

நாம் ஏற்கெனவே பாலில்லாவைப் பற்றிப் பார்த்தோம். இப்போது இளம் பாசிஸ்டுகளைப் பற்றிப் பரிசீலிப்போம். 1930-ல் பாசிஸ்டு சர்வாதிகாரத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்ற மிக நெருக்கடியான கட்டத்தில் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அச்சமயம் நெருக்கடி ஆரம்பித்திருந்தது. வெகுஜனங்களின் கோபாவேசம் அதிகரித்து வந்தது. கம்யூனிஸ்டு கட்சியின் பணி தீவிரமடைந்திருந்தது. கத்தோலிக்க இளைஞர்களின் பிரச்சினை 2 இன்னமும் தீர்க்கப்படாதிருந்தது.

இளைஞர் முன்னணியிலிருந்து விடுபட்டு கட்சியில் சேருவதற்கு இடைப்பட்ட காலத்தில் இளம் மக்களை அணி திரட்டும் பிரச்சினை 1930-ல் பாசிஸ்டுக் கட்சியை எதிர் நோக்கிற்று. பாசிஸ்டுக் கட்சிக்கு அரசியல் வாழ்க்கை ஏதும் இல்லை. இதர நிறுவனங்களில் இது போன்று இளம் மக்களை ஒன்று திரட்ட முடியாது. இளைஞர்கள் பதினெட்டு வயதை அடைவதற்கும் பாசிஸ்டுக் கட்சியில் சேருவதற்கும் இடையே ஓர் இடைவெளி இருந்தது. இளம் பாசிஸ்டுகள் அமைப்பை நிறுவுவதன் மூலம் இந்த இடைவெளியை அடைக்க பாசிஸ்டுக் கட்சி முற்பட்டது.

இந்த அமைப்பு உருவானபோது அதில் 3 இலட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். 1931-ல் இது 8 இலட்சத்துக்குத் தாவிற்று. (கத்தோலிக்க நிறுவனங்களுக்கு எதிராக அப்போது போராட்டம் நடைபெற்று வந்தது); ஆனால் 1932-ம் ஆண்டிலோ இது ஐந்து இலட்சமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மொத்த உறுப்பினர்களில் ஏறத்தாழ பாதிப்பேரை இழந்தது. ஏனென்றால் 1932-ம் ஆண்டை எண்ணற்ற போராட்டங்களின் ஆண்டு எனலாம். கம்யூனிஸ்டுக் கட்சி வளர்ச்சியடைந்த ஆண்டு எனக் கூறலாம். இளம் பாசிஸ்டுகளின் எண்ணிக்கை சுருங்கி வந்தபோது இளம் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை விரிவடைந்த ஆண்டு எனவும் இதனைச் சொல்லலாம். முடிவாக, ஏராளமான இளம் பாசிஸ்டுகள் நம் பக்கம் வந்த ஆண்டாகவும் இது இருந்தது. எமிலியா, டுஸ்கேனி போன்ற இடங்களில் இந்த ஆண்டில்தான் நாம் பிரம்மாண்டமான ஸ்தாபன வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம்.

இதனால் பாசிசம் மூர்க்க வெறியுடன் நமக்கு எதிராகவும் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இளம் பாசிஸ்டுகள் நிறுவனம் இந்த ஆண்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களை அதிகமாகப் பெற்றது. ஆனால் 1933-ல் மீண்டும் 4 இலட்சத்து 50 ஆயிரமாக வீழ்ச்சியடைந்தது.

உறுப்பினர்கள் சேர்ப்பதில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடும் இந்த ஊசலாட்டங்களுக்கு ஓரளவு காரணமாகும். இளம் மக்களுக்குத் தொழில் ஏதும் இல்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடந்தன. வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. பல்கலைக் கழகங்களில் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்கள் எல்லாமே தங்களுக்கு மூடப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள். இதனால் வெகுஜனப் பகுதியினரிடையே உறுதியின்மையும், ஊசலாட்டமும், தடுமாற்றமும் அதிகரித்தன. புரட்சிகர சித்தாந்தம் இவர்கள் மத்தியில் எளிதாக ஊடுருவக்கூடிய நிலைமை உருவாயிற்று. இந்த ஊடுருவலைத் தடுக்க பாசிசம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது.

படிக்க:
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பிரச்சினை குறித்துப் பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சில பிராந்தியங்களில் இந்த உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் சுய விருப்ப அடிப்படையில் நடைபெறுகிறது. வேறு சில இடங்களில் நிர்ப்பந்த முறையில் நடைபெறுகிறது. இதில் ஒரு வேறுபாடு நிலவுவது தெளிவு. ஆனால், ஒரு பொதுப் படப்பிடிப்பை நோக்கும்போது, இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேரும்படித் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தங்களை வயது வந்தோரைக் கட்சியில் சேருமாறுத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தங்களுடன் ஒப்பிடுவது என்பது சாத்தியமல்ல. இளம் மக்களிடம் சென்று நீ சேரவில்லை என்றால் உனக்கு வேலை இல்லை என்று கூறமுடியாது! ஏனென்றால் எப்படியிருந்தாலும் அன்றைய நிலைமையில் இளம் மக்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்! ஆதலால் இந்தப் பயமுறுத்தல் அவர்களை அச்சுறுத்த முடியாது.

எனவே, பாசிஸ்டுகள் இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பிரச்சினைக்கு வேறு வகையில் பரிகாரம் காண முனைந்தனர்; அதிகார வர்க்க நிர்ப்பந்தத்தைக் கொண்டு “சுய விருப்ப” அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்; இதில் வன்முறையைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை.

ஆக, இளம் பாசிஸ்டுகள் பல்வேறு திட்டங்களுடன் எவ்வாறு பெருமளவில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், இதர நிறுவனங்களின் உறுப்பினர்களைவிட இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேருவதற்கு இவர்கள் எவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதையும், எத்தகைய கடினமான கடமைப் பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இவற்றை மனத்திற் கொள்ளவில்லை என்றால், இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்தின்பால் நமது இளைஞர் சம்மேளனம் கைக்கொள்ளும் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியாது. இளம் பாசிஸ்டுகள் அமைப்பின் இந்த இயல்பு காரணமாகவே அதன் விஷயத்தில் நமது இளைஞர் சம்மேளனம் பின்பற்றும் கொள்கை குறிப்பாக முனைப்பானதாகவும் துணிகரமானதாகவும் இருந்து வருகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

2. கத்தோலிக்க இளைஞர்களின் பிரச்சினை : ஆபேரா நாசியோனலே பாலில்லாவை எல்லா வாலிபர் ஸ்தாபனங்களுக்கும் ஒரு அரசு ஏகபோக அமைப்பாகப் பாசிஸ்டுகள் கண்டனர். இந்த இலட்சியத்தை அடைய கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைக்க வேண்டியிருந்தது. கத்தோலிக்க சாரணர்களிடையே முதலில் ஆக்கிரமிப்பு நடந்தது. அவை 1926-1928-க்கு உட்பட்ட காலத்தில் பல்வேறு உத்தரவுகளால் கலைக்கப்பட்டன.

சமூக, தொழிலாளர் அல்லது அரசியல் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும் கத்தோலிக்க செயல்பாட்டு ஸ்தாபனங்கள் எல்லாவற்றின் மீது ஆட்சி ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்தது. அதனுடைய பிரதான குறி இத்தாலிய கத்தோலிக்க வாலிபர் கழகமும் இத்தாலிய கத்தோலிக்க பல்கலைக்கழக சம்மேளனமும் போப் பதினொன்றாவது பயஸ் பலாத்காரத்திற்கு கண்டனம் தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பினார்.

ஆனால் அடிப்படையாக பாசிசத்தைக் கண்டித்தல்ல. இதற்கு அடுத்து, பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, கத்தோலிக்க ஸ்தாபனங்கள் ஆன்மீகம் சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை வாட்டிகன் வெகுவாக குறைத்து, பாசிச எதிர்ப்பிலிருந்து விலகிச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. “மத சம்பந்தமான நோக்கங்கள் கொண்ட பொழுதுபோக்கு, கல்வி நடவடிக்கைகளுக்கு” மட்டுமே அவற்றின் செயல்பாடுகளின் களம் என்று கட்டுப்படுத்த வாட்டிகன் ஒத்துக் கொண்டது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

2019 தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் !

கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் ‘ஒருநாள் தேசிய கருத்தரங்கம்’

நாள் : ஜூலை 20, 2019, சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 முதல் 6.00 மணிவரை
இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர், சென்னை (நந்தனம் சிக்னல் அருகில்)

சிறப்புரை :

பேராசிரியர் வீ.அரசு
மேனாள் தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

பேராசிரியர் ஜி.ஹரகோபால்
National Law School of India University, Bangalore,
தலைமைக் குழு உறுப்பினர், கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம் (AIRTE)

கருத்துரையாளர்கள் :

பேராசிரியர் கதிரவன்
உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

ஆசிரியர் சு.மூர்த்தி
ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

மருத்துவர் எழிலன்
இளைஞர் கழகம்

முனைவர் க.ரமேஷ்
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு – சென்னை

பேராசிரியர் அமலநாதன்
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை. பொதுக்கல்விக்காக ஓருங்கிணைப்புக் குழு – நெல்லை

நிறைவுரை :

மேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்றம்

நண்பர்களே, வணக்கம்.

த்திய அரசு கடந்த ஜூன் மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக்கேட்பு நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் 2019 – 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதை அமுலுக்கும் கொண்டு வந்துவிட்டது. மோடி அரசின் இந்த நடவடிக்கை கல்வித்துறை எதிர்கொள்ளப் போகும் அபாயத்திற்கு ஒரு சான்று.

தேசிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை . மாறாக, ஆர்.எஸ்.எஸ் சார்ந்த கல்வி அமைப்புகள் மற்றும் தனியார் பள்ளி/கல்லூரி நிறுவனங்களின் கூட்டமைப்பு, CII, FICCI, NASCOM முதலாளிகள் சங்கம் போன்றவைகளிடம் மட்டுமே கருத்து கேட்டு தயாரித்துள்ளனர். இதிலிருந்தே இந்த கல்விக் கொள்கை யாருடைய நலனுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

தேசிய கல்விக் கொள்கையிலே, 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு; 8 -ம் வகுப்பிலிருந்து கட்டாய தொழிற்கல்வி; பள்ளிப்படிப்பிலிருந்து உயர்கல்வி வரை இந்தி – சமஸ்கிருத திணிப்பு; கல்வி மீதான மாநில அரசின் அதிகாரத்தை பறித்து பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையத்திடம் ஒப்படைப்பது; B.A.,B.Sc உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு; கல்விக்கட்டணம், ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் ஆரம்பிப்பது ஆகியவற்றிக்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை, கல்லூரி நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்; திறமை அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம்; டாடா, அதானி, அம்பானி, பில்கேட்ஸ், மார்க் சுகர்பர்க் போன்ற ‘தனியார் கொடை வள்ளல்கள்’ கல்வித் தொழில் தொடங்க முன்னுரிமை; தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது.

இப்பரிந்துரைகளின் நோக்கமே கல்வி கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசின் பங்களிப்பை முற்றிலும் நீக்குவதுடன், ஒட்டு மொத்த இந்திய கல்வி சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைப்பதும் அதற்கு தகுந்த நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதுதான்.

படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் கொள்கை.

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நவீன குலக்கல்வியை திணிக்கின்ற, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கி நிதி மூலதனங்களின் கொள்ளைக்காக வழிவகை செய்கின்ற தேசிய கல்விக் கொள்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலனுக்கான கல்விக் கொள்கையை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து உருவாக்க வேண்டும்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Commin Education)
சென்னை, தொடர்புக்கு : 94443 80211, 72993 61319

மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !

அனுப்புனர்:

சி.ராஜு,வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

பெறுநர்:

தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள் (சட்டம் ஒழுங்கு)
ராஜாஜி சாலை, தமிழ்நாடு. 

பொருள் :  தமிழகத்தில் எமது அமைப்புக்கு ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டங்கள் நடத்த தடை – அனுமதி மறுப்பது,  பிரச்சாரம் செய்தால், போராட்டம் நடத்தினால் பொய் வழக்கு போடுவது குறித்த முறையீடு.

மதிப்பிற்குரியீர் வணக்கம்,

எமது முறையீடு குறித்து தங்களின் பரிசீலனைக்கும் மேல் நடவடிக்கைக்கும் கீழகண்டவற்றை முன் வைக்கிறோம்.

நமது அரசியல் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளிலும், இந்தியா கையொப்பமிட்டுள்ள உலகளாவிய மனித உரிமைகளிலும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் முதன்மையானவை. அரசின் திட்டங்களை, கொள்கைகளை செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை, மக்கள் தங்கள் தேவைகளைக் கோரியும், பாதிக்கும் திட்டங்கள் கொள்கைகளை எதிர்த்தும் போராடும் உரிமை ஆகியவை ஒரு ஜனநாயக அரசின் மிக அடிப்படையான கூறுகள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளதோடு விமர்சிப்பதையும் எதிர்க்கருத்துச் சொல்வதையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக கூறியிருப்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

ஆயினும் ஜனநாயக நெறி முறைகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் நேர் எதிரான முறையில் மாவட்ட, கோட்ட, வட்டார காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

படிக்க :
♦ அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பாதிக்கும் பிரச்சினைகளான எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு உள்ளிட்ட கார்ப்பரேட் நலத்திட்டங்களை எதிர்த்தும், பாலியல் வன்கொடுமை, ஆணவப்படுகொலை, ஊழல் முறைகேடு போன்ற மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகளிலும், பொதுக்கூட்டம், கருத்தரங்கம், தெருமுனைப் பிரச்சாரம், மாநாடு போன்றவற்றிற்கு சட்டப்புறம்பான நியாயமற்ற காரணங்களை கூறி போலீசார் எதேச்சதிகாரமாக எமது அமைப்புக்கு அனுமதி மறுக்கின்றனர்.

மேலும் அமைதியான ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டம், தொடர்முழக்கப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், ஊர்வலம் ஆகிய எதற்கும் போலீசார் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கின்றனர். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களை விமர்சித்து துண்டு பிரசுரம்விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டினால்கூட  பொய்யான காரணங்களை புனைந்து பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்கின்றனர். காவல் சட்டம் பிரிவு 30 (2) பேச்சுரிமைக்கு தடை போட வில்லை. ஆனால் போலீசார் இஷ்டம் போல் இந்த சட்டப்பிரிவை காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். இவ்வாறான சட்டப்புறம்பான, கருத்து உரிமையை மறுக்கின்ற காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு சான்றாக சில நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சட்டப்புறம்பான, நியாயமற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டவை:

  1. 17.3.2019, 8.4.2019 ஆகிய நாட்களில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மற்றும் பெரியார் சிலை உடைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அவ்வாறு எந்தத் தடையும் விதிக்காத போது இவ்வாறு மறுத்தது சட்ட மீறல் என்றே கருதுகிறோம்.
  1. 24.4.2019 கோத்தகிரியில் பொன்பரப்பி சாதி வெறி தாக்குதலை கண்டித்தும், 23.4.2019 தருமபுரியிலும் போலீசு சட்ட பிரிவு 30(2) அமலில் உள்ளதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு அமலில் உள்ளபோது அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பதை போலீசார் தவறாக செயல்படுத்துகின்றனர்.
  1. மத்திய – மாநில அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள், இந்து அமைப்புகளைத் தாக்கி பேசக்கூடும் என்ற அனுமானத்திலும், விவசாயிகளைத் தூண்டிவிட வாய்ப்புள்ளது என்ற அனுமானத்திலும், மாற்றுக்கட்சியினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என்ற அனுமானத்திலும் போலீசார் சென்னையில், கோவையில், திருச்சியிலும்  கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளார். இவை சில எடுத்துக்காட்டுகளே,. யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவார்கள் எனக் காவல்துறை கருதுகிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  சட்டப்படியான கருத்து உரிமையை ஒருதலைபட்சமாக பறிப்பது அரசியல் சட்ட மீறல் அநீதியானது.
  1. தனியார் மண்டபங்களில் நடக்கும் உள் நிகழ்ச்சிகளை தடை செய்யக்கூடாது எனவும், பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் காரணம் கூறி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என நீதிமன்றத் தீர்ப்புகள் உத்திரவாதப்படுத்தி உள்ள நிலையில் போலீசார் மதிக்காது அனுமதி மறுக்கும் போக்கு தொடர்கிறது.
  1. போலீசாரின் ஒவ்வொரு சட்டமீறலுக்கும் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெறுவது சாதாரண மக்களைச் சார்ந்து இயங்கும் எம்மை போன்ற இயக்கங்களுக்கு மிக சிரமமான் காரிணம்.

  உண்மைக் காரணங்களை மறுத்து பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்தவை:

  1. 17.12.2018 சென்னை, சிந்தாதிரிப் பேட்டை 380/2018 ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறைத்து டாஸ்மாக் கடை பணியாளரை பணம் கேட்டு மிரட்டி டாஸ்மாக் பார்-யை சேதப்படுத்தியதாக வழக்கு.
  1. திருச்சி திருவெறும்பூர் 24.7.2018 233/18 சுவரொட்டி ஒட்டியதற்காக எட்டு காவல்நிலையங்களில் வழக்கு. ஒரு சம்பவத்திற்கு ஒரு வழக்குதான் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் 8 வழக்கு. அதே போல் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளியதில் இறந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டதற்கு மூன்று காவல் நிலையங்களில் வழக்கு.
  1. கரூர் டவுன் காவல் நிலையம் 429/18, 15-3-2019 கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு திருச்சி மாநாட்டு விளம்பர பிரசுரம் விநியோகித்த எமது அமைப்பினர் மீதான பொய் வழக்கு
  1. விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் 18.9.18 – Cr.no.864/18 – ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விளக்கி மக்களிடம் துண்டறிக்கை வினியோகித்ததை மறைத்து போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கையில் கருங்கல்லை வைத்து கொண்டு பேருந்து நிலையத்தில் பொது மக்களையும், போலீசையும் மிரட்டியதாக பொய் வழக்கு.
  1. கரூர் பசுபதிபாளையம் (Cr.no.701/18 10.11.2018) எமது அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த நிர்வாகிகள் மீது பொய் வழக்கு.
  1. கள்ளக்குறிச்சியில் ( Cr.no. 480/18 18.7.2018) ஸ்டெர்லைட்டை மூடக்கோரி துண்டறிக்கை வினியோகித்த எமது தோழர்கள் மீது தேசத்துரோக பொய் வழக்கு.

இவ்வாறு எமது அமைப்பின் மீது மட்டுமல்ல வேறு பல அமைப்புகளுக்கும் அனுமதி மறுப்பு பொய் வழக்கு என போலீசு அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குறிப்பிட்டவை சில சான்றுகள் மட்டுமே.

மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயல்படும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்துவதாகவே கருதுகிறோம். மக்களின் அடிப்படை கருத்துரிமைகளை நசுக்கும் போக்கு ஜனநாயகத்தை பெரிதும் பலவீனப்படுத்தும். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுக்காக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. எனவே காவல்துறை அவற்றை நசுக்குவதையும், மக்களுக்காகப் போராடுபவர்களை கிரிமினல் குற்ற வழக்கில் கைது செய்து ஒடுக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இவண்
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு

நெருக்கடி காலகட்டத்தை விட மிகவும் மோசமான சூழலே தமிழகத்தில் நிலவுகிறது ! ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, அணுக் கழிவு கூடம் என தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துவருகிறது அரசு. இதனை எதிர்த்து தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை எந்த வகையில் பதிவு செய்தாலும், அவர்கள் மீது கருப்புச்சட்டங்களைப் பாய்ச்சி ஒடுக்குமுறையை செலுத்துகிறது போலீசு. போராடுபவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு குவிக்கிறது அரசு.

நமது உரிமைகளை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தை முறியடிக்க, நாளை காலை தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! அனைவரும் வருக ! நாளை (17-07-2019) காலை 11 மணிக்கு …

 

ஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி

தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் மோடி அரசு எவ்வாறு மனுநீதியை இந்திய மக்களின் மீது திணிக்கிறது என்பதை விளக்குகிறார் மருத்துவர் எழிலன்.

தேசியக் கல்விக்கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பை எவ்வாறு மத்திய அரசு நேரடியாகச் செய்கிறது ? இந்த பட்ஜெட்டில் கல்விக்கான தொகை ஒதுக்கீட்டை வெறும் 0.01% அதிகரித்துவிட்டு, இந்தி மொழி வளர்ச்சிக்காக அதிகமாக நிதியை ஒதுக்கியது ஏன்?

கல்வியின் மீதான அரசின் பிடியைத் தளர்த்தி அதனை தனியாரின் கையில் தாரை வார்க்கிறது தேசிய கல்விக் கொள்கை. அறிவியல் என்னும் பெயரில் புராணக் குப்பைகளைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது தேசிய கல்விக் கொள்கை..

இது தேசிய கல்விக் கொள்கை அல்ல ! ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தக் கொள்கை என்பதை அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் முகிலன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 இஸ்லாமபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலைநகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்து பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்பட்டேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தாடி வைத்து தொள தொளவென்று நீண்ட மேலங்கி அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருத்தர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹொட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் குறித்து தந்த ‘பேர்ல் கொன்ரினென்ரல்’ என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் முதன்முதல் ஏதாவது ஓர் அதிர்ச்சி கிடைப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த முதல் அதிர்ச்சி மூன்று சக்கர ஒட்டோக்களில். அவற்றின் உருவத்தில் அல்ல, வேகத்திலும் அல்ல, காட்சியில். எனக்கு எதிரிலே வந்த ஒட்டோக்களிலும், என்னைத் தாண்டிப்போன ஒட்டோக்களிலும் பின் படுதாவில் நடிகை சிறீதேவியின் சிரித்த முகப் படம் பெரிதாகக் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாகவே சிறீதேவி இங்கே வந்து எல்லா ஒட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரே’ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தானில் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே எனக்கு பரிச்சயமான இந்த முகம் ரோடுகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்து சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.

என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. திடீரென்று ‘எந்த பேர்ல் கொன்ரினென்ரல்?’ என்றார். இந்தக் கேள்வியை பாதி தூரம் கடந்து விட்ட பிறகுதான் கேட்டார். நான் ராவல்பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் நாங்கள் இஸ்லாமபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம் என்றபடி வண்டியைத் திருப்பினார். பயண முடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டி வந்தது.

பிறகு விசாரித்து இரண்டு ஹொட்டல்கள் இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு பெரியது துரோகம் செய்வார் என்பதை நானும் எதிர் பார்க்கவில்லை.

புராணங்களில் சொல்லப்பட்ட எட்டு நாகங்களில் ஒன்று தட்சன். இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (Taxilla) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. 2,500 வருடங்களுக்கு முன்னர் இங்கே ஓர் உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கல்விமான்கள் இங்கே கூடினார்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போன போது புத்தர் தடுத்து ஆட்கொண்டது இங்கே தான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் என்று ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு 326 -ல் அலெக்ஸாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கி இருந்திருக்கிறார். தத்துவஞானி கௌடில்யர் இங்கேதான் அலெக்ஸாந்தருக்கு பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் ஒயாத வாயசைவை எப்படி நிறுத்துவது என்பது தெரியாமல் அவருடைய தலையை கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கு கட்டளை இட்டாராம். கௌடில்யர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார் என்று பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள். இந்த விவரங்களை சரித்திரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரித்திரத்துக்கு வருவோம்.

படிக்க:
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
♦ காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

நான் சூரியக் கோயிலையும் அங்கே உள்ள பிரபலமான இரட்டைத் தலை கழுகு உருவத்தையும் பார்த்தபடி நின்றேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்த சிதிலமான 2000 வருடவயதான சுவரில் ஒருத்தர் தன் 40 வயது கால்களை பதித்தபடி குந்தியிருந்தார். மிகப் பெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்து பாதியிலே அது சரியாகப் போகாததால் நிறுத்திவிட்டு இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் தன் பின்னங் கால்களை 2000 வருட சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்தார். முரட்டு சால்வை போர்த்தியிருக்கும் ஆறடி உயரம், பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்கு கூப்பிடுவது போல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்து வைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம் மிகப்பழசானது. அலெக்ஸாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்பத்தில் இதைப் பாதுகாத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.

மாதிரிப் படம்

நாணயத்தை வாங்கிப் பார்த்தேன், சந்தேகமே இல்லை. அலெக்ஸாந்தர் தலை போட்ட யானைத்தோல் கவசம் அணிந்த பிரபலமான நாணயம். பேரம் நடந்தது. இருபது டொலருக்கு வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்த்தால் இஸ்லாமபாத்தில் இந்த நாணயம் இல்லாதவரே ஒன்று இரண்டு பேர்கள்தான் என்று தெரிய வந்தது. நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என் குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக்காட்டினாள்.

அந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருத்தராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டு வெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவில்லை. லாகூரிலே பார்க்க வேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது, இன்னும் ஒரு சில காட்சிகளே எஞ்சி இருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழி காட்டியை வைத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.

முத்து மசூதிக்கு கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சனசந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக்கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர் ‘நாண்’ ரொட்டியை வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழம்பில் தோய்த்து தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். பஸ் நிலையத்தில் சகாயவிலைக் கடையில் வாங்கிய இருபது ரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி, இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ, அணில் எச்சமோ, வினை எச்சமோ ஏதோ ஒன்றை வெள்ளையாக தன் தோளிலே அவருடைய தகுதிக்கு ஏற்றவாறு தரிக்திருந்தார். அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கறாராக பேசி முடிவு செய்தோம்.

தன் தகப்பனைப் போல ஒளரங்கசீப் கட்டிடக்கலையில் ஆர்வம் காட்டவில்லை. அபூர்வமாக அவர் கட்டிய அலாம்கீர் வாசலை ஏதோ தான்தான் கட்டிமுடித்தது போல வழிகாட்டி பெருமையாகக் காட்டினார். அதன் பிறகு ஷாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில் வழிகாட்டி நெருப்பு கொழுந்தைப் பற்றவைத்து வீசி வீசிக்காட்டிய போது எங்கும் தீக்கொழுந்து மின்னல்போல பரவி ஒளியடித்தது.

இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க கலாபூர்வமான உள்வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பேர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள் வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை தந்தது. தாஜ்மஹாலை உலகத்துக்கு தந்த ஷாஜஹானுக்கு கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயர்ந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும் போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாக கணக்கு எழுதி வைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது ஷாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் அவசரமாக கூட்டிப் பார்த்தபோது மிகச் சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெயரைக் சூட்டிவிட்டார்கள்.

படிக்க:
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
♦ அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக, கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, சுவர்களை ஆராய்ந்தபடி நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி ரஸ்ய எழுத்துக்கள் போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நின்றார்கள். வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களை சீக்கிரத்தில் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையை பிடிப்பதற்காக விடை பெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஒடினார். நாங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்கு பதில் நாலு ரூபா கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காக கணக்கு வைத்த பேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய் கணக்கில் தவறியது எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.

என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.

என்னுடைய இஸ்லமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்திய தூதரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இங்கே இந்தியர்களுடன் பழகக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான, பழமையான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.

நாங்கள் இங்கே வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூ வைப்பதும், நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்து தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும் போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார் கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம், வரலாம்.

விருந்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது எங்கள் காரைத் தொடர்ந்து நீண்ட நேரமாக இன்னொரு கார் வந்தது. உளவுத்துறையில் முன் அனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை வீட்டுக் காவல்காரர்களும், கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக சொன்னார்கள்.

அதன் பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்பட்டோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே இந்த நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.

இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத, சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும், இன்னும் சில நேரங்களில் வேகத்தை குறைத்தும் உதவி செய்தேன். சில வேளைகளில் அவர்கள் போதிய சிரத்தை காட்டாமல், தவறான திருப்பங்களை எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலை தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை அவர்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவிப்போமா என்றுகூட யோசித்தது உண்டு.

ஒர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும், பேசவும், நடக்கவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும் போது சில சங்கேத வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன். என் பாதைகளையும், கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும், முன்பின் தெரியாத மனிதர்களுடன் ரகஸ்யமான வாய் அசைவுகளுடன் பேசவும் கற்றுக் கொண்டேன்.

இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்லை.

எவ்வளவுதான் நான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை, இது அங்கே விடுமுறை தினம், என் மனைவி ஜும்மா சந்தைக்குப் போக வேண்டும் என்றாள். இது இஸ்லாமபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் பிரம்மாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஒர் உலகப் புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான், ஆனாலும் இதை மனைவிகளுக்குப் புரிய வைப்பது எப்படி.

சரி என்றேன். சில துப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூச்சில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணி நேரம் பேரம் பேசி வாங்கி முடித்துவிட்டாள்.

ஆனால் திரும்பும் போது வழி மறந்துபோய்விட்டது. ஒரு வழிப் பாதைகள் என்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டு போய் சேர்த்தன. அப்பொழுது நான் என்னை தொடர்ந்து வந்த கார்காரரை அணுகி வழிதவறிவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழி காட்டுவதாக முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என் வீட்டு வாசலுக்கு அலுங்காமல் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.

இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்கள் முன்னே செல்ல, நான் பின்னே சென்றேன். உலக உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

ரேஷன் கார்டு மரணங்கள்

ன்று வெளியாகியிருக்கும் ஆங்கில இந்து நாளிதழில் (ஜூலை 13) ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. Death by digital exclusion? என்ற தலைப்பில் வெளியாகிருக்கும் இந்தக் கட்டுரை இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டில், ஆதார் கணக்குடன் ரேஷன் கார்டுகளை இணைக்காதது, Point of Sales எந்திரங்கள் இயங்க இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் பொருட்களை விநியோகம் செய்ய முடியாதது ஆகிய காரணங்களால், பழங்குடியின மக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக சென்று சேர்வதில்லை. இதனால், அந்த மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன என்கிறது கட்டுரை. 

‘ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் இங்கே ரேஷன் கார்டு வாங்கினால், இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் போய் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்களே, அவர்களுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்கிறது. வட மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் அந்தந்த மாநில மக்களுக்கே பொருட்களை சரியாக விநியோகிக்க முடியாதபோது, எப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகிப்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி.

பிஹாரிலிருந்து 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் ஜார்க்கண்ட். தற்போது பாஜக-வின் ரகுபர்தாஸ் முதல்வராக இருக்கிறார். மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து 2006-ம் ஆண்டுவரையிலும்; 2010-லிருந்து 2013 வரையிலும்; 2014-லில் இருந்து தற்போது வரையிலும் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. நடுநடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் இருந்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தை டிஜிட்டல்மயமாக்கும் சோதனை தற்போது இந்த மாநிலத்தில் நடந்துவருகிறது. இதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, உணவு தானியம் கிடைக்காமல் பட்டினியால் 2017 செப்டம்பரிலிருந்து 2019 ஜூன் வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாகச் செத்தவர் லடேஹர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முண்டா. இவர் கிராமத்திற்கு பல மாதங்களாக ரேஷன் பொருட்களே வரவில்லை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை வாங்க பல விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பிறகு ஆதார் அட்டை இருக்க வேண்டும். அதற்குப் பிறகு இரண்டையும் இணைக்க வேண்டும். இங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆஃப் சேல் மிஷின் மூலம்தான் விற்பனை நடக்கிறது. அது இயங்க இன்டர்நெட் வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

சில இடங்களில் ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வந்துவிடும். ஆனால், இன்டர்நெட் இல்லாததால் பொருட்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க முடியாத நிலை.

படிக்க :
♦ கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

இதற்கு நடுவில் அதிகாரிகள் இடும் பல உத்தரவுகள், நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. 2017-ல் தலைமைச் செயலராக இருந்த ராஜ்பாலா வர்மா, ஆதாருடன் இணைக்காத ரேஷன் கார்டுகளை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இது மிகப் பெரிய அளவில் பயனாளிகளை பொதுவிநியோகப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதைவிட இன்னொரு கொடுமை நடந்தது. சத்தர்பூரில் இருந்த துணை வட்டாட்சியர் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதன்படி ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறையைப் பயன்படுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் முறை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்தை வந்து எடுக்க ஒரு நாளும் பொருட்களை வாங்க ஒரு நாளும் ஆனதால், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்தத் திட்டம் இப்போதைக்கு கைவிடப்பட்டது.

இந்த மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மோசமாக செயல்படுத்தப்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.
இதுவரை பட்டினியால் இறந்துபோன 20 பேரில் 11 பேர் ஆதிவாசிகள். 4 பேர் தலித்துகள். 11 பேர் பெண்கள். 13 பேர் ஆதார் கணக்கை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் இறந்துபோனவர்கள்.

கட்டுரைக்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. படித்துப் பாருங்கள் பல விஷயங்கள் புலப்படும்.

Death by digital exclusion? : on faulty public distribution system in Jharkhand

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

0

பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்தியாவில் நடத்திய மிக பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவமான ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது.

அதனையொட்டி ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கிய போராளி உத்தம் சிங் குறித்து ‘The Patient Assassin’ என்ற நூலை பத்திரிகையாளர் அனிதா ஆனந்த் எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு Francis P Sempa எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம் இந்தப் பதிவு.

♦ ♦ ♦

1919 ஏப்ரல் 13-ம் தேதி, பஞ்சாப்பின் அம்ரித்சர் தங்கக் கோயில் அருகே இருந்த ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை ஜெனரல் ரெக்ஸ் டயர் (General Reginald Rex Dyer) தலைமையிலான பிரிட்டீஷ் மற்றும் ஏகாதிபத்திய படைகள் சுட்டுவீழ்த்தின.

போராட்டத்துக்காக திரண்டிருந்த 400-லிருந்து 600 மக்கள் அந்த இடத்தில் வீழ்ந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பத்து நிமிடங்கள் நீடித்த அந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்து, ஓட முயற்சித்த பலர் சுடப்பட்டனர். உயிர் பிழைக்க பூங்கா சுவர் ஏறியவர்களும் இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை அல்லது அம்ரித்சர் படுகொலை குறித்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில், ‘இது ஒரு படுகொலை. ஒரு பயங்கரமான நிகழ்வு’ என கூறினார். “இந்த சம்பவம் பிரிட்டீஷ் பேரரசின் நவீன வரலாற்றில் முன்மாதிரி அல்லாத ஒன்று” எனவும் அவர் பேசினார். பிரிட்டீஷ் வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி டெய்லர் இந்தப் படுகொலை, “பிரிட்டீஷ் ஆட்சியில் இந்தியர்கள் அந்நியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய தருணம்” என எழுதினார்.

நீண்ட காலம் பிபிசி-யில் பணியாற்றிய பத்திரிகையாளர் அனிதா ஆனந்த், ஜாலியன்வாலாபாக் படுகொலையின் பின்னணியில் உத்தம் சிங் குறித்த மிக சுவாரஸ்யமான கதையைக் கூறியுள்ளார். ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த பஞ்சாபியான உத்தம் சிங், ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்களுக்காக அவர்களைக் கொல்லக் காரணமாக இருந்த பிரிட்டீஷ் அதிகாரிகளை பழிவாங்க தன்னுடைய 21 ஆண்டுகாலத்தை செலவழித்து திட்டமிட்டார்.

1940, மார்ச் 13-ம் நாள், லண்டனில் கேக்ஸ்டன் ஹாலில் நடந்த கிழக்கு இந்திய சங்கத்தின் சந்திப்புக்கு வந்திருந்த சர் மைக்கேல் ஓ. டயரை (Michael O’Dwyer) கொன்றார் உத்தம் சிங். ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பஞ்சாப் கவர்னராக இருந்தவர் டயர். பிரிட்டீஷின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தவரும் இவரே. அதன்பின் ஆதரித்தும் பேசியவர். இந்த சம்பவத்தில் மூன்று பிரிட்டீஷ் அதிகாரிகளும் காயமுற்றனர்.

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

“உத்தம் சிங், துப்பாக்கி விசையை அழுத்திய அந்தக் கணம்,அவர் பிரிட்டனின் அதிகம் வெறுக்கப்பட்ட நபராகவும், இந்தியாவின் கதாநாயகனாகவும் சர்வதேச அரசியலில் மதிப்புள்ள ஒரு கதாபாத்திரமாகவும் மாறினார்” என எழுதுகிறார் அனிதா.

அனிதாவின் பார்வையில் உத்தம் சிங், வில்லனும் அல்ல புனிதரும் அல்ல !

Francis P Sempa

பிரிட்டீஷ் ஒடுக்குமுறை இந்திய தேசிய நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு குறித்த பரப்புரைகளாலும் படுகொலை காரணமாகவும் உத்தம் சிங் தீவிரமயப்படுத்தப்பட்டார். முதலில் கம்யூனிஸ்ட் இயக்கமாகவும் பிறகு நாசிக்களாகவும் மாறிய இந்திய தேசிய ராணுவத்தால், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சியை பலவீனப்படுத்த அவர் பயன்படுத்தப்பட்டார்.

இந்த நூலை எழுதிய அனிதா ஆனந்த், இந்தப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புள்ளவர். அந்த சமயத்தில் பதின்பருவத்தில் இருந்த இவருடைய தாத்தா, படுகொலையின்போது அம்ரித்சரில் இருந்தார். பிரிட்டீஷ் படைகள் ஜாலியன்வாலாபாக் வருவதற்கு சற்று முன்பான அவர் அங்கிருந்து வெளியேறினார். தன்னுடைய நண்பரை இந்தத் தாக்குதலில் பலிகொடுத்தார்.

அனிதாவின் கணவர் குடும்பமும் பஞ்சாபிலிருந்து வந்ததுதான். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உத்தம் சிங்குடன் வசித்தவர். அவருடைய பார்வை இந்திய தன்மையுடன் உள்ளது, அது தவறானதல்ல எனினும், அது முழுமையாக இல்லை. பிரிட்டீஷ் பார்வை முழுமையாக இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் ஒப்பீட்டளவில் குறைவானதாகவே உள்ளது.

பேரரசின் அடையாளமாக இருந்த பிரிட்டீஷ் மகுடத்தில் ஒரு ஆபரணமாக இருந்தது இந்தியா. சிறிய அளவிலான பிரிட்டீஷ் இராணுவத்தாலும் அரசியல் உயரடுக்கைச் சேர்ந்தவர்களாலும் துணைகண்டத்தில் இருந்த உள்ளூர் உயரடுக்கைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது அது. பிரிட்டன் தனது பேரரசை தேவைப்படும்போது இரக்கமின்றி ஆட்சி செய்தது, இந்தியாவில் இருந்த பிரிட்டனின் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் மீது பிடிப்புடன் இருப்பதை புரிந்து வைத்திருந்தனர்.

கிளர்ச்சியின் முதல் அறிகுறியில் பிரிட்டனின் நடத்தையை அனிதா இப்படிச் சொல்கிறார், “தொடக்கத்திலேயே செயல்படுங்கள், தீர்க்கமாக செயல்படுங்கள், வலிமையைக் காட்டுங்கள் அல்லது ஆபத்து துடைத்தெறியப்பட வேண்டும்”.

1857-ன் இந்திய சிப்பாய் கலகம் இது தொடர்பாக ஒரு பாடத்தை வழங்கியிருக்கிறது. கொல்கத்தாவில் பிரிட்டீஷ் இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய்கள் செய்த கலகம், வட இந்தியா முழுவதும் வேகமாக பரவியது.

“கிளர்ச்சியாளர்கள் இப்பகுதி முழுவதும் வெடித்தெழுந்தனர்” என எழுதுகிற அனிதா, “ஒரு சிறுபான்மையினர் பிரிட்டீஷ் பொதுமக்களுக்கு எதிராக சொல்லமுடியாத குற்றங்களை செய்தனர். 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் குழந்தைகள் மற்றும் பெண்களை பிபிகரில் கொன்றனர். இந்த சம்பவங்களில் தொடர்பில்லாத பலரையும் சேர்த்து, கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிப்பாய்களை தூக்கிட்டதன் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கம் தனது பழிவாங்கலைச் செய்தது.

1857 சிப்பாய் கலகம் இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்திய அரசு வெளியிட்ட தபால்தலை.

பிரிட்டீஷ் அதிகாரிகள் ஏப்ரல் 1919-ம் ஆண்டும் சிப்பாய் கலகம் போன்றதொரு சம்பவம் நடக்கக்கூடாது என்றே கருதினர். தன்னாட்சி அதிகாரத்துக்கான காந்தியின் அகிச்சை இயக்கம், இந்திய புரட்சிகர இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாக அவர்கள் கருதினர். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின், பஞ்சாபில் கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன், காந்தியையும் மேலும் இரண்டு காலனிய எதிர்ப்பு தலைவர்களையும் பிரிட்டீஷ் போலீசு கைது செய்தது. இந்தக் கைதை கண்டிக்கும் வகையில் ஒரு கும்பல் அம்ரித்சரில் சில ஐரோப்பியர்களை தாக்கியது, இது உள்ளூர் போலீசால் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்த கும்பல் ஐவரைக் கொன்று, மூன்று பேரை தெருவில் வைத்து எரித்தது. ஒரு மூத்த மிஷனரி பெண்ணை கடுமையாக தாக்கி, கொன்றது இந்த கும்பல்.

ஏப்ரல் 13-ம் தேதி காலையில் ஜெனரல் டயர், நகரின் பல்வேறு இடங்களில் பொது கூட்டம் நடத்தவோ, கூட்டமாகவோ கூடக்கூடாது என்றும் அப்படி கூடினால் படைகளால் சிதறியடிக்கப்படுவீர்கள் எனவும் பொது அறிவிப்பைச் செய்தார். அவருடைய எச்சரிக்கையை புறம்தள்ளிவிட்டு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான மக்கள் ஆயுதங்களை ஏந்தி, ஜாலியன்வாலாபாக்கில் கூடினர்.

படிக்க:
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

பிரிட்டீசின் பார்வையில், டயரின் நடவடிக்கையால் அந்த நாளில் பெருமளவில் நடக்கவிருந்த சேதம் தடுக்கப்பட்டது, பல உயிர்களும் காப்பாற்றப்பட்டது. சில நாட்களில் பிரிட்டீசின் நடவடிக்கை பஞ்சாப் மாகாணத்தில் அமைதியைக் கொண்டுவந்தது. இந்திய கடைக்காரர்களும் வணிகர்கள் தங்களுடைய பொருட்கள் கொள்ளை போகாமல் தடுத்ததற்காக டயரை புகழ்ந்தனர். அருகில் இருந்த தங்கக் கோயிலின் காப்பாளர்கள் டயருக்கு கௌரவ சீக்கியர் பட்டம் அளித்தனர்.

அனிதா மற்றும் சில பிரிட்டீஷ் கண்ணோட்டங்கள் உண்மையை பிரிக்கவில்லை, அது அவர்களுடைய மாறுபட்ட கண்ணோட்டங்களாகும்.

அதன்பின், பிரிட்டீஷ் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையில் ஜெனரல் டயரின் நடவடிக்கை மீது தவறு இருப்பது தெரியவந்தது, அவர் தன்னுடைய பதவியை இழந்தார். இந்தியர்களுக்கு அம்ரித்சரின் கொடுங்கோலன் அவர். பிரித்தானியர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சியை காப்பாற்ற இந்திய மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முயற்சித்த ஒரு பலியாடு. அவர் உடைந்த மனிதராக 1927-ம் ஆண்டு ஜூலை மாதம் இறந்தார்.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை சித்தரிக்கும் ஓவியம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை இந்திய தேசியவாதத்தையும் பிரிட்டீஷ் எதிர்ப்பு மனநிலையையும் வளர்த்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. படுகொலைக்கு முந்தைய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய துருப்புகள் முதல் உலகப் போரில் பேரரசுக்கு சேவை செய்திருந்தன என்பது இந்த விசயத்தில் உதவவில்லை. ஆங்கிலேயர்களின் நன்றிக்கடனை காட்டியவிதம்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையா?

பிரிட்டீஷ் காலனி ஆட்சிக்கு எதிர்ப்பு இரு முக்கிய வழிகளில் வந்தது: காந்தி மற்றும் அவரை பின்பற்றுகிறவர்கள் அகிம்சை முறையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளே அரசியல் தன்னாட்சி வேண்டும் எனக் கேட்டார்கள். பஞ்சாப்பில் கெதர் கட்சி தலைமையிலான தீவிர புரட்சிகர இயக்கம், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி வன்முறையின் மூலமே துடைத்தெறியப்படவேண்டும் என்றது. உத்தம் சிங் கெதர்களின் மீது ஈர்ப்பு கொண்டார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையின் போது உத்தம் சிங் அங்கே இருந்ததாக அனிதா எழுதுகிறார். ஆனால், அந்த நாளில் எங்கே இருந்தார் என்கிற உண்மை தெளிவாக இல்லை. உத்தம் சிங்கிற்கு மட்டுமே உண்மை தெரியும். அவர் தன்னுடைய வாழ்நாளில் பல நபர்களிடம் பலவிதமான சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார். எது உண்மை என கண்டறிவது இயலாததாக உள்ளது.

படுகொலை நிகழ்ந்து இருபது ஆண்டுகளில் உத்தம் சிங், வெவ்வேறு பெயர்களில் ஆப்பிரிக்கா முதல் ஐரோப்பிய கண்டம் வரை அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை “தனது மக்களின் பழிவாங்கும் தேவதையாக” மாறும் முயற்சியில் பயணித்திருக்கிறார்.

இந்திய புரட்சியாளர்கள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் தொடர்பு காரணமாக பிரிட்டீஷ் புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு பல முறை அவர் உள்ளாகியிருக்கிறார். உத்தம் சிங் குறித்து பிரிட்டீஷ் அதிகாரிகளால் மூடிவைக்கப்பட்டிருந்த ஆவணங்களை தகவல் பெறும் சுதந்திரத்தின் அடிப்படையில் அனிதா பெற்றிருக்கிறார்.

அமெரிக்கா, ஐரோப்பியாவில் இருந்த இந்திய கெதர் கட்சியால் உத்தம் சிங் ஆதரிக்கப்பட்டார். அந்தக் கட்சிக்கு விசுவாசமாகவும் அவர் இருந்தார். கெதர் கட்சிக்காரர்கள் அவருக்கு பணத்தையும் போலி அடையாளங்களுக்கான சான்றுகளை அளித்ததோடு, பயணங்களின்போது தங்குவதற்கு நட்பான இடங்களையும் ஏற்பாடு செய்துகொடுத்தனர்.

அம்ரித்சரில் தேசவிரோத பொருட்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் கைதாகி ஐந்து வருடம் சிறை தண்டனை பெற்றார் உத்தம் சிங். அப்போது அவர், 1929-ம் ஆண்டும் டெல்லி சட்டப் பேரவை வளாகத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு பிரிட்டீஷ் போலிசு அதிகாரியைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பகத் சிங்கை சந்தித்தார். உத்தம் சிங், பகத் சிங்கை தன்னுடைய குரு என அழைத்தார். பகத் சிங்கின் முன்னுதாரணத்தைப் பயன்படுத்தி கொலைத்திட்டத்துக்கான ஊக்கத்தைப் பெற்றார்.

உத்தம் சிங்கின் காத்திருப்பு, இறுதியாக 1940 மார்ச் 13-ம் தேதி பலன் கொடுத்தது. சர் மைக்கேல் ஓ டயரைக் கொன்ற பிறகு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் என தனது குற்றத்தையும் நோக்கத்தையும் சொன்னார் அவர். இந்த விசாரணை இரண்டு நாள் நீடித்தது. அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, மரணதண்டனை பெற்றார். 1940-ம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் பென்நோன்வில்லா சிறையில் அவர் தூக்கிலடப்பட்டார்.

எந்தவொரு அரசியல் தொடர்போ அல்லது நோக்கமோ இல்லாத ஒரு ‘தனி-ஓநாய் பயங்கரவாதி’ என்று பிரிட்டீஷ் அதிகாரிகள் அவரை உருவகப்படுத்தினர். அங்கே ஒரு போர் நடந்துகொண்டிருந்தது, பேரரசு காப்பாற்றப்பட்டாக வேண்டிய தேவை இருந்தது.

பிரிட்டன் போரில் வென்றது. ஆனால், பேரரசை காப்பாற்ற முடியவில்லை. இந்திய சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது, ஆனால் அமைதியாக அல்ல. அனிதாவின் கூற்றுப்படி, பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற மிக கடுமையான விலையைக் கொடுக்க வேண்டிருந்தது. 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்வுக்கு ஆளானார்கள், 2 மில்லியன் மக்கள் இறந்தார்கள். அனிதா, பிரிட்டீசாரே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டுகிறார்.

படுகொலை நடந்த இடத்தில் உத்தம் சிங்கிற்கு 2017-ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டதாக அனிதா முடிக்கிறார்…

“அது அவரை சித்தரிக்கிறது. கையை நீட்டி, உள்ளங்கையை உயர்த்தி, தரையில் சிந்திய ரத்தத் துளிகளை கையில் ஏந்தி நிற்கிறார். ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்பட இருபதாண்டுகள் பிடித்ததற்கான ஒரு நினைவூட்டல்.”


கட்டுரையாளர் : Francis P Sempa
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை

ல்கலைக்கழக அளவில், தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் சடங்குகளாகி வருகின்றன. பதவி உயர்வுகளுக்கு ஆய்வுப் பட்டங்கள் இன்றையமையாத் தகுதிகளாக வற்புறுத்தப்பட்ட பின்பு, ஆய்வாளர்களின் எண்ணிக்கை கூடியது. வருமானத்துக்காக மட்டுமே பதவிகளையும் படிப்பையும் ஏற்றவர்கள், ஆய்வுகளையும் செய்து தொலைக்க வேண்டிய கடனாகக் கருதினார். இதனால் புறநானூற்றில் பூச்சிகள், சிலப்பதிகாரத்தில் பூண்டுகள் என்ற போக்கிலேயே ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழ் ஆய்வுகளைப் பொறுத்தமட்டிலும் தரமான ஆய்வுகளைச் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தரமான ஆய்வு நூல்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய ஒரு சூழலில் மா.உத்திராபதியின் எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு, ”காலந்தோறும் நந்தன் கதை” என்ற தலைப்பில் நூலாக வருகிறது.

எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு என்ற எல்லைக்குள் நின்று இந்த நூலைப் படிக்கும்பொழுது, இது பத்தோடு பதினொன்று என்று எண்ணிச் செல்ல வேண்டிய ஒரு நூலாகப் படவில்லை. ஆய்வாளரின் ஈடுபாடும், முயற்சியும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது பார்வையிழந்த மாணவர் ஒருவரின் நூல் என்று யாராலும் பரிந்துரைக்கப்பட வேண்டிய தேவையைத் தவிர்த்து நிற்கின்றது.

‘அடியும் முடியும்’ என்ற நூலில், ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ என்ற கட்டுரையில், க. கைலாசபதி, நந்தன் கதையை ஆராய்ந்துள்ளார். இது அந்த ஆய்வின் தொடர்ச்சியாக நீள்கிறது. நந்தனைப் பற்றிய ஒரு புதினம், ஒரு சிறுகதை, ஒரு கதா காலட்சேபம், ஒரு நாடகம், ஒரு கவிதை,  ஒரு வில்லுப்பாட்டு ஆகியவை ஆய்வுக்குரியவையாகின்றன. இவை 1917-ல் இருந்து, 1982 வரை படைக்கப்பட்டவை. இந்தக் கால கட்டங்களில், நந்தன் என்ற கதாபாத்திரம் தமிழ்ச் சமுதாய மாற்றத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக இருக்கிறான்.

தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.

விவேகானந்தரிலிருந்து ஜெயகாந்தன் வரை நந்தன்களை மேல்நிலையாக்கம் செய்யும் நோக்கங்களை வலியுறுத்துகின்றனர். இந்த நோக்கங்கள் இன்றளவும் ஈடேறவில்லை; அது மட்டுமன்று நந்தனுக்குப் பூணூல் போட்டுப் பார்ப்பது எந்த அளவில் அவனை விடுதலை பெற்ற மனிதனாக்கும் என்பதும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

… பூணூலும் வேத பாராயணமும், விடுதலைக்கான சின்னங்கள் அல்ல. அவை மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைச் சின்னங்கள், இன்று கல்விகற்று அதிகாரத்தில் அமரும் ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் பூணூல் அணியாதிருக்கலாம். வேதம் ஓதாதிருக்கலாம் – ஆனால் அவர்கள் பெற்ற கல்வி விடுதலைக்கான கல்வி அன்று. வளர்த்துக்கொண்ட சிந்தனை விடுதலைக்கான சிந்தனையன்று. இதனால் அவர்கள் இந்த வாழ்க்கை முறையை உடைப்பதற்கு மாறாக உறவுகளை உடைத்துக் கொள்கிறார்கள், மனோபாவத்தால் ஒடுக்குமுறையாளர்களுடனேயே தங்களை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இங்கு மேனிலையாக்கம் என்பது இந்த வகையில் நடைபெறுகிறது என்று சொல்லலாம்…

… ‘காலந்தோறும் நந்தன் கதை’ ஆய்வு நூலைப் படித்து முடித்தால் இன்னும் நந்தன் கதைகளும், அவை தொடர்பான ஆய்வுகளும் வளரும் என்றே தோன்றுகிறது. நந்தனுடைய விடுதலை நந்தன் தன்னை அந்தணனாகக் காண்பதில் இல்லை, புலையனாகக் காண்பதில் இல்லை, மனிதனாகக் காண்பதிலேயே என்றும் கூறத் தோன்றுகிறது. (நூலுக்கான அணிந்துரையில் இன்குலாப்)

வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் போன்ற மிகப்பழமையான நூல்களில் எண்ணற்ற கதைக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவை பின்னர் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் காப்பியங்களாகவும் உருப்பெற்றன. இவ்வாறு உருவாகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் அடிப்படுவதைக் காணலாம். அந்த அளவிற்கு இவை மக்களின் அடிமனத்தில் இடம் பெற்றுள்ளன.

… தமிழ் இலக்கியத்திலும் இம் மரபைக் காணலாம். கண்ணகியைப் பற்றிய கதைகள் பலவும் இம் மரபில் தோன்றியவை. பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கதைகளில் பல இம் மரபில் பிற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகளாக உருப்பெற்றிருக்கின்ற. இங்ஙனம் இம்மரபிற்கு உட்படுத்தப்பட்ட கதைகளில் திருநாளைப் போவார் எனும் நந்தனார் கதையும் ஒன்று.

தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கருதுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. கீழ்ச்சாதியினருக்கும் மேற்சாதியினருக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளின் தன்மை காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது. கீழ்ச்சாதியினர் தம் நிலையை உயர்த்திக் கொள்ள பலவாறு முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இம்முயற்சிகள் இன்றும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுமளவிற்கு வெற்றிபெறவில்லை. தொடர்ந்து நிலவும் முரண்பாடுகள் படைப்பிலக்கியத்தின் கவனத்தை ஈர்ப்பது இயல்பே. கீழ்ச்சாதியைச் சேர்ந்த நந்தனின் கதை இலக்கியப் படைப்பாளிகளால் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய கருத்துக்களுடன் மறுவார்ப்பு செய்யப்படுவதை காணலாம்.

இந்த ஆய்விற்கு இருபதால் நூற்றாண்டில் படைக்கப் பெற்ற ஆறு படைப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன… ஒவ்வோர் இலக்கிய வடிவத்திற்கும் ஒரு நூல் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

நூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக, ஏழு இயல்கள் கொண்டது. முதல் இயலில், புராணக்கதைகள், பழங்கதைகள் ஆகியவை இலக்கியங்களில் ஏன் இடம்பெறுகின்றன என்பது பற்றியும் யுங், பிரை, கைலாசபதி, ஆகியோர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன… அடுத்த ஆறு இயல்களில் முறையே நந்தன் கதையின் தாக்கத்தில் படைக்கப்பட்ட ஆறு நூல்களும் ஒவ்வொன்றாக ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் இயலிலும், அந்நூல் தோன்றிய காலத்து சமூக அரசியல் சூழல் விவரிக்கப்பட்டு அவ்வக் காலக் கருத்துக்கள் எவ்வாறு இலக்கியப் படைப்பைப் பாதித்திருக்கின்றன என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. காலத்தேவையை பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நூலும் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளது, எவ்வகையில் குறைபாடுடையது என்பனவும் விவாதிக்கப்படுகின்றன. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)

நூல் : காலந்தோறும் நந்தன் கதை
ஆசிரியர் : மா. உத்திராபதி

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089..
தொலைபேசி எண் : 98417 75112.

பக்கங்கள்: 124
விலை: ரூ 50.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.